5 Aug 2026

வியாபாரம் வாழ்க! உலகம் ஒழிக!

வியாபாரம் வாழ்க! உலகம் ஒழிக!

உலக அமைதிக்கான 405 ஆவது சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.

அரங்கத்தின் நடுவே ஏசி காற்று ஜிலீரென்று அடிக்க, ஏழை நாடுகளின் பஞ்சத்தைப் பற்றிப் பேசிவிட்டு, தட்டிலிருந்த பீட்ஸாவைப் பீஸ்புல்லாகச் சுவைத்துக்கொண்டிருந்தார் தண்டோரா தேசத்து அதிபர் ஜான்.

அவருக்கு எதிரே அமர்ந்திருந்த மற்றொரு புல்புல்தாரா தேசத்து வல்லரசு அதிபர் அலெக்ஸி, தனது வீட்டோ அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தி உலக அமைதியைக் காப்பாற்றுவது, அதாவது மற்றவன் எவனையும் பேச விடாமல் செய்வது என்று மனதுக்குள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.

"ஜான்! பண்டோரா தேசத்துல அணு ஆயுதம் இருக்குன்னு சொல்லி நாம ஆரம்பிச்ச போர் நல்லா போய்ட்டு இருக்குல்ல? ஆனா பாருங்க, நம்மகிட்ட ஏவுகணை ஸ்டாக் முடியப் போகுது!" என்றார் அலெக்ஸி, டிஷ்யூ பேப்பரால் உதட்டைத் துடைத்தபடி.

"கவலைப்படாதீங்க அலெக்ஸி. அமைதிப் பேச்சுவார்த்தைன்னு ஒரு போர்டை மாட்டிட்டு, ரெண்டு வாரம் தாக்குதலை நிறுத்துவோம். அந்த கேப்பில் ஆயுத உற்பத்தியை டபுள் ஆக்கிட்டு, அப்புறம் பண்டோரா தேசம் பேச்சுவார்த்தைக்கு வரலைன்னு சொல்லி திரும்ப அணுகுண்டை வீச வேண்டியதுதான்!" என்று ஜான் சிரித்தார்.

அப்போது, மாநாட்டின் மேடைக்கு வந்தார் திரு முனியாண்டி பரமசிவம். அவர் உலக அமைதி அமைப்பின் தலைமைச் செயலாளர். மைக் முன்னால் நின்று தொண்டையைக் கனைத்தார்.

"கணவான்களே! இந்த மாநாட்டின் நோக்கம் உலக அமைதி. ஆனால் பண்டோரா மற்றும் தண்டோரா தேசங்களுக்கு இடையே ஆயுதப் போட்டி முற்றிவிட்டது. நீங்கள் உற்பத்தி செய்து குவித்துள்ள அணுகுண்டுகள், ரோபோட்டிக்ஸ் ஆயுதங்கள், உயிரி இரசாயனப் பொருட்கள். இவை அனைத்தும் மனித குலத்தையே அழித்துவிடும். இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது!" என்றார் முனியாண்டி பரமசிவம்.

அதிபர் ஜான் அலட்சியமாகச் சிரித்தார். "என்ன தீர்வு முனியாண்டி பரமசிவம்? ஐ.நாவில் இன்னொரு கண்டன தீர்மானம் போடுவீங்களா? அதைத்தான் என் பாக்கெட்ல இருக்குற வீட்டோ சுவிட்சை வச்சு ஒரே நொடியில தூக்கிக் குப்பையில போட்டுடுவேனே!"

அலெக்ஸியும் சேர்ந்துகொண்டார், "ஆமாம் முனியாண்டி பரமசிவம், நீங்க பிடிஎப் பைல் அனுப்புறதை விட நாங்க வெடிகுண்டு அனுப்புற வேகம் அதிகம். எங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இந்த உலகத்தின் ஆயுதச் சந்தையே எங்க கைக்குள்ளதான் இருக்கு!"

முனியாண்டி பரமசிவம் லேசாகப் புன்னகைத்தார். அவரது புன்னகையில் ஒரு தத்துவார்த்தமான நக்கல் ஒளிந்திருந்தது.

"ஐயா அதிபர்களே. நீங்க சொல்றது உண்மைதான். ஆனா ஒரு சின்ன திருத்தம். ஆயுத உற்பத்தியில நீங்க மட்டும் பெரிய ஆள் இல்லை." என்று கூறிய முனியாண்டி பரமசிவம், தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய ரிமோட் கன்ட்ரோலரை எடுத்தார்.

அரங்கத்தில் இருந்த பெரிய திரையில் ஒரு வரைபடம் தோன்றியது.

"என்ன இது?" என்று பதற்றத்தோடு கேட்டார் ஜான்.

"இதுதான் உங்களோட ரகசிய அணு ஆயுதக் கிடங்குகள். நீங்க ரெண்டு பேரும் உலகத்துக்குத் தெரியாம தயாரிச்சு வச்சிருந்த மொத்த அணுகுண்டுகளையும், ஏவுகணைகளையும் போன மாசமே உங்க நாட்டு பாதுகாப்பு அமைப்பில் இருந்த சில வியாபாரிகள் மூலமா ரகசியமா ஒருத்தர் மொத்தமாக விலைக்கு வாங்கிட்டார்!" என்றார் முனியாண்டி பரமசிவம்.

அதிபர் அலெக்ஸி அதிர்ச்சியில் நாற்காலியை விட்டு எழுந்தார். "என்னது? எங்க நாட்டு அணுகுண்டை எங்களுக்கே தெரியாம வித்துட்டாங்களா? அதை எவன் வாங்குனான்? உலகத்துலேயே அவ்வளவு பெரிய கோடீஸ்வரன் எவன் இருக்கான்?"

பரமசிவம் கூலாகத் தன் கண்ணாடி லென்ஸைத் துடைத்தபடி சொன்னார்:

"வேற யாரு? அந்த பண்டோரா தேசம்தான் உங்க ரெண்டு பேரோட மொத்த அணு ஆயுதத்தையும் வாங்கிடுச்சு!"

அரங்கமே உறைந்துபோனது. ஜானின் கையிலிருந்த ஒயின் கிளாஸ் கீழே விழுந்து நொறுங்கியது.

"பண்டோரா தேசமா?! அவங்ககிட்ட அணு ஆயுதமே இல்லைன்னு நினைச்சுதானே நாங்க போரே தொடுத்தோம்? அவங்ககிட்ட எப்படி அவ்வளவு பணம் வந்தது?" என்று கத்தினார் ஜான்.

முனியாண்டி பரமசிவம் சிரித்தார்.

"நீங்க போடும் வரிக்கு பயந்து, உங்க தண்டோரா தேசத்து தனியார் ஆயுத நிறுவனங்களே வரி ஏய்ப்பு செய்வதற்காகப் பண்டோரா தேசத்துக்கு மறைமுகமாக ஆயுதங்களை வித்துட்டாங்க. இப்போ நிலவரப்படி, உங்க ரெண்டு பேர்கிட்டயும் பழைய துப்பாக்கியைத் தவிர வேற பெரிய ஆயுதம் எதுவும் இல்லை. ஆனா, பண்டோரா தேசத்துகிட்ட இப்போ உலகத்திலேயே அதிக அணு ஆயுதங்கள் இருக்கு!"

அரங்கத்தின் லைட்டுகள் லேசாக மிளிர்ந்தன. முனியாண்டி பரமசிவம் தனது கோட்டைச் சரிசெய்து கொண்டு தொடர்ந்தார், "அப்புறம் இன்னோரு முக்கியமான விஷயம் அதிபர் ஜான்! பண்டோரா தேசத்து அதிபர் இப்பதான் எனக்கு மெசேஜ் பண்ணாரு. தண்டோரா தேசத்துகிட்ட இப்போ குண்டு தீர்ந்து போச்சுல்ல. சோ, நாங்க அமைதிப் பேச்சுவார்த்தையைத் தற்காலிகமா நிறுத்திட்டு, உங்க மேல போர் தொடுக்கப்போறோம்'னு சொல்லச் சொன்னாரு!"

மாநாட்டு அரங்கத்தில் இருந்த வல்லரசு அதிபர்கள் இருவரும், உலக அமைதிக்காக அல்ல. தங்கள் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதற்கு வழி தெரியாமல் திகைத்து நின்றார்கள்!

வெளியே 'உலக அமைதி மாநாடு வாழ்க' என்ற பிரம்மாண்டமான பேனர் காற்றில் பறந்துகொண்டிருந்தது.

*****

மெல்ல சாகும் இனம்!

ஜீன் எக்ஸ்பிரஸ்

அறை முழுவதும் ஏசி குளிரையும் தாண்டி ஒருவித பரபரப்பு புகையும் வாடையுமாக உறைந்திருந்தது.

"டாக்டர் மார்க்கண்டேய ஞானதிரவியம்! நேத்திரா டிவியில நேத்தி நீங்க பேசினதெல்லாம் ஓகே. ஆனா அரசாங்கம்ங்கறது ஒரு பிசினஸ். மதுவிலக்கைக் கொண்டு வந்தா கள்ளச்சாராயம் பெருகிடும்னு எங்களுக்கு வர்ற ரிப்போர்ட் சொல்லுது!" என்றார் அந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, கையில் இருந்த கோப்பை மூடிவைத்தபடி.

மார்க்கண்டேய ஞானதிரவியம் லேசாகச் சிரித்தார். "சார், 1971க்கு முன்னாடி 30 வருஷம் இங்க பூரண மதுவிலக்கு இருந்தது. அப்போ இல்லாத கள்ளச்சாராயமா இப்போ வரப்போகுது? அரசாங்கமும் போலீஸும் நினைச்சா ஒரு பொட்டு கள்ளச்சாராயம் இல்லாம பண்ண முடியும். கொரோனா டைம்ல கடைகளை மூடுனீங்களே. நாடு என்ன அழிஞ்சா போச்சு?"

அதிகாரி யோசனையுடன் பேனாவைச் சுழற்றினார்.

"சரி. ஆனா இதுக்கு மேல இந்தத் தமிழ்ச் சமூகம் குடிச்சா அடுத்த 30 வருஷத்துல தமிழ் சமுதாயமே அழிஞ்சிடும், மரபணு பேரிடர்ன்னு சொன்னீங்களே. அது கொஞ்சம் ஓவரா தெரியல?"

மார்க்கண்டேய ஞானதிரவியம் தன் லேப்டாப்பைத் திறந்து ஒரு டி.என்.ஏ  வரைபடத்தைக் காண்பித்தார்.

"இல்ல சார். இது பியூர் சயின்ஸ். 1971லிருந்து ரெண்டு தலைமுறையா இங்க குடியோட வீரியம் ரத்தத்துல ஊறிடுச்சு. மூணாவது தலைமுறையும் இதையே தொடர்ந்தா, அடுத்து பிறக்கப்போற குழந்தைகள் வயித்துல இருக்கும்போதே மதுவுக்கு அடிமையாத்தான் பிறக்கும். 55 வயசுல தெம்பா இருந்த தமிழ்நாட்டு ஜீன் அமைப்பு இப்போ சிதையுது. இன்னும் 30 வருஷத்துக்கு அப்புறம் தமிழன்னு சொல்லிக்க இங்க ஆள் இருக்க மாட்டான்."

அறைக்குள் ஒரு கனத்த அமைதி நிலவியது. ஐ.ஏ.எஸ் அதிகாரி பெருமூச்சு விட்டார்.

"ரைட். விஷயம் சீரியஸ்தான். டாஸ்மாக்கைத் தனியாருக்குக் கொடுத்தா லாப நோக்கத்துல இன்னும் அதிகமா விற்பாங்க. நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா, உடனடியாகக் கடைகளை மூடுறதுதான் சமுதாயத்தைக் காப்பாத்துற ஒரே வழி! நான் உடனே இதை மேலிடத்துக்குப் பார்வர்ட் பண்றேன்."

மார்க்கண்டேய ஞானதிரவியம் நிம்மதியுடன் லேப்டாப்பை மூடினார். ஒரு மருத்துவ விஞ்ஞானியின் கடமை முடிந்தது என்ற திருப்தி அவர் முகத்தில்.

*

அடுத்த வாரம்.

மார்க்கண்டேய ஞானதிரவியம் மருத்துவமனையில் தனது வழக்கமான பரிசோதனைகளை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் அரசு வெளியிட்ட அதி அவசர அறிவிப்பு ஒலித்தது,

"பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உடனடியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது! அனைத்து டாஸ்மாக் கடைகளும், பார்களும் இன்றோடு மூடப்படுகின்றன!"

மார்க்கண்டேய ஞானதிரவியம் புன்னகைத்தார், "செய்துவிட்டார்கள்!"

*

மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் கார் ஒரு சிக்னலில் நின்றது. பக்கத்துச் தெருவில் திடீரென ஒரு மிகப்பெரிய கூட்டம் அலைமோதியது. ஏதோ திருவிழா போல ஆட்களின் கூச்சல்.

மார்க்கண்டேய ஞானதிரவியம் காரின் கண்ணாடியை இறக்கி, பக்கத்தில் நின்ற ஒரு இளைஞனிடம் கேட்டார், "தம்பி என்ன அங்கே கூட்டம்? டாஸ்மாக் மூடுனதைக் கொண்டாடுறாங்களா?"

அந்த இளைஞன் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்தான்.

"ஹலோ அங்கிள்! எந்த உலகத்துல இருக்கீங்க? கவர்மென்ட் மதுக்கடையை மூடுன செய்தி வந்த அரை மணி நேரத்துல, பக்கத்து மாநிலத்துல இருந்து லாரி லாரியா சரக்கு உள்ள வர ஆரம்பிச்சிடுச்சு! அதைவிடக் கூத்து, இங்க இருக்கிற பார்மா கம்பெனிகள் எல்லாம் ஹோம் டெலிவரி ஆப் மூலமா லீகலா ஆல்கஹால் சப்ளிமெண்ட் விக்க ஆரம்பிச்சிட்டாங்க! டாஸ்மாக் இருந்தப்பக்கூட இவ்வளவு ஸ்பீடா கிடைக்கல சார்!"

மார்க்கண்டேய ஞானதிரவியம் அதிர்ச்சியுடன் பார்த்தார். அந்த இளைஞன் தன் மொபைல் திரையைக் காண்பித்தான். அதில் ஒரு புது ஆப் மிளிர்ந்தது, டிராப்ஸ் - 10 நிமிடத்தில் உங்கள் வாசலில்!'

அப்போது மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் மொபைல் போன் அடித்தது. ஸ்கிரீனில் அதே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பெயர்.

மார்க்கண்டேய ஞானதிரவியம் பதற்றத்துடன் போனை எடுத்தார், "ஹலோ சார்"

மறுமுனையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒருவித கார்ப்பரேட் நக்கல் இருந்தது.

"டாக்டர்! உங்க ஜீன் தியரி ரொம்ப அற்புதம் சார்! டாஸ்மாக் மூலமா அரசுக்கு வந்த வருமானத்தை விட, இப்போ இந்த ஆல்கஹால் ஆல்டர்நேட்டிவ் ஆப்ஸ் மூலமா அரசுக்கு வரியும், தனியாருக்கு லாபமும் 3 மடங்கு அதிகமா வருது! மதுவிலக்கு கொண்டு வந்தா பிசினஸ் அடிபடும்னு நினைச்சோம். ஆனா அதுவே ஒரு புதிய மிகப்பெரிய சந்தையைத் தொறந்து விட்டுடுச்சு! தேங்க்ஸ் டாக்டர்!"

மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் கையில் இருந்த போன் மெதுவாக நழுவியது.

கார்ப்பரேட் உலகமும், மனித மூளையும் அறிவியலை விட எவ்வளவு வேகமாக அப்டேட் ஆகிவிடுகிறது என்பதை நினைத்தபோது, 30 ஆண்டுகள் தேவையில்லை, தமிழ் சமுதாயத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது!

*****

4 Aug 2026

மெய்யறிதலின் புதிர்வெளியும் சில அவசரக் குடுக்கைத்தனங்களும்!

மெய்யறிதலின் புதிர்வெளியும் சில அவசரக் குடுக்கைத்தனங்களும்!

கார் பயணத்தில் தொடங்கும் ஜெயமோகனின் கட்டுரை, மனித மண்டையோட்டைக் கிழித்துக்கொண்டு போய், இறுதியில் பிரபஞ்சத்தின் பெருவெளியில் போய் நிறைகிறது. ஜெயமோகன் பாணி உரைநடையின் அசாத்திய வசீகரத்தையும், அதே சமயம் அதில் ஒளிந்திருக்கும் சின்னச் சின்னத் தர்க்கக் கோளாறுகளையும் ஒருசேரத் தரிசிக்க ‘மேகங்களின் குரல்’ தொடர் கட்டுரையின் ‘புத்திக்கும் அப்பால்…’ என்ற இக்கட்டுரை ஒரு நல்ல வாய்ப்பு.

அறையில் அமர்ந்து பேசினால் "அன்றாட விஷயங்கள்" மட்டுமே பேசப்படுமாம்; காரில் வேகமாகப் போனால் "புற உலகம் இல்லாமல் ஆகி, உரையாடல் கூர் கொள்ளுமாம்".

என்ன ஓர் அழகான கற்பனை! பொதுவாகக் கார் பயணங்களில் "அடுத்த டோல் பிளாசா எப்போ வரும்?", "டீ குடிக்க வண்டி நிறுத்துவோமா?" என்று பேசிக்கொண்டு போவதுதான் நம் ஊர் வழக்கம். ஆனால், எழுத்தாளரின் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டும் கார் கதவு சாத்தப்பட்டதும் ஆளுக்கொரு தத்துவப் பொட்டலத்தைப் பிரித்து வைக்கிறார்கள் போலிருக்கிறது. என்னவோ போங்கள், காரில் போனால் மட்டுமே தீவிரம் கூடும் என்றால், நம்மூர் டிராபிக் ஜாமில் சிக்குபவர்கள் எல்லாம் எப்போதுதான் மெய்ஞானம் அடையப் போகிறார்களோ தெரியவில்லை!

விபத்தில் சிக்கிய தோழியின் அனுபவ விவரிப்பு பகுதி மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது, ஒரு சிறுகதைக்குரிய அடர்த்தியோடு. ஆனால், அங்கேயும் ஒரு கிண்டலான நண்பர் கேட்கிறார், "கண்ணாடிதான் பறந்துபோயிருக்குமே, அப்புறம் எப்படி கூழாங்கல் முதற்கொண்டு துல்லியமாகத் தெரிந்தது?"

நியாயமான கேள்விதான்! அதற்கு எழுத்தாளர் சொல்லும் பதில் என்னவென்றால், "மூளைக்குத் தேவைப்பட்டால் ஒலியைக் காட்சியாகவும், காட்சியை மணமாகவும் மாற்றிக்கொள்ளும்!"

சுவாரஸ்யமான வாதம். ஆனால், பார்வை போன பிறகு மூளை கண்ணாடி வேலையைத் தானே பார்த்துக்கொள்ளும் என்றால், அப்புறம் எதற்கு அந்த அம்மா தடிமனான கண்ணாடி போட்டுக்கொண்டு திரிய வேண்டும்? மூளையின் இந்த அசாத்திய திறமையை ஏன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை என்ற கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை.

பீனியாஸ் கேஜின் மண்டையோட்டுக்குள் கடப்பாரை புகுந்து சென்ற கதை, நரம்பியலில் ஒரு புகழ்பெற்ற சம்பவம். அதை மிக அழகாக விவரித்துவிட்டு, 'Brain அல்ல, Braining' என்று ஆலிவர் சாக்ஸையும் துணைக்கு அழைத்து வருகிறார் ஜெ.மோ. இதுவரைக்கும் அறிவியல் ரொம்பவே சுவாரஸ்யமாகவும் அழகாகவும் போகிறது.

ஆனால், அதற்குப் பிறகுதான் எழுத்தாளர் தனது வழக்கமான செம்பைச் செருகுகிறார்.

"நான் வேதாந்தி. என் பாதை தூய அறிவின் பாதை. அறிவியலுக்கு அப்பால் யோசிப்பதில்லை" என்று சுய சான்றிதழ் கொடுத்துக்கொண்டே, அடுத்த அடியை அப்படியே அறிவியல் எல்லைக்கு வெளியே எடுத்து வைக்கிறார்.

கேஜின் சிதைந்த மூளை தன்னைத்தானே சரிசெய்துகொண்டது உயிரியலின் அசாத்தியமான ஒரு தன்னமைவு இயக்கம்.

ஆனால், அதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், "அப்படிச் செய்ய வைத்தது எது? அதுதான் அது!" என்று ஒரே தாவலாகக் கீதையின் புத்தே பரதஸ்து சஹ் என்பதற்குள் போய் விழுந்துவிடுகிறார்.

அறிவியல் இன்னும் ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவில்லை என்றால், "அடடா, அங்கேதான் மெய்ஞானம் ஒளிந்திருக்கிறது!" என்று உடனடியாகப் பிரகடனம் செய்துவிடுவது நம்மூர் வேதாந்திகளுக்கு கைவந்த கலை. அறிவியலின் இடைவெளியில் ஆன்மிகக் கொடியை நட்டு வைக்கும் இந்த அவசரம் இருக்கிறதே, அதுதான் சுவாரஸ்யமானது!

ஒன்றை ஒத்துக்கொண்டாக வேண்டும். கட்டுரை வாசிக்க மிகச் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், "நான் தூய அறிவியல் வழியில் சிந்திக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே, அறிவியலின் தோள் மீது ஏறி நின்று வேதாந்தக் கொடி பிடிக்கும் இந்த நுட்பமான போலித் தருக்கம்தான் இதில் வேடிக்கையான விஷயம்.

சுருக்கமாகச் சொன்னால், இக்கட்டுரை ஓர் அரிய அனுபவப் பதிவு; சுவாரஸ்யமான அறிவியல் விவாதம். ஆனால், இறுதியில் எழுத்தாளர் அடையும் அந்த வேதாந்த முடிவு என்பது தூய அறிவின் பாதை' அல்ல; அது அவருடைய சொந்த ஆன்மிக விருப்பம் மட்டுமே!

*****

தொண்ணூற்று ஒன்பது + ஒன்று!

தொண்ணூற்று ஒன்பது + ஒன்று!

அந்த வகுப்பறையில் மொத்தம் இரண்டு பேர்தான் இருந்தார்கள்.

ஒருவர், ஆசிரியர் தமிழரசன். இன்னொருவன், மாணவன் கபிலன்.

கடந்த மூன்று வருடங்களாகவே வகுப்பறை அப்படித்தான் இருந்தது. கபிலன் தும்மினால் தமிழரசனுக்கு ஜலதோஷம் பிடிக்கும்; தமிழரசன் பெருமூச்சு விட்டால் கபிலன் புத்தகத்தை விரிப்பான்.

வகுப்பில், யாருக்காவது சந்தேகம் இருக்கா? என்று கேட்கும்போதெல்லாம், கபிலன் தமிழரசனையும், தமிழரசன் கபிலனையும் பார்த்துக் கொள்வார்கள்.

மதிய உணவு சமைக்கும் இரு அக்காக்களும் வாசலில் அமர்ந்து, "இன்னிக்கு ஒரு முட்டை மிச்சம் சாமி, யார் சாப்பிடுறது?" என்று தினமும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள்.

ஒரு நாள், தலைமை ஆசிரியர் போல வந்த ஓர் அதிகாரி, அட்டவணையோடு வகுப்பறைக்குள் நுழைந்தார்.

"தமிழரசன் ஐயா! எமிஸ் தரவுப்படி உங்க ஸ்கூல்ல 10 பேருக்கு கம்மியா இருக்கு. பக்கத்து யூனியன்ல இருக்குற பெரிய ஸ்கூல் கூட இந்த ஸ்கூலை மெர்ஜ் பண்ணப்போறோம். பையனுக்கு ஒரு மினி வேன் வச்சு அங்க அனுப்ப போறோம்! நீங்க நாளைல இருந்து 100 பேர் இருக்குற பெரிய ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர்!" என்றார்.

தமிழரசனுக்குக் கண்கள் கலங்கின. "அப்போ கபிலன்? அவன் மத்தப் பிள்ளைகளோட ஓடிப் பிடிச்சு விளையாடுவானா சார்? அவனுக்கு சமூகத் திறன் வளருமா சார்?"

"ஆமாம் ஐயா! மினி வேன்ல பாட்டு பாடிட்டே போவான். தினமும் புதுசு புதுசா சண்டை போடுவான், கலைத் திருவிழாவுல ஜெயிப்பான்! நீங்களும் நூறு பேருக்குப் பாடம் நடத்தலாம். நிதி மிச்சம், ஆசிரியர் வளம் மிச்சம்!" என்று கவிதையாகச் சொல்லிவிட்டு அதிகாரி கிளம்பினார்.

மறுநாள் காலை.

புதிய, பிரம்மாண்டமான ஒன்றிய நடுநிலைப் பள்ளி. நூறு மாணவர்கள், விளையாட்டு மைதானம், நூலகம், காலை உணவுத் திட்டம் என ஒரே அமர்க்களமாக இருந்தது.

தமிழரசன் உற்சாகமாக வகுப்பறைக்குள் நுழைந்தார். அடடா! எத்தனை குழந்தைகள்! எத்தனை கேள்விகள்! எத்தனை சமூகத் திறன்! என்று நெகிழ்ந்துபோய், கரும்பலகையில் எழுதத் தொடங்கினார்.

அப்போது, வகுப்பறையின் கடைசிப் பெஞ்சில் ஒரு சிறுவன் தனிமையாக, மிகவும் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.

பக்கத்திலிருந்த மாணவனிடம் கேட்டார், "யார் அது? ஏன் அவ்வளவு சோகமா இருக்கான்?"

அந்த மாணவன் சலிப்பாகச் சொன்னான், "அவன் பேரு பாரிவேந்தன். அவன் தான் போன வருஷம் வரைக்கும் இந்த பெரிய ஸ்கூல்ல படிச்ச ஒரே ஆளு!"

தமிழரசன் அதிர்ச்சியுடன், "என்னது? போன வருஷம் வரைக்கும் இந்த பெரிய ஸ்கூல்ல ஒரே ஒரு பையன்தான் இருந்தானா? அப்போ மிச்ச 99 பேர் யாருடா?" என்று கேட்டார்.

மாணவன் சிரித்துக்கொண்டே சொன்னான், "ஐயா! அரசாங்கம் இந்த வருஷம் பத்து  மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளை மூடி, ஒரே பெரிய பள்ளியா இணைப்போம்னு அறிவிச்சங்கல்ல? அப்படி ஒன்றியம் முழுக்கப் பூட்டப்பட்ட 49 சின்னப் பள்ளிகளுல இருந்து, 49 மினி வேன்கள்ல ஒண்ணு, ரெண்டு. மூணுன்னு கூட்டிட்டு வந்து மொத்தமா இறக்கின 99 மாணவர்கள்தான் ஐயா நாங்க எல்லாரும்!"

தமழரசன் மலைத்துப்போய் நின்றார்.

இப்போது அங்கே, வேனில் வந்த 99 மாணவர்களும் புதிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோய், "நாங்க பழையபடி எங்க ஊரு இரண்டு பேர் ஸ்கூலுக்கே போறோம்டா சாமி!" என்று மினி வேனை நோக்கி ஓடத் தொடங்கியிருந்தார்கள்.

தமிழரசனின் கண்கள் அந்த 99 பேரில் கபிலன் எங்கே எனத் தேடத் தொடங்கியது.

*****

3 Aug 2026

மதுவும் மாண்புமிகு வருவாயும்!

மதுவும் மாண்புமிகு வருவாயும்!

மனித இனம் தோன்றிய காலத்திலேயே கூடவே இரண்டு விஷயங்களும் தோன்றிவிட்டன.

ஒன்று, நாளை நிச்சயம் மதுவை ஒழித்துவிடுவோம் என்ற வாக்குறுதி.

இரண்டு, அந்த வாக்குறுதியை மறக்க வைக்கும் மதுபான வருமானம்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது சரியாகத் தேர்தல் முடிவுகள் வருவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை மிகவும் உன்னதமான, புனிதமான தத்துவமாக இருக்கும். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிகிற அதே நிமிடத்தில், அது நிதியமைச்சரின் நெஞ்சைப் பிளக்கும் தலைவலியாக உருமாறிவிடும்.

நமது முன்னோர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர். சங்க காலத்தில் "தேறல்", "கள்", "வடிகட்டப்படாத தூய்மையான பானங்கள்" எனப் பல பெயர்களில் அருந்தியிருக்கிறார்கள்.

புறநானூற்றுப் புலவர்கள் அரசனிடம் சென்று "மன்னா, உன் வீரம் வாழ்க, எனக்குச் சிறிது கள் தருக" என்று பாடல் இயற்றி வாங்கி அருந்திய வரலாறுகள் உண்டு. ஆனால், அப்போதெல்லாம் அதை வைத்து வருவாய் பற்றாக்குறையைச் சரிசெய்யும் "பொருளாதாரப் புத்திசாலித்தனம்" எந்த மன்னனுக்கும் தோன்றவில்லை. பாவம், அவர்களுக்கு நவீன நிதி மேலாண்மை தெரியவில்லை!

அதன் பிறகு வந்தார்கள் வெள்ளையர்கள். 1878 இல் ஆங்கிலேய அரசு அபகாரி சட்டம் கொண்டுவந்து, "நீங்களாகக் காய்ச்சி அருந்தினால் அது சட்டப்படி தவறு, நாங்களே காய்ச்சி விற்றால் அது வரி!" என்ற உலக மகா தத்துவத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

சுதேசி இயக்க காலத்தில் காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் செய்தபோது, "ஐயோ, இந்த மதுவை ஒழித்தால் அரசுக்கு வருமானம் போய்விடுமே" என்று லார்ட் இர்வின் அழுதாரோ இல்லையோ, இன்றைய நவீன அரசுகள் தினமும் அழுதுகொண்டுதான் இருக்கின்றன.

"ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான்!" என இந்த வாக்கியத்தைக் கேட்காத தமிழ்நாட்டின் செவிகளே இருக்க முடியாது. ஆனால், வெற்றி பெற்ற பிறகு என்ன நடக்கும்?

"பள்ளிக்கு அருகில் இருக்கும் 1000 கடைகளை மூடிவிட்டோம்!" என்பார்கள்.

உடனே நாமும் நெகிழ்ந்துபோய், "ஆஹா! அருமை!" என்போம். அதன் பிறகுதான் தெரியவரும், அந்த 1000 கடைகளில் அருந்தியவர்கள் அப்படியே பக்கத்துத் தெருவில் இருக்கும் 1001 ஆவது கடைக்கு நடையாக நடந்து சென்றுவிட்டார்கள் என்று!

2003 இல் லாட்டரியை ஒரே அடியாகத் தடை செய்தது போல, மதுவையும் ஒரே அடியாகத் தூக்கி எறியலாமே என்றால், உடனே "அடடே! கள்ளச்சாராயம் வந்துவிடுமே! நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் கடை நடத்துகிறோம்!" என்று மக்கள் நலன் மீது திடீர் பாசம் பொங்கி வழியும்.

வாகனம் ஓட்டினால் விபத்து நடக்கும் என்பதற்காக வாகனத்தையா தடை செய்கிறோம்? என்ன ஓர் அற்புதமான தர்க்கம்! அப்படியென்றால் அரச நிர்வாகமே விபத்து செய்து பழகிக்கொள்ளுங்கள் என்று வாகனம் வாங்கித் தருவது போன்றது அல்லவா இந்த நியாயம்?

அரச நிர்வாகம் என்ன யோசிக்கிறது என்றால், உரிமைத்தொகை வேண்டுமா? – அருந்துங்கள்! இலவச எரிவாயு உருளை வேண்டுமா? – இன்னும் நன்றாக அருந்துங்கள்! இலவசப் பேருந்து பயணமா? – இன்னும் கூடுதலாக இரண்டு கோப்பை அருந்துங்கள்!

ஒரு மனிதன் தன் சிறுநீரகத்தை விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் தங்கச் சங்கிலி வாங்கி அணிந்துகொண்டு அழகு பார்ப்பதற்குப் பெயர் வளர்ச்சி என்றால், இந்த நிதிக்கொள்கையும் மிகச்சிறந்த வளர்ச்சிதான்.

“மது அருந்துதல் உடல் நலத்திற்குக் கேடு” என்ற எச்சரிக்கையைக் பாட்டிலில் மட்டும் எழுதாமல், “மது வருமானத்தில் நிர்வாகம் நடத்துவது நிர்வாக நலத்திற்குக் கேடு” என்பதை மக்கள் மன்றங்களின் வாசலிலும் எழுதி வைத்தால் நன்றாக இருக்கும்!

*****

டெல்டாவில் குறுவை நாடகம்!

டெல்டாவில் குறுவை நாடகம்!

மேட்டூரும் திறக்கவில்லை. மேகமும் பொழியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி வந்துவிட்டால் போதும்; மேட்டூர் அணைக் கதவுக்குப் பின்னால் ஏதோ ஒரு ஸ்விட்ச் காத்திருப்பதைப் போல நாளிதழ்களில் செய்திகள் வெளிவரும். "ஜூன் 12 இல் மேட்டூர் திறப்பு. விவசாயிகள் மகிழ்ச்சி வெள்ளம்!" என்று வண்ணமயமாக எழுதுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு?

கர்நாடகா மேலிருந்து தண்ணீரைத் திறந்துவிடவில்லை; நம்மவர்கள் வழக்கம்போல மேட்டூர் அணையைத் திறந்துவிடவில்லை.

தண்ணீர் வராத கதையைப் பார்த்தால், காவிரியில் தண்ணீர் வருவதைக் காட்டிலும், யூடியூப்பில் வெளியாகும் வாட்டர் ரெசிபி காணொளிகளைப் பார்த்துதான் விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும் போலிருக்கிறது!

கடந்த சில ஆண்டுகளாக, "நாங்கள் சொன்ன நேரத்திற்கு அணையைத் திறப்போம்; சொல்லாத நேரத்தில் மழையைப் பெய்ய வைப்போம்" என்று அரசு சொல்லிக்கொண்டிருந்தது. குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் என்று பெயரிட்டு, 482 ரூபாயை கோடியை அள்ளித் தெளித்தார்கள். உயிர் உரம், நுண்ணூட்டச் சத்து, மானிய விதை என ஒரே கொண்டாட்டம்தான். 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்தார்களாம்!

சென்ற ஆண்டு 12.48 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்து சாதனை படைத்ததாகப் பெருமை பேசினார்கள்.

ஆனால், இந்த ஆண்டு?

"ஆற்றில் தண்ணீர் இருந்தால் அள்ளிக்கொள்ளலாம். ஆற்றில் தண்ணீரே இல்லை என்றால் என்ன செய்வது?" என்ற மிகச் சிறந்த தத்துவார்த்தக் கேள்விக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மேட்டூர் அணை திறக்கப்படவில்லை என்றால் என்ன, நிலத்தடி நீர் இருக்கிறதே? "பம்புசெட்டைப் போடு, பயிரை நடு!" என்று களம் இறங்கினால், மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்பது மின்சார வாரியத்திற்கே தெரியாது.

இருப்பினும், நம் விவசாயிகள் சிரமப்பட்டு பம்புசெட்டைப் பயன்படுத்தி இதுவரை 4.39 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். ஆனால், வழக்கமான 5.32 லட்சம் ஏக்கர் இலக்கில் 93 ஆயிரம் ஏக்கர் அம்பேல். "அட போங்கள், 93 ஆயிரம் ஏக்கர் குறைந்தால் என்ன? நாங்கள் காகிதத்தில் இலக்கை எட்டி விட்டோமே!" என்று அதிகாரிகள் மனதிற்குள் நினைக்காமல் இருந்தால் சரி.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏதாவது நஷ்டஈடு அல்லது இழப்பீடு கிடைக்குமா என்று ஓர் உயர் அதிகாரியிடம் கேட்டால், அவர் மிக மிக இயல்பாக ஒரு வெடிகுண்டை வீசுகிறார்:

"நீர் பற்றாக்குறையால் சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு இதுவரை தனியாக எந்த இழப்பீடும் வழங்கப்பட்டதே இல்லையே தம்பி! அரசாங்க வரலாற்றிலேயே அப்படி ஒரு வழக்கமே கிடையாது!"

ஆஹா! எவ்வளவு தெளிவான விளக்கம்! "தண்ணீரும் தரமாட்டோம், இழப்பீடும் தரமாட்டோம். ஆனால் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தில் மானிய விலையில் உரம் தருவோம்; அதை வாங்கி வீட்டில் வரவேற்பறையில் காட்சிப் பொருளாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்கிறார்களோ என்னவோ!

சுருக்கமாகச் சொன்னால்,

காவிரி நீரைக் காணவில்லை.

குறுவை சாகுபடி பரப்பளவு 1 லட்சம் ஏக்கர் காலி.

விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி.

அரசு தரப்பு பதில், "அட, வழக்கம்போல ஒன்றும் தரவில்லையே, புதிதாக ஏன் கேட்கிறீர்கள்?"

இப்படி, மழை வருமா? வராதா? என்று வானத்தைப் பார்த்துக்கொண்டே, பம்புசெட் மோட்டாருக்குப் பூஜை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள்!

*****

2 Aug 2026

ஏரிகளும், நாம் செய்யும் ஏழரைகளும்!

ஏரிகளும், நாம் செய்யும் ஏழரைகளும்!

மனிதன் அருந்த, மாடுகள் குளிக்க, பயிர் பச்சை வளர, பறவைகள் வந்து பொழுதைக் கழிக்க. என அனைத்துக்கும் ஏரிதான் பிரதான ஆதாரம்.

ஏரியில் தண்ணீரைத் தேக்கி வைத்தால், அடியில் இருக்கும் நிலத்தடி நீரும் “நான் இருக்கிறேன் நண்பா என்று மேலே உயரும். இதையெல்லாம் புரிந்து கொண்டுதான் நம் முன்னோர்கள் ஏரி வெட்டுவதையும், அதைப் பராமரிப்பதையும் ஏதோ சாமி கும்பிடும் காரியத்தைப் போலப் பரம பயபக்தியுடன் செய்து வந்தார்கள்.

அக்காலத்தில் ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடக் கூடாது என்பதற்காகக் காவலர்களை நியமித்திருந்தார்கள். ஏரியில் மண் அடைத்துக் கொண்டால், ஊர் மக்கள் அனைவரும் கூட்டமாகப் புறப்பட்டுச் சென்று தூர் வாருவார்கள். அதற்குப் பெயர்தான் குடிமராமத்து. அதாவது, "நம் ஊர் ஏரி, நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்கிற கொஞ்ச நஞ்சப் பொறுப்புணர்வு!

பத்தாம் நூற்றாண்டில் ராஜாதித்த சோழன் என்றொரு மன்னன். அவர் வெட்டிய வீராணம் ஏரியின் சுற்றளவு மட்டுமே 15 கிலோமீட்டர்! 1,465 மில்லியன் கன அடி தண்ணீரை அதற்குள் அடைத்து வைக்கலாம். மனித கரங்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் இதுதான். இன்றைக்கும் சுற்றியிருக்கும் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்குத் தண்ணீர் கொடுத்து, சென்னைவாசிகளின் தொண்டையையும் நனைத்துக் கொண்டு இருக்கிறது.

சொல்லப்போனால், இந்தியாவிலேயே அதிக ஏரிகளைக் கொண்ட பெருமை நம் தமிழ்நாட்டிற்கும், அப்புறம் அந்த ராஜஸ்தானுக்கும்தான் உண்டு.

1906 இல் மெட்ராஸில் மட்டும் 474 ஏரிகள் இருந்தனவாம். இப்போது கணக்கெடுத்துப் பார்த்தால், வெறும் 43 மட்டுமே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இன்றைக்கோ, நாளைக்கோ என்று இருக்கின்றன!

மிச்ச ஏரிகளெல்லாம் எங்கே என்று கேட்டால், எல்லாம் வடிவேலுவின் கிணற்றைக் காணும் காமெடியாக நிஜமாகவே டிராஜடியாகக் காணாமல் போய்விட்டன. அத்தனை ஏரிகளையும் மூடி, வீடாக்கி, வணிக வளாகமாக்கி, தொழிற்சாலையாக்கி, சென்னைவாசிகளையெல்லாம் மெட்ரோ மனிதர்களாக்கி வளர்ச்சி அடைந்துவிட்டோம்.

இதில் உச்சக்கட்ட நகைமுரண் என்னவென்றால், சென்னையின் மையப்பகுதியில் இருந்த முகப்பேர் ஏரியை மொத்தமாக மூடிவிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அதற்கு முகப்பேர் ஏரித் திட்டம் என்றே பெயர் வைத்து மனைப் பிரிவு போட்டு விற்றுவிட்டதுதான்! ஏரியை அழித்துவிட்டு அதற்கே ஏரி திட்டம் என்று பெயர் வைக்கும் அந்த நல்ல மனம் இருக்கிறதே. அதுதான் தமிழ்நாட்டின் தனித்துவமான டிசைன்!

அடுத்து நம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 100 வருடங்களுக்கு முன்னால் 15,000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடந்தது. இப்போது தேடிப் பார்த்தால் 2,500 ஏக்கர் கூடத் தேறாது. அப்புறம் மழை பெய்தால் ஊருக்குள் வெள்ளம் வராமல் அமெரிக்காவுக்கா போகும்? அது அமெரிக்க சதியோ, ஆப்பிரிக்கா சதியோ அத்தனை வெள்ளமும் சென்னை மாநகருக்குள்தான் படை எடுக்கின்றன.

ஏரிக்குள் குப்பையைக் கொட்டுவது, சீமைக்கருவேல மரத்தையும், ஆகாயத்தாமரையையும் வளர்த்து அழகு பார்ப்பது என நாம் செய்கின்ற காரியங்களைப் பார்த்தால், நாம் ஏரியைப் பராமரிக்கிறோம் என்பதை விட, அதை எப்போது காலி செய்யலாம் என்று காத்துக் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது.

கடைசியாகச் சொல்ல வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. அது என்னவென்றால், தமிழ்நாட்டில் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் இதற்கு 914 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். அப்புறம் 2024 இல் 4,276 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள்.

யோசித்துப்பாருங்கள். வானத்தில் இருந்து இயல்பாக ஊற்றும் மழைத் தண்ணீரை ஏரியில் சேமித்து வைக்காமல், அதை நேராகக் கடலுக்கு அனுப்பிவிட்டு, பின்னர் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அந்த உப்புத் தண்ணீரைக் குடிநீராக மாற்றுகிறார்களாம்! என்னவொரு புத்திசாலித்தனம்!

ஏரிகளை வெட்டி, அதை வெட்டாவிட்டாலும் கூட பரவாயில்லை, இருக்கின்ற ஏரிகளைக் கொஞ்சம் செலவு செய்து பராமரித்தாலே கடல்நீரைக் குடிநீராக்கவும் வேண்டாம், வெள்ளம் வந்தால் உள்ளம் நொந்து அவதிப்படவும் வேண்டாம்.

*****