6 Feb 2026

விலை கொடுத்து வாங்கும் 20 ரூபாய் / 30 ரூபாய் டேஞ்சர்!

விலை கொடுத்து வாங்கும் 20 ரூபாய் / 30 ரூபாய் டேஞ்சர்!

வெயில் கொளுத்துகிறது. தாகம் தொண்டையை நனைக்கச் சொல்லி கெஞ்சுகிறது. பளபளக்கும் பிளாஸ்டிக் பாட்டில். உள்ளே பளிங்கு போல் தண்ணீர். வாங்கியதும் மூடியைத் திறக்கிறீர்கள். ஒரு க்ரக் சத்தம். அந்தச் சத்தம் நமக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. சீல் செய்யப்பட்ட சுத்தமான நீர். அப்படித்தான் நீங்கள், நான், எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று அதற்கு ஒரு பெரிய குட்டு வைத்திருக்கிறது. அந்தப் பாட்டிலில் எச்சரிக்கை வாசகம் எங்கே? என்பதுதான் அந்தக் குட்டு.

ஏனிந்த குட்டு? ஏன் அந்த எச்சரிக்கை வாசகம்?

உள்ளே இருப்பது என்ன? நாம் குடிக்கும் பாட்டில் தண்ணீரில் இருப்பது வெறும் H2O என்றா நினைக்கிறீர்கள்? அதையும் தாண்டி சில வஸ்தாத்துகள் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள்தான் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ். கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள்.

ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2.4 லட்சம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் சைரன் சங்கை ஊதுகின்றன.

இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் தாகத்திற்குத் தண்ணீர் குடிக்கவில்லை. ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலையையே உள்ளே அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால், சிகரெட் பாக்கெட்டில் புற்றுநோய் வரும் என்று போடுகிறார்களே, மது பாட்டில்களில் குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று போடுகிறார்களே, அது போல பாட்டில் தண்ணீரிலும் எச்சரிக்கை வாசகம் போடுங்கள் என்கிறது உயர்நீதிமன்றம்.

இப்போது புரிந்து விட்டதா விடயம்.

அவ்வளவு முக்கியமா அந்த ரெட் லைட் வாசகம் என்றால், நிச்சயமாக.

பிளாஸ்டிக் துகள்களால் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படலாம். தொடர்ந்து பிளாஸ்டிக் துகள்களோடு தண்ணீரை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தால் இளவயது மாரடைப்பு ஏற்படலாம். மலடாகிப் போய் வம்ச விருத்தி பூஜ்ஜியத்தில் போய் நிற்கலாம்.

ப்ளாஸ்டிக்கில் நீண்ட நாள் சேமித்து வைக்கப்படும் நீரில் பிளாஸ்டிக்கின் வேதிப்பொருள் கலக்க வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, அந்தப் ப்ளாஸ்டிக்குகளை வெயிலில் வைக்கும்போது ஆபத்து மல்டிபிளை ஆகிறது.

நம் நாட்டில் குழாய் தண்ணீரை நம்புவதை விட, காசு கொடுத்து வாங்கும் பிளாஸ்டிக் பாட்டிலை நம்புகிறோம். இது ஒரு விசித்திரமான சைக்காலஜிதான். அடுத்த முறை நீங்கள் ஒரு வாட்டர் பாட்டிலை வாங்கும்போது, அதன் லேபிளைப் பாருங்கள். அங்கே அதிக வெப்பத்தில் வைக்காதீர்கள் அல்லது மீண்டும் பயன்படுத்தாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் சின்ன எழுத்தில் இருக்கும். இனிமேல் அது பெரிய எழுத்தில் வரப்போகிறது.

தண்ணீர் என்பது உயிர். பிளாஸ்டிக் என்பது மெதுவான விஷம்.

நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அவர் காலத்தில் அந்த மாதிரியான பிரச்சனைகள் இல்லை. நம் காலத்தில் வந்து விட்டது. அதை நீதிமன்றமும் எச்சரித்துவிட்டது. நாம்தான் கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டும்.

முடிந்தால் ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டிலில் வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இந்தப் பூமிக்கும் நல்லது.

*****

டிப்ரஷன் – ஒரு டெக்னிக்கல் ரிப்போர்ட்!

டிப்ரஷன் – ஒரு டெக்னிக்கல் ரிப்போர்ட்!

திடீரென்று வரும். காரணம் இல்லாமல் கதவைத் தட்டும். அது மனச்சோர்வு என்று நமக்குப் புரியும் முன்னரே, கன்னாபின்னாவென்று சில முடிவுகளை எடுக்க வைக்கும். விளைவு? யாரிடமாவது காரசாரமாக எகிறிவிட்டு, அப்புறம் ஏன் இப்படிச் செய்தோம்? என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

இதை எதிர்கொள்ளும் விதமாகச் சமீபகாலமாக ஒரு டெக்னிக்கைக் கையாள்கிறேன். அது கவனித்தல். மனிதர்களைக் கவனிப்பது. வாயைத் திறந்து எதையும் கொட்டிவிடாமல், அப்படியே அவர்களை ஸ்கேன் செய்வது. நிதானம் உள்ளே மெல்லக் குடியேறுகிறது. சிக்கல்கள் குறைகின்றன.

அப்படிக் கவனித்ததில் அண்மையில் எதிர்கொண்ட ஒரு குணச்சித்திர கேரக்டர். அந்த அம்மாவுக்கு ஏகப்பட்ட ஆதங்கம். அப்போ அந்தப் பயலுவோகிட்ட என் பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சினேன். ஒரு பயலும் அப்போ கண்டுக்கல. இப்போ என் பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் முடிஞ்சு போயிட்டாங்க. நான் பேரன் பேத்திகளப் பார்த்துட்டேன். ஆனா அந்தப் பயலுங்க இன்னும் அரைக் கெழவனா ஆகிக்கிட்டு சுத்துறானுங்க என்றார் ஆவேசமாக.

நான் என்ன சொல்லப் போகிறேன் என்று என் முகத்தையே பார்த்தார். நான் சொன்னேன் வெயிலோட அருமை நிழல்ல தெரியும்மா. அந்த ஒரு வரி பஞ்ச் அவருக்குப் போதுமானதாக இருந்தது. முகத்தில் அத்தனை சந்தோஷம். தன் கரங்களை என் முகத்துக்கு அருகே கொண்டு வந்து அப்படியே நெட்டி முறித்தார். மனச்சோர்வு அப்படியே முறிந்தது போல இருந்தது.

இப்படியாக அந்தக் கதை முடிந்தது.

உடல் உழைப்பு என்பதும் மற்றபடி மனச் சோர்வுக்கு ஒரு நல்ல ஆன்டி பயாடிக். ஆனால், தோல்விகள் தொடரும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது.

தூக்கமில்லாத இரவுகள் ஒரு ரெட் சிக்னல். சில மருந்துகள் தற்காலிகமாக உதவினாலும், பிரச்சனை வேறு. செய்கிற காரியமெல்லாம் தப்போ என்கிற சந்தேகம். கூடவே ஒரு தாழ்வு மனப்பான்மை. ஒரு விதமான டிப்ரஷன் லூப்.

இதற்கு ஒரே வழி எதிர் வினையாற்றுவது மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் பக்கங்களைப் புரட்டுவதுதான் இப்போதைக்கு என் ரிலீஃப். அப்துற் றஹீமின் புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. ஒரே வாயில் சாரி, ஒரே மூச்சில் முடித்து விட்டேன். ரீ-சார்ஜ் ஆனது போல ஒரு உணர்வு. டெம்ப்ளேட்டான விசயங்கள்தான் என்றாலும், காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் இருக்க முடியுமா? இப்போது மனசு குளோசப் பேஸ்ட் போட்டு துலக்கியதைப் போல புத்துணர்ச்சியாக இருக்கிறது. வேண்டுமானால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

*****

5 Feb 2026

உலகைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்!

எப்ஸ்டீன் – ஒரு கணினி காலத்து லோலிதா

ஜெப்ரி எப்ஸ்டீன். பெயர் ஒரு மாதிரி ஜேம்ஸ் பாண்ட் வில்லன் போல இருக்கிறது இல்லையா? ஆள் நிஜமாகவே வில்லன்தான். ஒரு பில்லியன் டாலர் மூளை. அசாத்தியமான நெட்வொர்க்கிங். எலெக்ட்ரானிக் வேகம் கொண்ட வாழ்க்கை.

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆலோசகரான எப்ஸ்டீன் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கிய டச் அப்பில் டூ மச்சாக இருந்தவர்.

2000 ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில், சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அவர்களைக் கடத்திச் சென்று தனது சொந்தத் தீவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் இவர் மீது புகார்கள் எழுந்தன. 2019 இல் கைது செய்யப்பட்ட இவர், சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மனுஷன் செய்தது என்னவோ மகா தப்பு. ஒரு தீவையே விலைக்கு வாங்கி, அதில் சிறுமிகளை வைத்துக்கொண்டு தனி உலகம் நடத்தியிருக்கிறார். அந்த லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவில் நடந்தவை எல்லாம் அப்பட்டமான குரூரங்கள்.

அது குறித்து விசாரணை நடத்தி அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்டு வரும் இந்தக் கோப்புகளில் எப்ஸ்டீனுடன் பழகியவர்கள், அவரது தீவிற்குச் சென்றவர்கள் அல்லது அவரது லோலிதா எக்ஸ்பிரஸ் தனி விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர்கள் உள்ளன.

ஏன் இது உலகையே பூகம்பம் போல அதிர வைக்கிறது என்றால், இந்தக் கோப்புகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நபர்களின் பெயர்கள் 9.8 ரிக்டர் ஸ்கேலில் அடுத்தடுத்து அடிபடுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்:

இப்போது வெளியாகி இருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் என்பது ஒரு வகை பண்டோராவின் பெட்டி. திறந்தால் உள்ளிருந்து வண்டுகள் வெளியே வருகின்றன.

யார் யார் அந்த வண்டுகள்?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தொடங்கி இந்நாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட, பிரிட்டிஷ் இளவரசர் ஆன்ட்ரூ, மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யத்தின் பில்கேட்ஸ் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், பெயர் வந்தவர்கள் எல்லாம் இப்போது கோரஸாகப் பாடுவது ஒரே ஒரு பல்லவிதான் - அவரை எனக்குத் தெரியும். ஆனால், அவர் இப்படிப்பட்டவர் என்று தெரியாது. பில் கேட்ஸ் மட்டும் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டு விட்டார்.

ஆனால் அவர்கள் சொல்வது ரொம்ப சௌகரியமான தர்க்கம் இது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தக் கோப்புகளில் இந்தியாவின் நிலை?

இப்போதைக்கு இந்தியா தப்பித்திருக்கிறது. இங்கே கோப்புகள் என்பவை பெரும்பாலும் ரேஷன் கார்டாகவும், மின்சார பில்லாகவும்தான் இருக்கின்றன. எப்ஸ்டீன் கோப்புகளில் இந்தியத் தலைவர்களின் பெயர்கள் இருப்பதாக வரும் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை இப்போதைக்கு நம்ப வேண்டாம். அவை பெரும்பாலும் குரூப் 4 தேர்வுக்கான வதந்திகளை விட மோசமானவை.

அதே நேரத்தில் வருங்காலத்தில் இந்தியா தப்பிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொண்டார், அல்லது செய்யப்பட்டார் இல்லையா! அது இன்னொரு மர்ம நாவல். ஆனால் அவர் விட்டுச் சென்ற டிஜிட்டல் தடயங்கள், இப்போது பல விஐபிகளின் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் சாமானிய மனிதனுக்கு ஒரு சின்ன பயம் வரலாம். அதிகாரம், பணம், ரகசியம் – இந்த மூன்றும் சேர்ந்தால் மனிதன் மிருகமாக மாற எவ்வளவு நேரம் ஆகும்? அதற்கான பதில் ஒன்றும் கடினமானதல்ல, ஒரு நேனோ செகண்ட் போதும்.

கடைசியாக ஒரு கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய மர்மங்களைச் சுமந்து கொண்டு, எப்ஸ்டீன் மட்டும் எப்படி அத்தனை ஆண்டுகள் ஜாலியாகச் சுற்றித் திரிந்தார்?

தப்பு செய்பவர்களை விட, தப்பை வேடிக்கை பார்ப்பவர்களின் அதிகாரம் பெரியது. நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஆனால், உண்மை ஒரு நாள் வெளிவரும் போது வேடிக்கை பார்த்த அதிகார மையங்கள் அனைத்தும் ஆட்டம் காண்பதை அந்த ஆண்டவனே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

*****

மனதின் இரைச்சலுக்கு இலக்கிய தெரபி!

மனதின் இரைச்சலுக்கு இலக்கிய தெரபி!

இப்படி ஒரு மன உளைச்சல் இதற்கு முன் எப்போதும் வாய்த்ததில்லை. காரணம் சிம்பிள். வாசிப்பைக் கைவிட்டது. மனசு என்பது ஒரு லைப்ரரி மாதிரி. ஒழுங்காக அடுக்கி வைக்காத புத்தகங்களால் மூளை இப்போது குப்பையாகிக் கிடக்கிறது.

மீண்டும் ஒரு சீர்மையும் ஒழுங்கும் தேவைப்படுகிறது.

திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியம்... இவற்றைத் தேடித் தேடி படிக்க செய்ய வேண்டும். சூத்திரங்கள் மனதுக்குள் அமர்ந்தால், தர்க்கம் தானாகத் திரும்பும். சிதறிய எண்ணங்கள் வரிசைக்கு வரும்.

அப்புறம் அந்த அதீத உழைப்பு வியாதி.

இத்தனை நாள் யார் யாருக்காகவோ உழைத்தேன். அப்போது விதவிதமான எதிர்பார்ப்புகள் முளைத்திருக்கின்றன. என் உழைப்பை நான்கு பேர் பாராட்ட வேண்டும், அதில் கொஞ்சமேனும் சொற்ப வருமானம் வர வேண்டும் என்ற நப்பாசை.

உலகியல் தர்க்கப்படி பார்த்தால் பார்த்தால், இது ஒரு தேவையற்ற குப்பை வேதாந்தம். உண்பதற்கு, உடுப்பதற்கு, இருப்பதற்கு வருமானம் வருகிறதா? யாரையாவது சந்தித்தால் நான்கு பேருக்குத் தேநீர் வாங்கிக் கொடுக்க பையில் காசு இருக்கிறதா? அதுவே போதுமான சம்பாத்தியம். அதற்கு மேல் ஏன் அதீத எதிர்பார்ப்பு?

அதிர்ஷ்டம் இல்லாமல் ஏதோ கிடைப்பதுதான் எல்லாருக்கும் கொடுப்பினை. முட்டி மோதி யாரும் இதுவரை எதையும் சாதித்ததாகச் சரித்திரம் இல்லை, தலையை உடைத்துக் கொண்டு தக்காளி சட்டினியைப் பார்த்ததுதான் மிச்சம்.

இன்னொரு தவறு, வழக்கமாக எல்லாரும் செய்வது. எல்லாவற்றிலும் கை வைப்பது. மல்டி டாஸ்கிங் என்பது கேட்க நன்றாக இருக்கும். ஆனால், எல்லாத் துறைகளிலும் கால் வைத்தால் கவனம் காற்றில் பறந்துவிடும். அதுதான்  மனச்சோர்வாகத் திடீரென பூதம் போல எதிரில் வந்து நிற்கிறது.

ஆனால் ஒன்று... செயல்பட ஆரம்பித்தால் சோர்வு காணாமல் போய் விடும். ஐந்து நிமிடம் யோசிப்பதை விட, ஒரு நிமிடம் வேலை செய்வது மேல் என்கிற இன்ஜினியரிங் இத்தியாதிதான் இதற்குத் தீர்வு.

இவற்றையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது. வாசிக்க வாசிக்க ஏதோ கொஞ்சம் புரிகிறது. அனுபவப்பட செருப்படி சித்தாந்தங்கள் நிறையே கிடைக்கின்றன.

மற்றபடி நிற்காமல் வாசித்துக் கொண்டே, எதிர்கொள்ளும் அனுபவங்களைச் சுவாசித்துக் கொண்டே பயணித்துக் கொண்டே இருங்கள். இளைப்பாறுவதற்கான நிழல் தரும் கானகத்தைப் பயணமே காட்டிக் கொடுக்கும். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் இதையே நான் சொல்லிக் கொள்கிறேன்.

*****

4 Feb 2026

பணால் ஆன இரண்டு லட்சம் கோடி!

சிலிக்கான் சிப்சும் சிதறிய கனவுகளும்!

இன்று பிப்ரவரி 4 ஆம் நாள் இந்திய ஐடி நிறுவனப் பங்குகளுக்கு ஒரு கேடு காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஐடி நிறுவனப் பங்குகள் சீட்டுக்கட்டுகள் சரிவதைப் போலச் சரிந்து 8 சதவீதம் வரையிலான வீழ்ச்சியைச் சந்தித்து டைவ் அடித்துள்ளன. இது மார்ச் 2020க்குப் பிறகு ஐடி நிறுவனப் பங்குகள் சந்திக்கும் ஒரு மோசமான சரிவாகும்.

இது இயந்திரங்கள் செய்யக் கூடிய சதியா என்றால், இயந்திரங்கள் பண்ணப் போகும் வேலைகளைப் பார்த்து மனிதர்கள் ஐடி நிறுவனப் பங்குகளில் பறிக்கும் குழி. டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரிய ஐடி தலைகளே இன்றைய ஆடிக் காற்றில் அம்மியைப் போலப் பறக்க ஆரம்பித்து விட்டன.

ஏன் சரிந்தன ஐடி நிறுவனப் பங்குகள்?

காரணங்கள் இதோ,

அமெரிக்காவின் Anthropic நிறுவனம் தனது 'Claude' சாட்பாட்டில் புதிய வேலைவாய்ப்பு சார்ந்த தானியங்கி கருவிகளை (Workplace Automation tools) அறிமுகப்படுத்தியுள்ளது. இது சட்டம், விற்பனை மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை மனித உதவியின்றிச் செய்யக்கூடியது. இதனால், இந்திய ஐடி நிறுவனங்கள் செய்யும் பாரம்பரிய வேலைகளுக்கு (Outsourced services) எதிர்காலத்தில் மவுசு குறையுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. அச்சம் எழுந்தால் முதலீட்டாளர்கள் அன்ட்ராயர் கழண்டு விழுவது கூட தெரியாமல் ஓடுவார்கள் என்பதால், ஐடி நிறுவனப் பங்குகள் எல்லாம் பல்டி அடிக்க ஆரம்பித்து விட்டன.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கிலேயே ஐடி நிறுவனப் பங்குகள் தலைகுப்புற விழுந்து கடும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக Nvidia, Microsoft, Alphabet போன்ற நிறுவனங்களின் பங்குகளே டமால் டுமாலைச் சந்தித்தன.

சமீபத்திய இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக இன்று வலுவடைந்தது. ஐடி நிறுவனங்கள் தங்களது வருவாயை டாலரில் ஈட்டுவதால், ரூபாயின் மதிப்பு உயரும்போது அவற்றின் லாப வரம்பு திறந்து வைத்த கற்பூர டப்பாவைப் போலப் பாதிக்கப்படும். இதுவும் ஐடி நிறுவனப் பங்குகள் தலைகுப்புற படுத்துக் கொள்ள காரணமாகி விட்டது.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஐடி நிறுவனங்களின் "Billable Hours" (பணியாளர்களின் வேலை நேரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படும் கட்டணம்) கோடையில் அடிவாங்கும் மேட்டூர் அணையைப் போலக் குறையக்கூடும். இது ஐடி நிறுவனங்களின் எதிர்காலத்தைச் சூன்யமாக்கி விடும்.

இதனால் ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் ஐடி துறை முதலீட்டாளர்களுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவனப் பங்குகளில் ஆர்வமாக முதலீடு செய்தவர்கள் தெருக்கோடியில் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

பொதுவாகப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் விசித்திரமானவர்கள். பயம் வந்தால் விற்றுத் தள்ளுவார்கள். ஆசை வந்தால் வாங்கித் தள்ளுவார்கள். அதனால் இன்று வீழ்ந்த ஐடி நிறுவனப் பங்குகள் சில நாட்களில் ஏறவும் கூடும், ஒருவேளை ஏறாமல் போகவும் கூடும்.

பெரும்பாலும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நாளை என்ன நடக்கும் என்ற பயத்தில் இன்றைக்கே சூசைட் அட்டெம்ப்ட் பண்ணும் கேரக்டர்கள்.

இதன் விளைவு பங்குச் சந்தையில் மட்டுமில்லை, கல்யாணச் சந்தையிலும் இனி பிரதிபலிக்கும். இனி ஐடி மாப்பிள்ளை என்றாலோ, கோடிங் தெரிந்த ஜாம்பவான் என்றாலோ பெண் கொடுக்க கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார்கள். வியாபாரச் சந்தையிலும் இதன் பிரதிபலிப்பு இருக்கும். ஐடி நிறுவனங்களின் பக்கத்தில் இருக்கும் மால்களில், ஹோட்டல்களில் காற்றடிக்கவும் ஆரம்பித்து விடும். ரியல் எஸ்டேட்டை இனி இஷ்டப்படி ஏற்றுவதெல்லாம் வேளச்சேரியிலோ, சோழிங்கநல்லூரிலோ நடக்காது. கொஞ்ச நாள் அடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை.

*****

மனசு - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

மனசு - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

மனசு ஒரு குரங்கா என்றால், இல்லை, அதைவிட மோசம். ஒரு சேனலில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ரிமோட் இல்லாத டிவி போன்றது. கவனச் சிதறல் அதன் செல்லக் குழந்தை. ஒரு புள்ளியில் நிற்க மறுக்கும். ஆழி சூழ் உலகு மாதிரி இது ஒரு மாதிரி நிறைவின்மை சூழ் வாழ்க்கை. இது தன்னைத் தானே பிய்த்துப் போட்டுக் கொள்ளும் ஒரு சைக்காலஜிக்கல் அரக்கன். கடைசியில் ஐயோ, வலிக்கிறதே, ரத்தம் வருகிறதே என அழும். அதற்கு ஆபரேஷன் செய்தால் வலிக்குமா என்று நம்மையே கேட்கும்.

இதிலிருந்து தப்பிப்பதற்கான கொள்கை ரொம்ப எளிமையானது.  அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. பிறகு, சுவாசிப்பதற்கு நமக்கு மூக்கு இல்லாமல் போய் விடும். அது ஆபத்து மட்டுமல்ல, அநாகரிகம். மற்றவர் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது ஒரு தியேட்டர் அனுபவம் போல. அவர் நெருப்பில் குதிக்கும்போது, நாமும் கூடவே குதிப்பது முட்டாள்தனம். ஏற்கனவே வாழ்க்கை ஏகப்பட்ட பிரச்சனைகளை இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்போது, நாமாகப் போய் பெய்ட் சர்வீஸ் எடுத்துக் கொண்டு நாசமாகத் தேவையில்லை. வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்போதும் பை ஒன், கெட் டூ அல்லது பைன் ஒன் கெட் ஒன் ப்ரீ ஆபர்தான். அதனால் எச்சரிக்கை ரொம்பவே அவசியம்.

அடுத்தது, மகிழ்ச்சி. அது ஒரு தனிநபர் சொத்து. மற்றவர்களிடம் போய் பிச்சை கேட்பதில் அர்த்தமில்லை. ஏமாற்றம்தான் மிஞ்சும். சுய மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட. பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு அதுதான் ஒரு தற்காப்பு கலை. என் மகிழ்ச்சிக்கு நான் தான் ஸ்பான்சர். அது மற்றவன் தருவதை விடக் குறைவாக இருக்கலாம், ஆனால் அது சுத்தமானது. கலப்படமில்லாதது. எனது தேவை, எனது விருப்பம். இதில் மற்றவர்களின் தீர்ப்புகளுக்கு வேலையே இல்லை.

உழைப்பது பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே நேற்று கொஞ்சம் சொல்லி விட்டேன். இன்னும் கொஞ்சம் சொல்லவும் இடம் இருக்கிறது. மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்வது தவிர்க்க முடியாது. செருப்பு கொழுப்பதற்கா பிறந்திருக்கிறது, தேய்வதற்குத்தானே. அப்படித்தான். இப்படி படாத பாடு படுவதற்காக யாரும் வந்து பொன்னாடை போர்த்த போவதில்லை, கை தூக்கி விடவும் போவதில்லை. அவரவர் வீடு, அவரவர் பாடு. அதனால் யாருக்காகவும் எதையும் பாலிஷ் செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக உழைப்பது என்பது கமர்ஷியல் சினிமா போல. நமக்கு எதார்த்த சினிமாவே போதுமானது. பட்ஜெட்டும் கம்மி, சென்சார் பிரச்சனைகளும் இருக்காது. யாரோ ஒருத்தர் எப்போதாவது பார்த்து அடடா என்பார். அது போதும் நமக்கு.

சுருக்கமாகச் சொன்னால்… இதைச் சொல்ல ஒரு மாதிரியாகவும் இருக்கிறது, எல்லாரும் சொல்லி விட்டார்கள், இருந்தாலும் வேறு வழியில்லை,  எண்ணங்களை வேடிக்கை பாருங்கள். புரிந்துகொள்ள முயலுங்கள். மனநிறைவு என்பது வெளியே இல்லை, அது உங்களின் சொந்த ப்ரைவேட் ஏரியா. இது எங்க ஏரியா, உள்ளே வராதே என்பது இதற்கு மட்டும் நூறு சதவீதமென்ன, இருநூறு சதவீதம் கூட பொருந்தும். நீங்கள் உங்கள் மனதை ஸ்கேன் செய்யும் போது, வேறு எதாவது தோன்றினால், அதையும் சொல்லுங்கள். சேர்த்துக் கொள்வோம்.

*****

3 Feb 2026

சுயநலத்தின் ஜியோமெட்ரி!

சுயநலத்தின் ஜியோமெட்ரி!

உலகத்தில் உழைக்கிறவன் கதி அவ்வளவுதான். அவன் பிழைக்கத் தெரியாதவன், அப்படியே உழைத்துக் கொண்டே கிடக்கட்டும் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள். மனிதர்களின் சுயநலம் இருக்கிறதே, அது ஒரு தனி டிசைன்!

சரி, நாம் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? கூடாது. லாஜிக் பார்க்காமல், நியாய, தர்மங்கள் பார்க்காமல் அந்தந்த நிமிடம் மனதில் என்ன 'ரா-வாக' (Raw) தோன்றுகிறதோ, அப்படி வாழ வேண்டும். அவ்வப்போது மனதை 'ரீ-சார்ஜ்' செய்து கொள்ளாவிட்டால், மனப்புழுக்கம் ஏறிவிடும். அந்த இறுக்கம் இருக்கிறதே, அது ஒரு சைலண்ட் கில்லர். எப்பேர்ப்பட்ட மனுஷனையும் அப்படியே சாய்த்துவிடும்.

இந்த மனிதர்கள் படுத்தும் பாடுகளில் சில சமயம் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. மூளைக்குச் செல்லும் சிக்னல்கள் கட் ஆனது போல் ஒரு உணர்வு. யாரோ கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், யாரைக் கேட்டாலும் என் கைகளில் கயிறு இல்லையே என்பார்கள்.  சுற்றிலும் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாம் அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஆக்சன் செய்ய வேண்டும்.

ஆனால், ஒரு பயலாவது நாம் என்ன நினைக்கிறோம் என்று யோசிப்பதில்லை. சுயநலம்தான் இயல்பானது இல்லையா?

இவர்களிடம் போய் தர்மத்தைக் கேட்டால் அதற்கு ஒரு பில் போட்டு அதை கேட்டவர்களுக்கே பார்சல் பண்ணி வைப்பார்கள்.

இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால், அவர்களின் கையில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோலுக்கு ஆடும் ரோபோட்டாக நம்மை எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்குத் தேவையெல்லாம் இவர்களுக்குத் தகுந்தாற்போல நடிக்கும் நடிகர்கள்தான், நல்ல மனிதர்கள் இல்லை.

நம்மை வரைபடத்தில் அடைத்து விட்டு, நம் சிறகுகளின் நீளத்தை அளக்கப் பார்ப்பவர்கள் நம்மை மியூசியத்தில் அடைக்கப் பார்க்கிறார்கள். அங்கு நாம் பலராலும் பார்க்கப்படுவோம் என்பது உண்மைதான். நம்மால் வெளியுலகைப் பார்க்க முடியாது. யாரும் நம்மைக் காட்சிப்படுத்த வேண்டாம். அப்படி நம்மை காட்சிப்படுத்துகிறேன் என்பவர்களுக்காக உழைத்துக் கொட்டவும் வேண்டாம்.

அவ்வபோது இவர்களைக் கோபிக்கவும் தயங்கக் கூடாது. இவர்களை விட்டுப் போய் விடுவேன் என்று பாச்சா காட்டவும் தயங்கக் கூடாது. இவர்களை விட்டு விட்டு இவர்கள் கண்ணில் படாமல் சில நாட்கள் காணாமல் போவதும் தவறு கிடையாது.

இந்த மனிதர்கள் மத்தியில் இந்த மனம் என்பது ஒரு பிரஷர் குக்கர் போன்றது. அவ்வபோது சிறு சிறு சந்தோசங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் டமால் ஆகி விடும். அவ்வபோது இவர்களை நையாண்டி செய்ய யோசிக்காதீர்கள். அப்படிச் செய்யாவிட்டால் இவர்கள் உங்களைப் போண்டியாக்கிக் கோவணாண்டி ஆக்கி விடுவார்கள்.

*****