31 May 2020

நல்லா வருவே! வெசனப்படாதே!

செய்யு - 465

            ஆட்டோ குண்டுலயும் குழியிலயும் விழுந்து ஆடிட்டுப் போற ரம்மியமே தனித்தாம். அப்பிடியே தொட்டில்ல கொழந்தைய வெச்சு தாலாட்டுறாப்புல ஒரு நெனைப்பு வந்துப்புடும். அத்தோட பெரியவரோட பேச்சும் சேந்துப்புட்டா சொல்லவா வேணும். சுப்பு வாத்தியாரு நடந்தக் கதைய இப்பத்தாம் சொல்ல ஆரம்பிச்சாரு பெரியவருகிட்டெ. சொல்ல சொல்ல அதெ பொறுமையா கேட்டுக்கிட்டாரு பெரியவரு.
            "என்னவோ அவ்வேம் அப்பிடி நெனைக்கிறாம்! நம்ம குடும்பத்துலேந்து போயி நல்லா இருந்தா நமக்குத்தானேம்பீ பெருமெ. பட்டணத்துல எவனெவனோ போயி எப்பிடியில்லாம் ஆவுறாம். அந்த எடத்துல நம்ம பயலுவோ அப்பிடி ஆனா அதுல சந்தோஷந்தானே யம்பீ! கிட்டாம் சின்ன புள்ளயிலேந்தே அப்பிடித்தாம். எல்லாத்துலயும் ஒரு படி ஒசத்திங்ற நெனைப்பு. செரி இருந்துட்டுப் போவட்டும். அதுக்காக நம்ம பயலுக எல்லாம் அஞ்ஞத்தான கெடக்குறானுவோ! ஒரு வார்த்தெ சொன்னா போயிப் பாத்துக்கிட மாட்டானுவோளா? ஏம்டா கார்த்தேசு அங்க கெடக்குறதுல்லாம் ஒம்மட அண்ணங்காரனுவோ, தம்பிக்காரனுவோத்தானெ. மலரு யக்கா இருக்கு, அத்தான் கெடக்குறாரு. அப்பிடியே அரும்பாக்கத்துல ஒரு எட்டு வெச்சிருந்தா ன்னா?"ன்னாரு பெரியவரு.
            "யப்பாத்தாம் வாணாம்னுச்சு! அதாங் யோசிச்சேம் பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "நீயி ஒஞ்ஞ அப்பம் போல ஒரு ஆளுடா. அரும்பாக்கத்துல போயி பாக்குறது இஞ்ஞ வேலங்குடிக்குத் தெரியுதாக்கும்? போயிப் பாத்தீன்னா அப்பிடியா ஒன்னய ஒண்ணுந் தெரியாதவேம் மாதிரியா வுட்டுப்புடுவானுவோ? ஏம்டா இப்பிடி இருக்கீயே? ஏத்தோ நமக்குள்ளுத்தாம் இப்பிடி ஆயிக் கெடக்குதுன்னா, சின்னப் பயலுவோ நீஞ்ஞல்லாம் ஒண்ணடி மண்ணடியுமா கெடக்குறதில்லையா?"ன்னாரு பெரியவரு.
            "நமக்கு அஞ்ஞ அண்ணனோட அட்ரஸ்ஸூ தெரியாதுல்ல பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "சென்னைப் பட்டணம் போறதுக்கு மின்னாடி நம்மள தெரியாம வந்துப் பாத்திருந்தா ஒரு சிட்டுல எழுதிக் கொடுத்திருக்க மாட்டேனா? அவ்வேம் போனுல்லாம் வெச்சிருக்காம். அந்த நம்பர்ர சொல்லிருந்தா கூட ஞாபவத்துல வெச்சிருக்க மாட்டீயா நீயி? இப்பிடி இருந்திருக்கீயேடா?"ன்னாரு பெரியவரு.
            "இன்னொரு வெசயம் பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "சொல்லு!"ன்னாரு பெரியவரு.
            "சந்தானம் அண்ணன் நம்மள ஒரு தவா எழும்பூர்ல வெச்சுப் பாத்துச்சு பெரிப்பா. அண்ணன் ராஜ்தூத் பைக்ல போனப்ப எதேச்சையா நம்மளப் பாத்துட்டு நம்மள கூப்புட்டு நெருங்கி வந்துச்சு. நாம்ம பாக்காத மாதிரிக்கி கூட்டத்துல கலந்துப் போயிட்டேம் பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "அறிவுக் கெட்ட பயலே! அக்கப்போரு! அதாங் பார்ரேம்! சந்தானம் பாத்திருக்காம்லா. ஒமக்கு வர்ற ஆபத்து தெரியப் போயி கண்ணுல பட்டுருக்காம்லாம்டா. நீயி ஓடி ஒளிஞ்சிக்கிட்டா அவ்வேம் என்னடா பண்ணுவாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொஞ்சம் காட்டாம.
            "அட போடா கிறுக்குப் பயெ புள்ளே! அதாங் பாத்திருக்காம், கூப்புட்டுருக்காம். அப்பவாச்சும் அவனெ பிடிச்சிக்கணுமா இல்லியா? சந்தானம் அஞ்ஞ பட்டணம் பூரா சுத்தி வந்துப்புடுவாம். அதாங் நீயி எஞ்ஞ இண்டு இருக்குல இருந்தாலும் ஒன்னயப் பாத்திருக்காம இருக்க மாட்டான்னேன்னு மனசுல நெனைக்குறேம். நீயும் அதுக்குத் தகுந்தாப்புல சேதி சொல்றெ பாரு. அவனெப் பாத்துப் பேசிருந்தீன்னா அஞ்ஞ மலரு யக்கா வூட்டுல கொண்டு போயி வெச்சிருப்பாம். வூட்டுச் சாப்பாடு. நல்ல தண்ணி. ஒடம்புக் கெட்டுப் போயிருக்காது. அவனெ பாத்து ஒன்னய ஒரு நல்ல எடமாவும் வேலையில சேத்து வுட்டுருப்பாம்! நாம்ம இப்போ அவ்வேனுக்குப் போனு பண்ணல. பண்ணிருந்தா சொல்லிருப்பாம். அதாம்னே பாத்தேம் ஆண்டவனா பாத்து காப்பாத்தி வுட நெனைச்சாலும் இவுனுவோ பிடிச்சிக்க மாட்டானுவோ போலருக்கே! இப்பிடிப் பண்ணிட்டு வந்து நிக்குதீயே? இப்ப ஒடம்ப வுட்டுப்புட்டீயே! என்னத்தெ பண்ணுவே? ஒடம்பு இருந்தாத்தானே ஒழைச்சிச் சம்பாதிக்கலாம்! சம்பாதிக்கிறது எதுக்குடா? ஒடம்புக்குத்தானே. அதெ வுட்டுப்புட்டுச் சம்பாதிக்கிறானாம் சம்பாதிப்பு? பாருங்கம்பீ! இவுனுவோல்லாம் எப்பிடி இருக்கானுவோ?"ன்னு சுப்பு வாத்தியார்ர பாத்துச் சொன்னாரு பெரியவரு.
            "நாம்ம சின்னத்தாம்கிட்டெ சொல்லிட்டேம் யத்தாம்! எதெயும் அப்போ உள்வாங்குற நெலையில யில்ல. அதாங் கதையெல்லாம் சொன்னேம்ல. இதெ மனசுல வெச்சிக்கிட்டு இத்து மாதிரி எதாச்சிம் ஆயிப்புடும்னுத்தாம் நெனைச்சி அப்போ சொன்னேம். எந்த நேரத்துல சொன்னேன்னோ அப்பிடியே ஆயிப் போயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அவ்வேம் பேச்சுல்லாம் கேக்கக் கூடாதும்பீ! நீஞ்ஞளாவது நம்மகிட்டெ ரகசியமா ஒரு வார்த்தெ சொல்லிருந்தா அவ்வேம் சந்தானத்தெ வுட்டு சென்னைப் பட்டணத்தைச் சல்லடைப் போட்டு சலிச்சாவது பிடிச்சாந்து வூட்டுல போட்டுக்கடான்னு சொல்லிருப்பேம்! எஞ்ஞ நீஞ்ஞளுந்தாம் சொல்லல. பெறவு என்னத்தெ பண்ணுறது?"ன்னாரு பெரியவரு.
            "போனது போயாச்சு! அதெ வுடுங்கத்தாம்! மேக்கொண்டு ஆவுறதெப் பத்தித்தாம் பேசியாவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒடம்பு கொணம் காணட்டும் யம்பீ! நாமளே சந்தானத்துக்குப் போன போட்டு வேலங்குடிக்கு வாரச் சொல்லி இவனெ பயலெ அழைச்சிட்டுப் போவச் சொல்றேம். அஞ்ஞ கொஞ்ச நாளைக்கி மலரு வூட்டுலத்தாம் இவனெ வுடணும். பெறவு வேணும்ன்னா சந்தானத்து ஆபீஸ்லயோ, பயலுவோ ரூம்லயோ தங்கிடட்டும். அதாஞ் செய்யணும்!"ன்னாரு பெரியவரு.

            கார்த்தேசு அத்தான் ஒண்ணுஞ் சொல்ல முடியாம தவிச்சுப் போச்சு.
            "நாம்ம கூட இருந்த வரைக்கும் ஒங்கப்பனுக்குப் பாத்துப் பாத்துத்தாம் செஞ்சி வெச்சேம். இப்போ பிரிஞ்சிப் போயி நிக்குறாம். பிரிஞ்சிப் போனதோட நிக்காம நம்மளோட எதிரிப் போட்டுக்கிட்டு வேற நிக்குறாம். இந்தக் கூத்தெ நாம்ம எஞ்ஞப் போயிச் சொல்ல? செரித்தாம் கழுதெ கெட்டா குட்டிச் சொவர்ன்னு விட்டுப்புட்டேம்! இப்போ புள்ளய இப்பிடிப் பண்ணி வெச்சிருக்காம்னே! அதெ நெனைச்சாத்தாம்பீ நமக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது!"ன்னாரு பெரியவரு.
            "அதெ வுடுங்கத்தாம்! எல்லாம் நல்லதுக்குன்னு நெனைச்சுக்குங்க. இப்பிடி ஒரு சம்பவம் நடக்கலன்னு வெச்சுக்கோங்க, சின்னத்தான்ன யாரு வழிக்குக் கொண்டார முடியும்னு நெனைக்குறீங்க? கெட்டதுலயும் ஒரு நல்லதுங்ற மாதிரிக்கி, இனுமே இவனுவோ தலைமொறையாவது ஒண்ணா கெடந்துட்டுப் போறானுவோ. வெளி எடத்துல, பெறத்தியாருக்கு மின்னாடி ஒண்ணா இருந்தாத்தான மதிப்பு. அப்பத்தான நம்மள நாலு பேத்து மதிப்பாம். இப்பிடி ஒத்த மரமா நின்னா தூக்கிப் போட்டுத்தாம் மிதிப்பாம். அதாங் பாருங்களேம் ஒடம்பு முடியாதவனெ சென்னைப் பட்டணத்துலேந்து ஒத்தையா ரயிலேத்தி அனுப்பி வுட்டுருக்கானுவோளே கூட இருந்த பயலுவோ? வழியில எஞ்ஞயாச்சும் மயங்கி வுழுந்து கெடந்தான்னா என்னாவுறது நெனைச்சிப் பாருங்க யத்தாம்? நல்ல வேளையா அப்பிடில்லாம் ஒண்ணும் நடக்காம வூடு வந்து சேந்திருக்காம் பயெ! அதெ நெனைச்சித்தாம் திருப்திப்பட்டுக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் செரிடாம்பீ! சென்னைப் பட்டணத்துல எஞ்ஞடா கெடந்தே நீயி?"ன்னாரு பெரியவரு கார்த்தேசு அத்தானப் பாத்து.
            "எழும்பூரு பெரிப்பா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "அதாம்பீ! நாம்ம ரயிலுல போயி எறங்குவோம்ல!"ன்னாரு பெரியவரு சுப்பு வாத்தியார்ர பாத்து.
            "தெரியுது யத்தான்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நடந்தது நடந்துச்சு. இனுமே ஒனக்கு எல்லாம் நல்ல காலந்தாம். நீயி சந்தானத்தோட வேல பாத்தாலும் செரித்தாம், யில்ல நீயி படிச்சப் படிப்புக்கு ஏத்த மாதிரிக்கி வேலையில இருக்குறதுன்னாலும் செரித்தாம், அதெ சந்தானம் பாத்துப்பாம். மாரி, ராமு, சுப்புணின்னு எல்லா பயலும் அஞ்ஞத்தாம் போயிக் கெடக்குறானுவோ. ஒண்ணுக்கு நாலா தொணையா இருப்பானுவோ. நீயும் அவனுவோ கூட கெடக்கலாம். அவனுவோளும் ஒங் கூட கெடப்பானுவோ. அஞ்ஞ ரூமு ஒண்ணுத்தெ எடுத்துக்கிட்டு எல்லா பயலும் மலரு அக்கா வூட்டுலத்தாம் சாப்புட்டுக்கிறானுவோ. ஒன்னய வேணும்னாலும் ஒடம்பு முடியாம தேறுறதால மலரு யக்கா வூட்டுலயே போட்டுப்புடுவேம். ஒமக்கென்னடா மவராசம்டா! நல்ல வருவே வா!"ன்னாரு பெரியவரு.
            இதையெல்லாம் கேக்க கேக்க கார்த்தேசு அத்தானுக்குக் கண்ணுல தண்ணிக் கோத்துக்குது. கன்னத்துல தண்ணியா வழியுது. பெரியவரு அதெ பாத்துட்டு தொடைச்சி வுடுறாரு.
            "அழாதடாம்பீ! ஒமக்கு எல்லாம் இனுமே எப்பிடி நடக்குதுன்னு பாரு! நீயும் சென்னைப் பட்டணத்துக்குப் போயி தம்பியையும் அழைச்சுக்கோ! நம்ம வேலங்குடியிலேந்து எத்தனெ பேரு அஞ்ஞ சந்தானத்துக்கிட்டெ போயி என்னமா சம்பாதிச்சிட்டுக் கெடக்கானுவோ? என்னம்மா வளந்து நிக்குறானுவோ? எவனெவனுக்கோ செய்யுறப்போ தம்பிக்காரனுக்குச் செய்ய மாட்டானாடா என்னடாம்பீ? எதுக்குடாம்பீ நீயி வெசனப்படுறே? பழனியாண்டவரு இருக்காரு, ஆஞ்சநேயரு இருக்காரு ஒன்னயப் பாத்துக்கோ!"ன்னு பெரியவரு சொல்லி முடிச்சாரு.
            இவுங்க பேசிட்டு இருக்குறதுக்கு இடையில இப்படிப் போங்க, அப்பிடி திருப்புங்கன்னு சுப்பு வாத்தியாரு வழியச் சொல்லிட்டு வர்றாரு. ஆட்டோ ட்ர்ருட்டு டர்ருட்டுன்னு சத்தத்தெ கேக்க வுட்டுப்புட்டு அது பாட்டுக்குப் போயிட்டு இருக்கு. பேச்சும் ஓடிட்டு இருக்கு. முடிவா இப்போ ஆட்டோ வேலங்குடி சின்னவரு வூட்டுக்கு மின்னாடி நின்னுச்சு.
            ஆட்டோ நின்னு சுப்பு வாத்தியாரு எறங்கி, கார்த்தேசு அத்தான் எறங்குது. அதுக்குப் பெறவு பெரியவரு எறங்குறாரு. இதெப் பாத்துப்புட்டு சின்னவரு ஓடியாந்து மவனெ கட்டிப் பிடிச்சிக்கிறாரு. ரசா அத்தையும் வெளியில வந்துடுச்சு.
            "ஆஸ்பத்திரியில என்னாம்பீ சொன்னாங்க? டாக்கடரு என்னாம்பீ சொன்னாரு?"ன்ன தழுதழுக்குறாரு சின்னவரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
            "உள்ள வாஞ்ஞ மொதல்ல. உக்காந்து நெதானமாப் பேசுவோம். ஆட்டோக்கார யம்பீ உள்ள வார்றது? ஒரு வாயி டீத்தண்ணியக் குடிச்சிட்டுக் கெளம்பலாம்!"ன்னாரு பெரியவரு.
            "நூத்து இருவது ரூவாயக் கொடுத்து முடிச்சீங்கன்னா அடுத்தச் சவாரியப் போயிப் பாப்பேம் பெரியவர்ரே!"ன்னாரு ஆட்டோ டிரைவரு.
            "நூத்து இருவது ரூவாயா? நூத்து ரூவாத்தாம்!"ன்னாரு பெரியவரு.
            "வெயிட்டீங்கலாம் போட்டீயேல்லா! அரை நாளு ஆக்கிப் பூட்டீங்க. சவாரி போயிடுச்சு. ஒடம்பு முடியாம அழைச்சிட்டு வார்றீங்கன்னுத்தாம் கொறைச்சிச் சொல்றேம்!"ன்னாரு ஆட்டோ டிரைவரு.
            "நூத்து ரூவாயக் கொடுங்கம்பீ!"ன்னாரு பெரியவரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து. சுப்பு வாத்தியாரு சட்டைப் பையிலேந்து நூத்து ரூவாய் நோட்டு ஒண்ணுத்தையும், இருவது ரூவாயி நோட்டு ஒண்ணுத்தையும் எடுத்துக் கொடுத்தாரு. ஆட்டோ டிரைவரு அதெ வாங்கிட்டு சந்தோஷமா, "ரொம்ப நன்றிங்க அண்ணாத்தே!"ன்னு சொல்லிட்டுக் கெளம்பிட்டாரு.
            பெரியவரு சுப்பு வாத்தியார்ர ஒரு பார்வைப் பாத்தாரு பாருங்க, அதுக்குச் சுப்பு வாத்தியாரு, "சந்தோஷமா போவட்டும் யத்தாம்! நம்மள்ல ஒருத்தரு போல கெடந்திருக்காரு! நம்ம பயெ கொணம் கண்டா போதும்!"ன்னாரு.
            "கொடுக்குறதுன்னு முடிவெ பண்ணிப்புட்டே! பெறவு நாம்மச் சொல்லியா கேக்கப் போறே?"ன்னுட்டு பெரியவரு எல்லாத்தையும் உள்ளார அழைச்சாந்து, சாமி மாடத்துக்கு மின்னாடி வாங்கியாந்த மருந்து மாத்திரை, ஆர்லிக்ஸ் பாட்டிலு எல்லாத்தையும் எடுத்து வெச்சாரு. "யப்பா பழனியாண்டவா! நீந்தாம் எல்லாத்தியும் காபந்து பண்ணி வுடணும். ஆஞ்சநேயா நீந்தாம் எல்லாத்துக்கும் மனசுல தெம்ப கொடுக்கணும்! ஆஸ்பிட்டலுக்குப் போயாச்சு. டாக்கடர்ர பாத்தாச்சு. கொணம் பண்ணிப்புடலாம்ன்னு மருந்து மாத்திரையல்லாம் எழுதிக் கொடுத்துட்டாரு. நேரா நேரத்துக்கு அதெ சரியா கொடுக்கணும். ந்நல்ல சத்தான ஆகாரமா பண்ணிக் கொடுத்தாவணும். இப்போ கொஞ்ச நாளுக்குச் சாப்பாடு எறங்காதாம். கஞ்சித் தண்ணி, இட்டலி, இடியாப்பம்னுத்தாம் கொடுத்து ஆர்லிக்ஸூத்தாம் ஆத்திக் கொடுத்தாவணும். அதுக்குப் பெறவு ஒடம்பெ தேத்தியாவணும். என்னத்தெ பண்ணணுங்றதெ நாம்ம சொல்றேம். நாமளெ வந்துப் பண்ணிக் கொடுக்குறேம்!"ன்னு சொல்லிக்கிட்டே, பழனியாண்டவர் சந்நிதியில மடிச்சி எடுத்தாந்த விபூதியை எல்லாரு நெத்தியிலயும் பூசி வுட்டாரு பெரியவரு. 
            சின்னவரு ஒண்ணும் பேசல. அப்பிடியே நெடுஞ்சாண்கிடையா பெரியவரு கால்ல வுழுந்தாரு. பெரியவருக்குக் கண்ணு கலங்கிட்டு. "நாம்ம அப்பங்கார்ரனா இருந்து என்னத்தெ புண்ணியம்? நீந்தானே நம்மட தானத்துல நின்னுப் போயிச் செய்யுறே!"ன்னாரு சின்னவரும் கண்ணு கலங்க இப்பத்தாம் பெரியவருகிட்டெ வாயைத் தொறந்துப் பேசுனாரு.
            "அவ்வேம் நம்மட யம்பீக்குத்தாம் அலைச்சலு! அவ்வேம் இல்லன்னா இஞ்ஞ நம்மக் குடும்பம் யில்ல!"ன்னுச்சு ரசா அத்தை.
*****


31.0


31.0
            தொடர்ச்சியாக எழுத வேண்டிய ஒரு நாவலை ஓர் இடைவெளி விட்டு எழுதுவது என்பது அபத்தம். அதுவும் அந்த இடைவெளி சிறிது என்று கூறி விட்டு அதை பெரிதாக்கிய குற்றத்திற்கு நாவலாசிரியர் வாசகர்களிடம் மன்னிப்பைக் கோருவதைத் தவிர வழியில்லை. அநேகமாக இந்த நாவல் என்னது என்பது குறித்து வாசகர்கள் மறந்திருக்கலாம். அது நல்லது. நல்லது என்றால் மிகவும் நல்லது. எந்த ஒன்றும் நினைவில் இருப்பதைப் போன்ற சுமை வேறெதுவும் இல்லை. உங்களை மறதியில் தள்ளி இந்த நாவல் தன்னைத் தானே விடுவித்திருந்தால் அதற்காக நீங்கள் இந்த நாவலுக்கு நன்றிச் சொல்லத்தான் வேண்டும்.
            உலகில் இருக்கும் மோசமான நாவல்கள் செய்யும் மோசமான வேலையை இந்த நாவல் செய்யாது. ஒரு சோகத்தை உங்கள் மனதில் சுமக்க வைப்பதையோ, உற்சாகத்தை உங்கள் உள்ளுக்குள் அள்ளி நிரப்புவதையோ, ஒரு பாரத்தை உங்கள் நெஞ்சாங்கூட்டில் போட்டு வைப்பதையோ செய்யாத உன்னத நாவலாக இதை நீங்கள் பார்க்கலாம்.
            இந்த நாவலை முன்பு தொடர்ச்சியாகப் படித்ததெல்லாம் மறந்து போயிருந்தால் அதற்காக நீங்கள் முன்பு சென்று படித்து விட்டு இப்போது இந்த இடத்திலிருந்து தொடர வேண்டியதில்லை. இந்த நாவலை நீங்கள் எந்த இடத்திலிருந்தும் தொடரலாம். இந்த நாவலின் பெயரே வாசகர்கள் பல நாள் வாசித்த பின்புதான் வெளியானது. பல நாட்கள் பெயரற்ற நாவலாக வாசிக்கப்பட்ட இந்த நாவலின் தலைப்பு மறந்திருந்தால் அதுவும் நல்லதுதான். அப்படி மறந்திருந்தால் உங்களைப் பொருத்த வரையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம். அதுதான் வேண்டும். தாக்கம் என்பது மோசமானது. அது தாக்குதலை விட மோசமானது.
            நாவலின் தாக்கம் என்பது நாவலைப் பின்பற்றும் பல மனநோயாளிகளை உருவாக்கியிருக்கிறது. மனநோயாளிகள் பாவம், சிறைபட்ட கைதிகளைப் போல. அவர்களுக்கான சிறைகள் யாராலும் கட்டப்படுவதில்லை, அவர்களே கட்டிக் கொள்வது. அதற்குப் பெரும்பாலான நாவல்கள் செங்கற்களை வழங்கியிருக்கின்றன. மாறாக இந்த நாவல் கட்டிய கட்டடங்களை உடைத்தெறியும் ராட்சச எந்திரத்தைப் போன்றது.
            கட்டுவது நீண்ட கால செயல்முறை, உடைத்தெறிவது சில மணி நேர செயல்துறை என்றுதானே நினைத்திருக்கிறீர்கள். அதுதான் தவறு. மனதைப் பொருத்த வரையில் அது அப்படியே உல்டா. கட்டியது சில நொடி செயல்முறையாக இருக்கும். அதை இடித்தெறிவது என்பது நீண்ட கால செயல்முறை. என்றாலும் அது மின்னலைப் போல சில நொடிகளுக்குள் நிகழக்கூடியது. அப்பிடி நிகழ நெடுங்காலம் பிடிக்கும். ஏனென்றால் ஒரு மின்னல் உருவாவதற்கு பூமியில் இருக்கும் நீரை உறிஞ்சியெடுத்து, மேகத்தை உண்டு பண்ணி, அதை மோத விட்டு என்னென்னவோ வேலைகளை வானம் செய்ய வேண்டியிருக்கிறது. பார்ப்பதற்கு உங்களுக்கு அது சில நோடி நேர வேலையைப் போல தெரிகிறது. அது நீண்ட கால கண்ணோட்டமுடைய செயல் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லா செயல்பாடுகளும் நீண்ட கால செயல்பாடுகள்தான். விளைவுகள் பட்டென மின்னி மறைபவை. உங்களால் அந்த நீண்ட கால ரசவாதத்தைப் பார்க்க முடியாது.
            மீண்டும் இந்த நாவலின் தலைப்பு குறித்து ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நாவலின் தலைப்பு உங்களுக்கு நினைவு இருந்தால் நீங்கள் அதை நாவலாசியருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறீர்கள். தன்னை மறந்து எழுதும் நாவலாசிரியருக்கு வாசகர்கள் அதை அடிக்கடி நினைவுபடுத்த கடமைப்பட்டவர்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அத்துடன் வாசிக்கும் நீங்களும், எழுதும் நாவலாசிரியரும் கலந்தே இந்த நாவலைப் படைக்கிறோம் என்பதை எந்த இடத்திலும் அசட்டையாக விட்டு விடக் கூடாது.
            இந்த நாவல் செழுமை அடைய வேண்டும் என்றால் அநேகமாக நீங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வழங்கிய பின் உங்களிடம் ஒன்றும் இருக்காது பாருங்கள். அந்த வெற்றிடம் உண்டாக வேண்டும். அந்த வெற்றிடத்தில்தான் இந்த நாவல் வந்து உக்கார முடியும். இந்த நாவல் மிகப்பெரிய வெற்றிடம். ஆகவே உட்கார மிகப்பெரிய வெற்றிடம் தேவை. அதை உருவாக்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இந்த நாவலை அவ்வளவு சீக்கிரமாக முடிக்க நாவலாசிரியர் பிரியப்படவில்லை. அதற்கான பிரதான பயங்களுள் ஒன்று, சீக்கிரமாக முடித்தால் இதை யாரேனும் புத்தகமாகப் போட முயற்சிக்கலாம். அது நடப்பதனால் உண்டாகும் எந்திரங்களின் சத்தத்தைக் கேட்டாலே காதுகள் படபடக்கின்றன. பாவம் அச்சடிப்பாளர்கள் தடக் தடக் படக் படக் சத்தத்தோடு போராடுகிறார்கள். வாசிப்பவர் அந்த இம்சை இல்லாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார் பேரொலிகளை உணரும் பிரக்ஞையில்லாமல்.
*****


30 May 2020

பழனியாண்டவா! ஆஞ்சநேயா!

செய்யு - 464

            "இவனெ நடக்க வுட்டா செரிப்படாது. ஒரு ஆட்டோவ பிடிம்பீ!"ன்னாரு பெரியவரு.
            "ஆட்டோவப் பிடிச்சி அப்பிடியே அதுலயே கூட வூட்டுக்குக் போயிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏம் பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போயி பஸ்ஸப் பிடிச்சிக்கிடலாம்! எம்மாம் காசும்பீ செலவு பண்ணுறது?"ன்னாரு பெரியவரு.
            "பஸ்ஸப் பிடிச்சி ராயநல்லூர்ல எறங்கி பெறவு வேலங்குடிப் போவணும். ரோடு சரியில்ல. அந்த ரோட்டுல வந்துட்டுப் போறதுக்கோ வைத்தியம் பாக்குறாப்புல ஆயிடும். வாணாம் யத்தாம்! ஆட்டோலயே போயிடலாம்! பயலோட ஒடம்பெ வுட காசியா முக்கியம்?"ன்னுட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்த ரண்டு பயலுகள வேற வரச் சொல்லிட்டோமே! பாவம் தண்டமா திரும்புறாப்புல இருக்கு! இப்பிடிக் காரியம் சுலுவா முடியும்ன்னா வந்திருக்க சொல்ல வேண்டியதில்லே. அவனோளும் வந்துட்டுனாவோ. நல்லதாச் போச்சு. போறதுதாங் போறோம். அப்பிடியே கீழ வீதி தேரடி முட்டிக்கிட்டெ போயி பழனியாண்டவர் சந்நிதிக்கும், அப்பிடியே எதுத்தாப்புல ஆஞ்சநேயரு கோயிலுக்கும் போயி பயலுக்கு ஒரு அர்ச்சனையப் பண்ணிப்புட்டா சீக்கிரமா கொணம் கண்டுப்புடுவாம். நம்ம கையில ன்னாம்பீ இருக்கு? நாம்ம தூக்கியாரலாம், டாக்கடருகிட்டெ காட்டலாம். கொணப்படுத்துறது அவ்வேம் நெனைச்சாத்தாம்!"ன்னாரு பெரியவரு கைய மேல காட்டுனாப்புல.
            சுப்பு வாத்தியாரு ஆட்டோவைப் பிடிச்சாரு. பெரியவரு, சுப்பு வாத்தியாரு ரெண்டு பக்கமும் உக்காந்துக்க, கார்த்தேசு அத்தான் நடுவுல உக்காந்துகிட்டது. குமாரு அத்தானும், தாசு அத்தானும் டிரைவரு பக்கத்துல ஆளுக்கொரு பக்கமா உக்காந்துகிட்டாங்க. ஆட்டோ வடக்குவீதியச் சுத்தி பழனியாண்டவர் சந்நிதியில நின்னுச்சு. எல்லாரையும் எறக்கி வுட்டு பெரியவரு அர்ச்சனைத் தட்டு ஒண்ணுத்த வாங்கிக்கிட்டு, கொஞ்சம் வெசாரிச்சாரு, கொஞ்சம் நெதானிச்சாரு. பெறவுத்தாம் எல்லாத்தையும் கூப்புட்டுக்கிட்டு பழனியாண்டவரு சந்நிதியில காலடி எடுத்து வெச்சாரு. பழனியாண்டவரு ராசா கோலத்துல காட்சித் தந்தாரு.  கார்த்தேசு அத்தான் பேர்ல ஒரு அர்ச்சனையப் பண்ணாரு. அர்ச்சனைப் பண்ணி, சாமி தரிசனத்து முடிச்சிட்டு ஒடனே கெளம்பக் கூடாதுன்னு ஒரு அஞ்சு நிமிஷம் எல்லாரையும் உக்காரப் போட்டாரு.
            அப்பிடி உக்காரப் போட்டப்போ பெரியவரு ஒரு சங்கதியச் சொன்னாரு, "பழனியாண்டவரு சந்நிதி இருக்குல்லா ரொம்ப சக்தி வாய்ஞ்சது. பழனியில இருக்குற முருகங் கோயிலுக்கு நெகரானது. அஞ்ஞப் போவ முடியாதவங்க இஞ்ஞயே கும்புட்டுக்கிடலாம். இருந்தாலும் அதுலயும் ஒரு வெசயம் இருக்கு. நெறையப் பேத்துக்குத் தெரியாது. இஞ்ஞ வந்து கோயில்ல பாக்குறப்போ முருகனெ எந்தக் கோலத்துல பாக்குறோமோ அந்தக் கோலத்துக்கு வாழ்க்கை வந்துப்புடும். நீயி வந்து பாக்குறப்போ முருகஞ் செல சோடிக்காம ஆண்டிக் கோலத்தோட இருந்தா ஆண்டியா போயிடுவே! அப்பிடில்லாம்ம சோடிச்சி ராசா கணக்கா முருகஞ் செல இருந்துச்சுன்னா நீயும் அந்தச் செல மாதிரிக்கி ராசாவா போயிடுவே. பழனியாண்டவரு கோயிலுக்கு வர்றப்போ மட்டும் நேரம் காலம் பாத்து சுத்தி நிக்குற ஆளுககிட்டெ கோயில்ல என்னா நடக்குதுன்னு வெசாரிச்சுக் கேட்டுப்புட்டு வெவரம் அறிஞ்ச பின்னாடித்தாம் வாரணும். அது புரியாமா வந்து நின்னுப்புட்டு பழனியாண்டவர் சந்திக்குப் போனேம், அரசனா இருந்த நாம்ம ஆண்டியாயிட்டேம்னு சொல்லப் படாது. ஆண்டியா இருக்குறவெங் அரசனா ஆவுற நேரம் பாத்து வாரணும். அதுலத்தாம இருக்கு சூக்குமம். இப்போ நாம்ம வந்த நேரம் பாத்தியா? நாம்ம அர்ச்சனெ தட்டு வாங்குறப்பவெ வெசாரிச்சிட்டேம். கார்த்தேசு வந்த நேரம் முருகஞ் செல சோடிச்சு எம்மாம் அம்சமா இருந்துச்சு. அதெ பாத்திருக்காம் கார்த்தேசு. இனுமே அவனும் வாழ்ககையில எம்மாம் அம்சமா ராசா கணக்கா வாரப் போறாம் பாரு!"ன்னாரு பெரியவரு.
            சுப்பு வாத்தியாரு அதெ கேட்டுச் சிரிச்சிக்கிட்டாரு. "என்னாம்பீ சிரிப்பு? நாம்ம போய்யிச் சொல்றேம்ன்னு கதெ வுடுறேம்ன்னு நெனைக்குதீயளா?"ன்னாரு பெரியவரு.
            "அப்பிடியில்ல யத்தாம்! நாம்ம செல புத்தகங்கள்ல படிச்சிருக்கேம், முருகனோட ஆண்டிக் கோலங்றது ஞானக் கோலம்ன்னும், சோடிச்சக் கோலங்றது ராசக் கோலம்ன்னும். ராசா மாதிரி அனுபவிக்கிறப்போ ஞானம் கெடைக்காதுன்னும், ஞானம்கெடைச்சி பின்னே ராசா மாதிரி அனுபவிக்கிற மனசு வாரதுன்னும், எதாச்சிம் ஒண்ணுலத்தாம் மனுஷ வாழ்க்கெ நிக்க முடியுங்றதெ காட்டுறாப்புலத்தாம் அதெ பத்திக் கேள்விப்பட்டிருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் செரி! குடும்பத்துல இருக்குற நாம்ம ஆண்டிக் கோலம் போட்டுக்கிட்டு ஞானந்தாம் பெரிசுன்னு போயிட முடியுமா? ராசா மாதிரிக்கி இருந்தாத்தாம் புள்ளீயோள வளத்து ஆளாக்கலாம், நாலு பேத்து மின்னாடி எப்பிடி குடித்தனம் பண்றேம்ன்னு பெருமெ பேசலாம்! தொறந்து போறவங்களுக்கு ஒரு கோலம், குடித்தனம் பண்ண போறவங்களுக்கு ஒரு கோலம்ன்னு ரெண்டு கோலத்துலயும் நின்னு ரண்டு பேத்துக்குமே காட்சித் தர்றவேம் முருகன்னுத்தாம் நாம்ம அதெ அர்த்தம் பண்ணிக்கிடணும். நாம்ம முருகனோட ராசா கோலத்தத்தாம் பாக்க நெனைக்கணும். இதோட அர்த்தம் என்னான்னா, எங்கனாச்சும் போனா சட்டுபுட்டுன்னு எதுலயும் உள்ளார நொழைஞ்சிடக் கூடாது? நெலமெ எப்பிடி என்ன மாதிரி இருக்குங்றதெ அனுமானிச்சிக்கணும், வெசாரிச்சிக்கணும், பெறவுத்தாம் காலடி எடுத்து வைக்கணுங்றதுதாம் பழனியாண்டவர் சந்நிதி சொல்ற சேதி. கோயிலுக்கே இப்பிடின்னா, தெய்வத்தெ பாக்க வாரப்பயே இப்பிடி இருக்குன்னா ஒரு வூடு, வேலன்னு போறப்போ எததெ எப்பிடி இருக்குன்னு மொதல்ல வெசாரிச்சிக்கணும். பெறவு அடியெடுத்து வெச்சோம்ன்னா ராசா மாதிரிக்கி இருக்கலாம்லா!"ன்னாரு பெரியவரு.

            "ஏம் மாமா முருகனுக்கு வள்ளி, தேவானன்னு ரண்டு பொண்டாட்டில்லா. அதுக்கு என்னா அர்த்தம்?"ன்னுச்சு இப்போ கார்த்தேசு அத்தான் கொஞ்சம் வேடிக்கையான மனநெலைக்கு வந்தாப்புல.
            "ரண்டு பொண்டாட்டியக் கட்டுனாலும் குடும்பமா ரண்டையும் வெச்சு ஒத்துமையா இருக்கணுங்றதுதாம் அர்த்தம். ரண்டு பொண்டாட்டின்னு ரண்டு குடித்தனம் பண்ணக் கூடாது. குடித்தனங்றது ஒண்ணுத்தாம். நம்மக் குடும்பத்தையே எடுத்துக்கோ. ரண்டா பிரிஞ்சிக் கெடக்குறேம். எங் குடும்பத்துல அஞ்சு சிங்கப் புள்ளீயோ, ஒங் குடும்பத்துல ரண்டு சிங்கப் புள்ளீயோ. ஏழு சிங்கப் புள்ளீயோ இருக்குறதுக்கு ஊருல எப்பிடி இருக்கணும்? ஊரையே நாம்மத்தானே ஆளணும். ஆன்னா பிரிஞ்சுல்லா கெடக்குறேம். அப்பிடிக் கெடக்கக் கூடாதுங்றதுதாம் அர்த்தம். முருகனெ பாரு எஞ்ஞப் பாத்தாலும் வள்ளி தேவானையோடத்தாம் பாக்கலாம். சரி சமமா வெச்சி நிப்பாரு. அவரு அப்பங்கூட சிவனாரு புள்ளே பார்வதிய வெச்சிருக்கிறது தெரியும், கங்கய வெச்சிருக்கிறது வெசயம் தெரிஞ்சவுங்களுக்த்தாம்தெரியும். பெருமாளுப் புள்ளைய எடுத்துக்கிட்டாலும் சீதேவிய வெச்சிருக்கிறது தெரியும், பூமா தேவிய வெச்சிருக்கிறது வெசயம் புரிங்சவங்களுக்குத்தாம் தெரியும். முருகப் புள்ளே அப்பிடில்ல. இந்த வெசயத்துல அப்பனுக்கே பாடம் எடுத்தவருல்லா! அவரு மாதிரிக்கி ரண்டு பொண்டாட்டில்லாம் கட்டிக்கணும்னு நிக்காதே. ஒண்ணு போதும். அண்ணம் தம்பிகளோட அந்தபடிக்கி ஒத்துமையா இரு. அதுதாங் வெசயம்! ஒனக்குந்தாம் கலியாண வயசு ஆவப் போவதுல்லா. சொல்ல வேண்டிய வெசயம்தான்னு!" ன்னாரு பெரியவரு கண்ண அடிச்சிக்கிட்டே.
            "யத்தாம் ஆட்டோ வேற கெடக்குது. நேரம் ஆயிட்டே போவுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் செரி! பேச்சுல பிடிச்சா இப்பிடித்தாம். ஆன்னா இந்தப் பேச்சுதாம்பீ கொணம்ங்றது. அத்துத்தாம் கொணம் காணப் பண்ணும். மனசெ வுட்டுப் பேசிப்புபட்டாவே ஒடம்புல ஒண்ணு தங்காது. நோயி நொடில்லாம் ஓடிப்போயிடும். அப்பிடியே ஒரு எட்டு எதுத்தாப்புலத்தானே ஆஞ்சநேயரு கோயிலுக்கு போயிட்டுக் கெளம்பிடலாம் சட்டுபுட்டுன்னு!"ன்னாரு பெரியவரு.
            "ராசா கோலத்துக்கு முருகனெ பாத்தாச்சு! கார்த்தேசு ராசாவாப் போறாம். யடுத்து பெரம்மச்சரியக் கோலத்துக்கு ஆஞ்சநேயரா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டெ.
            "அங்கத்தாம் யம்பீ தப்புப் பண்றீயே! புத்தகத்தெ படிச்சவம்லாம் இப்பிடித்தாம் எகனைக்கு மொகனையா இருக்கீயே! அத்துவா அர்த்தம் அதுல. ராமன் சீத்தா குடித்தனத்துக்கு ஒத்தாசியா இருந்தது யாரு? ஆஞ்சநேயருதானே. ரண்டு பேத்தையும் ஒண்ணு பண்ணது யாரு? ஆஞ்சநேயருதானே. அப்பிடி இருக்கணுங்ற பாடத்தெ படிக்கணும். இந்த ஊர்லத்தாம்பீ இப்பிடி டாக்கடர்ர பாத்துட்டு கோயிலப் பாக்கலாம். எந்த ஊர்லயும் இல்லாத விசேசம் இத்து, டாக்கடரும், சாமியும் ஒண்ணா இருக்குறது. அத்துல ஒரு விசயத்தெப் பாரு! லங்கா யுத்தத்துல ராமனும், லட்சுமணனும் மயங்கிப் போயிடுறாங்க. அப்போ சஞ்சீவி மூலிகையக் கொண்டாந்தாத்தாம் ரண்டு பேத்தையும் பொழைக்க வைக்கலாங்ற நெலமெ. அதெ கொண்டாந்து பொழைக்க வெச்சது யாரு? ஆஞ்சநேயருல்லா. அதால ஒருத்தெம் என்ன நெலமையில கொணமாவ முடியா நெலையில இருந்தாலும் செரித்தாம் ஆஞ்சநேயான்னு போயிக் கால்ல வுழுந்துட்டா போதும், அவரு பாத்துப்பாரு. எந்த சஞ்சீவி மூலிகையெ கொடுக்கணும்னு அவருக்குத் தெரியும். இப்போ அவருதாம் பயலுக்கு முக்கியமான மருந்து. அவரெ ஒரு எட்டுப் பாத்துட்டுப் போயிட்டா வேல முடிஞ்சிது. பெறவு பாரு பய எப்பிடி ஆஞ்சநேயரு மாதிரிக்கி நெஞ்ச நிமுத்திக்கிட்டு நடக்குறாம்னு!"ன்னாரு பெரியவரு.
            பெரியவரு ரோட்டுக்கு குறுக்கால நடந்து ஆஞ்சநேயரு கோயிலுக்குப் போனாரு. எல்லா சனமும் அவரு பின்னாடி சேர்ந்து போனுச்சு. "ஆஞ்சநேயர்ர நல்ல வேண்டிட்டு கொடுக்குற துளசித் தீர்த்தத்தெ வாங்கிக் குடி! வடெ மால சாத்துறேம்ன்னு வேண்டிக்கோ! பெறவு பாருடாம்பீ!"ன்னாரு பெரியவரு. கார்த்தேசு அத்தான் அப்பிடியே பண்ணுச்சு.
            "பேருக்கு சித்தெ உக்காந்து கெளம்புங்க! நேரமாயிட்டு இருக்கு. வடென்னு சொன்னதும்தாம்பீ ஞாபவத்துக்கு வருது பாரு. உளுத்தம் வடைய வுடவா ஒடம்ப பலம் பண்ணுறதுக்கு ஒண்ணு இருக்குங்றே? அத்து ஒண்ணுப் போதும்பீ! ஒடம்பு நல்லா உருண்டு தெரண்டு வந்துப்புடும். சாமிக்கு படையல்ன்னு வெச்சிருக்காங்க பாரும்பீ உளுத்தம் வடெ, மெளகுப் பொங்கலு, கொண்டைக்கடலெ, புளியஞ்சாதம், தயிரு சாதம், இனிப்பு அடெ, சர்க்கரைப் பொங்கலுன்னு. அதாங் ஆகாரம். அதெ பண்ணிப் போட்டாவே போதும்பீ பயெ திமுரிக்கிட்டுக் கெளம்பிடுவாம்!"ன்னு பெரியவரு சொல்றப்பவே கார்த்தேசு அத்தானுக்கு ஒடம்புல ஒரு தெம்பு வந்தாப்புல இருந்துச்சு.
            "இனுமே எத்து பேசுறதா இருந்தாலும் ஆட்டோவ்ல போயிக்கிட்டெ பேசுவோம் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பாடிகளா மாமாவுக்குக் கோவம் வந்துப்புட்டுடா! வந்து ஏறுங்கடா சட்டுபுட்டன்னு ஆட்டோவுல! ஆஞ்சநேயரு சந்நிதிலத்தாம் ரொம்ப பேச முடியல. ஆஞ்சநேயரு வாயைக் கட்டிப்புட்டாரு. அவரு பேசுற தெய்வமில்லெ, காரியத்துல செஞ்சுக் காட்டுற தெய்வம்ல்லா. அந்தப் படிக்கி இருக்கணுங்றதெ இப்பிடிக் காட்டுறாரு போல, சக்தி வாய்ஞ்ச தெய்வமுல்லா!"ன்னாரு பெரியவரு.
            சனம் ஒவ்வொண்ணும் சட்டுப்புட்டுன்ன கெளம்ப தயாரானுச்சு. எல்லாரும் ஏறுனதும் ஆட்டொ கெளம்புனுச்சு.
            ஆட்டோ கெளம்புனதும் பெரியவரு சொன்னாரு, "யம்பீ! இவுனோள பஸ் ஸ்டாண்டுல எறக்கி வுட்டப்புட்டு பஸ்ல ஏறி வந்துடச் சொல்லிப்புடலாம். பாவம் டிரைவரு யம்பீ செருமப்பட்டு உக்காந்துகிட்டு இருக்கு!"ன்னாரு பெரியவரு.
            அதுபடியே தாசு அத்தானையும், குமாரு அத்தனையும் பஸ் ஸ்டாண்டுல எறக்கி வுட்டுப்புட்டு ஆட்டோ வேலங்குடி நோக்கிக் கெளம்புனுச்சு.
*****


துளியில் நனையும் கடல்

துளியில் நனையும் கடல்

            சீனாவிலிருந்து வந்ததில் வழக்கம் போல் கொரோனா சோதனைக்கருவிகள் தரமற்றவைகளாகி விட, கொரோனா கிருமி மட்டும் எப்படியோ தரமாகப் போய் விட்டது.
*****
            முதலில், உற்பத்தி செய்யும் மதுபானத் தொழிற்சாலைகளை மூடச் சொல்லாமல் மதுபானக் கடைகளை மூடச் சொல்ல முடியாது.
*****
            மதுக்கடைகளைத் திறந்தால் மட்டும் எப்படியோ கொரோனா பயம் போய் விடுகிறது.
*****
            உழைத்தக் காசில் செய்யப்படும் ஒரு ரூபாய் உதவி எப்போதும் வெளியில் தெரிவதில்லை. கொள்ளையடித்த காசில் செய்யப்படும் ஆயிரம் ரூபாய் உதவிகளே எப்போதும் வெளியில் தெரிகின்றன.
*****
            நியாயமான விலையில் பொருள்களை விற்பவர்கள் மனித சமூகத்துக்கு மாபெரும் உதவியைச் செய்தவர்கள் ஆகிறார்கள். அதுவும் கொரோனா காலத்தில் ஒரு பிடி உப்பை ஒரு பைசா உயர்த்தாமல் நியாயமாகக் கொடுப்பவர்கள் மாபெரும் தர்மவான்கள்.
*****
            அம்மாக்களும் அதையே சொல்கிறார்கள், கொரோனா கிருமியும் அதையே சொல்கிறது, "வீடடங்கி இரு!". இரண்டுக்கும் ஒரே மரபணுதான் போல, தொற்றினால் விடுவதில்லை.
*****
            கொரோனா கிருமி இல்லாத நிலையில்தான் எந்த ஒரு நாடும் துணிந்து சொல்ல முடியும், தங்கள் நாட்டில் China Products இல்லை என்பதை.
*****
            கொரோனா ஊரடங்களிலிருந்து வெளியே வந்தவன் சலூன் கடையையும், மதுக்கடையையும் பார்த்ததில் குழம்பிப் போனான், எந்த கட்டிங்கை முதலில் போடுவதென்று?!
*****
            எப்போதும் வீட்டிலேயே அடைந்துக் கிடக்கும் பெண்களுக்குத்தான் தெரியும், கொரோனா என்பது ஆண்கள் வடிவில் அந்தக் காலத்திலிருந்தே இருக்கும் கிருமியென்பது.
*****
            வீட்டிலேயே நீண்ட காலம் அடைந்த கிடக்க முடியாத மனிதன் ஒருவன்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியும்.
*****
            வாசிப்புப் பயணத்தை எந்தக் கொரோனா கால ஊரடங்கும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. நாள்தோறும் பயணிப்பவர்கள் எந்த பாஸூம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
*****
            சில இசங்களைச் சொல்லி அவை எந்தப் புள்ளியில் சந்திக்கும் என்று கேட்கிறார்கள். அவை எந்தப் புள்ளியிலும் சந்திக்காது. ஏனென்றால் அவை இணைகோடுகள்.
*****
            வாய்மை வெல்வதுமில்லை, தோற்பதுமில்லை. அதற்குப் பொய்மையோடு போட்டிப் போட ஒரு போதும் பிடிப்பதில்லை.
*****
            அறிவுரைச் சொல்பவரோடு ஒன்றி விடுங்கள். அவரைப் போல் தூங்க வைக்கும் வேறோரு மனிதரை இந்த உலகில் பார்க்க முடியாது.
*****
            நம்மை அதிகம் தாங்கிக் கொண்டிருப்பவரை நாம் ஒரு போதும் மதிப்பதில்லை. உதாரணம் செருப்பு.
*****


29 May 2020

பார்த்தால் பறந்தோடும்!

செய்யு - 463

            சின்னவரு வூட்டுல இருந்தபடியே வேலங்குடி பெரியவரு சத்தம் போட்டாரு, "எலே கொமாரு! சட்டெ, கடியாரம், தெனசரித் தாளெ, துணிப் பையெ எடுத்துட்டு வெரசா வாடா இஞ்ஞப் பக்கத்துல!"ன்னு.
            குமாரு அத்தான் கொரலு போயிச் சேர்ந்த ரெண்டு நிமிஷத்துல பெரியவரு கேட்டதெ எடுத்துட்டு சின்னவரு வூட்டுக்கு ஓடியாந்துச்சு. ரொம்ப நாளுக்குப் பெறவு குமாரு அத்தானும் இப்பத்தாம் சின்னவரு வூட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்குது. அரசல் புரசலா பக்த்து வூட்டுல நடக்குற சங்கதிங்க இங்க பெரியவரு வூட்டுல செயா அத்தைக்கும், குமாரு அத்தானுக்கும் வுட்ட கொறையா தொட்ட கொறையா கொஞ்ச கொஞ்சம் தெரியத்தாம் செய்யுது. அதுக்குன்னே தயாரா இருந்ததெப் போல, குமாரு அத்தான் கொண்டாந்ததை வேக வேகமா போட்டுகிட்டே, "யம்பீ! அவ்வேம் கிட்டாம் சைக்கிள எடுத்து வெளியில வையுங்க. நேரம் ஆவக் கூடாது. நீஞ்ஞ வண்டியப் பிடிச்சுக்கோங்க. எலே குமாரு யண்ணனப் பிடிடா! கைத்தாங்கலா கொண்டு போயி கேரியர்ல உக்கார வெச்சிட்டு இந்தப் பக்கம் நாமளும், அந்தப் பக்கம் நீயும் பிடிச்சிகிட்டீன்னா ராயநல்லூரு வரைக்கும் வேக வேகமா தள்ளிட்டுப் போயிடுவேம். அஞ்ஞ பஸ்ஸப் பிடிச்சா, திருவாரூரு டவுனு போனா அஞ்ஞயிருந்து ஆட்டோவ பிடிக்கிறது, ஆஸ்பிட்டல்ல எறக்கிடுறது. இப்ப இதாங் திட்டம்!"ன்னாரு பெரியவரு. அவரு சொன்னபடியே ஆயிடுச்சு.
            ரசா அத்தை, "யத்தாம் நாமளும் வாரட்டுமா?"ன்னுச்சு.
            "வாண்டாம் ஆயி! ராயநல்லூரு போற வரைக்குந்தாம் கஷ்டம். ராயநல்லூரு போயாச்சுன்னா திருவாரூரு போன மாதிரிக்கித்தாம். கூட கொமாரு இருக்காம்லா பாத்துக்கிடுறேம். இந்தாருடா கொமாரு ராயநல்லூர்ல வுட்டுப்புட்டு சைக்கிள்ல வந்து இஞ்ஞ சித்தப்பா வூட்டுல அதெ போட்டுப்புடு. போட்டுப்புட்டு அவ்வேம் தாசு பயலயும் கெளப்பிக்கிட்டு கமலாலயக் கரெ ஆஸ்பத்திரி பக்கம் வா! வாரதுக்கு மின்னாடி வயக்காட்டுப் பக்கம் போயி மம்புட்டியும், பில்லு அறுக்குற அருவாளும் கெடக்கும். எடுத்தாந்து வூட்டுல போட்டுப்புட்டு கெளம்புடா!"ன்னாரு பெரியவரு.
            இப்போ, பெரியவரு சொன்னபடியே சுப்பு வாத்தியாரு சைக்கிளப் பிடிச்சிக்கிட்டு நின்னாரு. பெரியவரும் குமாரு அத்தானும் கார்த்தேசு அத்தானை எழுப்பி கைத்தாங்கலா கொண்டாந்து சைக்கிளு கேரியர்ல உக்கார வெச்சா, சுப்பு வாத்தியாரு தள்ளிக்கிட்டே போவ, பெரியவரும், குமாரு அத்தானும் கார்த்தேசு அத்தானை பிடிச்சவாக்குலயே அந்தக் கப்பி கெழண்ட ரோட்டுல வேக வேகமா போறாங்க. தெருவுலயும் கிட்டதட்ட சேதி பரவியிருக்கும் போலருக்கு. தெருவுல நின்ன ஒண்ணு ரண்டு பேரு கவனிச்சிப்புட்டு கேட்குறாங்க. "இப்போ சேதி சொல்ல நேரமுல்ல. வந்துப் பெறவு சொல்றேம்!"ன்னு பெரியவரு சொல்லிகிட்டே வெரசா போறதுல கவனமா இருக்காங்க. இவுங்க ராயநல்லூரு போன நேரமா பாத்து திருத்துறைப்பூண்டி பஸ் ஒண்ணு பஸ் ஸ்டாப்புல திருவாரூருக்குப் போறதுக்கு நின்னுச்சு. கார்த்தேசு அத்தானை பாத்துப் பதனமா பஸ்ல ஏத்திக்கிட்டு பெரியவரும் சுப்பு வாத்தியாரும் பயணப்பட்டாங்க.
            அவுங்க முடிவுப்படியே டவுன்ல எறங்கி ஆட்டோவ எடுத்துக்கிட்டு கமலாலய கரையில இருந்த ஸ்ரீதரன் ஆஸ்பிட்டல்ல கொண்டுப் போயிச் சேத்துப்புட்டாங்க. பெரியவரு கையில கட்டியிருந்த கடியாரத்தப் பாத்தாரு பத்து மணிய நெருங்குனுச்சு நேரம்.
            "டாக்கடரு வர்ற நேரந்தாம் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "டாக்கடரு வந்ததும் வராதுமா மொத ஆளா காட்டிப்புடணும்!"ன்னாரு பெரியவரு. அவுங்க பேசிட்டு இருக்குறப்பவே ஸ்ரீதரன் டாக்கடரு உள்ள நொழைஞ்சாரு. பெரியவரு போயி டாக்கடரோட கையப் பிடிச்சிட்டாரு. அவர்ரப் பாக்குறதுக்குன்னு கூட்டம் ரெண்டு பெஞ்சு நெறைய உக்காந்திருக்கு. ஸ்ரீதரன் டாக்கடரு புரிஞ்சிக்கிட்டாரு.
            "கம் இன்சைட்!"ன்னு சொல்லிட்டு உள்ளாரப் போனாரு டாக்கடரு.
            சுப்பு வாத்தியாரும், பெரியவரும் கார்த்தேசு அத்தானைக் கைத்தாங்கலா டாக்கடரு பாக்குற அறைக்குள்ள உள்ளார கொண்டு போனாங்க. பாத்த ஒடனேயே கணிக்கிற டாக்கடருல்லா ஸ்ரீதரன். அவரு ஒரு பார்வெ பாத்துப்புட்டார்ன்னா வெயாதி துண்டெ காணும், துணியெக் காணும்னு ஓடித்தாம் ஆவணும். பாக்குற பார்வையிலயே, நோயாளியோட பாவனையிலயே எல்லாத்தையும் கப்புன்னு பிடிச்சிடுவாரு. அப்பிடி ஒரு பார்‍வெ அவருக்கு. அதுல அத்தனெ வருஷ அனுபவம் அவருக்கு. கைத்தாங்கலா பிடிச்சிட்டு வர்றப்போ, கார்த்தேசு அத்தானோட நடந்து வர்ற நடை, கண்ணு முழி, ஒடம்பு எல்லாத்தையும் மேலயிருந்து கீழே வரைக்கும் என்னவோ ரசிச்சுப் பாக்குறாப்புல ஒரு பார்வையப் பாத்தாரு. ஒடம்பத் தொட்டும் பாக்கல, கழுத்துல போட்டுருக்குற ஸ்டெத்தாஸ்கோப்ப வெச்சியும் பாக்கல. கார்த்தேசு அத்தானப் பாத்து, "நாக்கெ நீட்டு!"ன்னாரு ஸ்ரீதரன் டாக்கடரு.
            கார்த்தேசு அத்தான் புரியாத மாதிரிக்கி திருதிருன்னு முழச்சிச்சு. "மவனே! நாக்கெ நீட்டுடா!"ன்ன பெரியவரு அவரோட நாக்கை எப்படி நீட்டணும்னு புரிய வைக்கிற மாதிரிக்கி நாக்கெ நீட்டிக் காட்டுனாரு. கார்த்தேசு அத்தானுக்கு அப்பத்தாம் புரியுறாப்புல இருந்துச்சு. கார்த்தேசு அத்தான் நாக்க நீட்டிக் காட்டுனுச்சு. நாக்கு அப்பிடியே வெள்ளைப் பெயிண்டு வெச்சாப்புல வெள்ளை வெளேர்ன்னு இருக்கு.
            ஸ்ரீதரன் டாக்கடரு ஒதட்டை ஒரு சுளிப்பு சுளிச்சிக்கிட்டு, "டைபாய்டு! தட்ஸ் ஆல்!"ன்னாரு பாருங்க, பெரியவருக்கும், சுப்பு வாத்தியாருக்கும் ஆச்சரியம் தாங்கல.
            ஒடனே டாக்கடரு சீட்டுல மருந்து மாத்திரைகள எழுதுனாரு. எழுதி முடிச்சிட்டு, "கொஞ்சம் முத்துன கேஸூத்தாம். தங்கிப் பாக்குறதுன்னாலும் பாத்துக்கிடலாம். வூட்டுக்கு அழைச்சிட்டுப் போயி பாத்துக்கிடறதுன்னாலும் பாத்துக்கிடலாம். ரெண்டு மூணு நாளைக்கி சரியா சாப்பாடு செல்லாது. மல்லுக்கட்டித்தாம் சாப்புடணும். சாப்புட்ட பெறவுத்தாம் மாத்திரையப் போடணும். சாப்பாடு கொள்ளலன்னு சாப்புடாம போட்டா பெறவு வயிறு புண்ணாயி அதுக்குத் திரும்ப வைத்தியம் பண்ணுறாப்புல ஆயிடும்!"ன்னு சொல்லிக்கிட்டெ மருந்து மாத்திரை எழுதுன சீட்டைக் கிழிச்சி சுப்பு வாத்தியாருகிட்டெ கொடுத்தாரு.
            "ஒண்ணும் பயப்படுற மாதிரியில்லயில்லங்க! டெஸ்ட்டுல்லாம் எதாச்சிம்?" ன்னாரு பெரியவரு.

            "அதாங் முத்துன கேஸூன்னு சொன்னேம்ல. டெஸ்ட் எடுத்தாலும் நாம்ம சொல்றதுதாங் வரும். வேணும்ன்னா அதுக்கு எரநூறு முந்நூறு செலவு பண்ணிட்டு எடுத்துட்டு வாங்க!"ன்னு சொல்லிட்டு சிரிச்சவரு, தொடர்ந்து, "கொணம் காணுறதுக்கு பத்து நாளுக்கு மேல ஆவும். ஒடம்பு தேறுறதுக்கு ஒரு மாசம் வரைக்கும் ஆவும்! மாத்திரைய மட்டும் சொன்னபடிக்குச் சரியா கொடுங்க. மற்றபடின்னா தங்குறதுன்னா தங்கலாம். அழைச்சிட்டுப் போறதுன்னா ஒரு வாரம் கழிச்சி மறக்காம வந்துப் பாக்கணும். கொஞ்சம் கொணம் கண்டுச்சு விட்டுப்புடலாம்ன்னு நெனைச்சிப்புடக் கூடாது. கிருமி உள்ளார அப்பிடியே இருக்கும்! அதெ கம்ப்ளீட்டா அழிச்சிட்டு கியூர் பண்ணியாவணும்!"ன்னாரு டாக்கடரு.
            டாக்கடரு சொல்றதெ கேட்டு வாயைப் பொளந்துட்டாரு பெரியவரு. "அடேங்கப்பா பாத்த ஒடனேயில்ல புட்டு புட்டு வைக்குறாம் மனுஷன். வைத்தியத்துல பெரிய நூலறுந்த கொம்பனா இருப்பாம் போலருக்கு, ஒடம்புக்கு முடியலன்னு போனா ரத்தத்தெ டெஸ்ட்டு எடும்பானுவோ, ஒண்ணுக்கு அடிக்கிறதெ புடிச்சி வந்து டெஸ்ட்டு எடுக்கணும்பானுவோ, இவரு என்னான்னா ஒடம்பத் தொட்டுக் கூட பாக்கல, நடந்த நடையப் பாத்தாரு, நின்ன நெலையப் பாத்தாரு, உக்காந்த நெலையப் பாத்தாரு, நாக்கெ நீட்டச் சொன்னாரு, சட்டுன்னு இதாங் வெயாதின்னு ஒரே அடியா அடிச்சி, மருந்து மாத்திரையை எழுதி அஞ்சு நிமிஷத்துல மொத்த சோலியையும் முடிச்சிப்புட்டாரே! டாக்கடருன்னா இப்பிடில்லா இருக்கணும்!"ன்னு நெனைச்சுக்கிட்டாரு. பெரியவரு அப்படி நெனைச்சுட்டு இருக்குறப்பவே, "இப்போ வூட்டுக்கு அழைச்சிட்டுப் போவலாமா டாக்கடரு? டைபாய்டுன்னு வேற சொல்றீஞ்ஞ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            பெரியவருக்குக் கடெசியா ஒரு சந்தேகம் மனச வுட்டுப் போவல, ஊசிப் போடாலன்னா அவரு என்னா டாக்கடருன்னு? ஒரு ஊசிப் போட்டாத்தானே வெயாதி சட்டுன்னு மட்டுப்படும்னு நெனைச்சவரு, "ஊசி ஏதும் போடலீங்களா டாக்கடரு?"ன்னாரு பெரியவரு.
            "அழைச்சிட்டுப் போவலாம், நத்திங் டூ ஒர்ரி. ஊசில்லாம் வேண்டாம். வியாதி இதுதான்னு சரியா டயக்னஸ் பண்ணிட்டா, அதுக்குச் சரியா மருந்தெ கொடுத்துட்டா போதும். இப்போ இருக்குற மருந்துல்லாம் அப்பிடி பவர்புல். கொணம் பண்ணிடும். நம்மளப் பொருத்தவரை வியாதி இதுவா இருக்குமா? அதுவா இருக்குமா?ன்னு சந்கேம் பண்ணிட்டு மருந்து மாத்திரைய எழுதுறதில்ல. இதுதாம் வியாதின்னு தெரிஞ்சித்தாம் எழுதுவேம். நம்மகிட்டெ வர்ற பேஷண்ட்ஸ் அதிகபட்சம் ரண்டு தடவெ, மூணு தடவெ வந்தா பெரிசு. கொணமாயிடுவாங்க. தண்ணி மட்டும் காய்ச்சுன வெந்நியாத்தாம் இருக்கணும். கண்ட கண்ட தண்ணியக் குடிக்கக் கூடாது. காய்ச்சுன தண்ணின்னா அப்பைக்கப்போ காய்ச்சுனதா இருக்கணும். காலையில காய்ச்சிப் போட்டுப்புட்டு அதெ ராத்திரி வரைக்கும் குடிக்கக் கூடாது! அவ்வளவுதாங். கெளம்பலாம்!"ன்னுட்டாரு டாக்கடாரு ரெண்டு பேருக்கும் சேத்தாப்புல பதிலச் சொல்றாப்புல.
            கைத்தாங்கலா கார்த்தேசு அத்தானைப் பிடிச்சிட்டு ரெண்டு பேருமா வெளியில வந்தாங்க. வெளியில வந்து, டாக்கடருக்கான பீஸ் அப்போ எம்பது ரூவா. அப்போ அது பெரிய காசுத்தாம். வடவாதியில இருந்து டாக்கடருமாருகல்லாம் இருவது ரூவாயோ, முப்பது ரூவாயோத்தாம் பீஸா வாங்குவாங்க. அவுங்ககிட்டப் போயி கொணம் காணணும்ன்னா ரெண்டு மூணு தவா போயி வந்தாவணும். மொத்தத்துல ரெண்டு மூணு தவா போயி வந்தா பீஸ் காசு இவரு வாங்குற அளவுக்கு வந்துப்புடும். ஸ்ரீதரன் டாக்கடருகிட்டெ பெரும்பாலும் ஒரு தடவெத்தாம் வரது. ஒடம்பு கொணம் கண்டுடும். மறுதவா வந்து பாத்துட்டுப் போவணும்னுத்தாம் சொல்வாரு. பெரும்பாலும் யாரும் போறதில்ல. எம்பது ரூவாய டோக்கன் போட்டுட்டு உக்காந்திருக்குற பொண்ணுகிட்டெ கொடுத்தாரு சுப்பு வாத்தியாரு.  பக்கத்துல இருக்குற மருந்துக் கடையில மருந்து மாத்திரைகள வாங்குனாரு சுப்பு வாத்தியாரு. அது ஐநூத்து அறுவது ரூவாய்க்கி வந்துச்சு. அத்தோட ஒடம்பு சரியில்லாம இருக்குறதால ஒரு ஆர்லிக்ஸ் பாட்டிலையும் சேத்து வாங்கிட்டாரு. அவரு வாங்க வாங்க அதையெல்லாம் வாங்கி கையோட கொண்டாந்த துணிப்பையில போட்டுக்கிட்டாரு பெரியவரு.
            ஸ்ரீதரன் ஆஸ்பிட்டலுக்குப் பக்கத்தாலயே ஒரு பிராமணாள் சாப்பாட்டுக் கடை இருந்துச்சு அப்போ. கார்த்தேசு அத்தானைத் தவுர ரெண்டு பேத்துக்கும் தாங்க முடியா பசி. மூணு பேருமா சேர்ந்து கடைக்குள்ள நொழைஞ்சு ஆளுக்கு நாலு இட்டிலிய வைக்கச் சொன்னாங்க. சுப்பு வாத்தியாரும், பெரியவரும் இருந்த பசியில நாலு இட்டிலி போன தெசை தெரியல. இன்னொரு நாலு இட்டிலிய வாங்கி கெட்டிச் சட்டினியும், சாம்பாருமா ஒரு அடி அடிச்சி முடிச்சாங்க. கார்த்தேசு அத்தான் ஒண்ணரை இட்டிலிய திங்குறதுக்குள்ள படாத பாடு பட்டுச்சு.
            "சாப்புடுடா யம்பீ! அப்பத்தாம் மருந்து மாத்திரைய திங்க முடியும்! அதெ தின்னாத்தாம் கொணம் காண முடியும்!"ன்னாரு பெரியவரு. கார்த்தேசு அத்தான் மல்லுகட்டி தின்னுச்சு. ரண்டரை இட்டிலி வரைக்கும் உள்ளப் போனுச்சு. அதுக்கு மேல போவல. "செரித்தாம் வுடுடா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. டாக்கடரைப் பாத்ததுலயும், இப்போ கொஞ்சம் சாப்புட்டதுலயும் ஒடம்பு தெம்பா இருக்குறது போல இருந்துச்சு கார்த்தேசு அத்தானுக்கு. அதுக்குள்ள பெரியவரு சாப்பாட்டு கடைக்குள்ளாற போயி கொதிக்க கொதிக்க தண்ணியப் போட்டு வாங்கியாந்து அதெ ரெண்டு தம்பளர்ர வெச்சி ஆத்திட்டு இருந்தாரு. ஆத்தி முடிச்சிட்டு துணிப் பையில கைய வுட்டு மருந்து மாத்திரைகள எடுத்து வெளியில வெச்சாரு. சுப்பு வாத்தியாரு ஒவ்வொரு காகித உறையா பாத்து எந்த மாத்திரைய எப்ப கொடுக்கணும்னு பாத்து காலைக்கு உள்ள மாத்திரைகளக் கொடுத்தாரு. அதெ வாங்கி வாயில போட்டு, பெரியவரு ஆத்திக் கொடுத்த தண்ணிய ஊத்தி முழுங்குனுச்சு கார்த்தேசு அத்தான். மாத்திரைய முழுங்கி ரெண்டு நிமிஷம் இருக்காது, "மாம்மா! பெரிப்பா! நமக்கு மயக்கமா வர்ற மாதிரி இருக்கு!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான்.
            "அப்பிடியே படுறாம்பீ!"ன்னு உக்காந்திருந்த பெஞ்சுலயே கார்த்தேசு அத்தானோட கால தூக்கி மடியில வெச்சிக்கிட்டாரு பெரியவரு. தலையத் தூக்கி தன்னோட மடியில வெச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. "இந்த மாத்திரைச் சாப்புட்டா சித்தெ நேரம் அப்பிடித்தாம்டா இருக்கும்! சரியா பூடும்! படு சித்தே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒடம்புல கைய வெச்சிப் பார்ரேம்பீ! இப்போ காய்ச்சலு இல்ல பாரு!"ன்னாரு பெரியவரு.
            சுப்பு வாத்தியாரு நெத்தி, நெஞ்சுன்னு கைய வெச்சிப் பாத்துட்டு, "கொணம் கண்டுப்புடும் யத்தாம்! ஒடம்பெ சரி பண்ணிக் கொண்டாந்தாவணும். அதாங் பெரும்பாடு. சத்தான ஆகாரமா சாப்புட வைக்கணும். கொஞ்சம் மெனக்கெட்டுப் பாத்தாதாங் ஒடம்பு தேறும். மருந்து மாத்திரை ஒடம்ப கொணம் பண்ணாலும் அதுவே பாதி ஒடம்பு அடிச்சிப்புடும் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம பக்கத்துலத்தான யம்பீ இருக்குறேம். பாத்துக்கிடறேம். பாலுதாங் வூட்டுல கறக்குது. நல்லா சுண்டக் காய்ச்சி ஒரு லிட்டரு பால அரை லிட்டரு பாலா ஆக்கிக் கொடுக்குறேம். மாட்டுப் பாலுக்குத் தேறாத மனுஷ ஒடம்பு எந்த ஊர்ல இருக்குச் சொல்லு? நீயி கூட இந்த ஆர்லிக்ஸ் பாட்டில்ல வாங்கிருக்க வேண்டில்லா. என்னவோ வாங்கிப்புட்டே. வாங்குறப்ப என்னத்தெ வேணாம்னு சொல்றதுன்னு வுட்டுப்புட்டேம். கேவுரு, கம்பு, தெனை மூணையும் ஒண்ணா கலந்து அரைச்சி அத்தோட பொரியரிசி மாவைக் கலந்து கஞ்சிப் பண்ணிக் கொடுத்தா தேறாத ஒடம்பும் தேறிப் போவுமுல்லா! வூட்டுல சுத்தமான தேனு வெச்சிருக்கேம் ஒரு பாட்டில்ல. தேனுக்கும் ‍‍தெனை மாவுக்கும் தேறாத ஒடம்பா? பயித்தங் கஞ்சி, வாழக்காயி இருக்கு. வாழக்காயி வறுவலு ஒண்ணு பத்தாதா? கத்திரிக்காயி ஒத்துக்கிட்டா கரைப்பாம் இல்லாத ஒடம்புன்னா அத்து ஒண்ணு போதும்பீ! நம்ம காக்கா புள்ளே வூட்டுல மாதுளங்காயி இருக்கு. பத்தாதா? பெறவு நமக்குத் தெரியாத ஆகாரமா? நாமளே நம்ம கையாலயே பண்ணி இவனெ தேத்தி வுட்டுப்புட்டுத்தாம் மறுவேல பாப்பேம் பாத்துக்கோ!"ன்னாரு பெரியவரு.
            ஒரு பத்து நிமிஷம் பெஞ்சுல படுத்ததுல ஒடம்பு தெளிஞ்சாப்புல இருந்துச்சு கார்த்தேசு அத்தானுக்கு. "இப்போ பரவால்ல. கெளம்பலாம் மாமா!"ன்னுச்சு.
            கிளப்புக் கடையில சாப்புட்டதுக்கு பணத்தெ கொடுத்துட்டு, மூணு பேருமா வெளியில வந்தாங்க. கார்த்தேசு அத்தானுக்கு ஒடம்பு ரொம்ப களைப்பா இருந்துச்சு. கொஞ்சம் நடந்து கமலாலயக் கரையில தெற்குப் பக்கமா திரும்பியிருப்பாங்க, குமாரு அத்தானும், தாசு அத்தானும் எதுத்தாப்புல நடந்து வந்துச்சுங்க.
*****


தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...