18 May 2026

தூக்கம் எனும் அரிய வகைக் கலை – ஒரு யோக நித்திரை எக்ஸ்போஸ்!

தூக்கம் எனும் அரிய வகைக் கலை –

ஒரு யோக நித்திரை எக்ஸ்போஸ்!

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். ஆனால், இந்த ஹோமோ சேப்பியன்ஸ் ரக மனிதர்களுக்குத்தான் அந்தப் பிராப்தம் இல்லாமல் போய்விட்டது.

உருப்படியாக நாலு மணி நேரம் ஆழ்ந்து தூங்கினால் உடல், மனம் எல்லாம் தேறிவிடும் என்பது ஸ்லீப்பிங் தியரி. ஆனால், நடைமுறையில் நமக்கோ கம்ப்யூட்டர் யுகம் என்ற பெயரில் கண்ணைச் சுற்றிக் கருவளையத்தை வளர்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

தூங்க முடியாத சோகத்தில் இருப்பவர்களுக்காகவே உலகெங்கும் இப்போது ஒரு புது பிசினஸ், மன்னிக்கவும், உத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் அறிதுயில் நிலை. அதாவது, தூங்காமலேயே தூக்கத்தின் பலனைப் பெறுவது. அட, இது நம்ம ஊர் சித்தர்களும் முனிவர்களும் பல ஆயிரம் வருஷங்களாக யோக நித்திரை என்ற பெயரில் செய்து வந்ததுதான்! புது மொந்தையில் பழைய கள்.

நம்ம ஊர் பெரியவர்கள் படுக்கச் சொல்லும்போதே இடது பக்கமாக ஒருக்களித்து படு என்பார்கள். ஏன்? இடது பக்கம் படுத்தால், புவிஈர்ப்பு விசை புண்ணியத்தில் நீங்கள் உள்ளே தள்ளிய பிரியாணியும், அதைச் செரிக்கச் சுரக்கும் அமிலமும் அங்கேயே அடங்கி இருக்கும். மல்லாக்கப் படுத்துக் கொண்டு நெஞ்செரிச்சல் என்று கதற வேண்டியிருக்காது. இதயம் சீராக இயங்கும், ரத்த ஓட்டமும் ஸ்மூத் ஆக இருக்கும்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இரவு நேர வேலையில் விழித்திருந்து, கைப்பேசியின் நீல நிற ஒளியைப் பார்த்து, உடலின் உயிரியல் கடிகாரத்தைத் தலைகீழாகத் திருப்பி வைத்திருக்கிறோம். விளைவு, காலையில் விழிக்கும்போது புத்துணர்வுக்குப் பதில் ஏன்டா உயிர் வாழ்றோம்? என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது.

சரி, தொலைத்த தூக்கத்தைத் திரும்பப் பெற என்னதான் வழி?

சவாசனம் என்ற மகா அற்புதமான யோகா போஸ் ஒன்று இருக்கிறது.

அதை எப்படிச் செய்வது என்கிறீர்களா?

நல்ல காற்றோட்டமான இடத்தில் ஒரு விரிப்பை விரித்துப் படுத்துக் கொள்ளுங்கள். இரு பாதங்களுக்கு இடையில் இரண்டடி இடைவெளி இருக்கட்டும். கைகளை உடம்புக்குப் பக்கத்தில், உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்தபடி சரணாகதி மோடில் வைத்துக்கொள்ளுங்கள்.

கால் விரலில் தொடங்கி தலை வரை ஒவ்வொரு உறுப்பாக ஓய்வு எடு என்று ஆர்டர் போடுங்கள்.

இப்போது ஒரு விஷுவலைசேஷன். மலை, அருவி, பறவை சத்தம், தென்றல் என ஒரு சொர்க்கத்தை உங்கள் மனக்கண்ணில் ஓட விடுங்கள். கூடவே ஓர் ஒளிக்கற்றை உங்கள் கால் வழியாக நுழைந்து தலை வரை சென்று உங்களை அமைதிப்படுத்துவதாக நம்புங்கள். நம்பிக்கைதானே எல்லாம்!

மூக்கு வழியாக மூச்சை இழுத்து, நாக்கை இலைச்சுருள் போலச் சுருட்டி வாய் வழியாக மெதுவாக விடுங்கள். இதையும் ஒரு ஐந்து முறை செய்யலாம்.

கடைசியில் வலது பக்கம் திரும்பி மெதுவாக எழுந்து உட்காருங்கள். இந்த இருபது நிமிஷ வித்தையைச் சரியாகச் செய்தால், அது ஆறு மணி நேர ஆழ்ந்த உறக்கத்திற்குச் சமமாம்.

இதனால் என்ன லாபம்?

ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் எஸ்கேப் ஆகிவிடும்.

இதயத் துடிப்பு சீராகும்.

ஆழ்மன அழுக்குகள் கிளீன் ஆகும்.

முக்கியமாக, உங்கள் தோலின் மேல் இருக்கும் அந்த ஏதோ ஒரு அழுத்தம் மற்றும் முகத்தில் இருக்கும் அந்த எரிச்சல் காணாமல் போகும்.

மொத்தத்தில், நேராகப் படுத்து உருப்படியாகத் தூங்க முடியாதவர்கள், இந்த யோக நித்திரை என்ற ஷார்ட்கட் ரூட்டில் போய் புத்துணர்ச்சி அடையலாம். கம்ப்யூட்டர் கர்மாவிலிருந்து தப்பிக்க இதைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது!

என்ன இருந்தாலும் எட்டு மணி நேர தூக்கத்திற்கு எதுவும் ஈடாகாது. ஈடாகாத போது இது கொஞ்சம் ஈடு செய்யும். விசயம் அவ்வளவுதான்.

*****

17 May 2026

நள்ளிரவு மேட்னி! - ஒரு குறுங்கதை

நள்ளிரவு மேட்னி!

சென்னையின் ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடி. அறையில் இருந்த ஒரே ஒரு ஜன்னல் வழியாகப் பார்த்தால், கீழே தெருவிளக்கின் ஒளியில் மழையில் நனைந்தபடி ஒரு கறுப்பு நாய் நின்றிருந்தது. இன்பவேணி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு பனிரெண்டு. கண்ணபிரான் இன்னும் வரவில்லை.

கண்ணபிரான் ஒரு கலைஞன். துரதிர்ஷ்டவசமாக அவனது கலை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிட்டது. அவன் ஒரு தேர்ந்த கைரேகை நிபுணன், ஆனால் அடுத்தவர் பைகளில் இருக்கும் பர்ஸைத் திருடும்போதுதான் அவனது கைரேகைகள் சிறப்பாகச் செயல்பட்டன.

இன்பவேணி ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தாள். இப்போது அவள் பாடுவது இரண்டு பேருக்கு மட்டும்தான். ஒன்று, தூளியில் இருக்கும் குழந்தைக்கு. இன்னொன்று, அவள் படும் துயரங்களைக் கேட்டுப் பழகிப்போன அந்தச் சுவருக்கு.

அவர்களின் வாழ்க்கை ஒரு கிழிந்த இசைத்தட்டு போல ஓடிக்கொண்டிருந்தது. கண்ணபிரான் அடிக்கடி சொல்வான், இன்பவேணி, ஒரு பெரிய டீல் இருக்கு. அது முடிஞ்சா நாம பெரிய இடத்துக்குப் போயிடலாம். அப்புறம் நீ வைரம் பதிச்ச கம்மல் போட்டுக்கிட்டு கச்சேரி பண்ணலாம் என்று.

இன்பவேணி வைரத்தை எதிர்பார்க்கவில்லை, அமைதியான ஒரு தூக்கத்தையே எதிர்பார்த்தாள்.

அந்த இரவு 12 மணிக்குப் பலமாக ஒரு சத்தம் கேட்டது. கதவு திறக்கப்பட்டது. கண்ணபிரான் உள்ளே நுழைந்தான். ஆனால் அவன் தனியாக வரவில்லை. பின்னால் இரண்டு முரட்டு மனிதர்கள். ஒருவன் கையில் கத்தி, இன்னொருவன் கையில் ஒரு லெதர் பேக்.

இதோ இவதான் என் பொண்டாட்டி. நல்லா பாடுவா. இவகிட்ட கொடுங்க, என்றான் கண்ணபிரான். அவன் கண்கள் மதுவினால் சிவந்திருந்தன.

அந்த மனிதர்களில் ஒருவன் முன்னால் வந்தான். இன்பவேணி மேடம், உங்க புருஷன் எங்ககிட்ட 50,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கான். இன்னைக்குத் திருப்பித் தர்றதா சொன்னான். ஆனா அவன்கிட்ட காசு இல்லை. என் பொண்டாட்டி ஒரு பழைய பாட்டைக் கண்டுபிடிச்சு வச்சிருக்கா, அதைக் கொடுத்தா கோடிக்கணக்குல பணம் வரும்னு சொல்லி எங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கான், என்றான்.

இன்பவேணி நடுங்கினாள். கண்ணபிரான் அவளருகே வந்து ரகசியமாகச் சொன்னான், வேணி, அந்தப் பழைய பெட்டியில இருக்கிற பேப்பரை எடு. அந்த ராகம் மட்டும் கிடைச்சா இவங்க நம்மளை விட்டுடுவாங்க.

இன்பவேணி மெதுவாக உள்ளே சென்றாள். அவளிடம் எந்தப் பழைய ராகமும் இல்லை. ஆனால், அவளது அப்பா ஒரு பழைய உயிலை வைத்திருந்தார். அது அவர்கள் ஊரில் இருந்த ஒரு சிறிய நிலத்தின் பத்திரம். கண்ணபிரானைத் தப்பிக்க வைக்க அவள் எதையும் செய்யத் தயாராக இருந்தாள். அந்தப் பத்திரத்தைக் கொண்டுவந்து அவர்களிடம் நீட்டினாள்.

இதுதான் அந்தப் பாட்டு. இதோட மதிப்பு உங்களுக்குத் தெரியாது, என்றாள் இன்பவேணி கண்ணீருடன்.

அந்த மனிதர்கள் அந்தப் பத்திரத்தைப் பார்த்தார்கள். இது என்ன பாட்டா? இது ஏதோ சொத்துப்பத்திரம் மாதிரி இருக்கே, என்று குழம்பினார்கள்.

கண்ணபிரான் அவசர அவசரமாக, ஆமாம், இதுதான் அந்த மியூசிக் நோட்ஸ். இதை எடுத்துட்டுப் போங்க, என்று அவர்களைத் துரத்தினான். அவர்கள் நம்ப முடியாமல் அதை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.

இன்பவேணி தரையில் அமர்ந்து அழுதாள். நம்மளோட கடைசிப் புகலிடமான அந்த நிலத்தையும் கொடுத்துட்டேனே, என்றாள்.

கண்ணபிரான் அவளைப் பார்த்து ஒரு விசித்திரமான சிரிப்பு சிரித்தான்.  நீ ஒன்னும் கவலைப்படாத வேணி, இனிமே நமக்குக் கஷ்டமே இல்லை, என்றான்.

மறுநாள் காலை. இன்பவேணி தூங்கி எழுந்தபோது, கண்ணபிரான் வீட்டில் இல்லை. மேஜை மேல் ஒரு கடிதம் இருந்தது.

இன்பவேணி, அந்த நிலப் பத்திரம் உண்மையில் செல்லாத ஒன்று. அது என் அப்பா அடமானம் வைத்து மூழ்கிப்போன சொத்து. அதை வைத்து நான் அந்த ரௌடிகளிடம் நாடகமாடித் தப்பித்து விட்டேன். ஆனால், நீ எனக்காகச் செய்த அந்தத் தியாகம் எனக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைத்தது. நான் உனக்குத் தகுதியானவன் இல்லை. அதனால் நான் கிளம்புகிறேன். உன் அப்பா உனக்காகச் சேர்த்து வைத்த உண்மையான நகைகள் அந்தத் தூளிக்கு அடியில் இருக்கின்றன. நான் அதைத் தொடவில்லை.

இன்பவேணி பதற்றத்துடன் தூளியைத் தூக்கினாள். அங்கே ஒரு சிறிய பொட்டலம் இருந்தது. அதைத் திறந்தால். உள்ளே நகைகள் இல்லை. பென் டிரைவ்கள்.

ஒவ்வொரு பென் டிரைவ்வாகப் போட்டுப் பார்த்தாள். அவளுக்கு உடலெங்கும் கூசியது. அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. 

கேஸ் அடுப்பைப் பற்ற வைத்தாள். ஒவ்வொரு பென் டிரைவ்வாகப் போட்டு அவை உருகியோடுவதைப்பார்த்துக் கொண்டே இருந்தாள்.

*****

16 May 2026

விரல் நுனி நரகம் – ஒரு டிஜிட்டல் ஜாதகம்!

விரல் நுனி நரகம் – ஒரு டிஜிட்டல் ஜாதகம்!

ஒரு காலத்தில் மனிதர்கள் மண்ணைத் தோண்டினார்கள். பிறகு இயந்திரத்தைத் துடைத்தார்கள். இப்போது கைப்பேசியைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விழித்தவுடன் டூத் பேஸ்ட்டையும் பிரஷையும் தேடுகிறார்களோ இல்லையோ, நோட்டிபிகேஷன் பாரில் யாராவது லைக் போட்டிருக்கிறார்களா என்று தேடுகிறார்கள்.

முன்பு ஒழுக்கம் என்பது அண்டை வீட்டாருடன் சண்டை போடாமல் இருப்பது. இன்று, தெரியாத ஊரில் இருக்கும் ஒருவரைத் திட்டி கமெண்ட் போடாமல் இருப்பதே பெரும் ஒழுக்கம்.

சுதந்திரம் என்பது நினைத்ததை வாந்தி எடுப்பது என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு பொய்யான தகவலைப் பகிர்வது என்பது, ஆயிரம் பேருக்குத் தெரியாமல் டயேரியா மாத்திரைகளைக் கொடுப்பதற்குச் சமம்.

இன்று உலகமே விலையில்லா உலகமாகி விட்டது. இதில் இலவசம் படுத்தும் பாடு படாத பாடாக இருக்கிறது. அதிலும் இந்த இலவசச் செயலிகள். இலவசமாக ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்யும்போது நீங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று தப்புக்கணக்கு போடலாம். அங்கே விற்கப்படுவது நீங்கள் தான்.

உங்கள் புகைப்படம், உங்கள் ரசனை, உங்கள் ரகசியங்கள் என இவை அனைத்தும் விளம்பர நிறுவனங்களின் கல்லாவிற்குப் போகும் எரிபொருள். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது உங்கள் மனைவியை விட கூகுள் அல்காரிதத்திற்கு நன்றாகவே தெரியும்.

இணையத்தினால் எழுந்த பிரச்சனைகளே இன்னும் தீர்ந்த பாடில்லை. அதற்குள் அடுத்த பூதம் கிளம்பியது போலச் செயற்கை நுண்ணறிவு புதுப்புது பிரச்சனைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இன்று செயற்கை நுண்ணறிவு கவிதை எழுதுகிறது, படம் வரைகிறது. நாளை அது உங்களுக்காக முடிவெடுக்கும். அப்போது மனிதத் தீர்ப்பு எங்கே போகும்? இயந்திரம் சொல்வதை அப்படியே கேட்பதற்கு நாம் ஏன் ஆறாம் அறிவோடு அலைய வேண்டும்?

விசயங்கள் இவ்வளவு இருக்கின்றன. இதற்கு மத்தியில் திரைக்குப் பின்னால் இருப்பது ஒரு மனிதன் என்பதை மறந்துவிட்டு, கீபோர்டில் வீரவசனம் பேசுவதுதான் இன்றைய நாகரிகம்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யோசிக்கும் போது இப்படிச் சில எண்ணங்கள் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. பரிணாம வளர்ச்சியில் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பார்கள். இப்போது மீண்டும் ஸ்மார்ட்போனுக்குள் கூனிக் குறுகி அமர்ந்து, அந்தப் பழைய நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.

மனிதர்களின் ஆறாம் அறிவுக்கு எப்போதும் வேலை இருக்க வேண்டும். அதற்கு இந்த இயந்திர அறிவை ஆறாம் அறிவு ஆள வேண்டும். மாறாக ஆறாம் அறிவை இயந்திர அறிவு ஆளக் கூடாது. இன்றைய உலகின் பெரும் கவலை இதுவாகத்தான் இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்?

*****

15 May 2026

எத்தனாலா? தண்ணீரா? – எது முக்கியம்?!

எத்தனாலா? தண்ணீரா? – எது முக்கியம்?!

வாழ்க்கையே ஒரு கலவைதான். இப்போது நம் பெட்ரோலும் அப்படி ஆகிவிட்டது. சமீபகாலமாக எத்தனால் கலந்த பெட்ரோல் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. இதனால், பெட்ரோல் இறக்குமதி குறையும் என்கிறார்கள் ஒரு பக்கம். நிலத்தடி நீர் காலியாகிவிடும் என்கிறார்கள் இன்னொரு பக்கம்.

இதில் எது உண்மை?

எத்தனால் என்றால் என்னவென்றால் சர்க்கரை ஆலைகளின் கழிவான மொலாசஸ் அல்லது மக்காச்சோளம், நெல் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை எரிபொருள். குடிப்பவர்களுக்கு இது கிக் தரும், வண்டிக்கு இது பிக் அப் தரும் என்று நம்பப்படுகிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஐடியா வந்தாலும், இப்போதுதான் அரசு இதற்கு சீரியஸ் லுக் கொடுக்கிறது. தற்போது 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்க வேண்டும் என்பது இலக்கு.

சமூக வலைதளங்களில் ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீர் தேவை என்று வெடிகுண்டுகளை வீசுகிறார்கள். நிஜம் என்னவென்றால், சராசரியாக 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவை. இதுவும் குறைவானது அல்ல!

இதனால் நமக்குத் தேவை எத்தனாலா, பெட்ரோலா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கணக்குப் போட்டுப் பார்த்தால், ஆண்டுக்கு 2,200 கோடி லிட்டர் எத்தனால் தேவை. அதாவது ஒரு டி.எம்.சி எத்தனால். இதைத் தயாரிக்க நமக்குத் தேவைப்படும் தண்ணீர், காவிரி ஆற்றில் ஓடும் ஒட்டுமொத்த நீரை விட பல மடங்கு அதிகம்.

காவிரி நீருக்கே நூறு வருடமாகக் கர்நாடகமும் தமிழ்நாடும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கையில், எத்தனாலுக்காக 5,000 டி.எம்.சி தண்ணீரை எங்கே போய்த் தேடுவது?

பெட்ரோல் இறக்குமதியைக் குறைத்தால் ஆண்டுக்கு 8 முதல் 10 பில்லியன் டாலர் மிச்சமாகும். இது நாட்டுக்கு நல்லது.

எத்தனாலுக்காக கரும்பு விவசாயம் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. விவசாயிகளுக்குப் பணம் கிடைக்கிறது, சரி. ஆனால் நிலத்தடி நீர்? அதுவும் எக்கச்சக்கமாகக் குறைந்து வருகிறது.

ஆக, என்ன நடக்கும்? கரும்பிலிருந்து எத்தனால் எடுத்து பெட்ரோல் போடுவோம். நாளை வண்டி ஓடும், ஆனால் குடிக்கத் தண்ணீர் இருக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

உண்மையைச் சொன்னால், எத்தனால் கலந்த பெட்ரோல் என்பது சாதாரண பெட்ரோலை விட உற்பத்திச் செலவு அதிகம். சுமார் 30% முதல் 50% வரை. ஆனாலும், புவிசார் அரசியல் சூழலில் மற்ற நாடுகளை நம்பியிருப்பதை விட, நம்மூர் கரும்பை நம்புவது மேல் என்று அரசு நினைக்கிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், பெட்ரோலைச் சேமிக்கப்போய் தண்ணீரைத் தொலைத்துவிடக் கூடாது.

பெட்ரோல் தீர்ந்தால் மின்சார வண்டிக்கு மாறலாம். தண்ணீர் தீர்ந்தால் எதற்கு மாறுவது?

இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எத்தனால் கனவு கண்டால், எதிர்காலத்தில் பெட்ரோல் பங்குகளில் தண்ணீர் பாட்டில்களையும், குடிநீர் குழாய்களில் பெட்ரோலையும் தேட வேண்டியிருக்கும்.

*****

14 May 2026

அகம், புறம், அந்தப்புரம் மற்றும் கழிப்பறை – ஓர் அலசல்!

அகம், புறம், அந்தப்புரம் மற்றும் கழிப்பறை – ஓர் அலசல்!

நம் ஆட்கள் பரிணாம வளர்ச்சியில் செல்போன் வரை வந்துவிட்டார்களே தவிர, செப்டிக் டேங்க் விஷயத்தில் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறார்கள்.

மகாத்மா காந்திக்குத் தூய்மை என்பது ஓர் ஆன்மீக அனுபவம். எங்கே சுத்தம் இருக்கிறதோ அங்கே இறைமை இருக்கிறது, என்றார் அவர்.

ரயில்வே மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்து, அங்கிருந்த சுகாதாரச் சீர்கேட்டைப் பற்றி அவர் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதினார்.

இன்று அவர் மட்டும் உயிரோடு இருந்து, நம் ஊர் அரசுப் பேருந்து நிலையக் கழிப்பறைகளைப் பார்த்திருந்தால், மீண்டும் ஒரு சத்தியாக்கிரகத்தையே ஆரம்பித்திருப்பார்.

காந்தியின் பதினெட்டு ஆக்கபூர்வத் திட்டங்களில் தூய்மைக்கு ஒரு தனி இடம் உண்டு. வினோபா பாவே போன்ற அறிஞர்கள் எல்லாம் துப்புரவுப் பணியைச் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்த்தார்கள்.

ஆனால் நாம்?

சுதந்திரம் வாங்கிவிட்டோம், ஆனால் இன்னும் சுத்தம் வாங்கவில்லை.

இந்தியாவில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை விட கழிப்பறை வசதி உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாம். அதாவது, வாட்ஸ்அப்பில் குட் மார்னிங் மெசேஜ் அனுப்ப வசதி இருக்கிறது, ஆனால் காலைக்கடனை கழிக்கத்தான் வசதி இல்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வானளாவிய கட்டடங்களிலோ, 5G வேகத்திலோ இல்லை. அந்த நாட்டின் பொது கழிப்பறையில் தண்ணீர் வருகிறதா என்பதில்தான் இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணி நம் ஊர் சாலைகளைப் பார்த்தால் வளர்ச்சி தெரியும், அதுவே ஒரு பொதுக் கழிப்பறைக்குள் நுழைந்தால் நிஜமான இந்தியா தெரியும்.

என் வீடு சுத்தமாக இருந்தால் போதும், தெரு குப்பையானால் எனக்கென்ன? இதுதான் நம் தேசிய தாரக மந்திரம். வீட்டைத் துடைப்பத்தால் பெருக்கி, அந்த குப்பையை அப்படியே அண்டை வீட்டார் வாசலில் தள்ளிவிடுவது ஒரு கலை. இந்தியக் கலை என்றே அதைச் சொல்லலாம்.

குப்பையைத் தொட்டியில் போடுவது ஏதோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிவது போல ஒரு சாகசச் செயலாக நமக்குத் தெரிகிறது.

பொதுச்சொத்தைப் பாதுகாப்பது என்பது நம் மரபணுவிலேயே இல்லை போலிருக்கிறது. ஒரு கழிப்பறை நன்றாகக் கட்டப்பட்டால், அடுத்த வாரமே அதன் கதவு அல்லது குழாய் மாயமாய் மறைந்துவிடுவது நம் ஊர் மர்மம்.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சுகாதாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பள்ளிக் கழிப்பறையிலேயே மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடும் குழந்தைகளுக்கு நாம் எதைக் கற்றுக்கொடுக்கிறோம்?

தூய்மை என்பது ஏதோ ஒரு நாள் மட்டும் துடைப்பத்தைப் பிடித்துப் புகைப்படம் எடுக்கும் ஈவென்ட் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.

உங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருங்கள், இல்லையென்றால் ஆண்டவன் அங்கே வருவாரோ இல்லையோ, டெங்கு கொசு கண்டிப்பாய் விஜயம் செய்யும்!

*****

13 May 2026

ரீல்ஸும் காலப் பெருவழியின் துவாரங்களும்!

ரீல்ஸும் காலப் பெருவழியின் துவாரங்களும்!

சோஷியல் மீடியாவில் ஒரு நிமிடம் என்பது ஒரு மணி நேரமாக உருமாறும் வித்தைக்கு, காலம்தான் பொறுப்பேற்க வேண்டும், நாம் அல்ல. உண்மையில் காலம் என்பது ஒரு ரப்பரைப் போன்றது. நீங்கள் ரீல்ஸ் பார்க்கும்போது அது சுருங்குகிறது, ஒரு வேலையைச் செய்யத் துவங்ககினால் அது முடிவின்றி நீள்கிறது.

நமது மூளை ஒரு வினோதமான ஆவணக்காப்பாளர். நீங்கள் போனைத் தூர வைத்துவிட்டு, சரி, உருப்படியாக எதையாவது சிந்திப்போம், என்று கண்ணை மூடினால், அது பழைய கோப்புகளைத் தூசி தட்டி எடுக்கிறது.

வெயிலோடு உறவாடி கிரிக்கெட் விளையாடி எட்டு வருடங்கள் கருத்துப் போனதை, அடுத்தத் தெரு அனிதாவுக்காக ஆறு வருடங்கள் செக்குமாடு போலச் சுற்றித் திரிந்ததை, குரூப் 4 தேர்விற்காக நான்கு வருடத்தைப் புத்தகங்களில் புதைத்துக் கொண்டதை, கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறேன் என்று போய் இரண்டு வருடங்கள் கர்ப்ப காலத்தில் இருந்ததை எல்லாம் அப்படியே பவர் பாய்ண்டை விட அழகாக ஸ்லைடு போட்டுக் காட்டும்.

வெயிலோடு உறவாடிய அந்த இந்திய கிரிக்கெட் கனவுக்காலம் உங்களைக் கறுப்பாக்கியிருக்கலாம், ஆனால் வெயிலைத் தாங்கும் தோல் பதனிடுதலை அதுதான் செய்தது.

அடுத்தத் தெரு அனிதாவுக்காகச் சுழன்று சுற்றிய  ஆறு வருடங்கள் வீண் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஆறு வருடங்களில் நீங்கள் பொறுமை எனும் பேராற்றலைக் கற்றுக் கொண்டது நிஜம்.

குரூப் 4 இன் நான்கு வருடங்களும், கர்நாடக சங்கீதத்தின் இரண்டு வருடங்களும் பயனற்றதல்ல. வாழ்க்கையின் நிலையாமையை நீங்கள் அப்போது உணரவில்லை என்றாலும், இப்போது ரீல்ஸ் பார்க்கும்போது ஏற்படும் அதே அர்த்தமற்ற உணர்வை அப்போதே முன்கூட்டியே பயிற்சி செய்திருக்கிறீர்கள்.

இதனால் சொல்ல வருவது என்னவென்றால், குற்ற உணர்வு என்பது ஒரு போதை மருந்து. வீணடித்த காலத்தை நினைத்து வருத்தப்படுவது என்பது, அடுத்த சில மணிநேரங்களை வீணடிப்பதற்கான ஒரு முன் அனுமதிச் சீட்டு.

வாழ்க்கையையே வீணடித்துவிட்டோம் என்ற மிகப்பெரிய துக்கம் வரும்போது, அதைத் தாங்கிக் கொள்ள ஒரு சிறிய துக்கம் தேவைப்படுகிறது. அந்தச் சிறிய துக்கத்தை ஸ்க்ரோல் செய்வதன் மூலம் நாம் அடைகிறோம்.

முழு வாழ்க்கையையும் வீணடித்தவனுக்கு, அடுத்த ஒரு மணிநேரம் என்பது ஒரு ஜுஜுபி. ஏற்கனவே கப்பல் மூழ்கிவிட்டது, இப்போது ஸ்பூனால் தண்ணீரை வெளியேற்றி என்ன பயன்? என்று நினைத்துக்கொண்டு ரீல்ஸ் பார்க்கும் அந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் ஆகச்சிறந்த நிர்வாண நிலை.

காலத்தை வீணடித்துவிட்டோமே என்று கவலைப்படுவதும் ஒரு வகையான கால விரயம்தான். நீங்கள் கவலைப்படும் அந்தப் பத்து நிமிடத்தில் இன்னும் இருபது ரீல்ஸ்கள் பார்த்திருக்கலாம்.

ஒட்டுமொத்த வாழ்க்கையும் வீணாகிவிட்டது என்று தோன்றுகிறதா? சந்தோஷம். ஏனெனில், வீணாவதற்கு இனிமேல் உங்களிடம் வாழ்க்கை மிச்சமில்லை என்ற நிம்மதி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது ஒரு ரீல்ஸ் வீடியோ போன்றதுதான். நீங்கள் அதை ரசித்தாலும், ரசிக்காவிட்டாலும் அது ஓடிக்கொண்டே இருக்கும். முடிவில் வாட்ச் அகைன் என்று கேட்க யாருமில்லை. எனவே, கிரிக்கெட், அனிதா, குரூப் 4, கர்நாடக சங்கீதம், ரீல்ஸ் என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். எல்லாம் ஒரே கிணற்றில்தான் விழுகின்றன.

இப்போது அடுத்த ரீல்ஸைத் தள்ளுங்கள். காலம் உங்களுக்காகக் காத்திருக்காது, ஆனால் இன்ஸ்டாகிராம் அல்காரிதம் காத்திருக்கும்!

*****

12 May 2026

பிழைக்கத் தெரிந்தவன் பிழைப்பான் – ஏஐ எனும் எமதர்மன்!

பிழைக்கத் தெரிந்தவன் பிழைப்பான் – ஏஐ எனும் எமதர்மன்!

உலகம் இப்போது ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்தால் அது தவறு. உலகம் இப்போது ஏஐ வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.

நேரம் மிச்சம், காசு மிச்சம் என்று முதலாளிகள் ஏஐயைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பாவம், ஊழியர்கள்தான் லே ஆப் என்ற ஒற்றைச் சொல்லில் வாசலில் நிற்கிறார்கள்.

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 98 டெக் நிறுவனங்கள் சேர்ந்து 92,272 பேரை டாடா சொல்லி வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றன. பெரிய முதலைகள்தான் இப்படி என்றால், இப்போது சின்னச் சின்ன ஸ்டார்ட் அப் குட்டிகளும் ஊழியர்களைக் கடிக்கத் தொடங்கிவிட்டன.

ஏஐ என்பது ஒரு புத்திசாலியான குழந்தை. அந்தப் புத்திசாலி குழந்தை பலருடைய பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது.

முன்பெல்லாம் 100 பேர் தேவைப்பட்ட ஒரு வேலைக்கு ஏஐயைப் பயன்படுத்தினால் பத்து பேரே போதும் என்று ஆகி விட்டது நிலைமை.

ஒரு லட்சம் வரை செலவழித்துப் பார்த்த வேலையை ஏஐயைக் கொண்டு பத்தாயிரத்தில் முடித்து விடலாம்.

இன்னும் பழைய பெருமை பேசிக்கொண்டு, புதுசாக எதையும் கற்காமல் இருந்தால் அவர்களுக்கு எல்லாம் ஏஐ ஆப்பைத் அதாவது ஆப் அல்ல, நிஜமான ஆப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

பிபிஓ, கஸ்டமர் சப்போர்ட், டிக்கெட் சிஸ்டம் எல்லாம் இப்போது ஏஐயின் கையில். கோடிங் மற்றும் டேட்டா என்டரி பக்கம் இனிமேல் ஆட்களே தேவைப்பட மாட்டார்கள் போலிருக்கிறது.

நிதி ஆயோக் ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறது. 2031 இல் டெக் துறையில் ஊழியர் எண்ணிக்கை 80 லட்சத்திலிருந்து 60 லட்சமாகக் குறையுமாம். இந்த அறிக்கை குறிப்பிடும் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், இது அதிகமாகவே இருக்கும் என்று பீதியைக் கிளப்புகிளார்கள் டெக் துறையில் பழம் தின்று கொட்டைப் போட்ட கோட்டைவான்கள்.

பல மாதங்கள் கஷ்டப்பட்டு ஐடி நிறுவனங்கள் உருவாக்கும் ரிப்போர்ட்டை ஏஐ பதினைந்து நிமிடங்களில் பக்காவாகக் கொடுக்கிறது.

விசயம் இதுதான்.

ஏஐ என்பது ஒரு தீராத பசி கொண்ட பூதம். அது நிமிடத்துக்கு நிமிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் டிகிரி முடித்துவிட்டேன், எனக்கு எல்லாம் தெரியும், எப்போது வேலை தரப் போகிறீர்கள் என்று உட்கார்ந்திருந்தால், ஏஐ வந்து கோவணம் வரை உருவி விட்டுப் போய் விடும்.

அடிப்படை அறிவு என்பது எழுதுதல், படித்தல், கணக்கிடுதல் என்பதோடு ஏஐ அடிப்படைகளை அறிந்திருத்தல் என்பதாகத்தான் இருக்கும். இனி ஏஐ காலத்தின் கட்டாயம். இல்லையென்றால், எல்லாவற்றுக்கும் ஏஐ என்ட் கார்டு போட்டு ஒரு கோடிங் எழுதி விடும். எனவே அப்டேட் ஆகா விட்டால் அவுட்தான்.

*****