30 Nov 2020

ப்ளாக்மார்க் இல்லாம ரிட்டையர்டு ஆவணும்!


 ப்ளாக்மார்க் இல்லாம ரிட்டையர்டு ஆவணும்!

செய்யு - 641

            அஞ்சாவது மொறையா சமூக நீதி மையத்துலேந்து அழைப்பு வந்தப்போ செய்யுவும், சுப்பு வாத்தியாரும், விகடுவும் போனாங்க. கைப்புள்ளையக் கூப்புட்டதுக்கு இந்தக் கூட்டத்துக்கு யாருமே போக வேணாம்ன்னுட்டாரு. பாக்குக்கோட்டையான் தரப்புலேந்து யாரும் வர்றப் போறதில்லங்றதால போவுற எந்த பிரயோஜனமும் இல்லன்னு அடிச்சிச் சொன்னாரு கைப்புள்ள. ஒருவேள அவுங்க தரப்புலேந்து வந்து நாம்ம போவாம இருந்தா அடுத்து நடக்கப் போறதுக்கு நாமளே முட்டுக்கட்டையா இருந்ததா ஆயிடும்ன்னுத்தாம் சுப்பு வாத்தியாரு கெளம்புனது. அங்கப் போயிப் பாத்தப்போ கைப்புள்ள சொன்னதுதாம் அப்பிடியே நடந்துச்சு. ரொம்ப சரியாத்தாம் கணிச்சிருந்தாரு கைப்புள்ள. “சமூக நீதி மையத்துல வெசாரிக்குற மொறையப் பாத்தா அவுங்களால ஒண்ணும் காரியம் ஆவப் போறாப்புல தெரியல. ஞாயம் பேசுறவங்க சிலதெ கண்டிச்சும் சிலதெ தப்புன்னு அடிச்சும் பேசணும். இதுதாங் மொறைப்பாடுன்னு ரண்டு பேரு தலையிலயுமே தட்டணும். அத்து என்னான்னா தம் தலையிலயே தட்டிக்கிது. அத்தோட அந்த யம்மா ன்னா ரண்டு பக்கமும் தாளாளிச்சு வுடுறாப்புல பேசுது. இதுல கதெ ஒண்ணும் ஆவுறாப்புல தெரியல. நாம்ம அடிச்சிச் சொல்றேம் அந்த யம்மாவால நமக்கு எந்த ஞாயமும் பண்டிட முடியாது. நீஞ்ஞ இதெ போயிப் பாத்துப்புட்டு மறுக்கா அனுபவப்பட்டு வாஞ்ஞ. நாம்ம வேணும்ன்னா அடுத்த மொறெ வார்றேம். நம்ம கணிப்புத்தாம் எப்பிடி இருக்குன்னு பாப்பமே!”ன்னு கைப்புள்ள சொல்லி வுட்டுருந்தாரு.

            சமூக நீதி மையத்துலப் போயிப் பாத்தா நடக்குறது எல்லாம் கைப்புள்ள சொல்ற மாதிரித்தாம் நடக்கும் போல இருந்துச்சு. “என்ன மனுஷன்யா! இம்புட்டுச் சரியா கணிச்சுச் சொல்றாம் நாசா விஞ்ஞானியப் போல!” ன்னு ஒரு நிமிஷம் அதெ நெனைச்சு விகடு அசந்துப் போனாம். அங்கப் போனதுக்கு கடமைக்குன்னு திரும்பவும் வெசாரணை ஆரம்பிச்சது.

            வெசாரணை பண்ணுற அம்மாவப் பாத்து செய்யு கேட்டா, "எத்தனெ கூட்டம் போட்டாலும் வர்றேன்னு சொன்னவர்ரு ஏம் வாரலே?"ன்னு.

            "வாரதது மட்டுமில்ல. போன கூட்டத்துக்கு என்னென்ன வெசாரிச்சிப் பதிவு பண்ணிருக்கேங்றதெ தகவல் அறியும் உரிமைச் சட்டத்துலப் போட்டு வேற கேட்டிருக்காம் அவ்வேம். அவனுக்குப் போயா இம்மாம் பரிஞ்சிப் பேசணும்ன்னு ஆயிடுச்சு நமக்கு. நாம்மத்தாம் அன்னிக்கு சமரசம் பண்ணப்பவே எல்லாத்தையும் சொன்னேம். இருந்தாலும் இப்பிடி வெவரம் கேக்குறது மூலமா அப்பிஷியல் எவிடென்ஸ்ஸ எதிர்பாக்குறானோ என்னவோ! நாம்ம மனுதாரரின் தனிப்பட்ட ரகசியமான வெசாரணைகள கோர்ட்டுக்குத் தவுர வேற யாருக்கும் அளிக்கிறதில்லன்னு அவனுக்குப் பதிலக் கொடுத்திருக்கேம். என்னோட சர்வீஸ்ல எவ்வளவோ விசயங்கள டீல் பண்ணி வுட்டுருக்கேம். இப்பிடி நடந்ததில்ல. இதுதாங் மொத மொறை. நல்லவேம் மாதிரியே நடிச்சிக்கிட்டு இன்னிக்கு கூட்டத்துக்கும் வாராம, தகவல் அறியும் உரிமெ சட்டத்து மூலமா காயிதத்தெ போன ஒடனே அனுப்பி வுட்டு எவிடென்ஸையும் உருவாக்கிட்டு இருக்காம். அவ்வேம் போற டிராக்கெப் புரியல. சேந்து வாழணும்ன்னு நெனைக்கிறவேம் இன்னிக்கு எப்பிடியும் வந்திருக்கணும்தாம்!"ன்னாங்க அந்த அம்மா பரிதாபமா செய்யுவப் பாத்து.

            "பிடிக்கலன்னா பிரிஞ்சிப் போவ வேண்டித்தானே. பெறவு ஏம் சேந்து வாழணும்ன்னு நின்னுகிட்டு கழுத்தறுக்குறாம்?"ன்னா செய்யு அந்த அம்மாவப் பாத்து ஆத்திரம் தாளாம.

            "நீயா பிரிஞ்சிப் போவணுங்றதுக்காகத்தாம் சேர்நது வாழணும்ன்னு அவ்வேம் நிக்கணும். அவனா பிரிஞ்சிப் போனா உனக்கு ஜீவனாம்சம், இழப்பீடுல்லாம் கொடுத்தாவணும். அதுக்காகக் கூட இருக்கலாம். பட் எனக்கு முழுசா அப்பிடிதான்னான்னு தெரியல. அப்பிடியும் இருக்கலாம் அவனோட மோட்டீவ். இந்த ஒரு கூட்டத்துக்கு வாரததாலயே நாம்ம அப்பிடி நெனைக்க முடியுமான்னும் தெரியல. ஒருவேள வர்ற முடியாத சூழ்நிலையும் இருந்திருக்கலாம். அடுத்த ஒரு கூட்டத்துலப் பாத்துட்டு முடிவு பண்ணலாம். அதுதாங் செரியா இருக்கும்ன்னு நெனைக்கிறேம். அடுத்தக் கூட்டத்துக்கும் அவ்வேம் வரலன்னா நிச்சயமா நாம்ம சொல்றப்படித்தாம் இருக்கணும்!"ன்னாங்க அந்த அம்மா இப்பயும் நிச்சயமில்லாம.

            "நீஞ்ஞ போன அடிச்சி வர்றாங்களா யில்லியாங்றதெ கேக்கலாமேம்மா!"ன்னா செய்யு.

            "போன அடிச்சிப் பாத்தாச்சு. எடுக்குறாப்புல தெரியல. எத்தனெ மொறைப் போடுறது? இன்னொரு பாஞ்சு நாளு கழிச்சி அடுத்த சிட்டிங்கப் போடுறேம். அதுக்கு மட்டும் செருமம் பாக்கமா வந்துட்டுப் போயிடு. அதுக்கு மேல ஒன்னய நாம்ம வற்புறுத்த மாட்டேம்!"ன்னாங்க அந்த அம்மா செய்யுவப் பாத்து பாவப்படுற தொனியில. அத்தோட நெறைய ஆறுதலையும், புத்திமதியையும் சொல்லி அனுப்புனாங்க அந்த அம்மா. இன்னும் எத்தனெ மொறைத்தாம் இப்பிடி ஒரு முடிவுக்கு வார முடியாம ஆளாளுக்குப் போட்டு கொழப்பி வுடுறதெ பொறுத்துக்கிட்டு அலையணுமோன்னு வெறுத்துப் போயித்தாம் அன்னிக்குப் போன சுப்பு வாத்தியாரு, விகடு, செய்யுன்னு மூணு பேரும் வக்கீல்கிட்ட நடந்ததெ சொல்லிட்டுக் கௌம்பி வந்தாங்க. ஆனா பிடிச்ச சனியும் சளியும் விட்டாத்தானே!

            ஆறாவது மொறையா போட்ட கூட்டத்துக்குப் போறப்போ ரொம்பவும் சலிச்சுப் போயிருந்த செய்யு விகடுவெ வர்ற வாணாம்ன்னே சொல்லிட்டா. வந்து ஒரு காரியமும் ஆவப் போறதில்லங்றதால, தேவையில்லாமல லீவப் போட்டுட்டு அலைஞ்சிட்டுக் கெடக்க வேணாம்ன்னு அவ்வே சொன்னா. "ஒருவேள அவ்வேம் தரப்புலேந்து வந்து நம்ம தரப்புல தொணைக்கு ஆளில்லாமலோ, பேசறதுக்க வாய்ப்பில்லாமலோ போச்சுன்னா ன்னா பண்ணுறது?"ன்னாம் விகடு.

            "அப்பிடி இருந்தா நாம்ம வேணும்ன்னா போன அடிக்கிறேம். லீவ போட்டுக்கிட்டு வரலாம். அவனுங்க வர்றானுங்களா வரலீயான்னே தெரியாம அங்கப் போயி தண்டமா நின்னுட்டு, தண்டமா திரும்புறதுல எந்த வெதமான புண்ணியமும் இல்ல!"ன்னா செய்யு. அதுவும் செரித்தாம்ன்னு விகடு பள்ளியோடம் கெளம்பிப் போயிட்டாம். சுப்பு வாத்தியாரும் செய்யுவுந்தாம் அந்த ஆறாவது அழைப்புக்குப் போனாங்க. அத்தோட கைப்புள்ளையையும் போட்டு தொந்தரவு பண்ணி வாரச் சொல்லி அலைக்கழிக்க வேணாம்ன்னுட்டா.

            அங்கப் போனா வெசாரணைப் பண்ணுற அதிகாரியா இருந்த அம்மா செய்யுகிட்டெ பொலம்பித் தள்ள ஆரம்பிச்சிட்டாங்க. வழக்கமா இத்தனெ மொறையும் செய்யுத்தாம் ஆத்திரமாவும் ஆத்தாமையாவும் பொலம்பிட்டுக் கெடந்தா. இப்போ என்னான்னா எல்லாம் தலைகீழா மாறிப் போயி அந்த அம்மா ஆத்திரமாவும் ஆத்தாமையாவும் பொலம்ப ஆரம்பிச்சாங்க.

            "நாம்ம கூட ஒம் புருஷனெ என்னவோ எதுவோ எதார்த்தமா ஆத்திர அவ்சரத்துல பேசுறானேன்னு நெனைச்சிட்டெம். செரியான விஷப்பாம்பா இருப்பாம் போலருக்கு. தகவல் உரிமெ சட்டம் மூலமா தனிப்பட்ட வெசாரணை வெவரங்கள்ல ரகசியம் காக்குற உரிமெ எஞ்ஞளுக்கு இருக்குறதாப் போட்ட பதிலப் பாத்துட்டு அவ்வேம் பாட்டுக்கு அந்த உரிமெயோட சட்டப் பிரிவு என்னா? யாருக்குச் சாதகமா நாம்ம நடந்துக்கிறேம்? வெசாரணை முழுசா நடத்தாம தள்ளிப் போட்டுக்கிட்டெ இருக்குறதுக்கு ன்னார காரணம்ன்னு அவ்வேம் பாட்டுக்கு இது வரைக்கும் பத்துக்கு மேல தகவல் அறியும் உரிமெ சட்டத்து மூலமா காயிதத்தெ அனுப்பிட்டெ இருக்காம். அந்தப் பயெ அனுப்புற மனுவுக்குப் பதிலு சொல்றதுக்கே நமக்கு நேரம் போயிடும் போலருக்கு! அன்னிக்கு நீஞ்ஞ கொஞ்சம் தயங்குனாப்புல சொன்னது நல்லதாப் போச்சுது. ஒருவேள நீயிப் போயிருந்தீன்னா ஒம்மட நெலைய நெனைக்குறப்பவே பயமாத்தாம் இருக்குது. இத்து ஒரு சாதாரண வெசாரணைத்தாம். வெசாரணைன்னு கூட சொல்ல முடியாது. சமரசம் பண்ணி வுடுறதுதாம். இதுலப் போயி அவனா கற்பனெ பண்ணிட்டு ஏம் இப்பிடி ஒண்ணு கெடக்க பண்ணுறான்னு தெரியலையே? பேசுறதெ ஒண்ணுத்தெ பேசுறாம் அப்பாவியா. செய்யுறதெ வெறொண்ண செய்யுறாம் அடப்பாவிங்ற மாதிரிக்கி!"ன்னாங்க அந்த அம்மா.

            "அவ்வேம் அப்பிடித்தாம் பண்ணுவாம்மா. மனசுல நெனைச்சிருக்கிறதெ லேசுல தெரிஞ்சிக்கிட முடியாது. அதுக்கேத்தாப்புல நடக்குறதுக்கான அத்தனெ வேலைகளையும் முதுகுக்குப் பின்னாடி பாப்பாம். மொகத்துக்கு நேரா சொல்லவே மாட்டாம். சொல்லாமலே செய்ய வைக்குறேம் பாருன்னு அப்படிச் செய்ய வைக்குறதுல ஒரு குரூர திருப்தி! கொலகார பாவி! கொலையையும் எரக்கப்பட்டு பட்டுன்னு பண்டிட மாட்டாம். துடிக்க துடிக்க கழுத்தறுத்தாத்தாம் திருப்திப்படும் அவ்வேம்க்கு!"ன்னா செய்யு.

            "அதுக்காக நம்மட வேலைக்கே வேட்ட வெச்சிடுவாம் போலருக்கே. கலக்டர் ரிவ்யூ மீட்டிங்ல சத்தம் போடுறாரும்மா. டேரக்டா கலக்டருக்கு வேற மனு போட்டிருக்காம். நாம்ம சரியா வெசாரிக்கலன்னும், ஒஞ்ஞகிட்டெ பணத்தெ வாங்கிக்கிட்டு ஒஞ்ஞளுக்குச் சாதவமாக பேசுறதாவும். நெசத்துல நாம்ம நடந்த அத்தனெ சம்பவங்களும் தெரிஞ்ச பிற்பாடும், அவ்வேம் பக்கம் கொஞ்சம் சாதவமாவும், ஒஞ்ஞளுக்குக் கொஞ்சம் எதிராவும் பேசுனதுதாம் உண்மெ. ஏன்னா எடுத்த எடுப்புலயே அவ்வேம் மேல நீஞ்ஞ ஏகக் கடுப்புல இருந்தீயளா. அதால ஏம் ரண்டு பேத்த பிரிச்சி வைக்கணும், காலப் போக்குல எப்பிடியோ கடவுளோட கிருபையில அதெல்லாம் சரியாப் போயிடுங்ற நம்பிக்கத்தாம் அதுக்கு அப்பிடிப் பேசக் காரணம். எம் மேல அவ்வேம் அனுப்புன புகாருக்கு வேற வெசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வெசாரணை சம்பந்தமா கம்ப்ளீட் பைலையும் எடுத்தாரச் சொல்லி கலக்டர்ரே நேர்ல பாத்தாரு. கலக்டருக்கு இருக்குற வேலைக்கு அவர்ர இந்த அளவுக்கு பாக்குற அளவுக்குக் கொண்டாந்துட்டாம். அந்த அளவுக்குக் கொண்டுப் போயி வுட்டுப்புட்டாம். ரொம்ப டார்ச்சரா போயிடுச்சும்மா அந்தப் பயெ பண்ணுற வேல! எல்லாத்தையும் தெரிஞ்சி வைச்சுக்கிட்டு ரொம்ப பெரமாதமா நடிச்சிக்கிட்டு வேலையக் காட்டிட்டு இருக்காம்! அவ்வேம் திட்டம் பண்ணி நகத்துறாம். அவ்வேம் திட்டம் புரியாம அப்பாவின்னு எறங்கிப் போயி அவனுக்காகப் பரிதாவப்பட்டு நாம்ம மாட்டிப்பேம் போலருக்கு!"ன்னாங்க அந்த அம்மா.

            "நீஞ்ஞத்தாம்மா இந்த விசயத்துல நமக்கு ஏதாச்சும் ஒரு நல்ல வழியக் காட்டணும்!"ன்னா செய்யு அந்த அம்மாவப் பரிதாபமா பாத்து.

            "நாம்ம எஞ்ஞ ஒனக்கு நல்ல வழியக் காட்டுனேம்? போயிச் சேந்து இருன்னு கெட்ட வழியத்தாம் காட்டப் பாத்தேம். நல்ல வேளையா ஒம்மட யண்ணன் கேட்ட கேள்வியில மைண்ட் அப்செட் ஆயி அதெ தள்ளி வெச்சேம். அன்னிக்கு அதெ ரொம்ப கெட்டதாப் பாத்தேம். அப்பிடி நடந்ததும் ஒரு வெதத்துல செளகரியமாப் போயிடுச்சு. இல்லீன்னா அன்னிக்கு ரண்டு பக்கமும் எழுதி வாங்கிட்டு இதெ முடிக்கிறதாத்தாம் யோஜனெ. இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்ததாலத்தாம் தள்ளி வெச்சேம். ஒமக்கு நல்ல வழின்னா அந்தப் பயெ கொடுக்க வேண்டிய பணங்காசி, நகெ நட்டெப் பாக்காதே. அவ்வேங்கிட்டெயிருந்து விடுதலைய வாங்கிக்கிட்டுப் போயிடு. சைத்தாங் கூட குடும்பம் நடத்த முடியாது!"ன்னாங்க அந்த அம்மா பட்டுன்னு.

            "அந்த முடிவுலத்தாம் நானும் இருக்கேம்! நகெ நட்டு, பணங்காசி நாஞ்ஞ கொடுத்ததெ கொடுத்தா போதும்ன்னு விட்டுட்டுப் போயிடுவேம். அந்த பணங்காசி, நகெநட்டுன்னு எதையும் நாம்ம சம்பாதிக்கல. எல்லாம் யப்பா, யண்ணனோட சம்பாத்தியம். அதுக்காகத்தாம் அதெ வுட முடியாம அதுல பிடியா நிக்குறேம்!"ன்னா செய்யு.

            "அதெ பாத்தீன்னா ஒன்னயப் பத்தி கெட்ட பேர்ர கட்டி வுடுறதுல அவ்வேம் குறியா நிப்பான்னு நெனைக்கிறேம். பாத்தீன்னா நம்ம பேரையே கலக்ட்ரேட்டுல கெடுத்துட்டாம். கலக்ரேட்டுல நமக்கு எப்பயும் ஒரு நல்ல பேரு. கறைபடாத கையி, வேலையில சரியா இருக்குற ஆளுன்னு. இந்தப் பயெ பண்ணி வுடுற வேலையால கெட்டப் பேர்ரா ஆயிட்டுக் கெடக்கு. தகவல் அறியும் உரிமெ சட்டத்தெ வெச்சிக்கிட்டு நெதமும் ஒரு காயித்தெ டார்ச்சர் பண்ணுறாப்புல அனுப்பிட்டு இருக்காம். அப்பிடி அவ்வேம் பண்ணுற டார்ச்சர்ல நம்மால நம்ம குடும்பத்தையே சரியா பாக்க முடியுல. குடும்பத்துல யாருகிட்டெயும் கொஞ்ச நேரம் மனசு வுட்டுப் பேச முடியல. எந்நேரமும் இதெ நெனைப்பாவே இருக்கு. நாளைக்கி என்னத்தெ அனுப்பப் போறானோ? கலக்டர்ரு எப்போ கூப்ட்டு வுடப் போறாரோன்னு? இப்பல்லாம் டெய்லி இந்த கேஸாலயே ஏதோ ஒரு வெதத்துல கலக்டர்ரப் போயி பாக்குறாப்பு ஆயிடுது. சரியான சென்னாக்குன்னிப் பயலா இருப்பாம் போலருக்கு!"ன்னாங்க அந்த அம்மா பாவப்பட்டாப்புல. அவுங்க சொல்றதெ கேக்க கேக்க செய்யுவ விட பாலாமணியால அவுங்க ரொம்ப பாதிக்கப்பட்டாப்புல தெரிஞ்சது. அந்த அம்மாவப் பாக்கவும் பாவமாத்தாம் இருந்துச்சு. ஒரே நேரத்துல ரண்டு பேத்தையும் போட்டுத் தாக்குறாப்புல பண்ணிப்புட்டாம் பாலாமணி.

            "புரிஞ்சிக்க முடியாத மனுஷன்ம்மா! ரைட்ல இன்டிகேட்டர்ரப் போட்டுட்டு லெப்டுல திருப்புற மனுஷனப் போல எந்த நேரத்துல என்னத்தெ பண்ணுவாங்றதெ புரிஞ்சிக்க முடியாத மனுஷம். சமைச்சி வையின்னு சொல்லிட்டு ஓட்டல்ல சாப்பாட்ட வாங்கியாந்து சாப்புடுறது, ராத்திரிக்கிச் சந்தோஷமா இருக்கணும்ன்னு சொல்லிட்டு தங்காச்சி வூட்டுலப் போயி படுத்துக்கிறது, நீயி இல்லாம இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு வெளியில போயி வந்துப்புட்டு சண்டெய வெச்சிக்கிட்டு வெளியில போடீ நாயேன்னு துணி மணிய எல்லாம் வெளியில தூக்கி எறியுறதுன்னு ரொம்ப அனுபவிச்சிட்டெம்ம்மா!"ன்னா செய்யு பழசையெல்லாம் நெனைப்புல கொண்டாந்து.

            "இவனெ வெட்டி வுடுறதுக்குன்னா எவ்ளோ காசிய வாணாலும் இழக்கலாம். அப்பிடித்தாம் நாம்ம சொல்வேம். நீயி கூடியச் சீக்கரமே வக்கீல்ட்ட சொல்லி கேஸப் போட்டு வுட்டு வெளியில வந்துப்புடு. இவனெ மறந்தீன்னாத்தாம் ஒன்னால கவலெ இல்லாம இருக்க முடியும். இந்த கேஸூ இருக்குற வரைக்கும் ஒன்னால இந்த நெனைப்ப மறக்க முடியாது. ஏம் அனுபவத்துல சொல்றேம், அந்தப் பயலே நெனைச்சாலே நமக்குப் பத்திட்டு வருது. அவ்வேங்கிட்ட எப்பயும் ரொம்ப கவனமா இரு. இப்பிடியெல்லாம் எப்பிடித்தாம் ஆம்பளைங்க பொறந்து வாரானுவோளே தெரியல? எவ்ளோ கேஸப் பாத்திட்டேம். இந்த மாதிரி கேஸ்ஸப் பாக்கல. நாம்ம பாத்த வரைக்கும் ஆத்திரமா, ஆக்ரோஷமா பேசுவாங்க. பிடிக்கலன்னா பிடிக்கலன்னு மூஞ்சுல அடிச்சாப்புல சொல்லுவாங்க. அதெ மீறிச் சேத்து வெச்சா கொன்னேபுடுவேம்ன்னு நேராவே சொல்லுவாங்க. அந்த மாதிரி ஆளுங்களத்தாம் நாம்ம பாத்திருக்கேம். இவனெ மாதிரிக்கிக் குடும்ப விசயத்துல நடிக்குற ஆளெ இப்பத்தாம் பாக்குறேம். அந்தப் பயலே அவனெ ஏமாத்திக்கிறாம்!"ன்னாங்க அந்த அம்மா அவனெ வெறுக்குறாப்புல.

            "நடிப்புதாம்மா! எல்லாமே நடிப்புத்தாம்! அவ்வேம் நடிக்கலாம் ஆம்பள. எல்லாத்துலயும் எப்பிடித்தாம் குடித்தனம் பண்ணுற பொண்ணு நாம்ம நடிக்க முடியும்மா?"ன்னு கேட்டா‍ செய்யு.

            "கஷ்டந்தாம் போ! ஒனக்கு மட்டுமில்ல, எனக்கும். இன்னும் மூணு வருஷம் இருக்கு சர்வீஸூ நமக்கு. அதுக்குள்ள நல்லபடியா ரிட்டையர்டு ஆவேனாங்ற கவலெ நமக்கு வந்தப்புட்டு. ஒம் கேஸூல ப்ளாக் மார்க் வந்துப்புடுமான்னு அத்து வேற கவலெயா இருக்கு. அந்த அளவுக்கு நம்ம மேல அவ்வேம் பாட்டுக்கு புகார்ர அனுப்பிட்டு இருக்காம் முதலமைச்சரோட தனிப்பிரிவுக்கு உட்படன்னா பாத்துக்கோயேம்! இத்தனெ மொறை வந்தப்பல்லாம் ஒமக்கு ஆறுதலெ சொல்லிட்டு, இப்போ நாம்மளே பொலம்புற நெலைக்கு வந்துப்புட்டேம் போ! அதாங் நேரங்றது! பேயாம ஒரு மூணு மாசத்துக்கு மெடிக்கல் லீவப் போட்டுப்புட்டு வூட்டுல இருக்கலாம்ன்னும் பாக்குறேம்!"ன்னாங்க அந்த அம்மா பாவமா.

            "நம்மாலே ஒஞ்ஞளுக்கு இப்பிடி ஒரு கஷ்டம் வந்திடுச்சேம்மா!"ன்னு செய்யு ரொம்ப மனசு சங்கடப்பட்டு அந்த அம்மாவப் பாத்துச் சொன்னா.

            "நமக்கு மட்டுமா? மகளிர் ஸ்டேசன்னு இன்ஸ்பெக்கடருக்கும்தாம். அவுங்க போன வாரத்துல போன அடிச்சாங்க. இவனெ போன்ல மெரட்டுனத ரிக்கார்ட பண்ணி புகாரு கொடுத்திருக்காம் போலருக்கு. அதெப் பத்தி வருத்தப்பட்டுக்கிட்டெ சொல்லி நம்மள எச்சரிக்கையா இருக்கச் சொன்னுச்சு அந்த அம்மா. பின்னாடி இப்போ பண்ண போன அந்தப் பயலெ வெசாரணையப் போடுறதுக்கு மின்னாடி சொல்லிருக்கக் கூடாது? எல்லாம் எந் நேரந்தாம். இதுல ஒன்னயச் சொல்லி எந்தக் குத்தமும் இல்ல. அந்தப் பயெத்தாம் எல்லாத்துக்கும் காரணம். அத்தோட எந் தலயெழுத்தும் இருக்கு. நம்மட சர்வீஸ்ல இப்பிடி ஒருத்தனெ சந்திக்கணும்ன்னு. ஆன்னா ஒண்ணு சொல்றேம் கேட்டுக்கோ, குடும்ப விசயத்துல உள்வேல பாக்குறவேம் வெளங்கவே மாட்டாம். இதுல நடிக்குறவேம் நாசமா போயிடுவாம். எவ்ளோ பெரிய ரெளடிகள எல்லாம் வெசாரணையில பாத்திருக்கேம். எவனும் பொண்ட்டாட்டிய வுட்டுக் கொடுத்துப் பேசி நாம்ம பாத்ததில்லே. ஒங்கிட்ட நாம்ம தனிப்பட்ட வெசாரணையில பேசுனதெ சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்றேம், ஒன்னய ஒந் சின்னம்மா புள்ளயா இருக்குற தம்பிக் கூட இணைச்சிப் பேசி, அவ்வேம் கூட படுத்து எழுந்திரிச்சிதெ கூட மன்னிச்சுச் சேர இருக்காம்ன்னு சொன்னாம் பாரு அப்போவே யோஜிச்சிருக்கணும். விட்டுப்புட்டேம். இந்த மாதிரி எந்தப் பயலும் சொன்னதே இல்ல. ஒரு வேள அப்பிடி வெசயம்ன்னாலும் அதெ சொல்லி அதுக்காகவே பிரிச்சி வுட்டுப்புடுங்கன்னு சொல்லித்தாம் நாம்ம கேட்டிருக்கேம். அதெச் சொல்லி என்னவோ பெரிய மகனாப் போல எப்பிடியோ சேத்து வெச்சிப்புடுங்க, எல்லாத்தையும் மறந்து அவ்வே கூட வாழ தயாரா இருக்கேம்ன்னு சொன்னாம் பாரு! அன்னிக்கேத் தப்புப் பண்ணிட்டேம், அதெப் பத்தி இன்னும் கொஞ்சம் யோஜிக்காம?"ன்னாங்க அந்த அம்மா வேதனைப்படுறாப்புல.

            அதெ கேட்டதும் செய்யுவோட கண்ணுலேந்து பொல பொலன்னு தண்ணித் தண்ணியா கொட்ட ஆரம்பிச்சது.

            "யய்யே! அவ்வேம் சொல்றது பொய்யிம்மா! அத்து நமக்கு அப்பவே தெரிஞ்சிது. இருந்தாலும் புருஷன் பொண்டாட்டிச் சண்டையில கூட கொறைச்சலு சொல்றதுன்னு நெனைச்சிக் கொஞ்சம் தடுமாறிட்டேம். நீயி அப்பிடிப்பட்ட பொண்ணுல்லாம் கெடையாதுங்றதெ யாரு சொல்லியும் நமக்குத் தெரியணுங்ற அவ்சியம் யில்ல. இதெ சொல்ல வாணாம்ன்னுத்தாம் நெனைச்சேம். என்னவோ மனசு பொறுக்காம என்னையும் அறியாம சொல்லிட்டேம்!"ன்னாங்க அந்த அம்மாவும் கண்ணைத் தொடைச்சிக்கிட்டு.

            "நாம்ம அதுக்காக அழவுலம்மா! யார்ரப் பாத்தாலும் இதெத்தாம் சொல்றாம்! பெறவெப்படி சேந்து வாழணும்ன்னும் சொல்றாம்? அவ்வேங் கூட சேந்து வாழப் போனா இதெச் சொல்லிச் சொல்லியே நெதமும் டார்ச்சர் பண்ண மாட்டானா? அவ்வேம் படுத்துன பாட்டுல, பண்ணுன டார்ச்சர்ல நாம்ம பைத்தியம் ஆனதுதாம் மிச்சம். என்ன செய்றேம்ன்னே தெரியாம தூக்குல தொங்கப் போனதுதாம் மிச்சம். செத்துப் போனாலும் பரவாயில்லன்னு சாப்புடாம கெடந்ததுதாம் மிச்சம். எப்பிடியெல்லாம் மனசு வந்துப் போய்யச் சொல்றாம்? ரண்டு தங்காச்சியோட பொறந்தவம்தாம் அவ்வேம்!"ன்னா செய்யு கண்ணீரும் கம்பலையுமா.

            "இதெயல்லாம் மனசுல வெச்சுக்காதே. நமக்கா அடுத்த ஒரு சிட்டிங் மட்டும் வந்துப்புட்டுப் போயிடு. கடெசீயா ஒரு எதிர்பார்ப்பு. அதுக்கு வாரானான்னா இல்லியான்னு! அதெ பாத்துப்புட்டு இதெ முடிச்சி வுட்டுப்புடுறேம். கோர்ட்ல வெச்சிப் பாத்துக்கிடலாம்!"ன்னாங்க அந்த அம்மா ஒரு முடிவுக்கு வந்தாப்புல.

            "யில்லம்மா இனுமே நாம்ம வர்ற மாட்டேம். வந்தும் பெரயோஜனம் இல்லன்னு நெனைக்கிறேம்!"ன்னா செய்யுவும் ஒரு முடிவுக்கு வந்தாப்புல.

            "செரி மொதல்ல கண்ணு கலங்குறதெ வுடு! நீயி வார்ர வாணாம். ஒருவேள அவ்வேம் வந்தாம்ன்னா போன அடிக்கிறேம். வூட்டுலேந்து ஒரு மணி நேரத்துல வந்தா போதும். ஒண்ணரை ரண்டு மணி நேரம் ஆனாலும் பரவாயில்ல. அவனெ காக்க வைக்கிறேம்! நீயி தேவயில்லாம அலைஞ்சிட்டுக் கெடக்க வாணாம்!"ன்னாங்க அந்த அம்மா ஆறுதலா சொல்றாப்புல. செய்யு அதுக்குத் தலையாட்டுனா. அதுக்குப் பெறவு அவுங்களே அந்த அறையிலேந்து செய்யுவ அழைச்சாந்து சுப்பு வாத்தியார்ட்ட விட்டு, "பொண்ண பாத்து அழைச்சிட்டுப் போங்க! பாத்துப்பேம்! எஞ்ஞ ஓடிடப் போறாம்? ஒஞ்ஞகிட்டெயிருந்து விடுதலெ வாங்குனாத்தாம் அவனுக்கு விடுதலெ!"ன்னு தெம்பு பண்ணுறாப்புல சொல்லி அனுப்புனாங்க. சுப்பு வாத்தியாரு அப்பிடியே செய்யுவ அழைச்சிக்கிட்டு கோர்ட்டுல இருந்த வக்கீலப் பாத்து சேதியச் சொல்லிட்டுக் கெளம்புனாரு. "நாம்ம அந்த மேடத்த கலந்துக்கிட்டுச் சொல்றேம்!"ன்னு சொல்லி வக்கீலும் அனுப்பி வெச்சாரு.

*****

29 Nov 2020

சிவாஜிக்குச் சித்தப்பன்கள்!


 சிவாஜிக்குச் சித்தப்பன்கள்!

செய்யு - 640

            வெசாரணை அதிகாரியான அம்மா கொஞ்சம் டென்ஷன் கொறைஞ்சி உள்ளாரக் கூப்புட்டதும் சுப்பு வாத்தியாரு, "நாம்ம உள்ளார வாரல! நீயே போயி தங்காச்சிய அழைச்சிக்கிட்டுக் கேட்டுக்கிட்டு வா!"ன்னாரு விகடுவெப் பாத்து. விகடுவும் செய்யுவும் உள்ளாரப் போனாங்க. பின்னாலேயே பாலாமணியும், ராசாமணி தாத்தாவும் வந்தாங்க. யாரும் ஒருத்தரு ஒருத்தர்கிட்டெ பேசிக்கிடல.

            அந்த அம்மாவோட மொகம் சஞ்சலமா இருந்துச்சு. தலைமுடியெல்லாம் கலைஞ்சாப்புலயும் இருந்துச்சு. மொகத்த அலம்பியிருப்பாங்க போல. அதெ சரியா தொடைக்காம மொகத்துல அங்கங்க தண்ணித் துளியாவும் இருந்துச்சு. தண்ணிப் பாட்டில்லேந்து குடிச்ச தண்ணி அவுங்க மேல ஊத்தியிருந்ததும் தெரிஞ்சிது.

            "தப்பா பேசிருந்தா பொறுத்துக்கணும்!"ன்னாம் விகடு.

            "இட்ஸ் ஆல் ரைட்! பரவாயில்ல! உக்காருங்க! எதெ பேசுறதெ இருந்தாலும் கொஞ்சம் நெதானமா யோசிச்சுப் பேசுப்பா!"ன்னாங்க அந்த அம்மா.

             ரண்டு நிமிஷம் வரைக்கும் யாரும் எதுவும் பேசல. பெறவு அந்த அம்மாவே பேசுனாங்க. "திரும்ப பழசுலேந்து ஆரம்பிக்காம முடிவா யிப்போ ன்னா முடிவெப் பண்ணிருக்கீங்க?"ன்னாங்க ரண்டுப் பக்கமும் பொதுவாப் பாத்து.

            "அம்மா எந்த முடிவெப் பண்ணாலும் அதெ ஏத்துக்கிறேம்!"ன்னாம் விகடு இப்போ பட்டுன்னு. அவ்வேம் இப்படிச் சொன்னதெ கனிவா பாக்குறாப்புல பாத்தாங்க அந்த அம்மா.

            "ப்ளீஸ் பிரதர்! எஞ்ஞ குடும்பதையல்லாம் இழுத்துப் பேசாதீங்க! ரொம்ப டார்ச்சரா இருக்கு. ஏம்டா இந்த வேலைக்கு வந்தேம்ன்னு இன்னிக்கு நம்மள நெனைக்க வெச்சீட்டிங்க. இந்த வேலைக்கு வந்து நாம்ம நிம்மதியா தூங்குன ராத்திரிய வெரல்ல வுட்டு எண்ணிப்புடலாம். இங்க கேக்குற பெரச்சனையெல்லாம் எம் குடும்பத்துல நடக்குறாப்புலயேத்தாம் தெனமும் கனவு வருது. அதுல முழிச்சேன்னா அத்தோட தூக்கம் போயிடும். மறுக்கா தூங்கணும்ன்னா தூக்க மாத்திரையப் போட்டாத்தாம் தூக்கம் வரும். ஒடம்பப் பாருங்க நமக்கு. தூக்க மாத்திரையப் போட்டுப் போட்டே உப்பிப் போயிக் கெடக்குது. சமயத்துல சைக்கியாரிஸ்ட்டுகிட்டெ போயி கன்சல்ட்டும் பண்ணிக்கிறேம். இதெ ஏம் ஒஞ்ஞகிட்டெ சொல்றேம்ன்னா, இந்தப் பொறுப்புல இருக்குறதால நம்மள பெரிசா நெனைச்சிட வாணாம். நானும் ஒஞ்ஞளுப் போல ஒரு மனுஷ வகைத்தாம். பொழைப்புக்குத்தாம் இந்த வேலைக்கு வந்திருக்கேம். இதுல வாங்கிட்டுப் போற காசிய வெச்சித்தாம் குடும்பத்தெ ஓட்ட வேண்டிருக்கு. நாஞ்ஞளும் மனுஷங்கப்பத்தாம். வேத்துக் கிரகத்துலேந்து குதிச்சிடல்ல. ஒரு வெதத்துல பாவம் செஞ்ச சன்மங்கய்யா நாங்க!"ன்னு அதெ சொல்றப்ப அந்த அம்மாவுக்குக் கண்ணு கலங்கியிருந்துச்சு.

            "பொண்ண இப்ப அழைச்சிட்டுப் போறதுன்னாலும் தயார்ரா கார்ர எடுத்துட்டுத்தாம் வந்திருக்கேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா தம்மோட தரப்ப பதிலச் சொல்றாப்புல.

            "நமக்கு எம் பொண்டாட்டி வேணும். சேந்துத்தாம் வாழ்வேம்!"ன்னாம் பாலாமணியும் ஒடனே சின்னபுள்ளே அடம் பிடிக்கிறாப்புல.

            "அவுங்க நம்மள நம்பிச் சொல்றாங்க. ஆன்னா மனசுல சில விசயங்க அவுங்களுக்கு இருக்கு. அத்து நமக்குத் தெரியுது. அத்தெ தெளிவுப் பண்ணி வுடாம பொண்ண நாம்ம அனுப்பி வுட மாட்டேம். இதெ வேலையா மட்டும் செய்யல. நாம்ம சமாதானம் பண்ணி இஞ்ஞயிருந்து போவுற எந்தப் பொண்ணும், புள்ளையும் நல்லதா வாழ்ற சேதித்தாம் நமக்கும் எப்பவும் கெடைச்சிட்டு இருக்கு. இந்த விசயத்துலயும் அப்பிடித்தாம் நடக்கணும். பொழைப்புக்குத்தாம் இந்த வேலன்னு சொன்னாலும் இதுல என்னோட ஜாப் சேட்டிஸ்பிக்சன் நமக்கும் முக்கியம்ன்னு நெனைக்கிறேம். இன்னும் ரண்டு சிட்டிங் போடுவேம். பேசுவேம். அவுங்களும் மனசு ஒத்து அவுங்க வாயாலேயே அனுப்புறேம்ன்னு சொல்லட்டும். அப்பிடி அனுப்பி வுட்டாத்தாம் நாம்ம சரியா சமரசம் பண்ணிருக்கேம்ன்னு அர்த்தம். அதுக்குக் கொஞ்சம் நாளாவும். ஆவட்டுமே. ரண்டு மாசம் மூணு மாசம் ஆவட்டுமே. மியூட்சுவலா சேந்தீங்கன்னா ஒஞ்ஞ ப்யூச்சர்ல எந்தச் சிக்கலும் வாராது. பொண்ணோட மட்டுமில்ல அவுங்க குடும்பத்தோடயும் டாக்கடர்ரு நீஞ்ஞ நல்ல ரிலேஷன்சிப்ல இருக்கணும்ன்னு நாம்ம நெனைக்கிறேம். பொண்ண அனுப்ப அவுங்க சம்மதம்ன்னாலும் நாட் ஹண்டரட் பெர்சன்ட் அவுங்க பக்கம் இப்போ ஓக்கே இல்லங்றதுதாம் உண்மெ. ஒரு பர்சன்ட் அவுங்களுக்குள்ள தயக்கம் இருக்கு. அதெயும் சரிபண்ணி வுட்டுப்புடுவேம்! இன்னும் ஒரு ரண்டு மூணு சிட்டிங்கப் போடுறேம். கஷ்டம் பாக்காம டாக்கடர்ரு வந்துட்டுப் போயிடலாமா?"ன்னு அந்த அம்மா பாலாமணியையும், ராசாமணித் தாத்தாவையும் பாத்துக் கேட்டாங்க.

            "தாராளமா மேடம்! ரண்டு மூணு சிட்டிங் ன்னா? இருவது முப்பது வாணும்ன்னாலும் போடுங்க. நெதமும் போட்டாலும் செரித்தாம் திருவாரூர்லயே ரூம் போட்டுத் தங்கி வந்து கலந்துக்கிடுறேம். அவுங்க அனுப்ப சம்மதம்ன்னு சொன்னதெ போதும். நீங்களும் நல்ல வெதமா சமாதானம் பண்ணி அனுப்பி விடுறதுதாம் மொறைன்னு சொல்றதும் செரித்தாம். அடுத்த சிட்டிங் எப்பன்னு சொல்லுங்க மேடம்!"ன்னாம் பாலாமணி ரொம்ப ஆவலாதியா.

            "மனசுல்லாம் அவுங்க தரப்புல கொஞ்சம் மாறணும். ஒரு பாஞ்சு நாளு போகட்டும். அவுங்களும் இன்னிக்கு நடந்ததெ ஆர அமர யோசனெ பண்ணிட்டு வாரட்டும். அதால ஒரு ரண்டு வாரம் கழிச்சி...!"ன்னு சொல்லிக் காலண்டர்ரப் பாத்து, "இருவத்து ரண்டாம் தேதி ஓக்கேவா?"ன்னாங்க அந்த அம்மா.

            "டபுள் ஓக்கே மேடம்! நாம்ம கும்புடுற தெய்வம் நம்மள கைவுடல மேடம்! நாம்ம கோயில்ல இருக்குற தெய்வத்த மட்டும் சொல்லல, ஒஞ்ஞளையும் சேத்துத்தாம் சொல்றேம்! இருவத்து ரண்டுல நாம்ம இஞ்ஞ இருப்பேம். அவுங்க அன்னிக்குன்னுப் பாத்து ஓடிப் போயிடாம இஞ்ஞ இருக்கணும்! அதுக்கும் சேர்த்து ஒஞ்ஞளையும் ஆண்டவனையும் வேண்டிக்கிடுறேம்!"ன்னாம் பாலாமணி.

            "இருவத்து ரண்டு ஒஞ்ஞளுக்கு ஓக்கேவா?"ன்னாங்க அந்த அம்மா விகடுவையும் செய்யுவையும் பாத்து.

            "என்னா வேல கெடந்தாலும் அதெப் போட்டுட்டு அன்னிக்கு இஞ்ஞ ஒஞ்ஞ மின்னாடி இருக்கேம்மா!"ன்னாம் விகடு.

            "செரி கெளம்புங்க! நாமளும் கெளம்புறேம்! இதுக்கு மேல இன்னிக்கு முடியாது!"ன்னு சொல்லிட்டு எல்லாரையும் கெளப்பிட்டு அந்த அம்மாவும் கெளம்புனாங்க. அவுங்க கெளம்புறப்போ மணி சாயுங்காலம் நாலு மணிக்கு மேல இருக்கும். அவ்வளவு நேரம் அந்த வெசாரணை ஓடுனுச்சு. மத்தியானம் யாரும் சாப்புட்ட மாதிரி தெரியல.

            வெளியில வந்த விகடுவையும் செய்யுவையும் பாத்து கைப்புள்ள, "அம்மா என்னத்தெ சொன்னாங்க? சொல்லிட்டு எஞ்ஞ வெரசா கெளம்பிப் போறாங்க?"ன்னாரு சிரிச்சிக்கிட்டே.

            "இருவத்து ரண்டு வர்றச் சொல்லிருக்காங்க! பேசுனதுல கொஞ்சம் மனசு கொஞ்சம் பாதிச்சிருக்கும் போல கெளம்பிட்டாங்க!"ன்னாம் விகடு வருத்தமா.

            "யப்பா சொன்னுச்சு நீயி கேட்ட கேள்விய? செரியான கேள்வித்தாம். அவனுங்களப் பத்தி அந்தம்மா தெரியாமப் பேசுது? பாவம் அத்து ன்னா பண்ணும்? சேத்து வைக்கணும்ன்னு நெனைக்குது, இந்தப் பயலுவோ கொலக்கார பாவியோன்னு தெரியாமா? அவனுவோ காசிப் பணத்துக்கும், நகெ நட்டுக்கும் குறி வெச்சிக்கிட்டு ஆட்டத்தெ காட்டுறானுவோங்றது அந்த அம்மாவுக்குப் புரிய மாட்டேங்குது. போவப் போவப் புரிஞ்சிக்கும். ஆன்னா ஒண்ணுப்பா இன்னிக்கு வந்ததுல வாங்குன நகெ நட்டையும், பணங் காசியையும் கொடுக்குறேம்ன்னு என்னத்தத்தாம் மனசு வந்து ஒத்துக்கிட்டானுவோளோ தெரியல!"ன்னாரு கைப்புள்ள மறுபடியும் ஒரு சிரிப்பெ சிரிச்சிக்கிட்டு.

            அந்த நேரமாப் பாத்து பழைய பரமசிவம் வந்து கைப்புள்ள, சுப்பு வாத்தியாரு, விகடு எல்லாருக்கும் கையக் கொடுத்தாரு. "அடுத்த தடவெ சந்திக்கிறப்போ நமக்குள்ள ஒறவு இன்னும் ஆழப்பட்டிருக்கணும். பேசுனதெ கேள்விப்பட்டேம். நல்லதே நடக்கட்டும். அடுத்த மொறை வர்றப்போ நீஞ்ஞத்தாம் நம்ம எல்லாத்துக்கும் சாப்பாடு பண்ணணும் பாத்துக்கோங்க!"ன்னு சொல்லிட்டு வேகு வேகுன்னு கெளம்பிப் போனாரு.

            "இவ்வேம் ன்னடா ஆவாதக் கதைக்கு ஆத்தெ கட்டி எறைப்பாம் போலருக்கு? மொதல்ல பேசுறப்ப ஒரு மாதிரிக்கிப் பேசுனாம். பெறவு ஒக்காந்துப் பேசுறப்போ அந்தப் பேச்ச பேசுறாம். இஞ்ஞ வர்றப்போ இப்பிடி பேசுறாம். சரியான பச்சோந்திப் பயலுவோளா இருப்பானுவோ போலருக்கு. இன்ன நடிப்ப நடிக்குறானுவோ! சிவாஜித் தோத்துப் போவ வேண்டியதுத்தாம். சிவாஜிக்குச் சித்தப்பன்ஙகளா இருப்பானுங்கப் போலருக்கு. இவனுங்கல்லாம் ஏம் இப்பிடி அலைஞ்சிட்டுக் கெடக்குறானுவோ? பேயாம சினிமாவுல சான்ஸ் வாங்கிட்டு வில்லனா நடிச்சி காசிப் பணத்த பாக்க வேண்டித்தானே? கெளம்பி வர்றானுவோ பாருடாம்பீ வெகடு?"ன்னாரு கைப்புள்ள கௌம்பிப் போயிட்டு இருந்த அவுங்களப் பாத்து நமுட்டுச் சிரிப்ப சிரிச்சிக்கிட்டு.

            "அதெ வுடுங்க! நாம்மப் பக்கம் பேச வேண்டியதெ செரியா பேசியாச்சு. அத்துப் போதும். மித்தபடி என்ன வாணாலும் நடக்கட்டும். மத்தியானம் வேற சாப்புடல. எஞ்ஞ சாப்புடுவோம் சொல்லுங்க?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பேச்ச மாத்தி.

            "இனுமே என்னத்தெ சாப்புடுறது? ஒரு பட்சணத்த அமுக்கிக்கிட்டு, டீத்தண்ணியக் குடிச்சிட்டு வூட்டுக்குப் போயி ராத்திரிச் சாப்பாடுதாம். ஒரு டீக்கடையப் பாருங்க!"ன்னாரு கைப்புள்ள.

            சுப்பு வாத்தியாரு அங்கயிருந்து எல்லாத்தையும் கௌப்பிக்கிட்டு வந்து சுத்திலும் பார்வைய சொழல வுட்டாரு. கலக்டர் ஆபீஸூக்குப் பின்னாடி இருக்குற மகளிர் சுய உதவிக் குழுவால நடத்தப்படுற டீக்கடைக்கு கண்ணுல பட, அங்க போவலாமான்னு கண்ணாலயே கேட்டாரு. கைப்புள்ளையும் கண்ணாலயே சம்மதம் காட்டுனாரு. சுப்பு வாத்தியாரு எல்லாத்தையும் அங்க அழைச்சிட்டுப் போனாரு. அங்க சுடச் சுட வடை சுட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுல ஆளுக்கு ரண்டு வாங்கிக் கொடுத்து டீத்தண்ணியையும் வாங்கிக் கொடுத்தாரு. அதெ சாப்புட்டுக்கிட்டெ கைப்புள்ள சொன்னாரு, "ஒலகமே பணத்தெ நோக்கித்தாம் ஓடுறாப்புல இருக்குது. அதுல யோக்கியன் பட்டமும் தேவையா இருக்குது. அதுக்காக என்னென்ன வேஷத்தப் போடுறானுவோ? பணத்த பாங்கியிலப் போட்டுட்டு லாக்கர்ர ஓப்பன் பண்ணிட்டு வாடான்னா அதுக்கு ன்னா கதைய இழுக்குறாம்? நாம்ம டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிடுவேங்றாம், ஏமாத்திப் புடுவோம்ங்றாம். அவ்வேம் பரம்பரை பரம்பரையா ஏமாத்திட்டுக் கெடந்தப் பயலுவோ. நெனைப்பு அப்பிடித்தாம் போவும். அவனுகளப் போலத்தாம் நம்மளையும் பாப்பானுவோ. இதுல வேற நாம்ம கொடுத்த பணங்காசியே அவனுக கையில இல்லியாம், நகெ நட்டும் இல்லியாம், அதெயும் தாண்டி அதுல டபுள் பங்கா செஞ்சி வேற அழைச்சிட்டுப் போவுதாங். மொசப் புடிக்கிற நாயிக்கு மூஞ்செ பாத்தாலே தெரியாது? லவுட்டிக்கிட்டுக் கெடக்குறப் பயலுவோளுக்கு ன்னா பேச்சு? என்னவோ பத்தர மாத்துத் தங்கத்தெப் போலல்லா!"ன்னாரு கைப்புள்ள சுடச்சுட டீத்தண்ணியையும் உள்ளார வுட்டுக்கிட்டு சுடச்சுட வார்த்தைகளையும் வுட்டுகிட்டு.

            "அது கெடக்குது வுடுங்க. அவனுங்களும் எதாச்சிம் பேசி ஆவணும். பணத்தையும் நகையையும் கொடுக்காம ஏமாத்தியாவணும். பொண்ணையும் அழைச்சிட்டுப் போயிடக் கூடாது. அப்பிடியே அழைச்சிட்டுப் போனாலும் சந்தேகம் வர்றதா அளவுக்கு வெச்சி கொன்னுப்புடணும். இதெல்லாம் தெரியாததா? மலபுடுங்கி மகாதேவனுங்களுக்கு மரமும் சிறுதுரும்புங்ற மாதிரிக்கிக் கொலக்கார பாவியோளுக்கு இந்தப் பேச்சுல்லாம் பெரிசா ன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஆமாம் போங்ற மாதிரிக்கு.

            "இருவத்து ரண்டாம் தேதி வந்துத்தானே ஆவணும். அன்னிக்கும் இந்த மாதிரியே பேசிச் சமாளிச்சிப்புடவா முடியும்?"ன்னாம் விகடு.

            "அவனுவோ வந்தாத்தானே பேசிச் சமாளிக்க. இன்னிக்கு எதுக்கு வந்தோன்னுவான்னா வன்கொடுமெ சட்டத்துல அந்த அம்மா கேஸைப் போட்டு வுட்டுப்புடுமோங்ற பயத்துலத்தாம். அதுக்காகத்தாம் அவ்வேம் வக்கீலையும் கூட அழைச்சிட்டு வந்திருக்காம். இந்த சிட்டிங் வந்தா இன்னும் ரண்டு சிட்டிங் வர்றாம மூணாவது சிட்டிங்கிக்கு வந்தா போதும். இதெல்லாம் சட்டத்துல இருக்குற விசயம்ங்க. அதுக்குத்தாம் அடி போடுறாம் அந்தப் பயெ. இத்துப் புரியாம நீயா ஒண்ணுத்தப் பேசுடாம்பீ நீயி? இதெல்லாம் அவனுகளுக்கு நாடகம்டாம்பீ! சம்பவத்தப் பண்ணி வுட்டுப்புட்டு அவனுங்கப் பாட்டுக்குப் போயிட்டே இருப்பானுங்க! நாம்ம இவுனுங்கள மாதிரிக்கி எத்தனெ பேர்ர பாத்திருக்கேம்!"ன்னாரு கைப்புள்ள.

            "இன்னிக்கு இத்து பேசுனதுப் போதும். யே யப்பா ரொம்ப பேசிக் களைச்சாப்புல இருக்கு. மனுஷ பெராணனைய வுட்டுப் பேச வேண்டிதா இருக்கு. வக்கீலுக்குப் போன அடிச்சித் தகவலச் சொல்லிட்டுப் போயிட்டே இருப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெல்லாம் நம்மள அந்த அம்மா வெளியில அனுப்பனுப்பவே அடிச்சித் தகவலச் சொல்லிட்டேம். இந்த மாதிரி வந்து அசிங்கப்படுறாப்புல இருக்கும்னுத்தாம் நாம்ம வரலன்னு ரொம்ப சாமர்த்தியமாக சொல்லிட்டாரு வக்கீலு. அவ்ளோதாம் விசயம். இதுக்கு மேலன்னா நேர்லப் போயிப் பாத்துதாம் சொல்லணும்!"ன்னாரு கைப்புள்ள.

            "நேர்லல்லாம் இன்னிக்கு வாணாம். வூடுப் போயிச் சேருவோம். பெறவு வேணும்ன்னா நெதானமா ஒரு நாளு வந்துப் பாத்துப்போம்! ஒடம்பெல்லாம் அடிச்சிப் போட்டாப்புல களைப்பா யிருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அடுத்த சிட்டிங்ல ஒரு முடிவு வந்துப்புடுமா?"ன்னா செய்யு இவ்வளவையும் கேட்டும் புரியாத்தனமா. அவ்வே மனநெல அப்போ அப்பிடி இருந்துச்சு.

            "அவனுவோளும் வந்துப்புடுவானுவோ! முடிவும் வந்துப்புடும் நெனைச்சிக்கிட்டு இரு. பணமும் வணாம், நகெயும் வாணாம்ன்னு சொல்லு. இந்த நிமிஷத்துலயே எல்லாம் முடிவுக்கு வந்துப்புடும்!"ன்னாரு கைப்புள்ள சிரிச்சிக்கிட்டெ.

            "அத்து எங் காசின்னா போனா போவுதுன்னு வுட்டுப்புடுவேம். யப்பாவும் யண்ணனும் ஒரு கடையில டீத்தண்ணி குடிச்சா கூட காசி சிலவாயிடும்ன்னு பாத்துப் பாத்து சேத்த காசி! அதெ எப்பிடி வுட முடியும்?"ன்னா செய்யு கண்ணுல பொங்கி வர்ற தண்ணிய அடக்க முடியாம.

            "யப்போ பேயாம பொத்திக்கிட்டு அடுத்த சிட்டிங்குக்கு வந்து ன்னா நடக்குதுன்னு பாரு!"ன்னாரு கைப்புள்ள அழுத்தம் திருத்தமா.

            "இந்தாரு பணங்காசியப் பாத்துட்டு வாழ்க்கைய வுட்டுப்புட்டு நிக்காதே. பணங்காசிய சம்பாதிச்சுப்புடலாம். வருஷம் போனா அதெ சம்பாதிக்க முடியாது. நீயி ஒழுங்கா படிச்சி ஒரு வேலைக்குப் போற வழியப் பாரு. இதெ விட்டுப்புடு. அது போக்குக்குப் போயி அதுவாவே ஒரு முடிவுக்கு வந்துப்புடும்! இதெ பத்தி நெனைக்கவே நெனைக்காதே! ஏத்தோ வந்துட்டுப் போறதோட பேசுறதோட இதெ மறந்துப்புடணும். இதெ மனசுல சொமந்துகிட்டு ஆவ வேண்டிய காரியத்துல கவனத்தெ வுட்டுப்புடக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆம்மாம்! இதுல மனசெ வெச்சிக்கிட்டு நிக்காதே! இதல்லாம் சுத்த அக்கப்போருதாம். வேலைக்கிப் போன எதையும் சம்பாதிச்சிடலாம். காலத்தத்தாம் சம்பாதிக்க முடியாது!"ன்னாம் விகடுவும் தங்காச்சியப் பாத்து அப்பங்காரரு சொன்னதெ ஆமோதிக்குறாப்புல.

            "ல்லண்ணே! நாம்ம அவனுவுகள வுடறாப்புல யில்ல. இருவத்து ரண்டாம் தேதி பார்ரேம்!"ன்னா செய்யு மனசுக்குள்ள வேகம் அடங்காதவளப் போல.

            "அத்து கொஞ்ச நாளு அப்பிடிப் பிடிவாதமா நின்னுத்தாம் மனசு அடங்கும். வுடு. ஆக்கி வெச்ச சோறு ஆறாம எஞ்ஞப் போயிடப் போவுது வுடு!"ன்னாரு கைப்புள்ள விகடுவப் பாத்து. பேச்சு அத்தோட ஒரு முடிவுக்கு வந்தது போல இருந்துச்சு. அத்தோட போதும் பேச்சுன்னு அதுக்கு மேல பேச்ச வளத்தாம வூட்ட நோக்கி வண்டிய வுட்டாங்க.

*****

28 Nov 2020

உங்கப் பொண்ணுன்னா அனுப்புவீங்களா?

உங்கப் பொண்ணுன்னா அனுப்புவீங்களா?

செய்யு - 639

            வெசாரணை அதிகாரியான அம்மா எல்லாரையும் ப்ளாஸ்டிக் நாற்காலிகள்ல உக்காரச் சொன்னாங்க. "அவுங்க தரப்புலேந்து வக்கீல் இருக்கலாமா? ஏதும் ஆட்பேசபனை இருக்கா?"ன்னாங்க சுப்பு வாத்தியார்ரப் பாத்து. அதுக்குக் கைப்புள்ள பதிலச் சொன்னாரு. "எல்லாரும் சேர்ந்து பேசுறப்போ யாரு வாணாலும் இருக்கலாம். அதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் யில்ல. ஒவ்வொருத்தரையும் தனித்தனியா வெசாரிக்கிறப்போ அந்தத் தரப்புலேந்து ஒருத்தரு, அதுவும் வக்கீலு இருக்குறது மொறை கெடையாதுன்னுத்தாம் சொன்னேம். அப்படி அது ஞாயம்ன்னா அவுங்க தரப்புல அவுங்கள வெசாரிக்கிறப்போ எஞ்ஞ தரப்புலேந்து எஞ்ஞ வக்கீலோ யில்ல எஞ்ஞள்ல ஒருத்தரோ இருக்கணுமா யில்லையா? யிப்போ அவரு இருக்குறதப் பத்தி எங்களுக்கு ஒண்ணும் பெரச்சனெ யில்ல!"ன்னாரு.

            "நீஞ்ஞ ஒண்ணும் தப்பா நெனைச்சிக்கிட வாணாம். பெரச்சனையோட கோணம் தனக்குப் புரியலன்னும், ஒவ்வொருத்தரும் பேசுறதெ கேட்டா அதெ புரிஞ்சிக்கிட்டுச் சேத்து வைக்குறதுக்கு உண்டான முயற்சியப் பண்ணலாம்ன்னு வக்கீல் சார் சொன்னதால, ஒரு நல்ல வெசயந்தானேன்னு நெனைச்சி வக்கீல சார்ர உள்ளார உக்காரச் சொன்னேம். வேற ஒண்ணும் இதுல உள்நோக்கமெல்லாம் யில்ல!"ன்னாங்க அந்த அம்மா கைப்புள்ளைக்கு ஒரு வௌக்கத்தக் கொடுக்குறாப்புல.

            "சேத்து வைக்குற ஒரு பெரச்சனைக்கு வக்கீலே வர்றக் கூடாது. நாஞ்ஞ எஞ்ஞப் பக்கத்துக்குன்னு வக்கீலக் கொண்டாந்திருக்கமா? இத்தனைக்கும் இந்தா பக்கத்துல எதுத்தாப்புல இருக்குற கோர்ட்டுக் கட்டடத்துலத்தாம் எஞ்ஞ வக்கீலு இருக்காரு. ஒரு போன அடிச்சாப் போதும். பாஞ்சு வந்துப்புடுவாரு! ஆன்னா செய்யலப் பாருங்க!"ன்னாரு கைப்புள்ளயும் அந்த அம்மாவுக்கு பதிலுக்குப் பதிலு வௌக்கத்தக் கொடுக்குறாப்புல.

            "செரி! இதுக்கு மேல பெரச்சனைய வளத்த வாணாம். சில கசப்பான விசயங்க நடந்திருக்கு. இல்லன்னு சொல்றதுக்கில்ல. நெருடலான ஒரு சில விசயங்களும் இருக்கு. அதையும் இல்லன்னு சொல்லல. பேசுனா சரி பண்ண முடியாத விசயம்ன்னு எதுவும் கெடையாது. அந்த நம்பிக்கையிலத்தாம் சொல்றேம். நடந்தது நடந்துப் போச்சு. அதெ பேசணும்ன்ன ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கலாம். அந்தத் தெசையில எதெப் பத்தியும் பேச வாணாம்ன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுறேம். நாம்ம பேசப் போறது ரண்டு தரப்புக்கும் கொஞ்சமாச்சும் உபயோகமா இருக்கணும். அதெ மனசுல வெச்சிட்டு பேசணுங்றதெ ஒரு அன்பான கண்டிஷனாவே முங்கூட்டியே சொல்லிடுறேம். யிப்போ மாப்புள்ளப் பையேம் பொண்ண அழைச்சிட்டுப் போவ தயாரா இருக்காரு. ஒத்தக் கால்ல நிக்குறாருன்னும் சொல்லலாம். பொண்ண அனுப்புறதுல சார் ஒஞ்ஞளுக்கு எதாச்சும் தாங்கல் இருக்கா? இருந்தா சொல்லுங்க!"ன்னாங்க அந்த அம்மா சுப்பு வாத்தியாரைப் பாத்து.

            "நாம்ம ஒங்ககிட்டெ மின்னாடி சொன்னதுதாம். அதெ செஞ்சிட்டா பாக்கலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒடனே அந்த அம்மாவுக்கு ஒரு பதிலெச் சொல்றாப்புல.

            "அத்து நீஞ்ஞ தனியா சொன்னது. அதெ நாம்ம குறிச்சிக்கிட்டெம். யிப்போ எல்லார் மின்னாடியும் அதெப் பத்திச் சொல்லுங்க! அப்பத்தானே அவுங்களுக்கு வௌங்கும்!"ன்னாங்க அந்த அம்மா.

            "அதாம்ங்க! காரு வாங்கன்னு கொடுத்த பத்து லட்சத்துக் காசிக்குக் காரு வாங்கலங்றதால அந்தப் பணத்த எம் பொண்ணு பேர்ல பாங்கியில டிபாசிட்டு பண்ணிடணும். கலியாணத்துக்குன்னு எம் பொண்ணுக்கு நூத்துச் சவரன் செஞ்சிருக்கேம். அதெ போட்டுத்தாம் பொண்ண அழைச்சிட்டுப் போவணும். அத்தோட அந்த நகெயெ வெச்சிக்கிட எம் பொண்ணு பேர்ல பாங்கியில லாக்கரு ஓப்பன் பண்ணிக் கொடுத்துடணும். எம் பொண்ணுக்குன்னுப் போட்ட நகெயெ எம் பொண்ணுத்தாம் வெச்சிக்கும், எடுத்துக்கும். இதுக்குச் சம்மதம்ன்னா பொண்ண அனுப்புறதுல அட்டியில்ல!"ன்னு முன்னாடி சொன்னதையே திரும்பவும் இப்போ எல்லார் முன்னாடியும் சொன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யப்போ இவருக்குப் பொண்ணு மேல அக்கறயில்ல. பணங்காசி, நகெநட்டு மேலத்தாம் அக்கறெ?"ன்னாரு பழைய பரமசிவம் பட்டுன்னு சுப்பு வாத்தியார்ரப் போட்டுத் தாக்குறாப்புல.

            "அதெ பேசாதீயே! அவுங்கப் பக்கத்து டிமாண்ட்ட அவுங்க சொல்றாங்க. அதெ செய்ய முடியுமா? முடியாதான்னு மட்டும் பேசுங்க!"ன்னாங்க அந்த அம்மா பட்டுன்னு.

            "அப்பிடிச் சொல்லாதீயே. செலதெ பேசித்தாம் ஆவணும். பொண்ண கட்டிக் கொடுத்துட்டாரு. பணங்காசியக் கொடுத்துட்டாரு, நகெ நெட்ட செஞ்சிட்டார்ன்னா அத்தோட வுட்டுப்புடணும். அதெ இப்பிடித்தாம் பண்ணணும், அப்பிடித்தாம் பண்ணணும்ன்னா அதெல்லாம் நடை‍மொறைக்கு ஒத்து வாராதும்மா! அப்பிடி உள்ளவரு அதுக்குத் தகுந்தாப்புல வூட்டொட மாப்புள்ளப் பாத்து வெச்சிருக்கணும்!"ன்னாரு பழைய பரமசிவம் சண்டெய நிமுண்டி விடுறாப்புல.

            "அதுலத்தாம்யா சந்தேகமே எஞ்ஞளுக்கு. கொடுத்த பணங்காசி ஒஞ்ஞகிட்டெ யில்ல. நகெ நட்டும் யில்ல. அதுலயே எஞ்ஞளுக்குச் சந்தேகமா இருக்கு. கொடுத்த நகெநட்டு, பணங்காசியப் பாதுகாப்பா வெச்சிருக்கிருக்கத் தெரியாதவம் நாளைக்கிப் பொண்ண அனுப்புனா அதெ எப்பிடிச் சரியா வெச்சிப்பாம்? இப்பிடிப் பண்ணுனா இதுக்காச்சும் பொண்ண பத்திரமா வெச்சிருப்பாம் பாரு! அதுக்குத்தாம் இப்பிடிக் கேக்குறது புரியுதா?"ன்னாரு கைப்புள்ள பழைய பரமசிவத்தப் பாத்து அவரு கேட்டதுக்கு ஒரு பதில பொட்டுல அறைஞ்சாப்புல சொல்லுற மாதிரி.

            "ஏம்யா நீஞ்ஞ பணமே கொடுக்கல. நகெ நட்டெ பண்ணலன்னு சொன்னா ன்னா பண்ணுவீயே?"ன்னாரு பழைய பரமசிவம் இப்போ எடக்கு மடக்கா. அதெ கேட்டதும் கொதிச்சுப் போயி ப்ளாஸ்டிக் நாற்காலியிலேந்து எழும்புன கைப்புள்ளையக் கைய காட்டி உக்கார வெச்சாங்க வெசாரணை அதிகாரி அம்மா. கைப்புள்ளையும் ஒண்ணும் சொல்லாம உக்காந்தாரு.

            "இந்தாருங்க அதெப் பேசாதீயே! அவுங்க அந்த அளவுக்குப் பணங்காசியக் கொடுத்தது, நகெநட்டெ செஞ்சது எல்லாம் உண்மென்னு ஒஞ்ஞ மாப்புள்ளப் பையேம் எங்கிட்ட தனிப்பட்ட மொறையில வெசாரிச்சப்ப ஒத்திருக்காரு. ச்சும்மா போழுதுப் போவாம நாம்ம ஒவ்வொருத்தர்ரா கூப்ட்டு வெசாரிச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கல. ஒரு சில விசயங்கல பொதுவுல சொல்ல முடியாது, சங்கோஜமா இருக்கும்ன்னுத்தாம் தனியா வெசாரிக்கிறது. அந்தப் படிக்கு வெசாரிச்சதுல நெறைய விசயங்கள குறிச்சும் வெச்சிருக்கும். கோர்ட்டுக்குப் போனாலும் நாம்ம குறிச்சி வெச்சது ஒரு வாக்குமூலமா செல்லும் பாத்துக்குங்க!"ன்னாங்க அந்த அம்மா பழைய பரமசிவத்த அசமடக்குறாப்புல.

            "பெறவு ன்னா? அம்மாவே சொல்லிப்புட்டாங்க. செஞ்சது உண்மெத்தான்னு. நாஞ்ஞ கேக்குறதெப் பண்ணி வுட்டுப்புட்டு அழைச்சிட்டுப் போங்க!"ன்னாரு கைப்புள்ள பட்டுன்னு நாற்காலியிலேந்து எழும்பி.

            "நீஞ்ஞ மொதல்ல பொண்ண கேளுங்க மேடம்! பொண்ணு ஒண்ணும் மைனரில்ல, மேஜரு. குடும்பம் நடத்த வர்றதா சொன்னா மேட்டர் முடிஞ்சிது. இவுங்ககிட்டெ ன்னா பேசிக்கிட்டு? பொண்ணு வர்றேன்னு சொல்றப்போ இவுங்க மறுத்தா இவுங்களப் பிடிச்சி உள்ளாரப் போட வேண்டியதுத்தாம்!"ன்னாரு அவுங்க தரப்பு வக்கீலும் பட்டுன்னு நாற்காலியிலேந்து எழும்பி.

            "சார்! வக்கீல் நீஞ்ஞ. அதுக்குத் தகுந்தாப்புல பேசுங்க. இப்பிடி உள்ளாரப் பிடிச்சிப் போடுறது அத்து இத்துன்னா அவுங்களுக்குப் பயம் வாராது! சித்தெ யாரும் சம்பந்தம் இல்லாம எடையில பேசாதீயே! நாம்ம கேக்குறதுக்கு மட்டும் பதிலச் சொல்லுங்க! இதென்ன சண்டெ வளக்குற எடமா யில்ல லாவணி கச்சேரி நடக்குற கூடமா? ஒரு ஆபிசர்ன்னா அதுக்கு இருக்குற மருவாதிய கொடுங்க. ஆளாளுக்கு எழும்பிப் பேசுனா ன்னா அர்த்தம்? தயவுசெஞ்சு இனுமே அநாவசியமா யாரும் பேசாதீயே. எம்மாடி பொண்ணு ஒங் கருத்து ன்னா? அதெச் சொல்லு!"ன்னாங்க அந்த அம்மா எழும்பி நின்னவங்கள ஒரு மொறைப்பு மொறைச்சிக்கிட்டு.

            "எம் உசுருக்கு உத்தரவாதம் வேணும்மா!"ன்னு செய்யு சொல்லி முடிச்சிருக்க மாட்டா, ஒடனே பாலாமணி நாற்காலியிலேந்து எழும்பி, "எம் உசுருக்கும் உத்தரவாதம் வேணும்!"ன்னாம் பட்டுன்னு.

            "ச்சும்மா வெளையாட்டுப் பண்ணிட்டு இருக்கக் கூடாது. அழைச்சிட்டுப் போறது நீதானப்பா! பெறவென்ன ஒம்மட உசுருக்குப் பாதுகாப்பு. அப்பிடி பயப்படுற நீயி எதுக்குப் பொண்ணோட சேந்து வாழணும்? இதுல பொண்ண வேற பாத்து சேத்து வெச்சி அனுப்பி வுடுங்கறே? அப்பிடியே உருவி வழிஞ்சு கெஞ்சுறே?"ன்னாங்க அந்த அம்மா பாலாமணியப் பாத்து கடுப்படிக்குறாப்புல.

            "பொண்ண அழைச்சிட்டுப் போறேம்! சமைச்சிப் போடுறேன்னு வெசத்தெ ஊத்தி வெச்சா யாருக்குத் தெரியும்? நேரடியா மொரட்டு வெசமா வைக்காம ஸ்லோ பாய்சனா வெச்சிக்கிட்டெ இருக்குதுன்னு வெச்சுக்கோங்க யாருக்கு என்னாங்க தெரியும்? மாப்புள்ள வெளையாட்டா பேசுறதால்லாம் நெனைக்காதீயே! எத்தனெ கேஸூ இத்து மாதிரி நடக்குது. தெனசரி பேப்பர்ர பாக்குறீயளே! பொண்ணு உசுருக்கு உத்தரவாதத்தக் கேட்டா, மாப்புள்ளையும் கேக்கத்தாம் செய்வாம்!"ன்னாரு ஒடனே வக்கீல் எழும்பி ஆர்கியுமெண்ட பண்றாப்புல.

            "அப்பிடில்லாம் நம்பிக்கையில்லாம எஞ்ஞப் பொண்ண யாரும் அழைச்சிட்டுப் போவ வாணாம்ங்க. அந்தக் கூட்டத்துக்குக்கு உசுர்ர எடுத்துல்லாம் பழக்கம். எஞ்ஞளுக்குல்லாம் உசுர்ர கொடுத்துத்தாம் பழக்கம். ஒரு சபெயில அதென்ன கொலகாரிங்ற மாதிரிக்கி சர்வ சாதாரணமா பேசலாம்? அந்தப் பயெத்தாம் எஞ்ஞ பொண்ண தூக்குல தொங்குறாப்புல பண்ணுனாம். அப்ப யாரு கொலக்கார்ரேம்?"ன்னாரு கைப்புள்ளயும் எழும்பி ஆர்கியுமெண்ட வைக்குறாப்புல.

            "செல தப்பப் பண்ணத இப்பத்தாம் உணர்றேம்! பெரிய மனுஷங்கள இருக்கீயேளே! நல்ல வெதமா ரண்டுப் பக்கமும் சேந்து வுட பேசி வுடுவீங்கன்னுப் பாத்தா நீஞ்ஞளே போதும் பிரிச்சி வுட. தயவுபண்ணி வக்கீல் சார் கெளம்பிப் போங்க வெளியில. எதுவும் தப்பா நெனைச்சுக்காதீயே. அதெப் போல பொண்ணு மாப்புள்ளையோட ரத்த ஒறவுங்கத் தவுர யாரு இருந்தாலும் வெளியில கெளம்பிடுங்க. ஏன்னா முடிவு எடுக்க வேண்டியது அவுங்கத்தாம். அவுங்கள வெச்சி நாம்ம பேசிக்கிறேம்!"ன்னு அந்த அம்மா நாற்காலியிலேந்து எழும்பி நின்னு பட்டுன்னு கையெடுத்துக் கும்பிட்டாங்க. அவுங்க அப்பிடிக் கும்பிட்டதும் வக்கீலு, பழைய பரமசிவம், பாலாமணியோட வந்திருந்த ரண்டு ஒறவுக்காரவுங்க, கைப்புள்ளன்னு எல்லாரும் எழும்பி வெளியலப் போனாங்க. இப்போ அறையில இருந்தது அந்த அம்மா, சுப்பு வாத்தியாரு, செய்யு, விகடு, பாலாமணி, ராசாமணி தாத்தா மட்டுந்தாம்.

            "சமரசம் பண்ணுற எடத்தெ கோர்ட்டு மாதிரி ஆக்கிக்கிட்டு. பொதுவா நாஞ்ஞ வக்கீல அலோ பண்ணுறதெ கெடையாது. ஏத்தோ நல்லவரு மாதிரிக்கிப் பேசுனாரேன்னுப் பாத்தா இந்த ஒரு ஆளெ போதும் இஞ்ஞயே டிவோர்ஸ்ஸப் பண்ணி அனுப்பி வுட்டுப்புடுவாரு போலருக்கு. நல்லா வந்ததெ கெடுத்துட்டுப் போறாரு! ஏம் சார் இவரையெல்லாம் அழைச்சிட்டு வாறீங்க?"ன்னாங்க அந்த அம்மா பாலாமணியப் பாத்து.

            பாலாமணி அதுக்கு ஒண்ணும் சொல்லாம இப்போத்தாம் வாழ்க்கையிலயே மொத மொறையா தலையக் குனிஞ்சிக்கிட்டாம் என்னவோ தப்பெ பண்ணிட்டவேம் போல.

            "ரண்டுப் பக்கத்துக்குக்கும் சொல்லிக்கிறேம். வாதத்துக்குத்தாம் மருந்திருக்கு. விதாண்டாவாதத்துக்கு எல்லாம் மருந்தில்லே. பரஸ்பர நம்பிக்கத்தாம் முக்கியம். ஒஞ்ஞ ரண்டு பேரு பொண்ணு மாப்புள்ளயப் பாக்குறப்ப அவுங்க பேசுனாப்புல நமக்குப் படல. படிச்சவங்க ரண்டு பேரும். பேசுறதெ யோசிச்சு நெதானமாப் பேசணும்! வார்த்தைய வுட்டு வாழ்க்கைய வுட்டேம்ங்ற பேரு இருக்கக் கூடாது! எந்த எடத்துல இந்தப் பெரச்சனெ முட்டிக்கிட்டு இருக்குறதோ அதெ மட்டும் சரி பண்ணிக்கிடுறாப்புலப் பேசணும். பணம்காசிய பாங்கியில டிபாசிட் பண்ணணும், நகெநட்டுக்கு லாக்கர்ரத் தயாரு பண்ணணும். அதெ செஞ்சாச்சுன்னு வெச்சிப்போம். உசுருக்குல்லாம் ஒண்ணும் பயப்பட வாணாம். ரண்டு பேத்துமே அந்த மாதிரிக்கிச் செய்யுற ஆளு மாரில்லாம் நமக்குத் தெரியலங்றதால சொல்றேம். மேக்கொண்டு என்ன பண்ணலாம்ங்றதெ நீஞ்ஞ சொல்லுங்க சார் பொண்ண பெத்தவங்களே!"ன்னாங்க அந்த அம்மா.

            "பணங்காசிக்கும், நகெநட்டுக்கும் யாரு ஒப்புக்கிறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு திரும்பவும் மொதல்லேந்து ஆரம்பிச்சு உத்திரவாதம் கேக்குறாப்புல.

            "அய்யோ சார்! அந்த எடத்தெ வுடுங்க. அதுக்கு நாம்ம ஒத்துக்கிறேம்ன்னே வெச்சுக்குங்க! அடுத்ததெப் பத்திச் சொல்லுங்க. எப்ப அனுப்பலாம், எப்பிடி அனுப்பலாங்ற அடுத்த விசயத்துக்குத் தயவு பண்ணி வாங்க!"ன்னாங்க அந்த அம்மா.

            "அத்து முடியாதும்மா! டிபாசிட்டப் பண்ணி அந்தப் பத்திரத்தக் காட்டணும். லாக்கர்ர ஓப்பன் பண்ணி சாவிய எம் பொண்ணு கையில ஒப்படைக்கணும்! அதுக்குப் பெறவுதாம் நாம்ம பொண்ண அனுப்புவேம்! அதுல எந்த மாத்ததும் கெடையாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரே வார்த்தையா பிடிவாதமா.

            "பணத்தெ டிபாசிட் பண்ணுறதுன்னா எஞ்ஞ? லாக்கர்ர ஓப்பன் பண்ணுறதுன்னா எஞ்ஞ? அதெ தெளிவா சொல்லணுமா இல்லியா?"ன்னாங்க அந்த அம்மா.

            "அத்து அவுங்களுக்கு வசதிப்பட்டாப்புல பாக்குக்கோட்டையில பண்ணாலும் செரித்தாம், சென்னைப் பட்டணத்துல பண்ணிக்கிட்டாலும் செரித்தாம். பண்ணுறது கவர்மெண்ட் பாங்கியிலத்தாம் பண்ணணும். தனியாரு பாங்கியிலப் பண்ணிடக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தன்னோட நெலைப்பாட தெளிவா.

            "செரி பொண்ணு வூட்டுத் தரப்புல சொல்லிப்புட்டாங்க. ஏம்பா டாக்கடரு மாப்புள அதுல செய்யுறதுல ஒஞ்ஞளுக்கு எந்தச் சிரமமும் இருக்காதுன்னு நெனைக்குறேம். அதெ பண்ணிட்டு என்னிக்கு அவுங்க கேக்குற மாதிரிக்கி பத்திரத்தோடயும், லாக்கரோடயும் வார்றீயே? அதெச் சொல்லுங்க மொதல்ல!"ன்னாங்க அந்த அம்மா.

            "மேடம் வாயிக்கு வக்கனையா யாரு வாணாலும் எப்பிடி வாணாலும் பேசலாம். சொன்னபடி நடப்பாங்களா?"ன்னாம் பாலாமணி இப்போ எழும்பி நின்னு.

            "அதுக்கு நாம்ம பொறுப்பு. நீஞ்ஞ நம்பலாம். அவுங்க சார்பா அதுக்கு நாம்ம உத்தரவாதம் தர்ற தயாரா இருக்கேம்!"ன்னாங்க அந்த அம்மா எல்லாத்துக்கும் பொறுப்ப ஏத்துக்கிறாப்புல.

            "பத்திரத்தையும் லாக்கரையும் கையில வாங்கிட்டு டிவோர்ஸ் கேஸ்ஸப் போட்டு நம்மையும் நம்மட பொண்டாட்டியையும் பிரிச்சிட மாட்டாங்கறதுக்கு ன்னா உத்திரவாதம்? அதெ சொல்லுங்க!"ன்னு தடார்ன்னு மேசையத் தட்டுனாம் பாலாமணி. அவ்வேம் அப்பிடி படார்ன்னு தட்டுனதுல அந்த அம்மாவே ஒரு நிமிஷம் அதிர்ந்துதாம் போனாங்க.

            "ன்னப்பா இவ்ளோ நேரமா ஒரு மாதிரியாப் பேசிட்டு, யிப்போ வேற மாதிரியா பேசுறே?"ன்னாங்க அந்த அம்மா அதிர்ச்சியானாப்புல.

            "அவுங்க நிக்குறதெ பணங்காசியையும், நகெநட்டையும் வாங்கிட்டு நம்மள வெத்தாள வுடறதுக்குத்தாம் மேடம். அத்து அவுங்க கைக்குப் போயிட்டா நம்மள அம்போன்னு வுட்டுப்புட்டுப் போயிட்டே இருப்பாங்க அவுங்கப் பாட்டுக்கு எம் பொண்டாட்டிய அழைச்சிக்கிட்டு. பெறவு காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்தி வந்தவன் தள்ளிக்கிட்டுப் போனாப்புல இன்னொரு கலியாணத்தையும் பொண்ணுக்குப் பண்ணி வெச்சிப்புடுவாங்க. நல்லா தெளிவா திட்டம் பண்ணிட்டு வந்து உக்காந்துக்கிட்டுப் பேசிட்டு இருக்காங்க. நல்லா புரிஞ்சிக்கோங்க மேடம்! அவுங்க பிரிச்சி வுடணும்ன்னு நிக்குறாங்க. நாம்ம சேந்து வாழணும்ன்னு நிக்குறேம்! ஊரான் வூட்டு நெய்யேன்னானாம், எம் பொண்டாட்டிக் கையேனானாம்!"ன்னாம் பாலாமணி நின்ன நெலையிலயே.

            "சேர்ந்து வாழ வர்றதுன்னா பணங்காசி, நகெநட்டு எல்லாத்தையும் பண்ணிடறதுல ஒஞ்ஞளுக்கு வேற ஒண்ணும் மாத்துக் கருத்தில்லியே?"ன்னாங்க அந்த அம்மா மனசுல இருந்த கோவத்தக் காட்டிக்கிடாம சமாதானம் பண்ணுறாப்புல.

            "சேந்து வாழ வர்றேன்னு சொல்லட்டும். நூத்து சவரன் ன்னா? எரநூத்து சவரனெ போட்டு அழைச்சிட்டுப் போறேம்! பத்து லட்சம் ன்னா, இருவது லட்சத்தெ டிபாசிட் பண்ணிட்டு அழைச்சிட்டுப் போறேம்! பொண்டாட்டியப் பிரிஞ்சித் தவியா தவிச்சு நிக்குறேம் மேடம் நாம். வூட்டுச் சாப்பாட்ட சாப்புட்டு பல மாசங்களாச்சு. சென்னையில ஓட்டல் சாப்பாட்ட சாப்புட்டுப்புட்டு வவுறு வெந்துக் கேடக்குறேம் மேடம். நாம்ம சேந்து வாழணும் எம் பொண்டாட்டிக் கூட. அத்து ஒண்ணுதாம் எம்மட ஒரே லட்சியம்! அதுக்காகத்தாம் இன்னிக்கு ஒஞ்ஞ மின்னாடி வந்து நிக்குறேம். சென்னைப் பட்டணத்துல இந்த தமிழ்நாட்டுல நாம்ம எவ்ளோ பெரிய டாக்கடருங்றதெ வெசாரிச்சிப் பாருங்க தெரியும். அதயெல்லாம் ச்சீய்ப் போன்னு தூக்கி எறிஞ்சிட்டு பொண்டாட்டி வேணும்ன்னு இஞ்ஞ வந்து வெக்கம் கெட்டு நிக்குறேம். சேந்து வாழணும்ன்னு தவிக்கிறேம்! அவ்வளவுதாம் சொல்லுவேம் மேடம்!"ன்னாம் பாலாமணி ஆத்திரப்பட்டவனெப் போல.

            அதே கேக்க ஒடனே வேகப்பட்டு விகடு எழுந்திரிச்சாம், "சேந்து வாழணும்ன்னு தவியா தவிக்குறவங்கத்தாம் தூக்க மாட்டிக்க விடுவாரா? பஞ்சாயத்தெ வெச்சி பைத்தியம் பிடிச்சி அலையட்டும்ன்னு பண்ணுவாரா? வக்கீல் நோட்டீஸ அனுப்பி, போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் கொண்டுப் போயி நிறுத்தி, இப்போ இஞ்ஞ வரைக்கும் நிறுத்துவாரா?"ன்னாம்.

            "பழசெப் பேசாதீயேன்னு சொல்லித்தாம் ஆரம்பிச்சேம். அதெ மறந்துப்புடக் கூடாது. இப்போ பேசுறதோட மொத முக்கியமான விதிப்பாடே அதுதாங்!"ன்னாங்க அந்த அம்மா விகடுவெ கண்டிப்பான பார்வையப் பாத்துக்கிட்டு.

            "அதெ வுடுங்க மேடம்! எம் மச்சாம்தான்னே பேசுறதுக்கு உரிமெ இருக்கு. என்ன வாணாலும் பேசட்டும். நாலு அடி வாணாலும் அடிக்கட்டும். அதெ வாங்கிக்கிறேம். அந்த அளவுக்குத் தப்ப பண்ணிருக்கிறதெயும் ஒத்துக்கிடுறேம்!"ன்னாம் பெரிய மனுஷனப் போல பாலாமணி அதுக்கு.

            வெசாரணை அதிகாரி அம்மா ஒரு நிமிஷம் போட்டிருந்த மூக்குக் கண்ணாடிய கழட்டிக்கிட்டு ஒரு பெருமூச்ச விட்டுக்கிட்டாங்க. "பணம் நகெய வாங்கித் தர்றது எம் பொறுப்பு. உசுருக்கு உத்தரவாதம் பண்ணுறதும் எம் பொறுப்பு. இப்பச் சொல்லுங்க பொண்ண பெத்த பெரியவரே!"ன்னாங்க அந்த அம்மா சுப்பு வாத்தியார்ரப் பாத்து.

            "நாம்ம கண்ணால டிபாசிட்டுப் பத்திரத்தையும், லாக்கரு சாவியையும் பாத்தாத்தாம் நம்புவேம். பொண்ண அனுப்புவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதே பழைய பல்லவியப் பாடுறாப்புல.

            ஒடனே அந்த அம்மா சுப்பு வாத்தியார்ரப் பாக்குறத விட்டுப்புட்டு விகடுவெப் பாத்து, "அப்பா வயசானவரு. சில விசயங்கள்ல பிடிவாதமா நிக்குறவரு. அந்தக் காலத்து ஆளும் கூட. அதெ நாம்ம புரிஞ்சிக்கிறேம். நீஞ்ஞ இந்தக் காலத்துப் பையேம். தங்காச்சிய அனுப்பி வுடுறதுல சம்மதமா?"ன்னாங்க.

            "ஒஞ்ஞளுக்கு எத்தனெ பொண்ணு புள்ளீயோ?"ன்னாம் விகடு.

            "அதெ ஏம் கேக்குறீயே?"ன்னாங்க அந்த அம்மா ஒண்ணும் புரியாம.

            "அதெ சொன்னாத்தாம் எந் தங்காச்சிய அனுப்புறதா வாணாமான்னு சொல்லுவேம்!"ன்னாம் விகடு பிடிவாதமா.

            "ரண்டு. ரண்டும் பொண்ணுதாம்!"ன்னாங்க அந்த அம்மா.

            "கலியாணம் ஆயிட்டா?"ன்னாம் விகடு.

            "அதெ ஏம் கேக்குதீயே சம்பந்தம் இல்லாமா?"ன்னாங்க அந்த அம்மா எரிச்சலா.

            "நீஞ்ஞ பதிலச் சொன்னாத்தாம் நாமளும் பதிலச் சொல்லுவேம்!"ன்னாம் விகடு பிடிவாதமா நிக்குறாப்புல.

            "படிச்சிட்டு இருக்குதுங்க காலேஜ்ல! நாம்ம லேட் மேரேஜ்ப்பா. இல்ன்னா இந்நேரம் கலியாணத்தப் பண்ணி பேரப் புள்ளீயோளப் பாத்திருப்பேம்!"ன்னாங்க அந்த அம்மா மறுக்கா ஒரு பெருமூச்ச விட்டுக்கிட்டு.

            "ஒஞ்ஞப் பொண்ணுன்னா இந்த மாதிரி நெலமெ வந்து அனுப்புவீயன்னா நாம்மளும் தாராளமா அனுப்பச் சம்மதிக்கிறேம்! ஒருவேள இந்த மாதிரி நெலமையில அனுப்ப மாட்டேம்ன்னு நெனைச்சீயன்னா நாமளும் அனுப்ப மாட்டேம்மா! அதாங் நம்மளோட பதிலு!"ன்னாம் விகடு அந்த அம்மாவப் பாத்து.

            அந்த அம்மாவுக்கு மொகத்துல தாங்க முடியாத எரிச்சலும், அதிர்ச்சியும் உண்டாயிடுச்சு. அவுங்க மொகம் கோவத்துல கடுகடுக்க ஆரம்பிச்சிடுச்சு.

            "எம் குடும்பத்தெ இழுத்து, எம் பொண்ணுகள இழுத்து இதுல ஏம் பேசுதீயே? ஏம் பேசுதீயேன்னு கேக்குறேம்? ஒவ்வொரு நாளும் இந்த மாதிரி பஞ்சாயத்துகளப் பண்ணி வுட்டுப்புட்டு ராத்திரி போயி படுக்குறப்போ எம் பொண்ணுகள எப்பிடி கலியாணத்தப் பண்ணிக் கொடுக்கப் போறேம், கலியாணத்துக்குப் பெறவு என்னா பெரச்சனெ வர்றப் போவதுன்னு தூங்க முடியாம தவிக்கிறேம் தெரியுமா? நீஞ்ஞ நம்மள டென்ஷன் பண்ணிட்டீயே! சித்தெ நேரம் எல்லாம் போங்க வெளியில! ஒங் குடும்பத்துப் பெரச்சனையா பேசுனா எதுக்குப்பா நீயி எங் குடும்பத்தெ இழுக்குறே? போப்போ மொதல்ல வெளியில!"ன்னு தலையில கைய வெச்சிக்கிட்டு அந்த அம்மா உக்காந்துட்டாங்க. அதெ பாத்த எல்லாருக்கும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. எல்லாரும் எழுந்திரிச்சி வெளியில வர்றாப்புல ஆயிடுச்சு.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...