பேரண்டத்தின் ஆகச் சிறந்த நகைச்சுவை!
மனிதன்
கண்டுபிடித்ததிலேயே ஆகச்சிறந்த போதைப்பொருள் கஞ்சாவோ, அபினியோ கிடையாது. அது, நான்
ஒரு மேதாவி, என்கிற தற்பெருமை.
காலம்
என்பது ஒரு மிகப்பெரிய சூதாடி. அது நம்மை வீழ்த்துவதற்குக்
கத்தியையோ, துப்பாக்கியையோ தூக்கிக்கொண்டு வருவதில்லை. அதற்குப் பதிலாக, அது நமக்கு
ஓர் அழகான, பட்டுத்துணியால் ஆன சிம்மாசனத்தைப் பரிசளிக்கிறது. அதில் நம்மை அமரவைத்து,
அப்படியே அமர்ந்திருங்கள் பேரறிஞரே, உங்களை விட புத்திசாலி இந்த அண்டவெளியில் எவனுமில்லை,
என்று காதில் தேன் வடிக்கிறது. நாமும் நம் தொப்பையைத் தடவிக்கொண்டு, மீசையை முறுக்கிக்கொண்டு
அந்த சிம்மாசனத்தில் அமர்கிறோம்.‘
அங்கேதான்
ஆப்பு ஆரம்பமாகிறது.
ஒருவன்
தன்னை மேதாவி என்று நம்பத் தொடங்கும் அடுத்த கணமே, அவன் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை
நிறுத்திவிடுகிறான். ஏனெனில், அவனது அகந்தையின்படி, அவன் ஏற்கனவே எல்லாவற்றையும் அறிந்தவன்.
அறியாமை
என்பது ஒரு வெற்றுப் பாத்திரம். இதில் எதை வேண்டுமானாலும் நிரப்பலாம். இது பலவீனம்
அல்ல, சாத்தியக்கூறு.
மேதாவித்தனம்
என்பது ஏற்கனவே சாக்கடையால் நிரப்பப்பட்டு, மூடி சீல் வைக்கப்பட்ட பாத்திரம். இதில்
புதிய அமுதத்தை ஊற்றினாலும் அது வெளியேதான் வழியும்.
காலம்
மிகச் சாதுரியமானது. உங்களை அது ஓர் அறிவாளி என்ற கூண்டுக்குள் அடைத்துவிட்டால், அப்புறம்
உங்களைக் கண்காணிக்க வேண்டிய தேவையே அதற்கு இல்லை. உங்களை நீங்களே கவனித்துக் கொள்வீர்கள்.
மாற்றுக்கருத்து சொல்பவர்களை முட்டாள்கள் என்று ஒதுக்குவீர்கள். உங்களை நீங்களே ஒரு
கண்ணாடி அறையில் பூட்டிக்கொண்டு சுயஇன்பம் காண்பது போல உங்கள் அறிவை வியந்து கொண்டிருப்பீர்கள்.
ஒரு
முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும்போது அறிஞனாகிறான். ஆனால் ஓர் அறிஞன் தன்னை மேதாவி
என்று நம்பும்போது, அவன் காலத்தின் ஆகச்சிறந்த அடிமையாகிறான்.
ஏன்
இது உங்களைப் பலவீனமாக்குகிறது?
மிக
எளிய லாஜிக். இந்த உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. நேற்று விஞ்ஞானம் என்று போற்றப்பட்டது
இன்று அஞ்ஞானம் ஆகிறது. நீங்கள் உங்களை மேதாவி என்று நம்பும்போது, காலத்தின் ஓட்டத்திற்கு
ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள மறுக்கிறீர்கள். உறைந்துபோன பனிக்கட்டி போல ஒரு இடத்தில்
நிற்கிறீர்கள். காலம் என்னும் நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஓடும் நதியில் அசையாமல்
நிற்கும் பாறை ஒருநாள் தேய்ந்துதான் போக வேண்டும்.
உங்களை
மேதாவி என்று நம்ப வைப்பதன் மூலம், காலம் உங்கள் கேள்வி கேட்கும் திறனைத் திருடிவிடுகிறது.
நீங்கள் மற்றவர்களைப் பார்த்து கேள்வி கேட்பீர்கள், ஆனால் உங்களை நோக்கி ஒருபோதும்
கேள்வி கேட்க மாட்டீர்கள். தன் மீது தனக்கே சந்தேகம் வராத ஒரு மனிதன், மிக எளிதாக வீழ்த்தப்படக்கூடியவன்.
எனவே
நண்பரே, கண்ணாடி முன்னால் நின்று உங்கள் பிம்பத்தைப் பார்த்து, நான் எவ்வளவு புத்திசாலி,
என்று நீங்கள் முனகும் போதெல்லாம், பின்னணியில் காலம் தன் கைகளைத் தட்டிச் சிரித்துக்
கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.
உங்களைப்
பலவீனமாக்க எதிரிகள் தேவையில்லை, உங்கள் சொந்த புத்திசாலித்தனமே போதும். நீங்கள் அறிவாளியாக
இருப்பதில் காலத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நீங்கள் மேதாவி என்று உங்களை
நம்பத் தொடங்கும் கணமே, நீங்கள் காலத்தின் சதுரங்கப் பலகையில் ஒரு வெட்டப்படப் போகும்
சிப்பாய் ஆகக் கடவீர்கள்.
சுருக்கமாகச்
சொன்னால், அறிவோடு இருங்கள், ஆனால் அறிவாளி என்கிற திமிரோடு இருக்காதீர்கள். ஏனெனில்,
காலம் உங்களை விடப் பெரிய பிஸ்தா!
*****






