22 Jun 2026

இரத்தமும் தத்துவமும் – ஒரு போஸ்ட்மார்ட ரிப்போர்ட்!

இரத்தமும் தத்துவமும் – ஒரு போஸ்ட்மார்ட ரிப்போர்ட்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஹரித்துவாரில் நிகழ்ந்த, கஞ்சா நெடியடிக்கும் ஒரு கதையைக் குவாண்டம் இயற்பியல் தளத்திற்கு இட்டுச் சென்று, பிரம்ம சூத்திரத்தில் முடித்திருந்தார் ஜெயமோகன்.

இது ஜெயமோகனின் வழக்கமான ஹரித்துவார், சன்னியாசி, தாடி, உன்னதத்தனம் ஆகிய கூறுகளின் சேர்க்கை ஆகும். வாசிப்பதற்கு இது நன்றாகவே இருக்கிறது. காட்சிப்படுத்துதலில் அவர் எப்போதுமே வல்லவர். அந்த சோட்டா பாபா படிக்கட்டிலிருந்து விழுந்து கிடக்கும் காட்சி, ஒரு மிக நெருக்கமான ஒளிப்பதிவுக் காட்சி போன்றது. இரத்தம் குமிழியிடுவதும், விரல்கள் நடுங்குவதும் என உடற்கூறியல் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கிருந்தே நம் படா பாபாவின் தத்துவார்த்த உரையாடல் தொடங்குகிறது.

ஐம்பது ஆண்டுக்காலத் தோழர் மண்டை உடைந்து இறந்து கிடக்கிறார். சுற்றிலும் மக்கள் கூச்சலிடுகிறார்கள். ஆனால், அவரோ எவ்விதச் சலனமுமின்றி கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத்தான் ஜெயமோகன் பிரம்ம சூத்திரம் வரை கொண்டு சென்று, தத்து சமன்வயாத் அதாவது, அது சமநிலைப்புள்ளியில் உள்ளது என்று இயற்பியல் தளத்தோடு தொடர்புபடுத்துகிறார்.

இதன் தொடக்கமே அதிரடியானது. தாடி வளர்த்து, அழுக்குத் துணியணிந்து, எதையும் கவனிக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், நம் ஊரில் உடனே அவரைச் சாமி ஆக்கிவிடுவார்கள். அதை நாற்பது ஆண்டுகள் கழித்து ஜெயமோகன் மனச்சோர்வு என்னும் மருத்துவக் கலைச்சொல்லால் புரிந்து கொண்டதற்கு ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

ஆனால், அங்கிருந்த பிச்சைக்காரர்கள் நடைமுறை அறிவு  உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். துறவிகளுக்காக அவர்கள் பிச்சை எடுப்பதும், பிச்சைக்காரர்கள் தங்களைத் துறவிகள் என்று கூறிக் கொள்வதும் என, மியூச்சுவல் பண்ட் போன்ற ஒரு கூட்டுப் பிச்சை வணிகம் அங்கு நடந்திருக்கிறது.

படா பாபா, சோட்டா பாபா என்ற அந்த எழுபது வயதைக் கடந்த இரு முதியவர்கள். ஒருவர் கஞ்சா சுருட்டு தயாரிப்பது, மற்றொருவர் அதனை இழுப்பது; இருவருக்குள்ளும் ஒரு வார்த்தை கூடப் பரிமாறப்படுவதில்லை.

சாதாரண மனிதர்கள் இதைப் பார்த்தால், “இருவரும் போதையில் பேசக்கூட முடியாத அளவிற்கு மயங்கிக் கிடக்கிறார்கள்” என்றுதான் நினைப்பார்கள். ஆனால் ஜெயமோகனோ அதனை, "வார்த்தைகள் தேவையற்ற உன்னத உடல்மொழி" என்று மிகைப்படுத்துகிறார். இதனை எப்படி ஏற்றுக் கொள்வது என்று புரியவில்லை.

கதையின் மிகச்சிறந்த பரபரப்பான காட்சி என்பது நாம் ஆரம்பத்தில் பார்த்த சோட்டா பாபா மேலிருந்து விழுந்து, கழுத்து முறிந்து, மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் கிடப்பதுதான். கைவிரல்கள் துடிக்கின்றன. சுற்றியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், திரையரங்கில் படம் பார்ப்பதைப் போல வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்கு அது நேரடித் திரைப்படம்!

நமது படா பாபா என்ன செய்கிறார்? "அவன் இறந்தால் எனக்கென்ன" என்ற அலட்சியத்துடன் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் நியாயமான கோபத்துடன், "மனிதனா நீ? கூட இருந்தவன் இறந்து கிடக்கிறான்!" என்று கத்துகிறார். அதற்கு அந்த முதியவர் கூறும் ஆன்மீக வசனம் இதோ:

"துறவிகள் ஈம காரியம் செய்யக் கூடாது. கடமையைத் துறப்பதுதான் துறவு."

உண்மையைக் கூறின், நிஜ உலகத்தில் ஒருவன் தன்னுடன் ஐம்பது ஆண்டுகள் இருந்தவன் இறந்து கிடக்கும்போது, வருத்தப்படாமல் கஞ்சா தயாரித்துக் கொண்டிருந்தால், அவனைச் சைக்கோபாத்  அல்லது போதையில் அறிவு இழந்தவன் என்று கூறி மனநல மருத்துவமனையில் சேர்ப்பார்கள். ஆனால், அதுவே ஹரித்துவாரில் நடந்தால் அதற்குப் பெயர் ஜீவன்முக்தித்தனம்! அது போதாதென்று கேரளாவிலிருந்து வந்த மற்றொரு சாமி, "அவர் தன் இறப்பிற்கே அஞ்சவில்லை, பிறகு ஏன் அடுத்தவர் இறப்பிற்கு அழ வேண்டும்?" என்று அதற்கு ஓர் உளவியல் முட்டுக் கொடுக்கிறார்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் இறக்கும்போது பதறுவது, அவனிடமிருந்து கைமாறு எதிர்பார்ப்பதால் அல்ல; அது மனித மூளையின் மிரர் நியூரான்கள் செய்யும் வேலை. சக உயிரியின் வலியைப் பிரதிபலிப்பது இயற்கையின் பரிணாம விதி. அதை அட்டாச்மென்ட், ஈகோ என்று தத்துவ முலாம் பூசுவது அநியாயமானது.

படா பாபா கூறுவது இன்னும் விசித்திரம். அவர் சொல்கிறர், “நான் விழுந்திருந்தாலும் அவன் இப்படித்தான் இருந்திருப்பான். அதனால்தான் அவனுடன் நெருக்கமாக இருந்தேன்.”

இதன் கணக்கு மிக எளிமையானது. இருவருமே அபாதி என்னும் தீவிரமான மன உறைவு நிலையை ஞானம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கஞ்சா கொடுக்கும் டோபமைன் சுரப்பால், மூளையின் உணர்ச்சிப் பகுதிகள் செயலிழந்து போவதை நாம் ஏன் ஆன்மீகச் சமநிலை என்று கொண்டாட வேண்டும்?

இறுதியாக எல்லாவற்றையும் எங்கு இணைக்கிறார் ஜெயமோகன்? பாதராயணரின் 'பிரம்ம சூத்திரம்'—'தத்து சமன்வயாத்.' அதாவது, படா பாபா அன்று காட்டிய அந்த அராஜகமான அலட்சியம்தான் பிரபஞ்சத்தின் சமநிலையாம்! அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரானும் புரோட்டானும் சமநிலை அடைவதைப் போல, சோட்டா பாபா இறப்பதும் படா பாபா கஞ்சா இழுப்பதும் சமநிலை அடைகிறதாம்.

ஜெயமோகன் பிரம்ம சூத்திரத்தை நவீன இயற்பியலோடு ஒப்பிடுவது சுவாரஸ்யமானது. “நுண்துகள்களுக்கு நடுவே உள்ள மின்னூட்டத்தின் சமநிலையே இப்பிரபஞ்சம்.” என்கிறார்.

அண்டவெளியில் சூப்பர்நோவா வெடித்துச் சிதறும்போது பேரண்டம் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் உண்மைதான். ஏதேனும் ஒரு விண்கல் பூமியில் மோதி மனித இனமே அழிந்தால் கூடப் பிரபஞ்சத்தின் சமநிலை மாறப்போவதில்லை. ஆனால், நாம் அண்டவெளித் தூசிகள் அல்லவே! நமக்கு நரம்பு மண்டலம் இருக்கிறது; வலி இருக்கிறது.

எந்தவொரு ஆன்மீகக் கட்டுரையும் நவீன அறிவியலுடனும், இயற்பியலுடனும் தொடர்புபடுத்தி எழுதப்படவில்லை என்றால் இன்றைய வாசகர்களிடம் மதிப்பு இருக்காது என்பது ஜெயமோகனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

நம் ஊர் ஆன்மீகத்தின் ஆகப்பெரிய வசதியே இதுதான். நமக்கு ஒருவன் மீது கடுமையான கோபமும் சீற்றமும் வரும்; அவனை அடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், நாம் கோழையாக இருப்பதாலோ அல்லது சட்டத்திற்குப் பயந்தோ அதைச் செய்ய மாட்டோம்.

பல ஆண்டுகள் கழித்து ஏதோ ஒரு பழைய புத்தகத்தில் இருக்கும் வரியைப் படித்துவிட்டு, "அன்று அவன் செய்த அயோக்கியத்தனமும், நான் காட்டிய கோழைத்தனமும் பிரபஞ்சத்தின் சமநிலைப்புள்ளி ஆகும்" என்று தத்துவ மசாலா தடவி நமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்வோம்.

இதன் மிகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், அடுத்த முறை சாலையில் யாராவது விபத்தில் சிக்கிக் கிடக்கும்போது உதவாமல், கஞ்சா புகைத்துக் கொண்டு கடந்து சென்றால், நாம் "தத்து சமன்வயாத்" என்று கூறிவிட்டுச் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

உலகில் எல்லாவற்றையும் சமநிலை செய்கிறேன் என்று கூறிச் சுடுகாட்டு அமைதியை நோக்கிப் போவது ஞானமல்ல; அது ஒரு வகையான பித்தலாட்ட தப்பியோட்டம்.

“எல்லாம் சரியாகிவிடும், ஒன்று போனால் இன்னொன்று வரும்” என்று பாமர மக்கள் கூறும் ஆறுதலில் இருக்கும் ஈரப்பதம் கூட, பிரம்ம சூத்திரம் பேசும் அந்தப் படா பாபாவின் கஞ்சா புகையில் இல்லை.

நெருக்கடி நேரத்தில் உதவாத சமநிலை என்பது, வெறும் ஜடப்பொருள் நிலையே ஆகும்.

*****

அப்பள வியாபாரமும் கிழிந்து தொங்கிய அறநெறிகளும்!

சீரழித்த சினிமா – 20

ஜென்டில்மேன்

அப்பள வியாபாரமும் கிழிந்து தொங்கிய அறநெறிகளும்!

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றாம் ஆண்டின் ஜூலை திங்கள், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஒழுங்கிற்கும், கல்வி நிர்வாகப் பகுத்தறிவுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, மருத்துவக் கல்லூரி நுழைவாயிலிலேயே சவக்குழி தோண்டப்பட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய ஏழை மாணவர்களுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்றால் சமூகப் போராட்டங்கள் நடத்த வேண்டும் அல்லது சட்டப்படியாகப் போராட வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒருவனுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல், தன் நண்பன் தற்கொலை செய்துகொண்டதால் கோபம் வந்தால், அவன் உயர் தொழில்நுட்பக் கொள்ளையனாக மாறி, அரசாங்க கஜானாவையும் பணக்காரர்களையும் நடுத்தெருவில் வைத்து மொட்டையடிக்கலாம்; அந்தக் கொள்ளைப் பணத்தில் மெடிக்கல் காலேஜ் கட்டினால் அத்தனை பாவங்களும் தீர்ந்துவிடும் என்ற ஒரு புதுவிதமான பாசிச, அராஜக வக்கிர அத்துமீறலை  தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு உண்டு.

நம் ஊர் ஜனங்களுக்கு எப்போதுமே ஒரு பலவீனம் உண்டு. சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, நான்கு பேரைத் தூக்கிப் போட்டுக் மிதித்து, அநியாயக்காரர்களை அழிக்கும் ராபின்ஹூட் கதைகள் என்றால் நாக்கில் உமிழ்நீர் ஊறும். அதைத்தான் ஜென்டில்மேன் படமும் கச்சிதமாகச் செய்தது.

நாயகனின் கிச்சா என்ற பகலில் பவ்யமாக அப்பளம் சுட்டு விட்டு, இரவில் நவீன ஆயுதங்களுடன் கெத்து காட்டும் போலிப் புனித பிம்பமும், கொள்ளையனுக்குத் துணையாகத் திரியும் நாயகியின் பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு ஹைடெக் கொள்ளைக் கூடம் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த பொருளாதாரக் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு உன்னதமான காரியத்தைச் செய்யப் போகிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் எந்தக் குற்றத்தையும் செய்யலாம். அரசாங்கப் பணத்தையும், முதலமைச்சரின் பாதுகாப்பு வளையத்தையும் உடைத்துக் கோடிகளைக் கொள்ளையடிப்பது தவறல்ல, அது ஒரு புனிதமான தியாகம்.

ஏழைகளுக்குக் கல்வி கொடுப்பதற்காகப் பணக்காரர்களிடம் திருடுவது தப்பில்லை என்ற உறைபனியூட்டும் இத்திரைப்படத்தின் ராபின்ஹுட் தத்துவத்தின் மூலம், நாட்டின் சட்ட அமைப்புகளும், தனிமனிதச் சொத்துரிமைகளும் அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.

ஒரு தனிநபர் தன் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொண்டு, போலீஸையே முட்டாளாக்கி வன்முறை மற்றும் திருட்டை நிகழ்த்துவது குற்றமல்ல; அது ஜென்டில்மேன்தனம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையின் கல்வி முறைச் சிக்கல்களையும், அதன் பின்னணியில் இருக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக் கோட்பாடுகளையும் ஆராயாமல், ஜென்டில்மேன் படம் மாதிரி கொள்ளையடித்தாவது ப்ரீ காலேஜ் கட்டணும்டா என்று மிக எளிதாகத் தன்னிச்சையான அராஜகத்தை நியாயப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற, சட்டத்தை மதிக்காத வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

ஜென்டில்மேன் படத்தில் நவீனத் தொழில்நுட்பங்களையும், கண்ணாடிக்கூண்டு அத்துமீறல்களையும் காட்டித் திருட்டுத் தொழிலையே ஒரு கிளாமர் அந்தஸ்துக்கு ஏற்றி விற்றார்கள். இந்த நயவஞ்சகக் குற்றவியல் நடவடிக்கையை, மிக வண்ணமயமான சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே போன்ற அதிரடிப் பாடல்களாலும், கிராபிக்ஸ் காட்சிகளாலும் மூடி மறைத்து, அவன் நல்லவன்டா என்று பார்ப்பவனை ஏமாற்றுவதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

முறையான சமூக மாற்றத்திற்கான உழைப்பை விடுத்து, ஹைடெக் திருட்டுகளை மாஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களை வைத்து அப்பளப் பட்டறைகளில் நடக்கும் அத்துமீறல்களையும், பெண்களைக் கேலி செய்வதையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது இத்திரைப்படம்.  ஒரு சமூகத்தின் ஒழுக்கச் சீர்கேட்டைக் கண்டு கேள்வி கேட்க வேண்டிய சமூகம், அதையே டைமிங் காமெடியாகச் செய்தால்,  பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க பழகிக் கொண்டது. பொறுப்பின்மையையும், லோக்கல் சைட் அடித்தல்களையும் என்டர்டெய்ன்மென்ட் என்று சிரித்துக் கடந்து போகும் ஒரு மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த தந்திரம்.

பெரும்பாலான கமர்ஷியல் பட நாயகிகளைப் போலவே, இப்படத்தின் நாயகியும் படித்து விவரம் தெரிந்த பெண்ணாகக் காட்டப்பட்டாலும், ஹீரோவின் அப்பள வியாபாரப் போலி பிம்பத்தைப் பார்த்து ஏமாறுவதற்கும், அவன் ஒரு கொள்ளையன் என்று தெரிந்தவுடன் அவனுக்குத் துணையாகப் பிணைக் கைதியாக மாறுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு காட்சிப் பொருளாகச் சுருக்கப்பட்டார்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, காவல் துறையை அணுகும் தைரியமோ இல்லாமல், ஆண் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் அவனது நல்ல குணத்திற்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் காவியம் என்ற லேபிளோடு நேர்த்தியாகப் பட்டுவாடா செய்தது.

ஜென்டில்மேன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து,நாயகனுக்கு ஆக்சன் கிங் பட்டத்தை இன்னும் பலப்படுத்தி, அறிமுகப் படத்திலேயே பிரம்மாண்டங்களின் இயக்குனர் என்று அப்படத்தின் இயக்குநரைப் பிரமாண்ட நாற்காலியில் அமர வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

கல்வி வியாபாரமாகக் கூடாது என்பதுதான் படம் சொல்ல வரும் விசயம். ரொம்ப நல்ல விஷயம்தான். ஆனால், அதைச் சொல்வதற்கு ஒருத்தன் ஊர் முழுக்க கொள்ளையடிக்க வேண்டும், போலீஸை ஓட ஓட விரட்ட வேண்டும், கடைசியில் சென்டிமென்ட்டாக எமோஷனல் கார்டு ப்ளே பண்ண வேண்டும் என்பதுதான் ஜென்டில்மேன் கற்றுத் தந்த மிஸ்பிஹேவியரிஸம்.

இப்படி ஜென்டில்மேன் நமக்குக் கற்றுக்கொடுத்தது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், சட்டம், ஒழுங்கு, போலீஸ் எல்லாமே வேஸ்ட். உங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டுமா? நேராகப் போய் அரசாங்கக் கருவூலத்தை உடையுங்கள். கூடவே பின்னணியில் ஒரு பிஜிஎம்மை ஒலிக்க விடுங்கள். நீங்கள் குற்றவாளி அல்ல, ஜென்டில்மேன். சமூகம் சீரழிய இதைவிட வேறு என்ன வேண்டும்?

படத்தில் நாயகன் கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து இலவசமாகக் கல்லூரிகளைக் கட்டுகிறார். அதாவது, தவறான வழியில் வரும் பணம், சரியான காரியத்திற்குப் பயன்படுத்தப்பட்டால் அது புண்ணியம் என்கிற ஒரு விசித்திரமான லாஜிக் அது. அதன்படி, நான் வாங்கும் லஞ்சப் பணத்தில் என் மகனை டொனேஷன் கொடுத்து மெடிக்கல் சீட் சேர்க்கிறேன், எனவே நானும் ஒரு ஜென்டில்மேன்தான் என்று ஒவ்வொரு லஞ்சப் பேர்வழியும் கண்ணாடி முன்னால் நின்று நாயகன் போல போஸ் கொடுக்க ஆரம்பித்தால் என்னவாகும்?

கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கத்தைக் கொள்ளையடிப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும், விதிகளையும் ஒழுக்கத்தையும் காற்றில் பறக்கவிடுவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த தியாகம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ராபின்ஹுட் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

21 Jun 2026

ஆன்டி ஹீரோக்களின் எழுச்சியும் வில்லனை ரசிக்கும் ஜீன்களும்

சீரழித்த சினிமா – 19

மங்காத்தா

ஆன்டி ஹீரோக்களின் எழுச்சியும் வில்லனை ரசிக்கும் ஜீன்களும்

இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த அறநெறியும், ஒழுக்க விழுமியங்களும் பணம் என்ற ஒற்றைச் சொல்லுக்கு முன்னால் மண்டியிட்டு, படுபாதாளத்தில் வீழ்ந்தன.

தமிழ் சினிமா அதுவரை காப்பாற்றி வந்த ஹீரோ என்பவன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும், என்ற எழுதப்படாத விதியை உடைத்து, ஒரு முழுநேரக் குற்றவாளியைத் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த ரோல் மாடலாக மாற்றிய உன்னதத் திரைப்படம்தான் மங்காத்தா.

ஹாலிடே பாணி இயக்கமும், நாயகனின் சால்ட் அண்ட் பெப்பர் பிம்பமும், அமானுஷ்ய தீம் இசையும் சேர்ந்து, தமிழர்களின் பொதுப்புத்தியை எப்படி சூதாட்டக் கிளப் மட்டத்திற்குச் சீரழித்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த வாழ்வியல் பாடம் என்ன தெரியுமா?

நீங்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், சஸ்பெண்ட் ஆன பிறகு பணத்திற்காக எந்தக் கொடூரமான குற்றத்தையும் செய்யலாம். துரோகம் செய்வது, கூட இருப்பவனைக் கொல்வது, சூதாடுவது எல்லாமே கெத்துதான். இப்படியாக, இங்க நல்லவனா இருந்தா வாழ முடியாது என்று வில்லத்தனத்திற்கான புனித அங்கீகாரத்தை வழங்கியதுதான் மங்காத்தா செய்த ஆகச் சிறந்த வாழ்வியல் பாடம்.

படத்தில் வரும் நாயகன் ஓர் ஆண்டி ஹீரோ கூட அல்ல; அந்நாயகன் ஓர் அப்பட்டமான வில்லன். ஆனால், சினிமா அந்த வில்லத்தனத்திற்கு ஸ்டைல், ஆளுமை, கம்பீரம் என்ற போலி முலாம் பூசி ஒரு ரட்சகனாகக் கொண்டாடியது.

நான் எவனுக்கும் நல்லவன் கிடையாது, எனக்குப் பணம் மட்டும்தான் முக்கியம் என்று நாயகன் பேசும் வசனத்தைக் கேட்டுத் திரையரங்கில் விசில் அடித்த சராசரித் தமிழன், தன் நிஜ வாழ்க்கையிலும் நேர்மை, நாணயம், தர்மம் போன்ற நற்பண்புகளை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினான்.

இத்திரைப்படத்தின் மையக்கதையே கிரிக்கெட் பெட்டிங் பணத்தை எப்படிக் கொள்ளையடிப்பது என்பதுதான். உழைத்து வாழும் நடுத்தர வர்க்கத் தமிழனை, ஒரே நாளில் குறுக்கு வழியில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற பேராசைப் போதைக்குள் தள்ளியது இத்திரைப்படம்.

நெற்றியில் வியர்வை சிந்தி உழைப்பது முட்டாள்தனம், எவனையாவது ஏமாற்றிப் பணத்தைப் பறிப்பதுதான் புத்திசாலித்தனம் என்ற விசித்திரமான நுகர்வோர் கலாச்சார நச்சை இது இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.

விளைவு?

ஆன்லைன் சூதாட்டங்களிலும், போலிப் பணப் பரிவர்த்தனைகளிலும் சிக்கி தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைப்பதற்குக் தத்துவார்த்த ரீதியான பிள்ளையார் சுழி போட்டது இந்த மங்காத்தா மனோபாவம்தான்.

படத்தில் நாயகி ஒரு பெரிய தொழிலதிபரின் மகள். அவளை நாயகன் காதலிப்பது எதற்காக? அவளது குணத்திற்காகவோ அல்லது அழகுக்காகவோ அல்ல; அவளது தந்தையின் பணப் பெட்டியை நெருங்குவதற்காக மட்டும்தான். காதலைக் கூட ஒரு வணிகத் திட்டமாக மாற்றி, பெண்களைத் தங்களின் சுயநலப் பேராசைக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்தப் படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

பெண்களை மதிப்பதை விடுத்து, அவர்களைத் தங்களின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான ஒரு வெறும் பகடைக்காயாக மட்டுமே பார்க்கும் ஒரு சுயநலப் புத்தியை இத்திரைப்படம் காதலின் பெயரால் இளைஞர்களிடம் விற்றது.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் துரோகம் செய்து கொள்வார்கள். கூட இருப்பவனை எப்போது வேண்டுமானாலும் முதுகில் குத்தலாம், பணம்தான் இறுதி வெற்றி என்பதுதான் இப்படத்தின் கிளைமாக்ஸ் கற்றுத்தரும் பாடம்.

நட்பு, கூட்டுழைப்பு, பரஸ்பர நம்பிக்கை போன்ற சமூகக் கட்டமைப்பின் அத்தியாவசிய விதிகளைக் கேலிக்கூத்தாக்கிவிட்டு, தனிமனித சுயநலமே பிரபஞ்சத்தின் விதி என்ற பாசிசச் சிந்தனையைத் தமிழர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதியவைத்தது மங்கத்தா.

மங்காத்தா திரைப்படம் அப்பட நாயகனின் ஐம்பதாவது திரைப்படமாகப் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்திருக்கலாம், அந்த ஹாலிடே பாணி இயக்குநருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

தமிழக நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கவியல் கோட்டையை ஒற்றைக் கையால் தகர்த்தெறிந்த பெருமை மங்காத்தா திரைப்படத்திற்கு உண்டு. வழக்கமாக, நல்லவன் வாழ்வான், கெட்டவன் நாசமாய்ப் போவான், என்ற கோடம்பாக்கத்து நாஸ்டால்ஜியா பார்முலாவை, தியேட்டர் வாசலில் வைத்தே கொளுத்திவிட்டு, கெட்டவன் வாழ்வான், மிகக் கெட்டவன் இன்னும் சூப்பராக வாழ்வான் என்ற புதுமொழியை இது விதைத்தது.

நல்லவனாக இருப்பது கஷ்டம் என்பதை விட, கெட்டவனாக இருப்பது எவ்வளவு கூல் என்பதை மிக நேர்த்தியாக மார்க்கெட்டிங் செய்தது மங்காத்தா. ஒழுக்கம் என்பது ஓர் ஆடை என்றால், அதை அவிழ்த்து எறிவதே சுதந்திரம் என்று இளைஞர்கள் நம்பத் தொடங்கியது இத்திரைப்படத்திற்குப் பின்புதான்.

சூதாடினால் குடும்பம் அழியும் என்ற பழைய சினிமாவின் போதனை சோதனைக்குள்ளாகி, சூதாடினால் 500 கோடி கிடைக்கும், அதை வைத்து பாரின் போகலாம் என்பது புதிய சினிமாவின் மில்லேனிய சாதனை போதனையானது. அத்துடன் யாரையும் நம்பாதே, உன்னையும் சேர்த்து என்ற நச்சுப் பார்வை நடுத்தர வர்க்க நட்புகளுக்குள் மெல்லப் பரவியது ஓர் அவலச் வேதனையானது.

இதன் காரணமாக ஐபிஎல் மேட்ச் நடக்கும்போது டிவி முன்னால் உட்காரும் ஒவ்வொரு டீன் ஏஜ் பையனின் மனதிலும் ஒரு மினி மங்காத்தா நாயகன் பிறப்பெடுத்தான். உழைத்து வாழும் தத்துவம், ஒரே மேட்ச்சில் லைப் செட்டில் என்ற பேராசையிடம் மண்டியிட்டது.

இப்படம் மூன்று புதிய விதிகளை இளைஞர்களின் மனதில் எழுதியது. விதி 1: பணம் முக்கியம். விதி 2: அந்தப் பணத்தைப் பெற யார் கழுத்தையும் அறுக்கலாம். விதி 3: விதி 1 மற்றும் விதி 2ஐ ஸ்டைலாகச் செய்ய வேண்டும். இந்த மூன்று விதிகளையும் எடுத்துக் கொண்ட இளைய சமூகம் அதாவது, துரோகம் என்பது ஒரு கலை, அதைச் சரியாகச் செய்தால் ஜெயிப்பாய் என்று நம்பத் தொடங்கியது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதைக் கெத்து என்றும், துரோகம் செய்வதைப் புத்திசாலித்தனம் என்றும், சட்டத்தையும் ஒழுக்கத்தையும் மதிக்காமல் வாழ்வதே அல்டிமேட் வாழ்க்கை என்றும் நம்பிய ஒரு ஸ்டைலிஷான, முதிர்ச்சியற்ற சூதாட்ட சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

20 Jun 2026

அறத்தை விடுவதாவது, அப்பளத்தை உடைப்பதாவது - ஓர் அலசல்

அறத்தை விடுவதாவது, அப்பளத்தை உடைப்பதாவது - ஓர் அலசல்

"அறங்களைக் கைவிடுக... அதுதான் சரணாகதி." என்கிறார் ஜெயமோகன்.

கேட்பதற்கு எவ்வளவு கம்பீரமாக, ஒரு பெரிய ஆன்மிக பேரானந்தம் கொடுக்கிற மாதிரி இருக்கிறது பாருங்கள்! ஆனால், இதன் பின்னால் இருக்கும் தத்துவார்த்த ஓட்டையை எதைக் கொண்டு அடைப்பது?

ஏனென்றால், அறங்களை நாம் கைவிடுவதாவது?

நாம் எப்போது அறத்தைக் கையில் வைத்திருந்தோம், அதைத் தூக்கிக் கீழே போடுவதற்கு? என்ற கேள்வியைத் தூர வைத்து விட்டு, நாம் இக்கருத்தியலைத் தொடர்ந்தால், நாம் அடைவது எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

தத்துவம் என்ன சொல்கிறது?

"நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்" என்பது ஒரு அற விதி.

ஆனால் பிரபஞ்சம் என்ன சொல்கிறது? "எனக்கு கொசு விரட்டிக்கும் கொசுவுக்கும் வித்தியாசம் தெரியாது. பொத்தனைப் போட்டால் கொசு சாகும், அவ்வளவுதான்" என்கிறது.

அறத்தை விடுவது எளிது. ஆனால், கைவிட்டால் என்னாகும்? ஹிட்லரும் அதையேதான் சொன்னார். "நான் பிரபஞ்ச விதியைத்தான் செய்கிறேன், பலவீனமானர்கள் அழிய வேண்டும்" என்றார். அதற்குப் பெயர் சரணாகதி இல்லை, அராஜகம்.

மனிதர்கள் தங்களுக்கு வசதியாகச் சில தார்மீக விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதைக் கைவிட்டு விட்டு உண்மையான அறத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் சமய நூல்களின் விருப்பமாக இருக்குமே தவிர, எல்லா தர்மங்களையும் கைவிடு என்பதன் உண்மையான அர்த்தம், "அப்பாடா! இனிமேல் போக்குவரத்து சிவப்புச் சமிக்ஞையில் வண்டியை நிறுத்த வேண்டியதில்லை, அடுத்தவன் பையில் கையை வைக்கலாம், எல்லாவற்றையும் கைவிடச் சொல்லிவிட்டார்கள்" என்று நமக்குத் தகுந்தபடி தர்மத்தைக் கழற்றி விடுவதாக இருக்காது.

ஜெயமோகனின் கட்டுரை சொல்கிறது, "பிரபஞ்சத்தில் நாம் ஒரு மணல்துகள். அந்தத் துகளின் தர்க்கம் பிரபஞ்சத்துக்குப் பொருந்தாது. அதனால் சரணாகதி அடைவதே விடுதலை."

இது மிக உன்னதமான தத்துவமாகச் சிலருக்கு இருக்கலாம். ஆனால், நடைமுறையில் இந்தச் சரணாகதி என்பது மனிதனின் ஆகச் சிறந்த சோம்பேறித்தனம்.

ஒரு காரியத்தை ஒழுங்காகச் செய்து முடிக்கத் துப்பில்லை என்றால், உடனே "எல்லாம் அவன் செயல், நான் வெறும் கருவி" என்று சரணாகதி பதாகையை மாட்டிவிடுவது எப்படி நியாயமாகும்?

தேர்வுக்குப் படிக்காமல் போய் விட்டு, "நான் பிரபஞ்சப் பெருவெளியில் ஒரு தூசி, மதிப்பெண் என்பது மாயை" என்று தத்துவம் பேசுவது எப்படி ஏற்புடையதாகும்?

பாதர் பெனெடிக்ட் சொன்ன, "நான் நீதியைக் கேட்பதில்லை, என்னை ஒப்படைக்கிறேன்" என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார் ஜெயமோகன். தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், இது அதிமேதாவித்தனம். நீதி என்று நீதிமன்றத்துக்குப் போனால் அங்கே சாட்சிகள், குறுக்கு விசாரணை என்று தலைவலி வரும். அதுவே சரணாகதி ஆகிவிட்டால், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. "இறைவா, நீயே பார்த்துக்கொள்" என்றுவிட்டு அறைக்குள் போய் கேண்டி க்ரஷ் விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால், அதற்கு ஏ.எஸ்.ஆர். சாரி போன்ற வக்கீல்களைப் பெறும் கொடுப்பினை இருக்க வேண்டும்.

காட்டில் புழுவை பறவை தின்கிறது, அங்கே கருணை இல்லை என்று கட்டுரை கேட்கிறது. உண்மைதான். காட்டில் புட் செயின் இருக்கிறது. மனிதனிடம் செயின் ஸ்னாட்சிங் இருக்கிறது. இரண்டையும் ஒன்றாக்க முடியுமா?

கட்டுரையில் காட்டில் சிங்கம் மானைச் சாப்பிடுவதாகவும், அதனால் அங்கே ஏது அறம் என்ற கேள்வி எழுப்பப்டுகிறது. நியாயமான கேள்விதான். ஆனால், நாம் இன்னும் காட்டில் மரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கவில்லையே. ஹோமோ சேப்பியன்ஸ் என்று நமக்கென்று ஒரு மென்பொருளை நிறுவியிருக்கிறோமே. அதற்குப் பெயர்தான் சமூகம்.

காட்டில் சிங்கம் மானைச் சாப்பிட்டால் அது உணவுச் சங்கிலி. ஆனால், நாட்டில் மனிதன் மனிதனைச் சாப்பிட்டால் அது கொலைக்குற்றம். காட்டுக்கு அறம் தேவையில்லை, ஏனென்றால் அங்கே நீதிமன்றம், காவலர்கள், ரேஷன் அட்டை எதுவும் கிடையாது. ஆனால், மனிதருக்கும் அறம் தேவையில்லை என்றால், நாளைக் காலையில் உங்கள் வீட்டில் காணாமல் போன வாகனத்தைத் திருடிக் கொண்டு போனவன், பிரபஞ்ச விதி, சரணாகதி என்றெல்லாம் சொல்வான். ஏன், ஜெயமோகன் கட்டுரையைத் திருடி எழுதியவன் கூட அதைச் சொல்லலாம். அதை அவரால் ஏற்க முடியுமா?

விலங்குகளுக்குப் பகுத்தறிவு இல்லை, அதனால் அவை அறத்தை உருவாக்கவில்லை. மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது, அதனால் அவன் அறத்தை உருவாக்கினான். பின்பு அதை எப்படி மீறலாம் என்று வழியையும் கண்டுபிடித்தான் என்பது வேறு விடயம்.

அறங்களை முழுமையாகக் கைவிடுவது என்பது, ஒரு கணினியின் இயக்க மென்பொருளை முற்றிலும் அன் இன்ஸ்டால் செய்வது மாதிரி. அதைச் செய்துவிட்டால் நீங்கள் ஜீவன் முக்தர் ஆகிவிட மாட்டீர்கள்; வெறும் ஹேங் ஆன கணிப்பொறி மாதிரிதான் உட்கார்ந்திருக்க வேண்டும்.

இதற்கு மேல் என்ன சொல்வது?

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடுத்தவனை ஏமாற்றத் துடிக்கும் ஒரு மனிதன், "நான் தத்துவார்த்த ரீதியாக அறங்களைக் கைவிட்டுவிட்டேன், இப்போது சரணாகதி நிலையில் இருக்கிறேன்" என்று சொன்னால், அவனைப் போலீஸ் லாக் அப்பில் வைத்துத்தான் தத்துவ விசாரணை நடத்த வேண்டும்!

ஆகவே,

பிரபஞ்சம் ரொம்பப் பெரிதுதான். நாம் அதில் ஒரு சின்னப் புள்ளிதான். அதுற்காக, நான் சின்னப் புள்ளி, அதனால் சாலையில் விதிகளை மதிக்க மாட்டேன், வண்டியைக் கண்டபடி ஓட்டுவேன், பிடிக்கவில்லை என்றால் கொலை செய்வேன் என்று சொல்ல முடியுமா?

கடவுள் பெரியவராக இருக்கலாம், பிரபஞ்சம் விசித்திரமாக இருக்கலாம். ஆனால், மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால், அறம் என்கிற ஒளிவிளக்கு வேண்டும். பிரபஞ்ச இருட்டில் அந்த ஒளி விளக்கை அணைத்து விட்டால் அப்புறம் இருட்டுதான். அதனால், அறங்களை எப்போதும் கைவிடக் கூடாது. கைவிட்டால், நாம் வெறும் சதைப்பிண்டங்கள்தான்!

*****

ரௌடியிஸத்திற்கு அடிக்கப்பட்ட கிளாமர் பெய்ண்ட்!

சீரழித்த சினிமா – 18

போக்கிரி

ரௌடியிஸத்திற்கு அடிக்கப்பட்ட கிளாமர் பெய்ண்ட்!

இரண்டாயிரத்து ஏழு, ஜனவரி மாதம். தமிழ்ச் சமூகத்தின் பகுத்தறிவு ஐ.க்யூ  பூஜ்ஜியத்துக்கு இறங்கிய புண்ணிய தினம். சட்டம், ஒழுங்கு எல்லாவற்றிற்கும் பை பை சொல்லிவிட்டு, தியேட்டர் வாசலிலேயே குழி தோண்டிக் கொண்டாடினார்கள் தமிழர்கள்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய போலீஸ்காரர்கள் சீருடை அணிந்து, சட்டத்தின்படி குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒரு அண்டர்கவர் போலீஸ் அதிகாரி நினைத்தால், ரவுடி போலத் தலைமுடியை வளர்த்துக்கொண்டு, ரௌடியிஸத்தை பாபுலரிசம் போலவும், கூலிப்படைத் தலைவன் போலவும் ஊர் சுற்றலாம்; பணத்திற்காக என்று காரணம் சொல்லி யாரையும் போட்டுத் தள்ளலாம், என்ற ஒரு புதுவிதமான யூனிபார்ம் இல்லாத வக்கிர அத்துமீறலைத்  தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, மைக்கேல் ஜாக்ச நடன இயக்குநரின் இயக்கத்தில் வெளியான போக்கிரி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அலட்சியமான, அதேசமயம் ஆபத்தான சண்டியர் பிம்பமும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும், நாயகியின் ஏமாளிப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு லோக்கல் மார்க்கெட் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இந்தப் படம் தமிழ்நாட்டு யூத்களுக்குச் சொல்லிக் கொடுத்த அட்வான்ஸ்டு சிவிக்ஸ் லெசன் என்ன தெரியுமா? நீங்கள் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும் என்றால், உங்களுக்குச் சட்ட புத்தகங்களோ அல்லது காவல் நிலையங்களோ தேவையில்லை. ரவுடியிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, அவனது எதிரிக் கும்பலைக் கொடூரமாகத் தீர்த்துக் கட்டினால் போதும்; நீங்கள் தான் டாப் க்ளாஸ் சிபிசிஐடி ஆபீசர்!

எப்ப அடிச்சான், எப்புடி அடிச்சான்னு தெரியக்கூடாது. அடிச்சா இடிமாதிரி இருக்கணும், என்ற ஒற்றை வரி தத்துவத்தின் மூலம், சட்டம் ஒழுங்கு என்ற அற்பமான விஷயம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ஒரு அதிகாரி சட்டத்தைக் கையில் எடுத்து எத்தனை கொலைகள் செய்தாலும், க்ளைமாக்ஸில் யூனிபார்ம் மாட்டிக்கொண்டு சல்யூட் அடித்தால் போதும், அவனது அத்தனை அராஜகங்களும் புனிதமானவை என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் வன்முறையைக் கையில் எடுக்கும் ரவுடித்தனத்தை மாஸ் என்று நினைத்துக்கொண்டு, போக்கிரி பாணியில் சுற்றும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஹீரோ ஹீரோயினை லிப்ட்டுக்குள் வைத்தும், நடுத்தெருவில் வைத்தும் மிரட்டுவது போலவும், வம்புக்கு இழுப்பது போலவும் காட்சிகள் இருக்கும். ஒரு பெண் பயந்து நடுங்கும்போது, அவளது பயத்தைப் போக்கத் துணியாமல், அவளது பயத்தையே தன் காதலுக்கான முதலீடாக மாற்றும் வக்கிரத்தை இத்திரைப்படம் மாஸாகக் காட்டியது.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது காதல் அல்ல; அது ஓர் ஆதிக்க மனோபாவம். ஒரு ஆண் ரவுடியாக இருந்தாலும், அவன் தன்னைக் காப்பாற்றுகிறான் என்ற ஒரே காரணத்திற்காக, அவன் செய்யும் அத்தனை அத்துமீறல்களையும் பொறுத்துக்கொண்டு அவனையே காதலிக்க வேண்டும் என்ற ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் மனநிலையை இது பெண்களிடமும், ஆண்களிடமும் விதைத்தது.

வழக்கமான கமர்ஷியல் பாணியில் நாயகி என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் அடிதடி சாகசங்களைப் பார்த்து விசிலடிப்பதற்கும், பாடலுக்குக் கிளாமராக ஆடுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு பொருளாகக் காட்டப்பட்டது. நாயகிக்கு என்று தனியாக வேலை, குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும், ஹீரோவின் துப்பாக்கிச் சத்தங்களுக்கு நடுவே அய்யோ அம்மா என்று கத்திக்கொண்டே அவனது பின்னால் ஓடுவதுதான் அவளது முழுநேர வேலையாகச் சுருக்கப்பட்டது.

பெண் என்பவள் தனக்கென ஒரு பகுத்தறிவோ, சுய புத்தியோ இல்லாதவள்; அவளை யார் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுகிறானோ, அவன் எவ்வளவு பெரிய பொறுக்கியாக இருந்தாலும் அவனுக்குத் தன் வாழ்க்கையையே தாராளமாகத் தந்துவிட வேண்டும் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படமும் மிக நளினமாகப் பட்டுவாடா செய்தது. அத்துடன் பெண்களை வெறும் குத்துப் பாடல்ககளுக்கும், ஹீரோவின் சாகசங்களை வாய்பிளந்து பார்ப்பதற்கும் மட்டுமேயான ஒரு காட்சிப் பொருளாக மாற்றியது.

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன், என்று நாயகனைப் பேச வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தமிழனின் மூளையையும் ரீசார்ஜ் செய்ய முடியாத அளவுக்கு அடியோடு சீரழித்துதான் இத்திரைப்படத்தின் ஆகக் சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இந்த வசனத்தைத் தத்துவார்த்தமாக அலசினால் எஞ்சுவது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இந்த ஒரே ஒரு வசனம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தங்களுக்குள் இரண்டு பிரிவாகப் பிரித்தது. முடிவு செய்யும் நான் ஒருவன், தன் பேச்சைத் தானே கேட்க மறுக்கும் நான் இன்னொருவன். ஆக எனக்குள் நான் என்று நீங்கள் சொல்லிக் கொள்ள முடியாது. எனக்குள் நானும் இன்னொருவனும் என்ற மனச்சிதைவைத்தான் நீங்கள் குறிப்பிட வேண்டியிருக்கும்.

மருத்துவம் மற்றும் நரம்பியல் ரீதியாக நோக்கினாலும் இது ஓர் ஆபத்தான நிலைதான். மனித மூளையின் முன் பகுதிதான் முடிவுகளை எடுக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்துவது நரம்பு மண்டலம். ஒருவன் தன் பேச்சைத் தானே கேட்க மறுக்கிறான் என்றால், அவனுடைய முன்மூளைக்கும் பின்மூளைக்கும் இடையே ஏதோ வயர் கட் ஆகியிருக்கிறது என்று அர்த்தம். ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் நரம்பியல் சமநிலையை அந்த ஒரே ஒரு வசனம் காலி செய்துவிட்டது.

போக்கிரிக்கு முன், போக்கிரி என்றால் ரவுடி. போக்கிரி என்ற இப்படத்திற்குப் பின், போக்கிரி என்றால் அது ஒரு ஸ்டைல் என அகராதிகள் கதறும் அளவுக்கு நிலைமை மாறியது.

போக்கிரி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனின் வசூல் சக்கரவர்த்தி பிம்பத்தை மீண்டும் இமயமலையில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

காவல்துறை அதிகாரிகள் என்பவர்கள் ரவுடிகளோடு சேர்ந்து கள்ளச்சந்தையில் சுற்றும் சண்டியர்கள் என்றும், டிராக் மாறிக் கொலைகள் செய்வதே ஹீரோயிசம் என்றும், பெண்களை மிரட்டிக் காதலிப்பதே வாலிபத்தின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற போக்கிரிச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

19 Jun 2026

நள்ளிரவு பிரியாணியும் நாற்பது கிலோ துப்பாக்கியும்!

சீரழித்த சினிமா – 17

விக்ரம் (2022)

நள்ளிரவு பிரியாணியும் நாற்பது கிலோ துப்பாக்கியும்!

இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுகள் முடியும் தருவாயில், தமிழ்ச் சமூகம் தன் சிந்திக்கும் திறனையும் ரசனைத் திறனையும் ஒட்டு மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே அடகு வைத்துவிட்டு, எல்சியூ என்ற ஒற்றைப் மாய உலகிற்குள் தங்களை ஒட்டடை அடித்துக் கொண்டது.

நாயகனின் முதிய வயது மாஸ் பிம்பமும், காது ஜவ்வு கிழியும் பிஜிஎம்மும், கமர்ஷியல் நடிகர்களின் கண்கள் பிதுங்கும் நடிப்பும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையில் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் லட்சக்கணக்கான தோட்டாக்களை நடுரோட்டில் சுட்டுத் தீர்க்க வேண்டும் என்ற ஆபத்தான பாசிச நச்சை இந்த விக்ரம் எப்படி விதைத்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சமூகப் பாடம் என்ன தெரியுமா? நீங்கள் ஒரு போதைப்பொருள் இல்லாத உலகத்தை உருவாக்க விரும்பினால், சட்டத்தையோ, நீதிமன்றத்தையோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவையோ நம்பக் கூடாது. ஒரு பழைய ஏஜென்டை கூட்டி வந்து, கள்ளச்சந்தையில் விற்கப்படும் ஆகச்சிறந்த பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் கொண்டு ஊரிலிருக்கும் அத்தனை பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும்.

படத்தில் வரும் நாயகன், நாட்டின் பாதுகாப்பிற்காக உழைத்த முன்னாள் அதிகாரி. ஆனால், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் வேகம் இருக்கிறதே. அது எந்த ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கும் குறைவானது அல்ல. நோக்கம் நன்றாக இருந்தால், நீங்கள் எந்த ஒரு கட்டடத்தையும் வெடிவைத்துத் தகர்க்கலாம்; அது தப்பில்லை என்ற அராஜகச் சிந்தனையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

படத்தின் ஆகச்சிறந்த கலாச்சாரப் பங்களிப்பு என்றால், வில்லன் கதாபாத்திரத்தை இச்சமூகம் கொண்டாடிய விதம்தான். வாயில் ஏதோ ஒரு போதை மாத்திரையைப் போட்டுக் கொண்டு, அந்த வில்லன் பாத்திரம் செய்யும் அமானுஷ்ய அட்ராசிட்டியைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பிம்பமாக மாற்றிக் கொண்டாடினர்.

கொலையையும், சித்திரவதையையும், போதைப்பொருள் கடத்தலையும் ஒரு கெத்து வடிவமாக மாற்றிக் காட்சிப்படுத்தி, பார்ப்பவனுக்கு ஒருவித வக்கிரமான சுவாரசியத்தைத் தந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் வன்முறையையும் குரூரத்தையும் பார்த்து அருவருப்படைய வேண்டிய இளைஞர்கள், சந்தானம் பாய்ஸ் என்று தங்களைக் கற்பனை செய்துகொண்டு, வக்கிரங்களை ரசிக்கும் ஒரு மூர்க்கமான பொதுப்புத்தியை வளர்த்துக்கொண்டனர்.

படத்தின் கிளைமாக்ஸில் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வரும் ரோலக்ஸ்  கதாபாத்திரம் தமிழ்நாட்டிற்குச் செய்த உபகாரம் அளப்பரியது. கத்தியால் ஒருவனின் தலையைச் சீவிவிட்டு, ரத்தம் வழிய வழிய வந்து நிற்கும் ஒரு சர்வதேசக் கடத்தல்காரனைத் திரையரங்கில் ஒட்டுமொத்தத் தமிழனும் எழுந்து நின்று கைகொட்டி வரவேற்றான்.

அறிவையும், சுயசிந்தனையையும் வளர்த்துக்கொண்டு சமூகத்திற்குப் பயன்பட வேண்டிய வயதில், தமிழ்நாட்டு வாலிபர்கள் பலரும் தங்களை ஒரு ரோலக்ஸ் ஆகக் கற்பனை செய்துகொண்டு, கைல காசு, வாயில தோட்டா என்று போஸ்டர் அடித்துத் திரியத் தொடங்கினர். ஒரு தனிமனிதனின் மாஸ் பிம்பத்திற்காக, ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த அறநெறியும் படுபாதாளத்தில் தள்ளப்பட்டது.

பெரும்பாலான கமர்ஷியல் படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகக் குறைவு. ஒன்று அவர்கள் வில்லனால் கொடூரமாகக் கொல்லப்பட வேண்டும் இல்லையென்றால் ஹீரோவின் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு வெறும் பரிதாபப் பொருளாக இருக்க வேண்டும்.

பெண்களின் ஆளுமையையோ, அறிவுத்திறனையையோ காட்டுவதை விடுத்து, ஆண்களின் பழிவாங்கும் வெறிக்குத் தீனியாக அவர்களைக் கொலைக்களத்தில் பலியிடுவதையே இத்திரைப்படம் தன் திரைக்கதை உத்தியாகக் கொண்டது.

விக்ரம் பாக்ஸ் ஆபீஸில் 400 கோடிகளைக் குவித்து, உலக நாயகனைத் தமிழ் சினிமாவின் பிரபஞ்ச நாயகனாக மீண்டும் அரியணையில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அறுபது வயது முதியவர் ஒருவர், நூறு கிலோ எடையுள்ள இயந்திரத் துப்பாக்கியை ஒற்றைக் கையில் தூக்கிக்கொண்டு சுடுகிறார் என்றால், நியூட்டனின் மூன்றாவது விதிப்படி அவர் பின்னோக்கிப் போய் விழுந்திருக்க வேண்டும். அதைத் தனி ஒருவராகத் தூக்க முடியாது என்பதும் அது போர்க்கப்பல்களில், போர் விமானங்களில், கவச வாகனங்களில் பயன்படுவது என்பதும் வேறு விசயம். ஆனால், தூக்கியது உலகநாயகன் என்பதால் என்பதால் புவியீர்ப்பு விசையும், இயற்பியல் விதிகளும் கேள்விக்குறியாகி ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரிக்கே சாவல் விட்டன. இப்படி ஓர் அஞ்ஞானக் கோதாவில் பேரக் குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டிய தாத்தாக்களை ரகசிய அறையில் கெத்தாகத் தீபாவளி துப்பாக்கித் துடைக்க வைத்ததுதான் விக்ரம் உருவாக்கிய சூடோ சயன்ஸ் நான்சென்ஸ்.

நெடுங்காலமாக கத்தி என்பது மனிதனை நாகரிகமாக மாற்றுவதற்குப் பயன்பட்ட ஓர் எளிய சாதனம், காய்கறி நறுக்க, அறுவை சிகிச்சை செய்ய, சவரம் செய்ய என்று. அந்த ஜெய்பீம் நாயகன் ரோலக்ஸ் ஆக வந்து, ஒரு சவரக் கத்தி போன்ற ஒரு கசாப்பு கத்தியை வைத்துக் கொண்டு அநாயசமாகத் தலையைச் சீவிய பிறகு, இப்போதெல்லாம் சலூன் கடைகளில் ஒரு நிசப்தம் உலவுகிறது. கசாப்புக் கடை கத்திகளுக்கும் ஒரு தட்டுபாடு நிலவுகிறது.

இப்படி ஒரு தாத்தாவுடன் அந்தப் பேரக் குழந்தை வளர்ந்தால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். 2035இல் அந்தக் குழந்தை வளர்ந்து எட்டாம் வகுப்பு படிக்கும்போது, கணக்கு வாத்தியார் ஹோம்வொர்க் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பையன் மெதுவாகப் பையிலிருந்து பேனாவை எடுப்பதற்குப் பதிலாகத், தாத்தா கொடுத்த விக்ரம் ஸ்பெஷல் துப்பாக்கியை எடுத்தால். வாத்தியாரின் கதி? இது அமெரிக்காவில் சர்வ சாதாரணம் என்பதற்காக இந்தியாவிலும் அப்படி ஆக வேண்டுமா என்ன? அந்த அளவுக்கு ஒரு துப்பாக்கிக் கலாச்சாரத்தை விதைத்ததுதான் விக்ரம் செய்த அறுவடை.

தமிழ்நாட்டின் அத்தனை ரவுடிகளையும், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் ஒரே பிரபஞ்சத்துக்குள் கொண்டு வந்து ஒரு புதிய சாதனை படைத்த எல்சியூவினால் பாதிக்கப்பட்ட தமிழன் அடுத்தடுத்து புதுப்புது கடத்தல் வில்லன்களையும் போதைப் பொருள் மாபியாக்களின் விசித்திர நடமாட்டத்தையும் தேடி கோலம்பஸ் போல ஓட ஆரம்பித்தான்.

சட்டத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் கேலிக்கூத்தாக்கிவிட்டு, உணர்ச்சிவசப்பட்டுப் பீரங்கிகளைத் தூக்குவதே ஆகச்சிறந்த வீரம் என்றும், போதை உலக தாதாக்களை ஆராதிப்பதே நாகரிகம் என்றும் நம்பி ஒரு எல்சியூ போதைக்கு அடிமையான சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

18 Jun 2026

பாட்ஷாலஜி – ஒரு மாஸ் மசாலா சதி!

சீரழித்த சினிமா – 16

பாட்ஷா

ஆட்டோ மீட்டரும் அடியாட்கள் தியரியும்!

பாட்ஷாலஜி – ஒரு மாஸ் மசாலா சதி!

தொண்ணூறுகளின் மத்தியில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுப்புத்தியும், பகுத்தறிவும் ஒரே ஒரு ஆட்டோவின் மீட்டருக்குப் பின்னால் கட்டப்பட்டு, படுபாதாளத்தில் வீசப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சீரழிவை அரங்கேற்றிய உன்னதத் திரைப்படம் 1995 இல் வெளியான பாட்ஷா.

அதிரடி இயக்கமும், உச்ச நட்சத்திர நாயகனின் அமானுஷ்ய மாஸ் பிம்பமும், நாயகனுக்கான பிஜிஎம்மும் சேர்ந்து, தமிழர்களின் மூளையில் நிழல் உலக தாதாதான் உண்மையான கடவுள், என்ற ஆபத்தான நச்சை எப்படி நளினமாக ஏற்றியது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இன்றுவரை தமிழ்நாட்டின் முச்சந்திகளிலும், பள்ளிக்கூடப் பெஞ்சுகளிலும், அரசியல் மேடைகளிலும் தட்டப்படும் ஆகச்சிறந்த தத்துவ வசனம் என்னவென்றால், ஒரு தடவை சொன்னா அது நூறு தடவை சொன்ன மாதிரி. என்னவோ இம்போஷிஷன் எழுதவன் பயந்தது போல உரைக்கப்பட்ட இந்த வசனம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ஜனநாயக் கல்வி என்ன தெரியுமா? தலைவன் என்பவன் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவன். அவன் ஒரு முறை உளறினாலும், அதை நீங்கள் நூறு முறை ஆராயாமல் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

சுயசிந்தனையோ, கேள்விகள் கேட்கும் முதிர்ச்சியோ இல்லாத ஓர் ஆட்டுக்குட்டி சமூகத்தை உருவாக்க இந்த ஒரே ஒரு வசனம் போதுமானதாக இருந்தது. ஒரு மனிதன் தன் வாதத்திற்கு நியாயமான காரணங்களைச் சொல்வதை விடுத்து, நான் சொல்லிட்டேன், அவ்வளவுதான் என்ற சர்வாதிகாரப் புத்தியை நிஜ வாழ்க்கையில் கையாள்வதற்கு இந்த பாட்ஷா தியரிதான் ஊக்கமருந்து.

படத்தில் வரும் நாயகன் வெறும் ஆட்டோக்காரர் அல்ல; அவர் பம்பாயை ஆட்டிப்படைத்த தாதா. ஆனால், சினிமா அவரை எப்படிச் சித்தரிக்கும்? ஏழைகளுக்குப் பணம் கொடுப்பவர், நண்பனுக்காகக் கொலை செய்பவர், தங்கைகளின் திருமணத்திற்காகத் தன் கடந்த காலத்தை மறைத்து வாழும் ஒரு தியாகச் செம்மல்.

ஒரு குற்றவாளியை அவனது ரத்தக் கறை படிந்த குற்றப் பின்னணியில் இருந்து பிரித்து, அவனுக்குப் பின்னால் இருக்கும் குடும்பப் பாசம் என்ற சென்டிமென்ட் போர்வையைப் போர்த்தி, உருக வைத்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகப்பெரும் கமரஷியல் தந்திரம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தன் ஏரியாவில் கஞ்சா விற்கும் ரவுடியையும், மாமூல் வாங்கும் தாதாவையும் அண்ணன். வெளியில அப்படி இருந்தாலும், தங்கச்சின்னா அவனுக்கு உசிருப்பா, கஷ்ட நஷ்டம்ன்னு தெரிஞ்சா ஓடி வந்து உதவுவாருப்பா, என்று நியாயப்படுத்தத் தொடங்கினான்.

படத்தில் பாட்ஷாவின் தங்கைக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, அல்லது வில்லனின் ஆட்கள் வருகிறார்கள் என்று தெரிந்தாலோ, பாட்ஷா போடும் முதல் உத்தரவு, உள்ளே போ என்பதுதான். பெண்கள் வீட்டின் நான்கு சுவருக்குள்ளே பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்கள், அவர்களுக்குப் பிரச்சினை வந்தால் வெளியில் இருக்கும் ஆண் தான் அதைத் தன் தசைகளைக் கொண்டு தீர்க்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ சிந்தனையை இந்தப் படம் மிக கம்பீரமாக விற்றது.

பெண்ணின் சுயசார்பு, அவளது தைரியம் அனைத்தையும் மழுங்கடித்து, அவள் எப்போதும் ஆணின் நிழலில் வாழும் ஒரு பலவீனமானப் பொருள் என்ற பொதுப்புத்தியை இன்றும் பல குடும்பங்களில் இந்த பாட்ஷா பாணி வளர்ப்பு முறைதான் தக்கவைத்திருக்கிறது.

படத்தில் வரும் வில்லன் செய்யும் அநியாயங்களை ஒடுக்க, இந்திய அரசாங்கமோ அல்லது காவல்துறையோ வராது. பாட்ஷா தன் சொந்தக் கூலிப்படையை வைத்துக் கொண்டுதான் அவரோடு சண்டை போடுவார். சட்டம் என்பது ஏழைகளைக் காப்பாற்றாத ஒரு வெற்றுப் காகிதம்; நிழல் உலக தாதாக்கள்தான் உங்களுக்கான ஒரே ரட்சகர், என்ற ஆபத்தான சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆழமாக நட்டது இந்தப் பாட்ஷா.

விளைவு?

ஒரு சாதாரண மனிதன், தன் கடந்த காலக் கிரிமினல் வரலாற்றை மறைத்துக்கொண்டு, ஆட்டோ ஓட்டுநராக வாழ்வதுதான் இத்திரைப்படத்தின் கதை. கேட்பதற்கு ஒரு சராசரி மசாலா தோசை அதாவது கதை போலத் தோன்றும் இந்தத் திரைப்படம், தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தியை வேறு விதமாக ரிவீட் அடித்தது.

நிஜ வாழ்க்கையில் நமக்கொரு அநீதி நடந்தால், நீதிமன்றத்தையோ காவல்துறையையோ நம்புவதை விடுத்து, பெரிய இடத்து செல்வாக்குடைய அடியாட்களிடம் தஞ்சமடைவதே கௌரவம் என்ற காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரம் இதனால் சமூகத்தில் வேரூன்றியது.

பாட்ஷாவுக்கு முன்பு வரை, ஆட்டோக்கள் என்பவை வெறும் போக்குவரத்து வாகனங்கள். பாட்ஷாவுக்குப் பின்பு, அவை நடமாடும் தத்துவப் பள்ளிகளாக மாறின. நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி என்ற இந்த ஒரே ஒரு வசனம், தமிழ்நாட்டின் கணிதவியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஒரு முறை சொல்வதற்கும் நூறு முறை சொல்வதற்கும் இடையே உள்ள பிரம்மாண்டமான நேர மற்றும் ஆற்றல் வித்தியாசத்தை இந்தச் சமூகம் தட்டையாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

பாட்ஷா தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த வணிக மைல்கல், பாக்ஸ் ஆபீஸின் இமயமலை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், தமிழர்களை அது எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒருவன் பம்பாயில் இருக்கும்போது நூறு பேரைக் கொலை செய்யலாம்; கடத்தல் தொழில் புரியலாம்; தாதாவாக வாழலாம். ஆனால், சென்னைக்கு வந்து அமைதியாக ஆட்டோ ஓட்டி, தங்கைக்கோ தம்பிக்கோ பீஸ் கட்டினால் அவன் புனிதன். இந்த ப்ளாஷ்பேக் தியரி, சமூகத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியது. தற்போதைய குற்றவாளிகள் பலரும், நாளை நாம் ஒரு நல்ல காரியம் செய்து இதைக் கழுவிக்கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சலைப் பெற்றனர். தர்மம் என்பது வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றல்ல, அது ஒரு பார்ட் டைம் ஜாப் என்ற எண்ணத்தை இந்தத் திரைப்படம் விதைத்தது.

அறிவையும் விவேகத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு சட்டபூர்வ ஜனநாயகச் சமூகத்தை, ஒரு முன்னாள் ரவுடியின் பம்பாய் பிளாஷ்பேக்கைக் கண்டு விசில் அடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற கூட்டமாக மாற்றியதில், நாயகனின் அந்த ஆட்டோவிற்கும், பாட்ஷாவின் அந்தப் கோட்டுச் சட்டைக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத கசப்பான உண்மை!

பாட்ஷா என்பது ஒரு கமர்ஷியல் சினிமா மட்டும் அல்ல. அது, அமைதியாக இருப்பவனை உசுப்பிவிட்டால் அவன் உங்களை மிருகம் போல அடித்துத் துவம்சம் செய்வான் என்ற வன்முறைத் தத்துவத்தை, ஆட்டோ என்ற ஏழை எளிய வாகனத்தின் எஞ்சினில் ஏற்றி நம் தலைக்குள் புகுத்திய ஒரு மாஸ் மசாலா சதி.

இப்போதும் சாலையில் போகும்போது ஏதாவது ஆட்டோவின் பின்னால் உள்ளே போ என்றோ, பாட்ஷா என்றோ என்று எழுதியிருந்தால், தயவுசெய்து உள்ளே போகாதீர்கள். அங்கே உங்களுக்காக ஒரு பிளாஷ்பேக் காத்துக்கொண்டிருக்கலாம்! அது உங்களை அடித்துத் துவைத்து ரத்தக் களறியாக்கினால், அதற்கு யார் பொறுப்பு என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.  

*****