24 Jun 2026

ஆத்மார்த்த அலப்பறைகளும், உபநிடத பல்புகளும்!

ஆத்மார்த்த அலப்பறைகளும், உபநிடத பல்புகளும்!

ஜெயமோகன் வழக்கம்போல ஆரம்பத்திலேயே இளைஞர்களைக் கொஞ்சம் வாரிவிடுகிறார். இளமை என்றாலே கொந்தளிப்பு, தந்தை எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு என்று சைக்காலஜி பேசுகிறார்.

உண்மையில் விஷயம் அதுவல்ல; காந்தியின் சத்திய சோதனையை விட, அவரது சரளாதேவி சோதனைதான் வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது, அவ்வளவுதான்! வங்காளத்து மேட்டிமைவாதம், பாரதியாரின் சிறுகதை, பிரம்ம சமாஜம் × ஆரிய சமாஜம் என்று ஏகப்பட்ட வரலாற்றுப் பின்னணிகளோடு சரளாதேவி சௌதராணியை மேடைக்குக் கொண்டு வரப்படுகிறார்.

38 வயதில், கணவனும் மகனும் இருக்கும் போதே, 51 வயது காந்தியுடன் கடிதப் போக்குவரத்து நடத்தியிருக்கிறார் சரளாதேவி. காந்தியோ, தன் வழக்கமான பரிசோதனை பாணியில், இதற்கு “அறிவுத்துணைவி, “ஆத்மாவின் தோழி என்றெல்லாம் டிசைன் டிசைனாகப் பெயர் வைக்கிறார். நாமெல்லாம் இன்று Platonic Relationship என்று ஸ்டேட்டஸ் போடுவதைக் காந்தி அப்போதே காந்தியப் பாணியில் டிசைன் பண்ணியிருக்கார்!

அடுத்த கட்டமாக, திருமணத்தை நோக்கிக் காந்தி முடிவெடுத்தபோதுதான், சுற்றியிருந்த ராஜாஜியும், மகாதேவ தேசாயும் பதறிப்போய் அலறுகிறார்கள். இதைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்கிறார்கள். காந்தியோ விடாமல், “இது உடற்காதல் இல்லப்பா, இன்டெலக்சுவல் ஈர்ப்பு என்று வாதாடுகிறார்.

கடைசியில், இருபது வயது மகன் தேவதாஸ் வந்து, “அப்பா, அம்மாவைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கள் என்று சென்டிமென்ட் பிளாக்மெயில் செய்த உடனே, காந்தி ஒரு லெட்டரைப் போட்டுவிட்டு விலகி விடுகிறார். தன் சுயசரிதையில், “என் ஆணவம் என்னை ஒரு தீயாலான பாதைக்குள் கொண்டு செல்லப் பார்த்தது என்று இதைக் காந்தியடிகள் சொல்வதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

சரளாதேவி சும்மா இருக்கவில்லை. காந்திக்கு எதிராகப் பேனாவை எடுத்துப் போர்க்கொடி தூக்குகிறார். காந்தி பண்றதெல்லாம் நாட்டுக்குக் கேடு என்று கட்டுரைகளாகக் கொட்டுகிறார்.

இதையெல்லாம் படித்துவிட்டு நம்ம ஜெயமோகன், காந்தியவாதி ஜி.குமாரபிள்ளையிடம் போய், “சரளாதேவி செம அறிவாளி சார், அவங்க காந்தியை எதிர்த்தா அதுல நியாயம் இருக்கும்ல?” என்று ஆவேசப்பட்டிருக்கிறார். அதற்கு குமாரபிள்ளை, “தம்பி, முதல்ல காந்தியைப் படிப்பா என்று சில புத்தகங்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

அங்குதான் அந்த மகா மெய்ஞ்ஞான விவாதம் நடக்கிறது. சரளாதேவி ஏன் காந்தியைப் புரிந்துகொள்ளவில்லை? அதற்கு குமாரபிள்ளை, ஈஸோவாஸ்ய உபநிடத வரியை எடுத்துப் போடுகிறார். “அறியாமையில் இருப்பவன் இருளில் இருக்கிறான்; ஆனால், எனக்கு எல்லாம் தெரியும் என்று அலையும் அறிவுஜீவி, அதைவிடப் பெரிய இருளில் அதாவது, ஆணவ இருளில் இருக்கிறான்.”

சரளாதேவியின் கட்டுரைகளில் நான் என்ற வார்த்தைதான் ஓங்கி ஒலித்ததாம். கடைசி காலத்தில் சரளாதேவி இந்த அறிவுஜீவி ஆணவத்தை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஆன்மிகப் பாதைக்கு மாறி, காந்தியைப் புரிந்துகொண்டாராம்.

நல்லவேளை! மெய்யறிவின் ஒளி கிடைத்து, காந்தி குடும்பத்திலேயே தன் மகனுக்குப் பெண்ணும் எடுத்து, சுபமங்களமாக கதையை முடித்திருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, சயின்டிஸ்ட்டாக இருந்தாலும் சரி ரிஜெக்சன் வந்தால் முதலில் வருவது கோபமும் வன்மமும்தான். அதுக்கு அறிவு விதிவிலக்கல்ல. அங்க வேலை செய்வது லிம்பிக் சிஸ்டம், மூளை இல்லை!

சுருக்கமாகச் சொன்னால், "அறிவின் இருளுக்கு மாற்று அறியாமை அல்ல, மெய்யறிவு" என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த ஆத்மார்த்த காதல்களும், அது பிரேக் அப் ஆனதும் வரும் வன்மங்களும், அப்புறம் வயசானதும் வரும் தத்துவ ஞானங்களும் காலம் காலமாய் உலகத்துல நடக்குற அதே கொசுத்தொல்லைதான்!

அதற்கு ஏன் உபநிடதத்தை எல்லாம் இழுத்து, பாவம், அந்த இருட்டைக் குத்திக் கிழிக்க வேண்டும்? ஒருவர் தனது ஈகோவைப் புரிந்து கொண்டால் விசயம் முடிந்தது. இதற்கு ஆன்மீகம்தான் வேண்டும், குரு சிஷ்ய பாவம் அவசியம் என்றெல்லாம் ஏன் அநாவசிய ஆணிகளை அடிக்க வேண்டும்?

*****

தாத்தாவின் கத்தியும் தடம் மாறியு புத்தியும்!

சீரழித்த சினிமா – 22

இந்தியன்

தாத்தாவின் கத்தியும் தடம் மாறியு புத்தியும்!

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றாறாம் ஆண்டின் மே திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச சட்டபூர்வ ஜனநாயக விழிப்புணர்வுக்கும், நிர்வாகப் பகுத்தறிவுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, வர்மக்கலை மூலம் தர்மக் கொலை செய்யும் தாத்தாவைக் காட்டியதுதான் இந்தியன் திரைப்படம்.

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, லஞ்சம் வாங்குபவர்கள்; இரண்டு, லஞ்சம் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள். ஆனால், இந்தியன் திரைப்படம் நமக்கு ஒரு மூன்றாவது வகையைக் காட்டியது. லஞ்சம் வாங்குபவர்களை வர்மக் கலையால் குத்தி தர்மக் கொலை செய்யும் ஒரு முதியவர்தான் அந்த மூன்றாவது வகை.

படம் முன்வைக்கும் ஆகப்பெரிய ஆபத்தான தத்துவம் என்னவென்றால், சட்டம் தன் கடமையைச் செய்யாதபோது, ஒரு தனிமனிதன் கத்தியை கையில் எடுக்கலாம் என்பதுதான். அரசு அலுவலகத்தில் பியூன் முதல் அதிகாரி வரை காசு கேட்கிறார்கள். உடனே அவர்களைக் கொலை செய்தால் நாடு சுத்தமாகிவிடும் என்பதுதான் இத்தத்துவத்திற்கான சுருக்கமான பொழிப்புரை.

இது கேட்பதற்கு விசில் போடும் அளவுக்கு தியேட்டரில் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் இதற்குப் பெயர் அராஜகம். ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறை, காவல்துறை என்று இருக்கும்போது, ஒரு தாத்தா நாட்டாமையாக மாறித் தீர்ப்பு வழங்குவதை நியாயப்படுத்தியதுதான் இதன் முதல் சீரழிவு. இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டால், நாளை டிராபிக் சிக்னலை மதிக்காதவரைக் கூட வர்மக்கலையால் வைகுண்டம் அனுப்ப வேண்டி வரும் என்பதுதான் இதன் தாக்கம் ஏற்படுத்தும் இரண்டாவது சீரழிவு.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய, ஒரு நாட்டில் தவறு நடந்தால் சட்டம், காவல்துறை, நீதிமன்றம் மூலமாகப் போராட வேண்டும் அல்லது நிர்வாகச் சீர்கேட்டிற்குப் பின்னால் இருக்கும் சமூக பொருளாதாரக் காரணங்களை ஆராய வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, எண்பது வயது சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவருக்குத் கோபம் வந்தால், அவர் கத்தியையோ துப்பாக்கியையோ தூக்கி தன் கை விரல்களால் ஆட்காட்டி விரலை மடித்தே வர்மக் கலை மூலம் தர்மக் கொலை செய்யலாம் என்ற ஒரு புதுவிதமான பாசிச, அராஜக வக்கிர அத்துமீறலை  தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, இத்திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் இந்தியன் தாத்தா என்ற எதற்கும் அசையாத, எப்போதும் ஒழுக்கப் பாடம் நடத்தும் அந்தப் புனித பிம்பமும், டூயட் பாடும் ரப்பர் பொம்மைகளாகச் சுருக்கப்பட்ட கிளாமர் நாயகிகளின் ஆபாச நடனங்களும் சேர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கொலைக்கள நிலைக்குக் கொண்டு சென்றது என்பதை இன்னும் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

ஒரு நாட்டின் அத்தனை பிரளயங்களுக்கும், விபத்துகளுக்கும் ஒரே ஒரு காரணிதான் உண்டு. அது லஞ்சம். ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினால் பேருந்து கவிழ்ந்துவிடும், ஒரு மருத்துவர் லஞ்சம் வாங்கினால் குழந்தை இறந்துவிடும் என்ற மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு லாஜிக்கை விதைத்து, அதற்குரிய தீர்வாகச் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை இத்திரைப்படம் கொண்டாடியது.

தவறு செய்தவன் என் மகனே என்றாலும் கொல்வேன் என்ற உறைபனியூட்டும் பாசிசக் கோட்பாட்டின் மூலம், மனித உரிமைகளும் முறையான சட்ட விசாரணைகளும் அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.

இதனால், ஒரு முதியவர் தன் கைகளால் சட்டத்தை வளைத்து, வர்மக் கலையைப் பயன்படுத்தி நடுரோட்டில் கொலைகளை நிகழ்த்துவது குற்றமல்ல; அது நாட்டைச் சுத்தம் செய்யும் உன்னத யாகம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையின் சிக்கலான நிர்வாக அமைப்புகளைப் புரிந்து கொள்ளாமல், சமூக வலைத்தளங்களில் இந்தியன் தாத்தா மாதிரி எல்லாரையும் வர்மம் பண்ணிக் கொல்லணும்டா என்று மிக எளிதாகத் தன்னிச்சையான வன்முறையைத் தூண்டும் ஒரு முதிர்ச்சியற்ற, சட்டத்தை மதிக்காத வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நாயகனின் இன்னொரு பாத்திரமான சந்துரு வழியே, லஞ்சம் வாங்கியாவது ஒரு மாருதி காரையோ, பளபளக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பையோ வாங்கிவிடத் துடிக்கும் நடுத்தர வர்க்க வக்கிரத்தை ஜாலி என்று பெயரில் கமர்ஷியலாக விற்றது இந்தியன் திரைப்படம்.

லஞ்சத்தை வெகு தீவிரமாக எதிர்க்கும் கருப்பொருள் கொண்ட இத்திரைப்படம் நகைச்சுவைப் பாத்திரங்களை வைத்து அரசு அலுவலகங்களில் நடக்கும் அத்தனை முறைகேடுகளையும், லஞ்ச ஊழல்களையும் காமெடி என்ற பெயரில் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்த அவலத்தையும் என்டர்டெய்ன்மென்ட் என்ற பெயரில் செய்தது.

இதை இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால், ஒரு நாட்டின் முதுகெலும்பை அரிக்கும் ஊழலைக் கண்டு கொதித்தெழுந்து கேள்வி கேட்க வேண்டிய சமூகம், அதில் டைமிங் காமெடி செய்தால் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசித்து, காமெடி பாத்திரங்களாக்கிய அதிகாரிகளின் பொறுப்பின்மையையும், அநாகரிகத்தையும் என்டர்டெய்ன்மென்ட் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகியின் கதாபாத்திரம், விலங்கு நல ஆர்வலராகக் காட்டப்பட்டாலும், ஹீரோவின் போலி பிம்பத்தைப் பார்த்து ஏமாறுவதற்கும், அவனைச் சுற்றிச் சுற்றி ஆடுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகச் சுருக்கப்பட்டது. இன்னொரு புறம், இன்னொரு பெண் பாத்திரம், அப்பாவின் நேர்மை என்ற போலிப் பிடிவாதத்தால் மருத்துவ உதவி கிடைக்காமல் துடிதுடித்து இறந்து போகும் ஒரு தேவையற்ற பலிகடாவாக மாற்றப்பட்டது.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, தனியாகப் போராடும் ஆற்றலோ இல்லாமல், ஒன்று ஆணின் பாசிசக் கொள்கைகளுக்குப் பலியாக வேண்டும், இல்லை என்றால் அவனது ஆபாசக் கற்பனைகளுக்குப் பாட்டுப் பாட வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் தேசபக்திக் காவியம் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

இந்தியன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நூறு கோடிகளைக் குவித்து, நாயகனுக்கு தேசிய விருதை வாங்கித் தந்து, அதன் இயக்குநரைப் பிரம்மாண்டம் என்ற நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனுக்குத் தினமும் காலையில் எழும் போதே எத்தனையோ எரிச்சல்கள் வருகின்றன. பால் பாக்கெட் லேட், கார்ப்பரேஷன் தண்ணீரில் சாக்கடை வாடை, டிராபிக் நெரிசல், போதாக்குறைக்கு அரசு அலுவலகத்தில் ஒரு சின்ன சான்றிதழ் வாங்க ஐம்பது ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கோபத்தை எல்லாம் அப்படியே ஒரு கேப்சூலாக மாற்றி, அதற்கு வர்மக்கலை என்று லேபிள் ஒட்டி, ஒரு முதியவரை விட்டு லஞ்சம் வாங்குபவர்களைக் கொலை செய்ய வைத்தால், தியேட்டரில் விசில் பறக்கிறது. கைதட்டல் அதிர்கிறது. ஆனால், தியேட்டரை விட்டு வெளியே வரும்போது நாம் என்னவாகியிருக்கிறோம்? அதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி.

எல்லாத் தப்புக்கும் சட்டத்திற்குப் புறம்பான ஒரு குறுக்குவழித் தீர்வு இருக்கிறது என்ற எண்ணத்தை இத்திரைப்படம் பாமர மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்தது. படம் லஞ்சத்தை ஒரு தனிமனித ஒழுக்கப் பிரச்சினையாக மட்டுமே பார்த்தது. ஆனால், லஞ்சம் என்பது ஒரு பிரம்மாண்டமான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புப் பிரச்சினை. ஆனால், இயக்குனர் பாணியில் எல்லாவற்றையும் கருப்பு – வெள்ளை என்று பிரித்து, லஞ்சம் வாங்கினாயா? இதோ பிடி வர்மக் குத்து மற்றும் கத்திக் குத்து என்று சுருக்கியது ஓர் அறிவுஜீவித்தனமான அணுகுமுறையே அல்ல. அது எல்லா சிக்கலான நோய்களுக்கும் ஜண்டூபாம் தடவியே குணப்படுத்த முயல்வதைப் போன்றது.

ஒரு லஞ்ச அதிகாரியைக் கொன்றால், அந்த இடத்திற்கு வரும் அடுத்த அதிகாரி லஞ்சம் வாங்க பயப்படுவார் என்பது ஒரு சினிமாட்டிக்கான கற்பனை. நிஜ வாழ்க்கையில், அந்த இடத்திற்கான விலை இன்னும் அதிகமாகும், அவ்வளவுதான். லஞ்சத்திற்கான காரணங்களை ஆராயாமல், வெறும் வன்முறை மூலம் அதைத் தீர்க்க முயலும்  அக்மார்க் அறியாமையை வளர்த்ததுதான் இத்திரைப்படம் தமிழர்களிடம் உண்டாக்கிய உளவியல் சீரழிவு.

லஞ்சம் வாங்குவது தப்பு. ஆனால், லஞ்சம் வாங்குபவனைச் சட்டத்தைக் கையில் எடுத்து, சித்திரவதை செய்து கொல்வது தப்பில்லை என்ற மனநிலையை உருவாக்கிய இந்தியன் திரைப்படத்தைப் பார்த்து ‘இந்தியன் தாத்தா வாழ்க!’ என்று கத்திய கூட்டம்தான், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் வண்டியை ஓரம் கட்டிய அதிகார வர்க்கத்துக்கு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டியது. ஐம்பது ரூபாய் டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டிய படத்தைப் ப்ளாக்கில் ஐநூறு ரூபாய் கொடுத்தும் பார்த்தது. கருத்தியல் சீரழிவு என்பது இதுதான். படமும் மாறவில்லை, மக்களும் மாறவில்லை, ஆனால் மக்களுக்குள் ஒரு போலி விசிபிலாண்டி மனநிலையை மட்டும் அது வளர்த்துவிட்டுச் சென்றது.

ஒரு நாட்டின் சட்ட அமைப்புகள் தேவையில்லை, ஒரு முதியவர் வர்மக் கலையுடன் வந்து கொன்றாலே நாடு திருந்திவிடும் என்றும், அக்கடான்னு நடைபோட்டா, துக்கடான்னு எடைபோட்டா, தடைபோட கவர்மென்ட்டா என்று பாடினால் அத்தனை சட்டமீறல்களையும், வன்முறைகளையும் ரசிக்கலாம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது விழிப்புணர்வும், சட்டப்பூர்வமான போராட்டமும், நிர்வாக அமைப்பைச் சீரமைப்பதும்தானே தவிர, எண்பது வயது முதியவர் கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்புவது அல்ல என்ற எக்ஸ்ட்ரா மெசேஜையும் இந்தத் திரைப்படத்திற்காக மீண்டும் மீண்டும் கூடுதலாகத் தட்ட வேண்டியிப்பது கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைலேஜ் வேலையாகத்தான் தோன்றுகிறது! எனவே, திரையில் கைதட்டுங்கள், தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் வர்மக்கலையைத் தேடாதீர்கள்; அது அவுட் ஆப் சிலபஸ் என்பதற்கு இந்தியன் – 2இன்தோல்வியே சரியான சான்றாகும்!

*****

23 Jun 2026

நீலாம்பரி சின்ட்ரோமும் ஹைபர் ஆண்மை ப்ராப்ளமும்!

சீரழித்த சினிமா – 21

படையப்பா

நீலாம்பரி சின்ட்ரோமும் ஹைபர் ஆண்மை ப்ராப்ளமும்!

படையப்பா படத்தை நீங்கள் ஒரு மாஸ் மசாலா என்று கடந்து போயிருக்கலாம். ஆனால், ஒரு பின் நவீனத்துவ, இருத்தலியல் நோக்கில் பார்த்தால், அது தமிழ் சமூகத்தின் கூட்டு நனவிலி மனதைச் சீரழித்த செல்லுலாய்டு பாஸ்ட்புட் நூடுல்ஸ்.

இது உழைக்கும் வர்க்கத்திற்குத் தந்த போலி நம்பிக்கையான திடீர் அதிர்ஷ்டம் உங்களை முதலாளி ஆக்கும் என்ற நுகர்வோர் கலாச்சாரச் சீரழிவின் தொடக்கம் ஆகும்.

தனக்கு வேண்டியதைத் துணிச்சலாகக் கேட்கும் பெண் வில்லி, அமைதியாகப் பவ்யமாகப் பாம்புப் புற்றுக்குக் பால் ஊற்றும் பெண் நல்லவள் என்ற பிற்போக்குத்தனமான இருமை நிலையைத் தேவையில்லாத ஆணியாய்த் தமிழர்களின் மண்டைக்குள் ஆழமாக இறக்கியது படையப்பா.

என் வழி, தனி வழி என்ற இப்படத்தின் வசனம் ஏதோ தத்துவார்த்தமான வரிகளைப் போலக் கொண்டாடப்பட்டாலும், உண்மையில் இது சமூகப் பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடும் ஒரு நிஹிலிச சிந்தனை.

நாயகனின் படையப்பா என்ற எதற்கும் அசையாத, எப்போதும் அதிகாரம் பேசும் போலிப் புனித பிம்பமும், நீலாம்பரி என்கிற ஒட்டுமொத்தப் பெண் இனத்தின் திமிராகச் சித்திரிக்கப்பட்ட பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு ஜமீன்தார் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

படையப்பா திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த பாலினக் கல்வி என்ன தெரியுமா?

பெண்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதை ஓர் ஆண்தான் வகுக்க வேண்டும். ஒரு பெண் அழகாகவோ, திமிராகவோ, கோபமாகவோ இருந்தால் அவளுக்குப் பெயர் நீலாம்பரி. அவள் அடக்கமாக, பயந்து நடுங்கிக்கொண்டு, சமையலறையில் வேலை பார்த்தால் அவளுக்குப் பெயர் வசுந்தரா.

அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது, என்ற ஒற்றை வரி பாசிசத் தத்துவத்தின் மூலம், பெண்ணின் சுயமரியாதையும் கோபத்தையும் அடியோடு குழிதோண்டிப் புதைத்தது படையப்பா. ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆசைப்படலாம், சபதம் எடுக்கலாம்; ஆனால் பெண் தன் உரிமையைக் கேட்டால், கொஞ்சமேனும் கோபப்பட்டால் அவள் அழிந்து போவாள் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, ஆளுமையோ காட்டும் பெண்களைப் பார்த்தால், நீயென்ன பெரிய நீலாம்பரின்னு நெனப்போ? என்று சமூக வலைத்தளங்களில் வசைபாடி, பெண்களைத் தங்களுக்குக் கீழ் வைக்கத் துடிக்கும் ஓர் ஆபத்தான பெண் வெறுப்பு சமூகத்தின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

படையப்பா படத்தில் ஒட்டுமொத்த நிலப்பிரபுத்துவ கௌரவத்தை மாஸ் ஹீரோயிசம் என்று காட்டி விற்றுதான் கல்லா கட்டினார்கள். நீலாம்பரி தன் வீட்டுக்கு வரும் படையப்பாவை அவமானப்படுத்த ஊஞ்சலை மேலே ஏற்றி வைப்பார். ஆனால், ஹீரோ தன் சால்வையை வீசி, ஊஞ்சலைத் கீழே இழுத்து, அதில் கால் மேல் கால் போட்டு அமர்வார்.

இந்த உறைபனியூட்டும் சாதிய, நிலப்பிரபுத்துவ அதிகாரப் பகட்டை, மிக விசித்திரமான பின்னணி இசையால் மூடி மறைத்து, பார்ப்பவர்களை ஸ்டைலிஷாக ஏமாற வைத்தார் இயக்குனர்.

உழைப்பையும், மனிதநேயத்தையும் விடுத்து, போலிப் பாரம்பரியக் கௌரவத்தை உன்னதம் என்று காட்டி, பார்ப்பவருக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இதன் விளைவாகத்தான் கிராமங்களில் இன்னமும் பட்டுத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு பஞ்சாயத்து செய்து மனித உரிமைகளைப் பறிக்கும் போலி நாட்டாமைத்தனத்தைத் தன் ஸ்டைல் என்று நினைத்து வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தான் ஹைடெக் தமிழன்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது. வசுந்தரா என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் பட்டு வேட்டியைத் துவைப்பதற்கும், நாயகன் வரும்போது குனிந்து சல்யூட் அடிப்பதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு வீட்டுப் பொருளாகக் காட்டப்பட்டார். இன்னொரு புறம், பதினெட்டு வருடங்கள் ஓர் அறைக்குள் பூட்டிக்கிடந்து பழிவாங்கத் துடிக்கும் நீலாம்பரி, தன் ஈகோ உடைந்தவுடன் தற்கொலை செய்துகொண்டார்.

பெண் என்பவள் ஒன்று ஆணுக்கு அடங்கிப் போகும் அடிமை, இல்லை என்றால் ஆணின் கௌரவத்திற்கு முன்னால் மண்டியிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் அகந்தை என்ற இரு முனைகளுக்குள் பெண்களின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அடியோடு மழுங்கடித்தது இத்திரைப்படம்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுயமரியாதையோடு வாழக் கூடாது; அவளை ஆட்டிப் படைப்பது ஆணின் விரல் அசைவில் தான் இருக்கிறது என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

படையப்பா பாக்ஸ் ஆபீஸில் நூறு கோடிகளைக் குவித்து, சூப்பர் ஸ்டார் பிம்பத்திற்குத் தங்கக் கிரீடம் சூட்டி இருக்கலாம். படம் ஒரு சிறந்த கமர்ஷியல் எண்டர்டெய்னர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கேசட்டுகளும், டிக்கெட்டுகளும் கோடிகளில் விற்றன. ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

சமூகம் மற்றும் பாலின ரீதியாகப் பார்த்தால், அது பெண்களை இரண்டாம் தரமாக நடத்தும் சிந்தனைக்கும், தனிமனித வழிபாட்டுக்கும் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி வளர்த்துவிட்டது கொழுந்து விட்டு எரியச் செய்தது என்பதுதான் நிஜம்.

பெண்ணடிமைத்தனம் மற்றும் அடக்கமே பெண்மை என்ற கற்கால பிற்போக்குத்தனத்தைத் தற்கால நடைமுறைகளாகச் செல்லுலாய்டு பாலிஸ் தடவி, ஸ்டைலிஷ் பெய்ண்ட் அடித்து தமிழ்ச் சமூகத்தை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னே தள்ளியது படையப்பா.

சுயமரியாதையை ஆணவமாகச் சித்தரித்தும், ஆணுக்கு அடங்கும் பெண்ணடிமைத்தனத்தை விதந்தோதியும் பெரியாரிய சிந்தனைகளைப் பின்னுக்கு இழுத்து, அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம், கற்பு நிலையென்றால் இருசாரருக்கும் பொதுவாக்குவோம் என்ற பாரதியின் வரிகளுக்கு ரிவீட் அடித்து அச்சமும் நாணமும் பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வேண்டும் என்று சுத்தி சுத்தி வந்து சுட்டு விரலால் சுட்டு எடுத்தது படையப்பா.

*****

22 Jun 2026

இரத்தமும் தத்துவமும் – ஒரு போஸ்ட்மார்ட ரிப்போர்ட்!

இரத்தமும் தத்துவமும் – ஒரு போஸ்ட்மார்ட ரிப்போர்ட்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஹரித்துவாரில் நிகழ்ந்த, கஞ்சா நெடியடிக்கும் ஒரு கதையைக் குவாண்டம் இயற்பியல் தளத்திற்கு இட்டுச் சென்று, பிரம்ம சூத்திரத்தில் முடித்திருந்தார் ஜெயமோகன்.

இது ஜெயமோகனின் வழக்கமான ஹரித்துவார், சன்னியாசி, தாடி, உன்னதத்தனம் ஆகிய கூறுகளின் சேர்க்கை ஆகும். வாசிப்பதற்கு இது நன்றாகவே இருக்கிறது. காட்சிப்படுத்துதலில் அவர் எப்போதுமே வல்லவர். அந்த சோட்டா பாபா படிக்கட்டிலிருந்து விழுந்து கிடக்கும் காட்சி, ஒரு மிக நெருக்கமான ஒளிப்பதிவுக் காட்சி போன்றது. இரத்தம் குமிழியிடுவதும், விரல்கள் நடுங்குவதும் என உடற்கூறியல் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கிருந்தே நம் படா பாபாவின் தத்துவார்த்த உரையாடல் தொடங்குகிறது.

ஐம்பது ஆண்டுக்காலத் தோழர் மண்டை உடைந்து இறந்து கிடக்கிறார். சுற்றிலும் மக்கள் கூச்சலிடுகிறார்கள். ஆனால், அவரோ எவ்விதச் சலனமுமின்றி கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத்தான் ஜெயமோகன் பிரம்ம சூத்திரம் வரை கொண்டு சென்று, தத்து சமன்வயாத் அதாவது, அது சமநிலைப்புள்ளியில் உள்ளது என்று இயற்பியல் தளத்தோடு தொடர்புபடுத்துகிறார்.

இதன் தொடக்கமே அதிரடியானது. தாடி வளர்த்து, அழுக்குத் துணியணிந்து, எதையும் கவனிக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், நம் ஊரில் உடனே அவரைச் சாமி ஆக்கிவிடுவார்கள். அதை நாற்பது ஆண்டுகள் கழித்து ஜெயமோகன் மனச்சோர்வு என்னும் மருத்துவக் கலைச்சொல்லால் புரிந்து கொண்டதற்கு ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

ஆனால், அங்கிருந்த பிச்சைக்காரர்கள் நடைமுறை அறிவு  உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். துறவிகளுக்காக அவர்கள் பிச்சை எடுப்பதும், பிச்சைக்காரர்கள் தங்களைத் துறவிகள் என்று கூறிக் கொள்வதும் என, மியூச்சுவல் பண்ட் போன்ற ஒரு கூட்டுப் பிச்சை வணிகம் அங்கு நடந்திருக்கிறது.

படா பாபா, சோட்டா பாபா என்ற அந்த எழுபது வயதைக் கடந்த இரு முதியவர்கள். ஒருவர் கஞ்சா சுருட்டு தயாரிப்பது, மற்றொருவர் அதனை இழுப்பது; இருவருக்குள்ளும் ஒரு வார்த்தை கூடப் பரிமாறப்படுவதில்லை.

சாதாரண மனிதர்கள் இதைப் பார்த்தால், “இருவரும் போதையில் பேசக்கூட முடியாத அளவிற்கு மயங்கிக் கிடக்கிறார்கள்” என்றுதான் நினைப்பார்கள். ஆனால் ஜெயமோகனோ அதனை, "வார்த்தைகள் தேவையற்ற உன்னத உடல்மொழி" என்று மிகைப்படுத்துகிறார். இதனை எப்படி ஏற்றுக் கொள்வது என்று புரியவில்லை.

கதையின் மிகச்சிறந்த பரபரப்பான காட்சி என்பது நாம் ஆரம்பத்தில் பார்த்த சோட்டா பாபா மேலிருந்து விழுந்து, கழுத்து முறிந்து, மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் கிடப்பதுதான். கைவிரல்கள் துடிக்கின்றன. சுற்றியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், திரையரங்கில் படம் பார்ப்பதைப் போல வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்கு அது நேரடித் திரைப்படம்!

நமது படா பாபா என்ன செய்கிறார்? "அவன் இறந்தால் எனக்கென்ன" என்ற அலட்சியத்துடன் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் நியாயமான கோபத்துடன், "மனிதனா நீ? கூட இருந்தவன் இறந்து கிடக்கிறான்!" என்று கத்துகிறார். அதற்கு அந்த முதியவர் கூறும் ஆன்மீக வசனம் இதோ:

"துறவிகள் ஈம காரியம் செய்யக் கூடாது. கடமையைத் துறப்பதுதான் துறவு."

உண்மையைக் கூறின், நிஜ உலகத்தில் ஒருவன் தன்னுடன் ஐம்பது ஆண்டுகள் இருந்தவன் இறந்து கிடக்கும்போது, வருத்தப்படாமல் கஞ்சா தயாரித்துக் கொண்டிருந்தால், அவனைச் சைக்கோபாத்  அல்லது போதையில் அறிவு இழந்தவன் என்று கூறி மனநல மருத்துவமனையில் சேர்ப்பார்கள். ஆனால், அதுவே ஹரித்துவாரில் நடந்தால் அதற்குப் பெயர் ஜீவன்முக்தித்தனம்! அது போதாதென்று கேரளாவிலிருந்து வந்த மற்றொரு சாமி, "அவர் தன் இறப்பிற்கே அஞ்சவில்லை, பிறகு ஏன் அடுத்தவர் இறப்பிற்கு அழ வேண்டும்?" என்று அதற்கு ஓர் உளவியல் முட்டுக் கொடுக்கிறார்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் இறக்கும்போது பதறுவது, அவனிடமிருந்து கைமாறு எதிர்பார்ப்பதால் அல்ல; அது மனித மூளையின் மிரர் நியூரான்கள் செய்யும் வேலை. சக உயிரியின் வலியைப் பிரதிபலிப்பது இயற்கையின் பரிணாம விதி. அதை அட்டாச்மென்ட், ஈகோ என்று தத்துவ முலாம் பூசுவது அநியாயமானது.

படா பாபா கூறுவது இன்னும் விசித்திரம். அவர் சொல்கிறர், “நான் விழுந்திருந்தாலும் அவன் இப்படித்தான் இருந்திருப்பான். அதனால்தான் அவனுடன் நெருக்கமாக இருந்தேன்.”

இதன் கணக்கு மிக எளிமையானது. இருவருமே அபாதி என்னும் தீவிரமான மன உறைவு நிலையை ஞானம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கஞ்சா கொடுக்கும் டோபமைன் சுரப்பால், மூளையின் உணர்ச்சிப் பகுதிகள் செயலிழந்து போவதை நாம் ஏன் ஆன்மீகச் சமநிலை என்று கொண்டாட வேண்டும்?

இறுதியாக எல்லாவற்றையும் எங்கு இணைக்கிறார் ஜெயமோகன்? பாதராயணரின் 'பிரம்ம சூத்திரம்'—'தத்து சமன்வயாத்.' அதாவது, படா பாபா அன்று காட்டிய அந்த அராஜகமான அலட்சியம்தான் பிரபஞ்சத்தின் சமநிலையாம்! அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரானும் புரோட்டானும் சமநிலை அடைவதைப் போல, சோட்டா பாபா இறப்பதும் படா பாபா கஞ்சா இழுப்பதும் சமநிலை அடைகிறதாம்.

ஜெயமோகன் பிரம்ம சூத்திரத்தை நவீன இயற்பியலோடு ஒப்பிடுவது சுவாரஸ்யமானது. “நுண்துகள்களுக்கு நடுவே உள்ள மின்னூட்டத்தின் சமநிலையே இப்பிரபஞ்சம்.” என்கிறார்.

அண்டவெளியில் சூப்பர்நோவா வெடித்துச் சிதறும்போது பேரண்டம் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் உண்மைதான். ஏதேனும் ஒரு விண்கல் பூமியில் மோதி மனித இனமே அழிந்தால் கூடப் பிரபஞ்சத்தின் சமநிலை மாறப்போவதில்லை. ஆனால், நாம் அண்டவெளித் தூசிகள் அல்லவே! நமக்கு நரம்பு மண்டலம் இருக்கிறது; வலி இருக்கிறது.

எந்தவொரு ஆன்மீகக் கட்டுரையும் நவீன அறிவியலுடனும், இயற்பியலுடனும் தொடர்புபடுத்தி எழுதப்படவில்லை என்றால் இன்றைய வாசகர்களிடம் மதிப்பு இருக்காது என்பது ஜெயமோகனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

நம் ஊர் ஆன்மீகத்தின் ஆகப்பெரிய வசதியே இதுதான். நமக்கு ஒருவன் மீது கடுமையான கோபமும் சீற்றமும் வரும்; அவனை அடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், நாம் கோழையாக இருப்பதாலோ அல்லது சட்டத்திற்குப் பயந்தோ அதைச் செய்ய மாட்டோம்.

பல ஆண்டுகள் கழித்து ஏதோ ஒரு பழைய புத்தகத்தில் இருக்கும் வரியைப் படித்துவிட்டு, "அன்று அவன் செய்த அயோக்கியத்தனமும், நான் காட்டிய கோழைத்தனமும் பிரபஞ்சத்தின் சமநிலைப்புள்ளி ஆகும்" என்று தத்துவ மசாலா தடவி நமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்வோம்.

இதன் மிகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், அடுத்த முறை சாலையில் யாராவது விபத்தில் சிக்கிக் கிடக்கும்போது உதவாமல், கஞ்சா புகைத்துக் கொண்டு கடந்து சென்றால், நாம் "தத்து சமன்வயாத்" என்று கூறிவிட்டுச் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

உலகில் எல்லாவற்றையும் சமநிலை செய்கிறேன் என்று கூறிச் சுடுகாட்டு அமைதியை நோக்கிப் போவது ஞானமல்ல; அது ஒரு வகையான பித்தலாட்ட தப்பியோட்டம்.

“எல்லாம் சரியாகிவிடும், ஒன்று போனால் இன்னொன்று வரும்” என்று பாமர மக்கள் கூறும் ஆறுதலில் இருக்கும் ஈரப்பதம் கூட, பிரம்ம சூத்திரம் பேசும் அந்தப் படா பாபாவின் கஞ்சா புகையில் இல்லை.

நெருக்கடி நேரத்தில் உதவாத சமநிலை என்பது, வெறும் ஜடப்பொருள் நிலையே ஆகும்.

*****

அப்பள வியாபாரமும் கிழிந்து தொங்கிய அறநெறிகளும்!

சீரழித்த சினிமா – 20

ஜென்டில்மேன்

அப்பள வியாபாரமும் கிழிந்து தொங்கிய அறநெறிகளும்!

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றாம் ஆண்டின் ஜூலை திங்கள், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஒழுங்கிற்கும், கல்வி நிர்வாகப் பகுத்தறிவுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, மருத்துவக் கல்லூரி நுழைவாயிலிலேயே சவக்குழி தோண்டப்பட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய ஏழை மாணவர்களுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்றால் சமூகப் போராட்டங்கள் நடத்த வேண்டும் அல்லது சட்டப்படியாகப் போராட வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒருவனுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல், தன் நண்பன் தற்கொலை செய்துகொண்டதால் கோபம் வந்தால், அவன் உயர் தொழில்நுட்பக் கொள்ளையனாக மாறி, அரசாங்க கஜானாவையும் பணக்காரர்களையும் நடுத்தெருவில் வைத்து மொட்டையடிக்கலாம்; அந்தக் கொள்ளைப் பணத்தில் மெடிக்கல் காலேஜ் கட்டினால் அத்தனை பாவங்களும் தீர்ந்துவிடும் என்ற ஒரு புதுவிதமான பாசிச, அராஜக வக்கிர அத்துமீறலை  தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு உண்டு.

நம் ஊர் ஜனங்களுக்கு எப்போதுமே ஒரு பலவீனம் உண்டு. சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, நான்கு பேரைத் தூக்கிப் போட்டுக் மிதித்து, அநியாயக்காரர்களை அழிக்கும் ராபின்ஹூட் கதைகள் என்றால் நாக்கில் உமிழ்நீர் ஊறும். அதைத்தான் ஜென்டில்மேன் படமும் கச்சிதமாகச் செய்தது.

நாயகனின் கிச்சா என்ற பகலில் பவ்யமாக அப்பளம் சுட்டு விட்டு, இரவில் நவீன ஆயுதங்களுடன் கெத்து காட்டும் போலிப் புனித பிம்பமும், கொள்ளையனுக்குத் துணையாகத் திரியும் நாயகியின் பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு ஹைடெக் கொள்ளைக் கூடம் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த பொருளாதாரக் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு உன்னதமான காரியத்தைச் செய்யப் போகிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் எந்தக் குற்றத்தையும் செய்யலாம். அரசாங்கப் பணத்தையும், முதலமைச்சரின் பாதுகாப்பு வளையத்தையும் உடைத்துக் கோடிகளைக் கொள்ளையடிப்பது தவறல்ல, அது ஒரு புனிதமான தியாகம்.

ஏழைகளுக்குக் கல்வி கொடுப்பதற்காகப் பணக்காரர்களிடம் திருடுவது தப்பில்லை என்ற உறைபனியூட்டும் இத்திரைப்படத்தின் ராபின்ஹுட் தத்துவத்தின் மூலம், நாட்டின் சட்ட அமைப்புகளும், தனிமனிதச் சொத்துரிமைகளும் அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.

ஒரு தனிநபர் தன் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொண்டு, போலீஸையே முட்டாளாக்கி வன்முறை மற்றும் திருட்டை நிகழ்த்துவது குற்றமல்ல; அது ஜென்டில்மேன்தனம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையின் கல்வி முறைச் சிக்கல்களையும், அதன் பின்னணியில் இருக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக் கோட்பாடுகளையும் ஆராயாமல், ஜென்டில்மேன் படம் மாதிரி கொள்ளையடித்தாவது ப்ரீ காலேஜ் கட்டணும்டா என்று மிக எளிதாகத் தன்னிச்சையான அராஜகத்தை நியாயப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற, சட்டத்தை மதிக்காத வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

ஜென்டில்மேன் படத்தில் நவீனத் தொழில்நுட்பங்களையும், கண்ணாடிக்கூண்டு அத்துமீறல்களையும் காட்டித் திருட்டுத் தொழிலையே ஒரு கிளாமர் அந்தஸ்துக்கு ஏற்றி விற்றார்கள். இந்த நயவஞ்சகக் குற்றவியல் நடவடிக்கையை, மிக வண்ணமயமான சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே போன்ற அதிரடிப் பாடல்களாலும், கிராபிக்ஸ் காட்சிகளாலும் மூடி மறைத்து, அவன் நல்லவன்டா என்று பார்ப்பவனை ஏமாற்றுவதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

முறையான சமூக மாற்றத்திற்கான உழைப்பை விடுத்து, ஹைடெக் திருட்டுகளை மாஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களை வைத்து அப்பளப் பட்டறைகளில் நடக்கும் அத்துமீறல்களையும், பெண்களைக் கேலி செய்வதையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது இத்திரைப்படம்.  ஒரு சமூகத்தின் ஒழுக்கச் சீர்கேட்டைக் கண்டு கேள்வி கேட்க வேண்டிய சமூகம், அதையே டைமிங் காமெடியாகச் செய்தால்,  பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க பழகிக் கொண்டது. பொறுப்பின்மையையும், லோக்கல் சைட் அடித்தல்களையும் என்டர்டெய்ன்மென்ட் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த தந்திரம்.

பெரும்பாலான கமர்ஷியல் பட நாயகிகளைப் போலவே, இப்படத்தின் நாயகியும் படித்து விவரம் தெரிந்த பெண்ணாகக் காட்டப்பட்டாலும், ஹீரோவின் அப்பள வியாபாரப் போலி பிம்பத்தைப் பார்த்து ஏமாறுவதற்கும், அவன் ஒரு கொள்ளையன் என்று தெரிந்தவுடன் அவனுக்குத் துணையாகப் பிணைக் கைதியாக மாறுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகச் சுருக்கப்பட்டார்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, காவல் துறையை அணுகும் தைரியமோ இல்லாமல், ஆண் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் அவனது நல்ல குணத்திற்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் காவியம் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

ஜென்டில்மேன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து,நாயகனுக்கு ஆக்சன் கிங் பட்டத்தை இன்னும் பலப்படுத்தி, அறிமுகப் படத்திலேயே பிரம்மாண்டங்களின் இயக்குனர் என்று அப்படத்தின் இயக்குநரைப் பிரமாண்ட நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

கல்வி வியாபாரமாகக் கூடாது என்பதுதான் படம் சொல்ல வரும் விசயம். ரொம்ப நல்ல விஷயம்தான். ஆனால், அதைச் சொல்வதற்கு ஒருத்தன் ஊர் முழுக்க கொள்ளையடிக்க வேண்டும், போலீஸை ஓட ஓட விரட்ட வேண்டும், கடைசியில் சென்டிமென்ட்டாக எமோஷனல் கார்டு ப்ளே பண்ண வேண்டும் என்பதுதான் ஜென்டில்மேன் கற்றுத் தந்த மிஸ்பிஹேவியரிஸம்.

இப்படி ஜென்டில்மேன் நமக்குக் கற்றுக்கொடுத்தது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், சட்டம், ஒழுங்கு, போலீஸ் எல்லாமே வேஸ்ட். உங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டுமா? நேராகப் போய் அரசாங்கக் கருவூலத்தை உடையுங்கள். கூடவே பின்னணியில் ஒரு பிஜிஎம்மை ஒலிக்க விடுங்கள். நீங்கள் குற்றவாளி அல்ல, ஜென்டில்மேன். சமூகம் சீரழிய இதைவிட வேறு என்ன வேண்டும்?

படத்தில் நாயகன் கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து இலவசமாகக் கல்லூரிகளைக் கட்டுகிறார். அதாவது, தவறான வழியில் வரும் பணம், சரியான காரியத்திற்குப் பயன்படுத்தப்பட்டால் அது புண்ணியம் என்கிற ஒரு விசித்திரமான லாஜிக் அது. அதன்படி, நான் வாங்கும் லஞ்சப் பணத்தில் என் மகனை டொனேஷன் கொடுத்து மெடிக்கல் சீட் சேர்க்கிறேன், எனவே நானும் ஒரு ஜென்டில்மேன்தான் என்று ஒவ்வொரு லஞ்சப் பேர்வழியும் கண்ணாடி முன்னால் நின்று நாயகன் போல போஸ் கொடுக்க ஆரம்பித்தால் என்னவாகும்?

கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கத்தைக் கொள்ளையடிப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும், விதிகளையும் ஒழுக்கத்தையும் காற்றில் பறக்கவிடுவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த தியாகம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ராபின்ஹுட் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

21 Jun 2026

ஆன்டி ஹீரோக்களின் எழுச்சியும் வில்லனை ரசிக்கும் ஜீன்களும்

சீரழித்த சினிமா – 19

மங்காத்தா

ஆன்டி ஹீரோக்களின் எழுச்சியும் வில்லனை ரசிக்கும் ஜீன்களும்

இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த அறநெறியும், ஒழுக்க விழுமியங்களும் பணம் என்ற ஒற்றைச் சொல்லுக்கு முன்னால் மண்டியிட்டு, படுபாதாளத்தில் வீழ்ந்தன.

தமிழ் சினிமா அதுவரை காப்பாற்றி வந்த ஹீரோ என்பவன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும், என்ற எழுதப்படாத விதியை உடைத்து, ஒரு முழுநேரக் குற்றவாளியைத் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த ரோல் மாடலாக மாற்றிய உன்னதத் திரைப்படம்தான் மங்காத்தா.

ஹாலிடே பாணி இயக்கமும், நாயகனின் சால்ட் அண்ட் பெப்பர் பிம்பமும், அமானுஷ்ய தீம் இசையும் சேர்ந்து, தமிழர்களின் பொதுப்புத்தியை எப்படி சூதாட்டக் கிளப் மட்டத்திற்குச் சீரழித்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த வாழ்வியல் பாடம் என்ன தெரியுமா?

நீங்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், சஸ்பெண்ட் ஆன பிறகு பணத்திற்காக எந்தக் கொடூரமான குற்றத்தையும் செய்யலாம். துரோகம் செய்வது, கூட இருப்பவனைக் கொல்வது, சூதாடுவது எல்லாமே கெத்துதான். இப்படியாக, இங்க நல்லவனா இருந்தா வாழ முடியாது என்று வில்லத்தனத்திற்கான புனித அங்கீகாரத்தை வழங்கியதுதான் மங்காத்தா செய்த ஆகச் சிறந்த வாழ்வியல் பாடம்.

படத்தில் வரும் நாயகன் ஓர் ஆண்டி ஹீரோ கூட அல்ல; அந்நாயகன் ஓர் அப்பட்டமான வில்லன். ஆனால், சினிமா அந்த வில்லத்தனத்திற்கு ஸ்டைல், ஆளுமை, கம்பீரம் என்ற போலி முலாம் பூசி ஒரு ரட்சகனாகக் கொண்டாடியது.

நான் எவனுக்கும் நல்லவன் கிடையாது, எனக்குப் பணம் மட்டும்தான் முக்கியம் என்று நாயகன் பேசும் வசனத்தைக் கேட்டுத் திரையரங்கில் விசில் அடித்த சராசரித் தமிழன், தன் நிஜ வாழ்க்கையிலும் நேர்மை, நாணயம், தர்மம் போன்ற நற்பண்புகளை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினான்.

இத்திரைப்படத்தின் மையக்கதையே கிரிக்கெட் பெட்டிங் பணத்தை எப்படிக் கொள்ளையடிப்பது என்பதுதான். உழைத்து வாழும் நடுத்தர வர்க்கத் தமிழனை, ஒரே நாளில் குறுக்கு வழியில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற பேராசைப் போதைக்குள் தள்ளியது இத்திரைப்படம்.

நெற்றியில் வியர்வை சிந்தி உழைப்பது முட்டாள்தனம், எவனையாவது ஏமாற்றிப் பணத்தைப் பறிப்பதுதான் புத்திசாலித்தனம் என்ற விசித்திரமான நுகர்வோர் கலாச்சார நச்சை இது இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.

விளைவு?

ஆன்லைன் சூதாட்டங்களிலும், போலிப் பணப் பரிவர்த்தனைகளிலும் சிக்கி தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைப்பதற்குக் தத்துவார்த்த ரீதியான பிள்ளையார் சுழி போட்டது இந்த மங்காத்தா மனோபாவம்தான்.

படத்தில் நாயகி ஒரு பெரிய தொழிலதிபரின் மகள். அவளை நாயகன் காதலிப்பது எதற்காக? அவளது குணத்திற்காகவோ அல்லது அழகுக்காகவோ அல்ல; அவளது தந்தையின் பணப் பெட்டியை நெருங்குவதற்காக மட்டும்தான். காதலைக் கூட ஒரு வணிகத் திட்டமாக மாற்றி, பெண்களைத் தங்களின் சுயநலப் பேராசைக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்தப் படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

பெண்களை மதிப்பதை விடுத்து, அவர்களைத் தங்களின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான ஒரு வெறும் பகடைக்காயாக மட்டுமே பார்க்கும் ஒரு சுயநலப் புத்தியை இத்திரைப்படம் காதலின் பெயரால் இளைஞர்களிடம் விற்றது.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் துரோகம் செய்து கொள்வார்கள். கூட இருப்பவனை எப்போது வேண்டுமானாலும் முதுகில் குத்தலாம், பணம்தான் இறுதி வெற்றி என்பதுதான் இப்படத்தின் கிளைமாக்ஸ் கற்றுத்தரும் பாடம்.

நட்பு, கூட்டுழைப்பு, பரஸ்பர நம்பிக்கை போன்ற சமூகக் கட்டமைப்பின் அத்தியாவசிய விதிகளைக் கேலிக்கூத்தாக்கிவிட்டு, தனிமனித சுயநலமே பிரபஞ்சத்தின் விதி என்ற பாசிசச் சிந்தனையைத் தமிழர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதியவைத்தது மங்கத்தா.

மங்காத்தா திரைப்படம் அப்பட நாயகனின் ஐம்பதாவது திரைப்படமாகப் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்திருக்கலாம், அந்த ஹாலிடே பாணி இயக்குநருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

தமிழக நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கவியல் கோட்டையை ஒற்றைக் கையால் தகர்த்தெறிந்த பெருமை மங்காத்தா திரைப்படத்திற்கு உண்டு. வழக்கமாக, நல்லவன் வாழ்வான், கெட்டவன் நாசமாய்ப் போவான், என்ற கோடம்பாக்கத்து நாஸ்டால்ஜியா பார்முலாவை, தியேட்டர் வாசலில் வைத்தே கொளுத்திவிட்டு, கெட்டவன் வாழ்வான், மிகக் கெட்டவன் இன்னும் சூப்பராக வாழ்வான் என்ற புதுமொழியை இது விதைத்தது.

நல்லவனாக இருப்பது கஷ்டம் என்பதை விட, கெட்டவனாக இருப்பது எவ்வளவு கூல் என்பதை மிக நேர்த்தியாக மார்க்கெட்டிங் செய்தது மங்காத்தா. ஒழுக்கம் என்பது ஓர் ஆடை என்றால், அதை அவிழ்த்து எறிவதே சுதந்திரம் என்று இளைஞர்கள் நம்பத் தொடங்கியது இத்திரைப்படத்திற்குப் பின்புதான்.

சூதாடினால் குடும்பம் அழியும் என்ற பழைய சினிமாவின் போதனை சோதனைக்குள்ளாகி, சூதாடினால் 500 கோடி கிடைக்கும், அதை வைத்து பாரின் போகலாம் என்பது புதிய சினிமாவின் மில்லேனிய சாதனை போதனையானது. அத்துடன் யாரையும் நம்பாதே, உன்னையும் சேர்த்து என்ற நச்சுப் பார்வை நடுத்தர வர்க்க நட்புகளுக்குள் மெல்லப் பரவியது ஓர் அவலச் வேதனையானது.

இதன் காரணமாக ஐபிஎல் மேட்ச் நடக்கும்போது டிவி முன்னால் உட்காரும் ஒவ்வொரு டீன் ஏஜ் பையனின் மனதிலும் ஒரு மினி மங்காத்தா நாயகன் பிறப்பெடுத்தான். உழைத்து வாழும் தத்துவம், ஒரே மேட்ச்சில் லைப் செட்டில் என்ற பேராசையிடம் மண்டியிட்டது.

இப்படம் மூன்று புதிய விதிகளை இளைஞர்களின் மனதில் எழுதியது. விதி 1: பணம் முக்கியம். விதி 2: அந்தப் பணத்தைப் பெற யார் கழுத்தையும் அறுக்கலாம். விதி 3: விதி 1 மற்றும் விதி 2ஐ ஸ்டைலாகச் செய்ய வேண்டும். இந்த மூன்று விதிகளையும் எடுத்துக் கொண்ட இளைய சமூகம் அதாவது, துரோகம் என்பது ஒரு கலை, அதைச் சரியாகச் செய்தால் ஜெயிப்பாய் என்று நம்பத் தொடங்கியது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதைக் கெத்து என்றும், துரோகம் செய்வதைப் புத்திசாலித்தனம் என்றும், சட்டத்தையும் ஒழுக்கத்தையும் மதிக்காமல் வாழ்வதே அல்டிமேட் வாழ்க்கை என்றும் நம்பிய ஒரு ஸ்டைலிஷான, முதிர்ச்சியற்ற சூதாட்ட சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

20 Jun 2026

அறத்தை விடுவதாவது, அப்பளத்தை உடைப்பதாவது - ஓர் அலசல்

அறத்தை விடுவதாவது, அப்பளத்தை உடைப்பதாவது - ஓர் அலசல்

"அறங்களைக் கைவிடுக... அதுதான் சரணாகதி." என்கிறார் ஜெயமோகன்.

கேட்பதற்கு எவ்வளவு கம்பீரமாக, ஒரு பெரிய ஆன்மிக பேரானந்தம் கொடுக்கிற மாதிரி இருக்கிறது பாருங்கள்! ஆனால், இதன் பின்னால் இருக்கும் தத்துவார்த்த ஓட்டையை எதைக் கொண்டு அடைப்பது?

ஏனென்றால், அறங்களை நாம் கைவிடுவதாவது?

நாம் எப்போது அறத்தைக் கையில் வைத்திருந்தோம், அதைத் தூக்கிக் கீழே போடுவதற்கு? என்ற கேள்வியைத் தூர வைத்து விட்டு, நாம் இக்கருத்தியலைத் தொடர்ந்தால், நாம் அடைவது எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

தத்துவம் என்ன சொல்கிறது?

"நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்" என்பது ஒரு அற விதி.

ஆனால் பிரபஞ்சம் என்ன சொல்கிறது? "எனக்கு கொசு விரட்டிக்கும் கொசுவுக்கும் வித்தியாசம் தெரியாது. பொத்தனைப் போட்டால் கொசு சாகும், அவ்வளவுதான்" என்கிறது.

அறத்தை விடுவது எளிது. ஆனால், கைவிட்டால் என்னாகும்? ஹிட்லரும் அதையேதான் சொன்னார். "நான் பிரபஞ்ச விதியைத்தான் செய்கிறேன், பலவீனமானர்கள் அழிய வேண்டும்" என்றார். அதற்குப் பெயர் சரணாகதி இல்லை, அராஜகம்.

மனிதர்கள் தங்களுக்கு வசதியாகச் சில தார்மீக விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதைக் கைவிட்டு விட்டு உண்மையான அறத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் சமய நூல்களின் விருப்பமாக இருக்குமே தவிர, எல்லா தர்மங்களையும் கைவிடு என்பதன் உண்மையான அர்த்தம், "அப்பாடா! இனிமேல் போக்குவரத்து சிவப்புச் சமிக்ஞையில் வண்டியை நிறுத்த வேண்டியதில்லை, அடுத்தவன் பையில் கையை வைக்கலாம், எல்லாவற்றையும் கைவிடச் சொல்லிவிட்டார்கள்" என்று நமக்குத் தகுந்தபடி தர்மத்தைக் கழற்றி விடுவதாக இருக்காது.

ஜெயமோகனின் கட்டுரை சொல்கிறது, "பிரபஞ்சத்தில் நாம் ஒரு மணல்துகள். அந்தத் துகளின் தர்க்கம் பிரபஞ்சத்துக்குப் பொருந்தாது. அதனால் சரணாகதி அடைவதே விடுதலை."

இது மிக உன்னதமான தத்துவமாகச் சிலருக்கு இருக்கலாம். ஆனால், நடைமுறையில் இந்தச் சரணாகதி என்பது மனிதனின் ஆகச் சிறந்த சோம்பேறித்தனம்.

ஒரு காரியத்தை ஒழுங்காகச் செய்து முடிக்கத் துப்பில்லை என்றால், உடனே "எல்லாம் அவன் செயல், நான் வெறும் கருவி" என்று சரணாகதி பதாகையை மாட்டிவிடுவது எப்படி நியாயமாகும்?

தேர்வுக்குப் படிக்காமல் போய் விட்டு, "நான் பிரபஞ்சப் பெருவெளியில் ஒரு தூசி, மதிப்பெண் என்பது மாயை" என்று தத்துவம் பேசுவது எப்படி ஏற்புடையதாகும்?

பாதர் பெனெடிக்ட் சொன்ன, "நான் நீதியைக் கேட்பதில்லை, என்னை ஒப்படைக்கிறேன்" என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார் ஜெயமோகன். தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், இது அதிமேதாவித்தனம். நீதி என்று நீதிமன்றத்துக்குப் போனால் அங்கே சாட்சிகள், குறுக்கு விசாரணை என்று தலைவலி வரும். அதுவே சரணாகதி ஆகிவிட்டால், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. "இறைவா, நீயே பார்த்துக்கொள்" என்றுவிட்டு அறைக்குள் போய் கேண்டி க்ரஷ் விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால், அதற்கு ஏ.எஸ்.ஆர். சாரி போன்ற வக்கீல்களைப் பெறும் கொடுப்பினை இருக்க வேண்டும்.

காட்டில் புழுவை பறவை தின்கிறது, அங்கே கருணை இல்லை என்று கட்டுரை கேட்கிறது. உண்மைதான். காட்டில் புட் செயின் இருக்கிறது. மனிதனிடம் செயின் ஸ்னாட்சிங் இருக்கிறது. இரண்டையும் ஒன்றாக்க முடியுமா?

கட்டுரையில் காட்டில் சிங்கம் மானைச் சாப்பிடுவதாகவும், அதனால் அங்கே ஏது அறம் என்ற கேள்வி எழுப்பப்டுகிறது. நியாயமான கேள்விதான். ஆனால், நாம் இன்னும் காட்டில் மரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கவில்லையே. ஹோமோ சேப்பியன்ஸ் என்று நமக்கென்று ஒரு மென்பொருளை நிறுவியிருக்கிறோமே. அதற்குப் பெயர்தான் சமூகம்.

காட்டில் சிங்கம் மானைச் சாப்பிட்டால் அது உணவுச் சங்கிலி. ஆனால், நாட்டில் மனிதன் மனிதனைச் சாப்பிட்டால் அது கொலைக்குற்றம். காட்டுக்கு அறம் தேவையில்லை, ஏனென்றால் அங்கே நீதிமன்றம், காவலர்கள், ரேஷன் அட்டை எதுவும் கிடையாது. ஆனால், மனிதருக்கும் அறம் தேவையில்லை என்றால், நாளைக் காலையில் உங்கள் வீட்டில் காணாமல் போன வாகனத்தைத் திருடிக் கொண்டு போனவன், பிரபஞ்ச விதி, சரணாகதி என்றெல்லாம் சொல்வான். ஏன், ஜெயமோகன் கட்டுரையைத் திருடி எழுதியவன் கூட அதைச் சொல்லலாம். அதை அவரால் ஏற்க முடியுமா?

விலங்குகளுக்குப் பகுத்தறிவு இல்லை, அதனால் அவை அறத்தை உருவாக்கவில்லை. மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது, அதனால் அவன் அறத்தை உருவாக்கினான். பின்பு அதை எப்படி மீறலாம் என்று வழியையும் கண்டுபிடித்தான் என்பது வேறு விடயம்.

அறங்களை முழுமையாகக் கைவிடுவது என்பது, ஒரு கணினியின் இயக்க மென்பொருளை முற்றிலும் அன் இன்ஸ்டால் செய்வது மாதிரி. அதைச் செய்துவிட்டால் நீங்கள் ஜீவன் முக்தர் ஆகிவிட மாட்டீர்கள்; வெறும் ஹேங் ஆன கணிப்பொறி மாதிரிதான் உட்கார்ந்திருக்க வேண்டும்.

இதற்கு மேல் என்ன சொல்வது?

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடுத்தவனை ஏமாற்றத் துடிக்கும் ஒரு மனிதன், "நான் தத்துவார்த்த ரீதியாக அறங்களைக் கைவிட்டுவிட்டேன், இப்போது சரணாகதி நிலையில் இருக்கிறேன்" என்று சொன்னால், அவனைப் போலீஸ் லாக் அப்பில் வைத்துத்தான் தத்துவ விசாரணை நடத்த வேண்டும்!

ஆகவே,

பிரபஞ்சம் ரொம்பப் பெரிதுதான். நாம் அதில் ஒரு சின்னப் புள்ளிதான். அதுற்காக, நான் சின்னப் புள்ளி, அதனால் சாலையில் விதிகளை மதிக்க மாட்டேன், வண்டியைக் கண்டபடி ஓட்டுவேன், பிடிக்கவில்லை என்றால் கொலை செய்வேன் என்று சொல்ல முடியுமா?

கடவுள் பெரியவராக இருக்கலாம், பிரபஞ்சம் விசித்திரமாக இருக்கலாம். ஆனால், மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால், அறம் என்கிற ஒளிவிளக்கு வேண்டும். பிரபஞ்ச இருட்டில் அந்த ஒளி விளக்கை அணைத்து விட்டால் அப்புறம் இருட்டுதான். அதனால், அறங்களை எப்போதும் கைவிடக் கூடாது. கைவிட்டால், நாம் வெறும் சதைப்பிண்டங்கள்தான்!

*****