2 Jul 2026

இருளின் தத்துவமும், வெளிச்சத்தின் விலையும்!

இருளின் தத்துவமும், வெளிச்சத்தின் விலையும்!

இருட்டு என்பது வெளிச்சத்தின் இல்லாமை என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் தமிழ்நாட்டுக்கோ, இருட்டு என்பது கோடைக்காலத்தின் வருகைக்கான உத்தரவாதம்.

சுவிட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சுவிட்ச் போட்டவுடன், 'இன்று மின்சாரம் வருமா வராதா?' என்று யோசிக்க வைப்பதுதான் நம் ஊர் தத்துவம்.

தமிழகத்தில் கோடைக்காலம் வந்துவிட்டாலே மின்சாரம் போய்விடுகிறது என்பது செய்தி அல்ல; அது ஒரு பிரபஞ்ச விதி.

வெயில் காலத்தில் மனிதர்களுக்குக் குளிர்ச்சி தேவைப்படுகிறது. குளிர்ச்சிக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. பிரபஞ்சமோ சமநிலையை விரும்புகிறது. எனவே, நீங்கள் ஏசியை ஆன் செய்யும்போது, மின்வாரியம் மெதுவாக மெயின் சுவிட்சைக் கீழிறக்கி 'ஓம் சாந்தி' என்கிறது.

விஞ்ஞானம் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால், மின்சார வாரியமோ மனிதனை விசிறியோடு வீட்டு வாசலுக்கு அனுப்புகிறது. இரண்டுமே ஒரு வகையான பயணம்தான்!

விளைவு?

மக்கள் சாலையில் இறங்கி மறியல் செய்கிறார்கள். இருட்டில் அமர்ந்து பேசுவதை விட, கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று கத்துவது அவர்களுக்கு ஆறுதல் தருகிறது போலும். அரசியல் மாறினாலும் அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் மாறுவதில்லையே, அப்புறம் ஏன் இந்த அதிர்ச்சி? என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதா?

உலகில் குறிப்பாகத் தமிழகத்தில் புள்ளிவிவரங்கள் எப்போதும் சுவாரசியமானவை. அவை எதையும் தீர்ப்பதில்லை, ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள மொத்த மின் இணைப்புகள்: 3,52,80,929 அதாவது, வீடு, கொட்டகை, குடோன், விசைத்தறி எல்லாம் சேர்த்து.

தமிழகத்தின் கோடைக்காலத் தேவை 21,000 மெகாவாட்.

நம்மிடம் இருப்பதாகக் காகிதத்தில் உள்ள அளவு 47,238 மெகாவாட். தேவையை விட 26,000 மெகா வாட் அதிகம்தான். ஆனால், அது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் ஹாலோ மேனைத் தேடுவதைப் போல கஷ்டம் பிடித்த வேலை.

சரி, மின்வெட்டு என்றால் அதற்கு ஏதேனும் ஒரே ஒரு காரணமாவது இருக்க வேண்டுமே.

ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக விளக்கங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவற்றுள் சில,

வெயில் தாங்காமல் மின்மாற்றிகள் தற்கொலை செய்துகொள்வது, நிலத்தடி கேபிள்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது, அதையும் தாண்டி, முந்தைய ஆட்சியின் பாவங்கள், மரக்கிளைகள் மின்கம்பிகளை முத்தமிடுவது, மற்றும் சில மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து பியூஸ் கேரியர்களைத் திருடிச் செல்வது.

இந்தக் கடைசி காரணம்தான் கொஞ்சம் இடிக்கிறது. பியூஸ் கேரியரைத் திருடிச் சென்று அவர்கள் என்ன செய்வார்கள்? அதை வைத்து ஏதேனும் புதிய கலைப்படைப்பு உருவாக்குகிறார்களா என்பது பிரபஞ்சத்திற்கே வெளிச்சம்

நாம் இன்னும் இருண்ட காலத்திற்குள் சென்று விடவில்லை என்பதே தத்துவார்த்தமாக நமக்கு உள்ள ஒரே ஆறுதல்.

இப்போதிருக்கும் நிலையில் நாம் என்னதான் செய்வது?

மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இருள் என்பது ஒளியின்மை மட்டுமல்ல, அது சுயசரிதை எழுதிக்கொள்ள ஒரு நல்ல சூழல். நமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்! என்ன செய்யப் போகிறோம் நாம் என்பதற்கான பதில் நம்மிடமே இருக்கிறது.

*****

சாக்லேட் காபி போட்டு சாமானியனைச் சாத்தியெடுத்தல்

சீரழித்த சினிமா – 30

லியோ

சாக்லேட் காபி போட்டு சாமானியனைச் சாத்தியெடுத்தல்

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் ஆயுத பூஜை, தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த சிந்திக்கும் திறனுக்கும் ஆயுத பூஜை போட்டு, அதை மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே தீயிலிட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய நல்ல குடும்பத் தலைவன் பிம்பத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு, "ஒருவன் இமாச்சலப் பிரதேசத்தில் அமைதியாகக் காபி போட்டுக்கொண்டு, பேக்கரி நடத்திக் கொண்டிருந்தாலும், அவனது கடந்த காலம் ரத்தக் களறியான லியோ தாஸாகத்தான் இருக்கும்; அவன் ஒரு தொழிற்சாலையையே வெட்டிச் சாய்க்கலாம்" என்ற ஒரு புதுவிதமான உளவியல் அத்துமீறல் பார்முலாவைத் தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, லியோ திரைப்படத்திற்கு உண்டு.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது, ஆனால் மனிதன் இன்னும் இருட்டறையில் அமர்ந்து பிறர் வெட்டிக்கொள்வதைப் பார்த்துத் தன் இருப்பை உறுதி செய்துகொள்ளும் விசித்திர விலங்காகவே இருக்கிறான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்தது லியோ.

நாயகனின் அந்த நரைமுடி பிம்பமும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும், ஹைனா சண்டைக் காட்சியின் கிராபிக்ஸ் மாயையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி காட்டுமிராண்டி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்ப விழுமியம் என்ன தெரியுமா?

நீங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு பெரிய ரவுடியாக, கொலைகாரனாக, கடத்தல்காரனாக இருந்தாலும் கவலை இல்லை. நிகழ்காலத்தில் தாடியை வளர்த்துக்கொண்டு, சாந்தமாக ஒரு குடும்பத்தை நடத்தினால் போதும். யாராவது உங்களைக் கடந்த காலத்தைப் பற்றிக் கேள்வி கேட்டால், கூசாமல் பொய் சொல்லுங்கள்; மனைவியையும் குழந்தைகளையும் ஏமாற்றுங்கள்; ஆள்மாறாட்டம் செய்யுங்கள்.

படத்தில் வரும் நாயகன், தன் அடையாளத்தை மறைப்பதற்காகச் செய்யும் அத்தனை காரியங்களும் அப்பட்டமான சட்டவிரோதச் செயல்கள். "தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒருவன் தன் ஒட்டுமொத்தக் கடந்த காலத்தையே பொய்களால் கட்டமைக்கலாம்" என்ற ஆபத்தான, நேர்மையற்ற சிந்தனையை இத்திரைப்படம் குடும்பப் பாசம் என்ற போலி லேபிளோடு நியாயப்படுத்தியது.

படத்தின் ஆகச்சிறந்த முரண்பாடு, தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் நாயகன் செய்யும் வன்முறைகள்தான். "என் குடும்பத்தைத் தொட நினைத்தால் ஒட்டுமொத்த ஊரையும் கொளுத்துவேன்" என்ற பாசிச மனோபாவத்திற்கு ஹீரோயிசம் என்று முலாம்பூசி விற்றதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையிலும் "என் சுயநலத்திற்காக நான் எந்தச் சட்டத்தையும் மீறுவேன்" என்று அலையும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறைக்கு அடிமையான பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது இன்னும் ஆழமாக விதைத்தது.

படத்தில் வரும் வில்லன்கள் செய்யும் அநியாயங்களுக்குக் காட்டப்படும் பின்னணி நரபலி மற்றும் சாத்தானியக் கோட்பாடுகள். இருபத்தோராம் நூற்றாண்டின் டிஜிட்டல் யுகத்தில், இன்னும் நரபலி கொடுத்தால் தொழில் வளரும் என்ற அறிவியலற்ற மூடநம்பிக்கையைத் திரைக்கதைக்கான முக்கியக் கருவியாக மாற்றியது டெராபைட் பிற்போக்குத்தனம்!

அறிவியலையும், பகுத்தறிவையும் நோக்கி நகர வேண்டிய ஒரு சமூகத்தில், கமர்சியல் சினிமா தன் பிளாஷ்பேக் விறுவிறுப்பிற்காக இதுபோன்ற வக்கிரமான, பின்தங்கிய மூடநம்பிக்கைகளுக்குப் பிரம்மாண்ட வடிவம் கொடுத்துப் பொதுப்புத்தியைச் சீரழித்தது.

இத்திரைப்படத்தில் நாயகிக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. தன் கணவன் லியோவா இல்லையா என்று அவளுக்குத் தெரியாது; அவளது ஒட்டுமொத்தக் கதையும் கணவனைச் சந்தேகப்படுவதிலும், அவனது பொய்களை நம்பி ஏமாறுவதிலும், அழுகையிலுமே முடிந்துவிடுகிறது.

ஒரு பெண்ணுக்குத் தன் கணவனின் கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமையோ, அல்லது அவனது வன்முறைகளைக் கேள்வி கேட்கும் ஆளுமையோ கிடையாது. அவள் எப்போதும் கணவனின் அதிகாரப் பாதுகாப்பிற்குள் மட்டுமே முடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு பலவீனமானப் பொருள் என்ற நிலப்பிரபுத்துவச் சிந்தனையை இத்திரைப்படம் மிக நேர்த்தியாகத் தக்கவைத்தது.

லியோ பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிகளைக் குவித்து, அதன் நாயகன் மற்றும் இயக்குநரின் பிம்பத்தை அடுத்த கட்டத்திற்குத் தூக்கிச் சென்றிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

லியோ ஏற்படுத்திய சீரழிவு என்பது, வன்முறையை ஒரு லைப்ஸ்டைல் ஆக மாற்றியதுதான். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சராசரி மனிதன், தன் மனைவியிடம் காபி கேட்கும் போது கூட, பின்னணியில் படாஸ் மியூசிக் ஓடுவதாக மனப்பிராந்தி அடைந்தான். உண்மை என்னவென்றால், நாம் யாரும் லியோ தாஸும் அல்ல, பார்த்திபனும் அல்ல. நாம் அனைவரும் வெறும் டிக்கெட் வாங்கிய ஏமாளிகள் என்பதைத் தமிழனுக்குப் புரிய வைப்பது சிரமமாகப் போனது.

திரையரங்கிற்குள் நுழையும்போது சாதாரண இளைஞனாகச் செல்பவன், வெளியே வரும்போது ஒரு மினி சைக்கோவாக உருவெடுத்திருப்பதுதான் இன்றைய டார்க் சினிமாக்களின் சாதனை. லியோவில் காட்டப்பட்ட அதீத வன்முறை மனித மூளையின் அமிக்டலா பகுதியை வேறிநாய் கணக்காக இயங்கச் செய்தது என்றால் அதில் மிகையேதுமில்லை.

ஒரு காலத்தில் திரையில் இரத்தம் சிந்தினால் கண்கள் தானாக மூடிக்கொள்ளும். இன்று, ஒருவன் மண்டை ஓட்டைச் சுத்தியலால் உடைப்பதைப் பாப்கார்ன் மென்றுகொண்டே வாவ் என்று ரசிக்கும்படி நம் நரம்பு மண்டலம் மரத்துப்போக லியோவும் ஒரு காரணமானது.

லியோ படம் முழுக்கத் துப்பாக்கிகளும், போதைப்பொருள் கடத்தலும், தசரா திருவிழா போலக் கொண்டாடப்பட்டன. "கெட்ட வார்த்தை பேசினால் மாஸ், ரத்தம் சிதறினால் க்ளாஸ்" என்கிற புதிய சமூகப் பொதுப்புத்தியை லியோ உருவாக்கியது.

திரையரங்கு இருக்கைகளை உடைப்பது, சமூக வலைத்தளங்களில் வசைபாடுவது, நான் ரெடி என்று போதை கலாச்சாரப் பாடலுக்குப் பள்ளிச் சீருடையுடன் ரீல்ஸ் செய்வது எனச் சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பைச் சிதைத்ததில் லியோவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

டெஸ்கார்ட்ஸ் "நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்" என்பார். லியோ அதை "நான் வெட்டுகிறேன், ரத்தம் சிதறுகிறது, எனவே என் இருப்பு உறுதி செய்யப்படுகிறது" என்று இயங்கியது படம் பார்ப்பவர்களை வன்முறை மிருகங்களாக மனதளவில் மாற்றியது.

சட்டம், ஒழுங்கு, அறம் எல்லாமே ஒரு தனிமனிதனின் மாஸ் இமேஜுக்கு முன்னால் மண்டியிட வேண்டும் என்றும், "விதிகள் சாமானியர்களுக்கு மட்டுமே, லியோக்களுக்கு அல்ல" என்றும் சமூகக் கட்டமைப்பை மெல்ல அரிக்கும் கருத்துக் கரையான்களை உற்பத்தி செய்து புற்றுநோயைப் போல பரவ விட்டது லியோ.

அமைதியாக வாழ நினைக்கும் ஒருவன், தன் குடும்பத்தைக் காப்பாற்ற நூறு பேரைக் கொல்லலாம் என்கிற விஜிலாண்டி மனப்பான்மையை வளர்த்ததோடு, சட்டம், ஒழுங்கு, போலீஸ் எல்லாமே வேடிக்கை பார்க்கும் டம்மிகள் என்கிற எண்ணத்தை நியாயப்படுத்தியதுதான் லியோ படத்தின் சாதனை.

சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி என்பார்கள். லியோ போன்ற படங்கள் காட்டும் கண்ணாடி கொஞ்சம் உடைந்து, கூர்மையான முனைகளுடன் பார்ப்பவர்களைப் பதம் பார்க்கும் கலவரக் கண்ணாடி.

திரையில் பாய்ந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளின் விஞ்ஞானம் வளர வளர மனிதனின் நிதானம் குறைகிறது என்பதற்கு இந்தப் படத்திற்கு வரும் சண்டைக் கூட்டமே சரியான சாட்சி.

மேலும், நரகத்தின் கதவுகள் திரையரங்குகளின் வடிவில் திறக்கப்பட்டிருக்கின்றன. அங்கே விற்கப்படும் பாப்கார்னின் விலையை விட, மனித உயிர்களின் விலை குறைவாக இருக்கிறது என்பதற்கும் இப்படமே அக்மார்க் சாட்சியம்.

ஆல்பர் காம்யூவின் தி ஸ்ட்ரேஞ்சர் நாவலின் நாயகன், வெயில் அதிகமாக இருந்தது என்பதற்காகக் கொலை செய்வான். லியோவில், "என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், அல்லது என் கடந்த காலத்தை மறைக்க வேண்டும்" என்று கொலைக்கு மேல் கொலைகள் செய்து வன்முறைக்குக் கற்பித்த நியாயம் என்பது அநியாயம் என்று சொல்வதை விட அபத்தமானது. அந்த அபத்தத்தைத்தான் தமிழகமே கூடிக் கொண்டாடி திரையரங்க இருக்கைகளைப் பீஸ் பீஸாக்கிப் பஞ்சுப் பஞ்சாகப் பறக்க விட்டுக் கொண்டாடியது.

மனிதன் தன் அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்தும், அர்த்தமற்ற தன்மையிலிருந்தும் தப்பிக்க ஒரு போலி உலகத்தைத் தேடுகிறான். தியேட்டரின் இருட்டில், ஸ்கிரீனில் ஒரு நாயகன் கையில் கத்தியோடு நூறு பேரைக் கொல்லும்போது, முன்னால் அமர்ந்திருக்கும் இளைஞன் தன் சொந்தத் தோல்விகளை மறந்து, அந்த வன்முறையோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். இது ஒரு வகையான மனநல தற்கொலை. தன் சுயத்தை இழந்து, திரையின் வன்முறையில் தன் இருப்பைத் தேடும் அந்த அவலத்தைப் பலமாகச் சந்தைப்படுத்தித் தன் கல்லாவை நிரப்பிக் கொண்டது லியோ.

குடும்பத்தைக் காப்பது என்ற பெயரில் வன்முறையைக் கையாள்வதைக் கெத்து என்றும், தன் அடையாளத்தை மறைக்கப் பொய் சொல்வதைப் புத்திசாலித்தனம் என்றும், சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காமல் வாழ்வதே படாஸ் வாழ்க்கை என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற போதை சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

1 Jul 2026

தலை துண்டிப்பு ஒரு கலை – ஹுகும் தத்துவத்தின் தொடக்கம்

சீரழித்த சினிமா – 29

ஜெயிலர்

தலை துண்டிப்பு ஒரு கலை – ஹுகும் தத்துவத்தின் தொடக்கம்

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச அமைதிக்கும், நிம்மதிக்கும், சமூக பாதுகாப்பு உணர்வுக்கும் ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்து பொக்ரான் அணுகுண்டைப் போட்டுத் தள்ளியது ஜெயிலர் திரைப்படம்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "ஓய்வுபெற்ற வயதான தாத்தாக்கள் பேரன் பேத்திகளோடு பூங்காவிற்குப் போய் அமைதியாக வாழ வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "முன்னாள் ஜெயில் அதிகாரி நினைத்தால், ஓய்வு காலத்தில் தன் வீட்டின் சமையலறையிலேயே வில்லனின் ஆட்களைத் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைத்தெடுத்து கரம் மசாலா போட்டு பிரியாணி செய்யலாம்" என்ற ஒரு புதுவிதமான முதிய வயது வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, ஜெயிலர் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அமைதியான, அதேசமயம் ஆபத்தான பிம்பமும், காது ஜவ்வு கிழியும் ஹுகும் என்ற பின்னணி இசையும், காவாலா நடனப் போதையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கசாப்புக் கடை நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் காவல்துறையிலோ அல்லது சிறைத்துறையிலோ உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றால் போதும்; உங்களுக்கு நாட்டின் சட்டதிட்டங்களோ, நீதிமன்றங்களோ, தற்போதைய போலீஸோ தேவையில்லை. உங்கள் மகனுக்குப் பிரச்சினை என்றால், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் உங்கள் பழைய கிரிமினல் நண்பர்களைப் போனில் கூப்பிட்டு, சொந்தமாக ஒரு துணை ராணுவப் படையையே உருவாக்கி, ஊரிலிருக்கும் அத்தனை பேரையும் போட்டுத் தள்ளலாம் அல்லது கொல்லலாம்.

படத்தில் வரும் நாயகன், சட்டத்தைக் காக்க வேண்டிய சிறைத்துறையில் இருந்தவர். ஆனால், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் வேகம் இருக்கிறதே, அது எந்த ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கும் குறைவானது அல்ல. ஜெயிலர் என்பவர் சிறைக் காவலர், படத்தில் அவர் செய்யும் கொலைகளைப் பார்க்கும் போது அவரை அப்படிச் சொல்ல முடியாது, எமதர்மனின் ஆதரவாளர் என்றுதான் சொல்ல முடியும்.

ஒரு தந்தை தன் மகனைக் காப்பாற்றவோ அல்லது பழிவாங்கவோ எந்த எல்லையற்ற வன்முறையையும் கையாளலாம்; அதற்குப் பழைய குற்றவாளிகளின் துணையைப் பெறலாம், என்ற வன்முறையான சிந்தனையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

இப்படத்தின் ஆகச்சிறந்த கலாச்சாரப் பங்களிப்பு என்னவென்றால், வன்முறையையும் குரூரத்தையும் நகைச்சுவையோடு கலந்து கமர்ஷியலாக விற்றதுதான்.

வில்லனின் ஆட்கள், நாயகனின் வீட்டின் சமையலறைக்குள் புகுந்து மிரட்டும்போது, அவர்களை மிகச் சாதாரணமாகத் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைத்து கைம்மா பரோட்டா போடுவது போல அவர்களை அழிய வைப்பார் நாயகன். மேலும், தன்னை இழிவுபடுத்தும் வில்லனின் ஆளைச் சர்வ சாதாரணமாகத் தலையைத் துண்டித்து எவ்வித அதிர்ச்சியுமில்லாமல் நிற்பார் நாயகன். இந்த உறைபனியூட்டும் கொடூரத்தைக் காட்டிவிட்டு, பின்னணியில் ஒரு நகைச்சுவை நடிகரை வைத்து காமெடி செய்வார் இயக்குனர்.

கொலையையும், பிணங்களை மறைப்பதையும் ஏதோ வீட்டில் சமையல் செய்வது போன்ற ஓர் எளிய தினசரி காரியமாக மாற்றிக் காட்சிப்படுத்தி, பார்ப்பவனுக்கு வன்முறையின் மீதான பயத்தையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் வன்முறையைப் பார்த்து அருவருப்படைய வேண்டிய சமூகம், துண்டு துண்டாக வெட்டப்படும் காட்சிகளைக் கண்டு திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்கும் ஒரு மிருகத்தனமான பொதுப்புத்தியை வளர்த்துக்கொண்டது.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், தன் மகன் ஊழல்வாதியாக, கடத்தல்காரனாக மாறிவிட்டான் என்று தெரிந்ததும், நாயகன் தன் சொந்த மகனையே சுட்டுக் கொல்ல சைகை காட்டுவார். இதை ஏதோ நேர்மையின் உச்சகட்டத் தியாகம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது நேர்மை அல்ல; அது ஒரு முதிய ஆணின் ஈகோ. "என் வளர்ப்பு, என் பாரம்பரியம், என் நேர்மையான பிம்பத்திற்கு என் மகனே களங்கம் விளைவிப்பதா?" என்ற சுயநலப் பெருமிதத்திற்காகத் தன் மகனைத் தீர்த்துக் கட்டுவதைக் கௌரவமாகக் காட்டியது இத்திரைப்படம்.

குடும்ப உறவுகளுக்குள் பகுத்தறிவோ, சட்டபூர்வமான திருத்தங்களோ இல்லாமல், "என் கௌரவத்திற்காக நான் எதையும் செய்வேன்" என்ற நிலப்பிரபுத்துவக் கௌரவக் கொலை அதாவது, ஆணவக்கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு இது.

வழக்கமான கமர்ஷியல் தமிழ்ப் படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. படத்தின் முக்கியக் கதையோடு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், படத்தின் வியாபாரத்திற்காக காவாலா என்ற பாடலுக்கு ஒரு முன்னணி நாயகியைக் கவர்ச்சிப் பதுமையாக ஆட வைத்தும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த செய்திகளும் தெரிய வேண்டாம் என அவர்களை ஜாடிக்குள் அடைபட்ட ஊறுகாய்களாக்கியும் பெண்களின் ஆளுமையை அடியோடு மழுங்கடித்தது இத்திரைப்படம்.

ஜெயிலர் பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிகளைக் குவித்து, சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தை மீண்டும் இமயமலையில் ஏற்றி, அதன் இயக்குநரை ஸ்டார்களுக்கான இயக்குநர் எனப் பிராண்டிங் பண்ணியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் சத்தம் போடாமல், பூனைக்கு உணவளித்துக் கொண்டு, பேரக் குழந்தைக்குக் குடை பிடித்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பது பழைய விதி. ஆனால், இந்தத் படம் அதை உடைத்தது.

அதன் விளைவாக வீட்டில் இருக்கும் தாத்தாக்களைப் பார்க்கும்போது பேரன்மார்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை வரத் தொடங்கியது. "எங்க தாத்தாவும் முன்னாள் சி.பி.ஐயோ, ஜெயிலரோ ஆக இருந்திருப்பாரோ? அலமாரிக்குள் ஏதேனும் ரகசியத் துப்பாக்கி இருக்குமோ?" என்கிற தேடல் சிறுவர்களிடம் அதிகரித்தது. சுருக்கமாகச் சொன்னால், ரிட்டயர்ட் ஆனவர்களுக்கான சமூக அந்தஸ்தை இந்தப் படம் ஒட்டுமொத்தமாக வயலன்டாக ரீபிராண்ட் செய்தது.

மேலும், ஜெயிலர் திரைப்படத்திற்குப் பின் எந்த தாத்தாவும் பேரனுக்குக் கதை சொல்வதில்லை; மாறாக, "தம்பி, தாத்தா ஒரு காலத்துல திஹார் ஜெயில்ல..." என்று பிளாஷ்பேக் மூட்டையைக் அவிழ்க்க ஆரம்பித்தார்கள். அத்துடன் வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியைப் பார்க்கும்போதெல்லாம், தங்களுக்குள் ஒரு காட்டுக்கட்டாரி ஒளிந்திருப்பதாக முதியவர்கள் நம்பத் தொடங்கினர்.

ஒரு காலத்தில் வில்லன் அடித்தால் ஹீரோ அழுவான். பிறகு ஹீரோ அடித்தால் வில்லன் பறப்பான். ஜெயிலர் படத்தில் காட்டியிருப்பது வேறு ரகம். இரத்தம் சிந்துவது என்பது ஒரு கோரமான விஷயம் என்பதிலிருந்து தலையை எந்தவித அதிர்ச்சியுமில்லாமல் துண்டிப்பது வரை, அது அதிரடி பிஜிஎம்மோடு வரும்போது ஒரு கொண்டாட்டம் என்ற நிலைக்கு தமிழனின் மூளை பக்குவப்படுத்தப்பட்டது இத்திரைப்படம் தந்தச் சாபக்கேடே.

உளவியல் ரீதியாக, ஒரு மனிதனின் தலை துண்டிக்கப்பட்டு விழும்போது தியேட்டரே எழுந்து நின்று கியூட் ஆக ஹுகும் என்று கத்தும் அளவுக்கு சமூகத்தின் வன்முறை சார்ந்த சகிப்புத்தன்மை மோசமானது ஜெயிலரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அன்ட் பிரேக். இது ஓர் ஆபத்தான உளவியல் மாற்றம். வன்முறை அங்கே கொடூரமாகத் தெரியவில்லை; அது ஒரு ஸ்டைல் ஆக, மாஸ் ஆக மாற்றப்பட்டிருந்தது. ரத்தமும் சதையும் திரையில் தெறிக்கும்போது, அது நம் நரம்பு மண்டலத்தை வதக்குவதற்குப் பதிலாக, ஒருவிதக் களிப்பை ஏற்படுத்தியது. இது சமூகத்தின் மழுங்கிப்போன உணர்வெல்லைக்கு ஒரு சான்று.

சமூகத்தில் அமைதியாக, அடக்கமாக இருக்கும் மனிதர்களைக் கண்டால். "அவன் ரொம்ப அமைதியா இருக்கான்டா... கண்டிப்பா பின்னாடி நாலு மாநிலத்துல அவனுக்கு நெட்வொர்க் இருக்கும்!" என்ற சந்தேகப் புத்தி சமூகத்தில் பரவத் தொடங்கியது ஜெயிலர் ஏற்படுத்திய ஸ்பாய்லர்.

"வயதானாலும் என் ஸ்டைலும் அழகும் இன்னும் போகவில்லை" என்று இப்படத்தின் நாயகர் நிரூபித்தாரோ இல்லையோ, "வயதானாலும் நம் சமூகத்தின் வன்முறை வெறியும், மாஸ் ஹீரோ வழிபாட்டு மனநிலையும் இன்னும் போகவே இல்லை" என்பதை ஜெயிலர் நிரூபித்தது.

ஜெயிலர் தமிழ் சமூகத்திற்குப் பெரிய தத்துவப் பாடம் எதையும் நடத்தவில்லை. மாறாக, தமிழனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஆதிக்க மனப்பான்மை வயதான பின்னும் வெல்லலாம் என்ற நம்பிக்கை, மற்றும் வன்முறையை ரசிக்கும் விசித்திர குணம் ஆகியவற்றைத் தூண்டி விட்டது.

சிறைச்சாலை அதிகாரிகள் என்பவர்கள் கிரிமினல்களோடு கைகுலுக்கும் தாதாக்கள் என்றும், சட்டத்தை மீறிச் செய்யப்படும் படுகொலைகள் டைகரின் கட்டளை என்றும், குரூரமான வன்முறையை ரசிப்பதே ஆகச்சிறந்த திரையரங்கு அனுபவம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஆசிட் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

30 Jun 2026

சொம்பு ராஜ்ஜியமும் பகுத்தறிவின் பூஜ்ஜியமும்

சீரழித்த சினிமா – 28

நாட்டாமை

சொம்பு ராஜ்ஜியமும் பகுத்தறிவின் பூஜ்ஜியமும்

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டின் நவம்பர் திங்களில், தமிழ்ப் பொதுப்புத்தியின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நவீன ஜனநாயகச் சிந்தனைகளுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நீதிமன்றக் கட்டமைப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாகப் பஞ்சர் போட்டு வெந்தப் புண்ணில் டிஞ்சர் ஊற்றியது நாட்டாமை.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "சட்டத்தின் முன் அனைவரும் சமம், காவல் துறையும் நீதிமன்றமுமே குற்றங்களை விசாரிக்க வேண்டும்" என்ற குறைந்தபட்ச எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு ஊரில் பெரிய நாட்டாமை இருந்தால், அவர் சட்டப் புத்தகங்களைப் படிக்கத் தேவையில்லை; அவர் ஒரு கம்பீரமான பட்டுத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு, தவறு செய்தவன் யாராக இருந்தாலும் என் செம்பைக் கொடு என்று உத்தரவிட்டால் போதும், ஒட்டுமொத்த ஊரே சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்க வேண்டும்" என்ற ஒரு புதுவிதமான நிலப்பிரபுத்துவக் கௌரவ வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, நாட்டாமை திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அந்த பெரிய நாட்டாமை மற்றும் சின்ன நாட்டாமை என்ற இரட்டைப் பாத்திரங்களின் வழியே கட்டியெழுப்பப்பட்ட மீசையை முறுக்கும் போலிப் பாரம்பரிய பிம்பமும், நாயகிகளின் வெறும் குடும்பக் குத்துவிளக்கு மற்றும் பழிவாங்கும் கருவிகளாகச் சுருக்கப்பட்ட வக்கிரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மரத்தடித் தீர்ப்பு மண்ணாங்கட்டி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

உங்களுக்கு ஊரில் செல்வாக்கு இருந்தால் போதும்; உங்களுக்குச் சட்ட ஒழுங்கோ, முறையான விசாரணையோ தேவையில்லை. ஒரு பெண் தன் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்தது என்று புகார் கூறினால், மருத்துவப் பரிசோதனைக்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ போகக் கூடாது. நேராக நாட்டாமையின் வீட்டு வாசலில் வந்து நிற்க வேண்டும். அவர் ஒரு போலியான சாட்சியைப் பார்த்துவிட்டு, "உன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேன்" என்று தன்னிச்சையாகச் சொல்லும் தீர்ப்பைத்தான் தெய்வீக நீதி என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

"நாட்டாமை தீர்ப்ப மாத்து..." என்று ஒரு ஊரே கதறினாலும், ஒருமுறை சொன்ன தீர்ப்பை மாற்ற மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதையே பரம்பரை கௌரவம் என்று சித்தரித்தது இத்திரைப்படம்.

தன் தம்பியே தவறு செய்ததாகப் பொய் வழக்குப் போடப்பட்டபோது, உண்மையை ஆராயாமல் அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்கி ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்கு வரவழைப்பதுதான் நேர்மையான நிர்வாகம் என்று காட்டியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த வக்கிரம்.

விளைவு?

இருபத்தியோராம் நூற்றாண்டிலும் முறையான சட்ட அமைப்புகளை மதிக்காமல், தங்களுக்குத் தோன்றும் தனிநபர் கருத்துக்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் டிஜிட்டல் பஞ்சாயத்து கூட்டி அடுத்தவர்களைத் தீர்ப்பெழுதித் தண்டிக்கும் முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நாட்டாமை படத்தில் ஒரு பித்தளைச் செம்பு மற்றும் நாற்காலியை ஒட்டுமொத்த கிராமத்தின் கௌரவக் குறியீடாக மாற்றி விற்றார்கள். இந்த உறைபனியூட்டும் பிற்போக்குத்தனத்தை, மிக வண்ணமயமான பாடல்களாலும், உணர்ச்சிமயமான வசனங்களாலும் மூடி மறைத்து, அவங்க பாரம்பரியத்தைக் காப்பாத்துறாங்க என்று பார்ப்பவனை ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் கமர்ஷியல் தந்திரம்.

முறையான கல்வியையோ அல்லது விழிப்புணர்வையோ பேசாமல், பரம்பரை நாற்காலியையும், பஞ்சாயத்துச் செம்பையும் கெத்து என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

மற்றொரு பக்கம் நகைச்சுவைக் கதாபாத்திரங்களை வைத்துக் கிராமங்களில் நடக்கும் அத்தனை பாலியல் அநாகரிகங்களையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது இத்திரைப்படம். ஒரு பெண்ணை அவமதிப்பதையும், ஒழுக்கக்கேடான விஷயங்களையும், மனிதத் தன்மையற்ற வக்கிரங்களையும், பெண்களைப் போகப் பொருளாக நடத்துவதையும் என்டர்டெய்ன்மென்ட் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்த நாட்டாமை சாம்ராஜ்ஜியம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகியின் கதாபாத்திரம், நாட்டாமையின் பட்டு வேட்டியை மடித்து வைப்பதற்கும், அவருக்குப் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்பதற்கும், கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் செவக்கும் என்று பாட்டு பாடவும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகவே காட்டப்பட்டது. இன்னொரு நாயகியின் கதாபாத்திரம், வில்லன் குடும்பத்தின் பழிவாங்கலுக்கு உள்ளாகி, தன்மானத்தையும் கௌரவத்தையும் நாட்டாமையின் தீர்ப்பின் மூலம் மட்டுமே மீட்டெடுக்க வேண்டிய ஒரு சுயசார்பற்ற பலிகடாவாகச் சுருக்கப்பட்டது.

பெண் என்பவள் தனக்கென ஒரு தனித்துவமான சிந்தனையோ, காவல் துறையை அணுகும் தைரியமோ இல்லாமல், நாட்டாமையின் வீட்டு ஆண்கள் எடுக்கும் முடிவுகளின் நிழலில் மட்டுமே வாழ வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் மகா வெற்றி என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

நாட்டாமை பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனின் சுப்ரீம் ஸ்டார் பிம்பத்திற்கு ஒரு கிராமியப் பிரம்மாண்டத்தைத் தந்து, அதன் இயக்குநரை ஹிட் இயக்குனர் என்ற நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

படத்தில் நாட்டாமை என்பவர் ஒரு மனிதர் அல்ல; அவர் ஒரு நடமாடும் தர்மதேவதை. அவர் தும்மினால் அது நியாயம், அவர் சொம்பைத் தூக்கிக் கொண்டு போனால் அது தர்மம். "நாட்டாமை தீர்ப்ப மாத்து" என்று யாராவது சொன்னால், உடனே வானமே இடிந்து விழுந்துவிடும் என்கிற ரேஞ்சுக்கு ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

நிஜ வாழ்க்கையிலும் தங்களுக்குப் பிடித்தமான ஒரு தலைவரோ, சாதிப் பெரியவரோ, அல்லது குடும்பத்து ஆணோ என்ன செய்தாலும் அது நியாயம்தான் என்கிற ஒரு குருட்டுத்தனமான அடிமை மனோபாவம் தொடர நாட்டாமை வழிவகுத்தது. மொத்தத்தில் சட்டம், நீதிமன்றம், ஆதாரங்கள் எல்லாவற்றையும் விட "பெரியவர் வாக்கு" முக்கியம் என்கிற காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு புனிதத்தன்மை ஊட்டியது நாட்டாமை.

ஒரு நாட்டாமைக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, கையில் ஒரு பித்தளைச் செம்பு இருக்க வேண்டும். அந்தச் செம்பை வைத்துக்கொண்டு அவர் போடும் தீர்ப்புகள் எல்லாமே, சட்டம் ஒழுங்கைத் தவுடுபொடியாக்கும் ரகம். ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தியவனுக்கு, அவளையே கட்டி வைக்கச் சொல்வது, ஆதாரமே இல்லாமல் ஒருவனை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்று அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

இதைத்தான் நாம் இன்றுவரை வாட்ஸ்அப் பஞ்சாயத்துகளிலும், சமூக ஊடகக் கொலைகளிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எவ்வித விசாரணையும் இன்றி, ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பி, அவரைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் காட்டுமிராண்டித்தனமான உத்திக்கு ராக்கெட் லாஞ்சிங் செய்ததே இந்தத் திரைப்படம்தான்.

நிலப்பிரபுத்துவ வலிமையும் சாதிப் பெருமையும் உடைய ஒருவரே நீதிபதி, அவரே போலீஸ், அவரே தண்டனை வழங்குபவர் என்ற பியூடல் மனநிலையை நியாயப்படுத்திய இத்திரைப்படம்தான் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதை விட, ஒரு நல்ல நாட்டாமை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்ற அடிமைத்தனம் மீண்டும் துளிர்விட உதவியது.

நாட்டாமை என்பது, ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய முற்போக்குச் சிந்தனைகளுக்கு நேர் எதிரானது. அது, சாதியப் பெருமையையும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும், ஆண் மைய வாதத்தையும் சென்டிமென்ட் என்கிற சர்க்கரைப் பாகில் முக்கித் தந்த ஒரு கலப்பட பண்டமாகத் தமிழனின் மன ஆரோக்கியத்தைச் சீரழித்தது.

நாட்டாமை என்பது ஒரு பொறுப்பு என்பதைத் தாண்டி, அது ஒரு குறிப்பிட்ட சமூக, பொருளாதார ஆதிக்கத்தின் அடையாளமாக்கி அதைத் இத்திரைப்படம் அசாத்தியமான மாஸ் மசாலாவுடன் க்ளாமரைஸ் செய்ததில், படித்த இளைஞன் கூட தியேட்டரை விட்டு வெளியே வந்த போது, தன் ஊரிலும் இப்படி ஒரு நாட்டாமைத்தனம் வேண்டும் என்று ஏங்கத் தொடங்கினான். இப்படியாக முற்போக்கு சிந்தனைகளை அப்படியே ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற பெருமை இந்தத் திரைக்கதைக்கு உண்டு.

படத்தில் நாட்டாமை தவறுதலாகத் தீர்ப்பு வழங்கிவிட்டோம் என்று தெரிந்ததும், நெஞ்சு வெடித்து இறந்துவிடுவார். இது ஏதோ மாபெரும் தியாகம் போலவும், குற்ற உணர்ச்சியின் உச்சக்கட்டப் புனித வடிவம் போலவும் காட்டப்பட்டது. தவறு செய்துவிட்டால் அதைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதோ, திருத்திக்கொள்வதோ முக்கியமல்ல; உணர்ச்சிவசப்பட்டு உயிரை விடுவதே கௌரவம் என்கிற ஒரு விபரீதமான உளவியலை இது இளைஞர்கள் மத்தியில் விதைத்தது.

கற்பு, பழிவாங்குதல் என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலேயே பெண்களைச் சித்தரித்த இத்திரைப்படம் தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஒரு கமர்ஷியல் மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமூக உளவியல் ரீதியாக அது கற்பித்தது முற்போக்கோ, பகுத்தறிவோ அல்ல. மாறாக., "ஒருவன் பெரிய ஆள் என்றால், அவன் சொல்வதே சட்டம்; அவன் வைப்பதே தீர்ப்பு" என்கிற பாசிச சிந்தனையின் சினிமாட்டிக் வடிவத்தையே வலிமையாகத் தமிழர்களின் மண்டையில் தேவையில்லாத ஆணியாக அடித்தது.

சட்டத்தை மதிக்காமல் பஞ்சாயத்து மரத்தடியில் தீர்ப்பு வழங்குவதுதான் ஊர்ப்பெருமை என்றும், பெண்ணின் பிறவிப் பயனே ஆண்களின் கௌரவத்தைக் காப்பதும், அந்தக் கௌரவத்துக்குப் பலிகடா ஆவதும்தான் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற பஞ்சாயத்துச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

29 Jun 2026

கோழிச் சண்டையும் கூமுட்டை மண்டையும்

சீரழித்த சினிமா – 27

சண்டக்கோழி

கோழிச் சண்டையும் கூமுட்டை மண்டையும்

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டின் டிசம்பர் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வுக்கும், கல்லூரி மாணவர்களின் படிப்பு நெறிமுறைகளுக்கும் திரையரங்க வாசலிலேயே பிரமாண்ட கல்லறைகள் எழுப்பப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "மதுரைக் காரர்கள் என்றால் எப்போதும் அரிவாளும் ரத்தமுமாகத் திரிவார்கள், சென்னைக்காரர்கள் லோக்கல் ரௌடித்தனம் செய்வார்கள்" என்ற தனித்தனி சினிமாட்டிக் விதிகளைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, "சென்னையில் படிக்கும் ஓர் இன்ஜினியரிங் மாணவன், விடுமுறைக்குத் தன் நண்பனின் ஊரான சிதம்பரத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, பேருந்து நிலையத்திலேயே ஒரு டானை  நடுத்தெருவில் வைத்துப் பந்தாடினால் போதும்; அவனது அப்பாவும் ஊரின் பெரிய புள்ளியாக இருந்தால், ஒட்டுமொத்த குண்டர்களுமே அவர்களது காலுக்குக் கீழே விழுந்து கிடக்க வேண்டும்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர அத்துமீறலை  தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, சண்டக்கோழி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் சட்டையைக் கழற்றத் தயாராக இருக்கும் போலிப் பாய்ச்சல் பிம்பமும், நாயகியின் எந்நேரமும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் வாலுத்தனம் மற்றும் லூசுத்தனம் நிரம்பிய பாத்திரமும், நாயகனின் தந்தையின் பிரம்மாண்டமான முரட்டுக் கௌரவப் பிம்பமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கோழிக்கூடு நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த கல்வி நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு பொறியியல் கல்லூரி மாணவராக இருந்தால், உங்களுக்கு செமஸ்டர் தேர்வுகளோ, ப்ராஜெக்ட்டுகளோ முக்கியமல்ல. சொந்த ஊருக்குத் துரத்தி வரும் ரௌடிகளை நடுரோட்டிலும், கரும்பு வயல்களிலும் வைத்து எப்படித் துவம்சம் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற அற்பமான அமைப்புகள் எல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைக்குப் பொருந்தாது. நகரின் ஆகச்சிறந்த ரௌடி தன் ஆட்களுடன் வந்து வழிமறித்தால், போலீஸைக் கூப்பிடக் கூடாது; தானே ஒரு சண்டைக்கோழியாக மாறி, ஒரு மைக் டைசனாகவோ, அல்லது புரூஸ்லீயாகவோ விஸ்வரூபம் எடுத்து சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். அதுதான் ஆணழகனின் ஆகச்சிறந்த அடையாளம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் கல்லூரிகளுக்குச் சென்று உருப்படியாகப் படிக்காமல், "நாங்கெல்லாம் அந்த ஊர்க்காரங்கடா, இறங்குனா கொத்துக்கறிதான்" என்று தேவையில்லாமல் முறுக்கிக் கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

சண்டக்கோழி படத்தில் ஓர் ஊரின் பெரும்புள்ளி நினைத்தால், ஒட்டுமொத்த மாவட்டத்தின் சட்டத்தையே தன் கையில் வைத்திருக்கலாம் என்ற நிலப்பிரபுத்துவக் கொடுமையை மரியாதை என்ற லேபிளோடு விற்றார்கள்.

இந்த உறைபனியூட்டும் தனிநபர் வழிபாட்டு வக்கிரத்தை, உணர்ச்சிமயமான பின்னணி இசையாலும், பளபளக்கும் பட்டு வேட்டிகளாலும் மூடி மறைத்து, அவர் தப்பு செய்ய மாட்டார், தட்டிக் கேப்பார் என்று பார்ப்பவனை ஏமாற்றுவார் இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு பெரும் புள்ளி நினைத்தால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குப் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் விசித்திரமானது. நாயகியின் கதாபாத்திரம், எந்நேரமும் வால்த்தனமாகவும், லூசுத்தனமாகவும் ஊரிலிருக்கும் எல்லோரையும் வம்பு இழுப்பது, ஹீரோவிடம் வம்படியாகக் காதல் வளர்ப்பது, பொது இடங்களில் அநாகரிகமாகப் பேசுவது என ஒரு ஹைபர் ஆக்டிவிச பிம்பத்தின் உச்சமாகக் காட்டப்பட்டார்.

ஒரு பெண்ணின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவளது அதீதப் பேச்சையும், முதிர்ச்சியற்ற சேட்டைகளையும் ரொம்பக் கியூட் என்று காட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம். இதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் அடுத்த பத்து வருடங்களுக்கு ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கும், தனக்கென ஒரு சுய சிந்தனையற்ற போலித் துறுதுறுப்புக் கொண்ட கதாநாயகிகளின் சீரழிவுப் பாத்திரங்கள் அணிவகுக்கத் தொடங்கின.

சண்டக்கோழி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை ஓர் ஆக்சன் ஹீரோ நாற்காலியில் அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு மாஸ் இயக்குனர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் ஓர் அடி அடிக்கிறான். வில்லன் முப்பது அடி தள்ளிப் போய் விழுகிறான். நியூட்டனின் மூன்றாவது விதி அங்கே கதறி அழ ஆரம்பித்தது. தியேட்டரில் இருக்கும் பதினெட்டு வயது இளைஞனின் அட்ரினலின் சுரப்பி, பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டது போலப் பொங்கி வழிய ஆரம்பித்தது.

சண்டக்கோழி போன்ற திரைப்படங்களுக்கு முன்பு வரை மதுரை என்பது மல்லிகைப் பூவுக்கும், மீனாட்சி அம்மனுக்கும், இட்லிக்கும் புகழ்பெற்ற ஓர் அமைதியான ஊர். ஆனால், அதற்குப் பிறகுதான், மதுரையில் பிறக்கும்போதே குழந்தைகளுக்குத் தாய்ப்பாலோடு மூர்க்கத்தனமாகச் சண்டை போடும் கலையும் கற்றுத்தரப்படுகிறது என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

வம்புச் சண்டைக்குப் போகும் ஹீரோவை, "போய் அடிச்சிட்டு வாப்பா" என்று ரிலாக்ஸாக வழி அனுப்பி வைக்கும் ஒரு விசித்திரக் குடும்பக் கலாச்சாரத்தை இந்தச் சமூகம் வியப்போடு வேடிக்கை பார்த்தது. வன்முறையை ஒரு கலை வடிவம் போலக் காட்டுவதுதான் ஆபத்தானது. அந்த ஆபத்தை மாஸாகவும் பேஷாகவும் செய்தது சண்டக்கோழி.

ஒரு மனிதன் தன் செயல்களின் மூலமே தன் இருப்பை வரையறுக்கிறான். சண்டக்கோழி பாணியில் வாழ நினைக்கும் ஒருவனுக்கு, அவன் ஹீரோ என்று நிரூபிக்க ஒரு பயங்கரமான வில்லன் தேவை. ஆனால் அரியர்ஸ், ரூம் வாடகை, ரேஷன் கியூ, டிராபிக் நெருக்கடி போன்ற பயங்கர வில்லன்களிடம் அதெல்லாம் எடுபடாது. அவற்றையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கவும் முடியாது, சவால் விடவும் முடியாது. இதனால், “நான் சண்டைக்கோழியா? அல்லது சும்மா கூண்டில் இருக்கும் கூடைக்கோழியா?” என்ற குழப்பத்தில், கொசுக்கடியோடு போராட முடியாமல் தவிக்கத் தொடங்கினான் தமிழ் இளைஞன்.

சண்டக்கோழி தமிழ் இளைஞர்களைத் தங்களின் நிஜமான சராசரி வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு இளைஞனும் தனக்குள்ளே ஒரு ஹீரோவை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியே ஒரு காமெடியன் போல வாழ்ந்து மடிய வேண்டிய சினிமாட்டிக் சாபத்தைத் தந்துவிட்டுச் சென்றது!

படிக்கப் போகும் இடத்தில் லோக்கால் தாதாவைப் பந்தாடிச் சண்டை போடுவதுதான் வாலிபம் என்றும், தாவணி போட்ட தீபாவளி என்று பாடினால் அத்தனை அராஜகங்களையும் ரசிக்கலாம் என்றும், மதுரைக் கௌரவமும் உள்ளூர் குண்டர் கலாச்சாரமும் கலந்ததுதான் தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சண்டைக்காரச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

28 Jun 2026

மன்மத ராசாவும் மண்புழுவான சமூகமும்!

சீரழித்த சினிமா – 26

திருடா திருடி

மன்மத ராசாவும் மண்புழுவான சமூகமும்!

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் செப்டம்பர் திங்களில், நடுத்தர தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச விழுமியங்களுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, பொறுக்கித்தனத்தையும் போக்கிரித்தனத்தையும் டேட்டா பேக்கில் ஏற்றிய திரைப்படம்தான் திருடா திருடி.

படிக்காமல் ஊர் சுற்றும் வால்களைப் பெற்றோர் கண்டித்தால், அவர்கள் திருந்தி உருப்பட வழி தேட வேண்டும், என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு பொறுக்கித் தனமான மகன் தனது போக்கிரித்தனத்துக்கு நகைச்சுவையான காரணங்களை வரிசை கட்டிக் கொண்டு, ஒரு பெண்ணை ஸ்டால்க் செய்து, அவளிடமே வம்பு வளர்த்து, கடைசியில் அவளையே காதலிக்க வைக்கலாம்" என்ற ஒரு புதுவிதமான நடுத்தர வர்க்க வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, திருடா திருடி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் ஒல்லியான, எப்போதும் கௌண்டர் கொடுத்து அராஜகம் செய்யும் போலிப் பொறுக்கி பிம்பமும், நாயகியின் முட்டாளாக்கப்படும் ஐடி ஊழியர் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு டாஸ்மாக் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்பவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் வீட்டில் கடைக்குட்டிப் பிள்ளையாக இருந்து, எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக இருந்தால் போதும்; உங்களைக் கண்டிக்கும் அப்பனை வில்லன் என்று நினைக்கலாம். அண்ணனை அவனது பலகீனத்தைப் பயன்படுத்தி அகௌரவத்தில் சிக்க வைத்து விட்டு, அதைத் தந்தை மௌனமாக எதிர்த்தால், வீட்டை விட்டு வெளியேறிவிட்டு நான் சுயமரியாதை உள்ளவன் என்று சீன் போடலாம்.

இதை தமிழ் இளைஞன் எப்படி எடுத்துக் கொண்டான் தெரியுமா? கடைக்குட்டிப் பிள்ளையின் பொறுப்பின்மை என்பது கண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல; அது ஒரு தந்தை தன் மகனைப் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் தலைமுறை இடைவெளி என்று நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் பெற்றோரின் வியர்வை துளிக்குக் கூட மதிப்பளிக்காமல், வெட்டி பந்தா செய்துகொண்டு ஊர் சுற்றும் பல உதவாக்கரைகள் தங்களை ஒரு தியாகியாகக் காட்டிக்கொள்ள கிடைத்த ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள். ஆனால், திருடா திருடி படத்தில் ஒட்டுமொத்தத் திரையரங்கையுமே ஒரு குடிமகன் கூடாரமாக மாற்றி விற்றார்கள்.

படத்திற்கும் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் வரும் அந்த மன்மத ராசா பாடல், தமிழ்நாட்டு இளைஞர்களின் நரம்புகளை எப்படி முறுக்கேற்றியது என்றால், எவன் ஒருவன் நளினமில்லாமல் வெறிபிடித்தாற்போல் கை கால்களை உதறி ஆடுகிறானோ அவனே மாஸ் ஹீரோ என்று காட்டியது.

இந்த உறைபனியூட்டும் நரம்புத் தளர்ச்சி நடனத்தைத் தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டாடியதன் விளைவு, இன்றுவரை தமிழ் சினிமாவில் நல்ல கதைகளோ, மெல்லிசைகளோ தோற்றுப் போய், வெறும் டாஸ்மாக் குத்துப் பாடல்களும், தலைகால் புரியாத குத்தாட்டங்களும் மட்டுமே இருந்தால் படம் ஓடிவிடும் என்ற ஒரு மிக மோசமான ரசனைச் சீரழிவைத் தமிழனிடம் இத்திரைப்படம் விதைத்தது.

மன்மத ராசா மெயின் டிஷ் என்றால், அதற்கு சைட் டிஷ் போல பொண்ணுங்க அழகாக இருக்காங்க, வண்டார்குழலி போன்ற ஆப்பாயில் அரைவேக்காட்டு ஆபாச சைட் டிஷ்களும் போனஸ் பாய்ண்டுகளைப் போலப் படத்தில் உண்டு.

அதுமட்டுமில்லாது திருடா திருடி படம் நகைச்சுவைப் பாத்திரங்கள் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் அத்தனை தில்லுமுல்லுகளையும், திருட்டுத் தனங்களையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது. இதெல்லாம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமப்பா என்ற விட்டேத்தி மனநிலையை மிக நேர்த்தியாக விதைத்தது.

ஓர் இளைஞனை நல்வழிப்படுத்த வேண்டிய நட்பு, பின்னணியில் ஆபாசமாகப் பாடி அசிங்கம் செய்து கொண்டிருந்தால் நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்பதையும், பொறுப்பின்மையையும், ஏமாற்று வேலைகளையும் செம காமெடி என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியையும் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

7ஜி ரெயின்போ காலனி மற்றும் மின்னலே திரைப்படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது.

நாயகியின் கதாபாத்திரமானது இப்படத்தில் படித்துப் பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் தற்சார்பு உடைய பெண்ணாகக் காட்டப்படும். ஆனால், அவருக்கும் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. தன்னைத் துரத்தித் துரத்திக் கொடுமைப்படுத்தும், வேலைவெட்டியற்ற ஒரு லோக்கல் பொறுக்கியின் மீது அவளுக்கு எப்போது காதல் வரும் என்றே அவளுக்கும் தெரியாது படத்தைப் பார்க்கும் நமக்கும் புரியாது.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுயமரியாதையோ, கண்ணியமான வாழ்க்கையோ வாழத் தகுதியற்றவள்; அவள் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் வேலையில் இருந்தாலும், கடைசியில் வீட்டில் உருப்படாத ஒரு சோம்பேறிப் பொறுக்கியை லவ் பண்ணி அவனைத் துரத்துவதே அவளது பிறவிப் பயன் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் கமர்ஷியல் ஹிட் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

திருடா திருடி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை நடுத்தர வர்க்கப் பொறுக்கிகளின் ரோல் மாடல் பிம்பத்தில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

இப்படத்தின் ஆகப்பெரும் சமூகச் சீரழிவு, அதன் பாடல்கள்தான். குறிப்பாக, அந்த ஒரு குறிப்பிட்ட பாடலான மன்மத ராசா. அதுவரை நடனம் என்றால் ஒரு நளினம் இருக்க வேண்டும் என்று நம்பியிருந்த பரதநாட்டிய தேசத்தில், "யார் அதிகமாக உடம்பை முறித்துக் கொள்கிறார்களோ, அவர்களே சிறந்த நடனக் கலைஞர்" என்றொரு புதிய உளவியல் நோய் பரவியது. கல்யாண வீடு, திருவிழா, காதுகுத்து என எங்கு பார்த்தாலும், தங்களின் இடுப்பு எலும்புகள் முறிவதைப் பற்றியோ, சுற்றியிருப்பவர்களின் கண்கள் குத்தப்படுவதைப் பற்றியோ கவலைப்படாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடே கைகளை முன்னும் பின்னும் ஆட்டி பித்து பிடித்தாற்போல் ஆடத் தொடங்கியது.

இசை என்பது ஆன்மாவை அமைதிப்படுத்த வேண்டும் என்பார்கள். ஆனால், 'மன்மத ராசா' ஆன்மாவை உலுக்கி, மூளையின் செல்களை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது.

சுருக்கமாகச் சொன்னால், 'திருடா திருடி' என்பது வெறும் திரைப்படம் அல்ல; அது தமிழ் சமூகத்தின் ரசனைத் தரம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட ஒரு மோசமான ‘மின்னல் தாக்குதல்.

இப்படத்தைப் பார்த்துவிட்டு, "நானும் இப்படித்தான் சுத்துவேன், ஆனா எனக்கும் ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா" என்று நம்பிக் கொண்டிருக்கும் முப்பது, நாற்பது வயது இளைஞர்கள் இன்றும் நம்மிடையே உலா வருவதுதான் இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய ஆகப்பெரும் உளவியல் சீரழிவின் நேரடி சாட்சி.

பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது, அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும் வற்புறுத்துவது போன்ற ஸ்டாக்கிங் முறையை இந்தப் படம் மிகச் சாதாரணமாகக் காட்டியது. பெண்ணின் இல்லை என்ற வார்த்தைக்குப் பின்னால் ஆமாம் என்பது இருக்கிறது என்ற தவறான உளவியல் புரிதலை இது பல இளைஞர்களின் மனதில் விதைத்தது.

ஒரு சுமாரான கதை, கொஞ்சம் ஆபாசம், அதீத வன்முறையான நடனம், பொறுப்பற்ற நாயகன் என இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து, அதற்கு கமர்ஷியல் ஹிட் என்று லேபிள் ஒட்டியதன் விளைவாகக் கமர்ஷியல் தமிழ் சினிமா படு லோக்கல், தரை லோக்கல் என்கிற லெவலுக்குத் தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்வதைக் கமர்ஷியல் ஹிட்டிற்கான பார்முலாவாகப் பார்த்தது.

பெற்றோரை எதிர்த்து அவர்களை நக்கலடிப்பதுதான் வாலிபத்தின் இயல்பு என்றும், மன்மத ராசா என்றும், பொண்ணுங்க அழகா இருக்காங்க என்றும், வண்டார்குழலி என்றும் வெறித்தனமாக ஆடினால் அத்தனை பொறுக்கித்தனங்களையும் ரசிக்கலாம் என்றும், வேலைவெட்டியின்றித் திரிந்து பெண்களைத் துரத்துவதே காதலின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற டாஸ்மாக் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

27 Jun 2026

திரைக்கதையின் பிதாமகன் – கே. பாக்கியராஜ்

திரைக்கதையின் பிதாமகன் – கே. பாக்கியராஜ்

கே.பாக்கியராஜ் ஈரோடு வெள்ளங்கோவிலில் கிருஷ்ணசாமி நாயுடு - அமராவதி தம்பதிக்கு மகனாகப் பிறக்கும்போதே, தனக்கான திரைக்கதையை அவரே எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்.

இல்லையெனில், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து, கிழக்கே போகும் ரயில்பெட்டியில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் முகம் காட்டி, சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வசனம் எழுதி, சட்டென்று புதிய வார்ப்புகள் மூலம் கதாநாயகன் ஆனது எப்படிச் சாத்தியம்?

அன்றைய தமிழ் சினிமா நாயகர்கள் மீசையை முறுக்கிக் கொண்டும், தொடையைத் தட்டிக்கொண்டும் அனல் பறக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவரோ, அடுத்த வீட்டு வாலிபனின் அப்பாவித்தனத்தையும், கள்ளமில்லாத அல்லது கள்ளத்தனம் நிறைந்த புன்னகையையும் மூலதனமாக்கினார்.

ஊமைகளின் மொழியைப் பேச முற்பட்ட ஒரு கை ஓசை இவரைத் தயாரிப்பாளராக்கியது. ஆனால், பேசத் தெரிந்த உலகம் இவரை இயக்குநராகக் கொண்டாடியது.

பாக்கியராஜ் இயக்கிய படங்கள் வெறும் கதைகள் அல்ல; அவை மனித பலவீனங்களின் மீதான நையாண்டிகள்.

மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு எனத் தொடர்ந்த அவரது படங்கள், குடும்ப அமைப்பின் போலித்தனங்களை மிக நாசூக்காகக் கேலி செய்தன.

இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

குருநாதர் பாரதிராஜாவுடன் மீண்டும் இணைந்த ஒரு கைதியின் டைரி கமல் ஹாசனின் இரட்டை வேடத்தால் ஜொலித்தது. ஆனால், அதன் இந்திப் பதிப்பான ஆக்ரி ராஸ்தா மூலம் அமிதாப் பச்சனையும் ராஜேஷ் கன்னாவையும் இயக்கிய பெருமை பாக்கியராஜுக்குக் கிடைத்தது.

இவரது கதைகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற மகுடத்தை இவருக்குப் பெற்றுத் தந்தன.

திரைப்படம் பத்தாதென்று பாக்யா வார இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் பேனாவைப் பிடித்தார். 'வாங்க சினிமாவைப்பற்றி பேசலாம்', 'நீங்க நெனச்சா சாதிக்கலாம்' எனப் புத்தகங்கள் எழுதினார். தமிழக அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பாராட்டுகள் குவிந்தன.

எம்.ஜி.ஆர் பாதியில் விட்டுச் சென்ற ‘அண்ணா நீ என் தெய்வம்’ காட்சிகளை வைத்து, புதுத் திரைக்கதை எழுதி ‘அவசர போலீஸ் 100’ என்று வெளியிட்டாரே, அதுதான் பாக்கியராஜின் உச்சக்கட்ட புத்திசாலித்தனம்.

எம்.ஜி.ஆரே இவரைத் தன் ‘கலையுலக வாரிசு’ என்றார். அதன் விளைவோ என்னவோ, 1989இல் ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்’ தொடங்கி அரசியலிலும் குதித்தார். பின்னர் திமுகவிலும் சில காலம் மின்னி மறைந்தார்.

பாக்கியராஜின் திரைக்கதையைப் போலவே அவரது வாழ்க்கைத் திரைக்கதையும் சுவாரசியமான காதல்களையும், சோகங்களையும் கொண்டது.

உதவி இயக்குநராக இருந்தபோது காதலித்து, 1981இல் மணந்த மனைவி பிரவீணா. ஆனால், மஞ்சள் காமாலை என்ற வில்லன் 1983இல் அவரைப் பறித்துக்கொண்டது.

டார்லிங் டார்லிங் பட நாயகியான பூர்ணிமாவை மறுபடி காதலித்து மணந்தார். மகள் சரண்யாவை பாரிஜாதம் மூலம் அறிமுகப்படுத்தினார். மகன் சாந்தனு சக்கரக்கட்டி மூலம் அறிமுகமாகி இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கால ஓட்டத்தில், கதாநாயகன் அந்தஸ்திலிருந்து உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன் என குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். இவர் கடைசியாக இயக்கி நடித்தது சித்து பிளஸ் 2.

பார்த்திபன், பாண்டியராஜன் போன்ற சுட்டித்தனமான இயக்குநர்களைத் தமிழ் சினிமாவிற்குத் தந்ததே இவரது ஆகச்சிறந்த பங்களிப்பு.

சினிமாக்களில் எத்தனையோ ட்விஸ்ட்களை எழுதிய திரைக்கதை மன்னனின் நிஜ வாழ்க்கை கிளைமாக்ஸ் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சமீபத்தில்தான் கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் திருமணத்திற்குச் சென்று சென்னை திரும்பியிருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் இல்லத்தில், இன்று காலை வழக்கம் போல மார்னிங் வாக் சென்றுவிட்டு வீடு திரும்பியவருக்கு திடீர் நெஞ்சுவலி.

மயங்கி விழுந்தவரை குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட். கடும் மாரடைப்பு. டாக்டர்கள் போராடினார்கள்.

ஆனால், பாக்கியராஜின் லைப் ஸ்கிரீன்பிளே அங்கே முடிவுக்கு வந்தது. சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இவருடைய குருநாதர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்து சரியாக 17 நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் சீடனும் கிளம்பிவிட்டார். குருவும் சீடனும் மேலேயும் ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கான டிஸ்கஷனைத் தொடங்கி விட்டார்களோ என்னவோ?

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைக்கதை மன்னனுக்கு கண்ணீர் அஞ்சலி!

*****