26 Jun 2026

மனிதா இன்னும் நீ ஏன் பைத்தியமாகவில்லை?!

சீரழித்த சினிமா - 24

சேது

மனிதா இன்னும் நீ ஏன் பைத்தியமாகவில்லை?!

இரண்டாயிரமாவது ஆண்டின் விடியலுக்குச் சற்று முன்பாக, 1999 ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச மனநலம் சார்ந்த புரிதல்களுக்கும் ஒட்டுமொத்தமாக டைம் பாம் வைத்தது சேது திரைப்படம்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரி மாணவர்கள் ரவுடித்தனம் செய்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" அல்லது "காதல் என்பது பரஸ்பரச் சம்மதத்துடன் மலர வேண்டிய ஒன்று" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு கல்லூரி அளவிலான லோக்கல் தாதா, பயந்து நடுங்கும் ஒரு பெண்ணை மிரட்டிக் காதலிப்பதும், அவளைத் தன் வன்முறைப் பிடிக்குள் வைப்பதும்தான் உன்னதமான காதல்" என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, சேது திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அந்தச் சீயான் என்ற கரடுமுரடான, அதேசமயம் மனநலம் பிறழ்ந்த பிம்பமும், அபிதா குஜலாம்பாள் என்கிற பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மனநலக் காப்பக நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த மாணவர் ஒழுக்கவியல் கல்வி என்ன தெரியுமா? நீங்கள் ஒரு கல்லூரியின் மாணவர் தலைவராக இருந்தால் போதும்; உங்களுக்குப் பாடப்புத்தகங்களோ, பேராசிரியர்களோ தேவையில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கல்லூரிக்குள் புகுந்து சக மாணவர்களை மிரட்டலாம், அராஜகங்களுடன் வலம் வரலாம்.

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 506 அதாவது, மிரட்டல் விடுத்தல் போன்ற அற்பமான சட்டங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமா நாயகனுக்குப் பொருந்தாது.

ஒரு பெண் உங்களைப் பார்த்துப் பயந்து ஓடினால், அவளை நடுத்தெருவில் வைத்து மிரட்டி, அவளது பயத்தையே காதலாக மாற்ற முனைய வேண்டும். இதுதான் ஆண்மையின் கம்பீரம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் கல்லூரிகளில் படித்து முன்னேற வழியில்லாமல், சீயான் பாணியில் தாடி வளர்த்து, தங்களை ஒரு ரப் அண்ட் டப் ரவுடியாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

சேது படத்தில் ஒட்டுமொத்த மனநலப் பிறழ்வையே காதலின் உன்னதக் குறியீடாக மாற்றி விற்றார்கள். ஹீரோ சேதுவுக்கு அடிதடியில் மண்டை உடைந்து, அவர் மனநலக் காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மொட்டை அடித்து அலைவார்.

இந்த உறைபனியூட்டும் கொடூரத்தைக் காட்டிவிட்டு, பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், காதலுக்காகப் பைத்தியம் ஆயிட்டான், என்று பார்ப்பவனுக்குக் கொலையையும் வன்முறையையும் விடக் கொடூரமான ஒரு மனநோயின் மீது போலிப் புனிதத்துவத்தை வரவழைப்பார் இயக்குனர்.

இதன் விளைவுவாகக் காதல் தோல்வி அடைந்தால் நேராக மனநல மருத்துவரிடம் போவதை விடுத்து, சீயான் போலச் சங்கிலியை இழுத்துக்கொண்டு அலையத் துடிக்கும் சினிமாட்டிக் பொதுப்புத்தியைத் தமிழன் வளர்த்துக்கொண்டான்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், மனநலம் குணமாகித் திரும்பி வரும் சேது, தன் காதலி இறந்துவிட்டதை அறிந்து, தன்னைத் தேடி வரும் மனநலக் காப்பக வாகனத்திலேயே ஏறித் திரும்பவும் பைத்தியமாகவே வாழ ஓடிவிடுவார். இதை ஏதோ காதலின் பிரிக்க முடியாத சோக பந்தம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது காதல் அல்ல; அது நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாத ஒரு பலவீனமான ஆணின் கோழைத்தனம். "என் காதலி இல்லை என்றால் நான் ஏன் சாதாரணமாக வாழ வேண்டும்? நான் பைத்தியமாகவே மடிவேன்" என்று ஓடுவதை மாஸாகக் காட்டியது இத்திரைப்படம்.

தமிழ் இளைஞர்களுக்கு காதல் தோல்வி அல்லது துயரம் வந்தால், அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்கக் கூடாது; உங்களை நீங்களே சித்திரவதை செய்து அழித்துக்கொள்ள வேண்டும் என்ற போலித் தற்கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. அபிதா என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் மிரட்டலுக்குப் பயந்து நடுங்குவதற்கும், அவன் பைத்தியமானவுடன் அவனுக்காக உருகி உருகி அழுது தன் உயிரையே விடுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு பலிகடாவாகக் காட்டப்பட்டார். அவளுக்கு என்று தனியாக ஒரு வாழ்க்கை, குடும்பப் பாரம்பரியம் இருந்தாலும், ஹீரோவின் சீயான் பிம்பத்திற்கு முன்னால் அவள் ஒரு மண்பொம்மை போலச் சுருக்கப்பட்டாள்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, பகுத்தறிவோ இல்லாமல், தன்னை மிரட்டிக் கடத்தும் ரவுடியாக இருந்தாலும் அவனது அன்பைப் புரிந்துகொண்டு அவனுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் தேசிய விருது வாங்கும் அளவிற்கு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

சேது பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனுக்குச் சீயான் என்ற நிரந்தரப் பிம்பத்தைத் தந்து, அதன் இயக்குநரை மனநலப் பிரச்சனைகளைக் கொண்டு ஹிட்டடிக்கும் பலமான இயக்குநராக கமர்ஷியல் ஏணியில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு பெண்ணின் சம்மதம் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. "அவன் கெட்டவனா இருந்தாலும் மனசுக்குள்ள குழந்தை சார்" என்ற ஒற்றை வாதத்தைக் காட்டி, கல்லூரிப் பெண்களை மிரட்டுவதும், கடத்துவதும், மனரீதியாக வசிப்படுத்துவதும் தீவிரமான காதல் என்பதாக இங்கே புனிதப்படுத்தப்பட்டது.

மன அழுத்தம் என்பது மருத்துவப் பிரச்சினை அல்ல, அது ஓர் அழகியல் என்று மாற்றிய பெருமை சேதுவையே சாரும். “வாழ்க்கையில் உனக்கு விடிவு காலமே கிடையாது, நீ உருப்பட நினைத்தாலும் இந்தச் சமூகம் உன்னை வாழவிடாது” என்கிற அதீத எதிர்மறை எண்ணத்தை இது இளைஞர்களின் ஆழ்மனதில் விதைத்தது. தங்களுக்கு நடக்கும் சின்னச் சின்ன தோல்விகளுக்கும், தங்களைச் சேதுவாக நினைத்துக்கொண்டு சுய பரிதாபத்தில் மூழ்கும் பலவீனமான மனிதர்களை இந்தப் படம் உற்பத்தி செய்தது.

வாழ்க்கையில் ஏமாற்றம் வந்தால் மீண்டு வராதே. மீண்டும் பைத்தியமாகவே போய்விடு என்பது சேது வழங்கிய ஓர் ஆபத்தான டிப்ரசிவ் சிந்தனை. இளைஞர்களுக்கு ஒரு தோல்வியைக் கையாளும் பக்குவத்தையோ, நம்பிக்கையையோ இந்தப் படம் தரவில்லை. மாறாக, சோகத்தைக் கொண்டாடும், சுய அழிவைத் தேடும் ஒரு போக்கை உருவாக்கியது.

கதாநாயகன் என்பவன் அழகாகவோ, சுமாராகவோ இருப்பது முக்கியமல்ல; எவ்வளவு கொடூரமாகத் தன்னைத் தானே சித்திரவதை செய்துகொள்கிறான் என்பதுதான் அர்ப்பணிப்பு என்று ஒரு புது வித சித்திரவதை முயற்சியை இது துவக்கி வைத்தது.

சமூக எதிர்மறைகளையும் வக்கிரங்களையும் காட்டி, சுபமான முடிவை வைக்கவே கூடாது என்கிற ஒரு தவறான முன்மாதிரியை இது தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தது.

தமிழ்ச் சமூகத்தின் மனநலத்தை ஒரு வித மனச்சோர்வு சார்ந்த கலாச்சாரத்தை நோக்கி நகர்த்திய பெருமையும் இத்திரைப்படத்துக்கு உண்டு. சேது திரைப்படம் தமிழ் சினிமாவின் இலக்கணத்தை உடைத்தது உண்மைதான். ஆனால், அது சமூகத்தின் மனநல இலக்கணத்தையும் ரொம்பவே சிதைத்தது.

ஒரு பெண்ணை மிரட்டிக் காதலிப்பதுதான் உன்னதமான காதல் என்றும், மனநலம் பிறழ்ந்து சங்கிலியால் அடிபடுவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த தியாகம் என்றும், வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிவதே ஹீரோயிசம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

சுருக்கமாகச் சொன்னால், சேது தமிழ் சினிமாவின் கபாலப் பகுதியில் விழுந்த ஒரு பலத்த அடி!

*****

25 Jun 2026

மறுதேர்வு என்னும் மரண லீலை

மறுதேர்வு என்னும் மரண லீலை

மனிதன் பிறக்கிறான்; வாழ முயல்கிறான்; ஆனால் இடையில் ஏதோ ஒரு புள்ளியில் அவன் ஒரு வட்டத்திற்குள் அடைக்கப்படுகிறான். அந்த வட்டத்தை ஓஎம்ஆர் தாள் என்கிறார்கள். அந்த வட்டத்தை ஒழுங்காகக் கருக்கினால், அதாவது கருப்பாக்கினால் மட்டுமே மனிதன் இருக்கிறான்.

அதாவது, இந்தியத் துணைக் கண்டத்தில் எதிர்காலம் என்பது ஒரு மூன்று மணி நேரத் தேர்வு அறையில், நான்கு பக்கக் கேள்விகளுக்கு நடுவே, கருப்பு மை பேனாவால் வட்டமிடும் புள்ளிகளில் ஒளிந்திருக்கிறது.

இந்த நம்பிக்கையின் உச்சகட்டக் கூத்தே நீட்.

தேர்வு நடக்கும், மதிப்பெண் வரும், இடம் கிடைக்கும் என்ற எளிய சமன்பாட்டை மாற்றி, தேர்வு நடக்கும், லீக் ஆகும், ரத்தாகும், மீண்டும் நடக்கும் என்ற புதிய மறுதேர்வு விளையாட்டைத் தேர்வு முகமை அறிமுகப்படுத்திய உடனே, நாடு முழுவதும் 15 மாணவர்கள் தங்கள் வாழ்க்கையையே ரத்து செய்துகொண்டு விட்டார்கள். அதாவது, தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள்.

இதில் தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் அடக்கம்.

ஆல்பர்ட் காம்யு சிசிபஸ் என்றொரு கிரேக்கக் கதாபாத்திரத்தைப் பற்றி எழுதியிருப்பார். சாபத்தின் காரணமாக அவன் ஒரு பெரும் பாறையை உருட்டிக்கொண்டு மலை உச்சிக்குச் செல்வான். உச்சியை அடைந்ததும் அந்தப் பாறை தானாகக் கீழே உருண்டுவிடும். மீண்டும் அவன் கீழே வந்து அதை மேலே உருட்ட வேண்டும். இது முடிவில்லாத, அர்த்தமற்ற ஒரு சுழற்சி.

நமது தருமபுரி, கிருஷ்ணகிரி மாணவர்களின் நிலையும் இதுதான். அவர்கள் பாறையை அதாவது, பாடப்புத்தகங்களை உருட்டிக்கொண்டு மலை உச்சிக்கு அதாவது, தேர்வுத் தேதிக்கு நகர்கிறார்கள். உச்சியைத் தொடும் வேளையில், கேள்வித்தாள் கசிந்துவிட்டது என்று சிஸ்டம் அந்தப் பாறையைக் கீழே தள்ளிவிடுகிறது. மீண்டும் முதலிலிருந்து உருட்டு, அதற்குப் பெயர் மறுதேர்வு என்கிறது தேர்வு முகமை.

மனிதன் பாறையை உருட்டலாம். ஆனால், பாறையே அவனைக் கேலி செய்யத் தொடங்கும்போதுதான் இருத்தலின் ஆகப்பெரும் வழுக்கல் நிகழ்கிறது. நீ படித்துக்கொண்டே இரு, நான் ரத்து செய்துகொண்டே இருப்பேன் என்று ஒரு தேர்வு முகமை சொல்லும்போது, வாழ்தல் என்பது அதாவது தேர்வு என்பது வெறும் அபத்த நாடகமாகிவிடுகிறது. 15 பேர் அந்த மேடையிலிருந்து பாதியிலேயே இறங்கிவிட்டார்கள். அவர்களுக்கு நாடகம் பிடிக்கவில்லை என்பதை விட, அதன் முட்டாள்தனம் அலுத்துவிட்டது என்பதே உண்மை.

ஜீன் பால் சார்த்தர் சொன்னது போல, "மனிதன் சுதந்திரமாக இருக்க தண்டிக்கப்பட்டிருக்கிறான்." ஆனால், இங்குள்ள கல்வி முறையோ, "நீ சுதந்திரமாகத் தற்கொலை செய்து கொள்ளவாவது அனுமதிக்கப்படுகிறாய்" என்ற விசித்திரமான தத்துவத்தை முன்வைக்கிறது.

மரணங்கள் எப்போதும் எண்களாக மாற்றப்படும்போதுதான் அரசாங்கங்களுக்கு எளிதாகப் புரிகிறது. 15 என்பது வெறும் இரண்டு இலக்க எண்தான். ஆனால், அந்த எண்களுக்குப் பின்னால் 15 வீடுகளின் அடுப்பங்கரைகளில் இனி ஒருபோதும் வேகாத சோறும், எரியாத விளக்குகளும் இருக்கின்றன.

நமது கல்வி முறையின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என்னவென்றால், அது மாணவர்களுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, அழுத்தத்தை மிகத் துல்லியமாகக் கையாளக் கற்றுக் கொடுத்துவிடுகிறது. ஆனால், அந்த அழுத்தமே ஒரு கட்டத்தில் மரணப் பாசமாக மாறும் என்பதை யாரும் கணக்கில் கொள்வதே இல்லை.

*****

அறமற்ற வேட்டையும் அனிச்சை வகை வன்முறையும்!

சீரழித்த சினிமா – 23

துப்பாக்கி

அறமற்ற வேட்டையும் அனிச்சை வகை வன்முறையும்!

இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டின் தீபாவளிப் பண்டிகை தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு புதிய தேசபக்தி ரசாயனத்தை அறிமுகப்படுத்தியது. அதுவரை ராணுவ உடை அணிந்து எல்லையில் நின்று நாட்டைப் பாதுகாப்பதாகக் காட்டப்பட்ட நாயகர்களை மாற்றி, லீவில் ஊருக்கு வந்தாலும், துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அடியாட்களை வேட்டையாடலாம் என்ற புதிய அத்துமீறல் பார்முலாவைத் தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை துப்பாக்கி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் மிக நேர்த்தியான பிம்பமும், நாயகியுடனான கிளாமர் பாடலும், துரிதமான திரைக்கதையின் வேகமும் சேர்ந்து, தமிழர்களின் சிந்திக்கும் திறனை எப்படி ஒரு பாசிச எல்லைக்குள் சுருக்கியது என்பதை ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ராணுவக் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்தால் போதும்; உங்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்களோ, காவல்துறையோ, நீதிமன்றமோ தேவையில்லை. மும்பை போன்ற ஒரு பெருநகரத்திற்குள் புகுந்து, உங்களுக்குச் சந்தேகப்படுபவர்களைக் கடத்தி, சொந்தமாக டார்ச்சர் செய்து, எவனை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம்.

படத்தில் வரும் நாயகன், ஒரு ராணுவ வீரனாகப் பொறுப்புடன் நடப்பதை விட, சட்டத்திற்குப் புறம்பாகத் தன் சொந்த நீதிமன்றத்தை நடத்தும் ஒரு விஜிலாண்டி ஆகத்தான் செயல்படுவார். நாட்டின் பாதுகாப்பு என்ற லேபிளை ஒட்டிவிட்டால், ஒரு தனிமனிதன் செய்யும் அத்தனை சட்டவிரோதக் கொலைகளும் புனிதமானவை என்ற ஆபத்தான பாசிசச் சிந்தனையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

படத்தின் ஆகச்சிறந்த மாஸ் காட்சியாகக் கொண்டாடப்படுவது, நாயகன் தன் ஆர்மி நண்பர்களை ஒன்றுதிரட்டி, மும்பையின் வெவ்வேறு இடங்களில் இருக்கும் ஸ்லீப்பர் செல்களை ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லும் காட்சி. எந்தவித விசாரணையோ, சட்டபூர்வமான ஆதாரங்களோ இல்லாமல், அவன் தீவிரவாதி, அவனைக் கொன்றுவிடு என்று ஒரு தனிநபர் உத்தரவிடுவதும், அதைத் தேசபக்தி என்ற பெயரில் சமூகம் கைதட்டி ரசிப்பதும் எவ்வளவு பெரிய அறவீழ்ச்சி!

ஒரு ஜனநாயக நாட்டில் குற்றவாளிகள் கூடச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, முறையான விசாரணை நடத்தப்பட்டுதான் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விழுமியத்தை இத்திரைப்படம் அடியோடு தகர்த்தது.

விளைவு?

நிஜ வாழ்க்கையிலும், அடிச்சு என்கவுண்ட்டர் பண்ணுங்க சார் என்று மனித உரிமைகளைக் கேலி செய்யும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறைக்கு அடிமையான பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது ஆழமாக விதைத்தது.

இத்திரைப்படத்தின் மையக்கதை தீவிரவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட மதப் பின்னணி கொண்ட மனிதர்களை ஒட்டுமொத்தமாகச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் ஓர் ஆபத்தான ஸ்டீரியோடைப் பொதுப்புத்தியை மிக நளினமாக உருவாக்கியது.

பம்பாயில் இருக்கும் சாதாரண வியாபாரிகள், கூலிகள் போன்ற சாமானியர்களைச் ஸ்லீப்பர் செல்கள் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடைத்து, அவர்கள் அனைவருமே நாட்டின் அமைதியைக் கெடுக்கக் காத்திருப்பவர்கள் போன்ற ஒரு போலிப் பயத்தைக் கமர்ஷியலாக இத்திரைப்படம் விற்றது.

சமூகத்தில் இருக்கும் பன்முகத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும் பேணுவதை விடுத்து, சாமானிய மனிதர்களுக்கு இடையே அவநம்பிக்கையையும் வெறுப்பையும் விதைப்பதற்கு இந்தத் துப்பாக்கி பாணி அரசியல் மிகச் கச்சிதமாகப் பயன்பட்டது.

படத்தில் வரும் நாயகி ஒரு பாக்ஸிங் வீராங்கனை. ஒரு விளையாட்டு வீராங்கனையைத் தமிழ் சினிமா எப்படி நடத்தும்? அவளுக்குப் புத்திசாலித்தனம் இருக்காது, எப்போது பார்த்தாலும் லூசுத் தனமாகப் பேசிக் கொண்டிருப்பாள், நாயகன் தன்னை ஏமாற்றுவது கூடத் தெரியாமல் ஏமாந்து போவாள். அவளது பாக்ஸிங் திறமை என்பது படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு காமெடி காட்சியோடு முடிந்துவிடும்; அதன் பிறகு அவள் நாயகனின் பின்னால் அலைந்து உருகும் ஒரு வெறும் அழகுப் பொம்மைதான். பெண்களின் கல்வியையோ, விளையாட்டுத் திறமையையோ, ஆளுமையையோ கமர்சியல் சினிமா எப்படித் தன் ஆணாதிக்க பிம்பத்திற்கு முன்னால் மண்டியிட வைக்கிறது என்பதற்கு இத்திரைப்படமும் ஒரு ஆகச் சிறந்த உதாரணம்.

துப்பாக்கி பாக்ஸ் ஆபீஸில் 100 கோடிகளைக் குவித்து, நாயகனின் திரையுலகப் பாதையை அடுத்த கட்டத்திற்குத் தூக்கிச் சென்றிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அதற்கு முன், சலவைக்காரர், காய்கறி விற்பவர், பால் காரர் ஆகியோரைப் பார்த்தால் "காசு எவ்வளவு?" என்றுதான் கேட்கத் தோன்றும். படத்திற்குப் பின், "இவன் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறான்? ஒருவேளை ஸ்லீப்பர் செல்லோ?" என்ற சந்தேகத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கும் உளவியல் நோய் பரவியது.

தீவிரவாதி என்றால் தாடி வைத்திருக்க வேண்டும், கறுப்புச் சட்டை போட்டிருக்க வேண்டும் என்ற மரபார்ந்த கற்பிதங்களை உடைத்து, "உன் பக்கத்து வீட்டில் குடிவந்து, உனக்கேத் தெரியாமல் உன் வைபையைத் திருடிப் பயன்படுத்துபவனும் தீவிரவாதியாக இருக்கலாம்" என்ற உலகளாவிய விழிப்புணர்வை இப்படம் விதைத்தது. இதன் விளைவாக, சட்டம், ஒழுங்கு, காவல்துறை இதெல்லாம் வேஸ்ட்; ஒரு தனிமனிதன் நினைத்தால், அவனாகவே சிஸ்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தீர்ப்பு எழுதலாம் என்கிற ஆபத்தான அராஜகவியலை இத்திரைப்படம் வேரூன்றியது.

தேசபக்தி என்ற பெயரில் தனிநபர் வன்முறையை நியாயப்படுத்துவதையும், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைக் கெத்து என்று நம்புவதையும், பிற மனிதர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதையுமே ஒரு ஸ்டைல் ஆக மாற்றியதுதான் இந்தத் துப்பாக்கி தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையில் நிகழ்த்திய ஆகச்சிறந்த வரலாற்றுத் துளை!

*****

24 Jun 2026

ஆத்மார்த்த அலப்பறைகளும், உபநிடத பல்புகளும்!

ஆத்மார்த்த அலப்பறைகளும், உபநிடத பல்புகளும்!

ஜெயமோகன் வழக்கம்போல ஆரம்பத்திலேயே இளைஞர்களைக் கொஞ்சம் வாரிவிடுகிறார். இளமை என்றாலே கொந்தளிப்பு, தந்தை எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு என்று சைக்காலஜி பேசுகிறார்.

உண்மையில் விஷயம் அதுவல்ல; காந்தியின் சத்திய சோதனையை விட, அவரது சரளாதேவி சோதனைதான் வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது, அவ்வளவுதான்! வங்காளத்து மேட்டிமைவாதம், பாரதியாரின் சிறுகதை, பிரம்ம சமாஜம் × ஆரிய சமாஜம் என்று ஏகப்பட்ட வரலாற்றுப் பின்னணிகளோடு சரளாதேவி சௌதராணியை மேடைக்குக் கொண்டு வரப்படுகிறார்.

38 வயதில், கணவனும் மகனும் இருக்கும் போதே, 51 வயது காந்தியுடன் கடிதப் போக்குவரத்து நடத்தியிருக்கிறார் சரளாதேவி. காந்தியோ, தன் வழக்கமான பரிசோதனை பாணியில், இதற்கு “அறிவுத்துணைவி, “ஆத்மாவின் தோழி என்றெல்லாம் டிசைன் டிசைனாகப் பெயர் வைக்கிறார். நாமெல்லாம் இன்று Platonic Relationship என்று ஸ்டேட்டஸ் போடுவதைக் காந்தி அப்போதே காந்தியப் பாணியில் டிசைன் பண்ணியிருக்கார்!

அடுத்த கட்டமாக, திருமணத்தை நோக்கிக் காந்தி முடிவெடுத்தபோதுதான், சுற்றியிருந்த ராஜாஜியும், மகாதேவ தேசாயும் பதறிப்போய் அலறுகிறார்கள். இதைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்கிறார்கள். காந்தியோ விடாமல், “இது உடற்காதல் இல்லப்பா, இன்டெலக்சுவல் ஈர்ப்பு என்று வாதாடுகிறார்.

கடைசியில், இருபது வயது மகன் தேவதாஸ் வந்து, “அப்பா, அம்மாவைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கள் என்று சென்டிமென்ட் பிளாக்மெயில் செய்த உடனே, காந்தி ஒரு லெட்டரைப் போட்டுவிட்டு விலகி விடுகிறார். தன் சுயசரிதையில், “என் ஆணவம் என்னை ஒரு தீயாலான பாதைக்குள் கொண்டு செல்லப் பார்த்தது என்று இதைக் காந்தியடிகள் சொல்வதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

சரளாதேவி சும்மா இருக்கவில்லை. காந்திக்கு எதிராகப் பேனாவை எடுத்துப் போர்க்கொடி தூக்குகிறார். காந்தி பண்றதெல்லாம் நாட்டுக்குக் கேடு என்று கட்டுரைகளாகக் கொட்டுகிறார்.

இதையெல்லாம் படித்துவிட்டு நம்ம ஜெயமோகன், காந்தியவாதி ஜி.குமாரபிள்ளையிடம் போய், “சரளாதேவி செம அறிவாளி சார், அவங்க காந்தியை எதிர்த்தா அதுல நியாயம் இருக்கும்ல?” என்று ஆவேசப்பட்டிருக்கிறார். அதற்கு குமாரபிள்ளை, “தம்பி, முதல்ல காந்தியைப் படிப்பா என்று சில புத்தகங்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

அங்குதான் அந்த மகா மெய்ஞ்ஞான விவாதம் நடக்கிறது. சரளாதேவி ஏன் காந்தியைப் புரிந்துகொள்ளவில்லை? அதற்கு குமாரபிள்ளை, ஈஸோவாஸ்ய உபநிடத வரியை எடுத்துப் போடுகிறார். “அறியாமையில் இருப்பவன் இருளில் இருக்கிறான்; ஆனால், எனக்கு எல்லாம் தெரியும் என்று அலையும் அறிவுஜீவி, அதைவிடப் பெரிய இருளில் அதாவது, ஆணவ இருளில் இருக்கிறான்.”

சரளாதேவியின் கட்டுரைகளில் நான் என்ற வார்த்தைதான் ஓங்கி ஒலித்ததாம். கடைசி காலத்தில் சரளாதேவி இந்த அறிவுஜீவி ஆணவத்தை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஆன்மிகப் பாதைக்கு மாறி, காந்தியைப் புரிந்துகொண்டாராம்.

நல்லவேளை! மெய்யறிவின் ஒளி கிடைத்து, காந்தி குடும்பத்திலேயே தன் மகனுக்குப் பெண்ணும் எடுத்து, சுபமங்களமாக கதையை முடித்திருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, சயின்டிஸ்ட்டாக இருந்தாலும் சரி ரிஜெக்சன் வந்தால் முதலில் வருவது கோபமும் வன்மமும்தான். அதுக்கு அறிவு விதிவிலக்கல்ல. அங்க வேலை செய்வது லிம்பிக் சிஸ்டம், மூளை இல்லை!

சுருக்கமாகச் சொன்னால், "அறிவின் இருளுக்கு மாற்று அறியாமை அல்ல, மெய்யறிவு" என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த ஆத்மார்த்த காதல்களும், அது பிரேக் அப் ஆனதும் வரும் வன்மங்களும், அப்புறம் வயசானதும் வரும் தத்துவ ஞானங்களும் காலம் காலமாய் உலகத்துல நடக்குற அதே கொசுத்தொல்லைதான்!

அதற்கு ஏன் உபநிடதத்தை எல்லாம் இழுத்து, பாவம், அந்த இருட்டைக் குத்திக் கிழிக்க வேண்டும்? ஒருவர் தனது ஈகோவைப் புரிந்து கொண்டால் விசயம் முடிந்தது. இதற்கு ஆன்மீகம்தான் வேண்டும், குரு சிஷ்ய பாவம் அவசியம் என்றெல்லாம் ஏன் அநாவசிய ஆணிகளை அடிக்க வேண்டும்?

*****

தாத்தாவின் கத்தியும் தடம் மாறியு புத்தியும்!

சீரழித்த சினிமா – 22

இந்தியன்

தாத்தாவின் கத்தியும் தடம் மாறியு புத்தியும்!

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றாறாம் ஆண்டின் மே திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச சட்டபூர்வ ஜனநாயக விழிப்புணர்வுக்கும், நிர்வாகப் பகுத்தறிவுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, வர்மக்கலை மூலம் தர்மக் கொலை செய்யும் தாத்தாவைக் காட்டியதுதான் இந்தியன் திரைப்படம்.

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, லஞ்சம் வாங்குபவர்கள்; இரண்டு, லஞ்சம் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள். ஆனால், இந்தியன் திரைப்படம் நமக்கு ஒரு மூன்றாவது வகையைக் காட்டியது. லஞ்சம் வாங்குபவர்களை வர்மக் கலையால் குத்தி தர்மக் கொலை செய்யும் ஒரு முதியவர்தான் அந்த மூன்றாவது வகை.

படம் முன்வைக்கும் ஆகப்பெரிய ஆபத்தான தத்துவம் என்னவென்றால், சட்டம் தன் கடமையைச் செய்யாதபோது, ஒரு தனிமனிதன் கத்தியை கையில் எடுக்கலாம் என்பதுதான். அரசு அலுவலகத்தில் பியூன் முதல் அதிகாரி வரை காசு கேட்கிறார்கள். உடனே அவர்களைக் கொலை செய்தால் நாடு சுத்தமாகிவிடும் என்பதுதான் இத்தத்துவத்திற்கான சுருக்கமான பொழிப்புரை.

இது கேட்பதற்கு விசில் போடும் அளவுக்கு தியேட்டரில் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் இதற்குப் பெயர் அராஜகம். ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறை, காவல்துறை என்று இருக்கும்போது, ஒரு தாத்தா நாட்டாமையாக மாறித் தீர்ப்பு வழங்குவதை நியாயப்படுத்தியதுதான் இதன் முதல் சீரழிவு. இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டால், நாளை டிராபிக் சிக்னலை மதிக்காதவரைக் கூட வர்மக்கலையால் வைகுண்டம் அனுப்ப வேண்டி வரும் என்பதுதான் இதன் தாக்கம் ஏற்படுத்தும் இரண்டாவது சீரழிவு.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய, ஒரு நாட்டில் தவறு நடந்தால் சட்டம், காவல்துறை, நீதிமன்றம் மூலமாகப் போராட வேண்டும் அல்லது நிர்வாகச் சீர்கேட்டிற்குப் பின்னால் இருக்கும் சமூக பொருளாதாரக் காரணங்களை ஆராய வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, எண்பது வயது சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவருக்குத் கோபம் வந்தால், அவர் கத்தியையோ துப்பாக்கியையோ தூக்கி தன் கை விரல்களால் ஆட்காட்டி விரலை மடித்தே வர்மக் கலை மூலம் தர்மக் கொலை செய்யலாம் என்ற ஒரு புதுவிதமான பாசிச, அராஜக வக்கிர அத்துமீறலை  தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, இத்திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் இந்தியன் தாத்தா என்ற எதற்கும் அசையாத, எப்போதும் ஒழுக்கப் பாடம் நடத்தும் அந்தப் புனித பிம்பமும், டூயட் பாடும் ரப்பர் பொம்மைகளாகச் சுருக்கப்பட்ட கிளாமர் நாயகிகளின் ஆபாச நடனங்களும் சேர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கொலைக்கள நிலைக்குக் கொண்டு சென்றது என்பதை இன்னும் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

ஒரு நாட்டின் அத்தனை பிரளயங்களுக்கும், விபத்துகளுக்கும் ஒரே ஒரு காரணிதான் உண்டு. அது லஞ்சம். ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினால் பேருந்து கவிழ்ந்துவிடும், ஒரு மருத்துவர் லஞ்சம் வாங்கினால் குழந்தை இறந்துவிடும் என்ற மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு லாஜிக்கை விதைத்து, அதற்குரிய தீர்வாகச் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை இத்திரைப்படம் கொண்டாடியது.

தவறு செய்தவன் என் மகனே என்றாலும் கொல்வேன் என்ற உறைபனியூட்டும் பாசிசக் கோட்பாட்டின் மூலம், மனித உரிமைகளும் முறையான சட்ட விசாரணைகளும் அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.

இதனால், ஒரு முதியவர் தன் கைகளால் சட்டத்தை வளைத்து, வர்மக் கலையைப் பயன்படுத்தி நடுரோட்டில் கொலைகளை நிகழ்த்துவது குற்றமல்ல; அது நாட்டைச் சுத்தம் செய்யும் உன்னத யாகம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையின் சிக்கலான நிர்வாக அமைப்புகளைப் புரிந்து கொள்ளாமல், சமூக வலைத்தளங்களில் இந்தியன் தாத்தா மாதிரி எல்லாரையும் வர்மம் பண்ணிக் கொல்லணும்டா என்று மிக எளிதாகத் தன்னிச்சையான வன்முறையைத் தூண்டும் ஒரு முதிர்ச்சியற்ற, சட்டத்தை மதிக்காத வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நாயகனின் இன்னொரு பாத்திரமான சந்துரு வழியே, லஞ்சம் வாங்கியாவது ஒரு மாருதி காரையோ, பளபளக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பையோ வாங்கிவிடத் துடிக்கும் நடுத்தர வர்க்க வக்கிரத்தை ஜாலி என்று பெயரில் கமர்ஷியலாக விற்றது இந்தியன் திரைப்படம்.

லஞ்சத்தை வெகு தீவிரமாக எதிர்க்கும் கருப்பொருள் கொண்ட இத்திரைப்படம் நகைச்சுவைப் பாத்திரங்களை வைத்து அரசு அலுவலகங்களில் நடக்கும் அத்தனை முறைகேடுகளையும், லஞ்ச ஊழல்களையும் காமெடி என்ற பெயரில் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்த அவலத்தையும் என்டர்டெய்ன்மென்ட் என்ற பெயரில் செய்தது.

இதை இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால், ஒரு நாட்டின் முதுகெலும்பை அரிக்கும் ஊழலைக் கண்டு கொதித்தெழுந்து கேள்வி கேட்க வேண்டிய சமூகம், அதில் டைமிங் காமெடி செய்தால் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசித்து, காமெடி பாத்திரங்களாக்கிய அதிகாரிகளின் பொறுப்பின்மையையும், அநாகரிகத்தையும் என்டர்டெய்ன்மென்ட் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகியின் கதாபாத்திரம், விலங்கு நல ஆர்வலராகக் காட்டப்பட்டாலும், ஹீரோவின் போலி பிம்பத்தைப் பார்த்து ஏமாறுவதற்கும், அவனைச் சுற்றிச் சுற்றி ஆடுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகச் சுருக்கப்பட்டது. இன்னொரு புறம், இன்னொரு பெண் பாத்திரம், அப்பாவின் நேர்மை என்ற போலிப் பிடிவாதத்தால் மருத்துவ உதவி கிடைக்காமல் துடிதுடித்து இறந்து போகும் ஒரு தேவையற்ற பலிகடாவாக மாற்றப்பட்டது.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, தனியாகப் போராடும் ஆற்றலோ இல்லாமல், ஒன்று ஆணின் பாசிசக் கொள்கைகளுக்குப் பலியாக வேண்டும், இல்லை என்றால் அவனது ஆபாசக் கற்பனைகளுக்குப் பாட்டுப் பாட வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் தேசபக்திக் காவியம் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

இந்தியன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நூறு கோடிகளைக் குவித்து, நாயகனுக்கு தேசிய விருதை வாங்கித் தந்து, அதன் இயக்குநரைப் பிரம்மாண்டம் என்ற நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனுக்குத் தினமும் காலையில் எழும் போதே எத்தனையோ எரிச்சல்கள் வருகின்றன. பால் பாக்கெட் லேட், கார்ப்பரேஷன் தண்ணீரில் சாக்கடை வாடை, டிராபிக் நெரிசல், போதாக்குறைக்கு அரசு அலுவலகத்தில் ஒரு சின்ன சான்றிதழ் வாங்க ஐம்பது ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கோபத்தை எல்லாம் அப்படியே ஒரு கேப்சூலாக மாற்றி, அதற்கு வர்மக்கலை என்று லேபிள் ஒட்டி, ஒரு முதியவரை விட்டு லஞ்சம் வாங்குபவர்களைக் கொலை செய்ய வைத்தால், தியேட்டரில் விசில் பறக்கிறது. கைதட்டல் அதிர்கிறது. ஆனால், தியேட்டரை விட்டு வெளியே வரும்போது நாம் என்னவாகியிருக்கிறோம்? அதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி.

எல்லாத் தப்புக்கும் சட்டத்திற்குப் புறம்பான ஒரு குறுக்குவழித் தீர்வு இருக்கிறது என்ற எண்ணத்தை இத்திரைப்படம் பாமர மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்தது. படம் லஞ்சத்தை ஒரு தனிமனித ஒழுக்கப் பிரச்சினையாக மட்டுமே பார்த்தது. ஆனால், லஞ்சம் என்பது ஒரு பிரம்மாண்டமான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புப் பிரச்சினை. ஆனால், இயக்குனர் பாணியில் எல்லாவற்றையும் கருப்பு – வெள்ளை என்று பிரித்து, லஞ்சம் வாங்கினாயா? இதோ பிடி வர்மக் குத்து மற்றும் கத்திக் குத்து என்று சுருக்கியது ஓர் அறிவுஜீவித்தனமான அணுகுமுறையே அல்ல. அது எல்லா சிக்கலான நோய்களுக்கும் ஜண்டூபாம் தடவியே குணப்படுத்த முயல்வதைப் போன்றது.

ஒரு லஞ்ச அதிகாரியைக் கொன்றால், அந்த இடத்திற்கு வரும் அடுத்த அதிகாரி லஞ்சம் வாங்க பயப்படுவார் என்பது ஒரு சினிமாட்டிக்கான கற்பனை. நிஜ வாழ்க்கையில், அந்த இடத்திற்கான விலை இன்னும் அதிகமாகும், அவ்வளவுதான். லஞ்சத்திற்கான காரணங்களை ஆராயாமல், வெறும் வன்முறை மூலம் அதைத் தீர்க்க முயலும்  அக்மார்க் அறியாமையை வளர்த்ததுதான் இத்திரைப்படம் தமிழர்களிடம் உண்டாக்கிய உளவியல் சீரழிவு.

லஞ்சம் வாங்குவது தப்பு. ஆனால், லஞ்சம் வாங்குபவனைச் சட்டத்தைக் கையில் எடுத்து, சித்திரவதை செய்து கொல்வது தப்பில்லை என்ற மனநிலையை உருவாக்கிய இந்தியன் திரைப்படத்தைப் பார்த்து ‘இந்தியன் தாத்தா வாழ்க!’ என்று கத்திய கூட்டம்தான், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் வண்டியை ஓரம் கட்டிய அதிகார வர்க்கத்துக்கு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டியது. ஐம்பது ரூபாய் டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டிய படத்தைப் ப்ளாக்கில் ஐநூறு ரூபாய் கொடுத்தும் பார்த்தது. கருத்தியல் சீரழிவு என்பது இதுதான். படமும் மாறவில்லை, மக்களும் மாறவில்லை, ஆனால் மக்களுக்குள் ஒரு போலி விசிபிலாண்டி மனநிலையை மட்டும் அது வளர்த்துவிட்டுச் சென்றது.

ஒரு நாட்டின் சட்ட அமைப்புகள் தேவையில்லை, ஒரு முதியவர் வர்மக் கலையுடன் வந்து கொன்றாலே நாடு திருந்திவிடும் என்றும், அக்கடான்னு நடைபோட்டா, துக்கடான்னு எடைபோட்டா, தடைபோட கவர்மென்ட்டா என்று பாடினால் அத்தனை சட்டமீறல்களையும், வன்முறைகளையும் ரசிக்கலாம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது விழிப்புணர்வும், சட்டப்பூர்வமான போராட்டமும், நிர்வாக அமைப்பைச் சீரமைப்பதும்தானே தவிர, எண்பது வயது முதியவர் கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்புவது அல்ல என்ற எக்ஸ்ட்ரா மெசேஜையும் இந்தத் திரைப்படத்திற்காக மீண்டும் மீண்டும் கூடுதலாகத் தட்ட வேண்டியிப்பது கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைலேஜ் வேலையாகத்தான் தோன்றுகிறது! எனவே, திரையில் கைதட்டுங்கள், தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் வர்மக்கலையைத் தேடாதீர்கள்; அது அவுட் ஆப் சிலபஸ் என்பதற்கு இந்தியன் – 2இன்தோல்வியே சரியான சான்றாகும்!

*****

23 Jun 2026

நீலாம்பரி சின்ட்ரோமும் ஹைபர் ஆண்மை ப்ராப்ளமும்!

சீரழித்த சினிமா – 21

படையப்பா

நீலாம்பரி சின்ட்ரோமும் ஹைபர் ஆண்மை ப்ராப்ளமும்!

படையப்பா படத்தை நீங்கள் ஒரு மாஸ் மசாலா என்று கடந்து போயிருக்கலாம். ஆனால், ஒரு பின் நவீனத்துவ, இருத்தலியல் நோக்கில் பார்த்தால், அது தமிழ் சமூகத்தின் கூட்டு நனவிலி மனதைச் சீரழித்த செல்லுலாய்டு பாஸ்ட்புட் நூடுல்ஸ்.

இது உழைக்கும் வர்க்கத்திற்குத் தந்த போலி நம்பிக்கையான திடீர் அதிர்ஷ்டம் உங்களை முதலாளி ஆக்கும் என்ற நுகர்வோர் கலாச்சாரச் சீரழிவின் தொடக்கம் ஆகும்.

தனக்கு வேண்டியதைத் துணிச்சலாகக் கேட்கும் பெண் வில்லி, அமைதியாகப் பவ்யமாகப் பாம்புப் புற்றுக்குக் பால் ஊற்றும் பெண் நல்லவள் என்ற பிற்போக்குத்தனமான இருமை நிலையைத் தேவையில்லாத ஆணியாய்த் தமிழர்களின் மண்டைக்குள் ஆழமாக இறக்கியது படையப்பா.

என் வழி, தனி வழி என்ற இப்படத்தின் வசனம் ஏதோ தத்துவார்த்தமான வரிகளைப் போலக் கொண்டாடப்பட்டாலும், உண்மையில் இது சமூகப் பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடும் ஒரு நிஹிலிச சிந்தனை.

நாயகனின் படையப்பா என்ற எதற்கும் அசையாத, எப்போதும் அதிகாரம் பேசும் போலிப் புனித பிம்பமும், நீலாம்பரி என்கிற ஒட்டுமொத்தப் பெண் இனத்தின் திமிராகச் சித்திரிக்கப்பட்ட பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு ஜமீன்தார் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

படையப்பா திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த பாலினக் கல்வி என்ன தெரியுமா?

பெண்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதை ஓர் ஆண்தான் வகுக்க வேண்டும். ஒரு பெண் அழகாகவோ, திமிராகவோ, கோபமாகவோ இருந்தால் அவளுக்குப் பெயர் நீலாம்பரி. அவள் அடக்கமாக, பயந்து நடுங்கிக்கொண்டு, சமையலறையில் வேலை பார்த்தால் அவளுக்குப் பெயர் வசுந்தரா.

அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது, என்ற ஒற்றை வரி பாசிசத் தத்துவத்தின் மூலம், பெண்ணின் சுயமரியாதையும் கோபத்தையும் அடியோடு குழிதோண்டிப் புதைத்தது படையப்பா. ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆசைப்படலாம், சபதம் எடுக்கலாம்; ஆனால் பெண் தன் உரிமையைக் கேட்டால், கொஞ்சமேனும் கோபப்பட்டால் அவள் அழிந்து போவாள் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, ஆளுமையோ காட்டும் பெண்களைப் பார்த்தால், நீயென்ன பெரிய நீலாம்பரின்னு நெனப்போ? என்று சமூக வலைத்தளங்களில் வசைபாடி, பெண்களைத் தங்களுக்குக் கீழ் வைக்கத் துடிக்கும் ஓர் ஆபத்தான பெண் வெறுப்பு சமூகத்தின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

படையப்பா படத்தில் ஒட்டுமொத்த நிலப்பிரபுத்துவ கௌரவத்தை மாஸ் ஹீரோயிசம் என்று காட்டி விற்றுதான் கல்லா கட்டினார்கள். நீலாம்பரி தன் வீட்டுக்கு வரும் படையப்பாவை அவமானப்படுத்த ஊஞ்சலை மேலே ஏற்றி வைப்பார். ஆனால், ஹீரோ தன் சால்வையை வீசி, ஊஞ்சலைத் கீழே இழுத்து, அதில் கால் மேல் கால் போட்டு அமர்வார்.

இந்த உறைபனியூட்டும் சாதிய, நிலப்பிரபுத்துவ அதிகாரப் பகட்டை, மிக விசித்திரமான பின்னணி இசையால் மூடி மறைத்து, பார்ப்பவர்களை ஸ்டைலிஷாக ஏமாற வைத்தார் இயக்குனர்.

உழைப்பையும், மனிதநேயத்தையும் விடுத்து, போலிப் பாரம்பரியக் கௌரவத்தை உன்னதம் என்று காட்டி, பார்ப்பவருக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இதன் விளைவாகத்தான் கிராமங்களில் இன்னமும் பட்டுத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு பஞ்சாயத்து செய்து மனித உரிமைகளைப் பறிக்கும் போலி நாட்டாமைத்தனத்தைத் தன் ஸ்டைல் என்று நினைத்து வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தான் ஹைடெக் தமிழன்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது. வசுந்தரா என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் பட்டு வேட்டியைத் துவைப்பதற்கும், நாயகன் வரும்போது குனிந்து சல்யூட் அடிப்பதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு வீட்டுப் பொருளாகக் காட்டப்பட்டார். இன்னொரு புறம், பதினெட்டு வருடங்கள் ஓர் அறைக்குள் பூட்டிக்கிடந்து பழிவாங்கத் துடிக்கும் நீலாம்பரி, தன் ஈகோ உடைந்தவுடன் தற்கொலை செய்துகொண்டார்.

பெண் என்பவள் ஒன்று ஆணுக்கு அடங்கிப் போகும் அடிமை, இல்லை என்றால் ஆணின் கௌரவத்திற்கு முன்னால் மண்டியிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் அகந்தை என்ற இரு முனைகளுக்குள் பெண்களின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அடியோடு மழுங்கடித்தது இத்திரைப்படம்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுயமரியாதையோடு வாழக் கூடாது; அவளை ஆட்டிப் படைப்பது ஆணின் விரல் அசைவில் தான் இருக்கிறது என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

படையப்பா பாக்ஸ் ஆபீஸில் நூறு கோடிகளைக் குவித்து, சூப்பர் ஸ்டார் பிம்பத்திற்குத் தங்கக் கிரீடம் சூட்டி இருக்கலாம். படம் ஒரு சிறந்த கமர்ஷியல் எண்டர்டெய்னர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கேசட்டுகளும், டிக்கெட்டுகளும் கோடிகளில் விற்றன. ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

சமூகம் மற்றும் பாலின ரீதியாகப் பார்த்தால், அது பெண்களை இரண்டாம் தரமாக நடத்தும் சிந்தனைக்கும், தனிமனித வழிபாட்டுக்கும் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி வளர்த்துவிட்டது கொழுந்து விட்டு எரியச் செய்தது என்பதுதான் நிஜம்.

பெண்ணடிமைத்தனம் மற்றும் அடக்கமே பெண்மை என்ற கற்கால பிற்போக்குத்தனத்தைத் தற்கால நடைமுறைகளாகச் செல்லுலாய்டு பாலிஸ் தடவி, ஸ்டைலிஷ் பெய்ண்ட் அடித்து தமிழ்ச் சமூகத்தை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னே தள்ளியது படையப்பா.

சுயமரியாதையை ஆணவமாகச் சித்தரித்தும், ஆணுக்கு அடங்கும் பெண்ணடிமைத்தனத்தை விதந்தோதியும் பெரியாரிய சிந்தனைகளைப் பின்னுக்கு இழுத்து, அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம், கற்பு நிலையென்றால் இருசாரருக்கும் பொதுவாக்குவோம் என்ற பாரதியின் வரிகளுக்கு ரிவீட் அடித்து அச்சமும் நாணமும் பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வேண்டும் என்று சுத்தி சுத்தி வந்து சுட்டு விரலால் சுட்டு எடுத்தது படையப்பா.

*****

22 Jun 2026

இரத்தமும் தத்துவமும் – ஒரு போஸ்ட்மார்ட ரிப்போர்ட்!

இரத்தமும் தத்துவமும் – ஒரு போஸ்ட்மார்ட ரிப்போர்ட்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஹரித்துவாரில் நிகழ்ந்த, கஞ்சா நெடியடிக்கும் ஒரு கதையைக் குவாண்டம் இயற்பியல் தளத்திற்கு இட்டுச் சென்று, பிரம்ம சூத்திரத்தில் முடித்திருந்தார் ஜெயமோகன்.

இது ஜெயமோகனின் வழக்கமான ஹரித்துவார், சன்னியாசி, தாடி, உன்னதத்தனம் ஆகிய கூறுகளின் சேர்க்கை ஆகும். வாசிப்பதற்கு இது நன்றாகவே இருக்கிறது. காட்சிப்படுத்துதலில் அவர் எப்போதுமே வல்லவர். அந்த சோட்டா பாபா படிக்கட்டிலிருந்து விழுந்து கிடக்கும் காட்சி, ஒரு மிக நெருக்கமான ஒளிப்பதிவுக் காட்சி போன்றது. இரத்தம் குமிழியிடுவதும், விரல்கள் நடுங்குவதும் என உடற்கூறியல் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கிருந்தே நம் படா பாபாவின் தத்துவார்த்த உரையாடல் தொடங்குகிறது.

ஐம்பது ஆண்டுக்காலத் தோழர் மண்டை உடைந்து இறந்து கிடக்கிறார். சுற்றிலும் மக்கள் கூச்சலிடுகிறார்கள். ஆனால், அவரோ எவ்விதச் சலனமுமின்றி கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத்தான் ஜெயமோகன் பிரம்ம சூத்திரம் வரை கொண்டு சென்று, தத்து சமன்வயாத் அதாவது, அது சமநிலைப்புள்ளியில் உள்ளது என்று இயற்பியல் தளத்தோடு தொடர்புபடுத்துகிறார்.

இதன் தொடக்கமே அதிரடியானது. தாடி வளர்த்து, அழுக்குத் துணியணிந்து, எதையும் கவனிக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், நம் ஊரில் உடனே அவரைச் சாமி ஆக்கிவிடுவார்கள். அதை நாற்பது ஆண்டுகள் கழித்து ஜெயமோகன் மனச்சோர்வு என்னும் மருத்துவக் கலைச்சொல்லால் புரிந்து கொண்டதற்கு ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

ஆனால், அங்கிருந்த பிச்சைக்காரர்கள் நடைமுறை அறிவு  உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். துறவிகளுக்காக அவர்கள் பிச்சை எடுப்பதும், பிச்சைக்காரர்கள் தங்களைத் துறவிகள் என்று கூறிக் கொள்வதும் என, மியூச்சுவல் பண்ட் போன்ற ஒரு கூட்டுப் பிச்சை வணிகம் அங்கு நடந்திருக்கிறது.

படா பாபா, சோட்டா பாபா என்ற அந்த எழுபது வயதைக் கடந்த இரு முதியவர்கள். ஒருவர் கஞ்சா சுருட்டு தயாரிப்பது, மற்றொருவர் அதனை இழுப்பது; இருவருக்குள்ளும் ஒரு வார்த்தை கூடப் பரிமாறப்படுவதில்லை.

சாதாரண மனிதர்கள் இதைப் பார்த்தால், “இருவரும் போதையில் பேசக்கூட முடியாத அளவிற்கு மயங்கிக் கிடக்கிறார்கள்” என்றுதான் நினைப்பார்கள். ஆனால் ஜெயமோகனோ அதனை, "வார்த்தைகள் தேவையற்ற உன்னத உடல்மொழி" என்று மிகைப்படுத்துகிறார். இதனை எப்படி ஏற்றுக் கொள்வது என்று புரியவில்லை.

கதையின் மிகச்சிறந்த பரபரப்பான காட்சி என்பது நாம் ஆரம்பத்தில் பார்த்த சோட்டா பாபா மேலிருந்து விழுந்து, கழுத்து முறிந்து, மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் கிடப்பதுதான். கைவிரல்கள் துடிக்கின்றன. சுற்றியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், திரையரங்கில் படம் பார்ப்பதைப் போல வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்கு அது நேரடித் திரைப்படம்!

நமது படா பாபா என்ன செய்கிறார்? "அவன் இறந்தால் எனக்கென்ன" என்ற அலட்சியத்துடன் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் நியாயமான கோபத்துடன், "மனிதனா நீ? கூட இருந்தவன் இறந்து கிடக்கிறான்!" என்று கத்துகிறார். அதற்கு அந்த முதியவர் கூறும் ஆன்மீக வசனம் இதோ:

"துறவிகள் ஈம காரியம் செய்யக் கூடாது. கடமையைத் துறப்பதுதான் துறவு."

உண்மையைக் கூறின், நிஜ உலகத்தில் ஒருவன் தன்னுடன் ஐம்பது ஆண்டுகள் இருந்தவன் இறந்து கிடக்கும்போது, வருத்தப்படாமல் கஞ்சா தயாரித்துக் கொண்டிருந்தால், அவனைச் சைக்கோபாத்  அல்லது போதையில் அறிவு இழந்தவன் என்று கூறி மனநல மருத்துவமனையில் சேர்ப்பார்கள். ஆனால், அதுவே ஹரித்துவாரில் நடந்தால் அதற்குப் பெயர் ஜீவன்முக்தித்தனம்! அது போதாதென்று கேரளாவிலிருந்து வந்த மற்றொரு சாமி, "அவர் தன் இறப்பிற்கே அஞ்சவில்லை, பிறகு ஏன் அடுத்தவர் இறப்பிற்கு அழ வேண்டும்?" என்று அதற்கு ஓர் உளவியல் முட்டுக் கொடுக்கிறார்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் இறக்கும்போது பதறுவது, அவனிடமிருந்து கைமாறு எதிர்பார்ப்பதால் அல்ல; அது மனித மூளையின் மிரர் நியூரான்கள் செய்யும் வேலை. சக உயிரியின் வலியைப் பிரதிபலிப்பது இயற்கையின் பரிணாம விதி. அதை அட்டாச்மென்ட், ஈகோ என்று தத்துவ முலாம் பூசுவது அநியாயமானது.

படா பாபா கூறுவது இன்னும் விசித்திரம். அவர் சொல்கிறர், “நான் விழுந்திருந்தாலும் அவன் இப்படித்தான் இருந்திருப்பான். அதனால்தான் அவனுடன் நெருக்கமாக இருந்தேன்.”

இதன் கணக்கு மிக எளிமையானது. இருவருமே அபாதி என்னும் தீவிரமான மன உறைவு நிலையை ஞானம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கஞ்சா கொடுக்கும் டோபமைன் சுரப்பால், மூளையின் உணர்ச்சிப் பகுதிகள் செயலிழந்து போவதை நாம் ஏன் ஆன்மீகச் சமநிலை என்று கொண்டாட வேண்டும்?

இறுதியாக எல்லாவற்றையும் எங்கு இணைக்கிறார் ஜெயமோகன்? பாதராயணரின் 'பிரம்ம சூத்திரம்'—'தத்து சமன்வயாத்.' அதாவது, படா பாபா அன்று காட்டிய அந்த அராஜகமான அலட்சியம்தான் பிரபஞ்சத்தின் சமநிலையாம்! அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரானும் புரோட்டானும் சமநிலை அடைவதைப் போல, சோட்டா பாபா இறப்பதும் படா பாபா கஞ்சா இழுப்பதும் சமநிலை அடைகிறதாம்.

ஜெயமோகன் பிரம்ம சூத்திரத்தை நவீன இயற்பியலோடு ஒப்பிடுவது சுவாரஸ்யமானது. “நுண்துகள்களுக்கு நடுவே உள்ள மின்னூட்டத்தின் சமநிலையே இப்பிரபஞ்சம்.” என்கிறார்.

அண்டவெளியில் சூப்பர்நோவா வெடித்துச் சிதறும்போது பேரண்டம் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் உண்மைதான். ஏதேனும் ஒரு விண்கல் பூமியில் மோதி மனித இனமே அழிந்தால் கூடப் பிரபஞ்சத்தின் சமநிலை மாறப்போவதில்லை. ஆனால், நாம் அண்டவெளித் தூசிகள் அல்லவே! நமக்கு நரம்பு மண்டலம் இருக்கிறது; வலி இருக்கிறது.

எந்தவொரு ஆன்மீகக் கட்டுரையும் நவீன அறிவியலுடனும், இயற்பியலுடனும் தொடர்புபடுத்தி எழுதப்படவில்லை என்றால் இன்றைய வாசகர்களிடம் மதிப்பு இருக்காது என்பது ஜெயமோகனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

நம் ஊர் ஆன்மீகத்தின் ஆகப்பெரிய வசதியே இதுதான். நமக்கு ஒருவன் மீது கடுமையான கோபமும் சீற்றமும் வரும்; அவனை அடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், நாம் கோழையாக இருப்பதாலோ அல்லது சட்டத்திற்குப் பயந்தோ அதைச் செய்ய மாட்டோம்.

பல ஆண்டுகள் கழித்து ஏதோ ஒரு பழைய புத்தகத்தில் இருக்கும் வரியைப் படித்துவிட்டு, "அன்று அவன் செய்த அயோக்கியத்தனமும், நான் காட்டிய கோழைத்தனமும் பிரபஞ்சத்தின் சமநிலைப்புள்ளி ஆகும்" என்று தத்துவ மசாலா தடவி நமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்வோம்.

இதன் மிகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், அடுத்த முறை சாலையில் யாராவது விபத்தில் சிக்கிக் கிடக்கும்போது உதவாமல், கஞ்சா புகைத்துக் கொண்டு கடந்து சென்றால், நாம் "தத்து சமன்வயாத்" என்று கூறிவிட்டுச் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

உலகில் எல்லாவற்றையும் சமநிலை செய்கிறேன் என்று கூறிச் சுடுகாட்டு அமைதியை நோக்கிப் போவது ஞானமல்ல; அது ஒரு வகையான பித்தலாட்ட தப்பியோட்டம்.

“எல்லாம் சரியாகிவிடும், ஒன்று போனால் இன்னொன்று வரும்” என்று பாமர மக்கள் கூறும் ஆறுதலில் இருக்கும் ஈரப்பதம் கூட, பிரம்ம சூத்திரம் பேசும் அந்தப் படா பாபாவின் கஞ்சா புகையில் இல்லை.

நெருக்கடி நேரத்தில் உதவாத சமநிலை என்பது, வெறும் ஜடப்பொருள் நிலையே ஆகும்.

*****