31 Jan 2018

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றால்...

குறளதிகாரம் - 4.5 - விகடபாரதி
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றால்...
            இன்று அதிகம் பேசப்படும் பேசுபொருள் 'மாசு'
            நீர்,
            நிலம்,
            காற்று என்று எங்கு நோக்கினும் மாசு.
            வான் வெளியிலும் மனிதன் அனுப்பிய செயற்கைக் கோள்கள் செயல்படாத நிலையை அடைந்த பிறகு மாசுக்களாய்ச் சுற்றிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.
            மனிதனால் எங்கும் மாசு.
            மனிதன் மனத்திலும் மாசு.
            மனிதனால் உருவாகும் மாசுக்கள் என்னவென்று தெரிகின்றன. மனிதன் மனத்துக்குள் உள்ள மாசுக்கள்தான் என்னவென்று தெரிவதில்லை. நடந்த முடிந்த பிறகுதான் அந்த மனத்தில் இருந்த மாசு என்னவென்று வெளியே தெரிய வருகிறது.
            அப்படி மனத்தில் இருந்த மாசு பின்வரும் வகையறாக்களின் வகைக்குள் ஒன்றாகவோ அல்லது கூட்டாகவோத்தான் இருக்கும். அவையாவன,
            பொறாமை,
            ஆசை,
            கோபம்,
            ஆபாசச் சொல் 
            அநேகமாக இவைகளில் ஒன்றாகத்தான் அல்லது இவற்றின் சேர்க்கை கொண்ட வடிவமாகத்தான் அந்த மாசு மனதுக்குள் இருந்திருக்கும்.
            அதன் வெளிப்பாட்டு வடிவங்கள் வெவ்வாறாக இருக்கலாம். துரோகங்கள், ஏமாற்றுகள், வன்முறைகள், வன்கொடுமைகள், கொலைகள் என்று அதன் வடிவங்கள் எப்படி இருப்பினும் அவற்றின் மூல வித்தை விதைத்துப் பயிர் செய்வது மேலே குறிப்பிட்ட அம்மன மாசுக்கள்தான்.
            மாசுள்ள இடத்தில் கிருமிகள் பிறப்பது போல, மாசுள்ள மனதில் குற்றங்கள் பிறக்கின்றன, அறமற்ற சிந்தனைகள் எழுகின்றன.
            பொறாமை பிடித்து அழிந்த எத்தனையோ பங்காளிக் குடும்பங்களின் கதைகள் நைச்சியமாக வேண்டாம் எனச் சுட்டுவது பொறாமை எனும் மன மாசைத்தான்.
            ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் பிரான் குறிப்பிடுவது ஆசை எனும் மன மாசைத்தான்.
            'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்று பெரியோர்கள் தலையில் குட்டி எச்சரிப்பது கோபம் எனும் மன மாசு குறித்துதான்.
            'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வார்களே. மனதைக் கொன்று மனிதனைக் கொல்லும் அந்த ஒற்றைச் சொல் - அதுதான் இன்னாச்சொல் எனும் மனமாசு.
            மனிதனின் அறமற்ற செயல்கள் அனைத்தும் பூமியில் பிறப்பதற்கு முன், மனதில் பிறந்து விடுகின்றன. மனம் மாசற்று இருந்ததால் அறமற்ற செயல்கள் மனதிலும் பிறக்காது, பூமியிலும் நடக்காது.
            இந்தப் பூமியைக் குற்றங்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், அறமற்ற செயல்களிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தால், ஒவ்வொருவரும் தங்கள் மனதிலிருந்து அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவைகளை விலக்கி வைக்க வேண்டும்.
            கட்டுக்கடங்காத ஆசையினின்றுதான் அனைத்துக் குற்றங்களும் பிறக்கின்றன, ஒருவர்க்கு நிறைவேறும் ஆசை தனக்கு நிறைவேறவில்லையே என ஒருவர் நினைத்து ஏங்கும் போது பொறாமை பிறக்கின்றது. பொறாமைப்பட்டு முயன்று அப்போதும் நிறைவேறாத போது கோபம் பிறக்கிறது. கோபம் கொண்டும் முயன்று நிறைவேறாத போது மனதுக்குள் ஆபாசச் சொற்கள் பிறக்கின்றன. இப்படி அடுக்கப்பட்ட சீட்டுக் கட்டைத் தட்டி விடுவது போல வரிசையாக தாக்கத்தை ஏற்படுத்தி உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்கும் இயல்பை உடையனவே அறமற்ற செயல்கள். அத்தகைய அறமற்றச் செயல்களைச் சீட்டுக் கட்டைத் தட்டி விடுவதைப் போல தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் மன மாசுக்கள்.
            அறம் என்பது செய்யப்படுவதில் உள்ளது போலவே, விலக்கி நிற்பதிலும் இருக்கிறது. அஃது யாதெனில் மனத்தில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கையும் விலக்கி நிற்பது ஆகும்.
            அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்கிறார் வள்ளுவர்.
            ஆம்! இந்நான்கையும் விலக்கி நிற்பவர் மனதில்தான் அறம் நிற்கிறது, நிலைக்கிறது.
            ஆசைப்படுபவரும், கோபப்படுபவரும், பொறாமைபடுபவரும், இன்னாச்சொல் வழங்குபவரும் ஒரு போதும் அறத்தின் அருகே நிற்க முடியாது. அறத்தின் அருகே கூட நிற்க முடியாதவர்கள் அறம் செய்யவும் முடியாது.
            அறத்தின் அருகே வர நினைப்பவர்கள் யாராக இருப்பினும் வள்ளுவர் மேற்சொன்ன நான்கையும் விலக்கி விட்டு வாருங்கள். அப்படி விலக்கி விட்டு வாராதவர்களை அறம் விலக்கி விட்டு வேடிக்கை காட்டும்.
            அநேகமாக நல்லவர் போல் காட்டிக் கொண்டு, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று யோக்கியர் போல புலம்புபவர்கள் யாராகினும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் வள்ளுவர் மேற்சொன்ன நான்கில் ஒன்றையோ அல்லது அந்நான்கில் இரண்டையோ அல்லது அந்நான்கில் மூன்றையோ அல்லது அந்நான்கில் அந்நான்கையுமோ விலக்க வேண்டியவர்களாகத்தான் இருப்பர்.
            கட்டுக்கடுங்காத ஆசையை விலக்கி வையுங்கள். ஆசை நிறைவேறாமையினால் எழும் பொறாமையை விலக்கி வையுங்கள். பொறாமை கொண்ட  இயலாமையினால் எழும் கோபத்தை விலக்கி வையுங்கள். கோபம் கொண்டு நிறைவேறாத ஆற்றாமையினால் எழும் இன்னாச்சொற்களை விலக்கி வையுங்கள். அப்படி விலக்கி வைத்தால் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று யாரும் புலம்ப வேண்டியிருக்காது. அறமற்ற செயல்களும் யாரிடமிருந்தும் உருவாக வேண்டிய அவசியம் இருக்காது.

*****

இப்படித்தான் நல்ல பேர் எடுக்கிறான் எஸ்.கே.!

இப்படித்தான் நல்ல பேர் எடுக்கிறான் எஸ்.கே.!
            ஒவ்வொருவருக்கும் ஒரு மொழிநடை. அவர்களுக்கென ஒரு மொழிநடை தேவைப்படுகிறது. எஸ்.கே.வுக்கென ஒரு மொழிநடை இருக்கிறது. பல நேரங்களில் இரண்டும் ஒத்துப் போவதில்லை.
            அதற்காக எஸ்.கே. என்ன செய்வான்? ஏதோ இந்த மொழி நடையாவது வாய்த்திருக்கிறதே என்று அவன் மகிழ்ச்சி கொள்வதே நல்லது.
            எஸ்.கே.யின் வாழ்வைப் பொருத்த வரையில் அவனது வாழ்க்கையே ஒரு விளையாட்டு. அதை அவன் விளையாட்டாகச் செய்யலாமே தவிர, சீரியஸாக எதைச் செய்வது?
            எஸ்.கே.யைச் சுற்றி இருப்பவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் நினைப்பதுதான் அவர்களுக்கு ஏற்றது. அதில் அநாவசியமாகப் புகுந்து தன் கருத்துகளைத் தெரிவித்து எஸ்.கே. அசிங்கப்படத் தேவையில்லை.
            ஒவ்வொருவரும் தாங்கள் நினைப்பதே சரி என நினைத்துக் கொள்ளும் போது அவர்களிடம் போய் எஸ்.கே. தன் கருத்தைச் சரியென்று எப்படி நிறுவ முடியும்?
            யாருடைய மனநிலையும் நிலையாக இருப்பதில்லை. மனநிலைகள் எப்போது எப்படி மாறும் என்று புரியாத அபாயத்திற்குட்பட்டவை.
            முன்னர் நினைத்ததைப் பின்னர் நினைத்துப் பார்க்கும் போது தவறு என்று சொல்வதற்கு வெளியில் இருந்து ஒருவர் தேவையா என்ன? அவரவர்களின் மனநிலையே அதற்குப் போதுமானது.
            அவரவர்களைப் புகழ்ந்து பேசுவதுதான் எஸ்.கே. தப்பிப்பதற்கான வழி. யாரும் அவனிடம் ஆலோசனைகளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்களைக் குறித்த புகழ்ச்சி மொழிகளைத்தான்.
            பொதுவாகத் தான் பேசுவது சரியென்று எஸ்.கே. நினைத்துக் கொண்டு இருக்கலாம். எஸ்.கே. பேசுவது சரியா? தவறா? என்பது எதிரில் இருப்பவரின் மனநிலையைப் பொருத்தது. எஸ்.கே. வாழும் சூழல் அப்படித்தான் இருக்கிறது. சரியான சூழ்நிலைகளில் சொல்லும் சரியான வார்த்தைகளும் தப்பாவது இப்படித்தான்.
            இவர்களிடம் பேசி மாள முடியாது என்பதால்தான் இப்போதெல்லாம் பேசாமல் இருந்தே நல்ல பெயரை எடுத்துக் கொள்கிறான் எஸ்.கே.!

*****

பிரியமான பிரார்த்தனை

பிரியமான பிரார்த்தனை
கண்ணீர்த் துளிகள் இரண்டு
மண்ணில் புதைவதற்குள்
மரித்து வந்து விடு
இயேசுவைப் போல
உன்னை வணங்கியே
வாழ முடியாது என்பதால்
இந்தப் பிரார்த்தனை
வாழ்ந்துதான் வாழ முடியும் என்னால்
வெறி பிடித்த மடையர்கள்
யாரையாவது கொன்று விட்டுப் போகட்டும்
எப்படியாவது தப்பி வந்து விடு
என் பிரிய தெய்வமே

*****

30 Jan 2018

தூய்மை உலகினர்க்கு தேவையான முதல் தூய்மை!

குறளதிகாரம் - 4.4 - விகடபாரதி
தூய்மை உலகினர்க்கு தேவையான முதல் தூய்மை!
            நெஞ்சிலே வஞ்சம் வைத்து,
            வஞ்சத்திலே நெஞ்சை வைத்து
            செய்வதெல்லாம் அறம் ஆகுமா?
            காட்டை அழிப்பவன் மரம் வளர்ப்போம் என்று பதாகை வைப்பதும்,
            ஆழ்க்குழாய் கிணறுகளை உருவாக்கி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பவன் மழைநீரைச் சேகரிப்போம் என பிரச்சாரம் செய்வதும்,
            மதுபானத் தொழிற்சாலை நடத்துபவன் மது ஒழிப்புக்கான விளம்பரம் செய்வதும் அறம் ஆகுமா?
            உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், செய்வதும் அறம் என்ற வகைமைக்குள் வாராதவைகள்.
            உடல் தூய்மையாக இல்லாவிட்டால் உடல் அழுக்கில் புழுக்கள்தானே புழுக்கும்.
            மனம் தூய்மையாக இல்லாவிட்டால் மன அழுக்கில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், செய்வதும்தான் நிகழும்.
            அறம் செய்வதற்கான முதல் தகுதி, மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
            தூய்மையான மனதால் செய்யப்படுவதே அறம். மற்றவையெல்லாம் விளம்பரம். வெற்று ஆரவாரம்.
            ஆதாயத்தோடு ஆற்றைக் கட்டி இறைப்பதற்கு அறம் என்ற பெயர் பொருத்தப்படாது. ஏனென்றால் அறம் என்பது கறைபடாதது.
            ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டுக் கொண்டு ஒரு நாள் அன்னதானம் வழங்கும் தர்மப் பிரபுக்கள் இங்கு அநேகம்.
            எரிகிற வீட்டில் பிடுங்குன வரை ஆதாயம் என்று பிடுங்கிக் கொண்டு சிறு துரும்பை தூக்கிப் போட்டுச் செய்யப்படும் உதவிகளும் இங்கு அநேகம்.
            சிறிய மீனைப் போட்டு பெரிய மீனை விழுங்கும் தூண்டில்களும் இங்கு அநேகம்.
            புண்ணிய பூமி என்று சொல்லப்படும் பாரதம் இப்படித்தான் புண்ணியமற்ற பூமியாக விளங்குகிறது.
            நம் நாட்டில் தர்மம் செய்வதாக நாம் கருதும் தர்மவான்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
            இவைகளையெல்லாம் எதற்காக இங்கு விவாதிக்கிறோம் என்கிறீர்களா?
            அறம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இப்படிப்பட்டவைகளைச் செய்து அவைகளை அறம் என்ற வார்த்தையால் குறிப்பிட்டு, அறம் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தாமலாவது இருக்க வேண்டும் என்பதற்காக.
            அறம் என்பது 'செய்யப்படுவது' என்பது எவ்வளவு உண்மையோ, அதை விட உண்மையினும் உண்மை அறம் என்பது தூய்மையான மனதால் மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும் என்பது.
            கிராமங்களில் சிறு தெய்வ வழிபாட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. விரதம் இருக்கும் நாளில் சுத்த பத்தமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தெய்வம் அடித்துக் கொன்று விடும் என்று.
            அதே நம்பிக்கை அறத்திற்கு நூற்றுக்கு நூறு முற்றிலும் பொருந்தும். மனத் தூய்மையோடு செய்யப்படாத அறங்களை அறமே கொன்று விடும்.
            அறம் என்ற சொல், மிகச் சரியகாக அறுத்து எடுக்கப்படும் 'அறு' என்ற பொருள்படும் வினைச்சொல்லிலிருந்து பிறந்த பெயர்ச்சொல். மனத்தூய்மை இல்லாத படையல்களை அறம் ஏற்பதில்லை, பரிகாரத் தெய்வங்களைக் குறித்த நம்பிக்கையைப் போல.
            மனத் தூய்மையோடு செய்யப்படும் அறமே அறம். அஃதில்லாமல் செய்யப்படும் எல்லாம் வீண் ஆரவாரம்.
            தெருவைச் சுத்தப்படுத்துவதற்கு முன் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது போல, அறம் செய்வதற்கு முன் மனதைத் தூய்மை செய்ய வேண்டும்.
            தூய்மையான மனதில் பிறப்பதெல்லாம் அறம்.
            தூய்மையற்ற மனதில் பிறப்பதெல்லாம் வெற்று விளம்பரம்.
            தூய்மையான மனம் அறத்தில் நிற்கிறது. தூய்மையற்ற மனம் அறத்திலிருந்து விலகுகிறது.
            அறமற்றவைகள் விலக்கப்பட்டு விட்டால் பின் நிகழ்வதெல்லாம் அறம்தானே. அறமற்றவைகளை விலக்க மனத்தூய்மை முக்கியம்.
            தூய்மை செய்த இடத்தில் ஏன் துர்நாற்றமெடுக்கப் போகிறது?
            தூய்மையான மனதில் ஏன் அறமற்றவைகள் பிறக்கப் போகிறது?
            அறமற்றவைகளை விலக்கி, அறத்தை நிலைக்கச் செய்ய
            மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற என்கிறார் வள்ளுவர்.
            தூய்மையாக்கி துர்நாற்றமில்லாமல் செய்வதே நல்லதா? துர்நாற்றம் எடுக்க விட்டு பின் தூய்மையைப் பற்றிச் சிந்திப்பது நல்லதா?
            அதே போல்தான் மனத்தைத் தூய்மையாக்கி அறத்தோடு நிற்றல் நல்லதா? அறமற்றவைகளை நிகழ்த்தி விட்டு அறத்தைப் பற்றி ஏன் வலியுறுத்துவது நல்லதா?
            அறத்தின் அடிப்படையும், அடித்தளமும் மனத்தூய்மையில் இருக்கிறது என்பதால்தான் மனத்தூய்மையை மிக அதிகமாக வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
            மனத்துக்கண் மாசுக்கள் இல்லாமல் இருப்பதே அறம்.
            மனத்தூய்மை தலையாய அறம்.
            அறத்தின் தோற்றுவாய், ஊற்றுக்கண், பிறப்பிடம், இருப்பிடம் எல்லாம் மனத்தூய்மைதான்.
            மனமது செம்மையானால் மந்திரம்தான் செபிக்க வேண்டுமோ என்ன?
            தூய்மை இந்தியாவுக்கு மட்டுமல்லாது, தூய்மை உலகுக்கும் தேவையான முதல் தூய்மை மனத்தூய்மைதான். தூய்மை என்பதை முதலிருந்து அங்கிருந்துதான் தொடங்க வேண்டும். மனத்தில் களைகளை மண்ட விட்டு விட்டு அறம் எனும் பயிர் செழிக்கவில்லை என்று சொல்வதில் அறம் இருக்க முடியுமா?
            அது சரி! அப்படியானால்,
            அவைகள் என்ன மனத்துக்கண் மாசுக்கள்? அதாவது மனத்தூய்மையைக் கெடுக்கும் அந்த மாசுக்கள் என்னனென்ன என்கிறீர்களா? அடுத்தக் குறளில் (குறளதிகாரம் 4.5) அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

*****

தானே கற்றல்

தானே கற்றல்
பசிக்குச் சில தூண்டில்கள் கொடுக்கப்பட்டது
ஆறு வறண்டு கிடந்தது
தூண்டிலில் மாட்ட வைத்திருந்த
புழுக்களைத் தின்னத் தொடங்கியவன்
தன்னைத் தேடி வரும்
பூச்சிகளைப் பிடிக்கக் கற்றுக் கொண்டான்

*****

தப்பித்தல் முட்டாள்தனம்

தப்பித்தல் முட்டாள்தனம்
வாழப் பழகிக் கொண்ட
குருவிகளுக்கு டார்வின் மேல் கோபம்
அவைகளுக்கு றெக்கைகள் இல்லை
தத்தித் தத்தி நடைபயில
கால்கள் இல்லை
எங்கே தப்பி விடுமோ என்ற சந்தேகத்தில்
கத்தரிக்கப்பட்டு இருந்தன
முன்பொரு காலத்தில் நீங்கள்
இருந்த இடத்திற்கு காடென்று பெயர்
இப்போதொரு காலத்தில்
இருக்கும் இடத்திற்கு கூண்டு என்று பெயர்
உச்சரிக்கப்படும் வாக்கியங்களை
வெறுக்கின்றன குருவிகள்
முடமாக்கப்பட்ட வாழ்வில்
தப்பித்தல் முட்டாள்தனம் என்பதை
உணர்ந்திருக்கின்றன அவைகள்
கூண்டுக் கம்பிகளைப் பார்த்து
நக்கலாய்ச் சிரிக்கின்றன
குருவிகள் மகிழ்வதாகப்
பார்த்து ரசிக்கிறார்கள் மனிதர்கள்

*****

29 Jan 2018

கெளண்ட் டவுனுக்காகக் காத்திருக்குமா அறம்?!

குறளதிகாரம் - 4.3 - விகடபாரதி
கெளண்ட் டவுனுக்காகக் காத்திருக்குமா அறம்?!
            சுவாசிப்பதற்கு கால நேரம் பார்க்குமா நுரையீரல்?
            துடிப்பதற்கு கால நேரம் பார்க்குமா இதயம்?
            சுத்தகரிப்பதற்கு கால நேரம் பார்க்குமா சிறுநீரகம்?
            கால நேரம் பார்க்காமல் அவைகள் தம் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதால்தான் உடலில் உயிர் நிலைத்திருக்கிறது.
            அப்படி கால நேரம் பார்க்காமல் அறம் செய்பவர்கள் இந்த உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைகொண்டிருக்கிறது.
            இராகு காலம், எம கண்டம், குளிகை, கரி நாள், அஷ்டமி, நவமி என்று நல்ல நேரம் பார்த்து தள்ளி வைத்த காரியங்கள் எத்தனை? வீணான மணித்துளிகள் எவ்வளவு?
            இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரிவதற்குள் தானம் நிகழ்ந்து முடிய வேண்டும் என்பார்கள்.
            மறு புயல் வரும் வரை மீட்புப் பணிகள் செய்வது கால தாமதப்படுத்தப்பட்டால்...
            வறட்சியில் உயிர்கள் சாகும் வரை நிவாரணத் தொகை வழங்குவதற்குக் கால நேரம் பார்த்துக் கொண்டிருந்தால்...
            விபத்தில் அடிபட்டவருக்கு முதல் தகவல் அறிக்கை வரும் வரை அறுவைச் சிகிச்சையை தாமதபடுத்திக் கொண்டிருந்தால்...
            இப்போது புரிந்திருக்குமே! அறம் என்பது எப்படி ஆற்றப்பட வேண்டும் என்பது. அதற்காக முதலுதவி போல ஆற்றப்படுவதுதான் அறம் என்று சுருங்கிப் புரிந்து கொள்வதோ என்றால், முதலுதவியாக மட்டுமல்லாது முடிவான உதவியாகவும் ஆற்றப்படுவதுதான் அறம் என்று சரியாகப் புரிந்து கொண்டு ஆற்றப்படுவதே அறம்.
            கொடுக்கின்ற மனம் கால நேரம் பார்ப்பதில்லை.
            பொழிகின்ற மழை கால நேரம் பார்ப்பதில்லை.
            அறம் செய்வதற்கும் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை, இடம், பொருள், ஏவல் பார்க்க வேண்டியதில்லை.
            காசு, பணம் சேரட்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. தள்ளிப் போடுதல் என்பது அந்தக் காரியத்தைச் செய்யாமல் இருப்பதற்கான நொண்டிச் சாக்கேயன்றி வேறில்லை.
            அறம் செய்யும் எண்ணம் தோன்றிய அந்தக் கணத்திலிருந்தே அறம் செய்ய வேண்டியதுதான். எண்ணம் தோன்றி, அதைப் பேசி, அதைச் செயலுக்குக் கொண்டு வரும் செயல்திட்டம் போன்றதல்ல அறம்.
            எண்ணம், பேச்சு, செயல் என்பதால் பிளவுபட்டதன்று அறம். எண்ணம், பேச்சு, செயலால் ஒன்றுபட்டதே அறம்.
            எண்ணியதை செயல்படுத்த முடியாமல் போவதற்குப் பெயர் அறமன்று. எல்லாருக்கும்தான் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. செயல் வடிவம் பெறாத அந்த எண்ணம் அறமாகாது.
            பேசிக் கொண்டே செய்யாமல் விடுவதும் அறமாகாது. ஒவ்வொரு நாட்டிலும் நாடு நலம் பெற வேண்டும் என்று அரசியல்வாதிகள் பேசாத பேச்சா?
            சிறியதோ, பெரியதோ காரியத்தில் நிகழ்த்தப்படுவதே அறம்.
            பனைத்துணை நலம் கிடைக்க வேண்டும் என்று காத்திருப்பவன் மக்கட்பதடி ஆவான், தினைத்துணை நலம் கிடைக்கும் எனில் செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் என்று பாரதிதாசன் பாடியதற்குக் காரணம் அதுவே.
            அறத்திற்கு சிறியது, பெரியது என்ற அளவு கிடையாது. அது அறம் அவ்வளவே. அதற்கு வேறுபாடுகள், பாகுபாடுகள் கிடையாது.
            உங்களால் கடுகளவுதான் இயலும் என்றால் அதைச் செய்வதுதான் அறம். அதை விட இன்னும் சிறிய அளவே செய்ய இயலும் என்றாலும் அதைச் செய்வதே அறம்.
            மலையளவு செய்வதாக வாக்குறுதி தந்து விட்டு, மயிர் அளவு கூட செய்யாமல் இருப்பதற்குப் பெயர் அறமா என்ன?
            இயலும் வகையில் எல்லாம், வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் சுவாசம் போல், இதயத் துடிப்பு போல் அறம் செய்யுங்கள்.
            வாழும் வரை சுவாசத்துக்கு, இதயத் துடிப்புக்கோ ஓய்வு கிடையாது. அது போன்றதுதான் அறம்.
            எப்போதும், எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லா காலங்களிலும், எவர் வேண்டுமானாலும் செய்யக் கூடியதே அறம்.
            அறத்துக்கு ஏது விடுமுறை? அறத்துக்கு ஏது காத்திருப்பு முறை?
            அறம் காற்று போல. வீசிக் கொண்டே இருக்க வேண்டியது.
            அறம் பூமி போல. சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியது.
            அறம் சுவாசமும், இதயத் துடிப்பும் போல. நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டியது.
            அந்திமக் காலத்தில் சாக நினைத்தாலும் சாக விடாத உடல் போலத்தான், செய்ய வேண்டாம் என்று நினைத்தாலும் செய்யாமல் இருக்க விடாதுதான் அறம்.
            அறம் எதற்காகக் காத்திருப்பதும் இல்லை. கால நேரம் வரட்டும் என்று பொறுத்திருப்பதுமில்லை. வாய்ப்புகள் வரட்டும் என்று வாளாவிருப்பதும் இல்லை.
            அறம் என்பது தீயணைப்பு ஊர்தி போல.
            அறம் என்பது 108 அவசர ஊர்தி போல.
            24 * 7 சேவைதான்!
            ஓய்வுக்கும் வேலையில்லை. எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கும் வேலையில்லை. இயலும் வகையில் எல்லாம், வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதுதான் அறம்.
            ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் என்று இதை மிக அழகாகக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
            கெளண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி ஏவுவதற்கு அறம் என்ன செயற்கைக் கோளா?உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று ஓடித் துடைக்கும் இயற்கைக் கோள் - அதுதான் அறம். மனிதாபிமானத்தின் நிறம்.

*****

மிகை மதிப்புக் கோட்பாடு

மிகை மதிப்புக் கோட்பாடு
மிகையான மதிப்பை
யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்
புனைகதைப் புனைவார்கள்
அதை நம்பும்படி
மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவார்கள்
தோழியின் தோழியே
தோழனின் தோழனே
துரோகி என்பது எல்லார்க்கும் தெரியும்
நடவடிக்கை எடுக்க முடியாது
தலையில் அடித்துக் கொள்ளுங்கள்
மிகை மதிப்பு உங்களை வென்று விட்டது

*****

ஒற்றைக் கோரப் பல்லின் சிரிப்பு

ஒற்றைக் கோரப் பல்லின் சிரிப்பு
ஒரு முட்டையைப் பொத்தலிட்டு
ஆளுக்குப் பாதி
குடித்துக் கொண்டோம்
வெள்ளைக் கரு யாருக்குச் சென்றது
மஞ்சள் கரு யாருக்குச் சென்றது
என்ற சந்தேகம் இருவர்க்கும்
பொத்தலிட்ட முட்டை
சிரிக்கும் கோரப் பல்லைப் போல
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது

*****

28 Jan 2018

உழைத்துச் சம்பாதித்தாலும் ஒட்டாது!

குறளதிகாரம் - 4.2 - விகடபாரதி
உழைத்துச் சம்பாதித்தாலும் ஒட்டாது!
            உழைத்துச் சம்பாதித்ததே ஒட்டுவதில்லை, உழைக்காமல் வந்தது ஒட்டுமா?
            உழைக்காமல் வந்தது ஒட்டாது என்பது சரி!
            உழைத்து வந்தது எப்படி ஒட்டாமல் போகும்?
            உழைத்து வரும் செல்வமானது... அறவழியில் உழைத்து வந்தது என்றால் ஒட்டும்.
            அறவழியை மறந்து பிறவழியில் வந்தது என்றால் ஒட்டாது.
            இந்த உலகில்,
            ஊழல் செய்பவனும் உழைப்பதாகத்தான் கூறுகிறான்,
            கையூட்டுப் பெறுபவனும் மாட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக வாங்க திட்டமிட்டு உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            அநியாய வட்டிக்கு கடன் கொடுப்பவனும் வட்டியை வசூலிக்க அலைந்து திரிந்து உழைப்பதாகத்தான் சொல்கிறான்,        
            களவு செய்பவனும் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு கடுமையாக உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            கொலை செய்பவனும் ஸ்கெட்ச் போட்டு தீவிரமாக உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            சாராயம் காய்ச்சுபவனும் வேகாக வெக்கையில் நின்று உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            போதைப் பொருள் கடத்துபவனும் எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டுக் கஷ்டப்பட்டு உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            குண்டு வைப்பவனும் இரவு பகல் பாராது உழைப்பதாகத்தான் சொல்கிறான்.
            பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் அனைத்துக்கும் பெயர் உழைப்பு என்று ஆகி விட்டப் பிறகு,
            உழைப்பின் விளைவாக ஈட்டும் பணம் அறவழியிலிருந்து வருகிறதா? அறமற்ற வழியிலிருந்து வருகிறதா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை.
            உழைப்புதான் என்றாலும் அறவழியில் வரும் பணமே ஆக்கமாக நிலைக்கிறது. அறமற்ற வழியிலிருந்து வரும் பணம் நீக்கமாக கழிகிறது.
            முதலிலிருந்து சொல்வதாகச் சொன்னால் உழைத்துச் சம்பாதித்ததே என்றாலும் அறவழியில் ஈட்டும் பணம் ஒட்டுகிறது. உழைத்துச் சம்பாதித்ததே என்றாலும் பிறவழியில் ஈட்டும் பணம் ஒட்டாமல் ஒழிகிறது.
            ஆக எதை மறந்தாலும் அறத்தை மறக்கக் கூடாது. ஏனென்றால் அறவழியில் ஈட்டுவதே ஆக்கமாக ஒட்டுகிறது. அறமற்ற பிறவழியில் ஈட்டுவது நீக்கமாக மறைகிறது.
            அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
            இனி யாராவது உழைத்தப் பணம் ஒட்டவில்லை என்று சொன்னால், அவர்களிடம் கேளுங்கள் உழைப்பை மட்டும் நினைந்து அறத்தை மறந்து ஈட்டிய பணமா அது என்று?
            உழைத்துச் சம்பாதித்தது என்றாலும் அஃது வந்த வழி அறவழி இல்லை என்றால் அஃது செல்லாது செல்லாதுதான், ஒட்டாது ஒட்டாதுதான்.
            உழைப்பும் வேண்டும். உழைத்துச் செல்வம் சேர்க்கவும் வேண்டும். அவ்வழியில் வரும் செல்வம் அறவழியினின்று வருவதாகவும் இருக்க வேண்டும். அதுவே நிலைக்கும். அஃதில்லாதவற்றை உலகம் பழிக்கும். அறமே அதைக் கடைசியில் ஒட்ட விடாமல் அழிக்கும்.
            அறத்தை மறந்து ஆக்கத்தைத் தேடவும் வேண்டாம். அப்படி ஆக்கத்தைத் தேடித் தூக்கத்தை இழந்து வாடவும் வேண்டாம். கடைசியில் உள்ளதும் போச்சே என்று மனம் நோகவும் வேண்டாம். அறத்தை மறந்தவர் என்று உலகம் உங்களைச் சாடவும் வேண்டாம்.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...