12 Jul 2026

இசை × 48,000 = ஜானகி எனும் மகா பாடகி!

இசை × 48,000 = ஜானகி எனும் மகா பாடகி!

மரணத்திற்கு இசை ரசனை கம்மி என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால், 20 மொழிகளில் 48,000 பாடல்களைப் பாடி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் செவிகளிலும் தேனைக் கொட்டிய ஒரு குரலை, இப்படி சட்டென்று மியூட் செய்ய அதற்கு எப்படி மனது வந்தது?

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனது 88 ஆவது வயதில் மைசூருவில் காலமானார். வயது முதிர்வு என்பது ஒரு காரணம் என்றாலும், கடந்த ஜனவரியில் அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா மறைந்த அதிர்ச்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை என்கிறார்கள். கணவர் ராம்பிரசாத் 1997 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். தனிமை, துயரம், முதுமை என எல்லாம் சேர்ந்து ஒரு மகா குரலை அணைத்துவிட்டது என்றுதான சொல்ல வேண்டும்.

பத்து வயதில் நாகஸ்வர வித்வான் பைடி சுவாமியிடம் ஆரம்பப் பாடம் படிக்கப் போனபோது, மாஸ்டர் இவரை சும்மா உட்காரச் சொல்லிவிட்டு, மற்ற மாணவர்களிடம் “இவரைப் பார்த்து சங்கதி கத்துக்கோங்கப்பா” என்று ஜானகியைக் காட்டியிருக்கிறார். பார்ன் ஜீனியஸ் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

ஜானகியின் வாழ்க்கை ஒரு விசித்திரமான இசைச் சுழல். 1938 இல் ஆந்திராவின் பல்லபட்டா கிராமத்தில் பிறந்து, 19 ஆவது வயதில் ஏவி.எம். ஸ்டுடியோவின் ஒப்பந்தப் பாடகியாக மெட்ராசுக்குள் நுழைந்தபோது, அவர் ஒரு சகாப்தத்தைத் தொடங்குகிறார் என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1957 இல் விதியின் விளையாட்டு என்ற படத்தின் மூலம் தொடங்கிய அந்தப் பயணம், அடுத்த 60 ஆண்டுகளுக்கு இந்தியத் திரையிசையை ஆட்டிப்படைத்தது.

ஆனால், அவரது சினிமா உலகப் பிரவேசம் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 1957 இல் ஏவிஎம் ஆடிஷனில் தேர்வாகி, விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடலைப் பாடினார். பாட்டு பிரமாதம். ஆனால், விதி நிஜமாகவே விளையாடியது. படம் ரிலீஸாகவே இல்லை!

முதல் பாட்டே பெட்டிக்குள் முடங்கிய சோகத்தை அவரே பகிர்ந்துள்ளார். அதற்குப் பிறகு மதகளநாட்டு மேரி என்ற படம்தான் அவரது அதிகாரப்பூர்வ முதல் தமிழ் பாடலானது.

1957 இல் தொடங்கிய அந்தப் பாட்டுப் பயணம், 2016 இல் 10 கல்பனகள் என்ற மலையாளப் படத்தோடு முற்றுப்பெற்றது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இசை அரசாங்கம் அது.

மரணம் ஜானகியை அழைத்துக்கொண்டு போய்விட்டது. ஆனால், போவதற்குள் அவர் அள்ளிக் குவித்த விருதுகளையும், நிகழ்த்திய வித்தைகளையும் பார்த்து எமதர்மனே சற்று மிரண்டுதான் போயிருப்பான்.

தேசிய விருதுகள் நான்கு வாங்கியது ஒருபுறமிருக்க, மாநில அரசுகள் இவருக்குப் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை வாரி வழங்கியிருக்கின்றன. மொத்தம் 33 மாநில விருதுகள்.

இதுதவிர, இந்தியில் சாஹேப் படத்திற்காக பிலிம்பேர் விருது, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவா விருது, மைசூரு பல்கலைக்கழகம் கொடுத்த கௌரவ டாக்டர் பட்டம் என அவரது அலமாரி விருதுகளால் நிரம்பி வழிந்தது.

ரசிகர்களோ அவரை தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றும், கான கோகிலா என்றும் செல்லமாக அழைத்துக் கொண்டாடினார்கள்.

இளையராஜா என்னும் இசையின் ஞானமும், எஸ்பிபி என்னும் காதலின் குரலும், ஜானகி என்னும் உணர்ச்சிகளின் பேரரசும் இணைந்த அந்த முக்கோணக் கூட்டணி தென்னிந்திய திரையிசையின் பொற்காலம்.

எஸ்பிபியோடு இணைந்து ஜானகி பாடிய டூயட்டுகள் அத்தனையும் காதலர்களின் தேசிய கீதங்கள். யேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன் என அத்தனை ஜாம்பவான்களுடனும் ஜோடி சேர்ந்து பாடியுள்ளார் ஜானகி.

ஜானகியின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், அவர் தன் வாழ்நாளில் அதிக பாடல்களைப் பாடியது கன்னட மொழியில்தான்! மொழி என்பது ஜானகிக்கு வெறும் உச்சரிப்பு மட்டுமே, அவரது உணர்வு எப்போதும் இசையாகவே இருந்தது.

ஜானகி ஒரு குரல் பிரம்மா. குரலை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார். ஐந்து வயதுக் குழந்தையின் மழலை வேண்டுமா? ஜானகி ரெடி. அறுபது வயதுப் பாட்டியின் தழுதழுப்பு வேண்டுமா? அதற்கும் ஜானகி ரெடி. காதலின் உச்சம், விரகத்தின் தவிப்பு, பக்தியின் உருக்கம் என மனித உணர்ச்சிகளின் அத்தனை அலைவரிசைகளையும் தன் தொண்டைக்குள் ஒளித்து வைத்திருந்தார்.

கே.வி.மகாதேவன் தொடங்கி, இளையராஜா வழியாக ஏ.ஆர்.ரஹ்மான் வரை அத்தனை இசையமைப்பாளர்களும் இவரை வைத்துத் தங்களின் இசைப் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள். மவுனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு அவரே இசையமைக்கவும் செய்தார். மவுனத்திற்கும் இசைக்கும் நடுவேயான தூரத்தை அவர் நன்கு அறிந்திருந்தார் போலும்.

மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் அவரது மூச்சு நின்றபோது, இந்தியத் திரையுலகின் ஒரு பெரும் பகுதி நிசப்தத்தில் மூழ்கியது.

மரணம் ஜானகியின் உடலை எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் பாடிவிட்டுப் போன 48,000 பாடல்களையும் என்ன செய்யும்? ஏதாவது ஒரு நள்ளிரவில், எவரோ ஒருவரின் ஏகாந்தத்தின் உச்சத்தில் செந்தூரப் பூவே ஒலிக்கும்போது ஜானகி மீண்டும் உயிர்பெற்றுக்கொண்டுதான் இருப்பார். மரணமே, நீ தோற்றுவிட்டாய்!

*****

மயானத்துச் சாம்பலும் வன்முறைக் காவியமும்

சீரழித்த சினிமா – 38

பிதாமகன்

மயானத்துச் சாம்பலும் வன்முறைக் காவியமும்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் அக்டோபர் திங்களில், தீபாவளித் திருநாளின் நல்வாழ்த்துகளோடு, தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நாகரிக ஒழுக்கத்திற்கும், மனிதநேய விழுமியங்களுக்கும் திரையரங்கு வாசலிலேயே பாதாளப் படுகுழிகள் தோண்டப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "நாயகன் என்பவன் பாசக் காரனாக இருப்பான், சமூகத்தோடு இணைந்து வாழ்வான்" என்ற ஆகச்சிறந்த சினிமாட்டிக் விதிகளுக்கு ஆதி முதல் அந்தம் வரை ரிவீட் அடித்து, "மயானத்தில் பிறந்து, பிணங்களின் சாம்பலை உடம்பில் பூசி, பேசத் தெரியாமல் மனிதர்களைக் கடித்துக் குதறும் ஒரு காட்டுமிராண்டிக்கு, ஒரு லோக்கல் 420 திருடன் பழக்கமானால் போதும்; அவன் செய்யும் அத்தனை அராஜகங்களும், மனித உடல்களைத் துண்டு துண்டாக்கும் வன்முறைகளும் உன்னதமான நட்பு என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, பிதாமகன் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் மிருகத்தனமாக உறுமும் போலிப் பாய்ச்சல் பிம்பமும், லோக்கல் பித்தலாட்ட ஜோல்னா திருடனின் ஓயாத வாய் மாலமும், இயக்குனரின் வழக்கமான இருண்ட, பிணவாடை வீசும் உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மயான பூமி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த வாழ்வியல் நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு சமூகத்தில் வாழ விரும்பினால், உங்களுக்குப் படிப்போ அல்லது சட்ட ஒழுங்கோ முக்கியமல்ல. கஞ்சா வியாபாரம் செய்யும் ஒருவனுக்கு நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்; பிறகு ஒரு 420 உங்களுக்கு விசுவாசமானால், அவனைக் கொல்பவனின் தொண்டையைக் கடித்துக் குதறும் அசாத்திய மிருகத்தனம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற குடிமைச் சமூக அமைப்புகள் எல்லாம் இப்படத்தின் பெரிய இடத்து நிலப்பிரபுக்களுக்கும், இந்த மயானத்து மிருகத்திற்கும் பொருந்தாது.

ஊரின் பெரும்புள்ளி கஞ்சாத் தோட்டம் நடத்தி, தன் ஆட்களை வைத்து உங்களை மிரட்டினால், போலீஸைக் கூப்பிடக் கூடாது; தானே ஒரு பிதாமகனாக மாறி, ஒரு நரமாமிசம் தின்னும் மிருகமாக விஸ்வரூபம் எடுத்துச் சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். அதுதான் ஒரு சமூகப் பிரஜையின் ஆகச்சிறந்த அடையாளம் என்று இத்திரைப்படத் தாக்கத்தால் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் ஒழுங்காக வாழாமல், "நாங்கெல்லாம் நட்புக்காக உசுரையே கொடுப்போம்டா, இறங்குனா சித்தன் மாதிரி கடித்துக் குதறிடுவோம்" என்று தேவையில்லாமல் முறுக்கிக் கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

மனிதனை மனிதன் கடித்துக் குதறும் உறைபனியூட்டும் வக்கிரத்தையும் கொடூரத்தையும், உணர்ச்சிமயமான, ஆன்மீகத் தகிப்பு நிறைந்த பின்னணி இசையாலும், பளபளக்கும் தேனி மாவட்டக் கிராமத்து லொகேஷன்களாலும் மூடி மறைத்து, மிருகத்தனத்தைக் கலை வடிவம் என்று பார்ப்பவனைக் கமர்ஷியலாக ஏமாற்றினார் இப்பட இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு காட்டுமிராண்டி தன் கைகளால் பழிவாங்கினால் மட்டும்தான் இறுதி நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் விசித்திரமானது. ஒரு பெண் எந்நேரமும் கஞ்சா கடத்துவதும், ஒரு மயானத்துக் காட்டுமிராண்டியிடம் அனுதாபம் கொண்டு அவனை நேசிப்பதை காதல் என்றும், இன்னொரு பெண், ஒருவன் லோக்கல் 420 எனத் தெரிந்தும் அவனிடம் வம்படியாகக் காதல் வளர்ப்பதும், அவனது பிராடுத்தனங்களை முதலில் வெறுத்து, பின்பு கியூட் என்று ரசிப்பதுமாக ஒரு போலித் துறுதுறுப்புக் கொண்ட பாத்திரமாக காட்டப்பட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறை நகைச்சுவையாக்கப்பட்டது இத்திரைப்படத்தின் மூலம் நேர்ந்த அவலம். பெண்களின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களின் முதிர்ச்சியற்ற சேட்டைகளையும், வறுமையையும் ரொம்பக் கமர்ஷியலாகக் காட்டி ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

பிதாமகன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகரனுக்கு தேசிய விருதையும் ஆக்சன் ஹீரோ நாற்காலியையும் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

மனிதன் மிருக நிலையிலிருந்து சிந்திக்கும் நிலைக்கு உயர்ந்ததே மொழி கண்டுபிடித்த பிறகுதான் என்று மானுடவியல் சொல்கிறது. ஆனால் இப்படத்தன் இயக்குனரோ, நாயகனுக்கு மொழி தேவையில்லை, அவன் கத்தினால் போதும்; கடித்தால் போதும்; கஞ்சா விற்றால் போதும்; அவனுக்குள் ஓர் உன்னதமான ஆன்மா இருக்கும் என்று நம்ப வைத்தார்.

படத்தல் நாயகன் பேச மாட்டார். சீறுவார். கடிப்பார். இதைப் பார்த்துவிட்டு, வீடுகளில் தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தெரியாத கணவன்மார்களும், பிள்ளைகளும், "நான் பிதாமகன் மாதிரி கசப்பானவன், ஆனா பாசக்காரன்" என்று தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு வகை உளவியல் நோய் பரவ, பேச மறுப்பது ஒரு மாபெரும் ஆன்மீகத் தகுதி எனச் சமூகம் தப்பாகப் புரிந்துகொண்டது.

மனிதன் என்பவன் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து செதுக்கி வைத்த ஒரு சமூகப் பிராணி. அவனுக்கு நாகரிகம், உடை, மொழி, கலாச்சாரம், பண்பாடு எனச் சொல்லித் தந்த பிறகு, இப்படத்தின் இயக்குநர் அவை எல்லாவற்றையும் அதை ஒரே அடியில் அடித்து சுக்கு நூறாக உடைத்தார். சுடுகாட்டில் பிணங்களோடு பிணமாய் வளரும் ஒரு ஜீவனுக்குள் எந்த சமூகக் கட்டுப்பாடும் கிடையாது என்றும், அவன் பேசும் மொழி அமானுஷ்யமானது என்றும் நம்ப வைத்து, அந்த அசுர சக்தியின் கோரத்தனத்தைக் காட்டித் தியேட்டரில் இருந்த ரசிகர்களின் அடிமனதில் தூங்கிக் கொண்டிருந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கிளறிவிடக் காரணமானது இத்திரைப்படம்.

இத்படத்தின் இறுதிக்காட்சியில் காட்டப்படும் கொடூரமான வன்முறையும், பழிவாங்கலும் பலவீனமான மனநிலை கொண்ட பார்வையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலையும், அதிர்ச்சியையும் தந்ததை மறுக்க முடியாது. மக்களுக்கு எப்போதும் வன்முறை மேல் ஒரு ரகசியக் கவர்ச்சி உண்டு. பிதாமகன் செய்த பெரிய தவறு, வன்முறையை நியாயப்படுத்தியது அல்ல, அதை அழகுபடுத்தியது. படத்தின் நாயகன் சித்தன் அடிக்கும்போது தியேட்டரில் விசில் பறந்தது.

நியாயப்படி, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மிருகத்தனமாகக் கடிப்பதையும் அடிப்பதையும் பார்த்துப் பயந்திருக்க வேண்டும். ஆனால், சமூகம் அதை ஹீரோயிசம் என்று கொண்டாடியது. எம்பதி எனும் பிறர் வலியை உணர்தல் என்ற உணர்வை விட, அக்ரஷன்தான் பவர்புல் என்ற தவறான உளவியல் பதிவை இத்திரைப்படம் இளைஞர்கள் மனதில் விதைத்தது.

பிதாமகனில் வன்முறை என்பது கதையின் போக்கிற்குத் தேவையான ஒரு புள்ளியில் வந்து போவதில்லை. அதுவே கதையாக, அதுவே காட்சியாக, அதுவே மொத்தப் பிரதியின் ஆன்மாவாகப் பிரதிபலித்தது. மரணமும், சித்திரவதையும், ரத்த சகதியும் மிகக் குதூகலத்தோடு காட்சிப்படுத்தப்பட்டது. விளிம்பு நிலை மனிதர்கள் என்றாலே வன்முறையாளர்களாகவும், போதைப்பொருள் கடத்துபவர்களாகவும் மட்டும்தான் இருப்பார்கள் என்ற ஒரு தவறான பிம்பத்தைப் பொதுப்புத்தியில் விதைக்கவும் இத்திரைப்படம் வழிவகுத்தது.

தமிழனுக்கு இயல்பாகவே சோகப் படங்களின் மீது ஓர் அலாதிப் பிரியம் உண்டு. அதிலும் பிதாமகன், உலகத்தில் நல்லவர்களுக்கு இடமே இல்லை, நீ நல்லவனாக இருந்தால் சுடுகாட்டில் இரு, அல்லது சுடுகாட்டுக்கு போ என்ற அவநம்பிக்கை வாதத்தை விதைத்தது. படத்தின் திரைக்கதையாக்கம் ஏற்படுத்திய தாக்கம், தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் பலரது அன்றாடச் சந்தோஷங்களைக் காவு வாங்கியது. வாழ்க்கையின் மீதான ஒருவித ஒவ்வாமையையும், பிணங்களின் மீதான ஒரு விசித்திரக் கவர்ச்சியையும் அது பார்வையாளன் ஆழ்மனதில் பதுக்கி வைத்தது.

மனிதர்களுக்கிடையேயான உறவுகளில் உள்ள மென்மையும், தியாகமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக மலிவானதாக, அல்லது முட்டாள்தனமாகப் பிதாமகன் திரைப்படத்தில் நையாண்டி செய்யப்பட்டன. சமூகத்தின் மீது, சக மனிதனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைத் தர வேண்டிய ஒரு படைப்பு, எல்லாவற்றின் மீதும் ஒரு தீராத அவநம்பிக்கையையும் கசப்பையும் மட்டுமே இத்திரைப்படம் மூலமாகப் பார்வையாளனின் மனதில் மிச்சம் வைத்துச் சென்றது.

பிதாமகன் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்த மிக மோசமான பாடம் என்னவென்றால், நீங்கள் நாகரிகமாக உடை உடுத்தி, நியாயமாக வாழ்ந்தால், வில்லனால் கொல்லப்படுவீர்கள். நீங்கள் அழுக்காக இருந்து, கஞ்சா விற்று, பேசாமல் இருந்தால், உங்களைக் கொண்டாட ஒரு தேசிய விருது குழுவோடு காத்துக் கொண்டிருக்கும் என்பதுதான். இப்படி ஒரு பொதுபுத்தியோடு சமூகம் உருப்படாமல் போனதில் இப்பட இயக்குநரின் பங்கு அளப்பரியது!

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை தேனி, மதுரை மாவட்டங்கள் ஆன்மீகத்திற்கும், விவசாயத்திற்கும், விருந்தோம்பலுக்கும் புகழ்பெற்ற அமைதியான ஊர்கள். ஆனால், அதற்குப் பிறகுதான், அங்கெல்லாம் மனிதர்களை வெட்டிப் புதைப்பதும், கஞ்சா வளர்ப்பதும்தான் முதன்மைத் தொழில் என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

பிதாமகன் தமிழ் இளைஞர்களைத் தங்களின் நிஜமான சராசரி நாகரிக வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு இளைஞனும் தனக்குள்ளே ஒரு காட்டுமிராண்டியை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியே ஒரு சாதுவான மனிதன் போல வாழ்ந்து மடிய வேண்டிய சினிமாட்டிக் சாபத்தைத் தந்துவிட்டுச் சென்றது!

படத்தின் இறுதியில் சித்தன் எடுக்கும் வன்முறைத் தேர்வான வில்லனை வேட்டையாடுவது என்பது அவனது முழுமையான இருத்தலியல் கோபத்தின் வெளிப்பாடு. ஆனால், அந்த வன்முறை அவனுக்கு விடுதலையைத் தரவில்லை; மாறாக, மீண்டும் அவனை எவராலும் புரிந்துகொள்ள முடியாத ஓர் இருண்ட தனிமைக்கே கொண்டு சேர்த்தது.

வாழ்க்கையே ஏற்கனவே கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கிறது. அதில் சினிமாவும் இன்னும் கொஞ்சம் கரியைப் பூச வேண்டுமா என்ற கேள்விக்கு இத்திரைப்பட இயக்குநர்தான் பதில் சொல்ல வேண்டும்.

மயானத்தில் வாழ்வதுதான் ஆகச்சிறந்த தத்துவம் என்றும், இளம் காத்து வீசுது என்ற மெல்லிசைப் பாட்டைக் கேட்டால் அத்தனை கொடூரக் கொலைகளையும் ரசிக்கலாம் என்றும், பிணவாடையும் வன்முறையும் கலந்ததுதான் உன்னதமான தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சண்டைக்காரச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

11 Jul 2026

காற்றின் விலையும் கலோரியின் எடையும்

காற்றின் விலையும் கலோரியின் எடையும்

பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த ஏமாற்று வித்தை எது தெரியுமா?

எதுவுமே இல்லாத ஒன்றை, எல்லாமே இருப்பது போல் காட்டுவது.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், கடைகளில் தொங்கும் லேஸ் பாக்கெட்டுகள்.

நீங்கள் ஐந்து ரூபாயையோ, இருபது ரூபாயையோ கொடுத்து வாங்குவது உருளைக்கிழங்கு சிப்ஸை அல்ல, பிரத்யேகமாக ஆலைகளில் அடைக்கப்பட்ட நைட்ரஜன் காற்றை!

பாக்கெட்டைப் பார்த்தால் ஒரு தலையணை அளவுக்கு உப்பிக் கொண்டு கம்பீரமாக இருக்கும். ஆனால், அதன் எடையோ பூவின் இதழை விட லேசாக இருக்கும்.

சரி, எடையும் லேசாக இருக்கிறது, நாமும் லேசாக ஆகிவிடலாம், என்ற உன்னத தத்துவ நோக்கில் மனிதன் அதை வாங்குகிறான்.

ஆனால், அங்கேதான் பிரபஞ்சம் தன் இருள் நகைச்சுவையை ஒளித்து வைத்திருக்கிறது.

பாக்கெட்டின் எடை மிக லேஸ்தான். ஆனால், அதைத் தின்று முடித்த பிறகு உங்கள் தொப்பையில் ஏறும் கொழுப்பின் எடை இருக்கிறதே. அது ஹெவி!

பாக்கெட்டைப் பிரித்ததும் புஸ் என்று காற்று வெளியேறும். உள்ளே குனிந்து பார்த்தால், ஏதோ ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல, அடியாளத்தில் நான்கு அல்லது ஐந்து சிப்ஸ் துண்டுகள் சோகமாகக் காட்சியளிக்கும்.

இவ்வளவுதானா? என்று நம் மூளை கேட்கும்போதே, கைகள் அந்தச் சிப்ஸை வாய்க்குள் தள்ளியிருக்கும். அந்த நொடியில் நாக்கில் கரையும் உப்பு, காரம், மற்றும் கொழுப்பு ஆகியவை மனிதனை ஒரு தற்காலிக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

சாப்பிட்டு முடித்ததும் பாக்கெட் காலி. கையில் எடையும் இல்லை, பையிலும் எடையில்லை. ஆனால், அந்த ஐந்து சிப்ஸ் துண்டுகளுக்குள் ஒளிந்திருந்த கலோரிகள் உடனே தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். அவை நேராகச் சென்று உங்கள் இடுப்பிலும், தொப்பையிலும் தஞ்சம் புகுந்து கொள்ளும்.

அதாகப்பட்டது, பாக்கெட்டின் எடை 30 கிராம் அல்லது ஏறத்தாழ பூஜ்ஜியம்.

அதன் தத்துவார்த்த விளைவு, உங்கள் எடையில் கூடுதலாக 2 கிலோ!

என்னவொரு அற்புதமான அறிவியல் முரண்? லேசான பொருளைத் தின்னத் தின்ன மனிதன் கனமாகிக் கொண்டே போகிறான்.

உலகில் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் டயட் இருக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தோற்பது எங்கே தெரியுமா? இந்த லேசான பாக்கெட்டுகளின் முன்னால்தான்.

சாத்தான் எப்போதுமே கனமான இரும்புக் குண்டுகளோடு வருவதில்லை. அவன் சில சமயம் காற்றில் மிதக்கும் மஞ்சள் நிற லேஸ் பாக்கெட்டுகளின் வடிவிலும் வருவான். எதை நாம் வெயிட் இல்லாதது என்று அலட்சியமாக நினைக்கிறோமோ, அதுதான் ஒருநாள் நம்மை வெயிட் மெஷின் மீது ஏறவிடாமல் பயமுறுத்தும் வல்லமை கொண்டது.

எனவே மக்களே, காசு கொடுத்து காற்றை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் அந்த இரண்டு உருளைக்கிழங்குத் துண்டுகளையும் தின்றால், அப்புறம் நீங்கள் லேசாக நடப்பதற்குக் கூட ஒரு ஆள் தேவைப்படும்!

*****

மகாபாரத மறுவாசிப்பும் மாபியா வழிபாடும்

சீரழித்த சினிமா – 37

தளபதி

மகாபாரத மறுவாசிப்பும் மாபியா வழிபாடும்

தமிழ் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது ஒரு கூட்டு நனவிலித் தற்கொலைக்கான ஊடகம். அதிலும்  ஒரு ஸ்டார் நாயகனை, நாயகன் பாணியின் தொடர்ச்சியாக, கார்ப்பரேட்டுகளின் காட்சிப் பித்தலாட்டக்கார இயக்குநர் ஒருவர், மகாபாரதத்தின் கர்ணனைத் தூக்கிச் சென்னைத் தாதாத் தெருக்களில் எறிந்தபோது, இங்கே ஒரு மாபெரும் சமூக உளவியல் பேரழிவு அரங்கேறியது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "நண்பனுக்காக எதையும் செய்யலாம், ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்ற சமூக விதிகளைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, "தாய் கைவிட்ட ஓர் அனாதைச் சிறுவன், சேரியில் வளர்ந்து பெரிய ரௌடியாக மாறி, அந்த ஊரின் ஆகச்சிறந்த மாபியா தாதாவுக்குத் தளபதியாக முடிசூடினால் போதும்; அவன் செய்யும் அத்தனை கொலைகளும், அராஜகங்களும், நடுத்தெருப் பஞ்சாயத்துகளும் 'உன்னதமான நட்பு' மற்றும் 'மகாபாரதக் கர்ணனின் தியாகம்' என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, தளபதி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் சட்டையைக் கழற்றத் தயாராக இருக்கும் முரட்டுப் பாய்ச்சல் பிம்பமும், இயக்குனரின் வழக்கமான நிழலும் ஒளியும் கலந்த இருண்ட உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கொலைக்கள நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சமூக நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஓர் ஏழை எளிய மக்களின் காவலனாக மாற விரும்பினால், உங்களுக்கு நீதிமன்றங்களோ அல்லது காவல் துறையோ முக்கியமல்ல. ஊரின் பெரிய தாதாவுக்கு நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்; அவனது எதிரிகளை நடுத்தெருவில் வைத்து எப்படித் துவம்சம் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற சிவில் சமூக அமைப்புகள் எல்லாம் பெரிய இடத்துத் தாதாக்களுக்குப் பொருந்தாது. ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியரோ, காவல் துறையோ வந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றால், போலீஸைக் கூப்பிடக் கூடாது; தானே ஒரு மாபியா வீரனாக விஸ்வரூபம் எடுத்துச் சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும் என்பதுதான் தளபதி போதித்த சமூகவியல் பாடம்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் உருப்படியாக வேலைக்குப் போகாமல், "நாங்கெல்லாம் நட்புக்காக உசுரையே கொடுப்போம்டா, எங்க அண்ணன் இறங்குனா கொத்துக்கறிதான்" என்று தேவையில்லாமல் முறுக்கிக் கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளியானது தளபதி திரைப்படம்.

தளபதி படத்தில், ஒரு ரௌடி கும்பல் நினைத்தால் ஒட்டுமொத்த மாவட்டத்தின் சட்டத்தையே தன் கையில் வைத்திருக்கலாம் என்ற அராஜகத்தை மரியாதை மற்றும் நட்பு என்ற கமர்ஷியல் லேபிளோடு விற்றார்கள். இந்த உறைபனியூட்டும் தனிநபர் வழிபாட்டு வக்கிரத்தை, மேஸ்ட்ரோவின் உணர்ச்சிமயமான, ஆன்மீகத் தகிப்பு நிறைந்த பின்னணி இசையாலும், பளபளக்கும் கேமரா கோணங்களாலும் மூடி மறைத்து, அவர் தப்பு செய்ய மாட்டார், தட்டிக் கேப்பார் என்று பார்ப்பவனை ஏமாற்றினார் இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு தாதா நினைத்துத் தன் கோட்டையில் பஞ்சாயத்து கூட்டினால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் விசித்திரமானது. நாயகனின் காதலி கதாபாத்திரம், ரௌடி என்று தெரிந்தே அவனைக் காதலிப்பதும், பின்னர் குடும்பத்தின் வற்புறுத்தலால் ஓர் அரசு அதிகாரியைக் கட்டிக்கொண்டு அழுவதுமாக ஒரு சுயமற்ற பிம்பமாகக் காட்டப்பட்டார். இன்னொரு பெண், கணவனைக் கொன்ற ரௌடியிடமே தஞ்சமடைந்து, அவனது வன்முறையைக் சகித்துக் கொள்வதாகக் காட்டப்பட்டார். பெண்களின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களின் துயரங்களையும், ஒரு ரௌடியின் பாசப் போராட்டத்தையும் ரொம்பக் கமர்ஷியலாகக் காட்டி ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த செல்லுலாய்டு தந்திரம்.

தளபதி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை ஒரு சூப்பர் ஸ்டார் நாற்காலியில் நிரந்தரமாக அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு மாஸ் இயக்குனர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை நட்பு என்பது அன்புக்கும், பரஸ்பர வளர்ச்சிக்குமான ஓர் உன்னத உறவு. ஆனால், அதற்குப் பிறகுதான், நண்பனுக்காகக் கொலை செய்வதும், சட்டம் ஒழுங்கை மீறுவதும்தான் உண்மையான நட்பு என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

தளபதிக்கு முன் வன்முறை என்பது சட்டவிரோதமாக இருந்தது. தளபதி அதை ஒரு அழகியல் நுகர்வுப் பொருளாக மாற்றியது. "அடிச்சான் பாரு ஒரு அடி" என்று சாமான்யன் பரவசமடைந்த கணத்தில், வன்முறைக்கு ஒரு தார்மீக நியாயம் கற்பிக்கப்பட்டது.

அத்துடன் நல்ல தாதா, கெட்ட தாதா என்னும் பகுப்பு உருவானது. சட்டத்தை மதிக்காத ஒருவன் மக்களின் காவலன் ஆக முடியும் என்ற மாயை, இளைஞர்களின் மூளையில் ஆழப் பதிக்கப்பட்டது. காவல் நிலையங்களை விட ஏரியா ரவுடிகளின் கட்டப்பஞ்சாயத்து அதிக நம்பகத்தன்மை பெற்றது.

மாபியாத்தனமான ரௌத்திரம் என்பது ஒரு புனிதப் பண்டமாகப் பரிமாறப்பட இத்திரைப்படம் ஒரு ராஜபாட்டையையே அமைத்துத் தந்தது.

"நட்புன்னா என்னன்னு தெரியுமா?" என்று இப்படத்தின் நாயகனும் நண்பனும் கட்டிப்பிடித்துக் கொண்டபோது, தமிழ்நாட்டின் தர்க்க அறிவு தற்கொலை செய்து கொண்டது. அநியாயக் கொலைகள் செய்யும் ஒருவனை, அவன் என் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக ஆதரிப்பதுதான் ஆகச்சிறந்த அறம் என்று போதிக்கப்பட்டது. இந்த லாஜிக் இல்லாத விசுவாசம், நிஜ வாழ்க்கையில் ரவுடிக் கும்பல்களுக்கும், சாதிய அமைப்புகளுக்கும், அரசியல் அடிவருடித்தனத்திற்கும் மிகச்சிறந்த எரிபொருளாக மாறியது. நண்பன் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கக் கூடாது, தாதாவுக்குக் குடை பிடிக்க வேண்டும் என்ற விசித்திர வியாதி பரவியது.

அநாதையாக வளரும் நாயகன், தன் தாயைத் தேடும் பரிதவிப்பும் சமூகத்தின் மீதும் கொள்ளும் ஆழமான வன்மமும், இங்கே ஒரு தலைமுறையின் விக்டிம் கார்டு மனநிலையைத் தூண்டிவிட்டது. "நான் அநாதை, அதனால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்ற உளவியல் தப்பித்தல், குற்ற உணர்ச்சியை முற்றிலுமாகத் துடைத்தெறிந்தது.

ரயிலில் தவறிய குழந்தை, ரயிலையே தடம் புரளச் செய்யும் தாதாவாக மாறுவதை சமூகம் அழுதுகொண்டே ரசித்தது ஒரு கூட்டு மனப்பிறழ்வு.

தளபதி திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், சட்டம், போலீஸ், நீதிமன்றம் என்பன எல்லாம் ஹேங் ஆன சிஸ்டம்ஸ் என்ற எண்ணம் வலுத்தது. "நமக்கு நாமே சட்டம்" என்ற 'தேவா – சூர்யா' மாடல், இளைஞர்களின் மனதில் ஒரு பேரலல் நீதிபரிபாலனத்தை நியாயப்படுத்தியது. மொத்தத்தில் வன்முறைக்கு ஒரு கிளாசிக் பெயிண்ட் அடிக்கப்பட்டது.

நாயகன் மற்றும் அவனது நண்பன் ஆகிய இருவரையும் "சூழலால் உருவாக்கப்பட்ட வன்முறையாளர்கள்" என்று படம் சித்தரித்து, "அடிபட்டவன் திருப்பி அடிப்பான்" என்ற ஒற்றை வரியைக் கொண்டு அவர்களின் வன்முறை, சட்டவிரோதச் செயல்கள் அனைத்திற்கும் நியாயம் கற்பித்தது தளபதி. சமூகம் இந்தத் தர்க்கத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டது. தங்களின் தனிப்பட்ட தோல்விகளுக்கும், சட்டமீறல்களுக்கும் "சமூகம் என்னை இப்படி மாற்றிவிட்டது" என்று தனிமனிதர்கள் தங்களின் சுய பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் ஓர் உளவியல் சீரழிவை இப்படம் மிக ஜரூராக நியாயப்படுத்தியது.

வன்முறையை அழகியல் ஆக்கினால், சமூகம் அதை ஒழுக்கமாக மாற்றிக்கொள்ளும். அதுதான் ஆபத்து. சூர்யாக்கள் நிஜ வாழ்க்கையில் கத்தியை எடுத்தால், க்ளைமாக்ஸில் அழுதுகொண்டிருக்க அம்மாக்கள் வரமாட்டார்கள். போலீஸ் வேன்தான் வரும் என்ற உண்மையை அவ்வளவு சீக்கிரமாக இப்படம் பார்த்த இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனதுதான் இத்திரைப்படம் உருவாக்கிய மாயாஜால ஜகஜ்ஜால பரிதாப பிரதாபம்.

இப்படத்தின் பின்னணி இசையும், நேர்த்தியான ஒளியமைப்பும் சேர்ந்து ஒரு கொடூரமான தாதாயிசத்தைக் கவித்துவமாக மாற்றின. மஞ்சள் வெயிலிலும், மழையிலும் ரத்தம் சிந்துவது ஏதோ ஒரு தெய்வீகக் காரியம் போன்ற சித்திரத்தை உருவாக்கின. மக்கள் கொலையைக் கண்டு அஞ்சவில்லை; மாறாக, அந்தக் கொலையின் ப்ரேமிங் அழகாக இருக்கிறதா என்று பார்க்கப் பழகினார்கள்.

தளபதி திரைப்படம், 'சமூக அங்கீகாரம்' மற்றும் 'நட்பு' என்ற பெயரில் ஒரு மாபியா குழுவிற்கான விசுவாசத்தைப் புனிதப்படுத்தப்படுத்தியது. மாபியா தலைவனின் பார்வைக்காகவும், அவனது அங்கீகாரத்திற்காகவும் நாயகன் எத்தகைய வன்முறையையும் செய்யத் துணிகிறான். இப்படித் தனிமனித அஸ்தித்துவம், ஒரு கூட்டுக் குற்றக் கும்பலின் நிழலில் அடகு வைக்கப்படும் தன்மையானது இளைஞர்களிடையே "ஒரு தலைவனுக்காகவோ அல்லது குழுவிற்காகவோ சட்டத்தைக் கையில் எடுப்பதே வீரம்" என்ற வன்முறை சார்ந்த அடிமைத்தன உளவியலை மிக ஆழமாகவே விதைத்தது.

தளபதி திரைப்படம் மகாபாரதத்தின் கர்ணனை அடிப்படையாகக் கொண்டது. இதில் நாயகனின் ஒட்டுமொத்த வாழ்வும், அவனது பிறப்பின் ரகசியத்தாலும், அனாதை என்ற முத்திரையாலும், கைவிடப்பட்ட கோபத்தாலுமே அதன் திரைக்கதை தீர்மானிக்கப்பட்டது. ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாக வாழ முயன்றாலும், அவனது பிறப்பின் சூழல் அவனை ஒரு வன்முறையாளனாகவே வைத்திருக்கிறது என்பதை நியாயப்படுத்தி, மனிதனின் சுதந்திரமான தேர்வைக் கொச்சைப்படுத்தியது இத்திரைப்படம்.

"ஒருவன் எங்கு, எப்படிப் பிறந்தான் என்பதே அவனது விதியைத் தீர்மானிக்கும்" என்ற பிற்போக்குத்தனமான, விதியியல் உளவியலைச் சமூகத்தை நோக்கி இப்படம் வீசியது. இது மனித ஆற்றலையும் சுதந்திரத்தையும் இழிவுபடுத்தும் செயலன்றி வேறில்லை.

ஜனநாயக அமைப்புகள், சட்ட ஒழுங்கு ஆகியவற்றின் மீது நம்பிக்கையற்ற, ஒருவித அராஜகவாத உளவியலை இது சமகால இளைஞர்களிடம் உருவாக்கியது. "சட்டப்படி தண்டிக்க முடியாதவனை, நாமே தண்டிப்பதில் தவறில்லை" என்ற ஆபத்தான சிந்தனை முறைக்கு இது அழகியல் முலாம் பூசியதை மறுக்க இயலாது.

"சூழ்நிலைகளின் பலியாடு" என்ற போலியான முகமூடியை அணிவித்து  வன்முறையையும், சட்டவிரோத விசுவாசத்தையும் 'இருத்தலியல் பெருமிதமாக'  மாற்றிக் காட்டியதன் மூலம், ஒரு தலைமுறையின் கூட்டு உளவியலை அது நன்னம்பிக்கையின்மை நோக்கித் தள்ளியது

சுருக்கமாகச் சொன்னால், தளபதி செய்தது ஓர் எளிய ரௌடியிஸ ரசவாத வித்தை. அது குற்றத்தை அறமாகவும், அராஜகத்தைக் கடமையாகவும், வன்முறையைக் காதலாகவும் மொழிபெயர்த்தது. அந்தப் படத்தின் பாதிப்பில் உருவான வாழ்க்கை முறை இன்னும் நம் தெருக்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது, கையில் கத்தியுடனும், நெஞ்சில் நட்புடனும்.

நட்பு என்ற பெயரில் லோக்கல் தாதாவோடு சேர்ந்து கொண்டு சண்டை போடுவதுதான் வீரம் என்றும், காட்டுக்குயிலு மனசுக்குள்ள. பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல என்று பாடினால் அத்தனை அராஜகங்களையும் ரசிக்கலாம் என்றும், தாதா கலாச்சாரமும் வன்முறையும் கலந்ததுதான் தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சண்டைக்காரச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

10 Jul 2026

இருட்டு – ஒரு தத்துவார்த்தத் தேடல்!

இருட்டு – ஒரு தத்துவார்த்தத் தேடல்!

வெப்பம் என்பது வெறும் தட்பவெப்ப நிலை அல்ல. அது ஒரு தண்டனை. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சூரியன் நேரடியாக நம் தலைக்கு மேல் அமர்ந்து கொண்டு, நீ செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய், என்று நம்மை வறுத்துக் கொண்டிருக்கிறது.

மின்சாரம் என்பது கடவுளைப் போன்றது. அது இருக்கும்போது யாரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது இல்லாதபோதுதான் எல்லோரும் அதைப் பற்றி அழுதுகொண்டு, மின்வாரியப் பொறியாளர்களைத் தேடுகிறார்கள்.

தமிழகம் தற்போது தென்னிந்தியாவிலேயே மின் தேவையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தச் சாதனையை நாம் கொண்டாடுவதா அல்லது கரன்ட் இல்லாத இருட்டில் அமர்ந்து அழுவதா என்று தெரியவில்லை.

அனைவரும் ஒரே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டியை ஆன் செய்வது, ஒரு வழிப் பாதையில் ஒரே நேரத்தில் நூறு லாரிகள் நுழைய முயற்சிப்பதைப் போன்றது. உள்ளூர் மின்மாற்றிகள் அழுதபடி வெடிக்கின்றன.

பொறியாளர்களுக்கு உத்தரவு போகிறது, 30 நிமிடங்களில் சரி செய் என்று. இது ஒரு நல்ல ஜோக். 21,000 மெகாவாட் சுமையைச் சுமக்க முடியாமல் கதறும் ஒரு எந்திரத்திடம், சீக்கிரம் எழுந்து ஓடு, என்று சொல்வது ஒரு விதமான வர்க்கப் போராட்டம்.

வேறு வழியில்லை. சேமிப்பு என்பதைப் பற்றி நாம் பேசியாக வேண்டும். நாம் ஏன் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்?

சுற்றுச்சூழலைக் காக்கவா? இல்லை.

அரசுக்கு உதவவா? கண்டிப்பாக இல்லை.

உங்கள் பணப்பையில் ஓட்டை விழாமல் இருக்க!

மின்சாரத்தைச் சேமிப்பது என்பது உங்கள் பணத்தைச் சேமிப்பதுதான் என்பதை உணரும்போதுதான், தமிழனின் கைகள் சுவிட்சை நோக்கித் தானாக நீளும்.

குண்டு பல்புகளைத் தவிர்த்து எல்இடிக்கு மாறுங்கள், என்று அரசு சொல்கிறது. ஆனால், பல்பை மாற்றுவதை விட, இருட்டில் அமர்ந்து தியானம் செய்வது அதிக லாபகரமானது.

அத்துடன் ஜன்னல்களைத் திறங்கள். பகலில் ஜன்னலைத் திறந்தால் வெளிச்சம் வரும், கூடவே அக்கம் பக்கத்து வீட்டுச் சண்டைகளும் இலவசமாகத் தெரியும். ஒரு மின்விளக்கு ஒளிர்வதால் விரயமாகும் மின்சாரம் மிச்சமாகும்.

மின் விசிறிகளைச் சுத்தம் செய்யுங்கள். அந்த விசிறிகளின் இறக்கைகளில் இருக்கும் தூசிச் சேர்த்துச் சுழல்வது என்றால் டிரான்ஸ்பார்மரே வெடித்து விடும்.

பிரிட்ஜில் சூடான உணவை வைக்காதீர்கள். உணவைச் சூடாக இருக்கும்போதே சாப்பிட்டுவிட்டால், பிரிட்ஜுக்கும் வேலை இல்லை, உங்களுக்கும் ஆரோக்கியம்.

காற்றாலைகள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மின்சாரம் தயாரிக்கும். அதாவது, காற்று அடித்தால் நமக்கு மின்சாரம். காற்று அடிக்காவிட்டால் நாம் விசிறியை வைத்து நமக்கே காற்று அடித்துக் கொள்ள வேண்டும். இயற்கை எவ்வளவு அழகாக நம்மைச் சுழல வைக்கிறது!

இருட்டில் அமர்ந்திருப்பது ஒரு கலை. அப்போதுதான் உங்கள் செல்போனின் பேட்டரி எவ்வளவு முக்கியம் என்பது புரியும். மின்சாரம் என்பது ஒரு போதை. அது இல்லாதபோது ஏற்படும் உளவியல் அறிகுறிகள்தான் மின் வெட்டு.

மின்சாரத்தைச் சேமிப்போம்! இல்லையென்றால், எதிர்காலத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு, அந்தக் காலத்தில் ஏசி என்று ஒன்று இருந்ததே, ஞாபகம் இருக்கிறதா? என்று நம் பேரக்குழந்தைகளிடம் கதை சொல்வோம். அவை ஏன் இப்படி கதை விடுகிறீர்கள் என்று கலாய்க்கட்டும்.

மற்றபடி, மகிழ்ச்சியாக இருங்கள், மின்சாரம் இருக்கும் வரை!

*****

கடன் சுமை : மாயா பிரபஞ்சத்தின் நெகடிவ் எண்கள்

கடன் சுமை : மாயா பிரபஞ்சத்தின் நெகடிவ் எண்கள்

தமிழகத்தின் மொத்த கடன் சுமை 10.71 லட்சம் கோடி ரூபாய்.

தத்துவம் என்ன சொல்கிறது? 'எதுவுமே இல்லை' என்பதிலிருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது.

தமிழ்நாடு கஜானா வழங்கும் பிரசாதமும் அதுதான்.

இல்லாத பணத்தை வைத்துக்கொண்டு, இருக்கும் மக்களுக்கு எப்படி இலவசங்களை வழங்குவது? இது ஒரு ஜென் தத்துவம் போன்றது.

வட்டியும் அசலுமே 1.16 லட்சம் கோடி ரூபாயைத் தின்று ஜீரணிக்கிறது.

மூலதனச் செலவு என்பது இங்கே கானல் நீர்.

புதிய பள்ளிகளும், மருத்துவமனைகளும் வெறும் காகிதக் கனவுகள்.

கையில் காசே இல்லாதபோது, இலவச வாக்குறுதி அளிப்பது, அங்காடியில் விற்காத பொருளுக்கு பை ஒன் கெட் ஒன் ஆபர் போடுவதைப் போன்றது. கடன் என்பது ஒரு சுழல்; அதில் அடிக்கடி கஜானா சிக்கிக் கொள்கிறது.

அத்வைதம் சொல்வது போல், "எல்லாம் ஒன்று" என்று மக்கள் நினைத்தால் பிரச்சனை க்ளோஸ். ஆனால் "கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் வேண்டும்" என்று மக்கள் கேட்டால், அது பசித்த சிங்கங்களுக்கு இடையே ஒரு துண்டு ரொட்டியைப் பகிர்ந்து அளிப்பதைப் போன்ற சாகசம்.

தமிழ்நாட்டின் மற்ற துறைகளை விட்டு விடுவோம். விவசாயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பில் 13% விவசாயம். ஆனால், 93% பேர் குறு, சிறு விவசாயிகள்.

நிலத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது, ஆனால் விவசாயியின் மதிப்பு சுருங்கிக்கொண்டே போகிறது.

நிலத்தை விற்றால் லாபம், சாகுபடி செய்தால் நஷ்டம். இதைவிட ஒரு ஆகச்சிறந்த இருத்தலியல் துயரம் விவசாயிக்கு இருக்க முடியாது.

விசயம் என்னவென்றால், நிலம் துண்டாடப்படுவது போல, மக்களின் தேவைகளும், வாக்குறுதிகளும் துண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் கடன் சுமை ரோலர் கோஸ்டர் போல ஏறிக் கொண்டிருக்கிறது. இறைப்பதற்கு நீர் ஊற்று போலச் சுரப்பதற்கு தமிழகத்தின் உற்பத்திப் பெருக்கம் இல்லை என்பதே எதார்த்தம்.

மிகப்பெரிய கடனை வைத்துக் கொண்டு மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி நடப்பது என்பதுஅறுபது கிலோ மனிதன் நூற்று இருபது கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு சிகரத்தில் ஏறுவதைப் போலத்தான்.

எவ்வளவு எடையேறினாலும் சிகரத்தை நோக்கிய பயணத்தை நிறுத்த முடியாது. கால் ஒடிந்தாலும் ஒடிந்த காலைத் தூக்கிக் கொண்டு ஓடத்தான் வேண்டும்.

முடிவாக விசயம் இதுதான். வாக்குறுதிகள் என்பவை காற்றில் எழுதப்பட்டவை, எதார்த்தப் பொருளாதாரம் என்பது கல்லில் செதுக்கப்பட்டது.

அரசு அமைப்புகள் நிர்வாகச் சவால்களைத் தன் அர்ப்பணிப்பால் வென்றால் வரலாறு வாழ்த்தும்; இல்லையெனில், தமிழ்நாடு மீண்டும் ஒரு புதிய தேடலை நோக்கி நகரத் தொடங்கிவிடும் என்பதுதான் பிரபஞ்ச விதி.

*****

9 Jul 2026

ராகவனின் ரேடியோவும் கௌடபாதரின் வேதாந்தமும்!

ராகவனின் ரேடியோவும் கௌடபாதரின் வேதாந்தமும்!

வழக்கம் போல ஜெயமோகன் ஒரு மிடில் கிளாஸ் மிலிட்டரி ராகவனைப் பிடித்து, பர்மியக் காட்டுக்குள் கொண்டு போய், இருநூறு அடி பள்ளத்தில் தள்ளி, மண்டையோட்டை உடைத்து, கடைசியில் வழக்கம் போல வேதாந்தத்தை இழுத்து தங்கம்தான் ஆத்மா என்று முடித்திருக்கிறார்.

ஜெயமோகனின் கூற்றுப்படி, கேரளாவில் நூலகங்கள் அறிவு வளர்க்கப் பயன்படுகிறதோ இல்லையோ, குடிகாரர்கள் ஹேங்கோவர் தீர தங்கும் விடுதியாகப் பயன்படுகின்றன என்பது ஒரு புதிய சமூகவியல் கண்டுபிடிப்பு.

நண்பர் குடித்ததால் அவர் வீட்டிற்குப் போக விரும்பவில்லை என்கிறார் ஜெமோ, சரி. ஆனால் 70 வயது ராகவனுக்கு அதே நூலகத்தில் என்ன வேலை? அவரும் அதே வேலையைத்தானே செய்கிறார். அவர் அங்கே வாசிப்புப் பழக்கத்தை மதுவோடு கலக்க வந்திருக்கிறார் போலும். உலகப்போர் நினைவுகளை விட, அந்த நூலகத்தில் அன்று இரவு எத்தனை குவாட்டர்கள் காலி செய்யப்பட்டன என்ற கணக்குதான் எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிகிறது.

ராகவன் சொல்கிறார், "துப்பாக்கியெல்லாம் கொடுத்தார்கள். ஆனால் நான் ஒரு முறைகூடச் சுட்டதாக நினைவில்லை."

இரண்டாம் உலகப்போரில் பர்மா காட்டுக்குச் சென்று, துப்பாக்கியைத் தொடாமல், வெறும் மஞ்சள் கொடியை மூங்கிலில் கட்டி ஆட்டிக்கொண்டிருக்க இவருக்கு பிரிட்டிஷ் அரசு மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறது! பிரிட்டிஷ் காரர்களுக்கு எவ்வளவு பெருந்தன்மை! ஒருவேளை ராகவன் எதிரிகளைத் தன் தொப்பியைக் காட்டியே பயமுறுத்தியிருப்பாரோ என்னவோ.

இருநூறு அடி ஆழமுள்ள, விரல் நுழையுமளவுக்கு இடுங்கலான பாறை வெடிப்புக்குள் தலைகீழாகவோ நேராகவோ செருகிக் கிடக்கிறார் ராகவன். கை, கால் உடைந்திருக்கிறது. மரண அவதி. அந்த நிலையிலும் அவர் செய்த முதல் காரியம், இடுப்பிலிருந்த ரேடியோவை எடுத்து ஆன் செய்து பாட்டு கேட்டது அல்லது சத்தம் போட்டது.

பிரிட்டிஷ் ஆர்மி இவருக்குக் கொடுத்த ரேடியோ எவ்வளவு வாட்டர் புரூப், ஷாக் புரூப் என்று பாருங்கள்! 200 அடி பள்ளத்தில் விழுந்தும் அது ரீங்காரம் பாடி, இவரைக் காப்பாற்றியிருக்கிறது. சோனி நிறுவனத்தினர் இதைக் கேட்டால் இப்போதே ராகவனின் ஆன்மாவுக்கு ராயல்டி தருவார்கள்.

ராகவனின் கனவுகள் எல்லாம் அக்மார்க் 916 தங்கம்.

ஆற்றில் அள்ளிய தண்ணீர் தங்கம்.

மேலிருந்து விழுந்த முயல் தங்கம்.

கையில் எடுத்த துப்பாக்கி தங்கம்.

கடைசியில் சிவந்த பையிலிருந்து வெளிவந்த மான் குட்டி மோப்பம் பிடித்த கல்லும் தங்கம்!

இது திருஷ்ணையோ அல்லது ஆத்மாவின் இயல்போகிடையாது. தன் அக்காவுக்கு 50 ரூபாய்க் கடனில் நல்ல தங்கம் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு வந்த ஓர் ஏழை ராணுவ வீரனின் கில்ட் கான்சியஸ். மாத்ருபூமி பத்திரிகைக்காரர்கள் இந்தக் கதையை ஏன் பிரசுரிக்கவில்லை என்பது இப்போது புரிகிறது. அவர்களுக்கு வேதாந்தத்தை விட பவுன் விலை நிலவரம் முக்கியமாக இருந்திருக்கும்.

கடைசியில் இந்தக் கதையை அப்படியே கொண்டு போய் குரு நித்யாவின் மாணவர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் கொட்டுகிறார் ஜெமோ. அவரும் சளைக்காமல் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம் என்று ஆன்மிகச் சொற்களை அள்ளி வீசுகிறார்.

பிராய்டை இழுக்க வேண்டாம். இது மிக எளிய மனிதனின் ஸ்ட்ரெஸ் விளைவித்த சைக்கோ சோமாடிக் கனவுகள். நிறைவேறாத ஆசை, மரண பயத்தின் விளிம்பில் தங்கமாக உருமாறுகிறது. சிம்பிள்.

ஆனால், கதை அங்கே முடிந்திருந்தால் அது நல்லதொரு உலகப்போர் நாவலின் அத்தியாயம். ஆனால், ஜெமோ சும்மா இருக்க மாட்டாரே! பன்னிரண்டு வருடங்கள் கழித்து ஸ்ரீகிருஷ்ணாவிடம் போய் ஏன் தங்கம்? என்று கேட்கிறார்.

ஒருத்தன் மண்டையில கால் லிட்டர் தண்ணி நிக்கிற அளவுக்குப் பள்ளம் விழுந்து, ஐம்பது வருஷமாக தலைவலியால் அவதிப்படுகிறான் என்றால்,  அவனுக்கு முதலில் சைக்கியாட்ரிஸ்ட்டும், நியூரோ சர்ஜனும்தான் தேவை. அதை விட்டுட்டு, அவரோட மண்டை ஓட்டுப் பள்ளத்தை ஆத்மாவின் பொன்வரி என்று கவிதை பாடுவது என்ன நியாயம்?

அப்புறம், பயாலஜிக்கலாக இது சாத்தியமா மிஸ்டர் ஜெயமோகன்? மண்டை ஓடு இல்லாமல், மூளையை வெறும் தோல் மட்டும் பாதுகாத்துக் கொண்டு ஐம்பது வருடங்கள் தலைவலியோடு வாழ முடியுமா? மெடிக்கல் மிராக்கிள் என்றுதான் சொல்ல வேண்டும். அனிமேஷன் படங்களில் வருவது போன்ற ஒரு விசுவல்.

ராகவனின் மண்டையில் இருக்கும் அந்தப் பள்ளத்தில் வெயில் படக்கூடாது என்பதுதான் உண்மை. ஆனால் நம் வேதாந்திகளோ, அந்தப் பள்ளத்தில் வேதாந்த வெளிச்சத்தைப் பாய்ச்சி அதை ஒரு தத்துவக் கிணறாக மாற்றிவிடுகிறார்கள்.

ராகவன் ஒரு நல்ல மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவசியமே இல்லாமல் ஓர் ஏழை மனிதனின் வறுமையையும், போர்க்கால மன உளைச்சலையும் மாண்டூக்ய உபநிடதம் வரை கொண்டு சென்று பஞ்சதஸியோடு சுட்டிணைப்பதுதான் இந்த தமிழ் இலக்கியவாதிகளின் ஆகப் பெரிய விசித்திரம்.

சுருக்கமாகச் சொன்னால், ராகவன் கண்டது தங்கக் கனவு; எழுத்தாளர் நமக்குக் காட்டியதோ வேதாந்தப் பம்மாத்து!

*****