வாஷிங்டன் தாத்தாவும், டெல்லி மௌனமும் –
ஒரு ராஜதந்திர காமெடி!
உலக
அரசியல் இப்போது ஒரு விசித்திரமான கட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின்
டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து வரும் அறிக்கைகளைப் பார்த்தால், அது ராஜதந்திர உறவா
அல்லது ரவுடித் தனமான மிரட்டலா என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
முன்னெப்போதும்
இல்லாத வகையில், இந்தியாவின் இறையாண்மையை ஒரு சைடு டிஷ் ரேஞ்சுக்கு டிரம்ப் டீல் செய்வதுதான்
இப்போதைய ஹாட் டாபிக்.
பிரதமர்
மோடியின் அரசியல் வாழ்க்கையை என்னால் அழிக்க முடியும். என்று டிரம்ப் அடிக்கடி சொல்லி
வருகிறார். இது ஏதோ ஒரு பள்ளிக்கூடப் பையன் இன்னொரு பையனைப் பார்த்து, உங்க அப்பாகிட்ட
சொல்லி உன்னை அடி வாங்க வைப்பேன். என்று சொல்வது போலத் தெரிந்தாலும், இதில் ஒரு பெரிய
ஆபத்து இருக்கிறது. 140 கோடி மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த ஒரு தலைவரை, ஒரு
வெளிநாட்டுத் தலைவர் இப்படிப் பேசுவது இந்திய ஜனநாயகத்தையே டம்மி ஆக்கும் முயற்சி.
ஆனால்,
நம் ஊரில் இதற்கு வரும் ரியாக்ஷன்களைப் பார்த்தால், அவர் அப்படித்தான் பேசுவார், அவர்
ஒரு செல்லமான கோபக்காரர். என்பது போல ஒரு மென்மையான, வளைந்து கொடுக்கும் போக்கையே அரசு
கடைப்பிடிக்கிறது. உலக அரங்கில் நாட்டின் கண்ணியம் என்பது இப்போது சைலண்ட் மோடில் போடப்பட்டிருக்கிறது.
இந்தியா
போன்ற நாடுகளை டிரம்ப் நரகக் குழிகள் என்று வர்ணித்திருக்கிறார். பல ஆயிரம் காலத்துக்
கலாசாரம், ஜனநாயகம், அறிவுத்திறன் எனப் பீற்றிக்கொள்ளும் நம் நாட்டைப் பார்த்து இப்படி
ஒரு வர்ணனை வரும்போது, நமக்குக் கோபம் வரவேண்டும். ஆனால், நாம் ஒரு கண்ணியமான ராஜதந்திரக்
குறிப்பை அனுப்பிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம்.
உண்மையில்
தேவைப்படுவது உறுதியான கண்டனம், சாரி கேட்க வைக்கும் அளவுக்கு ஓர் அழுத்தம். ஆனால்,
நமக்குத்தான் பெரியண்ணன் அமெரிக்காவைக் கண்டால் ஒருவித பயம் கலந்த பக்தி இருக்கிறதே!
இந்தியாவின்
எரிபொருள் கொள்கையில் அமெரிக்கா தலையிடுவது உச்சக்கட்டக் கூத்து. ரஷியாவிடம் எண்ணெய்
வாங்காதே, என்று உத்தரவு போடுவதும், பிறகு சரி, ஒரு 30 நாளைக்கு மட்டும் வாங்கிக்கோ
என்று பர்மிஷன் கொடுப்பதும் என்ன மாதிரியான உறவு?
இந்தியா
என்ன வாஷிங்டனிடம் அனுமதி பெற்றுச் செயல்படும் ஒரு கிளை அலுவலகமா? எரிசக்தி பாதுகாப்பு
என்பது நம் வீட்டுப் பிரச்சினை. அதில் ஒரு வெளிநாட்டுச் சக்தி கண்டிஷன் போடுவதை அனுமதிப்பது,
நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை ஒரு நிமிடம் மறந்துவிடுவதற்குச் சமம்.
இன்னொரு
பக்கம், பாகிஸ்தானுடனான ராணுவ நடவடிக்கைகளைத் தான்தான் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப்
ஒரு கதை விடுகிறார். இது உண்மையோ பொய்யோ, ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு முடிவுகள் வெள்ளை
மாளிகையில் எடுக்கப்படுகின்றன என்கிற பிம்பத்தை இது உருவாக்குகிறது.
ஓர்
இறையாண்மை கொண்ட நாடு, தன் ராணுவத் தேவைகளைத் தானே தீர்மானிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு,
அவர் சொன்னார், நாங்க கேட்டோம், என்கிற ரேஞ்சுக்குச் செய்திகள் வருவது நம் சுயாட்சியின்
ஆணிவேரையே ஆட்டங்காணச் செய்கிறது.
நட்பு
என்பது வேறு, அடிபணிதல் என்பது வேறு. உலக வல்லரசுகளுடன் கைகோர்ப்பது அவசியம்தான், ஆனால்
அது சமத்துவமான மேடையில் இருக்க வேண்டும். இல்லை என்று சொல்ல வேண்டிய இடத்தில் உறுதியாகச்
சொல்லும் அரசுதான் வலிமையான அரசு.
சுருக்கமாகச்
சொன்னால், டிரம்ப் ஒரு பக்கம் தன் இஷ்டத்துக்குப் பந்தை உருட்டி விளையாடுகிறார். நம்
பக்கமோ, பந்து நம் கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தாலும் பரவாயில்லை, அவர் நம்ம ஆளுதான்,
என்று சிரித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு எந்த
வல்லரசு நட்பும் நமக்குத் தேவையில்லை. இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் செய்வது, நம்
வரலாற்றையே கொச்சைப்படுத்துவதற்குச் சமம்.
டிரம்ப்
தாத்தாவுக்கு யாராவது இறையாண்மை என்றால் என்னவென்று ஒரு டிக்ஷனரி அனுப்பி வைத்தால்
தேவலை!
இந்தியத்
தலைவர்களும் அந்த டிக்சனரியில் அதற்கான பொருள் என்னவென்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்வது
நல்லது. டிரம்பின் பேச்சுகளைப் பார்க்கும் போது இந்தியத் தலைவர்கள் அதை அடிக்கடி மறந்துவிடுவது
போலத் தெரிகிறது.
*****

