5 Jul 2026

வானம், பூமி, மற்றும் சில போர்த்துகீசிய வார்த்தைகள்

வானம், பூமி, மற்றும் சில போர்த்துகீசிய வார்த்தைகள்

வானிலை இலாகா மீண்டும் ஒருமுறை தீர்க்கதரிசியாக அவதரித்திருக்கிறது. இந்த முறையும் அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதம் முன்னெச்சரிக்கை.

பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு வறட்சி நம்மை நோக்கி மெல்ல ஊர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

காரணம்?

பசிபிக் பெருங்கடலில் குளித்துக் கொண்டிருக்கும் எல்நினோ என்றொரு வெப்பநீரோட்டம்.

மனிதர்களுக்குப் பெயரிடுவதில் இருக்கும் சுவாரசியத்தை விட, கடல்களுக்குப் பெயரிடுவதில் விஞ்ஞானிகளுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.

பசிபிக் கடலின் ஒரு பகுதியில் சில ஆண்டுகள் வெந்நீர் ஓடுமாம்; அதற்கு எல்நினோ என்று பெயர்.

சில ஆண்டுகள் ஜில்லென்று நீர் ஓடுமாம்; அதற்கு லாநினோ என்று பெயர்.

இவை இரண்டும் போர்த்துகீசிய வார்த்தைகள் என்று வானிலை அறிக்கை நமக்கு மிகவும் அக்கறையோடு பாடம் நடத்துகிறது.

பசிபிக் கடலில் இருக்கும் தண்ணீருக்குப் போர்த்துகீசியர்கள் ஏன் பெயரிட்டார்கள், அதைக் கேட்டு நாம் ஏன் இப்போது பயப்பட வேண்டும் என்ற தத்துவார்த்தக் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை.

இந்தியர்களுக்கு மழை என்பது ஏதோ வானத்திலிருந்து விழும் தண்ணீர் மட்டுமல்ல; அது ஒரு வாழ்வாதாரக் கணக்கு.

நமக்கு இரண்டு பருவக் காற்றுகள் உண்டு. ஒன்று, அக்டோபர் மாதவாக்கில் வரும் வடகிழக்கு பருவக்காற்று. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்கள் இதன் மூலம் தப்பிப் பிழைக்கின்றன.

இன்னொன்று, ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவக்காற்று. நாட்டின் எண்பது சதவீத மழையைத் தீர்மானிப்பது இதுதான். இமயமலையின் கிழக்குச் சரிவில் இருக்கும் சில இடங்கள் 1000 சென்டிமீட்டருக்கும் மேல் மழையை வாங்கி சொதசொதவென்று நனையும்.

இந்த ஆண்டு மே 26லேயே மழை வந்துவிடும் என்று வானிலை இலாகா முதலில் ஆருடம் சொல்லியிருந்தது. நாமும் குடைகளைத் தூசு தட்டி வைத்திருந்தோம்.

ஆனால், இயற்கை எப்போதும் மனிதனின் கணிப்புகளைக் கண்டு அற்பமாகப் புன்னகைக்கக் கூடியது.

இப்போது வரை தென்மேற்குப் பருவமழை வந்தபாடில்லை. இன்னும் தாதமாகிறது. அப்படி வந்தாலும் குறைவாகத்தான் மழை தருமாம்.

தத்துவம் என்னவென்றால், பசிபிக் கடலில் எழும் ஒரு சிறிய வெப்ப அலை, இந்தியப் பெருங்கடலின் காற்றை உலர வைக்கிறது. மேகங்களில் இருக்கும் நீர்ப்பசை வற்றிப்போகிறது.

கடலில் ஈரப்பதம் குறைந்தால், நிலத்தில் மனிதர்களின் தொண்டை வறள்கிறது. கடைசியாக 2015இல் இப்படித்தான் எல்நினோ வந்து நம்மைப் படுத்தியது.

அப்போது எண்பத்தாறு சதவீத மழைதான் பெய்ததாம். இந்த முறை தொண்ணூறு சதவீதத்திற்கும் கீழே போகும் என்று கணித்திருக்கிறார்கள். அதற்குக் கீழே போகாதுஎன்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமுமில்லை. போனாலும் போனதுதான்.

வழக்கம்போல, வறட்சி வரப்போகிறது என்ற செய்தி கேட்டவுடன் மனிதர்களாகிய நாம் பதற்றமடையத் தொடங்கிவிட்டோம்.

ஆனால், தண்ணீரே இல்லாத மேகங்களைச் சுமந்துகொண்டு வானத்தில் அலைந்து கொண்டிருக்கும் அந்தப் பருவக்காற்றின் சோகத்தை எவரும் சிந்திப்பதில்லை. பெய்ய வழியில்லாத மேகம், சொல்ல முடியாத கவிதை போன்றது.

வானிலை இலாகா எச்சரித்துவிட்டது. இனி நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், அடுத்த முன்னெச்சரிக்கை வரும் வரை, இந்த வறட்சியை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு தத்துவார்த்தக் குழப்பத்துடன் காத்துக்கொண்டிருப்பதுதான்.

*****

பியர், பிரேக் அப் மற்றும் பிட்டு படங்களின் தத்துவம்

சீரழித்த சினிமா – 33

திரிஷா இல்லன்னா நயன்தாரா

பியர், பிரேக் அப் மற்றும் பிட்டு படங்களின் தத்துவம்

உலக சினிமா வரலாற்றில் காதலைப் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால், "ஒருத்தி போனா இன்னொருத்தி" என்கிற ஆகச்சிறந்த பிரபஞ்ச விதியை இவ்வளவு ஆணித்தரமாக, எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பிரகடனப்படுத்திய பெருமை 2015 இல் வெளிவந்த திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்தையே சேரும்.

மார்க்சியம் பேசும் பண்டமாக்கல் கோட்பாட்டைத் தன் திரைக்கதையின் மூலம் மிக வக்கிரமாக நிரூபித்திருத்த திரைப்படமே திரிஷா இல்லன்னா நயன்தாரா. படத்தின் தலைப்பிலேயே அந்த ஆபத்தான சந்தை அரசியல் தொடங்கிவிடுகிறது. திரிஷா இல்லன்னா நயன்தாரா அதாவது, சந்தையில் ஒரு பிராண்ட் சோப்பு கிடைக்கவில்லை என்றால், நுகர்வோர் இன்னொரு பிராண்ட் சோப்புக்கு மாறுவதைப் போல, பெண்களை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றும் ஆணாதிக்கக் கொழுப்பை இந்தத் தலைப்பிலேயே நீங்கள் பார்க்கலாம்.

படத்தின் கதை என்று தனியாக தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். அதற்காகத் அதைத் தேடாமலும் இருக்க முடியாது. அது ஒரு இன்பினிட்டி லூப்.

அந்த லூப்பின் படிகளாவன,

படி 1 : ஹீரோவுக்கு ஒரு பெண் மீது காதல் வருகிறது.

படி 2 : ஏதோ ஒரு அற்ப காரணத்தால் உதாரணமாக, தண்ணி அடிப்பது, அல்லது வேறு லோக்கல் மேட்டர்களால் பிரேக் அப் ஆகிறது.

படி 3 : ஹீரோ உடனே டாஸ்மாக் சென்று சோகப் பாடல் பாடுகிறார்.

படி 4 : அடுத்த பெண்ணைத் தேடிப் போகிறார்.

படி 5 : மீண்டும் படி 1க்குச் செல்லவும்.

நாயகனுக்குப் படத்தில் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே வேலை, இளம்பருவத்து ஹார்மோன் கோளாறுகளைத் திரையில் பிரதிபலிப்பதுதான். எந்நேரமும் ஒருவித ஏக்கத்தில் இருக்கும் இவரது கண்கள், காதலைத் தேடுகிறதா அல்லது வேறு எதையாவது தேடுகிறதா என்பது நாயகனுக்கே வெளிச்சம்.

தமிழ் சினிமா வழக்கப்படி, ஹீரோயின்கள் என்பவர்கள் ஹீரோவின் டாஸ்மாக் புலம்பல்களுக்குக் காரணகர்த்தாக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற விதியை இந்தப் படம் அட்சர சுத்தமாகப் பிரதிபலிக்கிறது.

அநேகமாக வர்ஜினிட்டி என்ற வார்த்தையை மிக அதிக முறை உச்சரித்த முதல் தமிழ்ப் படம் இதுவாகத்தான் இருக்கும். சென்சார் போர்டு அதிகாரிகள் படம் பார்க்கும்போது தூங்கிவிட்டார்களா அல்லது அவர்களுக்கு காது கேட்கவில்லையா என்று யோசித்தால், இதிலிருக்கும் உளவியல் நுட்பம் உங்களுக்குப் புரிய வரும். அதாவது, ஒரே வார்த்தையை நான்கு முறை சொன்னால் போரடித்து விடும், நாற்பது முறை சொன்னால் அது ஒரு வார்த்தையா என்று சந்தேகமே வந்து விடுமே அப்படி போரடிப்பு மற்றும் சந்தேகம் வந்திருக்க வேண்டும் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு.

"ஒரு பெண் இல்லையென்றால் இன்னொரு பெண்" என்ற தத்துவம், தனிமனித உறவின் ஆழத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு தற்காப்பு வழிமுறை. உண்மையான காதலின் தீவிரத்தையும், அதன் பின்னால் இருக்கும் பொறுப்பையும் எதிர்கொள்ள பயந்து, இப்படத்தின் நாயகன் தன் சுதந்திரத்தை அர்த்தமற்ற அலைச்சலாக மாற்றிக் கொள்கிறான். காதலில் தியாகம், கண்ணீர், கற்பு, மரணம் போன்ற மரபான தமிழ் சினிமா கூறுகள் இதில் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன. விழுமியங்கள் அற்ற இந்தச் சூழலில் நாயகன் தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள பாலியல் மற்றும் மது ஆகிய தற்காலிக இன்பங்களை மட்டுமே சார்ந்திருக்கிறான்.

நாயகனுக்குப் பெண்கள் மீது இருப்பது காதலா அல்லது தன் அகத் தனிமையைப் போக்கிக் கொள்ளத் தேடும் ஒரு வடிகாலா? அவனால் எந்தவொரு பெண்ணுடனும் உண்மையான இருத்தலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த முடிவதில்லை. அவனது தேடல் முழுவதும் உடல் சார்ந்ததாகவும், சமூகத்தின் முன் தன்னை ஓர் ஆண் என்று நிரூபிக்கத் துடிக்கும் ஒரு தவிப்பாகவுமே சுருங்கிவிடுகிறது.

இத்திரைப்படம் அர்த்தமற்ற, விழுமியங்கள் அற்ற, இலக்கற்ற ஒரு நவீன உலகத்தில் வாழும் இளைஞனின் ஆழமான இருத்தலியல் தவிப்பின் அநாகரிகமான கொண்டாட்டம். வாழ்க்கைக்கு என்று எந்த உன்னத நோக்கமும் இல்லை என்பதை உணர்ந்த பின், ஒரு மனிதன் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி தன் விருப்பப்படி வாழத் தலைப்படும் அபத்த நாடக வடிவமே இத்திரைப்படம்.

திரிஷா இல்லன்னா நயன்தாரா என்பது ஒரு திரைப்படமே அல்ல. அது, தியேட்டருக்குள் ஏதோ ஒரு போதையில் நுழைந்து, இரண்டரை மணி நேரம் கழித்து "நாம் எங்கே இருக்கிறோம்?" என்று தெரியாமல் வெளியே வரும் ஒரு மாயாஜால அனுபவம்.

ஒருவர் இந்தப் படத்தை 5 பியர் பாட்டில்களோடு பார்க்கப் போனால், இரண்டைத்தான் குடித்திருப்பார். மீதி மூன்றை திரையில் வரும் நாயகன் பிடுங்கிக் குடித்திருப்பார். அந்த அளவுக்கு இப்பட நாயகன் டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாஸடராகக் குடித்து குடித்து டாஸ்மாக்கிற்கே பஞ்ச கோலத்தைக் காட்டக் கூடியவர்.

சரியாகச் சொல்வதென்றால், இத்திரைப்படம் ஒரு திரைக்கலையே அல்ல; பண்பாட்டுத் தளத்தில் நடத்தப்பட்ட ஒரு பாலியல் வன்புணர்வு!

இத்திரைப்படம் ஏற்படுத்திய விளைவுகளை மதிப்பிட்டால், ஹைப்பர்ரியாலிட்டி  கோட்பாட்டின்படி, திரையில் காட்டப்படும் இந்த வக்கிரமான, மிகைப்படுத்தப்பட்ட உறவு நிலைகளை உண்மை என்று நம்பி, நிஜ வாழ்க்கையிலும் இளைஞர்கள் தங்கள் இணையர்களை அதே அளவுகோல்களுடன் அணுகத் தொடங்கியது ஒரு மோசமான பின்னடைவு. இந்தப் பின்னடைவு நிஜ உலக உறவுகளில் பெரும் ஏமாற்றத்தையும், மன அழுத்தத்தையும் உருவாக்க காரணமாகியது.

தமிழ் சினிமா எத்தனையோ பிற்போக்குத்தனங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆனால், ஒரு நுகர்வுச் சந்தையின் ஆகச்சிறந்த கழிவை, இளைஞர்களின் நாடித் துடிப்பு என்ற பெயரில் திரையரங்குகளில் கொட்டிய இந்த திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம், சமகாலப் பண்பாட்டுச் சீரழிவின் ஆகச்சிறந்த குறியீடு.

இத்திரைப்படம் ஏற்படுத்திய சீரழிவு என்பது, அது காட்டிய ஆபாச வசனங்களில் மட்டும் இல்லை; மனித விழுமியத்தின் தனித்துவத்தை நிராகரித்து, உறவுகளின் ஆழத்தை எள்ளி நகையாடி, பொறுப்பற்ற தனத்தை கொண்டாட்டமாக மாற்றிய தத்துவார்த்த வறுமையில்தான் இருக்கிறது.

பெண்ணியம் பேசும் சுயமரியாதைக் கருத்துக்களைத் துடைத்தெறிந்துவிட்டு, பெண்ணின் உடலை, அவளது கற்பை, அவளது அசைவுகளைத் தங்களுக்குத் தேவையான ஆணாதிக்கச் சந்தைக்கான மூலதனமாக மாற்றியதுதான் இத்திரைப்படத்தின் ஆகச் சிறந்த அக்கிரமம். படம் முழுக்க நாயகன் பேசும் வசனங்கள் அனைத்தும், ஒரு பாலியல் வறட்சி மிகுந்த சமூகத்தின் வக்கிரக் கூச்சல்கள் அன்றி வேறில்லை.

இந்தியச் சூழலில் நிலவும் பாலியல் நசுக்கல்களையும், விலக்கப்பட்ட தனிமனித உரையாடல்களையும் இத்திரைப்படம் தனக்கான முதலீடாக மாற்றிக் கொண்டு, தமிழ்ச் சமூகத்தைப் பாலியல் முதிர்ச்சியை அடைய விடாத, தேங்கி நிற்கும் டீன் ஏஜ் உளவியலிலேயே தேக்கி வைத்ததுதான் இத்திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு.

*****

4 Jul 2026

இரெ. சண்முகவடிவேலுவின் ‘நினைவின் நிழல்கள்’ ஓர் எளிய அறிமுகம்

இரெ. சண்முகவடிவேலுவின் ‘நினைவின் நிழல்கள்’ ஓர் எளிய அறிமுகம்

முன்னோக்கிப் பாயும் ப்ளாஸ்பேக்!

நினைவின் நிழல்கள் என்ற தலைப்பில் நா. பார்த்தசாரதி ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார்.

அதே தலைப்பில் இரெ. சண்முகவடிவேல் எழுதியுள்ள இந்த நூல் அவரது வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டும் குறுநாவல் போலவே இருக்கிறது.

ஆங்கிலத்தில் சிறந்த மனிதர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு இந்தப் புத்தகத் தலைப்பே நல்லதொரு உதாரணம்தான்.

நினைவுகளின் நிழல்கள் என்ற லாவண்யா பெரியசாமி என்பவரின் புத்தகமும் இணைய வெளியில் காணக் கிடைக்கிறது. நினைவுகளைப் பன்மைப்படுத்தாமல் ஒருமைப்படுத்தி இரெ. சண்முகவடிவேல் எழுதியுள்ள இந்தப் புத்தகம் அவரது நினைவில் வாழும் மனிதர்களைப் பற்றிச் சிரிக்க சிரிக்க நம்மிடம் பேசுகிறது.

மனிதர்கள் எவ்வளவு வண்ணமயமாக இருந்தாலும் விழும் நிழல்கள் என்னவோ கருப்புதான். அந்த வகையில் அந்தக் கால கருப்பு வெள்ளை கிளாஸிக் படம் பார்ப்பது போன்ற உணர்வு இந்தப் புத்தகத்தைப் படிக்கையில்.

நிழல்கள் என்ற கருமையைப் பெயராக இந்நூல் சூட்டிக் கொண்டாலும் நினைவின் நிழல்களாய் நடமாடும் அந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வண்ணமயமான கிராபிக்ஸ்களாகவே புத்தகம் முழுவதும் உலவுகிறார்கள். கரு நிழல்களுக்கும் வண்ணம் தீட்டத் தெரிந்த வித்தைக்காரராக இருக்கிறார் சண்முகவடிவேல்.

மனிதன் என்பவன் அடிப்படையில் ஒரு ஞாபக மறதிப் பிராணி. ஆனால், சண்முகவடிவேலுவுக்கு ஞாபகசக்தி அதிகம். தான் சந்தித்த மனிதர்கள், கடந்து வந்த பாதைகள் என எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து இப்படி ஒரு புத்தமாக ஆக்கியிருக்கிறார்.

புத்தகத்தில் வரும் மனிதர்கள் பெரும்பாலும் பட்டிமன்றம் தொடர்பான மனிதர்கள். சில இடங்களில் பேருந்துகளிலும், சந்தைக் கடைகளிலும் கடந்து போகும் சாதாரண மனிதர்களும் இருக்கிறார்கள். சண்முகவடிவேலு அவர்களை விவரிக்கும் விதம்தான் இதில் முக்கியம். அது மைக்ரோஸ்கோப்பில் சாதாரண எறும்பை அசாதாரணமாகப் பார்ப்பது போலச் சுவாரசியமாக ஆக்கி விடுகிறது.

புத்தகத்தில் சில மொக்கையான மனிதர்களை அவர் சந்திக்குமிடம் நமக்கு ரொம்ப அலாதியானது. பரவாயில்லை, நமக்கு மட்டும்தான் மொக்கையான மனிதர்கள் அறிமுகமாகிறார்கள் என்று நினைத்தால், இவ்வளவு பெரிய மனிதருக்கும் அதேதான் என்கிற சராசரி மனிதனுக்குக் கிடைக்கும் திருப்திதான் அது.

எழுத்தாளர் ரொம்பவும் நல்லப் பிள்ளை என்பதற்கு பளிச்சென்ற முகத்துடன் வெள்ளைச்சட்டையில் உள்ள அட்டைப்படமே நல்ல சான்றுதான். கொஞ்சம் கூடக் கெட்ட வார்த்தைகளோ, அதிர்ச்சியூட்டும் அந்தரங்கங்களோ இல்லாமல், பக்திப் பழமாக வண்டி ஓடுவதால் அனைவரும் படிக்கக் கூடிய புத்தமாக விளங்குகிறது. அந்த வகையில் பரபரப்பான த்ரில்லர்களோ, ரத்தக் கறைகளோ இல்லாத ஒரு சாதுவான புத்தகம் இது.

வாசிக்க வாசிக்க முள்ளாகக் குத்தாமல், வெண்ணெய் போல நகர்கிறது. செயற்கையான பந்தாக்கள் இல்லை. நான் ஒரு மேதாவி என்று காலரைத் தூக்கிக் கொள்ளாமல் எதார்த்தமாக எழுதியிருக்கிறார். பட்டுவேட்டி, பட்டுச் சட்டை தோற்றத்தைக் கூட தோற்றப் போலிவுதான், ஜெயித்தப் போலிவில்லை என்று சொல்லும் இடம் அதற்கு நல்ல சாட்சியம்.

புத்தகத்தின் ஆகச் சிறந்த அம்சம் என்றால், தேவையில்லாத எதிர்மறை விஷயங்களை டெலிட் செய்துவிட்டு, அழகிய நினைவுகளை மட்டும் ரீஸ்டோர் செய்திருக்கும் அந்த அழகுதான். அந்த அளவுக்குச் சண்முகவடிவேலு தான் சந்தித்த மனிதர்கள், பழகிய நண்பர்கள், ரசித்த இடங்கள் என எல்லாவற்றையும் ஓர் ஆல்பம் போலத் தொகுத்திருக்கிறார்.

இப்புத்தகத்தைப் படித்து முடிக்கையில் இரெ. சண்முகவடிவேலுவின் இந்த நினைவின் நிழல்கள் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதரின் டைரிக் குறிப்பு போலவும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், டைரியை நாம் பூட்டி வைப்போம். சண்முகவடிவேலு புத்தகமாக்கி விட்டார். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கை திறந்த புத்தமாக இருக்கிறது.

நூல் குறிப்பு :

தலைப்பு       : நினைவின் நிழல்கள்

ஆசிரியர்        : புலவர் இரெ. சண்முகவடிவேல் M.A.

பக்கங்கள்     : 186

விலை            : ரூ. 200/-

வெளியீடு     : கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணித் தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017

*****

இருத்தலியலின் மாபெரும் துயரம்

சீரழித்த சினிமா – 32

குட் பேட் அக்லி

இருத்தலியலின் மாபெரும் துயரம்

இருத்தலியலின் ஆகப்பெரும் சாபமே அர்த்தமின்மைதான். பிரபஞ்சத்திற்கு எப்படி ஒரு நியதியும் அர்த்தமும் இல்லையோ, அதேபோல்தான் 2025 இல் வெளிவந்த குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தின் திரைக்கதைக்கும் எந்த நியதியும் அர்த்தமும் தர்க்கமும் இல்லை என்பதை உணரும்போது ஒரு தத்துவார்த்த அதிர்வு நமக்குள்ளே நிகழ்கிறது.

இப்படத்தின் பெயரில் இருக்கும் குட் என்பது சும்மா பெயருக்குத்தான். இங்கே நன்மையும் தீமையும் வேறு வேறல்ல; இரண்டும் ஒரே பிரியாணி அண்டாவில் வெந்த வெவ்வேறு கறித்துண்டுகள்.

படத்தின் தலைப்பில் உள்ள பேட் என்பதில்தான் ஹீரோ ஆனந்தம் அடைகிறார்.

அப்புறம் அந்தப் படத்தின் தலைப்பில் கடைசியில் இருக்கும் அக்லி. அதுதான் திரைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நுகர்வோர் சமூகம்.

இப்படத்தின் கதைதான் என்ன?

நாயகன் வருகிறார். சிரிக்கிறார். துப்பாக்கியை எடுக்கிறார். சுடுகிறார். டான்ஸ் ஆடுகிறார். இடையில் கொஞ்சம் டார்க் காமெடி பண்ணுகிறார். சுருக்கமாகச் சொன்னால், லாஜிக்கை வாஷ் பேசினில் போட்டுப் பிளஷ் செய்த கதம்ப சாதம்தான் படத்தின் கதை.

படத்தில் சுடப்படும் துப்பாக்கிக் குண்டுகளின் எண்ணிக்கை தோராயமாக சில பல ஆயிரங்கள் இருக்கலாம், லட்சங்களைத் தொட்டாலும் எண்ணிக்கைப் பிழையில்லை. நாயகன் மீசையை முறுக்கும் இடங்கள் சில பல நூறுகள் இருக்கலாம். திரைக்கதையில் லாஜிக் உதைக்கும் இடங்கள் சில பல இன்பினிட்டிகள் இருக்கலாம்.

சமூகம் என்பது மனிதர்கள் இணைந்து வாழ உருவாக்கிய ஒரு கற்பிதம். ஆனால், குட் பேட் அக்லி காட்டும் உலகம் முழுக்க முழுக்க அராஜகவாதத்தால் ஆனது. சட்டம், ஒழுங்கு, போலீஸ் எல்லாமே அங்கே காமெடி பீஸ்கள்.

குட் பேட் அக்லி என்பது வெறும் சினிமாவல்ல; அது ஒரு சமூக உளவியல் பரிசோதனை. மனிதன் எவ்வளவு தூரம் தன் பகுத்தறிவைத் துறந்துவிட்டு, வெறும் பிம்ப வழிபாட்டிலும், அதீத வன்முறைக் காட்சிகளிலும் தன் இருப்பைத் தேடிக்கொள்கிறான் என்பதற்கான வாழும் சான்று.

ஒரு நபர் திரையில் துப்பாக்கியை எடுத்து நூறு பேரைக் சுட்டுத் தள்ளும்போது, தியேட்டரில் இருக்கும் ரசிகர்கள் ஏன் கத்துகிறார்கள்? ஏன் விசிலடிக்கிறார்கள்? ஏனென்றால், அவர்கள் ஆழ்மனதில் யாரையோ சுட்டுக் கொல்ல விரும்புகிறார்கள். அந்த வன்முறையைத் திரையில் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு போலி திருப்தி கிடைக்கிறது.

இத்திரைப்படம் ரசிகர்களை ஏன் திருப்திப்படுத்துகிறது என்பது முக்கியமானதொரு கேள்வி.

படத்தில் வரும் நாயகனின் கதாபாத்திரம் எந்தவொரு தார்மீக விதிகளுக்கும், சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டது அல்ல. அது குட் ஆகவும் இருக்கிறது, பேட் ஆகவும் மாறுகிறது, அக்லியாகச் செயல்படவும் யோசிக்காது. அது தன் சொந்த விதிகளைத் தானே உருவாக்கும்.

இதற்குத் தியேட்டரில் இருக்கும் ரசிகன் ஏன் விசிலடிச்சான் குஞ்சாக ஆகிறான் என்றால், ரசிகன் தன் நிஜ வாழ்க்கையில் தனக்கிருக்கும் முழுமையான சுதந்திரத்தைக் கண்டு பயப்படுகிறான் மற்றும் எப்படி எதிர்கொள்வது எனக் குழம்பிப் போகிறான்.

ஒரு நுகர்வுச் சமூகத்தின் அடிமையாக, காலையிலிருந்து மாலை வரை அல்லது இரவிலிருந்து அதிகாலை வரை வேலையின் சட்டகத்திற்குள் அடைபட்டுக் கிடக்கும் ரசிகனுக்கு, தன் விருப்பப்படி வாழும் துணிச்சல் இல்லை.

ஹீரோவின் துப்பாக்கி முனையில் தன் சுதந்திரத்தை வாடகைக்கு எடுத்து, இரண்டரை மணி நேரம் போலி இன்பம் காண்கிறான். இது வாழ்வியல் ரீதியாக ரசிகன் மீது நிகழ்த்தப்படும் ஒரு மிகப்பெரிய துரோகம்.

ஒரு கணக்கு போட்டுப் பார்த்தால், குட் பேட் அக்லி ரசிகர்களைச் சீரழித்ததா? அல்லது ஏற்கனவே ரசிகர்கள் சீரழிந்துதான் போய் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டியதா? என்பது விடை காண முடியாத கேள்வி.

படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் தோன்றும் ஒரே ஒரு ஞானம் இதுதான். இருக்கிறோம். வாழ்கிறோம். இடையில் மசாலா படம் பார்க்கிறோம். அவ்வளவுதான்!

உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால், கமர்ஷியல் சினிமா என்ற போர்வையில், ரசிகர்களின் பலவீனங்களை மூலதனமாக்கிக் கொண்டு, தங்களை ஏதோ ஒரு பெரிய கலைப் படைப்பை உருவாக்கியதாகக் காட்டிக் கொள்ளும் நாயகன் மற்றும் இயக்குநரின் போலித்தனம் இது.

ஓர் ஓட்டலில் சாப்பாடு பரிமாறுபவர் எப்படித் தன்னை முழுமையாக ஒரு சர்வர் என்று நம்பி நடிக்கிறாரோ, அப்படியே இப்பட நாயகனும் தன்னை ஒரு மாஸ் ஹீரோ என்று நம்பி நடிக்கிறார். இருவருமே தங்களின் உண்மையான இருப்பை மூடி மறைக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லப்போவதில்லை. ஏனெனில், இந்தத் திரைப்படத்திற்கும் எந்தவொரு உள்ளார்ந்த அர்த்தமும் இல்லை. மக்கள் தியேட்டருக்குள் நுழைந்தார்கள், காசை இழந்தார்கள், வெளியே வந்தார்கள். படம் முடிந்தது. அவ்வளவுதான். பேக் அப்.

*****

3 Jul 2026

ஒரு குடத் தண்ணீரும் ஒன்பது கொலைகளும்!

ஒரு குடத் தண்ணீருக்குப் பின்னிருக்கும் ஒன்பது பிணங்கள்!

மனித நாகரிகத்தின் தொடக்கமே நதிக்கரைகளில்தான் நிகழ்ந்தது என்கிறது வரலாறு. ஆனால், அதே மனித குலம் தன் நாகரிக முதிர்ச்சியின் உச்சத்தில், ஒரு தெருக் குழாய் தண்ணீருக்காக ஒன்பது உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது.

நெல்லை மாவட்டம் மூலச்சி கிராமத்தில், இரு பெண்களுக்கிடையே ஒரு குடம் தண்ணீர் பிடிப்பதில் தொடங்கிய சாதாரண வாய்த்தகராறு, இன்று ஐந்து வயது பாலகன் உள்பட ஒன்பது மனிதர்களின் குருதியைக் குடித்துவிட்டுத்தான் ஓய்ந்திருக்கிறது.

2006 இல் தொடங்கிய ஒரு சிறு பொறி, இருபது ஆண்டுகாலமாக அணையாத பேரெரிமலையாக மாறியதன் பின்னணியில் இருப்பது பழிக்குப்பழி என்னும் குருட்டுத் தத்துவம்.

சுப்பிரமணியன், முத்துக்குட்டி, குமார், சுப்பையா, பெருமாள் பாண்டியன் எனத் தொடங்கி, இன்று காளிமுத்து மற்றும் அவரது ஐந்து வயது மகன் ஜெயராஜ் வரை இந்த மரணப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இங்கே மரணங்கள் வெறும் எண்கள் அல்ல; அவை மனித ஈகோவின் குறியீடுகள்.

இவ்வுலகில் உயிர்கள் தோன்றுவதற்குக் காரணமான உன்னத சக்தி தண்ணீர். அது ஜீவராசிகளின் தாகத்தைத் தணிப்பது. ஆனால், அதே தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் காட்டிய சகிப்புத்தன்மையின்மை, இன்று ஒன்பது பேரின் தாகத்தை அடக்க முடியாத மரண வெறியாக மாற்றியிருக்கிறது.

ஒரு குடம் தண்ணீரை விட்டுக்கொடுக்க மனமில்லாத மனிதர்கள், இன்று ஒன்பது உயிர்களையும், தங்கள் குடும்பங்களின் நிம்மதியையும், வாழ்நாள்பூராவும் சிறைச்சாலை கம்பிகளுக்குப் பின்னால் கழிக்கப் போகும் எதிர்காலத்தையும் தாராளமாக விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். இதைவிட ஒரு தத்துவ முரண்பாடு மனித வரலாற்றில் இருக்க முடியுமா?

இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தின் உச்சக்கட்ட அவலம், ஐந்து வயதுச் சிறுவன் ஜெயராஜின் மரணம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தண்ணீர் குழாயடிச் சண்டை நடக்கும்போது இந்தச் சிறுவன் பிறக்கக்கூட இல்லை. யாருக்கோ, எப்போதோ ஏற்பட்ட வன்மத்திற்கும், ஈகோவிற்கும் இந்த அறியாப் பாலகன் என்ன பாவம் செய்தான்?

இங்கேதான் வன்மத்தின் ஆகப்பெரும் சாபம் வெளிப்படுகிறது. வன்மம் என்பது குற்றம் செய்தவனை மட்டும் அழிப்பதில்லை; அவனோடு தொடர்பிலுள்ள, அவன் வழியில் வரும் அத்தனைப் புனிதங்களையும் சேர்த்துப் பொசுக்கிவிடுகிறது.

எப்போது முடியும் இந்த குருதி ஆட்டம்?

"கண்ணுக்குக் கண் என்று நாம் பழிவாங்கத் தொடங்கினால், இந்த ஒட்டுமொத்த உலகமுமே குருடாகிவிடும்" என்றார் மகாத்மா காந்தி.

மூலச்சிகிராமத்தின் இந்தத் துயரம் நமக்குச் சொல்லும் தத்துவம் ஒன்றுதான். சகிப்புத்தன்மை இல்லாத சமூகத்தில், அமைதி என்பது வெறும் பகற்கனவு.

ஒரு குடம் தண்ணீரை விட, மனித உயிரும் மனிதநேயமும் பெரிது. வன்மத்தை வன்மத்தால் அழிக்க முடியாது, அதை மன்னிப்பாலும் சகிப்புத்தன்மையாலுமே வெல்ல முடியும்.

*****

தமிழனைக் கருடபுராணக் கொலைகாரனாக்கியச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 31

அந்நியன்

தமிழனைக் கருடபுராணக் கொலைகாரனாக்கியச் சீரழிவு!

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டின் ஜூன் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச மனநலத்துக்கும், நாட்டின் நீதித்துறையின் மீதான குறைந்தபட்ச நம்பிக்கைக்கும் ஒட்டுமொத்தமாகச் சிதறு தேங்காய் அடித்து, நடு மண்டையில் நச்சென்று பூசணிக்காய் உடைத்தது அந்நியன்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "சமூகத்தில் ஊழலோ, குற்றங்களோ நடந்தால் சட்டப்படி போராட வேண்டும் அல்லது காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு வக்கீலுக்கு மனநோய் இருந்தால் போதும்; அவன் பகலில் சட்டம் பேசிவிட்டு, இரவில் விக்கை மாட்டிக்கொண்டு, கருடபுராணத்தின் பெயரால் நடுத்தெருவில் மனிதர்களைப் பாம்புகளை விட்டும், எருமைகளை ஏவியும், கொதிக்கும் எண்ணெயில் போட்டும் கொடூரமாகக் கொலை செய்யலாம்" என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, அந்நியன் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அந்த அம்பி, அந்நியன், ரெமோ என்ற மூன்று முகம் கொண்ட ஆபத்தான மனப்பிறழ்வு பிம்பமும், கருப்பாக இருந்த சாலைகளில் பெய்ண்ட் டப்பாக்களைக் கொட்டி வண்ணமடித்து, காது கிழியும் வகையில் ஊதப்பட்ட பின்னணி இசைப்பாடல்களும், நகைச்சுவை நாயகனாக வருபவரின் போலித் தத்துவக் கூத்தும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கசாப்புக் கடை நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சட்டக் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருந்து, உங்கள் கண் முன்னால் யாராவது வரி ஏய்ப்பு செய்தாலோ, ரயிலில் அழுகிய சாப்பாடு கொடுத்தாலோ, உங்களுக்கு நீதிமன்றங்கள் தேவையில்லை. நீங்கள் நேராக அந்நியன்.காம் என்ற இணையதளத்தைத் தொடங்கி, சாட்சிகளோ விசாரணையோ இல்லாமல் நேரடியாக மரண தண்டனை நிறைவேற்றலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், மனித உரிமை ஆணையம் போன்ற அற்பமான விஷயங்கள் எல்லாம் தமிழ் சினிமா மாஸ் ஹீரோவுக்குப் பொருந்தாது. இத்திரைப்படத்தால் கும்பிபாகம், அந்தகூபம் என்று நரகத்தின் தண்டனைகளைப் பூலோகத்திலேயே நிறைவேற்றுவது குற்றமல்ல; அது நாட்டைத் திருத்த வந்த புனிதமான சமூகச் சேவை என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சட்டத்தை மதித்து நடப்பதை விடுத்து, "இவனையெல்லாம் அந்நியன் படத்துல பண்ணது மாதிரி கொதிக்கிற எண்ணெயில போடணும்டா" என்று சமூக வலைத்தளங்களில் வன்முறையைக் கொண்டாடும் ஒரு முதிர்ச்சியற்ற, பாசிசத் தலைமுறையின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

மின்னலே படத்தில் ஆள்மாறாட்டத்தைக் கொண்டாடினார்கள் என்றால், அந்நியன் படத்தில் ஒரே மனிதன் தன் மனநோயைப் பயன்படுத்திப் பெண்ணை ஏமாற்றுவதை ரொமான்ஸ் என்று காட்டி விற்றார்கள். ஹீரோ அம்பியாக இருக்கும்போது அவனது பண்பாட்டைக் கேலி செய்யும் நாயகி, அவன் ரெமோ என்ற போலி மாடலிங் பிம்பமாக வந்து அத்துமீறிப் பழகும்போது அவனது காலடியில் சரணடைவாள்.

இந்த உறைபனியூட்டும் நயவஞ்சக ஏமாற்று வேலையை, மிக ஆடம்பரமான உடைகளாலும், பிரமாண்ட காஸ்ட்லியான பாடல்களாலும் மூடி மறைத்து, அவன் காதலுக்காகத் தானே ரெமோவா மாறுறான் என்று பார்ப்பவனை ஏமாற்றுவார் இயக்குனர். ஒரு பெண்ணின் மனதை வெல்ல அவளது பலவீனத்தைப் பயன்படுத்துவதை க்ளாஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்கு நேர்மையின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

போக்கிரி படத்தில் வன்முறையை நகைச்சுவைப் பாத்திரங்களை வைத்து காமெடியாக்கியது போல, அந்நியன் படத்தில் ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரத்தை வைத்து மனிதர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதை மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தார்கள். தன் கண்ணெதிரே ஒருவன் எருமைக் கடாக்களால் மிதிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான், இன்னொருவன் கொதிக்கும் எண்ணெயில் பொரிக்கப்படுகிறான். ஆனால், அதையெல்லாம் பார்க்கும் அந்த நகைச்சுவைப் பாத்திரம் டைமிங் காமெடி செய்து கொண்டிருக்கும்.

ஒரு கொடூரமான தொடர் கொலையைக் கண்டு அதிர்ச்சியடைய வேண்டிய புலனாய்வுத் துறை, பின்னணியில் காமெடி செய்து கொண்டிருந்தால் நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும். குரூரமான வன்முறையை ஹீரோயிசம் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன, மிருகத்தனமான பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்ததில் இந்தச் சினிமாவுக்கு பயங்கர பங்குண்டு.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகி கதாபாத்திரம், பாரம்பரியமான, படித்த பெண்ணாகக் காட்டப்படுவார். ஆனால், அவருக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை ஆராயும் குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. அவர் எப்போதும் வெளிப்புற பளபளப்பை பார்த்து ஏமாறுவதற்கும், உண்மை தெரிந்தவுடன் “ஐயோ அம்பிக்குள்ள அந்நியனா?” என்று பயந்து நடுங்குவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு கதாபாத்திரமாகச் சுருக்கப்பட்டிருப்பார்.

பெண் என்பவள் தனக்கென ஓர் உறுதியான ஒழுக்க நெறியோ, உண்மை எது பொய் எது என்று ஆராயும் திறனோ இல்லாதவள்; அவளிடம் அழகாக ஆங்கிலம் பேசி, காதல் யானை என்று பாடினால், அவள் கொலையாளியாக இருந்தாலும் அவனிடம் தன் இதயத்தைத் தந்து காதல் பூனையாகி விடுவாள் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

அந்நியன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை நடிப்பு அரக்கன் என்ற பிம்பத்தை மீண்டும் உலக அரங்கில் ஏற்றி, அதன் இயக்குநரைப் பிரம்மாண்டத்தின் உச்சமாக்கியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அந்நியன் திரைப்படம் வெளியாகி இத்தனை வருடங்கள் ஆகியும், இன்னும் இந்தியக் குடிமகன் ஒருவன் பொது இடத்தில் எச்சில் துப்புவதற்கு முன்னால் சுற்றும் முற்றும் பார்ப்பதற்கு அதன் இயக்குநர்தான் காரணம். ஆனால், அந்தப் பயம் ஒரு ஐந்து விநாடிகள் மட்டுமே நீடிக்கிறது என்பது வேறு விஷயம்.

அந்நியன் செய்த ஆகப்பெரும் உளவியல் பாதிப்பு என்னவென்றால், அதுவரை மனநலக் குறைபாடுகளைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஊரை, அதை ஒரு மாஸான விஷயமாகப் பார்க்க வைத்தது.

சமூகத்தில் தவறு செய்பவர்களைத் தண்டிக்க ஒரு நீதித்துறை இருக்கிறது என்பதை மறந்து, எல்லோரும் தங்களுக்குள் ஒரு மினி அந்நியனைத் தேட ஆரம்பித்ததுதான் இத்திரைப்படம் ஏற்படுத்திய மிகப்பெரிய சமூகச் சீரழிவு.

ஐந்து பைசா திருடினாலும் கும்பிபாகம் தண்டனை என்று சொல்லி, உலகிலேயே மிகக் கடுமையான கார்ப்பரேட் கவர்னன்ஸ் விதிகளை அமல்படுத்திய அந்நியனால், “நீ நல்லவனாக இருந்தால் உன்னை லூசு என்பார்கள். நீ கொலையாளியாக இருந்தால் உன்னை ஹீரோ என்பார்கள். நீ அழகாக டிரஸ் பண்ணினால் உன்னை ரெமோ என்பார்கள். மொத்தத்தில், நீ நீயாக இருக்கக் கூடாது” என்கிற விநோதத் தத்துவம் பரவியது.

சராசரி மனிதனுக்குள் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் இயலாமை. வரிசையில் நிற்காமல் முந்துபவன், லஞ்சம் வாங்கும் அதிகாரி, ரோடு போடுவதில் ஊழல் செய்யும் கான்ட்ராக்டர் என இவர்களைப் பார்த்து அன்றாடக் குடிமகன் ரத்தக் கொதிப்பு அடைவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அங்கேதான் விச ஊசியை இடம் பார்த்துக் குத்தியது அந்நியன்.

சமூக உளவியல் ரீதியாக, மக்கள் தங்களின் கோபத்தையும், இயலாமையையும் நியாயப்படுத்த இந்த அந்நியன் முகமூடியைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். "நானும் நல்லவன்தான், ஆனா கோபம் வந்தா அந்நியன் ஆயிடுவேன்" என்கிற டயலாக் சர்வ சாதாரணமாக மாறியது.

தவறு செய்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விட, "இவனுக்குப் பயங்கரமான மரணம் கிடைக்க வேண்டும்" என்கிற வன்மத்தை இந்தத் திரைப்படம் சமூக மனநிலையில் விதைத்தது. இன்றைய சமூக ஊடகங்களில் ஒரு தவறு நடக்கும்போது, நெட்டிசன்கள் கோர்ட்டை விடக் கொடூரமான டிஜிட்டல் மரண தண்டனைகளைக் கமெண்ட்டுகளில் வழங்குவதற்கு இந்த அந்நியன் மனநிலை ஒரு முக்கியக் காரணியானது.

அந்நியன் ஒரு சுவாரசியமான சைக்காலஜிக்கல் த்ரில்லர். ஆனால், சமூக ரீதியாக அது மக்களுக்குள் இருக்கும் பாசிச சிந்தனைக்குத் தீனி போட்டது. சட்டம் தன் கடமையைச் செய்யும் வரை காத்திருக்கப் பொறுமையற்ற, உடனடித் தீர்ப்பை விரும்பும் ஒரு அவசர யுகத்துச் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாறுவதற்கு இந்தப் படம் ஒரு வினையூக்கியாகிப் போனது.

நாட்டைத் திருத்த நீதிமன்றங்கள் தேவையில்லை, புராணக் கொலைகளே தீர்வு என்றும், ரெமோ என்று டை கட்டினால் அத்தனை ஏமாற்று வேலைகளையும் ரசிக்கலாம் என்றும், குரூரமான வன்முறையைக் கண்டு சிரிப்பதே மாஸ் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஆசிட் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

2 Jul 2026

இருளின் தத்துவமும், வெளிச்சத்தின் விலையும்!

இருளின் தத்துவமும், வெளிச்சத்தின் விலையும்!

இருட்டு என்பது வெளிச்சத்தின் இல்லாமை என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் தமிழ்நாட்டுக்கோ, இருட்டு என்பது கோடைக்காலத்தின் வருகைக்கான உத்தரவாதம்.

சுவிட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சுவிட்ச் போட்டவுடன், 'இன்று மின்சாரம் வருமா வராதா?' என்று யோசிக்க வைப்பதுதான் நம் ஊர் தத்துவம்.

தமிழகத்தில் கோடைக்காலம் வந்துவிட்டாலே மின்சாரம் போய்விடுகிறது என்பது செய்தி அல்ல; அது ஒரு பிரபஞ்ச விதி.

வெயில் காலத்தில் மனிதர்களுக்குக் குளிர்ச்சி தேவைப்படுகிறது. குளிர்ச்சிக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. பிரபஞ்சமோ சமநிலையை விரும்புகிறது. எனவே, நீங்கள் ஏசியை ஆன் செய்யும்போது, மின்வாரியம் மெதுவாக மெயின் சுவிட்சைக் கீழிறக்கி 'ஓம் சாந்தி' என்கிறது.

விஞ்ஞானம் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால், மின்சார வாரியமோ மனிதனை விசிறியோடு வீட்டு வாசலுக்கு அனுப்புகிறது. இரண்டுமே ஒரு வகையான பயணம்தான்!

விளைவு?

மக்கள் சாலையில் இறங்கி மறியல் செய்கிறார்கள். இருட்டில் அமர்ந்து பேசுவதை விட, கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று கத்துவது அவர்களுக்கு ஆறுதல் தருகிறது போலும். அரசியல் மாறினாலும் அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் மாறுவதில்லையே, அப்புறம் ஏன் இந்த அதிர்ச்சி? என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதா?

உலகில் குறிப்பாகத் தமிழகத்தில் புள்ளிவிவரங்கள் எப்போதும் சுவாரசியமானவை. அவை எதையும் தீர்ப்பதில்லை, ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள மொத்த மின் இணைப்புகள்: 3,52,80,929 அதாவது, வீடு, கொட்டகை, குடோன், விசைத்தறி எல்லாம் சேர்த்து.

தமிழகத்தின் கோடைக்காலத் தேவை 21,000 மெகாவாட்.

நம்மிடம் இருப்பதாகக் காகிதத்தில் உள்ள அளவு 47,238 மெகாவாட். தேவையை விட 26,000 மெகா வாட் அதிகம்தான். ஆனால், அது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் ஹாலோ மேனைத் தேடுவதைப் போல கஷ்டம் பிடித்த வேலை.

சரி, மின்வெட்டு என்றால் அதற்கு ஏதேனும் ஒரே ஒரு காரணமாவது இருக்க வேண்டுமே.

ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக விளக்கங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவற்றுள் சில,

வெயில் தாங்காமல் மின்மாற்றிகள் தற்கொலை செய்துகொள்வது, நிலத்தடி கேபிள்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது, அதையும் தாண்டி, முந்தைய ஆட்சியின் பாவங்கள், மரக்கிளைகள் மின்கம்பிகளை முத்தமிடுவது, மற்றும் சில மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து பியூஸ் கேரியர்களைத் திருடிச் செல்வது.

இந்தக் கடைசி காரணம்தான் கொஞ்சம் இடிக்கிறது. பியூஸ் கேரியரைத் திருடிச் சென்று அவர்கள் என்ன செய்வார்கள்? அதை வைத்து ஏதேனும் புதிய கலைப்படைப்பு உருவாக்குகிறார்களா என்பது பிரபஞ்சத்திற்கே வெளிச்சம்

நாம் இன்னும் இருண்ட காலத்திற்குள் சென்று விடவில்லை என்பதே தத்துவார்த்தமாக நமக்கு உள்ள ஒரே ஆறுதல்.

இப்போதிருக்கும் நிலையில் நாம் என்னதான் செய்வது?

மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இருள் என்பது ஒளியின்மை மட்டுமல்ல, அது சுயசரிதை எழுதிக்கொள்ள ஒரு நல்ல சூழல். நமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்! என்ன செய்யப் போகிறோம் நாம் என்பதற்கான பதில் நம்மிடமே இருக்கிறது.

*****