20 Aug 2026

தங்கத்தைத் தேடித் துணி பொறுக்கிய திருடர்களின் சோகக் கதை!

தங்கத்தைத் தேடித் துணி பொறுக்கிய திருடர்களின் சோகக் கதை!

பூட்டை உடைப்பது என்பது ஒரு கலை. அதுவும் பட்டப்பகலில், அதுவும் வேலூர் குடியாத்தத்தின் பரபரப்பான ஆற்றோரம் பகுதியில், பூட்டை உடைத்து உள்ளே நுழைய தனித் திறமை வேண்டும். இப்படித் திறமையையும் நேரத்தையும் முதலீடு செய்து உள்ளே நுழைந்த கொள்ளையர்களுக்குக் காத்திருந்தது ஒரு மாபெரும் வரலாற்று அதிர்ச்சி!

கதையின் நாயகர் செல்வம், காந்தி ரோட்டில் ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர். வேலை நிமித்தமாக அவர் சென்னைக்குப் பயணமாகியிருந்தார். அவருடைய மனைவி உண்ணாமலை வழக்கம் போல ஜெராக்ஸ் கடையைக் கவனிக்கச் சென்றுவிட, வீட்டில் எஞ்சியிருந்தது செல்வத்தின் 75 வயதுத் தாயார் கண்ணம்மாள் மட்டுமே. மதிய வேளையில் பாட்டியும் வீட்டைப் பூட்டிவிட்டு மெல்லக் கடைப் பக்கம் நடைபோட, வீட்டின் பூட்டு "யாரும் இல்லையே, வந்து பாரேன்" என்று கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

பூட்டியிருந்த கதவைக் கண்டதும் கொள்ளையர்களின் நெஞ்சில் நிச்சயமாக ரயில்கள் ஓடியிருக்கும். "இன்றைக்குக் குறைந்தபட்சம் ஐம்பது பவுன் தங்கம், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம், ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால் வைரம்!" என்றெல்லாம் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டபடி, பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்திருக்கிறார்கள்.

உள்ளே நுழைந்ததும் அவர்கள் பார்வையில் பட்டது ஒரு பீரோ. கொள்ளை அத்தியாயத்தின் உச்சக்கட்டக் காட்சி இதுதான். பூட்டை உடைத்த கையோடு பீரோவையும் திறந்துவிடலாம் என்று சகல வித்தைகளையும் இறக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பீரோவோ கொள்ளையர்களின் முயற்சிக்குச் சற்றும் மசியாமல், இரும்புக் கோட்டையாக வீறுகொண்டு நின்றிருக்கிறது.

அங்கேதான் அந்தத் தர்மசங்கடமான கேள்வி பிறந்திருக்கிறது. "இவ்வளவு கஷ்டப்பட்டுப் பூட்டை உடைத்து உள்ளே வந்த பிறகு, வெறும் கையோடு திரும்பினால் திருட்டுத் தொழிலுக்கே பெரும் அவமானம் அல்லவா?"

மனதைத் தேற்றிக்கொண்ட கொள்ளையர்கள் சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறார்கள். தங்கம் கிடைக்கவில்லை என்றால் என்ன, இரும்பு இருக்கிறதே! வீட்டில் வைத்திருந்த சுமார் 60 கிலோ எடை கொண்ட இரும்புச் சட்டங்களை முதலில் கண்ணில் ஒற்றிக்கொண்டு அள்ளியிருக்கிறார்கள்.

அடுத்து, "வெறும் இரும்பை மட்டும் தூக்கிச் சென்றால் என்ன மரியாதை?" என்று யோசித்திருக்க வேண்டும். நேரே வீட்டு வாசலுக்கு வந்து, கொடியில் காயப்போட்டிருந்த துணிகளைப் பார்த்திருக்கிறார்கள். சூரிய வெளிச்சத்தில் சுகமாகாய் உராய்ந்து காய்ந்துகொண்டிருந்த துணிமணிகளை, ஒன்று பாக்கி இல்லாமல் வாரிச்சுருட்டித் மூட்டையாகக் கட்டியிருக்கிறார்கள். ஒருவேளை, "அடுத்த திருட்டுக்குப் போகும்போது போட்டுக்கொள்ளப் புதிய ஆடைகள் கிடைத்துவிட்டன" என்ற திருப்தி அவர்களுக்கு இருந்திருக்கலாம்.

இரவில் சென்னையிலிருந்து வீடு திரும்பிய செல்வத்திடம், பாட்டி கண்ணம்மாள் இந்த 'இரும்பு மற்றும் துணி' திருட்டு மேஜிக்கைப் பற்றி விவரித்திருக்கிறார். செய்தி கேட்டு அதிர்ந்துபோன செல்வம், இப்போது போலிசில் புகார் கொடுத்திருக்கிறார்.

பட்டப்பகலில் நடந்த இந்த வீரம் செறிந்த சம்பவத்தைக் கேட்டு குடியாத்தம் மக்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். தங்கம், பணம் திருடுபோகும் என்ற பயத்தில் வீட்டைப் பூட்டிச் சென்றவர்கள், இப்போது கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் துணிகளைக் காப்பற்றத் தனிப் பாதுகாப்புப் படையை அமர்த்தலாமா என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேலூர் காவல் துறை இந்த 'ஆடை மற்றும் இரும்புப் பிரியர்களை' தீவிரமாகத் தேடி வருகிறது.

ஒருவேளை அவர்கள் திருட வந்தவர்கள் அல்ல, துணி துவைக்கும் வேலையை மிச்சப்படுத்த வந்த தொண்டுள்ளம் கொண்டவர்களா அல்லது இரும்புக் கடைக்குச் சாமான்களைத் தேடி வந்தவர்களா என்பது காவல் துறை விசாரணையில்தான் தெரியவரும்.

தங்கத்தைத் தேடிச் சென்ற இடத்தில் துணிகளை அள்ளிய நவீனத் திருடர்களாக அவர்கள் ஆகியிருக்கிறார்கள். வாழ்க திருடர்கள்! வளர்க அவர்களது புதுமையான சிந்தனைகள்!

*****

புண்ணிய பாரதத்தின் புதுமைத் திருவிளையாடல்கள்

27 குத்துகளும், இரண்டு லட்சங்களும்!

மனிதக் குலத்தின் நாகரிகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்பதற்கு நாள்தோறும் பத்திரிகைகளில் வரும் செய்திகளே சாட்சி. அதிலும் குறிப்பாக, நமது கல்வி முறை மாணவர்களை எந்த அளவிற்கு நல்வழிப்படுத்துகிறது என்பதை விளக்குவதற்குத் தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

செய்தி மிக எளிதானது, ஆனால் அதன் உட்பொருள் ஆழமானது. நாகார்ஜுனா பப்ளிக் பள்ளி என்றொரு கல்விக்கூடம். அதன் முதல்வர், திருமதி கே. ரூபா ரெட்டி என்பவர், ஆகஸ்ட் 11 ஆம் தேதி தம் இல்லத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வெறும் கொலையா? இல்லை. உடலில் 27 கத்திக்குத்துகள். செய்தித்தாளில் "கொடூர காயங்களுடன் இறந்துகிடந்தார்" என்று மிக நாகரிகமாக எழுதப்பட்டிருந்தது.

நமது நாட்டின் தொன்மையான மரபில் 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்பார்கள். இதில் தெய்வத்திற்கு முன்பாகக் குருவை வைத்தார்கள். காரணம், குருதான் தெய்வத்தைக் காட்டுவார் என்பதால். ஆனால், நவீன தெலுங்கானாவின் நல்கொண்டா நகரில், பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் குருவை நேரடியாக தெய்வத்திடமே அனுப்பி வைக்கத் தீர்மானித்தார்கள்.

பத்தாம் வகுப்பு என்றால் என்ன வயது இருக்கும்? பதினைந்து அல்லது பதினாறு. இந்த வயதில் மற்ற நாட்டுச் சிறுவர்கள் என்ன செய்வார்கள்? விளையாடுவார்கள், புத்தகம் படிப்பார்கள், அல்லது கைப்பேசியில் கணினி விளையாட்டுகளை ஆடுவார்கள். ஆனால், நமது நல்கொண்டா மாணவர்களோ மிகத் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். அவர்களுக்குப் போதைப் பழக்கம் இருந்தது என்று காவல் துறையினர் கூறுகிறார்கள். போதைப்பொருட்களை வாங்க பணம் வேண்டும் அல்லவா? அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழிதான் பள்ளி முதல்வரின் இல்லத்திற்குச் சென்று நிதி திரட்டுவது அதாவது நிதி சுருட்டுவது.

எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்குத் திட்டமிடல் மிக முக்கியம் என்பதை அவர்கள் பள்ளியில் நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, முதல்வரின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். நோக்கம் மிகவும் புனிதமானது. அதுதான் கொஞ்சம் பணம் வேண்டும்.

அங்கேதான் ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. வீட்டின் உரிமையாளரான பள்ளி முதல்வர் ரூபா ரெட்டி, உள்ளே நுழைந்த மாணவர்களில் ஒருவனை அடையாளம் கண்டுவிட்டார்.

"அட, இது நம்ம பள்ளி மாணவன் அல்லவா!" என்று அவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், மாணவர்களோ 'ஆசிரியர் - மாணவர் உறவில்' எந்தவிதமான குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். தம்மை அடையாளம் கண்டுவிட்டாரே என்ற பதற்றத்தில், அவர்கள் தங்களின் கையில் இருந்த கத்தியைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

ஒரு முறை குத்தினால் மனிதன் இறந்துவிடுவான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள். பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பழகும் பழக்கம் உள்ளவர்கள். எனவே, ஒரு முறையோடு நிறுத்தவில்லை. இரண்டு முறை, மூன்று முறை அல்ல. மொத்தம் 27 முறை!

27 முறை குத்துவது என்பது சாதாரண விஷயமா? அதற்கு எவ்வளவு உடற்பயிற்சியும், கவனக் குவிப்பும் தேவைப்பட்டிருக்கும்! "மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை" என்று புலம்பும் பெற்றோர்கள், இந்த மாணவர்களின் கவனக் குவிப்பைப் பார்த்துப் பெருமைப்படலாம்.

கொலை செய்து முடித்த பிறகு, அவர்கள் அங்கிருந்து ரூ.2.20 லட்சத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

இங்குதான் அவர்களின் அமளிதுமளித்தனமான செயல் வெளிப்படுகிறது. கொள்ளையடித்த பணத்தில் ரூ.1.60 லட்சத்தில் ரத்தக்கறை படிந்திருந்தது. போதை பழக்கம் உள்ள சிறுவர்களான போதிலும், அவர்கள் பணத்தின் மீது கொண்ட பற்றுதல் வியக்கத்தக்கது. ரத்தம் படிந்த பணமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதைத் தங்களோடு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

காவல்துறையினர் வழக்கம்போல விசாரணையைத் தொடங்கினார்கள். ஒரு சிறுவனிடமிருந்து ரத்தக்கறை படிந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனே காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். கிடுக்கிப்பிடி என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். உடனே அந்தச் சிறுவர்கள் உண்மை முழுவதையும் ஒப்புக்கொண்டார்கள். "நாங்கள் போதைக்கு அடிமையானோம்; பணத்திற்காகப் போனோம்; அடையாளம் கண்டதால் குத்தினோம்; பணத்தை எடுத்தோம்" என்று ஒரு சிறுகதை போல வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டார்கள்.

இந்தச் சம்பவத்தைக் கேள்விபடும் போது நமக்குச் சில தத்துவார்த்தமான கேள்விகள் எழுகின்றன:

பள்ளிக்குச் செல்வது அறிவு பெறுவதற்காகவா, அல்லது முதல்வரின் வீட்டு முகவரியைத் தெரிந்து கொண்டு கொள்ளையடிப்பதற்காகவா?

சிறுவயதிலேயே போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமா? ஏனெனில், அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை புழக்கத்தில் விடுகிறார்களே!

2.20 லட்சத்தில் 1.60 லட்சத்தைக் கழித்தால் மீதி எவ்வளவு என்று அந்த மாணவர்களுக்குத் தெரிந்திருக்குமா? அந்த மீதிப் பணத்தை அவர்கள் என்ன செய்தார்கள்?

நமது சமூகம் மிகவும் விசித்திரமானது. "சிறுவர்கள் கையில் புத்தகம் இருக்க வேண்டும்" என்று மேடைகளில் பேசுவார்கள். ஆனால், அந்தச் சிறுவர்களோ கையில் கத்தியையும், பையில் ரத்தம் படிந்த நோட்டுகளையும் வைத்திருக்கிறார்கள்.

பள்ளி முதல்வர் ரூபா ரெட்டி, தம் வாழ்நாளில் எத்தனையோ மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருப்பார். ஆனால், தம்முடைய சொந்தப் பள்ளி மாணவர்கள், '27 குத்துகள்' என்ற மிகப்பெரிய பாடத்தை தமக்குக் கற்பிப்பார்கள் என்று அவர் நிச்சயமாகக் கருதியிருக்க மாட்டார்.

இப்போது அந்த இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அல்லது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அங்கே அவர்களுக்கு போதைப்பொருட்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்: அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அவர்கள் எழுத முடியாமல் போகலாம். அது பற்றி அவர்களுக்குக் கவலை இருக்குமா என்பதும் தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே வாழ்க்கையின் 'மிகப்பெரிய தேர்வில்' தேர்ச்சி பெற்றுவிட்டார்கள், அதாவது, எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இன்றி ஒரு மனிதனை 27 முறை குத்திக் கொல்வது எப்படி என்ற தேர்வில்!

நகரி செய்தித் தாளில் வந்த இந்தச் சிறிய பத்தி, நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான். "பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; ஆனால், அவர்கள் திரும்பி வரும்போது கையில் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதையும், அவர்கள் யாருடைய வீட்டிற்குச் செல்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்."

இல்லையெனில், அடுத்தமுறை உங்கள் வீட்டுச் காலிங் பெல் அடிக்கும்போது, வெளியே நிற்பது உங்களின் அன்பிற்குரிய மாணவனாகக்கூட இருக்கலாம், கையில் கத்தியுடன்!

*****

சக்கர நாற்காலியும் சாத்தான் மகனும்

அன்பு எனும் பெருஞ்சுமை

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது."              (குறள், 45)

என்றார் வள்ளுவர். ஆனால், மணவூர் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் பார்த்தால், வள்ளுவர் சொன்ன அந்தப் பண்பு ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேகம் பிடிப்பதற்குள் நடைமேடையிலேயே கீழே விழுந்து நொறுங்கிவிட்டது போல் இருக்கிறது.

பார்த்தசாரதிக்கு வயது 45. மனதளவில் இன்னும் முதிர்ச்சி அடையாத குழந்தை போலத் தோன்றுகிறது. தாய் பத்மாவதியோ 72 வயதில் படுக்கையில் வீழ்ந்தவர்.

மனித உறவுகளின் சிக்கல் என்னவென்றால், அன்பைக் காட்டுவதற்கு ஆட்கள் திரள்வார்கள்; அதே அன்பைச் சுமையாகக் சுமக்க வேண்டிய சூழல் வரும்போது, 'நான் வருகிறேன்' என்று அமைதியாக நழுவி விடுவார்கள். பார்த்தசாரதியின் மனைவியும் குழந்தைகளும் அப்படித்தான் நழுவியிருக்கிறார்கள்.

சுமை தாங்க முடியாத பார்த்தசாரதி, தாயைக் காப்பாற்ற வேறு வழிகளைத் தேடியிருக்கலாம், சமூக அமைப்புகள், அரசின் உதவிகள், அல்லது ஏதேனும் ஆதரவு இல்லங்கள். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த வழி, காற்றில் நடைபயணம் போவது போலத் தாயைச் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றது.

"கொஞ்சம் காற்று வாங்கி வரலாம் அம்மா!" என்றிருக்கிறார் பார்த்தசாரதி.

இந்த ஒரு வரியில் எத்தனை பாசம், எத்தனை நம்பிக்கை ஒளிந்திருக்கிறது! பத்மாவதியும் அந்த வார்த்தையை நம்பி, தன் மகனின் கைகளைப் பற்றிச் சென்றிருப்பார். ஆனால், ரயில் நிலையத்தின் நடைமேடையை எட்டியபோது, பார்த்தசாரதியின் மனசாட்சி முடங்கிப்போயிருந்தது.

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி ஏலகிரி எக்ஸ்பிரஸ் இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்துகொண்டிருந்தது. பார்த்தசாரதி யோசித்தார் அல்லது யோசிப்பதை நிறுத்தினார். சக்கர நாற்காலி உருண்டது. ஒரு நொடி, ஒரே நொடிதான். தண்டவாளத்தில் ஒரு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

பார்த்தசாரதி காரணம் சொன்னார், தாயைப் பராமரிக்க முடியவில்லையாம். மனைவி பிரிந்து சென்ற விரக்தியாம். சாக்குப்போக்குகளுக்கு என்றும் பஞ்சமிருந்ததில்லை.

ஆனால், காலம் எப்போதும் சாட்சிகளை விட்டுச் செல்கிறது. மனித மனசாட்சி தூங்கிவிட்டாலும், மணவூர் ரயில் நிலையத்தின் ஏதோ ஒரு மூலையில் பொருத்தப்பட்டிருந்த அந்தச் சிறிய கண்காணிப்பு கேமரா தூங்கவில்லை. அது பார்த்தசாரதியின் பதற்றத்தையும், அந்த நெஞ்சைப் பிளக்கும் கொடூரத்தையும் துல்லியமாகப் பதிவு செய்துவிட்டது.

இப்போது அரக்கோணம் ரயில்வே போலீசார் பார்த்தசாரதியைக் கைது செய்து கம்பிகளுக்குப் பின்னால் அடைத்துவிட்டார்கள்.

தான் பெற்ற பிள்ளை தன் வாழ்க்கையைத் தள்ளாட வைப்பான் என்று எந்தத் தாயும் நினைப்பதில்லை. ஆனால், சக்கர நாற்காலியோடு தாயையே தண்டவாளத்தில் தள்ளிவிட்ட பார்த்தசாரதிகள் வாழும் இந்தச் சமூகத்தில், 'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்' என்ற பழமொழி வெறும் கவிதை வரியல்ல; அது ஒரு கொடூரமான நிஜம் என்பதைத் தான் இந்தச் சம்பவம் நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.

மனித உறவுகள் எவ்வளவு பலவீனமானவை என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று தேவையில்லை. பெற்ற பிள்ளைக்குத் தாயைப் பாரமாகத் தெரிய வைக்கும் இந்தச் சமூகம், எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

*****

விழி வழி ஆக்ஸிடெண்டும் 108 ஆம்புலன்சும்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 11

விழி வழி ஆக்ஸிடெண்டும் 108 ஆம்புலன்சும்

அது அந்தி மயங்கும் பொன்மாலைப் பொழுது.

அலுவலகத்தின் மூலையில் உட்கார்ந்திருந்தான் அவன்.

எதிரே அவள்.

அவள் அந்தச் செந்நிறப் பட்டில் தேவதை போலிருந்தாள்.

எதையும் பெரிதாகப் பொருட்படுத்தாத நவீன பெண் அவள்.

ஆனால், அவளது கண்கள். அது வேறு கதை.

அவன் தன் மடிக்கணினியை மூடிவிட்டு அவளைப் பார்த்தான். அவள் தேநீரை உறிஞ்சியபடியே அவனை ஒரு கணம் ஏறெடுத்துப் பார்த்தாள்.

அந்த முதல் பார்வையில் ஒரு கூர்மை இருந்தது. ஓர் அலட்சியம், ஒரு சின்ன ஏளனம், நெஞ்சைக் குத்தும் லேசான நிராகரிப்பு. அவனுக்குள் ஏதோ ஒன்று சரக்கென்று தைத்தது. இதயத்துடிப்பு சட்டென எகிறியது. அது பார்வையா அல்லது நெஞ்சில் இறங்கிய நஞ்சா என்று தெரியாத அளவுக்கு அவனுக்குள் ஒரு சுகமான வலி படர்ந்தது.

"அடப்பாவமே, இவளிடம் மாட்டிக்கொண்டு நாம் படப்போகும் பாடு பெரியது போலிருக்கே!" என்று அவனுக்குள் ஒரு லேசான பயமும், வழிப்பும் உருவானது. அது ஒரு நோய் மாதிரி அவனைத் தொற்றிக்கொண்டது.

அவன் முகத்தைச் சுளித்து, பார்வையைத் திருப்ப முயன்றான்.

அடுத்த நொடி, அவள் தன் பார்வையின் கோணத்தை லேசாக மாற்றினாள். இமைக்கடையில் ஒரு குறும்பு மின்னியது. அவளது உதட்டின் ஓரத்தில் மெல்லிய புன்னகை அரும்ப, அதே கண்கள் இப்போது அவனை ஒரு வசியப்பார்வை பார்த்தன. "பயப்படாதே, நான் உன்னவள்தான்" என்று சத்தமில்லாமல் சொன்னது அந்த இரண்டாவது பார்வை.

முந்தைய நொடியில் நெஞ்சில் ஏறிய அதே வலி, இந்த நொடியில் அப்படியே பனி போல விலகி ஓடியது. உடம்பெல்லாம் ஒரு சுகமான சிலிர்ப்பு. வலி நிவாரணி போல இருந்தது இந்தப் பார்வை.

அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். வள்ளுவன் அன்றைக்கே எழுதிவைத்துவிட்டுப் போன காதல் ப்ரோகிராம் இதுதான் போல!

ஒரே ஜோடி கண்கள் தான். ஆனால் அதற்குள் இரண்டு வெவ்வேறான லென்ஸ்கள்.

முதல் பார்வை என்பது மனதை உயிரோடு வதைக்கும் ஒரு நோய். இரண்டாவது பார்வை என்பது அந்த நோயை உடனடியாகக் குணப்படுத்தும் அருமருந்து.

"என்ன யோசனை?" என்றாள் அவள், தன் மொபைலை மேஜை மீது வைத்தபடி.

"ஒன்றுமில்லை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் உன் கண்களைப் பத்தி அப்படியே கோடிங் எழுதி வச்சிட்டுப் போயிருக்கார், அதைத்தான் நினைச்சேன்" என்றான் அவன், தேநீர் கோப்பையைக் கையில் எடுத்தபடியே!

"இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஏதுடா கோடிங்? அப்போ நான் பிறக்கவே இல்ல. அப்போ எப்படிடா என் கண்ணைப் பத்தி கோடி எழுத முடியும்?" என்றாள் அவள்.

"இதுதான் அந்தக் கோடிங்.

"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து."   (குறள், 1091)

எப்படி இருக்கு?"

அவள் கன்னங்கள் நாணத்தால் சிவந்தன. கண்கள் அவனை அப்படியே விழுங்கி விடுவது போலச் சுருங்கின.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

19 Aug 2026

வேளாண்மையின் விசித்திரக் கூத்துகள்

வேளாண்மையின் விசித்திரக் கூத்துகள்

மனிதன் பிறக்கிறான்; அழுகிறான்; அழுது முடித்ததும் பசிக்கிறது என்கிறான். பசித்தால் எதை உண்பது? 'அரிசிச் சோறு' என்கிறது தமிழ்ச் சமூகம்.

ஆனால், அந்த அரிசி எப்படி வருகிறது? நிலத்திலிருந்து அல்லவா?

"இல்லை, அது சூப்பர் மார்க்கெட் பிளாஸ்டிக் பையிலிருந்து வருகிறது, ஜிபே அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வருகிறது!" என்று நம்பும் ஒரு தலைமுறையை நாம் மிக வெற்றிகரமாக உருவாக்கி வைத்திருக்கிறோம்.

சமீபத்திய அதிர்ச்சி செய்தி இதுதான் : தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை ஏறிவிட்டதாம். மக்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.

இத்தனை காலம் தூங்கிவிட்டு, திடீரென்று விழித்துக்கொண்டு "ஐயோ, அரிசி விலை ஏறிவிட்டதே!" என்று அலறுவது தமிழனின் தொன்று தொட்ட பாரம்பரியப் பொழுதுபோக்கு.

"எல் நினோ வந்துவிட்டது, மழை பெய்யவில்லை, காவிரி டெல்டாவில் வறட்சி!" என்று வழக்கம் போல இயற்கை மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நிர்வாகங்களோடு சேர்ந்து ஊடகங்களும் தயாராக இருக்கின்றன.

இயற்கை பாவப்பட்டது. அது பதில் பேசாது. அதனால் எல்லாப் பழியையும் அதன் மீது சுமத்திவிடலாம். அது ஒன்றும் சொல்லாது.

ஆனால் உண்மை என்னவென்றால், இயற்கை செய்த துரோகத்தை விட, நாம் வேளாண்மைக்குச் செய்த துரோகம்தான் மிகப் பெரியது.

கடந்த பல தசாப்தங்களாக, கட்டமைப்புச் சிக்கல்களையும் உற்பத்திக் குறைபாடுகளையும் நாம் அழகாகப் பராமரித்து, வளர்த்து, சீராட்டி வந்திருக்கிறோம். இப்போது அதற்கான வட்டி வசூலிக்கப்படும்போது, "ஐயோ, வட்டி இவ்ளோ அதிகமா?" என்று மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கிறோம்.

சுருங்கும் நிலமும், வீங்கும் வீண்கனவுகளும்

ஒரு காலத்தில் 'சோழநாடு சோறுடைத்து' என்றார்கள். இப்போது 'சோழநாடு ரியல் எஸ்டேட் உடைத்து' என்று மாற்றி எழுத வேண்டும்.

புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தலைச்சுற்றும். 1970களில் தமிழ்நாட்டின் நெல் சாகுபடிப் பரப்பு 27 லட்சம் ஹெக்டேராக இருந்தது. 2025இல் அது எவ்வளவு தெரியுமா? வெறும் 19 லட்சம் ஹெக்டேர். சுமார் 8 லட்சம் ஹெக்டேர் நிலம் எங்கே போயிற்று? வேற்றுகிரகவாசிகளா தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்? இல்லை. நாம்தான் அதை 'நகரமாக்கல்' என்ற பெயரிலும், 'ப்ளாட் போட்டு விற்றல்' என்ற பெயரிலும் தார்ச் சாலைகளாகவும், சிமெண்ட் காங்க்ரீட் காடுகளாகவும் மாற்றி வைத்திருக்கிறோம்.

இந்திய அளவில் மொத்தச் சாகுபடிப் பரப்பளவும், நெல் சாகுபடிப் பரப்பளவும் உயர்ந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அது சுருங்கிக் கொண்டே போகிறது. இதன் விளைவு என்ன?

நம்முடைய வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ள நாம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிடம் கையேந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். "நாங்கள் திராவிடக் கம்பீரம், தமிழன் பாரம்பரியம், நாகரிகத்தின் தொட்டில்" என்று மேடையில் பேசுவதற்கு வேண்டுமானால் நாம் தம்பட்டம் அடிக்கலாம், ஆனால் தட்டில் சோறு விழ வேண்டும் என்றால் பக்கத்து மாநிலத்துக்காரன் தயவு தேவைப்படுகிறது.

தேசிய அளவில் நெல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 1970களில் முன்னணியில் இருந்தது. இப்போது அது 5 சதவீதத்திற்குள் சுருங்கிவிட்டது. பஞ்சாப்பும் ஹரியானாவும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நவீன தொழில்நுட்பத்தையும் பாசன வசதிகளையும் புகுத்தி, 2025 இல் ஹெக்டேருக்கு 4,400 கிலோவுக்கும் அதிகமாக விளைச்சலைப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன. நாமோ இன்னும் ஹெக்டேருக்கு 3,300 கிலோ என்ற அளவிலேயே பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கிறோம்.

ஏன் இந்தத் தேக்கம்? ஏனென்றால், நமக்கு அரசியல் பேச நேரம் இருக்கிறது, சினிமா பார்க்க நேரம் இருக்கிறது, ஆனால் நிலத்தை எப்படி வளப்படுத்துவது என்று யோசிக்க நேரமில்லை.

விவசாயி என்பவன் தியாகியா, லூஸா?

தமிழ் சினிமாவில் விவசாயியை எப்படி காட்டுவார்கள்? கிழிந்த வேட்டி, கையில் கலப்பை, கண்ணீரோடு வானத்தைப் பார்க்கும் முகம். அவன் ஒரு 'தியாகி' என்று பட்டம் கொடுப்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில்? அவனை ஒரு முட்டாளாகவே நிர்வாகங்கள் நடத்துகின்றன.

சாகுபடியில் லாபமே இல்லை என்றால் ஒருவன் ஏன் அந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்? 1975 முதல் 2022 வரையிலான தரவுகளின்படி தமிழ்நாட்டு விவசாயிகள் நெல் சாகுபடி மூலமாக லாபம் ஈட்டிய ஆண்டுகள் எத்தனை தெரியுமா? வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே!

குறிப்பாக, 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 25 ஆண்டுகளில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே விவசாயிகள் லாபம் பார்த்திருக்கிறார்கள்.

யோசித்துப்பாருங்கள், 25 வருடத்தில் 22 வருடம் நஷ்டம் தரும் ஒரு தொழிலை உலகத்தில் வேறு யாராவது செய்வார்களா? எந்தக் கார்ப்பரேட் கம்பெனியாவது நடத்துமா? உடனே மூடிவிட்டு ஓடியிருப்பார்கள். ஆனால் விவசாயி செய்கிறான். அதை நாம் 'விவசாயத்தின் மீது அவனுக்கு இருக்கும் பாசம்' என்று சொல்லி ஏமாற்றுகிறோம். உண்மையில் அது பாசம் அல்ல, வேறு தொழில் தெரியாத அவனது கதியற்ற நிலை.

கூலி உயர்வு, டிராக்டர் வாடகை, நீர்ப்பாசனச் செலவு, உரம், பூச்சிக்கொல்லி விலை என எல்லாமே ராக்கெட் வேகத்தில் ஏறி விட்டன. ஆனால் நிர்வாகங்கள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை ஆமை வேகத்தில் கூட நகர மறுக்கிறது. விளைவு? விவசாயி கடன் சுமையில் மூழ்குகிறான். கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு வாட்ச்மேன் வேலைக்கு வருகிறான்.

அரிசியோடு முடியப்போவதில்லை இந்த நாடகம்!

"சரி போனால் போகிறது, அரிசி விலைதானே உயர்ந்தது, நாம் சப்பாத்தி சாப்பிட்டுக்கொள்வோம்" என்று அலட்சியமாக நினைத்தால், உங்களை விட அறிவாளி யாரும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சினை அரிசியோடு நிற்கப்போவதில்லை.

இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு எந்தெந்தப் பயிர்களில் எல்லாம் கொடூரமாக வீழ்ச்சியடைந்துள்ளது தெரியுமா?

நெல் உற்பத்திப் பங்கு 8.62% இலிருந்து 5.64% ஆகக் குறைந்துள்ளது. துவரை உற்பத்திப் பங்கு 2.13% இலிருந்து 1.19% ஆகச் சரிந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் 9.31% இலிருந்து 3.01% ஆகக் கொடூர வீழ்ச்சி கண்டுள்ளது. நிலக்கடலை உற்பத்தி 15.82% இலிருந்து 10.23% ஆகக் குறைந்துள்ளது. பருத்தி உற்பத்தி 3.20% இலிருந்து 0.94% ஆக தரை தட்டியுள்ளது. கரும்பு உற்பத்தி 10.18% இலிருந்து 3.59% ஆகச் சுருங்கியுள்ளது.

மக்காச்சோளத்தைத் தவிர வேறு எந்தப் பயிரிலும் தமிழ்நாட்டிற்குப் பெருமைப்பட்டுக்கொள்ள எதுவுமில்லை. இதற்கும் எல் நினோதான் காரணமா? வானம் மழை தராததால் பருத்தி விளையவில்லையா? கரும்பு சுருங்கியதா?

இல்லை, நம்முடைய கொள்கை வீழ்ச்சி அது. தொலைநோக்குப் பார்வை இல்லாத திட்டங்களும், நடைமுறைஎதார்த்தம் தெரியாமல்திட்டங்களும்சேர்ந்து உருவாக்கிய பேரழிவு இது. நாளைக்கு பருப்பு விலை கிலோ 300 ரூபாய், நல்லெண்ணெய் லிட்டர்500 ரூபாய் என்று ஏறும்போது, மக்கள் மீண்டும் 'பேரதிர்ச்சி' அடைவார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் எச்சில் தெறிக்கப் பேசுவார்கள். பிறகு வழக்கம் போல மறந்துபோய் அடுத்த சினிமா பட ரிலீஸுக்குக் கொடி பிடிப்பார்கள்.

பணவீக்கப் பிசாசும், நிர்வாகத்தின் தூக்கமும்

2026 மே மாதத் தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி பணவீக்கம் 3.93% ஆக இருக்கும்போது, தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.11% ஆக உயர்ந்து நிற்கிறது. ஏன்? ஏனென்றால் உணவின் விலை ஏறிவிட்டது.

ஒரு மாநிலத்தில்வேளாண் உற்பத்தி குறைந்தால், உணவிற்காக வெளிமாநிலங்களை நம்பியிருந்தால், பணவீக்கம் ஏறாமல் என்ன செய்யும்? உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்காமல் நாம் என்ன செய்யப் போகிறோம்?

நெடுங்காலமாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கையில் விவசாயத்திற்கு வழக்கம் போல இரண்டாம்பட்ச இடமே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்திய வேகத்தில், பாசனக் கால்வாய்களைத் தூர்வார நிர்வாகங்கள் முன்வரவில்லை. விளைவு? பாசனப் பரப்பு சுருங்கியது, தரிசு நிலப் பரப்பு கூடியது, சாகுபடிப் பரப்பு குறைந்தது. இப்போது விலைவாசி விண்ணைத் தொடுகிறது.

சில கசப்பான மருந்துகள்

நாம் செய்ய வேண்டியது மிகப்பெரிய பிரம்ம வித்தை ஒன்றும் இல்லை. கொஞ்சம் மூளையையும், நியாயமான மனசாட்சியையும் பயன்படுத்தினால் போதும்.

முதலில் மேடைப் பேச்சு பேசும் நிர்வாகிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உண்மையான சிறந்த வேளாண் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் தமிழ்நாட்டின் வேளாண்மையை வேகமாக முடுக்கிவிடுவதற்குக் குறுகியகால, நீண்டகாலத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

உண்மையான நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிக்கு லாபம் கிடைத்தால்தான் அவன் நிலத்தில் இறங்குவான். "நீ தியாகம் செய், நான் சாப்பிடுகிறேன்" என்றால் எவனும் வர மாட்டான்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அங்கிருக்கும் ஊழலையும் இடைத்தரகர்களின் தலையீட்டையும் தூக்கி எறிய வேண்டும். மழையில் நெல் நனைந்து முளைவிடும் அவலத்தை நிறுத்த சேமிப்புக் கிடங்குகளின்எண்ணிக்கையையும் கொள்ளளவையும் பெருக்க வேண்டும்.

40,000 க்கும் மேற்பட்ட குளங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பெரும்பாலான குளங்கள் இப்போது ஆக்கிரமிப்பில் உள்ளன அல்லது தூர்வாரப்படாமல் தூங்கி வழிகின்றன. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நுண்பாசன முறைகளான சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனத்தைக் காகிதத்தில் மட்டும் காட்டாமல் நிஜத்தில் தீவிரப்படுத்தி, பயிர் உற்பத்தியையும் நீர்ப் பயன்பாட்டுத் திறனையும் உயர்த்த வேண்டும்.

விழித்துக்கொள்வோமா அல்லது பட்டினி கிடப்போமா?

தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி விலை உயர்வு தற்காலிகமாகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு மட்டுமல்ல; அது நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட வேளாண் கொள்கையின் விளைவு.

நிர்வாகங்கள் உடனடியாக வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், நீர்ப்பாசனப் பரப்பளவை வலுப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யவும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், அடுத்த சில ஆண்டுகளில் நாம் சோற்றுக்கு அலைவது உறுதி.

அப்போது அரிசி விலை கிலோ 100 ரூபாய் ஆகும். மக்கள் முகநூலிலும் எக்ஸ்  தளத்திலும் ஹேஷ்டேக் போட்டுப் போராடுவார்கள். நிர்வாகம் நிவாரண உதவி அறிவிக்கும். ஆனால், தட்டில் சோறு இருக்காது!

விவசாயத்தைக் காப்பாற்றுவது விவசாயிக்கான சலுகை அல்ல; அது நம்முடைய சொந்த வயிற்றுக்கான பாதுகாப்பு! இதை உணர்ந்தால் சரி, இல்லையேல், வாழ்க ஜனநாயகம், வளர்க பட்டினி!

*****

கண்களில் ஒரு மதுபானக் கடை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 10

கண்களில் ஒரு மதுபானக் கடை!

இருள் கவியத் தொடங்கிய இனிய வேளை.

அவனும் நண்பனும் பூம்புகார் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர்.

நண்பன் திடீரென்று தன் இருப்பில் செருகி மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு மதுவை ஒரு மடக்குக் குடித்தான். வேலையின் கவலைகளையெல்லாம் மறந்து அவன் முகம் சற்று தளர்வடைந்தது. ஒருவிதப் போதை அவன் கண்கள் வழியே பரவியது.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை.

"இதுக்குதான்டா உன் கூட வரவே யோசிக்கிறேன்!" என்றான்.

நண்பன் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "மச்சி! இந்த ஜானி வாக்கரை குடிக்கிறப்போ வர்ற கிக்கு இருக்கே, அது குடிக்கிறவனுக்குத்தான் தெரியும். பக்கத்துல சும்மா வர்ற உனக்கு கண்டிப்பா புரியாது! கொஞ்சம் அதெ அனுபவிச்சுப் பாருடான்னா கேட்க மாட்டேங்றீயே!" என்றான் பெருமிதத்தோடு.

அவன் புன்னகைத்தபடி "இனி ஜானி வாக்கரோடு வர்றதா இருந்தா என்னோட வாக்கிங் வராதே." என்றான்.

அப்போது, அவர்கள் எதிரே அவள் தன் தோழிகளோடு வந்து கொண்டிருந்தாள்.

சடரென்று ஒரு விபத்தைப் போல அவளது பார்வையும் அவனுடைய பார்வையும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

அவள் தன் கலைந்த கூந்தலை ஒதுக்கியபடி, அவனைப் பார்த்து மிக மெலிதாக, அன்பும் கனிவும் நிறைந்த ஒரு புன்னகையைச் சிந்தினாள்.

அந்த ஒரே ஒரு பார்வையில், நாள் முழுவதுமான களைப்பு மறைந்து அவனது முகத்தில் ஓர் ஒளி பிறந்தது.

அவன் முகம் அப்படியே மாறியது. அவனது கண்கள் மின்னின. உதடுகளில் சொல்ல முடியாத ஓர் ஆனந்தப் புன்னகை மலர்ந்தது. உலகையே மறந்து, அவளது அன்பில் அவன் மெய்மறந்து காதல் போதையில் தள்ளாடிப் போய் நின்றான்.

"நைஸ் டூ மீட் யூ. பீச் காற்று ரொம்ப பீஸ்புல்லா இருக்குல்ல." அவ்வளவுதான் எளிமையாக விசாரித்து விட்டு, அவள் தோழிகளோடு கலகலவெனச் சிரித்தபடி கிளம்பி விட்டாள்.

ஜானி வாக்கரை மீண்டும் மறைபிரதேசத்தில் வைத்திருந்த நண்பன் இதை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

"மச்சி! நான்தான் சரக்கு அடிச்சிருக்கேன். எனக்குத்தான் போதை ஏறணும். ஆனா நீ எதுவுமே குடிக்காமலேயே, அவ உன்னை ஒரு தடவை பார்த்த உடனே உன் மூஞ்சில போதை ஏறுன மாதிரி தள்ளாடுறீயேடா, எப்படிரா? " என்றான் குழப்பத்துடன்.

"நீ குடிக்கிற மதுவோ, போதைப்பொருளோ அதை உண்டால்தான் தற்காலிகக் கிறக்கத்தைத் தரும். ஆனா, காதல் இருக்கே. கண்டாலே போதும்டா ஜானி வாக்கரைத் தாண்டின போதைதான். "

"உன்னோட இந்த லாஜிக்கல் பார்முலா சூப்பரா இருக்கேடா!"

"இது என்னோடா தர்க்க சூத்திரம் இல்லடா. திருவள்ளுவரோட காதல் சூத்திரம்."

"ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த மனுஷன் எப்படிடா இப்படி ஒரு சூத்திரத்தை எழுதுனாரு?"

"அதனாலத்தான் அந்தப் புலவரைத் தெய்வப் புலவர்ங்றாங்க. அவர் எழுதுன அந்தக் காதல் சூத்திரம் இதுதாண்டா.

"உண்டார்கண் அல்லது அடுநறாக் காமல்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று."    (குறள், 1090)

எப்படிடா இருக்கு?"

"நான் இந்த ஜானி வாக்கரை மறைச்சு வெச்சிருக்கிறதுக்காக அந்த ஞானி டாக்கர்கிட்டெ மன்னிப்புக் கேட்டுக்கிறேன்டா"  நண்பன் தன்னுள்ளே மறைவிலிருந்த பாட்டிலை எடுத்துக் கடற்கரை மணலில் வீசினான்.

இதைப் பார்த்த்தும், நிஜமாகவே அவன் முகம் இப்போது காதலியின் பார்வையைக் கண்டதை விட அதிக மகிழ்ச்சியில் ஜொலிக்க, நண்பன் தொடர்ந்தான், "செமயா சொன்ன மச்சி! சரக்கு உடம்பைக் கெடுத்துக் குடிக்கிறவனை அழிக்கும். ஆனா காதல், அது பார்த்தாலே போதும் சரக்கை விட பெரிய போதையை அளிக்கும். மனுஷன மனுஷனா வாழ வைக்கும். வாழ்க்கையையும் அழகாக்கும்! இப்படிப்பட்ட போதையை வெச்சுக்கிட்டாடா நம்ம பசங்க டாஸ்மாக்கைத் தேடி அலையுறானுங்க?" என்று கூறிச் சிரித்தான் நண்பன்.

"அவனுங்களுக்கு உனக்குக் கிடைக்குற மாதிரி ஜானி வாக்கர் கிடைக்குணுமே! அதான் கிடைக்கிறதைத் தேடி போறானுங்க." என்று கலாய்த்தான் அவன்.

"அப்படி இல்லடா! அவனுங்களுக்கு நீ எனக்கு எப்படி எடுத்துச் சொன்னீயோ அப்படி இந்த 1090 ஆவது குறளை எடுத்துச் சொல்ல ஆள் இல்லாமத்தான்டா டாஸ்மாக்கத் தேடி அலையுறானுங்க." என்றான் நண்பன்.

உண்டால்தான் மயக்கும் கள். கண்டாலே மயக்கும் காதல்.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

18 Aug 2026

ஒரு சுழற்சியின் மௌன சாட்சியம்

ஒரு சுழற்சியின் மௌன சாட்சியம்

நாம் வாழும் இந்தக் காலத்தில் சொற்களுக்குப் பஞ்சம் ஏதும் இல்லை. மேடைகளிலும், செய்தித் தாள்களிலும், ஊடகங்களின் மின்னல் திரைகளிலும் சொற்கள் அலை அலையாய்ப் பெருகி வழிகின்றன. ஆனால், அந்தச் சொற்களுக்குப் பின்னே இருக்கும் அறிவுத் தெளிவு என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், கைக்குச் சிக்குவது வெறும் பாசி பிடித்த நுரை மட்டும்தான்.

சிறுபிள்ளைத்தனமான தர்க்கம்

அண்மைக் காலமாகச் சமூக வலைதளங்கள் என்றழைக்கப்படும் அந்த விசித்திரமான கண்ணாடிக்கூண்டுகளில் ஒரு குரல் உரக்கக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. “ஆற்றுத் தண்ணீரை ஏன் கடலுக்கு அனுப்பி வீணடிக்கிறீர்கள்?” என்பதுதான் அந்த மேதாவிலாசமான கேள்வி. கேட்பதற்கு எளிய, ஒரு வியாபாரியின் தராசுப் புத்திக்கு சட்டென்று புரியக்கூடிய கேள்விதான். நாம் குடிக்காத நீர், நாம் பயிர் செய்யாத நீர், நமக்கு எவ்வித லாபமும் தராத நீர் கடலில் போய் விழுந்தால் அது வீண்தானே? என்ற சிறுபிள்ளைத்தனமான தர்க்கம் அதன் பின்னால் ஒளிந்திருக்கிறது.

வீதிச் சண்டைப் போக்கு

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அதுவும் நாட்டின் உயர்நீதிமன்றமும் நடுவர் மன்றமும் வழங்கிய தீர்ப்புகளையெல்லாம் தனக்குக் கீழே இருக்கும் வெறும் காகிதங்களாகக் கருதும் ஓர் அதிகார பீடத்தில் இருக்கும் மனிதர், மிகச் சாதாரணமான ஒரு வீதிச் சண்டையாளனைப் போலப் பேசுகிறார், “கடந்த ஆண்டு நாங்கள் திறந்துவிட்ட நீரை நீங்கள் கடலில் கலந்து வீணடித்துவிட்டீர்கள். எனவே இனித் தண்ணீர் தர முடியாது.”

எவ்வளவு எளிமையான சுயநலம்! இயற்கை உருவாக்கிய ஒரு நீர்வழிப்பாதையை, பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்களைச் சுமந்து வரும் ஒரு ஜீவநதியை, ஏதோ தன் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீரைப் போலவும், அதைத் திறந்து மூடும் சாவியைத் தன் பாக்கெட்டில் வைத்திருப்பதாகவும் நினைத்துக் கொள்ளும் மனித அகந்தையின் உச்சம் இது. நதியின் விதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதனுக்கு என்று வந்தது?

இயற்கையின் சுழற்சியும் மனிதனின் சிறுமையும்

புவியின் மேற்பரப்பில் நான்கில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டிருக்கிறது. இந்த நிலப்பரப்பை நாம் கடல் என்றும் பெருங்கடல் என்றும் நம் வசதிக்காகப் பெயரிட்டு அழைக்கிறோம். நன்னீர் கடலைச் சென்று அடைவது ஏதோ ஒரு விபத்தோ அல்லது திட்டமிடப்படாத தவறோ அல்ல. அதுதான் இயற்கையின் ஆதி விதி.

கடல்நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகிறது; அந்த ஆவி மேகக் கூட்டங்களாக மாறுகிறது; காற்றழுத்த மாறுபாடுகளால் அந்த மேகங்கள் திசைநோக்கி நகர்கின்றன; புயலும், பருவமழையும் தரணியெங்கும் உருவாகின்றன. இந்த விசித்திரமான, அதேசமயம் மிகத் துல்லியமான இயந்திரத்தை இயக்கியது யார்? மனிதனின் எந்தப் பொறியியல் துறை இதற்கு வழிகாட்டியது?

மலைகள் என்பவை வெறும் பாறை இடுக்குகள் அல்ல; அவை இந்த மேகக் கூட்டங்களின் பயணத்தை மறித்து, அதை அமுதமாக மாற்றித் தரும் மந்திரக் கூடங்கள். சரிவுகளில் வழியும் மழைத்துளிகள், தங்களுக்குள் ஒரு பாதையை அமைத்துக் கொண்டு, நிலத்தின் தாகத்தைத் தணித்து, வண்டல் மண் என்னும் ஊட்டச்சத்தைச் சுமந்துகொண்டு போய் டெல்டா நிலங்களில் சேர்க்கின்றன. அந்த வண்டல்தான் மனிதனின் உணவுப் தேவையைப் பூர்த்தி செய்கிறது. நிலத்திற்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்த பிறகு, நதி தன் தாயான கடலைச் சென்றடைகிறது. இது ஒரு பூரணமான வட்டம்.

அந்த வட்டத்தைச் பாதியில் உடைத்து, நீ என் எல்லைக்குள் மட்டுமே ஓட வேண்டும், கடலைத் தொடக் கூடாது என்று வேலி போட நினைப்பது, தாயையும் சேயையும் பிரிக்கும் பேதைமை அன்றி வேறென்ன?

முகத்துவாரமும் பல்லுயிர்ப் பெருக்கமும்

ஆற்று நீரை அதன் பாதையிலேயே தடுத்து, முற்றாக ஓர் இடத்தில் தேக்கி நிறுத்திவிட்டால் என்னவாகும்? நதி தன் இயல்பான ஓட்டத்தை இழக்கும். ஓடாத நதி, நதியே அல்ல; அது வெறும் சாக்கடை அல்லது இறந்துபோன குட்டை.

ஆறும் கடலும் சங்கமிக்கும் அந்த முகத்துவாரம் இருக்கிறதே, அது இயற்கையின் மிக விசித்திரமான ஒரு பரிசோதனைக் கூடம். அங்கே உப்பு நீரும் நன்னீரும் ஒன்றையொன்று தழுவிக்கொள்கின்றன. அந்தச் சந்திப்பில் உருவாகும் பல்லுயிர்த் தன்மை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாத ஒன்று. அங்கே வாழும் உயிரினங்களுக்கு ஒரு சிறப்பு வரம் உண்டு. அவையால் உப்பு நீரிலும் வாழ முடியும், நன்னீரிலும் நீந்த முடியும்.

நாம் ஆற்று நீரின் வரவைத் தடுத்துவிட்டால், அந்த முகத்துவாரத்தின் சமநிலை குலைந்துபோகிறது. நன்னீரின் அழுத்தம் குறையும் போது, கடல்நீர் சத்தமில்லாமல் நிலத்திற்குள் புகத் தொடங்குகிறது. நிலத்தடி வழியாகக் கடல்நீர் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே வந்துவிட்டால், அந்த நிலம் உவர் நிலமாகிவிடும். விவசாயமும் பொய்த்துப் போகும்; நுண்ணுயிர்கள் முதல் பேருயிர்கள் வரை அனைத்தும் அழியும். கடல் ஓரத்தில் இருக்கும் மாவட்டங்களின் வாழ்க்கையே சுடுகாடாக மாறும்.

இதையெல்லாம் விட, அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், நன்னீர் மீன்கள் என ஆற்று நீரின் சத்துக்காகக் காத்திருக்கும் கோடானுகோடி உயிரினங்களின் நிலையை யார் யோசிப்பது?

மனிதன் எனும் சுயநலப் பிராணி

இயற்கை இந்த பூமிக்கு எல்லைக் கோடுகளை வரையறுக்கவில்லை. நதிக்குக் கர்நாடகா என்றும் தெரியாது, தமிழ்நாடு என்றும் தெரியாது; அது புவியீர்ப்பு விசையின் திசையில், தன் இயற்கை அமைப்பின் வழியே கடலை நோக்கி ஓடும் ஒரு ஜீவ நதி. ஆனால், மனிதன் தன் அரசியல் அதிகாரத்தாலும், குறுகிய மாநிலப் பற்றினாலும் இயற்கையின் வழியைச் சிறைபிடிக்க நினைக்கிறான்.

“எங்கள் நிலத்தில் விழும் மழை நீர் எங்களுக்கு மட்டுமே சொந்தம்; அது நிரம்பி வழிந்தால் மட்டுமே அடுத்தவனுக்குத் தருவோம்; அதை நீங்கள் கடலில் கலந்து வீணடித்துவிட்டீர்கள்” என்று வாதிடும் மேலதிகாரத் தர்க்கம், மனித சுயநலத்தின் மிக மோசமான முகம். நதியை ஒரு பொதுச் சொத்தாகப் பார்க்காமல், தன் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீராகக் கருதும் இந்த மனப்போக்கு, புவிசார் அறிவியலையே கேலி கூத்தாக்கக் கூடியது.

குறைந்தபட்ச உயிரோட்டம்

ஒரு நதி உயிருடன் இருக்க வேண்டும் என்றால், அதில் எப்போதும் குறிப்பிட்ட அளவு நீர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இதைச் சூழலியலாளர்கள் சூழலியல் நீரோட்டம் என்பார்கள். ஆனால் மனிதன் என்ன செய்கிறான்?

ஆற்றின் குறுக்கே ஒன்றன்பின் ஒன்றாக அணைகளைக் கட்டி, சொட்டு நீரைக் கூட கீழே விடாமல் தேக்குகிறான். இதனால், ஆற்றுப் படுகைகள் வறண்டு, மணல் கொள்ளையால் ஆழமாக்கப்பட்டு, இறுதியில் சாக்கடை நீரும் கழிவுகளும் மட்டுமே ஓடும் வெறும் "கழிவுநீர்க் கால்வாய்களாக" நதிகள் உருமாறுகின்றன.

தன் சொந்தப் பயன்பாட்டிற்கு அப்பாற்பட்டு, சூழலியல் சமநிலையைப் பேண நதிக்குத் தேவைப்படும் நீரைத் தருவதற்குக்கூட மனித மனமும் அவனது சட்டங்களும் மறுக்கின்றன.

பயன்பாடு என்ற குறுகிய பார்வை

மனிதன் இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் தன் "பயன்பாட்டுத் தராசில்" மட்டுமே வைத்துப் பார்க்கிறான். ஒரு மரம் பலன் தந்தால் அது பயன்பாடு; பலன் தராவிட்டால் அது வெறும் விறகு. ஒரு நதி வயலுக்கு நீர் பாய்ச்சினால் அது பயனுள்ளது; அது கடலில் போய் விழுந்தால் அது "வீண்". இயற்கையில் எதுவுமே வீணில்லை என்ற அடிப்படை உண்மை அவனுக்குப் புரிவதில்லை.

கடலில் கலக்கும் ஆற்று நீர்தான் கடலின் உப்புத் தன்மையைக் கட்டுப்படுத்துகிறது; அதுதான் கடல் வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டு சேர்க்கிறது; அதுதான் கடல்நீரின் வெப்பநிலையைச் சீராக வைத்து, மழை தரும் மேகங்களை உருவாக்குகிறது. இந்த நுட்பமான சங்கிலித் தொடரை உடைக்கும் மனிதன், இறுதியில் தன் சொந்த நிலத்தடி நீரையே உவர்நீராக மாற்றி, குடிநீருக்காகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

மனிதனின் இந்தப் பேராசையும், இயற்கையைத் தான் வென்றுவிட்டதாகக் கருதும் அகந்தையுமே இன்றைய அனைத்து நீர்ச் சிக்கல்களுக்கும், பருவநிலை மாற்ற அச்சுறுத்தல்களுக்கும் மூலக்காரணமாக அமைந்திருக்கிறது.

உலக நாடுகளின் அனுபவமும் பேராசையின் விலையும்

நாம் ஏதோ புதியதாக ஒரு தவற்றைச் செய்யவில்லை. மனிதனின் பேராசை உலகெங்கிலும் ஒரே மாதிரிதான் தொழிற்படுகிறது. வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான், இராக், உஸ்பெகிஸ்தான், ஈரான், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற பல நாடுகளில் உள்ள டெல்டாப் பகுதிகள் இன்றைக்குப் பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கின்றன. காரணம்? ஆற்று நீரை முற்றாகத் தடுத்து ஆங்காங்கே அணைகளைக் கட்டியதுதான்.

அணைகள் கட்டப்பட்டு, முகத்துவாரங்களுக்கு நீர் வருவது நின்றவுடன், கடல்நீர் நிலத்திற்குள் புகுந்தது. விவசாய நிலங்கள் உப்பாக மாறின. மகசூல் வீழ்ச்சியடைந்தது. இன்றைக்கு அந்த நாடுகள் நிலத்தைச் சீரமைக்கப் பில்லியன் கணக்கில் பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றன. இயற்கையை வென்றுவிட்டதாக நினைத்த மனிதன், முடிவில் தன் சொந்தச் செலவிலேயே தன் கல்லறையைத் தோண்டிக் கொண்ட கதையாக இது முடிந்தது.

நம் நாட்டின் எண்களைப் பாருங்கள். கோதாவரி ஆற்றில் இருந்து மட்டும் ஓராண்டில் சுமார் 2,850 டி.எம்.சி தண்ணீர் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பிரம்மபுத்திரா நதியிலிருந்து ஓராண்டில் சுமார் 22,000 டி.எம்.சி தண்ணீர் கடலைச் சென்றடைகிறது.

இந்த எண்களைப் பார்த்தவுடனே, நம் ஊர் அரசியவாதிகளுக்கும், சுயநலச் சிந்தனையாளர்களுக்கும் ரத்த அழுத்தம் எகிறக்கூடும். "அவ்வளவு தண்ணீரும் வீணாகிறதே!" என்று புலம்புவார்கள். ஆனால், அந்தத் தண்ணீர்தான் வங்காள விரிகுடாவின் உப்புத் தன்மையைச் சமநிலையில் வைத்திருக்கிறது. அந்தத் தண்ணீர்தான் இந்தியப் பெருங்கடலின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிக்கிறது. அது இல்லையென்றால், நமக்கு மழை தரும் பருவக்காற்றே உருமாறிப்போகும் என்பதை இந்த நுண்மதி படைத்த மனிதர்கள் உணர மறுக்கிறார்கள்.

முன்னோர்களின் வழியும் இன்றையத் தீர்வும்

நம் முன்னோர்கள் அறிவிலிகள் அல்லர். அவர்கள் ஆற்றுக்குக் குறுக்கே மாபெரும் மதகுகளைக் கட்டி, நீரை ஒரே இடத்தில் சிறைபிடிக்க நினைக்கவில்லை. மாறாக, நதி வழியும் பாதையெங்கும் ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும் வெட்டினார்கள்.

நதியில் வெள்ளம் பெருகும்போது, அந்த உபரி நீர் ஏரிகளுக்குச் சென்றது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. நதியின் பிரதான ஓட்டம் தடைபடாமல் கடலை நோக்கிச் சென்றுகொண்டுதான் இருந்தது. நதிக்கும் கடலுக்குமான பந்தம் எந்தக் காலத்திலும் துண்டிக்கப்படவில்லை.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் வீடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றுகிறோம். பிறகு, மழைக்காலத்தில் நீர் தேங்கும்போது, தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறதே என்று நதியின் மீது பழியைப் போடுகிறோம்.

இயற்கையின் இறுதித் தீர்ப்பு

அணை நிரம்பி வழிந்து, வேறு வழியே இல்லாமல் வழியும் நீரை மட்டும் மனமில்லாமல் கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு அனுமதிக்கும் ஒரு சில மாநில ஆட்சியாளர்களும், அவர்களுக்குச் சொம்பெடுக்கும் போராளிகளும் இயற்கையின் இந்த எளிய சுழற்சியைப் புரிந்துகொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

ஏனெனில், அதிகாரத்தின் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தங்களின் பதவியும், அடுத்த தேர்தலுமே பிரதானமாகத் தெரிகிறதே தவிர, புவியின் எதிர்காலம் தெரிவதில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இயற்கையை விஞ்சிய ஆசான் இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. அது மனிதனைப் போலக் காகிதங்களில் தீர்ப்பு எழுதுவதில்லை; உடனடியாக தண்டனையும் வழங்குவதில்லை. அது தன் பாடங்களை மெதுவாக, ஆனால் தீர்க்கமாக நடத்துகிறது.

காலத்தின் போக்கில் அது வைக்கும் தேர்வுகளில் மனிதன் தோற்றுப்போகும்போது, இயற்கை அறிவிக்கும் தீர்ப்பு மிகவும் கொடூரமானதாக இருக்கும். அப்போது கடலும் இருக்காது, நதியும் இருக்காது, அதைப் பங்கிட்டுக் கொள்ளச் சண்டையிட்டுக் கொண்டிருந்த மனிதனும் இருக்க மாட்டான். அப்போது, எஞ்சியிருக்கும் வெறும் வறண்ட ஆற்றுப் படுகையில், காற்று தன் மௌனமான புலம்பலை மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும்.

*****