24 May 2026

நிழல்களின் நர்த்தனம் – மாய உலகக் கோட்பாடு!

நிழல்களின் நர்த்தனம் – மாய உலகக் கோட்பாடு!

மனிதன் களிமண்ணால் உருவங்களைச் செய்து அதற்கு உயிர் கொடுக்க ஆசைப்பட்டான். அது புராண காலம். இன்று மனிதன் எலக்ட்ரான்களால் போலி ஆன்மாக்களை உருவாக்கி, அதற்கு லைக்குகளையும் வியூஸ்களையும் பிச்சையிட்டு உலவ விட்டிருக்கிறான். இது டிஜிட்டல் காலம்.

இன்று ரூட் மாபியா என்பது வெறும் தொழில்நுட்ப மோசடி மட்டுமல்ல, அது நவீன மனிதனின் ஏமாறக் காத்திருக்கும் மனநிலையை மூலதனமாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த வியாபாரம்.

இந்த ரூட் மாபியாக்கள் நினைத்தால் யாரை முதலமைச்சராக்க வேண்டும், யாரை முதலமைச்சராக்கக் கூடாது, யாரை பிரதமராக்க வேண்டும், யாரைப் பிரதமராக்கக் கூடாது என்பதைக் கூட தீர்மானிக்க முடியுமாம். சுருக்கமாகச் சொன்னால் இது நவீன நரக உலகின் டிஜிட்டல் சாத்தான்கள்தான்.

ஆதி பிரம்மன் உலகைப் படைக்க கோடி வருடங்கள் தவம் இருந்தானாம். ஆனால், இந்த ரூட் மாபியாக்கள் ஒரு சாதாரண லேப்டாப் மற்றும் சில பிராக்ஸி மென்பொருட்களை வைத்துக் கொண்டு, ஒரே நொடியில் பத்து லட்சம் மனிதர்களைப் படைக்கிறார்கள்.

அவர்களுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, வெறும் ஐபி அட்ரஸ் மட்டுமே முகவரி. அவர்களுக்கு பசியும் இல்லை, தூக்கமும் இல்லை. ஆனால், நீங்கள் போடும் பதிவுகளுக்கு ஹார்ட் சிம்பல் போடவும், வசைபாடவும் அவர்களுக்குத் தெரியும்.

நிஜ உலகில் ஒரு மனிதனுக்கு ஓர் ஓட்டுதான். ஆனால், இந்த மாய உலகில், ஒருவனுக்குப் பின்னால் ஒரு லட்சம் நிழல்கள் கைதட்டக் காத்திருக்கின்றன. அப்படியென்றால், இங்கே வாழ்பவன் மனிதனா, அல்லது அந்த நிழல்களா?

யார் அரியணையில் அமர வேண்டும் என்பதை ஒரு காலத்தில் வாள்களும், பீரங்கிகளும் தீர்மானித்தன. பிறகு வாக்குச்சீட்டுகள் தீர்மானித்தன. இன்றோ, கலர்புல்லான எடிட்டிங் செய்யப்பட்ட 30 வினாடி ரீல்ஸ்களும், அதன் கீழே விழும் போலி லைக்குகளும் தீர்மானிக்கின்றன.

உண்மை என்னவென்றால், ஒரு மனிதன் யோசித்து முடிவெடுக்கிறான். ஆனால், ரூட் மாபியாவின் உண்மை என்னவென்றால், ஓர் அல்காரிதம் மனிதனை யோசிக்க விடாமல் முடிவெடுக்க வைக்கிறது.

ஒரு வெற்றுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதற்கு தங்க முலாம் பூசி, சுற்றிலும் ஒரு லட்சம் ரோபோக்களை விட்டு ஆஹா, ஓஹோ என்று கோரஸ் பாட வைத்தால், பாமர மனிதன் அதைத் தெய்வீகப் பாத்திரம் என்று நம்பி விடுகிறான்.

புரிதல் இல்லாத மக்கள், அந்த வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஓடும் குழந்தைகளைப் போல, இந்த போலிப் பிம்பங்களின் பின்னால் ஓடி, தங்களின் எதிர்காலத்தைத் தொலைக்கிறார்கள்.

ஏமாற்றுபவர்கள் இருக்கிற வரை ஏமாறுபவர்கள் இருப்பார்கள் என்பது பழைய தத்துவம். புதிய தத்துவம் என்னவென்றால், நீங்கள் ஏமாறத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அல்காரிதம் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறது.

மக்களுக்கு உண்மை சுடுகிறதோ இல்லையோ, அது மிகவும் போரடிப்பதாக இருக்கிறது. அவர்களுக்குத் தேவை கவர்ச்சியான, அதிரடியான, கண்களைக் கூசச் செய்யும் பொய்கள். ரூட் மாபியாக்கள் தருவது அதைத்தான். அவர்கள் பொய்களை வோட்கா போல வண்ணமயமான கிளாசில் ஊற்றித் தருகிறார்கள். மக்கள் அதை போதையோடு பருகிவிட்டு, நிஜ உலகை மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த ரூட் மாபியாக்கள் உருவாக்குவது தலைவர்களை அல்ல, மாயாவிகளை. ஒரு கணினித் திரையின் பின்னால் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையையும் திசைதிருப்பும் இந்த டிஜிட்டல் சாத்தான்கள் வெல்வது அவர்களின் திறமையால் அல்ல, நமது சோம்பேறித்தனத்தால்.

திரையில் தோன்றும் லைக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்து ஒருவனின் யோக்கியதையைத் தீர்மானிக்கும் வரை, நாம் அனைவரும் இந்த ரூட் மாபியாவின் கண்ணுக்குத் தெரியாத சிறைச்சாலை கைதிகள்தான்.

ஆகத் தத்துவம் என்னவென்றால், திரையைத் துடைத்துப் பாருங்கள். அங்கே தெரிவது தலைவன் அல்ல, உங்கள் ஏமாளித்தனத்தின் பிரதிபலிப்பு மட்டுமே!

*****

23 May 2026

கருப்பு – அதிகாரத்தின் நிழல்களும், கடவுளின் வருகையும்!

கருப்பு – அதிகாரத்தின் நிழல்களும், கடவுளின் வருகையும்!

மனிதன் தன் இயலாமையின் உச்சத்தில், நியாயத்தின் கதவுகள் யாவும் பூட்டப்படும்போது, பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு புள்ளியிலிருந்து தனக்கான விடிவு வரும் என்று நம்புகிறான். அந்த நம்பிக்கையின் குறியீடான மிளகாய் சாந்து அரைக்கும் சடங்கிலிருந்து தொடங்குகிறது கருப்பு.

ஆனால், இங்கே கேள்வி என்னவென்றால், நீதிமன்றம் என்பது மனிதன் உருவாக்கிய சட்டங்களின் தங்குமிடம். அங்கே தெய்வீகம் நுழைந்தால் மனிதனின் நீதி என்னவாகும்?

ஓர் எளிய தந்தை தன் மகளின் மருத்துவத்திற்காகக் கொண்டு வந்த நகைகளை இழக்கிறார். சட்டத்தின் காவலனாக இருக்க வேண்டிய வழக்கறிஞர் அநீதியின் மொத்த உருவமாக நின்று அதைத் தடுக்கிறார்.

தத்துவம் என்ன சொல்கிறது என்றால், அதிகாரம் எங்கு செறிவூட்டப்படுகிறதோ, அங்கு அறம் நீர்த்துப்போகிறது.

நீதிமன்றம் என்ற கட்டமைப்பு, எளியவர்களைக் காப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு செக் வைக்கும் சதுரங்கப் பலகையாக மாறும்போது, மனிதன் தன் சட்டப் புத்தகங்களை மூடிவிட்டு, ஆதி தெய்வமான கருப்பனை நோக்கித் திரும்புகிறான்.

சூர்யா கருப்புசாமியாக இறங்கி வரும்போது, அது வெறும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி மட்டுமல்ல, அது பிரபஞ்ச நீதியின் வெளிப்பாடு. மிளகாய்ப் பொடியின் உஷ்ணத்தை விடவும், அநீதியைக் கண்டு எரியும் ஒரு தெய்வத்தின் கோபம் திரை எங்கும் ருத்ரதாண்டவமாக மாறுகிறது.

இயக்குநர் காட்டும் சில தத்துவார்த்த ஐடியாக்கள் கவனிக்கத்தக்கவை.

அராஜகங்கள் அரங்கேறும் நீதிமன்றத்தை நல்வழிப்படுத்த, சாட்சாத் கருப்பனே இறங்கி வந்தால் என்னவாகும்? வழக்கம் போல, லாஜிக் கதவைச் சாத்திவிட்டு ஜன்னல் வழியாகக் குதிக்கும்! ஆம், கடவுள்களுக்கு வேறு வேலைகள் எதுவும் இல்லை போல!

நாயகி திரிஷாவுக்கு வழக்கறிஞர் கோட் ஓகே. ஆனால், அந்த லிப் சிங்க்? உதடுகள் ஒரு கிலோமீட்டர் முன்னால் போகின்றன, வசனங்கள் அரை கிலோமீட்டர் பின்னால் வருகின்றன.

அபிநயங்கரின் அதிரடி இசையும், ஜி.கே.விஷ்ணுவின் கேமராவும் அந்தத் தெய்வீக ஆக்ரோஷத்தைக் கொண்டாட்டமாக மாற்றினாலும், தத்துவ ரீதியாக ஒரு கேள்வி எழுகிறது. கடவுள் எல்லாவற்றையும் ஜஸ்ட் காட் திங்ஸ் என்று தன் மாயாஜாலத்தால் தீர்த்துவிட்டால், மனிதனின் பகுத்தறிவும் போராட்டமும் எங்கே போவது?

திரைப்படம் ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ பிரபஞ்சத்திற்குள் நுழைவதும், சிங்கத்தை உலாவ விடுவதும் தீவிரமான ஒரு தத்துவக் கதையை, சமகால பாப் கலாச்சார ஸ்பூப்பாக மாற்றிவிடுகிறது.

கருப்பு என்பது ஒரு ஆன்மிகத் தேடலோ அல்லது சட்டத்தின் நுணுக்கங்களைப் பேசும் கதையோ அல்ல. அது, அநீதி மிஞ்சும் போது ஏதோ ஒரு வடிவில் நீதி திருப்பி அடிக்கும் என்ற மனிதனின் ஆதிப் பேராசையின் கமர்ஷியல் வடிவம்.

ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், பல நட்சத்திரங்கள் வலம் வரும் இந்த கருப்பனின் யுனிவர்ஸ், சூர்யா என்ற ஒற்றை மனிதனின் மாஸ் கமர்ஷியல் அக்னிக்காகத் தாராளமாகத் தரிசிக்கப்பட வேண்டிய ஒன்று!

கிளைமாக்ஸில் அவர் ஆடும் பேயாட்டம் ரசிகர்களுக்கு மிரட்டலான திரை அனுபவம், லாஜிக் பார்ப்பவர்களுக்குத் தலைவலி அனுபவம்!

படத்துக்கு பத்துக்கு 6¼ மார்க் கொடுக்கலாம். அந்தக் கால் மார்க் எக்ஸ்ட்ரா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியே வில்லனாக நடித்ததற்கு.

*****

22 May 2026

கடந்தகாலம் ஒரு தங்குமிடம் அல்ல, வாடகைக்குக் கூடத்தான்!

கடந்தகாலம் ஒரு தங்குமிடம் அல்ல, வாடகைக்குக் கூடத்தான்!

மனிதர்களாகிய நமக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பதை விட, ரயில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்துப் பெருமூச்சு விடுவதில் நமக்கு அலாதிப் பிரியம்.

கடந்தகாலம் என்பது ஒரு சிறந்த ஆசான் என்பார்கள். ஆனால், அந்த ஆசானே நம்மை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லிவிட்டு, வகுப்பறையிலேயே சிறை வைத்துவிட்டால் என்ன செய்வது?

கடந்தகாலம் என்பது ஒரு மியூசியம் போன்றது. அங்கே போய்ப் பார்க்கலாம், அடடா, அப்போது எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம், என்று ஆச்சரியப்படலாம், ஓரிரு பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், மியூசியத்திலேயே பாய் போட்டுப் படுத்து உறங்க முடியாது. அங்கே தங்க முற்பட்டால், செக்யூரிட்டி எனும் காலம் உங்களை வெளியே தள்ளுவது உறுதி.

மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் பேசுவதில்லை. அதேபோல், கடந்தகாலச் சம்பவங்களும் மாறப்போவதில்லை. மாறாத ஒன்றைப் பிடித்துக்கொண்டு தொங்குவது, நங்கூரமிட்ட படகில் அமர்ந்து கொண்டு துடுப்புப் போடுவதற்குச் சமம்.

கடந்தகாலத்தில் இருந்து கற்றுக் கொள்கிறேன், என்று சொல்லிக்கொண்டு பலர் செய்வது என்னவென்றால், பழைய காயங்களை மீண்டும் மீண்டும் நோண்டிப் பார்ப்பதுதான்.

அன்று அப்படிச் சொல்லியிருக்கலாமே! அவன் அப்படிச் செய்தபோது நான் ஏன் சும்மா இருந்தேன்? இவை பாடங்கள் அல்ல, இவை தீர்ந்துபோன பழைய பேப்பர்கள். பழைய பேப்பரை விற்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதை அடுக்கி வைத்துக்கொண்டு அதன் மேல் அமர்ந்திருந்தால் வீடு குப்பையாகத்தான் மாறும்.

கடந்தகாலத்திலேயே தங்கிவிடுபவர்கள், பின்னோக்கிப் பார்த்தபடி முன்னோக்கி நடக்க முயற்சிப்பவர்கள். விளைவு? முன்னால் இருக்கும் குழியில் விழுவதுதான்.

நாம் செய்த தவறுகள் நமக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமே தவிர, அவை கைவிலங்குகளாக மாறிவிடக் கூடாது. பாடம் கற்றுக் கொண்டவுடன் புத்தகத்தை மூடி வைக்க வேண்டும். புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் தேர்வு எழுத முடியாது.

உண்மையில், கடந்தகாலம் என்பது ஒரு பழைய எஸ்.எம்.எஸ் போன்றது. அதை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் டேட்டா எதுவும் தீர்ந்துவிடாது, ஆனால் உங்கள் பேட்டரி தீர்ந்துவிடும்.

கடந்தகாலம் அழகானது என்று யாராவது சொன்னால், அவர் இப்போது நிகழ்காலத்தில் ஏதோ பெரிய மொக்கையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். கடந்தகாலத்தில் தங்குவது என்பது, தூக்கத்தில் வரும் கனவை நிஜம் என்று நம்பி, விழித்த பிறகும் கண்களை மூடிக் கொண்டே இருப்பதற்குச் சமம்.

கடந்தகாலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதற்காக அங்கேயே டியூஷன் சேர்ந்துவிடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு வழிப்பாதை. பின்னாடி திரும்பிப் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினால், இன்சூரன்ஸ் கூடக் கிடைக்காது.

கடந்தகாலத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோரும் அப்படியெல்லாம் இருந்தது என்பார்கள். ஆனால், அப்போது அவர்கள் உண்மையில் எப்படி இருந்தார்கள் என்று கேட்டால், இப்போதும் இருப்பதைப் போலத்தான் அப்போதும் புலம்பிக் கொண்டிருந்திருப்பார்கள்.

கடந்த காலத்துக்கு டாடா சொல்லி விட்டு, நிகழ்காலத்துக்குள் காலடி எடுத்து வையுங்கள். ஓடிக் கொண்டிருக்கும் நதி யாருக்காகவும் நிற்காது.

*****

21 May 2026

வாழ்வின் எஞ்சிய கால்வாசியும், மீதமுள்ள முக்கால்வாசியும்!

வாழ்வின் எஞ்சிய கால்வாசியும், மீதமுள்ள முக்கால்வாசியும்!

பிறரைத் திருப்திப்படுத்துவது என்பது ஒரு முழுநேர வேலை. இதற்குச் சம்பளம் கிடையாது, விடுமுறை கிடையாது, மிக முக்கியமாக ரிடையர்மென்ட் கிடையாது. நாம் பிறந்தவுடன் அழுகிறோம். அது நமக்கு வலிப்பதால் அல்ல, குழந்தை பிறந்த உடனே அழ வேண்டுமே, இல்லையென்றால் மருத்துவர் பயந்துவிடுவாரே, என்று அவரைத் திருப்திப்படுத்துவதன் தொடக்கம்.

முக்கால்வாசி என்பது ஒரு கணக்கு அல்ல, அது ஒரு சாபம் . வாழ்க்கையை நூறு சதவீதமாகப் பிரித்தால், அதில் முக்கால்வாசி அதாவது 75 சதவீதம் அடுத்தவர்களுக்காகவே செலவாகிறது.

அதில், முதல் கால்வாசி பெற்றோரைத் திருப்திப்படுத்தப் படிக்கிறோம்.

இரண்டாம் கால்வாசி, முதலாளியைத் திருப்திப்படுத்த வேலை செய்கிறோம்.

மூன்றாம் கால்வாசி, வாழ்க்கைத் துணையை, பிள்ளைகளைத் திருப்திப்படுத்த வாழ்கிறோம்.

மீதமுள்ள அந்தக் கால்வாசி எங்கே? அதுதான் நாம் தூங்கும் நேரம். அங்கேயும் கூட, சிலருக்கு குறட்டை விட்டு அடுத்தவர்களைத் தொந்தரவு செய்துவிடுவோமோ? என்ற பயம் வந்துவிட்டால், அந்தப் பங்கும் பிறருக்கே தாரை வார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிகவும் கடினமான காரியம் எதுவென்றால், ஒருவரைத் திருப்திப்படுத்துவதுதான். ஏனென்றால், மனிதர்களுக்கு எதில் திருப்தி வரும் என்று அவர்களுக்கே தெரியாது.

நீங்கள் மென்மையாகப் பேசினால், என்ன இவன் பயந்தாங்கொள்ளி? என்பார்கள். அதிகாரமாகப் பேசினால், என்ன இவன் அகங்காரி? என்பார்கள். கடைசியில் நீங்கள் பேசாமல் மௌனமாக இருந்தால், என்ன இவன் திமிர் பிடித்தவன்? என்பார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிப்பது என்பது, ஓட்டைப் பானையில் கடல் நீரை நிரப்ப முயல்வதற்குச் சமம்.

இங்கே நாம் வாழ்வது நமக்காக அல்ல, பிறர் நம்மைப் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயத்திற்காக மற்றும் பிம்பத்திற்காக.

நமக்குச் பிடிக்காத சட்டையை உடுத்துகிறோம், ஏனெனில் அது நான்கு பேருக்குப் பிடிக்கும். நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தத்துவத்தைப் பேசுகிறோம், ஏனெனில் அது நான்கு பேருக்கு நம்மை அறிவாளியாகக் காட்டும்.

அந்த நான்கு பேர் யார் என்று யாரிடமாவது கேட்டால், இன்றுவரை ஒருவரிடமும் பதில் இல்லை. அந்த மர்மமான நாலு பேரைத் திருப்திப்படுத்துவதிலேயே நம் வாழ்நாள் முடிகிறது.

மற்றவர்களைத் திருப்திப்படுத்த முனைபவர் ஒரு சிறந்த நடிகர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கைதட்ட வேண்டிய ரசிகர்களும் அதே மேடையில் வேறு ஒருவரைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே யாரையும் பார்ப்பதில்லை. ஆனால், எல்லோரும் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஷேக்ஸ்பியர் உலகமே நாடகமேடை என்று சொன்னதில் உண்மை இருக்கிறது.

வாழ்க்கையின் முக்கால்வாசி பிறரைத் திருப்திப்படுத்தவே முடிகிறது என்பது சோகமல்ல. மீதமுள்ள கால்வாசியிலாவது நம்மை நாம் திருப்திப்படுத்திக் கொள்கிறோமா என்பதுதான் கேள்வி. ஒருவேளை நீங்கள் உங்களைச் சரியாகத் திருப்திப்படுத்திக் கொண்டால், அதைப் பார்த்து இன்னும் ஒரு முக்கால்வாசிப் பேர் அதிருப்தி அடைவார்கள் என்பது கூடுதல் போனஸ்.

அடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதை விட மிக எளிதான காரியம் ஒன்று இருக்கிறது. அது அடுத்தவர்களை அதிருப்திப்படுத்துவது. இதற்கு நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, நீங்கள் நீங்களாக இருந்தாலே போதும்.

*****

20 May 2026

அறியாமையின் போர்வையில் ஒளிந்திருக்கும் அறிவுஜீவித்தனம்!

அறியாமையின் போர்வையில் ஒளிந்திருக்கும் அறிவுஜீவித்தனம்!

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, எதுவும் தெரியாதவர்கள். இரண்டு, எல்லாம் தெரிந்தும் ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பவர்கள். இந்த இரண்டாம் வகை மனிதர்களின் மிக முக்கியமான ஆயுதம்தான்,  தெரியாமதான் கேட்கிறேன் என்பது.

உண்மையில், எதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர் ஒருபோதும் தெரியாமதான் கேட்கிறேன் என்று முன்னுரை கொடுக்க மாட்டார். அவர் நேரடியாகக் கேள்வியைக் கேட்டு விட்டு அடிவாங்கிவிட்டுப் போவார்.

ஆனால், இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துபவர் ஏற்கனவே பாதி விஷயத்தைத் தன் பையில் முடிந்து வைத்திருப்பார். மீதிப் பாதியை உங்கள் வாயாலேயே வரவழைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அறிவுசார் தூண்டில் இது.

ஏன் இந்தப் பொய்யான தன்னடக்கம்?

எனக்கு எல்லாம் தெரியும், என்று சொன்னால் உலகம் நம்மை அகங்காரி என்கிறது. எனக்கு எதுவுமே தெரியாது, என்று சொன்னால் முட்டாள் என்கிறது. ஆகவே, தெரியாமதான் கேட்கிறேன் என்று சொல்லும்போது, அவர் ஒரே நேரத்தில் விவேகியாகவும் வினயமானவனாகவும் காட்சியளிக்கிறார்.

ஒருவேளை நாம் கேட்கும் கேள்வி அடுத்தவர் இதயத்தையோ அல்லது ஈகோவையோ புண்படுத்தினால், நான்தான் முன்னமே சொன்னேனே, தெரியாமதான் கேட்கிறேன்னு, என்று தப்பித்துக்கொள்ள இது ஒரு காப்பீடு.

தெரியாமல்தான் கேட்கிறேன் என்ற இந்தத் தொடரை நாம் வெவ்வேறு சூழல்களில் மொழிபெயர்த்தால் அதன் உண்மை முகம் விளங்கும்.

நீங்கள் சொல்வது சுத்தப் பொய் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும் நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று பார்க்கத்தான் கேட்கிறேன் என்பது இதன் ஒரு முகம்.

உங்க தகுதிக்கு இது ஓவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்களாக ஒத்துக்க மாட்டீர்களே? என்பது இதன் மறுமுகம்.

நான் சொல்வதுதான் சரி. அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிற வரைக்கும் நான் விடமாட்டேன் என்பது இதன் வேறொரு முகம்.

தத்துவ ரீதியாகப் பார்த்தால், மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்குத் தன் சக விலங்கைப் பற்றித் தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம், பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தெரிந்துகொள்வதில் இல்லை.

எனவே, யாராவது உங்களிடம் வந்து, தெரியாமல்தான் கேட்கிறேன், என்று ஆரம்பித்தால், அவருக்குத் தெரியாது என்று அர்த்தமல்ல, உங்களுக்குத் தெரிந்ததை அவர் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

உண்மையில் எதையும் தெரிந்துகொள்ள விரும்பாதவர்களே நிம்மதியாக இருக்கிறார்கள். தெரிந்ததை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களே தெரியாமல்தான் கேட்கிறேன், என்று அலைகிறார்கள்.

ஆகவே, நான் தெரியாமல் எல்லாம் கேட்கவில்லை, தெரிந்தே கேட்கிறேன், இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

*****

19 May 2026

தாவரங்களின் தற்கொலை ஒப்பந்தம்! – ஒரு குறுங்கதை!

தாவரங்களின் தற்கொலை ஒப்பந்தம்! – ஒரு குறுங்கதை!

சந்துரு கொடைக்கானலில் இருந்து திரும்பும்போது அவனது கார் ஒரு நகரும் நந்தவனத்தைப் போலிருந்தது. பின்சீட்டில் அமர்ந்திருந்த அவன் மனைவி, குழந்தைகளை விட, அங்கிருந்த பூச்செடிகளுக்குத்தான் அதிக ஆக்சிஜன் கிடைத்துக் கொண்டிருந்தது.

சார், இது பாளையங்கோட்டை வெயில்ல கூடப் பக்காவா கிளம்பும் பூச்செடி சார், என்று அந்த நர்சரி வியாபாரி சொன்னபோது, சந்துருவின் அறிவு ஒரு நிமிடம் சுவிட்ச் ஆப் ஆனது.

அந்த வியாபாரி கண்களை உருட்டி, இதோ பாருங்க, இது ஸ்பெஷல் உரம். இதைப்போட்டா செடிக்குக் கொடைக்கானல்ல இருக்கிற மாதிரியே ஒரு பீல் இருக்கும், என்று ஒரு பாக்கெட் சாம்பலை ஆயிரம் ரூபாய்க்கு விற்றபோது, சந்துரு அதை ஒரு புனிதப் பிரசாதமாக வாங்கிக்கொண்டான்.

சென்னை வந்து சேர்ந்த அன்று இரவு, அந்தச் செடிகள் காரின் பின் சீட்டை விட்டு வெளியே வந்தன.

அடுத்த நாள் காலை.

சூரியன் தனது வழக்கமான சுடுவேன் என்கிற கடமையைச் செய்ய ஆரம்பித்தது.

சந்துருவின் பால்கனியில் வைக்கப்பட்டிருந்த அந்த மலைப்பிரதேசச் செடிகள், சுற்றுமுற்றும் பார்த்தன. அவற்றுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏய்! மேகம் எங்கே? என்று பக்கத்தில் இருந்த கறிவேப்பிலைச் செடியிடம் கேட்டன அந்த மலைச் செடிகள்.

கறிவேப்பிலைச் செடி அலுப்புடன் சொன்னது, இங்கே மேகம் வராது. மேல ஏசி அவுட்டோர் யூனிட்ல இருந்து சுடு காத்துதான் வரும். பேசாம சரண்டர் ஆயிடுங்கள்.

சந்துரு ஓடி வந்து அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். நர்சரிக்காரன் கொடுத்த மாயாஜால உரத்தைத் தூவினான்.

அந்த உரம் மண்ணில் பட்டதும், செடிக்கு இன்னும் வினோதமாக இருந்தது. அது ஒரு சர்க்கரை நோயாளிக்கு ஜிலேபி ஊட்டுவது போலிருந்தது.

மூன்றாம் நாள், அந்தச் செடிகள் ஒரு முக்கியமான முடிவை எடுத்தன. பனிப்புகை இல்லாத இடத்தில் பூப்பதைக் காட்டிலும், ஒரு கௌரவமான மரணம் மேல், என்று அவை தீர்மானித்தன. மெல்லத் தங்களது பச்சை நிறத்தைக் குறைத்துக்கொண்டு, ஒரு விதமான மெரூன் நிறத்திற்கு மாறின.

சந்துரு பதறினான். நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்துச்சு? என்று கூகுளில் தேடினான். கூகுள் நூறு பதில்களைச் சொன்னது. அவன் அத்தனையையும் செய்தான்.

ஆனால், அந்தச் செடிகள் ஒரு பிடிவாதமான காந்தியைப் போல ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்தன.

ஏழாம் நாள் காலை.

சந்துரு பார்த்தபோது, அந்தச் செடிகள் ஒவ்வொன்றும் காய்ந்த குச்சிகளாக மாறியிருந்தன. பக்கத்தில் இருந்த உர பாக்கெட் கேலியாகச் சிரித்தது.

சந்துருவின் மனைவி சொன்னாள், அப்பவே சொன்னேன், அங்கேயோட அதுகளப் பார்க்கிறதோட நிறுத்திக்கலாம்னு. இப்போ பாருங்க, ஐயாயிரம் ரூபாய் காலி, மனசுக்கும் கஷ்டமா இருக்கு.

சந்துரு காய்ந்த செடிகளைப் பார்த்தான்.

அந்தச் செடிகள் செத்துப்போகவில்லை, அவை மீண்டும் மண்ணாக மாறியிருந்தன. அந்தச் செடிகளுக்குத் தெரியும், தாங்கள் கொடைக்கானலில் இருந்தால் இன்னும் சில மாதங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று. ஆனால், சந்துருவின் ஆசைக்குத் தீனி போட அவை தயாராக இல்லை.

சந்துரு மெல்ல அந்தச் செடிகளைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டான். கார்ப்பரேஷன்காரர்கள் அள்ளிக் கொண்டு போனார்கள்.

அன்று மாலை, அவன் அதே பால்கனியில் அமர்ந்து கொடைக்கானலில் எடுத்த போட்டோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அந்தச் செடிகள் இன்னும் பச்சையாக, விதிவிதமாக பூத்து இருந்தன.

சந்துரு முணுமுணுத்தான், ஐயாயிரம் நட்டம், ஏமாளி பட்டம்.

*****

18 May 2026

தூக்கம் எனும் அரிய வகைக் கலை – ஒரு யோக நித்திரை எக்ஸ்போஸ்!

தூக்கம் எனும் அரிய வகைக் கலை –

ஒரு யோக நித்திரை எக்ஸ்போஸ்!

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். ஆனால், இந்த ஹோமோ சேப்பியன்ஸ் ரக மனிதர்களுக்குத்தான் அந்தப் பிராப்தம் இல்லாமல் போய்விட்டது.

உருப்படியாக நாலு மணி நேரம் ஆழ்ந்து தூங்கினால் உடல், மனம் எல்லாம் தேறிவிடும் என்பது ஸ்லீப்பிங் தியரி. ஆனால், நடைமுறையில் நமக்கோ கம்ப்யூட்டர் யுகம் என்ற பெயரில் கண்ணைச் சுற்றிக் கருவளையத்தை வளர்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

தூங்க முடியாத சோகத்தில் இருப்பவர்களுக்காகவே உலகெங்கும் இப்போது ஒரு புது பிசினஸ், மன்னிக்கவும், உத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் அறிதுயில் நிலை. அதாவது, தூங்காமலேயே தூக்கத்தின் பலனைப் பெறுவது. அட, இது நம்ம ஊர் சித்தர்களும் முனிவர்களும் பல ஆயிரம் வருஷங்களாக யோக நித்திரை என்ற பெயரில் செய்து வந்ததுதான்! புது மொந்தையில் பழைய கள்.

நம்ம ஊர் பெரியவர்கள் படுக்கச் சொல்லும்போதே இடது பக்கமாக ஒருக்களித்து படு என்பார்கள். ஏன்? இடது பக்கம் படுத்தால், புவிஈர்ப்பு விசை புண்ணியத்தில் நீங்கள் உள்ளே தள்ளிய பிரியாணியும், அதைச் செரிக்கச் சுரக்கும் அமிலமும் அங்கேயே அடங்கி இருக்கும். மல்லாக்கப் படுத்துக் கொண்டு நெஞ்செரிச்சல் என்று கதற வேண்டியிருக்காது. இதயம் சீராக இயங்கும், ரத்த ஓட்டமும் ஸ்மூத் ஆக இருக்கும்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இரவு நேர வேலையில் விழித்திருந்து, கைப்பேசியின் நீல நிற ஒளியைப் பார்த்து, உடலின் உயிரியல் கடிகாரத்தைத் தலைகீழாகத் திருப்பி வைத்திருக்கிறோம். விளைவு, காலையில் விழிக்கும்போது புத்துணர்வுக்குப் பதில் ஏன்டா உயிர் வாழ்றோம்? என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது.

சரி, தொலைத்த தூக்கத்தைத் திரும்பப் பெற என்னதான் வழி?

சவாசனம் என்ற மகா அற்புதமான யோகா போஸ் ஒன்று இருக்கிறது.

அதை எப்படிச் செய்வது என்கிறீர்களா?

நல்ல காற்றோட்டமான இடத்தில் ஒரு விரிப்பை விரித்துப் படுத்துக் கொள்ளுங்கள். இரு பாதங்களுக்கு இடையில் இரண்டடி இடைவெளி இருக்கட்டும். கைகளை உடம்புக்குப் பக்கத்தில், உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்தபடி சரணாகதி மோடில் வைத்துக்கொள்ளுங்கள்.

கால் விரலில் தொடங்கி தலை வரை ஒவ்வொரு உறுப்பாக ஓய்வு எடு என்று ஆர்டர் போடுங்கள்.

இப்போது ஒரு விஷுவலைசேஷன். மலை, அருவி, பறவை சத்தம், தென்றல் என ஒரு சொர்க்கத்தை உங்கள் மனக்கண்ணில் ஓட விடுங்கள். கூடவே ஓர் ஒளிக்கற்றை உங்கள் கால் வழியாக நுழைந்து தலை வரை சென்று உங்களை அமைதிப்படுத்துவதாக நம்புங்கள். நம்பிக்கைதானே எல்லாம்!

மூக்கு வழியாக மூச்சை இழுத்து, நாக்கை இலைச்சுருள் போலச் சுருட்டி வாய் வழியாக மெதுவாக விடுங்கள். இதையும் ஒரு ஐந்து முறை செய்யலாம்.

கடைசியில் வலது பக்கம் திரும்பி மெதுவாக எழுந்து உட்காருங்கள். இந்த இருபது நிமிஷ வித்தையைச் சரியாகச் செய்தால், அது ஆறு மணி நேர ஆழ்ந்த உறக்கத்திற்குச் சமமாம்.

இதனால் என்ன லாபம்?

ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் எஸ்கேப் ஆகிவிடும்.

இதயத் துடிப்பு சீராகும்.

ஆழ்மன அழுக்குகள் கிளீன் ஆகும்.

முக்கியமாக, உங்கள் தோலின் மேல் இருக்கும் அந்த ஏதோ ஒரு அழுத்தம் மற்றும் முகத்தில் இருக்கும் அந்த எரிச்சல் காணாமல் போகும்.

மொத்தத்தில், நேராகப் படுத்து உருப்படியாகத் தூங்க முடியாதவர்கள், இந்த யோக நித்திரை என்ற ஷார்ட்கட் ரூட்டில் போய் புத்துணர்ச்சி அடையலாம். கம்ப்யூட்டர் கர்மாவிலிருந்து தப்பிக்க இதைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது!

என்ன இருந்தாலும் எட்டு மணி நேர தூக்கத்திற்கு எதுவும் ஈடாகாது. ஈடாகாத போது இது கொஞ்சம் ஈடு செய்யும். விசயம் அவ்வளவுதான்.

*****