31 Aug 2026

ஸ்டெத்தாஸ்கோப் அறியாத மருத்துவம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 22

ஸ்டெத்தாஸ்கோப் அறியாத மருத்துவம்

விளமல், நவஜீவன் மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு அருகே இருந்த மருத்துவர் அறை. ஏசி ஜில்லென்று உடலை உலுக்கியது.

அவன் டாக்டரின் ஸ்டெதாஸ்கோப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நெஞ்சில் ஏதோ இனம்புரியாத பாரம், ஒருவித அடர்த்தியான அழுத்தம். கடந்த ஒரு வாரமாகவே உடம்பில் எந்த உறுப்பும் ஒன்றுக்கொன்று ஸிங்க் ஆகாத மாதிரி ஒரு படபடப்பு.

"பிபி நார்மல், ஈசிஜியும் பெர்பெக்ட். ஆனா ஏதோ ஒரு கெமிக்கல் இம்பேலன்ஸ் உடம்புக்குள்ள இருக்கு. கடுமையான ஸ்ட்ரெஸ்னு நினைக்கிறேன். நான் ஒரு ஆன்டி டிப்ரஸன்ட் தர்றேன், சாப்பிட்டுப் பாருங்க," என்றார் டாக்டர், கம்ப்யூட்டரில் கீபோர்டைத் தட்டியபடியே.

மருத்துவப் புத்தகங்களில் இல்லாத, பார்மஸி மருந்து அட்டைகளில் கிடைக்காத நோய் அது என்பதை அவன் மட்டுமே அறிவான்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்து தன் ராயல் என்பீல்ட் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான். திருவாரூர் மாலையின் புழுக்கமும் டிராபிக்கும் அவனை மேலும் சோதித்தன. விளமல் ரவுண்டானா சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய, புல்லட்டை நிறுத்திக் கியரைக் குறைத்தான்.

பக்கத்தில் வந்து நின்ற ஒரு பிங்க் நிற ஸ்கூட்டியைத் எதேச்சையாகப் பார்த்தான். அங்கே அவள் நின்றிருந்தாள்.

அவள் ஹெல்மெட்டின் முன் கண்ணாடியை லேசாக உயர்த்தி, தலையைச் சிலிர்த்துக்கொண்டாள். காதில் அணிந்திருந்த ரேடியோ ஹெட்போனில் ஓடும் ஏதோ ஒரு பாட்டுக்கு விரல்களால் ஸ்கூட்டியின் ஹேண்டில்பாரில் தாளம் போட்டுக்கொண்டிருந்தாள். மாலையின் சிக்னல் வெளிச்சத்தில், அவள் காதில் அணிந்திருந்த அந்தச் சிறிய வைரத் தோடு பளிச்சென்று மின்னியது.

கடந்த மாதம் நடந்த அந்த அற்பச் சண்டை, இருவரிடமும் உறைந்து கிடந்த ஈகோ, அப்புறம் யாருமே எதிர்பார்க்காத அந்த பிரேக் அப் என நினைவுகள் அதிவேகமாக மனக்கண் முன் வந்து சென்றன.

அவன் ஹெல்மெட்டுக்குள் இருந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது பார்வை மெதுவாகத் திரும்பி, இவன் பக்கமாக வந்தது. ஒரு அரை நொடி அவளது கண்கள் லேசாக விரிந்தன. இவனை அடையாளம் கண்டுகொண்ட கணத்தில், ஒரு மெல்லிய, அழகான புன்னகை அவள் உதட்டின் ஓரத்தில் அரும்பியது.

அந்த ஒரே ஒரு நொடி.

அவனின் நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு பெரும் பூட்டு கிளிக் எனத் திறந்தது. அடைத்துக்கொண்டிருந்த மூச்சு சீரானது. தலைபாரம் சட்டெனக் கரைந்து காணாமல் போனது. கைகளில் இருந்த நடுக்கம் நின்று, உடம்பில் ஒரு புது ரத்த ஓட்டம் பாய்ந்தது.

டாக்டர் கொடுத்த ட்ரான்கிலைஸர், விட்டமின் மாத்திரைகள், கார்டியாலஜிஸ்ட் ரிப்போர்ட் என உலகத்தின் எந்த மருத்துவமும் செய்யாத அற்புதத்தை, அவளது அந்த ஒரு நொடிப் பார்வை நொடிப் பொழுதில் செய்துவிட்டது.

புல்லட்டை அப்படியே ஓரம் கட்டிப் பக்கவாட்டில் சைட் ஸ்டாண்டில் நிறுத்தினான். பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். அவளே நோய், அவளே மருந்து என அவன் தட்டச்சு செய்ய கூகுள் குரோம் 1102 ஆவது குறளைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கண் முன் நிறுத்தியது.

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.”               (குறள், 1102)

நோயைக் கொடுத்தவளேதான் அதற்கான மருந்தை வைத்திருக்கிறாள். இதற்கு வள்ளுவரின் மருத்துவம்தான் சரி, இன்றைய மருத்துவர்களின் மருத்துவம் சரிபட்டு வராது என அவன் மனம் சொல்லியது.

சிக்னல் பச்சையாக மாற, அவளுடைய ஸ்கூட்டி மெதுவாக நகர்ந்து முன்னால் சென்றது. அவன் ஒரு சிறு புன்னகையுடன் தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்து, அவளது ஸ்கூட்டியைப் பின்தொடர ஆரம்பித்தான்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

30 Aug 2026

பிரச்சனை என்னும் இலவச இணைப்பு!

பிரச்சனை என்னும் இலவச இணைப்பு!

சொல்லப்போனால், "வாழ்நாளில் வரும் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டு, அதன்பிறகு நிம்மதியாக வாழ வேண்டும்" என்று நினைப்பதை விட ஒரு மிகப்பெரிய அறியாமை இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது.

குடும்பம் ஒரு பக்கம் அவுட் ஆப் ஆர்டர் ஆகி, வேலை இன்னொரு பக்கம் கொலப்ஸ் ஆகி, மனம் துண்டு துண்டாக உடைந்து சிதறும் போதுதான் மனிதனுக்கு உண்மையான ஞானம் பிறக்க வேண்டும்.

ஆனால் நாம என்ன செய்கிறோம்? "ஐயோ, இந்த ஒரு பிரச்சனை மட்டும் தீர்ந்தால் போதும்டா சாமி" என்று நேர்ந்துகொண்டு, அடுத்த கோயிலுக்கு தேங்காய் உடைக்க ஓடுகிறோம்.

அங்கேதான் வாழ்க்கையின் மிகப் பெரிய ஆப்பு காத்திருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு ரேஷன் கடை க்யூ போன்றது. ஒரு பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு என்ற டோக்கனை வாங்கி வெளியே கதவைத் திறந்தால், அடுத்த பிரச்சனை இன்முகத்தோடு "ஹாய், அடுத்து நான்தான்!" என்று க்யூவில் நின்று கொண்டிருக்கும்.

நீங்கள் முதல் பிரச்சனையோடு மல்லுக்கட்டி ஜெயித்துவிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், இரண்டாவது பிரச்சனை தன் சொந்தக்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து செட்டில் ஆகியிருக்கும்.

மனிதர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்றால், "ஆமாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை!" என்று சொல்லிவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருக்கலாம். அல்லது, அவர்களை நல்லவர்கள் என்று நம்பிய நம்மை விட மோசமான முட்டாள்கள் யாரும் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இதில் மனிதர்களைச் சரி செய்கிறேன், சூழ்நிலையைச் சரி செய்கிறேன் என்று கிளம்புவது, சுனாமி வரும்போது வாட்டர் ப்ரூப் குடை பிடித்துக் கொண்டு நிற்பதற்குச் சமம்.

அதனால், பிரச்சனைகளைத் தீர்க்க நினைக்காதீர்கள். அவற்றுடன் சகிப்புத்தன்மையோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். பழக பழக இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று உங்களுக்கே தோன்ற ஆரம்பித்து விடும்.

வீட்டில் கணவரோ மனைவியோ கத்தத் தொடங்கினால், "சரி, இது இந்த வாரத்திற்கான ஷெட்யூல்ட் அலாரம்" என்று நினைத்துக்கொண்டு டீயை ஆற்றிப் பருகக் கற்றுக்கொள்ளுங்கள்.

வேலை போனால் "சரி, திங்கட்கிழமை காலையில் அலாரம் வைக்காமல் தூங்க ஒரு வாய்ப்பு" என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

மனம் துண்டு துண்டாக உடைந்தால், அந்தத் துண்டுகளைச் சேர்த்து வைத்து பஸ்ஸில்  விளையாடப் பழகிக் கொள்ளுங்கள்.

பிரச்சனையை நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்காத போது, அது கடுப்பாகி வேறு யாரையாவது தேடி ஓடிவிடும்.

கடைசியாக ஒரு பின்குறிப்பு என்னவென்றால், நான் மேலே சொன்ன எதையும் நம்பாதீர்கள். ஏன்,  "நாமெல்லாம் ரொம்ப ஒழுங்காத்தான் வாழ்கிறோம்" என்று உங்கள் மனம் சொல்வதைக் கூட நீங்கள் நம்ப வேண்டிய அவசியமில்லை.

எப்படியும் பிரச்சனைகள் தீரப் போவதில்லை. அப்புறம் என்ன? அவற்றுடன் சேர்ந்து வாழப் பழகிக்கொண்டு ஜாலியாக இருங்கள்! நீங்கள் ஜாலியாக இருப்பதைப் பார்த்து அந்தப் பிரச்சனைகள் நெஞ்சு வெடித்துச் சாகட்டும்!

*****

மெய்நிகர் பிரம்மன்

பாண்ட் 007 டூ 000

அவனும் ஒரு காலத்தில்

ஜேம்ஸ் பாண்ட்தான்!

கல்யாணம் பண்ணி வைத்தார்கள்

ரப்பர் பாண்ட் ஆகி விட்டான்!

*****

வெற்றிச் சின்னம்

எத்தனை பேர் நின்று

எத்தனை முறை தோற்றாலும்

வைப்புத்தொகையே போனாலும்

ஒற்றை ஓட்டுக் கூட

விழாமல் போனாலும்

தலைவருக்குத்

தலைமுறைத் தலைமுறையாக

அதுவே

வெற்றிச் சின்னம்

*****

உயிர்க்கும் பாடல்

யார் சொன்னது

உயிருள்ளது பாடும்

உயிரற்றது பாடாது என்று

வாய் வைத்தால்

எதுவும் பாடும்

மூங்கில் போல்

குழலாக!

*****

உருமாற்றம்

நீந்திப் பார்க்கலாம் என்றால்

குளம் இருந்த இடத்தில்

வீடு

*****

மெய்நிகர் பிரம்மன்

உலகின் மிக அழகிய பெண்

இவள்தான் என்று

சாட்பாட்டிடம் பூரித்தான்

அந்த இளைஞன்!

அது

நான் உருவாக்கியதாகவும் இருக்கலாம்

என்றது

ஏஐ!

*****

டச் அப்

இதற்கு மேல் முடியாது என்ற

ஹீரோவிடம்

விடுங்க சார்

கிராபிக்ஸில் பார்த்துப்போம்

என்றார்

டைரக்டர்

*****

ஐந்தை அடிபணிய வைக்கும் ஒன்று!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 21

ஐந்தை அடிபணிய வைக்கும் ஒன்று!

மின்னல் வெட்டியது போலத்தான் இருந்தது.

அவன் கையிலிருந்த கி.வா.ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சி பதிப்பிலிருந்து கண்ணை எடுத்தபோது, எதிரே அவள் நின்றுகொண்டிருந்தாள். கையில் இரண்டு கோப்பை தேநீர். அவளது வளையல்கள் "கிலுக்" என்று ஒரு மெல்லிய இசை எழுப்பின.

"என்ன மிஸ்டர்! ஏதோ ஒரு ரொம்ப பெரிய ஆராய்ச்சி போல?"

அவள் தேநீரை நீட்டியபோது, சுட சுட அதன் ஆவியோடு சேர்ந்த ஏலக்காய் வாசம் அவனது நாசியை துளைத்தது. அது வெறும் தேநீர் வாசனை இல்லை; அவள் பக்கத்தில் இருக்கும்போது மட்டுமே கிடைக்கும் ஒருவித தனித்துவமான நறுமணம்.

அவன் கோப்பையை வாங்கி ஒரு வாய் உறிஞ்சினான். நாக்கில் சுட சுட கதகதப்பும் இனிப்பும் கலந்த திருப்தி.

"தேநீர் பிரமாதம்!"

"நான் பண்ணா எல்லாமே பிரமாதம்தான்!" அவள் சிரித்தாள்.

அவள் சிரிக்கும்போது அந்தச் சின்ன அறையில் ஒரு புது வெளிச்சம் பரவுவது போலிருக்கும். அவள் உடுத்தி வந்திருந்த அடர் நீலச் சேலையின் சலசலப்பு, அந்த வளையல்களின் ஓசை, அவளுடைய சிரிப்பின் ஒலி என எல்லாமே அவனது காதுகளில் ஓர் இனிய மெல்லிசையாக விழுந்தது.

அவள் அவனருகே அமர்ந்தாள். அவளது தோள் அவனது தோளில் லேசாக உரசியது. ஒரு சின்ன மின்சாரம். தொடு உணர்ச்சி என்பது இத்தனை தீவிரமானதா? உடம்பின் ஒவ்வொரு நரம்பும் விழித்துக் கொள்வது போல இருந்தது.

அவன் அவளையே பார்த்தான். அவளுடைய அந்தப் பெரிய, பிரகாசமான கண்கள். கருவிழிகளுக்குள் ஏதோ ஒரு புதிர். உலகத்தின் மொத்த அழகையும் அந்த இரண்டு கண்களுக்குள் அடக்கி வைத்தது போல ஒரு பிரமை.

அப்போதுதான் அவனுக்கு அந்தக் குறள் அவன் நினைவைத் தீண்டியது. அவன் சடசடவென்று கையில் இருந்த திருக்குறள் ஆராய்ச்சி பதிப்பு நூலின் பக்கங்களை வேக வேகமாகப் புரட்டினான்.

ஈராயிரம் வருடத்துக்கு முன்பே திருவள்ளுவர்,

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள."                       (குறள், 1101)

என எழுதி வைத்து விட்ட அந்தக் குறளை மனதுக்குள் முணுமுணுத்தபடி அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போனான்.

அட அவர் சொன்னபடி, அப்படியே இந்த இரண்டாயிரம் வருடம் கடந்தும் எதுவும் மாறாமல், அதன் சாராம்சம் எதுவும் காலாவதி ஆகாமல் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் என்று இந்த ஐந்து புலன்களின் சுகமும், ஒளிர்கிற வளையல் போட்ட இந்த ஒரு பெண்ணிடம் மொத்தமாக இருக்கிறதே!

"என்ன யோசனை?"  அவள் அவனது கன்னத்தை லேசாகக் தட்டினாள்.

"ஒன்னுமில்லை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் சொன்ன சூத்திரம் சரிதானான்னு சோதனை பண்ணிட்டு இருந்தேன்."

"என்னவாம்?"

"நீதான்டி அது!" என்று அவன் அவளது கையைப் பற்றிக் கொண்டான். வளையல்கள் மீண்டும் கலகலவெனச் சிரித்தன.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

29 Aug 2026

விழி பேசும் மொழிகள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 20

விழி பேசும் மொழிகள்

திருவாரூர் பேருந்து நிலையம்.

மழை பெய்துகொண்டிருந்தது. வழக்கம்போலத்தான். மழையிடம் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால், மனிதர்கள்தான் மழையைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ புதிதாகப் பார்ப்பது போல் தங்களை ஏமாற்றிக் கொள்வார்கள். அது மனிதர்களின் வழக்கம்தான்.

மணி மாலை ஆறு பதினாறு.

அவன் பேருந்து நிலைய தூணில் சாய்ந்திருந்தான். வடபாதிமங்கலம் பேருந்து வரக்கூடும் என்ற லேசான நம்பிக்கையில். அல்லது, வடபாதிமங்கலம் பேருந்து வராது என்ற ஆழ்ந்த சந்தேகத்தில். ஆனால், அவன் நிஜத்தில் வடபாதிமங்கலம் பேருந்தை எதிர்பார்க்கவில்லை. அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் மன்னார்குடி பேருந்துக்காகக் காத்திருந்தாள். குடையைப் பிடித்துக்கொண்டு.

இருவரும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள். ஆறு மாதங்களாக. ஆசிரியர் பணிக்கே உரிய அதே மெல்லிய சோகத்துடன்.

அவர்களிடையே இதுவரை நடந்த உரையாடல்கள் மிகவும் மகத்தானவை. 'திறன் தேர்வு நடத்தி விட்டீர்களா?', 'மதிய உணவு சாப்பிட்டீங்களா?', 'மெல்ல கற்கும் மாணவர்களுக்கான அறிக்கை கொடுத்து விட்டீர்களா?'

மனிதர்கள் காதலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பற்றிப் பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள்.

திடீரென மழை தீவிரமடைந்தது. பேருந்து நிலையக் கூரையின் ஓட்டைகள் வழியாக நீர் கொட்டியது. ஜனங்கள் பின்வாங்கியதில், அவனும் அவளும் தவிர்க்க முடியாதபடி நெருங்கி நிற்க நேரிட்டது.

"மழை விடாது போல." என்றான் அவன். உலகிலேயே மிகவும் அறிவார்ந்த ஒரு உண்மையைக் கண்டுபிடித்தவனைப் போல.

"ஆமா." என்றாள் அவள் அந்த உலக மகா உண்மையை நோபல் கமிட்டியே அங்கீகரிப்பது போல.

அவ்வளவுதான் உரையாடல் முடிந்தது. வழக்கம்போல.

அப்போது மன்னார்குடி பேருந்து இரைச்சலோடு வந்து நின்றது. மக்கள் அதை ஏதோ கடைசிப் பேருந்தைப் போல நினைத்துக் கொண்டு முண்டியடித்துக்கொண்டு ஓடினார்கள். கூட்டத்தின் தள்ளுமுள்ளுவில் அவளது கையில் இருந்த குடை நழுவி, கீழே விழப் பார்த்தது.

அவன் சட்டென்று குனிந்து அதை நிலத்தில் விழுமுன் பிடித்தான். அதே வினாடியில் அவளது கையும் அதை எடுக்கக் கீழே வந்தது.

இருவரின் கரங்களும் குடையின் பிடியில் ஒன்றோடொன்று உரசின.

அவன் நிமிர்ந்தான். அவளும் நிமிர்ந்தாள்.

இரண்டு வினாடிகள்.

அந்த மழை இரைச்சலும், மனித இரைச்சலும், பேருந்து ஒலிப்பான்களின் இரைச்சலும் மிகுந்த திருவாரூர் பேருந்து நிலையத்தின் நடுவே, அவர்களின் கண்கள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

சுற்றியிருந்த மக்களின் கூச்சலும், மழை மற்றும் பேருந்துகளின் சத்தமும் ஒரு கணத்தில் அணைந்துபோய், உலகம் ஸ்தம்பித்தது போலிருந்தது.

அவனின் கண்களில் இருந்த தயக்கம் மறைந்து, "எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். இந்த ஆறு மாதமாக இதை உன்கிட்ட சொல்லணும்னு துடித்துக் கொண்டு இருக்கேன்." என்ற விழிகளின் மௌனமான அலறல் அவளுக்குத் தெளிவுபடக் கேட்டது.

அவளது விரிந்த கருவிழிகளில், "எனக்கும் தெரியும். நீ கேட்குற ஒவ்வொரு முறையும் உன் கண்ணைப் பார்த்து நான் பதிலைச் சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். நீதான் புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளைத் தேடுற." என்ற பதில் விழிகளில் மின்னல் போல மின்னி மறைந்தது.

அதாவது அவர்கள் பேசியதன் சாராம்சம் என்னவென்றால்,

"எனக்கு உன்னைப் பிடிக்கும்டா லூசு."

"எனக்கும்தான்டி லூசு. அதுக்கு ஏன் ஆறு மாசம்?"

அவ்வளவுதான். அந்தக் கண் பார்வையில் எல்லாமே எழுதப்பட்டுவிட்டது. அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை; போலித்தனமான வார்த்தை ஜாலங்கள் இல்லை. இப்படியாக ஒரு பெரிய காதல் காவியம் அங்கே முடிந்தது, கவிதைகள், உபதேசங்கள், சினிமா வசனங்கள் எதுவுமே இல்லாமல்.

அவள் மெதுவாகத் தன் கையை விலக்கிக்கொண்டாள். அவளது உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய புன்னகை அரும்பியது. அவன் சேறு படாத குடையை அவளிடம் நீட்டினான்.

"நான் பேருந்து ஏறறேன்," என்றாள்.

"பார்த்து போங்க." என்றான் அவன்.

மன்னார்குடி பேருந்திற்குள் அவள் ஏறி ஜன்னலோரச் சீட்டில் அமர்ந்தாள். பேருந்து கிளம்பி மழை இருளுக்குள் மறைந்தது.

அவர்கள் பேசியது இரண்டே வாக்கியங்கள்தான். ஆனால், இருவருமே தங்கள் வாழ்வின் மிக முக்கிய உரையாடல் முடிந்துவிட்டதை உணர்ந்தார்கள். சொல்ல வேண்டிய அனைத்துக் காதலும் சொல்லப்பட்டுவிட்டது.

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல."                     (குறள், 1100)

-          சூத்திரங்கள் தொடரும்!

****

28 Aug 2026

உண்டியல், ஒரு மர்மக் கதை மற்றும் பூங்காத் தோழி!

உண்டியல், ஒரு மர்மக் கதை மற்றும் பூங்காத் தோழி!

பூங்கா என்பது வெறும் நடைப்பயிற்சிக்கான இடம் மட்டுமல்ல, அது வினோதமான மனிதர்களைச் சந்தைப்படுத்தும் ஒரு தளம். அங்குதான் சுபத்ராவுக்கு அறிமுகமானாள் உபத்ரா.

நான்கு நாட்கள் ஒரே திசையில் நடந்தாலே போதும், இந்தியப் பண்பாட்டின்படி பரஸ்பரம் பற்களைக் காட்டிச் சிரித்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாம் நாள், எத்தனை ரவுண்டு? என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்வியோடு உபத்ரா சுபத்ரா அருகில் வந்தாள்.

அவளது பேச்சில் இருந்த வேகம், அவளை ஓர் அவசரத் தோழி ஆக்கியது சுபத்ராவுக்கு. சில நிமிடங்களிலேயே சுபத்ராவின் குடும்ப ஜாதகம், கணவரின் குறட்டைச் சத்தம், மகளின் பிடிவாதம் என அனைத்தும் அவளுக்குத் தெரிந்துவிட்டது.

இன்னைக்கு உங்க வீட்டுப் பக்கமாதான் ஒரு கடைக்குப் போறேன். அப்படியே உங்க வீட்டுக்கு வந்துட்டுப் போகட்டுமா? என்றாள் உபத்ரா, மிகவும் எதார்த்தமாக.

சுபத்ராவும் ஒரு மிடில்கிளாஸ் பெருந்தன்மையுடன், தாராளமா வாங்க. ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம், என்றாள். எப்போதாவது ஒருமுறை யாரையாவது உபசரித்தால்தான் நாம் வாழ்கிறோம் என்கிற பிரமை நீடிக்கும்.

வீட்டுக்கு வந்தாள். ஹாலில் சோபாவில் அமர்ந்தபடி, சுற்றும் முற்றும் பார்த்தாள் உபத்ரா. சுபத்ராவின் மகளின் பீங்கான் உண்டியல் டிவியின் அருகில் லட்சுமிகரமாக அமர்ந்திருந்தது. மகள் சேமித்து வைத்திருந்த சில்லறைகளும், தாள்களும் அதற்குள் கனமாகத் தவம் இருந்தன.

வீடு ரொம்ப அழகா இருக்கு. நீங்களும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும், என்று காபியை உறிஞ்சிக் குடித்துவிட்டு, ஒரு பித்தலாட்டப் புன்னகையுடன் விடைபெற்றாள் உபத்ரா.

மறுநாள் காலை, சுபத்ராவின் வீட்டில் பிரபஞ்சமே ஸ்தம்பித்தது போல ஒரு காட்சி.

டிவியின் அருகில் இருந்த அந்த உண்டியலைக் காணவில்லை. அது ஒன்றும் கால்கள் முளைத்து நடைப்பயிற்சிக்குச் செல்லும் பூச்சியல்ல. வீட்டில் இருந்த கணவரிடமும், மகளிடமும் விசாரித்தாள் சுபத்ரா. கணவர், யாராவது தியானம் பண்ண எடுத்துட்டுப் போயிருப்பாங்களோ? என்பது போல ஒரு லுக் விட்டார்.

அப்போதுதான் உறைத்தது சுபத்ராவுக்கு நேற்று வந்து போன அந்த பூங்காத் தோழி உபத்ராவின் உபத்ரவம்.

அவள் வந்து போன பிறகு வீட்டுக்கு ஈக்காக்கை கூட வரவில்லை. மகளின் எதிர்காலச் சேமிப்பு சுமார் சில ஐயாயிரம் ரூபாய், அந்தப் பெண்ணின் ஹேண்ட்பேக்குள் கௌரவமாக அடைக்கலம் புகுந்துவிட்டது என்பதை சுபத்ராவின் உள்ளுணர்வு அலறியது.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஓடிப்போகும் காதலனைப் போல, மறுநாளிலிருந்து உபத்ரா பூங்கா பக்கமே வரவில்லை. பூங்காவின் ஒவ்வொரு புதரிலும், பெஞ்சிலும் அவளைத் தேடினாள் சுபத்ரா. அவள் இல்லை. அவளது நட்பு ஒரு இன்ஸ்டன்ட் காபியைப் போலச் சட்டெனக் கரைந்து, கசப்பை மட்டும் மிச்சம் வைத்துவிட்டுப் போய்விட்டது.

தெரியாத நபர்களை வீட்டுக்குள் அழைப்பது என்பது, திருடனிடம் சாவிக்கொத்தைக் கொடுத்துவிட்டு பத்திரமாகப் பார்த்துக்கொள் என்று சொல்வதற்குச் சமம்.

இப்போதெல்லாம் சுபத்ரா யாரையும் வீட்டுக்குள் அழைப்பதில்லை. அழைத்தாலும் காப்பி கொடுப்பதில்லை. கிளம்புறீங்களா, கொஞ்சம் வேலை கெடக்கு என்று படக்கென்று சொல்லி விடுகிறாள்.

*****

அந்நியனாக நடிக்கும் கலை

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் - 19

இவர்களை நம்பவே முடியாது!

திருவாரூர் மாவட்ட மைய நூலகம்.

அமைதியான சூழலில் புத்தகங்களின் வாசனை காற்றில் பரவியிருந்தது.

அவன் தமிழ் இலக்கியப் பிரிவின் மர அலமாரிக்கு அருகில் நின்று ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தான். அவனது கவனம் முழுக்க எதிரே ஆங்கில இலக்கியம் பிரிவில் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த அவள் மீதுதான் இருந்தது.

அவள் கையில் இரண்டு புத்தகங்களுடன் நகர்ந்து வந்தாள். எப்போதாவது நிமிர்ந்து அவனைப் பார்ப்பாள். அந்தப் பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்காது. ஏதோ நூலகத்தில் எதேச்சையாக எதிர்கொள்ளும் ஓர் அந்நிய வாசகரைப் பார்ப்பது போல ஒரு வெற்றுப் பார்வை.

"என்ன, உறுப்பினர் அட்டை புதுப்பிச்சாச்சா?" குரலில் எந்த அதிர்வும் இல்லை. நூலகத்தின் அமைதியைக் கெடுக்காதவாறு, ஏதோ அறிமுகமில்லாதவரிடம் மெல்லிய குரலில் கேட்கும் தொனி.

"ம். புதுப்பிச்சுட்டேன். தண்டத் தொகையும் கட்டியாச்சு."

"ஓ, சரி."

திரும்பவும் அலமாரியில் இருந்த புத்தகங்களுக்குள் மூழ்கினாள்.

ஊர் அறியக் கூடாது என்பதற்காகவும், நூலகக் கட்டுப்பாட்டுக்காகவும் இப்படிச் சந்திக்கும் காதலர்களுக்குள் இது என்ன மாதிரியான நாடகமோ?

இரண்டு வருடங்களாகக் காதலிப்பவர்கள்.

ஆனால், இந்தத் திருவாரூர் நூலகத்தில், சுற்றிலும் நான்கைந்து தீவிர வாசகர்கள் அமைதியாகப் படித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அவர்கள் இருவருக்கும் நடுவே ஒரு பிரம்மாண்டமான இரும்புத் திரை தொங்கிக்கொண்டிருந்தது.

அவனுக்குள் சிரிப்பு வந்தது. அவன் மனதில் சட்டென்று திருவள்ளுவர் வந்து போனார்.

"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள."                (குறள், 1099)

எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது 2026லும் அப்படியே அட்சர சுத்தமாகப் பொருந்துகிறதே என்ற பிரமிப்பு அவனுக்குள்.

அந்நியர்களைப் போல, யாருமே இல்லாத பொதுவான ஒரு பார்வையை வீசுவது உண்மையாகக் காதலிப்பவர்களிடம் மட்டுமே இருக்கும் வித்தை.

ஏனெனில், நூலகத்தில் இருப்பவர்கள் கவனத்தைக் கலைக்கக் கூடாது, யாராவது பார்த்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை. "நாங்கள் இரண்டு பேரும் சும்மா நூலக  வாசகர்கள்தானப்பா" என்று உலகுக்குப் பறைசாற்றும் நாடகம். அந்த நாடகத்தின் ஆகச்சிறந்த நடிகர்கள் காதலர்கள் மட்டுமே.

அவள் அவனைக் கடந்து சென்றபோது அதே வெற்றுப் பார்வையை வீசினாள்.

ஆனால், அவனுக்குத் தெரியும். அந்த வெற்றுப் பார்வைக்கு அடியில் என்ன இருக்கிறது என்று.

அவள் கையில் வைத்திருந்த புத்தகத்தை மேஜை மீது வைத்தபோது, அவளது ஆள்காட்டி விரல் புத்தக அட்டை மீது இரண்டு முறை தட்டியது. அது அவர்கள் மட்டுமே அறிந்த இரகசிய மொழி. 'இன்னும் ஐந்து நிமிடத்தில் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து விடு.'

அவன் எடுத்துப் படித்த புத்தகத்தை மீண்டும் அலமாரியில் வைத்துவிட்டு அமைதியாக வெளியே வந்தான்.

நூலகரிடம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, அவளும் அமைதியாக வெளியே வந்தாள்.

சுற்றியிருந்தவர்கள் நினைத்திருப்பார்கள், 'பாவம், ஏதோ ஆராய்ச்சிப் படிப்புக்கு புத்தகம் எடுக்க வந்திருக்கார்கள் போல.'

நூலகக் கட்டடத்தைக் கடந்து, நிழல் படர்ந்த வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து தனது இரு சக்கர வாகனத்துக்கு அருகில் நின்றான் அவன்.

அடுத்த வினாடி.

அந்த அந்நியப் பார்வை காற்றில் கரைந்து போயிருந்தது. அவளது கண்களில் வெளிப்பட்ட அந்த அளவற்ற வெளிச்சமும், குறும்புச் சிரிப்பும் நூலகத்தின் அமைதியான சூழலில் இருந்த அவளை முற்றிலும் வேறொருத்தியாக மாற்றியிருந்தது.

"ஏன், அங்க உள்ள வச்சு அவ்ளோ மொக்கையாவா பாத்தேன்? அந்த நூலகர் தாத்தா நம்மளையே பாக்குறாரோனு பயத்துல அப்படி மூஞ்சியை வச்சுக்கிட்டேன்!" என்று அவன் கையைப் பற்றிக்கொண்டு கலகலவெனச் சிரித்தாள்.

"அப்பாடி! நிஜமாவே எனக்கு பயமே வந்துருச்சு. ஏதோ அறியாத முகம் மாதிரி அப்படி ஒரு பார்வை. வள்ளுவர் சும்மாவா சொன்னாரு. அந்நியன் மாதிரி பார்க்குற அந்தப் பார்வை இருக்கே, அது காதலர்களுக்கு மட்டுமே கைவந்த கலை!"

அவன் இரு சக்கர வாகனத்தை உதைத்துக் கிளப்ப, அவள் அவனுக்குப் பின்னால் அமர்ந்து அவனது தோள்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

நூலகத்தில் அமைதியாய், அந்நியராய் நடித்த அதே கண்கள், தனிமையில் உலகத்தின் முழு அன்பையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தன. அந்த நாடகத்தில்தானே காதலின் சுவாரஸ்யமே ஒளிந்திருக்கிறது. உலகின் மிகச் சிறந்த நடிகர்கள் காதலர்கள்தானே!

-          சூத்திரங்கள் தொடரும்!

*****