19 Apr 2026

பிள்ளைகளும் பணமும் – ஒரு நடுத்தர வர்க்கக் திகில் கதை!

பிள்ளைகளும் பணமும் – ஒரு நடுத்தர வர்க்கக் திகில் கதை!

இன்றைய உலகம் ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வேகத்தில் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்தால், நேராக ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களுக்குள் போய் விழுகிறார்கள்.

முன்னெல்லாம் பணம் என்றால் என்ன? என்று கேட்டால், அது ஒரு காகிதம் என்பார்கள் பிள்ளைகள். இப்போது கேட்டால், அது அப்பாவின் போனில் இருக்கும் ஒரு ஓடிபி என்கிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி பிள்ளைகளின் மூளையை விட, அவர்களின் ஆசை லிஸ்ட்டைப் பெரிதாக்கியிருக்கிறது.

குழந்தைகள் இப்போது கார்ட்டூன் பார்ப்பதில்லை, விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சம் கார்ட்டூன் பார்க்கிறார்கள். அந்த விளம்பரத்தில் வரும் ரோபோ பொம்மையைப் பார்த்ததும், இது இல்லை என்றால் என் வாழ்க்கையே சூன்யம் என்கிற லெவலுக்கு அடம் பிடிக்கிறார்கள். மார்க்கெட்டிங்காரர்களுக்குத் தெரியும், அப்பாவை விடக் குழந்தையை நம்பினால்தான் கல்லா கட்ட முடியும் என்று.

பள்ளிக்கூடத்தில் பாடம் ஏறுகிறதோ இல்லையோ, பக்கத்து சீட்டு மாணவி வைத்திருக்கும் புது பிராண்ட் பேனா மட்டும் துல்லியமாகத் தெரிகிறது. அவ வச்சிருக்கா, எனக்கு வேணும், என்பதுதான் இன்றைய குழந்தைகளின் தாரக மந்திரம். இது தேவை அல்ல, இது ஒரு வகையான கௌரவப் போர். இதில் தோற்றுப் போனால் சமூகத்தில் தலை காட்ட முடியாது என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.

பெற்றோர்களும் இதற்கு ஒரு காரணம். பிள்ளைகள் கேட்ட உடனே, ஏதோ ஏடிஎம் மெஷின் மாதிரி பொருட்களைத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாமதான் கஷ்டப்பட்டோம், புள்ளைங்க சந்தோஷமா இருக்கட்டுமே என்கிற அந்தச் சென்டிமென்ட் இருக்கிறதே, அதுதான் ஆபத்து.

எதை கேட்டாலும் உடனே கிடைத்தால், பணத்தின் மதிப்பு எப்படித் தெரியும்? ரூபாய் நோட்டை வெறும் காகிதமாகத்தான் பார்ப்பார்கள்.

இந்தச் சின்னச் சின்ன ஆசைகளை இப்போதே கிள்ளி எறியவில்லை என்றால், வளர்ந்த பிறகு அவர்கள் கிரெடிட் கார்டு என்கிற எமனிடம் சிக்கிக் கொள்வார்கள். அதற்கு ஆண்டுக்கு 40% வட்டி. இதைக் கட்டவே அவர்கள் ஆயுள் முழுக்க ஓட வேண்டியிருக்கும். கடைசியில், ஒரு வீட்டுக் கடன் வாங்கக் கூடத் தகுதி இல்லாமல், சிபில் ஸ்கோர் பாதாளத்தில் கிடக்க, நடுத்தர வர்க்கத் துயரம் ஆரம்பமாகும்.

இதற்கு என்னதான் தீர்வு

பிள்ளைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக் கொடுக்க பொருளாதாரப் பாடம் தேவையில்லை, நடைமுறை போதும்.

ஒரு நாள் உங்கள் அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். அங்கே பாஸ் கொடுக்கும் டார்ச்சரையும், டிராஃபிக்கில் நீங்கள் படும் அவஸ்தையையும் பார்த்தால், அடுத்த முறை ஐஸ்கிரீம் கேட்கும்போது ஒரு நிமிடம் யோசிப்பார்கள்.

மாதம் ஒரு 500 ரூபாயைக் கொடுத்து, உன் தேவையை நீயே பார்த்துக்கோ, என்று சொல்லிப் பாருங்கள். அந்த 500 ரூபாயை வைத்துக்கொண்டு அவர்கள் படும் பாடுதான் அவர்களுக்குப் பெரிய பாடம்.

புத்தகம் வாங்குவது தேவை, ஆனால் அந்த 5000 ரூபாய் வீடியோ கேம் என்பது வெறும் ஆசை என்பதைப் புரிய வையுங்கள்.

மொத்தத்தில், பிள்ளைகளைச் செல்லம் கொடுத்துக் கெடுப்பதை விட, கொஞ்சம் கணக்கு காட்டி வளர்ப்பதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

சிறு வயதில் உண்டியலில் சேமிக்கும் அந்த ஒரு ரூபாய், பின்னாளில் அவர்கள் கடனாளியாகாமல் தடுக்கும் இன்சூரன்ஸ்.

இல்லையென்றால், நீங்கள் சேர்த்து வைத்த சொத்து எல்லாம் அவர்களின் ஒரு மாத ஆன்லைன் ஷாப்பிங் பில்லுக்கே சரியாகப் போய்விடும்!

இனி என்ன செய்வது என்பது ஒவ்வொரு பெற்றோரின் முடிவுதான். பெற்றோரின் முடிவு குழந்தைகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். விசயம் அவ்வளவுதான்.

*****

தொகுதி மறுவரையறை மசோதா – நடந்தது என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா – நடந்தது என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா என்ற பெயரைக் கேட்டாலே ஏதோ தையல் கடையில் சட்டைக்கு அளவு எடுப்பது போல இருக்கிறதல்லவா? கிட்டத்தட்ட அதுதான். ஆனால் இங்கே தைக்கப்படுவது சட்டை அல்ல, நம் நாட்டின் அரசியல் வரைபடம்.

தற்போது லோக்சபாவில் 543 பேர் இருக்கிறார்கள். இதை இனி இதை 815 ஆக ஆக்கப்போகிறார்களாம். அதாவது 50 சதவீத டாப்-அப். அதுதான் இந்த மசோதா.

இந்தியாவில் மக்கள் தொகை கூடிக் கொண்டே போகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. இது எப்படி இருக்கிறதென்றால், பத்து பேர் இருக்கும் குடும்பத்தில் ஒரே ஒரு ‘பேமிலி பேக் பிரியாணியை வைத்துக்கொண்டு, எல்லோருக்கும் லெக் பீஸ் வேணும் என்று அடம் பிடிப்பது போலத்தான்.

அதனால், எந்த ஊரில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்கேற்ப எம்.பிக்களைப் பிரித்துக் கொடுப்போம் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படை நோக்கம்.

நோக்கம் சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்தால், இங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் அரசு சொன்னதைக் கேட்டு, பெற்றால் டூ, இல்லையேல் ஒன் என்று குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றின. விளைவு? மக்கள் தொகை குறைந்தது.

வடக்கிலோ நிலைமை வேறு. மக்கள் தொகையே மாபெரும் சக்தி, என்று ராகுல் காந்தி ஸ்டைலில் கிளம்பி, எண்ணிக்கையைப் பெருக்கிவிட்டார்கள்.

இப்போது தொகுதி மறுவரையறை வந்தால், வட மாநிலங்கள் நாங்கள் நிறையப் பேர் இருக்கிறோம், அதனால் எங்களுக்கு அதிக எம்.பி சீட் கொடுங்கள் என்று கேட்பார்கள், ஹோம்வொர்க் செய்யாத பையனுக்கு அதிக மார்க் போடுவது போல!

ஆனால், தென் மாநிலங்களின் நிலைமை. நாங்கள் சமத்தாகச் சொன்னதைக் கேட்டோம், அதற்காக எங்கள் சீட்டைக் குறைக்கிறீர்களே? என்பார்கள், கிளாஸில் அமைதியாக இருந்ததற்குத் தண்டனை கொடுப்பது போல!

இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்றால், நாடாளுமன்றத்தில் இருக்கைகள் கூடும். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அவ்வளவு பெரிதாகக் கட்டியதே இதற்காகத்தான். சுமார் 800க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் சரியாகச் சொன்னால் 815 எம்.பிக்கள் அமர்வார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், குடும்பக் கட்டுபாடு செய்த மாநிலங்கள் அரசியல் பலத்தை இழக்கும். குடும்பக் கட்டுபாட்டைக் காற்றில் பறக்க விட்ட மாநிலங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்.

ஜனநாயகத்தில் தலைகளுக்குத்தான் மதிப்பு, மூளைகளுக்கு அல்ல என்பதை இந்த மசோதா நிரூபித்து விடலாம்.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு உங்கள் ஊர் தொகுதி பெயர் மாறலாம், ஆனால் உங்கள் தெருவில் இருக்கும் அந்தப் பாதாளச் சாக்கடை ஓட்டை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கலாம். அது வேறு விசயம்.

இப்போது விசயத்திற்கு வருவோம்.

இந்த மசோதாவுக்குத் தென் மாநிலங்களின் எதிர்ப்பை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தார்.

தமிழ்நாட்டில் 39 ஆக இருப்பதை 59 ஆக்குவோம். அதாவது எம்.பிக்கள் சீட். கேரளாவில் 20ஐ 30 ஆக்குவோம். மொத்தமாகத் தெற்கில் 129லிருந்து 195 சீட்கள் வரும் என்றார்.

அதாவது, தெற்கு மாநிலங்களின் பலம் 23.76 சதவீதத்திலிருந்து 23.87 சதவீதமாக உயருமாம். அதாவது, ஒரு கிலோ பிரியாணியில் ஒரு பருக்கை அரிசியை அதிகமாகப் போடுவது போல.

வடக்கில் இந்த எண்ணிக்கையைப் போட்டால், 815 – 195 = 620. அதாகப்பட்டது, மொத்த அதிகரிப்பு தொகுதிகள் மைனஸ் தென் மாநிலங்கள் என்றால் மிச்சமிருப்பது வடமாநில அதிகரிப்புத் தொகுதிகள்தானே. அப்படிப் பார்த்தால் 620 என்ற எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு என்பது சர்வ சாதாரணமாக வந்து விடுகிறதே. இன்னும் சரியாகச் சொன்னால் நான்கில் மூன்று பங்கு எம்பிக்கள் வட மாநில எம்.பிக்களாகவே இருப்பர்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, தென் மாநிலங்களில் ஜெயிக்காமலேயே, வட மாநிலங்களில் ஜெயித்தால் ஆட்சியை அலேக்காகத் தூக்கி விடலாம். சட்டத் திருத்தங்களையும் ஜரூராக முடித்து விடலாம்.

இதனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது இந்த மசோதா.

ஆனால், கிளைமாக்ஸ் என்னவென்றால், இறுதியில் புஸ்ஸென்று போய் விட்டது.

என்ன நடந்தது என்றால், நடந்தது இதுதான்.

528 பேர் ஓட்டுப் போட்டார்கள். அதில் 298 பேர் ஆஹா, சூப்பர் மசோதா என்று ஆதரவு தந்தார்கள். ஆனால், சட்டப்படி மூன்றில் இரண்டு பங்கு அதாவது 352 பேர் ஆதரவு வேண்டும்.

கடைசியில் பார்த்தால், 54 ஓட்டுகள் குறைவாகப் பெற்று மசோதா பரிதாபமாகத் தோற்றுப்போனது.

தமிழ்நாட்டின் ரியாக்‌ஷன் தான் இதில் ஹைலைட். தில்லி ஒரு பவுலர் என்றால், தமிழ்நாடு ஒரு ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மேட்சை முடித்துவிட்டது. தமிழ்நாட்டின் எதிர்ப்பு அப்படி இருந்தது.

முடிவு இதுதான். 815 எம்.பிக்கள் வந்து, சென்ட்ரல் விஸ்டாவில் நெருக்கிக் கொண்டு அமர்வார்கள் என்று பார்த்தால், இப்போது மீண்டும் பழைய 543 பேரே நாங்கதான் கெத்து என்று அமரப்போகிறார்கள்.

இந்தத் தோல்வியால் ஒரு விஷயம் தெளிவாகின்றது. தென் மாநிலங்களின் குரல் இன்னும் தில்லியில் கேட்கிறது. ஒருவேளை மசோதா ஜெயித்திருந்தால் தென் மாநிலங்களின் குரல்வளையைத் தூக்கிக் காயலான் கடையில்தான் போட வேண்டியிருந்திருக்கும்.

மசோதா தோற்றதால், தொகுதிப் பங்கீடு இனி மாறாது. எனவே, உங்கள் ஊர் எம்.பியிடம் அதே பழைய புகார்களை மீண்டும் கொடுக்கலாம். ஆனால் என்னதான் வந்தாலும் மாற்றம் என்பது மசோதாவில் மட்டுமே, மக்கள் வாழ்க்கையில் அல்ல என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது! என்ன செய்வது? அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டர் எப்போதோ கவுண்டர் கொடுத்து விட்டார்.

*****

18 Apr 2026

ஓட்டு – உங்கள் ஜனநாயகத் துருப்புச் சீட்டு!

ஓட்டு – உங்கள் ஜனநாயகத் துருப்புச் சீட்டு!

தமிழ்நாட்டை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகும் தலைமையைத் தீர்மானிக்கும் மகத்தான பொறுப்பு ஏப்ரல் 23 இல் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே... என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

அரசு என்பது உங்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு என்று இன்னும் நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால், அந்த நம்பிக்கையைச் சிதைக்காமல் இருக்க, வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சோம்பலைத் தள்ளி வைத்துவிட்டு வாக்குச்சாவடிக்குப் போக வேண்டும்.

கொஞ்சம் கூட்டம் இருக்கலாம். வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவது அவசியம்.

என் ஓர் ஓட்டால்தான் எல்லாம் மாறப் போகிறதா என்று தத்துவார்த்தமாகக் கேட்டுவிட்டு, அந்த நாளை நெட்பிளிக்ஸிலும் தூக்கத்திலும் தொலைக்கத் துடிக்கும் புத்திசாலிகள் இங்கே அதிகம்.

நினைவிருக்கட்டும், உங்கள் ஓர் ஓட்டு முடிவை மாற்றாததுதான், ஆனால் மாற்றத்தை நோக்கிய உங்கள் இயலாமையைக் குறைக்கும்.

யாருமே தேறமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், அதற்காகவே தேர்தல் ஆணையம் நோட்டா என்ற பொத்தானை வைத்திருக்கிறது. உங்களில் யாருக்கும் என் வாக்கு கிடையாது, என்று சொல்வதற்காவது நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அதுவும் ஒரு ஜனநாயகக் கடமைதான்.

வாக்களிக்கும் முன் சில விசயங்களை யோசித்துப் பாருங்கள். அவற்றில் சில,

பட்டதாரிகளை மொத்தமாக உற்பத்தி செய்துவிட்டு, அவர்களுக்குத் தகுதியான வேலையைக் கொடுக்க முடியாமல் தமிழ்நாடு விழி பிதுங்கி நிற்கிறது. எல்லாருக்கும் அரசு வேலை சாத்தியமில்லைதான். ஆனால் தகுதிக்கேற்ப ஏதாவது ஒரு வேலை சாத்தியம்தானே. அந்தச் சாத்தியத்தைத் தேர்தலில் நிற்கும் எந்தக் கட்சியின் சின்னம் உறுதி செய்யும் என்று பாருங்கள்.

கடன் சுமையால் தடுமாறும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்கும் வித்தை இப்போது தமிழகத்துக்கு அத்துப்படி. இந்த கடனெல்லாம் யார் தலையில் விடியும் என்று நினைக்கிறீர்கள்? ஆகவே, உங்கள் யோசனையில் இதையும் வைத்து அதற்கேற்ப வாக்களியுங்கள்.

அப்புறம், இந்த வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலைப் பாருங்கள். நாட்டின் ஜிடிபியை விட அவர்களின் சொத்து வளர்ச்சி விகிதம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. பலருடைய பின்னணியான கிரிமினல் சைட் கிருமித்தனமாக இருக்கிறது. இதையும் நீங்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு கிரிமினல் கிருமியைத் தேர்ந்தெடுப்பதில் என்ன இருக்கிறது? அது இன்னொரு கொரோனா, லாக் டவுன் என்றாகி விடும்.

இப்போதெல்லாம் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் குறைந்து விட்டன. கட்சிகள் நேரடியாகவே உங்கள் செல்போனுக்கு எல்லாவற்றையும் அனுப்புகின்றன. கட்சிகளுக்கு எப்படி உங்கள் செல்போன் நம்பர் கிடைக்கிறதோ? ஆக, அரசியல் கட்சிகள் உங்கள் செல்போனுக்குள் அனுப்பியிருக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைப் படியுங்கள். அதில் எவை நிஜம், எவை வெறும் காமெடி என்பதைப் பிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இலவச மிக்ஸிக்கும், கிரைண்டருக்கும், பிரிட்ஜ்க்கும், டோக்கனுக்கும் ஆசைப்படுவதை விட, மாநிலத்தின் எதிர்காலத்துக்கு எது உருப்படியானது என்று யோசியுங்கள்.

ஆட்சிகள் வரும், போகும். ஆனால் நாம் கட்டும் வரி மட்டும் போய்க்கொண்டே இருக்கும் என்பது உண்மை என்றாலும், அந்த வரி மக்கள் நலனுக்குக் கொஞ்சமாவது பயன்பட வேண்டுமானால் யோசித்து வாக்களித்தால்தான் உண்டு.

எனவே, ஏப்ரல் 23 ஆம் தேதி உங்கள் மனசாட்சியைக் கொஞ்சம் தட்டி எழுப்பி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு தீர்க்கமான முடிவெடுங்கள்.

ஜனநாயகம் என்பது வேர் என்றால், உங்கள் வாக்குதான் அதன் உரம். அது விஷமா அல்லது சத்தா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

வாக்களிக்க அவசியம் போய் வாருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கிறதோ இல்லையோ, அடுத்து ஐந்து வருடங்களுக்கு நீங்கள் திட்டித் தீர்ப்பதற்கு ஒரு தார்மீக உரிமை உங்களுக்குக் கிடைக்கட்டுமே!

*****

மூளையும் கட்டைவிரலும் – ஒரு டிஜிட்டல் மரணம்!

மூளையும் கட்டைவிரலும் – ஒரு டிஜிட்டல் மரணம்!

நவீன மனிதர்களின் ஆகப்பெரிய துயரம் இதுதான். புத்தகம் படிக்க அவர்களுக்கு நேரமில்லை, ஆனால் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ்ஆப், ரீல்ஸ் பார்க்க அவர்களுக்கு நேரம் போதவில்லை.

ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பிரித்து, முன்னுரையைப் படிப்பதற்குள் அவர்களுக்குக் கொட்டாவி வருகிறது. இந்த எழுத்தாளர் ஏன் இவ்வளவு நீளமாக எழுதுகிறார்? என்று எரிச்சல் படுகிறார்கள்.

அதே மனிதர், யாரோ ஒரு புண்ணியவான் கேமரா முன்னால் நின்று இடுப்பை ஆட்டுவதையோ அல்லது என்னங்க சமையல் என்று கத்துவதையோ இரண்டு மணிநேரம் இமைக்காமல் பார்க்கிறார்.

புத்தகம் என்பது ஒரு மெதுவான பயணம். அது உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும். மூளைக்கு வேலை கொடுப்பது என்பது இன்றைய தேதியில் ஒரு தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இன்ஸ்டா, யூடியூப், ரீல்ஸ்? அது ஒரு துரித உணவு. நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. உங்கள் கட்டைவிரல் மட்டும் இயங்கினால் போதும்.

இந்த யூடியூப்காரர்களும், இன்ஸ்டாகாரர்களும், ரீல்ஸ் மகான்களும் ஒவ்வொரு 15 விநாடிக்கும் ஒரு புதிய உணர்ச்சியை சிரிப்பு, அழுகை, எரிச்சல் என்று உங்கள் நரம்புகளுக்குள் ஊசி போட்டு ஏற்றி இறக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கக் குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஆனால், அதே ஒரு வாரத்தில் நீங்கள் சுமார் பத்தாயிரம் ரீல்ஸ்களைப் பார்த்து, பத்தாயிரம் விதமான முட்டாள்தனங்களைச் சேமித்து வைத்திருக்க முடியும்.

நேரமே இல்லைங்க என்று சொல்பவர்களிடம் அவர்களின் செல்போனில் இருக்கும் ஸ்கிரீன் டைம் ஆப்ஷனைத் திறந்து காட்டச் சொல்லுங்கள். அதில் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் இன்ஸ்டாகிராமிலோ, யூடியூபிலோ, வாட்ஸ்ஆப்பிலோ கழிந்திருக்கும்.

அறிவு என்பது ஒரு பெரிய சமுத்திரம். ஆனால் அதைத் தேடிப் போக யாருக்கும் விருப்பமில்லை. எல்லாரும் அந்தச் சமுத்திரத்தின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு யாரோ துப்பிய ரீல்ஸில், இன்ஸ்டாவில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தகம் படிப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பார்கள். ரீல்ஸ் பார்ப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அந்தப் பாட்டுக்கு அந்தப் பொண்ணு என்ன ஸ்டெப் போட்டுச்சு என்பது மட்டும்தான்.

நாளை ஒரு போர் வந்தால், நம் இளைஞர்கள் கையில் துப்பாக்கியைத் தூக்குவதற்குப் பதில், எதிரியின் முன்னால் நின்று செல்பி எடுத்து, கரன்ட் மூட் – வார் என்று ஸ்டேட்டஸ் போடுவார்கள் போலிருக்கிறது.

புத்தகம் படிக்க நேரமில்லை என்று சொல்பவர்கள் உண்மையில் சொல்வது இதுதான், எனக்கு யோசிக்க நேரமில்லை, என்னை அப்படியே மந்தையாக வாழ விடுங்கள்.

வாழுங்கள். உங்கள் கட்டைவிரல் தேயும் வரை ரீல்ஸ்களைத் தள்ளிக் கொண்டே இருங்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் மூளை தானாகவே அன்இன்ஸ்டால் ஆகிவிடும். அப்போது உங்களுக்குப் புத்தகங்களும் தேவைப்படாது, இந்த வாழ்க்கையும் புரியாது.

நம் கட்டை விரலை விட மூளையைக் கவனிப்பது முக்கியம். அதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்.

******

17 Apr 2026

வீட்டுக்குள் நிம்மதியாக இருத்தல்!

வீட்டுக்குள் நிம்மதியாக இருத்தல்!

மனிதர்களைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ரிடையர்மென்ட் ஆகும் வரை வாடகை வீட்டில் வசிப்பவர்கள். வாடகை வீட்டுக்குப் பயந்து ஹோம் லோன் போட்டு இஎம்ஐ கட்டும் இன்ஸ்டால்மென்ட் வீட்டில் வசிப்பவர்கள்.

இரண்டுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றுமில்லை. முதல் வகையினர் அறுபது வயது வரை வாடகை வீட்டில் ஓனர் தரும் டார்ச்சரை அனுபவிப்பார்கள். இரண்டாம் வகையினர் அறுபது வயது வரை பேங்க் மேலாளர் தரும் இஎம்ஐ டார்ச்சரை அனுபவிப்பார்கள். முன்னது உடல்நலத்துக்குக் கேடு, பின்னது மனநலத்துக்குக் கேடு.

இன்றைய இளைஞர்களுக்குச் சொந்த வீடு என்பது ஒரு சென்டிமென்ட் அல்ல, அது ஒரு இருபது காலத் தண்டனை. வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் ஆண்டிலேயே ஹோம் லோன் எடுத்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் அலுவலகத்தில் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களின் இஎம்ஐ அவர்களை தானாகவே அடிமையாக்கிவிடும். மேனேஜர் திட்டும்போது கோபப்படத் தோன்றும், ஆனால் பாத்ரூம் டைல்ஸின் விலை நினைவுக்கு வந்து கோபத்தைத் தணிக்கும்.

இவர்களுக்குச் சுதந்திரம் என்பது என்ன? அடுத்த இருபது வருஷத்துக்கு வேலையை விடமாட்டேன் என்று வங்கிக்கு எழுதித் தருவதுதான்!

இன்னொரு ரகம் உண்டு. அரசு வேலை முடிஞ்சு, வர்ற காசுல ஒரு சின்னதா நாலு செவுரு எழுப்பி நிம்மதியா சாகணும் என்று கனவு காண்பவர்கள். அறுபது வயதில் வீடு கட்டி முடிக்கும்போது, அவர்களுக்குப் பால் காய்ச்சத் தெம்பிருக்காது. அந்த வீட்டு ஹாலில் நடக்கக் கூட மூட்டு வலி அனுமதி தராது. ஒரு வழியாகக் கட்டி முடித்த வீட்டில் அவர்கள் நிம்மதியாக உட்காரும்போது, அவர்களின் பையன் அந்த வீட்டை இடித்துவிட்டு அப்பார்ட்மென்ட் கட்டத் திட்டம் போட்டுக்கொண்டிருப்பான்.

விசயம் என்னவென்றால்,

நீங்கள் வாங்குவது 1200 சதுர அடியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உண்மையில் வாழ்வது அந்த வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இருக்கும் எண்களுக்குள்தான்.

உங்கள் வீட்டின் சுவருக்கு நீங்கள் அடிக்கும் பெயிண்ட், உண்மையில் உங்கள் ரத்தத்தின் நிறமாகக்கூட இருக்கலாம்.

வாடகை வீட்டில் இருக்கும்போது எப்போ சொந்த வீடு வரும்? என்கிற கவலை இருக்கும். சொந்த வீடு வந்த பிறகு எப்போ லோன் முடியும்? என்கிற கவலை வரும்.

கடைசியில் பார்த்தால், இரண்டு வகையினருமே தங்கள் வாழ்க்கையை ஒரு கான்கிரீட் பெட்டிக்காக அடகு வைக்கிறார்கள். பூமிக்கு மேலே ஒரு வீடு கட்டுவதற்காக, பூமிக்கு அடியில் போவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.

வாடகை வீடாக இருந்தால் என்ன, லோன் வீடாக இருந்தால் என்ன? எப்படியும் ஒரு நாள் எல்லாரும் காலி செய்துவிட்டுப் போகப்போகிற கெஸ்ட் ஹவுஸ்தான் இது. அதற்காக ஏன் இத்தனை முக்கல் முனகல்கள்? வீட்டில் ரொம்ப காசைப் போட்டு அவஸ்தைக்கு ஏன் ஆளாக வேண்டும்?

வீட்டுக்குள் நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். அந்த வீடே உங்கள் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது.

சொந்த வீடா? வாடகை வீடா?

இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாடகை வீடு எப்போதும் பெஸ்ட். நீங்கள் வீட்டுக்குப் பெய்ண்ட் அடிக்க வேண்டியதில்லை, பிளம்பிங், எலெக்ட்ரிக் மெயின்டெனன்ஸ் செய்ய வேண்டியதில்லை, டேங்க் கிளினிங் பண்ண வேண்டியதில்லை, எல்லாவற்றையும் ஓனர் பார்த்துக் கொள்வார்.

ஆகவே, இந்த ஓனர் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு ஓனர். வீட்டைக் கட்டிப் போட்டு விட்டு, வெளிநாட்டில் இருக்கும் ஓனர்களும் இருக்கிறார்கள். அவர்கன் வீட்டைப் பிடியுங்கள். வாழ்க்கை ஸ்மூத்தாகப் போகும்.

*****

16 Apr 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – பிரீமியம் கட்டினால் காதல் கிடைக்குமா?

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி –

பிரீமியம் கட்டினால் காதல் கிடைக்குமா?

எல்ஐகே – ஒரு திரைப்பார்வை

விக்னேஷ் சிவன் எப்போதுமே ஒரு கலர்புல் உலகத்தைத்தான் சமைப்பார். இந்த முறையும் அதையே செய்திருக்கிறார். ஆனால், இதில் கொஞ்சம் பியூச்சரிஸ்டிக் மசாலா மிக்சிங் பண்ணியிருக்கிறார். அவர் எப்போதுமே காதல் எனும் பழைய ஊறுகாயை புது ஜாடியில் போட்டுத் தருவதில் கில்லாடி. இந்த முறை ஜாடி கொஞ்சம் காஸ்ட்லி.  2040 ஆம் வருடத்தில் உலகம் முழுவதும் செல்போனுக்குள் சுருங்கிவிட்டதாம். இப்போதும் அப்படித்தானே இருக்கிறது என்று லாஜிக் பேசக்கூடாது!

காதலுக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் ஒரு நிறுவனம். அதாவது, உங்கள் காதலி உங்களைக் கழற்றிவிட்டால் அல்லது காதல் தோல்வியடைந்தால், அதற்கு ஒரு செட்டில்மென்ட் கிடைக்கும் என்பதுதான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் கான்செப்ட். ஆனால், உண்மையில் படத்தின் கரு என்னவென்றால், எல்லாவற்றிற்கும் இன்சூரன்ஸ் எடுக்கலாம், ஆனால் எடுத்த இன்சூரன்ஸை க்ளைம் செய்வதற்குள் நமக்கு உயிர் போய்விடும் என்பதுதான்.

படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் இன்னும் அந்த லவ் டுடே ஹேங்ஓவரிலேயே இருக்கிறார்.  அது அவருக்கு செட் ஆகிறது என்பதுதான் உண்மை. ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் பதற்றத்தையும், குழப்பத்தையும் அவர் அப்படியே பிரதிபலிக்கிறார். ஆனால், சில இடங்களில் அவர் ஓவர்-ஆக்டிங் செய்கிறாரா அல்லது கேரக்டர் அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கவனிக்க வேண்டிய குறிப்பு என்னவென்றால், இன்சூரன்ஸ் தொகை அவ்வளவு வராது! கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு அவர் வளைந்து நெளிந்து கொடுக்கும் போஸ்கள் இருக்கிறதே. அது ஒரு தனி கலை. டியூட் கதாபாத்திரங்களுக்கு இவர்தான் இப்போது ஆஸ்தான நடிகர் போல.

படத்தின் நாயகி கிரித்தி செட்டி திரையில் வந்து போகிறார். அழகாக இருக்கிறார். விக்னேஷ் சிவன் படங்களில் நாயகிகளுக்கு அதிக வேலை இருக்காது, நாயகனைச் சுற்றி ஒரு அழகான வளையமாக இருந்தால் போதும். இதில் கிரித்தி அந்த வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் சில சமயம் இழுவையாக இருந்தாலும், எமோஷன் காட்சிகளில் க்ளிக் ஆகிறார். ஒரு போன் மெமரி புல்லானால் வரும் பதற்றம் அவர் முகத்தில் அச்சு அசலாகத் தெரிகிறது.

வில்லன் எஸ்.ஜே.சூர்யா. படத்திற்கு ஆக்சிஜன் இவர்தான். அந்த அலப்பறையான நடிப்பு, பாடி லாங்குவேஜ் எனத் திரையை ஆக்கிரமிக்கிறார். படத்தில் அதிகமாக கத்துகிறார். ஆனால், ரசிக்க முடிகிறது. படத்தில் அவருக்குப் பெயர் சூரியன். ஆனால் அவர் பேசுவது, கத்துவது எல்லாம் எரிமலையிலிருந்து வரும் சத்தம் போல இருக்கிறது. டிராகன் போல சீறுகிறார். மனிதர் எனர்ஜியில் மட்டும் இன்னும் 2024 ஆம் வருடத்திலேயே நிற்கிறார்.

படத்தின் பாதி பலம் அனிருத்தின் மியூசிக். பிஜிஎம்மில் காது கிழிகிறது, ஆனால் அது ஒரு பெப்பி பீலைத் தருகிறது. அனிருத் ஒரு ரோபோவுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.  பாடுவது போதாதென்று இப்போது பேசவும் ஆரம்பித்துவிட்டார். நல்லவேளை, அது ஸ்வீட் சர்ப்ரைஸ்!

காதலுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் முடிச்சுப் போட்ட விதம் சுவாரஸ்யம். சில காட்சிகள் ஜவ்வாக இழுக்கின்றன. எடிட்டர் கத்தரி போடத் தயங்கியது தெரிகிறது. ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த காமெடி என்பதால் லாஜிக் பார்க்கக்கூடாது என இயக்குநர் ஒரு டிஸ்கிளைமர் போட்டிருக்கலாம்.

நீங்கள் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் டைப் படங்களை ரசிப்பவர் என்றால், இந்த எல்ஐகே பாலிசி உங்களுக்கு லாபகரமானது.

படத்தின் மைனஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஒரு ரீல்ஸில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு மணி நேரமாக இழுத்திருக்கிறார்கள். பிளாஸ்பேக் ஆழமே இல்லாமல் வந்து போகிறது. ஏதோ அவசரமாக எடுத்த ஷார்ட் பிலிம் போல இருக்கிறது.

விக்னேஷ் சிவன் நிறைய ஐடியாக்களை வைத்திருக்கிறார், ஆனால் அதை ஒழுங்காக மூட்டை கட்டத்தான் கொஞ்சம் சோம்பேறித்தனம் காட்டியிருக்கிறார்.

காதலுக்கு இன்சூரன்ஸ் அவசியமோ இல்லையோ, இந்தப் படத்தைப் பார்க்கும்போது இடைவேளையில் ஒரு காபி குடிப்பதற்கு நல்ல லைப் இன்சூரன்ஸ் அவசியம். விக்னேஷ் சிவன் இன்ஸ்டால் செய்திருக்கும் இந்த உலகத்தை ஒருமுறை லைக் செய்யலாம், ஆனால் ஷேர் செய்வதற்கு யோசிக்க வேண்டும்!

சீரியஸாக படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு ரிஸ்க் ஆன முதலீடு! படத்தை ஒருமுறை பார்க்கலாம். ஆனால், க்ளைம் கிடைக்காது! பாலிசிதாரர்களுக்குப் பாதி லாபம்!

படத்துக்குப் பத்துக்கு 5½ மார்க் கொடுக்கலாம் படத்திற்கு, அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா எதற்கென்றால், ரோபோவை நல்ல நடிகராக்கியதற்கு.

*****

டயக்னோசிஸ் – எல்லா நாடுகளிலும் ஓர் எட்டாக்கனி!

டயக்னோசிஸ் – எல்லா நாடுகளிலும் ஓர் எட்டாக்கனி!

நோய்க் கண்டறிதல் என்பது எல்லா நாடுகளிலும் எட்டாக் கனியாகவே உள்ளது. அது அமெரிக்காவாகவே இருந்தாலும் சரிதான். அமெரிக்கா என்றால் நமக்குத் தெரிந்தது அதிநவீன மருத்துவமனைகளும், கண்ணிமைக்கும் நேரத்தில் மரபணுவை வரிசைப்படுத்தும் மெஷின்களும்தான். ஆனால், அங்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் ஒரு விசித்திரமான நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நரகத்தின் பெயர், பெயரிடப்படாத நோய்.

அலெக்ஸாண்ட்ரா சிபர்லின் எழுதிய தி எலுசிவ் பாடி என்ற புத்தகத்தைப் படித்தால், நீங்கள் இந்த உண்மையை அறியலாம்.

ஏழு வருடங்களாகத் திரட்டிய தகவல்களை வைத்து அவர் ஒரு டயக்னோசிஸ் க்ரைஸிஸ் சித்திரத்தை வரைந்திருக்கிறார்.

புத்தகத்தில் வரும் ப்ராக்டர் உடன்பிறப்புகளின் கதை பகீர் ரகம். அவர்களுக்கு ஒரு மரபணு மாற்றம். விளைவு? அவர்களின் தசைநார்கள் மெல்ல மெல்ல சிமெண்ட் போலக் கல்லாக மாறுகின்றன.

இன்னொரு பக்கம் 30 வயது மார்க். ஒரு காலத்தில் சைக்கிளிங் செய்தவர், இப்போது மூன்று சக்கர வண்டியில் கூட பேலன்ஸ் செய்ய முடியாமல் தள்ளாடுகிறார்.

டாக்டர்களிடம் போனால், உங்களுக்கு ஒன்றுமில்லை, எல்லாம் மனப்பிரமை, என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அல்லது, ஒரு ஸ்பெஷலிஸ்ட்டிடம் இருந்து இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்டுக்கு பந்து போலத் தட்டி விடுகிறார்கள்.

பொதுவாக இது போன்ற புத்தகங்களில் டாக்டர்கள் எல்லாம் மோசமானவர்கள், நோயாளிகள் பாவம் என்கிற ரீதியில்தான் எழுதுவார்கள். ஆனால் சிபர்லின் அப்படிச் செய்யவில்லை. அவருக்கும் டாக்டர்கள் மேல் அனுதாபம் இருக்கிறது.

நிமிடத்திற்கு நிமிடம் ஓடும் கார்ப்பரேட் மருத்துவ உலகில், ஒரு நோயாளியின் கதையை நிதானமாக உட்கார்ந்து கேட்க டாக்டர்களுக்கு நேரமில்லை.

ஒரு எக்ஸ்ரே எடுப்பதற்கான நேரம்தான் இன்று டயக்னோசிஸ் செய்ய ஒதுக்கப்படுகிறது, என்கிறார்கள் நோயாளிகள் பக்கம் நின்று வாதாடும் அனுதாபிகள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பீடியாட்ரிக் நியூராலஜிஸ்ட் டயானா செஜாஸ். அவரே ஒரு டாக்டர். தன் கழுத்தில் ஒரு கட்டி இருப்பதை அவரே கண்டுபிடித்துச் சொல்கிறார். சக டாக்டர்கள் அதை அலட்சியப்படுத்துகிறார்கள். கடைசியில் அது கேன்சர் என்று தெரிய வருகிறது. ஒரு டாக்டருக்கே இந்த நிலை என்றால், சாதாரண ஆசாமியின் கதி?

அமெரிக்கா மருத்துவத்திற்காக வாரி இறைக்கும் பணம் உலகிலேயே அதிகம். ஆனால், அங்கே நோயைக் கண்டுபிடிப்பதிலேயே இத்தனை ஓட்டைகள்.

இந்தப் புத்தகம் சொல்லும் செய்தி ஒன்றுதான். மருத்துவ உலகம் வெறும் மெஷின்களையும் டெஸ்ட்டுகளையும் மட்டும் நம்பாமல், நோயாளியின் கதையைக் கேட்க மீண்டும் பழக வேண்டும்.

கண்டுபிடிக்கப்படாத நோய் என்பது ஓர் இருட்டு அறை. அதில் டார்ச் அடித்துத் தேடும் முயற்சியே இந்தப் புத்தகத் தேடல்.

உங்கள் உடம்பில் ஏதோ ஒன்று சரியில்லை என்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால், அதை ஒரு டாக்டர் மறுத்தால், இன்னொரு டாக்டரிடம் போங்கள்.

சில நேரம் மெஷின்களை விட உங்கள் உடம்பு சொல்வது உண்மையாக இருக்கும்!

*****