1 Mar 2026

உனக்குப் பயம்! விளம்பரத்துக்குக் காசு!

உனக்குப் பயம்! விளம்பரத்துக்குக் காசு!

கௌதமன் தன் மடிக்கணினியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.

பூங்குன்றன் தன் செல்போன் திரையில் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தான். திடீரெனப் பூங்குன்றன் முகம் சுருங்கியது.

கௌதமா ஒரு சந்தேகம். இணையத்தில் பாலியல் ஆரோக்கியம் என்று தேடினால் வரும் முடிவுகள் பயமுறுத்துகிறதே என்றான் பூங்குன்றன்.

கௌதமன் மடிக்கணினியை விட்டு முகத்தைத் திருப்பினான். நீ எங்கே தேடுகிறாய் என்பதுதான் முக்கியம் பூங்குன்றா. கூகுளில் ஒரு சாதாரண தலைவலி என்று தேடினால் கூட, அது கடைசியில் புற்றுநோய் என்று கொண்டு போய் முடிக்கும். இதில் பாலியல் என்றால் கேட்கவா வேண்டும்?

இல்லை கௌதமா, விளம்பரங்கள் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. இதைச் சாப்பிட்டால் குதிரை பலம், பத்தே நாளில் மாற்றம் என்று விதவிதமான லேகியம், மாத்திரைகள். இதையெல்லாம் உண்மையென்று நம்பி யாராவது வாங்குவார்களா? என்றான் பூங்குன்றான்.

கௌதமன் சிரித்தான். வாங்குவார்களே. ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்று கடையில் ஒரு தாள் ஒட்டியிருந்தாலே பாய்ந்து கொண்டு வாங்குவார்கள். இதில் குதிரை பலம், பத்தே நாளில் மாற்றம் என்றால் வாங்காமல் இருப்பார்களா? இது ஒரு வகை பய உளவியல். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் இளைஞர்கள் தங்களுக்கு ஏதோ குறைபாடு இருக்குமோ என்று பயப்படுகிறார்கள். அவர்களது பயத்தை விளம்பரங்கள் காசாக்குகின்றன என்றான்.

பூங்குன்றான் அலைபேசியை ஒளி மங்கச் செய்தான். அப்படியானால் இந்த இணையத் தேடல்கள் எல்லாம் தவறா? என்றான்.

எல்லாம் தப்பில்லை பூங்குன்றா. ஆனால் மக்கள் எதைத் தேடுகிறார்கள் தெரியுமா? ஆரோக்கியமான தகவல்களை விட, பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த குறுக்கு வழிகள் இருக்குமா என்றுதான் அதிகமாகத் தேடுகிறார்கள். அந்த மாதிரியான படங்களைப் பார்த்து விட்டு, அதுதான் உண்மை என்று நம்பி தன்னுடைய உடலை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய புதைகுழி. சிக்கினால் மன உளைச்சல் இலவசம்.

பூங்குன்றன் யோசனையில் ஆழ்ந்தான். இதற்கு என்னதான் தீர்வு என்றான்.

இணையத்தில் வருகின்ற எல்லா விளம்பரமும் உண்மை கிடையாது. பாலியல் ரீதியான சந்தேகங்கள் இருந்தால் ஒரு தகுதியான மருத்துவரை நேரில் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு பத்து ரூபாய்க்கு பத்து மாத்திரை என்கிற சலுகையை நம்பினால் ஆரோக்கியம் தவணை முறையில் போய் விடும். சொல்லிவிட்டுக் கௌதமன் சிரித்தான்.

பூங்குன்றன் இனி நீ இங்கேயே கிட என்று அலைபேசியைக் குழாய் சட்டையின் பைக்குள் போட்டான். இலவசமாக வருகின்ற தகவல்களை உண்மை என்று நம்புவது ஓட்டைப் படகில் கடலைக் கடக்க முயற்சிப்பது போல என்றான்.

தெளிவாகி விட்டாய் பூங்குன்றா. விளம்பரங்களை வியத்தலும் இலமே, பாலியலை இகழ்தல் அதனினும் இலமே என்று கண்ணடித்தான் கௌதமன்.

*****

28 Feb 2026

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு பத்து நிமிடம்!

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு பத்து நிமிடம்!

வார்த்தைகள் ஆபத்தானவை. ஒருவன் சரி என்கிறான். அதையே இன்னொருவன் தவறு என்கிறான். இந்த சரி, தவறுக்குள் எத்தனை அர்த்தங்கள்? அது சம்மதமாக இருக்கலாம், சலிப்பாக இருக்கலாம், அல்லது இப்போதைக்குத் தொலையேன் என்கிற எரிச்சலாகவும் இருக்கலாம்.

நாம் என்ன செய்கிறோம்? அவன் சொன்ன வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். அதன் பின்னாலிருக்கும் அர்த்தத்தை விட்டுவிடுகிறோம். அங்கேயே ஆரம்பிக்கிறது உலகப்போர்.

கவனிக்க வேண்டியது வார்த்தைகளையல்ல, அந்த வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் அர்த்தத்தை. இதைத் திருவள்ளுவர் குறிப்பறிதல் என்கிறார். இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அந்தக் கஷ்டத்தைப் பார்த்தால் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு படுகிற கஷ்டம் உலக மகா கஷ்டமாக இருக்கும்.

புரியவில்லை என்பதுதான் உலகின் மிகப்பெரிய கவலை. படிக்கிறவனுக்குப் பாடப்புத்தகம் புரிவதில்லை. வேலை பார்ப்பவனுக்கு மேனேஜர் புரிவதில்லை. மேனேஜருக்கு முதலாளி புரிவதில்லை. முதலாளிக்குத் தொழிலாளி புரிவதில்லை. கணவனுக்கு மனைவி புரிவதில்லை. மனைவிக்குக் கணவன் புரிவதில்லை. பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் புரிவதில்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் புரிவதில்லை. இது ஓர் உலகளாவிய பிரச்சனை.

இந்தப் புரியவில்லை என்பதற்குப் பின்னால்தான் அர்த்தமே ஒளிந்து கிடக்கிறது. ஓர் அர்த்தம் மட்டுமல்ல, வேறுபல அர்த்தங்களும் ஒளிந்து கிடக்கின்றன. ஆகவே இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று சிந்திப்பதற்கு ஒரு பத்து நிமிடம் செலவு செய்தால், இங்கே பாதி விவாகரத்துகளும், முக்கால்வாசி சண்டைகளும் காணாமல் போய்விடும்.

அந்தப் பத்து நிமிடம்தான் பிரச்சனை. அப்படி பத்து நிமிடம் ஒதுக்க முடியாத அளவுக்கு உணர்ச்சிக் குவியலுக்குள் காணாமல்போய் விடுகிறோம். உணர்ச்சிப் பிழம்பாய்த் தெறித்து புரிய வேண்டிய அர்த்தங்களை புரிய விடாமல் பொசுக்கி விடுகிறோம்.

நம் மூளை ஒரு விசித்திரமான வஸ்து. அது தனக்குத் தெரிந்த தரவுகளை வைத்துக்கொண்டு, எதிராளி சொல்வதற்கு உடனே ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக் கொள்கிறது. அதற்கு வேறு அர்த்தமும் இருக்கும் என்பதை யோசிக்க மறுக்கிறது.

உதாரணத்துக்கு ஆசிரியர் கூப்பிட்ட உடன் மாணவன் என்ன நினைத்துக் கொள்கிறான்? திட்டத்தான் கூப்பிடுகிறார் என்று. பாராட்டவும் கூப்பிட்டிருக்கலாம் அல்லவா! இங்குதான் மைன்ட் செட் பிரச்சனை செய்கிறது. பழகிய மைன்ட் செட்டிலிருந்து வெளியே வர மறுக்கிறது மனம். அதிலிருந்து வெளியே வந்து வேறு அர்த்தமும் இருக்கலாம், வேறொன்றும் நிகழலாம் என்று யோசிக்க ஆரம்பித்தால் வாழ்க்கையின் லாஜிக்கே மாறி விடும்.

என்னைக் கேட்டால் மனம் ஒரு தவறான புரிதல்களின் தொழிற்சாலை என்பேன். அது சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. மனம் சொல்லும் அந்த ஓர் அர்த்தம் மட்டுமா இருக்கும்? வேறு அர்த்தமும் இருக்கும் என்று அதை யோசிக்க பழக்க வேண்டும். இந்த ஒரு பழக்கம் உங்கள் வாழ்க்கையையே மாற்றும். தவறான புரிதல்களிலிருந்து உங்களைக் கரையேற்றும்.

உலகில் உள்ள பாதி பிரச்சினைகள் அவன் சொன்னான், இவள் நினைத்தாள் என்பதில்தான் இருக்கின்றன. ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மௌனத்தை வாசிக்க நமக்குத் தெரிவதில்லை.

அறிவியல் ஒலியின் வேகத்தை 331 மீ/வி என்கிறது. ஒளியின் வேகத்தை 3×108 மீ/வி என்கிறது. ஆனால் தவறான புரிதலின் வேகம் அதைவிட அதிகம். ஒரு வார்த்தை காதில் விழுந்தவுடனேயே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

நிதானமாக எதையும் பத்து நிமிடம் ஒதுக்கி யோசிப்பது என்பது ஒரு கலை. அதுவும் இவன் ஏன் இப்படிச் சொன்னான்? அவன் ஏன் அப்படிச் சொன்னான்? என்று மற்றவர் பக்கம் நின்று யோசிப்பது ஒரு மேதாவித்தனம்.

எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கமலஹாசன் பேசுவதைப் போலத்தான் இதுவும். பார்க்கும் பார்வையைப் பொறுத்து அர்த்தங்கள் மாறும்.

அடுத்த முறை யாராவது உங்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசினால், கோபப்படுவதற்கு முன்னால் மனதிடம் ஒரு பத்து நிமிடம் பாஸ் என்று மனதிற்குள் Pause பட்டனை அழுத்துங்கள். இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? என்று அதனிடமே கேளுங்கள். அதுதானே சிக்க வைக்கப் பார்க்கிறது. ஆகவே அதனிடமே இப்படிக் கேட்டு அந்தச் சிக்கலிலிருந்து வெளியேறுங்கள். ஒரு பெரிய அமைதி பிறக்கும். அந்த அமைதிதான் இந்த உலகத்திற்கும் உங்களுக்கும் இப்போது தேவை.

இது உங்களுக்குப் பிடித்திருந்தால் நான்கு பேரை இதைப் படிக்கக் கூட்டி வாருங்கள். இப்படிச் சொன்னதும் இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டால் நீங்கள் சக்சஸ் ஆகிவிட்டீர்கள் பாஸ். யூ ஆர் Pass. உங்களுக்கு தேர்ச்சி சான்றிதழை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்.

*****

27 Feb 2026

எங்கே போகும் தமிழகத்தின் கடன் பாதை?

எங்கே போகும் தமிழகத்தின் கடன் பாதை?

தமிழர்களாகிய நாம் அனைவரும் லட்சாதிபதிகள் ஆகி விட்டோம்!

கையில் இன்னும் பணம் வரவில்லை என்கிறீர்களா? அது வராது. இது கைக்கு வரும் பணம் அல்ல. தலைக்கு வரும் பணம்.

தமிழ்நாட்டின் கடன் 10 லட்சம் கோடி ரூபாய். அதைத் தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்கள்தொகையால் வகுத்துப் பார்த்தால் தலைக்குத் தோராயமாக ஒன்றரை லட்சம் வருகிறது. அந்தத் தொகையை வைத்துப் பார்த்தால் தமிழர்களாகிய நாமெல்லாம் லட்சாதிபதிகள்தானே.

2012 வரை இருந்த கடன்தொகை தமிழகத்துக்கு நாலரை லட்சம் கோடிக்குச் சற்றுக் கம்மி என்றால், அதுவே ஐந்தாண்டுகள் கழித்து 2026 இல் பார்க்கும் போது, எதையும் கழிக்க முடியாத அளவுக்குக் கூடிப் போய் பத்து லட்சம் கோடியை எட்டி விட்டது.

கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ஆறரை லட்சம் கோடி. அதாவது, கிரிக்கெட்டில் லாஸ்ட் ஓவரில் சிக்ஸராக விளாசுவார்களே, அப்படி எகிறியிருக்கிறது கிராஃப்.

எதிர்க்கட்சிகள் ஓவர் கடன் என்கின்றன. எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன் என்று பெரிய புள்ளிகளை வைத்துதான் பிளான் போடுறோம் என்கிறது தமிழக அரசு.

அப்படியானால் இதில் இருக்கும் லாஜிக்தான் என்ன?

ஐந்து வருடத்துக்கு முன்பிருந்த தஙகம் விலை இப்போது டபுள். அதே போக்கில் இந்தக் கடனும் டபுள் என்று சொல்வது ஒரு வகை லாஜிக்.

ஏழு ரூபாய் டீ கூட இப்போது பனிரெண்டு ரூபாய் என்பது இதே லாஜிக்தான். இது பணமதிப்பு சரிந்துவிட்டது என்று சொல்லும் பண வீக்க லாஜிக்.

மத்திய அரசுக்கே 197 லட்சம் கோடி கடன் இருக்கும் போது தமிழக அரசுக்கு இருப்பது கொசுறுதான் என்பது வேறொரு வகை லாஜிக்.

மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வைத்து பணத்தை அச்சடித்துக் கொள்ளும். தமிழக அரசால் அது முடியாது.

மத்திய அரசுக்கு பெல், ஐஓசி, ஓஎன்ஜிசி என்று டிவிடென்ட் தரும் கம்பெனிகள் அதிகம். தமிழக அரசுக்கு கடனில் தத்தளிக்கும் கம்பெனிகள்தான் அதிகம். ஆகையால் மத்திய அரசுக்கு இருக்கும் கடனும் தமிழக அரசுக்கு இருக்கும் கடனும் ஒன்றல்ல. மொத்தத்தில் கடன் என்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல.

ஏனிப்படி ஆகிறது தமிழகப் பொருளாதாரம்?

தமிழகப் பொருளாதாரத்தைப் பொதுவாக பொருளாதாரப் புள்ளிகள் விண்டோ பிரேக் எக்கானமி என்கிறார்கள். அதாவது கண்ணாடியை உடைப்பதும், அப்புறம் அதை மாற்றுவதும் என்று இதற்கு அர்த்தம். அதை ஏன் உடைப்பானேன்? அதை ஏன் மாற்றுவானேன்? உடைத்தால்தானே அல்லது உடைந்தால்தானே மாற்ற முடியும். உடைக்காமல் மாற்ற முடியாதே. ஆனால் இரண்டுமே பொருளாதாரக் கணக்கில் வேலைதான். தி கிட் படத்தில் சார்லி சாப்ளின் செய்வாரே, அப்படி.

அப்படி சாலையைப் போட்டு, ஒரே வருடத்தில் அது ஜல்லியடித்தால் திரும்பவும் சாலையைப் போட்டுக் கணக்கு எழுதினால் கணக்கில் புள்ளி ஏறும், சொத்து டவுன்சைடில் பிரயாணிக்கும்.

ஒரு கட்டிடத்தைக் கட்டிப் பத்து வருடத்தில் மீண்டும் இடித்துக் கட்டினால் அதுவும் இதே வகையறாத்தான்.

ஒரு சாலை என்றால், ஒரு கட்டிடம் என்றால் அதற்கான ஆயுட்காலம் என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஆயுட்காலம் வரை அதை வாழ விட வேண்டும். இடையிலேயே கொன்று போட்டு உயிர் கொடுக்கக் கூடாது.

அப்புறம், இலவசங்களுக்கு அதிகம் செலவு செய்கிறது தமிழக அரசு என்கிற வாதமும் உண்டு. ஏழைகளுக்குக் கொடுத்தால் அது வீண் செலவு, பணக்காரர்களுக்குக் கொடுத்தால் அது சலுகையா என்கிற எதிர்வாதமும் இதற்கு உண்டு.

இதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அரசாங்கம் ஒரு கையில் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்கிறது. இன்னொரு கையில் அதே வீட்டுக்காரர் டாஸ்மாக்கில் அந்தப் பணத்தை ரிவர்ஸ் கியர் போட்டுக் கொண்டு போய் கொட்டுகிறார். சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்குச் செலவு செய்கின்ற பணம், மது வருவாய் வழியாக மறுபடியும் அரசாங்கத்துக்கே வந்து விடுகிறது என்று ஆதங்கப்படும் சமூக மற்றும் பொருளாதார ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆதங்கப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஆக, என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்?

பல நாடுகள் கடன் வாங்குகின்றன. பல மாநிலங்கள் கடன் வாங்குகின்றன. உண்மைதான். ஆனால், கடன் வாங்காத நாடுகளும், மாநிலங்களும் இருக்கின்றன. வருவாய் பற்றாக்குறை இல்லாமல் பட்ஜெட் போடும் அரசுகளும் இருக்கின்றன. ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கோடு இருக்கும் தமிழ்நாடு அரசு கடனில்லாத பட்ஜெட் என்ற ஓர் இலக்கை ஏன் நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் இப்போதைக்கான டிரில்லியன் டாலர் கேள்வி.

*****

26 Feb 2026

எளிமை, நேர்மையின் ஊற்றுக்கண் தோழர் நல்லகண்ணு!

எளிமை, நேர்மையின் ஊற்றுக்கண் தோழர் நல்லகண்ணு!

இந்த மனிதரைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது? அரசியலில் புனிதம் என்ற வார்த்தை இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு இவர்தான் ஆகச்சிறந்த சாட்சி.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. நேர்மையின் ஒளி. எப்போதும் நிமிர்ந்த நடை. இவருடைய எளிமையைப் பார்த்தால், கார்ப்பரேட் கார்களில் பவனி வரும் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்குக் காய்ச்சலே வந்துவிடும். இன்றைய அரசியல்வாதிகளின் ஒரு நாள் டீ செலவில், நல்லக்கண்ணு ஐயா ஒரு வருடம் குடும்பம் நடத்திவிடுவார். அவ்வளவு எளிமை. மனிதர்களுடன் பழகுவதில் அவ்வளவு இனிமை.

ஒரு முறை தஞ்சாவூரில் ஐயா நல்லக்கண்ணுவைப் பார்க்கும் வாய்ப்பு. அப்படியே அதே எளிமை 100 சதவீதம். பந்தா 0 சதவீதம். மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர் என்ற எந்தக் கோதாவும் இல்லை. அறிமுகமே இல்லாத என்னிடம் ஓர் ஆத்மார்த்தமான நண்பரிடம் பேசுவது போன்ற அத்தனைக் கனிவான பேச்சு. நான் அப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன். எனக்கு வெகுநாட்கள் பழகியது போன்ற ஓர் உணர்வு. இப்படி ஒரு ரசவாதத்தை உருவாக்குவது எல்லா தலைவருக்கும் சாத்தியம் இல்லை.

மதிய உணவு பொட்டலமாக வழங்கப்பட்ட போது தனக்கெனத் தனியிடம் எதுவும் தேடாமல், அங்கேயிருந்த ஒரு சிமிட்டு மேடையில் எல்லாரையும் போல பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்து விட்டார். டைனிங் டேபிள், தலைவருக்கான ஸ்பெஷல் கவனிப்பு எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

அவர் அருகில் அமர்ந்து அருகில் சாப்பிட்ட நான்கு பேரில் அப்போது நானும் ஒருவன். அப்படி அவரோடு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அப்போது எனக்கு ஒரு சின்ன ஆசை. இப்போதுள்ள தலைவர்களை நினைத்துப் பார்க்கையில் அது ரொம்ப பெரிய ஆசை. அதன்பின் வேறு எந்த தலைவர் அருகிலும் அமர்ந்து சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. தோழர் தந்த அதிர்ஷ்டம் அது.

அது சரி என்னைப் போன்ற சாமான்யன் அருகே அமர்ந்து சாப்பிட எந்தத் தலைவர் விரும்புவார்? எல்லாரையும் போலத் தானும் ஒருவன்தான் என்பதை ஒரு தலைவர் பழகுவோரிடம் எல்லாம் ஏற்படுத்துவது சாதாரணமானதல்ல. தானும் சாமான்யன்களில் ஒரு சாமான்யன்தான் என்ற எண்ணம் ஒரு தலைவருக்கு வருவது நல்லகண்ணு போன்ற சில ஆபூர்வர்களுக்கே வாய்ப்பது. காமராசர், கக்கன் வரிசையில் நல்லகண்ணு ஓர் அரசியல் அதிசயம்.

தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருதைப் பெற்றார். பரிசுத் தொகை ஒரு லட்சம். அதை அப்படியே கட்சிக்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார். தகைசால் தமிழர் விருது பெற்ற போது கிடைத்த பத்து லட்ச ரூபாயோடு தன் சொந்த நிதி ஐயாயிரத்தையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி விட்டார். யாருக்கு வரும் அப்படி ஒரு மனசு?

அரசாங்கம் இவருக்கு ஒரு வீடு கொடுத்தது. ஒரு நோட்டீஸ் அனுப்பி அதைத் திருப்பிக் கேட்ட போது எவ்வித மறுப்பின்றி உடனே அதைத் திருப்பித் தந்தார். எனக்கு எதற்கு வீடு, மக்கள் இருக்கிறார்களே என்பது அவரது எண்ணம். ஓர் எளிமையான வாடகை வீடே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதை போலத் தெரியலாம். ஆனால் நிஜம்.

தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க இவர் நடத்திய போராட்டங்கள், மணல் கொள்ளைக்கு எதிராக இவர் காட்டிய உறுதி, இதெல்லாம் ஏதோ பேப்பர் செய்திகள் அல்ல. மண்ணின் மீதான காதல். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் இலக்கணம். அவரது வாழ்க்கை அதற்கான இலக்கியம்.

நேர்மையாக இருப்பது கஷ்டம் என்கிறார்கள். ஆனால், நேர்மையைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத மனிதர்களும் இங்கே இருக்கிறார்கள். இப்போது அந்த மனிதர்களில் ஒருவர் இல்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு 101 வயதில் இயற்கையோடு இயற்கையாகக் கலந்திருக்கிறார். அவருக்குப் பிறகு அந்த இடம் காலியாகவே இருக்கும் போலிருக்கிறது.

இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது எனும் பொருளில் Nature abhors a vacuum என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் இந்த வெற்றிடத்தை யாரால் நிரப்ப முடியும்?

கலைஞர் கருணாநிதி ஒரு முறை சொன்னார், எனக்கு ஒரு கண் போனாலும் இன்னொரு கண்ணாக நல்லகண்ணு இருக்கிறார் என்று. இப்போது நம்மிடம் அந்தக் கண்ணும் இல்லை.

காந்தியைப் பற்றிச் சொல்லும் போது ஐன்ஸ்டீன் இப்படிச் சொன்னார், இப்படி ஒரு மனிதர் இந்தப் பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்கால உலகம் நம்பாது என்று. ஐன்ஸ்டீன் சொன்னது அப்படியே தோழருக்கும் பொருந்தும்.

*****

25 Feb 2026

மனிதர்களை நம்புங்க பாஸ்!

எந்தத் தீமையிலும் நன்மை உண்டு. எப்படி?

டிரம்ப் மட்டும் டாரிப்பை உயர்த்தா விட்டால் இந்தியாவில் ஜிஎஸ்டி குறைந்திருக்காது.

*****

தேடப்படும் மனிதராக இருக்க குற்றவாளியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?

கடன் வாங்கி விட்டு கம்பி நீட்டினாலும் நீங்கள் ஒரு தேடப்படும் மனிதர்தான்.

*****

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாவிட்டால் ஒருவர் இந்தியன் இல்லையா?

உன்னை வாக்காளர் என்று நிரூபிக்க போராடினால் நீயும் ஒரு இந்தியனே.

*****

போகிற இடமெல்லாம் ஆதார், பான், வாக்காளர் அட்டை என்று எதாவது அடையாள அட்டைகளைக் கேட்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

போகிறப் போக்கைப் பார்த்தால் ஆதார், வாக்காளர் அட்டை, பான் இவற்றையெல்லாம் உடம்பில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது. அல்லது சட்டையில் அச்சிட்டும் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. மனிதர்களை நம்புங்க பாஸ்.

*****

ஐந்து முறைக்கு மேல் வாக்களித்த உங்களுக்கு SIR படிவம் வழங்கப்பட்ட போது என்ன தோன்றியது?

வருமான வரித் துறை ஆதாரையும் பானையும் வைத்து என்னென்னவெல்லாம், எதையெதையெல்லாம் எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா? தேர்தல் ஆணையமும் அது போல நவீன வழிகளைப் பின்பற்றாமல் இன்னும் விண்ணப்பம் கொடுத்தல், திருத்துதல், பதிவேற்றுதல் என்று ஏன் அரதப்பழசான முறைகளிலேயே இருக்கிறார்கள். நீங்கள் தேர்தல் ஆணைய வெப்சைட்டுக்கேப் போனாலும் இருபது ஆண்டுகளுக்கு முந்தை உங்களது வாக்காளர் எண்ணின் நிலையைக் கண்டுபிடிப்பது என்பது லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் செய்ய வேண்டிய வேலைகள்.

*****

24 Feb 2026

மூளையே ஓவராக யோசிக்காதே ப்ளீஸ்!

ஓவர் திங்கிங் – நியூரான்களின் நிழல் யுத்தம்!

யோசிப்பது நல்லது. மனிதனை மரம், செடி, கொடிகளிடமிருந்து பிரித்துக் காட்டுவதே இந்த நியூரான்களின் மின்சாரப் பாய்ச்சல்தான்.

சிக்கல் வரும்போது மூளையானது ஒரு சுவிட்ச் போட்ட மெக்கானிக் போல வேலை செய்ய வேண்டும்.

ஆனால், அந்த மெக்கானிக் வேலையை விட்டுவிட்டு, சுத்தியல், ஸ்பேனர், கோடரி, கடப்பாரையை எடுத்துக் கொண்டு வண்டியைச் சரி செய்யாமல் மொத்தமாக உடைத்துப் போட்டு வேடிக்கை பார்த்தால், அதுதான் ஓவர் திங்கிங். உங்கள் வண்டி எங்கும் போகாது. நீங்கள் அங்கேயேதான் இருப்பீர்கள். உங்கள் வண்டிதான் பிரித்துப் போடப்பட்டிருக்கிறதே.

நமது மூளை ஓர் அற்புதமான கம்ப்யூட்டர்.அதில் ஒரு சின்ன கோளாறு, அதற்கு ஸ்டாப் பட்டன் இல்லாமல் இருப்பது.

ஒரு சின்னப் பிரச்சினை வரும்போது, அதற்கு ஒரு தீர்வை யோசிப்பதற்குப் பதில், பத்து வருடம் கழித்து இதே போன்ற பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று ஒரு கிளைக் கதையை உங்கள் மூளை உருவாக்கிக் கொண்டே போனால், சத்தியமாக நீங்கள் ஓவர் திங்கிங் என்ற ஓவர் டோஸால் அவதிப்படுகிறீர்கள்.

யோசிப்பதற்கும் மிகையாக யோசிப்பதற்கும், தட் மீன்ஸ் திங்கிங் அன்ட் ஓவர் திங்கிங்கிற்கும் உள்ள வித்தியாசம் மிக மெல்லியது.

வண்டி சாவி தொலைந்து விட்டால், அதைத் தேடுவதுதான் தீர்வு.

இந்நேரம் அந்தச் சாவி யார் கையிலாவது கிடைத்து, அவர் வண்டியை எடுத்துக் கொண்டு போய் எவர் மேலாவது மோதி இருந்தால்…, இன்றைய ராசிபலன் வேறு சரியில்லையே… போன வாரமே ஜோசியர் சொன்னாரே… என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால், சாரி பாஸ் நீங்கள் ஓவர் திங்கிங் எனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐசியுவில் வைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், மூளையின் ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ் அதிகப்படியான வேலைப்பளுவைச் சுமக்கும்போது, அது முடிவெடுக்கும் திறனை இழந்து விடுகிறது என்கிறார்கள் மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள்.

அப்போது என்னவாகும் என்கிறீர்களா? ஒருவிதமான பாராலிசிஸ் ஏற்பட்டது போல கை, கால் ஏன் ஒட்டுமொத்த உடலும் செயலிழந்தது போல உட்கார்ந்துவிடுவீர்கள். கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கலாம். அனுபவிக்கும் போதுதான் அதன் வேதனையும் வலியும் புரியும்.

இதற்குத் தீர்வுகள் இல்லையா?

ஏன் இல்லாமல்,

ஒரு சிக்கலைப் பற்றி யோசிக்க பத்து நிமிடம் போதும். அதற்கு மேல் போனால் அது ஆயிரம் தடவை எழுதும் இம்போசிசன், தீர்வு அல்ல.

மூளைக்குள் ஓடும் எண்ணங்களை ஒரு காகிதத்தில் எழுதினால், அதன் வீரியம் குறைந்துவிடும். ஸோ எழுதுங்கள். சில நேரங்களில் அதற்கு அலுப்புபட்டுக் கொண்டே யோசிப்பதை நிறுத்தி விடுவீர்கள். எப்படியோ நின்றால் சரி சனியன்.

ஓவர் திங்கிங்கால் யோசித்துக் கொண்டே இருப்பதை விட, ஒரு தவறான முடிவை எடுப்பது கூட மேல்தான். தப்பு நடந்தால் திருத்திக் கொள்ளலாம். யோசித்துக் கொண்டே இருந்தால் சமயங்களில் மண்டை கழன்று போகும். ஒருவரை மண்டை கழண்ட கேஸ் என்று சொன்னால் எப்படி இருக்கும் சொல்லுங்கள்.

முடிவாக, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அமுதத்துக்கே அந்தக் கதி என்றால், உங்கள் ஓவர் திங்கிங்கை என்ன சொல்ல?

எனவே யோசனைகளை நீங்கள் ஆளுங்கள். யோசனைகளை உங்களை ஆள விடாதீர்கள். ஒரு சத்தியமான உண்மை என்ன தெரியுமா? உலகத்தில் பல போர்கள் வெறும் யோசனையாலேயே உங்கள் மனதுக்குள் நடந்து முடிந்துவிடுகின்றன. நிஜத்தில் ஒன்றுமே நடப்பதில்லை!

இதற்கு மேல் என்ன சொல்ல? உங்கள் ஓவர்திங்கிங்கிற்கு இன்றே என்ட் கார்ட் போடுங்கள். போனால் போகட்டும் போடா என்று பாடுங்கள். ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்று ஆடுங்கள்.

இன்னும் வேறு ஏதேனும் சொல்லவேண்டுமானால் சொல்லுங்கள், சொல்கிறேன். கீழே கமென்ட் பாக்ஸ் இருக்கிறது.

*****

23 Feb 2026

நாக்கே பேசாதே ப்ளீஸ்!

நாக்கே பேசாதே ப்ளீஸ்!

வாழ்க்கை என்பது ஒரு விசித்திரமான டிஜிட்டல் உலகம். நாம் ஓர் உள்ளீடு கொடுத்தால் எர்ரர் மெசேஜ் இன்ஸ்டன்டாக அனுப்பப்படும், அல்லது ஒட்டுமொத்த கட்டமைப்பே ஹேங் ஆகும். நாம் சொல்வதை யாரும் கேட்கப்போவதில்லை என்று தெரிந்த பிறகு, அங்கே எதற்கு ஒரு மைக்ரோஃபோன்?

நம் வழிமுறைகள் தரமானதாக இருக்கலாம். ஆனால் ஏன் இந்த எர்ரர் மெசேஜ், சிஸ்டம் ஹேங்? ஏனென்றால் நாம் சொல்வதைச் செயல்படுத்த வேண்டியவர்கள் மொபைல் போன் அப்டேட் செய்யாத பழைய மாடல் மனிதர்களாக இருக்கிறார்கள். அதில் புதிய ஆப் வேலை செய்யாது. ஆப்பு அடிக்கவே செய்யும்.

மனிதர்கள் பொதுவாக வித்தியாசமானவர்கள். சரியாக நடப்பதை விரும்பவும் மாட்டார்கள், நல்லதாக நான்கு விசயங்கள் சொல்வதைக் கேட்கவும் மாட்டார்கள். இது அவர்களின் பிழையன்று, அவர்களின் மனதின் டிசைனின் பிழை.

அது போன்ற நிலைமைகளில் நம்முடைய எனர்ஜியை வேஸ்ட் செய்வது லாஜிக் இல்லாத விஷயம். ஓரளவுக்கு மேல் முயற்சி செய்தால், நம்முடைய மனம் சூடாகி, மன உளைச்சல் என்கிற ப்ளூ ஸ்கிரீன் வந்துவிடும். மற்றவர்களும் நம்முடைய அட்வைஸ் எனும் ஓவர்லோடைத் தாங்க மாட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு சைலன்ட் மோட். பேசாமல் இருப்பது. பேச்சைக் குறைப்பது அல்ல, பேச்சையே நிறுத்துவது. உலகத்தின் பாதிப் பிரச்சனைகளுக்குக் காரணம் இந்த நாக்கு என்கிற ஹார்டுவேர்தான். தேவையில்லாமல் பேசப் போய், அது வில்லங்கம் என்கிற வைரஸை உள்ளே இழுத்து வந்துவிடுகிறது.

பேசும்போது என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிவிடுவதால் வரும் ஆபத்துகள் அதிகம். பேசாமல் இருக்கும்போது அந்த ரிஸ்க் பேக்டர் ஜீரோ ஆகிவிடுகிறது.

நாம் மனநிறைவோடு இருந்தால் அதற்கு மேல் அடைவதற்கு என்ன இருக்கிறது? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாம் சுழியம் ஆகிவிடுகிறது. ஒருவிதமான நிதானம், போதும் என்ற மனம்.

அப்போதும் இப்போதெல்லாம் ஏன் எதுவும் சொல்வதில்லை என்று கேட்க ஒரு கூட்டமே வரும். சொல்லி என்ன பயன் என்பதுதான் பதில். எல்லாவற்றையும் சாமர்த்தியமாகப் பேசி டெலீட் செய்பவர்களிடம் நம்முடைய நல்லன எதுவும் எடுபடாது.

எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு வழியும் இருக்கத்தான் செய்கிறது. அது அனுபவம். அவர்கள் அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

வாழ்க்கையில் எல்லோருடைய பேச்சையும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரத்தில் யாருடைய பேச்சையும் கேட்காமலும் இருக்க முடியாது. அப்படியானால் யார் பேச்சைக் கேட்பது? யார் பேச்சுக்கு எஸ்கேப் கீயை அழுத்துவது என்கிறீர்களா?

யார் களத்தில் நின்று வேலை பார்க்கிறார்களோ, அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் அப்டேட் அனுபவத்தோடு இருப்பார்கள். வாழ்க்கையில் அவுட்டேட்டட் அனுபவம் உபயோகப்படாது.

என்றாலும் என்னதான் தெரிந்தாலும், இந்த உலகிற்கு எதையாவது சொல்ல நினைத்தாலும், இன்றைய தேதியில் எனக்குத் தெரிந்த சிறந்த தத்துவம், மவுனம் என்பது வெறும் சத்தம் இல்லாத நிலை அல்ல, அது ஒரு பாதுகாப்பான கவசம்.

அதனால்தான் நான் பேசுவதில்லை. எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

*****