31 May 2018

ஒரே ஓர் இரகசியம் உமக்கு மட்டும்...


ஒரே ஓர் இரகசியம் உமக்கு மட்டும்...
            தடங்கல்கள் வேலையைச் செய்ய விடுவதில்லை. அடுத்தது என்ன நடக்குமோ என்ற அச்சம் படரத் தொடங்குகிறது. இரண்டு வழிகள் புலனாகின்றன.
            நடப்பது எப்படியோ அப்படியே நடக்கட்டும் என்பது ஒரு வழி.
            அச்சத்தைக் களைந்து விட்டு மோதிப் பார்ப்பது இன்னொரு வழி.
            மோதிப் பார்க்கும் வழியில் மண்டை உடைந்த குருதியின் சுவடு அல்லது தடைகள் நொறுங்கிக் கிடக்கும் குப்பைகளின் தடங்கள் கிடக்கின்றன.
            மாற்றி யோசிக்கும் மற்றொரு வழியில்தான் சிம்மாசனங்கள் பறிக்கப்படுகின்றன.
            நடப்பது எவ்வழியோ அவ்வழி என்பவர்கள் சலாம் போட்டு நிற்கிறார்கள். அச்சமற்றவர்கள் சிம்மாசனங்களின் அருகில் மெய்க்காப்பாளர்களாக நிற்கிறார்கள்.
*****
கண்ணுக்குத் தெரியாதத் தாக்குதல்கள்
            உலகில் எல்லாவற்றையும் விட மனநிம்மதி முக்கியமானதாகப் படுகிறது. தாக்குதல் என்பதே இக்காலத்தில் மனரீதியாகத்தான் நிகழ்த்தப்படுகிறது. ஒன்று மனதைக் கடந்து செல்ல வேண்டும் அல்லது அந்த விசயத்தில் வைத்திருக்கும் பற்றை விலக்க வேண்டும். அதுதான் வழி.
            அத்தோடு நிதானமானப் போக்கை கைவிட்டு விடக் கூடாது. அதுதான் நிலைநிறுத்துகிறது. அனைத்துப் பலத்தோடு செயல்பட அதுவே அவசியம்.
            நிதானத்தையும், பொறுமையையும் இழக்கும் சம்பவங்கள் மனிதர் தம்மை இழக்கும் சம்பவங்களாகும். நிதானமின்மை, பொறுமையின்மை ஆகிய இந்த இரண்டைத் தவிர எவரையும் எவராலும் அழிக்க முடியாது.
            தம்முடைய கோபங்கள், தாபங்கள் இவைகளைத் தம்மிடமே வைத்துக் கொள்ளும் மனிதர்கள் அசைக்க முடியாதவர்களாகிறார்கள். அதை வெளிக்காட்டுவதன் மூலம் பலகீனம் ஆகி விடுபவர்கள்தான் நாட்டில் நிறைய இருக்கிறார்கள்.
*****


விடுபட்டவரின் வார்த்தைகள்
இந்த வார்த்தைகள்
உங்களை விடுவித்து விட்டால்
அதற்கு யாரும் பொறுப்பு கிடையாது
விடுபடுவது அவரவர் விருப்பம்
வார்த்தைகள் சாவியைத் தருகின்றது
பூட்டுகள் உங்களிடம் இருக்கின்றன
திறந்து விடுபடுவதும்
விடுபடாமல் இருப்பதும்
அவரவர் பிரச்சனை
திறந்த பூட்டுகளைத் தூக்கி எறிவதைத் தவிர
வேறு என்ன வழி இருக்க முடியும்
பூட்டுகள் அவரவர் வசமே இருக்க வேண்டும் என்றால்
திறக்காதீர்கள்
விடுபட்ட பின் அங்கே எதுவுமில்லை
பூட்டுகளோடு இருக்கும் போதோ
அவரவர்க்கென்று ஒரு சிறை இருக்கிறது
விடுபட்டவரின் வார்த்தைகளை
எப்போதும் கவனமாகப் பரிசீலியுங்கள்
*****
நன்றி -ஆனந்த விகடன் -இதழ் 30.05.2018 -பக்கம் 38

*****


பேச்சு நாடகம்


பேச்சு நாடகம்
            பேசுவதை ஓர் அபத்த நாடகம் ஆக்குகிறார்கள். அவரவர் மனநிலைக்குத் தகுந்தாற் போல் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை நோக்கிப் பேச்சின் போக்கையும் இழுக்கிறார்கள். அதற்காக உணர்வு ரீதியாகப் புகுந்து நெருக்கடிகளை உருவாக்கி நிர்பந்திக்கிறார்கள். இல்லையென்றால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். அதிருப்தியான முக பாவனைகள் காட்டுகிறார்கள். கோபத்தை எரிச்சலை உதிர்க்கிறார்கள். உணர்வு ரீரியாக சித்திரவதைச் செய்வதில் ஈடுபடத் துவங்குகிறார்கள்.
            உலகம் ஒரு நாடகமேடை என்கிறார் ஷேக்ஸ்பியர். ஓர் அபத்த நாடக மேடை.
            மற்றொரு வகை,
            சில பேர் இருக்கிறார்கள்! பேசிப் பேசியே வன்முறை செய்பவர்கள். இடைநிறுத்தம் இல்லாமல் மணிக் கணக்கில் பேசுவார்கள். இடையிடையே அவ்வபோது கேள்வி கேட்டு ஆழம் பார்த்து வேறு கொள்வார்கள். எல்லாம் நாடகம்தான். ஒரு கஷ்டம் என்னவென்றால் இப்போது நடந்து கொண்டிருக்கும் செத்தவர்கள் அடுத்த முறை அதே நாடகம் போடப்படும் போது அதிலும் சாக வேண்டும்.
*****
தொற்றாமல் தொற்றும் தொற்றா வியாதிகள்
            தினம் பத்து முறை முயலுங்கள் என்பார்கள். எவ்வளவு முயன்றாலும் மாதத்துக்கு ஒன்றில் தேறுவது அபூர்வம். தினம் பத்து முயற்சிகள் என்று வைத்துக் கொண்டால் மாதத்துக்கு முந்நூறு முயற்சிகள். முந்நூறுக்கு ஒன்று தேறுவது என்பது உண்மையில் பயங்கரமானதுதான். அவர்கள் அப்படித்தான் பயமுறுத்துகிறார்கள்.
            இப்படி முயன்று முயன்று சலித்துப் போக வேண்டியதுதான். நான்கு மாதங்களுக்குப் பிறகு அதை அப்படியே பின்பற்றிக் கொண்டிருந்தால் முயல்வது என்பது ஒரு வியாதியாகி விடும்.
            இது முயற்சிக்கு எதிரானதா என்றால், நமக்குப் பிடித்தமானவற்றுக்கு முயலவே வேண்டாம் என்ற உண்மைக்கு ஆதரவானது.
            இது ஒரு வகை வியாதி என்றால், மற்றொரு வகையாக, மனநிறைவு இல்லாமல் இருப்பதை மிகப் பெரிய வியாதியாகச் சொல்கிறார்கள். அதிலிருந்து உடல் வியாதிகள் தொடங்கி, சமூக வியாதிகள் வரை அனைத்து வியாதிகளும் உண்டாகின்றன என்று பிரஸ்தாபிக்கிறார்கள்.
            எளிமையான செயல்பாடு, எளிமையான எதிர்பார்ப்பு இவைகளே மனநிறைவுக்கான வழிகள். இதைச் சுருக்கமாக எளிமை என்று சொல்லலாம். விரிவாகச் சொன்னாலும் எளிமை என்றுதான் சொல்லலாம்.
            இதற்காக நிறைய செய்ய வேண்டும் என்பதில்லை, குறைவாகச் செய்தாலும் போதுமானது. அதில் மனநிறைவு என்பது முக்கியமானது. இதையெல்லாம் கணக்கிட்டு மனநிறைவோடு இருப்பதாக தோன்றுவதாக ஒருவர் கூறினால் அவர் மனநிறைவோடு இல்லை என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். மனநிறைவோடு இருப்பவர்களுக்கு அப்படியெல்லாம் தோன்றாது. அது குறித்து எதுவும் தெரியாது. மனநிறைவோடு இருப்பவரிடம் மனநிறைவு பற்றிப் பேசினால் அவர் மனநிறைவற்றவராகி விடுவார். வியாதி அப்படி!
*****

30 May 2018

மூன்று தெறிப்புகள்


மூன்று தெறிப்புகள்
            1. எழுத்தின் அழகு எழுதுகின்ற கையின் பொறுமையில்தான் இருக்கிறது.
            2. சோம்பேறித்தனத்தை எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை. எவரும் எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்க முடியாது. ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஒன்றில் எவரும் சுறுசுறுப்பாகச் செயலாற்றுவர். சோம்பேறித்தனம் இருக்கும் ஒருவர் சுறுசுறுப்போடும் இணைந்தே இருக்கிறார். ஒருவரைப் பற்றி அறிந்த பக்கங்களின் அடிப்படையில் ஒருவர் சோம்பேறியாகத் தெரியலாம். அறியாத பக்கங்களின் அடிப்படையில் அவர் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
            3. எல்லையற்ற அன்புதான் எல்லாமும் என்பது. அது அடையாளமற்றே இருக்கிறது. அப்படியானால் அடையாளத்தோடு இருப்பதைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை.
*****
அது அப்படியா என்ன?
            ஆசையாகக் கேட்கிறார்கள் என்பதற்காக செய்யப்படுவது அன்பை அதிகப்படுத்தும் என நம்பப்படுகிறது. அது உண்மையிலேயே அப்படியா என்ன?
            அங்கிருந்துதான் பிரச்சனைகள் துவங்குகின்றன என்பதை அனுபவப்பட்டவர்கள்தான் உணர முடியும். உண்மையில் அன்பாக இருப்பவர்கள் ஆசைப்பட்டு எதையும் கேட்பதில்லை. அவர்கள் அன்பானவர்களின் அருகாமையை மட்டுமே விரும்புகிறார்கள். தாம் ஆசைப்பட்டதைக் கொண்டு தருவதற்காக அன்பானவர்கள் பிரிவதை விரும்புவதில்லை.
            ஆசையாகக் கேட்கிறார்கள் என்றால் முதலில் உடன்பாடாகச் சிந்திப்பதைப் போல, இரண்டாவதாக எதிர்மறையாகவும் சிந்தித்தால் சரியான கோணத்தை அடைய முடியும். அது அனுபவத்திற்கு முன் சாத்தியமா என்பது தெரியவில்லை. வேண்டுமானால் முயன்று பார்க்கலாம்.
            ஆசைப்பட்டவர்களுக்காக செய்ததற்குப் பின்பான வாழ்க்கை என்பது துயரமான வாழ்க்தைான். அதில் சிரித்த நாட்களை விட, சோகமான நாட்கள் அதிகமாக இருக்கும். சிக்கிக் கொண்ட பின் முட்டாள்தனமாக சிக்கிக் கொண்ட நரகம் அது என்பதை உணர முடியும்.
*****

29 May 2018

அதிசய உலகம்


அதிசய உலகம்
            எஸ்.கே. தனக்கானப் பிரத்யேகக் குறிப்பேட்டில் பின்வரும் ஐந்து குறிப்புகளை எழுதி அதற்கு அதிசய எழுத்து என்று தலைப்பிட்டார். பின்னர் நினைத்தாரோ தலைப்பை அதிசய உலகம் என்று மாற்றிக் கொண்டார். இக்குறிப்புகள் இரண்டு தலை மனிதர், ஐந்து கால் ஆட்டுக்குட்டி, பத்து கண் புலி என்பது குறித்து இல்லாவிட்டாலும் எஸ்.கே. இறுதியாக இட்ட தலைப்பு அதுதான். அந்தக் குறிப்புகள் இவைகள்.
            1. உலகம் ஏற்கனவே தப்பும் தவறுமாகத்தான் இருக்கிறது என்றால் மேலும் தப்பும் தவறுமான விளக்கத்தை அளித்து விட வேண்டாம். அது ஏற்கனவே சரியாகத்தான் இருக்கிறது என்றால் தயவுசெய்து எந்த விளக்கத்தையும் அளித்து விட வேண்டாம்.
            2. எல்லாவற்றையும் செய்தால் எதிலாவது குற்றம் காணப்படும். எதையும் செய்யா விட்டால் எதையாவது எப்படியாவது செய்ய வைப்பது குறித்து ஆராயப்படும்.
            3. நிறைந்துள்ள பணப்பையை விட நிறைவான மனமே சிறந்தது என்று ஓரிடத்தில் படித்ததாக ஞாபகம். மனம் ஒரு போதும் நிறையாத ஒட்டைப் பை என்பது தெரியுமா?
            4. உங்களிடமிருந்து எழுவதுதான் உங்களுக்கான எழுத்து. அந்த எழுத்துகள் உங்கள் ஆசிரியரிடமிருந்து கற்றதுதான். அர்த்தங்கள் உங்களிடமிருந்து புறப்படுபவை.
            5. கொஞ்சம் குறைகளோடு ஏற்றுக் கொண்டால் எந்தக் குறைகளுமில்லை.
*****

வார்த்தைக் குறிப்பு

வார்த்தைக் குறிப்பு
வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்கப் போன
குழந்தை
வண்ணத்துப் பூச்சியாக திரும்பி வந்தது
பிடிக்க முடியாத குறும்புகளோடு
கானகமான வீட்டில் பறக்கும் அதை
பார்க்க பார்க்க
வண்ணத்துப் பூச்சியானவர்கள்
வண்ணத்துப் பூச்சியைப் பார்ப்பவர்கள்
வண்ணத்துப் பூச்சியாகிறார்கள் என்ற
எச்சரிக்கை வாசகத்தை எழுதி வைத்தனர்
வண்ணத்துப் பூச்சியைப் பார்ப்பதைத்
தவிர்ப்பது நல்லது என
முடிவெடுத்துக் கொண்டனர்
தங்கள் குழந்தைகளோடு
அவ்வாசகத்தைக் கடக்க முயன்ற மனிதர்கள்
*****

யானை பார்த்த கதை


யானை பார்த்த கதை
நான்கு குருடர்கள்
யானை பார்த்த கதை தெரியும்
என்ற ஒருவன்
நீயும் அப்படித்தான் என்றான்
அவர்களுக்குத் தெரிந்திருந்தால்
யானை பார்த்த கதை இல்லை
என்ற நான்
யானை பார்க்காத
அவன் கதையைச் சொல்லத் துவங்கினேன்.
*****

28 May 2018

கண்டுக்காதீங்க ப்ளீஸ்! (Five Points Management)


கண்டுக்காதீங்க ப்ளீஸ்! (Five Points Management)
            1. சில கேள்விகளுக்குப் பதில் இல்லை. அது மனதின் பயம் அல்லது சந்தேகம். அதற்குச் சாதுர்யமானப் பதிலைச் சொல்ல முனையக் கூடாது. அவர்களின் உளவியலைப் புரிந்து கொண்டு மரியாதையோடு கூடிய புகழும்படியானப் பதிலைச் சொல்ல வேண்டும். ஒருவரின் பயத்தையும், சந்தேகத்தையும் களைவதற்கு அதுதான் பதிலா என்றால் அதுதான் அந்த ஒருவருக்கு ஏற்ற பதில். மரியாதையும், பாராட்டும் குறையும் இடத்தில் அதுபோன்ற பயமும், சந்தேகமும் நிறையவே வரும்.
            2. சில சமயங்களில் அப்படித்தான் நடக்கும். அதற்கு எதுவும் செய்ய இயலாது. கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விட வேண்டும். அதை நோண்டி நோண்டி பார்ப்பது என்பது ஆறும் புண்ணை நோண்டி நோண்டிப் பார்ப்பதைப் போன்றது. நேர்மையாக இருக்கிறோம் என்பது எறியப்படும் கல்லுக்கு எப்படித் தெரியும், அதை எறிபவருக்கே தெரியாத போது.
            3. சில இடங்களில் மற்றவர்கள் தான் எனும் ஆணவத்தோடு பேச ஆரம்பிக்கும் போது, நாமும் தாம் எனும் ஆணவத்தோடு பேசத் தொடங்குவோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லாம் பழக்கதோஷம். அப்படி நேர்ந்து விடும். அப்படிப் பேசி அதில் எந்தப் பயனும் உண்டாகப் போவதில்லை. வீண் வம்பும், மன பேதங்களும்தான் மிச்சம்.
            தேவைப்படுவது புரிந்து கொள்வதற்கான தன்மையே. அதை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது. அவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பது புரியாமலே இங்கே பல பேர் இருக்கிறார்கள்.
            ஆக, தணிப்பதற்கானப் பேச்சு என்பது வேறு. இவ்வளவு கோபப்படுகிறீர்களே என்று சொல்வதை விட, கோபமே வராத உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்து விட்டதே என்று சொல்வதுதான் தணிப்பது என்பது. அதாவது தணிப்பது என்பது புத்திசாலிதனமான விளக்கங்கள் சொல்வது அல்ல, முகஸ்துதி செய்வதுதான்.
            4. சில நேரங்களில் தொழில்நுட்ப சாத்தியங்களைப் பார்க்கும் போது பிரமாண்டமாக இருக்கிறது. அப்படி ஒரு பிரமாண்டம் வாழ்விலும் சாத்தியம்தான். மனதுக்கு ஒத்து வராது. பிரமாண்டங்கள் இல்லாமல் இருப்பது மனதுக்கு நல்லது. ஆனால் அந்தப் பிரமாண்டங்கள் உருவானது எல்லாம் மனதில்தான் என்பதை நினைத்துப் பார்த்தால் அது அதை விட பிரமாண்டமாக இருக்கும்.
            5. சில பொழுதுகளில் செய்ய வருமோ? வராதோ? என்று நினைத்துக் கொள்ளலாம். செய்யத் துவங்கினால் அது வரும். ஆக செய்ய முடியுமா? முடியாதா? என்பது இல்லை. செய்யத் துவங்கினால் அது முடியும். செய்வதற்கு முன்னான மனநிலை வேறு. செய்யத் துவங்கி விட்டால் ஏற்படும் மனநிலை வேறு. அதனால் மனநிலைகளை நம்பி ஏமாற வேண்டாம். தொடங்கி விடுவது எல்லாவற்றையும் மாற்றி விடும். எத்தனையோ முன்முடிந்த பல முடிவுகளை அவைகள் தூள் தூளாக்கியிருக்கின்றன.
*****

27 May 2018

சொல்லத்தான் நினைக்கலாம்!


சொல்லத்தான் நினைக்கலாம்!
            1. சில குறிப்பிட்ட விளைவுகளைப் பார்க்கும் போது அது கிடைக்காமல் போனால் நிச்சயம் கோபம் ஏற்படத்தான் செய்யும். அப்படியெல்லாம் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டு வாழ வேண்டியதில்லை.
            2. மனிதர்கள் யாரை எப்போது எப்படி தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியாது. அதனால் அவர்களிடம் எச்சரிக்கையாக, கவனமாகப் பேச வேண்டும் என்பதல்ல பேசாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
            3. வார்த்தைகளை நிதானமாகப் பேச வேண்டும். அதுதான் நல்லது. என்ன பேசுகிறார்கள் என்பதற்கான விளக்கத்தையும் அவ்வபோது கேட்டுக் கொள்ள வேண்டும். லாஜிக் ஆன கேள்விகளைக் கேட்கத் தவறக் கூடாது. அப்போதுதான் ஒரு மரியாதை கிடைக்கும். லாஜிக் தவறாகக் கூட இருக்கலாம்.
            4. பிடித்த மாதிரிதான் வாழ வேண்டும். அதற்குதான் வாழ்க்கை. என்ன பிடித்திருக்கிறது என்பது வெளியில் தெரியக் கூடாது.
            5. நல்லதைச் சொன்னாலும் கோபத்தில் சொல்லி விடக் கூடாது. அதைத் தவறாகப் புரிந்து கொள்ளும் உலகில் இருக்கிறோம்.
            6. எதற்காகவும் மிகுதியாக அலட்டிக் கொள்ள வேண்டாம். போகிறப் போக்கில் போய்க் கொண்டிருக்கவும். அப்படியே அதை விட்டு விடலாம் அல்லது அதுவே நம்மை விட்டு விடும்.
            7. யார் பெரியவர் என்ற எண்ணம் இருக்கிற வரை போட்டிகளும் இருக்கும், சண்டைகளும் இருக்கும். யார் சிறியவர் என்பதற்கானப் போட்டிகள், சண்டைகள் அவைகள்.
            8. சமாதானம் என்பது நீண்ட நேரம் சண்டை போட்டு விட்டோமே என்பதற்காக நாம் செய்து கொள்ளும் சால் சாப்புதான். பிறகுதான் மிக உக்கிரமான சண்டைகள் தொடங்குகின்றன.
            9. சண்டை என்று வந்து விட்டால் பீஷ்மராக இருந்தாலும் முள் படுக்கையில் படுப்பதைத் தவிர்ப்பது கடினம்.
            10. செய்வதற்கு முன் கடந்த கால அனுபவங்களை ஒரு முறை கலந்தாலோசிக்க வேண்டும். சென்ற முறை வாங்கிய அடி பலமாக இருக்கலாம்.
            11. எப்படி வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். அது ஒரு பிரச்சனையில்லை. அதற்காகவே பிறந்துள்ளோம். பிறப்பின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடக் கூடாது.
            12. சிறிது நேரம் அதையே செய்து கொண்டிருந்தால் எதைச் செய்கிறோமோ அதில் ஆழ்ந்த கவனம் தானாக வந்து விடும். வன்முறைகள் எல்லாம் அப்படித்தான். கடைசியில் குற்ற உணர்ச்சி செத்து விடும்.
*****

26 May 2018

காக்கையின் அமுதம்


அழைப்பு
இலைகள் கையை ஆட்டி தடுத்தாலும்
மரத்தை விட்டு
பறவைகள் விலகுவதில்லை
மனிதர் கையை நீட்டி அழைத்தாலும்
பறவைகள் வருவதில்லை
*****
காக்கையின் அமுதம்
செத்துப் போய்
நாறிக் கிடக்கும் எலி
என்று சொல்லாதே
காக்கையின் பசி
என்று சொல்
மூக்கை மூடிக் கொண்டாவது
வாயைத் திறந்து
ஒரு காகத்தை அழை
*****

படைப்பாளன் என்ற முறையில்...

படைப்பாளன் என்ற முறையில்...
கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே
அல்லாடிக் கொண்டிருந்த படி
சற்றே நவீனமாக உடை அணிந்தவர்களிடம்
உலக இலக்கியம் கலந்து
அவர்களைச் சற்றே நயந்து
ஒரு வாய் டீ குடிப்பதற்காக
பேச நினைத்து கவிதைகளாய் உளறி
எழுத நினைத்து உரைநடையில் தடுமாறி
தன்னைத் தானே தீர்மானித்துக் கொள்ளும்
பெருவெளியில் தீர்மானமின்றி அலைந்து
அதுவாக அது எழுதிக் கொள்ளும் என்ற
நம்பிக்கையில் எது குறித்தும் கற்காமல்
இது நாள் வரை இருந்து விட்டதை எண்ணி
இதை வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும்
பின்னால் ஒரு பெருங்கூட்டம் வரும் என்று
அதற்கிடையில் அது செத்துக் கிடப்பதைப் பார்த்து
படைப்பாளன் என்ற முறையில்
சிரித்துக் கொள்வதைத் தவிர
வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்பவன்
கழிவறைத் தொட்டியில் வீசி எறிகிறான்
அணிய முடியாத மீசை வைத்த முகமூடியை
*****

பல நேரங்களில் பல மனிதர்கள்


பல நேரங்களில் பல மனிதர்கள்
            மாற்றம் என்பது மாறாததுதான், ஆனால் யாரையும் அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியாது. எவரும் தங்கள் மனநிலையை அவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள்.
            தங்கள் மனநிலையே உயர்வானது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனநிலைகளால் இந்த உலகில் ஏற்படுத்தும் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால் நேரும் சிக்கல்களும் கணக்கில் அடங்காதவை.
            அப்படிப்பட்டவர்களை நம்பி எந்த ஒன்றையும் செய்து விட முடியாது. அப்படி எதையாவது செய்தால் அவர்கள் அதற்கு எதிராக மாறி விடுவார்கள். அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லது செய்யப் போவதாக நினைத்துக் கெடுதலில் மாட்டிக் கொண்ட நிகழ்வுகள் அநேகமாகி விடும்.
            அவர்களிடம் எதையும் சொல்ல வேண்டியதில்லை. சொன்னாலும் அவர்கள் எதையும் நம்பப் போவதில்லை. உண்மையைச் சொன்னால் பொய் என்பார்கள். உள்ளுணர்வால் எழுவதைச் சொன்னாலும் சந்தேகப்படுவார்கள். அவர்களிடம் நல்லது எதையாவது சொல்லி முட்டாள்பட்டம் வாங்குவது தேவையில்லாதது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அர்த்தமில்லாதது. அவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் நினைப்பதுதான் சரியானது. அவர்கள் அப்படியே இருந்து கொள்ளட்டும்.
            அவர்கள் எமோஷனலாக ப்ளாக்மெயில் செய்யும் ஒவ்வொரு முறையும் தங்களின் சுய உருவத்தை நிர்சலனமாகக் காட்டுவார்கள். அதுபோன்ற நிலைமைகளில் அவர்களைச் சமாதானப்படுத்துவது பிரச்சனைகளின் உச்சகட்டம். அப்படி ஏதேனும் நிகழ்வுகள் நடக்குமானால் அவைகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். அதே போன்ற முட்டாள்தனத்தை அடுத்தடுத்தும் வழக்கம் போல நிகழ்த்தும் முட்டாள்தனமும் நிகழவே செய்யும். எப்படியாவது சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணமாக இருக்கும். கடந்த காலத்தில் பாடம் கற்றுக் கொள்ளாத முட்டாள்தனமே அது. அது போன்று உணர்ச்சிகரமான மிரட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர, முட்டாள்தனமாக அல்ல. அவர்களை அவர்களின் போக்கில் விட்டு விடுவதுதான் அதற்குச் சிறந்த வழி. சரியான வழியும் கூட. சமயங்களில் அழுது கூட ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள். அது வெள்ளந்தியாக இருப்பது போலக் காட்டி அவர்கள் செய்த வன்முறை என்பது புரியவே நாளாகும்.
            இப்படி அவர்கள் செய்வது சரியில்லைதான். அவைகளைச் சரியாக்க முயன்றால் அதன் பின் எதுவும் சரியில்லாமல் போய் விடும் என்பதன் சூட்சமம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. அப்படிப்பட்டவர்களிடம் போய் யாராவது உள்ளார்ந்த விருப்பங்களைத் தெரிவிப்பார்களா? அப்படி ஒரு பேதைத்தனமும் சில நேரங்களில் நடந்து விடும். அதற்கு அந்த உள்ளார்ந்த விருப்பத்தையே துறந்து விட்டு கம்பீரமாக இருப்பது மேலானது. கம்பீரமாக இருப்பது தனி அழகு, தனி இன்பமும் கூட. கொஞ்சம் அவசரப்படுபவர்களுக்கு இது புரிவது சற்று நாள் எடுக்கும் சமாச்சாரம்.
            நுட்பமாக யோசித்துப் பார்த்தால் அப்படிப்பட்டவர்கள் எல்லாவற்றிலும் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டு இருப்பார்கள். இது புரியாமல் அவர்களை அணுகுவது என்பது நரியொன்றிடம் கோழி ஒன்று பிராது கொடுப்பதைப் போலாகி விடும்.
            அவர்கள் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பது போல நடிக்கவும் செய்வார்கள். அந்த நடிப்பின் மூலம் நுட்பமான ஆதிக்கத்தை ஏற்படுத்த முனைவார்கள். இது புரியாமல் அவர்களின் பயந்தாங்கொள்ளித்தனத்திற்கு ஆறுதல் சொல்வதோ, தைரியப்படுத்துவதாக முயல்வதோ மற்றுமொரு அபத்தத்தின் உச்சக்கட்டம்.
            அவர்கள் மற்றவர்கள் செயலாற்ற வேண்டும் என்று தாங்கள் செயலாற்றாமல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது அவர்களுக்கு அவசியம். அப்போதுதானே அதில் புழுதி வாரி தூற்ற முடியும். குற்றம் குறைகளைச் சொல்ல முடியும். செயலாற்றாமல் இருப்பதை எதுவும் செய்யவில்லை என்ற ஒரு வகையில்தான் குறை கூற முடியும், வேறு எந்த வகையிலும் குறை கூற முடியாது என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள்.
            சிலரிடம் நல்லது என நினைத்துச் செய்து அது தனிப்பட்ட முறையில் கெடுதலாக முடிவதன் காரணம் என்ன? என்று கேள்வி கேட்டால் அதற்கானப் பதில்தான் மேலே விலாவாரியாக இருப்பது.
            அவர்கள் மனதளவில் ஒரு முடிவு எடுத்து விட்டவர்கள். அவர்களிடம் எதையும் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முடியாதது ஒரு துர்பாக்கிய நிலைதான். உலகின் பிரச்சனைகளே இப்படித்தான். ஒரு மனநிலைக்கும், உண்மையான, நியாயமான வேண்டுகோளுக்கும் இடையே நிகழும் போராட்டம்தான்.
*****

25 May 2018

சில சாதனைச் சரித்திரங்களுக்கு...


கேள்விக்கு என்ன பதில்?
            முடிவே பதிலைத் தீர்மானிக்கிறது. மனம் பல நேரங்களில் முடிவை தன்னுள் இருத்தாமல் பதில் கூறிக் கொண்டு இருக்கும்.
            எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பது எதை விரும்புகிறோமோ அதைப் பொருத்ததாக அமைகிறது. விருப்பங்களின் சலனங்கள் மனதை அலைக்கழிக்கிறது. பல முட்டாள்தனமானப் பதில்களைச் சொல்வதற்குக் காரணமாக அந்த விருப்பங்களினால் ஏற்படும் சலனம் அமைகிறது.
            பதில்கள் பெரும்பாலும் இழந்து விடுவோமோ என்ற பயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பல நேரங்களில் பதில்கள் மழுப்பல்களாக அமைந்து விடுகிறது. ஆனால் இழப்பது நல்லது. இழப்பில் புதிய ஒன்று கண்டடையப்படுகிறது. இருப்பதை இழக்காமல் புதிய ஒன்றைக் கண்டடைவது முடியாது. கோப்பை மீண்டும் நிரம்ப அது காலியாக வேண்டும். இருக்கின்ற கோப்பையில் நிரப்ப நினைத்தால் அது வழிந்ததான் ஓடும்.
*****
சில சாதனைச் சரித்திரங்களுக்கு...
            கோபத்தை வெளிக்காட்டி அதன் மூலம் சில காரியங்களைச் சாதித்து விடலாம் என நினைக்கலாம். அதன் முடிவுகள் முட்டாள்தனமாகவே அமையும். கோபத்தால் செயலைச் சாதித்து இருந்தாலும் அதனால் எதிரிகளையும் சாம்பாதிக்க வேண்டியிருக்கும்.
            கோபப்பட்டுச் சொல்வதை அக்கறையாகச் சொல்வதாக யாரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். சம்பந்தம் இல்லாமல் கோபப்படுவதாகத்தான் நினைத்துக் கொள்வார்கள்.
            அவர்களின் விருப்பம் போல் இருப்பது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். தேவையில்லாமல் குறுக்கிட்டு அவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடாது.
            அது போன்ற விசயங்களில் உடனடியாக எதையும் சாதித்து விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்லித்தான் எதையாவது சாதிக்க முடியும். அதுவும் நூறு சதவீத அளவுக்கெல்லாம் இல்லை. இருபது சதவீதம் சாதித்தால் கூட அது நூறு சதவீத அளவுக்குச் சமானம்.
*****

24 May 2018

'என்னமோ போ' என்பதற்கான 12 கருத்துருக்கள்


'என்னமோ போ' என்பதற்கான 12 கருத்துருக்கள்
            1. உதிர்க்கும் மரம் துளிர்க்கும். இளைப்பாறும் வயல் இரண்டு மடங்கு விளையும். தேக்கத்துக்குப் பின் ஒரு பாய்ச்சல் இருக்கும்.
            2. ஒரே விசயத்தில் மனம் இருக்க விரும்புவதில்லை. அவ்வபோது மாறிக் கொள்ளவே விரும்பும். அதற்கு இடம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு இடம் கொடுக்க மனம்தான் என்றாலும் அதற்கே மனமிருப்பதில்லை.
            3. ஆத்திரப்படுவதில் ஓர் அர்த்தமும் இல்லை. அதனால் விளைவுகள் அதி மோசமாகத்தான் போகுமே தவிர குறையாது. சாதுர்யமாக சிந்திக்கலாம். அது நல்ல பலனைத் தரும். இல்லாவிட்டால் கூட அப்படியே விட்டு விடலாம். நிலைமை அவ்வளவு மோசமாகாது.
            4. அறிந்த தளத்தில் நடக்கும் விசயங்களைக் கவனிக்கிறோம். அறியாத தளத்தில் நடக்கும் விசயங்களைக் கவனிக்கத் தவறி விடுகிறோம். அங்கிருந்துதான் எப்போதும் கல் வந்து விழும்.
            5. ரொம்பப் போட்டு அலட்டுவதற்கு எதுவுமில்லை. அது இறுக்கத்தில் கொண்டு போய் முடியலாம். அதுவும் இல்லாமல் எளிமையான காரியங்களையும் அது கடினமாக்கி விடும்.
            6. பேசும் போது கவனமாகப் பேசுவது கஷ்டம். பெரும்பாலும் பாசிட்டிவாகப் பேசி விடுவது ஈஸி. எளிமையான எஸ்கேப்!
            7. மனிதர்கள் ரொம்ப சுயநலமானவர்கள் என்பதால் அவர்களின் சுயநலத்திற்கு ஏதேனும் குந்தகம் நேர்ந்தால் கொதித்து எழுந்து விடுவார்கள். அதனால் குந்தகம் விளைவிக்காமல் செயல்படுவது கடினமாக இருக்கிறது.
            8. பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்தால் அதை விட சாதனை எதுவுமில்லை. அத்தனையும் அடையலாம். எப்படி என்றால் அதற்குள் அவசரப்பட்டவர்களும், அமைதியற்றவர்களும் மண்டையைப் போட்டு இருப்பார்கள்.
            9. அதிகமான எதிர்பார்ப்புகளை நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது. அதிகமான ஏமாற்றத்திற்கு உள்ளாகலாம். உச்சபட்ச முயற்சியிலும் இறங்கி விடக் கூடாது. மனமுறிவில் கொண்டு போய் நிறுத்தி விடும். சராசரியாக செயல்பட யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதால் அப்படி இருக்கலாம். போட்டிகள், பொறாமைகள் உண்டாகவே உண்டாகாது.
            10. மனச்சோர்வு திடீர் திடீர் என்று ஆட்கொண்டு விடும். அது இயல்புக்கு மீறிய ஒரு செயலைச் செய்ய முற்பட்டு செய்ய இயலாமையால் ஏற்படுவது. அப்போது அதில் எதிர்பார்ப்பு அதிகரித்து விடலாம். அதனால் ஏமாற்றமாக உணரலாம். மற்றபடி நாமாவது ஏமாறுவதாவது?
            11. நீ வெளிவந்தாலும் ஒன்றுதான், வெளிவராவிட்டாலும் ஒன்றுதான். புதைத்தப் பின் யார் தோண்டிப் பார்க்கப் போகிறார்கள்? முளைத்து வருவது உன் சாமர்த்தியம்!
            12. நான் யார் என்பதைக் காட்ட நினைத்தால் அவர்கள் யார் என்பதைக் காட்ட நினைப்பார்கள். நான் யார் என்பதைக் காட்டாமல் இருந்தால் அவர்கள் யார் என்று புரியாமலே அவர்களும் இருந்து விடுவார்கள்.
*****

23 May 2018

வலைக்குள் சிக்கிக் கொள்ளும் வலை


வலைக்குள் சிக்கிக் கொள்ளும் வலை
            எல்லாம் மனம்தான். வலை விரித்தவனே சிக்கிக் கொள்ளும் வலை அது. குழி வெட்டியவனே விழுந்து விடும் குழி அது.
            அமைதியாக்குகிறது, அமைதியைக் குலைக்கிறது, இயல்பாக்குகிறது, இயல்பை அழிக்கிறது. அது வெறும் மனம்தான். வெவ்வேறு வடிவங்களில் அணுகிப் பார்க்கிறது, ஒரு மாறுவேடக்காரரைப் போல. மாறுவேடக்காரரை உண்மையாக நினைத்துக் கொள்வது போலத்தான் மனதைக் கொண்டவரின் நிலை.
            உண்மையில் அந்த மனம் அவருடையதுதான். இன்னொருவர் மேல் வெறுப்பு கொள்ளும் அந்த மனம் அவருடையதுதான். அது அவர் உருவாக்கிய அல்லது அவருக்குள் உருவான அவரது மனம்தான். அவருள் இருக்கும் வேறொன்றல்ல அது.
            ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு அது ஒவ்வொன்றும் ஓர் இயக்கத்தை உருவாக்கிக் கொள்கிறது. முரண்பாடுகள் முற்று பெறும் போது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.
            மனதைப் பொருத்த வரையில் ஆரம்பத்தில் அது தான் உருவாக்கியப் போராட்டக்களம் என்பதில் தெளிவாக இருக்கும். போகப் போக மனம் அதை மறந்து விடச் செய்யும். மனம் தானே ஒரு போராட்டக்களமாகி விடும். தானே ஒரு போராட்டம் என்ற கற்பிதத்துக்கு ஆளாகி விடும். மனதைப் பொருத்த வரையில் நடக்கும் மோசமான விசயம் இது.
            மனதுக்கு எந்த வழிமுறைகளையும் வழங்க வேண்டியதில்லை. அதற்குத் தேவையான வழிமுறைகளை அது உருவாக்கிக் கொண்டே போகும். அதுதான் மனதின் வழிமுறை. செய்ய வேண்டியது எல்லாம் எளிமையாக இருப்பது மட்டுமே. அதுதான் பாதை. அந்தப் பாதைதான் சரியானப் பாதை.
            உணர்ச்சிகள், எண்ணங்கள் மூலம் அமைக்கும் பாதை மனதின் பாதை. ஆபத்தானப் பாதை. எப்படிப்பட்ட பாதையில் கடந்து வந்தோம் என்பது கூட ஒரு கட்டத்தில் புரியாத நிலையை உருவாக்கி விடும் ஒரு வித போதை நிறைந்த பாதை.
            எப்படிப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது முக்கியம். எளிமைதான் அந்தப் பாதை. அதுதான் கடினமானப் பாதையாகவும் இருக்கிறது. மெத்தையிலேயே படுத்து விட்டு, தரையில் படுப்பதைப் போலிருக்கிறது அது. மனதில் எளிமையாக இருந்து கொள்வது நல்லதொரு பாதை.
            மனதைச் சிக்கலாக்கிக் கொண்டு அவஸ்தைப்படக் கூடாது என்பது கடைசியில் புரியக் கூடும். அப்போது அநேகமாக எல்லாமும் ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடும். அவரவர் அவஸ்தைக்கு அவரவர் சிக்கலாக வளர்த்து விட்ட மனமே சிக்கலாக முளைத்து அவஸ்தைகளைத் தந்து கொண்டிருக்கும். இதை நாள்பட்டுப் உணர்ந்து கொள்வதில் பிரயோஜனம் இருக்காது. நாள்பட்டு இதைத் தாமாகவே உணர்ந்து கொள்ளும் நிலையும் வந்து விடும். அப்போது அதற்கானப் புண்ணியம் இல்லாமல் போய் விடும்.
*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...