7 Sept 2026

ஈகோவின் அரையடி இடைவெளி

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 29

ஈகோவின் அரையடி இடைவெளி

மாலை நேரத்துப் பூம்புகார் கடற்கரை.

அலைகள் கரையைத் தொட்டுத் தொட்டுச் சென்றுகொண்டிருக்க, அந்தி வானத்தின் ஆரஞ்சு வெளிச்சத்தில் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்தன அந்தக் கடற்கரை மண்டபங்கள்.

சுற்றி நின்று சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவர்களின் சத்தத்திற்கும், கடல் அலைகளின் பேரிரைச்சலுக்கும் நடுவே, இவர்களுக்கிடையே மட்டும் ஒரு கனத்த மெளனம்.

மணலில் அவனும் அவளும் அமர்ந்திருந்தார்கள். நடுவே அரை அடி இடைவெளி.

பிரச்சனை ரொம்ப பெரிதெல்லாம் இல்லை. மாலை ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்குப் போய் விட்டு கடற்கரைக்கு வரலாம் என்று அவள் சொல்லியிருந்தாள். அவனுக்கு அலுவலகத்தில் திடீரென ஓர் அவசர கூட்டம். கூட்டத்தில் சொன்ன வேலையை அங்கேயே உட்கார்ந்து வேலையை முடிக்க முக்கால் மணி நேரம் தாமதமாகிவிட்டது.

வந்ததிலிருந்து அவள் பேசவில்லை. கடல் அலையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவளது அமைதி கல்மண்டபத்துச் சிலை போல எந்தப் பதிலும் இல்லாமல் இருந்தது.

"சாரிடி செல்லம். மேனேஜர் விடல. லேட் ஆயிடுச்சு," அவன் மெதுவாக ஆரம்பித்தான்.

மௌனம்.

கண்கள் அலைகளிலேயே நிலைத்திருந்தன.

"இங்க பாருடி, அட்லீஸ்ட் என்னை ஒரு தடவை பார்!"

"நான் உங்களைப் பார்க்கவே இல்லை. நீங்க கிளம்புங்க, லேட் ஆச்சுல்ல? ஆபீஸுக்கே போங்க!" குரலில் அண்டார்டிக்கா குளிர்.

அவன் சிரித்துக்கொண்டான். இந்த ஊடல் இருக்கிறதே அது ஆபத்தானது, அதே சமயம் அழகுமானது. இதே புகார் கடற்கரையில் கோவலனையும் மாதவியையும் பிரித்து விட்ட அழகிய பிசாசு அல்லவா இது! ஒரு சின்ன விலகல் கூட பெரிய இடைவெளி போலப் பயமுறுத்தும்.

மெதுவாக மணலில் நகர்ந்து அவள் அருகில் அமர்ந்தான். அவள் கொஞ்சம் தள்ளி நகர்ந்தாள். அவன் மீண்டும் நகர்ந்து அவளது தோளோடு தோள் உரசும் அளவுக்கு நெருங்கினான்.

"கோபமா செல்லம்?"

"இல்லை."

"பின்ன ஏன் மூஞ்சி கிரஷ் ஆன மொபைல் மாதிரி இருக்கு?"

அவள் அவனைத் திரும்பப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் குற்றச்சாட்டுகள். "உங்களுக்கு எப்பவுமே வேலைதான் முக்கியம். ஒரு வாரமா இதே போல காத்திருக்கேன். ஒரு நாளுக்குக் கூட நேரத்துக்கு வர மாட்டீங்க இல்ல. என்னை ரொம்பவே அலட்சியப்படுத்துறீங்க!"

"அய்யோ மேடம்! நாளைக்கு அந்த மேனேஜரை மூஞ்சுலேயே குத்தல. அப்புறம் பாருங்க. இனிமே என்னோட ஆல் இன் ஆல் மேனேஜர் நீதாண்டி செல்லம். மறுபடியும் மறுபடியும் சாரிடி. இதுதான் லாஸ்ட் அன்ட் லாஸ்ட் பார் எவர்." என்று சொல்லி அவளது விரல்களை மெல்லப் பற்றினான்.

அவள் கையை இழுக்க முயன்றாள். ஆனால் அவன் விடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

அவள் மெல்ல அவனது தோளில் லேசாகக் குத்தினாள். அந்த ஒரு செல்லக் குத்தில் அவளது மொத்தக் கோபமும் கரைந்து போனது.

"பொய்யி!" என்றாள் லேசான புன்னகையோடு.

"நிஜமாடி! இனிமே ஆபீஸை விட நீதான் பர்ஸ்ட்." என்றபடி அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவளது தலை அவனது தோளில் சாய்ந்தது. பூம்புகாரின் கடற்கரைக் காற்றின் குளுமையில், அவளது விரல்கள் அவனது கைகளோடு பிணைந்து கொண்டன. கோபம் மறைந்து, இருவரின் இதயத்துடிப்பும் ஒரே நேர்கோட்டில் இணையத் தொடங்கியது.

ஊடலின் கசப்பு நீங்கி, காதலின் உணர்தல் கூட, அந்த மாலை நேரத்தில் அழகிய கவிதையானது.

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்."                 (குறள், 1109)

என்று கடற்கரை காற்று சொல்வது போல அக்காற்றின் குளுமையிலும் மெல்லோசையிலும் ஒரு சுகந்தம் கூடியிருந்தது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

6 Sept 2026

நாய்கள் இல்லாத ஊரில் பூனைகள் ஆவியாதல்!

நாய்கள் இல்லாத ஊரில் பூனைகள் ஆவியாதல்!

தூத்துக்குடியின் சந்துபொந்துகளிலெல்லாம் இரவு நேரத்து அசாத்திய நிசப்தம் கவிழ்ந்திருக்கிறது. அந்த நிசப்தத்தின் நரம்புகளை அறுப்பது போல, எங்கோ ஒரு மூலையிலிருந்து மெலிதாக ஒலிக்கிறது ஒரு பூனையின் முனகல். அது வெறும் பூனையின் சத்தம் மட்டுமல்ல; இந்த ஊரின் விசித்திரமான ஒரு மாயமானின் விம்மல்.

பூபாலராயர்புரத்திலும் திரேஸ்புரத்திலும் நேற்றிரவு வரை சுவரிடை நடந்து, மீன் கழிவுகளை மேய்ந்து, உலகத்து மனிதர்களின் முட்டாள்தனங்களை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டிருந்த நாட்டுப் பூனைகள், இப்போது காற்றில் கரைந்துபோய்க்கொண்டிருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருநூறு ஆன்மாக்கள், மன்னிக்கவும், இருநூறு பூனைகள் காணாமல் போயிருக்கின்றன.

சுவர்களில் சாய்ந்து நிற்கும் சிசிடிவி கேமராக்கள், இரவின் கரிய திரைக்குப் பின்னால் நடக்கும் அந்தச் சம்பவங்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றன. ஒரு நிழல் நடமாடுகிறது. கையில் ஒரு சாக்குப்பைப் போன்ற கறுத்த உருவம். அடுத்த கணம், அங்கிருந்த பூனை காற்றில் ஆவியாகிவிடுகிறது.

மனிதர்கள் தங்கள் திரைகளில் அந்த நிழல்களைப் பார்த்துப் பதறுகிறார்கள். சமூக வலைதளங்கள் என்ற பெருஞ் சந்தையில் அந்த விடியோக்கள் அச்சத்தைப் பண்டமாற்றம் செய்கின்றன.

ஊருக்குள் இப்போது கேள்விகள் மொய்க்கத் தொடங்கியிருக்கின்றன.

"அந்தப் பூனைகள் எங்கே போகின்றன?"

சாலையோரக் கடைகளின் புகை மூட்டத்திற்குள், கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிகளுக்குள் அவற்றின் இறைச்சி மறைந்துவிடுகிறதா? அல்லது, நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அண்டாவில் மூலிகைகளைக் கொதிக்கவைத்து போலி மருந்து தயாரிக்கும் மனிதர்களின் ரகசியப் பாத்திரங்களுக்குள் அவை வீழ்கின்றனவா?

பதில்கள் யாரிடமும் இல்லை; ஆனால் சந்தேகங்கள் மனிதர்களின் மனங்களில் நச்சரவமாக நெளிந்துகொண்டிருக்கின்றன.

அச்சமடைந்த குடிமக்கள் சிலர் காவல் நிலையங்களின் படி ஏறுனார்கள். காகிதங்களில் புகார்கள் எழுதப்பட்டன. காவல்துறையினரின் கைகளில் 'மனு ரசீதுகள்' எனும் வெள்ளைத் துண்டுகள் கைமாறின. தற்போது "விசாரணை நடக்கிறது" என்ற வழக்கமான சொற்கள் காற்றில் மிதக்கின்றன.

ஆனால், தெருக்களின் மூலைகளில் எஞ்சியிருக்கும் சில பூனைகள், தங்களின் பெரிய மஞ்சள் கண்களால் மனிதர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களின் பசியோ, பேராசையோ, அல்லது ஏதோ ஒரு ரகசிய வெறியோ தங்களை விழுங்கக் காத்திருப்பதை அறிந்தவை போல!

இரவு மேலும் அடர்த்தியாகிறது. தூத்துக்குடியின் தெருக்களில் அடுத்த பூனையைத் தேடி அந்த மர்ம நிழல் அசையத் தொடங்குகிறது.

மீன்களின் வாசமும் உப்புக்காற்றும் நிறைந்த தெருக்களில், இப்போது பூனைகளின் காலடிச் சத்தங்கள் குறைந்துகொண்டே வருகின்றன.

அவை வெறும் தெருவோர விலங்குகள் அல்ல; மனிதர்களின் இரகசியங்களையும், இரவின் மௌனத்தையும் தங்கள் கண்களுக்குள் சேகரித்து வைத்திருந்த எளிய ஜீவன்கள். மனிதன் தன் பசிக்காகவோ, பேராசைக்காகவோ அல்லது காரணமற்ற கொடூரத்திற்காகவோ ஏதோவொன்றை வேட்டையாடிக்கொண்டேதான் இருக்கிறான்.

இன்று சாக்குப்பைகளுக்குள் அடைபட்டுப்போனது பூனைகள் மட்டுமல்ல, இந்த மனித சமூகத்தின் மிச்சமிருக்கும் கருணையும்தான்.

இருள் இன்னும் அடரும் முன், அந்த மஞ்சள் கண்களின் மௌனக் கூச்சலுக்கு நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இல்லையெனில், நாளை அதே இருள் நம்மை நோக்கித் தன் கைகளை நீட்டக்கூடும்.

*****

காற்றுக்கு அனுமதியில்லை

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 28

காற்றுக்கு அனுமதியில்லை

மழைக்காலத்து நள்ளிரவு.

திருவாரூர் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கார் பழுதாகி நின்றபோது, அவனும் அவளும் சண்டையின் ஐந்தாம் கட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் காதலிக்க ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன.

காரின் எஞ்சின் சூடு தணிந்திருந்தது. காரின் ஏசி நின்றதும், உள்ளே ஊடுருவிய மழைக்காற்றின் குளிர் இருவரையும் மெல்ல நடுங்க வைத்தது.

"எல்லாம் உன்னாலதான்! கிளம்பும்போதே மெக்கானிக்கிட்ட காமிப்போம்னு சொன்னேனா இல்லையா?" அவள் காரின் டேஷ்போர்டை வெறித்தபடி கத்தினாள்.

"இப்ப கத்தி என்ன ஆகப்போகுது? நெட்வொர்க்கும் இல்லை. அமைதியா இரு," அவன் மொபைலை என்ன செய்வது என்று தெரியாமல், நெடுஞ்சாலையில் ஏதேனும் வாகனம் வருகிறதா எனப் பார்த்தான். இருளைத் தவிர வேறு எதுவும் தென்படுவதாகத் தெரியவில்லை.

வெளியே மழை வீறிட்டு அடித்தது. கடும் காற்று காரை அசைத்துப் பார்த்தது. காருக்குள் இருட்டின் அடர்த்தியும், அமைதியும் பாறையாய் இறங்கியது.

சண்டை போட்டுக் அலுத்துப் போய், குளிரில் பற்கள் கிட்டடி அடிக்க ஆரம்பித்தன இருவருக்கும். அவன் தன் கைகளைப் பிசைந்து கொண்டான். அவள் உதடுகளைக் கடித்துக்கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டாள்.

ஒரு கட்டத்தில் குளிர் அவர்களின் ஈகோவை விடவும் கடுமையானதாக மாறியது.

"இங்க வா!" அவன் தன் கைகளை விரித்தான்.

அவள் யோசிக்கவில்லை. அடுத்த நொடி அவனது நெஞ்சில் போய் முகம் புதைத்துக் கொண்டாள். அவன் தன் கைகளால் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அவர்களின் உடல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. இருவரின் இதயத் துடிப்பும் ஒரே சீராக இயங்கத் தொடங்கியது. உடல்களின் வெப்பம் பரிமாறப்பட்டு, நடுங்கும் குளிர் மெல்ல விலகியது.

அப்போது, அவனது விரல்கள் அவளது முதுகை இன்னும் இழுத்து அணைக்க முயன்றன. ஆனால், அவர்கள் அணிந்திருந்த தடிமனான ஸ்வெட்டர்கள் இடையே தடையாய் நின்றன.

"ஹ்ம்ம்! இந்த ஸ்வெட்டர் கூட நடுவுல காத்து புகுற அளவுக்கு கேப் விடுது," அவள் அவனது கழுத்து வளைவில் முணுமுணுத்தாள்.

அவன் சிரித்தான். "காத்து கூட புக முடியாத அளவுக்கு ஒட்டிக்கணும்ங்கறதுதான் உண்மையான சுகம்ன்னு இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நம்ம ஊரு ஐயன் எழுதி வெச்சிருக்கார் தெரியுமா?"

"யாரு?"

"வள்ளுவர்தான்.

''வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு''               (குறள், 1108)

அப்படின்னு அவரு ஒரு சூத்திரத்தையே எழுதி வெச்சிருக்காரு. அதாவது, காதலிக்கும் ரெண்டு பேர் கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்கும்போது, அவங்களுக்கு நடுவுல மெல்லிய காத்து கூட புக முடியாத அளவுக்கு இறுகின அணைப்புதான் உலகத்திலேயே ஆகச்சிறந்த சுகமாம்."

அவள் தன் கையிலிருந்த ஸ்வெட்டர் ஜிப்பை மெல்லக் கீழே இறக்கினாள். "அப்படின்னா, அந்த வள்ளுவர் சொன்னதை நாம ஏன் தப்பாக்கணும்?"

வெளியே பேய்க்காற்று சாலையோர மரங்களைப் பிளந்து கொண்டு வீசியது. ஆனால், அந்த மூடிய காருக்குள். காற்று புகக்கூட ஒரு மில்லிமீட்டர் இடைவெளி இருக்கவில்லை.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

5 Sept 2026

முயக்கத்தின் தர்க்கவியல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 27

முயக்கத்தின் தர்க்கவியல்

அந்த பொன் மாலைப் பொழுதில், அவன் அமிர்தம் வளாகத்தின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். கையில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கத்தின் திருக்குறள் உரை.

அவள் வேக வேகமாக மாடி ஏறி வந்தாள். அவள் கையில் ஒரு பொட்டலம். அதில் நல்ல வாசனை வீசும் சூடான முந்திரி அல்வா.

"என்னது இது, திடீர்னு?" என்றான் அவன், அவளைப் பார்த்த ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தி.

"உனக்குப் பிடிக்கும்னு செஞ்சேன். ஆனா ஒரு கண்டிஷன். இதுல இருக்குற அல்வாவை நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் சாப்பிடணும். ஆளுக்கு ஒரு ஸ்பூன்," என்றாள் அவள், அவன் அருகில் அமர்ந்து.

அவன் சிரித்துக் கொண்டே ஒரு ஸ்பூன் எடுத்து அவள் வாயில் வைத்தான். அவள் அடுத்த ஸ்பூனை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

இளஞ்சூடான நெய்யும், கருப்பட்டியும், முந்திரியும் நாவில் கரையும் அந்தத் தருணத்தில், அவன் மனதிற்குள் ஏதோ ஒன்று சட்டென்று பொறி தட்டியது.

தன் சொந்தக் கையால் எடுத்துச் சாப்பிடும் அல்வாவை விட, அவள் தன் கையால் ஊட்டும்போது அதன் சுவை பன்மடங்கு கூடுவதாக அவனுக்குத் தோன்றியது. ஒரே அல்வாதான். ஆனால், தானாக உண்பதற்கும், அன்பான ஒருத்தி ஊட்டிவிடும்போது அதை உண்பதற்கும் நடுவே எவ்வளவோ பெரிய வித்தியாசம்!

அவன் அவளுடைய தோளைப் பற்றி, அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் ஒரு விவரிக்க முடியாத இனிமை இருந்தது.

"என்ன திடீர்னு ரொமான்ஸ்?" என்றாள் அவள், லேசான நாணத்துடன்.

"இல்ல இப்போ நாம அல்வா சாப்பிட்டோம்ல? அது வெறும் அல்வா இல்ல. இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னாடி திருவள்ளுவர் சொன்ன ஒரு குறளோட பிராக்டிகல் டெமோ," என்றான் அவன்.

"அப்படியா! அது என்ன குறள்?"

"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.                (குறள், 1107)"

அவள் அவனைப் புதிதாகப் பார்ப்பது போலப் பார்த்தாள். "அப்படின்னா?"

"தன்னோட சொந்த உழைப்புல வந்த பணத்தால கட்டுன வீட்டுல உட்கார்ந்து, மத்தவங்களோட பகிர்ந்து சாப்பிடும்போது ஓர் அலாதி இன்பம் கிடைக்கும் பாரு, அதே மாதிரி ஒரு பேரன்பின் இனிமைதான், அன்பான காதலியோட அணைப்பில் கிடைக்கிற சுகமும்ன்னு வள்ளுவர் சொல்றார். நாம தனியா வாழ்றதை விட, பகிர்ந்து வாழும்போதுதான் வாழ்க்கையோட உண்மையான சுவையே தெரியுது!"

அவள் புன்னகைத்தாள். "அப்படியா சார்? அப்போ இன்னும் ஒரு ஸ்பூன் அல்வா ஊட்டி விடட்டுமா?"

"தாராளமா! வள்ளுவர் வழியில நாம பயணிக்க வேணாமா?" என்றபடி அவன் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.

மாடியின் மீது மெல்லிய இளந்தென்றால் வீசத் தொடங்க, அந்த வளாகத்தில் அன்பும் அல்வாவும் இணையற்ற சுவையோடு அமிர்தம் போல நிறைந்திருந்தன.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

4 Sept 2026

ஆடுகள் அளிக்கும் மன்னிப்பு

ஆடுகள் அளிக்கும் மன்னிப்பு

சாலையின் குறுக்கே வந்த

ஆட்டிற்காகக் கோபப்பட்ட போது

தன் இனத்தில் ஒன்றைக் கொன்று

மட்டன் பிரியாணியாக்கி

வயிறு முட்டச் சாப்பிட்டு

நெஞ்சு முட்ட குடித்து விட்டு

வேகமாக வாகனத்தை

ஓட்டி வந்ததற்காக

அடிபட்டு ஓரத்தில்

ரத்த சகதியில் விழுந்தும்

கோபப்படவில்லை அந்த ஆடு

*****

ரட்சகன்

காசேதான் கடவுளடா

என்றான் ஒருவன்

அந்தக் கடவுளையும்

தூக்கி எறிந்து விட்டு

தழுவிக் கொள்கிறான்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்

கடவுளைப் போல ஒருவன்

*****

நம்பிக்கை

விழுமோ

விழாதோ

விழும் என்ற நம்பிக்கையில்தான்

அமர்ந்திருக்கிறார்

பிச்சைக்காரர்

*****

தீண்டலின் சமன்பாடு

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 26

தீண்டலின் சமன்பாடு

மழை பெய்துகொண்டிருந்தது. அவன் செமஸ்டர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தான்.

கையில் ஜேம்ஸ் மங்க்ரேஸின் டோபாலஜி புத்தகம்.

அருகே இருந்த தேநீர்க் கோப்பையில் தேநீர் ஆறிப்போயிருந்தது.

"சூடா ஒரு கப் டீ போட்டுத் தரவா?"

குரல் கேட்டுத் திரும்பினான்.

அவள்.

ஈரம் சொட்டும் குடையைச் சுருக்கி ஓரமாய் வைத்துவிட்டு, தன் சுடிதார் ஷாலைத் தட்டிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த கணமே, அவனது மனதுள் இருந்த டோபாலஜியின் சிக்கலான தேற்றத்தின் சமன்பாடுகளும், நிரூபணங்களும் காணாமல் போயின.

"தேங்க்ஸ். ஆனா நீ ஏன் இந்த மழையில வந்த?"

"உன்னைப் பாக்கத்தான்."

அவள் சட்டென்று அவனருகே வந்தாள். நாற்காலியில் அமர்ந்திருந்த அவனது தோளைத் தொட்டு, லேசாக உரசியபடி நின்றாள்.

அந்த நொடி,

அவனது உடலுக்குள் ஏதோ ஒரு மின்கசிவு. காலை முதல் ஒரு கணிதத் தேற்றத்தின் நிரூபணம் புரியாமலும், செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்த மன அழுத்தத்தாலும் செத்துப்போயிருந்த அவனது நரம்புகள் ஒவ்வொன்றும் விழித்துக்கொண்டன. செத்துப் போன உயிரணுக்களுக்குள் யாரோ ரீசார்ஜ் செய்தது போன்ற உணர்வு.

அவள் கைவிரல்கள் அவனது தோள்பட்டையில் ஊர்ந்தபோது, அவனுக்குத் தோன்றியது, இவள் தோள்கள் வெறும் சதையாலும் எலும்பாலும் ஆனவை அல்ல. ஏதோ தேவலோகத்து அமிழ்தத்தால் செய்யப்பட்டவை. தொடும்போதெல்லாம் செத்துப்பிழைக்க வைக்கிறது!

அவள் சிரித்தாள். "என்ன யோசனை?"

"ஒன்னுமில்லை. வள்ளுவர் ரெண்டு வரி எழுதிருக்கார் தெரியுமா?

"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்."                 (குறள், 1106)

அப்படின்னு. அதாவது, ஒவ்வொரு முறை தொடும்போதும் செத்துப்போன உயிர் திரும்பத் தளிர்க்குதாம். அதனால அந்தப் பொண்ணோட தோள் அமிழ்தத்தால செய்யப்பட்டதுங்கறார்."

"என்ன பாஸ்? நீங்க டோபாலஜி படிக்கிறீங்களா? இல்ல, அந்த அதுக்குள்ள மறைச்சு வெச்சு வேற எதாச்சும் படிக்கிறீங்களா? சந்தேகமா இருக்கே?"

"சந்தேகமே வேண்டாம். புக்தான் டோபாலஜி. அது முழுக்க உன் பேஷியாலஜிதான். 2000 வருஷத்துக்கு முன்னாடி வள்ளுவர் எழுதியது. ஆனா இப்போ எனக்கு அது சயின்ஸ் பிக்சன் மாதிரி இல்ல. பியூர் எக்ஸ்பீரியன்ஸ்."

"ஓ! அப்படியா?" என்றபடி அவள் மீண்டும் அவனது தோளை அழுத்தமாகப் பற்றினாள்.

"தொடுதலில் ஒரு மாயமிருக்கிறது. அதுவும் காதலியின் தீண்டல்? சும்மா சொல்லக்கூடாது, அது ஒரு தனி ஹை வோல்டேஜ் எலக்ட்ரிக் ஷாக்."

"கணிதரே! கொஞ்சம் கவிஞரை ஓரங்கட்டி விட்டு கணித்ததைப் பாருங்க. செமஸ்டரில் கவிதை எழுத முடியாது." அவள் புன்னகைத்துவிட்டு அவனது தேநீர் கோப்பையை எடுத்தாள்.

"கணிதம் என்பது இயற்கையின் கவிதை; கவிதை என்பது மனித மனத்தின் கணிதம்."

"இருங்க மிஸ்டர் வள்ளுவர் வழி காதலரே! நான் போய் சூடா போட்டுட்டு வர்றேன். உங்கள் உயிர் இன்னும் கொஞ்சம் நல்லா தளிர்க்கட்டும்!"

அவள் சமையலறைக்குச் செல்ல, அவன் புதுத் தெம்போடு டோபாலஜி புத்தகத்தின் தாள்களைத் திருப்பினான். ஆறு மணி நேரமாக திக்கு திசை புரியாத பல தேற்றங்களுக்கான நிரூபணங்கள் இப்போது அவனுக்கு அத்தனை சுலபமாக விளங்க ஆரம்பித்தன.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

3 Sept 2026

எட்டாம் வகுப்பில் ஒரு மிருகக்காட்சி சாலை

எட்டாம் வகுப்பில் ஒரு மிருகக்காட்சி சாலை

பள்ளிக்கூடம் என்பது சரஸ்வதி தேவியின் ஆலயம் என்று நாமெல்லாம் படித்துப் படித்துப் பழகிய பழமொழி. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்திருக்கும் இந்த கொடூரம், அந்த ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திற்குள்ளேயே சாத்தான்கள் நுழைந்துவிட்டனவோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அவனது பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவுவதும், ரப்பர் பேண்டால் அடிப்பதும், வகுப்பறையிலேயே நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதும் என்ன மாதிரியான மனநிலை? அதுவும் ஓராண்டாக இந்த அட்டூழியம் தொடர்ந்து நடந்திருக்கிறது. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல,  ஓராண்டு காலம் அதாவது 365 நாட்கள்! இந்த ஓராண்டில் அந்தப் பிஞ்சு நெஞ்சம் அடைந்த வேதனையை, அவமானத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த வன்முறையைச் செய்தது வேறு யாரோ வெளியாட்கள் அல்ல; அவனோடு ஒரே வகுப்பில் அமர்ந்து பாடம் படித்த சக ஒன்பது மாணவர்கள்! திரைப்படங்களிலும் இணையதளங்களிலும் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரம் இன்று சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் எத்தகைய விஷத்தைக் விதைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

கைது, போக்சோ வழக்கு, கூர்நோக்கு இல்லம் இதெல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும் வழக்கமான பாதைகள். ஆனால், எழும் உண்மையான கேள்வி வேறு. பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் இத்தனை காலம் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

ஒரு மாணவன் மன உளைச்சலால் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருக்கும்போது, அதற்கான காரணத்தை ஆராய வேண்டியது யார் பொறுப்பு? கிராப்ட் வகுப்பில் ஏதோ தெரியவந்ததாம், உடனே பெற்றோருக்குத் தகவல் சொன்னார்களாம். சரி, அதன்பின் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? தலைமை ஆசிரியை காட்டிய இந்தத் தாமதமும் அலட்சியமும் குற்றத்திற்குத் துணைபோவதற்குச் சமமில்லையா?

கல்வி அதிகாரிகளும், "விளக்கம் கேட்டிருக்கிறோம், அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்" என்று வழக்கமான பாணியில் அறிக்கைவிட்டு நகர்கிறார்கள்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தானே தவிர, சக மாணவர்களிடம் சித்ரவதைப் பட்டு உடலும் மனமும் சிதைந்து போவதற்கில்லை. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்குச் சீர்திருத்தப் பயிற்சியும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முறையான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சையும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக, பள்ளி வளாகங்களுக்குள் நடக்கும் இதுபோன்ற "ராகிங்" மற்றும் பாலியல் கொடுமைகளைக் கண்டறியவும் தடுக்கவும் பள்ளிகளில் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் வெறும் பாடங்களை நடத்துவதோடு தங்கள் கடமை முடிந்தது என்று ஒதுங்கிவிடக் கூடாது; மாணவர்களின் நடத்தையையும், மனநிலையையும் கூர்ந்து கவனிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. இந்த விளாத்திகுளம் சம்பவம், தமிழகக் கல்வித் துறைக்கு விழுந்த பலத்த சாட்டையடி! இனியாவது தூக்கம் கலைந்து விழித்துக் கொள்ளப் போகிறார்களா? அல்லது கும்பகோணம் தீ விபத்து போல ஒரு சம்பவம் நடந்து நாட்டையே உலுக்கும் வரை தூங்கிக் கொண்டே இருக்கப் போகிறார்களா?

*****