7 Mar 2026

நம் சிந்தனையா நம்மைச் சிறைப்பிடிப்பது?

நம் சிந்தனையா நம்மைச் சிறைப்பிடிப்பது?

மூளைக்குள் ஒரு சிலந்தி வலை.

அது வேறு ஒன்றும் இல்லை, ஓவராகப் போகும் நம் சிந்தனை.

சிந்தனை ஒரு போதை. அதுவும் இடைவிடாமல் சிந்திப்பது என்பது, ஒருவன் தன் சொந்த மூளைக்குள் தானே கட்டிக்கொள்ளும் சிறைச்சாலை.

சாப்பிடும்போது சாப்பாட்டின் ருசியை கவனிக்காமல், நாளை என்ன விபரீதம் நடக்கும் என்று சிந்திப்பவன், அந்த பருப்புச் சாதத்தின் எதார்த்தத்தைத் தொலைக்கிறான். அவனுக்குத் தெரிவதெல்லாம் ஒரு மாய பிம்பம் மட்டுமே.

எதார்த்தம் என்பது தரை தட்டுவது போன்றது. கால் கட்டை விரலில் அடிபட்டால் வலிக்கும் பாருங்கள், அதுதான் நிஜம். ஆனால், சிந்தனையிலேயே வாழ்பவன் அந்த வலியைக் கூட இது நரம்பு மண்டலத்தின் மின் தூண்டல் என்று தத்துவம் பேசி கடந்துவிடுவான். அவன் வாழ்வது ரத்தமும் சதையுமான உலகில் அல்ல, நியூரான்கள் ஓடும் நரக உலகில்.

தொடர் சிந்தனையாளன் என்பவன் ஒரு சிலந்தியைப் போன்றவன். தன் வாயிலிருந்து வரும் நூலை வைத்தே வலை பின்னுகிறான். பிறகு அந்த வலைக்குள்ளேயே தானே சிக்கிக் கொள்கிறான். ஐயோ சிக்கிக் கொண்டு விட்டேனே, என்னைக் காப்பாற்ற யாருமில்லையே என்று கூச்சல் போடுகிறான். பிறகு அவனைப் பித்துப் பிடித்தவன் என்று பித்துக்குளி பட்டம் கட்டி கேலி பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதிகமாகச் சிந்திப்பவன் வாழ்க்கையை வாழ்வதில்லை, அதை வெறும் ஒரு கேஸ் ஸ்டடி போல மாற்றி விடுகிறான்.

எதார்த்தத்தைத் தொலைப்பவன் மெல்ல மெல்ல ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகிறான். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை விட, தன் தலைக்குள் இருக்கும் மனிதர்களோடு அவன் அதிகம் பேசுகிறான். இது ஒரு வகை மெண்டல் லூப்.

வெளிப்பக்கம் கதவு திறந்திருந்தாலும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கட்டளைகள் அவனை வெளியே வர விடுவதில்லை.

சிந்தனைகளைச் சுருட்டிக் கொண்டு கொஞ்சம் ஜன்னல் வழியாக வெளியே பாருங்கள். வானம் நீலமாக இருக்கிறது. காக்கை கரைகிறது. பக்கத்து வீட்டுக் குழந்தை அழுகிறது. இவை எதற்கும் எந்தத் தத்துவார்த்தமான அர்த்தமும் கிடையாது. அவை அப்படியே இருக்கின்றன.

ஓவரான சிந்தனைகளை நிறுத்திவிட்டு, எதார்த்தத்தைத் தொடுவதுதான் ஒரு மனிதன் செய்யக்கூடிய ஆகச்சிறந்த அற்புதமான வாழ்க்கை விளையாட்டு.

ஆக இந்த ஓவர் சிந்தனைப் போக்கைத் தவிர்க்க, அவ்வபோது யோசனையின் பிளக்கை பிடுங்குங்கள். அதாவது யோசிப்பதற்கு ஒரு என்ட் கார்டு போடுங்கள். கொஞ்சம் மொட்டை மாடிக்கு, அந்த மாடிக்கு மொட்டை அடித்து விட்ட பார்பர் யார் என்று யோசிக்காமல், கண்ணில் படுவதை எல்லாம் கவனியுங்கள். அங்கே எதாவது எதையாவது யோசித்துக் கொண்டு செய்கிறதா? உதாரணத்துக்கு கத்தும் குருவி, அசையும் மரம், ஓடும் மேகம். அது போல கொஞ்ச நேரம் மாறி விடுங்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எதார்த்தம் என்பது உங்கள் ஓவர் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. ஓவர் சிந்தனையை நிறுத்துங்கள்.

இப்போது போதும் மொட்டை மாடி. ஓர் ஓட்டலுக்குச் சொல்லுங்கள். ஒரு மசாலா தோசையை ஆர்டர் செய்யுங்கள். அதன் மொறுமொறுப்பை ரசியுங்கள். சிந்தனை ரகசியங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சர்வர் சட்னி வைக்காமல் போகிறார் பாருங்கள். முதலில் அந்தத் தோசைக்குச் சட்னி வைக்கச் சொல்லுங்கள். தேங்காய் சட்னியை விட்டு விட்டு, கார சட்னியை மறந்து விடப் போகிறார். அதையும் வைக்கச் சொல்லுங்கள். அதுதான் இப்போதைய எதார்த்தம்!

தோசை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். நன்றாக இருந்தால் அந்த ஹோட்டலுக்கு நானும் வர வேண்டும்.

சில நேரங்களில் அப்படித்தான் ஒரு தோசையை ரசித்துச் சாப்பிடுவதிலோ அல்லது ஒரு கோப்பைத் தேநீரை சன்னமாக ருசித்து அருந்துவதிலோ எதார்த்தத்தை நோக்கி வந்து விடுகிறோம்.

*****

6 Mar 2026

வழுக்கையா? வாழ்க்கையா? தடுமாற்றம் தேவையா?

முடி மாற்று சிகிச்சையில் கலப்பட கலவரங்கள்!

தலையில் முடி கம்மியாக இருக்கிறது என்று அமேசான் காட்டு மூலிகை எண்ணெயைத் தலையில் தேய்த்த காலம் போய், இப்போது ஹேர் டிரான்ஸ்பிளான்ட்  எனும் நவீன அறுவை சிகிச்சை ஜரூராக நடக்கிறது.

பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட இதற்கான கிளினிக்குகளை ஆரம்பித்து சக்கை போடு போடுகிறார்கள். அப்படியெல்லாம் இந்தக் கிளினிக்கை ஆரம்பிக்க முடியாதுதான். அதற்கென்று படிப்புகள், மருத்துவ உரிமங்கள் எல்லாம் இருக்கின்றன.

அப்புறம் எப்படி எஸ்எஸ்எல்சிக்கள் இந்தக் கிளினிக்கை நடத்துகிறார்கள் என்றால், இந்தச் சிகிச்சை முறை சிக்கலானது அல்ல, ஆனால் பொறுமை தேவையானது.

ஒரு டாக்டர் பல மணி நேரம் குனிந்து வேலை செய்யும்போது, அவருக்கு உதவியாக இருக்கும் டெக்னீஷியன்கள் இதை வேடிக்கை பார்த்துப் பழகிவிடுகிறார்கள். டாக்டர் பண்றதை நாமும் பண்ணலாமே என்று கிளம்பி, சொந்தமாக ஒரு போர்டை மாட்டி விடுகிறார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜன் அல்லது முறையாகப் பயிற்சி பெற்ற தோல் மருத்துவர் செய்ய வேண்டிய வேலையைப் பியூட்டி பார்லர் லெவலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். ஜாக்கிரதை, இது வெறும் ஹேர் கட்டிங் கிடையாது, மயக்க மருந்து கொடுத்துச் செய்ய வேண்டிய மைனர் சர்ஜரி!

இப்போது விசயத்திற்கு வருவோம். அது ஏன் முன்தலை வழுக்கை நாட்டில் அதிகமாகத் தலைவிரித்து ஆடுகிறது. அறிவியல்படி அதற்கு காரணம் இருக்கிறது. முதலில் கொஞ்சூண்டு முடி கொட்டுவதற்கு வில்லன் டிஹெச்டி என்கிற ஹார்மோன். இது தலையில் இருக்கும் ஆண்ட்ரோஜென் ரிசப்டார் என்கிற சாக்கெட்டுக்குள் புகுந்து உட்கார்ந்துகொள்ளும். ஒருமுறை பிளக் பாயிண்ட் லாக் ஆகிவிட்டால், அந்த முடிக்கு குட்பைதான்.

சுவாரஸ்யம் என்னவென்றால், தலையின் பக்கவாட்டிலும் பின்புறமும் இருக்கும் முடிகளுக்கு இந்த ரிசப்டார் கிடையாது. அவை சேஃப் ஜோன். அங்கிருந்து முடியை எடுத்து வழுக்கை விழுந்த இடத்தில் நடுவதுதான் இந்தச் சிகிச்சை. இது புது முடியை உருவாக்குவது அல்ல, இருக்கும் செடியை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடும் கார்டனிங் வேலைதான்.

இன்னொரு முக்கிய மேட்டர். அது முடிக்கு மீட்டர். அதுதான் மெலட்டோனின். நள்ளிரவு வரை போனில் ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தால் இந்த ஹார்மோன் சுரக்காது. உடல் தன்னைத்தானே பழுதுபார்க்கும் நேரத்தை நீங்கள் கெடுத்தால், உடல் முதலில் கைவிடுவது உங்கள் முடியைத்தான். வழுக்கை விழுவதற்குப் பரம்பரை மட்டும் காரணமல்ல, உங்கள் லைஃப் ஸ்டைலும்தான்.

வழுக்கை விழுந்தால் மன உளைச்சல் வருவது சிலருக்குத் தவிர்க்க முடியாதது. அதற்காகத் தெரிந்த கிளினிக்கில் எல்லாம் தலையைக் கொடுத்து விடக் கூடாது. இந்த விசயத்தில் மூளைக்கு மேல் முடி இருக்கிறதோ இல்லையோ முடிக்குக் கீழ் இருக்கும் மூளையில் அறிவு முக்கியம்.

முடி போனாலும் வழுக்கைத் தலையோடு வாழ்ந்து விடலாம். வழுக்கைத் தலை முடிக்காகக் கண்ட கிளினிக்கில் தலையைக் கொடுத்து வாழ்க்கை முடிந்து விட்டால் கடவுள் கொடுத்து ஒரு பிறவி டஸ்ட் பின்னுக்குப் போய் விடும்.

முடிக்காகத் தலையைக் கொடுப்பதற்கு முன்பு, அந்தக் கிளினிக்கை டாப் டூ பாட்டம் கம்ப்ளீட் இன்வெஸ்டிகேஷனை முடித்து விட்டு, உங்கள் தலையைக் கொடுப்பது உத்தமம். தலை முக்கியம் அல்லவா! ஒரு நடிகரைத் தல என்று அழைக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற மாநிலம் அல்லவா நம் மாநிலம்! தல என்ற பெயரில் அஜித்தை அழைப்பது இடுகுறித் தன்மையோடு அல்ல, காரணத் தன்மையோடுதான் இல்லையா!

*****

5 Mar 2026

நாளைய தீர்ப்பு – ஒரு குறுங்கதை

நாளைய தீர்ப்பு – ஒரு குறுங்கதை

அந்த மினுமினுக்கும் கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார் கேட்டிற்குள் நுழைந்தது. மீடியாக்களின் ப்ளாஷ்கள் மின்னலைத் தோற்கடித்துக் கொண்டிருந்தன.

திரிஷ்யன் கரங்கள் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தன. கண்கள் சிவந்திருந்தன. இது இரவு முழுவதும் பிசினஸ் மீட்டிங்கால் ஏற்பட்டது அல்ல, கடந்த மூன்று நாட்களாகத் தூக்கமில்லாத ஆலோசனைகள். அதைவிடக் கொடுமை, காலையில் லண்டனிலிருந்து வந்த அந்த வாட்ஸ்அப் மெசேஜ்.

விஜயலெட்சுமியிடமிருந்து. முடிவு பண்ணிட்டேன். மனு ரெடி. அதுதான் அந்த மெசேஜ்.

திரிஷ்யன் வானுயுயர்ந்த கட்டிடங்களைக் கட்டி உலகப் புகழ் பெற நினைக்கும் திரிஷ்யன் லக்ஸ்யூரி பில்டர்ஸின் சிஇஓ மற்றும் சரி பாதி நிறுவனர்.

விஜயலெட்சுமி ஒரு திரிஷ்யன் பிரியை மற்றும் மனைவி. அத்துடன் லண்டன் வெறியை. அமைதியானவள், ஆனால் புயலைக் கிளப்பத் தெரிந்தவள்.

பல வருட மௌனத்திற்குப் பிறகு அவள் வீசியிருக்கும் இந்த அஸ்திரம் திரிஷ்யனின் பிசினஸ் எதிர்காலத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டது. காரணம் திரிஷ்யனின் சொத்தில் பாதி அவள் பெயரில் இருக்கிறது.

சார் திவ்யா மேடம் லைன்ல இருக்காங்க, பி.ஏ. நடுக்கத்துடன் போனை நீட்டினான்.

திரிஷ்யன் போனை வாங்கினான். அந்தப் பக்கம் எப்போதும் அவன் கேட்கும் அதே கணீர் குரல். அதே பிடிவாதம்.

என்ன நடக்குது திரிஷ்யன்? மறுபடியும் என் பேரை ஏன் உள்ளே இழுக்குறாங்க? விஜயலெட்சுமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் புராஜெக்ட் முடிஞ்சாச்சு, அதுக்கப்புறம் நாம பார்த்ததே இல்லையே. திவ்யாவின் குரலில் கோபம் கலந்த ஏமாற்றம்.

சாரி திவ் இது பிசினஸ் கேம்ப்ளிங். என்னைத் தனிமைப்படுத்த நினைக்கிறாங்க. நீ ஒரு கேடலிஸ்ட். உன்னை வச்சு என்னைக் காலி பண்ணப் பாக்குறாங்க, திரிஷ்யன் குரல் தழுதழுத்தது.

ஆனா விஜயலெட்சுமி? அவங்க ஏன் டைவர்ஸ் வரைக்கும் போகணும்?

திவ்யா திரிஷ்யனின் கனவுகளுக்கு அவ்வபோது டானிக் ஊட்டி விடும் மேனகை. அவ்வபோது அவனுடைய ப்ராஜெக்டில் இணைந்து அதை ஜெட் வேகத்தில் கொண்டு போகும் கில்லாடி.

இது முக்கோணக் காதல் இல்லை. இது ஒரு முக்கோணச் சதி. ஒரு பக்கம் விஜயலெட்சுமியின் நியாயமான கோபம். இன்னொரு பக்கம் திவ்யாவை சந்திக்கு இழுத்து சிரிக்கும் வதந்தி. இந்த மூணு கோடும் ஒரு இடத்துல சந்திக்குது. திரிஷ்யன் மனசாட்சி திடீரென்று இப்படி பேசியது.  

விஜயலெட்சுமியைச் சமாதானப்படுத்த முடியுமா? – இது திவ்யா.

திரிஷ்யனிடமிருந்து பதில் வரவில்லை.

திவ்யாவே தொடர்ந்தாள், விஜயலெட்சுமிக்கு என் மேல கோபம் இல்லை திரிஷ்யன். உங்க மௌனத்தின் மேலதான் கோபம். நீங்க அந்த டிரிபிள் டவர் புராஜெக்ட்டுக்குப் போனது அவங்களுக்குப் பிடிக்கலை. என்னை ஒரு கருவியா அவங்க பயன்படுத்துறாங்க. நீங்க அந்த புராஜெக்டை விடுவீங்கன்னு அவங்க நினைக்கிறாங்க.

திரிஷ்யன் ஜன்னல் வழியாகப் பார்த்தான். வெளியே கேமராக்களுடன் ஒரு பட்டாளமே முட்டி மோதிக் கொண்டு நின்றது.

சார், வெளியே மீடியா காத்துட்டு இருக்கு. திவ்யா உள்ளே இருக்காங்களான்னு கேக்குறாங்க, என்றான் இடையில் குறுக்கிட்டு பிஏ.

திவ்யா நீ இப்போ எதுவும் பேசாதே. சைலண்டா இரு. மௌனம் தான் இப்போதைக்கு ஆக்ஸிஜன். போனை வைத்தான் திரிஷ்யன்.

உடனே விஜயலெட்சுமிக்கு ஒரு மெசேஜ் தட்டினான். மனுவை வைச்சுக்கோ. ஆனா ஜட்ஜ்மென்டை நான் எழுதறேன்.

சதுரங்கப் பலகையில் ராணி நகர்ந்துவிட்டது. ராஜா இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார். மந்திரி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார். திரிஷ்யனின் மனசாட்சி உருவகமாகப் பேசியது.

காதலுக்கும் பிசினஸ்க்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் என்றால், மூன்றாவது நபரை பலிகொடுத்துத்தான் ஆகவேண்டும். இங்கே பலி ஆடு விஜயலெட்சுமியா? திவ்யாவா? அல்லது திரிஷ்யனின் லட்சியமா? திரிஷ்யனின் மூளை வேறு விதமாக யோசித்தது.

அது வந்து… என ஆரம்பித்த மனசாட்சியை, ஒரு தடவை ஒரு முடிவு பண்ணிட்டா, அதை நானே கேட்க மாட்டேன் என்று அதன் தலையில் ஒரு குட்டு குட்டி கட் பண்ணினான்.

மறுநாள் மீடியாக்கள் பிரேக்கிங் நியூஸில் அலறின.

திரிஷ்யன் ட்ர்பிள் டவர் லக்ஸ்யூரி பில்டர்ஸ் கட்டுமான விபத்தில் சிக்கி 41 பேர் பலி.

*****

4 Mar 2026

மனமும் பிரிட்ஜிக்குள் இருக்கும் தக்காளியும்!

மனமும் பிரிட்ஜிக்குள் இருக்கும் தக்காளியும்!

பயம் என்பது ஒரு முன்யோசனை முத்தண்ணா. வண்டி ரிப்பேர் ஆவதற்கு முன்பே சர்வீஸ் செய்ய நினைப்பது புத்திசாலித்தனம்தான். ஆனால் வண்டியே இல்லாதபோது, வருங்காலத்தில் டயர் பஞ்சர் ஆனால் என்ன செய்வது என்று யோசிப்பவன் முத்தண்ணா அல்ல, பித்தண்ணா.

நமது மூளைக்குள் ஒரு முத்தண்ணா வகை செக்யூரிட்டி இருக்கிறான். அவனுக்கு ஓவர் டைம் டூட்டி கொடுத்தால் என்னவாகும்? அவன் தூங்க மாட்டான், உங்களையும் தூங்க விடமாட்டான். அவன் போடும் அலாரம்தான் அச்சுறுத்தல். ஐயோ என்னவாகப் போகிறதோ என்கிற ஆர்ப்பாட்டம்.

இந்த முத்தண்ணாவால் நமக்கு இன்று இருப்பதை விட, நாளை என்ன நடக்கும் என்கிற கவலைகள்தான் அதிகம். பையன் பாஸ் செய்வானா? இ.எம்.ஐ கட்ட முடியுமா? ரோபோக்கள் நம் வேலையைப் பிடுங்கிக் கொள்ளுமா? இப்படி இதற்கு ஓர் எல்லையே கிடையாது.

உண்மையில் ஆபத்து இன்னும் வரவில்லை. ஆபத்து வருவதாக ஒரு மாய பிம்பம். அதாவது, வராத மழையை நினைத்து இப்போதே குடை பிடித்துக்கொண்டு வெயிலில் நடப்பது போன்ற முட்டாள்தனம்.

பிரச்சனை வெளியே இருக்கிறது. ஆனால், நாம் தீர்வை எங்கே தேடுகிறோம்? நம்முடைய மண்டைக்குள்! தீர்வு அங்கிருந்து வர வேண்டும்தான். ஆனால் கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாய், கவலைகளும் பயங்களும் கிளம்பி வந்தால்?

மேனேஜர் திட்டுகிறார் என்பது உண்மையான பிரச்சனை.

உள்ளே, அதாவது மனதிற்குள்ளே, அவர் ஏன் திட்டினார்? நாளைக்கு வேலைக்கு ஆப்படித்து விடுவாரோ? வேறு வேலை கிடைக்குமா? கையில் காசு இல்லையே? என்பதெல்லாம் முத்தண்ணா கிளப்பி விடும் கன்னா பின்னா ஐயிட்டங்கள்.

இந்தத் தீர்வுகள் எல்லாமே ரீப்பீட் மோடில் சுற்றக் கொண்டிருப்பவை.  ஒரு கேள்வி, அதற்கு ஒரு பயம், அந்தப் பயத்தைப் போக்க இன்னொரு கற்பனைத் தீர்வு,  கடைசியில் தீர்வு கிடைக்காது, பிபி, டென்சன், டிப்ரசன்தான் கிடைக்கும்.

பிரச்சனைகளுக்கு முத்தண்ணா டைப்பில் மனதிற்குள் தீர்வு தேடுவது என்பது, இருட்டில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போன்றது. அதுவும் அந்தப் பூனை கடிக்கப் போகிறது என்று பயந்து கொண்டு!

நாம் ஏன் இப்படிச் செய்கிறோம்? மனித இனம் தப்பிப் பிழைக்க இது தேவைப்பட்டது. ஆதிமனிதன் புதர் அசையும்போது புலி வருமோ என்று பயந்ததால்தான் இன்று நாம் இருக்கிறோம். ஆனால் இன்று புதர் அசைவது ஏசி காற்றால் என்று தெரிந்தும், நம் மூளை பூகம்பம்தான் வருகிறது என்று அலெர்ட் ஆறுமுகமாகிறது.

வருங்காலத்தைப் பற்றி யோசிப்பதில் தப்பில்லை. ஆனால் அதையே ஒரு பிரச்சனையாக்கி, உள்ளுக்குள்ளேயே மல்யுத்தம் செய்வதுதான் வொர்க் அவுட் ஆகாத விஷயம். எதார்த்தம் என்பது வெளியே இருக்கிறது. போய் கதவைத் திறந்து பாருங்கள், உலகம் அழகாக இருக்கிறது!

என்ன செய்யலாம்?

ஒரு குட்டித் தூக்கம், சிறு நடைபயணம், ஒரு டீ இருக்கிறதா? குடியுங்கள். ஏதாவது ஒரு பஸ் வருகிறதா? கை நீட்டி ஏறி ஒரு ரவுண்ட் போய் விட்டுத் திரும்புங்கள். பிரெஸ்ஸாகி விடுவீர்கள். இன்னும் ஏன் நீங்கள் பிரிட்ஜ்க்குள் கிடந்து அழுகவும் முடியாமல், ஜாமும் ஆக முடியாமல் தவிக்கும் தக்காளியைப் போல இருக்க வேண்டும்?

வருவது வரும் போது வரட்டும். இப்போது நிகழ்காலம் கையில் இருக்கிறது. லெட்ஸ் டேக் இட் அன்ட் டேஸ்ட் இட். எதிர்காலத்தை நினைத்து டோன்ட் வேஸ்ட் இட்?

*****

3 Mar 2026

ஏனிந்த அமெரிக்க ஈரான் போர்?

ஏனிந்த அமெரிக்க ஈரான் போர்?

இது உலகப் போர் அல்ல. ஆனால் அதற்கான எல்லா முஸ்தீபுகளும் இதில் உண்டு. அமெரிக்காவிடம் இருப்பது அதிநவீன ஆயுதங்கள். ஈரானிடம் இருப்பது நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற நிலைபாடு. நடுவில் மாட்டிக்கொண்டு விழிப்பது ஒட்டுமொத்த உலக பொருளாதாரம்.

அமெரிக்கா ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனி போல. அதன் சி.இ.ஓ அதாவது அதன் அதிபர் அவ்வப்போது மாறும்போதெல்லாம் பாலிசிகளும் மாறும். ஈரான் ஒரு பழைய குடும்பம் போல. தலைமுறை தலைமுறையாக ஒரே நிலைபாடு.  அமெரிக்காவுக்கு எண்ணெய் வேண்டும், ஈரானுக்குத் தன் நிலைபாடு முக்கியம்.

யுத்த தந்திரங்கள் இப்போது மாறிவிட்டன. ஒரு காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, ஒட்டகப்படை எல்லாம் இருந்தன. பிறகு டாங்கிகள் வந்தன. இப்போது எல்லாம் டிஜிட்டல் மயம். வீடியோ கேம் வகையறா.

ஒரு பட்டனை அழுத்தினால் ஈரானின் மின்சாரம் கட் ஆகும். அப்படிப்பட்ட சைபர் அட்டாக்குகளும் இந்த யுத்தத்தில் உண்டு.

ஆளே இல்லாமல் ஆகாயத்தில் பறந்து குண்டு போடுவது இப்போதைய போர்களின் ஸ்பெஷாலிட்டி. இது ட்ரோன்களின் வேலை.

ஏனிந்த சண்டை என்றால், அதற்கான பதிலை அவ்வளவு சுலுவாகச் சொல்லி விட முடியாது. இது வெறும் நிலப்பரப்புக்கான சண்டை இல்லை. ஈரானின் நிலம் மற்றும் கடல் பரப்பில் இருக்கும் எண்ணெய்க்கான சண்டை என்பது ஒரு பார்வை. உலக அளவில் ஈரானிடம் இருக்கும் எண்ணெய் வளம் பத்து சதவீதம்.

மேற்படிப் பார்வைப்படி இந்தப் போர் நடப்பதற்குக் காரணம் என்னவென்றால்,

இந்த எண்ணெய்க்கான வணிகம் டாலரின் வழியில் தன் கட்டுபாட்டில் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஈரான் அப்படிச் செய்தால் போர் தொடுக்காமல் பாதுகாப்பையும் வழங்குவேன் என்கிறது அமெரிக்கா. என்னிடம் இருக்கும் எண்ணெய் வளத்தை என் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் நான் வர்த்தகம் செய்வேன், அதைக் கேட்க நீ யார் மாமனா, மச்சானா என்கிறது அமெரிக்காவைப் பார்த்து ஈரான்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகச் சொல்வது மற்றொரு பார்வை. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு இஸ்ரேலுக்குப் பாதகமாக இருக்கும் என்று இஸ்ரேலுடன் அமெரிக்காவும் அஞ்சுகிறது. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அன்றி, அமெரிக்கா நினைக்கும் அளவுக்கு தங்களிடம் எந்த அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளும் இல்லை என்று ஈரான் தலையிலடித்துச் சொல்கிறது. அப்படியெல்லாம் இல்லை, சுரங்கம் தோண்டி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா நெஞ்சிலடித்துச் சொல்கிறது.

எப்படியோ போருக்கு ஒரு காரணமும் ஒரு நியாயம் செய்வதும் தேவைப்படுகிறது. அதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

இந்தப் போர் ஒரு மாதத்துக்குத் தொடரும் என ஜோதிடம் பார்த்து விட்டுச் சண்டையைத் தொடங்கியதைப் போல டிரம்ப் சொல்கிறார். எத்தனை நாட்கள் நடக்கும், எப்போது முடியும், போரின் போக்கு எப்படியெல்லாம் மாறும் என்றெல்லாம் யாரும் சொல்லி விட முடியாது.

இந்தப் போரினால் என்ன நடக்கும்?

பெட்ரோல் விலை ஏறும். விரைவில் அது பங்குகளில் தெரிய வரும். பங்குச்சந்தை கீழே விழும். அதன் படி விழுந்தே விட்டது. படுத்தே விட்டானய்யா நிலைதான் தற்போது பங்குச் சந்தையில்.

அமெரிக்கா தன்னுடைய புது ஆயுதங்களை எல்லாம் பரீட்சை செய்து பார்க்கும். ஈரான் சில அமெரிக்க ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும். இந்தப் போரில் அமெரிக்கா யானைதான். ஆனால் யானைக்கும் அடி சறுக்கினால், அதன் பின் நடப்பதையெல்லாம், கற்பனை செய்து பார்க்க முடியாது.

ஈரானின் முக்கிய தலைவர்களையெல்லாம் காலி செய்து விட்டேன் என்கிறது அமெரிக்கா. அடுத்த தலைவர் அங்கு உருவாக மாட்டாரா என்ன? அப்படி உருவாகி அவர் அமெரிக்கா எனும் யானையின் காதுக்குள் புகுந்து விட்ட எறும்பாகி விட்டால்… அதன் பின் நடக்கப் போவதையும் அறுதியிட்டு உறுதியிட்டு எல்லாம் கூறு முடியாது.

ஹார்முஸ் ஜலசந்திதான் எண்ணெய் உலகின் தொண்டைக் குழி. ஈரான் இங்கே கை வைத்தால் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்து விடும். ஏனென்றால், உலக எண்ணெய்க் கப்பல்களில் இருபது சதவீதம் இதைக் கடந்துதான் போக வேண்டும். ஆக அங்கே பறக்கும் ஒவ்வொரு ஏவுகணைக்கும் பெட்ரோலோ, டீசலோ லிட்டருக்கு ஒரு ரூபாயாவது நிச்சயம் ஏறும்.

இப்போது விமானங்கள் வளைகுடா பகுதிகளுக்குப் பறக்க முடியாது என்று குட் நைட் சொல்லி விட்டன. விமானப் போக்குவரத்து வார் வார் கோ அவே, கம் அகைன் அனதர் டே என்று பாடிக் கொண்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க சப்போர்ட்டில் இருக்கும் சவூதி, துபாய், குவைத்தை ஈரான் தாக்கத் தொடங்கினால், அதன் பிறகு எண்ணெய் கிணறுகள் தீப்பிடிக்க தீப்பிடிக்க தீ பரவட்டும் மொமன்ட்தான். பெட்ரோல் தீயை அணைப்பது சாதாரணப்பட்ட வேலை அல்ல. தீப்பொறி திருமுகமே வந்தாலும் அனல் பறக்கும்.

போர் நடப்பது வளைகுடாவில்தான் என்றாலும், உலகின் அனைத்து நாட்டு மக்களின் குடல்களையும் இந்தப் போர் பதம் பார்க்கும். எண்ணெய் விலை ஏறினால், எல்லா பொருட்களின் விலைக்கும் ஜலதோசம் பிடித்துவிடும். எல்லாம் தாறுமாறாக ஏறத் தொடங்கும். சாமான்யன் என்ன செய்வான்?

இந்த உலகமே ஒரு சர்க்யூட் போல தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் எங்கே ஷார்ட் சர்க்யூட் ஆனாலும் மெயின் ஸ்விட்ச் ஆப் ஆகி விடும். அதனால் உலகப் பெருமந்தம் வரலாம் அல்லது வராமல் போகலாம். யுத்தம் என்பது ஒரு தோல்வி அடைந்த உரையாடல் என்பார்கள். ஆயுதங்களுக்குக் காதுகள் கிடையாது. அதுபாட்டுக்கு அழித்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கும்.

ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் என்று ஒரு தலைவலி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியாத நிலையில், இன்னொரு தலைவலி துவங்கி விட்டது இந்த உலகுக்கு. ஒரு பாராசிட்டாமலோ, அனாசினோ போட்டால் நிற்கக் கூடிய தலைவலி கிடையாது இது. போர் இல்லை என்றால் இந்த அநாவசிய தலைவலிகள் ஏற்படப் போவதே இல்லை.

*****

 

2 Mar 2026

சைக்காலஜிகல் பிரைசிங்

சைக்காலஜிகல் பிரைசிங்

ஆதினி, ஒரு நிமிஷம் நில்லு... அங்கே பார், ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் பாவாடை என்று ஆதினியின் கையைப் பிடித்து இழுத்தாள் எழினி.

ஆதினி அந்த மஞ்சள் நிற போர்டைப் பார்த்தாள். பிரம்மாண்டமான எழுத்துகளில் BUY 1 GET 1 FREE என்று ஜொலித்தது. நடுத்தர வர்க்கத்தின் பலவீனம் அந்த போர்டுகளில் தான் ஒளிந்திருக்கிறது என்பது ஆதினிக்குத் தெரியும்.

எழினி ஒன்றைத் தூக்கினாள். விலையைப் பார், 220 ரூபாய் தான். ஒண்ணு வாங்கினா இன்னொரு பாவாடை ப்ரீ. ரெண்டும் 220 ரூபாய்னா லாபம்தானே?

ஆதினி அதை வாங்கித் திருப்பினாள். அந்த விலைப் பட்டியலை ஒரு ஸ்கேனிங் பார்வை பார்த்தாள். பிறகு அங்கேயே இருந்த வேறொரு பாவாடை பிராண்ட் அலமாரிக்குச் சென்றாள். அங்கே ஆஃபர் போர்டுகள் எதுவுமில்லை. அமைதியாக அடுக்கப்பட்டிருந்த ஒரு பாவாடை செட்டைத் தூக்கிக்கொண்டு வந்தாள்.

இதைப் பாரு எழினி, இது ரெண்டு பாவாடை செட். விலை 200 ரூபாய்.

எழினி சட்டென மனதில் கணக்குப் போட்டாள். இது ஒரு பாவாடை 100 ரூபாய் வருது. ஆனால் ஆஃபரில்…

ஆதினி சொன்னாள், இந்த ஆஃபர்ல ஒரு பாவாடை 110 ரூபாய். அதாவது ஒரிஜினல் விலையை அப்படியே டபுள் ஆக்கிட்டு, ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீன்னு சொல்றான். அந்த ரெண்டு பாவாடை 200 ரூபாயோடு ஒப்பிடும் போது 20 ரூபாய் அதிகமாகவே கொடுக்கிறோம். இலவசம்ங்கிற வார்த்தையில மனசு மயங்கிடுது.

சொல்லி விட்டு ஆதினி சிரித்தாள். இதுக்கு பேருதான் சைக்காலஜிக்கல் பிரைஸிங். ஒரு பாவாடை என்ன விலைன்னு தெரியாத அப்பாவிங்க, இலவசம்ங்கிற வலையில விழுந்து பத்து பதினைஞ்சுன்னு அள்ளிட்டுப் போவாங்க. அந்தக் கம்பெனிக்காரன் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கிறான். ஒண்ணு, அவன் ஸ்டாக்கைக் காலி பண்றான். இன்னொன்னு, அதிக லாபம் பாக்குறான்.

எழினி கையில் இருந்த ஆஃபர் பாக்கெட்டைத் திரும்ப வைத்தாள். நல்லவேளை சொன்னீயே. இலவசம்னாலே அதுல ஏதோ ஒரு தந்திரம் இருக்கும்னு இப்பதான் புரியுது.

மார்க்கெட்ல எதையுமே பக்கத்துல இருக்குற பிராண்டோட ஒப்பிட்டுப் பார்க்காம வாங்கக்கூடாது. அது பாவாடையோ இல்ல வாழ்க்கையோ என்றாள் ஆதினி தத்துவார்த்தமாக.

எழினி இப்போது சிரித்துக் கொண்டே சொன்னாள், அந்த ரெண்டு செட் பாவாடைய 200 ரூபாய்க்கு எடுத்துக்கிட்டு மிச்சமாகும் இருபது ரூபாய்க்கு ஆளுக்கொரு டீ சாப்பிடுவோமா?

தம்ஸ் அப் காட்டினாள் ஆதினி.

*****

1 Mar 2026

உனக்குப் பயம்! விளம்பரத்துக்குக் காசு!

உனக்குப் பயம்! விளம்பரத்துக்குக் காசு!

கௌதமன் தன் மடிக்கணினியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.

பூங்குன்றன் தன் செல்போன் திரையில் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தான். திடீரெனப் பூங்குன்றன் முகம் சுருங்கியது.

கௌதமா ஒரு சந்தேகம். இணையத்தில் பாலியல் ஆரோக்கியம் என்று தேடினால் வரும் முடிவுகள் பயமுறுத்துகிறதே என்றான் பூங்குன்றன்.

கௌதமன் மடிக்கணினியை விட்டு முகத்தைத் திருப்பினான். நீ எங்கே தேடுகிறாய் என்பதுதான் முக்கியம் பூங்குன்றா. கூகுளில் ஒரு சாதாரண தலைவலி என்று தேடினால் கூட, அது கடைசியில் புற்றுநோய் என்று கொண்டு போய் முடிக்கும். இதில் பாலியல் என்றால் கேட்கவா வேண்டும்?

இல்லை கௌதமா, விளம்பரங்கள் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. இதைச் சாப்பிட்டால் குதிரை பலம், பத்தே நாளில் மாற்றம் என்று விதவிதமான லேகியம், மாத்திரைகள். இதையெல்லாம் உண்மையென்று நம்பி யாராவது வாங்குவார்களா? என்றான் பூங்குன்றான்.

கௌதமன் சிரித்தான். வாங்குவார்களே. ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்று கடையில் ஒரு தாள் ஒட்டியிருந்தாலே பாய்ந்து கொண்டு வாங்குவார்கள். இதில் குதிரை பலம், பத்தே நாளில் மாற்றம் என்றால் வாங்காமல் இருப்பார்களா? இது ஒரு வகை பய உளவியல். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் இளைஞர்கள் தங்களுக்கு ஏதோ குறைபாடு இருக்குமோ என்று பயப்படுகிறார்கள். அவர்களது பயத்தை விளம்பரங்கள் காசாக்குகின்றன என்றான்.

பூங்குன்றான் அலைபேசியை ஒளி மங்கச் செய்தான். அப்படியானால் இந்த இணையத் தேடல்கள் எல்லாம் தவறா? என்றான்.

எல்லாம் தப்பில்லை பூங்குன்றா. ஆனால் மக்கள் எதைத் தேடுகிறார்கள் தெரியுமா? ஆரோக்கியமான தகவல்களை விட, பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த குறுக்கு வழிகள் இருக்குமா என்றுதான் அதிகமாகத் தேடுகிறார்கள். அந்த மாதிரியான படங்களைப் பார்த்து விட்டு, அதுதான் உண்மை என்று நம்பி தன்னுடைய உடலை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய புதைகுழி. சிக்கினால் மன உளைச்சல் இலவசம்.

பூங்குன்றன் யோசனையில் ஆழ்ந்தான். இதற்கு என்னதான் தீர்வு என்றான்.

இணையத்தில் வருகின்ற எல்லா விளம்பரமும் உண்மை கிடையாது. பாலியல் ரீதியான சந்தேகங்கள் இருந்தால் ஒரு தகுதியான மருத்துவரை நேரில் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு பத்து ரூபாய்க்கு பத்து மாத்திரை என்கிற சலுகையை நம்பினால் ஆரோக்கியம் தவணை முறையில் போய் விடும். சொல்லிவிட்டுக் கௌதமன் சிரித்தான்.

பூங்குன்றன் இனி நீ இங்கேயே கிட என்று அலைபேசியைக் குழாய் சட்டையின் பைக்குள் போட்டான். இலவசமாக வருகின்ற தகவல்களை உண்மை என்று நம்புவது ஓட்டைப் படகில் கடலைக் கடக்க முயற்சிப்பது போல என்றான்.

தெளிவாகி விட்டாய் பூங்குன்றா. விளம்பரங்களை வியத்தலும் இலமே, பாலியலை இகழ்தல் அதனினும் இலமே என்று கண்ணடித்தான் கௌதமன்.

*****