10 Mar 2026

மஞ்சள் அபாயம் – ஒரு சயன்ஸ் பிக்சன் குறுங்கதை!

மஞ்சள் அபாயம் – ஒரு சயன்ஸ் பிக்சன் குறுங்கதை!

-         விகடபாரதி

அண்டார்டிகா, மெக்மர்டோ ஆய்வு மையத்தில் முனைவர் இளஞ்செழியின்  லேப்டாப் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். திரையில் ஒரு கிராஃப் செங்குத்தாக ஏறிக்கொண்டிருந்தது. 2050 ஆம் ஆண்டின் ஒரு பிப்ரவரி மாதத்தின் அதிகாலை நேரம் அது.

என்ன செழியன், அதே தானா? பின்னால் வந்து நின்றாள் இளவெயினி. அவள் கையில் ஒரு தெர்மோ பிளாஸ்க்.

அதே தான் வெயினி. இந்த வாரம் மட்டும் டெம்பரேச்சர் இரண்டு டிகிரி கூடியிருக்கு. அது முக்கியமில்லை. இதப் பார். செழியனின் மனம் படபடத்தது.

அவன் ஒரு டிரோன் புகைப்படத்தை பெரிதாக்கினான். அதுவரை வெள்ளையாக மட்டும் தெரிந்த அந்தப் பள்ளத்தாக்கில், இப்போது ஒரு பெரிய மஞ்சள் திட்டு தெரிந்தது. அது ஒரு பூந்தோட்டம் போல விரிந்து கிடந்தது.

பூக்கள் தானே செழியன்? பார்க்க அழகாகத்தான் இருக்கிறது, என்றாள் இளவெயினி.

செழியன் கசப்பாகச் சிரித்தான். டைட்டானிக் கப்பலில் இசை வாசித்ததைக் கேட்டிருக்கிறாயா? அதுவும் அழகாகத்தான் இருந்தது. ஆனால் கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தது. இந்த பூக்கள் சாதாரணமானவை அல்ல. இவை நியூ ரைசோமா வகை. இவை வளர வளர பனியின் அடர்த்தி குறைகிறது. மிக முக்கியமாக, இந்தப் பூக்கள் ஒருவித ரசாயனத்தை மண்ணில் கசியவிடுகின்றன.

என்ன ரசாயனம்? இளவெயினி அதிர்ச்சியோடு கேட்டாள்.

தெரியல. ஆனால் அந்த ரசாயனம் காற்றில் கலந்தால், மனிதர்களுக்கு ஒருவித  போதை வரும். சுற்றியிருப்பவை எல்லாம் அழகாகத் தெரியும். பனி உருகுவதோ, உலகம் அழிவதோ கவலை தராது. ஒருவித கூட்டுத் தற்கொலைக்கு இயற்கை நம்மைத் தயார் செய்யுதோ என்று தோன்றுகிறது.

சரியாக அப்போது, ஆய்வு மையத்தின் அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே பார்த்த இளவெயினி திகைத்து நின்றாள்.

பனிப்பாறைகளுக்கு நடுவே, ஒரு ராட்சத மஞ்சள் பூ ஜன்னல் கண்ணாடிக்கு மிக அருகில் வளர்ந்து நின்றது. அதன் இதழ்கள் மெல்லத் திறந்தன. உள்ளே இருந்து ஒரு மெல்லிய மஞ்சள் நிறப் புகை வெளிப்பட்டது.

இளவெயினிக்கு இப்போது அந்தப் பூ மிக அழகாகத் தெரிந்தது.

செழியன் ஏன் பயப்படுகிறாய்? அந்தப் பூவைப் பார். எவ்வளவு அழகு. ஏன் நாமும் வெளியே போய் அதைத் தொடக்கூடாது? இளவெயினியின் குரலில் ஒரு விசித்திரமான குதூகலம் இருந்தது.

இளஞ்செழியன் அதிர்ச்சியடைந்தான். அவளுக்கு அந்தப் பூ உண்டாக்கும் போதை தொடங்கிவிட்டது. இயற்கை வெறும் வைரஸால் மட்டும் மனிதனை அழிப்பதில்லை. சில நேரங்களில் அது அழகு மூலமாகவும் அழிக்கும் போல.

இளஞ்செழியன் சட்டென்று இளவெயினியின் தோளைப் பிடித்து உலுக்கினான். வெயினி ஜன்னலை விட்டு தள்ளி நில். இது கஞ்சா போதை மாதிரி ஒரு மாயை. அதைப் பார்க்காதே!

இளவெயியினியின் கண்கள் நிலைகுத்தி இருந்தன. அவள் முகத்தில் ஒரு விகாரமான புன்னகை. இல்லை செழியன். அந்தப் பூக்கள் பேசுகின்றன. இவ்வளவு காலம் எங்களைச் சிறை வைத்த பனி விலகிவிட்டது. இப்போது இது எங்கள் முறை என்று சொல்கின்றன. கேள். அந்த இசை கேட்கிறதா?

இளஞ்செழியன் லேப்டாப்பைத் தட்டினான். சென்சார்கள் சிவப்பாக மின்னின. காற்றில் அந்த ரசாயனத்தின் அளவு 40 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்த ஆய்வு மையத்தின் சீல் வைக்கப்பட்ட அறைகளுக்குள்ளும் அது கசியத் தொடங்கும்.

அவன் அவசரமாக ஒரு கமென்ட்டை டைப் செய்தான். ப்ராஜெக்ட் ஐஸ்பெர்க். இது போன்ற ஒரு அவசர நிலைக்காக இந்தியாவின் டிஆர்டிஓஉம் இஸ்ரோவும் ஒரு ரகசியத் திட்டம்.

வெயினி, இதைப் பார்! அவன் லேப்டாப் திரையில் ஒரு பழைய வீடியோ ஓடியது. 1950களில் சரியாக நூறாண்டுகளுக்கு முன்பாக அண்டார்டிகாவில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை படம். பனிக்கு அடியில் புதைந்திருந்த ஒரு விசித்திரமான உலோகக் கோளம் அங்கே தெரிந்தது.

இந்த மஞ்சள் பூக்கள் சும்மா வளரவில்லை வெயினி. பனி உருக உருக, பல லட்சம் ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த ஏதோ ஒன்று வெளியே வருகிறது. அந்த உலோகக் கோளத்தின் மேல் படர்ந்திருந்த பாசிகள்தான் இப்போது பூக்களாக மாறியிருக்கின்றன. இது பூமிக்குச் சொந்தமான தாவரமே இல்லை! இளஞ்செழியன் படபடத்தான்.

சரியாக அப்போது ஆய்வு மையத்தின் தரை அதிரத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே இருந்த அந்த ராட்சதப் பூவின் அடியில் இருந்து ஒரு உலோகம் போன்ற தண்டு மெல்ல எட்டிப்பார்த்தது. அது ஒரு செடி அல்ல. ஓர் ஆன்டெனா!

இளவெயினி இப்போது தரையில் அமர்ந்துவிட்டாள். செழியன் அவர்கள் வந்துவிட்டார்கள். நாம் கார்பனைச் சேர்த்துச் சேர்த்துப் பூமியைச் சூடாக்கியது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அவர்களுக்குத் தேவையான வெப்பநிலையை நாமே உருவாக்கித் தந்துவிட்டோம். தேங்க்யூ ஹ்யூமன்ஸ் என்று சொல்கிறார்கள். இளவெயினி முணுமுணுத்தாள்.

இளஞ்செழியன் உறைந்து போனான். இவ்வளவு காலமாக நாம் பயந்தது வேற்றுக்கிரகவாசிகள் வானத்திலிருந்து வருவார்கள் என்று. ஆனால் அவர்கள் பனிக்கு அடியில் நமக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். நாம் செய்த குளோபல் வார்மிங் அவர்களுக்கு ஒரு வெல்கம் ட்ரிங்க்.

இளஞ்செழியன் அவசரமாகத் தன் சேட்டிலைட் போனை எடுத்தான். ஹலோ. திஸ் இஸ் மெக்மர்டோ பேஸ். ஆபரேஷன் ஐஸ்பெர்க் தோல்வி. அவர்கள் விழித்துக்கொண்டார்கள். மீண்டும் சொல்கிறேன். தி பிளவர்ஸ் ஆர் நாட் பிளான்ட்ஸ். தே ஆர் மெஷின்ஸ்!

அவன் பேசி முடிப்பதற்குள், ஜன்னல் கண்ணாடி தடதடவென விரிசலிட்டது. அந்த மஞ்சள் இதழ்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தன. அறை முழுவதும் அந்த இனிய மணம் பரவியது.

இளஞ்செழியனுக்கும் இப்போது பயம் மறைந்து ஒருவித அமைதி வரத் தொடங்கியது. ஏன் இவ்வளவு காலம் கவலைப்பட்டோம்? உலகம் அழிந்தால் என்ன? இந்தப் பூக்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!

அவன் இளவெயினியின் கையைப் பிடித்துக் கொண்டான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே

என இளஞ்செழியனின் வாய் முணுமுணுக்க, அண்டார்டிகாவில் மஞ்சள் பூ உண்டு என்று இளவெயினியின் இதழ்கள் கடைசி சொற்களை உதிர்த்தன.

இருவரும் அந்த மஞ்சள் புகைக்குள் மெல்லக் கரைந்தார்கள்.

வெளியே அண்டார்டிகா முழுக்கப் பனி உருகி, ஒரு பிரம்மாண்டமான இயந்திரச் சோலை மெல்ல எழத் தொடங்கியது.

*****

9 Mar 2026

கற்பனைப் பூதமும் கையில் இருக்கும் அல்வாவும்!

கற்பனைப் பூதமும் கையில் இருக்கும் அல்வாவும்!

நிஜத்தைச் சொல்லப்போனால் மனிதன் ஒரு வினோதமான பிராணி. அவனுக்குத் தன் கையில் இருக்கும் ஆப்பிளைச் சுவைப்பதில் ஆர்வம் குறைவு. ஒருவேளை அடுத்த வாரம் ஆப்பிள் விலையேறிவிட்டால் என்ன செய்வது? அந்த ஆப்பிளுக்குள் புழு இருந்தால் என் கதி என்ன? என்று கற்பனை செய்து பிபியை ஏற்றிக்கொள்வதில் அவன் பிஹெச்டி முடித்திருக்கிறான்.

மனிதனது மூளை ஒரு விசித்திரமான ஸ்கிரிப்ட் ரைட்டர். அது ஆஸ்கார் விருது வாங்கத் துடிக்கும் இயக்குநரைப்போல, நடக்காத பல விபரீதங்களை நிஜத்தை விட தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பலர் தங்கள் பார்வையை எப்போதுமே அந்தத் தொடுவானத்தில் நங்கூரமிட்டு வைத்திருக்கிறார்கள். தொடுவானம் என்பது ஒரு ஜியோமெட்ரிகல் பொய். நீங்கள் அதை நோக்கி ஓட ஓட, அதுவும் பின்வாங்கும்.

ரிடையர் ஆன பிறகு என்ன செய்வேன்? என் பேரன் அமெரிக்காவில் செட்டில் ஆவானா? செட்டில் ஆக அவனுக்கு விசா கிடைத்து விடுமா? இதெல்லாம் இன்றைய மனிதர்களுக்கான இப்போதைய கவலைகள். இதற்காக இப்போதே கவலைப்பட்டு, இன்று மதியம் உங்கள் தட்டில் இருக்கும் சூடான ரத்தப் பொறியலைச் சுவைக்காமல் ரத்தத்தின் பிரசரை எகிற அடிக்கிறீர்கள்.

உண்மை என்னவென்றால் நம்மை அச்சுறுத்தும் 90 சதவீதப் பிரச்சினைகள் நம் மண்டைக்குள் மட்டுமே ரிகர்சல் பார்க்கப்படுகின்றன. நிஜ மேடைக்கு அவை வருவதே இல்லை.

காலடியில் இருக்கும் நிலம் நிஜமானது. அது செழிப்பானது. அங்கேதான் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அதுதான் நிகழ்காலம்.

இப்போது நீங்கள் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் டீயின் சூடு, உங்கள் மொபைல் திரையின் – ஒளி இதுதான் நிஜம்.

நிகழ்காலம் என்பதுதான் இருப்பதிலேயே மிகச் சிறிய, ஆனால் மிக வலிமையான புள்ளி. கடந்த காலம் ஒரு பழைய நியூஸ் பேப்பர். எதிர்காலம் என்பது இன்னும் அச்சடிக்கப்படாத ஒரு புத்தகம்.

கற்பனைப் பூதங்களை விரட்ட ஒரே வழி, உங்கள் வேலையில் கவனத்தைத் திருப்புவதுதான். ஒரு சின்னக் கணக்கு போடுவது அல்லது ஜன்னல் வழியாக சும்மா வேடிக்கை பார்ப்பது கூட உங்களை நிகழ்காலத்திற்கு இழுத்து வரும்.

தூரத்தில் இருக்கும் மேகத்தைப் பார்த்து குடை தேடுவதை விட்டுவிட்டு, இப்போது உங்கள் காலடியில் இருக்கும் புல்லின் பசுமையைப் பாருங்கள். கற்பனைப் பிரச்சனைகள் என்பவை ஒரு பேய்ப்படம் போல, பார்த்து முடித்துச் சீட்டை விட்டு எழுந்தால் எல்லாம் மறைந்துவிடும். ஆனால், நிகழ்காலம் என்பது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிஜமான கிளைமாக்ஸ்.

பரிணாம வளர்ச்சியில் சிங்கம் வருமா, புலி வருமா என்று பயந்து பயந்தே நம் டி.என்.ஏ வடிவமைக்கப்பட்டுவிட்டது. அதனால், நிஜத்தில் புலி வராதபோது, நம் மூளை ஒரு கற்பனைப் புலியை உருவாக்கி, அதற்குப் பயங்கரமான கிராபிக்ஸ் போட்டு நம்மைப் பயமுறுத்துகிறது.

அதாவது, நடக்காத ஒரு விஷயத்திற்காக இப்போதே அட்வான்ஸாகக் கவலைப்படுவது. எல்லாருடைய மூளைக்குள்ளும் அமைக்டாலா  என்று ஒரு சின்னப் பகுதி இருக்கிறது. இதுதான் பயத்திற்குப் பொறுப்பு. இதற்கு லாஜிக் தெரியாது. இதுதான் ஓவர் ஆக்டிங், ஓவர் ரியாக்சனுக்குப் பொறுப்பு.

இந்தப் பொறுப்பாளி வேலை செய்தால் மனம் உடனே மெகா சீரியல் கதையை எழுத ஆரம்பித்துவிடும். உடனே அட்ரினலின் சுரக்க ஆரம்பித்து விடும். கை வியர்க்க ஆரம்பித்து விடும். இதயம் துடிக்க ஆரம்பித்து விடும். மெகா சீரியல் ரைட்டர்கள் இதைத்தான் பயன்படுத்துகிறார்களோ என்னவோ!

வாழ்க்கை என்பது ஒரு லைவ் டெலிகாஸ்ட். அதை எடிட் செய்ய முடியாது. ஆனால் நாம் ரீவைண்ட் பட்டனையும் பாஸ்ட் ஃபார்வர்ட் பட்டனையும் அழுத்தியே பொன்னான நேரத்தை வீணாக்குகிறோம்.

சுற்றி இருக்கும் ஐந்து பொருள்களைப் பாருங்கள். நான்கு ஒலிகளைக் கேளுங்கள். மூன்று வாசனைகளை நுகருங்கள். இது உங்கள் கவனத்தைக் கற்பனை உலகத்திலிருந்து இழுத்து வந்து நிகழ்கால உலகத்தில் லேண்டிங் செய்ய வைக்கும்.

உங்கள் கவலையை ஒரு நோட்டில் எழுதுங்கள். அதில் எத்தனை சதவீதம் நிஜம், எத்தனை சதவீதம் கற்பனை என்று மார்க் போடுங்கள். கற்பனைக்கு எப்போதும் பூஜ்யம் மார்க் கொடுங்கள்.

கற்பனைப் பிரச்சனைகள் என்பவை ஒரு காகிதப் புலி. அதை நீங்களே வரைந்து, நீங்களே பயப்படுகிறீர்கள். அந்தப் பேப்பரைக் கிழித்துப் போட்டுவிட்டு, நிஜமான புலியைப் பார்க்க ஜூவை நோக்கிப் புறப்படுங்கள். வாழ்க்கை மலரட்டும்.

*****

8 Mar 2026

கிரிச் கிரிச் கிளாசிக் நினைவுகள்!

இங்க் பேனாக்களின் நாஸ்டால்ஜியா நோட்

இங்க் பேனாவில் எழுதியது ஒரு நாஸ்டால்ஜியா நோட். இப்போது யோசித்துப் பார்க்கையில், அது அப்படித்தான் இருக்கிறது. இப்போது அதைப் பயன்படுத்துவர்களை ரெட்ரோவைப் போலப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இங்க் பேனாவை மாதம் ஒரு முறை நீருற்றித் தூய்மை செய்து பழுது பார்ப்பதிலிருந்து, அதில் இங்க் நிரப்புவது வரை பொறுமை தேவைப்படும் வேலை. அந்தப் பொறுமைக்கு இன்று வேலை இல்லை.

இங்க் பேனாக்கள் ஒரு கை வாகாக இருக்க வேண்டும். ஆளாளுக்குப் பயன்படுத்தினால் அதற்குப் பிடிக்காது. கிரீச் கிரீச் என்று முரண்டு பிடிக்கும், என்னவோ வண்டிக்காரனுக்கு மட்டும் கட்டுப்பட்ட காளைகளைப் போல.

இப்போது யாராவது இங்க் பேனாவை வைத்திருப்பதைப் பார்த்தால் அதிசயத்தைப் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.

ஒரு தாய் குழந்தைக்குப் பசிக்கும் போதெல்லாம் பாலூட்டுவதைப் போல,இங்க் தீரும் போதெல்லாம் இங்க் பேனாவிற்கு இங்கை ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும். இங்க் பேனாவின் காதலர்கள் இங்க் பில்லர்களைப் பயன்படுத்தியெல்லாம் இங்க் ஊற்ற மாட்டார்கள். இங்க் பாட்டிலிருந்து ஒரு துளி கூட சிந்தாமல், ஓரத்தில் வழியாமல் அவ்வளவு லாவகமாக, நாசுக்காக ஊற்றுவார்கள்.

இங்க் இருக்கும் வரை ஒரு சுட்டிக் குழந்தையைப் போல அது தாளில் ஆடும் எழுத்து விளையாட்டு அட்டகாசமாக இருக்கும்.

பால் பாய்ண்ட் பேனாவில் வராத எழுத்தின் வசீகரம் இங்க் பேனாவில் எங்கிருந்தோ வந்து விடும். தாளுக்கும் இங்க் பேனாவின் நிப்பிற்கும் இருக்கும் ஈர்ப்பு அப்படி.

இங்க் பேனாவில் எழுதுவதில் ஓர் அழகு இருக்கிறது. அதில் ஒரு நிதானம் வருகிறது. இப்படிச் சொல்வது இங்க் பேனாவிலேயே பழகி விட்ட ஒருவரின் விதந்தோதும் வாசகமாக இருந்தாலும் அதில் உண்மையும் இருக்கிறது.

பால் பாய்ண்ட் பேனாக்களை வாங்கி ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவதைப் போல அல்லாமல், இங்க் பேனாவை பல லட்சம் முறை பயன்படுத்தலாம். வாழ்நாள் முழுவதும் ஒரு இங்க் பேனாவோடு வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள், ஒரே காதலன், ஒரே காதலி என்பதைப் போல.

இன்று நாம் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிபவையாக இருக்கின்றன. பால் பாக்கெட், பாலிதீன் பைகள் வரிசையில் பால் பாய்ண்ட் பேனாவும் வருகிறது.

ஓர் இங்க் பேனா ஆயுள் முழுவதும் ஒர மனிதரோடு வாழ பிரியப்படக் கூடியது என்று சொன்னால் அது கொஞ்சம் அதிபட்சமாகத் தெரியலாம். ஆனால் அது ஒரு சாசுவதம்தான்.

முன்னொரு காலத்தில் பாய் பாய்ண்ட் பேனாக்களில் ரீபிள் மட்டும்தான் மாற்றுவார்கள் என்று சொன்னால் இந்தத் தலைமுறை நம்புமா? இப்போதெல்லாம் பேனாவையே அல்லவா மாற்றி விடுகிறார்கள்.

ஒரு மனிதன் தன் ஆயுளுக்குள் குறைந்தபட்சம் 100லிருந்து அதிகபட்சம் 1000 வரை பால் பாய்ண்ட் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடும்.

பள்ளிகளில் பால் பாய்ண்ட் பேனாக்களுக்குத் தடை உத்தரவு இருந்த காலமும் இருந்தது. பால் பாய்ண்ட் பேனாக்களோ அல்லது நோட்ஸ்களோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அடித்துத் தோலை உரித்த காலம் அது.

இன்று பால் குடிக்காத பிள்ளைகள் கூட உண்டு. பால் பாய்ண்ட் பிடிக்காத பிள்ளைகள் இருக்க முடியாது. ஆசிரியர்களும் அதற்காக அல்ல, எதற்காகவும் அடிக்க முடியாது. பல போட்டித் தேர்வுகளில் ஓஎம்ஆர் சீட்டுகளைப் பால் பாய்ண்ட் பேனாக்களைக் கொண்டே நிரப்பச் சொல்கிறார்கள்.

காலம் மாறி விட்டது. நீங்கள் விரும்பினால் இங்க் பேனாவினால் எழுதலாம். இப்போதும் இங்க் பேனாக்கள் இருக்கின்றன, எழுதுவர்களைத் தேடிக் கொண்டு!

*****

7 Mar 2026

நம் சிந்தனையா நம்மைச் சிறைப்பிடிப்பது?

நம் சிந்தனையா நம்மைச் சிறைப்பிடிப்பது?

மூளைக்குள் ஒரு சிலந்தி வலை.

அது வேறு ஒன்றும் இல்லை, ஓவராகப் போகும் நம் சிந்தனை.

சிந்தனை ஒரு போதை. அதுவும் இடைவிடாமல் சிந்திப்பது என்பது, ஒருவன் தன் சொந்த மூளைக்குள் தானே கட்டிக்கொள்ளும் சிறைச்சாலை.

சாப்பிடும்போது சாப்பாட்டின் ருசியை கவனிக்காமல், நாளை என்ன விபரீதம் நடக்கும் என்று சிந்திப்பவன், அந்த பருப்புச் சாதத்தின் எதார்த்தத்தைத் தொலைக்கிறான். அவனுக்குத் தெரிவதெல்லாம் ஒரு மாய பிம்பம் மட்டுமே.

எதார்த்தம் என்பது தரை தட்டுவது போன்றது. கால் கட்டை விரலில் அடிபட்டால் வலிக்கும் பாருங்கள், அதுதான் நிஜம். ஆனால், சிந்தனையிலேயே வாழ்பவன் அந்த வலியைக் கூட இது நரம்பு மண்டலத்தின் மின் தூண்டல் என்று தத்துவம் பேசி கடந்துவிடுவான். அவன் வாழ்வது ரத்தமும் சதையுமான உலகில் அல்ல, நியூரான்கள் ஓடும் நரக உலகில்.

தொடர் சிந்தனையாளன் என்பவன் ஒரு சிலந்தியைப் போன்றவன். தன் வாயிலிருந்து வரும் நூலை வைத்தே வலை பின்னுகிறான். பிறகு அந்த வலைக்குள்ளேயே தானே சிக்கிக் கொள்கிறான். ஐயோ சிக்கிக் கொண்டு விட்டேனே, என்னைக் காப்பாற்ற யாருமில்லையே என்று கூச்சல் போடுகிறான். பிறகு அவனைப் பித்துப் பிடித்தவன் என்று பித்துக்குளி பட்டம் கட்டி கேலி பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதிகமாகச் சிந்திப்பவன் வாழ்க்கையை வாழ்வதில்லை, அதை வெறும் ஒரு கேஸ் ஸ்டடி போல மாற்றி விடுகிறான்.

எதார்த்தத்தைத் தொலைப்பவன் மெல்ல மெல்ல ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகிறான். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை விட, தன் தலைக்குள் இருக்கும் மனிதர்களோடு அவன் அதிகம் பேசுகிறான். இது ஒரு வகை மெண்டல் லூப்.

வெளிப்பக்கம் கதவு திறந்திருந்தாலும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கட்டளைகள் அவனை வெளியே வர விடுவதில்லை.

சிந்தனைகளைச் சுருட்டிக் கொண்டு கொஞ்சம் ஜன்னல் வழியாக வெளியே பாருங்கள். வானம் நீலமாக இருக்கிறது. காக்கை கரைகிறது. பக்கத்து வீட்டுக் குழந்தை அழுகிறது. இவை எதற்கும் எந்தத் தத்துவார்த்தமான அர்த்தமும் கிடையாது. அவை அப்படியே இருக்கின்றன.

ஓவரான சிந்தனைகளை நிறுத்திவிட்டு, எதார்த்தத்தைத் தொடுவதுதான் ஒரு மனிதன் செய்யக்கூடிய ஆகச்சிறந்த அற்புதமான வாழ்க்கை விளையாட்டு.

ஆக இந்த ஓவர் சிந்தனைப் போக்கைத் தவிர்க்க, அவ்வபோது யோசனையின் பிளக்கை பிடுங்குங்கள். அதாவது யோசிப்பதற்கு ஒரு என்ட் கார்டு போடுங்கள். கொஞ்சம் மொட்டை மாடிக்கு, அந்த மாடிக்கு மொட்டை அடித்து விட்ட பார்பர் யார் என்று யோசிக்காமல், கண்ணில் படுவதை எல்லாம் கவனியுங்கள். அங்கே எதாவது எதையாவது யோசித்துக் கொண்டு செய்கிறதா? உதாரணத்துக்கு கத்தும் குருவி, அசையும் மரம், ஓடும் மேகம். அது போல கொஞ்ச நேரம் மாறி விடுங்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எதார்த்தம் என்பது உங்கள் ஓவர் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. ஓவர் சிந்தனையை நிறுத்துங்கள்.

இப்போது போதும் மொட்டை மாடி. ஓர் ஓட்டலுக்குச் சொல்லுங்கள். ஒரு மசாலா தோசையை ஆர்டர் செய்யுங்கள். அதன் மொறுமொறுப்பை ரசியுங்கள். சிந்தனை ரகசியங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சர்வர் சட்னி வைக்காமல் போகிறார் பாருங்கள். முதலில் அந்தத் தோசைக்குச் சட்னி வைக்கச் சொல்லுங்கள். தேங்காய் சட்னியை விட்டு விட்டு, கார சட்னியை மறந்து விடப் போகிறார். அதையும் வைக்கச் சொல்லுங்கள். அதுதான் இப்போதைய எதார்த்தம்!

தோசை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். நன்றாக இருந்தால் அந்த ஹோட்டலுக்கு நானும் வர வேண்டும்.

சில நேரங்களில் அப்படித்தான் ஒரு தோசையை ரசித்துச் சாப்பிடுவதிலோ அல்லது ஒரு கோப்பைத் தேநீரை சன்னமாக ருசித்து அருந்துவதிலோ எதார்த்தத்தை நோக்கி வந்து விடுகிறோம்.

*****

6 Mar 2026

வழுக்கையா? வாழ்க்கையா? தடுமாற்றம் தேவையா?

முடி மாற்று சிகிச்சையில் கலப்பட கலவரங்கள்!

தலையில் முடி கம்மியாக இருக்கிறது என்று அமேசான் காட்டு மூலிகை எண்ணெயைத் தலையில் தேய்த்த காலம் போய், இப்போது ஹேர் டிரான்ஸ்பிளான்ட்  எனும் நவீன அறுவை சிகிச்சை ஜரூராக நடக்கிறது.

பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட இதற்கான கிளினிக்குகளை ஆரம்பித்து சக்கை போடு போடுகிறார்கள். அப்படியெல்லாம் இந்தக் கிளினிக்கை ஆரம்பிக்க முடியாதுதான். அதற்கென்று படிப்புகள், மருத்துவ உரிமங்கள் எல்லாம் இருக்கின்றன.

அப்புறம் எப்படி எஸ்எஸ்எல்சிக்கள் இந்தக் கிளினிக்கை நடத்துகிறார்கள் என்றால், இந்தச் சிகிச்சை முறை சிக்கலானது அல்ல, ஆனால் பொறுமை தேவையானது.

ஒரு டாக்டர் பல மணி நேரம் குனிந்து வேலை செய்யும்போது, அவருக்கு உதவியாக இருக்கும் டெக்னீஷியன்கள் இதை வேடிக்கை பார்த்துப் பழகிவிடுகிறார்கள். டாக்டர் பண்றதை நாமும் பண்ணலாமே என்று கிளம்பி, சொந்தமாக ஒரு போர்டை மாட்டி விடுகிறார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜன் அல்லது முறையாகப் பயிற்சி பெற்ற தோல் மருத்துவர் செய்ய வேண்டிய வேலையைப் பியூட்டி பார்லர் லெவலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். ஜாக்கிரதை, இது வெறும் ஹேர் கட்டிங் கிடையாது, மயக்க மருந்து கொடுத்துச் செய்ய வேண்டிய மைனர் சர்ஜரி!

இப்போது விசயத்திற்கு வருவோம். அது ஏன் முன்தலை வழுக்கை நாட்டில் அதிகமாகத் தலைவிரித்து ஆடுகிறது. அறிவியல்படி அதற்கு காரணம் இருக்கிறது. முதலில் கொஞ்சூண்டு முடி கொட்டுவதற்கு வில்லன் டிஹெச்டி என்கிற ஹார்மோன். இது தலையில் இருக்கும் ஆண்ட்ரோஜென் ரிசப்டார் என்கிற சாக்கெட்டுக்குள் புகுந்து உட்கார்ந்துகொள்ளும். ஒருமுறை பிளக் பாயிண்ட் லாக் ஆகிவிட்டால், அந்த முடிக்கு குட்பைதான்.

சுவாரஸ்யம் என்னவென்றால், தலையின் பக்கவாட்டிலும் பின்புறமும் இருக்கும் முடிகளுக்கு இந்த ரிசப்டார் கிடையாது. அவை சேஃப் ஜோன். அங்கிருந்து முடியை எடுத்து வழுக்கை விழுந்த இடத்தில் நடுவதுதான் இந்தச் சிகிச்சை. இது புது முடியை உருவாக்குவது அல்ல, இருக்கும் செடியை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடும் கார்டனிங் வேலைதான்.

இன்னொரு முக்கிய மேட்டர். அது முடிக்கு மீட்டர். அதுதான் மெலட்டோனின். நள்ளிரவு வரை போனில் ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தால் இந்த ஹார்மோன் சுரக்காது. உடல் தன்னைத்தானே பழுதுபார்க்கும் நேரத்தை நீங்கள் கெடுத்தால், உடல் முதலில் கைவிடுவது உங்கள் முடியைத்தான். வழுக்கை விழுவதற்குப் பரம்பரை மட்டும் காரணமல்ல, உங்கள் லைஃப் ஸ்டைலும்தான்.

வழுக்கை விழுந்தால் மன உளைச்சல் வருவது சிலருக்குத் தவிர்க்க முடியாதது. அதற்காகத் தெரிந்த கிளினிக்கில் எல்லாம் தலையைக் கொடுத்து விடக் கூடாது. இந்த விசயத்தில் மூளைக்கு மேல் முடி இருக்கிறதோ இல்லையோ முடிக்குக் கீழ் இருக்கும் மூளையில் அறிவு முக்கியம்.

முடி போனாலும் வழுக்கைத் தலையோடு வாழ்ந்து விடலாம். வழுக்கைத் தலை முடிக்காகக் கண்ட கிளினிக்கில் தலையைக் கொடுத்து வாழ்க்கை முடிந்து விட்டால் கடவுள் கொடுத்து ஒரு பிறவி டஸ்ட் பின்னுக்குப் போய் விடும்.

முடிக்காகத் தலையைக் கொடுப்பதற்கு முன்பு, அந்தக் கிளினிக்கை டாப் டூ பாட்டம் கம்ப்ளீட் இன்வெஸ்டிகேஷனை முடித்து விட்டு, உங்கள் தலையைக் கொடுப்பது உத்தமம். தலை முக்கியம் அல்லவா! ஒரு நடிகரைத் தல என்று அழைக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற மாநிலம் அல்லவா நம் மாநிலம்! தல என்ற பெயரில் அஜித்தை அழைப்பது இடுகுறித் தன்மையோடு அல்ல, காரணத் தன்மையோடுதான் இல்லையா!

*****

5 Mar 2026

நாளைய தீர்ப்பு – ஒரு குறுங்கதை

நாளைய தீர்ப்பு – ஒரு குறுங்கதை

அந்த மினுமினுக்கும் கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார் கேட்டிற்குள் நுழைந்தது. மீடியாக்களின் ப்ளாஷ்கள் மின்னலைத் தோற்கடித்துக் கொண்டிருந்தன.

திரிஷ்யன் கரங்கள் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தன. கண்கள் சிவந்திருந்தன. இது இரவு முழுவதும் பிசினஸ் மீட்டிங்கால் ஏற்பட்டது அல்ல, கடந்த மூன்று நாட்களாகத் தூக்கமில்லாத ஆலோசனைகள். அதைவிடக் கொடுமை, காலையில் லண்டனிலிருந்து வந்த அந்த வாட்ஸ்அப் மெசேஜ்.

விஜயலெட்சுமியிடமிருந்து. முடிவு பண்ணிட்டேன். மனு ரெடி. அதுதான் அந்த மெசேஜ்.

திரிஷ்யன் வானுயுயர்ந்த கட்டிடங்களைக் கட்டி உலகப் புகழ் பெற நினைக்கும் திரிஷ்யன் லக்ஸ்யூரி பில்டர்ஸின் சிஇஓ மற்றும் சரி பாதி நிறுவனர்.

விஜயலெட்சுமி ஒரு திரிஷ்யன் பிரியை மற்றும் மனைவி. அத்துடன் லண்டன் வெறியை. அமைதியானவள், ஆனால் புயலைக் கிளப்பத் தெரிந்தவள்.

பல வருட மௌனத்திற்குப் பிறகு அவள் வீசியிருக்கும் இந்த அஸ்திரம் திரிஷ்யனின் பிசினஸ் எதிர்காலத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டது. காரணம் திரிஷ்யனின் சொத்தில் பாதி அவள் பெயரில் இருக்கிறது.

சார் திவ்யா மேடம் லைன்ல இருக்காங்க, பி.ஏ. நடுக்கத்துடன் போனை நீட்டினான்.

திரிஷ்யன் போனை வாங்கினான். அந்தப் பக்கம் எப்போதும் அவன் கேட்கும் அதே கணீர் குரல். அதே பிடிவாதம்.

என்ன நடக்குது திரிஷ்யன்? மறுபடியும் என் பேரை ஏன் உள்ளே இழுக்குறாங்க? விஜயலெட்சுமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் புராஜெக்ட் முடிஞ்சாச்சு, அதுக்கப்புறம் நாம பார்த்ததே இல்லையே. திவ்யாவின் குரலில் கோபம் கலந்த ஏமாற்றம்.

சாரி திவ் இது பிசினஸ் கேம்ப்ளிங். என்னைத் தனிமைப்படுத்த நினைக்கிறாங்க. நீ ஒரு கேடலிஸ்ட். உன்னை வச்சு என்னைக் காலி பண்ணப் பாக்குறாங்க, திரிஷ்யன் குரல் தழுதழுத்தது.

ஆனா விஜயலெட்சுமி? அவங்க ஏன் டைவர்ஸ் வரைக்கும் போகணும்?

திவ்யா திரிஷ்யனின் கனவுகளுக்கு அவ்வபோது டானிக் ஊட்டி விடும் மேனகை. அவ்வபோது அவனுடைய ப்ராஜெக்டில் இணைந்து அதை ஜெட் வேகத்தில் கொண்டு போகும் கில்லாடி.

இது முக்கோணக் காதல் இல்லை. இது ஒரு முக்கோணச் சதி. ஒரு பக்கம் விஜயலெட்சுமியின் நியாயமான கோபம். இன்னொரு பக்கம் திவ்யாவை சந்திக்கு இழுத்து சிரிக்கும் வதந்தி. இந்த மூணு கோடும் ஒரு இடத்துல சந்திக்குது. திரிஷ்யன் மனசாட்சி திடீரென்று இப்படி பேசியது.  

விஜயலெட்சுமியைச் சமாதானப்படுத்த முடியுமா? – இது திவ்யா.

திரிஷ்யனிடமிருந்து பதில் வரவில்லை.

திவ்யாவே தொடர்ந்தாள், விஜயலெட்சுமிக்கு என் மேல கோபம் இல்லை திரிஷ்யன். உங்க மௌனத்தின் மேலதான் கோபம். நீங்க அந்த டிரிபிள் டவர் புராஜெக்ட்டுக்குப் போனது அவங்களுக்குப் பிடிக்கலை. என்னை ஒரு கருவியா அவங்க பயன்படுத்துறாங்க. நீங்க அந்த புராஜெக்டை விடுவீங்கன்னு அவங்க நினைக்கிறாங்க.

திரிஷ்யன் ஜன்னல் வழியாகப் பார்த்தான். வெளியே கேமராக்களுடன் ஒரு பட்டாளமே முட்டி மோதிக் கொண்டு நின்றது.

சார், வெளியே மீடியா காத்துட்டு இருக்கு. திவ்யா உள்ளே இருக்காங்களான்னு கேக்குறாங்க, என்றான் இடையில் குறுக்கிட்டு பிஏ.

திவ்யா நீ இப்போ எதுவும் பேசாதே. சைலண்டா இரு. மௌனம் தான் இப்போதைக்கு ஆக்ஸிஜன். போனை வைத்தான் திரிஷ்யன்.

உடனே விஜயலெட்சுமிக்கு ஒரு மெசேஜ் தட்டினான். மனுவை வைச்சுக்கோ. ஆனா ஜட்ஜ்மென்டை நான் எழுதறேன்.

சதுரங்கப் பலகையில் ராணி நகர்ந்துவிட்டது. ராஜா இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார். மந்திரி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார். திரிஷ்யனின் மனசாட்சி உருவகமாகப் பேசியது.

காதலுக்கும் பிசினஸ்க்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் என்றால், மூன்றாவது நபரை பலிகொடுத்துத்தான் ஆகவேண்டும். இங்கே பலி ஆடு விஜயலெட்சுமியா? திவ்யாவா? அல்லது திரிஷ்யனின் லட்சியமா? திரிஷ்யனின் மூளை வேறு விதமாக யோசித்தது.

அது வந்து… என ஆரம்பித்த மனசாட்சியை, ஒரு தடவை ஒரு முடிவு பண்ணிட்டா, அதை நானே கேட்க மாட்டேன் என்று அதன் தலையில் ஒரு குட்டு குட்டி கட் பண்ணினான்.

மறுநாள் மீடியாக்கள் பிரேக்கிங் நியூஸில் அலறின.

திரிஷ்யன் ட்ர்பிள் டவர் லக்ஸ்யூரி பில்டர்ஸ் கட்டுமான விபத்தில் சிக்கி 41 பேர் பலி.

*****

4 Mar 2026

மனமும் பிரிட்ஜிக்குள் இருக்கும் தக்காளியும்!

மனமும் பிரிட்ஜிக்குள் இருக்கும் தக்காளியும்!

பயம் என்பது ஒரு முன்யோசனை முத்தண்ணா. வண்டி ரிப்பேர் ஆவதற்கு முன்பே சர்வீஸ் செய்ய நினைப்பது புத்திசாலித்தனம்தான். ஆனால் வண்டியே இல்லாதபோது, வருங்காலத்தில் டயர் பஞ்சர் ஆனால் என்ன செய்வது என்று யோசிப்பவன் முத்தண்ணா அல்ல, பித்தண்ணா.

நமது மூளைக்குள் ஒரு முத்தண்ணா வகை செக்யூரிட்டி இருக்கிறான். அவனுக்கு ஓவர் டைம் டூட்டி கொடுத்தால் என்னவாகும்? அவன் தூங்க மாட்டான், உங்களையும் தூங்க விடமாட்டான். அவன் போடும் அலாரம்தான் அச்சுறுத்தல். ஐயோ என்னவாகப் போகிறதோ என்கிற ஆர்ப்பாட்டம்.

இந்த முத்தண்ணாவால் நமக்கு இன்று இருப்பதை விட, நாளை என்ன நடக்கும் என்கிற கவலைகள்தான் அதிகம். பையன் பாஸ் செய்வானா? இ.எம்.ஐ கட்ட முடியுமா? ரோபோக்கள் நம் வேலையைப் பிடுங்கிக் கொள்ளுமா? இப்படி இதற்கு ஓர் எல்லையே கிடையாது.

உண்மையில் ஆபத்து இன்னும் வரவில்லை. ஆபத்து வருவதாக ஒரு மாய பிம்பம். அதாவது, வராத மழையை நினைத்து இப்போதே குடை பிடித்துக்கொண்டு வெயிலில் நடப்பது போன்ற முட்டாள்தனம்.

பிரச்சனை வெளியே இருக்கிறது. ஆனால், நாம் தீர்வை எங்கே தேடுகிறோம்? நம்முடைய மண்டைக்குள்! தீர்வு அங்கிருந்து வர வேண்டும்தான். ஆனால் கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாய், கவலைகளும் பயங்களும் கிளம்பி வந்தால்?

மேனேஜர் திட்டுகிறார் என்பது உண்மையான பிரச்சனை.

உள்ளே, அதாவது மனதிற்குள்ளே, அவர் ஏன் திட்டினார்? நாளைக்கு வேலைக்கு ஆப்படித்து விடுவாரோ? வேறு வேலை கிடைக்குமா? கையில் காசு இல்லையே? என்பதெல்லாம் முத்தண்ணா கிளப்பி விடும் கன்னா பின்னா ஐயிட்டங்கள்.

இந்தத் தீர்வுகள் எல்லாமே ரீப்பீட் மோடில் சுற்றக் கொண்டிருப்பவை.  ஒரு கேள்வி, அதற்கு ஒரு பயம், அந்தப் பயத்தைப் போக்க இன்னொரு கற்பனைத் தீர்வு,  கடைசியில் தீர்வு கிடைக்காது, பிபி, டென்சன், டிப்ரசன்தான் கிடைக்கும்.

பிரச்சனைகளுக்கு முத்தண்ணா டைப்பில் மனதிற்குள் தீர்வு தேடுவது என்பது, இருட்டில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போன்றது. அதுவும் அந்தப் பூனை கடிக்கப் போகிறது என்று பயந்து கொண்டு!

நாம் ஏன் இப்படிச் செய்கிறோம்? மனித இனம் தப்பிப் பிழைக்க இது தேவைப்பட்டது. ஆதிமனிதன் புதர் அசையும்போது புலி வருமோ என்று பயந்ததால்தான் இன்று நாம் இருக்கிறோம். ஆனால் இன்று புதர் அசைவது ஏசி காற்றால் என்று தெரிந்தும், நம் மூளை பூகம்பம்தான் வருகிறது என்று அலெர்ட் ஆறுமுகமாகிறது.

வருங்காலத்தைப் பற்றி யோசிப்பதில் தப்பில்லை. ஆனால் அதையே ஒரு பிரச்சனையாக்கி, உள்ளுக்குள்ளேயே மல்யுத்தம் செய்வதுதான் வொர்க் அவுட் ஆகாத விஷயம். எதார்த்தம் என்பது வெளியே இருக்கிறது. போய் கதவைத் திறந்து பாருங்கள், உலகம் அழகாக இருக்கிறது!

என்ன செய்யலாம்?

ஒரு குட்டித் தூக்கம், சிறு நடைபயணம், ஒரு டீ இருக்கிறதா? குடியுங்கள். ஏதாவது ஒரு பஸ் வருகிறதா? கை நீட்டி ஏறி ஒரு ரவுண்ட் போய் விட்டுத் திரும்புங்கள். பிரெஸ்ஸாகி விடுவீர்கள். இன்னும் ஏன் நீங்கள் பிரிட்ஜ்க்குள் கிடந்து அழுகவும் முடியாமல், ஜாமும் ஆக முடியாமல் தவிக்கும் தக்காளியைப் போல இருக்க வேண்டும்?

வருவது வரும் போது வரட்டும். இப்போது நிகழ்காலம் கையில் இருக்கிறது. லெட்ஸ் டேக் இட் அன்ட் டேஸ்ட் இட். எதிர்காலத்தை நினைத்து டோன்ட் வேஸ்ட் இட்?

*****