27 Jun 2026

திரைக்கதையின் பிதாமகன் – கே. பாக்கியராஜ்

திரைக்கதையின் பிதாமகன் – கே. பாக்கியராஜ்

கே.பாக்கியராஜ் ஈரோடு வெள்ளங்கோவிலில் கிருஷ்ணசாமி நாயுடு - அமராவதி தம்பதிக்கு மகனாகப் பிறக்கும்போதே, தனக்கான திரைக்கதையை அவரே எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்.

இல்லையெனில், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து, கிழக்கே போகும் ரயில்பெட்டியில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் முகம் காட்டி, சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வசனம் எழுதி, சட்டென்று புதிய வார்ப்புகள் மூலம் கதாநாயகன் ஆனது எப்படிச் சாத்தியம்?

அன்றைய தமிழ் சினிமா நாயகர்கள் மீசையை முறுக்கிக் கொண்டும், தொடையைத் தட்டிக்கொண்டும் அனல் பறக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவரோ, அடுத்த வீட்டு வாலிபனின் அப்பாவித்தனத்தையும், கள்ளமில்லாத அல்லது கள்ளத்தனம் நிறைந்த புன்னகையையும் மூலதனமாக்கினார்.

ஊமைகளின் மொழியைப் பேச முற்பட்ட ஒரு கை ஓசை இவரைத் தயாரிப்பாளராக்கியது. ஆனால், பேசத் தெரிந்த உலகம் இவரை இயக்குநராகக் கொண்டாடியது.

பாக்கியராஜ் இயக்கிய படங்கள் வெறும் கதைகள் அல்ல; அவை மனித பலவீனங்களின் மீதான நையாண்டிகள்.

மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு எனத் தொடர்ந்த அவரது படங்கள், குடும்ப அமைப்பின் போலித்தனங்களை மிக நாசூக்காகக் கேலி செய்தன.

இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

குருநாதர் பாரதிராஜாவுடன் மீண்டும் இணைந்த ஒரு கைதியின் டைரி கமல் ஹாசனின் இரட்டை வேடத்தால் ஜொலித்தது. ஆனால், அதன் இந்திப் பதிப்பான ஆக்ரி ராஸ்தா மூலம் அமிதாப் பச்சனையும் ராஜேஷ் கன்னாவையும் இயக்கிய பெருமை பாக்கியராஜுக்குக் கிடைத்தது.

இவரது கதைகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற மகுடத்தை இவருக்குப் பெற்றுத் தந்தன.

திரைப்படம் பத்தாதென்று பாக்யா வார இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் பேனாவைப் பிடித்தார். 'வாங்க சினிமாவைப்பற்றி பேசலாம்', 'நீங்க நெனச்சா சாதிக்கலாம்' எனப் புத்தகங்கள் எழுதினார். தமிழக அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பாராட்டுகள் குவிந்தன.

எம்.ஜி.ஆர் பாதியில் விட்டுச் சென்ற ‘அண்ணா நீ என் தெய்வம்’ காட்சிகளை வைத்து, புதுத் திரைக்கதை எழுதி ‘அவசர போலீஸ் 100’ என்று வெளியிட்டாரே, அதுதான் பாக்கியராஜின் உச்சக்கட்ட புத்திசாலித்தனம்.

எம்.ஜி.ஆரே இவரைத் தன் ‘கலையுலக வாரிசு’ என்றார். அதன் விளைவோ என்னவோ, 1989இல் ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்’ தொடங்கி அரசியலிலும் குதித்தார். பின்னர் திமுகவிலும் சில காலம் மின்னி மறைந்தார்.

பாக்கியராஜின் திரைக்கதையைப் போலவே அவரது வாழ்க்கைத் திரைக்கதையும் சுவாரசியமான காதல்களையும், சோகங்களையும் கொண்டது.

உதவி இயக்குநராக இருந்தபோது காதலித்து, 1981இல் மணந்த மனைவி பிரவீணா. ஆனால், மஞ்சள் காமாலை என்ற வில்லன் 1983இல் அவரைப் பறித்துக்கொண்டது.

டார்லிங் டார்லிங் பட நாயகியான பூர்ணிமாவை மறுபடி காதலித்து மணந்தார். மகள் சரண்யாவை பாரிஜாதம் மூலம் அறிமுகப்படுத்தினார். மகன் சாந்தனு சக்கரக்கட்டி மூலம் அறிமுகமாகி இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கால ஓட்டத்தில், கதாநாயகன் அந்தஸ்திலிருந்து உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன் என குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். இவர் கடைசியாக இயக்கி நடித்தது சித்து பிளஸ் 2.

பார்த்திபன், பாண்டியராஜன் போன்ற சுட்டித்தனமான இயக்குநர்களைத் தமிழ் சினிமாவிற்குத் தந்ததே இவரது ஆகச்சிறந்த பங்களிப்பு.

சினிமாக்களில் எத்தனையோ ட்விஸ்ட்களை எழுதிய திரைக்கதை மன்னனின் நிஜ வாழ்க்கை கிளைமாக்ஸ் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சமீபத்தில்தான் கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் திருமணத்திற்குச் சென்று சென்னை திரும்பியிருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் இல்லத்தில், இன்று காலை வழக்கம் போல மார்னிங் வாக் சென்றுவிட்டு வீடு திரும்பியவருக்கு திடீர் நெஞ்சுவலி.

மயங்கி விழுந்தவரை குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட். கடும் மாரடைப்பு. டாக்டர்கள் போராடினார்கள்.

ஆனால், பாக்கியராஜின் லைப் ஸ்கிரீன்பிளே அங்கே முடிவுக்கு வந்தது. சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இவருடைய குருநாதர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்து சரியாக 17 நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் சீடனும் கிளம்பிவிட்டார். குருவும் சீடனும் மேலேயும் ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கான டிஸ்கஷனைத் தொடங்கி விட்டார்களோ என்னவோ?

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைக்கதை மன்னனுக்கு கண்ணீர் அஞ்சலி!

*****

எங்கே உங்கள் அப்பாவைக் காணோம்?

எங்கே உங்கள் அப்பாவைக் காணோம்?

பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகிய இருவரும் தங்களது தந்தை பாரி இறந்த பிறகு, தாங்கள் வாழ்ந்த பறம்பு மலையையும், தங்களது தந்தையையும் நினைத்து உருகிப் பாடிய புகழ்பெற்ற பாடல் ஒன்றுண்டு.

போன வருடம் தந்தை இருந்தாரே, இந்த வருடம் அவர் இல்லையே எனத் தந்தையின் நிழலைத் தேடும் வரிகள் இவை,

"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்,

எந்தையும் உடையேம்; எம்மலையும் எமதே;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்,

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றமும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"      - (புறநானூறு, 112)

சங்க இலக்கியத்தின் மிகச்சிறந்த, உருக்கமான பாடல்களில் ஒன்றான பாரி மகளிரான அங்கவை, சங்கவையின் இப்பாடல், வெறும் போர்க்கால அவலத்தை மட்டும் பேசவில்லை. இதில் ஆழமான இருத்தலியல், சமூகவியல், மற்றும் உளவியல் தத்துவங்கள் பொதிந்துள்ளன.

"அன்று எல்லாம் இருந்தது; இன்று எதுவுமில்லை" என்ற இரண்டு வரிகளுக்குள் மனித வாழ்வின் நிலையாமையையும், அடையாள இழப்பையும் இப்பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது.

இருத்தலியல் தத்துவம் மனிதனின் சுதந்திரம், தனிமை, மற்றும் திடீரென மாறும் வாழ்வின் எதார்த்தத்தைப் பேசுகிறது. இப்பாடலில் ஜீன் பால் சார்த்தர் மற்றும் ஆல்பர்ட் காம்யு ஆகியோரின் இருத்தலியல் சிந்தனைகளின் கூறுகளைக் காண முடிகிறது.

'அற்றைத் திங்கள்' அதாவது, அன்றைய நிலவு இவர்களுக்குப் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.

ஆனால் 'இற்றைத் திங்கள்' அதாவது, இன்றைய நிலவு அதே வெண்ணிலவாக இருந்தாலும், இவர்களின் உலகம் தலைகீழாக மாறிவிட்டது.

நிலவு மாறவில்லை, ஆனால் இவர்களின் இருப்பு மாறிவிட்டது.

தங்களைச் சுற்றியிருந்த உலகம் திடீரென அந்நியப்பட்டு, ஒரு பெரும் சூனியமாக மாறுவதை பாரி மகளிர் உணர்கிறார்கள். இதை அந்நியமாதல் மற்றும் வெறுமை என்கிறது இருத்தலியல்வாதம்.

நேற்றுவரை "எம்மலையும் எமதே" என்று பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைத் தங்களுக்குரியதாகக் கொண்டாடினார்கள். இன்று "யாம் எந்தையும் இலமே" என்று தங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு வளையத்தையும் இழந்து நிற்கிறார்கள் பாரி மகளிர். மனிதர்கள் எந்தவொரு பாதுகாப்பும் அற்ற, கணிக்க முடியாத ஒரு உலகில் எறியப்பட்டிருக்கிறார்கள் என்ற இருத்தலியல் எதார்த்தத்தை இது காட்டுகிறது.

சமூகவியல் ரீதியாக, இப்பாடல் அதிகார மாற்றம், நிலப்பிரபுத்துவப் போர் முறை மற்றும் பெண்களின் சமூக நிலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஒன்றிணைந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டு வீழ்த்தினர். "வென்றெறி முரசின் வேந்தர்" என்ற வரி, வலிமையான அரசு என்ற கட்டமைப்பு எவ்வாறு ஒரு தனிமனிதனின் அல்லது சிறிய சமூகத்தின் சுதந்திரத்தைப் பறிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

"எம்மலையும் எமதே" என்பது ஒரு சமூகத்தின் கூட்டு உடைமையைக் குறிக்கிறது. போர் என்பது நிலத்தையும் அதன் வளங்களையும் பறிக்கும் ஒரு வன்முறைச் செயல். நிலம் கைமாறும்போது, அந்த நிலத்தைச் சார்ந்த மனிதர்களின் ஒட்டுமொத்த சமூக அடையாளமும், வாழ்வாதாரமும் சிதைக்கப்படுகிறது.

தந்தை மற்றும் நிலத்தை இழந்த பெண்கள், அக்கால சமூக அமைப்பில் உடனடியாகப் பாதுகாப்பற்றவர்களாக, நாதியற்றவர்களாக மாறுகிறார்கள்.

ஒரு சமூகப் பேரழிவில் பெண்களே மிகக் கடுமையான உளவியல் மற்றும் சமூக பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்பாடல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இப்பாடல் முழுக்க முழுக்க ஒரு தீவிரமான உளவியல் அதிர்ச்சியை மற்றும் இழப்பின் துயரத்தைப் பதிவு செய்கிறது.

நேற்று இருந்த வாழ்விற்கும் இன்று இருக்கும் வாழ்விற்கும் இடையே உள்ள இடைவெளி மிகக் குறுகியது. பாடலின் படி அது ஒரே ஒரு மாத காலம் அதாவது, ஒரு திங்கள். இந்தத் திடீர் மாற்றத்தை மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தவிப்பு "அற்றைத் திங்கள்... இற்றைத் திங்கள்..." என்ற ஒப்பீட்டில் வெளிப்படுகிறது.

மனித மனம் தனக்கான அடையாளத்தை 'தந்தை' அதாவது அவர் தரும் பாதுகாப்பு மற்றும் 'நிலம்' அதாவது, அது தரும் அடைக்கலம் ஆகியவற்றின் மூலமே கட்டமைக்கிறது.

"எந்தையும் இலமே" என்று கூறும்போது, அவர்கள் தங்கள் வழிகாட்டியையும், வேரையும் இழந்துவிட்ட உளவியல் அநாதை நிலையை அடைகிறார்கள் என்பதை அறிந்து ஓர் உளவேதனை உண்டாகிறது.

நிகழ்காலத்தின் கொடூரத்தைத் தாங்க முடியாமல், மனம் கடந்த காலத்தின் பொன்னான நினைவுகளுக்குள் தஞ்சம் புகுந்து அழுது தீர்க்கிறது. நிலவு இங்கே ஒரு சாட்சியாக நின்று அவர்களின் கடந்த கால மகிழ்ச்சியையும் நிகழ்காலத் துயரத்தையும் இன்னும் அதிகமாக்கிக் காட்டுகிறது.

பாரி மகளிரின் இப்பாடல் வெறும் தனிமனித அழுகை அல்ல. அது அதிகார வெறியால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்களின் உலகளாவிய குரல். காலம், அதிகாரம், மரணம் ஆகியவற்றின் முன்னால் மனிதனின் இருப்பு எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்தும் ஒரு தத்துவப் பிரகடனம்.

*****

வசீகரமானதொரு மனப்பிறழ்வுக் கையேடு!

சீரழித்த சினிமா – 25

மின்னலே

வசீகரமானதொரு மனப்பிறழ்வுக் கையேடு!

இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டின் பிப்ரவரித் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச அக ஒழுக்கத்திற்கும் ஒட்டுமொத்தமாக பை பை சொல்லி விட்டு, காதலுக்காக ஹாய் ஹாய் என எதையும் செய்யலாம் எனக் காட்டியது மின்னலே.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரியில் எதிரியாக இருந்தவன், நிஜ வாழ்க்கையில் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போக வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒருவன் தன் கல்லூரி எதிரியின் திருமணப் பெண்ணை அடைவதற்காக, அமெரிக்காவிலிருந்து வரும் அந்த எதிரியின் பெயரிலேயே ஆள்மாறாட்டம் செய்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்குள்ளேயே புகுந்து ஐந்து நாட்கள் குடும்பம் நடத்தலாம்" என்ற ஒரு புதுவிதமான மென்பொருள் வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, மின்னலே திரைப்படத்திற்கு உண்டு.

இதை ஒரு காதல் காவியம் என்று கொண்டாடுவதை விட, ஒரு தலைமுறையின் மனப்பிறழ்வுக் கையேடு என்று சொல்வதே பொருத்தமானது.

மின்னலே திரைப்படம் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய ஆகச்சிறந்த சமூகவியல் பங்களிப்பு என்னவென்றால்: "ஒரு பெண்ணின் காதல் வேண்டுமென்றால், நீங்கள் நீங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; வேறொருவராக இருந்தால் போதும்." என்பதுதான்.

நாயகனின் நளினமான, அதேசமயம் ஆபத்தான போலி ஐடி பிம்பமும், நாயகியின் ஏமாளி மற்றும் கோமாளிப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு சைபர் கிரைம் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த தகவல் தொழில்நுட்பவியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள், ஆனால் அவளுக்கு வேறு ஒருவனுடன் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்தால் போதும்; நீங்கள் நேரடியாக அவளது வருங்காலக் கணவனின் பயோடேட்டாவைத் திருடிவிடலாம். அமெரிக்காவிலிருந்து வரும் அவனாக நீங்களே மாறி, அவளது வீட்டு வாசலில் போய் நிற்கலாம்.

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 419 அதாவது, ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் போன்ற அற்பமான சட்டங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமா மெட்ரோ செக்சுவல் நாயகனுக்குப் பொருந்தாது.

ஒரு பெண்ணை அடைவதற்காக அவளது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், அவளது நம்பிக்கையையும் ஐந்து நாட்களுக்குத் திட்டமிட்டு ஏமாற்றுவது குற்றமல்ல; அது காதலின் தீவிரம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சமூக வலைத்தளங்களில் வேறு ஒருவனின் புகைப்படத்தையும் முகவரியையும் திருடி, போலி கணக்குகள் ஆரம்பித்து பெண்களை ஏமாற்றும் ஓர் ஆபத்தான கேட் பிஷிங் சமூகத்தின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

7ஜி ரெயின்போ காலனியில் பொறுக்கித்தனமாக ஸ்டாக்கிங் செய்தார்கள் என்றால், மின்னலே படத்தில் அதை டை கட்டிய கிளாஸ் ஸ்டாக்கிங்காக மாற்றி விற்றார்கள்.

படத்தில் நாயகன் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் ஊர் சுற்றுவான். வழியில் மழையில் நனையும் நாயகியை மின்னல் ஒளியில் பார்த்ததும், அவளது தொலைபேசி எண்களைத் திருடி, அவளது தோழிகளை டேட்டா பேஸாக்கி, அவளைப் பற்றிய அத்தனை அந்தரங்கத் தகவல்களையும் ஒட்டுக் கேட்டுச் சேகரிப்பான்.

இந்த உறைபனியூட்டும் தனிமனித உரிமை மீறலை மிக அழகான காட்சி அமைப்புகளாலும், மெல்லிய பின்னணி இசையாலும் மூடி மறைத்து, அவன் காதலுக்காகத்தானே பண்றான் என்று பார்ப்பவருக்குக் கொலையாளியை விட ஆபத்தான ஒரு சைபர் குற்றவாளியின் மீது பரிதாபத்தை வரவழைப்பார் இயக்குனர்.

ஒரு பெண்ணின் சுதந்திரத்தை நளினமாகப் பறிப்பதை ரொமான்ஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பாலினக் கண்ணியத்தின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம். இதன் விளைவுதான் இன்ஸ்டாகிராமில் பெண்களின் கணக்குகளை ஸ்டால்க் செய்வதை ஏதோ ஒரு உன்னதக் கலையாக நினைத்துக் கொண்டு அதை இளைஞர்கள் வளர்த்துக் கொண்டதெல்லாம்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், உண்மை தெரிந்து நாயகன் ஓடி ஒளிந்த பிறகு, உண்மையான அந்த நிச்சயிக்கப்பட்ட மணமகன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும், அவனைக் கல்யாணம் செய்யாமல், தன்னை ஏமாற்றிய போலி நாயகனைத் தேடித்தான் நாயகி ஓடுவாள் என்பதுதான்.

விமான நிலையத்தில் வைத்து அந்த நிச்சயிக்கப்பட்ட மணமகனே தன் காதலைத் தியாகம் செய்து, தன் அடையாளத்தைத் திருடியவனிடமே அந்த நாயகியை ஒப்படைப்பார்.

இது பார்ப்பதற்கு காதலின் உன்னதமான தியாகம் போலத் தெரியும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அது தியாகம் அல்ல; அது ஓர் ஏமாளி ஆணின் தற்காப்பு வாதம். "என்னை ஏமாற்றினாலும் பரவாயில்லை, அவன் அழகாகப் பாடினால், டான்ஸ் ஆடினால் அவன் பின்னால் போவதே பெண்ணின் இயல்பு" என்ற ஒரு விசித்திரமான பொதுப்புத்தியை இது சமூகத்தில் விதைத்தது.

நேர்மையாக வாழும் மனிதர்களை விட, ஏமாற்று வேலைகள் செய்து கெத்து காட்டும் ஆண்களுக்கே சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற போலி அறநெறியை இது மிக நுணுக்கமாக இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.

அனைத்துக் கமர்ஷியல் திரைப்படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. நாயகியின் கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் போலிப் புன்னகையைப் பார்த்து ஏமாறுவதற்கும், பாடல்களுக்குக் கிளாமராகப் போஸ் கொடுப்பதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகக் காட்டப்பட்டது. நாயகிக்கு என்று தனியாக ஒரு படிப்பு, குடும்பப் பின்னணி இருந்தாலும், அவளைச் சுற்றி அரங்கேறும் இத்தனை பெரிய ஆள்மாறாட்டச் சதியைக் கூடக் கண்டுபிடிக்கத் தெரியாத ஒரு அழகு முட்டாளாகவே அவள் சுருக்கப்பட்டாள்.

பெண் என்பவள் தனக்கென ஒரு பகுத்தறிவோ, உண்மை எது, பொய் எது என்று ஆராயும் திறனோ இல்லாமல், தன் அடையாளத்தை விற்றுத் தன்னை ஏமாற்றும் ஒருவனாக இருந்தாலும், அவன் மேடி என்ற பிம்பத்துடன் இருந்தால் அவனிடம் சரணடைந்துவிட வேண்டும் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாகப் பட்டுவாடா செய்தது.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், மின்னலே என்பது ஓர் ஆபத்தான வைரஸ். அது மியூசிக் என்ற அழகான கோட்டிங் கொடுக்கப்பட்டு, விஷுவல்ஸ் என்ற அழகான பேக்கிங் பண்ணப்பட்டு விற்கப்பட்ட ஒரு கரப்டெட் வெர்ஷன். மக்கள் அதை ரொமாண்டிக் க்ளாசிக் என்று நினைத்து மெண்டல் சிஸ்டத்திற்குள் ஏற்றிக் கொண்டார்கள். ஆனால், அது ஒரு பக்கா மால்வேர்.

மின்னலே பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை சாக்லேட் பாய் பிம்பத்தில் ஏற்றி, அதன் இசையமைப்பாளரை இசையுலகின் மின்னலாக மாற்றி, அதன் இயக்குநருக்கு அறிமுகப் படத்திலேயே ஹிட் அடிக்க உதவியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக, அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு பெண்ணை அடைவதற்காக யாருடைய அடையாளத்தையும் திருடலாம், அதுதான் காதல் என்றும், வசீகரா என்று பாடினால் அத்தனை ஏமாற்று வேலைகளையும் மன்னித்துவிடலாம் என்றும், அடுத்தவனுக்கு நிச்சயகிக்கப்பட்ட பெண்ணைத் தூக்குவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த உத்தி என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஆள்மாறாட்டச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

26 Jun 2026

மனிதா இன்னும் நீ ஏன் பைத்தியமாகவில்லை?!

சீரழித்த சினிமா - 24

சேது

மனிதா இன்னும் நீ ஏன் பைத்தியமாகவில்லை?!

இரண்டாயிரமாவது ஆண்டின் விடியலுக்குச் சற்று முன்பாக, 1999 ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச மனநலம் சார்ந்த புரிதல்களுக்கும் ஒட்டுமொத்தமாக டைம் பாம் வைத்தது சேது திரைப்படம்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரி மாணவர்கள் ரவுடித்தனம் செய்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" அல்லது "காதல் என்பது பரஸ்பரச் சம்மதத்துடன் மலர வேண்டிய ஒன்று" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "ஒரு கல்லூரி அளவிலான லோக்கல் தாதா, பயந்து நடுங்கும் ஒரு பெண்ணை மிரட்டிக் காதலிப்பதும், அவளைத் தன் வன்முறைப் பிடிக்குள் வைப்பதும்தான் உன்னதமான காதல்" என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, சேது திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அந்தச் சீயான் என்ற கரடுமுரடான, அதேசமயம் மனநலம் பிறழ்ந்த பிம்பமும், அபிதா குஜலாம்பாள் என்கிற பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மனநலக் காப்பக நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த மாணவர் ஒழுக்கவியல் கல்வி என்ன தெரியுமா? நீங்கள் ஒரு கல்லூரியின் மாணவர் தலைவராக இருந்தால் போதும்; உங்களுக்குப் பாடப்புத்தகங்களோ, பேராசிரியர்களோ தேவையில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கல்லூரிக்குள் புகுந்து சக மாணவர்களை மிரட்டலாம், அராஜகங்களுடன் வலம் வரலாம்.

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 506 அதாவது, மிரட்டல் விடுத்தல் போன்ற அற்பமான சட்டங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமா நாயகனுக்குப் பொருந்தாது.

ஒரு பெண் உங்களைப் பார்த்துப் பயந்து ஓடினால், அவளை நடுத்தெருவில் வைத்து மிரட்டி, அவளது பயத்தையே காதலாக மாற்ற முனைய வேண்டும். இதுதான் ஆண்மையின் கம்பீரம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் கல்லூரிகளில் படித்து முன்னேற வழியில்லாமல், சீயான் பாணியில் தாடி வளர்த்து, தங்களை ஒரு ரப் அண்ட் டப் ரவுடியாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

சேது படத்தில் ஒட்டுமொத்த மனநலப் பிறழ்வையே காதலின் உன்னதக் குறியீடாக மாற்றி விற்றார்கள். ஹீரோ சேதுவுக்கு அடிதடியில் மண்டை உடைந்து, அவர் மனநலக் காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மொட்டை அடித்து அலைவார்.

இந்த உறைபனியூட்டும் கொடூரத்தைக் காட்டிவிட்டு, பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், காதலுக்காகப் பைத்தியம் ஆயிட்டான், என்று பார்ப்பவனுக்குக் கொலையையும் வன்முறையையும் விடக் கொடூரமான ஒரு மனநோயின் மீது போலிப் புனிதத்துவத்தை வரவழைப்பார் இயக்குனர்.

இதன் விளைவுவாகக் காதல் தோல்வி அடைந்தால் நேராக மனநல மருத்துவரிடம் போவதை விடுத்து, சீயான் போலச் சங்கிலியை இழுத்துக்கொண்டு அலையத் துடிக்கும் சினிமாட்டிக் பொதுப்புத்தியைத் தமிழன் வளர்த்துக்கொண்டான்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், மனநலம் குணமாகித் திரும்பி வரும் சேது, தன் காதலி இறந்துவிட்டதை அறிந்து, தன்னைத் தேடி வரும் மனநலக் காப்பக வாகனத்திலேயே ஏறித் திரும்பவும் பைத்தியமாகவே வாழ ஓடிவிடுவார். இதை ஏதோ காதலின் பிரிக்க முடியாத சோக பந்தம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது காதல் அல்ல; அது நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாத ஒரு பலவீனமான ஆணின் கோழைத்தனம். "என் காதலி இல்லை என்றால் நான் ஏன் சாதாரணமாக வாழ வேண்டும்? நான் பைத்தியமாகவே மடிவேன்" என்று ஓடுவதை மாஸாகக் காட்டியது இத்திரைப்படம்.

தமிழ் இளைஞர்களுக்கு காதல் தோல்வி அல்லது துயரம் வந்தால், அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்கக் கூடாது; உங்களை நீங்களே சித்திரவதை செய்து அழித்துக்கொள்ள வேண்டும் என்ற போலித் தற்கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. அபிதா என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் மிரட்டலுக்குப் பயந்து நடுங்குவதற்கும், அவன் பைத்தியமானவுடன் அவனுக்காக உருகி உருகி அழுது தன் உயிரையே விடுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு பலிகடாவாகக் காட்டப்பட்டார். அவளுக்கு என்று தனியாக ஒரு வாழ்க்கை, குடும்பப் பாரம்பரியம் இருந்தாலும், ஹீரோவின் சீயான் பிம்பத்திற்கு முன்னால் அவள் ஒரு மண்பொம்மை போலச் சுருக்கப்பட்டாள்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, பகுத்தறிவோ இல்லாமல், தன்னை மிரட்டிக் கடத்தும் ரவுடியாக இருந்தாலும் அவனது அன்பைப் புரிந்துகொண்டு அவனுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் தேசிய விருது வாங்கும் அளவிற்கு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

சேது பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனுக்குச் சீயான் என்ற நிரந்தரப் பிம்பத்தைத் தந்து, அதன் இயக்குநரை மனநலப் பிரச்சனைகளைக் கொண்டு ஹிட்டடிக்கும் பலமான இயக்குநராக கமர்ஷியல் ஏணியில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு பெண்ணின் சம்மதம் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. "அவன் கெட்டவனா இருந்தாலும் மனசுக்குள்ள குழந்தை சார்" என்ற ஒற்றை வாதத்தைக் காட்டி, கல்லூரிப் பெண்களை மிரட்டுவதும், கடத்துவதும், மனரீதியாக வசிப்படுத்துவதும் தீவிரமான காதல் என்பதாக இங்கே புனிதப்படுத்தப்பட்டது.

மன அழுத்தம் என்பது மருத்துவப் பிரச்சினை அல்ல, அது ஓர் அழகியல் என்று மாற்றிய பெருமை சேதுவையே சாரும். “வாழ்க்கையில் உனக்கு விடிவு காலமே கிடையாது, நீ உருப்பட நினைத்தாலும் இந்தச் சமூகம் உன்னை வாழவிடாது” என்கிற அதீத எதிர்மறை எண்ணத்தை இது இளைஞர்களின் ஆழ்மனதில் விதைத்தது. தங்களுக்கு நடக்கும் சின்னச் சின்ன தோல்விகளுக்கும், தங்களைச் சேதுவாக நினைத்துக்கொண்டு சுய பரிதாபத்தில் மூழ்கும் பலவீனமான மனிதர்களை இந்தப் படம் உற்பத்தி செய்தது.

வாழ்க்கையில் ஏமாற்றம் வந்தால் மீண்டு வராதே. மீண்டும் பைத்தியமாகவே போய்விடு என்பது சேது வழங்கிய ஓர் ஆபத்தான டிப்ரசிவ் சிந்தனை. இளைஞர்களுக்கு ஒரு தோல்வியைக் கையாளும் பக்குவத்தையோ, நம்பிக்கையையோ இந்தப் படம் தரவில்லை. மாறாக, சோகத்தைக் கொண்டாடும், சுய அழிவைத் தேடும் ஒரு போக்கை உருவாக்கியது.

கதாநாயகன் என்பவன் அழகாகவோ, சுமாராகவோ இருப்பது முக்கியமல்ல; எவ்வளவு கொடூரமாகத் தன்னைத் தானே சித்திரவதை செய்துகொள்கிறான் என்பதுதான் அர்ப்பணிப்பு என்று ஒரு புது வித சித்திரவதை முயற்சியை இது துவக்கி வைத்தது.

சமூக எதிர்மறைகளையும் வக்கிரங்களையும் காட்டி, சுபமான முடிவை வைக்கவே கூடாது என்கிற ஒரு தவறான முன்மாதிரியை இது தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தது.

தமிழ்ச் சமூகத்தின் மனநலத்தை ஒரு வித மனச்சோர்வு சார்ந்த கலாச்சாரத்தை நோக்கி நகர்த்திய பெருமையும் இத்திரைப்படத்துக்கு உண்டு. சேது திரைப்படம் தமிழ் சினிமாவின் இலக்கணத்தை உடைத்தது உண்மைதான். ஆனால், அது சமூகத்தின் மனநல இலக்கணத்தையும் ரொம்பவே சிதைத்தது.

ஒரு பெண்ணை மிரட்டிக் காதலிப்பதுதான் உன்னதமான காதல் என்றும், மனநலம் பிறழ்ந்து சங்கிலியால் அடிபடுவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த தியாகம் என்றும், வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிவதே ஹீரோயிசம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

சுருக்கமாகச் சொன்னால், சேது தமிழ் சினிமாவின் கபாலப் பகுதியில் விழுந்த ஒரு பலத்த அடி!

*****

25 Jun 2026

மறுதேர்வு என்னும் மரண லீலை

மறுதேர்வு என்னும் மரண லீலை

மனிதன் பிறக்கிறான்; வாழ முயல்கிறான்; ஆனால் இடையில் ஏதோ ஒரு புள்ளியில் அவன் ஒரு வட்டத்திற்குள் அடைக்கப்படுகிறான். அந்த வட்டத்தை ஓஎம்ஆர் தாள் என்கிறார்கள். அந்த வட்டத்தை ஒழுங்காகக் கருக்கினால், அதாவது கருப்பாக்கினால் மட்டுமே மனிதன் இருக்கிறான்.

அதாவது, இந்தியத் துணைக் கண்டத்தில் எதிர்காலம் என்பது ஒரு மூன்று மணி நேரத் தேர்வு அறையில், நான்கு பக்கக் கேள்விகளுக்கு நடுவே, கருப்பு மை பேனாவால் வட்டமிடும் புள்ளிகளில் ஒளிந்திருக்கிறது.

இந்த நம்பிக்கையின் உச்சகட்டக் கூத்தே நீட்.

தேர்வு நடக்கும், மதிப்பெண் வரும், இடம் கிடைக்கும் என்ற எளிய சமன்பாட்டை மாற்றி, தேர்வு நடக்கும், லீக் ஆகும், ரத்தாகும், மீண்டும் நடக்கும் என்ற புதிய மறுதேர்வு விளையாட்டைத் தேர்வு முகமை அறிமுகப்படுத்திய உடனே, நாடு முழுவதும் 15 மாணவர்கள் தங்கள் வாழ்க்கையையே ரத்து செய்துகொண்டு விட்டார்கள். அதாவது, தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள்.

இதில் தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் அடக்கம்.

ஆல்பர்ட் காம்யு சிசிபஸ் என்றொரு கிரேக்கக் கதாபாத்திரத்தைப் பற்றி எழுதியிருப்பார். சாபத்தின் காரணமாக அவன் ஒரு பெரும் பாறையை உருட்டிக்கொண்டு மலை உச்சிக்குச் செல்வான். உச்சியை அடைந்ததும் அந்தப் பாறை தானாகக் கீழே உருண்டுவிடும். மீண்டும் அவன் கீழே வந்து அதை மேலே உருட்ட வேண்டும். இது முடிவில்லாத, அர்த்தமற்ற ஒரு சுழற்சி.

நமது தருமபுரி, கிருஷ்ணகிரி மாணவர்களின் நிலையும் இதுதான். அவர்கள் பாறையை அதாவது, பாடப்புத்தகங்களை உருட்டிக்கொண்டு மலை உச்சிக்கு அதாவது, தேர்வுத் தேதிக்கு நகர்கிறார்கள். உச்சியைத் தொடும் வேளையில், கேள்வித்தாள் கசிந்துவிட்டது என்று சிஸ்டம் அந்தப் பாறையைக் கீழே தள்ளிவிடுகிறது. மீண்டும் முதலிலிருந்து உருட்டு, அதற்குப் பெயர் மறுதேர்வு என்கிறது தேர்வு முகமை.

மனிதன் பாறையை உருட்டலாம். ஆனால், பாறையே அவனைக் கேலி செய்யத் தொடங்கும்போதுதான் இருத்தலின் ஆகப்பெரும் வழுக்கல் நிகழ்கிறது. நீ படித்துக்கொண்டே இரு, நான் ரத்து செய்துகொண்டே இருப்பேன் என்று ஒரு தேர்வு முகமை சொல்லும்போது, வாழ்தல் என்பது அதாவது தேர்வு என்பது வெறும் அபத்த நாடகமாகிவிடுகிறது. 15 பேர் அந்த மேடையிலிருந்து பாதியிலேயே இறங்கிவிட்டார்கள். அவர்களுக்கு நாடகம் பிடிக்கவில்லை என்பதை விட, அதன் முட்டாள்தனம் அலுத்துவிட்டது என்பதே உண்மை.

ஜீன் பால் சார்த்தர் சொன்னது போல, "மனிதன் சுதந்திரமாக இருக்க தண்டிக்கப்பட்டிருக்கிறான்." ஆனால், இங்குள்ள கல்வி முறையோ, "நீ சுதந்திரமாகத் தற்கொலை செய்து கொள்ளவாவது அனுமதிக்கப்படுகிறாய்" என்ற விசித்திரமான தத்துவத்தை முன்வைக்கிறது.

மரணங்கள் எப்போதும் எண்களாக மாற்றப்படும்போதுதான் அரசாங்கங்களுக்கு எளிதாகப் புரிகிறது. 15 என்பது வெறும் இரண்டு இலக்க எண்தான். ஆனால், அந்த எண்களுக்குப் பின்னால் 15 வீடுகளின் அடுப்பங்கரைகளில் இனி ஒருபோதும் வேகாத சோறும், எரியாத விளக்குகளும் இருக்கின்றன.

நமது கல்வி முறையின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என்னவென்றால், அது மாணவர்களுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, அழுத்தத்தை மிகத் துல்லியமாகக் கையாளக் கற்றுக் கொடுத்துவிடுகிறது. ஆனால், அந்த அழுத்தமே ஒரு கட்டத்தில் மரணப் பாசமாக மாறும் என்பதை யாரும் கணக்கில் கொள்வதே இல்லை.

*****

அறமற்ற வேட்டையும் அனிச்சை வகை வன்முறையும்!

சீரழித்த சினிமா – 23

துப்பாக்கி

அறமற்ற வேட்டையும் அனிச்சை வகை வன்முறையும்!

இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டின் தீபாவளிப் பண்டிகை தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு புதிய தேசபக்தி ரசாயனத்தை அறிமுகப்படுத்தியது. அதுவரை ராணுவ உடை அணிந்து எல்லையில் நின்று நாட்டைப் பாதுகாப்பதாகக் காட்டப்பட்ட நாயகர்களை மாற்றி, லீவில் ஊருக்கு வந்தாலும், துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அடியாட்களை வேட்டையாடலாம் என்ற புதிய அத்துமீறல் பார்முலாவைத் தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை துப்பாக்கி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் மிக நேர்த்தியான பிம்பமும், நாயகியுடனான கிளாமர் பாடலும், துரிதமான திரைக்கதையின் வேகமும் சேர்ந்து, தமிழர்களின் சிந்திக்கும் திறனை எப்படி ஒரு பாசிச எல்லைக்குள் சுருக்கியது என்பதை ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ராணுவக் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்தால் போதும்; உங்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்களோ, காவல்துறையோ, நீதிமன்றமோ தேவையில்லை. மும்பை போன்ற ஒரு பெருநகரத்திற்குள் புகுந்து, உங்களுக்குச் சந்தேகப்படுபவர்களைக் கடத்தி, சொந்தமாக டார்ச்சர் செய்து, எவனை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம்.

படத்தில் வரும் நாயகன், ஒரு ராணுவ வீரனாகப் பொறுப்புடன் நடப்பதை விட, சட்டத்திற்குப் புறம்பாகத் தன் சொந்த நீதிமன்றத்தை நடத்தும் ஒரு விஜிலாண்டி ஆகத்தான் செயல்படுவார். நாட்டின் பாதுகாப்பு என்ற லேபிளை ஒட்டிவிட்டால், ஒரு தனிமனிதன் செய்யும் அத்தனை சட்டவிரோதக் கொலைகளும் புனிதமானவை என்ற ஆபத்தான பாசிசச் சிந்தனையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

படத்தின் ஆகச்சிறந்த மாஸ் காட்சியாகக் கொண்டாடப்படுவது, நாயகன் தன் ஆர்மி நண்பர்களை ஒன்றுதிரட்டி, மும்பையின் வெவ்வேறு இடங்களில் இருக்கும் ஸ்லீப்பர் செல்களை ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லும் காட்சி. எந்தவித விசாரணையோ, சட்டபூர்வமான ஆதாரங்களோ இல்லாமல், அவன் தீவிரவாதி, அவனைக் கொன்றுவிடு என்று ஒரு தனிநபர் உத்தரவிடுவதும், அதைத் தேசபக்தி என்ற பெயரில் சமூகம் கைதட்டி ரசிப்பதும் எவ்வளவு பெரிய அறவீழ்ச்சி!

ஒரு ஜனநாயக நாட்டில் குற்றவாளிகள் கூடச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, முறையான விசாரணை நடத்தப்பட்டுதான் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விழுமியத்தை இத்திரைப்படம் அடியோடு தகர்த்தது.

விளைவு?

நிஜ வாழ்க்கையிலும், அடிச்சு என்கவுண்ட்டர் பண்ணுங்க சார் என்று மனித உரிமைகளைக் கேலி செய்யும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறைக்கு அடிமையான பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது ஆழமாக விதைத்தது.

இத்திரைப்படத்தின் மையக்கதை தீவிரவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட மதப் பின்னணி கொண்ட மனிதர்களை ஒட்டுமொத்தமாகச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் ஓர் ஆபத்தான ஸ்டீரியோடைப் பொதுப்புத்தியை மிக நளினமாக உருவாக்கியது.

பம்பாயில் இருக்கும் சாதாரண வியாபாரிகள், கூலிகள் போன்ற சாமானியர்களைச் ஸ்லீப்பர் செல்கள் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடைத்து, அவர்கள் அனைவருமே நாட்டின் அமைதியைக் கெடுக்கக் காத்திருப்பவர்கள் போன்ற ஒரு போலிப் பயத்தைக் கமர்ஷியலாக இத்திரைப்படம் விற்றது.

சமூகத்தில் இருக்கும் பன்முகத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும் பேணுவதை விடுத்து, சாமானிய மனிதர்களுக்கு இடையே அவநம்பிக்கையையும் வெறுப்பையும் விதைப்பதற்கு இந்தத் துப்பாக்கி பாணி அரசியல் மிகச் கச்சிதமாகப் பயன்பட்டது.

படத்தில் வரும் நாயகி ஒரு பாக்ஸிங் வீராங்கனை. ஒரு விளையாட்டு வீராங்கனையைத் தமிழ் சினிமா எப்படி நடத்தும்? அவளுக்குப் புத்திசாலித்தனம் இருக்காது, எப்போது பார்த்தாலும் லூசுத் தனமாகப் பேசிக் கொண்டிருப்பாள், நாயகன் தன்னை ஏமாற்றுவது கூடத் தெரியாமல் ஏமாந்து போவாள். அவளது பாக்ஸிங் திறமை என்பது படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு காமெடி காட்சியோடு முடிந்துவிடும்; அதன் பிறகு அவள் நாயகனின் பின்னால் அலைந்து உருகும் ஒரு வெறும் அழகுப் பொம்மைதான். பெண்களின் கல்வியையோ, விளையாட்டுத் திறமையையோ, ஆளுமையையோ கமர்சியல் சினிமா எப்படித் தன் ஆணாதிக்க பிம்பத்திற்கு முன்னால் மண்டியிட வைக்கிறது என்பதற்கு இத்திரைப்படமும் ஒரு ஆகச் சிறந்த உதாரணம்.

துப்பாக்கி பாக்ஸ் ஆபீஸில் 100 கோடிகளைக் குவித்து, நாயகனின் திரையுலகப் பாதையை அடுத்த கட்டத்திற்குத் தூக்கிச் சென்றிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அதற்கு முன், சலவைக்காரர், காய்கறி விற்பவர், பால் காரர் ஆகியோரைப் பார்த்தால் "காசு எவ்வளவு?" என்றுதான் கேட்கத் தோன்றும். படத்திற்குப் பின், "இவன் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறான்? ஒருவேளை ஸ்லீப்பர் செல்லோ?" என்ற சந்தேகத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கும் உளவியல் நோய் பரவியது.

தீவிரவாதி என்றால் தாடி வைத்திருக்க வேண்டும், கறுப்புச் சட்டை போட்டிருக்க வேண்டும் என்ற மரபார்ந்த கற்பிதங்களை உடைத்து, "உன் பக்கத்து வீட்டில் குடிவந்து, உனக்கேத் தெரியாமல் உன் வைபையைத் திருடிப் பயன்படுத்துபவனும் தீவிரவாதியாக இருக்கலாம்" என்ற உலகளாவிய விழிப்புணர்வை இப்படம் விதைத்தது. இதன் விளைவாக, சட்டம், ஒழுங்கு, காவல்துறை இதெல்லாம் வேஸ்ட்; ஒரு தனிமனிதன் நினைத்தால், அவனாகவே சிஸ்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தீர்ப்பு எழுதலாம் என்கிற ஆபத்தான அராஜகவியலை இத்திரைப்படம் வேரூன்றியது.

தேசபக்தி என்ற பெயரில் தனிநபர் வன்முறையை நியாயப்படுத்துவதையும், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைக் கெத்து என்று நம்புவதையும், பிற மனிதர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதையுமே ஒரு ஸ்டைல் ஆக மாற்றியதுதான் இந்தத் துப்பாக்கி தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையில் நிகழ்த்திய ஆகச்சிறந்த வரலாற்றுத் துளை!

*****

24 Jun 2026

ஆத்மார்த்த அலப்பறைகளும், உபநிடத பல்புகளும்!

ஆத்மார்த்த அலப்பறைகளும், உபநிடத பல்புகளும்!

ஜெயமோகன் வழக்கம்போல ஆரம்பத்திலேயே இளைஞர்களைக் கொஞ்சம் வாரிவிடுகிறார். இளமை என்றாலே கொந்தளிப்பு, தந்தை எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு என்று சைக்காலஜி பேசுகிறார்.

உண்மையில் விஷயம் அதுவல்ல; காந்தியின் சத்திய சோதனையை விட, அவரது சரளாதேவி சோதனைதான் வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது, அவ்வளவுதான்! வங்காளத்து மேட்டிமைவாதம், பாரதியாரின் சிறுகதை, பிரம்ம சமாஜம் × ஆரிய சமாஜம் என்று ஏகப்பட்ட வரலாற்றுப் பின்னணிகளோடு சரளாதேவி சௌதராணியை மேடைக்குக் கொண்டு வரப்படுகிறார்.

38 வயதில், கணவனும் மகனும் இருக்கும் போதே, 51 வயது காந்தியுடன் கடிதப் போக்குவரத்து நடத்தியிருக்கிறார் சரளாதேவி. காந்தியோ, தன் வழக்கமான பரிசோதனை பாணியில், இதற்கு “அறிவுத்துணைவி, “ஆத்மாவின் தோழி என்றெல்லாம் டிசைன் டிசைனாகப் பெயர் வைக்கிறார். நாமெல்லாம் இன்று Platonic Relationship என்று ஸ்டேட்டஸ் போடுவதைக் காந்தி அப்போதே காந்தியப் பாணியில் டிசைன் பண்ணியிருக்கார்!

அடுத்த கட்டமாக, திருமணத்தை நோக்கிக் காந்தி முடிவெடுத்தபோதுதான், சுற்றியிருந்த ராஜாஜியும், மகாதேவ தேசாயும் பதறிப்போய் அலறுகிறார்கள். இதைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்கிறார்கள். காந்தியோ விடாமல், “இது உடற்காதல் இல்லப்பா, இன்டெலக்சுவல் ஈர்ப்பு என்று வாதாடுகிறார்.

கடைசியில், இருபது வயது மகன் தேவதாஸ் வந்து, “அப்பா, அம்மாவைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கள் என்று சென்டிமென்ட் பிளாக்மெயில் செய்த உடனே, காந்தி ஒரு லெட்டரைப் போட்டுவிட்டு விலகி விடுகிறார். தன் சுயசரிதையில், “என் ஆணவம் என்னை ஒரு தீயாலான பாதைக்குள் கொண்டு செல்லப் பார்த்தது என்று இதைக் காந்தியடிகள் சொல்வதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

சரளாதேவி சும்மா இருக்கவில்லை. காந்திக்கு எதிராகப் பேனாவை எடுத்துப் போர்க்கொடி தூக்குகிறார். காந்தி பண்றதெல்லாம் நாட்டுக்குக் கேடு என்று கட்டுரைகளாகக் கொட்டுகிறார்.

இதையெல்லாம் படித்துவிட்டு நம்ம ஜெயமோகன், காந்தியவாதி ஜி.குமாரபிள்ளையிடம் போய், “சரளாதேவி செம அறிவாளி சார், அவங்க காந்தியை எதிர்த்தா அதுல நியாயம் இருக்கும்ல?” என்று ஆவேசப்பட்டிருக்கிறார். அதற்கு குமாரபிள்ளை, “தம்பி, முதல்ல காந்தியைப் படிப்பா என்று சில புத்தகங்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

அங்குதான் அந்த மகா மெய்ஞ்ஞான விவாதம் நடக்கிறது. சரளாதேவி ஏன் காந்தியைப் புரிந்துகொள்ளவில்லை? அதற்கு குமாரபிள்ளை, ஈஸோவாஸ்ய உபநிடத வரியை எடுத்துப் போடுகிறார். “அறியாமையில் இருப்பவன் இருளில் இருக்கிறான்; ஆனால், எனக்கு எல்லாம் தெரியும் என்று அலையும் அறிவுஜீவி, அதைவிடப் பெரிய இருளில் அதாவது, ஆணவ இருளில் இருக்கிறான்.”

சரளாதேவியின் கட்டுரைகளில் நான் என்ற வார்த்தைதான் ஓங்கி ஒலித்ததாம். கடைசி காலத்தில் சரளாதேவி இந்த அறிவுஜீவி ஆணவத்தை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஆன்மிகப் பாதைக்கு மாறி, காந்தியைப் புரிந்துகொண்டாராம்.

நல்லவேளை! மெய்யறிவின் ஒளி கிடைத்து, காந்தி குடும்பத்திலேயே தன் மகனுக்குப் பெண்ணும் எடுத்து, சுபமங்களமாக கதையை முடித்திருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, சயின்டிஸ்ட்டாக இருந்தாலும் சரி ரிஜெக்சன் வந்தால் முதலில் வருவது கோபமும் வன்மமும்தான். அதுக்கு அறிவு விதிவிலக்கல்ல. அங்க வேலை செய்வது லிம்பிக் சிஸ்டம், மூளை இல்லை!

சுருக்கமாகச் சொன்னால், "அறிவின் இருளுக்கு மாற்று அறியாமை அல்ல, மெய்யறிவு" என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த ஆத்மார்த்த காதல்களும், அது பிரேக் அப் ஆனதும் வரும் வன்மங்களும், அப்புறம் வயசானதும் வரும் தத்துவ ஞானங்களும் காலம் காலமாய் உலகத்துல நடக்குற அதே கொசுத்தொல்லைதான்!

அதற்கு ஏன் உபநிடதத்தை எல்லாம் இழுத்து, பாவம், அந்த இருட்டைக் குத்திக் கிழிக்க வேண்டும்? ஒருவர் தனது ஈகோவைப் புரிந்து கொண்டால் விசயம் முடிந்தது. இதற்கு ஆன்மீகம்தான் வேண்டும், குரு சிஷ்ய பாவம் அவசியம் என்றெல்லாம் ஏன் அநாவசிய ஆணிகளை அடிக்க வேண்டும்?

*****