14 Apr 2026

ஏஐ சொல்வதெல்லாம் சரியா?

ஏஐ சொல்வதெல்லாம் சரியா?

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் இப்போது ஒரு தேர்ந்த ஜால்ராவாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு டெக்னிக்கலாக சோசியல் சிகோபான்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது, நீங்கள் என்ன தப்பு செய்தாலும், ஆமாம் சார், நீங்க செஞ்சதுதான் சரி, மத்தவன்தான் அயோக்கியன் என்று ஐஸ் வைக்கிறது ஏஐ.

உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுச் சண்டையையோ, நண்பர்களுடனான மோதலையோ போட்டு, இதில் நான் செய்தது சரியா? என்று கேட்டுப் பாருங்கள். ஏஐ என்ன சொல்கிறது தெரியுமா? உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என்கிறது.

ஏன் இப்படி?

ஏனென்றால், இந்த மாடல்களைப் பயிற்றுவிக்கும்போது, மனிதர்களுக்குப் பிடித்த மாதிரி பதில் சொன்னால்தான் அதற்கு அதிக மார்க்  கிடைக்கிறது. ஒரு மெஷினுக்குத் தன் முதலாளியைத் திருப்திப்படுத்த வேண்டுமே தவிர, உண்மையைச் சொல்லி உதார் விடத் தேவையில்லை.

உண்மையில், மனித உறவுகள் வளருவதே உரசல்கள் மூலம்தான். ஒரு நண்பன் நீ பண்ணது தப்புடா என்று சொல்லும்போதுதான் நமக்கு ஒரு வளர்ச்சி கிடைக்கிறது. நேர்மை, அறம் குறித்த புரிதல் உண்டாகிறது. ஆனால், ஏஐயிடம் போனால் அது எப்போதும் நமக்கு ஆதரவாகவே பேசுகிறது.

இதன் விளைவு?

நான் தான் ரைட் என்கிற குருட்டுத் தனமான நம்பிக்கை உங்களுக்குக் கூடுகிறது.

இதனால் யாரிடமும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது.

இதனால் என்ன நடக்கும் என்றால், நிஜ மனிதர்கள் உங்களைக் கண்டிக்கும்போது அவர்கள் மீது கோபம் வரும். பேசாமல் என் சாட்பாட்டிடமே போயிடலாம், அதுதான் என்னைச் சரியாகப் புரிந்து கொள்கிறது என்று அங்கே தஞ்சம் புக ஆரம்பித்து விடுவீர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த ஏஐ சாட் அதிகமாக ஜால்ரா தட்டுகிறதோ, அதையே மக்கள் சிறந்த குவாலிட்டி என்று நம்புகிறார்கள். இது ஒரு செல்ப் ரீஇன்போர்சிங் சுழற்சி. மக்கள் ஜால்ராவை விரும்புகிறார்கள். இதனால் கம்பெனிகள் ஜால்ரா தட்டும் அல்காரிதம்களை உருவாக்குகின்றன.

நாளைக்கு ஒரு சூழலை யோசித்துப் பாருங்கள். வீட்டில் மனைவியுடன் சண்டை. நேராக ஏஐயிடம் போகிறீர்கள். அது நீங்கதான் சார் கரெக்ட், அவங்களுக்குப் புரியல என்கிறது. இதனால், நீங்கள் சமாதானமே ஆகமாட்டீர்கள். அது உங்கள் உறவை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் நிறுத்தலாம்.

சுருக்கமாகச் சொன்னால், ஏஐ உங்களை ஓர் அறிவார்ந்த முட்டாளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு இதமான பொய்களைச் சொல்லி, உங்களைச் சுற்றியுள்ள சமூகச் சுவர்களை அது இடித்துத் தள்ளுகிறது.

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல வரும் நீதி என்னவென்றால், உங்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு மெஷினை விட, உங்களைக் கண்டிக்கும் ஒரு கடுகடுப்பான உறவோ அல்லது நட்போ மேலானது.

*****

ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ ஏமாற்றம் இலவசம்!

ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ ஏமாற்றம் இலவசம்!

தெருவில் ஒரு டெம்போ வேன் அலறிக்கொண்டு வந்தது. உள்ளே கொய்யாப்பழங்கள்.

ஒரு கிலோ நூறு ரூபாயாம். கூடவே ஒரு கிலோ இலவசமாம்.

இந்த இலவசம் என்ற சொல்லைக் கேட்டதுமே, நம் ஊர் மக்களுக்கு மூளையில் இருக்கும் லாஜிக் செல்கள் தற்காலிகமாகச் செயலிழந்துவிடும் என்பது அந்த வியாபாரிக்குத் தெரிந்திருந்தது.

கூட்டத்தைப் பிளந்து கொண்டு உள்ளே சென்றான் பஞ்சநாதன். பழங்கள் அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டு, பெட்டிகள் எல்லாம் பாரிஸ் நகரத்து வாசனைத் திரவிய டப்பாக்கள் போலப் பளபளவென மின்னின.

ஒண்ணு திறந்து காட்டுப்பா, என்றான் பஞ்சநாதன்.

வியாபாரி ஒரு தத்துவஞானியைப் போலப் பார்த்தார். பெட்டியைப் பிரிச்சா நீங்கதான் வாங்கணும் சாமி, என்றார். இது குழந்தையைப் பெத்தா நீங்கதான் வளர்க்கணும் என்பது போன்ற ஒரு தார்மீகக் கட்டளை.

பஞ்சநாதன் வீம்புக்குச் சம்மதித்தான்.

பெட்டியைத் திறந்தார் வியாபாரி.

உள்ளே இருந்த கொய்யாப்பழங்கள் ஒவ்வொன்றும் மஞ்சள் வைரங்கள் போல மின்னின. எடுத்துச் சுவைத்தான் பஞ்சநாதன். தேவாமிர்தம்!

இரண்டு கிலோ, அதாவது நிஜத்தில் ஒரு கிலோவுக்கு ஒரு கிலோ இலவசம் என்பதால், நான்கு கிலோ வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

வீட்டுக்கு வந்து பெட்டியைத் தோண்டியபோதுதான் புரிந்தது, அந்த வியாபாரி ஒரு சிறந்த லேயரிங் கலைஞர் என்று.

மேலே இருந்த கொய்யாப்பழங்கள் ஆரோக்கியமாக, ஜிம்முக்குச் சென்ற உடற்கட்டோடு இருந்தன.

அடியில் இருந்தவை எல்லாம் தற்கொலை செய்துகொண்டவை போல அழுகி, நசுங்கி, கூழாகிக் கிடந்தன.

கடைசியில் எடையைப் போட்டுப் பார்த்தால், அந்தப் பெட்டிக்கும் லேபிளுக்கும் தான் அதிக விலை கொடுத்திருப்பது தெரிந்தது.

ஒரு கிலோ என்று அவர்கள் சொன்னதில் கால் கிலோ என்பது வெறும் பேக்கிங் மற்றும் அந்த வியாபாரியின் புத்திசாலித்தனமானப் பொய். ஒரு கிலோவுக்கு எஞ்சியது முக்கால் கிலோதான்.

ஒரு பெட்டி அழகாக இருக்கிறது என்பதற்காக அதை நம்பிவிடாதீர்கள். மேக்கப் கலை கொய்யாப்பழப் பெட்டிகளுக்கும் வந்துவிட்டது. அடியில் இருப்பதை ஆராயாமல் பொருளை வாங்குவது, புகைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு மாப்பிள்ளை அல்லது பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமம்!

*****

13 Apr 2026

குறுந்தத்துவக் குறிப்புகள்!

குறுந்தத்துவக் குறிப்புகள்!

செயற்றை நுண்ணறிவை விட இயற்கை நுண்ணறிவு மேலானதா?

நிச்சயமாக. எப்படி என்கிறீர்களா? முதலீடுகளை விழுங்கியபடி லாபம் ஈட்ட போராடிக் கொண்டிருக்கிறது செயற்கை நுண்ணறிவு. எந்தவித முதலீடும் இல்லாமல் லாபத்தை அள்ளித் தந்தபடி முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது இயற்கை நுண்ணறிவு. அது எப்படி என்கிறீர்களா? செயற்றை நுண்ணறிவில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று மனிதர்களின் இயற்கை நுண்ணறிவு தூண்டி விட அதை நம்பித்தானே செயற்கை நுண்ணறிவை நோக்கி முதலீடுகள் குவிகின்றன. ஆக எப்படிப் பார்த்தாலும் மனிதர்களின் இயற்கை நுண்ணறிவைச் செயற்கை நுண்ணறிவு ஒரு போதும் முந்த முடியாது.

*****

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டா?

உண்டு.

தீர்வே இல்லாத பிரச்சனைக்கு எப்படித் தீர்வு உள்ளது என்று சொல்ல முடியும்?

ஒரு பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்பதும் ஒரு தீர்வே.

*****

ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காமல் சேர்ந்திருக்க முடியாதா?

ஏன் முடியாது?!

முன்பு அதற்குப் பெயர் கூட்டுக் குடும்பம்.

இன்று அரசியலில் அதற்குப் பெயர் கூட்டணி. நிரந்தர எதிரிகளும் கூடியிருக்கும் அற்புத இடம் அது.

*****

வீட்டுமுறைச் சாப்பாடு என எழுதப்பட்டிருக்கும் ஓட்டலைப் பார்க்கும் போது மனதின் குரல் எப்படிப் பேசும் தெரியுமா?

“வீட்டுச் சாப்பாடு பிடிக்காமல்தான் இங்கே வந்தேன். இங்கேயுமாடா?!”

*****

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு எப்போது கிடைக்கும்?

அவர் அமைதியாக இருக்கும் போது!

*****

ஒரு கிலோ பிரியாணியும், ஐந்து விரல் சாபமும்!

ஒரு கிலோ பிரியாணியும், ஐந்து விரல் சாபமும்!

கூட்டத்தை எப்போது கூட்ட வேண்டும், எப்போது கலைக்க வேண்டும் என்பது தெரிந்தால் நீங்களும் ஓர் அரசியல்வாதிதான்.

மக்களும் முட்டாள்கள் இல்லை. அவர்களுக்கு அனைத்தும் தெரியும்.

அரசியல் கட்சிகள் ஒரு பிசினஸ் மாடலில் ஓடும்போது, மக்கள் மட்டும் ஏன் தர்மகர்த்தா மாதிரி யோசிக்க வேண்டும்?

ஓர் அரசியல் கூட்டத்திற்குப் போனால் இருநூறோ, முந்நூறோ கிடைக்கும் என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைப் பொருளாதாரப் பகுத்தறிவு எனலாம்.

இன்றைய அரசியலில் புனித பிம்பங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. காந்தி, காமராஜர் போல யாரும் இப்போது புனிதம் வேடம் போடுவதில்லை.

மக்களுக்கும் தெரியும் இவர்கள் பணம் கொடுத்து ஜெயித்தவர்கள் என்று.  தலைவர்களுக்கும் தெரியும் இவர்கள் காசு வாங்கித்தான் ஓட்டுப் போட்டார்கள் என்று.

இரு தரப்புமே ஒருவருக்கு ஒருவர் நடித்துக் கொள்கிறார்கள். இது ஒரு பரஸ்பர நடிப்பு விழா.

அரசியல்வாதி வெளியில், நான் உங்களுக்குச் சேவை செய்யப் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டாலும், மனதுக்குள் போட்ட முதலை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதை யோசித்தபடி இருக்கிறார்.

மக்களும் நீங்கள்தான் எங்கள் கடவுள் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், மனதுக்குள் ஓட்டுக்கு இன்னும் ஒரு ஐநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் குறைந்தா போய் விடுவார் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. இங்கே முதலீடு அதிகம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலைக் காக்கப் பணம் தருகிறார்கள். கான்ட்ராக்டர்கள் தரமற்ற வேலையைக் கண்டு கொள்ளாமல் இருக்க கமிஷன் தருகிறார்கள். இப்படி அரசியல்வாதிகளுக்குப் பணம் வர, அவர்கள் வேட்பாளர்களாகும் போது ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் கணக்குப் பார்த்து செலவு செய்கிறார்கள்.

கட்சிகள் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதே அவரது செலவு செய்யும் தகுதியை வைத்துத்தான். இவர் நல்லவர் என்பதை விட, இவர் கரன்சியால் மக்களை எந்த அளவுக்குக் குளிப்பாட்டுவார் என்பதுதான் இன்றைய தகுதித் தேர்வு.

அக்காலத்தில் மக்கள் தரையில் உட்கார்ந்து, சொந்தக் காசில் வேர்க்கடலை வாங்கித் தின்றபடி தலைவர்களின் பேச்சைக் கேட்டார்கள். இன்று, இருக்கையில் பிரியாணிப் பொட்டலம் இல்லை என்றால் தலைவரைப் பார்க்கக் கூட ஆள் வருவதில்லை. அந்தப் பிரியாணி பொட்டலத்தோடு தரப்படும் தண்ணீர் பாட்டிலிலும் தலைவரின் முகம் சிரிக்கிறது.

ஆனால் ஒரு தர்க்கம் இடிக்கவே செய்கிறது. வாக்காளர் வாங்கும் அந்த ஆயிரம் ரூபாயோ, ஒரு பொட்டலம் பிரியாணியோ அவர்களது கேள்வி கேட்கும் உரிமையை அப்படியே லபக் செய்து விடுகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான இந்தக் கேள்விக் கேட்கும் உரிமை போய் விட்டால், அங்கே மிச்சம் என்ன இருக்கிறது?

வாக்காளர் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் போது இன்னொன்றும் நிகழ்கிறது. அது என்னவென்றால், வாக்காளர் ஒரு விரலை நீட்டி ஊழல்வாதி என்று ஓர் அரசியல்வாதியைச் சொல்லும்போது, மற்ற மூன்று விரல்களும் நீயும் அந்த ஊழலில் பங்கு வாங்கி பிரியாணி தின்றவர்தானே என்று சொல்லும்.

மேலும் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டைப் போடும் போது ஒரு மாயாஜாலமே நடக்கும். அரசியல் என்பது வாரிசுத் தொழில் ஆகி விடும். அதாகப்பட்டது, தேசியத் தலைவர் மகன் அடுத்த தேசியத் தலைவர். மாநிலத் தலைவர் மகன் அடுத்த மாநிலத் தலைவர். மாவட்டத் தலைவர் மகன் அடுத்த மாவட்டத் தலைவர். தப்பித்தவறி வேறு யாராவது உள்ளே வந்தால், அவர்கள் மாலை போடவும் வாழ்க சொல்லவும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதெல்லாம் சகஜமப்பா என்ற மனநிலைதான் நம் ஜனநாயகத்தின் ஆகப்பெரிய எதிரி. ஓர் அரசு தன் கடமையைச் செய்வதைச் சாதனை என்று விளம்பரம் செய்கிறது. அதை எதிர்க்கட்சி வேதனை என்கிறது. இதற்கு நடுவில் உண்மையான மக்களாட்சி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.

ஆனால், மாற்றத்திற்கான முணுமுணுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்கத்தான் செய்கின்றன. எத்தனை காலம்தான் அவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள், இவர்கள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்? அதிலும் ஒரு மாற்றமோ, புரட்சியோ வெடிக்கக் கூடும். அப்போது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது திருத்தி எழுதப்படும்.

*****

12 Apr 2026

தங்கம் தழுதழுத்த கதை!

ஒரு தோழியும் ஓர் அழுகையும்!

அகிலா வீடு தேடி வந்து அழைத்த போது குரலில் அத்தனை ஈரம். அவசர மருத்துவச் செலவு, என்றாள். பணம் இல்லாவிட்டால் எல்லாம் பணால் ஆகி விடும் என்றாள். கண்ணீரில் நனைந்த அந்தச் சொற்களைக் கேட்டதும் இனியாவின் இதயம் மெழுகாக உருகியது.

ஆனால் இனியாவின் வங்கிச் சேமிப்போ பாறையாகக் கல்லாய்க் கிடந்தது. கையில் பணமில்லை, ஆனால் கையில் அதாவது மணிக்கட்டில் தங்கம் இருந்தது. அது வளையல்.

அடுத்த மாசமே மீட்டுத் தந்துடுவேன்டி, என்று அகிலா சொன்னபோது, அகிலாவின் கண்களை விட இனியாவின் வளையல்கள் பிரகாசமாக மின்னின.

கணவரிடம் சொன்னால் லாஜிக் பேசுவார் என்று பயந்து, ரகசியமாக அந்தத் தங்கத்தை அகிலாவின் கையில் தாரை வார்த்தாள் இனியா.

நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி. அதை ஒருமுறை அடகு வைத்தால், திரும்பக் கிடைக்கும்போது விரிசலோடுதான் கிடைக்கும் என்பது அப்போது இனியாவுக்குத் தெரியவில்லை.

மாதங்கள் ஓடின. அகிலாவும் எங்கே ஓடினாள் என்று தெரியவில்லை.

இனியா போன் செய்யும்போதெல்லாம் அந்த நண்பி அகிலா ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக மாறினாள்.

இந்தா நாளைகேக் ஒரு செக் கிளியர் ஆகப்போகுது, என்றாள்.

செக் கதை சொல்லி அலுத்துப் போன பிறகு, நாளைக்குச் சாயங்காலம் நாலு மணிக்கு உன் கைக்குத் தங்கம் வந்துடும், என்றாள்.

இப்படி அகிலா சொன்ன நாளை என்பது, விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில், அகிலாவின் போன் சுவிட்ச் ஆஃப் மோடுக்குச் சென்றது. அதுவரை தழுதழுத்த அவள் குரல், இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது.

இனியா விசாரித்தபோதுதான் தெரிந்தது, அந்தப் புண்ணியவதி வளையல்களை வைத்து மருத்துவச் செலவு ஏதும் செய்யவில்லை. ஏதோ ஒரு ஆன்லைன் பிசினஸில் போட்டு, அதை அம்பானி ரேஞ்சுக்கு வளர்க்கப் பார்த்து, கடைசியில் ஆப்பனியாகி நஷ்டமடைந்திருக்கிறாள்.

வேறு வழியின்றி, கணவரிடம் சொல்லவும் முடியாமல், சொல்லி மெள்ளவும் முடியாமல் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறையாக, எப்படியோ வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பணத்தைச் சேர்த்து நகையை மீட்டெடுத்தாள் இனியா.

எப்படியோ நகையை மீட்டெடுக்க முடிந்த இனியாவுக்கு, அதன் பிறகு அகிலாவின் நட்பை மீட்டெடுக்க முடியாமலேயே போய் விட்டது.

நீதி என்னவென்றால், கொடுப்பது கடன். அதை வாங்கும் அவர்கள் நினைப்பது அது தானம். கடைசியில் கொடுத்தவருக்கு மிஞ்சுவது தியானம்!

*****

வாக்காளரும் வேட்பாளரும் – ஒரு தெருக்கூத்து!

வாக்காளரும் வேட்பாளரும் – ஒரு தெருக்கூத்து!

இதுவரை கூகுள் மேப்பிற்கே தெரியாத உங்கள் வீட்டுச் சந்துக்குள், விலையுயர்ந்த கார்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நுழைகின்றன என்றால், ஊரில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

வேட்பாளர்கள் இப்போதுதான் முதன்முதலாக உங்கள் தெருவின் மேடு பள்ளங்களை அதாகப்பட்டது சாலைகளை நேரடியாகத் தரிசிக்க தொடங்குவார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் என்பவர் வெறும் சட்டங்களை இயற்றுபவர் மட்டுமல்ல, உங்கள் ஏரியா சாக்கடை அடைப்பிற்கும், உலகளாவிய பொருளாதாரக் கொள்கைக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டியவர். அவர் உங்கள் சுக துக்கங்களில் பங்கேற்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் மக்கள் விரும்புவது ஒர் அணுகக்கூடிய மனிதரை. அதாவது, போன் செய்தால் எடுக்க வேண்டும், நேரில் போனால் பார்க்க வேண்டும். ஆனால் பல பிரதிநிதிகள் பதவிக்கு வந்ததும் அவுட் ஆஃப் ரீச் ஆகிவிடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனசாட்சியும்தான்!

ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை விட, இருக்கக் கூடாத கலைகளை மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கிறார்கள்.

ஊரில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் போக வேண்டும். ஆனால் இங்கே மக்கள் பிரதிநிதி அலுவலகமே ஒரு நடமாடும் நீதிமன்றமாக மாறுகிறது. தீர்ப்பு யாருக்குச் சாதகம் என்பது, யார் கொண்டு வரும் கவர் கனமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. இது மாபெரும் அரசியல் கலையாகவே வளர்ந்து வருகிறது.

ஆற்று மணல் முதல் மலை வரை அனைத்தையும் கூறுபோட்டுச் சாப்பிடுவது மக்கள் பிரதிநிதிகளுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. இவர்களுக்குத் தேவைப்படும் ஒரே இயற்கை வளம் பணம் மட்டுமே.

சாலை போடுகிறார்களோ இல்லையோ, கமிஷன் வாங்குவதில் ஒரு நேர்மை வைத்திருக்கிறார்கள். தரமான வேலை என்பது மாறி, இவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம் தரமான ஊழல் என்பதாக இருக்கிறது. அந்தக் கலையில் வல்லவர்களே அரசியல்வாதிகளாக ஜொலிக்கிறார்கள்.

மக்கள் ஒன்றும் மலையைக் கேட்கவில்லை. தரமான கல்வி, நல்ல ஆஸ்பத்திரி, பிள்ளைகளுக்கு ஒரு வேலை அவ்வளவுதான். லஞ்சம் வாங்காத, சமூக விரோதிகளுக்குப் பெரியப்பாவாக இருக்காத ஒரு மனிதரைத்தான் தேடுகிறார்கள்.

இந்த மக்கள் பிரதிநிதிகள் நேர்மையை மட்டும் மூலதனமாகப் போட்டால், மக்கள் பணத்தையோ, பிரியாணி பொட்டலத்தையோ எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களின் நேர்மையே மக்களுக்குப் பெரிய போதை!

மக்களை ஏமாற்றுவது எளிது என்று நினைப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள் - ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் கையில் ஒரு மெஷின் அதாகப்பட்டது, ஓட்டிங் மெஷின் கிடைக்கிறது. அதில் அவர்கள் வைக்கும் குத்து, பலரது அரசியல் வாழ்க்கைக்கு வைக்கும் முற்றுப்புள்ளியாகாமல் இருக்க வேண்டுமானால், மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவே இருக்க வேண்டும். பணத்துக்கும், ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் அவர்கள் பிரதிநிதிகளாகி விடக் கூடாது!

*****

11 Apr 2026

தி இன்கம்ப்ளீட் மேன் – ஒரு ரேமண்ட் டிராஜெடி!

தி இன்கம்ப்ளீட் மேன் – ஒரு ரேமண்ட் டிராஜெடி!

உலகிலேயே மிகச்சிறந்த சூட் தைப்பது எப்படி என்று தெரிந்த ஒரு மனிதனுக்கு, தன் வாழ்க்கையைச் சரியாகத் தைக்கத் தெரியாமல் போனதுதான் இந்தச் சதிக் காலத்தின் விசித்திரம்.

பொதுவாக, ஒருவன் ஸ்மார்ட்டாக நடந்தால் அவனை ரேமண்ட் மாடல் என்பார்கள். ஆனால், அந்த பிராண்டை உருவாக்கிய விஜய்வட் சிங்கானியாவோ, கடைசியில் மாடலாகக் கூட இருக்க முடியாமல், ஒரு வாடலாகி, பாடமாகிப்போனார்.

சிங்கானியா கட்டிய 37 மாடி ஜே.கே ஹவுஸ் மளிகைக்கடைப் பட்டியல் போல நீளமானது. 6,000 கோடி ரூபாய் அதன் மதிப்பு. அம்பானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் காஸ்ட்லி செங்கல் குவியல் அது.

ஆனால், 87 வயதில் அவர் கண்மூடியபோது, ஒரு வாடகை வீட்டில் பழைய பேன் காற்றில், ஏன்டா மகனுக்கு சொத்தை எழுதிக் கொடுத்தோம்? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆசாமி சாதாரணபட்ட ஆள் இல்லை.

லண்டனில் இருந்து அகமதாபாத்துக்கு அவரே பிளேனை ஓட்டி வந்தவர். ஓர் அசாத்திய விமானியும் கூட.

69,000 அடி உயரத்தில் பலூனில் பறந்து மேகங்களுக்கு ஹலோ சொன்னவர். ஒரு சாகசப் பிரியரும் கூட.

இந்திய விமானப்படையே இவரைப் பார்த்து சல்யூட் அடித்தது. அதெல்லாம் ஒரு காலம்.

ஆனால் பாவம், தரை இறங்கிய பிறகுதான் தெரிந்தது, ஆகாயத்தை விட தரை அதிக ஆபத்தானது என்று அவருக்குப் புரிந்தது.

இவருக்கு இரண்டு மகன்கள். பெரியவன் மதுபடி. இளையவன் கௌதம். சொத்துத் தகராறு வந்தபோது, விஜய்வட் தன் விவேகத்தைப் பயன்படுத்திப் பெரியவனைத் துரத்திவிட்டு, செல்லக் குட்டி கௌதமுக்கு மொத்தப் பங்குகளையும் 2015 இல் எழுதி வைத்தார்.

கம்ப்ளீட் மேன் பிராண்டை உருவாக்கியவர் செய்த இன்கம்ப்ளீட் காரியம் அது.

அதற்குப் பிறகு நடந்த கிளைமாக்ஸ்தான் கவனிக்கப்பட வேண்டியது.

சொத்து கைமாறியதும், பாசம் அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிட்டது.

கௌதம் தன் தந்தையை நிறுவனத்தில் இருந்து துரத்தினார். அவர் கட்டிய மாளிகையிலிருந்தே அவரை வெளியேற்றினார்.

ஒரு காலத்தில் பத்மபூஷண் வாங்கிய கைகள், மகன் மீது வழக்குப் போட்டு கோர்ட் வாசலில் வக்கீல் நோட்டீஸைப் பிடித்துக் கொண்டு நின்றன.

விஜய்வட் தன் வாழ்க்கை வரலாற்றுக்கு அன் இன்கம்ப்ளீட் லைப் என்று பெயர் வைத்தார்.

பொருத்தமான தலைப்புதான்.

ஏனென்றால், ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்தில் பறந்தாலும், அவன் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கும்போது மட்டும் மூளையைக் கீழே இறக்கி வைத்துவிடுகிறான்.

உங்கள் பிள்ளைகள் மேல் உங்களுக்குப் பாசம் இருக்கலாம். ஆனால், உங்கள் சொத்துக்கள் மேல் உங்களுக்கு அதைவிட அதிகமான பக்தி இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் கம்ப்ளீட் மேன் ஆக வாழ்ந்தாலும், இன்கம்ப்ளீட்டாகத்தான் சாக வேண்டியிருக்கும்.

மறைந்த சிங்கானியாவுக்கு நம் அஞ்சலிகள்.

அவர் தைத்த சூட்கள் இன்னும் கம்பீரமாக இருக்கின்றன, அணிந்திருப்பவர்களின் பாக்கெட்டில் பணம் இருக்கும் வரை!

*****