TET தேர்வுக்குத் தயாராவது எப்படி?
இனி
ஒருவர் ஆசிரியர் ஆக வேண்டுமானால் சரி, பணியில் தொடர்ந்து ஆசிரியராக இருக்க வேண்டுமானாலும் சரி TET என்ற இந்தத் தேர்வை ஹை ஜம்ப் செய்ய வேண்டும். சிவகார்த்திகேயன் டான் படத்தில்
செய்ததை டான் என்று டன் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டு விட்டது.
150
கேள்விகள், 180 நிமிடங்கள். சராசரியாகப் பார்த்தால் ஒரு கேள்விக்கு 1.2 நிமிடத்தில்
விடையளிக்க வேண்டும். இருந்தாலும் இந்தச் சராசரி ஒரு குத்துமதிப்பிற்காகத்தான். உங்களுக்கு
நன்கு விடை தெரிந்த வினாவிற்கு ஒரு நொடியில் விடையளித்து விட்டு, யோசித்து விடை எழுத
வேண்டிய கேள்விக்கு இரண்டு நிமிடம் கூட எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கான சிலபஸ் என்றால் அது 5 தலைப்புகள்.
முதலில்
கல்வி உளவியல். பியாஜேயும், பாவ்லோவும் என்ன சொன்னார்கள் என்று கேட்பார்கள். ஒரு குழந்தையை
எப்படிப் பார்க்க வேண்டும்? எப்படி கல்வி கற்பிக்க வேண்டும்? அதற்கான படிநிலைகள் என்ன?
அது குறித்துச் செய்யப்பட்டிருக்கும் ஆராய்சிகள் என்ன? என்கிற ரீதியில் நீங்கள் படித்துக்
கொள்ள வேண்டும்.
இரண்டாவது
தாய்மொழி தமிழ்.
பத்தாம்
வகுப்பு வரையுள்ள இலக்கணம், செய்யுள் பகுதிகளில் பலமாக இருக்க வேண்டும். முடிந்தால்
பனிரெண்டாம் வகுப்பு வரை கூட பலப்படுத்திக் கொள்ளலாம். உரைநடைகளைக் கொஞ்சம் நுணுக்கமாகப்
பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டிச் செய்திகளிலிருந்து நுண்ணோக்கியில் பார்ப்பதைப்
போலப் பார்த்தெடுத்து வினாக்களைக் கேட்பார்கள்.
மூன்றாவது
சர்வதேச மொழியான ஆங்கிலம். இதற்கு நீங்கள் பத்தாம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களில்
ஒரு உலா போய் விட வேண்டும். டென்ஸ், ஆக்டிவ் பேசிவ் வாய்ஸ், டேரக்ட் இன்டேரக்ட், டிகிரிஸ்
ஆப் கம்பேரிசன், ஆர்டிகிள் போன்ற கிராமர் இத்தியாதிகளில் புலமை பெற்று விட வேண்டும்.
அத்துடன் போயம் வெர்ஷன்களில் சிமிலி, மெடாபர் வகையறாக்களையும், அவற்றை எழுதியவர்களை
அடையாளம் காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நான்கும்
ஐந்தும் உங்களுக்கான பாடங்கள். டெட் 1 என்றால் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்துப்
பாடங்கள். அதுவே டெட் 2 எனும் போது, நீங்கள் கணிதம் மற்றும் அறிவியல் என்றால் நான்காம்
பாடம் கணிதம், ஐந்தாம் பாடம் அறிவியல். சமூக அறிவியல் என்றால் நான்காம் பாடமும், ஐந்தாம்
பாடமும் உங்களுக்கு அதுவேதான். இதற்கும் நீங்கள் பத்தாம் வகுப்பு வரையுள்ள பாடப்புத்தகங்களை
ஓர் அகழ்வாராய்ச்சியைச் செய்ய வேண்டியிருக்கும். கேள்விகள் அப்படித்தான் புகுந்து புறப்பட்டுக்
கண்டுபிடித்து எடுத்திருப்பார்கள்.
இப்படியே
இவற்றைப் பார்ப்பதுடன் பழைய வினாத்தாள்களையும் ஒரு ரவுண்ட் அடித்து விடுங்கள். எப்படிக்
கேள்வி கேட்கிறார்கள் என்பதற்கு இதுதான் கூகுள் மேப்.
படிக்கும்
போது கதைப்புத்தகம் போலப் படிப்பது வேலைக்காகாது. பக்கத்திலேயே ஒரு நோட்டை வைத்துக்
கொண்டு குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குறிப்புகளை அடிக்கடி பார்த்து நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும். பலமுறை என்பது முக்கியம். ஒரு முறை பார்த்தால் அது ரேம் மெமரிதான்.
அது வேலைக்காகாது. பரீட்சை நேரத்தில் காலை வாரி விட்டு விடும். பலமுறை பார்ப்பதுதான்
ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் பெர்மினன்ட் மெமரி. அதுதான் பரீட்சையில் கை கொடுக்கும்.
தேர்வை
எழுதும் போது நேரம் ஓடிக் கொண்டே இருக்கும். எனவே தெரியாத கேள்விக்கு ஸ்டெப் எடுத்து, ஸ்டாப் எடுத்து
எல்லாம் யோசனை பண்ணாதீர்கள். தெரிந்ததை முடித்துவிட்டு, பிறகு அதற்குத் திரும்புங்கள்.
இந்தத்
தேர்வில் நெகட்டிவ் மார்க் கிடையாது என்பது மிகப்பெரிய ப்ளஸ். கல்லா கட்டை போட்டாவது
150 கேள்விகளையும் அட்டெண்ட் பண்ணிவிடுங்கள். ஏதாவது ஒரு ப்ராபபிலிட்டி வேலை செய்யும்!
புதிய
புத்தகங்கள், கைடுகள் என்று எதைத் தேடியும் ஓடாதீர்கள். எல்லாம் பத்தாம் வகுப்பு வரையுள்ள
தமிழக அரசின் பாடப்புத்தகங்கள்தான். அதுதான் இந்தத் தேர்வுக்கான வேதப்புத்தகங்கள்.
ஆக இதை
வெறும் தேர்வாக மட்டும் கருதிக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமென்றால்,
முதலில் ஆசிரியருக்குப் புரிய வேண்டுமே, அதைச் சோதிப்பதற்கான ஒரு சோதனையாக மட்டும்
நினைத்துக் கொள்ளுங்கள். என்னால் பத்தாம் வகுப்பு வரையுள்ள எந்தப் பாடக்கருத்தையும்
எப்படிப்பட்ட மாணவருக்கும் புரிய வைக்க முடியும் என்றால் நீங்கள் இந்த TET தேர்வைப்
பற்றிக் கவலைப்படவே வேண்டாம். ஆம், நீங்கள் நூற்று ஐம்பதுக்கு நூறை அசால்டாகக் கடந்து
விடுவீர்கள்.
*****







