13 Feb 2026

மீண்டும் மீண்டும் மரணம்! என்ன செய்யப் போகிறார் விஜய்?

மீண்டும் மீண்டும் மரணம்! என்ன செய்யப் போகிறார் விஜய்?

சேலம் சீலநாயக்கன்பட்டி. வெயில் மண்டையைப் பிளக்கிறது. ஒரு பக்கம் தளபதி கோஷம், இன்னொரு பக்கம் ட்ரோன்களின் ரீங்காரம். தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருவர் செத்துப்போயிருக்கிறார். கரூர் சம்பவத்தின் ஈரம் காய்வதற்கு முன்பாக சேலத்தில் அடுத்தச் சம்பவம்.

விஜய்யின் தவெக கூட்டங்களுக்குக் காவல்துறை 51 நிபந்தனைகள் போட்டிருந்தது. அதில் 52 ஆவது நிபந்தனையாக யாரும் சாகக்கூடாது என்று போட்டிருக்கலாம். ஆனால், மரணம் எந்த பெர்மிஷனும் கேட்பதில்லை.

இன்று ஒரே நாளில் ஒரு பக்கம் மகளிர் உரிமைத் தொகை கணக்கில் ஏறுகிறது. இன்னொரு பக்கம் ஓர் ஏழைத் தொண்டனின் உயிர் கணக்கில் வராமல் காற்றில் கரைகிறது.

விஜய் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், அந்த அரசியலுக்காகக் கூடும் கூட்டத்தில் ஓர் உயிர் போவது, அந்தத் தலைவனுக்குத் தான் தர்மசங்கடம்.

இந்த மரணத்தை மாரடைப்பு என்கிறார்கள். ஆனால் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், அரசியலில் மாரடைப்பு தொண்டனுக்குத்தான், தலைவருக்கு இல்லை.

இப்படியே போனால் டிவிகே என்பது தமிழக வெற்றிக் கழகமா? தமிழக விபத்துக் கழகமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்து விடும்.

மாஸில் மரண மாஸ் என்பது போல, கூட்டத்தில் இது மரணக் கூட்டமோ என்னவோ!

எப்போதுதான் நிற்கப் போகிறது இது போன்ற உயிர் எடுக்கும் அரசியல் கூட்டங்கள்?

அரசியலுக்கு வருவோர் முதலில் தங்கள் பதவி நாட்டங்களைக் குறைத்துக் கொண்டு, அரசியல் கூட்டங்களைக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

*****

பிப்ரவரி 14 – இதயங்களின் பிசினஸ்!

பிப்ரவரி 14 – இதயங்களின் இன்ப்ளேசன்!

கத்திரி வெயிலுக்கும் பிப்ரவரி பதினான்குக்கும் ஓர் ஒற்றுமை  உண்டு. முதலாமவது பல்ஸைப் பதம் பார்க்கும். இரண்டாமவது பர்ஸைப் பதம் பார்க்கும்.

பிப்ரவரி 14 என்றால், ரோஜாப்பூவானது பங்குச் சந்தைக்குக் கிறுக்குப் பிடித்தது போல ஐம்பது ரூபாய்க்கு விற்கும். மறுநாள் அது அப்படியே மரண அடி வாங்கிய பங்குச் சந்தையைப் போல ஐந்து ரூபாய்க்கு விற்கும். இதற்கும் பணவீக்கத்திற்கும் மண்ணாங்கட்டி சம்பந்தம்தான்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பூக்காரனும், சாக்லேட்காரனும், வாழ்த்து அட்டைக்காரனும் சேர்ந்து கண்டுபிடித்த மார்கெட் ஸ்ட்ராடஜியோ இந்த பிப்ரவரி 14 என்று எண்ண தோன்றும்.

இந்தப் பிப்ரவரி 14க்கு என்று சில எழுதப்படாத சட்டங்கள் இருக்கின்றன.

எங்கெங்கு காணினும் சிவப்புதான். அன்று சிவப்பு நிறம் கட்டாயம்.  அன்று நீங்கள் எதைப் பார்த்தாலும் சிவப்பு கண்ணாடி போட்டது போலச் சிவப்பாக இருக்கும். சிவப்புக் கண்ணாடி போடா விட்டாலும் சிவப்பாகத்தான் இருக்கும். சட்டை, சேலை, சுரிதார், கார், ஏன் இரத்தம் கூட சிவப்பாகத்தான் இருக்கும். இரத்தம் இயல்பாகவே சிவப்பு என்றுதான் சொல்லக் கூடாது. அன்று இந்த ஸ்பெஷலுக்காக இரத்தமும் சிவப்பாகத்தான் இருக்கும்.

அப்புறம் அந்த டெடி பியர். ஒரு வளர்ந்த பெண்ணுக்கு, பஞ்சு அடைக்கப்பட்ட ஒரு கரடி பொம்மையை எதற்குப் பரிசாகத் தருகிறார்கள் என்பது ஆண்டவனுக்கும், அந்தப் பாடாவதி பையனுக்குமே வெளிச்சம். அந்தக் கரடி எதற்கும் பயன்படாது, பீரோவில் இடம் பிடிப்பதைத் தவிர. பீரோவில் இடமில்லாமல் வெளியில் இடம் பிடித்தால் பாவம் புழுதி படிந்து போய், சீக்கு பிடித்த சிங்காரியைப் போல அழுக்கு மண்டிக் கிடக்கும்.

பிப்ரவரி 14 இல் எழுதப்படாத மற்றுமொரு விதி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும் என்பது. நார்மலாக கரண்ட் கட் ஆன வீட்டில் சாப்பிடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. வீட்டில் சாப்பிட்டால் பில் இருக்காது. கரண்ட் பில் செலவும் இருக்காது என்பது வேறு விசயம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிட்டால் பில் இருக்கும். இந்தக் காசுக்குப் பிடித்த கேடு, ஒரு வேறுபாடு.

காதல் என்பது பிப்ரவரி 14 இல் பூக்கும் பூ என்றால் பிப்ரவரி 15 என்பது அந்தப் பூவிற்கு அடியிலிருந்து குத்தும் முள்.

உண்மையான காதல் என்பது பிப்ரவரி மாதத்தில் வருமான வரியைக் கட்டி, மார்ச் மாத வீட்டு வாடகையை முடித்து, ஏப்ரல் மற்றும் மே மாத கத்திரி வெயிலை ஆபரில் ஏர்கூலலை வாங்கி முடித்துக் கொண்டு, சூன் மாத பள்ளிக்கூட பீஸை எல்லாம் செட்டில்மென்ட் செய்து, சூலை மாதத்தில் ஒரு லோனைப் போட்டு, ஆகஸ்ட்டில் அதற்கு இஎம்ஐ கட்ட முடியாமல், செப்டம்பரில் கிரெடிட் கார்டைத் தேய்த்து, அதற்கு வட்டி கட்ட முடியாமல் அக்டோபரில் நகையை அடகு வைத்து, நவம்பரில் தீபாவளிக்கு அண்டா, குண்டாவைச் சேட்டுக் கடையில் கொண்டு சேர்த்து, டிசம்பர் மழைக்கு இன்ஸ்டால்மென்டில் ஒரு படகை வாங்கி வைத்துக் கொண்டு, ஜனவரியில் வீட்டை மாற்றிக் கொள் என்று ஹவுஸ் ஓனர் சொன்னதும், அலைந்து திரிந்து ஒரு வீட்டைக் கண்டுபிடித்ததும் வரும் பாருங்கள் அடுத்த பிப்ரவரி, அப்போது ஓய்ந்து போய் உட்கார்ந்திருக்கும் போது, இதெல்லாம் லைப்ல சகஜம்தான் எனறு இருவரும் ஆசுவாசமாக ஒரு கோப்பைத் தேநீரை அருந்தும் போது, அப்பாடா என்று விடும் பெருமூச்சில்தான் வருகிறது.

இதைச் சொன்னால் வாழ்த்து அட்டை விற்காது, ரோஜாப்பூக்கள் வாடி விடும், சாக்லேட்டுகள் எக்ஸ்பயரி ஆகி விடும், டெடி பியர்கள் எல்லாம் ஆர்டிக் பிரதேசத்துக்கு ஓடி விடும். மேற்படி கம்பெனிகாரன்கள் எல்லாம் சேர்ந்து கேஸ் போட்டு விடுவான்.

இதையெல்லாம் தாண்டி, எனக்கு கிஃப்ட் எல்லாம் வேண்டாம், உன் அன்பு போதும் என்று லவ்வர் ப்ளவர் வாயால் சொன்னால், அதை அப்படியே நம்பிவிடக் கூடாது. அது ஒரு ட்ராப். அந்தப் பொறியில் விழுந்தால், அடுத்த பிப்ரவரி 14 க்கு முரட்டுச் சிங்கிளாக முறுக்கிக் கொண்டு நிற்க வேண்டியிருக்கும்.

கழுதை, எவ்வளவோ செலவாகிறது, ஒரு ரோஜாப்பூ கிடைக்காவிட்டாலும் கால் முழம் மல்லிகைப்பூவோடாவது வீடு போய் சேருங்கள். அதற்கும் முடியாவிட்டால் ரோட்டோரத்தில் பூத்திருக்கும் ஒரு செம்பருத்தி பூவையாவது பறித்துக் கொண்டு போய் விடுங்கள்.

மற்றபடி உங்களுக்கு பிப்ரவரி 14க்கு வாழ்த்துகள். இந்தச் செய்தி உங்களுக்குப் பிரயோஜனப்பட்டால் யாராவது 14 பேருக்கு ஷேர் பண்ணுங்கள். உங்கள் லவ் கைகூடும். ஆனால் உங்கள் லவ்வருக்குப் பண்ணி விடாதீர்கள். உங்கள் லவ் மூவ் ஆகி விடும்.

*****

மைன்ட் – பாய்ன்ட் டூ பாய்ன்ட்

மைன்ட் – பாய்ன்ட் டூ பாய்ன்ட்

முதலில் கவனியுங்கள். பிறகு உள்வாங்குங்கள். அப்புறம் பேசுங்கள். இது ஒரு சிம்பிள் தத்துவம்தான். நில், கவனி, செல் என்று சாலை பாதுகாப்புக்குப் பயன்படும் அதே தத்துவம்தான். வாழ்க்கைப் பாதுகாப்புக்கு ரொம்பவே பயன்படும்.

ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய சிக்கலே அந்த அவசரக் குடுக்கைத் தனம்தான். மனசு அலைபாய்கிறது. அநாவசியமாகக் கவனத்தைச் சிதறவிடக் கூடாது. செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள். ஆனால், தோல்விக்கான காரணத்தை நீங்களே கண்டுபிடியுங்கள். அது சுவாரசியமான குறுக்கெழுத்துப் புதிர். புதிரைக் கண்டடைந்து அதை வெற்றியாக மாற்றுவதுதான் கெத்து.

மனசை ரிலாக்ஸ் பண்ணுங்கள். ஏனோ எதிர்மறை எண்ணங்கள். ஏதோ ஒரு பின்னடைவு போல ஒரு சோர்வு. சுற்றியிருக்கும் சூழலும் ஒரு காரணம். இதை விலக்க நினைக்காதீர்கள், ஆனால் கண்டு கொள்ளாதீர்கள்.

மற்றவர்களைப் புரிந்து கொள்ள நினைத்து அடிபடும் தகர டப்பாவாகி விடாதீர்கள். நெளிந்து போய் விடுவீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவர்களைப் புரிந்து கொள்ள நாம் திணறுவது போல, நம்மைப் புரிந்து கொள்ள அவர்களும் திணறுவார்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள ரகசியம். பொறுமை அவசியம்.

எதற்கெடுத்தாலும் மனசைப் போட்டு ரொம்பக் கட்டுப்படுத்தாதீர்கள். ஓவர் அழுத்தம் கொடுத்தால் ஒரு நாள் வெடிக்கும். இப்படித்தான் என்று எதற்கும் முன்கூட்டியே முடிவெடுக்காதீர்கள். எல்லாவற்றையும் தீர்க்கமாகக் கணிக்க நாம் அவ்வளவு பெரிய தீர்க்கதரிசியா என்ன? ஒரு நெகிழ்வுத்தன்மை வேண்டும். வெகு காலம் நாம் எதையோ போட்டு அழுத்திக் கொண்டு நிம்மதியைத் தொலைத்து விட்டோம். இனி இருப்பதைத் தொலைக்காமல் இருப்போம். நிம்மதி இருந்தால் மதி இருக்கும். மதி இருந்தால் எல்லாம் இருக்கும்.

பக்கம்பக்கமாகப் பேசினால் கேட்பதற்கு யாருக்குப் பொறுமை இருக்கிறது? சின்னச் சின்னப் பேச்சுகள் போதும். அதிகமாகப் பேசுவதற்குப் பத்து வரிகூட அதிகம். விஷயம் முக்கியம். அதிகபடியாகப் பேசுவதில் எதுவும் இல்லை.

எத்தனை பேரை உங்கள் பேச்சு வசீகரிக்கிறது என்பதுதான் மேட்டர். சிறப்பாகப் பேச இரண்டு ஐடியாக்கள் உண்டு. ஒன்று, உங்களைப் பற்றிப் பேசாமல் யாரிடம் பேசுகிறீர்களோ, அவர்களைப் பற்றிப் பேசுங்கள். இரண்டு, பேச்சின் இடையே அவருக்கு நான்கு பாராட்டைப் போடுங்கள். பிறகு பாருங்கள், அவர் பொரைக்கு ஏங்கும் நாயாகி விடுவார்.

எப்போதும் பேசும் போது சீரியசான மேட்டர் வேண்டாம். ஒவ்வொரு மனிதரும் இயல்பிலேயே சீரியசாக இருக்கிறார்கள். ஏற்கனவே அழுந்திக் கிடக்கும் மனிதனை இன்னும் அழுத்தி விடக் கூடாது. காமெடி ரொம்பவே உசிதம். அது கைவராவிட்டாலும் பரவாயில்லை, பழையசோறும் நன்றாகவே இருக்கும். அதென்ன பழையசோறு என்றால், அவரைப் பற்றி மட்டுமே பேசுவது, பேச்சினிடையே அவரைப் புகழ்வது, முன்பே சொன்னேன் இல்லையா, அதுதான்.

அப்புறம், வாழ்க்கையில் எது போதும் தெரியுமா?

பல வேலைகளில் தலையைப் போட்டால், சீக்கிரம் தலை மண்டையைப் போட்டு விடும். ஆகவே ஒரு வேலை, ஒரு தலை. நம் தலயையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று நடிப்பில் இருப்பார், இல்லையென்றால் கார் ரேஸில் இருப்பார். இரண்டிலும் இருக்க மாட்டார். எனவே தல நிம்மதியாக இருக்கிறார். நாம் தலயா, தளபதியா என்ற குழப்பத்தில் நிம்மதியைத் தொலைத்து விடுகிறோம்.

எப்போதும் மன அமைதிதான் டாப் பிரையாரிட்டி. அதற்கு எதிலும் அதிகம் வேண்டாம், அளவே போதும் என்பது முக்கியம். அளவுக்குக் குறைவாகச் செய்தாலும் அது தரமாக இருக்கும். உங்களுக்கு எப்படி வருகிறதோ அப்படியே செல்லுங்கள். ஒத்து வராத வழிகள் வேண்டாம். குறிப்பாகக் காப்பி – பேஸ்ட் வழிகள் சுத்தமாக வேண்டாம்.

அப்படி இதுதான் என் ரூட் என்று முடிவெடுத்து விட்டால், உங்கள் ரூட் கிளியர் ஆகி விடும். ரூட் கிளியர் ஆனால் உங்கள் மனதில் ஏன் டிராபிக் ஜாம் ஆகப் போகிறது. நீங்கள் ஒரு சுதந்திரமான சந்தோசமான மனிதர். அதற்காகத்தானே ஏங்கினீர்கள். அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

*****

12 Feb 2026

விண்வெளியில் ஒரு டேட்டா சிட்டி – எலான் மஸ்கின் அட்ராசிட்டி!

விண்வெளியில் ஒரு டேட்டா சிட்டி – எலான் மஸ்கின் அட்ராசிட்டி!

எலான் மஸ்க் சும்மா இருக்க மாட்டார். மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். இம்முறை மனிதர் தரையில் கால் வைப்பதாக இல்லை.

உங்கள் கையில் இருக்கும் செல்போனில் ஒரு மெசேஜ் டைப் செய்து அனுப்பினால், அது பக்கத்து தெருவில் இருக்கும் டவருக்குப் போய், அங்கிருந்து கடலுக்கடியில் இருக்கும் கேபிள் வழியாகக் கலிபோர்னியாவுக்குப் போய், டேட்டா சென்டரில் பிராசஸ் ஆகித் திரும்ப வருவதற்குள் சில மில்லி செகண்டுகள் ஆகும். மஸ்க்கிற்கு இது பிடிக்கவில்லை. மஸ்க்கு எதுதான் பிடித்திருக்கிறது?

ஏன் தரையில் கஷ்டப்பட வேண்டும், மேலே போயிடலாம் என்கிறார்.

இதற்காக அவர் என்ன செய்யப் போகிறார் என்றால், சுமார் பத்து லட்சம் செயற்கைக்கோள்களை வரிசையாக அணிவகுத்து நிற்க வைக்கப் போகிறார்.

எதற்குத் தெரியுமா? விண்வெளி டேட்டா சென்டர் அமைக்க. அப்படியானால் நம்மூர் பிபிஓ சென்டர்களின் கதி என்ன என்கிறீர்களா? அதோ கதிதான்.

அது சரி, மஸ்க் ஏன் இப்படி யோசிக்கிறார் என்கிறீர்களா?

பூமியில் டேட்டா சென்டர் வைத்தால், இரண்டு பெரிய தலைவலிகள்.

ஒன்று, கரண்ட் பில். ஏகப்பட்ட சர்வர்கள் ஓடும். அதற்குத் தீனி போட மெகா வாட் கணக்கில் மின்சாரம் வேண்டும்.

இரண்டு, ஏசி பில். சர்வர்கள் சூடாகும். அதைக் குளிர்விக்க ராட்சத ஏசிகள் வேண்டும். பாதி லாபம் ஏசி பில்லுக்கே போய்விடும்.

ஆகவே மஸ்க் இப்படி யோசிக்கிறார். விண்வெளியில் சூரியன் எப்போதும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். மேகமூட்டம் கிடையாது, மழை கிடையாது. சோலார் பேனலை வைத்தால் தமிழ்நாட்டைப் போல விலையில்லா மின்சாரம். அடுத்தது குளிர்ச்சி. விண்வெளியே ஒரு பெரிய ப்ரிட்ஜ் மாதிரிதான். ஊட்டி, கொடைக்கானல் ரேஞ்சுக்கு இருக்கும். ஹீட் சிங்க் வைத்தால் வெப்பம் தானாக வெளியேறிவிடும்.

ஆம், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இன்னும் சில வருடங்களில் உங்கள் மொபைல் டேட்டா பூமியிலிருந்து அல்ல, மேலிருந்து வரப்போகிறது. நீங்கள் அனுப்பும் ஒரு ஹாய் மெசேஜ்ஜோ, ஸ்மைலியோ மேகங்களைத் தாண்டி, வளிமண்டலத்தைக் கடந்து, அங்கே சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு சர்வருக்கு போய், ஒரு லேசர் வெளிச்சத்தில் இன்னொரு சாட்டிலைட்டிற்குத் தாவி, பிராசஸ் ஆகித் திரும்ப உங்கள் கைக்கு வரும்.

இப்போது பிரச்சனை என்னவென்றால், பத்து லட்சம் சேட்டிலைட்டுகள் மேலே போனால் என்னவாகும்? டிராபிக் ஜாம் ஏதும் ஆகுமா? விண்வெளியில் நிறைய ஸ்பேஸ் இருக்கிறது என்பது வேறு விசயம்.

ஆனால் ஏற்கனவே அங்கு ஏகப்பட்ட சேட்டிலைட்டுகள் பயன்படுபவை, பயன்படாதவை, செயல்படுபவை, செயல் இழந்தவை என்று ஏகப்பட்டவை கிராக்கு பிடித்ததைப் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் விண்வெளிக் குப்பைகள் அங்கே அதிகம். இதில் பத்து லட்சம் புது வரவுகள் என்றால், இரவு வானத்தைப் பார்க்கும்போது நட்சத்திரங்களுக்குப் பதில் மஸ்க்கின் டேட்டா சென்டர்கள்தான் மின்னுமோ என்னவோ?

அறிவியல் வளர்ச்சி பற்றி வழக்கமாகச் சொல்வதுதான் இது என்றாலும், ஆழ்ந்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால், அறிவியல் வளர்ச்சி என்பது ஒரு கத்தி மாதிரி. ஆப்பிளையும் வெட்டலாம், விரலையும் வெட்டலாம்.

மஸ்க் ஆப்பிள் வெட்டுவாரா? விண்வெளியின் கரங்களை வெட்டுவாரா? ஒருவேளை வெட்டுவது கரங்கள் என்றால், என்றாவது ஒரு நாள் மேலே இருந்து விழப்போகும் மஸ்கின் சேட்டிலைட் டேட்டா சென்டர்களுக்கு நாம் ஹெல்மெட் போட்டுக்கொண்டு அலைவதா? இதுதான் டிரில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்வி அந்த டிரில்லியன் டாலர் மனிதருக்குப் புரிய வேண்டுமே!

அமெரிக்காவின் டிரம்பால் டாக்ஸ் பிரச்சனை என்றால், அமெரிக்காவின் மஸ்க்கால் இப்படி ஸ்பேஸ் பிரச்சனை. இந்த உலகம் என்ன செய்யப் போகிறதோ? அது சரி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

*****

அட்ஜெஸ்ட்மென்ட் ஆபத்துகள்!

அட்ஜெஸ்ட்மென்ட் ஆபத்துகள்!

விதிமுறை என்பது ஒரு ஸ்கேல் மாதிரி. அது நேராக இருந்தால் மட்டும்தான் கோடு நேராக வரும். கொஞ்சம் வளைந்தால் என்ன, என்று நாம் நினைக்கும்போதுதான் அந்த ஸ்கேல் நம் தலையில் விழும் கத்தியாகிறது.

நமக்குப் பொதுவாக நிர்வாக ஞானம் லேட்டாகத்தான் பிறக்கிறது, முடி கொட்டிய பிறகுதான் சீப்பு கிடைக்கும் என்பது போல. சில விதிகளை நெகிழ்வுத்தன்மை என்கிற பெயரில் தளர்த்தும் போது அது மிகப்பெரிய தவறுகளில் போய் முடிகிறது.

விதிகள் என்பவை வெறும் சட்டங்கள் அல்ல, அவை ஒரு நிர்வாகியின் கையில் இருக்கும் மிகச்சிறந்த அறுவைச் சிகிச்சை கருவிகள். அந்தக் கருவியைக் கீழே போட்டுவிட்டு, எல்லாம் சுமூகமாகப் போகட்டும் என்று நினைத்தால் கட்டி பெரியதாக வளர்ந்து வளர்ந்து வீங்கி வெடித்து நிர்வாகத்தைப் பதம் பார்த்து விடும். ஆக இதுதான் பூதாகரமாக நிற்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் விதை.

இதன் தர்க்கம் மிக எளிது. ஒரு சின்ன அட்ஜெட்மென்ட்தானே என்று நினைத்து தளர்த்தக் கூடாத விதியைத் தளர்த்தும் போது, ஏகப்பட்ட குழப்ப கும்மாளங்கள். அங்கேதான் உள்ளுணர்வு ஒரு ஷார்ட்கட்டை யோசிக்கிறது. ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்டைச் செய்யும் போது, நாமும் எப்போதாவது அதை பயன்படுத்திக் கொள்ளலாமே என்று. இந்த எண்ணம் இருக்கிறதே, இது ஓர் ஆபத்தான போதை. நிர்வாகத்தில் தவறான பாதை.

இங்கேதான் ஒரு நுட்பமான விஷயத்தைக் கோட்டை விட்டு விடுகிறோம். நீங்களும் அவர்களும் ஒன்றல்ல.

நீங்கள் கொடுக்கும் உழைப்பு அதிகமாக இருக்கலாம், அவர்கள் கொடுப்பதோ அற்பமாக இருக்கலாம். உழைப்பால் உயர்ந்து நிற்பவனையும், உழைக்காமல் ஊதியம் பார்ப்பவனையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதுதான் நிர்வாகக் கொலை. உங்களுக்குப் பொருந்தும் சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாருக்கும் பொருந்தாது.

உலகத்தில் எல்லோரையும் சமமாகப் பாவிப்பது போல ஒரு பாவனை வேண்டுமானால் செய்யலாம். ஆனால், உண்மையில் எல்லோரையும் சமமாகப் பார்க்க முடியாது. அதுவும் நிர்வாகத்தில். அதுதான் யதார்த்தம்.

நிர்வாகத்தில் குறுக்கு வழிகள் கிடையாது. ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படித்தான் செய்ய வேண்டும். அதில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய நினைத்தால், அதற்கான விலையை நீங்கள்தான் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

ஏன் நிர்வாகத்தைச் சில நேரங்களில் ஓர் ஒழுங்கோடு கொண்டு செல்ல முடிவதில்லை? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், உள்ளே ஒரு மெல்லிய தாழ்வு மனப்பான்மை ஒளிந்திருக்கலாம். நம்மால் சரியாகச் செய்ய முடியாமல் போனால் மற்றவர்களின் துணை வேண்டுமே என்கிற பயம் அப்பிக் கிடக்கலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நிர்வாகத்தில் யாரும் யாருக்கும் துணை இல்லை. எல்லாம் ஒரு கடிகாரத்திற்குத் தேவையான கட்டாயப் பார்ட்டுகள்.

சிறிய முள் மெதுவாக இயங்குகிறதே, பெரிய முள் வேகமாக இயங்குகிறதே, பெரிய முள்ளுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்து மெதுவாக இயங்கிக் கொள்ள ஒரு சிறு அட்ஜெஸ்ட்மென்ட் செய்யலாம் என்று நினைத்தால், கடிகாரம் கடிகாரமாக இருக்காது, அது பயனற்றதாகப் போய் விடும்.

ஆனால், ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால், அவர்கள் துணை நிற்பது போலப் பேசுவார்கள், அழகாகச் சமத்காரம் செய்வார்கள். ஆனால் காரியம் என்று வரும்போது, ஒவ்வொருவரும் அவரவர் சுயநலக் கூட்டிற்குள் சுருண்டுகொள்வார்கள்.

அடுத்தவனின் கஷ்ட நஷ்டங்களைப் பற்றித் துளிக்கூடக் கவலைப்படாத மனிதர்களிடம் போய் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொடுத்து விட்டு ஆப்பாயில் எதிர்பார்ப்பது என்பது பறவைக் காய்ச்சல் வந்தக் கோழியின் முட்டையை வாங்கிச் சாப்பிடுவதைப் போன்றது.

இனிமேல் நோ அட்ஜஸ்ட்மென்ட். விதிகள் பேசட்டும். நீங்கள் வேடிக்கை பாருங்கள். அவர்கள் விதிகளுக்குள் அட்ஜெஸ்ட்மென்ட் ஆகி வருவதை ஆச்சரியத்துடன் பார்ப்பீர்கள்.

அப்படி அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய நினைத்தால் அதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஒரு விதி இருக்கிறது. அது திருவள்ளுவர் சொன்னது,

“தகுதி என ஒன்று நன்றே பகுதியான்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.”         (குறள், 111)

பொருள் என்ன என்கிறீர்களா?

நீங்களே தேடிக் கண்டடையுங்கள். ஏனென்றால், இதில் நோ அட்ஜெஸ்ட்மென்ட். நீங்கள் தேட வேண்டும். தேடிக் கண்டடைய வேண்டும். அப்போதுதான் அது நிலைக்கும்.

*****

11 Feb 2026

பனிப்பொழிவோடு கலந்த ரத்தத் துளிகள்!

பனிப்பொழிவோடு கலந்த ரத்தத் துளிகள்!

கனடா அமைதியின் தேசம். இன்று நடந்த சம்பவம் கனடாவா அங்கு என்னடா நடக்கிறது விழி உயர்த்த வைத்திருக்கிறது.

அந்த இடம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ப்ளர் ரிட்ஜ்.

காலை மணி ஒன்பதே கால். வகுப்பறை துவங்கும் நேரம்.

அந்தக் காலை வகுப்பறைக்குள் ஆப்பிள் மடிக்கணினிகள் மெல்லத் திறந்துகொண்டிருந்தன. திடீரென்று அந்தச் சத்தம்.

என்ன சத்தம் இந்த நேரம் என்று அதைக் கேட்டு, யாரோ கதவை முட்டுகிறார்களோ என்றுதான் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது கதவை முட்டும் சத்தமல்ல, உயிரை எடுக்கும் சத்தம். துப்பாக்கிச் சூடு.

துப்பாக்கி ஏந்தியவன் உட்பட பத்து பேரின் உயிர்கள் காற்றில் கலக்கின்றன. 25க்கும் மேற்பட்டோரின் காயம் பட்ட ரத்தத் துளிகள் பனியில் நனைகின்றன.

அந்த செமி ஆட்டோமேட்டிக் கன், கண் இமைக்கும் நேரத்தில் மண்ணில் 10 உயிர்களை விழச் செய்து விட்டது.

அந்தத் துப்பாக்கிக் கொடூரனின் பெயர் இன்னும் போலீஸ் ஃபைலில் ரகசியமாக இருக்கிறது.

அந்தத் துப்பாக்கி மிருகம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தபோது, கணக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியைக்குத் தெரிந்திருக்காது, அதுதான் அந்த வகுப்பின் கடைசிப் பாடம் என்று. அவர் நடத்திய கணக்கு முடிவதற்குள் பத்து பேரின் கணக்கு முடிந்து விட்டது.

கனடா என்றால் நம்பகம் என்று ஒரு பிம்பம் உண்டு. பனி, மேப்பிள் சிரப், பண்பான மனிதர்கள். ஆனால், இப்போது அந்தப் பனிப்பாறையில் ரத்தக் கறை படிந்திருக்கிறது. துப்பாக்கிக் கலாச்சாரம் எனும் வைரஸ் மெல்ல மெல்ல அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குப் பரவுகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதெல்லாம் அமெரிக்காவில்தான் சகஜம், கனடாவில் அல்ல.

அமெரிக்காவில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச் சூடுகளைக் கடக்க பழகி விட்ட உலகம், கனடாவில் நடக்கும் போது அதிர்ச்சி அடைகிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி கண்கள் சிவக்க, இது ஒரு தேசிய சோகம் என்கிறார்.

கனடா இந்தியா அல்ல. அங்கே பாதுகாப்பு அதிகம், தொழில்நுட்பமும் அதிகம். அப்படியானால் அந்தப் பள்ளியில் இருந்த ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம் ஏன் வேலை செய்யவில்லை? லேசர் அலாரங்கள் எங்கே போயின? ஒருவன் ஆயுதத்தோடு நுழையும்போது அந்தச் செயற்கை நுண்ணறிவு ஏன் மௌனமாக இருந்தது?

மனித வன்முறையை எந்த மென்பொருளாலும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதற்கு இது மேலும் ஓர் உதாரணமாகி விட்டது.

பத்து உயிர்கள் காற்றில் கரைந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் மெழுகுவர்த்திகள் எரியும். பூங்கொத்துகள் குவியும். அப்புறம்? அடுத்த ஒரு செய்தி வரும் வரை நாம் இதை மறப்போம்.

துப்பாக்கிகள் பேசுவதை நிறுத்திவிட்டு, மனிதர்கள் பேசத் தொடங்கினால் ஒழிய, இது போன்ற செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

குழந்தைகளோடு பேசத் தொடங்குவோம். அவர்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளைப் பிடுங்கி விட்டுத் தூரிகைகளையும் பூங்கொத்துகளையும் கொடுப்போம்.

கனடா போன்ற நிலை இந்தியாவில் ஏற்படாது என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. இப்படித்தான் அமெரிக்காவில் ஏற்பட்டது போல, இங்கு ஏற்படாது என்று கனடா இருந்திருக்கும். ஆனால் என்னவாயிற்று?

இந்தியாவில் துப்பாக்கிகளுக்கு சட்ட ரீதியான தடைக்கற்களும், வேகத்தடைகளும் நிறைய இருக்கின்றன என்றாலும், கள்ளத்துப்பாக்கிகள் அதிகம் உலவுவது குறித்து உச்சநீதிமன்றமே கவலை தெரிவித்திருக்கிறது. அவை விளையாட்டுப் பொம்மைகள் போலக் குழந்தைகள் கையில் கிடைத்து விடாமல், அவர்களின் கையில் புத்தகங்களும், பேனாக்களுமே புழங்குவதற்கு அவர்களுடனான உரையாடலையும் விவாதங்களையும் நாம் அதிகப்படுத்த வேண்டும்.  

மொபைலிலும், டிஜிட்டல் திரைகளிலும் மூழ்கியிருக்கும் அவர்களை ஆடி, பாடி, உரையாடி விளையாடும் களம் நோக்கித் திருப்ப வேண்டும்.

*****

மன விரைவு ஒரு சாப்ட்வேர் பக்!

வாழ்க்கை வலைக்குள் ஆடும் நடனம்!

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அப்புறம் அந்த ஒரு க்ளிக். இந்த வேகத்தோடு வேகமாக இன்னொரு வேலையையும் முடித்து விடுவோம் என்று அதில் இறங்கப் போய் டிராபிக் ஜாம் ப்ளஸ் ஆக்சிடென்ட். சிஸ்டம் ஹேங். கூடவே மனசும்.

புதிய முயற்சிகளின் போது விபத்துகள் சகஜம். சறுக்காமல் மலையேற முடியாது. ஆனால், சறுக்கும்போது அடிபடும் வலி இருக்கிறதே. அதுதான் ஒரு மாதிரியான மன உளைச்சலைக் கொடுத்துவிடுகிறது.

பிரச்னை இதுதான். வேகம்.

மனம் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் போலச் செயல்படத் துடிக்கிறது. ஒளியின் வேகத்தில் காரியங்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் யதார்த்தம் ஒரு மாட்டு வண்டி. இந்த வேகத்துக்கும் விவேகத்துக்கும் நடக்கும் யுத்தத்தில், நிதானம் என்கிற லாஜிக் அடிபட்டுச் சாகிறது. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத வேகத்தில் ஓட நினைப்பது, ஹைவேயில் ப்ரேக் இல்லாத காரை ஓட்டுவது போன்றது. ஆபத்தானது.

இன்னொரு விஷயம். முடிவுகள்.

யார் எதைக் கேட்டாலும் சட்டென்று பதில் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயச் சட்டம் இருக்கிறதா என்ன? மனிதன் ஒன்றும் கூகுள் தேடுபொறியோ, அல்லது தீர்ப்புச் சொல்லும் இயந்திரமோ கிடையாது. ஒரு செகண்டில் அகண்டமாக முடியாது.

வெளியில் விட்ட சொல், எய்த அம்பு. திரும்பப் பெற முடியாது. அதனால், சட்டென்று எதிலும் கருத்துச் சொல்வதோ, சரி என்று தலையாட்டுவதோ புத்திசாலித்தனம் இல்லை. அது ஒரு முட்டாள்தனம். மோடுமுட்டித்தனம்.

கொஞ்சம் நேரம் கொடுக்க முடியுமா? என்கிற அந்த நான்கு வார்த்தைகள் தரும் பாதுகாப்பு அலாதியானது. ஒரு கதவைத் திறந்து, இன்னொது கதவை மூடி வைத்தே பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் பிறகு யோசித்துப் பார்க்க இடம் இருக்கும்.

அடுத்த ஒன்று. சூழல் தர்மம்.

எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான பதிலைப் போட்டு எக்சாம் எழுத முடியாது. யுனிவர்சல் ஆன்ஸர் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஆளுக்கேற்ப, இடத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப பதில்கள் மாற வேண்டும். இது சந்தர்ப்பவாதம் அல்ல, தவிர்க்க முடியாத எதார்த்தம்.

அடுத்து வேறென்ன, வாழ்க்கைச் சுழலில் நாம் ஆடப் போகும் முறைதான்.

உண்மை என்னவென்றால், நாம் ஒரு பெரிய வலையில் சிக்கி இருக்கிறோம். நம்மைச் சுற்றி ஒரு சூழல் பின்னப்பட்டிருக்கிறது. அதில் சிக்கிக் கொண்டுதான் நாம் சுழன்றாட வேண்டும். தப்பிக்க வழியில்லை. ஆனால் அந்த வலையிலேயே எப்படி அழகாக நடனம் ஆடுவது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். ஆடும் போது அதிக உணர்ச்சிவசப்படாமல், அளவான மகிழ்ச்சியோடு, நிதானமான தாளத்தோடு ஆடப் பழகிக் கொள்ள வேண்டும். அதிரடி ஆட்டம் அல்லது உணர்ச்சிகர ஆட்டம் வலையைப் பிய்ந்துப் போகச் செய்து பாதாளத்தில் தள்ளி விடும்.

மேற்படி சங்கதிகள் அனைத்துக்கும் பேஸ் மனவிரைவு.

எனவே, கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சுழன்று ஆடுங்கள்.

நிதானம் முக்கியம், பிகிலு.

ஓர் அவசியமான பின்குறிப்பு என்னவென்றால், இந்தப் பிகில் என்ற வார்த்தைக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

*****