17 Feb 2026

இன்றைய அறிவுலகமும் டிரம்பும்!

இன்றைய அறிவுலகமும் டிரம்பும்!

இன்றைய அறிவுலகம் எப்படி இருக்கிறது என்றால் …

எதற்கு வினை புரிய பண்ண வேண்டும், எதற்கு வினை புரியக் கூடாது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் சரியான அறிவு.

வாட்ஸப்பிலும், பேஸ்புக்கிலும் வரிந்து கட்டிக் கொண்டு உப்புச் சப்பில்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் சண்டை போடுபவர்கள், அக்கிரமங்களை நிஜ வாழ்வில் காணும் போது கண்டும் காணாமலும் சமாதானமாகக் கடந்து விடுகிறார்கள். இப்படித்தான் இருக்கிறது இன்றைய அறிவுலகம்.

*****

இந்தக் காலத்திலும் சோற்றுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பவர்களிடம் என்ன சொல்வது …

அரசாங்கம் இலவச அரிசிக்குப் பதிலாக இலவச சோறு கொடுத்திருக்க வேண்டும்.

*****

உலக நாடுகள் அனைத்துக்கும் எதிராகச் சாட்டையை முறுக்கும் டிரம்புக்கும் சாட்டைக்குள் உள்ள தொடர்பு என்னவென்றால் …

டிரம்ப் வித்தியாசமானவர். ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்பதற்காக இந்தியாவுக்கு வரி விதிப்பார். இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியத்தை வாங்கக் கூடாது என்று சொல்லி விட்டு அவர் மட்டும் இஷ்டத்துக்கு ரஷ்யாவிடமிருந்து யுரேனியத்தைப் பேக்கப் செய்து கொண்டிருப்பார். இந்தியா பாகிஸ்தான் போரை வர்த்தக ஒப்பந்தத்தைக் காட்டி நிறுத்துவார். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்தால் ஆயுத ஒப்பந்தங்களைப் போட்டு பணத்தைக் குவித்துக் கொள்வார். அவர் அனுமதியில்லாமல் எந்த நாடும் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கக் கூடாது என்பார். அப்படியே தொடுத்தாலும் தன் முன்னே வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சாட்டையைச் சுழற்றுவார். ஆனால், ஈரான் மேல் அவர் தொடுத்த தாக்குதலுக்கு என்ன செய்வார்? இப்போது வெனிசுலாவின் மீது அத்துமீறியதற்கு என்ன செய்வார்? தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்வாரா? அல்லது உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் சாட்டையால் அடிப்பாரா? அவர் கையில் இருக்கும் சாட்டையானது எம்ஜியாரின் ‘நான் ஆணை இட்டால்…’ என்பது போலவும் சுழலும், கழைக்கூத்தாடியின் கையில் இருக்கும் சாட்டையைப் போலவும் சுழலும். அது எப்போது எப்படிச் சுழலும் என்பது சமயத்துக்குத் தகுந்தாற் போல டிரம்மை அடிக்கும் டிரம்புக்கே வெளிச்சம்.

*****

அன்எடிட்டபிள் மனங்களின் டெசிபல்

அன்எடிட்டபிள் மனங்களின் டெசிபல்

வாழ்க்கை என்பது ஒரு லைவ் டெலிகாஸ்ட். நடக்கும்போது எடிட் செய்ய முடியாது. கேமராவுக்குப் பின்னால் இருந்து பார்த்தால் எல்லாம் மொண்ணையாகத்தான் இருக்கும். ஆனால், எல்லாம் முடிந்து ஒரு டாக்குமெண்டரியாகப் போட்டுப் பார்த்தால், அடடா என்ன ஒரு திரைக்கதை!

அதனால்தான் சொல்கிறேன், நிகழ்வுகளின் இடையில் சுவாரசியத்தைத் தேடாதீர்கள். உப்பு போடாத பருப்பு மாதிரி சில சமயம் வாழ்க்கை சப்பென்றுதான் இருக்கும். அதற்காக அதில் தேவையில்லாத மசாலாக்களைச் சேர்த்து விபரீதம் ஆக்கிவிடாதீர்கள். என்ட் கார்டு போடும்போது கதை தானாகவே மாஸாக மாறும்.

இங்கே யார் நல்லவன், யார் கெட்டவன்? இது ஒரு ரிலேடிவ் தியரி. அவரவர் பார்வைக்கேற்ப நல்லவனும் கெட்டவனும் மாறிக் கொண்டே இருப்பான். ஆகவே மற்றவர்கள் சொல்லும் கெட்டவன் பற்றி ஓவர் திங்கிங் வேண்டாம். அவர்கள் சொல்லும் வகையில் நல்லவனாக இருந்து நாசமாய்ப் போவதை விட, அவர்கள் பார்வையில் நீங்கள் கெட்டவனாக இருந்து நிம்மதியாக வாழ முடியும் என்றால் யோசிக்காதீர்கள், அப்படியே வாழுங்கள்.

இந்த உலகம் உங்களை யூஸ் பண்ணிக்கொள்ளத் துடிக்கும். நீ எனக்கு உதவவில்லை என்றாலும் பரவாயில்லை, நான் உன்னை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த சமூகத்தின் அல்காரிதம். ஆக, அவர்களுக்கு ஒரு ஜஸ்டிஸ், உங்களுக்கு ஒரு ஜஸ்டிஸ். தட்ஸ் ஆல்! இதைப் புரிந்து கொள்ளுங்கள். இதற்காக யாரிடமும் போய் சூப்பர் சுப்பராயன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்காதீர்கள்.

பொதுவாக மனிதர்களை நம்புவது என்பது ஒரு பக் நிறைந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வது போன்றது. இதில் நம்பிக்கைத் துரோகம் என்று எதுவும் இல்லை, அந்த சாஃப்ட்வேரின் டிசைனே அப்படி! ஒவ்வொரு மனதும் ஒரு யுனிக் கோட்.

சில நேரங்களில் மனம் நினைக்கிறது, நான் சிந்திப்பது போலவேதான் அவனும் சிந்திப்பான் என்று. இது உலக மகா எர்ரர். இங்கேதான் லாஜிக் இடிக்கிறது. உங்கள் மனதின் ஃபிரீக்வென்சி வேறு, அடுத்தவன் மனதின் ஃப்ரீக்வென்சி வேறு.

ஒவ்வொரு மனதுக்குள்ளும் கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் விரோதம், ஏகப்பட்ட ஏமாற்றங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு டைம் பாம் மாதிரி. வெடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும். இன்னொரு மனம் அதற்கு ஒரு சிறு தீக்குச்சியை நீட்டினால் போதும். டமால்! அந்த இன்னொரு மனமாக உங்கள் மனம் இருந்து விடக் கூடாது.

கடைசியாக ஒன்று, எந்த மனதுக்கும் கன்ட்ரோல் பிடிக்காது. நீங்கள் ஒரு வேலி போட்டால், மனம் அதைத் தாண்டத் துடிக்கும். நீங்கள் ஒரு கட்டளை இட்டால், அது ஆப்போசிட் டைரக்சனில் ஓடும்.

மனம் என்பது பிடிபடாத பாதரசம். அதைக் கட்டுப்படுத்த நினைக்காதீர்கள், அவதானியுங்கள். வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும். அதுவாக ஆடி அடங்கும். ஆடும் போது வேடிக்கை பாருங்கள். உங்களுக்கே வாழ்க்கை ரொம்ப ரசமா இருக்கும். இல்லையென்றால் விசமாக இருக்கும்.

*****

16 Feb 2026

ஏஐ கற்றாரோடு ஏனை யவர் - உருவாகும் புதுக்குறள்!

ஏஐ சிட்டியாகி விட்ட டெல்லி!

டெல்லி இந்தியாவின் தலைநகரம். இப்போது அது செயற்கை நுண்ணறிவின் தலைநகரமாகவும் மாறியிருக்கிறது. காரணம் அங்கு நடந்து கொண்டிருக்கும் ஏஐ மாநாடு. அது இன்று தொடங்கியிருக்கிறது. இன்றோடு 5 நாட்கள் நடக்க உள்ளது.

டெல்லியில் பிப்ரவரி மாதம் எப்போதும் குளிராக இருக்கும். ஆனால், இந்த ஏஐ மாநாட்டால் அங்கே அறிவு வெப்பம் தகிக்கிறது.

20 நாடுகளின் தலைவர்கள், 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் என ஏஐ உலகத்தின் ஹெவிவெயிட்ஸ் சாம்பியன் எல்லாம் ஒரே இடத்தில்.  கூடிவிட்டார்கள்.

செயற்கை நுண்ணறிவு இப்போது இது ஒரு டெக்னாலஜி மட்டுமல்ல, ஒரு வாழ்வாதாரம்.

மேடையில் பிரதமர் மோடி பேசுகையில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அது மக்கள், பூமி, முன்னேற்றம். சுருக்கமாகச் சொன்னால் அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் மகிழ்ச்சிக்காகவுமான ஏஐ.

இந்த உச்சி மாநாடு ஏதோ மேலைநாடுகள் மட்டும் பேசிக்கொள்ளும் கிளப் கிடையாது. வளரும் நாடுகளின் குரல். இதற்காக ஏழு சக்கரங்கள் எனும் பணிக்குழுக்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

அவையாவன,

1. மனித வளச் சக்கரம்

இது மெஷின் லேர்னிங் கற்கும் மாணவர்களுக்கு என்ன வழி என்று ஆராயப் போகிறது.

2. சமூக உள்ளடக்கச் சக்கரம்

இது கிராமத்துக் கடைசி மனிதனுக்கும் ஏஐ சென்றடைவது எப்படி என்று யோசிக்க இருக்கிறது.

3. பாதுகாப்புச் சக்கரம்

டீப் பேக் போன்ற ஆபத்துகளை எப்படித் தடுப்பது என்று சிந்திக்க இப்பணிக்குழு.

4. அறிவியல் சக்கரம்

மருந்துவ ஆராய்ச்சி முதல் வானிலை வரை செயற்கை நுண்ணறிவை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் புட்டு புட்டு வைக்க இக்குழு.

5. சூழலியல் சக்கரம்

ஏஐ டேட்டா சென்டர்கள் வெளியிடும் கார்பனை எப்படிக் குறைப்பது என்று ஆராய்வதற்கு இக்குழு.

6. ஜனநாயகப்படுத்தும் சக்கரம்

சில நிறுவனங்களின் கையில் மட்டும் ஏஐ சிக்காமல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமே. அதற்காக இந்தக் குழு.

7. பொருளாதாரச் சக்கரம்

இந்தியாவின் 8.3 லட்சம் கோடி முதலீட்டு இலக்கை எட்டுவது குறித்து அலச இக்குழு.

அப்புறம் இந்த 5 நாள் திருவிழாவில் 3,500 நிபுணர்கள் உரையாற்றுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது 'AI for ALL' மற்றும் 'AI by HER' போன்ற போட்டிகள். குறிப்பாக பெண்கள் நடத்தும் ஏஐ ஸ்டார்ட் அப்களுக்கு ரூ. 2.50 கோடி பரிசு தர இருக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 70,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சி. அங்கே நிஜமான ரோபோக்களும், மனித மூளையை மிஞ்சத் துடிக்கும் அல்காரிதங்களும் ஊர்வலம் போக இருக்கின்றன.

ஆக, இனி நாம் ஏஐ பார்த்துப் பயப்படுவதில் அர்த்தமில்லை. அதற்காக மாநாடே நடக்கிறது.

ஏஐ பயன்படுத்தத் தெரிந்த ஒரு மனிதர், ஏஐ தெரியாத ஒரு மனிதரின் வேலையைப் பறிக்கக்கூடும். ஆகவே இனி எண்ணென்ப ஏனை எழுத்தென்ப … எனும் குறளோடு ஏஐ என்ப என்பதையும் சேர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

விலங்கோடு மக்கள் அனையர் இலங்குஏஐ

கற்றாரோடு ஏனை யவர்

என்று திருவள்ளுவர் மீண்டும் வந்து புதுக்குறள் எழுதினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. சூழ்நிலை அப்படி மாறி இருக்கிறது.

*****

ஆஃபர் கிடையாது ஆப்புதான்! ஆகவே காத்திருங்கள்!

ஆஃபர் கிடையாது ஆப்புதான்! எனவே காத்திருங்கள்!

இந்த உலகத்தில் எதுவும் இலவசம் கிடையாது. விலையில்லா அரிசி, விலையில்லா உரிமைத்தொகை போன்ற ஒரு சில விதிவிலக்குகள் தனி. மற்றபடி ஒரு சின்ன புன்னகை கூட ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்துதான் இங்கே உதிர்க்கப்படுது.

சுலபமாகக் காரியம் சாதிக்க இங்கே வாய்ப்பில்லை. இங்கே எல்லாவற்றுக்கும் ஒரு லேபிள் உண்டு. அந்த லேபிளில் ஒரு விலை உண்டு. அந்த பிரைஸ் டேக்கைப் பார்த்து விட்டு, பர்ஸைத் திறக்கத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டும் கதவு திறக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு நோ என்ட்ரிதான்.

வாழ்க்கை என்பது ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட். அங்கே எல்லாமும் உண்டு. கொடுக்கல் வாங்கல்தான் அதன் அடிப்படை விதி. அந்த மெக்கானிசம் புரியவில்லை என்றால் நீங்க அவுட்.

உங்கள் பங்களிப்பு இல்லையென்றால், அங்கே உங்கள் உறவு வெட்டி எறியப்படும். எல்லாவற்றுக்கும் சமாதானம் பேசிக் கொண்டு, காந்தி மாதிரி அஹிம்சை வழி இங்கே கிடையாது.

இது புரியாமல் நீங்கள்அங்கேயே நின்று கொண்டிருந்தால் உலகம் உங்களை ஒரு ஓரமாக தள்ளி வைத்து விடும். இதற்காகச் சில நேரங்களில் நீங்கள் பழிவாங்கவும் படுவீர்கள். எல்லாம் நீங்கள் அங்கே வெறுமனே நின்ற பாவத்திற்காக. இது விசித்திரமாக இருக்கலாம். அந்த விசித்திரம் நடக்கும் போதுதான் உங்களுக்குப் புரியும்.

ஆக உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். தயாரிப்பு முடிந்த உடன், உங்கள் சாமர்த்தியத்தை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடிக்காதீர்கள். அதில் அவ்வளவு நேர்த்தி உடனே கைகூடி வந்து இருக்காது. கொஞ்சம் அதைச் சோதித்துப் பார்த்து பட்டி டிங்கரிங் செய்வதற்கான அனுபவம் தேவைப்படும். அதுவரை உங்களை ஒரு டம்மி பீஸ் மாதிரி வைத்துக் கொண்டு, உங்கள் திறமை எனும் வைரத்தைப் பட்டைத் தீட்டிக் கொள்ளுங்கள்.

உங்கள் திறமை தொடர்பாக உருவாகும் அத்தனைப் பிரச்சனைகள் பற்றியும், அவற்றைச் சமாளிக்கும் முறைகள் பற்றியும் தேவையான அத்தனை அறிவையும் நீங்கள் உங்கள் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

இதுதான் இந்த உலகில் உங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்வதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலை.

உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவர்களுக்குக் கூடத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு, அவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று அவர்களை எதிர்பார்க்கக் கூடாது. யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரிந்தால் போதும். அதுவும் எப்போது தெரிய வேண்டுமோ அப்போது தெரிந்தால் போதும். அதற்கு முன்பு அவசரம் காட்டி விடவும் கூடாது. எதையும் பருவத்தே பயில் செய்தால்தான் நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் உப்பு விளைவிக்க ஆசைபடக் கூடாது.

எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகம் வருகிறது.

மிஸ்டர் டென்சன் ஒருவர் என் திறமைக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்று நான் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போனேன். ரிசல்ட்? எனக்கு ஒரு டீபுரோமேஷன் இன்ஸ்டன்ட் காபி போல வழங்கப்பட்டது. இதுதான் அவர் என் திறமைக்குக் கொடுத்த மரியாதை. இப்படித் திறமையை டீபுரோமேஷனால் குறைத்துக் கொள்வதுதான் திறமையா?

திறமையைக் காட்டுவதை விடவும், திறமையைப் பல இடங்களில் காட்டாமல் இருப்பதுதான் பெரிய திறமை என்பது புரிய எனக்குக் காலம் தேவைப்பட்டது. உங்களுக்கு அவ்வளவு காலம் வேண்டாம். என் இந்த அனுபவமே போதும். அதை இந்தச் செகண்டே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமை புரியாதவர்களிடம் உங்கள் திறமைக்கு மரியாதையை எதிர்பார்ப்பது திறமையற்ற செயல்.

இப்போது ஒரு கேள்வி. அவருக்கு ஏன் உங்கள் திறமை புரிய வேண்டும்? உங்கள் திறமையைப் புரிந்தவர் ஒருநாள் உங்கள் கண்ணில் படுவார். உங்களைத் தேடி வரவும் செய்வார். அப்போது மிஸ்டர் டென்ஷனிடம் கூலாக ராஜினாமா லெட்டரைத் தூக்கிக் கடாசி விட்டுக் கிளம்பலாம்.

அதுவரை, அமைதியாக ஒரு வேட்டைக்காரன் மாதிரி காத்திருங்கள். அவசரப்பட்டு உங்கள் திறமையை வெளிப்படுத்த நினைத்தால், அது திறமையாகவே மதிக்கப்பட மாட்டாது.

காத்திருத்தால் என்பது வாழ்க்கை விளையாட்டின் ஒரு பகுதி. உங்கள் திறமை விளையாட்டிற்கு அது ரொம்பவே பொருந்தும். சில நேரங்களில் பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு பொருளை வாங்க நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும். அது உங்கள் பர்ஸ்க்குத்தான் ஸ்வாஹா. காத்திருந்தால் அடி மாட்டு விலைக்கே கிடைக்கும். இது உங்கள் திறமைக்கும் பொருந்தும்.

*****

15 Feb 2026

வாழ்வது எப்படி? ஒரு மினி வழிகாட்டி!

வாழ்வது எப்படி? ஒரு மினி வழிகாட்டி!

மனம் எப்போதும் ஒரு சுமை. முதலில் இந்த மனம் என்கிற சமாச்சாரத்தை டிஸ்மேண்டில் பண்ணுங்கள். மனம் என்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டால், அப்புறம் அது சொல்கிறபடிதான் நீங்கள் ஆட வேண்டும். என்னைக் கேட்டால், அது ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ். மனம் இல்லாமல் இருந்தால் லைஃப் ரொம்ப லைட்டா இருக்கும்.

இப்போது சுற்றிப் பாருங்கள். சுற்றிலும் ஒயிட் காலர் வில்லன்கள். தனக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால், இவர்களுக்கு மூளை ராக்கெட் வேகத்தில் வேலை செய்யும். நாம் ஒரு வேலை என்று போய் நின்றால் சமாளிப்பிகேஷனில் இவர்களைத் தட்டிக் கொள்ள முடியாது. வஞ்சகம் என்பது இந்தியாவில் ஒரு தேசிய விளையாட்டு. பொதுநலத்திற்காக யார் புத்தியை அடகு வைப்பார்கள் சொல்லுங்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், அதற்கும் நுட்பங்கள் இருக்கின்றன.

உண்மை என்பது எப்போதும் ஒரு வெடிகுண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதை பற்ற வைத்து விடாதீர்கள். பிறகு பத்த வெச்சுட்டீயே பரட்டை கதையாகி விடும். எல்லாவற்றையும் உள்ளே வைத்துக் கொள்ளுங்கள். பொக்கிஷங்கள் உள்ளேதானே இருக்க வேண்டும். உண்மைகள் பொக்கிஷங்கள். மனதில் ஒரு கால்குலேட்டர் ஓடிக் கொண்டே இருக்கட்டும்.

யாரிடமும் கோப்படாதீர்கள். அது ப்ளட் பிரஷரைச் சுனாமியாக்கும். யார் உங்களைப் பார்த்தாலும் நீங்கள் புத்தர் போலக் காட்சி தர வேண்டும். காட்சித்தான் தர வேண்டுமே தவிர, புத்தராகி உண்மையைத் தேடிக் கானகத்திற்குப் புறப்பட்டு விடக் கூடாது.

யாராவது விளக்கம் கேட்டால், உண்மையைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பொய்கள் எதற்கு இருக்கின்றன? அவிழ்த்து விடுங்கள். உங்கள் கற்பனையாற்றலைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். மூளைக்கு வேலை கொடுங்கள்.

ஏனென்றால், உண்மையை நீங்கள் வெளிப்படுத்தவே வேண்டியதில்லை. அதுவாகவே வெளியாகிக் கொள்ளும். ஆகவே உண்மைக்குப் பிரசவம் பார்க்கும் மகப்பேறு டாக்டராக வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்காதீர்கள்.

உண்மையை விட இந்த உலகில் ஆபத்து ஏதுமில்லை. எப்ஸ்டீன் கோப்புகளையே எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மையா, பொய்யா என்று கேட்டால், அவை பொய்யாகவும் இருக்கலாம். பொய்களுக்கு இடையே உண்மையும் இருக்கலாம். ஏனென்றால் இது டார்க் சைக்கலாஜி. இருளுக்குள் ஓளியை நீங்கள்தான் தேடிக் கொள்ள வேண்டும்.

உண்மை என்பது லாக்கருக்குள் இருக்கம் வரை அதற்கு இருக்கும் மரியாதையே வேறு. அதை வெளியே போட்டு உடைத்து விட்டால், திருஷ்டி பூசணிக்காயைத் தெருவில் உடைந்தால் என்ன கிடைக்குமோ, அதுதான் கிடைக்கும். பைசா காசு தேறாது.

ஒரு சின்ன உதாரணம். ஒரு சிபாரிசு கடிதம் கேட்டார்கள். கொடுத்தேன். அதற்குள் ஆயிரம் கேள்விகள். யார் கொடுத்தார்? எதற்குக் கொடுத்தார்? எப்படிக் கொடுத்தார்? உள்ளே என்ன இருக்கிறது? என்ன காரியம் ஆக வேண்டும்?

அதைத் திறந்து பார்த்தால் எல்லாம் தெரிந்து விடப் போகிறது. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் திறந்து பார்க்க மாட்டார்கள்.

திறந்து பார்த்தால் எதாவது செய்தாக வேண்டும். அதனால் கவரை வாங்க ஒரு நாள். அதை மேசை டிராயருக்குள் வைக்க ஒரு நாள். டிராயரிலிந்து எடுக்க ஒரு நாள். கவரின் உறையைப் பிரிக்க ஒரு நாள். கடிதத்தின் மடிப்பை விரிக்க ஒரு நாள். அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் படிக்க ஒவ்வொரு நாள். கடைசியாக கடிதத்தை மடிக்க ஒரு நாள். அதைக் குப்பையில் போட ஒருநாள். இப்படியே 365 நாட்கள் போய் அடுத்த 365 நாட்களுக்காக அடுத்த ஆண்டும் வரும்.

ஏதாவது புரிகிறதா?

ஒரு குறிப்பு தருகிறேன். அந்தச் சிபாரிசு கடித உறைக்குள் கடிதத்திற்குப்பதில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்திருந்தால், எல்லாம் முடிய ஒரு நாள்.

நான் அந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளியில் நிற்கும் உங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்றால், நான் கொடுத்தது சிபாரிசு கடிதம் என்று. உள்ளே உறையில் இருந்தது என்ன? சத்திய சோதனையை எழுதிய காந்தி புன்னகைக்கும்நோட்டு அல்லவா! இப்போது முதலிலிருந்து படித்துப் பாருங்கள். உங்களுக்கு எல்லாம் புரியும்.

ஆகவேதான் மனசு, மண்ணாங்கட்டி, தெருபுழுதி இத்தியாதிகள் எல்லாம் வேண்டாம் என்கிறேன். அப்படி வைத்துக் கொண்டால், லஞ்சம், ஊழல், அநியாயம் என்ற கொதித்தெழுந்து அதற்கு வாடகைக் கட்டி மாளாது.

எனவே, இந்த மனிதர்களை டீல் பண்ண இதுதான் ஒரே வழி. வேறு வழி இருந்தால் எனக்கு கீழே கமெண்ட் பண்ணுங்கள்!

*****

14 Feb 2026

மிஸ்டர் டென்சன் அன்ட் மிலிட்டரி மேனேஜர்! - ஒரு குறுங்கதை

மிஸ்டர் டென்சன் அன்ட் மிலிட்டரி மேனேஜர்!

ஒரு குறுங்கதை

முதலில் மேனேஜருக்கு போன் செய்தேன். மனிதர் பிஸி. யாரிடம் அத்தனை நேரம் கடலை போடுகிறார் என்று தெரியவில்லை. இது முதல் அடி. அடுத்து, அவர் எழுதச் சொன்ன சாப்ட்வேர். அதற்காக அவர் சொன்னதையெல்லாம் டவுன்லோட் பண்ணப்போய் அது கொடுத்த டெக்னிக்கல் சொதப்பல்கள் இரண்டாவது அடி. மனசு அப்படியே ஹேங் ஆகிவிட்டது. மேனேஜர் இன்னும் பாதிக் கடலையைத் தின்று முடிக்கவில்லை. இங்கே வேலை அந்தரத்தில் தொங்குகிறது. நாளை வேலை முடியவில்லை என்றால் என்னிடமும் கடலை போட மாட்டார். கல்லைத் தூக்கித் தலையில் போடுவார்.

இதற்கு மேல் இந்தக் கம்ப்யூட்டரோடு மாரடிப்பது சரிபட்டு வராது என்று வெளியே வந்தேன். வெளியில் சுவாரசியங்கள், அசுவாரசியங்கள் எல்லாம் அதிகம். நான் ஸ்டாப்பாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இது போன்ற நேரங்களில் அது ஒரு நல்ல ரிலாக்சேசன். லாஜிக் பார்த்தால் அது டிப்ரஷன். அதனால் நோ லாஜிக்.

அப்படி ஒரு நான் ஸ்டாப் பேச்சு வாமிட்டிங் ஓடிக் கொண்டிருந்தது.

எப்படியோ இந்த நகரத்தில் தப்பிப் பிழைத்து ஓரத்தில் ஒண்டிக் கொண்டிருந்த அந்த வேப்பமரத்தடியில் மாநாடு கூடியிருந்தது.

அவர், காந்தியைச் சுட்டது சரி என்றார். ஜனநாயகம் வேஸ்ட், மிலிட்டரி ஆட்சிதான் பெஸ்ட் என்றார். தெருக்கோடியில் ஒரு நாய் குரைத்தால் கூட அதற்குச் சேர்மேன்தான் காரணம் என்றார். வேடிக்கை என்னவென்றால், சுற்றியிருந்தவர்கள் ஆமாம் சாமி போட்டுச் சிரித்தார்கள். அந்த மனிதரை அவர்கள் அவ்வளவு அழகாக டீகோடு செய்து வைத்திருக்கிறார்கள். அங்கே போனதற்கு நானும் சும்மா இருக்கக் கூடாது, ஒரு பின்னணி இசையை ப்ளே பண்ணி விட்டு வந்தேன். அது ஜால்ரா.

எனக்கென்னவோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதுதான் நிம்மதி என்று தோன்றியது. எதுவும் தானாக மாறும். ஈகோவை மூட்டை கட்டி வைப்பது உடம்புக்கு நல்லது.

இதற்கிடையே ஓனர் அவராகவே லைனில் வந்தார். போனை வைத்து விட்டு வந்திருக்க வேண்டும். தப்பு செய்து விட்டேன். வேலை முடிந்ததா என்றார்.

மேனேஜர் கடலைப் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்று சொல்ல முடியாது. மேனேஜரிடம் கலந்து பேசிட்டுச் சொல்றேன் என்றேன். இது உலக மகா தப்பித்தல் சூத்திரம். எனக்குத் தெரியாது, புரியலை என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் தரும் நிம்மதி தனி. அதை இப்போதைக்கு ஓனரிடம் சொல்ல முடியாது. சீட்டைக் கிழித்து விடுவார். அதனால் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் டிரை பண்ணிப் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

எனக்கு ஒரு கருத்தைச் சொன்னால், அதில் ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது என் கழுத்தை நெரிக்கிறது. சுற்றியிருப்பவர்கள் செம கேஷுவலாக எதையாவது உளறிவிட்டுப் போவார்கள். ஆனால், என்னை மட்டும் பொறுப்பானவன் என்ற கூண்டுக்குள் ஏற்றி வேடிக்கை பார்ப்பார்கள். அதனால் இந்த முறை பட்டும் படாமல் ஒரு பதில் ஓனருக்கு.

உண்மையில், நான் எதையாவது சொல்லி அடுத்தவர் மனதைக் காயப்படுத்துவதை விட, அவர் என்ன சொல்கிறார் என்று வெயிட் பண்ணிக் கேட்பது புத்திசாலித்தனம். அவருக்கு ஓர் ஆத்மதிருப்தி, எனக்கு ஒரு டென்ஷன் ஃப்ரீ லைஃப்.

உலகத்தில் இதுவரை சொல்லப்பட்ட அட்வைஸ்களே போதும், மக்கள் திருந்துவதற்கு. ஆனால் யாரும் திருந்தமாட்டார்கள்.

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஓர் ஆதார சுருதி உண்டு. அவன் மனசு அந்த ஃப்ரீக்வென்சியில்தான் வேலை செய்யும். கருத்துச் சொல்லியோ, கம்பு எடுத்தோ அதை மாற்றிவிட முடியாது. அந்தச் சுருதி எங்கே இழுக்கிறதோ, அங்கேதான் அவன் போவான்.

அந்த ஆதார சுருதிக்கு எதிராக நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் போதும், மனுஷன் எகிறி குதிப்பான். எரிச்சல் படுவான். உங்களை அன்-ஃபாலோ செய்வான்.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில், மேனேஜர் லைனுக்கு வந்தார்.

சார் ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டு இருந்தேன். ஓனர் லைனுக்கு வந்துட்டார் என்றேன்.

நான் ரிசைன் பண்றதா முடிவு பண்ணிட்டேன் விகடபாரதி என்றார்.

ஹா ஹா நல்ல முடிவு என்று இப்போது சிரிக்க முடியாது. ஒய் ஸார் என்ற வருத்தப்படுவது போலக் காட்டிக் கொண்டேன்.

அது வேண்டாம். வாட் அபௌட் யூ? என்றார்.

நீங்கள் போய் விட்டால், நான் அடுத்த மேனேஜர் என்றா சொல்ல முடியும்.

நீங்கப் போய் ஒரு நல்ல ப்ளேஸ்ல ஜாய்ன் பண்ணுங்க. நான் வந்து ஒட்டிக்கிறேன் என்றேன்.

எனக்குத் தெரியும் பை விகடா என்றார்.

சட்டென்று மாடிப்படிகளில் தாவிக் குதித்து ஏறி, குரங்கு சேட்டைகள் பண்ணியபடி அபார்ட்மென்டுக்குள் ஓடினேன். அதுவரை பக் ஆகியிருந்த அத்தனையும் விடுபடுவது போலிருந்தது. கடகடவென்று சாப்ட்வேரை டைப்பிக்க ஆரம்பித்தேன்.

டெபனெட்டாக நெக்ஸ்ட் மேனேஜர், அது நான்தான்.

*****

13 Feb 2026

மீண்டும் மீண்டும் மரணம்! என்ன செய்யப் போகிறார் விஜய்?

மீண்டும் மீண்டும் மரணம்! என்ன செய்யப் போகிறார் விஜய்?

சேலம் சீலநாயக்கன்பட்டி. வெயில் மண்டையைப் பிளக்கிறது. ஒரு பக்கம் தளபதி கோஷம், இன்னொரு பக்கம் ட்ரோன்களின் ரீங்காரம். தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருவர் செத்துப்போயிருக்கிறார். கரூர் சம்பவத்தின் ஈரம் காய்வதற்கு முன்பாக சேலத்தில் அடுத்தச் சம்பவம்.

விஜய்யின் தவெக கூட்டங்களுக்குக் காவல்துறை 51 நிபந்தனைகள் போட்டிருந்தது. அதில் 52 ஆவது நிபந்தனையாக யாரும் சாகக்கூடாது என்று போட்டிருக்கலாம். ஆனால், மரணம் எந்த பெர்மிஷனும் கேட்பதில்லை.

இன்று ஒரே நாளில் ஒரு பக்கம் மகளிர் உரிமைத் தொகை கணக்கில் ஏறுகிறது. இன்னொரு பக்கம் ஓர் ஏழைத் தொண்டனின் உயிர் கணக்கில் வராமல் காற்றில் கரைகிறது.

விஜய் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், அந்த அரசியலுக்காகக் கூடும் கூட்டத்தில் ஓர் உயிர் போவது, அந்தத் தலைவனுக்குத் தான் தர்மசங்கடம்.

இந்த மரணத்தை மாரடைப்பு என்கிறார்கள். ஆனால் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், அரசியலில் மாரடைப்பு தொண்டனுக்குத்தான், தலைவருக்கு இல்லை.

இப்படியே போனால் டிவிகே என்பது தமிழக வெற்றிக் கழகமா? தமிழக விபத்துக் கழகமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்து விடும்.

மாஸில் மரண மாஸ் என்பது போல, கூட்டத்தில் இது மரணக் கூட்டமோ என்னவோ!

எப்போதுதான் நிற்கப் போகிறது இது போன்ற உயிர் எடுக்கும் அரசியல் கூட்டங்கள்?

அரசியலுக்கு வருவோர் முதலில் தங்கள் பதவி நாட்டங்களைக் குறைத்துக் கொண்டு, அரசியல் கூட்டங்களைக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

*****