29 Sept 2023

தி.ஜானகிராமனின் ‘மலர் மஞ்சம்’ – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘மலர் மஞ்சம்’ – ஓர் எளிய அறிமுகம்

மலர் மஞ்சம் தி.ஜானகிராமனின் இரண்டாவது அல்லது மூன்றாவது நாவல். அல்லது வரிசைமுறைப்படி ஐந்து நாவல்களுக்குள் ஒன்றாகவும் இருக்கலாம். அது இரண்டாவது நாவல் என்பது காலச்சுவடு வெளியீட்டின் பின்னட்டையில் உள்ள தகவல். மூன்றாவது நாவல் என்பது காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘ஜானகிராமம்’ என்ற தொகுப்புநூலில் உள்ள கட்டுரை ஒன்றில் உள்ள தகவல். இந்த இரு முரண்பட்ட தகவல்களால்தான் இப்படி ஒரு குழப்பமும் அதன் நீட்சியாக அதைத் தொடர்ந்து ஐந்து நாவல்களுள் ஒன்றாக இருக்கலாம் என்ற கணிப்பும் எனக்கு எழுகிறது.

‘மலர் மஞ்சம்’ 1960களில் சுதேசமித்ரனில் தொடராக வெளிவந்திருக்கிறது. 1961 இல் நாவலாக முதல் பதிப்பையும் கண்டிருக்கிறது. இதுவும் காலச்சுவடு வெளியீடு தரும் தகவல்தான். தி.ஜா.வின் படைப்புகளைத் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டு வருகிறவர்களுக்கு இது போன்ற வரிசைக்கிரமம் குறித்த முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தன்னையறியாமல் எழக் கூடும். அதே நேரத்தில் இந்த வரிசைமுறை ஆய்வுகள் எதற்கு, அவர் எழுத்துதான் முக்கியம் என்ற எண்ணமும் அடுத்து உடனே எழும்.

இணையத்தில் தி.ஜா.வின் நாவல்கள் குறித்துத் தேடும் போது இப்படி ஒரு வரிசைக்கிரமத்தையும் நீங்கள் பார்க்கலாம். கீழே காணும் இந்த வரிசைமுறைப்படி பார்த்தால் இந்த நாவல் தி.ஜா.வின் இரண்டாவது நாவல். மேலும் இந்த வரிசைக்கிரமத்தில் காலக்குறிப்பும் இணைந்தே இருக்கிறது. இதன் நம்பகத் தன்மை எத்தனை சதவீதம் சரியானது என்பதை ஆய்வாளர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.

1)      அமிர்தம் (1945)

2)      மலர்மஞ்சம் (1961)

3)      அன்பே ஆரமுதே (1963)

4)      மோகமுள் (1964)

5)      அம்மா வந்தாள் (1966)

6)      உயிர்த்தேன் (1967)

7)      செம்பருத்தி (1968)

8)      மரப்பசு (1975)

9)      நளபாகம் (1983)

தி. ஜானகிராமனின் நாவல்களின் முதல் பதிப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு பதிப்பு கண்ட நாவல்களில் காணப்படுகின்றன. இந்த விவரங்களும் நாவலை வரிசைப்படுத்த முயல்வோருக்கு உதவுவதாக அமையும் என நினைக்கிறேன்.

வ.எண்

நாவல்

முதல் பதிப்பு

1.

அமிர்தம்

1948

2.

மோகமுள்

1956

3.

மலர் மஞ்சம்

1961

4.

அன்பே ஆரமுதே

1965

5.

அம்மா வந்தாள்

1966

6.

உயிர்த்தேன்

1967

7.

செம்பருத்தி

1968

8.

மரப்பசு

1975

9.

நளபாகம்

1983

இவற்றைக் கொண்டு வாசகர்கள் தாங்களே ஒரு முடிவுக்கு வருவதும் மேற்கொண்டு ஆய்வாளர்கள் கூறும் முடிவுகளை ஏற்பதும் தி.ஜானகிராமனின் நாவல்களின் வரிசைக்கிரமம் குறித்த முடிவுகளுக்கு ஏற்ற தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நாவல் வரிசைப் பற்றி அண்ணன் வில்சனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு வரிசைமுறையச் சொன்னார். அவர் தி.ஜா.வைத் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளராகக் கொள்பவர். அவர் தன் மனதில் இருக்கும் ஞாபகத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த வரிசை முறையைக் கூறினார். அதனால் அவர் சொன்ன அந்த வரிசை முறையையும் கூறி விடுகிறேன்.

1)      அமிர்தம்

2)      மோகமுள்

3)      மலர் மஞ்சம்

4)      அன்பே ஆரமுதே

5)      செம்பருத்தி

6)      உயிர்த்தேன்

7)      அம்மா வந்தாள்

8)      நளபாகம்

மரப்பசு எனும் நாவல் அப்போது அவர் ஞாபகத்தில் வரவில்லையோ என்னவோ? எனக்கும் அந்த விடுபடல் அப்போது ஞாபகத்தில் வரவில்லை. இந்த நாவலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் இப்படி சில சுவாரசிய அனுபவங்கள் அதன் வரிசைக்கிரமம் பற்றி எழுந்ததால் அதைப் பதிவு செய்கிறேன். அதைத் தவிர வேறெந்த நோக்கமும் இந்தப் பதிவுகளுக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாவல் எழுதப்பட்ட வரிசைப்படி இந்த நாவல் மூன்றாவதாகவும் நூல் வடிவம் கண்ட வகையில் இரண்டாவதாகவும் இருக்கக் கூடும். இதெல்லாம் ஆய்ந்து உறுதிபடுத்த வேண்டிய விவரங்கள். இந்த விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நாவலைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அதுவே ஒரு தடங்கலாகி விடவும் கூடும்.

‘மலர் மஞ்சம்’ நாவலைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் இராமையா என்ற பாத்திரத்தின் சங்கல்பத்தைச் சுற்றிச் சுழலும் ஒரு நாவல். மனைவி பாக்கியம் இல்லாதவர் இராமையா என்றுதான் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதல் மனைவி காமாட்சி இறந்துப் போக இரண்டாவதாகக் கங்காவைக் கட்டுகிறார். கங்காவும் இறக்க பங்கஜத்தைக் கட்டுகிறார். பங்கஜம் இறந்த பிறகு நான்காவதாக அகிலாண்டத்தைக் கட்டுகிறார்.

அகிலாண்டமும் நிலைக்காமல் ஒரு பெண் குழந்தையைக் கொடுத்து விட்டு இறந்து போகிறார். பெண் குழந்தையா என்று அங்கலாய்க்கும் இராமையாவுக்கு அதனாலென்ன சொர்ணா அக்கா மகனுக்குக் கட்டிக் கொடுத்தால் போயிற்று என்று ஆற்றுப்படுத்தி விட்டு இறந்து போகிறார். இராமையா மனைவியின் வாக்கைச் சங்கல்பமாக எடுத்துக் கொள்கிறார். அந்தச் சங்கல்பத்தை அவர் நிகழ்த்திக் காட்டுவதற்குள் நிகழும் போராட்டங்களும் சம்பவங்களுமே ‘மலர் மஞ்சம்’ என்ற இந்த நாவல்.

வையன்னா ஒருவரைத் தவிர நாவலில் கெட்டவர்கள் யாருமில்லை எனும்படி நல்லவர்களால் நிறைந்திருக்கும் நாவல் இது. கெட்டவராக இருப்பினும் நாவலின் திருப்பங்களுக்கு வழிவகுப்பவர் வையன்னாதான்.

வையன்னாவால்தான் இராமையா தன்னுடைய பெண் குழந்தையான பாலாம்பாள் எனும் பாலியை அழைத்துக் கொண்டு கொரடாச்சேரிக்கு அருகே உள்ள இராஜாங்காடு எனும் கிராமத்தை விட்டு தஞ்சாவூருக்கு இடம் பெயருகிறார். அவர் தஞ்சாவூருக்கு இடம் பெயர்வதால் பாலிக்கு நல்ல கல்வி கிடைக்கிறது, ஆட்டக்கலைக்கு பெரியசாமி எனும் அற்புதமான குருநாதர் கிடைக்கிறார்.

தஞ்சாவூரில் இராமையா பிள்ளைக்கு ஆதுரமாக இருப்பவர் இருவர். ஒருவர் வக்கீல் நாகேச்வர அய்யர். இவர்தான் தஞ்சாவூரில் மையம் கொள்ளும் நாவலைப் பாலியின் படிப்பிற்காகப் பட்டணம் எனப்படும் சென்னைக்கு நாவலை இடம் மாற்றுபவர்.

மற்றொருவர் கோணவாய் நாயக்கர். இவர்தான் நாவலைக் காசியில் கொண்டு போய் முடித்து வைப்பவர்.

நாவல் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இடம் மாறும் இடம் அற்புதமானது. பாலியின் மனப்போராட்டம் வெளிப்படும் இடமும் சென்னைதான். பாலிக்குச் செல்லம் எனும் தோழி கிடைக்கும் இடமும் சென்னைதான். பாலிக்கும் செல்லத்திற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் தி.ஜா.வுக்கே உரிய அம்சங்களோடு இழையோடுபவை. பாலிக்குப் பாலியின் மனதைத் திறந்து காட்டுபவள் இந்தச் செல்லம்தான்.

தஞ்சையைப் போலச் சென்னையையும் அதன் கடற்கரையையும் அவ்வளவு ஈர்ப்போடு தி.ஜா. நாவலில் சித்திரிக்கும் இடங்கள் புல்லரிக்க வைப்பவை. நாவல் நிகழும் காலத்தை ஓரளவுக்கு அனுமானிக்க உதவும் இடமும் சென்னைதான். சென்னையில் டிராம் போக்குவரத்து நிகழும் காலக்கட்டம்தான் நாவலின் காலக்கட்டம்.

அதே போல நாவலின் காலக்கட்டத்தை அனுமானிக்க தஞ்சாவூரும் ஓரிடத்தில் உதவுகிறது. தஞ்சாவூரில் புது ஆறு தோண்டப்பட்ட காலத்தை ஒட்டிய காலத்தில்தான் நாவலின் கால கட்டம் நகர்கிறது. இதை இரண்டையும் ஒருங்கே இணைத்து தஞ்சாவூரில் புது ஆறு தோண்டப்பட்ட காலமும், சென்னையில் டிராம் போக்குவரத்து நிலவிய காலமும் நாவலின் காலகட்டம் எனலாம்.

1931லிருந்து 1953வரை சென்னையில் டிராம் போக்குவரத்துச் செயல்பட்டிருக்கிறது. 1934 இல் புதுஆறு திறக்கப்பட்டிருக்கிறது. 1920 லிருந்து 1940வரையிலான காலகட்டம் நாவலின் கால கட்டம் என யூகிக்க இடம் இருக்கிறது. அதற்கு முன்னே பின்னே பத்தாண்டுகள் வித்தியாசமும் இருக்கலாம்.

நாவலின் காலகட்டத்தைக் கடந்து நாவலின் கதையோட்டத்திற்குள் நுழைந்தால், இராமையா சங்கல்பம் செய்து கொண்டிருக்கும் தங்கராஜனைக் கட்டிக் கொள்வதா, மனம் நாடும் நாகேச்வர அய்யரின் பேரன் ராஜாவைக் கட்டிக் கொள்வதா என்று மனம் தடுமாறும் பாலியை ராஜாவை நோக்கி ஆற்றுப்படுத்துகிறது சென்னை.

நாவல் சென்னையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது இரண்டு விதமான முடிச்சுகள் விழுகின்றன. ஒன்று இராஜாங்காட்டில் நிகழும் வையன்னாவின் கொலை. மற்றொன்று கோணவாய் நாயக்கரின் மகன் பதினாயிரம் ரூபாய் கடன் படுவது. இந்த இரண்டு முடிச்சுகளும் நாவலின் முடிவை வேறு விதமாக திசை மாற்றுகின்றன.

இந்த நாவலை தி.ஜா. இரண்டு விதமாக முடித்திருக்கலாம். பாலி ராஜாவைத் திருமணம் செய்து கொள்வதாக அல்லது தங்கராஜனைத் திருமணம் செய்து கொள்வதாக.

பாலி ராஜாவைத் திருமணம் செய்து கொள்வதற்கான நியாயங்களைத் தி.ஜா. வலுவாகப் புனைந்து கொண்டு வரும் போது வாசிப்போருக்குப் பாலிக்கும் ராஜாவுக்கும் திருமணம் நடத்து விடும் என்ற நம்பிக்கையை விதைத்து விடுகிறார். ஆனால் நாவல் இராமையாவின் விருப்பப்படி பாலிக்கும் தங்கராஜனுக்கும் திருமணம் நடைபெறுவதாக முடிகிறது.

இந்த மாறுபட்ட முடிச்சு உருவாவதற்குக் காரணமாக அமைவது வையன்னா. இராஜாங்காட்டிலிருந்து தஞ்சாவூருக்கு இராமையா போகக் காரணமாக இருக்கும் வையன்னாதான் கொலையுண்டு பாலியையும் தங்கராஜனையும் சேர்த்து வைத்து விடுகிறார்.

முதல் முடிச்சைத் தி.ஜா. அவிழ்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயிலின் கருவூரார் சந்நிதி. வையன்னா கொலையுண்ட மர்மத்தையும் தி.ஜா. அந்த இடத்தில் விடுவிக்கிறார். வையன்னா பாலியைத் ‘தேவடியாள்’ என்று சொன்ன ஒரு வார்த்தை தங்கராஜனைக் கொலைகாரனாக மாற்றி விடுகிறது. உண்மையானது தங்கராஜன் மூலமாக வெளிப்படும் இடத்தில் பாலி தங்கராஜனை மணக்க சம்மதிக்கும் முடிவை எடுத்து விடுகிறாள். 

நாவலின் இரண்டாவது முடிச்சைத் தி.ஜா. காசியில் வைத்து விடுவிக்கிறார். நாவலை இப்படி தெற்கு – வடக்கு என்று இந்தியாவின் இரு எல்லைகளில் வைத்து இந்தியர்களின் வழமையான ஆன்மிக தேடலுக்கு ஒரு நிறைவு தரும் வகையில் முடிக்கிறார்.

மகன் வாங்கிய பதினாயிரம் கடனுக்காக நண்பனான ராமையா பாரம்பரிய சொத்தை விற்கக் கூடாது என்பதற்காகவும் இராமையாவின் மகளான பாலி தனது மகனின் கடனைத் தீர்ப்பதற்காகப் பொதுவில் ஆடுவது கூடாது என்பதற்காகவும் மகனோடு அதற்கு மேல் இணக்கமாக வாழ முடியாது என்ற முடிவாலும் கோணவாய் நாயக்கர் கடனையெல்லாம் அடைத்து விட்டு சந்நியாசியாகிக் காசிக்குப் போய் விடுகிறார் என்று மட்டும் தி.ஜா.வின் காசியை நோக்கிய நாவலின் நகர்த்தலைச் சொல்லி விட முடியாது.

ஒரு தர்க்கரீதியான காரணத்தைக் கொண்டே தி.ஜா. நாவலைக் காசியில் வைத்துநிறைவு செய்கிறார். தானிருக்கும் வரை பாலியின் மனதுக்கு மாறாகத் திருமணம் நடக்காது என்ற சங்கல்பத்தைக் கோணவாய் நாயக்கர் உறுதியாகத் தருகிறார்.

இராமையாவின் சங்கல்பம், கோணவாய் நாயக்கரின் சங்கல்பம் இரண்டில் ஒன்றே நிறைவேற சாத்தியக்கூறு உள்ள நிலையில் இராமையாவின் சங்கல்பமே நிறைவேறுகிறது.

தனது சங்கல்பத்துக்கு மாறாகப் பாலியின் திருமணம் நிகழ்ந்து விட்ட பிறகு கொடுத்த உறுதிமொழிக்குக் கட்டுபட்டு, அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்காமல் அவர் சந்நியாசியாகிக் கடைசியாகக் காசிக்குச் சென்று விடுவதாகக் கருத இடம் தருகிறார் தி.ஜா.

கோணவாய் நாயக்கருக்கு அவரின் அந்திம காலம் தெரிய வரும் போது இராமையாவுக்குத் தந்தி கொடுத்து வரவழைக்கிறார். இராமையா கோணவாய் நாயக்கரைக் கங்கையில் ஜல சமாதி செய்வதோடு நாவல் முடிகிறது. 

நாவலில் இராமையாவின் சங்கல்பம் நிறைவேறி விடுகிறது. ஆனால் கோணவாய் நாயக்கர் மூலமாக பாலியின் மனநிலையின் பக்கம் நின்று பேசுகிறார் தி.ஜா. தன்னுடைய முதல் நாவலான அமிர்தத்தில் அமிர்தத்தையும் முதலியார் மகனையும் சேர்த்து வைக்காமல் தந்தையான முதலியாரின் விருப்பத்திற்கேற்ப ஓர் உயர்ந்த முடிவை அடைவது போல அனைவரையும் உன்னத மாந்தர்களாகக் காட்டும் வகையில் நாவலை முடித்திருப்பார்.

இந்த நாவலிலும் உன்னத மாந்தர்களைத்தான் தி.ஜா. காட்ட முயல்கிறார். மனிதருக்குரிய மனதின் பக்கம் சாய்ந்து பேச கோணவாய் நாயக்கரைச் சன்னியாசியாக்கி ஒரு ஸ்படிகமான மனநிலையில் பாலியின் விருப்பத்தை நிறைவேற்றாமல் போனது மலர் மஞ்சத்தை எப்படி உறுத்தும் என்பதைக் காட்டுகிறார்.

தி.ஜா. மனிதர்களின் ஆசா பாசங்கள் கொண்ட மனநிலை பக்கம் நோக்கி திரும்பும் திருப்பத்தை இந்த இரண்டாவது நாவல் காட்டுகிறது. சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் போட்டு உருட்டி மனதின் உணர்வுகளை மரக்கடிப்பதைத் தி.ஜா. விரும்பவில்லை. மனதின் உணர்வுகளை அழகியலோடு உரையாடல்கள் கலந்து காட்சிப்படுத்துவதன் மூலமாக ஒரு மாற்றத்தை முன்னகர்த்த விழைகிறார்.

இரண்டு ஆண்களை நேசிக்கும் ஒரு பெண் என்ற மரபை மாற்றி யோசித்து மரபை உடைத்தாற் போல ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் மரபைக் காப்பாற்றும் ஒரு முடிவை நோக்கி நாவலைத் தி.ஜா. நகர்த்தினாலும் அப்படிக் காப்பாற்றிய முடிவைத் தவறென்று முடிக்கும் மனோதர்மத்தைத்தான் பிற்பாடு அவர் எழுதிய நாவல்களில் காட்டுகிறாரோ என்னவோ.

*****

28 Sept 2023

உறைகளுக்குக் கணக்கு இருக்கிறதா?

உறைகளுக்குக் கணக்கு இருக்கிறதா?

தினம்தோறும் நாம் பயன்படுத்தும் உறைகளுக்குக் கணக்கு இருக்கிறதா?

தினந்தோறும் ஒவ்வொரு குடும்பமும் காலை, மாலை என்று இரு வேளைகளில் இரு பால் பொட்டல உறைகளைப் பயன்படுத்துகின்றன. இது குறைந்தபட்ச எண்ணிக்கை அல்லது சராசரி எண்ணிக்கை. அதிகபட்சமாகச் சராசரியைத் தாண்டி சில நேரங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட பால் பொட்டலங்களைப் பயன்படுத்தும் போது இந்த உறைகளின் எண்ணிக்கைக் கூடவும் செய்யும்.

பால் பொட்டல உறைகளுக்கு அப்பால் தயிர் பொட்டல உறைகள் இருக்கின்றன. ஒரு தனிநபருக்கு ஒரு நாளுக்கு ஒன்றிலிருந்து இந்த எண்ணிக்கை எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.

மாவு பொட்டலங்களின் உறைகளும் அன்றாடப் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. ஒரு தோசை மாவு பொட்டலமாவது வாங்காத குடும்பங்கள் இப்போது கிராமங்களிலும் இல்லை. அவற்றின் உறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கணக்கின் மீதே ஒரு வெறுப்பு வந்தாலும் வந்து விடலாம். உறைகளுக்காக எவ்வளவுதான் கணக்குப் போடுவது சொல்லுங்கள்.

மளிகைப் பொருட்களுக்கான உறைகள் கணக்கில் அடங்காதவை.

கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு, மல்லி, மிளகாய், சீனி, வெல்லம், தேநீர்த் தூள், சலவைத்தூள், சோப்பு, சவுக்காரம் என்று கணக்கெடுத்துக் கொண்டு போனால் உறைகளின் எண்ணிக்கை நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போலாகி விடும். இந்த உறைகள் நாள்தோறுமோ, வாரா வாரமோ, மாதா மாதமோ சுழற்சியாகப் பெருகிக் கொண்டிருப்பவை.

தின்பண்டங்களுக்கான உறைகள் கணக்கில் அடங்குமோ? நொறுக்குத்தீனிகள், மாச்சில்கள் (பிஸ்கட்டுகள்) மற்றும் பலகாரங்களுக்கான உறைகள் முடிவிலியாய் நீளக் கூடியவை.

காலை உணவோ, மதிய உணவோ, இரவு உணவோ அதை உணவகத்திலிருந்து கட்டி வாங்கி வரும் போது அதற்குள் எவ்வளவு உறைகள் இருக்கின்றன. சட்டினிக்கு ஒரு உறை, சாம்பாருக்கு ஒரு உறை, துவையலுக்கு ஒரு உறை, தொடுகறிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு உறை என்று உறைக்குள் உறையாக தொடர்பவை நமக்கான உணவுப் பொட்டலங்கள்.

அடுத்ததாகத் தூக்குப் பைகள் (கேரி பேக்) என்று அடுத்தக்கட்ட கணக்கீட்டைத் தொடங்கினால் உறைகள் முடிவில்லாமல் இனிமேல் கட்ட வேண்டிய உலகப் பெருஞ்சுவரைப் போல நீளக் கூடியவை. நான்கு கடைகள் ஏறி இறங்கி பத்துப் பொருட்கள் வாங்கினால் பத்துப் பொருட்களையும் பத்துத் தூக்குப் பைகளில் போட்டுக் கொடுத்து விடுவார்கள். நமக்கும் ஒரு பொருளைத் தூக்குப் பையில் வாங்கி வராவிட்டால் எதையோ இழந்து விட்டாற் போல ஒரு நினைப்பு வந்து விடுகிறது.

துணிக்கடைகள் துணிப்பைகள் கொடுப்பதாகச் சொன்னாலும் துணிப்பைக்குள் இருக்கும் ஒவ்வொரு துணியும் உறைகளால் சூழப்பட்டதாக இருக்கும். ஒரு புடவையோ வேட்டியோ நெகிழி உறையால் சூழப்பட்டு அதை ஒரு துணிப்பைக்குள் போட்டு வாங்கி வருவதில் என்ன இருக்கிறது?

இப்படியே உறைகள் பற்றி கணக்கு பண்ணிக் கொண்டே போனால் இன்னும் கூட உறைகள் இருக்கலாம். உறைகளுக்கு உறை போட முடியுமோ?

இந்த உறைகளில் அநேக உறைகள் நெகிழி உறைகள். அவ்வளவு நெகிழி உறைகளை இந்த மண் தாங்குமா? ஆறுகள்,கால்வாய்கள், கடல்கள் தாங்குமா?

மண் நெகிழியைச் சிதைக்க முடியாமல் தடுமாறுகிறது. ஆறுகளும் கால்வாய்களும் நெகிழி அடைப்புகளால் ஓட முடியாமல் தடுமாறுகின்றன. கடல்கள் நெகிழிக் கழிவுகளால் நிரம்புகின்றன.

இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

வருங்காலத்து மண் என்பது மண்ணும் கல்லும் கலந்த கலவையாக மட்டுமல்லாமல் கட்டடக் கழிவுகளும் (காங்கிரீட்) நெகிழியும் கலந்த கலவையாக இருக்கப் போகின்றது.

எதிர்காலத்து ஆறுகள், கால்வாய்கள் மற்றும் கடல்களில் நெகிழிகள் நீந்திக் கொண்டும் அடியில் படுத்து உறங்கிக் கொண்டும் இருக்கலாம்.

இதெல்லாம் தெரிந்தவைதானே என்கிறீர்களா? நிச்சயமாக. தெரிந்தும் நம்மால் தடுக்க முடிகிறதா? கொஞ்சமேனும் குறைக்க முடிகிறதா?

புகையும் மதுவும் கேடு செய்யும் என்று தெரிந்து புழங்குபவர்களைப் போலத்தான் நெகிழி மண்ணுக்கும் நீர் நிலைகளுக்கும் ஆகாது என்று தெரிந்தே நாம் புழங்கிக் கொண்டிருக்கிறோம்.

நெகிழிக்கு எதிராகத் துணிப்பை இயக்கத்தை நாம் கையில் எடுத்தாலும் அந்தத் துணிப்பைக்குள் நிரம்புபவை நெகிழிப்பையிலான பொட்டலங்களாகத்தானே இருக்கின்றன.

ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் கலாச்சாரம் நம்மை நெகிழி வடிவில் சூழ்ந்திருக்கிறது. இந்தக் கலாச்சாரம் நம்மைத் துரத்தித் துரத்திப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் அதைத் துரத்தி விட மனமில்லாமல் பின்தொடர அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு முறைப் பயன்படுத்தித் தூக்கி எறிந்து விட்டால் அத்தோடு கடமை விட்டது. அதைத் தூய்மை செய்ய வேண்டியதில்லை, மறுபயன்பாட்டுக்குப் பராமரிக்க வேண்டியதில்லை. இது எவ்வளவோ வேலைகளைக் குறைக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆசுவாசமாக இருப்பதற்கு வசதி செய்வதாக நினைக்கிறோம்.

நம் அலுப்புக்கும் சோம்பலுக்கும் ஓர் அளவில்லை. அவற்றை வளர்க்கும் கலாச்சாரமே நம்மிடம் நிலைபெறவும் செய்கிறது. அப்படி ஒரு கலாச்சாரத்தை வளர்க்கவே அலுப்பும் சோம்பலும் இல்லாமல் பொருளாதாரத்தைப் பெருக்க நினைக்கும் பெரு நிறுவனங்களும் நவீன உலகின் வியாபார தந்திரங்களும் அயர்வில்லாமல் பாடுபடுகின்றன.

இப்படியே போனால் ஒரு முறைப் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் ஆடைகள்தான் அதன் அடுத்தக் கட்டம். இப்போதைய இந்த ஆடைகள்தான் நமக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன? துவைக்கவும் காய வைக்கவும் மடித்து இஸ்திரி செய்யவும் என்று அவை எத்தனையெத்தனை வேலைகளில் இழுத்து விட்டுக் கொண்டிருக்கின்றன?

நம் நினைப்புகளும் எண்ணங்களும் இப்படி இருக்கையில் நம்மை யார்தான் என்ன செய்ய முடியும்? நாம் இப்படியே இருக்கும் வகையில் நம்மை இப்படியே இறுத்தி வைக்கவும் இந்த நிலையிலே நிறுத்தி வைத்து நம்மை உறிஞ்சி எடுத்துக் கொள்ளவும் நமக்கென பிரத்யேகமான நுகர்வு உலகம் தயாரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கை கழுவி விட்டால் இன்னொரு கை முளைத்து விடும் எனும் போது இருக்கின்ற கையைக் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பு தேவை இல்லாமல் போய் விடுகிறது. இந்தப் பொறுப்பற்ற தன்மைதான் ஒருமுறைப் பயன்படுத்தும் பொருட்களை ஊக்குவிக்கிறது.

ஒருமுறைப் பயன்பாடு மனிதர்களின் சோம்பேறித்தனத்திற்கும் உல்லாசத்திற்கும் வசதியானது. உற்சாகமாகப் பொறுப்பற்ற தன்மையில் உழல்வதற்கும் உகந்தது.

எத்தனை நாட்கள் பொறுப்பில்லாமல் இருக்க முடியும்? பொறுப்பற்ற தனத்தால் ஒட்டுமொத்த மனித குலமும் பாதிக்கப்படாத வரையில் பொறுப்பில்லாமல் இருக்கலாம். பாதிப்பு வெளிப்படும் போது பொறுப்பானவர்களாக மனிதர்கள் மாறியாக வேண்டும். அந்த மாற்றத்தை இயற்கை அதிரடியாகத்தான் செய்கிறது. அப்போது நாம் இயற்கையைக் குறை சொல்ல முடியாது. நம்முடைய பொறுப்பற்றத் தனத்தைத்தான் குறை சொல்லிக் கொள்ள வேண்டும்.

*****

27 Sept 2023

கொண்டாடாமல் இருப்பதில் இருக்கும் கொண்டாட்டம்

கொண்டாடாமல் இருப்பதில் இருக்கும் கொண்டாட்டம்

நீங்கள் உங்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடியதே இல்லையா? என்று ஆச்சரியமாக என்னைப் பார்த்துக் கேட்பவர்களைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

என்னவோ எனக்குக் கொண்டாடத் தோன்றியதில்லை.

என்னுடைய பெற்றோர்கள் அதை ஒரு பழக்கமாக்காமல் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

என்னுடைய சமூகச் சூழ்நிலையில், நான் வளர்ந்து வந்த கால கட்டங்களில் பிறந்த நாள் கொண்டாடுவது முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததும் இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்கள் குழந்தைப் பிராயங்களில் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல நாங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தோம். குழந்தைப் பருவத்தில் எங்களுக்கு இதைச் சாதிக்க வேண்டும், அதைச் சாதிக்க வேண்டும் என்ற எந்த இலக்குகளும் இல்லாமல் இருந்தன. நாங்கள் குழந்தைகளாகவே இருந்தோம். அதனால் கூட அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்குத் தேவைப்படாமல் இருந்திருக்கலாம்.

என்னுடைய பிறந்த நாளைக் கேட்டால் நான் அதை அடையாள அட்டையில் பார்த்துச் சொல்லக் கூடிய நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். அதனால் என்னுடைய பிறந்த நாள் வரும் போதும் எனக்கு அது ஞாபகத்தில் இருப்பதில்லை.

பிறந்த நாளைக் கொண்டாடுவதால் அப்படியென்ன பெரிய மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது? கொண்டாடாமல் விட்டு விடுவதால் அப்படியென்ன இழப்பு நேர்ந்து விடப் போகிறது? எனக்குள் அடிக்கடி எழும் இந்த இரண்டு கேள்விகளும் கூட என்னைப் பிறந்த நாளைக் கொண்டாட விடாமல் செய்திருக்கலாம்.

உங்களுக்கு ஓர் அடையாளம் தேவை என்றால் நீங்கள் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடத்தான் வேண்டும். அந்த நாளில் எல்லாரும் உங்களையே கவனிப்பார்கள். நீங்கள் இனிப்பு தரப் போவதை அல்லது விருந்து தரப் போவதை அல்லது ஒரு கொண்டாட்டம் தரப் போவதை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஏதோ ஒன்றைத் தரப் போவதற்கான எதிர்பார்ப்பு அது. பதிலுக்கு நீங்கள் உங்களுக்கான அடையாளத்தையும் உங்களுக்கான மகிழ்ச்சியையும் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பீர்கள். அல்லது அது ஓர் அங்கீகாரமாகவும் உங்களுக்கு இருக்கலாம்.

காரணமே இல்லாமல் கொண்டாட முடியாது என்பதால் ஏதோ ஒரு காரணம் வைத்து ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்தவும் இந்தப் பிறந்தநாள்கள் பலருக்கு உதவுகின்றன.

அந்த ஒரு நாள் உங்களுடைய பிறந்த நாள் என்றால், மற்ற நாள்கள் எல்லாம் என்ன? அதற்கு எதிரான நாட்களா? இப்படி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டியதில்லைதான். ஆனால் பிறந்த நாளைப் போல ஒவ்வொரு நாளும் முக்கியமானவைதானே, கொண்டாட்டத்திற்கு உரியவைதானே?

முகநூலிலும் புலனத்திலும் இருந்த ஆரம்ப நாட்களில் என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி பலர் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு நன்றி சொல்லியும் பலருக்கு எதுவும் சொல்லாமலும் இருந்திருக்கிறேன். பதிலுக்கு அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறாமையைப் பார்த்து விட்டு அடுத்தடுத்த பிறந்த நாட்களில் எனக்கு வாழ்த்துச் சொல்வதை நிறுத்தி விட்டார்கள். எனக்கும் ஒவ்வொன்றுக்கும் பார்த்துப் பார்த்து நன்றி சொல்கின்ற வேலை மிச்சமாகி விட்டது.

முகநூலுக்கு உங்களுடைய பிறந்த நாள் தெரியும் என்பதால் நீங்கள் மறந்தாலும் அது உங்களுடைய பிறந்த நாளை உங்கள் தொடர்பில் இருப்போருக்கு எல்லாம் செய்தியாக அனுப்பிக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுகிறது. இப்படி கொண்டாடுவதற்கான வாய்ப்பை அது காட்டும் போது அது அதிகமான செய்திப் பகிர்வுகளை உண்டாக்குகிறது. முகநூலுக்கு தேவை அதுதானே. அது தன்னுடைய தேவையை நம்முடைய எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் வைத்து நிறைவேற்றிக் கொள்கிறது.

பிறந்த நாள் என்பது காலச் சுழற்சியின் ஒரு கணக்கு. ஒரு வருட சுழற்சி என்று இருப்பதால் பூமியில் இப்படிக் கொண்டாட முடிகிறது. ஆனால் ஒவ்வொரு வருடமும் வேறுதான். பிறந்த வருடமும் இப்போதுள்ள வருடமும் ஒன்றல்ல. மாதமும் நாளும் நேரமும் ஒத்துப் போகின்றன அவ்வளவுதான். லீப் ஆண்டின் பிப்ரவரி 29 இல் பிறந்தவர்களை நினைத்துப் பாருங்கள். நான்காண்டுகளுக்கு ஒரு முறைதான் அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட முடியும்.

பொதுவாகப் பிறந்த நாள் ஆங்கில ஆண்டிற்கு ஒரு நாளாகவும் தமிழ் ஆண்டிற்கு வேறொரு நாளாகவும் வரும். அவரவர் கணக்கு அவரவர்களுக்கு என்பது போல.

பூமியில் பிறந்ததால் இப்படி ஒரு சூழற்சிக் கணக்கு. செவ்வாயிலோ வியாழனிலோ பிறக்கும் கிரகக் சூழ்நிலைகள் வாய்த்திருந்தால் கணக்கு வேறாகியிருக்கும்.

பெரிய பெரிய தலைவர்களுக்கு, சிறிய சிறிய என்றிருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு, தன்னை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக நிறுவிக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் பிறந்த நாள் ரொம்பவே முக்கியமானது. வருடத்திற்கு ஒரு பிறந்த நாளாவது இல்லாமல் அவர்களால் வாழ முடியாது. வருடத்திற்கு நான்கு ஐந்து பிறந்த நாள்கள் இருந்திருந்தால் மகிழக் கூடியவர்கள் அவர்கள்.

அவ்வபோது மறந்து விட்டாலும் மகான்களை, தியாகிகளை இந்தப் பிறந்த நாளை வைத்து ஞாபகம் செய்து கொள்ள முடிகிறது. அந்த நாளில் அந்த நேரத்தில் பிறந்த அவர்கள் மகான்களாகி விட்டார்கள், தியாகிகளாகி விட்டார்கள். அப்படி ஆக முடியாத நாம் அதைக் கொண்டாடுவதன் மூலமாக அப்படி ஆக முடியும் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

எவ்வளவோ மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள், பிறந்து கொண்டு இருக்கிறார்கள், பிறக்கப் போகிறார்கள். ஒவ்வொரு நாளும் வேவ்வேறு மனிதர்கள் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பிறந்த நாள்கள் கொண்டாடப்படாத தினம் என்று இந்தப் பூமியில் எந்த நாளும் இருக்க வாய்ப்பில்லை.

பிறந்த நாள் ஓர் எடை பார்க்கும் இயந்திரத்தைப் போல ஒவ்வொராண்டும் வயதின் எடையைப் பார்த்துச் சொல்கிறது. ஒவ்வோராண்டும் கூடிக் கொண்டு போகும் எடையை நினைவுபடுத்திக் காட்டுகிறது. முடிவில் எடை கூட முடியாத ஓர் ஆண்டில் ஒரு முற்றுப்புள்ளியை இறந்த நாள் என்ற பெயரில் வைத்து விடுகிறது.

இறந்த நாள் வரும் வரை பிறந்த நாளைக் கொண்டாட முடிகிறது. இறந்த பின்பு அந்த ஒரு நாளை மட்டும் கொண்டாட முடிவதில்லை. ஒவ்வோராண்டும் பிறந்த நாளைத் தரிசித்த மனிதன் இறந்த நாளுக்கு அடுத்த ஆண்டு அதை தரிசிக்க முடியாத இன்மையில் தொலைந்து போய் விடுகிறான். அப்படி அல்லாமல் அதைக் கொண்டாடவும் ஒரு பாக்கியம் இருந்தால் மனிதர்கள் விட மாட்டார்கள்தானே!

ஒரு சராசரி மனிதனாகிய எனக்கு இந்தப் பிறந்த நாள் தேவையில்லாத ஒன்றாகவே எப்போதும் தோன்றுகிறது. இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருப்பதே ஒரு கொண்டாட்டமாகவும் இருக்கிறது.

இந்த ஆண்டிற்கான என்னுடைய பிறந்த நாளுக்கான பிரார்த்தனை எல்லாம் இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடிய அளவுக்கு வருங்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபராக ஒரு போதும் ஆகி விடக் கூடாது என்பதுதான்.

*****

26 Sept 2023

நல்ல மனதையும் கெட்ட மனதையும் உருவாக்கிக் கொள்ளுதல்

நல்ல மனதையும் கெட்ட மனதையும் உருவாக்கிக் கொள்ளுதல்

சமாதான மனதைத் தண்டிப்பது எவ்வளவு குரூரமானது?

இந்த உலகில் நல்ல மனது தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தண்டனையை அன்பாக ஏற்றுக் கொள்ளும் தன்மை அதற்கே இருக்கிறது. அதைத் தண்டித்து விடுவதில் கெட்ட மனதுக்கு ஒரு சந்தோசமும் இருக்கிறது.

தண்டனையை ஏற்காத தன்மையை நீங்கள் எப்படித் தண்டிக்க முடியும்? உங்கள் தண்டனையே அங்கு அர்த்தமற்றதாகி விடும். ஆகவே தண்டனையைச் சாத்வீதமாக ஏற்றுக் கொள்ளும் மனதைத் தண்டிக்கும் போதுதான் நீங்கள் எதிர்ப்பின்றித் தண்டனையைச் செயல்படுத்த முடியும்.

ஓர் எதிர்ப்பு வந்தால் நீங்கள் பின்னோக்கி ஓடி விடுவீர்கள். உங்களது தண்டனையைச் செயல்படுத்தும் முன்னேற்ற வாய்ப்பை உங்களுக்கு ஒரு நல்ல மனதுதான் கொடுக்க முடியும். அப்போது உங்கள் மனது ஒரு கெட்ட மனதாக இருந்தால்தான் தண்டனையைத் துணிந்து செயல்படுத்த முடியும்.

எதிர்ப்பானது இரு பக்கங்களின் பயங்கர மோதலாகவோ அல்லது சமரசமாகவோ முடியும். பயங்கர மோதல் என்பது இரு தரப்பும் மற்றொரு தரப்பை ஏற்க தயாரில்லை என்பதன் விளைவு. சமரசம் என்பது ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ள விரும்பாத விளைவு. இந்த இரண்டு இடங்களிலும் தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இருக்கப் போவதில்லை.

கெட்ட மனது ஒரு நல்ல மனதைத் தண்டிக்கும் போது அந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்ளும் மனவலிமை இருந்து விட்டால் முடிவில் கெட்ட மனதுதான் தோற்றுப் போகும். தண்டிப்பது ஒரு பலகீனத்தின் விளைவு. சமாதானம் அடையாத ஒரு மனதைச் சமாதானம் செய்விக்க முயலும் பலாத்காரத்தின் செயல்பாடு அது.

ஒரு கெட்ட மனது தொடர்ச்சியாகத் தண்டித்துக் கொண்டே செல்ல முடியாது என்பது அதன் பின்னுள்ள மறுக்க முடியாத உண்மை. ஏதோ ஓர் இடத்தில் அது ஒரு நல்ல மனதாக மாறுவதற்கான மனச்சான்று விழித்துக் கொள்ளும். அப்போது அது மிக அதிக தண்டனையைத் தனக்குத் தானே அனுபவித்துக் கொள்ளும். அந்த இடத்தில் ஒரு கெட்ட மனது வழங்கிய தண்டனைகள் அதற்கே மீள்கின்றன.

வலிமையில்லாத ஒரு மனம் தண்டனைகளை விலக்க நினைக்கலாம். விலக்க நினைக்க நினைக்க மனமானது மேலும் மேலும் பலவீனமாகிறது. எதிர்கொள்ளல் ஒன்றே மனதை பலமாக்குகிறது. நிகழ்வை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளல் என்பது பலவீனமான மனதையும் பலமாக்கும். ஆரம்பத்தில் வெளிப்படும் பலவீனத்தைக் கண்டு ஒரு பலவீனமான மனம் பின்னடைய வேண்டியதில்லை. தொடர்ந்து எதிர்கொள்ள எதிர்கொள்ள பலவீனம் தானாகவே பலமாகும்.

எதிர்கொள்ளலும் ஏற்றுக் கொள்ளலும் வலிமையை உண்டாக்குகின்றன. எதிர்கொண்டு எதிர்கொண்டு நீங்கள் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி விட முடியும். மனதளவில் ஏற்றுக் கொண்டு எதிர்கொள்ள ஆரம்பித்து விட்டால் அது புதிய புதிய வழிகளைக் காட்டும். உங்களைப் பலமாக நிலைநிறுத்திக் கொள்ளவும் அது வழிவகுக்கும்.

ஒரு குரூர மனம் என்பது எதையும் எதிர்கொள்ள பயந்து கொண்டிருக்கிற பலவீனத்தின் வெளிப்பாடுதான். அது மறைமுகமாக எதிர்த்துக் காய் நகர்த்தப் பார்க்கிறது. தன்னுடைய பயத்தை தன்னுடைய எதிராளிக்குக் கடத்தி விட நினைப்பதன் மூலம் சந்தோஷம் அடைய நினைக்கிறது.

இதற்கு மாறாக எதையும் எதிர்கொண்டு வலிமையாகும் மனதானது தன்னுடைய வலிமையையும் சந்தோசத்தையும் எதிரில் இருப்போருக்குக் கடத்த நினைக்கிறது. அதனால்தான் அது வசீகரமாகவும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.

வன்மத்தைத் தேர்ந்து கொள்ளும் கெட்ட மனது அச்சுறுத்தும் உடனடி விளைவுகளை மட்டும் பார்க்கிறது. அதன் பார்வை தொலைதூரத்துக்கு நீள்வதில்லை. சிறிது தள்ளி நிற்கும் தூரத்தில் இருப்பது கூட அதன் கண்களுக்குத் தெரிவதில்லை. அதன் பார்வை அத்தனையும் அருகாமைதான்.

அருகில் தோற்றம் தரும் ஒவ்வொரு அச்சுறுத்தலும் பாறாங்கல்லைப் போல பெரிய தோற்றத்தைத் தரக் கூடியவை. ஒரு பெரிய பாறாங்கல்லைத் தொலைதூரத்துக்கு நகர்த்திக் கொண்டு போனால் அது சிறிய புள்ளியாகி விடக் கூடும். தொலைதூரத்துக்கு நகர்த்திக் கொண்டு போய் பார்க்கும் வல்லமை உங்களுக்கு வேண்டும்.

ஒரு பிரச்சனை பாறையைப் போலாகி நிற்கும் போது, அது நகர்ந்து புள்ளியாகும் வரை நகர்த்தும் பொறுமையும், அப்படி நகரும் காலத்தை அணுகும் பொறுமையும் வேண்டும். மனதோ படபடக்கக் கூடியது. உடனடி விளைவுகளைப் பார்த்து ஆனந்திக்க நினைக்கக் கூடியது.

நிலையாகப் பறக்கத் தொடங்கும் போது சிறகுகள் அதிகம் அசைவது கூட இல்லை. பதற்றமும் பயமும் என்ன நடக்குமோ என்ற அச்சமும் சிறகுகளை அதிகம் படபடக்கச் செய்கின்றன. படபடப்புகள் உங்களைச் சிறிது தூரம் கூட நகர்த்தப் போவதில்லை.

நகர்த்த முடியாத படபடப்பே உங்களை எங்கோ நகர்த்திக் கொண்டு ஆறுதல் பண்ணுவதாக அல்லது பிரச்சனையைத் தீர்த்து விடுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

உங்கள் படபடப்பையும் பரபரப்பையும் நீங்கள் அந்த நிலையில் உற்றுப் பார்க்க வேண்டும். அத்துடன் உங்களிடமிருந்து விலகிப் போய் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகிப் போய் பாருங்கள். உங்களுக்கு நகைப்பாகக் கூட இருக்கலாம்.

எதிர்கொள்வதற்குப் பலவீனமாகிப் படபடப்பாதல் ஒரு வழிமுறையே இல்லை என்பது அதிலிருந்து தள்ளிப் போகப் போகத்தான் உங்களுக்குப் புரியும். நீங்கள் அமைதியாக இருந்திருக்கலாம் என்பதும் அப்போது புரியும். அந்த அமைதி உங்களுக்கு வேறொரு தீர்வைத் தந்திருக்கும் என்பதும் புரியும்.

நீங்கள் சிறிய வயதில் எது எதற்கோ பயந்திருக்கலாம், படபடப்பை அனுபவித்திருக்கலாம். இப்போது நினைத்துப் பார்க்கும் போது அப்படி எதுவும் அடைந்திருக்கத் தேவையில்லை என்பதை எளிதாகக் கண்டுணர முடிகிறதா? இது எப்படி நிகழ்கிறது என்றால் நீங்கள் தள்ளி வந்து விடுகிறீர்கள். தொலைவில் அதாவது பால்யத்தில் நிகழ்ந்ததைத் தள்ளி வந்து பார்க்கிறீர்கள். சற்றுத் தள்ளிப் போய் ஒரு பார்வை பார்க்கும் போது உங்களுக்குச் சரியான ஒரு தோற்றம் கிடைக்கிறது. அது அருகிலிருந்து பார்த்ததிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.

கால இடைவெளியும் ஒரு தொலைவுதான். உங்களிலிருந்து வெளிப்பட்டு இன்னொரு பார்வையில் பார்ப்பதும் ஒரு தொலைவுதான். அருகிலிருந்து பார்ப்பதற்கும் தொலைவிலிருந்து பார்ப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டாகிறது. இரண்டும் நீங்கள் பார்த்த பார்வைதான். அந்தப் பார்வைகளில் உங்கள் மனமானது இரு வேறாக இரு விதமான நோக்குகளை உணர்கிறது.

மனதின் விசித்திரம் இதுதான். ஒரே விசயத்திற்கு இப்படி இரண்டு, மூன்று என்று பலவிதமான நோக்குகளைக் காட்டும் அதன் தன்மையை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? நீங்கள் ஏதோ அதன் ஒரு நோக்கிற்குக் கட்டுபட்டு அதன் பயத்தையும் பரபரப்பையும் படபடப்பையும் எடுத்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் பயம், பரபரப்பு, படபடப்பு இவற்றிலிருந்து தள்ளிப் போனால் உங்கள் துணிவு, வலிமை, உறுதி எல்லாம் உங்களிடம் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரிகின்றன. எல்லாமே உங்களிடம் இருக்கின்றன. அவற்றை நீங்கள் தேர்ந்து கொள்கிறீர்கள்.

உங்கள் அச்சத்தையும் பலவீனத்தையும் நீங்கள் தேர்ந்து கொண்டால் நீங்கள் ஒரு கெட்ட மனதுடனே வாழப் பழக்கப்பட்டு விடுகிறீர்கள். அப்போது தண்டிப்பதையே நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களால் தண்டிக்க முடியாமல் போனாலும் யாராவது தண்டிக்க மாட்டார்களா என்று ஏங்குகிறீர்கள்.

துணிவையும் வலிமையையும் தேர்ந்து கொண்டால் நல்ல மனதோடு துணிந்து முன்னோக்கிப் போகிறீர்கள். உங்களுக்குப் பல வழிகள் இப்போது கிடைக்கின்றன. தண்டிப்பது என்ற முட்டுச்சந்தில் முட்டிக் கொள்வது உங்களுக்குப் பிடிக்காமல் போய் விடும். மன்னிப்பதும் தண்டிப்பதை மறந்து வேறு வழியில் பயணிப்பதன் ஆனந்தமும் உங்களை இப்போது பீடித்துக் கொள்ளும்.

*****

25 Sept 2023

மன அழுத்தத்திலிருந்து மன மகிழ்வுக்கு…

மன அழுத்தத்திலிருந்து மன மகிழ்வுக்கு…

ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட மன அழுத்தம் இன்று வயது வேறுபாடினின்றி சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கச் செய்கிறது. வயது வித்தியாசம் தெரியாத குருடாகி விட்டது மன அழுத்தம்.

மனதுக்கு ஒத்து வராத நிகழ்வுகள், சம்பவங்கள், பிரதிவினைகள் மற்றும் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைகள், வாழ்வியல் நிலைகள், மனதால் சகித்துப் போக முடியாத அக மற்றும் புற நிலைமைகள் ஆகியன ஒருவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். இவை மட்டும்தான் மன அழுத்தத்திற்கான காரணங்கள் என்றில்லை.

மனதின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள், சின்ன சின்ன விருப்பங்கள், சிறு சிறு வெற்றிகள், அங்கீகாரங்கள் போன்றவை கிடைக்கப்பெறாத சமூக நிலைமைகளும் ஒருவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.

தொடர்ச்சியாக ஏற்படும் தோல்விகள், ஏமாற்றங்கள், பின்னடைவுகள், மதிக்கப்படாத சூழ்நிலைகள், அங்கீகாரமற்ற பொதுவான நிலைகள் போன்றவற்றில் தொடர்ந்து இருத்தப்படும் நிர்ப்பந்தங்கள் போன்றனவும் ஒருவரை மன அழுத்தம் கொள்ளச் செய்யலாம்.

அன்பும் மகிழ்வும் கிடைக்கப்பெறாத குடும்பச் சூழ்நிலைகள், நட்பும் அங்கீகாரமும் கிடைக்கப்பெறாத பணிச் சூழ்நிலைகள், மதிப்பும் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறாத உறவுகளின் பின்னணிகளும் ஒருவரை மன அழுத்தம் கொள்ளச் செய்யலாம்.

மன அழுத்தம் உண்டாவதற்கான காரண காரிய பரப்பு பரந்து விரிந்தது.

ஒருவர் தனக்கான மன அழுத்தம் எதன் காரணமாக ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதைக் களைந்து கொள்ளும் முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. மன அழுத்தம் நாளுக்கு நாள் முற்றிப் போவது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கி விடுகிறது. இந்த முற்றும் விளைவைத் தவிர்ப்பதற்கென மூத்தோர்கள், அனுபவசாலிகள் மற்றும் மருத்துவர்களின் உதவியை நாடுவதும் சில  நேரங்களில் தவிர்க்க முடியாமல் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு அச்சம் தரக்கூடிய விளைவுகளை உண்டாக்கக் கூடியது மன அழுத்தம்.

மன அழுத்தப் பிரச்சனைகளில் அதை சுலபமாக அகற்றிக் கொள்ளவும் சில வழிகள் இருக்கின்றன. ஒருவர் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் போதும், நிகழ்பவற்றைப் புரிந்து கொண்டு அவற்றில் மாற்றக் கூடியவற்றை மாற்றியும் மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது மூலமாகவும் மன அமைதியை அடைய முடியும். அதை எப்படியேனும் அடைவது அடிக்கடி மன அழுத்தம் அடைபவருக்கான வாழ்வதற்கான தகுதியாகி விடுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மன அழுத்தம் ஒவ்வொரு மாதிரியானது என்றாலும் மனதுக்கு ஒவ்வாத அக மற்றும் புற நிலைகளே மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன என்பது பொதுவாகப் பலருக்கும் ஒத்துப் போகும் ஒன்றாகும். இதனைத் தொகுத்துப் பார்த்தால் மன ஒவ்வாமையின் மன விளைவே மன அழுத்தம் எனலாம்.

ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் மனதில் நிலவும் உங்கள் மனநிலையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவீர்கள். இவ்விதத்தில் எளிதில் சீரணிக்க முடியாத மனநிலையின் அஜீரணமே பல நேரங்களில் மன அழுத்தமாகி விடுகிறது.

உதாரணமாக இப்படி ஒரு சூழ்நிலையை எடுத்துக் கொள்ளலாம். இந்த முறை மருத்துவ நுழைவுத் (நீட்) தேர்வில் நீங்கள் தேர்வாகி விடுவீர்கள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் முடிவு வேறாகும் போது நிச்சயம் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். இது இயற்கையானது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஒவ்வொரு நிலைமைகளிலும் இப்படி மன அழுத்தத்திற்கு ஆளாவது மனிதர்களால் தவிர்க்க முடியாதது ஆகும்.

ஒரு சில நாட்கள் வரை இது குறித்த மன அழுத்தம் இருந்து பிறகு அதிலிருந்து நீங்கள் விடுபட்டு விட்டால் இத்தகைய மன அழுத்தத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்த மன அழுத்தம் தொடர்ந்து உங்களை அழுத்திக் கொண்டோ அல்லது உங்களைத் தற்கொலைக்குத் தூண்டிக் கொண்டோ இருந்தால் நீங்கள் மன அழுத்த வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். வியாதி உங்களைத் தின்று தீர்க்கும் நாளை நோக்கி நெருங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

இது போன்ற நிலைமைகளில் மன அழுத்தத்திற்கு உடனடி மருந்து உங்களை மூடிக் கொள்வதல்ல. உங்கள் மனநிலையைச் சகஜமாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் சரியான மருந்து. அதனால் உங்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். அதனால் தேர்வு பெறாத நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்று முடியுமா என்றும் கேட்கலாம். கடந்த காலத்தில் நடந்து முடிந்து விட்ட ஒன்றை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அதனால் பெருகப் போகும் உங்கள் மன அழுத்தத்தைப் பாதியாக அல்லது அதற்கும் அதிகமாகக் குறைத்துக் கொள்ள முடியும்.

ஓர் இலக்கு உங்களை மன அழுத்தத்தில் தள்ளுகிறது என்றால் அதன் குறுகிய நோக்கிலிருந்து நீங்கள் வெளியேறும் காலம் வந்து விட்டது எனலாம். ஏனென்றால் உங்கள் திறமைகளை ஒரு கூண்டுக்குள் சிறகடித்துக் காட்டுவதை விட வானவெளியில் சிறகடித்து மகிழ்வது சிறந்ததாகும். மன அழுத்தத்துடன் நீங்கள் சிறகடிக்க நினைப்பது கூண்டுக்குள் சாகசம் செய்யும் பறவையின் நிலையைப் போன்றதாகும்.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஒரு வேலையில் சேர்ந்தவர்களை விட அதில் தோல்வியுற்று நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வேலைக்கு அமர்த்திய சாமர்த்தியசாலிகள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஓர் உண்மையை உணரலாம். அதாவது மன அழுத்தம் என்பது குறுகிய பார்வை. அதிலிருந்து விடுபடுவது என்பது விசாலப் பார்வையை நோக்கிச் செல்வதாகும். விசாலப் பார்வையால் உங்கள் மனதை விரிவுபடுத்தும் போது நீங்கள் மன அழுத்தத்திலிருந்து சுலபமாக விடுபடலாம்.

மற்றுமொரு பயிற்சியாக வானத்தை நோக்குதல் மன அழுத்தத்திலிருந்து விடுபட அருமையான ஒரு வழிமுறையாகும். வானத்தை நோக்குங்கள். அது எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? கலைந்து போகும் மேகங்களால் வானம் எப்போதும் விதவிதமாகத்தான் இருக்கிறது. மனிதர்களின் மனதும் அப்படிப்பட்டதுதான். பலவிதமான எண்ணங்களால் மனமானது வானத்தைப் போலத்தான் இருக்கிறது.

சில நேரங்களில் வானில் இடி, மின்னல் ஏற்படுகின்றன. கருமேங்கள் சூழ்கின்றன. என்றாலும் எப்போதும் வானம் அப்படியேவாக இருக்கிறது? மனமும் அப்படித்தான் சில நேரங்களில் குழப்பம், விரக்தி, எரிச்சல் போன்ற உணர்வுகளால் சூழப்படுகிறதுதான். ஆனால் எப்போதும் இல்லை. அது மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த மாறிக் கொண்டே இருக்கிறது என்ற உண்மையை எப்போதும் மனதில் வையுங்கள்.

மேற்படி நினைப்பு உங்களுக்கு வந்து விட்டால் நல்லது. அதனால், இப்போது உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்று எப்போது அப்படியே அழுத்திக் கொண்டு இருக்க முடியாது. நாளைய பொழுதொன்றில் இவ்வளவு அழுத்தம் அழுத்திய அந்த எண்ணத்தை மறந்தவராக நீங்கள் சிரித்துக் கொண்டிருப்பீர்கள்.

வானத்தைப் பார்க்கும் நீங்கள் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கலாம். இந்த வானவெளியிலிருந்து பார்த்தால் இந்தப் பூமி எவ்வளவு பெரிது என்று நினைக்கிறீர்கள்? நிச்சயம் சூரியனை விட சிறியது.

அந்தச் சூரியனையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பார்த்தால் அது ஒரு சிறிய கோலிகுண்டுதான். இப்போது இந்தச் சூரியன் – பூமி – நீங்கள் என்ற வரிசை முறைக்கு வாருங்கள். நீங்கள் எவ்வளவு பெரிது என்று சொல்லுங்கள். இந்த ஒப்பீட்டில் நாம் பொருட்படுத்ததக்க ஓர் அளவே இல்லை. இதில் நம்முடைய மன அழுத்தம் என்று பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது சொல்லுங்கள்?

உங்கள் மன அழுத்தத்தை நீங்கள் கடந்து போகலாம் அல்லது ஏற்றுக் கொள்ளலாம் அல்லது கண்டு கொள்ளாமல் இருந்து விடலாம். எல்லாம் மன அழுத்தத்தை அணுகுவதற்கான முறைகள்தான்.

நீங்கள் மன அழுத்தமே இல்லாமல் இருந்து விட்டால் இந்த முறைகள் எதுவும் தேவையில்லைதானே. அது சாத்தியமா என்றால் அதுவும் சாத்தியம்தான்.

இந்த உலகில் உங்களுக்கு நிகழும் அனைத்தும் இரண்டே வகையில்தான் இருக்கும். ஒன்று உங்களால் கட்டுப்படுத்த முடிந்த உங்கள் கட்டுபாட்டிற்குள் வரக் கூடியன. மற்றொன்று உங்களால் கட்டுபடுத்த முடியாத உங்கள் கட்டுபாட்டிற்குள் வராதன.

இப்போது நீங்கள் உங்கள் கட்டுபாட்டிற்குள் வரக்கூடியவற்றிற்காக நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கவலைப்பட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் கட்டுபாட்டிற்குள் உள்ளவற்றை உங்களால் மாற்றியமைக்க முடியும்.

உங்கள் கட்டுபாட்டிற்குள் வரதாவற்றைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அதை உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஒன்று அதுவாக உங்களுக்குத் தகுந்தாற் போல மாறலாம் அல்லது இரண்டாவதாக அப்படி மாறாமல் போகலாம். அதை உங்களால் எதுவும் செய்ய முடியாது.

இப்போது உங்கள் ஒவ்வொரு சூழ்நிலையையும் மனநிலையையும் இதை ஒட்டிப் பாருங்கள். நுழைவுத் தேர்வை எழுதுவதுதான் உங்கள் கட்டுபாட்டில் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் மதிப்பெண்களிலிருந்து தேர்வு பெறுவது ஒவ்வொரு ஆண்டும் மாறக் கூடியதாக இருக்கிறது. சில ஆண்டுகளில் மிக உச்ச மதிப்பெண்கள் கூட தேர்வு பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களுக்குப் போதாமையாகி விடுகின்றன. சில ஆண்டுகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் கூட தகுதி மதிப்பெண்களாகி விடுகின்றன. அது உங்கள் கட்டுபாட்டில் இல்லை.

நீங்கள் அதிகபட்ச மதிப்பெண்கள் எடுப்பதற்காக முயன்றாலும் சில நேரங்களில் பல்வேறு காரணிகளால் அது நடக்காமல் போகலாம். உங்களால் இயன்ற அளவு முயற்சி என்ற ஒன்று மட்டுமே இதில் உங்கள் கட்டுபாட்டில் இருக்கிறது. அதைத் தாண்டி எந்நேரமும் ஒரு சக்தி வாய்ந்த மனிதரைப் போலச் செயலாற்றும் வாய்ப்பு அதாவது ஒரு சூப்பர் மேனைப் போலச் செயலாற்றும் தன்மை எப்போதும் உங்கள் கைகளில் இல்லை. அதைப் பற்றி நீங்கள் எப்போதும் கவலைப்பட வேண்டியதில்லை.

உங்களால் முடிந்த ஆகச் சிறந்த முறையில் நீங்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொண்டு விட்டீர்கள் எனும் போது, அதன் முடிவுகளைப் பற்றி நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. எந்த முடிவு வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அடுத்து உங்கள் கட்டுபாட்டில் உள்ளவற்றைக் கொண்டு அதில் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும் பாருங்கள். உங்களை மன அழுத்தம் ஒரு போதும் அண்டாது.

தேர்வு பெறாத போது உங்கள் கட்டுபாட்டில் உள்ள இரண்டு வாய்ப்புகள் என்னவென்றால் மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார்ப்பது அல்லது வேறு திசையில் நீங்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களைக் கொண்டு உங்களுக்குப் பிடித்தமான மற்றொரு துறையில் துணிந்து இறங்க முடிவெடுப்பது. இந்த இரண்டு முடிவுகளுக்குள் ஒன்றை நோக்கி வந்து விட்டால் வெற்றிகரமாக உங்கள் மன அழுத்தத்தைக் கடந்து விடலாம். அதை விடுத்து நிச்சயம் தேர்வாக வேண்டிய இந்தத் தேர்வில் எப்படித் தோற்றோம் என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்தால் ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். அந்தச் சூழல்தான் மன அழுத்தம்.

எப்போதும் சுழலில் சிக்கியோர்களைக் காப்பாற்றுவது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் சுழல் என்றுதெரிந்த பிறகு நீங்கள் அதில் சிக்காமல் உங்களைக் காத்துக் கொள்ள முடியும். உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் உங்களால் தேவையற்ற சுழலில் சிக்கி விடாமல் தடுத்தாட்கொள்ள முடியும்.

ஆகவே மன அழுத்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒரு சுழலில் சிக்கிக் கொண்டு அநாவசியமாகப் போராடுவதில் என்ன இருக்கிறது? அதற்குப் பதில் அதைக் கடந்து வேறொரு திசையில் ஒடத் துவங்குங்கள். இந்த வாழ்க்கையில் நீங்கள் பார்க்க வேண்டிய காட்சிகள் அநேகம் இருக்கின்றன.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...