ஒரு மிடில்கிளாஸ் தற்காப்புக் கலை!
மாதத்தின்
முதல் தேதி காலை 9:01 மணிக்கு மொபைலில் வரும் அந்த மெசேஜ் இருக்கிறதே, அது ஒரு மாயக்காரி.
சம்பளம்
கிரெடிட் ஆகிவிட்டது, என அவள் கண் சிமிட்டும்போதே, கூடவே மின்கட்டணம், பால் கணக்கு,
வாஷிங் மெஷின் இஎம்ஐ எனப் பத்து பேர் கத்தியுடன் வாசலில் நிற்பார்கள்.
நடுத்தர
வர்க்கத்தின் சம்பளம் என்பது, தியேட்டரில் ரிலீஸாகும் பெரிய பட்ஜெட் படம் போன்றது.
வெள்ளிக்கிழமை வரும், ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் காணாமல் போய்விடும்.
வாசுதேவன்
அத்தகைய ஒரு நடுத்தர வர்க்கப் போராளி. பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளம். ஆனால், அவன்
முகத்தில் எப்போதும் ஓர் அலட்டிக்கொள்ளாத அமைதி இருக்கும்.
சென்ற
வாரம் அவன் நண்பன் குமார், டீக்கடையில் வைத்து ஆச்சரியமாகக் கேட்டான், ஏன் மச்சி, உன்
பொண்ணு அந்தப் பெரிய காலேஜ்ல சேரப்போறாளாமே? பதினைந்தாயிரம் சம்பளத்துல இதெல்லாம் எப்படிச்
சாத்தியம்? எனக்கு ஒரு மாசம் முடிஞ்சு அடுத்த மாசம் வர்றதுக்குள்ள மூச்சு முட்டுது!
வாசுதேவன்
சிரித்தான். அவன் சிரிப்பில் ஒரு மெல்லிய கர்வம் இருந்தது. எல்லாம் அம்மாச்சி சொல்லிக்கொடுத்த
வித்தை மச்சி, என்றான்.
வாசுதேவனின்
அம்மாச்சி ஒரு மர்மமான மனுஷி. தாத்தா புண்ணாக்கு மூட்டைகளை விற்றுவிட்டுப் பணத்தைக்
கொண்டு வந்து நீட்டினால், அதைத் தொட்டுப் பார்த்தே, இதில் ஆயிரம் ரூபாய் இருக்கிறதா?
என்பார்.
தாத்தா
அசந்து போய், நீ என்ன மந்திரக்காரியா? என்பார்.
அம்மாச்சி
மந்திரக்காரி இல்லை. அவர் ஒரு பொருளாதாரப் பூனை. வந்த பணத்தில் பாதியை ஒரு பழைய அடுக்குப்
பானையில் போட்டுவிட்டு, அதன் வாயைத் துணியால் கட்டிவிடுவார். பூமி அதிரட்டும், வானம்
இடியட்டும், அவசிய அத்திவாசிய காரியங்களுக்குத் தவிர, அந்தப் பானை திறக்கப்படாது.
வாசுதேவனுக்குத்
தனது பதின்ம வயதில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பூர்வீக நிலத்தை விற்றபோது அவன் பங்காக
இரண்டு லட்சம் ரூபாய் கைக்கு வந்தது.
அப்போதுதான்
அவன் பங்காளிகளின் நிஜ முகங்கள் தெரிந்தன. ஒரு பங்காளிக்கு திடீரென தேசபக்தி வந்துவிட்டது.
வாழ்க்கையில எப்போ சாவோம்னு தெரியாதுப்பா, என்று தத்துவம் பேசி, கன்னியாகுமரியில் ஆரம்பித்து
காஷ்மீர் வரை ஊர் சுற்றப் போனார். வந்தபோது கைப்பை காலியாக இருந்தது. ஆனால் இமயமலைப்
புகைப்படம் கைவசம் இருந்தது.
இன்னொரு
பங்காளி, அம்பானி மட்டும்தான் கார்ல போகணுமா? என்று கேட்டுவிட்டு ஒரு வெள்ளை நிற அம்பாசிடர்
காரை வாங்கினார். கார் வந்த வேகத்தில் பெட்ரோல் விலையும் ஏறியது. இப்போது கார் வீட்டு
வாசலில் ஒரு ஷோபீஸ் போல நிற்கிறது.
வாசுதேவனின்
மைத்துனர் இன்னும் ஒருபடி மேலே போனார். மாப்ளே, காலி மனை விற்பனைக்கு வருது. வாங்கிப்
போட்டால் ஐந்து வருடத்தில் விதைக்காமலேயே, பராமரிக்காமலேயே பத்து டன் கருவை விறகு வெட்டலாம்
என்றார்.
ஆனால்
வாசுதேவன், தன் அம்மாச்சியின் மந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பாதி இப்போ,
பாதி அப்புறம்!
அவன்
அந்த ஒரு லட்சத்தை அப்படியே தங்கமாகவும் இன்னொரு லட்சத்தைப் பிளாட்டாகவும் வாங்கி அடுக்குப்
பானையில் போட்டான். கூடவே, மாதம் 2,000 ரூபாய் ஆர்.டி., இன்னொரு 2000 எஸ்.ஐ.பி. உலகம்
போக்கில் போய்க்கொண்டிருக்க, இவன் மட்டும் தன் ஆசைகளைக் கொஞ்சம் அடக்கி வாசித்தான்.
டிவி பழுதானால் ரிப்பேர் செய்தான், புதுசு வாங்கவில்லை. டூர் போவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டான்.
இன்று,
பதினைந்து வருடங்கள் கழித்து அந்தப் பானையைத் திறந்து பார்த்தபோது, அதில் இருபது லட்சம்
ரூபாய் இருந்தது.
சித்தப்பா
போன் செய்து, பொண்ணை அந்தக் காலேஜ்ல சேர்த்திருக்கே. பீஸ் அள்ளிக் கொட்டணுமேப்பா, சமாளிப்பியா?
என்று கேட்டபோது, வாசுதேவன் அமைதியாகச் சொன்னான், சமாளிச்சிருவேன் சித்தப்பா.
தன்
மகள் அந்தப் பெரிய கல்லூரியின் வாசலில் நுழையும்போது, வாசுதேவனுக்குக் கடன் வாங்கும்
பதற்றம் இருக்காது. நகைக்கடையிலோ, வங்கியிலோ போய் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது.
வாழ்க்கை
என்பது ஒரு மேஜிக் ஷோதான். ஆனால், கிளைமாக்ஸில் கையில் காசு இல்லையென்றால், அந்த மேஜிக்
ஒரு மோசமான காமெடியாக முடிந்துவிடும் என்பதை வாசுதேவன் அறிந்திருந்தான்.
பணத்தைச்
செலவு செய்வதை விட, அதைச் சேமிப்பதில் ஒரு சாடிஸ்டிக் சந்தோஷம் இருக்கிறது. அதை அனுபவித்துப்
பார்த்தால்தான் தெரியும், வாசுதேவனைப் போல!
*****






