31 Aug 2019

இந்த ஊரு எம்.எல்.ஏ.



செய்யு - 193
            வடவாதிக்கு திருவாரூர்லேந்து ஒரு பஸ்ஸூ! அது எட்டாம் நம்பரு பஸ்ஸூ. அதெப் பத்தி நாம்ம முன்னாடியே பாத்தாச்சு. பயணமும் போயாச்சு. அது ஒண்ணா. இன்னொன்னு மன்னார்குடியிலேந்து வர்ற ரண்டாம் நம்பரு பஸ்ஸூ. அதுவும் அப்பைக்கப்போ நம்ம கதையில வந்துப் யோயிருக்கு. மூணாவது கும்பகோணத்துலேந்து ஒரு பஸ்ஸூ. மெயிலுன்னு அதுக்குப் பேரு. காலையில எட்டு மணி வாக்குல ஒரு தடவயும், சாயுங்காலம் நாலு மணி வாக்குல ஒரு தடவையும் அது வரும், போவும். அதுல மனுஷங்க வர்றது கம்மி. இந்த ஊருக்கு ஆளுங்க வராம டிரைவரும், கண்டக்கரும் மட்டும் பயணம் பண்ணி வர்ற பஸ்ஸூன்னா அது ஒண்ணுதாம். வடவாதி போஸ்ட்டு ஆபீஸ்க்கு வர வேண்டிய கடுதாசிகளை எல்லாத்தையும் அந்த பஸ்ஸூதான் எடுத்துகிட்டு வரும். அதால அதுக்குப் பேரு மெயிலு. சாயுங்காலம் போறப்ப இங்க சேந்துருக்குற கடுதாசிகளையெல்லாம் எடுத்துகிட்டுப் போவும். அந்த வேலையை அது கர்ம சிரத்தையா செஞ்சிகிட்டு இருக்கு.
            இப்போ யாரு கடுதாசில்லாம் எழுதுறான்னு கேட்கக் கூடாது. யாரும் பெரிசா கடுதாசி எழுதாட்டியும் பேங்குக்காரன் போடுற கடுதாசி வகையறா இருக்கே - ஏ.டி.எம். அட்டைக வர்ற கடுதாசி, கடனைக் கட்டச் சொல்லி வர்ற கடுதாசி, வெச்ச நகையை மீட்கச் சொல்லி வர்ற கடுதாசி, ஆதார் கார்டு வர்ற கடுதாசி, அக்கெளண்ட்ல பேன் நம்பர இணைங்க, ஆதார் நம்பர இணைங்கன்னு சொல்லி வர்ற கடுதாசி, ஊர்ல யாருக்காவது தீவிர இலக்கிய இதழ்களா வர்ற கடுதாசி, மாசக் கூட்டம் போடுறவங்க அனுப்புற மஞ்சகார்டு கடுதாசி, நாலு பக்கத்தியும் மஞ்சள  தடவிகிட்டு வர்ற கல்யாண கடுதாசி, ஓரத்துல கருப்ப தடவிகிட்டு வர்ற கருமாதி கடுதாசி இதெல்லாம் அந்த மெயிலு பஸ்ல பயணம் பண்ணித்தான் வடவாதிக்கு வருதுங்க. அதுல மக்கள் பயணம் பண்ணி வர்றது கம்மினாலும், பயணம் பண்ணி வர்ற கடுதாசிக்குக் கொறைச்சல் இருக்காது. ஆமாம் அதுல காலையில எட்டு மணிக்கு ஏறி உட்கார்ந்தா அது ஆடி அசைஞ்சு புதுப் பொண்ணு கணக்கா கும்பகோணம் போயிச் சேர்றதுக்கு பதினோரு மணி ஆயிடும்.
            கும்பகோணத்துல கல்யாணத்துக்குன்னு அதுல போறவங்க தாலி கட்டுறத பாக்க முடியாம பதினோரு மணிக்கு கும்பகோணத்து பஸ் ஸ்டாண்டுல எறங்கி, அடிச்சுப் பிடிச்சு ஓடிப் போயி மண்டபத்த அடைஞ்சு மதியான சாப்பாட்ட மட்டும் சாப்பிட்டுட்டு மொய் எழுதிட்டு வந்த கதையெல்லாம் இங்க நெறைய இருக்கு. சாவு காரியம்னு இந்த பஸ்ல போனவங்க முகத்தைப் பார்க்க முடியாம சுடலையில எறியுறத பாத்துட்ட வந்த கதையும் நெறைய இருக்கு. ரொம்ப நிதானமான பஸ்ஸூ அது. அது போற ரோடே ரண்டா பிளந்து கிடந்தாலும் எந்தப் பக்கமும் கவுந்துடாமா கும்பகோணத்துல கொண்டு போயி எறக்கிடும். அவ்வளவு நிதானம், பொறுமை, அமைதி அப்பிடின்னு எந்த வார்த்தையைப் போட்டு சொன்னாலும் அது அந்த பஸ்ஸூக்குப் பொருந்தும். யாருக்காவது மனசு சரியில்லன்னா மெயில்ல ஏறி உட்கார்ந்து கும்பகோணம் போயி திரும்பி வந்தா போதும் அது போற வேகத்துல மனசு வெறுத்துப் போயி, ஏற்கனவே சரியில்லாத மனசும், இப்போ உண்டான வெறுப்பும் ஒண்ணா சேந்துகிட்டு மைனசும் மைனசும் சேர்ந்து பிளஸ் ஆவுற கணக்கா மனசு சரியாயிடும். வாழ்க்கையில நிதானத்தைக் கத்துக்க விரும்புற மனுஷங்க இந்த பஸ்ஸைப் பார்த்துதான் கத்துக்கணும். அதுல ஒரு வாட்டியாவது பயணம் போயி ஆகணும்.
            நாலாவதா வடவாதிக்கு வர்ற பஸ்ஸூதான் எம்.எல்.ஏ. பஸ்ஸூ. எங்க சுத்துப்பட்டி ஊருக்கு இந்தச் சனங்க ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ. வராறோ இல்லையோ, இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸூ நாள் தவறாம சரியான நேரத்துக்கு வந்துடும். அதால இந்த ஊரயெல்லாம் எம்.எல்.ஏ. வந்துப் பாக்காத ஊருன்னு சொல்ல முடியாது. அது திருச்சி பஸ்ஸூ. அந்த பஸ்ஸூ திருச்சிலேந்து நடுராத்திரி ரெண்டே முக்காலு வாக்குல வடவாதிக்கு வரும். வந்து அப்படியே ஹால்ட் ஆயி காலையில ஆறே காலுக்கு எடுப்பாங்க. எடுத்தா டான்னு ஒன்பதே முக்காலுக்கு திருச்சியில கொண்டு போயி விட்டுடுவாங்க. திருச்சிக்குப் போன அந்தப் பஸ்ஸூ திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் சுத்திகிட்டு இருந்துகிட்டு மத்தியானம் ரண்டே முக்காலுக்கு மறுபடியும் வடவாதி வரும். வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு மூணே காலுக்குக் கிளம்பிடும் திருச்சியப் பார்க்க. இந்த வடவாதிக்கு வர்ற ஒரே நல்ல பஸ்ஸூ இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸூதான். இந்தப் பஸ்ஸப் பத்தியும் ஒரு கதை சொல்லுவாங்க. இந்த ஊரு பய மக்களுக்கு கதை கதையா சொல்றதுன்னா அலுக்காதுன்னு இந்நேரம் ஒங்களுக்குப் புரிஞ்சுப் போயிருக்கும். அந்தக் கதையையும் கொஞ்சம் கேட்டுப்புடுவோம். சுருக்கமான கதைதான். இந்த ஊரு கதைக்குள்ள பஸ்ஸூ ஓடுறது மட்டுமா, பஸ்ஸூக்குள்ளயும் கதை ஓடும். அப்படி இந்த ஊரு கதையும், பஸ்ஸூம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்தது.
            இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸோட சொந்தக்காரங்க இருக்காங்களே! அவுங்க மொத மொதல்ல வுட்ட பஸ்ஸூ திருச்சிக்கும் வடவாதிக்கும் வுட்ட இந்த பஸ்ஸூதான். அவங்களோட குல தெய்வம் மலையப்பன் சாமி. அந்த மலையப்பன சுருக்கி எம்.எல்.ஏ. ஆக்கிப்புட்டாங்க. அதால அவுங்க வுட்ட பஸ்ஸூக்கு எம்.எல்.ஏ. டிரான்ஸ்போர்ட்ஸ்னு பேரு வெச்சிப்புட்டாங்க. இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸ வுட்டாரு இல்லீங்களா அவரு யாருன்னு கேட்டீங்கன்னா... ஜி.டி.நாயுடு இருக்கார்ல... அவரு பஸ்ஸூ வுட்டப்ப அவருகிட்ட பஸ்ஸூ ஒட்டிகிட்டு இருந்துகிட்டு தொழிலு கத்துகிட்டவரு. நெறைய பேருக்கு ஜி.டி. நாயுடுவ விஞ்ஞானியத்தான் தெரியும். அவரு பஸ்ஸூ வுட்டு ஓட்டன கதையெல்லாம் அவ்வளவா தெரியாம இருக்கலாம். ஜி.டி.நாயுடு இருக்காரே, அவரு விஞ்ஞானியா மட்டும் கில்லாடியில்ல, பஸ்‍ஸை பக்காவா வெச்சிக்கிறதலயும், பஸ்லேந்து சம்பாதிக்கிறதுலயும் கில்லாடி. அவருகிட்ட தொழிலு கத்துகிட்டவரு பஸ்ஸூ விட்டா எப்பிடி இருக்கும்!
            இந்த ஒரு பஸ்ஸூலேந்து சம்பாதிச்ச சம்பாத்தியத்துல அவுங்க ஏகப்பட்ட பஸ்ஸூ வாங்கி தஞ்சாவூர்லேந்து புதுக்கோட்டை, பாக்குக்கோட்டை, வேளாங்கண்ணி, மாயவரம், கும்பகோணம்னு கும்பகோணம் கோட்டத்துல கவர்மெண்டுக்குப் பஸ்ஸூ ஓடுதுல்ல அந்த அளவுக்கு இப்போ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. அவுங்க தஞ்சாவூர்லேந்து எத்தனை ரூட்டுக்கு எத்தனை பஸ்ஸூ வுட்டாலும் அவங்கள தூக்கி விட்டது வடவாதிக்கு வுட்ட இந்த மொத பஸ்ஸூதானே. அதால அவங்க எப்போ மொத பஸ்ஸூ வாங்குனாலும் அது இந்த ரூட்டுல கொஞ்ச நாளைக்கு வுட்டுதான் பெறவு அதை மத்த ரூட்டுக்கு விடுவாங்களாம். அதாலதான் இந்த வடவாதி ரூட்டுல ஓடுற எம்.எல்.ஏ. பஸ்ஸூ மட்டும் எப்பவும் புதுசா இருக்கும். இந்த ரூட்டுல வுட்டு மத்த ரூட்டுல வுட்டாத்தான் அந்த பஸ்ஸூ ஆக்சிடென்ட் ஆவாம நல்ல விதமா ஓடுமுன்னு அவுங்களுக்கு ஒரு நம்பிக்கை. ஒரு தடவெ அப்படித்தான் தெரியாத்தனமா புதுசா வாங்குன பஸ்ஸை வடவாதிக்கு விடாம பாக்குக்கோட்டைக்கு விட்டு அது ஆக்சிடென்ட் ஆயி பஸ்ல போனவங்கள்ல நாலு பேரு ஸ்பாட்டு அவுட். பல பேருக்கு பலத்த காயங்களாப் போயிடுச்சி. அதுலேந்து முத பஸ்ஸூன்னா அது வடவாதிக்குதான். இந்த வடவாதி ரூட்டுல ஓடுன பிற்பாடுதான் எந்த எம்.எல்.ஏ. பஸ்ஸூம் மத்த ரூட்டுகளுக்கு மாத்தி ஓடும். அதால இந்த வடவாதி ரூட்டுல ரோடு சரியில்லாட்டியும், குண்டும் குழியுமா இருந்தாலும், அதுல ஓடுற எம்.எல்.ஏ. பஸ்ஸூ மட்டும் எம்.எல்.ஏ. எப்படி வெள்ளை சொள்ளையுமா கஞ்சிப் போட்ட வேட்டிச் சட்டையில பொலிசா வர்றாரே அப்படித்தான் எம்.எல்.ஏ. பஸ்ஸூலாம் எப்பயம் பொலிசா வரும்.
            ஊர்ல நாலு பஸ்ஸூ ஓடுனாலும் நம்ம ஊரு பய மக்கள் இந்த ஒரு பஸ்ல அள்ளிகிட்டு ஏறும். கவர்மெண்டு பஸ்ல ஒரு கண்டக்டர்னா இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸூல மூணு கண்டக்டர்னா நம்புவீங்களா? மூணு பேரு இருந்தாத்தான் ஏறுற கூட்டத்துக்கு டிக்கெட்டுப் போட முடியும். எவ்வளவு கூட்டம் ஏறுனா என்னா அடுத்த ஸ்டாப்பிங் போறதுக்குள்ள அந்த கண்டக்கடரு ஆளுங்க டிக்கெட்ட போட்டு பைசாவ வாங்கிப் பையில போட்டுடுங்க. எல்லாம் அந்த பஸ்ஸூ நிர்வாகத்துல கொடுத்தப் பயிற்சி. ஜி.டி.நாயுடுகிட்ட தொழிலு கத்துகிட்டவாங்களாச்சே. அந்த பஸ்ஸோட டிரைவரு, கண்டக்கருங்க எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருப்பாங்க. சரியான நேரத்துக்கு வண்டி எடுக்குறதிலேந்து, வண்டிய சுத்தமா வெச்சிக்கிறதிலேந்து எல்லாத்திலயும் தனி மார்க்கம்தான். வடவாதியில இந்த பஸ்ஸ ஆறே காலுக்கு எடுத்தா ஒவ்வொரு ஸ்டாப்பிங்குக்கும் எந்த நேரத்துல வருங்றது நொடி பிசகாம சொல்லலாம். அந்த அளவுக்கு கணக்குப் பண்ணிகிட்டு ‍டிரைவரு ஓட்டுவாரு. ஒவ்வொரு ஸ்டாப்பிங்கலயும் எவ்வளவு நேரம் நிப்பாட்டி சனங்கள எறக்கி ஏத்தணுங்றதுக்குக் கூட கணக்கு வெச்சிக்கிட்டு கண்டக்கடருங்க பிகிலு ஊதுவாங்குன்னா பாத்துக்கோங்க.
            நடுராத்திரிக்கு மேல அகாலத்துல இந்த பஸ்ஸூ திருச்சிலேந்து கிளம்பி ரெண்டே முக்காலுக்கு வருன்னு சொன்னோம்ல. அதுலயாவது கூட்டம் கம்மியா இருக்கும்னு நெனைச்சீங்களா! அதுலயும் தூங்கிக்கிட்டு, வழிஞ்சிகிட்டு முப்பது நாப்பது பேருக்கு மேல வந்து வடவாதியில எறங்கும். அதுலதான் வடவாதிக்கு வர வேண்டிய நியூஸ் பேப்பரு, பார்சல்கள், பால் பாக்கெட்டுகள், பூ கட்டுறவங்களுக்கான பூவு எல்லாம் வந்து சேரும்.
            இப்போ எதுக்கு குறுக்கே இந்த எம்.எல்.ஏ. பஸ்ஸை ஓட்டுறோம்னு கேட்குறீங்களா? ராத்திரி ரெண்டே முக்காலுக்கு வர்ற இந்த பஸ்ஸூலதான் பாக்குக்கோட்டையிலேந்து வர்ற ஆதிகேசவன் தஞ்சாவூருக்குப் போயி, தஞ்சாவூர்ல இந்தப் பஸ்ஸைப் பிடிச்சி வடவாதிக்கு வந்து எறங்கியிருக்கிறான், போயிருக்கிறான். அவனுக்குத் தோதா பஸ்ஸூ அமைஞ்சுப் போச்சு. ராத்திரி ரண்டே முக்காலுக்கு வந்து எறங்குனா, காலையில ஆறே காலுக்குத் திரும்பிப் போறதுக்கு அந்த பஸ்ஸூ ரொம்பவே அவனுக்கு வசதியா இருந்துருக்கு.
            சித்துவீரனுக்கு யோசிக்க யோசிக்க விசயம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா புரிபடுது.
*****

பாக்கியவான்கள் எதையும் செய்ய வேண்டாம்!


            மனநிலையைத் திருப்திப் பண்ண வேண்டியதில்லை. அது ஒரு நிலை அவ்வளவுதான். திருப்திப் பண்ண மனநிலை அப்படியே மாறாமல் இன்னொரு நேரத்தில் இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அது ஒவ்வொரு நேரத்திலும் ஒரு நிலை. மனநிலைகளைத் திருப்தி பண்ண முயற்சி செய்தால் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மனநிலையைத் திருப்தி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஒரு முடிவு இருக்காது. பிறகு ஏன் திருப்தியான மனநிலை தேவைப்படுகிறது? என்ற கேள்வி சுவாரசியமாக இருக்கலாம். இந்தச் சுவாரசியமான கேள்வியின் பின்னணி அப்படியொரு மனநிலை என்பது இல்லை என்பதால் அதை விரும்பும் மனநிலைதான் அது என்பதுதான்.
            மனதே மனநிலையை உருவாக்குகிறது. அப்படி உருவாக்கிய மனநிலை அதற்கே பிடித்தம் இல்லாமல் தோன்றும் போது அப்படி ஒரு மனநிலையை உருவாக்கி அதுவே அப்படி எதிர்பார்க்கிறது. அப்படி ஒரு மனநிலையை அது கற்பிதம் செய்து கொண்டால் அதை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது. ஒரு கனவு போதும் அதற்கு அதை உருவாக்கிக் கொள்வதற்கு. அதை விட வேடிக்கையான ஒன்று என்னவென்றால் அப்படி ஒரு மனநிலையை அது கற்பித்த விட்ட உடனே அது அப்படியான மனநிலையை உருவாக்கிக் கொண்டு விட்டது என்பதுதான். ஒரு சூட்சமமான உண்மை அதுதான். மழையில் கடும்கோடையை உணர்வதும், கோடையும் பனிமழையையும் உருவாக்கிக் கொண்டு அதனால் உணரவும் முடியும். அதனை அதன் போக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போவதில் இருக்கிறது மனதைக் கையாள்வதன் புத்திசாலித்தனம்.
            மாறாக மனதிற்கு அப்படி ஒன்றை உருவாக்கித் தரப் போகிறேன் என்ற மனநிலையை உருவாக்கிக் கொண்டு உள்ளே புகுந்தவர்கள் தொலைந்தார்கள். அதுவோ நிமிடத்திற்கு நிமிடம் மனநிலையை மாற்றிக் கொண்டே போகும். நீங்கள் நினைக்கும் வடிவத்தை அதை மாற்றிக் கொண்ட பிறகு அதை நீங்கள் உருவாக்கிக் கொடுத்து ஏமாந்து போவீர்கள். இப்போது உங்களுக்கு அடுத்தப் பிரச்சனை ஆரம்பிக்கும். மனம் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டே போவதால்தான் அதை திருப்தி படுத்த முடியவில்லை என்று நினைப்பீர்கள். நினைத்து அடுத்து என்ன செய்வீர்கள்? வழக்கமாக மனதை ஒரு நிலைபடுத்த வேண்டும் என்ற வேலையில் இறங்கி ஒருநிலைப்படாத மனம் என்ற புதிய சிக்கலை உருவாக்கிக் கொள்வீர்கள்.
            மனதை கவனித்துக் கொள்வதில்தான் இருக்கிறது எல்லாமும். அது வெறுமனே ஒரு கவனிப்புதான். அதற்காக எதையும் செய்யும் கவனிப்பு அல்ல அது. எதையாவது கவனிப்பதற்காக செய்ய ஆரம்பித்தால் செய்ய வேண்டியவைகளுக்கு எல்லை இருக்காது. அதன் அமைப்பு அப்படித்தான். அது பலதரப்பட்டதாக ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்க பழக்கப்பட்டது.
            மனதுக்காக எதையாவது செய்யும் அபத்ததில் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீளவே முடியாது. மனம் எதையாவது செய்ய வேண்டும் என்று மனதிருப்திக்காக எதிர்பார்க்கும். அது ஒரு மது அருந்ததலாகவோ, புகைப் பிடித்தலாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைச் செய்ய ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவு இருக்காது.
            அப்படியானால் இதில் செய்ய என்ன இருக்கிறது என்றால் எதுவுமே இல்லை. எப்படி அமைதியான மனநிலையிலிருந்து அது அமைதியற்ற மனநிலைக்கு மாறியதோ, அப்படியே அது அமைதியற்ற மனநிலையிலிருந்து அமைதியான மனநிலைக்கும் மாறும். ஏனென்றால் அதனால் நிலையாக இருக்க முடியாது. எந்த ஒன்றிலும் நிலையாக இருக்க முடியாத அதன் தன்மையால்தான் இருமைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு செல்வதை ஆன்மீகம் வற்புறுத்துகிறது. அப்படிப் பழகி அதுவும் ஒரு பழக்கமாகி விடலாம் என்பதால் வெறுமனே இருப்பதே இதில் ஆகச் சிறந்ததாக ஆகிறது. வெறுமனே இருப்பதும் ஒரு பழக்கமன்று, ஒரு செயலுமன்று என்பதை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது முக்கியம்.
            எதாவது இதில் செய்துதான் ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இதில் ஆக்கப்பூர்வமாகச் சொல்லப்பட்டதுதான் தியானம். இதை புரிந்து உள்வாங்கிக் கொண்டவர்கள் அதையும் செய்ய வேண்டியதில்லை. புரிந்த உள்வாங்குவதற்கு தியானம் உதவலாம். அதுவும் அதற்கான செயலோ, பழக்க முறையோ இல்லை புரிந்து கொள்வது முக்கியம். இல்லாது போனால் தியானத்தை நீங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அதற்கும் ஒரு முடிவு இருக்காது. ஒரு யோகி என்பவர் அந்த தியானத்தை நிறுத்திக் கொண்டவர்தான் என்று புரிய இதனால் உங்களுக்கு நாளாகி விடும்.
            மேலும் இது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவோ, புரிதலோ தேவையிருப்பின் இது சார்ந்து இதே வலைப்பூவில் முன்பு எழுதியிருக்கும் பதிவுகள் உதவலாம். அவைகள் ஒரு உதவிக்கான வரைபடமே தவிர அதுவே உதவி அன்று. உங்களுக்கான உதவியை இந்த விசயத்தில் நீங்கள்தான் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அது என்ன உதவி என்றால் உங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை என்பதும், உங்கள் மனதிருப்திக்காக நீங்களோ, மற்றவர்களோ எதையும் செய்ய வேண்டியதில்லை என்பதுமே. எதையும் செய்ய வேண்டாம் என்ற இந்த உபதேசம் எவ்வளவு இனிமையானது என்றால் அதைச் செய்வது எவ்வளவு கடினம் என்பதை உணரும் போதுதான் புரியும். எதையும் செய்து பழக்கப்பட்ட மனநிலைக்கு எதையாவது செய்யாமல் இருப்பது என்பதும் செய்து பழக்கப்பட வேண்டியதோ என்று விளங்கிக் கொள்வதுதாம் அதன் வினோதம். இந்த வினோதங்களைத் கடந்துதாம் நீங்கள் அந்த வினோதத்தை அடைய முடியும். ஒரு சிலருக்கு நொடியில் நிகழ்ந்து விடும் இந்த வினோதம், ஒரு சிலருக்கு வருடக் கணக்கை எடுத்துக் கொள்ளும். எப்படியாயினும் இதை உணர்ந்த பின்னே உங்கள் மரணம் நிகழும். மரணத்திற்கு முன்பே இதை உணர்ந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
*****

30 Aug 2019

ஒத்தக் கதவுக்கு ரெட்ட தாழ்ப்பாள்



செய்யு - 192
            ஓர் ரகசியப் பொட்டி போல இருக்கு இப்போ அந்த டாய்லெட்டு. கதவைத் திறந்தா என்னென்னமோ ரகசியங்கள் எல்லாம் வந்து விழுமோ யாருக்குத் தெரியும். கதவைத் திறக்கச் சொல்லியும் திறக்க மாட்டேங்றாளே சுந்தரி, ஓங்கி ஒதைச்சும் அசைஞ்சு கொடுக்க மாட்டேங்றாளே இந்த சுந்தரி அப்படிங்ற கோபம் சித்துவீரனுக்கு இப்போ அதிகமாயிட்டே போவுது.
            "ஏம்டி அவ்சாரி நாயே! உள்ள யாரடி வெச்சிருக்கே? கதவத் தொறடி தே.... சிறுக்கி." அப்பிடின்னு வாய்ல வந்தபடியெல்லாம் அவளுக்கு மட்டும் கேட்குற மாரி பல்ல கடிச்சிகிட்டு சத்தம் போடுறான் சித்துவீரன். சத்தம் அதிகமாயி வெளியில கேட்டு அக்கம் பக்கத்துல யாரும் எழுந்திரிச்சி வந்துட்டா அது வேற மானக்கேடா போயிடுமேன்னு ஒரு யோசனையும் அவங்கிட்ட இருக்கு.
            அதுக்கு ஏத்த மாதிரி "இந்த வூட்டுல நிம்மதியா டாய்லெட்டு போவ முடியுதா? இப்பிடிச் சந்தேகம் பிடிச்ச சனியங்கிட்ட சிக்கி சீக்குப்படணும்னு எம் தலயில எழுதியிருக்கு!" என்று பதிலுக்கு சுந்தரியும் பல்லக் கடிச்சிகிட்டு அவனுக்கு கேட்குற அளவுக்கு அவளும் சத்தம் போடுறா.
            "ஒன்னய என்னத்தாம் நாக்கப் பிடுங்கிகிட்டு நாண்டுக்குற மாரி கேட்டாலும் ஒனக்கெல்லாம் ஒண்ணும் ஏறாது.எல்லாத்தியும் உதுத்துட்ட நாடுமாறிதானே நீயி. ஏய் கண்டார...நீயெல்லாம் எதுக்குடி இந்த நாத்த ஒடம்ப வெச்சிகிட்டு உசுரோட இருக்கே?" என்று அவன் போடும் சத்தம் கொல்லைப் பக்கத்துல ஓடிக் கிடக்குற சாக்கடையை விட அதிகமா நாறுது.
            இவன் போடுற சத்தத்த ஒரு கட்டத்துல சுந்தரியால பொறுக்க முடியல.
            "இந்த நாத்த ஒடம்புக்குதாம்டா நீயி பாக்குக்கோட்டை வந்து நாக்கத் தொங்க போட்டுகிட்டு நின்னே. ஏம்டா பாக்குறதுக்க நாம்ம ஒம்ம பொண்ணு மாரிதாம்டா இருக்கேம்? பொண்ணு மாரி இருக்குற நம்மள அப்பங்காரம் மாரி இருக்கற நீயி கட்டிக்கலாமாடா?" என்கிறது சுந்தரி.
            இப்படிச் சுந்தரி பேசும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல சித்துவீரன். "ஏய் மானங்கெட்ட சிறுக்கி! ஒனக்குத் தனியா வூடு வாங்கிக் கொடுத்து பொங்கித் திங்றதுக்கு சம்பாதிச்சிப் போட்டா... அரிப்பெடுத்துப் போயி ஊரு மேய்ஞ்சிட்டுத் திரிவியாடி சொரி நாயே!" அப்படிங்றான் சித்துவீரன்.
             "போடா பொட்டப் பயலே! நீயென்ன ஒழுங்கா சொகம் பண்ணிருந்தா நாம்ம ஏம்டா இன்னொருத்தங்கிட்டப் போறேம்? ஒரு பத்து செகண்டு ஒன்னால் ஒழுங்கா செய்ய முடியுமாடா புழுத்திப் பயலே! ஊருல வந்து சோன்னேம்னா வெச்சிக்க ஒன்னய ஆம்பளன்னு ஒரு பயலும் மதிக்க மாட்டாம். நீயெல்லாம் ஏம்டா மீசய முறுக்கிகிட்டு ஆம்பளன்னு திரியுறே? போடா புடவையைச் சுத்திகிட்டு எவனையாவது கட்டிகிட்டு சோறு ஆக்கிப் போடுறா ஒம்போது!" அப்படின்னு சுந்தரி சொன்னதும் சித்துவீரனுக்கு ஆத்திரம்னா ஆத்திரம் பொங்கிகிட்டு வருது. இப்போ அதுக்கு மேல அவனுக்கு எப்படிப் பேசுறதுன்னு புரியல. இந்த அளவுக்கு எறங்கி அவ்வே பேசுவான்னு அவன் கொஞ்சம் கூட நினைக்கல. ஒடம்பெல்லாம் அப்படியே துடிக்குது. துடிக்குதா? நடுங்குதா?ன்னா அது வேற சரியா புரியல.
            இந்தச் சமூகத்துல ஒரு பொம்பள ஆம்பளய இந்த அளவுக்கு எறங்கிப் பேசிட்டா அவனோட நிலைமை சிரமம்தான். பேர்ல இருக்குற வீரம் இப்போ சித்துவீரனுக்கு வார்த்தையில வர மாட்டேன்னு அடம் பிடிக்கிது. அந்த இயலாமையில வீட்டுக்குள்ள ஓடிப் போயி ஒரு அரிவாள எடுத்து வந்து கண்டம் துண்டமா வெட்டிப் போட்டுலாமான்னு நினைக்கிறான். இல்ல கதவத் தொறந்துகிட்டு வெளியில இழுத்துப் போட்டு அந்தப் பயலயும், அவளையும் சாத்து சாத்தலாமான்னும் யோசிக்கிறான். அவனால ஒரு முடிவுக்கு வர முடியல. வர்ற கோபத்துக்கு தரையைப் போட்டு ஓங்கி ஓங்கி உதைக்கிறான். டக்குன்னு டாய்லெட்டோ வெளித்தாழ்ப்பாள போட்டுட்டு, "இருடி எவ்வளவு நேரந்தான் உள்ள இருப்பேன்னு பாக்கிறேம்!" என்று சத்தம் கொடுக்கிறான் சித்துவீரன். அவன் வெளித்தாழ்ப்பாளைப் போடும் கீறிச்சென்ற  சத்தம் உள்ளுக்குள் அவளுக்கும் கேட்கிறது.
            இங்க கிராமங்களில் டாய்லெட்டு கதவுக்கு உள்பக்கம், வெளிப்பக்கம் என ரெண்டு பக்கமும் தாழ்ப்பாள் போட்டு வைத்திருப்பார்கள். டாய்லெட்டுக்கு உள்ளே போனால் டாய்லெட்டை உள்பக்கமாக பூட்டிக் கொள்ள உள்தாழ்ப்பாளும், மற்ற நேரங்களில் திறந்துக் கெடக்கும் டாய்லெட்டுக்குள் நாய் போய் விடக் கூடாது என்பதற்காக வெளித்தாழ்ப்பாளும் போட்டு வைத்திருப்பார்கள். அதாவது மனுஷன் போற டாய்லெட்டுக்குள் நாய் போய் விடக் கூடாதுன்னு அப்படி ஓர் ஏற்பாடு.
            "அடச்சீ! பொட்டச்சி வெளிக்கிப் போறதப் பாக்கணும்னு நெனைக்கிறீயேடா மானங்கெட்டப் பயலே! நீயெல்லாம் ஒரு அப்பனுக்குப் பெறந்தியா? நாலஞ்சு அப்பனுக்குப் பெறந்தியா? யில்ல பீய்க்குப் பொறந்தீயா? இப்பிடி டாய்லெட்டுக்குள்ள வெச்சிப் பூட்டுறீயே நீயெல்லாம் ஆம்பளையாடா?" என்கிறது சுந்தரி.
            "வர்ற ஆத்திரத்துக்கு முண்டச்சி ஒன்னய அப்படியே மண்ணெண்ணெயை ஊத்தி எரிச்சிப் புடுவேம்டி!" என்கிறான் சித்துவீரன்.
            "இப்போ நீயி கதவுத் தாப்பாள தொறந்து விட்டுட்டு வூட்டுக்குள்ளார போவல அப்படியே அம்மணக் கட்டய வெளில வருவேம் பாத்துக்க!" என்கிறது சுந்தரி.
            "வா! அப்பதாம் ஒம் பவுசுக்கட்ட ஊரு ஒலகத்துக்குத் தெரியும்!"
            "கட்டுன பொண்டாட்டிய ஊருக்கெல்லாம் காட்ட நெனைக்கிறீயேடா மாமா பயலே!"
            இப்படி ரண்டு பேரும் மாத்தி மாத்திப் பேசிட்டே இருக்காங்க. இடையில கொஞ்ச நேரம் அமைதி நிலவும். மறுபடியும் பேச்சு ஆரம்பிக்கும். இப்படியே போயிட்டு இருந்ததுல கெழக்குல சூரியன் தலையை எட்டிப் பார்க்கிறான் என்னடா இன்னிக்கு விடியக்காலயலேயே நாராசமா சத்தம் வந்துகிட்டு இருக்குதுன்னு.
            "ச்சீய்! கதவத் தொறடா பொட்ட! இஞ்ஞ நாம்ம தாழ்ப்பாள திறக்கிறேம்!" என்று சுந்தரி உள் தாழ்ப்பாளை விலக்குகிறது.
            "ஊரு மேயுற சிறுக்கிக்குக் கொழப்பப் பாரு! வாடி வெளியில மொதல்ல. நீ வெச்சிருக்குற மொகரக் கட்டைய, அந்தக் கொடுக்க நாமளும் பாக்கணும்!" என்று சித்துவீரனும் வெளித்தாழ்ப்பாளை விலக்குகிறான்.
            கதவைத் திறந்ததும் சித்துவீரனைப் போலவே ஒல்லியான கருப்பான கரிக்கட்டையைப் போன்ற உருவம் டாய்லெட்டை விட்டு வெளியே ஓடி வேலியை லாவகமாக நகர்த்தி வைத்து விட்டு வேக வேகமாக ஓடுகிறது.
            இப்போ சித்துவீரன் சுந்தரியை இழுத்துப் போட்டு அடி அடியென அடிக்கிறான். சுந்தரியைக் கீழே இழுத்துப் போட்டு மிதி மிதியென மதிக்கிறான். கொல்லைப் பக்கத்தில் அடுக்கி வைத்திருக்கும் வெறகுக் கட்டை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு சாத்து சாத்து என சாத்துகிறான். அடிக்க அடிக்க அவனது ஆத்திரம் அதிமாயிட்டே போகுதே தவிர குறைஞ்ச பாடில்ல. ஆத்திரத்தோட குணம் அதுதான். திட்டுனா குறைஞ்சிடும், அடிச்சா குறைஞ்சிடும்னு நெனைச்சு ஆரம்பிச்சா... திட்டத் திட்ட அது இன்னும் அதிகமாவும். அடிக்க அடிக்க சொல்லவே வேணாம், அது கொலை பண்ணுற அளவுக்கு அதிகமாவும். அவன் அடிக்கிற அடியைப் பார்க்கிறப்ப அவனே சுந்தரியை அடிச்சக் கொன்னுடுவான் போலருக்கு. அவ்வளவு அடிக்கும் சுந்தரிகிட்டேயிருந்து ஒரு சின்ன சத்தம் வரணுமே! ம்ஹூம் வரல!
            அடிச்சு அடிச்சு அவனும் கை கால் ஓய்ஞ்சு களைச்சுப் போறான். ஒடம்புலயோ, முகத்துலயோ எந்தக் களைப்பும் தெரியாத அளவுக்கு எழுந்துப் போறா சுந்தரி இப்போ. உடம்பெல்லாம் ரத்தக் காயமா இருக்கு. முகமெல்லாம் ரத்தமா வழியுது. வேற யார இருந்தாலும் இவ்வளவு அடிய வாங்கிட்டு உசுரோட இருக்குறது சிரமந்தான். இதைப் பாக்கிறப்ப சித்துவீரனுக்கு இன்னும் ஆத்திரம் தாங்கல. ஆனா அடிக்கவும் ஒடம்புல தெம்பு இல்ல.
            "இப்டி ஒரு வாழ்க்க வாழுறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்!" என்று  சொல்லிவிட்டு "த்துப்பூ!" என்று காறித் துப்புகிறான் சித்துவீரன்.
            "ஏம் நீயுந்தாம் இப்பிடி ஒண்ண பாத்துப்புட்டு உசுரோட இருக்கே? நீயுந்தாம் நாண்டுகிட்டுச் சாவலாம்டா நாதாரிப் பயலே!" என்று அந்த நிலையிலும் ஒரு மொறைப்பு மொறைச்சுகிட்டு சொல்லிட்டு வூட்டுக்குள்ளப் போவுது சுந்தரி.
            "எப்படி இந்தப் பாவிப்பய மவன் பாக்குக்கோட்டையிலந்து இஞ்ஞ வந்திருப்பாம்! அதுவும் அந்த நேரத்துல!" அப்பிடின்னு இப்போ யோசனை ஓடுது சித்துவீரனுக்கு. வடவாதி என்ன நெனைச்ச நேரத்துல வந்துட்டுப் போறதுக்கு ஏகப்பட்ட பஸ்ஸூ ஓடற டவுனா என்ன! அதெச் சொல்லப் போனா சர்க்கரை ஆலை இருந்த ஊருக்கு இவ்ளோ பஸ்ஸூதான் ஓடுனாச்சுன்னு நீங்க தலயில அடிச்சீப்பீங்க! ஊருதான் சர்க்கரை ஆலை இருந்த ஊரு. இந்த ஊருல அப்போ ஒரு ஹை ஸ்கூலு கிடையாது. அங்கேயிருந்து அஞ்சாறு கிலோ மீட்டரு தள்ளிக் கிழக்கால மணமங்கலத்துலதான் ஹை ஸ்கூலு இருந்துச்சு. இந்த ஊருல ஸ்கூலு கட்டுனா அவனவனும் படிச்சிப்புட்டு சர்க்கரை ஆலையில வேலை பாக்குறதுக்கு ரொம்ப கூலி கேட்பான்னு சர்க்கரையை ஆலையைக் கட்டுனவங்க பள்ளிக்கூடத்தைத் திருவாரூரு டவுன்ல போயி கட்டிக்கிட்டாங்க. இந்த ஊருலேந்து அவனவனும் அடிச்சு பிடிச்சுகிட்டு அங்கப் போயி எப்படிப் படிப்பான்னு அவங்களுக்கு ஒரு நெனைப்பு. அதுக்கு ஏத்த மாதிரி இந்தச் சுத்துப்பட்டியில இருந்தவனுங்களும் கரும்பு வெட்டுறது, அதைக் கட்டு கட்டறது, அதைத் தூக்கிப் போடுறது, பேக்டரியில மூட்டைத் தூக்குறதுன்னு அப்படியே காலத்தை ஓட்டிட்டானுங்க.
*****

சுத்தம் சோறு போடும் என்பதன் உண்மைப் பொருள்



            "சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. சுத்தமாக இருந்தால் சோற்றைப் போட்டுத் உண்ணலாம். இல்லாது போனால் அந்த அசுத்தம் தரும் நோயில் கஞ்சியைக் குடித்துதான் உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டி வரும். சுத்தத்துக்கும் சோற்றுக்கும் உள்ள தொடர்பு இது. அந்தக் காலத்தில் அப்படித்தான் கஞ்சி என்பது மருந்து ஆகாரம் மற்றும் பத்திய ஆகாரம். பெரும்பான்மையான நோய்கள் அசுத்தத்தோடு தொடர்புடையது என்பது தொடர்ந்து வரும் ஒரு வகை பாரம்பரிய மருத்துவ அறிவு.
            சுத்தமாக வைத்திருப்பதற்கு ஒரு மெனக்கெடல் தேவையாக இருக்கிறது. வீடு, வாசல் இவைகளைப் பெண்கள் காலையும் மாலையும் கூட்டிப் பெருக்குவதன் மூலம் ஒரு சுத்தத்தை உண்டாக்கி விடுகிறார்கள். அவர்களே சத்தம் போட்டும் சண்டை போட்டும் குளிக்க வைத்தும், பல் துலக்க வைத்தும், நகங்களை வெட்ட வைத்தும், துணி மணிகளைத் துவைத்துப் போட வைத்தும் ஒரு வித சுத்த ஒழுங்கை உண்டு பண்ணி விடுகிறார்கள்.
            சுத்தம் என்பது அத்தோடு நின்று விடுகின்ற ஒன்றா என்றால் அதுதான் இல்லை. நாம் பயன்படுத்துகின்ற அத்தனைப் பொருட்களோடு அது தொடர்புடையதாக இருப்பதுதான் புதிய சிக்கலை உண்டு பண்ணுகிறது. நாம் அப்படிப் பயன்படுத்தும் அத்தனைப் பொருட்களையும் சுத்தம் பண்ண ஆரம்பித்தால் வாழ்நாளின் அனைத்து நாட்களும் அதிலே செலவாகிப் போகும்.
            வீட்டிலே மேலே சுழலும் மின்விசிறியை ஓர் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் அதில் பத்தை பத்தையாக அழுக்கு அப்படி ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வளவு அழுக்கோடு அது சுழன்று காற்றை விசிறியடிப்பதுதான் என்னைக் கேட்டால் உலகின் ஒன்பதாவது அதிசயம்.
            வீட்டில் கார் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அதில் படிந்திருக்கும் அழுக்கில் வித விதமான நவீன ஓவியங்களை வரைந்து பார்த்து விடலாம். இதற்குப் பயந்து கொண்டே கார் வாங்காமல் இருக்கும் ஆசாமிகளில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.
            குறிப்பாக இரு சக்கர வாகனம் இருக்கிறதே அதை நான் துடைப்பதே இல்லை. ஏறி உட்கார்ந்து இறங்குவதில் ஒரு வாறாக அதன் இருக்கை மற்றும் ஆடைகள் படும் இடத்தில் அந்த இடங்கள் சுத்தமாகி விடுகின்றன. மற்ற இடங்களைப் பார்த்தால் வாந்திதான் எடுக்க வேண்டும் என்பதால் நான் பார்ப்பது இல்லை. வாகனத்தை எடுத்தால் சாலையைப் பார்த்து ஓட்டுவதோடு சரி. வண்டியைச் சுற்றி அதிகம் பார்ப்பதில்லை. குறிப்பாக நண்பர்கள் குழாம் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தாமல் நீண்ட தூரத்துக்கு முன்பே நிறுத்தி விட்டு நடந்து சென்றுதான் அவர்களைச் சந்திக்கச் செல்கிறேன். வண்டியில் வந்தேன் என்று தெரிந்தால் நான் வண்டி வைத்திருக்கும் சோபையைப் பார்ப்பதற்கென்றே கண்காட்சியில் கூடி விடுவதை விட போல கூடி கமெண்ட்டுகள் எனும் கருத்துரைகளைக் காற்று மண்டலத்தில் கலந்து விடுகிறார்கள். அது போன்ற நேரங்களில் துடைப்பதும் கழுவுவதும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.
            வண்டித் தூய்மையைப் பொருத்தமட்டில் இதற்காக ஒவ்வொரு மழையைத்தான் நான் நம்பிப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். மழை பெய்தால் போதும் வண்டியை மழையில் நிறுத்தி விட்டு, நான் ஒதுங்கிக் கொள்வது. வண்டி நனைந்தால் அதற்கு ஜலதோஷம் பிடிக்காது. நாம் நனைந்தால் அப்படியா? அதனால் வண்டிக்கு மட்டும் மழையை ரசிக்கும், மழையில் நனையும் பாக்கியத்தைத் தந்து விட்டு ஒதுங்கிக் கொள்வது. மழை நின்ற பின்புதான் எடுத்து உள்ளே போடுவது. வண்டியை அப்போது பார்க்க வேண்டுமே புத்தம் புதிதாக வாங்கியது போல பளபளவென இருக்கும்.
            இதற்கு நேர்மாறாக நம் கோசிகாமணி நண்பர். வண்டியைப் பெயிண்டு போகும் அளவுக்கு துடைத்து பளபளவென வைத்திருக்கிறார். இதற்காகவே காலையில் ஒரு மணி நேரம் ஒதுக்குவதாகச் சொல்கிறார். வேட்டியை அவிழ்த்து விட்டு பட்டாப்பட்டி கால்சட்டையோடும், கை வைத்த பனியனோடும் வீட்டில் சேர்ந்திருக்கும் பழந்துணிகளையெல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு வண்டியின் ஒவ்வொரு உதிரி பாகத்திலும் துணியை விட்டு முன்னே பின்னே இழுத்து, தேய்த்துத் துடைத்து அவர் பண்ணுகிற வேலையைப் பார்த்தால் ஒரு சாகசக்காரனின் வேலையைப் போல இருக்கும். முடிவில் அவர் வியர்த்து விறுவிறுத்து நிற்கும் கோலத்தைப் பார்க்க வேண்டுமே! இதுதான் தான் செய்யும் உடற்பயிற்சி என்று வேறு முடிவில் பீத்திக் கொள்கிறார். இதனாலேயே அவர் வீட்டிற்குக் காலையில் போகும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டு வருடக் கணக்காகி விட்டது.
            வீட்டில் இருக்கும் அலமாரிகள், நிலைப்பேழைகள், பாத்திரப் பண்டங்கள் இவைகளில் படியும் தூசியையும் அழுக்கையும் சொல்லி மாளாது. ஆயுத பூசை, புரட்டாசி விரதம், போகிப் பொங்கல், சித்திரையின் தொடக்க நாள் என்று வந்தால் அந்தப் பொருட்களையெல்லாம் எடுத்துப் போட்டு இடுப்பெலும்பை, முதுகெலும்பை முறித்து விடுகிறார்கள் மற்றும் கழற்றி விடுகிறார்கள்.
            தொலைக்காட்சி, மாவரைக்கும் இயந்திரம், சட்டினி அரைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் எந்திரம், கணினி இவைகளும் இப்போது இந்தத் தூய்மை செய்யும் பட்டியலில் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
            குறிப்பாகக் கணினியைப் பற்றிச் சொல்வதென்றால் நண்பர்கள்தான் அதைப் பார்க்கும் போது பழைய துணியை எடுத்து தலையில் அடித்துக் கொண்டாவது சுத்தம் செய்து தருகிறார்கள். இப்படி அழுக்காய் வைத்துக் கொள்வதில் அப்படி என்ன ஆனந்தம் என்று கேவலப்படுத்துவதைப் போல ஒரு கேள்வியையும் கேட்டு வைத்துப் போகிறார்கள்.
            செல்பேசியைப் பற்றிச் சொல்வதற்கில்லை. அதில் போட்டிருக்கும் உறையில் அரை கிலோ அழுக்காவது பற்றியிருக்கும். அதை தண்ணீரில் தூக்கிப் போட்டு டிடர்ஜெண்டில் போட்டு சுத்தம் செய்யக் கூடாது என்று அதற்கென்று சில முறைகளைச் சொல்கிறார்கள். அதெல்லாம் நமக்கு ஒத்து வருமா என்ன?
            நாம் பயன்படுத்தும் பணத்தைப் பற்றி ஒரு கட்டுரை படித்ததில் உலகத்தில் அதிக கிருமிகள் இருக்கும் பொருளில் முதன்மையான இடத்தில் அதுதான் இருப்பதைத் தெரிந்து நான் அதிர்ச்சியடையவில்லை.  இந்தப் பணத்தை நான் கையால் பயன்படுத்தியது குறைவு. வீட்டுச் செலவு என்றால் வீட்டில் இருப்பவர்கள் அதைச் செய்கிறார்கள். வெளியில் எங்கேயாவது சென்றால் மனைவி பணச் செலவைப் பார்த்துக் கொள்வார். ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் எண்ணத் தெரியாமல் அறுபது ரூபாயாகக் கொடுக்கும் ஆள் என்பதால் நம்மை நம்பிப் பணத்தைக் கொடுப்பதற்குப் பொதுவாக எல்லாரும் யோசிப்பதால் அதிலிருந்து தப்பித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களோடு சென்றால் அவர்கள்தான் முழுச் செலவையும் செய்கிறார்கள். ஒரு பாதுகாப்புக்காக பையில் வழக்கமாக வைத்திருக்கும் ஒரு நூறு ரூபாய் நோட்டும், ஐநூறு ரூபாய் நோட்டும் அப்படியே காலம் காலமாக இருக்கின்றன. அதை நான் எடுத்து நீட்டுவதற்குள் நண்பர்கள் எடுத்து நீட்டி விடுகிறார்கள் என்பதுதான் அதன் பின்னுள்ள விசயம். 
            நிறையப் பொருட்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதன் பின்னணியில் 'சுத்தம் சோறு‍ போடும்' என்ற மொழியே காரணமாக இருக்கலாம். சோறு என்பது நமக்குத்தானே தேவை. ஆதலால் நாம் சுத்தமாக இருந்து நமக்குச் சோறு கிடைத்தால் போதும். அந்தப் பொருட்களுக்கு என்ன சோறு‍ தேவையா? ஆகவே அவை அசுத்தமாக இருந்து அதற்கு சோறு கிடைக்காவிட்டாலும்பரவாயில்லை என்பது பிற பொருள் ஓம்பாத ஒரு வகை அலட்சிய மனப்பான்மைதான். அதற்காக அந்தப் பொருட்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்.
*****

29 Aug 2019

திறக்காத கதவுகள்



செய்யு - 191
            இந்தச் செல்போன்ல ஒரு சிக்கல் என்னான்ன நாம யாருக்குப் போன் பண்ணோம், யாரு நமக்குப் போன் பண்ணா அப்படிங்கற எல்லா விவரத்தையும் அதுலேந்து எடுக்க முடியறதுதாம். டெலிபோன்ல இந்தச் சிக்கல்லாம் இல்ல. அதுல லாஸ்ட் டயலத் தவிர அப்போ வேற ஆப்ஷன் கெடையாது பாருங்க.
            சித்துவீரன் வெளிநாடுல்லாம் போயி அங்க செல்போனையெல்லாம் பார்த்து, பயன்படுத்திகிட்ட இருந்த காரணத்தால அதுல பூந்து விளையாடுறான். அதை நோண்டி நோண்டிப் பார்க்கிறான். வெளிநாட்டுலேர்ந்து ஊருக்கு வர்றப்ப ஒரு செல்போனு வாங்கிட்டு வரணும்னு வேற நெனைச்சிருந்தான். அதுக்குள்ள அபார்ஷன் ஆயிடுச்சிங்ற துரதிர்ஷ்டமான சேதி வந்ததுல எப்படியோ ஊரு போயிச் சேர்ந்து சுந்தரிய பார்த்தா போதும்னு குழம்பிப் போயி ஊரு வந்து சேர்ந்துட்டான். 
            இந்தச் செல்போனு பரவலான காலத்துல அதுல ஒருத்தரோட நம்பர எடுக்குறதுக்கும், அந்த நம்பருக்குப் போன் பண்றதுக்கும் நம்ம ஆளுங்க பட்ட கஷ்டம் இருக்கே! அதெ வெளியில சொல்ல முடியாது. ஒரு காலம் வரைக்கும் பாத்தீங்கன்னா... இதுக்குன்னே செல்போன்ல நல்லா போன் பண்ண தெரிஞ்சா ஆளா பாத்து வெச்சிகிட்டு அவனெ தாஜா பண்ணிகிட்டு அலைஞ்சதுங்க நம்ம கிராமத்து சனங்க. சித்துவீரனுக்கு அந்தக் கஷ்டம் இல்லாமப் போயிடுச்சி. சித்துவீரன் அந்தச் செல்போன போட்டு நோண்டி அதுல போன் போன நம்பரு, போன் வந்த நம்பருன்னு  இருந்த நம்பரையெல்லாம் குறிச்சிக்கிறான். குறிச்சிட்டுப் பார்த்தா எல்லா நம்பரும் ஒரே நம்பருதான். அதுலேந்து போன் போன நம்பர், அந்தச் செல்போனுக்கு போன் வந்த நம்பர் எல்லாம் ஒரே நம்பரா இருக்குது. அந்த நம்பர் யாரோட நம்பரா இருக்குங்ற யோசனை அவனோட மண்டையைப் போட்டுக் குழப்புது. எதுவும் தெரியாத மாதிரி எல்லாம் எப்படி இருந்துச்சோ அப்படியே வெச்சிட்டு சித்துவீரன் அந்த நம்பரோட போறான். அது யாரோட நம்பர்னு அவனுக்குத் தெரிஞ்ச ஆளுங்கள வெச்சி விசாரிச்சுப் பார்க்குறான். இதுக்குன்னு ரெண்டு நாளு திருவாரூருக்கும், தஞ்சாவூருக்கும் யாருக்கும் தெரியாம அலையா அலைஞ்சி ஆளுங்களப் பிடிச்சிக் கண்டுபிடிக்கிறான். அந்த நம்பர் பாக்குக்கோட்டை ஆதிகேசவனோட நம்பருன்னு தெரிய வருது. யாரு இந்த பாக்குக்கோட்டை ஆதிகேசவன்னு இப்போ அவனுக்கு யோசனைப் போவுது! யாருக்கும் தெரியாம பாக்குக்கோட்டைப் போயி அதையும் விசாரிச்சுப்புடணும்னு மனசுல ஒரு முடிவு பண்ணிக்கிறான்.
            இப்போ சித்துவீரன் வீட்டை விட்டுட்டு எங்கயேும் போறதில்ல. எந்நேரமும் வீட்டுலதான் படுக்கை. எப்போ பார்த்தாலும் பாயையும் தலையணையையும் எடுத்துப் போட்டுகிட்டு தூங்குற மாதிரி ஆக்சன் விட்டுகிட்டு இருக்கான். இது சரியா தெரியாம சுந்தரி ஒரு மத்தியானத்துல ஆதிகேசவனுக்குப் போனைப் போட்டு ராத்திரி மூணு மணி வாக்குல வான்னு ரூமுக்குள்ள இருந்து போன்ல பேசுறது தூங்குற மாதிரி நடிச்சிகிட்டு இருந்த சித்துவீரனோட காதுக்குள்ள கேட்டுடுது. ஏதோ தப்பு நடந்திருக்கு, அது இப்பயும் நடந்துகிட்டு இருக்குங்ற விசயம் அவனுக்குப் புரிய ஆரம்பிக்குது. இன்னிக்கு ராத்திரி முழுக்க தூங்கக் கூடாதுன்னு அவன் முடிவு பண்ணிக்கிறான். அவனுக்கு சுந்தரி மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு.
            ராத்திரி தூங்குற மாதிரி இவன் படுத்துருக்கான். இவனுக்குப் பக்கத்துல சுந்தரி தூங்கிகிட்டு இருக்கு. திடீர் திடீர்னு எழுந்திருச்சி சுந்தரிய பார்க்குறான். அது நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கு. உண்மையில அதுவும் தூங்காமத்தான் படுத்திருக்கு. தூங்குறது போல நடிக்கிறதுல அது இவனெ விட கெட்டிக்காரியா இருக்குது. புருஷங்காரன் திடீர் திடீர்னு இப்படி எழுந்திரிச்சிப் பார்க்கிறானேன்னு அதுக்கும் யோசனையா இருக்குது. இப்படில்லாம் எழுந்திருக்கிற ஆளு அவன் கிடையாது. படுத்தான்னா அப்படியே புளி மூட்டைக் கணக்கா தூங்குவான் சித்துவீரன். இடியே விழுந்தாலும் அவனுக்குத் தெரியாது. அவனா இப்படி முழிப்புத் தட்டி அடிக்கடி எழுந்திரிச்சிப் பாக்கிறாங்ற யோசனைதான் சுந்தரிக்கு. இப்படி ஒருத்தர் மாத்தி யோசனை பண்ணிகிட்டே ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் அசந்து தூங்கிடுறாங்க. ராத்திரி ஒரு மணிக்கு மேல வர்ற தூக்கம் இருக்குப் பாருங்க அது மனுஷன் தன்னை மறந்து தூங்குற தூக்கம். எழுப்புனாலும் எழுந்திரிக்க முடியாது. அதுதான் மனுஷன் தூங்குறதுலயே நல்ல தூக்கம். அந்தத் தூக்கம் அப்படியே அதிகாலை நாலு, அஞ்சு மணி வரைக்கும் நீடிக்கும். ஒரு வீடு ஏறிக் குதிச்சி கள்ளத்தனம் பண்றதுக்கு அதுதான் தோதான நேரம். கள்ளத்தனம்ங்றது மனுஷன ஏமாத்திப் பண்ற வேலைதானே. அதை மனுஷன் நல்லா முழிச்சிகிட்டு இருக்கிறப்பவா செய்ய முடியும்? மனுஷன் அசந்து இருக்குற நேரந்தான் அதுக்குத் தோது.
            ராத்திரி ரெண்டு மணிக்கு மேல சுந்தரிக்கு முழிப்புத் தட்டுது. வீட்டுல மாடு கண்ணு வெச்சிருக்கவங்களுக்கு அப்படி முழிப்புத் தட்டுறது உண்டு. மாடுகள எழுந்திரிச்சிப் பார்க்கணுமேன்னு அது பழக்கத்துல அப்படியே வந்திடும். இங்க சீத்துவீரன் வீட்டுல எங்க மாடு இருக்கு? மாடு இல்லாட்டியும் அந்த நேரத்துல சுந்தரி முழிச்சி பழக்கமா இருக்குறதால அதால சரியா எழுந்திரிக்க முடியுது. அப்படியே எழுந்திரிச்சி அது சித்துவீரனப் பார்க்குது. அவன் நல்லா கொறட்டை வுட்டுத் தூங்குறான். "நல்லா தூங்குடா ராசா தூங்குன்னு!" மனசுக்குள்ள நெனைச்சிகிட்டு சுந்தரி எழுந்திரிச்சி கொல்லைப் பக்கத்து வெளி லைட்டைப் போட்டு விட்டுகிட்டுக் கொல்லைப் பக்கமா வருது. வந்து திறந்த கதவைச் சாத்தி அந்தக் கதவுல அடிச்சி வெச்சி ஆணியில கட்டி வெச்சிருக்குற சின்ன நைலான் கயிறை இழுத்து அப்படியே நிலை மேல இருக்குற ஆணியில ஒரு சின்னக் கட்டா போட்டு மாட்டுது. டக்குன்னு கதவை யாரும் திறந்துட்டு வர முடியாத அளவுக்கு அது ஒரு சின்ன ஏற்பாடு. அப்படியே பக்கத்துல உடைஞ்ச ப்ளாஸ்டிக் வாளிய ஒண்ண தூக்கி வைக்குது.

            பொதுவா கொல்லைப் பக்கத்துக் கதவுக்கு உள் தாழ்ப்பாள்தான் போடுவாங்க. அதுக்கு வெளிப்பக்கத் தாழ்ப்பாளோ, பூட்டு மாட்டுற பேட்லாக்கோ போட மாட்டாங்க. வீட்டைப் பூட்டிட்டுக் கிளம்புறப்ப கொல்லைக் கதவ உள்பக்கத்துல தாழ்ப்பாள் போட்டுட்டா போதாதா? கொல்லைக் கதவை வீட்டுக்குள்ளேர்ந்து திறந்துகிட்டுப் போய்தானே திறக்கப் போறோம்னு அப்படி ஓர் ஏற்பாடு. அதால கொல்லைக் கதவை உள்பக்கத்துக்குச் சாத்தி வைக்கலாமே தவிர அதுக்கு வெளிப்பக்கத்திலேந்து தாழ்ப்பாள் போடுறதோ, பூட்டுப் போடுறதோ முடியாது. அது ஓட்டு வீடுங்றதால தெருப்பக்கத்துக்கும், கொல்லைப் பக்கத்துக்கு ஒத்த கதவா அந்தக் காலத்து முறையில செஞ்சு மாட்டியிருக்காங்க. அந்தக் கதவுகளை எல்லாம் உள்பக்கமாத்தான் திறக்கலாம். பொதுவா நிலையோட இருக்குற கதவுகள் எல்லாம் அப்படித்தான். உள்பக்கமா திறக்கலாம். ஜன்னல் கதவுகளைத்தான் வெளிப்பக்கமா திறக்குற மாதிரி வைப்பாங்க. அதுவும் வூட்டுக்கு முன்னாடி வைக்கிற ஜன்னல் கதவை உள் பக்கம்மா திறக்குற மாதிரி வெச்சிப்பாங்க. அந்தக் காலத்து ஓட்டு வீடுங்க எல்லாம் அப்படித்தான் கதவு திறப்பு இருக்கும். கதவைப் பொருத்த மட்டுல ஒத்தக் கதவாத்தான் இருக்கும். ரெட்டைக் கதவா இருக்காது.
            இப்போ அந்த ஒத்தக் கதவுக்கு வெளியில உடைஞ்ச பிளாஸ்டிக் வாளி ஒண்ணு இருக்குல்ல சட்டுன்னு திறந்துட்டு வெளியில வர்றவங்க காலுல பட்டு தடுமாறி விழுற அளவுக்கு. கதவையும் சட்டுன்னு திறக்க முடியாத அளவுக்கு கதவுக்கும் நிலைக்கும் ஆணி போட்டு நைலான் கயிறு போட்டு கட்டியிருக்கு. சட்டுன்னுக் கதவைத் திறக்க முடியாதே தவிர கொஞ்சம் வேகமாக திறந்தா கொல்லைக் கதவு திறந்துக்கும். அப்படித் திறந்துட்டு ஒரு வேகத்துல வர்றப்ப ப்ளாஸ்டிக் வாளி வாசல்படியிலேர்ந்து உருண்டு கீழே விழுந்துடும். அப்படி விழுறப்ப ஒரு சத்தம் வருமுல்ல. அது ஒரு முன்னெச்சரிக்கைக் குறிப்பா உதவும்னுதான் சுந்தரி அந்த ஏற்பாட்டைப் பண்ணி வெச்சிருக்கு.
            அந்தக் காலத்து ஓட்டு வீடுங்களோட அமைப்பு தரை மட்டத்திலேந்து எப்படியும் ரெண்டு மூணு அடி மேலதான் இருக்கும். வீட்டுக்குள்ள தெரு வாசல்படி வழியா போகணும்னாலும், கொல்லை வாசல் படி வழியா எறங்குணும்னாலும் ரெண்டு படி அல்லது நாலு படி அல்லது ஆறு படின்னு ரெட்டைப் படையிலதான் உசரத்துக்குத் தகுந்தபடி படி வெச்சி கட்டியிருப்பாங்க. அது ஒரு கணக்கு. படி ஏறுறப்ப ஒவ்வொரு படிக்கும் லாபம், நட்டம், லாபம், நட்டம்னு மாத்தி மாத்திச் சொல்லி ஏறுனா கடைசியில வீட்டுக்குள்ள அடி எடுத்து வைக்கிறப்ப லாபம்னு சொல்ற மாதிரி அடி வைக்கணும்னு ஒரு கணக்கு. அந்தக் கணக்குக்கு ரெட்டைப் படையில படி வெச்சத்தான் சரியா இருக்கும். அதால படிகளை ரெட்டைப் படையிலதான் வைப்பாங்க. ஒத்தைப் படையில வைக்க மாட்டாங்க.
            சித்துவீரனோட வாசல்படியும், கொல்லைப்படியும் நாலு படி எண்ணிக்கையில உள்ளது. ஏறுறதா இருந்தாலும், எறங்குறதா இருந்தாலும் நாலு படி ஏறி இறங்கியாகணும்.
            கொல்லைக் கதவுக்கு ஓரளவுக்கு சட்டுன்னு திறக்க முடியாத அளவுக்கு நைலான் கயித்துக் கட்டப் போட்டு வெச்சப் பிறகு சுந்தரி டாய்லெட்டுக்குள்ள நுழையுது.
            வீட்டுக்குள்ள அசந்து தூங்கிகிட்டு இருக்குற சித்துவீரனுக்கு மூணரை மணி வாக்குல மூத்திரம் முட்டிகிட்டு வந்து தூக்கம் கலையுது. தூக்கம் கலைஞ்சுப் பக்கத்துலப் பார்த்தா சுந்தரியக் காணும். ஆகா இவளக் கண்காணிக்கணும்னு முழிச்சிகிட்டு இருக்கணும்னு நெனைச்சு இப்படித் தூங்கிகிட்டேன்னு அவன் தனக்குத் தானே தலையில ரெண்டு அடி அடிச்சுக்கிறான். வேக வேகமா எழுந்திரிச்சி வந்துப் பார்த்தா... கொல்லை லைட்டு எரியுற வெளிச்சம் வீட்டுக்குள்ளேயிருந்து தெரியுது. கொல்லைக் கதவைத் திறக்கப் பார்க்குறான். ஏதோ கொல்லைக் கதவைத் தடுக்குற மாதிரி இருக்கு. அவனுக்கு வர்ற கோபத்துல கதவையே உடைச்சிட்டு வெளியில போவலாமான்னு இருக்கு. அந்த ஆத்திரத்திலயே கதவை பலங் கொண்ட மட்டும் இழுத்துத் திறக்குறான். அவன் இழுத்த இழுப்புல கயிறு படார்னு அறுந்து திறந்துக்குது. அதே ஆத்திரத்தோட வேக வேகமா கொல்லைப் படிகட்டுல போனவனோட காலு பட்டு ப்ளாஸ்டிக் வாளி தட தடன்னு உருண்டு நாலு படியைக் கடந்து விழுவுது. அது ஒரு சின்ன கொல்லைதான். கொல்லையைச் சுத்தி அங்கயும் இங்கயும் பாக்குறான். மூத்திரம் வேற இவனுக்கு முட்டிகிட்டு வருது. வேக வேகமா டாய்லெட்டுப் பக்கம் வந்து பாக்குறான். டாய்லெட்டு உள்பக்கமா தாழ்ப்பாள் போட்டிருக்கு.
            டாய்லெட்டுக் கதவைப் போட்டு படார் படார்னு அடிக்குறான் சித்துவீரன். "யாரு உள்ளே அங்க?" அப்பிடின்னு சத்தம் போடுறான்.
            "ஏம் இப்பிடிப் போட்டு அடிக்கிறீங்க? நாந்தாம்! வவுத்துப் போக்கா இருக்கு. அதாங் உள்ளே உக்காந்திருக்கேம். என்ன வேணும் ஒங்களுக்கு?" அப்பிடிங்குது சுந்தரி.
            "ஒண்ணுக்கு முட்டிகிட்டு வருதுடி! கதவெத் திறந்துட்டு வெளியில வாடி!" அப்பிடிங்றான் சித்துவீரன்.
            "அப்டி ஓரமா போயித் தொலைங்க. இப்பைக்கு வார முடியாது. கொஞ்ச நேரமாகும்!" அப்படிங்குது சுந்தரி.
            "தொலைச்சுக் கட்டிப்புடுவேன் ஒண்ணய. மருவாதியா கதவெத் தெற!" அப்பிடிங்றான் சித்துவீரன்.
            "செத்த நேரம் ச்சும்மா கெடய்யா பேதியில போவ்வே! சொல்றேம்ல!" அப்பிடிங்குது சுந்தரி.
            வர்ற கோபத்துல என்ன செய்யறதுன்னு புரியாம சித்துவீரன் டாய்லெட்டோ கதவ ஓங்கி ஒரு உதை உதைக்கிறான். டாய்லெட்டோட தகரக் கதவுல அவனோட ஒதைப்பட்டு படார்னு சத்தம் கெளம்புது. இன்னொரு ஒதை ஒதைச்சா கதவு கழண்டுகிட்டு விழுந்துடும் போல இருக்கு நெலைமை.
*****


கதைகளின் அரசியல்



            எதையும் கதைகள் மூலமாக சொல்லிக் கேட்ட பரம்பரை நாம். பிறகு புத்தகங்கள், இதழ்கள் என்று கதைகளாகப் படித்துத் தெரிந்து கொண்டோம். அதற்கும் பிற்பாடு திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொண்டோம். காலமாற்றம் சீரியல்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வைத்து, இன்று பேஸ்புக் எனும் முகநூல், வாட்ஸப் எனும் புலனம் அல்லது கட்செவி அஞ்சல், டிவிட்டர் எனும் கீச்சி, யூடியுப் எனும் கணொலிகள் மூலம் தெரிந்து கொள்ள வைத்திருக்கிறது.
            இந்தத் தெரிந்து கொள்ளுதலுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. மனித மனம் அப்படி. அதற்கு எதையாவது தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். தெரிந்து கொள்வதன் மூலமாக விசாலப்பட்டுப் போய்க் கொண்டே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் மனித மனம்.
            இப்படி எதை எதையோ தெரிந்து கொள்ள துடிக்கும் அந்த மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள‍ வேண்டும் என்று சைக்காலஜி எனும் உளவியல் தோன்றியதுதான் அதன் உச்சம். அதை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, அதற்கென்றே மருத்துவ விஞ்ஞானம் தோன்றும் அளவுக்கு அந்தத் துறை வளர்ச்சி அடைந்திருப்பதைப் பார்க்கும் போது ஆரம்ப காலத்து சென்னை ஆயுள் காப்பீட்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தைப் பார்த்து அதிசயித்து நின்றதுதான் ஞாபகம் வருகிறது.
            இப்போது நாம் வந்த திசையிலிருந்து அப்படியே பின்னோக்கிப் போகும் போது நமது கதைகள் எல்லாம் மனவியலை அடிப்படையாகக் கொண்டிருந்ததை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தாத்தா, பாட்டிச் சொன்ன கதைகள் எல்லாம் மனதை என்னவோ செய்து அவர்களைப் போலவே மனதைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா என்று தெரியவில்லை. இப்போது இருக்கும் பக்குவமற்ற, நிதானமற்ற மனிதர்களைப் பார்க்கும் போது அவர்கள் எல்லாம் தாத்தா, பாட்டிகளிடம் கதை கேட்காதவர்களோ என்ற சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. அவர்களெல்லாம் தாத்தா - பாட்டிகளைப் பார்த்தவர்களா என்ற ஐயம் அதை விட தவிர்க்க முடியாதது.
            ஒரு வகையில் இந்தியக் கதைகளின் அடிப்படையே மனோ அமைதிதான். மனதைத்தான் இந்தியக் கதைகள் மிக அதிகமாக அலசுகின்றன. மனதைப் புரிந்து கொள்வதற்காக சந்நியாசம் புகுவதெல்லாம் இந்தத் தேசத்தில்தான் வழமையாக இருந்திருக்கின்றன.
            இந்தத் தேசத்தில் வழங்கிய கதைகள் புராணக் கதைகளாக இருந்த போதிலும் அதில் விமர்சிப்பதற்கான ஓர் இடம் வழங்கப்பட்டிருந்ததே அதன் தனித்தன்மை எனலாம். ஒரு கதை இங்கு இரண்டு விதமாகப் புழங்குவதன் பின்னணியில் அது மனோநிலைக்கேற்ப கதைச் சொல்வதை அனுமதித்திருக்கும் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். கதை என்பதே இங்கு மனநிலையின் ஓட்டம்தான். ஒரே காக்கா - நரி கதையைத் தினம் தினம் சலிக்காமல் கேட்க முடிவதற்கு அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனநிலையில் நின்று சொல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதன் சுதந்திரம்தான் காரணம் என்று நினைத்துப் பார்க்கலாம்.
            ஒரு ஊர்ல... என்று ஆரம்பிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரை, ஒவ்வொரு மனதைக் காட்டிக் கொண்டே செல்கின்றன. ஆரம்பம் ஒன்றாக இருக்கலாம். அது தொட்டுச் செல்லும் பாதை பலதரப்பட்டவை. இங்கு வழங்கப்படும் கதைகள் எல்லாம் கதை சொல்லல் மரபின் தொடர்ச்சிதான். எந்தக் கதையும் இங்கு முடிந்து விடவில்லை. அது சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் இன்னம் பாரதமும், ராமாயணமும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பாரதி பாரதத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து பாஞ்சாலி சபதம் எழுதுகிறார். ராமாயணத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு புதுமைப்பித்தன் சாப விமோசனம் எழுதினார். இன்னும் எழுதுகிறார்கள். எழுதிக் கொண்டே இருப்பார்கள். அதுதான் நிதர்சனம். கதை சொல்லப்படுவதன் தீர்க்க முடியாத சலிப்பு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கதை சற்றேறக்குறைய அநேகமாக ஒன்றாக இருக்கலாம். அது ஒவ்வொருவர் வாழ்விலும் புகுந்து புறப்பட்டு வரும் போது வெவ்வேறு விதமாக ஆகி விடுகிறது. ஒரு புது வண்ணத்தைக் கலந்து கட்டிக் கொண்டு சுழித்துக் கொண்டு ஓடுகிறது.
            நாம் கதை சொல்லியாகவும் இருக்கிறோம். கதை கேட்பவர்களாகவும் இருக்கிறோம். அடிப்படையில் அந்தக் கதை நம் கதை. நமக்கான கதையை நாம் நமக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அந்த மரபின் தொடர்ச்சியாகத்தான் நமது திரைப்படங்களாகட்டும், நெடுந்தொடர்களாகட்டும் நீண்டு கொண்டே இருக்கின்றன. ஒரு போதும் அதன் சுரப்பு தீர்ந்து விடாது. நமது அரசியலையே எடுத்துக் கொள்ளுங்கள். அது நமது கதைச் சொல்லலின் முடிந்து விடாத, முடித்து விட முடியாத ஒரு முடிச்சுதான். அதில் இருக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள் எப்போதும் இருக்கும். அது கதையின் முடிச்சுகள் மற்றும் கதைக்கான சிக்கல்கள். அந்த முடிச்சுகள் அவிழ்வது போல அவிழ்ந்து மிண்டும் முடிச்சு கொள்ளும். அதுதான் கதைகளின் அவிழ்க்க முடியாத ரகசியமும் ரசவாதமும். அதுதானே அரசியல். இதைக் கதைகளின் அரசியல் என்று சொன்னாலும் பிழையிருக்காது.
*****

28 Aug 2019

கொம்பு வெச்ச செல்போனு!



செய்யு - 190
            கதைக் கேட்குறதுன்னா சின்ன புள்ளைங்களிலேந்து பெரியவங்க வரை ஓர் ஆர்வம் இருக்கத்தான் செய்யுது. அந்தக் கதை நம்ம வாழ்க்கையில நடக்காத வரைக்கும், மத்தவங்க வாழ்க்கையில நடந்துகிட்டு இருக்குற வரைக்கும் கதையைக் கேட்குற சுவாரசியம் போயிடாது. எப்போ அந்தக் கதை நம்ம வாழ்க்கையில நடக்க ஆரம்பிக்குதோ அப்போ நீங்க ஒரு கதைச்சொல்லியா ஆயிடுவீங்க. ஆகித்தான் ஆகணும். ஒங்க மனசு வெடிச்சிடாம இருக்க அந்தக் கதையை நீங்க யாருகிட்டயாவது எறக்கி வெச்சுத்தான் ஆகணும். உலகத்துப் பாரத்தைச் சுமந்துடலாம். ஆனா மனசுல இருக்குற கதையோட பாரத்தைச் சுமக்க முடியாது. நீங்க யாருகிட்டேயும் எதையும் சொல்ல வேணாம்னு நெனைச்சாலும் அது உங்களையறியாமல் உங்ககிட்டேயிருந்து அப்பிடி இப்பிடின்னு யாருகிட்டயாவது பேசிகிட்டு இருக்கிறப்ப அதுவா ஓட்டைப் பானையிலிருந்து ஒழுகிப் போற தண்ணி கணக்கா ஒழுகிப் போயிட்டு இருக்கும்.
            ஒரு கதைன்னா என்ன நினைக்கிறீங்க? இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க அல்லது இப்படியும் மனுஷங்க இருக்காங்களே அப்பிடின்னு நினைக்க வைக்கிற ஒண்ணுதான் அது. கதையில யாரு வேணாலும் எப்பிடி வேணாலும் இருக்கலாம். அது கதையோட சுதந்திரம் கெடையாது. அப்படி கதைக்குள்ள இருக்குற மனுஷங்களோட சுதந்திரம். ஒரு நிஜமான கதை அப்பிடித்தான் இருக்குது.
            இப்படிக் கதையைப் பத்தியே கதை கதையா பேசிக்க வேண்டியிருக்குப் பாருங்க. இதுதான் கதைக்குன்னு இருக்குற கதை. நாமெல்லாம் இப்போ கதைக்குள்ள சிக்கிக்கிட்டோம் ஒரு பெருங்காட்டுல சிக்குன மாதிரி. ஒரு பெருங்காட்டுல வித விதமா இருக்குற மரங்கள், அருவிகள், செடி கொடிகள், விலங்குகள் கணக்கா ஒரு கதைக்குள்ளயும் பாருங்க வித விதமான மனுஷங்க, இடங்க, பழக்க வழக்கங்க, முறைதலைங்க, சம்பவங்க, முடிவுங்க, மனசோட நிலைங்க, குணாதிசயங்கன்னு என்னென்னமோ இருக்கு.
            கொழந்தை ஆறு மாசத்துல அபார்ஷன் ஆச்சுங்ற சேதி துபாய்ல இருக்குற சித்துவீரனுக்குச் சொல்லப்பட்டதும் அடுத்த ரெண்டு மாசத்துல அவ்வேன் அங்க இருக்கப் பிடிக்காம கெளம்பி இங்க நம் நாட்டுக்கு வந்துப்புட்டான். அவனுக்கு இங்க இருக்குற எல்லாத்தி மேலயும் செமத்தியான கோபம். கொஞ்சம் கவனமா இருந்துருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்காதுன்னு நெனைக்கிறான். அதை எல்லார்கிட்டயும் சொல்லிச் சொல்லி எரிஞ்சு வேற விழுவுறான்.
            அவனோட கோபம் யாருக்கு வேணும் சொல்லுங்க. அவ்வேன் அப்படிக் கோபமா இருக்குறதே நல்லதுன்னு நெனைக்குது லாலு மாமா. ஒரு மனுஷன் ரொம்ப யோசிக்கக் கூடாதுன்னு நெனைச்சா அவனைக் கோபப்படுத்தி விட்டுடணும். யோசிக்கிற மனுஷன் ஏன் கோபப்படுறான் சொல்லுங்க? இப்படி அபார்ஷன் ஆகிப் போச்சேங்ற சித்துவீரனோட கோவத்துல நிறைய விசயங்கள் மறைஞ்சுப் போச்சு. இப்படி அபார்ஷன் ஆக விட்டுட்டாங்களே என்கிற ஒரு விசயத்தைத் தவிர வேற எதையும் நினைக்கல சித்துவீரன். இதுக்காக, கண்டுக்காம விட்டுட்டதா முருகு மாமாவையும், நீலு அத்தையையும் போயி பிடிபிடின்னு பிடிக்குறான். எப்படி வாயும் வயிறுமா இருக்குறவள தஞ்சாரூ, திருச்சின்னு அலய விட்டு இப்படி பண்ணி வெச்சிருக்கீங்களேன்னு லாலு மாமாவையும் சகட்டு மேனிக்குப் பேசுறான் சித்துவீரன். அவங்க எல்லாரும் வருத்தமா கேட்டுக்குறது போல கேட்டுகிட்டு மனசுக்குள்ள சிரிச்சுக்கிறாங்க. அதுலயும் லாலு மாமாவோட நமுட்டுச் சிரிப்பு இருக்கே "சுத்த புத்திக்கெட்ட பயலா இருப்பாம் போலருக்கு! கேனக் கிறுக்கன்!" அப்பிடிங்ற கணக்கா இருக்கு. "என்னம்மா ஆட்டம் ஆடி பிரிஞ்சுகிட்டுப் போனான்! கொல்லைக்கு நடுவுல யாரும் இல்லாத நேரத்துல வேலிய வைக்கிறான். வேண்டியதுதான் இந்தப் பயலுக்கு இதெல்லாம்!" என்று நினைக்கிறது முருகு மாமா.
            ஒரு மனுஷன் ஓர் இழப்பைத் தன்னோட இழப்புன்னு நினைச்சா இப்படித்தான் எல்லார்கிட்டயும் கோபப்படுறான். அந்த இழப்புக்கும் தனக்கும் சம்பந்தமோ, தொடர்போ இல்லைன்னு நெனைச்சுட்டான்னு வெச்சுங்க அதெ ஒரு காமெடியா ஆக்கி எல்லார்கிட்டயும் நக்கல் பண்ணிகிட்டு சிரிச்சுகிட்டு இருக்கிறான்.
            சித்துவீரனும், "ஆனது ஆயிப் போச்சு, அதையே நெனைச்சுகிட்டுக் கவலைப்பட்டுக்கிட்டுக் கொண்டிருந்தா காரியும் ஆகுமா? ஆவுற காரியம் வேற ஆவாமல்ல போயிடும்னு நெனைச்சுகிட்டு அடுத்ததா என்ன செய்யலாம்"னு யோசிக்குது.
            இப்படி எல்லா விசயமும் முடி மறைச்சு முடிஞ்சுப் போச்சுன்னு நெனைச்சப்பத்தான் மறுபடியும் அந்த விசயம் வேற ஒரு விதத்துல வந்து தலைதூக்குது.
            தஞ்சாவூருல லாலு மாமாவோட பையன் வேலன் செல்போனு ஒண்ணு வெச்சிருந்ததா சொன்னது ஞாபவம் இருக்கும்னு நெனைக்கிறேன். அது செல்போனு வந்த புதுசு. சோப்பு டப்பால பாதி அளவு இருக்கற செல்போனு. அந்தச் செல்போனு காணாம போன விசயத்தை ஒங்ககிட்ட சொல்லல இல்ல. இந்தச் சுந்தரிப் பொண்ண தஞ்சாவூர்ல கொஞ்ச நாளு வெச்சிருந்து அதைப் பாக்குக்கோட்டை கொண்டு போய் விட்ட நாள்லேர்ந்து அது காணல. லாலு மாமாவும், வேலனும் வீட்டையும், தஞ்சாவூரையும் சல்லடைப் போட்டுத் துளைக்காத குறையா தேடுறாங்க. ஆப்புடல.  வெளியல போறப்ப தவற விட்டுட்டோமா, இல்ல யாராவது ஆட்டையப் போட்டுட்டாங்களா என்ற குழப்பம் ரெண்டு பேருக்கும்.
            லேண்ட்லைன் நம்பர்லேர்ந்து அந்த நம்பருக்குப் போன் பண்ணிப் பாக்கறாங்க. ரிங் போவுது. யாரும் எடுக்க மாட்டேங்றாங்க. இப்படி காணாமப் போன சாயுங்காலத்துல ஆரம்பிச்சு ராத்திரி பத்து மணிக்கு வரைக்கும் போன் பண்ணா ரிங் போயிட்டே இருக்குது. எடுக்கத்தான் மாட்டேங்றாங்க. ஆக அது இங்க எங்கேயோத்தான் இருக்கணும்னு லேண்ட் லைன் நம்பர்லேர்ந்து போனைப் போட்டு ஒரு எடம் விடாம தேடிப் பாக்குறாங்க. பத்து மணிக்கு மேல ரிங் போறது நின்னுப் போயி அதுவும் ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சுப் போல. அதுவும் எவ்வளவு நேரம்தான் சத்தம் போட்டுகிட்டே கிடக்கும். அறுபவது, எழுவது தடவைக்கு மேல அடிச்சா அது சத்தம் போட்டு போட்டே மட்டையாகிடுச்சுப் போலருக்கு.
            தான் போன எடம், வந்த எடம், நண்பருங்க வீடுன்னு ஒரு எடம் வுடாம தன்னோட பைக்கை வெச்சுகிட்டுத் தேடிப் பார்க்கிறான் வேலன். அவன் தேடுறதையும், லாலு மாமா தவிக்குறதையும் பார்த்தா பரிதாபமா இருக்கு. அவுங்க அப்படி நிக்குற நெலமையைப் பார்த்தாலே எவ்வளவு கொடுமையான திருடனா இருந்தாலும் அந்தச் செல்போனை எடுத்திருந்தா கொண்டாந்து கொடுத்துடுவான். எடுக்காட்டியும் அது எங்க, எப்படித் தொலைஞ்சிருந்தாலும் எப்படியாவது கண்டுபிடிச்சிக் கொடுத்துடுவான். கடைசியா வேலனுக்கும், லாலு மாமாவுக்கும் அதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாம போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளய்ண்ட்ட கொடுத்துட்டு ஆப்பாயிட்டாங்க. மனசுல வருத்தம் அவ்வளவு சீக்கரம் போகுமா? கொஞ்ச நாளைக்கு அதைப் பத்திப் பேசிட்டு இருந்துகிட்டு விட்டுட்டாங்க.
            அந்தக் காணாம போன செல்போனு சித்துவீரன் வடவாதி வந்ததுக்கு அப்புறம் அவன் வீட்டுல கிடைக்குது பாருங்க. அது எப்படி தஞ்சாவூர்ல காணாம போனது வடவாதியில கெடைக்குதுன்னு சந்தேகமா இருக்கா?
            பொண்டாட்டிக்காரிக்கு அபார்ஷன் ஆயிடுச்சேங்ற விரக்தியில வெளிநாட்டுலேந்து நம்ம நாட்டுக்கு வந்து, வெளியில சுத்திக்கிட்டு வீட்டுக்குள்ள வந்து நகை நெட்டு சாமானுங்க பீரோல்லாம் வெச்சிருக்குற ரூமுக்குள்ள நுழையுறான் சித்துவீரன். நுழைஞ்சா அங்க இருக்குற ப்ளக்பாயிண்ட்ல விநோதமா சின்னதா ஒரு டப்பா போல ஒண்ணு செருகி அதுலேந்து ஒரு ஒயர் போயி அந்த ஒயரு ஒரு போர்வைக்குள்ள மறைஞ்சி அங்க இருக்குற ஸ்டூல் மேல கிடக்கு. ஸ்டூலு மேல கெடக்குற போர்வைய எடுத்துப் பார்த்தா தஞ்சாவூர்ல காணாமப் போச்சுல்ல வேலனோட செல்போனு அதுதான் இது. அதுதாங் சார்ஜ் ஏறிகிட்டு கெடக்குது. இன்னும் வடவாதி பக்கமெல்லாம் அவ்வளவா செல்போனுங்க சகஜமா புழக்கத்துல வரல அப்போ. வடவாதி மில்லுகாரவங்க வூட்டுல ஒண்ணு, திட்டையில ரகுநாதன் வூட்டுல ஒண்ணு, சாமி. தங்கமுத்து வூட்டுல ஒண்ணு, கிள்ளிவளவன்கிட்ட ஒண்ணு அப்பிடின்னு அங்க இங்கன்னுதான் இருக்குது.
            அந்தச் செல்போன பாக்குறதுக்கும், அதெ கையில வாங்கி ஒரு ரண்டு நிமிஷம் வெச்சிக்கிறதுக்கும் இந்த சனங்க அடிச்சிகிட்ட அடி இருக்கே! போற எடமெல்லாம் வெச்சிகிட்டு அதை வெச்சிகிட்டுப் பேசலாங்றத நம்ம சனங்களால நம்ப முடியல. அது எப்பிடிடா ஒரு ஒயரும் இல்ல, மண்ணும் இல்ல, அதுல எப்பிடிடா பேச முடியும்னு அவனவனும் மண்டையில இருக்குற முடிய பிய்ச்சிக்காத கொறையா யோசிச்சுகிட்டுக் கிடக்குறான். சிக்னல் மூலமா செல்போன்ல பேசலாங்றத பல பேரு நம்ப மாட்டேங்றான். பேசுறவங்களோட நம்பரு அதுல வர்றதை ஆச்சரியமா பாக்குறாங்க. இதென்னடா கூத்து... இதை விட பெரிசா இருக்குற டெலிபோன்ல யாரு பேசுறான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு காலர் ஐடில்லாம் வைக்க வேண்டிருக்கு. இது என்னான்னனா பாதி சோப்பு டப்பா கணக்கா இருந்துகிட்டு யாரு பேசுறாங்கற நம்பரையெல்லாம் தெரிஞ்சுக்க முடியுறாப்புல இருக்கு! அத்தோட எந்த நம்பரையும் ஞாபவம் வெச்சிக்க அவசியமில்லா எல்லாத்தோட நம்பரையும் பதிவு பண்ணி வெச்சிக்கிற மாதிரி வசதியெல்லாம் பண்ணி வெச்சிருக்கேன்னு ஆச்சரியம்னா ஆச்சரியம் நம்ம ஆட்களுக்குத் தாங்க முடியல. அந்த நேரத்துல செல்போன வெச்சி கண்காட்சி போட்டிருந்தா ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சிருக்கலாம்னா பாத்துக்குங்க. செல்போன அப்படி ஒரு அதிசய வஸ்தாத்தா பாத்த காலம். இப்போ அதெ அப்படியே படமா எடுத்துப் போட்டா யூடியுப்புல பார்க்க வெச்சி ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சுப்புடலாம்.
            அப்படி இருக்குறப்ப சித்துவீரனுக்கு தன்னோட வூட்டுல செல்போன பார்த்தா எப்பிடி இருக்கும்? அது ஆரம்ப காலத்துல வந்த நோக்கியாவோட ஒத்த பக்கம் கொம்பு வெச்ச மாதிரி இருக்கும் செல்போனு. அவன் இதையெல்லாம் வெளிநாட்டுலதான் பார்த்திருக்கான். அதுல அங்க அவன் பேசியிருக்கான். ஏர்போர்ட்டுல இறங்கி வரப்ப அதுல சில பேரு பேசிகிட்டு நிக்குறதைப் பார்த்து, நாம்ம நாடும் சீக்குரத்துல முன்னேறிடும்னு அசந்துக்கிறான். நம்மூர்லயும் ஒரு சில பேரு அதை வாங்கி வெச்சி உபயோகப்படுத்துறாங்கன்னு கேள்விப் பட்டு சந்தோஷபட்டு இருக்கான்.  அப்படிப்பட்ட செல்போனு எப்படி இங்கன்னு யோசிக்கிறான், யோசிக்கிறான். ஆனா அவனுக்குப் பிடி கிடைக்க மாட்டேங்குது.
            "இங்க நம்ம சொந்த வூட்டுல இந்த செல்போனு சார்ஜ் ஏறுதுன்னா அது நம்ம வூட்டுல உள்ளதாத்தானே இருக்கணும். அதுவும் அது பாட்டுக்கு சும்மா போட்டு சார்ஜ் ஏறுனா என்ன? யாரும் பாக்க முடியாத அளவுக்கு செல்போனை ஸ்டூலு மேல வெச்சு அதுக்கு மேல போர்வையைப் போத்தி விட்டு வெச்சிக்கணும்னு என்ன அவசியம்? வீட்டுல அங்கங்க ப்ளக் பாய்ண்ட்டு இருக்குறப்ப ரூமுக்குள்ள போயி ரகசியமாக ப்ளக் பாய்ண்டுல செருவுற அவசியம் அப்படி என்ன வந்திச்சி" அப்பிடின்னு அவன் மனசு பலவிதமாக யோசிக்குது.
*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...