புதியது விற்பனைக்கு இல்லை!
திருத்துறைப்பூண்டி,
ஏஆர்வி திருமண மண்டபத்தில் நடந்த நெல் திருவிழா 2026 ஐ எழுதியப் பிறகு அத்தனை போன்
கால்கள். அட இந்த வலைப்பூவைக் கூட இத்தனை பேர் படிக்கிறார்களா என்று ஒரே ஆச்சரியம்தான்
போங்கள்.
மனிதர்கள்
எழுத்தைப் பற்றியெல்லாம் போன் போட்டு பேசுவதைக் கேட்க நான் தமிழ்நாட்டில் இருக்கிறேனா,
இங்கிலாந்து அல்லது ஜெர்மனியில் இருக்கிறேனா என்று மயக்கம் வராத குறைதான்.
அதென்னய்யா
நெல் திருவிழாவை எழுதிய நீர் (வாட்டர் அல்ல), புத்தகத் திருவிழாவை எழுதாமல் விட்டீர்
என்று செல்லமான மிரட்டல்கள் அந்தப் போன் கால்களில் ஏராளம்.
ஏனிந்தப்
பாவம் எனக்கு? அநாவசியமாக மற்றவர்களின் மிரட்டல்களுக்கு நான் ஏன் ஆளாக வேண்டும்?
ஆனால்,
காலம் கடந்து விட்டதே!
காலம்
கடந்து விட்டது என்றாலும், மதிய சாப்பாட்டை மூன்று மணிக்கேனும் சாப்பிடாமலா இருக்கிறோம்?
கல்யாணமோ, சாவோ பிறகு போய் விசாரித்துக் கொள்வதில்லையா? காலம் ஒரு பிரச்சனையே இல்லை
என்றார்கள் போன் காலர்கள்.
*
திருவாரூர்
அருகே பவித்திரமாணிக்கம்.
மங்கள்
வரதர் மஹால்.
குளிர்
இல்லாத, ஆனால் காற்றில் இலக்கியவாதிகள் எப்போதோ விட்டுச் சென்ற பெருமூச்சுகள் மட்டுமே
அடர்த்தியாக உறைந்திருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை.
மக்களுக்குப்
புத்தகம் படிக்கும் பழக்கம் செத்துப்போய்விட்டது என்பதை நிரூபிப்பதைப் போல, அந்த மாலை
நேரத்திலும் அந்தப் பேச்சு அரங்கு காலியாகக் கிடந்தது. மனிதர்களை விட அதிக எண்ணிக்கையில்
ஈக்கள் பறந்துகொண்டிருந்தன.
புத்தகக்
காட்சி நடக்கும் அந்த மஹாலுக்குள் ஜன நடமாட்டத்தைக் காண்பது, அத்தி பூத்தாற்போல அல்ல,
அத்தியே இல்லாத மரத்தில் பழம் காய்ப்பது போல அரிதாக இருந்தது.
பதிப்பகத்தார்கள்
தங்களுடைய கடைகளுக்கு முன்னால், வியாபாரம் இல்லாத விரக்தியில், ஈக்களைக் கூட விரட்டச்
சோம்பல்பட்டுக்கொண்டு டிஜிட்டல் இந்தியாவின் அடுத்தகட்டப் பரிணாமமாகச் செல்போன்களை
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
விகடபாரதி
ஒரு தீவிரமான ஆராய்ச்சியாளனைப் போல ஒவ்வொரு அரங்காக ஏறி இறங்கி, உலாவிக் கொண்டிருந்தான்.
அவனுக்குள் ஓர் ஆராய்ச்சி அரிப்பு எடுத்திருந்தது. தன் கையில் இருந்த குறிப்பேட்டில்,
மக்கள் அதிகம் விரும்பும் புத்தகம் என்று தமிழில் எழுதி, கீழே பிராக்கெட்டில் பீப்பிள்
மோஸ்ட் வான்டட் புக் என்று ஆங்கிலத்திலும் குறித்துக்கொண்டான். அந்த ஆங்கிலக்
குறிப்பு அவனுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்தது.
வார
நாட்களில் சீருடையில் அழைத்து வரப்பட்ட பள்ளிச் சிறுவர்கள், "டேய், அந்த காமிக்ஸ்
அட்டையைப் பாருடா!" என்று கத்த, அவர்களை அழைத்து வந்த ஆசிரியரோ, "புத்தகத்தைத்
தொட்டுப் பார்க்காதே, அழுக்காயிடும்" என்று மிரட்டி, தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பின்
முன்னுரையை வாசித்துக்கொண்டிருந்தார். சிறுவர்கள் ஏதோ ஒரு கடையில், முகப்பில் கிடந்த
பத்தே நாட்களில் ஆங்கிலம் பேசுவது எப்படி? புத்தகத்தை வாங்கி பையில் திணித்துக் கொண்டார்கள்.
பெரியவர்களும்
வந்திருந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வீட்டில் படிக்காமல் வைத்திருக்கும்
அதே பாரதியார் கவிதைகள் புத்தகத்தை, இப்போதும் அட்டைப் படம் மாறியிருக்கிறதா என்று
திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு, தமிழ் வாழ்க என்று மனதுக்குள் வாழ்த்திவிட்டுச்
சென்றார்கள்.
விகடபாரதி
தன் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்தினான்.
ஆங்கிலப்
புத்தகப் பிரிவில் கொஞ்சம் மனிதர்கள். அநேகமாக அவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்களாக
இருக்க வேண்டும். ஆங்கில எழுத்தாளர்கள் எப்படியோ புத்தகம் போட்டு விற்றுத் தள்ளி விடுகிறார்கள்.
தமிழ்ப் பக்கமோ பயங்கரமான அமைதி.
இருந்தாலும்
அதே பரமார்த்த குரு, அக்பர் பீர்பால், முல்லா, பஞ்ச தந்திரம் மற்றும் தெனாலிராமன்.
அதற்குப் பக்கத்தில் கல்கி, சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, சமையல் குறிப்புகள், ஜாதகம்
பார்ப்பது எப்படி? சில பதிப்பகத்தார்கள் திருக்குறள், ஆத்திசூடி மற்றும் பாரதியார்,
பாரதிதாசன் கவிதைகளையுத் ஆங்கில அகராதிகளையும் பளபள அட்டையில் போட்டு புது அலையை உருவாக்கி
விட்ட திருப்தியில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
விகடபாரதியின்
மண்டைக்குள் பளிச் என்று ஒரு ஞானோதயம் உதித்தது.
"ஏன்
இந்தப் புத்தகக் கண்காட்சியில் புதிய நூல்களுக்குப் பஞ்சம்?" என்று அவன் மனம்
கொந்தளித்தது.
வீடு
வந்தவன், சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களை எடுத்து ஆங்காங்கே படித்தான்.
"அடடே! இந்தப் புத்தகக் காட்சிக்குப் போன புத்தகக் காட்சி பரவாயில்லை. போனதற்கு
அதற்கும் போனது பரவாயில்லை." என்று பழைய நினைவுகளில் மூழ்கினான்.
மறுநாள்
காலை.
விகடபாரதி
ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பூர்வமான முடிவை எடுத்தான். "தமிழ் புத்தகங்களை நானே
மீட்டெடுக்கிறேன்!" என்று, தன் வங்கியிலிருந்த மிச்சமீதிப் பணத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு,
"இதுவரை வாங்காத புதிய தமிழ் புத்தகங்களை மட்டுமே வாங்குவேன்" என்ற புனித
லட்சியத்தோடு மீண்டும் அதே அரங்கிற்குள் காலடி எடுத்து வைத்தான்.
ஒவ்வொரு
கடையாக ஏறி இறங்கினான். "ஐயா, போன புத்தகக் காட்சியில் இல்லாத புதிய தமிழ்ப் புத்தகம்
ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டான்.
ஒரு
பதிப்பகத்தார் அவனை ஏற இறங்கப் பார்த்து, "தம்பி, இது தீவிர இலக்கியக் கடை. புது
புக்கையெல்லாம் நாங்க புத்தகம் போடுறதில்ல. வாழ்க்கையோட கோர முகத்தை, துயரத்தைப் பிரதிபலிக்குறதுதான்
இலக்கியம். வேணும்னா போன புத்தகக் காட்சியிலிருந்து இந்தப் புத்தக்காட்சி வரை விற்காத
இந்தச் சவப்பெட்டியின் அழுகை நாவலை வாங்குங்க," என்றார்.
ஐந்து
மணி நேரத் தீவிரமான, உயிரைக் கொடுக்கும் தேடலுக்குப் பிறகு, விகடபாரதி வாங்கிய மொத்தப்
புத்தகங்களின் எண்ணிக்கை, பூஜ்ஜியம்.
உடலும்
மனமும் சோர்ந்து, "தமிழ்நாட்டில் புதிய புத்தகங்களுக்கான தேவை செத்தே போய்விட்டது"
என்ற இரங்கல் செய்தியை மனதுக்குள் எழுதியபடி வெளியிலிருந்த சிற்றுண்டி கடை பக்கம் வந்தான்.
அங்கே பயங்கரக் கூட்டம். புத்தகத் திருவிழா சோடை போனாலும் சிற்றுண்டித் திருவிழா சோடை
போகவில்லை.
அங்கே,
ஒரு பிரபல பதிப்பகத்தின் உரிமையாளர். அவர் கடைசியாக வெளியிட்ட புத்தகம், துயரங்களின்
பள்ளத்தாக்கில் என் கண்ணீர். அவர் பெஞ்சில் உட்கார்ந்து, தன் தொப்பை குலுங்க, வாய்விட்டு,
கண்ணீரே வரும் அளவுக்குச் சிரித்துக் ஆனந்தித்துக் கொண்டிருந்தார்!
விகடபாரதி
திடுக்கிட்டான்.
ஓடிச்
சென்று அவர் பாதங்களுக்கு அருகில் நிற்பது போல நின்று, "ஐயா! இலக்கியப் பெருந்தகையே!
எந்தப் புதிய புத்தகத்தைப் படித்து இப்படி மெய்மறந்து ஆனந்திக்கிறீர்கள்? தயவுசெய்து
சொல்லுங்கள், என் தமிழ்ச் சமூகம் பிழைத்துப் போகட்டும்!" என்று உணர்ச்சிவசப்பட்டுக்
கேட்டான்.
அந்தப்
பதிப்பகத்தார் தன் செல்போன் திரையை விகடபாரதியின் முகத்திற்கு நேரே நீட்டினார்.
அதில்,
வடிவேலுவை வைத்துச் செய்யப்பட்ட அட்டகாச மீம் ஒன்று. அவர் ஆனந்தத்ததை அடக்க முடியாமல்
சொன்னார், "யோவ் தம்பி! யாருய்யா நீ? புத்தகக் கண்காட்சியில போய் யாராச்சும் புது
புத்தகத்தைத் தேடுவாங்களா? புதுசுங்கறது இப்போல்லாம் வாட்ஸ்அப் மீம்ஸ்லேயும், இன்ஸ்டாகிராம்
ரீல்ஸ்லயும் மட்டுமே இருக்க வேண்டிய விஷயம்! புத்தகத்துல பழசும் அரதப் பழசும் மட்டும்தான்
இருக்கணும். போய் வேலையைப் பாருய்யா!"
விகடபாரதி
கையில் வைத்திருந்த குறிப்பேட்டை மெல்லக் கீழே போட்டான்.
அரங்கின்
வாசலில் இருந்த, வாசிப்பு மனிதனை உன்னதப்படுத்துகிறது என்ற பேனர், காற்றில் படபடவென
அடித்துக்கொண்டு, அவனைச் செவுட்டு இழுப்பாக இழுப்பது போல இருந்தது!
*****