27 Mar 2026

மெமரி பவர் – சில கப்சாக்களும் நிஜங்களும்!

மெமரி பவர் – சில கப்சாக்களும் நிஜங்களும்!

ஞாபகசக்தி என்றாலே நம்மூரில் சில செட் நம்பிக்கைகள் உண்டு. இருபது வயதுக்கு மேல் அறிவு மழுங்கிடும், வல்லாரை மாத்திரை சாப்பிட்டால் எல்லாம் ஞாபகம் வரும் -  இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று நினைக்கிறீர்கள்?

உலகெங்கம் நடைபெற்றுள்ள ஆய்வுகள் என்ன சொல்கின்றன தெரியுமா?

இருபதுகளில் ஷார்ட் டெர்ம் மெமரி உச்சத்தில் இருக்கும் என்பது உண்மை. ஆனால் அதற்காக முப்பது வயதில் மூளை ரிடையர் ஆகிவிடாது. தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் நுண்ணறிவு ஒருவருக்கு 60 முதல் 70 வயதில்தான் பீக்கில் இருக்குமாம்.

இளைஞர்கள் வேகமாக யோசிக்கலாம், ஆனால் சீனியர்கள் ஷார்ட்கட்களில் ஜெயிப்பார்கள். அனுபவம் என்கிற டேட்டாபேஸ் அவர்களிடம் அதிகம். அதனால், வயதாகி விட்டது, இனிமேல் என்ன இருக்கிறது? என்பது வெறும் சோம்பேறித்தனம்.

ஞாபக சக்தியை அதிகப்படுத்துவதாக வரும் விளம்பரங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிஷ் ஆயில், ஜின்கோ பிலோபா, மெமரி டேப்லெட்டுகள் என்று விளம்பரம் செய்யப்படும் எந்த மெமரி சப்ளிமெண்ட்டும் வேலை செய்வதில்லை என்று பல ஆய்வுகள் கைவிரித்துவிட்டன.

அப்புறம் எதுதான் வேலை செய்யும்?

காய்கறிகள், பழங்கள், ஆலிவ் ஆயில், மீன், முழு தானியங்கள். இதைச் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக மறதி நோய் வரும் வாய்ப்பு 35 சதவீதம் குறைகிறதாம். சும்மா மாத்திரை விழுங்குவதை விட, தட்டில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் தேவை.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் ஜாக்கிரதை. அது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும். அதேபோல கொலஸ்ட்ரால் அதிகமானால் மூளையில் நச்சுப் புரதங்கள் சேரத் தொடங்கும். இதுதான் அல்சைமர் நோய்க்கு விசிட்டிங் கார்டு.

மன அழுத்தம், கவலை இருந்தால் உடனே ட்ரீட்மென்ட் எடுங்கள். ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசோல் உங்கள் மூளையைத் தற்காலிகமாக ஆஃப் செய்துவிடும். இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக யோகா மற்றும் உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும் பாரம்பரிய மருந்துகள்.

அதுமட்டுமல்ல, மூளையைக் கூர்மையாக வைத்திருக்க ஆகச்சிறந்த வழி யோகா மற்றும் உடற்பயிற்சி. வாரத்தில் மூன்று முறை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மூளையின் ஹிப்போகாம்பஸ் அதாவது அந்த நினைவாற்றல் மையம் அப்படியே இருக்கிறது. ஆனால், சோம்பேறியாக உட்கார்ந்திருப்பவர்களுக்கு அது சுருங்கத் தொடங்குகிறது. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மூளை மெலிந்து போகும் அபாயம் உண்டு. எனவே, நாற்காலியை அதிகம் தேய்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கணினியில் பிரைன் கேம்ஸ் விளையாடினால் அறிவு வளரும் என்று நம்புவது ஒரு மாயை. அந்த கேம்களில் வேண்டுமானால் நீங்கள் சாம்பியன் ஆகலாம். ஆனால், அது நிஜ வாழ்க்கையில் மளிகைக் கடைக்குச் செல்லும் வழியைக் கூட ஞாபகம் வைத்திருக்க உதவாது.

மேலும் சில வழிகளும் ஞாபக ஆற்றலை வளர்க்க சொல்லப்படுகின்றன. அவற்றில் சில - புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், தினசரி பேப்பர் படியுங்கள், ஒரு புதிய பயிற்சி வகுப்புக்குச் செல்லுங்கள் அல்லது யாருக்காவது தன்னார்வலராக உதவி செய்யுங்கள் என்பதெல்லாம். மூளையை பிஸியாக வைத்திருப்பவர்களுக்கு டிமென்ஷியா வரும் வாய்ப்பு மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, விசயம் இதுதான். 80 வயதில் ரிடையர் ஆகிவிடாதீர்கள். மூளைக்குத் தீனி போடுங்கள், உடலுக்கு வேலை கொடுங்கள். உங்கள் ஞாபக சக்தி அவ்வளவு சீக்கிரத்தில் பழுதுபட்டு விடாது.

ஆகவே, கப்சாக்களுக்கு குட்பை சொல்லுங்கள். உண்மைக்கு வெல்கம் சொல்லுங்கள்.

*****

மிஸ்ஸிங் மெமரி – அந்த மூன்று வயது வரை என்ன நடந்தது?

மிஸ்ஸிங் மெமரி – அந்த மூன்று வயது வரை என்ன நடந்தது?

நீங்கள்இப்படிச் சொல்லக் கூடும்.

எனக்கு இரண்டு வயது இருக்கும்போது காது வலி உயிர் போனது. நள்ளிரவில் என் அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியதும், அங்கே ஒரு சின்ன சர்ஜரி நடந்ததும் எனக்குத் துளி கூட நினைவில்லை. ஆனால், அடுத்து சில வருடங்கள் கழித்துப் பக்கத்து வீட்டுப் பூனை புதருக்கு அடியில் ஒளிந்திருந்தது மட்டும் ஹைடெபனிஷன் தரத்தில் ஞாபகம் இருக்கிறது.

அப்படியானால், நடுவில் இருந்த வருடங்கள் எங்கே போயின?நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணும் கதையாய் அவை எங்கே போயின?

விஞ்ஞானிகள் இதற்கு சிறுவயது மறதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மூன்று வயது வரை நம் மூளை ஒரு மெமரி கார்டு இல்லாத கேமரா போலச் செயல்படுகிறது. பதிவாகும், ஆனால் சேமிக்கப்படாது. ஏழு வயது ஆகும்போது, நம்முடைய ஆரம்பகால அந்த மூதல் மூன்றாண்டு நினைவுகள் கிட்டத்தட்ட முழுவதுமாக டெலீட் செய்யப்பட்டுவிடுகின்றன.

ஒரு பதின்பருவப் பையனுக்கும் அல்லது பெண்ணுக்கும் மற்றும் 50 வயதுப் பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் தங்கள் மூன்று வயது நினைவுகளைப் பற்றி இருக்கும் அறிவு ஒன்றுதான். அதாவது பூஜ்யம்.

இதற்குப் பின்னால் சில கோட்பாடுகள் இருக்கின்றன.

முதல் கோட்பாடு சொல்வது என்னவென்றால், மூளையின் நினைவாற்றல் மையமான ஹிப்போகாம்பஸ், நாம் பிறக்கும்போதே தயாராக இருந்தாலும், அதன் சில பகுதிகள்  வளர இன்னும் சில காலம் ஆகிறது. இதனால் மூன்று வயது வரையிலான நினைவுகள் பிக் அக் ஆகாது.

இரண்டாவது கோட்பாட்டின்படி, ஆரம்பகாலத்தில் மூளை மிக வேகமாக வளர்கிறது. புதிய நியூரான் இணைப்புகள் உருவாகும்போது, பழைய மெல்லிய நினைவுகளை அவை ஓவர் ரைட் செய்துவிடுகின்றன. பழைய வீட்டை இடித்துவிட்டுப் புதிய அப்பார்ட்மெண்ட் கட்டுவது போல! எனவே அந்த பழைய மூன்று வயதுக்குள்ளான நினைவுகள் அப்ஸ்காண்ட்.

மூன்றாவதாக ஒரு கோட்பாடு இப்படிச் சொல்கிறது. நமக்கு மொழி தெரியாதபோது ஒரு சம்பவத்தை எப்படிப் பதிவு செய்வோம்? பிம்பமாகத்தானே. அம்மா பால் கொடுத்தார் என்று வார்த்தைகளால் கோர்க்கத் தெரியாதபோது, அந்த நினைவு ஒரு பிம்பமாக மட்டும் இருந்து காலப்போக்கில் அழிந்துவிடுகிறது என்கிறது இந்த மூன்றாவது கோட்பாடு.

அத்துடன் ஆராய்ச்சியில் ஒரு வேடிக்கையான விஷயம் தெரிந்தது. எந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பேசி, சம்பவங்களை விவரமாகச் சொல்லப் பழகுகிறார்களோ, அவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கிறது.

இன்றைக்கு என்ன ஆயிற்று? என்று கேட்கும் அம்மாவிடம், கிரிக்கெட் பந்து எதிர் வீட்டு ஜன்னலில் அடித்து, கண்ணாடி உடைந்து போய் விட்டது  என்று ஒரு குழந்தை சொல்லும்போது, அந்த நினைவு ஆழமாகப் பதிகிறது. அம்மாக்கள் சும்மா இருப்பதில்லை, அப்புறம் என்ன ஆச்சு? எதிர் வீட்டுக்காரர் என்ன செய்தார்? என்று தோண்டித் துருவி கேட்கும்போது, அது ஒரு நாவல் போல மூளையில் பதிவாகிவிடுகிறது.

நம்மில் பலர், எனக்கு ஒரு வயதில் நடந்ததெல்லாம் நினைவிருக்கிறது என்று அடித்துச் சொல்வோம். இது உண்மையா? அதற்கு முன் இந்தச் சம்பவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரபல சைக்காலஜிஸ்ட் ஜான் பியாஜே, தனக்கு இரண்டு வயதில் ஒரு கடத்தல் முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து தப்பியதாகவும் துல்லியமாகச் சொன்னார். ஆனால் 15 வருடம் கழித்துத்தான் தெரிந்தது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, செவிலியர் சொன்ன கதையை அவர் தன் நினைவு என்று நம்பிவிட்டார்!

நாமும் அப்படித்தான். பழைய போட்டோக்கள், அம்மா சொன்ன கதைகள் இரண்டையும் மிக்ஸ் செய்து ஒரு கற்பனை மெமரியை உருவாக்கி வைத்துக் கொள்கிறோம் என்பது சாட்சாத் 100 சதவீத உண்மை.

நினைவு இல்லாவிட்டாலும் பாதிப்பு இருக்கும். சிக்கன் எலும்பு தொண்டையில் சிக்கிய ஒரு குழந்தைக்கு, வளர்ந்த பிறகு சிக்கன் என்றாலே அலர்ஜியாக இருக்கலாம். ஏன் பிடிக்காது? என்று அந்த வளர்ந்த குழந்தைக்குத் தெரியாது, ஆனால் மூளையின் ஏதோ ஒரு மூலையில் அந்தப் பயம் ஒளிந்திருக்கும்.

நமது கடந்த காலம் என்பது ஒரு பெரிய இருட்டு அறை. அதில் மூன்று வயதுக்குப் பிறகுதான் மின்விளக்கு எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் நாம் யார் என்பது நமக்குத் தெரிகிறது. அதுவரை நடந்தது எல்லாமே ஒரு ப்ரீ புரொடக்சன் வேலைதான்! ஆக, மூன்று வயது வரை நடந்ததை உங்களால் முப்பது வயதில் நினைவு கூர முடியாது. அப்படி முடியும் என்று சொன்னால், அதற்கு வேறு ஒரு பெயர் இருக்கிறது. அதன் பெயர்தான் கப்சா.

*****

26 Mar 2026

மூளை – ஒரு விசித்திர விருமாண்டி!

மூளை – ஒரு விசித்திர விருமாண்டி!

திடீரென ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூரலாம். எனக்கு அந்தத் தேதி ஞாபகம் இல்லை, ஆனால் அந்தச் சம்பவம் மட்டும் துல்லியமாக ஞாபகம் இருக்கிறது, என்று சொல்லலாம்.

ஒரு சாதாரண மனிதனுக்கு இது முரணாகத் தெரியலாம். ஆனால், ஒரு நரம்பியல் நிபுணருக்கு இதில் ஆச்சரியமே இல்லை. அங்கேதான் ஹிப்போகாம்பஸ் என்கிற அந்தச் சின்னஞ்சிறிய மூளைப் பகுதி வேலை செய்கிறது.

நமக்கு ஒரு பயமோ, அதிர்ச்சியோ ஏற்படும்போது மூளையில் நோர்பின்பிரைன் மற்றும் எபின்பிரைன் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை அந்தச் சம்பவத்தை மூளையில் ஆழமாக பச்சை குத்தி விடுகின்றன. மற்ற விபரங்களான தேதி, கிழமை எல்லாம் காற்றில் பறந்துவிடும், ஆனால் அந்த டிராமா மட்டும் ஹைடெபனிஷன் தரத்தில் பதிவாகிவிடும்.

நினைவாற்றலை விஞ்ஞானிகள் இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

ஒன்று, வெளிப்படையான நினைவு. இதில் பெயர்கள், தேதிகள், உங்கள் முதல் பாராட்டு, போன வாரம் சாப்பிட்ட ஹோட்டல் போன்றன ஸ்டோரேஜ் ஆகும். இது ஹிப்போகாம்பஸில் நடக்கும் விஷயம்.

மற்றொன்று, உள்ளார்ந்த நினைவு. இதில் சைக்கிள் ஓட்டுவது, ஷூ லேஸ் கட்டுவது போன்றன ஸ்டோரேஜ் ஆகும். இதற்கெல்லாம் நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. கை கால்களே பார்த்துக் கொள்ளும். இதற்கு செரிபெல்லம் மற்றும் ஸ்ட்ரியேட்டம் ஆகிய பகுதிகள் பொறுப்பு.

மருத்துவ உலகில் ஒரு சம்பவம். வலிப்பு நோயாளி ஒருவருக்கு ஒரு சர்ஜரி நடந்தது. வலிப்பு குறைய வேண்டும் என்பதற்காக அவர் மூளையின் ஒரு பகுதியை ஹிப்போகாம்பஸ் உட்பட வெட்டி எடுத்தார்கள். வலிப்பு நின்றது, ஆனால் ஒரு விபரீதம் நடந்தது. அவரால் புதிய விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவே முடியவில்லை.

டாக்டரைச் சந்திப்பார், ஐந்து நிமிடம் கழித்து வெளியே போய்விட்டு உள்ளே வந்தால், யார் நீங்கள்? என்று கேட்பார். ஆனால் சுவாரஸ்யமாக, அவருக்கு ஒரு ஸ்டார் வரையக் கற்றுக்கொடுத்தால், அதைச் சரியாகச் செய்வார். யார் கற்றுக்கொடுத்தது? என்றால் தெரியாது என்பார். இதன் மூலம்தான், செயல்முறை நினைவு தனி, தகவல் நினைவு தனி என்று உலகிற்குத் தெரிந்தது.

விஞ்ஞானிகள் இந்த விசய்ததை இத்தோடு விட்டு விடவில்லை. நிறைய உயிரிகளை வைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதில் ஒன்று, ஒரு அடி நீளம் இருக்கும் அப்லீசியா என்ற கடல் நத்தையை வைத்து செய்த ஆராய்ச்சி. அதன் நரம்பு மண்டலம் மிக எளிமையானது. அந்த நத்தைக்கு ஒரு விஷயத்தைக் கற்பிக்கும்போது, அதன் நரம்பு செல்களுக்கு இடையே இருக்கும் இணைப்புப் புள்ளி பலமடைவதைக் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நாம் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, மூளை தன்னைத்தானே ரீவயர் செய்துகொள்கிறது. இதற்குப் பெயர் நியூரோப்ளாஸ்ட்டிட்டி. டாக்ஸி டிரைவர்களை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஊர் வழிகளை ஞாபகம் வைத்துக்கொண்டே இருந்ததால் அவர்களின் ஹிப்போகாம்பஸ் பகுதி மற்றவர்களை விடப் பெரிதாக இருந்ததாம்!

வாழ்க்கை என்பதே நினைவுதான். கடந்து போகிற இந்த ஒரு நொடியைத் தவிர மற்ற எல்லாமே நினைவுகள்தானே?

இப்படி மூளையின் நினைவுகளில், செயல்களில் பல விசித்திரங்கள் இருக்கின்றன. இங்கே ஒன்றைப் பார்த்தோம். இது போன்று நிறைய இருக்கின்றன சங்கதிகள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நம் மூளை ஒரு விசித்திரமான லைப்ரரி. அங்கே சில புத்தகங்கள் பளிச்சென்று இருக்கும், சில கறையோடு இருக்கும், சில காணாமல் போயிருக்கும். ஆனால், அந்த லைப்ரரிதானே நாம் யார் என்பதைத் தீர்மானிக்கிறது.

*****

என்னதான் நடக்கிறது அந்த வளைகுடாவில்?

என்னதான் நடக்கிறது அந்த வளைகுடாவில்?

அந்த பிப்ரவரி 28,

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மிக முக்கியமான மையங்கள் மீது வான்வழித் தாக்குதலைத் நடத்தின.

ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்ட செய்தி வந்தபோது, உலகம் ஒரு நிமிடம் ஹேங் ஆகிவிட்டது.

எதற்கும் அசையாத டெஹ்ரானின் வீதிகள் இப்போது கரும்புகையால் நிறைந்திருக்கின்றன.

ஈரான் சும்மா இருக்குமா? அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் ஹோர்முஸ் நீர்ச்சந்தி.

உலகத்தின் ஆயில் டேங்கர்கள் செல்லும் அந்தச் சின்னப் பாதையை ஈரான் லாக் செய்துவிட்டது.

நீ என்னை அடித்தால், நான் உனக்கு பெட்ரோல் தரமாட்டேன் என்கிற பழைய அசிமெட்ரிக் ஸ்ட்ராடெஜிதான்.

18க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் இதுவரை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. நம் ஊரில் பெட்ரோல் விலை ஏறப்போவதற்கு இதுதான் மெயின் ரீசன்.

ஈரான் இப்போது ஆயிரக்கணக்கான ட்ரோன்களை ஏவுகிறது. ஒரே நேரத்தில் ஈக்கள் போலப் பறந்து வரும் இந்த ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்துவது ரேடார்களுக்குக் கூடச் சிரமம். இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவின் சென்ட்காம் ஈரானின் 30க்கும் மேற்பட்ட கண்ணிவெடிப் படகுகளை ஒரே நாளில் காலி செய்திருக்கிறது.

வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் தனது பாணியிலேயே காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஈரான் ஆட்சியை மாற்றுவோம் என்று ஒரு பக்கம் கர்ஜனை, இன்னொரு பக்கம் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது துல்லியமான தாக்குதல். இதற்குப் பெயர்தான் எஸ்கலேட்டரி லேடர். ஒவ்வொரு நாளும் ஏணிப்படியில் ஏறுவது போலப் பதற்றம் ஏறிக்கொண்டே போகிறது.

யுத்தம் என்றால் பழைய படங்களில் வருவது போல வீரர்கள் நேருக்கு நேர் சண்டையிடுவது கிடையாது. இது க்ளிக் செய்தால் வெடிக்கும் யுத்தம்.

டெஹ்ரானில் ஓர் அணுசக்தி மையம் தகர்க்கப்பட்டால், இங்கே சிட்னி ஏர்போர்ட்டில் டேட்டா கம்பிளீட்டாகக் கரப்ட் ஆகிறது. எல்லாம் ஒரு பெரிய சிலந்தி வலை போலப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

அறிவியல் இன்று ஒரு மனிதனை அவன் வீட்டில் இருக்கும்போதே டிரோன் மூலம் தேடிக் கண்டுபிடித்துத் தாக்கப் பயன்படுகிறது.

இந்தப் போர்ச் செய்திகளைப் படிக்க படிக்க பத்தற்மதான். ஆனால், உலகம் எப்போதும் இப்படித்தான் – ஒரு பக்கம் வினாசம், ஒரு பக்கம் வளர்ச்சி. இந்த யுத்தம் கார் டயரில் இருக்கும் காற்றைக் கூடப் பாதிக்கும், பெட்ரோல் தட்டுப்பாட்டால்!

யுத்தம் என்பது இப்போது வீரத்தைப் பொறுத்தது அல்ல. அது வோல்டேஜ் மற்றும் வேவ்லென்த் பொறுத்தது. ஒரு பக்கம் சிலிக்கான் வேலி டெக்னாலஜி, இன்னொரு பக்கம் விடாப்படியான நிலத்தடி ரகசியங்கள்.

அமெரிக்காவின் ராணுவம் ஒரு மல்டி கோர் பிராசஸர் போல. F-35 மற்றும் B-21 ரக விமானங்கள். ரேடார்களில் இவை ஒரு சின்ன காக்கா அளவுக்கே தெரியும். ஈரானின் வான் பாதுகாப்பு அரண்களைத் தெரியாமலேயே ஊடுருவும் கோஸ்ட் மெஷின்கள் இவை.

அமெரிக்காவின் கண்கள் வானத்தில் இருக்கின்றன. ஈரானின் மொபைல் போன் சிக்னல் முதல் ஏவுகணை ஏவுதளம் வரை ரியல் டைம் கண்காணிப்பு. நீ எங்கே இருக்கிறாய்? என்று தேட வேண்டியதில்லை, நீ இங்கேதான் இருக்கிறாய் என்று ஜூம் செய்து பார்ப்பார்கள்.

இது சைபர் போரும் கூட. ஒரு வைரஸ் மூலம் ஈரானின் ஒட்டுமொத்த கம்யூனிகேஷன் கிரிட்டையும் ப்ளூ ஸ்கிரீன் ஆக்கிவிட முடியும்.

ஈரானையும் குறைத்து மதிப்பிட முடியாதே. அமெரிக்கா ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் என்றால், ஈரான் ஒரு புத்திசாலித்தனமான ஹேக்கர்.

ஈரான் தனது ஏவுகணைகளை தரைக்கு அடியில் மலைகளுக்குள் சுரங்கம் தோண்டி மறைத்து வைத்திருக்கிறது. அமெரிக்காவின் சாட்டிலைட்களால் கூட எட்டிப் பார்க்க முடியாத ஆழம். இவர்களின் பத்தாஹ் ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லும்.

விலையுயர்ந்த ஏவுகணைகளை விட, மலிவான ட்ரோன்கள் ஈரானின் பலம். ஒரு 500 ட்ரோன்களை மொத்தமாக ஏவினால், அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு சிஸ்டமே குழம்பிப் போய் ஹேங் ஆகிவிடுகிறது.

ஈரானின் டெக்னிக் என்பது பிராக்ஸி வார். இதுதான் அவர்களின் ஆகச்சிறந்த ஸ்ட்ராடெஜி. லெபனான் முதல் ஏமன் வரை தங்களுக்குச் சாதகமான குழுக்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவைச் சுற்றலில் விடுவது. நாங்கள் அடிக்க மாட்டோம், ஆனால் அடி விழும் என்கிற தந்திரம்.

இந்த இரண்டுக்கும் நடுவில் மாட்டுவது என்னவோ டேட்டா பேஸ்தான்.

அமெரிக்காவிடம் பணம் இருக்கிறது, ஈரானிடம் அடங்காத குணம் இருக்கிறது. ஒரு பக்கம் ஹை டெக் ஆயுதங்கள், இன்னொரு பக்கம் லோ டெக், ஆனால் சக்தி வாய்ந்த தந்திரங்கள்.

அறிவியல் முன்னேற்றம் என்பது ஒரு கட்டத்தில் நம்மையே பயமுறுத்தத் தொடங்குகிறது. ஒரு பட்டனை அழுத்தினால் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு நகரம் அழியும் என்பது சாதனையா அல்லது வேதனையா?

யுத்தம் என்பது எப்போதும் ஒரு ஜீரோ சம் கேம். இறுதியில் ஜெயித்தவனுக்கும் இழப்பு உண்டு, தோற்றவனுக்கும் இழப்பு உண்டு.

போரின் விளைவுகளைக் கூட்டிக் கழித்து, பெருக்கு வகுத்து, வர்க்கமூலம் வரை போய் பார்த்தால், அணு ஆயுதங்களை விட, மனிதநேயம்தான் உலகைக் காக்கும் இறுதி மென்பொருள். ஆனால் இதை இன்ஸ்டால் செய்யத்தான் யாரும் முன்வருவதில்லை.

*****

25 Mar 2026

ஓவர்லோட் – உங்கள் பலவீனம் அல்ல, பஃபரிங்!

ஓவர்லோட் – உங்கள் பலவீனம் அல்ல, பஃபரிங்!

வாழ்க்கை என்பது ஒரு மென்பொருள் என்றால், இந்த எமோஷனல் ஓவர்வெல்ம் என்பது அதில் வரும் ஒரு பக் கிடையாது, அது சிஸ்டம் ஓவர் ஹீட் ஆகிவிட்டது என்பதைக் காட்டும் ஒரு வார்னிங் மெசேஜ்.

நம்மில் பலரும் நினைப்பது போல, மன அழுத்தம் என்பது எடுத்தவுடனேயே கதறி அழுவதோ அல்லது தலையைப் பிய்த்துக் கொள்வதோ அல்ல. சில சமயம் அது ரொம்பவும் சைலண்ட்.

காலையில் எழுந்திருக்கும் போதே, ஒரு நீண்ட தூக்கத்திற்குப் பிறகும் உடம்பு டயர்டாக இருந்தால், சின்னச் சின்ன விஷயங்களை அதாவது, சாவியை எங்கே வைத்தோம் என்பது போன்றவற்றை அடிக்கடி மறந்தால், பதில் வராத ஒரு வாட்ஸ்அப் மெசேஜுக்காக அல்லது சிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களுக்காக அழுகை முட்டினால், இன்னும் ஒரே ஒரு பிரச்சனை வந்தால் கூட தாங்க மாட்டேன் என்கிற ஒரு மெல்லிய பயம் அடிமனதில் ஓடினால் உங்களுக்கு ஓவர்வெல்ம் ஆகிவிட்டது என்று அர்த்தம். இது கத்தி கூச்சல் போடாது. அடியில் கசிந்து கொண்டிருக்கும் குழாய் போல மெல்ல மெல்ல உங்களைக் காலி செய்யும்.

இங்கே இப்போது என்ன நடக்கிறது என்றால், நீங்கள் புல் ஆகிவிட்டீர்கள். ஒரு பென் டிரைவில் 64 ஜிபி தான் இடம் இருக்கிறது என்றால், அதில் 65 ஆவது ஜிபியை ஏற்ற முடியாது. அது எர்ரர் காட்டும். உங்கள் மனமும் அப்படித்தான்.

உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி என்று நமக்கு யாரும் ஸ்கூலில் சொல்லித் தரவில்லை. அதைப் பகிர்ந்து கொள்ள இடமும் இல்லை. விளைவு? எல்லாம் உள்ளேயே தேங்கி, அழுத்தம் அதிகமாகி, ஒரு கட்டத்தில் ப்ரிண்டர் ஜாம் ஆவது போல உங்கள் சிஸ்டம் ஜாம் ஆகிறது.

 ஏன் இதைப் புரிந்துகொள்வது கஷ்டம் என்றால், இது ஒரு மூவிங் டார்கெட்.

ஒரு நாள் படபடப்பாக இருக்கும். அடுத்த நாள் ஒன்றுமே ஓடாதது போல இருக்கும். உங்கள் தோள்பட்டை, வயிறு, தூக்கம் என எல்லா இடத்திலும் இது ஒளிந்து கொண்டிருக்கும். எந்த ஒரு புரொடக்டிவிட்டி ஆப்போ அல்லது செக் லிஸ்ட்டோ இதைச் சரி செய்யாது. இது டெக்னிக்கல் பிரச்சனை அல்ல, பயாலஜிக்கல் பிரச்சனை!

ஓவர்லோட் என்பது உங்கள் மூளையின் ஷார்ட் சர்க்யூட்!

நம் ஊர் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டால் ஹார்ன் சத்தம் எப்படி நம் பிபியை ஏற்றுகிறதோ, அப்படித்தான் இந்த எமோஷனல் ஓவர்லோட்.

மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது? நான் என்ன அவ்வளவு வீக்கா? என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்.

நிஜத்தைச் சொல்லப்போனால், இது உங்கள் கேரக்டர் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, இது உங்கள் உடலில் இருக்கும் ஹார்டுவேர் சம்பந்தப்பட்ட கோளாறு.

உங்கள் மண்டைக்குள் அமிக்டலா என்று ஒரு குட்டி பீன்ஸ் வடிவ உருவம் இருக்கிறது. அதுதான் உங்கள் உடம்பின் அலாரம் சிஸ்டம்.

ஆதிகாலத்தில் மனிதன் காட்டில் இருந்தபோது, தூரத்தில் புலி உறுமினால் இவன் ஓட வேண்டுமா அல்லது சண்டை போட வேண்டுமா என்று முடிவு செய்வது இந்த அமிக்டலாதான். ஆபத்து வந்ததும் இது சிக்னல் கொடுக்கும். ரத்த அழுத்தம் ஏறும், இதயம் டக் டக் என அடிக்கும், தசைகள் இறுகும். எல்லாம் ரெடி என கிரீன் சிக்னல் கொடுக்கும்!

ஆனால், இன்று புலி வருவது கிடையாது. அதற்கு பதில், திறந்தாலே தலைவலி தரும் 200 அன்ரீட் ஈமெயில்கள், வாட்ஸ்அப்பில் வரும் அந்த ஒரு ரிப்போர்ட் எங்கே? மெசேஜ், நாம பேசணும் என்று காதலியோ, மனைவியோ சொல்லும் அந்த ஒற்றை வரி போன்றவை புலி போல ஆகி விட்டன.

உங்க அமிக்டலா பாவம், ரொம்ப அப்பாவி. ஈமெயிலுக்கும் புலிக்கும் அதற்கு வித்தியாசம் தெரியாது. ஆபத்து என்று தெரிந்தாலே உடனே அலாரத்தை அடித்து விடும்.

தொடர்ந்து இப்படி அலாரம் அடித்துக்கொண்டே இருந்தால், உங்கள் உடல் ரெஸ்ட் மோடுக்கு போகவே மறந்து விடும். உங்கள் மனதின் பேண்ட்விட்த் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும்.

ஒரு கட்டத்தில், மிகச்சிறிய விஷயம் கூட உங்கள் சிஸ்டத்தை ஹேங் செய்துவிடும். இது உங்கள் தோல்வி அல்ல, உங்கள் நரம்பு மண்டலம்  தம்பி, கொஞ்சம் ஓரம் போய் நில், எனக்கு மூச்சு முட்டுகிறது என்று போடும் சிக்னல்.

இந்த விசயத்தில், உங்களை நீங்களே குறைபட்டுக் கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சிஸ்டம் ஓவர்-ஹீட் ஆகியிருக்கிறது. அவ்வளவுதான். கொஞ்சம் கூலண்ட் ஊற்றி, ரீபூட்  செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.

உணர்ச்சிவசப்படுவது ஓர் உயிரியல் செயல்முறை என்பதைப் புரிந்து கொள்வதுதான் இதற்கான தீர்வுக்கான முதல் படி.

உங்களை ஒரு நிரம்பி விட்ட வாளியாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு டென்ஷனும், ஒவ்வொரு பொறுப்பும், ஒவ்வொரு ஈமெயிலும் அந்த வாளியில் விழும் ஒரு சொட்டுத் தண்ணீர்.

வாளியில் தண்ணீர் விழ விழ, அதை வெளியேற்ற ஒரு அவுட்லெட் குழாய் வேண்டும். அதாவது, தூக்கம், கொஞ்சம் அமைதி, பிடித்தமான ஒரு பாட்டு, அல்லது யாரிடமாவது மனம் விட்டுப் பேசுவது.

இந்த அவுட்லெட் குழாய் அடைபட்டு, தண்ணீர் மட்டும் விழுந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்? வாளி வழியும். அதைத்தான் நாம் ஸ்ட்ரெஸ் என்கிறோம். ஆக, நீங்கள் சென்சிட்டிவ் ஆள் எல்லாம் கிடையாது, உங்கள் வாளிக்கு ஏற்ற அவுட்லெட் இல்லை, அவ்வளவுதான்!

இப்போது உங்களுக்கு விசயம் புரிந்து விட்டதா? அவ்வபோது சின்ன சின்ன ரெஸ்ட் மற்றும் உங்களுக்கே உங்களுக்குப் பிடித்த சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் பிராப்ளம் சால்வ்டு.

*****

ரத்தத்தால் எழுதப்படும் பூகோளம் – ஒரு கண்ணீர் அறிக்கை!

ரத்தத்தால் எழுதப்படும் பூகோளம் – ஒரு கண்ணீர் அறிக்கை!

சமாதான மேஜையில் அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்த போதே, வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா.

ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி வீழ்த்தப்பட, மத்திய கிழக்கு நாடுகள் எரிமலைக் குழம்பாய் கொதிக்கின்றன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனானைத் தாக்க, ஈரான் தன் கோபத்தை அமெரிக்கப் படைத்தளங்களின் மீது ஏவுகணைகளாகப் பொழிகிறது.

ஈரமே இல்லாத இதயங்கள் ஏந்திய ஆயுதங்களால், ஈரான் இன்று எரிகிறது! எங்கள் இழப்புகளுக்குப் பழி தீர்க்காமல் இந்தப் போர் அணையாது, என்கிறது ஈரான்.

இது முடிவில்லாப் போர் அல்ல, ஆனால் முடிவுக்கு வரக் காலம் பிடிக்கும், என்கிறது இஸ்ரேல்.

காலத்தின் காலடியில் சிக்கிய எறும்புகளாய் மனித உயிர்கள் நசுக்கப்படுகின்றன. அமெரிக்காவோ, சமாதானப் புறாவைக் கையில் பிடித்துக்கொண்டே, மறு கையால் ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருக்கிறது!

மூன்று வார காலப் போரில், அமெரிக்கா மட்டும் இறைத்திருக்கும் தொகை 20 பில்லியன் டாலர்கள்! இந்தியத் தாயின் கருவூலக் கணக்கில் சுமார் 1.85 லட்சம் கோடி ரூபாய்!

போர் முனையில் சிந்தும் ரத்தம், சாமானியனின் சமையலறையில் கண்ணீராய் வடிகிறது.

அமெரிக்காவில் 2.89 டாலருக்கு விற்ற ஒரு கேலன் பெட்ரோல், இன்று 3.79 டாலரைத் தொட்டுவிட்டது. இந்தியாவிலும் அப்படி விலை ஏறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

அமெரிக்காவின் ராணுவச் செலவுகள், அந்நாட்டு மக்களின் அன்றாடச் செலவுகளைக் கழுத்தை நெரித்துக் கொல்கின்றன. இந்தப் போர் எங்களுக்கு வேண்டாம் என அமெரிக்க மக்கள் கதறத் தொடங்கிவிட்டார்கள்.

அமெரிக்கப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் தலைவன் ஜோ கென்ட், தன் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டார். ஈரானால் உடனடி அச்சுறுத்தல் இல்லை, இது அதிகார லாபிகளின் அழுத்தம். என் மனசாட்சிக்கு விரோதமாக இந்தப் போரைத் தொடர முடியாது என அவர் வெளியேறிவிட்டார்.

உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.

உலக நாடுகளை உதவிக்கு அழைத்த ட்ரம்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த நாடும் போர்க்கப்பல்களை அனுப்ப முன்வரவில்லை.

இப்போது கூடுதல் படைகளை அனுப்பும் முயற்சியில் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் அதலபாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழப்புகள் 5,000 ஐத் தாண்டிவிட்டது. உண்மை அதை விட அதிகமாகவும் இருக்கலாம்.

இஸ்ரேல் 8,000 கோடிகளைச் சாம்பலாக்கிவிட்டது.

லெபனானின் கட்டடங்கள் இன்று வெறும் மண் மேடுகள்.

வளைகுடா நாடுகளின் சுற்றுலா முடங்கிவிட்டது.

இந்தியாவில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏழையின் அடுப்பு அணைந்து கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தொட்டுவிட்டது. இது 130 டாலரைத் தாண்டினால் உலகமே ஸ்தம்பிக்கும்.

ஈரான் சொல்வது போல 200 டாலரை எட்டினால் அடுப்புகளில் பூனைதான் படுத்துறங்கும். வாகனங்களில் சிலந்திதான் வலை கட்டிப் பயணித்துக் கொண்டிருக்கும்.

ஆயுதம் செய்பவன் அறத்தைப் பேசுவதில்லை.

அதிகாரப் பசி கொண்டவன் உயிரை மதிப்பதில்லை.

எரிபொருள் விலையில் எரிகிறது மனிதம்.

ஏவுகணை மழையில் நனைகிறது பூமி.

ஐ.நா சபையோ மௌன விரத்தில் இருக்கிறது.

இந்தப் போர் நின்றால் மட்டுமே இனி உலகம் விடியும்!

அந்த விடியலுக்காகக் காத்திருக்கிறார்கள் உலக மக்கள் ஒவ்வொருவரும்!

*****

24 Mar 2026

இரண்டு போர்கள், ஒரு க்ளைமாக்ஸ்!

இரண்டு போர்கள், ஒரு க்ளைமாக்ஸ்!

மத்திய கிழக்கில் நடப்பது ஒரு போர் என்று நினைத்தால் அது தவறு. அங்கே இணைகோடுகளாக இரண்டு போர்கள் நடக்கின்றன.

ஒன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன விமானங்கள் ஈரானின் தலையில் போடும் குண்டுகள்.

இரண்டு, ஈரான் உலகப் பொருளாதாரத்தின் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் எனர்ஜி வார்.

இந்த இரண்டுமே ஒரு பக்கச் சார்புடையவை. அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களை ஈரானால் தடுக்க முடியவில்லை. அதே சமயம், ஈரான் மூடி வைத்திருக்கும் அந்த 54 கிலோமீட்டர் அகலமுள்ள ஹோர்முஸ் நீர்ச்சந்தியை திறக்க அமெரிக்காவால் முடியவில்லை.

ஈரானின் லாஜிக் சிம்பிள், நீ என் மீது குண்டு போட்டால், நான் உலகத்தின் பெட்ரோல் டேங்க்கை உடைப்பேன். வலி தாங்க முடியாமல் நீயே போரை நிறுத்துவாய்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. ஹோர்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் வரை போரை நிறுத்த அவர் தயாராக இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்பத்தில் ஈரானைப் பார்த்து பயந்த வளைகுடா நாடுகள், இப்போது டிரம்புடன் கைகோர்த்து நிற்கின்றன. இப்படியே விட்டால் இவன் வாழ்நாள் முழுக்க மிரட்டுவான், அடித்து ஒழித்துவிடுங்கள் என்பதுதான் அவர்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸ்.

பென்டகன் கணக்குப்படி 7,000 தாக்குதல்கள் ஈரானில் நடந்துவிட்டன. இஸ்ரேல் ஒரு படி மேலே போய், ஈரானின் முக்கியப் புள்ளிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்குகிறது.

ஈரானின் கப்பல்கள் பல இப்போது கடலுக்கு அடியில் மீன்களுக்கு வீடாக மாறியிருக்கின்றன. ஆனாலும் ஈரான் விடுவதாக இல்லை. ஜலசந்தியைச் சுற்றி கண்ணிவெடிகளையும், ட்ரோன்களையும் ஏவி ஒரு வெர்ச்சுவல் பூட்டைப் போட்டிருக்கிறது.

1988களில் டிரம்ப் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், நான் அதிபரானால் கார்க் தீவை ஒரு கை பார்ப்பேன்.

கார்க் தீவு என்பது ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் ஒரு பாறைத் திட்டு. இப்போது மார்ச் 13 இல் அங்கே குண்டு மழை பொழிந்துவிட்டார். அடுத்து அந்தத் தீவை ஆக்கிரமிக்கவும் திட்டம் இருக்கலாம். வளைகுடா நாடுகள் எண்ணெய் விற்க முடியாவிட்டால், ஈரானும் விற்கக்கூடாது, இதுதான் டிரம்பின் ஈக்விட்டி.

ஈரான் இப்போது தன் வியூகத்தை மாற்றியிருக்கிறது. கப்பல்களைத் தாக்குவதை விட, சவுதி அரேபியா மற்றும் துபாயின் எண்ணெய் வயல்களையும், சுத்திகரிப்பு நிலையங்களையும் நேரடியாகத் தாக்குகிறது. இதனால் பெட்ரோல் விலை எகிறுகிறது. கூடவே செமிகண்டக்டர் தயாரிக்கத் தேவையான ஹீலியம் வாயுவின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.

துபாய் ஏர்போர்ட்டில் ஈரான் ட்ரோனின் சிதறல்கள் விழுந்ததில் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஹோட்டல்கள் காலியாக கிடக்கின்றன. ரமலான் முடிந்த கையோடு பிசினஸ் களைகட்டும் என்று நினைத்த வளைகுடா நாடுகளுக்கு இது பேரிடி.

ஈரான் இப்போது ஒரு மாப் பாஸ் போலப் பேசுகிறது. அமெரிக்கா எல்லா பேஸ்களையும் காலி செய்ய வேண்டும், போர் நஷ்ட ஈடாக எங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

டிரம்பின் நிஜமான நோக்கம் என்ன? ஈரானின் ஆட்சியைத் தூக்குவதா? அல்லது ஒரு டீல் போடுவதா? யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்:

ஈரான் எப்போது உலகத்தின் எரிசக்தி மீது கை வைத்ததோ, அப்போதே அதன் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். இவனை முழுமையாக முடக்காமல் போர் முடியாது என்கிற ஒற்றைப் புள்ளியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் இப்போது கைகோர்த்து நிற்கின்றன.

ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும் போலிருக்கிறது. எந்தப் பக்கம் என்ன நடக்கும் என்பது வழக்கம் போலவே எதிர்காலத்திற்கு மட்டுமே தெரிந்த விடுகதை.

*****