7 May 2026

நோய் நாடி… நோய் முதல் நாடி…

நோய் நாடி… நோய் முதல் நாடி…

அறிவியல் வளர வளர நோய்கள் பற்றிய அறிவு மக்களுக்கு ஜாஸ்தியாகிவிட்டது. முன்னெல்லாம் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது புதுப் புது மருந்துகள், தடுப்பூசிகள் என மருத்துவத் தொழில்நுட்பம் வந்து நம்மை சாக விடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

விளைவு?

மனிதனின் சராசரி ஆயுட்காலம் எகிறிக்கொண்டே போகிறது.

கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நாற்பது, ஐம்பது வயதிலேயே கிளம்பிப் போய்க்கொண்டிருந்த மனிதன், இப்போது 72 வயது வரைக்கும் விக்கெட் விழாமல் தாக்குப் பிடிக்கிறான். வெறும் உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டால் போதாது, மனசையும் கொஞ்சம் சர்வீஸ் செய்ய வேண்டும் என்கிறது முதுமை பற்றிய ஆய்வுகள்.

நவீன மருத்துவ ஆய்வுகள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. நீ நன்றாகச் சாப்பிடுவது, எக்சர்சைஸ் செய்வது, தம் அடிக்காமல் இருப்பது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நீ எவ்வளவு காலம் ஓடுவாய் என்பதை உன்னுடைய ரத்தத்தில் ஓடும் மரபணுக்கள் தான் முடிவு செய்கின்றன என்கிறது. அதாவது, உன் தாத்தா-பாட்டி கொடுத்த கிப்ட் அது என்கிறது.

மனிதன் செத்துப் போவதற்கு வெளிக்காரணிகள், உள்காரணிகள் என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. மனிதர்கள் மேலே போவது எந்த வழியில்வேண்டுமானாலும் நடக்கலாம்.

விபத்துகளில் சாகாமல் தப்பிப்பவர்களில் 55 சதவீத பேர், அவர்கள் உடம்பில் இருக்கும் அந்த ஜீன்களால் தான் நீண்ட நாள் வாழ்கிறார்களாம். டென்மார்க், ஸ்வீடன் பக்கம் போய் ஆராய்ச்சி பண்ணியதில் இது கன்பார்ம் ஆகியிருக்கிறது.

எண்பது வயதைத் தாண்டியும், இருபது வயதுப் பையன்களை விட சுறுசுறுப்பாக, ஷார்ப்பாக இருப்பவர்களை சூப்பர் ஏஜர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்களுடைய மூளையில் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி, ஆற்றுத் தண்ணீர் மாதிரி புதுப் புது நியூரான்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறதாம். சும்மா சொல்லக்கூடாது, இவர்களுடைய மூளை ஒரு நெகிழ்வுத் தன்மையோடு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது.

இந்த சூப்பர் பவர் உங்களுக்கும் வேண்டும் என்றால், நல்ல தூக்கம் முக்கியம், உடற்பயிற்சி அவசியம், சத்தான உணவு வேண்டும், மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.

நம் ஊர் பெரிய மனுஷர்கள் சொல்வது போல, மனுஷன் உழைச்சுச் சாகுறது இல்ல, கவலையாலயும் மன உளைச்சலாலயும் தான் சாகுறான் என்பது நவீன ஆய்வுகள் மூலமாக உண்மை என வெளிச்சமாகியிருக்கிறது.

மனம் உடம்புக்கு அடிமையாக இருக்கிறது. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே உங்கள் உடம்பு மாறுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் பொறாமை, கோபம், ஸ்ட்ரெஸ் எல்லாம் அழைக்காத விருந்தாளியாக வந்து நம்மை அரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், திடீர் மரணங்கள் சாதாரணமாகிவிட்டன.

ஆக, நோயில்லாத வாழ்க்கை என்பது இப்போதைக்கு ஒரு அழகான ஸ்டேட்டஸ் மட்டும்தான். ஆனால், அந்த கனவை நோக்கித்தான் நம் மரபணுக்கள் போராடிக்கொண்டிருக்கின்றன.

*****

6 May 2026

லவ் பாம்பிங் – இதயத்தில் இடம்பிடித்து, பையில் கைவைக்கும் கலை!

லவ் பாம்பிங் – இதயத்தில் இடம்பிடித்து, பையில் கைவைக்கும் கலை!

வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றது அன்பு என்பார்கள். ஆனால், இன்றைய இன்டர்நெட் காலத்தில் அன்பின் விலை எவ்வளவு தெரியுமா? உங்கள் வங்கிச் சேமிப்பில் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவுதான்.

சமீபகாலமாக லவ் பாம்பிங் என்றொரு போர்முறை பரவி வருகிறது. இது ஒன்றும் ராணுவ ரகசியம் அல்ல. உங்கள் போனுக்கு வரும் ஒரு ஹாய் டியர் மெசேஜில்தான் இதன் தொடக்கம் இருக்கிறது.

யாரோ தெரியாத ஒரு முகவரியிலிருந்து மெசேஜ் வரும். அந்த டி.பியை பார்த்தால் ஏதோ ஒரு சினிமா ஸ்டார் போல இருப்பார். உண்மையில் அந்தப் படத்தின் பின்னால் இருப்பது ஒரு நடுத்தர வயது ஆசாமியாகவோ அல்லது ஏ.ஐ உருவாக்கிய பிம்பமாகவோ இருக்கலாம்.

நமக்குத்தான் யார் அது? என்று தெரிந்துகொள்ளும் அரிப்பு அதிகம் அல்லவா?

யார் நீங்க? என்று ஒரு மெசேஜைத் தட்டிவிடுவோம்.

அவ்வளவுதான், தூண்டில் விழுந்துவிட்டது.

உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சேன். பயமா இருந்தது, என்று அந்தப் பக்கம் இருந்து பதில் வரும்.

இன்றைய தனிமை உலகில், யாராவது நம்மிடம் நாலு வார்த்தை அன்பாகப் பேச மாட்டார்களா என்று ஏங்குபவர்களுக்கு இது அமிர்தம்.

மெல்ல மெல்ல மெசேஜ்கள் போன் கால்களாக மாறும். காலையில் குட் மார்னிங் தொடங்கி இரவு குட் நைட் வரை உங்கள் காதுகள் அந்தப் பக்கத்து குரலுக்கு அடகு வைக்கப்படும்.

இந்த இடைவெளியில், நீங்கள் உங்கள் சொந்தக் கதை, சோகக் கதை மற்றும் யாருக்கும் தெரியாத அந்தரங்க ரகசியங்கள் அனைத்தையும் வாந்தியெடுத்து விடுவீர்கள். அந்த ரகசியங்கள்தான் பின்னாளில் உங்களை மிரட்டப் பயன்படும் வெடிகுண்டுகள்.

திடீரென்று ஒரு நாள் அந்தப் பக்கத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்கும்.

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்!

அப்பாவுக்கு அப்பென்டிசிடிஸ்!

ஸ்காலர்ஷிப் பணம் கட்டவில்லை என்றால் என் படிப்பு பாழாகிவிடும்!

இப்படி ஏதாவது அந்தக் குரல் உங்கள் நெஞ்சை உருக்கும்.

பாச மழையில் நனைந்த உங்களுக்கு, அவர் கேட்பது ஐந்தாயிரமோ பத்தாயிரமோ பெரிய விஷயமாகத் தெரியாது. அன்புக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா? என்று பெருந்தன்மையாகப் பணத்தை அனுப்புவீர்கள். பிறகு அந்தத் தொகை ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் முடியும் வரை உங்களுக்குப் புத்தி வராது.

இதுதான் லவ் பாம்பிங்கிற்கான ப்ளோ சார்ட். இந்தப் ப்ளோவை எப்படி என்ட் கார்டுக்குக் கொண்டு வருவது என்றால்,

உங்களைப் பிடிக்கும் என்று உருகுபவரை நேரில் வரச் சொல்லுங்கள். நான் இமயமலைச் சாரலில் இருக்கிறேன் என்றோ, கேமரா முன்னால் வர வெட்கமாக இருக்கிறது என்றோ சொன்னால், அந்த அன்பை அங்கேயே பிளாக் செய்யுங்கள்.

உங்கள் அந்தரங்கங்களை யாரிடமும் பகிராதீர்கள். இன்றைய டிஜிட்டல் உலகில், உங்கள் ரகசியம் உங்கள் கையில் இருக்கும் வரைதான் அது சீக்ரெட். இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால் அது உங்களுக்கு எதிரான ஆயுதம்.

டி.பியில் இருக்கும் அழகிய முகமும், போனில் கேட்கும் கனிவான குரலும் நிஜமானவை அல்ல. ஒரு சின்ன ஆப் இருந்தால் எருமை மாட்டைக் கூட ஐஸ்வர்யா ராய் போலப் பேச வைக்கலாம்.

அன்புக்காக ஏங்குவது மனித இயல்பு. ஆனால், அந்த ஏக்கம் உங்களை ஓர் ஏமாளியாக மாற்ற அனுமதிப்பது முட்டாள்தனம்.

தெரியாத எண்ணிலிருந்து ஹாய் டியர் வந்தால், அதற்கு ஹலோ சார் என்று பதில் சொல்லிவிட்டு, பிளாக் செய்வதே உங்கள் பணப்பைக்கும், நிம்மதிக்கும் நல்லது.

அன்பு என்பது இதயங்களைப் பரிமாறிக்கொள்வது, எலக்ட்ரானிக் பணப்பரிமாற்றம் செய்வது அல்ல!

*****

5 May 2026

2026 தேர்தல் முடிவுகளை மாற்றிய மேஜிக் எது?

2026 தேர்தல் முடிவுகளை மாற்றிய மாடல்தான் என்ன?

மே 4, 2026.

வழக்கம்போலத்தான் விடிந்தது.

ஆனால், சூரியன் மட்டும் கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி உதயமானது.

உதயசூரியன் உதித்திருக்க வேண்டிய பல இடங்களில், ஒரு புது வெளிச்சம் பாய்ந்தது. எக்சிட் போல் கணிப்புகளை அடித்து நொறுக்குவது போல முடிவுகள் வெளிவரத் துவங்கின.

தேர்தல் முடிவுகளை நாம் சென்னை அதாவது தலைநகரம், நகர்ப்புறம், கிராமப்புறம், டெல்டாப்பகுதி எனப் பிரித்துப் பார்த்தால் இப்படி அமைந்திருக்கிறது.

சென்னையைத் தக்கவைத்துக்கொள்வது என்பது திராவிடக் கட்சிகளுக்கு எப்போதும் ஒரு கௌரவப் பிரச்சினை. ஆனால், இந்த முறை சென்னைவாசிகளுக்கு மாற்றம் என்றால் ரொம்பப் பிடித்திருக்கும் போலிருக்கிறது. 37 இடங்களில் 32ஐ தவெகவுக்கு அள்ளித் தந்து விட்டார்கள்.

இதில் உச்சகட்ட ட்விஸ்ட் என்னவென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரிலேயே தோல்வியடைந்திருப்பதுதான். கோட்டை நமக்குத்தான் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கையில், கோட்டையின் கதவுச் சாவியை யாரோ மாஸ்டர் கீ போட்டுத் திறந்துவிட்டார்கள்.

நகர்ப்புறமும் தவெகவுக்கு தொகுதிகளை வாரி வழங்கியிருக்கிறது. இங்கே விஜய்க்கு 46 சதவீத ஓட்டு. அதாவது, ஐடி வேலையில் இருப்பவர்களும், ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவர்களும் ஒரே சீராக விஜய்க்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

கிராமப்புறத்தை எடுத்துக் கொண்டால், இங்கே மட்டும் திராவிடக் கட்சிகள் கொஞ்சம் மூச்சு விடுகின்றன. விவசாயிகளுக்கு இன்னும் விஜய்யை விட சூரியனும், இலையும் நெருக்கமாகத் தெரிகிறார்கள்.

டெல்டா பகுதி சூரியனுக்கு ஆதரவாக இருந்திருக்கிறது. அங்கே மட்டும் 19 இடங்களைத் திமுக கூட்டணி பிடித்துள்ளது. டெல்டா கைகொடுக்காமல் போயிருந்தால் கூட்டணியின் நிலை இன்னும் மோசமாகப் பின்தங்கிப் போயிருக்கும்.

இத்தேர்தல் முடிவுகளிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்வது?

தமிழக அரசியல் இதுவரை ஒரு திமுக – அதிமுக என இரு துருவ நிலையில் இருந்து. அது தற்போது முத்துருவமாக மாறியிருக்கிறது.

1967லிருந்து மாறி மாறி தொடர்ந்த திராவிட ஆட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய ஹீரோ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

விஜய்க்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமாகியது?

விஜய் ஒரு தனி ஒருவன் பாணியிலிலேயே இந்தத் தேர்தலை அணுகினார். அவர் ஆட்சியிலேயே பங்கு என்று கூட்டணிக்குத் தயாராக இருந்தாலும், யாருடனும் கூட்டணி அமையவில்லை அல்லது அமைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.

இந்த நவீன தாராளமய யுகத்தில், சுயமாகத் தன்னைச் செதுக்கிக்கொள்ளும் வசீகரம் அவரிடம் இருக்கிறது. இதைக் குறிப்பிட்டுச் சொல்ல காரணம் இருக்கிறது.

கரூர் சம்பவம், மனைவியின் விவாகரத்து மனு, ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனது, குழந்தைகளை வைத்து அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் – என்று எதுவும் அவரைத் தீண்டாமல் டெப்லான் கோட்டிங் வழுக்கிக் கொண்டு போயிருப்பதை இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

திமுகவின் திராவிட மாடல், அதிமுகவின் பல்க்கான விலையில்லா வாக்குறுதிகள், பாஜகவின் இந்துத்துவம் – இவற்றைத் தாண்டி விஜய்யின் மாடல் வெற்றி பெற்றிருப்பதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று தமிழ்நாடே யோசித்துக் கொண்டிருக்கிறது.

அது எதுவாக இருக்கும்?

இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான இன்ஸ்டன்ட் மேஜிக்கை தனது ஒன் லைனர்கள் மூலமாகவும் ரோடு ஷோக்கள் மூலமாகவும் விஜய் தந்திருக்கிறார்.

பழைய அரசியல்வாதிகளின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகளுக்கு மாறாக ஒரு குட்டி ஸ்டோரி சொல்லிவிட்டுக் கூலாக விசிலடித்துச் செல்லும் அவரது பாணி மக்களுக்குப் பிடித்திருந்திருக்கிறது. அந்தப் பிடித்தமே அவர்கள் லைக் பட்டனைத் தட்டி விடுவதைப் போல விஜய்க்கு வாக்குகளைத் தட்டி விட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் விஜய்யின் திரைத்துறையிலிருந்து அரசியல் நோக்கிய வளர்ச்சியை நாம் நுட்பமாக நோக்க வேண்டும்.

பொதுவாகத் தமிழ்நாட்டில் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால், அவரை எம்.ஜி.ஆருடனோ அல்லது ரஜினியுடனோ ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, அவர் அளவுக்கு வருவாரா? என்று சோடா குடிப்பதுதான் வழக்கம்.

ஆனால், விஜய் என்கிற இந்த யங் கமாண்டர், பழைய கமாண்டர்கள் அத்தனை பேரையும் ஒரே லியோ ஜம்ப்பில் ஓரம் தள்ளிவிட்டு, ஆந்திர என்டிஆரைப் போல தமிழக என்டிஆர் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

அவரது திரையுலக பயணத்தை உன்னிப்பாக நோக்க வேண்டும். ஏனென்றால், விஜய்யின் வெற்றி என்பது ஒரு தனிமனிதரின் வெற்றி என்பதை விட, ஒரு நீண்ட கால மார்க்கெட்டிங் திட்டத்தின் விளைவு. ஆரம்பத்தில் காதலுக்கு மரியாதை கொடுத்து உருகி உருகி நடித்தவர், எப்போது தளபதியாகத் தன்னைத் தரம் உயர்த்திக்கொண்டாரோ, அப்போதே கோட்டைக்கான சாவியைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

மற்ற நடிகர்கள் மைக் பிடித்தால் உளறிக் கொட்டும் காலத்தில், இவர் மௌன விரதம் இருந்தார். அதுவே அவருக்கு ஒரு மிஸ்டிக் அந்தஸ்தைத் தந்தது. அவர் பேசாததுதான் அவருக்குப் பெரிய பலமாக அமைந்தது. ஏனென்றால், மக்கள் அவர் பேசாத மௌனத்திற்குத் தங்களுக்குப் பிடித்த அர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டார்கள்.

2013 இல் தலைவா படத்திலேயே டைம் டூ லீட் என்று அவர் போட்ட டேக்லைனைப் பார்த்து அவர் படத்துக்கான தடை போடும் அரசியல் ஆரம்பித்து விட்டது. தற்போது அது ஜனநாயகன் வரை நீண்டாலும், அவரது அரசியல் வேகத்தைத் தடுக்க முடியவில்லை.

அவர் தன்னை ஊழலுக்கு எதிரான ஹீரோவாகத் தன்னைத் திரையில் செதுக்கிக்கொண்ட விதம் அலாதியானது. திரையில் அவர் ஊழலை எதிர்த்து ஓர் அடி அடித்தால், அது நிஜமாகவே ஊழலுக்கு விழும் அடி என்று மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.

அதன் உச்சகட்டமாக 2024 இல் தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்தபோது, அவருக்குக் கூடிய கூட்டம் பிரமாண்டமானது மற்றும் எதிர்பாராதது.

விளைவு?

1977 இல் எம்.ஜி.ஆர் செய்த சாதனையை, கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் விஜய் செய்திருக்கிறார்.

திராவிட மாடலுக்கும், எம்ஜிஆர் மாடலுக்கும், இந்துத்துவா மாடலுக்கும் மத்தியில் இப்போது விஜய் மாடல் என்கிற ஒரு புது அரசியலை அவர் வெற்றிகரமாக லான்ச் செய்திருக்கிறார்.

அவர் கோடிட்டுக் காட்டும் நல்லாட்சி, அவர் அளித்த வாக்குறுதிகள், அவர் அடுத்து எடுத்து வைக்கப் போகும் அடிகள் குறித்து இப்போதே எதுவும் கூறி விட முடியாது. அப்படிக் கூறினால் எக்சிட் போல் கணிப்புகள் போல் அவை ஆனாலும் ஆகி விடும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*****

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் டைனோசர் இடைவெளி!

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் டைனோசர் இடைவெளி!

உலகம் ரொம்பவே முன்னேறிவிட்டது.

எப்படித் தெரியுமா?

ஒரு பக்கம் மக்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள், இன்னொரு பக்கம் எந்தத் தீவில் போய் தங்குவது? என்று பணக்காரர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக மக்கள் தொகையில் அந்த மேல்தட்டு 10 சதவீத புண்ணியவான்கள் இருக்கிறார்களே, அவர்களிடம்தான் உலக சொத்தில் 75 சதவீதம் இருக்கிறதாம். மீதமுள்ள 90 சதவீதம் பேர், மீந்து போன கேக்கில் விழும் துகள்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் துல்லியமாகச் சொன்னால், வெறும் 60,000 பேர் கையில் இருக்கும் சொத்து, உலக மக்கள் தொகையில் பாதி பேரின் சொத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

இதைச் படிக்கும்போது உங்களுக்குக் கோபம் வந்தால், நீங்கள் அந்த 90 சதவீதத்தில் ஒருவர். சிரிப்பு வந்தால், நீங்கள் அந்த 60,000 பேரில் ஒருவர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூச்சு விடாதே, கார்பன் டை ஆக்சைடு வரும், என்று ஏழைகளைத்தான் மிரட்டுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உலகின் அடிமட்ட 50 சதவீத மக்கள் வெளியேற்றும் கார்பன் வெறும் 3 சதவீதம் தான்.

அந்த மேல்தட்டு 10 சதவீத முதலீட்டாளர்கள் தங்கள் சொகுசு வாழ்க்கை மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் 77 சதவீத கார்பனை வாரி வழங்குகிறார்கள்.

அதாவது, பணக்காரர்கள் ஏசி அறையில் அமர்ந்து புகையை கிளப்புவார்கள், அதன் வெப்பத்தில் ஏழைகள் ரோட்டில் வெந்து சாவார்கள். இதுதான் உலக நீதி!

பாலின சமத்துவம் பற்றி மேடையில் பேசுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

நிதர்சனத்தில், வீட்டு வேலையையும் சேர்த்தால் பெண்கள் வாரத்திற்கு 53 மணிநேரம் உழைக்கிறார்கள். ஆண்கள் வெறும் 43 மணிநேரம்தான். இதில் அந்தப் பத்து மணிநேரம் எங்கே போனது என்று கேட்காதீர்கள், ரிமோட் தேடுவதிலேயே போயிருக்கும்.

இவ்வளவு உழைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் ஆண்களில் பாதி கூட இல்லை.

தொழில்நுட்பம் எவ்வளவு உயர்ந்த போதும் பெண் தொழிலாளர்களின் வருமானம் உயரவே இல்லையாம். அநேகமாக, பணவீக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் செல்லாது என்று உலகம் முடிவு செய்துவிட்டது போலும்!

இந்த விஷயத்தில் இந்தியா மட்டும் சளைத்ததா என்ன? இந்தியாவின் முதல் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் 40 சதவீத சொத்துகளை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் கடைநிலை 50 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்து வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவு.

இதைப் பார்த்தால், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது பழைய பாட்டு, எல்லாப் பணமும் ஒருவருக்கே சொந்தம் என்பதுதான் புதிய டூயட்டு.

இந்நிலையைப் போக்க அரசாங்கம் நிறைய வைத்திருப்பவர்களிடம் நிறைய வரி வாங்க வேண்டும். ஆனால் நடப்பதோ வேறு.

பணக்காரர்களுக்கு வரி குறைப்பு செய்தால்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள் என்கிற நவீன தாராளமயக் கொள்கைதான் இப்போதும் ஹாட் கேக்.

சுருக்கமாகச் சொன்னால், உலகம் ஒரு பெரிய டைட்டானிக் கப்பல் போலப் போய்க்கொண்டிருக்கிறது. மேல் தளத்தில் பார்ட்டி நடக்கிறது, கீழ் தளத்தில் தண்ணீர் புகுந்து கொண்டிருக்கிறது.

சமத்துவத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்காமல், புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் என்று பேசுவது, செல்போனில் சார்ஜ் போடாமலேயே ரீல்ஸ் பார்ப்பதற்குச் சமம்.

உண்மை என்னவென்றால், வளர்ச்சி என்பது ஒர் ஏணி. ஆனால் அந்த ஏணி இப்போது பணக்காரர்கள் மட்டும் ஏறிச் செல்லும்படி லிப்ட் ஆக மாற்றப்பட்டுவிட்டது. ஏழைகள் இப்போதும் கீழே நின்று ஏணியைத் துடைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

எத்தனை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வந்தாலும் இந்த நிலை மாறாது என்பதுதான் எதார்த்தம் போலும்!

*****

4 May 2026

இட்டலிக்கு அமெரிக்காவும் ஈரானும் வைத்த குறி!

இட்டலிக்கு அமெரிக்காவும் ஈரானும் வைத்த குறி!

தமிழ்நாட்டில் இப்போது ஓர் இட்டலி சாப்பிடுவது என்பது, பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்குச் சமமான ஒரு காரியமாகிவிட்டது.

ஈரான் – அமெரிக்கா யுத்தம் முடிவுக்கு வருகிறதோ இல்லையோ, தமிழகத்தில் ஒரு தட்டில் இருக்கும் இரண்டு இட்டலிகளுக்கு இடையிலான சாம்பாருக்கான பட்ஜெட் போர் முடிவுக்கு வரப் போவதில்லை.

வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக 993 ரூபாய் உயர்ந்து, இப்போது 3,071 ரூபாய்க்கு வந்து நிற்கிறது.

சிலிண்டரின் எடை 19 கிலோதான், ஆனால் அதன் விலை இப்போது ஒரு சாமானியனின் மாதச் சம்பளத்தின் எடையைத் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை விலையை உயர்த்தின. ஹோட்டல் உரிமையாளர்கள் சனிக்கிழமை விலையை உயர்த்தினார்கள். மக்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டினி கிடக்க முடிவெடுத்தார்கள். இதுதான் தற்போதைய டிஜிட்டல் வேகத்திலான சப்ளை செயின்!

இப்போது ஹோட்டல் உணவுகளின் விலை உயர்வுப் பட்டியலைப் பார்த்தால், அது உணவக மெனு கார்டு போலத் தெரியவில்லை, ஏதோ ஒரு அபராதப் பட்டியல் போலத் தெரிகிறது.

ரோட்டுக்கடை இட்டலி 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்குத் தாவிவிட்டது. ஒரு இட்டலிக்கு 5 ரூபாய் உயர்வு என்பது அற்பமாகத் தோன்றலாம். ஆனால், பத்து இட்லி சாப்பிடும் ஒரு மல்யுத்த வீரருக்கு இது ஒரு பெரிய பொருளாதாரச் சரிவு.

சிக்கன் பிரியாணி 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய்க்கு அப்கிரேட் ஆகிவிட்டது. பிரியாணியில் இருக்கும் சிக்கன் துண்டுகள் குறைகிறதோ இல்லையோ, நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்துண்டுகள் காணாமல் போவது உறுதி.

வாழ்க்கையே ஒரு டீயும் பஜ்ஜியும்தான் என்று நினைத்திருந்த பேச்சிலர்களுக்கு இப்போது டீ 15 ரூபாய். பஜ்ஜிக்குள் இருக்கும் உருளைக்கிழங்குக்குக் கூட அவ்வளவு மதிப்பு கிடையாது, அதைச் சுட வைக்கும் அந்த காஸ்க்குத்தான் இவ்வளவு மதிப்பு!

வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும், வெளியூர்களில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்களுக்கும் பெய்டு கெஸ்ட் என்பது பெயின்புல் கெஸ்ட் ஆக மாறிவிட்டது.

சாப்பாட்டுச் செலவு அதிகரித்ததால் விடுதி வாடகை 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை ஏறிவிட்டது.

30,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர், தன் சம்பளத்தில் எஞ்சியிருப்பதை மைக்ரோஸ்கோப் வைத்துத் தான் தேட வேண்டியிருக்கிறது.

ஹோட்டல் சங்கங்கள் ஜி.எஸ்.டியைக் குறைக்க சொல்கிறது, கரண்ட் பில்லைக் குறைக்க சொல்கிறது. நடக்கிற காரியங்களா இவை?

அப்புறம் 18 சதவீத வரியில் மின்சார அடுப்பு வாங்கி, சமைக்கலாம் என்று பார்த்தால், பீக் ஹவர் சார்ஜ் என்று மின்சார வாரியம் ஷாக் கொடுக்கிறது. ஒரு பக்கம் சிலிண்டர் சுடுகிறது, மறுபக்கம் கரண்ட் பில் எரிக்கிறது.

உலக அரசியல் காரணமாக எரிவாயு விலை உயர்கிறதாம். தேர்தலுக்கு முன்பு வரை உயரவில்லை என்பதால் அப்போது உலக அரசியல் நடக்கவில்லை என்று அர்த்தமல்ல.

விசயம் இதுதான், எங்கோ இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொண்டால், தமிழகத்தில் இருக்கும் ஓர் ஆட்டோ டிரைவர் தன் மத்தியானச் சாப்பாட்டில் ஓர் அப்பளத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது.

வளர்ச்சி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விலை உயர்வு மட்டுமே எல்லோருக்குமான பொதுவான வளர்ச்சியாக இருக்கிறது.

இனிமேல் குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போவதற்குப் பதில், ஒரு பர்சனல் லோன் எடுத்துக்கொண்டு போவது புத்திசாலித்தனம்!

*****

கிளாட் மித்தோஸ் – வங்கிகளின் டிஜிட்டல் ஜுரம்!

கிளாட் மித்தோஸ் – வங்கிகளின் டிஜிட்டல் ஜுரம்!

உலகில் திருடர்கள் எப்போதும் அப்டேட்டடாகவே இருக்கிறார்கள்.

நாம் கையில் இருக்கும் சில்லறையை எண்ணுவதற்குள், அவர்கள் நம் வங்கிச் சேமிப்பை பிட் காயினாக மாற்றி விண்வெளிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இப்போது அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் வில்லன் கிளாட் மித்தோஸ்.

அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் இதை உருவாக்கியது. ஆரம்பத்தில் மென்பொருளில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அடைக்க உதவும், என்றுதான் இதைப் பற்றிச் சொன்னார்கள்.

ஆனால், ஓட்டை எங்கே இருக்கிறது என்று தெரிந்தால், அதை அடைக்கிறவர்களை விட, அந்த ஓட்டை வழியாக உள்ளே புகுந்து கல்லாவைத் தேடுகிறவர்களுக்குத்தான் ஆர்வம் அதிகம் என்பது நம் ஊர் சைபர் விதிகளில் ஒன்று.

மனிதக் கண்களுக்குப் புலப்படாத, ஏன் 27 ஆண்டுகளாக ஒரு மென்பொருள் நிபுணருக்குக் கூடத் தெரியாத சிறிய பிழையைக் கூட இந்த மித்தோஸ் ஒற்றை நொடியில் மோப்பம் பிடித்துவிடுகிறதாம்.

இது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும், மறுபக்கம் வங்கிகளுக்கு திகில் கிளப்பியிருக்கிறது.

வீட்டுச் சாவி துவாரத்தில் ஒரு சின்ன விரிசல் இருந்தால் கூட, அதை ஒரு பெரிய வாசலாக மாற்றி உள்ளே நுழையும் வித்தை இந்த மித்தோஸ்க்குத் தெரியும்.

இது தேசவிரோதிகளின் கையில் கிடைத்தால்?

வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணம், நீங்கள் கண் இமைக்கும் நேரத்தில் மாயா பஜார் ஆகிவிடும்.

இந்த ஏ.ஐ பூதத்திடம் இருந்து தப்பிக்க, இப்போது வங்கிகள் தங்களின் பாதுகாப்புச் செலவுகளை வாரி இறைக்க முடிவு செய்துள்ளன.

புதிய சவால்கள் வந்துவிட்டன, எனவே ஐ.டி துறையில் முதலீட்டை அதிகரிக்கிறோம் என்று பொதுத்துறை வங்கிகளே அலறுகின்றன.

அதாவது, திருடன் அதிநவீன கார் வாங்கினால், நாமும் வேகமான ஜீப் வாங்க வேண்டும் என்ற எதார்த்தம்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்க தனியார் வங்கிகளும் தயாராகி விட்டன.

என்ன செய்யப்போகிறது அரசு?

இந்தியாவில் டிஜிட்டல் கைது, போலி க்யூ ஆர் கோடு என ஏற்கெனவே திருடர்கள் கிரியேட்டிவிட்டியில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த கிளாட் மித்தோஸ் அவர்களுக்குக் கிடைத்தால் அது குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டையாக மாறிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தொழில்நுட்பம் வளர வளர, நம் பணத்தைப் பாதுகாப்பதற்கான செலவும் வளர்ந்துகொண்டே போகிறது.

திருடனிடமிருந்து தப்பிக்க நாம் செலவு செய்யும் பணத்தை விட, வங்கியின் லாபம் குறைவாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

அது என்னவென்றால்,

உங்கள் ரகசியக் குறியீடுகளை யாரிடமும் பகிராதீர்கள். ஏனென்றால், மித்தோஸ் மென்பொருள் ஓட்டையைத் தேடும், ஆனால் மனிதர்கள் இன்னமும் அப்பாவித்தனமான மனிதர்களையே தேடுகிறார்கள்!

*****

ஏஐ மற்றும் எத்திக்ஸ் – ஒரு டேஞ்சர் ரிப்போர்ட்!

ஏஐ மற்றும் எத்திக்ஸ் – ஒரு டேஞ்சர் ரிப்போர்ட்!

கொரோனா வைரஸை லேபில் வைத்து ஏதோ ஆல்டர் பண்ணப்போய், உலகம் முழுக்க மாஸ்க் போட்டுக்கொண்டு அலைந்தோம். அது ஒரு டிரெய்லர் தான்.

நிஜமான படம் ரொம்பப் பழையது. முதல் அணு குண்டை வெடித்தபோது அதன் பிதா ஓப்பன்ஹைமர் சொன்னார், நானே மரணம், உலகங்களை அழிப்பவன் என்று. அவர் சும்மா கவிதை சொல்லவில்லை, நிஜத்தைச் சொன்னார்.

மனுஷன் எதையாவது கண்டுபிடிப்பான், அப்புறம் அதை வைத்து அவனே அழிந்துபோவான். தொழில்நுட்பம் என்கிற புலிக்குக் கடிவாளம் போடத் தெரியாமல் அதன் வால் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது உலகம்.

கம்ப்யூட்டர் வளர்கிறது, ஆனால் நம் அறிவு?

இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒருமுறை சொன்னார், யார் செயற்கை நுண்ணறிவில் கில்லாடியோ, அவர்தான் உலகத்தையே ஆளுவார். இது சும்மா சயின்ஸ் பிக்‌ஷன் கிடையாது, எதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது.

நாளைக்கு உங்களை யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், உங்களை எக்கனாமிக் சிஸ்டத்தில் இருந்தே டெலீட் பண்ணும் அதிகாரம் அந்த அல்காரிதத்திற்கு உண்டு. உளவு பார்ப்பது, சுதந்திரத்தைப் பறிப்பது என செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐயின் லிஸ்ட் நீளுகிறது.

சிக்மண்ட் பிராய்ட் ஒரு கேள்வி கேட்டார், நவீன வாழ்க்கை நம்மைச் சந்தோஷமாக வைத்திருக்கிறதா?

இவ்வளவு நவீன கண்டுபிடிப்புகள் வந்த பிறகும் நாம் ஏன் சந்தோசமாக இல்லை?

ஒவ்வொரு புது கண்டுபிடிப்புக்கும் ஒரு பின்விளைவு உண்டு.

டெலிபோன் வந்தது. தூரத்தில் இருப்பவர்களுடன் பேசினோம், ஆனால் பக்கத்தில் இருப்பவர்களைப் பிரிந்தோம்.

மருத்துவம் வளர்ந்தது. மக்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள், ஆனால் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஏஐ வருகிறது. வேலைகள் எளிதாகிறது, ஆனால் நாம் வெறும் டேட்டா ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

சிக்கல் என்னவென்றால், இங்கே ஒரு பெரிய கேப் இருக்கிறது.

டெக்னாலஜி தெரிந்தவனுக்கு எத்திக்ஸ் தெரியாது. எத்திக்ஸ் தெரிந்த தத்துவவாதிக்கு டெக்னாலஜி தெரியாது.

கணினி விஞ்ஞானிக்கு அடுத்த கோட் எப்படி எழுதுவது என்பதுதான் குறி. தத்துவவாதிக்கோ காண்ட் சொன்னாரா, மில் சொன்னாரா என்ற தர்க்கம். இரண்டு பேரும் இரண்டு துருவங்கள்.

தத்துவவாதியிடம் பார்முலா இருக்கிறது, விஞ்ஞானியிடம் எண்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டு பேரையும் ஒரே ரூமில் உட்கார வைக்க யாருமே இல்லை.

அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்? கவலைப்படாதீர்கள், எத்திக்ஸ் கமிட்டி பார்த்துக்கொள்ளும், என்று கூலாகச் சொல்வார்கள். நிஜத்தில் அந்த கமிட்டிக்கே அங்கே என்ன நடக்கிறது என்று புரியாது.

ஓப்பன்ஹைமர், அதாகப்பட்டவர் அணுகுண்டின் தந்தை ஒரு விஷயம் சொன்னார், ஏதாவது ஒன்று தொழில்நுட்ப ரீதியாக இனிப்பாக இருந்தால், அதைச் செய்துவிடுவோம். அதன் பிறகுதான் அது சரியா தவறா என்று யோசிப்போம் என்று.

அணு குண்டு அப்படித்தான் வந்தது. இன்டர்நெட் அப்படித்தான் வந்தது. இன்டர்நெட்டை உருவாக்கியவர்கள் அது நாளைக்கு ஆபாசப் படங்கள் பார்க்கவும், கடத்தல்காரர்களுக்கும் பயன்படும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இப்போது ஏஐயை கட்டவிழ்த்து விட்டுவிட்டு, அய்யோ, தப்பு பண்ணிட்டோமோ? என்று பின்னால் யோசிப்பது கேலிக்கூத்து.

தொழில்நுட்பம் வார்ப் ஸ்பீடில் போகிறது. நம்முடைய தார்மீகச் சிந்தனையோ ஆமை வேகத்தில் நகர்கிறது.

இனிமேல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்கிற ரிலேட்டிவிசம் வேலைக்கு ஆகாது. ஒரு பொதுவான, வலிமையான அறநெறி விவாதம் தேவை. அதுவும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் விவாதமாக இருக்க வேண்டும்.

யாரோ ஒரு கமிட்டி பார்த்துக்கொள்ளும் என்று விடுவதை விட, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தத் தொழில்நுட்பத்தை அனுமதிக்கலாம், எதை நிராகரிக்கலாம் என்று முடிவெடுக்கும் பில்டர் நமக்குத் தேவை.

ஏனென்றால், சுவிட்ச் நம் கையில் இருக்கும்போதுதான் நாம் மனிதர்கள். அது அல்காரிதம் கைக்குப் போய்விட்டால் நாம் வெறும் ஜீரோக்கள்தான்!

*****