1 May 2026

வாஷிங்டன் தாத்தாவும், டெல்லி மௌனமும் – ஒரு ராஜதந்திர காமெடி!

வாஷிங்டன் தாத்தாவும், டெல்லி மௌனமும் –

ஒரு ராஜதந்திர காமெடி!

உலக அரசியல் இப்போது ஒரு விசித்திரமான கட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து வரும் அறிக்கைகளைப் பார்த்தால், அது ராஜதந்திர உறவா அல்லது ரவுடித் தனமான மிரட்டலா என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் இறையாண்மையை ஒரு சைடு டிஷ் ரேஞ்சுக்கு டிரம்ப் டீல் செய்வதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கையை என்னால் அழிக்க முடியும். என்று டிரம்ப் அடிக்கடி சொல்லி வருகிறார். இது ஏதோ ஒரு பள்ளிக்கூடப் பையன் இன்னொரு பையனைப் பார்த்து, உங்க அப்பாகிட்ட சொல்லி உன்னை அடி வாங்க வைப்பேன். என்று சொல்வது போலத் தெரிந்தாலும், இதில் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. 140 கோடி மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த ஒரு தலைவரை, ஒரு வெளிநாட்டுத் தலைவர் இப்படிப் பேசுவது இந்திய ஜனநாயகத்தையே டம்மி ஆக்கும் முயற்சி.

ஆனால், நம் ஊரில் இதற்கு வரும் ரியாக்‌ஷன்களைப் பார்த்தால், அவர் அப்படித்தான் பேசுவார், அவர் ஒரு செல்லமான கோபக்காரர். என்பது போல ஒரு மென்மையான, வளைந்து கொடுக்கும் போக்கையே அரசு கடைப்பிடிக்கிறது. உலக அரங்கில் நாட்டின் கண்ணியம் என்பது இப்போது சைலண்ட் மோடில் போடப்பட்டிருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளை டிரம்ப் நரகக் குழிகள் என்று வர்ணித்திருக்கிறார். பல ஆயிரம் காலத்துக் கலாசாரம், ஜனநாயகம், அறிவுத்திறன் எனப் பீற்றிக்கொள்ளும் நம் நாட்டைப் பார்த்து இப்படி ஒரு வர்ணனை வரும்போது, நமக்குக் கோபம் வரவேண்டும். ஆனால், நாம் ஒரு கண்ணியமான ராஜதந்திரக் குறிப்பை அனுப்பிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம்.

உண்மையில் தேவைப்படுவது உறுதியான கண்டனம், சாரி கேட்க வைக்கும் அளவுக்கு ஓர் அழுத்தம். ஆனால், நமக்குத்தான் பெரியண்ணன் அமெரிக்காவைக் கண்டால் ஒருவித பயம் கலந்த பக்தி இருக்கிறதே!

இந்தியாவின் எரிபொருள் கொள்கையில் அமெரிக்கா தலையிடுவது உச்சக்கட்டக் கூத்து. ரஷியாவிடம் எண்ணெய் வாங்காதே, என்று உத்தரவு போடுவதும், பிறகு சரி, ஒரு 30 நாளைக்கு மட்டும் வாங்கிக்கோ என்று பர்மிஷன் கொடுப்பதும் என்ன மாதிரியான உறவு?

இந்தியா என்ன வாஷிங்டனிடம் அனுமதி பெற்றுச் செயல்படும் ஒரு கிளை அலுவலகமா? எரிசக்தி பாதுகாப்பு என்பது நம் வீட்டுப் பிரச்சினை. அதில் ஒரு வெளிநாட்டுச் சக்தி கண்டிஷன் போடுவதை அனுமதிப்பது, நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை ஒரு நிமிடம் மறந்துவிடுவதற்குச் சமம்.

இன்னொரு பக்கம், பாகிஸ்தானுடனான ராணுவ நடவடிக்கைகளைத் தான்தான் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் ஒரு கதை விடுகிறார். இது உண்மையோ பொய்யோ, ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு முடிவுகள் வெள்ளை மாளிகையில் எடுக்கப்படுகின்றன என்கிற பிம்பத்தை இது உருவாக்குகிறது.

ஓர் இறையாண்மை கொண்ட நாடு, தன் ராணுவத் தேவைகளைத் தானே தீர்மானிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, அவர் சொன்னார், நாங்க கேட்டோம், என்கிற ரேஞ்சுக்குச் செய்திகள் வருவது நம் சுயாட்சியின் ஆணிவேரையே ஆட்டங்காணச் செய்கிறது.

நட்பு என்பது வேறு, அடிபணிதல் என்பது வேறு. உலக வல்லரசுகளுடன் கைகோர்ப்பது அவசியம்தான், ஆனால் அது சமத்துவமான மேடையில் இருக்க வேண்டும். இல்லை என்று சொல்ல வேண்டிய இடத்தில் உறுதியாகச் சொல்லும் அரசுதான் வலிமையான அரசு.

சுருக்கமாகச் சொன்னால், டிரம்ப் ஒரு பக்கம் தன் இஷ்டத்துக்குப் பந்தை உருட்டி விளையாடுகிறார். நம் பக்கமோ, பந்து நம் கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தாலும் பரவாயில்லை, அவர் நம்ம ஆளுதான், என்று சிரித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு எந்த வல்லரசு நட்பும் நமக்குத் தேவையில்லை. இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் செய்வது, நம் வரலாற்றையே கொச்சைப்படுத்துவதற்குச் சமம்.

டிரம்ப் தாத்தாவுக்கு யாராவது இறையாண்மை என்றால் என்னவென்று ஒரு டிக்‌ஷனரி அனுப்பி வைத்தால் தேவலை!

இந்தியத் தலைவர்களும் அந்த டிக்சனரியில் அதற்கான பொருள் என்னவென்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்வது நல்லது. டிரம்பின் பேச்சுகளைப் பார்க்கும் போது இந்தியத் தலைவர்கள் அதை அடிக்கடி மறந்துவிடுவது போலத் தெரிகிறது.

*****

பார்ட்டியும் பல்ப்பும்!

பார்ட்டியும் பல்ப்பும்!

பரமசிவம் ஒரு காலத்தில் லட்சிய புருஷன். டீக்கடையில் பெஞ்ச் துடைத்தவர், மெல்ல மெல்ல உயர்ந்து பரமு ஹோம் அப்ளையன்சஸ் உரிமையாளர் ஆனார். அவர் கடையில் டிவி வாங்கினால் படம் தெளிவாகத் தெரியும், பீரோ வாங்கினால் திருடன் தொடமாட்டான் என ஊருக்குள் ஒரு நம்பிக்கை.

கனிவாகப் பேசுவார். அவர் பேசுவதைக் கேட்டால், நமக்குக் கட்டில் தேவையில்லை என்றாலும், இவர் பேச்சுக்காக ஒன்றரை டன் ஏசி வாங்கலாம் என்று தோன்றும். வியாபாரம் செழித்தது. பணம் பெட்டியில் நிரம்பியது.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, அந்தச் சாத்தான் வாட்ஸ்ஆப் வடிவில் வரும் வரை.

பள்ளிக்கூட காலத்து நண்பன் ஒருவன் முளைத்தான். பழைய நண்பர்கள் என்பவர்கள் ஊறுகாய் போன்றவர்கள், அவ்வப்போது தொட்டுக்கொண்டால் ருசிக்கும். ஆனால் பரமு அந்த நண்பனையே மெயின் டிஷ் ஆக்கிக்கொண்டார்.

என்ன பரமு, எப்பப் பார்த்தாலும் கடையிலேயே கிடக்கிற? வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? வாவ் திஸ் இஸ் லைப்! என்று நண்பன் ஒரு பீர் பாட்டிலைத் திறக்க, பரமுவின் புத்தி மெல்ல மழுங்கியது.

பிறகு என்ன, ஞாயிற்றுக்கிழமை லீவு என்பது போய், வாரத்தில் ஏழு நாளும் நோ பார்க்கிங் ஆனது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பூட்டிய ஷட்டரைப் பார்த்துவிட்டு, என்னப்பா பரமு கடைக்கு விடுமுறை கொடுத்துட்டாரா, இல்ல கடையையே விடுவித்துட்டாரா? என்று கேட்டுவிட்டு நகர்ந்தார்கள்.

கடைசியில் ஒரு நாள் ஷட்டர் நிரந்தரமாக இறங்கியது.

கடன் கொடுத்தவர்கள் எல்லாம் வரிசையில் நின்றார்கள். பரமுவின் சொத்துக்கள் ஒவ்வொன்றாக விடைபெற்றன. முதலில் காலி மனை போனது. அடுத்து குடியிருந்த வீடு. கடைசியில் கடையில் மிஞ்சியிருந்த ஒரு உடைந்த மிக்ஸி ஜார் கூடப் போனது.

இப்போது அந்த பழைய நண்பன் இவரிடம் பேசுவதே இல்லை.

எல்லாம் போச்சு தம்பி, என்று யாரைப் பார்த்தாலும் புலம்புகிறார் பரமு, ஒரு பழைய பிளாக் அண்ட் ஒயிட் டிவி போல மங்கலாகப் சிரித்தபடி.

பணத்தைச் சம்பாதிக்கத் தெரிஞ்ச உங்களுக்கு, அதைக் காப்பாத்தத் தெரியலையே சார் என்றால், நண்பன் கூடச் சேர்ந்து ஜாலியா இருக்கும்போது உலகம் அழகா தெரிஞ்சது தம்பி, என்று இளிக்கிறார்.

உண்மைதான். உலகம் அழகாதான் இருந்தது. ஆனால் அவர் பேங்க் பேலன்ஸ்தான் அசிங்கமாகி விட்டிருந்தது.

இதிலிருந்து நாம் உருவிக் கொள்ள வேண்டிய நீதிகளாவன,

பணம் சம்பாதிப்பது என்பது கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிப்பது போல. ஆனால் அந்தப் பணத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பது டெஸ்ட் மேட்ச் ஆடுவது போல. ஒரு நோ பால் விழுந்தால் மொத்த இன்னிங்ஸும் காலி.

பள்ளிக்கூட நண்பர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல. சில பேர் உங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பிக்க வருவார்கள். சில பேர் உங்கள் வங்கிக் கணக்கைப் புதுப்பிக்க தட் மீன்ஸ் காலி செய்ய வருவார்கள். பழைய நண்பன் வந்து கதவைத் தட்டும்போது, நினைவுகளை மட்டும் உள்ளே விடுங்கள். கல்லாப் பெட்டிச் சாவியைக் கொடுத்தால், ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சும்.

வாழ்க்கையில் உயரும்போது தடம் மாறாமல் இருப்பது முக்கியம். நீங்கள் மேகத்தில் பறக்கலாம், ஆனால் உங்கள் கடை ஷட்டர் தரையில்தான் இருக்க வேண்டும். சுய ஒழுக்கம் இல்லாதவனின் சொத்து, வெயிலில் வைத்த ஐஸ்கிரீம் போன்றது. அது உருகுவதும் தெரியாது, ஒழுகுவதும் தெரியாது.

சுருக்கமாகச் சொன்னால், மேலே ஏறும் ஏணியில் எண்ணெய் தடவினால், கீழே இறங்கும்போது லிப்டை விட வேகமாக வரலாம். விழிப்போடு இருப்பது முக்கியம்.

*****

30 Apr 2026

பெண்கள் - ஆட்ட நாயகிகள்!

பெண்கள் - ஆட்ட நாயகிகள்!

சமீபத்திய தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டது. வாக்குப்பதிவு 85 சதவீதம். 2011 இல் வெறும் 78 சதவீதத்தோடு போதும் என்று நிறுத்திக்கொண்டவர்கள், 15 வருடம் கழித்து இப்போது செஞ்சுரி அடிக்காத குறையாக ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

அதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், இளம் வாக்காளர்களின் எழுச்சி அதாவது முதல்முறை விரலில் மை வைக்கும் ஆர்வம் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

ஆனால், எல்லாவற்றையும் விட முக்கியமானது, பூத்களில் நின்ற பெண்களின் கூட்டம்.

வாக்காளர் பட்டியலில் 1000 ஆண்களுக்கு 1,044 பெண்கள் இருக்கிறார்கள். அதாவது, கவனிப்பாரற்றுப் போகும் ஆண்களை விட பெண்கள் தான் இங்கே அதிகம். இதுதான் பெண்களைத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றியிருக்கிறது. இதற்காகவே அரசியல் கட்சிகள் அவர்கள் பின்னால் அலைகின்றன.

இதில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கிறது. ஆண்கள் பொதுவாக, நான் இந்தக் கட்சிப் பரம்பரை என்று ஒரு லேபிளை ஒட்டிக்கொண்டு அலைவார்கள். ஆனால், பெண்கள் அப்படியல்ல. அவர்கள் ஒரு ப்ரீ ஏஜென்ட் போலச் செயல்படுகிறார்கள்.

முன்னெல்லாம் கிராமங்களில் யாருக்கு ஓட்டுப் போடணும்? என்று பெண்கள் தங்கள் கணவரிடமோ, அண்ணனிடமோ அனுமதி கேட்பதுண்டு. ஆனால் இப்போது அந்த சீனெல்லாம் பழைய படத்தோடு முடிந்துவிட்டது.

2014 இல் நடந்த ஒரு ஆய்விலேயே 70 சதவீதப் பெண்கள், நான் யாரையும் கேட்டு ஓட்டுப் போடுவதில்லை, என்று சொல்லிவிட்டார்கள்.

இந்தச் சட்டசபைத் தமிழகத் தேர்தலில், தகுதி பெற்ற 2.93 கோடி பெண் வாக்காளர்களில் 2.51 கோடி பேர், அதாவது 85 சதவீதம் ஆஜராகிவிட்டார்கள்.

பாவம் ஆண்கள், 2.80 கோடியில் 2.34 கோடி பேர்தான் அதாவது 83 சதவீதம்தான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்கள் வேகமாக முடிவெடுக்கிறார்கள், வரிசையில் நின்று நேரத்தையும் வீணடிப்பதில்லை.

1962இல் வெறும் 48 சதவீதப் பெண்கள் தான் வீட்டை விட்டு வெளியே வந்து ஓட்டுப் போட்டார்கள். ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் 65.72 சதவீத பெண்கள் ஓட்டுப் போட்டு, ஆண்களை அதாவது 65.55 சதவீதத்தை ஓவர்டேக் செய்துவிட்டார்கள்.

50 ஆண்டுகளில் ஆண்களின் ஆர்வம் 7 சதவீதம்தான் கூடியிருக்கிறது, பெண்களுக்கோ 27 சதவீதம் எகிறியிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கும் இது புரிந்துவிட்டது. அதனால்தான் இப்போது வரும் தேர்தல் அறிக்கைகளில், அக்காக்களுக்கு இது, தங்கச்சிகளுக்கு அது, எனப் பெண்களைக் கவரும் திட்டங்கள் மழையாகப் பொழிகின்றன.

இனி வரும் காலங்களில் பெண்கள் ஒரு தனித்த வாக்கு வங்கி. அவர்கள் எதை எதிர்பார்த்து ஓட்டுப் போடுகிறார்கள் என்பது ஆண்களின் நோக்கத்திலிருந்து மாறுபடுகிறது. அதனால்தான் கேஸ் சிலிண்டர், மகளிர் உதவித்தொகை எனப் பெண்களைக் குறிவைத்த ஸ்கீம்கள் தேர்தல் அறிக்கைகளில் வரிசையாக வருகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும், எவ்வளவு வித்தியாசத்தில் தோற்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் மாஸ்டர் கீ இப்போது பெண்களிடம் இருக்கிறது. ஆண்கள் சும்மா கூட்டத்தில் கோஷம் போட மட்டுமே மிச்சமிருக்கிறார்கள்!

*****

எக்சிட் போல் கணிப்புகள் – தமிழ்நாட்டின் நிலை என்ன?

எக்சிட் போல் கணிப்புகள் – தமிழ்நாட்டின் நிலை என்ன?

தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும் என்றும், கேரளாவில் கை சின்னம் கைகொடுக்கும் என்றும், வங்காளத்தில் தாமரை மலர்ந்து ஆக்கிரமிக்கும் என்றும் ஜோசியர்கள், அதாகப்பட்டது, அந்த எக்ஸிட் போல் நடத்தும் மேதாவிகள் ஆரூடம் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் நான்கு முனை போட்டி என்கிறார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, புதுவரவான சினிமா கட்சி, அப்புறம் எப்போதுமே இருக்கும் தம்பிமார்கள் கட்சி. இதில் திமுக கூட்டணிதான் பெரியப்பா என்று பெரும்பாலான கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் அதிமுகவுக்கு விசில் அடிக்கின்றன. விசிலுக்கும் ஒரு கணிப்பு இலைக்குள் தாமரையை மலர வைக்கிறது. யாருக்கு எத்தனை சீட் என்பதில் கணிப்புகளுக்கிடையே இருக்கும் வித்தியாசம், ஒரு சராசரி மனிதனின் சம்பளத்திற்கும் செலவிற்கும் இருக்கும் வித்தியாசத்தை விட அதிகம்.

கேரளாவில் இடதுசாரிகள் பத்து வருடங்களாகச் செய்த புரட்சி போதும் என்று மக்கள் கை சின்னத்திற்கு மாற முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் தீதிக்கும் மோடிக்கும் நடந்த மல்யுத்தத்தில், இம்முறை தாமரை இலை தட்டிப் பறிக்கும் என்கிறார்கள்.

அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பழைய பஞ்சாங்கமே தொடருமாம்.

நாங்கள் இனி சும்மா கை தட்ட மாட்டோம், மேடையிலும் ஏறி அமருவோம், என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதாவது, இனி நாங்கள் வெறும் கூட்டணி அல்ல, அதிகாரப் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இது எனக்கும் ஒரு லட்டு வேணும் என்று அடம் பிடிக்கும் குழந்தையின் ஆசையைப் போன்றதா அல்லது நியாயமான கோரிக்கையா என்பதை காலம் மற்றும் ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.

எக்சிட் போல் கணிப்புகளின் தரவுப் பட்டியல்களைப் பார்க்கும் போது, அவை குழப்பங்களின் தொகுப்பு போல இருக்கிறது. இருந்தாலும் குழப்பங்களுக்கு மத்தியில் அவற்றைத் தொகுத்தால் முன்னிலை கணிப்பு எப்படி இருக்கிறது என்றால்,

தமிழ்நாட்டில் +120 இடங்களோடு திமுக ஆட்சியைப் பிடிக்கலாம்.

கேரளாவில் +70 இடங்களோடு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கலாம்.

மேற்குவங்கத்தில் +140 இடங்களோடு பாஜக ஆட்சியைப் பிடிக்கலாம்.

புதுச்சேரியில் +16 இடங்களோடு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கலாம்.

ஆனால், உண்மை நிலவரம்?

மே 4ஆம் தேதி வாக்குப்பெட்டிகள் திறக்கப்படும். அன்றுதான் தெரியும், கணிப்புகள் எல்லாம் புள்ளிவிவரப் புதிர்களா அல்லது புருடாக்களா என்று.

அதுவரை தலைவர்கள் அனைவரும் நாங்களே வெல்வோம் என்று கேமரா முன்னால் தியானம் செய்வார்கள்.

மக்கள்?

அவர்கள் எப்போதும் போலவே விரைவில் பெட்ரோல் – டீசல் – சிலிண்டர் விலை உயர்வுக்காகக் காத்திருப்பார்கள்.

*****

பேராசை பெருநஷ்டம் – ஒரு சுருக்கமான ஆப்பு வரலாறு!

பேராசை பெருநஷ்டம் – ஒரு சுருக்கமான ஆப்பு வரலாறு!

பரந்தாமன் நிலத்தை விற்றார். கையில் வந்தது இருபது லட்சம்.

பணம் கையில் இருந்தால் சில அரிப்புகளைத் தரும். கையை நனைக்காமல் ஏதாவது வங்கியில் போடுங்கள், என்றார் அர்ச்சுனன்.

பரந்தாமனுக்கு அறுபது வயது.

அஞ்சலகத்தில் சீனியர் சிட்டிசன் ஸ்கீம் இருக்கிறது. அரசாங்கப் பாதுகாப்பு. நிம்மதியாகத் தூங்கலாம், என்று சரியாக வழிகாட்டினார் அர்ச்சுனன். அத்தோடு நில்லாமல், அதற்குத் தேவையான படிவங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனார்.

பரந்தாமன் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை. ஒரு தத்துவ ஞானியைப் போல அர்ச்சுனனைப் பார்த்தார்.

தம்பி, போஸ்ட் ஆபீஸில் என்ன வட்டி தருவார்கள்? எட்டணா, பத்தணா. நான் ஒருத்தரைப் பார்த்தேன். அஞ்சலக வட்டி மாதிரி ரெண்டு மடங்கு தர்றேன்னு சொல்லிட்டார். பணத்தைக் கொடுத்துட்டேன், என்றார்.

யார் அவர்? என்றார் அர்ச்சுனன்.

பெரிய மனிதர். நெற்றியில் பட்டை, கையில் ஜபமாலை. அவர் முகத்தைப் பார்த்தாலே திருட்டுத்தனம் தெரியாது, என்றார் பரந்தாமன்.

அர்ச்சுனன் கொண்டு போன படிவங்களைச் சுருட்டிப் பையில் வைத்தார். கவனமாக இருங்கள், என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பேராசைக்காரர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் எப்போதும் கேட்கப்படாத வானொலி நிலையங்களைப் போன்றவை.

சில நாட்களில் அந்தச் சுவாரசியச் செய்தி வந்தது.

அந்த ஜபமாலை மனிதர் வீட்டைத் தூர்வாரத் தேவையில்லை என்று முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக வீட்டைக் காலி செய்துவிட்டு ஓடிவிட்டார். ஊரில் பாதிப் பேருக்கு இப்போதுதான் ரத்த அழுத்தம் எகிறியிருக்கிறது.

பரந்தாமன் இப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சூன்யத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஏமாத்திட்டுப் போயிட்டானே தம்பி, என்று அர்ச்சுனுனைப் பார்த்துப் புலம்பினார்.

அவர் ஏமாற்றவில்லை சார். நீங்கள் ஏமாறத் தயாராக இருந்தீர்கள், அவர் உங்களுக்கு உதவினார், என்று சொல்ல நினைத்தார் அர்ச்சுனன், ஆனால், சொல்லவில்லை.

இதிலிருந்து சகலமானவர்களும் அறிந்து கொள்ள சில நீதிகள் இருக்கின்றன. அவையாவன,

அரசாங்கத்தை விட ஒரு தனி நபர் அதிக வட்டி தருகிறார் என்றால், அவர் ஒன்று பணம் அச்சிடும் இயந்திரம் வைத்திருக்க வேண்டும் அல்லது அவருக்கு உங்கள் பணத்தை அமுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணத்தை இழப்பது எளிது. ஆனால் இழந்த பிறகு வரும் அறிவு இருக்கிறதே, அது மிகவும் விலை உயர்ந்தது.இந்தக் கதையில் சரியாக இருபது லட்சம் ரூபாய். இந்தத் தொகையானது கதைக்கு கதை மாறுபடும்.

வங்கி அல்லது அஞ்சலகம் தரும் வட்டி என்பது ஒரு கணக்கு. யாராவது அதற்கு மேல் டபுள் தருகிறேன் என்று சொன்னால், அது கணக்கல்ல, அது ஒரு தூண்டில். தூண்டிலில் சிக்கினால் செத்தான் சேகரு மொமன்ட்தான்.

பரந்தாமன் போன்றோர் அறுபது வயதில் முதலீடு செய்ய வேண்டியது பணத்தை மட்டுமல்ல, கொஞ்சம் நிதானத்தையும்தான். கொஞ்சம் ஆசைப்பட்டாலும் லபக்தான். அதிகம் ஆசைப்பட்டால் சொல்லவே வேண்டியதில்லை.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத நபரிடம் பணத்தைக் கொடுப்பது, பசித்திருக்கும் ஓநாயிடம் ஆட்டுக்குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்லச் சொல்வதற்குச் சமம். அது மாதிரியான ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடும் பழக்கங்கள் வேண்டவே வேண்டாம்.

ஸோ, இதிலிருந்து அறியப்பட வேண்டிய நீதி என்னவென்றால், அதிக வட்டிக்கு ஆசைப்படுபவன், ஒருநாள் தன் அசலையே வட்டியாகக் கொடுத்துவிட்டுத் தெருவில் நிற்பான்.

அதிக வட்டி தரும் ஆசாமி எங்கே இருக்கிறார் என்று தேடுவதை விட, உங்கள் பணம் எங்கே பாதுகாப்பாக இருக்கும் என்று தேடுவதே புத்திசாலித்தனம். இல்லையெனில், வட்டியும் வராது, வாங்கியவனும் திரும்புவதில்லை.

முதலீடு என்பது முட்டையிடும் கோழியை வாங்குவது போல. யாராவது, உன் கோழி தங்க முட்டை போடும், என்று சொன்னால், கோழியையும் தூக்கிக்கொண்டு அவர் ஓடப்போகிறார் என்று அர்த்தம். புரிந்து கொள்ளுங்கள். உடனே விழித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் விசயம்.

*****

29 Apr 2026

கோர்ட், கேஸ் மற்றும் சில கிரிமினல் மேட்டர்கள்!

கோர்ட், கேஸ் மற்றும் சில கிரிமினல் மேட்டர்கள்!

ஊர் ஊருக்குக் கோர்ட்டுகள் இருக்கின்றன. அங்கே ஆயிரக்கணக்கான கேஸ்கள் விசாரணை என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கூண்டுக்குள் நிற்கும் குற்றவாளிகள் ஏதோ நெட்ஃபிளிக்ஸ் சீரிஸ் பார்ப்பது போல மிக அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

வெளியே பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கதையை ரத்தமும் கண்ணீருமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் அவர்கள் தாய்மொழியிலேயே நடந்தாலும், கூண்டுக்குள் இருப்பவருக்கு இது புரியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அதாவது, அய்யோ, தப்பு பண்ணிட்டோமே! என்று அவர் உள்ளம் பதறுகிறதா? அந்தத் தண்டனையைத் தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறாரா? சான்ஸே இல்லை.

நீதிபதி சட்டப் புத்தகத்தைப் புரட்டி, உனக்கு இத்தனை வருஷம் ஜெயில், என்று தீர்ப்புச் சொன்னால், அவ்வளவுதானே? ஓகே டன். என்று ஒரு தினுசான அலட்சியத்தோடு கூண்டை விட்டு இறங்குகிறார்கள் குற்றவாளிகள். இவர்களை எந்தச் சட்டம் திருத்தும்?

தெரியாம பண்ணிட்டேன், என்று உருகுவதெல்லாம் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலம். இப்போது, தெரிஞ்சுதான் பண்ணேன், என்ன இப்போ? என்று மார்தட்டுகிறார்கள். தண்டனை என்னவென்று கூகுள் செய்து பார்த்துவிட்டு, அதற்குத் தயாராகிவிட்டே கிரைம் செய்கிறார்கள்.

கல்வி அறிவே இல்லாதவரை விடுங்கள், நன்றாகப் படித்துப் பெரிய பதவியில் இருப்பவர்களும் பக்கா பிளானிங் போட்டுத் திருடுகிறார்கள். மாட்டிக்கொள்ளாத வரை நான் யோக்கியன் என்பதுதான் இன்றைய எஜுகேஷன் சிஸ்டம் கற்றுக்கொடுத்த பாடமோ என்னவோ! கடிக்க வரும் நாய், முட்டும் காளை, மதம் பிடித்த யானை இவற்றுக்கும் இவர்களுக்கும் உருவத்தைத் தவிர வேறு என்ன பெரிய வித்தியாசம்?

யாரையும் பழிவாங்குவது சட்டத்தின் நோக்கம் இல்லை. குற்றவாளிகளை ஒழிப்பதை விட, குற்றத்தை ஒழிப்பதுதான் அதன் ஐடியா. ஆனால், குற்றவாளிகள் ஓவர் நைட்டில் உருவாவதில்லை. சின்ன வயதில் மனதில் விழுந்த காயங்களும், வடுக்களும்தான் பின்னாளில் முள் மரமாக வளர்கின்றன.

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்பது பழைய பாட்டு. ஆனால், உண்மை அதுதான். பொறாமை, ஆசை, கோபம் ஆகிய இந்த வாசல்கள் வழியாகத்தான் குற்றங்கள் நுழைகின்றன.

காந்தி தாத்தா குற்றங்களைத் தடுக்க மூன்று வழிகளைச் சொன்னார். முதலாமவது போலீஸிடம் சொல்வது, இரண்டாமவது சும்மா இருப்பது, மூன்றாமவது சத்தியாகிரகம்.

காந்தியைப் பொறுத்தவரை குற்றம் என்பது ஒரு வியாதி. குற்றவாளி ஒரு நோயாளி. நோய்க்கு மருந்து தர வேண்டுமே தவிர, அடி வெளுக்கக் கூடாது. நோய்நாடி நோய்முதல் நாடி என்றார் வள்ளுவர். அதைத்தான் காந்தியும் வழிமொழிகிறார்.

திருடனுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார் காந்தி. தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைப்பதே ஒரு வகை திருட்டுதான். பாக்கெட் திருடன் மாட்டிக்கொண்டு தண்டனை பெறுகிறான், பெரிய பணக்காரத் திருடன் மாட்டிக்கொள்ளாமல் சமூக மரியாதையைப் பெறுகிறான். அவ்வளவுதான் டிபரன்ஸ்.

அறிஞர்கள் பார்வையில் நல்ல நாட்டில் குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்களை அன்பால் திருத்த வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், எல்லாரும் அன்பாக இருந்தால், கோர்ட்டும் கிடையாது, கூண்டும் கிடையாது. அப்படி ஒரு சொர்க்கத்தை இங்கே கிரியேட் பண்ண முடியாதா என்ன? முடியாது என்பதுதான் எதார்த்தம், இருந்தாலும் முயற்சிப்பதில் என்ன தப்பு?

*****

ரோபோக்களும், நாமும், சில கவலைகளும்!

ரோபோக்களும், நாமும், சில கவலைகளும்!

உலகம் முழுக்க இயந்திரங்கள் ஊடுருவிவிட்டன. இந்தியாவில் வேகம் குறைவு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் இங்கேயும் சூடு பிடித்துவிட்டது.

எதை எடுத்தாலும் ஒரு மெஷின். துணி துவைக்க, காசு எண்ண, பார்கோடு படிக்க என எங்கு பார்த்தாலும் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கலந்த மனிதர்களின் ராஜ்யம்.

முன்பெல்லாம் மனிதர்கள் மூளையை உபயோகிக்காமல் சில வேலைகளைச் செய்வார்கள். இப்போதும் பலர் அப்படித்தான் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட மெக்கானிக்கல் வேலைகளை இனி மனிதர்கள் செய்யத் தேவையில்லை. அந்த இடத்தைப் பிடிப்பதற்கு ரோபோக்கள் வந்துவிட்டன.

ஆட்கள் தேவையில்லை, அவற்றுக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை, தொழிற்சங்கம் ஆரம்பிக்க மாட்டார்கள். அசுர வேகத்தில் வேலை செய்கின்றன. ரோபோக்களைப் பற்றி இப்படி பிள்ளைத்தமிழே எழுதி விட்டார்கள்.

பல கார் கம்பெனிகளில் உதவியாளர்கள் இப்போது வீட்டின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கார் தயாரிப்பு முழுவதும் ரோபோக்கள் கைவசம்.

ஒரு தனியார் வங்கி 1200 கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஒரு ரோபோவை களம் இறக்கியிருக்கிறது. ஒரு சராசரி மனிதர் தன் வாழ்நாளில் மனைவியிடம் கேட்கும் கேள்விகளே ஐம்பதைத் தாண்டாது. ஆனால், இந்த ரோபோ இவ்வளவு பதில் சொல்கிறதாம்.

கடைகளுக்குப் போய் பொருள் வாங்குவதெல்லாம் பழைய பேஷன். இப்போது அமேசானும், பிளிப்கார்ட்டும் உங்கள் விரல் நுனியில். காசு கொடுக்க வங்கிக்குப் போக வேண்டியதில்லை. மொபைலில் தட்டினால் சோலி முடிந்தது.

ஏன், திருட்டைப் பிடிக்கக் கூட நாய்களை விட சிசிடிவி கேமராக்கள்தான் இப்போது விசுவாசமாக இருக்கின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் ஹோட்டலில் சர்வர் தம்பிக்கு பதிலாக ஒரு தட்டுத் தடுமாறும் அல்லது சாப்பாடு பரிமாறும் ரோபோ வந்து நிற்கும்.

பெட்ரோல் போட ஆள் இருக்காது. டைம் ஆகிறது, சட்டென்று பெட்ரோலைப் பிடி, காரியத்தை முடி என்று ரோபோ கத்தக் கூடும்.

துணிக்கடையில் துணியை அணிந்து பார்க்கத் தேவையில்லை. ஒரு பட்டனைத் தட்டினால் அந்தச் சட்டையில் நீங்கள் எவ்வளவு அழகாக அல்லது அசிங்கமாக இருப்பீர்கள் என்று திரையிலேயே காட்டிவிடும்.

வெளிநாடுகளில் ரோபோ குரு என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பையனுக்கு உடம்பு சரியில்லை என்றால், அவனுக்குப் பதில் அந்த ரோபோ பள்ளிக்குச் செல்லுமாம்.

அதாகப்பட்டது, பையன் வீட்டில் படுத்துக்கொண்டு கேம் விளையாடுவான், ரோபோ அங்கே போய் பாடம் கவனிக்கும். என்ன ஓர் அற்புதமான கல்விமுறை! அதுமட்டுமல்ல, சீக்கிரம் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்களே பாடம் நடத்தும்.

கையில் கட்டியிருக்கும் வாட்ச் இப்போது ஒரு டாக்டர் போலப் பேசுகிறது. நீ இவ்வளவு நடந்திருக்கிறாய், உன் ரத்த அழுத்தம் இவ்வளவு, என்று மிரட்டுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது. பழைய திறமைகள் இனி செல்லாக் காசு. நீங்கள் படித்த படிப்புக்கும் இனி வரும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.

மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாறாவிட்டால், பழைய இரும்புச் சாமான்கள் விற்கும் கடையில் நாமும் ஒரு மூலையில் கிடக்க வேண்டியிருக்கும்.

புதுத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது இப்போது பிழைப்புக்கு மட்டுமல்ல, இருப்புக்கே அவசியம்.

ரோபோக்கள் வரட்டும், செயற்கை நுண்ணறிவு மிரட்டட்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சிந்திக்கும் வேலையை மெஷின்கள் இன்னும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை அல்லது அவை நம்மை விட புத்திசாலித்தனமாகச் சிந்திக்கின்றன என்ற நிலையில் இருக்கின்றன. அதனால் நாமும் கொஞ்சம் நுட்பமாகச் சிந்திக்கப் பழகுவோம்.

தொழில்நுட்பம் என்பது ஓர் ஓடும் ரயில். அதில் ஏறி அமர்ந்தால் பயணம். நான் ஏற மாட்டேன், தண்டவாளத்திலேயே நிற்பேன் என்றால் மரணம். முடிவு உங்கள் கையில்.

*****