2 Aug 2026

ஏரிகளும், நாம் செய்யும் ஏழரைகளும்!

ஏரிகளும், நாம் செய்யும் ஏழரைகளும்!

மனிதன் அருந்த, மாடுகள் குளிக்க, பயிர் பச்சை வளர, பறவைகள் வந்து பொழுதைக் கழிக்க. என அனைத்துக்கும் ஏரிதான் பிரதான ஆதாரம்.

ஏரியில் தண்ணீரைத் தேக்கி வைத்தால், அடியில் இருக்கும் நிலத்தடி நீரும் “நான் இருக்கிறேன் நண்பா என்று மேலே உயரும். இதையெல்லாம் புரிந்து கொண்டுதான் நம் முன்னோர்கள் ஏரி வெட்டுவதையும், அதைப் பராமரிப்பதையும் ஏதோ சாமி கும்பிடும் காரியத்தைப் போலப் பரம பயபக்தியுடன் செய்து வந்தார்கள்.

அக்காலத்தில் ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடக் கூடாது என்பதற்காகக் காவலர்களை நியமித்திருந்தார்கள். ஏரியில் மண் அடைத்துக் கொண்டால், ஊர் மக்கள் அனைவரும் கூட்டமாகப் புறப்பட்டுச் சென்று தூர் வாருவார்கள். அதற்குப் பெயர்தான் குடிமராமத்து. அதாவது, "நம் ஊர் ஏரி, நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்கிற கொஞ்ச நஞ்சப் பொறுப்புணர்வு!

பத்தாம் நூற்றாண்டில் ராஜாதித்த சோழன் என்றொரு மன்னன். அவர் வெட்டிய வீராணம் ஏரியின் சுற்றளவு மட்டுமே 15 கிலோமீட்டர்! 1,465 மில்லியன் கன அடி தண்ணீரை அதற்குள் அடைத்து வைக்கலாம். மனித கரங்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் இதுதான். இன்றைக்கும் சுற்றியிருக்கும் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்குத் தண்ணீர் கொடுத்து, சென்னைவாசிகளின் தொண்டையையும் நனைத்துக் கொண்டு இருக்கிறது.

சொல்லப்போனால், இந்தியாவிலேயே அதிக ஏரிகளைக் கொண்ட பெருமை நம் தமிழ்நாட்டிற்கும், அப்புறம் அந்த ராஜஸ்தானுக்கும்தான் உண்டு.

1906 இல் மெட்ராஸில் மட்டும் 474 ஏரிகள் இருந்தனவாம். இப்போது கணக்கெடுத்துப் பார்த்தால், வெறும் 43 மட்டுமே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இன்றைக்கோ, நாளைக்கோ என்று இருக்கின்றன!

மிச்ச ஏரிகளெல்லாம் எங்கே என்று கேட்டால், எல்லாம் வடிவேலுவின் கிணற்றைக் காணும் காமெடியாக நிஜமாகவே டிராஜடியாகக் காணாமல் போய்விட்டன. அத்தனை ஏரிகளையும் மூடி, வீடாக்கி, வணிக வளாகமாக்கி, தொழிற்சாலையாக்கி, சென்னைவாசிகளையெல்லாம் மெட்ரோ மனிதர்களாக்கி வளர்ச்சி அடைந்துவிட்டோம்.

இதில் உச்சக்கட்ட நகைமுரண் என்னவென்றால், சென்னையின் மையப்பகுதியில் இருந்த முகப்பேர் ஏரியை மொத்தமாக மூடிவிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அதற்கு முகப்பேர் ஏரித் திட்டம் என்றே பெயர் வைத்து மனைப் பிரிவு போட்டு விற்றுவிட்டதுதான்! ஏரியை அழித்துவிட்டு அதற்கே ஏரி திட்டம் என்று பெயர் வைக்கும் அந்த நல்ல மனம் இருக்கிறதே. அதுதான் தமிழ்நாட்டின் தனித்துவமான டிசைன்!

அடுத்து நம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 100 வருடங்களுக்கு முன்னால் 15,000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடந்தது. இப்போது தேடிப் பார்த்தால் 2,500 ஏக்கர் கூடத் தேறாது. அப்புறம் மழை பெய்தால் ஊருக்குள் வெள்ளம் வராமல் அமெரிக்காவுக்கா போகும்? அது அமெரிக்க சதியோ, ஆப்பிரிக்கா சதியோ அத்தனை வெள்ளமும் சென்னை மாநகருக்குள்தான் படை எடுக்கின்றன.

ஏரிக்குள் குப்பையைக் கொட்டுவது, சீமைக்கருவேல மரத்தையும், ஆகாயத்தாமரையையும் வளர்த்து அழகு பார்ப்பது என நாம் செய்கின்ற காரியங்களைப் பார்த்தால், நாம் ஏரியைப் பராமரிக்கிறோம் என்பதை விட, அதை எப்போது காலி செய்யலாம் என்று காத்துக் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது.

கடைசியாகச் சொல்ல வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. அது என்னவென்றால், தமிழ்நாட்டில் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் இதற்கு 914 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். அப்புறம் 2024 இல் 4,276 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள்.

யோசித்துப்பாருங்கள். வானத்தில் இருந்து இயல்பாக ஊற்றும் மழைத் தண்ணீரை ஏரியில் சேமித்து வைக்காமல், அதை நேராகக் கடலுக்கு அனுப்பிவிட்டு, பின்னர் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அந்த உப்புத் தண்ணீரைக் குடிநீராக மாற்றுகிறார்களாம்! என்னவொரு புத்திசாலித்தனம்!

ஏரிகளை வெட்டி, அதை வெட்டாவிட்டாலும் கூட பரவாயில்லை, இருக்கின்ற ஏரிகளைக் கொஞ்சம் செலவு செய்து பராமரித்தாலே கடல்நீரைக் குடிநீராக்கவும் வேண்டாம், வெள்ளம் வந்தால் உள்ளம் நொந்து அவதிப்படவும் வேண்டாம்.

*****

ஷாக் அடிக்க வைக்கும் மின் கட்டணம்!

ஷாக் அடிக்க வைக்கும் மின் கட்டணம்!

தமிழக மின்சார வாரியம் எப்போதுமே ஒரு கலைக்கூடம். நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம் என்பதற்கும், அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில் இருக்கும் தொகைக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்க இயற்பியலின் எந்த விதியும் போதாது.

சமீபத்தில் "500 யூனிட் வரை பயன்படுத்தினால் 200 யூனிட் இலவசம்" என்று ஓர் அரிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

மக்கள் 'அடடா, அரசாங்கம் நமக்கு ஏதோ நல்லது செய்கிறது' என்று நெகிழ்ந்துபோய் மின்விசிறியைக் கொஞ்சம் வேகமாக ஓட வைத்தார்கள். அடுத்த மாதமே மின்வாரியம் தனது வழக்கமான மாஸ்டர் பிளானை இறக்கியது.

ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை மின் கட்டணம் வரும் ஒருவருக்கு, இந்த முறை அவரது செல்லிடப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும், அவருக்கு மின்சாரம் தேவையில்லாமலேயே ஷாக் அடித்தது. அவருக்கு மின் கட்டணம் 16,907 ரூபாய்!

அவர் "நான் வீட்டில் மின்சார அடுப்பில் ராக்போர்ட் சீஸ் சமைக்கவில்லை, நாசாவுக்காக ராக்கெட் ஏதும் ஏவவில்லை" என்று அதிகாரிகளிடம் போய் முறை முறையிட்டிருக்கிறார். அதிகாரிகள் மிகவும் அமைதியாக, "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, பணத்தைக் கட்டு. இல்லை என்றால் பீஸைப் பிடுங்கி விடுவோம்" என்று தங்களின் வாடிக்கையாளர் சேவை திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.

சிக்கனச் செம்மலாக வாழும் ஒரு குடும்பத்தார் ஏசியைப் போடுவதற்குக் கூடப் பயந்து, கோடைக் காலத்தில் கூட பேன் காற்றில் மட்டும் வாழ்க்கையை ஓட்டியதற்கு அவருக்கு வந்த மின் கட்டணம் 3800 ரூபாய். அவரது போன மாத கட்டணம் 600 ரூபாய்.

"நாங்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தினோம், ஆனால் மின்வாரியம் தன் பில் போடும் திறமையை தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறது" என்று புலம்புகிறார்கள் அந்தக் குடும்பத்தார்கள்.

ரீடிங் எடுக்க வரும் ஊழியர் மீட்டரைப் பார்த்து ஏதோ ஒரு கணக்கை நோட்டில் குறித்துக்கொள்வார். அவரிடம், "எவ்வளவு சார்?" என்று நாம் கேட்டால், ஒரு சாதாரண தொகையைச் சொல்லிவிட்டுப் போவார். ஆனால், அடுத்த 10 நிமிடங்களில் நம் போனுக்கு வரும் குறுஞ்செய்தியில், அவர் சொன்னதை விட இரண்டு மடங்கு தொகை போட்டிருக்கும்!

மீட்டருக்கும், ரீடிங் எடுப்பவரின் கண்ணுக்கும், போனுக்கு வரும் குறுஞ்செய்திக்கும் இடையே என்ன மாதிரியான டேட்டா டிரான்ஸ்பர் நடக்கிறது என்பது உலக மகா ரகசியம்.

வீட்டில் ஏசி, வாஷிங் மெஷின் ஓடினால் யூனிட் ஏறும் சரிதான். ஆனால், இலவசம் தருகிறோம் என்ற பெயரில் குறைந்தபட்ச யூனிட் கட்டணத்தை உயர்த்தி, மறைமுகமாகச் சுமையைக் கூட்டுவது மின்வாரியத்தின் தனித்துவமான பொருளியல் தந்திரம்.

சுருக்கமாகச் சொன்னால், தமிழகத்தில் இப்போது மின்சாரம் வருகிறதோ இல்லையோ, பில் தவறாமல் வந்துவிடுகிறது. இலவச மின்சாரம் என்பது பாயாசத்தில் போட்ட முந்திரிப் பருப்பு மாதிரி, கண்ணுக்குத் தெரியும், ஆனால் வாய்க்குச் சிக்காது!

*****

1 Aug 2026

ஒரு சிவப்புப் புள்ளி!

ஒரு சிவப்புப் புள்ளி!

கோடம்பாக்கம். கனவுகளின் மயானம்.

அங்கே டீக்கடைகளில் உலக சினிமா பேசும் உதவி இயக்குநர்கள், தையல் மெஷின் சிரிப்போடு கதவு தட்டும் புது நடிகைகள் என விதவிதமான எரிநட்சத்திரங்களையும் பார்க்கலாம், அவற்றின் சாம்பல்களையும் பார்க்கலாம்.

அந்த ராஜ்யத்தின் அன்டர் கிரவுண்ட் ராஜாதான் இயக்குநர் விக்ரம் ஆதித்யா.

அவர் படம் எடுத்தால் நேஷனல் அவார்ட் நிச்சயம். ஆனால் அவர் ஆபீஸுக்குள் ஒரு பெண் நுழைந்தால், அவளது பெண்மைக்கும் சுயமரியாதைக்கும் ஆப்பு நிச்சயம்.

அன்று மாலை நாலரை மணி.

விக்ரம் ஆதித்யாவின் ஏசி ரூம்.

லேசான சென்ட் வாசம்.

மங்கலான லைட்டிங்.

முன்னால் மித்ரா. பாவமாக உட்கார்ந்திருந்தாள். கிராமத்துப் பைங்கிளி டைப்.

விக்ரம் ஆதித்யா பக்கத்தில் நகர்ந்தார். "பாரும்மா மித்ரா! சினிமாவுல டேலண்ட் மட்டும் பத்தாது. ஒரு கனெக்ட் வேணும். நான் சொல்றதைக் கேட்டா, நெக்ஸ்ட் வீக் பூஜையில நீதான் ஹீரோயின். இல்லன்னா. பேக் அப் பண்ணிட்டு ஊருக்கு ஓட வேண்டியதுதான்."

சொல்லிவிட்டு அவளது தோளைத் தொடக் கையை நீட்டினார்.

மித்ரா பயந்து நடுங்குவாள் என்று எதிர்பார்த்தார்.

அவள் அழவில்லை.

அமைதியாகத் தன் ஹேண்ட்பேகைத் திறந்தாள்.

"என்னம்மா சம்மதமா?"

அவள் பையிலிருந்து ஒரு சின்ன மெட்டல் பொருளை எடுத்தாள்.

அது கேமரா இல்லை. ரெக்கார்டரும் இல்லை.

அது ஒரு லேசர் பாயிண்டர்.

அதை ஆன் செய்து, விக்ரம் ஆதித்யாவின் நெஞ்சுக் கூட்டின் மையத்தில் சிவப்பாக ஒரு பொட்டு வைத்தாள்.

விக்ரம் ஆதித்யா பதறிப்போய் நான்கு அடியெடுத்துப் பின்வாங்கினார்.

நெஞ்சைத் தொட்டுப் பார்த்தபடி, "ஏய் என்னடி இது? வெளியே ஸ்னைப்பரா? துப்பாக்கியோட யாராவது நிக்குறாங்களா?" என்று வேர்த்துக்கொட்டக் கத்தினார்.

மித்ரா உதட்டோரத்தில் லேசாகச் சிரித்தாள்.

"ஹாலிவுட் படமெல்லாம் நிறையப் பார்ப்பீங்க போலிருக்கே சார்? நெஞ்சுல ரெட் டாட் விழுந்ததும் துப்பாக்கினு நினைச்சு இவ்ளோ பயப்படுறீங்க! இது வெறும் நூறு ரூபாய் லேசர் லைட்தான். ஆனா உங்களைப் மாதிரி அதிகார பலத்துல ஆடுறவங்களை ஒரே செகண்ட்ல நிலைகுலைய வைக்க இந்த உளவியல் பயம் போதும்னு தெரியும். இது வெளிய நிக்குற என் டீமுக்கான சிக்னல்!"

"என்னடி உளறுரே? டீமா?"

"ஆமா சார்! ஜன்னல் வழியா வெளியே பாருங்க."

விக்ரம் ஆதித்யா நடுங்கும் விரல்களால் திரைச்சீலையை விலக்கினார்.

வாசலில் இரண்டு கறுப்பு நிற சுஸுகி கார்கள். உள்ளிருந்து நாலைந்து பேர் இறங்கினார்கள். கையில் ட்ரைபாட், கேமரா. கழுத்தில் அடையாள அட்டைகள்.

இ.டி மற்றும் ஐ.டி.

விக்ரம் ஆதித்யாவிற்குத் தொண்டை வறண்டது. "ஏய் என்னடி கூத்து இது? ஐ.டி ரெய்டுக்கும் நீ சொல்ற மேட்டருக்கும் என்ன சம்பந்தம்?"

மித்ரா கூலாக எழுந்து தோள்பையை மாட்டியபடி நிமிர்ந்தாள்.

"டைரக்டர் சார்! நீங்க என்னை நடிகைன்னு நினைச்சீங்க. ஆனா நான், நீங்க கடந்த அஞ்சு வருஷமா பிளாக் மணியை ஒயிட் பண்ணப் பயன்படுத்திய மிராக்ஸ் என்டர்டெயின்மென்ட் ஷெல் கம்பெனியோட சீக்ரெட் ஆடிட்டர்!"

"வாட்?!"

"நீங்க நடிகைககிட்ட அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும்போது கதவை சாத்துவீங்க. ஆனா நான் உங்க லேப்டாப் ஹேக்கிங் மூலமா, உங்க சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் வரைக்கும் பாஸ்வேர்ட்டை உடைச்சுட்டேன்! பொண்ணுங்க பயப்படுவாங்கனு நினைச்சீங்க இல்ல. ஆனா கணக்கு வழக்குன்னு வந்துட்டா, இந்தியன் பீனல் கோடை விட பயங்கரமானது எதுவுமில்லை சார்!"

டிங் டாங்!

வாசல் காலிங் பெல் உரக்க அடித்தது.

மித்ரா கதவைத் திறந்தாள். திரும்பிப் பார்த்து நயன்தாரா ஸ்டைல் புன்னகை ஒன்றைச் சிதறடித்தாள், "MeToo ரொம்ப பழைய வெர்ஷன் சார்! இப்போதெல்லாம் வீட்டுக் கதவைத் தட்டுறது EDtoo! ஆல் தி பெஸ்ட் சார்!"

*****

வடக்கிலிருந்து வந்த லவட்டல் தேவதைகள்!

வடக்கிலிருந்து வந்த லவட்டல் தேவதைகள்!

உலகத்தில் எத்தனையோ விதமான டூரிஸ்ட்டுகளைப் பார்த்திருப்போம். ஆனால், மத்திய பிரதேசத்தில் இருந்து "வாருங்கள்! தென்னகத்தின் நகைகளைச் செதுக்குவோம் மற்றும் லவட்டுவோம்!" என்று டூர் பேக்கேஜ் போட்டு வந்திருக்கும் மூன்று லவட்டல் தேவதைகள் தமிழகத்துக்குக் கொஞ்சம் புதியவர்கள்.

அந்த மூன்று லவட்டல் தேவதைகள்தான் குஷ்பு, மீனாட்சி, லட்சுமி.

போலீஸ் அவங்களுக்கு வைத்த பெயர் த்ரீ ரோஸ்!

த்ரீ ரோஸ் டீ குடித்தால் ஸ்ட்ராங்காக இருக்கின்ற மாதிரி, இவர்கள் திருடினால் நகைகள் அனைத்தும் ஸ்ட்ராங்காக காலி ஆகி விடும் போலிருக்கிறது. என்ன ஒரு பிராண்ட் நேம்!

இவர்களின் ‘நகை லவட்டல்’ ஸ்டைலே தனி.

முதலில் ஜவுளிக்கடைக்குள் அமைதியாக, சாதுவாக நுழைய வேண்டியது.

அடுத்து, துணி எடுப்பது மாதிரி சீன் போட வேண்டியது.

கிளைமாக்ஸாகப் பக்கத்தில் இருப்பவர்களின் கவனத்தைத் திசை திருப்பி, நகை மற்றும் பணத்தை சுவாஹா பண்ண வேண்டியது!

சென்னை மாம்பலம் துணிக்கடைகளில் இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி விட்டு, சிசிடிவி கேமராவில் தங்கள் பொன்னான முகத்தையும் காட்டி விட்டு எஸ்கேப் ஆகிக் கொண்டு இருந்தார்கள்.

அதற்குப் பிறகு, சென்னை போலீஸ் பதறிப்போய், "அடடே நம்ம த்ரீ ரோஸ் மேடம்களை நேரடி தரிசனம் பண்ண முடியவில்லையே!" என்று அண்டை மாநிலங்களுக்கெல்லாம் அவர்களின் போட்டோவை வாட்ஸ்அப் குரூப்ல ஷேர் பண்ணி தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தத் திரி ரோஸ் மேடம்களின் ஸ்பெஷாலிட்டியே, திருடிய பொருட்களை எல்லாம் உடனே பக்காவாகப் பேக்கேஜில் போட்டு மத்திய பிரதேசத்துக்கு கொரியர் பண்ணி விடுவார்களாம்!

அடடே, என்ன ஒரு பிசினஸ் டெக்னிக்!

அமேசான், பிளிப்கார்ட் காரன்கூட இவ்வளவு ஸ்பீடா டெலிவரி பண்ணுவார்களா என்பது சந்தேகம்தான்!

ஆந்திரா, தமிழ்நாடு என இரண்டு மாநில போலீஸையும் சுற்றலில் விட்டு, சுற்றுலா பாணியில் கலக்கிக் கொண்டிருந்த த்ரீ ரோஸ் டீம், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்குள்  நுழைந்து தங்கள் தரிசனத்தைத் தந்த போதுதான் அலேக்காகத் தூக்கப்பட்டிருருக்கிறார்கள்.

அங்கே புதுச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் சாதா டிரஸ்ஸில் வாடிக்கையாளர்கள் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்த மூன்று பேரும் அடுத்த டார்கெட் என மப்டி போலீஸை டார்கெட் பண்ண, கையும் களவுமாகத் த்ரீ ரோஸ்களையும் கிள்ளி விட்டது போலீஸ்.

அப்புறம் என்ன?

திருடி திருடி நகைகளை மத்திய பிரதேசத்துக்குப் பார்சல் பண்ணிக் கொண்டிருந்தவர்களைச் சென்னை மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பார்சல் பண்ணி அனுப்பி வைத்து விட்டார்கள்.

இப்போது இன்னொரு செய்தி.

நியூசிலாந்து அரசு வெளிநாடுகளிலிருந்து ஏவுகணைகளுக்கு மாற்றாக, இலக்கைத் தாக்கிவிட்டுத் திரும்பாத, குறைந்த செலவிலான ஒன் வே தாக்குதல் டிரோன்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நேரத்தில், நியூசிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ஒரு சிறப்பான யோசனை என்னவென்றால், "மதிப்பிற்குரிய அமைச்சரே! நீங்கள் எதற்காகக் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டு டிரோன்களை வாங்க வேண்டும்? அதற்குப் பதிலாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த த்ரீ ரோஸ் பெண்களை உங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். எதிரிகளின் ஆயுதங்கள் அனைத்தையும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒன் வே முறையில் திருடிக்கொண்டு வந்துவிடுவார்கள்! பணமும் மிச்சம், வேலையும் கச்சிதம்!"

வடமாநிலத்திலிருந்து வந்து தென்னகத்தில் தன் கைவரிசையைக் காட்டிய த்ரீ ரோஸ் திருட்டுக் கும்பல், தற்போது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறது. அந்தத் தேநீர் த்ரீ ரோஸ்ஸா? சக்ரா கோல்டா? அல்லது வேறு எதுவுமா? என்பது தெரியவில்லை.

இனிமேலாவது அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று, நேர்மையான வழியில் ஏதேனும் தொழில் செய்து பிழைப்பார்கள் என நம்புவோம்!

*****

31 Jul 2026

2.79 கோடி ஜி.எஸ்.டியும் ஏரி வேலையும்!

2.79 கோடி ஜி.எஸ்.டியும் ஏரி வேலையும்!

உலகத்தில் பலவிதமான அதிசயங்கள் நடப்பதுண்டு. எகிப்து பிரமிடு, தாஜ்மஹால் எல்லாம் பழைய கதை.

நம் ஊரில் நடக்கும் நவீன அதிசயம் என்னவென்றால், ஏரி வேலைக்குச் செல்லும் ருக்மணி அம்மணி என்பவருக்கு 2.79 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக வணிகவரித் துறை அன்போடு நோட்டீஸ் அனுப்பியிருப்பதுதான்!

பாவம் ருக்மணி. 125 நாள் வேலைத் திட்டத்தில் வெயிலில் நின்று மண்ணள்ளிப் போட்டு, அதில் வரும் சொற்பக் கூலியை வாங்கலாம் என்று வங்கிக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே இருந்த வங்கி மேலாளர், “அம்மா! நீங்க சாதாரண ஆள் இல்லை! ஆர்.எம். டிரேடர்ஸ் முதலாளி! நீங்க ஜி.எஸ்.டி கட்டாம இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல வரி ஏய்ப்பு பண்ணியிருக்கீங்க. அதான் உங்க அக்கவுண்ட்டை லாக் பண்ணிட்டோம் என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

இதில் நாம் வியக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

நாட்டின் பெரும் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் எங்கே வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நமது புலனாய்வுத் துறை, ஏரி வேலைக்குச் செல்லும் ஓர் ஏழைப் பெண்ணைக் கச்சிதமாகக் கண்டுபிடித்துவிட்டது!

“யாரை வேணா விட்டுடுவோம். ஆனா இந்த 125 நாள் வேலைக்குப் போறவங்களை விடமாட்டோம் என்ற அவர்களின் கடமை உணர்ச்சியைப் பார்த்து கார்ப்பரேட் முதலாளிகளே கண்ணீர் வடிக்கிறார்கள்.

இது ஒரு புறம். ஏரி வேலைக்குக் கொண்டு செல்லும் வட்டசட்டி, மண்வெட்டிதான் அந்த நிறுவனத்தின் மூலதனம் போலிருக்கிறது!

அப்புறம், 125 நாள் வேலைத் திட்டத்தில் கொடுக்கும் கூலியை வைத்துக்கொண்டு கோடிகளில் டிரேடிங் செய்யும் இந்த பிசினஸ் டெக்னிக் எந்த ஐ.ஐ.எம் மேனேஜ்மென்ட் புத்தகத்திலும் இல்லை.

வழக்கமாகக் கடன் கேட்டுப் போனால், "ஆதார் கார்டு நகல் தெளிவா இல்லை, நாளைக்கு வாங்க" என்று அலைக்கழிக்கும் வங்கிகள், இவ்வளவு பெரிய விவகாரத்தில் மட்டும் எவ்வளவு சுறுசுறுப்பு! "உங்க கணக்கில் வந்த 125 நாள் சம்பளத்தைக் கொடுக்க முடியாது. ஏன்னா நீங்க பில்லியனர் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்கள்.

யாரோ ஒரு மிஸ்டர் டெக்னிக்கல் திருடன், அப்பாவி ருக்மணியின் ஆதார், பான் கார்டைத் திருடி ஆர்.எம். டிரேடர்ஸ் ஆரம்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறான் என்பது சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும். ஆனால், சிஸ்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டும் அது புரியவே புரியாது!

ஏழைக்கு வந்தால் நோட்டீஸ். கோடீஸ்வரனுக்கு வந்தால் வெய்வர்.

எது எப்படியோ. இனிமேல் 125 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், கையில் மண்வெட்டியோடு ஜி.எஸ்.டி பைல் பையையும் கூடவே எடுத்துச் செல்வது நல்லது. நாடாளும் மாடல்கள் வாழ்க!

*****

குளவியின் நஞ்சும் ஜெயமோகனின் கைராசியும்!

குளவியின் நஞ்சும் ஜெயமோகனின் கைராசியும்!

ஒருவர் பேருந்தில் நடத்துநரிடம் கெட்ட வார்த்தை வாங்கி, மேலதிகாரியிடம் கோப்பை வீசியெறிந்துவிட்டு ஓடிவந்து, பின் சினிமாவுக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததற்குப் பின்னால் பிரபஞ்சத்தின் பேரறிவு செயல்பட்டிருக்கிறது என்று சொல்வதை விடத் தற்காப்புப் புனைவு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஜெயமோகன் தன்னுடைய இந்த "மேகங்களின் குரல்" கட்டுரையில் வழக்கம்போலத் தனது சுயசரிதையை ஒரு வேதாந்த தரிசனமாக மாற்றுவதற்குத் தேவைக்கதிகமான கவித்துவப் பிரயத்தனங்களைச் செய்திருக்கிறார்.

இக்கட்டுரையின் மீதான விமர்சனத்தை நாம் மூன்று தளங்களில் அணுகலாம்.

முதலில், பேருந்து நெரிசலின் புழுக்கத்தில் ஏற்பட்ட கோபத்தையும், BSNL அலுவலகத்தின் வேலைப்பளு தந்த எரிச்சலையும் கட்டுப்படுத்த முடியாமல் அலுவலகக் கோப்பை மேஜையில் தூக்கி வீசிவிட்டு ஓடிவந்த நிகழ்வு என்பது ஒரு சாதாரண மனிதனின் பலவீனம் அல்லது நிதானமின்மை. ஆனால், அதை ஒப்புக்கொள்வதற்கு மனித மனம் அஞ்சுகிறது.

உடனே, அதற்கு லோகிததாஸ் வந்ததையும், இயக்குநர் பாலா அழைத்ததையும் இணைத்து "இது பிரபஞ்சத்தின் திட்டமிடப்பட்ட தர்க்க ஒழுங்கு" என்று சொல்வது ஒரு சுவாரஸ்யமான மாயை.

தன் கோபத்தையும் அவசர முடிவையும் நியாயப்படுத்த, பிரபஞ்சத்தையே துணைக்கு அழைப்பது ஜெயமோகனுக்கே உரிய வலுவான தற்பெருமை.

நடத்துநர் திட்டாவிட்டால் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டாராம்! அப்படியானால் அந்த நடத்துநரின் வசைபாடல் பிரபஞ்சத்தின் ஈக்‌ஷதே வழிகாட்டுதலா? என்னவொரு போலித் தர்க்கம்!

இரண்டாவதாக, லியால் வாட்சனின் Lifetide புத்தகத்திலிருந்து அவர் எடுத்தாளும் குளவி – புழு உவமை சுவாரஸ்யமானது; ஆனால், அது பரிணாம வளர்ச்சியைப் பற்றிய தவறான புரிதலின் வெளிப்பாடு.

இயற்கையின் கோடிக்கணக்கான ஆண்டுகளின் ‘முயன்று தவறுதல்’ என்ற தேர்ச்சி முறையை ஒரே நாளில் குளவிக்கு வந்த யோசனை போலச் சித்தரிப்பது அறிவியல் பூர்வமானது அல்ல.

அறிவியலின் விளிம்புநிலை யூகங்களை எடுத்துக்கொண்டு, அதைத் தன் வேதாந்தக் கோட்பாடுகளுக்குப் பலவந்தமாகப் பொருத்துவது தமிழ் எழுத்தாளர்களின் பழைய நோய். ஜெயமோகன் அதை மிகவும் நேர்த்தியாக, வாசிப்பவரை மயக்கும் நடையில் செய்கிறார்.

மூன்றாவதாக, கட்டுரையின் இறுதியில் வரும் ஈக்‌ஷதே அதாவது, அது சிந்திக்கிறது என்ற பிரம்மசூத்திரத்தின் மேற்கோள், கட்டுரையை ஒரு தத்துவார்த்த உச்சத்திற்குக் கொண்டு செல்வதாகக் காட்டிக்கொள்கிறது.

எறும்பு தீனியைப் பார்ப்பதும், குளவி நஞ்சைச் செலுத்துவதும், இவர் BSNL வேலையை விட்டுவிட்டு நான் கடவுள் படத்திற்குத் திரைக்கதை எழுத வந்ததும் ஒரே பிரபஞ்சத் திட்டத்தின் பகுதிகளாம்!

இதில் உள்ள நகைமுரண் என்னவென்றால், "அந்தத் திட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது, அதை ஊகிப்பவன் பேதை" என்று சொல்லிவிட்டே, முழு கட்டுரையும் அந்தப் பிரபஞ்சத் திட்டத்தைத் தான் ஊகித்து உணர்ந்துவிட்டது போலவே எழுதி முடித்துள்ளார்.

ஒரு படைப்பாளி தன் வாழ்க்கையின் தற்செயல்கள் மீது ஒரு புனைவுத் தன்மையை  ஏற்றிப் பார்ப்பதில் தவறில்லை. அது வாசகனுக்கு வாசிப்பு இன்பத்தைத் தருகிறது.

ஆனால், தன் வாழ்வின் ஒவ்வொரு சிறு சம்பவத்தின் பின்னாலும் ஒரு மகா பிரபஞ்சப் பேரறிவு நின்று இயங்குகிறது என்று நம்புவதும், அதை மற்றவர்களை நம்பச் சொல்வதும் தன்முனைப்பின் உச்சக்கட்டம்.

சுருக்கமாகச் சொன்னால், இது பிரபஞ்சம் ஈக்‌ஷதே செய்ததன் விளைவல்ல; ஜெயமோகன் தன் சொந்த வாழ்க்கையைத் தானே ஒரு மெகா சினிமாத் திரைக்கதையாக மாற்றி யோசித்ததன் விளைவு!

*****

30 Jul 2026

செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ரூபாய்!

செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ரூபாய்!

இந்தியப் பொருளாதாரம் என்பது ஒரு விசித்திரமான யோக நிலை. நாம் உலகின் அதிவேகப் பொருளாதார சக்தி, என்று உரக்கக் கத்தும்போது, இந்திய ரூபாய் மட்டும் தனியாக மூலையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து, மெல்லத் தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டே கீழே இறங்கும்.

அதாவது, வளர்ச்சி மேலே போகிறது; ரூபாய் கீழே போகிறது. இரண்டுமே இயக்கம்தான். இயக்கம்தான் வாழ்வு!

1971 இல் ஒரு டாலரின் விலை 7 ரூபாய் 50 காசுகள். இன்று அதே டாலரின் விலை 97 ரூபாய்!

இது வீழ்ச்சி அல்ல; இது பற்றுறுத்தல். டாலர் என்ற மாயையைத் துரத்தத் துரத்த, அது நம்மை விட்டு விலகிச் செல்கிறது. கச்சா எண்ணெய், தங்கம், ராணுவத் தளவாடங்கள் என உலக ஆசைகளில் நாம் மூழ்க மூழ்க, டாலர் தன் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் எவ்வளவு தான் இறக்குமதி செய்தாலும், நம் தாகம் தணிவதில்லை.

ரூபாய் மதிப்பு சரிவதால் கவலைப்பட என்ன இருக்கிறது? அதில் எத்தனை ஆனந்தங்ககள் ஒளிந்திருக்கின்றன தெரியுமா?

முதலில் அதனால் ஏற்றுமதியாளருக்கு ஆனந்தம். ரூபாய் உடைந்தால் ஏற்றுமதி கூடும்.

இரண்டாவதாக அந்நிய முதலீட்டாளருக்கு ஆனந்தம். வெளிநாட்டினருக்கு இந்தியா மலிவான சொர்க்கமாக மாறும்.

மூன்றாவதாக வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியக் குடும்பங்களின் ஆனந்தம். வெளிநாட்டில் வேர்வை சிந்தி ஒரு டாலர் அனுப்பும் மகனால், ஊரில் இருக்கும் தாய் 97 ரூபாயைப் பெற்று மகிழ்வாள்.

அதாவது, நமது நாணயத்தின் வீழ்ச்சியே, சில குடும்பங்களின் எழுச்சி! என்னவொரு மகத்தான சமநிலை பாருங்கள்.

ஈரான் மீது தாக்குதல் நடக்கிறது; கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது; நமது வர்த்தகப் பற்றாக்குறை 12 லட்சம் கோடியைத் தொடுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 23 பில்லியன் டாலர்களை மூட்டை முடிச்சோடு எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

சீனாவின் யுவான் வலுவடைகிறது. மலேசியாவின் ரிங்கிட் நிமிர்ந்து நிற்கிறது. சிங்கப்பூர், தன் டாலரை உயர்த்துகிறது. ஆனால், இந்திய ரூபாய்?

பொருளாதாரம் செழிப்பாக இருக்கிறது, ஆனால் ரூபாய் ஏன் விழுகிறது? என்ற கேள்விக்கு, நம்மிடம் அமைதியே பதிலாய் இருக்கிறது. மௌனத்தை விடச் சிறந்த தத்துவம் வேறு என்ன இருக்க முடியும்?

பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள், ரூபாய் மதிப்பு விரைவில் செஞ்சுரி அடிக்கும் என்று.

அச்சப்படத் தேவையில்லை. 100 என்பது ஒரு முழுமை. ஒரு சதம். 97 இல் நிற்பதை விட 100 இல் நிற்பது கணக்கு வைப்பதற்கு மிகவும் சுலபமானது அல்லவா?

700 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி இருப்பு வைத்துள்ளோம். ஆனால், அதுவும் நமக்கு முழுமையான அமைதியைத் தரவில்லை. ஏனெனில், உண்மையான அமைதி இருப்பில் இல்லை; இறக்குமதியைக் குறைத்து, உற்பத்தியைப் பெருக்கி, நாம் சுயமாக நிமிர்ந்து நிற்பதில்தான் இருக்கிறது.

உற்பத்திச் செலவு குறைவாக உள்ள நம் நாட்டில், உற்பத்தியைப் பெருக்காமல் இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பது, கையில் அமுதத்தைச் வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் பிச்சை கேட்பதற்குச் சமம்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்தால்தான் தேசத்தின் மதிப்பு உயரும். இல்லையேல், நாம் டாலருக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும் பக்தர்களாகவே எஞ்சியிருப்போம்!

நாம் எப்படி இருக்கப் போகிறோம்?

அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்!

*****