31 Dec 2019

குட்டிச் சிங்கப்பூரு!



செய்யு - 313

            அரச மரம்தாம் புத்தருக்குப் போதிமரம். கிராமத்துப் பக்கத்துல இது மாதிரியான போதி மரங்கள் அதிகெம். அந்த மரத்துக்கடியிலத்தாம் கிராமத்து ஆளுங்க, ஆடு, மாடுங்களோட அதெ மேய்க்கிறவங்க, விளையாடுற கொழந்தைங்க எல்லாம் உக்காந்திருக்கும். அதுக்கடியில உக்காந்து உக்காந்தோ என்னவோ அந்த மனுஷங்களுக்கும் புத்தரு மாதிரியான ஒரு மனநெல வாய்ச்சிடுது. அவ்வளவுக்கு ஏம் போவணும்? கிராமத்துப் பஞ்சாயத்துங்களே இந்த அரச மரத்தடியிலத்தாம். சில பஞ்சாயத்துல கொஞ்சம் கரைச்சலு, இரைச்சலு இருந்தாலும் முடிவா புத்தரு மாதிரியான ஒரு மனநெலக்குக் கொண்டாந்துடுவாங்க. அதாங் அரசமரத்தோட சிறப்பு போலருக்கு. அதால அந்த மரத்துக்குக் கீழே உக்காந்த புத்தரு ஞானத்த அடைஞ்சாரு போலருக்கு.
            சிலுசிலு காத்தும், அந்தக் காத்துக்கேற்ப அரச மரம் தர்ற குளிர்ச்சியும், இதுக்குனெ கட்டப்பட்டது போலருக்கும் மதுவாங் கட்டையும் கடைசியா ஒண்ணு சேந்து விகடோவட மனசுல, "ஆமாம் போ! எது நடந்தாலும் நடந்துட்டுப் போவுது! அங்கப் போயி என்னத் தோணுதோ அதெ பேசுவேம், என்ன மாதிரியான முடிவு அப்போக்கித் தோணுதோ அதெயே எடுத்துப்போம்"ன்னு தோண வைக்குது. இன்னுங் கொஞ்ச நேரம் இந்த நிழல்லயும், மதுவாங்கட்டையிலயும் ஒக்காந்தா தேவலாம்னுத்தாம் படுது. ஆனா இப்பவோ எவ்வளவு நேரம் உக்காந்தோம், எவ்வளவு நேரம் ஆயிருக்கும்னு யோசனெ வருது. யோசனெ வந்தாலும் அவ்வேன் கைக்கடியாரத்தைப் பாக்கல. என்ன நேரமா வேணாலும் இருந்துட்டுப் போவட்டும் செரி கெளம்புவோம்னு மதுவாங்கட்டைக்கு வந்த வழியில திரும்பி கோம்பூரு ரோட்டுலேந்து வேலுக்குடி மெயின் ரோட்டுக்கு வந்து கூத்தாநல்லூர நோக்கி சைக்கிள மிதிக்குறான்.
            இப்போ சைக்கிள மிதிக்கிறப்போ எல்லா பாரமும் எறங்குனது போலருக்கு. என்னவோ தனக்கும் எடுக்கப் போற முடிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போல தோணுது. யாருக்கோ நடக்குற ஒண்ணுக்கு தாம் இப்போ போயிப் பேசப் போறோம்னுத்தாம் அவனுக்குத் தோணுது. எப்படி இப்படி சித்தெ நேரத்துல மனசு மாறிப் போச்சுன்னு அதுவும் அவனுக்கு ஆச்சரியமாத்தாம் இருக்கு.
            அடே யப்பாடி! இந்த ஒலகத்துல யார்ர நம்புனாலும் நம்பலாம். ஒருத்தனோட மனச மட்டும் ஒருத்தன் நம்பிடக் கூடாது. அதுவுங் குறிப்பாச் சொல்லணும்னா அவனோட மனசு இருக்கே அதெ அவன் நம்பவே கூடாது. இப்போ ஒரு மாதிரியா இருக்குற மனசு, இன்னோரு நேரத்துல அப்படிய பல்டி அடிச்சி இன்னொரு வெதமால்ல மாறிடுது.
            நல்லா யோசிச்சுப் பாத்தா மனசுங்றது ஒரு வேஷக்காரன் மாதிரி. சினிமாவுல வேஷங் கட்டி நடிக்கிறாங்க இல்ல. அப்படித்தாம் இந்த மனசு ஒவ்வொரு வெதமா வேஷங்கட்டி இந்த வாழ்க்கைங்ற சினிமாவுல நடிச்சிக்கிட்டு இருக்கு. ஒரு நடிகன் எப்படி ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு ஆளா நடிக்கிறாம் பாருங்க! அப்படித்தாம் இந்த மனசும் ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கும்னு அவனுக்குப் புரியுது. ஒரு நேரத்துல இருக்குற மனசு இன்னொரு நேரத்துல இருக்காது. இப்போ சந்தோஷமாவும் துடிப்பாவும் இருக்குற மனசெ அப்படியே எல்லா நேரமும் இருக்கணும்னு எதிர்பார்க்க முடியாது. இப்போ பயந்துகிட்டும், நடுங்கிக்கிட்டு இருக்கற மனச அப்படியே இருக்கும்னு நெனைக்க முடியாது. மனசப் பொருத்த வரைக்கும் ஒவ்வொரு நேரத்துலயும் ஒவ்வொரு மாதிரித்தாம் இருக்கும்.
            குளிருல நடுங்குற ஒடம்புகிட்ட வேர்த்துப் போயி நில்லுன்னோ, வெக்கையில வேர்த்துப் போயி நிக்குற ஒடம்புக்கிட்டு குளுந்துப் போயி நில்லுன்னோ எப்படிச் சொல்ல முடியாதோ மனசுகிட்டேயும் அப்படித்தாம். மனசுகிட்ட இதுக்காகப் போயி அது இதுன்னு எதாச்சியும் சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது. அப்படி சொல்ல நெனைச்சா அப்படிச் சொல்ற அதுவும் இன்னொரு மனசுதாங்றத புரிஞ்சிக்கிடணும். மனசு ஒரு நெலையில இருக்க, அந்த மனசே இன்னொண்ணா பிரிஞ்சி அப்படி இரு இப்பிடி இருன்னா மனசு எதெக் கேக்குறது? எப்பிடி இருக்குறது?ன்னு கொழம்பிப் போயி அதுக்கு ஒரு பகுதியா பிரிஞ்சி யோசிக்க முடியும். ஏற்கனவே துண்டு துண்டா போயிருக்குற மனசு இன்னொரு துண்டா போயி யோசிக்க ஆரம்பிச்சி மனசு துண்டுபட்டது அதிகமாயி இன்னும் கொழப்பம் அதிகமாயிடும்.
            வேலுக்குடிய தாண்டி சைக்கிள மிதிச்சா பனங்காட்டாங்குடி வருது. அதெ தாண்டி மிதிச்சிட்டுப் போறப்ப பூதமங்கலம். அப்படியே போறப்ப லெட்சுமாங்குடி புது பஸ் ஸ்டாண்டு கண்ணுல படுது. கட்டி உபயோகமில்லாம கெடக்குற அதெ பாக்குறாம் விகடு. அதெ பாக்குறப்ப அப்படி ஆபீஸ் ஆரம்பிச்சி நம்ம நெலையும் அதுபோல ஆயிடுமோங்ற பயம் அவனுக்குள்ள வருது. அதெ எவ்வளவு செலவு பண்ணி கட்டியிருப்பாங்க. லெட்சுமாங்குடிக்குன்னு ஒரு பஸ் ஸ்டாண்ட் இருந்தா அந்த ஊரு நல்லா வளரும்னு நெனைச்சித்தாம் அந்த யோசனையெ பண்ணிச் செஞ்சிருப்பாங்க. ஆனா இப்போ அங்க எந்த பஸ்ஸூம் நிக்குறதில்ல. பஸ்ஸூங்க பாட்டுக்கு ரோட்டோட நேரத்தாம் போவுதே தவிர எந்த பஸ்ஸூம் அதுக்குள்ள போயி வரதில்ல. வூட்டக் கட்டி அதுல குடியிருக்காம பாழடைஞ்சுப் போயிக் கெடந்தா எப்பிடி இருக்குமோ அப்பிடில்ல கெடக்குது பஸ் ஸ்டாண்டு.

            அந்த பஸ் ஸ்டாண்டுக்குள்ள கட்டியிருக்கிற எந்தக் கடையிலயும் யாரும் கடை போடல. மூத்திரம் பெய்யுறதுக்கும், அவரசமா இயற்கை ஒபாதையக் கழிக்கிறதுக்கும் மனுஷங்க அந்த பஸ் ஸ்டாண்ட பயன்படுத்திக்கிறாங்க. அதெ தவிர மனுஷங்களுக்கு அந்த பஸ் ஸ்டாண்டால எந்தப் பிரயோஜனமும் இருக்குறதா தெரியில. குடிகாரங்களும், பாக்குப் போடுறவங்களும் அங்கங்க ஓரமாக படுத்துக் கெடக்கறாங்க. அந்த பஸ் ஸ்டாண்டுல மனுஷங்களுக்கு உபயோகம் இருக்கோ பன்னிங்க கூட்டத்துக்கு ரொம்ப உபயோகம் இருக்கு. அதுங்க அங்கத்தாம் தேங்கிக் கெடக்குற சாக்கடையில, மனுஷக் கழிவுகளத் தின்னுக்கிட்டு குதியாட்டம் போட்டுக்கிட்டு நிக்குதுங்க. ஒண்ணு ரெண்டு லாரியோ, டூரிஸ்ட்டு பஸ்ஸூங்க நிப்பாட்டுறதுக்கு எடம் வசதியா இருக்கேன்னு உள்ள நிப்பாட்டிக் கெடக்குதுங்க. மித்தப்படி அந்த பஸ் ஸ்டாண்ட எதுக்காக கட்டுனாங்களோ, அதோட நோக்கம் நிறைவேறல்ல.
            எல்லாத்தையும் அப்படியே பாத்துக்கிட்டே சைக்கிள மிதிச்சா போலீஸ் ஸ்டேஷன் வருது. அந்த போலீஸ் ஸ்டேஷன் காம்பெளண்டுக்குள்ள எவ்வளவோ வாகனங்க அப்படியே துரு பிடிச்சிப் போயி இத்துப் போயி நிக்குதுங்க. ஏதோ ஒரு கேஸ்ல உள்ள போன வாகனங்களா இருக்கும் அதுங்க. பெறவு அதெ மீட்க முடியாம அதுகளும் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லாம அப்படியே கெடக்குதுங்க. வாழக்கையோட பெருத்த சோதனைங்றது அதுதாங். உபயோகமாகணும்னு உருவாயி உபயோகமத்துப் போறது இருக்கே அதெ தலையெழுத்துன்னு சொல்றதா? அதெ தலைவேதனைன்னு சொல்றதா? அதெ ஒண்ணும் பண்ண முடியாதுன்னு அப்படியே விட்டுப்புடறதா? அதெ எப்படிச் சொல்றதுன்னு தெரியல. இதெல்லாம் இப்ப மனசுக்குள்ள ஓடி ஒரு புது கொழப்பத்த உண்டு பண்ணுது விகடுவோட மனசுக்குள்ள. மனுஷனுக்கு சில நேரத்துல வவுத்தக் கலக்கும் பாருங்க, அதெ போல இப்போ மனசக் கலக்குது விகடுவுக்கு. வவுத்தக் கலக்கி அது வயித்தாலப் போனா ஒடம்பு நல்லா வந்துடும். ஆனா இந்த மனசு கலங்குறது இருக்கே அது வயித்தாலப் போறது போல எங்க வெளியிலப் போவுது? மனசுக்குள்ளயே கெடந்து கொடையோன்னுல்ல கொடையுது.
            கொஞ்ச நேரத்துக்கு அரச மரத்தடியும், குளுந்த காத்தும் தந்த அமைதிய இப்போ உபயோகமில்லாம கெடக்குற பஸ் ஸ்டாண்டும், வாகனங்களும் தகத்தெறிஞ்சிப்புடுச்சி. விகடு அவனோட பழைய சைக்கிளப் பாக்குறாம். லெட்சுமாங்குடி மெயின்ரோட்டுலேந்து எடது பக்கமா பிரியுது அப்துல் ரகுமான் ‍ரோடு. அப்படியே எடது பக்கமா கையைக் காட்டி சைக்கிள வளைச்சித் திருப்புறாம். திருப்புறதுக்கு மின்னாடி சைக்கிளப் பாத்தான்ல, அவனுக்குள்ள இப்போ ஒரு எண்ணம் வந்துச்சிப் பாருங்க. இத்து பழைய சைக்கிள்தான, இத்துப் போன சைக்கிள்தான, ஆனா உபயோகம் அத்தாப் போச்சு. இல்லல்ல. இத்து உபயோகமா இருக்குறதும், உபயோகமத்துப் போறதும் யாரு கையில இருக்கு? அதெ வெச்சிருக்கிற மனுஷங் கையிலத்தான இருக்கு. அதெ போலத்தாம் ஆபீஸூம். அதெ வெச்சி நடத்துறவங் கையிலத்தாம் எல்லாம் இருக்கு. அதெ வுட்டுப்புட்டு சம்பந்தமில்லாம யோசிக்கிறது பிரயோஜனமில்லன்னு அவனுக்குத் தோணுது.
            அந்த நெனைப்பு தோணுண உடனே எழுந்து நின்னு சைக்கிள மிதிக்க ஆரம்பிக்கிறாம். அதுக்கு எந்த அவசியமில்லேங்ற மாதிரி அப்துல் ரகுமான் ரோட்டுலேந்து பிரியிற தெருவு ஒவ்வொரு எடத்துலயும் ஒவ்வொரு வேகத்தடைய போட்டு வெச்சிருக்காங்க வாழ்க்கையில முன்னேறம்னு நினைக்குறப்ப வருமே முட்டுக்கட்டைங்க அந்த மாதிரி. சைக்கிள சீட்டுலயே உக்காந்து மெல்லமா மிதிக்கிறது மாதிரி ஆயிப் போவுது அவ்வேன் நெலமே. சுமாரா எட்டு வேகத்தடையத் தாண்டி மிதிச்சி வந்தா கூத்தாநல்லூரு முனிசிபாலிட்டி ஆபீஸூவருது. எதுக்கே பிரியிற தெருவுல கெழக்குக் கோட்டையாரு வூட்டுப் பக்கமா திருப்புறாம்.
            அடேங்கப்பா இங்க ஒவ்வொரு வூடும் எம்மாம் பெரிசா இருக்கு. வூடு ஒவ்வொண்ணுத்தையும் வூடாவா கட்டிருக்காங்க. ஒவ்வொண்ணுத்தையும் கோட்டை மாரில்லா கட்டியிருக்காங்க. ஒவ்வொரு வூடும் ஒவ்வொரு தினுசு. ஒத்த மாடி உள்ள வூடுங்க, ரெண்டு மாடி உள்ள வூடுங்க, மூணு மாடி உள்ள வூடுங்கன்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு வூடும் இசுலாமிய சனங்க வூடுக. அது மட்டுமா இங்க இருக்கற அவுங்களோட கடைகள்ல அம்புட்டு வெளிநாட்டுச் சாமானுங்கள, சரக்குகள வாங்கலாம். வெளிநாட்டுக் கடியாரம், வெளிநாட்டு சென்டுக, வெளிநாட்டு ரேடியோ, வெளிநாட்டு டெக்கு, வெளிநாட்டு டி.வி., வெளிநாட்டு அயர்ன் பாக்ஸூன்னு அவுங்ககிட்ட கெடைக்குற வெளிநாட்டுப் பொருளுங்களுக்குக் கணக்கு இருக்காது.
            நீங்க கூத்தாநல்லூருக்குள்ள நொழைஞ்சிட்டாலேயே இது இந்தியாவா? வெளிநாடாங்ற சந்தேகம் வந்துப்புடும் ஒங்களுக்கு. அட நீயென்னப்பா ஒரு சிங்கப்பூருக்கு போறவேம் மாதிரில்ல பேசுறேன்னு நீங்க சொன்னா அது செரித்தாம். ஏன்னா கூத்தாநல்லூருக்கு இன்னொரு பேரு குட்டிச் சிங்கப்பூரு. இங்க ஒரு ஆபீஸப் போட்டா வெளிநாட்டுல போயி வேல பாக்குறேன்னு கூட தெனாவெட்டா சொல்லிக்கலாம். இங்க இருக்குற ஆளுங்களுக்கு மட்டும் நம்பிக்கெ வந்துட்டுன்னா வெளிநாட்டுலப் போயி சம்பாதிக்கிற அத்தனெ சம்பாத்தியத்தயும் அவுங்ககிட்டயே சம்பாதிச்சிப்புடலாம். அந்த நம்பிக்கெ அதுதாங் முக்கியம். அம்புட்டுச் சீக்கிரத்துல அவுங்க யாரையும் நம்பிப்புட மாட்டாங்க. நம்பிட்டாங்கன்னா உசுரையே கொடுப்பாங்க. அவுங்க வூட்டு ஆளுங்க கணக்கா நடத்துவாங்க. நல்லது கெட்டதுன்னு அப்பிடித் தொணை நிப்பாங்க. பாசத்துல அப்பிடியே மெழுகா உருகிப் போயிடுவாங்க. எந்த விசயம்னாலும் நம்பிக்கெ வெச்ச அந்த ஆள கலந்துக்காம எதெயும் செய்ய மாட்டாங்க. நம்பிக்கைக்கு அவுங்க கொடுக்குற மருவாதி அது.
            அங்க இருக்குற வூடுகள்ல்ல கெழக்குக் கோட்டையாரு வூடு மட்டும் தனியா தெரியுது. அது மூணு மாடி வூடு. வூட்டை அப்படியே சலவைக்கல்லால எழைச்சி வெச்சிருக்காரு கெழக்குக் கோட்டையாரு. வூட்டுக்கு முன்னாடி நிக்குற காம்பெளண்டே ரெண்டாளு உசரத்துக்கு பாக்குறதுக்கு அது ஒரு சீனப் பெருஞ்சுவரு மாதிரி நிக்குது. அந்த வூட்ட ஒரு சுத்துல ரெண்டு கண்ணால பாத்துட முடியாது. ஏழெட்டு எடத்துல நின்னு ஒவ்வொரு சுத்தா பகுதி பகுதியாத்தாம் பாக்கலாம். ஏம் அந்த வூட்டுக்காரர கெழக்குக் கோட்டையாருன்னு சொல்றாங்றத கெழக்கால நிக்குற அந்த வூடே சாட்சியா நின்னு சொல்லுது. அந்த வூட்டுலேந்து நாலஞ்சு வூடு தள்ளித்தாம் மாலிக் அய்யாவோட வூடு இருக்குது. அதெல்லாம் நல்லா தெரிஞ்சும் விகடு சைக்கிள நிப்பாட்டு அப்படியே கால ஊனிக்கிட்டு, அங்க நின்னுகிட்டு இருக்குற ஒரு ஆளுகிட்ட, "இஞ்ஞ புரபஸர் மாலிக் வூடு?" அப்பிடிங்றாம்.
            "அதோ ரோட்டாண்ட ஒரு டிவியெஸ் பிப்டியும், மேக்ஸ் ஹண்ட்ரட் ஆரும் நிக்குது பாரு. அதாங்!"றாரு அந்த ஆளு. இவனுக்கு அங்க நிக்குறப்பவே அது சுப்பு வாத்தியாரோட டிவியெஸ் பிப்டி மாதிரியும், விநாயகம் வாத்தியாரோட மேக்ஸ் ஹண்ட்ரட் ஆர் மாதிரியும் தெரியுது. இருந்தாலும் கண்ணு ரெண்டையும் ஒரு சிமுட்டு சிமிட்டிக்கிட்டுப் பாக்குறாம். கொஞ்சம் அப்படியும் இப்படியுமா தெரியுது.
            இவ்வேன் சைக்கிள அந்த வண்டிக மின்னாடி போயி நிப்பாட்டிப் பாத்தா சந்தேகமே இல்லாம அது சுப்பு வாத்தியாரோட வண்டியும், விநாயகம் வாத்தியாரோட வண்டியுந்தாம் அதுங்க.
*****


25.0



            இரண்டு கவிஞர்கள் தொடர்ச்சியாகக் கவிதை பாடும் போது ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. கவிதை உணர்ச்சியைப் பிழிய பிழிய இடையே ஒரு கருத்துக் குவியல் தேவைப்படுகிறது.
            ஒல்லியல் மருத்துவர் அருள் அடுத்ததாகப் பேசத் தொடங்குகிறார்.

            "பரிணாமக் கோட்பாட்டை உலகிற்குத் தந்தவர் சார்லஸ் டார்வின்.
            உயிரினங்களின் தோற்றம் குறித்த ஆய்வை நாற்பது ஆண்டு காலம் மேற்கொள்கிறார் சார்லஸ் டார்வின்.
            தீவிரமான ஆய்வில் ஈடுபட்ட டார்வினுக்கு என்ன நிகழ்கிறது தெரியுமா?
            உலகுக்கு அந்த உண்மை தெரியாது. அவருக்கு அடுத்ததாக என்ன நேர்கிறது என்பது உலகம் அறியாதது.
            சுமார் பத்தாண்டு காலம் வரை அவர் இதய படபடப்பு, ஞாபக மறதி, கை கால் நடுக்கம் ஆகியவற்றோடு அவர் போராட வேண்டியதாகி விடுகிறது.
            டார்வினின் போராட்டம் ஜேம்ஸ் மேன்பி கல்லி எனும் ஒல்லியல் மருத்துவரைச் சந்திக்கும் வரை தொடர்கிறது.
            அவரது நோய்மைக் கால போராட்டத்தைக் காலக் கணக்கில் பார்க்கையில்,
            நாள் கணக்கில் பார்த்தால் 3650 நாட்கள்.
            மாதக் கணக்கில் பார்த்தால் 120 மாதங்கள்.
            வாரக் கணக்கில் பார்த்தால் 520 வாரங்கள்.
            அவ்வளவு காலம் நீடித்த டார்வினின் உடல், மனம் சார்ந்த போராட்டத்தை 30 நாட்களில் ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார் கல்லி.
            பரிணாமக் கொள்கையை உலகிற்குத் தந்தவர் டார்வின்.
            அவரது உடல்நலத்தை முழுமையாக மீட்டுத் தந்தது ஓமியோ.
            ஓமியோ மருத்துவம் ஓர் இயற்கை மருத்துவ முறை.
            மனிதர் இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படி அவரை மீட்டுக் கொண்டு வருவது ஓமியோ. ஓமியோ மனிதர்களை இயல்பாகக் குணப்படுத்துகிறது. பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்துகிறது. முழுமையாக குணப்படுத்துகிறது என்ற சொல்லாக்கத்தை விட முழுமையாக நலமாக்குகிறது என்ற சொல்லாக்கத்தைச் சொல்வதுதாம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
            ஓமியோவை உருவாக்கிய டாக்டர் சாமுவேல் ஹானிமான் ஓர் அலோபதி மருத்துவர் என்ற செய்தியை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அவர் அலோபதியின் பக்கவிளைவுகளை அறிந்து, அத்தகைய பக்க விளைவுகள் இல்லாத இயல்பாக உடலைக் குணமாக்கும் ஓமியோ முறையைக் கண்டறிகிறார்.
            இங்கு மருந்து என்பது இம்மிதாம்.
            இம்மி அளவு மருந்து எப்படிக் குணமாக்கும் என்று கேட்டால் அதன் சக்தி அப்படி. அதாவது இம்மி அளவு விஷம் எப்படி சாகடிக்கிறது என்று கேட்டால் அதன் சக்தி அப்படி.
            கொடுக்கப்படும் மருந்தின் அளவிலா இருக்கிறது மருத்துவம்?
            கொடுக்கப்படும் மருந்தின் செயல்படும் வீரியத்தில் இருக்கிறது மருத்துவம்.
            அதை அறிந்து செயல்படுகிறது ஓமியோ.
            அநாவசியமாக ஒரு இம்மியினும் இம்மி அளவு மருந்து கூட இங்கு வழங்கப்படுவதில்லை.
            இங்கு எந்த மருந்தும் கசப்பில்லை, கார்ப்பில்லை, உவர்ப்பில்லை, துவர்ப்பில்லை, கரிப்பில்லை. அனைத்து மருந்துகளும் இனிப்பானவை. மென்று முழுங்க அவசியம் இல்லாதவை. மருந்தை உட்கொள்ள விருப்பம் இல்லையென்றாலும் வாயில் வைத்தால் கரையக் கூடியவை. அப்படி வாயில் வைத்து உமிழ்நீரோடு மருந்து கலப்பதே போதும் ஓமியோவின் மருந்து செயலாற்றுவதற்கு.
            ஓமியோவில் மருந்தும் செலவும் மிகவும் குறைவு.
            இந்த மருத்துவ முறை மக்களிடம் அதிகம் பரவ வேண்டும் என்று பிரியப்படுகிறேன். நான் ஓமியோ மருத்துவர் என்பதால் மட்டுமே சொல்லவில்லை. மாற்று மருத்துவங்களாகவும், பாரம்பரிய மருத்துவங்களாகவும் சொல்லப்படுகிற சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவமும் மக்களிடம் பரவ வேண்டும் என்றே பிரியப்படுகிறேன். மக்கள் இந்த உண்மைகளை விளங்கிக் கொள்வார்களாக!"
*****


29 Dec 2019

சைக்கிள் வுடுறப்ப சஞ்சலம் வுடுது!



செய்யு - 312

            அந்த விசாலக் கிழமெ வந்தப்போ மாலிக் அய்யாவ போயிப் பாக்குறதா? வேணாமான்னு கொழம்ப ஆரம்பிச்சிட்டாம் விகடு. ஆபீசு போடலன்னாலும் போயி பாக்காம இருக்குறது மரியாதையா இருக்காது. அப்படி ஒரு முடிவுல இருந்தாலும் அதெப் போயி சொல்லிபுடறதுதாம் ஞாயம் இல்லையா.
            நல்லதுக்கும், கெட்டதுக்குமான ஒரு மனக்கொழப்பம் அது. நல்லது எது? கெட்டது எது?ன்னு தெரியாம இருக்குறப்ப மனுஷன் எதெ வேணாலும் செஞ்சிக்கிட்டே இருப்பாம். மனசுன்னு ஒண்ணு இருக்குறது அப்போ தெரியவே தெரியாது. இதாங் நல்லது, இதாங் கெட்டதுன்னு தெரியுறப்போ நல்லதா உள்ளதத்தாம் செய்யணும்னு மனசு நெனைக்கும். ஆனா கெரகம் எப்டி இருக்குமுன்னா கெட்டதெ செஞ்சத்தாம் தப்பிப் பொழைக்க முடியுங்றது போல இருக்கும். அப்போ நல்லதெ செஞ்சி நாசமாப் போறதா? கெட்டதெ செஞ்சித் தப்பிப் பொழைக்கிறதா?ங்ற சஞ்சலம் இருக்கே. அது மனசக் கொன்னு மனுஷன சித்திரவதைப் பண்ணிப்புடும்.
            சுருக்கமா சொல்லணும்னா எதெயும் பிரிச்சுப் பாக்காதப்ப மனசுன்னு ஒண்ண மனுஷன் பாக்கவே முடியாது. பிரிச்சுப் பாக்குறப்பத்தாம் மனசுன்னு இருக்குறதெ மனுஷனால உணர முடியும். நல்லதோ, கெட்டதோ வேற ஒண்ணும் வழியில்ல ரெண்டையும் ஏத்துக்கிட்டு ஆவணும்னு போயிக்கிட்டே இருந்தா இந்த மனச மறுபடியும் மனுஷனால பாக்க முடியாது. ஒவ்வொரு விசயத்தையும் ரெண்டு ரெண்டா அதாவது நல்லது - கெட்டது, சந்தோஷம் - கவலை, அதிர்ஷ்டம் - துரதிர்ஷ்டம், பாசம் - வெறுப்பு, சுறுசுறுப்பு - சலிப்பு, வெற்றி - தோல்வி, லாபம் - நஷ்டம், ஞாயம் - அநியாயம், சிரிப்பு - சோகம் இப்பிடின்னு பிரிச்சிக்கிட்டுப் போனா மனசு உருவாயிடும். ஆமாம் போ இதெல்லாம் பிரிச்சிப் பாக்க எங்க நேரமிருக்குன்னு போயிட்டு இருந்தா மனசு செத்துப் போயிடும். உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு ரொம்ப பலமா இருக்குறதா சொன்னாக்க நீங்க நிச்சயம் பிரிவினைவாதித்தாம். அப்பிடியா மனசுன்னு ஒண்ணு எங்க எங்கிட்டு இருக்குன்னு கேட்டா நீங்க எல்லாத்தையும் சமமா பாக்குற அசாமித்தாம்.
            விகடவோட மனச அந்த ஒரு கேள்வித்தாம் உறுத்திக்கிட்டு இருந்துச்சு. ஒருவேள நஷ்டம் ஆயிடுச்சுன்னா அதுக்கு என்னா பண்ணுவேங்ற கேள்விக்கு அவனால அப்படி ஆகாதுன்னு ஒரு பதில அழுத்தமா சொல்ல முடிஞ்சாலும் இப்போ அவனுக்குள்ளே அப்படி ஆகாதுன்னு நூத்துக்கு நூறு எப்படிச் சொல்ல முடியுங்ற வினா எழ ஆரம்பிச்சிடுச்சு. மொதல்ல ஆபீஸப் போடலாம்னு நெனைச்சப்போ அவனுக்கு நஷ்டம்ங்றதெல்லாம் ஞாபகத்துலயே இல்ல. லாபம் ஒண்ணுத்தாம் அவனோட ஞாபகத்துல இருந்துச்சு. மனசு அப்போ லாபம் - நஷ்டம்னு ரெண்டா ஆகவே இல்ல. இப்போ லாபத்துக்குப் பக்கமா நின்னு ஒரு மனசும், நஷ்டத்துக்குப் பக்கத்துல ஒரு மனசும் நின்னு ரெண்டுப் பக்கமாவும் வாதாடுதுங்க. லாபத்துக்குப் பக்கத்துல நின்னு வாதாடுறது யாருன்னு கேட்டாக்கா அதுவும் விகடுவோட மனசுத்தாம். நஷ்டத்துக்குப் பக்கமா நின்னு வாதாடுறது யாருன்னு கேட்டாக்க அதுவும் விகடுவோட மனசுதாம்.
            முன்னாடி விகடுவும், விநாயகம் வாத்தியாரும் ரெண்டு பக்கமா நின்னு பேசுனாங்க இல்லையா? இப்போ அந்த வேலைய அவனோட மனசே விகடுவாவும், விநாயகம் வாத்தியாராவும் நின்னு செய்யுது. அதெப்பிடி தன்னோட மனசுல ஒரு பாதியா விநாயகம் வாத்தியாரு புகுந்தாருன்னு அது வேற அவனுக்கு எரிச்சலா இருக்கு? அப்போ விநாயகம் வாத்தியாரு போல பேசுற மனசு நானா? விநாயகம் வாத்தியாரன்னு அது வேற அவனுக்குக் கொழப்பம் தாங்க முடியல.
            மாலிக் அய்யா காலந்தவறாமையுல ரொம்ப சரியான ஆளு. அவருக்கு ரெண்டு தாள குண்டூசி குத்தி இணைச்சுக் கொடுக்கறதுலயும் ஒரு நேர்த்தி இருக்கணும்னு எதிர்பாக்குற ஆளு. குண்டூசிய குத்துறதெ வெச்சி அந்த ஆளோட ஜாதகத்த அக்குவேறு ஆணிவேரா கணிக்குற ஆளு அவரு. குண்டூசிய குத்தினா வெளியில அது நீட்டிக்கிட்டு இருக்கக் கூடாது. அதெ மறுபடியும் ஒரு குத்து குத்தி அதோட கூர்ப்ப உள்ளார குத்திப்புடணும். இல்லாட்டி, "ஒரு குண்டூசிய இப்டி ஒந் தாள வாங்குறவேம் கையக் குத்துறாப்புல வைக்குறீயே? ஒனக்கெல்லாம் பிறத்தியாளப் பத்தின யோஜனெ கொஞ்சமாவது இருக்கா? நீயெல்லாம் ன்னா மனுஷம்டா?" அப்பிடிம்பாரு அவரு. இப்படி ஊடால மாலிக் அய்யாவ பத்தின சிந்தனையும் ஓடுது விகடுவுக்கு.
            டிரேடிங் ஆயிட்டு இருந்த கம்ப்யூட்டர்ல நேரம் மூணு ஆவுறது தெரியுது. மார்க்கெட் முடியுறதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்குது.
            "நாம்ம கெளம்புறேம்!"ன்னு விகடு எழுந்திருக்கிறாம்.
            "நானும் வரட்டா?"ங்றாரு லெனின்.
            வேணாங்றது போல தலைய ஆட்டுறாம் விகடு.
            "ன்னா முடிவு? ஆபீஸ் போட்டுறலாம்தான்ன?"ங்றாரு லெனின்.
            "நூத்துக்குத் தொண்ணூத்து ஒம்போது போடணுங்றதுத்தாம் முடிவு. நூத்துக்கு ஒண்ணே ஒண்ணு போட வாணாம்னுங்றது முடிவு. போறப்போ எந்தப் பக்கம் முடிவாகுதோ அதாங் முடிவு."ங்றான் விகடு.
            "அதாங் நாம்ம வர்றேங்றேம்!"ங்றாரு லெனின்.
            "டெர்மினல்ல ஆர்டர் ஆகலன்னா ஹெட் ஆபீஸ்லேந்து போன் வரும்ங்கய்யா! நீஞ்ஞ கொஞ்சம் பாத்துக்குங்க! நம்மால ஒங்களுக்குப் பெரச்சன வேணாம்!"ங்றான் விகடு.
            "அத்து ஒரு மேட்டரு இல்ல. கோபிய வெச்சு ரெண்டு டெர்மினலுக்கும் சமாளிச்சுக்கலாம்!"ங்றாரு லெனின். ஹெட் ஆபீஸிருந்து ஒவ்வொரு டெர்மினலிலும் நடக்கும் பங்கு யேவாரத்தை உன்னிப்பாக பாத்துக்கிட்டு இருப்பாங்க. எதாச்சிம் ஒண்ணுல ஆர்டரோட அளவு கொறைஞ்சாலும் உடனே போன் அடிப்பாங்க ஏம் ஆர்டரு கொறையுதுன்னு. ஏன்னா ஆபீஸோட வருமானமே ஆர்டர் போட வெச்சு விக்குறதுலயும், வாங்குறதுலயும் கெடைக்கிற கமிஷன்தானே. அதால கிளையண்ட்ஸை எதாச்சிம் பண்ண வெச்சிக்கிட்டே இருக்கணும். இல்லன்னா ஹெட் ஆபீஸ் போனு அலற ஆரம்பிச்சிடும்.
            "வாணாம்! நாம்ம பஸ்லப் போகல. சைக்கிள்லத்தாம் போவப் போறேம்!"ங்றான் விகடு இப்போ.

            "அம்மாம் தூரம் சைக்கிள்ல போயி பிற்பாடு அஞ்ஞயிருந்து வூட்டுக்குச் சைக்கிள்ன்னா... தேவயே யில்ல. சைக்கிள இஞ்ஞ ஸ்டாண்டுல போட்டுட்டு பஸ்லப் போயி, நாளைக்கு அப்டியே வூட்டுலேந்து பஸ்ல வந்து எடுத்துக்கிடலாம்!"ங்றாரு லெனின்.
            விகடு அதுக்கு எந்தப் பதிலும் சொல்லாம வெளியில வர்றாம். ஏ.சி. அறையை விட்டு வெளியில வந்ததும் லேசான வெப்பம் வந்து ஒடம்பத் தாக்குது. தன்னோட சைக்கிளோட ஸ்டாண்டைத் தட்டி விட்டுப்புட்டு ஏறி அதுல உக்கார்றாம். திருவாரூ தெக்கு வீதியிலேந்து பஸ் ஸ்டாண்டுக்கு வர்றதுக்குள்ள வாகனங்க நெரிசலா அங்கயும், இங்கயுமா போயிட்டு இருக்கு. பஸ் ஸ்டாண்டைத் தாண்டி மேம்பாலத்து வழியா போனாக்கா இவனோட ஊரு போற வழி. அப்படித் திரும்பாம நேரா தஞ்சாவூரு ரோட்டுல போனாக்கா விளமலு வருது. விளமலு கல்லுபாலத்துக்கிட்டு பெட்ரோலு பாங்குகிலேந்து எடது பக்கமா ஒடிச்சி மன்னார்குடி ரோட்டுல போனாக்கா கூத்தாநல்லூரு போவலாம். விளமலு கடைத்தெரு தாண்டி கூட்டுறவு நகரு வர்ற வரைக்கும் வெத வெதமான வானங்களா கடந்து வர்றது பெரிய ரோதனையாத்தாம் இருக்கு. இவ்வளவு வாகனங்கள நாட்டுல எங்க உற்பத்திப் பண்ணாங்கன்னு ஆச்சரியமா இருக்கு? நாட்டுல இம்மாம் வாகனங்க இருக்கான்னு அதிசயமாவும் இருக்கு? ரோட்டுல சனங்களும் ச்சும்மா கொசகொசன்னு யம்மாடி ன்னா கூட்டம்னு அலுத்துப் போவுது.
            விளமலு ரயில்வே கேட்ட தாண்டுன பிற்பாடுத்தாம் ரோடு தெரியுது, ரோடு ரோடா இருக்குது. ஒண்ணு ரெண்டு வாகனங்க மட்டும் வர்றதும் போறதுமா இருக்கு. காத்து குளுகுளுன்னு அடிக்கிற மாரி இருக்குது. ரோட்டோட ரெண்டு பக்கமும் பொட்டலாத்தாம் இருக்கு. வயலா இருந்ததையெல்லாம் ப்ளாட்டு போட்டு வெச்சிருக்காங்க. நல்ல வேளையா சனங்க இன்னும் வூடு கட்டி குடி வர்றாதால பொட்டல் பொட்டலாவே இருக்கு. பொட்டல் எல்லாம் வூடு ஆனாக்க இந்த அளவுக்குக் காத்து வருமான்ன தெரியல. அதெப்படியே அத்தனை வருஷம் வயலுகளா இருந்தத சில வருஷத்துக்குள்ள ப்ளாட்ட போட்டு நகர்களா ஆக்கிப்புட்டாங்கன்னு தெரியல. அடிக்கிற காத்து சைக்கிள ஒரு பக்கமா லேசா தள்ளப் பாக்குது. அதெ ஒரு பாலன்ஸூக்குக் கொண்டு வர்றது கொஞ்சம் செரமா இருந்தாலும் அது ஒரு சந்தோஷத்தைக் கொடுக்குது மனசுக்குள்ள. சீட்டை வுட்டு ஏறி நின்னு மிதிக்க ஆரம்பிக்கிறாம் விகடு. சைக்கிளு அடிக்கிற காத்துலயும் செம வேகத்துல போய்ட்டு இருக்கு. இப்பிடி மிதிச்சிட்டுப் போறது ரொம்ப ஜாலியா இருக்க கமலாபுரம் கடைத்தெரு வர்ற வரைக்கும் இதே மிதியிலத்தாம் போறான் விகடு.
            கமலாபுரம் கடைத்தெருவுல கொஞ்சம் கூட்டமா இருக்கு. கொஞ்சம் வேகத்த மட்டுப்படுத்தி சைக்கிளு ரேஸ்ல மெல்லமா போவாங்களே அது மாதிரிப் போறாம். கடைத்தெரு தாண்டுனதும் மூலங்குடி, வேலுக்குடி வரைக்கும் வேகம்னா வேகம் அன்ன வேகம். அவனுக்கு ஒலகமே மறந்து போல இருக்கு. இந்த வேகத்துல அவனுக்கு எதுக்கு இப்டி சைக்கிள மிதிச்சிட்டுப் போறேங்றது கூட மறந்திடுச்சி. வேலுக்குடி வந்து அந்த மொரட்டுத்தனமா இருக்குற வளைவுல திரும்புறதுக்கு வேகத்த கொறைச்சப்பத்தாம் அவனுக்கு எதுக்குச் சைக்கிளுல போறோம்ங்ற ஞாபவமே வருது. அந்த ஞாபவம் வந்ததும் வளைவ திரும்பி முடிச்சா வர்றகோம்பூரு ரோட்டுப் பக்கமா சைக்கிள திருப்புறாம். அது கூத்தாநல்லூரு போறதுக்கான வழி கெடையாது. அவன் சைக்கிள திருப்பாம நேரா மன்னார்குடி ரோட்டுல போனாத்தாம் கூத்தநல்லூரு போவ முடியும். கோம்பூரு ரோட்டுல திருப்புனா பாதி வழியிலயே தி‍செ மாறுறாப்புலத்தாம் அர்த்தம்.
            கோம்பூரு ரோட்டுல திருப்புனவன் அங்க இருக்குற ரைஸ் மில்ல கடந்து வந்து அப்டியே எடது பக்கமா ஒடிச்சிச் சைக்கிள திருப்புறாம். அது ஓகையூரு போற ரோடு. அதுல கொஞ்சம் தூரம் போனாக்கா ஒரு பெரிய மதுவாங் கட்டெ வருது. பக்கத்துலயே ஒரு பெரிய அரசமரம் நிக்குது. அதுக்கு அடியில சைக்கிள நிப்பாட்டுனவன் அப்படியே ஒரு தாவு தாவி மதுவாங் கட்ட மேல ஏறி உக்காந்திருக்கிறாம்.
            சைக்கிள்ல போறதுல ஒரு விசயம் என்னான்னா போவுறப்ப வேர்க்காது. அடிக்கிற காத்துல சாமரம் வீசறது போல ஒடம்புக்கு சொகமா இருக்கும். சைக்கிள வுட்டு எறங்கி உக்காந்தா போதும் இதயம் படபடன்னு துடிக்கும். ஒடம்பு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிடும். விகடு இப்போ கிட்டதட்ட பத்து பன்னெண்டு கிலோ மீட்டராவது மிதிச்சிக்கிட்டு வந்திருப்பாம். சைக்கிள நிப்பாட்டி உக்காந்ததும் இதயம் படக் படக்னு துடிக்கிறது ஒலகத்துக்கே கேக்கறது போல இருக்கு அவனுக்கு. ஆனா அதுவும் ஒரு‍ சொகமாத்தாம் இருக்கு. குப்புன்னு வேக்குற வேர்வையில சட்டைக்காலரு, கக்கம் எல்லாம் நனையுறது தெரியுது. நெத்தியிலயும், கழுத்துலயும் வழியுற வேர்வையை வழிச்சி வெரலால அப்பிடியே சுண்டி விடுறாம். அந்த வேர்வையை வர விடக் கூடாதுன்னு அரசமரம் சிலுசிலுன்னு காத்த வாங்கி வுடுது. உக்காந்த ரண்டு நிமிஷத்துக்குள்ள வந்த வேர்வை எங்கேங்ற கேக்குற அளவுக்கு அடிக்கிற காத்தோட ஏ.சி.ய போட்டு வுட்டாப்புல எல்லாம் அடங்கிப் போவுது. ஏ.சி. மரமாட்டம்தாம் அரச மரம் இலைகள சிலுசிலுத்துக்கிட்டு ஏதோ சிம்போனி இசைய போட்டு விட்ட மாதிரி கெத்தா காத்துல இலை, கிளைகள டான்ஸ ஆட விட்டுட்டு நிக்குது. இயற்கையான ஆட்டம், பாட்டத்தோடு சொர்க்க லோகத்து ஏ.சி.ரும்னா அது அரச மரந்தாம்.
            அரசமரத்தோட நிழலு அந்த மதுவாங்கட்டைக்கும் சேர்த்து பந்தல போட்டது போல இருக்குது. சுத்திலும் வயல் வெளிங்கத்தாம். அங்கங்க விவசாய ஆளுங்க வேல பாத்துக்கிட்டு இருக்காங்க. கையில கயித்தோட மாடுகள வெச்சிக்கிட்டு மேய்ச்சிக்கிட்டு இருக்குற ஆளுங்க நிக்குறாங்க. வெயிலு அவ்வளவா தணிஞ்சாப்புல இல்ல. மேக்காலேந்து சூரியன் ரொம்ப சார்ப்பா மஞ்ச வெயில மூஞ்சுல ஊசி குத்துறாப்புல அடிக்கிது. ஆனா அனுபவிக்க இதமான வெயிலு. வெயில தணிய அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆவணும் போல இருக்கு. அப்படி கொஞ்சம் நேரம் ஆனா இந்த மதுவாங் கட்டையில ஆளுங்க வந்து உக்கார ஆரம்பிச்சிடுவாங்க. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கு வூடுன்னு ஒண்ணு கண்ணுல தட்டுப்படவே இல்ல. வானத்துல ஒரு சில பறவைங்க மட்டும்தாம் பறந்துக்கிட்டு இருக்குங்க. அரசமரத்துல ஒரு சில குருவிகளோட கீச்சு கீச்சு சத்தமும் கேட்குது.
             எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கிறோம்னு விகடு யோசிக்க ஆரம்பிக்கிறாம். யோசிக்க யோசிக்க சுப்பு வாத்தியாரு, விநாயகம் வாத்தியாரு, புரபஸர் மாலிக், லெனின், கோபி, சுபான்னு ஒவ்வொருத்தரு முகமா மனசுல வந்துப் போகுது. கடைசியா தொண்டாமூத்தூரு கேப்பிட்டல்ல மசாலா பாலு குடிக்கிறதுக்கு முன்னாடி லெனின், கோபி, சுபாகிட்ட ஆபீஸ் போடுறதப் பத்தி அவுங்களாப் பேசுனதுதாம். அதுக்குப் பிற்பாடு பேசல. லெனின் அப்பப்போ அது பத்திப் பேச்சுக் கொடுத்தாலும் விகடு பதிலுக்குப் பேச்சுக் கொடுத்து அதுக்கு ஒரு பதிலச் சொல்லல. அதால அவங்களும் அமைதியா வுட்டத்தாம் இதுக்கு ஒரு முடிவு கெடைக்கும்னு நெனைச்சி அது தொடர்பா மேக்கொண்டு பேசுறதெ நிப்பாட்டிட்டாங்க. ஆனா அவுங்க அமைதியா வுட்டதுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாம போனதுதாம் மிச்சம். விகடுவால தெளிவா ஒரு முடிவுக்கு வர முடியல. சரி நாமளா போயிப் பேசலாம்னு நெனைச்சாலும் அதுக்கு அவனோட மனசு எடங் கொடுக்க மாட்டேங்குது. ஒரு மாதிரி வெசயத்தெ எத்தனெ முறைத்தாம் மாத்தி மாத்திப் பேசுறதுன்னு யோசிச்சு யோசிச்சு அதெ விட்டுப்புட்டாம்.
            கடைசியா இப்போ கெளம்புறப்பத்தாம் லெனின் அது பத்திக் கேட்டாரு. அது பத்தின ஒரு முடிவு இருந்தா அவருகிட்டே சொல்லிருப்பாம். அவங்கிட்ட அது இல்லாததால அப்படி ஒரு குந்தாங்கூறான பதிலச் சொல்லிட்டு வந்துட்டாம். அதாலத்தாம் அவன் லெனின் பஸ்ல போவச் சொன்னப்பயம் சைக்கிள்லயே வந்துட்டாம். சைக்கிளு பங்காளி போல அவனுக்கு. அது அவனுக்கு ஆசானு. அதுல போறப்பத்தாம் அவனோட மனசஞ்சலம் கொறைஞ்சது போலிருக்கும் எவ்ளோ மனகஷ்டம் இருந்தாலும் சைக்கிள எடுத்துட்டுப் போனாக்கா போதும் மனசுல சந்தோஷம் வந்துடும் அவனுக்கு. சைக்கிள மிதிக்க மிதிக்க கஷ்டங்கள் எல்லாத்தியும் ஏறி மிதிக்கிற மாதிரி தோணும் அவனுக்கு.
*****


24.3



            இயற்கைப் பேரிடர்களும், மனிதப் பேரிடர்களும் நிறைய கவிஞர்களைப் பிரசவிக்கின்றன. பேரிடருக்குப் பிறந்த கவிஞர்களால் பிரளயமாகிறது பூமி. சுனாமிக்குப் பிறந்த கவிஞர்கள் அதிகம். அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குலில் நிறைய கவிஞர்கள் அவதாரம் எடுத்தார்கள்.

            பெருவெள்ளம் வந்தால் கண்ணீரால் எங்களை மூழ்கடித்து விடாதே மேகமே என்று கவிஞர்கள் பிரார்த்திக்கத் தொடங்கி விடுகிறார்கள். வறட்சி வந்தால் எங்கள் வயிற்றைக் காயப் போட்டு விடாதே என்று நாக்கு வறள கவிதைப் படிக்கிறார்கள்.
            கவிஞர்கள் பிறப்பதில்லை உண்டாக்கப்படுகிறார்கள். பேரிடர்கள் கவிஞர்களை உண்டு பண்ணுகின்றன. உலகின் எந்தப் பிரதேசத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தாலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் கவிஞர்கள் பிறந்து விடுகிறார்கள். கவிஞர்களின் பிறப்புக்கு எந்த வித கவிஞர் தொகை கட்டுபாடும் எந்தத் தேசத்திலும் இல்லை.
            எப்போதெல்லாம் கவிஞர்கள் எண்ணிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம் பூமி ஒரு பேரிடரை நிகழ்த்தி கவிஞர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறது. எப்போதெல்லாம் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகமாகிறதோ அப்போதெல்லாம் பூமி அமைதியை நிலைநிறுத்தி கவிஞர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விடுகிறது.
            பல நேரங்களில் பேரிடரால் கவிஞர்கள் பிறக்கிறார்களா? கவிஞர்களால் பேரிடர் பிறக்கிறதா? என்ற சந்தேகம் எழுவதை எப்படித் தவிர்ப்பதென்று புரியாமல் போய் விடுகிறது.
            அகலின் நான்காவது கூட்டத்தொடரில் கவிப்பேரொளி கண்ணன் அவதரிக்கிறார்.
            அடைமழையை அள்ளித் தெளிக்கிறது மேகம்
            ஊரெங்கும் வெள்ளம் என்று வெள்ள நிவாரணக் குரல்கள் கேட்கின்றன
            கனலைக் கக்கி கழனியையெல்லாம் வறளச் செய்கிறது சூரியன்
            ஊரெங்கும் பஞ்சம் என்று வறட்சி நிவாரணக் குரல்கள் கேட்கின்றன
என்ற கவிதையை வாசிக்கிறார். கூட்டவாதிகள் ஒவ்வொருவரும் கை தட்டுகிறார்கள். அந்த கை தட்டலின் ஓசை அடங்குவதற்கு முன் பனிரெண்டாம் வகுப்புக் குழாத்திலிருந்து ஒரு புவனக் கவிஞர் புவனேஸ்வரி பிறப்பெடுக்கிறார். அவர் வாசிக்கிறார்,
            சுவைக்க தேன்
            சூட மலர்
            சமைக்கக் காய்
            பரிமாற இலை
            தின்ன பழம்
            எரிக்க விறகு
            தரும் என்னை
            இனியேனும் திட்டாதீர்கள்
            மரமண்டை என்று.
ஆகா! அருமை! என்று மறுபடியும் கூட்டவாதிகள் கைகளைத் தட்ட தொடங்கி விடுகிறார்கள்.
*****


28 Dec 2019

ஊடால பூந்து கலந்துக்கிறது



செய்யு - 311

            விகடு ஒண்ணும் பேசல. "அப்பா சொன்னிச்சு..."ன்னு விநாயகம் வாத்தியாருதாம் ஆரம்பிக்கிறாரு. அதுக்கும் விகடு ஒண்ணும் பேசல.
            "ஒனக்கு வாத்தியாரு வேல எப்பிடியும் ஒரு வருஷத்துக்குள்ள வந்துப்புடும். அப்டி வந்துப்புட்டா பெறவு இந்த ஆபீசு அது இதுன்னு செருமப்பட்டு வீணால்லா போயிடும்! அதாங் கொஞ்சம் யோஜிச்சுப் பண்ணலாமுன்னு அப்பா நெனைக்குது!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "வருஷா வருஷம் இதத்தாங்கய்யா சொல்லுறீங்க! வேலத்தாம் வந்த பாடில்ல. அது வரட்டும். வராம போவட்டும். இப்போ வர்ற வாய்ப்பை விட வேணாம்னு நெனைக்கிறேம். அப்படியே வேல வந்தாலும் ஆபீஸை கைமாத்தி எடுத்துக்கிறதுக்கு ஆளுங்க நெறைய பேரு இருக்காங்க. இதுல முதல்ல போட்டு வீணாவுறதுக்கு ஒண்ணும் இல்ல. எல்லாம் எங்க பேராசிரியர் ஐயாத்தாங்க போடுறாங்க."ங்றான் வெகடு.
            "யாருய்யா அவுங்க?"ன்னு சிரிச்சிக்கிட்டே கொஞ்சம் நக்கலா கேள்வியப் போடுறாரு விநாயகம் வாத்தியாரு.
            "திருவாரூ தியாகராசரு கல்லூரியில நமக்கு தாவரவியல் பாடஞ் சொல்லித் தந்தவரு."ங்றான் விகடு.
            "ஒமக்கு ஏம் அவுங்க ஆபீஸ் போட்டு... அப்படித் தர்றதுல அவுங்களுக்கு ன்னா லாபம்னு புரிய மாட்டேங்குது? இப்போ எஞ்ஞ தம்பிங்க மெட்ராஸ்ல இருக்காங்கல்ல. அவுங்க சிலதெ நீயி சொல்றாப்புல பார்ட்னர்சிப்ல டீலு பண்ணுறத கேள்விப்பட்டிருக்கேம். தப்பா நெனைச்சிக்காதே வெகடு. நாம்ம புரியாமத்தாம் கேக்கிறேம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு நைச்சியமா.
            "இதுல தப்புல்லாம் ஒண்ணும் இல்லங்கய்யா! இப்டி கலந்துக்கிறதுதாங் சரி. ஒருத்தொருக்கொருத்தர் கலந்துக்கிட்டு வெவரம் தெளிவாச்சுன்னா எந்தப் பிரச்சனையுமில்ல. அதெ வுட்டுப்புட்டு அவங்கவங்க மனசுல ஒண்ணு நெனைச்சுக்கிட்டு, அவுங்க நெனைக்குற வெதமா அப்படித்தாம்னு கலந்துக்காம இருக்குறதுதாங் எல்லா பிரச்சனைக்கும் காரணம். நீங்க கேட்குறது சரிதாங்க்யயா! அவுங்களுக்கு முதலீடு பண்றதப் பத்தி அவ்வளவு விவரம் தெரியலேங்றாங்க. நம்மகிட்ட இருக்குற அந்த விவரத்தைத்தாம் அவங்க முதலீடா பாக்குறாங்க. அவுங்க பெரிய கையிங்க. ஆபீஸ் போடுறது அவுங்களுக்கு பெரிய விசயமில்லே. அவுங்களுக்குன்னு சொந்தமாவே ஒரு ஆபீஸ் போடுற அளவுக்கு அவுங்க அதாங் முஸ்லீம்மார்க ஆளுங்க இருக்காங்க. அதாங் ஆபீஸப் போட்டுத் தந்து அதுல வர்றத நமக்குன்னும், அவுங்களுக்கு முதலீடு பண்ணித் தர்ற லாபம் அவுங்களுக்குன்னும் செய்யலாம்னு பேராசிரியர் ஐயா நெனைக்குறாங்க!"ங்றான் வெகடு அப்பங்காரரையும் பேச்சோடு பேச்சாக குத்திக் காட்டுறது போல.
            "அது செரி வெகடு! ஆபீஸ நாம்ம போடாம ஆபீஸ்ல வர்ற லாவம் நமக்குன்னா அதுல ஞாயம் இல்லியே? நமக்கு ஒரு உபகாரம் பண்றாங்றது வேற, பிசினங்றது வேற. பின்னாடி மனவருத்தம் வந்துடக் கூடாது பாரு. ஆரம்பிக்கிறப்பவே தெளிவா பேசிக்கணும். ஒருவேள நீயி ஆபீஸ் போடுறேன்னு வெச்சிக்குவோம். அதுல லாவம் பிச்சிக்கிட்டு போவுதுன்னு வெச்சிப்போம். அப்போ என்னாவும்னு நெனைக்குறே? அந்த எடத்துல என்ன வாணாலும் நடக்கலாம். லாவம் அதிகம் வர்றதால நீயி ஆபீஸூக்காக என்னா முதலு போட்டுருக்கிறேங்ற கேள்வி வந்துப்புடலாம். அப்போ நீயி என்ன சொல்வே? இந்த ஆபீஸ உருவாக்குனது நாம்ம, இப்டி லாவத்தக் கொண்டு வந்தது நாம்ம, அதாங்க மொதலுன்னு சொல்லுவீயா? அதுக்கு நேர்மாறா ஒருவேள... நட்டம் வந்துப் போவுதுன்னு வெச்சிப்பேம். ஒண்ண நம்பித்தாம் பண்ணினேம். இப்டி ஆயிடுச்சே! ஆன நட்டத்துக்கு எதாச்சிம் ரூவாய எடுத்து வையின்னு நிக்குறாங்கன்னு வெச்சிப்பேம் நீயி ன்னா பண்ணுவே? இப்ப நாம்ம சொல்றதெல்லாம் நடக்கணும்னு அவசியமில்ல. நீயி ஆபீஸ ந்நல்லாவே நடத்துவேம்னு வெச்சிக்கிட்டாலும் ஒருவேள... நாம்ம சொல்ற மாறி நடந்தா ன்னா பண்ணுவே? ஏம் நாம்ம இப்டிப் பேசுறேன்னா அதாங் பிசினசுங்றது. நட்பு மொறையில பிசினஸ ஆரம்பிச்சு விரோதியா ஆயி பிரிஞ்சி வாரக் கூடாது. நாட்டுல இன்னிக்கு நூத்துக்கு தொண்ணூத்து ஒம்பது அப்டித்தாம் நடக்குது. எல்லாங் கெரகம். அதாங் அப்பா வந்து நம்மகிட்டு கலந்துகிடுச்சி. அதாங் நாம்ம வந்து பேசுறேம்னு வந்திருக்கேம்!"ன்னு விநாயகம் வாத்தியாரு நேரடியாவே வெசயத்தைப் போட்டு இப்பத்தாம் ஒடைக்கிறாரு.
            "நீங்க சொல்ற மாரி நடக்க வாய்ப்புல்லங்கய்யா! ஆனா நாம்ம சொல்லிப் பண்ற முதலீடு எறங்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா காத்திருந்தா அதுவே ரெண்டு பங்கா, மூணு பங்கா வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு!"ங்றான் விகடு.
            "நீயி இன்னும் விசயத்துக்கே வரல. பிசினஸங்றது மதிலு மேல போற பூனை மாரித்தாம். இந்தப் பக்கம் லாவம். அந்தப் பக்கம் நட்டம்னு வெச்சிக்கோயேன். எந்தப் பக்கமும் அந்த பிசினஸ்ங்ற பூனைக் குதிக்கலாம். ரண்டையும் சமாளிக்கிற தெறமையும் சூதானமும் இருந்தாத்தாம் பிசினஸ்ல நிக்க முடியும். நீயி என்னவோ அங்க எங்களோட பி.எப். பணத்தயெல்லாம் கவர்மெண்டு போடப் போறதா... அதாங் ஷேர் மார்கெட்டுல போடப்போறதா சொன்னீயாமே? அதுல்லாம் பிரபோஸல் போயிருக்கு. அவ்வளவுதாம். அதெல்லாம் அப்படி ஆவ வுட மாட்டேம். போராட்டம் பண்ணுவேம். அதுல்லாம் அம்மாம் ஈஸி கெடையாது பாத்துக்கோ. காசெ ஒபரியா வெச்சுக்கிட்டு அந்தக் காசெ ன்னா பண்றதுன்னு அரிப்பெடுத்து அலையுறாம் பாரு! அவனுக்குத்தாம் நீயி சொல்ற ஷேர் மார்கெட்டுல்லாம் சரி வரும். நாம்ம இப்பத்தாம் தலயெடுக்கிறேம். நமக்கு நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் சரிபட்டு வராதுன்னுத்தாம் நாம்ம நெனைக்கிறேம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "நாலு வருஷம் மார்கெட்டுல இருந்திருக்கேம். நம்மகிட்ட டிரேட் பண்ற கிளையண்ட்ஸூக்குக் கூட நஷ்டம் வர்ராம பண்ணியிருக்கேம்!"ங்றான் விகடு.
            "நாப்பது வருஷம் இதுல இருந்தும் ஒண்ணும் பண்ண முடியாதவன பத்தியெல்லாம் மெட்ராஸ்ல இருக்குற எம்மட தம்பிச் சொல்லியிருக்காங்க. ஒனக்காகவே இன்னிக்குப் போன போட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல அவங்கிட்டப் பேசிருக்கேம் பாத்துக்க!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு கண்டிக்கிற தொனியோட வெரல ஆட்டிக்கிட்டு.
            "நீங்க ஒரு விசயத்த புரிஞ்சிக்க மாட்டேங்றீங்கய்யா! நீங்க முதலீடு பண்ணவங்களோட, டிரேட் பண்ணவங்களோட நெலமையப் பத்திச் சொல்லிட்டு இருக்கீங்கய்யா! நாம்ம தெளிவா சொல்றேம்! ஒங்க தம்பிங்க நடத்துற பிசினஸ் பாஷையிலயே சொல்றேம். சாராயக்கடை நடத்துறவேம் ஆண்டியாவ மாட்டாம். சாராயக் கடையில வந்து குடிக்கிறவேம்தான் ஆண்டியாவாம். இதுல கடைய போடுறவேம் கடைசி வரைக்கும் நட்டமாவ மாட்டாம். கடைக்கு வர்றவம் நட்டமாவாம்."ங்றான் விகடு.
            "நீயி கோபமா ஆயிட்டேன்னு நெனைக்கிறேம். ஆனா விசயத்துக்கு வந்துட்டே. பரவாயில்ல. எஞ்ஞ தம்பிங்க சாராயக்கடை யேவாரிகளாவே இருக்கட்டும். ஒண்ணும் நமக்கு வருத்தமில்லே. ஆனா ஒம்மட வாயாலயே சொன்னப் பாரு. இதுல கடையப் போட்டவம் நட்டமாவ மாட்டாம். ஆனா கடைக்கு வந்தவம் நட்டமாவாம்னு. அதெச் சொல்லித்தாம்பா ஒங்க அப்பாரு வேதனைப்படுறாரு. அழுவுறாரு. நம்மட குடும்பத்துக்கு அப்டி ஒரு வாசாப்பு வேணுமான்னு கேக்குறாரு. நாம்ம வர வேண்டிய எடத்துக்கு நீயே வந்துட்டதால நீயே அதுக்குப் பதிலச் சொல்லு! எஞ்ஞ தம்பிங்க ஏத்தோ போயிட்டாங்க அவுங்கள வுடு. அப்போ குடும்பத்தோட வறுமெ அப்டி. ஆன்னா ஒம்மோட நெலம இப்போ அப்டி யில்ல. அதால சரியாச் சொல்லு. யோஜசிச்சுச் சொல்லு"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "எந்தப் பக்கம் போனாலும் அதுல வளைச்சு வளைச்சுப் பிடிச்சி தெளிய வெச்சி தெளிய வெச்சி அடிக்கிறீங்க. நாம்ம போடுற கடெ வேற. மித்த கடைங்க வேற. நம்ம கடையில யாரும் நட்டமாவ மாட்டாங்கோ. நட்டமாவ வுட மாட்டேம். இத்து சத்தியம். நீஞ்ஞ நம்மள நம்பலாம்கய்யா!"ங்றான் விகடு.
            "ந்தாருப்பா வெகடு! பிசினஸ்ல இதெல்லாம் பேசுறதுக்கில்ல. நட்டம் வராத பிசினஸூ எஞ்ஞ இருக்கு? நட்டமான்னா ன்னா பண்ணுவே? அவுங்க அடைஞ்ச நட்டத்துக்கு ஈடு பண்ணிக் கொடுக்க ஒங்கிட்ட ன்னா சொத்துப்பத்து இருக்கு?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "ஒண்ணுமில்லங்கய்யா! ஒண்ணுமேயில்லங்கய்யா! எங்கிட்ட ன்னா இருக்கு? நாம்ம சம்பாதிக்கிறதுல ஒத்த பைசா காசி கூட நம்மகிட்ட இல்லே. எல்லாத்தையும் எஞ்ஞ யம்மாகிட்டத்தாம் கொடுக்கிறேம். அது அதுலேந்து கொடுக்குற காசியில்லத்தாம் பஸ்ல கூட போவாம இன்னிக்கு வர்றைக்கும் பழஞ்சைக்கிள்லயே போயிட்டு வர்றேம். ஒண்ணுமேயில்ல. ஒண்ணுமேயில்லங்றதாலத்தாம் எதாச்சிம் ஒண்ண சேக்கணும்னு இதெ ஆரம்பிக்க நெனைக்கிறேம். ஒண்ணுமே இல்லன்னு கடெசி வரைக்கும் இருந்துடக் கூடாது பாருங்கய்யா! அதுக்குத்தாம் இப்டில்லாம் செருமப்படுறேம். மனுஷனுக்குச் சந்தர்ப்பங்கறதெல்லாம் எப்பயாச்சியும்தாம் வரும். அதுவா வர்றப்ப பயன்படுத்திக்கணும். அதெ வுட்டுப்புட்டு நாம்ம பயன்படுத்திக்கிறாப்புல சூழ்நிலெ இருக்குறப்ப வான்னா அது வரவே வராது. இப்டி அப்டின்னு பேசிட்டு இருக்குறதுல புண்ணிய இல்லைங்கய்யா. வெட்டு ஒண்ணு துண்டு ஒண்ணுன்னு ஒங்க முடிவெ சொல்லுங்கய்யா!"ன்னு விடாப்புடியா கேக்குறான் விகடு.
            "நீதானப்பா சொன்னே! இப்டிக் கலந்துக்கிறது நல்லதுன்னு! சொல்லிப்புட்டு நிமிஷ நேரத்துல இப்டி மாறுனா நாம்ம ன்னா பண்ணுறது?"ன்னு அடுத்த கொக்கியப் போடுறாரு விநாயகம் வாத்தியாரு.

            "சொன்னேம்தாம்! நீஞ்ஞ பேசுறதெ இப்போ பாக்குறப்போ நீஞ்ஞ நம்மள ஊக்கப்படுத்துற மாரி தெரியல. நம்மள மனசளவுல ஊனப்பட வெக்குறீங்க. அதாங் அப்டி பேச வாண்டியதா இருக்கு!"ங்றான் விகடு.
            "பேசப் பேச வெகடுகிட்ட சுத்தமான தமிழுப் போயிடும் போலருக்கே! ஏம்பா யப்பாடி ஒஞ்ஞ அப்பாவுக்கு நீயி ஒருத்தம் மட்டுந்தாம் புள்ளீயா? ஒந் தங்காச்சி ஒண்ணு இருக்குல்ல. நீயி பாட்டுக்குப் பிசினஸ்னு போயி அதுல நட்டப்பட்டு வந்து நின்னியின்னா... ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தாம் அப்டி வெச்சிப்போம். நாளிக்கு ஒந் தங்காச்சிய கலியாணம் காட்சில்லாம் பண்ணிக் கொடுக்கணுமே. அதெ ஒங்க அப்பாரு பாக்குமா? யில்ல ஒன்னோட நட்டத்தப் பாக்குமா? பதிலெச் சொல்லு! மேக்கொண்டு நாம்ம பேசல."ங்றாரு இப்போ விநாயகம் வாத்தியாரு அழுத்தமான நங்கூரத்தப் போட்டாப்புல.
            "ஷேர் மார்கெட்டுல நமக்குப் பிடிக்காத ஒரே வார்த்தெ நஷ்டங்றதுதாம். அதெ நமக்குத் தெரிஞ்ச அளவுல நாம்ம ஆபரேட்டரா இருந்து பண்ண டெர்மினல்ல மார்கெட்டுல பாத்ததில்ல, பாக்க வுட்டதில்ல. மார்கெட்டுக்குப் போன ஒரு வருஷம் வரைக்கும் அதெ நெனைச்சு நெனைச்சு மண்டையைப் போட்டு ஒடைச்சிக்கிட்டுக் கிடந்திருக்கிறேம். மார்கெட்டுக்கு வர்ற எவ்ளோ ஆளுங்களப் பாத்து அதெ கண்டுபிடிச்சிருக்கிறேம். டிரேட் பண்ற ஒவ்வொருத்தரயும் இஞ்ச் பை இஞ்சா கவனிச்சு அதெ மண்டையில போட்டு கசக்கிப் பிழிஞ்சு அந்த ரசவாதத்த கண்டுபிடிச்சிருக்கிறேம். நஷ்டம் நஷ்டம்னு சொல்லுதீங்களே! அதெப் பாக்கவும் மாட்டேம். நாலு வருஷமா நாம்ம கத்துக்கிட்ட வித்தைங்கள நம்மால நாப்பது நிமிஷத்துல ஒங்களுக்கு விளக்கிட மிடியாது. மனசு பூரா அந்த சூட்சமங்கத்தாம் நெரம்பிக் கெடக்குது. அதெ எப்டிச் சமாளிப்பேம் என்ன வகையில சமாளிப்பேங்றது நாம்ம மட்டும் அறிஞ்ச ரகசியம். அந்த ரகசியத்துக்குத்தாம் இன்னிக்கு ஆளு நம்மள பாத்து வர்றாங்க. நமக்குத் தெரிஞ்ச அளவுல ஷேர் மார்கெட் யாரையும் கைவுடாது. ஆனா சிலபேரு கைய வுட வைப்பாங்க. அத்து மார்கெட்டோட மிஸ்டேக்குக் கெடையாது. மார்கெட்டுல மிஸ்டேக்கு பண்றவங்களோட மிஸ்டேக்கு."ங்றான் விகடு.
            "செரி அதெ வுடு. நீயி டென்ஷன் ஆவுறாப்புல ஆவுது. புரபஸ்ர்னு சொன்னீயே! யாரு ன்னா ஊரு? பேரு?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு வேற ஏதோ ஒரு விசயத்தப் புடிக்கிறாப்புல.
            "புரபஸர் டாக்டர் அப்துல்மாலிக். மின்னாடி அடியக்கமங்கலத்துல இருந்தாரு. இபபோ ஜாகையா கூத்தாநல்லூருக்கு வந்துட்டாரு. பெருங்கையா ஆயிட்டாரு!"ங்றான் விகடு.
            "கூத்தாநல்லூர்ல எஞ்ஞேங்றேம்?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "அப்துல் ரகுமான் ரோட்டுல முனிசிபாலிட்டி ஆபீஸூக்கு எதுத்தாப்புல போற சந்துல கெழக்குக்கோட்டையாரு வூடு இருக்குற தெருவுலத்தாம்!"ங்றான் விகடு.
            "நீயிப் போயி பாத்தியா? மேக்கொண்டு பேசுனீயா?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "மீட்ல ஓட்டல் செல்வீஸ்ல பாத்ததுதாம். விசாலக் கெழமெ வாரச் சொல்லிருக்காரு."ங்றான் விகடு.           
            "வர்ற விசாலக் கெழமயா?"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            விகடு தலைய ஆட்டுறான். விநாயகம் வாத்தியாரு எழுந்திரிச்சி, "செரி வாத்தியாரே நாம்ம கெளம்புறேம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரைப் பார்த்து.
            "தலயும் இல்லாம வாலும் இல்லாம மொட்டயாப் பேசுனீங்க! மொட்டயா கெளம்புதீங்க. உக்காருங்க நாம்ம டென்ஷன் ஆவாம பதிலெச் சொல்றேம்!"ங்றான் விகடு.
            "யில்ல. நமக்குக் கொஞ்சம் வேல இருக்கு. கெளம்புறேம். இத்து கொஞ்சம் இன்னும் ப்ரியா பேசணும். பெறவு வர்றேம். பாத்துக்கலாம்."ங்றாரு விநாயகம் வாத்தியாரு. அவருக்குள்ள வார்த்தெ எஞ்ஞ தடிச்சிடுமோங்ற மாதிரி ஒரு அச்சம் முகத்துல தாண்டவமாடுது.
            "அப்போ முடிவு?"ங்றான் விகடு.
            "ஒன்னய வெச்சி மட்டும் யோஜிக்காத. குடும்பத்தயும் மனசுல வெச்சி யோஜி. இப்பைக்கு இதாங். பெறவு பேசலாம். பேசுறதுக்கு நெறய இருக்கு. பேசிக்கலாம்."ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "பேசிக்கலாம்னு கெளம்புதீயளே?"ங்றான் விகடு.
            "அதாங் தெளிவா பேசிக்கலாம்னு சொல்லிருக்கேம்ல. பேசிக்கலாம். இப்போ பேசலாம்யில்ல. பேசிக்கலாம். பேசுவேம். இப்போ ‍பொறு. வூட்டுல ஒடம்பு சரியில்ல. மருந்து வாங்கி வாரேம்னு வந்தேம். பேச்சுல நேரம் ஆவுறாப்புல தெர்யுது. நமக்கும் குடும்பம் முக்கியம்பா!"ன்னு சொல்லிட்டு மேக்கொண்டு பேச விருப்பம் இல்லாதவரப் போல, "வர்றேம்மா! வர்றேம் செய்யு! வர்றேம்டா வெகடு!"ன்னு சொல்லிட்டு விடுவிடுவென கெளம்பி மேக்ஸ் ஹண்டர்ட் ஆருக்குப் பக்கத்தில போனவரு, ஏறி உக்காந்து கிக்கரை ஒரு ஒதைச்சி ஒரே ஒதையில வண்டிய கெளப்பிக்கிட்டு, ட்ருக்கு ட்ருக்டெக்னு சத்ததோடு போறாரு.
            அது வரைக்கும் பேயாமலே இருந்த சுப்பு வாத்தியாரு, வெங்கு, செய்யுன்னு யாரும் இப்பவும் விகடுகிட்ட பேசல. அவனும் யாருகிட்டயும் பேச விருப்பம் இல்லாதவன் போல ரூமுக்குள்ள போயி உக்காந்துக்கிட்டான்.வர்ற விசாலக் கெழம மாலிக்கைப் போயிப் பாக்கறதா வேண்டாவான்னு ஒரு குருஷேத்திரமே மனசுக்குள்ள ஓடுது. இத்து இப்போ அவனுக்கு குருவா இருந்த விநயாகம் வாத்தியாரே உருவாக்குன சேத்திரமா வேறல்ல போயிடுச்சு. அவரோட பேச்சோட சாரங்றது இப்போ இந்த ஆபீஸ் போடுற வேலயெல்லாம் வேணாங்குறதுதாம். சுப்பு வாத்தியாரு அப்படித்தாம் விநாயகம் வாத்தியார்கிட்ட, பயெ நமக்குக் கட்டுப்பட மாட்டேங்றாம், நீஞ்ஞ அப்டிப் பேசி வுடுங்க, அவ்வேம் மனசு மாறிக்குவாம்னு சொல்லிருப்பாரு. பதிலுக்கு விநாயகம் வாத்தியாரும் நீஞ்ஞ யாரும் ஊடால புகுந்துப் பேசிப்புடாதீங்க, நாம்ம மட்டுமே பேசியே மனசெ கரைச்சிப்புடறேம்னு சொல்லியிருப்பாரு. அவுங்க ரெண்டு பேரும் ஒத்த மனசு, ரெண்டு ஒடம்புன்னு இருக்குற ஆளுங்கத்தானே.
*****


தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...