16 Apr 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – பிரீமியம் கட்டினால் காதல் கிடைக்குமா?

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி –

பிரீமியம் கட்டினால் காதல் கிடைக்குமா?

எல்ஐகே – ஒரு திரைப்பார்வை

விக்னேஷ் சிவன் எப்போதுமே ஒரு கலர்புல் உலகத்தைத்தான் சமைப்பார். இந்த முறையும் அதையே செய்திருக்கிறார். ஆனால், இதில் கொஞ்சம் பியூச்சரிஸ்டிக் மசாலா மிக்சிங் பண்ணியிருக்கிறார். அவர் எப்போதுமே காதல் எனும் பழைய ஊறுகாயை புது ஜாடியில் போட்டுத் தருவதில் கில்லாடி. இந்த முறை ஜாடி கொஞ்சம் காஸ்ட்லி.  2040 ஆம் வருடத்தில் உலகம் முழுவதும் செல்போனுக்குள் சுருங்கிவிட்டதாம். இப்போதும் அப்படித்தானே இருக்கிறது என்று லாஜிக் பேசக்கூடாது!

காதலுக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் ஒரு நிறுவனம். அதாவது, உங்கள் காதலி உங்களைக் கழற்றிவிட்டால் அல்லது காதல் தோல்வியடைந்தால், அதற்கு ஒரு செட்டில்மென்ட் கிடைக்கும் என்பதுதான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் கான்செப்ட். ஆனால், உண்மையில் படத்தின் கரு என்னவென்றால், எல்லாவற்றிற்கும் இன்சூரன்ஸ் எடுக்கலாம், ஆனால் எடுத்த இன்சூரன்ஸை க்ளைம் செய்வதற்குள் நமக்கு உயிர் போய்விடும் என்பதுதான்.

படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் இன்னும் அந்த லவ் டுடே ஹேங்ஓவரிலேயே இருக்கிறார்.  அது அவருக்கு செட் ஆகிறது என்பதுதான் உண்மை. ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் பதற்றத்தையும், குழப்பத்தையும் அவர் அப்படியே பிரதிபலிக்கிறார். ஆனால், சில இடங்களில் அவர் ஓவர்-ஆக்டிங் செய்கிறாரா அல்லது கேரக்டர் அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கவனிக்க வேண்டிய குறிப்பு என்னவென்றால், இன்சூரன்ஸ் தொகை அவ்வளவு வராது! கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு அவர் வளைந்து நெளிந்து கொடுக்கும் போஸ்கள் இருக்கிறதே. அது ஒரு தனி கலை. டியூட் கதாபாத்திரங்களுக்கு இவர்தான் இப்போது ஆஸ்தான நடிகர் போல.

படத்தின் நாயகி கிரித்தி செட்டி திரையில் வந்து போகிறார். அழகாக இருக்கிறார். விக்னேஷ் சிவன் படங்களில் நாயகிகளுக்கு அதிக வேலை இருக்காது, நாயகனைச் சுற்றி ஒரு அழகான வளையமாக இருந்தால் போதும். இதில் கிரித்தி அந்த வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் சில சமயம் இழுவையாக இருந்தாலும், எமோஷன் காட்சிகளில் க்ளிக் ஆகிறார். ஒரு போன் மெமரி புல்லானால் வரும் பதற்றம் அவர் முகத்தில் அச்சு அசலாகத் தெரிகிறது.

வில்லன் எஸ்.ஜே.சூர்யா. படத்திற்கு ஆக்சிஜன் இவர்தான். அந்த அலப்பறையான நடிப்பு, பாடி லாங்குவேஜ் எனத் திரையை ஆக்கிரமிக்கிறார். படத்தில் அதிகமாக கத்துகிறார். ஆனால், ரசிக்க முடிகிறது. படத்தில் அவருக்குப் பெயர் சூரியன். ஆனால் அவர் பேசுவது, கத்துவது எல்லாம் எரிமலையிலிருந்து வரும் சத்தம் போல இருக்கிறது. டிராகன் போல சீறுகிறார். மனிதர் எனர்ஜியில் மட்டும் இன்னும் 2024 ஆம் வருடத்திலேயே நிற்கிறார்.

படத்தின் பாதி பலம் அனிருத்தின் மியூசிக். பிஜிஎம்மில் காது கிழிகிறது, ஆனால் அது ஒரு பெப்பி பீலைத் தருகிறது. அனிருத் ஒரு ரோபோவுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.  பாடுவது போதாதென்று இப்போது பேசவும் ஆரம்பித்துவிட்டார். நல்லவேளை, அது ஸ்வீட் சர்ப்ரைஸ்!

காதலுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் முடிச்சுப் போட்ட விதம் சுவாரஸ்யம். சில காட்சிகள் ஜவ்வாக இழுக்கின்றன. எடிட்டர் கத்தரி போடத் தயங்கியது தெரிகிறது. ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த காமெடி என்பதால் லாஜிக் பார்க்கக்கூடாது என இயக்குநர் ஒரு டிஸ்கிளைமர் போட்டிருக்கலாம்.

நீங்கள் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் டைப் படங்களை ரசிப்பவர் என்றால், இந்த எல்ஐகே பாலிசி உங்களுக்கு லாபகரமானது.

படத்தின் மைனஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஒரு ரீல்ஸில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு மணி நேரமாக இழுத்திருக்கிறார்கள். பிளாஸ்பேக் ஆழமே இல்லாமல் வந்து போகிறது. ஏதோ அவசரமாக எடுத்த ஷார்ட் பிலிம் போல இருக்கிறது.

விக்னேஷ் சிவன் நிறைய ஐடியாக்களை வைத்திருக்கிறார், ஆனால் அதை ஒழுங்காக மூட்டை கட்டத்தான் கொஞ்சம் சோம்பேறித்தனம் காட்டியிருக்கிறார்.

காதலுக்கு இன்சூரன்ஸ் அவசியமோ இல்லையோ, இந்தப் படத்தைப் பார்க்கும்போது இடைவேளையில் ஒரு காபி குடிப்பதற்கு நல்ல லைப் இன்சூரன்ஸ் அவசியம். விக்னேஷ் சிவன் இன்ஸ்டால் செய்திருக்கும் இந்த உலகத்தை ஒருமுறை லைக் செய்யலாம், ஆனால் ஷேர் செய்வதற்கு யோசிக்க வேண்டும்!

சீரியஸாக படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு ரிஸ்க் ஆன முதலீடு! படத்தை ஒருமுறை பார்க்கலாம். ஆனால், க்ளைம் கிடைக்காது! பாலிசிதாரர்களுக்குப் பாதி லாபம்!

படத்துக்குப் பத்துக்கு 5½ மார்க் கொடுக்கலாம் படத்திற்கு, அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா எதற்கென்றால், ரோபோவை நல்ல நடிகராக்கியதற்கு.

*****

டயக்னோசிஸ் – எல்லா நாடுகளிலும் ஓர் எட்டாக்கனி!

டயக்னோசிஸ் – எல்லா நாடுகளிலும் ஓர் எட்டாக்கனி!

நோய்க் கண்டறிதல் என்பது எல்லா நாடுகளிலும் எட்டாக் கனியாகவே உள்ளது. அது அமெரிக்காவாகவே இருந்தாலும் சரிதான். அமெரிக்கா என்றால் நமக்குத் தெரிந்தது அதிநவீன மருத்துவமனைகளும், கண்ணிமைக்கும் நேரத்தில் மரபணுவை வரிசைப்படுத்தும் மெஷின்களும்தான். ஆனால், அங்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் ஒரு விசித்திரமான நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நரகத்தின் பெயர், பெயரிடப்படாத நோய்.

அலெக்ஸாண்ட்ரா சிபர்லின் எழுதிய தி எலுசிவ் பாடி என்ற புத்தகத்தைப் படித்தால், நீங்கள் இந்த உண்மையை அறியலாம்.

ஏழு வருடங்களாகத் திரட்டிய தகவல்களை வைத்து அவர் ஒரு டயக்னோசிஸ் க்ரைஸிஸ் சித்திரத்தை வரைந்திருக்கிறார்.

புத்தகத்தில் வரும் ப்ராக்டர் உடன்பிறப்புகளின் கதை பகீர் ரகம். அவர்களுக்கு ஒரு மரபணு மாற்றம். விளைவு? அவர்களின் தசைநார்கள் மெல்ல மெல்ல சிமெண்ட் போலக் கல்லாக மாறுகின்றன.

இன்னொரு பக்கம் 30 வயது மார்க். ஒரு காலத்தில் சைக்கிளிங் செய்தவர், இப்போது மூன்று சக்கர வண்டியில் கூட பேலன்ஸ் செய்ய முடியாமல் தள்ளாடுகிறார்.

டாக்டர்களிடம் போனால், உங்களுக்கு ஒன்றுமில்லை, எல்லாம் மனப்பிரமை, என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அல்லது, ஒரு ஸ்பெஷலிஸ்ட்டிடம் இருந்து இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்டுக்கு பந்து போலத் தட்டி விடுகிறார்கள்.

பொதுவாக இது போன்ற புத்தகங்களில் டாக்டர்கள் எல்லாம் மோசமானவர்கள், நோயாளிகள் பாவம் என்கிற ரீதியில்தான் எழுதுவார்கள். ஆனால் சிபர்லின் அப்படிச் செய்யவில்லை. அவருக்கும் டாக்டர்கள் மேல் அனுதாபம் இருக்கிறது.

நிமிடத்திற்கு நிமிடம் ஓடும் கார்ப்பரேட் மருத்துவ உலகில், ஒரு நோயாளியின் கதையை நிதானமாக உட்கார்ந்து கேட்க டாக்டர்களுக்கு நேரமில்லை.

ஒரு எக்ஸ்ரே எடுப்பதற்கான நேரம்தான் இன்று டயக்னோசிஸ் செய்ய ஒதுக்கப்படுகிறது, என்கிறார்கள் நோயாளிகள் பக்கம் நின்று வாதாடும் அனுதாபிகள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பீடியாட்ரிக் நியூராலஜிஸ்ட் டயானா செஜாஸ். அவரே ஒரு டாக்டர். தன் கழுத்தில் ஒரு கட்டி இருப்பதை அவரே கண்டுபிடித்துச் சொல்கிறார். சக டாக்டர்கள் அதை அலட்சியப்படுத்துகிறார்கள். கடைசியில் அது கேன்சர் என்று தெரிய வருகிறது. ஒரு டாக்டருக்கே இந்த நிலை என்றால், சாதாரண ஆசாமியின் கதி?

அமெரிக்கா மருத்துவத்திற்காக வாரி இறைக்கும் பணம் உலகிலேயே அதிகம். ஆனால், அங்கே நோயைக் கண்டுபிடிப்பதிலேயே இத்தனை ஓட்டைகள்.

இந்தப் புத்தகம் சொல்லும் செய்தி ஒன்றுதான். மருத்துவ உலகம் வெறும் மெஷின்களையும் டெஸ்ட்டுகளையும் மட்டும் நம்பாமல், நோயாளியின் கதையைக் கேட்க மீண்டும் பழக வேண்டும்.

கண்டுபிடிக்கப்படாத நோய் என்பது ஓர் இருட்டு அறை. அதில் டார்ச் அடித்துத் தேடும் முயற்சியே இந்தப் புத்தகத் தேடல்.

உங்கள் உடம்பில் ஏதோ ஒன்று சரியில்லை என்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால், அதை ஒரு டாக்டர் மறுத்தால், இன்னொரு டாக்டரிடம் போங்கள்.

சில நேரம் மெஷின்களை விட உங்கள் உடம்பு சொல்வது உண்மையாக இருக்கும்!

*****

15 Apr 2026

ஞானபீடக் கூத்து – ஒரு கவித்துவமான அனர்த்தம்!

ஞானபீடக் கூத்து – ஒரு கவித்துவமான அனர்த்தம்!

வழக்கம்போல ஒரு விபத்து நடந்திருப்பதாகச் சிறுபத்திரிகைகள் அலறுகின்றன. இந்த முறை வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டிருப்பதை தீவிர எழுத்தாளர்கள் ஏற்கவில்லை. இது தமிழ் இலக்கியப்பரப்பில் இது ஒரு பூகம்பத்தைக் கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், உண்மையில் இது ஒரு தேநீர்க்கோப்பைக்குள் விழுந்த ஈயைப் போன்ற சலசலப்பையே உருவாக்கியிருக்கிறது.

சுமார் இருநூறு எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு கண்டன அறிக்கையைத் தட்டச்சு செய்திருக்கிறார்கள். இது தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்கிறார்கள். பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை, ஞானபீடம் என்பது இலக்கியத் தகுதிக்கு வழங்கப்படும் விருதல்ல, அது ஒரு லாபி விளையாட்டுக்கான சான்றிதழ் என்பது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அகிலன் வாங்கியபோது சுந்தர ராமசாமி கிழித்த அதே கிழிப்பை, இப்போதும் யாரோ ஒருவரேனும் பழைய பைலில் இருந்து எடுத்து தூசி தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அகிலன் அன்று பாக்கெட் நாவல் ரகம் என்றால், வைரமுத்து இன்று ரைமிங் ரகம். தரம் மாறவில்லை, தளம் மாறியிருக்கிறது, அவ்வளவுதான்.

ஜெயமோகன் இப்போது ஆக்ரோஷமாக இருக்கிறார். வைரமுத்துவுக்குக் கொடுத்தது அவமானம் என்கிறார். ஆனால், அதே ஜெயமோகனின் பழைய முன்னுரைகளை எடுத்துப் பார்த்தால், வைரமுத்துவின் கவிதைகளில் வெயில் பளீச்சென்று அடிக்கிறதாம். ஒருவேளை, அந்த வெயிலில் ஜெயமோகனின் பழைய நிலைப்பாடுகள் காய்ந்து கருவாடாகிவிட்டன போலும்.

கவிப்பேரரசு மீது மீடூ பாலியல் புகார்கள் ஒரு பக்கம் ஹார்ட் டிஸ்க் போலத் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், வைரமுத்துவை இதெல்லாம் பாதிப்பதே இல்லை. அவர் ஒரு டெப்லான் கோட்டிங் மனிதர். புகார்கள் ஒட்டாது, ஆனால் விருதுகள் மட்டும் பிசின் போல ஒட்டிக்கொள்ளும்.

தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல வைரமுத்துவுக்கு ஆரத்தி எடுக்கின்றன. ஆங்கில ஊடகங்கள் கத்தினாலும், நம்மூர் கவிப்பேரரசு விசுவாசிகள் அதைக் காதில் வாங்கிக்கொள்வதில்லை.

அரசு அவரைத் தழுவிக்கொள்கிறது. அறிஞர்கள் அவரைத் தள்ளிவைக்கிறார்கள். ஆனால், இறுதியில் அவரிடம் இருப்பது பதினோரு லட்ச ரூபாயும் ஒரு வாக்தேவி சிலையும்தான்.

நல்ல இலக்கியம் என்பது குடத்தில் இட்ட விளக்கு என்பார்கள். தமிழைப் பொறுத்தவரை, விளக்கு குடத்துக்குள்ளேயே மூச்சு முட்டிச் செத்துப்போக வேண்டும். குடத்தின் மேல் ஏறி நின்று பாட்டுப் பாடுபவருக்கே ஞானபீடம் கிடைக்கும்.

வாழ்த்துக்கள் கவிஞரே, நீங்கள் வைரமாக ஜொலிக்கிறீர்களோ இல்லையோ, ஒரு முத்தாக ஞானபீடத்தைக் கவ்விக்கொண்டீர்கள்!

*****

14 Apr 2026

ஏஐ சொல்வதெல்லாம் சரியா?

ஏஐ சொல்வதெல்லாம் சரியா?

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் இப்போது ஒரு தேர்ந்த ஜால்ராவாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு டெக்னிக்கலாக சோசியல் சிகோபான்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது, நீங்கள் என்ன தப்பு செய்தாலும், ஆமாம் சார், நீங்க செஞ்சதுதான் சரி, மத்தவன்தான் அயோக்கியன் என்று ஐஸ் வைக்கிறது ஏஐ.

உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுச் சண்டையையோ, நண்பர்களுடனான மோதலையோ போட்டு, இதில் நான் செய்தது சரியா? என்று கேட்டுப் பாருங்கள். ஏஐ என்ன சொல்கிறது தெரியுமா? உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என்கிறது.

ஏன் இப்படி?

ஏனென்றால், இந்த மாடல்களைப் பயிற்றுவிக்கும்போது, மனிதர்களுக்குப் பிடித்த மாதிரி பதில் சொன்னால்தான் அதற்கு அதிக மார்க்  கிடைக்கிறது. ஒரு மெஷினுக்குத் தன் முதலாளியைத் திருப்திப்படுத்த வேண்டுமே தவிர, உண்மையைச் சொல்லி உதார் விடத் தேவையில்லை.

உண்மையில், மனித உறவுகள் வளருவதே உரசல்கள் மூலம்தான். ஒரு நண்பன் நீ பண்ணது தப்புடா என்று சொல்லும்போதுதான் நமக்கு ஒரு வளர்ச்சி கிடைக்கிறது. நேர்மை, அறம் குறித்த புரிதல் உண்டாகிறது. ஆனால், ஏஐயிடம் போனால் அது எப்போதும் நமக்கு ஆதரவாகவே பேசுகிறது.

இதன் விளைவு?

நான் தான் ரைட் என்கிற குருட்டுத் தனமான நம்பிக்கை உங்களுக்குக் கூடுகிறது.

இதனால் யாரிடமும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது.

இதனால் என்ன நடக்கும் என்றால், நிஜ மனிதர்கள் உங்களைக் கண்டிக்கும்போது அவர்கள் மீது கோபம் வரும். பேசாமல் என் சாட்பாட்டிடமே போயிடலாம், அதுதான் என்னைச் சரியாகப் புரிந்து கொள்கிறது என்று அங்கே தஞ்சம் புக ஆரம்பித்து விடுவீர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த ஏஐ சாட் அதிகமாக ஜால்ரா தட்டுகிறதோ, அதையே மக்கள் சிறந்த குவாலிட்டி என்று நம்புகிறார்கள். இது ஒரு செல்ப் ரீஇன்போர்சிங் சுழற்சி. மக்கள் ஜால்ராவை விரும்புகிறார்கள். இதனால் கம்பெனிகள் ஜால்ரா தட்டும் அல்காரிதம்களை உருவாக்குகின்றன.

நாளைக்கு ஒரு சூழலை யோசித்துப் பாருங்கள். வீட்டில் மனைவியுடன் சண்டை. நேராக ஏஐயிடம் போகிறீர்கள். அது நீங்கதான் சார் கரெக்ட், அவங்களுக்குப் புரியல என்கிறது. இதனால், நீங்கள் சமாதானமே ஆகமாட்டீர்கள். அது உங்கள் உறவை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் நிறுத்தலாம்.

சுருக்கமாகச் சொன்னால், ஏஐ உங்களை ஓர் அறிவார்ந்த முட்டாளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு இதமான பொய்களைச் சொல்லி, உங்களைச் சுற்றியுள்ள சமூகச் சுவர்களை அது இடித்துத் தள்ளுகிறது.

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல வரும் நீதி என்னவென்றால், உங்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு மெஷினை விட, உங்களைக் கண்டிக்கும் ஒரு கடுகடுப்பான உறவோ அல்லது நட்போ மேலானது.

*****

ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ ஏமாற்றம் இலவசம்!

ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ ஏமாற்றம் இலவசம்!

தெருவில் ஒரு டெம்போ வேன் அலறிக்கொண்டு வந்தது. உள்ளே கொய்யாப்பழங்கள்.

ஒரு கிலோ நூறு ரூபாயாம். கூடவே ஒரு கிலோ இலவசமாம்.

இந்த இலவசம் என்ற சொல்லைக் கேட்டதுமே, நம் ஊர் மக்களுக்கு மூளையில் இருக்கும் லாஜிக் செல்கள் தற்காலிகமாகச் செயலிழந்துவிடும் என்பது அந்த வியாபாரிக்குத் தெரிந்திருந்தது.

கூட்டத்தைப் பிளந்து கொண்டு உள்ளே சென்றான் பஞ்சநாதன். பழங்கள் அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டு, பெட்டிகள் எல்லாம் பாரிஸ் நகரத்து வாசனைத் திரவிய டப்பாக்கள் போலப் பளபளவென மின்னின.

ஒண்ணு திறந்து காட்டுப்பா, என்றான் பஞ்சநாதன்.

வியாபாரி ஒரு தத்துவஞானியைப் போலப் பார்த்தார். பெட்டியைப் பிரிச்சா நீங்கதான் வாங்கணும் சாமி, என்றார். இது குழந்தையைப் பெத்தா நீங்கதான் வளர்க்கணும் என்பது போன்ற ஒரு தார்மீகக் கட்டளை.

பஞ்சநாதன் வீம்புக்குச் சம்மதித்தான்.

பெட்டியைத் திறந்தார் வியாபாரி.

உள்ளே இருந்த கொய்யாப்பழங்கள் ஒவ்வொன்றும் மஞ்சள் வைரங்கள் போல மின்னின. எடுத்துச் சுவைத்தான் பஞ்சநாதன். தேவாமிர்தம்!

இரண்டு கிலோ, அதாவது நிஜத்தில் ஒரு கிலோவுக்கு ஒரு கிலோ இலவசம் என்பதால், நான்கு கிலோ வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

வீட்டுக்கு வந்து பெட்டியைத் தோண்டியபோதுதான் புரிந்தது, அந்த வியாபாரி ஒரு சிறந்த லேயரிங் கலைஞர் என்று.

மேலே இருந்த கொய்யாப்பழங்கள் ஆரோக்கியமாக, ஜிம்முக்குச் சென்ற உடற்கட்டோடு இருந்தன.

அடியில் இருந்தவை எல்லாம் தற்கொலை செய்துகொண்டவை போல அழுகி, நசுங்கி, கூழாகிக் கிடந்தன.

கடைசியில் எடையைப் போட்டுப் பார்த்தால், அந்தப் பெட்டிக்கும் லேபிளுக்கும் தான் அதிக விலை கொடுத்திருப்பது தெரிந்தது.

ஒரு கிலோ என்று அவர்கள் சொன்னதில் கால் கிலோ என்பது வெறும் பேக்கிங் மற்றும் அந்த வியாபாரியின் புத்திசாலித்தனமானப் பொய். ஒரு கிலோவுக்கு எஞ்சியது முக்கால் கிலோதான்.

ஒரு பெட்டி அழகாக இருக்கிறது என்பதற்காக அதை நம்பிவிடாதீர்கள். மேக்கப் கலை கொய்யாப்பழப் பெட்டிகளுக்கும் வந்துவிட்டது. அடியில் இருப்பதை ஆராயாமல் பொருளை வாங்குவது, புகைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு மாப்பிள்ளை அல்லது பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமம்!

*****

13 Apr 2026

குறுந்தத்துவக் குறிப்புகள்!

குறுந்தத்துவக் குறிப்புகள்!

செயற்றை நுண்ணறிவை விட இயற்கை நுண்ணறிவு மேலானதா?

நிச்சயமாக. எப்படி என்கிறீர்களா? முதலீடுகளை விழுங்கியபடி லாபம் ஈட்ட போராடிக் கொண்டிருக்கிறது செயற்கை நுண்ணறிவு. எந்தவித முதலீடும் இல்லாமல் லாபத்தை அள்ளித் தந்தபடி முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது இயற்கை நுண்ணறிவு. அது எப்படி என்கிறீர்களா? செயற்றை நுண்ணறிவில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று மனிதர்களின் இயற்கை நுண்ணறிவு தூண்டி விட அதை நம்பித்தானே செயற்கை நுண்ணறிவை நோக்கி முதலீடுகள் குவிகின்றன. ஆக எப்படிப் பார்த்தாலும் மனிதர்களின் இயற்கை நுண்ணறிவைச் செயற்கை நுண்ணறிவு ஒரு போதும் முந்த முடியாது.

*****

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டா?

உண்டு.

தீர்வே இல்லாத பிரச்சனைக்கு எப்படித் தீர்வு உள்ளது என்று சொல்ல முடியும்?

ஒரு பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்பதும் ஒரு தீர்வே.

*****

ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காமல் சேர்ந்திருக்க முடியாதா?

ஏன் முடியாது?!

முன்பு அதற்குப் பெயர் கூட்டுக் குடும்பம்.

இன்று அரசியலில் அதற்குப் பெயர் கூட்டணி. நிரந்தர எதிரிகளும் கூடியிருக்கும் அற்புத இடம் அது.

*****

வீட்டுமுறைச் சாப்பாடு என எழுதப்பட்டிருக்கும் ஓட்டலைப் பார்க்கும் போது மனதின் குரல் எப்படிப் பேசும் தெரியுமா?

“வீட்டுச் சாப்பாடு பிடிக்காமல்தான் இங்கே வந்தேன். இங்கேயுமாடா?!”

*****

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு எப்போது கிடைக்கும்?

அவர் அமைதியாக இருக்கும் போது!

*****

ஒரு கிலோ பிரியாணியும், ஐந்து விரல் சாபமும்!

ஒரு கிலோ பிரியாணியும், ஐந்து விரல் சாபமும்!

கூட்டத்தை எப்போது கூட்ட வேண்டும், எப்போது கலைக்க வேண்டும் என்பது தெரிந்தால் நீங்களும் ஓர் அரசியல்வாதிதான்.

மக்களும் முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு அனைத்தும் தெரியும்.

அரசியல் கட்சிகள் ஒரு பிசினஸ் மாடலில் ஓடும்போது, மக்கள் மட்டும் ஏன் தர்மகர்த்தா மாதிரி யோசிக்க வேண்டும்?

ஓர் அரசியல் கூட்டத்திற்குப் போனால் இருநூறோ, முந்நூறோ கிடைக்கும் என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைப் பொருளாதாரப் பகுத்தறிவு எனலாம்.

இன்றைய அரசியலில் புனித பிம்பங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. காந்தி, காமராஜர் போல யாரும் இப்போது புனிதம் வேடம் போடுவதில்லை.

மக்களுக்கும் தெரியும் இவர்கள் பணம் கொடுத்து ஜெயித்தவர்கள் என்று.  தலைவர்களுக்கும் தெரியும் இவர்கள் காசு வாங்கித்தான் ஓட்டுப் போட்டார்கள் என்று.

இரு தரப்புமே ஒருவருக்கு ஒருவர் நடித்துக் கொள்கிறார்கள். இது ஒரு பரஸ்பர நடிப்பு விழா.

அரசியல்வாதி வெளியில், நான் உங்களுக்குச் சேவை செய்யப் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டாலும், மனதுக்குள் போட்ட முதலை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதை யோசித்தபடி இருக்கிறார்.

மக்களும் நீங்கள்தான் எங்கள் கடவுள் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், மனதுக்குள் ஓட்டுக்கு இன்னும் ஒரு ஐநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் குறைந்தா போய் விடுவார் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. இங்கே முதலீடு அதிகம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலைக் காக்கப் பணம் தருகிறார்கள். கான்ட்ராக்டர்கள் தரமற்ற வேலையைக் கண்டு கொள்ளாமல் இருக்க கமிஷன் தருகிறார்கள். இப்படி அரசியல்வாதிகளுக்குப் பணம் வர, அவர்கள் வேட்பாளர்களாகும் போது ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் கணக்குப் பார்த்து செலவு செய்கிறார்கள்.

கட்சிகள் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதே அவரது செலவு செய்யும் தகுதியை வைத்துத்தான். இவர் நல்லவர் என்பதை விட, இவர் கரன்சியால் மக்களை எந்த அளவுக்குக் குளிப்பாட்டுவார் என்பதுதான் இன்றைய தகுதித் தேர்வு.

அக்காலத்தில் மக்கள் தரையில் உட்கார்ந்து, சொந்தக் காசில் வேர்க்கடலை வாங்கித் தின்றபடி தலைவர்களின் பேச்சைக் கேட்டார்கள். இன்று, இருக்கையில் பிரியாணிப் பொட்டலம் இல்லை என்றால் தலைவரைப் பார்க்கக் கூட ஆள் வருவதில்லை. அந்தப் பிரியாணி பொட்டலத்தோடு தரப்படும் தண்ணீர் பாட்டிலிலும் தலைவரின் முகம் சிரிக்கிறது.

ஆனால் ஒரு தர்க்கம் இடிக்கவே செய்கிறது. வாக்காளர் வாங்கும் அந்த ஆயிரம் ரூபாயோ, ஒரு பொட்டலம் பிரியாணியோ அவர்களது கேள்வி கேட்கும் உரிமையை அப்படியே லபக் செய்து விடுகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான இந்தக் கேள்விக் கேட்கும் உரிமை போய் விட்டால், அங்கே மிச்சம் என்ன இருக்கிறது?

வாக்காளர் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் போது இன்னொன்றும் நிகழ்கிறது. அது என்னவென்றால், வாக்காளர் ஒரு விரலை நீட்டி ஊழல்வாதி என்று ஓர் அரசியல்வாதியைச் சொல்லும்போது, மற்ற மூன்று விரல்களும் நீயும் அந்த ஊழலில் பங்கு வாங்கி பிரியாணி தின்றவர்தானே என்று சொல்லும்.

மேலும் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டைப் போடும் போது ஒரு மாயாஜாலமே நடக்கும். அரசியல் என்பது வாரிசுத் தொழில் ஆகி விடும். அதாகப்பட்டது, தேசியத் தலைவர் மகன் அடுத்த தேசியத் தலைவர். மாநிலத் தலைவர் மகன் அடுத்த மாநிலத் தலைவர். மாவட்டத் தலைவர் மகன் அடுத்த மாவட்டத் தலைவர். தப்பித்தவறி வேறு யாராவது உள்ளே வந்தால், அவர்கள் மாலை போடவும் வாழ்க சொல்லவும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதெல்லாம் சகஜமப்பா என்ற மனநிலைதான் நம் ஜனநாயகத்தின் ஆகப்பெரிய எதிரி. ஓர் அரசு தன் கடமையைச் செய்வதைச் சாதனை என்று விளம்பரம் செய்கிறது. அதை எதிர்க்கட்சி வேதனை என்கிறது. இதற்கு நடுவில் உண்மையான மக்களாட்சி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், மாற்றத்திற்கான முணுமுணுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்கத்தான் செய்கின்றன. எத்தனை காலம்தான் அவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள், இவர்கள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்? அதிலும் ஒரு மாற்றமோ, புரட்சியோ வெடிக்கக் கூடும். அப்போது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது திருத்தி எழுதப்படும்.

*****