5 May 2026

2026 தேர்தல் முடிவுகளை மாற்றிய மேஜிக் எது?

2026 தேர்தல் முடிவுகளை மாற்றிய மாடல்தான் என்ன?

மே 4, 2026.

வழக்கம்போலத்தான் விடிந்தது.

ஆனால், சூரியன் மட்டும் கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி உதயமானது.

உதயசூரியன் உதித்திருக்க வேண்டிய பல இடங்களில், ஒரு புது வெளிச்சம் பாய்ந்தது. எக்சிட் போல் கணிப்புகளை அடித்து நொறுக்குவது போல முடிவுகள் வெளிவரத் துவங்கின.

தேர்தல் முடிவுகளை நாம் சென்னை அதாவது தலைநகரம், நகர்ப்புறம், கிராமப்புறம், டெல்டாப்பகுதி எனப் பிரித்துப் பார்த்தால் இப்படி அமைந்திருக்கிறது.

சென்னையைத் தக்கவைத்துக்கொள்வது என்பது திராவிடக் கட்சிகளுக்கு எப்போதும் ஒரு கௌரவப் பிரச்சினை. ஆனால், இந்த முறை சென்னைவாசிகளுக்கு மாற்றம் என்றால் ரொம்பப் பிடித்திருக்கும் போலிருக்கிறது. 37 இடங்களில் 32ஐ தவெகவுக்கு அள்ளித் தந்து விட்டார்கள்.

இதில் உச்சகட்ட ட்விஸ்ட் என்னவென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரிலேயே தோல்வியடைந்திருப்பதுதான். கோட்டை நமக்குத்தான் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கையில், கோட்டையின் கதவுச் சாவியை யாரோ மாஸ்டர் கீ போட்டுத் திறந்துவிட்டார்கள்.

நகர்ப்புறமும் தவெகவுக்கு தொகுதிகளை வாரி வழங்கியிருக்கிறது. இங்கே விஜய்க்கு 46 சதவீத ஓட்டு. அதாவது, ஐடி வேலையில் இருப்பவர்களும், ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவர்களும் ஒரே சீராக விஜய்க்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

கிராமப்புறத்தை எடுத்துக் கொண்டால், இங்கே மட்டும் திராவிடக் கட்சிகள் கொஞ்சம் மூச்சு விடுகின்றன. விவசாயிகளுக்கு இன்னும் விஜய்யை விட சூரியனும், இலையும் நெருக்கமாகத் தெரிகிறார்கள்.

டெல்டா பகுதி சூரியனுக்கு ஆதரவாக இருந்திருக்கிறது. அங்கே மட்டும் 19 இடங்களைத் திமுக கூட்டணி பிடித்துள்ளது. டெல்டா கைகொடுக்காமல் போயிருந்தால் கூட்டணியின் நிலை இன்னும் மோசமாகப் பின்தங்கிப் போயிருக்கும்.

இத்தேர்தல் முடிவுகளிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்வது?

தமிழக அரசியல் இதுவரை ஒரு திமுக – அதிமுக என இரு துருவ நிலையில் இருந்து. அது தற்போது முத்துருவமாக மாறியிருக்கிறது.

1967லிருந்து மாறி மாறி தொடர்ந்த திராவிட ஆட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய ஹீரோ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

விஜய்க்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமாகியது?

விஜய் ஒரு தனி ஒருவன் பாணியிலிலேயே இந்தத் தேர்தலை அணுகினார். அவர் ஆட்சியிலேயே பங்கு என்று கூட்டணிக்குத் தயாராக இருந்தாலும், யாருடனும் கூட்டணி அமையவில்லை அல்லது அமைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.

இந்த நவீன தாராளமய யுகத்தில், சுயமாகத் தன்னைச் செதுக்கிக்கொள்ளும் வசீகரம் அவரிடம் இருக்கிறது. இதைக் குறிப்பிட்டுச் சொல்ல காரணம் இருக்கிறது.

கரூர் சம்பவம், மனைவியின் விவாகரத்து மனு, ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனது, குழந்தைகளை வைத்து அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் – என்று எதுவும் அவரைத் தீண்டாமல் டெப்லான் கோட்டிங் வழுக்கிக் கொண்டு போயிருப்பதை இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

திமுகவின் திராவிட மாடல், அதிமுகவின் பல்க்கான விலையில்லா வாக்குறுதிகள், பாஜகவின் இந்துத்துவம் – இவற்றைத் தாண்டி விஜய்யின் மாடல் வெற்றி பெற்றிருப்பதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று தமிழ்நாடே யோசித்துக் கொண்டிருக்கிறது.

அது எதுவாக இருக்கும்?

இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான இன்ஸ்டன்ட் மேஜிக்கை தனது ஒன் லைனர்கள் மூலமாகவும் ரோடு ஷோக்கள் மூலமாகவும் விஜய் தந்திருக்கிறார்.

பழைய அரசியல்வாதிகளின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகளுக்கு மாறாக ஒரு குட்டி ஸ்டோரி சொல்லிவிட்டுக் கூலாக விசிலடித்துச் செல்லும் அவரது பாணி மக்களுக்குப் பிடித்திருந்திருக்கிறது. அந்தப் பிடித்தமே அவர்கள் லைக் பட்டனைத் தட்டி விடுவதைப் போல விஜய்க்கு வாக்குகளைத் தட்டி விட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் விஜய்யின் திரைத்துறையிலிருந்து அரசியல் நோக்கிய வளர்ச்சியை நாம் நுட்பமாக நோக்க வேண்டும்.

பொதுவாகத் தமிழ்நாட்டில் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால், அவரை எம்.ஜி.ஆருடனோ அல்லது ரஜினியுடனோ ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, அவர் அளவுக்கு வருவாரா? என்று சோடா குடிப்பதுதான் வழக்கம்.

ஆனால், விஜய் என்கிற இந்த யங் கமாண்டர், பழைய கமாண்டர்கள் அத்தனை பேரையும் ஒரே லியோ ஜம்ப்பில் ஓரம் தள்ளிவிட்டு, ஆந்திர என்டிஆரைப் போல தமிழக என்டிஆர் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

அவரது திரையுலக பயணத்தை உன்னிப்பாக நோக்க வேண்டும். ஏனென்றால், விஜய்யின் வெற்றி என்பது ஒரு தனிமனிதரின் வெற்றி என்பதை விட, ஒரு நீண்ட கால மார்க்கெட்டிங் திட்டத்தின் விளைவு. ஆரம்பத்தில் காதலுக்கு மரியாதை கொடுத்து உருகி உருகி நடித்தவர், எப்போது தளபதியாகத் தன்னைத் தரம் உயர்த்திக்கொண்டாரோ, அப்போதே கோட்டைக்கான சாவியைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

மற்ற நடிகர்கள் மைக் பிடித்தால் உளறிக் கொட்டும் காலத்தில், இவர் மௌன விரதம் இருந்தார். அதுவே அவருக்கு ஒரு மிஸ்டிக் அந்தஸ்தைத் தந்தது. அவர் பேசாததுதான் அவருக்குப் பெரிய பலமாக அமைந்தது. ஏனென்றால், மக்கள் அவர் பேசாத மௌனத்திற்குத் தங்களுக்குப் பிடித்த அர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டார்கள்.

2013 இல் தலைவா படத்திலேயே டைம் டூ லீட் என்று அவர் போட்ட டேக்லைனைப் பார்த்து அவர் படத்துக்கான தடை போடும் அரசியல் ஆரம்பித்து விட்டது. தற்போது அது ஜனநாயகன் வரை நீண்டாலும், அவரது அரசியல் வேகத்தைத் தடுக்க முடியவில்லை.

அவர் தன்னை ஊழலுக்கு எதிரான ஹீரோவாகத் தன்னைத் திரையில் செதுக்கிக்கொண்ட விதம் அலாதியானது. திரையில் அவர் ஊழலை எதிர்த்து ஓர் அடி அடித்தால், அது நிஜமாகவே ஊழலுக்கு விழும் அடி என்று மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.

அதன் உச்சகட்டமாக 2024 இல் தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்தபோது, அவருக்குக் கூடிய கூட்டம் பிரமாண்டமானது மற்றும் எதிர்பாராதது.

விளைவு?

1977 இல் எம்.ஜி.ஆர் செய்த சாதனையை, கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் விஜய் செய்திருக்கிறார்.

திராவிட மாடலுக்கும், எம்ஜிஆர் மாடலுக்கும், இந்துத்துவா மாடலுக்கும் மத்தியில் இப்போது விஜய் மாடல் என்கிற ஒரு புது அரசியலை அவர் வெற்றிகரமாக லான்ச் செய்திருக்கிறார்.

அவர் கோடிட்டுக் காட்டும் நல்லாட்சி, அவர் அளித்த வாக்குறுதிகள், அவர் அடுத்து எடுத்து வைக்கப் போகும் அடிகள் குறித்து இப்போதே எதுவும் கூறி விட முடியாது. அப்படிக் கூறினால் எக்சிட் போல் கணிப்புகள் போல் அவை ஆனாலும் ஆகி விடும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*****

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் டைனோசர் இடைவெளி!

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் டைனோசர் இடைவெளி!

உலகம் ரொம்பவே முன்னேறிவிட்டது.

எப்படித் தெரியுமா?

ஒரு பக்கம் மக்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள், இன்னொரு பக்கம் எந்தத் தீவில் போய் தங்குவது? என்று பணக்காரர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக மக்கள் தொகையில் அந்த மேல்தட்டு 10 சதவீத புண்ணியவான்கள் இருக்கிறார்களே, அவர்களிடம்தான் உலக சொத்தில் 75 சதவீதம் இருக்கிறதாம். மீதமுள்ள 90 சதவீதம் பேர், மீந்து போன கேக்கில் விழும் துகள்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் துல்லியமாகச் சொன்னால், வெறும் 60,000 பேர் கையில் இருக்கும் சொத்து, உலக மக்கள் தொகையில் பாதி பேரின் சொத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

இதைச் படிக்கும்போது உங்களுக்குக் கோபம் வந்தால், நீங்கள் அந்த 90 சதவீதத்தில் ஒருவர். சிரிப்பு வந்தால், நீங்கள் அந்த 60,000 பேரில் ஒருவர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூச்சு விடாதே, கார்பன் டை ஆக்சைடு வரும், என்று ஏழைகளைத்தான் மிரட்டுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உலகின் அடிமட்ட 50 சதவீத மக்கள் வெளியேற்றும் கார்பன் வெறும் 3 சதவீதம் தான்.

அந்த மேல்தட்டு 10 சதவீத முதலீட்டாளர்கள் தங்கள் சொகுசு வாழ்க்கை மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் 77 சதவீத கார்பனை வாரி வழங்குகிறார்கள்.

அதாவது, பணக்காரர்கள் ஏசி அறையில் அமர்ந்து புகையை கிளப்புவார்கள், அதன் வெப்பத்தில் ஏழைகள் ரோட்டில் வெந்து சாவார்கள். இதுதான் உலக நீதி!

பாலின சமத்துவம் பற்றி மேடையில் பேசுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

நிதர்சனத்தில், வீட்டு வேலையையும் சேர்த்தால் பெண்கள் வாரத்திற்கு 53 மணிநேரம் உழைக்கிறார்கள். ஆண்கள் வெறும் 43 மணிநேரம்தான். இதில் அந்தப் பத்து மணிநேரம் எங்கே போனது என்று கேட்காதீர்கள், ரிமோட் தேடுவதிலேயே போயிருக்கும்.

இவ்வளவு உழைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் ஆண்களில் பாதி கூட இல்லை.

தொழில்நுட்பம் எவ்வளவு உயர்ந்த போதும் பெண் தொழிலாளர்களின் வருமானம் உயரவே இல்லையாம். அநேகமாக, பணவீக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் செல்லாது என்று உலகம் முடிவு செய்துவிட்டது போலும்!

இந்த விஷயத்தில் இந்தியா மட்டும் சளைத்ததா என்ன? இந்தியாவின் முதல் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் 40 சதவீத சொத்துகளை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் கடைநிலை 50 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்து வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவு.

இதைப் பார்த்தால், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது பழைய பாட்டு, எல்லாப் பணமும் ஒருவருக்கே சொந்தம் என்பதுதான் புதிய டூயட்டு.

இந்நிலையைப் போக்க அரசாங்கம் நிறைய வைத்திருப்பவர்களிடம் நிறைய வரி வாங்க வேண்டும். ஆனால் நடப்பதோ வேறு.

பணக்காரர்களுக்கு வரி குறைப்பு செய்தால்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள் என்கிற நவீன தாராளமயக் கொள்கைதான் இப்போதும் ஹாட் கேக்.

சுருக்கமாகச் சொன்னால், உலகம் ஒரு பெரிய டைட்டானிக் கப்பல் போலப் போய்க்கொண்டிருக்கிறது. மேல் தளத்தில் பார்ட்டி நடக்கிறது, கீழ் தளத்தில் தண்ணீர் புகுந்து கொண்டிருக்கிறது.

சமத்துவத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்காமல், புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் என்று பேசுவது, செல்போனில் சார்ஜ் போடாமலேயே ரீல்ஸ் பார்ப்பதற்குச் சமம்.

உண்மை என்னவென்றால், வளர்ச்சி என்பது ஒர் ஏணி. ஆனால் அந்த ஏணி இப்போது பணக்காரர்கள் மட்டும் ஏறிச் செல்லும்படி லிப்ட் ஆக மாற்றப்பட்டுவிட்டது. ஏழைகள் இப்போதும் கீழே நின்று ஏணியைத் துடைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

எத்தனை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வந்தாலும் இந்த நிலை மாறாது என்பதுதான் எதார்த்தம் போலும்!

*****

4 May 2026

இட்டலிக்கு அமெரிக்காவும் ஈரானும் வைத்த குறி!

இட்டலிக்கு அமெரிக்காவும் ஈரானும் வைத்த குறி!

தமிழ்நாட்டில் இப்போது ஓர் இட்டலி சாப்பிடுவது என்பது, பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்குச் சமமான ஒரு காரியமாகிவிட்டது.

ஈரான் – அமெரிக்கா யுத்தம் முடிவுக்கு வருகிறதோ இல்லையோ, தமிழகத்தில் ஒரு தட்டில் இருக்கும் இரண்டு இட்டலிகளுக்கு இடையிலான சாம்பாருக்கான பட்ஜெட் போர் முடிவுக்கு வரப் போவதில்லை.

வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக 993 ரூபாய் உயர்ந்து, இப்போது 3,071 ரூபாய்க்கு வந்து நிற்கிறது.

சிலிண்டரின் எடை 19 கிலோதான், ஆனால் அதன் விலை இப்போது ஒரு சாமானியனின் மாதச் சம்பளத்தின் எடையைத் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை விலையை உயர்த்தின. ஹோட்டல் உரிமையாளர்கள் சனிக்கிழமை விலையை உயர்த்தினார்கள். மக்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டினி கிடக்க முடிவெடுத்தார்கள். இதுதான் தற்போதைய டிஜிட்டல் வேகத்திலான சப்ளை செயின்!

இப்போது ஹோட்டல் உணவுகளின் விலை உயர்வுப் பட்டியலைப் பார்த்தால், அது உணவக மெனு கார்டு போலத் தெரியவில்லை, ஏதோ ஒரு அபராதப் பட்டியல் போலத் தெரிகிறது.

ரோட்டுக்கடை இட்டலி 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்குத் தாவிவிட்டது. ஒரு இட்டலிக்கு 5 ரூபாய் உயர்வு என்பது அற்பமாகத் தோன்றலாம். ஆனால், பத்து இட்லி சாப்பிடும் ஒரு மல்யுத்த வீரருக்கு இது ஒரு பெரிய பொருளாதாரச் சரிவு.

சிக்கன் பிரியாணி 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய்க்கு அப்கிரேட் ஆகிவிட்டது. பிரியாணியில் இருக்கும் சிக்கன் துண்டுகள் குறைகிறதோ இல்லையோ, நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்துண்டுகள் காணாமல் போவது உறுதி.

வாழ்க்கையே ஒரு டீயும் பஜ்ஜியும்தான் என்று நினைத்திருந்த பேச்சிலர்களுக்கு இப்போது டீ 15 ரூபாய். பஜ்ஜிக்குள் இருக்கும் உருளைக்கிழங்குக்குக் கூட அவ்வளவு மதிப்பு கிடையாது, அதைச் சுட வைக்கும் அந்த காஸ்க்குத்தான் இவ்வளவு மதிப்பு!

வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும், வெளியூர்களில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்களுக்கும் பெய்டு கெஸ்ட் என்பது பெயின்புல் கெஸ்ட் ஆக மாறிவிட்டது.

சாப்பாட்டுச் செலவு அதிகரித்ததால் விடுதி வாடகை 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை ஏறிவிட்டது.

30,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர், தன் சம்பளத்தில் எஞ்சியிருப்பதை மைக்ரோஸ்கோப் வைத்துத் தான் தேட வேண்டியிருக்கிறது.

ஹோட்டல் சங்கங்கள் ஜி.எஸ்.டியைக் குறைக்க சொல்கிறது, கரண்ட் பில்லைக் குறைக்க சொல்கிறது. நடக்கிற காரியங்களா இவை?

அப்புறம் 18 சதவீத வரியில் மின்சார அடுப்பு வாங்கி, சமைக்கலாம் என்று பார்த்தால், பீக் ஹவர் சார்ஜ் என்று மின்சார வாரியம் ஷாக் கொடுக்கிறது. ஒரு பக்கம் சிலிண்டர் சுடுகிறது, மறுபக்கம் கரண்ட் பில் எரிக்கிறது.

உலக அரசியல் காரணமாக எரிவாயு விலை உயர்கிறதாம். தேர்தலுக்கு முன்பு வரை உயரவில்லை என்பதால் அப்போது உலக அரசியல் நடக்கவில்லை என்று அர்த்தமல்ல.

விசயம் இதுதான், எங்கோ இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொண்டால், தமிழகத்தில் இருக்கும் ஓர் ஆட்டோ டிரைவர் தன் மத்தியானச் சாப்பாட்டில் ஓர் அப்பளத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது.

வளர்ச்சி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விலை உயர்வு மட்டுமே எல்லோருக்குமான பொதுவான வளர்ச்சியாக இருக்கிறது.

இனிமேல் குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போவதற்குப் பதில், ஒரு பர்சனல் லோன் எடுத்துக்கொண்டு போவது புத்திசாலித்தனம்!

*****

கிளாட் மித்தோஸ் – வங்கிகளின் டிஜிட்டல் ஜுரம்!

கிளாட் மித்தோஸ் – வங்கிகளின் டிஜிட்டல் ஜுரம்!

உலகில் திருடர்கள் எப்போதும் அப்டேட்டடாகவே இருக்கிறார்கள்.

நாம் கையில் இருக்கும் சில்லறையை எண்ணுவதற்குள், அவர்கள் நம் வங்கிச் சேமிப்பை பிட் காயினாக மாற்றி விண்வெளிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இப்போது அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் வில்லன் கிளாட் மித்தோஸ்.

அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் இதை உருவாக்கியது. ஆரம்பத்தில் மென்பொருளில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அடைக்க உதவும், என்றுதான் இதைப் பற்றிச் சொன்னார்கள்.

ஆனால், ஓட்டை எங்கே இருக்கிறது என்று தெரிந்தால், அதை அடைக்கிறவர்களை விட, அந்த ஓட்டை வழியாக உள்ளே புகுந்து கல்லாவைத் தேடுகிறவர்களுக்குத்தான் ஆர்வம் அதிகம் என்பது நம் ஊர் சைபர் விதிகளில் ஒன்று.

மனிதக் கண்களுக்குப் புலப்படாத, ஏன் 27 ஆண்டுகளாக ஒரு மென்பொருள் நிபுணருக்குக் கூடத் தெரியாத சிறிய பிழையைக் கூட இந்த மித்தோஸ் ஒற்றை நொடியில் மோப்பம் பிடித்துவிடுகிறதாம்.

இது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும், மறுபக்கம் வங்கிகளுக்கு திகில் கிளப்பியிருக்கிறது.

வீட்டுச் சாவி துவாரத்தில் ஒரு சின்ன விரிசல் இருந்தால் கூட, அதை ஒரு பெரிய வாசலாக மாற்றி உள்ளே நுழையும் வித்தை இந்த மித்தோஸ்க்குத் தெரியும்.

இது தேசவிரோதிகளின் கையில் கிடைத்தால்?

வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணம், நீங்கள் கண் இமைக்கும் நேரத்தில் மாயா பஜார் ஆகிவிடும்.

இந்த ஏ.ஐ பூதத்திடம் இருந்து தப்பிக்க, இப்போது வங்கிகள் தங்களின் பாதுகாப்புச் செலவுகளை வாரி இறைக்க முடிவு செய்துள்ளன.

புதிய சவால்கள் வந்துவிட்டன, எனவே ஐ.டி துறையில் முதலீட்டை அதிகரிக்கிறோம் என்று பொதுத்துறை வங்கிகளே அலறுகின்றன.

அதாவது, திருடன் அதிநவீன கார் வாங்கினால், நாமும் வேகமான ஜீப் வாங்க வேண்டும் என்ற எதார்த்தம்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்க தனியார் வங்கிகளும் தயாராகி விட்டன.

என்ன செய்யப்போகிறது அரசு?

இந்தியாவில் டிஜிட்டல் கைது, போலி க்யூ ஆர் கோடு என ஏற்கெனவே திருடர்கள் கிரியேட்டிவிட்டியில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த கிளாட் மித்தோஸ் அவர்களுக்குக் கிடைத்தால் அது குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டையாக மாறிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தொழில்நுட்பம் வளர வளர, நம் பணத்தைப் பாதுகாப்பதற்கான செலவும் வளர்ந்துகொண்டே போகிறது.

திருடனிடமிருந்து தப்பிக்க நாம் செலவு செய்யும் பணத்தை விட, வங்கியின் லாபம் குறைவாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

அது என்னவென்றால்,

உங்கள் ரகசியக் குறியீடுகளை யாரிடமும் பகிராதீர்கள். ஏனென்றால், மித்தோஸ் மென்பொருள் ஓட்டையைத் தேடும், ஆனால் மனிதர்கள் இன்னமும் அப்பாவித்தனமான மனிதர்களையே தேடுகிறார்கள்!

*****

ஏஐ மற்றும் எத்திக்ஸ் – ஒரு டேஞ்சர் ரிப்போர்ட்!

ஏஐ மற்றும் எத்திக்ஸ் – ஒரு டேஞ்சர் ரிப்போர்ட்!

கொரோனா வைரஸை லேபில் வைத்து ஏதோ ஆல்டர் பண்ணப்போய், உலகம் முழுக்க மாஸ்க் போட்டுக்கொண்டு அலைந்தோம். அது ஒரு டிரெய்லர் தான்.

நிஜமான படம் ரொம்பப் பழையது. முதல் அணு குண்டை வெடித்தபோது அதன் பிதா ஓப்பன்ஹைமர் சொன்னார், நானே மரணம், உலகங்களை அழிப்பவன் என்று. அவர் சும்மா கவிதை சொல்லவில்லை, நிஜத்தைச் சொன்னார்.

மனுஷன் எதையாவது கண்டுபிடிப்பான், அப்புறம் அதை வைத்து அவனே அழிந்துபோவான். தொழில்நுட்பம் என்கிற புலிக்குக் கடிவாளம் போடத் தெரியாமல் அதன் வால் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது உலகம்.

கம்ப்யூட்டர் வளர்கிறது, ஆனால் நம் அறிவு?

இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒருமுறை சொன்னார், யார் செயற்கை நுண்ணறிவில் கில்லாடியோ, அவர்தான் உலகத்தையே ஆளுவார். இது சும்மா சயின்ஸ் பிக்‌ஷன் கிடையாது, எதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது.

நாளைக்கு உங்களை யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், உங்களை எக்கனாமிக் சிஸ்டத்தில் இருந்தே டெலீட் பண்ணும் அதிகாரம் அந்த அல்காரிதத்திற்கு உண்டு. உளவு பார்ப்பது, சுதந்திரத்தைப் பறிப்பது என செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐயின் லிஸ்ட் நீளுகிறது.

சிக்மண்ட் பிராய்ட் ஒரு கேள்வி கேட்டார், நவீன வாழ்க்கை நம்மைச் சந்தோஷமாக வைத்திருக்கிறதா?

இவ்வளவு நவீன கண்டுபிடிப்புகள் வந்த பிறகும் நாம் ஏன் சந்தோசமாக இல்லை?

ஒவ்வொரு புது கண்டுபிடிப்புக்கும் ஒரு பின்விளைவு உண்டு.

டெலிபோன் வந்தது. தூரத்தில் இருப்பவர்களுடன் பேசினோம், ஆனால் பக்கத்தில் இருப்பவர்களைப் பிரிந்தோம்.

மருத்துவம் வளர்ந்தது. மக்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள், ஆனால் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஏஐ வருகிறது. வேலைகள் எளிதாகிறது, ஆனால் நாம் வெறும் டேட்டா ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

சிக்கல் என்னவென்றால், இங்கே ஒரு பெரிய கேப் இருக்கிறது.

டெக்னாலஜி தெரிந்தவனுக்கு எத்திக்ஸ் தெரியாது. எத்திக்ஸ் தெரிந்த தத்துவவாதிக்கு டெக்னாலஜி தெரியாது.

கணினி விஞ்ஞானிக்கு அடுத்த கோட் எப்படி எழுதுவது என்பதுதான் குறி. தத்துவவாதிக்கோ காண்ட் சொன்னாரா, மில் சொன்னாரா என்ற தர்க்கம். இரண்டு பேரும் இரண்டு துருவங்கள்.

தத்துவவாதியிடம் பார்முலா இருக்கிறது, விஞ்ஞானியிடம் எண்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டு பேரையும் ஒரே ரூமில் உட்கார வைக்க யாருமே இல்லை.

அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்? கவலைப்படாதீர்கள், எத்திக்ஸ் கமிட்டி பார்த்துக்கொள்ளும், என்று கூலாகச் சொல்வார்கள். நிஜத்தில் அந்த கமிட்டிக்கே அங்கே என்ன நடக்கிறது என்று புரியாது.

ஓப்பன்ஹைமர், அதாகப்பட்டவர் அணுகுண்டின் தந்தை ஒரு விஷயம் சொன்னார், ஏதாவது ஒன்று தொழில்நுட்ப ரீதியாக இனிப்பாக இருந்தால், அதைச் செய்துவிடுவோம். அதன் பிறகுதான் அது சரியா தவறா என்று யோசிப்போம் என்று.

அணு குண்டு அப்படித்தான் வந்தது. இன்டர்நெட் அப்படித்தான் வந்தது. இன்டர்நெட்டை உருவாக்கியவர்கள் அது நாளைக்கு ஆபாசப் படங்கள் பார்க்கவும், கடத்தல்காரர்களுக்கும் பயன்படும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இப்போது ஏஐயை கட்டவிழ்த்து விட்டுவிட்டு, அய்யோ, தப்பு பண்ணிட்டோமோ? என்று பின்னால் யோசிப்பது கேலிக்கூத்து.

தொழில்நுட்பம் வார்ப் ஸ்பீடில் போகிறது. நம்முடைய தார்மீகச் சிந்தனையோ ஆமை வேகத்தில் நகர்கிறது.

இனிமேல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்கிற ரிலேட்டிவிசம் வேலைக்கு ஆகாது. ஒரு பொதுவான, வலிமையான அறநெறி விவாதம் தேவை. அதுவும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் விவாதமாக இருக்க வேண்டும்.

யாரோ ஒரு கமிட்டி பார்த்துக்கொள்ளும் என்று விடுவதை விட, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தத் தொழில்நுட்பத்தை அனுமதிக்கலாம், எதை நிராகரிக்கலாம் என்று முடிவெடுக்கும் பில்டர் நமக்குத் தேவை.

ஏனென்றால், சுவிட்ச் நம் கையில் இருக்கும்போதுதான் நாம் மனிதர்கள். அது அல்காரிதம் கைக்குப் போய்விட்டால் நாம் வெறும் ஜீரோக்கள்தான்!

*****

3 May 2026

மகுடம் சூட்டிக்கொள்ளும் மந்தைகள்!

மகுடம் சூட்டிக்கொள்ளும் மந்தைகள்!

தலைமைப்பண்பு என்பது ஒரு ரசாயன மாற்றம். அதாவது, ஒரு தலைமை நிர்வாகி நினைத்தால் தகரத்தையும் தங்கமாக்குவார். இரசவாதம் எல்லாம் அந்தக்காலத்தோடு போய்விட்டது என்று நினைத்து விடாதீர்கள். அது தலைமையேற்பவர்கள் நினைத்தால் சாத்தியமாகக் கூடியதுதான்.

நிர்வாகம் என்பது ஒரு தவம். ஆனால் நம் ஊரில் பலருக்கு அது ஒரு தப்பித்தல். பதவி வந்ததும் சிலர் தங்களைச் சுற்றி ஒரு பெரிய கோட்டையை எழுப்பிக்கொண்டு, உள்ளே ஒளிந்துகொள்வார்கள்.

நல்ல தலைமை இல்லாவிட்டால், மோசமான அல்லது செயல்படாத நிர்வாகம் உருவாகும். ஆகத் தலைமையிடங்களை வெற்றிடங்களாக நீடிக்க விடக் கூடாது.

தமிழ்நாட்டில் இன்சார்ஜ் என்ற பெயரில் பல இடங்கள் பல துறைகளில் காலியாக இருக்கின்றன.

ஒரு எம்.எல்.ஏ செத்துப்போனால் உடனே தேர்தல் நடத்திப் புது ஆளைப் போடுகிறார்களே, அதே வேகம் ஏன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் இல்லை? ஒருவேளை, துணை இல்லாத வேந்தர்கள்தான் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்று நினைக்கிறார்களோ என்னவோ!

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்தத் தலைமை குறித்துக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். தலைமையில் மூன்று வகை உண்டு:

சிம்ம சொப்பனம் போல இருப்பவர் முதல் வகை.  இவர்களைப் பார்த்தாலே ஊழியர்கள் ஒளிந்து கொள்வார்கள். இவர்களுக்கு ஒழுக்கம் என்றால் மற்றவர்கள் பயந்து நடுங்குவது என்று அர்த்தம்.

கலந்தாலோசகர்கள் இரண்டாவது வகை. இவர்கள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, கடைசியில் தான் நினைத்ததைச் செய்வார்கள். ஆனால் சுற்றியிருப்பவர்களுக்கு நாமும் ஏதோ செய்தோம் என்கிற திருப்தி இருக்கும்.

தோழமைத் தலைவர்கள் மூன்றாவது வகை. நம் மக்கள் பாஷையில் சொன்னால்,  இவர்கள்தான் ஆபத்தானவர்கள். அதாகப்பட்டது, அன்பாகப் பேசியே வேலையை வாங்கிவிடுவார்கள்.

சிலர் பதவிக்கு வந்தவுடன் தன் பயோடேட்டாவை மெருகேற்றுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அலுவலக நேரத்தை ஆபிஸ் வேலைக்குத் தவிர மற்ற எல்லாப் புகழுக்கும் பயன்படுத்துவார்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் பிழைக்கத் தெரிந்தவர்கள், என்று உலகம் சொல்லும்.

ஆனால், தன் நிறுவனத்துக்காகத் தன்னையே உருக்கிக்கொள்பவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள், என்று உலகம் ஏளனம் செய்யும். ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பிழைக்கத் தெரியாதவர்களின் பெயர்தான் காலத்துக்கும் நிற்கிறது. அவரால்தான் நிறுவனமும் நிலைக்கிறது.

ஒரு நிறுவனம் உருப்பட நிதியும் வசதியும் மட்டும் போதாது. அதை வழிநடத்தும் ஆளின் ஆளுமை முக்கியம். அதிகாரம் கையில் இல்லாதபோது குனிந்து கும்பிடு போடுபவர், பதவி வந்தவுடனும் அதே பணிவோடு இருந்தால், அது அந்தப் பதவிக்கே பெருமை. ஆனால், பதவி வந்ததும் முகம் மாறுபவர்கள் முகமூடி அணிந்த கோமாளிகள்.

கடைசியாகச் சொல்ல வேண்டிய ஒன்று இருக்கிறது. இது கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

உருப்படியாக எதையும் செய்ய விருப்பம் இல்லாதவர்கள், தயவுசெய்து அந்தத் தலைமைப் பதவியை ஏற்காதீர்கள். சும்மா இருக்கவே சம்பளம் தரும் இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஒரு நிறுவனத்தைத் தரம் உயர்த்தத் திறனில்லாதவர்கள், வழிவிட்டு ஒதுங்குவதுதான் அந்தப் பதவிக்குச் செய்யும் மிகப்பெரிய அறம்.

உங்கள் பெயர் கல்வெட்டில் இருக்க வேண்டுமா அல்லது சுவரில் கரிக்கோடுகளாக இருக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

*****

வெயிலும் மண்டை ஓடும் – ஒரு கோடைக்காலக் குறிப்பு!

வெயிலும் மண்டை ஓடும் – ஒரு கோடைக்காலக் குறிப்பு!

சூரியன் இப்போது ஒரு வேலையற்ற தாதாவைப் போலச் செயல்படுகிறது. கத்திரி வெயில் என்னும் அபிஷியல் சித்திரவதைக்கு முன்பே, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

கடந்த சனிக்கிழமை மட்டும் இந்தியாவின் நாற்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.

உத்தர பிரதேசத்தின் பாந்தா நகரில் 117.32 டிகிரி பாரன்ஹீட்டாம். அங்கு யாராவது ஆம்லெட் போட அடுப்பைப் பற்ற வைக்க வேண்டாம், முட்டையைச் சாலையில் உடைத்தாலே போதும்.

தில்லியில் 112 டிகிரி பாரன்ஹீட். இயல்பை விட 11 டிகிரி அதிகம். அதாவது, இயற்கை இப்போது ஒரு ஓவர் அச்சீவர்.

வடமாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்கிறது. தமிழகம், ஆந்திரா போன்ற கடற்கரை ஓரங்களில் வெயிலும் ஈரப்பதமும் சேர்ந்து நம்மை ஓர் உயிருள்ள இட்லி போல வேக வைக்கிறது.

4.5 டிகிரி முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடினால் அதை வெப்ப அலை என்கிறார்கள். எனக்குத் தெரிந்து இதை வெப்பச் சுனாமி என்றே அழைக்கலாம். அதுவே 6.4 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் அது தீவிர வெப்ப அலையாம்.

ஏற்கனவே ஒடிஸாவில் ஆழ்துளைக் கிணறு தோண்டிய தொழிலாளி, கணக்கெடுப்பு நடத்திய ஆசிரியர் எனச் சிலர் இந்த வெப்பச் சுனாமிக்கு தட் மீன்ஸ் வெப்ப அலைக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஊட்டியிலேயே 80 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அடிக்கிறது என்றால், சமவெளி மனிதர்களின் கதி?

உடல்நிலைக்கு இதனால், தக்காளி போல தோல் சிவந்து போவது, ஆபீஸ் வேலையினால் வருவதைத் தவிர்த்து தலைவலி மற்றும் மயக்கம், காதல் மேட்டர் இல்லாமல்   இதயத்துடிப்பு அதிகரித்தல், மிக முக்கியமாக, நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகம் ஸ்ட்ரைக் செய்வது போன்றவை ஏற்படுகின்றன.

இதிலிருந்து உயிர் பிழைக்கும் வித்தைகள்தான் இப்போது நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அந்த டாபிக்கைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்தால்,

மதியம் 11 முதல் 3 மணி வரை வெளியே தலை காட்டாதீர்கள் என்கிறார்கள். அத்தியாவசியத் தேவை இருந்தால் ஒழிய, சூரியனுடன் மல்யுத்தம் செய்ய வேண்டாம். முக்கியமாக டெலிவரி பாய்ஸ், துப்புரவுப் பணியாளர்கள் ஜாக்கிரதை.

கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்க வேண்டுமாம். அது சூரியனைச் செல்லமாக வா என்று அழைக்குமாம். மெல்லிய பருத்தி ஆடைகளே தேவலாம்.

தாகம் எடுக்கிறதோ இல்லையோ, தண்ணீரைக் குடிக்க வேண்டும். இளநீர், மோர், கம்பங்கூழ், எலுமிச்சை சாறு போன்றவைதான் இப்போது நம் மீட்பர்கள்.

இந்த வெப்ப அலை அதாகப்பட்டது வெப்பச் சுனாமியைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இதற்காக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரத் தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கே ஆக்சிஜனும் குளுக்கோஸும் தயார் நிலையில் இருக்கிறது.

இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக, அங்கே போவேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வெயிலில் அலையக் கூடாது. அங்கே போகாமல் இருப்பதே உத்தமம்.

அப்புறம் பேச வேண்டியதைப் பேச வேண்டுமே. அதென்ன என்கிறீர்களா?

மரங்களை வெட்டிவிட்டு கான்கிரீட் காடுகளை வளர்த்தோம். ஏ.சியைப் போட்டு வெளியே இருக்கும் காற்றைச் சூடாக்கினோம். இப்போது இயற்கை ரிட்டர்ன் கிப்ட் தருகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நாம் வெறென்ன செய்ய முடியும். குடை பிடியுங்கள், நீர் அருந்துங்கள், முடிந்தால் நிழலில் தவமிருங்கள். ஒரு புங்கையோ, வேப்ப மரமோ தெருவோரம் நட முடியுமா என்று பாருங்கள். நிழலில் தவமிருக்க மரம் வேண்டுமே!

*****