20 Apr 2026

விருதுநகர் – மீண்டும் மீண்டும் விபத்து!

பட்டாசு, சாவு மற்றும் சில அனுமதிகள்!

ஏப்ரல் 18 – ஞாயிற்றுக் கிழமை.

விருதுநகர் அருகே ஒரு தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு 25 பேர் இறந்திருக்கிறார்கள். வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில். ஆலை உரிமையாளரின் லாப வெறிக்கு விடுமுறை இல்லாததால், தொழிலாளர்கள் சரவெடி தயாரிப்பில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள்.

சரியாக 3.30 மணி. ஒரு அறையில் உராய்வு ஏற்பட, அது சங்கிலித் தொடராக அடுத்தடுத்த மூன்று அறைகளையும் தரைமட்டமாக்கியிருக்கிறது.

முடிவு?

25 பேர் மரணம்.

இதில் 21 பேர் பெண்கள் அக்காள், தங்கை உட்பட.

பட்டாசு ஆலைகளில் தீக்குச்சிகளை விட மலிவானது ஏழைத் தொழிலாளர்களின் உயிர்தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் இடிபாடுகளை அகற்ற பொக்லைன் கொண்டு வந்த போது, அங்கிருந்த எஞ்சிய' மருந்துகள், நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்று நினைவூட்டும் விதமாக மீண்டும் வெடித்தன. இதில் உதவி தீயணைப்பு அலுவலர், பெண் காவலர்கள் என மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள்.

வழக்கமான சம்பிரதாயப்படி மேலிடத்திலிருந்து இரங்கல்கள் மழையாய் பொழிந்தன. குடியரசுத் தலைவர் கவலையளிக்கிறது என்று சொல்லியிருக்கிறார். பிரதமர் மிகுந்த வருத்தப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் மனவேதனை அடைந்திருக்கிறார். முதல்வர் வேதனையளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் அமைச்சர் ஒரு முக்கியமான பாயிண்டாக, நிவாரணம் கொடுக்க ஆசைதான், ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் குறுக்கே நிற்கிறதே என்றிருக்கிறார். அதாவது, உயிர்கள் போயிருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிச் சீட்டு கிடைத்தால் ஒழிய, அந்தப் பிணங்களுக்கு விலை பேச முடியாது என்கிற எதார்த்தத்தைச் சொல்லியிருக்கிறார்.

வெடிவிபத்து நடந்த ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரி என்பவர் முன்னாள் ஊராட்சித் தலைவர் மனைவி என்பதால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

அதை விட இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், கடந்த ஆண்டுதான் இந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாம். அப்புறம் எப்படி மீண்டும் அனுமதி கிடைத்தது?

இதற்கு என்ன பதில் சொல்வது?

இந்தியாவின் மிகச்சிறந்த மாயாஜால வித்தையான ஊழல் அல்லது அலட்சியம் என்று பதில் சொல்வதா? விருதுநகர் என்றாலே அப்படித்தான் என்று பதில் சொல்வதா?

ஒரே அறையில் 30 பேரை அடைத்து வைத்து வேலை வாங்கியிருக்கிறார்கள். இப்போது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து, ஞாயிற்றுக்கிழமை ஏன் வேலை செய்தார்கள்? என்று தீவிரமாக, அதாவது தேர்தல் முடியும் வரை விசாரிப்பார்கள்.

இதனால் அறிய வருவது என்னவென்றால், நீங்கள் தீபாவளிக்கு வெடிக்கும் ஒவ்வொரு சரவெடியிலும் யாரோ ஒரு தொழிலாளியின் சாம்பல் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

உண்மை கசக்கும் என்றாலும் உண்மை இதுதான். தீபாவளி இனிப்புகளில் அந்தக் கசப்புகள் மறைந்து போகுமோ என்னவோ!

*****

தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தமிழகம் இந்தத் தேர்தலில் ஒரு விசித்திரமான மசாலா தோசையைப் போல வெந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தகுந்தாற் போல கோடை வெயில் வேறு போட்டு பொளக்கிறது. இதுவரை இட்லியா அல்லது தோசையா? என்று கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களிடம், திடீரென்று யாரோ ஒருத்தர் பீட்சாவைக் கொண்டு வந்து நீட்டியிருக்கிறார். அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது உங்களுக்கான குறுக்கெழுத்துப் புதிர்.

இப்படியெல்லாம் பீடிகைப் போடாமல் நேரடியாக விசயத்திற்கு வந்தால் நிலைமை இதுதான். தமிழகத் தேர்தல் களம் இப்போது ஒரு மல்டி ஸ்டாரர் சினிமா போல இருக்கிறது.

ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்.

நான்கு ஹீரோக்கள்.

அதன் கதை மற்றும் கிளைமாக்ஸ்?

அதுதான் தேர்தல் 2026 – ஜெயிக்கப் போவது யாரு?

தமிழகத்தில் ஐந்து கோடியே அறுபத்தேழு லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கைதான் அதிகம். மேத்தமடிக்கலாகப் பார்த்தால் பெண்கள்தான் கோட்டையைத் தீர்மானிக்கப் போகிறார்கள்.

இதில் 12 லட்சம் பேர் கன்னி வாக்காளர்கள். இவர்களுக்கு எம்.ஜி.ஆரைத் தெரியாது, கருணாநிதியின் அடுக்குமொழி வசனம் புரியாது, ஜெயலலிதாவின் கம்பீரம் தெரியாது. இவர்கள் அறிந்ததெல்லாம் வெறும் யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் லியோவும் கோட்டும் மட்டும்தான். இவர்களும் இந்தத் தேர்தல் பார்ட்டிசிபேட் ஆகிறார்கள். ஸோ, இவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் பிரச்சார நிலவரம் ஒரு பக்கம் என்றால், களநிலவரம் எப்படி இருக்கிறது?

டீ விலை 12 ரூபாய் ஆனது ஹாட் டாபிக்காக இருக்கிறது. சுடச்சுட டீ விலை ஏறியது போல வருமானம் ஏறவில்லை என்று பலரது கவலையாக இருக்கிறது. இந்தக் குறையை அதிகப்படியாக வந்த நலத்திட்டங்கள் போக்கியிருக்கின்றன.

பெண்களுக்கான உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணங்கள் ஆகியன ஆண் வாக்காளர்களை விட அதிகமிருக்கும் பெண் வாக்காளர்களை அட்ராக்ட் செய்யும் மேக்னடிக் பார்முலா ஒன் திட்டங்கள்.

இப்படி நலத்திட்டங்கள் நிறைய வந்தாலும், கஞ்சா குடியர்களும், டாஸ்மாக் வெறியர்களும், பெண்களைச் சீண்டும் காமுகர்களும் எப்படி நிறைய வருகிறார்கள்? என்பது வாக்காளர்களான பொதுமக்கள் மனதில் எழும் கேள்விகள். லாஜிக்காக இந்த விசயம் ஆளும் திமுகவுக்கு நெகடிவ் பாய்ண்ட்.

இந்த லாஜிக் ஒருவேளை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால், எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அந்த சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்போரின் லாஜிக் திமுகவை மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பிருக்கிறது.

ஆளும் திமுகவின் ப்ளஸ் பாய்ண்ட் அதன் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் களப்பணிகள். அதை பீட் பண்ணுவது சாதாரணமல்ல. மற்றவர்கள் இன்னும் ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் ஷூட்டிங் முடித்து எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அப்படியானால் எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலை? அதிமுக நிறைய இடங்களைப் பிடிப்பதில் சில பலவீனங்களைச் சந்திக்கிறது. அவை என்னவென்றால், அதிமுக ஓபிஎஸ், செங்கோட்டையனை இழந்திருக்கிறது. அன்புமணி – ராமதாஸ் என இரண்டாகப் பிரிந்திருக்கும் பாமகவின் அன்புமணி பக்கத்தைத் தன் கூட்டணியில் வைத்திருக்கிறது. ராமதாஸ் சசிகலாவோடு அமைத்திருக்கும் கூட்டணி வாக்குகளைப் பிரிக்கக் கூடும். அதிமுக கூட்டணியை மேலாண்மை செய்வது அதிமுகவா? பாஜகவா? என்ற கேள்வி தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது. இவையெல்லாம் மைனஸ் பாய்ண்டுகளாக நீடிப்பதால் பெரும்பான்மையை எட்டிப் பிடிப்பது அதிமுகவுக்கு தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதைப் போலத்தான் இருக்கும்.

அடுத்து, தவெகவின் நிலை? தமிழகத்தில் புதிதாகக் கட்சித் தொடங்கும் பிரபலங்கள் கணிசமாக வாக்குகளை அறுவடை செய்தது கடந்த கால வரலாறு. அந்த வகையில் விஜய் திமுக அல்லது அதிமுகவின் ஓட்டுகளைப் பிரித்து மேய்ந்தால் இரண்டுக்கும் போதுமான இடங்கள் கிடைக்குமா என்பது எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும் என்பதைப் போன்ற கேள்வி.

மேற்படி நிலையை நாம் எதனோடு ஒப்பிட வேண்டும் என்றால், 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது விஜயகாந்தின் தேமுதிக அரசியல் வரவினால், திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது ஜெயலலிதா ஆளும் திமுகவை மைனாரிட்டி அரசு என விமர்சித்தது தனிக் கதை. அப்படி ஒரு நிலைமை விஜய்யால் திமுகவுக்கு ஏற்படுமா? அல்லது அதிமுக எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்பைப் பறிக்குமா? என்பது மக்கள் மனதில் ஏப்ரல் 23 அன்று வெடிக்கப் போகும் லாஜிக்கைப் பொருத்தது.

தவெக எவ்வளவு வாக்குகளைப் பெறும் என்று, விஜய்க்குக் கூடும் கூட்டத்தைக் கொண்டு அப்ராக்சிமேட்டாகவும் மேத்தமடிக்கலாகவும் யோசிக்கும் போது அது ஐம்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளாக இருக்கலாம். இது தமிழகத்தின் மொத்த வாக்குகளில் பத்திலிருந்து இருபது சதவீதமாகும். அப்படி நடந்தால், இது விஜயகாந்தின் அரசியல் என்ட்ரியின் போது நடந்ததை விட அதிகம்தான்.

ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால், விஜய் கோட்டையைப் பிடிக்க முடியுமா? ஒரு தலைவரை மட்டும் வைத்து ஒரு கட்சி ஜெயித்து விட முடியாது. லோக்கலில் இறங்கி அடிக்கும், தட் மீன்ஸ் வேலை பார்க்கும் தொண்டர்கள் வேண்டும். அந்த வகையில் கிரவுண்ட் லெவலில் ஆடகள் இல்லாததால் தவெக கோட்டையைக் கோட்டை விடவும் வாய்ப்பு இருக்கிறது.

அதுமட்டுமல்ல, விஜய் இன்னும் எல்லாத் தொகுதிகளுக்கும் விசிட் அடிக்கவில்லை. ஸ்கிரீனில் பார்த்த முகத்தை நேரில் பார்க்கவில்லை என்றால், தமிழக வாக்காளனுக்குக் கொஞ்சம் சுணக்கம் வந்து விடும். விஜய் பிரசாரத் திட்டங்களில் ஏதோ ஒரு பக் இருக்கிறது. கூட்ட நெரிசல், மயக்கமடிப்போர், ஆக்சிடென்ட் ஆவோர் என்று விஜய் கூட்டங்களுக்கான பிரேக்கிங் நியூஸ் விஜய்யின் மூவ்மெண்டுக்கு அடிக்கடி பிரேக் அடித்துக் கொண்டிருக்கிறது.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். சீமான்? எப்படியும் விஜய் சீமானைப் பின்னுக்குத் தள்ளி விடுவார் போலிருக்கிறது நிலைமை. அவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தைத் தக்க வைப்பாரா என்பதே எஞ்சியிருக்கும் கேள்வி.

இந்த மல்டி ஸ்டாரர் படத்தில் விஜய், சீமானைக் கழித்து விட்டுப் பார்த்தால் திமுகவும் அதிமுகவும் பிரதான போட்டியாளர்களாக மோத இருக்கிறார்கள். இவர்களை எந்த அளவுக்கு விஜய்யின் தவெக பாதிக்கப் போகிறது என்பது மே 4 தரும் கிளைமாக்ஸில்தான் தெரிய வரும்.

அந்தக் கிளைமாக்ஸில் ஒருவேளை மேஜிக் நம்பரான 118ஐ யாரும் எளிதில் தொட முடியாமலும் போகலாம்.  20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மைனாரிட்டி அரசாங்கம் அமையவும் அமையலாம். நாம் மே 4 வரை பொறுத்திருப்பது நல்லது.

*****

19 Apr 2026

பிள்ளைகளும் பணமும் – ஒரு நடுத்தர வர்க்கக் திகில் கதை!

பிள்ளைகளும் பணமும் – ஒரு நடுத்தர வர்க்கக் திகில் கதை!

இன்றைய உலகம் ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வேகத்தில் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்தால், நேராக ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களுக்குள் போய் விழுகிறார்கள்.

முன்னெல்லாம் பணம் என்றால் என்ன? என்று கேட்டால், அது ஒரு காகிதம் என்பார்கள் பிள்ளைகள். இப்போது கேட்டால், அது அப்பாவின் போனில் இருக்கும் ஒரு ஓடிபி என்கிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி பிள்ளைகளின் மூளையை விட, அவர்களின் ஆசை லிஸ்ட்டைப் பெரிதாக்கியிருக்கிறது.

குழந்தைகள் இப்போது கார்ட்டூன் பார்ப்பதில்லை, விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சம் கார்ட்டூன் பார்க்கிறார்கள். அந்த விளம்பரத்தில் வரும் ரோபோ பொம்மையைப் பார்த்ததும், இது இல்லை என்றால் என் வாழ்க்கையே சூன்யம் என்கிற லெவலுக்கு அடம் பிடிக்கிறார்கள். மார்க்கெட்டிங்காரர்களுக்குத் தெரியும், அப்பாவை விடக் குழந்தையை நம்பினால்தான் கல்லா கட்ட முடியும் என்று.

பள்ளிக்கூடத்தில் பாடம் ஏறுகிறதோ இல்லையோ, பக்கத்து சீட்டு மாணவி வைத்திருக்கும் புது பிராண்ட் பேனா மட்டும் துல்லியமாகத் தெரிகிறது. அவ வச்சிருக்கா, எனக்கு வேணும், என்பதுதான் இன்றைய குழந்தைகளின் தாரக மந்திரம். இது தேவை அல்ல, இது ஒரு வகையான கௌரவப் போர். இதில் தோற்றுப் போனால் சமூகத்தில் தலை காட்ட முடியாது என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.

பெற்றோர்களும் இதற்கு ஒரு காரணம். பிள்ளைகள் கேட்ட உடனே, ஏதோ ஏடிஎம் மெஷின் மாதிரி பொருட்களைத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாமதான் கஷ்டப்பட்டோம், புள்ளைங்க சந்தோஷமா இருக்கட்டுமே என்கிற அந்தச் சென்டிமென்ட் இருக்கிறதே, அதுதான் ஆபத்து.

எதை கேட்டாலும் உடனே கிடைத்தால், பணத்தின் மதிப்பு எப்படித் தெரியும்? ரூபாய் நோட்டை வெறும் காகிதமாகத்தான் பார்ப்பார்கள்.

இந்தச் சின்னச் சின்ன ஆசைகளை இப்போதே கிள்ளி எறியவில்லை என்றால், வளர்ந்த பிறகு அவர்கள் கிரெடிட் கார்டு என்கிற எமனிடம் சிக்கிக் கொள்வார்கள். அதற்கு ஆண்டுக்கு 40% வட்டி. இதைக் கட்டவே அவர்கள் ஆயுள் முழுக்க ஓட வேண்டியிருக்கும். கடைசியில், ஒரு வீட்டுக் கடன் வாங்கக் கூடத் தகுதி இல்லாமல், சிபில் ஸ்கோர் பாதாளத்தில் கிடக்க, நடுத்தர வர்க்கத் துயரம் ஆரம்பமாகும்.

இதற்கு என்னதான் தீர்வு

பிள்ளைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக் கொடுக்க பொருளாதாரப் பாடம் தேவையில்லை, நடைமுறை போதும்.

ஒரு நாள் உங்கள் அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். அங்கே பாஸ் கொடுக்கும் டார்ச்சரையும், டிராஃபிக்கில் நீங்கள் படும் அவஸ்தையையும் பார்த்தால், அடுத்த முறை ஐஸ்கிரீம் கேட்கும்போது ஒரு நிமிடம் யோசிப்பார்கள்.

மாதம் ஒரு 500 ரூபாயைக் கொடுத்து, உன் தேவையை நீயே பார்த்துக்கோ, என்று சொல்லிப் பாருங்கள். அந்த 500 ரூபாயை வைத்துக்கொண்டு அவர்கள் படும் பாடுதான் அவர்களுக்குப் பெரிய பாடம்.

புத்தகம் வாங்குவது தேவை, ஆனால் அந்த 5000 ரூபாய் வீடியோ கேம் என்பது வெறும் ஆசை என்பதைப் புரிய வையுங்கள்.

மொத்தத்தில், பிள்ளைகளைச் செல்லம் கொடுத்துக் கெடுப்பதை விட, கொஞ்சம் கணக்கு காட்டி வளர்ப்பதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

சிறு வயதில் உண்டியலில் சேமிக்கும் அந்த ஒரு ரூபாய், பின்னாளில் அவர்கள் கடனாளியாகாமல் தடுக்கும் இன்சூரன்ஸ்.

இல்லையென்றால், நீங்கள் சேர்த்து வைத்த சொத்து எல்லாம் அவர்களின் ஒரு மாத ஆன்லைன் ஷாப்பிங் பில்லுக்கே சரியாகப் போய்விடும்!

இனி என்ன செய்வது என்பது ஒவ்வொரு பெற்றோரின் முடிவுதான். பெற்றோரின் முடிவு குழந்தைகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். விசயம் அவ்வளவுதான்.

*****

தொகுதி மறுவரையறை மசோதா – நடந்தது என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா – நடந்தது என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா என்ற பெயரைக் கேட்டாலே ஏதோ தையல் கடையில் சட்டைக்கு அளவு எடுப்பது போல இருக்கிறதல்லவா? கிட்டத்தட்ட அதுதான். ஆனால் இங்கே தைக்கப்படுவது சட்டை அல்ல, நம் நாட்டின் அரசியல் வரைபடம்.

தற்போது லோக்சபாவில் 543 பேர் இருக்கிறார்கள். இதை இனி இதை 815 ஆக ஆக்கப்போகிறார்களாம். அதாவது 50 சதவீத டாப்-அப். அதுதான் இந்த மசோதா.

இந்தியாவில் மக்கள் தொகை கூடிக் கொண்டே போகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. இது எப்படி இருக்கிறதென்றால், பத்து பேர் இருக்கும் குடும்பத்தில் ஒரே ஒரு ‘பேமிலி பேக் பிரியாணியை வைத்துக்கொண்டு, எல்லோருக்கும் லெக் பீஸ் வேணும் என்று அடம் பிடிப்பது போலத்தான்.

அதனால், எந்த ஊரில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்கேற்ப எம்.பிக்களைப் பிரித்துக் கொடுப்போம் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படை நோக்கம்.

நோக்கம் சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்தால், இங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் அரசு சொன்னதைக் கேட்டு, பெற்றால் டூ, இல்லையேல் ஒன் என்று குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றின. விளைவு? மக்கள் தொகை குறைந்தது.

வடக்கிலோ நிலைமை வேறு. மக்கள் தொகையே மாபெரும் சக்தி, என்று ராகுல் காந்தி ஸ்டைலில் கிளம்பி, எண்ணிக்கையைப் பெருக்கிவிட்டார்கள்.

இப்போது தொகுதி மறுவரையறை வந்தால், வட மாநிலங்கள் நாங்கள் நிறையப் பேர் இருக்கிறோம், அதனால் எங்களுக்கு அதிக எம்.பி சீட் கொடுங்கள் என்று கேட்பார்கள், ஹோம்வொர்க் செய்யாத பையனுக்கு அதிக மார்க் போடுவது போல!

ஆனால், தென் மாநிலங்களின் நிலைமை. நாங்கள் சமத்தாகச் சொன்னதைக் கேட்டோம், அதற்காக எங்கள் சீட்டைக் குறைக்கிறீர்களே? என்பார்கள், கிளாஸில் அமைதியாக இருந்ததற்குத் தண்டனை கொடுப்பது போல!

இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்றால், நாடாளுமன்றத்தில் இருக்கைகள் கூடும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அவ்வளவு பெரிதாகக் கட்டியதே இதற்காகத்தான். சுமார் 800க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் சரியாகச் சொன்னால் 815 எம்.பிக்கள் அமர்வார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், குடும்பக் கட்டுபாடு செய்த மாநிலங்கள் அரசியல் பலத்தை இழக்கும். குடும்பக் கட்டுபாட்டைக் காற்றில் பறக்க விட்ட மாநிலங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்.

ஜனநாயகத்தில் தலைகளுக்குத்தான் மதிப்பு, மூளைகளுக்கு அல்ல என்பதை இந்த மசோதா நிரூபித்து விடலாம்.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு உங்கள் ஊர் தொகுதி பெயர் மாறலாம், ஆனால் உங்கள் தெருவில் இருக்கும் அந்தப் பாதாளச் சாக்கடை ஓட்டை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கலாம். அது வேறு விசயம்.

இப்போது விசயத்திற்கு வருவோம்.

இந்த மசோதாவுக்குத் தென் மாநிலங்களின் எதிர்ப்பை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தார்.

தமிழ்நாட்டில் 39 ஆக இருப்பதை 59 ஆக்குவோம். அதாவது எம்.பிக்கள் சீட். கேரளாவில் 20ஐ 30 ஆக்குவோம். மொத்தமாகத் தெற்கில் 129லிருந்து 195 சீட்கள் வரும் என்றார்.

அதாவது, தெற்கு மாநிலங்களின் பலம் 23.76 சதவீதத்திலிருந்து 23.87 சதவீதமாக உயருமாம். அதாவது, ஒரு கிலோ பிரியாணியில் ஒரு பருக்கை அரிசியை அதிகமாகப் போடுவது போல.

வடக்கில் இந்த எண்ணிக்கையைப் போட்டால், 815 – 195 = 620. அதாகப்பட்டது, மொத்த அதிகரிப்பு தொகுதிகள் மைனஸ் தென் மாநிலங்கள் என்றால் மிச்சமிருப்பது வடமாநில அதிகரிப்புத் தொகுதிகள்தானே. அப்படிப் பார்த்தால் 620 என்ற எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு என்பது சர்வ சாதாரணமாக வந்து விடுகிறதே. இன்னும் சரியாகச் சொன்னால் நான்கில் மூன்று பங்கு எம்பிக்கள் வட மாநில எம்.பிக்களாகவே இருப்பர்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, தென் மாநிலங்களில் ஜெயிக்காமலேயே, வட மாநிலங்களில் ஜெயித்தால் ஆட்சியை அலேக்காகத் தூக்கி விடலாம். சட்டத் திருத்தங்களையும் ஜரூராக முடித்து விடலாம்.

இதனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது இந்த மசோதா.

ஆனால், கிளைமாக்ஸ் என்னவென்றால், இறுதியில் புஸ்ஸென்று போய் விட்டது.

என்ன நடந்தது என்றால், நடந்தது இதுதான்.

528 பேர் ஓட்டுப் போட்டார்கள். அதில் 298 பேர் ஆஹா, சூப்பர் மசோதா என்று ஆதரவு தந்தார்கள். ஆனால், சட்டப்படி மூன்றில் இரண்டு பங்கு அதாவது 352 பேர் ஆதரவு வேண்டும்.

கடைசியில் பார்த்தால், 54 ஓட்டுகள் குறைவாகப் பெற்று மசோதா பரிதாபமாகத் தோற்றுப்போனது.

தமிழ்நாட்டின் ரியாக்‌ஷன் தான் இதில் ஹைலைட். தில்லி ஒரு பவுலர் என்றால், தமிழ்நாடு ஒரு ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மேட்சை முடித்துவிட்டது. தமிழ்நாட்டின் எதிர்ப்பு அப்படி இருந்தது.

முடிவு இதுதான். 815 எம்.பிக்கள் வந்து, சென்ட்ரல் விஸ்டாவில் நெருக்கிக் கொண்டு அமர்வார்கள் என்று பார்த்தால், இப்போது மீண்டும் பழைய 543 பேரே நாங்கதான் கெத்து என்று அமரப்போகிறார்கள்.

இந்தத் தோல்வியால் ஒரு விஷயம் தெளிவாகின்றது. தென் மாநிலங்களின் குரல் இன்னும் தில்லியில் கேட்கிறது. ஒருவேளை மசோதா ஜெயித்திருந்தால் தென் மாநிலங்களின் குரல்வளையைத் தூக்கிக் காயலான் கடையில்தான் போட வேண்டியிருந்திருக்கும்.

மசோதா தோற்றதால், தொகுதிப் பங்கீடு இனி மாறாது. எனவே, உங்கள் ஊர் எம்.பியிடம் அதே பழைய புகார்களை மீண்டும் கொடுக்கலாம். ஆனால் என்னதான் வந்தாலும் மாற்றம் என்பது மசோதாவில் மட்டுமே, மக்கள் வாழ்க்கையில் அல்ல என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது! என்ன செய்வது? அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டர் எப்போதோ கவுண்டர் கொடுத்து விட்டார்.

*****

18 Apr 2026

ஓட்டு – உங்கள் ஜனநாயகத் துருப்புச் சீட்டு!

ஓட்டு – உங்கள் ஜனநாயகத் துருப்புச் சீட்டு!

தமிழ்நாட்டை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகும் தலைமையைத் தீர்மானிக்கும் மகத்தான பொறுப்பு ஏப்ரல் 23 இல் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே... என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

அரசு என்பது உங்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு என்று இன்னும் நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால், அந்த நம்பிக்கையைச் சிதைக்காமல் இருக்க, வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சோம்பலைத் தள்ளி வைத்துவிட்டு வாக்குச்சாவடிக்குப் போக வேண்டும்.

கொஞ்சம் கூட்டம் இருக்கலாம். வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவது அவசியம்.

என் ஓர் ஓட்டால்தான் எல்லாம் மாறப் போகிறதா என்று தத்துவார்த்தமாகக் கேட்டுவிட்டு, அந்த நாளை நெட்பிளிக்ஸிலும் தூக்கத்திலும் தொலைக்கத் துடிக்கும் புத்திசாலிகள் இங்கே அதிகம்.

நினைவிருக்கட்டும், உங்கள் ஓர் ஓட்டு முடிவை மாற்றாததுதான், ஆனால் மாற்றத்தை நோக்கிய உங்கள் இயலாமையைக் குறைக்கும்.

யாருமே தேறமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், அதற்காகவே தேர்தல் ஆணையம் நோட்டா என்ற பொத்தானை வைத்திருக்கிறது. உங்களில் யாருக்கும் என் வாக்கு கிடையாது, என்று சொல்வதற்காவது நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அதுவும் ஒரு ஜனநாயகக் கடமைதான்.

வாக்களிக்கும் முன் சில விசயங்களை யோசித்துப் பாருங்கள். அவற்றில் சில,

பட்டதாரிகளை மொத்தமாக உற்பத்தி செய்துவிட்டு, அவர்களுக்குத் தகுதியான வேலையைக் கொடுக்க முடியாமல் தமிழ்நாடு விழி பிதுங்கி நிற்கிறது. எல்லாருக்கும் அரசு வேலை சாத்தியமில்லைதான். ஆனால் தகுதிக்கேற்ப ஏதாவது ஒரு வேலை சாத்தியம்தானே. அந்தச் சாத்தியத்தைத் தேர்தலில் நிற்கும் எந்தக் கட்சியின் சின்னம் உறுதி செய்யும் என்று பாருங்கள்.

கடன் சுமையால் தடுமாறும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்கும் வித்தை இப்போது தமிழகத்துக்கு அத்துப்படி. இந்த கடனெல்லாம் யார் தலையில் விடியும் என்று நினைக்கிறீர்கள்? ஆகவே, உங்கள் யோசனையில் இதையும் வைத்து அதற்கேற்ப வாக்களியுங்கள்.

அப்புறம், இந்த வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலைப் பாருங்கள். நாட்டின் ஜிடிபியை விட அவர்களின் சொத்து வளர்ச்சி விகிதம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. பலருடைய பின்னணியான கிரிமினல் சைட் கிருமித்தனமாக இருக்கிறது. இதையும் நீங்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு கிரிமினல் கிருமியைத் தேர்ந்தெடுப்பதில் என்ன இருக்கிறது? அது இன்னொரு கொரோனா, லாக் டவுன் என்றாகி விடும்.

இப்போதெல்லாம் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் குறைந்து விட்டன. கட்சிகள் நேரடியாகவே உங்கள் செல்போனுக்கு எல்லாவற்றையும் அனுப்புகின்றன. கட்சிகளுக்கு எப்படி உங்கள் செல்போன் நம்பர் கிடைக்கிறதோ? ஆக, அரசியல் கட்சிகள் உங்கள் செல்போனுக்குள் அனுப்பியிருக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைப் படியுங்கள். அதில் எவை நிஜம், எவை வெறும் காமெடி என்பதைப் பிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இலவச மிக்ஸிக்கும், கிரைண்டருக்கும், பிரிட்ஜ்க்கும், டோக்கனுக்கும் ஆசைப்படுவதை விட, மாநிலத்தின் எதிர்காலத்துக்கு எது உருப்படியானது என்று யோசியுங்கள்.

ஆட்சிகள் வரும், போகும். ஆனால் நாம் கட்டும் வரி மட்டும் போய்க்கொண்டே இருக்கும் என்பது உண்மை என்றாலும், அந்த வரி மக்கள் நலனுக்குக் கொஞ்சமாவது பயன்பட வேண்டுமானால் யோசித்து வாக்களித்தால்தான் உண்டு.

எனவே, ஏப்ரல் 23 ஆம் தேதி உங்கள் மனசாட்சியைக் கொஞ்சம் தட்டி எழுப்பி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு தீர்க்கமான முடிவெடுங்கள்.

ஜனநாயகம் என்பது வேர் என்றால், உங்கள் வாக்குதான் அதன் உரம். அது விஷமா அல்லது சத்தா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

வாக்களிக்க அவசியம் போய் வாருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கிறதோ இல்லையோ, அடுத்து ஐந்து வருடங்களுக்கு நீங்கள் திட்டித் தீர்ப்பதற்கு ஒரு தார்மீக உரிமை உங்களுக்குக் கிடைக்கட்டுமே!

*****

மூளையும் கட்டைவிரலும் – ஒரு டிஜிட்டல் மரணம்!

மூளையும் கட்டைவிரலும் – ஒரு டிஜிட்டல் மரணம்!

நவீன மனிதர்களின் ஆகப்பெரிய துயரம் இதுதான். புத்தகம் படிக்க அவர்களுக்கு நேரமில்லை, ஆனால் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ்ஆப், ரீல்ஸ் பார்க்க அவர்களுக்கு நேரம் போதவில்லை.

ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பிரித்து, முன்னுரையைப் படிப்பதற்குள் அவர்களுக்குக் கொட்டாவி வருகிறது. இந்த எழுத்தாளர் ஏன் இவ்வளவு நீளமாக எழுதுகிறார்? என்று எரிச்சல் படுகிறார்கள்.

அதே மனிதர், யாரோ ஒரு புண்ணியவான் கேமரா முன்னால் நின்று இடுப்பை ஆட்டுவதையோ அல்லது என்னங்க சமையல் என்று கத்துவதையோ இரண்டு மணிநேரம் இமைக்காமல் பார்க்கிறார்.

புத்தகம் என்பது ஒரு மெதுவான பயணம். அது உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும். மூளைக்கு வேலை கொடுப்பது என்பது இன்றைய தேதியில் ஒரு தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இன்ஸ்டா, யூடியூப், ரீல்ஸ்? அது ஒரு துரித உணவு. நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. உங்கள் கட்டைவிரல் மட்டும் இயங்கினால் போதும்.

இந்த யூடியூப்காரர்களும், இன்ஸ்டாகாரர்களும், ரீல்ஸ் மகான்களும் ஒவ்வொரு 15 விநாடிக்கும் ஒரு புதிய உணர்ச்சியை சிரிப்பு, அழுகை, எரிச்சல் என்று உங்கள் நரம்புகளுக்குள் ஊசி போட்டு ஏற்றி இறக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கக் குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஆனால், அதே ஒரு வாரத்தில் நீங்கள் சுமார் பத்தாயிரம் ரீல்ஸ்களைப் பார்த்து, பத்தாயிரம் விதமான முட்டாள்தனங்களைச் சேமித்து வைத்திருக்க முடியும்.

நேரமே இல்லைங்க என்று சொல்பவர்களிடம் அவர்களின் செல்போனில் இருக்கும் ஸ்கிரீன் டைம் ஆப்ஷனைத் திறந்து காட்டச் சொல்லுங்கள். அதில் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் இன்ஸ்டாகிராமிலோ, யூடியூபிலோ, வாட்ஸ்ஆப்பிலோ கழிந்திருக்கும்.

அறிவு என்பது ஒரு பெரிய சமுத்திரம். ஆனால் அதைத் தேடிப் போக யாருக்கும் விருப்பமில்லை. எல்லாரும் அந்தச் சமுத்திரத்தின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு யாரோ துப்பிய ரீல்ஸில், இன்ஸ்டாவில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தகம் படிப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பார்கள். ரீல்ஸ் பார்ப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அந்தப் பாட்டுக்கு அந்தப் பொண்ணு என்ன ஸ்டெப் போட்டுச்சு என்பது மட்டும்தான்.

நாளை ஒரு போர் வந்தால், நம் இளைஞர்கள் கையில் துப்பாக்கியைத் தூக்குவதற்குப் பதில், எதிரியின் முன்னால் நின்று செல்பி எடுத்து, கரன்ட் மூட் – வார் என்று ஸ்டேட்டஸ் போடுவார்கள் போலிருக்கிறது.

புத்தகம் படிக்க நேரமில்லை என்று சொல்பவர்கள் உண்மையில் சொல்வது இதுதான், எனக்கு யோசிக்க நேரமில்லை, என்னை அப்படியே மந்தையாக வாழ விடுங்கள்.

வாழுங்கள். உங்கள் கட்டைவிரல் தேயும் வரை ரீல்ஸ்களைத் தள்ளிக் கொண்டே இருங்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் மூளை தானாகவே அன்இன்ஸ்டால் ஆகிவிடும். அப்போது உங்களுக்குப் புத்தகங்களும் தேவைப்படாது, இந்த வாழ்க்கையும் புரியாது.

நம் கட்டை விரலை விட மூளையைக் கவனிப்பது முக்கியம். அதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்.

******

17 Apr 2026

வீட்டுக்குள் நிம்மதியாக இருத்தல்!

வீட்டுக்குள் நிம்மதியாக இருத்தல்!

மனிதர்களைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ரிடையர்மென்ட் ஆகும் வரை வாடகை வீட்டில் வசிப்பவர்கள். வாடகை வீட்டுக்குப் பயந்து ஹோம் லோன் போட்டு இஎம்ஐ கட்டும் இன்ஸ்டால்மென்ட் வீட்டில் வசிப்பவர்கள்.

இரண்டுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றுமில்லை. முதல் வகையினர் அறுபது வயது வரை வாடகை வீட்டில் ஓனர் தரும் டார்ச்சரை அனுபவிப்பார்கள். இரண்டாம் வகையினர் அறுபது வயது வரை பேங்க் மேலாளர் தரும் இஎம்ஐ டார்ச்சரை அனுபவிப்பார்கள். முன்னது உடல்நலத்துக்குக் கேடு, பின்னது மனநலத்துக்குக் கேடு.

இன்றைய இளைஞர்களுக்குச் சொந்த வீடு என்பது ஒரு சென்டிமென்ட் அல்ல, அது ஒரு இருபது காலத் தண்டனை. வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் ஆண்டிலேயே ஹோம் லோன் எடுத்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் அலுவலகத்தில் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களின் இஎம்ஐ அவர்களை தானாகவே அடிமையாக்கிவிடும். மேனேஜர் திட்டும்போது கோபப்படத் தோன்றும், ஆனால் பாத்ரூம் டைல்ஸின் விலை நினைவுக்கு வந்து கோபத்தைத் தணிக்கும்.

இவர்களுக்குச் சுதந்திரம் என்பது என்ன? அடுத்த இருபது வருஷத்துக்கு வேலையை விடமாட்டேன் என்று வங்கிக்கு எழுதித் தருவதுதான்!

இன்னொரு ரகம் உண்டு. அரசு வேலை முடிஞ்சு, வர்ற காசுல ஒரு சின்னதா நாலு செவுரு எழுப்பி நிம்மதியா சாகணும் என்று கனவு காண்பவர்கள். அறுபது வயதில் வீடு கட்டி முடிக்கும்போது, அவர்களுக்குப் பால் காய்ச்சத் தெம்பிருக்காது. அந்த வீட்டு ஹாலில் நடக்கக் கூட மூட்டு வலி அனுமதி தராது. ஒரு வழியாகக் கட்டி முடித்த வீட்டில் அவர்கள் நிம்மதியாக உட்காரும்போது, அவர்களின் பையன் அந்த வீட்டை இடித்துவிட்டு அப்பார்ட்மென்ட் கட்டத் திட்டம் போட்டுக்கொண்டிருப்பான்.

விசயம் என்னவென்றால்,

நீங்கள் வாங்குவது 1200 சதுர அடியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உண்மையில் வாழ்வது அந்த வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இருக்கும் எண்களுக்குள்தான்.

உங்கள் வீட்டின் சுவருக்கு நீங்கள் அடிக்கும் பெயிண்ட், உண்மையில் உங்கள் ரத்தத்தின் நிறமாகக்கூட இருக்கலாம்.

வாடகை வீட்டில் இருக்கும்போது எப்போ சொந்த வீடு வரும்? என்கிற கவலை இருக்கும். சொந்த வீடு வந்த பிறகு எப்போ லோன் முடியும்? என்கிற கவலை வரும்.

கடைசியில் பார்த்தால், இரண்டு வகையினருமே தங்கள் வாழ்க்கையை ஒரு கான்கிரீட் பெட்டிக்காக அடகு வைக்கிறார்கள். பூமிக்கு மேலே ஒரு வீடு கட்டுவதற்காக, பூமிக்கு அடியில் போவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.

வாடகை வீடாக இருந்தால் என்ன, லோன் வீடாக இருந்தால் என்ன? எப்படியும் ஒரு நாள் எல்லாரும் காலி செய்துவிட்டுப் போகப்போகிற கெஸ்ட் ஹவுஸ்தான் இது. அதற்காக ஏன் இத்தனை முக்கல் முனகல்கள்? வீட்டில் ரொம்ப காசைப் போட்டு அவஸ்தைக்கு ஏன் ஆளாக வேண்டும்?

வீட்டுக்குள் நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். அந்த வீடே உங்கள் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது.

சொந்த வீடா? வாடகை வீடா?

இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாடகை வீடு எப்போதும் பெஸ்ட். நீங்கள் வீட்டுக்குப் பெய்ண்ட் அடிக்க வேண்டியதில்லை, பிளம்பிங், எலெக்ட்ரிக் மெயின்டெனன்ஸ் செய்ய வேண்டியதில்லை, டேங்க் கிளினிங் பண்ண வேண்டியதில்லை, எல்லாவற்றையும் ஓனர் பார்த்துக் கொள்வார்.

ஆகவே, இந்த ஓனர் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு ஓனர். வீட்டைக் கட்டிப் போட்டு விட்டு, வெளிநாட்டில் இருக்கும் ஓனர்களும் இருக்கிறார்கள். அவர்கன் வீட்டைப் பிடியுங்கள். வாழ்க்கை ஸ்மூத்தாகப் போகும்.

*****