7 Jul 2026

பாட்டிலில் ஒரு திரவச் சாத்தான்!

பாட்டிலில் ஒரு திரவச் சாத்தான்!

சுமார் அரை நூற்றாண்டாக இந்த மண்ணில் ஒரு பழக்கம் வழக்கம் ஆக்கப்பட்டிருக்கிறது. அதுதான் மதுப்பழக்கம்.

நாட்டின் பெரும்பாலான கொடூரக் குற்றங்கள், 95% சாலை விபத்துகள், கற்பனைக்கு எட்டாத பாலியல் வன்கொடுமைகள் என எல்லாவற்றின் பின்னாலும் இந்தத் திரவ சாத்தான் ஒளிந்திருக்கிறது.

வயிற்றுக்குள் போகும் ஓர் அவுன்ஸ் திரவம், உங்கள் உடம்புக்குள் என்னவெல்லாம் செய்கிறது என்று அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், பக் என்று இருக்கும்.

ஆல்கஹால் உள்ளே போன சில நிமிடங்களில், அது நேராக ரத்தத்தில் கலந்து மூளைக்குச் செல்கிறது. மூளையில் இருக்கும் நரம்புக் கடத்திகளை இது அட்டாக் செய்கிறது.

காபா என்பது மூளையை அமைதிப்படுத்தும் ஒரு கெமிக்கல். ஆல்கஹால் இதை அளவுக்கு அதிகமாகத் தூண்டுகிறது. அதனால்தான் குடித்தவுடன் ஒரு ஹாயான போலி அமைதி கிடைக்கிறது.

குளுட்டமேட் என்பது இது மூளையை சுறுசுறுப்பாக்கும் கெமிக்கல். ஆல்கஹால் இதை லாக் செய்கிறது.

விளைவு?

மூளையின் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிறது. பேச்சு குளறுகிறது. தள்ளாட்டம் வருகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமானால், மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதி தற்காலிகமாக ஸ்விட்ச் ஆப் ஆகும். இதற்குத்தான் பிளாக் அவுட் என்று பெயர். நேற்று இரவு என்ன நடந்தது என்றே ஞாபகம் இருக்காது!

நம் உடம்பின் ஆகப் பெரிய கெமிக்கல் பேக்டரி கல்லீரல்தான். உள்ளே வரும் நச்சுக்களை எல்லாம் வடிகட்டி உடம்பைக் காப்பாற்றுவது இதனுடைய வேலை.

ஆல்கஹாலைக் கல்லீரல் எப்படி டீல் செய்கிறது தெரியுமா?

முதலில் ஆல்கஹாலை அசிடால்டிஹைட் என்ற கெமிக்கலாக மாற்றுகிறது. இந்த அசிடால்டிஹைட் என்பது விஷத்தை விடக் கொடியது. கேன்சரை உருவாக்கும் காரணி!

பிறகு அதை கஷ்டப்பட்டு அசிட்டேட் ஆக மாற்றி உடம்பை விட்டு வெளியேற்றுகிறது.

ஆல்ஹகாலைத் தொடர்ந்து ஊற்ற ஊற்ற, கல்லீரலால் வேலை செய்ய முடிவதில்லை. ஆல்கஹாலில் இருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் படிய ஆரம்பிக்கின்றன. இதுதான் பேட்டி லிவர். நாளடைவில் அந்த செல்கள் எல்லாம் செத்துப்போய், கல்லீரல் சுருங்கி, கல்லாகிவிடும். மெடிக்கல் பாஷையில் லிவர் சிர்ரோசிஸ். அப்புறம் காலி.

குடித்தால் ரத்த அழுத்தம் எகிறும். இதயத் துடிப்பு சீரற்றுப் போகும். இதற்கு கார்டியோமயோபதி என்று பெயர். இதயத்தின் தசைகள் பலவீனமடைந்து, பம்ப் செய்யும் திறனை இழக்கும். திடீர் மாரடைப்புக்கு இதுவே ரெட் கார்பெட் போடும்.

மிக முக்கியமாக, ஆல்கஹால் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் காலி செய்கிறது. வெள்ளை ரத்த அணுக்களின் வீரியத்தைக் குறைத்து விடுகிறது.

எல்லாவற்றையும் விடக் கொடுமை, அது நம் செல்களின் மாஸ்டர் பிளான் ஆன டி.என்.ஏவைச் சிதைக்கிறது. டி.என்.ஏ சிதைந்தால், செல்கள் தாறுமாறாக வளர ஆரம்பிக்கும். அதன் பெயர்தான் புற்றுநோய். வாய், தொண்டை, கல்லீரல், மார்பகப் புற்றுநோய்களுக்கு ஆல்கஹால் ஒரு நேரடி ஏஜென்ட்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஆல்கஹால் என்பது உடலுக்கு எந்த விதத்திலும் தேவையில்லாத ஒரு தேசத்துரோகி.

மது அருந்துவது என்பது, உங்கள் வீட்டின் கம்ப்யூட்டர் மதர்போர்டில் ஆசிடை ஊற்றிவிட்டு, அது நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்.

உடம்பு என்பது ஓர் அற்புதமான பயோ மெஷின். அதை வெறும் எத்தனால் கொண்டு அழிப்பது என்ன மாதிரியான புத்திசாலித்தனம்?

எனவேதான், நமது பேராசான் திருவள்ளுவர் இதை நஞ்சு என்றார். கள் உண்ணாமை என்று தனி அதிகாரமே எழுதி பத்து குறள்களில் மண்டையில் அடிப்பது போல் விளக்கியிருக்கிறார்.

பிற உயிர்களை அழித்து வாழும் இந்த அவலத்தை மணிமேகலை காப்பியமும் “மயக்குங் கள்ளும், மன்னுயிர் கோறலும்” என்று கண்டித்துக் காறித் துப்பியது.

ஆனால் இங்கே நடப்பதோ தலைகீழ் எதார்த்தம். குடிக்கிற ஏழை குடிசை வீட்டில் கிடக்கிறான்; மதுவை விற்கிற அரசோ கல்லா கட்டுகிறது; மது ஆலையை நடத்துகிற முதலாளி சொகுசு பங்களாவில் வாழ்கிறான்.

துயரம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதற்குக் காரணமே குடிகாரக் கணவர்களின் அகால மரணங்கள்தான்.

*****

கொக்கிக் குமாரின் கொடூரக் கோட்பாடுகள்!

சீரழித்த சினிமா – 35

புதுப்பேட்டை

கொக்கிக் குமாரின் கொடூரக் கோட்பாடுகள்!

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் மே திங்களில், தமிழ்நாட்டின் திரையரங்கு வாசல்களில் அரசியலில் கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருந்த விழுமியங்களுக்கும், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வுக்கும், அடித்தட்டு இளைஞர்களின் வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் மிக பிரமாண்டமான கல்லறைகள் எழுப்பப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "ரௌடி என்பவன் என்றாவது ஒருநாள் மனம் திருந்துவான் அல்லது கைது செய்யப்படுவான்" என்ற அறநெறி விதிகளை அடியோடு ஒதுக்கி வைத்து விட்டு, "சென்னையின் பேட்டைகளில் வாழும் ஒரு பள்ளி மாணவன், தன் தாயைக் கொன்ற தந்தையைப் பழிவாங்கத் துப்பில்லாமல் ஓடிவந்து, பசியின் உச்சத்தில் ஒரு கொலை செய்துவிட்டு, அரசியல்வாதிகளின் கைக்கூலியாக மாறி, கடைசியில் சட்டமன்ற உறுப்பினராகவே ஆகிவிடலாம்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, புதுப்பேட்டை திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் பயத்திலும் வெறியிலும் பிதுங்கி வழியும் கண்களும், "கடவுள் பாதி மிருகம் பாதி" என்ற போலிப் பாய்ச்சல் பிம்பமும், இயக்குனரின் வழக்கமான இருண்ட, மனப்பிறழ்வு உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கொலைக்கள நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த கல்வி நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஓர் ஏழை வீட்டுப் பிள்ளையாக இருந்தால், உங்களுக்குப் படிப்போ, நேர்மையான உழைப்போ முக்கியமல்ல. எவனாவது உங்களை உற்றுப் பார்த்தால், நடுரோட்டில் வைத்து அவனை எப்படிக் கொத்துக்கறி ஆக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற சிவில் சமூக அமைப்புகள் எல்லாம் நாயகன் கொக்கி குமாருக்குப் பொருந்தாது. நகரின் ஆகச்சிறந்த தாதா தன் ஆட்களுடன் வந்து வழிமறித்தால், சட்டத்தை நாடக் கூடாது; தானே ஒரு சைக்கோ ரௌடியாகவோ அல்லது வெறிபிடித்த கொலைகாரனாகவோ விஸ்வரூபம் எடுத்து, "பயம் குமாரு... பயம்..." என்று டயலாக் பேசிக்கொண்டே சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். அதுதான் ஒரு ரௌடியின் ஆகச்சிறந்த ஆளுமை என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் உருப்படியாக வேலைக்குப் போகாமல், "நாங்கெல்லாம் புதுப்பேட்டை குமார் பரம்பரைடா, இறங்குனா ரத்த ஆறுதான்" என்று தேவையில்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

புதுப்பேட்டை படத்தில், ஒரு ரௌடி நினைத்தால் ஒட்டுமொத்த தேர்தல் முறையையும் ஜனநாயக அமைப்பையுமே தன் கையில் வைத்திருக்கலாம் என்ற ரௌடியிஸக் கொடுமையை மாஸ் என்ற லேபிளோடு விற்றார்கள். இந்த உறைபனியூட்டும் ரௌடியிஸ வழிபாட்டு வக்கிரத்தை, உணர்ச்சிமயமான, வெறித்தனமான பின்னணி இசையாலும், பளபளக்கும் நியான் விளக்குகளாலும் மூடி மறைத்து, அவன் தப்பு செய்தாலும் அது சூழ்நிலையின் பலி என்று பார்ப்பவனை ஏமாற்றினார் இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு தாதா நினைத்து எம்.எல்.ஏ ஆனால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது மற்றும் விசித்திரமானது. ஒரு பெண் ரௌடி என்று தெரிந்தே அவனோடு வாழத் துடிப்பதும், அவனது வன்முறையைக் கண்டு காதலில் விழுவதுமாக ஒரு வக்கிர பிம்பமாகக் காட்டப்பட்டார். இன்னொரு பெண் கட்டாயத் தாலி கட்டப்பட்டு, அவனது அராஜகங்களுக்குப் பயந்து அடிமையாக வாழும் பரிதாபகரமாகக் காட்டப்பட்டார்.

பெண்களின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களின் துயரங்களையும், ஒரு ரௌடியின் அந்தப்புர வாழ்க்கையையும் ரொம்பக் கியூட் அண்ட் கமர்ஷியலாகக் காட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம். இதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் அடுத்த பத்து வருடங்களுக்கு ரௌடிகளைக் காதலிக்கும் லூசுப் பெண் மற்றும் அடிமைப் பெண் சீரழிவுப் பாத்திரங்கள் அணிவகுக்கத் தொடங்கின.

புதுப்பேட்டை பாக்ஸ் ஆபீஸில் ஒரு கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்று, அதன் நாயகனை ஒரு அசாத்திய நடிகராக அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு ஜீனியஸ் நாற்காலியில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் ஒரு அரிவாள் வெட்டு வெட்டுகிறான். வில்லன் தலை தெறித்து விழுகிறான். மனிதநேயத்தின் அடிப்படை விதிகள் அங்கே கதறி அழ ஆரம்பித்தன. தியேட்டரில் இருக்கும் பதினெட்டு வயது இளைஞனின் அட்ரினலின் சுரப்பி, சென்னை கூவம் ஆற்றில் சுனாமி ஏற்பட்டது போலப் பொங்கி வழிய ஆரம்பித்தது.

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை சென்னை என்பது உழைப்பாளர்களுக்கும், கலகலப்பான மெட்ராஸ் பாஷைக்கும் புகழ்பெற்ற ஓர் ஊர். ஆனால், அதற்குப் பிறகுதான், சென்னையில் பிறக்கும் போதே குழந்தைகளுக்குக் கைகளில் அரிவாளும், மனதில் துரோகமும் கற்றுத்தரப்படுகிறது என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

பொதுவாக, சினிமா, வன்முறையைத் தீமையின் அடையாளமாகவே காட்டும். ஆனால், புதுப்பேட்டை அதை ஓர் அவசியம் என்று போதித்தது. வன்முறை என்பது தீமை அல்ல; அது ஒரு தற்காப்பு உத்தி என்ற பிம்பத்தை அது இளைஞர்களின் ஆழ்மனதில் பதிய வைத்தது.

அது மட்டுமல்லாமல், உலகில் உள்ள அத்தனை உளவியல் சிக்கல்களுக்கும் புதுப்பேட்டை ஓர் அபத்தமான தீர்வைச் சொன்னது. உனக்கு ஒரு அநீதி நடந்தால், நீ அதைவிடப் பெரிய அநீதியைச் செய் என்றது. அன்பு காட்டினால் அடிமையாகிவிடுவோம், பயமுறுத்தினால் தான் பவ்யமாக இருப்பார்கள் என்கிற ஓர் ஆபத்தான ஆதிக்க உளவியலையும் இந்தப் படம் மிக நளினமாக இளைஞர்களின் நரம்புகளுக்குள் ஏற்றியது. சமூகம் தங்களை வஞ்சிக்கிறது என்று நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும், தங்களுக்குள் ஒரு குட்டி கொக்கி குமாரை வளர்த்துக்கொள்ள இந்தப் படம் பெரும் உத்வேகமளித்தது.

ஒருவன் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போகும் கொடூரமான காட்சியைக்கூட, தியேட்டரில் இருந்தவர்களை விசிலடிக்க வைத்ததுதான் இத்திரைப்படத்தின் ஆகப் பெரும் சாதனை. வன்முறையை ஒரு கலை வடிவமாக மாற்றி, உளவியல் ரீதியாக, ஒரு கொடூரத்தைக் கொண்டாடும் மனநிலைக்குச் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டதன் பின்னால் இந்தத் திரைப்படத்துக்கு முக்கியப் பங்குண்டு.

மனிதன் மிருகத்திலிருந்து தோன்றினான் என்பதை டார்வின் நிரூபித்தார். ஆனால், மனிதன் மீண்டும் மிருகமாக மாற ஆசைப்படுகிறான் என்பதைப் புதுப்பேட்டை நிரூபித்தது.

வன்முறை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதைச் சொல்லவந்த படம், வன்முறையே வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சென்றது. இப்போதும் சமூக வலைதளங்களில், சாதாரண வாக்குவாதங்களுக்குக் கூட கொக்கி குமாரின் ஜிப் இமேஜ்களைப் பயன்படுத்தும் அளவுக்கு, அந்த வன்முறைப் பிம்பம் ஒரு ஸ்டைல் ஆக மாறிவிட்டது.

புதுப்பேட்டை ஒரு நிகிலிச தத்துவப் பின்னணியைக் கொண்டது. அதாவது, உலகில் நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை, எல்லாம் ஒரு சூன்யம்; அதிகாரமும் பணமும் மட்டுமே நிஜம் என்ற பார்வையை உடையது. இவ்வகையிலான புதுபேட்டையின் தத்துவார்த்தப் பார்வை என்பது வன்முறையை நியாயப்படுத்துவதாகவும், அற விழுமியங்களைக் கேலி செய்வதாகவும் அமைந்தது. இத்திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பல "ரௌடியிசக்" கதாபாத்திரங்கள் கதாநாயகர்களாகக் கொண்டாடப்படும் ஒரு தவறான தத்துவார்த்தப் பாதைக்கு வித்திட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

படிக்கப் போகும் வயதில் லோக்கல் ரௌடிகளோடு சேர்ந்து கொண்டு கொலையும் கொள்ளையும் செய்வதுதான் கெத்து என்றும், சென்னையின் தாதா கலாச்சாரமும் வக்கிர அரசியலும் கலந்ததுதான் தமிழகமும் தமிழ் சினிமாவும் என்று நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சைக்கோ சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

6 Jul 2026

அகோர(ரி)ப் பசிக்குப் பலியான தமிழகத்தின் பொதுப்புத்தி!

சீரழித்த சினிமா – 34

நான் கடவுள்

அகோரப் பசிக்குப் பலியான தமிழகத்தின் பொதுப்புத்தி!

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டின் பிப்ரவரி திங்களில், தமிழ்நாட்டின் திரையரங்கு வாசல்களில் மானுடத்தின் எஞ்சியிருந்த ஆகச் சிறந்த நாகரிகப் பண்புகளுக்கும், சராசரி மனிதனின் அன்றாட மன அமைதிக்கும் மிக பிரமாண்டமான சிதைகள் மூட்டப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "நாயகன் என்பவன் அநீதியைத் தட்டிக்கேட்பான், காதலியைக் கரம் பிடிப்பான்" என்ற ஆகச்சிறந்த கமர்ஷியல் விதிகளை அடியோடு தகர்த்து, "காசிக்குச் சென்று கஞ்சா புகைத்து, ஜடாமுடி வளர்த்து, அஹம் பிரம்மாஸ்மி என்று கத்தினால் போதும்; அவன் செய்யும் அத்தனை கொலைகளும், அராஜகங்களும் ஆன்மீக விடுதலை என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும்" என்ற ஒரு புதுவிதமான மனநோயியலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, நான் கடவுள் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் வெறிக்க வெறிக்கப் பார்க்கும் சிவந்த கண்களும், மனித உடல்களைப் பந்தாடும் வக்கிரப் பாய்ச்சலும், இயக்குநரின் வழக்கமான விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய அதீதக் கற்பிதங்களும் சேர்ந்து, தமிழ்நாட்டு ரசிகர்களின் மூளையை எப்படி ஒரு மயான பூமி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டுச் சமூகத்திற்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சமூக நெறிமுறை என்ன தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றோரும் சமூகத்தின் ஆதரவைப் பெற வேண்டியவர்கள் அல்ல; அவர்கள் ஒரு மாபியா கும்பலின் கைகளில் மாட்டிக்கொண்டு சித்திரவதையை மட்டுமே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் துறை போன்ற அற்பமான அமைப்புகள் எல்லாம் இந்தத் திரைப்படத்தின் உலகிற்குப் பொருந்தாது. நகரின் ஆகச்சிறந்த ரௌடி மாற்றுத்திறனாளிகளை வதைத்தால், சட்டத்தை நாடக் கூடாது; காசியில் இருந்து ஒரு விசித்திரமான அகோரி வந்து, சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுத்து, எல்லோரையும் கொன்று குவிக்க வேண்டும். அதுதான் ஆகச்சிறந்த ஆன்மீக இரட்சிப்பு என்று தமிழ் ரசிகன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

சமூகம் மற்றும் சட்ட அமைப்புகளின் மீது நம்பிக்கையற்று, எல்லாவற்றிற்கும் ஒரு அதிமானுட வன்முறைதான் தீர்வு என்று நம்பும் ஒரு முதிர்ச்சியற்ற, இருண்ட மனநிலையைக் கொண்ட வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நான் கடவுள் திரைப்படம், ஒரு தனிமனிதன் நினைத்தால் ஒட்டுமொத்தக் காவல் துறையையும், சட்டத்தையும் மண்டியிட வைக்கலாம் என்ற அராஜகத்தை அகோரி பண்பாடு என்ற லேபிளோடு விற்றது. இந்த உறைபனியூட்டும் வன்முறை வக்கிரத்தை, மேஸ்ட்ரோ மற்றும் இசைஞானியின் உணர்ச்சிமயமான பின்னணி இசையாலும், மிரட்டும் காசி காட்சிகளாலும் மூடி மறைத்து, அவன் மனிதர்களுக்கு மேலே வாழ்பவன் என்று பார்ப்பவனை ஏமாற்றியது இயக்குநரின் பக்கா கமர்ஷியல் தந்திரம்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு அகோரி நினைத்தால் மட்டும்தான் இறுதி நீதி அதுவும் மரணத்தின் வழியே கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் கொடூரமானது. நாயகியின் கதாபாத்திரம், எந்நேரமும் அழுதுகொண்டே இருப்பதும், உலகின் ஒட்டுமொத்தக் கொடுமைகளையும் தாங்குவதுமாக ஒரு சுயமற்ற, பரிதாபகரமான பிம்பத்தின் உச்சமாகக் காட்டப்பட்டார். ஒரு பெண்ணின் சுயம், போராட்டம் அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவளது துன்பங்களை மிக நீளமாகக் காட்டி, கடைசியில் அவளுக்குக் கொடுக்கும் மரணத்தைக் கருணைக் கொலை என்று நியாயப்படுத்தியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கோம்பாக்கத்துக் கொத்துப்பரோட்டோ தந்திரம். இதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் அடுத்த சில வருடங்களுக்குப் பெண்களை வெறும் வதைபடும் பொருளாகக் காட்டும் சீரழிவுப் பாத்திரங்கள் அணிவகுக்கத் தொடங்கின.

நான் கடவுள் பாக்ஸ் ஆபீஸில் விருதுகளைக் குவித்து, அதன் நாயகனை ஒரு மாற்றுப் பாதை நடிகராக அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு க்ரப்ட் மாஸ்டர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் ஒரு கையைப் பிடிக்கிறான், அந்த மனிதனின் எலும்புகள் நொறுங்குகின்றன. நியூட்டனின் விதிகள் அங்கே கதறி அழ ஆரம்பித்தன. தியேட்டரில் இருக்கும் சராசரி இளைஞனின் அட்ரினலின் சுரப்பி, ஒரு மயான அமைதியோடு பொங்கி வழிய ஆரம்பித்தது.

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை ஆன்மீகம் என்பது அமைதிக்கும், அன்புக்கும், சுய தேடலுக்குமான ஒரு வழியாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகுதான், ஆன்மீகம் என்றாலே மூர்க்கத்தனமாகச் சண்டை போடுவதும், சாபமிடுவதும்தான் என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

நான் கடவுள் என்று நாயகன் கத்தும்போது தியேட்டரில் விசிலடித்த பாமரனுக்கு, அடுத்த நொடி பஸ்ஸில் டிக்கெட் எடுக்க காசு இல்லையென்ற நிஜம் உறைக்கவில்லை. கடவுள் என்பவர் எல்லாவற்றையும் கடந்தவர் என்ற தத்துவத்தை, எல்லாரையும் அடித்துத் துவம்சம் செய்பவர் என்று தமிழ் சினிமாவுக்கே உரிய ரவுடியிச பார்முலாவிற்குள் இயக்குநர் சுருக்கியதன் விளைவாக, ஆன்மீகம் என்ற பெயரில் வன்முறையையும், மயிர் வளர்ப்பதையும், கஞ்சா அடிப்பதையும் மாஸ் குறியீடாக இளைஞர்கள் சில காலம் கொண்டாடித் திரிந்த உளவியல் விகாரம் நிகழ்ந்தது.

மாற்றுத் திறனாளிகளைச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பதைத் திரையில் காட்டி, நம் நெஞ்சில் ஈரத்தை வரவழைத்தாரா இயக்குநர் என்றால், இல்லை. மாறாக, அவர்களின் அவலங்களை, உடல் ஊனங்களை மிகக் கொடூரமான கோணங்களில் படம் பிடித்து, தியேட்டரில் பாப்கார்ன் தின்றுகொண்டே அதைப் பார்த்து அய்யோ பாவம் என்று வக்கிரமாக ரசிக்க வைக்கும் ஒரு சமூகச் சீரழிவை இப்படம் சாத்தியமாக்கியது. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவனின் துயரத்தை ஒரு மூன்று மணி நேர பொழுதுபோக்கு பொருளாக மாற்றியதில் இயக்குநர் ஜெயித்தார், சமூகத்தின் மனிதாபிமானம் தோற்றது.

சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம் எல்லாமே வேஸ்ட், ஒரு சூப்பர் ஹீரோ இங்கே அகோரி வடிவில் வந்துதான் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் என்ற பாசிசச் சிந்தனையை இப்படம் மிக அழகாக ரசிகனின் அடிமனதில் விதைத்தது.

மன அழுத்தத்தைப் போக்க தியேட்டருக்குப் போனவனை, இன்னும் கொஞ்சம் மன அழுத்தத்தை இலவசமாகத் தந்து, உன் வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று ஒரு தற்காலிக திருப்தியைத் தேட வைத்ததுதான் இந்தப் படத்தின் ஆகச்சிறந்த உளவியல் வஞ்சகம்.

ஒரு மனிதன் தன் செயல்களின் மூலமே தன் இருப்பை வரையறுக்கிறான். நான் கடவுள் பாணியில் வாழ நினைக்கும் ஒருவனுக்கு, அவன் கடவுள் என்று நிரூபிக்க ஒரு பயங்கரமான அரக்கன் தேவை. ஆனால் வேளைப்பளு, மனஅழுத்தம், மாசடைந்த சுற்றுப்புறம், நேரமின்மை, பயணக் களைப்பு போன்ற அன்றாட வாழ்க்கையில் அதற்கெல்லாம் இடமில்லை. இதனால், “நான் அகோரியா? அல்லது வெறும் அப்பாவியா?” என்ற குழப்பத்தில், விலைவாசியோடும், பற்றாக்குறை பட்ஜெட்டோடும், டிராபிக் ஜாமோடும் போராட முடியாமல் தவிக்கத் தொடங்கினான் தமிழ் இளைஞன்.

நான் கடவுள் திரைப்படம் தமிழ் மக்களைத் தங்களின் நிஜமான சராசரி வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே ஒரு ருத்ரனை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியே ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியாக வாழ்ந்து மடிய வேண்டிய சினிமாட்டிக் சாபத்தைத் தந்துவிட்டுச் சென்றது!

நான் கடவுள் ஒரு சினிமா அல்ல; அது நம் மூளைக்குள் திட்டமிட்டுச் செலுத்தப்பட்ட ஒரு நெகட்டிவ் வைரஸ். தத்துவத்தின் பெயரால் வன்முறையையும், யதார்த்தத்தின் பெயரால் வக்கிரத்தையும் விற்ற ஒரு டார்க் எக்ஸ்பிரிமெண்ட். சுருக்கமாகச் சொன்னால், இத்திரைப்படம் சமூகத்தின் அழுக்குகளைத் துடைக்க வந்த துடைப்பம் அல்ல; அந்த அழுக்குகளைத் திரையில் காட்டி காசு பார்த்த, தமிழ் சினிமாவின் டார்க் அண்ட் க்ரிட்டி வியாபார உத்தி.

மரணமே ஒரு அவல வாழ்வின் ஆகச்சிறந்த விடுதலை என்றும், கஞ்சா புகைக்கு நடுவேதான் உண்மை ஒளிந்திருக்கிறது என்றும், வக்கிரமும் ரத்தமும் கலந்ததுதான் ஆகச்சிறந்த கலை என்றும் நம்பிய ஒரு இருண்ட, முதிர்ச்சியற்ற வன்முறைச் சமூகமாகத் தமிழர்களை மாற்ற முயன்றதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

5 Jul 2026

வானம், பூமி, மற்றும் சில போர்த்துகீசிய வார்த்தைகள்

வானம், பூமி, மற்றும் சில போர்த்துகீசிய வார்த்தைகள்

வானிலை இலாகா மீண்டும் ஒருமுறை தீர்க்கதரிசியாக அவதரித்திருக்கிறது. இந்த முறையும் அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதம் முன்னெச்சரிக்கை.

பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு வறட்சி நம்மை நோக்கி மெல்ல ஊர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

காரணம்?

பசிபிக் பெருங்கடலில் குளித்துக் கொண்டிருக்கும் எல்நினோ என்றொரு வெப்பநீரோட்டம்.

மனிதர்களுக்குப் பெயரிடுவதில் இருக்கும் சுவாரசியத்தை விட, கடல்களுக்குப் பெயரிடுவதில் விஞ்ஞானிகளுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.

பசிபிக் கடலின் ஒரு பகுதியில் சில ஆண்டுகள் வெந்நீர் ஓடுமாம்; அதற்கு எல்நினோ என்று பெயர்.

சில ஆண்டுகள் ஜில்லென்று நீர் ஓடுமாம்; அதற்கு லாநினோ என்று பெயர்.

இவை இரண்டும் போர்த்துகீசிய வார்த்தைகள் என்று வானிலை அறிக்கை நமக்கு மிகவும் அக்கறையோடு பாடம் நடத்துகிறது.

பசிபிக் கடலில் இருக்கும் தண்ணீருக்குப் போர்த்துகீசியர்கள் ஏன் பெயரிட்டார்கள், அதைக் கேட்டு நாம் ஏன் இப்போது பயப்பட வேண்டும் என்ற தத்துவார்த்தக் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை.

இந்தியர்களுக்கு மழை என்பது ஏதோ வானத்திலிருந்து விழும் தண்ணீர் மட்டுமல்ல; அது ஒரு வாழ்வாதாரக் கணக்கு.

நமக்கு இரண்டு பருவக் காற்றுகள் உண்டு. ஒன்று, அக்டோபர் மாதவாக்கில் வரும் வடகிழக்கு பருவக்காற்று. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்கள் இதன் மூலம் தப்பிப் பிழைக்கின்றன.

இன்னொன்று, ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவக்காற்று. நாட்டின் எண்பது சதவீத மழையைத் தீர்மானிப்பது இதுதான். இமயமலையின் கிழக்குச் சரிவில் இருக்கும் சில இடங்கள் 1000 சென்டிமீட்டருக்கும் மேல் மழையை வாங்கி சொதசொதவென்று நனையும்.

இந்த ஆண்டு மே 26லேயே மழை வந்துவிடும் என்று வானிலை இலாகா முதலில் ஆருடம் சொல்லியிருந்தது. நாமும் குடைகளைத் தூசு தட்டி வைத்திருந்தோம்.

ஆனால், இயற்கை எப்போதும் மனிதனின் கணிப்புகளைக் கண்டு அற்பமாகப் புன்னகைக்கக் கூடியது.

இப்போது வரை தென்மேற்குப் பருவமழை வந்தபாடில்லை. இன்னும் தாதமாகிறது. அப்படி வந்தாலும் குறைவாகத்தான் மழை தருமாம்.

தத்துவம் என்னவென்றால், பசிபிக் கடலில் எழும் ஒரு சிறிய வெப்ப அலை, இந்தியப் பெருங்கடலின் காற்றை உலர வைக்கிறது. மேகங்களில் இருக்கும் நீர்ப்பசை வற்றிப்போகிறது.

கடலில் ஈரப்பதம் குறைந்தால், நிலத்தில் மனிதர்களின் தொண்டை வறள்கிறது. கடைசியாக 2015இல் இப்படித்தான் எல்நினோ வந்து நம்மைப் படுத்தியது.

அப்போது எண்பத்தாறு சதவீத மழைதான் பெய்ததாம். இந்த முறை தொண்ணூறு சதவீதத்திற்கும் கீழே போகும் என்று கணித்திருக்கிறார்கள். அதற்குக் கீழே போகாதுஎன்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமுமில்லை. போனாலும் போனதுதான்.

வழக்கம்போல, வறட்சி வரப்போகிறது என்ற செய்தி கேட்டவுடன் மனிதர்களாகிய நாம் பதற்றமடையத் தொடங்கிவிட்டோம்.

ஆனால், தண்ணீரே இல்லாத மேகங்களைச் சுமந்துகொண்டு வானத்தில் அலைந்து கொண்டிருக்கும் அந்தப் பருவக்காற்றின் சோகத்தை எவரும் சிந்திப்பதில்லை. பெய்ய வழியில்லாத மேகம், சொல்ல முடியாத கவிதை போன்றது.

வானிலை இலாகா எச்சரித்துவிட்டது. இனி நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், அடுத்த முன்னெச்சரிக்கை வரும் வரை, இந்த வறட்சியை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு தத்துவார்த்தக் குழப்பத்துடன் காத்துக்கொண்டிருப்பதுதான்.

*****

பியர், பிரேக் அப் மற்றும் பிட்டு படங்களின் தத்துவம்

சீரழித்த சினிமா – 33

திரிஷா இல்லன்னா நயன்தாரா

பியர், பிரேக் அப் மற்றும் பிட்டு படங்களின் தத்துவம்

உலக சினிமா வரலாற்றில் காதலைப் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால், "ஒருத்தி போனா இன்னொருத்தி" என்கிற ஆகச்சிறந்த பிரபஞ்ச விதியை இவ்வளவு ஆணித்தரமாக, எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பிரகடனப்படுத்திய பெருமை 2015 இல் வெளிவந்த திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்தையே சேரும்.

மார்க்சியம் பேசும் பண்டமாக்கல் கோட்பாட்டைத் தன் திரைக்கதையின் மூலம் மிக வக்கிரமாக நிரூபித்திருத்த திரைப்படமே திரிஷா இல்லன்னா நயன்தாரா. படத்தின் தலைப்பிலேயே அந்த ஆபத்தான சந்தை அரசியல் தொடங்கிவிடுகிறது. திரிஷா இல்லன்னா நயன்தாரா அதாவது, சந்தையில் ஒரு பிராண்ட் சோப்பு கிடைக்கவில்லை என்றால், நுகர்வோர் இன்னொரு பிராண்ட் சோப்புக்கு மாறுவதைப் போல, பெண்களை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றும் ஆணாதிக்கக் கொழுப்பை இந்தத் தலைப்பிலேயே நீங்கள் பார்க்கலாம்.

படத்தின் கதை என்று தனியாக தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். அதற்காகத் அதைத் தேடாமலும் இருக்க முடியாது. அது ஒரு இன்பினிட்டி லூப்.

அந்த லூப்பின் படிகளாவன,

படி 1 : ஹீரோவுக்கு ஒரு பெண் மீது காதல் வருகிறது.

படி 2 : ஏதோ ஒரு அற்ப காரணத்தால் உதாரணமாக, தண்ணி அடிப்பது, அல்லது வேறு லோக்கல் மேட்டர்களால் பிரேக் அப் ஆகிறது.

படி 3 : ஹீரோ உடனே டாஸ்மாக் சென்று சோகப் பாடல் பாடுகிறார்.

படி 4 : அடுத்த பெண்ணைத் தேடிப் போகிறார்.

படி 5 : மீண்டும் படி 1க்குச் செல்லவும்.

நாயகனுக்குப் படத்தில் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே வேலை, இளம்பருவத்து ஹார்மோன் கோளாறுகளைத் திரையில் பிரதிபலிப்பதுதான். எந்நேரமும் ஒருவித ஏக்கத்தில் இருக்கும் இவரது கண்கள், காதலைத் தேடுகிறதா அல்லது வேறு எதையாவது தேடுகிறதா என்பது நாயகனுக்கே வெளிச்சம்.

தமிழ் சினிமா வழக்கப்படி, ஹீரோயின்கள் என்பவர்கள் ஹீரோவின் டாஸ்மாக் புலம்பல்களுக்குக் காரணகர்த்தாக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற விதியை இந்தப் படம் அட்சர சுத்தமாகப் பிரதிபலிக்கிறது.

அநேகமாக வர்ஜினிட்டி என்ற வார்த்தையை மிக அதிக முறை உச்சரித்த முதல் தமிழ்ப் படம் இதுவாகத்தான் இருக்கும். சென்சார் போர்டு அதிகாரிகள் படம் பார்க்கும்போது தூங்கிவிட்டார்களா அல்லது அவர்களுக்கு காது கேட்கவில்லையா என்று யோசித்தால், இதிலிருக்கும் உளவியல் நுட்பம் உங்களுக்குப் புரிய வரும். அதாவது, ஒரே வார்த்தையை நான்கு முறை சொன்னால் போரடித்து விடும், நாற்பது முறை சொன்னால் அது ஒரு வார்த்தையா என்று சந்தேகமே வந்து விடுமே அப்படி போரடிப்பு மற்றும் சந்தேகம் வந்திருக்க வேண்டும் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு.

"ஒரு பெண் இல்லையென்றால் இன்னொரு பெண்" என்ற தத்துவம், தனிமனித உறவின் ஆழத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு தற்காப்பு வழிமுறை. உண்மையான காதலின் தீவிரத்தையும், அதன் பின்னால் இருக்கும் பொறுப்பையும் எதிர்கொள்ள பயந்து, இப்படத்தின் நாயகன் தன் சுதந்திரத்தை அர்த்தமற்ற அலைச்சலாக மாற்றிக் கொள்கிறான். காதலில் தியாகம், கண்ணீர், கற்பு, மரணம் போன்ற மரபான தமிழ் சினிமா கூறுகள் இதில் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன. விழுமியங்கள் அற்ற இந்தச் சூழலில் நாயகன் தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள பாலியல் மற்றும் மது ஆகிய தற்காலிக இன்பங்களை மட்டுமே சார்ந்திருக்கிறான்.

நாயகனுக்குப் பெண்கள் மீது இருப்பது காதலா அல்லது தன் அகத் தனிமையைப் போக்கிக் கொள்ளத் தேடும் ஒரு வடிகாலா? அவனால் எந்தவொரு பெண்ணுடனும் உண்மையான இருத்தலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த முடிவதில்லை. அவனது தேடல் முழுவதும் உடல் சார்ந்ததாகவும், சமூகத்தின் முன் தன்னை ஓர் ஆண் என்று நிரூபிக்கத் துடிக்கும் ஒரு தவிப்பாகவுமே சுருங்கிவிடுகிறது.

இத்திரைப்படம் அர்த்தமற்ற, விழுமியங்கள் அற்ற, இலக்கற்ற ஒரு நவீன உலகத்தில் வாழும் இளைஞனின் ஆழமான இருத்தலியல் தவிப்பின் அநாகரிகமான கொண்டாட்டம். வாழ்க்கைக்கு என்று எந்த உன்னத நோக்கமும் இல்லை என்பதை உணர்ந்த பின், ஒரு மனிதன் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி தன் விருப்பப்படி வாழத் தலைப்படும் அபத்த நாடக வடிவமே இத்திரைப்படம்.

திரிஷா இல்லன்னா நயன்தாரா என்பது ஒரு திரைப்படமே அல்ல. அது, தியேட்டருக்குள் ஏதோ ஒரு போதையில் நுழைந்து, இரண்டரை மணி நேரம் கழித்து "நாம் எங்கே இருக்கிறோம்?" என்று தெரியாமல் வெளியே வரும் ஒரு மாயாஜால அனுபவம்.

ஒருவர் இந்தப் படத்தை 5 பியர் பாட்டில்களோடு பார்க்கப் போனால், இரண்டைத்தான் குடித்திருப்பார். மீதி மூன்றை திரையில் வரும் நாயகன் பிடுங்கிக் குடித்திருப்பார். அந்த அளவுக்கு இப்பட நாயகன் டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாஸடராகக் குடித்து குடித்து டாஸ்மாக்கிற்கே பஞ்ச கோலத்தைக் காட்டக் கூடியவர்.

சரியாகச் சொல்வதென்றால், இத்திரைப்படம் ஒரு திரைக்கலையே அல்ல; பண்பாட்டுத் தளத்தில் நடத்தப்பட்ட ஒரு பாலியல் வன்புணர்வு!

இத்திரைப்படம் ஏற்படுத்திய விளைவுகளை மதிப்பிட்டால், ஹைப்பர்ரியாலிட்டி  கோட்பாட்டின்படி, திரையில் காட்டப்படும் இந்த வக்கிரமான, மிகைப்படுத்தப்பட்ட உறவு நிலைகளை உண்மை என்று நம்பி, நிஜ வாழ்க்கையிலும் இளைஞர்கள் தங்கள் இணையர்களை அதே அளவுகோல்களுடன் அணுகத் தொடங்கியது ஒரு மோசமான பின்னடைவு. இந்தப் பின்னடைவு நிஜ உலக உறவுகளில் பெரும் ஏமாற்றத்தையும், மன அழுத்தத்தையும் உருவாக்க காரணமாகியது.

தமிழ் சினிமா எத்தனையோ பிற்போக்குத்தனங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆனால், ஒரு நுகர்வுச் சந்தையின் ஆகச்சிறந்த கழிவை, இளைஞர்களின் நாடித் துடிப்பு என்ற பெயரில் திரையரங்குகளில் கொட்டிய இந்த திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம், சமகாலப் பண்பாட்டுச் சீரழிவின் ஆகச்சிறந்த குறியீடு.

இத்திரைப்படம் ஏற்படுத்திய சீரழிவு என்பது, அது காட்டிய ஆபாச வசனங்களில் மட்டும் இல்லை; மனித விழுமியத்தின் தனித்துவத்தை நிராகரித்து, உறவுகளின் ஆழத்தை எள்ளி நகையாடி, பொறுப்பற்ற தனத்தை கொண்டாட்டமாக மாற்றிய தத்துவார்த்த வறுமையில்தான் இருக்கிறது.

பெண்ணியம் பேசும் சுயமரியாதைக் கருத்துக்களைத் துடைத்தெறிந்துவிட்டு, பெண்ணின் உடலை, அவளது கற்பை, அவளது அசைவுகளைத் தங்களுக்குத் தேவையான ஆணாதிக்கச் சந்தைக்கான மூலதனமாக மாற்றியதுதான் இத்திரைப்படத்தின் ஆகச் சிறந்த அக்கிரமம். படம் முழுக்க நாயகன் பேசும் வசனங்கள் அனைத்தும், ஒரு பாலியல் வறட்சி மிகுந்த சமூகத்தின் வக்கிரக் கூச்சல்கள் அன்றி வேறில்லை.

இந்தியச் சூழலில் நிலவும் பாலியல் நசுக்கல்களையும், விலக்கப்பட்ட தனிமனித உரையாடல்களையும் இத்திரைப்படம் தனக்கான முதலீடாக மாற்றிக் கொண்டு, தமிழ்ச் சமூகத்தைப் பாலியல் முதிர்ச்சியை அடைய விடாத, தேங்கி நிற்கும் டீன் ஏஜ் உளவியலிலேயே தேக்கி வைத்ததுதான் இத்திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு.

*****

4 Jul 2026

இரெ. சண்முகவடிவேலுவின் ‘நினைவின் நிழல்கள்’ ஓர் எளிய அறிமுகம்

இரெ. சண்முகவடிவேலுவின் ‘நினைவின் நிழல்கள்’ ஓர் எளிய அறிமுகம்

முன்னோக்கிப் பாயும் ப்ளாஸ்பேக்!

நினைவின் நிழல்கள் என்ற தலைப்பில் நா. பார்த்தசாரதி ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார்.

அதே தலைப்பில் இரெ. சண்முகவடிவேல் எழுதியுள்ள இந்த நூல் அவரது வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டும் குறுநாவல் போலவே இருக்கிறது.

ஆங்கிலத்தில் சிறந்த மனிதர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு இந்தப் புத்தகத் தலைப்பே நல்லதொரு உதாரணம்தான்.

நினைவுகளின் நிழல்கள் என்ற லாவண்யா பெரியசாமி என்பவரின் புத்தகமும் இணைய வெளியில் காணக் கிடைக்கிறது. நினைவுகளைப் பன்மைப்படுத்தாமல் ஒருமைப்படுத்தி இரெ. சண்முகவடிவேல் எழுதியுள்ள இந்தப் புத்தகம் அவரது நினைவில் வாழும் மனிதர்களைப் பற்றிச் சிரிக்க சிரிக்க நம்மிடம் பேசுகிறது.

மனிதர்கள் எவ்வளவு வண்ணமயமாக இருந்தாலும் விழும் நிழல்கள் என்னவோ கருப்புதான். அந்த வகையில் அந்தக் கால கருப்பு வெள்ளை கிளாஸிக் படம் பார்ப்பது போன்ற உணர்வு இந்தப் புத்தகத்தைப் படிக்கையில்.

நிழல்கள் என்ற கருமையைப் பெயராக இந்நூல் சூட்டிக் கொண்டாலும் நினைவின் நிழல்களாய் நடமாடும் அந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வண்ணமயமான கிராபிக்ஸ்களாகவே புத்தகம் முழுவதும் உலவுகிறார்கள். கரு நிழல்களுக்கும் வண்ணம் தீட்டத் தெரிந்த வித்தைக்காரராக இருக்கிறார் சண்முகவடிவேல்.

மனிதன் என்பவன் அடிப்படையில் ஒரு ஞாபக மறதிப் பிராணி. ஆனால், சண்முகவடிவேலுவுக்கு ஞாபகசக்தி அதிகம். தான் சந்தித்த மனிதர்கள், கடந்து வந்த பாதைகள் என எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து இப்படி ஒரு புத்தமாக ஆக்கியிருக்கிறார்.

புத்தகத்தில் வரும் மனிதர்கள் பெரும்பாலும் பட்டிமன்றம் தொடர்பான மனிதர்கள். சில இடங்களில் பேருந்துகளிலும், சந்தைக் கடைகளிலும் கடந்து போகும் சாதாரண மனிதர்களும் இருக்கிறார்கள். சண்முகவடிவேலு அவர்களை விவரிக்கும் விதம்தான் இதில் முக்கியம். அது மைக்ரோஸ்கோப்பில் சாதாரண எறும்பை அசாதாரணமாகப் பார்ப்பது போலச் சுவாரசியமாக ஆக்கி விடுகிறது.

புத்தகத்தில் சில மொக்கையான மனிதர்களை அவர் சந்திக்குமிடம் நமக்கு ரொம்ப அலாதியானது. பரவாயில்லை, நமக்கு மட்டும்தான் மொக்கையான மனிதர்கள் அறிமுகமாகிறார்கள் என்று நினைத்தால், இவ்வளவு பெரிய மனிதருக்கும் அதேதான் என்கிற சராசரி மனிதனுக்குக் கிடைக்கும் திருப்திதான் அது.

எழுத்தாளர் ரொம்பவும் நல்லப் பிள்ளை என்பதற்கு பளிச்சென்ற முகத்துடன் வெள்ளைச்சட்டையில் உள்ள அட்டைப்படமே நல்ல சான்றுதான். கொஞ்சம் கூடக் கெட்ட வார்த்தைகளோ, அதிர்ச்சியூட்டும் அந்தரங்கங்களோ இல்லாமல், பக்திப் பழமாக வண்டி ஓடுவதால் அனைவரும் படிக்கக் கூடிய புத்தமாக விளங்குகிறது. அந்த வகையில் பரபரப்பான த்ரில்லர்களோ, ரத்தக் கறைகளோ இல்லாத ஒரு சாதுவான புத்தகம் இது.

வாசிக்க வாசிக்க முள்ளாகக் குத்தாமல், வெண்ணெய் போல நகர்கிறது. செயற்கையான பந்தாக்கள் இல்லை. நான் ஒரு மேதாவி என்று காலரைத் தூக்கிக் கொள்ளாமல் எதார்த்தமாக எழுதியிருக்கிறார். பட்டுவேட்டி, பட்டுச் சட்டை தோற்றத்தைக் கூட தோற்றப் போலிவுதான், ஜெயித்தப் போலிவில்லை என்று சொல்லும் இடம் அதற்கு நல்ல சாட்சியம்.

புத்தகத்தின் ஆகச் சிறந்த அம்சம் என்றால், தேவையில்லாத எதிர்மறை விஷயங்களை டெலிட் செய்துவிட்டு, அழகிய நினைவுகளை மட்டும் ரீஸ்டோர் செய்திருக்கும் அந்த அழகுதான். அந்த அளவுக்குச் சண்முகவடிவேலு தான் சந்தித்த மனிதர்கள், பழகிய நண்பர்கள், ரசித்த இடங்கள் என எல்லாவற்றையும் ஓர் ஆல்பம் போலத் தொகுத்திருக்கிறார்.

இப்புத்தகத்தைப் படித்து முடிக்கையில் இரெ. சண்முகவடிவேலுவின் இந்த நினைவின் நிழல்கள் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதரின் டைரிக் குறிப்பு போலவும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், டைரியை நாம் பூட்டி வைப்போம். சண்முகவடிவேலு புத்தகமாக்கி விட்டார். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கை திறந்த புத்தமாக இருக்கிறது.

நூல் குறிப்பு :

தலைப்பு       : நினைவின் நிழல்கள்

ஆசிரியர்        : புலவர் இரெ. சண்முகவடிவேல் M.A.

பக்கங்கள்     : 186

விலை            : ரூ. 200/-

வெளியீடு     : கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணித் தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017

*****

இருத்தலியலின் மாபெரும் துயரம்

சீரழித்த சினிமா – 32

குட் பேட் அக்லி

இருத்தலியலின் மாபெரும் துயரம்

இருத்தலியலின் ஆகப்பெரும் சாபமே அர்த்தமின்மைதான். பிரபஞ்சத்திற்கு எப்படி ஒரு நியதியும் அர்த்தமும் இல்லையோ, அதேபோல்தான் 2025 இல் வெளிவந்த குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தின் திரைக்கதைக்கும் எந்த நியதியும் அர்த்தமும் தர்க்கமும் இல்லை என்பதை உணரும்போது ஒரு தத்துவார்த்த அதிர்வு நமக்குள்ளே நிகழ்கிறது.

இப்படத்தின் பெயரில் இருக்கும் குட் என்பது சும்மா பெயருக்குத்தான். இங்கே நன்மையும் தீமையும் வேறு வேறல்ல; இரண்டும் ஒரே பிரியாணி அண்டாவில் வெந்த வெவ்வேறு கறித்துண்டுகள்.

படத்தின் தலைப்பில் உள்ள பேட் என்பதில்தான் ஹீரோ ஆனந்தம் அடைகிறார்.

அப்புறம் அந்தப் படத்தின் தலைப்பில் கடைசியில் இருக்கும் அக்லி. அதுதான் திரைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நுகர்வோர் சமூகம்.

இப்படத்தின் கதைதான் என்ன?

நாயகன் வருகிறார். சிரிக்கிறார். துப்பாக்கியை எடுக்கிறார். சுடுகிறார். டான்ஸ் ஆடுகிறார். இடையில் கொஞ்சம் டார்க் காமெடி பண்ணுகிறார். சுருக்கமாகச் சொன்னால், லாஜிக்கை வாஷ் பேசினில் போட்டுப் பிளஷ் செய்த கதம்ப சாதம்தான் படத்தின் கதை.

படத்தில் சுடப்படும் துப்பாக்கிக் குண்டுகளின் எண்ணிக்கை தோராயமாக சில பல ஆயிரங்கள் இருக்கலாம், லட்சங்களைத் தொட்டாலும் எண்ணிக்கைப் பிழையில்லை. நாயகன் மீசையை முறுக்கும் இடங்கள் சில பல நூறுகள் இருக்கலாம். திரைக்கதையில் லாஜிக் உதைக்கும் இடங்கள் சில பல இன்பினிட்டிகள் இருக்கலாம்.

சமூகம் என்பது மனிதர்கள் இணைந்து வாழ உருவாக்கிய ஒரு கற்பிதம். ஆனால், குட் பேட் அக்லி காட்டும் உலகம் முழுக்க முழுக்க அராஜகவாதத்தால் ஆனது. சட்டம், ஒழுங்கு, போலீஸ் எல்லாமே அங்கே காமெடி பீஸ்கள்.

குட் பேட் அக்லி என்பது வெறும் சினிமாவல்ல; அது ஒரு சமூக உளவியல் பரிசோதனை. மனிதன் எவ்வளவு தூரம் தன் பகுத்தறிவைத் துறந்துவிட்டு, வெறும் பிம்ப வழிபாட்டிலும், அதீத வன்முறைக் காட்சிகளிலும் தன் இருப்பைத் தேடிக்கொள்கிறான் என்பதற்கான வாழும் சான்று.

ஒரு நபர் திரையில் துப்பாக்கியை எடுத்து நூறு பேரைக் சுட்டுத் தள்ளும்போது, தியேட்டரில் இருக்கும் ரசிகர்கள் ஏன் கத்துகிறார்கள்? ஏன் விசிலடிக்கிறார்கள்? ஏனென்றால், அவர்கள் ஆழ்மனதில் யாரையோ சுட்டுக் கொல்ல விரும்புகிறார்கள். அந்த வன்முறையைத் திரையில் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு போலி திருப்தி கிடைக்கிறது.

இத்திரைப்படம் ரசிகர்களை ஏன் திருப்திப்படுத்துகிறது என்பது முக்கியமானதொரு கேள்வி.

படத்தில் வரும் நாயகனின் கதாபாத்திரம் எந்தவொரு தார்மீக விதிகளுக்கும், சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டது அல்ல. அது குட் ஆகவும் இருக்கிறது, பேட் ஆகவும் மாறுகிறது, அக்லியாகச் செயல்படவும் யோசிக்காது. அது தன் சொந்த விதிகளைத் தானே உருவாக்கும்.

இதற்குத் தியேட்டரில் இருக்கும் ரசிகன் ஏன் விசிலடிச்சான் குஞ்சாக ஆகிறான் என்றால், ரசிகன் தன் நிஜ வாழ்க்கையில் தனக்கிருக்கும் முழுமையான சுதந்திரத்தைக் கண்டு பயப்படுகிறான் மற்றும் எப்படி எதிர்கொள்வது எனக் குழம்பிப் போகிறான்.

ஒரு நுகர்வுச் சமூகத்தின் அடிமையாக, காலையிலிருந்து மாலை வரை அல்லது இரவிலிருந்து அதிகாலை வரை வேலையின் சட்டகத்திற்குள் அடைபட்டுக் கிடக்கும் ரசிகனுக்கு, தன் விருப்பப்படி வாழும் துணிச்சல் இல்லை.

ஹீரோவின் துப்பாக்கி முனையில் தன் சுதந்திரத்தை வாடகைக்கு எடுத்து, இரண்டரை மணி நேரம் போலி இன்பம் காண்கிறான். இது வாழ்வியல் ரீதியாக ரசிகன் மீது நிகழ்த்தப்படும் ஒரு மிகப்பெரிய துரோகம்.

ஒரு கணக்கு போட்டுப் பார்த்தால், குட் பேட் அக்லி ரசிகர்களைச் சீரழித்ததா? அல்லது ஏற்கனவே ரசிகர்கள் சீரழிந்துதான் போய் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டியதா? என்பது விடை காண முடியாத கேள்வி.

படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் தோன்றும் ஒரே ஒரு ஞானம் இதுதான். இருக்கிறோம். வாழ்கிறோம். இடையில் மசாலா படம் பார்க்கிறோம். அவ்வளவுதான்!

உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால், கமர்ஷியல் சினிமா என்ற போர்வையில், ரசிகர்களின் பலவீனங்களை மூலதனமாக்கிக் கொண்டு, தங்களை ஏதோ ஒரு பெரிய கலைப் படைப்பை உருவாக்கியதாகக் காட்டிக் கொள்ளும் நாயகன் மற்றும் இயக்குநரின் போலித்தனம் இது.

ஓர் ஓட்டலில் சாப்பாடு பரிமாறுபவர் எப்படித் தன்னை முழுமையாக ஒரு சர்வர் என்று நம்பி நடிக்கிறாரோ, அப்படியே இப்பட நாயகனும் தன்னை ஒரு மாஸ் ஹீரோ என்று நம்பி நடிக்கிறார். இருவருமே தங்களின் உண்மையான இருப்பை மூடி மறைக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லப்போவதில்லை. ஏனெனில், இந்தத் திரைப்படத்திற்கும் எந்தவொரு உள்ளார்ந்த அர்த்தமும் இல்லை. மக்கள் தியேட்டருக்குள் நுழைந்தார்கள், காசை இழந்தார்கள், வெளியே வந்தார்கள். படம் முடிந்தது. அவ்வளவுதான். பேக் அப்.

*****