4 Mar 2026

மனமும் பிரிட்ஜிக்குள் இருக்கும் தக்காளியும்!

மனமும் பிரிட்ஜிக்குள் இருக்கும் தக்காளியும்!

பயம் என்பது ஒரு முன்யோசனை முத்தண்ணா. வண்டி ரிப்பேர் ஆவதற்கு முன்பே சர்வீஸ் செய்ய நினைப்பது புத்திசாலித்தனம்தான். ஆனால் வண்டியே இல்லாதபோது, வருங்காலத்தில் டயர் பஞ்சர் ஆனால் என்ன செய்வது என்று யோசிப்பவன் முத்தண்ணா அல்ல, பித்தண்ணா.

நமது மூளைக்குள் ஒரு முத்தண்ணா வகை செக்யூரிட்டி இருக்கிறான். அவனுக்கு ஓவர் டைம் டூட்டி கொடுத்தால் என்னவாகும்? அவன் தூங்க மாட்டான், உங்களையும் தூங்க விடமாட்டான். அவன் போடும் அலாரம்தான் அச்சுறுத்தல். ஐயோ என்னவாகப் போகிறதோ என்கிற ஆர்ப்பாட்டம்.

இந்த முத்தண்ணாவால் நமக்கு இன்று இருப்பதை விட, நாளை என்ன நடக்கும் என்கிற கவலைகள்தான் அதிகம். பையன் பாஸ் செய்வானா? இ.எம்.ஐ கட்ட முடியுமா? ரோபோக்கள் நம் வேலையைப் பிடுங்கிக் கொள்ளுமா? இப்படி இதற்கு ஓர் எல்லையே கிடையாது.

உண்மையில் ஆபத்து இன்னும் வரவில்லை. ஆபத்து வருவதாக ஒரு மாய பிம்பம். அதாவது, வராத மழையை நினைத்து இப்போதே குடை பிடித்துக்கொண்டு வெயிலில் நடப்பது போன்ற முட்டாள்தனம்.

பிரச்சனை வெளியே இருக்கிறது. ஆனால், நாம் தீர்வை எங்கே தேடுகிறோம்? நம்முடைய மண்டைக்குள்! தீர்வு அங்கிருந்து வர வேண்டும்தான். ஆனால் கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாய், கவலைகளும் பயங்களும் கிளம்பி வந்தால்?

மேனேஜர் திட்டுகிறார் என்பது உண்மையான பிரச்சனை.

உள்ளே, அதாவது மனதிற்குள்ளே, அவர் ஏன் திட்டினார்? நாளைக்கு வேலைக்கு ஆப்படித்து விடுவாரோ? வேறு வேலை கிடைக்குமா? கையில் காசு இல்லையே? என்பதெல்லாம் முத்தண்ணா கிளப்பி விடும் கன்னா பின்னா ஐயிட்டங்கள்.

இந்தத் தீர்வுகள் எல்லாமே ரீப்பீட் மோடில் சுற்றக் கொண்டிருப்பவை.  ஒரு கேள்வி, அதற்கு ஒரு பயம், அந்தப் பயத்தைப் போக்க இன்னொரு கற்பனைத் தீர்வு,  கடைசியில் தீர்வு கிடைக்காது, பிபி, டென்சன், டிப்ரசன்தான் கிடைக்கும்.

பிரச்சனைகளுக்கு முத்தண்ணா டைப்பில் மனதிற்குள் தீர்வு தேடுவது என்பது, இருட்டில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போன்றது. அதுவும் அந்தப் பூனை கடிக்கப் போகிறது என்று பயந்து கொண்டு!

நாம் ஏன் இப்படிச் செய்கிறோம்? மனித இனம் தப்பிப் பிழைக்க இது தேவைப்பட்டது. ஆதிமனிதன் புதர் அசையும்போது புலி வருமோ என்று பயந்ததால்தான் இன்று நாம் இருக்கிறோம். ஆனால் இன்று புதர் அசைவது ஏசி காற்றால் என்று தெரிந்தும், நம் மூளை பூகம்பம்தான் வருகிறது என்று அலெர்ட் ஆறுமுகமாகிறது.

வருங்காலத்தைப் பற்றி யோசிப்பதில் தப்பில்லை. ஆனால் அதையே ஒரு பிரச்சனையாக்கி, உள்ளுக்குள்ளேயே மல்யுத்தம் செய்வதுதான் வொர்க் அவுட் ஆகாத விஷயம். எதார்த்தம் என்பது வெளியே இருக்கிறது. போய் கதவைத் திறந்து பாருங்கள், உலகம் அழகாக இருக்கிறது!

என்ன செய்யலாம்?

ஒரு குட்டித் தூக்கம், சிறு நடைபயணம், ஒரு டீ இருக்கிறதா? குடியுங்கள். ஏதாவது ஒரு பஸ் வருகிறதா? கை நீட்டி ஏறி ஒரு ரவுண்ட் போய் விட்டுத் திரும்புங்கள். பிரெஸ்ஸாகி விடுவீர்கள். இன்னும் ஏன் நீங்கள் பிரிட்ஜ்க்குள் கிடந்து அழுகவும் முடியாமல், ஜாமும் ஆக முடியாமல் தவிக்கும் தக்காளியைப் போல இருக்க வேண்டும்?

வருவது வரும் போது வரட்டும். இப்போது நிகழ்காலம் கையில் இருக்கிறது. லெட்ஸ் டேக் இட் அன்ட் டேஸ்ட் இட். எதிர்காலத்தை நினைத்து டோன்ட் வேஸ்ட் இட்?

*****

3 Mar 2026

ஏனிந்த அமெரிக்க ஈரான் போர்?

ஏனிந்த அமெரிக்க ஈரான் போர்?

இது உலகப் போர் அல்ல. ஆனால் அதற்கான எல்லா முஸ்தீபுகளும் இதில் உண்டு. அமெரிக்காவிடம் இருப்பது அதிநவீன ஆயுதங்கள். ஈரானிடம் இருப்பது நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற நிலைபாடு. நடுவில் மாட்டிக்கொண்டு விழிப்பது ஒட்டுமொத்த உலக பொருளாதாரம்.

அமெரிக்கா ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனி போல. அதன் சி.இ.ஓ அதாவது அதன் அதிபர் அவ்வப்போது மாறும்போதெல்லாம் பாலிசிகளும் மாறும். ஈரான் ஒரு பழைய குடும்பம் போல. தலைமுறை தலைமுறையாக ஒரே நிலைபாடு.  அமெரிக்காவுக்கு எண்ணெய் வேண்டும், ஈரானுக்குத் தன் நிலைபாடு முக்கியம்.

யுத்த தந்திரங்கள் இப்போது மாறிவிட்டன. ஒரு காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, ஒட்டகப்படை எல்லாம் இருந்தன. பிறகு டாங்கிகள் வந்தன. இப்போது எல்லாம் டிஜிட்டல் மயம். வீடியோ கேம் வகையறா.

ஒரு பட்டனை அழுத்தினால் ஈரானின் மின்சாரம் கட் ஆகும். அப்படிப்பட்ட சைபர் அட்டாக்குகளும் இந்த யுத்தத்தில் உண்டு.

ஆளே இல்லாமல் ஆகாயத்தில் பறந்து குண்டு போடுவது இப்போதைய போர்களின் ஸ்பெஷாலிட்டி. இது ட்ரோன்களின் வேலை.

ஏனிந்த சண்டை என்றால், அதற்கான பதிலை அவ்வளவு சுலுவாகச் சொல்லி விட முடியாது. இது வெறும் நிலப்பரப்புக்கான சண்டை இல்லை. ஈரானின் நிலம் மற்றும் கடல் பரப்பில் இருக்கும் எண்ணெய்க்கான சண்டை என்பது ஒரு பார்வை. உலக அளவில் ஈரானிடம் இருக்கும் எண்ணெய் வளம் பத்து சதவீதம்.

மேற்படிப் பார்வைப்படி இந்தப் போர் நடப்பதற்குக் காரணம் என்னவென்றால்,

இந்த எண்ணெய்க்கான வணிகம் டாலரின் வழியில் தன் கட்டுபாட்டில் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஈரான் அப்படிச் செய்தால் போர் தொடுக்காமல் பாதுகாப்பையும் வழங்குவேன் என்கிறது அமெரிக்கா. என்னிடம் இருக்கும் எண்ணெய் வளத்தை என் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் நான் வர்த்தகம் செய்வேன், அதைக் கேட்க நீ யார் மாமனா, மச்சானா என்கிறது அமெரிக்காவைப் பார்த்து ஈரான்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகச் சொல்வது மற்றொரு பார்வை. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு இஸ்ரேலுக்குப் பாதகமாக இருக்கும் என்று இஸ்ரேலுடன் அமெரிக்காவும் அஞ்சுகிறது. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அன்றி, அமெரிக்கா நினைக்கும் அளவுக்கு தங்களிடம் எந்த அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளும் இல்லை என்று ஈரான் தலையிலடித்துச் சொல்கிறது. அப்படியெல்லாம் இல்லை, சுரங்கம் தோண்டி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா நெஞ்சிலடித்துச் சொல்கிறது.

எப்படியோ போருக்கு ஒரு காரணமும் ஒரு நியாயம் செய்வதும் தேவைப்படுகிறது. அதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

இந்தப் போர் ஒரு மாதத்துக்குத் தொடரும் என ஜோதிடம் பார்த்து விட்டுச் சண்டையைத் தொடங்கியதைப் போல டிரம்ப் சொல்கிறார். எத்தனை நாட்கள் நடக்கும், எப்போது முடியும், போரின் போக்கு எப்படியெல்லாம் மாறும் என்றெல்லாம் யாரும் சொல்லி விட முடியாது.

இந்தப் போரினால் என்ன நடக்கும்?

பெட்ரோல் விலை ஏறும். விரைவில் அது பங்குகளில் தெரிய வரும். பங்குச்சந்தை கீழே விழும். அதன் படி விழுந்தே விட்டது. படுத்தே விட்டானய்யா நிலைதான் தற்போது பங்குச் சந்தையில்.

அமெரிக்கா தன்னுடைய புது ஆயுதங்களை எல்லாம் பரீட்சை செய்து பார்க்கும். ஈரான் சில அமெரிக்க ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும். இந்தப் போரில் அமெரிக்கா யானைதான். ஆனால் யானைக்கும் அடி சறுக்கினால், அதன் பின் நடப்பதையெல்லாம், கற்பனை செய்து பார்க்க முடியாது.

ஈரானின் முக்கிய தலைவர்களையெல்லாம் காலி செய்து விட்டேன் என்கிறது அமெரிக்கா. அடுத்த தலைவர் அங்கு உருவாக மாட்டாரா என்ன? அப்படி உருவாகி அவர் அமெரிக்கா எனும் யானையின் காதுக்குள் புகுந்து விட்ட எறும்பாகி விட்டால்… அதன் பின் நடக்கப் போவதையும் அறுதியிட்டு உறுதியிட்டு எல்லாம் கூறு முடியாது.

ஹார்முஸ் ஜலசந்திதான் எண்ணெய் உலகின் தொண்டைக் குழி. ஈரான் இங்கே கை வைத்தால் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்து விடும். ஏனென்றால், உலக எண்ணெய்க் கப்பல்களில் இருபது சதவீதம் இதைக் கடந்துதான் போக வேண்டும். ஆக அங்கே பறக்கும் ஒவ்வொரு ஏவுகணைக்கும் பெட்ரோலோ, டீசலோ லிட்டருக்கு ஒரு ரூபாயாவது நிச்சயம் ஏறும்.

இப்போது விமானங்கள் வளைகுடா பகுதிகளுக்குப் பறக்க முடியாது என்று குட் நைட் சொல்லி விட்டன. விமானப் போக்குவரத்து வார் வார் கோ அவே, கம் அகைன் அனதர் டே என்று பாடிக் கொண்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க சப்போர்ட்டில் இருக்கும் சவூதி, துபாய், குவைத்தை ஈரான் தாக்கத் தொடங்கினால், அதன் பிறகு எண்ணெய் கிணறுகள் தீப்பிடிக்க தீப்பிடிக்க தீ பரவட்டும் மொமன்ட்தான். பெட்ரோல் தீயை அணைப்பது சாதாரணப்பட்ட வேலை அல்ல. தீப்பொறி திருமுகமே வந்தாலும் அனல் பறக்கும்.

போர் நடப்பது வளைகுடாவில்தான் என்றாலும், உலகின் அனைத்து நாட்டு மக்களின் குடல்களையும் இந்தப் போர் பதம் பார்க்கும். எண்ணெய் விலை ஏறினால், எல்லா பொருட்களின் விலைக்கும் ஜலதோசம் பிடித்துவிடும். எல்லாம் தாறுமாறாக ஏறத் தொடங்கும். சாமான்யன் என்ன செய்வான்?

இந்த உலகமே ஒரு சர்க்யூட் போல தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் எங்கே ஷார்ட் சர்க்யூட் ஆனாலும் மெயின் ஸ்விட்ச் ஆப் ஆகி விடும். அதனால் உலகப் பெருமந்தம் வரலாம் அல்லது வராமல் போகலாம். யுத்தம் என்பது ஒரு தோல்வி அடைந்த உரையாடல் என்பார்கள். ஆயுதங்களுக்குக் காதுகள் கிடையாது. அதுபாட்டுக்கு அழித்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கும்.

ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் என்று ஒரு தலைவலி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியாத நிலையில், இன்னொரு தலைவலி துவங்கி விட்டது இந்த உலகுக்கு. ஒரு பாராசிட்டாமலோ, அனாசினோ போட்டால் நிற்கக் கூடிய தலைவலி கிடையாது இது. போர் இல்லை என்றால் இந்த அநாவசிய தலைவலிகள் ஏற்படப் போவதே இல்லை.

*****

 

2 Mar 2026

சைக்காலஜிகல் பிரைசிங்

சைக்காலஜிகல் பிரைசிங்

ஆதினி, ஒரு நிமிஷம் நில்லு... அங்கே பார், ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் பாவாடை என்று ஆதினியின் கையைப் பிடித்து இழுத்தாள் எழினி.

ஆதினி அந்த மஞ்சள் நிற போர்டைப் பார்த்தாள். பிரம்மாண்டமான எழுத்துகளில் BUY 1 GET 1 FREE என்று ஜொலித்தது. நடுத்தர வர்க்கத்தின் பலவீனம் அந்த போர்டுகளில் தான் ஒளிந்திருக்கிறது என்பது ஆதினிக்குத் தெரியும்.

எழினி ஒன்றைத் தூக்கினாள். விலையைப் பார், 220 ரூபாய் தான். ஒண்ணு வாங்கினா இன்னொரு பாவாடை ப்ரீ. ரெண்டும் 220 ரூபாய்னா லாபம்தானே?

ஆதினி அதை வாங்கித் திருப்பினாள். அந்த விலைப் பட்டியலை ஒரு ஸ்கேனிங் பார்வை பார்த்தாள். பிறகு அங்கேயே இருந்த வேறொரு பாவாடை பிராண்ட் அலமாரிக்குச் சென்றாள். அங்கே ஆஃபர் போர்டுகள் எதுவுமில்லை. அமைதியாக அடுக்கப்பட்டிருந்த ஒரு பாவாடை செட்டைத் தூக்கிக்கொண்டு வந்தாள்.

இதைப் பாரு எழினி, இது ரெண்டு பாவாடை செட். விலை 200 ரூபாய்.

எழினி சட்டென மனதில் கணக்குப் போட்டாள். இது ஒரு பாவாடை 100 ரூபாய் வருது. ஆனால் ஆஃபரில்…

ஆதினி சொன்னாள், இந்த ஆஃபர்ல ஒரு பாவாடை 110 ரூபாய். அதாவது ஒரிஜினல் விலையை அப்படியே டபுள் ஆக்கிட்டு, ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீன்னு சொல்றான். அந்த ரெண்டு பாவாடை 200 ரூபாயோடு ஒப்பிடும் போது 20 ரூபாய் அதிகமாகவே கொடுக்கிறோம். இலவசம்ங்கிற வார்த்தையில மனசு மயங்கிடுது.

சொல்லி விட்டு ஆதினி சிரித்தாள். இதுக்கு பேருதான் சைக்காலஜிக்கல் பிரைஸிங். ஒரு பாவாடை என்ன விலைன்னு தெரியாத அப்பாவிங்க, இலவசம்ங்கிற வலையில விழுந்து பத்து பதினைஞ்சுன்னு அள்ளிட்டுப் போவாங்க. அந்தக் கம்பெனிக்காரன் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கிறான். ஒண்ணு, அவன் ஸ்டாக்கைக் காலி பண்றான். இன்னொன்னு, அதிக லாபம் பாக்குறான்.

எழினி கையில் இருந்த ஆஃபர் பாக்கெட்டைத் திரும்ப வைத்தாள். நல்லவேளை சொன்னீயே. இலவசம்னாலே அதுல ஏதோ ஒரு தந்திரம் இருக்கும்னு இப்பதான் புரியுது.

மார்க்கெட்ல எதையுமே பக்கத்துல இருக்குற பிராண்டோட ஒப்பிட்டுப் பார்க்காம வாங்கக்கூடாது. அது பாவாடையோ இல்ல வாழ்க்கையோ என்றாள் ஆதினி தத்துவார்த்தமாக.

எழினி இப்போது சிரித்துக் கொண்டே சொன்னாள், அந்த ரெண்டு செட் பாவாடைய 200 ரூபாய்க்கு எடுத்துக்கிட்டு மிச்சமாகும் இருபது ரூபாய்க்கு ஆளுக்கொரு டீ சாப்பிடுவோமா?

தம்ஸ் அப் காட்டினாள் ஆதினி.

*****

1 Mar 2026

உனக்குப் பயம்! விளம்பரத்துக்குக் காசு!

உனக்குப் பயம்! விளம்பரத்துக்குக் காசு!

கௌதமன் தன் மடிக்கணினியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.

பூங்குன்றன் தன் செல்போன் திரையில் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தான். திடீரெனப் பூங்குன்றன் முகம் சுருங்கியது.

கௌதமா ஒரு சந்தேகம். இணையத்தில் பாலியல் ஆரோக்கியம் என்று தேடினால் வரும் முடிவுகள் பயமுறுத்துகிறதே என்றான் பூங்குன்றன்.

கௌதமன் மடிக்கணினியை விட்டு முகத்தைத் திருப்பினான். நீ எங்கே தேடுகிறாய் என்பதுதான் முக்கியம் பூங்குன்றா. கூகுளில் ஒரு சாதாரண தலைவலி என்று தேடினால் கூட, அது கடைசியில் புற்றுநோய் என்று கொண்டு போய் முடிக்கும். இதில் பாலியல் என்றால் கேட்கவா வேண்டும்?

இல்லை கௌதமா, விளம்பரங்கள் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. இதைச் சாப்பிட்டால் குதிரை பலம், பத்தே நாளில் மாற்றம் என்று விதவிதமான லேகியம், மாத்திரைகள். இதையெல்லாம் உண்மையென்று நம்பி யாராவது வாங்குவார்களா? என்றான் பூங்குன்றான்.

கௌதமன் சிரித்தான். வாங்குவார்களே. ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்று கடையில் ஒரு தாள் ஒட்டியிருந்தாலே பாய்ந்து கொண்டு வாங்குவார்கள். இதில் குதிரை பலம், பத்தே நாளில் மாற்றம் என்றால் வாங்காமல் இருப்பார்களா? இது ஒரு வகை பய உளவியல். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் இளைஞர்கள் தங்களுக்கு ஏதோ குறைபாடு இருக்குமோ என்று பயப்படுகிறார்கள். அவர்களது பயத்தை விளம்பரங்கள் காசாக்குகின்றன என்றான்.

பூங்குன்றான் அலைபேசியை ஒளி மங்கச் செய்தான். அப்படியானால் இந்த இணையத் தேடல்கள் எல்லாம் தவறா? என்றான்.

எல்லாம் தப்பில்லை பூங்குன்றா. ஆனால் மக்கள் எதைத் தேடுகிறார்கள் தெரியுமா? ஆரோக்கியமான தகவல்களை விட, பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த குறுக்கு வழிகள் இருக்குமா என்றுதான் அதிகமாகத் தேடுகிறார்கள். அந்த மாதிரியான படங்களைப் பார்த்து விட்டு, அதுதான் உண்மை என்று நம்பி தன்னுடைய உடலை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய புதைகுழி. சிக்கினால் மன உளைச்சல் இலவசம்.

பூங்குன்றன் யோசனையில் ஆழ்ந்தான். இதற்கு என்னதான் தீர்வு என்றான்.

இணையத்தில் வருகின்ற எல்லா விளம்பரமும் உண்மை கிடையாது. பாலியல் ரீதியான சந்தேகங்கள் இருந்தால் ஒரு தகுதியான மருத்துவரை நேரில் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு பத்து ரூபாய்க்கு பத்து மாத்திரை என்கிற சலுகையை நம்பினால் ஆரோக்கியம் தவணை முறையில் போய் விடும். சொல்லிவிட்டுக் கௌதமன் சிரித்தான்.

பூங்குன்றன் இனி நீ இங்கேயே கிட என்று அலைபேசியைக் குழாய் சட்டையின் பைக்குள் போட்டான். இலவசமாக வருகின்ற தகவல்களை உண்மை என்று நம்புவது ஓட்டைப் படகில் கடலைக் கடக்க முயற்சிப்பது போல என்றான்.

தெளிவாகி விட்டாய் பூங்குன்றா. விளம்பரங்களை வியத்தலும் இலமே, பாலியலை இகழ்தல் அதனினும் இலமே என்று கண்ணடித்தான் கௌதமன்.

*****

28 Feb 2026

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு பத்து நிமிடம்!

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு பத்து நிமிடம்!

வார்த்தைகள் ஆபத்தானவை. ஒருவன் சரி என்கிறான். அதையே இன்னொருவன் தவறு என்கிறான். இந்த சரி, தவறுக்குள் எத்தனை அர்த்தங்கள்? அது சம்மதமாக இருக்கலாம், சலிப்பாக இருக்கலாம், அல்லது இப்போதைக்குத் தொலையேன் என்கிற எரிச்சலாகவும் இருக்கலாம்.

நாம் என்ன செய்கிறோம்? அவன் சொன்ன வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். அதன் பின்னாலிருக்கும் அர்த்தத்தை விட்டுவிடுகிறோம். அங்கேயே ஆரம்பிக்கிறது உலகப்போர்.

கவனிக்க வேண்டியது வார்த்தைகளையல்ல, அந்த வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் அர்த்தத்தை. இதைத் திருவள்ளுவர் குறிப்பறிதல் என்கிறார். இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அந்தக் கஷ்டத்தைப் பார்த்தால் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு படுகிற கஷ்டம் உலக மகா கஷ்டமாக இருக்கும்.

புரியவில்லை என்பதுதான் உலகின் மிகப்பெரிய கவலை. படிக்கிறவனுக்குப் பாடப்புத்தகம் புரிவதில்லை. வேலை பார்ப்பவனுக்கு மேனேஜர் புரிவதில்லை. மேனேஜருக்கு முதலாளி புரிவதில்லை. முதலாளிக்குத் தொழிலாளி புரிவதில்லை. கணவனுக்கு மனைவி புரிவதில்லை. மனைவிக்குக் கணவன் புரிவதில்லை. பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் புரிவதில்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் புரிவதில்லை. இது ஓர் உலகளாவிய பிரச்சனை.

இந்தப் புரியவில்லை என்பதற்குப் பின்னால்தான் அர்த்தமே ஒளிந்து கிடக்கிறது. ஓர் அர்த்தம் மட்டுமல்ல, வேறுபல அர்த்தங்களும் ஒளிந்து கிடக்கின்றன. ஆகவே இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று சிந்திப்பதற்கு ஒரு பத்து நிமிடம் செலவு செய்தால், இங்கே பாதி விவாகரத்துகளும், முக்கால்வாசி சண்டைகளும் காணாமல் போய்விடும்.

அந்தப் பத்து நிமிடம்தான் பிரச்சனை. அப்படி பத்து நிமிடம் ஒதுக்க முடியாத அளவுக்கு உணர்ச்சிக் குவியலுக்குள் காணாமல்போய் விடுகிறோம். உணர்ச்சிப் பிழம்பாய்த் தெறித்து புரிய வேண்டிய அர்த்தங்களை புரிய விடாமல் பொசுக்கி விடுகிறோம்.

நம் மூளை ஒரு விசித்திரமான வஸ்து. அது தனக்குத் தெரிந்த தரவுகளை வைத்துக்கொண்டு, எதிராளி சொல்வதற்கு உடனே ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக் கொள்கிறது. அதற்கு வேறு அர்த்தமும் இருக்கும் என்பதை யோசிக்க மறுக்கிறது.

உதாரணத்துக்கு ஆசிரியர் கூப்பிட்ட உடன் மாணவன் என்ன நினைத்துக் கொள்கிறான்? திட்டத்தான் கூப்பிடுகிறார் என்று. பாராட்டவும் கூப்பிட்டிருக்கலாம் அல்லவா! இங்குதான் மைன்ட் செட் பிரச்சனை செய்கிறது. பழகிய மைன்ட் செட்டிலிருந்து வெளியே வர மறுக்கிறது மனம். அதிலிருந்து வெளியே வந்து வேறு அர்த்தமும் இருக்கலாம், வேறொன்றும் நிகழலாம் என்று யோசிக்க ஆரம்பித்தால் வாழ்க்கையின் லாஜிக்கே மாறி விடும்.

என்னைக் கேட்டால் மனம் ஒரு தவறான புரிதல்களின் தொழிற்சாலை என்பேன். அது சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. மனம் சொல்லும் அந்த ஓர் அர்த்தம் மட்டுமா இருக்கும்? வேறு அர்த்தமும் இருக்கும் என்று அதை யோசிக்க பழக்க வேண்டும். இந்த ஒரு பழக்கம் உங்கள் வாழ்க்கையையே மாற்றும். தவறான புரிதல்களிலிருந்து உங்களைக் கரையேற்றும்.

உலகில் உள்ள பாதி பிரச்சினைகள் அவன் சொன்னான், இவள் நினைத்தாள் என்பதில்தான் இருக்கின்றன. ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மௌனத்தை வாசிக்க நமக்குத் தெரிவதில்லை.

அறிவியல் ஒலியின் வேகத்தை 331 மீ/வி என்கிறது. ஒளியின் வேகத்தை 3×108 மீ/வி என்கிறது. ஆனால் தவறான புரிதலின் வேகம் அதைவிட அதிகம். ஒரு வார்த்தை காதில் விழுந்தவுடனேயே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

நிதானமாக எதையும் பத்து நிமிடம் ஒதுக்கி யோசிப்பது என்பது ஒரு கலை. அதுவும் இவன் ஏன் இப்படிச் சொன்னான்? அவன் ஏன் அப்படிச் சொன்னான்? என்று மற்றவர் பக்கம் நின்று யோசிப்பது ஒரு மேதாவித்தனம்.

எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கமலஹாசன் பேசுவதைப் போலத்தான் இதுவும். பார்க்கும் பார்வையைப் பொறுத்து அர்த்தங்கள் மாறும்.

அடுத்த முறை யாராவது உங்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசினால், கோபப்படுவதற்கு முன்னால் மனதிடம் ஒரு பத்து நிமிடம் பாஸ் என்று மனதிற்குள் Pause பட்டனை அழுத்துங்கள். இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? என்று அதனிடமே கேளுங்கள். அதுதானே சிக்க வைக்கப் பார்க்கிறது. ஆகவே அதனிடமே இப்படிக் கேட்டு அந்தச் சிக்கலிலிருந்து வெளியேறுங்கள். ஒரு பெரிய அமைதி பிறக்கும். அந்த அமைதிதான் இந்த உலகத்திற்கும் உங்களுக்கும் இப்போது தேவை.

இது உங்களுக்குப் பிடித்திருந்தால் நான்கு பேரை இதைப் படிக்கக் கூட்டி வாருங்கள். இப்படிச் சொன்னதும் இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டால் நீங்கள் சக்சஸ் ஆகிவிட்டீர்கள் பாஸ். யூ ஆர் Pass. உங்களுக்கு தேர்ச்சி சான்றிதழை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்.

*****

27 Feb 2026

எங்கே போகும் தமிழகத்தின் கடன் பாதை?

எங்கே போகும் தமிழகத்தின் கடன் பாதை?

தமிழர்களாகிய நாம் அனைவரும் லட்சாதிபதிகள் ஆகி விட்டோம்!

கையில் இன்னும் பணம் வரவில்லை என்கிறீர்களா? அது வராது. இது கைக்கு வரும் பணம் அல்ல. தலைக்கு வரும் பணம்.

தமிழ்நாட்டின் கடன் 10 லட்சம் கோடி ரூபாய். அதைத் தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்கள்தொகையால் வகுத்துப் பார்த்தால் தலைக்குத் தோராயமாக ஒன்றரை லட்சம் வருகிறது. அந்தத் தொகையை வைத்துப் பார்த்தால் தமிழர்களாகிய நாமெல்லாம் லட்சாதிபதிகள்தானே.

2012 வரை இருந்த கடன்தொகை தமிழகத்துக்கு நாலரை லட்சம் கோடிக்குச் சற்றுக் கம்மி என்றால், அதுவே ஐந்தாண்டுகள் கழித்து 2026 இல் பார்க்கும் போது, எதையும் கழிக்க முடியாத அளவுக்குக் கூடிப் போய் பத்து லட்சம் கோடியை எட்டி விட்டது.

கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ஆறரை லட்சம் கோடி. அதாவது, கிரிக்கெட்டில் லாஸ்ட் ஓவரில் சிக்ஸராக விளாசுவார்களே, அப்படி எகிறியிருக்கிறது கிராஃப்.

எதிர்க்கட்சிகள் ஓவர் கடன் என்கின்றன. எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன் என்று பெரிய புள்ளிகளை வைத்துதான் பிளான் போடுறோம் என்கிறது தமிழக அரசு.

அப்படியானால் இதில் இருக்கும் லாஜிக்தான் என்ன?

ஐந்து வருடத்துக்கு முன்பிருந்த தஙகம் விலை இப்போது டபுள். அதே போக்கில் இந்தக் கடனும் டபுள் என்று சொல்வது ஒரு வகை லாஜிக்.

ஏழு ரூபாய் டீ கூட இப்போது பனிரெண்டு ரூபாய் என்பது இதே லாஜிக்தான். இது பணமதிப்பு சரிந்துவிட்டது என்று சொல்லும் பண வீக்க லாஜிக்.

மத்திய அரசுக்கே 197 லட்சம் கோடி கடன் இருக்கும் போது தமிழக அரசுக்கு இருப்பது கொசுறுதான் என்பது வேறொரு வகை லாஜிக்.

மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வைத்து பணத்தை அச்சடித்துக் கொள்ளும். தமிழக அரசால் அது முடியாது.

மத்திய அரசுக்கு பெல், ஐஓசி, ஓஎன்ஜிசி என்று டிவிடென்ட் தரும் கம்பெனிகள் அதிகம். தமிழக அரசுக்கு கடனில் தத்தளிக்கும் கம்பெனிகள்தான் அதிகம். ஆகையால் மத்திய அரசுக்கு இருக்கும் கடனும் தமிழக அரசுக்கு இருக்கும் கடனும் ஒன்றல்ல. மொத்தத்தில் கடன் என்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல.

ஏனிப்படி ஆகிறது தமிழகப் பொருளாதாரம்?

தமிழகப் பொருளாதாரத்தைப் பொதுவாக பொருளாதாரப் புள்ளிகள் விண்டோ பிரேக் எக்கானமி என்கிறார்கள். அதாவது கண்ணாடியை உடைப்பதும், அப்புறம் அதை மாற்றுவதும் என்று இதற்கு அர்த்தம். அதை ஏன் உடைப்பானேன்? அதை ஏன் மாற்றுவானேன்? உடைத்தால்தானே அல்லது உடைந்தால்தானே மாற்ற முடியும். உடைக்காமல் மாற்ற முடியாதே. ஆனால் இரண்டுமே பொருளாதாரக் கணக்கில் வேலைதான். தி கிட் படத்தில் சார்லி சாப்ளின் செய்வாரே, அப்படி.

அப்படி சாலையைப் போட்டு, ஒரே வருடத்தில் அது ஜல்லியடித்தால் திரும்பவும் சாலையைப் போட்டுக் கணக்கு எழுதினால் கணக்கில் புள்ளி ஏறும், சொத்து டவுன்சைடில் பிரயாணிக்கும்.

ஒரு கட்டிடத்தைக் கட்டிப் பத்து வருடத்தில் மீண்டும் இடித்துக் கட்டினால் அதுவும் இதே வகையறாத்தான்.

ஒரு சாலை என்றால், ஒரு கட்டிடம் என்றால் அதற்கான ஆயுட்காலம் என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஆயுட்காலம் வரை அதை வாழ விட வேண்டும். இடையிலேயே கொன்று போட்டு உயிர் கொடுக்கக் கூடாது.

அப்புறம், இலவசங்களுக்கு அதிகம் செலவு செய்கிறது தமிழக அரசு என்கிற வாதமும் உண்டு. ஏழைகளுக்குக் கொடுத்தால் அது வீண் செலவு, பணக்காரர்களுக்குக் கொடுத்தால் அது சலுகையா என்கிற எதிர்வாதமும் இதற்கு உண்டு.

இதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அரசாங்கம் ஒரு கையில் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்கிறது. இன்னொரு கையில் அதே வீட்டுக்காரர் டாஸ்மாக்கில் அந்தப் பணத்தை ரிவர்ஸ் கியர் போட்டுக் கொண்டு போய் கொட்டுகிறார். சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்குச் செலவு செய்கின்ற பணம், மது வருவாய் வழியாக மறுபடியும் அரசாங்கத்துக்கே வந்து விடுகிறது என்று ஆதங்கப்படும் சமூக மற்றும் பொருளாதார ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆதங்கப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஆக, என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்?

பல நாடுகள் கடன் வாங்குகின்றன. பல மாநிலங்கள் கடன் வாங்குகின்றன. உண்மைதான். ஆனால், கடன் வாங்காத நாடுகளும், மாநிலங்களும் இருக்கின்றன. வருவாய் பற்றாக்குறை இல்லாமல் பட்ஜெட் போடும் அரசுகளும் இருக்கின்றன. ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கோடு இருக்கும் தமிழ்நாடு அரசு கடனில்லாத பட்ஜெட் என்ற ஓர் இலக்கை ஏன் நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் இப்போதைக்கான டிரில்லியன் டாலர் கேள்வி.

*****

26 Feb 2026

எளிமை, நேர்மையின் ஊற்றுக்கண் தோழர் நல்லகண்ணு!

எளிமை, நேர்மையின் ஊற்றுக்கண் தோழர் நல்லகண்ணு!

இந்த மனிதரைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது? அரசியலில் புனிதம் என்ற வார்த்தை இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு இவர்தான் ஆகச்சிறந்த சாட்சி.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. நேர்மையின் ஒளி. எப்போதும் நிமிர்ந்த நடை. இவருடைய எளிமையைப் பார்த்தால், கார்ப்பரேட் கார்களில் பவனி வரும் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்குக் காய்ச்சலே வந்துவிடும். இன்றைய அரசியல்வாதிகளின் ஒரு நாள் டீ செலவில், நல்லக்கண்ணு ஐயா ஒரு வருடம் குடும்பம் நடத்திவிடுவார். அவ்வளவு எளிமை. மனிதர்களுடன் பழகுவதில் அவ்வளவு இனிமை.

ஒரு முறை தஞ்சாவூரில் ஐயா நல்லக்கண்ணுவைப் பார்க்கும் வாய்ப்பு. அப்படியே அதே எளிமை 100 சதவீதம். பந்தா 0 சதவீதம். மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர் என்ற எந்தக் கோதாவும் இல்லை. அறிமுகமே இல்லாத என்னிடம் ஓர் ஆத்மார்த்தமான நண்பரிடம் பேசுவது போன்ற அத்தனைக் கனிவான பேச்சு. நான் அப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன். எனக்கு வெகுநாட்கள் பழகியது போன்ற ஓர் உணர்வு. இப்படி ஒரு ரசவாதத்தை உருவாக்குவது எல்லா தலைவருக்கும் சாத்தியம் இல்லை.

மதிய உணவு பொட்டலமாக வழங்கப்பட்ட போது தனக்கெனத் தனியிடம் எதுவும் தேடாமல், அங்கேயிருந்த ஒரு சிமிட்டு மேடையில் எல்லாரையும் போல பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்து விட்டார். டைனிங் டேபிள், தலைவருக்கான ஸ்பெஷல் கவனிப்பு எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

அவர் அருகில் அமர்ந்து அருகில் சாப்பிட்ட நான்கு பேரில் அப்போது நானும் ஒருவன். அப்படி அவரோடு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அப்போது எனக்கு ஒரு சின்ன ஆசை. இப்போதுள்ள தலைவர்களை நினைத்துப் பார்க்கையில் அது ரொம்ப பெரிய ஆசை. அதன்பின் வேறு எந்த தலைவர் அருகிலும் அமர்ந்து சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. தோழர் தந்த அதிர்ஷ்டம் அது.

அது சரி என்னைப் போன்ற சாமான்யன் அருகே அமர்ந்து சாப்பிட எந்தத் தலைவர் விரும்புவார்? எல்லாரையும் போலத் தானும் ஒருவன்தான் என்பதை ஒரு தலைவர் பழகுவோரிடம் எல்லாம் ஏற்படுத்துவது சாதாரணமானதல்ல. தானும் சாமான்யன்களில் ஒரு சாமான்யன்தான் என்ற எண்ணம் ஒரு தலைவருக்கு வருவது நல்லகண்ணு போன்ற சில ஆபூர்வர்களுக்கே வாய்ப்பது. காமராசர், கக்கன் வரிசையில் நல்லகண்ணு ஓர் அரசியல் அதிசயம்.

தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருதைப் பெற்றார். பரிசுத் தொகை ஒரு லட்சம். அதை அப்படியே கட்சிக்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார். தகைசால் தமிழர் விருது பெற்ற போது கிடைத்த பத்து லட்ச ரூபாயோடு தன் சொந்த நிதி ஐயாயிரத்தையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி விட்டார். யாருக்கு வரும் அப்படி ஒரு மனசு?

அரசாங்கம் இவருக்கு ஒரு வீடு கொடுத்தது. ஒரு நோட்டீஸ் அனுப்பி அதைத் திருப்பிக் கேட்ட போது எவ்வித மறுப்பின்றி உடனே அதைத் திருப்பித் தந்தார். எனக்கு எதற்கு வீடு, மக்கள் இருக்கிறார்களே என்பது அவரது எண்ணம். ஓர் எளிமையான வாடகை வீடே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதை போலத் தெரியலாம். ஆனால் நிஜம்.

தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க இவர் நடத்திய போராட்டங்கள், மணல் கொள்ளைக்கு எதிராக இவர் காட்டிய உறுதி, இதெல்லாம் ஏதோ பேப்பர் செய்திகள் அல்ல. மண்ணின் மீதான காதல். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் இலக்கணம். அவரது வாழ்க்கை அதற்கான இலக்கியம்.

நேர்மையாக இருப்பது கஷ்டம் என்கிறார்கள். ஆனால், நேர்மையைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத மனிதர்களும் இங்கே இருக்கிறார்கள். இப்போது அந்த மனிதர்களில் ஒருவர் இல்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு 101 வயதில் இயற்கையோடு இயற்கையாகக் கலந்திருக்கிறார். அவருக்குப் பிறகு அந்த இடம் காலியாகவே இருக்கும் போலிருக்கிறது.

இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது எனும் பொருளில் Nature abhors a vacuum என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் இந்த வெற்றிடத்தை யாரால் நிரப்ப முடியும்?

கலைஞர் கருணாநிதி ஒரு முறை சொன்னார், எனக்கு ஒரு கண் போனாலும் இன்னொரு கண்ணாக நல்லகண்ணு இருக்கிறார் என்று. இப்போது நம்மிடம் அந்தக் கண்ணும் இல்லை.

காந்தியைப் பற்றிச் சொல்லும் போது ஐன்ஸ்டீன் இப்படிச் சொன்னார், இப்படி ஒரு மனிதர் இந்தப் பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்கால உலகம் நம்பாது என்று. ஐன்ஸ்டீன் சொன்னது அப்படியே தோழருக்கும் பொருந்தும்.

*****