30 Jun 2026

சொம்பு ராஜ்ஜியமும் பகுத்தறிவின் பூஜ்ஜியமும்

சீரழித்த சினிமா – 28

நாட்டாமை

சொம்பு ராஜ்ஜியமும் பகுத்தறிவின் பூஜ்ஜியமும்

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டின் நவம்பர் திங்களில், தமிழ்ப் பொதுப்புத்தியின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நவீன ஜனநாயகச் சிந்தனைகளுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நீதிமன்றக் கட்டமைப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாகப் பஞ்சர் போட்டு வெந்தப் புண்ணில் டிஞ்சர் ஊற்றியது நாட்டாமை.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "சட்டத்தின் முன் அனைவரும் சமம், காவல் துறையும் நீதிமன்றமுமே குற்றங்களை விசாரிக்க வேண்டும்" என்ற குறைந்தபட்ச எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு ஊரில் பெரிய நாட்டாமை இருந்தால், அவர் சட்டப் புத்தகங்களைப் படிக்கத் தேவையில்லை; அவர் ஒரு கம்பீரமான பட்டுத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு, தவறு செய்தவன் யாராக இருந்தாலும் என் செம்பைக் கொடு என்று உத்தரவிட்டால் போதும், ஒட்டுமொத்த ஊரே சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்க வேண்டும்" என்ற ஒரு புதுவிதமான நிலப்பிரபுத்துவக் கௌரவ வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, நாட்டாமை திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அந்த பெரிய நாட்டாமை மற்றும் சின்ன நாட்டாமை என்ற இரட்டைப் பாத்திரங்களின் வழியே கட்டியெழுப்பப்பட்ட மீசையை முறுக்கும் போலிப் பாரம்பரிய பிம்பமும், நாயகிகளின் வெறும் குடும்பக் குத்துவிளக்கு மற்றும் பழிவாங்கும் கருவிகளாகச் சுருக்கப்பட்ட வக்கிரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மரத்தடித் தீர்ப்பு மண்ணாங்கட்டி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

உங்களுக்கு ஊரில் செல்வாக்கு இருந்தால் போதும்; உங்களுக்குச் சட்ட ஒழுங்கோ, முறையான விசாரணையோ தேவையில்லை. ஒரு பெண் தன் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்தது என்று புகார் கூறினால், மருத்துவப் பரிசோதனைக்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ போகக் கூடாது. நேராக நாட்டாமையின் வீட்டு வாசலில் வந்து நிற்க வேண்டும். அவர் ஒரு போலியான சாட்சியைப் பார்த்துவிட்டு, "உன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேன்" என்று தன்னிச்சையாகச் சொல்லும் தீர்ப்பைத்தான் தெய்வீக நீதி என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

"நாட்டாமை தீர்ப்ப மாத்து..." என்று ஒரு ஊரே கதறினாலும், ஒருமுறை சொன்ன தீர்ப்பை மாற்ற மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதையே பரம்பரை கௌரவம் என்று சித்தரித்தது இத்திரைப்படம்.

தன் தம்பியே தவறு செய்ததாகப் பொய் வழக்குப் போடப்பட்டபோது, உண்மையை ஆராயாமல் அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்கி ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்கு வரவழைப்பதுதான் நேர்மையான நிர்வாகம் என்று காட்டியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த வக்கிரம்.

விளைவு?

இருபத்தியோராம் நூற்றாண்டிலும் முறையான சட்ட அமைப்புகளை மதிக்காமல், தங்களுக்குத் தோன்றும் தனிநபர் கருத்துக்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் டிஜிட்டல் பஞ்சாயத்து கூட்டி அடுத்தவர்களைத் தீர்ப்பெழுதித் தண்டிக்கும் முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நாட்டாமை படத்தில் ஒரு பித்தளைச் செம்பு மற்றும் நாற்காலியை ஒட்டுமொத்த கிராமத்தின் கௌரவக் குறியீடாக மாற்றி விற்றார்கள். இந்த உறைபனியூட்டும் பிற்போக்குத்தனத்தை, மிக வண்ணமயமான பாடல்களாலும், உணர்ச்சிமயமான வசனங்களாலும் மூடி மறைத்து, அவங்க பாரம்பரியத்தைக் காப்பாத்துறாங்க என்று பார்ப்பவனை ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் கமர்ஷியல் தந்திரம்.

முறையான கல்வியையோ அல்லது விழிப்புணர்வையோ பேசாமல், பரம்பரை நாற்காலியையும், பஞ்சாயத்துச் செம்பையும் கெத்து என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

மற்றொரு பக்கம் நகைச்சுவைக் கதாபாத்திரங்களை வைத்துக் கிராமங்களில் நடக்கும் அத்தனை பாலியல் அநாகரிகங்களையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது இத்திரைப்படம். ஒரு பெண்ணை அவமதிப்பதையும், ஒழுக்கக்கேடான விஷயங்களையும், மனிதத் தன்மையற்ற வக்கிரங்களையும், பெண்களைப் போகப் பொருளாக நடத்துவதையும் என்டர்டெய்ன்மென்ட் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்த நாட்டாமை சாம்ராஜ்ஜியம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகியின் கதாபாத்திரம், நாட்டாமையின் பட்டு வேட்டியை மடித்து வைப்பதற்கும், அவருக்குப் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்பதற்கும், கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் செவக்கும் என்று பாட்டு பாடவும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகவே காட்டப்பட்டது. இன்னொரு நாயகியின் கதாபாத்திரம், வில்லன் குடும்பத்தின் பழிவாங்கலுக்கு உள்ளாகி, தன்மானத்தையும் கௌரவத்தையும் நாட்டாமையின் தீர்ப்பின் மூலம் மட்டுமே மீட்டெடுக்க வேண்டிய ஒரு சுயசார்பற்ற பலிகடாவாகச் சுருக்கப்பட்டது.

பெண் என்பவள் தனக்கென ஒரு தனித்துவமான சிந்தனையோ, காவல் துறையை அணுகும் தைரியமோ இல்லாமல், நாட்டாமையின் வீட்டு ஆண்கள் எடுக்கும் முடிவுகளின் நிழலில் மட்டுமே வாழ வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் மகா வெற்றி என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

நாட்டாமை பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனின் சுப்ரீம் ஸ்டார் பிம்பத்திற்கு ஒரு கிராமியப் பிரம்மாண்டத்தைத் தந்து, அதன் இயக்குநரை ஹிட் இயக்குனர் என்ற நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

படத்தில் நாட்டாமை என்பவர் ஒரு மனிதர் அல்ல; அவர் ஒரு நடமாடும் தர்மதேவதை. அவர் தும்மினால் அது நியாயம், அவர் சொம்பைத் தூக்கிக் கொண்டு போனால் அது தர்மம். "நாட்டாமை தீர்ப்ப மாத்து" என்று யாராவது சொன்னால், உடனே வானமே இடிந்து விழுந்துவிடும் என்கிற ரேஞ்சுக்கு ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

நிஜ வாழ்க்கையிலும் தங்களுக்குப் பிடித்தமான ஒரு தலைவரோ, சாதிப் பெரியவரோ, அல்லது குடும்பத்து ஆணோ என்ன செய்தாலும் அது நியாயம்தான் என்கிற ஒரு குருட்டுத்தனமான அடிமை மனோபாவம் தொடர நாட்டாமை வழிவகுத்தது. மொத்தத்தில் சட்டம், நீதிமன்றம், ஆதாரங்கள் எல்லாவற்றையும் விட "பெரியவர் வாக்கு" முக்கியம் என்கிற காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு புனிதத்தன்மை ஊட்டியது நாட்டாமை.

ஒரு நாட்டாமைக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, கையில் ஒரு பித்தளைச் செம்பு இருக்க வேண்டும். அந்தச் செம்பை வைத்துக்கொண்டு அவர் போடும் தீர்ப்புகள் எல்லாமே, சட்டம் ஒழுங்கைத் தவுடுபொடியாக்கும் ரகம். ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தியவனுக்கு, அவளையே கட்டி வைக்கச் சொல்வது, ஆதாரமே இல்லாமல் ஒருவனை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்று அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

இதைத்தான் நாம் இன்றுவரை வாட்ஸ்அப் பஞ்சாயத்துகளிலும், சமூக ஊடகக் கொலைகளிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எவ்வித விசாரணையும் இன்றி, ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பி, அவரைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் காட்டுமிராண்டித்தனமான உத்திக்கு ராக்கெட் லாஞ்சிங் செய்ததே இந்தத் திரைப்படம்தான்.

நிலப்பிரபுத்துவ வலிமையும் சாதிப் பெருமையும் உடைய ஒருவரே நீதிபதி, அவரே போலீஸ், அவரே தண்டனை வழங்குபவர் என்ற பியூடல் மனநிலையை நியாயப்படுத்திய இத்திரைப்படம்தான் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதை விட, ஒரு நல்ல நாட்டாமை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்ற அடிமைத்தனம் மீண்டும் துளிர்விட உதவியது.

நாட்டாமை என்பது, ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய முற்போக்குச் சிந்தனைகளுக்கு நேர் எதிரானது. அது, சாதியப் பெருமையையும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும், ஆண் மைய வாதத்தையும் சென்டிமென்ட் என்கிற சர்க்கரைப் பாகில் முக்கித் தந்த ஒரு கலப்பட பண்டமாகத் தமிழனின் மன ஆரோக்கியத்தைச் சீரழித்தது.

நாட்டாமை என்பது ஒரு பொறுப்பு என்பதைத் தாண்டி, அது ஒரு குறிப்பிட்ட சமூக, பொருளாதார ஆதிக்கத்தின் அடையாளமாக்கி அதைத் இத்திரைப்படம் அசாத்தியமான மாஸ் மசாலாவுடன் க்ளாமரைஸ் செய்ததில், படித்த இளைஞன் கூட தியேட்டரை விட்டு வெளியே வந்த போது, தன் ஊரிலும் இப்படி ஒரு நாட்டாமைத்தனம் வேண்டும் என்று ஏங்கத் தொடங்கினான். இப்படியாக முற்போக்கு சிந்தனைகளை அப்படியே ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற பெருமை இந்தத் திரைக்கதைக்கு உண்டு.

படத்தில் நாட்டாமை தவறுதலாகத் தீர்ப்பு வழங்கிவிட்டோம் என்று தெரிந்ததும், நெஞ்சு வெடித்து இறந்துவிடுவார். இது ஏதோ மாபெரும் தியாகம் போலவும், குற்ற உணர்ச்சியின் உச்சக்கட்டப் புனித வடிவம் போலவும் காட்டப்பட்டது. தவறு செய்துவிட்டால் அதைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதோ, திருத்திக்கொள்வதோ முக்கியமல்ல; உணர்ச்சிவசப்பட்டு உயிரை விடுவதே கௌரவம் என்கிற ஒரு விபரீதமான உளவியலை இது இளைஞர்கள் மத்தியில் விதைத்தது.

கற்பு, பழிவாங்குதல் என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலேயே பெண்களைச் சித்தரித்த இத்திரைப்படம் தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஒரு கமர்ஷியல் மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமூக உளவியல் ரீதியாக அது கற்பித்தது முற்போக்கோ, பகுத்தறிவோ அல்ல. மாறாக., "ஒருவன் பெரிய ஆள் என்றால், அவன் சொல்வதே சட்டம்; அவன் வைப்பதே தீர்ப்பு" என்கிற பாசிச சிந்தனையின் சினிமாட்டிக் வடிவத்தையே வலிமையாகத் தமிழர்களின் மண்டையில் தேவையில்லாத ஆணியாக அடித்தது.

சட்டத்தை மதிக்காமல் பஞ்சாயத்து மரத்தடியில் தீர்ப்பு வழங்குவதுதான் ஊர்ப்பெருமை என்றும், பெண்ணின் பிறவிப் பயனே ஆண்களின் கௌரவத்தைக் காப்பதும், அந்தக் கௌரவத்துக்குப் பலிகடா ஆவதும்தான் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற பஞ்சாயத்துச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

29 Jun 2026

கோழிச் சண்டையும் கூமுட்டை மண்டையும்

சீரழித்த சினிமா – 27

சண்டக்கோழி

கோழிச் சண்டையும் கூமுட்டை மண்டையும்

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டின் டிசம்பர் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வுக்கும், கல்லூரி மாணவர்களின் படிப்பு நெறிமுறைகளுக்கும் திரையரங்க வாசலிலேயே பிரமாண்ட கல்லறைகள் எழுப்பப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "மதுரைக் காரர்கள் என்றால் எப்போதும் அரிவாளும் ரத்தமுமாகத் திரிவார்கள், சென்னைக்காரர்கள் லோக்கல் ரௌடித்தனம் செய்வார்கள்" என்ற தனித்தனி சினிமாட்டிக் விதிகளைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, "சென்னையில் படிக்கும் ஓர் இன்ஜினியரிங் மாணவன், விடுமுறைக்குத் தன் நண்பனின் ஊரான சிதம்பரத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, பேருந்து நிலையத்திலேயே ஒரு டானை  நடுத்தெருவில் வைத்துப் பந்தாடினால் போதும்; அவனது அப்பாவும் ஊரின் பெரிய புள்ளியாக இருந்தால், ஒட்டுமொத்த குண்டர்களுமே அவர்களது காலுக்குக் கீழே விழுந்து கிடக்க வேண்டும்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர அத்துமீறலை  தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, சண்டக்கோழி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் சட்டையைக் கழற்றத் தயாராக இருக்கும் போலிப் பாய்ச்சல் பிம்பமும், நாயகியின் எந்நேரமும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் வாலுத்தனம் மற்றும் லூசுத்தனம் நிரம்பிய பாத்திரமும், நாயகனின் தந்தையின் பிரம்மாண்டமான முரட்டுக் கௌரவப் பிம்பமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கோழிக்கூடு நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த கல்வி நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு பொறியியல் கல்லூரி மாணவராக இருந்தால், உங்களுக்கு செமஸ்டர் தேர்வுகளோ, ப்ராஜெக்ட்டுகளோ முக்கியமல்ல. சொந்த ஊருக்குத் துரத்தி வரும் ரௌடிகளை நடுரோட்டிலும், கரும்பு வயல்களிலும் வைத்து எப்படித் துவம்சம் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற அற்பமான அமைப்புகள் எல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைக்குப் பொருந்தாது. நகரின் ஆகச்சிறந்த ரௌடி தன் ஆட்களுடன் வந்து வழிமறித்தால், போலீஸைக் கூப்பிடக் கூடாது; தானே ஒரு சண்டைக்கோழியாக மாறி, ஒரு மைக் டைசனாகவோ, அல்லது புரூஸ்லீயாகவோ விஸ்வரூபம் எடுத்து சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். அதுதான் ஆணழகனின் ஆகச்சிறந்த அடையாளம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் கல்லூரிகளுக்குச் சென்று உருப்படியாகப் படிக்காமல், "நாங்கெல்லாம் அந்த ஊர்க்காரங்கடா, இறங்குனா கொத்துக்கறிதான்" என்று தேவையில்லாமல் முறுக்கிக் கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

சண்டக்கோழி படத்தில் ஓர் ஊரின் பெரும்புள்ளி நினைத்தால், ஒட்டுமொத்த மாவட்டத்தின் சட்டத்தையே தன் கையில் வைத்திருக்கலாம் என்ற நிலப்பிரபுத்துவக் கொடுமையை மரியாதை என்ற லேபிளோடு விற்றார்கள்.

இந்த உறைபனியூட்டும் தனிநபர் வழிபாட்டு வக்கிரத்தை, உணர்ச்சிமயமான பின்னணி இசையாலும், பளபளக்கும் பட்டு வேட்டிகளாலும் மூடி மறைத்து, அவர் தப்பு செய்ய மாட்டார், தட்டிக் கேப்பார் என்று பார்ப்பவனை ஏமாற்றுவார் இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு பெரும் புள்ளி நினைத்தால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குப் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் விசித்திரமானது. நாயகியின் கதாபாத்திரம், எந்நேரமும் வால்த்தனமாகவும், லூசுத்தனமாகவும் ஊரிலிருக்கும் எல்லோரையும் வம்பு இழுப்பது, ஹீரோவிடம் வம்படியாகக் காதல் வளர்ப்பது, பொது இடங்களில் அநாகரிகமாகப் பேசுவது என ஒரு ஹைபர் ஆக்டிவிச பிம்பத்தின் உச்சமாகக் காட்டப்பட்டார்.

ஒரு பெண்ணின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவளது அதீதப் பேச்சையும், முதிர்ச்சியற்ற சேட்டைகளையும் ரொம்பக் கியூட் என்று காட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம். இதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் அடுத்த பத்து வருடங்களுக்கு ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கும், தனக்கென ஒரு சுய சிந்தனையற்ற போலித் துறுதுறுப்புக் கொண்ட கதாநாயகிகளின் சீரழிவுப் பாத்திரங்கள் அணிவகுக்கத் தொடங்கின.

சண்டக்கோழி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை ஓர் ஆக்சன் ஹீரோ நாற்காலியில் அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு மாஸ் இயக்குனர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் ஓர் அடி அடிக்கிறான். வில்லன் முப்பது அடி தள்ளிப் போய் விழுகிறான். நியூட்டனின் மூன்றாவது விதி அங்கே கதறி அழ ஆரம்பித்தது. தியேட்டரில் இருக்கும் பதினெட்டு வயது இளைஞனின் அட்ரினலின் சுரப்பி, பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டது போலப் பொங்கி வழிய ஆரம்பித்தது.

சண்டக்கோழி போன்ற திரைப்படங்களுக்கு முன்பு வரை மதுரை என்பது மல்லிகைப் பூவுக்கும், மீனாட்சி அம்மனுக்கும், இட்லிக்கும் புகழ்பெற்ற ஓர் அமைதியான ஊர். ஆனால், அதற்குப் பிறகுதான், மதுரையில் பிறக்கும்போதே குழந்தைகளுக்குத் தாய்ப்பாலோடு மூர்க்கத்தனமாகச் சண்டை போடும் கலையும் கற்றுத்தரப்படுகிறது என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

வம்புச் சண்டைக்குப் போகும் ஹீரோவை, "போய் அடிச்சிட்டு வாப்பா" என்று ரிலாக்ஸாக வழி அனுப்பி வைக்கும் ஒரு விசித்திரக் குடும்பக் கலாச்சாரத்தை இந்தச் சமூகம் வியப்போடு வேடிக்கை பார்த்தது. வன்முறையை ஒரு கலை வடிவம் போலக் காட்டுவதுதான் ஆபத்தானது. அந்த ஆபத்தை மாஸாகவும் பேஷாகவும் செய்தது சண்டக்கோழி.

ஒரு மனிதன் தன் செயல்களின் மூலமே தன் இருப்பை வரையறுக்கிறான். சண்டக்கோழி பாணியில் வாழ நினைக்கும் ஒருவனுக்கு, அவன் ஹீரோ என்று நிரூபிக்க ஒரு பயங்கரமான வில்லன் தேவை. ஆனால் அரியர்ஸ், ரூம் வாடகை, ரேஷன் கியூ, டிராபிக் நெருக்கடி போன்ற பயங்கர வில்லன்களிடம் அதெல்லாம் எடுபடாது. அவற்றையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கவும் முடியாது, சவால் விடவும் முடியாது. இதனால், “நான் சண்டைக்கோழியா? அல்லது சும்மா கூண்டில் இருக்கும் கூடைக்கோழியா?” என்ற குழப்பத்தில், கொசுக்கடியோடு போராட முடியாமல் தவிக்கத் தொடங்கினான் தமிழ் இளைஞன்.

சண்டக்கோழி தமிழ் இளைஞர்களைத் தங்களின் நிஜமான சராசரி வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு இளைஞனும் தனக்குள்ளே ஒரு ஹீரோவை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியே ஒரு காமெடியன் போல வாழ்ந்து மடிய வேண்டிய சினிமாட்டிக் சாபத்தைத் தந்துவிட்டுச் சென்றது!

படிக்கப் போகும் இடத்தில் லோக்கால் தாதாவைப் பந்தாடிச் சண்டை போடுவதுதான் வாலிபம் என்றும், தாவணி போட்ட தீபாவளி என்று பாடினால் அத்தனை அராஜகங்களையும் ரசிக்கலாம் என்றும், மதுரைக் கௌரவமும் உள்ளூர் குண்டர் கலாச்சாரமும் கலந்ததுதான் தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சண்டைக்காரச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

28 Jun 2026

மன்மத ராசாவும் மண்புழுவான சமூகமும்!

சீரழித்த சினிமா – 26

திருடா திருடி

மன்மத ராசாவும் மண்புழுவான சமூகமும்!

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் செப்டம்பர் திங்களில், நடுத்தர தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச விழுமியங்களுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, பொறுக்கித்தனத்தையும் போக்கிரித்தனத்தையும் டேட்டா பேக்கில் ஏற்றிய திரைப்படம்தான் திருடா திருடி.

படிக்காமல் ஊர் சுற்றும் வால்களைப் பெற்றோர் கண்டித்தால், அவர்கள் திருந்தி உருப்பட வழி தேட வேண்டும், என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு பொறுக்கித் தனமான மகன் தனது போக்கிரித்தனத்துக்கு நகைச்சுவையான காரணங்களை வரிசை கட்டிக் கொண்டு, ஒரு பெண்ணை ஸ்டால்க் செய்து, அவளிடமே வம்பு வளர்த்து, கடைசியில் அவளையே காதலிக்க வைக்கலாம்" என்ற ஒரு புதுவிதமான நடுத்தர வர்க்க வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, திருடா திருடி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் ஒல்லியான, எப்போதும் கௌண்டர் கொடுத்து அராஜகம் செய்யும் போலிப் பொறுக்கி பிம்பமும், நாயகியின் முட்டாளாக்கப்படும் ஐடி ஊழியர் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு டாஸ்மாக் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்பவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் வீட்டில் கடைக்குட்டிப் பிள்ளையாக இருந்து, எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக இருந்தால் போதும்; உங்களைக் கண்டிக்கும் அப்பனை வில்லன் என்று நினைக்கலாம். அண்ணனை அவனது பலகீனத்தைப் பயன்படுத்தி அகௌரவத்தில் சிக்க வைத்து விட்டு, அதைத் தந்தை மௌனமாக எதிர்த்தால், வீட்டை விட்டு வெளியேறிவிட்டு நான் சுயமரியாதை உள்ளவன் என்று சீன் போடலாம்.

இதை தமிழ் இளைஞன் எப்படி எடுத்துக் கொண்டான் தெரியுமா? கடைக்குட்டிப் பிள்ளையின் பொறுப்பின்மை என்பது கண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல; அது ஒரு தந்தை தன் மகனைப் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் தலைமுறை இடைவெளி என்று நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் பெற்றோரின் வியர்வை துளிக்குக் கூட மதிப்பளிக்காமல், வெட்டி பந்தா செய்துகொண்டு ஊர் சுற்றும் பல உதவாக்கரைகள் தங்களை ஒரு தியாகியாகக் காட்டிக்கொள்ள கிடைத்த ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள். ஆனால், திருடா திருடி படத்தில் ஒட்டுமொத்தத் திரையரங்கையுமே ஒரு குடிமகன் கூடாரமாக மாற்றி விற்றார்கள்.

படத்திற்கும் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் வரும் அந்த மன்மத ராசா பாடல், தமிழ்நாட்டு இளைஞர்களின் நரம்புகளை எப்படி முறுக்கேற்றியது என்றால், எவன் ஒருவன் நளினமில்லாமல் வெறிபிடித்தாற்போல் கை கால்களை உதறி ஆடுகிறானோ அவனே மாஸ் ஹீரோ என்று காட்டியது.

இந்த உறைபனியூட்டும் நரம்புத் தளர்ச்சி நடனத்தைத் தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டாடியதன் விளைவு, இன்றுவரை தமிழ் சினிமாவில் நல்ல கதைகளோ, மெல்லிசைகளோ தோற்றுப் போய், வெறும் டாஸ்மாக் குத்துப் பாடல்களும், தலைகால் புரியாத குத்தாட்டங்களும் மட்டுமே இருந்தால் படம் ஓடிவிடும் என்ற ஒரு மிக மோசமான ரசனைச் சீரழிவைத் தமிழனிடம் இத்திரைப்படம் விதைத்தது.

மன்மத ராசா மெயின் டிஷ் என்றால், அதற்கு சைட் டிஷ் போல பொண்ணுங்க அழகாக இருக்காங்க, வண்டார்குழலி போன்ற ஆப்பாயில் அரைவேக்காட்டு ஆபாச சைட் டிஷ்களும் போனஸ் பாய்ண்டுகளைப் போலப் படத்தில் உண்டு.

அதுமட்டுமில்லாது திருடா திருடி படம் நகைச்சுவைப் பாத்திரங்கள் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் அத்தனை தில்லுமுல்லுகளையும், திருட்டுத் தனங்களையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது. இதெல்லாம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமப்பா என்ற விட்டேத்தி மனநிலையை மிக நேர்த்தியாக விதைத்தது.

ஓர் இளைஞனை நல்வழிப்படுத்த வேண்டிய நட்பு, பின்னணியில் ஆபாசமாகப் பாடி அசிங்கம் செய்து கொண்டிருந்தால் நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்பதையும், பொறுப்பின்மையையும், ஏமாற்று வேலைகளையும் செம காமெடி என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியையும் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

7ஜி ரெயின்போ காலனி மற்றும் மின்னலே திரைப்படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது.

நாயகியின் கதாபாத்திரமானது இப்படத்தில் படித்துப் பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் தற்சார்பு உடைய பெண்ணாகக் காட்டப்படும். ஆனால், அவருக்கும் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. தன்னைத் துரத்தித் துரத்திக் கொடுமைப்படுத்தும், வேலைவெட்டியற்ற ஒரு லோக்கல் பொறுக்கியின் மீது அவளுக்கு எப்போது காதல் வரும் என்றே அவளுக்கும் தெரியாது படத்தைப் பார்க்கும் நமக்கும் புரியாது.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுயமரியாதையோ, கண்ணியமான வாழ்க்கையோ வாழத் தகுதியற்றவள்; அவள் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் வேலையில் இருந்தாலும், கடைசியில் வீட்டில் உருப்படாத ஒரு சோம்பேறிப் பொறுக்கியை லவ் பண்ணி அவனைத் துரத்துவதே அவளது பிறவிப் பயன் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் கமர்ஷியல் ஹிட் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

திருடா திருடி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை நடுத்தர வர்க்கப் பொறுக்கிகளின் ரோல் மாடல் பிம்பத்தில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

இப்படத்தின் ஆகப்பெரும் சமூகச் சீரழிவு, அதன் பாடல்கள்தான். குறிப்பாக, அந்த ஒரு குறிப்பிட்ட பாடலான மன்மத ராசா. அதுவரை நடனம் என்றால் ஒரு நளினம் இருக்க வேண்டும் என்று நம்பியிருந்த பரதநாட்டிய தேசத்தில், "யார் அதிகமாக உடம்பை முறித்துக் கொள்கிறார்களோ, அவர்களே சிறந்த நடனக் கலைஞர்" என்றொரு புதிய உளவியல் நோய் பரவியது. கல்யாண வீடு, திருவிழா, காதுகுத்து என எங்கு பார்த்தாலும், தங்களின் இடுப்பு எலும்புகள் முறிவதைப் பற்றியோ, சுற்றியிருப்பவர்களின் கண்கள் குத்தப்படுவதைப் பற்றியோ கவலைப்படாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடே கைகளை முன்னும் பின்னும் ஆட்டி பித்து பிடித்தாற்போல் ஆடத் தொடங்கியது.

இசை என்பது ஆன்மாவை அமைதிப்படுத்த வேண்டும் என்பார்கள். ஆனால், 'மன்மத ராசா' ஆன்மாவை உலுக்கி, மூளையின் செல்களை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது.

சுருக்கமாகச் சொன்னால், 'திருடா திருடி' என்பது வெறும் திரைப்படம் அல்ல; அது தமிழ் சமூகத்தின் ரசனைத் தரம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட ஒரு மோசமான ‘மின்னல் தாக்குதல்.

இப்படத்தைப் பார்த்துவிட்டு, "நானும் இப்படித்தான் சுத்துவேன், ஆனா எனக்கும் ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா" என்று நம்பிக் கொண்டிருக்கும் முப்பது, நாற்பது வயது இளைஞர்கள் இன்றும் நம்மிடையே உலா வருவதுதான் இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய ஆகப்பெரும் உளவியல் சீரழிவின் நேரடி சாட்சி.

பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது, அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும் வற்புறுத்துவது போன்ற ஸ்டாக்கிங் முறையை இந்தப் படம் மிகச் சாதாரணமாகக் காட்டியது. பெண்ணின் இல்லை என்ற வார்த்தைக்குப் பின்னால் ஆமாம் என்பது இருக்கிறது என்ற தவறான உளவியல் புரிதலை இது பல இளைஞர்களின் மனதில் விதைத்தது.

ஒரு சுமாரான கதை, கொஞ்சம் ஆபாசம், அதீத வன்முறையான நடனம், பொறுப்பற்ற நாயகன் என இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து, அதற்கு கமர்ஷியல் ஹிட் என்று லேபிள் ஒட்டியதன் விளைவாகக் கமர்ஷியல் தமிழ் சினிமா படு லோக்கல், தரை லோக்கல் என்கிற லெவலுக்குத் தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்வதைக் கமர்ஷியல் ஹிட்டிற்கான பார்முலாவாகப் பார்த்தது.

பெற்றோரை எதிர்த்து அவர்களை நக்கலடிப்பதுதான் வாலிபத்தின் இயல்பு என்றும், மன்மத ராசா என்றும், பொண்ணுங்க அழகா இருக்காங்க என்றும், வண்டார்குழலி என்றும் வெறித்தனமாக ஆடினால் அத்தனை பொறுக்கித்தனங்களையும் ரசிக்கலாம் என்றும், வேலைவெட்டியின்றித் திரிந்து பெண்களைத் துரத்துவதே காதலின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற டாஸ்மாக் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

27 Jun 2026

திரைக்கதையின் பிதாமகன் – கே. பாக்கியராஜ்

திரைக்கதையின் பிதாமகன் – கே. பாக்கியராஜ்

கே.பாக்கியராஜ் ஈரோடு வெள்ளங்கோவிலில் கிருஷ்ணசாமி நாயுடு - அமராவதி தம்பதிக்கு மகனாகப் பிறக்கும்போதே, தனக்கான திரைக்கதையை அவரே எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்.

இல்லையெனில், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து, கிழக்கே போகும் ரயில்பெட்டியில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் முகம் காட்டி, சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வசனம் எழுதி, சட்டென்று புதிய வார்ப்புகள் மூலம் கதாநாயகன் ஆனது எப்படிச் சாத்தியம்?

அன்றைய தமிழ் சினிமா நாயகர்கள் மீசையை முறுக்கிக் கொண்டும், தொடையைத் தட்டிக்கொண்டும் அனல் பறக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவரோ, அடுத்த வீட்டு வாலிபனின் அப்பாவித்தனத்தையும், கள்ளமில்லாத அல்லது கள்ளத்தனம் நிறைந்த புன்னகையையும் மூலதனமாக்கினார்.

ஊமைகளின் மொழியைப் பேச முற்பட்ட ஒரு கை ஓசை இவரைத் தயாரிப்பாளராக்கியது. ஆனால், பேசத் தெரிந்த உலகம் இவரை இயக்குநராகக் கொண்டாடியது.

பாக்கியராஜ் இயக்கிய படங்கள் வெறும் கதைகள் அல்ல; அவை மனித பலவீனங்களின் மீதான நையாண்டிகள்.

மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு எனத் தொடர்ந்த அவரது படங்கள், குடும்ப அமைப்பின் போலித்தனங்களை மிக நாசூக்காகக் கேலி செய்தன.

இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

குருநாதர் பாரதிராஜாவுடன் மீண்டும் இணைந்த ஒரு கைதியின் டைரி கமல் ஹாசனின் இரட்டை வேடத்தால் ஜொலித்தது. ஆனால், அதன் இந்திப் பதிப்பான ஆக்ரி ராஸ்தா மூலம் அமிதாப் பச்சனையும் ராஜேஷ் கன்னாவையும் இயக்கிய பெருமை பாக்கியராஜுக்குக் கிடைத்தது.

இவரது கதைகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற மகுடத்தை இவருக்குப் பெற்றுத் தந்தன.

திரைப்படம் பத்தாதென்று பாக்யா வார இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் பேனாவைப் பிடித்தார். 'வாங்க சினிமாவைப்பற்றி பேசலாம்', 'நீங்க நெனச்சா சாதிக்கலாம்' எனப் புத்தகங்கள் எழுதினார். தமிழக அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பாராட்டுகள் குவிந்தன.

எம்.ஜி.ஆர் பாதியில் விட்டுச் சென்ற ‘அண்ணா நீ என் தெய்வம்’ காட்சிகளை வைத்து, புதுத் திரைக்கதை எழுதி ‘அவசர போலீஸ் 100’ என்று வெளியிட்டாரே, அதுதான் பாக்கியராஜின் உச்சக்கட்ட புத்திசாலித்தனம்.

எம்.ஜி.ஆரே இவரைத் தன் ‘கலையுலக வாரிசு’ என்றார். அதன் விளைவோ என்னவோ, 1989இல் ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்’ தொடங்கி அரசியலிலும் குதித்தார். பின்னர் திமுகவிலும் சில காலம் மின்னி மறைந்தார்.

பாக்கியராஜின் திரைக்கதையைப் போலவே அவரது வாழ்க்கைத் திரைக்கதையும் சுவாரசியமான காதல்களையும், சோகங்களையும் கொண்டது.

உதவி இயக்குநராக இருந்தபோது காதலித்து, 1981இல் மணந்த மனைவி பிரவீணா. ஆனால், மஞ்சள் காமாலை என்ற வில்லன் 1983இல் அவரைப் பறித்துக்கொண்டது.

டார்லிங் டார்லிங் பட நாயகியான பூர்ணிமாவை மறுபடி காதலித்து மணந்தார். மகள் சரண்யாவை பாரிஜாதம் மூலம் அறிமுகப்படுத்தினார். மகன் சாந்தனு சக்கரக்கட்டி மூலம் அறிமுகமாகி இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கால ஓட்டத்தில், கதாநாயகன் அந்தஸ்திலிருந்து உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன் என குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். இவர் கடைசியாக இயக்கி நடித்தது சித்து பிளஸ் 2.

பார்த்திபன், பாண்டியராஜன் போன்ற சுட்டித்தனமான இயக்குநர்களைத் தமிழ் சினிமாவிற்குத் தந்ததே இவரது ஆகச்சிறந்த பங்களிப்பு.

சினிமாக்களில் எத்தனையோ ட்விஸ்ட்களை எழுதிய திரைக்கதை மன்னனின் நிஜ வாழ்க்கை கிளைமாக்ஸ் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சமீபத்தில்தான் கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் திருமணத்திற்குச் சென்று சென்னை திரும்பியிருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் இல்லத்தில், இன்று காலை வழக்கம் போல மார்னிங் வாக் சென்றுவிட்டு வீடு திரும்பியவருக்கு திடீர் நெஞ்சுவலி.

மயங்கி விழுந்தவரை குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட். கடும் மாரடைப்பு. டாக்டர்கள் போராடினார்கள்.

ஆனால், பாக்கியராஜின் லைப் ஸ்கிரீன்பிளே அங்கே முடிவுக்கு வந்தது. சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இவருடைய குருநாதர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்து சரியாக 17 நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் சீடனும் கிளம்பிவிட்டார். குருவும் சீடனும் மேலேயும் ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கான டிஸ்கஷனைத் தொடங்கி விட்டார்களோ என்னவோ?

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைக்கதை மன்னனுக்கு கண்ணீர் அஞ்சலி!

*****

எங்கே உங்கள் அப்பாவைக் காணோம்?

எங்கே உங்கள் அப்பாவைக் காணோம்?

பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகிய இருவரும் தங்களது தந்தை பாரி இறந்த பிறகு, தாங்கள் வாழ்ந்த பறம்பு மலையையும், தங்களது தந்தையையும் நினைத்து உருகிப் பாடிய புகழ்பெற்ற பாடல் ஒன்றுண்டு.

போன வருடம் தந்தை இருந்தாரே, இந்த வருடம் அவர் இல்லையே எனத் தந்தையின் நிழலைத் தேடும் வரிகள் இவை,

"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்,

எந்தையும் உடையேம்; எம்மலையும் எமதே;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்,

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றமும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"      - (புறநானூறு, 112)

சங்க இலக்கியத்தின் மிகச்சிறந்த, உருக்கமான பாடல்களில் ஒன்றான பாரி மகளிரான அங்கவை, சங்கவையின் இப்பாடல், வெறும் போர்க்கால அவலத்தை மட்டும் பேசவில்லை. இதில் ஆழமான இருத்தலியல், சமூகவியல், மற்றும் உளவியல் தத்துவங்கள் பொதிந்துள்ளன.

"அன்று எல்லாம் இருந்தது; இன்று எதுவுமில்லை" என்ற இரண்டு வரிகளுக்குள் மனித வாழ்வின் நிலையாமையையும், அடையாள இழப்பையும் இப்பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது.

இருத்தலியல் தத்துவம் மனிதனின் சுதந்திரம், தனிமை, மற்றும் திடீரென மாறும் வாழ்வின் எதார்த்தத்தைப் பேசுகிறது. இப்பாடலில் ஜீன் பால் சார்த்தர் மற்றும் ஆல்பர்ட் காம்யு ஆகியோரின் இருத்தலியல் சிந்தனைகளின் கூறுகளைக் காண முடிகிறது.

'அற்றைத் திங்கள்' அதாவது, அன்றைய நிலவு இவர்களுக்குப் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.

ஆனால் 'இற்றைத் திங்கள்' அதாவது, இன்றைய நிலவு அதே வெண்ணிலவாக இருந்தாலும், இவர்களின் உலகம் தலைகீழாக மாறிவிட்டது.

நிலவு மாறவில்லை, ஆனால் இவர்களின் இருப்பு மாறிவிட்டது.

தங்களைச் சுற்றியிருந்த உலகம் திடீரென அந்நியப்பட்டு, ஒரு பெரும் சூனியமாக மாறுவதை பாரி மகளிர் உணர்கிறார்கள். இதை அந்நியமாதல் மற்றும் வெறுமை என்கிறது இருத்தலியல்வாதம்.

நேற்றுவரை "எம்மலையும் எமதே" என்று பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைத் தங்களுக்குரியதாகக் கொண்டாடினார்கள். இன்று "யாம் எந்தையும் இலமே" என்று தங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு வளையத்தையும் இழந்து நிற்கிறார்கள் பாரி மகளிர். மனிதர்கள் எந்தவொரு பாதுகாப்பும் அற்ற, கணிக்க முடியாத ஒரு உலகில் எறியப்பட்டிருக்கிறார்கள் என்ற இருத்தலியல் எதார்த்தத்தை இது காட்டுகிறது.

சமூகவியல் ரீதியாக, இப்பாடல் அதிகார மாற்றம், நிலப்பிரபுத்துவப் போர் முறை மற்றும் பெண்களின் சமூக நிலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஒன்றிணைந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டு வீழ்த்தினர். "வென்றெறி முரசின் வேந்தர்" என்ற வரி, வலிமையான அரசு என்ற கட்டமைப்பு எவ்வாறு ஒரு தனிமனிதனின் அல்லது சிறிய சமூகத்தின் சுதந்திரத்தைப் பறிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

"எம்மலையும் எமதே" என்பது ஒரு சமூகத்தின் கூட்டு உடைமையைக் குறிக்கிறது. போர் என்பது நிலத்தையும் அதன் வளங்களையும் பறிக்கும் ஒரு வன்முறைச் செயல். நிலம் கைமாறும்போது, அந்த நிலத்தைச் சார்ந்த மனிதர்களின் ஒட்டுமொத்த சமூக அடையாளமும், வாழ்வாதாரமும் சிதைக்கப்படுகிறது.

தந்தை மற்றும் நிலத்தை இழந்த பெண்கள், அக்கால சமூக அமைப்பில் உடனடியாகப் பாதுகாப்பற்றவர்களாக, நாதியற்றவர்களாக மாறுகிறார்கள்.

ஒரு சமூகப் பேரழிவில் பெண்களே மிகக் கடுமையான உளவியல் மற்றும் சமூக பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்பாடல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இப்பாடல் முழுக்க முழுக்க ஒரு தீவிரமான உளவியல் அதிர்ச்சியை மற்றும் இழப்பின் துயரத்தைப் பதிவு செய்கிறது.

நேற்று இருந்த வாழ்விற்கும் இன்று இருக்கும் வாழ்விற்கும் இடையே உள்ள இடைவெளி மிகக் குறுகியது. பாடலின் படி அது ஒரே ஒரு மாத காலம் அதாவது, ஒரு திங்கள். இந்தத் திடீர் மாற்றத்தை மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தவிப்பு "அற்றைத் திங்கள்... இற்றைத் திங்கள்..." என்ற ஒப்பீட்டில் வெளிப்படுகிறது.

மனித மனம் தனக்கான அடையாளத்தை 'தந்தை' அதாவது அவர் தரும் பாதுகாப்பு மற்றும் 'நிலம்' அதாவது, அது தரும் அடைக்கலம் ஆகியவற்றின் மூலமே கட்டமைக்கிறது.

"எந்தையும் இலமே" என்று கூறும்போது, அவர்கள் தங்கள் வழிகாட்டியையும், வேரையும் இழந்துவிட்ட உளவியல் அநாதை நிலையை அடைகிறார்கள் என்பதை அறிந்து ஓர் உளவேதனை உண்டாகிறது.

நிகழ்காலத்தின் கொடூரத்தைத் தாங்க முடியாமல், மனம் கடந்த காலத்தின் பொன்னான நினைவுகளுக்குள் தஞ்சம் புகுந்து அழுது தீர்க்கிறது. நிலவு இங்கே ஒரு சாட்சியாக நின்று அவர்களின் கடந்த கால மகிழ்ச்சியையும் நிகழ்காலத் துயரத்தையும் இன்னும் அதிகமாக்கிக் காட்டுகிறது.

பாரி மகளிரின் இப்பாடல் வெறும் தனிமனித அழுகை அல்ல. அது அதிகார வெறியால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்களின் உலகளாவிய குரல். காலம், அதிகாரம், மரணம் ஆகியவற்றின் முன்னால் மனிதனின் இருப்பு எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்தும் ஒரு தத்துவப் பிரகடனம்.

*****

வசீகரமானதொரு மனப்பிறழ்வுக் கையேடு!

சீரழித்த சினிமா – 25

மின்னலே

வசீகரமானதொரு மனப்பிறழ்வுக் கையேடு!

இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டின் பிப்ரவரித் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச அக ஒழுக்கத்திற்கும் ஒட்டுமொத்தமாக பை பை சொல்லி விட்டு, காதலுக்காக ஹாய் ஹாய் என எதையும் செய்யலாம் எனக் காட்டியது மின்னலே.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரியில் எதிரியாக இருந்தவன், நிஜ வாழ்க்கையில் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போக வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒருவன் தன் கல்லூரி எதிரியின் திருமணப் பெண்ணை அடைவதற்காக, அமெரிக்காவிலிருந்து வரும் அந்த எதிரியின் பெயரிலேயே ஆள்மாறாட்டம் செய்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்குள்ளேயே புகுந்து ஐந்து நாட்கள் குடும்பம் நடத்தலாம்" என்ற ஒரு புதுவிதமான மென்பொருள் வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, மின்னலே திரைப்படத்திற்கு உண்டு.

இதை ஒரு காதல் காவியம் என்று கொண்டாடுவதை விட, ஒரு தலைமுறையின் மனப்பிறழ்வுக் கையேடு என்று சொல்வதே பொருத்தமானது.

மின்னலே திரைப்படம் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய ஆகச்சிறந்த சமூகவியல் பங்களிப்பு என்னவென்றால்: "ஒரு பெண்ணின் காதல் வேண்டுமென்றால், நீங்கள் நீங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; வேறொருவராக இருந்தால் போதும்." என்பதுதான்.

நாயகனின் நளினமான, அதேசமயம் ஆபத்தான போலி ஐடி பிம்பமும், நாயகியின் ஏமாளி மற்றும் கோமாளிப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு சைபர் கிரைம் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த தகவல் தொழில்நுட்பவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள், ஆனால் அவளுக்கு வேறு ஒருவனுடன் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்தால் போதும்; நீங்கள் நேரடியாக அவளது வருங்காலக் கணவனின் பயோடேட்டாவைத் திருடிவிடலாம். அமெரிக்காவிலிருந்து வரும் அவனாக நீங்களே மாறி, அவளது வீட்டு வாசலில் போய் நிற்கலாம்.

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 419 அதாவது, ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் போன்ற அற்பமான சட்டங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமா மெட்ரோ செக்சுவல் நாயகனுக்குப் பொருந்தாது.

ஒரு பெண்ணை அடைவதற்காக அவளது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், அவளது நம்பிக்கையையும் ஐந்து நாட்களுக்குத் திட்டமிட்டு ஏமாற்றுவது குற்றமல்ல; அது காதலின் தீவிரம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சமூக வலைத்தளங்களில் வேறு ஒருவனின் புகைப்படத்தையும் முகவரியையும் திருடி, போலி கணக்குகள் ஆரம்பித்து பெண்களை ஏமாற்றும் ஓர் ஆபத்தான கேட் பிஷிங் சமூகத்தின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

7ஜி ரெயின்போ காலனியில் பொறுக்கித்தனமாக ஸ்டாக்கிங் செய்தார்கள் என்றால், மின்னலே படத்தில் அதை டை கட்டிய கிளாஸ் ஸ்டாக்கிங்காக மாற்றி விற்றார்கள்.

படத்தில் நாயகன் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் ஊர் சுற்றுவான். வழியில் மழையில் நனையும் நாயகியை மின்னல் ஒளியில் பார்த்ததும், அவளது தொலைபேசி எண்களைத் திருடி, அவளது தோழிகளை டேட்டா பேஸாக்கி, அவளைப் பற்றிய அத்தனை அந்தரங்கத் தகவல்களையும் ஒட்டுக் கேட்டுச் சேகரிப்பான்.

இந்த உறைபனியூட்டும் தனிமனித உரிமை மீறலை மிக அழகான காட்சி அமைப்புகளாலும், மெல்லிய பின்னணி இசையாலும் மூடி மறைத்து, அவன் காதலுக்காகத்தானே பண்றான் என்று பார்ப்பவருக்குக் கொலையாளியை விட ஆபத்தான ஒரு சைபர் குற்றவாளியின் மீது பரிதாபத்தை வரவழைப்பார் இயக்குனர்.

ஒரு பெண்ணின் சுதந்திரத்தை நளினமாகப் பறிப்பதை ரொமான்ஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பாலினக் கண்ணியத்தின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம். இதன் விளைவுதான் இன்ஸ்டாகிராமில் பெண்களின் கணக்குகளை ஸ்டால்க் செய்வதை ஏதோ ஒரு உன்னதக் கலையாக நினைத்துக் கொண்டு அதை இளைஞர்கள் வளர்த்துக் கொண்டதெல்லாம்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், உண்மை தெரிந்து நாயகன் ஓடி ஒளிந்த பிறகு, உண்மையான அந்த நிச்சயிக்கப்பட்ட மணமகன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும், அவனைக் கல்யாணம் செய்யாமல், தன்னை ஏமாற்றிய போலி நாயகனைத் தேடித்தான் நாயகி ஓடுவாள் என்பதுதான்.

விமான நிலையத்தில் வைத்து அந்த நிச்சயிக்கப்பட்ட மணமகனே தன் காதலைத் தியாகம் செய்து, தன் அடையாளத்தைத் திருடியவனிடமே அந்த நாயகியை ஒப்படைப்பார்.

இது பார்ப்பதற்கு காதலின் உன்னதமான தியாகம் போலத் தெரியும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அது தியாகம் அல்ல; அது ஓர் ஏமாளி ஆணின் தற்காப்பு வாதம். "என்னை ஏமாற்றினாலும் பரவாயில்லை, அவன் அழகாகப் பாடினால், டான்ஸ் ஆடினால் அவன் பின்னால் போவதே பெண்ணின் இயல்பு" என்ற ஒரு விசித்திரமான பொதுப்புத்தியை இது சமூகத்தில் விதைத்தது.

நேர்மையாக வாழும் மனிதர்களை விட, ஏமாற்று வேலைகள் செய்து கெத்து காட்டும் ஆண்களுக்கே சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற போலி அறநெறியை இது மிக நுணுக்கமாக இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.

அனைத்துக் கமர்ஷியல் திரைப்படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகியின் கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் போலிப் புன்னகையைப் பார்த்து ஏமாறுவதற்கும், பாடல்களுக்குக் கிளாமராகப் போஸ் கொடுப்பதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகக் காட்டப்பட்டது. நாயகிக்கு என்று தனியாக ஒரு படிப்பு, குடும்பப் பின்னணி இருந்தாலும், அவளைச் சுற்றி அரங்கேறும் இத்தனை பெரிய ஆள்மாறாட்டச் சதியைக் கூடக் கண்டுபிடிக்கத் தெரியாத ஒரு அழகு முட்டாளாகவே அவள் சுருக்கப்பட்டாள்.

பெண் என்பவள் தனக்கென ஒரு பகுத்தறிவோ, உண்மை எது, பொய் எது என்று ஆராயும் திறனோ இல்லாமல், தன் அடையாளத்தை விற்றுத் தன்னை ஏமாற்றும் ஒருவனாக இருந்தாலும், அவன் மேடி என்ற பிம்பத்துடன் இருந்தால் அவனிடம் சரணடைந்துவிட வேண்டும் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாகப் பட்டுவாடா செய்தது.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், மின்னலே என்பது ஓர் ஆபத்தான வைரஸ். அது மியூசிக் என்ற அழகான கோட்டிங் கொடுக்கப்பட்டு, விஷுவல்ஸ் என்ற அழகான பேக்கிங் பண்ணப்பட்டு விற்கப்பட்ட ஒரு கரப்டெட் வெர்ஷன். மக்கள் அதை ரொமாண்டிக் க்ளாசிக் என்று நினைத்து மெண்டல் சிஸ்டத்திற்குள் ஏற்றிக் கொண்டார்கள். ஆனால், அது ஒரு பக்கா மால்வேர்.

மின்னலே பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை சாக்லேட் பாய் பிம்பத்தில் ஏற்றி, அதன் இசையமைப்பாளரை இசையுலகின் மின்னலாக மாற்றி, அதன் இயக்குநருக்கு அறிமுகப் படத்திலேயே ஹிட் அடிக்க உதவியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக, அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு பெண்ணை அடைவதற்காக யாருடைய அடையாளத்தையும் திருடலாம், அதுதான் காதல் என்றும், வசீகரா என்று பாடினால் அத்தனை ஏமாற்று வேலைகளையும் மன்னித்துவிடலாம் என்றும், அடுத்தவனுக்கு நிச்சயகிக்கப்பட்ட பெண்ணைத் தூக்குவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஆள்மாறாட்டச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

26 Jun 2026

மனிதா இன்னும் நீ ஏன் பைத்தியமாகவில்லை?!

சீரழித்த சினிமா - 24

சேது

மனிதா இன்னும் நீ ஏன் பைத்தியமாகவில்லை?!

இரண்டாயிரமாவது ஆண்டின் விடியலுக்குச் சற்று முன்பாக, 1999 ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச மனநலம் சார்ந்த புரிதல்களுக்கும் ஒட்டுமொத்தமாக டைம் பாம் வைத்தது சேது திரைப்படம்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரி மாணவர்கள் ரவுடித்தனம் செய்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" அல்லது "காதல் என்பது பரஸ்பரச் சம்மதத்துடன் மலர வேண்டிய ஒன்று" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு கல்லூரி அளவிலான லோக்கல் தாதா, பயந்து நடுங்கும் ஒரு பெண்ணை மிரட்டிக் காதலிப்பதும், அவளைத் தன் வன்முறைப் பிடிக்குள் வைப்பதும்தான் உன்னதமான காதல்" என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, சேது திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அந்தச் சீயான் என்ற கரடுமுரடான, அதேசமயம் மனநலம் பிறழ்ந்த பிம்பமும், அபிதா குஜலாம்பாள் என்கிற பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மனநலக் காப்பக நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த மாணவர் ஒழுக்கவியல் கல்வி என்ன தெரியுமா? நீங்கள் ஒரு கல்லூரியின் மாணவர் தலைவராக இருந்தால் போதும்; உங்களுக்குப் பாடப்புத்தகங்களோ, பேராசிரியர்களோ தேவையில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கல்லூரிக்குள் புகுந்து சக மாணவர்களை மிரட்டலாம், அராஜகங்களுடன் வலம் வரலாம்.

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 506 அதாவது, மிரட்டல் விடுத்தல் போன்ற அற்பமான சட்டங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமா நாயகனுக்குப் பொருந்தாது.

ஒரு பெண் உங்களைப் பார்த்துப் பயந்து ஓடினால், அவளை நடுத்தெருவில் வைத்து மிரட்டி, அவளது பயத்தையே காதலாக மாற்ற முனைய வேண்டும். இதுதான் ஆண்மையின் கம்பீரம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் கல்லூரிகளில் படித்து முன்னேற வழியில்லாமல், சீயான் பாணியில் தாடி வளர்த்து, தங்களை ஒரு ரப் அண்ட் டப் ரவுடியாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

சேது படத்தில் ஒட்டுமொத்த மனநலப் பிறழ்வையே காதலின் உன்னதக் குறியீடாக மாற்றி விற்றார்கள். ஹீரோ சேதுவுக்கு அடிதடியில் மண்டை உடைந்து, அவர் மனநலக் காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மொட்டை அடித்து அலைவார்.

இந்த உறைபனியூட்டும் கொடூரத்தைக் காட்டிவிட்டு, பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், காதலுக்காகப் பைத்தியம் ஆயிட்டான், என்று பார்ப்பவனுக்குக் கொலையையும் வன்முறையையும் விடக் கொடூரமான ஒரு மனநோயின் மீது போலிப் புனிதத்துவத்தை வரவழைப்பார் இயக்குனர்.

இதன் விளைவுவாகக் காதல் தோல்வி அடைந்தால் நேராக மனநல மருத்துவரிடம் போவதை விடுத்து, சீயான் போலச் சங்கிலியை இழுத்துக்கொண்டு அலையத் துடிக்கும் சினிமாட்டிக் பொதுப்புத்தியைத் தமிழன் வளர்த்துக்கொண்டான்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், மனநலம் குணமாகித் திரும்பி வரும் சேது, தன் காதலி இறந்துவிட்டதை அறிந்து, தன்னைத் தேடி வரும் மனநலக் காப்பக வாகனத்திலேயே ஏறித் திரும்பவும் பைத்தியமாகவே வாழ ஓடிவிடுவார். இதை ஏதோ காதலின் பிரிக்க முடியாத சோக பந்தம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது காதல் அல்ல; அது நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாத ஒரு பலவீனமான ஆணின் கோழைத்தனம். "என் காதலி இல்லை என்றால் நான் ஏன் சாதாரணமாக வாழ வேண்டும்? நான் பைத்தியமாகவே மடிவேன்" என்று ஓடுவதை மாஸாகக் காட்டியது இத்திரைப்படம்.

தமிழ் இளைஞர்களுக்கு காதல் தோல்வி அல்லது துயரம் வந்தால், அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்கக் கூடாது; உங்களை நீங்களே சித்திரவதை செய்து அழித்துக்கொள்ள வேண்டும் என்ற போலித் தற்கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. அபிதா என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் மிரட்டலுக்குப் பயந்து நடுங்குவதற்கும், அவன் பைத்தியமானவுடன் அவனுக்காக உருகி உருகி அழுது தன் உயிரையே விடுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு பலிகடாவாகக் காட்டப்பட்டார். அவளுக்கு என்று தனியாக ஒரு வாழ்க்கை, குடும்பப் பாரம்பரியம் இருந்தாலும், ஹீரோவின் சீயான் பிம்பத்திற்கு முன்னால் அவள் ஒரு மண்பொம்மை போலச் சுருக்கப்பட்டாள்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, பகுத்தறிவோ இல்லாமல், தன்னை மிரட்டிக் கடத்தும் ரவுடியாக இருந்தாலும் அவனது அன்பைப் புரிந்துகொண்டு அவனுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் தேசிய விருது வாங்கும் அளவிற்கு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

சேது பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனுக்குச் சீயான் என்ற நிரந்தரப் பிம்பத்தைத் தந்து, அதன் இயக்குநரை மனநலப் பிரச்சனைகளைக் கொண்டு ஹிட்டடிக்கும் பலமான இயக்குநராக கமர்ஷியல் ஏணியில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு பெண்ணின் சம்மதம் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. "அவன் கெட்டவனா இருந்தாலும் மனசுக்குள்ள குழந்தை சார்" என்ற ஒற்றை வாதத்தைக் காட்டி, கல்லூரிப் பெண்களை மிரட்டுவதும், கடத்துவதும், மனரீதியாக வசிப்படுத்துவதும் தீவிரமான காதல் என்பதாக இங்கே புனிதப்படுத்தப்பட்டது.

மன அழுத்தம் என்பது மருத்துவப் பிரச்சினை அல்ல, அது ஓர் அழகியல் என்று மாற்றிய பெருமை சேதுவையே சாரும். “வாழ்க்கையில் உனக்கு விடிவு காலமே கிடையாது, நீ உருப்பட நினைத்தாலும் இந்தச் சமூகம் உன்னை வாழவிடாது” என்கிற அதீத எதிர்மறை எண்ணத்தை இது இளைஞர்களின் ஆழ்மனதில் விதைத்தது. தங்களுக்கு நடக்கும் சின்னச் சின்ன தோல்விகளுக்கும், தங்களைச் சேதுவாக நினைத்துக்கொண்டு சுய பரிதாபத்தில் மூழ்கும் பலவீனமான மனிதர்களை இந்தப் படம் உற்பத்தி செய்தது.

வாழ்க்கையில் ஏமாற்றம் வந்தால் மீண்டு வராதே. மீண்டும் பைத்தியமாகவே போய்விடு என்பது சேது வழங்கிய ஓர் ஆபத்தான டிப்ரசிவ் சிந்தனை. இளைஞர்களுக்கு ஒரு தோல்வியைக் கையாளும் பக்குவத்தையோ, நம்பிக்கையையோ இந்தப் படம் தரவில்லை. மாறாக, சோகத்தைக் கொண்டாடும், சுய அழிவைத் தேடும் ஒரு போக்கை உருவாக்கியது.

கதாநாயகன் என்பவன் அழகாகவோ, சுமாராகவோ இருப்பது முக்கியமல்ல; எவ்வளவு கொடூரமாகத் தன்னைத் தானே சித்திரவதை செய்துகொள்கிறான் என்பதுதான் அர்ப்பணிப்பு என்று ஒரு புது வித சித்திரவதை முயற்சியை இது துவக்கி வைத்தது.

சமூக எதிர்மறைகளையும் வக்கிரங்களையும் காட்டி, சுபமான முடிவை வைக்கவே கூடாது என்கிற ஒரு தவறான முன்மாதிரியை இது தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தது.

தமிழ்ச் சமூகத்தின் மனநலத்தை ஒரு வித மனச்சோர்வு சார்ந்த கலாச்சாரத்தை நோக்கி நகர்த்திய பெருமையும் இத்திரைப்படத்துக்கு உண்டு. சேது திரைப்படம் தமிழ் சினிமாவின் இலக்கணத்தை உடைத்தது உண்மைதான். ஆனால், அது சமூகத்தின் மனநல இலக்கணத்தையும் ரொம்பவே சிதைத்தது.

ஒரு பெண்ணை மிரட்டிக் காதலிப்பதுதான் உன்னதமான காதல் என்றும், மனநலம் பிறழ்ந்து சங்கிலியால் அடிபடுவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த தியாகம் என்றும், வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிவதே ஹீரோயிசம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

சுருக்கமாகச் சொன்னால், சேது தமிழ் சினிமாவின் கபாலப் பகுதியில் விழுந்த ஒரு பலத்த அடி!

*****