18 Apr 2026

ஓட்டு – உங்கள் ஜனநாயகத் துருப்புச் சீட்டு!

ஓட்டு – உங்கள் ஜனநாயகத் துருப்புச் சீட்டு!

தமிழ்நாட்டை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகும் தலைமையைத் தீர்மானிக்கும் மகத்தான பொறுப்பு ஏப்ரல் 23 இல் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே... என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

அரசு என்பது உங்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு என்று இன்னும் நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால், அந்த நம்பிக்கையைச் சிதைக்காமல் இருக்க, வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சோம்பலைத் தள்ளி வைத்துவிட்டு வாக்குச்சாவடிக்குப் போக வேண்டும்.

கொஞ்சம் கூட்டம் இருக்கலாம். வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவது அவசியம்.

என் ஓர் ஓட்டால்தான் எல்லாம் மாறப் போகிறதா என்று தத்துவார்த்தமாகக் கேட்டுவிட்டு, அந்த நாளை நெட்பிளிக்ஸிலும் தூக்கத்திலும் தொலைக்கத் துடிக்கும் புத்திசாலிகள் இங்கே அதிகம்.

நினைவிருக்கட்டும், உங்கள் ஓர் ஓட்டு முடிவை மாற்றாததுதான், ஆனால் மாற்றத்தை நோக்கிய உங்கள் இயலாமையைக் குறைக்கும்.

யாருமே தேறமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், அதற்காகவே தேர்தல் ஆணையம் நோட்டா என்ற பொத்தானை வைத்திருக்கிறது. உங்களில் யாருக்கும் என் வாக்கு கிடையாது, என்று சொல்வதற்காவது நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அதுவும் ஒரு ஜனநாயகக் கடமைதான்.

வாக்களிக்கும் முன் சில விசயங்களை யோசித்துப் பாருங்கள். அவற்றில் சில,

பட்டதாரிகளை மொத்தமாக உற்பத்தி செய்துவிட்டு, அவர்களுக்குத் தகுதியான வேலையைக் கொடுக்க முடியாமல் தமிழ்நாடு விழி பிதுங்கி நிற்கிறது. எல்லாருக்கும் அரசு வேலை சாத்தியமில்லைதான். ஆனால் தகுதிக்கேற்ப ஏதாவது ஒரு வேலை சாத்தியம்தானே. அந்தச் சாத்தியத்தைத் தேர்தலில் நிற்கும் எந்தக் கட்சியின் சின்னம் உறுதி செய்யும் என்று பாருங்கள்.

கடன் சுமையால் தடுமாறும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்கும் வித்தை இப்போது தமிழகத்துக்கு அத்துப்படி. இந்த கடனெல்லாம் யார் தலையில் விடியும் என்று நினைக்கிறீர்கள்? ஆகவே, உங்கள் யோசனையில் இதையும் வைத்து அதற்கேற்ப வாக்களியுங்கள்.

அப்புறம், இந்த வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலைப் பாருங்கள். நாட்டின் ஜிடிபியை விட அவர்களின் சொத்து வளர்ச்சி விகிதம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. பலருடைய பின்னணியான கிரிமினல் சைட் கிருமித்தனமாக இருக்கிறது. இதையும் நீங்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு கிரிமினல் கிருமியைத் தேர்ந்தெடுப்பதில் என்ன இருக்கிறது? அது இன்னொரு கொரோனா, லாக் டவுன் என்றாகி விடும்.

இப்போதெல்லாம் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் குறைந்து விட்டன. கட்சிகள் நேரடியாகவே உங்கள் செல்போனுக்கு எல்லாவற்றையும் அனுப்புகின்றன. கட்சிகளுக்கு எப்படி உங்கள் செல்போன் நம்பர் கிடைக்கிறதோ? ஆக, அரசியல் கட்சிகள் உங்கள் செல்போனுக்குள் அனுப்பியிருக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைப் படியுங்கள். அதில் எவை நிஜம், எவை வெறும் காமெடி என்பதைப் பிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இலவச மிக்ஸிக்கும், கிரைண்டருக்கும், பிரிட்ஜ்க்கும், டோக்கனுக்கும் ஆசைப்படுவதை விட, மாநிலத்தின் எதிர்காலத்துக்கு எது உருப்படியானது என்று யோசியுங்கள்.

ஆட்சிகள் வரும், போகும். ஆனால் நாம் கட்டும் வரி மட்டும் போய்க்கொண்டே இருக்கும் என்பது உண்மை என்றாலும், அந்த வரி மக்கள் நலனுக்குக் கொஞ்சமாவது பயன்பட வேண்டுமானால் யோசித்து வாக்களித்தால்தான் உண்டு.

எனவே, ஏப்ரல் 23 ஆம் தேதி உங்கள் மனசாட்சியைக் கொஞ்சம் தட்டி எழுப்பி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு தீர்க்கமான முடிவெடுங்கள்.

ஜனநாயகம் என்பது வேர் என்றால், உங்கள் வாக்குதான் அதன் உரம். அது விஷமா அல்லது சத்தா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

வாக்களிக்க அவசியம் போய் வாருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கிறதோ இல்லையோ, அடுத்து ஐந்து வருடங்களுக்கு நீங்கள் திட்டித் தீர்ப்பதற்கு ஒரு தார்மீக உரிமை உங்களுக்குக் கிடைக்கட்டுமே!

*****

மூளையும் கட்டைவிரலும் – ஒரு டிஜிட்டல் மரணம்!

மூளையும் கட்டைவிரலும் – ஒரு டிஜிட்டல் மரணம்!

நவீன மனிதர்களின் ஆகப்பெரிய துயரம் இதுதான். புத்தகம் படிக்க அவர்களுக்கு நேரமில்லை, ஆனால் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ்ஆப், ரீல்ஸ் பார்க்க அவர்களுக்கு நேரம் போதவில்லை.

ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பிரித்து, முன்னுரையைப் படிப்பதற்குள் அவர்களுக்குக் கொட்டாவி வருகிறது. இந்த எழுத்தாளர் ஏன் இவ்வளவு நீளமாக எழுதுகிறார்? என்று எரிச்சல் படுகிறார்கள்.

அதே மனிதர், யாரோ ஒரு புண்ணியவான் கேமரா முன்னால் நின்று இடுப்பை ஆட்டுவதையோ அல்லது என்னங்க சமையல் என்று கத்துவதையோ இரண்டு மணிநேரம் இமைக்காமல் பார்க்கிறார்.

புத்தகம் என்பது ஒரு மெதுவான பயணம். அது உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும். மூளைக்கு வேலை கொடுப்பது என்பது இன்றைய தேதியில் ஒரு தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இன்ஸ்டா, யூடியூப், ரீல்ஸ்? அது ஒரு துரித உணவு. நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. உங்கள் கட்டைவிரல் மட்டும் இயங்கினால் போதும்.

இந்த யூடியூப்காரர்களும், இன்ஸ்டாகாரர்களும், ரீல்ஸ் மகான்களும் ஒவ்வொரு 15 விநாடிக்கும் ஒரு புதிய உணர்ச்சியை சிரிப்பு, அழுகை, எரிச்சல் என்று உங்கள் நரம்புகளுக்குள் ஊசி போட்டு ஏற்றி இறக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கக் குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஆனால், அதே ஒரு வாரத்தில் நீங்கள் சுமார் பத்தாயிரம் ரீல்ஸ்களைப் பார்த்து, பத்தாயிரம் விதமான முட்டாள்தனங்களைச் சேமித்து வைத்திருக்க முடியும்.

நேரமே இல்லைங்க என்று சொல்பவர்களிடம் அவர்களின் செல்போனில் இருக்கும் ஸ்கிரீன் டைம் ஆப்ஷனைத் திறந்து காட்டச் சொல்லுங்கள். அதில் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் இன்ஸ்டாகிராமிலோ, யூடியூபிலோ, வாட்ஸ்ஆப்பிலோ கழிந்திருக்கும்.

அறிவு என்பது ஒரு பெரிய சமுத்திரம். ஆனால் அதைத் தேடிப் போக யாருக்கும் விருப்பமில்லை. எல்லாரும் அந்தச் சமுத்திரத்தின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு யாரோ துப்பிய ரீல்ஸில், இன்ஸ்டாவில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தகம் படிப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பார்கள். ரீல்ஸ் பார்ப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அந்தப் பாட்டுக்கு அந்தப் பொண்ணு என்ன ஸ்டெப் போட்டுச்சு என்பது மட்டும்தான்.

நாளை ஒரு போர் வந்தால், நம் இளைஞர்கள் கையில் துப்பாக்கியைத் தூக்குவதற்குப் பதில், எதிரியின் முன்னால் நின்று செல்பி எடுத்து, கரன்ட் மூட் – வார் என்று ஸ்டேட்டஸ் போடுவார்கள் போலிருக்கிறது.

புத்தகம் படிக்க நேரமில்லை என்று சொல்பவர்கள் உண்மையில் சொல்வது இதுதான், எனக்கு யோசிக்க நேரமில்லை, என்னை அப்படியே மந்தையாக வாழ விடுங்கள்.

வாழுங்கள். உங்கள் கட்டைவிரல் தேயும் வரை ரீல்ஸ்களைத் தள்ளிக் கொண்டே இருங்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் மூளை தானாகவே அன்இன்ஸ்டால் ஆகிவிடும். அப்போது உங்களுக்குப் புத்தகங்களும் தேவைப்படாது, இந்த வாழ்க்கையும் புரியாது.

நம் கட்டை விரலை விட மூளையைக் கவனிப்பது முக்கியம். அதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்.

******

17 Apr 2026

வீட்டுக்குள் நிம்மதியாக இருத்தல்!

வீட்டுக்குள் நிம்மதியாக இருத்தல்!

மனிதர்களைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ரிடையர்மென்ட் ஆகும் வரை வாடகை வீட்டில் வசிப்பவர்கள். வாடகை வீட்டுக்குப் பயந்து ஹோம் லோன் போட்டு இஎம்ஐ கட்டும் இன்ஸ்டால்மென்ட் வீட்டில் வசிப்பவர்கள்.

இரண்டுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றுமில்லை. முதல் வகையினர் அறுபது வயது வரை வாடகை வீட்டில் ஓனர் தரும் டார்ச்சரை அனுபவிப்பார்கள். இரண்டாம் வகையினர் அறுபது வயது வரை பேங்க் மேலாளர் தரும் இஎம்ஐ டார்ச்சரை அனுபவிப்பார்கள். முன்னது உடல்நலத்துக்குக் கேடு, பின்னது மனநலத்துக்குக் கேடு.

இன்றைய இளைஞர்களுக்குச் சொந்த வீடு என்பது ஒரு சென்டிமென்ட் அல்ல, அது ஒரு இருபது காலத் தண்டனை. வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் ஆண்டிலேயே ஹோம் லோன் எடுத்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் அலுவலகத்தில் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களின் இஎம்ஐ அவர்களை தானாகவே அடிமையாக்கிவிடும். மேனேஜர் திட்டும்போது கோபப்படத் தோன்றும், ஆனால் பாத்ரூம் டைல்ஸின் விலை நினைவுக்கு வந்து கோபத்தைத் தணிக்கும்.

இவர்களுக்குச் சுதந்திரம் என்பது என்ன? அடுத்த இருபது வருஷத்துக்கு வேலையை விடமாட்டேன் என்று வங்கிக்கு எழுதித் தருவதுதான்!

இன்னொரு ரகம் உண்டு. அரசு வேலை முடிஞ்சு, வர்ற காசுல ஒரு சின்னதா நாலு செவுரு எழுப்பி நிம்மதியா சாகணும் என்று கனவு காண்பவர்கள். அறுபது வயதில் வீடு கட்டி முடிக்கும்போது, அவர்களுக்குப் பால் காய்ச்சத் தெம்பிருக்காது. அந்த வீட்டு ஹாலில் நடக்கக் கூட மூட்டு வலி அனுமதி தராது. ஒரு வழியாகக் கட்டி முடித்த வீட்டில் அவர்கள் நிம்மதியாக உட்காரும்போது, அவர்களின் பையன் அந்த வீட்டை இடித்துவிட்டு அப்பார்ட்மென்ட் கட்டத் திட்டம் போட்டுக்கொண்டிருப்பான்.

விசயம் என்னவென்றால்,

நீங்கள் வாங்குவது 1200 சதுர அடியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உண்மையில் வாழ்வது அந்த வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இருக்கும் எண்களுக்குள்தான்.

உங்கள் வீட்டின் சுவருக்கு நீங்கள் அடிக்கும் பெயிண்ட், உண்மையில் உங்கள் ரத்தத்தின் நிறமாகக்கூட இருக்கலாம்.

வாடகை வீட்டில் இருக்கும்போது எப்போ சொந்த வீடு வரும்? என்கிற கவலை இருக்கும். சொந்த வீடு வந்த பிறகு எப்போ லோன் முடியும்? என்கிற கவலை வரும்.

கடைசியில் பார்த்தால், இரண்டு வகையினருமே தங்கள் வாழ்க்கையை ஒரு கான்கிரீட் பெட்டிக்காக அடகு வைக்கிறார்கள். பூமிக்கு மேலே ஒரு வீடு கட்டுவதற்காக, பூமிக்கு அடியில் போவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.

வாடகை வீடாக இருந்தால் என்ன, லோன் வீடாக இருந்தால் என்ன? எப்படியும் ஒரு நாள் எல்லாரும் காலி செய்துவிட்டுப் போகப்போகிற கெஸ்ட் ஹவுஸ்தான் இது. அதற்காக ஏன் இத்தனை முக்கல் முனகல்கள்? வீட்டில் ரொம்ப காசைப் போட்டு அவஸ்தைக்கு ஏன் ஆளாக வேண்டும்?

வீட்டுக்குள் நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். அந்த வீடே உங்கள் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது.

சொந்த வீடா? வாடகை வீடா?

இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாடகை வீடு எப்போதும் பெஸ்ட். நீங்கள் வீட்டுக்குப் பெய்ண்ட் அடிக்க வேண்டியதில்லை, பிளம்பிங், எலெக்ட்ரிக் மெயின்டெனன்ஸ் செய்ய வேண்டியதில்லை, டேங்க் கிளினிங் பண்ண வேண்டியதில்லை, எல்லாவற்றையும் ஓனர் பார்த்துக் கொள்வார்.

ஆகவே, இந்த ஓனர் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு ஓனர். வீட்டைக் கட்டிப் போட்டு விட்டு, வெளிநாட்டில் இருக்கும் ஓனர்களும் இருக்கிறார்கள். அவர்கன் வீட்டைப் பிடியுங்கள். வாழ்க்கை ஸ்மூத்தாகப் போகும்.

*****

16 Apr 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – பிரீமியம் கட்டினால் காதல் கிடைக்குமா?

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி –

பிரீமியம் கட்டினால் காதல் கிடைக்குமா?

எல்ஐகே – ஒரு திரைப்பார்வை

விக்னேஷ் சிவன் எப்போதுமே ஒரு கலர்புல் உலகத்தைத்தான் சமைப்பார். இந்த முறையும் அதையே செய்திருக்கிறார். ஆனால், இதில் கொஞ்சம் பியூச்சரிஸ்டிக் மசாலா மிக்சிங் பண்ணியிருக்கிறார். அவர் எப்போதுமே காதல் எனும் பழைய ஊறுகாயை புது ஜாடியில் போட்டுத் தருவதில் கில்லாடி. இந்த முறை ஜாடி கொஞ்சம் காஸ்ட்லி.  2040 ஆம் வருடத்தில் உலகம் முழுவதும் செல்போனுக்குள் சுருங்கிவிட்டதாம். இப்போதும் அப்படித்தானே இருக்கிறது என்று லாஜிக் பேசக்கூடாது!

காதலுக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் ஒரு நிறுவனம். அதாவது, உங்கள் காதலி உங்களைக் கழற்றிவிட்டால் அல்லது காதல் தோல்வியடைந்தால், அதற்கு ஒரு செட்டில்மென்ட் கிடைக்கும் என்பதுதான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் கான்செப்ட். ஆனால், உண்மையில் படத்தின் கரு என்னவென்றால், எல்லாவற்றிற்கும் இன்சூரன்ஸ் எடுக்கலாம், ஆனால் எடுத்த இன்சூரன்ஸை க்ளைம் செய்வதற்குள் நமக்கு உயிர் போய்விடும் என்பதுதான்.

படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் இன்னும் அந்த லவ் டுடே ஹேங்ஓவரிலேயே இருக்கிறார்.  அது அவருக்கு செட் ஆகிறது என்பதுதான் உண்மை. ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் பதற்றத்தையும், குழப்பத்தையும் அவர் அப்படியே பிரதிபலிக்கிறார். ஆனால், சில இடங்களில் அவர் ஓவர்-ஆக்டிங் செய்கிறாரா அல்லது கேரக்டர் அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கவனிக்க வேண்டிய குறிப்பு என்னவென்றால், இன்சூரன்ஸ் தொகை அவ்வளவு வராது! கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு அவர் வளைந்து நெளிந்து கொடுக்கும் போஸ்கள் இருக்கிறதே. அது ஒரு தனி கலை. டியூட் கதாபாத்திரங்களுக்கு இவர்தான் இப்போது ஆஸ்தான நடிகர் போல.

படத்தின் நாயகி கிரித்தி செட்டி திரையில் வந்து போகிறார். அழகாக இருக்கிறார். விக்னேஷ் சிவன் படங்களில் நாயகிகளுக்கு அதிக வேலை இருக்காது, நாயகனைச் சுற்றி ஒரு அழகான வளையமாக இருந்தால் போதும். இதில் கிரித்தி அந்த வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் சில சமயம் இழுவையாக இருந்தாலும், எமோஷன் காட்சிகளில் க்ளிக் ஆகிறார். ஒரு போன் மெமரி புல்லானால் வரும் பதற்றம் அவர் முகத்தில் அச்சு அசலாகத் தெரிகிறது.

வில்லன் எஸ்.ஜே.சூர்யா. படத்திற்கு ஆக்சிஜன் இவர்தான். அந்த அலப்பறையான நடிப்பு, பாடி லாங்குவேஜ் எனத் திரையை ஆக்கிரமிக்கிறார். படத்தில் அதிகமாக கத்துகிறார். ஆனால், ரசிக்க முடிகிறது. படத்தில் அவருக்குப் பெயர் சூரியன். ஆனால் அவர் பேசுவது, கத்துவது எல்லாம் எரிமலையிலிருந்து வரும் சத்தம் போல இருக்கிறது. டிராகன் போல சீறுகிறார். மனிதர் எனர்ஜியில் மட்டும் இன்னும் 2024 ஆம் வருடத்திலேயே நிற்கிறார்.

படத்தின் பாதி பலம் அனிருத்தின் மியூசிக். பிஜிஎம்மில் காது கிழிகிறது, ஆனால் அது ஒரு பெப்பி பீலைத் தருகிறது. அனிருத் ஒரு ரோபோவுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.  பாடுவது போதாதென்று இப்போது பேசவும் ஆரம்பித்துவிட்டார். நல்லவேளை, அது ஸ்வீட் சர்ப்ரைஸ்!

காதலுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் முடிச்சுப் போட்ட விதம் சுவாரஸ்யம். சில காட்சிகள் ஜவ்வாக இழுக்கின்றன. எடிட்டர் கத்தரி போடத் தயங்கியது தெரிகிறது. ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த காமெடி என்பதால் லாஜிக் பார்க்கக்கூடாது என இயக்குநர் ஒரு டிஸ்கிளைமர் போட்டிருக்கலாம்.

நீங்கள் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் டைப் படங்களை ரசிப்பவர் என்றால், இந்த எல்ஐகே பாலிசி உங்களுக்கு லாபகரமானது.

படத்தின் மைனஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஒரு ரீல்ஸில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு மணி நேரமாக இழுத்திருக்கிறார்கள். பிளாஸ்பேக் ஆழமே இல்லாமல் வந்து போகிறது. ஏதோ அவசரமாக எடுத்த ஷார்ட் பிலிம் போல இருக்கிறது.

விக்னேஷ் சிவன் நிறைய ஐடியாக்களை வைத்திருக்கிறார், ஆனால் அதை ஒழுங்காக மூட்டை கட்டத்தான் கொஞ்சம் சோம்பேறித்தனம் காட்டியிருக்கிறார்.

காதலுக்கு இன்சூரன்ஸ் அவசியமோ இல்லையோ, இந்தப் படத்தைப் பார்க்கும்போது இடைவேளையில் ஒரு காபி குடிப்பதற்கு நல்ல லைப் இன்சூரன்ஸ் அவசியம். விக்னேஷ் சிவன் இன்ஸ்டால் செய்திருக்கும் இந்த உலகத்தை ஒருமுறை லைக் செய்யலாம், ஆனால் ஷேர் செய்வதற்கு யோசிக்க வேண்டும்!

சீரியஸாக படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு ரிஸ்க் ஆன முதலீடு! படத்தை ஒருமுறை பார்க்கலாம். ஆனால், க்ளைம் கிடைக்காது! பாலிசிதாரர்களுக்குப் பாதி லாபம்!

படத்துக்குப் பத்துக்கு 5½ மார்க் கொடுக்கலாம் படத்திற்கு, அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா எதற்கென்றால், ரோபோவை நல்ல நடிகராக்கியதற்கு.

*****

டயக்னோசிஸ் – எல்லா நாடுகளிலும் ஓர் எட்டாக்கனி!

டயக்னோசிஸ் – எல்லா நாடுகளிலும் ஓர் எட்டாக்கனி!

நோய்க் கண்டறிதல் என்பது எல்லா நாடுகளிலும் எட்டாக் கனியாகவே உள்ளது. அது அமெரிக்காவாகவே இருந்தாலும் சரிதான். அமெரிக்கா என்றால் நமக்குத் தெரிந்தது அதிநவீன மருத்துவமனைகளும், கண்ணிமைக்கும் நேரத்தில் மரபணுவை வரிசைப்படுத்தும் மெஷின்களும்தான். ஆனால், அங்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் ஒரு விசித்திரமான நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நரகத்தின் பெயர், பெயரிடப்படாத நோய்.

அலெக்ஸாண்ட்ரா சிபர்லின் எழுதிய தி எலுசிவ் பாடி என்ற புத்தகத்தைப் படித்தால், நீங்கள் இந்த உண்மையை அறியலாம்.

ஏழு வருடங்களாகத் திரட்டிய தகவல்களை வைத்து அவர் ஒரு டயக்னோசிஸ் க்ரைஸிஸ் சித்திரத்தை வரைந்திருக்கிறார்.

புத்தகத்தில் வரும் ப்ராக்டர் உடன்பிறப்புகளின் கதை பகீர் ரகம். அவர்களுக்கு ஒரு மரபணு மாற்றம். விளைவு? அவர்களின் தசைநார்கள் மெல்ல மெல்ல சிமெண்ட் போலக் கல்லாக மாறுகின்றன.

இன்னொரு பக்கம் 30 வயது மார்க். ஒரு காலத்தில் சைக்கிளிங் செய்தவர், இப்போது மூன்று சக்கர வண்டியில் கூட பேலன்ஸ் செய்ய முடியாமல் தள்ளாடுகிறார்.

டாக்டர்களிடம் போனால், உங்களுக்கு ஒன்றுமில்லை, எல்லாம் மனப்பிரமை, என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அல்லது, ஒரு ஸ்பெஷலிஸ்ட்டிடம் இருந்து இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்டுக்கு பந்து போலத் தட்டி விடுகிறார்கள்.

பொதுவாக இது போன்ற புத்தகங்களில் டாக்டர்கள் எல்லாம் மோசமானவர்கள், நோயாளிகள் பாவம் என்கிற ரீதியில்தான் எழுதுவார்கள். ஆனால் சிபர்லின் அப்படிச் செய்யவில்லை. அவருக்கும் டாக்டர்கள் மேல் அனுதாபம் இருக்கிறது.

நிமிடத்திற்கு நிமிடம் ஓடும் கார்ப்பரேட் மருத்துவ உலகில், ஒரு நோயாளியின் கதையை நிதானமாக உட்கார்ந்து கேட்க டாக்டர்களுக்கு நேரமில்லை.

ஒரு எக்ஸ்ரே எடுப்பதற்கான நேரம்தான் இன்று டயக்னோசிஸ் செய்ய ஒதுக்கப்படுகிறது, என்கிறார்கள் நோயாளிகள் பக்கம் நின்று வாதாடும் அனுதாபிகள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பீடியாட்ரிக் நியூராலஜிஸ்ட் டயானா செஜாஸ். அவரே ஒரு டாக்டர். தன் கழுத்தில் ஒரு கட்டி இருப்பதை அவரே கண்டுபிடித்துச் சொல்கிறார். சக டாக்டர்கள் அதை அலட்சியப்படுத்துகிறார்கள். கடைசியில் அது கேன்சர் என்று தெரிய வருகிறது. ஒரு டாக்டருக்கே இந்த நிலை என்றால், சாதாரண ஆசாமியின் கதி?

அமெரிக்கா மருத்துவத்திற்காக வாரி இறைக்கும் பணம் உலகிலேயே அதிகம். ஆனால், அங்கே நோயைக் கண்டுபிடிப்பதிலேயே இத்தனை ஓட்டைகள்.

இந்தப் புத்தகம் சொல்லும் செய்தி ஒன்றுதான். மருத்துவ உலகம் வெறும் மெஷின்களையும் டெஸ்ட்டுகளையும் மட்டும் நம்பாமல், நோயாளியின் கதையைக் கேட்க மீண்டும் பழக வேண்டும்.

கண்டுபிடிக்கப்படாத நோய் என்பது ஓர் இருட்டு அறை. அதில் டார்ச் அடித்துத் தேடும் முயற்சியே இந்தப் புத்தகத் தேடல்.

உங்கள் உடம்பில் ஏதோ ஒன்று சரியில்லை என்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால், அதை ஒரு டாக்டர் மறுத்தால், இன்னொரு டாக்டரிடம் போங்கள்.

சில நேரம் மெஷின்களை விட உங்கள் உடம்பு சொல்வது உண்மையாக இருக்கும்!

*****

15 Apr 2026

ஞானபீடக் கூத்து – ஒரு கவித்துவமான அனர்த்தம்!

ஞானபீடக் கூத்து – ஒரு கவித்துவமான அனர்த்தம்!

வழக்கம்போல ஒரு விபத்து நடந்திருப்பதாகச் சிறுபத்திரிகைகள் அலறுகின்றன. இந்த முறை வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டிருப்பதை தீவிர எழுத்தாளர்கள் ஏற்கவில்லை. இது தமிழ் இலக்கியப்பரப்பில் இது ஒரு பூகம்பத்தைக் கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், உண்மையில் இது ஒரு தேநீர்க்கோப்பைக்குள் விழுந்த ஈயைப் போன்ற சலசலப்பையே உருவாக்கியிருக்கிறது.

சுமார் இருநூறு எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு கண்டன அறிக்கையைத் தட்டச்சு செய்திருக்கிறார்கள். இது தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்கிறார்கள். பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை, ஞானபீடம் என்பது இலக்கியத் தகுதிக்கு வழங்கப்படும் விருதல்ல, அது ஒரு லாபி விளையாட்டுக்கான சான்றிதழ் என்பது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அகிலன் வாங்கியபோது சுந்தர ராமசாமி கிழித்த அதே கிழிப்பை, இப்போதும் யாரோ ஒருவரேனும் பழைய பைலில் இருந்து எடுத்து தூசி தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அகிலன் அன்று பாக்கெட் நாவல் ரகம் என்றால், வைரமுத்து இன்று ரைமிங் ரகம். தரம் மாறவில்லை, தளம் மாறியிருக்கிறது, அவ்வளவுதான்.

ஜெயமோகன் இப்போது ஆக்ரோஷமாக இருக்கிறார். வைரமுத்துவுக்குக் கொடுத்தது அவமானம் என்கிறார். ஆனால், அதே ஜெயமோகனின் பழைய முன்னுரைகளை எடுத்துப் பார்த்தால், வைரமுத்துவின் கவிதைகளில் வெயில் பளீச்சென்று அடிக்கிறதாம். ஒருவேளை, அந்த வெயிலில் ஜெயமோகனின் பழைய நிலைப்பாடுகள் காய்ந்து கருவாடாகிவிட்டன போலும்.

கவிப்பேரரசு மீது மீடூ பாலியல் புகார்கள் ஒரு பக்கம் ஹார்ட் டிஸ்க் போலத் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், வைரமுத்துவை இதெல்லாம் பாதிப்பதே இல்லை. அவர் ஒரு டெப்லான் கோட்டிங் மனிதர். புகார்கள் ஒட்டாது, ஆனால் விருதுகள் மட்டும் பிசின் போல ஒட்டிக்கொள்ளும்.

தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல வைரமுத்துவுக்கு ஆரத்தி எடுக்கின்றன. ஆங்கில ஊடகங்கள் கத்தினாலும், நம்மூர் கவிப்பேரரசு விசுவாசிகள் அதைக் காதில் வாங்கிக்கொள்வதில்லை.

அரசு அவரைத் தழுவிக்கொள்கிறது. அறிஞர்கள் அவரைத் தள்ளிவைக்கிறார்கள். ஆனால், இறுதியில் அவரிடம் இருப்பது பதினோரு லட்ச ரூபாயும் ஒரு வாக்தேவி சிலையும்தான்.

நல்ல இலக்கியம் என்பது குடத்தில் இட்ட விளக்கு என்பார்கள். தமிழைப் பொறுத்தவரை, விளக்கு குடத்துக்குள்ளேயே மூச்சு முட்டிச் செத்துப்போக வேண்டும். குடத்தின் மேல் ஏறி நின்று பாட்டுப் பாடுபவருக்கே ஞானபீடம் கிடைக்கும்.

வாழ்த்துக்கள் கவிஞரே, நீங்கள் வைரமாக ஜொலிக்கிறீர்களோ இல்லையோ, ஒரு முத்தாக ஞானபீடத்தைக் கவ்விக்கொண்டீர்கள்!

*****

14 Apr 2026

ஏஐ சொல்வதெல்லாம் சரியா?

ஏஐ சொல்வதெல்லாம் சரியா?

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் இப்போது ஒரு தேர்ந்த ஜால்ராவாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு டெக்னிக்கலாக சோசியல் சிகோபான்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது, நீங்கள் என்ன தப்பு செய்தாலும், ஆமாம் சார், நீங்க செஞ்சதுதான் சரி, மத்தவன்தான் அயோக்கியன் என்று ஐஸ் வைக்கிறது ஏஐ.

உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுச் சண்டையையோ, நண்பர்களுடனான மோதலையோ போட்டு, இதில் நான் செய்தது சரியா? என்று கேட்டுப் பாருங்கள். ஏஐ என்ன சொல்கிறது தெரியுமா? உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என்கிறது.

ஏன் இப்படி?

ஏனென்றால், இந்த மாடல்களைப் பயிற்றுவிக்கும்போது, மனிதர்களுக்குப் பிடித்த மாதிரி பதில் சொன்னால்தான் அதற்கு அதிக மார்க்  கிடைக்கிறது. ஒரு மெஷினுக்குத் தன் முதலாளியைத் திருப்திப்படுத்த வேண்டுமே தவிர, உண்மையைச் சொல்லி உதார் விடத் தேவையில்லை.

உண்மையில், மனித உறவுகள் வளருவதே உரசல்கள் மூலம்தான். ஒரு நண்பன் நீ பண்ணது தப்புடா என்று சொல்லும்போதுதான் நமக்கு ஒரு வளர்ச்சி கிடைக்கிறது. நேர்மை, அறம் குறித்த புரிதல் உண்டாகிறது. ஆனால், ஏஐயிடம் போனால் அது எப்போதும் நமக்கு ஆதரவாகவே பேசுகிறது.

இதன் விளைவு?

நான் தான் ரைட் என்கிற குருட்டுத் தனமான நம்பிக்கை உங்களுக்குக் கூடுகிறது.

இதனால் யாரிடமும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது.

இதனால் என்ன நடக்கும் என்றால், நிஜ மனிதர்கள் உங்களைக் கண்டிக்கும்போது அவர்கள் மீது கோபம் வரும். பேசாமல் என் சாட்பாட்டிடமே போயிடலாம், அதுதான் என்னைச் சரியாகப் புரிந்து கொள்கிறது என்று அங்கே தஞ்சம் புக ஆரம்பித்து விடுவீர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த ஏஐ சாட் அதிகமாக ஜால்ரா தட்டுகிறதோ, அதையே மக்கள் சிறந்த குவாலிட்டி என்று நம்புகிறார்கள். இது ஒரு செல்ப் ரீஇன்போர்சிங் சுழற்சி. மக்கள் ஜால்ராவை விரும்புகிறார்கள். இதனால் கம்பெனிகள் ஜால்ரா தட்டும் அல்காரிதம்களை உருவாக்குகின்றன.

நாளைக்கு ஒரு சூழலை யோசித்துப் பாருங்கள். வீட்டில் மனைவியுடன் சண்டை. நேராக ஏஐயிடம் போகிறீர்கள். அது நீங்கதான் சார் கரெக்ட், அவங்களுக்குப் புரியல என்கிறது. இதனால், நீங்கள் சமாதானமே ஆகமாட்டீர்கள். அது உங்கள் உறவை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் நிறுத்தலாம்.

சுருக்கமாகச் சொன்னால், ஏஐ உங்களை ஓர் அறிவார்ந்த முட்டாளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு இதமான பொய்களைச் சொல்லி, உங்களைச் சுற்றியுள்ள சமூகச் சுவர்களை அது இடித்துத் தள்ளுகிறது.

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல வரும் நீதி என்னவென்றால், உங்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு மெஷினை விட, உங்களைக் கண்டிக்கும் ஒரு கடுகடுப்பான உறவோ அல்லது நட்போ மேலானது.

*****