5 Jun 2026

தமிழனை டேமேஜ் செய்த பஞ்ச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 3

திருமலை

தமிழனை டேமேஜ் செய்த பஞ்ச் சீரழிவு!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் சினிமாவுக்குப் பிடித்த சாக்லேட் பாய் காய்ச்சலைத் துடைத்தெறிந்துவிட்டு, இருபத்தோறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு புதிய நச்சு வித்தை அரங்கேறியது.

அதுதான் திருமலை.

அதுவரை துறுதுறுவெனக் காதலித்துக் கொண்டிருந்த ஒரு நடிகரை, கையில் சிகரெட்டையும் வாயில் பஞ்ச் வசனங்களையும் கொடுத்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆகச்சிறந்த ரோல் மாடலாக மாற்றிய பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

ஒரு மெக்கானிக் ஷாப் பையன் எப்படி ஒட்டுமொத்தச் சமூகத்தின் பொதுப்புத்தியையும் தன் பஞ்ச்களால் பழுதுபார்த்தான் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரித் தத்துவம்.

வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க தோக்குறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோப்பான் என்பது இன்றுவரை தமிழ்நாட்டின் டாஸ்மாக் சுவர்களிலும், ஆட்டோக்களின் பின்னாடியும் எழுதப்பட்டிருக்கும் ஆகச் சிறந்த தத்துவ ஞானம். இப்படத்தின் ஆகச் சிறந்த பஞ்ச் போஜனம் இதுதான்.

இந்தப் படம் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த மிக மோசமான பாடம் என்னவென்றால், நீ உருப்படாமல் ஊர் சுற்றினாலும், அடியாளாக அலைந்தாலும் கவலைப்படாதே, வாழ்க்கை ஒரு வட்டம், அதுவே உன்னை ஒரு நாள் மேலே தூக்கிவிடும் என்பதுதான்.

திட்டமிடல், கல்வி, ஒழுக்கம், உழைப்பு எதுவுமே இல்லாமல், எல்லாவற்றையும் வட்டம் என்ற விதியின் மீது போட்டுவிட்டுச் சோம்பேறியாகத் திரியும் ஒரு தலைமுறையை உருவாக்க இந்த ஒரே ஒரு வசனம் அப்போதைக்கும் இப்போதைக்கும் எப்போதைக்கும் தமிழகத்துக்குப் போதுமானதாக இருந்தது, இருக்கிறது, இருந்து வருகிறது.

படத்தில் நாயகன், நாயகியைக் காதலிக்கும் லட்சணம் அலாதியானது. அவள் பின்னால் அலைவது, அவள் போகும் இடமெல்லாம் பின்தொடர்வது, அவளது தனிப்பட்ட விருப்பங்களை மதிக்காமல் அத்துமீறுவது. இதையெல்லாம் விடக் கொடுமை, நாயகிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும், அவளது காரை வழிமறித்துத் தன் நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் ஆட்டம் போடுவது என்று ஸ்டாக்கிங்கே ஆகச் சிறந்த காதல் என்று நிறுவிய படம் இது.

ஒரு பெண் இல்லை என்று சொன்னால், அவளை இன்னும் தீவிரமாகத் துரத்த வேண்டும், ஒரு கட்டத்தில் அவள் தானாகவே மண்டியிடுவாள் என்ற ஆபத்தான வக்கிரத்தை காதல் என்ற பெயரில் தமிழர்களின் நெஞ்சில் பதிய வைத்தது திருமலை. இதன் விளைவை, இன்றுவரை பேருந்து நிலையங்களிலும் கல்லூரி வாசல்களிலும் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் கலாச்சாரப் பங்களிப்பு சிகரெட் பிடிக்கும் ஸ்டைல். சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயால் பிடிப்பதையும், தீக்குச்சியைத் தொடையில் கீறிப் பற்றவைப்பதையும் வீரம் என்று காட்டியது. விளைவு, அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு தீக்குச்சியோடு விளையாடத் தொடங்கினர். இப்படம் வெளியாகிக் கால் நூற்றாண்டைக் கடக்க இருக்கும் நிலையிலும் தமிழ் இளைஞர்களின் அந்த தீராத விளையாட்டுத்தனம் இன்றும் நின்றபாடில்லை.

உடம்பை முறுக்கிக் கொண்டு, சட்டைப் பொத்தான்களைக் கழற்றிவிட்டு, முச்சந்திகளில் நின்று கொண்டு வம்பு வளர்ப்பதே கெத்து என்ற போலியான ஆண்மை மனோபாவம் இந்தத் திரைப்படத்திற்குப் பின் மிகத் தீவிரமாகப் பரவியது. தையல் கலைஞர்களுக்கு இதனால் தமிழ்நாட்டில் பொத்தான் தைக்கும் வேலை குறைந்தாலும், சமூகத்தில் காவலர்களுக்கும் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் இந்த உடல் முறுக்கிகளை நெளிவெடுக்கும் வேலை அதிகமாகி விட்டது.

இத்திரைப்படத்தில் ஊரில் பெரிய டானாக இருக்கும் ஒருவன், இந்த மெக்கானிக் பையனின் தைரியத்தைப் பார்த்து வியந்து, அவனுக்குப் பக்கபலமாக நிற்பார். அதாவது, சமுதாயத்தில் பெரிய ஆளாக வர வேண்டுமென்றால், உங்களுக்குச் சட்டத்தின் துணையோ அல்லது நல்லவர்களின் நட்போ தேவையில்லை. ஒரு பெரிய ரவுடியின் ஆசி இருந்தால் போதும் என்ற நச்சுப் புத்தியை இதன் மூலம் ஏற்படுத்தியது இத்திரைப்படம். ரவுடிகளும் தங்கள் பிறந்த நாள்களை அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடும் புதிய வெப்பன் கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

காவல்துறையை வழக்கம் போல் கோமாளிகளாகக் காட்டிவிட்டு, நிழல் உலக தாதாக்களின் அராஜகங்களுக்குப் புனிதப் போர்வை போர்த்தும் அதே பழைய பார்முலாவை, புது மில்லினியத்தின் இளைஞர்களுக்குத் தகுந்தாற்போல் அப்டேட் செய்து கொடுத்தது இந்தச் சினிமா.

திருமலை திரைப்படம் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகனின் திரையுலகப் பாதையை மாற்றியிருக்கலாம், விநியோகஸ்தர்களுக்குப் லாபத்தைத் தந்திருக்கலாம். ஆனால், சராசரித் தமிழனை அது எங்கு கொண்டு போய் நிறுத்தியது? என்பதுதான் முக்கியமான கேள்வி.

காதல் என்ற பெயரில் பெண்களைத் துன்புறுத்துவதையும், பஞ்ச் வசனங்கள் பேசுவதையே ஆகச்சிறந்த அறிவாற்றல் என்று நம்புவதையும், வன்முறையைக் கௌரவமாகக் கருதுவதையும் ஒரு ட்ரெண்ட் ஆக மாற்றியதுதான் இந்தத் திருமலை செய்த ஆகப்பெரும் பழுது!

*****

4 Jun 2026

தமிழனைப் பக்குவமாய் மடையன் ஆக்கிய மாஸ்டர் ப்ளாஸ்டர்!

சீரழித்த சினிமா – 2

சகலகலா வல்லவன்

தமிழனைப் பக்குவமாய் மடையன் ஆக்கிய மாஸ்டர் ப்ளாஸ்டர்!

ஏண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் தன் பகுத்தறிவையும், கொஞ்ச நஞ்சமிருந்த பொதுப்புத்தியையும் திரையரங்கு வாசலிலேயே கழற்றி வைத்துவிட்டு, வெறும் அலறல் மற்றும் கதறல்களோடு உள்ளே நுழையக் கற்றுக்கொண்டது. அந்த அற்புதம் நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் 1982இல் வெளியான சகலகலா வல்லவன்.

அறிவியலும் நாகரிகமும் உலகெங்கும் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழனின் சிந்தனையை மாடு மேய்க்கும் ஹீரோயிஸம், மேல்தட்டுப் பெண்ளைப் பழிவாங்கல், டிஸ்கோ டான்ஸ் என்ற ஒரு முக்கோணப் பெட்டிக்குள் அடைத்துச் சீரழித்த பெருமை இத்திரைப்படத்துக்கு உண்டு.

இத்திரைப்படம் தமிழர்களின் மூளையில் ஏற்றிய மிக மோசமான நச்சுச் சிந்தனை என்னவென்றால், ஒரு பெண் நன்றாகப் படித்து, நாகரிகமாக உடை உடுத்தி, தன் உரிமைகளைப் பேசினால் அவள் திமிர் பிடித்தவள் என்று முத்திரை குத்துவதுதான். அவளைத் திருத்த அதாவது அடக்க வேண்டுமென்றால், கிராமத்தில் மாடு மேய்க்கும் ஒரு படிக்காத ஆனால், பரந்த நெஞ்சமும், முறுக்கிய மீசையும் கொண்ட நாயகனால்தான் முடியும் என்ற உலகமகா தத்துவத்தை விதைத்தது இத்திரைப்படம்.

பெண்ணின் கல்வி என்பது அவளது ஆளுமைக்கானது அல்ல, அது ஆணின் ஈகோவை உரசிப் பார்க்கும் ஒரு வியாதி என்ற பார்வையை இன்றும் பல குடும்பங்களில் விதைத்து வைத்திருப்பது இந்தச் சகல கலா வல்லவன் கற்றுக்கொடுத்த பாடம்தான்.

நாயகன், நாயகியைப் பழிவாங்க அவளுடைய வீட்டிற்கே மாறுவேடத்தில் கம்பீரமான மீசையை வழித்துவிட்டு, சமையல்காரனாக நுழைவார். ஒரு பெண்ணின் தனிப்பட்ட எல்லைக்குள் ஏமாற்று வேலை செய்து நுழைவதையும், அவளது அந்தரங்கங்களை உளவு பார்ப்பதையும் காதல், தியாகம், வீரம் என்று உலகத்தரம் உயர்த்திக் காட்டியது இந்தத் திரைப்படம். உலக நாயகன் நடித்தது கூட அந்த உலகமகா தத்துவம் மற்றும் உலகத்தரத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த இளைஞர்கள், காதலிப்பதற்கோ அல்லது பெண்ணை அணுகுவதற்கோ நேர்மையான வழிகளைத் தேடவில்லை. மாறாக, பொய்கள் சொல்வதையும், ஆள்மாறாட்டம் செய்வதையும், பெண்களை ஏமாற்றுவதையும் அதற்காகப் பித்தலாட்டங்களில் இறங்குவதையும் காதலின் அத்தியாவசிய விதிகளாக மாற்றிக்கொண்டனர்.

இளமை இதோ இதோ, என்று புத்தாண்டுக்கு இன்றும் ஒலிக்கும் இத்திரைப்பட பாடலின் பின்னணியில் இருப்பது, ஒரு நுகர்வோர் கலாச்சார சீரழிவு. உழைத்து வாழும் நடுத்தர வர்க்கத் தமிழனை, கிளப்புகளுக்கும், மதுக் கலாச்சாரத்திற்கும், மேற்கத்தியப் போலி ஆடம்பரங்களுக்கும் ஏங்க வைத்தது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தில் இடம் பெற்ற நேத்து ராத்திரி யம்மா என்ற திரைப்பாடல் தமிழர்களிடையே தூக்கமின்மை வியாதியை உருவாக்கியது. அந்தப் பாடலில் ஆடிய சில்க் ஸ்மிதாவுக்கும் உருவாக்கியது. தூக்கமின்மை முடிவில் தற்கொலையைத் தூண்டும் என்பது மருத்துவ உளவியல். சில்க் ஸ்மிதா நிஜ வாழ்வில் நிஜமாகவே தற்கொலை செய்து கொண்டார். தமிழர்களும் அதுவரை அகம் – புறம் என்று வகுத்திருந்த இலக்கண மரபுகளைத் தூக்கில் தொங்க விட்டனர். அதன்பின் பாலியல் படங்களை ஏன் தனித்துக் கொடுக்க வேண்டும் என்று யோசித்து, அதையும் கலந்த கமர்ஷியல் காக்டெயிலாக் கொடுக்கத் தொடங்கியது தமிழ்த் திரையுலகம்.

வாழ்க்கையின் லட்சியம் என்பது அறிவை வளர்ப்பதோ அல்லது சமூகத்திற்குப் பங்களிப்பதோ அல்ல. மாறாக, பளபளக்கும் ஆடைகளை உடுத்தி, டிஸ்கோ விளக்குகளுக்குக் கீழே ஆடம்பரமாய் கும்மாளம் அடிப்பதுதான் வாழ்க்கை என்ற ஒரு மாயையை இது உருவாக்கியது இத்திரைப்படம். நிஜ வாழ்க்கையின் வறுமையையும் ஏழ்மையையும் மறக்கடிக்க, சினிமா காட்டிய இந்த வண்ணமயமான போதை, தமிழனை நிஜப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க விடாமல் எதையும் ஹீரோயிஸம் என்ற கோதாவால் மாற்ற முடியும் என்ற மாயையில் கொண்டு போய் நிறுத்தியது.

கதைப்படி நாயகியின் குடும்பம் செய்த அவமானத்திற்குப் பழிவாங்க, நாயகன் அவளது சொத்துக்களைப் பறிப்பதும், அவளைத் தன் காலடியில் விழ வைப்பதும்தான் கிளைமாக்ஸ்.

ஒரு நாகரிகச் சமூகம் ஈகோ பிரச்சினைகளை எப்படித் தீர்க்க வேண்டும்? சமரசப் பேச்சுகள் அல்லது சட்டபூர்வமான பிரிதல் மூலம். ஆனால், இங்கோ அடிக்கு அடி, பழிக்குப் பழி என்பதுதான் கௌரவம் என்று போதிக்கப்பட்டது.

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் ஈகோக்களைக் கையாள்வதில் தமிழர்களுக்கு இன்றுவரை இருக்கும் முதிர்ச்சியற்ற தன்மைக்கு, இதுபோன்ற பழிவாங்கல் கதைகளே ஆகச்சிறந்த ஊற்றுக்கண்.

சகலகலா வல்லவன் பாக்ஸ் ஆபீஸில் நூறு நாட்களைக் கடந்து ஓடியிருக்கலாம். உலக நாயகனை கலையுலகக் கலைக் களஞ்சியமாக நிலைநிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை ஒரு முற்போக்குச் சிந்தனையாளனாக மாற்றவில்லை. மாறாக, பெண்களைக் குறைத்து மதிப்பிடும், ஆடம்பரத்தை ஆராதிக்கும், போலிக் கௌரவங்களுக்காக வாழும் ஒரு சகலகலா மடையனாக மாற்றிச் சீரழித்தது என்பதுதான் காலம் கடந்து இப்போதும் நெஞ்சை நெருடிக் கொண்டிருக்கும் உண்மை!

*****

3 Jun 2026

மாடுகளுக்குக் கிடைத்த பெருமை, மனிதர்களுக்கு நேர்ந்த சிறுமை!

சீரழித்த சினிமா – 1

முரட்டுக்காளை

மாடுகளுக்குக் கிடைத்த பெருமை, மனிதர்களுக்கு நேர்ந்த சிறுமை!

தமிழ்ச்சமூகத்திற்குச் சினிமா செய்த ஆகப்பெரும் தொண்டுகளில் முதன்மையானது, அறிவையும் சிந்தனையையும் அப்படியே உறையவைத்து, அனிச்சைச் செயல்களின் மூலம் மட்டுமே வாழப் பழக்கியதுதான்.

அந்தப் புனிதமானப் பணியை 1980களில் மிக நேர்த்தியாகத் தொடங்கி வைத்த பெருமை முரட்டுக்காளை என்ற திரைப்படத்திற்கு உண்டு.

இன்றுவரை தமிழர்களின் கூட்டுமனோபாவத்தில் உறைந்து கிடக்கும் பல விசித்திரமான சீரழிவுகளுக்கு இந்தப் படம் எப்படி பிள்ளையார் சுழி போட்டது என்பதைப் பார்ப்போம்.

இந்தப் படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த முதல் பாடம் என்னவென்றால், ஒரு மனிதன் நல்லவனாக, ஹீரோவாக வாழ வேண்டுமென்றால் அவனுக்குப் படிப்போ, உலகறிவோ, சமூகப் பொறுப்போ தேவையில்லை, வெறும் முரட்டுத்தனம் மட்டும் இருந்தால் போதும்.

மாட்டை அடக்கத் தெரிந்தவனுக்கு நாட்டைப் பற்றி எதுவும் தெரிய வேண்டிய அவசியமில்லை என்ற தத்துவத்தைத் தமிழனின் மூளையில் ஆணி அடித்தது முரட்டுக்காளை.

விளைவு?

அன்று முதல் இன்று வரை, பொதுவாழ்வில் விவேகம் உள்ளவர்களை ஒதுக்கிவிட்டு, சட்டைப் பொத்தானைக் கழற்றிவிட்டுச் சண்டைக்குப் போகும் ரோசக்காரர்களை நம் சமூகம் தலைவனாகக் கொண்டாடி வருகிறது.

இத்திரைப்படத்தில் வரும் நாயகி, ஆரம்பத்தில் கொஞ்சம் திமிராகவும், தன் சுயமரியாதையைப் பேசுகிறவளாகவும் இருப்பாள். ஒரு முற்போக்குச் சமூகம் அவளை எப்படிக் கையாள வேண்டும்? அவளோடு உரையாட வேண்டும். ஆனால், நம் முரட்டுக்காளையோ அவளை அடக்குகிறார்.

பெண்ணியம் பேசும் பெண்களை அடங்காப்பிடாரிகள் என்றும், அவர்களை ஏதோ ஒரு வகையில் வன்முறையாலோ அல்லது கற்பு என்ற ஒற்றைச் சொல்லாலோ பணிய வைப்பதே ஆணின் வீர லட்சணம் என்ற ஆபத்தான சிந்தனையை இந்தப் படம் மிக நளினமாக விதைத்தது.

இந்த அடக்குமுறை பார்முலாதான் அடுத்த நாற்பது வருடத் தமிழ் சினிமாவுக்குத் தீனியாக அமைந்தது. நிஜ வாழ்க்கையில் பல பெண்களின் சுதந்திரத்திற்குப் பூட்டும் போட்டது.

ஊரில் ஒரு வில்லன் அநியாயம் செய்கிறான் என்றால், ஒரு நாகரிகச் சமூகம் என்ன செய்ய வேண்டும்? காவல் நிலையத்திற்குப் போக வேண்டும், சட்டத்தை நாட வேண்டும். ஆனால் படத்தின் நாயகன் முரட்டுக்காளையோ, சட்டத்தையும் அரசாங்கத்தையும் டம்மி ஆக்கிவிட்டு, தானே பஞ்சாயத்து செய்வார், தானே தீர்ப்பு வழங்குவார்.

இப்படி ஹீரோவே சட்டம், ஹீரோவே நீதிமன்றம் என்ற பாசிச மனோபாவம் தமிழர்களின் சிந்தனையை எப்படிச் சீரழித்தது தெரியுமா? நிஜ வாழ்க்கையில் நமக்கொரு பிரச்சினை என்றால், சட்டப்பூர்வமாக அணுகுவதை விடுத்து, ஏரியா தாதாவிடமோ அல்லது அடியாட்களிடமோ தஞ்சமடையும் ஒரு வன்முறைச் சமூகமாக நம்மை மாற்றியது.

சட்டம் தன் கடமையைச் செய்வதை விட, ஒரு தனிமனிதன் அரிவாளைத் தூக்குவதே கெத்து என்ற விபரீதப் புரிதலை இது உருவாக்கியது.

ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது வீரத்தின் அடையாளம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த வீரத்தை மட்டுமே ஒட்டுமொத்த வாழ்க்கையின் தகுதியாக மாற்றியதில் இருக்கிறது இந்தத் திரைப்படம் உருவாக்கிய ஆபத்து.

மாட்டை அடக்கும் காட்சியைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தன் அறிவை வளர்த்துக் கொள்ளப் புத்தகங்களை நாடவில்லை.  மாறாக, தன் உடம்பில் இருக்கும் தசைகளை முறுக்கிக் கொண்டு அலையத் தொடங்கினான்.

அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சிந்தனையையும் காளை, கம்பு, கத்தி என்ற வட்டத்திற்குள்ளேயே சுருக்கி வைத்தது இந்தத் திரைப்படம்.

முரட்டுக்காளை கமர்ஷியலாக மிகப் பெரிய ஹிட் அடித்தது என்பதில் ஐயமில்லை. தயாரிப்பாளரின் கல்லா நிறைந்தது, நடிகரின் பிம்பம் உயர்ந்தது. ஆனால், அதை ரசித்த தமிழ்ச் சமூகமோ, சிந்தனை ரீதியாகப் பின்னோக்கி நகர்ந்தது.

விவேகத்தை விட வன்முறைக்கும், அறிவை விட அதிரடிக்கும் முக்கியத்துவம் தரும் ஒரு முரட்டுத்தனமான சமூகமாக நாம் மாறுவதற்கு, எண்பதுகளில் போடப்பட்ட அந்தப் பாட்டுடைத் தலைவனின் ஆவேச சத்தம் இன்றுவரை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை!

*****

2 Jun 2026

டாலரின் அகங்காரமும், ரூபாயின் துறவறமும்!

டாலரின் அகங்காரமும், ரூபாயின் துறவறமும்!

கச்சா எண்ணெய், தங்கம், எலெக்ட்ரானிக்ஸ் என நாம் ஆசைப்படும் அத்தனைக்கும் அமெரிக்க டாலரில்தான் பிச்சை கேட்க வேண்டியிருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 96 ரூபாயைத் தாண்டி, 100 ரூபாயை நோக்கித் தியான நிலையில் சரிந்து கொண்டிருக்கிறது.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, என்றார் வள்ளுவர். டாலர் இல்லார்க்கு எந்த உலகமும் இல்லை, என்கிறது அமெரிக்கா.

டாலர் வெளியேற வெளியேற, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்னும் ஆன்மீக வறுமை நம்மைத் தொற்றிக் கொள்கிறது. இந்த வறுமையைத் துடைக்க, பிரதமர் மக்களின் தங்கப் பசியைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். ஆனால், மனித மனம் விசித்திரமானது.

ஒரு குழந்தையிடம் அந்தப் பொம்மையைத் தொடாதே, என்று சொன்னால், அக்குழந்தை அழுது புரண்டாவது அந்தப் பொம்மையைத்தான் முதலில் தொடும். அதுபோலவே, தங்கம் வாங்காதீர்கள், வரி 15% ஆகப் போகிறது என்றதும், இந்தியப் பிரஜைகள் அனைவரும் நாளைக்கே தங்கம் அழியப் போகிறது என்ற பதற்றத்தில் நகைக் கடைகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள். தடையை விடப் பெரிய விளம்பரம் வேறென்ன இருக்க முடியும்?

இந்தியாவைப் பொருத்த வரையில் தங்கம் என்பது வெறும் உலோகமல்ல, அது மக்களின் கலாசாரம்.

இங்கு பிறப்பு முதல் இறப்பு வரை, அழுகை முதல் புன்னகை வரை அனைத்தும் தங்கத்தால் மட்டுமே அளவிடப்படுகிறது. அதை திடீரென ஆடம்பரப் பொருள் என்று முத்திரை குத்தினால், நடுத்தர வர்க்கத்தின் கதி என்னாவது?

அரசுகள் எப்போதுமே பிரச்சினையின் வேரைத் தேடாமல், கிளையை வெட்டப் பார்க்கும்.

இந்தியக் குடும்பங்களிலும் கோயில்களிலும் ஏறத்தாழ 40,000 டன் தங்கம் சும்மா உறங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தங்கம், மோட்சம் அடைந்த ஆன்மாக்களைப் போல எந்தச் சலனமும் இல்லாமல் லாக்கர்களில் தூங்குகிறது. இதை மீண்டும் சந்தைச் சுழற்சிக்குக் கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.

தற்போது நமது தங்கத்தின் தேவை 60% இறக்குமதியையும், 40% மறுசுழற்சியையும் நம்பி இருக்கிறது. இந்த விகிதத்தை மாற்றி, வீட்டிலிருக்கும் தங்கத்திற்கு வட்டி தந்து, அதை அரசே சுழற்சிக்கு விட்டால் டாலர் ஏன் வெளியேறப் போகிறது?

அதை விடுத்து, வரியை உயர்த்தினால் நடப்பது என்ன? தங்கம் கடத்தல்காரர்களின் கைகளில் தவழத் தொடங்கும். நேர்மையாக வாங்க நினைப்பவர் திருமணத்தையே தள்ளி வைக்க வேண்டிய சூழல் வரும்.

தங்கம் வாங்காதீர்கள், என்று ஒரு தடையை விதிப்பதற்குப் பதிலாக, பிரதமர் மக்களிடம் ஒரு தத்துவார்த்தக் கேள்வியை முன்வைத்திருக்கலாம். மக்களே, தங்கம் என்பது உங்களை அழகூட்டும் நகையல்ல, அது உங்களைச் சிறைப்பிடிக்கும் ஒரு மஞ்சள் நிற விலங்கு. உங்கள் லாக்கர்களில் தூங்கும் தங்கத்தை தேசத்தின் ரத்த ஓட்டத்திற்குத் தாருங்கள். பழைய தங்கத்தைக் கொடுத்துப் புதிய தங்கம் வாங்கும்போது உங்களுக்கு வரியே கிடையாது! என்று அறிவித்திருக்கலாம்.

மனிதர்களை அச்சுறுத்துவதை விட, அவர்களின் பேராசையையோ அல்லது தேசபக்தியையோ லேசாகத் தட்டி எழுப்புவதுதான் ஆகச்சிறந்த அரசியல் தத்துவம். அதை விடுத்து, பயத்தை விதைத்தால் மக்கள் தங்கத்தை இன்னும் ஆழமாகப் பூமிக்குள் புதைத்து வைக்கவே நினைப்பார்கள்.

ஏனெனில், பொருளாதாரம் என்பது எண்களால் ஆனது மட்டுமல்ல. அது மனிதர்களின் விசித்திரமான மனோபாவங்களால் ஆனது!

*****

தமிழகத்தைச் சீரழித்த சினிமாக்கள்!

தமிழகத்தைச் சீரழித்த சினிமாக்கள்!

தமிழர்களின் வாழ்க்கையை எத்தனையோ விசயங்கள் சீரழித்திருக்கின்றன. கமர்ஷியலாக ஹிட்டடித்த திரைப்படங்களும் அவற்றுள் அடக்கம். அவை தமிழர்களின் வாழ்வியலை, சிந்தனை முறையை எப்படிச் சீரழித்தன என்பது சுவாரசியமான வரலாறு.

அசல் வாழ்க்கை தெரியாதபடி கமர்ஷியல் எனும் மாயஞாலப் பூச்சுகளால் மக்களை மேலும் முட்டாள்களாக்கிய திரைப்படங்களால் ஹீரோக்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், அத்திரைப்படங்களோடு தொடர்புடைய இன்னபிற பலருக்கும் மிகப்பெரிய லாபம் கிடைத்திருக்கலாம். தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்பட்டதோ மிகப்பெரிய நட்டம்.

ஒரு மோசமான அசமன்பாட்டைத் தோற்றுவித்துவிட்ட கமர்ஷியல் சினிமாக்களின் உள்ளடி சதித்திட்டங்களைக் கொஞ்சமேனும் அறிந்து கொள்ளாமல் அவற்றின் மாயக் கவர்ச்சியிலிருந்து விடுபடுவது சாதாரண ஒன்றில்லை.

உலகில் பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் போல சினிமாவயப்பட்ட இனம் வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் சினிமாவைக் கும்பிடுகிறார்கள், கமர்ஷியல் சினிமாவுக்குப் பாலாபிஷேகம் செய்கிறார்கள், கோயில் கட்டுகிறார்கள், அதை அரசியலாக்குகிறார்கள், ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கிறார்கள், சினிமாவை அந்த அளவுக்குச் சுவாசிக்கிறார்கள், சினிமாவிலேயே வாழ்கிறார்கள். தமிழர்களைக் கமர்ஷியல் சினிமாவில் வாழும் மாய எதார்த்தவாதிகள் என்று சொல்லலாம்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் டாஸ்மாக் மட்டும் தமிழர்களைச் சீரழிக்கவில்லை, கமர்ஷியல் சினிமாவும் அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் சீரழித்திருக்கிறது. இன்று டாஸ்மாக்கும் தியேட்டரும் இல்லாத தமிழகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது.

டாஸ்மாக்குகள், தியேட்டர்கள் இருக்குமிடங்கள் தெரியும் எத்தனை பேருக்கு நூலகங்கள் இருக்கும் இடம் தெரியும்?

டாஸ்மாக்குக்கும் தியேட்டருக்கும் மக்களை யாரும் திரட்ட வேண்டியதில்லை. நூலகத்துக்கு மக்களை எவ்வளவு திரட்டினாலும் அவர்கள் தயாராவதில்லை.

ஒரு டாஸ்மாக்கையும் ஒரு சிறுதானிய கடையையும் அருகருகே அமைத்தால் டாஸ்மாக்கை நாடிச் செல்பவர்களே அதிகம். தரமான சினிமாக்களின் நிலையும் கிட்டதட்ட இதேதான். ஒரு தரமான படத்தையும், கமர்ஷியல் படத்தையும் அருகருகே இரு தியேட்டர்களில் திரையிட்டால் மக்கள் கமர்ஷியல் படத்துக்கே டிக்கெட் எடுப்பார்கள். தரமான படம் காற்றாடும். மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அப்படி வார்க்கப்பட்டும் வருகிறது.

வாசிப்புக் கூட முன்னர் அப்படித்தான் இருந்தது. தரமான எழுத்தை வாசிப்பதை விடவும், கமர்ஷியல் எழுத்தை வாசிப்போர் அதிகம். இப்போது வாசிப்பு பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் அது பற்றிய கவலைகள் கூட அருகி விட்டன. அதற்காகத் தரமான வாசிப்பு குறித்த முன்னெடுப்பைக் கைவிட்டு விட இயலாது.

மக்களின் அடிப்படை மனநிலையிலேயே அறிவார்ந்த செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளன. உணர்ச்சிகளையும் கவர்ச்சிகளையும் தூண்டக்கூடிய செயல்பாடுகள் முதலிடம் பெறுகின்றன.

இவையெல்லாம் தேவையில்லாத ஆணிகள்தான். தேவையில்லாத ஆணிகள் என்று தெரிந்தும் அவற்றைத் தங்கள் மீதே அறைந்து கொள்வதில் மக்களுக்குத் தனி சந்தோசம் இருக்கிறது என்பது விநோதமாக இருக்கிறது. அதற்காக அதை அப்படியே விட்டு விட முடியாது. அறிவார்ந்த ஒரு முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழித்து விட முடியாது.

ஆக மொத்தத்தில், தமிழ் கமர்ஷியல் சினிமாக்களின் மசாலா தனங்கள், தமிழர்களின் சமூகப் புத்தியை வெகுவாகப் பதம் பார்த்திருக்கின்றன.

போலி ஆண்மை, பின்தங்கிய பெண் சித்தரிப்பு, அறிவியலற்ற மூடநம்பிக்கைகள், வன்முறைக்குக் கொடுக்கும் பில்டப், சாதியப் பெருமிதம் என்று ஹிட்டடித்த கமர்ஷியல் சினிமாக்கள் செய்த அநியாய அக்கிரமங்கள் ஏராளம்.

ஒரு சுருக்கமான பட்டியல் போட்டால்,

ஹீரோயிசம் என்கிற பெயரில் ரவுடித்தனத்தை விதைத்தது,

காதல் என்ற பெயரில் ஈவ் டீசிங்கை நியாயப்படுத்தியது,

சென்டிமென்ட் என்ற பெயரில் பெண்ணியம் மற்றும் குடும்பப் பாங்கைக் கேலி செய்தது,

சாதியப் பெருமிதம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டியது,

ரசனை, கவர்ச்சி என்ற பெயரில் போலித்தனத்தை வளர்த்தது என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் கமர்ஷியல் படங்கள் மீது இருக்கின்றன.

இவற்றைப் பற்றி ஒவ்வொரு படங்களாகப் பார்க்கும் போது உங்களுக்கே புரியும். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நாளையிலிருந்து தமிழர்களைச் சீரழித்த ஒவ்வொரு படமாகக் கூறுபோடுவோம்.

*****

1 Jun 2026

மீண்டும் மீண்டும் ரீமேக்காகும் பாசமலர்!

வெற்றுச் சொற்களின் பாராட்டும், மனிதனின் எல்லையற்ற தனிமையும்!

பாசமலர் திரையில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் அடிக்கடி ரீமேக்காகும் ரீல் + ரியல் திரைப்படமாகும்.

குடும்பங்களின் பாசமலர்களைப் பார்த்து அலுத்துப் போன நமக்கு, அரசியலில் பாசமலர்களைப் பார்க்கும் போது அது ஒரு புதுமையான ட்விஸ்ட்டாக இருக்கிறது.

வாஷிங்டனில் இருந்து இந்தியாவைப் புகழ்ந்து வரும் செய்திகள், இரண்டு உலகத் தலைவர்களின் நட்புப் பாராட்டுதலைப் பற்றியது அல்ல. அது மனித இருத்தலின் ஆகப்பெரும் வெறுமையையும், அதிலிருந்து தப்பிக்க மனிதன் தேடும் போலியான அங்கீகாரங்களையும் பற்றியது.

டெல்லியின் பாரத மண்டபத்தில் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், அதிபர் டிரம்ப்பின் குரலை அங்கிருந்தவர்களுக்குக் கேட்பிக்கத் தனது அலைபேசியை மைக்ரோபோனுக்கு முன்னால் நீட்டுகிறார். இந்தத் தொழில்நுட்பக் காட்சி, நவீன மனிதனின் ஆகப்பெரும் அவலத்தைக் காட்டுகிறது. நாம் எல்லையற்ற தொடர்புச் சாதனங்களைக் கைகளில் வைத்திருக்கிறோம். ஆனால், ஒருவரிடம் நேரடியாகப் பேச முடிவதில்லை.

அதிபர் டிரம்ப்பின் குரல் ஒரு கருவியிலிருந்து இன்னொரு கருவிக்குக் கடத்தப்பட்டு, காற்றில் அதிர்வுகளாகப் பரவுகிறது. நான் மோடியின் ரசிகன், என்ற டிரம்ப்பின் சொற்கள், உண்மையின் வெளிப்பாடு அல்ல, மாறாக, பிரபஞ்சத்தின் எல்லையற்ற மௌனத்தைக் கண்டு அஞ்சி, மனிதன் எழுப்பும் வெற்று ஒலிகள் மட்டுமே.

நாம் நமது தனிமையைப் போக்கிக் கொள்ள, பிறிதொரு மனிதனின் குரலைத் தேடிக் கொண்டே இருக்கிறோம்.

மனிதனின் இருத்தலில் நிரந்தரமான உண்மை என்று எதுவுமே இல்லை என்பதை டிரம்ப்பின் முந்தைய பதிவுகள் நிரூபிக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவை நரகக் குழி என்று வர்ணித்த அதே மனிதர், இன்று இந்தியாவை நூறு சதவீதம் நம்பகமான தோழன், என்கிறார்.

ஒரு மனிதருக்கு ஒரு தேசம், ஒரு கணம் நரகமாக இருக்கிறது, அடுத்த கணமே அது சொர்க்கமாக மாறுகிறது. இந்த முரண்பாடு காட்டும் உண்மை என்னவென்றால், உலகியல் அரசியலில் விழுமியங்களுக்கு சுயமான அர்த்தங்கள் இல்லை என்பதுதான்.

அதிகாரமும் சுயநலமும் மட்டுமே அர்த்தங்களை உற்பத்தி செய்கின்றன. நேற்று நாம் தூற்றிய ஒன்றை இன்று போற்றுகிறோம், ஏனெனில் மனித மனம் நிலையற்ற தன்மையால் ஆனது.

தன் எண்ணங்களை டிரம்ப் பகிர்வது ட்ரூத் என்ற சமூக வலைதளப் பக்கத்தில். இது எவ்வளவு பெரிய முரண்நகை! ட்ரூத் என்பதற்கு உண்மை என்பது பொருள். ஆனால், அந்தப் பகிர்வு எந்த அளவுக்கு உண்மையானது?

மனிதன் தனக்குச் சாதகமான புனைவுகளை, மாயைகளை உண்மை என்று பெயரிட்டுத் தன் இருத்தலை நியாயப்படுத்திக் கொள்ள முயல்கிறான். மோடியைப் புகழ்ந்த பதிவை டிரம்ப் அங்கு மறுபகிர்வு செய்வதன் மூலம், உலகிற்குத் தான் இன்னும் முக்கியமானவனாக இருக்கிறேன் என்பதை உரக்கச் சொல்ல முயல்கிறார்.

இருத்தலியல் தத்துவத்தின்படி, மனிதன் பிறப்பால் முற்றிலும் தனியானவன். அவனுக்கு என்று பிரபஞ்சம் எந்த நோக்கத்தையும், அர்த்தத்தையும் தருவதில்லை. எனவே, அவன் புகழ்ச்சிகள், தூதரக விழாக்கள், மற்றும் ரசிகன் என்ற பட்டங்கள் மூலம் தனக்கான ஒரு தற்காலிக அர்த்தத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

என்னையும் அமெரிக்காவையும் இந்தியா 100 சதவீதம் நம்பலாம், என்ற டிரம்ப்பின் வார்த்தைகள் காற்றில் கரைந்து போகக்கூடியவை. ஏனெனில், மனித இருத்தலில் 100 சதவீத நம்பிக்கை என்பது சாத்தியமே இல்லாத ஒரு மாயை.

இந்தச் செய்தி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை விவரிப்பதாகத் தோன்றினாலும், ஆழத்தில் இது காட்டும் உண்மை ஒன்றுதான். மனிதர்கள் அனைவரும் ஒரு பெரிய நாடக மேடையில் இருக்கிறார்கள். அங்கு மைக்ரோபோன்களும், சமூக வலைதளப் பக்கங்களும் மனிதனின் உள்ளார்ந்த தனிமையையும், அர்த்தமின்மையையும் மறைக்கப் பயன்படும் வெறும் முட்டுகள் மட்டுமே.

நாளை அந்தப் பதிவுகள் மாறலாம். இன்றே கூட மாறலாம். நேற்று அப்படி இருந்ததே, இன்று இப்படி இருக்கிறதே என்று கேட்பதில் பொருள் எதுவுமில்லை. இந்த உலகில் எல்லாம் அபத்தங்களே. அதிலும் தலைவர்கள் உதிர்க்கும் முத்துகள் அபத்தங்களின் தத்துப்பிள்ளைகள். அவை பாசமலர்கள் பெற்றெடுத்த வேஷ மலர்கள்.

*****

நவீன மிக்ஸிகளின் வீழ்ச்சியும் மனித மண்டையின் எழுச்சியும்

நவீன மிக்ஸிகளின் வீழ்ச்சியும் மனித மண்டையின் எழுச்சியும்

இன்று சந்தைக்குப் போனால் 750 வாட்ஸ், 1000 வாட்ஸ் எனப் பலத்த சத்தத்துடன் ஓடும் மிக்ஸிகள் கிடைக்கின்றன. சுவிட்சைப் போட்டால் இரண்டு நிமிடத்தில் பாறாங்கல்லைக் கூட பவுடராக மாற்றிவிடும் தகுதி அவற்றுக்கு உண்டு. கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்களோ உளுந்தை பஞ்சு போல ஆக்கித் தருகின்றன.

ஆனால், இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த உலகம் தன் அன்றாட மசாலா தேவைகளுக்கு, அதாவது ஏமாற்று வேலைகளுக்கு, உங்கள் தலையைத்தான் மிகச் சிறந்த அரைக்கும் கல்லாகத் தேர்ந்தெடுக்கிறது. தட் மீன்ஸ், உங்கள் தலையில்தான் மிளகாய் அரைக்கிறது.

இதற்கான காரணம் மிக எளிதானது. மிக்ஸியில் அரைத்தால் மின்சாரக் கட்டணம் வரும், வாரண்டி முடிந்துவிட்டால் ரிப்பேர் செய்ய காசு கொடுக்க வேண்டும். ஆனால், உங்கள் தலையில் மிளகாய் அரைத்தால், இவையெல்லாம் தேவையில்லை பாருங்கள்.

அதுமட்டுமல்லாமல், அரைத்து முடித்ததும் காரம் உங்களுக்குத்தான் ஏறும், அரைத்தவருக்கு ருசியான சட்னி கிடைத்துவிடும்.

இந்த உலகத்தில் உங்கள் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் யாரும் திடீரென்று கையில் அம்மிக் கல்லோடு வருவதில்லை. அவர்கள் மிகவும் அன்பானவர்கள், உங்களின் நலம் விரும்பிகள், சில சமயம் உங்களுக்கு மட்டும் தான் இந்தச் சலுகை என்று வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள்.

மச்சி, உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா? என்று ஒருவர் தோளில் கை போடுகிறார் என்றால், அவர் தன் கையில் காஷ்மீரி மிளகாயை மறைத்து வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

உங்கள் தலை எவ்வளவு ப்ளெய்ன் ஆக, அதாவது வழுக்கையாகவோ அல்லது கூந்தலோடோ இருக்கிறதோ, அவ்வளவு நைஸாக மிளகாய் அரையும். நீங்கள் நான் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் அந்த உன்னத கணத்தில்தான், பின்மண்டையில் காரம் இறங்கத் தொடங்கியிருக்கும்.

பங்குச் சந்தையில் டபுள் டிரிபிள் பிராபிட், பிரெண்ட் கேட்ட பர்சனல் லோன், இன்னும் இரண்டே வருடத்தில் டபுள் மடங்கு லாபம் தரும் ரியல் எஸ்டேட் பிசினஸ் என எல்லாமே மிக்ஸியை விட அதிவேகமாக உங்கள் தலையில் அற்புதமாக மிளகாய் அரைத்து விடுகின்றன.

கடைகளில் விற்கும் மிக்ஸிகளுக்குக் கூட ஓவர்லோடு பிரொடெக்சன்  என்றொரு சுவிட்ச் கீழே இருக்கும். மிளகாய் அதிகமாகிவிட்டால், அது தானாக டக் என்று ஆப் ஆகிவிடும். ஆனால், பிரபஞ்சம் மனித மண்டையைப் படைக்கும்போது அந்த சுவிட்சை வைக்க மறந்துவிட்டது.

நீங்கள் எப்போது அடுத்தவருக்கு உதவப் போகிறேன் என்று தியாகச் செம்மலாக மாறுகிறீர்களோ, அப்போதே உங்கள் தலை ஒரு உலகத்தரம் வாய்ந்த மிக்ஸி ஜாராக உருமாறிவிடுகிறது. உலகம் உங்களை ஒரு நல்லவன் என்று பாராட்டுவது, நீங்கள் காரத்தைத் தாங்கிக் கொண்டு சத்தமில்லாமல் அரைபடுவதற்காக மட்டும்தான்.

எனவே, அடுத்த முறை யாராவது உங்களிடம் வந்து, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், என்று இழுத்தால், உடனே உங்கள் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கே ஏற்கனவே போன வாரம் அரைத்த மிளகாயின் வாசம் இன்னும் மிச்சமிருக்கக் கூடும்!

*****