30 Sept 2017

அணித் தலைவன்

அணித் தலைவன்
            கட்சியின் இளைஞரணிப் பொறுப்பு கொடுக்கப்பட்ட கதிரேசன், "கட்சியோட ஸ்லீப்பர் செல் அணித் தலைவர் பொறுப்பு காலியாத்தானே இருக்கு! அதைக் கொடுங்க!" என்று கேட்டார்.
*****
போலி
            "போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!" என்று பிரச்சாரம் செய்து கொண்டு சென்ற வாகனம் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் மாட்டிக் கொண்டது.
*****
இன்னும் ரெண்டு நாள்
            "இன்னும் வேலை நிறுத்தம் ரெண்டு நாளைக்கு நீடிச்சிருந்தா வீட்டு வேலைகளையெல்லாம் முடிச்சிருப்பேன்!" வேலை நிறுத்தம் வாபஸ் என்ற செய்திக் கேட்ட விமலா சலித்துக் கொண்டாள்.
*****
களமாடல்
            "போராடாமல் இருப்பவர்களை விட போராடித் தோற்பவர்கள் வெற்றியாளர்களே! போராட்டத்தைக் கொச்சைப்படுத்த சோம்பேறிகளால்தான் முடியும்!" தங்கள் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் பேசிய பேச்சை டி.வி.யில் கேட்டு வீட்டிலிருந்து கை தட்டினார் போராட்டக் களத்திற்குச் செல்லாத நாகு.

*****

வீரனின் புராணம்

வீரனின் புராணம்
தானாக வரட்டும்
வலியப் போய்
எதற்கு முயற்சி செய்கிறாய்?
தலைகள் வெட்டுப்பட்டு
அருகே உருண்டு ஓடி வரும்
வாளை மட்டும்
தயாராக வைத்துக் கொள்
உருண்டோடி வந்த தலையைக்
கையில் எடுத்துக் கொண்டு
வாளை கையில் ஏந்திக் கொள்
வெற்றி வீரனுக்கு
வாழ்த்துகள் சொல்லட்டும் உலகம்

*****

பழக்கம் என்பதாகக் கருதிக் கொள்கிறோம்

ழக்கம் என்பதாகக் கருதிக் கொள்கிறோம்
நீ யோசிப்பதுதான்
நீ முடிவு எடுப்பதுதான்
எங்கள் கருத்துகள்
உன் சந்தர்ப்பவாதத்துக்குதான் என்பது
எங்களுக்கு நன்றாகத் தெரியும்
நாங்கள் உன் கூடத்தான் இருப்போம்
எங்களுக்குப் பழகி விட்டது
உனக்குப் பழக்கமாகி விட்டது

*****

29 Sept 2017

பிரச்சனைகளின் முடிவுகள்

பிரச்சனைகளின் முடிவுகள்
ச்சம் என்பதை
களைந்து விடு
எல்லா பிரச்சனைகளும்
ஒரு முடிவுக்கு வந்து விடும்
பயம் உன் பழக்கமாகி விட்டதால்
தொடர்கின்றன
உனக்கும் எனக்குமான
பிரச்சனைகள்
உன் பயம் ஒரு நாள் உதிரும் போது
உதிர்ந்து விட்ட
உன் வாழ்நாள்களை
பொறுக்க முடியாது என்பதைப்
புரிந்து கொள்வாய்
உனக்கும் எனக்குமான
பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல்
வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விடும்
நம் பிரச்சனை பற்றி பேச
யாரும் இருக்க மாட்டார்கள்
அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு

*****

பையில் இருப்பதையல்ல... பையையே அடிக்கிறார்கள்!

பையில் இருப்பதையல்ல... பையையே அடிக்கிறார்கள்!
            நகர்ப்புறங்களிலோ, புறநகர்ப் புறங்களிலோ வாங்கிய பொருள்களை ஒரு பையில் இட்டு நிறுத்தியிருக்கும் இரு சக்கர வாகனத்தில் தொங்க விட்டு செல்ல முடியாது. சென்று வருவதற்குள் பையில் இருப்பதை ஆடுகளோ, மாடுகளோ தின்று தீர்த்திருக்கும்.
            ஆடு, மாடுகளிடம் அந்தப் பை தப்பித்தால் அங்கே திரிந்து கொண்டிருக்கும் மனநலம் பாதித்த மனிதர்கள் கையில் பயணித்துக் கொண்டிருக்கும்.
            செல்லும் இடங்களில் எல்லாம் பையோடு அலைவது உசிதம். பையை ஒருவேளை இழந்து விட்டால் அதை வெளியில் சொல்லாமல் இருப்பது இன்னும் உசிதம் மற்றும் விவேகம்.  
            விசயத்தைக் கேள்விபடுபவர்கள் பையை இழந்தவரைத் திட்டோ திட்டென்று திட்டுகிறார்கள். பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா என்று பாய்ந்து பாய்ந்து மிரட்டுகிறார்கள். இந்தக் காலத்தில் இப்படியா அசட்டையாக இருப்பது மட்டையாகும் வரை அறிவுரைகளால் கும்மோ என்று கும்மி விடுகுறார்கள். மனநலம் பாதித்தவரிடம் பையைத் தொலைத்தவரை மனநலம் பாதிக்கும் அளவுக்குக் கொண்டு சென்று விடுகிறார்கள்.
            இவைகளையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதில் ஆச்சரியமான சங்கதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
            பையில் எது இருந்தாலும் அதை ஆடுகளும், மாடுகளும் தின்கின்றன.
            எங்கு பை தொங்கிக் கொண்டிருந்தாலும், அதை மனநலம் பாதித்த மனிதர்கள் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

*****

இப்படித்தான் வெளுத்தது பணம்!

இப்படித்தான் வெளுத்தது பணம்!
            பண மாற்ற மதிப்பின் மூலம் மிகப் பெரும் மாற்றம் வந்து விடும் என்றார்கள். தற்போது வெளிவரும் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது ஏமாற்றம் வந்ததுதான் மிச்சம்.
            கூடுதல் பணம் வைத்திருப்பவர்களும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும் பண மாற்ற மதிப்பில் சிக்குவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தது. அவர்கள் அரசாங்கத்தைச் சிக்க வைத்து விட்டார்கள்.
            அப்போது டாஸ்மாக்கில் பணியாற்றுபவர்கள், வசூல் மையங்களில் பணியாற்றுபவர்கள், பேருந்தில் வசூலாகும் பணத்தை நிர்வகிப்பவர்கள் என மக்கள் பணத்தைக் கையாளும் மற்றும் வசூல் செய்யும் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் வசூலானப் பணத்தோடு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டில்தான் நின்றார்கள்.
            அவர்கள் தாங்கள் வசூல் செய்த மற்றும் கல்லா கட்டிய பணத்தை பிரமுகர்களிடம் கொடுத்தார்கள். பிரமுகர்களிடம் இருந்த பழைய ஐநூறையும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் அவர்கள் பெற்றுக் கொண்டு வசூலானப் பணம் என்ற பெயரில் வங்கியில் கட்டினார்கள். அதற்காக அவர்கள் மிகப் பெரிய அளவில் கமிஷன் வருமானம் பெற்றார்கள்.
            கருப்புப் பணத்தை வெளுப்புப் பணமாக வெகு அழகாக அந்த இக்கட்டான காலத்திலும் சலவை செய்தார்கள்.
            வங்கிகள் குறிப்பாக தனியார்கள் வங்கிகள் புதுப் புது சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கி மூன்று லட்சங்களாக நிரப்பத் தொடங்கின.
            ஒரு சில ஓட்டைகளோடு ஏதோ ஓடிக் கொண்டிருந்த படகு கடைசியில் சல்லடையாய் ஆனதுதான் மிச்சம்.
            சல்லடை ஆனாலும் படகு படகுதான் என்ற ஒரு வாதமும் இருக்கிறது. ஆனால் அந்த வாதத்திற்கு எதிர்வாதம் இல்லை. ஏன் இல்லை என்றால் விதாண்டாவாதத்தின் முக்கிய பண்பே அதுதான்.

*****

ஆகிக் கொள்வது அவரவர் விருப்பம்

ஆகிக் கொள்வது அவரவர் விருப்பம்
எனக்கு இப்படித் தோன்றுகிறது
அதை பேசுகிறேன்
அதை எழுதுகிறேன்
உனக்கு அது எப்படித் தோன்றும் என்று
எனக்குத் தெரியாது
நீயும் பேசு
நீயும் எழுது
தயவுசெய்து கல்லை மட்டும்
கையில் தூக்காதே
மொழி தெரியா
ஆதிமனிதன் நீயென்றால்
தயவுசெய்து மன்னித்துக் கொள்
உன்னிடம் பேசியதற்காகவும்
எழுதியதற்காகவும்
நானும் உன் போல்
கற்கால கருவிகள் உபயோகிக்கம்
ஆதிமனிதன் ஆகிக் கொள்கிறேன்.

*****

வடிகட்டல் தேர்வுகள்

வடிகட்டல் தேர்வுகள்
            தேர்வுகளுக்குத் தயாராகி வேலைக்கு தகுதியற்றவர்களாய் ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வகை நிலை என்றால், இன்னொரு வகை நிலை  தேர்வுக்காகத் தயாரித்த தயாரிப்பில் நூறில் ஒரு பங்கிற்குக் கூட வேலைக்கான அறிவு தேவைப்படாத நமது தேர்வு தயாரிப்பு முறை.
            வடிகட்டி நல்லதை கீழே விட்டு விடும். அல்லதை தக்க வைத்துக் கொள்ளும். இந்தத் தேர்வுகளும் வடிகட்டித் தேர்வுகளாக இருக்கின்றன. தகுதியானவர்களைக் கீழே விட்டு விட்டு, தகுதியற்றவர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.
            ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற ஒருவர் ல-ழ-ள என்ற மூன்று எழுத்துகளுக்கும் வேறுபாடு தெரியாமல் ஒரு கடிதம் எழுதுகிறார்.
            தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வில் தேர்வு பெற்று அதிகாரிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் செய்வினை - செயப்பாட்டு வினை வேறுபாடு இல்லாமல் மேற்பார்வை நோட்டில் எழுதி வைத்து விட்டுப் போகிறார்.
            இந்தத் தேர்வுகளை ஏன் வடிகட்டல் தேர்வுகள் என்று சொல்லக் கூடாது? அதுவுமில்லாமல் இந்தத் தேர்வுகளில் கேட்கப்படும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எனும் வகையிலான நூறோ அல்லது நூற்றைம்பது ஒரு மதிப்பெண் வினாக்கள் எப்படி ஒருவரின் தகுதியை அளவிட்டு விடும்?
            பதினைந்து, பதினேழு வருடங்கள் படிப்பது வெறும் 150 ஒரு மதிப்பெண் வினாக்களுக்குத்தான் என்றால் அதைப் படிப்பவர்கள் எப்படிப் படிப்பார்கள்? அந்த படிப்பின் மூலம் அவர்கள் எப்படி உருவாகுவார்கள்? என்ற கேள்விகளுக்கு அந்தத் தேர்வுகளிடம் என்ன பதில் இருக்கிறது.
            ஓ! மன்னிக்கவும்! தேர்வுகள்தான் நம்மிடம் கேள்விக் கேட்கும். நாம் தேர்வுகளிடம் கேள்வி கேட்க முடியுமா என்ன?

*****

28 Sept 2017

அமைதியும் பொறுமையும் அனுதினமும் வேண்டும்!

அமைதியும் பொறுமையும் அனுதினமும் வேண்டும்!
            பயங்கர மன இறுக்கமாக இருக்கும். சூழல் புரியாமல் அவரவர் பிரச்சனைகளை முன்னிருத்துவார்கள். அதில் நியாய தர்மங்களை வேறு சேர்த்துக் கொள்வார்கள்.
            சுத்தமாகவே அந்தச் சூழல் பிடிக்காது. மனம் பிடித்து வெளியே தள்ளும். சிறு சிந்தனை கூட அந்த நேரத்தில் நிறைய சக்தியை உறிஞ்சும். மனச்சோர்வு கொள்ளச் செய்யும்.
            எதுவும் செய்ய முடியாதது போலத் தோன்றும். ஆனால், அந்த இடத்தில் சுருண்டு விடக் கூடாது. ஆம்! செய்ய ஆரம்பித்து விட்டால் எந்தச் செயலும் தானாக வந்து விடும். அதற்காகவெல்லாம் ரொம்ப சிக்கலாக யோசித்துக் கொண்டு சிரமப்பட வேண்டாம்.
            நமக்குப் பிடித்த மாதிரி இருந்தால் எல்லாம் இன்பமாக இருக்கும். நாம் வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் இருந்தால், பிடித்தமில்லாத வேலையை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
            பிடித்தமில்லாத வேலையைச் செய்யும் போது தூக்கம் வருகிறது. கொட்டாவி வருகிறது. சற்று அந்த வேலையை விலக்கி விட்டு வந்தால் வந்த கொட்டாவியும், தூக்கமும் போயே போய் விடும். விசயம் அவ்வளவுதான்.
            நமது அதிகப்படியான மனஅழுத்தம் காரியங்களை மேலும் கடினமாக்கும். காரியங்களைச் சுலபமாக்குவதில் நமது இலகுவான மனநிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
            பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து விட்டால், அதே நிலையில் ஒரு செயலையும் செய்ய ஆரம்பித்து விட்டால் நிகழ்பவைகளும் அது போலவே அமைகின்றன. அதற்கு மாறாக இருந்தாலோ, செய்தாலோ நிகழ்வுகளும் அவ்வாறே அமைகின்றன.

*****

பாம்பு கதை

பாம்பு கதை
பாம்புகள் குறித்த கதைகள்
பிரமாண்டமாக இருக்கின்றன
பழிவாங்கும் பாம்புகள்
தெய்வாம்சப் பாம்புகள் என்று
ஒவ்வொரு கதையும்
பேய்ப்படம், சாமிப்படம் போல
விதவிதமானவை
பாம்பு குறித்த பயம் கொண்ட
பட்டினத்துவாசி ஒருவர்
தான் அதை டிஸ்கவரி சேனலில் பார்ப்பதோடு சரி
நேரில் பார்த்ததில்லை என்கிறார்
அவரைப் பாம்பு போல் நினைத்து
படை நடுங்கிக் கொண்டிருக்கும்
அவரது குடும்பத்தினருக்குத் தெரியும்
பட்டினத்தில் பாம்புகளின் வடிவம் வேறு என்பது
இந்நேரம் மனிதப் பாம்புகள் குறித்த
நிறைய கதைகள் பேசிக் கொண்டிருக்கக் கூடும்
நிஜப் பாம்புகள்.

*****

கடினக் காலத்தைக் கடத்தல்

கடினக் காலத்தைக் கடத்தல்
            சில செயல்களைச் செய்யும் போது ஏன்தான் இந்தச் செயலை ஆரம்பித்தோம் என்று எண்ணம் தோன்றுவதுண்டு. சில செயல்கள் அப்படி அந்த அளவுக்கு மன இறுக்கம் தருவதாக உள்ளது.
            ஆனால், அந்தச் செயல் முடிந்த பிறகு அந்த மன இறுக்கம் தானாகவே விலகி விடும். இதற்குப் போயா இவ்வளவு மன இறுக்கம் கொண்டோம் என்று எண்ணவும் தோன்றும்.
            ஆக, அந்தக் காலத்தைக் கடத்தல்தான் எல்லாம். அந்தக் காலத்தைக் கடப்பதற்குக் கூட எதுவும் செய்ய வேண்டாம். நாம் பாட்டுக்கு இருந்தால் அதுவாகக் கடந்து போய் விடும். கடினமான காலங்களை அப்படித்தான் கடக்க வேண்டும்.
            மனதைப் போட்டு எதையாவது செய்தால் பிரச்சனை. அதனதனை அதனதன் போக்கில் விட்டு விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதுவதுவாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.
            சில செயல்களில் நாம் முடிவைத் தேடிக் கொண்டு போக வேண்டியதில்லை. முடிவு தானாக வரும்.

*****

யசோதராவின் ஓலம்

யசோதராவின் ஓலம்
அந்த நள்ளிரவில்
யசோதரா வெளியேறினாள்
காடு, மலை கடந்து அலைந்து திரிந்து
போதி மரத்தடியில்
ஞானமடைந்த போது
போதி மரத்திலிருந்து
மொத்த உலகமும்
ஞானம் பெற்றது
புத்தர் தான் பெற்ற ஞானத்திற்காக
முதல் முறையாக
தலை குனிந்தார்.

*****

பொறுத்திருத்தலையும் கற்றுக் கொள்ள வேண்டும்!

பொறுத்திருத்தலையும் கற்றுக் கொள்ள வேண்டும்!
            தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்த செயலை சில பொழுதுகளில் செய்ய முடியாத நிலை ஏற்படுவது உண்டு. செய்ய முடியாத தடைபட்ட அந்த நிலையைக் கண்டு கலங்க வேண்டியதில்லை. இத்தனை நாள் முடிந்த செயல் இன்று முடியவில்லையே என்று ஏங்க வேண்டியதில்லை.
            செய்ய முடியாத நிலை அந்தச் செயலுக்கான ஓய்வுக்காலம். அது சில காலம் நீடிக்கும் எதுவும் சில காலம் என்பது போல. அது இயற்கையாக அமைந்த ஓய்வுக்காலமும் கூட.
            இயற்கையிலேயே அப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரேக் இருக்கிறது. அந்தத் தடைக்காலத்தில் செயலைச் செய்ய வேண்டுமே என்று மீறிக் கொண்டு செய்ய முயல வேண்டியதில்லை.
            தொடர் முயற்சி, கடின உழைப்பு என்பது நல்ல விசயம். அதை அந்தத் தடைக்காலத்தில் முயன்று பார்க்க வேண்டாம். காத்திருப்பு பலன் கொடுக்கும். மீண்டும் மனம் உற்சாகம் அடையும். அப்போது அதன் வேகம் இரட்டிப்பாக இருக்கும். கடின உழைப்பு என்பது ஆர்வத்தோடு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மன இறுக்கத்தோடு செய்வதாக இருக்கக் கூடாது.
            வாழ்க்கையில் பொறுத்திருக்கவும் வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டிய காலக் கட்டம் அது.

*****

27 Sept 2017

சமாதானம் உண்டாவதாக!

சமாதானம் உண்டாவதாக!
            ஆண்களுக்கு ஏன் பெண்களின் உடலில் உரசுவதில் அப்படி ஓர் அலாதி இன்பம்? பேருந்து என்றால் சொல்லவும் வேண்டுமோ! பெண்களின் இடையில் கிள்ளுபவர்கள் வரை பல வகையறாக்கள் முளைத்து விடுகிறார்கள்.
            எவ்வளவோ விஞ்ஞானம் வந்து விட்டது என்கிறார்கள், தொழில்நுட்பத்தில் நம்மை யாரும் அசைக்க முடியாது என்கிறார்கள். வயிறுப் பிதுங்கியது போல் கூட்டமாகச் செல்லும் பேருந்தைக் குறைக்க முடிகிறதா?
            உட்கார்ந்து செல்லும் பேருந்து பயணங்களைப் பெரும்பாலும் கனவில் மட்டுந்தான் காண முடிகிறது. பெரும்பாலானப் பயணங்கள் நின்று கொண்டுதான் அதுவும் தாள முடியாத நெரிசலில் மீள முடியாத நெருக்கடிகளோடுதான் நிகழ்கின்றன. இப்படித்தான் பெண்களின் மேல் உரசுவதற்கும், அவர்களைச் சீண்டுவதற்கும் இந்த நாட்டில் களம் அமைத்துக் கொடுக்கிறார்கள் வளர்ச்சி, வளர்ச்சி என்று வாய் கிழிய கத்துபவர்கள்.
            அப்படிப்பட்ட ஒரு பேருந்து பயணத்தில்தான் ஒரு பெண் தன் இடையில் கை வைத்து தேய்த்த ஒரு ஆண்மகனை(!) போட்டுப் பொளந்து கட்டினாள். அவள் அடித்த அடியின் சத்தம் நடத்துனரின் விசிலை விட பலமாக பேருந்து முழுவதும் கேட்டது. ஓட்டுநரோ எதுவும் நடக்காதது போல வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட கடமை உணர்ச்சி குறையாத ஓட்டுநர்களால்தான் தமிழ்நாட்டின் பயணங்கள் தடை படாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
            கடைசியில் சுற்றி இருந்தவர்கள் சமாதானப்படுத்தி, நடத்துநரும் தன் பங்குக்கு நிலைமையைச் சகஜமாக்கி அந்த ஆண் மகனைப் பின் இருக்கைப் பகுதிக்கு கொண்டு வந்து அமரச் செய்து இயல்பானப் பேருந்து பயணத்தைத் தொடரச் செய்தார்கள்.
            யாருக்கும் பேருந்தைக் காவல் நிலையத்துக்கு விட வேண்டும் என்று மருந்துக்குக் கூட தோன்றவில்லை. காவல் நிலையம் என்றால் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கால தாமதம் ஆகி விட்டால்... என்ன செய்வது? அந்தப் பெண் அந்த ஆண் மகனை அடிக்கும் போதே எல்லாவற்றையும் யோசித்து வைத்திருந்திருப்பார்கள் போல. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல மெளனமாக அதைப் பற்றிப் பேசுவதைக் கூட வெகு கவனமாகத் தவிர்த்தார்கள். அதே பேருந்து பழுதுபட்டு நின்று விட்டால் அரை மணி நேரம் என்ன இரண்டு மணி நேரம் வரை அப்படியே நிற்பார்கள்.
            கடைசி இருக்கையில் அமர வைக்கப்பட்ட நம் ஆண்மகனோ மாப்பிள்ளை போல ஜம்மென்று அமர்ந்த படி மிலுக்காக பயணித்துக் கொண்டிருந்தான்.
            இது நமது பேருந்துப் பயணங்களின் பாரம்பரிய குல வழக்க முறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

*****

முளை

முளை
பத்து கிராமத்து வயல்களைத்
தின்று செரித்த
நகரத்துப் ப்ளாட்டில்
புல் பூண்டு கூட
முளைக்கவில்லை.

*****

ஜன்னலைத் திறக்காதே! கொசு வந்து விடும்!

ஜன்னலைத் திறக்காதே! கொசு வந்து விடும்!
            நகர்ப்புறத்தில் இருக்கும் வீடுகளுக்குச் செல்லும் போது கோழிப் பெட்டிகளின் நினைவு வருகிறது.
            2400 க்குப் போடப்பட்ட ப்ளாட்டுகள் எனும் வீட்டு மனைகள் 1800 க்குக் குறைந்து, அப்புறம் 1000 க்குச் சுருங்கி, பின் அதுவும் 600 க்கும் 400 க்கும் காய்ந்துப் இன்னும் நன்றாகக் காய்ந்து போன வற்றல் போல மேலும் சுருங்கிக் கொண்டு இருக்கிறது.
            நகர்ப்புறத்தின் ஒரு வீட்டிற்குச் சென்ற போது ஜன்னலைத் திறக்க வேண்டும் போலிருந்தது. வெகு சாதாரணமாக "கொஞ்சம் ஜன்னலைத்திறந்து விடுங்களேன். காற்று வரட்டும்!" என்று சொல்லி விட்டேன்.
            "அதுக்கு எதுக்கு ஜன்னலைத் திறக்கணும். பேனைப் போட்டால் காற்று வரப் போகிறது. ஜன்னலைத் திறந்தால் கொசுதான் வரும்!" என்று பதற்றமாகி விட்டார்கள் வீட்டுக்காரர்கள்.
            "டவுன்ல களவு, கொள்ளை எல்லாம் அதிகமாயிடுச்சு! அதனாலயும் பெரும்பாலும் ஜன்னலைத் திறக்கிறதில்ல. அதுவும் இல்லாமல் நீங்க ஜன்னலைத் திறந்தா பக்கத்து வீட்டு சுவர் தெரியும். இல்லேன்னா காம்பெளண்ட்தான் தெரியும்!" என்று கூடுதல் விளக்கத்தையும் தந்தார்கள்.
            அவர்கள் ஜன்னல் இல்லாமல் கூட வீடு கட்டியிருக்கலாம். வருங்காலத்தில் அதைத்தான் முயன்று பார்க்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

*****

பசி கொண்ட நகரங்கள்

சி கொண்ட நகரங்கள்
நகரங்கள்
கிராமங்களை விற்றுத் தின்றன
ஒவ்வொரு வயலாக
விற்கப்படும் போது
நகரம் ப்ளாட்டுகளாக விரிந்தது.
ஒரு கட்டத்தில்
அந்த நகரம் கிராமம் வரை
விரிந்த போது
நகரமான கிராமம்
இன்னொரு சுற்றுவட்ட கிராமத்தை
விழுங்கத் தொடங்கியது
நகரமாவதற்கான
அகோரப் பசியோடு.

*****

இருவரின் அதிகபட்ச தனிநபர்க் கடன் = 0

இருவரின் அதிகபட்ச தனிநபர்க் கடன் = 0
            கணவனும் மனைவியும் பணிக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. தங்களது வருமானத்தில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் வருமானத்துக்கும் இடம் விற்கும் விலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது.
            வங்கிக் கடன் வாங்கியாது ஒரு இடம் வாங்க வேண்டும் என்று முயல்கிறார்கள். கணவனின் வருமானத்தைப் பார்த்து அதிகபட்சமாக ஆறு லட்சம் தனிநபர்க் கடன் வழங்க இயலும் என்கிறது வங்கி. மனைவியின் வருமானத்திற்கு அதிகபட்சமாக ஐந்து லட்சம் தனிநபர்க் கடன் வழங்க இயலும் என்கிறது. கூட்டிப் பார்த்தால் பதினோரு லட்சம் அதிகபட்ச சடன் வாங்க இயலும்.
            பதினோரு லட்சக் கடனுக்கு அவர்கள் ஏழு ஆண்டுகள் தவணை கட்ட வேண்டும். ப்ளாட்டுகள் எனும் வீட்டுமனைகள் விற்கும் இடங்களில் அவர்கள் அலைந்து பார்க்கிறார்கள்.
            ஆயிரத்து எண்ணூறு சதுர அடியில் ஒரு இடம் வாங்குவதற்கு எட்டு முதல் பத்து லட்சம் வரை ஆகும் என்கிறார்கள். அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இப்போது வாங்கிய தனிநபர்க் கடனுக்கு இடத்தை வாங்குவது. அடுத்து அந்தக் கடன் அடைந்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்த பின் மீண்டும் ஒரு கடன் பெற்று வீட்டைக் கட்டுவது என்று.
            இப்படியாக அவர்களின் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போல் வீட்டுக்கு இடம் வாங்கி வீடு கட்டுவதிலே கழிகிறது. அதற்கிடையில் குழந்தைகளைப் படிக்க வைத்தல், உறவுகளின் நல்லது கெட்டதுக்கான செலவுகள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கானச் செலவுகள், இத்யாதிகள் என்று எவ்வளவோ இருக்கிறது.
            நல்ல பணியில் இருக்கும் இருவரும் பணியாற்றும் ஒரு குடும்பத்தினருக்கு இப்படி ஒரு சூழ்நிலை இருக்குமானால் ஒருவர் மட்டும் பணியாற்றி வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கு வீடு கட்டும் திட்டம் இன்னும் எவ்வளவு சிரமமாக இருக்கும்?
            இது என்ன வகைப் பொருளாதாரம் என்றுதான் புரியவில்லை. இந்த நாட்டில் உள்ள மக்கள் வீடு இல்லாமல் அல்லது வீட்டுக்காகக் காலம் முழுவதும் கனவுகளோடு கடனோடு வாழ்வதைத்தான் இந்தப் பொருளாதாரம் விரும்புகிறதா?
            அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டைக் கட்டுவதற்கு இவ்வளவு போராட வேண்டும் என்றால் பிற தேவைகள் குறித்து நினைத்தே பார்க்கக் கூடாது என்பதைத்தான் இந்தப் பொருளாதாரம் நிலைநாட்ட முனைகிறதா?

*****

26 Sept 2017

வீட்டுக்கனவில் காசு பண்ணும் மாபியாக்கள்

வீட்டுக்கனவில் காசு பண்ணும் மாபியாக்கள்
            முன்பெல்லாம் மாபியாக்கள் யார் என்பதைப் பிரித்து அடையாளம் காண முடிந்தது. இப்பொதெல்லாம் அந்த அடையாளங்கள் தொலைந்து விட்டன. அன்றாடம் பழகிக் கொண்டிருக்கும் நம் நண்பர் கூட நமக்கு மாபியாகவா இருக்கலாம்.
            நிதிச் சேவைகள் என்ற போர்வையில் இன்று யார் வேண்டுமானாலும் ஓர் ஏஜென்டாகி நமக்கு எதிரான மாபியாவாக உருவெடுக்கலாம்.
            நம்முடைய வீட்டுக் கனவுதான் நிதிச் சேவை மாபியாக்களின் இலக்கு. உங்களுக்கு ‍அதிகபட்சமாக வழங்கப்படும் தனிநபர்க் கடனை விட நீங்கள் வாங்க இருக்கும் வீட்டு மனை எனும் பிளாட்டின் விலை இருக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
            ஒரு மனிதரின் அதிகபட்ச தனிநபர்க் கடன் அளவை விட இந்த நாட்டில் ப்ளாட்டகளின் விலை எப்படி உயர்கிறது? அப்போதுதான் அவனை இன்னும் அதிக கடனாளியாக்கி உறிஞ்சிப் பிழியலாம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இப்படி ஒரு சூழ்நிலை இங்கு நீடிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
            பிறகு வீடு கட்டக் கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க மாதாந்திரத் தவணைத் திட்டம் என்று காலில் விழாத குறையாக வாங்க வைத்து பின் கழுத்தை இறுக்காகத் குறையாக ஒவ்வொன்றாக நம்மிடமிருந்து தூக்குவார்கள். குறுக்கே நின்றால் ஆளையும் தூக்குவார்கள்.
            கழுத்து மட்டும் கடன் வாங்கித்தான் ஒரு சராசரி மனிதன் இடம் வாங்கி, பின் தலைக்கு மேல் கடன் வாங்கித்தான் வீடு கட்ட முடியும் என்பது ஒரு நல்ல நாட்டிற்கு உரிய இலக்கணமாகாது.
            வீடு என்பது வாழ்வதற்கு! கடனால் வீழ்வதற்கு அல்லவே!
            நாமெல்லாம் வீடு கட்ட கடன் வாங்கி நிதிச்சேவை மாபியாக்களின் அடிமைகளாக சேவகம் செய்ய பணிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதாக மாறிக் கொண்டிருக்கும் நம் சமகால நடுத்தர வர்க்க வாழ்வு தூண்டில் புழுவுக்கு ஆசைப்படும் மீனை விட மோசமானது என்பதையன்றி வேறெப்படி இதைச் சொல்வது?

*****

நாயகன்

நாயகன்
மூன்று அடிகள் வாங்கி
சட்டை கிழிந்து அல்லது
உடம்பில் ரத்தம் வழிந்து
எதிர்த்தவர்களைத் தூக்கிப்
பந்தாடுவான் நாயகன்.
திரைப்படத்துக்குப் பதில்
செய்திச்சேனல் ஓடிக் கொண்டிருந்த
அன்றொரு நாளில்
அப்படியொரு காட்சி ஓடிக் கொண்டிருக்க
யாரிவர் என்ற கேள்விக்கு
சபை நாயகர் என்ற பதில் கிடைக்க
ஓடிக் கொண்டிருந்தன
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள்.

*****

முயற்சி - சில கருப்பொருள்கள்

முயற்சி - சில கருப்பொருள்கள்
            விருப்பமானதைச் செய்யும் போது சலிப்புத் தட்டாது. சோர்வு தோன்றாது. இதை ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியும் எழாது.
            விரும்பாத ஒன்றைச் செய்யும் போது நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கும். விரும்பா ஒன்றை நீண்ட காலம் செய்ய முடியாது. அப்படி நீண்ட காலம் செய்ய முயன்றால் அதுவே மனச்சோர்வுக்குக் காரணமாகி, மனப்பிறழ்வுக்கும் வித்திட்டு விடும்.
            விரும்பாத ஒன்றை விரும்ப வைக்கிறேன் பார் என்ற பெயரில் அதீத முயற்சியில் ஈடுபட்டு தன்னைத் தானே வெறுக்கும் நிலைக்குச் சென்று விடக் கூடாது. விரும்பா ஒன்றை விருப்பம் இல்லை என்று விட்டு விடுவது கூட நல்லதே.
            எல்லா முயற்சிகளும் நமக்காகத்தான். அந்த முயற்சிகளுக்காக நாம் அல்ல. அதற்காக நம்மைப் பலியிடுவது என்ற நிலைக்குச் சென்று விடுவது அல்ல.
            எந்த முயற்சியாக இருந்தாலும் மனம் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த முயற்சி மனதுக்குப் பிடித்தம் இல்லை என்றுதான் பொருள். அது போன்ற முயற்சிகளைத் தொடராமல் இருப்பது நல்லது.

*****

செஞ்சிடுங்க...

செஞ்சிடுங்க...
அறுபத்தாறு கோடி ஊழல்
ஆயிரம் கோடி ஊழல்
வருமானத்து அதிகமான சொத்து
அதிகார துஷ்பிரயோகம்
இதெல்லாம் குற்றம் என்று
யாரும் பார்ப்பதில்லை
அதுவுமன்றி,
இவைகளைக் குற்றமென்று நிரூபிக்க
நான்கு நீதிமன்றங்கள் கடந்தாக வேண்டும்
இப்படி அவர்கள் செய்வதையெல்லாம்
வேண்டா வெறுப்பாகவேனும்
விரும்பச் செய்திடவே
படைக்கப்பட்டுள்ளோம் மக்களென.
மதுவாங்கட்டையில் அமர்ந்து
தன் வாரிசுகளுக்கெல்லாம்
லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிய
முத்துக்கண்ணு சொல்லும் போது
வேடிக்கையாக இருக்கும்,
"தேர்தல் நேரத்துல
ஆயிரம், ஐநூறுன்னு கொடுக்கணும்னா
அவன்தான் எங்கப் போவான்?
அடிக்கணும்! இன்னும் அடிக்கணும்!
அப்பத்தான்
ரெண்டாயிரம், ஐயாயிரம்னு
கைநிறைய கொடுப்பானுங்க"

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...