வியாபாரம் வாழ்க! உலகம் ஒழிக!
உலக அமைதிக்கான 405 ஆவது சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில்
மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.
அரங்கத்தின் நடுவே ஏசி காற்று ஜிலீரென்று அடிக்க, ஏழை நாடுகளின் பஞ்சத்தைப்
பற்றிப் பேசிவிட்டு, தட்டிலிருந்த பீட்ஸாவைப் பீஸ்புல்லாகச் சுவைத்துக்கொண்டிருந்தார்
தண்டோரா தேசத்து அதிபர் ஜான்.
அவருக்கு எதிரே அமர்ந்திருந்த மற்றொரு புல்புல்தாரா தேசத்து வல்லரசு அதிபர்
அலெக்ஸி, தனது வீட்டோ அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தி உலக அமைதியைக் காப்பாற்றுவது,
அதாவது மற்றவன் எவனையும் பேச விடாமல் செய்வது என்று மனதுக்குள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.
"ஜான்! பண்டோரா தேசத்துல அணு ஆயுதம் இருக்குன்னு சொல்லி நாம ஆரம்பிச்ச
போர் நல்லா போய்ட்டு இருக்குல்ல? ஆனா பாருங்க, நம்மகிட்ட ஏவுகணை ஸ்டாக் முடியப் போகுது!"
என்றார் அலெக்ஸி, டிஷ்யூ பேப்பரால் உதட்டைத் துடைத்தபடி.
"கவலைப்படாதீங்க அலெக்ஸி. அமைதிப் பேச்சுவார்த்தைன்னு ஒரு போர்டை மாட்டிட்டு,
ரெண்டு வாரம் தாக்குதலை நிறுத்துவோம். அந்த கேப்பில் ஆயுத உற்பத்தியை டபுள் ஆக்கிட்டு,
அப்புறம் பண்டோரா தேசம் பேச்சுவார்த்தைக்கு வரலைன்னு சொல்லி திரும்ப அணுகுண்டை வீச
வேண்டியதுதான்!" என்று ஜான் சிரித்தார்.
அப்போது, மாநாட்டின் மேடைக்கு வந்தார் திரு முனியாண்டி பரமசிவம். அவர் உலக அமைதி
அமைப்பின் தலைமைச் செயலாளர். மைக் முன்னால் நின்று தொண்டையைக் கனைத்தார்.
"கணவான்களே! இந்த மாநாட்டின் நோக்கம் உலக அமைதி. ஆனால் பண்டோரா மற்றும்
தண்டோரா தேசங்களுக்கு இடையே ஆயுதப் போட்டி முற்றிவிட்டது. நீங்கள் உற்பத்தி செய்து
குவித்துள்ள அணுகுண்டுகள், ரோபோட்டிக்ஸ் ஆயுதங்கள், உயிரி இரசாயனப் பொருட்கள். இவை
அனைத்தும் மனித குலத்தையே அழித்துவிடும். இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது!"
என்றார் முனியாண்டி பரமசிவம்.
அதிபர் ஜான் அலட்சியமாகச் சிரித்தார். "என்ன தீர்வு முனியாண்டி பரமசிவம்?
ஐ.நாவில் இன்னொரு கண்டன தீர்மானம் போடுவீங்களா? அதைத்தான் என் பாக்கெட்ல இருக்குற வீட்டோ
சுவிட்சை வச்சு ஒரே நொடியில தூக்கிக் குப்பையில போட்டுடுவேனே!"
அலெக்ஸியும் சேர்ந்துகொண்டார், "ஆமாம் முனியாண்டி பரமசிவம், நீங்க பிடிஎப்
பைல் அனுப்புறதை விட நாங்க வெடிகுண்டு அனுப்புற வேகம் அதிகம். எங்களை யாராலும் கட்டுப்படுத்த
முடியாது. இந்த உலகத்தின் ஆயுதச் சந்தையே எங்க கைக்குள்ளதான் இருக்கு!"
முனியாண்டி பரமசிவம் லேசாகப் புன்னகைத்தார். அவரது புன்னகையில் ஒரு தத்துவார்த்தமான
நக்கல் ஒளிந்திருந்தது.
"ஐயா அதிபர்களே. நீங்க சொல்றது உண்மைதான். ஆனா ஒரு சின்ன திருத்தம். ஆயுத
உற்பத்தியில நீங்க மட்டும் பெரிய ஆள் இல்லை." என்று கூறிய முனியாண்டி பரமசிவம்,
தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய ரிமோட் கன்ட்ரோலரை எடுத்தார்.
அரங்கத்தில் இருந்த பெரிய திரையில் ஒரு வரைபடம் தோன்றியது.
"என்ன இது?" என்று பதற்றத்தோடு கேட்டார் ஜான்.
"இதுதான் உங்களோட ரகசிய அணு ஆயுதக் கிடங்குகள். நீங்க ரெண்டு பேரும் உலகத்துக்குத்
தெரியாம தயாரிச்சு வச்சிருந்த மொத்த அணுகுண்டுகளையும், ஏவுகணைகளையும் போன மாசமே உங்க
நாட்டு பாதுகாப்பு அமைப்பில் இருந்த சில வியாபாரிகள் மூலமா ரகசியமா ஒருத்தர் மொத்தமாக
விலைக்கு வாங்கிட்டார்!" என்றார் முனியாண்டி பரமசிவம்.
அதிபர் அலெக்ஸி அதிர்ச்சியில் நாற்காலியை விட்டு எழுந்தார். "என்னது? எங்க
நாட்டு அணுகுண்டை எங்களுக்கே தெரியாம வித்துட்டாங்களா? அதை எவன் வாங்குனான்? உலகத்துலேயே
அவ்வளவு பெரிய கோடீஸ்வரன் எவன் இருக்கான்?"
பரமசிவம் கூலாகத் தன் கண்ணாடி லென்ஸைத் துடைத்தபடி சொன்னார்:
"வேற யாரு? அந்த பண்டோரா தேசம்தான் உங்க ரெண்டு பேரோட மொத்த அணு ஆயுதத்தையும்
வாங்கிடுச்சு!"
அரங்கமே உறைந்துபோனது. ஜானின் கையிலிருந்த ஒயின் கிளாஸ் கீழே விழுந்து நொறுங்கியது.
"பண்டோரா தேசமா?! அவங்ககிட்ட அணு ஆயுதமே இல்லைன்னு நினைச்சுதானே நாங்க
போரே தொடுத்தோம்? அவங்ககிட்ட எப்படி அவ்வளவு பணம் வந்தது?" என்று கத்தினார் ஜான்.
முனியாண்டி பரமசிவம் சிரித்தார்.
"நீங்க போடும் வரிக்கு பயந்து, உங்க தண்டோரா தேசத்து தனியார் ஆயுத நிறுவனங்களே
வரி ஏய்ப்பு செய்வதற்காகப் பண்டோரா தேசத்துக்கு மறைமுகமாக ஆயுதங்களை வித்துட்டாங்க.
இப்போ நிலவரப்படி, உங்க ரெண்டு பேர்கிட்டயும் பழைய துப்பாக்கியைத் தவிர வேற பெரிய ஆயுதம்
எதுவும் இல்லை. ஆனா, பண்டோரா தேசத்துகிட்ட இப்போ உலகத்திலேயே அதிக அணு ஆயுதங்கள் இருக்கு!"
அரங்கத்தின் லைட்டுகள் லேசாக மிளிர்ந்தன. முனியாண்டி பரமசிவம் தனது கோட்டைச்
சரிசெய்து கொண்டு தொடர்ந்தார், "அப்புறம் இன்னோரு முக்கியமான விஷயம் அதிபர் ஜான்!
பண்டோரா தேசத்து அதிபர் இப்பதான் எனக்கு மெசேஜ் பண்ணாரு. தண்டோரா தேசத்துகிட்ட இப்போ
குண்டு தீர்ந்து போச்சுல்ல. சோ, நாங்க அமைதிப் பேச்சுவார்த்தையைத் தற்காலிகமா நிறுத்திட்டு,
உங்க மேல போர் தொடுக்கப்போறோம்'னு சொல்லச் சொன்னாரு!"
மாநாட்டு அரங்கத்தில் இருந்த வல்லரசு அதிபர்கள் இருவரும், உலக அமைதிக்காக அல்ல.
தங்கள் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதற்கு வழி தெரியாமல் திகைத்து நின்றார்கள்!
வெளியே 'உலக அமைதி மாநாடு வாழ்க' என்ற பிரம்மாண்டமான பேனர் காற்றில் பறந்துகொண்டிருந்தது.
*****






