10 Apr 2026

காளிதாஸ் 2 - மிஸ்ஸிங் ஆன தர்க்கமும் ஒரு குழந்தையும்!

காளிதாஸ் 2 – ஒரு திரைப்பார்வை

முதல் பாகத்தில் ரகசியங்களைக் காப்பாற்றிய காளிதாஸ், இரண்டாம் பாகத்தில் அந்த ரகசியங்களைச் சுமக்க முடியாமல் திணறுவது போலிருக்கிறது. ஒரு படம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இது முன்னுதாரணமல்ல, ஆனால் ஒரு படம் எப்படித் தப்பிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்வழிகாட்டி.

இயக்குநர் ஒரு பெரிய சிலந்தி வலையைப் பின்னுகிறார். அதில் நாமெல்லாம் சிக்கிக்கொள்வோம் என்று அவர் நம்புகிறார். பாவம், அவரே அந்த வலையில் சிக்கித் தத்தளிக்கிறார்.

ஒரு குழந்தை காணாமல் போகிறது. அதைத் தேடி ஒரு தந்தை அலைகிறார். இது உலகளாவிய சோகம். ஆனால், அந்தத் தேடலின் ஊடே திரைக்கதை காணாமல் போகிறதே, அதுதான் மாபெரும் மர்மம்!

படத்தில் குழந்தை காணாமல் போனவுடன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பதற்றத்தை விட, அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்று யூகிக்கத் துடிக்கும் ரசிகர்களுக்கு ஏற்படும் பதற்றம் அதிகம்.

ஒரு துப்பறியும் கதையில் துப்புகள் மெல்ல மெல்லக் கிடைக்க வேண்டும். இங்கே துப்புகள் மழையாகக் கொட்டுகின்றன, ஆனால் குடை பிடிப்பது யார் என்பதில் தான் குழப்பம்.

குழந்தை எங்கே போனது என்பது ஒரு கேள்வி என்றால், அந்தப் பதற்றமான சூழலில் நாயகன் ஏன் இவ்வளவு நிதானமாக ஸ்டைல் செய்கிறார் என்பது ஒரு தத்துவார்த்த கேள்வி.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தையைத் தேடும் படலத்தை விட, அந்தத் தேடலில் இயக்குநர் ஒளித்து வைத்திருக்கும் அந்த ட்விஸ்ட் இருக்கிறதே, அதுதான் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் அக்னிப் பரீட்சை!

இப்படத்தில் லாஜிக் என்பது, மொட்டை மாடியில் காயப்போட்டிருக்கும் துணி காற்றில் பறப்பதைப் போன்றது. எங்கே விழும் என்று யாருக்கும் தெரியாது, விழுந்த பிறகு அது யாருடையது என்பதும் முக்கியமல்ல.

படத்தின் நாயகன் பரத் மீண்டும் காளிதாஸாக வருகிறார். மிடுக்கு குறையவில்லை, ஆனால் அந்த மிடுக்கை என்ன செய்வது என்று தெரியாமல் கேமராவைப் பார்த்து முறைக்கிறார்.  நாயகியின் கண்கள் பேசுகின்றன. ஆனால் உதடுகள் பேசும் வசனங்கள் காதுகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

ஒரு குழந்தையைத் தேடும் அவசரத்தில், டூயட் பாடுவது ஏன் என்பது தமிழ் சினிமாவுக்கே வெளிச்சம். பாவம், அந்தத் தீவிரமான சூழலில் நாயகனுக்குக் காதல் சுரப்பது ஒரு மருத்துவ அதிசயம்.

முதல் பாதியில் விறுவிறுப்பு இருக்கிறது. இடைவேளை வரை நம்மை இருக்கையில் கட்டிப்போடுகிறார்கள். ஆனால் இரண்டாம் பாதியில், கட்டை அவிழ்த்துவிட்டு நம்மை எங்கெங்கோ ஓடவிடுகிறார்கள்.

ஒரு மர்மக் கதையில் மௌனம் என்பது ஆயுதம். ஆனால் இங்கே மௌனம் என்பது அடுத்த சீன் என்னவென்று தெரியாத குழப்பம்.

 படத்தில் இசையானது துகளைக் கிழிக்காமல், இதயத் துடிப்பை எகிற வைக்க முயன்று, இறுதியில் ஒரு மிக்ஸி ஓடும் சத்தத்தில் முடிகிறது.

ஒளிப்பதிவு என்பது இருட்டான அறையில் கருப்புப் பூனையைத் தேடும் வேலை. பூனை இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல, அந்த இருட்டு அழகாக இருக்கிறது.

 மொத்தத்தில் இது ஒரு மோசமான படம் அல்ல. ஆனால் இது ஓர் அவசியமான படமும் அல்ல.

முதல் பாகத்தின் வெற்றியைக் கொண்டு ஒரு கோட்டை கட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால் சிமெண்டிற்குப் பதில் வெறும் மணலைப் பயன்படுத்தியதால், படம் மெல்ல மெல்லச் சரிந்து நம் தலை மேலேயே விழுகிறது.

நீங்கள் ஒரு துப்பறியும் நிபுணர் என்றால், இந்தப் படத்தில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதிலேயே உங்கள் வாழ்நாளைக் கழித்துவிடலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், காளிதாஸ் - 2, முதல் பாகத்தின் நிழலில் ஒதுங்க நினைத்து, வெயிலில் சிக்கிக்கொண்ட ஒரு முயற்சி.

இந்தப் படத்திற்குப் பத்துக்கு 4¼ மதிப்பெண்கள் கொடுக்கலாம். அந்த ¼ மார்க் எக்ஸ்ட்ரா கிளைமாக்ஸ் டிவிட்ஸ்ட்டிற்கு. அது மட்டும் இல்லாது போனால் சுற்றிய தலை, படம் நின்ற பிறகும் சுற்றிக் கொண்டே இருந்திருக்கும்.

*****

சாத்தான்குளம் – லத்திகளும் எமதர்மனின் இரட்டை முத்திரையும்!

சாத்தான்குளம் – லத்திகளும் எமதர்மனின் இரட்டை முத்திரையும்!

ஆறு ஆண்டுகள். ஒரு சாமானியக் குடும்பம் அதிகாரத்தின் முரட்டுத்தனமான மிரட்டல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் இடையே காத்திருந்தது இந்த ஒரு தீர்ப்புக்காகத்தான்.

ஜெயராஜையும் பென்னிக்ஸையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, உடற்கூறியல் பாடப்புத்தகமே மிரளும் வகையில் சித்திரவதை செய்து கொன்ற ஒன்பது காவலர்களுக்கும் (மொத்தம் பத்து, ஒருவர் இறந்து விட்டார்) மதுரை நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை வழங்கியிருக்கிறது.

அதிகார போதையில், நாங்களே சட்டம், நாங்களே எமன், என்று ஆடியவர்களுக்கு, சட்டம் தன் இரட்டை முகத்தைக் காட்டியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் ஒரே ஒரு வெளிச்சப்புள்ளி தலைமைக் காவலர் ரேவதி. சீருடை அணிந்த மற்றவர்கள் நிழல் உலக மனிதர்களாக மாறியபோது, இவர் மட்டும் மனிதராக இருக்கத் துணிந்தார். ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் போலீஸாரே பொய் சொல்லும்போது, ஒரு போலீஸே உண்மையைச் சொன்னால் அது அதிசயம். அந்த அதிசயம்தான் இன்று ஒன்பது கயவர்களுக்குக் தூக்குக் கயிறுகளைப் பரிசளித்திருக்கிறது.

இந்தச் சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் ஒரு மிக முக்கியமான கசப்பான உண்மையைச் சொல்லியிருக்கிறார்,  நீதிமன்றம் மட்டும் தலையிடவில்லை என்றால், அந்த உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே உண்மைகள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என்று.

ஆயுள் தண்டனை கொடுத்தால், சிறைக்குள் சென்று சில ஆண்டுகள் சோறு தின்றுவிட்டு வந்துவிடலாம், என்று ஏளனம் செய்தவர்களுக்கு, இரட்டை மரண தண்டனை என்பது ஒரு பலமான அறை.

மரணம் என்பது ஒருமுறைதான் வரும். ஆனால் இரட்டை மரண தண்டனை என்பது அந்த மரணத்தின் தீவிரத்தை அதிகார வர்க்கத்தின் ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு குறியீடு.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, ஜெயராஜையும் பென்னிக்ஸையும் இழந்த ஆம்பளை இல்லாத வீட்டுல பொம்பளைகளால என்ன செய்ய முடியும்? என்று கேட்டுச் சிரித்த அந்த அதிகாரக் கொழுப்புக்கு, இன்று ஒரு பெண்ணின் கண்ணீர் பதிலடி கொடுத்திருக்கிறது.

தன் கணவனையும் மகனையும் பறிகொடுத்த ஒரு தாய், இன்று ஆறு ஆண்டுகள் கழித்து நிம்மதியாக உறங்குவார். ஆனால் அந்த ஒன்பது பேரின் தூக்கம் இனி நிரந்தரமாகக் கலைந்துபோகும்.

தமிழகத்தில் இது அரிதிலும் அரிதான தீர்ப்பு. வழக்கமாகச் சட்டத்தைக் கையிலெடுக்கும் காவலர்களுக்குச் சட்டம் கைலாகு கொடுக்கும். ஆனால் இம்முறை சட்டம் தன் கையிலிருக்கும் தராசைத் தூக்கி அவர்கள் தலையிலேயே போட்டிருக்கிறது.

லத்தியால் அடிப்பது வீரமல்ல என்பதை விட, சட்டத்தின் லத்தி எவ்வளவு பலமாகத் தாக்கும் என்பதைச் சீருடை அணிந்த சில கயவர்கள் இனி உணர்வார்கள். அந்தக் கயவர்களுக்குத் தூக்குக் கயிறு காத்திருக்கிறது. இம்முறை அது யாருக்காகவும் வளைந்து கொடுக்காது!

*****

9 Apr 2026

லீடர் – அண்ணாச்சியின் ஆக்சன் ஸ்டோர்ஸ்!

லீடர் – ஒரு திரைப்பார்வை!

பொதுவாக ஒரு நடிகருக்கு முகம் அசையவில்லை என்றால் அதை நடிப்பு வராது என்பார்கள். ஆனால், லெஜண்ட் சரவணனைப் பொறுத்தவரை அது ஒரு ஸ்டைல். பாறை போல உறுதியான முகம், காற்றிலேயே அசையாத தலைமுடி என இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு மனிதர் அல்ல, ஓர் அசையாத கொள்கை விளக்கப் படம்.

பொதுவாக மெக்கானிக் என்பவர்கள் காரின் இன்ஜினைப் பிரிப்பார்கள். ஆனால், படத்தில் மெக்கானிக்கான நம் சக்திவேல் ஆகிய லெஜண்ட் சரவணன் காரைப் பிரிப்பதை விட, எதிரிகளின் எலும்புகளைப் பிரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

தூத்துக்குடியில் மகளுடன் கொஞ்சி விளையாடும் ஒரு பாசமலராக அறிமுகமாகும் இவர், காரின் பின்சீட்டில் ஒரு பாட்ஷாவைப் பூட்டி வைத்திருக்கிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரித் தத்துவம்.

கதையென்னும் கமர்ஷியல் குழம்பு என்னவென்று பார்த்தால், மகள் ஐரீனுடன் வசிக்கும் சக்திவேலுக்கு, துறைமுகத்தில் நடக்கும் ஸ்மக்லிங் விவகாரத்தில் போலீஸ் ஆண்ட்ரியாவுக்கு உதவ விருப்பமில்லை. ஆனால், வில்லன்கள் அவர் மகளைத் தொட்டதும், மாணிக்கம் மோடை மாற்றிவிட்டு, பாட்ஷா மோடில் கியரை மாற்றுகிறார். அதன் பிறகு நடப்பதெல்லாம், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸில் நடக்கும் ஆடித் தள்ளுபடி போல ஒரே ஆக்‌ஷன் மயம்!

ஆண்ட்ரியா, ஷ்யாம், லால் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது, சரவணா ஸ்டோர்ஸில் ஒவ்வொரு செக்‌ஷனுக்கும் ஒரு ஆள் இருப்பது போல.

முந்தைய லெஜண்ட் படத்தில் நூறடி உயரத்தில் நின்ற லெஜண்ட் சரவணன், இதில் தரைக்கு இறங்கி வந்திருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் அவர் காட்டும் வேகம், ஒரு பந்தயக் குதிரைக்கும் ரோபோவுக்கும் பிறந்த கலவை போல இருக்கிறது.

உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் கூட அண்ணாச்சி மிக நிதானமாக இருக்கிறார்.

குறிப்பாகக் கார் மெக்கானிக் என்பதால் சண்டைக் காட்சிகளில் அண்ணாச்சி வண்டிகளைப் பறக்கவிடுவதில் நல்ல ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் இருக்கிறார்.

இயக்குநர் துரை செந்தில்குமாரைப் பாராட்ட வேண்டும். அண்ணாச்சிக்கு எதெல்லாம் வராதோ, அதையெல்லாம் கேமரா ஆங்கிள் மற்றும் எடிட்டிங் மூலமே வரவழைத்து விடுகிறார். ஒரு மனிதனை எப்படிப் பேச விடாமல் வைத்தே படம் எடுக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு பிஎச்டி ஆய்வு.

படத்தில் மியூசிக்கைக் காது கிழியும் அளவு ஒலிக்க வைத்து, படத்தில் அண்ணாச்சி பேசாத வசனங்களுக்கு ஈடாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசைக் கருவிகளை வைத்துப் பேச முயற்சித்திருக்கிறார்.

ஸ்கிரீனில் நடக்கும் ஆக்சனுக்கும் இசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தியேட்டரில் யாரும் தூங்கிவிடக் கூடாது என்பதில் ஜிப்ரான் கவனமாக இருந்திருக்கிறார். அதே நேரத்தில் ஜிப்ரானின் பின்னணி இசை இல்லையென்றால், அண்ணாச்சியின் அமைதி நம்மை அச்சுறுத்தியிருக்கும்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் லீடர் ஆகலாம், சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட.

அண்ணாச்சிக்கு நடிப்பு வருகிறதோ இல்லையோ, நடிக்க வேண்டும் என்ற அந்த விடாமுயற்சி இருக்கிறதே, அதுதான் படத்தின் உண்மையான ட்விஸ்ட்.

லீடர் ஒரு கமர்ஷியல் சினிமா என்பதால், இதில் லாஜிக் தேடுவது, சரவணா ஸ்டோர்ஸில் போய் தள்ளுபடிக்கு மேல் தள்ளுபடி கேட்பதைப் போன்றது.

ஆக விசயம் இதுதான், லெஜன்டைத் தொடர்ந்து லீடர் மூலமாக அண்ணாச்சி மீண்டும் வந்துவிட்டார், ஆக்சன் செய்கிறார், பறக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரசிக்க உங்களுக்கு ஒரு தனி இதயம் வேண்டும்.

படத்தின் இறுதியில் பார்ட் 2 வரும் என்று ஒரு க்ளூ கொடுத்திருக்கிறார்கள். இது எச்சரிக்கையா அல்லது கொண்டாட்டமா?

ஆனால் முடிவைச் சொல்ல வேண்டும் இல்லையா? இதுதான் அந்த முடிவு. அது என்னவென்றால், ஒரு மெக்கானிக் நினைத்தால் காரைச் சரி செய்யலாம். ஒரு லெஜண்ட் நினைத்தால் சினிமாவையே மெக்கானிக் ஷாப்பாக மாற்றலாம்!

படத்திற்கு பத்துக்கு 5½ மார்க் தாராளமாகக் கொடுக்கலாம். அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா எதற்கென்றால், அண்ணாச்சியின் விதவிதமான காஸ்ட்யூமுக்கு.

*****

ஒரு ஜோடித் தூக்குக்கயிறு!

ஒரு ஜோடித் தூக்குக்கயிறு!

பக்கத்து வீட்டு முதிய தம்பதிக்குத் திடீரெனக் கடவுள் மீது அதீதக் காதல் வந்துவிட்டது. ஊரில் கும்பாபிஷேகம் என்று, ஒரு வாரம் ஊருக்குப் போகிறார்கள்.

போகிறவர்கள் நிம்மதியாகப் போகாமல், ஒரு மஞ்சள் பையை நீட்டினார்கள் மார்த்தாண்ட தம்பதியிடம்.

தம்பி, நகையெல்லாம் வீட்ல வைக்க பயமா இருக்கு. உங்க பீரோவுல இருக்கட்டுமே? என்றார்கள்.

மார்த்தாண்ட தம்பதி அந்தப் பையை ஒரு புனிதப்பண்டம் போல வாங்கிக்கொண்டார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பது அநாகரிகம் என்று நினைத்தார்கள்.

உண்மையில், அது அநாகரிகம் மட்டுமல்ல, ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறு என்று புரிய சில நாட்கள் தேவைப்பட்டது.

ஒரு வாரம் மார்த்தாண்டத்தின் மனைவி தூங்கவில்லை. பீரோவுக்குப் பக்கத்தில் பல்லி ஊர்ந்தால் கூட, நகையைத் திருட வருகிறதோ? என்று சந்தேகப் பார்வையில் பார்த்தாள்.

ஒருவழியாகக் கும்பாபிஷேகத்திற்குப் போன அவர்கள் வந்தார்கள். மார்த்தாண்டத்தின் மனைவி அந்தப் பையை அப்படியே திருப்பிக் கொடுத்தாள்.

ஒரு நிம்மதிப் பெருமூச்சு இருவருக்கும். அந்தப் பெருமூச்சில் ஒரு சிறிய சூறாவளியே அடங்கியிருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் அந்த வீட்டுப் பாட்டியின் முகம் ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா போல சோகமாக இருந்தது.

மார்த்தாண்டத்தின் மனைவிக்குத் தாங்கவில்லை. என்ன பாட்டி, கும்பாபிஷேகம் நல்லா நடந்ததா?, என்று எதார்த்தமாக விசாரிக்கப் போக, பாட்டி மெல்ல இழுத்தார்.

எல்லாம் நல்லாத்தான் நடந்ததும்மா. ஆனா, அந்த நகைப்பையில இருந்த ஒரு ஜோடி வளையலைக் காணோம். உங்க வீட்டுக்கு யாராவது புதுசா வந்துட்டுப் போனாங்களா? என்று ஒரு கேள்வியை, அமெரிக்கா ஈரானில் ஒரு குண்டைத் தூக்கிப் போடுவதைப் போலப் போட்டார்.

அந்தக் கேள்வி ஓர் அமெரிக்க அணுகுண்டு ஹிரோஷிமா, நாகசாகியில் வெடித்ததை விட மோசமாக வெடித்தது.

மார்த்தாண்டத்தின் மனைவிக்குத் தலை சுற்றியது. மார்த்தாண்டத்துக்கோ, சிறைச்சாலைக் கம்பிகள் கண்ணுக்குத் தெரிந்தன.

அவர்கள் அந்தப் பையிலிருந்து எதையும் எடுக்கவே இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது?

சாட்சியில்லாத நேர்மை என்பது ஒரு தற்கொலை முயற்சி.

அன்று மாலை முழுக்க மார்த்தாண்டத்தின் வீட்டில் ஒரு மயான அமைதி. ஒரு ஜோடி வளையலுக்காக முப்பது காலக் கௌரவம் குப்பையில் விழுந்தது போலத் தெரிந்தது.

மாலை ஆறு மணி இருக்கும். காலிங் பெல் அடித்தது. எமன் தான் வந்திருக்கிறார் என்று நினைத்துத் திறந்தால், மார்த்தாண்டத்தின் முன் பாட்டி நிற்கிறார். முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பு.

மன்னிச்சிருங்க தம்பி. போன மாசமே என் பொண்ணு அந்த வளையலை வாங்கிட்டுப் போனது எனக்கு ஞாபகமே இல்லை. பையைத் திறந்து பார்த்தப்பதான் தெரிஞ்சது. வயசான காலத்துல மறதி, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மார்த்தாண்ட தம்பதிக்கு அப்போதுதான் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. பாட்டிக்கு மறதி இருக்கலாம், ஆனால் மார்த்தாண்ட தம்பதிக்கு அது ஒரு பெரிய பாடம்.

பாட்டி போன பிறகு, மார்த்தாண்டத்தின் மனைவி பீரோவைத் திறந்து ஏதோ தேடினாள். அவளது முகம் வெளுத்துப் போனது.

என்ன ஆச்சு? என்றான் மார்த்தாண்டம்.

நிம்மதியில நான் கவனிக்கவே இல்லை. அந்தப் பாட்டிக்கு வளையல் கிடைச்சிருச்சு. ஆனா, அந்தப் பையில நான் அவசரத்துல கழட்டி வச்ச என் வைர மோதிரத்தைக் காணோம். அவங்க பையைத் தர்றப்போ தெரியாம என் மோதிரத்தையும் சேர்த்துப் போட்டுட்டேன்னு நினைக்கிறேன். இப்போ போய் எப்படிக் கேக்குறது?

மார்த்தாண்ட தம்பதி இப்போது மீண்டும் அதே சோகமான மௌனத்திற்குத் திரும்பியது.

*****

8 Apr 2026

சிரிக்கும் கபட மனிதர்!

சிரிக்கும் கபட மனிதர்!

அந்த ஏரியாவுக்குப் புதிதாகக் குடி வந்த அந்த நபர் மீது ஒருவிதமான கார்ப்பரேட் நம்பிக்கை நிலவியது.

அவர் நடத்திய மாதாந்தரச் சீட்டு, வங்கிகளை விடவும் அதிக லாபம் தரும் என்கிற வதந்தி, தெருமுனைத் டீக்கடையில் ஒரு உபநிஷதம் போலப் பரவிக் கிடந்தது.

அவசரத் தேவைக்குக் கை கொடுக்கும், என்று அக்கம்பக்கத்தினர் கொடுத்த தைரியத்தில், ஞானசுந்தரம் மாதா மாதம் ஐயாயிரம் ரூபாயை அவரிடம் ஒப்படைத்து வந்தார்.

உண்மையில், அது அந்த ஆசாமிக்கு கொடுத்த நன்கொடை என்பது அப்போது ஞானசுந்தரத்துக்குத் தெரியவில்லை.

சீட்டு முடிய இன்னும் மூன்றே மாதங்கள். ஞானசுந்தரத்தின் கனவுகளில் அந்தப் பணத்தில் வாங்கப் போகும் பொருட்கள் அணிவகுப்பு நடத்தின.

ஆனால், ஒரு காலை வேளையில், அந்த நபர் வீட்டைப் பூட்டிவிட்டு, ஊரையும் சேர்த்துப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகி விட்டார்.

ரசீது கூட வாங்காமல், ஒரு நபரின் புன்னகையை மட்டுமே பிணையாக வைத்துப் பணம் கொடுத்த ஞானசுந்தரம் போன்ற பலர், இப்போது தெருவில் நின்று கியூபிசம் ஓவியம் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

முறையான வங்கி இருக்கும்போது ஏன் அங்கே போனாய்? என்று இப்போது உறவுகளும் நட்புகளும் ஞானசுந்தரத்தைத் திட்டுகின்றன.

வழிப்பறி செய்தவனை விட, வழிப்பறி கொடுக்க நின்றவன் மேல் தான் இந்தச் சமூகம் அதிகக் கோபப்படுகிறது.

நெருக்கமானவர் என்கிற தகுதியை விட, அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனமே சிறந்தது என்கிற கசப்பான உண்மையை, அந்தப் பூட்டிய கதவு ஞானசுந்தரத்துக்கு மிகத் தெளிவாகப் புரிய வைத்துவிட்டது.

புன்னகைக்கும் நபரை விட, முறைக்கும் ஊழியர்கள் அடங்கிய வங்கியே பாதுகாப்பானது. அங்கு லாபம் குறைவாக இருக்கலாம், ஆனால் நம் தூக்கம் அதிகமாக இருக்கும். இதை பார்ப்போரிடமெல்லாம் ஞானசுந்தரம் ஞான வாக்கைப் போலச் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நீங்களும் இதை நான்கு பேருக்குச் சொல்லலாம். ஏதோ நான்கு பேருக்கு நன்மை என்றால், நான்கு வார்த்தை சொல்வதில் என்ன தவறு இருக்கப் போகிறது?

*****

டூயல் சிம் மூளைக்காரன்!

டூயல் சிம் மூளைக்காரன்!

சுசீந்திரன் மனைவிக்கு ஒரு விசித்திரமான ஆசை. கடல் தாண்டிப் போய், ஏரோபிளேன்ல நாலு மணி நேரம் பறக்க வேண்டும். பொதுவாக, நான்கு மணி நேரம் அந்தரத்தில் தொங்குவதை ஒரு சாதனையாகக் கருதும் மனிதாபிமானம் கொண்டவர் அவர்.

சுசீந்திரனுக்கு வாங்கும் சம்பளமோ வீட்டு வாடகைக்கும், மளிகைக் கடைக்காரரின் சாபத்துக்கும் சரியாக இருந்தது.

ஆசைகள் நியாயமானவைதான், ஆனால் அந்த ஆசைகளுக்கு பெட்ரோல் ஊற்றப் பணம் வேண்டுமே!

அப்போதுதான் சுசீந்திரனின் டூயல் சிம் மூளை வேலை செய்தது.

ஸ்ட்ரெய்டடாகக் களத்தில் இறங்கினான்.

தன் அலுவலகப் பணிக்கு மத்தியில் சேலை, வேஷ்டி, லுங்கி என்று மொத்தமாக வாங்கி வந்து, சைடு பிசினஸ் ஆரம்பித்தான்.

அலுவலகம் போகும் நேரங்களில் அவனின் அந்த மனைவி கல்லாவைக் கவனித்துக்கொண்டார்.

நண்பர்கள் சொன்னார்கள், நீ பேச்சுக்காரன்யா, பேசிப் பேசியே லுங்கியைத் தலைப்பாகையா கட்ட வச்சிடுவ என்று.

சுசீந்திரனின் டூயல் சிம் மூளையானது போகப்போக டிரிபிள் சிம் அளவுக்கு வேலை செய்ய ஆரம்பித்தது.

சினிமாவுக்குப் போனால் கூட, ஒரு கோணிப்பையில் நாலு வேஷ்டி, ஐந்து லுங்கி, ஆறு புடவையை எடுத்துக் கொண்டு போய் தியேட்டர் வாசலில் நிற்பான்.

படம் ஆரம்பிக்க ஒரு மணி நேரம் முன்னால் போய் இரண்டு வேஷ்டியையாவது விற்றுவிட்டு, அந்த லாபத்தில் பாப்கார்ன் வாங்கி மனைவிக்குக் கொடுப்பான். அவனுக்கு நோ பாப்கார்ன். அதை சேமிப்பில் வரவு வைத்துக் கொள்வான்.

இப்படியாகச் சேர்த்தப் பணத்தில் பத்து வருடங்களில் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் அளவுக்குக் கொழுத்த பணக்காரனான் சுசீந்திரன்.

மக்களை வசியப்படுத்தத் தெரிந்தவனுக்கு வானம் மட்டுமல்ல, விமான டிக்கெட்டும் வசப்படும் என்பதை நிரூபித்த சுசிந்திரன், இப்போது மனைவியோடு விமானத்தில் பறந்து கொண்டிருந்தான்.

சும்மா இல்லாமல், அங்கும், பக்கத்து சீட்டில் இருப்பவரிடம் ஒரு வேஷ்டியை விற்க முயற்சி செய்து கொண்டிருந்தான் சுசீந்திரன். விமானத்திலிருந்து இறங்கி, டாக்ஸியில் செல்வதற்குச் செலவுக்கு ஆகுமே அந்த வேட்டி விற்ற லாபம்!

*****

7 Apr 2026

குழந்தையின்மை – மௌனத்தின் வலி!

குழந்தையின்மை – மௌனத்தின் வலி!

விசேஷம் ஏதும் உண்டா?

இந்த ஒரு வரி கேள்விக்குள்ளே எத்தனை ஈட்டிகள் ஒளிந்திருக்கின்றன என்பது அதை எதிர்கொள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவர் ஓர் ஆளுமைமிக்க தைரியமான பெண்மணி (யார் என்கிற விவரம் வேண்டாமே!) அத்துடன் தேர்ந்த பேச்சாளர், தன்னம்பிக்கை எழுத்தாளர். குரலை வைத்தே மனிதர்களின் உணர்ச்சிகளைக் கணிப்பவர். ஆனால், அவரே தன் கருச்சிதைவு மற்றும் தோல்வியடைந்த ஐவிஎஃப் சிகிச்சைகள் பற்றிப் பேசும்போது தடுமாறுகிறார்.

விஷயம் என்னவென்றால், நம் சமூகத்தில் தாய்மை என்பது ஒரு டீபால்ட் செட்டிங். அது தானாக நடக்காவிட்டால், சமூகம் பதற்றமடைகிறது. அந்தப் பதற்றத்தில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஆறுதலை விட அதிக ரணங்களையே ஏற்படுத்துகின்றன.

இதை மேம்போக்காகப் பார்ப்பதை விட, சற்று டெக்னிக்கலாகப் பார்ப்போம்.

இன்று ஏழு தம்பதிகளில் ஒருவருக்குக் கருவுறுதலில் சிக்கல் இருக்கிறது என்கிறது மருத்துவம்.

ஐவிஎஃப் முறையில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு சராசரியாக 25 சதவீதம்தான்.  மீதி 75 சதவீதம் தோல்விதான் மிஞ்சுகிறது.

இது வெறும் கணக்கு அல்ல, பலருடைய கண்ணீர்.

மேற்படி நாம் சொன்ன அந்தப் பெண்மணி, தன் அனுபவத்தில் சந்தித்த மனிதர்கள் சொன்னதையெல்லாம் கேட்டால் கண்களல்ல, கண்ணீரே கண்ணீர் வடிக்கும்.

ஒரு விருந்தில் தட்டில் உணவை நிரப்பிக்கொண்டே, வருத்தப்படாதீங்க, கண்டிப்பா அடுத்த முறை நடக்கும், என்று போகிற போக்கில் அந்தப் பெண்மணியைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாராம் ஒரு நபர். கருச்சிதைவு என்பது ஏதோ பஸ்ஸைத் தவறவிடுவது போன்ற விஷயமா என்ன? அப்படித்தான் தோன்றியிருக்கிறது அந்த நபருக்கு.

கருமுட்டை மாற்றப்பட்ட பிறகு ஒரு நண்பர் சொன்னாராம், அந்தச் செல்கள் ஒன்னும் பெருசில்லை, அது உயிராக வாய்ப்பு குறைவுதான் என்று. அறிவியல்பூர்வமாக அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், பல மாத ஊசிகளுக்கும் வலிக்கும் பிறகு அந்தப் பெண்ணுக்கு அது வெறும் செல் அல்ல, அது ஒரு கனவு! இதைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் பூஜ்ஜியம்தான்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே, உனக்குக் கொடுப்பினை அவ்வளவுதான் என்று இன்னொருவர் சொல்லியிருக்கிறார். இது ஒரு ரகமான க்ளிஷே. ஆறாத புண்ணில் மிளகாய்ப் பொடி தூவுவதற்குச் சமம்.

அப்படியானால், எது சரியான ஆறுதல்?

அந்தப் பெண்மணியிடம் விஷேஷம் பற்றிக் கேட்கின்ற போது, அவர் கண்கள் கலங்குவதைக் குறிப்பறிந்து சொல்லப்படும், ஐ ஆம் சாரி என்பது ஒரு முழுமையான வாக்கியம். இதற்குப் பின்னால் ஒட்டுக்கள் தேவையில்லை.

பல நேரங்களில் நிச்சயம் நடக்கும் என்ற போலி நம்பிக்கையை விட, உன் வலியில் நானும் பங்கெடுக்கிறேன் என்கிற மௌனமே சிறந்தது.

அந்தப் பெண்மணி ஓர் அழகான உதாரணத்தைச் சொல்கிறார். ஒரு தம்பதி தாங்கள் கருவுற்றிருக்கும் செய்தியை அவரிடம் சொல்லும்போது, இந்தச் செய்தி உன்னை வருத்தப்பட வைக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும், என்று நிதானமாகச் சொன்னார்களாம். அந்தத் தர்மசங்கடத்தைப் புரிந்து கொள்வதே ஒரு பெரிய அன்புதான்.

கடைசியாக, அந்த ஐவிஎஃப் கிளினிக் வரவேற்பாளர் சொன்ன,  உங்களை இத்தனை வருஷமா பார்க்கிறேன். ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு அன்பா இருக்கீங்க? குழந்தை இல்லாமலேயே நீங்கள் இருவரும் முழுமையானவர்கள் தான், என்கின்ற ஆறுதலும் மேம்பட்டதுதான்.

வாழ்க்கை என்பது ஏதோ ஸ்கோர்போர்டு வைத்து விளையாடும் விளையாட்டு அல்ல. குழந்தை இல்லை என்பதற்காக ஒரு வாழ்வு அர்த்தமற்றதாகி விடுவதில்லை.

மனிதர்களுக்குத் தேவைப்படுவது அதிகப்படியான கேள்விகள் அல்ல, கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கும் பொறுமையும், சில மௌனமான கைகுலுக்கல்களும்தான்.

மௌனத்தின் வலி புரிந்தவர்கள் அமைதியான ஆறுதலை எப்படிக் கொடுப்பது என்றுதான் யோசிப்பார்களே தவிர, மனக்குறையை ஒருபோதும் கிளறி விட்டு விட மாட்டார்கள்.

*****