Showing posts with label விவசாயி. Show all posts
Showing posts with label விவசாயி. Show all posts

6 Oct 2024

ஒரு விவசாயி என்பவர்…

ஒரு விவசாயி என்பவர்…

விவசாயமும் ஒரு வியாபாரம் போலவே மாறி விட்டது.

விவசாயியின் கையில் எதுவுமில்லை.

விதைநெல் கூட அவரிடம் இல்லை.

விதை நெல்லை வியாபாரியிடம் வாங்குகிறார்.

எருவும் அவரிடம் இல்லை.

உரத்தை வியாபாரியிடம் வாங்குகிறார்.

பூச்சிக்கொல்லிகளும் அவரிடம் இல்லை.

களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி என்று என்னென்ன ரசாயனங்கள் இருக்கிறதோ அவை அத்தனையையும் வியபாரியிடம் வாங்குகிறார்.

உழுவதற்கும் அறுப்பதற்கும் இன்னபிற விவசாயப் பணிகளைச் செய்து தருவதற்கும் முகவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாடினால் கருவிகளோடு வந்து காரியத்தை நடத்தித் தருகிறார்கள்.

நெல்லை வீட்டிற்குக் கொண்டு வந்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

அறுத்த அடுத்த நொடியே அறுவடை ஆன இடத்தில் வாகனத்தோடு வந்து பெற்றுக் கொள்ள வியாபாரி இருக்கிறார்.

விவசாயி என்பவர் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஓர் இடைநிலையாளர். அத்துடன் விவசாயச் செலவினங்களுக்காகக் கடன் வாங்கும் ஒரு கடன்காரர்.

அவர் நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கலாம்.

நிலத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கலாம்.

கந்து வட்டியிலும் கடன் வாங்கலாம்.

சொந்தமாக நிலம் வைத்திருப்பதற்காகக் கடன் வாங்கி விவசாயம் செய்யும் ஒரு பாவப்பட்ட ஜீவன் அவர்.

இந்த விவசாயியால் அப்போதும் சரி, இப்போதும் சரி நெல்லின் விலையைத் தீர்மானிக்க முடியவில்லை. அது முடியவும் முடியாது.

ஆனால், அரிசி விலை மட்டும் ஏறிக் கொண்டு இருக்கும்.

நெல்லின் விலைஅப்படியே இருக்கும்.

முன்னர் இருந்த விவசாயியும் இப்போது இருக்கும் விவசாயியும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. அவர்கள் வாழ்க்கை மட்டும் அப்போதும் சரி இப்போதும் சரி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அது எப்போதும் அப்படியேத்தான் இருக்கும் போலிருக்கிறது.

*****