ஓட்டு – உங்கள் ஜனநாயகத் துருப்புச் சீட்டு!
தமிழ்நாட்டை
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகும் தலைமையைத் தீர்மானிக்கும் மகத்தான பொறுப்பு ஏப்ரல்
23 இல் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயகம்
என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே... என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.
அரசு
என்பது உங்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு என்று இன்னும் நீங்கள்
நம்பிக் கொண்டிருந்தால், அந்த நம்பிக்கையைச் சிதைக்காமல் இருக்க, வரும் ஏப்ரல் 23 ஆம்
தேதி சோம்பலைத் தள்ளி வைத்துவிட்டு வாக்குச்சாவடிக்குப் போக வேண்டும்.
கொஞ்சம்
கூட்டம் இருக்கலாம். வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள்
ஜனநாயகக் கடமையை ஆற்றுவது அவசியம்.
என்
ஓர் ஓட்டால்தான் எல்லாம் மாறப் போகிறதா என்று தத்துவார்த்தமாகக் கேட்டுவிட்டு, அந்த
நாளை நெட்பிளிக்ஸிலும் தூக்கத்திலும் தொலைக்கத் துடிக்கும் புத்திசாலிகள் இங்கே அதிகம்.
நினைவிருக்கட்டும்,
உங்கள் ஓர் ஓட்டு முடிவை மாற்றாததுதான், ஆனால் மாற்றத்தை நோக்கிய உங்கள் இயலாமையைக்
குறைக்கும்.
யாருமே
தேறமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், அதற்காகவே தேர்தல் ஆணையம் நோட்டா என்ற பொத்தானை
வைத்திருக்கிறது. உங்களில் யாருக்கும் என் வாக்கு கிடையாது, என்று சொல்வதற்காவது நீங்கள்
வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அதுவும் ஒரு ஜனநாயகக் கடமைதான்.
வாக்களிக்கும்
முன் சில விசயங்களை யோசித்துப் பாருங்கள். அவற்றில் சில,
பட்டதாரிகளை
மொத்தமாக உற்பத்தி செய்துவிட்டு, அவர்களுக்குத் தகுதியான வேலையைக் கொடுக்க முடியாமல்
தமிழ்நாடு விழி பிதுங்கி நிற்கிறது. எல்லாருக்கும் அரசு வேலை சாத்தியமில்லைதான். ஆனால்
தகுதிக்கேற்ப ஏதாவது ஒரு வேலை சாத்தியம்தானே. அந்தச் சாத்தியத்தைத் தேர்தலில் நிற்கும்
எந்தக் கட்சியின் சின்னம் உறுதி செய்யும் என்று பாருங்கள்.
கடன்
சுமையால் தடுமாறும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. வட்டி கட்டவே மீண்டும்
கடன் வாங்கும் வித்தை இப்போது தமிழகத்துக்கு அத்துப்படி. இந்த கடனெல்லாம் யார் தலையில்
விடியும் என்று நினைக்கிறீர்கள்? ஆகவே, உங்கள் யோசனையில் இதையும் வைத்து அதற்கேற்ப
வாக்களியுங்கள்.
அப்புறம்,
இந்த வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலைப் பாருங்கள். நாட்டின் ஜிடிபியை விட அவர்களின்
சொத்து வளர்ச்சி விகிதம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. பலருடைய பின்னணியான
கிரிமினல் சைட் கிருமித்தனமாக இருக்கிறது. இதையும் நீங்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள
வேண்டும். மீண்டும் ஒரு கிரிமினல் கிருமியைத் தேர்ந்தெடுப்பதில் என்ன இருக்கிறது? அது
இன்னொரு கொரோனா, லாக் டவுன் என்றாகி விடும்.
இப்போதெல்லாம்
போஸ்டர், சுவர் விளம்பரங்கள் குறைந்து விட்டன. கட்சிகள் நேரடியாகவே உங்கள் செல்போனுக்கு
எல்லாவற்றையும் அனுப்புகின்றன. கட்சிகளுக்கு எப்படி உங்கள் செல்போன் நம்பர் கிடைக்கிறதோ?
ஆக, அரசியல் கட்சிகள் உங்கள் செல்போனுக்குள் அனுப்பியிருக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைப்
படியுங்கள். அதில் எவை நிஜம், எவை வெறும் காமெடி என்பதைப் பிரிக்கத் தெரிந்திருக்க
வேண்டும். இலவச மிக்ஸிக்கும், கிரைண்டருக்கும், பிரிட்ஜ்க்கும், டோக்கனுக்கும் ஆசைப்படுவதை
விட, மாநிலத்தின் எதிர்காலத்துக்கு எது உருப்படியானது என்று யோசியுங்கள்.
ஆட்சிகள்
வரும், போகும். ஆனால் நாம் கட்டும் வரி மட்டும் போய்க்கொண்டே இருக்கும் என்பது உண்மை
என்றாலும், அந்த வரி மக்கள் நலனுக்குக் கொஞ்சமாவது பயன்பட வேண்டுமானால் யோசித்து வாக்களித்தால்தான்
உண்டு.
எனவே,
ஏப்ரல் 23 ஆம் தேதி உங்கள் மனசாட்சியைக் கொஞ்சம் தட்டி எழுப்பி, யாருக்கு வாக்களிக்க
வேண்டும் என்று ஒரு தீர்க்கமான முடிவெடுங்கள்.
ஜனநாயகம்
என்பது வேர் என்றால், உங்கள் வாக்குதான் அதன் உரம். அது விஷமா அல்லது சத்தா என்பதை
நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
வாக்களிக்க
அவசியம் போய் வாருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கிறதோ இல்லையோ, அடுத்து ஐந்து வருடங்களுக்கு
நீங்கள் திட்டித் தீர்ப்பதற்கு ஒரு தார்மீக உரிமை உங்களுக்குக் கிடைக்கட்டுமே!
*****






