25 Mar 2026

ஓவர்லோட் – உங்கள் பலவீனம் அல்ல, பஃபரிங்!

ஓவர்லோட் – உங்கள் பலவீனம் அல்ல, பஃபரிங்!

வாழ்க்கை என்பது ஒரு மென்பொருள் என்றால், இந்த எமோஷனல் ஓவர்வெல்ம் என்பது அதில் வரும் ஒரு பக் கிடையாது, அது சிஸ்டம் ஓவர் ஹீட் ஆகிவிட்டது என்பதைக் காட்டும் ஒரு வார்னிங் மெசேஜ்.

நம்மில் பலரும் நினைப்பது போல, மன அழுத்தம் என்பது எடுத்தவுடனேயே கதறி அழுவதோ அல்லது தலையைப் பிய்த்துக் கொள்வதோ அல்ல. சில சமயம் அது ரொம்பவும் சைலண்ட்.

காலையில் எழுந்திருக்கும் போதே, ஒரு நீண்ட தூக்கத்திற்குப் பிறகும் உடம்பு டயர்டாக இருந்தால், சின்னச் சின்ன விஷயங்களை அதாவது, சாவியை எங்கே வைத்தோம் என்பது போன்றவற்றை அடிக்கடி மறந்தால், பதில் வராத ஒரு வாட்ஸ்அப் மெசேஜுக்காக அல்லது சிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களுக்காக அழுகை முட்டினால், இன்னும் ஒரே ஒரு பிரச்சனை வந்தால் கூட தாங்க மாட்டேன் என்கிற ஒரு மெல்லிய பயம் அடிமனதில் ஓடினால் உங்களுக்கு ஓவர்வெல்ம் ஆகிவிட்டது என்று அர்த்தம். இது கத்தி கூச்சல் போடாது. அடியில் கசிந்து கொண்டிருக்கும் குழாய் போல மெல்ல மெல்ல உங்களைக் காலி செய்யும்.

இங்கே இப்போது என்ன நடக்கிறது என்றால், நீங்கள் புல் ஆகிவிட்டீர்கள். ஒரு பென் டிரைவில் 64 ஜிபி தான் இடம் இருக்கிறது என்றால், அதில் 65 ஆவது ஜிபியை ஏற்ற முடியாது. அது எர்ரர் காட்டும். உங்கள் மனமும் அப்படித்தான்.

உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி என்று நமக்கு யாரும் ஸ்கூலில் சொல்லித் தரவில்லை. அதைப் பகிர்ந்து கொள்ள இடமும் இல்லை. விளைவு? எல்லாம் உள்ளேயே தேங்கி, அழுத்தம் அதிகமாகி, ஒரு கட்டத்தில் ப்ரிண்டர் ஜாம் ஆவது போல உங்கள் சிஸ்டம் ஜாம் ஆகிறது.

 ஏன் இதைப் புரிந்துகொள்வது கஷ்டம் என்றால், இது ஒரு மூவிங் டார்கெட்.

ஒரு நாள் படபடப்பாக இருக்கும். அடுத்த நாள் ஒன்றுமே ஓடாதது போல இருக்கும். உங்கள் தோள்பட்டை, வயிறு, தூக்கம் என எல்லா இடத்திலும் இது ஒளிந்து கொண்டிருக்கும். எந்த ஒரு புரொடக்டிவிட்டி ஆப்போ அல்லது செக் லிஸ்ட்டோ இதைச் சரி செய்யாது. இது டெக்னிக்கல் பிரச்சனை அல்ல, பயாலஜிக்கல் பிரச்சனை!

ஓவர்லோட் என்பது உங்கள் மூளையின் ஷார்ட் சர்க்யூட்!

நம் ஊர் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டால் ஹார்ன் சத்தம் எப்படி நம் பிபியை ஏற்றுகிறதோ, அப்படித்தான் இந்த எமோஷனல் ஓவர்லோட்.

மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது? நான் என்ன அவ்வளவு வீக்கா? என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்.

நிஜத்தைச் சொல்லப்போனால், இது உங்கள் கேரக்டர் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, இது உங்கள் உடலில் இருக்கும் ஹார்டுவேர் சம்பந்தப்பட்ட கோளாறு.

உங்கள் மண்டைக்குள் அமிக்டலா என்று ஒரு குட்டி பீன்ஸ் வடிவ உருவம் இருக்கிறது. அதுதான் உங்கள் உடம்பின் அலாரம் சிஸ்டம்.

ஆதிகாலத்தில் மனிதன் காட்டில் இருந்தபோது, தூரத்தில் புலி உறுமினால் இவன் ஓட வேண்டுமா அல்லது சண்டை போட வேண்டுமா என்று முடிவு செய்வது இந்த அமிக்டலாதான். ஆபத்து வந்ததும் இது சிக்னல் கொடுக்கும். ரத்த அழுத்தம் ஏறும், இதயம் டக் டக் என அடிக்கும், தசைகள் இறுகும். எல்லாம் ரெடி என கிரீன் சிக்னல் கொடுக்கும்!

ஆனால், இன்று புலி வருவது கிடையாது. அதற்கு பதில், திறந்தாலே தலைவலி தரும் 200 அன்ரீட் ஈமெயில்கள், வாட்ஸ்அப்பில் வரும் அந்த ஒரு ரிப்போர்ட் எங்கே? மெசேஜ், நாம பேசணும் என்று காதலியோ, மனைவியோ சொல்லும் அந்த ஒற்றை வரி போன்றவை புலி போல ஆகி விட்டன.

உங்க அமிக்டலா பாவம், ரொம்ப அப்பாவி. ஈமெயிலுக்கும் புலிக்கும் அதற்கு வித்தியாசம் தெரியாது. ஆபத்து என்று தெரிந்தாலே உடனே அலாரத்தை அடித்து விடும்.

தொடர்ந்து இப்படி அலாரம் அடித்துக்கொண்டே இருந்தால், உங்கள் உடல் ரெஸ்ட் மோடுக்கு போகவே மறந்து விடும். உங்கள் மனதின் பேண்ட்விட்த் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும்.

ஒரு கட்டத்தில், மிகச்சிறிய விஷயம் கூட உங்கள் சிஸ்டத்தை ஹேங் செய்துவிடும். இது உங்கள் தோல்வி அல்ல, உங்கள் நரம்பு மண்டலம்  தம்பி, கொஞ்சம் ஓரம் போய் நில், எனக்கு மூச்சு முட்டுகிறது என்று போடும் சிக்னல்.

இந்த விசயத்தில், உங்களை நீங்களே குறைபட்டுக் கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சிஸ்டம் ஓவர்-ஹீட் ஆகியிருக்கிறது. அவ்வளவுதான். கொஞ்சம் கூலண்ட் ஊற்றி, ரீபூட்  செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.

உணர்ச்சிவசப்படுவது ஓர் உயிரியல் செயல்முறை என்பதைப் புரிந்து கொள்வதுதான் இதற்கான தீர்வுக்கான முதல் படி.

உங்களை ஒரு நிரம்பி விட்ட வாளியாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு டென்ஷனும், ஒவ்வொரு பொறுப்பும், ஒவ்வொரு ஈமெயிலும் அந்த வாளியில் விழும் ஒரு சொட்டுத் தண்ணீர்.

வாளியில் தண்ணீர் விழ விழ, அதை வெளியேற்ற ஒரு அவுட்லெட் குழாய் வேண்டும். அதாவது, தூக்கம், கொஞ்சம் அமைதி, பிடித்தமான ஒரு பாட்டு, அல்லது யாரிடமாவது மனம் விட்டுப் பேசுவது.

இந்த அவுட்லெட் குழாய் அடைபட்டு, தண்ணீர் மட்டும் விழுந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்? வாளி வழியும். அதைத்தான் நாம் ஸ்ட்ரெஸ் என்கிறோம். ஆக, நீங்கள் சென்சிட்டிவ் ஆள் எல்லாம் கிடையாது, உங்கள் வாளிக்கு ஏற்ற அவுட்லெட் இல்லை, அவ்வளவுதான்!

இப்போது உங்களுக்கு விசயம் புரிந்து விட்டதா? அவ்வபோது சின்ன சின்ன ரெஸ்ட் மற்றும் உங்களுக்கே உங்களுக்குப் பிடித்த சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் பிராப்ளம் சால்வ்டு.

*****

ரத்தத்தால் எழுதப்படும் பூகோளம் – ஒரு கண்ணீர் அறிக்கை!

ரத்தத்தால் எழுதப்படும் பூகோளம் – ஒரு கண்ணீர் அறிக்கை!

சமாதான மேஜையில் அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்த போதே, வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா.

ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி வீழ்த்தப்பட, மத்திய கிழக்கு நாடுகள் எரிமலைக் குழம்பாய் கொதிக்கின்றன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனானைத் தாக்க, ஈரான் தன் கோபத்தை அமெரிக்கப் படைத்தளங்களின் மீது ஏவுகணைகளாகப் பொழிகிறது.

ஈரமே இல்லாத இதயங்கள் ஏந்திய ஆயுதங்களால், ஈரான் இன்று எரிகிறது! எங்கள் இழப்புகளுக்குப் பழி தீர்க்காமல் இந்தப் போர் அணையாது, என்கிறது ஈரான்.

இது முடிவில்லாப் போர் அல்ல, ஆனால் முடிவுக்கு வரக் காலம் பிடிக்கும், என்கிறது இஸ்ரேல்.

காலத்தின் காலடியில் சிக்கிய எறும்புகளாய் மனித உயிர்கள் நசுக்கப்படுகின்றன. அமெரிக்காவோ, சமாதானப் புறாவைக் கையில் பிடித்துக்கொண்டே, மறு கையால் ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருக்கிறது!

மூன்று வார காலப் போரில், அமெரிக்கா மட்டும் இறைத்திருக்கும் தொகை 20 பில்லியன் டாலர்கள்! இந்தியத் தாயின் கருவூலக் கணக்கில் சுமார் 1.85 லட்சம் கோடி ரூபாய்!

போர் முனையில் சிந்தும் ரத்தம், சாமானியனின் சமையலறையில் கண்ணீராய் வடிகிறது.

அமெரிக்காவில் 2.89 டாலருக்கு விற்ற ஒரு கேலன் பெட்ரோல், இன்று 3.79 டாலரைத் தொட்டுவிட்டது. இந்தியாவிலும் அப்படி விலை ஏறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

அமெரிக்காவின் ராணுவச் செலவுகள், அந்நாட்டு மக்களின் அன்றாடச் செலவுகளைக் கழுத்தை நெரித்துக் கொல்கின்றன. இந்தப் போர் எங்களுக்கு வேண்டாம் என அமெரிக்க மக்கள் கதறத் தொடங்கிவிட்டார்கள்.

அமெரிக்கப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் தலைவன் ஜோ கென்ட், தன் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டார். ஈரானால் உடனடி அச்சுறுத்தல் இல்லை, இது அதிகார லாபிகளின் அழுத்தம். என் மனசாட்சிக்கு விரோதமாக இந்தப் போரைத் தொடர முடியாது என அவர் வெளியேறிவிட்டார்.

உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.

உலக நாடுகளை உதவிக்கு அழைத்த ட்ரம்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த நாடும் போர்க்கப்பல்களை அனுப்ப முன்வரவில்லை.

இப்போது கூடுதல் படைகளை அனுப்பும் முயற்சியில் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் அதலபாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழப்புகள் 5,000 ஐத் தாண்டிவிட்டது. உண்மை அதை விட அதிகமாகவும் இருக்கலாம்.

இஸ்ரேல் 8,000 கோடிகளைச் சாம்பலாக்கிவிட்டது.

லெபனானின் கட்டடங்கள் இன்று வெறும் மண் மேடுகள்.

வளைகுடா நாடுகளின் சுற்றுலா முடங்கிவிட்டது.

இந்தியாவில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏழையின் அடுப்பு அணைந்து கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தொட்டுவிட்டது. இது 130 டாலரைத் தாண்டினால் உலகமே ஸ்தம்பிக்கும்.

ஈரான் சொல்வது போல 200 டாலரை எட்டினால் அடுப்புகளில் பூனைதான் படுத்துறங்கும். வாகனங்களில் சிலந்திதான் வலை கட்டிப் பயணித்துக் கொண்டிருக்கும்.

ஆயுதம் செய்பவன் அறத்தைப் பேசுவதில்லை.

அதிகாரப் பசி கொண்டவன் உயிரை மதிப்பதில்லை.

எரிபொருள் விலையில் எரிகிறது மனிதம்.

ஏவுகணை மழையில் நனைகிறது பூமி.

ஐ.நா சபையோ மௌன விரத்தில் இருக்கிறது.

இந்தப் போர் நின்றால் மட்டுமே இனி உலகம் விடியும்!

அந்த விடியலுக்காகக் காத்திருக்கிறார்கள் உலக மக்கள் ஒவ்வொருவரும்!

*****

24 Mar 2026

இரண்டு போர்கள், ஒரு க்ளைமாக்ஸ்!

இரண்டு போர்கள், ஒரு க்ளைமாக்ஸ்!

மத்திய கிழக்கில் நடப்பது ஒரு போர் என்று நினைத்தால் அது தவறு. அங்கே இணைகோடுகளாக இரண்டு போர்கள் நடக்கின்றன.

ஒன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன விமானங்கள் ஈரானின் தலையில் போடும் குண்டுகள்.

இரண்டு, ஈரான் உலகப் பொருளாதாரத்தின் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் எனர்ஜி வார்.

இந்த இரண்டுமே ஒரு பக்கச் சார்புடையவை. அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களை ஈரானால் தடுக்க முடியவில்லை. அதே சமயம், ஈரான் மூடி வைத்திருக்கும் அந்த 54 கிலோமீட்டர் அகலமுள்ள ஹோர்முஸ் நீர்ச்சந்தியை திறக்க அமெரிக்காவால் முடியவில்லை.

ஈரானின் லாஜிக் சிம்பிள், நீ என் மீது குண்டு போட்டால், நான் உலகத்தின் பெட்ரோல் டேங்க்கை உடைப்பேன். வலி தாங்க முடியாமல் நீயே போரை நிறுத்துவாய்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. ஹோர்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் வரை போரை நிறுத்த அவர் தயாராக இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்பத்தில் ஈரானைப் பார்த்து பயந்த வளைகுடா நாடுகள், இப்போது டிரம்புடன் கைகோர்த்து நிற்கின்றன. இப்படியே விட்டால் இவன் வாழ்நாள் முழுக்க மிரட்டுவான், அடித்து ஒழித்துவிடுங்கள் என்பதுதான் அவர்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸ்.

பென்டகன் கணக்குப்படி 7,000 தாக்குதல்கள் ஈரானில் நடந்துவிட்டன. இஸ்ரேல் ஒரு படி மேலே போய், ஈரானின் முக்கியப் புள்ளிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்குகிறது.

ஈரானின் கப்பல்கள் பல இப்போது கடலுக்கு அடியில் மீன்களுக்கு வீடாக மாறியிருக்கின்றன. ஆனாலும் ஈரான் விடுவதாக இல்லை. ஜலசந்தியைச் சுற்றி கண்ணிவெடிகளையும், ட்ரோன்களையும் ஏவி ஒரு வெர்ச்சுவல் பூட்டைப் போட்டிருக்கிறது.

1988களில் டிரம்ப் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், நான் அதிபரானால் கார்க் தீவை ஒரு கை பார்ப்பேன்.

கார்க் தீவு என்பது ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் ஒரு பாறைத் திட்டு. இப்போது மார்ச் 13 இல் அங்கே குண்டு மழை பொழிந்துவிட்டார். அடுத்து அந்தத் தீவை ஆக்கிரமிக்கவும் திட்டம் இருக்கலாம். வளைகுடா நாடுகள் எண்ணெய் விற்க முடியாவிட்டால், ஈரானும் விற்கக்கூடாது, இதுதான் டிரம்பின் ஈக்விட்டி.

ஈரான் இப்போது தன் வியூகத்தை மாற்றியிருக்கிறது. கப்பல்களைத் தாக்குவதை விட, சவுதி அரேபியா மற்றும் துபாயின் எண்ணெய் வயல்களையும், சுத்திகரிப்பு நிலையங்களையும் நேரடியாகத் தாக்குகிறது. இதனால் பெட்ரோல் விலை எகிறுகிறது. கூடவே செமிகண்டக்டர் தயாரிக்கத் தேவையான ஹீலியம் வாயுவின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.

துபாய் ஏர்போர்ட்டில் ஈரான் ட்ரோனின் சிதறல்கள் விழுந்ததில் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஹோட்டல்கள் காலியாக கிடக்கின்றன. ரமலான் முடிந்த கையோடு பிசினஸ் களைகட்டும் என்று நினைத்த வளைகுடா நாடுகளுக்கு இது பேரிடி.

ஈரான் இப்போது ஒரு மாப் பாஸ் போலப் பேசுகிறது. அமெரிக்கா எல்லா பேஸ்களையும் காலி செய்ய வேண்டும், போர் நஷ்ட ஈடாக எங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

டிரம்பின் நிஜமான நோக்கம் என்ன? ஈரானின் ஆட்சியைத் தூக்குவதா? அல்லது ஒரு டீல் போடுவதா? யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்:

ஈரான் எப்போது உலகத்தின் எரிசக்தி மீது கை வைத்ததோ, அப்போதே அதன் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். இவனை முழுமையாக முடக்காமல் போர் முடியாது என்கிற ஒற்றைப் புள்ளியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் இப்போது கைகோர்த்து நிற்கின்றன.

ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும் போலிருக்கிறது. எந்தப் பக்கம் என்ன நடக்கும் என்பது வழக்கம் போலவே எதிர்காலத்திற்கு மட்டுமே தெரிந்த விடுகதை.

*****

அப்டேட் ஆகாத கனவுகளும், ஹேங் ஆகும் வாழ்க்கையும்!

அப்டேட் ஆகாத கனவுகளும், ஹேங் ஆகும் வாழ்க்கையும்!

இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுள்ள பெண் என்றால், கையில் ஒரு ஸ்மார்ட்ஃபோன், உள்ளுக்குள் ஒரு தீராத பதற்றம். இதுதான் இன்றைய ஜென் இசட்  பெண்களின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்.

இவர்களைக் கட்டாயப்படுத்தித் தெரபிக்கு கூட்டிட்டுப் போக முடியாது. தப்பான முடிவுகள் எடுக்காதே என்று தடுத்து நிறுத்தவும் முடியாது.

இந்த ஜென் இசட் பெண்களுக்கு, அவர்களின் தோழிகள் என்ன பிராண்ட் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறார்கள் என்பதை விட, எந்த ஆன்டி டிப்ரஸன்ட் மாத்திரை வேலை செய்கிறது என்பதுதான் அத்துப்படியாக இருக்கிறது.

ஜென் இசட் பெண்களுக்கு வாழ்க்கை என்பது ஒரு கிரிட்டிக்கலான பக் நிறைந்த சாஃப்ட்வேர் போல ஆகிவிட்டது.

இது குறித்த புள்ளிவிவரங்கள் கொஞ்சம் பீதியைக் கிளப்புகின்றன.

எங்காவது ஓடிவிடலாமா என்று யோசிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 19%. பெண்களோ 40%.

எப்போதும் ஒரு பயத்திலேயே இருக்கிறேன் என்று சொல்லும் ஆண்கள் 19%. பெண்களோ 33%.

முன்பெல்லாம் டிவியில் செய்தி பார்ப்பார்கள். இப்போது செய்தி இவர்களைத் துரத்துகிறது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் என எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் தகவல்கள். கூடவே, பக்கத்து வீட்டுப் பெண் காபி டேயில் காபி குடிப்பதைப் பார்த்து வரும் தாழ்வு மனப்பான்மை இந்த ஜென் இசட் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது.

அட்டென்ஷன்தான் இன்னைக்கு கரன்சி, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பதாகச் சொல்கிறார் இந்த ஜென் இசட் பெண்கள்.

பழைய தலைமுறைப் பெண்கள் நாங்கள் எல்லாம் அப்போது அப்படி இருந்தோம் என்று அட்வைஸ் செய்யலாம். ஆனால், இன்றைய சூழல் வேறு.

இந்த ஜென் இசட் தலைமுறையில் டிகிரி வாங்கிய பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம். ஆனால், கையில் இருக்கும் கல்விக்கடன் மலைபோல இருக்கிறது.

ஜென் இசட் பெண்களின் கையில் மாஸ்டர் டிகிரி என்பது சர்வ சாதாரணம். ஆனால், அதுக்கு மேல் எக்கச்சக்கமான லோன். அதனால் கைக்கு வர்ற சம்பளம், ஒரு வார மளிகைச் சாமானுக்கே மூச்சு வாங்குகிறது அவர்களுக்கு.

அதாகப்பட்டது, சம்பளம் என்னவோ டவுன் பஸ் ரேஞ்சில் இருக்கிறது. ஆனால், மளிகைச் சாமான்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

ஜென் இசட் பெண்களில் முப்பது சதவீதத்துக்கு மேல் ஐம்பதாயிரம், லட்சம் போன்ற சம்பளங்களை அநாயசமாக வாங்குகிறார்கள். ஆனால் சொந்த வீட்டில் இருப்பவர்கள் 25 சதவீதம் கூட இருக்காது. பாவம், மீதி பேர் எல்லாம் வாடகை வீட்டில் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு சம்பாதிப்பவர்களே வீடு வாங்க முடியவில்லை என்றால், மற்ற எழுபது சதவீத ஜென் இசட் பெண்களின் நிலைமை?

அடுத்து செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ இவர்களின் பல வேலைகளைக் காலி பண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சின்ன ஆறுதல். பெண்கள் அதிகம் இருக்கும் ஹெல்த்கேர், டீச்சிங் போன்ற வேலைகளை ஏஐயால் அவ்வளவு சீக்கிரம் அவுட் பண்ண முடியவில்லை.

இன்றைய டேட்டிங் கலாச்சாரம் ஒரு குப்பைத் தொட்டி என்கிறார்கள். ஒருவரைப் பிடிப்பதும், உடனே எக்ஸ்பெண்டபிள் எனத் தூக்கிப் போடுவதும் சாதாரணமாகிவிட்டது இந்த ஜென் இசட் தலைமுறையில்.

இதன் விளைவு? ஒரு குழந்தையோடு போதும் என்று இந்த ஜென் இசட் இளம் தாய்மார்கள் முடிவெடுக்கிறார்கள். இரண்டாவது குழந்தைக்கு இங்கே இடமும் இல்லை, பட்ஜெட்டும் இல்லை.

பதற்றம், நிச்சயமற்ற எதிர்காலம், விலைவாசி உயர்வு இதற்கிடையில் எப்படியாவது பிழைத்துக் கொள்ளப் போராடும் ஒரு தலைமுறைதான் இன்றைய ஜென் இசட் பெண்கள். அவர்கள் சோம்பேறிகள் அல்ல, ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் இருந்து கீழே விழாமல் இருக்க கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள்.

நாங்கள் வெறுமனே உயிர் வாழத்தான் முயற்சி செய்றோம். ப்ளீஸ், எங்களை வாழ விடுங்களேன் என்பதுதான் ஒட்டுமொத்த ஜென் இசட் பெண்களின் மைண்ட் வாய்ஸ் ஆக மாறிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு குழப்பம், பயம் இருந்தாலும், வாழ்க்கை பயங்கரமாகப் போனாலும், அதை ஒரு சின்ன நையாண்டியோடு, ஒரு மீம் போட்டு சிரித்துக் கொண்டே கடந்து போவதுதான் ஜென் இசட் பெண்களின் ஸ்பெஷாலிட்டி. சிரிக்கவில்லை என்றால் இந்த உலகம் தாங்காதுதானே!

*****

23 Mar 2026

கேக், சிப் மற்றும் எலக்ட்ரான் யுத்தம்!

கேக், சிப் மற்றும் எலக்ட்ரான் யுத்தம்!

என்விடியா பாஸ் ஜென்சன் ஹுவாங் ஒரு தத்துவம் சொல்கிறார், ஏஐ என்பது ஒரு கேக் மாதிரி.

மேலே இருக்கும் க்ரீம் சாட்பாட்கள். நடுவில் இருக்கும் பிரட் எல்.எல்.எம் சாஃப்ட்வேர். அடியில் இருக்கும் பேஸ் செமிகண்டக்டர் சிப்ஸ். ஆனால், இந்த கேக் வேக வைக்க ஒரு அடுப்பு வேண்டுமே? அதுதான் எனர்ஜி.

சீனா இப்போது இந்த ஏஐ கேக்கைப் பேக் பண்ணுவதில் செம பிஸியாக இருக்கிறது. டிக்டாக்காரர்கள் ஒரு வீடியோ ஆப் வைத்திருக்கிறார்கள். ஹுவாய் ஒரு புதிய சிப்பை இறக்குகிறது. ஆனாலும், அமெரிக்காவை முந்த ஒரு ரகசிய ஆயுதத்தை சீனா கையில் எடுத்திருக்கிறது. அதன் பெயர் எலெக்ட்ரான் கேப்.

ஏஐ மாடல்களுக்குப் பசி அதிகம். அவை ட்ரில்லியன் கணக்கில் கணக்குப் போட மின்சாரம் ரத்தம் மாதிரி தேவை. அமெரிக்காவின் கிரிட் பழைய பஞ்சாங்கம். அங்கே ஒரு டேட்டா சென்டர் ஆரம்பிக்க மின்சார கனெக்ஷனுக்குப் பின்னால் வரிசையில் நிற்க வேண்டும்.

ஆனால் சீனா?

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 500 ஜிகாவாட் சேர்த்திருக்கிறார்கள். இது அமெரிக்காவின் மொத்தத் திறனை விட இரண்டு மடங்கு.

சீனாவில் ஒரு யூனிட் மின்சாரம் சுமார் 3 சென்ட்தான். அமெரிக்காவில் இது டபுள்.

அமெரிக்காவில் டேட்டா சென்டர் கட்டினால், எங்கள் வீட்டு மின்சார விலை ஏறிவிடும் என்று மக்கள் கொடி பிடிப்பார்கள். சீனாவில் அந்தப் பேச்சிற்கே இடமில்லை.

சாம் ஆல்ட்மேன் முதல் எலான் மஸ்க் வரை எல்லோருக்கும் இப்போது பயம் வந்துவிட்டது. சிப் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மின்சாரம் இருந்தால் சீனா ஜெயித்துவிடும் என்று முணுமுணுக்கிறார்கள்.

ஷான்சி மாகாணத்தில் யங்காஓ என்று ஒரு தூசி படிந்த ஊர். அங்கே ஒரு பழைய பன்றிப் பண்ணையை இடித்துவிட்டுப் பிரம்மாண்டமான டேட்டா சென்டர் கட்டியிருக்கிறார்கள்.

சுற்றிலும் விண்ட் மில், சோலார் பேனல்கள், நிலக்கரி மின் நிலையம் எனப் பவர் சப்ளை தாராளம். ஆனால் ஒரு சின்னப் பிரச்சனை. அமெரிக்காவின் தடையால் அங்கே அதிநவீன சிப்கள் இல்லை. அங்கிருக்கும் மேனேஜர் புலம்புகிறார், எங்களிடம் இருக்கும் சிப்களில் 0.1 சதவீதம் கூட ஏஐ ட்ரெய்னிங் செய்ய லாயக்கில்லை என்று.

சீனா சளைக்கவில்லை. அதிநவீன சிப் இல்லையென்றால் என்ன? சாதாரண சிப்களை நிறைய அடுக்கி வைத்து வேலை வாங்குவோம் என்கிறார்கள். இதற்கு மின்சாரம் அதிகம் செலவாகும். ஆனால் சீனாவில்தான் மின்சாரம் மலிவாச்சே!

ஹுவாய் நிறுவனம் இப்போது 7 நேனோமீட்டர் சிப்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. இது அமெரிக்க சிப்களை விட வேகம் கம்மியாக இருந்தாலும், எண்ணிக்கையை அதிகப்படியாக வைத்து அடித்து நொறுக்கப் போகிறார்கள். 2028க்குள் நாடு முழுக்க இருக்கும் டேட்டா சென்டர்களை ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப் போகிறது சீனா.

சீனாவின் இப்போதைய டார்கெட் என்னவென்றால், ஆர்ட்டிபீசியல் ஜெனரல் இன்டெலிஜன்ஸ். அதாவது மனிதனை விட அதிக அறிவுள்ள மெஷின். இதற்குப் பிரம்மாண்டமான மின்சாரம் தேவைப்படும்.

சீனாவின் புதிய ஐந்தாண்டுத் திட்டத்தில் இதைப் பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் எதையும் கண்டுபிடிக்க வேண்டாம், தொடர்ந்து கட்டிக்கொண்டே இருந்தால் போதும், என்கிறார் ஒரு சீன அறிஞர்.

அமெரிக்காவிடம் புத்திசாலித்தனமான சிப்கள் இருக்கலாம். ஆனால் சீனாவிடம் அந்த சிப்களை ஓட்டத் தேவையான எலக்ட்ரான் மலை போல இருக்கிறது. இறுதியில் இந்த கேக் யாருக்குச் சொந்தம் என்பது மின்சார பில்லில்தான் இருக்கிறது!

என்ன நடக்கப் போகிறது? அமெரிக்காவா? சீனாவா? வெயிட் அன்ட் வாட்ச்.

*****

அந்த ரகசியக் கூட்டணி! - ஒரு குறுங்கதை

அந்த ரகசியக் கூட்டணி!

சென்னையின் அந்தப் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலின் தனி அறையில் ஒரு முக்கிய சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. வெளியே தேர்தல் காய்ச்சல் ஒருபுறம், சமூக வலைதளங்களில் வதந்தி காய்ச்சல் மறுபுறம் கொதித்துக் கொண்டிருந்தது.

அறையினுள் ரஜினி அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் ஒரு தீர்க்கமான அமைதி. அவருக்கு எதிரே கமல் தன் செல்போனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அதில் அவர்கள் இருவரையும் இணைத்து வந்த வதந்திகள் டிரெண்டிங்கில் இருந்தன.

திடீரென கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்தார் பார்த்திபன். அவர் கையில் ஒரு பெரிய கறுப்பு நிறக் கோப்பு இருந்தது.

யாராவது பார்த்தார்களா பார்த்திபன்? என்றார் ரஜினி குரலில் ஒருவித ரகசியம் ஒலிக்க.

இல்லை சார், எல்லாரும் நம்மைப் பற்றி வரும் வதந்திகளை விவாதிப்பதிலேயே பிஸியாக இருக்கிறார்கள். நான் உள்ளே வந்ததைக் கூட யாரும் கவனிக்கவில்லை, என்றார் பார்த்திபன் தன் டிரேட்மார்க் நக்கல் கலந்த புன்னகையுடன்.

கமல் நிமிர்ந்து பார்த்தார். பிறகு பேசினார், அந்தத் தகவல்கள் எல்லாம் தயார்தானே? மக்கள் இதைப் பார்த்தால் அதிர்ச்சியாகிவிடுவார்கள். குறிப்பாக அந்த லெட்டர் மிக முக்கியம்.

சமூக வலைதளங்களில் அப்போதுதான் ஒரு செய்தி தீயாகப் பரவிக் கொண்டிருந்தது. ரஜினி – கமல் – பார்த்திபன் மூவரும் இன்று மாலை ஒரு ரகசிய இடத்தில் சந்திப்பு! பெரிய அறிவிப்பு வெளியாகப் போகிறது!

வதந்திகள் பலவாறு சிறகு விரித்தன. அது ஒருவேளை அரசியல் கூட்டணியா? அல்லது அவர்கள் மூவரும் இணையும் மெகா பட்ஜெட் படமா? எனப் பலரும் மண்டையை உடைத்துக் கொண்டனர்.

பார்த்திபன் அந்தக் கோப்பை மேஜை மீது வைத்தார். இதில் எல்லாமே இருக்கிறது. ரஜினி சார், நீங்கள் இதில் கையெழுத்திட்டால் போதும். எல்லாம் முடிந்துவிடும், என்றார்.

ரஜினி அந்தப் பேனாவை எடுத்தார். கமல் ஆவலுடன் அருகில் வந்து நின்றார். பார்த்திபன் கேமராவைத் தயார் செய்தார். கோப்பில் இருந்த அந்தத் தாளில் ரஜினி கையெழுத்திட்டார். அடுத்துக் கையெழுத்திட கமல் தயாரானார்.

மறுநிமிடம், அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியானது. உலகம் எதிர்பார்த்த அந்த ரகசியத் தகவல் வெளியானது.

அந்தப் புகைப்படம் எதைப் பற்றியது என்பதற்கான விடை கிடைத்தது.

அவர்கள் மூவரும் இணைந்திருப்பது எந்தப் படத்திற்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ அல்ல. அது வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் நடத்தை முறைகள் குறித்த ஒரு குறும்படத்தின் ஒப்பந்தம்!

அதில் ரஜினி கையெழுத்திட்ட அந்தத் தாளில் எழுதியிருந்தது, வதந்திகளைப் பரப்பாதீர்கள், ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்!

பார்த்திபன் இயக்கிய அந்தக் குறும்படத்தில், ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து, தேர்தல் நேரத்தில் பரப்பப்படும் பொய் செய்திகளை மக்கள் எப்படி அடையாளம் காண வேண்டும் என்று பாடம் எடுத்திருந்தார்கள்.

சமூக வலைதளங்களில் பிரேக்கிங் நியூஸையும், வைரல்களையும் தேடியவர்கள், இப்போது தங்கள் ஓட்டுச்சாவடி எங்கே என்று தேடத் தொடங்கினார்கள்.

பின் குறிப்பு : இந்த உலகில் ஒருவர் போல ஏழு பேர் இருப்பார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இச்சித்திரிப்பில் இடம்பெற்றிருக்கும் இப்பாத்திரங்கள் கோலிவுட்டின் பிரபலமான பாத்திரங்களைக் குறிப்பிடுவது கிடையாது, மேலும் இவர்கள் ஹாலிவுட்டோடு தொடர்புடையவர்கள்.

*****

22 Mar 2026

டொனால்ட் டிரம்ப் – புவிஈர்ப்பு விசைக்கு ஒரு சவால்!

டொனால்ட் டிரம்ப் – புவிஈர்ப்பு  விசைக்கு ஒரு சவால்!

யாரும் பந்தயம் கட்டாதீர்கள், குறிப்பாக டொனால்ட் டிரம்புக்கு எதிராக.

2021 ஜனவரி 6-ல் அவருடைய ஆதரவாளர்கள் கேபிடல் ஹில்லுக்குள் புகுந்து கலாட்டா செய்தபோது, முடிந்தது கதை என்றுதான் உலகம் நினைத்தது. ஆனால், 2024 இல் அதைவிட அதிக வாக்குகளுடன் மனிதர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழையும்போது, அரசியல் புவிஈர்ப்பு விசை அவரிடம் மட்டும் வேலை செய்யாதோ என்று தோன்றுகிறது.

ஆனால், இப்போது ஒரு சிக்கல். ஈரானுக்கு எதிராக அவர் ஆரம்பித்திருக்கும் இந்த அவசரக்கோலப் போர், டிரம்ப் எனும் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கப் பார்க்கிறது. இது வெறும் போரல்ல. டிரம்பின் சூப்பர் பவர்களை மழுங்கடிக்கும் ஒரு பொறியாகத் தெரிகிறது.

டிரம்பின் மேஜிக், தனக்கென்று ஓர் உண்மையை உருவாக்கி அதை நம்ப வைப்பது. இப்போதும் நான் ஈரானில் ஜெயித்துவிட்டேன் என்றுதான் சொல்கிறார். ஆனால், தரை எதார்த்தம் வேறு. ஈரானின் உட்கட்டமைப்பு சிதைக்கப்பட்டிருக்கலாம், அலி லாரிஜானி போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனாலும், ஈரான் அவர் சொல்வது போன்ற நிலைக்கு வரவில்லை. யுரேனியத்தை வைத்துக்கொண்டு ஈரான் இன்னமும் கண்ணாமூச்சி ஆடுகிறது.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலரைத் தாண்டிவிட்டது. மார்ச் 18 இல் கத்தார் எரிவாயு மையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல், சந்தையை உலுக்கிவிட்டது. இவற்றையெல்லாம் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை.

டிரம்பின் பிரம்மாஸ்திரம், மற்றவர்களைத் தன் பிடிக்குள் வைத்திருப்பது. ஆனால் இப்போது உலக நாடுகள் உஷாராகிவிட்டன. ஹோர்முஸ் நீர்ச்சந்தியைத் திறக்க நேட்டோ நாடுகளின் உதவியை அவர் கேட்டபோது, அவர்கள் நோ சொல்லிவிட்டார்கள். உடனே, எனக்கு யார் உதவியும் தேவையில்லை என்று அந்தர் பல்டி அடித்தார் டிரம்ப்.

ஈரானும் இப்போது லிவரேஜ் அரசியலில் இறங்கிவிட்டது. எங்களுக்குப் பிடித்த நாடுகளின் கப்பல்களை மட்டும் விடுவோம் என்கிறார்கள். ஒருவேளை ஏப்ரல் இறுதி வரை இந்தப் போர் நீடித்தால், பெட்ரோல் விலை 150 டாலரைத் தொடலாம். இது ஒரு கணிப்புதான். நிலைமை அதைத் தாண்டியும் போகலாம். அதை இப்போது முன்கூட்டியே சொல்வது சிரமம். அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்தால் டிரம்ப் என்ன செய்வார்? ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்றுவாரா அல்லது பணிவாரா? இவையெல்லாம் டிரில்லியன் டாலர் கேள்விகள். அதென்ன மில்லியன் டாலரை விட்டு விட்டு இப்போது டிரில்லியன் டாலருக்கு கேள்வியை உயர்த்தி விட்டாயே என்றால், உலகப் பொருளாதாரம் அப்படி இருக்கிறது.

டிரம்பின் அசுர பலம், குடியரசுக் கட்சி அவர் கைக்குள் இருப்பது. ஆனால், போர் வரும்போது விலைவாசியும் எகிறுகிறது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கலிபோர்னியா வெயிலைப் போல சுட்டெரிக்கிறது. டிரம்பின் தீவிர ஆதரவாளரான டக்கர் கார்ல்சனே இப்போது துரோகம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். ஆகக் கட்சியில் அவரது பலத்தைப் பற்றி நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

வரும் நவம்பர் இடைத்தேர்தலில் செனட் சபையைக் குடியரசுக் கட்சி இழக்க 50 சதவீத வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அப்படி நடந்தால், டிரம்ப் ஓர் அதிகாரமற்ற தலைவர் ஆகிவிடுவார்.

ஆனால், தோற்பது டிரம்புக்குப் பிடிக்காத விஷயம். போர் தோல்வியில் முடிந்தால், அவர் தன் கோபத்தை வேறு பக்கம் திருப்புவார். உக்ரைனைக் கைவிடலாம், நேட்டோவை விட்டு வெளியேறலாம், அல்லது மெக்சிகோ எல்லையில் அதிரடி காட்டலாம்.

உள்நாட்டிலும் மீடியாக்கள் மீது பாயத் தயாராகிவிட்டார் டிரம்ப். டிவி உரிமங்களை ரத்து செய்வேன் என்று இப்போதே மிரட்டல் ஆரம்பித்துவிட்டது. ஈரான் விவகாரத்தில் டிரம்ப் ஜெயிப்பது கடினம் என்பது போலத்தான் தெரிகிறது. உண்மை வெளிப்பட நாட்களாகும். அவர் உண்மையையும் வேறு விதமாகத் திரிப்பார்.

கடந்த காலத்தைப் பார்க்கையில் டிரம்ப் ஒரு கெட்ட வெற்றியாளராக இருந்திருக்கிறார். ஆனால் ஒரு 'மோசமான தோல்வியாளராக அவர் மாறினால், அது உலகிற்கு இன்னும் ஆபத்து. டிரம்ப் என்ன செய்யப் போகிறார்? அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் கணிப்பது அவருக்கே சிரமமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

*****