22 Jul 2026

கடைசி விசிலுக்குப் பிறகு…

கடைசி விசிலுக்குப் பிறகு…

12பி பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது, ஒரு பழைய இரும்புப் பெட்டி ஆஸ்த்மா நோயாளி போல் இருமுவது போல.

சுப்பையா டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தார். அவர் முகம் எனக்கு வாழ்க்கை மேல பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை என்பதைத் தெளிவாகச் சொன்னது. ப்ரீ பஸ் அறிவித்ததில் இருந்து, ஸ்டாப்பில் சேலை கட்டுன உருவத்தைப் பார்த்தாலே அவர் வலது கால் ஆக்ஸிலரேட்டரை அமுக்கப் பழகியிருந்தது.

கண்டக்டர் மாணிக்கத்தின் சில்லறைப் பையில் காசை விட வெறுமை அதிகம் ஒலித்தது. பஸ்ஸுக்கு போர்டு மாற்றினால் மட்டும் போதாது, டிரைவர் புத்தியும் மாற வேண்டுமென்று அவருக்குத் தெரியும்.

அந்தப் பஸ் ஸ்டாப்பில் மூன்று பேர் நின்றிருந்தார்கள். தேர்வு பதற்றத்தில் ஒரு பையன், மீன் கூடையோடு ஒரு பெண்மணி, அப்புறம், தமிழ்நாட்டு பஸ்ஸைப் பற்றி ஆராய்ச்சி பண்ண ஜெர்மனியில் இருந்து வந்த பீட்டர்.

சுப்பையா வண்டியை நிறுத்தாமல் உருட்டினார். மீன் அம்மாள் கத்திக் கொண்டே ஓட, மாணிக்கம் "போ... போ... போட்ரு!" என்று விசில் அடித்தார்.

பையன் ஓடி வந்து படியில் தொங்கினான்.

பீட்டர் தன் நோட்டுப் புத்தகத்தில் இந்தியப் போக்குவரத்து ஒரு த்ரில்லர் விளையாட்டு'என்று குறித்துக்கொண்டார்.

கொஞ்ச தூரத்தில் ஊர்மக்கள் பஸ்ஸை மறித்தார்கள். "சிற்றூருக்குள் பஸ் வர வேண்டும்!" என்று கோஷம்.

பஸ் நின்றது.

அப்போது, மீன் அம்மாள் உள்ளே வந்து உட்கார்ந்தார். "யோவ் கன்டக்டரு, நீ நிறுத்தலைனா நான் வரமாட்டேனா? அடுத்த சிக்னல்ல ஷேர் ஆட்டோவை புடிச்சு ஏறிட்டேன்ல!" என்றார்.

மாணிக்கம் கடுப்பாகி, "மீன் நாறுது, தள்ளி வை" என்றார்.

பீட்டர் மாணிக்கத்திடம், "ஐயா, இதில் ஜிபிஎஸ் இருக்கிறதா? ஆப் இருக்கிறதா?" என்றார்.

மாணிக்கம் சலிப்பாக, "தம்பி, பஸ்ஸுக்கே ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை, இதுல ஆப்பாவது, மாப்பாவது! இந்தப் போர்டைத் தவிர இங்க எதுவும் புதுசு இல்லை" என்றார்.

கடைசியில் ஜெர்மனிக்குப் போன பீட்டர் அறிக்கை எழுதினார், "அங்கு பொதுப் போக்குவரத்து என்பது சேவை அல்ல; அது ஒரு தொடர் போராட்டம்."

ஆறு மாதம் கழித்து அறிக்கை எழுதிய பீட்டர் மீண்டும் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்தார்.

பஸ்ஸில் ஜிபிஎஸ் மின்னியது. சுப்பையா எல்லா ஸ்டாப்பிலும் வண்டியை நிறுத்தினார். மாணிக்கம் பயணிகளிடம் "வாருங்கள் ஐயா" என்று வழிந்தார்.

பீட்டர் வியந்து, "என் அறிக்கையைப் பார்த்து நிர்வாகம் சீர்திருத்தி விட்டதா?" என்றார்.

மாணிக்கம் பீட்டரின் தோளைத் தட்டிச் சொன்னார், "யோவ் வெளிநாட்டுக்காரவே... போன மாசம் பஸ்ஸைத் துரத்துன பொண்ணு வீடியோ சமூக வலைதளத்துல வைரல் ஆகி, கோர்ட் எங்களை உக்கார வச்சுடுச்சு. வேலை போயிடும்னு பயந்து, டிரைவர்-கன்டக்டர் எல்லாரும் ஆளுக்கு சில ஆயிரம் ரூபாய் போட்டு ஜிபிஎஸ் மாட்டி, ஒழுங்கா வண்டி ஓட்டுறோம்!"

பீட்டர் அதிர்ச்சியில் தன் நோட்டுப் புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறித்துக் கொண்டார், "நிர்வாகம் செய்யாததை, ஒரு வைரல் வீடியோ செய்துவிட்டது."

*****

10 செகண்ட் மனிதர்கள்

10 செகண்ட் மனிதர்கள்

இரவு 10:00 மணி.

நவீன் தன் அறையில் கைப்பேசி திரையை வேகமாக ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தான்.

திடீரென ஒரு 10 விநாடி காணொளி அவன் கவனத்தை ஈர்த்தது. வீட்டின் வாசலில் நிற்கும் வயதான தாத்தாவை, ஒரு வாலிபன் மரக்கட்டையால் ஓங்கி அடிப்பது போன்ற காட்சி அது!

நவீனுக்கு ரத்தம் கொதித்தது. "என்ன மிருகத்தனம்! இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது!" என்று ஆத்திரத்துடன் பொங்கி, "இவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்!" என்று காட்டமான கருத்தைப் பதிவிட்டு, அந்த காணொலியை ஆயிரக்கணக்கானோருக்குப் பகிர்ந்தான்.

சில நிமிடங்களில், இணையமே அந்த வாலிபனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி கொந்தளித்தது.

நவீனுக்குத் தான் ஏதோ மிகப்பெரிய சமூகப் புரட்சி செய்துவிட்டதாக ஒரு பெருமிதம்.

அடுத்த அரை மணி நேரத்தில் நவீனின் கைப்பேசியில் ஒரு செய்தி அதிர்வு வந்தது. அதே சம்பவத்தின் முழு காணொளி!

அதைப் பார்த்த நவீன் உறைந்துபோனான். உண்மையில் அந்த தாத்தா மின்சாரக் கம்பியைத் தொட்டு அதிர்ச்சியில் துடித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்த அந்த வாலிபன், தன் உயிரைப் பொருட்படுத்தாமல், கையில் கிடைத்த மரக்கட்டையால் அடித்து தாத்தாவை மின்சாரத் தொடர்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறான்!

தன் அவசரப் புத்தியை நினைத்து நவீனுக்கு வெட்கமாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. உடனே தன் பதிவை நீக்கிவிட்டு, அந்த வாலிபனின் வீரம் மற்றும் மனிதநேயத்தைப் பாராட்டி, "உண்மையான கதாநாயகன் இவன்தான்!" என்று நெகிழ்ச்சியோடு புதிய பதிவு ஒன்றைப் போட்டான்.

மனம் லேசான திருப்தியுடன், யாரையும் தவறாக எடைபோடக் கூடாது என்ற உயரிய சிந்தனையோடு கைப்பேசியை அணைத்துவிட்டு உறங்கச் சென்றான் நவீன்.

மறுநாள் காலை.

நவீனின் வீட்டு வாசலில் பலத்த கூச்சல் சத்தம். கதவைத் திறந்தவனுக்குப் பேரதிர்ச்சி! வெளியே காவல்துறையும், முகத்தில் காயங்களுடன் அந்த வாலிபனும் நின்றிருந்தனர்.

காவல்துறை அதிகாரி நவீனிடம், "தம்பி, நேற்று இரவு இந்த ஆளைப் பாராட்டி ஒரு பதிவு போட்டீங்களே. அதுக்குப் பிறகுதான் இந்த ஆள் பழக்கம் இல்லாத வயசான தாத்தாவைத் தாக்கிப் பணத்தைப் பறிச்ச வழக்கில் தேடப்படும் குற்றவாளின்னு எங்களுக்குத் தெரிஞ்சது. நீங்க போட்ட வீடியோ ஆதாரத்தை வச்சுதான் இவனைக் கைது செஞ்சோம். ரொம்ப நன்றி!" என்றார்.

கைப்பேசித் திரையில் தெரியும் பாதி உண்மையை வைத்து முதல் தீர்ப்பு எழுதிய நவீன், இப்போது கிடைத்த இன்னொரு பாதி உண்மையை வைத்து இரண்டாவது தீர்ப்பையும் எழுதி ஏமாந்திருந்தான்!

அரைகுறைத் தகவல்கள் நிறைந்த காணொளி உலகில், உண்மையின் முகம் எத்தனை முகமூடிகளை அணிந்திருக்கும் என்பதை நினைத்து நவீன் ஸ்தம்பித்து நின்றான்.

*****

21 Jul 2026

ஆர்டிக் ரகசியம்

ஆர்டிக் ரகசியம்

அடர்ந்த மேகமூட்டத்திற்கு நடுவே, உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாடு நடக்கும் டாவோஸ் நகரம் உறைந்து கிடந்தது. அந்த பனிக்குள்ளும், பிரதிநிதிகளின் அறைகளில் புவிசார் அரசியலின் அனல் வீசிக் கொண்டிருந்தது.

பேர்ட் அண்ட் பேர்ட் லண்டன் அலுவலகத்தின் சிறப்பு புலனாய்வு ஆலோசகர்களான ஜோசப் மற்றும் அவரது உலகப் புகழ்பெற்ற பார்ட்னர் டொனால்ட், அந்த உயர்மட்ட மாநாட்டின் பிரத்யேக அரங்கில் நின்றுகொண்டிருந்தனர்.

டொனால்ட் தனது ஓவர் கோட்டைச் சரிசெய்தபடி, "ஜோசப், இதைப் பார். வெளியே பனி உருகுகிறது, ஆனால் மனிதர்களுக்குள் இருக்கும் பனிப்போர் அதிகமாகிறது. அமெரிக்கா புதைபடிவ எரிபொருட்களைப் பிடித்துத் தொங்குகிறது, சீனாவோ பசுமை ஆற்றல், பசுமை நிதி என்று பேசி ஆர்க்டிக் பனிப்பாறைகள் வழியாக செம்பு, லித்தியம் விநியோகச் சங்கிலியைக் கைப்பற்றத் துடிக்கிறது. எல்லா வர்த்தக ஒப்பந்தங்களும் அரசியல் ஆதிக்கம்தான்!"

ஜோசப் தனது மெல்லிய புன்னகையுடன், கையில் இருந்த பளபளப்பான செம்பு  நாணயம் ஒன்றைச் சுழற்றியபடி பேசத் தொடங்கினார்:

"இது வெறும் அரசியல் போட்டி இல்லை, டொனால்ட். எரிசக்தி மாற்றம் என்ற பெயரில் பூமியின் வளங்களை யார் முதலில் சுரண்டுவது என்பதற்கான யுத்தம். ஆர்க்டிக் பனி உருகுவதும், தென் அமெரிக்கக் காடுகள் சுரங்கங்களாவதும் இவர்களுக்கு வெறும் பக்க விளைவுதான்."

"நாம் இதைத் தடுக்க வேண்டாமா ஜோசப்?" டொனால்ட் பதற்றமாகக் கேட்டார்.

"உலகப் பொருளாதார வல்லுநர்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் நம்மைத்தான் நம்பியிருக்கின்றன. சீனாவோ அல்லது அமெரிக்காவோ இந்தப் பசுமைத் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், பூமி மீள முடியாத பேரழிவைச் சந்திக்கும்!"

ஜோசப் அமைதியாகத் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் டேப்ளெட்டை எடுத்து டொனால்டிடம் நீட்டினார். அதில் ஒரு மிகப்பெரிய ரகசிய சுரங்க நிறுவனத்தின் பங்குகளும், ஆர்க்டிக் பிராந்தியத்தின் கனிம உரிமைகளுக்கான ஆவணங்களும் இருந்தன.

அவற்றின் கீழே இருந்த கையெழுத்தைப் பார்த்த டொனால்டின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன.

அங்கே இருந்தது ஜோசப்பின் கையெழுத்து!

டொனால்ட் உறைந்து போய் நின்றார். "ஜோசப். இது என்ன? நீயா? இந்த ஆதிக்கப் போட்டிக்கும், சுற்றுச்சூழல் அழிவுக்கும் பின்னால் நீ இருக்கிறாயா?"

ஜோசப் அந்தத் செம்பு நாணயத்தை டொனால்டின் கையில் வைத்து மூடினார். அவரது முகத்தில் இருந்த புன்னகை இப்போது ஒரு குளிர்ந்த வஞ்சகச் சிரிப்பாக மாறியிருந்தது.

"டொனால்ட், நீ இன்னும் ஏமாளிதான். உலக நாடுகள் அமெரிக்கா என்றும் சீனா என்றும் பிரிந்து நிற்பதாக நினைக்கிறாய் அல்லவா? இல்லை. அந்த இரு துருவங்களையும் மோதவிட்டு, ஆர்க்டிக்கின் உருகும் பனிக்கு அடியில் உள்ள கனிம வளங்களையும், தென்னமெரிக்க கனிமச் சுரங்கங்களையும் பின்னணியில் இருந்து வாங்குவது நம்முடைய கார்ப்பரேட் கூட்டமைப்புதான்."

"அப்படியானால்... காலநிலை மாற்றம், பசுமைத் தொழில்நுட்பம், இந்த டாவோஸ் மாநாடு எல்லாமே?" டொனால்டின் குரல் நடுங்கியது.

"எல்லாமே நாடகம்!" ஜோசப் பெருமிதத்தோடு தொடர்ந்தார். "நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும்போதுதான் அரிய கனிமங்களின் விலை விண்ணைத் தொடும். பனி உருக உருகத்தான் நமக்கான புதிய கப்பல் பாதைகளும் கனிமங்களும் திறக்கும். காலநிலை மாற்றம் என்பது அவர்களுக்குப் பக்கவிளைவு. ஆனால் நமக்கு? அதுதான் மிகப்பெரிய லாபம் தரும் வர்த்தகம்!"

டொனால்ட் அதிர்ச்சியில் பேச்சற்று நிற்க, ஜோசப் தனது கோட்டைச் சரிசெய்தபடி கதவை நோக்கி நடந்தார்.

"வா டொனால்ட், அடுத்த கூட்டத்திற்கு நேரமாகிறது. புதிய உலகம் உருவாவதை நாம் வேடிக்கை பார்க்கப்போவதில்லை... அதை நாம்தான் உருவாக்கப்போகிறோம்!"

*****

மாற்றமே மானுடத்தின் சாபம் அல்லது வெற்றிக்கான பயணம்!

மாற்றமே மானுடத்தின் சாபம் அல்லது வெற்றிக்கான பயணம்!

உலகமே விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டிருக்கிறது என்று தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும் மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்கிறார்கள்.

நாமும் "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதே சோபாவில், அதே பழைய பொசிஷனில் படுத்துக் கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மாறிக் கொண்டே இருந்தால் எப்போதுதான் வாழ்வது?

இந்த உலகத்தில் இரண்டு விஷயங்களை நம்மால் கணிக்கவே முடியாது.

ஒன்று, நாளைக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது.

இரண்டு, நம்மைச் சுற்றி என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்பது.

நாம் ஆசையாக எதிர்பார்த்த மாற்றங்கள் நடப்பதே இல்லை, உதாரணமாக, சம்பள உயர்வு.

ஆனால், நாம் கனவிலும் நினைக்காத மாற்றங்கள் அருணகிரிநாதர் லெவலுக்கு இல்லையென்றாலும், திடீர் லாக்டவுன் போல நம்மை வந்து அணைத்துக் கொள்கின்றன.

இந்த லட்சணத்தில், "மாற்றங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று இலவச அட்வைஸ் எங்கெங்கும் கிடைக்கிறது.

ஆகவே, வேறு வழியில்லை. மாறித்தான் ஆக வேண்டும்.

"நான் மாறவே மாட்டேன், பழைமைவாதம்தான் பேசுவேன்" என்று அடம் பிடிப்பவர்கள், ஸ்மார்ட்போன் காலத்தில் இன்னும் லேண்ட்லைன் போனில் டயல் செய்ய முயல்பவர்கள் போன்றவர்கள். அவர்களை விடுங்கள், நாம் அடுத்த மாற்றத்திற்குப் போவோம்.

ஒரு காலத்தில் துவைக்கும் கல்லில் துணியை வைத்து, கோபத்தையெல்லாம் சலவைக்கல்லில் காட்டி மாங்குமாங்கென்று துவைத்தார்கள். இப்போது சலவை இயந்திரம் வந்துவிட்டது. துணியை உள்ளே போட்டுவிட்டு, அது துவைத்து முடிக்கும் வரை நாம் நிம்மதியாக அமர்ந்து மாற்றங்களைப் பற்றி யோசிக்கலாம்.

சமையலறையில் விறகடுப்புப் புகை போய், கேஸ் சிலிண்டர் வந்து, இப்போது கரண்ட் அடுப்பு வந்துவிட்டது. சமையல் சீக்கிரம் முடிகிறதோ இல்லையோ, சிலிண்டர் விலை ஏறும் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது!

மனிதர்களின் உடைகளிலும் என்னவொரு புரட்சி!

வேட்டி சட்டைதான் அரசியல்வாதியின் அடையாளம் என்ற காலம் போய், இப்போது பேண்ட் சட்டை, கோட் சூட் என்று கார்ப்பரேட் மேனேஜர்கள் போல வலம் வருகிறார்கள். ஆடைகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறுவதில்லை என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ஆறுதல்.

பெண்கள் பாவாடை தாவணி, புடவையில் இருந்து சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று நவநாகரிக மங்கையராக மாறிவிட்டார்கள். தோற்ற மாற்றம் மன மாற்றத்தைத் தருகிறதோ இல்லையோ, துணிக்கடைகளின் கல்லா பெட்டியைத் தீவிரமாக மாற்றியமைத்திருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தைக் கூட இந்த மாற்றம் விட்டுவைக்கவில்லை. சுவர்களில் போஸ்டர் ஒட்டி, காகித நோட்டீஸ் கொடுத்துக் கத்திக் கூச்சல் போட்ட காலம் அவுட். இப்போது அரசியல்வாதிகள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ஓட்டு கேட்கிறார்கள். செலவும் குறைவு, மக்களும் ஸ்கிப் செய்யாமல் சில சமயம் நெட்டிசன்கள் செய்யும் ட்ரோல்களை ரசிக்கிறார்கள்.

கல்வித் துறையிலும் அமைதியான புரட்சியாகக், கரும்பலகையில் சாக்பீஸால் எழுதிப் போட்ட காலம் போய், இப்போது ஸ்மார்ட் கிளாஸ் வந்துவிட்டது. ஒளியும் ஒலியுமாகத் திரையில் படங்கள் ஓடுகின்றன.

முன்பெல்லாம் பதின்பருவப் பிள்ளைகளின் கண்ணில் மொபைல் போன் படக் கூடாது என்று லாக்கரில் பூட்டி வைத்தார்கள் பெற்றோர். இப்போது, "ஆன்லைன் கிளாஸ் கவனிடா செல்லம்" என்று பெற்றோரே ஐபோனைப் பிள்ளைகளின் கையில் திணிக்கும்படியான ஒரு விசித்திரமான மாற்றத்தை காலம் பரிசளித்திருக்கிறது.

இதெல்லாம் சரியா தவறா?

அதையெல்லாம் யோசிக்க நமக்கு நேரமில்லை, ஏனென்றால் அடுத்த நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருக்கிறது.

தனிமனிதர்களின் மனங்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் சமூக வளர்ச்சிக்கு வித்திடுகிறதாம். மாற்றம் என்பது மாறாதது மட்டுமல்ல, அதுதான் நிரந்தரமானது. இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து, "நான் அப்படியேதான் இருப்பேன்" என்று சொல்பவர்கள், சமூகத்திலிருந்து வெகு தூரம் விலகிப் போய்விடுவார்கள் அல்லது காலாவதியாகி விடுவார்கள்.

எனவே, மாற்றங்களை இரு கரம் நீட்டி வரவேற்போம். வேறு வழியில்லை.

அடுத்த முறை உங்கள் மொபைல் ஆப்பரேட்டர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் போதும், இதே பக்குவத்துடன் "மாற்றமே வளர்ச்சியின் பாதை" என்று சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான பயணம்!

*****

20 Jul 2026

நன்றி – ஒரு லாபகரமான தத்துவம்!

நன்றி – ஒரு லாபகரமான தத்துவம்!

உலகம் ஒரு பெரிய கூட்டுறவுச் சங்கம். ஆனால் இதில் உறுப்பினர்களாக இருக்கும் நமக்கு, மற்றவர்கள் நமக்காக உழைப்பது நம்முடைய பிறப்புரிமை என்கிற கர்வம் எப்போதும் உண்டு.

காலையில் எழுந்து பற்பசையை அமுக்கும்போது, அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்று நாம் யோசிப்பதில்லை. அந்தப் பற்பசையைத் தயாரித்தவர், சோப்புக்கு மணம் சேர்த்தவர், நாம் உடுத்தியிருக்கும் சட்டையை நெய்தவர் என ஒரு பெரும் கூட்டமே நமக்காக வியர்வை சிந்தியிருக்கிறது.

நாம் என்னவோ அந்தச் சட்டையை நாமே நெய்தது போலவும், சோப்பை நாமே கண்டுபிடித்தது போலவும் ஒரு மிதப்பில் அலைகிறோம்.

உண்மையில், முகம் தெரியாத மனிதர்களின் கருணையில்தான் நம் காலைக்கடன் முதல் இரவுத் தூக்கம் வரை எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சாப்பிடும் முன் சிலர் கடவுளைக் கும்பிடுகிறார்கள். அது பிரியாணி பிரமாதம் என்று சொல்வதற்காக மட்டுமல்ல. உலகில் பலருக்குத் தட்டே கிடைக்காதபோது, எனக்கு அதில் சோறும் போட்டாயே, என்று நன்றி சொல்வதற்காக.

நன்றி உணர்வு என்பது வெறும் பண்பு அல்ல. அது ஒரு தற்காப்புக் கலை. உதவி செய்தவரிடம் நன்றி என்று சொல்லிப் பாருங்கள், அவர் முகம் மலரும். அந்த மலர்ச்சியில் உங்கள் அகங்காரம் கொஞ்சம் கருகும். அதுதான் முக்கியம்.

நன்றிக்கு இலக்கணம் தேடினால் மகாபாரதக் கர்ணனிடம் போய் நிற்கலாம். தம்பிகள் பக்கம் நியாயம் இருந்தது, தர்மம் இருந்தது. ஆனால் துரியோதனனிடம் செஞ்சோற்றுக்கடன் இருந்தது.

தான் அழியப்போகிறோம் என்று தெரிந்தும், நண்பா, நீ போட்ட சோற்றுக்கு என் உயிரைத் தருகிறேன், என்று நின்றானே, அதுதான் நன்றியின் உச்சகட்ட நையாண்டி. துரோகத்தை விட நன்றியுணர்வு வலிமையானது என்பதை அவன் மரணம் நிரூபித்தது.

மனம் சோர்வாக இருக்கிறதா? ஒரு வெள்ளைத் தாளை எடுங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களைப் பட்டியலிடுங்கள்.

எனக்கு இந்த வேலை கிடைத்தது ஆச்சரியம், இந்த நண்பன் கிடைத்தது வரம், என்று எழுதிப் பார்த்தால், உங்கள் சோகம் காணாமல் போகும். ஏனென்றால், நம்மிடம் இல்லாததை நினைத்து வருந்துவதை விட, இருப்பதை நினைத்து நன்றி சொல்வது லாபகரமானது.

நன்றி ஒரு சிறந்த கரைப்பான். உங்களை எப்போதும் நோகடிப்பவர் கூட, ஒரு காலத்தில் ஒரு சிறு உதவி செய்திருப்பார். அந்தக் கடுகளவு உதவியை மலையளவாக நினைத்துப் பாருங்கள்; உங்கள் கோபம் ஐஸ் கட்டியாய் கரையும்.

நன்றியுணர்வு என்பது ஒரு பிரபஞ்ச ரகசியம். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நன்றி சொல்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பிரபஞ்சம் உங்களுக்குப் பரிசுகளை அள்ளித் தரும். இது ஒரு முதலீடு போன்றது.

தினமும் காலையில் இந்த உயிரைத் தக்க வைத்ததற்கு நன்றி, என்று ஆரம்பித்து, இரவு தூங்கும் முன் இன்று தப்பித்தோம் என்று முடிக்கும் வரை நன்றியுணர்வுடன் இருங்கள். மன அழுத்தம் குறையும், மகிழ்ச்சி கூடும்.

யார் கண்டது? நீங்கள் சொல்லும் ஒரு நன்றி, உங்களை ஒரு மனிதனாகக் கூட மாற்றலாம்! கொஞ்சம் ஓவராகத்தான் போகிறேனோ?!

*****

டச் ஸ்கிரீன் பெண்களும் கீபோர்டு ஆண்களும்!

அரசி, அரசன் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப்!

சமூகத்தில் பெண்ணுரிமை என்ற வார்த்தை, தீபாவளிக்கு வாங்கும் மத்தாப்பு போன்றது. கொளுத்திப் பிடிக்கும்போது வெளிச்சம் தரும்; கையில் சுட்டவுடன் அணைந்துவிடும்.

ஒரு பெண் ராணுவத்துக்கோ, விண்வெளிக்கோ போய்விட்டால், உடனே ஒட்டுமொத்தப் பெண் குலமும் கூரையைப் பிளந்து கொண்டு மேலே போய்விட்டதாக ஒரு பிரம்மை நமக்கு.

இந்தியத் தேர்தல்கள் ஒரு விசித்திரமான திருவிழா. இங்கே திருவிழாவை நடத்துபவர்கள் பெண்கள்; ஆனால், சாமி கும்பிட்டுவிட்டுப் பிரசாதம் வாங்குவதோடு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

வாக்குச் சாவடிகளில் ஆண்களை விடப் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதாவது, யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி பெண்களிடம் இருக்கிறது. ஆனால், நாங்களே ஆள்கிறோம் என்று அவர்கள் உள்ளே நுழைந்தால், "சீட் இல்லை" என்கிறார்கள்.

அரசியல் கட்சிகளுக்குப் பெண்களை வாக்காளர்களாக மதிக்கத் தெரியும்; தலைவர்களாக மதிக்கத் தயக்கம்.

அதிகாரம் எங்கே வெளிப்படையாக இல்லையோ, அங்கே சமத்துவம் என்பது வெறும் சுவரொட்டி விளம்பரம் மட்டுமே.

உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் பார்க்கும் காட்சி இதுதான். அதாவது பதவியில் அரசி அமர்ந்திருப்பார், ஆனால் அதிகாரப் பிரம்பை அரசன் அதாவது, அவருடைய கணவரோ, தந்தையோ, அண்ணனோ சுழற்றிக்கொண்டிருப்பார். ரப்பர் ஸ்டாம்பாக இருக்கும் பெண்ணை வைத்துக் கொண்டு அதை பெண் அதிகாரம் என்று கொண்டாடுவது, பொம்மைக்குக் கிரீடம் சூட்டி மகிழ்வதற்குச் சமம்.

பெண்களுக்குத் தேவை வெறும் பெயரளவிலான பிரதிநிதித்துவம் அல்ல; முடிவெடுக்கும் அதிகாரம்.

தேர்தல் செலவுகளின் பண பலமும், தாதாத்தனமும் குறைய வேண்டும்.

இல்லையெனில், பணக்காரப் பின்னணி கொண்ட வாரிசுப் பெண்கள் மட்டுமே உள்ளே வருவார்கள். சாதாரணக் கிராமத்துப் பெண், என்றும் போலவே வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

அரசியல் அதிகாரம் வேண்டும் என்றால், முதலில் கையில் காசு வேண்டும் என்பதுதான் உலக நியதி. தன் சொந்தச் செலவுக்கே கணவனின் பர்ஸையோ, தந்தையின் கையையோ எதிர்பார்க்கும் ஒரு பெண்ணால், எப்படிச் சுதந்திரமாகப் பொது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியும்?

பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் அதிகாரம், பெட்ரோல் இல்லாத சொகுசு கார் போன்றது. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் நகராது.

அதோடு, பாதுகாப்பு. ஒரு பெண் இரவில் பயமின்றித் தனியாகப் பேருந்திலோ, ரயிலிலோ பயணிக்க முடிந்தால் மட்டும்தான் அவளால் சமூகத் தொடர்புகளை உருவாக்க முடியும்; கூட்டங்களுக்குப் போக முடியும். தெருவிளக்கும், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தும் இல்லாத ஒரு நாட்டில், நீங்கள் எவ்வளவு பெரிய பெண்ணியப் புரட்சி பேசினாலும் அது வெறும் வாய்வார்த்தைதான்.

மக்கள்தொகையில் பாதியை அதாவது, பெண்களை முடிவெடுக்கும் இடத்திற்கு வெளியே உட்கார வைத்துவிட்டு, "நாங்கள் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம்" என்று மார்தட்டிக் கொள்வது ஒரு தார்மீகக் கோமாளித்தனம்.

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது ஏதோ ஆண்கள் செய்யும் நலத்திட்ட உதவியோ அல்லது அரசியல் கருணையோ அல்ல. அது இந்த சமூகத்தின் பிழைப்புக்கானத் தேவை.

பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வரும்போது, அவர்கள் வெறும் பங்கேற்பாளர்கள் அல்ல; அவர்கள் ஆட்டத்தின் விதிகளையே மாற்றப் போகும் ஆட்டக்காரர்கள்.

சில பெண்களின் சாதனைக் கதைகளை வாசித்துவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதை நிறுத்துவோம். ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் சம வாய்ப்பளிக்கும் ஒரு தளத்தை உருவாக்குவதே உண்மையான ஜனநாயகம்.

*****

19 Jul 2026

செய்தித்தாள் விற்றவனும், செய்தியாய்ப் போனவனும்!

செய்தித்தாள் விற்றவனும், செய்தியாய்ப் போனவனும்!

சண்முகநாதனுக்கு வயது அறுபது. அறுபது என்பது வெறும் எண் அல்ல, அது அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை இன்னும் உலகப் பேரறிவாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பழங்காலத் தலைமுறையின் குறியீடு.

தினமும் காலை அரை கிலோமீட்டர் நடப்பார் சண்முகநாதன்.

எதற்காக?

உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள.

உலகம் எப்போதுமே ஒரே இடத்தில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது; மனிதர்கள் தான் வீணாக அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்பது சண்முகநாதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

"சண்முகம் ஐயா, நீங்கள் ஏன் தினமும் இந்த வயதில் அலைகிறீர்கள்? பக்கத்தில் இருக்கும் பூங்காவில் காற்றை மட்டும் சுவாசித்துவிட்டு வாக்கிங் போங்கள். இந்த காகிதக் குப்பைகளை நான் உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து போடுகிறேன்," என்றார் கடைக்காரர் தர்மலிங்கம்.

மனிதர்கள் எப்போதும் சுலபமான வழிகளை, அதிலும் இலவசமாகக் கிடைக்கும் கரிசனங்களை விரும்புபவர்கள்.

சண்முகநாதனும் ஒப்புக்கொண்டார்.

பூங்காவில் நடக்கும்போது ஆக்சிஜன் கிடைத்தது உண்மைதான், ஆனால் வாசலில் வந்து விழுந்த நாளிதழோடு சேர்த்து தர்மலிங்கத்தின் வலையும் வீட்டிற்குள் நுழைந்தது.

நெருக்கம் என்பது ஒரு மெல்லிய சிலந்தி வலை. அதில் முதலில் விழுவது ஈக்களைப் போன்ற நம்பிக்கை, பிறகுதான் காகிதப் பணம்.

"கடை அபிவிருத்தி செய்யணும் ஐயா, பையனுக்கு உடம்பு சரியில்லை..." என தர்மலிங்கம் நீட்டிய வார்த்தை நாடகங்களுக்கு இரையாகி, சண்முகநாதன் தன் சேமிப்பிலிருந்துக் கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரங்களை எண்ணிக் கொடுத்தார்.

காகிதப் பத்திரிகை வாங்கிய இடத்தில், காகிதப் பணத்தைக் கொடுத்தார். இரண்டுமே ஒரே மரக்கூழில் இருந்து உருவானவைதான் என்ற தத்துவம் அப்போது சண்முகநாதனுக்கு வேலை செய்யவில்லை.

ஒரு நாள் காலை, கடையின் கதவில் பூட்டு தொங்கியது. தர்மலிங்கம் ஊரை விட்டு ஓடிவிட்டார்.

விஷயம் சண்முகநாதனின் குடும்பத்தாருக்குத் தெரிந்தபோதுதான், காகிதப் பணத்தின் மதிப்பு புரிந்தது. சண்முகநாதனுக்கோ வேறொன்று புரிந்தது. செய்தித்தாள்கள் தினமும் காலாவதியாகிவிடுகின்றன; மனிதர்களின் முகமூடிகளும் அப்படித்தான்.

தர்மலிங்கம் ஓடியதில் பண நஷ்டம் ஒருபுறம், சண்முகநாதனின் மனிதநேயம் என்ற தத்துவம் நொறுங்கிப்போனதுதான் ஆகப்பெரும் சோகம்.

நம்பிக்கை துரோகம் என்பது ஒரு விசித்திரமான வைரஸ். அது உடலை விட மனதை முதலில் தின்னும்.

இப்போது சண்முகநாதன் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைகிறார். அன்று செய்திதாள் வாங்க தர்மலிங்கத்தின் கடைக்கு நடந்த அரை கிலோமீட்டரை விட, இன்று மருத்துவமனை வராண்டாக்களில் அவர் நடக்கும் தூரம் அதிகம்.

மனிதர்கள் செய்தித்தாள்களைப் போன்றவர்கள். தர்மலிங்கங்களைப் போல தினமும் ஒரு புதிய தலைப்புச் செய்தியோடு முகப்பில் நிற்பார்கள். ஆனால், நேற்று படித்த செய்திக்கும் இன்று நடக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இருக்காது.

திடீரென நெருங்கி வரும் மனிதர்கள், உங்களை நேசிப்பதில்லை; உங்கள் வசம் இருக்கும் ஏதோ ஒன்றை நேசிக்கிறார்கள்.

இறுதியில், ஏமாற்றியவன் செய்தியாக மாறிவிடுவான், நீங்கள் அதை வராண்டாவில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பீர்கள்.

*****