15 Jul 2026

அணுசக்தியை விட அவசியமான ஆற்றல் சக்தி!

அணுசக்தியை விட அவசியமான ஆற்றல் சக்தி!

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, பட்டாசு வெடித்தாலே காதை மூடிக்கொள்பவர்கள். இரண்டு, அணுகுண்டு வெடித்தால் மட்டுமே உலகமே நம்மைத் திரும்பிப் பார்க்கும் என்று நம்புபவர்கள். நாம் இரண்டாம் வகை.

1998 இல் ராஜஸ்தான் பாலைவனத்தில் மணல் துகள்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது, இந்தியா ஆபரேஷன் சக்தியை நிகழ்த்தியது. இந்தச் சக்தியைக் காட்டியபோது, உலக நாடுகள் சிலவற்றுக்கு அழுகையே வந்துவிட்டது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ செயற்கைக்கோள்கள் வானத்தில் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. ஆனால், நம் ஆட்கள் அந்தச் செயற்கைக்கோள்களுக்கே நாமம் போட்டுவிட்டு, அவை தூங்கும் நேரத்தில் ரகசியமாகச் சோதனையை முடித்தார்கள்.

“அப்போது, நாங்கள் பல ஆண்டுகளாகக் கவனித்தோம், ஆனால் இதைக் கவனிக்க மறந்துவிட்டோம்”, என்று அமெரிக்கா சொன்னபோது, ஒரு சராசரி இந்தியனுக்குக் கிடைத்த ஆத்ம திருப்தி இருக்கிறதே, அது 5ஜி வேகத்தை விட அதிகமானது.

இந்தியா அணு ஆயுதப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தவுடன், உலகம் ஐயையோ, இது பாவம் என்று தடைகளை விதித்தது. ஜப்பானும் அமெரிக்காவும் பொருளாதார ரீதியாக முறுக்கிக்கொண்டன.

ஆனால் தடைகள் வந்தபோதுதான் நமக்குச் சுயபுத்தி வந்தது என்பதுதான் வரலாற்றுச் சோகம்.

மேடம் க்யூரி நோபல் பரிசு வாங்குவதற்கு முன்பே, அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிய கதைகள் நம்மிடம் உண்டு. இருந்தாலும் கலாம் போன்ற இந்திய விஞ்ஞானிகளின் கனவுகள் மற்றும் முயற்சிகள் எல்லாம் சேர்ந்து சேர்ந்து அணு சக்தி என்பது வெறும் அழிவுக்கான கருவியாக இல்லாமல், இந்தியாவின் கெத்துக்கான குறியீடாக மாறியது.

இன்று நாம் சந்திரயான் 3 மூலம் நிலவின் தென துருவத்தில் சைடு ஸ்டாண்ட் போட்டு நிற்கிறோம். மங்கள்யான் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விசிட் அடித்தோம். ஆட்டோ ரிக்‌ஷா கட்டணத்தை விடக் குறைவான செலவில் விண்வெளிக்குப் போகும் வித்தை தெரிந்த ஒரே இனம் நாம்தான். 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏற்றி, இன்னும் இடம் இருக்கு, தள்ளி உட்காருங்க, என்று சொல்லாத குறையாக விண்வெளிக்குப் பார்சல் அனுப்புகிறோம்.

இன்று நம்மிடம் 5ஜி இருக்கிறது, அக்னி ஏவுகணைகள் இருக்கின்றன, பிரம்மோஸ் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்த ஆண்டு ககன்யான் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப்போகிறோம்.

தொழில்நுட்பம் என்பது கத்தியைப் போன்றது. அதை வைத்து காய்கறியும் நறுக்கலாம், கைவிரலையும் பதம் பார்க்கலாம். உலகம் ஒரு சுழற்சி. அன்று அணுவைத் துளைத்தோம், இன்று குவாண்டம் கணினியைத் துளைக்கிறோம்.

முன்னேற்றம் என்பது மொபைல் போனை அடிக்கடி மாற்றுவது அல்ல, நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டை எங்கே கொண்டு செல்கிறது என்பதில் தான் இருக்கிறது.

நிலவுக்குப் போன நாம், ஊரில் இருக்கும் சாலைக் குழிகளைச் சரிசெய்யும் தொழில்நுட்பத்தை எப்போது கண்டுபிடிக்கப் போகிறோம்? ஏனென்றால், அதுதான் அணுசக்தியை விட உண்மையான ஆற்றல் மிக்க சக்தி!

*****

நுகர்வுப் பெருவெளியின் நனவிலிப் பிரஜைகள்

சீரழித்த சினிமா – 40

பாய்ஸ்

நுகர்வுப் பெருவெளியின் நனவிலிப் பிரஜைகள்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச குடும்பக் கட்டுப்பாடுகளுக்கும், கலாச்சார ஒழுக்கத்திற்கும் ஒட்டுமொத்தமாகக் குட்பை சொல்லி விட்டு ஆபாசங்களுக்கு அட்டகாசமாக வெல்கம் சொல்லலாம் என்று நுகர்வுப் பெருவெளியில் உதிர்ந்து போன ஒழுக்கவியலை புதிய தத்துவப் பாடமாக ஓதிய திரைப்படம்தான் பாய்ஸ்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரிக்குச் செல்லும் பருவத்தில் ஒழுங்காகப் படித்துப் பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "பதினெட்டு வயது இளைஞர்கள் ஐந்து பேர் சேர்ந்தால், குட்டிச் சுவரில் அமர்ந்து குட்டிச் சுவராகலாம், கல்வியில் ரேட்டிங்கை ஒதுக்கி வைத்து விட்டு டேட்டிங் போகலாம், குடும்ப ஒழுக்கத்தைக் குப்பையில் எறிந்து விட்டு ஆபாச வெளிகளோடு உலவலாம், பாலியல் தொழிலாளியிடம் போகலாம், நடுரோட்டில் நிர்வாணமாக ஓடலாம்" என்ற ஒரு புதுவிதமான வளரிளம் பருவ வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, பாய்ஸ் திரைப்படத்திற்கு உண்டு.

இத்திரைப்படம் திரைக்கு வந்தபோது தியேட்டர்களில் டிஜிட்டல் சவுண்ட் அதிர இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், அது தியேட்டருக்கு வெளியே ஏற்படுத்திய சமுதாய, உளவியல் அதிர்வுகள் கொஞ்சம் விசித்திரமானவை, ஆபத்தானவை.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் மட்டுமல்ல; அது சமூகத்தின் நனவிலி மனதிற்குள் விஷத்தையோ அமுதத்தையோ மிக மெதுவாக இறக்கும் ஒரு ஊசி. பாய்ஸ் திரைப்படம் வெளியான காலகட்டம், தமிழகம் உலகமயமாக்கலின் முதல் அலைகளை எதிர்கொண்டு, ஐடி கலாச்சாரத்தின் பளபளப்பில் கண்கள் கூசி நின்ற தருணம். அந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் பதின்ம பருவத்தினரின் ஹார்மோன்களின் பெருவெடிப்பைக் கொண்டு நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மீது நிகழ்த்திய உளவியல் அத்துமீறல்கள் சாதாரணமானவை அல்ல.

பதின்ம வயதுக் காதல் மற்றும் இளமைத் துடிப்பு என்கிற பெயரில், தமிழ் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் நிம்மதியைக் குலைப்பதற்காகத் தயாரித்து வெளியிட்ட ஒரு மோசமான சமூக உளவியல் பரிசோதனையான பாய்ஸ் திரைப்படம் ஏற்படுத்திய சீரழிவுகளைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்பவியல் மற்றும் குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் வாலிப வயதில் இருந்தால் போதும்; உங்களுக்குச் சமூக ஒழுக்கமோ, சட்டதிட்டங்களோ தேவையில்லை. நீங்கள் ஐந்து பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு நடுரோட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தெருவில் வருவோர் போவோல் தட்டிக் கேட்போரைக் கேலி செய்யலாம், பெண்களை ஆபாசக் கண்ணோட்டத்தோடு மட்டுமே அணுகலாம் என்பதுதான்.

இதனால், பொது இடங்களில் அநாகரிகமாக நடப்பது குற்றமல்ல, அது ஹார்மோன்களின் உந்துதலால் ஏற்படும் வாலிபக் குறும்பு என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

அத்துடன் வீட்டை விட்டு ஓடிப்போய், கையில் காசில்லாமல், திருட்டுத்தனமாகத் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதை ஏதோ உலக மகா புரட்சி போல இத்திரைப்படம் சித்தரித்தது.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் பெற்றோரின் உழைப்பை மதிக்காமல், கேங்காக சுற்றிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையே பாய்ஸ் கெத்து என்று நினைத்துத் திரியும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள், 7ஜியில் ஸ்டாக்கிங்கை ரசித்தார்கள் என்றால், பாய்ஸ் படத்தில் ஒட்டுமொத்தப் பொறுப்பற்ற தனத்தையுமே இசைத் திறமை என்ற போலிப் போர்வையைப் போர்த்திக் கமர்ஷியலாக விற்றார்கள்.

நாயகனும் அவனது நண்பர்களும் எந்த வேலைவெட்டியும் இல்லாமல், படிக்காமலும், உருப்படியாக எதுவும் செய்யலாமலும், ஆபாசத் தனமாக நடந்து கொள்வார்கள். ஆனால், அவர்கள் பாய்ஸ் என்ற பெயரில் ஒரு மியூசிக் பேண்ட் ஆரம்பித்து, ஒரே ஒரு மேடைப் பாடலின் மூலம் உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக மாறிவிடுவார்கள்.

இந்த உறைபனியூட்டும் குறுக்குவழிப் பாதையை, மிக வண்ணமயமான, பளபளப்பான கிராபிக்ஸ் காட்சிகளாலும், மேற்கத்திய இசையாலும் மூடி மறைத்து, அவங்க சொந்தக் கால்ல நின்னு ஜெயிச்சிட்டாங்க என்று பார்ப்போரைப் பந்தாவாக ஏமாற்றினார் இயக்குனர்.

உழைப்பையும், முறையான கல்வியையும் விடுத்து, அதிர்ஷ்டத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் மாஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

அந்நியன் படத்தில் கொலையை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை வைத்து காமெடியாக்கியது போல, பாய்ஸ் படத்திலும் அதே நகைச்சுவைப் பாத்திரத்தை வைத்து இளைஞர்களின் அத்தனை ஒழுக்கக்கேடுகளையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது இத்திரைப்படம்.

வீட்டை விட்டு ஓடிவந்து நடுத்தெருவில் நிற்கும் பூர்வாங்க பொறுக்கிகளுக்கு அந்த நகைச்சுவைப் பாத்திரம்தான் வழிகாட்டி. அவர் அவர்களுக்கு வாழ்க்கைத் தத்துவம் என்ற பெயரில், எப்படிக் காரியவாதியாக வாழ வேண்டும், எப்படிப் பெண்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற குப்பைகளைக் கற்றுக்கொடுப்பார்.

சமூகச் சீரழிவைச் சரிசெய்ய வேண்டிய திரைப்படங்கள், அத்தனைச் சமுகச் சீரழிவுகளையும் காமெடி மீற்றும் ஆபாச பீஸாக்கித் திரையில் ஜொலிக்க விட்டால், நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்ற வக்கிரமான மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த சினிமாட்டிக் டிராப்.

வழக்கமான தமிழத் திரைப்படங்கள் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. இப்படத்தில் நாயகியின் கதாபாத்திரம், மிகவும் வசதியான, மாடர்ன் பெண்ணாகக் காட்டப்படும். ஆனால், அந்தப் பாத்திரத்துக்கு தன் எதிர்காலத்தைப் பற்றிய குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. கையில் ஐந்து பைசா இல்லாத, உருப்படாத நாயகனைத் துணிந்து காதலித்து, அவனோடு ஓடிவந்து, அப்பாவிக் கோமாளியாக இருப்பதாகவே அப்பாத்திரம் படத்தில் சுருக்கப்படும்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் திறனோ இல்லாதவள்; அவளிடம் டேட்டிங் பேசி, பாய்ஸ்ஸை ஏங்க வைக்காதே, ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே என்று பாடினால், அவள் தன் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கழற்றி எறிந்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிடுவாள் என்ற ஆணாதிக்க நுகர்வோர் வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாகப் பட்டுவாடா செய்தது.

உழைப்பு, பொறுமை, குடும்பப் பொறுப்பு போன்ற விஷயங்களை எல்லாம் அவுட்டேட்டட் எனக் கேலிப் பொருளாக்கிவிட்டு, இன்பார்மேஷன் டெக்னாலஜியும், இன்ஸ்டன்ட் வெற்றியும், கட்டுப்பாடு இல்லாத காமமும் மட்டுமே வாழ்க்கை என்கிற மாயையை விதைத்துச் சென்றது பாய்ஸ்.

பாய்ஸ் பாக்ஸ் ஆபீஸில் சுமாராகவேனும் வசூலைக் குவித்து, ஐந்து புதிய ஹீரோக்களைத் தமிழ் சினிமாவுக்குத் தந்து, அதன் இயக்குநரை மீண்டும் பிரமாண்ட நாற்காலியில் ஏற்றிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

படிப்பு, கரியர் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்போது ஹார்மோன் சொல்வதைக் கேள், என்பது போல ஒரு மாயையை உருவாக்கியது பாய்ஸ். ஆனால், நிஜ வாழ்க்கை என்பது கேமரா ஆங்கிளோ, பிஜிஎம்மோ இல்லாதது. இந்தத் திரைக்கதை நிஜ உலக பதின்பருவத்தினரின் சிந்தனையை அப்படியே மழுங்கடித்து, வாழ்க்கையின் மிக முக்கியமான பில்டிங் பிளாக்ஸ் எனப்படும் கல்வி, ஒழுக்கம் இரண்டையும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது.

திரைப்படத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளாத, வெறும் பண இயந்திரங்களாக அல்லது அடக்குமுறை செய்பவர்களாகவே சித்தரிக்கப்படுவர். இது நிஜ வாழ்க்கையிலும் இளைஞர்களிடையே "பெற்றோர்கள் நம் எதிரிகள்" என்ற பிம்பத்தை வலுப்படுத்தியது. பெற்றோர்கள் என்பவர்கள் தங்களின் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் வில்லன்கள் என்ற பிம்பத்தை இளைய சமூகத்தின் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது பாய்ஸ்.

தமிழ் சமூகத்தின் ஆகச்சிறந்த பலம் மற்றும் சில நேரங்களில் பலவீனம் பெற்றோர் பிள்ளை உறவுதான். தன் வாழ்நாளின் அத்தனை வியர்வையையும் பிள்ளைகளின் கல்விக்காகத் தாரைவார்க்கும் நடுத்தர வர்க்கத் தந்தையர், தாயாரின் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அவர்களின் நியாயமான பதற்றங்கள் யாவும் ஒற்றைப் பரிமாணத்தில் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகக் காட்டப்பட்டது பெரும் உளவியல் விபரீதம். இது குடும்பங்களுக்குள் இருந்த மெல்லிய உரையாடல்களைக் கொன்று, தேவையற்ற கசப்புகளையும், தலைமுறை இடைவெளிகளையும் அசுர வேகத்தில் அதிகப்படுத்தியது.

"படிப்பு, வேலை, குடும்பம் எல்லாமே சலிப்பானது; இன்றைய பொழுது மட்டுமே முக்கியம்" என்ற தத்துவம் இளைஞர்களிடம் இத்திரைப்படத்தால் விதைக்கப்பட்டது. இது வாழ்வின் ஆழமான விழுமியங்களை அழித்து, எல்லாவற்றையும் அர்த்தமற்றதாகப் பார்க்கும் ஓர் ஆபத்தான மனநிலையை உருவாக்கியது.

டீன் ஏஜ் பருவத்தின் இயல்பான ஈர்ப்பை தாண்டி, பெண்களை வெறும் உடலியல் நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் பார்வையை இத்திரைப்படம் ஊக்குவித்தது. இது இளம்பருவத்தினரின் பாலியல் ஒழுக்க நெறிகளில் பெருமளவில் அதீத சிதைவை ஏற்படுத்தியது.

ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் என்பது அதன் பாலியல் முதிர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால், பாய்ஸ் திரைப்படம் பதின்பருவத்து இளைஞர்களின் பாலியல் தவிப்புகளை மிகக் கீழ்த்தரமான, வக்கிரமான வணிகப் பொருளாக மாற்றியது.

பெண் என்பவள் ஒரு சக உயிர், அவளுக்கென்று ஒரு தனித்துவமான ஆளுமை இருக்கிறது என்ற புரிதலைத் தராமல், அவளை வெறும் கவர்ச்சிப் பொருளாகவும், ஆண்களின் பாலியல் வேட்கையைத் தணிக்கும் வடிகாலாகவும் மட்டுமே காட்டியது. காதல் என்பது அகம் சார்ந்த ஓர் உன்னத உணர்வு நிலை என்பதிலிருந்து விலகி, அது உடல்களின் வேதியியல் கவர்ச்சி மட்டுமே என்ற பாலியல் வறுமையை அது இளைஞர்களின் நனவிலி மனதில் பதியவைத்தது.

இப்படத்தின் மிக அபாயகரமான உளவியல் தாக்கம் அதன் பின்பாதியில் இருந்தது. எந்தவித முறையான பயிற்சியோ, உழைப்போ, கலையின் மீதான அர்ப்பணிப்போ இல்லாமல் வெறும் அதிர்ஷ்டத்தாலும், ஒரு சில தந்திரங்களாலும் ஒரே இரவில் பாப் இசை உலகையே ஆட்டிப்படைக்கும் சூப்பர் ஸ்டார்களாக அந்த இளைஞர்கள் மாறுவார்கள். இது இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியை வழங்கியது. அந்த வகையில் இத்திரைப்படம் உழைப்பின்றிப் பெறும் வெற்றியே உன்னதமானது என்ற குறுக்குவழி மனப்பான்மை சமூகத்தின் இயல்பான உழைப்புச் சங்கிலியை அறுத்துப்போட்டது.

மேலும், எந்தவித உழைப்போ, அர்ப்பணிப்போ இன்றி, ஒரே ஓர் ஆல்பம் பாடல் மூலமாக ஒரே இரவில் பெரும் பணக்காரர்களாகவும் நட்சத்திரங்களாகவும் மாற முடியும் என்ற உடனடி வெற்றி கலாச்சாரத்தை இத்திரைப்படம் முன்மொழிந்தது. இது உழைப்பு, பொறுமை, தொடர் முயற்சி போன்ற மனிதகுலப் பரிணாமத்தின் அடிப்படை விழுமியங்களை இளைஞர்களின் மனதில் சிறுமைப்படுத்தியது.

பாய்ஸ் திரைப்படம் இளைஞர்களின் சுதந்திரப் போக்கைக் கொண்டாடுவதாக நினைத்துக்கொண்டு, பொறுப்பின்மை, உடனடி இன்பம் மற்றும் குடும்ப சமூக அமைப்புகளுக்கு எதிரான கலகக்குரல் ஆகியவற்றை மிகைப்படுத்திக் காட்டியது. இது தமிழ் திரையுலகிலும், நிஜ சமூகத்திலும் இளைஞர்களின் இருத்தலியல் நோக்கங்களை திசைதிருப்பி, ஒரு தற்காலிக சமூக உளவியல் சீரழிவிற்கு வித்திட்டது என்றால் அது மிகையல்ல.

பாய்ஸ் திரைப்படம் தமிழ் சமூகத்திற்குத் தந்த உளவியல் கொடை என்பது, தன்னல நுகர்வுவாதம், குடும்ப உறவுகளின் மீதான அவநம்பிக்கை மற்றும் பாலியல் ஒழுக்கமின்மை போன்றவையே. ஒரு சமூகத்தின் ஆன்மாவைச் சிதைத்து, அதை வெறும் நுகர்வுப் பெருவெளியின் கூட்டமாக மாற்றுவதற்குத் திரைக்கலை எவ்விதம் பயன்படக்கூடும் என்பதற்கான ஒரு கசப்பான வரலாற்று ஆவணம் இந்தத் திரைப்படம்.

பெற்றோரை எதிர்ப்பதுதான் சுதந்திரம் என்றும், பொறுப்பின்றித் திரிவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த உத்தி என்றும், ஒட்டுமொத்த தமிழனின் நிஜ வாழ்க்கைக்கான குடும்ப அமைப்பையும் ஒழுக்கத்தையும் அடியோடு சீரழிப்பதுதான் புதிய சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஹார்மோன் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

14 Jul 2026

சொத்து போகாது, ஆனால் காது கேட்காது!

சொத்து போகாது, ஆனால் காது கேட்காது!

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப்போகக் கூடாது, சொத்துகள் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கைமாறிவிடக் கூடாது என்கிற அதிபயங்கரப் பொருளாதார நோக்கங்களுக்காக, அத்தை மகளையும் மாமா மகனையும் பிடித்துக் கல்யாணம் செய்து வைக்கும் ரத்தப் பாச விசித்திரம் காலம் காலமாக நடந்து வருகிறது.

பிள்ளைகள் யாரையாவது காதலித்துத் தொலைத்துவிட்டால், பெற்றோருக்கு வரும் முதல் ஆத்திரம், நாளைக்கே உன் அத்தை மகனுக்கு உன்னைக் கட்டிக்கொடுக்கிறேன் பார் என்பதுதான். காதல் நோய்க்கு அத்தை மகன்தான் இவர்களின் ஒரே ஆன்டிபயாடிக்!

அண்மை மருத்துவவியல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. ரத்த உறவுத் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு டபுள் ஆகிறதாம்.

பிரிட்டனின் பிராட்போர்டு பகுதியில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்குக்குக் காரணம் இந்த ரத்தப் பாசத் திருமணங்கள்தான் என்று ஆய்வு செய்தே நிரூபித்திருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, நம் ஊர் லட்சணம் என்ன தெரியுமா?

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் பிறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கிறதாம்.

இதில் கர்நாடகத்தில் 30 சதவீதமும், தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தலா 20 சதவீதமும் குழந்தைகள் காது கேளாமல் பிறக்கிறார்கள்.

ஆண்டுதோறும் சுமார் 6 முதல் 8 லட்சம் இந்தியக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த மரபணுப் பெருமையில் தென்னிந்திய மாநிலங்கள்தான் டாப்!

வாழ்க பாரம்பரியம்!

கேரளா மட்டும்தான் இதிலிருந்து கொஞ்சம் தப்பித்திருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காதல் திருமணங்கள் பெருகிவிட்டதால் இந்த வழக்கம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், இன்னமும் குடும்பக் கட்டாயத்துக்காகப் பிடிக்காத மாமன் மகனைத் திருமணம் செய்துகொண்டு அழும் பெண்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த ரத்த உறவுக் கல்யாணங்களால் குழந்தைகளுக்கு என்னென்ன வரும் என்று மருத்துவர்கள் ஒரு பெரிய மெனு கார்டையே நீட்டுகிறார்கள்.

அறிவாற்றல் குறைபாடு,

குழந்தைப் பருவத்திலேயே மரணம்,

நுரையீரல் கோளாறு,

தலசீமியா,

அரிவாள் செல் சோகை,

மூளை, நரம்புகளை அழிக்கும் அபாயகரமான மரபணுக் கோளாறு.

தசை பலவீனம், நடுக்கம்,

பேசவோ விழுங்கவோ முடியாத நிலை என ஒரு பெரிய பட்டியலையே நீட்டுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், சொத்தைக் காப்பாற்றப்போய், பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தையே அடகு வைக்கும் விசித்திர வியாபாரம் இது.

இந்த ஆபத்தான பழக்கம் இன்னும் தொடர்வதற்கு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

நம்ம ஊர் ஜாதி ரீதியான திருமண இணையதளங்கள் முதன்மையான காரணம்.

பணக்காரர்கள் சொத்துப் போகக் கூடாது என்று நினைக்கிறார்கள்; ஏழைகள் திருமணச் செலவை மிச்சப்படுத்த வீட்டுக்குள்ளேயே முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இது அடுத்த முக்கியமான காரணம்.

ஆனால், ஒரு திருமணத்தில் பெண்ணின் ஆரோக்கியமும், அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் எதிர்காலமும் முக்கியம் என்பதை இந்த இரண்டு தரப்புமே யோசிப்பதில்லை.

எல்லாவற்றிலும் முன்னேறி விட்டதாக மார்புதட்டும் நம் நாட்டில், இன்னமும் இந்த மரபணுத் தற்கொலை வழக்கம் தொடர்வது ஒரு சாபக்கேடு. ரத்தச் சொந்தத்தில் கல்யாணம் செய்து கொண்டே இருந்தால், அது நாட்டுக்கு ஆரோக்கியமான மனித வளத்தைத் தராது; மாறாக மருத்துவமனைகளுக்குத்தான் வருமானத்தைத் தரும்.

சொந்த பந்தம் முக்கியம்தான், ஆனால் அது பிறக்கும் குழந்தையின் காதுகளை அடைப்பதாக இருக்கக் கூடாது!

*****

சுய மோகத்தின் திரை வடிவும் நுகர்வின் சூன்யமும்

சீரழித்த சினிமா – 39

குஷி

சுய மோகத்தின் திரை வடிவும் நுகர்வின் சூன்யமும்

இரண்டாயிரமாவது ஆண்டின் மே திங்களில், கொதிக்கும் கோடையில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச யதார்த்தக் காதலையும், மென்மையான பெண்ணின் உணர்வுப்பூர்வமான சுதந்திரத்தையும் கத்திரி வெயிலில் கருவாடு போட்டு மண்டை காய வைத்த திரைப்படம்தான் குஷி.

நவீனத் தமிழ்ச் சமூகம் தன் ஆழங்களை இழந்து, மேற்பரப்புப் பளபளப்புகளில் தன்னைத் தொலைத்துக் கொள்ளத் தொடங்கிய புள்ளியைச் சரியாக அடையாளம் காண வேண்டுமானால், குஷி திரைப்படத்தின் முன்னால் போய்தான் நிற்க வேண்டும்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்பத்தினரைச் சம்மதிக்க வைக்கப் போராட வேண்டும்" என்ற உன்னதமான விதியை அடியோடு மாற்றி, "கொல்கத்தாவில் வளர்ந்து சென்னையில் படிக்கும் ஒரு அரைகுறை மேதாவிப் பையனும், திருநெல்வேலி, குற்றாலத்தில் வளர்ந்து அதே காலேஜில் படிக்கும் ஒரு அகந்தை பிடித்த பெண்ணும், ஒரு தொப்புள் காட்சிக்காகத் தங்கள் ஒட்டுமொத்த சுயமரியாதையையும் அடகு வைத்துவிட்டு, படம் முழுக்க என் ஈகோ பெரிதா, உன் ஈகோ பெரிதா என்று தெருத்தெருவாகச் சண்டை போடலாம்" என்ற ஒரு புதுவிதமான மனநலப் பிறழ்வு வக்கிர அத்துமீறலைத தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, குஷி திரைப்படத்திற்கு உண்டு.

எப்போதும் தேவையில்லாமல் துள்ளிக் குதிக்கும், மற்றும் ஓவர் ஆக்டிங் செய்யும் நாயகனின் போலி வாலிப பிம்பமும், முகத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே நொடியில் பிழிந்து காட்டும் நாயகியின் அலப்பறைப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு ஹார்மோன் ஆய்வக மோசடிக்குக் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு காதலர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த உளவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு பெண்ணை உண்மையாகக் காதலித்தாலும், அவளது அந்தரங்கத்தைப் பார்த்ததை அகப்பொருளில் கையாண்டு, ஊடலைத் தணிக்காமல்அதையே ஒரு ஈகோ பிரச்சனையாக உருவாக்கிக் கொண்டு அதில் லாஜிக் மேஜிக் பேசி தங்களைத் தாங்களே வெறுத்துக் கொண்டு அசிங்கப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான்.

இதனால், ஓர் இயல்பான மனிதப் பார்வையின் தற்செயல் தவறை, இருபது ரீல்கள் ஓடும் அளவிற்குப் பெரிய கௌரவப் பிரச்சினையாக மாற்றி, "நீ என் தொப்புளப் பாத்த, நீ ஒரு பொறுக்கி" என்றும், "ஆமா பாத்தேன், அதுல என்ன தப்பு?" என்றும் சண்டை போடுவதைத்தான் உன்னதமான காதல் என்றும் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

பொதுவாகத் தமிழ் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கவியல் என்பது பெரும்பாலும் இதயத்தையும், கண்களையும், அதிகபட்சம் கைகளையும் சுற்றியே இயங்கி வந்தது. அடிப்படையில் காதல் என்பது கம்பன் காலத்திலிருந்து பாரதி காலம் வரைக்கும் கண்களில் ஆரம்பித்து இதயத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், குஷி திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் இளைய சமூகத்தின் கவனக் குவியத்தையும், வாழ்வியல் லட்சியத்தையும் சரியாக பதினெட்டு அங்குலங்கள் கீழே இறக்கியது.

மானுட பரிணாம வளர்ச்சியில், தாய்க்கும் சேய்க்குமான உறவை அறுக்கும் வெறும் தழும்பு என்று கருதப்பட்ட ஓர் உறுப்பு, தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வரலாற்றை மாற்றியமைக்கும் அதிர்வு மையமாக மாறும் என்று டார்வின் கூட கணித்திருக்க மாட்டார்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சிறுசிறு தவறுகளையும், தவறான புரிதல்களையும் பேசித் தீர்ப்பதை விடுத்து, தங்களது போலி ஈகோவிற்காகப் பல வருடக் காதலை ஒரே நிமிடத்தில் பிரேக் அப் செய்து கொள்ளும் முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

குஷி திரைப்படத்துக்கு முன்பு வரை, தமிழ் சினிமாவில் காதலர்கள் பிரிவதற்கு சாதி, மதம், ஏழை பணக்கார வர்க்கப் போராட்டம், அல்லது வில்லனின் துப்பாக்கிச் சூடு போன்ற வலுவான சமூகக் காரணங்கள் தேவைப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் மாற்றி குஷி நுகர்வோர் கலாச்சாரத்தின் உச்சகட்ட உளவியல் சீரழிவை அறிமுகப்படுத்தியது. அதுதான் காரணமே இல்லாத பிடிவாதம்.

இருபாலினத்தவரிடமும் இந்தத் திரைப்படம் அசுரத்தனமான ஈகோவை ஒரு கௌரவச் சின்னமாக மாற்றியது. நியாயமான காரணங்களே இன்றி சண்டை போடுவதும், அதை காதலின் ஆழம் என்று அதில் உளவியல் சுயஇன்பம் காண்பதும் இந்தத் திரைப்படத்திற்குப் பின்பே சமூக ஒழுங்காக மாறியது.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள் என்றால், குஷி படத்தில் காலேஜுக்குப் படிக்கப் போகும் அத்தனை பேரையுமே லவ் மேட்ச் மேக்கர் வேலையைப் பார்க்கும் தரகர்களாக மாற்றி கமர்ஷியலாக விற்றார்கள். ஹீரோவும் ஹீரோயினும் தங்களுக்குள் காதலிப்பதை விடுத்து, தங்களது நண்பர்களான ஜோடியைச் சேர்த்து வைக்கப் படம் முழுக்கக் கொரியர் பாய் போல அலைந்து கொண்டிருப்பார்கள், தங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்த உறைபனியூட்டும் வெட்டி வேலையை, மிக வண்ணமயமான உடைகளாலும், ஆபாசக் குத்துப் பாடல்களாலும் மூடி மறைத்து, இவங்க எவ்ளோ பெரிய காதலின் தியாகிகள் என்று பார்ப்பவனை ஏமாற்றினார் இயக்குனர்.

முறையான கல்வியையும், எதிர்கால லட்சியங்களையும் விடுத்து, அடுத்தவன் காதலுக்குத் தூது போவதையும், கட்டிப்புடி கட்டிப்புடிடா என குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதையும் மாஸ் என்று காட்டி, பகுத்தறிவு மற்றும் காதலின் மென்மை மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

அந்நியன் படத்தில் மனநோயைக் கொண்டாடினார்கள் என்றால், குஷி படத்தில் ஆணாதிக்க ஈகோவையும் இளைஞர்களின் அத்தனை முட்டாள்தனங்களையும் நியாயப்படுத்தினார்கள். படத்திலிருக்கும் ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்பது தியேட்டரில் இருக்கும் டிக்கெட் கிழிப்பவருக்குக் கூடத் தெரியும். ஆனால், அதை அந்த இரு முட்டாள்களும் கடைசி ஐந்து நிமிடம் வரை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு காதலைச் சொல்வதற்கு இத்தனை போலி பந்தாக்களும், பிடிவாதங்களும் தேவை என்று காட்டி, பின்னணியில் ஓ வெண்ணிலா என்று உருகி உருகிப் பாடினால் நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்பதுதான் இத்திரைப்படம் தமிழக இளைஞர்களுக்குச் சொல்லித் தந்த திரைப்பாடம்.

நேர்மையாகக் காதலை வெளிப்படுத்துவதை விடுத்து, அதை ஒரு செஸ் விளையாட்டு போல விளையாடி மனித உணர்வுகளைச் சிதைப்பதைக் க்யூட் காதல் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த சினிமாட்டிக் தந்திரம்.

7ஜி ரெயின்போ காலனி மற்றும் மின்னலே போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது. நாயகி  கதாபாத்திரம், திருநெல்வேலியில் பிறந்த, பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த, சுயமரியாதை உள்ள பெண்ணாகக் காட்டப்படுவார். ஆனால், அவருக்கும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. ஹீரோவின் ஒரு பார்வைக்காகத் தன் ஒட்டுமொத்த முகத்தையும் கோணலாக்கி, கைகளைக் காற்றில் வீசி, கத்தி சண்ட பிரசண்டம் செய்வார்.

பெண் என்பவள் சின்ன விஷயத்திற்கெல்லாம் ஈகோ பார்த்துத் தூக்கில் தொங்குபவள்; அவளிடம் காதலைச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டாள், ஆனால் அவளை விட்டு விலகினால், ரயில் நிலையத்திற்குப் பின்னால் ஓடிவந்து கதறுவாள் என்ற ஒரு விசித்திரமான, முதிர்ச்சியற்ற பெண்மைப் பிம்பத்தை இத்திரைப்படம் யூத் ட்ரெண்ட் செட்டர் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

சுருக்கமாகச் சொன்னால், குஷி என்பது ஒரு காதல் கதையல்ல; அது தமிழ் இளைஞர்களின் மூளையை மழுங்கடித்து, அவர்களைத் தங்களின் சுயமரியாதையையும், சமூகப் பொறுப்பையும் மறந்து, ஒரு பெண்ணின் இடுப்பு மடிப்புக்குள்ளும், ஆண் மற்றும் பெண்ணின் பிடிவாதத்திற்குள்ளும் சிறை வைத்த ஒரு மென்மையான உளவியல் பயங்கரவாதம்.

இன்று நாம் பார்க்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரத்திற்கும், டாஸ்க்குகளை விட ஆட்டிடியூட் முக்கியம் என நினைக்கும் தலைமுறைக்கும் சீரழிவின் விதையாகப் போடப்பட்ட திரைப்படம் குஷிதான்.

குஷி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனின் லவ்வர் பாய் பிம்பத்திற்குத் தங்கக் கிரீடம் சூட்டி, அதன் இயக்குநரை ஹிட் இயக்குனர் நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அதுவரைக்கும் தமிழ் சினிமாவில் காதல் என்பது ஏதோ ஒரு தெய்வீகமான, தியாகம் நிறைந்த விஷயமாகப் பிம்பப்படுத்தப்பட்டிருந்தது. குஷி அதை அப்படியே உடைத்து, காதலை மிக சாதாரணமான, ஹார்மோன் சார்ந்த, உடல் சார்ந்த ஒரு கவர்ச்சியாக மாற்றியது. இளைஞர்கள் மனதில் காதல் என்றால் இவ்வளவுதானா? என்கிற ஓர் அரைகுறை மதிப்பீடு இத்திரைப்படத்திலிருந்துதான் ஆரம்பித்தது.

விஞ்ஞான பூர்வமாகப் பார்த்தால், மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு. எதை நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கிறோமோ, அதுதான் உலகத்திலேயே பெரிய விஷயம் என்று நினைத்துக்கொள்ளும். குஷியில் ஒரு சின்ன தவறான புரிதல் பெரிய இமாலயப் பிரச்னையாகக் காட்டப்படும். ஒர் இடுப்புப் பார்வைக்காக, இரண்டு படித்த, முதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் உலகமகா யுத்தம் நடத்துகிறார்கள் என்பதைக் காட்டியே தமிழகத்தில் கோடி கணக்கில் கல்லா கட்ட முடியும் என்றால், நம் சமூகத்தின் முதிர்ச்சி இத்திரைப்படத்தால் எந்த அளவுக்கு இடறி விழுந்தது என்பதை நீங்களே கணித்துக் கொள்ள வேண்டியதுதான்.

பொறுப்புணர்ச்சி, சமூகப் பார்வை, சக மனிதன் மீதான பரிவு என இவை எல்லாவற்றையும் உதறிவிட்டு, தன் ஆடைகள், தன் சிகை அலங்காரம், தன் ஆட்டிடியூட் மட்டுமே முக்கியம் என்ற சுயமோகத்தில் ஒட்டுமொத்தத் தலைமுறையும் ஆழ்த்தப்பட இத்திரைப்படம் பிரதான காரணமாகியது. அதுமட்டுமல்ல, தீவிரமான சிந்தனைகள் எள்ளலுக்குள்ளாக்கப்பட்டன; அசட்டுத்தனங்கள் அற்புதங்கள் என்று கொண்டாடப்பட்டன.

குஷி ஏற்படுத்திய உளவியல் பாதிப்பு என்பது, அது தமிழ் இளைஞர்களின் அக உலகைக் காலி செய்துவிட்டு, அங்கே ஒரு பெரும் சூன்யத்தை நிரப்பியதுதான். ஒரு திரைப்பார்வையாளனுக்கு அந்தத் திரைப்படம் திரையில் காட்டிய வண்ணமயமான உலகம், உண்மையில் ஒரு சமூகத்தின் சிந்தனை வறட்சியின், அதன் உளவியல் வீழ்ச்சியின் தொடக்கப் புள்ளியாகவே இன்று வரை காட்சியளிக்கிறது.

குஷி காட்டும் காதல் என்பது காதலே அல்ல; அது காதலைப் போலப் பாசாங்கு செய்யும் இரு பிம்பங்களின் போலி விளையாட்டு.

காதல் என்றால் ஒருவரையொருவர் டார்ச்சர் செய்து கொள்வதுதான் வாலிபம் என்றும், மக்கரீனா என்றும் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடினால் அத்தனை அநாகரிகங்களையும் ரசிக்கலாம் என்றும், தேவையற்ற ஈகோ பாராட்டிப் பிரியப் பார்ப்பதே காதலின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஈகோ சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

13 Jul 2026

எலும்புக்கூடும் எந்திர மனங்களும்!

எலும்புக்கூடும் எந்திர மனங்களும்!

ஒடிஸாவின் கேந்ஜார் மாவட்டத்தில் நடந்த அந்தச் சம்பவம் ஒரு த்ரில்லர் நாவலின் க்ளைமாக்ஸ் போல இருக்கிறது. ஆனால் இது புனைவல்ல, நிஜம்.

ஜித்து முண்டா என்கிற சாமானியர், வங்கி மேலாளரின் முன்னால் ஒரு துணிப்பையைத் திறக்கிறான். உள்ளே இருப்பது அவரது அக்கா கல்ரா முண்டாவின் எலும்புக்கூடு.

இதோ என் அக்கா. பணத்தைக் கொடு! என்கிறார் ஜித்து முண்டா வங்கி மேலாளரிடம்.

இந்தக் காட்சியை இப்போது உங்கள் மனதில் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். சுற்றியிருந்தவர்கள் அலறியிருப்பார்கள். வங்கி மேலாளர் மயக்கமுற்றிருக்கலாம். ஆனால், இதற்குக் காரணமான அந்த சிவப்பு நாடா மனநிலை மட்டும் இன்னும் சாகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நமது சிஸ்டம் ஒரு விசித்திரமான பிராணி. அதற்கு உயிர் கிடையாது, ஆனால் அது உயிர்ச் சான்றிதழ் கேட்கும். அதற்கு உணர்ச்சிகள் கிடையாது, ஆனால் அது வாரிசுச் சான்றிதழ் கேட்டு நம்மை அழ வைக்கும்.

அந்த வங்கி மேலாளர் சொன்னாரே ஒரு வார்த்தை,  முடிந்தால் உன் அக்காவையே கூட்டி வா. அவர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பெற்றுக் கொள் என்று. இது வெறும் அதிகாரத் தோரணை அல்ல, மனித நேயம் வற்றிப்போன ஒரு மென்பொருளின் எர்ரர் மெசேஜ்.

ஜித்து முண்டா செய்த காரியம் கரடுமுரடானதுதான். ஆனால், ஒரு மனிதன் புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்றால், இந்த டிஜிட்டல் இந்தியாவின் வேகம் எங்கே நிற்கிறது?

இப்போது நீங்கள் இன்னும் சில உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இறந்து போன ஜித்து முண்டாவின் அக்கா வங்கியில் சேர்த்து வைத்தது வெறும் 20,000 ரூபாய்தான். அது அவர் ஆடு மாடு மேய்த்துச் சேர்த்த ரத்தம்.

அந்தப் பணத்தை எடுக்க அவர் ஒரு எலும்புக்கூடாகவே வரவேண்டியிருக்கிறது.

வாரிசுதாரர் இல்லாத வங்கிக் கணக்கு என்பது, சாவியில்லாத பூட்டைப் போன்றது. அதை உடைக்க வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் எனப் பல படிகளை ஏற வேண்டும்.

ஆனால், எது எதற்கோ ஆட்டோமேட்டிக்காக மாறும் இந்தச் சிஸ்டம் ஏன் இன்னும் இதற்கு ஆட்டோமேட்டிக்காக மாறவில்லை?

ஒருவர் இறந்துவிட்டால், அந்தத் தகவல் ஏன் தானாகவே வங்கிக்கும், மின்சார வாரியத்திற்கும் செல்வதில்லை? ஆதார்  போன்ற எண்கள் இருக்கும்போது, எதற்காக ஒரு மனிதர் தன் வாரிசுரிமையை நிரூபிக்க எலும்புக்கூட்டைச் சுமக்க வேண்டும்?

காரணம், மனித நேயம் என்பது சட்டப் புத்தகத்தில் இல்லை. அது கோப்புகளுக்கு இடையில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

எதார்த்தம் என்னவென்றால், இறந்தவர்களுக்குத் தேவைப்படுவது அமைதி; இருப்பவர்களுக்குத் தேவைப்படுவது அவர்கள் விட்டுச் சென்ற வாழ்வாதாரம்.

ஆனால் அதிகாரிகள், அந்த வாழ்வாதாரத்தையே ஒரு போர்க்களமாக மாற்றுகிறார்கள். ஜித்து முண்டாக்கள் உருவாகக் காரணம், சான்றிதழ்களை விடச் சட்டங்களின் பிடிவாதம் அதிகம் இருப்பதுதான்.

ஜித்து முண்டாவின் செயல் ஒரு எச்சரிக்கை. கோப்புகள் நகரவில்லை என்றால், மக்கள் புதைகுழிகளை நோக்கித் நகரத் தொடங்குவார்கள். அது ஒரு நாகரிக சமூகத்திற்கு அழகல்ல.

விதிமுறைகள் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதர்களை விதிகளுக்காகப் பலி கொடுக்காதீர்கள்.

அடுத்த முறை வங்கிக்குப் போகும்போது உங்கள் வாரிசுதாரர் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் வாரிசுகள் ஜித்து முண்டா போல் வங்கியின் ஏசி அறையில் உங்களை எலும்பு கூடாக உட்கார வைக்க வேண்டி வரலாம்!

*****

வீட்டிலிருந்தே வேலை அல்லது வீட்டிலிருந்தே சாவு

வீட்டிலிருந்தே வேலை அல்லது வீட்டிலிருந்தே சாவு

ஒரு காலத்தில், அதாவது கரோனா என்றொரு பூதம் உலகை ஆட்டியபோது ஒர்க் பிரம் ஹோம் முறைதான் ஐ.டி. ஜீவன்களின் ஆகச்சிறந்த சொர்க்கமாகப் பார்க்கப்பட்டது.

அதற்கு முன்புவரை, ஐந்து நாள்கள் மாடாய் உழைத்துவிட்டு, வார இறுதியில் தங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பப் கலாசாரம் என்றொரு தனி உலகத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

திடீரென லாக்டவுன் வந்ததும், வீட்டிலிருந்தே லேப்டாப்பைத் திறந்து உட்கார்ந்தார்கள். பெட்ரோல் செலவு மிச்சம், பார்மல் உடைகள் வாங்கும் செலவு மிச்சம் எனக் குஷியானார்கள்.

அம்மாவின் கைவண்ணத்தில் சூடான சாப்பாடு, குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிப்பது என ஆரம்பத்தில் எல்லாமே ஹனிமூன் காலம் போலத்தான் இனித்தது. நிறுவனங்களுக்கும் பில்டிங் வாடகை, ஏசி, கரண்ட் பில் மிச்சம்.

உண்மை என்னவென்றால், அப்போது பப் கலாசாரம் காணாமல் போனதே தவிர, மன அழுத்தம் போகவில்லை. மன அழுத்தம் மெல்ல மெல்ல வீட்டின் சமையலறைக்கே ஷிப்ட் ஆனது.

கொரோனாவிலிருந்து நிலைமை சீரானதும் சில நிறுவனங்கள் ஒழுங்காக ஆபீஸுக்கு வாருங்கள் என்றன. சில நிறுவனங்கள் பாதி நாள் வா, பாதி நாள் வீட்டிலிரு என்றன. ஆனால், இந்த வீட்டிலிருந்து வேலை என்பதில் ஒளிந்திருக்கும் ஆபத்தை நிறுவனங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன.

அலுவலக நேரம், சொந்த வாழ்க்கை என்ற இரண்டுக்கும் நடுவே இருந்த மெல்லிய கோடு அப்போது அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளின் மீது சவாரி செய்யும் வித்தைக் காரர்கள்.

விளைவு?

வீட்டில் நிசப்தம் என்பதே ஒரு பகற்கனவு ஆகி விட்டது. முக்கியமான கிளையண்ட் மீட்டிங்கில் இருக்கும்போதுதான் பக்கத்து வீட்டு மிக்ஸி அலறும், மோட்டார் சத்தம் போடும், தெரு நாய் குரைக்கும், குழந்தை அழுதே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும்.

காலையில் புத்துணர்ச்சியோடு கிளம்பி, சக மனிதர்களைப் பார்த்து, டீ பிரேக்குகளில் அரட்டையடித்து, மதிய உணவை நண்பர்களுடன் பகிர்ந்துண்ட அந்தப் பொற்காலம் தலைமறைவாகி விட்டது.

பூனை தன் குட்டியை எப்படிக் கவ்விக்கொண்டு போகுமோ, அதைப்போல ஐ.டி ஊழியர்கள் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு சமையல் மேடைக்கும், சாப்பாட்டு மேசைக்கும் அலைகிறார்கள்.

சக ஊழியர்களுடனான தொடர்பு வெறும் அலுவல் சார்ந்தது மட்டுமாகச் சுருங்கிவிட்டது. மனிதன் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வாழ முடியாது என்கிற அடிப்படை விதியே இங்கே அவுட் ஆப் டேட்டாகி விட்டது!

இதில் மிகவும் கொடுமையான விஷயம், இந்தியாவிலிருந்து கொண்டு வெளிநாட்டு நேரத்துக்கு வேலை செய்வது. மனித உடல் பகலில் உழைக்கவும், இரவில் தூங்கவும் டிசைன் செய்யப்பட்டது. ஆனால், நம் ஐ.டி சிங்கங்களோ நடுநிசி வரை லேப்டாப்புடன் மல்லுக்கட்டுகிறார்கள். பகலில் தூங்கலாம் என்றால் வீட்டு வேலைகள் கழுத்தை நெரிக்கும்.

குறிப்பாகப் பெண்களின் நிலை இந்த வீட்டிலிருந்தே வேலை என்பதால் மிகவும் மோசமாகி நரகமாகி விட்டது.

ஐ.டி. வேலைகளால் பெண்கள் இந்த நூற்றாண்டில்தான் கொஞ்சம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தார்கள். அழகாக ஆடை உடுத்தி, தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பும்போதே அவர்களுக்குள் ஒரு தனித் தன்னம்பிக்கை பிறந்தது. ஆபீஸில் நடக்கும் கொண்டாட்டங்கள் அவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் தந்தன.

ஆனால், இந்த வீட்டிலிருந்து வேலை முறை அவர்களை மீண்டும் கூண்டுக்கிளி ஆக்கிவிட்டது. தூக்கிக் கட்டிய கொண்டையுடனும், நைட்டியுடனும் லேப்டாப் முன் அமர்ந்து பொழுதைக் கழிக்க எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும்? சிறகடித்துப் பறக்க நினைக்கும் பட்டாம்பூச்சிகளை ஒரு அறைக்குள் அடைத்து வைத்தால் என்னவாகும்?

அவர்களின் சிரிப்புக்கும், உதட்டுச் சாயத்துக்கும் பின்னால் ஓராயிரம் அல்லல்களும், மன உளைச்சல்களும் ஒளிந்துள்ளன.

மேலை நாட்டுக்கு ஒப்பான, சுத்தமான, ஏசி பொருத்திய ஐ.டி நிறுவனங்கள் பலருக்கு இரண்டாவது வீடு போலத்தான் இருந்தது. அங்கே தேங்கி நிற்கும் குட்டை போல இல்லாமல், புதிய விஷயங்களை நண்பர்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பாவது கிடைத்தது.

ஆனால், தற்போதைய நிலைமை?

ஆபீஸுக்குப் போனால் அலைச்சல் என்று நினைத்தவர்கள், இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். சுருக்கமாகச் சொன்னால், வீட்டிலிருந்து வேலை என்பது சுதந்திரம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு சொகுசான ஆயுள் தண்டனை!

Work while you work, Play while you play என்பது போல வீட்டு வேலைகளை வீட்டிலும், அலுவலக வேலைகளை அலுவலகத்திலும் செய்வதே நல்லது.

*****

12 Jul 2026

இசை × 48,000 = ஜானகி எனும் மகா பாடகி!

இசை × 48,000 = ஜானகி எனும் மகா பாடகி!

மரணத்திற்கு இசை ரசனை கம்மி என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால், 20 மொழிகளில் 48,000 பாடல்களைப் பாடி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் செவிகளிலும் தேனைக் கொட்டிய ஒரு குரலை, இப்படி சட்டென்று மியூட் செய்ய அதற்கு எப்படி மனது வந்தது?

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனது 88 ஆவது வயதில் மைசூருவில் காலமானார். வயது முதிர்வு என்பது ஒரு காரணம் என்றாலும், கடந்த ஜனவரியில் அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா மறைந்த அதிர்ச்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை என்கிறார்கள். கணவர் ராம்பிரசாத் 1997 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். தனிமை, துயரம், முதுமை என எல்லாம் சேர்ந்து ஒரு மகா குரலை அணைத்துவிட்டது என்றுதான சொல்ல வேண்டும்.

பத்து வயதில் நாகஸ்வர வித்வான் பைடி சுவாமியிடம் ஆரம்பப் பாடம் படிக்கப் போனபோது, மாஸ்டர் இவரை சும்மா உட்காரச் சொல்லிவிட்டு, மற்ற மாணவர்களிடம் “இவரைப் பார்த்து சங்கதி கத்துக்கோங்கப்பா” என்று ஜானகியைக் காட்டியிருக்கிறார். பார்ன் ஜீனியஸ் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

ஜானகியின் வாழ்க்கை ஒரு விசித்திரமான இசைச் சுழல். 1938 இல் ஆந்திராவின் பல்லபட்டா கிராமத்தில் பிறந்து, 19 ஆவது வயதில் ஏவி.எம். ஸ்டுடியோவின் ஒப்பந்தப் பாடகியாக மெட்ராசுக்குள் நுழைந்தபோது, அவர் ஒரு சகாப்தத்தைத் தொடங்குகிறார் என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1957 இல் விதியின் விளையாட்டு என்ற படத்தின் மூலம் தொடங்கிய அந்தப் பயணம், அடுத்த 60 ஆண்டுகளுக்கு இந்தியத் திரையிசையை ஆட்டிப்படைத்தது.

ஆனால், அவரது சினிமா உலகப் பிரவேசம் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 1957 இல் ஏவிஎம் ஆடிஷனில் தேர்வாகி, விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடலைப் பாடினார். பாட்டு பிரமாதம். ஆனால், விதி நிஜமாகவே விளையாடியது. படம் ரிலீஸாகவே இல்லை!

முதல் பாட்டே பெட்டிக்குள் முடங்கிய சோகத்தை அவரே பகிர்ந்துள்ளார். அதற்குப் பிறகு மதகளநாட்டு மேரி என்ற படம்தான் அவரது அதிகாரப்பூர்வ முதல் தமிழ் பாடலானது.

1957 இல் தொடங்கிய அந்தப் பாட்டுப் பயணம், 2016 இல் 10 கல்பனகள் என்ற மலையாளப் படத்தோடு முற்றுப்பெற்றது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இசை அரசாங்கம் அது.

மரணம் ஜானகியை அழைத்துக்கொண்டு போய்விட்டது. ஆனால், போவதற்குள் அவர் அள்ளிக் குவித்த விருதுகளையும், நிகழ்த்திய வித்தைகளையும் பார்த்து எமதர்மனே சற்று மிரண்டுதான் போயிருப்பான்.

தேசிய விருதுகள் நான்கு வாங்கியது ஒருபுறமிருக்க, மாநில அரசுகள் இவருக்குப் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை வாரி வழங்கியிருக்கின்றன. மொத்தம் 33 மாநில விருதுகள்.

இதுதவிர, இந்தியில் சாஹேப் படத்திற்காக பிலிம்பேர் விருது, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவா விருது, மைசூரு பல்கலைக்கழகம் கொடுத்த கௌரவ டாக்டர் பட்டம் என அவரது அலமாரி விருதுகளால் நிரம்பி வழிந்தது.

ரசிகர்களோ அவரை தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றும், கான கோகிலா என்றும் செல்லமாக அழைத்துக் கொண்டாடினார்கள்.

இளையராஜா என்னும் இசையின் ஞானமும், எஸ்பிபி என்னும் காதலின் குரலும், ஜானகி என்னும் உணர்ச்சிகளின் பேரரசும் இணைந்த அந்த முக்கோணக் கூட்டணி தென்னிந்திய திரையிசையின் பொற்காலம்.

எஸ்பிபியோடு இணைந்து ஜானகி பாடிய டூயட்டுகள் அத்தனையும் காதலர்களின் தேசிய கீதங்கள். யேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன் என அத்தனை ஜாம்பவான்களுடனும் ஜோடி சேர்ந்து பாடியுள்ளார் ஜானகி.

ஜானகியின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், அவர் தன் வாழ்நாளில் அதிக பாடல்களைப் பாடியது கன்னட மொழியில்தான்! மொழி என்பது ஜானகிக்கு வெறும் உச்சரிப்பு மட்டுமே, அவரது உணர்வு எப்போதும் இசையாகவே இருந்தது.

ஜானகி ஒரு குரல் பிரம்மா. குரலை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார். ஐந்து வயதுக் குழந்தையின் மழலை வேண்டுமா? ஜானகி ரெடி. அறுபது வயதுப் பாட்டியின் தழுதழுப்பு வேண்டுமா? அதற்கும் ஜானகி ரெடி. காதலின் உச்சம், விரகத்தின் தவிப்பு, பக்தியின் உருக்கம் என மனித உணர்ச்சிகளின் அத்தனை அலைவரிசைகளையும் தன் தொண்டைக்குள் ஒளித்து வைத்திருந்தார்.

கே.வி.மகாதேவன் தொடங்கி, இளையராஜா வழியாக ஏ.ஆர்.ரஹ்மான் வரை அத்தனை இசையமைப்பாளர்களும் இவரை வைத்துத் தங்களின் இசைப் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள். மவுனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு அவரே இசையமைக்கவும் செய்தார். மவுனத்திற்கும் இசைக்கும் நடுவேயான தூரத்தை அவர் நன்கு அறிந்திருந்தார் போலும்.

மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் அவரது மூச்சு நின்றபோது, இந்தியத் திரையுலகின் ஒரு பெரும் பகுதி நிசப்தத்தில் மூழ்கியது.

மரணம் ஜானகியின் உடலை எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் பாடிவிட்டுப் போன 48,000 பாடல்களையும் என்ன செய்யும்? ஏதாவது ஒரு நள்ளிரவில், எவரோ ஒருவரின் ஏகாந்தத்தின் உச்சத்தில் செந்தூரப் பூவே ஒலிக்கும்போது ஜானகி மீண்டும் உயிர்பெற்றுக்கொண்டுதான் இருப்பார். மரணமே, நீ தோற்றுவிட்டாய்!

*****