28 Feb 2019

வைத்தியசாலை




செய்யு - 10
            ரெண்டாம் நம்பர் பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டே சென்றது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு படிக்கட்டுப் பக்கம் வைத்து நசுக்கியது போல் அமுங்கியவாறே அது இருந்தது. படிக்கட்டுப் பக்கம் சமயங்களில் டயர் உரசி தீய்ந்த வாடை வந்தது.
            ஒவ்வொரு காலைப் பயணத்தின் போதும் இந்தப் பஸ் முழுசாய் ஊர் போய் சேருமா? என்ற அவநம்பிக்கை ஏறும் ஒவ்வொருக்கும் இருக்கும். அந்தப் பஸ்தான் அன்றிலிருந்து இன்று வரை முழுசாய் ஊர்ப் போய் சேர்ந்து பயணிகளைச் சேர்த்துக் கொண்டு இருக்கிறது.
            மிதமான வேகத்தில் பஸ் சென்றால் திட்டையிலிருந்து ஒரு மணி நேரத்தில் மன்னார்குடி சென்று விடும். இந்த டிரிப் மட்டும் அப்படிச் செல்ல முடியாது. ஒன்றரை மணி நேரம் ஆகும். கூட்டம் மிகுதியால் அவ்வளவு மெதுவாகச் செல்லும்.
            பஸ் லெட்சுமாங்குடியைத் தாண்டியதும் டிரைவர் எந்த ஸ்டாப்பிங்கிலும் நிறுத்தவில்லை. அந்த அளவுக்குத் தாள முடியாத கூட்டத்தில் பஸ் பிதுங்கி வழிந்தது. ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கைநீட்டி பஸ்ஸை நிறுத்தப் பார்த்தார்கள். பஸ் நிறுத்தாமல் போன போது பஸ்ஸின் ஊடே ஓடி வந்து அதன் ஓரங்களில் தட்டினார்கள்.
            ஒருவழியாக பஸ் வைத்தியசாலையை அடைந்த போது மணி ஒன்பதரைக்கு மேல் இருக்கும். பஸ்ஸிருந்து இறங்குவதற்கே படாத பாடு பட வேண்டியதாக இருந்தது.
            இறங்கியதும் "என்னடியம்மா இந்தக் கூட்டத்து வர்றதுக்கு புள்ள அழுதாலும் அழுவட்டும்னு வூட்டுலயே வெச்சுக்கலாம்டி!"  என்று சலித்துக் கொண்டார் அதிராம்பட்டினத்து ஆத்தா.
            பஸ்ஸிருந்து இறங்கியவுடனே ஆஸ்பத்திரி வாசலில் கால் வைத்து விடலாம். அந்த ஆஸ்பத்திரிதான் பஸ் ஸ்டாப்பிங். ரோட்டை ஒட்டி காம்பெளண்ட். காம்பெளண்டுக்கு வெளியே பலூன் விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள் நின்று கொண்டிருப்பார்கள். காம்பெளண்டைக் கடந்தால் பெரிய வராண்டா. உள்ளே பெரிய ஹால். மறுபடியும் உள்ளே ஒரு ஹால். ஹாலின் இடப்புற மூலையில் இருக்கும் கதவைத் திறந்தால் டாக்டர் ரூம். கதவுக்கு வெளியேயும் உள்ளேயும் நர்ஸ்கள் நின்று கொண்டிருப்பார்கள்.
            செய்யு இன்னும் அழுது கொண்டிருந்தாள்.
            "நீ போய் டோக்கன் போடுடா!" என்று அம்மா சொன்னதும் விகடு அவர்களுக்கு முன் ஓடிப் போய் டோக்கன் போட்டான்.
            "நம்பர் நூத்தி ஏழும்மா!" என்றான்.
            "இப்ப எத்தனாம் நம்பர் போய்ட்டு இருக்கு?"
            "இருபத்து ஒம்போது!"
            அம்மாவிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்தது.
            ஆஸ்பத்திரி முழுவதும் குழந்தைகளும் அம்மாக்களுமாக நிறைந்திருந்தார்கள். சிலர் குழந்தையை மடியில் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். சிலர் குழந்தையை மார்போடு அணைத்தவாறே நின்று கொண்டிருந்தார்கள். சிலர் குழந்தையை தூக்கிய வண்ணம் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரி முழுவதும் குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
            "டாக்டர எப்ப பாத்து எப்படா கிளம்புறது? இந்த பஸ்ஸூ சீக்கிரமா வந்திருந்தாலாவது அம்பது நம்பருக்குள்ள டோக்கன் போட்டுருக்கலாம். வண்டியப் போட்டு இன்னா உருட்டு உருட்ரானுவோ! டாக்டரு பாக்குறதுக்கு ரெண்டு மணிக்கு மேல ஆகப் போகுது பாரு!" அம்மாவுக்கு எரிச்சலாக இருந்தது.
            "என்னடியம்மா பண்றது? வந்தது வந்துட்டோம்! ஆனா இந்த பஸ்ஸூல இவ்வளவு கூட்டம் ஆகாதுடியம்மா! உள்ள வெச்சு நசுக்கியே உசுர எடுத்துடுவானுவோ போலருக்கே!" ஆத்தாவுக்கும் எரிச்சலாக இருந்தது.
            "காலையிலேயும் எதுவும் சரியா சாப்புடல!" கடையில போய் ஏதாச்சும் வாங்கிட்டு வர்றீயா?" என்று அம்மா பர்ஸிலிருந்து பத்து ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினார்.
            விகடு ஓடினான்.
            கையில் ஒரு தட்டு. அதில் மூன்று டபரா செட்டில் டீ. மூன்று வடையோடு வந்து நின்றான் விகடு.
            "பாக்கி வாங்கியாந்தியாடா?" என்றார் அம்மா.
            "டபரா செட்டைக் கொண்டாந்து கொடுத்துட்டு வாங்கிக்கச் சொன்னாங்கம்மா! பாப்பாவுக்கு டீ குடிக்குமாமா?" என்றான் விகடு.
            அம்மாவுக்குச் சிரிப்பாக வந்தது. "வயித்து வலியாத்தான் இருக்கும். அதாலதான் அழுதுங்றாங்க. இதுல டீய குடுத்தா அவ்ளோதான்!"
            மணி பனிரெண்டைக் கடந்தும் டோக்கன் எழுபது வரைதான் போயிருந்தது.
            சந்திரமோகன் டாக்டரும் வேகமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். மன்னார்குடிக்கு குழந்தைகள் வைத்தியத்தில் அவர் ஒரு பிரபலமான டாக்டர். வேதாரண்யத்திலிருந்தெல்லாம் இங்கு வந்து பார்ப்பவர்கள் இருந்தார்கள். தஞ்சாவூர் எவ்வளவு பெரிய ஊர்? அங்கில்லாத டாக்டர்களா? அங்கிருந்தும் வந்து அவரிடம் வந்துப் பார்த்தார்கள்.
            டாக்டர் திடீரென்று எழுந்து வெளியே வந்தார். விகடுவைப் பார்த்ததும் அவன் கன்னத்தைக் கிள்ளினார். "மறுபடியும் கோல்டா?" என்றார். "எனக்கில்லே பாப்பாவுக்கு!" என்றான் விகடு. "ஓ! உனக்கு தங்கச்சி பாப்பா வந்துடுச்சா!" என்று விகடுவின் கன்னத்தைத் தட்டியபடியே வேகமாகச் சென்றார்.
            காத்திருந்த கூட்டத்திலிருந்து ஒருவர் சத்தம் போட்டார். "கூட்டம் எவ்ளோ இருக்கு. இப்போ எந்திரிச்சு எங்க போறாரு இந்த டாக்டரு?" சுற்றியிருந்த நர்ஸ்கள் ஓடி வந்து அவரைச் சத்தம் போட்டார்கள், "டாக்டரை ஒன் பாத்ரூம் கூட போகக் கூடாதுங்றீங்களா?"  சத்தம் போட்டவருக்கு என்னவோ போலாகி விட்டது. தலையைக் குனிந்து கொண்டார்.
            கூட்டத்திலிருந்தவர்கள் அவ்வபோது சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.
            "இன்னிக்க வர வேணாம். நாளிக்கு வரலாமுன்னு சொன்னேன்ல!" என்று அதில் ஒருவர் அவரது மனைவியைத் திட்டுவது தெளிவாகக் கேட்டது விகடுவுக்கு.
            "அம்மா! நாமளும் நாளைக்கி வந்திருக்கலாம்ல!" என்றான் விகடு.
            "ஏன்டா நாமலே பத்து நாளா யோசிச்சுதான்டா இன்னிக்கு வந்திருக்கிறோம்!" என்றார் அம்மா.
            "டாக்டர் பாத்ததுக்கு அப்புறம் பாப்பா அழுவாதுல்லம்மா!"
            "ம்ஹூம்!"
            "டோக்கன் நூத்தியேழு!" என்று குரல் வந்ததும் விகடுவுக்கு சந்தோசமாக இருந்தது.
            "ம்மா! நம்ம நம்பரும்மா!" என்றபடி எல்லாரையும் டாக்டர் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
            "ம்! என்ன பண்ணுது?" என்றார் டாக்டர்.
            "எப்ப பாத்தாலும் அழுதுகிட்டே இருக்குது டாக்டர்!" என்றான் விகடு.
            "நீ சொல்லக் கூடாது! நீங்க சொல்லுங்கம்மா!" என்றார் அம்மாவைப் பார்த்து.
            "அவன் சொல்றதுதான் டாக்டர்! ராவைக்கும் அழுது. பகலுக்கும் அழுது. நாங்களும் கைமருந்தா எவ்ளோ கொடுத்துப் பார்த்துட்டோம் டாக்டர்!"
            டாக்டர் பாப்பாவை உற்றுப் பார்த்தார். வயிற்றில் கைவைத்து லேசாக அழுத்திப் பார்த்தார். செய்யு வீறிட்டு அழுதாள்.
            "வெளிக்கில்லாம் நல்லா போகுதா?"
            "ம்! போகுது டாக்டர்!"
            "உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு? பீவர், கோல்ட், வயித்துவலி இந்த மாதிரி ஏதாவது?"
            "அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க டாக்டர்!"
            "வேற... வாந்தி, வயித்து மந்தம், பசி இல்லாம இருக்குறது இந்த மாதிரி..."
            "அப்படில்லாம் ஏதுமில்லீங்க டாக்டர்!"
            "உங்களுக்கு ஒரு ஊசிப் போடச் சொல்றேன். போட்டுக்குங்க. பாப்பாவுக்கு மருந்து எழுதித் தர்றேன். சொட்டு மருந்து மாதிரி இருக்கும். அதுலேயே பில்லர் இருக்கும். பால் கொடுத்து முடிச்சதும் கொடுக்கணும். ரொம்ப அழுதாலும் கொடுக்கணும் சரியா?."
            "எனக்கு ஒடம்பு நல்லாத்தான் இருக்கு டாக்டர். பாப்பாவுக்குத்தான் ஒடம்பு எதோ முடியல." அம்மாவின் முகம் பயத்தால் வெளிறிப் போயிருந்தது.
            "பாப்பாவுக்காகத்தான் உங்களுக்குப் போடச் சொல்றேன். பாப்பா உங்ககிட்டேயிருந்துதானே பால் குடிக்குது!"
            "ஊசிதான் போடணுமா? மாத்திரையா கொடுங்களேன். சாப்பிட்டுக்கிறேன்!"
            "ம்ஹூம்! ஊசி கண்டிப்பா போட்டுத்தான் ஆகணும்!" டாக்டர் நர்ஸைப் பார்த்தார்.
            அதற்கு மேல் மறுக்க வாய்ப்பில்லை என்பது அம்மாவுக்குப் புரிந்து போனது.
            நர்ஸ் அம்மாவை அழைத்துக் கொண்டு பச்சை ஸ்கிரீன் கட்டியிருந்த ஓரத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அம்மா தயங்கித் தயங்கிப் போய்க் கொண்டிருந்தார். விகடுவுக்குச் சிரிப்பாக இருந்தது. அவன் கையிலும், இடுப்பிலும் ஊசி புகாத இடங்களே இல்லை. அவ்வளவு ஊசிகள் போடப்பட்டு இருக்கின்றன. ஆத்தாவும் சிரித்தது, "அநேமா இதான்டா உங்கம்மாவுக்குப் போடுற மொத ஊசி!"
            "நான்லாம் எவ்ளோ ஊசி போட்ருக்கேன். அம்மா எதுக்கு பயப்படுறாங்க?" என்று விகடு சொல்லிக் கொண்டு இருக்கும் போது,             "அய்யோ! ம்ம்மா!" என்ற சத்தத்தோடு ஸ்கிரீனைத் தள்ளிக் கொண்டு கீழே விழுந்தார் நர்ஸ்.
            செய்யுவின் அழுகை நின்றிருந்தது. டாக்டர் எழுந்து விட்டார்.
            பக்கத்தில் இருந்த இரண்டு நர்ஸ்கள் ஓடி வந்து அவரைத் தூக்கினார்கள்.
            "நல்லா இடுப்புல உதைச்சிட்டாங்கடி!" என்றார் கீழே விழுந்த அந்த நர்ஸ்.
*****

ஆரோக்கியக் கவிதை


பெரு வியாதிகளின் மருத்துவச்சி
தெருவோரத்து தோசை விற்கும் பாட்டி
முதியோர் இல்லத்தில் இருக்கிறாளோ
கோயில் முன் பிச்சை ஏந்துகிறாளோ
அனாதையாகி மாநகரில் அலைகிறாளோ
குழந்தைகளைக் காப்பகங்களில் விட்டோர்க்கு
கட்டுச்சோறு கொண்டு செல்லாதோர்க்கு
நேற்று வைத்த மீன் குழம்பில்
பழைய சோறு தின்று அறியாதோர்க்கு
பாஸ்ட் புட்டின் பாலிதீன் உறையில்
பரோட்டாவின் சால்னாவில் நீந்துவோர்க்கு
காசற்றவரின் பசி தீர்த்த
தோசையின் ருசி தெரியாது
தள்ளாடி நடை நடக்கும்
நடுங்கும் கரங்களில் கரண்டி பிடித்து
வட்டம் சிதையாமல் வடித்தெடுக்கும்
அவளை அழைத்து வந்து
ஒரு தோசைச் சுடச் சொல்லிச் சாப்பிடுங்கள்
தின்றால் தீரும் சர்க்கரை வியாதியையும்
உணர்ச்சி வசப்பட்டால் குன்றும் ரத்தக் கொதிப்பையும்
விக்கித்தால் நீங்கும் மாரடைப்பையும்
தின்னத் தின்ன அழியும் கொழுப்பையும்
விசித்திரமாய் சந்திக்கலாம்
பெரு வியாதிகளின் மருத்துவச்சி அவள்
*****

27 Feb 2019

நிற்காத அழுகை



செய்யு - 9
            திட்டைக்கு வடக்கே ஓகையூர். வடவாதி வந்து நான்கு கிலோ மீட்டர் மண் சாலையில் பயணிக்க வேண்டும். கோடைக்காலங்களில் பயணிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. மழைக்காலங்களில் அந்தச் சாலையில் அடியெடுத்து வைக்க முடியாது. அப்படி ஒரு வித்தியாசமான களிமண்ணை ஓகையூருக்குச் செல்லும் அந்த சாலையில்தான் பார்க்க முடியும். காலை வைத்தால் காலில் பூட்ஸ் அணிந்தது போல அப்படியே அப்பிக் கொண்டு வரும்.
            சைக்கிளில் சென்றால் சக்கரம் முழுவதும் களிமண் அப்பிக் கொள்ளும். பிரேக் கட்டை இருக்கும் இடம் தெரியாது. கம்பிகள் முழுவதும் களிமண் பிசிறு பிசிறாக ஒட்டிக் கொண்டிருக்கும். அது மாதிரியான காலங்களில் ஓகைக்குச் சைக்கிளில் சென்று வந்தால் சைக்கிளை நிச்சயம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கழுவ வேண்டும். அப்போதுதான் சைக்கிள் சைக்கிளாக இருக்கும். சரியாக கழுவாமல் விட்டு விட்டால் ரிம், போக்ஸ் கம்பிகள் எல்லாம் பழுப்புப் பழுப்பாய் துரு பிடித்துக் கொள்ளும்.
            செய்யு பிறந்து மூன்று மாதங்களில் மழை பிடித்துக் கொண்டது. மூன்று மாதங்களாக அவள் இரவும் பகலுமாக அழுது கொண்டிருந்தாள். உரைமருந்து அரைத்துக் கொடுப்பது, ஓமதண்ணி கொடுப்பது என்று கைவைத்தியமாய் நிறைய செய்து பார்த்தார்கள். இதற்கென ஊரில் இருக்கும் பெரும்பாலான இலைகளை அரைத்துப் பார்த்து ஊத்தியாயிற்று. அழுகை நின்றபாடில்லை. தம்மேந்தி ஆத்தாவும், முல்லேம்பா ஆத்தாவும் மூன்று மாதம் வரை இப்படி அழும் குழந்தைகள் அப்புறம் அழாது என்றார்கள். அவர்களின் காலக் கணக்கை மீறி செய்யு அழுது கொண்டிருந்தாள்.
            டாக்டரிடம் அழைத்துப் போய் பார்க்கலாம் என்று வீட்டில் முடிவாயிற்று. டாக்டரிடம் அழைத்துச் செல்வது என்றால் திட்டையிலிருந்து மன்னார்குடி செல்லலாம் அல்லது திருவாரூர் செல்லலாம். திட்டையிலிருந்த குடும்பங்களில் சில மன்னார்குடி போய் வைத்தியம் பார்ப்பார்கள். சில குடும்பங்கள் திருவாரூர் போய் வைத்தியம் பார்ப்பார்கள். அவர்களிடம் இது குறித்த ஒரு நம்பிக்கை இருந்தது. மன்னார்குடி வைத்தியத்துக்குச் செல்லும் குடும்பங்களைக் கேட்டால், எங்களுக்கு மன்னார்குடி போய் வைத்தியம் பார்த்தால்தான் குணமாகும் என்பார்கள். திருவாரூர் வைத்தியத்துக்குச் செல்லும் குடும்பங்களைக் கேட்டால் எங்களுக்கு திருவாரூர் போய் வைத்தியம் பார்த்தால்தான் குணமாகும் என்பார்கள்.
            விகடுவின் குடும்பத்தைப் பொருத்த வரையில் மன்னார்குடி மற்றும் திருவாரூர் போய் வைத்தியம் பார்க்கும் முறையைத் தொடங்கி வைத்தவன் விகடுதான். அவன் அப்பாவோ, அம்மாவோ டாக்டரிடம் போய் வைத்தியம் பார்த்ததில்லை. அவர்களுக்கு கைவைத்தியத்திலேயே எல்லாம் குணமாகி விடும்.
            விகடுவைப் பிடித்து ஆட்டிப் படைத்த சளிக்காக அவர்கள் மன்னார்குடி, திருவாரூர் என இரண்டு நகரத்துக்கும் சென்று பார்த்தார்கள். விகடுவுக்கு திருவாரூர் செட்டாகவில்லை. மன்னார்குடி கொஞ்சம் பரவாயில்லை ரகமாக இருந்தது. அதனால் விகடுவின் குடும்பம் மன்னார்குடி போய் வைத்தியம் பார்க்கும் வகையறாவைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள்.
            தீராத அழுகையால் வீட்டை ரணகளப்படுத்திக் கொண்டிருந்த செய்யுவுக்காக மன்னார்குடி டாக்டரைப் போய் பார்ப்பது என்று வீட்டில் முடிவானது.
            திட்டையிலிருந்து மன்னார்குடி போவதற்கு ரெண்டாம் நம்பர், பதிமூணாம் நம்பர் என்று ரெண்டு பஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. ரெண்டாம் நம்பரில் போவதென்றால் காலை ஏழரைக்கு முன்பே கிளம்பி கேணிக்கரை பஸ் ஸ்டாப்பில் நிற்க வேண்டும். பதிமூணாம் நம்பர் என்றால் ஒன்பதே காலுக்கு முன்பே கிளம்பி பஸ் ஸ்டாப்பில் நிற்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே போய் நின்று கொள்வது மிக மிக மிக நல்லது. சில நேரங்களில் பஸ் முன்னரே போய் பஸ்ஸைத் தவற விட்ட அனுபவங்கள் திட்டையைச் சேர்ந்தவர்களுக்கு நிறையவே உண்டு.
            இதனால் ஏழரை பஸ் என்றால் ஏழு மணிக்கே போய் விடுவார்கள். ஒன்பதே கால் பஸ் என்றால் எட்டே முக்காலுக்கே போய் விடுவார்கள்.
            மன்னார்குடி டாக்டர் என்றால் சீக்கிரமே போய் விட வேண்டும். போய் டோக்கன் போட வேண்டும். ஏழரை பஸ்ஸூக்குப் போய் டோக்கன் போட்டால் டாக்டரைப் பார்ப்பதற்கு எப்படியும் பனிரெண்டு மணிக்கு மேலாகி விடும். ஒன்பதே கால் பஸ்ஸூக்குப் போனால் ரெண்டு மணியாகி விடும். அப்புறம் ஊர் திரும்ப வேண்டும். காலையில் பொழுதோடு கிளம்பினால் பொழுதோடு ஊர் திரும்ப வசதியாக இருக்கும். இதெல்லாம் விகடுவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் உண்டான அனுபவங்கள்.
            காலையில் ஏழரைக்கு கிளம்புவதே உசிதமானது என்பதால் ஏழு மணிக்கே கேணிக்கரை ஸ்டாப்பிங்கில் போய் நின்றார்கள். அதிராம்பட்டினம் ஆத்தாவும் துணைக்கு வந்தது. விகடுதான் இந்த மருத்துவப் பயணத்தின் வழிகாட்டி. அடிக்கடி மன்னார்குடி ஆஸ்பத்திரி போய் அவனுக்கு அலுத்துப் போயிருந்தது. அந்த அளவுக்கு ஆஸ்பத்திரிக்கும் அவனுக்குமான பிரயாணங்கள் இருந்தன. ஆஸ்பத்திரியில் இருந்த எல்லாரையும் விகடுவுக்குத் தெரியும். சந்திரமோகன் டாக்டருக்கு விகடுவை நன்றாகவே தெரியும். மேலும் விகடுவுக்கு எந்த ஸ்டாப்பிங்கில் இறங்க வேண்டும், எந்தக் கடையில் டீ குடிக்க வேண்டும், எந்த மருந்து கடையில் மருந்து வாங்க வேண்டும் என்ற எல்லா விவரங்களும் அத்துபடியாகி இருந்தன.
            அதிராம்பட்டினத்து ஆத்தா நான்காக மடிக்கப்பட்ட பெரிய தேங்காய்ப்பூ துண்டில் செய்யுவை வைத்துத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டார். அம்மா பையை எடுத்துக் கொண்டார். விகடுவின் கால்சட்டையில் போவதற்கும் வருவதற்குமான  பஸ் டிக்கெட்டுக்கான கட்டணம் ரெண்டு பொட்டலங்களாக கட்டப்பட்டு பத்திரமாக இருந்தன. விகடு அடிக்கடி கால்சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
            டிக்கெட் எடுக்கும் போதே வைத்தியசாலை அல்லது சந்திரமோகன் ஆஸ்பத்திரி என்று எப்படி சொன்னாலும் கண்டக்டர் சரியாக இறக்கி விடுவார்.
            ஏழு மணிக்கே போய் நின்றாலும் பஸ் வந்த போது எட்டு மணி இருக்கும். பஸ் கூட்டமாக இருந்தது. படியில் தொங்கிக் கொண்டு வந்தவர்கள் இறங்கிக் கொண்டு ஏறுபவர்களுக்கு வழி விட்டார்கள்.  "இந்த பஸ்லயாடி கைக்கொழந்தய தூக்கிகிட்டுப் போவப் போறோம்!" என்று அயர்ந்து போனார் அதிராம்பட்டினத்து ஆத்தா. வடவாதியைத் தாண்டியதும் கூட்டம் இன்னும் ஏறியது. ஏறியவர்கள் எல்லாரும் ஒரு காலில் நின்று கொண்டிருந்தார்கள். விகடு சீட்டுக்கு பக்கத்தில் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு கிட்டதட்ட சீட்டுக்கு இடையில் இருந்த இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவனால ரேண்டு கால்களையும் வைத்துக் கொள்ள முடிந்தது. அம்மாவும் ஆத்தாவும் ஒத்தைக் காலில் நின்று கொண்டிருந்தார்கள். அதுவும் ஆத்தாவுக்கு குழந்தையை வைத்துக் கொண்டு சிரமமாக இருந்தது.
            "கைக்கொழந்தய வெச்சுகிட்டு நிக்குறது சிரமமா இருக்கு! யாராவது கொஞ்சம் எடங் கொடுங்களேன்!" என்று ஆத்தா கேட்டுப் பார்த்தார். யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உட்கார்ந்திருந்தவர்கள் எங்கெங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தனர்.
            அம்மாவும் அங்கிருந்த சிலரிடம் கெஞ்சிப் பார்த்தார். ம்ஹூம்! எதுவும் நடக்கவில்லை.
            ஆனால் தனக்கான இடத்தை செய்யு தானாகவே உருவாக்கிக் கொண்டாள். பஸ் பழையனூரைக் கடந்ததும் அதுவரை நல்ல பிள்ளையாக அமைதியாக இருந்த செய்யு அழ ஆரம்பித்தாள். பேருந்தின் இரைச்சல், பயணிகளின் இரைச்சலைக் கடந்து செய்யுவின் அழுகை ஒலி வீறிட்டு ஒலித்தது. கீச்சுக் குரலில் அந்த அழுகைக் காதைக் கிழிப்பதைப் போலிருந்தது. வீட்டில் கேட்டுக் கேட்டு அந்த அழுகை ஒலி பழகி விட்டதால் விகடு அது பற்றிய பிரக்ஞை இல்லாமல் நின்று கொண்டிருந்தான். பஸ் பிரயாணிகளுக்கு அந்த அழுகை ஒலியைச் சகித்துக் கொள்வது கஷ்டமாக இருந்தது.
            "யாராவது அந்தக் கொழந்‍தைய வாங்கி வெச்சுக்குங்களேன்!" என்று கண்டக்டர் சொல்லும் அளவுக்கு நிலைமை தீவிரமானவுடன் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு வயதான பாட்டியம்மா ஆத்தாவிடமிருந்து செய்யுவை வாங்கி வைத்துக் கொண்டார்.
            அவர் வாங்கி வைத்துக் கொண்டதும் செய்யுவின் அழுகை பன்மடங்கி அதிகமாகி ஒலிக்கத் தொடங்கியது. அவர், "ச்சு... ச்சு... ச்சு" என்று உச் கொட்டி சமாளிக்கப் பார்த்தார். "நல்ல பாப்பல்ல அழக் கூடாதுல்ல. எதுக்கு அழுவறாளாம் எம் மவராசி. பஸ்ஸிலேர்ந்து எறங்குனதும் மிட்டாய் வாங்கித் தர்வேனாம். வளயல் மணியெல்லாம் வாங்கித் தர்வேனாம்!" என்று என்னென்னமோ சொல்லிப் பார்த்தார். அதற்கெல்லாம் அழுகையை நிறுத்துபவளா செய்யு?
            அந்தப் பாட்டியம்மா முடியாமல் எழுந்து கொண்டு அதிராம்பட்டினத்து ஆத்தாவை உட்காரச் சொல்லி ஆத்தாவின் கையில் செய்யுவைக் கொடுத்தார். இனிமேல் அழுகை நின்று விடும் சுற்றியிருந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். அந்த பஸ்ஸில் செய்யுவின் அழுகை நின்று விடும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது விகடு மட்டும்தான்.
            செய்யுவுக்கு யாருடைய எதிர்பார்ப்பும் புரியவில்லை. அவள் அழுது கொண்டே இருந்தாள். கொஞ்சம் அழுகை ஒலியின் அளவை மட்டும் குறைத்துக் கொண்டிருந்தாள்.
            "முன்னாடியே எடம் கொடுத்திருந்தீங்கன்னா கொழந்த இப்படி அழ ஆரம்பிச்சி இருக்காது!" என்றார் அதிராம்பட்டினத்து ஆத்தா.
            இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் நிச்சயமாக ஒன்றை நினைக்கக் கூடும்.
            ஓகையூரைப் பற்றிச் சொல்லி விட்டு மன்னார்குடிக்கு அழைத்துச் செல்கிறானே இந்த விகடு என்று நீங்கள் நினைக்கக் கூடும். நாளையோ அல்லது நாளை மறுநாளோ அங்கே போய்தான் ஆக வேண்டும். வழியை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது சில நேரங்களில் அவசியமாகி விடுகிறது.
*****

தியாகுவின் 'சுவருக்குள் சித்திரங்கள்' - நூல் அறிமுகம்



ஒரு சமூகப் போராளியின் நாட்குறிப்பும் சமூகப் போராளிக்கான கையேடும்
            தேச விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தையும், அழித்தொழிப்புப் போராட்டத்தையும் கையில் எடுத்துப் போராடிய தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு‍ போன்றோர். அவர்கள் எப்படிப்பட்ட ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தார்களோ அதே போன்றதொரு போராட்டத்தை சமூக விடுதலைக்காக சுதந்திர இந்தியாவில் முன்னெடுத்து முயன்று பார்த்தவர்கள் தியாகுவும் அவர்களின் தோழர்களும்.
            மேற்கு வங்க மாநிலத்தில்,
            டார்ஜிலிங் மாவட்டத்தில்,
            நக்சல்பாரி எனும் சிற்றூரில்,
            சாரு மஜூம்தார் தலைமையில் ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலைட்டுகளின் போராட்ட குணம் தியாகுவை ஈர்க்கிறது.
            தியாகுவும் அவர்களின் தோழர்களும் தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்தை முயன்று பார்க்க களம் காண்கிறார்கள்.
            உழைக்கும் மக்களிடமிருந்து உழைப்பையும் உணவையும் பிடுங்கிக் கொண்டு சாணிப்பாலையும் சவுக்கடியையும் தந்த நிலச்சுவான்தார்கள் தியாகுவுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் அழித்தொழிப்பதற்கான இலக்காகிறார்கள்.
            உழைக்கும் மக்களின் வியர்வையை உறிஞ்சியெடுத்து அவர்களைக் கொட்டாங்கச்சியில் தேநீர் பருகச் செய்யும் அவலம் தியாகுவின் தோழர்களின் நெஞ்சில் புரட்சிக் கனலைப் பற்றி எரியச் செய்கிறது.
            கம்யூனிஸத் தோழர்களும் முன்னெடுத்த இப்போராட்டத்தில் தியாகு தம்முடைய பாதை லெனினிய மாவோயிஸப் பாதை என்று மாறுபடுகிறார்.
            என்றாலும்,
            மொத்தத்தில் அவர்களின் வலியப் போராட்டத்துக்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமா?
            பூந்தாழங்குடியில் பக்கிரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
            சிக்கல் பக்கிரி நிலச்சுவான்தார்கள் ஏவி விட்ட குண்டர்களால் கொல்லப்படுகிறார்.
            கேக்கரை ராமச்சந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்.
            காதர் எரியும் நெருப்பில் வீசப்பட்டு கொல்லப்படுகிறார்.
            எழுமுக்காள் பக்கிரியின் மூன்று விரல்கள் துண்டு துண்டாக்கப்படுகிறது.
            இவைகள் எல்லாவற்றையும் விஞ்சும் வகையில்,
            1968 கிறிஸ்துமஸ் நாளில்...
             கீழவெண்மணியில் 44 உயிர்கள் நெருப்புக்கு இரையாகின்றன.
            தியாகுவின் உள்ளமெங்கும் பல குரல்கள் எதிரொலிக்கின்றன.
            "இதுவரை தத்துவஞானிகள் உலகைக் குறித்த விளக்கம் சொல்லியே வந்து இருக்கின்றனர். ஆனால் அது முக்கியமல்ல. உலகை மாற்றுவதுதான் முக்கியம்!" என்ற மார்க்ஸின் குரல்,
            "புரட்சியில் ஈடுபடாமல் புரட்சியைக் கற்றுக் கொள்ள முடியாது!" என்ற மாவோவின் குரல்,
            "இளைஞனே! ஆயுதமெடு! அழித்தொழி வர்க்கப் பகைவர்களை! இதுவே புரட்சியின் தொடக்கம்!" என்ற சாரு மஜூம்தாரின் குரல் - எல்லாம் சேர்ந்து தியாகுவைப் புரட்சிப் பாதையில் தூண்டுகின்றன.
            மஜூம்தாரின் குரல் தியாகுவின் உள்ளத்தில் அதிகமாகவே எதிரொலிக்கிறது. சீனாவின் மாவோவின் பாதையில்தான் இந்தியாவின் புதிய பாதையை அமைக்க முடியும் என்று தியாகு உறுதியாக நம்புகிறார்.
            வர்க்கப் பகைவர்களை அழித்தொழிக்கும் பாதையில் அடியெடுத்து வைக்கிறார் தியாகு தன் தோழர்களோடு.
            அந்த அழித்தொழிப்புச் செயலுக்குப் பின் கைது செய்யப்படுகிறார் தியாகு.
            தங்கள் புரட்சிக்கு விலையாக தங்கள் இன்னுயிரைத் தூக்குக் கயிற்றின் முன் சமர்ப்பித்த பகத்சிங்கின் தோழர்கள் போல தியாகுவின் தோழர்களும் தூக்கு மேடையை தங்கள் தியாகத்திற்கானப் பரிசு மேடையாக எண்ணி முத்தமிடத் துடிக்கிறார்கள்.
            தியாகுவும் அவர்களின் தோழர்களும் நீதிமன்ற விசாரணையைப் புறக்கணிக்கிறார்கள்.
            கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக் கூண்டை தங்களது கருத்துகளை விதைக்கும் பொதுக்கூட்ட மேடையாக மாற்ற முனைகிறார்கள். தங்களது புரட்சிப் பாதையை மக்களிடம் அம்பலப்படுத்தும் நாடக மேடையாகவும் ஆக்குகிறார்கள்.
            கீழமை நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறது.
            தூக்குத்  தண்டனை கைதிகளாக அடைபடும் தியாகுவும் அவரின் தோழர்களும் தூக்குத் தண்டனை பெற்றாகி விட்டதாகவோ, தங்களின் பணி முடிந்து விட்டதாகவோ  நினைத்தார்கள் இல்லை.
            போராளிகள் எங்கு அடைபட்டாலும் போராடவே செய்கிறார்கள். தன் கடைசி மூச்சையும் போராட்டத்துக்கு விலையாகவேத் தருகிறார்கள்.
            சிறையிலும் அவர்கள் போராடுகிறார்கள். ஒரு முறை நீதிமன்றத்துக்குப் போலீசாரால் அழைத்துச் செல்லப்படும் போது தப்பிக்கிறார்கள்.
            எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர்கள் அடிபடுகிறார்கள். உதைபடுகிறார்கள். நிர்வாணமாய் நிறுத்தப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுகிறார்கள்.
            திருச்சி மத்திய சிறையில் தியாகுவுக்குக் கிடைக்கும் ஏ.ஜி.கே. எனும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் தோழமை இந்தியாவுக்கு உரிய புரட்சிப் பாதையைத் தீர்மானிக்க தியாகுவுக்கு வழிகாட்டியாக அமைகிறது.
            அவர்கள் விவாதிக்கிறார்கள். முரண்படுகிறார்கள். சரியாக திட்டமிடப்படுவதன் அவசியத்தை உணர்கிறார்கள். மக்களிடையே ஒரு நாயக பிம்பத்தை உருவாக்க முயலாமல், மக்கள் பங்கேற்போடு கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கண்டடைகிறார்கள்.
            சிறையில் இருக்கும் அவர்கள் சிறைச் சீர்திருத்தத்தை முன்னிறுத்தி தங்களின் போராட்டப் பயணத்தைத் துவங்க வேண்டியதன் அவசியத்தை உணர்கிறார்கள்.
            சிறைக்குள்ளே பத்திரிகை நடத்துகிறார்கள். சிறைக்குள்ளே ரகசிய சங்கத்தை உருவாக்கி வழிநடத்துகிறார்கள். அதற்கு சந்தா வசூலிப்பது உட்பட அந்த முயற்சிகள் அனைத்தும் ரசனையானவை. சிறைக்குள் பீடி செலவாணியாகவும், சந்தாவாகவும் பயன்படுத்தப்படும் ரகசியங்களையெல்லாம் தியாகு இந்நூலில் பகிர்கிறார்.
            அவர்கள் சிறைப்போராட்டத்தைத் தொடங்கும் வேளையில் எவ்வளவோ இடர்பாடுகள்.
            ஒரு கிறுக்கனைப் போல் நடந்து கொள்ளும் சீவலபேரி பாண்டி சிறையிலிருந்து தப்பிக்கிறார். சிறையின் கெடுபிடிகள் அதிகமாகின்றன. என்றாலும் அவர்கள் திட்டமிட்டபடி தங்கள் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள்.
            ஒரு மரண தண்டனைக் கைதி உட்பட உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரும்பாலான கைதிகள் எழுச்சியோடு பங்கேற்கிறார்கள். ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் எல்லாம் பேசிப் பார்க்கிறார்கள். பேச்சுவார்த்தையை நுட்பமான ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள்.
            இறுதியில் சிறைத்துறைச் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் வகையிலும், சிறைக்கைதிகளைக் குடிமகன்களாய் நடத்தும் வகையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்களின் போராட்டம் வெற்றி பெறுகிறது.
            அதைத் தொடர்ந்து ஒரு தொய்வு காலமும் வருகிறது. என்றாலும் சிறைக்குள்ளும் போராடி சிறைக்கைதிகளையும் மனிதர்களாய் அடையாளங் காட்டிய அவர்களின் போராட்டம் சிறைத்துறைச் சீர்திருத்தங்களுக்கு ஒரு முன்னோடி.
            நீதிமன்ற விசாரணையைப் புறக்கணித்தாலும் தியாகுவுக்காகவும், அவர்களின் தோழமைகளுக்காகவும் வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் அவர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகிறது.
            தியாகராஜன் எனும் தியாகுவைப் பொறுத்த வரையில் சிறைபடும் வரையில் மக்களுக்காக செய்த ஆயுதப் போராட்டம், சிறையில் கைதிகளுக்காகவும் பல்வேறு வகையில் தொடர்கிறது. அவர் எப்போதும் ஒரு போராளியாகவே இருக்கிறார்.
            பொதுச்சமூகத்திலிருந்து சிறைபட்டு, மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு அவரது போராட்ட முறைகள் வெவ்வேறு விதமாய் செழுமைபட்டுக் கொண்டே செல்வதைக் காட்டும் ஒரு போராளியின் நாட்குறிப்பாகவும் 'சுவருக்குள் சித்திரங்கள்' எனும் இந்நூலைச் சுட்டலாம்.
            குறிப்பாக,
மூல உத்திகளிலிருந்தே தந்திர உத்திக்குச் செல்ல வேண்டும். அவ்வாறில்லாமல் தந்திர உத்தியிலிருந்து மூல உத்திக்குப் போவது என்பது தலைக்கு ஏற்ற குல்லாய் வாங்குவதற்குப் பதிலாக, குல்லாய்க்கு ஏற்றாற்போல் தலையை மாற்ற முயற்சிப்பது போலாகி விடும் என்ற பேருண்மையை தன் அனுபவத்தின் மூலம் இந்நூலில் முன்வைக்கிறார் தியாகு. சமூகப் போராளிகளுக்கான மிகப்பெரிய பாடம் இது. அவ்வகையில் போராளிகளுக்கானப் பாடப்புத்தகமாகவும் இந்நூலைக் கொள்ளலாம்.
            இந்நூலில் ஏ.ஜி.கே. புரட்சி குறித்து தியாகுவோடு பேசும் ஒவ்வொரு இடமும் போராளிகளுக்கான அனுபவப் படிப்பினைகளைக் கற்றுத் தரக் கூடியவைகள்.
            "போராட வேண்டும். அதன் வரையறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நட்புச் சக்திகளை இணைத்துக் கொள்ளவும், பகைவனைத் தனிமைப்படுத்தவும், வெளியிலிருந்து ஆதரவு திரட்டவும் வகை செய்த பிறகே போராட வேண்டும்."
            "என்றும் எப்போதும் விழிப்பாய் இருப்பதுவே உரிமை வாழ்வுக்கு தரும் விலை - Etermal vigilance is the price of liberty "
            "பகைவன் ஆத்திரமூட்டுகிறான் என்பதாலேயே ஆத்திரமடைய வேண்டியதில்லை. நாம் தயாராய் இல்லாத போது பகைவன் மோதலுக்கு இழுக்கிறான் என்றால் அந்த மோதலைத் தவிர்ப்பதுதான் நல்லது. நமது போராட்டத்துக்கு நாம்தான் களமும், காலமும் குறிக்க வேண்டும்."
            "பேசுவதால் சில நன்மைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் எதிரியின் உள்ளத்தை அறிய இது பயன்படுகிறது. இதை எதிரியின் மீது ஓர் உளவியல் போராக மாற்ற முயல வேண்டும். அவர்களாக பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு போகட்டும். முறிவுக்கான பழி நம்மைச் சாராது. அதுதான் நல்லது."
            "பேச்சுவார்த்தை கூட ஒரு போராட்ட களம்தான். மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகிறார்கள். அமைதிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பற்றிக் கொள்ள தயார் என்பதும், எதிரிதான் அமைதியைக் குலைத்து மோதலை நாடுகிறான் என்பதும் ஒவ்வொரு படியிலும் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்."
            இவைகள் அனைத்து ஏ.ஜி.கே. தியாகுக்குக் கற்றுத் தரும் பாடங்கள். அவ்வகையில் சமூகப் போராளிகளின் கையேடாகவும் கொள்ளத் தக்க நூல் இது.
            சிறை ஓர் அமிலப் பரிசோதனை. எந்தக் கோழையும் இங்கு வீரனாய் நடிக்க முடியாது என்று தியாகு கூறும் இடமாக இருக்கட்டும்,
            சிறை ஒரு மூடாத கல்லறை. கைதிகள் உயிரோடு இருக்கும் பிணங்கள் என்று சிறை அலுவலர் ஒருவர் சொல்லும் இடம் ஆகட்டும், சமகால சிறைகள் குறித்த ஆவணப்பதிவாகவும் கொள்ளத்தக்கது இந்நூல்.
            சக்கியடித்தல் என்றால் தூக்கில் இடுதல் என்று ஆரம்பித்து மரண தண்டனைக்கான கைதிகள் அடைக்கப்படும் இடம் கண்டம் என வழங்கப்படுவது வரை சிறை சார்ந்த பல்வேறு சொல்லாடல்களையும் இந்நூல் தருகிறது. கைதி என்பது உருதுச்சொல். சிறைபட்டவர் அல்லது தள்ளப்பட்டவர் என்பதே தமிழ்ச்சொல் என்று சொல் குறித்த ஆழம் காண்பதிலும் சிறை சார்ந்த சொற்கள் குறித்த சொற்களஞ்சியமாகவும் இந்நூல் விளங்குகிறது.
            சிறை சார்ந்த உளவியலும், சிறை சார்ந்த அரசியலும், சிறை சார்ந்த தோழமை உணர்வுகளும் பதிவாகியுள்ள இந்நூல் சமகாலத்தின் சிறை சார்ந்த தன்வரலாற்று நூல்களில் முக்கியமானதாகக் கருதத்தக்கது.
            தன் இளமை முழுவதையும் சிறையில் தியாகம் செய்த தோழர் தியாகராஜனுக்கு அந்தப் பெயர் எவ்வளவோ பொருந்தும். சிறையின் சுவர்களுக்கு இடையே அவர் வாழ்ந்த வாழ்வியலை எழுத்தோவியமாய்த் தீட்டிய வகையில் 'சுவருக்குள் சித்திரங்கள்' என்ற தலைப்பும் இந்நூலுக்கும் அவ்வளவு பொருந்தும்.
            சமூகப் போராளிகளின் ஆவண நூல் என்று கொள்ளத்தக்க இந்நூல் கிடைக்குமிடம் -
விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர் - 620 001
தொடர்பு எண் - 0422 2382614, 0422 2385614
*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...