31 Jul 2017

மிஸ்டர் கருத்து பஸ்டர் ஆகட்டும்!

மிஸ்டர் கருத்து பஸ்டர் ஆகட்டும்!
            எஸ்.கே. திடீரென்று கோபத்தின் உச்சிக்கு ஏறி விட்டான். அதைத் தணிப்பதற்கு எதையாவது வெறித்தனமாகச் செய்ய வேண்டும் அவனுக்கு. அப்படிச் செய்து அதனால் சூழ்நிலைகள் விபரீதமாகப் போன அனுபவங்கள் அவனுக்கு நிறைய உண்டு.
            அப்புறம் யோசித்துப் பார்த்தால் கோபப்படாமல் இருந்திருக்கலாமே என்று அவனுக்குத் தோன்றும். உண்மைதான். கோபம் எந்தப் பிரச்சனையையும் தீர்ப்பதில்லை. மாறாக பிரச்சனைகளை அபரிமிதமாக உருவாக்கி விடுகிறது.
            அன்று எஸ்.கே.வுக்கு அப்படி ஒரு சூழ்நிலை. தேவையில்லை அந்தக் கோபம். அதனால் நெஞ்சுவலி கண்டதுதான் மிச்சம்.
            கோபப்படுவதால் யார் மாறுவார்கள் என்று எஸ்.கே. நினைக்கிறானோ, அவர்கள் மாறுவதில்லை. மாறாக அவனை நிலைகுழைய அடித்து விடுகிறார்கள். அவன் பரிதாபமான நிலைக்கு ஆளாகி விட்டான்.
            எஸ்.கே. ஒரு திருமண ஏற்பாடு குறித்து கருத்துக் கூறி விட்டான். அவன் அந்தக் கருத்தைக் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கூறி விட்டான். மனதில் பொங்கி எழுவதை வெளியில் சொன்னால்தான் நிம்மதி என்பது போலவும், மன பாரம் குறைந்தது போலவும் சில நேரங்களில் இப்படி ஏதாவது உளறிக் கொட்டி மாட்டிக் கொண்டு விடுகிறான் எஸ்.கே.
            அதன் விளைவுகள் மோசமானவை. கருத்துகள் கத்தியை விட கூர்மையானவை. மனதை எக்குதப்பாக தாக்கும் இயல்புடையவை. அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வஞ்சம் தீர்க்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
            கருத்து கூற வேண்டும் என்றால் காமாசோமாவான ஒரு பொதுக்கருத்து இருக்கும். அதை மட்டும் கூற வேண்டும். அது எல்லாவற்றிற்கும் பொருத்தமானதாக இருப்பதோடு, பிரச்சனையை உருவாக்காமல் பாதுகாப்பாக இருப்பதோடு, எந்தச் செயலையும் செய்யாமல் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்து விடும்.
            மற்றபடி மனபாரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றால் உங்கள் மத்தியில் இது போன்று எழுதி எஸ்.கே. குறைத்துக் கொள்ள வேண்டும். எஸ்.கே.வுக்கு ஆரம்ப காலத்தில் இந்த நுட்பம் தெரியாமல் நிறைய மாட்டியிருக்கிறான். மற்றவர்களிடம் பேசி அதன் மூலம் மனபாரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இறங்கினால் அதன் அவ்வளவு ஆபத்தையும் பேசித் தீர்க்க நினைத்தவர் அனுபவிக்க வேண்டும். அது அநாவசியம்.
            எஸ்.கே. இதை அனுபவித்துப் புரிந்து கொண்டவன். நீங்கள் இதை படித்த மாத்திரத்திலே புரிந்து கொள்ளுங்கள். எஸ்.கே. பட்டதே இந்த ஒட்டு மொத்த உலகுக்கும் போதும்.

*****

பிடித்தமான குறிப்பு

பிடித்தமான குறிப்பு
            எஸ்.கே. யார்?
            அவன் ஒரு மாயவாத எதார்த்த புனைவியலாளன்.
            அவன் முகவரி?
            யாருக்குத் தெரியும்.
            அவன் எப்படி இருப்பான்?
            எப்படி வேண்டுமானால் இருக்கலாம். அப்படி ஒருவன் இல்லாமல் கூட இருக்கலாம். அநேகமாக நீங்கள் கூட எஸ்.கே.வாக இருக்கலாம். நான் கூட எஸ்.‍கே.வாக இருக்கலாம். எல்லாம் இருக்கலாம்தான். இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
            காணாமல் போனவர்கள் பட்டியலில் கணக்கெடுத்து தேடிக் கூட பார்க்கலாம். எஸ்.கே. உங்கள் கையில் சிக்குவதோ, சிக்காமல் போவதோ உங்கள் முன் ஜென்ம புண்ணியம்.
            அது கிடக்கட்டும். இங்கு விசயம் அதுவல்ல. எஸ்.கே. எழுதிய குறிப்புகளில் பிடித்தமான ஒன்று -
            "முற்போக்கான எண்ணங்கள் தரும் தெளிவே அலாதியானதுதான். தன்னுடைய கருத்துகளை வெளியிட யாரும் அஞ்ச வேண்டியதில்லை!"

*****

ஒரு வன்கொடுமையாளன் குறையட்டும்!

ஒரு வன்கொடுமையாளன் குறையட்டும்!
            மனம் ஆணி அறையும் ஒரு சுவரைப் போன்றதன்று. மனப்பாடம் என்ற பெயரில் நம் வருங்காலத் தலைமுறையை அதைத்தான் அறையச் செய்து கொண்டிருக்கிறோம்.
            சாதாரணமாகப் படித்தாலே அவர்கள் வாங்கப் போகும் மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்கள் வாங்குவார்கள். இது விசித்திரமாகத் தோன்றலாம். உண்மை அதுதான்.
            ஆக, செய்ய வேண்டியது என்பது எதுவுமில்லை. இயல்பாக இருப்பதே போதுமானது. சாதாரணமாகச் செய்வதே போதுமானது. இது படிப்புக்கு மட்டுமல்ல. எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.
            அநாவசிய முயற்சிகள், அதிகப்படியான முயற்சிகள் போன்றவை தேவையில்லாத பின்விளைவுகளை உண்டாக்குகின்றன.
            இயல்பாக இரு. இருப்பில் இரு. என்ன கிடைக்க வேண்டுமோ கிடைக்கும். அது உனக்கு ஏற்றதாகவும் இருக்கும். அதற்கு மாறாக சுற்றத்தைப் பார்த்து, அக்கம் பக்கத்தைப் பார்த்து பிடிவாதம் எனும் கயிற்றில் மனதைக் கட்டி ஆசைகளுக்கு நெய்யூற்றிப் பார்த்தால் நாம் பெற்ற பிள்ளைகளை நாமே வன்கொடுமைக்கு ஆளாக்கிய பழிக்கு ஆளாவதைத் தடுக்க முடியாது.

*****

மனிதம் முக்கியம் வருங்கால மருத்துவர்களே!

மனிதம் முக்கியம் வருங்கால மருத்துவர்களே!
            மூளையில் ஆணி வைத்து அடிப்பது போல இன்றைய பாடப்புத்தகங்களைப் குருட்டுப் பாடம் அடித்து படிப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தச் செய்யும். பாடப்புத்தகம் சார்ந்த அனைத்து முயற்சிகளும், முன்னெடுப்புகளும் மனப்பாடம் சார்ந்த முயற்சியில் மட்டும் இறங்கச் சொல்வதாக இருக்கிறது.
            எந்தப் பிடிவாதமான முயற்சிகளுக்கும் பின்னால் ஓர் ஆசை இருக்கிறது. இந்தப் பிடிவாதமான முயற்சிகளுக்குப் பின் இருக்கும் ஆசை பெரும்பாலும் டாக்டர் சீட் என்பதாக இருக்கிறது.
            எந்த முயற்சியும் மிதமான முயற்சியாக இருக்க வேண்டும். எந்த செயலும் மிதமான செயலாக அமைய வேண்டும். எந்த சொல்லும் மிதமான சொல்லாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவும் மிதமானதாக இருக்க வேண்டும். இயல்பாக செயல்படுவதற்கு அதுவே வசதியானது.
            எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்குத்தான் முயல வேண்டும். அளவைத் தாண்டும் போது அதற்கான மோசமான பின்விளைவுகளையும் சம்பந்தபட்டவர் அனுபவிக்க நேரிடும்.
            உரிய வசதிகள், வாய்ப்புகள் இல்லாமல் மிகை முயற்சியில் ஈடுபடும் எத்தனையோ பேர்களை அன்றாடம் கடந்து செல்லும் போது, தனி ஆளாக இந்த அளவுக்குச் செயல்படும் அவர்களின் ஈடுபாட்டைப் பாராட்டும் அதே நேரத்தில் அவர்கள் அதீத மனப்பிறழ்வு போன்ற மனநிலைப் பிறழ்வுகளுக்கு ஆளாகி விடக் கூடாது என்றும் கவலையும் ஏற்படுகிறது.
            ஆசையோ கவலையை வென்று விடுகிறது. அவர்கள் அப்படித்தான் முயற்சி செய்யப் பிறந்தவர்கள் என்பது போல  தூண்டப்படுகிறார்கள்.
            எதையும் விடவும் மனிதம் முக்கியம். அதை ஒரு மெடிக்கல் சீட்டுக்காக அடகு வைப்பதா? இப்படி தன்னிலைப் புரியாமல் படிக்க வைக்கப்படுபவர்கள் டாக்டர் சீட்டுக்குப் படித்துதான் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?!

*****

நீ உன் மனதைத்தான் எதிர்கொள்கிறாய்!

நீ உன் மனதைத்தான் எதிர்கொள்கிறாய்!
            எதில் நம்பிக்கை வைக்கிறாயோ அதில் நம்பிக்கை அற்றுப் போகும் அளவுக்குச் சூழல்கள் உண்டாகும். நம்பிக்கை வைப்பதே தவறு எனத் தோன்றும். சூழ்நிலைகள் உலுக்கி எடுக்கும். நிதானமாக உன் வழியில் போய்க் கொண்டிரு. உன்னால் செய்ய முடிந்தது அது மட்டுமே.
            அதுவாக எது வந்தாலும் சரிதான். நீயாக வரவழைப்பதில்லை என்ற முடிவில் இரு.
            உன் ஐடியா உனக்குத் தோன்றுவதுதான். அது எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும்.
            இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம்? அது எப்படி வேண்டுமானால் இருக்கட்டும்.
            இனி எதுவும் எழுதாதே. பேசாதே. தேவையென்றால் ஒன்றரை பக்க அளவில் நாளொன்றுக்கு எழுது. நூற்று இருபது வார்த்தைகள் எண்ணிப் பேசு.
            முடிவாகச் சொல்கிறேன், எந்த ஒரு மாபெரும் பிரச்சனையாக இருந்த போதும், நீ உன் மனதைத்ததான் எதிர்கொள்கிறாய்.

*****

30 Jul 2017

படிப்பது குறித்து எஸ்.கே. - சில குறிப்புகள்

படிப்பது குறித்து எஸ்.கே. - சில குறிப்புகள்
            எஸ்.கே. தேர்வுக்குப் படித்த போதெல்லாம் அலட்டிக் கொண்டுதான் படித்தான். எப்படிப் படித்தாலும் மறதி என்பது இருக்கும். ஆகவே இயல்பாக படிக்க வேண்டும். இதை எஸ்.கே. தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அது எப்படியென்றால்...
            "இயல்பாகப் படி. நினைவில் இருப்பது இருக்கட்டும். அது போதும். உன் இயல்பை எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் பொறுமையாகவும், அமைதியாகவும் தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்து கொண்டிருக்க வேண்டும்.
            இதை ஒரு பயிற்சியாகச் செய்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது. மாறாக அதைத் தாண்டி ஆணவத்தோடும், தலைக்கனத்தோடும் செய்தால் விளைவுகள் சுத்த பூஜ்யம். மேதைமை என்பது தானாக வந்து பொருந்த வேண்டும். பொருந்த வைக்க முயல கூடாது. துருத்திக் கொண்டிருக்கும்.
            எந்தச் சிக்கல் என்றாலும் தலைக்கனத்தையும், ஆணவத்தையும் விட்டாலே அந்தப் பிரச்சனை ஒன்றுமில்லாமல் போய் விடும். அதைத்தான் விட முடியாது. அப்படியென்றால் சிக்கலும் விடாது பிடித்துக் கொண்டிருக்கும். தப்பிப்பதற்கு மார்க்கமில்லை."

*****

அனுபவங்களின் குரூரங்கள்

அனுபவங்களின் குரூரங்கள்
            எது நடந்தாலும் மனதளவில் பொறுமையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். பொறுமையின் சக்தி அது.
            நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் போதும். அதுவே அவர்கள் நம்மை இழிவு படுத்துவதற்குப் போதுமானது. அடைவது, பெறுவது குறைவாக இருந்தாலும் தற்சார்பாக இருக்கப் பழக வேண்டும். தன்மானத்திற்கு அதுதான் வழி.
            காலைச் சாப்பாட்டை எஸ்.கே. ஹோட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டதன் மூலம், காலை உணவுக்காக வீட்டில் தொல்லை கொடுப்பது நின்று போனது. அது பல பிரச்சனைகளைத் தடுத்தது.
            அண்மையில் அவனுக்கு பதினோரு மணியளவில் டீ வைத்துக் குடிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், சில நாள்கள் வரை அவனே டீ வைத்துக் குடிக்க ஆரம்பித்தான். கடைசியில் அது சிக்கலில் முடிந்தது. வீட்டில் இருப்பவர்களுக்கு காபி பிடிக்கும். எஸ்.கே. காபியை விட்டு டீக்கு மாறும் போது இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழுந்து விடுகின்றன. கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கலாம். பிரச்சனை பூதாகரமாக எழக்கூடியது என்பதை நீங்கள் எஸ்.கே.வின் வீட்டில் அருகில் இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும்.
            எஸ்.கே.யின் மாற்றம் வீட்டில் இருப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அவர்கள் எஸ்.கே.வைத் தாக்குவதற்கு நேரம் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். சரியான நேரம் கிடைக்கும் போது பாய்ந்து விடுகிறார்கள். அவனிடம் உதவி கேட்பது போல கேட்டு, அவனால் செய்ய முடியாத இயலாமையை ஒரு சாக்காக வைத்து தாக்குதலைத் தொடங்கி விடுகிறார்கள்.
            ஒரு நாய்க்கு கஞ்சித் தண்ணியை வைப்பது போல எஸ்.கே. முன் கஞ்சித் தண்ணியை வைப்பதைப் பார்க்கும் போதுதான் எஸ்.‍கே.யின் மனவெக்கையை உணர முடிகிறது. மறுநாளே எஸ்.கே. டீ வைப்பதை நிறுத்தினான். எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன.
            இதிலிருந்து எஸ்.கே. விளங்கிக் கொண்டது,
                        "நல்லதே என்றாலும் யாரும் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள அவ்வளவு சீக்கிரத்தில் சம்மதித்து விட மாட்டார்கள். அவர்கள் அப்படியே சம்மதித்தாலும் தங்களின் அடிமனதில் ஒரு காழ்ப்புணர்வைச் சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒருவரின் மனநிலை, சூழ்நிலையை மாற்ற முயல்கிறேன் என்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் முதல் அடி மாற்ற முயல்பவர்களுக்குத்தான் விழும்."

*****

கோபம் - ஒரு புதிய பார்வை

கோபம் - ஒரு புதிய பார்வை
            கோபம் என்பது தேவைதானா? அவர்கள் அவர்களின் சுபாவத்தின் படி இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் மனநிலையை மாற்றுவதை அனுமதிக்க மாட்டார்கள். நமக்கோ கருதிய கருமம் கைகூட வேண்டும். அந்தக் கருமத்திற்காக அவர்களை மாற்ற நினைத்தால், அவர்களின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டியதுதான். ஒவ்வொன்றும் அதனதன் நோக்கில் செல்லவே விரும்பும். அதை திசைமாற்றி இத்திசையில் செல் என்றால் அது முதலில் கோபப்படவே செய்யும். பதிலுக்கு நாமும் கோபப்பட வேண்டியதுதான்.
            எப்படிப் பார்த்தாலும் வன்முறை நியாயமற்ற செயல். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களின் உலகமே தனி. அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களிடம் மேலும் உரையாட வேண்டும். உரையாடும் வெளியின் வாயிலாகத்தான் அவர்களை மாற்ற வேண்டும்.
            நாம் கோபப்பட்டு அடித்து மாற்ற நினைக்கிறோம். ஒருவேளை அதை விட அற்புதமான மாற்றத்தை படைக்க பிறந்திருப்பார்களானால் நாம் செய்யும் மாற்றம் அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகி விடும். ஆகவே அது வேண்டாம்.
            அவர்களின் ஒழுங்கீனங்களை நோக்கத் தெரியாதவர்களே அவர்களின் மீது கோபப்படுகிறார்கள். அவர்களை அடிக்கிறார்கள். அவர்களாக மாறுகிறார்கள். நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். அவர்கள் மாறா விட்டாலும் பரவாயில்லை. அவர்கள் அப்படி ஒரு ஜீவனாக இந்த உலகில் இருக்க யாதொரு தடையும் இல்லைதானே.

*****

கோபம் எனும் மாயை

கோபம் எனும் மாயை
            எஸ்.கே. சிறு சுடுசொல் பொறுக்க மாட்டான். பந்தாடி விடுவான். இப்படிப்பட்ட சூழலில்தான் எஸ்.கே.யுடன் இணைந்து வாழ வேண்டி இருக்கிறது எம்.கே.வுக்கு. இதற்க ஒரே வழி எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவதுதான். அப்படித்தான் இருந்தான் எம்.கே. திடீரென்று கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. கோபம் இப்படித்தான் ஒரு பொறுப்பை உருவாக்குவது போலக் காட்டி மாட்டி விட்டு விடும்.
            நேற்று ஆரம்பித்த பிரச்சனை. டீக்கடையில் ஒருவனை எம்.கே. அடித்ததில் ஆரம்பித்தது. பொதுவாக யாரையும் அடிக்கக் கூடாது என்ற கொள்கையில் இருந்த எம்.கே. எப்படி மாறினான் என்றே புரியவில்லை. ஆனால் இந்தக் கோபத்திற்குக் காரணம், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிடிமானங்களே. அதை மீறினால் மனம் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபப்பட்டு விடுகிறது. அது எப்படியாவது இருந்தால் என்ன? அப்படி இருந்து விட்டால், கோபம் ஏற்படப் போவதில்லை. அப்படி இருக்க முடியவில்லை.
            கட்டுபாடுகள், நிபந்தனைகள், நிர்பந்தங்கள் இவைகள் எல்லாம் கோபத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிச்சயம் அவைகள் மீறப்படும் போது அதை தாங்க இயலாது. ஏதாவது நடவடிக்கை எடுக்கத் தோன்றும். அதில் முதல் நடவடிக்கையாக கோபம் ஏற்படும். இப்படித்தான் அதீத கோபங்கள் ஏற்படுகின்றன.
            கோபப்படுவதால் நிலைமை மாறி விடும் என்று எம்.கே. நினைக்கலாம். நிலைமை மாறுவதில்லை. எப்படி மாறும்? யார் தங்கள் மனநிலையை விட்டுத் தருவார்கள்? அதுவும் எஸ்.கே. நடக்குமா?
            எம்.கே. கோபப்படுகிறான் என்று தெரிந்தாலே, எஸ்.கே.வுக்கு ஒரு பிடிவாதம் வந்து விடும். ஒருவரது பிடிவாதம் ஒருவரது கோபத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறையச் செய்யாது. பிடிவாதம் மேலும் வலுத்துக் கொண்டே போகும். கோபமும் வலுத்துக் கொண்டுதான் போகும்.
            கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே, சில நேரங்களில் விபரீதமாக ஏதாவது நடந்து விடுவதுண்டு. ஆகவேதான் எத்தகைய பலன் தருவதாக இருந்தாலும் கோபப்பட வேண்டாம். கொஞ்சம் காத்திருந்தால் போதும், கோபத்தால் அடையும் பலனை எந்த வித நட்டமும், எதிர்மறை விளைவுகளும் இல்லாமல் பெற்று விட முடியும். தேவை கொஞ்சம் பொறுமைதான்.
            கோபத்திற்குச் சிறந்த மருந்து பொறுமைதான். பொறுமையின் பலன் கோபத்தின் எதிர்மறை விளைவுகள் இல்லாமல் பலனைப் பெறுவதுதான். ஆகவேதான் பொறுமை உயர்ந்த சக்தியாக இருக்கிறது.
            எம்.கே.வையே எடுத்துக் கொள்ளுங்கள். எம்.கே. கோபப்பட, எஸ்.கே.யின் பிடிவாதம் இறுகுகிறது. எம்.கே. இளகினால், எஸ்.கே. உருகி விடுகிறான். எஸ்.கே. இளகுகிறானோ இல்லையோ, எம்.கே.வின் இதயத் துடிப்பு எகிறி, உடல் நலம் பாதித்து தேவையா இதெல்லாம்? வாழ்விற்குத் தேவை எதுவோ, அது கோபமின்றி இருப்பதில்தான் இருக்கிறது.

*****

கோபம் நின்றது!

கோபம் நின்றது!
            எஸ்.கே. இன்று காலை கோபப்பட்டான். அவன் குழந்தைகள் பள்ளிக்கூடம் கிளம்ப அடம் பண்ண ஆரம்பித்ததில் ஆரம்பித்த கோபம். இப்போது வரை நின்றபாடில்லை. இதனால்தான் அவன் கோபப்படுவதை விரும்புவதில்லை.
            எல்லா கோபமும் கோபம் கொண்டவனை அழித்த பின்தான் நிற்கின்றன.
            கோபப்படும் போது அர்த்தமுள்ளதாகப் படும் உணர்வு, கோபம் வடிந்த பிறகு அர்த்தமற்றதாகி விடுகிறது. அதற்கு எந்தப் பொருளும் இருப்பதில்லை. ஆனால் அது ஏற்படுத்திய வடுக்கள் தீராத ரணத்தைக் காலந்தோறும் தந்து கொண்டே இருக்கின்றன.
            அடக்கி வைக்கப்படும் விசயங்கள் கோபத்தில் பூதாகரமாக எழுகின்றன. இதனால் ஒரு விசயத்தில் முன்னேயும் செல்ல முடியாது. பின்னேயும் செல்ல முடியாது. எங்கு சென்றாலும் முட்டிக் கொள்ள வேண்டியதாக இருக்கும். சுற்றி இருப்பவர்களின் பேச்சுகளும், முடிவுகளும் படு குழப்பமாக இருக்கும்.
            கோபமாக இருக்கும் எஸ்.‍கே.யின் நிலைமை இப்படி என்றால் எதிர்தரப்பினர் நிலை பாவம்தான். அவர்கள் இதுநாள் வரை பைத்தியம் ஆகாமல் இருந்தது ஆச்சர்யம்தான்.
            எஸ்.கே. நினைத்துப் பார்த்தான், "கோபத்தால் என்னவாகப் போகிறது, என் பிராணன் போவதைத் தவிர?"
            இதற்கு மேல் கோபப்பட்டால், எல்லாரும் தன் மேல் கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள் என்பது எஸ்.கே.வுக்குத் தெரியும். தானாக நிறுத்திக் கொள்வதைப் போல் நிறுத்திக் கொண்டான்.
            "ஹய்யோ! இவ்வளவு சீக்கிரத்தில் கோபத்தை நிப்பாட்டிக்கிட்டாரே!" எஸ்.கே.வைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுவதைப் போல் நடிக்க ஆரம்பித்தார்கள்.

*****

29 Jul 2017

கவலைகள் கவலைப்படட்டும்!

கவலைகள் கவலைப்படட்டும்!
            பல வேலைகளைச் செய்யும் நிலை ஏற்படும் போது, முடியாது என்று துணிந்து சொல். உன் மரியாதை அதனால் அதிகமாகுமே தவிர குறையாது.
            மாறாக நீ பல வேலைகளை ஒப்புக் கொண்டு ஈடுபட்டால், அதனால் உன் வேலை தரம் குறைந்து உன் மேல் உள்ள மரியாதை குறையுமே தவிர அதிகமாகாது.
            எஸ்.கே. இதில் கெட்டிக்காரன். தன் எழுத்தை இன்னொன்று ஏன் தீர்மானிக்க வேண்டும் என்று என்ன அவசியம்? என்று கேள்வி கேட்டவன் அவன். இன்னொன்று தீர்மானித்து தன் படைப்புகள் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அவசியம் அப்படி என்ன வந்து விட்டது? என்று உரத்த குரல் எழுப்பிய ஆத்மா அவன்.
            தனக்குள் இருக்கும் படைப்பாளன் என்ன சொல்கிறானோ, அதை மட்டும் எழுத நினைக்கிறான் அவன். படிப்பார்தான் யாருமில்லை.

*****

பொங்கிப் பிரவகிக்கும் போதனைச் சுடர்கள்

பொங்கிப் பிரவகிக்கும் போதனைச் சுடர்கள்
            எது நடந்தாலும் ஓ.கே.தான் என்ற மனநிலை வந்து விட்டால் உன்னை யாரும் அசைக்க முடியாது. ஒன்று நடப்பதற்கு நீ காரணம் அல்லாத போது, அது நடந்தால் நீ என்ன செய்ய முடியும்? எதாவது நடந்து விட்டுப் போகட்டும் என்ற முடிவுதான் இந்த விசயத்தில் நல்லது.
            அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதுவே விசம். நீ குடிக்கும் காபியில் நீயே கலந்து கொள்ளும் விசம். இயல்பாக என்ன செய்ய வருகிறதோ செய். காபியில் கலக்கும் சர்க்கரை அது.
            உன் மனதைப் பாதிக்கும் மற்றொரு விசயம், பலன் கிடைக்காமல் போனால் என்னாகும் என்ற எதிர்மறை எண்ணம்தான். அப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டு விட்டால் விசயம் தொலைந்தது. நடப்பது உன் கையில் மட்டும் இல்லை. எது வேண்டுமானால் நடக்கலாம். நீ எதுவும் செய்ய முடியாது.
            பொதுவாக எஸ்.கே.யின் புத்தகங்களில் இல்லாத தீர்வுகள் இல்லை. அதை படிக்க வேண்டும். அதையும் தாண்டி அவனது போதனைகள் மனதின் துயரங்களை அழித்து விடும்.
            உனது துன்பங்களின் வேர் நீதான். அது கீழே முளை விட்டு வளர வளர துன்பம் எனும் கிளைகள் பசுமையாக பரவுகின்றன. நீ உன்னை வெட்டி விடு. நான் எனும் செருக்கை அழிக்க வேண்டும் என்பதை எஸ்.கே. இப்படித்தான் போதித்துக் கொண்டு இருக்கிறான். இப்போது உங்களுக்கு விசயம் புரிந்திருக்குமே!

*****

பாவப்பட்ட மனமுடைய மனிதர்களுக்கு...

பாவப்பட்ட மனமுடைய மனிதர்களுக்கு...
எஸ்.கே.யின் சுய பிரசங்கங்களுள் ஒன்று இது -
            நீ எதற்காக ஒன்றைச் செய்கிறாய்? அதன் மூலம் நீ யார் என்பதை காட்ட விரும்புகிறாய். உன் புகழை நீ நிலைநிறுத்த விரும்புகிறாய். உன் ஆணவத்தை மேலும் உரம் போட்டு வளர்க்க நினைக்கிறாய். அதற்குத்தான் நீ ஒன்றைச் செய்ய நினைக்கிறாய். எதைச் செய்தால் நீ நீயாக இருப்பாயோ, அதை மட்டும் செய். மற்ற அநாவசியங்கள் தேவையற்றது.
            நீதான் தோளில் போட்டு எல்லாவற்றையும் சுமப்பதாக நினைத்தால் தொலைந்தாய். அதற்கேற்ற அவ்வளவு இறுக்கத்தையும் நீதான் சுமக்க வேண்டும். அப்படி எண்ணமிருந்தால் விட்டு விடு.
            எஸ்.கே. ஆகிய என்னையே எடுத்துக்கொள். நான் பாட்டுக்கு எப்படியாவது இருந்து விட்டுப் போகிறேன் என்று விட்டு விட்டால், எந்தப் பிரச்சனையும் இல்லை. அதை இப்படி அப்படி என்றெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தொலைந்து விடுகிறேன். கூடவே ஓர் எதிர்பார்ப்பும் உருவாகிறது. அந்த எதிர்பார்ப்பின் படிதான் நடக்க இருப்பது நடக்க வேண்டும் என்று மனம் பிரியப்படுகிறது. ஆனால் நிதர்சனம்? அப்படி நடக்காது. அதை நினைத்துப் பார்க்க மனம் விரும்புமா? மனதுக்கு அது ஒரு பாரம். மனம் பாவம்.
            நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்தால் வாழ்வில் உன்னை எந்தத் துன்பமும் நெருங்காது. துன்பங்களைத் தூள் தூளாக்கும் வல்லமை வேலைக்கு உண்டு. வேலையில் ஆழ்ந்து விட்டால் நீ உன்னையே மறந்து விடும் போது, துன்பங்களையா நினைவில் வைத்துக் கொண்டு இருப்பாய்?

*****

நாயடி பேயடி டெக்னிக்

நாயடி பேயடி டெக்னிக்
            "போனால் போகட்டும் போடா!" என்பது அற்புதமான வார்த்தை மருந்து. மனதால் எதை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாலும் அதில் முன்னேற முடியாது. பிரேக்கைப் பிடித்துக் கொண்டு அதே நேரத்தில் ஆக்சிலேட்டரையும் திருகி விட்டபடி வண்டி ஓட்டுவதைப் போல அது ஓர் அவஸ்தை. நீ எதைப் பிடித்து இருக்கிறாயோ, அதை விலக்கி வைத்திருக்கவும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
            எஸ்.கே.யின் வழக்கு ஒன்றில் அவன் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்து போது அவனுக்கு மன இறுக்கமும், மன உளைச்சலும்தான் ஏற்பட்டது. அதுவே என்னவாக வேண்டுமானால் ஆகட்டும் என்று நினைத்து போது அவன் அதிலிருந்த விடுபட்டு விட்டான். ஆக இங்கு இறுக்கிப் பிடிப்பது எதிரியல்ல. அவரவர் மனம்தான். அவரவர் மனமே அவரவரையும் கழுத்தை இறுக்கிப் பிடிப்பது போல நெருக்கிப் பிடிக்கிறது என்பது உண்மை.
            "பிடிவாதமாக ஒரே கருத்தில் நிற்பது நல்லதல்ல. ஏனென்றால் நீ பிடியை இறுக்க இறுக்க, அதுவே உனக்கு சுருக்குக் கயிறாக மாறும்.
            இன்னும் சொல்லப் போனால், நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. நீ எதையாவது செய்ய செய்ய அது பிரச்சனையாக மாறும். நீ பாட்டுக்கு இரு. பிரச்சனை அது பாட்டுக்கு ஒரு பக்கத்தில் கிடக்கும்." எஸ்.கே. இப்படி அந்த அனுபவத்தை டைரியில் குறித்துக் கொண்டான்.
            பிரச்சனையை இப்படித்தான் எஸ்.கே. நாயடி, பேயடி அடித்து தப்பித்துக் கொண்டிருக்கிறான். உங்களுக்கும் உதவலாம் என்றால் எஸ்.கே.யை பாலோ பண்ணுங்கள். வேண்டாம் என்றால் படிப்பதோடு விட்டு விடுங்கள். என்ன மோசமாகப் போய் விட்டது!

*****

மந்திர தந்திர வாசகம்

மந்திர தந்திர வாசகம்
            "கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே." எஸ்.கே. அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வாசகம். எஸ்.கே.வுக்கு மிகவும் பொருந்தக் கூடிய வாசகம். எஸ்.கே. நிறைய எழுதியிருக்கிறான். பிரசுரம் ஆனவை சொற்பம். அப்போது ஏற்பட்ட மனசிக்கல்களை மேற்கண்ட வாசகத்தைக் கொண்டுதான் சரிசெய்து கொண்டிருந்திருக்கிறான்.
            பலன் கிடைக்குமா?
            பலன் கிடைக்காதா?
            பலனை அடையாமல் போய் விடுவேனோ?
            பலனைப் பாராத துரதிர்ஷ்டசாலியாய் ஆகி விடுவேனோ? என்று எஸ்.கே. பல நேரங்களில் பல விதமாக கலங்கியிருக்கிறான். அவனுக்கு பலவற்றிற்கும் அந்த வாசகத்தில் விடை இருக்கிறது.
            எஸ்.கே. மேலும் கூறுவது என்னவென்றால், "மனதில் எழும் கருத்துகள் பல விதம். மனதில் எழும் எந்தக் கருத்துகளும் உண்மையானது இல்லை. அடுத்தவர்கள் தூண்டி விடுவதால் ஏற்படும் கருத்துகளே. அவர்கள் உணர்வைத் தூண்ட முயல்கிறார்கள். அதை தாறுமாறாக செய்து விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் மீன் பிடிக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்."
            எல்லா பிரச்சனைகளும் கற்பனைவாத பிரச்சனைகள் எனும் போது, எஸ்.கே. ஆறுதல் கொள்ளும் "கடமைச் செய், பலனை எதிர்பாராதே!" என்ற வாசகம் கன கச்சிதமாக அவனுக்குப் பொருந்திப் போய் விடுகிறது. இதுவும் எஸ்.கே. சொன்னதுதான். முதல் வரிக்கும், கடைசி வரிக்கும்தான் எவ்வளவு முரண்பாடு. அதுதான் எஸ்.கே. அதுதான் எஸ்.கே.யின் டச்.

*****

28 Jul 2017

அம்பலமாகும் ரகசிய விதிகள்

அம்பலமாகும் ரகசிய விதிகள்
            எதையும் போட்டு அலட்டிக் கொண்டு இருக்காதீர்கள்.
            சமூகக் கட்டுபாடுகள்,
            ஒழுக்க நியதிகள்,
            குற்ற உணர்ச்சி,
            வெற்றி குறித்த சந்தேகங்கள்,
            தோல்வி குறித்த அச்சங்கள் - இப்படி அலட்டிக் கொள்வதற்கு ஆயிரம் விசயங்கள். இவைகள்தான் மனதைப் பிறழச் செய்கின்றன. எளிமையாக இருந்து விட்டால், இவைகளால் மனிதனை எதுவும் செய்ய முடியாது என்பது ரகசியம்.
            தைரியமாக இருங்கள். எப்போது உங்களால் தைரியமாக இருக்க முடியவில்லையோ, கொக்கிகள் மேல் கொக்கிகள் போடுவது போல, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறுங்கள். அதற்காக அஞ்ச வேண்டாம். அந்த அச்சம்தான் தைரியமிழக்கச் செய்யும் முதல் காரணி. அதே சமயத்தில் அர்த்தப்பூர்வமாகக் கேள்வி கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
            ஒரு சிறிய மற்றும் பெரிய பின்குறிப்பு என்னவென்றால், ஒவ்வொரு சின்ன விசயத்திற்கும் நீங்கள் எப்படி முடிவெடுக்கிறீர்களோ, அதுவே பெரிய விசயங்களிலும் பிரதிபலிக்கிறது. உங்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அப்படியே மற்றவர்களிடமும் நடந்து கொள்கிறீர்கள்.
            மேற்குறித்தத் தகவல்கள் அனைத்தும் எஸ்.‍கே.யிடமிருந்து ரகசியமாக உரையாடிக் கறக்கப்பட்டவைகள். பொதுமக்கள் நலன் கருதி அம்பலமாக்கப்படுகிறது.

*****

ஓட்டை வழிக் கோட்டைகள்

ஓட்டை வழிக் கோட்டைகள்
            கொலையில் முடியும் குரூரங்களை இப்போதெல்லாம் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. நடுரோட்டில் வைத்து வெட்டுகிறார்கள். முக்கிய சாலையில் அமைந்திருக்கும் பிராய்லர் கடையில் வெட்டுப்பட்டு சாகும் கோழிகளைப் போல வெட்டுப்பட்டுச் சாகிறார்கள் மனிதர்கள்.
            வெட்டிச் சாய்ப்பதற்கும், உயிரை எடுப்பதற்கும் கூலிப் படைகள் இருப்பதாகப் பரவலான பேச்சு அடிபடுகிறது. இதற்குமா படைகளுண்டு என்று அப்பாவியாய்க் கேட்பவர்களைப் பார்த்து பெரிய ஜோக்கைச் சொல்லி விட்டதாய்ச் சிரிக்கத்தான் முடிகிறது.
            கோபம், பழிவாங்கல், உக்கிரம், பொறாமை மற்றும் அடக்க முடியாத உணர்ச்சிகளின் வடிகால்களாக இப்படிப்பட்ட கொலைகள் நிகழ்த்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.
            இப்படிக் கொலையை நிகழ்த்திப் பார்ப்பவர்கள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக அவர்களே மக்கள் தலைவர்களாக மாறும் அவலத்தை இன்றைய சிவில் சமூகம் எதிர்கொண்டு வருகிறது.
            ஒரு கொலையை நிகழ்த்திவிட்டு ஒருவன் சமூகத்தின் தலைமைக்கு வர முடியும் என்றால், சமூக ஒழுங்கைக் காப்பதற்கான அமைப்புகளிடம் இருக்கும் மாபெரும் ஓட்டையை யாரும் மறுக்க முடியாது.
            அது ஓட்டையாகவே நீடிக்குமானல், தவறு செய்து தலைவர்களாக ஆகுபவர்களுக்கு அதுவே கோட்டையாகவும் அமையும்.
            உடனடியாக அடைக்கப்பட வேண்டிய ஓட்டைகள் அடைக்கப் படாவிட்டால் கப்பல் மூழ்கி விடும். மூழ்கிக் கொண்டிருக்கின்ற கப்பலில் நாம் தத்தளித்துக் கொண்டிருப்பதைத் தாமதமாகவேனும் நாம் உணர மறுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை என்ன சொல்வது?

*****

ரைட்டரின் இயல்புகள்

ரைட்டரின் இயல்புகள்
            தான்தோன்றித் தனமாக எழுதுவதில் ஓர் இன்பம். எழுத்தின் மாய வலையில் சிக்கியிருக்கிறான் எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளன்.
            சிலந்தி வலையை வீசி மீன் பிடிப்பதும், தூண்டிலை வீசி மலையைப் பிடிப்பதும் எஸ்.கே.யின் எழுத்தெனும் மாய மந்திர ஜாலத்தில் சிறுநீர் கழிப்பதைப் போல் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுபவை.
            மானுடப் பிறவியினத்தை மாற்றப் பிறந்தவன் எஸ்.‍கே. என நினைக்கும் போது அவன் அல்பதனமாக நடந்து கொண்டவைகள் நினைவில் வந்து தொலைக்கின்றன.
            மகா அல்பன்தான் அவன் என்று நினைக்கும் போது அவன் செய்த மகத்தான மகோன்னதமான காரியங்கள் முன்வந்து நிற்கின்றன.
            நாம் சீக்கிரம் சென்றால் லேட்டாகவும், லேட்டாகச் சென்றால் சீக்கிரமாகவும் வரும் பேருந்தைப் போல எஸ்.கே. புரிந்து கொள்ள முடியாத முரணின் பிள்ளை.
            எந்த நேரத்தில் எப்படி இருப்பேன் என்று தெரியாத கிறுக்கனின் நிலையில் நான் இருக்கிறேன் என்று எஸ்.கே. ஒருமுறை சொன்னதை வைத்து அவனை ஒருவாறாக அனுமனிக்காலம்.
            அந்த கிறுக்குத்தனம்தான் எஸ்.கே.விடம் உங்களுக்கும், எனக்கும் பிடித்தது. நம்மால் கிறுக்காக ஆக முடியாது என்பதால் எஸ்.கே.வின் கிறுக்குத்தனங்கள் பிடித்துப் போகின்றன.
            நாம் பண்ண விரும்பும் பல கிறுக்குத்தனங்களை எஸ்.கே. செய்வதாலயே அவனை உற்று கவனிக்க வேண்டியதாகிறது. வெளியே குதித்த நம்முடைய நிர்வாண மனம் போல் இருக்கிறான் எஸ்.கே.

*****

முதலில் அரசியலுக்கு வரப் போவது ரஜினியா? கமலா?

முதலில் அரசியலுக்கு வரப் போவது ரஜினியா? கமலா?
            சூப்பர் ஸ்டார், உலக நாயகன் - இருவருமே குழப்படியாகப் பேசுவதில் வல்லவர்களாக இருப்பதால் இருவருக்குமே அரசியலுக்கு வருவதற்கான தகுதி இருக்கிறது.
            அரசியலைப் பொருத்த வரையில் ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். வேறொன்றைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அதை இருவருமே சமத்தாக செய்து கொண்டிருப்பதால் இருவருமே தற்போதைய சூழ்நிலையில் பகுதிநேர அரசியல்வாதிகள்தான்.
            இந்த இருவரில் யார் முந்திக் கொள்கிறார்களோ, அவருக்கு அரசியல் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மற்றவர் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது.
            சினிமாவைப் போல் இருவருக்கும் சரிசமமான இரு இடங்களைக் கொடுக்காது அரசியல். ஒருவரைத் தூக்கி விட்டு, மற்றொருவரை அதள பாதாளத்திற்குத் தள்ளி விட்டு விடும்.
            கமலா? ரஜினியா? யார் முதல் என்றால்... எம்முடைய கணிப்பு சரியாக இருந்தால்... இருவருமே அரசியலுக்கு வர மாட்டார்கள். அப்படியே வருவதாக இருந்தாலும்... கமல்தான் முதலில் அரசியலுக்கு வருவார்.
            எஸ்.கே.யின் கருத்துப்படி கமல் மாநில அரசியலுக்கும், ரஜினி தேசிய அரசியலுக்கும் பொருத்தமானவர்கள்.
            இருவரில் யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் அது பார்த்து பழகிப் புளித்துப் போன அதே பழைய கிளைமாக்ஸ்தான்.
            பார்த்த படத்தைப் பார்ப்பதில் நமக்குதான் எவ்வளவு விருப்பம். அதை வைத்துதான் அவர்களும் இவ்வளவு நாள் பிலிம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

*****

மனச்சோர்வின் மாமருந்து

மனச்சோர்வின் மாமருந்து
            எதுவும் செய்ய முடியாதது போல் ஒரு மனச்சோர்வில் இருந்தான் எஸ்.கே. அது அப்படி இருந்தால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்கிறான். அதற்கு என்ன செய்வது? என்றும் அவன் கேள்வி எழுப்புகிறான்.
            எதுவும் செய்யாதே. ஓய்வாக இரு. இப்படிச் சொன்னால் மனம் கேட்குமா? கேட்காது. இப்போது மனமே ஓய்வாக இருக்கிறது. இருந்து விட்டுப் போகட்டும். இதுதான் எஸ்.கே. தரும் விளக்கம்.
            மனம் ஒரு அடம் பிடிக்கும் குழந்தையைப் போன்றது. கவனமாகத்தான் கையாள வேண்டும். இதுவும் எஸ்.கே. தரும் விளக்கம்தான்.
            இதன் பின்னணி என்னவென்றால்,
            எஸ்.கே. எழுதி எழுதி அலுத்து விட்டான். இதற்கு மேலும் எழுத வேண்டுமா? இப்படி எழுதுவதற்குதான் பிறப்பா? இப்படி எழுதி எழுதி எதற்காக மாய்ந்துப் போக வேண்டும்?
            ஒவ்வொன்றிலும் எழுதுவதற்கு ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். இதில் அவ்வபோது எஸ்.கே.விற்கு எழுத இடம் கொடுத்ததே பெரிய விசயம். அத்தோடு விட்டு விடு என்று எஸ்.கே. இப்போதெல்லாம் அமைதியாக இருக்கிறான்.

*****

27 Jul 2017

எஸ்.கே.யிடம் விவாதித்தல்

எஸ்.கே.யிடம் விவாதித்தல்
            நீங்கள் எஸ்.கே.யைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இப்படி அவனை நினைத்து நான் தவறு செய்வது இது முதல் முறையன்று.
            தர்க்க ரீதியாக ஒரு காரணத்தைச் சொன்னால் அதை எஸ்.கே. ஏற்றுக் கொள்வான் என்று நினைத்து விட்டேன். யாரும் அப்படி எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவரவர்கள் தங்கள் மனநிலைக்குத் தகுந்தாற் போல்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். அதைத்தான் எஸ்.கே. நேற்று நிரூபித்தான். தன்னுடைய கருத்தைச் சொல்லி, அதை அப்படியே எஸ்.கே. ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான்.
            எல்லா மனிதருக்கும் அப்படி ஒரு மனநிலை இருக்கும், தாங்கள் சொல்வதைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று. அதை அவர்கள் வலியுறுத்துவதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் சென்று வாதம் நிகழ்த்துவார்கள். அதை நான் தவறு என்று சொல்ல முடியாது.
            அப்படிப்பட்டவர்களிடம் நாம் வாதம் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் உண்மையான வாதப் பிரதிவாதம் என்பது மனநிலைக்கு அப்பாற்பட்டது. அதை மனநிலை சார்ந்து முடிவு எடுப்பவர்களிடம் போய் விவாதிக்க முடியாது. அவர்கள் விவாதத்திற்கே தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
            எஸ்.கே.யைப் பொருத்த வரையில் அப்படி விவாதத்திற்கே தகுதியற்றவன் என்று ஒரே அடியாக முடிவெடுத்து முடியாது. அப்படி முடிவெடுக்காமல் இருக்கவும் முடியாது.

*****

எழுதுவதன் சூட்சமம்

எழுதுவதன் சூட்சமம்
             எழுதுவதுதான் உன்னுடைய வேலை என்றால், எழுத ஆரம்பித்தால் போதும். எழுதுவதற்கு முந்தைய மனநிலை முக்கியமல்ல. எழுத ஆரம்பித்து வரப் போகும் மனநிலைதான் முக்கியம். மனநிலைகளை நம்பி மோசம் போக வேண்டியதில்லை. அது ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்மாதிரியாக இருக்கும். செயலைச் செய்யும் போது ஒரு மாதிரியாக இருக்கும். செயலைச் செய்து முடிக்கும் போது ஒரு மாதிரியாக இருக்கும். மாறுபட்டுக் கொண்டே இருக்கும் ஒன்றை நீ பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
            உன்னை மனதளவில் எது பயப்படுத்துகிறதோ, அதைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான் ஞானம். எழுதும் போது எதற்காகவும் பயப்படாதே. எழுதும் போது பயந்தவன் அதற்குப் பின் எழுத முடியாத நிலைக்கு ஆட்பட்டு இருக்கிறான்.
            எழுதுவதைப் பற்றி கவலையுற வேண்டியதில்லை. மறதியினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவன் எஸ்.கே. அவன் எழுதவில்லையா? எதற்காகவும் அவன் எழுதுவதை விட்டு விடவில்லை. தன்னால் படிக்க முடியாத மனநிலைகளில் அவன் எழுதி எழுதியே படிக்கிறான். அவைகளையும் அவன் தன்னுடைய எழுத்துகளைப் போலதான் நினைத்துக் கொள்கிறான். எஸ்.கே.யைக் கேட்டால் எழுதி எழுதி படிப்பதுதான் என் முறை என்பான். தேவை பயிற்சியும் முயற்சியும்தான். எஸ்.கே. அடிக்கடி உதிர்க்கும் பொன்மொழியும் அதுதான்.

*****

பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி

பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
            எஸ்.கே.யைப் பொருத்த வரையில் அவன் முயற்சி செய்து அடைந்த விசயங்கள் குறைவு. அதுவாக எதாவது நடந்த சம்பவங்கள்தான் அதிகம். எல்லாவற்றிலும் அப்படி ஏதாவது நடந்தால்தன்.
            பிரச்சனையே அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஏன் அப்படி நடக்க வேண்டும் என்று எஸ்.கே. எதிர்பார்க்கிறான்? எப்படியாவது நடந்து விட்டுப் போனால் என்ன? அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொண்டால் என்ன?
            சில விசயங்கள் அப்படித்தான் நடக்கும். அதற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாது. அதற்கு தான்தான் ஜவாப்தாரி என்று எஸ்.கே. நினைப்பதால்தான் பிரச்சனையே. தான் அதற்குப் பொறுப்பாவதாக நினைப்பதுதான் எஸ்.கே.யின் பிரச்சனையின் ஆதிமூலம்.
            அதே நேரத்தில் எஸ்.‍கே.விற்குத் தெரியாமல் இல்லை, எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அசையாமல் இருப்பவர்கள் பிரச்சனையை வென்று விடுவார்கள் என்பது.

*****

எஸ்.கே.க்கு ஏற்படும் பிரச்சனைகள்

எஸ்.கே.க்கு ஏற்படும் பிரச்சனைகள்
            நிறைய விசயங்கள் எஸ்.கே.யிடம் சொல்ல மறுக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது. அவைகள் தெரிந்தால் எஸ்.கே. அது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறான். நினைக்கிறான்தான். முடிவுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டால்தான். ஆக நிறைய விசயங்களில் விதியின் கை வலிமையானது. ஏன் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்? இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதற்கான பதில் விதிதான். ஏனெனில் அவர்களைக் குறை சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வந்து விடும்.
            எல்லாரும் அவரவர்களின் மனப்போக்கின் அடிப்படையில்தான் நடக்கிறார்களே தவிர, யாரும் எஸ்.கே.யின் எந்தக் கருத்தையும் கேட்பதில்லை. எஸ்.கே. ஒரு தத்துவ ஞானியைப் போல பதில் சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறான். யார் பிரச்சனையைச் சொல்கிறார்களோ, அந்தப் பிரச்சனையாக மாறி பதில் சொல்லக் கூடாது. அல்லது அவர்களாக மாறி பதில் சொல்லக் கூடாது. பிரச்சனை என்பது தற்காலிகத் தோற்றம்தான். அதே தோற்றத்தில் அது எப்போதும் இருக்கப் போவதில்லை. அந்த வடிவத்தை அது மாற்றிக் கொண்டே இருக்கும். ஆக,ஒவ்வொரு பிரச்சனைக்கும் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்க முடியுமா?
            முடிவுகளை அவரசப்பட்டு எடுக்க வேண்டாம். இதைச் செய் என்று அவசரப்பட்டு சொல்ல வேண்டாம். ஏனென்றால் இங்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் அவசரம் மற்றும் இதை இப்படிச் செய், அப்படிச் செய் என்று சொல்வதால் ஏற்படும் பிரச்சனைகளே. எல்லா முடிவுகளும் தானாக ஏற்படும். எல்லா பிரச்சனைகளும் தானாக ஒரு முடிவுக்கு வரும்.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...