1 Apr 2026

கத்தியின்றி ரத்தமின்றி மூளைக்குள் ஒரு டூயட்!

கத்தியின்றி ரத்தமின்றி மூளைக்குள் ஒரு டூயட்!

நம் மண்டையோட்டுக்குள்ளே இருக்கும் மூளை ஒரு மகா சமுத்திரம். அதன் மேலடுக்கை வருடிக் கொடுப்பது எளிது. ஆனால், மிக ஆழத்தில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் போன்ற இடங்களைத் தொட வேண்டுமானால், இதுவரை ஒரே வழிதான் இருந்தது. அது மண்டையைத் திறந்து, ஒயர்களை உள்ளே விட்டு ஒரு அறுவை சிகிச்சை செய்வது.

இப்போது இதற்கு ஒரு ஷார்ட்கட் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதற்குப் பெயர் இன்டர்ஃபியரன்ஸ். அதன்படி இரண்டு வெவ்வேறு அலைவரிசை கொண்ட மின்சாரத்தை மூளைக்குள் வெவ்வேறு கோணங்களில் பாய்ச்சுகிறார்கள். அவை இரண்டும் மூளையின் ஒரு குறிப்பிட்ட ஆழமான புள்ளியில் சந்திக்கும்போது, அங்கே ஒரு புதிய குறைந்த அதிர்வு உருவாகிறது. இதைத்தான் டெம்போரல் இன்டர்பெரன்ஸ் என்கிறார்கள்.

எளிமையாகச் சொன்னால், இரண்டு ரயில்கள் வெவ்வேறு வேகத்தில் வரும்போது, அவை சந்திக்கும் இடத்தில் உண்டாகும் அதிர்வு போன்றது இது. இந்த அதிர்வு மூளை நரம்புகளைத் தட்டி எழுப்புகிறது அல்லது அடக்கி வைக்கிறது.

ஏன் இது முக்கியம் என்றால், மண்டையைத் துளைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் லாபம் அதிகம். இதனால் அல்சைமர் எனும் மறதி நோய்க்கு சிகிச்சை, எபிலெப்ஸி எனும் காக்காய் வலிப்பு நோய்க்கு சிகிச்சை, ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு மறுவாழ்வு என இதன் லாபப் பட்டியல் நீள்கிறது. அத்துடன் இதற்கான உபகரணங்கள் விலை குறைவு. ஒரு சாதாரண எலக்ட்ரோட் தொப்பியைப் போட்டுக்கொண்டே சிகிச்சையைத் தொடரலாம்.

காக்காய் வலிப்பு இருப்பவர்களுக்கு இந்த முறையில் ஹிப்போகாம்பஸைத் தட்டிவிட்டு, அவர்களின் தூக்கத்தை சீராக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

வயதானவர்களின் மூளையைத் தூண்டி அவர்களை விரல்களால் வேகமாகத் தட்ட வைத்திருக்கிறார்கள். இது பக்கவாதம் வந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

ஆனால், வெளியே கத்தி வைக்கவில்லை என்பதால் இதை பின்விளைவு இல்லாதது என்றெல்லாம் சொல்ல முடியாது. மூளைக்கு உள்ளே ஏதோ மாற்றம் நடக்கிறது அல்லவா! இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கின்றன. ஒரு லேபில் நடப்பது இன்னொரு லேபில் ரிசல்ட் தருவதில்லை. இருந்தாலும், இது ஒரு ஓப்பன் சோர்ஸ் தெரபியாக மாற வாய்ப்பிருக்கிறது.

அதன்படி சீக்கிரம் ஒரு தொப்பி ரெடியாகும். அதை மாட்டிக்கொண்டு தூங்கினால், மறுநாள் காலையில் அல்சைமர் காணாமல் போய், ஞாபக சக்தி சூப்பர் மேனாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக அறிவியல் வளர்கிறது. நாம்தான் இன்னும் பழைய ஞாபகங்களோடு இருக்கிறோம் இல்லையா!

*****

குதிரையா? கழுதையா? – ஒரு குறுங்கதை!

குதிரையா? கழுதையா? – ஒரு குறுங்கதை!

தியாகராஜனின் அப்பா ஒரு பழைய காலத்து மனிதர். அதாவது, லாபத்தை விட நிம்மதியை அதிகம் நேசிப்பவர். அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. பத்து மூட்டை நெல்லைப் பத்து இடங்களில் வைப்பார். ஏம்பா இந்தச் சிதறல்? என்று கேட்டால், எல்லா எலிக்கும் ஒரே நேரத்துல பசி எடுக்காதுப்பா, என்பார்.

தியாகராஜனுக்கு அது அப்போது புரியவில்லை. அவன் வளர்ந்தான். முப்பத்தைந்து வயதில் ஒரு வீடு, கொஞ்சம் தங்கம், ஒரு காலி மனை என்று ஒரு சமநிலையான மனிதனாக ஆனான். அதாவது, போரடிக்கிற அளவுக்கு ஒழுக்கமான முதலீட்டாளன்.

அப்புறம், அந்தப் பெங்களூர் பார்ட்டி நடந்தது.

கமலக்கண்ணன் அங்கே ஒரு தீர்க்கதரிசி போல அமர்ந்திருந்தான். கையில் மதுக்கோப்பை. கண்களில் பங்குச் சந்தையின் பச்சை நிறக் கனவுகள். தியாகராஜா, நிலம் தங்கம்லாம் வெறும் சென்டிமென்ட் மச்சி. ஓடுற குதிரை மேல காசைப் போடணும். அதான் இன்னிக்கு ரிலிஜியன், என்றான்.

தியாகராஜனுக்கும அந்த மதம் பிடித்துக்கொண்டது.

முதலில் பிக்சட் டெபாசிட்டைத் தியாகம் செய்தான். பிறகு எமெர்ஜென்சி பண்டைக் கொன்றான். பின் மனைவியின் நகைகள் அடகுக் கடை இருட்டில் தவம் இருக்கப் போயின. கடைசியில், அந்தப் புறநகர் மனையையும் விற்றுச் சந்தையில் கரைத்தான்.

விரைவில் தியாகராஜன் ஒரு பங்குச் சந்தைப் புலி என்று ஊருக்குள் வதந்தி பரவியது. சொந்தக்காரர்கள் ஓடி வந்தார்கள். இந்தாங்க என் சேவிங்ஸ், இதையும் கொஞ்சம் புலியாக்கிக் கொடுங்க என்றார்கள்.

மற்றவர்கள் பணத்தில் டே டிரேடிங் செய்வது ஒரு போதை. தியாகராஜனுக்கு அது தலைக்கேறியது. அதுவும் தெரியாத வித்தையைத் தெரிந்ததாக நினைத்துச் செய்வது தற்கொலைக்குச் சமம். அதையும்தான் செய்து பார்ப்போம் என்று தோன்றியதோ அவனுக்கு என்று தெரியவில்லை.

தியாகராஜனின் சனி பெயர்ச்சி சரியில்லையோ என்னவோ? அமெரிக்க ஈரான் போர் தொடங்கியது. சந்தை சீட்டுக்கட்டுகளை விட மோசமாகச் சரிந்தது. அவன் புலி வேஷம் கலைந்தது. இப்போது நான்கு பக்கமும் செல்போன்கள் அலறுகின்றன. தூக்கம் போய் நான்கு வாரம். உலகமே ஒரு பெரிய கடன் பத்திரமாகத் தெரிந்தது.

சோகத்தைப் போக்கிக் கொள்ள பீச் பக்கம் எட்டிப் பார்த்தான். அங்கே கமலக்கண்ணன். பழைய தீர்க்கதரிசியைக் காணோம். யாரோ ஒருவனிடம் ஐநூறு ரூபாய்க்குக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

என்னடா கமலக்கண்ணா? குதிரை என்னாச்சு? என்றான் தியாகராஜன்.

கமலக்கண்ணன் கசப்பாகச் சிரித்தான். குதிரை ஓடுச்சு மச்சி. ஆனா அது என் மேல ஏறி மிதிச்சுட்டு ஓடிருச்சு. ஷேர் மார்கெட் பிராபிட்ன்னு உங்கிட்ட காட்டிய ஸ்கிரீன் ஷாட்ஸ் அத்தனையும் பேக் கிரியேஷன்ஸ். அன்னைக்கு நான் உன்கிட்ட அப்படி சீன் போட்டதே, நீயாவது எனக்குக் கொஞ்சம் கைமாத்துக் கொடுப்பேன்னுதான். ஆனா நீயும் என் கூடவே நடுத்தெருவுக்கு வந்துட்டியே!

தியகராஜனுக்குச் சிரிப்புதான் வந்தது. நாம் எப்போதுமே ஒரு பெரிய முட்டாளாக இருக்கும்போது, நம்மை விடப் பெரிய முட்டாளையே குருவாகத் தேடிக்கொள்கிறோம் என்று தோன்றியது.

வீட்டிற்கு வந்தான். அப்பா ஈஸி சேரில் அமர்ந்து பழைய கணக்குப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகத்தைப் பார்த்தார். என்னப்பா, எல்லா மூட்டைக்கும் எலி வந்துருச்சா? என்றார்.

தியாகராஜன் மெல்லத் தலையசைத்தான்.

அப்பா ஒரு பழைய மஞ்சள் பையை டீப்பாய் மீது தூக்கிப் போட்டார். உள்ளே மஞ்சன் நிறம் மினுமினுக்க தங்கம்.

அன்னைக்கு உன் பெரியப்பா நிலம் வாங்கச் சொன்னப்ப, நான் வேணாம்னு வாங்கி வச்சது. இதுல உன் நஷ்டமெல்லாம் தீராது. ஆனா, உன் வீட்டுல இன்னிக்கு அடுப்பு எரியும். முதல்ல கடன்காரங்களைச் சமாளி. அப்புறம் உழைச்சு இதை மீட்டு வை, என்றார் அப்பா இறுகிப் போன முகத்தோடு.

தங்கத்தின் மஞ்சள் நிறம் அன்று ஒரு பெரிய உண்மையைச் சொன்னது போலிருந்தது தியாகராஜனுக்கு.

அதாகப்பட்டது, குதிரையை விடக் கழுதை மேல் சுமை ஏற்றுவது பாதுகாப்பானது. அது மெதுவாகத்தான் போகும், ஆனால் கீழே தள்ளாது.

மயங்கிக் கிடந்தவனுக்குக் குளுக்கோஸ் டிரிப் ஏற்றியது போல இருந்தது இப்போது தியாகராஜனுக்கு.

*****

31 Mar 2026

ஆட்டோமொபைல் அசுரனாகும் சீனா!

டெட்ராய்ட்டை விஞ்சும் பெய்ஜிங்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை, சீனக் கார்களா? அதெல்லாம் பிளாஸ்டிக் பொம்மை மாதிரி, கிளம்பும்போது ஒரு சத்தம் வரும், ஓடும்போது ஒரு சத்தம் வரும் என்று அமெரிக்க ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இன்று அந்தச் சிரிப்பு கீச்சென்ற பிரேக் சத்தமாக மாறியிருக்கிறது.

சீனா இப்போது வெறும் கார் மார்க்கெட் அல்ல, அதுதான் உலக ஆட்டோமொபைல் உலகின் பவர் ஹவுஸ்.

2000களின் ஆரம்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்குள் நுழைய ஆசைப்பட்டபோது, சீனா ஒரு கண்டிஷன் போட்டது.  நீங்கள் இங்கே கார் விற்கலாம். ஆனால், எங்கள் ஆட்களோடு சேர்ந்து ஜாயிண்ட் வென்ச்சர் ஆரம்பிக்க வேண்டும், அத்துடன் உங்கள் டெக்னாலஜியை எங்களிடம் காட்ட வேண்டும் என்பதுதான் அந்தக் கண்டிஷன்.

டெட்ராய்ட் நிறுவனங்களும் சரி, ஆள் கிடைத்தால் போதும் என்று எல்லா ரகசியங்களையும் கொட்டினார்கள். விளைவு? சீனா வித்தையை மொத்தமாகப் படித்துக் கப்பென்று பிடித்துக்கொண்டது.

அமெரிக்கர்களின் செலவில், அமெரிக்கர்களின் அறிவை வைத்து, அமெரிக்கர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கார்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள் சீனர்கள்.

போர்டு நிறுவனத்தின் சி.இ.ஓ ஜிம் ஃபார்லி கடந்த ஆறு மாதமாக ஒரு காரை ஓட்டி வருகிறார். அது போர்டு அல்ல, சீனாவின் Xiaomi SU7. எப்படியிருக்கிறது? என்று கேட்டால், அற்புதம்! இதை விட்டு இறங்கவே மனமில்லை என்கிறார்.

வெறும் 30,000 டாலர் அதன் விலை. அதாவது அமெரிக்க கார்களின் பாதி விலை. ஆனால் பெர்ஃபார்மென்ஸ்? எகிறுகிறது. உள்ளே போனால் ஒரு பெரிய டச் ஸ்கிரீன். காரில் அமர்ந்து கொண்டே வீட்டின் லைட்டை ஆஃப் செய்யலாம். கூடவே ஒரு ஏஐ  அசிஸ்டெண்ட். மொத்தத்தில் அது கார் அல்ல, சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்!

சீன அரசாங்கம் ஒரு காருக்கு 10,000 டாலர் வரை சலுகை கொடுக்கிறது. இதனால் அங்கே உற்பத்தி எக்கச்சக்கமாகி, இப்போது உலகச் சந்தையை நோக்கி அந்தக் கார்கள் பாயத் தொடங்கி விட்டன. வியட்நாம் முதல் லத்தீன் அமெரிக்கா வரை சீனக் கார்கள் தான் ராஜபாட்டை நடத்துகின்றன.

இப்போது விசயத்திற்கு வருவோம். இன்றைய கார்கள் வெறும் இரும்புப் பெட்டிகள் அல்ல. அவை ரோலிங் டேட்டா சென்டர்கள். அவற்றில் கேமராக்கள், மைக்ரோஃபோன்கள், ஜி.பி.எஸ் எல்லாம் உண்டு.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஆகவே, கார்கள் என்றால் இனி என்ன நடக்கும்?

இது ஒரு கற்பனை போலத் தெரிந்தாலும் யோசிக்க வேண்டிய விசயம்தான். அதாகப்பட்டது, சீன மென்பொருளில் ஓடும் லட்சக்கணக்கான கார்கள் அமெரிக்கச் சாலையில் இருக்கும்போது, பெய்ஜிங்கில் யாரோ ஒரு ஆள் ஒரு பட்டனை அழுத்தினால் அத்தனை கார்களும் ஒரே நேரத்தில் செயலிழந்து நின்றால் என்னவாகும்?நிச்சயமாக இது ஒரு த்ரில்லர் நாவலின் க்ளைமாக்ஸ்தான்.

இந்த மாதம் டிரம்ப் சீனாவுக்குப் போகிறார். அவர் கையில் இருக்கும் அஸ்திரம் என்னவென்றால், நீங்கள் அமெரிக்காவில் கார் விற்க வேண்டுமா? தாராளமாக வாருங்கள். ஆனால், எங்கள் ஊரில் தொழிற்சாலை கட்டுங்கள். எங்கள் ஆட்களுக்கு வேலை கொடுங்கள். 25 வருஷத்துக்கு முன்னாடி நீங்கள் செய்த அதே ஜாயிண்ட் வென்ச்சர் வித்தையை இப்போது நாங்கள் செய்யப் போகிறோம், என்பதுதான். என்ன ஒரு காலம் செய்த கோலம்?!

டெக்னாலஜி என்பது ஒரு இருபுறமும் கூர்மையான கத்தி. அன்று அமெரிக்கா சீனாவுக்குக் கொடுத்தது, இன்று சுழன்று வந்து அமெரிக்காவையே மிரட்டுகிறது.

இந்த கார் யுத்தத்தில் கடைசியில் ஜெயிக்கப்போவது டாலரா அல்லது யுவானா? எனக்கென்னவோ சீனாவைப் பீட் செய்வது கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. காரணம் என்ன என்கிறீர்களா? அந்த டெட் சீப் ரேட்தான்.

*****

டிரம்ப்பின் வார் ரூம் டைரி (புள்ளிவிவரப் பொரியல்)

டிரம்ப்பின் வார் ரூம் டைரி (புள்ளிவிவரப் பொரியல்)

அமெரிக்கா இனிமேல் ஊர் ஊராகப் போய் ஜனநாயகம் என்கிற பெயரில் சாம்பார் ஊற்றப்போவதில்லை. நாங்கள் வருவோம், அடிப்போம், கிளம்புவோம் - இதுதான் டொனால்ட் டிரம்பின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட்.

வரலாறு ஒரு விசித்திரமான சுழற்சி. 1979 இல் தெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் பிடித்துக்கொண்டு 444 நாட்கள் ஆட்டம் காட்டியபோதே, இந்த யுத்தம் தொடங்கிவிட்டது என்கிறார்கள். இடையில் பெய்ரூட் குண்டுவெடிப்பு, கோபார் டவர்ஸ் என ஏகப்பட்ட ரத்த சரித்திரம். கடைசியாக 2023 அக்டோபர் 7 இல் ஹமாஸ் செய்த அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்ததும் இதே ஈரான் தான் என்பது ஓப்பன் சீக்ரெட் என்று இந்தப் போருக்கான காரணங்களை விளக்குவோர்கள் இருக்கிறார்கள்.

டிரம்ப் இப்போது செய்வது புது யுத்தத்தை ஆரம்பிப்பதல்ல.  47 வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்த ஒரு தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற ஒரு போர் பார்வையும் இருக்கிறது.

நாங்களும் ஈராக், ஆப்கானிஸ்தான் என்று போய் செருப்படி பட்டு வந்த தலைமுறைதான். எங்களுக்குத் தெரியும், அங்கே போய் உட்கார்ந்துகொண்டு அவர்களுக்குக் குடித்தனம் நடத்தச் சொல்லிக் கொடுப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இப்போதைய ஈரான் – அமெரிக்க போர் குறித்து புலம்பும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். இருப்பினும் டிரம்பின் கோட்பாடுகள் வேறு விதமானவை. அவையாவன,

1.  அமெரிக்காவின் லாபம் என்ன என்று பார்.

2.  பேசிப் பார்.

3.  பேச்சு கேட்கவில்லை என்றால், தலைசுற்றுகிற மாதிரி ஒரு அடி கொடுத்துவிட்டு, அடுத்த பிளைட்டைப் பிடித்து ஊருக்குத் திரும்பு.

டிரம்பின் பாலிசி தெளிவானது: ஈரானின் அயாத்துல்லாவையும் அவரது ஆட்களையும் காலி செய்துவிட்டு, இனி உங்கள் இஷ்டம், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் குடும்பம் நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவது. அங்கே போய் அவர்களுக்கு அமெரிக்க அரசியல் சாசனத்தை டியூஷன் எடுக்க டிரம்ப் தயாராக இல்லை.

இந்தப் போரில் அன்று போல் இப்போது ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பத் தேவையில்லை. குறி தப்பாத ஆயுதங்கள், கம்ப்யூட்டரிலேயே நாட்டை முடக்குவது, காபி குடித்துக்கொண்டே ரிமோட்டில் யுத்தம் செய்வது என்று ஏகப்பட்ட புது ஐட்டங்களோடு போர் முறை அப்டேட்டாகி இருக்கிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால், இனிமேல் அமெரிக்க வீரர்கள் அந்நிய மண்ணில் குடியிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் வெனிசுலா முதல் ஈரான் வரை டிரம்ப் போட்டிருக்கும் ஸ்கெட்ச் ஒன்றுதான். பொருளாதாரத் தடை. வர்த்தக அழுத்தம், அப்புறம் மீறினால் அதிரடித் தாக்குதல். அமெரிக்கா பர்ஸ்ட், மற்றதெல்லாம் நெக்ஸ்ட் என்பது இதன் பாலிஸ் பேக்ரவுண்ட்.

இருந்தாலும், அமெரிக்காவின் பழைய போர் கணக்குகளை நோண்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் சுமார் 8 டிரில்லியன் டாலர்களை அமெரிக்கா இழந்திருக்கிறது. இந்த எட்டு டிரில்லியன் என்பதற்கு 8 போட்டுவிட்டு பின்னால் 12 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் 7,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். கடைசியில் நடந்தது என்னவோ, பிக்பாஸ் வீட்டில் நடப்பது போல ஒரு குழப்பமான கிளைமாக்ஸ்.

மாறி விட்ட போர் சூழ்நிலையில் இப்போதைய ட்ரோன் தாக்குதல் வித்தியாசமானது. ஈரானின் கடற்படையை நிலைகுலையச் செய்ய இப்போது சுவர்ம் எனும் தொழில்நுட்பம் தயார். நூற்றுக்கணக்கான குட்டி ட்ரோன்கள் ஒரே நேரத்தில் தேனீக்கள் போலத் தாக்கும். ஒரு பைலட் கூடச் சாகத் தேவையில்லை.

அத்துடன் ஈரானின் அணுமின் நிலையங்களை ஸ்டக்ஸ்நெட் பாணியில் கம்ப்யூட்டர் வைரஸ் மூலமே முடக்க முடியும். ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் ஒரு நாட்டின் பவரை ஆஃப் செய்வது இதுதான்.

மேலும், பழைய காலத்தில் ஒரு பீரங்கி குண்டு போட்டால் பக்கத்து வீட்டுத் தோசைக் கல்லும் உடையும். இப்போதைய ஏவுகணைகள் வெடிக்காது, கத்திகள் போல விரிந்து, காரில் செல்லும் குறிப்பிட்ட நபரை மட்டும் ஸ்லைஸ் செய்யும்.

இன்னொன்றையும் இவ்விடம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால், டிரம்பின் மிகப்பெரிய ஆயுதம் துப்பாக்கி அல்ல, டாரிப் எனப்படும் இறக்குமதி வரி.

எங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் நாட்டு எண்ணெய்க்கு 100 சதவீத வரி. உங்கள் வங்கிக் கணக்குகள் எல்லாம் ப்ரீஸ். டிரம்பின் பாலிசி இப்போது இதுதான்.

டிரம்ப் அப்படிச் செய்வதால், அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைவதற்கு முன்பே அந்த நாட்டின் பொருளாதாரம் வெண்டிலேட்டருக்குப் போய்விடும். இதுதான் இன்றைய நவீன யுத்தம்.

ஆக, இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், டெக்னாலஜி மூலம் அச்சுறுத்தலை அழிப்பது, மின்னல் வேகத் தாக்குதல் நடத்துவது, வேலை முடிந்ததும் டாடா காட்டிவிட்டுத் திரும்புவது என்பதாக இருக்கிறது இன்றைய அமெரிக்க போர் நுட்பம்.

எனவே, உலகம் இப்போது ஒரு பெரிய வீடியோ கேம் போல மாறிவிட்டது. வாஷிங்டனில் உட்கார்ந்து கொண்டு ஒரு பட்டனை அழுத்தினால், தெஹ்ரானில் ஒரு மிஸைல் தளம் காலியாகும். டிரம்ப் விரும்புவது இந்த கிளீன் யுத்தத்தைத்தான்.

இதில் மனிதாபிமானம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அது அவுட் ஆஃப் சிலபஸ்!

ஆக, விஷயம் சீரியஸாகிவிட்டது. டிரம்ப் இப்போது ஒரு செஸ் பிளேயர் போல காய்களை நகர்த்துகிறார். ஒரு பக்கம் ஈரான், இன்னொரு பக்கம் வெனிசுலா. இரண்டுமே வெவ்வேறு விதமான கேம்கள்.

அதே நேரத்தில் அமெரிக்கா அடித்துவிட்டு டாடா காட்டிவிட்டுப் போய்விடலாம். ஆனால், ஈரான் சும்மா இருக்குமா? அயாத்துல்லாக்களின் பாணி வேறு.

ஹிஸ்புல்லா மற்றும் ஹூதிகள் ஈரானின் போர் தந்திரர்கள். இவர்கள் ஈரானின் ரிமோட் கண்ட்ரோல் படைகள். அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீதோ அல்லது செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதோ மிஸைல் மழை பொழிய வைப்பார்கள். இது ஒரு ஸ்லோ பாய்சன் போல. மெல்ல மெல்ல அமெரிக்காவின் நட்பு நாடுகளை நச்சரிப்பதுதான் ஈரானின் மாஸ்டர் பிளான்.

வெனிசுலாவில் டிரம்ப் விளையாடியது ஒரு எகனாமிக் வீடியோ கேம். அங்கே ராணுவத்தை அனுப்ப வேண்டிய அவசியமே இல்லாமல், அந்த நாட்டு எண்ணெய்க்கு சீல் வைத்து, ஒரு சொட்டு பெட்ரோல் கூட வெளியே வராமல் தடுத்தால், அந்த நாட்டு கரன்சி டிஷ்யூ பேப்பர் விலைக்குப் போய்விடும். மக்கள் பசியில் வீதிக்கு வரும்போது, அரசாங்கம் தானாகவே சரண்டர் ஆகும். இதுதான் ரத்தம் சிந்தாத ரணகளம்.

எல்லாவற்றிற்கும் மத்தியில் இனிமேல் வார் ரூமில் மேப் கிடையாது. எல்லாம் மல்டி டச் ஸ்கிரீன்கள் தான். “சிஸ்டம்! ஈரானின் 47 ஏவுகணை தளங்களை லாக் செய்”, இதுதான் இன்றைய கமாண்டர் கொடுக்கும் ஆர்டர்.

செயற்கை நுண்ணறிவுதான் அடுத்த டார்கெட்டை முடிவு செய்யும். மனிதர்கள் வெறும் கன்ஃபார்ம் பட்டனை மட்டும் அழுத்தினால் போதும். தப்பு நடந்தால் அது கம்ப்யூட்டர் எரர் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்!

டிரம்பின் இந்த ஹிட் அண்ட் ரன் பாலிசி ஜெயிக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு உள்ளே யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஆனால், இப்போது மக்கள் ‘நோகிங்ஸ்’ என்று டிரம்புக்கு எதிராகப் பேரணி நடத்தவும், போராடவும் தொடங்கி விட்டார்கள்.

பென்டகன் அதிகாரிகள் டிரம்பின் ஹிட் அன்ட் ரன் திட்டத்தைப் பார்த்து நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே கிளம்பி வந்துவிட்டால், அங்கே மீண்டும் தீவிரவாதம் வளராதா, என்பதுதான் அவர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

உலகம் அமைதியாகுமா அல்லது இன்னும் அதிருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் இந்த புதிய ஆட்டம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட முடிவல்ல. அதன் பின்னால் ஒரு பெரிய கால்குலேட்டர் இருக்கிறது. ரத்தக் கறை படியாத ஒரு டிஜிட்டல் யுத்தத்தின் ப்ளூபிரிண்ட் இது.

வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். அது கிணறுகளுக்கும் பொருந்துகிறது, அதாவது பெட்ரோல் கிணறுகளுக்கு. அமெரிக்க நாட்டாமையில் அதிர்ந்து கொண்டிருக்கிறது உலகம்.

*****

30 Mar 2026

வலி – ஒரு கடிகாரக் கொடுமை!

வலி – ஒரு கடிகாரக் கொடுமை!

வலியைப் பற்றிப் பேசும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். ஆனால், மனிதன் பரிணாம வளர்ச்சியில் தப்பிப் பிழைத்ததே இந்தப் பெய்ன் கொடுத்த அலாரத்தால்தான்.

வலிக்கும் போது, மூளைக்கு ஓர் எலக்ட்ரிக்கல் சிக்னல் போகிறது. இதற்கு மேல் தாங்க முடியாது என்று சினாப்ஸ் வழியே ஒரு மெசேஜ். இது பிஸியாலஜி. ஆனால், இதே வலியைத் தமிழன் எப்படித் ஹேண்டில் செய்திருக்கிறான் தெரியுமா?

சங்க இலக்கியத்தில் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் வலியைப் பசலை என்கிறார்கள். இது ஒரு விசித்திரமான ஸ்கின் டிசீஸ் கிடையாது, அது ஒரு சைக்கோசோமாடிக் வலி.

இங்கே வலி என்பது ஒரு தனிமை. தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நேரும் கோடுமை. ஒரு நியூட்ரினோ துகள் போல எவராலும் உணர முடியாத நுணுக்கமான வலி. சங்கப் புலவர்கள் வலியைப் பிசையத் தெரிந்தவர்கள்.

குறுந்தொகையில் பார்த்தீர்களானால், காமம் கடும் பகல் செய்தே என்ற வரியை வலிக்காமல் உங்களால் கடக்க முடியாது.  அதாவது காதல் என்பது மதிய வெயிலைப் போலச் சுடுகிறதாம். ஏர்கண்டிஷன் இல்லாத காலத்தில் இதைவிட ஒரு மெட்டபார் சொல்ல முடியாது.

சினிமாவில் சும்மா இருப்பார்களா? சினிமாவுக்கு வரும் போது அது கொஞ்சம் கமர்ஷியல் ஆகிறது.

கண்ணதாசன் ஒரு ரசவாதி. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா என்பார். இங்கே துரோகத்தால் வரும் வலியை ஒரு தத்துவமாக மாற்றிவிடுவார். கர்ணன் படத்தில் அந்தப் பாடலைக் கேட்கும் போது, நம் முதுகில் அம்பு தைப்பது போல ஒரு சென்சேஷன் வரும் பாருங்கள், அதுதான் கவிதையின் மூலமாகவே கடத்தப்படும் வலி.

இன்றைய ஒய் திஸ் கொலவெறி காலத்தில் கூட, கண்ணான கண்ணே, என்று இமான் இசையில் வரும்போது, அந்தத் தந்தை, மகள் பாசத்தின் வலி ஒரு ஸ்லோ பாய்சன் போல ரத்தத்தில் கலக்கிறது.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும்படி வலியை மறந்து சிரிக்க வைத்ததுதான் வடிவேலுவின், வலிக்குது அழுதுடுவேன் என்ற வசனம். இது பெய்ன் என்டர்டெய்ன் ஆன இடம்.

இப்போது கொஞ்சம் அறிவியலுக்கு வருவோம். இது ஒரு பெரிய நியூரோ சயின்ஸ் டாபிக். அது வலியை எப்படி ஹேண்டில் செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

வலி என்பது வெறும் உணர்ச்சியல்ல, அது ஒரு டைம் மெஷின். அடிபட்டால் வலிக்கும், சரி. ஆனால் அந்த வலி 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால் அதை குரோனிக் பெய்ன் என்கிறது அறிவியல். கூடவே போனஸாக டிப்ரஷன், தூக்கமின்மை, கவலை எல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

இது ஏன் நடக்கிறது?

நம்மில் பலருக்கு ராத்திரியில் வலி அதிகமாகும். பகலில் பிஸியாக இருப்பதால் தெரிவதில்லை என்று நாம் நினைப்போம். ஆனால் பிசிக்ஸ் ரீதியாக விஷயம் வேறு.

நம் மூளையின் நடுவே ஹைப்போதாலமஸ் பகுதியில் ஒரு மாஸ்டர் கடிகாரம் இருக்கிறது. இது ஒரு விசித்திரமான ஒயரிங் மூலம் முதுகெலும்புக்கு சிக்னல் அனுப்புகிறது.

பகலில் இந்த சிக்னல் வலியைத் தணிக்கும் அனல்ஜிசிக் சிஸ்டத்தை ஆக்டிவேட் செய்கிறது. இரவில் இந்த சிஸ்டம் தூங்கிவிடுகிறது. அதனால் நரம்புகள் வலியை அப்படியே மூளைக்கு கடத்துகின்றன.

அதாவது, வலி என்பது வெளியே இருந்து வரும் சிக்னல் மட்டுமல்ல, நம் மூளை இப்போது வலிக்கலாம் என்று கேட் திறந்துவிடும் ஒரு ஏற்பாடு! இதைப் புரிந்துகொண்டால், பெயின் கில்லர் மாத்திரைகளை எந்த நேரத்தில் போடவேண்டும் என்கிற கணக்கு மாறும்.

அடுத்தது வலி நீடிக்கும்போது மூளையின் ஹிப்போகாம்பஸ் என்ன ஆகிறது என்று பார்த்தார்கள். ஆச்சரியமாக, ஹிப்போகாம்பஸ் கொஞ்சம் வீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இது ஒரு அடாப்டிவ் நிலை. மூளை வலியை சமாளிக்க தன்னைத் தயார் செய்கிறது.

வலி தொடர்ந்தால், மூளையிலுள்ள மைக்ரோகிளியாசெல்கள் ஓவர் ஆக்டிவ் ஆகி, ஹிப்போகாம்பஸைத் தின்ன ஆரம்பிக்கின்றன. மெல்ல மெல்ல அந்தப் பகுதி சுருங்குகிறது.

வலி ஒரு பக்கம் இருக்க, கூடவே டிப்ரஷனும், அறிவுத்திறன் குறைபாடும் கைகோர்த்துக்கொண்டு வருகின்றன. இது வெறும் மனக்கவலை அல்ல, மூளையின் சர்க்யூட் மாற்றியமைக்கப்படுவதால் வரும் கோளாறு.

வலியை இனிமேல் வெறும் சென்சாராகப் பார்க்காமல், ஒரு டைம் ஸ்ட்ரக்சர்ட் மூளை நிலையாகப் பார்க்க வேண்டும். வலியைத் தணிக்க மாத்திரை மட்டும் போதாது, மூளையின் கடிகாரத்தையும் கொஞ்சம் சரி செய்ய வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

ஆக அறிவியல் வளர்கிறது. ஆனால் வலி மட்டும் இன்னும் பழைய பாணியிலேயே நம்மை வதைத்துக் கொண்டிருக்கிறது!

*****

ஹோர்முஸ் எபெக்ட் – ஒரு சமையலறை அட்டாக்!

ஹோர்முஸ் எபெக்ட் – ஒரு சமையலறை அட்டாக்!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் சண்டையை ஏதோ ஒரு ஹாலிவுட் ஆக்சன் படம் போல சோபா நுனியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் நம் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பெட்ரோல், டீசல், எரிவாயு என ஒவ்வொன்றாக இனி ஏறப் போகும் விலையைப் பார்க்கையில் போரை நிறுத்துவதுதான் விலை மலிவான விஷயமாக இருக்கும் போலிருக்கிறது. எரிபொருள் சிக்கனம் என்பது போய், இப்போது மூச்சு விடுவதைத் தவிர மற்ற எல்லாச் செயல்களிலும் சிக்கனம் தேவைப்படும் காலமாகி விட்டது.

இந்தப் போரைப் பற்றி அப்பாவித்தனமாகச் சொல்லப்போனால், இது ஏவுகணைகளின் பரிமாற்றம். டெக்னிக்கலாகச் சொன்னால், இது ஒரு சப்ளை செயின் தற்கொலை. எப்படி என்கிறீர்களா? ஈரானில் ஒரு வெடி விழுந்தால், ஏன் இங்கே என் சமையலறையில் சிலிண்டர் எரிய மறுக்கிறது?

விசயம் இத்தோடு முடியப் போவதில்லை. இன்னும் கூடுதல் விசயங்களும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

விசயம் ஒன்று என்னவென்றால், பிளாஸ்டிக் தண்ணீர் கேன் விலை ஏறப்போகிறது. ஏன்? பிளாஸ்டிக் என்பது அடிப்படையில் ஹைட்ரோகார்பன். கச்சா எண்ணெய் விலை ஏறினால், அந்த 20 லிட்டர் கேன் விலையும் ராக்கெட் வேகத்தில் ஏறும். தாகம் எடுக்கும்போது பெட்ரோல் குடிப்பது மலிவாக இருந்தாலும் ஆச்சரியமில்லை. நாம் குடிநீரை அடிபம்பு மற்றும் கிணற்றிலிருந்து பெட் பாட்டிலுக்கும், கேன் வாட்டருக்கும் மாற்றியதன் விளைவு இது.

விசயம் இரண்டு என்னவென்றால், உணவைச் சமைக்கத்தான் கஷ்டம் என்று பார்த்தால், விளைவிக்கவே சிக்கல். உரம் தயாரிக்கத் தேவைப்படும் எல்.என்.ஜி அரபு நாடுகளிலிருந்து வர வேண்டும். அந்த ஹோர்முஸ் நீர்ச்சந்தி ஒரு குறுகிய வாசல். ஈரான் அதை மூடினால், இந்திய விவசாயம் பபரிங் மோடிற்குப் போய்விடும். நாம் இயற்கை விவசாயத்திலிருந்து ரசாயன மோடிற்கு மாறியதற்குக் கொடுக்கும் விலை இது.

விசயம் மூன்று என்னவென்றால், பங்குச் சந்தை சரிவது ஒரு பக்கம் என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் எஸ்கேப் கீ-யை அழுத்திவிட்டு ஓடுகிறார்கள். டாலர் எகிறுகிறது, ரூபாய் மூச்சு வாங்குகிறது. விளைவு? பணவீக்கம். நாம் தற்சார்பை விட அந்நிய முதலீட்டை அதிகம் நம்பியதன் விளைவு இது.

தற்சமயம் அங்கே அந்த நீர்ச்சந்தியைச் சுற்றி என்ன நடக்கிறது என்றால், இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் வயல்களைத் தாக்குகிறது. பதிலுக்கு ஈரான் கத்தாரின் எரிவாயு தளங்களைச் சிதைக்கிறது. அமெரிக்கா மின்சார நிலையங்களைத் தூக்குவோம் என்கிறது. ஈரான் நீர்ச்சந்தியை மூடுவோம் என்கிறது. இது ஒரு முடிவில்லாத லூப் ஆகி விட்டது. ரிப்பீட் மோடில் எல்லாம் திரும்பதிரும்ப ஒரே மாதிரியாக நடக்கன்றன. இப்படி நடந்து கொண்டே இருந்தால், சிதைந்த எண்ணெய் வயல்களை ரீபூட் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும். ஆக, இந்த ரிப்பீட் மோடுக்கு ஓர் என்ட் கார்டு அவசியம்.

இந்த வளைகுடா போரால் நிஜத்தில் மட்டுமல்லாது, உலக மக்கள் எல்லாருடைய அன்றாட வாழ்க்கையிலும் சேர்த்து கடும் சூறாவளியில் வாழ்வாதாரம் எனும் கப்பல் சிக்கியிருக்கிறது. கேப்டன்கள் ஆகிய ஆட்சியாளர்கள் லாவகமாகத் திருப்பினால்தான் கரை சேர முடியும். இல்லையென்றால், நம் பட்ஜெட் சிஸ்டம் கிராஷ் ஆகிவிடும்.

*****

29 Mar 2026

தூக்கம் – மூளையின் டீடாக்ஸ்!

தூக்கம் – மூளையின் டீடாக்ஸ்!

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானால்

உன்னைத் தொடர்ந்திருப்பேன்

என்றும் துணையிருப்பேன்

ஆலயமணி படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இவை. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற இந்தப் பாடலின் ராகம் கூட நீலம்பரிதான். தூக்கத்திற்கு உகந்த ராகம்.

கண்ணதாசனின் மேற்படி வரிகள் ஷேக்ஸ்பியர் தழுவல். தத்துவத்தைக் கவித்துவமாக வெளிப்படுத்துவதில் ஷேக்ஸ்பியரை அடித்துக் கொள்ள முடியாது. அவர் தூக்கத்தைச் சாவுக்கும், அமைதிக்கும் ஒப்பிட்டு கூட நிறைய எழுதியிருக்கிறார்.

திருவள்ளவரும்,

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.          (குறள், 339)

என்று எழுதியிருக்கிறார்.

ஆனால், நவீன விஞ்ஞானம் சொல்வது வேறு. நாம் குறட்டை விட்டுத் தூங்கும்போது, நம் மூளைச் செல்கள் ஒன்றும் ஓய்வெடுப்பதில்லை. சொல்லப்போனால், அவை அப்போதும் செம பிஸி.

பகலில் வேலை செய்த களைப்பில் மூளையில் சேர்ந்த நச்சுப் பொருட்களை இரவு நேரத்தில் மூளை ஒரு திரவத்தைக் கொண்டு வாஷ் செய்கிறது. ஒரு பெரிய பார்ட்டி முடிந்த பிறகு, ஹாலைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களைப் போல நம் மூளை இரவு முழுக்க வேலை செய்கிறது. இதை டீடாக்ஸ் என்கிறார்கள்.

மூளைக்கும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்வதற்காக, ஓர் ஆய்வு செய்தார்கள். இதற்காக இரண்டு குரூப்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அவர்களிடம் 20 அந்நியர்களின் முகங்களையும் பெயர்களையும் காண்பித்தார்கள். ஒரு குரூப்பை நன்றாகத் தூங்க வைத்தார்கள். இன்னொரு குரூப் விழித்துக்கொண்டே இருந்தது.

மறுநாள் காலையில் செக் செய்தபோது, நன்றாகத் தூங்கிய குரூப் மற்றவர்களை விட 12 சதவிதம் அதிகத் துல்லியமாகப் பெயர்களைச் சொன்னார்கள்.

இதில் மேட்டர் இதுதான். நாம் தூங்கும்போது, அந்த கடல் குதிரை வடிவ ஹிப்போகாம்பஸ் பகலில் நாம் சேகரித்த குப்பையான தகவல்களில் எதைச் சேமிக்க வேண்டும், எதை டெலீட் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது. பிறகு, அந்தத் தகவல்களை மூளையின் பாதுகாப்பான லாக்கரான கார்டெக்ஸ் பகுதிக்குப் பார்சல் பண்ணி அனுப்பி வைக்கிறது.

இது பற்றி ஒரு சுவாரஸ்யமான தியரி இருக்கிறது. நாம் தூங்கும்போது மூளை அலைகள் மெதுவாக மாறும். அந்தச் சமயத்தில் மூளைக்குள் சின்னச் சின்ன மின்மினிக் கீற்றுகள் போல மின்சாரம் பாயும். இதற்கு ஸ்லீப் ஸ்பின்டில்கள் என்று பெயர்.

இது என்ன செய்கிறது தெரியுமா? நம் மூளையின் ஷார்ட் டெர்ம் மெமரி ஷெல்ஃபுகளைக் காலி செய்துவிட்டு, முக்கியமான கோப்புகளை லாங் டெர்ம் மெமரிக்கு மாற்றுகிறது. இதனால் காலையில் எழுந்ததும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள மூளையில் ப்ரீயான ஸ்பேஸ் கிடைக்கிறது.

கனவுத் தூக்கம் இன்னும் விசித்திரமானது. ஒரு சோதனையில், சிலரிடம் மிகவும் வருத்தப்படக்கூடிய புகைப்படங்களைக் காண்பித்தார்கள். தூங்கிய பிறகு மீண்டும் அதே படங்களைப் பார்த்தபோது, அவர்களுக்கு அந்தப் படங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லையாம்.

ஏன் என்கிறீர்களா?

தூக்கத்தில் மூளை ஒரு ஓவர்நைட் தெரபி செய்கிறது. ஒரு சம்பவத்தின் நினைவை மட்டும் வைத்துக்கொண்டு, அதோடு ஒட்டியிருக்கும் வலி அல்லது பயத்தை மட்டும் கத்தரித்து எடுத்துவிடுகிறது. அதனால்தான் தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முன்னோர்கள் சொன்னார்கள் போல!

ஐந்து மணி நேரத்திற்குக் குறைவாகத் தூங்குபவர்களுக்குப் பொய் நினைவுகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாம். அதாவது நடக்காத ஒரு விஷயத்தைத் தானாகவே கற்பனை செய்து நினைவு என்று மூளை சேமித்துவிடும். எட்டு மணித் தூக்கம் அவசியம். அப்போதுதான் மூளை வேலையில் கில்லியாக இருக்கும். நீங்கள் அறிவார்ந்த வேலையில் அதிகம் ஈடுபட்டால் பத்து மணி நேரம் கூட தூங்கலாம்.

அடுத்த முறை யாராவது உங்களைப் பார்த்து, என்ன எப்பப்பாரு தூங்கிக்கிட்டே இருக்கே? என்று கேட்டால், நான் தூங்கலை, மூளையில மெமரி ஹவுஸ்கீப்பிங் பண்ணிக்கிட்டு இருக்கேன், என்று தைரியமாகச் சொல்லுங்கள்! தட் இஸ் பிரைன் டீடாக்ஸ். எஸ் நீங்கள் டீடாக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால்தான் ராமாயண யுத்தக் காண்டத்தில் எது நீதி என்பது குறித்து இராவணனுக்கு இல்லாத தெளிவு, கும்பகர்ணனுக்கு இருந்தது போலும். ஸோ கும்பகர்ணன் அதிகம் தூங்கி நன்றாகவே பிரைன் டீடாக்ஸ் செய்திருக்கிறார்.

*****