3 Jul 2026

ஒரு குடத் தண்ணீரும் ஒன்பது கொலைகளும்!

ஒரு குடத் தண்ணீருக்குப் பின்னிருக்கும் ஒன்பது பிணங்கள்!

மனித நாகரிகத்தின் தொடக்கமே நதிக்கரைகளில்தான் நிகழ்ந்தது என்கிறது வரலாறு. ஆனால், அதே மனித குலம் தன் நாகரிக முதிர்ச்சியின் உச்சத்தில், ஒரு தெருக் குழாய் தண்ணீருக்காக ஒன்பது உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது.

நெல்லை மாவட்டம் மூலச்சி கிராமத்தில், இரு பெண்களுக்கிடையே ஒரு குடம் தண்ணீர் பிடிப்பதில் தொடங்கிய சாதாரண வாய்த்தகராறு, இன்று ஐந்து வயது பாலகன் உள்பட ஒன்பது மனிதர்களின் குருதியைக் குடித்துவிட்டுத்தான் ஓய்ந்திருக்கிறது.

2006 இல் தொடங்கிய ஒரு சிறு பொறி, இருபது ஆண்டுகாலமாக அணையாத பேரெரிமலையாக மாறியதன் பின்னணியில் இருப்பது பழிக்குப்பழி என்னும் குருட்டுத் தத்துவம்.

சுப்பிரமணியன், முத்துக்குட்டி, குமார், சுப்பையா, பெருமாள் பாண்டியன் எனத் தொடங்கி, இன்று காளிமுத்து மற்றும் அவரது ஐந்து வயது மகன் ஜெயராஜ் வரை இந்த மரணப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இங்கே மரணங்கள் வெறும் எண்கள் அல்ல; அவை மனித ஈகோவின் குறியீடுகள்.

இவ்வுலகில் உயிர்கள் தோன்றுவதற்குக் காரணமான உன்னத சக்தி தண்ணீர். அது ஜீவராசிகளின் தாகத்தைத் தணிப்பது. ஆனால், அதே தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் காட்டிய சகிப்புத்தன்மையின்மை, இன்று ஒன்பது பேரின் தாகத்தை அடக்க முடியாத மரண வெறியாக மாற்றியிருக்கிறது.

ஒரு குடம் தண்ணீரை விட்டுக்கொடுக்க மனமில்லாத மனிதர்கள், இன்று ஒன்பது உயிர்களையும், தங்கள் குடும்பங்களின் நிம்மதியையும், வாழ்நாள்பூராவும் சிறைச்சாலை கம்பிகளுக்குப் பின்னால் கழிக்கப் போகும் எதிர்காலத்தையும் தாராளமாக விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். இதைவிட ஒரு தத்துவ முரண்பாடு மனித வரலாற்றில் இருக்க முடியுமா?

இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தின் உச்சக்கட்ட அவலம், ஐந்து வயதுச் சிறுவன் ஜெயராஜின் மரணம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தண்ணீர் குழாயடிச் சண்டை நடக்கும்போது இந்தச் சிறுவன் பிறக்கக்கூட இல்லை. யாருக்கோ, எப்போதோ ஏற்பட்ட வன்மத்திற்கும், ஈகோவிற்கும் இந்த அறியாப் பாலகன் என்ன பாவம் செய்தான்?

இங்கேதான் வன்மத்தின் ஆகப்பெரும் சாபம் வெளிப்படுகிறது. வன்மம் என்பது குற்றம் செய்தவனை மட்டும் அழிப்பதில்லை; அவனோடு தொடர்பிலுள்ள, அவன் வழியில் வரும் அத்தனைப் புனிதங்களையும் சேர்த்துப் பொசுக்கிவிடுகிறது.

எப்போது முடியும் இந்த குருதி ஆட்டம்?

"கண்ணுக்குக் கண் என்று நாம் பழிவாங்கத் தொடங்கினால், இந்த ஒட்டுமொத்த உலகமுமே குருடாகிவிடும்" என்றார் மகாத்மா காந்தி.

மூலச்சிகிராமத்தின் இந்தத் துயரம் நமக்குச் சொல்லும் தத்துவம் ஒன்றுதான். சகிப்புத்தன்மை இல்லாத சமூகத்தில், அமைதி என்பது வெறும் பகற்கனவு.

ஒரு குடம் தண்ணீரை விட, மனித உயிரும் மனிதநேயமும் பெரிது. வன்மத்தை வன்மத்தால் அழிக்க முடியாது, அதை மன்னிப்பாலும் சகிப்புத்தன்மையாலுமே வெல்ல முடியும்.

*****

தமிழனைக் கருடபுராணக் கொலைகாரனாக்கியச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 31

அந்நியன்

தமிழனைக் கருடபுராணக் கொலைகாரனாக்கியச் சீரழிவு!

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டின் ஜூன் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச மனநலத்துக்கும், நாட்டின் நீதித்துறையின் மீதான குறைந்தபட்ச நம்பிக்கைக்கும் ஒட்டுமொத்தமாகச் சிதறு தேங்காய் அடித்து, நடு மண்டையில் நச்சென்று பூசணிக்காய் உடைத்தது அந்நியன்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "சமூகத்தில் ஊழலோ, குற்றங்களோ நடந்தால் சட்டப்படி போராட வேண்டும் அல்லது காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு வக்கீலுக்கு மனநோய் இருந்தால் போதும்; அவன் பகலில் சட்டம் பேசிவிட்டு, இரவில் விக்கை மாட்டிக்கொண்டு, கருடபுராணத்தின் பெயரால் நடுத்தெருவில் மனிதர்களைப் பாம்புகளை விட்டும், எருமைகளை ஏவியும், கொதிக்கும் எண்ணெயில் போட்டும் கொடூரமாகக் கொலை செய்யலாம்" என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, அந்நியன் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அந்த அம்பி, அந்நியன், ரெமோ என்ற மூன்று முகம் கொண்ட ஆபத்தான மனப்பிறழ்வு பிம்பமும், கருப்பாக இருந்த சாலைகளில் பெய்ண்ட் டப்பாக்களைக் கொட்டி வண்ணமடித்து, காது கிழியும் வகையில் ஊதப்பட்ட பின்னணி இசைப்பாடல்களும், நகைச்சுவை நாயகனாக வருபவரின் போலித் தத்துவக் கூத்தும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கசாப்புக் கடை நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சட்டக் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருந்து, உங்கள் கண் முன்னால் யாராவது வரி ஏய்ப்பு செய்தாலோ, ரயிலில் அழுகிய சாப்பாடு கொடுத்தாலோ, உங்களுக்கு நீதிமன்றங்கள் தேவையில்லை. நீங்கள் நேராக அந்நியன்.காம் என்ற இணையதளத்தைத் தொடங்கி, சாட்சிகளோ விசாரணையோ இல்லாமல் நேரடியாக மரண தண்டனை நிறைவேற்றலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், மனித உரிமை ஆணையம் போன்ற அற்பமான விஷயங்கள் எல்லாம் தமிழ் சினிமா மாஸ் ஹீரோவுக்குப் பொருந்தாது. இத்திரைப்படத்தால் கும்பிபாகம், அந்தகூபம் என்று நரகத்தின் தண்டனைகளைப் பூலோகத்திலேயே நிறைவேற்றுவது குற்றமல்ல; அது நாட்டைத் திருத்த வந்த புனிதமான சமூகச் சேவை என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சட்டத்தை மதித்து நடப்பதை விடுத்து, "இவனையெல்லாம் அந்நியன் படத்துல பண்ணது மாதிரி கொதிக்கிற எண்ணெயில போடணும்டா" என்று சமூக வலைத்தளங்களில் வன்முறையைக் கொண்டாடும் ஒரு முதிர்ச்சியற்ற, பாசிசத் தலைமுறையின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

மின்னலே படத்தில் ஆள்மாறாட்டத்தைக் கொண்டாடினார்கள் என்றால், அந்நியன் படத்தில் ஒரே மனிதன் தன் மனநோயைப் பயன்படுத்திப் பெண்ணை ஏமாற்றுவதை ரொமான்ஸ் என்று காட்டி விற்றார்கள். ஹீரோ அம்பியாக இருக்கும்போது அவனது பண்பாட்டைக் கேலி செய்யும் நாயகி, அவன் ரெமோ என்ற போலி மாடலிங் பிம்பமாக வந்து அத்துமீறிப் பழகும்போது அவனது காலடியில் சரணடைவாள்.

இந்த உறைபனியூட்டும் நயவஞ்சக ஏமாற்று வேலையை, மிக ஆடம்பரமான உடைகளாலும், பிரமாண்ட காஸ்ட்லியான பாடல்களாலும் மூடி மறைத்து, அவன் காதலுக்காகத் தானே ரெமோவா மாறுறான் என்று பார்ப்பவனை ஏமாற்றுவார் இயக்குனர். ஒரு பெண்ணின் மனதை வெல்ல அவளது பலவீனத்தைப் பயன்படுத்துவதை க்ளாஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்கு நேர்மையின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

போக்கிரி படத்தில் வன்முறையை நகைச்சுவைப் பாத்திரங்களை வைத்து காமெடியாக்கியது போல, அந்நியன் படத்தில் ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரத்தை வைத்து மனிதர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதை மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தார்கள். தன் கண்ணெதிரே ஒருவன் எருமைக் கடாக்களால் மிதிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான், இன்னொருவன் கொதிக்கும் எண்ணெயில் பொரிக்கப்படுகிறான். ஆனால், அதையெல்லாம் பார்க்கும் அந்த நகைச்சுவைப் பாத்திரம் டைமிங் காமெடி செய்து கொண்டிருக்கும்.

ஒரு கொடூரமான தொடர் கொலையைக் கண்டு அதிர்ச்சியடைய வேண்டிய புலனாய்வுத் துறை, பின்னணியில் காமெடி செய்து கொண்டிருந்தால் நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும். குரூரமான வன்முறையை ஹீரோயிசம் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன, மிருகத்தனமான பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்ததில் இந்தச் சினிமாவுக்கு பயங்கர பங்குண்டு.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகி கதாபாத்திரம், பாரம்பரியமான, படித்த பெண்ணாகக் காட்டப்படுவார். ஆனால், அவருக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை ஆராயும் குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. அவர் எப்போதும் வெளிப்புற பளபளப்பை பார்த்து ஏமாறுவதற்கும், உண்மை தெரிந்தவுடன் “ஐயோ அம்பிக்குள்ள அந்நியனா?” என்று பயந்து நடுங்குவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு கதாபாத்திரமாகச் சுருக்கப்பட்டிருப்பார்.

பெண் என்பவள் தனக்கென ஓர் உறுதியான ஒழுக்க நெறியோ, உண்மை எது பொய் எது என்று ஆராயும் திறனோ இல்லாதவள்; அவளிடம் அழகாக ஆங்கிலம் பேசி, காதல் யானை என்று பாடினால், அவள் கொலையாளியாக இருந்தாலும் அவனிடம் தன் இதயத்தைத் தந்து காதல் பூனையாகி விடுவாள் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

அந்நியன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை நடிப்பு அரக்கன் என்ற பிம்பத்தை மீண்டும் உலக அரங்கில் ஏற்றி, அதன் இயக்குநரைப் பிரம்மாண்டத்தின் உச்சமாக்கியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அந்நியன் திரைப்படம் வெளியாகி இத்தனை வருடங்கள் ஆகியும், இன்னும் இந்தியக் குடிமகன் ஒருவன் பொது இடத்தில் எச்சில் துப்புவதற்கு முன்னால் சுற்றும் முற்றும் பார்ப்பதற்கு அதன் இயக்குநர்தான் காரணம். ஆனால், அந்தப் பயம் ஒரு ஐந்து விநாடிகள் மட்டுமே நீடிக்கிறது என்பது வேறு விஷயம்.

அந்நியன் செய்த ஆகப்பெரும் உளவியல் பாதிப்பு என்னவென்றால், அதுவரை மனநலக் குறைபாடுகளைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஊரை, அதை ஒரு மாஸான விஷயமாகப் பார்க்க வைத்தது.

சமூகத்தில் தவறு செய்பவர்களைத் தண்டிக்க ஒரு நீதித்துறை இருக்கிறது என்பதை மறந்து, எல்லோரும் தங்களுக்குள் ஒரு மினி அந்நியனைத் தேட ஆரம்பித்ததுதான் இத்திரைப்படம் ஏற்படுத்திய மிகப்பெரிய சமூகச் சீரழிவு.

ஐந்து பைசா திருடினாலும் கும்பிபாகம் தண்டனை என்று சொல்லி, உலகிலேயே மிகக் கடுமையான கார்ப்பரேட் கவர்னன்ஸ் விதிகளை அமல்படுத்திய அந்நியனால், “நீ நல்லவனாக இருந்தால் உன்னை லூசு என்பார்கள். நீ கொலையாளியாக இருந்தால் உன்னை ஹீரோ என்பார்கள். நீ அழகாக டிரஸ் பண்ணினால் உன்னை ரெமோ என்பார்கள். மொத்தத்தில், நீ நீயாக இருக்கக் கூடாது” என்கிற விநோதத் தத்துவம் பரவியது.

சராசரி மனிதனுக்குள் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் இயலாமை. வரிசையில் நிற்காமல் முந்துபவன், லஞ்சம் வாங்கும் அதிகாரி, ரோடு போடுவதில் ஊழல் செய்யும் கான்ட்ராக்டர் என இவர்களைப் பார்த்து அன்றாடக் குடிமகன் ரத்தக் கொதிப்பு அடைவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அங்கேதான் விச ஊசியை இடம் பார்த்துக் குத்தியது அந்நியன்.

சமூக உளவியல் ரீதியாக, மக்கள் தங்களின் கோபத்தையும், இயலாமையையும் நியாயப்படுத்த இந்த அந்நியன் முகமூடியைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். "நானும் நல்லவன்தான், ஆனா கோபம் வந்தா அந்நியன் ஆயிடுவேன்" என்கிற டயலாக் சர்வ சாதாரணமாக மாறியது.

தவறு செய்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விட, "இவனுக்குப் பயங்கரமான மரணம் கிடைக்க வேண்டும்" என்கிற வன்மத்தை இந்தத் திரைப்படம் சமூக மனநிலையில் விதைத்தது. இன்றைய சமூக ஊடகங்களில் ஒரு தவறு நடக்கும்போது, நெட்டிசன்கள் கோர்ட்டை விடக் கொடூரமான டிஜிட்டல் மரண தண்டனைகளைக் கமெண்ட்டுகளில் வழங்குவதற்கு இந்த அந்நியன் மனநிலை ஒரு முக்கியக் காரணியானது.

அந்நியன் ஒரு சுவாரசியமான சைக்காலஜிக்கல் த்ரில்லர். ஆனால், சமூக ரீதியாக அது மக்களுக்குள் இருக்கும் பாசிச சிந்தனைக்குத் தீனி போட்டது. சட்டம் தன் கடமையைச் செய்யும் வரை காத்திருக்கப் பொறுமையற்ற, உடனடித் தீர்ப்பை விரும்பும் ஒரு அவசர யுகத்துச் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாறுவதற்கு இந்தப் படம் ஒரு வினையூக்கியாகிப் போனது.

நாட்டைத் திருத்த நீதிமன்றங்கள் தேவையில்லை, புராணக் கொலைகளே தீர்வு என்றும், ரெமோ என்று டை கட்டினால் அத்தனை ஏமாற்று வேலைகளையும் ரசிக்கலாம் என்றும், குரூரமான வன்முறையைக் கண்டு சிரிப்பதே மாஸ் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஆசிட் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

2 Jul 2026

இருளின் தத்துவமும், வெளிச்சத்தின் விலையும்!

இருளின் தத்துவமும், வெளிச்சத்தின் விலையும்!

இருட்டு என்பது வெளிச்சத்தின் இல்லாமை என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் தமிழ்நாட்டுக்கோ, இருட்டு என்பது கோடைக்காலத்தின் வருகைக்கான உத்தரவாதம்.

சுவிட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சுவிட்ச் போட்டவுடன், 'இன்று மின்சாரம் வருமா வராதா?' என்று யோசிக்க வைப்பதுதான் நம் ஊர் தத்துவம்.

தமிழகத்தில் கோடைக்காலம் வந்துவிட்டாலே மின்சாரம் போய்விடுகிறது என்பது செய்தி அல்ல; அது ஒரு பிரபஞ்ச விதி.

வெயில் காலத்தில் மனிதர்களுக்குக் குளிர்ச்சி தேவைப்படுகிறது. குளிர்ச்சிக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. பிரபஞ்சமோ சமநிலையை விரும்புகிறது. எனவே, நீங்கள் ஏசியை ஆன் செய்யும்போது, மின்வாரியம் மெதுவாக மெயின் சுவிட்சைக் கீழிறக்கி 'ஓம் சாந்தி' என்கிறது.

விஞ்ஞானம் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால், மின்சார வாரியமோ மனிதனை விசிறியோடு வீட்டு வாசலுக்கு அனுப்புகிறது. இரண்டுமே ஒரு வகையான பயணம்தான்!

விளைவு?

மக்கள் சாலையில் இறங்கி மறியல் செய்கிறார்கள். இருட்டில் அமர்ந்து பேசுவதை விட, கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று கத்துவது அவர்களுக்கு ஆறுதல் தருகிறது போலும். அரசியல் மாறினாலும் அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் மாறுவதில்லையே, அப்புறம் ஏன் இந்த அதிர்ச்சி? என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதா?

உலகில் குறிப்பாகத் தமிழகத்தில் புள்ளிவிவரங்கள் எப்போதும் சுவாரசியமானவை. அவை எதையும் தீர்ப்பதில்லை, ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள மொத்த மின் இணைப்புகள்: 3,52,80,929 அதாவது, வீடு, கொட்டகை, குடோன், விசைத்தறி எல்லாம் சேர்த்து.

தமிழகத்தின் கோடைக்காலத் தேவை 21,000 மெகாவாட்.

நம்மிடம் இருப்பதாகக் காகிதத்தில் உள்ள அளவு 47,238 மெகாவாட். தேவையை விட 26,000 மெகா வாட் அதிகம்தான். ஆனால், அது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் ஹாலோ மேனைத் தேடுவதைப் போல கஷ்டம் பிடித்த வேலை.

சரி, மின்வெட்டு என்றால் அதற்கு ஏதேனும் ஒரே ஒரு காரணமாவது இருக்க வேண்டுமே.

ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக விளக்கங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவற்றுள் சில,

வெயில் தாங்காமல் மின்மாற்றிகள் தற்கொலை செய்துகொள்வது, நிலத்தடி கேபிள்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது, அதையும் தாண்டி, முந்தைய ஆட்சியின் பாவங்கள், மரக்கிளைகள் மின்கம்பிகளை முத்தமிடுவது, மற்றும் சில மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து பியூஸ் கேரியர்களைத் திருடிச் செல்வது.

இந்தக் கடைசி காரணம்தான் கொஞ்சம் இடிக்கிறது. பியூஸ் கேரியரைத் திருடிச் சென்று அவர்கள் என்ன செய்வார்கள்? அதை வைத்து ஏதேனும் புதிய கலைப்படைப்பு உருவாக்குகிறார்களா என்பது பிரபஞ்சத்திற்கே வெளிச்சம்

நாம் இன்னும் இருண்ட காலத்திற்குள் சென்று விடவில்லை என்பதே தத்துவார்த்தமாக நமக்கு உள்ள ஒரே ஆறுதல்.

இப்போதிருக்கும் நிலையில் நாம் என்னதான் செய்வது?

மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இருள் என்பது ஒளியின்மை மட்டுமல்ல, அது சுயசரிதை எழுதிக்கொள்ள ஒரு நல்ல சூழல். நமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்! என்ன செய்யப் போகிறோம் நாம் என்பதற்கான பதில் நம்மிடமே இருக்கிறது.

*****

சாக்லேட் காபி போட்டு சாமானியனைச் சாத்தியெடுத்தல்

சீரழித்த சினிமா – 30

லியோ

சாக்லேட் காபி போட்டு சாமானியனைச் சாத்தியெடுத்தல்

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் ஆயுத பூஜை, தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த சிந்திக்கும் திறனுக்கும் ஆயுத பூஜை போட்டு, அதை மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே தீயிலிட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய நல்ல குடும்பத் தலைவன் பிம்பத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு, "ஒருவன் இமாச்சலப் பிரதேசத்தில் அமைதியாகக் காபி போட்டுக்கொண்டு, பேக்கரி நடத்திக் கொண்டிருந்தாலும், அவனது கடந்த காலம் ரத்தக் களறியான லியோ தாஸாகத்தான் இருக்கும்; அவன் ஒரு தொழிற்சாலையையே வெட்டிச் சாய்க்கலாம்" என்ற ஒரு புதுவிதமான உளவியல் அத்துமீறல் பார்முலாவைத் தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, லியோ திரைப்படத்திற்கு உண்டு.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, ஆனால் மனிதன் இன்னும் இருட்டறையில் அமர்ந்து பிறர் வெட்டிக்கொள்வதைப் பார்த்துத் தன் இருப்பை உறுதி செய்துகொள்ளும் விசித்திர விலங்காகவே இருக்கிறான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்தது லியோ.

நாயகனின் அந்த நரைமுடி பிம்பமும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும், ஹைனா சண்டைக் காட்சியின் கிராபிக்ஸ் மாயையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி காட்டுமிராண்டி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்ப விழுமியம் என்ன தெரியுமா?

நீங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு பெரிய ரவுடியாக, கொலைகாரனாக, கடத்தல்காரனாக இருந்தாலும் கவலை இல்லை. நிகழ்காலத்தில் தாடியை வளர்த்துக்கொண்டு, சாந்தமாக ஒரு குடும்பத்தை நடத்தினால் போதும். யாராவது உங்களைக் கடந்த காலத்தைப் பற்றிக் கேள்வி கேட்டால், கூசாமல் பொய் சொல்லுங்கள்; மனைவியையும் குழந்தைகளையும் ஏமாற்றுங்கள்; ஆள்மாறாட்டம் செய்யுங்கள்.

படத்தில் வரும் நாயகன், தன் அடையாளத்தை மறைப்பதற்காகச் செய்யும் அத்தனை காரியங்களும் அப்பட்டமான சட்டவிரோதச் செயல்கள். "தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒருவன் தன் ஒட்டுமொத்தக் கடந்த காலத்தையே பொய்களால் கட்டமைக்கலாம்" என்ற ஆபத்தான, நேர்மையற்ற சிந்தனையை இத்திரைப்படம் குடும்பப் பாசம் என்ற போலி லேபிளோடு நியாயப்படுத்தியது.

படத்தின் ஆகச்சிறந்த முரண்பாடு, தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் நாயகன் செய்யும் வன்முறைகள்தான். "என் குடும்பத்தைத் தொட நினைத்தால் ஒட்டுமொத்த ஊரையும் கொளுத்துவேன்" என்ற பாசிச மனோபாவத்திற்கு ஹீரோயிசம் என்று முலாம்பூசி விற்றதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையிலும் "என் சுயநலத்திற்காக நான் எந்தச் சட்டத்தையும் மீறுவேன்" என்று அலையும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறைக்கு அடிமையான பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது இன்னும் ஆழமாக விதைத்தது.

படத்தில் வரும் வில்லன்கள் செய்யும் அநியாயங்களுக்குக் காட்டப்படும் பின்னணி நரபலி மற்றும் சாத்தானியக் கோட்பாடுகள். இருபத்தோராம் நூற்றாண்டின் டிஜிட்டல் யுகத்தில், இன்னும் நரபலி கொடுத்தால் தொழில் வளரும் என்ற அறிவியலற்ற மூடநம்பிக்கையைத் திரைக்கதைக்கான முக்கியக் கருவியாக மாற்றியது டெராபைட் பிற்போக்குத்தனம்!

அறிவியலையும், பகுத்தறிவையும் நோக்கி நகர வேண்டிய ஒரு சமூகத்தில், கமர்சியல் சினிமா தன் பிளாஷ்பேக் விறுவிறுப்பிற்காக இதுபோன்ற வக்கிரமான, பின்தங்கிய மூடநம்பிக்கைகளுக்குப் பிரம்மாண்ட வடிவம் கொடுத்துப் பொதுப்புத்தியைச் சீரழித்தது.

இத்திரைப்படத்தில் நாயகிக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. தன் கணவன் லியோவா இல்லையா என்று அவளுக்குத் தெரியாது; அவளது ஒட்டுமொத்தக் கதையும் கணவனைச் சந்தேகப்படுவதிலும், அவனது பொய்களை நம்பி ஏமாறுவதிலும், அழுகையிலுமே முடிந்துவிடுகிறது.

ஒரு பெண்ணுக்குத் தன் கணவனின் கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமையோ, அல்லது அவனது வன்முறைகளைக் கேள்வி கேட்கும் ஆளுமையோ கிடையாது. அவள் எப்போதும் கணவனின் அதிகாரப் பாதுகாப்பிற்குள் மட்டுமே முடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு பலவீனமானப் பொருள் என்ற நிலப்பிரபுத்துவச் சிந்தனையை இத்திரைப்படம் மிக நேர்த்தியாகத் தக்கவைத்தது.

லியோ பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிகளைக் குவித்து, அதன் நாயகன் மற்றும் இயக்குநரின் பிம்பத்தை அடுத்த கட்டத்திற்குத் தூக்கிச் சென்றிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

லியோ ஏற்படுத்திய சீரழிவு என்பது, வன்முறையை ஒரு லைப்ஸ்டைல் ஆக மாற்றியதுதான். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சராசரி மனிதன், தன் மனைவியிடம் காபி கேட்கும் போது கூட, பின்னணியில் படாஸ் மியூசிக் ஓடுவதாக மனப்பிராந்தி அடைந்தான். உண்மை என்னவென்றால், நாம் யாரும் லியோ தாஸும் அல்ல, பார்த்திபனும் அல்ல. நாம் அனைவரும் வெறும் டிக்கெட் வாங்கிய ஏமாளிகள் என்பதைத் தமிழனுக்குப் புரிய வைப்பது சிரமமாகப் போனது.

திரையரங்கிற்குள் நுழையும்போது சாதாரண இளைஞனாகச் செல்பவன், வெளியே வரும்போது ஒரு மினி சைக்கோவாக உருவெடுத்திருப்பதுதான் இன்றைய டார்க் சினிமாக்களின் சாதனை. லியோவில் காட்டப்பட்ட அதீத வன்முறை மனித மூளையின் அமிக்டலா பகுதியை வேறிநாய் கணக்காக இயங்கச் செய்தது என்றால் அதில் மிகையேதுமில்லை.

ஒரு காலத்தில் திரையில் இரத்தம் சிந்தினால் கண்கள் தானாக மூடிக்கொள்ளும். இன்று, ஒருவன் மண்டை ஓட்டைச் சுத்தியலால் உடைப்பதைப் பாப்கார்ன் மென்றுகொண்டே வாவ் என்று ரசிக்கும்படி நம் நரம்பு மண்டலம் மரத்துப்போக லியோவும் ஒரு காரணமானது.

லியோ படம் முழுக்கத் துப்பாக்கிகளும், போதைப்பொருள் கடத்தலும், தசரா திருவிழா போலக் கொண்டாடப்பட்டன. "கெட்ட வார்த்தை பேசினால் மாஸ், ரத்தம் சிதறினால் க்ளாஸ்" என்கிற புதிய சமூகப் பொதுப்புத்தியை லியோ உருவாக்கியது.

திரையரங்கு இருக்கைகளை உடைப்பது, சமூக வலைத்தளங்களில் வசைபாடுவது, நான் ரெடி என்று போதை கலாச்சாரப் பாடலுக்குப் பள்ளிச் சீருடையுடன் ரீல்ஸ் செய்வது எனச் சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பைச் சிதைத்ததில் லியோவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

டெஸ்கார்ட்ஸ் "நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்" என்பார். லியோ அதை "நான் வெட்டுகிறேன், ரத்தம் சிதறுகிறது, எனவே என் இருப்பு உறுதி செய்யப்படுகிறது" என்று இயங்கியது படம் பார்ப்பவர்களை வன்முறை மிருகங்களாக மனதளவில் மாற்றியது.

சட்டம், ஒழுங்கு, அறம் எல்லாமே ஒரு தனிமனிதனின் மாஸ் இமேஜுக்கு முன்னால் மண்டியிட வேண்டும் என்றும், "விதிகள் சாமானியர்களுக்கு மட்டுமே, லியோக்களுக்கு அல்ல" என்றும் சமூகக் கட்டமைப்பை மெல்ல அரிக்கும் கருத்துக் கரையான்களை உற்பத்தி செய்து புற்றுநோயைப் போல பரவ விட்டது லியோ.

அமைதியாக வாழ நினைக்கும் ஒருவன், தன் குடும்பத்தைக் காப்பாற்ற நூறு பேரைக் கொல்லலாம் என்கிற விஜிலாண்டி மனப்பான்மையை வளர்த்ததோடு, சட்டம், ஒழுங்கு, போலீஸ் எல்லாமே வேடிக்கை பார்க்கும் டம்மிகள் என்கிற எண்ணத்தை நியாயப்படுத்தியதுதான் லியோ படத்தின் சாதனை.

சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி என்பார்கள். லியோ போன்ற படங்கள் காட்டும் கண்ணாடி கொஞ்சம் உடைந்து, கூர்மையான முனைகளுடன் பார்ப்பவர்களைப் பதம் பார்க்கும் கலவரக் கண்ணாடி.

திரையில் பாய்ந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளின் விஞ்ஞானம் வளர வளர மனிதனின் நிதானம் குறைகிறது என்பதற்கு இந்தப் படத்திற்கு வரும் சண்டைக் கூட்டமே சரியான சாட்சி.

மேலும், நரகத்தின் கதவுகள் திரையரங்குகளின் வடிவில் திறக்கப்பட்டிருக்கின்றன. அங்கே விற்கப்படும் பாப்கார்னின் விலையை விட, மனித உயிர்களின் விலை குறைவாக இருக்கிறது என்பதற்கும் இப்படமே அக்மார்க் சாட்சியம்.

ஆல்பர் காம்யூவின் தி ஸ்ட்ரேஞ்சர் நாவலின் நாயகன், வெயில் அதிகமாக இருந்தது என்பதற்காகக் கொலை செய்வான். லியோவில், "என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், அல்லது என் கடந்த காலத்தை மறைக்க வேண்டும்" என்று கொலைக்கு மேல் கொலைகள் செய்து வன்முறைக்குக் கற்பித்த நியாயம் என்பது அநியாயம் என்று சொல்வதை விட அபத்தமானது. அந்த அபத்தத்தைத்தான் தமிழகமே கூடிக் கொண்டாடி திரையரங்க இருக்கைகளைப் பீஸ் பீஸாக்கிப் பஞ்சுப் பஞ்சாகப் பறக்க விட்டுக் கொண்டாடியது.

மனிதன் தன் அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்தும், அர்த்தமற்ற தன்மையிலிருந்தும் தப்பிக்க ஒரு போலி உலகத்தைத் தேடுகிறான். தியேட்டரின் இருட்டில், ஸ்கிரீனில் ஒரு நாயகன் கையில் கத்தியோடு நூறு பேரைக் கொல்லும்போது, முன்னால் அமர்ந்திருக்கும் இளைஞன் தன் சொந்தத் தோல்விகளை மறந்து, அந்த வன்முறையோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். இது ஒரு வகையான மனநல தற்கொலை. தன் சுயத்தை இழந்து, திரையின் வன்முறையில் தன் இருப்பைத் தேடும் அந்த அவலத்தைப் பலமாகச் சந்தைப்படுத்தித் தன் கல்லாவை நிரப்பிக் கொண்டது லியோ.

குடும்பத்தைக் காப்பது என்ற பெயரில் வன்முறையைக் கையாள்வதைக் கெத்து என்றும், தன் அடையாளத்தை மறைக்கப் பொய் சொல்வதைப் புத்திசாலித்தனம் என்றும், சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காமல் வாழ்வதே படாஸ் வாழ்க்கை என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற போதை சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

1 Jul 2026

தலை துண்டிப்பு ஒரு கலை – ஹுகும் தத்துவத்தின் தொடக்கம்

சீரழித்த சினிமா – 29

ஜெயிலர்

தலை துண்டிப்பு ஒரு கலை – ஹுகும் தத்துவத்தின் தொடக்கம்

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச அமைதிக்கும், நிம்மதிக்கும், சமூக பாதுகாப்பு உணர்வுக்கும் ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்து பொக்ரான் அணுகுண்டைப் போட்டுத் தள்ளியது ஜெயிலர் திரைப்படம்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "ஓய்வுபெற்ற வயதான தாத்தாக்கள் பேரன் பேத்திகளோடு பூங்காவிற்குப் போய் அமைதியாக வாழ வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "முன்னாள் ஜெயில் அதிகாரி நினைத்தால், ஓய்வு காலத்தில் தன் வீட்டின் சமையலறையிலேயே வில்லனின் ஆட்களைத் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைத்தெடுத்து கரம் மசாலா போட்டு பிரியாணி செய்யலாம்" என்ற ஒரு புதுவிதமான முதிய வயது வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, ஜெயிலர் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அமைதியான, அதேசமயம் ஆபத்தான பிம்பமும், காது ஜவ்வு கிழியும் ஹுகும் என்ற பின்னணி இசையும், காவாலா நடனப் போதையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கசாப்புக் கடை நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் காவல்துறையிலோ அல்லது சிறைத்துறையிலோ உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றால் போதும்; உங்களுக்கு நாட்டின் சட்டதிட்டங்களோ, நீதிமன்றங்களோ, தற்போதைய போலீஸோ தேவையில்லை. உங்கள் மகனுக்குப் பிரச்சினை என்றால், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் உங்கள் பழைய கிரிமினல் நண்பர்களைப் போனில் கூப்பிட்டு, சொந்தமாக ஒரு துணை ராணுவப் படையையே உருவாக்கி, ஊரிலிருக்கும் அத்தனை பேரையும் போட்டுத் தள்ளலாம் அல்லது கொல்லலாம்.

படத்தில் வரும் நாயகன், சட்டத்தைக் காக்க வேண்டிய சிறைத்துறையில் இருந்தவர். ஆனால், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் வேகம் இருக்கிறதே, அது எந்த ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கும் குறைவானது அல்ல. ஜெயிலர் என்பவர் சிறைக் காவலர், படத்தில் அவர் செய்யும் கொலைகளைப் பார்க்கும் போது அவரை அப்படிச் சொல்ல முடியாது, எமதர்மனின் ஆதரவாளர் என்றுதான் சொல்ல முடியும்.

ஒரு தந்தை தன் மகனைக் காப்பாற்றவோ அல்லது பழிவாங்கவோ எந்த எல்லையற்ற வன்முறையையும் கையாளலாம்; அதற்குப் பழைய குற்றவாளிகளின் துணையைப் பெறலாம், என்ற வன்முறையான சிந்தனையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

இப்படத்தின் ஆகச்சிறந்த கலாச்சாரப் பங்களிப்பு என்னவென்றால், வன்முறையையும் குரூரத்தையும் நகைச்சுவையோடு கலந்து கமர்ஷியலாக விற்றதுதான்.

வில்லனின் ஆட்கள், நாயகனின் வீட்டின் சமையலறைக்குள் புகுந்து மிரட்டும்போது, அவர்களை மிகச் சாதாரணமாகத் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைத்து கைம்மா பரோட்டா போடுவது போல அவர்களை அழிய வைப்பார் நாயகன். மேலும், தன்னை இழிவுபடுத்தும் வில்லனின் ஆளைச் சர்வ சாதாரணமாகத் தலையைத் துண்டித்து எவ்வித அதிர்ச்சியுமில்லாமல் நிற்பார் நாயகன். இந்த உறைபனியூட்டும் கொடூரத்தைக் காட்டிவிட்டு, பின்னணியில் ஒரு நகைச்சுவை நடிகரை வைத்து காமெடி செய்வார் இயக்குனர்.

கொலையையும், பிணங்களை மறைப்பதையும் ஏதோ வீட்டில் சமையல் செய்வது போன்ற ஓர் எளிய தினசரி காரியமாக மாற்றிக் காட்சிப்படுத்தி, பார்ப்பவனுக்கு வன்முறையின் மீதான பயத்தையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் வன்முறையைப் பார்த்து அருவருப்படைய வேண்டிய சமூகம், துண்டு துண்டாக வெட்டப்படும் காட்சிகளைக் கண்டு திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்கும் ஒரு மிருகத்தனமான பொதுப்புத்தியை வளர்த்துக்கொண்டது.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், தன் மகன் ஊழல்வாதியாக, கடத்தல்காரனாக மாறிவிட்டான் என்று தெரிந்ததும், நாயகன் தன் சொந்த மகனையே சுட்டுக் கொல்ல சைகை காட்டுவார். இதை ஏதோ நேர்மையின் உச்சகட்டத் தியாகம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது நேர்மை அல்ல; அது ஒரு முதிய ஆணின் ஈகோ. "என் வளர்ப்பு, என் பாரம்பரியம், என் நேர்மையான பிம்பத்திற்கு என் மகனே களங்கம் விளைவிப்பதா?" என்ற சுயநலப் பெருமிதத்திற்காகத் தன் மகனைத் தீர்த்துக் கட்டுவதைக் கௌரவமாகக் காட்டியது இத்திரைப்படம்.

குடும்ப உறவுகளுக்குள் பகுத்தறிவோ, சட்டபூர்வமான திருத்தங்களோ இல்லாமல், "என் கௌரவத்திற்காக நான் எதையும் செய்வேன்" என்ற நிலப்பிரபுத்துவக் கௌரவக் கொலை அதாவது, ஆணவக்கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு இது.

வழக்கமான கமர்ஷியல் தமிழ்ப் படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. படத்தின் முக்கியக் கதையோடு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், படத்தின் வியாபாரத்திற்காக காவாலா என்ற பாடலுக்கு ஒரு முன்னணி நாயகியைக் கவர்ச்சிப் பதுமையாக ஆட வைத்தும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த செய்திகளும் தெரிய வேண்டாம் என அவர்களை ஜாடிக்குள் அடைபட்ட ஊறுகாய்களாக்கியும் பெண்களின் ஆளுமையை அடியோடு மழுங்கடித்தது இத்திரைப்படம்.

ஜெயிலர் பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிகளைக் குவித்து, சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தை மீண்டும் இமயமலையில் ஏற்றி, அதன் இயக்குநரை ஸ்டார்களுக்கான இயக்குநர் எனப் பிராண்டிங் பண்ணியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் சத்தம் போடாமல், பூனைக்கு உணவளித்துக் கொண்டு, பேரக் குழந்தைக்குக் குடை பிடித்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பது பழைய விதி. ஆனால், இந்தத் படம் அதை உடைத்தது.

அதன் விளைவாக வீட்டில் இருக்கும் தாத்தாக்களைப் பார்க்கும்போது பேரன்மார்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை வரத் தொடங்கியது. "எங்க தாத்தாவும் முன்னாள் சி.பி.ஐயோ, ஜெயிலரோ ஆக இருந்திருப்பாரோ? அலமாரிக்குள் ஏதேனும் ரகசியத் துப்பாக்கி இருக்குமோ?" என்கிற தேடல் சிறுவர்களிடம் அதிகரித்தது. சுருக்கமாகச் சொன்னால், ரிட்டயர்ட் ஆனவர்களுக்கான சமூக அந்தஸ்தை இந்தப் படம் ஒட்டுமொத்தமாக வயலன்டாக ரீபிராண்ட் செய்தது.

மேலும், ஜெயிலர் திரைப்படத்திற்குப் பின் எந்த தாத்தாவும் பேரனுக்குக் கதை சொல்வதில்லை; மாறாக, "தம்பி, தாத்தா ஒரு காலத்துல திஹார் ஜெயில்ல..." என்று பிளாஷ்பேக் மூட்டையைக் அவிழ்க்க ஆரம்பித்தார்கள். அத்துடன் வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியைப் பார்க்கும்போதெல்லாம், தங்களுக்குள் ஒரு காட்டுக்கட்டாரி ஒளிந்திருப்பதாக முதியவர்கள் நம்பத் தொடங்கினர்.

ஒரு காலத்தில் வில்லன் அடித்தால் ஹீரோ அழுவான். பிறகு ஹீரோ அடித்தால் வில்லன் பறப்பான். ஜெயிலர் படத்தில் காட்டியிருப்பது வேறு ரகம். இரத்தம் சிந்துவது என்பது ஒரு கோரமான விஷயம் என்பதிலிருந்து தலையை எந்தவித அதிர்ச்சியுமில்லாமல் துண்டிப்பது வரை, அது அதிரடி பிஜிஎம்மோடு வரும்போது ஒரு கொண்டாட்டம் என்ற நிலைக்கு தமிழனின் மூளை பக்குவப்படுத்தப்பட்டது இத்திரைப்படம் தந்தச் சாபக்கேடே.

உளவியல் ரீதியாக, ஒரு மனிதனின் தலை துண்டிக்கப்பட்டு விழும்போது தியேட்டரே எழுந்து நின்று கியூட் ஆக ஹுகும் என்று கத்தும் அளவுக்கு சமூகத்தின் வன்முறை சார்ந்த சகிப்புத்தன்மை மோசமானது ஜெயிலரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அன்ட் பிரேக். இது ஓர் ஆபத்தான உளவியல் மாற்றம். வன்முறை அங்கே கொடூரமாகத் தெரியவில்லை; அது ஒரு ஸ்டைல் ஆக, மாஸ் ஆக மாற்றப்பட்டிருந்தது. ரத்தமும் சதையும் திரையில் தெறிக்கும்போது, அது நம் நரம்பு மண்டலத்தை வதக்குவதற்குப் பதிலாக, ஒருவிதக் களிப்பை ஏற்படுத்தியது. இது சமூகத்தின் மழுங்கிப்போன உணர்வெல்லைக்கு ஒரு சான்று.

சமூகத்தில் அமைதியாக, அடக்கமாக இருக்கும் மனிதர்களைக் கண்டால். "அவன் ரொம்ப அமைதியா இருக்கான்டா... கண்டிப்பா பின்னாடி நாலு மாநிலத்துல அவனுக்கு நெட்வொர்க் இருக்கும்!" என்ற சந்தேகப் புத்தி சமூகத்தில் பரவத் தொடங்கியது ஜெயிலர் ஏற்படுத்திய ஸ்பாய்லர்.

"வயதானாலும் என் ஸ்டைலும் அழகும் இன்னும் போகவில்லை" என்று இப்படத்தின் நாயகர் நிரூபித்தாரோ இல்லையோ, "வயதானாலும் நம் சமூகத்தின் வன்முறை வெறியும், மாஸ் ஹீரோ வழிபாட்டு மனநிலையும் இன்னும் போகவே இல்லை" என்பதை ஜெயிலர் நிரூபித்தது.

ஜெயிலர் தமிழ் சமூகத்திற்குப் பெரிய தத்துவப் பாடம் எதையும் நடத்தவில்லை. மாறாக, தமிழனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஆதிக்க மனப்பான்மை வயதான பின்னும் வெல்லலாம் என்ற நம்பிக்கை, மற்றும் வன்முறையை ரசிக்கும் விசித்திர குணம் ஆகியவற்றைத் தூண்டி விட்டது.

சிறைச்சாலை அதிகாரிகள் என்பவர்கள் கிரிமினல்களோடு கைகுலுக்கும் தாதாக்கள் என்றும், சட்டத்தை மீறிச் செய்யப்படும் படுகொலைகள் டைகரின் கட்டளை என்றும், குரூரமான வன்முறையை ரசிப்பதே ஆகச்சிறந்த திரையரங்கு அனுபவம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஆசிட் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****