13 Aug 2026

ரீல்ஸ், ரத்தம், கொஞ்சம் சினிமா!

ரீல்ஸ், ரத்தம், கொஞ்சம் சினிமா!

ஒரு சுத்தியல், ஒரு கத்தி, கொஞ்சம் மது, அப்புறம் ஒரு ஸ்மார்ட்போன் என இவை போதும். இன்றைய மனிதனின் இருண்ட பக்கத்தை வைரல் கன்டென்ட் ஆக்குவதற்கு வேறு என்ன வேண்டும்?

கோவையில் நடந்த ஒரு சம்பவம் வெறும் ஒரு குற்றப்பின்னணிச் செய்தி மட்டுமல்ல; அது நமது காலத்தின் மிகக் கொடூரமான பண்பாட்டு வீழ்ச்சி.

திரையில் ஒரு கதாநாயகன் சுத்தியலால் அடித்து ரத்தத்தை ருசித்தால் அது மாஸ் மாஸ் என்று திரையரங்கில் சீழ்க்கை ஒலியாக மாறுகிறது. அதே காட்சியை நிஜத்தில் ஒரு மனிதனைக் கொன்று, ரத்தத்தை நக்கி, சடலத்தின் மீது நடனமாடி ரீல்ஸ் போட்டால் அது சைக்கோத்தனம் எனச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறது. ஆனால், இந்த இரண்டுக்கும் நடுவே இருந்த நிஜம் – புனைவு எனும் எல்லைக்கோடு இப்போது முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது.

இப்போது மனிதர்களுக்குக் கோபத்தை வெளிப்படுத்தவோ, பகையைத் தீர்த்துக்கொள்ளவோ பெரிய காரணங்கள் தேவையில்லை. நாலு பேர் பார்க்க வேண்டும் என்ற ரீல்ஸ் வெறியும், சில நூறு லைக்குகளும் கிடைத்தால் போதும், எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள்.

கொலை செய்த பிறகு "தப்பு பண்ணி விட்டோமே" என்று பதறுவதற்குப் பதிலாக, "இதை எந்த ட்ரெண்டிங் பேக்ரவுண்ட் மியூசிக்குடன் எடிட் பண்ணலாம்?" என்று யோசிக்கும் நிலைக்கு மூளை மரத்துப் போய்விட்டது.

மது தலையில் ஏறும்போது விலங்குத்தனம் வெளிப்படும் என்பார்கள். ஆனால், அந்த மதுவோடு சேர்ந்து சோஷியல் மீடியா போதையும் சேரும்போது, மனிதன் மிருகமாகக்கூட மாறுவதில்லை; அதையும் தாண்டி கொடூரமாக மாறி விடுகிறான்.

சினிமா வன்முறையைக் கொண்டாடுகிறது, மக்கள் அதை அப்படியே நுகர்கிறார்கள். திரையில் பார்க்கும் கொடூரத்தை நிஜத்தில் செய்து பார்க்கத் தூண்டும் அளவுக்கு மனித மனங்கள் இவ்வளவு சலனப்படக்கூடியவையாகவா இருக்கின்றன? அல்லது, "எப்படிப் பிரபலமானாலும் பரவாயில்லை, வைரல் ஆனால் போதும்" என்ற நவீன மனநோய்க்கு மனித மனங்கள் அனைத்தும் பலியாகிவிட்டனவா?

ரத்தக் கறையுடன் கேமராவைப் பார்த்துச் சிரிக்கும் அந்த பிம்பம், இந்த டிஜிட்டல் சமூகம் உருவாக்கிய ஆகச்சிறந்த பிரம்மாண்டக் கண்ணாடி.

கலையை ரசிப்பதற்கும், அதை வெறியாக மாற்றுவதற்கும் இடையே இருந்த மெல்லிய கோட்டை மனிதர்கள் எப்போதோ தாண்டி விட்டார்கள். இனி கதறல்களும், குருதியும் கூட யாரோ ஒருவரின் டைம்லைனில் 15 செகண்ட் என்டர்டெயின்மென்ட் ஆக மாறினாலும் மாறக் கூடும்.

*****

அதிவேகமாகப் பெரியவர்களாகும் கலை!

அதிவேகமாகப் பெரியவர்களாகும் கலை!

பள்ளி என்பது மனிதர்களை உருவாக்கும் புனிதமான கலைக்கூடம் என்பார்கள். ஆனால், தமிழகத்தின் ஓர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அது சற்றே வேறுவிதமான வேதியியல் பரிசோதனைக்கூடமாக மாறியிருக்கிறது.

அங்கு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியும் பீடி புகைத்திருக்கிறார்கள்.

காரணம் மிக எளிது.

மனிதர்களுக்குத் தங்களை உடனே பெரியவர்களாகக் காட்டிக்கொள்வதில் எப்போதும் ஒரு தீராத அவசரமும், ஆபத்தான கவர்ச்சியும் இருக்கிறது.

சிகரெட் என்பது முதலாளித்துவத்தின் அடையாளம் என்றால், பீடி என்பது பாட்டாளி வர்க்கத்தின் மிகச் சுருக்கமான, மலிவான புகை வடிவம்.

சுவருக்குப் பின்னால் ஒளிந்து நின்று, சுற்றிலும் யாரும் பார்க்கிறார்களா என்று கண்ணை உருட்டிப் பார்த்துப் புகையை விடுவதில், அந்த 15 வயதில் ஒரு சர்வதேசப் புரட்சி செய்த திருப்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடும்.

ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு அந்தப் புரட்சி மனப்பான்மை புரியவில்லை. அவர் வழக்கமான இந்தியப் பண்பாட்டின் பிரதிநிதி. உடனே பெற்றோரைக் வரவழைத்தார். "உங்கள் பிள்ளைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள்!" என்று கூறி விட்டார்.

பெற்றோர்கள், வழக்கம் போலப் பிள்ளைகள் செய்த தவறுக்காக, தாங்களே தவறு செய்தது போல வருத்தம் தெரிவித்துப் பிள்ளைகளை மீட்டுச் சென்றார்கள்.

பிரச்சினையே அங்கிருந்துதான் தொடங்குகியது.

தவறு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை விட, "சே! நம்ம ரகசியம் இப்படி அசிங்கமாக அம்பலமாகி விட்டதே!" என்ற தன்முனைப்பு அந்த மாணவிகளை அதிகம் வாட்டியிருக்கிறது. சுயமதிப்பு போன கவலையில் மாணவிகள் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அடுத்த நாள், ஒரு மாணவி தன் தந்தையின் ரத்த அழுத்தத்திற்குப் போடும் பிபி மாத்திரைகளைக் கொண்டுவந்தார். அப்பாவுக்கு பிபி ஏறும்போதெல்லாம் போடும் மாத்திரை அது.

"வாழ்க்கையே போயிற்று, இனி வாழவே கூடாது" என்று முடிவெடுத்த அந்த மூன்று மாணவிகளும், அதை ஏதோ சாக்லேட் சாப்பிடுவது போல அளவுக்கு அதிகமாக அள்ளிச் சாப்பிட்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரையானது வாழ்க்கையின் அழுத்தத்தைக் குறைத்து, தங்களை நேராக மேலோகத்திற்கு அனுப்பிவிடும் என்று அவர்கள் நம்பியிருக்கக் கூடும்.

அடுத்த சில நிமிடங்களில் தலைச்சுற்றல், மயக்கம். "நாங்கள் பிபி மாத்திரை சாப்பிட்டோம்" என்று பெருமையாக மற்ற மாணவிகளிடம் சொன்ன பிறகுதான், பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பிபி ஏறியது.

பதறிப்போன ஆசிரியர்கள் அவர்களை அரசு மருத்துவமனைக்குத் தூக்கி ஓடியிருக்கிறார்கள். அங்கிருந்து அரசு மருத்துவக் கல்லூரி வரை ஆம்புலன்ஸ் சத்தங்கள் அலறத் தொடங்கியிருக்கின்றன.

மருத்துவமனையில் இப்போது தீவிர சிகிச்சை நடக்கிறது. மாணவிகள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள். ஆனால், "குழந்தைகளை எப்படி வளர்ப்பது?" என்ற கேள்வியிலிருந்து இந்தச் சமூகமும், குடும்பங்களும், பள்ளிகளும் எப்படிப் பிழைத்துக் கொள்ளப் போகின்றன என்பதுதான் தெரியவில்லை!

*****

விழி வழி வைரஸ்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 4

விழி வழி வைரஸ்!

குளிர் சாதன அறையின் சீதளக் காற்று. சுற்றிலும் கருப்புத் திரைகளில் சி++ குறியீடுகளின் பச்சை வெளிச்சம்.

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையின் முன்னணி மென்பொருள் கம்பெனியின் மென்பொருள் பொறியாளன் அவன். வாட்ஸப் சர்வர் டவுன் ஆனாலும் சரி, ஹேக்கர்கள் நெட்வொர்க்கை ஸ்தம்பிக்க வைத்தாலும் சரி மூளையின் நியூரான்களைத் தட்டி ஒரே நிமிடத்தில் தீர்வு கண்டுவிடும் டெக் ஜீனியஸ். பன்னாட்டு கருத்தரங்குகளில் அவனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமெரிக்க வல்லுநர்கள் வியர்த்துக் கொட்டியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவன், இன்று தன் மானிட்டருக்கு முன்னால் டோட்டல் ப்ரீஸ் ஆகி நின்றிருந்தான்.

காரணம், அவனுக்கு எதிரே உட்கார்ந்திருந்த அவள்!

அவள் ஆர்கானிக் அமைதி. ஜீன்ஸ், காட்டன் டாப்ஸ். முகத்தில் மேக் அப் என்ற செயற்கை பூச்சுகளின் எந்த சுவடும் இல்லை. மிகவும் எளிமையான, நேர்த்தியான சுடிதாரின் அழகு தேவதை.

அவன் தன் லேப்டாப் ஸ்கிரீனின் ஓரத்தால் அவளைக் கண்களால் ஸ்கேன் செய்தான். அவள் தன் கமாண்ட் லைன்களில் மூழ்கியிருந்தாள். திடீரென நிமிர்ந்து, அவனது கண்களை நேராய்ச் சந்தித்து, "ஹலோ, இந்த கோடுல ஒரு லாஜிக்கல் எரர் வருது கொஞ்சம் செக் பண்றீங்களா?" என்றாள்.

அந்த நொடி.

அவளது அமைதியான விழிகளிலிருந்து பாய்ந்த அந்த ஒரு பார்வை அவனது மூளையின் சிபியூவை ஓவர்ஹீட் ஆக்கி, நெஞ்சுக்குள் 440 வோல்ட் மின்சாரத்தைப் பாய்ச்சியது!

பக்கத்தில் வந்த அவனது நண்பன், இவனது விரல்கள் கீபோர்டின் மேல் ஹேங் ஆகி நிற்பதைப் பார்த்து உரக்கச் சிரித்தான்.

"என்ன மச்சான்? ரஷ்யன் ஹேக்கர்களோட டிடாஸ் அட்டாக்கையே அசால்ட்டா தூக்கிச் சாப்பிடுற நம்ம கூகுள் லெவல் ஜீனியஸ், ஒரு சின்னப் பொண்ணோட க்யூட் பார்வையில மொத்தமா சிஸ்டம் க்ராஷ் ஆகி நிக்கிறான்?"

அவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் மடிக்கணினியை மூடி வைத்தான்.

"டேய் மச்சான்! நான் எத்தனையோ பக்குகளை கிளீன் பண்ணவன்டா. ஆனா அவளோட பார்வையைப் பாரேன். எந்தக் கெமிக்கலும் இல்லாத நேச்சுரல் ப்ளோ! ஆனா அந்த அமைதியான கண்கள்ல இருந்து வந்த லேசர் பார்வை. என் ஹார்ட்-டிஸ்க்கோட கண்ட்ரோலையே அன்ஆதரைஸ்டா ஹேக் பண்ணிடுச்சுடா!"

நண்பன் தன் தோளைக் குலுக்கிச் சிரித்தான்.

"டேய், இதுக்குத்தான் நம்ம திருவள்ளுவர் அன்னைக்கே ஓர் அல்காரிதம் எழுதி வச்சார். 

"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்."         (குறள், 1084)

பெண்களோட கண்கள் இருக்கே. அதுவும் காதலியோட கண்கள் இருக்கே. அது சாதாரணபட்டது இல்ல. உயிரைப் பறிக்கும் ஆயுதம்!

ஆனா என்ன ஆச்சரியம்னா? இவ்வளவு ஆபத்தான அழகை வச்சுக்கிட்டு, அந்தப் பெண் ரொம்ப வெகுளியா, அப்பாவித்தனமா அமைதியா இருக்குறா இல்ல.

இன்னும் உனக்குப் புரியும்படி உன்னோட பாஷையிலேயே சொல்லணும்னா, அது மிகவும் எளிமையான, ஆபத்தில்லாத ஒரு க்ளீன் யூஸர் இன்டர்பேஸ். ஆனால், அதோட பின்னணியில இயங்குற கோட் இருக்கே அது கம்ப்யூட்டரையே கம்ப்ளீட்டா ஹேக் பண்ணி முடக்கிவிடும் அளவுக்கு ஆபத்தானது!

இதுக்கு மேலயும் இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, அமைதிங்கிற சர்வர்ல, அழகுங்கிற மால்வேர் லோட் பண்ணி, உன் உயிரையே ஹேக் பண்ற மாய ஆயுதம்டா அது!"

அவள் மீண்டும் ஒருமுறை திரையிலிருந்து நிமிர்ந்து, அவனைப் பார்த்து மிகவும் லேசாகப் புன்னகைத்தாள்.

மென்பொருள் உலகத்தின் சூப்பர் கம்ப்யூட்டர் போன்ற அவன், அந்த எளிய பெண்ணின் அமைதியான விழிப் பார்வையில் தன் சோர்ஸ் கோடை மொத்தமாக இழந்து, எந்தப் புகாருமின்றிச் அமைதியானான்!

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

12 Aug 2026

மீண்டும் மீண்டும் எமன்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 3

மீண்டும் மீண்டும் எமன்!

மழையின் சாரலும், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் எஸ்.ஆர்.ஆர் கபேயின் காபி மணமும் கலந்திருந்த அந்தச் சாயங்காலம், அவனுக்கு வழக்கமான ஒன்றல்ல. அவனது இதயத்தின் இயக்கம் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் மாலையாக அது அமையப்போகிறது என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

அவன் தன் நண்பனிடம் தத்துவ மழை பொழிந்துகொண்டிருந்தான்.

"எமதர்மன் எப்படி இருப்பான்? கருப்பான மேனி, தலையில் கிரீடம், கையில் பாசக்கயிறு. இதெல்லாம் சினிமாக்காரன் கிளப்பிவிட்ட பேண்டஸி மச்சி. மரணம்ங்கிறது ரொம்ப சிம்பிள். அது ஒரு கார்டியாக் அரெஸ்ட், இல்லனா பிரேக் பெயிலியர் ஆகி ஓர் ஆக்சிடென்ட். அவ்வளவுதான்!"

அப்போது அவன் மணிக்கட்டில் இருந்த ஆப்பிள் வாட்ச், இதயத் துடிப்பை 72 என்று அமைதியாகக் காட்டிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் சாரல் மழையில் லேசாக நனைந்தபடி, ப்ளோரல் பிரின்ட் காட்டன் புடவையில் உள்ளே நுழைந்தாள் அவள். தோளில் லேப்டாப் பேக், கையில் ஒரு மணி பர்ஸ் என மிக எளிமையாகத்தான் வந்தாள்.

ஆனால், அவளைப் பார்த்ததும் அவனது பேச்சு சட்டென்று நின்றது.

அவள் இவர்கள் இருவரையும் எதிர்கொண்ட போது, தலைதிருப்பி அவனைப் பார்த்தாள்.

அது சாதாரணப் பார்வை அல்ல. மை தீட்டிய அந்தப் பெரிய, கூர்மையான கண்கள். ஒரே ஒரு நொடி அவனை நேருக்கு நேராக ஊடுருவின. அந்த விழிகளுக்குள் ஒரு பேரழகின் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. அதில் வன்முறையில்லை, ஆனால் சுண்டி இழுக்கும் விவரிக்க முடியாத அதிகாரமும் குறும்புச் சிரிப்பும் இருந்தது!

அடுத்த நொடி அவனது மூளை ஹேங் ஆனது. பேச வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே உறைந்தன.

அவன் கை கடிகாரம் திடீரென அதிர்ந்தது. வார்னிங் ஹை ஹார்ட் பீட் டிடெக்டெட் 142 என்று காட்டியது.

அவள் உதட்டின் ஓரத்தில் மெல்லிய புன்னகையோடு, அவர்களுக்கு எதிரே இரண்டு மேசை தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் கேட்க, சட்டென்று சர்வர் கொண்டு வந்த மண மணக்கும் அந்தக் கபே காபியைப் பருகத் தொடங்கினாள்.

இப்போது, அவனது நண்பன் தன் காபியை ஒரு சிப் அடித்து விட்டு உரக்கச் சிரித்தான். காதோடு காதாகக் கிசுகிசுப்பாக, "என்னப்பா. எமன்னா என்னன்னு சயின்ஸ் லெக்சர் குடுத்துட்டு இருந்த? இப்போ என்னடான்னா மூச்சு வாங்கறதையே நிறுத்திட்டு செத்துப் போனவன் போல உட்கார்ந்திருக்கிறே?"

எதிரே அவள் அமர்ந்திருந்தாலும், அவன் தன் போனை எடுத்து அவளுடைய இன்ஸ்டாகிராம் ப்ரொபைலைத் திறந்தபடி தன் நெஞ்சைத் தடவிக்கொண்டான்.

"டேய், எமன்னு ஒருத்தன் இருக்கான்னு நான் இதுவரைக்கும் புத்தகத்துலதான் படிச்சிருக்கேன். ஆனா அவனுக்கு நிஜமாவே உருவம் இருக்குடா. அதுவும் இவ்ளோ அழகா, ப்ளோரல் பிரின்ட் புடவை கட்டிக்கிட்டு வரும்னு நான் கனவுல கூட யோசிச்சதில்ல! அந்த பெரிய, கருப்பான கண்ணுல என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு. என் நெஞ்சுல யாரோ கடப்பாரையை வச்சுத் தோண்டுன மாதிரி ஆயிடுச்சுடா!"

நண்பன் மீண்டும் சிரித்தான். "அடப்பாவி, வள்ளுவர் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே,

"பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு"            (குறள், 1083)

என்று குறள் எழுதிட்டாருடா. அதுக்கு உன்னை மாதிரி ஒரு காதலில் விழுந்த பையன் இவ்ளோ மாடர்ன் பிராக்கெட் போடுவான்னு அவரு நினைச்சிருக்க மாட்டாரு!"

"அட, வள்ளுவர் என்ன சொன்னாரோ எனக்குத் தெரியாது மச்சி," என்றான் அவன். "எனக்கு எமன் எப்படி இருப்பான், எப்படி உயிரை எடுப்பான்னு இதுவரைக்கும் தெரியாது. ஆனா இப்போ தெரியுது. ஒரு பொண்ணோட வசீகரமும், அவளோட அந்த மிடுக்கான, போர்க்களம் போன்ற பெரிய கண்ணும்தான் என் உயிரை அசால்ட்டா தூக்குற எமன்னு! "

காபியைக் குடித்து முடித்த அவள், இவர்களை நோக்கி நடந்தாள். அவனைக் கடக்கும் போது, அதே பேரமர்க் கண்களால் அவனைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள்.

அவன் நண்பனின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு முணுமுணுத்தான்:

"மச்சி எமன் மறுபடியும் ரீ என்ட்ரிடா. எமன் ஒன்னும் கொடூரமான உருவத்துல வரமாட்டான். பெண்களுக்கே உரித்தான பேரழகோட, ரெண்டு பேரழகான கண்ணால நம்மை மொத்தமா காலி பண்ணத்தான் வருவான். ஆனா, இந்த எமன் கிட்ட உயிரைக் கொடுக்கிறதுல ஒரு தனி சுகம் இருக்குடா!"

ஐந்து ரூபாய் டிப்ஸோடு சர்வருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லி விட்டு அவள் கபேயை விட்டுக் கிளம்பி விட்டாள். ஆனால், அவனுக்கோ அவளருகில் அமர்ந்து அவள் காபி குடித்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. அந்த நினைவிலேயே அவன் பிரக்ஞையற்றுப் போன சவம் போல அமர்ந்திருந்தான்.

நண்பன் தன் தலையில் அடித்துக் கொண்டு பாதி குடித்த காபி கோப்பையைப் பார்த்தான். இவர்களின் பேச்சைப் பொறுக்க முடியாமல் அதில் ஓர் ஈ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தது. நிஜமாகவே அங்கே எமன் வந்திருக்கத்தான் வேண்டும், அந்த ஈயின் உயிரை எடுக்க.

*****

11 Aug 2026

பார்த்தான் செத்தான்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 2

பார்த்தான் செத்தான்!

திட்டசேரி கிராமத்தின் வள்ளியமூர்த்தி கோயிலுக்குப் பின்னால் ஒரு பர்லாங் தூரத்தில் அடர்ந்த தூங்குமூஞ்சி மரம் நிழலாகப் படர்ந்திருந்தது. ஊருக்குள் அவன்தான் சாமியாடி. கையில் எந்நேரமும் ஒரு பழைய சுவடியும், சுடுகாட்டுச் சாம்பலும் வைத்துக்கொண்டு, சுடுகாட்டுப் பாதையிலேயே திரிபவன்.

அன்று இரவு வள்ளியமூர்த்தி கோயிலின் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவனிடம், ஊர்ப் பூசாரி பழனி ஓடோடி வந்தான்.

"சாமியாடி! அந்த ஒண்டி வீட்டுப் பயலுக்கு என்னவோ ஆயிடுச்சுடா! சாயங்காலம் வெண்ணாற்றங்கரை பக்கம் போயிட்டு வந்தவன், திடீர்னு தூக்கித் தூக்கிப் போடுறான். நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டுத் தவிக்கிறான்! எந்தப் பேய் பிடிச்சதுனே தெரியல. கொஞ்சம் வந்து பாருடா!" என்று கதறினான்.

சாமியாடி லேசாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் சுடுகாட்டுப் புகையின் வாடை அடித்தது. அமைதியாக எழுந்து, ஒண்டி வீட்டுப் பயலின் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டுக்குள்ளே ஒண்டி வீட்டுப் பயல் சுவரோரம் சாய்ந்து கிடந்தான். உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் எதையோ பார்த்து வெறித்துக் கொண்டிருந்தன.

சாமியாடி அவனருகே சென்று, அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் இல்லை. கைநாடியைப் பிடித்தான். வேகம் சீராக இல்லை; எகிறிக் கொண்டிருந்தது.

"டேய் பயலே! உன்னை எந்தப் பேய் பிடிச்சது? மோகினியா? மாடத்தியா? காட்டேரியா? இசக்கியா? நீலியா? எங்கே, என்ன நடந்துச்சு சொல்லு?" என்றான் சாமியாடி, குரலில் ஒரு விசித்திரமான ஈர்ப்புடன்.

ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகக் வாய்திறந்தான். குரல் நடுங்கியது:

"ஆத்தங்கரையில தெக்குட்டுப் பொண்ணு தண்ணி எடுக்க வந்தா. நான் மரத்தோட மரமா நின்னு அவளைப் பார்த்தேன். அவளும் திடீர்னு திரும்பி என்னைப் பார்த்தா. நானும் தெகிரியமா நேருக்கு நேரா பார்த்தேன். அவ்ளோதான்."

"அப்புறம்?"

"அவ பார்வை சாதாரணப் பார்வை இல்லை சாமியாடி! இந்திய ராணுவம் பாகிஸ்தான் மேல பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு! என் உயிரே போயிடும் போல இருக்கு சாமியாடி!"

சாமியாடி கலகலவெனச் சிரித்தான். "அடலூசுப் பய மவனே! உன்னைப் பிடிச்சது எந்தப் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. வள்ளுவன் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே எழுதி வச்ச காதல் பேய் உன்னைப் பிடிச்சிருக்கு!"

பழனி பூசாரி குழப்பத்துடன், "என்னடா சொல்ற?" என்றான்.

சாமியாடி தன் சுவடியைத் திறந்தான். அங்கே எழுதப்பட்டிருந்ததைக் காட்டினான்.

"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண்டு அன்னது உடைத்து"              (குறள், 1082)

"இதோட அர்த்தம் என்ன தெரியுமாடா பழனி?" என்றான் சாமியாடி.

பழனி திருதிருவென விழித்தான்.

"இவன் அவளைப் பார்த்தான். அவளும் இவனைத் திரும்பிப் பார்த்தா. அப்படி இரண்டு பார்வைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த ஒரே ஒரு நொடி ஒரு பெரிய போர்க்களமே உண்டாயிடுச்சுடா."

ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகத் தலையை உயர்த்தினான். "அப்போ எனக்குப் பேய் பிடிக்கலையா சாமியாடி?"

"பிடிச்சிருக்குடா. ஆனா இது வேப்பிலை அடிச்சா போற பேய் இல்லை. அந்தப் தெக்குட்டுப் பொண்ணு கையால ஒரு பிடி திருநீறு வாங்கிப் பூசினா மட்டுமே தீருற காதல் பேய்!" என்றான் சாமியாடி.

ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகச் சிரித்தான். அவன் நெஞ்சு படபடப்பு அடங்கி, முகத்தில் ஒரு புதிய வெளிச்சம் பரவியது.

சாமியாடி தன் சாம்பல் பையை இடுப்பில் முடிந்துகொண்டு, மீண்டும் அந்த இருட்டுப் பாதையை நோக்கித் தனியாக நடந்து மறைந்தான்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

10 Aug 2026

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 1

வள்ளுவம் 18+

மின்னொளி பளீச்சிட்ட அந்த அரை வினாடி இடைவெளியில், அவளைப் பார்த்தேன்.

மழை பெய்து கொண்டிருந்த திருவாரூர், தியாகராஜர் கோயிலின் அருகே  இருந்த ஓட்டு வீட்டின் அருகே ஒற்றை ஆளாய் நின்றிருந்தாள்.

யார் இவள்?

தலையில் சுற்றியிருந்த நீல நிற துப்பட்டாவையும் மீறி, அந்த முகம் ஏதோ செய்தது.

மனிதப் பிறவிதானா?

அல்லது மழை இரவில் தவறி கீழே விழுந்த ஏதேனும் தேவகன்னியா?

மயிலின் சாயல் இருந்தது. ஆனால் தோகைக்குப் பதில் ஈரமான சுடிதார்.

காதில் அசையும் அந்தப் பெரிய ஜிமிக்கி. அது தங்கமா, கவரிங்கா என்று ஆராயும் அளவுக்கு என் மூளைக்குத் தெளிவில்லை.

மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானவன் போல என் கைவிரல்கள் ஆக்டிவாவின் ஆக்சிலேட்டரை இறுகப் பற்றிக்கொண்டன.

"ஹேய் ஜிமிக்கி பொண்ணே!" என்று மனம் முணுமுணுத்தது.

மார்புக்குள் இதயத்தின் படபடப்பு சட்டென்று அதிகரித்தது. நிஜமாகவே பயமாக இருந்தது.

இவள் தேவதையா?

மயக்கும் மோகினியா?

இல்லை வெறும் மனிதப் பெண்தானா?

தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. என் நெஞ்சம் தன் கட்டுப்பாட்டை இழந்து, பித்தெடுத்து அலைபாயத் தொடங்கிவிட்டது.

அந்த மழையிலும் தெற்கு கோபுர வாசலில் போக்குவரத்து நெரிசல் புளிமூட்டையைப் போல இருந்தது. பின்னால் இருந்த வாகனங்களின் ஒலிப்பெருக்கிகள் காதைப் பிளந்தன.

என் ஆக்டிவா மெல்ல நகரத் தொடங்கியது. கண்ணாடியைப் பார்த்தேன். அவளது உருவம் மழையிலும், பின்னோக்கிச் செல்லும் வெளிச்சத்திலும் மெல்ல மறைந்தது.

அதற்கு மேல் என்னால் ஆக்டிவாவைச் செலுத்த முடியவில்லை.

ஆக்டிவாவை தகர சீட்டுகள் வேயப்பட்டிருந்து ஒரு கடையோரமாக ஓரங்கட்டி விட்டு, வண்டியின் சீட்டைத் திறந்தேன். உள்ளே இருந்த கைபேசியைக் கையில் எடுத்தேன். வழக்கமாக வாட்ஸ்ஆப்பையும், பேஸ்புக்கையும், இன்ஸ்டாவையும் தட்டும் விரல்கள், அன்று தானாகக் கூகுளில் தேடித் தட்டியது திருவள்ளுவரை.

குறள் எண் : 1081

"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு."

இதே குழப்பம், இதே படபடப்பு, இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி அந்த ஆளுக்கும் வந்திருக்கிறது!

வள்ளுவர் பெருமூச்சு விட்டிருப்பார். எனக்கும் அதே பெருமூச்சு. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் எதுவும் மாறவில்லை.

நான் மீண்டும் கைபேசியை ஆக்டிவாவின் சீட்டைத் தூக்கி உள்ளே போட்டு விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்சிலேட்டரை முறுக்கினேன். மழை வலுக்கத் தொடங்கியது. வண்டியின் வேகத்தில் மழைநீர் அம்புகளைப் போல உடலைத் தாக்கத் தொடங்கின. உடல் தொப்பரையாக நனைந்தது.

உடலுக்குள் மழைநீரின் குளிர் நடுக்கம் மற்றும் வெளியே மழைக்காற்றின் ராட்சச குளிர். இந்த இரண்டையும் தாண்டி, வீடு வந்து சேரும் வரை நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று தகித்துக் கொண்டே இருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

9 Aug 2026

நண்டுகளின் கூடாரமும், கார்ப்பரேட் தர்மமும்

நண்டுகளின் கூடாரமும், கார்ப்பரேட் தர்மமும்

மனிதன் கல்வி கற்பதன் நோக்கம் தன்னை மேம்படுத்திக் கொள்வது என்று பழைய புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், நடைமுறையில் அவன் கல்வி கற்பதன் நோக்கம் எப்படியாவது ஓர் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு, சக மனிதனை விட நான்கு ரூபாய் அதிகமாகச் சம்பாதிப்பது மட்டுமே.

ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் பலரும் நினைப்பது, "நாம் நம் வேலையைச் செய்ய வந்திருக்கிறோம்" என்று.

என்னவொரு அறியாமை! நீங்கள் அங்கே வேலை செய்ய வரவில்லை; சக ஊழியர்களைக் கண்காணித்து, அவர்களை விட நீங்கள் எப்படி மேலானவர் என்று முதலாளிக்குக் காட்ட வந்திருக்கிறீர்கள்.

நவீன மேலாண்மை இதற்கு அலுவலக அரசியல் என்று நாகரிகமாகப் பெயரிட்டிருக்கிறது. அடிப்படையில், இது ஒரே குடுவைக்குள் இருக்கும் நண்டுகள் ஒன்றை ஒன்று கீழே இழுத்துக்கொள்ளும் ஓர் ஆதிவாசித் திருவிழா.

தன் தகுதியை வளர்த்துக் கொண்டு நேர்மையாக முன்னேறுவது என்பது மிகவும் போரடிக்கக்கூடிய விஷயம். அதற்குப் பதிலாக, பக்கத்து சீட்டில் இருப்பவனின் வேலையைக் கெடுத்து, அவன் மீது இல்லாத பழி சுமத்தி, வேலையைக் காலி செய்வது எளிதான குறுக்குவழி! இப்போது போட்டிக்கு ஆளில்லை. ஸோ, ஸ்ட்ரெய்ட் புரோமோஷன்.

பல உளவியல் ஆய்வுகள் பணியிட மன அழுத்தத்தை ஒரு பெரிய நோய் என்று சொல்கின்றன. டெலாய்ட், லிங்க்ட்இன் போன்ற நிறுவனங்கள் "அலுவலகச் சூழல் பிடிக்காமல் தான் ஊழியர்கள் ஓடிப் போகிறார்கள்" என்று தரவுகளுடன் அழுகின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஸ்டார்ட் அப்களிலும் ஏற்கனவே டார்கெட் என்ற பெயரில் சாட்டையடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதல் லே ஆப் பயம் வேறு. போதாதற்கு இந்த அலுவலக அரசியல் கூத்தும் சேரும்போது, அலுவலகம் என்பது ஒரு சொகுசான நரகம் ஆகிவிடுகிறது.

இந்த அறம் சார்ந்த சவால்களுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே காரணமல்ல; நம்முடைய கல்வி முறையும் ஒரு முக்கியக் குற்றவாளி.

பள்ளியிலும் கல்லூரியிலும் ஒருவனுக்கு முதலிடம் வர வேண்டும் என்று சொல்லித் தருகிறார்களே தவிர, பக்கத்து மனிதனுடன் எப்படி இணைந்து வாழ்வது என்று சொல்லித் தருவதே இல்லை.

ரேஸ் குதிரைகளாக வளர்க்கப்படும் பிள்ளைகள், ஆபீஸிற்குள் வந்தவுடன் சக ஊழியர்களையும் எதிரிக் குதிரைகளாகவே பார்க்கிறார்கள். அப்புறம் எப்படி அங்கே அன்புநெறி, அறநெறி வளரும்?

நேர்மையாக வேலை செய்யும் அப்பாவிகள் தங்களின் திறமை அங்கீகரிக்கப்படாமல், கடும் விரக்தியில் ஒரு நாள் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஒரு நல்ல ஊழியனை இழப்பது நிறுவனத்திற்கு நஷ்டம் என்று கணக்குத் தெரிந்த முதலாளிகளுக்குப் புரிகிறது. ஆனால், அதைத் தடுக்கும் சிஸ்டம் இன்னும் காகிதப் புலியாகவே இருக்கிறது.

சங்கப் புலவர் புறானூற்றுக் கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றார். அதை இன்றைய கார்ப்பரேட் மொழியில் மொழிபெயர்த்தால், "பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருப்பவனும் உன் சகோதரனே; அவனைக் கவிழ்க்கக் குழி தோண்டாதே" என்று அர்த்தம்.

அலுவலகம் என்பது நீங்கள் சம்பாதிப்பதற்கான இடம் மட்டுமல்ல, நீங்கள் ஒரு மனிதனாக வாழ்ந்து பழகுவதற்கான இடமும் கூட. அதை விடுத்து, சில்லறைத் தனமான சூழ்ச்சிகளால் சக மனிதனின் மன அமைதியைக் கெடுத்தால், இறுதியில் நீங்கள் வாங்கும் சம்பளம் உங்களின் மனநல மருத்துவருக்கே சரியாகப் போய்விடும்!

*****