27 Jul 2026

ஊன் சோற்று மனிதர்கள்!

ஊன் சோற்று மனிதர்கள்!

நாகேசுவரனுக்குள் அதிர்வு ஏற்பட்டது, ஒரு பூகம்பத்தின் ரிக்டர் அளவில் இல்லை; பழைய சோற்றில் ஊறுகாய் விழுந்தால் ஏற்படும் ஒரு சிறிய கிளர்ச்சி போல.

சின்ன கடைத் தெருக் கோடியில் ஒரு புது பிரியாணி கடை.

சங்க காலத்தில் போருக்குப் போன வீரன் ஊன் சோறு தின்றானாம். நெய்யும் மசாலாவும் மணக்க அதை உண்டானாம். அதைத்தான் இப்போது பிரியாணி என்கிறார்கள்.

பிரியான் என்றால் பாரசீகத்தில் வறுப்பது என்று அர்த்தமாம். முகலாயர்களும் நிஜாம்களும் தம் வயிற்றுப் பெருக்கத்திற்காகக் கண்டுபிடித்த அந்த பிலாப், இன்று நாகேசுவரனின் தெருவையே ஆக்கிரமித்திருந்தது.

தமிழ்நாடே பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு பிரியாணி தின்கிறதாம். இதில் தெருவோரக் கடைகள் மட்டுமே ஏழாயிரத்து ஐந்நூறு கோடியைச் சுருட்டுகின்றனவாம்.

மக்களுக்கு உணவின் மீதிருக்கும் மோகமா, அல்லது தம் அந்தஸ்தைக் காட்டிக்கொள்ளும் வெறியா? நாகேசுவரனுக்குள் தத்துவார்த்தமான கேள்விகள். காதணி விழா முதல் காரிய கருமாதி வரை இப்போது பிரியாணிதான் பிரதானம்.

அன்று மாலை. தெருவோரக் கடைக்காரன் தாண்டவராயன் தம் பிரியாணி பானையைத் திறந்தான்.

வாசனை நாகேசுவரனின் மூக்கைத் துளைத்தது. ஆனால், அந்த வாசனையின் அடிவயிற்றில் ஏதோ ஒரு அழுகல் மணம் ஒளிந்திருப்பதாக அவருக்குப் பட்டது. வடமாநிலத்து ரயில்களில் பனிக்கட்டிக்குள் அடைக்கப்பட்டு, உற்பத்தித் தேதியே இல்லாமல் வரும் ஆட்டிறைச்சிகள். மதுரையில் ஏதோ ஒரு ஹோட்டலில் 1200 கிலோ கெட்டுப்போன இறைச்சியைக் கைப்பற்றினார்களாம்.

மனிதர்கள் இறைச்சியை உண்கிறார்களா, அல்லது இறைச்சி மனிதர்களை உண்கிறதா? நாகேசுவரனுக்குள் மீண்டும் ஒரு தத்துவம்.

நாகேசுவரனின் தம்பி கணேசன் தினமும் பிரியாணி தின்பவன்.

"ஏன்டா, டால்டாவும் டிரான்ஸ்பேட்டும் உன் ரத்தக் குழாய அடைச்சு, மாரடைப்பு வந்தாத்தான் அடங்குவியா? தினமும் எதையாவது தின்னுட்டு வாந்தி, பேதின்னு கிடப்பியா?" என்றார் நாகேசுவரன்.

"அண்ணே, ருசிண்ணே. அந்த வாசனையண்ணே!" என்றான் கணேசன், தன் அறியாமையை ரசித்தபடி.

"ருசி இல்லைடா அது. உன்னைக் கொல்லும் விஷம்! அளவுக்கு மீறினா அஜீரணம், சர்க்கரை நோய், இதய நோய்னு வரிசையா வரும். போன வருஷத்துல மட்டும் அஞ்சு பேர் கெட்டுப்போன கறியைத் தின்னு செத்துப் போயிருக்காங்க. ஐந்நூறு பேருக்கு மேல ஆஸ்பத்திரியில கிடந்திருக்காங்க!"

தமிழகம் முழுக்க பல லட்சம் கடைகள். முப்பத்தெட்டாயிரம் கடைகளில் சோதனையிட்டு, அய்யாயிரம் கிலோ அழுகிய கறியைப் பிடித்து, ஒன்னரை கோடி ரூபாய் அபராதம் போட்டாலும், தாண்டவராயன்களும் பெரிய முதலாளிகளும் மாறுவதாயில்லை.

நாகேசுவரன் தன் சட்டைக் பையிலிருந்த சுருங்கிய காகிதத்தை எடுத்தார். அதில் ஒரு எண் குறிக்கப்பட்டிருந்தது. உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண். புகார் அளிக்கலாம் என்று போட்டிருந்தது.

அவர் போனை எடுத்தார். எண்ணைத் தட்டச்சினார். அப்புறம் என்ன நினைத்தாரோ, விரல்கள் தங்கிவிட்டன.

சுற்றிலும் பார்த்தார். தாண்டவராயன் கடையில் பிரியாணி வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த மனிதர்களின் முகங்களில் பசியை விட, ஏதோ ஒரு விவரிக்க முடியாத அவசரம் தெரிந்தது. அவர்கள் எதை உண்கிறோம் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை; நாவிற்குத் தரும் அந்த சில நிமிடக் கிளர்ச்சிதான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது.

நாகேசுவரன் பெருமூச்சுடன் போனை வைத்தார்.

தொலைவில் பிரியாணி பானையின் மூடி திறக்கப்படும் சத்தம் கேட்டது. புகை மண்டலத்திற்குள் மனிதர்கள் தம் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் மறந்து மூழ்கிக் கொண்டிருந்தார்கள். நாகேசுவரனும் தன் மீதமிருந்த ஆயுளை எண்ணியபடி அமைதியாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

*****

ஒரு ஸ்டார்ட் அப்பின் முடிவு!

ஒரு ஸ்டார்ட் அப்பின் முடிவு!

அந்த அறையில் ஏசி 16 டிகிரியில் ஓடிக் கொண்டிருந்தது. நடுவே, மேஜையின் மேல் இரண்டு லேப்டாப்கள்.

கார்ப்பரேட் உடையில் அமர்ந்திருந்த அரவிந்த் சுப்பிரமணியம், தனது காபி கப்பை உதட்டுக்குக் கொண்டு சென்றபடி எதிரே அமர்ந்திருந்த முனியசாமியைப் பார்த்தார்.

முனியசாமி சிவகாசி ஸ்டார்ட் அப்பின் புதுவரவு. அவரது தாத்தா அச்சுக்கூடங்களில் ஈயம் கோர்த்தவர்; அப்பா பட்டாசு ஆலைகளில் மருந்து கலந்தவர். முனியசாமி ஒரு படி மேலே போய், செயற்கை நுண்ணறிவு மூலம் சுயம்பாக வெடிக்கும் பட்டாசு அல்காரிதம் ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார்.

"பாருங்க முனியசாமி!" அரவிந்த் குரலைத் தாழ்த்தி, ஒரு குருவைப் போலப் பேசத் தொடங்கினார். "உங்ககிட்ட ஐடியா இருக்கு. சிவகாசியோட பாரம்பரிய உழைப்பு இருக்கு. ஆனா, முதலீட்டு ஞானம்? அது உங்ககிட்ட இல்லை. செபி பதிவு பெற்ற பண்டுகள்ல 12 லட்சம் கோடி சும்மா சுத்திட்டு இருக்கு. ஆனா தமிழ்நாட்டுல ஒரே ஒரு யூனிகார்ன்தான் வந்துருக்கு. ஏன் தெரியுமா?"

முனியசாமி பயபக்தியுடன் கேட்டார், "ஏன் சார்?"

"ஏன்னா, உங்களுக்கு பேலன்ஸ் ஷீட் போடத் தெரியல. ரிசர்வ் வங்கியோட எப்.டி.ஐ வழிகாட்டுதல் தெரியல. சிலிக்கான் வேலியிலயும், சிங்கப்பூர்லயும் இருக்கிற நம்ம தமிழ் பணக்காரங்களோட பணத்தைக் கொண்டு வரத் தெரியல! உங்களுக்கு ஒரு வழிகாட்டி தேவை!"

அரவிந்த் பேசி முடித்தபோது, முனியசாமியின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. "சார்! நீங்கதான் என் வழிகாட்டி. நீங்க சொல்ற மாதிரி என் கம்பெனியக் கட்டமைச்சு, செபி விதிகளுக்கு உட்பட்டு, அந்த 12 லட்சம் கோடியில ஒரு 100 கோடியை வாங்கித் தாங்க சார்! சிவகாசியைச் சிலிக்கான் வேலியா மாத்துறேன்!" என்றார்.

அரவிந்த் சுப்பிரமணியத்துக்குக் கண்கள் வேர்த்தன.

*

அடுத்த மூன்று மாதங்கள் சூப்பர் கம்ப்யூட்டர் வேகத்தில் ஓடின.

அரவிந்த் தீவிரமாக உழைத்தார். முனியசாமியின் நிறுவனத்திற்குப் புதுப் புது ஆடிட்டர்களை வரவழைத்தார். செபி விதிகளின்படி கணக்குகளைச் சீரமைத்தார். சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் ஜூம் மீட்டிங் போட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் சிக்கலான விதிகளை எளிமைப்படுத்திக் காட்டி, முதலீட்டை உறுதி செய்தார். முனியசாமியை ஒரு யூனிகார்ன் நிறுவனத்தின் சி.இ.ஓவாகவே மாற்றிவிட்டார்.

அனைத்து சட்டப்பூர்வ ஒப்பந்தங்களும் தயார். செபி அங்கீகரித்த பண்டிலிருந்து 100 கோடி ரூபாய் முனியசாமியின் ஸ்டார்ட் அப் வங்கிக் கணக்கிற்கு மாற வேண்டிய இறுதி நாள் வந்தது.

*

அரசு அமைப்பின் குளிரூட்டப்பட்ட மாநாட்டு அரங்கில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், செபி அதிகாரிகள், அரவிந்த் மற்றும் முனியசாமி அனைவரும் கூடி இருந்தனர்.

அரவிந்த் பெருமிதத்தோடு முனியசாமியைப் பார்த்துச் சொன்னார், "முனியசாமி, அந்த டிஜிட்டல் கையெழுத்தைப் போடுங்க. தமிழகத்தின் அடுத்த யூனிகார்ன் பிறந்துருச்சு!"

முனியசாமி லேப்டாப் திரையைப் பார்த்தார். பேனா போன்ற ஸ்டைலஸைக் கையில் எடுத்தார். பிறகு திடீரென நிறுத்தினார்.

அறையில் அமைதி நிலவியது. "என்ன முனியசாமி, என்ன ஆச்சு?" என்றார் அரவிந்த் பதற்றத்துடன்.

முனியசாமி நிதானமாக லேப்டாப்பை மூடினார். அரவிந்தைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் கார்ப்பரேட் நளினம் இல்லை; முதலாளிகளின் பரம்பரைத் தந்திரம் மட்டுமே இருந்தது.

"அரவிந்த் சார். இவ்வளவு நாள் நீங்க சொன்ன சட்ட விதிமுறைகள், செபி கைடுலைன்ஸ், பேலன்ஸ் ஷீட் ஸ்ட்ரக்சர் எல்லாத்தையும் ரொம்ப தெளிவா எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ். ஆனா, இந்த 100 கோடி முதலீட்டுக்கு கையெழுத்துப் போட்டா, என் கம்பெனியோட நாற்பது சதவீத பங்கை அந்த பண்டுக்கு எழுதித் தரணும். கரெக்ட்டா?"

"ஆமா முனியசாமி, அதான் வழக்கம்." என்றார் அரவிந்த்.

"அங்கதான் சார் நீங்க தப்புப் பண்றீங்க!" என்றார் முனியசாமி.

மடியிலிருந்த தனது பழைய டைரியை எடுத்த முனியசாமி தொடர்ந்தார், "நீங்க சொன்ன மாதிரி நம்ம தமிழ்நாட்டுல முதலீட்டு ஞானம் கம்மிதான். ஆனா, வார்த்தைக்கு மதிப்பளிச்சு கோடி ரூபாயைக் கடனாத் தர்ற கரூர் கைத்தறி வியாபாரிகளும், கூட்டு முதலீடு பண்ற திருப்பூர் நெசவாளர்களும் என் சொந்த மாமா, மச்சாங்காரனுங்க சார்!"

அரவிந்த் அதிர்ச்சியில் உறைந்தார்.

"நீங்க கம்பெனியை எப்படி லீகலா கட்டமைக்கணும்னு கத்துக் கொடுத்த அந்த மூணு மாசத்துல. என் மாமாக்கள், மச்சான்கள் 50 பேரை வச்சு ஒரு சீட்டுக்கட்டு கூட்டியே உங்களோட செபி, கிபியை விடக் கம்மி வட்டிக்கு 100 கோடியை ரொக்கமா ரெடி பண்ணிட்டேன் சார்! கம்பெனி பங்கையும் யாருக்கும் தரத் தேவையில்ல!"

முனியசாமி அரவிந்தின் தோளைத் தட்டினார்.

"செபி சட்டதிட்டம் தெரியாம இருந்ததுதான் சார் எங்களுக்குப் பிரச்சனை. அதைத்தான் நீங்க சூப்பரா கத்துக் கொடுத்துட்டீங்களே! வட்டிக்கு ஆள் புடிக்கிறது எங்க பரம்பரை ரத்தம் சார். வர்றேன்!"

முனியசாமி லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு மாநாட்டு அரங்கிலிருந்து வெளியேற, அரவிந்தின் கையிலிருந்த காபி கப் அப்படியே உறைந்து போயிருந்தது!

*****

ஜனநாயகன் – தியேட்டரில் ஒரு தேர்தல்!

ஜனநாயகன் – தியேட்டரில் ஒரு தேர்தல்!

தமிழ் சினிமாவில் அரசியல்வாதியாக மாறுவதற்கும், சினிமாவில் அரசியல் பேசுவதற்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. இரண்டுக்குமே கொஞ்சம் கைத்தட்டல், நாலு டைமிங் வசனங்கள், அப்புறம் ஒரு பழைய பாட்டு ரீமிக்ஸ் இருந்தால் போதும். ஜனநாயகன் படமும் அந்த மரபை மிக நேர்த்தியாகப் பின்பற்றுகிறது.

மலைக் கிராமத்தில் பிறந்து, படிப்பால் உயர்ந்து, செய்யாத குற்றத்துக்குச் சிறைக்குப் போய், கடைசியில் அதே சிறைக்கே பாதுகாவலராகவும் வரும் விசித்திரமான காவல்துறை அதிகாரிதான் படத்தின் நாயகன்.

இதற்கு இடையில் கதையின் ஒரு பாத்திரம் உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகி, வழக்கம் போல ஒரு விபத்தில் இறந்து போகிறது. போவதற்கு முன்னால் அந்தப் பாத்திரம், "என் மகளை ராணுவத்தில் சேர்த்துவிடு" என்று நாயகனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறது. நாயகனும் ஒரு டியூஷன் வாத்தியார் போல அந்த மகள் பாத்திரத்துக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இன்னொரு பக்கம், ஆப்பிரிக்காவில் பல கொலைகளைச் செய்து அந்த நாட்டையே சுடுகாடாக்கிய வில்லன், இந்தியக் கடற்படையைத் தாக்கி நாட்டிற்குள் நுழையச் சதி செய்கிறார். இந்தச் சூழலில், வில்லன் பாத்திரத்திடம் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிச் சீரழியும் மகள் பாத்திரத்தைக் காப்பாற்ற நாயகன் மீண்டும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்.

அதென்னவோ இந்தப் படத்திலும் வில்லன்களுக்கு எப்போதும் ஹீரோவின் ஆட்களைத் தவிர வேறு யாரையுமே கொல்லத் தோன்றுவதில்லை!

வில்லன் கூட்டமெல்லாம் நாயகனுக்கு பில்டப் கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் நடந்து கொள்கிறார்கள். எதிரே நிற்கும் வில்லன்களே "அவன் சாதாரண ஆள் இல்லப்பா!" என்று பேசிப் பேசி நாயகனை உயர்த்தும் பழைய தொண்ணூறுகளின் தமிழ் சினிமா பார்முலா இதில் இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது.

நவீன தமிழ் சமூகம் தனது பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதும், பிறகு அதே பிம்பங்களின் காலடியில் விழுந்து வணங்குவதும் ஒரு விசித்திரமான ஆட்டம். ஜனநாயகன் திரைப்படமும் இந்த ஆட்டத்தின் ஒரு பிரம்மாண்டமான தொடர்ச்சிதான். இங்கே சினிமா என்பது கலை வடிவமாக இல்லாமல், ஓர் அரசியல் பிரசாரத்தின் வண்ணமயமான சுவரொட்டியாகத் தன் உருவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது

படத்தின் இயக்குநர் மக்களின் நலன் பேணாத சர்வதேச முதலாளித்துவத்தையும், வாக்காளர் மற்றும் அரசியல்வாதி இடையிலான நுகர்வு உறவையும் தொட்டுப் பேச முற்படுகிறார். ஆனால், அது காட்சிகளாக உருப்பெறாமல் பெரும்பாலும் நீண்ட வசனப் பிரசங்கங்களாக மட்டுமே எஞ்சிநிற்கிறது. சிந்தனைகளை உரையாடலாக மாற்றுவதற்கும், மேடைப் பேச்சை திரையில் ஒப்பிப்பதற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை படம் பல இடங்களில் கடந்துவிடுகிறது.

தெலுங்கின் பகவந்த் கேசரி கதையின் விதையை எடுத்துக்கொண்டு, அதன் மேல் அரசியல், சமூகப் பிரச்சினைகள், பெண் பாதுகாப்பு, எமோஷன், ஆக்‌ஷன் என பல வண்ணப் பூச்சுகளைப் பூசியிருக்கிறார் இதன் இயக்குநர்.

ஜனநாயகன் என்பது சினிமா என்ற கலை வடிவத்தின் வழியாகத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதா என்றால் சந்தேகம்தான். ஆனால், ஓர் அரசியல் நகர்வாகவும், ரசிகர்களின் உணர்ச்சிப் பெருக்கைத் மூலதனமாகக் கொண்ட நுகர்வுப் பண்டமாகவும் தன் இலக்கைக் கச்சிதமாக அடைந்துவிடுகிறது!

திரையரங்கின் இருளுக்குள் நுழையும் போது, நாம் ஒரு கதையைக் கேட்கப் போகிறோமா அல்லது ஒரு பிம்பத்தின் ஊர்வலத்தைப் பார்க்கப் போகிறோமா என்ற கேள்வி எழுந்தால், அதற்கு ஜனநாயகன் அந்த இரண்டாம் தேர்வைத்தான் தன் தோள்களில் பலவந்தமாகச் சுமந்து நிற்கிறது.

ஒரு கலைஞன் தன் கலைக்கு உண்மையாக இருக்கும் வரைதான் அவன் விஸ்வரூபம் எடுக்கிறான். ஆனால், கலை ஒரு மனிதனின் பிம்பத்தைக் கட்டமைக்கும் ஏவலாளாக மாறும் போது, அங்கே கலை மெல்ல மெல்ல மௌனமாகி விடுகிறது.

நாம் கொண்டாட்டங்களை விரும்புபவர்கள். நமக்கு நிஜங்களை விட, நிஜங்களைப் போலக் காட்டப்படும் பிரமைகள்தாம் உற்சாகம் அளிக்கின்றன. ஜனநாயகன் ரசிகர்களுக்கான கொண்டாட்ட அரங்கைத் திறந்து வைக்கிறது; ஆனால், திரை அணைந்த பிறகு வீட்டிற்கு உடன் வர வேண்டிய ஆழமான மனித அனுபவத்தை அது தர மறுக்கிறது.

*****

26 Jul 2026

மேஜைக்கடியில் காந்தி!

மேஜைக்கடியில் காந்தி!

நகராட்சியின் இரும்பு நாற்காலிக்கு வாதநோய் வந்து பல வருடங்களாகிவிட்டன. வெயில் தாங்காமல் அது ஈனஸ்வரத்தில் முனகியபோதெல்லாம், "நான் இருக்கேன்டி செல்லம்" என்று ராமலிங்கம் தன் பிட்டத்தால் அதை அணைத்துக் கொண்டார்.

அவர் மேஜையில் இருந்த மனுக்களுக்கு அடியில் எப்போதும் ஓர் ஐந்நூறு ரூபாய் தாள் அரைப் பிரசவ நிலையில் தலைநீட்டிக்கொண்டிருக்கும். ராமலிங்கம் அதைத் தொடுவதும், விரல்கள் பட்டுப்போன பூச்சிகளைப் போலப் பின்வாங்குவதும் கடந்த இருபது வருடங்களாக நடக்கும் ஒரு சின்னஞ்சிறு நாடகம்.

உள்ளே நுழைந்தார் தலைமை எழுத்தர் சபாபதி. அவர் குரலில் எப்போதும் ஒரு கிலோ வனஸ்பதி தடவியிருக்கும்.

"என்ன யோசனை ராமலிங்கம்?"

"இல்லை சபாபதி. சமூகத்தில் தெருவில் திருடுபவனை அடித்துத் துவைக்கிறார்கள். கோடிகளில் சுருட்டுபவனுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?"

சபாபதி லேசாகச் சிரித்தார். "திருடுறவனுக்கு அதிகாரப் பின்புலம் இல்லை ராமலிங்கம். ஊழல் பண்றவனுக்கு அதிகாரம் இருக்கு. அதிகாரத்தைப் பார்த்துக் கும்பிடு போடுவது நம் டி.என்.ஏவிலேயே ஊறிப்போன ஜீன். பெண்டாட்டி, பிள்ளை குட்டி என்று சுயநலம் இருக்கும் வரை எந்த நாயாலும் இந்த பயத்தை ஒழிக்க முடியாது."

"ஆனால், பயம் நிலையானது இல்லையே?" என்றார் ராமலிங்கம், ஒரு தத்துவ ஞானியின் போஸைக் கஷ்டப்பட்டு வரவழைத்தபடி.

*

அன்று மாலை ஊரின் மைதானத்தில் ஒரு ரட்சகன் தோன்றியிருந்தார்.

"யார் லஞ்சம் கேட்டாலும் செருப்பைக் கழற்றி, மன்னிக்கவும், தர முடியாது என்று துணிச்சலாகச் சொல்லுங்கள்! அரசாங்கம் உங்களுடையது, நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன்!"

மேடையில் ஒலித்த அந்த புதிய அதிகாரத்தின் குரல், அங்கிருந்த இளைஞர்களின் கண்களில் உடனே ஏதோ ஓர் எக்ஸ்ட்ரா வெளிச்சத்தை ஏற்றிவைத்தது. ராமலிங்கத்தின் மகன் கார்த்திக், தன் கைபேசியில் அதை நேரலையாகப் பதிவிட்டு, உலகெங்கும் உள்ள தன் நண்பர்களுக்குப் பகிர்ந்து, தனக்கான லைக்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் கார்த்திக் வீராப்பு பேசினான். "அப்பா, இது வெறும் பேச்சு இல்லை. மேலிருக்கிற அதிகார மரத்தின் ஆணிவேரையே வெட்டப் போகிறார்கள். இனிமேல் நாங்களும் சும்மா இருக்கப்போவதில்லை. பல கோடி கண்கள் கண்காணிப்பில் இறங்கும்!"

ராமலிங்கம் பதில் பேசாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். காலத்தின் நதியில் ஏதாவது புதுக் குப்பை மிதந்து வருகிறதா என்று பார்க்கத் தானும் தயார் என்பது போல ஒரு மெல்லிய நம்பிக்கை அவர் மனதிலும் துளிர்த்தது.

*

அடுத்த நாள் காலை.

நகராட்சி அலுவலகம்.

அதே வாதநோய் நாற்காலி.

மேஜை மீது அதே மனு.

அடியில் அதே ஐந்நூறு ரூபாய்.

மனுவைக் கொண்டு வந்தவர் லேசாகக் கண் சிமிட்டி, "கொஞ்சம் சீக்கிரம் முடியுங்களேன்" என்றார்.

நேற்றைய மேடைப் பேச்சும், மகனின் வீராப்பும் ராமலிங்கத்தின் மனக்கண் முன் கவாத்து அடித்தன.

ராமலிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்தார். காந்தியைப் போலத் தன் முதுகெலும்பை நேராக்கினார். அந்த ஐந்நூறு ரூபாய் தாளை அப்படியே எடுத்தார். நபரிடம் திருப்பிக் கொடுத்து, "லஞ்சம் கொடுக்காதீர்கள். இது உங்கள் உரிமை!" என்றார்.

அந்த மனிதர் திகைக்கவில்லை. அதற்குப் பதிலாக, "யோக்கிய சிகாமணி. சரி, அப்ப வேலையப் பாருங்க" என்று லேசான எள்ளலுடன் சிரித்துவிட்டுத் தாளைப் பையில் போட்டுக் கொண்டு நகர்ந்தார்.

*

மதியம் இரண்டு மணி.

சபாபதி ஒரு காகிதத்தோடு வந்தார். "ராமலிங்கம், உங்களை உடனடியா பி பிரிவுக்கு மாத்தியாச்சு. அங்கே பழைய கிழிஞ்ச கோப்புகளைக் தூசி தட்டி அடுக்குற வேலை."

ராமலிங்கம் அதிர்ச்சியடைந்தார். "ஏன் சபாபதி? நான் என் கடமையைத்தானே செய்தேன்?"

சபாபதி பரிதாபமாகப் பார்த்தார். "காலையில உன்கிட்ட காசு கொடுத்தாரே. அவரு நேத்து மேடையில் பேசினாரே ஒரு ரட்சகன், அவரோட சொந்த மச்சான். லஞ்சம் வாங்காதேன்னு மேடையில் பேசறது மக்களுக்குத் தர்ற ஒருவித போதை மருந்து ராமலிங்கம். ஆனா அந்த சிம்மாசனத்தைச் சற்றே அசைக்கப் பார்த்தாலும், அதே கைதான் வந்து உன் தலையில் அடிக்கும்."

*

மாலை வீட்டில் கார்த்திக் சோகமயமாய் உட்கார்ந்திருந்தான்.

"என்னப்பா ஆச்சு? உங்களை ஆபீஸ்ல மிரட்டுனாங்களாமே? நான் சோஷியல் மீடியால போஸ்ட் போடலாம்னு பார்த்தா, நம்ம ஏரியா இளைஞர் மன்றத்துல இருந்து போன் பண்ணி இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனை, பேசாம இருங்கன்னு சொல்றாங்க அப்பா. போன் பண்ணது வேற யாரும் இல்லை, நேத்து என் கூடவே வந்து கைதட்டுன என் நண்பன்தான்," என்றான். அவனது குரலில் நேற்றிருந்த புரட்சி வடிந்து, ஒருவித அச்சு பிசகாத பயம் எட்டிப்பார்த்திருந்தது.

ராமலிங்கம் மெல்ல நடந்து சென்று ஜன்னல் அருகில் நின்றார். தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்தார். காலியாக இருந்தது.

நாளை மீண்டும் அதே இரும்பு நாற்காலியில் அமர்ந்து, மனுக்களின் அடியில் எட்டிப் பார்க்கும் ஐந்நூறு ரூபாய் தாள்களை எவ்வித சலனமுமின்றி, நாகரிகமாகப் பெறத் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை அவர் மனம் மெதுவாகப் புரிந்துகொண்டது.

இருள் முழுமையாக நகரைச் சூழ்ந்துகொண்டது வழக்கம்போல.

*****

ஒரு பிச்சைக்காரனின் விடியலும், அரை மணி நேர அறுவை சிகிச்சையும்!

நெல் திருவிழா – 2026

ஒரு பிச்சைக்காரனின் விடியலும்,

அரை மணி நேர அறுவை சிகிச்சையும்!

பாரம்பரியத்தைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, கடைசியில் என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறாத குறைதான் இந்த 2026 ஆம் ஆண்டின் நெல் திருவிழா அனுபவம்.

நேற்று நடந்து முடிந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நெல் திருவிழாவுக்குச் சென்று வந்த பிறகுதான் தெரிந்தது, நம் முன்னோர்கள் பாரம்பரிய நெல்லை மட்டும் விட்டுச்செல்லவில்லை, அதை வாங்குவதற்குத் தேவையான தப்பிப் பிழைக்கும் கலையையும் சேர்த்துத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று.

ஒவ்வொரு முறையும் இந்தத் திருவிழாவுக்குக் கிளம்பும்போதும் மனதுக்குள் ஒரு பெரிய கனவு இருக்கும்,  "இன்றைக்கு எப்படியாவது ஏதேனும் ஒருபாரம்பரிய நெல்லை வாங்கி வந்து இந்த ஊரில், இந்த நாட்டில், இந்த உலகத்தில் பாரம்பரிய விவசாயத்தைப் பாதுகாத்து ஒரு கை பார்த்துவிட வேண்டும்!" என்று.

ஆனால், அங்கு சென்றதும் ஒவ்வொரு முறையும் நடப்பதே வேறு.

திருவிழா நடந்த இடத்தை அடைந்தவுடனேயே எனக்குள் ஒரு நடுக்கம் தொற்றிக்கொண்டது. கூட்ட நெரிசலைப் பார்த்தால், அடுத்து ஒரு "கரூர் சம்பவம்" இங்கேதான் நடக்கப்போகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது.

அந்த அலைமோதும் கூட்டத்துக்கு நடுவே சிக்கிச் சின்னப்பின்னமாகி, கடைசியில் உயிர் தப்பி வீடு திரும்பியதே போன ஜென்மத்தில் நான் செய்த ஏதோ ஒரு புண்ணியம்தான்.

நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் தருகிறார்களாம். அதை வாங்குவதற்குப் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் முதல் அரைக்காணி நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வரை, கர்நாடகாவிடம் காவிரித் தண்ணீரைக் கேட்டுப் போராடும் விவசாயிகளின் அதே தர்ணா பாணியில் காலையிலிருந்து அதை கொடுக்கும் வரை தேவுடு காத்து வெயிலில் அங்கே இங்கே நகராமல் பரிதாபமாக உட்கார்ந்திருக்கிறார்கள். எங்கே போனாலும் விவசாயிகளுக்குத் தர்ணா செய்வதுதான் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி போலும்.

அங்கிருந்த கூட்டத்தைப் பார்க்க பார்க்க விழா அமைப்பாளர்களுக்கு ஒரே பெருமிதம்! "அடடே, எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டோம்!" என்று அவர்கள் முகத்தில் அத்தனை திருப்தி. ஆனால், அந்த கூட்டத்தை நெறிப்படுத்தவோ, ஒழுங்கு செய்யவோ அங்கே ஒரு நாய்கூட இல்லை. நாய்கள் ஒருவேளை கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓடியிருக்கலாம்.

மதியம் சுமார் மூன்று மணி வாக்கில்தான் அந்த "பொறுப்பான மன்னர்கள்" வந்திறங்குகிறார்கள். வந்தவர்கள் நேராக அந்தப்புரத்து மாடத்தின் மீது ஏறிக்கொண்டு, கீழே நிற்கும் மக்களுக்குக் காசுகளை வீசி எறிவதைப் போல இரண்டு கிலோ நெல் மூட்டைகளைத் தூக்கி எறிகிறார்கள்.

அதன் பிறகு அங்கு நடந்ததுதான் உச்சகட்டக் கூத்து. எங்கெங்கும் ஒரே பிச்சைக்காரக் குரல்கள்.

"ஐயா, புண்ணியவானே! எனக்கு ஒரு சீரகச் சம்பா நெல்லைப் பிச்சைப் போடுங்களேன்!"

"சாமி, என் பொண்டாட்டி தங்கச் சம்பா கேட்கிறா, ஒரு பிச்சை போடுங்களேன்!"

"மகராசனே, மாப்பிள்ளைச் சம்பா பிச்சை கிடைக்குமா?"

விவசாயிகள் ஆளாளுக்குத் தொண்டை வரளப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் சளைக்காமல், ஒரு மணி நேரம் தொண்டை வறண்டு போகும் அளவுக்கு "ஐயா கனவானே சீரகச் சம்பா பிச்சைப் போடுங்கள்.  ஐயா தர்மவானே தங்கச் சம்பா பிச்சைப் போடுங்கள்" என்று கதறிப் பிச்சை கேட்டேன்.

ஆனால், கடைசியில் தான் உறைத்தது, "பிச்சைக்காரர்களுக்குத் தனக்கு வேண்டிய உணவைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிடையாது" என்கிற கசப்பான உண்மை!

இதற்கு மேல் பிச்சையெடுத்து உயிரை விட முடியாது என்று, ஒரு வழியாக அந்த நெரிசலில் இருந்து தப்பித்து, சரி ஏதாவது பார்க்கலாம் என்று அங்கிருக்கும் அரங்குகள் பக்கம் ஒதுங்கினால். அது அடுத்தகட்ட ஆபத்து!

ஏதாவது ஓர் அரங்கின் பக்கம் தப்பித்தவறி எட்டிப்பார்த்துவிட்டால் போதும், நம்மை அப்படியே கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். அப்புறம் என்ன? அனஸ்தீசியா கொடுக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடக்கத் தொடங்குகிறது!

"இந்த நெல்லோட வரலாறு தெரியுமா தம்பி? கி.மு 200இல் எகிப்து பிரமிடுக்குள்ள இதோட விதையைக் கண்டுபிடிச்சப்போ…" என்று அவர்கள் ஆரம்பிக்கும் அந்த அரிய மருத்துவச் சிகிச்சை தொடர தொடர, நமது மூளையின் ஒவ்வொரு நரம்பையும் பிச்சி பிச்சி எடுத்தாற் போல ஒரு வலி, வேதனை. அறிவியலின்படி மூளை வலியை உணராது என்பார்கள். இங்கே மூளை வலியை உணர்வது வேறு விசயம்.

நாமோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு "சாமி, ஆளை விடுங்க சாமி" என்று மனதுக்குள் அலறுவோம். ஆனால், அறுவை சிகிச்சை முடியாமல் நோயாளி வெளியேற முடியாதே!

சரி, நெல்தான் கிடைக்கவில்லை, அறுவைச் சிகிச்சையும் ஓயவில்லை, அங்கிருக்கும் பாரம்பரியக் கைவினைப் பொருட்களையோ அல்லது மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையோ வாங்கலாம் என்று விலைப்பட்டியலைப் பார்த்தால், அடேங்கப்பா! விலைவாசி விண்ணைத் தொட்டு, அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கே ராக்கெட் விட்டுக்கொண்டிருக்கிறது.

"ஐயா, இந்த அரிசி பண்டத்தின் விலை என்ன?" என்று விசாரித்தால், "அட வெறும் எண்ணூறு ரூபாய்தான் தம்பி!" என்றார்கள். சாதாரணச் சந்தையில் ஐம்பது ரூபாய்க்கு விற்கும் ஒரு பண்டத்துக்கு, பாரம்பரியம் என்கிற ஸ்டிக்கரை ஒட்டி, விலையை ஏரோபிளேன் ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருந்தார்கள்.

சாதாரண ஈயச்சொம்புக்கும், பனை வெல்லத்துக்கும் அவர்கள் சொல்லும் விலையைக் கேட்டால், நம் பாரம்பரியத்தைக் காப்பாற்ற நமது பேங்க் பேலன்ஸையும், ஊர் திரும்ப கையிலிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையு பலி கொடுக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது!

பாரம்பரிய நெல்லைப் பரப்புவது இருக்கட்டும், முதலில் மனிதர்களை மனிதர்களாக நடத்தும் பாரம்பரியத்தையும், பார்வையாளர்களை அறுவை சிகிச்சை செய்யாமல் வாழவிடும் நாகரிகத்தையும் இவர்கள் மீட்டெடுத்தால் நன்றாக இருக்கும்.

இனிமேல் எந்த நெல் திருவிழா பக்கமும் தலைவைத்துக்கூடப் படுக்கப் போவதில்லை.

பாரம்பரிய நெல் விதைகளை விடவும், இந்தத் திருவிழா தந்த மன உளைச்சல்தான் அதிகமாக விளைந்திருக்கிறது!

*****

25 Jul 2026

நிழலின் நிழல்

நிழலின் நிழல்

பாலச்சந்திரனுக்கு அன்றைய காலை நேரம் வழக்கம்போலவே அவசரத்தின் விளிம்பில் இயங்கிக் கொண்டிருந்தது. காரின் ஸ்டீயரிங் வீலைப் பிடித்திருந்த அவனது கை விரல்களில் சிறு நடுக்கம். பின்புறக் சீட்டில், நான்கு வயது ரித்விக் தன் கைகளிலிருந்த பிளாஸ்டிக் பொம்மையை அசைத்துக் கொண்டிருந்தான்.

அவன் மனைவி மாலதி, காரின் கண்ணாடி வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் பார்வை வெளியில் இல்லை; அகத்தில் எதையோ துழாவிக் கொண்டிருந்தது.

"இன்னைக்கு அந்த டே கேர்ல கொஞ்சம் சீக்கிரம் போய் கூட்டிட்டு வந்திடு மாலதி," பாலச்சந்திரன் குரலில் இருந்த படபடப்பு, நகரத்தின் நெரிசலை விட அதிகமாக இருந்தது.

"நான் ஆபீஸ்ல பர்மிஷன் கேட்கணும் பாலா. அவங்க ஆறு மணி வரைக்கும் பொறுப்பா பார்த்துப்பாங்கன்னுதானே காசு தர்றோம்?" மாலதியின் பதில் ஒரு தற்காப்பு அரணாக எழுந்தது.

ஆனால், இருவருக்குமே தெரியும், பிரச்சனை நேரத்தைப் பற்றியது அல்ல. நம்பிக்கையைப் பற்றியது.

கடந்த சில நாட்களாக ரித்விக் பகல்நேரப் பராமரிப்பு மையத்திற்குச் செல்லும்போது காட்டும் அந்தத் தீவிரமான அமைதி, ஒரு சாதாரண வீம்பு அல்ல. குழந்தைகள் அழும்போது நாம் பயப்படுவதில்லை; ஆனால், அவை சட்டென்று வார்த்தைகளை இழந்து, சுவருக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் நிழலைப் போல மாறும்போதுதான் மனித மனம் திடுக்கிடுகிறது.

அன்று மாலை, பாலச்சந்திரன் மையத்தின் கதவைத் திறந்தபோது, வரவேற்பறையில் சிகரெட் வாசனை போல ஒரு செயற்கையான நறுமணம் வீசியது. சுவர்களில் வண்ணப் படங்கள், சிரிக்கும் கார்ட்டூன்கள். எல்லாமே ஒரு சர்வதேசத் தரத்தின் சான்றுகளாகப் பளபளத்தன.

"சார், ரித்விக் இன்னைக்கு ரொம்ப குட் பாய்." என்றார் அங்கு பணிபுரியும் பெண்மணி. அவள் முகத்தில் ஒரு புன்னகை வரையப்பட்டிருந்தது. அச்சடிக்கப்பட்ட புன்னகை.

"அவன் இன்னைக்கு சரியா சாப்பிட்டானா? மத்தியானம் தூங்கினானா?" பாலச்சந்திரன் கேட்டான்.

"யெஸ் சார், எல்லாமே சிசிடிவியில ரெக்கார்ட் ஆகியிருக்கு. வேணும்னா ஆப்ல செக் பண்ணிக்கோங்க."

அவள் சொன்ன அந்த சிசிடிவி என்ற வார்த்தை பாலச்சந்திரனுக்குள் ஒரு விசித்திரமான கசப்பை உருவாக்கியது. மனிதர்களின் கவனத்தையும் அன்பையும் கேமரா லென்ஸ்கள் இடமாற்றம் செய்துவிட்ட ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம்.

கனடாவில் ஏதோ ஒரு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வை நேற்றிரவு கூகுளில் படித்தது நினைவுக்கு வந்தது. நீண்ட நேரம் பராமரிப்பு மையங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு நடத்தை சார்ந்த அசாதாரணங்கள் வரக்கூடும் என்றது அந்த ஆய்வு. அது உண்மையா, அல்லது நகரத்து பெற்றோர்களின் குற்ற உணர்ச்சியை மூலதனமாக்கும் மற்றொரு வியாபாரமா?

தெரியவில்லை.

ஆனால், ஒரு விஷயம் புரிந்தது, குழந்தையை பாதுகாப்பாக வைப்பது என்பது வெறும் கட்டிடத்தின் கதவைப் பூட்டி வைப்பது அல்ல.

வீட்டிற்கு வந்ததும், ரித்விக் தன் காலணிகளைக் கழற்றி வீசிய விதம் வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமாக இருந்தது. மாலதி அவனருகே சென்று உட்கார்ந்தாள்.

"ரித்து அங்கே ஆன்டி உன்னை நல்லா பார்த்துக்கிட்டாங்களா? எதுவும் பயமா இருக்கா?"

சிறுவன் பதிலேதும் சொல்லாமல் தன் கைகளிலிருந்த பொம்மையின் தலையைத் திருகிக் கொண்டிருந்தான். குழந்தைகள் தங்களுக்குள் நடக்கும் வன்முறையை மொழி வழியாக வெளிப்படுத்துவதில்லை; அவர்கள் தங்கள் விளையாட்டின் வழியேதான் உலகத்திற்குச் செய்தி அனுப்புகிறார்கள்.

பாலச்சந்திரன் ஜன்னலருகே போய் நின்றான்.

நகரம் முழுக்க விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. பெங்களூரு, டெல்லி, லண்டன், சிங்கப்பூர் என உலகின் ஏதோ ஒரு மூலையில், இதே நிமிடத்தில், பேசத் தெரியாத ஒரு குழந்தையின் உரிமைகள் மௌனமாக மீறப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

சட்டங்கள் இருக்கின்றன, உரிமங்கள் இருக்கின்றன, பின்னணிப் பரிசோதனைகள் இருக்கின்றன. ஆனால், குறைந்த ஊதியத்தில், ஓய்வில்லாமல், மன அழுத்தத்தில் இயங்கும் ஒரு பராமரிப்பாளரின் கைகளில் தன் குழந்தையின் எதிர்காலத்தை ஒப்படைத்துவிட்டு, அமைதியாக கணிப்பொறித் திரையைப் பார்க்கும் இந்த நவீன வாழ்க்கை எத்தகையது?

"பாலா" மாலதியின் குரல் அவனைக் கலைத்தது.

"என்ன மாலதி?"

"நாம் சம்பாதிப்பது யாருக்காக?"

அந்தக் கேள்விக்குப் பாலச்சந்திரனிடம் உடனடியாக பதில் இல்லை. அது ஒரு தனிநபரின் கேள்வி அல்ல; இந்தச் சமூகம் முழுவதுமாகச் சேர்ந்து தப்பித்துக் கொள்ள முயலும் ஒரு தார்மீகக் கேள்வி.

பாலச்சந்திரன் மெதுவாக நடந்து சென்று ரித்விக்கை அணைத்துக் கொண்டான். குழந்தையின் சுவாசம் அவன் கழுத்தில் பட்டது.

"நாளைக்கு நான் ஆபீஸுக்கு லீவ் போடுறேன் பாலா." என்றாள் மாலதி.

"நானும் போடுறேன்." என்றான் பாலச்சந்திரன்.

இருவரும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்கள். இருள் முற்றிலுமாக நகரை மூடியிருந்தது. ஆனால், அந்த இருளுக்குள்ளும் ஏதோ ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்திற்காக மனித மனம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

*****

டிஜிட்டல் நியாயத்தராசு

டிஜிட்டல் நியாயத்தராசு

நள்ளிரவு ஒரு மணி. முத்தையாவுக்குத் தூக்கம் வரவில்லை. அதற்குக் காரணம் அவருடைய அறுபத்திரண்டு வயது மூட்டு வலியோ, அல்லது தெருவில் குரைக்கும் நாய்களோ அல்ல. அவரது மருமகள் ரேகா ஏந்தியிருந்த அந்த ஐபோன்.

அதன் திரையிலிருந்து வெளிவந்த வெளிச்சம், ஒரு மாயப் பேயின் முகம்போல ரேகாவின் முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது.

"மாமா! இந்த விடியோவை நல்லா பாத்துக்கோங்க. இதுல உங்க பையன் என்னைப் பாத்து அறிவு இருக்கான்னு கேட்ட ஆடியோ தெளிவா இருக்கு. நாளைக்குக் காலைல எட்டு மணிக்குள்ள நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட மன்னிப்பு கேட்கலன்னா, இதை பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் அப்புறம் உங்க சொந்தக்காரங்க வாட்ஸ்அப் குரூப் எல்லாத்துலயும் அப்லோட் பண்ணிடுவேன். வரதட்சணைக் கொடுமைப்படுத்தும் மாமனாரும் கணவனும்னு ஹாஷ்டேக் போட்டுருவேன்!"

முத்தையா கூனிக் குறுகிப் போனார்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, கெட்டிமேளம் முழங்க, சல்லடை போட்டுத் தேடி, நம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என்று ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்மணிதான் இப்போது கையில் ஒரு சிறிய திரையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறாள்.

அவர் மகன் கார்த்திக், பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவனுக்குத் தெரியும், அவன் சொன்ன அறிவு இருக்கா? என்ற கேள்வி, மாலை ஆறு மணிக்கு ரேகா சாம்பாரில் உப்புக்குப் பதிலாகச் சர்க்கரையைப் போட்டபோது தற்செயலாகக் கேட்டது. ஆனால், அந்த மூன்று வினாடி ஆடியோவில் சாம்பாரும் இல்லை, சர்க்கரையும் இல்லை; கார்த்திக்கின் கோபக் குரல் மட்டுமே சாட்சியாக எஞ்சியிருந்தது.

"டேய் கார்த்திக்!" முத்தையா மெல்லக் கிசுகிசுத்தார். "காவல்துறைக்குப் போனாக்கூட பரவாயில்லைடா. நம்ம தரப்பு நியாயத்தைச் சொல்லலாம். ஆனா, இந்த பேஸ்புக்ல போட்டுட்டா, ஊர் சிரிக்குமேடா! நாலு பேர் நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க? என் வாழ்நாள் கௌரவமே போயிடுமே!"

கார்த்திக் பெருமூச்சு விட்டான். "அப்பா, காவல் துறைக்குத் தீர்ப்பு சொல்ல ஆறு மாசம் ஆகும். ஆனா பேஸ்புக்ல ஆறு விநாடில தீர்ப்பு சொல்லிடுவாங்க. அதுல ஆயிரம் பேர் ஷேர் பண்ணுவான், மூவாயிரம் பேர் நம்மளத் திட்டி கமெண்ட் போடுவான். நம்ம பக்கத்து நியாயத்தை நம்ம பொணத்தைக் கொண்டுபோய் சுடுகாட்டுல வச்சாக் கூட அந்த ஆட்களுக்குச் சொல்ல முடியாது."

முத்தையா தன் கைகளைப் பார்த்தார். நடுக்கமாக இருந்தது.

அடுத்த நாள் காலை ஏழு மணி.

முத்தையா தன் அறையிலிருந்து வெளியே வந்தார். ரேகா ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள். கையில் அதே போன்.

முத்தையா மெதுவாக அவளருகே சென்றார். "ரேகா! என்னை மன்னிச்சிடுமா. நாம போலீசுக்கு வேணா போவோம். ஆனா அந்த நெட்ல மட்டும் எதையும் போட்டுடாத. ஊர் மத்தியில குடும்பத்து மானத்தை வாங்கிடாத..."

ரேகா புன்னகைத்தாள். அது ஒரு வெற்றியாளனின் புன்னகை. "பாத்தீங்களா மாமா! சட்டம் தரவேண்டிய பயத்தை இந்த ஒரே ஒரு போன் ஸ்கிரீன் தந்துடுச்சு. இனிமே இந்த வீட்ல நான் சொல்றதுதான் சட்டம்!"

அவள் காபி கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு, தன் அறைக்குச் சென்றாள்.

முத்தையா ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் கண்கள் சுவரில் தொங்கிய அவர் மனைவியின் படத்தைப் பார்த்தன. நல்லவேளை, அவள் உயிரோடு இல்லை.

திடீரென முத்தையாவின் கைப்பேசி ஒலித்தது. அவருடைய நண்பர் சுப்பையா அழைத்திருந்தார்.

"யோவ் முத்தையா! உன் மருமகள் ரேகா பேஸ்புக்ல ஒரு போஸ்ட் போட்டுருக்காப் பாரேன். என் மாமனாரும் கணவரும் என்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கிறாங்க தெரியுமா? அப்படின்னு உங்க மூணு பேர் போட்டோவையும் போட்டு, கீழ ஹேப்பி பேமிலின்னு ஹாஷ்டேக் போட்டுருக்கா!"

முத்தையா திடுக்கிட்டுப் போய் எழுந்தார். தன் கையிலிருந்த போனின் திரையை நோக்கிப் பார்த்தார். அந்த கறுப்புச் சில்லு, ஒரு மயான அமைதியுடன் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

*****