8 Jun 2026

ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து... நீட் விநோதக் கூத்துகள்!

ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து... நீட் விநோதக் கூத்துகள்!

உலகில் மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கிறது. கல்வித் துறைக்கு இருக்கும் ஒரே கடமை, மாணவர்களுக்குப் பரீட்சை வைப்பது. அந்தப் பரீட்சையை எப்படியாவது லீக் செய்வது மாபியாக்களின் கடமை.

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 70 வினாத்தாள்கள் கசிந்துள்ளனவாம். இரண்டு கோடி மாணவர்கள் இதனால் மன அழுத்தத்தில் இருக்கிறார்களாம்.

எனக்கு என்னவோ, வினாத்தாள் தயாரிப்பதை விட, அதை எப்படிக் கசியவிடுவது என்பதில் தான் நம் ஊர் மாபியாக்கள் அதிக மேலாண்மைத் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழல் எல்லாம் ஒரு பல்கலைக்கழக அளவிலான பிஹெச்டி ஆராய்ச்சி. இப்போது நீட் தேர்விலும் அந்த வித்தையைக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த முறை ராஜஸ்தானில் ஆரம்பித்து, மகாராஷ்டிராவின் தாவரவியல் பெண் விரிவுரையாளர் மனீஷா, பேராசிரியர் குல்கர்னி என சிபிஐ லிஸ்ட் நீள்கிறது. தாவரவியல் டீச்சர் என்பதால், வினாத்தாளை எப்படிக் கிளைபரப்பச் செய்வது என்று தாவரவியல் ரீதியாக யோசித்திருப்பார் போலிருக்கிறது!

முதல் அடுக்கில் ஒரு கொஸ்டின் பேப்பர் 5 கோடி முதல் 10 கோடி வரை விற்கப்பட்டதாம். ஆஹா, கல்வியின் மதிப்பு எவ்வளவு உயர்ந்துவிட்டது பாருங்கள்!

கடந்த மே 3ஆம் தேதி, சுமார் 22 லட்சம் அப்பாவிகள், மன்னிக்கவும், மாணவர்கள், நீட் தேர்வை எழுதப் போனார்கள். தேர்வு மையங்களில் இருந்த கட்டுப்பாடுகளைப் பார்த்தால் ஏதோ சர்வதேச எல்லை பாதுகாப்புப் படை முகாம் போல இருந்தது.

 மதியம் 2 மணி பரீட்சைக்கு காலை 11 மணிக்கே ஆஜராக வேண்டும்.

மெட்டல் டிடெக்டர் சோதனை.

ஏதோ ஓர் அரசு அடையாள அட்டை அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு

கைப்பேசி, கால்குலேட்டர் தடை சரி. மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, கண்ணாடி, தாயத்து, பெல்ட் எல்லாவற்றையும் கழற்றச் சொன்னார்கள்.

பாவம் மாணவ மாணவிகள், நகைகளைக் கழற்றிப் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, ஏதோ போருக்குப் போகும் துறவிகள் போல உள்ளே போனார்கள்.

அதிக உயரமுள்ள காலணிகளுக்கும் தடை. தப்பித்தவறி செருப்புக்குள் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் வைத்து பிட் அடித்தால் என்ன செய்வது?

இவ்வளவு இரும்புத்திரை பாதுகாப்போடு, துபாய், அபுதாபி, சிங்கப்பூர் என உலகமெங்கும் 5,500 மையங்களில் தேர்வு நடத்தி முடித்தார்கள். ஆனால், இவ்வளவு சோதனையிலும் எதைச் சோதிக்க மறந்தார்கள் தெரியுமா? அந்த வினாத்தாளின் ரகசியத் தன்மையை மட்டும்தான்!

தேசிய தேர்வு முகமை இப்போது நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மிகவும் பொறுப்புணர்வோடு, நீங்கள் கட்டிய எக்ஸாம் பீஸைத் திரும்பத் தருகிறோம், என்று அறிவித்திருக்கிறது. என்னவொரு பெருந்தன்மை!

இரண்டு மூன்று வருடங்கள் தூக்கமில்லாமல், கோச்சிங் சென்டருக்குப் பல லட்சங்களை அழுதுவிட்டுப் படித்த மாணவனிடம், இந்தாப்பா உன் அப்ளிகேஷன் பீஸ், வச்சுக்கோ, என்று கொடுப்பது எவ்வளவு பெரிய நகைச்சுவை!

22 லட்சம் மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணமாக மட்டுமே ரூ.300 கோடி வசூலாகும். ஜேஇஇ எல்லாம் சேர்த்தால் வருஷத்துக்கு 800 கோடி ரூபாய் டர்ன்ஓவர் பார்க்கும் இந்த மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு, சொந்தமாக ஒரு பிரிண்டிங் பிரஸ் கூட கிடையாதாம். கேள்வித்தாள் டைப் செய்வதில் இருந்து அதை அச்சிட்டு, பார்சல் கட்டி அனுப்புவது வரை நூறு கைகள் மாறுகிறதாம். பிறகு கசியாமல் என்ன செய்யும்?

போனால் போகிறது, ஜூன் 21இல் மறுதேர்வு நடத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.  அதுமட்டுமில்லாமல், அடுத்த வருஷத்தில இருந்து எல்லாமே கம்ப்யூட்டர் வழி ஆன்லைன் தேர்வுதான் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அங்கே ஹேக் செய்ய மாட்டார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை!

மாணவர்களுக்கு இருக்கும் மருத்துவ மோகத்தைப் பயன்படுத்தி, அவர்களைத் தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டே இருப்பதுதான் தற்போதைய கல்வி முறையின் உன்னத நோக்கம் போலும். இந்த லட்சணத்தில், இனியும் நீட் தேர்வு தொடரக் கூடாது என்று அறிவார்ந்த மக்கள் ஆசைப்படுகிறார்களாம்.

அறிவார்ந்த மக்கள் ஆசைப்படலாம். ஆனால் மாபியாக்களும், கோச்சிங் சென்டர்களும் அத்தனை சீக்கிரம் இந்தச் சுவாரசியமான விளையாட்டை நிறுத்த விடுவார்களா என்ன?

வரும் ஜூன் 21ஆம் தேதி வினாத்தாள் கசியுமா, அல்லது விடைத்தாள் மறையுமா என்பதைப் பார்க்க நாம் அனைவரும் ஆவலோடு காத்திருப்போம்!

*****

காக்கிச் சட்டையைக் கசாப்புக் கத்தியாக்கித் தமிழனைக் கர்ஜிக்க வைத்த பாசிசச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 6

சிங்கம்

காக்கிச் சட்டையைக் கசாப்புக் கத்தியாக்கித் 

தமிழனைக் கர்ஜிக்க வைத்த பாசிசச் சீரழிவு!

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் முடியும் தருவாயில், தமிழ் சினிமா தன் ஆகச்சிறந்த காட்டுமிராண்டித்தனமான பார்முலாவைக் கண்டறிந்தது. அதுதான் 2010இல் வெளியான சிங்கம். நாம் முன்பே பார்த்த சாமி என்ற திரைப்படத்தில் விதைக்கப்பட்ட போலீஸ் அராஜக நச்சை, இத்திரைப்படத்தில் இன்னும் கொஞ்சம் சத்தமாகவும், அதிவேகமாகவும், எக்கச்சக்கமான அலறல்களோடும் அப்டேட் செய்து கொடுத்தது கோடம்பாக்கத்து கமர்ஷியல் சினிமா பேக்டரி.

முறுக்கிய உடலும் மற்றும் மீசையும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் சிந்தனையை ஒரு மிருகத்தனமான வட்டத்திற்குள் சுருக்கியதுதான் சிங்கம் திரைப்படம் உருவாக்கிய அசிங்கச் சீரழிவு.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்ற இத்திரைப்படத்தின் வசனம் அறிவற்ற தசைகளின் போலிப் பெருமிதம். இப்போலிப் பெருமிதம் போலி ஆண்மையைத் தூண்டி விட்டுத் தமிழக இளைஞர்களைப் பித்துப் பிடித்து டன் கணக்கில் உளறச் செய்தது.

இத்திரைப்படம் தமிழர்களின் பொதுப்புத்தியில் ஏற்றிய ஆகச்சிறந்த தத்துவம் என்ன தெரியுமா? விவேகமும், சட்டப் புரிதலும், மனித உரிமைகளும் பலவீனமானவர்களுக்கானது. உண்மையான போலீஸ் அதிகாரிக்குத் தேவை அறிவு அல்ல, ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் எடையை உருவாக்கும் முரட்டுத் தசைகள் மட்டும்தான். அப்படித் தசைகளை மனிதர்களில் உருவாக்க முடியுமா என்ன? மனிதர்களை இன்னும் மேன்மையான மனிதர்களாக்குவதற்குப் பதிலாக, மனிதர்களை மிருகங்களாக மாற்ற முயற்சித்தது இத்திரைப்படம். டார்வினின் பார்வையில் சொன்னால் இது பின்னோக்கிய பரிணாம வளர்ச்சியாகும்.

இப்படத்தில் வரும் நாயகன், எதற்கெடுத்தாலும் கத்துவார், கையை ஓங்குவார், சட்டப் புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டுத் தன் சொந்தக் கைகளால் தீர்ப்பு வழங்குவார். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு முறையான வழிமுறைகள்  உண்டு. ஆனால், இத்திரைப்பட நாயகச் சிங்கமோ, நானே சட்டம், நானே நீதிபதி என்ற பாசிச மனோபாவத்திற்கு ஹீரோயிசம் என்ற போலி முலாம்பூசி கமர்ஷியல் ஹிட்டடித்தார்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நடக்கும் லாக்அப் மரணங்களையும், மனித உரிமை மீறல்களையும் பார்த்துவிட்டு, நம்ம சிங்கம் சார் மாதிரி சும்மா அதிரடியா பண்றாங்கப்பா, என்று கைதட்டி ரசிக்கும் ஒரு மூர்க்கமான பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது ஆழமாக விதைத்தது.

படத்தில் வரும் வில்லனை அடக்க, நாயகச் சிங்கம் கையாளும் உத்திகள் எவையுமே சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல. நீதிமன்ற விசாரணையோ, முறையான சாட்சியங்களோ இல்லாமல், ஒரு குற்றவாளியைச் சுட்டுக் கொல்வதே ஆகச்சிறந்த கிளைமாக்ஸ் என்று இத்திரைப்படம் கொண்டாடியது.

ஒரு குற்றவாளிக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் திறமையான போலீஸின் லட்சணம். ஆனால், கொலைக்குக் கொலை, அராஜகத்திற்கு அராஜகம் செய்வதுதான் கெத்து என்று காட்டியதன் மூலம், சட்டத்தின் ஆட்சியை  இத்திரைப்படம் கேலிக்கூத்தாக்கியது.

இதன் சீரழிவு என்னவென்றால், நிஜ சமூகத்தில் காவல்துறையினர் தங்களின் கடமையிலிருந்து தவறி, அராஜகத்தில் ஈடுபடும்போது அதைக் கேள்வி கேட்கும் அறிவை இந்தச் சமூகம் மொத்தமாக இழந்தது. காவல்துறையை என்கவுண்ட்டர் கூலிப்படையாகச் சித்தரித்தது மனித உரிமைகளுடன் கூடிய நாகரிக ஜனநாயக முறைக்கு எதிராக ஒரு பாசிசவாதத்தை முன் வைத்தது.

படம் தொடங்கும்போதே நாயகன் தன் கிராமம், தன் மண், தன் குடும்பக் கௌரவம் என்று அதீதப் பாசம் காட்டுவார். தமிழ் சினிமாவில் கிராமத்துப் பாசம் என்ற லேபிளுக்குப் பின்னால் எப்பொழுதும் ஒளிந்திருப்பது ஒரு குறிப்பிட்ட சாதியப் பெருமிதமும், நிலப்பிரபுத்துவ மனோபாவமும்தான்.

படிப்பறிவோ, நவீன உலகப் புரிதலோ இல்லாத ஒரு முரட்டுத்தனமான கிராமியச் சூழலை ஆகச்சிறந்த பண்பாடாகக் காட்டி, நகரத்து நாகரிகத்தையும் சட்ட ஒழுங்கையும் மட்டம் தட்டுவதுதான் இந்தச் சிங்கத்தின் ராஜதந்திரம். இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த இளைஞர்கள், உலகளாவிய சிந்தனைகளை நோக்கித் தங்களை வளர்த்துக்கொள்வதை விடுத்து, எங்க ஊரு கெத்து, எங்க மண் கெத்து என்று குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுருங்கிப் போவதைப் பெருமிதம் என்ற கருத ஆரம்பித்தார்கள். கிராமத்துப் பெருமை என்ற பெயரில் தூண்டப்பட்ட சாதியப் பொதுப்புத்தியை மறைமுகமாகத் தூக்கிப் பிடித்ததில் இத்திரைப்படத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

படத்தில் வரும் நாயகி, சென்னை போன்ற பெருநகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒரு படித்த பெண். ஆனால், அவளுக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன? மீசையை முறுக்கிக் கொண்டு கத்தும் நாயகனின் பின்னால் அலைவது, அவனது முரட்டுத்தனத்தைக் கண்டு உருகிப் போவது, பாடல்களுக்குத் தகுந்தாற்போல் ஆடுவது மட்டும்தான்.

ஒரு பெண்ணின் சுயமரியாதை, அவளது கல்வி, அவளது ஆளுமை அனைத்தையும் ஒரு ஆணின் அதிகாரப் பிம்பத்திற்கு முன்னால் மண்டியிட வைப்பதுதான் தமிழ் கமர்சியல் சினிமாவின் வழக்கம். அதை இத்திரைப்படமும் மிக நேர்த்தியாகச் செய்து, பெண்களை வெறும் போகப் பொருளாகவும் பின்துணையாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கப் புத்தியைத் தமிழர்களின் நெஞ்சில் இன்னும் ஆழமாகப் பதியவைத்தது.

சிங்கம் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் பின் மேலும் இரண்டு பாகங்களாக சிங்கம் 2, சிங்கம் 3 எனத் தமிழ்நாட்டைத் துவைத்து எடுத்தது, ஆனால், அழுக்குதான் போகவில்லை.

ஒரு முற்போக்குச் சமூகமாக மாற வேண்டிய தமிழர்களை இத்திரைப்படம் கொண்டு போய் நிறுத்திய இடம் எது தெரியுமா? ஸ்டைலிஷான காட்டுமிராண்டித்தன வெளி.

அறிவையும் மனிதநேயத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு சமூகத்தை, வெறும் கர்ஜனை, அதிரடி, என்கவுண்ட்டர் என்ற வன்முறைப் போதைக்கு அடிமையாக்கியதில், துரைசிங்கத்தின் அந்தச் சிங்க முத்திரை காக்கிச் சட்டைக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதுதான் இத்திரைப்படம் மற்றும் அதன் தொடர்ச்சியான மேலும் இரு பாகங்கள் குறித்த கசப்பான உண்மை!

*****

7 Jun 2026

போலீஸுக்குப் புனிதப் போர்வை போர்த்தி, பொதுப்புத்தியைப் புளிச்சமாவு ஆக்கிய சீரழிவு!

சீரழித்த சினிமா – 5

சாமி

போலீஸுக்குப் புனிதப் போர்வை போர்த்தி, 

பொதுப்புத்தியைப் புளிச்சமாவு ஆக்கிய சீரழிவு!

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் தன் உரிமைகளையும், சட்டத்தின் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே அடகு வைக்கப் பழகிக் கொண்டது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்ட பெருமை 2003 இல் வெளியான சாமி திரைப்படத்திற்கு உண்டு.

போலீஸ் அராஜகமே ஆகச்சிறந்த தீர்வு என்ற பாசிச நச்சை எப்படி நளினமாக இத்திரைப்படம் விதைத்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படத்தில் இடம்பெறும், நான் போலீஸ் இல்லடா பொறுக்கி என்ற வசனம் அராஜகத்திற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம்.

இத்திரைப்படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ஜனநாயகப் பாடம் என்னவென்றால், சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரியே ஒரு ரவுடியைப் போல அராஜகம் செய்யலாம், அது தப்பில்லை என்பதுதான்.

இத்திரைப்படத்தில் வரும் நாயகன், சட்டப் புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு, குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து அடித்துத் துவம்சம் செய்வார். ஒரு நாகரிக நாட்டில், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் வேலை. ஆனால் சாமியோ, போலீஸ் என்பவன் சட்டபூர்வமாக லைசென்ஸ் பெற்ற ஒரு ரவுடி என்ற ஆபத்தான சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆணி அடித்தார்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நடக்கும் போலீஸ் அத்துமீறல்களையும், போலி என்கவுண்ட்டர்களையும் பார்த்துவிட்டு, அடிச்சு நொறுக்குங்க சார், அப்பதான் நாடு உருப்படும், என்று கைதட்டி ரசிக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான பொதுப்புத்தியை இந்தச் சினிமா உருவாக்கியது.

இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் தத்துவார்த்த அபத்தம் என்னவென்றால், நாயகன் லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துவதுதான். ஊர்ல இருக்குற பெரிய வில்லன் கிட்ட வாரம் ரெண்டு லட்சம் லஞ்சம் வாங்கி, அதை வச்சு ஏழைகளுக்கு நல்லது செய்றேன், என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசும் வசனம் தமிழர்களை உருக வைத்தது.

ஊழலையும் லஞ்சத்தையும் ஒரு புனிதப் போர்வையால் மூடி, நோக்கம் நன்றாக இருந்தால் நீங்கள் வாங்கும் லஞ்சமும் தர்மமே என்ற விசித்திரமான அறவீழ்ச்சியை இது தமிழ்ச் சமூகத்தில் விதைத்தது.

நிஜ வாழ்க்கையில் நாம் செய்யும் சின்னச் சின்ன முறைகேடுகளையும், நாம என்ன அநியாயமா பண்றோம், நாலு பேருக்கு நல்லதுக்குத்தானே என்று நாமே சமரசம் செய்துகொள்வதற்கு இந்த சாமி தியரியே ஆதிமூலம்.

இப்படத்தில் இடம்பெற்ற கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா இல்லை ஓடிப் போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்ற திரைப்பாடல் அப்போது தமிழகமெங்கும் சிறுகுழந்தைகளின் உதடுகள் வரைப் போய்ச் சேர்ந்தது. உடனடி இன்பம் மற்றும் உடற்பசியை மட்டும் பிரதானமாகத் தத்துவமாகக் காட்டும் இப்பாடலின் அடுத்தடுத்த வரிகள் பாலியல் மசாலாவின் உச்சம்.

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா இல்லை புள்ளக்குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா என்பன வெறும் ஆபாச வரிகள் மட்டுமல்ல, மானிடவியல் ரீதியாகப் பார்த்தால், குடும்பம் என்ற அமைப்பின் வரிசைக்கிரமத்தைத் தலைகீழாக மாற்றிப் பார்க்கும் ஒரு அராஜகவாதத் தத்துவம். இதில் பேசப்படும் ஓடிப் போதல் என்பது, சமூகத்தின் மீதான புரட்சியோ அல்லது காதலுக்கான போராட்டமோ அல்ல, அது சமூக விதிகளிலிருந்து தப்பித்துத் தங்களின் உடல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளத் துடிக்கும் ஒரு தற்காலிகமான தப்பியோடும் மனநிலை. இப்பாடலில் வரும் அடுத்தடுத்த வரிகள் காதலை முற்றிலும் மன ரீதியான தளத்திலிருந்து இறக்கி, முழுக்க முழுக்க உடல் சார்ந்த தேவையாக  சுருக்குகின்றன.

ஒரு கலைப்படைப்பு மனிதனை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் அல்லது சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால், இப்பாடல் வரிகள் அழகியல் வீழ்ச்சி என்ற தத்துவத்தின் கீழ் வருகின்றன.

எது சமூகத்தில் தவறானது அல்லது மறைமுகமாகப் பேசப்பட வேண்டியதோ, அதை அப்பட்டமாக, மிகச் சாதாரணமான சொற்களைக் கொண்டு பொதுவெளியில் பாடி, அதைக் கொண்டாடுவதன் மூலம் சமூகத்தின் ஒட்டுமொத்த ரசனையையும் கீழ்நோக்கி இழுக்கும் வணிகத் தத்துவத்தை இது பிரதிபலித்தது. தமிழ்ச் சமூகமும் அப்போது இப்பாடலைத் தங்கள் குழந்தைகள் மழலை மொழியில் பாட, அதைக்  கேட்டு புளங்காகிதம் அடைந்தது என்பது சொல்லொணா கலைத்துயரம்.

படத்தில் வரும் வில்லன் செய்யும் அநியாயங்களுக்கு, நாயகன் கொடுக்கும் தண்டனைகள் எல்லாமே சட்டத்திற்குப் புறம்பானவை. ஒரு குற்றவாளியைக் கூலிப்படையை ஏவி அடிக்க வைப்பது, சட்டையைக் கழற்றிவிட்டு நடுரோட்டில் சண்டையிடுவது என ஒட்டுமொத்தப் படமும் வன்முறையை மட்டுமே மூலதனமாகக் கொண்டது.

விவேகத்தோடும், சட்டப்பூர்வமாகவும் அணுக வேண்டிய சமூகப் பிரச்சினைகளை, வெறும் அடிதடி, ரத்தக் களறி, பஞ்ச் வசனங்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே சுருக்கி, தமிழர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடித்ததுதான் இந்தச் சாமியின் ஆகச்சிறந்த அற்புதம்.

சாமி பாக்ஸ் ஆபீஸில் நூறு நாட்களைக் கடந்து ஓடி, அந்தச் சீயானின் பிம்பத்தை உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், ஒரு பொறுப்புள்ள திரைச் சமூகமாகத் தமிழர்களை அது எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அறிவையும் விவேகத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு சட்டபூர்வ ஜனநாயகச் சமூகத்தை, போலீஸின் அராஜகத்தைக் கண்டு விசில் அடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற கூட்டமாக மாற்றியதில், ஆறுச்சாமியின் அந்தப் போலீஸ் யூனிபார்முக்கும், சாமி திரையில் காட்டிய வன்முறைக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத கசப்பான உண்மை!

*****

6 Jun 2026

பேரண்டத்தின் ஆகச் சிறந்த நகைச்சுவை!

பேரண்டத்தின் ஆகச் சிறந்த நகைச்சுவை!

மனிதன் கண்டுபிடித்ததிலேயே ஆகச்சிறந்த போதைப்பொருள் கஞ்சாவோ, அபினியோ கிடையாது. அது, நான் ஒரு மேதாவி, என்கிற தற்பெருமை.

காலம்  என்பது ஒரு மிகப்பெரிய சூதாடி. அது நம்மை வீழ்த்துவதற்குக் கத்தியையோ, துப்பாக்கியையோ தூக்கிக்கொண்டு வருவதில்லை. அதற்குப் பதிலாக, அது நமக்கு ஓர் அழகான, பட்டுத்துணியால் ஆன சிம்மாசனத்தைப் பரிசளிக்கிறது. அதில் நம்மை அமரவைத்து, அப்படியே அமர்ந்திருங்கள் பேரறிஞரே, உங்களை விட புத்திசாலி இந்த அண்டவெளியில் எவனுமில்லை, என்று காதில் தேன் வடிக்கிறது. நாமும் நம் தொப்பையைத் தடவிக்கொண்டு, மீசையை முறுக்கிக்கொண்டு அந்த சிம்மாசனத்தில் அமர்கிறோம்.‘

அங்கேதான் ஆப்பு ஆரம்பமாகிறது.

ஒருவன் தன்னை மேதாவி என்று நம்பத் தொடங்கும் அடுத்த கணமே, அவன் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை நிறுத்திவிடுகிறான். ஏனெனில், அவனது அகந்தையின்படி, அவன் ஏற்கனவே எல்லாவற்றையும் அறிந்தவன்.

அறியாமை என்பது ஒரு வெற்றுப் பாத்திரம். இதில் எதை வேண்டுமானாலும் நிரப்பலாம். இது பலவீனம் அல்ல, சாத்தியக்கூறு.

மேதாவித்தனம் என்பது ஏற்கனவே சாக்கடையால் நிரப்பப்பட்டு, மூடி சீல் வைக்கப்பட்ட பாத்திரம். இதில் புதிய அமுதத்தை ஊற்றினாலும் அது வெளியேதான் வழியும்.

காலம் மிகச் சாதுரியமானது. உங்களை அது ஓர் அறிவாளி என்ற கூண்டுக்குள் அடைத்துவிட்டால், அப்புறம் உங்களைக் கண்காணிக்க வேண்டிய தேவையே அதற்கு இல்லை. உங்களை நீங்களே கவனித்துக் கொள்வீர்கள். மாற்றுக்கருத்து சொல்பவர்களை முட்டாள்கள் என்று ஒதுக்குவீர்கள். உங்களை நீங்களே ஒரு கண்ணாடி அறையில் பூட்டிக்கொண்டு சுயஇன்பம் காண்பது போல உங்கள் அறிவை வியந்து கொண்டிருப்பீர்கள்.

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும்போது அறிஞனாகிறான். ஆனால் ஓர் அறிஞன் தன்னை மேதாவி என்று நம்பும்போது, அவன் காலத்தின் ஆகச்சிறந்த அடிமையாகிறான்.

ஏன் இது உங்களைப் பலவீனமாக்குகிறது?

மிக எளிய லாஜிக். இந்த உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. நேற்று விஞ்ஞானம் என்று போற்றப்பட்டது இன்று அஞ்ஞானம் ஆகிறது. நீங்கள் உங்களை மேதாவி என்று நம்பும்போது, காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள மறுக்கிறீர்கள். உறைந்துபோன பனிக்கட்டி போல ஒரு இடத்தில் நிற்கிறீர்கள். காலம் என்னும் நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஓடும் நதியில் அசையாமல் நிற்கும் பாறை ஒருநாள் தேய்ந்துதான் போக வேண்டும்.

உங்களை மேதாவி என்று நம்ப வைப்பதன் மூலம், காலம் உங்கள் கேள்வி கேட்கும் திறனைத் திருடிவிடுகிறது. நீங்கள் மற்றவர்களைப் பார்த்து கேள்வி கேட்பீர்கள், ஆனால் உங்களை நோக்கி ஒருபோதும் கேள்வி கேட்க மாட்டீர்கள். தன் மீது தனக்கே சந்தேகம் வராத ஒரு மனிதன், மிக எளிதாக வீழ்த்தப்படக்கூடியவன்.

எனவே நண்பரே, கண்ணாடி முன்னால் நின்று உங்கள் பிம்பத்தைப் பார்த்து, நான் எவ்வளவு புத்திசாலி, என்று நீங்கள் முனகும் போதெல்லாம், பின்னணியில் காலம் தன் கைகளைத் தட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.

உங்களைப் பலவீனமாக்க எதிரிகள் தேவையில்லை, உங்கள் சொந்த புத்திசாலித்தனமே போதும். நீங்கள் அறிவாளியாக இருப்பதில் காலத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நீங்கள் மேதாவி என்று உங்களை நம்பத் தொடங்கும் கணமே, நீங்கள் காலத்தின் சதுரங்கப் பலகையில் ஒரு வெட்டப்படப் போகும் சிப்பாய் ஆகக் கடவீர்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அறிவோடு இருங்கள், ஆனால் அறிவாளி என்கிற திமிரோடு இருக்காதீர்கள். ஏனெனில், காலம் உங்களை விடப் பெரிய பிஸ்தா!

*****

தல தீபாவளி கொண்டாடிய தமிழனும், தாதாயிசத்தின் நச்சுப் பிள்ளையார் சுழியும்!

சீரழித்த சினிமா – 4

தீனா

தல தீபாவளி கொண்டாடிய தமிழனும், 

தாதாயிசத்தின் நச்சுப் பிள்ளையார் சுழியும்!

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம். தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு விசித்திரமான வியாதி ஏற்பட்டது. தம்பி, தம்பி என்று அழைக்கப்பட்ட ஒரு நடிகரை, தமிழ்நாட்டு இளைய சமூகம் ஒட்டுமொத்தமாய்த் தல என்று தங்களின் உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடத் தொடங்கியது.

அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த ரவுடியிச பார்முலாவை இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஸ்டைலிஷ் ஆக மாற்றி, தமிழர்களின் பொதுப்புத்தியை வக்கிரப்புத்தியாக மாற்றி கூசாமல் பதம் பார்த்தது தீனா என்ற திரைப்படம்.

இத்திரைப்படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்பத் தத்துவம் என்னவென்றால், அண்ணன் ஒரு பெரிய நிழல் உலக தாதாவாக இருந்தால், தம்பி அவனுக்குப் பக்கபலமாக நின்று ஊரிலிருக்கும் மற்ற ரவுடிகளை வெட்டிச் சாய்க்க வேண்டும் என்பதுதான்.

ஒரு குடும்பத்தின் கௌரவம் என்பது அவர்கள் செய்யும் தாதாயிசத்திலும், அவர்கள் பின்னால் இருக்கும் அடியாட்களின் எண்ணிக்கையிலும்தான் இருக்கிறது என்பது தீனா தந்த தீராத தத்துவம்.

சட்டவிரோதச் செயல்களையும், கட்டப்பஞ்சாயத்துகளையும் அண்ணன் தம்பி பாசம் என்ற பாசிசப் போர்வைக்குள் மூடி, அதற்குப் புனிதத்தன்மை கற்பித்ததுதான் இத்திரைப்படத்தினால் ஏற்பட்ட ஆகப்பெரும் சீரழிவு.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தர்மத்தையும் நியாயத்தையும் தேடுவதை விடுத்து, என் அண்ணன் யாரு தெரியுமா? என்று உள்ளூர் ரவுடிகளுக்குப் பின்னால் குடைபிடித்து ஓடத் தொடங்கினான்.

தீனா திரைப்படத்தின் ஆகச்சிறந்த கலாச்சாரப் பங்களிப்பு என்னவென்றால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு புதிய ஆட்டுக்குட்டி மனோபாவத்தை உருவாக்கியதுதான்.

படத்தில் நாயகன் செய்யும் காரியங்கள் என்னவென்றால், கையில் காப்பு மாட்டிக் கொண்டு அடியாட்களுடன் சுற்றுவது, வம்பு சண்டைக்குப் போவது, சட்டத்தை மதிக்காமல் தன் சொந்த நீதிமன்றத்தை நடத்துவது.

அறிவையும், சுயசிந்தனையையும் வளர்த்துக்கொண்டு சமூகத்திற்குப் பயன்பட வேண்டிய வயதில், தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் தங்களை ஒரு டான் ஆகக் கற்பனை செய்துகொண்டு, வழுக்கைத் தலையும் தாடியுமாக முச்சந்திகளில் நின்று கொண்டு வம்பு வளர்ப்பதை கெத்து என்று நம்பத் தொடங்கினர்.

ஒரு தனிமனிதனின் மாஸ் பிம்பத்திற்காக, ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த சிந்தனையும் வன்முறையை நோக்கித் திசைதிருப்பப்பட்டது ஒரு வரலாற்றுச் சோகம்.

படத்தில் நாயகி ஒரு கடையில் வேலை செய்யும் சாதாரணப் பெண். நாயகனோ அவளைக் கண்டதும் காதல் வயப்பட்டு, அவளது சம்மதம் இல்லாமலேயே அவளது வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைவார். அவளைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதும், ஒரு ரவுடியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவளைப் பணிய வைப்பதும்தான் இங்குக் காதல் என்று போதிக்கப்பட்டது.

ஒரு பெண் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பே, அவளது தனிப்பட்ட எல்லைகளை ஓர் ஆண் தன் அடியாட்களின் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிப்பதை நியாயப்படுத்தியது இந்தச் சினிமா. இதன் விளைவாக, நிஜ வாழ்க்கையிலும் பெண்கள் தங்களின் மறுப்பைச் சொல்வதற்கே அஞ்சும் ஒரு பயமுறுத்தும் சூழலை இந்த வீணா போன தீனா பாணி காதல் கலாச்சாரம் உருவாக்கியது.

வழக்கமான தமிழ் சினிமாக்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் காவல்துறை என்பது ரவுடிகளின் காலடியில் கிடக்கும் ஒரு வெறும் டம்மி அமைப்பாகவே சித்தரிக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீஸ், அண்ணன் தம்பி தாதாக்களின் உத்தரவுக்காகக் காத்திருந்தது உலக மகா திரை அனுபவம்.

சட்டம் என்பது பலவீனமானவர்களுக்கானது, பலமுள்ளவர்கள் சட்டத்திற்கு மேலே இருக்கிறார்கள் என்ற ஆபத்தான சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆழமாக ஆணியடித்து விதைத்தது தீனா.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நமக்கொரு அநீதி நடந்தால், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிப்பதை விட, உள்ளூர் தாதாக்களின் காலடியில் விழுந்து பஞ்சாயத்து செய்வதே சிறந்தது என்ற அடிமை மனோபாவம் தமிழர்களிடம் இன்னும் தீவிரமடைந்தது.

தீனா பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கலாம். அதன் முலம் தல என்ற ஒரு பெரும் மாஸ் ஹீரோவாக உருவாகியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

விவேகத்தை விட வன்முறைக்கும், சட்டத்தை விடச் சொந்த அராஜகத்திற்கும் முக்கியத்துவம் தரும் ஒரு முரட்டுத்தனமான சமூகமாக நாம் மாறுவதற்கு, புது மில்லினியத்தின் தொடக்கத்தில் வைக்கப்பட்ட அந்த தல வெடி, இன்றுவரை தமிழ்ச் சமூகத்தின் முற்போக்குச் சிந்தனைகளைச் சிதறடித்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை!

*****

5 Jun 2026

தமிழனை டேமேஜ் செய்த பஞ்ச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 3

திருமலை

தமிழனை டேமேஜ் செய்த பஞ்ச் சீரழிவு!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் சினிமாவுக்குப் பிடித்த சாக்லேட் பாய் காய்ச்சலைத் துடைத்தெறிந்துவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு புதிய நச்சு வித்தை அரங்கேறியது.

அதுதான் திருமலை.

அதுவரை துறுதுறுவெனக் காதலித்துக் கொண்டிருந்த ஒரு நடிகரை, கையில் சிகரெட்டையும் வாயில் பஞ்ச் வசனங்களையும் கொடுத்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆகச்சிறந்த ரோல் மாடலாக மாற்றிய பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

ஒரு மெக்கானிக் ஷாப் பையன் எப்படி ஒட்டுமொத்தச் சமூகத்தின் பொதுப்புத்தியையும் தன் பஞ்ச்களால் பழுதுபார்த்தான் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரித் தத்துவம்.

வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க தோக்குறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோப்பான் என்பது இன்றுவரை தமிழ்நாட்டின் டாஸ்மாக் சுவர்களிலும், ஆட்டோக்களின் பின்னாடியும் எழுதப்பட்டிருக்கும் ஆகச் சிறந்த தத்துவ ஞானம். இப்படத்தின் ஆகச் சிறந்த பஞ்ச் போஜனம் இதுதான்.

இந்தப் படம் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த மிக மோசமான பாடம் என்னவென்றால், நீ உருப்படாமல் ஊர் சுற்றினாலும், அடியாளாக அலைந்தாலும் கவலைப்படாதே, வாழ்க்கை ஒரு வட்டம், அதுவே உன்னை ஒரு நாள் மேலே தூக்கிவிடும் என்பதுதான்.

திட்டமிடல், கல்வி, ஒழுக்கம், உழைப்பு எதுவுமே இல்லாமல், எல்லாவற்றையும் வட்டம் என்ற விதியின் மீது போட்டுவிட்டுச் சோம்பேறியாகத் திரியும் ஒரு தலைமுறையை உருவாக்க இந்த ஒரே ஒரு வசனம் அப்போதைக்கும் இப்போதைக்கும் எப்போதைக்கும் தமிழகத்துக்குப் போதுமானதாக இருந்தது, இருக்கிறது, இருந்து வருகிறது.

படத்தில் நாயகன், நாயகியைக் காதலிக்கும் லட்சணம் அலாதியானது. அவள் பின்னால் அலைவது, அவள் போகும் இடமெல்லாம் பின்தொடர்வது, அவளது தனிப்பட்ட விருப்பங்களை மதிக்காமல் அத்துமீறுவது. இதையெல்லாம் விடக் கொடுமை, நாயகிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும், அவளது காரை வழிமறித்துத் தன் நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் ஆட்டம் போடுவது என்று ஸ்டாக்கிங்கே ஆகச் சிறந்த காதல் என்று நிறுவிய படம் இது.

ஒரு பெண் இல்லை என்று சொன்னால், அவளை இன்னும் தீவிரமாகத் துரத்த வேண்டும், ஒரு கட்டத்தில் அவள் தானாகவே மண்டியிடுவாள் என்ற ஆபத்தான வக்கிரத்தை காதல் என்ற பெயரில் தமிழர்களின் நெஞ்சில் பதிய வைத்தது திருமலை. இதன் விளைவை, இன்றுவரை பேருந்து நிலையங்களிலும் கல்லூரி வாசல்களிலும் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் கலாச்சாரப் பங்களிப்பு சிகரெட் பிடிக்கும் ஸ்டைல். சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயால் பிடிப்பதையும், தீக்குச்சியைத் தொடையில் கீறிப் பற்றவைப்பதையும் வீரம் என்று காட்டியது. விளைவு, அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு தீக்குச்சியோடு விளையாடத் தொடங்கினர். இப்படம் வெளியாகிக் கால் நூற்றாண்டைக் கடக்க இருக்கும் நிலையிலும் தமிழ் இளைஞர்களின் அந்த தீராத விளையாட்டுத்தனம் இன்றும் நின்றபாடில்லை.

உடம்பை முறுக்கிக் கொண்டு, சட்டைப் பொத்தான்களைக் கழற்றிவிட்டு, முச்சந்திகளில் நின்று கொண்டு வம்பு வளர்ப்பதே கெத்து என்ற போலியான ஆண்மை மனோபாவம் இந்தத் திரைப்படத்திற்குப் பின் மிகத் தீவிரமாகப் பரவியது. தையல் கலைஞர்களுக்கு இதனால் தமிழ்நாட்டில் பொத்தான் தைக்கும் வேலை குறைந்தாலும், சமூகத்தில் காவலர்களுக்கும் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் இந்த உடல் முறுக்கிகளை நெளிவெடுக்கும் வேலை அதிகமாகி விட்டது.

இத்திரைப்படத்தில் ஊரில் பெரிய டானாக இருக்கும் ஒருவன், இந்த மெக்கானிக் பையனின் தைரியத்தைப் பார்த்து வியந்து, அவனுக்குப் பக்கபலமாக நிற்பார். அதாவது, சமுதாயத்தில் பெரிய ஆளாக வர வேண்டுமென்றால், உங்களுக்குச் சட்டத்தின் துணையோ அல்லது நல்லவர்களின் நட்போ தேவையில்லை. ஒரு பெரிய ரவுடியின் ஆசி இருந்தால் போதும் என்ற நச்சுப் புத்தியை இதன் மூலம் ஏற்படுத்தியது இத்திரைப்படம். ரவுடிகளும் தங்கள் பிறந்த நாள்களை அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடும் புதிய வெப்பன் கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

காவல்துறையை வழக்கம் போல் கோமாளிகளாகக் காட்டிவிட்டு, நிழல் உலக தாதாக்களின் அராஜகங்களுக்குப் புனிதப் போர்வை போர்த்தும் அதே பழைய பார்முலாவை, புது மில்லினியத்தின் இளைஞர்களுக்குத் தகுந்தாற்போல் அப்டேட் செய்து கொடுத்தது இந்தச் சினிமா.

திருமலை திரைப்படம் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகனின் திரையுலகப் பாதையை மாற்றியிருக்கலாம், விநியோகஸ்தர்களுக்குப் லாபத்தைத் தந்திருக்கலாம். ஆனால், சராசரித் தமிழனை அது எங்கு கொண்டு போய் நிறுத்தியது? என்பதுதான் முக்கியமான கேள்வி.

காதல் என்ற பெயரில் பெண்களைத் துன்புறுத்துவதையும், பஞ்ச் வசனங்கள் பேசுவதையே ஆகச்சிறந்த அறிவாற்றல் என்று நம்புவதையும், வன்முறையைக் கௌரவமாகக் கருதுவதையும் ஒரு ட்ரெண்ட் ஆக மாற்றியதுதான் இந்தத் திருமலை செய்த ஆகப்பெரும் பழுது!

*****

4 Jun 2026

தமிழனைப் பக்குவமாய் மடையன் ஆக்கிய மாஸ்டர் ப்ளாஸ்டர்!

சீரழித்த சினிமா – 2

சகலகலா வல்லவன்

தமிழனைப் பக்குவமாய் மடையன் ஆக்கிய மாஸ்டர் ப்ளாஸ்டர்!

ஏண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் தன் பகுத்தறிவையும், கொஞ்ச நஞ்சமிருந்த பொதுப்புத்தியையும் திரையரங்கு வாசலிலேயே கழற்றி வைத்துவிட்டு, வெறும் அலறல் மற்றும் கதறல்களோடு உள்ளே நுழையக் கற்றுக்கொண்டது. அந்த அற்புதம் நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் 1982இல் வெளியான சகலகலா வல்லவன்.

அறிவியலும் நாகரிகமும் உலகெங்கும் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழனின் சிந்தனையை மாடு மேய்க்கும் ஹீரோயிஸம், மேல்தட்டுப் பெண்ளைப் பழிவாங்கல், டிஸ்கோ டான்ஸ் என்ற ஒரு முக்கோணப் பெட்டிக்குள் அடைத்துச் சீரழித்த பெருமை இத்திரைப்படத்துக்கு உண்டு.

இத்திரைப்படம் தமிழர்களின் மூளையில் ஏற்றிய மிக மோசமான நச்சுச் சிந்தனை என்னவென்றால், ஒரு பெண் நன்றாகப் படித்து, நாகரிகமாக உடை உடுத்தி, தன் உரிமைகளைப் பேசினால் அவள் திமிர் பிடித்தவள் என்று முத்திரை குத்துவதுதான். அவளைத் திருத்த அதாவது அடக்க வேண்டுமென்றால், கிராமத்தில் மாடு மேய்க்கும் ஒரு படிக்காத ஆனால், பரந்த நெஞ்சமும், முறுக்கிய மீசையும் கொண்ட நாயகனால்தான் முடியும் என்ற உலகமகா தத்துவத்தை விதைத்தது இத்திரைப்படம்.

பெண்ணின் கல்வி என்பது அவளது ஆளுமைக்கானது அல்ல, அது ஆணின் ஈகோவை உரசிப் பார்க்கும் ஒரு வியாதி என்ற பார்வையை இன்றும் பல குடும்பங்களில் விதைத்து வைத்திருப்பது இந்தச் சகல கலா வல்லவன் கற்றுக்கொடுத்த பாடம்தான்.

நாயகன், நாயகியைப் பழிவாங்க அவளுடைய வீட்டிற்கே மாறுவேடத்தில் கம்பீரமான மீசையை வழித்துவிட்டு, சமையல்காரனாக நுழைவார். ஒரு பெண்ணின் தனிப்பட்ட எல்லைக்குள் ஏமாற்று வேலை செய்து நுழைவதையும், அவளது அந்தரங்கங்களை உளவு பார்ப்பதையும் காதல், தியாகம், வீரம் என்று உலகத்தரம் உயர்த்திக் காட்டியது இந்தத் திரைப்படம். உலக நாயகன் நடித்தது கூட அந்த உலகமகா தத்துவம் மற்றும் உலகத்தரத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த இளைஞர்கள், காதலிப்பதற்கோ அல்லது பெண்ணை அணுகுவதற்கோ நேர்மையான வழிகளைத் தேடவில்லை. மாறாக, பொய்கள் சொல்வதையும், ஆள்மாறாட்டம் செய்வதையும், பெண்களை ஏமாற்றுவதையும் அதற்காகப் பித்தலாட்டங்களில் இறங்குவதையும் காதலின் அத்தியாவசிய விதிகளாக மாற்றிக்கொண்டனர்.

இளமை இதோ இதோ, என்று புத்தாண்டுக்கு இன்றும் ஒலிக்கும் இத்திரைப்பட பாடலின் பின்னணியில் இருப்பது, ஒரு நுகர்வோர் கலாச்சார சீரழிவு. உழைத்து வாழும் நடுத்தர வர்க்கத் தமிழனை, கிளப்புகளுக்கும், மதுக் கலாச்சாரத்திற்கும், மேற்கத்தியப் போலி ஆடம்பரங்களுக்கும் ஏங்க வைத்தது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தில் இடம் பெற்ற நேத்து ராத்திரி யம்மா என்ற திரைப்பாடல் தமிழர்களிடையே தூக்கமின்மை வியாதியை உருவாக்கியது. அந்தப் பாடலில் ஆடிய சில்க் ஸ்மிதாவுக்கும் உருவாக்கியது. தூக்கமின்மை முடிவில் தற்கொலையைத் தூண்டும் என்பது மருத்துவ உளவியல். சில்க் ஸ்மிதா நிஜ வாழ்வில் நிஜமாகவே தற்கொலை செய்து கொண்டார். தமிழர்களும் அதுவரை அகம் – புறம் என்று வகுத்திருந்த இலக்கண மரபுகளைத் தூக்கில் தொங்க விட்டனர். அதன்பின் பாலியல் படங்களை ஏன் தனித்துக் கொடுக்க வேண்டும் என்று யோசித்து, அதையும் கலந்த கமர்ஷியல் காக்டெயிலாக் கொடுக்கத் தொடங்கியது தமிழ்த் திரையுலகம்.

வாழ்க்கையின் லட்சியம் என்பது அறிவை வளர்ப்பதோ அல்லது சமூகத்திற்குப் பங்களிப்பதோ அல்ல. மாறாக, பளபளக்கும் ஆடைகளை உடுத்தி, டிஸ்கோ விளக்குகளுக்குக் கீழே ஆடம்பரமாய் கும்மாளம் அடிப்பதுதான் வாழ்க்கை என்ற ஒரு மாயையை இது உருவாக்கியது இத்திரைப்படம். நிஜ வாழ்க்கையின் வறுமையையும் ஏழ்மையையும் மறக்கடிக்க, சினிமா காட்டிய இந்த வண்ணமயமான போதை, தமிழனை நிஜப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க விடாமல் எதையும் ஹீரோயிஸம் என்ற கோதாவால் மாற்ற முடியும் என்ற மாயையில் கொண்டு போய் நிறுத்தியது.

கதைப்படி நாயகியின் குடும்பம் செய்த அவமானத்திற்குப் பழிவாங்க, நாயகன் அவளது சொத்துக்களைப் பறிப்பதும், அவளைத் தன் காலடியில் விழ வைப்பதும்தான் கிளைமாக்ஸ்.

ஒரு நாகரிகச் சமூகம் ஈகோ பிரச்சினைகளை எப்படித் தீர்க்க வேண்டும்? சமரசப் பேச்சுகள் அல்லது சட்டபூர்வமான பிரிதல் மூலம். ஆனால், இங்கோ அடிக்கு அடி, பழிக்குப் பழி என்பதுதான் கௌரவம் என்று போதிக்கப்பட்டது.

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் ஈகோக்களைக் கையாள்வதில் தமிழர்களுக்கு இன்றுவரை இருக்கும் முதிர்ச்சியற்ற தன்மைக்கு, இதுபோன்ற பழிவாங்கல் கதைகளே ஆகச்சிறந்த ஊற்றுக்கண்.

சகலகலா வல்லவன் பாக்ஸ் ஆபீஸில் நூறு நாட்களைக் கடந்து ஓடியிருக்கலாம். உலக நாயகனை கலையுலகக் கலைக் களஞ்சியமாக நிலைநிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை ஒரு முற்போக்குச் சிந்தனையாளனாக மாற்றவில்லை. மாறாக, பெண்களைக் குறைத்து மதிப்பிடும், ஆடம்பரத்தை ஆராதிக்கும், போலிக் கௌரவங்களுக்காக வாழும் ஒரு சகலகலா மடையனாக மாற்றிச் சீரழித்தது என்பதுதான் காலம் கடந்து இப்போதும் நெஞ்சை நெருடிக் கொண்டிருக்கும் உண்மை!

*****