17 Aug 2026

ஏகே – 47 வகை நெற்றி!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 8

ஏகே – 47 வகை நெற்றி!

பனி உறைந்த எல்லை.

மைனஸ் பத்து டிகிரி.

உள்ளே அதைவிடக் குளிர்ந்த மனிதன்.

அமெரிக்க படையே வந்தாலும் அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்ற உணர்வுதான். அத்தனை கூல்.

அவனை ஒரு ராணுவ அதிகாரி என்று சொல்வதைக் காட்டிலும், பெர்பெக்ட் கில்லிங் மெஷின் என்று சொல்வதுதான் பொருந்தும்.

பனிப்புயல், நள்ளிரவுத் தாக்குதல், எதிரிகளின் கூச்சல் என எதுவுமே அவனது இதயத் துடிப்பை நிமிடத்திற்கு எழுபத்திரண்டிலிருந்து எழுபத்தி மூன்றாக உயர்த்தியதில்லை. எதிரில் ஆயிரம் பேர் வந்தாலும், ஒரு கப்பில் டீ குடித்துக்கொண்டே அவர்களை ரத்த சட்டினிக்குத் தேங்காய் திருகுவதைப் போலத் திருகி விடுவான்.

சுருக்கமாகச் சொன்னால், அவனுக்குப் பயம் என்பதைப் பற்றி ஒரு தத்துவார்த்தக் குழப்பம் கூட வந்ததில்லை.

அப்போது,

"கேப்டன், எல்லைக்கோட்டுல மூவ்மென்ட். எதிரிங்க ரொம்பப் பேரு." வேகமாக உள்ளே வந்த லெப்டினன்ட்டின் குரலில் ஒரு சிறிய பூகம்பம்.

அவன் பைனாகுலரை லேசாகத் திருப்பிப் பார்த்தான். பிறகு தன் கைக்கடிகாரத்தை ஒரு வினாடி உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னான்,

"அவனுங்க வர்ற கோணமும் சரியில்லை. அவனுங்க பாடி லாங்குவேஜ், அதுவும் சரியில்லை. அஞ்சே நிமிஷம். வெறும் அஞ்சே அஞ்சு நிமிஷம். அப்புறம் அங்க ஆள் இருக்க மாட்டாங்க. அமைதி மட்டும்தான் இருக்கும்."

அவன் குரலில் இருந்த அந்த அசாதாரண அலட்சியம், சுற்றியிருந்த வீரர்களுக்குத் எனர்ஜியைக் கொடுத்ததோ இல்லையோ, இவன் மனுஷனா இல்லை எமனா என்ற அதிர்ச்சியைக் கொடுத்தது.

அப்போது நேரம் இரவு 11:50.

பதுங்கு குழியிலிருந்து வெளியேறும் நொடி. முகாமின் சாட்டிலைட் வைபை நெட்வொர்க்கில் அவனது போன் லேசாக முணுமுணுத்தது.

வாட்ஸ்ஆப்.

அனுப்பியது சந்தேகத்திற்கு இடமின்றி அவள்தான்.

அவன் போனைத் திறந்தான்.

ஒரு சுயபடம், அதாகப்பட்டது செல்பி.

வெளிர்நீலப் புடவை. நெற்றியில் ஒரு குட்டிச் சூரியன் போலவோ அல்லது வட்ட நிலா போலவோ ஒரு பொட்டு. அதற்கு மேல் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால், அந்த நெற்றியின் ஒளியும், அதிலிருந்த அந்த ஒற்றைப் புள்ளியும் அவனது சகல ராணுவத் வீரத்தையும் ஒரு நொடியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் தள்ளியது.

கீழே அவள் தட்டியிருந்த வரிகள்,

"கேப்டன் பார்டரில் இருக்கும் நேரம். கனவில் கூட என் முகம் வராது. வாட்ஸ்ஆப்பில் வந்திருக்கும் இந்த முகத்தைப் பார்க்கவும் நினைக்கவும் ஒரு நொடி நேரமாவது இருக்குமோ என்னவோ?"

அவனது கைகள் லேசாக நடுங்கின.

இதுவரை எந்த எதிரியின் ஏவுகணையும் செய்யாத ஒரு வேலையை, அந்த ஐந்து அங்குல திரை செய்துவிட்டது.

அவனுடைய சகல தாக்குதல் திட்டங்கள், தோளில் தொங்கிய நவீனத் துப்பாக்கியின் எடை, நெஞ்சில் இருந்த முரட்டுத்தனமான சித்தாந்தம் எல்லாமே ஆல் அவுட்.

"கேப்டன்! எதிரிங்க ரொம்ப பக்கத்துல வந்துட்டாங்க. ஆர்டர்?" லெப்டினன்ட் உத்தரவிற்காகப் பரபரத்தான்.

அவன் கண்களில் சற்று முன் இருந்த அந்த ஆட்கொல்லி மனிதன் இப்போது தலைமறைவாகியிருந்தான்.

"கேப்டன்! என்னாச்சு? அத்தனை எதிரிங்களோட முகங்களைப் பார்த்ததும் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கே? பயந்திட்டீங்களா?"

"பயமா? எனக்கா? பயம்தான்டா என்னைப் பார்த்து பயப்படணும்!"

"இல்ல கேப்டன்! உங்க முகத்துல நெஜமாவே ஒரு பயம் தெரியுது. உங்க கை நடுங்குது. கால்ல உதறல் தெரியுது. உங்கள நான் இப்படிப் பார்த்ததில்ல."

"இந்தக் கேப்டனை ஆயிரம் துப்பாக்கி, லட்சம் பீரங்கி, கோடி ஏவுகணை வந்தாலும் பயமுறுத்த முடியாதுடா. ஆனா, அவளோடு அந்த முகம். அந்த நெற்றி. அதுல இருக்குற ஒரு பொட்டு. பொட்டுன்னு என்னைப் போட்டுத் தள்ளிடுச்சுடா."

"புரிஞ்சிடுச்சு கேப்டன். இந்த உலகத்துல உங்களை, எங்களுக்கு வரப் போற அண்ணியோட முகம்தான் பயமுறுத்த முடியும், வேறெந்த பன்னியோட முகமும் பயமுறுத்த முடியாது."

"லோட் பண்ணுங்கடா எல்லாத்தையும். ஒருத்தன் உசுரோடு திரும்பக் கூடாது."

அவன் மெதுவாகப் போனைப் பாக்கெட்டில் வைத்துவிட்டு, ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டான். பிறகு, விரல்கள் நடுங்க அவளுக்குத் திரும்ப மெசேஜ் தட்டினான்,

"எதிரிகளோட திட்டமிட்ட தாக்குதலைக் கூட அடிச்சுத் துவம்சம் பண்ணிடுவேன். ஆனால், உன்னோட இந்த திட்டமிடாத் தாக்குதலில் துவம்சமாகி விட்டேன். இனி வார் டைம்ல இப்படி உன் முகத்தை அனுப்பி போர் புரியாதே."

மெசேஜை அனுப்பிவிட்டுத் துப்பாக்கியைக் கையில் ஏந்தினான், எதிரிகளை எதிர்கொள்ள மட்டும் அல்ல, அவனுடைய அவளது நெற்றிப் பொட்டு மட்டுமல்லாது, இந்தத் தேசத்தின் ஒவ்வொரு பெண்ணின் நெற்றிப் பொட்டும் அமைதியையும் பேரொளியையும் எதிர்கொள்ள.

கதை எப்படி இருக்கிறது?

இதே கதைதான் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நடந்திருக்கிறது. திருவள்ளுவர் சான்றாதரத்தோடு எழுதி வைத்து விட்டார்.

"ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு."     (குறள், 1088)

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

16 Aug 2026

அடங்காத யானையும் அடங்காத அழகும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 7

அடங்காத யானையும் அடங்காத அழகும்!

அந்தி சாயும் அந்தப் பொன்மாலைப் பொழுதில், பூங்காவின் அமைதியான ஒரு மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள் அவனும் அவளும்.

செவ்வானத்தின் லேசான சிவப்பு வெளிச்சமும் மரங்களின் நிழலும் அவர்கள் மீது படிந்திருந்தது.

அவன் தன் கையிலிருந்த கடிகாரத்தில் பார்த்தான். நேரம் ஆறு பதினைந்து. பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மெல்ல குறையத் தொடங்கியிருந்தது.

எதிரே உட்கார்ந்திருந்தவள் தன் சுண்டு விரலால் தரையில் விழுந்திருந்த ஒரு காய்ந்த இலையை நகர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்தவுடனே ஒரு கணம் மூச்சை அடைக்க வைக்கும் அழகு.

திடீரென்று வீசிய சில்லென்ற மாலைக் காற்று, அவளுடைய நெஞ்சோரச் சேலையைச் சற்றே அசைத்துப் பார்த்தது. அவ்வளவுதான்.

அவன் பார்வையைத் திருப்பாமல் அவளையே பார்த்தான்.

"என்ன அப்படிப் பார்க்கறீங்க? பார்வை நியூரான்கள் எல்லாம் என் மேலயே குவியுற மாதிரி இருக்குதே!" அவள் தன் கைகளைக் குறுக்கே கட்டியபடி அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

அவன் புன்னகைத்தான். "இல்லை. ஈராயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு விஞ்ஞானி பற்றி யோசிச்சேன்."

"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானியா? யார் அது?"

"திருவள்ளுவர்."

"அவர் எப்போ விஞ்ஞானியானார்? அவர் தமிழ்ப் புலவராயிற்றே!"

"தமிழ்ப் புலவர் மட்டுமா? மாபெரும் காதல் விஞ்ஞானி."

"காதல் விஞ்ஞானியின்னே வெச்சுப்போம். அப்படி என்னப்பா அவர் காதல்ல புதுசா கண்டுபிடிச்சிட்டார்? "

"அவர் மூன்றாம் பாலில் எழுதியிருக்கிற ஒவ்வொன்றும் காதல் அறிவியலுக்கான சூத்திரம் தெரியுமா?"

"ஒரு சூத்திரத்தைத்தான் சொல்லுங்களேன் கேட்போம்."

"மதம் பிடிச்ச, யாருக்கும் அடங்காத ஒரு பெரிய போர் யானை. அதுக்கு முகப்படாம் போடுவாங்களே. எதுக்குத் தெரியுமா?"

"அதோட வெறித்தனமான பார்வையை மறைக்கறதுக்காகவும், பார்க்கறவனுக்குப் பயம் வரக்கூடாதுங்கறதுக்காகவும்."

"அதே மாதிரிதான்...

"கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்."          (குறள், 1087)

அப்படின்னு சூத்திரம் எழுதுறார் திருவள்ளுவர்."

அவள் புருவத்தை உயர்த்தினாள். கண்கள் சற்றே விரிந்தன.

அவள் சில வினாடிகள் அமைதியானாள்.

பூங்காவின் தூரத்து மின்விளக்குகள் ஒவ்வொன்றாக எரியத் தொடங்கின.

அவளுடைய உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

"வள்ளுவரோட சூத்திரம் இருக்கட்டும். நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று கண்களைச் சிமிட்டினாள்.

"நான் என்ன நினைக்கிறேன்னா, அந்த யானைக்கு முன்னாடி நிக்கறவனுக்குத் தைரியமும் வேணும், தப்பிச்சு ஓடாத மனசும் வேணும். ஏன்னா, மத யானையைவிட இந்த அழகுதான் அதிவேகமாத் தாக்கும்!"

அவள் கலுக்கென்று சிரித்தாள்.

அவளுடைய சிரிப்பொலி அந்த மாலை நேரத்துப் பூங்காவின் அமைதியைக் கலைத்து, அந்த அரைகுறை வெளிச்சத்தில் பிரகாசமாகப் பரவியது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

15 Aug 2026

கொலைகாரப் பார்வை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 6

கொலைகாரப் பார்வை!

"என் முகத்தைப் பாரேன்டா!" என்றாள் அவள்.

அவன் தன் மொபைல் திரையிலிருந்து கண்களை எடுக்காமல், "பார்த்துட்டேதான் இருக்கேன்டி." என்றான்.

"பொய். நீ ஸ்கிரீனைத்தான் பார்க்குறே. என் முகத்தைப் பார்க்கவே இல்ல."

"பார்க்குறேன்டி"

"அப்படின்னா என்னோட முகத்துல என்ன மாறுதல்னு சொல்லு பாப்போம்?"

அவன் மெல்லத் தலையை நிமிர்த்தினான்.

ஆபத்து என்று அவனது ஆறாம் அறிவு அலறியது.

பெண்கள் "என் முகத்தைப் பார்" என்று சொல்லும்போது, உலகத்தின் எந்தக் கணினியும் தர முடியாத சிக்கலான அல்காரிதம் ஒன்று அங்கே இயங்கிக் கொண்டிருக்கும்.

அவன் அவளது முகத்தை உற்றுப் பார்த்தான்.

ஏதோ வித்தியாசம்தான்.

குத்துமதிப்பாக அடித்து விட்டான்.

"ம்ம் ஐப்ரோ ஷேப் பண்ணிருக்க?"

"அப்பாடா! கண்டுபிடிச்சுட்டீயேடா. எப்படி இருக்கு?"

அவள் தையல் மிஷினில் நூல் கோப்பது போலத் தன் புருவங்களை லேசாக உயர்த்திக் காண்பித்தாள்.

வில்லாக வளைந்திருந்தது புருவம்.

அவன் ஒரு பெருமூச்சு விட்டான்.

"உண்மையைச் சொல்லவா? அந்தப் புருவம் மட்டும் நேரா இருந்திருந்தா, தப்பிச்சிருப்பேன். அது அப்படி வில் மாதிரி வளைஞ்சு, பார்வை எனும் அம்பைச் செலுத்தி என்னைத் தப்பிக்க விடாம கொன்னு போட்டுடுது? "

அவள் புருவத்தை மேலும் உயர்த்தி, "என்னது?" என்றாள்.

"இல்லை. நேத்து நான் கொஞ்சம் லேட்டா வந்தப்ப, நீ என்னை ஒரு பார்வை பார்த்தியே. அப்பாடி! அணுஉலை வெடிச்ச மாதிரி இருந்துச்சு. ஆனா நல்லவேளை, உன் வளைஞ்ச புருவம் ரெண்டும் கொஞ்சம் நேராகி, டேய், பாவம்டா அவன், விட்டுடுனு அந்தப் பார்வை செலுத்தப்  போன  அம்பைத் தடுத்து நிறுத்திடுச்சு. நல்லவேளை தப்பிச்சேன்!"

அவள் சிரிக்க முயன்று, பின் செயற்கையாக முறைத்தாள். "என்னடா நக்கல் பண்றீயா?"

"நக்கல் இல்லைடி. வள்ளுவரே சொல்லியிருக்கார்.

"கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண். "           (குறள், 1086)

அப்படின்னு."

"ஏய் லூசு! நீ எப்படா திருக்குறள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சே."

"உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சு லூசானதுக்கு அப்புறம்தான்!"

"ஏய் நிஜமாவா? உண்மையைச் சொல்லுடா!"

"விகடபாரதின்னு ஒருத்தன் திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்ன்னு ஒரு இன்ட்ரெஸ்டிங்கான தொடரைப் ப்ளாக்ஸ்பாட்டுல எழுதிகிட்டு இருக்கான். அதுல அப்பைக்கப்போ படிக்குறதுதான்.”

"அது சரி! அதுக்கு என்ன அர்த்தமாம்?"

"உன் புருவம் மட்டும் வளையாம நேரா இருந்தா, உன்னோட கண்கள் காதல் எனும் அம்பைச் செலுத்த முடியாது. அது அப்படி வளைஞ்சு இருக்குறதாலதான் இப்படி அது உன் பார்வை வழியாகக் காதல் அம்புகளைச் செலுத்தி என்னை அப்படியே நடுநடுங்க வைக்குது. சுருக்கமா சொன்னா உன்னோட ஒத்தப் பார்வையிலேயே நான் செத்துப் போய்ட்டேங்றதுதான்.  தயவுபண்ணி உன்னோட புருவத்தை நேரா வெச்சுக்கிறீயா?"

அவள் சில வினாடிகள் அவனை முறைத்துப் பார்த்தாள். அங்கே கோபம் வர முயன்று, தோற்று, ஒரு சிறிய புன்னகையாக உருமாறியது.

அந்த வளைந்த புருவங்கள் லேசாகத் தளர்ந்தன.

"போதும்டா. இனிமே இப்படி அடிக்கடி பிராக்கெட் போடுற வேலையை விட்டுட்டு, ஒழுங்கா நேரத்து வந்து தொலைடா. வீட்டுக்கு லேட்டா போறதால எம் மேல கொஞ்சம் கொஞ்சமா சந்தேகம் விழுதுகிட்டு இருக்குடா!" என்று சொல்லி விட்டு அவள் கிளம்பினாள்.

அவன் மொபைலைச் சட்டைப் பையில் திணித்துக் கொண்டு, வள்ளுவருக்கு மனசுக்குள்ளேயே ஒரு கும்பிடு போட்டான். "நல்லவேளை. இன்றைக்கு வள்ளுவரால் தப்பித்தேன், பிழைத்தேன். இனி அவளது அலங்காரத்தைச் சரியாகக் கவனித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் கேள்வி கேட்க பதில் படிக்காமல் வந்த மாணவனைப் போல விழித்துக் கொண்டு மாட்டிக் கொள்ள கூடாது." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

அந்த நினைப்பின் ஊடே, அவள் கண்களை அப்படியே மனக்கண்ணில் கொண்டு வந்து பார்த்தான்.

அவள் புருவங்கள் எனும் வில் வழியாக, கண்கள் பார்வை எனும் மின்னலைச் செலுத்துவதைப்  போல இருந்தது. அவன் உடல் ஒரு நொடியில் மின்னல் தாக்கியது போல, ஒரு வெட்டு வெட்டி அதிர்ந்து நின்றது.

வள்ளுவன் எனும் உலக மகா காதலன் அவன் நெஞ்சில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

14 Aug 2026

விழுந்தமாவடியும், பேச்சிலர்களின் கல்லீரலும் – ஒரு கிராமியப் பொருளாதார ஆய்வு!

விழுந்தமாவடியும், பேச்சிலர்களின் கல்லீரலும்

– ஒரு கிராமியப் பொருளாதார ஆய்வு!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவது எப்படி என்று அரசு மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நாகப்பட்டினம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்துப் பெரியவர்கள் ஒரு மாபெரும் தத்துவார்த்தப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அங்கே வைக்கப்பட்டிருக்கும் பேனரின் சாரம்சம் இதுதான்.

"கல்யாணம் ஆகாத இளைஞர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம். குடிபோதையில் ரகளை செய்யும் திருமணமானவர்களுக்கு ரூ.5,000 அபராதம். குடிப்பவரைக் காட்டிக் கொடுத்தால் ரூ.2,000 பரிசு!"

இந்த அறிவிப்பைப் பார்த்ததும் எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் சில ஆழ்ந்த தத்துவக் கேள்விகள் எழுவது இயற்கை.

விழுந்தமாவடி பஞ்சாயத்தின் தர்க்கப்படி, மது அருந்துவது என்பது ஏதோ திருமணத்திற்குப் பின் மட்டுமே வழங்கப்படும் ஒரு சிறப்பு உரிமை போலத் தெரிகிறது.

ஓர் இளைஞன் கல்யாணம் ஆகாத வரை அவனது கல்லீரல் பஞ்சாயத்துக்குச் சொந்தமானது; கல்யாணம் ஆகிவிட்டால் அது அவன் மனைவிக்கும், தேவைப்பட்டால் பஞ்சாயத்தின் அபராத நிதிக்கும் சொந்தமானது.

"கல்யாணம் ஆகாதவன் எதற்காகக் குடிக்க வேண்டும்? அவனுக்குத்தான் வாழ்க்கையில் இன்னும் சோகங்களே ஆரம்பிக்கவில்லையே!" என்ற கிராமத்துப் பெரியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

அடுத்து, திருமணமான குடும்பஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனை இன்னும் சுவாரசியமானது.

அவர்கள் குடிக்கக் கூடாது என்று முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை; "குடித்துவிட்டு வீட்டிலோ பொது இடத்திலோ ரகளை செய்யக் கூடாது" என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒரு குடும்பஸ்தன் அமைதியாக, சாதுவாக, யாருக்கும் தொந்தரவு தராமல் தன் வீட்டுக் மூளையில் உட்கார்ந்து குடித்துவிட்டு அமைதியாகத் தூங்கிவிட்டால், அவருக்கு ரூ.5,000 அபராதம் கிடையாது! "குடியுங்கள், ஆனால் நாகரிகமாகக் குடியுங்கள்" என்ற இந்த ஐரோப்பியப் பாணி தாராளமயம் நாகப்பட்டினம் கிராமத்தில் பூத்திருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.

எல்லாவற்றையும் விடப் பிரமாதமான அறிவிப்பு என்னவென்றால், குடிப்பவரைக் காட்டிக் கொடுப்பவருக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை!

இது கிராமப்புறப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மாபெரும் ஸ்டார்ட் அப் யோசனை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இனி கவலையே இல்லை. மாலை நேரங்களில் புதர் மறைவிலும், தென்னந்தோப்புகளிலும் லைவ் ஸ்ட்ரீமிங் கேமராவுடன் உளவு பார்த்தால் போதும்.

நீங்களே கணக்கு போட்டுப் பாருங்களேன். ஒரு பேச்சிலர் குடிப்பதைப் படம் பிடித்துக் கொடுத்தால், தகவல் சொல்பவருக்கு ரூ.2,000 என்றால், பஞ்சாயத்துக்கு நிகர லாபம் ரூ.3,000.

இதில் ஒரே ஒரு நடைமுறைச் சிக்கல் தான் இருக்கிறது. இரண்டு பேச்சிலர்கள் சேர்ந்து, "டேய், இன்று நீ குடி. நான் உன்னைக் காட்டிக் கொடுத்து 2,000 ரூபாய் வாங்குகிறேன். நாளைக்கு நான் குடிக்கிறேன், நீ என்னைக் காட்டிக் கொடு. வந்த காசில் இருவரும் அபராதத்தைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்" என்று ஓர் உடன்படிக்கை அமைத்துவிட்டால், பஞ்சாயத்து என்ன செய்யும் என்பதுதான் தெரியவில்லை.

இன்றைய சரியான முடிவு, நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று பேனரில் எழுதியிருக்கிறார்கள். உண்மைதான்.

டாஸ்மாக் மூலமாக அரசாங்கம் ஈட்டும் வருவாயை விட, ஊர் பஞ்சாயத்து அபராதம் மற்றும் காட்டிக் கொடுக்கும் ஊக்கத்தொகை மூலமாக ஈட்டும் வருவாய் அதிகமாகிவிட்டால், விரைவில் விழுந்தமாவடி தனது சொந்தக் செலவில் ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தையே அமைத்துவிடும்.

தமிழக அரசு இனி மதுவிலக்கு குறித்து ஆராய எந்தக் குழுவையும் போடாவிட்டாலும் பரவாயில்லை; விழுந்தமாவடி பஞ்சாயத்தாரைக் கூப்பிட்டு ஒரு அரை மணி நேரம் ஆலோசகர் கூட்டம் நடத்தினாலே போதும், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்!

*****

22 நிமிடங்களும் 2 உயிர்களும்!

22 நிமிடங்களும் 2 உயிர்களும்!

மனிதன் தன் வாழ்வில் சில காரியங்களைச் செய்கிறான். அதில் பெரும்பாலானவை அவனுக்கே புரிவதில்லை.

தஞ்சாவூருக்குப் பக்கத்தில் சுந்தரபெருமாள்கோவில் என்றோர் ஊர். ஊரின் பெயரைப் பார்த்தாலே தெரிகிறது, பெருமாள் அங்கு சௌக்கியமாகத்தான் இருக்கிறார். ஆனால், மனிதர்களுக்குத்தான் அவசரம்.

அவசரம் என்றால் சாதாரணமான அவசரம் அல்ல, மூடியிருக்கும் கேட்டைத் தாண்டித் தண்டவாளத்தைக் கடக்கும் அளவுக்கான அவசரம்.

அன்று இரவு, நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி அந்தியோதயா விரைவு வண்டி வந்துகொண்டிருந்தது. ரயில் வரும்போது கேட் மூடப்படும். இது உலகம் அறிந்த விதி.

ஆனால், ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த முதியவருக்கு உலக விதிகளை விட, தன் சொந்த அவசரம் பெரிதாகப் பட்டிருக்கிறது. மூடியிருந்த கேட்டைக் கடந்து அவர் தண்டவாளத்திற்குள் இறங்கினார்.

அங்கே ராகுல் என்றோர் இளைஞர் இருந்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். வயது முப்பது. ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. வடக்கிலிருந்து தெற்கிற்குப் பிழைக்க வந்தவர். அவருக்கு மனிதர்களைக் காப்பாற்றுவது தன் கடமை என்ற எண்ணம் இருந்திருக்கலாம்; அல்லது ஒர் உயிர் போகிறதே என்ற பதற்றம் இருந்திருக்கலாம்.

ரயில் மிக அருகில் வந்துவிட்டது.

முதியவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். ராகுல் எச்சரித்தார். கேட்கவில்லை. உடனே ராகுல் ஓடிச் சென்று அவரைத் தள்ளிவிட முயன்றார்.

இயற்பியலுக்குக் கருணை கிடையாது. மணிக்கு எண்பதோ, நூறோ கிலோமீட்டர் வேகத்தில் வரும் பல நூறு டன் இரும்பு, தர்மத்தையோ, தியாகத்தையோ பார்த்து வேகம் குறைப்பதில்லை.

ரயில் மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்கள்.

இப்போது சில கேள்விகள் எஞ்சுகின்றன.

அந்த முதியவர் யார்? அவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாரா, அல்லது வாழ்க்கையைக் கடந்துவிடலாம் என்று தற்கொலைக்கு வந்தாரா? போலீஸ் விசாரிக்கிறதாம்.

யாரோ ஒரு முகமறியாத முதியவரைக் காப்பாற்ற, ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமான ஓர் இளைஞன் தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். உலகம் இதை வீர மரண வரிசையில் சேர்க்கும்; குடும்பத்தினருக்கு அது ஆறாத துயரம். இந்த விபத்தால் அந்தியோதயா ரெயில் இரவு 11.45 முதல் 12.07 வரை. சரியாக 22 நிமிடங்கள் நின்றிருந்தது. இரண்டு உயிர்கள் முடிவுக்கு வரத் தேவையான நேரம் சில நொடிகள். அதனால் ரயில் தாமதமான நேரம் 22 நிமிடங்கள்.

மனித உயிர்களின் மதிப்பு என்பது என்ன என்ற கேள்வி, அந்த நள்ளிரவு அமைதியில் தண்டவாளத்தின் ஓரங்களில் சப்தமில்லாமல் மிதந்து கொண்டிருக்கிறது.

*****

எமன் வந்தக் கதையை யாருமே கேட்கவில்லை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 5

எமன் வந்தக் கதையை யாருமே கேட்கவில்லை!

மருத்துவமனை தாழ்வாரத்தில் மாலையின் நிழல்கள் நீளத் தொடங்கியிருந்தன. ப்ளோரசன்ட் வெளிச்சத்தில் ஆபரேஷன் தியேட்டர் போர்டு சிவப்பு நிறத்தில் பளபளத்துக்கொண்டிருந்தது.

அவன் சுவரில் சாய்ந்து மூச்சு வாங்க நின்றான். நியூரோ சர்ஜரி பிரிவில், மூளையின் நுண்ணிய நரம்புகளை கத்தியால் தொடும்போது கை ஒரு மில்லிமீட்டர் கூட நடுங்காத ஆசாமி அவன். எத்தனையோ எமர்ஜென்சிகள். ஒன்றில் கூட பதற்றப்பட்டு பார்த்ததில்லை. ஆனால், இப்போது அவனது பல்ஸ் ரேட் 120ஐ தொட்டிருந்தது.

காரணம், புது இளம் மருத்துவரான அவள்.

கையில் கோப்புகளுடன் அவள் கடந்து போகும்போது வீசிய அந்த அரை விநாடிப் பார்வை அவனது மனசுக்குள் குழப்பத்தைக் கிளப்பியிருந்தது. கையில் இருந்த ஸ்டெத்தாஸ்கோப் நழுவப் பார்த்தது.

"என்ன டாக்டர், ஆபரேஷன் தியேட்டர் வாசல்லயே நின்னு லோ போட்டரி ஆயிட்டு இருக்கீங்க?"

சத்தம் கேட்டுத் திரும்பினான் அவன். அங்கே அவனது நண்பன் நின்றிருந்தான்.

"டேய் மூளை அறுவை சிகிச்சை பண்ணும் போது கூட எனக்கு இவ்வளவு குழப்பம் வந்ததில்லைடா. இப்போ அவள் ஒரு பார்வை பார்த்தா பாரு." அவன் தயங்கினான்.

"யாரு, அந்த புது ஜூனியர் டாக்டரா? என்ன ஆச்சு?"

"என்ன பார்வை அது? உயிரை சட்டென்று உறிஞ்சி எடுக்கும் எமன் மாதிரியும் இருக்கு. மை தீட்டிய மனிதப் பெண் கண் மாதிரியும் இருக்கு. காட்டில் வழிதவறி மிரளும் பெண் மான் மாதிரியும் இருக்கு. மூணும் ஒரே பார்வையில் மிக்ஸ் ஆகி வந்தா எந்த மனுஷன் தாங்குவான்?" என்று புலம்பினான் அவன்.

அவனது நண்பன் லேசாகச் சிரித்தான். "டேய், நீ சொல்றது எனக்கு ரொம்பப் பழகின லாஜிக் மாதிரி இருக்கே! கொஞ்சம் பொறு, நாம கீழே மரத்தடிக்குப் போவோம்."

மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரத்தடிக்கு இருவரும் வந்தனர். அப்போது அங்கே இன்னொரு பெண் வந்தாள். அவள் அந்த மருத்துவமனையின் மூத்த ஆலோசகர். அவனது நண்பனின் காதலி.

"என்ன டாக்டர்ஸ், ஏதோ பெரிய அனாலிசிஸ் போயிட்டு இருக்கு போல?" என்றாள் நண்பனின் காதலி.

அவனது நண்பன் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சொன்னான், "இவன் இப்போதான் ஒரு பொண்ணோட பார்வையை அனலைஸ் பண்ணி குழம்பிப்போய் இருக்கான். ஆனா, இதுக்கு வள்ளுவர் அன்னைக்கே 1085 ஆவது குறள்ல ரிப்போர்ட் எழுதிட்டாருன்னு இவனுக்குத் தெரியல."

"நீயாவது தமிழ் படிக்கறதாவது?" நண்பனின் காதலி நண்பனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் கொஞ்சம் அசிடிக் ஆசிட், நிறைய சர்க்கரை.

"நிஜமாத்தான்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம்இம் மூன்றும் உடைத்து.                        (குறள், 1085)

இதுதான் அந்தக் குறள்," என்றான் அவனது நண்பன்.

அவன் நண்பனை அசந்து பார்த்தான். "டேய், நான் யோசிச்ச அதே மூணு விசயங்கள்!"

"ஆமாடா," அவனது நண்பன் விளக்கினான். "ஒன்று கூற்றம், அதாவது நம்ம உயிரை வாங்குற எமன். இரண்டாவது பிணை, அதாவது பெண் மான். அந்த மானோட மிரண்ட பார்வை. மூன்றாவது: மடவரல் நோக்கம், அதாவது எதுவுமே தெரியாத மாதிரி ஒரு அப்பாவித்தனமான பார்வை. இந்த மூன்றும் ஒரே நேரத்துல டிஸ்ப்ளே ஆகும்போது, அது யாரா இருந்தாலும் அவன் காலி. ஆமாடா அப்போ நியூரோ சர்ஜனான உன் கை நடுங்கும்; என்னோட இதயம் சுக்கு நூறா வெடிக்கும்!"

நண்பனின் காதலியின் கண்கள் லேசாகச் சுருங்கியது. "அப்போ நானும் இவனைத் தடுமாற வச்ச அந்த ஜூனியர் டாக்டரும் உங்களுக்கு எமனா?"

"விஷயம் அது இல்லை," அவனது நண்பன் சற்றே நீட்டி லெக்சர் அடித்தான். "அந்தப் பார்வையில எமன் இருக்கான். ஏன்னா அது எங்களை மொத்தமா காலி பண்ணுது. மான் இருக்கு. ஏன்னா அதுல ஒரு பயமும் அழகும் கலந்துருக்கு. அப்புறம் அந்த அப்பாவித்தனம். நான் என்ன பண்ணேன்ங்கிற மாதிரி ஒரு லுக். இந்த மூணும் சேரும்போது எந்த லாஜிக்கும் ஒர்க் ஆகாது."

நண்பனின் காதலி நண்பனைச் சற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இப்போது எமன் இல்லை; மான் மட்டுமே இருந்தது. "இப்போ நான் எப்படிப் பார்க்கறேன்?"

"இப்போவா? வள்ளுவர் தோத்துட்டாருன்னு நினைக்கிறேன்," என்றான் அவனது நண்பன்.

அப்போது அந்த மரத்தடியைக் கடந்து கோப்புகளுடன் கடந்து சென்று கொண்டிருந்தாள் அந்த இளம் டாக்டர். அவள் தன்னை அறியாமல் அவர்கள் நின்றிருந்த மரத்தடியை ஒருமுறை திரும்பிப் பார்க்க, மீண்டும் அதே ஹை வோல்டேஜ் ஷாக் அவனுக்குள் பாய்ந்தது.

அவன் தன் நண்பனைப் பார்த்துச் சொன்னான், "இல்லடா வள்ளுவர் தோக்கல, ஆனா நாம ரெண்டு பேரும் மொத்தமா தோத்துட்டோம்!"

அவர்கள் மூவரும் சிரிக்க அந்த மரத்தடி நிழலில் தமிழ் மறையின் அழகு மெல்ல உறைந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

13 Aug 2026

ரீல்ஸ், ரத்தம், கொஞ்சம் சினிமா!

ரீல்ஸ், ரத்தம், கொஞ்சம் சினிமா!

ஒரு சுத்தியல், ஒரு கத்தி, கொஞ்சம் மது, அப்புறம் ஒரு ஸ்மார்ட்போன் என இவை போதும். இன்றைய மனிதனின் இருண்ட பக்கத்தை வைரல் கன்டென்ட் ஆக்குவதற்கு வேறு என்ன வேண்டும்?

கோவையில் நடந்த ஒரு சம்பவம் வெறும் ஒரு குற்றப்பின்னணிச் செய்தி மட்டுமல்ல; அது நமது காலத்தின் மிகக் கொடூரமான பண்பாட்டு வீழ்ச்சி.

திரையில் ஒரு கதாநாயகன் சுத்தியலால் அடித்து ரத்தத்தை ருசித்தால் அது மாஸ் மாஸ் என்று திரையரங்கில் சீழ்க்கை ஒலியாக மாறுகிறது. அதே காட்சியை நிஜத்தில் ஒரு மனிதனைக் கொன்று, ரத்தத்தை நக்கி, சடலத்தின் மீது நடனமாடி ரீல்ஸ் போட்டால் அது சைக்கோத்தனம் எனச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறது. ஆனால், இந்த இரண்டுக்கும் நடுவே இருந்த நிஜம் – புனைவு எனும் எல்லைக்கோடு இப்போது முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது.

இப்போது மனிதர்களுக்குக் கோபத்தை வெளிப்படுத்தவோ, பகையைத் தீர்த்துக்கொள்ளவோ பெரிய காரணங்கள் தேவையில்லை. நாலு பேர் பார்க்க வேண்டும் என்ற ரீல்ஸ் வெறியும், சில நூறு லைக்குகளும் கிடைத்தால் போதும், எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள்.

கொலை செய்த பிறகு "தப்பு பண்ணி விட்டோமே" என்று பதறுவதற்குப் பதிலாக, "இதை எந்த ட்ரெண்டிங் பேக்ரவுண்ட் மியூசிக்குடன் எடிட் பண்ணலாம்?" என்று யோசிக்கும் நிலைக்கு மூளை மரத்துப் போய்விட்டது.

மது தலையில் ஏறும்போது விலங்குத்தனம் வெளிப்படும் என்பார்கள். ஆனால், அந்த மதுவோடு சேர்ந்து சோஷியல் மீடியா போதையும் சேரும்போது, மனிதன் மிருகமாகக்கூட மாறுவதில்லை; அதையும் தாண்டி கொடூரமாக மாறி விடுகிறான்.

சினிமா வன்முறையைக் கொண்டாடுகிறது, மக்கள் அதை அப்படியே நுகர்கிறார்கள். திரையில் பார்க்கும் கொடூரத்தை நிஜத்தில் செய்து பார்க்கத் தூண்டும் அளவுக்கு மனித மனங்கள் இவ்வளவு சலனப்படக்கூடியவையாகவா இருக்கின்றன? அல்லது, "எப்படிப் பிரபலமானாலும் பரவாயில்லை, வைரல் ஆனால் போதும்" என்ற நவீன மனநோய்க்கு மனித மனங்கள் அனைத்தும் பலியாகிவிட்டனவா?

ரத்தக் கறையுடன் கேமராவைப் பார்த்துச் சிரிக்கும் அந்த பிம்பம், இந்த டிஜிட்டல் சமூகம் உருவாக்கிய ஆகச்சிறந்த பிரம்மாண்டக் கண்ணாடி.

கலையை ரசிப்பதற்கும், அதை வெறியாக மாற்றுவதற்கும் இடையே இருந்த மெல்லிய கோட்டை மனிதர்கள் எப்போதோ தாண்டி விட்டார்கள். இனி கதறல்களும், குருதியும் கூட யாரோ ஒருவரின் டைம்லைனில் 15 செகண்ட் என்டர்டெயின்மென்ட் ஆக மாறினாலும் மாறக் கூடும்.

*****