31 Jan 2021

நாட்டுல மனுச உசுரப் போல மலிவு வேறெதுமில்ல!

நாட்டுல மனுச உசுரப் போல மலிவு வேறெதுமில்ல!

செய்யு - 703

            மழெ வானத்தெ பொத்துக்கிட்டுக் கொட்டுறாப்புல ஊத்த ஆரம்பிச்சிது. ஆர்குடிப் பக்கம் ரண்டு சக்கர வாகனத்துலப் போயிட்டு இருந்தவங்க அரப்சாப் தர்க்கா பக்கமா ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அத்தனெ பேருக்கும் ஒதுங்க எடம் கொடுக்குற அளவுக்கு அந்த எடம் விசாலமா இல்லன்னாலும் உள்ளார நின்னவங்க ஒட்டி நெருங்கிக்கிட்டு வர்றவங்களுக்கு எடத்தெ கொடுத்துட்டு இருந்தாங்க. மனசு இருந்தா எடம் இல்லாத எடத்துலயும் எடம் உண்டாகத்தாம் செய்யுது. மித்த நேரத்துல காத்தோடிக் கெடக்குற அந்த எடத்துல மழைக்கு ஒதுங்குன கூட்டம் அதிகமா இருந்துச்சு. ஆர்குடிய நோக்கி வந்தவங்க மரக்கடையத் தாண்டி கொளத்து மண்ணு செதறிக் கெடந்த ரோட்டுல அஞ்சாறு பேத்துக்கு மேல வழுக்கி வுழுந்து கையி கால சிராய்ச்சிக்கிட்ட கதெயெ பேச ஆரம்பிச்சாங்க. பஸ்ஸூ வழுக்கிட்டுப் போயி வயல்ல கெடந்த கதெயெப் பத்தி வெசலாமாவும் பேச ஆரம்பிச்சாங்க.

            "என்னத்தங்க சொல்றது? நம்மகிட்டெ ரோடு டாக்ஸ் வாங்குறாம் வண்டிய வாங்குறதுக்குள்ளாரயே. ரோட்டப் பாத்தீயன்னா குண்டும் குழியுமா இருக்கு. அப்பிடியே ரோடு நல்லா இருந்தாலும் இந்த மாதிரிக்கி மண்ண அடிக்க வுட்டுக் குட்டிச் சொவரா ஆக்கிடுறானுங்க. மண்ண அடிக்கிறவனுவோ டிப்பரு தளும்ப தளும்பத்தாம் அடிக்கணுமா ன்னா? டிப்பர்ரு பின்னாடி கதவெ கூட மூட மாட்டாங்றானுவோ. அவ்ளோ அலுப்புங்க. அதுலேந்து வேற கணிசமா மண்ணு வுழுவுது!"ன்னாரு அதுல ஒருத்தரு மனுஷன் பொழைப்புல மண்ணள்ளிப் போடுறதெப் போல ரோட்டுல மண்ணள்ளிப் போடுறதெப் பத்தி.

            "எல்லாம் ப்ளாட்டுப் போறடுற பயலுவோளால வருது. அவனுவோ பாட்டுக்கு வயலத் தடுத்து கல்ல நட்டு ப்ளாட்டுப் போட்டுடுறானுவோ. அதெ நம்மப் பயலுவோ வாங்கி வூட்ட கட்டுறானுவோன்னு இப்பிடி மண்ண அடிச்சி அதுல வர்ற கதெதாங்க இதெல்லாம். மொத்தத்துல மனுஷனுக்கு மனுஷன் மண்ணள்ளி வெச்சிட்டுத்தாம் அடங்குவானுவோ போலருக்கு. எஞ்ஞ வூட்டக் கட்டணும், எஞ்ஞ வயலா வைக்கணும்ங்ற சட்டம்ல்லாம் நம்ம நாட்டுல செரியா கெடையாதுங்க. அவ்வவ்வேம் வைக்கறதெ சட்டமா இருக்கு. வலுத்துவேம் வைக்குறதுதாம் இந்தப் ப்ளாட்டு வெசயத்துல சட்டங்றாப்புல இருக்குது! நாம்ம நல்ல எடத்துல வூட்டுக் கட்டறதுக்கு அவ்வேங்கிட்டெ பெர்மிஷன், இவ்வேங்கிட்டெ பெர்மிஷன்னு நாயா அலைய வேண்டிக் கெடக்கு. நீஞ்ஞ மட்டும் ஒரு ப்ளாட்ட வாங்கிப் போட்டு வூட்டக் கட்டுங்க, எந்த பெர்மிஷனும் தேவல்லாம வூட்ட கட்டிக்கிட்டெ போவலாம். காசிருக்கிறவம்தானே ப்ளாட்ட வாங்கி அப்பிடி வூட்டக் கட்ட முடியும். யில்லாதவேம் ன்னாத்தா பண்ணுவாம்? இருக்குற எடத்துலத்தானே வூட்டக் கட்டிக்கப் பாப்பாம்!"ன்னாரு அதெ கேட்ட இன்னொருத்தரு மனுஷன் செத்த பின்னாடி மண்ணள்ளிப் போடுவாங்கன்னா, இவனுவோ மனுஷன் சாவட்டுமேன்னு மண்ணள்ளிப் போடுறானுவோங்றாப்புல.

            "பாத்தீயாடாம்பீ! மழைக்கு ஒதுங்குனதுல எம்மாம் வெசயங்க தெரியக் கெடக்குது! நாட்டுல இப்பிடித்தாம் நடக்குறதல்லாம் அநியாயமா இருக்கும் போல. எவனோ ஒருத்தெம் தேவைக்கு அவ்வேம் பாட்டுக்குக் காசியக் கொடுத்துப்புட்டு மண்ண அடிக்கிறாம். அதுல மழெ பேஞ்சி போறவேம், வர்றவேம்ன்னு பத்து பேராச்சும் வழுக்கி வுழுந்து கையிக் கால ஒடைச்சிக்கிறாம். சமயத்துல செல பேத்துக்கு உசுரே போயிடுது. நம்ம நாட்டுல நெறையப் பொருளோட வெல அதிகம்ன்னாலும் உசுரோட வெல என்னிக்கும் ரொம்ப மலிவுத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மவனெப் பாத்து நாட்டு வெலைவாசியில மனுஷ உசுரு மட்டும் வெலை எறங்கிட்டெ போறாப்புல. 

            "நீஞ்ஞளும் இதெ கேட்டு ந்நல்லாத்தாம் கருத்தாப் பேசுறீயேப்பா!"ன்னாம் விகடு நாலு எடம் போயிட்டு வந்தா நாலு கருத்து தானா வந்துப்புடும்ங்றாப்புல.

            "ந்நல்லா கருத்தா சிந்திக்க, பேச நெறைய புத்தகமெல்லாம் படிக்க வேண்டியதில்லா. இப்பிடி நாலு எடத்துலக்கு நாலு பேரு கூடுற எடத்துக்குப் போனாலே போதும்டாம்பீ! நீந்தாம் என்னவோ எந்நேரத்துக்குப் பொத்தகம் பொத்தகம்ன்னு கெடக்குறீயடாம்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒலகத்தெப் போல தொறந்த புத்தகம் வேற எதுவும் கெடையாதுங்றாப்புல.

            "ஏம்ப்பா ஒரு விசயத்தெ கவனிச்சீயளா? நாம்ம இந்தச் சம்பவத்துக்குப் பெறவு இதெ பேசுறதெ வுட ஒலகத்தெ அதிகம் கவனிச்சிப் பேச ஆரம்பிச்சிட்டேம்ப்பா. நாம்ம கூட நேத்திக்குக் கோவிந்து அண்ணங்கூட பேசுனப்ப நம்ம வெவகாரத்தையே சுத்தமா வுட்டுப்புட்டு அவுங்களோட பெரிப்பா மூலங்கட்டளெ கம்பு வாத்தியார்ரப் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டேம்ப்பா!"ன்னாம் விகடு இப்போல்லாம் பேச வேண்டியதெப் பத்தி வெலகிப் போறதெ சுட்டிக் காட்டிச் சொல்றாப்புல.

            "மனசு வெறுத்துப் போச்சுடாம்பீ! இதுலயே எத்தனெ வருஷம் கெடக்கறது? மூணு வருஷத்தக்கு மேல ஆவப் போவுது. அதாங் சம்பவம் பெரிசா நடந்துங் கூட சலிச்சிப் போச்சுது. இதுலேந்து மனசுக்கு அலுத்துப் போயி அத்து வெளியில அலைய ஆரம்பிச்சிடுச்சு. ரொம்பவே மனசு ஒரு வெசயத்துல பாதிக்கப்பட்டுச்சுன்னா ஒண்ணு அதுலயே ஒழட்டிக்கிட்டுப் பைத்தியமா போயிடும், யில்லன்னா அதெ வுட்டு வெலகிட்டுப் போயி யிப்பிடிச் சம்பந்தம் யில்லாத கவனிக்கவும், பேசவும் ஆரம்பிச்சிடும்! ஒழட்டிக்கிட்டுப் பைத்தியமா ஆவுறதுக்கு இத்து எவ்வளவோ தேவலாம் போ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உள்ளூருல பைத்தியமா அலையுறதெ வுட ஊர்ர வுட்டு ஓடுறது எவ்வளவோ மேலுங்றாப்புல.

            "நீஞ்ஞ சொல்றதும் சரித்தாம்பா!"ன்னாம் விகடு. மழெ லேசா வுட்டாப்புல தெரிஞ்சது. ஆன்னா தூத்தல் வுட்டபாடில்ல. தூவாணம் அடிச்சிக்கிட்டெத்தாம் இருந்துச்சு. அதையே கூட்டமா நெருக்கடியிச்சு நின்ன சனங்க ஏதோ பம்பர் பரிசு அடிச்சாப்புல விழுந்தடிச்சி அதெ வாங்கப் போறாப்புல கெளம்ப ஆரம்பிச்சதுங்க. சனங்க ஒவ்வொண்ணும் போவப் போவ மிஞ்சுனது விகடுவும், சுப்பு வாத்தியாரும், அத்தோட ஒரு ஜோடியுந்தாம். அந்த ஜோடியில பொண்டாட்டிக்காரவுங்க கெளம்பலாம்ன்னு அடம் பண்ணிட்டு இருந்தாங்க. புருஷங்காரரு மழெ முழுசா வுடட்டும்ன்னு சொல்லி காக்க வெச்சிட்டு இருந்தாரு.

            "வூட்டுக்குக் கெளம்புங்க. வூட்டுல நீஞ்ஞ கேட்ட மாதிரிக்கி தோசைக்கி கெட்டிச் சட்னியோட, மொளவா தொவையலும் அரைச்சித் தர்றேம்!"ன்னு அந்த அம்மா சொன்னதெ கேக்குறப்ப வேடிக்கையா இருந்துச்சு. அந்தப் புருஷங்காரரு எடம் நெறைய இப்போ காலியா கெடந்ததாப் பாத்துட்டு அப்பிடியே தலைக்குக் கையக் கொடுத்துட்டுப் படுத்துட்டாரு. "சித்தப் பொறு. இந்த தூவாணத்துலப் போனா வூடுப் போயிச் சேர்றதுக்குள்ள நனைஞ்சிட வேண்டித்தாம். சொல்ல முடியாது மறு மழெ ஆனாலும் ஆனதுதாங். சித்தெ இருந்துட்டுப் போறதால ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடப் போறதில்ல. நிக்குறதெ நிப்பாட்டிட்டு உக்காரு யிப்பிடி. நமக்கு நீயி தோசெ சுட்டுக் கொடுக்காட்டியும் பரவாயில்ல. பட்டினியா வாணாலும் கெடக்குறேம். இந்த மழையில நனைஞ்சிட்டுப் போயி நாம்ம ஒரு வாரத்துக்கு ஜலதோஷம் பிடிச்சிக் கெடக்க முடியாது!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு ஜன்ம விரோதிக்குக் கூட பயப்பட மாட்டேம் ஆன்னா ஜலதோஷத்துக்குப் பயப்படுவேம்ங்றாப்புல.

            "நாம்ம கோயிலுக்கு ஒஞ்ஞள கெளப்பிட்டு வந்தேம் பாருங்க. பேயாம ஆட்டோவ எடுத்துட்டு வந்திருந்தா இந்தக் கதி வந்திருக்காது. ஒஞ்ஞளுக்கு ன்னா வூட்டுக்கு வந்ததும் இப்போ படுத்ததெப் போல அப்பாடா நமக்கென்னன்னு படுத்துடுவீயே! நாம்மத்தானெ கெடக்கற அத்தனெ வேலையையும் பாத்துட்டு படுக்கோணும். ராத்திரி சீக்கிரமா படுத்தாத்தானே காத்தால எழும்பி ஒஞ்ஞளுக்கு வடிச்சிக் கொட்டி, சோத்த கட்டிக் கொடுக்க முடியுது. இடுப்பு ஒடைஞ்சிப் போவுது. ஒஞ்ஞளுக்கு ன்னா வெளியில ஹாயா அலைஞ்சிட்டு வர்ற ஆளுக்கு?"ன்னாங்க அந்த அம்மா வூட்டுல இருக்குற பொம்பளைக்கு லீவு நாளும் ஓய்வு நேரமும் எங்க இருக்குங்றாப்புல.

            "ஆம்மா வெளியில ஹாயா அலைஞ்சிட்டு வர்றேம்? இந்தாப் பாத்தில்லா? இத்து மாதிரித்தாம் ஒரு மழென்னா ‍எடைஞ்சல்ன்னா கெடைச்ச எடத்துல நின்னுட்டுப் பெறவுத்தாம் கெளம்பியாராணும்!"ன்னாரு அந்தப் புருஷங்காரரு வெளியில போயிட்டு வர்றவங்களுக்கு எப்பிடில்லாம் மண்டெ கொடைச்சல் உண்டாவுதுங்றதெ சொல்றாப்புல. அவுங்க ரண்டு பேரும் விகடுவும், சுப்பு வாத்தியாரும் இருக்குறதெப் பொருட்படுத்துன்னாப்புல தெரியல. அவுங்கப் பாட்டுக்குப் பேசிட்டே இருந்தாங்க. மழெ சுத்தமா வுட்டப் பாடா தெரிஞ்சிது. அது வரைக்கும் அவுங்கப் பேசிட்டே இருந்தாங்க. விகடுவும், சுப்பு வாத்தியாரும் கெளம்புன பெற்பாடும் அவுங்க கெளம்பாம அஞ்ஞயே தொசே சுடுறதெப் பத்தியும், சட்டினி அரைக்கிறதெப் பத்தியும் அந்த அம்மா அரைச்ச மாவையே திரும்ப அரைக்குறாப்புல பேச அதெ சுத்தியே மாத்தி மாத்திப் பேசிட்டு இருந்துச்சுங்க. அந்தப் புருஷங்காரரும் இப்போதைக்கு அந்த எடத்தெ வுட்டு கெளம்ப முடியாத அளவுக்கு அலுப்புக்காத்ததப் போல பிடிச்சு வெச்ச புள்ளையாரு கணக்கா சாலு சாப்பா எதாச்சும் பேசிக்கிட்டெ இருந்தாரு.

            வெளியில அடிக்குற தூத்தல் நின்னாலும் இந்த சோடிகளோட பேச்சு நிக்காது போலன்னு நெனைச்சபடிக்கு விகடுவும், சுப்பு வாத்தியாரும் கெளம்பி ஆஸ்பிட்டல்ல நோக்கிப் போறப்பட ஆரம்பிச்சாங்க. அவுங்க ரண்டு பேரும் வந்தப் பெற்பாடும் விகடுவுக்கு அவுங்க ரண்டு பேரும் எப்போ கெளம்பியிருப்பாங்கற யோசனெ வந்துக்கிட்டெ இருந்துச்சு.

            ஆஸ்பிட்டலுக்கு வெளியிலயே கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகம் மூணு பேரும் நின்னுகிட்டு இருந்தாங்க ஆயுத எழுத்துல இருக்குற மூணு புள்ளியப் போல. விகடுவையும், சுப்பு வாத்தியாரையும் பாத்துட்டுக் கிட்டெ வந்தாங்க.

            "ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசன்ல வெசாரிச்சிட்டேம். அந்த வக்கீலு இன்னிக்கு வந்திருந்தாம். பாத்ததும் அவனெ வெச்சி அஞ்ஞயே மொத்திடுவோம்ன்னுத்தாம் நெனைச்சேம். இப்பத்தானே பெரச்சனையாயி வெசாரிச்சிருக்கிறாங்க. அவனெ வேற அடிச்சி ஆளு வெச்சு அடிச்சதா திரும்ப கம்ப்ளெய்ண்டு பண்ணா அது வேற வேற வெதமான பெரச்சனையாயிடுமோன்னு நெனைச்சி வுட்டாச்சு. அவ்வேம் தங்காச்சிய வுட ஒஞ்ஞ வக்கீலு மேலத்தாம் செம காண்டா இருக்காம். ஒஞ்ஞ வக்கீலு மட்டும் இன்னிக்கு வந்திருந்தா அவனெ கடத்திக் கொண்டுட்டுப் போயி வெச்சி வெளுக்குறதா வெளிப்படையா சொல்லிட்டு இருந்தாம். பெறவு சொல்றேம்ன்னு தப்பா நெனைக்க வாணாம். ஒஞ்ஞ வக்கீலு அவுங்ககிட்டெ வெலை போயிட்டாப்புல. பணத்தெ வாங்கிட்டுத்தாம் குறுக்கு வெசாரணையப் பண்ணலன்னு சொன்னாம். அத்தோட யப்பிடிச் சண்டெயக் கெளப்பி வுட்டு எப்பிடியாச்சும் ஒஞ்ஞள ஒரு வழிக்குக் கொண்டு வர்றத்தாம் அவனுவோ நெனைச்சிருக்கானுவோ. சம்பவம் எதிர்பாராம தெசெ திரும்பிப் போனதுல அவனுவோ அப்செட்டா இருக்கானுவோ. அவனுவோ யிப்போ எப்பிடிச் சந்தேகப்படுறானுவோன்னா ஒஞ்ஞ வக்கீலு ஒஞ்ஞளுக்கு விசுவாசமா நடந்துக்கிட்டாதவும், அவனுககிட்டெ வாங்குன காசிக்கு விசுவாசமா நடந்துக்கிடாம போயிட்டதாவும் நெனைக்கிறானுவோ!"ன்னாரு கோவிந்து இதுவரைக்கும் நடந்திருக்குற சம்பவம் இதாம்ன்னு வெசாரிச்சிட்டேம்ங்றதெ கேக்காமலேயே சொல்றாப்புல.

            "எஞ்ஞளுக்கும் ஆரம்பத்துலேந்து அவ்வேம் மேல ஒரு சந்தேகந்தாம். ஏம் குறுக்கு விசாரணையப் பண்ண மாட்டேங்றான்னு ஒரு யோசனெ. நாம்மளும் ச்சும்மா பேருக்குப் பண்ணி வுடுப்பான்னு சொல்லியும் கேக்க மாட்டேம்ன்னாட்டாம். அதாங் ஏன்னு அப்பலேந்து புரியல. யிப்போ புரிஞ்சாப்புல இருக்கு. அத்தோட தங்காச்சிக்கு இந்த மாதிரி ஆச்சு, ஸ்டேசன் வரைக்கும் வாஞ்ஞன்னுக் கெஞ்சிப் பாத்துட்டேம். வரக் காணும்!"ன்னாம் விகடு டயர்ல காத்துப் போற எடம் இதானாங்றதெ அறிஞ்சிக்கிட்டாப்புல.

            "எப்பிடி வருவாம் வாத்தியாரே? ரண்டுப் பக்கமும் காசிய வாங்கிட்டவேம் எந்தப் பக்கம் பேச முடியும் சொல்லுங்க? ரண்டுப் பக்கமும் மொத்துப் பட்டுக்கிட வாணாம்ன்னு நாசுக்கா ஒதுங்கிட்டாம்!"ன்னாரு கோவிந்து ரண்டு பக்கமும் அடிய வாங்கிக்க அவ்வேம் என்ன கலியாணத்துக்கார மோளமாங்றாப்புல.

            "அவ்வேம் மேல தப்பில்ல. அந்த வக்கீலு அப்பவே அவனுவோ சமாதானத்துக்கு வந்தப்போவே இந்தக் கேஸ்ஸ முடிச்சிடுறதுங்ற முடிவுக்கு வந்துட்டாம். நம்மப் பொண்ணுத்தாம் பிடிவாதமா முடிக்க முடியாதுன்னு நின்னுட்டா. அதுல வெறுத்துப் போனவந்தாம். அதுக்குப் பெறவு அவ்வேம் பண்ணி வுட்ட அத்தனெயும் சறுக்கலுதாம். அதெத்தாம் எஞ்ஞளால புரிஞ்சிக்கவும் முடியல, புரிஞ்சிக்காமலும் இருக்க முடியல. தடுமாறிப் போயிட்டேம். எடையில நம்பிக்கெ யில்லன்னா கேஸ்ஸூ கட்டெ வாங்கிட்டுப் போயிடுங்கன்னு பயமுறுத்துற அளவுக்கு வந்துட்டாம். அப்பவும் அதெ புரிஞ்சிக்கிடாம எப்படியாச்சும் செஞ்சி வுட்டுடுங்கன்னு சொன்னமே தவுர நடந்தது என்னாங்றதெ புரிஞ்சிக்கிட முடியல. ஒரே நேரத்துல அவனுவோ இவ்வேம் மேல காண்டா இருக்குறதாவும் காட்டிக்கிட்டு, இவ்வேம் நம்ம பக்கம் விசுவாசமா தீவிரமா வாதாடுறாதாவும் காட்டிக்கிட்டு நம்மப் பக்கம் நாமத்தெச் சாத்திட்டாம்! நாம்மத்தாம் செரியா புரிஞ்ச்சிக்கிடலே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நாமளா போயி ஏமாந்துப்புட்டு நம்மள ஏமாத்திப்புட்டாம்ன்னு சொல்லக் கூடாதுங்றாப்புல.

            "செரி! நேத்தி வக்கீலு வந்துப் பாக்க முடியல. இன்னிக்காவது வந்துப் பாத்திருக்கலாம்ல! வேற ஒண்ணும் செய்ய வேண்டியதில்ல!"ன்னாம் விகடு துரோகம் பண்ணவ்வேம்கிட்டெ போயி ஞாயத்தெ வைக்குறாப்புல.

            "ஒஞ்ஞ வக்கீலு இனுமே என்னிக்கும் வந்து எட்டிப் பாக்க மாட்டாம். எட்டிப் பாத்தாம்ன்னா நீஞ்ஞளும் செருப்பால அடிப்பீங்க. அந்தப் பரதேசிப் பயலுவோ தரப்புலயும் செருப்பால அடி வுழுவும் பாருங்க!"ன்னாப்புல மகேந்திரன் தர்ம அடியிலேந்து தப்பிக்க நெனைக்கிறவேம் திரும்புன பக்கமெல்லாம் அடி வாங்குவாம்ங்றாப்புல.

            "நாம்ம பேச ஆரம்பிச்சா இப்பிடித்தாம்பா பேச்சுப் போயிட்டே இருக்கும். நேரம் ஆயிடுச்சு. மணியாயிடுச்சுன்னா உள்ளார லேடீஸ் வார்டுல வுட மாட்டாங்கப் பாத்துக்கோ. இப்பவே மணி அது பாட்டுக்கு ஆச்சுடுச்சு!"ன்னாரு பெத்தநாயகம் கையில கட்டியிருந்த கடியாரத்தெ ஒரு சொழட்டு சொழட்டிக்கிட்டு.

            "செரிங்க வாத்தியாரே! பேசுனது போதும். நீஞ்ஞப் போயி தங்காச்சியப் பாத்துட்டு வந்துடுங்க. நாஞ்ஞ யிப்பத்தாம் பாத்துட்டு வந்தேம். செம தெகிரியமா இருக்காக. ஒண்ணும் கவலப்பட வாணாம். நாம்ம யிருக்கிறப்போ இனுமே கவலயே வாணாம். தெனமும் இஞ்ஞ வந்து பாத்துட்டுப் போயிடுவேம்!"ன்னாரு கோவிந்து காசிக்காக நிக்குறவேம் கௌப்பிக்கிட்டாலும் பாசத்துக்காக நிக்குறவேம் பங்கம் பண்ண மாட்டாம்ங்றாப்புல.

            "நீஞ்ஞல்லாம் வந்துப் பாக்குறதுதாம் இந்த நேரத்துல‍ தெம்பும் தெகிரியமும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தோள் கொடுக்குறவேம் தொணையில்லாமப் போயிட்டாலும் ஆறுதல் சொல்றதுக்காச்சி ஒரு மனுஷ நாக்கு மனுஷருக்கு வேணும்ங்றாப்புல.

            "விசாகன் அண்ணாச்சி சென்னைப் பட்டணத்துலேந்து இன்னும் வாரல. வந்த ஒடனே மொத வேலையா கொண்டாந்துக் காட்டிப்புட்டுத்தாம் மறுவேல பாப்பேம்!"ன்னாரு பெத்தநாயகம் அண்ணாச்சி வந்தா என்னாச்சிங்ற அளவுக்கு எறங்கி வேல பாப்பேம்ங்றாப்புல.

            "எப்பா பெத்தநாயகம் இவுங்கள உள்ளார அழைச்சிட்டுப் போயிட்டு வா! உள்ளார வுட மாட்டேன்னு சொல்லுவானுவோ. நீயிப் போனத்தாம் செரிப்பட்டு வரும்!"ன்னு கோவிந்து தொணைக்குப் பெத்தநாயகத்தெ அனுப்பி வுட்டாரு எந்தெத்த காரியத்துக்கு யாரு யாரு தொணை இருக்கணும்ங்றதெ அறிஞ்சாப்புல.

விகடுவும், சுப்பு வாத்தியாரும் ஆஸ்பிட்டல்ல நொழைஞ்சி இன்பேஷண்ட் வார்ட்ட நோக்கி நடந்தாங்க. மின்னாடி‍ பெத்தநாயகம் வேட்டிய மடிச்சிக் கட்டிக்கிட்டுப் போனாரு. பெத்தநாயகத்தையும், அவரோட வேட்டியில இருந்த கட்சிக் கரையையும் பாத்து யாரும் எதுவும் சொல்லல. அவருப் பாட்டுக்குப் போவ பின்னாடிய ரண்டு பேரும் போயிட்டே இருந்தாங்க.

            பெட்ல செய்யுப் படுத்திருந்தா. அவ்வே பக்கத்துல ஏகப்பட்ட பழங்க பையில இருந்துச்சு. அதெ விகடு உத்துப் பாக்குறதப் பாத்து, "இந்த யண்ணங்கத்தாம் வாங்கியாந்தது!"ன்னா செய்யு பெத்தநாயகத்தெ பாசத்தோட பாத்தபடிக்கு. விகடுவுக்கு பெத்தநாயகத்தெ பாக்க சிலிர்ப்பாவும் பெருமையாவும் இருந்துச்சு மொகம் தெரிஞ்சவங்களே ஒதவாத நாட்டுல மொகம் தெரியாத மனுஷங்க ஏம் எதுக்குன்னு தெரியாம வந்து உதவுறாங்களேன்னு.

            "யிப்போ ஒடம்பு எப்பிடி இருக்கு? டாக்கடருங்க என்னா சொன்னாங்க?"ன்னாம் விகடு செய்யு கொஞ்சம் நொந்தாப்புல படுத்திருந்ததெப் பாத்துட்டு.

            "நாலு நாளு தங்கணும்ன்னு சொல்லிட்டாங்க. பின்னாடி முதுவுக்கு ஒண்ணுமில்லயாம். ரத்தக்கட்டா இருக்கலாம்ன்னாங்க. இஞ்ஞயே தங்கி ரெஸ்ட் எடுத்தா சரிபட்டு வந்துடும்ன்னாங்க! பெறவு செவப்பா லைட்ட வெச்சி அடிச்சி வுட்டாங்க!"ன்னா செய்யு தள்ளி வுட்டு ஒடைஞ்ச நாற்காலி பட்ட பாட்டெ வுட தாம் பட்ட பாடு பெரிசில்லங்ற மாதிரிக்கு.

            "வேற ஒண்ணும் பெரச்சனெ யில்லையில்ல?"ன்னாம் விகடு எக்ஸ்ரேயிலப் போல ஊடுருவிக் கேக்குற கொரல்ல.

            "யில்ல!"ன்னா செய்யு வெட்ட வெளிச்சத்துல கொட்ட கொட்ட பாத்தாலும் கண்ணுக்குத் தெரியல குண்டுமணிங்றாப்புல.

            "அவ்வே ச்சும்மா சொல்றாடாம்பீ! நீயி கவலெப்படுவேன்னு. ராத்திரி முழுக்க தூங்கல முதுவு வலின்னு. காத்தாலயும் வலி தாங்க முடியலன்னதும் ஊசியப் போட்டு வுட்டு தூங்க வெச்சிட்டாவோ. அடி பின்னாடி முதுகுத்தண்டுல பட்டுருக்குல்லடாம்பீ! வலி கண்டுத்தாம்டாம்பீ செரிபட்டு வாரும். பொம்பளப் புள்ளைய யிப்பிடியாடாம்பீ நாற்காலியோட பின்னாடித் தள்ளி வுட்டு பண்ணுவாங்கோ? கேக்குற கேள்விக்குல்லாம் பதிலுக்குப் பதிலு சொல்றதுல அந்தப் போலீஸ்காரவோளுக்கு அம்மாம் கோவமாம். நாட்டுல எதெ கேட்டாலும் எதெயும் சொல்லக் கூடாது போலருக்கு. ஏம்டாம்பீ நம்மட பொண்ண இப்பிடியெல்லாம் வெசாரிக்கிறப்போ, இதெ வுட நம்மப் பொண்ணுக்குக் கொடுமெ செஞ்ச அவனெ சாதாரணமா கூட வெசாரிக்கலடா பாருடாம்பீ!"ன்னு வெங்கு கண்ண கசக்கிட்டு அழுவ ஆரம்பிச்சது காது வலின்னு சொன்னவேம்க்கு மருள வாட்டி காதுல பிழிஞ்சு ஊத்துறாப்புல.

            "யப்பாடி கட்சிக்கார கண்ணுங்களா! டாக்கடரு விசிட்டு வர்ற நேரமாயிட்டு இருக்குது. வந்தாப்புலன்னா நம்மளத்தாம் பாட்டு வுடுவாரு. தயவுசெஞ்சு கெளம்புனீயள்ன்னா புண்ணியா போவும் கண்ணுகளா?"ன்னுச்சு காவலுக்கு இருக்குற அந்த அம்மா நேரமான பின்னால பாரமா நிக்காதீங்கங்றாப்புல. அந்த அம்மாகிட்டெ பெத்தநாயகம் பத்து ரூவா தாள ஒண்ணுத்தெ சட்டெப் பையிலேந்து எடுத்து நீட்டுனதும் அந்த அம்மா ஒண்ணும் சொல்லாம, சீக்கிரமா கெளம்புங்ற மாதிரிக்கி கண்ணெ காட்டிட்டுச் சுத்திலும் பாத்துட்டு அந்தாண்ட நவுந்துச்சு.

            "ந்நல்லா கவனிச்சிக்கிறாங்கடாம்பீ! சாப்பாட்டுக்குக் கூட சிலவில்ல. இந்த யம்மாகிட்டெ கொஞ்சம் காசியக் கொடுத்தா கூட கொறைச்சலு தர்றாங்க!"ன்னுச்சு வெங்கு. விகடு வாளியில கொண்டாந்த இட்டிலி, சட்டினியா வெங்கு மின்னாடி நீட்டுனாம். அதெ வாங்கி வெச்சிக்கிட்டு, "அதெ வாரச் சொல்ல வாணாம்டாம்பீ! பாத்தா வூட்டுல வந்து அழுதுகிட்டெ கெடப்பா! வூட்டுலயே இருக்கட்டும். இத்து மாதிரிக்கி வர்றப்போ சமைச்சிக் கொடுத்தா போதும். புள்ள வேற வூட்டுல இருக்குல்ல. மழெ தண்ணியா வேற இருக்குது. சீக்கிரமா கெளம்புங்க!"ன்னுச்சு வெங்கு போன்னா சொன்ன பெறவு நசநசன்னு நிக்காம பொசுக்குன்னு கௌம்புங்கங்றாப்புல.

            "யப்பா! இஞ்ஞ தங்குறதா சொன்னாக!"ன்னாம் விகடு சுப்பு வாத்தியார்ரக் காட்டிக்கிட்டு ராத்தங்கிக் காத்தால கௌம்புறதுக்குத் தயாரா வந்திருக்கிறதெ சொல்றாப்புல.

            "இஞ்ஞல்லாம் எந்தப் பாதுகாப்பும் வேண்டியதில்லா. ஆளுங்க நொழையுறதெல்லாம் கஷ்டம். நாஞ்ஞளே வெளியிலப் போயி உள்ளார நொழையுறது கஷ்டமா இருக்கு. ஏம் யப்பா தேவையில்லாம வெளியில கெடந்துக்கிட்டு? மழ வேற. கொசுக்கடியில கெடந்து செருமப்பட வாணாம். வூட்டுக்கு ஒங் கூடவே அழைச்சிட்டுப் போயிடு. வேணும்ன்னா காத்தால இதெ போல சாப்பாட்ட செஞ்சி வுட்டு அனுப்பி வுடு போதும்!"ன்னுச்சு வெங்கு சுத்திலும் இங்க பத்து பாஞ்சு மக்கா படுத்திருக்க ஒத்தையா ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாம மழைத்தண்ணியிலயும் கொசுக்கடியிலயும் புருஷங்காரு வெளியில ஏம் காவலுக்குப் படுத்திருக்கணும்ங்றாப்புல.

            "யம்மா சொல்றதுதாம் சரித்தாம். நீஞ்ஞ இஞ்ஞ கெடந்து கஷ்டப்பட வாணாம். இவுங்க ரண்டு பேருமே போதும்!"ன்னாரு பெத்தநாயகம் தாய்க்கோழி காவலிருக்க பருந்து வந்தா கோழிக்குஞ்செ அடிச்சிட்டுப் போயிடும்ங்றாப்புல.

            "மத்தியானதுக்கு மேல உளவுத்துறையிலேந்து வர்றதா சொல்லி ஒருத்தரு பேண்டு டீசர்ட்டுப் போட்டுக்கிட்டுப் பாத்தாருண்ணே!"ன்னா செய்யு நெத்திய சுருக்குனபடிக்கு சொல்ல வேண்டிய சேதியில ஒண்ணு மிச்சமிருக்குறாப்புல.

            "ன்னா சொன்னாரு?"ன்னாம் விகடு நாட்டுல எவ்வளவோ களவுல்லாம் நடக்குறப்போ இதெயெல்லாம்மா தெரிஞ்சுக்கிட்டு உளவுத்துறை விசாரிக்குதுங்றாப்புல.

            "நடந்ததெ கேட்டுக்கிட்டு ஒரு தாள்ல குறிச்சிக்கிட்டு, இதெ பெரிசு பண்ண வாணாம்ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு! நீயெல்லாம் பெரச்சனெ பண்ணுவீயா? யப்பா எப்பிடி? பெரச்சனெ பண்ணுவாராங்ற மாதிரிக்கிக் கொஞ்சம் கேள்வியக் கேட்டாரு. நாம்ம எல்லாம் பயந்தாங்கொள்ளி கேஸூன்னு சொல்லிட்டேம்ண்ணே!"ன்னா சிரிச்சிக்கிட்டெ செய்யு உளவுத்துறை வந்து வெசாரிக்கிற அளவுக்கு பொருமானம் யில்லாத மனுஷங்கங்றாப்புல.

            "ம்! நக்கலு! ஒம் கூட பொறந்த அண்ணன் வேணா அப்பிடி இருக்கலாம். ஓம் கூடப் பொறக்காத யண்ணம்மா நாம்ம. அந்தப் பயெல வெச்சி எப்பிடி வெளுத்து வாங்குறேம் பாரு. ச்சும்மா உரிச்சி எடுக்காம வுட மாட்டேம். உளவுத்துறை வந்து வெசாரிச்சப்ப இந்த யண்ணனப் பத்திச் சொல்லாம வுட்டுப்புட்டீயேம்மா! சொல்லிருந்தீன்னா பொறி பறந்திருக்கும்ல்லா. ஒரே நேரத்துல ஒம்போது கேஸ்ஸ டீல் பண்ணிட்டு இருக்காம் பெத்தநாயம்ன்னு தெரிஞ்சா தெறிக்க விட்ருக்கலாம்ல்லா. செரி இதுக்கு மேல இஞ்ஞ நின்னாக்கா அந்த யம்மா வந்து நம்மள சத்தம் போடும். பெறவு நாம்ம ஒரு டெரர்ரா மாறுறாப்புல ஆயிடும்!"ன்னாரு பெத்தநாயகம் களத்துல எறங்குனா களத்துமேட்டு வைக்கோலப் போல கசக்கி எறிஞ்சுப்புடுவேம்ங்றாப்புல. அவரு அப்பிடிச் சொன்னதும் எல்லாருமா கெளம்பி வெளியில வந்தாச்சு. ஆஸ்பிட்டலுக்கு வெளியில கோவிந்து அவுங்க கட்சி ஆளுங்களோட பேசிகிட்டு இருந்தாரு. இவுங்களப் பாத்ததும், "பாத்தாச்சுல்ல?"ன்னு கேட்டுகிட்டெ அவரு பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிட்டாரு ஆன் பண்ணி விட்ட ரேடியோ அது பாட்டுக்குப் பாடிட்டு இருக்கும்ங்றாப்புல. நேரம் அது பாட்டுக்குப் போயிட்டே இருந்துச்சு எனக்கென்ன கெட்டுச்சு தாம் பாட்டுக்கு ஓடிட்டு இருக்கேம்ங்றாப்புல. 

*****

30 Jan 2021

இப்போ நேரம் சரியில்ல!

இப்போ நேரம் சரியில்ல!

செய்யு - 702

            டிவியெஸ் பிப்டியை எடுத்தாந்தப் பெறவுதாம் விகடு பல்ல துலக்குனாம், குளிச்சி முடிச்சாம். சுப்பு வாத்தியாருக்குப் போன அடிச்சாம். அடிச்சதுமே அவரு கேட்ட மொத கேள்வி, "வண்டிய எடுத்தாந்திட்டீயாடாம்பீ? ரொம்ப கஷ்டப்பட்டு வாங்குன வண்டிடாம்பீ!"ன்னுத்தாம். மொத மொதலான விசயங்க வாழ்க்கையோட கடைசி வரைக்கும் மறக்கிறதில்ல. மனுஷன் பொறந்ததும் மொதல்ல பண்டுறது அழுவுறதுதானே. அதாலோ என்னவோ அதெ அவ்வேம்மால கடெசி வரைக்கும் மறக்க முடியாம அப்பைக்கப்போ அழுதுகிட்டெ இருக்காம் போல. வெளியில செருப்ப வுட்டவேம் கோயிலுக்கு உள்ள போன பெற்பாடும் அதெ ஞாபவமா சாமியக் கும்புடுறது போல சுப்பு வாத்தியாரு ராத்திரி முழுக்க வண்டி ஞாபவமாவே கெடந்திருப்பாரு போல. வண்டிய ராத்திரி ஆரம்பிச்சி, காலையில மெனக்கெட்டு ஸ்டேசன்ல எடுத்தாந்த கதெ வரைக்கும் சொல்லி முடிச்சாம் விகடு விக்கிரமாதித்யம் வேதாள சாகசக் கதெயெப் போல. "அதென்னடா இத்து நம்ம வூட்டுப் பொண்ண வூடு பூந்து தூக்குறாவோ. நம்ம வூட்டு வண்டியக் கேட்டா அம்மாம் இழுப்பு இழுக்குறாவோ. நம்ம வூட்டுல பூந்துத் தூக்க பெரசிடண்ட்ட கேட்டா செஞ்சாவோ? வண்டியக் கேட்டா மட்டும் பெரசிடண்டு சொன்னதும் வுட்டுடுறாவோ. எல்லாம் ஆளுக்குத் தவுந்த ஞாயந்தாம். ராத்திரியே பெரசிடெண்டுக்கு அடிச்சிருந்தீயன்னா காலைல அலைச்சல் இருந்திருக்காது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பாத்தவுடனே அடிச்சிருந்தா பாம்பெ வெரட்டிப் பிடிச்சு செருமப்பட்டு அடிக்க வேண்டியதில்லங்ற மாதிரிக்கு.

            "ராத்திரின்னா மணி பன்னெண்ட நெருங்கிட்டுப்பா. தூங்கிட்டு இருப்பாவோன்னு வுட்டாச்சு. அத்தோட காத்தால வந்தா கொடுத்துப்புடுறதா வேற சொன்னாவோப்பா. அதாங் காத்தால பாத்துட்டு அவுங்க கொடுக்கலன்னதுந்தாம் பெறவு அந்த யோசனெ வந்துச்சு!"ன்னாம் விகடு முதலை வாயால சொன்னதெ நம்பி மொதலுக்கு மோசம் வாராதுன்னு நம்புனதெ சொல்றாப்புல.

            "வண்டிய அஞ்ஞ போட்டுட்டு வந்தது தப்புடாம்பீ!"ன்னு வருத்தப்பட்டுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு நடந்த தப்புல தானும் கொஞ்சம் பங்கெ போட்டுக்கிடுறாப்புல.

            "இட்டிலியச் சுட்டு எடுத்துக்கிட்டு அப்பிடியே ஆயியயும் அழைச்சிக்கிட்டு வர்றேம்ப்பா!"ன்னாம் விகடு அந்தக் கதெ அத்தோட அத்தோட முடியட்டும், அடுத்து ஆவப் போற கதெயெ ஆரம்பிப்போம்ன்னு.

            "வேண்டாம்டாம்பீ! நீயி சாப்பாட்ட முடிச்சிட்டுப் பள்ளியோடத்துக்குக் கெளம்பு. லீவு வேற ரொம்ப போட்டிருக்கே. நாம்மத்தாம் இஞ்ஞ தொணைக்கு இருக்கேமே. பெறவு நீயி வேற ஏம் அலைஞ்சிக்கிட்டுக் கெடக்கே? நாம்ம இஞ்ஞயே பதினோரு மணி வரைக்கும் இருந்துட்டு அதுக்குப் பெறவு கெளம்பி வூடு வர்றேம். வந்தேம்ன்னா குளிச்சி முடிச்சிட்டு கொஞ்சம் தூக்கத்தப் போட்டா நீயி பள்ளியோடம் வுட்டு வந்ததுடுவே. ராத்திரி கொசுக்கடியில இஞ்ஞ நல்ல தூக்கமில்லடாம்பீ! பொரண்டு பொரண்டு படுத்து கண்ணெல்லாம் எரிச்சலாயிருக்கு. நாம்ம இஞ்ஞ இருந்து பாக்க வேண்டியதப் பாத்துக் கொடுத்துட்டுக் கெளம்பி வூடு வந்துடுறேம். பெறவு அப்பிடியே ரண்டு பேருமா கெளம்பி ஆஸ்பத்திரிக்கி வந்தா நீயும் பாத்துட்டு அப்பிடியே நம்மளயும் வுட்டுப்புட்டு ராத்திரிக்கு வூடு வந்துப்புடலாம்."ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரு ராத்திரி கழிஞ்சது ஓராயிரம் ராத்திரி கழிஞ்சதெப் போல.

            "இட்டிலி வேற நெறையச் சுட்டு, சட்டினி வேற நெறைய அரைச்சாயிடுச்சுப்பா! ஆயி வேற பாக்கணுங்றா?"ன்னாம் விகடு திட்டம் பண்ணதெ மாத்துனா சங்கட்டம் ஆயிடும்ங்றாப்புல.

            "அதெயே மத்தியானச் சாப்பாட்டுக்கு வெச்சிக்கிடலாம். வேணும்ன்னா சாயுங்காலம் கெளம்புறப்ப இட்டிலியும், சட்டினியும் செஞ்சு எடுத்துகிட்டுக் கெளம்பலாம்! அதெ வேணும்ன்னா இன்னொரு நாளு அழைச்சாந்து காட்டிக்கிடலாம். யிப்போ வாணாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சங்கட்டத்தையும் சாதவமா பண்ணிக்கிடலாம்ங்றாப்புல.

            "டாக்கடருமாருங்க வந்துப் பாத்தாங்களா? என்னத்தெ சொன்னாங்கப்பா?"ன்னாம் விகடு இட்டிலி சட்டினி நெனைப்பெ தூக்கி அந்தாண்ட வெச்சிட்டுத் தங்காச்சி நெனைப்பு வந்தாப்புல.

            "நாம்ம உள்ளாரப் போயி டீத்தண்ணியும், பன்னும் வாங்கிக் கொடுத்துட்டு வந்துதாம்டாம்பீ! என்ன நடந்துச்சுன்னு கேக்கலடாம்பீ! காலச் சாப்பாட்ட முடிச்சிட்டுக் கேக்கணும்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இனுமே ஆவுற கதெ அத்துப் பாட்டுக்கு ஆவும்ங்றாப்புல.

            செரித்தாம்ன்னு சொல்லிட்டு போன வெச்சிட்டு ஆயிகிட்டெ சேதியச் சொன்னாம் விகடு. "எப்பவும் எடுத்தா ஒரு முடிவுல நிக்க மாட்டீயளே? மாத்தி மாத்திட்டு இருப்பீயேளே! நாம்ம கெளம்பிப் போயிப் பாத்துட்டு வந்தாத்தாம் ன்னா? அவுக அத்தையும், செய்யுவும் ன்னா நெனைப்பாங்க? ஆஸ்பத்திரியில கெடக்குற நம்மள வந்துப் பாக்கலன்னுத்தாம் நெனைப்பாங்க. நீஞ்ஞ ஒஞ்ஞ இஷ்டத்துக்கு ஆடுறதுக்கு நாம்ம கெட்டப் பேர்ர வாங்கிக் கட்டிக்கிடணமாக்கும்?"ன்னு அவ்வே சுட்ட தொசையெ திருப்பித் திருப்பிச் சுட்டு எடுக்குறாப்புல ஒரு பாட்ட வெச்சா.

            "யப்பா மத்தியானத்துக்கு மின்னாடி சாப்பாட்டுக்கு வந்துடுவாங்க. நீயே கேட்டுக்கோ ன்னா ஏதுன்னு? மத்தியானச் சாப்பாட்ட பண்ணிப்புடுறீயா ன்னா?"ன்னாம் விகடு ஒம் பாட்டெ கேக்குறதுக்கும் ரசிக்கிறதுக்கும் நமக்கு நேரமில்லங்ற மாதிரிக்கு.

            "இட்டிலிய வேற கணக்கில்லாமச் சுட்டுப் போட்டு அது வேறயா? செரி செஞ்சி வைக்கிறேம். மாமாகிட்டெ கேட்டு ஒரு பெரயோஜனமும் யில்ல. இஞ்ஞ வூட்டுல பேத்தியாளப் பாத்துட்டுக் கெட, நாஞ்ஞ அஞ்ஞ அவுங்களப் பாத்துக்கிடுறேம்பாக. ஒஞ்ஞகிட்டெ கேக்குறதும் வீணு. மாமாகிட்டெயும் கேக்கறதும் வீணு. நாமளே ஒஞ்ஞ யாருகிட்டெயும் சொல்லாம கெளம்பிப் போயி பாத்துட்டு வந்தாத்தாம் செரிபட்டு வாரும்!"ன்னு சொல்லிட்டு பாடுன பாட்டெல்லாம் காத்தோட கரைஞ்ச மாதிரிக்குத்தாம்ன்னு தம் பாட்டுக்கு வேலையப் பாக்க ஆரம்பிச்சா.

            விகடு சாப்புட்டு முடிச்சிட்டுப் பள்ளியோடம் கெளம்புனாம். மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆறு இட்டிலியச் சாப்பாட்டு டப்பாவுல எடுத்துக் கொடுத்தா ஆயி. "வாணாம்! யப்பா வேற வர்றதா சொல்லிருக்காங்க. வந்து என்ன ஏதுன்ன வெவரம் வெசாரிட்டு அப்பிடியே சாப்புட்டுப்புட்டுப் போயிடுறேம்!"ன்னாம் விகடு, போற எடத்துக்குத் தகுந்தாப்புல நெறத்தெ மாத்திக்குமாமே பச்சோந்தி, அதெ போல அப்பைக்கப்போ யோஜனைக்கேத்தாப்புல திட்டத்தெ மாத்திக்கிறாப்புல.

            "அப்பிடின்னா வண்டிய எடுத்துக்கிட்டுப் போங்க. சைக்கிள மிதிச்சிக்கிட்டு மாங்கு மாங்குன்னு போயிகிட்டும், வந்துக்கிட்டும் கெடக்காதீயே!"ன்னா ஆயி மாத்துன யோஜனைக்கேத்தாப்புல வண்டிய மாத்தி எடுத்துட்டுப் போங்றாப்புல. செரின்னு பள்ளியோடத்துக்கு அன்னிக்குத்தாம் மொத மொதலா டிவியெஸ் வண்டியக் கெளப்பிக்கிட்டுப் போனாம். புள்ளியோ ஹோய்ன்னு சத்தத்தெ போட்டுக்கிட்டெ வண்டி பின்னாடியே ஓடியாந்துச்சுங்க. "நம்ம அய்யா வண்டியில வர்றாங்கடோய்!"ன்னு வண்டியச் சுத்திக்கிட்டுங்க திருவாரூரு தேரு தஞ்சாவூருக்கு வந்துப்புட்டதெப் போல. "அய்யா வண்டில்லாமா வெச்சிருக்கீயே?"ன்னு ஒவ்வொரு புள்ளீயோளும் சுத்தி நின்னு கேள்விய்க கேட்டு நச்சரிச்சிட்டுங்க. "இத்து நம்ம வண்டில்ல. யப்பாவோட வண்டி!"ன்னாம் லிப்ட் கேட்டுப் போறவேம் வண்டிய ஓட்டிட்டுப் போறதெப் போல. "இனுமே இந்த வண்டியிலயே வாங்கய்யா!"ன்னுச்சுங்க புள்ளீயோ சைக்கிளப் போட்டு மிதிமிதின்னு மிதிக்காம வண்டியில வாகா வாங்கங்றாப்புல. ஆன்னா சைக்கிளப் போறதெப் போல சொகமான அனுபவம் ஏதுமில்ல. தங் காலே தனக்கு உதவிங்றாப்புல சைக்கிளு சொல்லித் தர்ற பாடத்தெ பெட்ரோல்ல போவுற வண்டியால சொல்லித் தர்ற முடியாது. ஒரு மிதி மிதிச்சா நாலு அடி நம்மள தள்ளிட்டுப் போவும் சைக்கிளு. ஒடம்புல சேர்ற சர்க்கரையையும் கொழுப்பையும் ஒவ்வொரு மிதிக்கும் கரைச்சிட்டே இருக்கும் சைக்கிளு. அந்த வெதத்துல நாமளே மிதிச்சு அதாச்சு நாமளே ஒழைச்சு சைக்கிள்ல போறப்ப ஒடம்புலயும் செரி, காத்துலயும் செரி எந்த மாசும் சேர்றதில்ல. ஒழைக்காம உக்காந்து போற மோட்டார் வண்டியால ஒடம்புல சர்க்கரையும் கொழுப்பும் சேர்றதோட காத்துலயும் மாசுதாம் சேருது. சைக்கிள் மோதிச் செத்தவேம் இல்ல. மோட்டார் வண்டி மோதிச் செத்தவேம் இருக்காம். பஞ்சர் ஆனாலும் தள்ளிட்டு வர்ற சைக்கிளப் போல மோட்டார் வண்டியெ தள்ளிட்டு வர்ற முடியாது. சைக்கிளு தர்ற சௌகரியமே தனித்தாம். நாம்ம பாத்த வரைக்கும் மோட்டார் வண்டியில போறவனெ வுட சைக்கிள்ல போறவேம் நல்லாவே இருக்காம். அதெ வுட இன்னொரு உண்மெ சைக்கிளும் வுடத் தெரியாம நடந்தே போறவேம் இன்னும் ரொம்ப நல்லா இருக்காம். எல்லாத்துக்கும் வேகந்தாம் காரணம். போற வேகத்துக்கு ஏத்தாப்புல வேகமா போயிச் சேந்துப்புடுறாம் போல.

            பள்ளியோடம் ஆரம்பிச்ச பெற்பாடும் புள்ளீயோ வண்டியப் பத்தி வண்டிய வண்டியா பேசிட்டே இருந்துச்சுங்க. அதுகளப் பொருத்த வரைக்கும் சைக்கிள வுட மோட்டார் வண்டித்தாம் பெரிசு. ஆன்னா மோட்டார் வண்டியெ வுட சைக்கிள்தாம் பெரிசு. சைக்கிள வுட சொந்தக் கால்ல நடக்குறதுதாம் பெரிசு. அதுக்கு ஒண்ணும் காசி பணம் தேவையில்ல. ஆன்னா ஆரோக்கியமான ஒடம்பு தேவை. சைக்கிளையும் வாங்கிப்புடலாம், மோட்டார் வண்டியையும் வாங்கிப்புடலாம். ஆன்னா ஆரோக்கியத்தெ வாங்கிப்புட முடியாதே. இதுல என்னா ஒரு விசயம்ன்னா மோட்டார் வண்டிய வாங்காம இருந்தாலே அத்து ஆரோக்கியத்தைக் காசி கொடுக்காம வாங்குனதெப் போலத்தாம்ன்னு வயசான பெற்பாடுத்தாம் புரியும். இப்பிடிப் பேசிட்டு இருக்குறப்போ புள்ளீயோ மோட்டார் வண்டிய ஒசத்திச் சொன்னா விகடு சைக்கிள ஒசத்திச் சொன்னாம். செரித்தாம் வாத்தியாரு சொல்றாரேன்னு புள்ளியோ சைக்கிள ஒசத்திச் சொல்றப்போ விகடு நடந்துப் போறதெ ஒசத்தியா சொன்னாம்.

வுட்டா இன்னிய பொழுது வண்டி புராணமா போயிடுமோன்னு ஊடால பாடத்தெ கோத்து அத்துச் சம்பந்தமா புள்ளீயோளோட பேச்ச இழுத்தாந்தாம் விகடு. புள்ளீயோளோட பேசிட்டு இருக்க இருக்க எந்த ஞாபவமும் இல்லாம பாடமும் பேச்சும் ஒழுங்காப் போயிட்டு இருந்துச்சு. எதாச்சும் ஒரு பயிற்சிய எழுதிப் போட்டு அதெ எழுதி முடிங்கன்னு புள்ளியோள்ட்டெ சொன்னா போதும் நேத்தி நடந்த சம்பவமாவே ஞாபவத்துக்கு வந்துச்சு விகடுக்கு. ஒடனே அவனோட நெனைப்புப் பலவெதமா போயிகிட்டெ இருந்துச்சு. அந்த நெனைப்பு வந்தா ஒடனே ஆஸ்பிட்டலுக்குப் போன அடிச்சிக் கேட்டுக்கிட்டெ இருந்தாம். டாக்கடர்ரு வந்துப் பாத்தாங்களா? என்னத்தெ சொன்னாங்க? எத்தனெ நாளு ஆஸ்பிட்டல்ல இருக்கணும்ன்னு அவ்வேம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவெயாவது போன அடிச்சிட்டுக் கெடந்தாம் பங்குச் சந்தையில பங்கெ வாங்கிப் போட்டவேம் வேல ஏறியிருக்கா இல்லியான்னு நொடிக்கொரு தரம் வெலையப் பாத்துக்கிட்டுக் கெடக்குறதெப் போல. திரும்ப பாடத்தெ நடத்த ஆரம்பிச்சாத்தாம் வெதவெதமா வந்த அந்த நெனைப்புகப் போனுச்சு. பாத்தாம் விகடு அன்னிக்கு பாடத்தெ அவ்வேம் பாட்டுக்கு நடத்திக்கிட்டெ இருந்தாம். எதையும் எழுதிப்போட்டு புள்ளீயோள அன்னிக்கு எழுதவே சொல்லல. மத்தியானம் ஆனதும் மணிய அடிச்சி வுட்டுட்டு புள்ளீயோள பத்திரமா அமைப்பாளருக்கிட்டெ பாத்திருக்கச் சொல்லிட்டு, நாம்ம வந்தப் பெறவு கெளம்பலாம்ன்னு சொல்லிட்டு வந்தாம்.

            விகடு வூட்டுக்கு வந்தப்போ சுப்பு வாத்தியாரு குளிச்சி முடிச்சிட்டு உக்காந்திருந்தாரு. வந்ததும் வாரதுமா, "டாக்கடருங்க ன்னா சொன்னாங்க?"ன்னாம் விகடு ஒத்தெ பாட்டுக்கார்ரேம் அதெயெ பாடிக் கெடுக்குறாப்புல.

            "முதுவுல அடிபட்டதுக்கு எக்ஸ்ரே எடுக்கணும்ன்னு சொல்லிருக்காவோன்னு சொன்னேம்ல்லா. ஊசில்லாம் போட்டு வுட்டு, மாத்திரெ மருந்தெல்லாம் கொடுத்து வுட்டுருக்காவோ. நாம்ம கெளம்புற நேரத்துல இதுக எக்ஸ்ரே எடுக்குறதுக்கா நின்னுட்டு இருந்துச்சுங்க. நின்னா நேரமாயிடும்ன்னு நாம்ம கையில இருந்த பணத்தெ கொடுத்துட்டுக் கெளம்பிட்டெம்டாம்பீ! போலீஸ்காரவுக இம்மாம் மோசமா நடந்துப்பாவோன்னு நெனைக்கலடாம்பீ! நாம்ம கூட பொண்ணு மேல இன்னிய வரைக்கும் ஒன்னிய கூட அடிச்சிருக்கேம், மவளெ ஒரு அடி அடிச்சிதில்லடாம்பீ! அவனுக்குக் கட்டிக் கொடுத்து அவ்வேம் அடிச்சி, அவனெ கலியாணத்த பண்ணி வுட்டதுக்கு போலீஸ்லயும் அடி வாங்க வுட்டு, எல்லாம் தலயெழுத்துடாம்பீ! ஸ்டேசன்லயும் போயி இந்த மாதிரிக்கி நிக்க வேண்டியதா ஆயிடுச்சு! எல்லாந் நேரந்தாம்டாம்பீ!"ன்னு சுப்பு வாத்தியாரு சொல்ல கண்ணு கலங்குனுச்சு. அடி மேல அடி வுழுந்தா ஓரிடத்துல கெடக்குற அம்மிக்கல்லும் நவுந்துத்தானே போவும். அப்பிடி மனசு நவுந்துப் போயிப் பேசுனாரு சுப்பு வாத்தியாரு. விகடுவுக்கு என்னத்தெ சொல்றது, எப்பிடி ஆறுதல் சொல்றதுன்னு புரியாம தவிச்சி நின்னாம்.

            "செரி நீயிச் சாப்புட்டுக் கெளம்புடாம்பீ! இந்நேரத்துக்கு நீயி வரவே வேண்டியதில்லடாம்பீ! புள்ளீயோ வேற அஞ்ஞ கெடக்குமுங்க. கெளம்பு சட்டுன்னு. சாப்பாட்ட எடுத்துக்கிட்டுக் கூட அஞ்ஞப் போயி சாப்புடுடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நம்ம கதெ அதுவா எழுதிக்கும், நாம்ம எழுத வேண்டிய கதெயெ சரியா எழுதிப்புடணும்ங்றாப்புல.

            "சாப்பாடு சமைச்சிருக்கேம்லா மாமா! சூடா சாப்புட்டுப் போவட்டும் மாமா!"ன்னா ஆயி ரண்டு வாயிச் சூடா சாப்புட்டுப் போறதால கதெயில ஒண்ணும் குடி முழுகிப் போயிடாதுங்றாப்புல.

            "அதாங் இட்டிலி நெறையச் சுட்டுக் கெடக்குன்னான்னே! அதெ சாப்புட்டுக்க மாட்டேமா? ஏம் சாப்பாடு வேற செஞ்சே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு நீயி வேற ஏம் புதுக்கதெயெ ஆரம்பிக்கிறேங்றாப்புல.

            "அஞ்ஞ ஓட்டல்லயும் நேத்திலேந்து இட்டிலி, தொசென்னு சாப்புட்டுக் கெடந்திருப்பீயே! அதாங் ஒரு வேளையாச்சும் சாப்பாடா இருக்கட்டுமேன்னு பண்ணிட்டேம்! நாமளும் இன்னிக்கே வந்து ரண்டு பேத்தையும் பாத்துட்டு வந்துப்புடுறேனே?"ன்னா ஆயி நடக்குற கதெயில தன்னையும் கொஞ்சம் சேத்துக்குங்கங்றாப்புல.

            "நீயி இஞ்ஞ குடும்பத்தெப் பாத்துட்டுக் கெட. இப்போதைக்கு நீயி பண்ண வேண்டியது அத்துதாம். அதாங் அங்க யத்தெ கெடக்குல்லா. பாத்துக்கிடட்டும். நாளைக்கோ நாளா நாளிக்கோ அழைச்சிட்டு வந்துப்புடலாம். அதுக்கு நீயி வேற ஏம் வந்துப் பாத்துக்கிட்டு? இஞ்ஞ வந்த ஒடனே பாத்துக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தாம் பண்டுன பாவத்தெ தானே அனுபவிக்கணும்ங்றாப்புல.

            "நெனைச்சேம் மாமா! நீஞ்ஞ யிப்பிடித்தாம் சொல்லுவீயன்னு!"ன்னா ஆயி எழுதுன கதெயில யாரும் மாத்தம் பண்ண மாட்டாங்கங்றாப்புல.

            "அதெல்லாம் யிப்போ இருக்குற நேரமே சரியில்ல ஆயி! அதாங் இவனெ கூட காலம்பர வர வாணாம்ன்னு சொல்லிட்டேம்! எல்லாம் கொஞ்ச நாளுக்கு வெளிக் கெளம்பாம வூட்டோட இருக்குறதுதாங் நல்லது! வெளியில கௌம்பிப் போயி சமாளிக்கிறேம்ன்னுத்தாம் இம்புட்டும் ஆயிக் கெடக்கு!"ன்னு சொன்னவரு, "நீயி சாப்புட்டுப்புட்டு சட்டுப்புட்டுன்னு பள்ளியோடம் கெளம்பு. முடிச்சிட்டு வா. நாம்ம கெளம்பி தயாரா இருக்கேம்!"ன்னு விகடுவெப் பாத்துச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு நமக்கு நடக்குறது சரியா இல்லன்னாலும் நாம்ம நடந்துக்கிடறது சரியா இருக்கணும்ங்றாப்புல. அதெ கேட்டதும் அவ்சர அவ்சரமா நாலு வாயிச் சோத்தெ அள்ளி வாயிலப் போட்டுக்கிட்டு நெதானமா சாப்புட வகையில்லாத குருவியப் போல விழுங்குனது பாதி, விழுங்காதது பாதின்னு கௌம்பிட்டாம் விகடு.

            சாயுங்காலம் பள்ளியோடம் விட்டு வந்தாம் விகடு. அவ்வேம் கூட சுப்பு வாத்தியாரு கெளம்ப தயாரா இருந்தப்போ ஒரு பெரிய வாளியில இட்டிலியும், சின்ன வாளியில சட்டினியும் செஞ்சு தயாரா வெச்சிருந்தா ஆயி. அதெ எடுத்துக்கிட்டு வண்டிக்கு மின்னாடி மாட்டிக்கிட்டு ரண்டு பேரும் கெளம்புனாங்க. விகடு வண்டிய ஓட்டுனாம். சுப்பு வாத்தியாரு பின்னாடி உக்காந்துகிட்டாரு. கெளம்புறப்ப வானத்தெப் பாத்தப்போ மேக மூட்டமாத்தாம் இருந்துச்சு. காடுவெட்டிய நெருங்குற வரைக்கும் மழெ மேகம் தன்னோட வேலையக் காட்டல. அதுக்குப் பெறவு மழெ லேசா தூற ஆரம்பிச்சிது. வண்டிய நிறுத்துறதா, ஓட்டுறதாங்ற கொழப்பத்துல இருந்த விகடுகிட்டெ, "போயிட்டே இருடாம்பீ! பெலமா வந்தா பாத்து நிறுத்திக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு இப்போ போயிக்கிட்டெ இருக்குறதுதாம் பயணத்துக்கு நல்லதுங்றாப்புல.

வழுக்குப் பாதை

            கூத்தாநல்லூர் சார் பதிவாளர் ஆபீஸூக்கு எதுத்தாப்புல இருக்குற பாலத்து வழியாப் பூந்து மரக்கடை ரோட்டுல வுட்டு லட்சுமாங்குடிக்கு வெளியில இருக்குற ரோட்டுலப் போயிச் சேந்தாம் விகடு. மழெ கொஞ்சம் பலமா பெய்ய ஆரம்பிச்சிருந்தது. அந்த எடத்துலேந்து கோரைாயத்தாங்கரை வரைக்கும் கொளத்துலேந்து டிப்பர்ல டிராக்கடர்ர வெச்சி மண்ணு அடிச்சிருப்பாங்க போல. அங்கங்க கொளத்து களிமண்ணு கட்டிக் கட்டியா வுழுந்து செதறிக் கெடந்துச்சு. அது நச நசன்னு பேஞ்ச மழையில வழுக்கி வுடுற களியப் போல ரோட்டுலக் கெடந்துச்சு. வண்டியிலப் போறவங்ளெ அந்தக் களிமண்ணு வழுக்கி வுட ஆரம்பிச்சது. பனியில ஸ்கேட்டிங் போறவங்களப் போல வண்டிச் சக்கரம் அது பாட்டுக்குக் களியில உண்டான உலையில வழுக்கிக்கிட்டுப் போவ ஆரம்பிச்சது. அதெப் பாத்ததும் சுப்பு வாத்தியாரு மவ்வேங்கிட்டெ, "பாத்துப் போவணும்டாம்பீ! இத்து வழுக்கி வுட்டதுன்னா வண்டியோட சறுக்கிக்கிட்டு வுழுவ வேண்டித்தாம். ஒடம்பெல்லாம் செராய்ச்சி தேய்ச்சி எடுத்துப்புடும்! வண்டியிலேந்து வுழுந்தா ரண்டு மாசத்துக்கு வலியில் உசுரு போயிடும்!"ன்னாரு சூடு கண்ட பூனைக்குத்தாம் சூட்டோட வேதனெ தெரியும்ங்றாப்புல.

            "மெதுவாத்தாம் போறேம்!"ன்னாம் விகடு எந்தக் காலத்துல நாமெல்லாம் வண்டியில வேகமா போனேம்ங்றாப்புல.

            "இதுல போவவே வாணாம். எறங்கித் தள்ளிட்டுப் போயிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எடம் சரியில்லன்னா எறங்கிப் போறதுல தப்பில்லங்ற மாதிரிக்கு.

            "மழெ பலமா பிடிக்கிறதுக்குள்ளார மெதுவாப் போயிட்டெ யிருந்தா மழைக்கி மின்னாடி ஆஸ்பிட்டலுப் போயிச் சேந்துப்புடலாம்!"ன்னாம் விகடு காலத்தோட கடந்தா எடத்தெ மாத்திப்புடலாம்ங்றாப்புல.

            "சொன்னா கேக்க மாட்டீயேடாம்பீ! பாத்து மொல்லமா வுடு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நேரம் செரியில்லன்னா மொல்லமாத்தாம் போவணுங்றாப்புல. அவரு சொல்லிட்டு இருக்குறப்பவே இவுங்களத் தாண்டிப் போன கவர்மெண்டு பஸ்ஸூ சேத்துல வழுக்கிக்கிட்டுப் போயி ரோட்ட வுட்டு எறங்கி வாய்க்கால்லத் தாண்டி வயல்ல நோக்கி விருட்டுன்னு போனுச்சு. நல்லவங்க சொல்லுக்குக் கட்டுப்படாம போயி நிக்குற காவாளி மனுஷங்கப் போல பிரேக்குக்குக் கட்டுப்படாமப் போன பஸ்ஸூ அதுவா வயல்ல கெடந்த சகதி உலையில சிக்கி நகர முடியாம நின்னுச்சு. நல்ல வேளையா அந்த நேரத்துல அந்தப் பஸ்ஸூக்கு மின்னாடி யாரும் வர்றாமப் போனாங்க. வந்திருந்தா அவுங்களையும் மோதித் தூக்கி வாய்க்கால்ல தள்ளி வயலோட அணைச்சிருந்திருக்கும். வண்டியோட பின்னாடிச் சக்கரம் வாய்க்காலுக்குள்ள இருந்துச்சு. முன்னாடி சக்கரம் வயலுக்குள்ள பாய்ஞ்சிருந்துச்சு. நல்லவேளையா வண்டி தலைகுப்புற கவுழவோ, சாயவோ யில்ல. ரோட்டுலேந்து வெலகி வயல்லப் பாஞ்சாப்புல நின்னுச்சு. பஸ்லேந்து சனங்களோட சத்தம் குய்யோ முய்யோன்னு கேக்க ஆரம்பிச்சிது. அதெ நேரடியா கண்ணால பாத்ததும் அப்பிடியே பகீர்ன்னு தூக்கி வாரிப் போட்டுச்சு விகடுவுக்கு.

            "சோன்னேம்லடாம்பீ! நாலு பக்கமும் சக்கரமிருக்குற வண்டியே பாரு கிரிப்புக் ‍கெடைக்காம பிரேக்குக்கும் நிக்காம வாய்க்கால்லத் தாண்டி வயலுக்குள்ள கெடக்குது பாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அவ்சரப்பட்டா அவதியிலத்தாம் போயிக் கெடக்கணும்ங்றாப்புல.

            அக்கம் பக்கத்துல வண்டியில போயிட்டு இருந்த அத்தனெ பேரும் அந்த எடத்துல நின்னுட்டாங்க. பஸ்ல இருந்த சனங்கள பின்னாடி படிக்கட்டு வழியா வர்றச் சொல்லி வாய்க்காலுப் பக்கத்துல நின்னுகிட்டுக் கையக் கொடுத்து ரோட்டுப் பக்கம் இழுத்து வுட்டு ஒவ்வொருத்தரா எறங்கச் சொன்னாங்க. மழெ தூத்தல் போட்டது நிக்கவே யில்ல.

            "கொளத்துலேந்து மண்ண அடிக்கிற அனுமதிக் கொடுக்குறவனுவோ சிந்தாம செதறாம மண்ண அடிக்குறானுவோளான்னு பாக்கணுமா யில்லியா? நாம்ம வூட்டுக்கு ஒரு வண்டி மணல்ல அடிச்சாப் ‍போதும் ஆயிரத்தெட்டு கேள்வியக் கேட்டு வர்ற வண்டிய வர வுடாம அடிச்சிப்புடுவானுவோ. யிப்போ எத்தனெ டிப்பர்ல எத்தனெ வண்டி கொளத்து மண்ணுப் போயிருக்கு. இந்த ரோடு இப்பிடி கெடக்குதுன்னு ஒருத்தனாவது வந்துப் பாக்கறானுவோளா? யில்ல டிப்பர்ல அடிச்சப் பயலுவோலாவது அடிச்சி முடிச்சிப் பெற்பாடு இந்த மண்ண எதாச்சிம் வெச்சி சொரண்டி அந்தாண்ட இந்தாண்ட போட்டானுவோளா? இந்த மண்ணால ரோட்டுல போறவனுக்கும் எடைஞ்சல். இத்துக் காஞ்சுதுன்னா அப்பிடியே தார்ரப் பேத்துட்டு ரோட்டுக்கும் எடைஞ்சல். இந்த மண்ணு மழையில நனைஞ்சா பெருமழைப் பிடிச்சி மழையா அடிச்சி அந்தாண்ட கரைச்சி வுட்டாத்தாம் உண்டு. இவனுவோ கண்டுக்கிடவே மாட்டானுவோ. இதுல எத்தனெ பேரு வுழுந்தா என்ன? எத்தனெ பேரு வழுக்கிட்டுப் போயி செத்தா என்னான்னு இருப்பானுவோ!"ன்னு பஸ்லேந்து சனங்க எறங்கி ஒதவிப் பண்ணிட்டு இருந்த ஒருத்தரு சத்தம் போட்டாரு. பஸ்லேந்து எல்லாரும் எறங்கி முடிச்சி வெளியில வர்ற வரைக்கும் விகடுவும், சுப்பு வாத்தியாரும் அதெப் பாத்துக்கிட்டு நின்னாங்க.

            "ரோட்டுல கெடக்குற கொளத்து மண்ண மட்டும் நம்பக் கூடாதுடாம்பீ! வூட்டுக்குள்ளாரயே இருக்குற துரோகியும், ரோட்டுக்கு மேல கெடக்குற இந்த மண்ணும் ஒண்ணுடாம்பீ! சமயத்துல ஆளயே சாய்ச்சிப்புடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தோண்டுறவரெ தாங்குற நெலம்ன்னாலும் வழுக்குறப்போ சாய்ச்சுப்புடும்ங்றாப்புல.

            எல்லா சனமும் எறங்கி அங்க இங்கப் போவ ஆரம்பிச்சதும் வண்டியில வந்தவங்களும் கெளம்ப ஆரம்பிச்சாங்க. பஸ்லேந்து எறங்குன கண்டக்டரு போன அடிச்சி வண்டியோட நெலையப் பத்தி டிப்போவுக்குச் சொல்லிட்டு இருந்தாரு.

வேடிக்கெ பாத்தது போதும்ங்றாப்புல வண்டியில நின்ன சனங்க ஒவ்வொண்ணா வண்டிய கௌப்ப ஆரம்பிச்சதுங்க. விகடுவும் வண்டியக் கெளப்ப சுப்பு வாத்தியாரு ஏறி உக்காந்தாரு. கோரையாத்தாங்கரையத் தாண்டி நாலாநல்லூர்ர நெருங்குறதுக்குள்ள மழெ பலமா பிடிக்க ஆரம்பிச்சது. அஞ்ஞப் பக்கத்துல இருந்த அரப்ஸாப் தர்க்காவுல சனங்க ஒதுங்கி நின்னாங்க. விகடுவும் சுப்பு வாத்தியாரும் வண்டிய மழையிலயே நிறுத்திட்டு மழைக்கு ஒதுங்குனாங்க அங்க. பெய்யுற மழையில ஒதுங்கலன்னா காய்ச்சல்ல முழிப் பிதுங்கணும்பாங்க கிராமத்துல.

*****

29 Jan 2021

வண்டியை மீட்ட சுந்தரபாண்டியன்!

வண்டியை மீட்ட சுந்தரபாண்டியன்!

செய்யு - 701

            காலங்காத்தால சரியா ஆறு மணிக்கெல்லாம் வூட்டுக்கு மின்னாடி வந்து ஹாரன் அடிச்சாரு பரமுவோட அப்பா. அந்த ஹாரன் சத்தம் கேட்டுத்தாம் விகடு எழுந்திரிச்சாம். எழுந்து வாசப்பக்கம் ஓடிச் சட்டுன்னு கதவெ தொறந்து வுட்டாம். ஒரு நிமிஷம்ன்னு சொல்லி உள்ளார ஓடியாந்தவெம் ஒடனே கல்யாணம்ன்னு சொன்னாலும் ஒடனே அழுக்கு வேட்டிய அந்தாண்ட வாரி எறிஞ்சுப்புட்டுப் பட்டு வேட்டிக்கு மாறிக்கிடுற பல நாளு காத்திருந்த மாப்புள்ளையப் போல வாயக் கொப்புளிச்சிட்டு, மொகத்தக் கழுவிட்டு, சட்டுன்னு பேண்டு சட்டையை மாட்டிக்கிட்டுப் பரமுவோட அப்பா வண்டியில ஏறுனாம்.

            "ஏம்டா நேத்திக்கே சொல்லிட்டுதானே போனேம். காத்தால ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவேன்னு. நாம்ம வந்து நின்ன பெறவு எழுந்திரிச்சி ஓடியாறீயே, சுனாமி வாரதுன்னு சொன்ன பெறவும் சாவகாசமா எண்ணெய் குளியலு போட்டுக்கிட்டு நிக்குறவனாட்டம்?"ன்னாரு பரமுவோட அப்பா தன்னோட வேல அலமலப்பெ காட்டுறாப்புல.

            "ராத்திரி முழுக்க தூக்கமில்லே. நடந்ததெப் பத்தி ஒரே பேச்சு. ராத்திரி பேசிட்டு இருக்கிறப்பவே எப்ப தூங்குனேம்ன்னு நெனைப்பில்லாம தூங்குனதுதாம். எழும்பு முடியல!"ன்னாம் விகடு ராத்திரி நல்லா தூங்குறவனெ பகலு பத்து மணி வரைக்கும் தூங்குறப்பே நாம்ம என்ன செய்ய முடியும்ங்றாப்புல.

            "வண்டிய எடுத்துட்டு நேரா ஆர்குடிப் போறீயா? யில்ல பள்ளியோடம் போவப் போறீயா?"ன்னாரு பரமுவோட அப்பா ரெட்டை வழியில எந்த வழியில வண்டிய வுட போறேம்ங்றாப்புல.

            "பள்ளியோடத்துக்கு லீவப் போட்டுட்டு ஆர்குடிக்குப் போறாப்புலத்தாம் யோஜனெ. வூட்டுல சமைச்சித் தர்றேன்னு சொல்லிருக்கு. அதெ எடுத்துக்கிட்டு வூட்டுலயும் அழைச்சிட்டுக் கெளம்பணும்!"ன்னாம் விகடு போற தெசையிலத்தாம் போவணும்ங்றாப்புல.

            "ஸ்டேசன்ல மட்டும் வண்டியப் போடக் கூடாதுடா. அதாங் அடிச்சிப் பிடிச்சிட்டு காலங்காத்தாலயே ஓடியாந்து எழுப்புறேம்!"ன்னாரு பரமுவோட அப்பா சந்தைக்கடையில போறப்போ பணத்தெ சட்டைப் பையில மட்டும் வைக்கக் கூடாதுங்றாப்புல. பரமுவோட அப்பாவுக்கு வேற வேல இருக்கும் போல. இந்த வேலைய முடிச்சிக் கொடுத்துட்டு அவரு அடுத்த வேலையப் பாக்கப் போவணுங்ற திட்டத்துல கொஞ்சம் வண்டியில வேகமாவே கௌப்பிக்கிட்டுப் போனாரு. வண்டி தட தடன்னு அதிர்றது தலைமுடி வரைக்கும் தெறிச்சு ஓடுனது.

            வடவாதி போலீஸ் ஸ்டேசன்ல போயி வண்டிய நிறுத்தி உள்ளாரப் போனதும் ராத்திரிக்கி இருந்தாப்புல ரண்டு போலீஸ்காரவுங்கத்தாம் இருந்தாங்க. அதுல ஒருத்தரு இடுப்புல துண்டெ கட்டிக்கிட்டு ஒரு வாளிய எடுத்துக்கிட்டுக் குளிக்க தயாரா இருக்குறாப்புல வெளியில வந்து நின்னு இருந்தாரு. ராத்திரி பாத்த ஞாபவம் இல்லாததப் போல, "ன்னா விசயம்?"ன்னாரு மேலுதட்டெ மூக்கு மேல சுளிச்சுக்கிட்டு.

            "ராத்திரிக்கி வந்தோம்ல வண்டியக் கேட்டுக்கிட்டு. நீஞ்ஞ கூட காத்தால வந்து வாங்கிக்கோங்கன்னு சொன்னீயளே!"ன்னாம் விகடு அம்னீஷியாவுல மறந்துப் போனவங்களுக்கு அத்தனையையும் நெனைவுக்குக் கொண்டு வர்றாப்புல.

            "ராத்திரி சொன்னேனா? அப்பிடிச் சொல்லிருந்தா அய்யா வந்துதாம் கொடுக்க முடியும்ன்னு சொல்லிருப்பேனே!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு பரீட்சையில எந்தக் கேள்வி கேட்டாலும் அதுக்குப் பதிலு இதாம்ன்னு எல்லா கேள்விக்கும் ஒரே பதிலெ எழுதி வைக்குற ஒத்த புத்தி புள்ளையப் போல.

            "ஆமாம் சொன்னீயே!"ன்னாம் விகடு திருவாரூரு மாவட்டத்துல நின்னுகிட்டு தஞ்சாவூரு மாவட்டத்துத் தலையாட்டிப் பொம்மையப் போல தலைய கெழக்குக்கும் மேற்குக்குமா ஆட்டிக்கிட்டு.

            "அப்போ அய்யா வாரட்டும். இப்போ கெளம்பிப் போயிட்டு அய்யா வந்தப் பெறவு வாஞ்ஞ. காலங்காத்தாலயே வந்து கழுத்தறுக்காதீயே. நாஞ்ஞளும் மனுஷங்த்தானே. எழும்பி லட்ரின் போவ வேண்டியதில்ல. குளிக்க வேண்டியதில்ல. இப்பிடியா கடங்கொடுத்தவனெப் போல காத்தாலயே வந்து நிக்குறது?"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு பொழுது விடிஞ்சுதும் அழுது நிக்குறவனெ அடிச்சு வெரட்டுறதெப் போல.

            "யாருப்பா அது?"ன்னு கேட்டுக்கிட்டெ இன்னொரு போலீஸ்காரரு கொட்டாவி வுட்டுக்கிட்டெ வெளியில வந்தாரு. வர்றப்பவே அப்பிடியே பிட்டத்தெ கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி வாயு பிரியுற சத்தத்தையும் சத்தம் கொடுத்துட்டே வர்ற ஆம்புலன்ஸ்ஸப் போல கொடுத்துக்கிட்டே வந்தாரு.

            "ராத்திரி வந்து தூக்கத்தெ கெடுத்துச்சுங்களே ரண்டு கேஸூ. வண்டி வேணும்ன்னு வந்திருக்குவோ!"ன்னாரு வெளியில நின்னுட்டு இருந்த போலீஸ்காரரு விடிஞ்சதும் விடியாததுமா வந்துட்டுங்க மூதேவின்னுப் பாத்து மொகத்தெ சுளிக்குறாப்புல.

            "வண்டி வேணும்ன்னா கடையிலப் போயி வாங்கிக்கிட சொல்லு. ஸ்டேசன்ல வந்து நின்னா? நாம்ம ன்னா வண்டிய தயாரு பண்ணி விக்குற கடையா நடத்துறேம்? நீயிப் போயி குளிச்சிட்டு சட்டுன்னு வர்ற சோலியப் பாரு. அய்யா வர்றதுக்கு மின்னாடி நாமளும் குளிச்சாவணும்!"ன்னாரு உள்ளாரயிருந்து வந்த போலீஸ்காரரு ஆக்கங்கெட்ட கழுதைகள அடிச்சுத் தொரத்துங்றாப்புல. அதுக்கு மேல என்னத்தெ பேசுறதுன்னு விகடுவுக்குப் புரியல. பரமுவோட அப்பாத்தாம் பேசுனாரு. "நாஞ்ஞ திட்டையிலேந்து வர்றோம். திட்டை கிராமக் கமிட்டியில நாம்ம துணைத் தலைவர்ரா இருக்கேம்!"ன்னு ஆரம்பிச்சாரு பரமுவோட அப்பா பவர்ரக் காட்டி பவர்ப்புலா காரியத்தெ முடிச்சுப்புடலாம்ங்றாப்புல.

            "இந்த ஸ்டேசனோட கன்ட்ரோல்ல முப்பத்தெட்டு கிராமங்க இருக்குது. அதுலேந்து நீ எதுல வேணும்ன்னாலும் வா! நீயி எந்தக் கமிட்டியில வேணும்ன்னாலும் என்னாவா வேணும்ன்னாலும் இருந்துக்கோ! அதெப் பத்தியல்லாம் ஒண்ணும் பெரச்சனெயில்ல. இஞ்ஞ அய்யா வந்தாத்தாம் வேல ஆவும். அவரு வர்றாம இஞ்ஞயிருந்து ஒரு துரும்பக் கூட அந்தாண்ட இந்தாண்ட நவுத்த முடியாது. வந்தது வந்துட்டே. அந்தத் தூக்க எடுத்துட்டுப் போயி ஒலகநாதன் கடையில ஸ்ட்ராங்கா ரண்டு பார்சல் டீ வாங்கியா. ஸ்டேசனுக்குன்னு சொல்லி வாங்கியா. அவ்வேம் பாட்டுக்கு தண்ணிய ஊத்துனாப்புலப் போட்டுக் கொடுத்துடப் போறாம். அய்யா வந்து நிக்குறப்போ டீத்தண்ணி தயாரா இருக்கணும் ஆங்!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு டியூப்லைட்டுக்கு மின்னாடி டார்ச் லைட்டெ அடிச்சிக்கிட்டு நிக்காதேங்றாப்புல. பரமுவோட அப்பாவப் பாக்க பாவமா இருந்துச்சு. பத்து ஊரு சனங்க கூடி நிக்குறப்போ வேட்டி அவுந்துப் போயி பட்டாபட்டி டிராயரோட நிக்குறாப்புல அவரோட மொகம் ஆயிடுச்சு. அதெ வெளிக்காட்டிக்கிட விரும்பாம பரமுவோட அப்பா டேபிளுக்குக் கீழே இருந்த அந்தத் தூக்க எடுத்தாரு. "மறக்காம நாலு பேப்பர் கப்பு வாங்கியார மறந்துடாதே!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு எச்சில துப்புறவேம் அத்து எப்பிடி இருக்குன்னு சுவைச்சுப் பாருன்னு சொல்றாப்புல. அதுக்கு ஒண்ணும் சொல்லாம பரமுவோட அப்பா ஸ்டேசனுக்கு வெளியில வந்து வண்டிய ஸ்டார்ட் பண்ணாரு. விகடு பின்னாடி ஏறி உக்காந்தாம்.

            "காலங்காத்தாலயே டீ வாளிய தூக்க வுட்டுட்டான்னுவோளே? இன்னும் வூட்டுக்குப் பால கறந்து கொடுக்கலடா. இஞ்ஞ வந்து இவனுகளுக்கு டீத்தண்ணிய வாங்கி ஊத்த வேண்டிதா இருக்கு! வூட்டுல இன்னும் பொண்டாட்டி, மருமவ்வே, பேரப்புள்ள டீத்தண்ணிக் குடிக்காம கெடக்கு! இங்க மாட்டுக்குத் தண்ணிய காட்டுறதெப் போல டீத்தண்ணிய காட்டணும்ன்னு தலையில எழுதிருக்கு!"ன்னாரு பரமுவோட அப்பா இந்த நாள் நொந்த நாள் ஆயிடுச்சுங்றாப்புல.

            "டீத்தண்ணிய வாங்கியாந்து ஊத்துனா வண்டியக் கொடுத்துடுவாங்களா பரமு யப்பா?"ன்னாம் விகடு வேட்டிப் பறந்துப் போறதெ பத்தியென்ன கோவணம் கெட்டியா இருக்குமாங்றாப்புல.

            "மாடு தண்ணியக் காட்டுனா புண்ணாக்கு வேணும்ன்னு சொல்லும்டா!"ன்னு சலிச்சாப்புல சொன்னாரு பரமுவோட அப்பா கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஏத்துறவனெப் பத்தி கழுதைக்கு என்ன கவலெ, கழுதையோட கவலெயெல்லாம் காயிதம்தாம்ங்றாப்புல.

ஒலகநாதன் டீக்கடையில நல்ல கூட்டமா இருந்துச்சு கடையில மொய்க்குற டீயை வுட. பரமுவோட அப்பா கூட்டத்தெப் பாக்காம முண்டி அடிச்சுக்கிட்டு மின்னாடிப் போயி ரண்டு பார்சல் டீ வாங்கிட்டு, மறக்காம நாலு பேப்பர் கப்போட வெளியில வந்தாரு.

            "நீஞ்ஞ ஒரு டீன்னா அடிக்கிறியளா?"ன்னாம் விகடு சூடா எதாச்சும் குடிச்சா மனசோட சூடு கொறையும்ங்றாப்புல.

            "தயவுபண்ணி இந்த ஊர்ல டீயெல்லாம் சாப்புடச் சொல்லதடா! இந்த ஊர்ல இருக்குற இன்னிய நாளு வரைக்கும் இந்த ஊர்லயும் சரித்தாம், அக்கம் பக்கத்து ஊர்லயும் சரித்தாம் டீத்தண்ணியோ, காப்பித்தண்ணியோ, பலவார பட்சணமோ வாங்கிச் சாப்புட்டதில்ல. டவுனுக்குப் போனா எப்பவாச்சும் சாப்புட்டதும் முப்பது வருஷத்துக்கு மின்னாடி நடந்த கதெ. இவனுவோ போடுறதெல்லாம் ஒரு டீத்தண்ணின்னு, அதெ வாங்கி நக்கிக் குடிக்கிறதுக்கு இவ்ளோ பயலுங்க நிக்குறானுவோ! இவனுவோல்லாம் கயனித் தண்ணிய பட்டச் சரக்குன்னு நெனைச்சு அடிக்குற பயலுவோ! இவனுங்களுக்கு எத்து டீன்னும் தெரியாது, எது வெந்நியின்னும் தெரியாது. காலங்காத்தால சூடா உள்ளார எறங்கணும். அதுக்கு நெருப்பள்ளிப் போட்டுக்கிட வேண்டித்தானடா உள்ளார!"ன்னாரு பரமுவோட அப்பா எரியுற கொள்ளிக்கு ஏகப்பட்ட சொட்டு நெய்யி கெடைச்சாப்புல. பரமுவோட அப்பா இப்படித்தாம். சமயத்துல பேச ஆரம்பிச்சார்ன்னா பேசிட்டே இருப்பாரு. அதுக்கு என்ன பதிலச் சொல்றதுன்னு புரியாது. தப்பித்தவறி எதாச்சும் பதிலச் சொல்லிப்புட்டா அதெ வெச்சு நாலு வண்டி கதெயெ எடுத்து வுட ஆரம்பிச்சிடுவாரு. இப்போ இருக்குற அவசர கால நெலமையில எதுவும் பேசாம இருக்கிறதுதாம் நல்லதுன்னு பட்டுச்சு விகடுவுக்கு. அவ்வேம் பேயாம இருக்கு பரமுவோட அப்பாவும் எதுவும் பேயாம வண்டிய எடுக்க விகடு தூக்கயும், பேப்பர் கப்புகளயும் வாங்கி கையில வெச்சிக்கிட்டு பின்னாடி உக்காந்தாம்.

            ஸ்டேசனுக்குப் போனதும் குளிக்கப் போன போலீஸ்காரரு குளிச்சி முடிச்சி போலீஸ் உடுப்புக்கு மாறியிருந்தாரு. குளிக்கப் போறதா சொன்ன போலீஸ்காரரு, "அய்யா வந்துடட்டும். நாம்ம சொல்லிட்டு வூட்டுக்குப் போயே குளிச்சிக்கிறேம்!"ன்னு சோம்பலா உக்காந்தாரு நாட்டுல எவ்வேம் காலங்காத்தால இந்தக் குளிக்குற கருமத்தெல்லாம் கண்டுபிடிச்சாம்ங்றாப்புல. விகடு டீத்தண்ணிய வாங்கியாந்த தூக்க மேச மேல வெச்சிருந்தாம்.

            "அப்பிடியே மேச மேல வெச்சிட்டா யாரு ஊத்திக் கொடுப்பா? எடுத்து கப்புல ஊத்திக் கொண்டா! ஸ்டராங்கப் போட்டு வாங்கியாந்தியா? ஸ்டேசனுக்குன்னுச் சொன்னீயா?"ன்னாரு போலீஸ்காரரு ஓசியில வாங்குனாலும் தராதரம் பாத்து வாங்கணும்ங்றாப்புல. விகடு தலைய ஆட்டிக்கிட்டே பேப்பர் கப்புல ஊத்தி ரண்டு போலீஸ்காரவுகளுக்கும் கொடுத்தாம். அதெ வாங்கி உஸ் உஸ்ன்னு கொறட்டெ சத்தம் வர்றாப்புல உறிஞ்சிக் குடிச்சுப்புட்டு இன்னொரு கப்புக்கு ஊத்தச் சொன்னாங்க. விகடு தூக்கக் கொண்டுப் போயி அவுங்க குடிச்சக் கப்புலயே ஊத்துனாம். அதெயும் கரட்டு கரட்டுங்ற சத்தத்தோட உறிஞ்சிக் குடிச்சிட்டு, "மிச்சமிருக்கா?"ன்னாரு போலீஸ்காரரு ஒடைஞ்ச பானையில எம்மாம் தண்ணி மிச்சமிருக்குங்றாப்புல. விகடு இருக்குங்றாப்புல தலைய ஆட்டுனாம். "அதெ நீஞ்ஞ ரண்டு பேரும் ஆளுக்குக் கொஞ்சம் ஊத்திக் குடிங்க. அய்யா வர்றதுக்கு எப்பிடியும் எட்டு மணி ஆவும் போலருக்கு! ஆறிப் போன டீயெல்லாம் அய்யா குடிக்க மாட்டாக!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு பெருந்தன்மையா அவரு கையி காசியப் போட்டு வாங்கிக் கொடுத்த டீயைக் குடிக்கச் சொல்றாப்புல.

            "நாஞ்ஞ கடையில குடிச்சிட்டேம்!"ன்னாரு பரமுவோட அப்பா அதெ குடிக்கிறதுக்கு இஷ்டமில்லாம தானொரு ரோஷக்கார்ரேம்ங்றதெ மறைமுகமா காட்டுறாப்புல.

            "வெவரமான ஆளாத்தாம்யா இருக்கீயே! நாஞ்ஞ குடிக்கிறதுக்கு மின்னாடி குடிச்சிட்டு வாங்கி வந்திருக்கீயே! செரி அப்பிடிப் போயி அந்தப் பெஞ்சுல உக்காருங்க. அய்யா வாரட்டும்!"ன்னாரு போலீஸ்காரரு காரியம் முடிஞ்சிட்டா கரும்புச் சக்கெயெ கண்டமேனிக்குத் தூக்கி அந்தாண்ட எறியுறாப்புல.

            "இந்தத் தம்பீ வண்டிய எடுத்துக்கிட்டு ஆர்குடி போவ வேண்டிய வேல இருக்கு. நேத்தி நீஞ்ஞ அழைச்சிட்டுப் போன பொண்ணோட அண்ணன் இவரு. அஞ்ஞ ஸ்டேசன்ல வெச்சி நாற்காலியோட தள்ளி வுட்டதுல ஒடம்புக்கு முடியாம ஆஸ்பிட்டல்ல கெடக்கு. கொஞ்சம் மனசு வெச்சியள்ன்னா வண்டிய எடுத்துக்கிட்டு ஆஸ்பிட்டல்லப் போயிப் பாத்துட்டு வர்றதுக்கு ஒதவியா இருக்கும். ஒஞ்ஞளுக்குப் புண்ணியமா போவும்!"ன்னாரு பரமுவோட அப்பா நயமா பேசி நாசுக்கா காரியத்தெ சாதிச்சுப்புடலாம்ங்றாப்புல.

            "பாருடா பாவ புண்ணியம்ன்னு. ஒஞ்ஞளுக்குப் பாவ புண்ணியம் பாத்தா அய்யாகிட்டெ பாட்ட வாங்கிக் கட்டிக்கிறது யாரு? பேயாம சித்தெ உக்காருங்கய்யா. என்னவோ நாட்டுல ஒஞ்ஙளுக்குத்தாம் வேல கெடக்குறதெப் போலயும், நாஞ்ஞல்லாம் வேல யில்லாம இஞ்ஞ பெஞ்ச தேய்ச்சிக்கிட்டு இருக்குறாப்புலல்லயும் பேசுறீயே? இன்னும் சித்த நேரத்துல பாரு. கூட்டம் கூட்டமா வருவானுவோ அந்தப் பெரச்சனெ, இந்தப் பெரச்சனென்னு. நெதமும் சிங்கம் புலிக்கு மத்தியில வாழ்றாப்புல பெரச்சனைக்கு மத்தியில வாழ்ற ஆளுங்கய்யா நாஞ்ஞ!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு நாசுக்கா இருக்க நெனைக்குறவனுக்கு போலீசு ஸ்டேசன்ல என்ன வேலைங்றாப்புல. அதுக்கு மேல என்னத்தெ சொல்றதுன்னு பெஞ்சுல வந்து உக்காந்தாரு பரமுவோட அப்பா. விகடுவும் வந்து உக்காந்தாம்.

            "ன்னடா வூட்டுல வேற வேல கெடக்கு. இஞ்ஞ உக்காந்தா வூட்டு வேலய யாருடா பாக்குறது? இப்பிடி இஞ்ஞ உக்கார வைக்குறானுவோளே. எதாச்சும் புண்ணியம் இருந்தாலும் உக்காரலாம். காலங் காத்தாலயே யிப்பிடி உக்காந்துக் கெடந்தா ஒடம்புல சோம்பலு பூத்துப் போயிடுமேடா? இன்னிக்கு ஆவ வேண்டிய காரியம் ஆனாப்புலத்தாம்!"ன்னாரு பரமுவோட அப்பா நாளொண்ணு நாசமா போச்சுங்றாப்புல.

            "நாம்ம வேணும்ன்னா பிரசிடெண்டுக்குப் போன அடிக்கவா?"ன்னாம் விகடு பரமுவோட அப்பாவுக்கு மட்டும் கேக்குறாப்புல மொல்லமா.

            "யாரு திருச்செல்வத்துக்கா? அவ்வேம் யண்ணேம் ரகுநாதெம்கிட்டத்தாம் நமக்குப் பழக்கம். இவ்வேங்கிட்டல்லாம் நாம்ம பேசுறதெ யில்ல. அவ்வேம் இந்தப் பக்கம் நின்னா நாம்ம அந்தப் பக்கம் வந்துடுறது. மனுஷன்னா ரகுநாதெம் மனுஷம். அவ்வேம் பேர்ர வெச்சிக்கிட்டு இவ்வேம் பெரசிடென்ட்டு ஆயிட்டாம். அதால நாம்ம போன அடிக்க முடியாது. நீயி வேணும்ன்னா அடிச்சிப் பாரு. அதுக்குப் பேயாம ஒரு எருநூத்து ரூவாய எடுத்து நீட்டுனா வண்டிய வுட்டுப்புடுவானுவோடா! அதுக்குத்தாம் அடிப் போடுறானுவோ!"ன்னாரு பரமுவோட அப்பா விகடுவோட காதுக்கு மட்டும் கேக்குறாப்புல மொல்லமா.

            "வர்ற அவசரத்துல வண்டியோட சாவியையும் போனையும் மட்டுந்தாம் சட்டப்பையில எடுத்துப் போட்டேம். பைசா காசிய எடுத்துப் பையில போடல!"ன்னாம் விகடு என்னவோ வூடு நெறைய பீரோ முழுக்க பணத்தெ கொட்டி வெச்சிருக்கிறாப்புல அதாச்சி, சட்டியைப் பாக்காதவங்ககிட்டெ ஏம் போயி சட்டியில இருந்தாத்தாம் அகப்பையில வாரும்ன்னு சொல்லிக்கிட்டுங்றாப்புல.

            "நல்ல ஆளுடா நீயி! ஸ்டேசனுக்கு வர்ற நீயி பணம் யில்லாம வரலாமா? கடைக்குப் போறன்னா கூட பணத்தெ மறந்துட்டுப் போவலாம். கடனா கொடுங்கன்னு சொல்லிட்டு வாங்கியாந்திடலாம். இத்து ஸ்டேசன்டா. இஞ்ஞ அப்பிடில்லாம் கடனா கேக்க முடியாதுடா! இஞ்ஞ உக்காந்துப் பேசுனா சுத்தப்படாது. வாடா வெளியில போவேம்! பச்சத் தண்ணியில வெண்ணெய்ய எடுத்துப்புடலாம். போலீஸ் ஸ்டேசன்ல தவிப்புன்னாலும் சொட்டுத் தண்ணிய வாங்கிட முடியாது! செரியான ஒலகம் தெரியாம பயெ! மண்ணுமுட்டுடா நீயி!"ன்னாரு மெல்லமா சிரிச்சிக்கிட்டெ பரமுவோட அப்பா. ரண்டு பேருமா கெளம்பி ஸ்டேசனுக்கு வெளியில வந்தாங்க. ரோட்டத் தாண்டி எதுத்தாப்புல இருக்குற மாமரத்தடிக்கு வந்து நின்னாங்க.

            "நாம்ம போன அடிக்கிறேம்!"ன்னு சொல்லிட்டு பிரசிடெண்டுக்குப் போன அடிச்சாம் விகடு. காலங்காத்தால ஊரு சுத்துற குருவிக்கு இரைய ஒண்ணுத்தையாவது கண்ணுல பாக்குதோ இல்லையோ இல்லையோ, காலங்காத்தால போறவங்க பாக்க நெனைக்கிறவங்களப் பாத்துப்புடலாம். காலங்காத்தால செய்யுற காரியத்தோட மகிமெ அது. அந்த மகிமெ நல்லா வேல செய்யுறதப் போல அந்த மகிமெ பிரகாரம் திருச்செல்வம் போன எடுத்தாரு. அலோன்னு அவரு சொல்றப்பவே கொட்டாவி வுடுறதும் கேட்டது.

            "நாம்ம சுப்பு வாத்தியாரு மவ்வேம் விகடு பேசுறேம்! கோட்டகத்துல வாத்தியார்ரா இருக்கேம்ல்லா!"ன்னாம் விகடு இன்னாரு பேசுறேம்ன்னு அடையாளம் காட்டிக்கிறாப்புல.

            சர்ட்டுன்னு விசயத்தெ புரிஞ்சிக்கிட்டவர்ரப் போல, "சொல்லுங்கம்பீ! நேத்திக்கு விசயம் கேள்விப்பட்டேம். ஆர்குடி ஆஸ்பிட்டல்ல சேத்துருக்கிறதா கேள்விப்பட்டேம். நேத்திக்கே வாரணும்ன்னு பாத்தேம். மாவட்டத்தப் பாக்க போயி வர்றதுக்கு லேட்டாயிடுச்சு. இன்னிக்கு வந்துடுறேம்பீ! நீஞ்ஞ ஒண்ணும் கவலெப்படாதீயே. என்ன பெரச்சனெ யிருந்தாலும் ஆக்கினையப் பண்ணிடுவோம்பீ!"ன்னாரு திருச்செல்வம் நேரடியா விசயத்துக்கு வந்தவர்ரப் போல.

            "ரொம்ப நல்லதுங்க!"ன்னாம் விகடு பாதாளத்துல வுழுவுறவனுக்குப் பாதியில கொம்பொன்னு கெடைச்சாப்புல.

            "வேற எதாச்சும் ஒதவின்னாலும் சொல்லுங்க. செஞ்சிப் புடுவேம். ஆர்குடி ஆஸ்பிட்டலோட ஹெட் டாக்கடர்ட்டப் பேசிச் சொல்லி வுடவா? ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசன்ல எதாச்சும் பேசி வுடணுமா?"ன்னாரு திருச்செல்வம் அவசரக் கால உதவி ஏதோ தேவைன்னு புரிஞ்சிக்கிட்டாப்புல.

            "நம்ம வடவாதி ‍போலீஸ் ஸ்டேசன்ல நேத்திக்கு வந்தப்போ யப்பாவோட வண்டியப் போட்டுட்டு ஜீப்புல ஏறிப் போவுறாப்புல ஆச்சு. யிப்போ வண்டி இஞ்ஞ ஸ்டேசன்ல கெடக்கு. நேத்தி ராத்திரிக்கே வந்து கேட்டேம். காத்தால வாரச் சொன்னாங்க. இப்போ வந்து கேக்குறப்போ அய்யா வர்ற வரைக்கும் ஒக்காரச் சொல்லிருக்காங்க. வண்டி கொஞ்சம் ஒடனடியா கெடைச்சதுன்னா ஆர்குடி ஆஸ்பிட்டலுக்குப் போயி அஞ்ஞ இருக்குற தங்காச்சி, யம்மா, யப்பாவப் போயி பாக்க வேண்டிக் கெடக்கு!"ன்னாம் விகடு கையொடைஞ்சு நிக்குறவனுக்கு வைத்தியத்தெ பாக்காம கையில உள்ள கவரிங் மோதிரத்தெ பிடுங்கப் பாக்குறாங்கங்றாப்புல.

            "யிப்போ எஞ்ஞ இருக்கீயே?"ன்னாரு திருச்செல்வம் பட்டுன்னு ஏதோ ஒரு வகையில காரியத்தெ முடிச்சு வுடுறதுக்குத் தோதா.

            "ஸ்டேசன்லத்தாம் இருக்கேம். ஸ்டேசனுக்கு மின்னாடி நிக்குறேம்!"ன்னாம் விகடு சம்பவ எடத்துலத்தாம் சங்கடப்பட்டு நிக்குறேம்ங்றதெ சொல்றாப்புல.

            "உள்ளார நம்ம காத்தமுத்து இருக்காப்புலயா?"ன்னாரு திருச்செல்வம் படிக்காம வந்த நிக்குற புள்ளைக்கிட்டெ சரியா அந்தக கேள்விக்கான பதிலெ சொல்லுன்னு கேக்குற வாத்தியார்ரப் போல..

            "பேருல்லாம் தெரியல. ரண்டு போலீஸ்காரவுங்க மட்டும் இருக்காக!"ன்னாம் விகடு ஸ்டேசன்ல இருக்குறவங்களுக்கெல்லாம் போலீஸ்ங்றது மட்டுந்தாம் பேருங்றாப்புல.

            "செரி உள்ளாரப் போயி யாரா இருந்தாலும் திட்டை கிராமத்துப் பெரசிடண்ட்ன்னு நம்மப் பேர்ரச் சொல்லிப் போனக் கொடுங்க. பாப்பேம்!"ன்னாரு திருச்செல்வம் யார்ரா இருந்தாலும் பேசிப் பாக்கிறேம்ங்றாப்புல.

            விகடு வேக வேகமா ரோட்டத் தாண்டி ஸ்டேசனுக்கு உள்ளாரப் போயி, "எஞ்ஞ திட்டை கிராமத்துப் பஞ்சாயத்துப் பெரசிடெண்ட்டு திருச்செல்வம் அய்யா பேசுணும்ங்றாவோ!"ன்னாம் நீட்டோலைவாசியப் போல.

            "ஏம்ப்பா பெரசிடண்ட்டு ஆளுவோன்னு சொல்லக் கூடாதா?"ன்னு சொல்லிட்டுப் போன வாங்குனாரு போலீஸ்காரரு ஊரு, பேர சொல்றதுக்கு மின்னாடி யாரோட ஆளுங்றதெ சொல்லணுமா இல்லியாங்றாப்புல. மயிலே மயிலேன்னா எந்த மயிலு எறகெப் போடும். ஆன்னா சொல்றவங்க சொன்னா சொல்றதுக்கு மின்னாடியே போடும்ங்றாப்புல திருச்செல்வம் பேச பேச பண்ணிப்புடலாம், செஞ்சிப்புடலாம்ன்னு சொல்லிட்டெ வந்தாரு அந்தப் போலீஸ்காரரு. கடெசீயா, "ஸ்டேசனுக்குல்லாம் வந்து அடிக்கடி கவனிச்சிட்டுப் பாத்துட்டுப் போங்க தலைவரே!"ன்னு சொல்லி முடிச்சிட்டு போன கட் பண்ணிட்டு, விகடுவப் பாத்து, "போயி வண்டிய எடுத்துக்கோ!"ன்னு உள்ளாரப் பாத்துக் கண்ணக் காட்டுனாரு. விகடு அவர்ரப் பாத்து, "போனு!"ன்னாம் வண்டிய மீட்கிறதுக்கு மின்னாடி போன மீட்கணும்ங்றாப்புல. அவரு செல்போன அவ்வேங்கிட்டெ நீட்டுனாரு. அதெ வாங்கிட்டுப் போயி உள்ளார கெடந்த சுப்பு வாத்தியாரோட டிவியெஸ் பிப்டிய எடுத்துட்டு வெளியில வந்தாம்.

            பரமுவோட அப்பா விகடுவெப் பாத்துச் சிரிச்சாரு. "கெட்டிக்காரப் பயத்தாம்டா நீயி! எரநூத்து ரூவாய இன்னிக்கு மிச்சம் பண்ணிட்டீயே! காசில்லாம்ம ஸ்டேசனுக்கு வந்துக் காரியம் சாதிச்சுப்புட்டீயே!"ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளார அந்தப் போலீஸ்காரரு வெளியில வந்து, "ஒரு நூத்து ரூவா பணம் இருந்தா கொடுத்துட்டுப் போயேம்!"ன்னாரு ராத்திரி முழுக்க கெடந்த வண்டிக்கு வாடகெ கேக்குறாப்புல. விகடு சட்டப்பைய வெளியில இழுத்து வுட்டுக் காலிப் பையக் காட்டி, "இருந்த காசிக்கு டீத்தண்ணிய வாங்கியாச்சுங்கய்யா!"ன்னாம் வாடகெக் காசிய டீக்காசியில கழிச்சுக்குங்கங்றாப்புல.

            "செரியான சாவுகிராக்கி ஆளுங்கள இருப்பீயே போலருக்கு. கெளம்பு கெளம்பு. அய்யா வர்றதுக்கு மின்னாடி எடத்தெ காலி பண்ணு!"ன்னாரு அந்தப் போலீஸ்காரரு காசில்லாத வெறும் பயலுகளுக்கெல்லாம் சந்தையில என்னா வேலைங்றாப்புல.

            "ஏம்டா டீத்தண்ணிய எங் காசியில வாங்குனேம். நீயி வாங்கிக் கொடுத்ததா சொல்லி நல்லாவே சமாளிக்கிறீயேடா! நீதாம்டா நெசத்துல மதுரைய மீட்ட சுந்தரப்பாண்டியனப் போல, அப்பங்காரரோட வண்டிய மீட்ட சுந்தரப்பாண்டியன்!"ன்னு விகடுவுக்குக் கேக்குறாப்புல மொல்லமா கொல்லிகிட்டெ சிரிச்சிக்கிட்டெ பரமுவோட அப்பா வண்டிய நின்ன படிக்கு ஸ்டார்ட் பண்ணாரு. விகடு வண்டிய ஸ்டாண்டுப் போட்டு ஸ்டார்ட் பண்ணாம். ரண்டு பேரும் வண்டியக் கெளப்பிக்கிட்டு வூட்ட நோக்கிப் போவ ஆரம்பிச்சாங்க. புகை மட்டும் பின்னாடி போலீஸ் ஸ்டேசன்ன நோக்கிப் போவ ஆரம்பிச்சது கருகருன்னு.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...