2 Sept 2026

சுடும் நீர்! சுடாத தீ!!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 24

சுடும் நீர்! சுடாத தீ!!

குளிர்பதனம் செய்யப்பட்ட அறையின் காற்றில் லேசான லாவெண்டர் வாசனை. வெளியே வெயில் திருவாரூருக்கேகே உரித்தான கொடூரத்தோடு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

அவன் அலுவலகக் கோப்பைப் பார்த்தபடியே தேநீரை ஒரு மடக்கு குடித்தான்.

எதிரே அவள்.

அவளுடைய கூந்தல் நுனியில் இன்னும் லேசான ஈரம், கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சம், விரல்களில் சுழலும் வைர மோதிரம்.

அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் புதிராகவே இருக்கும்.

"என்ன அப்படிப் பார்க்கறே?" அவள் தன் அலுவலகக் கோப்பைப் பார்த்தபடி, தன் ஐலைனர் தீட்டிய கண்களை உயர்த்திக் கேட்டாள் அவள்.

"இல்ல. வெளிய தீயா எரியுது. ஆனா உன்கிட்ட வந்தா மட்டும் குளிருது. அதெ உன்னை விட்டுத் தள்ளிப் போனா சுடவும் செய்யுதுனு யோசிச்சேன்."

அவள் சிரித்தாள். "பிசிக்ஸ் படிச்சவன்னு காட்டிக்காத. சயின்ஸ்ல இதுக்கு பேரு தெர்மோடைனமிக்ஸ் எக்ஸ்செப்ஷன்."

"இல்ல, இது சயின்ஸ் இல்ல. சங்கம் மருவிய இலக்கியம்."

அவள் புருவத்தை உயர்த்தினாள். "தமிழ் வாத்தியார் மாதிரி பேசாத!"

"நிஜமாத்தான். வள்ளுவர் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே உன்னைப் பத்தி எழுதிட்டுப் போயிட்டார்.

"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்."                 (குறள், 1104)

என்று ஒரு குறள் உண்டு."

"அப்படின்னா?"

"தூரம் போனா சுடும். பக்கத்துல வந்தா குளிரும். இப்படி ஓர் அதிசயத் தீயை இவ எங்கிருந்து பிடிச்சுட்டு வந்தான்னு தலைவன் புலம்பறான். என்கிட்ட நீயும் அதே தீயாத்தான் இருக்க."

அவள் கொஞ்ச நேரம் பதிலேதும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். பிறகு தன் அழகிய டைட்டன் கடிகாரத்தைக் கழற்றி மேசை மேல் வைத்தாள். அலுவலகக் கோப்பை மெல்ல மூடினாள்.

"டேய்! குறும்புக்காரா!" அவளது குரல் சட்டென்று இறங்கி, ஒருவித நெருக்கமான நிசப்தத்தை அந்த அறையில் உருவாக்கியது.

"ம்?"

"அந்தத் தீயை நான் எங்கிருந்து கொண்டு வந்தேன்னு உனக்கு தெரியணுமா?"

"எங்கிருந்து?"

அவள் லேசாக முன் நகர்ந்து, அவன் கைகளைத் தன் இரு கைகளாலும் மூடினாள். அவளது விரல்களின் கதகதப்பு அவனுள் இறங்கியது. அதே நேரம், மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு விவரிக்க முடியாத அமைதியும் குளிர்ச்சியும் பரவியது.

"உன்கிட்ட இருந்துதான். நீ என்கிட்ட காட்டுற அன்போட வெளிப்பாடுதான் அது!" என்றாள் அவள்.

வெளியே திருவாரூருக்கே உரிய வெயில் தன் கொடூரத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்க, அந்த அறையில், வள்ளுவரின் அந்த விசித்திரத் தீ இருவருக்குள்ளும் அமைதியாக எரிந்து கொண்டிருந்தது.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

1 Sept 2026

இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?

எப்போது புது வருடம் பிறக்கிறது?

காலண்டரும் டைரியும் இலவசமாக வரும் போது…

*****

அடையாளத்திற்காக அடிக்கடி ஆதார் அட்டையைக் கேட்கும் போது உங்கள் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கிறது?

அந்த ஆதாரில் இருப்பது நானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது! அதை வைத்து எப்படி என்னை அடையாளம் காண்கிறார்களோ?!

*****

தெருவுக்கு நான்கு டிரான்ஸ்பார்மர்கள் இருந்தால் எப்படி இருக்கும்?

ரோடு ஷோ நடத்தும் சில தலைவர்களுக்கு வசதியாகத்தான் இருக்கும்.

*****

இருபது ரூபாய் நாணயத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

அடுத்து ஐம்பது ரூபாய் நாணயம் கூட கிடையாது, ஸ்ட்ரைட்டாக நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் நாணயம்தான்.

*****

அரசியலில் அப்பா – மகன் மோதலை எப்படித் தவிர்ப்பது?

வயதுக்கு வந்ததும் தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள் என்று வீட்டை விட்டு, Sorry கட்சியை விட்டே துரத்தி விட்டு விட வேண்டும்.

*****

அரசியலில் ஏன் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை?

கட்சியை விட்டுத் தூக்கியவர்கள் எல்லாம் கூட்டணியில் வந்து சேர்ந்து விட்டால் எதிரியாவது நண்பனாவது?

*****

எதிர்பாராத கூட்டணி என்பது என்ன?

மீந்துப் போன இட்டிலியோடு, வீணாய்ப் போன வெங்காயம் சேர்ந்து இட்டிலி உப்புமாவாக வந்து நிற்பதுதான்.

*****

இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?

இந்திப் படித்து இந்திக்காரனாகித் தமிழ்நாட்டுக்கு வந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்.

*****

ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் விலைவாசியைக் குறைப்போம் என்று அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுக்கிறார்களே! எந்த தைரியத்தில் அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்கள்?

எதுவாக இருந்தாலும் அது ஆறு மாதத்தில் பழகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்தத் தைரியத்தில்தான் குறைக்கவே முடியாத விலைவாசியைக் குறைப்போம் என்று வாக்குறுதியை வாரி வழங்குகிறார்கள்.

*****

எவ்வளவுதான் வெச்சு செஞ்சாலும் அமெரிக்காவை இந்தியா எதுவும் செய்யாமல் இருக்கிறதே?

வெச்சு செய்யுற அவனுங்களுக்கே அலுக்காத போது, அதெ வாங்கிக்கிற நமக்கு அலுக்கவா போவுது.

*****

தேவலோகத்திற்கான கூகுள் மேப்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 23

தேவலோகத்திற்கான கூகுள் மேப்!

தேசிய நெடுஞ்சாலை 83.

அந்த இரவில், காரின் குளிர்பதனக் காற்றில் இளையராஜாவின் மெல்லிசை ஓடிக் கொண்டிருந்தது.

அவன் டேஷ்போர்டைப் பார்த்தான்.

மணி 11:45.

பக்கத்து இருக்கையில் அவள், அவன் தோள் மீது தலை சாய்த்து அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது லேசான மூச்சுக்காற்று அவன் கழுத்தில் பட்டுத் தெறித்தது.

திடீரென காரின் மியூசிக் சிஸ்டம் தானாகவே சத்தத்தைக் குறைத்துவிட்டு, குரல் வழி உதவியாளரான 'ஆரா' இயங்கியது.

"உங்களது ஹார்ட் ரேட் நிமிடத்திற்கு 62 ஆகக் குறைந்துள்ளது. மூளையின் ஆல்பா அலைகள் சீராக உள்ளன. நீங்கள் இப்போது உச்சகட்ட மன அமைதியில் இருக்கிறீர்கள். சொர்க்கத்திற்குச் செல்ல இதுவே சிறந்த தருணம்," என்றது ரோபோடிக் குரலில்.

"சொர்க்கமா? என்ன உளறுகிறாய் ஆரா?" என்றான அவன்.

"நான் உளறவில்லை. நீங்கள் கடந்த வாரம் பதிவிறக்கம் செய்த 'தேவலோக விஆர்' ஆப் உங்கள் மொபைலில் காத்திருக்கிறது. அதில் 'வைகுந்தம் v2.0' அப்கிரேட் தயார் ஆபர் பிரைஸில். ஜஸ்ட் டென் லேக். தாமரைக்கண்ணன் உலகத்தின் டிஜிட்டல் அனுபவம். அங்கு துக்கமில்லை, மரணமில்லை, எல்லையற்ற பேரானந்தம் மட்டுமே. ஆப்கிரேட் செய்யுங்கள். நீங்கள் அந்த நித்யத்துவத்தை அடைந்துவிடலாம்."

அவன் கண்ணாடியில் பார்த்தான். அவன் மொபைலில் அந்த ஆப் அப்கிரேட் செய்வதற்கான நோட்டிபிகேஷன் மணியடித்தது.

"அங்கு என்னவெல்லாம் இருக்கும்?" அவன் தொடர்ந்தான். 

"மகாவிஷ்ணுவின் பேரழகு, பாற்கடலின் அலை ஓசை, தேவாமிர்தத்தின் சுவை, எந்தக் கவலையுமற்ற நிரந்தர நிம்மதி. மனித மூளை கற்பனை செய்ய முடியாத உச்சபட்ச மகிழ்ச்சி."

அவன் மெல்லத் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். அவள் இன்னமும் உறக்கத்தில் இருந்தாள். அவள் விரல்கள் அவன் கையை இறுக்கமாகப் பற்றியிருந்தன. கனவில் ஏதோ பயந்தவள் போல, அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள்.

அவளது கூந்தல் வாசனை, லேசான வியர்வை மணம், அந்த மென்மையான ஸ்பரிசம் என எந்த வெர்ச்சுவர் ரியாலிட்டி ஆப்பாலும் பிரதியெடுக்க முடியாத ஒரு நிஜத்தின் அசைவு அவனை வசீகரித்தது.

அவன் புன்னகைத்தான். மொபைலில்  இருந்த அந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்தான்.

"என்ன செய்கிறாய்? தாமரைக்கண்ணனின் உலகு உனக்கு வேண்டாம் என்பதா? அதைவிடச் சிறந்தது இந்த பூமியில் வேறு என்ன இருக்கிறது?" ஆரா ஆச்சரியத்துடன் கேட்டது.

"இருக்கிறது ஆரா," அவன் காரை மெல்ல ஸ்டார்ட் செய்தான். "2000 வருடத்துக்கு முன்னாடியே திருவள்ளுவர் அதை சொல்லி விட்டார்.

"தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு?"                   (குறள், 1103)

தான் நேசிக்கும் பெண்ணின் மெல்லிய தோளில் தலைவைத்துத் தூங்கும் அந்த நிஜமான இன்பத்தை விட, அந்தத் தாமரைக்கண்ணனின் வைகுந்த உலகம் அவ்வளவு இனிமையானதா என்ன? கண்டிப்பா இருக்காது!"

ஆரா மௌனித்தது.

அவன் மனம் இறக்கைக் கட்டிக் கொண்டது.

கார் நெடுஞ்சாலையில் வேகமான பறக்க, அவள் அவன் தோளில் இன்னும் கொஞ்சம் ஆழமாக முகம் புதைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு இப்போது அந்த வைகுந்தம் காரின் உள்ளேயே இருப்பது போலிருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

31 Aug 2026

உலகில் நிறுத்த முடியாத ஒரே போர்!

இப்போதெல்லாம் விசாரணை என்றதும் உங்களுக்கு மனதில் முதலில் தோன்றுவது என்ன?

உண்மை வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லை.

*****

தேர்தல் அரசியல் என்பது என்ன?

காந்தியும் கோட்ஸேயும் கூட்டணி வைத்துக் கொள்வதுதான்.

*****

மனைவியதிகாரம் என்பது என்ன தெரியுமா?

நேற்று ஒரு கல் உப்பு கூடுதலாக என்று சொன்னதற்கு, இன்று நான்கு கல் தூக்கலாகப் போடுவதுதான்.

*****

தங்கத்தின் சிறப்பு என்ன தெரியுமா?

ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்க முடியும். தங்கத்தை அப்படி முடியாது.

*****

ச்சும்மா ஓட்டைப் பிரித்து மேய ஒரு வாக்குறுதி…?

மகளிருக்கு மாதந்தோறும் ஒரு கிராம் தங்கம்.

*****

வாக்கிங் போகிறவர்களின் எண்ணிக்கை பிரத்யேகமாகச் சமீப காலங்களில் அதிகரிக்க என்ன காரணம்?

மக்கள் வாக்கிங் போகும் இடங்களாகப் பார்த்து சுவையான பஜ்ஜி, போண்டா, சமோசா கடைகள் அமைவதுதான்.

*****

இந்தியர்களின் எந்த நம்பிக்கை உலகை அசரடிக்கிறது?

கொன்றால் பாவம் தின்றால் போய் விடும் என்பது போல, புண்ணியம் செய்தால் செய்த பாவம் பறந்தோடி விடும் என்ற நம்பிக்கைதான்.

*****

இன்றைய இந்தியனுக்கு என்னதான் பிரச்சனை?

அது இயக்குநர் ஷங்கரைக் கேட்க வேண்டிய கேள்வி சார்!

*****

ஸ்விஸ் பேங்க் எங்கே இருக்கிறது?

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு எங்கிருந்ததோ, அங்கேதான் இப்போதும் இருக்கிறது.

*****

எந்தப் போரையும் அடாவடியாகப் புகுந்து நிறுத்த நினைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் நிறுத்த முடியாத போர் எது தெரியுமா?

அவர் செய்யும் அக்கப்போர். அதை அவர் நினைத்தாலும் நிறுத்த முடியாது.

*****

ஸ்டெத்தாஸ்கோப் அறியாத மருத்துவம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 22

ஸ்டெத்தாஸ்கோப் அறியாத மருத்துவம்

விளமல், நவஜீவன் மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு அருகே இருந்த மருத்துவர் அறை. ஏசி ஜில்லென்று உடலை உலுக்கியது.

அவன் டாக்டரின் ஸ்டெதாஸ்கோப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நெஞ்சில் ஏதோ இனம்புரியாத பாரம், ஒருவித அடர்த்தியான அழுத்தம். கடந்த ஒரு வாரமாகவே உடம்பில் எந்த உறுப்பும் ஒன்றுக்கொன்று ஸிங்க் ஆகாத மாதிரி ஒரு படபடப்பு.

"பிபி நார்மல், ஈசிஜியும் பெர்பெக்ட். ஆனா ஏதோ ஒரு கெமிக்கல் இம்பேலன்ஸ் உடம்புக்குள்ள இருக்கு. கடுமையான ஸ்ட்ரெஸ்னு நினைக்கிறேன். நான் ஒரு ஆன்டி டிப்ரஸன்ட் தர்றேன், சாப்பிட்டுப் பாருங்க," என்றார் டாக்டர், கம்ப்யூட்டரில் கீபோர்டைத் தட்டியபடியே.

மருத்துவப் புத்தகங்களில் இல்லாத, பார்மஸி மருந்து அட்டைகளில் கிடைக்காத நோய் அது என்பதை அவன் மட்டுமே அறிவான்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்து தன் ராயல் என்பீல்ட் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான். திருவாரூர் மாலையின் புழுக்கமும் டிராபிக்கும் அவனை மேலும் சோதித்தன. விளமல் ரவுண்டானா சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய, புல்லட்டை நிறுத்திக் கியரைக் குறைத்தான்.

பக்கத்தில் வந்து நின்ற ஒரு பிங்க் நிற ஸ்கூட்டியைத் எதேச்சையாகப் பார்த்தான். அங்கே அவள் நின்றிருந்தாள்.

அவள் ஹெல்மெட்டின் முன் கண்ணாடியை லேசாக உயர்த்தி, தலையைச் சிலிர்த்துக்கொண்டாள். காதில் அணிந்திருந்த ரேடியோ ஹெட்போனில் ஓடும் ஏதோ ஒரு பாட்டுக்கு விரல்களால் ஸ்கூட்டியின் ஹேண்டில்பாரில் தாளம் போட்டுக்கொண்டிருந்தாள். மாலையின் சிக்னல் வெளிச்சத்தில், அவள் காதில் அணிந்திருந்த அந்தச் சிறிய வைரத் தோடு பளிச்சென்று மின்னியது.

கடந்த மாதம் நடந்த அந்த அற்பச் சண்டை, இருவரிடமும் உறைந்து கிடந்த ஈகோ, அப்புறம் யாருமே எதிர்பார்க்காத அந்த பிரேக் அப் என நினைவுகள் அதிவேகமாக மனக்கண் முன் வந்து சென்றன.

அவன் ஹெல்மெட்டுக்குள் இருந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது பார்வை மெதுவாகத் திரும்பி, இவன் பக்கமாக வந்தது. ஒரு அரை நொடி அவளது கண்கள் லேசாக விரிந்தன. இவனை அடையாளம் கண்டுகொண்ட கணத்தில், ஒரு மெல்லிய, அழகான புன்னகை அவள் உதட்டின் ஓரத்தில் அரும்பியது.

அந்த ஒரே ஒரு நொடி.

அவனின் நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு பெரும் பூட்டு கிளிக் எனத் திறந்தது. அடைத்துக்கொண்டிருந்த மூச்சு சீரானது. தலைபாரம் சட்டெனக் கரைந்து காணாமல் போனது. கைகளில் இருந்த நடுக்கம் நின்று, உடம்பில் ஒரு புது ரத்த ஓட்டம் பாய்ந்தது.

டாக்டர் கொடுத்த ட்ரான்கிலைஸர், விட்டமின் மாத்திரைகள், கார்டியாலஜிஸ்ட் ரிப்போர்ட் என உலகத்தின் எந்த மருத்துவமும் செய்யாத அற்புதத்தை, அவளது அந்த ஒரு நொடிப் பார்வை நொடிப் பொழுதில் செய்துவிட்டது.

புல்லட்டை அப்படியே ஓரம் கட்டிப் பக்கவாட்டில் சைட் ஸ்டாண்டில் நிறுத்தினான். பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். அவளே நோய், அவளே மருந்து என அவன் தட்டச்சு செய்ய கூகுள் குரோம் 1102 ஆவது குறளைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கண் முன் நிறுத்தியது.

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.”               (குறள், 1102)

நோயைக் கொடுத்தவளேதான் அதற்கான மருந்தை வைத்திருக்கிறாள். இதற்கு வள்ளுவரின் மருத்துவம்தான் சரி, இன்றைய மருத்துவர்களின் மருத்துவம் சரிபட்டு வராது என அவன் மனம் சொல்லியது.

சிக்னல் பச்சையாக மாற, அவளுடைய ஸ்கூட்டி மெதுவாக நகர்ந்து முன்னால் சென்றது. அவன் ஒரு சிறு புன்னகையுடன் தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்து, அவளது ஸ்கூட்டியைப் பின்தொடர ஆரம்பித்தான்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

30 Aug 2026

பிரச்சனை என்னும் இலவச இணைப்பு!

பிரச்சனை என்னும் இலவச இணைப்பு!

சொல்லப்போனால், "வாழ்நாளில் வரும் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டு, அதன்பிறகு நிம்மதியாக வாழ வேண்டும்" என்று நினைப்பதை விட ஒரு மிகப்பெரிய அறியாமை இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது.

குடும்பம் ஒரு பக்கம் அவுட் ஆப் ஆர்டர் ஆகி, வேலை இன்னொரு பக்கம் கொலப்ஸ் ஆகி, மனம் துண்டு துண்டாக உடைந்து சிதறும் போதுதான் மனிதனுக்கு உண்மையான ஞானம் பிறக்க வேண்டும்.

ஆனால் நாம என்ன செய்கிறோம்? "ஐயோ, இந்த ஒரு பிரச்சனை மட்டும் தீர்ந்தால் போதும்டா சாமி" என்று நேர்ந்துகொண்டு, அடுத்த கோயிலுக்கு தேங்காய் உடைக்க ஓடுகிறோம்.

அங்கேதான் வாழ்க்கையின் மிகப் பெரிய ஆப்பு காத்திருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு ரேஷன் கடை க்யூ போன்றது. ஒரு பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு என்ற டோக்கனை வாங்கி வெளியே கதவைத் திறந்தால், அடுத்த பிரச்சனை இன்முகத்தோடு "ஹாய், அடுத்து நான்தான்!" என்று க்யூவில் நின்று கொண்டிருக்கும்.

நீங்கள் முதல் பிரச்சனையோடு மல்லுக்கட்டி ஜெயித்துவிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், இரண்டாவது பிரச்சனை தன் சொந்தக்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து செட்டில் ஆகியிருக்கும்.

மனிதர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்றால், "ஆமாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை!" என்று சொல்லிவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருக்கலாம். அல்லது, அவர்களை நல்லவர்கள் என்று நம்பிய நம்மை விட மோசமான முட்டாள்கள் யாரும் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இதில் மனிதர்களைச் சரி செய்கிறேன், சூழ்நிலையைச் சரி செய்கிறேன் என்று கிளம்புவது, சுனாமி வரும்போது வாட்டர் ப்ரூப் குடை பிடித்துக் கொண்டு நிற்பதற்குச் சமம்.

அதனால், பிரச்சனைகளைத் தீர்க்க நினைக்காதீர்கள். அவற்றுடன் சகிப்புத்தன்மையோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். பழக பழக இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று உங்களுக்கே தோன்ற ஆரம்பித்து விடும்.

வீட்டில் கணவரோ மனைவியோ கத்தத் தொடங்கினால், "சரி, இது இந்த வாரத்திற்கான ஷெட்யூல்ட் அலாரம்" என்று நினைத்துக்கொண்டு டீயை ஆற்றிப் பருகக் கற்றுக்கொள்ளுங்கள்.

வேலை போனால் "சரி, திங்கட்கிழமை காலையில் அலாரம் வைக்காமல் தூங்க ஒரு வாய்ப்பு" என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

மனம் துண்டு துண்டாக உடைந்தால், அந்தத் துண்டுகளைச் சேர்த்து வைத்து பஸ்ஸில்  விளையாடப் பழகிக் கொள்ளுங்கள்.

பிரச்சனையை நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்காத போது, அது கடுப்பாகி வேறு யாரையாவது தேடி ஓடிவிடும்.

கடைசியாக ஒரு பின்குறிப்பு என்னவென்றால், நான் மேலே சொன்ன எதையும் நம்பாதீர்கள். ஏன்,  "நாமெல்லாம் ரொம்ப ஒழுங்காத்தான் வாழ்கிறோம்" என்று உங்கள் மனம் சொல்வதைக் கூட நீங்கள் நம்ப வேண்டிய அவசியமில்லை.

எப்படியும் பிரச்சனைகள் தீரப் போவதில்லை. அப்புறம் என்ன? அவற்றுடன் சேர்ந்து வாழப் பழகிக்கொண்டு ஜாலியாக இருங்கள்! நீங்கள் ஜாலியாக இருப்பதைப் பார்த்து அந்தப் பிரச்சனைகள் நெஞ்சு வெடித்துச் சாகட்டும்!

*****

மெய்நிகர் பிரம்மன்

பாண்ட் 007 டூ 000

அவனும் ஒரு காலத்தில்

ஜேம்ஸ் பாண்ட்தான்!

கல்யாணம் பண்ணி வைத்தார்கள்

ரப்பர் பாண்ட் ஆகி விட்டான்!

*****

வெற்றிச் சின்னம்

எத்தனை பேர் நின்று

எத்தனை முறை தோற்றாலும்

வைப்புத்தொகையே போனாலும்

ஒற்றை ஓட்டுக் கூட

விழாமல் போனாலும்

தலைவருக்குத்

தலைமுறைத் தலைமுறையாக

அதுவே

வெற்றிச் சின்னம்

*****

உயிர்க்கும் பாடல்

யார் சொன்னது

உயிருள்ளது பாடும்

உயிரற்றது பாடாது என்று

வாய் வைத்தால்

எதுவும் பாடும்

மூங்கில் போல்

குழலாக!

*****

உருமாற்றம்

நீந்திப் பார்க்கலாம் என்றால்

குளம் இருந்த இடத்தில்

வீடு

*****

மெய்நிகர் பிரம்மன்

உலகின் மிக அழகிய பெண்

இவள்தான் என்று

சாட்பாட்டிடம் பூரித்தான்

அந்த இளைஞன்!

அது

நான் உருவாக்கியதாகவும் இருக்கலாம்

என்றது

ஏஐ!

*****

டச் அப்

இதற்கு மேல் முடியாது என்ற

ஹீரோவிடம்

விடுங்க சார்

கிராபிக்ஸில் பார்த்துப்போம்

என்றார்

டைரக்டர்

*****