எக்சிட் போல் கணிப்புகள் – தமிழ்நாட்டின் நிலை என்ன?
தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும்
என்றும், கேரளாவில் கை சின்னம் கைகொடுக்கும் என்றும், வங்காளத்தில் தாமரை மலர்ந்து
ஆக்கிரமிக்கும் என்றும் ஜோசியர்கள், அதாகப்பட்டது, அந்த எக்ஸிட் போல் நடத்தும் மேதாவிகள்
ஆரூடம் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் நான்கு முனை போட்டி என்கிறார்கள்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, புதுவரவான சினிமா கட்சி, அப்புறம் எப்போதுமே இருக்கும் தம்பிமார்கள்
கட்சி. இதில் திமுக கூட்டணிதான் பெரியப்பா என்று பெரும்பாலான கணிப்புகள் சொல்கின்றன.
சில கணிப்புகள் அதிமுகவுக்கு விசில் அடிக்கின்றன. விசிலுக்கும் ஒரு கணிப்பு இலைக்குள்
தாமரையை மலர வைக்கிறது. யாருக்கு எத்தனை சீட் என்பதில் கணிப்புகளுக்கிடையே இருக்கும்
வித்தியாசம், ஒரு சராசரி மனிதனின் சம்பளத்திற்கும் செலவிற்கும் இருக்கும் வித்தியாசத்தை
விட அதிகம்.
கேரளாவில் இடதுசாரிகள் பத்து வருடங்களாகச்
செய்த புரட்சி போதும் என்று மக்கள் கை சின்னத்திற்கு மாற முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
மேற்கு வங்கத்தில் தீதிக்கும் மோடிக்கும் நடந்த
மல்யுத்தத்தில், இம்முறை தாமரை இலை தட்டிப் பறிக்கும் என்கிறார்கள்.
அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பழைய பஞ்சாங்கமே
தொடருமாம்.
நாங்கள் இனி சும்மா கை தட்ட மாட்டோம், மேடையிலும்
ஏறி அமருவோம், என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதாவது,
இனி நாங்கள் வெறும் கூட்டணி அல்ல, அதிகாரப் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இது
எனக்கும் ஒரு லட்டு வேணும் என்று அடம் பிடிக்கும் குழந்தையின் ஆசையைப் போன்றதா அல்லது
நியாயமான கோரிக்கையா என்பதை காலம் மற்றும் ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.
எக்சிட் போல் கணிப்புகளின் தரவுப் பட்டியல்களைப்
பார்க்கும் போது, அவை குழப்பங்களின் தொகுப்பு போல இருக்கிறது. இருந்தாலும் குழப்பங்களுக்கு
மத்தியில் அவற்றைத் தொகுத்தால் முன்னிலை கணிப்பு எப்படி இருக்கிறது என்றால்,
தமிழ்நாட்டில் +120 இடங்களோடு திமுக ஆட்சியைப்
பிடிக்கலாம்.
கேரளாவில் +70 இடங்களோடு காங்கிரஸ் ஆட்சியைப்
பிடிக்கலாம்.
மேற்குவங்கத்தில் +140 இடங்களோடு பாஜக ஆட்சியைப்
பிடிக்கலாம்.
புதுச்சேரியில் +16 இடங்களோடு தேசிய ஜனநாயகக்
கூட்டணி ஆட்சியைப் பிடிக்கலாம்.
ஆனால், உண்மை நிலவரம்?
மே 4ஆம் தேதி வாக்குப்பெட்டிகள் திறக்கப்படும்.
அன்றுதான் தெரியும், கணிப்புகள் எல்லாம் புள்ளிவிவரப் புதிர்களா அல்லது புருடாக்களா
என்று.
அதுவரை தலைவர்கள் அனைவரும் நாங்களே வெல்வோம்
என்று கேமரா முன்னால் தியானம் செய்வார்கள்.
மக்கள்?
அவர்கள் எப்போதும் போலவே விரைவில் பெட்ரோல்
– டீசல் – சிலிண்டர் விலை உயர்வுக்காகக் காத்திருப்பார்கள்.
*****






