31 Jan 2020

ஆட்டு மாட்டுப் பள்ளியோடம்!



செய்யு - 344

            பழக்க வழக்கம், பேச்சு வார்த்தெ சரியா இல்லன்னாலும் கோட்டகம் பள்ளியோடத்துக்குக் குமரு மாமாவோட கைங்கர்யம் ரொம்பவே அதிகம். பள்ளியோடத்துக்கு வராந்தா தெறந்த‍ மேனிக்குக் கெடந்ததுல ஊர்ல உள்ள ஆடுங்க, மாடுங்க எல்லாம் ராத்திரி நேரத்துல அங்கத்தாம் பாடம் படிக்கணும்னு வந்துடும்ங்க. அந்த ஆடுங்க, மாடுங்க அங்கனயே படுத்து, புழுக்கைகளப் போட்டு, சாணியப் போட்டு வெச்சு காலையில போயிப் பாத்தாக்கா அந்த எடத்தெ சுத்தம் பண்றதுக்குள்ள அது ஒரு அரை மணி நேரத்தெ முழுங்கிப்புடும். மழைக்காலத்துல இந்த அட்டூழியம் ரொம்ப அதிகமாவே இருக்கும். கோடைக்காலத்துல அங்கங்க படுக்குற ஆடுங்க, மாடுங்க மழைக்காலத்துல வராந்துக்குள்ளத்தாம் வந்துப் படுத்துக்கும்ங்க. ஒரு வூட்டு ஆடு மாடு, ரெண்டு வூட்டு ஆடு மாடுன்னு இல்லாம ஊருல்ல உள்ள அத்தனெ ஆடு மாடுங்களும் வந்துப் படுத்தா வராந்தா என்னாவுறது? மழைக்காலத்துக்கு ஊர்ல இருக்குற ஆடுங்களுக்கும் மாடுங்களுக்கும் பள்ளியோடத்து வராந்தாத்தாம் கொட்டில் மாதிரி ஆகிப் போச்சு.
            அத்தோட மனுஷங்களும் பகல் நேரத்துல பொழுது போகலன்னா வராந்தாவுல வந்து துண்டெ விரிச்சிப் போட்டு படுத்துக்கிடுறாங்க. என்ன இப்பிடி பள்ளியோடத்து வராந்தாவுல பாடத்தெ நடத்துறப்ப படுத்திக்கிட்டா எப்பிடின்னா, "அதுக்கென்ன வாத்தியாரே! நீஞ்ஞ பாட்டுக்குப் உள்ளார பாடத்தெ நடத்துங்க! நாஞ்ஞப் பாட்டுக்குத் வெளியில தூங்குறேம். அதுல ஒங்களுக்கு ன்னா பாதிப்பு வந்துப் போச்சு?" அப்பிடின்னு சொல்லிப்புட்டு, சொல்லப் போற பதில கூட கேக்க நேரமில்லாதத போல அடுத்த நொடியே கொர் கொர்ன்னு கொறட்டை வுட்டுத் தூங்குறாங்க.
            இது ஒரு பிரச்சனை ஆச்சா... அடுத்தது இன்னொரு பிரச்சனை என்னான்னா... அறுவடை காலம் ஆச்சுன்னா கிராமத்துச் சனங்க அறுக்குற நெல்லு மூட்டைகள வராந்தாவுல கொண்டாந்து அடுக்கிக்கிட்டுப் படுத்துக்கிறாங்க. அறுவடை முடியுற இருவது நாளைக்கு வரையுமாவது பள்ளியோடத்து வராந்தா முழுக்க நெல்லு புடிக்கிற கொள்முதல் நிலையம் போல ஆயிடுது. அப்ப மட்டுந்தாம் வராந்தாவுல ஆடு மாடுக பிரச்சனை இருக்காது. மூட்டைக பிரச்சனை ஆரம்பமாயிடும். அதாவது மூட்டைகள அடுக்கிறதோட வுடாம எம்மோட எடத்துல இவ்வேம் அடுக்கிட்டாம், அவ்வேம் எடத்துல இவ்வேம் அடுக்கிட்டாம்னு வேற சண்டெ இழுத்துக்கிட்டு அதுக்குப் பஞ்சாயத்துப் பண்ணி வையுங்கன்னு விகடுகிட்ட வந்து நிக்குறாங்க. பள்ளியோடத்து வராந்தாவுல மூட்டைகள அடுக்குறதெ தப்புன்னா இதுல இப்பிடி பஞ்சாயத்து வெச்சுக்கிட்டு வந்து நின்னா என்ன பண்றது? அதுவுமில்லாம பள்ளியோடத்து வராந்தாவுல இது இவுங்க மூட்டை அடுக்குறதுக்குன்னா எடம், அது அவுங்க மூட்டை அடுக்குறதுக்கான எடம்னு யாரு பிரிச்சி வுட்டதுவோ?
            இந்த மேனிக்குப் பள்ளியோடத்து வராந்தாவுல மூட்டைகள அடுக்காதீங்க? ஆடு மாடுகள வுடாதீங்கன்னா அவுங்கள்ல யாரும் கேக்குற பாடாயில்ல. "இதென்ன புதுக் கூத்தா இருக்கு? பள்ளியோடம் பெறவு எதுக்கு இருக்கு? பள்ளியோடத்து வராந்தா சும்மாத்தான கெடக்கு? ராத்திரி நேரத்துல பள்ளியோடத்துல ன்னா பாடமா நடக்குது?"ன்னு கேட்டுட்டுச் சிரிக்கிறாங்களே தவிர அப்பிடி அவுங்க பண்றதெ மட்டும் நிறுத்த மாட்டேங்றாங்க.
            இத்தெ இப்பிடியே விட முடியாது, இதுக்கு ஒரு வழியக் கண்டுபிடிக்கணும்னு வராந்தாவுக்கு மரச்சட்டத்துல ஒரு தட்டிய செஞ்சு அடைச்சா தேவலாம்னு தோணுச்சு விகடுவுக்கு. இப்போ வருஷா வருஷம் பள்ளியோடத்துக்குப் பள்ளி மானியம், பராமரிப்பு மானியம்னு பணத்தெ ஒதுக்குறாங்க. அந்தப் பணத்தெ எடுத்துச் செஞ்சப்புடலாம்னு சின்னமுத்து வாத்தியாருகிட்ட கலந்துகிட்டாம் விகடு. அவரு எது செஞ்சாலும் சரித்தாம்ங்ற மாதிரி தலையாட்டுறாரு. குமரு மாமாகிட்ட போயிச் சொன்னதுக்கு அதுவும் சரின்னு காரியத்துல எறங்கிப்புடுச்சு. ஒரு நாளு வந்து தட்டிக்கான அளவுகள எடுத்துக்கிட்டு, இருவது நாள்ல தட்டிய தயாரு பண்ணிகிட்டு,துணைக்கு ஒரு ஆளையும் அழைச்சுக்கிட்டு டாட்டா ஏஸ்ல வந்து எறங்கிப்புடுச்சி குமரு மாமா. சுத்திலும் தட்டிய வெச்சி அடைச்சி, கதவ வெச்சி, நீல நெறத்துல பெயிண்டையும் கையோட கையா அடிச்சி விட்டு போயிடுச்சு. அத்தோட வராந்தாவுக்கு தட்டியிலயே கதவைப் போட்டு கதவுக்குப் பூட்டையும் போட்டு அடைச்சாச்சி. இதுல அடுத்தப் பிரச்சனை உண்டாயிப் போச்சு. இப்பிடி பள்ளியோடத்து வராந்தவ அடைச்சா ஆடுங்க, மாடுங்க எங்கப் போயி படுக்குறது? அறுவடை காலத்துல அறுக்குற மூட்டைகள எங்க போயி அடுக்குறது? மேக்கொண்டு என்னாத்த பண்றது?ன்னு கிராமத்துலேந்து பள்ளியோடத்துக்குத் தாக்கல் வருது.
            "அதிகாரிங்க வந்துப் பாத்தா பெரச்சனையா போயிடும். ஒஞ்ஞ வூட்டு ஆடு மாடுகள ஒஞ்ஞ ஒஞ்ஞ வூட்டுல கட்டி வெச்சி வளருங்க. ஒஞ்ஞ ஒஞ்ஞ நெல்லு மூட்டைகள ஒஞ்ஞ ஒஞ்ஞ வூட்டுல வெச்சிக்குங்க. பள்ளியோடம் பொது எடம். அது புள்ளைங்க படிக்க கொள்ள, வெளையாட‍ கொள்ள உபயோகப்படணுமே தவுர இப்பிடில்லாம் உபயோகம் ஆகக் கூடாது!" அப்பிடிங்றாம் விகடு அந்தத் தாக்கலுக்கு.

            "அப்பிடி ன்னா சட்டம் இருக்கா? அதெ எடுத்துக் காட்டுங்க வாத்தியார்ரே பாப்பேம்!"ங்றாங்க சனங்க சில பேருங்க. அத்தோட,             "இத்து எஞ்ஞ கிராமம். எஞ்ஞ பள்ளியோடம். நீஞ்ஞ வேத்து ஊருக்காரரு. பள்ளியோடம் வந்தா பாடத்தெ நடத்துறதெ மட்டும் பாருங்க. சட்டத்துல யில்லாத காரியத்தையெல்லாம் செய்யாதீங்க. பெறவு பெரச்சனையா போயிடும். போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் பண்றாப்புல ஆயிப்புடும்!" அப்பிடின்னும் சொல்லுறாங்க கிராமத்துல இருக்குற சில ஆளுங்க.
            விகடு பாத்தாம் அவுங்கள, "ரொம்ப நல்லதாப் போச்சி. மொதல்ல போயி அதெச் செய்யுங்க. இனுமே இஞ்ஞ ஆடு மாடுங்க படுக்குறதுக்கு, மூட்டைகள அடுக்குறதுக்கு அனுமதி கெடையாது."ங்றாம்.
            "நாஞ்ஞ கலக்டருகிட்ட போயி கம்ப்ளய்ண்ட் பண்ணுவேம்! கலக்டரு ஒஞ்ஞ மேல நடவடிக்கெ எடுத்தா நாங்க பொறுப்பில்ல பாத்துக்குங்க! வெவசாயம் பண்றத தடுக்குறதுக்கு யாருக்கும் உரி‍மெ யில்ல"ங்றாங்க சனங்க.
            அவுங்க புரிஞ்சிப் பேசுறாங்களா, புரியாம பேசுறாங்களான்னு நெனைக்க நெனைக்க விகடுவுக்குச் சிரிப்பு சிரிப்பா வருது. விகடு சிரிச்சிட்டாம். சிரிச்சிக்கிட்டே, "நீஞ்ஞ எஞ்ஞ வேணாலும் போயி என்ன வாணாலும் பண்ணுங்க. முடிவுல மாத்தம் இல்ல."ங்றாம் விகடு.
            "இத்தெ இப்பிடியே வுடக் கூடாது. ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரிய ஓட்டுன கதெயா ஆயிப்புடும். வாத்தியாரு மேல நடவடிக்கெ எடுத்தாவணும்! சிரிச்சிக்கிட்டே பேசுனா நாம்ம பயந்துப்புடுவேம்னு நெனைப்பாக்கும்? ஊரு வுட்டு ஊரு வர்ற வாத்திக்கே இம்மாம்ன்னா இந்த ஊர்லயே பொறந்து இந்த ஊரு மண்ண தின்னுட்டுக் கெடக்குற நமக்கு எம்மாம் இருக்கணும்?"னு பேசிகிட்டே கலையுறாங்க சனங்க.
            பள்ளியோடத்துக்குன்னு எடம் வரைமுறை இல்லாம தெறந்த மேனிக்குக் கெடக்குறதாலத்தாம், ஆடுங்க, மாடுங்க, மனுஷங்க வர்றதும், போறதும், சமயத்துல வராந்துக்குள்ளயே வந்துப் படுத்துகிறதும்னு இருக்கு. வண்டிகளும் பள்ளியோடத்துக்குப் பக்கத்துலயே சர்ரு புர்ருன்னு வர்றதும் போறதும்னு இருக்கு. இதுக்கு ஒரு முடிவு பண்ணியாவணும்னா பள்ளியோடத்தச் சுத்தி வேலிய அடைச்சாவணும்னு தோணுது விகடுவுக்கு.
            பள்ளியோடத்தச் சுத்தி வேலி அடைக்கணும்னா பள்ளியோடத்துக்கு எம்மாம் நெலம் இருக்குன்னு தெரியணுமேன்னு பத்திரத்தெ எடுத்துப் பாத்தா, பள்ளியோடத்து எடத்து வழியா பஞ்சாயத்து ரோட்ட போட்டு வெச்சிருக்குற சங்கதியே அப்பத்தாம் தெரிய வருது. பள்ளியோடத்து மின்னாடி வரைக்கும் ரோடு வர்றதோட சரி. அதுக்கு மேல ரோடு கெடையாது. அதெ தாண்டி ரோடு போற அத்தனெ எடமும் பள்ளியோடத்து எடம். அந்த பள்ளியோடத்து எடத்துல குறுக்கால ரோட்ட போட வெச்சி சனங்க போயிட்டும், வந்துட்டும் இருக்குற விசயம் அப்பத்தாம் தெரிய வருது. இதுக்கு உடந்தையா மின்னாடி இருந்த பஞ்சாயத்து தலைவரும் நடந்திருக்கிறாரு.
            விகடு இந்த சமாச்சாரங்கள அத்தனையையும் எடுத்துக்கிட்டு இப்போ பஞ்சாயத்து தலைவர்ரா இருக்குறவர்கிட்டே போயிட்டாம். கோட்டகம் கிராமம் ஓகையூரு பஞ்சாயத்துல வருது. அதோட பஞ்சாயத்து தலைவர்ரா இப்போ இருக்குறவரு உதயச்சந்திரன். அவரு விகடு சொன்ன சங்கதி அத்தனையையும் பொறுமையா கேட்டுக்கிட்டாரு. "நீஞ்ஞ சொல்றது சரித்தாம் வாத்தியார்ரே. மின்னாடி இருந்த பஞ்சாயத்து தலைவரு கோட்டகத்துல ஓட்டை வாங்கணுங்றதுக்காக குறுக்கால ரோட்டைப் போட்டு தர்றதா வாக்குறுதிக் கொடுத்து பள்ளியோடத்து எடத்துல குறுக்கால தாரு ரோட்டைப் போட்டுப்புட்டாங்க. அத்து தப்புத்தாம். போட்ட ரோட்டை எடுத்தா பெரச்சனையா போவும். அதெ வுட்டுப்புட்டு மிச்ச எடத்துல வேலிய கட்டிக்கிங்க."ங்றாரு.
            "ரோட்டுக்கு இந்தாண்ட பள்ளியோடம். அந்தாண்ட டாய்லட்டு கட்டியிருக்கு. குறுக்கால ரோடு போவுது. நாம்ம இந்தாண்டயும், அந்தாண்டயும் ரண்டு வேலில்லா தேவையில்லாம கட்ட வேண்டிருக்கும். புள்ளைங்க டாய்லெட்டுப் போவணும்னா ரண்டு எடத்துல வேலிப் படலெ தொறந்துகிட்டுப் போவணும். ரோட்டை அந்தாண்டையும், இந்தாண்டையும் கடந்துகிட்டுப் போவணும். வண்டிங்க வேற சர்ரு புர்ருன்ன போயிட்டுக் கெடக்குதுங்க. அந்த ரோட்டை எடுத்து வுட்டுப்புடுறதுதாங் செரி. பள்ளியோடம் பஞ்சாயத்துப் பள்ளியோடங்றதெ ஒத்துக்கிறேம். பஞ்சாயத்துக்கு ஒண்ணுன்னா பள்ளியோடத்து எடத்துலயே கைய வெச்சா, படிக்கிற புள்ளைங்களுக்கு வெளையாட எடம் எஞ்ஞ இருக்கு? நாளைக்கே பள்ளியோடம் பெரிய பள்ளியோடமா ஆவுதுன்னு வெச்சுக்குங்க. புதுசா கட்டடத்தெ கட்ட எஞ்ஞ எடம் இருக்கு? அப்போ எடத்துக்கு எஞ்ஞ போவீங்க? இப்பிடியே வுட்டாக்கா அந்த ஊரு வளராமலே போயிடும். பள்ளியோடத்து எடத்துல மட்டுமே ரோடு நானூத்து அம்பது அடிக்குப் போவுது ஊடால!"ங்றாம் விகடு.
            "வாத்தியாரம்பீ! நீஞ்ஞ பேசுறதுல்லாம் வாஸ்தவம்தாம். நீஞ்ஞ சொல்றதெ பண்ணா அடுத்த தடவெ நாம்ம பெரசிடண்டுக்கு நின்னு ஒத்த ஓட்டெ கூட கோட்டகத்துலேந்து வாஞ்ஞ முடியாது. நம்ம அடிமடியிலல்லா கையெ வைக்குறீங்க. அத்து ஒரு ஊரு? அந்த ஊருக்கு ஒரு பள்ளியோடம்? அவுனுங்க வெளங்க மாட்டேய்னுங்க யம்பீ! நீஞ்ஞ போனீங்களா வேலயப் பாத்துட்டுப் போங்க. அவுனுங்கள திருத்த முடியாது வாத்தியாரும்பீ!"ங்றாரு உதயச்சந்திரன்.
            "நீஞ்ஞ நெனைச்சா செய்யலாம்!"ங்றாம் விகடு.
            "இந்தப் பதவிக்கு வந்து ஒண்ணும் சம்பாதிக்கலம்பீ! மித்த ஆளுங்க மாதிரி நாம்ம கெடையாது. கையி சுத்தம். ஏதோ வண்டிய ஓட்டிக்கிட்டும் உருட்டிக்கிட்டும் கெடக்குறேம்!"ங்றாரு உதயச்சந்திரன்.
            "சம்பாதிக்கலங்றதுக்காக, கெட்ட பேர்ர சம்பாதிக்க வேண்டியதில்ல!"ங்றாம் விகடு.
            "வாத்தியாரும்பீ! நல்லாவே பேசுதீங்க!"ங்றாரு உதயச்சந்திரன்.
            "பாத்து பண்ணி வுடுங்க. ஒங்களுக்குப் புண்ணியமா போவும்! ஒங்கள நம்பித்தாம் வந்திருக்கேம். மலை போல நம்பி வந்திருக்கேம்!"ங்றான் விகடு.
            "யாம்பீ! நீஞ்ஞ வேற புண்ணியம் அது இதுன்னுகிட்டு? செரி போங்க! நாம்ம அடுத்த தடவெ பெரசிடென்டுக்கே நிக்கல. நின்னாலும் ஓட்டைப் போட மாட்டானுவோ. இத்து ஒரு நல்லதெ செஞ்சதா இருந்துட்டுப் போவட்டும். நீஞ்ஞ நெனைக்கிறதெ நடத்திக்குங்க!"றாரு உதயச்சந்திரன்.
            "யய்யா! இதுல நாம்ம நெனைக்கிறதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. இதாங் ஞாயம். இதாங் செரி. ஏத்தோ ஒரு நேரத்துல மாறிப் போயிடுச்சு. அத்தெ இப்போ சரி பண்ணிக்கிறோம். அம்மாங்தாம்!"ங்றாம் விகடு.
            "முடிவோட வந்துப்புட்டீங்க. முடிச்சிப்புடுங்க!"ங்றாரு இப்போ உதயச்சந்திரன்.
*****


30 Jan 2020

சீப் ரேட்டு வேலைக்காரரு!



செய்யு - 343

            குமரு மாமா வர்றதெ வழியப் பாத்துட்டே உக்காந்திருக்காம் விகடு. அதுக்குள்ள இன்னும் நாலஞ்சு பேரு வந்துட்டாங்க வேல விசயமா குமரு மாமாவ பாக்குறதுக்கு. எல்லாருமா சேர்ந்து பெஞ்சு போல அடிச்சி வெச்சிருக்கிற பலக மேல குந்தியிருக்காங்க. இன்னும் கொஞ்சம் நேரம் ஆனாக்கா இன்னும் நாலஞ்சு பேரு வந்துடுவாங்க போலருக்கு. குமரு மாமாட்ட யாரு மொதல்ல பேசுறது, வேலயப் பத்திச் சொல்றது காரியத்தெ முடிச்சிக்கிறதுங்றதுல இப்போ உக்காந்திருக்கிற ஆளுகளுகிட்ட ஒரு போட்டி உண்டாறது போல பேச்சு ஓடிட்டு இருக்கு. எல்லாருமே சீக்கிரத்துல குமரு மாமா வேலய முடிச்சிக் கொடுக்காம இருக்குறதெப் பத்தித்தாம் பேசிக்கிறாங்க.
            "ஆம்மாம் நாம்ம கொடுக்குற காசிக்கு சட்டுன்னு வேலயப் பாத்து முடிக்கிணுமாக்கும்! கொமரு சீப் ரேட்டுல பாக்குற வேலயப் பாத்துட்டு வேத்து ஊருக்காரங் வரைக்கும் வேலைக்கி வந்து நிக்குறாம். ஆனா பய செம்ம கில்லாடி. காசியப் பாக்கப் பாக்கத்தாம் வேல நெடக்கும். இல்லன்னா பாதிக் கோத்தும், பாதிக் கோக்கமாத்தாம் கெடக்கும்."ங்றாரு அதுல ஒருத்தரு.
            "அத்து கெடக்குப் போ! காசிய காட்டுனா மட்டும் ன்னாவாம்? பத்து நாளுல்ல முடியுற வேல இருவது நாளு வரைக்கும்ல இழுத்துட்டுப் போவுது!"ங்றாரு அதுல இன்னொருத்தரு.
            "காசிய காட்டவே இல்லன்னு வெச்சிக்கோ வாஞ்சிப் போட்டுருக்குற பலவெல்லாம் கொமருக்குன்னு அச்சாரம் பண்ணிட்டுப் போவ வேண்டியதுதாத்தாம்."ங்றாரு முன்னாடி பேசுன ஆளு.
            "பத்து காசி மிச்சமிருந்தாலும் நாலு ஆணிய போடாம வெச்சிருக்காம் கொமரு. அத்த கொடுத்தாத்தாம் அந்த நாலு ஆணிய சட்டுபுட்டுன்ன அந்த நேரத்துல போட்டு தூக்கிட்டுப் போங்றாம். நல்ல கதெய கெடுத்த போ!"ங்றாரு இன்னொரு ஆளு.
            இப்போ தூரத்துல குமரு மாமா பொன்னியம்மன் கோயில் பக்கத்துல வர்றது தெரியுது. கிட்டக்க வர வர குமரு மாமா விகடுவ பாக்குது. விகடு குமரு மாமாவ பாக்குறாம். முகத்த மழிச்சு பத்து நாளுக்கு மேல இருக்கும் குமரு மாமாவுக்கு. வழக்கமா போறப்ப வர்றப்ப பாக்குற அது போட்டுருக்குற அதே பழுப்புச் சட்டையும், லேசா பழுப்பேறுன வேட்டியத்தாம் கட்டியிருக்கு.
            விகடுவப் பாத்ததும், "வா!" அப்பிடிங்கிது. விகடு எழுந்திரிச்சி நின்னுகிட்டு, "ம்!"ங்றாம்.
            "ன்னா சோலி?"ங்குது குமரு மாமா அத்தனைப் பேரையும் வுட்டுப்புட்டு இவன பாத்து மட்டும். அத்தான் எப்பிடி இருக்காங்க, அக்கா எப்பிடி இருக்குன்னோ வேற எந்தக் கேள்வியையும் கேக்கல. விகடுவும் அத்தை எப்பிடி இருக்குன்னோ, புள்ளைங்க எப்பிடி இருக்குன்னோ எந்தக் கேள்வியையும் கேக்கல. நேரா விசயத்துக்கு வந்து பேச்சு நடக்குது.
            "பள்ளியோடத்துக்கு அஞ்சு செல்ப் அடிச்சி வேணும் அஞ்சு தட்டு இருக்குறாப்புல. பழக்கடையில சாய்ச்சாப்புல வெச்சிருப்பாங்கள்ல. அது மாதிரி வேணும்! அத்தோட சார்ட் ஒட்டி வைக்குறாப்புல ஸ்டாண்டு அஞ்சு வேணும்." அப்பிடிங்றாம் விகடு.
            "ன்னா பலவையில வேணும்? எம்மாம் நீளம்? தட்டுங்களுக்கு எடையே எம்மாம் உசரம் இருக்கணும்?"ங்குது குமரு மாமா.
            "மூவாயிரத்து எரநூத்து ரூவா கொடுத்துருக்காங்க. அதுக்குள்ள ன்னா பலவ ஒத்து வருமோ அந்தப் பலவையில வேணும். நீளம் அஞ்சு அல்லது ஆறு அடி வெச்சிக்கலாம். உசரங்றது ஒரு டிரே அலுங்காம கொள்ளாம உள்ள போயிட்டு வர்ற உசரம்."ங்றாம் விகடு.
            "மூவாயிரத்து எரநூத்துக்கு அஞ்சு செல்ப்பா? நீயி சொல்றதெப் பாத்தா ஒவ்வொரு செல்ப்புக்கும் அஞ்சு பலவையாவுது. அஞ்சுக்கும் சேர்த்தா இருபத்தஞ்சு பலவ ஆவுமேடா! தூங்குமூஞ்சு பலவைன்னாலும் பலவைக்கே காசி கட்டுபடியாகாதல்லோ! பெறவு அஞ்சு ஸ்டாண்டு அத்து எப்பிடி வேணும்னு தெரியலயே!"ங்குது குமரு மாமா.
            "பணம் அம்மாம்தாம் ஒதுக்கியிருக்காங்க! அதுக்குள்ள வேணும்! சாப்பாடு ரெடி, டிபன் ரெடின்னு கடையில வைக்குறாங்கள்ல அது போல ஸ்டாண்டு. அகலம் ஒரு சார்ட்டு ஒட்டுற அளவுக்குக் கொஞ்சம் பெரிசா!"ங்றாம் விகடு.

            "பள்ளியோடத்துக்குங்றே! பாத்துப் பண்ணிக்கிடலாம்! காசிய ஒரே தபாவா கொடுத்துப்புடு. வேலைய முடிச்சு நாமளே கொண்டாந்துப் போட்டுடுறேம். ஆனா வேல முடியறதுக்கு ஒரு மாசம் ஆவும். வேல இஞ்ஞ நெறைய கெடக்கே."ங்குது குமரு மாமா.
            "யில்லே! ஏற்கனவே ரொம்ப தாமசம் ஆயிடுச்சி. ஆபீஸருங்க வந்துப் பாத்தா சிக்கலாயிப்புடும். பணத்தெ வேற எடுத்தாச்சி. பணத்த எடுத்தா மூணு நாளைக்குள்ள செலவு பண்ணியாவணும். பண்டமா பொருளு வந்து சேந்தாவணும். கொசரம் சீக்கரமா பண்ணித் தந்தா தேவல."ங்றாம் விகடு.
            "ன்னடா இத்து! விடிஞ்சா கலியாணம்! கட்டுறா தாலியங்றே? இஞ்ஞ எம்மாம் வேல கெடக்குப் பாரு! ஒவ்வொருத்தரும் வந்து உக்காந்து வாஞ்சிட்டுப் போறாய்ங்க! பத்து பாஞ்சி நாளாவது ஆவும்!"ங்குது குமரு மாமா.
            "இத்து ஆரு பள்ளியோடத்து வாத்தியாரா?" அப்பிடிங்கிறாரு பக்கத்துல குமரு மாமாகிட்ட வேலைய சொல்ல வந்து முன்னாடி பேசிட்டு இருந்தார்ல அவரு.
            "ஆமாமாம்! பள்ளியோடத்து வாத்தியாருதாம்!"ங்குது குமரு மாமா அலட்சியமா.
            "ம்ஹூம்! எஞ்ஞகிட்ட பேசுற மாதிரியே பேசாதே! என்னவோ வேலய சீப்பா முடிச்சித் தர்றேங்றதுக்காக இஷ்டத்துக்குப் பேசுவீயோ? ஒரு வாத்தியாரு வந்து கேக்குறாப்புல்ல. அவுங்களுக்கு எப்போ வேணுமோ அம்மாம் சீக்கிரத்துல முடிச்சிக் கொடுத்துப்புடு."ங்றாரு அவரு.
            "ஆமாம்டா குமரு சீக்கிரமா முடிச்சிப்புடு!"ங்றாங்க பக்கத்துல உக்காந்திருக்கிற மித்த இன்னொரு ஆளும்.
            "செரி! முடிச்சிப்புடுவோம். முடிச்சிட்டாப்  போச்சு. அதுக்கென்ன ஆயிப் போச்சு? ஒஞ்ஞ வேலய மின்ன பின்ன வெச்சிக்கிலாம்ல!"ங்குது குமரு மாமா.
            "அட என்னப்பா! நீயி அடிமடியில கை வெக்கிறே? வாத்தியார்ர கெஞ்ச வுடலாமா? பாத்து முடிச்சிப்புடு!"ங்றாங்க அவுங்க எல்லாரும் ஒத்தக் குரல்ல.
            இப்பத்தாம் விகடு, "ஆமாம் மாமா! கொஞ்சம் சீக்கரமா முடிச்சித் தந்துப்புடு மாமா!"ங்றாம் விகடு.
            "செரிடா மாப்ளே! முடிச்சிப்புடுவேம்! இவுங்க அத்தனெ பேரு வேலயையும் தூக்கி அந்தான்டா போட்டுட்டு முடிச்சிப்புடறேம்டா மாப்ளே! ஒரு வாரத்துல எடுத்துக்கிடலாம்!"ங்குது குமரு மாமா.
            "இதுக்கொசரம் ஒண்ணும் கொறைச்சலு யில்ல. வேலயப் பிடிக்கிறதுக்கு மாப்ளேங்றது மச்சாங்றது? நீஞ்ஞ ஒண்ணும் வெசனமாகாதீங்க வாத்தியாரம்பீ! இதுக்குல்லாமா போயி மாமா ஓமான்னுக்கிட்டு?" அப்பிடிங்கிறாரு உக்காந்திருக்குற ஆளுல்ல ஒருத்தரு.
            "அடெ ச்சும்மா கெடய்யா! அவ்வேம் எஞ்ஞ அக்கா மவ்வேம்யா! எஞ்ஞ அத்தாம் சுப்பு வாத்தியாரு இருக்காருல்ல! அவரோட மவ்வேம்யா! நாம்ம அவனுக்கு தாய் மாமேம்யா!"ங்குது குமரு மாமா.
            "ம்ஹூக்கும்! இதுக்குத்தாம் இந்த முறுக்கு முறுக்குறீயாக்கும்? அக்கா மவ்வேம் வந்துக் கேக்குறாம்! நாளைக்கே முடிச்சிக் கையில தர்றேம்னு சொல்றது யில்லே! ஏய் கொமரு கொழுப்புடா ஒனக்கு! ஒரு பொட்டப் புள்ளய பெத்திருந்தா அடங்கிப் போயிருப்பே? ரண்டும் ஆம்பளப் புள்ளையால்ல பெத்து வெச்சிருக்கே. அத்தாங் இந்த ஆட்டம் ஆடுறே! இதுல இன்னொன்ன பெத்துக்க வேற மணிக்கு ஒரு தபா வூட்டுப்பக்கம் போய்ட்டு வர்றீயாமே? ஊர்ல இதப் பத்தித்தாம் பேச்சாக் கெடக்கு? ஏம்டா கூறு கெட்ட பயலே! அப்பம் பேர்ர கெடுக்கணும்னே நிக்குறீங்கடா!" அப்பிடிங்கிறாரு அந்த ஆளு.
            "ச்சேய்! வாய மூடுய்யா! அக்கா மவ்வனே வெச்சிக்கிட்டுப் பேசுறா பேச்சா இத்து? ந்தா நீயி கெளம்புடா! காசி இருந்தா கொடுத்துட்டுப் போ. யில்ல நாளைக்கு வந்து பைசலப் பண்ணு. பைசலப் பண்ணாத்தாம் வேலய ஆரம்பம் பண்ணுவேம். வேலய முடிச்சி பெயிண்ட்டு வர்ரைக்கு வெச்சிக் கொண்டாந்து தந்துப்புடறேம்!" அப்பிடிங்கிது குமரு மாமா விகடுவப் பாத்து.
            "சரிங் மாமா!"ன்னு சொல்லிட்டுப் பையில வெச்சிருந்த மூவாயிரத்து இருநூத்து ரூவாய எடுத்துக் கொடுத்துட்டுக் கெளம்புறாம் விகடு.
            குமரு மாமா சொன்னபடி ஒரு வாரத்துல வேலய முடிச்சிக் கொண்டாந்து கொடுக்கல. அது ஒரு இருவது நாளுக்கு மேல எடுத்திக்கிடுச்சு. எடுத்துட்டு வர்ற கொள்ள எந்தச் செரமும் இல்லாம அதுவே ஒரு டாட்டா ஏஸ்ல வெச்சிக் கொண்டாந்து பள்ளியோடத்துல போட்டிடுச்சு. அதுவே ஒரு ஆளையும் கொண்டாந்திருச்சு. அதெ வெச்சிக்கிட்டு அதெ தூக்கி எங்கெங்க போடணும்னு கேட்டுட்டு அங்கங்க போட்டு செட் பண்ணிக் கொடுத்துட்டும் போயிடுச்சு.
            இப்பத்தாம் கோட்டகம் பள்ளியோடத்தப் பாக்குறதுக்கு அம்சா இருக்கு. அஞ்சு பாடத்துக்கு அஞ்சு வெதமான செல்ப். எத்தனெ எண்ணிக்கைக்கு டிரேயை வாங்கணுமோ அத்தென எண்ணிக்கைக்கு அது வாங்கி ஆயிருந்துச்சு. அதெ கூத்தாநல்லூரு சாகிப் தாளகத்துக்காரரு காதர்பாட்சா விகடுங்றதால சல்லிசான வெலைக்குப் போட்டுக் கொடுத்து உதவி பண்ணியிருந்தாரு. ‍ஷெல்ப்புகளுக்குள்ள டிரேகளை வெச்சி, ஒவ்வொரு ஷெல்ப்புக்குப் பக்கத்துல அந்தப் பாடத்துக்கு ஏணிப்படி படத்தெ ஒட்டுறாப்புல ஸ்டாண்ட வெச்சி அதுல ஏணிப்படிகளோட படத்தெ ஒட்டி வுட்ட பெறவு புள்ளைக அட்டைகள எடுத்து வந்து படிக்கிறதும், வைக்குறதும், அதெ பாக்க பாக்க அது ஒரு அழகாத்தாம் இருக்கு. 
*****


29 Jan 2020

வேட்டியில வட்ட திட்டு!



செய்யு - 342

            குமரு மாமாவுக்கு ரெண்டு குழந்தை ஆயிடுச்சு. ரெண்டுமே ஆம்பளைப் புள்ளைங்களா அமைஞ்சிடுச்சு. அது ஒரு ஒறுப்ப கொடுத்திருக்கு குமரு மாமாவோட போக்குல. "நமக்கென்னடா ரண்டும் ஆம்பளைச் சிங்கம்ங்க. பொட்ட புள்ளையையா பெத்துப் போட்ருக்கேம்? எவங் கையி காலுல்ல வுழுந்து கட்டிக் கொடுக்குறதுக்கு? நம்ம பொண்ண கட்டிக்கோன்னு ரண்டு பேரு கையிலு காலுல்ல வுழுந்து கட்டிக்கிறாப்புல ரண்டுல்ல கெடக்குதுங்க." அப்பிடின்னு குமரு மாமா எதிருபடுற ஆளுங்ககிட்ட சலம்பிக்கிட்டுத் திரியுறதாவும் கேள்வி. பெத்த ரெண்டு புள்ளைங்கள்ல மூத்தப் புள்ளைய அருவாமணியில மாமனாரு வூட்டுல தூக்கிட்டுப் போயிட்டாங்க. ரண்டாவது புள்ளைய வளக்குற பொறுப்புத்தாம் குமரு மாமாவுக்கும் மேகலா மாமிக்கும். அந்தப் புள்ளையை ரெண்டரை வயசு ஆனவுடனே தூக்கி நர்சரி பள்ளியோடத்துல தூக்கிப் போட்டதுல அந்தப் புள்ளையை வளக்குற செரமம் இல்லாம போயிடுச்சு அவுங்களுக்கு. காலையில எட்டு மணி வாக்குல வர்ற வேன்ல தூக்கிப் போட்டாக்க சாயுங்காலம் நாலு மணி வாக்குலத்தாம் அந்தப் புள்ளை வூடு வந்து சேரும். திங்கட் கெழமை ஆரம்பிச்சா சனிக் கெழமை வரைக்கும் அதே பாடுதாம். ஞாயித்துக் கெழமை ஒரு நாளுதாம் புள்ளைய அவுங்க பாத்துக்க வேண்டிய பொறுப்பு.
            குமரு மாமாவோ, மேகலா மாமியோ சனங்கள யாரையும் வூட்டுக்குள்ள அண்ட வுடறதில்ல. சொந்தக்கார சனங்களோ, அக்கம்பக்கத்து சனங்களோ யாரா இருந்தாலும் மூஞ்சு முறிஞ்சிப் போயிடுறாப்புல பேசிப்புடுறாங்க அல்லது அப்படி ஆயிடுறாப்புல நடந்துக்கிடுறாங்க. குமரு மாமா வூட்டுப்பக்கம் அதால யாரும் பழக்கம் கெடையாது. யாரும் அதோட வூட்டுக்கு வந்துப் போறது கெடையாது. வூட்டுக்கு எதுக்கே பக்கத்துல இருக்குற பாஞ்சாலம்மன் கோயிலுக்கு வர்றவங்க போறவங்க குமரு வூட்டுல பேசுனா பொழங்குனாத்தாம் உண்டு. பாஞ்சாலம்மன் கோயிலுக்கு வர்ற சனங்க எல்லாம் பெருங்கைகதாம். அவுங்களோட மட்டுந்தாம் மேகலா மாமி பேசுறது. மித்தபடி, உள்ளூர்லேந்து போற சனங்க யாரும் பாஞ்சாலம்மன் கோயிலுக்குப் போறதோட சரி, குமரு மாமா வூட்டுப்பக்கம் அண்ட மாட்டாங்க. வைத்தி தாத்தாவும் சாமியாத்தாவும் கொழந்தை குட்டிகளோட ஜே ஜேன்னு இருந்த வூட்டுல இப்போ அவுங்க ரெண்டும் கொழந்தை ஒண்ணும்னு மூணு பேருதாம் இருக்காங்க. சாமியாத்தா இருந்த வரைக்கும் வூட்டுக்கு சனங்க வந்துகிட்டேதாம் இருக்கும்ங்க. அதுகிட்ட குறி கேக்குறதுக்கும், துன்னூறு போட்டுகிட்டுப் போறதுக்கும். இப்போ நெலமை அப்படியே தலைகீழா ஆயிப் போச்சு.
            குமரு மாமா வூட்டுக்கு வெளியே கிரில் கேட்டுப் போட்டு எந்நேரம் பூட்டியேத்தாம் கெடக்கு. அந்த கேட்டு குமரு மாமா வர்றப்போ, போறப்போ திட்டம் பண்ணி வெச்ச மாதிரி தொறந்துக்குது, மூடிக்குது. ஒரு கம்ப்யூட்டர்ர வெச்சி திட்டம் பண்ணி வெச்சா கூட அம்மாம் துல்லியமா தொறக்குமா? மூடுமான்னு தெரியல. அம்மாம் துல்லியமா தொறக்குறதும், மூடுறதும் நடக்குது.
            வடவாதியில குமரு மாமா பட்டறைக்குத்தாம் நல்ல ஓட்டம். குமரு மாமா வேலைகளப் பிடிக்கிறதுல்ல கெட்டிக்கார ஆளு. ஆளுங்களுக்குத் தகுந்தாப்புலத்தாம் வேல. காசைக் கொறைச்சுக் கொடுத்தா அதுக்குத் தகுந்த வேல. அதிகமா கொடுத்தா அதுக்குத் தகுந்த வேல. எந்த வேலையையும் வுட்டுப்புடாது, தட்டைக் கழிச்சிப்புடாது. இந்தக் காசுக்கு வேலைய முடிக்க முடியாதுன்னு சொல்லாது. அந்தக் காசுக்கு எந்த அளவுக்கு ஒட்டி ஒப்பேத்த முடியுமோ அதெ செஞ்சுக் கொடுத்துப்புடும். இந்த ஒத்த காரணத்தாலயே அதோட பட்டறையில கூட்டம் இருந்துகிட்டே இருக்கு.
            மின்னாடியெல்லாம் வேலைன்னா வேலை கொடுக்குறவங்க வூட்டுக்குப் போயி வேலையப் பாத்துட்டு இருந்த குமரு மாமா இப்போ எந்த வேலைன்னாலும் பட்டறையில கொண்டாந்து போடுங்கன்னு சொல்லிப்புடறதா கேள்வி. இதெ பாத்துப்புட்டு, "எந்த தச்சுவேலக்காரம்டா இப்போ வூட்டுல வந்து வேலயப் பாக்குறாம்? அவனவனும் ஒரு பட்டறையப் போட்டுக்கிட்டு அஞ்ஞ கொண்டாந்து சாமானுங்களப் போட சொல்றானுவோ! அஞ்ஞயே போட்டுக்கிட்டு செஞ்சி முடிச்சி எடுத்துட்டுப் போங்கங்கறானுவோ! நாட்டுல அநியாயம் பெருத்துப் போயிக் கெடக்கு! சாமானுங்களக் கொண்டு போயி போடுறதுக்கு டாட்டா ஏஸ்காரனுக்கு ஒரு கூலி. அதெ எடுத்தாந்து வூட்டுக்கு வாரதுக்கு ஒரு கூலின்னு ஆயிப் போயிடுது. தச்சுக்கார பயலுகளுக்கும், டாட்டா ஏஸ்கார பயலுகளுக்கும் ஏதோ கனெக்சன் இருக்குப் போலருக்கு. மின்னாடியெல்லாம் வூட்டுக்குக் கட்டுச்சோத்த கட்டிக்கிட்டு வந்து வேலய செஞ்சுகிட்டு கெடந்து பயலுகளுக்கு இப்படி ஆயிப் போச்சு கொடுப்பனையே!"ன்னு அது ஒரு பேச்சா கெடக்குது ஊருக்குள்ள.

            குமரு மாமா பட்டறைக்கு எதுத்தாப்புல நாலு கடை தள்ளித்தாம் வீயெம் மாமாவும் இப்போ பட்டறையப் போட்டிருக்கு. கூட்டம்னு பாத்தா குமரு மாமாவுக்குத்தாம். அதுகிட்ட ரெண்டு தச்சு ஆசாரிங்க எந்நேரத்துக்கும் வேல பாத்துக்கிட்டு கெடக்குறாங்க. அப்படியும் வர்ற வேலைங்கள அதால சரியான நேரத்துக்கு முடிச்சிக் கொடுக்க முடியாம போயிடுது. வேலையும் ராப்பகலா நடந்துகிட்டு கெடக்குது. குமரு மாமாவுக்கு ரண்டு மணி நேரம் வேலை பாத்தாக்கா ஒரு மணி நேரத்துக்கு வூட்டுக்கு வந்தாவணும். வூட்டுக்கு வந்து டீயோ, பட்சணமோ சாப்பிட்டுட்டுப் போவும். அப்படி அது வூட்டுக்கு வர்றப்போ, போறப்போ பட்டறையில இல்லன்னு வூட்டுல போயி பாத்துடக் கூடாது. அப்படி வூட்டுக்கு வந்தா, போனா அதுக்குக் கெட்ட கோவம் வந்துப்புடுது. "சித்த நேரம் பட்டறையில நின்னா கொறைஞ்சாப் போயிடுவீங்க! வூட்டுக்கு ஒரு கறி காயி சாமானுங்கள கூட வாங்கியாந்து போட வுட மாட்டேங்றீங்களே!"ன்ன சத்தம் போடுறதா சொல்லிக்கிறாங்க. பட்டறையில எம்மாம் நேரம் வேணாலும் பாத்துக்கலாம், பேசிக்கலாம், வூட்டுல மட்டும் ம்ஹூம் ஆகவே ஆகாது.
            குமரு மாமா வூட்டுக்கு எதுத்தாப்புலத்தான வீயெம் மாமா வூடு. வீயெம் மாமா வூட்டு சன்னலேந்து பாத்தாக்க குமரு மாமா வூட்டோ பெட்ரூம் நல்லா தெரியும் போலருக்கு. இது வீயெம் மாமா வூட்டுல இருக்குற கோகிலா மாமிக்குத் தெரியுது. இதெ குமரு மாமாவும், மேகலா மாமியும் எப்பிடி கவனிக்காம வுட்டாங்களோ தெரியல. ஊரு முழுக்க சங்கதி தெரிஞ்சி சந்திச் சிரிச்ச பிற்பாடுதாம் பெட்ரூமுக்குத் திரைச்சீலையப் போட்டு கதவச் சாத்த ஆரம்பிச்சிதுங்க குமரு மாமாவும், மேகலா மாமியும்.
            குமரு மாமாவுக்கு ரண்டு புள்ளைங்க ஆன பிற்பாடும், வீயெம் மாமாவுக்குக் கொழந்தைங்க ஒண்ணும் ஆவல. அது ஒரு ஆவலாதியா போச்சுது வீயெம் மாமாவுக்கும் கோகிலா மாமிக்கும். ரெண்டு பேரும் போவாத ஊரில்ல, கும்புடாத சாமியில்ல, பாக்காத டாக்கடருங்கயில்ல. என்ன பண்ணியும் ஒரு புழு பூச்சி உண்டாவுல கோகிலா மாமி வவுத்துல. வீயெம் மாமா இதுக்காக டாக்கடருங்ககிட்ட அலைஞ்சி என்னென்னம்மோ சோதென அது இதுன்னு பண்ணி ரண்டு லட்சத்து பாஞ்சாயிரத்துக்கு ரூவாய்க்கு மேல செலவாயிடுச்சுன்னு அதுக்கான ரசீதுகள பக்காவா வெச்சி ஆளாளுங்ககிட்ட காட்டிக்கிட்டு கெடந்து அலையுது.
            அந்த ஏக்கமோ என்னவோ தெரியல, கோகிலா மாமி மாடு வளர்க்க ஆரம்பிச்சுச்சு. பூனை வளர்க்க ஆரம்பிச்சுச்சு. வூடு பூரா பூனை குட்டிகளா அலையுற அளவுக்கு நெலமை ஆயிச் போச்சு. வூட்டுக்கு வெளியில வந்தா மாடுகளா இருந்திச்சு. ஒரு நேரத்துல வைத்தி தாத்தா வூடு அப்படித்தாம் இருந்துச்சு கொல்லை பூராவும் மாடுகளா. அப்பிடி இப்போ இருக்கு வீயெம் மாமா வூடு. ஆனா அப்போ வைத்தி தாத்தா வூட்டுல இருந்த அளவுக்குப் புள்ளைங்கத்தாம் இல்ல. மாடுகள்ள ஒரு காளைக் கண்ண வளத்ததுல அது இப்போ காளைக்குப் போடுற அளவுக்கு வந்து நின்னு அது ஒரு வருமானம் பாத்துக் கொடுக்குது கோகிலா மாமிக்கு. பசு மாடு செனைப் புடிக்கிறதுக்கு செனை ஊசி போடுறவங்களும் இங்க இருக்காங்க. அத்தோட காளைக்குப் போடுறவங்களும் இங்க இன்னும் கொறைஞ்சிடல. அவுங்க எல்லாம் வீயெம் மாமா வூட்டுக்கு காலங்காத்தால‍ படையெடுக்குறாப்புல கெளம்பி வந்து காளைக்குப் போட்டுட்டு நூத்து ரூவா தாள கையில திணிச்சிட்டுப் போறாங்க. காளைன்னா அதுவும் பெருங்காளையா நிக்குது. கொழந்தை இல்லாத ஏக்கமோ என்னவோ தெரியல. அவுங்க ரெண்டு பேரும் காளை மாட்டை அப்படிப் பாத்துப் பாத்து வளக்குறாங்க. ஊருல அது ஒரு பேச்சாவும் ஆவுது பாருங்க, "இந்த வீயெம் பயெ வூட்டுக் காளை ஊருக்கே கன்னுக்குட்டிகளா போட்டு வுடுது. அவ்வேம் வூட்டுல ஒரு கொழந்தை குட்டி ஆவுதா பாருங்க!" அப்பிடின்னு.
            நாளுக்கு நாளு கொழந்தை இல்லாத ஏக்கம் கோகிலா மாமிக்கு அதிகமாப் போச்சுது. பக்கத்து வூடுதானே குமரு மாமா வூடு. கட்டுன புருஷனோட அண்ணங்காரரு வூடுன்னாலும், கொழுந்தனாரு வூடுன்னாலும் பேசிப் பொழக்கம் இல்லாத வூடு. கட்டுன கொஞ்ச நாள்லயே முட்டிக்கிட்டு எதிரும் புதிருமா ஆன வூடு. இருந்தாலும் பள்ளியோடம் விட்டு கொழந்தை வந்த பிற்பாடு அதோட சத்தம், அழுகை, சிரிப்பு இதெல்லாம் கோகிலா மாமிய குமரு மாமா வூட்டைக் கவனிக்க வைச்சுது, ஒட்டுக் கேக்க வைக்குது. ஆரம்பத்துல கொழந்தை இருந்த நேரத்துல மட்டும் கவனிச்சிக்கிட்டும், ஒட்டு கேட்டுகிட்டும் இருந்த கோகிலா மாமிக்கு இப்போ அது ஒரு பழக்கமா போயி எந்நேரமும் குமரு மாமா வூட்ட கவனிக்கிறதும், ஒட்டுக் கேக்குறதும் வேலையா போயிடுச்சு.
            அன்னிக்கு ஒரு நாளு வூட்டு ஹால்லேந்து பாக்குறப்ப குமரு மாமா வூட்டு பெட்ரூமோட சன்னலு கதவு தொறந்து கெடக்குறதும், இங்கேயிருந்து பாக்குறப்போ பெட்ரூமு நல்லா தெரியுறதும் கோகிலா மாமி கண்ணுல படுது. அது வீயெம் மாமா வேலைக்குப் போன பிற்பாடு ஒத்த ஆளால்ல வூட்டையும், வூட்டுல இருக்குற மாடு கண்ணுகளையும், பூனைகளையும் பாத்துக்கிட்டு கெடக்கு. அத்தோட மனசுல கொழந்தை இல்லாத ஏக்கம் வேறயா. அதெ பாக்கப் பாக்கத்தாம் சில விசயங்கள் அதுக்குப் புரியுது.
            சரியா ரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவெ குமரு மாமா வருது. வெளியில கிரில் கேட்டு தொறக்குது, மூடுது. குமரு மாமா உள்ளார வந்ததும் நெலைக்கதவு தாழ்பாளு திறந்து மூடுது. அப்புறம் பெட்ரூமு கதவு தொறக்குறது, மூடுறது எல்லாமும் நடக்குது. குமரு மாமாவும் மேகலா மாமியும் முயங்கிக்கிட்டுக் கெடக்குறது நல்லாவே தெரியுது கோகிலா மாமிக்கு இங்க அதோட வூட்டு ஹால்லேந்து பாக்குறப்போ. எத்தனை நாளு அதெ பாத்துப் பாத்து அதுல ஒரு திருப்திய கண்டுகிட்டு அது கெடந்துச்சோ தெரியல. ஒரு நாளு அதெ மனசுல வெச்சிக்க முடியாம மேக்கால பக்கத்துல இருக்குற சயிப்புனிசாகிட்ட சொல்லப் போயி, சயிப்புனிசா அதோட புருஷங்காரங்கிட்ட சொல்லப் போயி விசயம் ஊரு சுத்தி வந்துப்போச்சு. விசயம் குமரு மாமா பட்டறையில வேலை பாக்குற தச்சு ஆசாரிங்க வரைக்கும் வந்து அப்பத்தாம் அவுங்க ரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவே வூட்டுக்குப் போயிட்டு வர்ற குமரு மாமாவோட வேட்டிய கவனிக்கிறாங்க. வேட்டியில திட்டு திட்டா வட்டமா தெரியுது. அதெ பாத்துப்புட்டு அவுங்களும் கமுக்கமா சிரிச்சிக்கிறாங்க. என்னத்தாம் சொந்தப் பொண்டாட்டிக்காரிகிட்ட படுத்துட்டு வந்தாலும் விசயம் வெளியில தெரியுறப்ப அது ஒரு மாதிரியாத்தானே போவுது. அவுங்களும் இந்த விசயத்த ரொம்ப நாளு வரைக்கும் குமரு மாமாகிட்ட சொல்லாம கொள்ளாம சிரிக்கிறதும், அமுக்குறதுமா இருந்திருக்காங்க.
            நம்ம மாடக்கண்ணு மளிகைக் கடையில ஒரு நாளு சாமாஞ் செட்டுக வாங்குறப்பத்தாம் மாடக்கண்ணு மூலமா விசயம் இதுன்னு தெரிஞ்சிருக்கு குமரு மாமாவுக்கு. அதுக்குப் பெறவுதாம் பெட்ரூமு சன்னலு தொறந்து கெடக்கறதெ கவனிச்சி அதெ சாத்தி அதுக்கு உள்ளார திரைச்சீலையப் போட்டு ஏற்பாடு பண்ணியிருக்கு குமரு மாமா. அதுக்குப் பெறவும் அந்தப் பழக்கத்த குமரு மாமா  வுட்ட பாடாயில்ல. ரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவே போறதெ மூணு மணி நேரத்துக்கு ஒரு தடவெயா போறதா மட்டும் மாத்தியிருக்கு. மேகலா மாமி பட் பட்டுன்னு பெட்ரூமு சன்னலு கதவெ மூடியிடறதால, கோகிலா மாமி இப்போ மூடிக் கெடக்குற சன்னலு கதவெ ஏக்கத்தோட பாத்துக்கிட்டுக் கெடக்கு.
*****


28 Jan 2020

சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்குன்னு ஆடிச்சாம்!



செய்யு - 341

            சின்னமுத்து வாத்தியாருக்கு ஒடம்பு தெம்புல்லாம் வத்திப் போச்சி. அந்தாண்ட இந்தாண்ட நகர்ந்துப் போறது கூட அவருக்கு செரமமாப் போச்சி. அவ்வளவு செரமத்துலயும் அவரால சரக்கு அடிக்காம இருக்க முடியல. அப்பிடி இப்பிடின்னு எப்படியோ போயி சரக்க அடிச்சிட்டுப் போதை தாங்க முடியாம ஆர்குடியில அங்கங்க விழுந்து கெடக்க ஆரம்பிச்சாரு. தெரிஞ்சவங்க, பாத்தவங்க அவர்ர தூக்கி ஆட்டோவுல போட்டு வுட்டு வீட்டுக்கு அனுப்பி வுடுவாங்க. வூட்டுல இருக்குறவங்களுக்கு இது ஒரு ரோதனையாப் போச்சுது. பாத்தாங்க வூட்டுல இருக்குறவங்க, அவர்ர வூட்டுக்குள்ள போட்டு பூட்டி வெச்சும் பாத்தாங்க. அப்படியும் அவருக்கு இருந்த லேவிடியான ஒடம்புக்கு எப்படியோ மாடியேறி அங்கயிங்க குதிச்சி வெளியில வந்து சரக்க அடிக்கிறதெ அவரால விட முடியல.
            அவரு வூடு நல்ல மாடி வூடு. வூட்டுக்கு மின்னாடி நாலு வூடுகள கட்டி வாடகைக்குல்லாம் வுட்டுருக்காரு. நல்ல பணக்கார குடும்பத்துல பொறந்தவருதாம் சின்னமுத்து வாத்தியாரு. அதாலயே ரொம்ப செல்லமா வளர்ந்தவரு. பேருக்கு ஒரு வேலையில இருக்கணும்னு வாத்தியாரு வேலைக்குப் படிச்சாதாவும், தன்னோட நேரம் படிச்சு முடிச்சு நாலஞ்சு வருஷம் ஊரு சுத்த கூட வாய்ப்பு இல்லாம, ஒடனே வேலை கெடைச்சி வேலைக்கு வர்ற மாதிரி ஆயிட்டதாவும் வாத்தியாரு வேலைக்கு வந்ததெ பத்தி வேடிக்கையா சொல்லுவாரு.
            ஆர்குடி பக்கம் போனாக்கா விகடு சின்னமுத்து வாத்தியார்ர வூட்டுல போயிப் பாக்காம வர்றதில்ல. அப்பிடிப் போயி பாக்குறப்பல்லாம் அவருக்கும் அவரோட பொண்டாட்டிக்காரவங்களுக்கும் சண்டைன்னா சண்டெ இதுவரைக்கும் நடந்திருக்கிற ரெண்டு உலகப் போருங்க தோத்துப் போயிடும் போலருக்கு, அப்பிடிச் சண்டெ பிடிச்சிட்டு நிக்குறாங்க. சமயத்துல ஏம்டா போயிப் பாக்குறோமோன்னும் தோணுது விகடுவுக்கு. சின்னமுத்து வாத்தியாரு அவரோட பொண்டாட்டிக்காரவுங்க மேல கொறையச் சொல்றாரு. அவரோட பொண்டாட்டிக்காரவுங்க தங்கம்மா இருக்காங்களே அவுங்க, சின்னமுத்து வாத்தியாரு மேல கொறையச் சொல்றாங்க. யாரு சொல்ற கொறைக்கு என்ன பதிலச் சொல்றதுன்னு அவுங்க பேசப் பேச பேசாம உக்காந்திருப்பாம் விகடு. "ன்னப்பா அப்பிடியே உக்காந்திருக்க எதாச்சிம் ஒரு பதிலெச் சொல்லு!"ம்பாரு சின்னமுத்து வாத்தியாரு. "எங் கூட பொறக்காத யம்பீ போல இருக்கீங்க! நீஞ்ஞத்தாம் இதுக்கு ஒரு ஆக்கினைய சொல்லணும்!" அப்பிடிம்பாங்க தங்கம்மா.
            விகடு யோசிச்சு யோசிச்சுப் பாத்து, "கல்யாண வயசுல ஒரு பொண்ணு, புள்ளே இருக்காங்க. நமக்குக் கல்யாணமே ஆவல. ஒங்களுக்கு நாம்ம என்னாத்தெ பதிலச் சொல்றது? நீஞ்ஞத்தாம் நமக்கு எதாச்சிம் சொல்லணும்!" அப்பிடிம்பாம்.
            "யப்பா! அந்தக் கதெயெ வேற ஞாபவம் பண்ணிட்டீயே?"ன்னு அதுக்கு ஒரு அலுப்பு அலுத்துப்பாரு சின்னமுத்து வாத்தியாரு. விகடு ஒண்ணுந் தெரியாம முழிச்சா, "அத்தெ ஏம்ப்பா கேக்குறே? ஒரு வாரமா வூட்டுலயே யாரும் இல்லப்பா! எல்லாம் வூட்டுப் பூட்டிட்டுத் தலைமறைவா ஆயிட்டோம்பா! போலீஸூ தேட ஆரம்பிச்சிடுச்சு. பெறவு அங்க இங்க ஆளெ பாத்து ஒரு வெதமா சமாதானமாப் போயி இப்பத்தாம் ரண்டு நாளா வூட்டுல இருக்கேம். போன வாரம் வந்திருந்தே, எஞ்ஞள வூட்டுல பாத்திருக்க முடியாது. பூட்டித்தாம் கெடந்திருக்கும்!" அப்பிடின்னு ஒரு பகீர்ர கெளப்பி வுடுவாரு.
            "ம்ஹூம்! அந்தக் கரும கன்றாவிக் கதெயே சொல்றப்பல்லாம் நாம்ம இஞ்ஞ இருக்க முடியாது. யம்பீ வேற முழிக்கிறாப்புல. ஒண்ணும் புரியாம மண்டெய பிய்ச்சிப்பாப்புல. நீஞ்ஞ சொல்லுங்க. நாம்ம கெளம்புறேம்!"ன்னு கெளம்பிடுவாங்க தங்கம்மா.
            "நம்ம பய இருக்கானே அவ்வேம் நாம்ம வாலிபத்துல இருந்ததெ வுட நாலு மடங்கு இருக்காம்ப்பா! செட்டு சரியில்லே. அஞ்ஞ இஞ்ஞ சுத்திக்கிட்டு பெரச்சனைய கெளப்பிட்டு வர்றாம். ஆம்பள புள்ளைங்க கூட அடிதடின்னு கெடந்தவேம் இப்போ பொம்பளைங்க வெவகாரத்துலயும் எதாச்சிம் பண்ணிட்டு வந்திடுறாம். ஒண்ணுந் பண்ண முடியல. நாமளே முடியாம கெடக்கிறேம். இதுல அவ்வேம் வேற படுத்துறாம். ஒரு பத்து நாளிக்கு மின்னாடி ஆர்குடி பஸ் ஸ்டாண்டுல ஒரு பொம்பள புள்ளயோட பட்டக்ஸ்ல அடிச்சிப்புட்டாம் போலருக்கு. அந்தப் புள்ள போலீஸ்ல போயி கம்ப்ளெய்ண்ட் பண்ணிப்புட்டு. வெவரம் தெரிஞ்ச பய அவ்வேம் பாட்டுக்குத் தப்பிச்சிப் போய்ட்டாம். வெவரத்து வூட்டுல சொல்லணும்ல. நாஞ்ஞ என்னத்தெ கண்டோம். வூட்டுல போலீஸூ வந்து நிக்கிது. வெசாரணைக்கு வரணும்னு சொல்லிப்புட்டாங்க. நாஞ்ஞ என்ன பண்ணோம்ன்னா நைசா வெசாரணைக்கு வர்றோம்னு சொல்லிப்புட்டு போலீஸூ அந்தப் பக்கமா போவ, நாஞ்ஞ கெளம்பி வூட்டைப் பூட்டிக்கிட்டு இந்தப் பக்கமா போயி தலைமறைவா ஆயிட்டோம். ரொம்ப அசிங்கமா போயிருக்கப் பாத்திச்சி. பெறவு அந்தப் பொண்ணு வூட்டுக்குப் போயி அதோட கையில காலுல வுழுந்து கம்ப்ளெய்ண்ட்ட வாபஸ் வாங்க வெச்சி இப்பத்தாம் வூட்டுப்பக்கம் வந்து வெவகாரம் வெளியில தெரியாம அமுக்கி வெச்சி நடமாடிட்டு இருக்கேம்! பொண்ணு ஒண்ணுந்தாம்ப்பா நல்ல வெதமா மெட்ராஸ்ல இன்ஜினியரிங் படிச்சிட்டு இருக்கே. மித்த ஒண்ணாலயும் நமக்கு எந்தப் பிரயோசனமும் இல்லே." அப்பிடிங்கிறாரு சின்னமுத்து வாத்தியாரு.

            விகடுவுக்கு ஏம்டா அவரோட வூட்டுப்பக்கம் வந்தோம்ங்ற மாதிரித்தாம் இருக்கு. ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம் பள்ளியோடம் வர்றாரு சின்னமுத்து வாத்தியாரு. பள்ளியோடத்து பெரிய வாத்தியார்ங்ற முறையில சில விசயங்கள அவருகிட்ட கலந்துக்காம செஞ்சிடக் கூடாதுங்றதுக்காக இப்பிடி ஆர்குடி பக்கமா வர்றப்ப அவரு வூட்டுப் பக்கம் போற மாதிரி ஆயிடுது. அப்படிப் போயி பள்ளியோடத்து வெவகாரத்த ஒண்ணு கூட பேச முடியாம, அவரோட வூட்டு வெவகாரங்கள அவரு பேச, அதெ கேட்டுப்புட்டு வர்ற மாதிரித்தாம் நெலமை ஆயிப் போயிடுது. கொடுமெ கொடுமென்னு கோயிலுக்குப் போனாக்க அங்க ஒரு பிடாரி கடவுளெ பிடிச்சிக்கிட்டு சிங்கு சிங்குன்னு ஆடிச்சாம்னு சொல்லுவாங்க யில்ல, அப்பிடி ஆயிப் போயிடுது நெலமெ. அவரு அவரோட வூட்டு வெவகாரங்கள சொல்ல சொல்ல பள்ளியோடத்து சமச்சாரங்களே விகடுவுக்கு மறந்து போயிடுது.
            இப்போ சின்னமுத்து வாத்தியார்ர பள்ளியோடத்துக்குக் கொண்டு வர்றதுக்கு ஒரு கார்ர வெச்சித்தாம் கொண்டு வர்றாங்க அவர்ர. இருந்த அத்தனெ விடுப்புகளயும் அவரு எடுத்துட்டாரு. மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்புன்னு எல்லாத்தையும் போட்டு கடைசியில ஊதியமில்லா விடுப்பு வரைக்கும் எடுத்தாச்சி. ஒரு நாளைக்குப் பள்ளியோடம் வந்தார்ன்னா தொடர்ச்சியா நாளைஞ்சு நாளுக்கு வருவாரு. அதுவும் கார்லத்தாம். அப்பிடி வர்றதக்குத்தாம் அவரோட ஒடம்பு ஒத்துழைக்குது. வந்தா அவரு பாட்டுக்கு நாற்காலியப் போட்டு உக்காந்திடுவாரு. பெறவு ஒரு மாசம், ரெண்டு மாசம் வரைக்கும் ஆளெ பாக்க முடியாது.
            இப்போ அவருக்கு நல்ல வெதமா பாடத்த நடத்தணும்னு ஆசையா இருக்கு. ஆனா நடத்த முடியல. ஒரு வாயித் தண்ணிக் குடிக்கணும்னாலும், ஒரு வேள சாப்பாடு சாப்பிடணும்னாலும் மத்தவங்களோட உதவி அவருக்குத் தேவைப்படுது. ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவணும்னாலும் அவர்ர தூக்கி வெச்சிக் கொண்டாந்து வுட வேண்டியதா இருக்கு. இதுக்கே இவ்வளவு கஷ்டப்படுற ஆளுக்கு சரக்குன்னா மட்டும் எப்படியோ ஒடம்பு வேலை செஞ்சி யாருக்குத் தெரியமா, எப்படியோ ஓடிப் போயி ஒரு குவார்ட்டர்ர அடிச்சிடுறார்தா அவரோட பொண்டாட்டிக்காரவுங்க தங்கம்மா சொல்லிச் சொல்லி அழுவுறாங்க.
            வூட்டுல இருக்குற புள்ளைங்க, பொண்டாட்டிங்க அழுவ அழுவ தான் பண்ணுன தப்புத்தாம் தன்னெப் போட்டு இப்பிடி அமுத்துதோன்னு அவருக்குத் தோண ஆரம்பிச்சிடுச்சி. பாத்தாரு சின்னமுத்து வாத்தியாரு விகடுவெ கூப்புட்டு, "கடெசி காலத்துல பேர்ரு வெளங்கச் சாவணும்னு நெனைக்கிறேம். எளந்தாரிப் பயலா இருக்கீயா நீயி! பள்ளியோடத்த நல்ல வெதமா கொண்டு வாரணும். நம்மால ஆவுறதுக்கு ஒண்ணுமில்ல. பள்ளியோடத்த நீயி நிமுத்திப்புட்டீன்னா நம்மோட கெட்ட பேரெல்லாம் அதுல அடிச்சிட்டுப் போயிடும். யப்பா பாத்து அதெ மட்டும் பண்ணு. ஒன்னோட இஷ்டத்துக்குப் பள்ளியோடத்தெ நீயி ன்னா வேணாலும் பண்ணி மேலுக்குக் கொண்டு வா. நாம்ம இன்னும் ஒரு மாசமோ, ரண்டு மாசமோத்தாம் உசுரோட இருப்பேம்னு நெனைக்கிறேம். ஒடம்புல உசுர தாங்கி வைக்கிற அளவுக்கு தெம்புயில்ல. இன்னிக்கே உசுர வுட்டுப்புட்டு போனாக்கா தேவலாம்னு இருக்கு." அப்பிடின்னாரு.
            அப்பத்தாம் விகடு சொன்னாம், "அரசாங்கத்துல ஒதுக்குன பணமெல்லாம் எடுக்காம கெடக்குங்கய்யா. நீஞ்ஞ கையெழுத்து போட்டுக் கொடுத்தீங்கன்னா எடுத்துப்புடலாம். அதெ எடுத்தாத்தாம் இப்போ இருக்குற முறைக்குத் தகுந்தாப்புல சில ஏற்பாடுகள பண்ணலாம்!" அப்பிடின்னு.
            "எஞ்ஞ எத்தனெ கையெழுத்தப் போடணும்னு சொல்லு. போட்டுத் தர்றேம்ப்பா!" அப்பிடின்னாரு சின்னமுத்து வாத்தியாரு. சொன்னதோட இல்லாம இவ்வேன் சொல்ற எடமெல்லாம் கையெழுத்த போட்டுத் தந்தாரு. அதுக்கு ஒரு நாளு பேங்குல போயி நின்னு பணத்தெ எடுத்து வந்தாம் விகடு.
            அட்டைகள வைக்க டிரேங்கத்தாம் நெறைய வாங்க வேண்டியிருந்திச்சி. அதெ கணக்குப் பண்ணி தேவையான டிரேங்கள வாங்குனாம். அந்த டிரேய்கள வைக்க அடுத்ததா ஷெல்ப்ப தயாரு பண்ண வேண்டியதா இருந்திச்சி. மித்த மித்த பள்ளியோடத்துலப் போயி பாத்தப்போ அவுங்க ராக்கை மாதிரி அடிச்சி வெச்சி அதுல டிரேய்கள வெச்சிருந்தாங்க. அதெ பாத்ததும் இவனுக்கு வேற மாதிரியான யோசனை தோணுச்சி. பழக்கடைகள்ல பழங்கள அடுக்கி வெச்சிருப்பாங்க யில்ல வரிசையா படிக்கட்டுல வெச்சிக்கிற மாதிரி. அந்த மாதிரி ஷெல்ப்பா செஞ்சி வெச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சி. அந்த மாதிரி செஞ்சி வெச்சா புள்ளைங்களுக்கும் பாக்க அம்சமா இருக்குன்னு விரும்பி வந்து அட்டைகள எடுக்க தோதா இருக்கும்னு அவ்வேம் நெனைச்சாம். அதுக்கு அடிக்கிற செல்ப்ப கொஞ்சம் சாய்ச்சி வெச்சி அடிச்சி பின்னால தாங்கலுக்கு பலகையையோ, சட்டத்தையோ வெச்சி அடிக்கணும். அப்பிடி அடிச்சிட்டா ஷெல்ப்பு சாயும்ங்ற பயம் கூட இருக்காது. ஒரு வேளை ஷெல்ப்பு சாய்ஞ்சி புள்ளைங்க மேல வுழுந்துடுமோன்னோ, புள்ளைங்க தள்ளி வுட்டுப்புடுமோன்னு பயப்படல்லாம் வேணாம். அப்படி ஒரு செளகரியமும் இருக்கு அதுல. அதால அப்பிடிச் செய்யுறதுதாம் சரின்னு முடிவு பண்ணிக்கிட்டாம். அதுக்குத் தோதா செஞ்சித் தர்ற ஆளெ பிடிக்கணுமே.
            இவனுக்குக் குமரு மாமாவோட ஞாபவம்தாம் வந்திச்சி. அவரோட பேசி நாளாச்சி, தவிரவும் இப்போ பேச்சு வார்த்தையும் இல்லாம கெடக்குதுன்னே ஒரு யோசனையில இவ்வேம் தயங்கி நின்னாம். இந்தச் சங்கதியெ அவரோட வூட்டுல போயிப் பேசுறதா? பட்டறையில போயிப் பேசுறதா?ன்னு அது ஒரு கொழப்பமா வேற இருந்திச்சி. மொதல்ல பட்டறைக்குப் போவோம், அங்க யில்லன்னா நேரா வுட்டுக்கே வுட்டுப்புடுவோம்ங்ற முடிவுல கெளம்பிப் போனாம் விகடு. பட்டறையில போயிப் பாத்தா குமரு மாமா காங்கல. "அவரு வர்ற நேரந்தாம் சித்தே இப்பிடி உக்காருங்க! வந்துடுவாப்புல! அடிக்கடி இப்பிடித்தாம் வூட்டுக்கும் பட்டறைக்கும் அலைஞ்சிட்டுக் கெடப்பாப்புல்ல. வூட்டுக்குப் போனாக்கா கடுப்பு அடிப்பாப்புல. வூட்டுக்குப் போவா வாணாம். அப்பிடி அந்த பலவ மேல குந்துங்க!" அப்பிடிங்கிறாரு அங்க வேலை பாத்துட்டு உளிய வெச்சி சுத்தியல தட்டிக்கிட்டு இருக்குற ஒரு ஆளு.
*****


27 Jan 2020

எங்கிட்டே வெளக்கம் கேட்பே?



செய்யு - 340

            தலைமையாசிரியர்ர பெரிய வாத்தியார்ன்னும், மத்த வாத்தியார்மார்கள சின்ன வாத்தியார்கள்ன்னும் சொல்றது இங்க ஒரு பழக்கம். ஒரு வாத்தியாரு ஒண்ணு பெரிய வாத்தியாரா இருப்பாரு, இல்ல சின்ன வாத்தியாரா இருப்பாரு. ரெண்டு வாத்தியாராவும் ஒரே வாத்தியாரு இருக்குங்றது ஓராசிரியர் பள்ளியோடத்துல நடக்குற சங்கதி. அங்க அந்த ஓராசிரியர்தாம் பெரிய வாத்தியார்ராவும் இருந்தாவணும், சின்ன வாத்தியார்ராவும் இருந்தாவணும். இரண்டாயிரமாவது வருஷத்துக்குப் பின்னாடி ஓராசிரியர் பள்ளியோடமே இருக்கக் கூடாதுன்னு அரசாங்கம் முடிவெடுத்து அதெ செயல்படுத்துனாலும் கோட்டகம் மாதிரியான பள்ளியோடங்கள் ஓராசிரியரு பள்ளியோடம் போல ஆயிடுது. கோட்டகத்துல பெரிய வாத்தியார்ன்னு ஒருத்தரு இருந்தாலும் அவரால பள்ளியோடம் வந்து போவ முடியாத நெலமை ஆயிப் போச்சு. சின்ன வாத்தியார்ன்னு விகடு இருந்தாலும் பெரிய வாத்தியாரு இல்லாததால அவனே பெரிய வாத்தியாராவும் இருந்து பள்ளியோடத்த பாத்துக்க வேண்டியதாகிப் போச்சு. மொத்தத்துல அந்தப் பள்ளியோடத்துக்கு அவந்தாம் பெரிய வாத்தியாரும், சின்ன வாத்தியாரும்னும் ஆயிடுச்சு.
            விகடு வாத்தியாரு டிரெய்னிங்க்ல பாடம் சொல்லிக் கொடுக்குற முறைப் பத்தி படிச்சது வேற. அவ்வேம் இப்போ வேலைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுக்குற முறை வேற. எல்லா முறையும் புள்ளைங்களுக்காகப் பாடம் சொல்லிக் கொடுக்குற முறைதான்னாலும் ஒவ்வொண்ணோட தத்துவமும், கருத்துப்பாடும் கொஞ்சம் வேறுபடத்தாம் செய்யுது. அடிப்படையில சின்ன சின்ன வேறுபாடுகள் ஒவ்வொண்ணுத்துக்கும் இருக்குது. அப்போ அரசாங்கம் செயல்வழிக் கற்றல்ங்ற முறையில பாடங்கள நடத்துற முறைய கொண்டு வந்திருச்சு. புள்ளைங்க படிக்கிற பாடங்க எல்லாத்தையும் அட்டைகளா மாத்தி வைச்சிருந்தாங்க. ஒவ்வொரு பாடத்தையும் அறிமுகப்படுத்துறதுக்கு ஒரு அட்டை. அந்தப் பாடத்தை செயல்பாடா மாத்தி நடத்துறதுக்கு ஒரு அட்டை. அந்தப் பாடத்தைப் புள்ளைங்க சரியா படிச்சிருக்காங்றத சோதிக்கிறதுக்கு ஒரு அட்டை. அந்தப் பாடத்துக்கு வீட்டுப்பாடம் கொடுக்குறதுன்னா அதுக்கு ஒரு அட்டைன்னு எல்லாம் அட்டைதாம். ஒவ்வொரு பாடத்தையும் ஏணியாவும், பாடத்தோட தலைப்பு ஒவ்வொண்யைும் ஏணியோட படி போல ஒரு படத்தை வரைஞ்சி அந்தப் படிக்குள்ள பாடத்தலைப்புக்கான அத்தனை அட்டைகளும் வரும்.
            அந்த அட்டைகள வாத்தியாரு எடுத்து வந்துல்லாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. புள்ளைங்கத்தாம் ஏணிப்படியோட படத்தைப் பார்த்து அதுங்க படிக்க வேண்டிய அட்டைகள எடுத்தாந்து அந்த அட்டைக்கு உக்கார வேண்டிய குழுவுல போயி உக்காந்துக்கும். இதுக்குன்னே ஆறு வகையான குழுக்களுக்கு ஆறு பாய்களப் போட்டு வெச்சிருக்கணும். மொதல் ரெண்டு குழுக்கள் இருக்குப் பாருங்க அதுக்குப் பக்கத்துலத்தாம் வாத்தியாரு உக்காந்துக்கணும். அந்த ரெண்டு குழுக்களுக்கான அட்டைகள வெச்சிருக்கிற புள்ளைங்களுக்குத்தாம் வாத்தியாரோட உதவி அதிகம் தேவைப்படும். மத்த மூணாவது நாலாவது குழுக்கள்ல இருக்குற புள்ளைங்களுக்கு தேவைக்கு ஏத்தாப்புல வாத்தியாரு உதவி பண்ணா போதும். பெரும்பாலும் அஞ்சாவது ஆறாவது குழுக்கள்ல இருக்குற புள்ளைங்க அதுவா செய்யுற அளவுக்கு முதல்லேர்ந்து நாலாவது வரை இருக்குற குழுக்கள்ல இருந்து தயாராயிடும்ங்றதால வாத்தியாரோட உதவி அதிகம் தேவைப்படாது.
            ஒரு நாளைக்கு எவ்வளவு படிக்கலாம்ங்றது புள்ளைங்களோட கையிலத்தாம் இருக்கு. அதுங்க ஆர்வமா எத்தனை அட்டைகள வேணாலும் எடுத்துப் படிச்சிட்டுப் போவாலாங்றதுதாம் இந்த முறை. ஒரு அட்டைய முழுசா முடிக்காம அடுத்த அட்டைக்குப் போவக் கூடாதுங்றதுதாம் இதுல உள்ள விதி. ஒவ்வொரு அட்டையையும் முழுசா முடிச்சிட்டா அடுத்தடுத்த அட்டைக்குப் போய்ட்டே இருக்கலாம். ஒவ்வொரு அட்டையையும் புள்ளைங்க முடிக்க முடிக்க அதுக்கு ஒரு நோட்டைப் போட்டு அதுல அதைக் குறிச்சிக்கணும். அப்படி இதுல முடிச்சிட்டுப் போறப்பவே காலாண்டு பரீட்சை, அரையாண்டு பரீட்சை, முழு ஆண்டு பரீட்சைக்கான அட்டைகளும் வரும். அந்த பரீட்சைக்கான அட்டை வர்றப்பத்தாம் அந்த புள்ளை பரீட்சையை எழுத முடியும். எல்லா புள்ளைங்களுக்கும் ஒரே நேரத்துல பரீட்சை நடக்காது. சம்பந்தப்பட்ட புள்ளை பரீட்சைக்கான அந்த அட்டையை நெருங்குறப்பத்தாம் பரீட்சை நடக்கும்.
            இந்த முறையோட ஒரு நல்லது என்னான்னா மெதுவா படிக்கிற புள்ளைங்க மெதுவா படிக்கலாம். வேகமா படிச்சிட்டுப் போற புள்ளைங்க வேகமா படிச்சிட்டுப் போவலாம். இந்த முறையில இருந்த கெட்டதும் அதுவாத்தாம் இருந்துச்சு, எப்பவும் நல்லதும் கெட்டதும் பக்கத்துப் பக்கத்துலத்தாம் இருக்குங்ற மாதிரி. புள்ளைங்க அதுவோட வேகத்துல படிக்கலாங்றதால ஒண்ணாப்பு படிக்க வேண்டிய வருஷத்துல ஒண்ணாப்புல உள்ள அட்டைகள படிச்சி முடிக்கணுங்ற அவசியம் இல்ல பாருங்க. மெதுவா படிக்கிற பய புள்ள ஒண்ணாப்புல படிக்க வேண்டிய அட்டைகள்ல பாதியப் படிச்சிட்டு, ரெண்டாப்பு படிக்க வேண்டிய வருஷத்துல ரெண்டாப்புக்கான அட்டைக்குப் போவாம ஒண்ணாப்பு அட்டையப் படிச்சிட்டுக் கெடக்கும். இத போல மூணாப்புல கெடக்குற பய புள்ள ரெண்டாப்புக்கான அட்டைகள முடிக்கலன்னா வெச்சிக்குங்க, அது மூணாப்பு படிக்க வேண்டிய வருஷத்துல ரெண்டாப்பு அட்டைகள படிச்சிட்டுக் கெடக்கும். இப்படி ஒவ்வொரு வகுப்பையும் எடுத்துக்கிட்டீங்கன்னா அவ்வேம் இருக்குறது ஒரு வகுப்பாவும், படிச்சிட்டு இருக்குற அட்டைக ஒரு வகுப்பாவும் இருக்கும். கேக்குற ஒங்களுக்கே கொழப்பமா இருக்குன்னா முப்பத்தெட்டு புள்ளைகள வெச்சிக்கிட்டு ஒத்த ஆளா பாடத்தெ நடத்திட்டு இருக்குற விகடுவோட நெலமைய நெனைச்சிப் பாருங்க.
            எல்லா புள்ளைங்களும் ஒரே வேகத்துல படிச்சதுன்னா இதுல எந்தப் பிரச்சனையும் இருக்காது. அந்த வருஷத்துல அந்தந்த வகுப்புக்கான அட்டைகள முடிச்சிட்டு அதுங்க இருக்க வேண்டிய வகுப்பும், படிக்க வேண்டிய வகுப்பும் சரியா இருக்கும். புள்ளைங்கள அதது வேகத்துக்கு வுட்ட பெறவு அட்டென்டன்ஸ்ஸ எடுத்துப் பார்த்தா அதுக இருக்குற வகுப்பு ஒண்ணாவும், அதுக அட்டைகள படிச்சிட்டு இருக்குற வகுப்பு ஒண்ணாவும் இருக்கும். முப்பத்தெட்டு பய புள்ளைகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அட்டையோட வரும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அட்டைய வெச்சிக்கிட்டு ஆறு குழுக்கள்ல ஒண்ணுத்துல போயி உக்காந்துக்கும். நாலு புள்ளைகளுக்கும் நாலு வெதமா அட்டைகளச் சொல்லிக் கொடுத்துட்டு, அதுங்க முடிக்கிற அட்டைகள நோட்டுல குறிச்சிக்கிட்டு வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்துல ரொம்பவே தடுமாறிப் போயிட்டாம் விகடு.

            இந்த மொறைக்கான ஏற்பாடுங்க ரொம்ப இருக்கு. அட்டைகள ஒவ்வொரு பாடத்துக்குமா வகைப் பிரிச்சி அதுக்கான டிரேய்கள்ல வைச்சிருக்கணும். ஒவ்வொரு பாடத்துக்கும் அந்த டிரேய்கள வைக்கிறதுக்கு ஒரு செல்ப் இருக்கணும். ஒண்ணாப்புக்கு சிவப்பு நெறத்துல பார்டர் போட்ட அட்டை, ரெண்டாப்புக்கு பச்சை நெறத்துல பார்டர் போட்ட அட்டை, மூணாப்புக்கு மஞ்சள் நெறத்துல பார்டர் போட்ட அட்டை, நாலாப்புக்கு நீல நெறத்துல பார்டர் போட்ட அட்டைன்னு நாலு வகுப்புக்குமான அட்டைக பத்து பதினைஞ்சி வெதமா பிரிச்சிஞ்சிருக்கும். உதாரணத்துக்கு ஒரு பாடத்தை அறிமுகம் பண்றதுக்கான அட்டைன்னா வெச்சிக்குங்க அதுக்கு ஒரு லோகோவ கொடுத்திருப்பாங்க. அந்த லோகோவுக்கான நாலு வகுப்புக்குமான அட்டைகளையும் ஒரு டிரேய்ல வெச்சிருக்கணும். இப்பிடி ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஏத்த மாதிரி ஒரு லோகோ. அதுல நாலு வகுப்புக்கான அட்டைகளும் இருக்கும். ஒவ்வொரு வகுப்புக்கான வெவ்வேறு பாடத் தலைப்புக்கான அட்டைகளும் வகுப்பு மாறி கலந்துடாம அந்த டிரேய்ல தனித்தனியா இருக்கறதுக்கு ரப்பர் பேண்டு போட்டு வெச்சிருக்கணும்.
            இப்பிடி ஒரு பய புள்ள நாலு வகுப்புக்கான அட்டைகள முடிச்சாத்தாம் அஞ்சாப்புக்கு வர முடியும். அஞ்சாப்புலத்தாம் புத்தகத்த வெச்சி கருத்து வரைபட முறையில பாடத்தை நடத்தலாம். இது அப்போ இருந்த முறை. கோட்டகத்துல எந்தப் பய புள்ளையும் நாலாப்பு வரையுள்ள அட்டைகள முடிக்காததால எல்லா பய புள்ளையும் அதுக்குள்ளத்தாம் இருந்தாம். அஞ்சாப்பு படிக்கிற பய புள்ளையும் நாலாப்பு வரை உள்ள அட்டைக்குள்ளத்தாம் இருந்தாம். உண்மையைச் சொல்லணும்னா இப்பிடி ஒரு முறையில பாடத்தெ கொண்டு போவணுங்றதெ பத்தியெல்லாம் கவலைப்படாம சின்னமுத்து வாத்தியாரு அவரு பாட்டுக்கு பள்ளியோடத்துக்கு பதினொண்ணு, பன்னெண்டு மணி வாக்குல வர்றதும், வாய்ப்பாட சொல்லச் சொல்றதும், இல்லாட்டி போர்ட்டுல எதையாச்சிம் எழுதிப் போட்டு வாசிக்க வைக்கிறதும், மூணு மணி வாக்குல கெளம்புறதுமுன்னு இருந்துட்டாரு.
            சின்னமுத்து வாத்தியாரு வாங்கியாந்த அட்டைக அத்தனையும் பேருக்கு பத்து பதினைஞ்சு டிரேய்ல கண்டமேனிக்கு அடுக்கிக் கெடந்துச்சு. மித்ததையெல்லாம் அப்படியே அட்டைப் பொட்டிகள்ல கட்டைக் கூட பிரிக்காம ரொம்ப பாதுக்காப்பா வெச்சிருந்தாரு. அதெ பய புள்ளைங்க கண்ணால பாத்தானுங்களான்னு கூட தெரியல. பய புள்ளைங்க புத்தகத்துல படம் பாக்குறதும், அந்தப் படத்து மேல எதாச்சிம் கிறுக்கி வைக்கிறதும், வாத்தியாரு எதாச்சிம் சொல்லிக் கொடுத்தா அதெ திருப்பிச் சொல்றதும்னும் வந்துக்கிட்டும் போய்கிட்டும் கெடந்திருக்குதுங்க.
            இப்போ மொத்த பள்ளியோடத்தையுமே மறுகட்டுமானம் செய்யுறாப்புல ஆயிப் போச்சு நெலமை. இன்னும் நெறைய டிரேய்கள வாங்க வேண்டியிருந்துச்சு. அந்த டிரெய்கள வைக்கிறதுக்கு செல்ப்புகள செய்ய வேண்டியிருந்துச்சு. அதுக்கான பணத்தையும் ஒதுக்கி ஒவ்வொரு பள்ளியோடத்துக்கும் பேங்குல அக்கெளண்ட் பண்ணியிருந்தாங்க அரசாங்கத்துல. நல்லவேளையா சின்னமுத்து வாத்தியாருக்குக் குடிக்கவும் அதுல கவனம் செலுத்தவும் நேரம் சரியா இருந்ததால அதெ கவனிக்காம விட்டுப்புட்டாரு. இல்லாட்டி அதுல இருந்த பணத்தையும் எடுத்து சரக்கா வாங்கி ஊத்தியிருப்பாரு. இது தொடர்பாவும் பள்ளியோடத்துக்கு ஒதுக்குன பணத்தெ எடுக்கல, அதெ ஒழுங்கா செலவழிக்கலன்னு அவருக்கு மெமோ மேல மெமோவா ஆபீஸ்லேந்து ரிஜிஸ்தரு தபால்ல அனுப்பிச்சிருந்தாங்க. எல்லா மெமொவையும் வாங்கி வெச்சிருப்பாரு சின்னமுத்து வாத்தியாரு. எந்த மெமோவையும் படிச்சுப் பாக்க மாட்டாரு. ஆனா வெளக்கத அனுப்புவாரு.
            அந்தக் கதெய கேளுங்க இப்போ. ஒருவேளை தப்பித் தவறி அவரு மெமோவே படிச்சிப் பாத்திருந்தார்ன்னா பணத்தெ எடுத்து போதையில மெதந்துக்கிட்டுப் பஞ்சா பறக்க விட்டுருப்பாரு. அவருக்கு மேமோ வர்றதுங்றது வருஷம் தப்பா பத்து தடவே மழை வர்ற மாதிரி. அது எப்படியும் அப்பயோ இப்பயோ வந்துட்டுப் போயிடும் தப்பவே தப்பாதுங்ற மாதிரி. அதால வழக்கமா வர்ற மெமோன்னு நெனைச்சிட்டு அவரு வழக்கமா என்னத்தெ பண்ணுவாரோ அதெ பண்ணாரு.
            வர்ற மெமொ ஒவ்வொண்ணுத்துக்கும் அவரும் விளக்கத்த ரிஜிஸ்தரு தபால்ல அக்னாலேட்ஜ்மெண்ட்டு கார்டோட அனுப்பிச்சிட்டு, அந்த தபாலு ஆபீஸூக்குப் போயி அங்கேயிருந்து அந்த அக்னாலெட்ஜ்மெண்ட்டு கார்டு இவரு கைக்கு வந்ததும் இவரு அதெ பத்திரமா வெச்சிப்பாரு. மெமொவுக்கான பதில அனுப்புனதுக்கு அதுதான ஆதாரம். ஆனா, இவரோட  வெளக்கத்துக்கு ஆபீஸ்ல எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
            அதெப்படி அம்மாம் சாமர்த்தியமா வெளக்கத்தைக் கொடுப்பாரான்னா கேட்டாக்கா அங்கத்தாம் சின்னமுத்து வாத்தியாரு தன்னோட வேலையக் காட்டியிருப்பாரு. வெளக்கத்தைக் கொடுத்தாத்தான்ன நடவடிக்க எடுக்க முடியும்? அதால காயிதத்துல வெளக்கம்லாம் எழுதாம எம்ப்டி கவரைத்தாம் அக்னாலெட்ஜ்மெண்ட் கார்டோட அனுப்புவாரு. ஆபீஸ்ல பிரிச்சுப் பாத்தா எம்ப்டி கவர்தான இருக்கும். என்னய்யா இப்பிடி இருக்குன்‍னு ஏயிய்வோ ஆளெ கூப்புட்டு வுட்டாக்கா ஆபீஸூ பக்கமே போவ மாட்டாரு. ரிஜிஸ்தரு தபால்ங்றதால ஆபீஸ்ல கடுதாசிக்கான பதிவையெல்லாம் மொறையா போட்டு வெச்சிருப்பாங்க. சின்னமுத்து வாத்தியாரும் அக்னாலெட்ஜ்மெண்டு கார்டை கையில வெச்சிருக்காரா? ஏயிய்வோக்கு தலைவலியா போவும்.
            வெளக்கக் கடுதாசியில வெளக்கத்துக்கான காயிதம் இருந்தாத்தான்ன அதெ படிச்சிப் பாத்துட்டு அதுக்கு தக்காப்புல நடவடிக்கைய எடுக்க முடியும். ஒண்ணுமே இல்லாத வெத்து கவர்ல எதெ வெச்சி நடவடிக்கை எடுக்குறது? ஏயிய்வோ சின்னமுத்து வாத்தியார்ர தேடி வர்றாப்புல ஆயிடும். தேடி வந்தா "நாந்தாம் வெளக்கத்த கடுதாசி வந்த அன்னைக்கே படிச்சிப் பாத்துட்டு அனுப்பிப்புட்டேன்னே. இந்தப் பாருங்க கடுதாசி அனுப்புனதுக்கான அத்தாட்சி கார்டு!"ன்னு எடுத்து நீட்டுவாரு சின்னமுத்து வாத்தியாரு.
            "கவர்ல ஒண்ணுமே இல்லைய்யா! வெத்துக் கவருய்யா! என்ன வெளக்கத்த எழுதி அனுப்புனே! அதாச்சிம் சொல்லித் தொலைய்யா!"ன்னு ஏயிய்வோ கெஞ்சாத கொறையா கேட்டாக்கா, "நீஞ்ஞ எத்து மாதிரியான வெளக்கத்த கேட்டு காகிதத்த அனுப்பினீங்களோ அது மாதிரியான வெளக்கத்தத்தாம் கொடுத்தேம்பாரு!" சின்னமுத்து வாத்தியாரு.
            "அதத்தாம்யா தெரியாம கேக்கிறேம். மறுக்கா ஒரு காயிதத்துல எழுதிக் கொடும்யா!"ன்னு ஏயிய்வோ கேட்டாக்கா, "நீஞ்ஞ காயித்த அனுப்பி வெளக்கத்த கேட்டீங்க. நாமளும் காயிதத்த அனுப்பி வெளக்கத்த கெடுத்தேம். அம்மாம்தாம் முடிஞ்சிப் போச்சி. மறுக்கா மறுக்கா கேட்டாக்கா எப்பிடி? ஒஞ்ஞளுக்கு நாம்ம வெளக்கத்த ஆபீஸூக்கு அனுப்பிச்சத காட்டி, அதெ நீஞ்ஞ ஆபீஸ்ல தொலைச்சிப்புட்டீங்கன்னு எழுதி மறுக்கா வெளக்கத்த தான்னு ஒரு காயிதத்த எழுதி நீட்டுங்க! நாமளும் மறுக்கா காயிதத்த எழுதி நீட்டுறேம். நீஞ்ஞ காயிதத்த நீட்டாம நாம்ம காயிதத்த நீட்ட மாட்டேம்!"பாரு சின்னமுத்து வாத்தியாரு.
            சொல்லிட்டு அத்தோட வுட மாட்டாரு, "அரசாங்கத்து ஆவணத்த பாதுகாக்க தவறுனதா கோர்ட்டுல அக்னாலெட்ஜ்மெண்ட் கார்ட வெச்சி ஒரு கேஸப் போட்டாத்தாம் சரியா வரும். இஞ்ஞ வந்து நின்னுக்கிட்டு அதெ எழுதிக் கொடு, இதெ எழுதிக் கொடுன்னு கழுத்தறுத்தா எப்பிடி?" அப்பிடின்னு ஏயிய்வோ காதுக்கு கேக்குற மாதிரியும் கேக்காத மாதிரியும் ஒரு விதமா சாடையா சொல்லுவாரு பாருங்க, அதெ கேக்குறப்ப ஏயிய்வோக்கு தலையச் சுத்துறாப்புல ஆயிப்புடும். பெறவு என்ன அவருக்கு எந்த வெதமான பாதிப்பும் வர்றாத போல ஒரு வெளக்கத்த ஏயிய்வோ எழுதி அதுல அவருகிட்டு கெஞ்சிக் கூத்தாடி கையெழுத்த மட்டும் வாங்கியறாப்புல ஆயிடும். அதுக்குப் பெறவு சின்னமுத்து வாத்தியாருக்கு நோட்டீஸ் கொடுக்கணும்னு யாருக்காவது தோணும்ங்றீங்க?
            அதே நேரத்துல பாத்தீங்கன்னா... அவரு இவ்வளவு பண்ணதுக்குத்தாம் சேர்த்து வெச்சி இப்போ நடமாட கூட முடியாம படுத்தப் படுக்கையா கெடந்து அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவிக்கிறார்ன்னு அவரோட நெலமையைப் பாத்துட்டு சொல்றவங்களும் இருக்காங்க.
*****


தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...