14 Jul 2026

சொத்து போகாது, ஆனால் காது கேட்காது!

சொத்து போகாது, ஆனால் காது கேட்காது!

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப்போகக் கூடாது, சொத்துகள் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கைமாறிவிடக் கூடாது என்கிற அதிபயங்கரப் பொருளாதார நோக்கங்களுக்காக, அத்தை மகளையும் மாமா மகனையும் பிடித்துக் கல்யாணம் செய்து வைக்கும் ரத்தப் பாச விசித்திரம் காலம் காலமாக நடந்து வருகிறது.

பிள்ளைகள் யாரையாவது காதலித்துத் தொலைத்துவிட்டால், பெற்றோருக்கு வரும் முதல் ஆத்திரம், நாளைக்கே உன் அத்தை மகனுக்கு உன்னைக் கட்டிக்கொடுக்கிறேன் பார் என்பதுதான். காதல் நோய்க்கு அத்தை மகன்தான் இவர்களின் ஒரே ஆன்டிபயாடிக்!

அண்மை மருத்துவவியல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. ரத்த உறவுத் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு டபுள் ஆகிறதாம்.

பிரிட்டனின் பிராட்போர்டு பகுதியில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்குக்குக் காரணம் இந்த ரத்தப் பாசத் திருமணங்கள்தான் என்று ஆய்வு செய்தே நிரூபித்திருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, நம் ஊர் லட்சணம் என்ன தெரியுமா?

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் பிறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கிறதாம்.

இதில் கர்நாடகத்தில் 30 சதவீதமும், தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தலா 20 சதவீதமும் குழந்தைகள் காது கேளாமல் பிறக்கிறார்கள்.

ஆண்டுதோறும் சுமார் 6 முதல் 8 லட்சம் இந்தியக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த மரபணுப் பெருமையில் தென்னிந்திய மாநிலங்கள்தான் டாப்!

வாழ்க பாரம்பரியம்!

கேரளா மட்டும்தான் இதிலிருந்து கொஞ்சம் தப்பித்திருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காதல் திருமணங்கள் பெருகிவிட்டதால் இந்த வழக்கம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், இன்னமும் குடும்பக் கட்டாயத்துக்காகப் பிடிக்காத மாமன் மகனைத் திருமணம் செய்துகொண்டு அழும் பெண்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த ரத்த உறவுக் கல்யாணங்களால் குழந்தைகளுக்கு என்னென்ன வரும் என்று மருத்துவர்கள் ஒரு பெரிய மெனு கார்டையே நீட்டுகிறார்கள்.

அறிவாற்றல் குறைபாடு,

குழந்தைப் பருவத்திலேயே மரணம்,

நுரையீரல் கோளாறு,

தலசீமியா,

அரிவாள் செல் சோகை,

மூளை, நரம்புகளை அழிக்கும் அபாயகரமான மரபணுக் கோளாறு.

தசை பலவீனம், நடுக்கம்,

பேசவோ விழுங்கவோ முடியாத நிலை என ஒரு பெரிய பட்டியலையே நீட்டுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், சொத்தைக் காப்பாற்றப்போய், பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தையே அடகு வைக்கும் விசித்திர வியாபாரம் இது.

இந்த ஆபத்தான பழக்கம் இன்னும் தொடர்வதற்கு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

நம்ம ஊர் ஜாதி ரீதியான திருமண இணையதளங்கள் முதன்மையான காரணம்.

பணக்காரர்கள் சொத்துப் போகக் கூடாது என்று நினைக்கிறார்கள்; ஏழைகள் திருமணச் செலவை மிச்சப்படுத்த வீட்டுக்குள்ளேயே முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இது அடுத்த முக்கியமான காரணம்.

ஆனால், ஒரு திருமணத்தில் பெண்ணின் ஆரோக்கியமும், அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் எதிர்காலமும் முக்கியம் என்பதை இந்த இரண்டு தரப்புமே யோசிப்பதில்லை.

எல்லாவற்றிலும் முன்னேறி விட்டதாக மார்புதட்டும் நம் நாட்டில், இன்னமும் இந்த மரபணுத் தற்கொலை வழக்கம் தொடர்வது ஒரு சாபக்கேடு. ரத்தச் சொந்தத்தில் கல்யாணம் செய்து கொண்டே இருந்தால், அது நாட்டுக்கு ஆரோக்கியமான மனித வளத்தைத் தராது; மாறாக மருத்துவமனைகளுக்குத்தான் வருமானத்தைத் தரும்.

சொந்த பந்தம் முக்கியம்தான், ஆனால் அது பிறக்கும் குழந்தையின் காதுகளை அடைப்பதாக இருக்கக் கூடாது!

*****

சுய மோகத்தின் திரை வடிவும் நுகர்வின் சூன்யமும்

சீரழித்த சினிமா – 39

குஷி

சுய மோகத்தின் திரை வடிவும் நுகர்வின் சூன்யமும்

இரண்டாயிரமாவது ஆண்டின் மே திங்களில், கொதிக்கும் கோடையில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச யதார்த்தக் காதலையும், மென்மையான பெண்ணின் உணர்வுப்பூர்வமான சுதந்திரத்தையும் கத்திரி வெயிலில் கருவாடு போட்டு மண்டை காய வைத்த திரைப்படம்தான் குஷி.

நவீனத் தமிழ்ச் சமூகம் தன் ஆழங்களை இழந்து, மேற்பரப்புப் பளபளப்புகளில் தன்னைத் தொலைத்துக் கொள்ளத் தொடங்கிய புள்ளியைச் சரியாக அடையாளம் காண வேண்டுமானால், குஷி திரைப்படத்தின் முன்னால் போய்தான் நிற்க வேண்டும்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்பத்தினரைச் சம்மதிக்க வைக்கப் போராட வேண்டும்" என்ற உன்னதமான விதியை அடியோடு மாற்றி, "கொல்கத்தாவில் வளர்ந்து சென்னையில் படிக்கும் ஒரு அரைகுறை மேதாவிப் பையனும், திருநெல்வேலி, குற்றாலத்தில் வளர்ந்து அதே காலேஜில் படிக்கும் ஒரு அகந்தை பிடித்த பெண்ணும், ஒரு தொப்புள் காட்சிக்காகத் தங்கள் ஒட்டுமொத்த சுயமரியாதையையும் அடகு வைத்துவிட்டு, படம் முழுக்க என் ஈகோ பெரிதா, உன் ஈகோ பெரிதா என்று தெருத்தெருவாகச் சண்டை போடலாம்" என்ற ஒரு புதுவிதமான மனநலப் பிறழ்வு வக்கிர அத்துமீறலைத தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, குஷி திரைப்படத்திற்கு உண்டு.

எப்போதும் தேவையில்லாமல் துள்ளிக் குதிக்கும், மற்றும் ஓவர் ஆக்டிங் செய்யும் நாயகனின் போலி வாலிப பிம்பமும், முகத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே நொடியில் பிழிந்து காட்டும் நாயகியின் அலப்பறைப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு ஹார்மோன் ஆய்வக மோசடிக்குக் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு காதலர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த உளவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு பெண்ணை உண்மையாகக் காதலித்தாலும், அவளது அந்தரங்கத்தைப் பார்த்ததை அகப்பொருளில் கையாண்டு, ஊடலைத் தணிக்காமல்அதையே ஒரு ஈகோ பிரச்சனையாக உருவாக்கிக் கொண்டு அதில் லாஜிக் மேஜிக் பேசி தங்களைத் தாங்களே வெறுத்துக் கொண்டு அசிங்கப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான்.

இதனால், ஓர் இயல்பான மனிதப் பார்வையின் தற்செயல் தவறை, இருபது ரீல்கள் ஓடும் அளவிற்குப் பெரிய கௌரவப் பிரச்சினையாக மாற்றி, "நீ என் தொப்புளப் பாத்த, நீ ஒரு பொறுக்கி" என்றும், "ஆமா பாத்தேன், அதுல என்ன தப்பு?" என்றும் சண்டை போடுவதைத்தான் உன்னதமான காதல் என்றும் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

பொதுவாகத் தமிழ் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கவியல் என்பது பெரும்பாலும் இதயத்தையும், கண்களையும், அதிகபட்சம் கைகளையும் சுற்றியே இயங்கி வந்தது. அடிப்படையில் காதல் என்பது கம்பன் காலத்திலிருந்து பாரதி காலம் வரைக்கும் கண்களில் ஆரம்பித்து இதயத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், குஷி திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் இளைய சமூகத்தின் கவனக் குவியத்தையும், வாழ்வியல் லட்சியத்தையும் சரியாக பதினெட்டு அங்குலங்கள் கீழே இறக்கியது.

மானுட பரிணாம வளர்ச்சியில், தாய்க்கும் சேய்க்குமான உறவை அறுக்கும் வெறும் தழும்பு என்று கருதப்பட்ட ஓர் உறுப்பு, தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வரலாற்றை மாற்றியமைக்கும் அதிர்வு மையமாக மாறும் என்று டார்வின் கூட கணித்திருக்க மாட்டார்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சிறுசிறு தவறுகளையும், தவறான புரிதல்களையும் பேசித் தீர்ப்பதை விடுத்து, தங்களது போலி ஈகோவிற்காகப் பல வருடக் காதலை ஒரே நிமிடத்தில் பிரேக் அப் செய்து கொள்ளும் முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

குஷி திரைப்படத்துக்கு முன்பு வரை, தமிழ் சினிமாவில் காதலர்கள் பிரிவதற்கு சாதி, மதம், ஏழை பணக்கார வர்க்கப் போராட்டம், அல்லது வில்லனின் துப்பாக்கிச் சூடு போன்ற வலுவான சமூகக் காரணங்கள் தேவைப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் மாற்றி குஷி நுகர்வோர் கலாச்சாரத்தின் உச்சகட்ட உளவியல் சீரழிவை அறிமுகப்படுத்தியது. அதுதான் காரணமே இல்லாத பிடிவாதம்.

இருபாலினத்தவரிடமும் இந்தத் திரைப்படம் அசுரத்தனமான ஈகோவை ஒரு கௌரவச் சின்னமாக மாற்றியது. நியாயமான காரணங்களே இன்றி சண்டை போடுவதும், அதை காதலின் ஆழம் என்று அதில் உளவியல் சுயஇன்பம் காண்பதும் இந்தத் திரைப்படத்திற்குப் பின்பே சமூக ஒழுங்காக மாறியது.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள் என்றால், குஷி படத்தில் காலேஜுக்குப் படிக்கப் போகும் அத்தனை பேரையுமே லவ் மேட்ச் மேக்கர் வேலையைப் பார்க்கும் தரகர்களாக மாற்றி கமர்ஷியலாக விற்றார்கள். ஹீரோவும் ஹீரோயினும் தங்களுக்குள் காதலிப்பதை விடுத்து, தங்களது நண்பர்களான ஜோடியைச் சேர்த்து வைக்கப் படம் முழுக்கக் கொரியர் பாய் போல அலைந்து கொண்டிருப்பார்கள், தங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்த உறைபனியூட்டும் வெட்டி வேலையை, மிக வண்ணமயமான உடைகளாலும், ஆபாசக் குத்துப் பாடல்களாலும் மூடி மறைத்து, இவங்க எவ்ளோ பெரிய காதலின் தியாகிகள் என்று பார்ப்பவனை ஏமாற்றினார் இயக்குனர்.

முறையான கல்வியையும், எதிர்கால லட்சியங்களையும் விடுத்து, அடுத்தவன் காதலுக்குத் தூது போவதையும், கட்டிப்புடி கட்டிப்புடிடா என குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதையும் மாஸ் என்று காட்டி, பகுத்தறிவு மற்றும் காதலின் மென்மை மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

அந்நியன் படத்தில் மனநோயைக் கொண்டாடினார்கள் என்றால், குஷி படத்தில் ஆணாதிக்க ஈகோவையும் இளைஞர்களின் அத்தனை முட்டாள்தனங்களையும் நியாயப்படுத்தினார்கள். படத்திலிருக்கும் ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்பது தியேட்டரில் இருக்கும் டிக்கெட் கிழிப்பவருக்குக் கூடத் தெரியும். ஆனால், அதை அந்த இரு முட்டாள்களும் கடைசி ஐந்து நிமிடம் வரை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு காதலைச் சொல்வதற்கு இத்தனை போலி பந்தாக்களும், பிடிவாதங்களும் தேவை என்று காட்டி, பின்னணியில் ஓ வெண்ணிலா என்று உருகி உருகிப் பாடினால் நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்பதுதான் இத்திரைப்படம் தமிழக இளைஞர்களுக்குச் சொல்லித் தந்த திரைப்பாடம்.

நேர்மையாகக் காதலை வெளிப்படுத்துவதை விடுத்து, அதை ஒரு செஸ் விளையாட்டு போல விளையாடி மனித உணர்வுகளைச் சிதைப்பதைக் க்யூட் காதல் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த சினிமாட்டிக் தந்திரம்.

7ஜி ரெயின்போ காலனி மற்றும் மின்னலே போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது. நாயகி  கதாபாத்திரம், திருநெல்வேலியில் பிறந்த, பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த, சுயமரியாதை உள்ள பெண்ணாகக் காட்டப்படுவார். ஆனால், அவருக்கும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. ஹீரோவின் ஒரு பார்வைக்காகத் தன் ஒட்டுமொத்த முகத்தையும் கோணலாக்கி, கைகளைக் காற்றில் வீசி, கத்தி சண்ட பிரசண்டம் செய்வார்.

பெண் என்பவள் சின்ன விஷயத்திற்கெல்லாம் ஈகோ பார்த்துத் தூக்கில் தொங்குபவள்; அவளிடம் காதலைச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டாள், ஆனால் அவளை விட்டு விலகினால், ரயில் நிலையத்திற்குப் பின்னால் ஓடிவந்து கதறுவாள் என்ற ஒரு விசித்திரமான, முதிர்ச்சியற்ற பெண்மைப் பிம்பத்தை இத்திரைப்படம் யூத் ட்ரெண்ட் செட்டர் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

சுருக்கமாகச் சொன்னால், குஷி என்பது ஒரு காதல் கதையல்ல; அது தமிழ் இளைஞர்களின் மூளையை மழுங்கடித்து, அவர்களைத் தங்களின் சுயமரியாதையையும், சமூகப் பொறுப்பையும் மறந்து, ஒரு பெண்ணின் இடுப்பு மடிப்புக்குள்ளும், ஆண் மற்றும் பெண்ணின் பிடிவாதத்திற்குள்ளும் சிறை வைத்த ஒரு மென்மையான உளவியல் பயங்கரவாதம்.

இன்று நாம் பார்க்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரத்திற்கும், டாஸ்க்குகளை விட ஆட்டிடியூட் முக்கியம் என நினைக்கும் தலைமுறைக்கும் சீரழிவின் விதையாகப் போடப்பட்ட திரைப்படம் குஷிதான்.

குஷி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனின் லவ்வர் பாய் பிம்பத்திற்குத் தங்கக் கிரீடம் சூட்டி, அதன் இயக்குநரை ஹிட் இயக்குனர் நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அதுவரைக்கும் தமிழ் சினிமாவில் காதல் என்பது ஏதோ ஒரு தெய்வீகமான, தியாகம் நிறைந்த விஷயமாகப் பிம்பப்படுத்தப்பட்டிருந்தது. குஷி அதை அப்படியே உடைத்து, காதலை மிக சாதாரணமான, ஹார்மோன் சார்ந்த, உடல் சார்ந்த ஒரு கவர்ச்சியாக மாற்றியது. இளைஞர்கள் மனதில் காதல் என்றால் இவ்வளவுதானா? என்கிற ஓர் அரைகுறை மதிப்பீடு இத்திரைப்படத்திலிருந்துதான் ஆரம்பித்தது.

விஞ்ஞான பூர்வமாகப் பார்த்தால், மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு. எதை நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கிறோமோ, அதுதான் உலகத்திலேயே பெரிய விஷயம் என்று நினைத்துக்கொள்ளும். குஷியில் ஒரு சின்ன தவறான புரிதல் பெரிய இமாலயப் பிரச்னையாகக் காட்டப்படும். ஒர் இடுப்புப் பார்வைக்காக, இரண்டு படித்த, முதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் உலகமகா யுத்தம் நடத்துகிறார்கள் என்பதைக் காட்டியே தமிழகத்தில் கோடி கணக்கில் கல்லா கட்ட முடியும் என்றால், நம் சமூகத்தின் முதிர்ச்சி இத்திரைப்படத்தால் எந்த அளவுக்கு இடறி விழுந்தது என்பதை நீங்களே கணித்துக் கொள்ள வேண்டியதுதான்.

பொறுப்புணர்ச்சி, சமூகப் பார்வை, சக மனிதன் மீதான பரிவு என இவை எல்லாவற்றையும் உதறிவிட்டு, தன் ஆடைகள், தன் சிகை அலங்காரம், தன் ஆட்டிடியூட் மட்டுமே முக்கியம் என்ற சுயமோகத்தில் ஒட்டுமொத்தத் தலைமுறையும் ஆழ்த்தப்பட இத்திரைப்படம் பிரதான காரணமாகியது. அதுமட்டுமல்ல, தீவிரமான சிந்தனைகள் எள்ளலுக்குள்ளாக்கப்பட்டன; அசட்டுத்தனங்கள் அற்புதங்கள் என்று கொண்டாடப்பட்டன.

குஷி ஏற்படுத்திய உளவியல் பாதிப்பு என்பது, அது தமிழ் இளைஞர்களின் அக உலகைக் காலி செய்துவிட்டு, அங்கே ஒரு பெரும் சூன்யத்தை நிரப்பியதுதான். ஒரு திரைப்பார்வையாளனுக்கு அந்தத் திரைப்படம் திரையில் காட்டிய வண்ணமயமான உலகம், உண்மையில் ஒரு சமூகத்தின் சிந்தனை வறட்சியின், அதன் உளவியல் வீழ்ச்சியின் தொடக்கப் புள்ளியாகவே இன்று வரை காட்சியளிக்கிறது.

குஷி காட்டும் காதல் என்பது காதலே அல்ல; அது காதலைப் போலப் பாசாங்கு செய்யும் இரு பிம்பங்களின் போலி விளையாட்டு.

காதல் என்றால் ஒருவரையொருவர் டார்ச்சர் செய்து கொள்வதுதான் வாலிபம் என்றும், மக்கரீனா என்றும் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடினால் அத்தனை அநாகரிகங்களையும் ரசிக்கலாம் என்றும், தேவையற்ற ஈகோ பாராட்டிப் பிரியப் பார்ப்பதே காதலின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஈகோ சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

13 Jul 2026

எலும்புக்கூடும் எந்திர மனங்களும்!

எலும்புக்கூடும் எந்திர மனங்களும்!

ஒடிஸாவின் கேந்ஜார் மாவட்டத்தில் நடந்த அந்தச் சம்பவம் ஒரு த்ரில்லர் நாவலின் க்ளைமாக்ஸ் போல இருக்கிறது. ஆனால் இது புனைவல்ல, நிஜம்.

ஜித்து முண்டா என்கிற சாமானியர், வங்கி மேலாளரின் முன்னால் ஒரு துணிப்பையைத் திறக்கிறான். உள்ளே இருப்பது அவரது அக்கா கல்ரா முண்டாவின் எலும்புக்கூடு.

இதோ என் அக்கா. பணத்தைக் கொடு! என்கிறார் ஜித்து முண்டா வங்கி மேலாளரிடம்.

இந்தக் காட்சியை இப்போது உங்கள் மனதில் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். சுற்றியிருந்தவர்கள் அலறியிருப்பார்கள். வங்கி மேலாளர் மயக்கமுற்றிருக்கலாம். ஆனால், இதற்குக் காரணமான அந்த சிவப்பு நாடா மனநிலை மட்டும் இன்னும் சாகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நமது சிஸ்டம் ஒரு விசித்திரமான பிராணி. அதற்கு உயிர் கிடையாது, ஆனால் அது உயிர்ச் சான்றிதழ் கேட்கும். அதற்கு உணர்ச்சிகள் கிடையாது, ஆனால் அது வாரிசுச் சான்றிதழ் கேட்டு நம்மை அழ வைக்கும்.

அந்த வங்கி மேலாளர் சொன்னாரே ஒரு வார்த்தை,  முடிந்தால் உன் அக்காவையே கூட்டி வா. அவர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பெற்றுக் கொள் என்று. இது வெறும் அதிகாரத் தோரணை அல்ல, மனித நேயம் வற்றிப்போன ஒரு மென்பொருளின் எர்ரர் மெசேஜ்.

ஜித்து முண்டா செய்த காரியம் கரடுமுரடானதுதான். ஆனால், ஒரு மனிதன் புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்றால், இந்த டிஜிட்டல் இந்தியாவின் வேகம் எங்கே நிற்கிறது?

இப்போது நீங்கள் இன்னும் சில உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இறந்து போன ஜித்து முண்டாவின் அக்கா வங்கியில் சேர்த்து வைத்தது வெறும் 20,000 ரூபாய்தான். அது அவர் ஆடு மாடு மேய்த்துச் சேர்த்த ரத்தம்.

அந்தப் பணத்தை எடுக்க அவர் ஒரு எலும்புக்கூடாகவே வரவேண்டியிருக்கிறது.

வாரிசுதாரர் இல்லாத வங்கிக் கணக்கு என்பது, சாவியில்லாத பூட்டைப் போன்றது. அதை உடைக்க வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் எனப் பல படிகளை ஏற வேண்டும்.

ஆனால், எது எதற்கோ ஆட்டோமேட்டிக்காக மாறும் இந்தச் சிஸ்டம் ஏன் இன்னும் இதற்கு ஆட்டோமேட்டிக்காக மாறவில்லை?

ஒருவர் இறந்துவிட்டால், அந்தத் தகவல் ஏன் தானாகவே வங்கிக்கும், மின்சார வாரியத்திற்கும் செல்வதில்லை? ஆதார்  போன்ற எண்கள் இருக்கும்போது, எதற்காக ஒரு மனிதர் தன் வாரிசுரிமையை நிரூபிக்க எலும்புக்கூட்டைச் சுமக்க வேண்டும்?

காரணம், மனித நேயம் என்பது சட்டப் புத்தகத்தில் இல்லை. அது கோப்புகளுக்கு இடையில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

எதார்த்தம் என்னவென்றால், இறந்தவர்களுக்குத் தேவைப்படுவது அமைதி; இருப்பவர்களுக்குத் தேவைப்படுவது அவர்கள் விட்டுச் சென்ற வாழ்வாதாரம்.

ஆனால் அதிகாரிகள், அந்த வாழ்வாதாரத்தையே ஒரு போர்க்களமாக மாற்றுகிறார்கள். ஜித்து முண்டாக்கள் உருவாகக் காரணம், சான்றிதழ்களை விடச் சட்டங்களின் பிடிவாதம் அதிகம் இருப்பதுதான்.

ஜித்து முண்டாவின் செயல் ஒரு எச்சரிக்கை. கோப்புகள் நகரவில்லை என்றால், மக்கள் புதைகுழிகளை நோக்கித் நகரத் தொடங்குவார்கள். அது ஒரு நாகரிக சமூகத்திற்கு அழகல்ல.

விதிமுறைகள் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதர்களை விதிகளுக்காகப் பலி கொடுக்காதீர்கள்.

அடுத்த முறை வங்கிக்குப் போகும்போது உங்கள் வாரிசுதாரர் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் வாரிசுகள் ஜித்து முண்டா போல் வங்கியின் ஏசி அறையில் உங்களை எலும்பு கூடாக உட்கார வைக்க வேண்டி வரலாம்!

*****

வீட்டிலிருந்தே வேலை அல்லது வீட்டிலிருந்தே சாவு

வீட்டிலிருந்தே வேலை அல்லது வீட்டிலிருந்தே சாவு

ஒரு காலத்தில், அதாவது கரோனா என்றொரு பூதம் உலகை ஆட்டியபோது ஒர்க் பிரம் ஹோம் முறைதான் ஐ.டி. ஜீவன்களின் ஆகச்சிறந்த சொர்க்கமாகப் பார்க்கப்பட்டது.

அதற்கு முன்புவரை, ஐந்து நாள்கள் மாடாய் உழைத்துவிட்டு, வார இறுதியில் தங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பப் கலாசாரம் என்றொரு தனி உலகத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

திடீரென லாக்டவுன் வந்ததும், வீட்டிலிருந்தே லேப்டாப்பைத் திறந்து உட்கார்ந்தார்கள். பெட்ரோல் செலவு மிச்சம், பார்மல் உடைகள் வாங்கும் செலவு மிச்சம் எனக் குஷியானார்கள்.

அம்மாவின் கைவண்ணத்தில் சூடான சாப்பாடு, குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிப்பது என ஆரம்பத்தில் எல்லாமே ஹனிமூன் காலம் போலத்தான் இனித்தது. நிறுவனங்களுக்கும் பில்டிங் வாடகை, ஏசி, கரண்ட் பில் மிச்சம்.

உண்மை என்னவென்றால், அப்போது பப் கலாசாரம் காணாமல் போனதே தவிர, மன அழுத்தம் போகவில்லை. மன அழுத்தம் மெல்ல மெல்ல வீட்டின் சமையலறைக்கே ஷிப்ட் ஆனது.

கொரோனாவிலிருந்து நிலைமை சீரானதும் சில நிறுவனங்கள் ஒழுங்காக ஆபீஸுக்கு வாருங்கள் என்றன. சில நிறுவனங்கள் பாதி நாள் வா, பாதி நாள் வீட்டிலிரு என்றன. ஆனால், இந்த வீட்டிலிருந்து வேலை என்பதில் ஒளிந்திருக்கும் ஆபத்தை நிறுவனங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன.

அலுவலக நேரம், சொந்த வாழ்க்கை என்ற இரண்டுக்கும் நடுவே இருந்த மெல்லிய கோடு அப்போது அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளின் மீது சவாரி செய்யும் வித்தைக் காரர்கள்.

விளைவு?

வீட்டில் நிசப்தம் என்பதே ஒரு பகற்கனவு ஆகி விட்டது. முக்கியமான கிளையண்ட் மீட்டிங்கில் இருக்கும்போதுதான் பக்கத்து வீட்டு மிக்ஸி அலறும், மோட்டார் சத்தம் போடும், தெரு நாய் குரைக்கும், குழந்தை அழுதே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும்.

காலையில் புத்துணர்ச்சியோடு கிளம்பி, சக மனிதர்களைப் பார்த்து, டீ பிரேக்குகளில் அரட்டையடித்து, மதிய உணவை நண்பர்களுடன் பகிர்ந்துண்ட அந்தப் பொற்காலம் தலைமறைவாகி விட்டது.

பூனை தன் குட்டியை எப்படிக் கவ்விக்கொண்டு போகுமோ, அதைப்போல ஐ.டி ஊழியர்கள் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு சமையல் மேடைக்கும், சாப்பாட்டு மேசைக்கும் அலைகிறார்கள்.

சக ஊழியர்களுடனான தொடர்பு வெறும் அலுவல் சார்ந்தது மட்டுமாகச் சுருங்கிவிட்டது. மனிதன் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வாழ முடியாது என்கிற அடிப்படை விதியே இங்கே அவுட் ஆப் டேட்டாகி விட்டது!

இதில் மிகவும் கொடுமையான விஷயம், இந்தியாவிலிருந்து கொண்டு வெளிநாட்டு நேரத்துக்கு வேலை செய்வது. மனித உடல் பகலில் உழைக்கவும், இரவில் தூங்கவும் டிசைன் செய்யப்பட்டது. ஆனால், நம் ஐ.டி சிங்கங்களோ நடுநிசி வரை லேப்டாப்புடன் மல்லுக்கட்டுகிறார்கள். பகலில் தூங்கலாம் என்றால் வீட்டு வேலைகள் கழுத்தை நெரிக்கும்.

குறிப்பாகப் பெண்களின் நிலை இந்த வீட்டிலிருந்தே வேலை என்பதால் மிகவும் மோசமாகி நரகமாகி விட்டது.

ஐ.டி. வேலைகளால் பெண்கள் இந்த நூற்றாண்டில்தான் கொஞ்சம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தார்கள். அழகாக ஆடை உடுத்தி, தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பும்போதே அவர்களுக்குள் ஒரு தனித் தன்னம்பிக்கை பிறந்தது. ஆபீஸில் நடக்கும் கொண்டாட்டங்கள் அவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் தந்தன.

ஆனால், இந்த வீட்டிலிருந்து வேலை முறை அவர்களை மீண்டும் கூண்டுக்கிளி ஆக்கிவிட்டது. தூக்கிக் கட்டிய கொண்டையுடனும், நைட்டியுடனும் லேப்டாப் முன் அமர்ந்து பொழுதைக் கழிக்க எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும்? சிறகடித்துப் பறக்க நினைக்கும் பட்டாம்பூச்சிகளை ஒரு அறைக்குள் அடைத்து வைத்தால் என்னவாகும்?

அவர்களின் சிரிப்புக்கும், உதட்டுச் சாயத்துக்கும் பின்னால் ஓராயிரம் அல்லல்களும், மன உளைச்சல்களும் ஒளிந்துள்ளன.

மேலை நாட்டுக்கு ஒப்பான, சுத்தமான, ஏசி பொருத்திய ஐ.டி நிறுவனங்கள் பலருக்கு இரண்டாவது வீடு போலத்தான் இருந்தது. அங்கே தேங்கி நிற்கும் குட்டை போல இல்லாமல், புதிய விஷயங்களை நண்பர்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பாவது கிடைத்தது.

ஆனால், தற்போதைய நிலைமை?

ஆபீஸுக்குப் போனால் அலைச்சல் என்று நினைத்தவர்கள், இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். சுருக்கமாகச் சொன்னால், வீட்டிலிருந்து வேலை என்பது சுதந்திரம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு சொகுசான ஆயுள் தண்டனை!

Work while you work, Play while you play என்பது போல வீட்டு வேலைகளை வீட்டிலும், அலுவலக வேலைகளை அலுவலகத்திலும் செய்வதே நல்லது.

*****

12 Jul 2026

இசை × 48,000 = ஜானகி எனும் மகா பாடகி!

இசை × 48,000 = ஜானகி எனும் மகா பாடகி!

மரணத்திற்கு இசை ரசனை கம்மி என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால், 20 மொழிகளில் 48,000 பாடல்களைப் பாடி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் செவிகளிலும் தேனைக் கொட்டிய ஒரு குரலை, இப்படி சட்டென்று மியூட் செய்ய அதற்கு எப்படி மனது வந்தது?

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனது 88 ஆவது வயதில் மைசூருவில் காலமானார். வயது முதிர்வு என்பது ஒரு காரணம் என்றாலும், கடந்த ஜனவரியில் அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா மறைந்த அதிர்ச்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை என்கிறார்கள். கணவர் ராம்பிரசாத் 1997 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். தனிமை, துயரம், முதுமை என எல்லாம் சேர்ந்து ஒரு மகா குரலை அணைத்துவிட்டது என்றுதான சொல்ல வேண்டும்.

பத்து வயதில் நாகஸ்வர வித்வான் பைடி சுவாமியிடம் ஆரம்பப் பாடம் படிக்கப் போனபோது, மாஸ்டர் இவரை சும்மா உட்காரச் சொல்லிவிட்டு, மற்ற மாணவர்களிடம் “இவரைப் பார்த்து சங்கதி கத்துக்கோங்கப்பா” என்று ஜானகியைக் காட்டியிருக்கிறார். பார்ன் ஜீனியஸ் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

ஜானகியின் வாழ்க்கை ஒரு விசித்திரமான இசைச் சுழல். 1938 இல் ஆந்திராவின் பல்லபட்டா கிராமத்தில் பிறந்து, 19 ஆவது வயதில் ஏவி.எம். ஸ்டுடியோவின் ஒப்பந்தப் பாடகியாக மெட்ராசுக்குள் நுழைந்தபோது, அவர் ஒரு சகாப்தத்தைத் தொடங்குகிறார் என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1957 இல் விதியின் விளையாட்டு என்ற படத்தின் மூலம் தொடங்கிய அந்தப் பயணம், அடுத்த 60 ஆண்டுகளுக்கு இந்தியத் திரையிசையை ஆட்டிப்படைத்தது.

ஆனால், அவரது சினிமா உலகப் பிரவேசம் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 1957 இல் ஏவிஎம் ஆடிஷனில் தேர்வாகி, விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடலைப் பாடினார். பாட்டு பிரமாதம். ஆனால், விதி நிஜமாகவே விளையாடியது. படம் ரிலீஸாகவே இல்லை!

முதல் பாட்டே பெட்டிக்குள் முடங்கிய சோகத்தை அவரே பகிர்ந்துள்ளார். அதற்குப் பிறகு மதகளநாட்டு மேரி என்ற படம்தான் அவரது அதிகாரப்பூர்வ முதல் தமிழ் பாடலானது.

1957 இல் தொடங்கிய அந்தப் பாட்டுப் பயணம், 2016 இல் 10 கல்பனகள் என்ற மலையாளப் படத்தோடு முற்றுப்பெற்றது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இசை அரசாங்கம் அது.

மரணம் ஜானகியை அழைத்துக்கொண்டு போய்விட்டது. ஆனால், போவதற்குள் அவர் அள்ளிக் குவித்த விருதுகளையும், நிகழ்த்திய வித்தைகளையும் பார்த்து எமதர்மனே சற்று மிரண்டுதான் போயிருப்பான்.

தேசிய விருதுகள் நான்கு வாங்கியது ஒருபுறமிருக்க, மாநில அரசுகள் இவருக்குப் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை வாரி வழங்கியிருக்கின்றன. மொத்தம் 33 மாநில விருதுகள்.

இதுதவிர, இந்தியில் சாஹேப் படத்திற்காக பிலிம்பேர் விருது, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவா விருது, மைசூரு பல்கலைக்கழகம் கொடுத்த கௌரவ டாக்டர் பட்டம் என அவரது அலமாரி விருதுகளால் நிரம்பி வழிந்தது.

ரசிகர்களோ அவரை தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றும், கான கோகிலா என்றும் செல்லமாக அழைத்துக் கொண்டாடினார்கள்.

இளையராஜா என்னும் இசையின் ஞானமும், எஸ்பிபி என்னும் காதலின் குரலும், ஜானகி என்னும் உணர்ச்சிகளின் பேரரசும் இணைந்த அந்த முக்கோணக் கூட்டணி தென்னிந்திய திரையிசையின் பொற்காலம்.

எஸ்பிபியோடு இணைந்து ஜானகி பாடிய டூயட்டுகள் அத்தனையும் காதலர்களின் தேசிய கீதங்கள். யேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன் என அத்தனை ஜாம்பவான்களுடனும் ஜோடி சேர்ந்து பாடியுள்ளார் ஜானகி.

ஜானகியின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், அவர் தன் வாழ்நாளில் அதிக பாடல்களைப் பாடியது கன்னட மொழியில்தான்! மொழி என்பது ஜானகிக்கு வெறும் உச்சரிப்பு மட்டுமே, அவரது உணர்வு எப்போதும் இசையாகவே இருந்தது.

ஜானகி ஒரு குரல் பிரம்மா. குரலை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார். ஐந்து வயதுக் குழந்தையின் மழலை வேண்டுமா? ஜானகி ரெடி. அறுபது வயதுப் பாட்டியின் தழுதழுப்பு வேண்டுமா? அதற்கும் ஜானகி ரெடி. காதலின் உச்சம், விரகத்தின் தவிப்பு, பக்தியின் உருக்கம் என மனித உணர்ச்சிகளின் அத்தனை அலைவரிசைகளையும் தன் தொண்டைக்குள் ஒளித்து வைத்திருந்தார்.

கே.வி.மகாதேவன் தொடங்கி, இளையராஜா வழியாக ஏ.ஆர்.ரஹ்மான் வரை அத்தனை இசையமைப்பாளர்களும் இவரை வைத்துத் தங்களின் இசைப் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள். மவுனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு அவரே இசையமைக்கவும் செய்தார். மவுனத்திற்கும் இசைக்கும் நடுவேயான தூரத்தை அவர் நன்கு அறிந்திருந்தார் போலும்.

மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் அவரது மூச்சு நின்றபோது, இந்தியத் திரையுலகின் ஒரு பெரும் பகுதி நிசப்தத்தில் மூழ்கியது.

மரணம் ஜானகியின் உடலை எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் பாடிவிட்டுப் போன 48,000 பாடல்களையும் என்ன செய்யும்? ஏதாவது ஒரு நள்ளிரவில், எவரோ ஒருவரின் ஏகாந்தத்தின் உச்சத்தில் செந்தூரப் பூவே ஒலிக்கும்போது ஜானகி மீண்டும் உயிர்பெற்றுக்கொண்டுதான் இருப்பார். மரணமே, நீ தோற்றுவிட்டாய்!

*****

மயானத்துச் சாம்பலும் வன்முறைக் காவியமும்

சீரழித்த சினிமா – 38

பிதாமகன்

மயானத்துச் சாம்பலும் வன்முறைக் காவியமும்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் அக்டோபர் திங்களில், தீபாவளித் திருநாளின் நல்வாழ்த்துகளோடு, தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நாகரிக ஒழுக்கத்திற்கும், மனிதநேய விழுமியங்களுக்கும் திரையரங்கு வாசலிலேயே பாதாளப் படுகுழிகள் தோண்டப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "நாயகன் என்பவன் பாசக் காரனாக இருப்பான், சமூகத்தோடு இணைந்து வாழ்வான்" என்ற ஆகச்சிறந்த சினிமாட்டிக் விதிகளுக்கு ஆதி முதல் அந்தம் வரை ரிவீட் அடித்து, "மயானத்தில் பிறந்து, பிணங்களின் சாம்பலை உடம்பில் பூசி, பேசத் தெரியாமல் மனிதர்களைக் கடித்துக் குதறும் ஒரு காட்டுமிராண்டிக்கு, ஒரு லோக்கல் 420 திருடன் பழக்கமானால் போதும்; அவன் செய்யும் அத்தனை அராஜகங்களும், மனித உடல்களைத் துண்டு துண்டாக்கும் வன்முறைகளும் உன்னதமான நட்பு என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, பிதாமகன் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் மிருகத்தனமாக உறுமும் போலிப் பாய்ச்சல் பிம்பமும், லோக்கல் பித்தலாட்ட ஜோல்னா திருடனின் ஓயாத வாய் மாலமும், இயக்குனரின் வழக்கமான இருண்ட, பிணவாடை வீசும் உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மயான பூமி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த வாழ்வியல் நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு சமூகத்தில் வாழ விரும்பினால், உங்களுக்குப் படிப்போ அல்லது சட்ட ஒழுங்கோ முக்கியமல்ல. கஞ்சா வியாபாரம் செய்யும் ஒருவனுக்கு நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்; பிறகு ஒரு 420 உங்களுக்கு விசுவாசமானால், அவனைக் கொல்பவனின் தொண்டையைக் கடித்துக் குதறும் அசாத்திய மிருகத்தனம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற குடிமைச் சமூக அமைப்புகள் எல்லாம் இப்படத்தின் பெரிய இடத்து நிலப்பிரபுக்களுக்கும், இந்த மயானத்து மிருகத்திற்கும் பொருந்தாது.

ஊரின் பெரும்புள்ளி கஞ்சாத் தோட்டம் நடத்தி, தன் ஆட்களை வைத்து உங்களை மிரட்டினால், போலீஸைக் கூப்பிடக் கூடாது; தானே ஒரு பிதாமகனாக மாறி, ஒரு நரமாமிசம் தின்னும் மிருகமாக விஸ்வரூபம் எடுத்துச் சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். அதுதான் ஒரு சமூகப் பிரஜையின் ஆகச்சிறந்த அடையாளம் என்று இத்திரைப்படத் தாக்கத்தால் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் ஒழுங்காக வாழாமல், "நாங்கெல்லாம் நட்புக்காக உசுரையே கொடுப்போம்டா, இறங்குனா சித்தன் மாதிரி கடித்துக் குதறிடுவோம்" என்று தேவையில்லாமல் முறுக்கிக் கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

மனிதனை மனிதன் கடித்துக் குதறும் உறைபனியூட்டும் வக்கிரத்தையும் கொடூரத்தையும், உணர்ச்சிமயமான, ஆன்மீகத் தகிப்பு நிறைந்த பின்னணி இசையாலும், பளபளக்கும் தேனி மாவட்டக் கிராமத்து லொகேஷன்களாலும் மூடி மறைத்து, மிருகத்தனத்தைக் கலை வடிவம் என்று பார்ப்பவனைக் கமர்ஷியலாக ஏமாற்றினார் இப்பட இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு காட்டுமிராண்டி தன் கைகளால் பழிவாங்கினால் மட்டும்தான் இறுதி நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் விசித்திரமானது. ஒரு பெண் எந்நேரமும் கஞ்சா கடத்துவதும், ஒரு மயானத்துக் காட்டுமிராண்டியிடம் அனுதாபம் கொண்டு அவனை நேசிப்பதை காதல் என்றும், இன்னொரு பெண், ஒருவன் லோக்கல் 420 எனத் தெரிந்தும் அவனிடம் வம்படியாகக் காதல் வளர்ப்பதும், அவனது பிராடுத்தனங்களை முதலில் வெறுத்து, பின்பு கியூட் என்று ரசிப்பதுமாக ஒரு போலித் துறுதுறுப்புக் கொண்ட பாத்திரமாக காட்டப்பட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறை நகைச்சுவையாக்கப்பட்டது இத்திரைப்படத்தின் மூலம் நேர்ந்த அவலம். பெண்களின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களின் முதிர்ச்சியற்ற சேட்டைகளையும், வறுமையையும் ரொம்பக் கமர்ஷியலாகக் காட்டி ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

பிதாமகன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகரனுக்கு தேசிய விருதையும் ஆக்சன் ஹீரோ நாற்காலியையும் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

மனிதன் மிருக நிலையிலிருந்து சிந்திக்கும் நிலைக்கு உயர்ந்ததே மொழி கண்டுபிடித்த பிறகுதான் என்று மானுடவியல் சொல்கிறது. ஆனால் இப்படத்தன் இயக்குனரோ, நாயகனுக்கு மொழி தேவையில்லை, அவன் கத்தினால் போதும்; கடித்தால் போதும்; கஞ்சா விற்றால் போதும்; அவனுக்குள் ஓர் உன்னதமான ஆன்மா இருக்கும் என்று நம்ப வைத்தார்.

படத்தல் நாயகன் பேச மாட்டார். சீறுவார். கடிப்பார். இதைப் பார்த்துவிட்டு, வீடுகளில் தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தெரியாத கணவன்மார்களும், பிள்ளைகளும், "நான் பிதாமகன் மாதிரி கசப்பானவன், ஆனா பாசக்காரன்" என்று தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு வகை உளவியல் நோய் பரவ, பேச மறுப்பது ஒரு மாபெரும் ஆன்மீகத் தகுதி எனச் சமூகம் தப்பாகப் புரிந்துகொண்டது.

மனிதன் என்பவன் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து செதுக்கி வைத்த ஒரு சமூகப் பிராணி. அவனுக்கு நாகரிகம், உடை, மொழி, கலாச்சாரம், பண்பாடு எனச் சொல்லித் தந்த பிறகு, இப்படத்தின் இயக்குநர் அவை எல்லாவற்றையும் அதை ஒரே அடியில் அடித்து சுக்கு நூறாக உடைத்தார். சுடுகாட்டில் பிணங்களோடு பிணமாய் வளரும் ஒரு ஜீவனுக்குள் எந்த சமூகக் கட்டுப்பாடும் கிடையாது என்றும், அவன் பேசும் மொழி அமானுஷ்யமானது என்றும் நம்ப வைத்து, அந்த அசுர சக்தியின் கோரத்தனத்தைக் காட்டித் தியேட்டரில் இருந்த ரசிகர்களின் அடிமனதில் தூங்கிக் கொண்டிருந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கிளறிவிடக் காரணமானது இத்திரைப்படம்.

இத்படத்தின் இறுதிக்காட்சியில் காட்டப்படும் கொடூரமான வன்முறையும், பழிவாங்கலும் பலவீனமான மனநிலை கொண்ட பார்வையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலையும், அதிர்ச்சியையும் தந்ததை மறுக்க முடியாது. மக்களுக்கு எப்போதும் வன்முறை மேல் ஒரு ரகசியக் கவர்ச்சி உண்டு. பிதாமகன் செய்த பெரிய தவறு, வன்முறையை நியாயப்படுத்தியது அல்ல, அதை அழகுபடுத்தியது. படத்தின் நாயகன் சித்தன் அடிக்கும்போது தியேட்டரில் விசில் பறந்தது.

நியாயப்படி, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மிருகத்தனமாகக் கடிப்பதையும் அடிப்பதையும் பார்த்துப் பயந்திருக்க வேண்டும். ஆனால், சமூகம் அதை ஹீரோயிசம் என்று கொண்டாடியது. எம்பதி எனும் பிறர் வலியை உணர்தல் என்ற உணர்வை விட, அக்ரஷன்தான் பவர்புல் என்ற தவறான உளவியல் பதிவை இத்திரைப்படம் இளைஞர்கள் மனதில் விதைத்தது.

பிதாமகனில் வன்முறை என்பது கதையின் போக்கிற்குத் தேவையான ஒரு புள்ளியில் வந்து போவதில்லை. அதுவே கதையாக, அதுவே காட்சியாக, அதுவே மொத்தப் பிரதியின் ஆன்மாவாகப் பிரதிபலித்தது. மரணமும், சித்திரவதையும், ரத்த சகதியும் மிகக் குதூகலத்தோடு காட்சிப்படுத்தப்பட்டது. விளிம்பு நிலை மனிதர்கள் என்றாலே வன்முறையாளர்களாகவும், போதைப்பொருள் கடத்துபவர்களாகவும் மட்டும்தான் இருப்பார்கள் என்ற ஒரு தவறான பிம்பத்தைப் பொதுப்புத்தியில் விதைக்கவும் இத்திரைப்படம் வழிவகுத்தது.

தமிழனுக்கு இயல்பாகவே சோகப் படங்களின் மீது ஓர் அலாதிப் பிரியம் உண்டு. அதிலும் பிதாமகன், உலகத்தில் நல்லவர்களுக்கு இடமே இல்லை, நீ நல்லவனாக இருந்தால் சுடுகாட்டில் இரு, அல்லது சுடுகாட்டுக்கு போ என்ற அவநம்பிக்கை வாதத்தை விதைத்தது. படத்தின் திரைக்கதையாக்கம் ஏற்படுத்திய தாக்கம், தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் பலரது அன்றாடச் சந்தோஷங்களைக் காவு வாங்கியது. வாழ்க்கையின் மீதான ஒருவித ஒவ்வாமையையும், பிணங்களின் மீதான ஒரு விசித்திரக் கவர்ச்சியையும் அது பார்வையாளன் ஆழ்மனதில் பதுக்கி வைத்தது.

மனிதர்களுக்கிடையேயான உறவுகளில் உள்ள மென்மையும், தியாகமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக மலிவானதாக, அல்லது முட்டாள்தனமாகப் பிதாமகன் திரைப்படத்தில் நையாண்டி செய்யப்பட்டன. சமூகத்தின் மீது, சக மனிதனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைத் தர வேண்டிய ஒரு படைப்பு, எல்லாவற்றின் மீதும் ஒரு தீராத அவநம்பிக்கையையும் கசப்பையும் மட்டுமே இத்திரைப்படம் மூலமாகப் பார்வையாளனின் மனதில் மிச்சம் வைத்துச் சென்றது.

பிதாமகன் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்த மிக மோசமான பாடம் என்னவென்றால், நீங்கள் நாகரிகமாக உடை உடுத்தி, நியாயமாக வாழ்ந்தால், வில்லனால் கொல்லப்படுவீர்கள். நீங்கள் அழுக்காக இருந்து, கஞ்சா விற்று, பேசாமல் இருந்தால், உங்களைக் கொண்டாட ஒரு தேசிய விருது குழுவோடு காத்துக் கொண்டிருக்கும் என்பதுதான். இப்படி ஒரு பொதுபுத்தியோடு சமூகம் உருப்படாமல் போனதில் இப்பட இயக்குநரின் பங்கு அளப்பரியது!

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை தேனி, மதுரை மாவட்டங்கள் ஆன்மீகத்திற்கும், விவசாயத்திற்கும், விருந்தோம்பலுக்கும் புகழ்பெற்ற அமைதியான ஊர்கள். ஆனால், அதற்குப் பிறகுதான், அங்கெல்லாம் மனிதர்களை வெட்டிப் புதைப்பதும், கஞ்சா வளர்ப்பதும்தான் முதன்மைத் தொழில் என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

பிதாமகன் தமிழ் இளைஞர்களைத் தங்களின் நிஜமான சராசரி நாகரிக வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு இளைஞனும் தனக்குள்ளே ஒரு காட்டுமிராண்டியை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியே ஒரு சாதுவான மனிதன் போல வாழ்ந்து மடிய வேண்டிய சினிமாட்டிக் சாபத்தைத் தந்துவிட்டுச் சென்றது!

படத்தின் இறுதியில் சித்தன் எடுக்கும் வன்முறைத் தேர்வான வில்லனை வேட்டையாடுவது என்பது அவனது முழுமையான இருத்தலியல் கோபத்தின் வெளிப்பாடு. ஆனால், அந்த வன்முறை அவனுக்கு விடுதலையைத் தரவில்லை; மாறாக, மீண்டும் அவனை எவராலும் புரிந்துகொள்ள முடியாத ஓர் இருண்ட தனிமைக்கே கொண்டு சேர்த்தது.

வாழ்க்கையே ஏற்கனவே கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கிறது. அதில் சினிமாவும் இன்னும் கொஞ்சம் கரியைப் பூச வேண்டுமா என்ற கேள்விக்கு இத்திரைப்பட இயக்குநர்தான் பதில் சொல்ல வேண்டும்.

மயானத்தில் வாழ்வதுதான் ஆகச்சிறந்த தத்துவம் என்றும், இளம் காத்து வீசுது என்ற மெல்லிசைப் பாட்டைக் கேட்டால் அத்தனை கொடூரக் கொலைகளையும் ரசிக்கலாம் என்றும், பிணவாடையும் வன்முறையும் கலந்ததுதான் உன்னதமான தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சண்டைக்காரச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

11 Jul 2026

காற்றின் விலையும் கலோரியின் எடையும்

காற்றின் விலையும் கலோரியின் எடையும்

பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த ஏமாற்று வித்தை எது தெரியுமா?

எதுவுமே இல்லாத ஒன்றை, எல்லாமே இருப்பது போல் காட்டுவது.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், கடைகளில் தொங்கும் லேஸ் பாக்கெட்டுகள்.

நீங்கள் ஐந்து ரூபாயையோ, இருபது ரூபாயையோ கொடுத்து வாங்குவது உருளைக்கிழங்கு சிப்ஸை அல்ல, பிரத்யேகமாக ஆலைகளில் அடைக்கப்பட்ட நைட்ரஜன் காற்றை!

பாக்கெட்டைப் பார்த்தால் ஒரு தலையணை அளவுக்கு உப்பிக் கொண்டு கம்பீரமாக இருக்கும். ஆனால், அதன் எடையோ பூவின் இதழை விட லேசாக இருக்கும்.

சரி, எடையும் லேசாக இருக்கிறது, நாமும் லேசாக ஆகிவிடலாம், என்ற உன்னத தத்துவ நோக்கில் மனிதன் அதை வாங்குகிறான்.

ஆனால், அங்கேதான் பிரபஞ்சம் தன் இருள் நகைச்சுவையை ஒளித்து வைத்திருக்கிறது.

பாக்கெட்டின் எடை மிக லேஸ்தான். ஆனால், அதைத் தின்று முடித்த பிறகு உங்கள் தொப்பையில் ஏறும் கொழுப்பின் எடை இருக்கிறதே. அது ஹெவி!

பாக்கெட்டைப் பிரித்ததும் புஸ் என்று காற்று வெளியேறும். உள்ளே குனிந்து பார்த்தால், ஏதோ ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல, அடியாளத்தில் நான்கு அல்லது ஐந்து சிப்ஸ் துண்டுகள் சோகமாகக் காட்சியளிக்கும்.

இவ்வளவுதானா? என்று நம் மூளை கேட்கும்போதே, கைகள் அந்தச் சிப்ஸை வாய்க்குள் தள்ளியிருக்கும். அந்த நொடியில் நாக்கில் கரையும் உப்பு, காரம், மற்றும் கொழுப்பு ஆகியவை மனிதனை ஒரு தற்காலிக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

சாப்பிட்டு முடித்ததும் பாக்கெட் காலி. கையில் எடையும் இல்லை, பையிலும் எடையில்லை. ஆனால், அந்த ஐந்து சிப்ஸ் துண்டுகளுக்குள் ஒளிந்திருந்த கலோரிகள் உடனே தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். அவை நேராகச் சென்று உங்கள் இடுப்பிலும், தொப்பையிலும் தஞ்சம் புகுந்து கொள்ளும்.

அதாகப்பட்டது, பாக்கெட்டின் எடை 30 கிராம் அல்லது ஏறத்தாழ பூஜ்ஜியம்.

அதன் தத்துவார்த்த விளைவு, உங்கள் எடையில் கூடுதலாக 2 கிலோ!

என்னவொரு அற்புதமான அறிவியல் முரண்? லேசான பொருளைத் தின்னத் தின்ன மனிதன் கனமாகிக் கொண்டே போகிறான்.

உலகில் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் டயட் இருக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தோற்பது எங்கே தெரியுமா? இந்த லேசான பாக்கெட்டுகளின் முன்னால்தான்.

சாத்தான் எப்போதுமே கனமான இரும்புக் குண்டுகளோடு வருவதில்லை. அவன் சில சமயம் காற்றில் மிதக்கும் மஞ்சள் நிற லேஸ் பாக்கெட்டுகளின் வடிவிலும் வருவான். எதை நாம் வெயிட் இல்லாதது என்று அலட்சியமாக நினைக்கிறோமோ, அதுதான் ஒருநாள் நம்மை வெயிட் மெஷின் மீது ஏறவிடாமல் பயமுறுத்தும் வல்லமை கொண்டது.

எனவே மக்களே, காசு கொடுத்து காற்றை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் அந்த இரண்டு உருளைக்கிழங்குத் துண்டுகளையும் தின்றால், அப்புறம் நீங்கள் லேசாக நடப்பதற்குக் கூட ஒரு ஆள் தேவைப்படும்!

*****