காந்தி – அவசரகால நண்பர்!
அன்று
காலை, அஜாத்தியன் ஊருக்குப் புறப்பட பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தார். அவரிடம் இரண்டு
ஆயுதங்கள் இருந்தன. ஒன்று, அரசாங்கம் வழங்கிய சீனியர் சிட்டிசன் இலவசப் பேருந்து பாஸ்.
இரண்டு, உலகத்தையே ஆளும் 5G மொபைல் போன்.
இனி
இந்த ஜென்மத்தில் ரொக்கப் பணம் தேவையில்லை, என்ற தத்துவ ஞானத்தோடு பஸ்ஸில் ஏறி ஜன்னலோர
சீட்டில் அமர்ந்தார்.
பஸ்
கிளம்பியது. நடத்துனர் விசில் ஊதிக்கொண்டே டிக்கெட் கேட்டு அவரிடம் வந்தார்.
அஜாத்தியன்
மிகக் கம்பீரமாக, பாஸ் இருக்குப்பா என்றார்.
பாஸைக்
காட்டுங்க ஐயா, என்றார் நடத்துனர். அவரது குரலில் அன்றாட வாழ்க்கையின் சலிப்பு அப்பட்டமாகத்
தெரிந்தது.
அஜாத்தியன்
தன் பையைத் துலாவிப்பார்த்தார். சட்டப் பை, பேண்ட் பை, பையின் உள் அடுக்கு என எல்லாவற்றையும்
தேடினார். அப்போதுதான் அந்தப் பேராபத்து உறைத்தது. அவசரத்திலும் பதற்றத்திலும் சீனியர்
சிட்டிசன் கார்டை வீட்டின் டைனிங் டேபிளிலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருந்தார்.
தம்பி,
கார்டை வீட்ல வச்சிட்டு வந்துட்டேன். பரவாயில்லை, டிக்கெட் எடுத்துக்கிறேன், என்று
சிரித்தபடியே தன் மொபைல் போனை எடுத்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யப் போனார்.
அங்கிருந்த
பிரபஞ்சத்தின் அதிபதி லேசாகப் புன்னகைத்தான்.
மொபைல்
திரையின் மூளையில் நோ நெட்வோர்க் மற்றும் E என்ற அட்சரங்கள் தோன்றி மறைந்தன. நெட்வொர்க்
சிக்னல், ஞானம் பெற்ற முனிவரைப் போல உலக பந்தங்களில் இருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தது.
மொபைல் செயலி சுழன்று கொண்டே இருந்ததே தவிர, பணம் பரிமாறப்படவே இல்லை.
தம்பி,
நெட்வொர்க் கிடைக்கலப்பா. கொஞ்சம் பொறு, என்றார் அஜாத்தியன், நெற்றியில் வியர்வை அரும்ப.
ஐயா,
இது கவர்ன்மென்ட் பஸ். நெட்வொர்க்குக்காகப் பஸ்ஸை நிறுத்த முடியாது. கையில் காசு இருந்தா
கொடுங்க, இல்லாட்டி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குங்க, என்றார் நடத்துனர், எந்தவித தத்துவார்த்த
சமரசமும் இன்றி.
அஜாத்தியனிடம்
கோடிக்கணக்கான ரூபாய்களைக் கையாளும் டிஜிட்டல் செயலிகள் இருந்தன. ஆனால், நடத்துனர்
கேட்ட ஐந்து ரூபாய் இல்லை.
தொழில்நுட்பம்
என்பது எவ்வளவு பெரிய மாயை! எலக்ட்ரான்களின் ஓட்டத்தை நம்பி மனிதன் தன் கால்களை நகர்த்திக்
கொண்டிருக்கிறான். அந்த எலக்ட்ரான்கள் சோம்பேறித்தனம் பட்டு நின்றால், மனிதன் நடுவழியில்
நிற்க வேண்டும்.
இரண்டு
ஸ்டாப்பிங் தள்ளிய ஒரு வெறிச்சோடிய இடத்தில் பஸ் நின்றது. அஜாத்தியன் தன் மொபைல் போனைப் பைக்குள் திணித்துவிட்டு, பஸ்ஸை
விட்டு இறங்கினார்.
அங்கிருந்து
வீட்டுக்குத் திரும்பும் அந்த நீண்ட பாதயாத்திரையில்தான் அவருக்கு உண்மையான தத்துவ
ஞானம் பிறந்தது. சுட்டெரிக்கும் வெயிலில், தன் சொந்தக் கால்களையே நம்பி அவர் நடந்து
கொண்டிருந்தார்.
நீங்கள்
அம்பானியாகவே இருந்தாலும், உங்களுக்காகச் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தாலும்,
உங்கள் போனில் லட்ச ரூபாய் பணம் இருந்தாலும் நெட்வொர்க் இல்லாத ஒரு கிராமத்துச் சாலையில்,
நடத்துனரின் கையில் இருக்கும் அந்த அழுக்கான ஐந்து ரூபாய் நாணயம்தான் அதிபதி.
தொழில்நுட்பம்
என்பது ஓர் அழகான காதலி போன்றது. தேவைப்படும்போது அது நாட் ரீச்சபிள் ஆகிவிடும்.
அஜாத்தியன்
வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, டைனிங் டேபிளில் அந்தப் பேருந்து பாஸும், அதன் அருகில்
ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றும் இவரைப் பார்த்துப் பல்லிளித்தன.
அன்று
முதல், அவர் வெளியே செல்லும்போது மொபைலை மறந்தாலும் மறக்கிறாரே தவிர, அவசரத் தேவைக்காக
ஒரு நூறு ரூபாய் நோட்டைத் தன் பையின் ரகசிய அடுக்கில் மடித்து வைத்துக் கொள்ள மறப்பதே
இல்லை.
ஏனென்றால்,
ரூபாய் நோட்டில் புன்னகைக்கும் காந்தியை விடச் சிறந்ததொரு அவசரக் கால நண்பன் இந்த டிஜிட்டல்
யுகத்திலும் வேறு யாருமில்லை!
*****






