30 Jun 2019

திறப்பு விழாவோடு மூடுவிழா!



செய்யு - 131
            மணி பத்து, பதினொன்று என்று கடந்து பனிரெண்டை நேருங்கி நிற்கிறது. இனியென்ன செய்வது என்று எல்லாருக்கும் யோசனையாக இருக்கிறது. ஆனது ஆகி விட்டது! காலைச் சாப்பாடு அவ்வளவு மீந்து கிடக்கிறது. ராத்திரிக்கு இட்டிலிகளைப் எப்படியாவது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்கிறார்கள். இட்டிலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்! ஆனால் பொங்கலை? மனசு எல்லாருக்கும் பொங்கிக் கொண்டு வருகிறது. எத்தனை நாட்கள் இப்படிப் பொங்கல் கூட இல்லாமல் பட்டினியாய்க் கிடந்திருப்போம் என்று எல்லாருக்கும் ஆற்றிக் கொண்டு வருகிறது மனசு.
            இப்போது இருக்கின்ற ஆறு பேர் வயிற்றிலும் அத்தனைப் பொங்கலையும் திணித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! வயிறு பொங்கிக் கொண்டு வந்து விடாமல் எவ்வளவு பொங்கலைத் திணிக்க முடியும்? முக்கி முக்கித் தின்று பார்த்தும் ரெண்டு வாளி பொங்கலில் கால்வாசிக் கூட காலியாகாமல் அப்படியே இருக்கிறது. இனி மதியானச் சாப்பாட்டுக்கான ஏற்பாட்டைச் செய்வதுதாம் சரியானது என்கிறார் கோவிலான். சொன்னதுதாம் வேதவாக்கு என்பது போல சமையல் மாஸ்டர் அவர் பாட்டுக்குச் சமைத்துத் தள்ளி மூன்று வட்டாவில் சாத வகையறாக்களோடு வந்து நிற்கிறார். காலையில் மீந்த சாப்பாடெல்லாம் வட்டாவிலும், வாளியிலுமாக ஓரம் கட்டியாகிறது.
            மதிய சாப்பாடும் அதே இருநூற்று ஐம்பது பேரை ரவுண்ட் கட்டி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நம்பிக்கை! மதியானத்துக்கு எப்படியும் கூட்டம் வந்து அள்ளாமலா போய் விடும்? மதியத்துக்கு ஒரு நூறு பேர் சாப்பிட்டிருப்பார்கள். பாக்கி சாப்பாடு அப்படியே மறுபடியும் மீந்து போகிறது. கோவிலான் விழித்துக் கொள்கிறார். ராத்திரி சாப்பாட்டே வேண்டாம். காலை இட்டிலிகளை அப்படியே மறுபடியும் சுட்டுப் போடுவோம் என்கிறார். விசயம் வெளியே தெரிந்தால் வருகின்ற இருபது முப்பது பேரும் மறுபடியும் கடைக்கு வர மாட்டான் என்கிறார் நந்தகுமார். அரைத்து வைத்த மாவை என்ன செய்வது? என்று கேள்வி எழுப்புகிறார் தமன்பிரகாஷ். மாவு ரொம்ப புளித்தால் தோசை போடலாம்? தோசை போடுவதற்கு கல்? இப்படி யோசனை மேல் யோசனையாகப் போய்க் கொண்டிருக்கிறது.
            இப்படியானால் எப்படி இருக்கும்?
            மீந்த சாப்பாட்டை வெளியில் கொடுத்தால் ஹோட்டலில் வியாபாரமாகவில்லை என்று பேராகி விடும் என்று பயம் காட்டுகிறார் கோவிலான். யாராவது நாலு பிச்சைக்காரர்களுக்குப் போட்டால்தான் என்ன என்கிறார் நந்தகுமார். பிச்சைக்கார ஓட்டல் என்று பேர் வந்து விடும் என்று அதற்கும் பயம் கிளப்புகிறார் கோவிலான். கெளரவமாக ஹோட்டல் நடத்துவது முக்கியம் என்கிறார் அதே கோவிலான். ஹோட்டல் அனுபவம் இல்லாததால் லெனினோ, பூரணலிங்கமோ, விகடுவோ ஒன்றும் சொல்லாமல் நிற்கிறார்கள். ஆனால் லெனினுக்குள் இப்படி ஒரு சுட்சுவேஷன் தனது படத்தில் வந்தால் அடுத்த சீனை எப்படி வைக்கலாம் என்பதாக சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் விகடுவின் காதைக் கடிக்கிறார். விகடு இப்படி சுட்சுவேஷன் வந்த படத்தை பாத்திருக்கிறானா என்று ஞாபகப்படுத்திப் பார்க்கிறான். அநேகமாக இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது. முடிவாக ஹோட்டலின் கெளரவம் என்ற கோவிலானின் கருத்துக்கு மதிப்பளிப்பது என்று முடிவாகி, காலை, மதியம் என்று மீந்தச் சாப்பாட்டை ஆறு பேரும் உண்டது போக எல்லாவற்றையும் சாக்கடையில் கொட்டி ஆகிறது. ஹோட்டலின் கெளரவத்தை இப்படியாகக் காப்பாற்றி ஆகிறது.
            ஏன் கூட்டம் குறைகிறது என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ளாத குறைதான். மண்டையில் இருக்கு நான்கு முடிகளும் கொட்டி முழுமையாக வழுக்கை ஆவதைப் போல மறுநாளுக்கு மறுநாள் என்று கூட்டம் குறைந்து கொண்டே போகிறதே தவிர கூட மாட்டேன்கிறது. பத்து பேர், இருபது பேர் என்று சாப்பிட்டு விட்டுச் செல்கிறார்கள். இருபது பேருக்கும், முப்பது பேருக்கும் என்று ஐம்பது பேருக்குக் கம்மியாக மாஸ்டரிடம் சமைக்கச் சொல்லவும் அலுப்பாக இருக்கிறது. மாஸ்டரும் ரெண்டு நாட்களாக பேசியபடி பைசாவை வெட்டாத கடுப்பில் பேசுகிறார், "இந்தாரு! இவ்ளோ கம்மியா போட்டு அதுக்கு மாஸ்டர் போட்டு சமைச்சீங்கன்னா அது ஒங்களுக்கும் கட்டுபடியாகாதுடி! சமைக்குற நமக்கும் கட்டுபடியாகாதுடி! சாப்பிட கூட்டத்தை அதிகம் பண்ணு! இல்லாட்டி கடையை இழுத்து மூடுற வழியைப் பாரு!" என்கிறார்.
            பசி ருசி அறியாது என்பார்கள். அது ரூம் வீட்டில் இருந்தவர்களைப் பொருத்த வரை உண்மையாகி விட்டது. சமையல் மாஸ்டர் எது சமைத்துப் போட்டாலும் அது அவர்களுக்கு ஆகா, ஓகோ என்றிருந்திருக்கிறது. ஹோட்டலுக்குச் சாப்பிட வருபவர்களுக்கு அது அப்படி இல்லாமலிருந்திருக்கிறது. கோவிலான் ஒரு நல்ல சமையல் மாஸ்டரைப் பிடிப்பதில் தவறி விட்டார்.
            அந்த மாஸ்டர் பொங்கலை அவர் கஞ்சி போல் காய்ச்சி வைத்திருந்தார். இட்டிலி ஒரு நாள் மாவாக இருக்கிறது. மறுநாள் ரோட்டில் கிடக்கும் கல் தோற்றுப் போய் விடும் போலிருக்கிறது. பிரிஞ்சி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் எல்லாம் தர தர தொர தொர ரகமாய் இருக்கிறது.
            முதல் நாள் திறப்பு விழா என்பதால் சாப்பிட்டுப் பொறுத்துக் கொண்டவர்கள் மறுநாளும் சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்க சொல்லாமல் கொள்ளாமல் கடையை மாற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
            மாஸ்டருக்கு அன்றன்றைக்குப் பைசா வெட்டாமல் போனதில் அவரும் கழன்று கொள்கிறார். ஹோட்டல் ஆரம்பித்த ஐந்தாறு நாட்களிலேயே தள்ளாட ஆரம்பிக்கிறது. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாக்குது!" என்று விக்ரமன் படப் பாடல் ரேஞ்சுக்கு ஆரம்பித்த ஹோட்டல், "போனால் போகட்டும் போடா!" என்ற சிவாஜிப் படப் பாடல் ரேஞ்சுக்கு வந்து நிற்கிறது.
            ஹோட்டலை இழுத்து மூடி விடுவதுதாம் இந்த நிலையிலிருந்து தப்பித்துக் கொள்வது சரியாகப் படுகிறது அனைவருக்கும். கோவிலானுக்கு அப்படி விட மனசில்லை. அவர் இதற்காக வேலையை விட்டிருக்கிறார்.நல்ல வேளையாக வேறு யாருக்கும் வேலை இல்லாததால் வேலையை விட முடியாமல் போயிருக்கிறது. இல்லையென்றால் கோவிலானுக்கு நேர்ந்த கதிதான் எல்லாருக்கும் நேர்ந்திருக்கும். இந்த நிலைமையைச் சமாளிப்பதில் அவருக்குதான் அதிகப் பங்கிருப்பது ‍என்பது போல அவர் நடந்து கொள்கிறார். அவர் தானே முன்வந்து தானே மாஸ்டர் இல்லாமல் அவரை விட பிரமாதமாகச் சமைத்துப் போடப் போவதாகச் சொல்கிறார். அதையும்தான் பார்த்து விடுவோம் என்று தோன்றுகிறது ரூம் வீட்டுவாசிகள் எல்லாருக்கும்.
            கோவிலானும் சமைத்துப் பார்க்கிறார். கோவிலானின் சமையலால் மாஸ்டருக்குக் கொடுக்க வேண்டிய காசு மிச்சமாகிறதே தவிர, கூட்டம் திரண்டபாடில்லை. கோவிலானின் சமையல் பசியோடு இருக்கும் ரூம்வாசிகளுக்குத் தேவாமிர்தமாய் இனிக்காத குறைதான். சாப்பிட வருபவர்கள்தான் என்னவோ வேப்பங்காயைக் கடித்து விட்டது போல முகத்தைச் சுளித்துக் கொண்டு போகிறார்கள்.
            ஆட்கள் படிப்படியாகக் குறைந்து ஆட்களின் வரத்தே இல்லாமல் போவதற்கு முன்பாக ஹோட்டலை மூடி விடுவதுதான் உசிதமாகப் படுகிறது ரூம்வீட்டுவாசிகளுக்கு. கடைசியில் அந்த தீர்மானமும் ஏகோபித்த ஆதரவுடன் செயல்முறைக்கு வருகிறது.
            அதிகபட்சம் ரெண்டு வாரத்துக்குள் ஆரம்பித்த ஹோட்டல் மூடுவிழா காண்கிறது. திறப்பு விழாவும், மூடு விழாவும் கண்ட ஒரு ஹோட்டல் கடையை நடத்தி முடித்த பின் அந்த ரூம் வீட்டுவாசிகள் அதற்குப் பின் சம்பாதிப்பதற்கான வேறெந்த சோதனை முயற்சியிலும் ஈடுபடாமல் எப்படிச் சம்பாதிப்பது என்பது பற்றி காரஞ சாரமாக விவாதிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
            கடையை இழுத்து மூடியாயிற்று. கடைக்கு கொடுக்க அட்வான்ஸை வாங்க வேண்டுமே! லேசில் தர மாட்டேன்கிறார் அட்வான்ஸ் வாங்கியவர். பாதித் தொகைதான் தருவேன் என்று மிரட்டுகிறார். பாதித் தொகையிலும் ஒரு மாத வாடகையைக் கழித்துக் கொள்வேன் என்கிறார். வேண்டுமானாலும் அட்வான்ஸ் கழியும் அத்தனை மாதங்களுக்கும் கடை‍யை வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். நடையோ நடை என்று கொடுத்த அட்வான்ஸை வாங்குவதற்காக அலைந்த அந்த முயற்சியில் கொடுத்த அட்வான்ஸை அரையும் குறையுமாக வாங்கிக் கொண்டு அவரவர் வேலையை அவரவர்கள் பார்க்கிறார்கள்.
            எல்லாருக்கும் மனசுக்குள் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் கங்கையம்மன் கோயில் தெரு வழியாக ஹோட்டல் வைத்த கடையைத் தாண்டிப் போகையில் சிரிப்புதான் வருகிறது. சொல்லிச் சொல்லி சிரிக்கிறார்கள். "அட்ரா சக்கை! நாமளும் ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சி நடத்திருக்கோம்!" என்று அதில் கொஞ்சம் பெருமிதம் வேறு. ஆனால் காலக்கொடுமையை நீங்கள் பார்க்க வேண்டும்! அதே இடத்தில் அடுத்த மாதத்தில் இன்னொரு குரூப் ஹோட்டல் ஹோட்டல் தொடங்கி சக்கைப் போடு போடுகிறது. அந்த ஹோட்டலில் கோவிலான் வேலைக்கும் சேர்ந்து விட்டார். முதல் போட்ட வகையில் கோவிலான், நந்தகுமார், இதயச்சந்திரன் மற்றும் தமன் பிரகாஷூக்கு இழப்புதான். அந்த இழப்பை அவர்கள் பல நாட்கள் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். விகடுவுக்கோ, லெனினுக்கோ, பூரணலிங்கத்துக்கோ இழப்பதற்கு இழப்பைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதால் திறந்த ஹோட்டலைத் திறந்த வேகத்தில் மூடி விட்டோமே என்பதற்காக மட்டும் கவலைபட்டுக் கொள்கிறார்கள்.
            ஹோட்டல் திறந்து மூடியதைப் பற்றி ஒரு கதை பண்ணி படம் பண்ண வேண்டும் என்கிறார் பூரணலிங்கம். அவரை ஆச்சரியத்தோடு பார்க்கிறான் விகடு. இதுதான் இழப்பிலும் இருப்பைப் பார்ப்பதோ என்பதாக நினைத்துக் கொள்கிறான் விகடு.
            "இந்தக் கதைய செகண்டாத்தாம் பண்ணணும். பர்ஸ்ட் கதெ பக்காவா ஒண்ணு வெச்சிருக்கேன்! கேட்குறீங்களா விகடு!" என்கிறார் பூரணலிங்கம். ரூம் வீட்டில் சமயத்தில் பொழுது போகவில்லை என்றால் இப்படி யாராவது கதை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள், லெனினைத் தவிர. அவர் கதை சொல்ல மாட்டார். சொன்னால் அவரது கதையை யாராவது திருடி விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு உள்ளூர இருக்கிறது. அவர் இதற்காகவே கதை எழுதிய லாங் சைஸ் நோட்டை பெட்டியில் வைத்து பூட்டி வைத்திருக்கிறார். பூரணலிங்கம் அப்படியில்லை. அவர் தன் கதையை கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேட்டு ஏரியாக்களில் மைக் வைத்து அனெளன்ஸ் பண்ணாத குறையாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
            அவ்வளவு நாட்கள் பூரணலிங்கத்தோடு இருந்து அவர் கதையைக் கேட்காமல் இருப்பது அபூர்வம். இப்போதே விகடு வந்து நாட்கள் கடந்து நிறைய கடந்திருக்கிறது. அந்த அபூர்வம் இதற்கு மேல் தாமதப்பட முடியாது என்பது போல நடக்க ஆரம்பிக்கிறது. பூரணலிங்கம் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
*****

ஏமாத்திட்டுப் போற புள்ள!



            எம் புள்ளய இங்கிலீஷ் பேசணுங்றதுக்குத்தாம் பிரைவேட்டு ஸ்கூல்ல சேத்தேங்றான் சேக்காளி ஒருத்தன்.
            சரிடா சேக்காளி! ஒம் புள்ளய இங்கிலீஷ்ல பேசச் சொல்லுன்னா... அந்த புள்ள வந்து தடுமாறி நிக்குது.
            பேசுறதுதாம் வரல. எழுதுறதாவது வருமான்னு நினைச்சிகிட்டு, நாம்ம சொல்ற விசயத்த அப்படியே ஒரு பிராதுவா இங்கிலீஷ்ல தயார் பண்ணி எழுதிக் கொடுன்னா புள்ள முகம் செத்துப் போயி பாடையில ஏத்துற மாதிரி ஆயிப் போச்சி.
            அத விட முக்கியமா, எம் புள்ள எழுதப் படிக்கத் தெரியாம போயிடக் கூடாதுன்னுதான் கவருமெண்டு ஸ்கூல்ல சேக்கலேங்றான் இன்னொரு சேக்காளி.
            உம் புள்ளய கூப்புட்டு இந்த பேப்பருல உள்ளத படிச்சுக் காட்டுச் சொல்லுன்னா... அந்தப் புள்ள வந்து நின்னுகிட்டுச் சொல்லுது, "அங்கிள்! படிப்புன்னா இதப் படிக்கிறதில்ல! எங்களுக்குப் புக்கு கொடுதுதிருக்காங்க! அதப் படிக்கிறது!" அப்புடிங்கது.
            நாம்ம சொல்ற விசயத்தைக் கோர்வையா நாலு வாக்கியத்துல எழுதிக் கொடுன்னா... அதுக்கும் அந்தப் புள்ள சிரிச்சிகிட்டுச் சொல்லுது, "அய்யோ அங்கிள்! அங்கிள்! இப்படிப் பட்டிக்காடா இருக்கீங்களே! எழுதுறதுன்னா எங்களுக்குப் புத்தகம் கொடுத்திருக்காங்க பாருங்க! அதுல உள்ளத எழுதுறது!" அப்படிங்றது.
            இதென்னடா காலக் கொடுமையா இருக்கேன்னு கவருமெண்டு ஸ்கூல்ல படிக்கிற ஒரு புள்ளய கூப்பிட்டுக் கேட்டா, நியூஸ் பேப்பருல உள்ளத அப்படியே பொளந்து கட்டுற மாதிரி படிச்சுக் காட்டுது. இந்தா இந்த விசயத்தைக் கேட்டுபுட்டு அப்படியே காயிதத்துல எழுதிக் கொடுன்னு சொன்னா அப்படியே கவிதை மாதிரி எழுதிக் கொடுத்துட்டுப் போகுது.
            அந்த கவர்மெண்டு ஸ்கூலு புள்ள போனதுக்கு அப்புறம் இந்த பிரைவேட்டு ஸ்கூலு புள்ள சொல்லுது, "பாத்தீங்களா அங்கிள்! புக்குல உள்ள படிக்கத் தெரியாம என்னிக்கோ வந்த பேப்பர்ல உள்ள படிச்சிக் காட்டி ஒங்கள ஏமாத்திட்டுப் போவுது அந்தப் புள்ள!"
            சரிதான்டா சேக்காளிகளா! உண்மையைச் சொன்னா கோவப்படுவீங்க! நீங்க இங்கிலீஷ் பேசுறதுக்காவோ அல்லது எழுதப் படிக்கத் தெரியறதுக்காவோ பிரைவேட்டு ஸ்கூல்ல சேர்க்கல. மார்க்கு வாங்க வைக்கணும், மார்க்க வாங்க வெச்சி கைநிறைய சம்பாதிக்கிற வேலையில சேர்த்து விடணும்தானே சேத்துருக்கீங்க! அதைச் சொல்லித் தொலையங்களேண்டா சேக்காளிகளா! என்னமோ இங்கிலீஷைப் புள்ளைகள கத்துக்க வெச்சி அழஞ்சிகிட்டு வர்ற இங்கிலீஷைக் காப்பாத்துற மாதிரியும், என்னமோ ஒங்க புள்ளைங்களத்தான் எழுதப் படிக்க கத்துக்க வெச்சி இந்த ஒலகத்துக்கே வழிகாட்ட வைக்கப் போறது மாதிரில்லடா பேசிட்டுத் திரியுறீங்க!
*****

29 Jun 2019

ரோட்டுல ஒரு ஹோட்டல்!



செய்யு - 130
            'எல்லாரும் சேர்ந்து ஒரு ஹோட்டல் ஆரம்பித்தால் என்ன?' ரூம் வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் யோசிக்கிறார்கள்.
            முக்கியமாக சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்து விடுகிறது. மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிடலாம். எல்லாருக்கும் ஒரு வேலை கிடைத்தது போலாகி விடுகிறது. மொத்தம் ஏழு பேர் இருப்பதால் மாற்றி மாற்றி ஹோட்டலைப் பார்த்துக் கொள்ளலாம். மாற்றி மாற்றி பார்த்துக் கொள்வதால் அவரவருக்கு விருப்பமான சான்ஸ் தேடும் வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம். இப்படியெல்லாம் நாலாபக்கமும் யோசனைகள் வந்து குவிகின்றன.
            இந்தக் கூட்டத்தில் ஓட்டலில் வேலை பார்க்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கோவிலான். சமையல் வேலைகளுக்கான ஏற்பாடுகளை எல்லாம் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார். இதற்காக வேலையை விட்டு விடவும் தயாராக இருக்கிறார்.
            எலெக்ட்ரிஷியனாக இருக்கும் நந்தகுமார் அவருடைய வேலையை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். மல்டி லெவல் மார்கெட்டிங்கில் இருக்கும் தமன்பிரகாசும் நந்தகுமார் சொன்னதற்கு அப்படியே டிட்டோ அடிக்கிறார். லெனினுக்கு இன்னும் சில வாரங்கள் வரை ஷூட்டிங் ஆரம்பிக்கப் போவதில்லை. லெனினுக்கும் இதில் எந்தப் பிரச்சனையுமில்லை. இதயச்சந்திரன் மட்டும்தான் ஷூட்டிங் போய்க் கொண்டிருந்தார். ஷூட்டிங் போய் விட்டு வந்து இரவு நேரங்களில் தன்னால் பார்த்துக் கொள்ள முடியும் என்பதாகச் சொல்கிறார். அத்தோடு கூடுதலாக ஷீட்டிங் இல்லாத நாட்களில் பகல் பொழுதுகளில் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார். பூரணலிங்கம் எந்நேரமும் வாய்ப்புத் தேடும் படலத்தில் இருந்ததால் கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில் சான்ஸ் தேடுவதைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார். விகடுவுக்கும் அப்படித்தான். அவனுக்கும் சான்ஸ் தேடும் வேலையைத் தவிர வேறு வேலை இல்லாததால் தானும் கிடைக்கும் நேரத்தில் அதைப் பார்த்தக் கொள்வதாகச் சொல்கிறான்.
            ஆர்வம் றெக்கைக் கட்டிப் பறக்காத குறை. இந்த நிமிஷமே ஆரம்பித்து விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
            ஹோட்டல் ஆரம்பிப்பது என்று ஏகோபித்த ஒரு போர்க்கால நடிவடிக்கைகான முடிவாகி விட்டது. பைசா வேண்டுமே! லெனின், பூரணலிங்கம், விகடுவைப் பற்றிச் சொல்வதற்கில்லை. கையில் பைசா காசில்லாதவர்கள். உதயாவிடம் கணிசமாக தொகை இருந்திருக்க வேண்டும். தவிர மற்ற மூன்று பேரிடமும் கணிசமான தொகை இருக்கிறது. அவர்களிடம் இருந்த தொகையைக் கணக்குப் பார்க்கும் போது இருபதாயிரம் வருகிறது.
            பைசா போட்டவர்களும், பைசா போடாதவர்களும் எப்படி சமமான பங்குதாரர்களாக முடியும். அதனால், பைசா போட்டவர்களுக்கு லாபத்தில் பங்கு என்றும், பைசா போடாதவர்களுக்கு மூன்று வேளை சாப்பாட்டோடு, சம்பளமும் என்று முடிவாகிறது. அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேலை பார்த்துக் கொள்ளலாம் என்பதும், யாருக்கேனும் முக்கியமான சான்ஸ் தேட வேண்டியிருந்தால் அதற்கு முக்கியத்துவம் தந்து அவரை அனுப்பி விட்டு மற்றவர்கள் கடையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத தீர்மானமாகிறது.
            பெரியார் பாதையிலிருந்து வலது புறத்தில் பிரியும் கங்கையம்மன் கோயில் தெருவில் இருந்த ஒரு கடையை வாடகைக்குப் பிடித்தாகிறது. நூறு அல்லது நூற்றைம்பது சதுர அடிக்கு மேல் இருக்காது. அட்வான்ஸ் பதினைந்தாயிரம். மாதா மாதம் ஆயிரத்து ஐநூறு வாடகை கொடுக்க வேண்டும் என்று பேசி முடிவாகிறது. இடம் என்றால் பார்த்தால் ஆட்கள் கூடும் முக்கியமான இடம்தான். எல்லாம் யோசித்து முடித்த ரெண்டே நாட்களில் ஒரு புதிய நட்சத்திரம் உதயமாவது போல ஹோட்டல் ஆரம்பமாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
            முதலில் வாடகைக்குப் பாத்திரங்களை எடுத்துக் கொள்வோம் என்கிறார் கோவிலான். வாடகைக்கு மூன்று வட்டாக்கள், பெரிய இட்லி பானை, நான்கு வாளிகள், தண்ணீர் பிடித்துக் கொள்ள ஒரு பேரல் எல்லாம் வண்டியில் வந்து கோவிலானின் ஏற்பாட்டில் இறங்கியாகிறது. தட்டுகள், டம்ப்ளர்கள் எல்லாம் ப்ளாஸ்டிக்கில் வாங்கிப் போட்டாகிறது. எல்லாம் ஓட்டலில் வேலை ‍அனுபவத்தால் கோவிலான் பக்காவாக முடிக்கிறார். தன்னுடைய யோசனையால் எல்லாம் எவ்வளவு சீப்பாக முடிகிறது என்பதை கோவிலான் அடிக்கடிக் கோடிட்டுக் காட்டிக் கொண்டு பெருமை பேசிக் கொள்கிறார். மற்றவர்களுக்கும் அது பெருமையாகத்தான் இருக்கிறது. இல்லையென்றால் போட வேண்டிய முதலின் அளவு அதிகமாகத்தான் ஆகி விடும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
            கோவிலானின் திட்டப்படி சமைப்பதற்கு ஒரு மாஸ்டர் பிடித்தாகிறது. அவருக்கு அன்றன்றைக்குச் சமைப்பதற்கு ஏற்றாற் போல பைசா வெட்டியாக வேண்டும் என்று ஒப்பந்தமாகிறது. காலையில் இட்டிலி, பொங்கல் அதற்கு சட்டினி, சாம்பார், துவையல். இதுதான் காலைச் சாப்பாடு. மதியத்துக்கு பிரிஞ்சி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம். இரவுக்கு இட்டிலி அதற்கு சட்டினி, சாம்பார், துவையல் மட்டும்தான். போகப் போக வெரைட்டிகளை அதிகமாக்கிக் கொள்வது என்று திட்டம் தூள் பறக்கிறது.
            மாஸ்டர் சமைக்க வேண்டியதைச் சமைத்து வைக்கிறார். அதை கடையின் முன்பு வைத்துக் கொண்டாகிறது. சாப்பிட வருபவர்கள் கடைக்கு வெளியே அப்படியே நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும். கையேந்தி பவன் என்று இதைச் சென்னையில் சொல்வார்கள். இந்தக் கையேந்தி பவனை ஆனந்த பவன் அளவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று எல்லாருக்கும் விக்ரமன் பட ரேஞ்சுக்கு கண்ணில் கனவு முட்டுகிறது. வாயில் விக்ரமன் படப்பாடல்கள் ஒவ்வொன்றாய் வந்து கதவைத் தட்டுகிறது. பாட்டைத் தங்களையும் அறியாமல் முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.
            சாப்பிட வருபவர்களுக்கு ப்ளாஸ்டிக் தட்டில் சதுரித்த பாலிதீன் தாளைப் போட்டு கேட்பதை வைத்து அதற்குரிய தொடு வகைகளை வைத்துக் கொடுக்க முதல் நாள் ஹோட்டல் ஆரம்பமாகிறது. ஏழு பேரும் தங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பார்க்காமல் ஏரியாவையே சலம்பி விட்டதில் கூட்டம் என்றால் தாங்க முடியாத கூட்டம். ஐம்பது அறுபது பேருக்கு மேல் நிற்கிறார்கள். அந்தக் கடைக்கு அது அதிகமான கூட்டமாகப் படுகிறது. காலை ஆறு மணிக்கு திறந்த கடையில் சாப்பிட வந்தவர்களுக்கு கேட்டதை எடுத்துக் கொடுக்க ஏழு பேராலும் முடியவில்லை. கூட்டம் அள்ளுகிறது. சமைத்ததெல்லாம் ஏழு மணிக்கே காலியாகி விடுகிறது. எல்லாருக்கும் சந்தோஷம் என்றால் அப்படி ஒரு சந்தோஷம்.  
            மதியத்துக்கும் கணிசமான கூட்டம்தான். சமைத்ததெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு எல்லாம் காலி. இரவும் கூட்டம் பரவாயில்லை. வேலை ஒன்றும் அதிகமாக இல்லை. ஓட்டலில் வேலை பார்த்த அனுபவத்தில் கோவிலான் கோயம்பேடு போய் காய்கறிகளை வாங்கிக் கொண்டு அப்படியே மளிகை சாமான்களோடு வந்து விடுகிறார். இருக்கின்ற எல்லாரும் மாஸ்டர் சொல்கிறபடி காய்கறிகளை அரிந்து கொடுத்து சில்லுண்டி வேலைகளைப் பார்த்தால் அவர் சமையலை முடித்து விடுகிறார். அதற்குப்புறம் சாப்பாட்டை எடுத்துக் கொடுக்க வேண்டியதுதான்.
            சாப்பிட்டு முடித்தவர்கள் மேலிருக்கும் பாலிதீன் தாளை அப்படியே எடுத்து ஓரத்தில் வைத்திருந்த தொட்டியில் போட்டு விட்டு தட்டை அப்படியே ஓரமாக வைத்து விட்டு, பேரலில் ப்ளாஸ்டிக் தம்பளரில் தண்ணீரை மோண்டு கையை அலம்பி விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள். கோவிலானின் ஏற்பாட்டின் படி பாத்திரங்களை அலம்பித் தருவதற்கென்று ஒரு பெண்மணியைப் போட்டாயிற்று. அந்த பெண்மணிக்கும் அன்றன்றே பைசா வெட்டியாக வேண்டும் என்பது ஒப்பந்தம். அதிகபட்சம் அன்று மூன்று மணி நேரமோ அல்லது நான்கு மணி நேரமோ வியாபாரம் பார்த்திருந்தால் அதிகம். இவ்வளவு எளிமையாகச் சம்பாதிக்க முடியுமா என்று எல்லாருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
            முதல் நாள் வியாபாரத்தில் கணக்குப் பார்த்தால் நல்ல லாபம்தான். செலவு எல்லாம் போக, மாஸ்டருக்கும், பாத்திரம் அலம்பும் பெண்மணிக்கும் அன்றைய கணக்கை வெட்டியது போக அறுநூற்று ஐம்பது ரூபாய்க்கு மேல் லாபம் நிற்கிறது. எப்படியும் மூன்று வே‍ளைகளுக்கும் கணக்குப் பார்த்தால் நானூறு, ஐநூறு பேருக்கு மேல் சாப்பிட்டு இருப்பார்கள். இனிமேல் வேளைக்கு நூறு சாப்பாடு, நூற்றம்பைது என கணக்குப் பார்த்துப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் நந்தகுமார். இனி ஆயிரம் ஐநூறுதான் என்று ஆர்வ மிகுதியில் பேசுகிறார் தமன்பிரகாஷ். அதில் ஆயிரமா? ஐநூறா? என்று விவாதமே கிளம்புகிறது. சாப்பாடு விற்று ஆகி விட்டது என்பதால்தானே ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் வந்தவர்களையெல்லாம் திருப்பி அனுப்ப வேண்டியதாகி விட்டது. ஆகவே ஆயிரம் போட்டால் அத்தனையும் காலியாகி விடும் என்று ஒரு பக்கம் சிலர் பேசுகிறார்கள். சமயத்தில் கூட்டம் வராமல் போய் விட்டால் சங்கடமாகி விடும் என்பதால் முந்நூறோ, நானூறோ போதும் என்று இன்னொரு பக்கம் சிலர் பேசுகிறார்கள். சரி ஆயிரமும் வேண்டாம், முந்நூறும், நானூறும் வேண்டாம் வேளைக்கு இருநூற்று ஐம்பது  போட்டுப் பார்ப்போம் என்று முடிவாகிறது.
            காலைச் சாப்பாடு பொங்கலும், இட்டிலியும் இருநூற்று ஐம்பது பேர் அளவுக்கு போட்டாகிறது. "கூட்டம் கும்மப் போவுது. நேத்திக்கு மாரி சாப்பாடு ல்லாம ஆளுங்க திரும்புனா கூட்டம் பெறவு வாராது!" என்கிறார் தமன்பிரகாஷ்.
            "நேத்தி மாரி ஆளாளுக்கு சாப்பாட எடுத்துக் கொடுத்து காச வாங்க வாணாம். எங்கிட்ட சாப்பாட சொல்லுங்க. பக்கவா எடுத்துத் தர்றேன். தமனு நீங்க கல்லாவுல நில்லுங்க. பைசா வாங்கிப் போடுங்க. நந்து, லெனின், பூரணம் மூணு பேரும் சாப்பாட்ட வாங்கிக் கொடுக்கட்டும்." என்கிறார் கோவிலான். "இந்த ஏற்பாடு நன்றாக இருக்கிறது. நேற்றே இதைச் செய்திருக்க வேண்டும். பரவாயில்லை அது தொடக்கவிழா. அப்படித்தான் இருக்கும். இதுதான் சரி. இன்றிலிருந்து இப்படித் தொடங்குவதுதான் சரி!" என்கிறான் விகடு. கோவிலானுக்கு பெருமிதத்தால் கண்கள் பனிக்கிறது. இதயம் இனிக்கிறது.
            நேற்று போல் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வரவில்லை. ஒருவர் இருவராக வருகிறார்கள். நேற்று ஏழு மணிக்கெல்லாம் முடிந்த சாப்பாடு பத்து மணி ஆகிறது. இன்னும் முடிந்த பாடில்லை. அறுபது எழுபது பேருக்கு மேல் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். ஆட்கள் வராமல் சும்மாவே நிற்பது அலுப்பாய் இருக்கிறது எல்லாருக்கும்.
*****

குழாய் போட்டு எடுக்க வேண்டியதும், கொடுக்க வேண்டியதும்!



            யாரைப் பார்த்தாலும் தண்ணீர் பிரச்சனைக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வுங்றான்! அடிப்படையில் தண்ணீர் பிரச்சனையே வருங்காலத்தில் போர்தான். அது எப்புடிங்றத கீழே நிறுவுறேன் பாருங்க!
            ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு லோடு மணலை லாரியில பத்தாயிரம், பனிரெண்டாயிரம்னு அடிச்சப்போ பகீர்னு இருந்துச்சு. அதையெல்லாம் நம்ம ஊருல ஒரு காலத்துல காசு யாரு கொடுத்து வாங்கியிருக்கா? ஆறு முழுக்க மணலா இருக்கும். மாட்டு வண்டிய கொண்டுட்டுப் போயி இஷ்டத்துக்கு அடிச்சிக்க வேண்டியது. இப்போ ஒரு லாரி மணல எறக்கணும்னா இருபத்தாஞ்சாயிரம் வரைக் கேக்குறான். நம்மூரு ஆற்றுல இருந்தப்ப தெரியாத மணலோடு மதிப்பு இப்போ தெரியுது.
            தண்ணி பத்தியெல்லாம் சொல்லவே வேண்டியதில்ல. எங்க போரைப் போட்டாலும் பத்தடி, பதினைஞ்சடின்னு அதிகபட்சம் முப்பது அடிக்குள்ள நல்ல தண்ணி கொட்டு கொட்டொன்னு கொட்டும். இங்க பாத்தீங்கன்னா அப்போ பதினைஞ்சடி, இருபதடி கைப்பம்புகள்தான் அதிகம்.
            அப்புறம் கதை என்னாச்சுன்னா முப்பது அடி, முப்பதஞ்சு அடியில தண்ணி வர மாட்டேங்குதுன்னு எண்பது, நூறடின்னு போரு போட ஆரம்பிச்சி, இப்போ எரநூறு, முந்நூறு அடிக்கு வந்து நிக்குது. இந்தப் போரு போட ஆரம்பிச்சப் பின்னாடிதான் புரிஞ்சிது தண்ணீர்ப் பிரச்சனை வருங்காலத்தில் போர்தான்னு. பாத்தீங்களா நிறுவிட்டேன். கணக்குப் போட்டுப் பாத்ததால வந்த புத்தி!
            எரநூறு அடி, முந்நூறு அடி தண்ணி பத்தலன்னு அவனவனும் ஆயிரம், ஆயிரத்து ஐநூறுன்னு தண்ணி லாரில்ல தண்ணி வாங்க ஆரம்பிச்சானுங்க! ஆரம்பத்துல எல்லா பயலுக்கு இது வேடிக்கையாத்தான் இருந்துச்சு. இன்னொரு பக்கம் வயித்தெரிச்சலாவும் இருந்துச்சி. என்னடா மாப்ளே இப்படி ஆயிடுச்சின்னு அவனவனும் சென்னையில இருக்குற சொந்தக்காரன், பந்தக்காரனுக்குப் போனு அடிச்சுப் பேசுனா, அவனுவோ சிரிக்கிறானுவோ, "டேய் மச்சாங்! இங்க அதே தண்ணி லாரி பத்தாயிரம், பன்னென்டாயிரம்னு!"
            அப்பதாம் தோணுச்சிப் பாருங்க! அட மக்கா! தண்ணியே இந்த ரேட்டுக்குப் போறப்போ அப்புறம் ஏன்டா இங்க ஹைட்ரோ கார்பன எடுக்கிறேன்னு கொழாயப் போட்டுக் கொல்லுறீங்க! அங்கங்க தாகத்தால தவிக்கிற மக்களுக்குக் கொழாயப் போட்டுக் கொடுங்கடா! அத்தோட இந்த மழைதண்ணி பேஞ்சா அது பூமிக்குள்ளப் போறதுக்குக் கொழாயப் போடுங்கடா!
            இது பாதுகாப்பான பெட்ரோலிய மண்டலமா இருந்துகிட்டு தாகத்துக்கு மனுஷன் என்ன பெட்ரோலு, டீசலு, மண்ணெண்ணெய்னா குடிக்க முடியுது? தண்ணியத்தானே குடிக்க வேண்டியதா இருக்கு! செரி! அப்படி எடுக்கற பெட்ரோலாவது விலை கம்மியாவா கிடைக்கது? அரபு நாட்டை விட விலை கூடத்தானே கிடைக்குது!
            அடப் போங்கடா! சொல்லி தாவு தீந்துப் போச்சி! இந்தப் பூமியிலேந்து எடுக்க வேண்டியதும், கொடுக்க வேண்டியதும் தண்ணிதான்டா! எடுத்த தண்ணிய மழைத் தண்ணி வடிவத்துல பூமியில போட்டுடணும்! மழைத்தண்ணில வடிவத்துல பூமியில போட்டு வெச்சத எடுத்துக்கணும்! அவ்வளவுதான்டா மேட்டர்!
            அத்தோட சின்னதா இன்னொரு மேட்டர்! இந்த மீத்தேன், கேஸூ, பெட்ரோலு அது இதுன்னு எடுத்துட்டுப் போற லாரியை, குழாயை ஒடைப்பு இல்லாம, லீக்கேஜ் எப்படிக் கொண்டு போறீங்க! அதே மாதிரிதாம் தண்ணிய எடுத்துட்டுப் போற லாரியையும், கொழாயையும் ஒடைப்பு இல்லாம கொண்டுட்டுப் போகணும்!தண்ணிய கொண்டுட்டுப் போறதுல என்னா ஒரு அலட்சியங்றீங்க!
*****

28 Jun 2019

கூட்டத்தில் நின்றவன்!



செய்யு - 129
            சூளைமேட்டு ரூம்வீட்டில் வாடகை எதுவும் கொடுக்காமல் பசியும் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறது. எந்நேரமும் ஆற்ற முடியாத பசி வயிற்றில் நிலை கொண்டிருக்கிறது. எவ்வளவு சாப்பிட்டாலும் அந்தப் பசியை ஆற்ற முடியாது என்ற பிரமை தட்டிக் கொண்டிருக்கிறது. லெனின் சென்னைக்கு வந்த போது சில நாட்கள் யோசனைப் பண்ணி பார்த்து விட்டு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்து விட்டதைப் பற்றிச் சொல்கிறார்.
            வேறெந்த வேலையை விடவும் சென்னைக்கு வந்தவர்கள் ஹோட்டலில் வேலைக்குச் சேர்வதன் செளகரியமாக இரண்டு இருப்பதைப் பற்றி அடுக்குகிறார். முதல் செளகரியம் மூன்று வேளைக்கும் சாப்பாடு கிடைத்து விடும். இரண்டாவது செளகரியம் தங்குவதற்கு ‍ஹோட்டலில் இடமும் கிடைத்து விடும். சென்னையில் இந்த இரண்டும்தான் மிகப் பெரிய பிரச்சனை. இந்த இரண்டையும் சமாளித்து விட்டால் சென்னையைப் போன்ற சொர்க்கபுரி எதுவுமில்லை என்று சொல்லிக் கொண்டே போகிறார்.
            அதுசரி! அப்புறம் ஏன் லெனின் ஹோட்டல் வேலையைத் தொடரவில்லை என்று கேட்க நினைக்கிறான் விகடு. கேட்காமலே உட்கார்ந்திருக்கிறான். அதைப் புரிந்து கொண்டதைப் போல லெனினே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். "ஓட்டல்ல வேல பாத்தப்ப நல்லாத்தாம் இருந்துச்சி. ன்னா ஒரு பெரச்சினைனா அதத் தவிர வேற வேலயையே பாக்க முடியாது. எனக்கு இப்படி ஒரு ஆறு மாசம் போயிடுச்சி. எதுக்கு வந்தேனோ அத வுட்டுட்டு இப்படி பசி தாங்க முடியாம ஓட்டல் வேலய பாத்துட்டு இருக்குறனேன்னு தோணுது. மூணு வேளையும் சாப்பாடு செர்வ் பண்ணி வேல பாத்ததான் ஒட்டல்ல சாப்பாடு, ஓட்டல்ல இடங்றானுவோ. பார்ட் டைமா வேல பாக்கணும்னா வெளியில தங்கிக்கணும், சாப்பிடணும்னா காசு கொடுக்கணுங்றானுவோ. அவனுங்க கொடுக்குற காசுக்கு அவனுவோ ஓட்டல்ல சாப்புட்டா அதுலயே கால்வாசி காசு போயிடும். மிச்ச காசுல ரூம் வாடக, மத்த செலவுகள சமாளிக்கிறது ம்ஹூம்! பாத்தேன். பசியத் தாங்கிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு அலய ஆரம்பிச்சேன். வேற வழியில்ல. ஆனா பெஸ்ட்டு என்னான்னா ஓட்டல் வேலதான்.‍ சென்னைல ஒருத்தன் பொழைக்கணும்னு நெனச்சா ஓட்டல் வேலைக்குச் சேந்துடணும்! சாப்பாடு பெரச்சனையும் தீந்துடும். தங்குற பெரச்சனையும் தீந்துடும்."
            லெனின் அந்த ஓட்டல் வேலைக்குப் பிறகு வேறு எந்த வேலையிலும் சேரவில்லை என்கிறார். பசியினால் மனுஷன் செத்துட மாட்டான்ங்றார். இந்தப் பசியைத் தாங்க தாங்கத்தான் வைராக்கியம் வளரும்ங்றார். வைராக்கியம் வளரலாம். உடம்பு வளராது. ஏற்கனவே இருந்த உடம்பு சுருங்கிப் போவதோடு, குட்டையாகப் போவது போல ஒரு தோற்றம் உண்டாகிறதே என்று நினைத்துப் பார்க்கிறான் விகடு. அப்படியென்ன உடம்பை வருத்திக் கொண்டு, வதைத்துக் கொண்டு ஓர் லட்சியம் என்று நீங்கள் கேட்கலாம். அப்படிப்பட்ட லட்சிய புருஷர்கள்தான் இந்தக் கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு முழுவதும் தங்கியிருக்கிறார்கள்.
            எவ்வளவு பசியென்றாலும் கோடம்பாக்கம், வடபழனி என்று சுற்றி ஒரு ரவுண்ட் அடித்தால் ஏதேனும் ஒரு டீக்கடையில் சினிமா கூட்டம் தட்டுபட்டு விடும். சினிமாவில் சான்ஸ் தேடுகிறவன் என்பதை மூஞ்சை வைத்தே கண்டுபிடித்து விடுவார்கள். "வாங்க பாஸூ! பாத்துக்கலாம். நமக்குன்னு ஒரு டைம் வராமலா போயிடும்? இன்னிக்கு சினிமாவுல இருக்குற அத்தனை பேரும் நம்மள மாரி கஷ்டப்பட்டவனுங்கதாம்! இந்த எல்லா கஷ்டமும் நாம்ம பண்ணப் போற சினிமாவுக்கான கதை!" என்ற ‍பொதுவான வசனத்தைப் பேசி விடுகிறார்கள். அப்படியொரு கூட்டம் இங்கே ரொம்ப அதிகமாகத்தான் படுகிறது.
            அந்தக் கூட்டத்தில் யாரோ ஒரு கையில் எப்படியும் கொஞ்சம் பணம் இருக்கும். யாரிடம் பணம் இருந்தாலும் டீ வாங்கிக் கொடுப்பதற்கு மட்டும் யோசிக்க மாட்டார்கள். என்ன கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கதைகளை வரிசையாக எடுத்து விடுகிறார்கள். நம் பங்குக்கு நாமும் நம் கதையை எடுத்து விட வேண்டியதாக இருக்கிறது. அப்புறம், ஒரு டீ அடித்து விட்டு வந்து விடலாம். ரெண்டு டீ லட்சியத்தோடு ஏரியாவையே சல்லடை போட்டு சலிப்பது போல ஒவ்வொரு டீக்கடையாய் அஞ்சாறு கிலோ மீட்டருக்கு நடந்தால் ஒரு டீ நிச்சயம். நம்முடைய கூட்டம் கண்ணில் தட்டுப்பட்டு விடும். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் அசிஸ்டெண்ட் டேரக்டர்களாக இருக்கிறார்கள். விகடு மட்டுந்தான் பாடலாசிரியர் என்ற தேடலில் இருக்கிறான். அவர்கள் இவனையும் முயற்சி செய்து அசிஸ்டெண்ட் டேரக்டர் பக்கம் இழுக்கிறார்கள். "அசிஸ்டெண்ட் டேரக்டராகிட்டு கூட பாட்டு எழுதிக்கலாம் பாஸூ!" என்கிறார்கள். அதற்கு என்னவோ மிக எளிமையாக வாய்ப்புக் கிடைத்து விடுவதைப் போல, தனக்கு அதெல்லாம் வராது என்பது போல விகடு விலகிக் கொள்கிறான்.
            இங்கே தொடர்புகள், பழக்கங்கள் எல்லாம் அதிகமாகத்தான் இருக்கிறது. நாளைக்கே ஏன் அடுத்த நொடியே வாய்ப்பு கிடைத்து விடும் என்பதாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே! வாய்ப்பு கிடைக்கும் ஒரு சிலர் பேர் மட்டுமே சரசரவென்று முன்னேறிப் போகிறார்கள். வாய்ப்பு கிடைக்காத பலபேர் அப்படிப் போகின்ற அவர்களைப் பார்த்துக் கொண்டே நமக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வரப் போவதாக நம்பிக் கொண்டே வாழ்ந்து விடுகிறார்கள். வாழ்ந்து விடுகிறார்கள் என்பது சரியா என்று கேட்டால், வாழ்ந்து முடித்தே விடுகிறார்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.
            ரூம் வீட்டில் இருந்த பூரணலிங்கத்துக்கு எப்படியும் வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். டேரக்டராகித்தான் கல்யாணம் என்கிறார். வீட்டில் பெண் பார்த்து சோர்ந்து போய் கிடக்கிறார்கள்.
            லெனினுக்கு வயது முப்பதை நெருங்கும். வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லெனினைக் கேட்டால் டேரக்டராகித்தான் கல்யாணம் என்பதில்லை, ஆனால் நிலையான வருமானம் வர்ற அளவுக்கு அசிஸ்டெண்ட் டேரக்டர்லயே ஒரு இடத்தைப் பிடித்து விட்டுதான் கல்யாணம் என்கிறார்.
            இதயச்சந்திரனுக்குப் பெண் பார்த்து விட்டார்கள். கல்யாணம் கூடிய சீக்கிரத்தில் இருக்கும். அவர் ஒருவர்தான் தொடர்ச்சியாக அசிஸ்டெண்ட் டேரக்டராக சீரியலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் என்ன சம்பாதிக்கிறார் என்பதும் புரியாமல்தான் இருக்கிறது. ஒருநாள் கைமாத்தாக விகடுவிடம் நூறு ரூபாய் கேட்ட போது விகடுவும் குழம்பிப் போகிறான். அவர் என்ன சம்பாதித்தாலும் அவர் ஊதித் தள்ளும் சிகரெட்டுக்கு அதெல்லாம் பத்தாது என்பதாக நினைத்துக் கொள்கிறான் விகடு.
            ஆரம்பத்தில் லெனினும், இதயச்சந்திரனும் ஒன்றாகத்தான் வாய்ப்பு தேடியிருக்கிறார்கள். ரெண்டு பேரும் ஒன்றாகப் போய் நிற்பதால்தான் யாரோ ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு ரெண்டு பேருக்கும் கிடைக்காமல் போய் விடுகிறது என்ற நினைப்பு அவர்களுக்கு வந்திருக்கிறது. பிரிந்து விட்டார்கள். பிரிந்ததும் ரெண்டு பேருக்கும் சான்ஸ் கிடைத்திருக்கிறது. அதிலிருந்து அவர்களிடம் தொழில்முறை பிரிவு தொடர்கிறது. ரூம் வீட்டில் ஒன்றாக இருந்தாலும் அவர் விசயத்தை இவர் பேசுவதில்லை. இவர் விசயத்தை அவர் பேசுவதில்லை என்றாகி விட்டது. மற்றபடி பேசிக் கொள்வார்கள், சாப்பிட்டாச்சா? டீ குடிச்சாச்சா? குளிச்சாச்சா? இன்னிக்கு எங்க ஷீட்டிங்? என்பது போல.
            இதயச்சந்திரன் ஒரு சில நாட்கள் அவரது ஷீட்டிங் நடைபெறும் இடத்திற்கு சில நாட்கள் விகடுவை அழைத்துச் செல்கிறார். அது போன்ற நாட்கள் அமைந்த விட்டால் கொண்டாட்டம்தான். பெரும்பாலும் ஷூட்டிங் ஏ.வி.எம். ஸ்டூடியோவில்தான் நடக்கிறது. உள்ளே போய் விட்டால் சாப்பாட்டுக்குப் பஞ்சம் இருக்காது. டீ, காபி, பால் என்று இஷ்டத்துக்கு வாங்கிச் சாப்பிடலாம். சிகரெட்டு புழக்கத்துக்கும் பஞ்சம் இருக்காது. அதற்காகவே தனக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களிலும் இதயச்சந்திரன் போகிறார். இதயச்சந்திரன் விகடுவை அது போன்ற நாட்களில்தான் அழைத்துச் செல்கிறார். அதுவும் அவருக்குத் தோன்றினால். அவர் ஏன் ஷீட்டிங் இருக்கும் நாட்களில் அழைத்துச் செல்ல மாட்டேன்கிறார் என்று யோசிக்கிறான் விகடு. எப்படி அவர் வேலை பார்க்கிறார் என்பதைப் பார்க்கலாமே என்று விகடுவுக்கு ஆசை எழுகிறது. தன்னை அப்படி ஒரு நாளில் அழைத்துச் செல்லுமாறு விகடு கேட்டுப் பார்க்கிறான். இதயச்சந்திரன் அந்த விசயத்தில் ம்ஹூம் ம்ஹூம்தான். இந்த ஒரு விசயம்தான் புரிய மாட்டேன்கிறது என்று இதயச்சந்திரனைக் கேட்டுப் பார்க்கிறான் விகடு. அவர் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே சிரிக்கிறாரே தவிர பதில் சொல்ல மாட்டேன்கிறார்.
            ஒரு வார்த்தை லெனினிடம் கேட்டுப் பார்க்கிறான் விகடு. அவர்தான் விளக்கம்சொல்கிறார். "அத மட்டும் செய்யமாட்டோம் விகடு. நாங்க அங்க டேரக்டர்ட்ட படுற பாட்ட பார்த்தா அதுக்கப்புறம் நீங்க எங்கள மதிக்கவே மாட்டீங்க. அவ்ளோ கேவலமா பேசுவானுங்க. திட்டுவானுங்க. சமயத்துல செவுட்டு அறை வாங்குறதும் உண்டு. உங்கள கூப்பிட்டு வெச்சிட்டு நாங்க அவனுங்ககிட்ட திட்டு வாங்க முடியுமா? செவுட்டு அறை வாங்க முடியுமா?"
            அதைக் கேட்டு விட்டு, "ஏன் ஐயா? இப்படி திட்டும், செவுட்டு அறையும் வாங்கிக் கொண்டு இப்படி ‍ஒரு வேலை பார்க்க வேண்டுமா?" என்கிறான் விகடு.
            "ந்நல்லா கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி! இத சுத்திலும் பாத்துட்டு இவ்வேம் எப்போ வெளில போவாம், உள்ள நாம்ம எப்ப நுழையலாம்னு பத்துப் பாஞ்சி பேராவது காத்திட்டு நிப்பானுங்க பாருங்க! இங்க இப்படித்தான்! எடம் எப்போ காலியாகும்? நாம்ம எப்போ பந்தில உக்காரலாம்னு இருப்பானுங்க!" என்கிறார்.
            இதயச்சந்திரனோடு போகும் நாட்களில் இன்னொரு நன்மையும் கிடைக்கத்தான் செய்கிறது விகடுவுக்கு. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பத்தாத போது இவனையும் கூப்பிட்டு நிறுத்திக் கொள்கிறார்கள். அதில் பெரும்பாலும் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஆளாக சேர்த்துக் கொள்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொள்ள வேண்டும். அல்லது உட்கார்ந்து கொள்ள வேண்டும். டயலாக்குகள் எதுவும் இருக்காது. ஆனால் நாள் பூராவும் உட்கார வைத்து விடுகிறார்கள் அல்லது நிற்க வைத்து விடுகிறார்கள். அப்படி நாள் முழுக்க உட்கார அல்லது நிற்க வைத்து எடுத்த அதை நீங்கள் நான்கைந்து நொடிகளுக்குத் திரையில் பார்த்தால் அரிது. அதற்கு ஷீட்டிங் முடியும் போது நூறு ரூபாய் கொடுக்கிறார்கள். சாப்பாடும் போட்டு, டீ, காபி, பால் இதில் வேண்டியதை இஷ்டத்துக்குக் குடிக்க வாய்ப்பும் கொடுத்து நூறு ரூபாய் என்றால்... நன்றாகத்தான் இருக்கிறது விகடுவுக்கு. ஆனால், இப்படி ஒரு ஷூட்டிங் எப்போதும் வர வேண்டுமே! சில நாட்கள் ஷூட்டிங்தான் அப்படி இருக்கிறது. மற்றபடி ரெண்டு பேரோ, மூன்று பேரோ அல்லது நான்கைந்து பேரோ பேசிக் கொண்ட்டே... இருக்கிறார்கள், திட்டிக் கொண்ட்டே... இருக்கிறார்கள், அழுது கொண்ட்டே... இருக்கிறார்கள், அவர்களின் முகத்துக்கு நேரே க்ளோஸ்அப்பில் கேமரா போய்க் கொண்டிருக்கிறது அல்லது லாங் ஷாட்டில் கேமரா போய்க் கொண்டே இருக்கிறது. இதில் டேக் சரியாக வராவிட்டால், அவர்கள் அந்த கொண்ட்டேவைக் கொண்ட்ட்ட்ட்ட்டேதான் இருக்க வேண்டும். இப்படித்தான் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
            இதயச்சந்திரன் விகடுவைப் புரிந்து கொண்டது போலச் சொல்கிறார். "இந்தாருங்க விகடு! ஒங்கள அழச்சிட்டுப் போகணும்னு நெனக்கிறது புரியுது. கூட்டத்தோடு கூட்டமா நின்னு நூறு ரூபாய் சம்பாதிக்கிறதுலயே நின்னுடுவீங்க போலருக்கு. இஞ்ஞ அப்படி நின்னுப் போனவங்க நெறய பேரு. அப்படியே நின்னு போயிட வேண்டியதுதாம். அதுக்கு மேல வளர விட மாட்டாங்க. இப்படின்னு ஆளு சேக்கறதுக்கு, சேரறதுக்குன்னு இஞ்ஞ ஒரு கூட்டமே இருக்குன்னு சொன்னா நம்ப மாட்டீங்க! அதனால இனுமே நம்ம கூட ஷூட்டிங் வாராதீங்க! போயி சான்ஸ் தேடுற வழியப் பாருங்க!" என்கிறார்.
*****

ஒரு மாணவர் பள்ளி



ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில்
இரண்டாயிரத்துக்கும் மேல் இருந்தோம்
அறுபது ஆசிரியர் பள்ளி அது
இரண்டாயிரங்களில்
ஆயிரத்துக்குக் கீழ் வந்தோம்
முப்பது ஆசிரியர் பள்ளி அது
இரண்டாயிரத்துப் பத்துகளில்
ஐநூறுக்குக் கீழ் வந்தோம்
பதினைந்து ஆசிரியர் பள்ளி அது
இரண்டாயிரத்துப் பதினைந்துகளில்
இருநூறுக்கும் கீழ் வந்தோம்
ஆறு ஆசிரியர் பள்ளி அது
இரண்டாயிரத்துப் பதினேழுகளில்
இருபதுக்கும் கீழ் வந்தோம்
ஓராசிரியர் பள்ளி அது
இரண்டாயிரத்து இருபதுகளில்
அதற்கும் கீழ் வர முடியாது என்பதால்
ஒரு மாணவர் பள்ளி அது
பூஜ்ய ஆசிரியர் பள்ளி அது
*****

27 Jun 2019

முதலில் கேட்ட ஹம்!



செய்யு - 128
            உடம்பு தேறியதும் விகடு ஒவ்வொரு ஆபீஸாக ஏறி இறங்குகிறான். டேரக்டர் வீடு, மியூசிக் டேரக்டர் வீடு, ஆபீஸ் என்று ஏறி இறங்குகிறான். ரூமில் இதற்கென மணிமேகலைப் பிரசுரத்தின் ஒரு புத்தகம் லெனினின் பெட்டியில் இருந்தது. அதில் எல்லா சினிமா பிரபலங்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் இருந்தன. லெனின் சென்னைக்கு வந்தப் புதிதில் முகவரிகள் தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். அப்போது யாரோ ஒருவர் இந்தப் புத்தகத்தைச் சொல்லியிருக்கிறார்கள். லெனின் மணிமேகலைப் பிரசுரத்தின் முகவரியை விசாரித்துக் கொண்டு நடந்தே சென்று வாங்கி வந்த புத்தகம் அது. அதை ஒரு பொக்கிஷம் போல வைத்திருப்பார் லெனின். முகவரிகள் வேண்டும் என்று புத்தகத்தைக் கேட்டால் ஒரு பொக்கிஷத்தை எடுத்து கொடுப்பத போல கொடுப்பார். அதைப் பார்த்து தேவையான முகவரிகளை எழுதிக் கொண்டு ஆன பின் பொக்கிஷத்தைத் திருப்பிக் கொடுப்பது போல கொடுத்து விட வேண்டும்.
            டேரக்டர்கள், மியூசிக் டேரக்டர்களைப் போய் பார்த்தாலே வாய்ப்பு கிடைத்து விடும் என்று நினைத்துக் கிடக்கிறான் விகடு. அவர்களைப் போய்ப் பார்க்கும் போதுதான் கண்ணில் ஒரு நொடி அவர்களைப் பார்ப்பதே பெரும்பாடு என்று புரிகிறது. இப்படி கோடம்பாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் என்று சுற்றிச் சுற்றிக் கிடக்கிறான். எங்கு போனாலும் நடைதான். பஸ்ஸில் போனால் ஒன்றரை ரூபாய் அல்லது ரெண்டேகால் ரூபாய் டிக்கெட் அப்போது. அதைச் சேர்த்து வைத்தால் டீ குடிக்கலாம் அல்லது ஒரு வேளைக்குச் சாப்பிடலாம் என்ற கணக்குதான் அவனுக்குள் ஓடுகிறது. பஸ்ஸில் போக மனசு வர மாட்டேன்கிறது. அதனால் எங்கு சென்றாலும் நடைதான். சூளைமேட்டிலிருந்து தினமும் தி.நகருக்கு நடந்து செல்வதெல்லாம் அவனுக்குச் சர்வ சாதாரணமாகி விட்டது.
            சாலிகிராமத்தில் அப்போது படம் எடுத்து பிரபலமான ஒரு இயக்குநரைப் போய் பார்த்தால் வாய்ப்பு கிடைக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். இப்போதும் அவர் பிரபலமான இயக்குநரே. புதிதாக வருபவர்களுக்கு அவர் வாய்ப்பு தருகிறார் என்று விகடுவை ரூம் வீட்டில் இருந்தவர்கள் ஏற்றி விடுகிறார்கள். காலையிலேயே அவரைப் பிடித்த விட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். விகடு நம்பிக்கையோடு கிளம்புகிறான். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி நடந்து ஆறரை மணிக்கெல்லாம் சாலிக்கிராமத்தில் அந்த டேரக்டரின் வீட்டின் முன்னால் நின்றால்... கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் திருவிழா கூட்டம் போல. எல்லாரும் அந்த டேரக்டரிடம் வாய்ப்பு கேட்க வந்தவர்கள். வெளியே செக்கியூரிட்டி நின்று கொண்டு யாரையும் உள்‍ளே விட மாட்டேங்றார்.
            வந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். அதில் ஓர் ஆசாமி விகடுவிடம் பேசுகிறான். "நான் சார்ட்ட அஸிஸ்டண்ட் ஆகணும்னு ஒரு மாசமா வந்துட்டு இருக்கேன்! நீங்க எத்தனை நாளா வந்துட்டு இருக்கீங்க?" என்கிறான். ஆள் பார்ப்பதற்கு கர்லிங் முடியோடு நான்கு ஆட்களை அடிக்கும் அளவுக்கு ஆஜானுபாகுவாய் இருக்கிறான். மஞ்சள் டீ சர்ட், ப்ளூ ஜீன்ஸோடு வெள்ளை ஷூ போட்டிருக்கிறான். இது நாள் கணக்கில் வந்து பார்க்க வேண்டிய சமாச்சாரம் போலிருக்கிறதே என தயங்கிய விகடு சொல்கிறான், "இன்றுதான் ஐயா வருகிறேன்! நான் உதவி இயக்குநர் வாய்ப்பிற்காக வரவில்லை. பாடல் ஆசிரியர் வாய்ப்பிற்காக வந்திருக்கிறேன்!" என்கிறான்.
            "ஓ! டயலாக்லாம் செமயா எழுதுவீங்க போலருக்கே! சப்போஸ் நான் டேரக்டரான டயலாக் நீங்கதான்!" என்கிறான் அவன்.
            "ஐயா! மன்னிக்கவும்! நமக்கு வசனமெல்லாம் வராது. ஒன்று பாட்டு. அல்லது கவிதை. வேறு எதுவும் எழுதுவதாக இல்லை." என்கிறான் விகடு.
            "ரொம்ப கிளியரா இருக்கீங்க! தட்ஸ் குட்!" என்று அவன் சொல்லும் போது "டேரக்டர் இன்னும் எழுந்திருக்கல!" என்று சொல்லி விட்டுப் போகிறார் செக்கியூரிட்டி.
            "எப்போ எழுந்திருப்பாங்க சாரு?" என்று கூட்டத்திலிந்து ஒரு குரல் வருகிறது. செக்கியூரிட்டி எந்தப் பதிலும் சொல்லாமல் போகிறார் இறுமாப்போடு.
            "நேத்திக்கு ஏழேகாலு இருக்கும். அதுக்கு முந்தா நாளு எட்டு ஆயிடுச்சு. முந்தா நேத்தி பத்தே காலு. எப்படியும் இன்னிக்கு ஏழரைக்குள்ள எழுந்திரிச்சிடுவாங்க!" என்கிறது கூட்டத்திலிருந்து பதில் அளிக்கும் விதமாக இன்னொரு குரல்.
            "இது வரிக்கும் ரண்டு படம். ரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். நெக்ஸ்ட் விஜய்க்குதாம் படம் பண்ணப் போறதா பேசிக்கிறாங்க. டிஸ்கஷன் போயிட்டு இருக்காம். சூர்யா மூவீஸாம்!" என்றெல்லாம் கூட்டத்திலிருந்து குரல் வருகின்றன. அந்த நேரம் பார்த்து ஒருவர் வருகிறார். அவருக்கு மட்டும் செக்கியூரிட்டி கதவைத் திறக்கிறார். அவர் கதவைத் திறந்து உள்ளே நுழைவதற்குள் கூடியிருந்த கூட்டம் அவரை அப்படியே மொய்த்து, "அண்ணே! அண்ணே!" என்று சுற்றி வளைக்கிறது. "சார்ட்ட அசிஸ்டண்ட்டா சேரணும். பாத்து பண்ணி வுடுங்க!" என்கிறது கூட்டம்.
            "இப்பவே சார்ட்ட பத்தொம்பது அசிஸ்டெண்ட். இருக்குற எங்கள யாரயும் காலி பண்ணிடாம யாரு வேணாலும் சேந்துக்குங்கப்பா!" என்று சொல்லி விட்டு அவர் உள்ளே போகிறார். ஓடிச் சென்று மாடியில் ஏறுகிறார்.
            மேலிருந்து நேரடி ஒளிபரப்பு போல செய்திகள் வர ஆரம்பிக்கின்றன. கூட்டம் ஆங்காங்கே பேசுவதை நிறுத்தி விட்டு உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பிக்கிறது. டேரக்டர் எழுந்துட்டாருப்பா... டாய்லெட்டு போயிட்டு இருக்காருப்பா... பல்ல துலக்க ஆரம்பிச்சிட்டாருப்பா... குளிக்க ஆரம்பிச்சிட்டாருப்பா... கொஞ்ச நேரத்தில் உள்ளே போன அசிஸ்டெண்ட் டேரக்டரின் ஈர ஜட்டியைத் தூக்கிக் கொண்டு கசக்கிப் பிழிந்து துவைத்துக் காயப் போட ஓடுவது கீழே இருந்து பார்க்கும் போது தெரிகிறது. டேரக்டரின் ஜட்டியைப் பார்க்க முடிந்து விட்டது. டேரக்டரைத்தான் பார்க்க முடியுமா என தெரியவில்லை.
            மறுபடியும் குரல்கள் மேலிருந்து வர ஆரம்பிக்கின்றன. கூட்டம் மறுபடியும் அமைதியாகிறது. டேரக்டர் ஜட்டிப் போட்டுட்டாருப்பா... டேரக்டர் பனியன் போட்டுட்டுடாருப்பா... தலை வாரியாச்சி... பவுடர் போட்டாச்சி... பேண்ட் போட்டாச்சி... சட்டைப் போட்டாச்சி... இன் பண்ணியாச்சி... டேரக்டர் சாப்பிட உட்கார்ந்துடாரப்பா... ரண்டு இட்டிலி, கொஞ்சம் கெட்டிச் சட்டினி... ஒரு சிகரெட்... டேரக்டர் கிளம்பிட்டாருப்பா... என்றதும் கூட்டம் முண்டியடித்து கேட்டின் முன் திரள்கிறது. செக்கியூரிட்டி வந்து கூட்டத்தை ரெண்டாகப் பிளந்து கார் போகும் அளவுக்கு பிரித்து விடுகிறார்.
            கூடியிருந்த கூட்டம் முழுவதும் பெரும் ஹீரோவைப் பார்ப்பதைப் போல வேடிக்கைப் பார்க்கிறது. டேரக்டர் வெளியே வருகிறார். வேக வேகமாக வந்து காரில் ஏறிக் கொள்கிறார். கார் கேட்டைத் தாண்டி வெளியே வந்ததும் ஒரு சில நொடிகள் கார் நிற்கிறது. "சார் ஒங்ககிட்டதாம் அசிஸ்டெண்ட் ஆகணும்னு ஒரு வருஷமா..." என்று சொல்லியபடி அவர் அருகே பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்கள் காகிகத்தை நீட்டுகிறார்கள். எல்லாவற்றையும் வாங்கி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அசிஸ்டெண்டிடம் கொடுத்து விட்டு, "கண்டிப்பா கன்சிடர் பண்றேன்!" என்று அவர் சொன்னதும் கார் நகர ஆரம்பிக்கிறது. அறுபது எழுபது பேரில் ஏழெட்டு பேர் காகிதம் கொடுத்திருப்பார்கள். மற்றவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம்தான். அவரின் முகத்தைப் பார்த்தவர்கள் முப்பது பேர் வரை இருப்பார்கள். மற்றவர்கள் அவரின் காரைப் பார்த்ததோடு சரி. அந்தப் பார்க்காதவரின் பட்டியலில் விகடுவும் இருக்கிறான்.
            கார் கண்ணிலிருந்து மறையும் வரை கூட்டம் பார்த்துக் கொண்டே நிற்கிறது. அதற்குப் பின்பு செக்கியூரிட்டி வருகிறார். ஒவ்வொருவராய்ப் பார்த்து, "நீ கொடுத்தியா? நீ கொடுத்தியா?" என்று கேட்கிறார். கொடுக்க வாய்ப்பில்லாதவர்களைப் பார்த்து, "நீல்லாம் எதுக்கு லாயக்குடி? ஒங்கிட்ட வந்து கேட்பார்னு பாத்தியா பேமாலி! ஒனக்கு சான்ஸ் வேணுன்னா நீதாம் முட்டி மோதிட்டுப் போயிக் கொடுக்கணும் சாவு கிராக்கி!" என்கிறார். அதைக் கேட்ட ஒருத்தர், "நாளிக்கி எப்படியும் நீட்டிடுவேண்ணே!" என்கிறார். "கிழிச்ச போ! அதுக்குள்ள இன்னம் பத்து பேரு சேந்திடுவான்டா கஸ்மாலம்!" என்கிறார் செக்கியூரிட்டி.
            கூட்டல் மெல்ல கலைய ஆரம்பிக்கிறது. விகடுவுக்கு நிற்பதா? கலைவதா? என்ற குழப்பம் சூழ்ந்து கொண்டு கும்மி அடிக்கிறது. மனசு நிலையில்லாமல் தவிக்கிறது. நல்ல வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாலம் விட்டு விட்டோமா என மனசு கிடந்து துடிக்கிறது. தவிரவும் அவரிடம் கொடுப்பதற்கான காகிதமும் எதுவும் இல்லை. பையில் ஒரு இங்க் பேனாவும், கையில் ஒரு கிங் சைஸ் நோட்டும்தான் இருக்கிறது. போட்டிருப்பது ரூமில் இருக்கும் ஒருவரின் பேண்ட். சட்டை இன்னொருத்தரின் சட்டை. பேண்டும், ஜட்டியும்தான் அவனுடையதாக இருந்தன. அது தி.நகர் பாண்டி பஜாரில் அறுபது ரூபாய்க்கு ரண்டு ஜோடிகள் என பேரம் பேசி வாங்கியது. அவனுடைய சட்டையும், பேண்டும் துவைத்துப் போட்டு துணியில் காய்ந்து கொண்டிருக்கின்றன. அவனோடு முன்பு பேசியவன் இப்போது அவன் முன்னால் வருகிறான். "எவரிடே கிரெளட் இன்கிரிஸ் ஆவுதே தவிர டிகிரிஸ் ஆவ மாட்டேங்குது! பட் எப்படியும் ஒரு டேரக்டர் ஆயிடுவேன்னு கான்பிடன்ட் இருக்குது பாஸ்! ஒங்களப் பார்த்தா டேலன்டா தெரியுது. கண்டிப்பா எம் படத்துல ஒங்களுக்கு சான்ஸ் உண்டு! ஒங்க ரிசியூமைக் கொடுங்க பாப்பம்!" என்கிறான்.
            "நம்மிடம் அப்படி ஒன்றும் இல்லை!" என்கிறான் விகடு.
            "கஷ்டம்!" என்று மூச்சை உள்ளிழுத்து பெருமூச்சாக விடுகிறான் அவன்.
            "பாஸூ! இந்தப் பாருங்க! இதுல மை டீடெய்ல்ஸ், ஒரு ஷார்ட் ஸ்டோரி, ஒரு சீன் டெவலப்பிங், அதுக்கு டயலாக் எல்லாம் வெச்சிருக்கேன் பாருங்க. இந்த மாதிரி நீங்க வாட் ஆர் யூ டூயிங்கனா... யூ ஆர் பாடலாசிரியர்... ஸோ ஒரு ஆல்பம் மாதிரி படத்த ஒட்டி அதுக்கு ஆப்போசிட்ல பாட்ட எழுதி வெச்சிருக்கணும். அதாங் ஒங்க விசிட்டிங் கார்டு. அன்டர்ஸ்டாண்ட்!" என்கிறான்.
            விகடு தலையாட்டுகிறான்.
            "லுக் பாஸூ! எம் பேரு செங்குமார்! சினிமாவுக்காக சுகந்தன். ரெட் ஹில்ஸ்லேந்து வாரேன் பாஸூ! எங்கிட்ட ஏகப்பட்ட ஸ்டோரிஸ் பாஸூ! பாலிடிக்ஸ், ரொமான்டிக், டிராஜடி, ஹாரர், காமெடி, திரில்லர்னு ஏகப்பட்ட ஸ்டோரிஸ் பாஸூ! எப்படியும் டேரக்டராகியே தீருவேன். இவனுங்க சான்ஸ் தராட்டியும் ஒரு அடல்ட்ஸ் ஒன்லி மூவி எடுத்தாவது டேரக்டராவேன் பாஸூ! அதுக்கு ஒண்ணும் பெரிசா பட்ஜெட் ஆவுறது இல்ல. ஆக்ட் பண்றவங்ககிட்டயே காசு வாங்கி படத்த எடுத்துடலாம். வில்லனா ஆக்ட் பண்றவங்கிட்ட செம டப்பு வாங்கிடலாம் பாஸூ! அதுக்கு அட்ஜஸ்ட் ஆகுற மாரி ஏகப்பட்ட ரேப் சீனு வெச்சிக் கொடுக்கணும். துட்டா? பணமா? வெச்சிக் கொடுத்துடலாம். பாஸூ! அப்படிப் படம் எடுத்தா நம்ம மூவில பாட்டு எழுத ஒங்களுக்கு ஒண்ணும் அப்ஜெஸன் இல்லல்ல!" என்கிறான் அவன்.
            "படம் எடுப்பதாக முடிவு பண்ணிய பின் நல்ல சமூக படமாக, சமூகத்துக்கு கருத்துள்ள படமாகவே எடுக்கலாமே!" என்கிறான் விகடு.
            "இதுவும் சோசியல் படம்தான் பாஸூ! இடையில அப்படி இப்படி காட்டுனாலும் கிளைமேக்ஸ்ல குட் மேசேஜ் இருக்கும் பாஸூ! வில்லன் எல்லாத்தியும் ஹீரோயின் டொப்பு டொப்புன்னு பிஸ்டல்ல போட்டு தள்ளுவா பாருங்க பாஸூ! அங்க வைக்கிறோம் டைட்டில் கார்டு பெண்மையின் சக்தி பாரடா! அப்படின்னு! தட்ஸ் வாட் ஐ சே! சீப்பா நெனச்சிபுடாதீங்க பாஸூ!"
            தலைசுற்றாத குறையாக நிற்கிறான் விகடு. பார்க்க வந்த டேரக்டரைப் பார்க்க முடியாமல் போனது மனதின் ஒரு பக்கம் இழுக்கிறது. ரெட்ஹில்ஸ் செங்குமார் என்ற சுகந்தனின் பேச்சு தெறிக்க விடுகிறது.
            "பேசுங்க பாஸூ! இந்த பீல்டுல எதக் கேட்டாலும் சம்பந்தம் இல்லாம பேசணும்! இப்டிலாம் ஏஜ் அட்டெண்ட் புள்ளயாட்டம் நிக்ககக் கூடாது. அதுங்களே ன்னா பேச்சு பேசுதுங்க. ரவுசு வுடுதுங்க. கம். ஒரு டீ அடிப்போம். நான் ஒரு டம்மி ஹம் பண்றேன். நீங்க அதுக்கு தகுந்த மாதிரி எழுதுங்க. கையிலதாம் நோட்டு ரெடியா வெச்சிருக்கீங்களே!"
            டீ வருகிறது. சாயுங்காலம் வரைக்கும் இந்த ஒரு டீ போதும் என்று நினைத்துக் கொள்கிறான் விகடு. டம்மி ஹம் ஆரம்பமாகிறது. "கீனா கவனிங்க பாஸூ! அச்சக் பச்சக் அச்சக் - இச்சக் பச்சக் இச்சக் - அச்சக் பச்சக் இச்சக் - இச்சக் பச்சக் அச்சக் - ஹே ‍ஹே ஹே அச்சக் அச்சக் அச்சக் - பச்சக் பச்சக் பச்சக் - இச்சக் இச்சக் இச்சக்" நல்லா ராகமாகத்தான் இழுத்து ஹம் செய்கிறார் செங்குமார். கேட்கும் போதே ஒரு கிறக்கம் உண்டாகிறது. படிக்கும் போது உங்களுக்கும் உண்டாகியிருக்கலாம்.
            இதற்கு எப்படிப் பாட்டெழுதுவது என்று தெரியாமல் முழிக்கிறான் விகடு. "உடனடியாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்!" என்கிறான் விகடு.
            "டேக் யுவர் ஓன் டைம் பாஸூ! பாட்டுதாம் முக்கியம் பாஸூ! ஒரு பாட்டுன்னாலும் மரண ஹிட் அடிக்கணும். ஒங்களுக்கு டியூனுக்கு பாட்டு எழுத வராதுன்னு நெனைக்கிறேன். அதாங் மெயினு பாஸூ! லேர்ன் பண்ணுங்க. ஒங்க போன் நம்பர் கொடுங்க! நான் கான்டாக்ட் பண்றேன்." என்கிறார் செங்குமார்.
            விகடு வீட்டு ஓனரின் போன் நம்பரைக் கொடுக்கிறான். "திஸ் இஸ் மை நம்பர்!" என்று ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுக்கிறார் செங்குமார்.
            செங்குமார் அதற்குப் பின் வீட்டு ஓனரின் நம்பரைத் தொடர்பு கொண்டாரோ? யாருடா நீ கஷ்மாலம்? என்று திட்டு வாங்கினாரோ தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை ரூம் வீட்டுக்கு வந்து விகடு சொல்ல சொல்ல எல்லாரும் சிரித்தச் சிரிப்பைப் பார்த்து விகடு செங்குமாரின் கார்டை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போடுகிறான். ஆனால் ஒரு வாரத்துக்கு, "போறப் போக்க பாத்தா விகடு மலையாளப் படத்துக்கே பாட்டு எழுதிடுவாம் போலருக்கு!" என்று அங்கு விகடு பற்றிய பேச்சாகவே இருக்கிறது ரூம் வீட்டில்.
*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...