19 Jul 2026

செய்தித்தாள் விற்றவனும், செய்தியாய்ப் போனவனும்!

செய்தித்தாள் விற்றவனும், செய்தியாய்ப் போனவனும்!

சண்முகநாதனுக்கு வயது அறுபது. அறுபது என்பது வெறும் எண் அல்ல, அது அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை இன்னும் உலகப் பேரறிவாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பழங்காலத் தலைமுறையின் குறியீடு.

தினமும் காலை அரை கிலோமீட்டர் நடப்பார் சண்முகநாதன்.

எதற்காக?

உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள.

உலகம் எப்போதுமே ஒரே இடத்தில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது; மனிதர்கள் தான் வீணாக அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்பது சண்முகநாதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

"சண்முகம் ஐயா, நீங்கள் ஏன் தினமும் இந்த வயதில் அலைகிறீர்கள்? பக்கத்தில் இருக்கும் பூங்காவில் காற்றை மட்டும் சுவாசித்துவிட்டு வாக்கிங் போங்கள். இந்த காகிதக் குப்பைகளை நான் உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து போடுகிறேன்," என்றார் கடைக்காரர் தர்மலிங்கம்.

மனிதர்கள் எப்போதும் சுலபமான வழிகளை, அதிலும் இலவசமாகக் கிடைக்கும் கரிசனங்களை விரும்புபவர்கள்.

சண்முகநாதனும் ஒப்புக்கொண்டார்.

பூங்காவில் நடக்கும்போது ஆக்சிஜன் கிடைத்தது உண்மைதான், ஆனால் வாசலில் வந்து விழுந்த நாளிதழோடு சேர்த்து தர்மலிங்கத்தின் வலையும் வீட்டிற்குள் நுழைந்தது.

நெருக்கம் என்பது ஒரு மெல்லிய சிலந்தி வலை. அதில் முதலில் விழுவது ஈக்களைப் போன்ற நம்பிக்கை, பிறகுதான் காகிதப் பணம்.

"கடை அபிவிருத்தி செய்யணும் ஐயா, பையனுக்கு உடம்பு சரியில்லை..." என தர்மலிங்கம் நீட்டிய வார்த்தை நாடகங்களுக்கு இரையாகி, சண்முகநாதன் தன் சேமிப்பிலிருந்துக் கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரங்களை எண்ணிக் கொடுத்தார்.

காகிதப் பத்திரிகை வாங்கிய இடத்தில், காகிதப் பணத்தைக் கொடுத்தார். இரண்டுமே ஒரே மரக்கூழில் இருந்து உருவானவைதான் என்ற தத்துவம் அப்போது சண்முகநாதனுக்கு வேலை செய்யவில்லை.

ஒரு நாள் காலை, கடையின் கதவில் பூட்டு தொங்கியது. தர்மலிங்கம் ஊரை விட்டு ஓடிவிட்டார்.

விஷயம் சண்முகநாதனின் குடும்பத்தாருக்குத் தெரிந்தபோதுதான், காகிதப் பணத்தின் மதிப்பு புரிந்தது. சண்முகநாதனுக்கோ வேறொன்று புரிந்தது. செய்தித்தாள்கள் தினமும் காலாவதியாகிவிடுகின்றன; மனிதர்களின் முகமூடிகளும் அப்படித்தான்.

தர்மலிங்கம் ஓடியதில் பண நஷ்டம் ஒருபுறம், சண்முகநாதனின் மனிதநேயம் என்ற தத்துவம் நொறுங்கிப்போனதுதான் ஆகப்பெரும் சோகம்.

நம்பிக்கை துரோகம் என்பது ஒரு விசித்திரமான வைரஸ். அது உடலை விட மனதை முதலில் தின்னும்.

இப்போது சண்முகநாதன் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைகிறார். அன்று செய்திதாள் வாங்க தர்மலிங்கத்தின் கடைக்கு நடந்த அரை கிலோமீட்டரை விட, இன்று மருத்துவமனை வராண்டாக்களில் அவர் நடக்கும் தூரம் அதிகம்.

மனிதர்கள் செய்தித்தாள்களைப் போன்றவர்கள். தர்மலிங்கங்களைப் போல தினமும் ஒரு புதிய தலைப்புச் செய்தியோடு முகப்பில் நிற்பார்கள். ஆனால், நேற்று படித்த செய்திக்கும் இன்று நடக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இருக்காது.

திடீரென நெருங்கி வரும் மனிதர்கள், உங்களை நேசிப்பதில்லை; உங்கள் வசம் இருக்கும் ஏதோ ஒன்றை நேசிக்கிறார்கள்.

இறுதியில், ஏமாற்றியவன் செய்தியாக மாறிவிடுவான், நீங்கள் அதை வராண்டாவில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பீர்கள்.

*****

ஒரு சமூக விலங்கியல்

ஒரு சமூக விலங்கியல்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்று தத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், இன்றைய மனிதன் தன் வீட்டுச் சுவர்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு பயந்தாங் கொள்ளி விலங்கு என்பதுதான் உண்மை.

பயணங்களின் போது ஒரு க்யூட் குழந்தையைப் பார்க்கிறீர்கள். 'என்னடா செல்லம்' என்று கொஞ்சத் தோன்றும். நம்மிடம் இருக்கும் சாக்லேட்டை நீட்ட நினைப்போம். ஆனால், அடுத்த நொடி கை பின்வாங்கும். பெற்றோர் நம்மை ஏதோ 'சைக்கோ கடத்தல்காரன்' ரேஞ்சுக்குப் பார்ப்பார்களோ என்ற பயம்.

அறிமுகமில்லாத இடங்களை விடுங்கள்; பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுச் சுட்டிகளைக்கூட 'எங்க வீட்டுக்கு வா, விளையாடலாம்' என்று அழைக்க முடிவதில்லை. நாம் வாழும் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

முன்பெல்லாம் பக்கத்து வீட்டுச் சுவர்கள் வெறும் செங்கற்களால் ஆனவை அல்ல, அவை நம்பிக்கையால் ஆனவை. பக்கத்து வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு நிம்மதியாகச் சமையல் செய்த அம்மாக்கள் அப்போது இருந்தார்கள்.

பழைய தலைமுறைக்கு ரத்த சம்பந்தம் இல்லாத ஏகப்பட்ட அத்தைகளும், சித்தப்பாக்களும் இருந்தார்கள். வாடகை வீடு மாறினால், புது உறவுகள் தானாக 'அப்டேட்' ஆகும்.

இன்று? பிள்ளைகளை உலகச் சுற்றுப்பயணம் அனுப்பத் துணியும் பெற்றோருக்கு, அடுத்த வீட்டுக்கு அனுப்பப் பயம். வாசலில் இரண்டு முறை ஒரு பைக் கடந்தால் நெஞ்சு படபடக்கிறது. சிசிடிவி கேமரா என்பது போலீசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டுக்கும் 'மஸ்ட்' ஆகிவிட்டது. பெண்கள் பையில் லிப்ஸ்டிக்கை விட 'பெப்பர் ஸ்ப்ரே' முக்கிய கேஜெட்டாக மாறிவிட்டது.

சூடான பாலைக் குடித்து நாக்கைச் சுட்டுக் கொண்ட தெனாலிராமன் பூனை கதையாகிவிட்டது நம் நிலைமை. சமூகம் முழுக்கவா கயவர்கள்? இல்லை. ஆனால், யார் கயவன் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. அதைத்தான் வள்ளுவர், 'மக்களே போல்வர் கயவர்' என்றார். அதாவது, வில்லனும் நம்மைப் போல இன்ஷர்ட் பண்ணிக்கொண்டு, 'நைஸ்' ஆகத்தான் உலா வருவான்.

மிருகங்கள் தங்களின் வாரிசுகளுக்கு இரை தேடக் கற்றுக்கொடுத்தவுடன் நகர்ந்துவிடுகின்றன. மனிதன் மட்டும்தான் வாரிசுகளுக்காகத் சொத்து சேர்க்கிறேன் என்ற பெயரில், தன் ஆயுள் முழுவதையும் பொருளாதாரப் பந்தயத்தில் தொலைக்கிறான்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்க நினைப்பது வங்கிக் கணக்குகளை மட்டுமே தவிர, தங்களின் நேரத்தை அல்ல. வீட்டில் கிடைக்காத அன்பைத் தேடித்தான் இளைய தலைமுறை சமூக வலைதளங்களின் போலி முகமூடிகளிடமும், முகம் தெரியாத் திரை நட்சத்திரங்களிடமும், எல்லாவற்றையும் மறந்து கற்பனை உலகத்தில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்களிடமும் தஞ்சம் புகுகின்றது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பெற்றோர்கள், "நாங்கள் அவனுக்கு என்ன வசதி செய்து தரவில்லை?" என்று கேட்கிறார்கள். நீங்கள் எல்லாவற்றையும் கொடுத்தீர்கள், நேரத்தையும் அன்பையும் தவிர.

நம் மகள்களைச் சில மகன்களிடமிருந்து பாதுகாத்தால்தான், அந்த மகன்களையுமே காப்பாற்ற முடியும். இதுதான் பிராக்டிகலான சமூகச் சிந்தனை. வீடுகளில் இருந்து தொடங்காத எந்த ஒழுக்கமும், எந்தச் சட்டத்தாலும் வீதிகளில் நிலைநாட்டப்பட முடியாது.

*****

18 Jul 2026

சங்க காலம் முதல் டாஸ்மாக் காலம் வரை – ஒரு திரவ வரலாறு!

சங்க காலம் முதல் டாஸ்மாக் காலம் வரை – ஒரு திரவ வரலாறு!

தமிழ் பேசும் மக்களுக்குப் போதை புதிதல்ல. சங்க காலத்திலேயே கள்ளும், நறவும் அருந்திவிட்டுப் போர்க்களத்திற்குப் போய் வீரம் காட்டினார்கள் என்று புறநானூறு பெருமையோடு பேசுகிறது. ஆனால், பாவம் அவர்களுக்குக் கஞ்சாவோ, ஓபியமோ தெரிந்திருக்கவில்லை. வட இந்தியர்களும், வெளிநாட்டு வர்த்தகர்களும்தான் நம் ஆட்களுக்கு இந்த உயரிய வஸ்துக்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

மருத்துவமனைகளில் மயக்க மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்ட கஞ்சாவை, பிரிட்டிஷ்காரன் காலத்தில் உழைப்பாளிகள் தங்கள் வலியைக் மறக்கப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இன்று நாமோ, வேலையில்லாத வலியையும், சம்பளம் பத்தாத வலியையும் மறக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

1937இல் சேலத்தில் முதன்முதலில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் வந்தபோது, பிரிட்டிஷ் அரசுக்கு காசு தேவைப்பட்டது; உடனே மதுவிலக்கைத் தளர்த்தினார்கள். அன்றிலிருந்து இன்று வரை அரசுக்கு எப்போதெல்லாம் காசு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் குடிமகன்களின் கல்லீரல் தான் அடகு வைக்கப்படுகிறது. போர் முடிந்துவிட்டது, ஆனால் கல்லீரல் இன்னும் மீளவில்லை.

இன்று மதுவிலக்கு ஒரு மியூசிகல் சேர் விளையாட்டாகி விட்டது. 1971இல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை திருட்டுத்தனமாகச் சாராயம் விற்றார்கள்; குடித்தவர்களைச் சமூகம் கேவலமாகப் பார்த்தது. அதன்பின் கட்சிகள் ஆட்சிக்கு வரும், மதுவிலக்கை அமல்படுத்தும், அப்புறம் மதுவிலக்கை ரத்து செய்யும்.  இப்படியே போய் நாங்கள் வந்தால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு மதுவிலக்க தள்ளாட ஆரம்பித்தது. என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும், ஜெயித்த பிறகு, அந்த படிப்படியை அப்படியே மறந்துவிட்டு, வருடாந்திர டார்கெட்டை மட்டும் ஐம்பதாயிரம் கோடியாக உயர்த்துவார்கள்.

அரசியல்வாதிகள் படிப்படியாக மூடுவோம் என்று சொன்னது டாஸ்மாக் கடைகளை அல்ல; மக்களின் கண்களை! ஆண்டுக்கு ரூ.50,000 கோடி லாபம் தரும் ஒரு தங்கக் கோழியைக் கழுத்தை அறுக்க எந்த அரசுக்காவது மனசு வருமா என்ன?

மதுபானங்கள் போதாது என்று, கடந்த பத்து ஆண்டுகளில் கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் புழக்கம் தமிழ்நாட்டில் ஜிடிபி விகிதத்தை விட வேகமாக வளர்ந்திருக்கிறது.

காவல்துறை சும்மா இருக்கவில்லை. ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்திச் சுமார் 75,000 கிலோ கஞ்சாவைப் பிடித்திருக்கிறார்கள். பிடிபட்டது 75,000 கிலோ என்றால், பிடிபடாமல் சந்தைக்குப் போனது எவ்வளவு இருக்கும் என்று கணக்கு போடும் அளவுக்கு இங்கே யாருக்கும் கணிதம் தெரியாது என்பது நமக்கிருக்கும் ஒரே ஆறுதல்.

முன்பெல்லாம் கஞ்சா வாங்க வேண்டுமென்றால் ரவுடிகளையோ, சந்து பொந்துகளையோ தேடிப் போக வேண்டும். இன்று நம் வீட்டுப் பிள்ளைகள் ஐடி புண்ணியத்தால் டார்க் வெப் மூலம் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்கிறார்கள். ஸ்விக்கியில் பிரியாணி வருகிறதோ இல்லையோ, போதைப்பொருள் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. டிஜிட்டல் இந்தியா சாதித்ததை விட, டிஜிட்டல் போதை உலகம் சாதித்தது அதிகம்!

ஒரு புள்ளிவிவரகக் கணக்குப்படி தமிழ்நாட்டில் 37 லட்சம் பேருக்குப் போதை மீட்பு சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், அரசிடம் இருக்கும் வசதியோ சில ஆயிரம் பேருக்கு மட்டுமே. அதாவது, குடிப்பதற்கான டாஸ்மாக் உள்கட்டமைப்பை  உலகத் தரத்தில் வைத்திருக்கும் அரசு, மீட்பதற்கான உள்கட்டமைப்பை இன்னும் ஆரம்பக் கல்வி நிலைய அளவிலேயே வைத்திருக்கிறது.

ஐஸ்லாந்து, போர்ச்சுகல், நெதர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்கள் நாட்டுப் போதை கலாசாரத்தை வேரோடு அழித்துவிட்டனவாம். இதைப் படிக்கும்போது நமக்குச் சிரிப்புதான் வருகிறது. அந்த நாடுகளின் பட்ஜெட் டாஸ்மாக் காசை நம்பியா நடக்கிறது? இங்கே பட்ஜெட்டே குவாட்டரிலும் ஆப்பிலும் புல்லிலும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான பெண்கள், போதைக்கு அடிமையான தங்கள் கணவனையும் மகனையும் மீட்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகாத ஒரு சூழலை இந்த அரசுகள் தராதா? என்று ஏங்குகிறார்கள்.

அரசோ, பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குகிறோம் என்கிறது. அந்த ஆயிரம் ரூபாயை வாங்கி, அப்படியே கணவனிடம் கொடுத்து, அவன் அதை டாஸ்மாக்கில் கொண்டு போய் கட்டி, மீண்டும் அரசிடமே அந்தப் பணம் போய்ச் சேரும் இந்த சர்க்குலர் எகனாமி இருக்கிறதே, அதை எந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையாலும் கண்டுபிடிக்க முடியாது!

இந்த டாஸ்மாக்கை ஒழித்து கட்ட முடியுமா என்ன? முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால், போதையை விடப் பெரிய போதை, அரசாங்கத்திற்கு இந்த டாஸ்மாக் வருமானத்தின் மேல் இருக்கும் போதைதான்!

*****

17 Jul 2026

ஒரு வரதட்சிணை இயல்

ஒரு வரதட்சிணை இயல்

மனிதர்கள் விலங்குகளைக் கூண்டில் அடைக்கிறார்கள். ஆனால், தங்களை அடைத்துக் கொள்ள அவர்களே உருவாக்கிய ஆகச்சிறந்த, பளபளப்பான கூண்டுக்கு திருமணம் என்று பெயர். இந்தக் கூண்டின் கதவுகளைத் திறப்பதற்கான சாவியாக வரதட்சிணை என்றொரு நாணயம் புழக்கத்தில் இருக்கிறது. இது ஒரு விசித்திரமான நாணயம். இதன் ஒரு பக்கத்தில் பேராசையும், மறுபக்கத்தில் மரணமும் அச்சிடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள் சில உண்மைகளை நம் முகத்தில் அறைகின்றன.

ஒரு வழக்கறிஞரையும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியையும் கொண்ட ஒரு கனம் கோர்ட்டார் குடும்பத்திலேயே உடலில் ஆறு காயங்களுடன் ஒரு பெண் கல்யாணம் ஆகி சில மாதங்களில் இறக்கிறார். சட்டத்தைக் கொண்டே ஒரு கொலையைத் தற்கொலையாக மாற்ற முயலும் வித்தையைச் சமூகம் வேடிக்கை பார்க்கிறது.

லட்சக் கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், சொகுசு கார் என்று எதற்கும் அடங்காத பேராசையோடு கேட்டு வாங்கிக் கொண்டு புகுந்த வீட்டிற்கு வந்தப் பெண்ணை மாடியிலிருந்து தள்ளி விட்டு கொல்கிறது இன்னொரு வரதட்சணைச் சமூகம்.

00 பவுன் நகையும் சொகுசு காரும் கொடுத்த பின்பும், எஞ்சிய 200 பவுனுக்காகச் சித்திரவதை செய்யப்பட்டு, திருமணமான 78ஆவது நாளில் விஷம் அருந்தி மாண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதையும் இந்த வரதட்சணை தேசத்தில்தான் நடக்கிறது.

பெண்கள் கல்வி கற்கிறார்கள், விண்வெளிக்குச் செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்கள் புகுந்த வீட்டிற்குள் நுழையும்போது, அவர்கள் வெறும் பணம் ஏற்றி வரும் வாகனங்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

இதில் உள்ள பேராசையின் தத்துவம், எல்லாம் உன் மகளுக்குத்தான் என்பதுதான்.

வரதட்சிணை வாங்குபவர்களிடம் ஒரு தனித்துவமான தத்துவம் இருக்கிறது. அவர்கள் அதை வரதட்சிணை என்று அழைப்பதில்லை. அதை இப்படிச் சொல்கிறார்கள், "நாங்கள் எங்களுக்காகவா கேட்கிறோம்? எல்லாம் உங்கள் மகளின் எதிர்காலத்திற்குத்தான். என் மகன் தொழிலை விரிவுபடுத்தினால், சொகுசாக வாழப்போவது உங்கள் மகள்தானே?"

இது மாமியார்கள் உதிர்க்கும் ஆகச் சிறந்த தத்துவார்த்தப் புளுகு. ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சேர்க்கும் மதிப்பை விட, அவளது தந்தை கடன்பட்டு வாங்கும் ஒரு காரின் மதிப்பு புகுந்த வீட்டில் உயர்ந்து நிற்கிறது.

இங்கு மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர்கள்தான். ஒடுக்கப்பட்டவர்கள், தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போது இன்னும் கொடூரமான ஒடுக்குமுறையாளர்களாக மாறுவார்கள் என்ற உளவியல் தத்துவம் இங்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

தன்னைப்போல் ஒரு பெண்தான் அந்த மருமகள் என்பதை உணர மறுக்கும் மாமியார்கள், பேராசையின் தரகர்களாக மாறுகிறார்கள்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், இந்தச் சமூகத்தின் மனநல அறிக்கையை நமக்குக் காட்டுகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் 5,737 வரதட்சிணை மரணங்கள் பதிவாகியிருக்கின்றனவாம்.  அதாவது, நாளொன்றுக்குச் சராசரியாக 15 பெண்கள் வரதட்சிணைக் கொடுமையால் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.

இதில் ஊடக வெளிச்சத்திற்கு வருபவை சில துளிகளே. இருண்ட அறைகளுக்குள், குடும்பம் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளைத் தாங்கிக்கொண்டு, சொற்களாலேயே தினசரி செத்துக்கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம், விண்வெளிக்குச் சுற்றுலாப் போகிறோம், செயற்கை நுண்ணறிவுடன் பேசுகிறோம். ஆனால், நம் வீட்டு இளைஞர்கள் இன்னும் தங்களின் கல்வித் தகுதியையும், வேலைவாய்ப்பையும் சந்தையில் ஏலம் போடும் விலைப்படைப் பொருட்களாகவே வைத்திருக்கிறார்கள்.

வீடு, கார், தொழில் விரிவாக்கம் என்ற பெயரில் பெண்ணின் வீட்டாரைப் பிழிந்தெடுப்பது ஒரு பிச்சைக்காரத்தனம் என்பதை இந்த மேம்பட்ட இளைஞர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

ஒரு சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என்பதன் அடையாளம், அது கட்டியெழுப்பும் வானளாவிய கட்டிடங்களோ, அதன் பொருளாதார எண்களோ அல்ல. அச்சமூகத்தின் பெண்கள், தாங்கள் கொண்டுவந்த சீர் போதவில்லை என்ற காரணத்திற்காகத் தூக்கில் தொங்காமலும், மாடியிலிருந்து தள்ளப்படாமலும், விஷம் குடிக்காமலும் அவர்களால் வாழ முடிகிறதா என்பதுதான்.

பேராசையைக் கலாச்சாரம் என்று கொண்டாடுவதை நிறுத்தாத வரை, இந்த வரதட்சிணை அவலம் தொடரவே செய்யும். இந்தச் சமூக அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது சட்டங்களால் மட்டுமல்ல, மனித மனங்களின் பேராசையை அறுவை சிகிச்சை செய்வதன் மூலமே சாத்தியம். அது ஒன்றும் செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சையல்ல, செலவை அளவோடு வைத்துக் கொள்ளச் சொல்லும் போதும் என்ற மன அறுவை சிகிச்சை.

*****

டிகிரி – ஒரு கோல்டன் டிக்கெட் மாரத்தான்!

டிகிரி – ஒரு கோல்டன் டிக்கெட் மாரத்தான்!

யுனிவர்சிட்டி என்றால் என்ன? பழைய காலத்தில் ஹம்போல்டியன் என்று ஒரு மாடல் இருந்தது. அதாவது, அங்கே படிப்பு என்பதை விட ஆராய்ச்சி தான் மெயின். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து புதுசு புதுசாக எதையாவது கண்டுபிடிப்பார்கள்.

அப்புறம் நெப்போலியன் வந்தான். அவனுக்குத் தேவைப்பட்டது ஸ்கில்டு ஒர்க்கர்ஸ். அரசாங்கத்துக்கும் மிலிட்டரிக்கும் வேலை பார்க்க ஆட்கள் வேண்டும், அதனால் கல்வி என்பது ஒரு பயிற்சி மையமாக மாறியது.

இன்றைய மாடல் என்ன தெரியுமா? அமெரிக்கன் மாடல். இது ஒரு காக்டெய்ல். கொஞ்சம் ஆராய்ச்சி, கொஞ்சம் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், நிறைய மார்க்கெட்டிங்!

இப்போது யுனிவர்சிட்டிகள் அகாடமிகளின் அங்காடித் தெரு போலச் செயல்படுகின்றன. ஒரு காலத்தில் டிகிரி என்பது நடுத்தர வர்க்கத்தின் கோல்டன் டிக்கெட். டிகிரி இருந்தால் வேலை உறுதி, வாழ்க்கை செட்டில். ஆனால், இப்போது அந்த டிக்கெட்டின் விலை எகிறிவிட்டது, டிக்கெட் கொடுக்கும் இடமோ காலியாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் 2010க்குப் பிறகு உள்நாட்டு மாணவர்கள் கல்லூரிகளுக்குப் போவது குறைந்துவிட்டது. அதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம் பீஸ். இது படிப்புச் செலவா அல்லது பட்ஜெட் தாக்கல் செய்யும் தொகையா என்று சந்தேகம் வரும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.

இரண்டாவது காரணம் லோன். படித்து முடிப்பதற்குள் மாணவன் ஒரு நடமாடும் கடன் அட்டையாக மாறிவிடுகிறான்.

மூன்றாவது காரணம் வேலை. டிகிரி வாங்கிய பின் கிடைக்கும் வேலையை விட, டிகிரி இல்லாமலே செய்யும் வேலைகளில் வருமானம் அதிகம் என்ற நிலை.

இப்போது கல்வி என்பது ஒரு பொருள். ஆசிரியர்கள் ஒரு புரொடியூசர். மாணவர்கள் கன்ஸ்யூமர். யுனிவர்சிட்டி ஒரு கார்ப்பரேட்.

ஒரு சிலபஸை ரெடி பண்ணி, அதை சின்னச் சின்ன மாட்யூல்ஸாக உடைத்து, காப்புரிமை வாங்கி, மார்க்கெட்டில் விற்கிறார்கள். இதில் ஆசிரியர்களுக்குச் சுதந்திரம் கிடையாது. அவர்கள் இப்போது பர்ன் அவுட் ஸ்டேஜில் நிற்கிறார்கள். அவர்கள் பாடம் நடத்துவதை விட, பண்டு திரட்டுவதிலும், மேனேஜ்மென்ட் வேலையிலுமே பிஸியாக இருக்கிறார்கள்.

அறிவியல் என்பது தேடல் என்பார்கள். ஆனால் இன்று அறிவியல் என்பது யாருக்கு விற்கலாம்? என்கிற வியாபாரம்.

அத்துடன் டிகிரி வாங்கியவர்கள் தங்களை மேதாவிகளாகவும், வாங்காதவர்களை டம்மிகளாகவும் பார்க்கும் ஒரு கலாசாரப் பிளவு உருவாகிவிட்டது. ஆனால் வேடிக்கை என்னவென்றால், இப்போது கிளெரிக்கல் வேலை பார்ப்பவர்களில் 20 சதவீத பேர் டிகிரி வைத்திருப்பவர்கள். அதாவது, கல்வி அதிகமாகிவிட்டது, ஆனால் வேலைகளின் தரம் அங்கேயே நிற்கிறது.

இந்தியாவில் கதை கொஞ்சம் வேறு. இங்கே இன்னும் டிகிரிக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் பண்ட் மட்டும் இல்லை.

அரசு கொடுக்கும் மானியம் 33.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

யுஜிசி பட்ஜெட்டில் 60 சதவீதம் கத்தரி போட்டுவிட்டார்கள்.

வருடத்துக்கு 1000 காலேஜ்கள் புதிதாகத் தொடங்கப்படுகின்றன. கொடுமை என்னவென்றால், அதில் 80 சதவீதம் பிரைவேட்!

இந்தியாவில் மாஸ் எஜுகேஷன் என்பது 1970களில் ஆரம்பித்து விட்டது. ஆனால் அது தரமானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

யுனிவர்சிட்டிகள் இப்போது அறிவை வளர்க்கும் இடங்கள் அல்ல, சந்தைக்குத் தேவையான சப்ளையை கொடுக்கும் இடங்கள். இந்த ஓட்டத்தில் தொலைந்து போவது மாணவர்களின் கனவுகளும், ஆசிரியர்களின் சுயாட்சியும்தான். கல்வி என்பது மனிதனைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் இன்று அது மாணவர்களைச் சம்பாதிக்க வைக்கவே தடுமாற்றத்தில் தள்ளாடுகிறது.

*****

16 Jul 2026

கஞ்சி – ரெசிபி பழையது, பாலிடிக்ஸ் புதியது!

கஞ்சி – ரெசிபி பழையது, பாலிடிக்ஸ் புதியது!

நம்மூர் சமையலறைகளில் கஞ்சி என்பது ஓர் எளிய திரவம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச வணிக நெட்வொர்க் இருக்கிறதே, அது ஒரு சயின்ஸ் பிக்சன் நாவலை விட சுவாரஸ்யமானது.

நொந்துபோன வயிற்றில் ஊற்றப்படும் கஞ்சிக்குத் தெரியாது, அதற்கு இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்று. 1563களில் கார்சியா டி ஓர்டா என்கிற போர்த்துகீசிய டாக்டர், கோவாவில் இருந்தபடி இதை ஒரு மருந்து என்று ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

தமிழின் கஞ்சிதான் போர்த்துகீசியத்தில் Canje ஆகி, ஆங்கிலத்தில் Congee ஆக உருமாறியது. நாம் வீட்டில் சாதாரணமாகக் குடிக்கும் இந்தக் கஞ்சி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து, லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பிய மருத்துவக் குறிப்புகளில் இடம்பிடித்துவிட்டது. அதாவது, கூகுள் வருவதற்கு முன்பே கஞ்சி வைரல் ஆகிவிட்டது!

இந்த இடத்தில் தான் ஒரு ட்விஸ்ட். இந்தியாவிடம் டிரடிஷனல் நாலெட்ஜ் டிஜிட்டல் லைப்ரரி என்று ஒரு டிஜிட்டல் நூலகம் இருக்கிறது. வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி போன்றவற்றுக்கு வெளிநாட்டவன் பேடன்ட் வாங்கிவிடக்கூடாது என்று நாம் உஷாராகப் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

ஆனால், அங்கே ஒரு சிக்கல். இந்த நூலகம் ஆயுர்வேதம், சித்தா போன்ற பழைய புத்தகங்களில் எழுதியிருப்பதை மட்டும்தான் கணக்கில் கொள்ளும். நம் பாட்டிமார்கள் வாய்மொழியாகச் சொல்லிக்கொடுத்த சுக்குக் கஞ்சிக்கு அங்கே இடமில்லை.

லாபம் தரும் விஷயம்தான் அறிவு,  சும்மா வீட்டில் வைக்கும் கஞ்சி எல்லாம் வெறும் சமையல் என்ற இந்தத் தர்க்கம்தான் உலகளவிலான சட்டத்தின் முன் இப்போதைய மிகப்பெரிய ஓட்டையாக மாறியுள்ளது.

கஞ்சி என்பது வெறும் உணவு அல்ல, அது நம் முன்னோர்களின் பாரம்பரிய வாழ்வியல் அறிவின் கண்டுபிடிப்பு. எந்த அரிசியைப் பயன்படுத்தினால் உடல் சூடு தணியும்? எந்தக் காலநிலையில் நொதிக்க வைத்த கஞ்சி குடிக்க வேண்டும்? இதையெல்லாம் தீர்மானிப்பது நம் வீட்டுப் பெண்கள்தான்.

ஆனால், நவீன அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் ஒரு தனிநபர் கண்டுபிடிப்பைத்தான் அறிவு என்று அங்கீகரிக்கின்றன. ஒரு சமூகமே சேர்ந்து, தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுத்த இந்தக் கூட்டு அறிவை;r  சட்டம் கண்டுகொள்வதில்லை.

இன்று நகர்ப்புறங்களில் பெர்மென்டட் ரைஸ் வாட்டர் என்றும், டீடாக்ஸ் போரிட்ஜ் என்றும் ஸ்டைலாகப் பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். விலை பல நூறு ரூபாய்!

நம் பாட்டி கஞ்சி வடித்தபோது கிடைக்காத மதிப்பு, ஒரு கார்ப்பரேட் கம்பெனி லேபிள் ஒட்டும்போது கிடைத்துவிடுகிறது. இங்கே லாபம் யாருக்குப் போகிறது? கஞ்சியைப் பாதுகாத்த சமூகத்திற்கா அல்லது அந்த பாட்டிலை டிசைன் செய்த கம்பெனிக்கா? பதில் உங்களுக்கே தெரியும்.

கஞ்சி என்பது வெறும் வறுமையின் அடையாளம் அல்ல; அது நம் உயிர்நாடி. இதை வெறும் டெக்னிக்கல் விஷயமாகப் பார்க்காமல், நம் கலாசார அடையாளமாக  அங்கீகரிக்க வேண்டும்.

நிச்சயமாக முதலில் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் இந்தப் பாரம்பரிய அறிவுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், நாளை பழைய சாதம் சாப்பிடுவதற்கும் நாம் ராயல்டி கட்ட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்!

*****

காய்ச்சலின் அனுதாபமும், கடனின் தனிமையும்!

காய்ச்சலின் அனுதாபமும், கடனின் தனிமையும்!

ஒருவனுக்கு 104 டிகிரி காய்ச்சல் அடித்தால், சுற்றியிருப்பவர்களுக்கு அவன் மீது சட்டென்று ஓர் ஆன்மீகக் கருணை பிறந்துவிடுகிறது. நெற்றியில் ஈரத்துணி போடு, கஞ்சி காய்ச்சித் தா. என்று ஆளாளுக்கு ஓடி வருவார்கள்.

ஏன் தெரியுமா?

காய்ச்சல் என்பது இலவச அனுதாபத்தை முதலீடு செய்யக்கூடிய ஒரு தளம். அதற்கு யாரும் பையிலிருந்து காசு எடுக்கத் தேவையில்லை.

ஆனால், கடன் அப்படியல்ல.

காய்ச்சல் வந்தவன் படுக்கையில் படுத்திருப்பான், உலகம் அவனைத் தேடி வரும். கடன் வாங்கியவன் தேடிப் போனாலும், உலகம் படுக்கைக்கு அடியில் போய் ஒளிந்துகொள்ளும்.

கடன் வாங்கிய கணமே, ஒரு மனிதனைச் சுற்றி ஒரு தீண்டாமைச் சுவர் உருவாகிவிடுகிறது. அதுவரை மிக நெருக்கமாக இருந்த நண்பர்கள் கூட, போன் கால்களைத் தவிர்ப்பதற்கும், தூரத்தில் கண்டால் டூவீலரைத் திருப்பி ஓட்டுவதற்கும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.

வாங்கும் கடன் என்பது வெறும் பணம் அல்ல, அது எதிர்கால உழைப்பு. இன்று  சொகுசாகச் செலவழிக்கும் ஒவ்வொரு கடன் பணமும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சிந்தப்போகும் வேர்வையை இன்றே அடகு வைப்பதற்குச் சமம்.

இயற்கையின் விதியின்படி காலம் முன்னோக்கி மட்டுமே நகரும்.

வட்டியின் விதியின்படி காலம் தூங்கினாலும், புயல் அடித்தாலும், உலகம் அழிந்தாலும் வட்டி மட்டும் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அது விநாடி முள்ளை விட அதிவேகமாக வளரக்கூடிய ஒரு விசித்திரச் செடி.

நீதிமன்றக் கூண்டில் ஏறும் குற்றவாளிக்குக் கூட வாதாட வக்கீல் வருவார். ஆனால், மாதக் கடைசியில் இஎம்ஐ கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கத்து மனிதனின் கூண்டில், அவனும் அவனது கால்குலேட்டரும் மட்டுமே இருக்கும்.

இன்றைய நுகர்வோர் உலகம் மனிதர்களை எந்நேரமும் வேட்டையாடிக்கொண்டே இருக்கிறது. உன்னிடம் பணம் இல்லை என்றால் என்ன, இதோ கிரெடிட் கார்டு, இதோ பர்சனல் லோன், என்று ஆசைகாட்டி கழுத்தில் கயிற்றை மாட்டுகிறது.

இப்போதைக்கு எங்களிடம் எதுவும் இல்லை, என்று சொல்வதில் இருக்கும் பேரானந்தத்தை இந்த உலகம் நமக்கு மறக்கடித்துவிட்டது.

நம்மிடம் கார் இல்லை, என்ற ஏக்கம் தரும் வலியை விட, காருக்கான தவணைப் பணத்தை இன்னும் கட்டவில்லை, என்று வங்கி ஊழியர் வாசலில் வந்து நிற்கும்போது ஏற்படும் அவமானம் பல மடங்கு கொடியது.

மனிதன் பிறக்கும்போது அம்மணமாகப் பிறக்கிறான். இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை. இடையில் இருக்கும் சில பத்தாண்டுகளில், இல்லாத ஒன்றுக்காக, அடுத்தவன் காசில் எதற்கு இத்தனை பந்தா?

காய்ச்சல் வந்தால் உடல் உருகும், சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால் கடன் வாங்கினால் ஆன்மாவே உருகிவிடும். எனவே, வயிற்றுப் பசிக்கு பழைய கஞ்சி குடித்தாலும், மன அமைதிக்கு சொந்தக் காசையே செலவழிப்போம், என்ற தத்துவத்தோடு வாழப் பழகுவதே புத்திசாலித்தனம்.

ஏனெனில், கடனே இல்லாத மனிதன்தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த கோடீஸ்வரன்!

*****