23 Jul 2026

இமயமலைப் பூஞ்சையும் இலக்கியப் புனைவுகளும்!

இமயமலைப் பூஞ்சையும் இலக்கியப் புனைவுகளும்!

ஜெயமோகன் எழுதி இருக்கும் மூளை எனும் அரிய சாதனம் பற்றிய அத்தியாயத்தைப் படித்தபோது, எனக்கு முதலில் எழுந்த உணர்வு ஒரு மெல்லிய சிரிப்புதான். பிறகு, வழக்கம்போல அவரிடம் பொங்கி வழியும் அந்த மகா எக்ஸ்பிரஷனிச உரைநடையைக் கண்டு உருவான அலுப்பு.

ஜெயமோகன் எப்போதும் தன் அனுபவங்களை உலகை உலுக்கும் பேரனுபவங்களாக மாற்றிவிடும் வித்தை தெரிந்தவர். இமையமலையில் அவர் சாப்பிட்ட ஏதோ ஒரு காளான், கூஃப் என்று அவரே பெயரிட்டுக்கொள்ளும் அந்தப் போதைப்பொருள் அவருக்குக் கொடுத்தது வெறும் ஒரு மோசமான மற்றும் அருவருப்பான அனுபவம். அவ்வளவுதான். மலத்திலும் சிறுநீரிலும் புரண்டு, கொசுக்கடி வாங்கி, மூளையின் நியூரான்கள் குழம்பிப்போய் அவர் அடைந்த அந்த அவஸ்தை, நரம்பியல் ரீதியாக எந்தப் போதைக்காளான் சாப்பிடும் ஒருவனுக்கும் நடப்பதுதான்.

ஆனால், ஜெயமோகன் அதை சாதாரணமாகக் கடந்துபோக மாட்டேன் என்கிறார். அதை உபநிடதத்துடனும், அகம் ஏவ இதம் சர்வோஸ்மி என்ற வேதாந்த மெய்யனுபவத்துடனும் முடிச்சுப்போட்டு ஒரு பெரிய தத்துவார்த்த வடிவத்தைக் கொடுக்க முயல்கிறார்.

காளான் சாப்பிட்டு வாந்தி எடுத்ததையும், கட்டிலுக்குக் கீழே கிடந்து அலறியதையும் வேதாந்தத்தின் மெய்யனுபவ விரிவோடு ஒப்பிடுவது, ஒருவன் கால் தடுமாறிச் சாக்கடையில் விழுந்ததை நான் பூமியின் ஆழத்தை நோக்கிப் பயணித்தேன் என்று கவிதை எழுதுவதைப் போன்றது.

இங்கு சில விஷயங்களை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

தன் மூளையைத் தினமும் தூசுதட்டித் துலக்கி வைக்கும் அரிய சாதனம் என்கிறார். உலகம் முழுதும் உள்ள மனிதர்கள் ரீல்ஸ் பார்த்தும், பாக்குப்போட்டும் மூளையை மழுங்கடிக்கிறார்களாம்; இவர் மட்டும்தான் லட்சத்தில் ஒருவராக மூளையைக் கூர்தீட்டிக்கொண்டே இருக்கிறாராம்.

இந்தச் சுயமோகமும், தன்னை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மேதையாகக் காட்டிக்கொள்ளும் அவசரமும் ஜெயமோகனின் பிரத்யேக அடையாளம். மூளையைப் பேணுவது நல்லதுதான், ஆனால் அதை மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதற்கான தராசாக மாற்றுவது அறிவாளித்தனத்தின் அடையாளம் அல்ல.

ஒரு பூஞ்சையை வெண்ணெயில் வேகவைத்துச் சாப்பிட்டுவிட்டு, சுவரும் நானே, கொசுவும் நானே என்று உளறுவது உடைந்து சிதறிய விரிவு என்றால், தீவிரமான காய்ச்சலில் பிதற்றுவதும் வேதாந்த அனுபவம்தானா? ஆலிவர் சாக்ஸையும் உபநிடதத்தையும் ஒரே மூச்சில் இழுத்துப்பிடித்துத் தன் போதை மயக்கத்திற்கு ஒரு அறிவுஜீவி முத்திரை குத்தப் பார்க்கிறார் ஜெமோ.

தத்துவம் சொல்லும் மலர்ச்சி என்பது உணர்வுகளின் குழப்பத்தால் வருவதல்ல; தெளிவின் உச்சத்தால் வருவது. ஜெயமோகனோ தன் பயத்தையும், மாயத்தோற்றங்களையும் தத்துவத்தின் உச்சக் கணங்களாகப் புனைவு செய்கிறார்.

ஜெயமோகனின் இந்தக் கட்டுரை, ஒரு நரம்பியல் கோளாறு அனுபவத்திற்குத் தரப்பட்ட மிகையான தத்துவச் சாயம்.

போதையில் தடுமாறியதை உடைந்து சிதறிய பிரம்ம அனுபவம் என்று எழுதுவது இலக்கிய ரசனைக்குரிய புனைவாக இருக்கலாம்; ஆனால், அதை மெய்யியல் தேடலாக எடுத்துக்கொண்டால் சிரிப்புதான் எஞ்சும்.

கூஃப் காளான் தந்த போதையை விட, தன் சொந்த உரைநடை மற்றும் ஆளுமை மீது ஜெயமோகனுக்கு இருக்கும் போதை மிகவும் தீவிரமானது!

*****

எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு அல்ல!

எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு அல்ல!

1967 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதே கால கட்டத்தில் ஹரியானாவில் வேறு ஒரு மாற்றம் ஏற்பட்டது.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற கயா லால் என்ற எம்.எல்.ஏ குரங்கை விட அதிவேகமாக வெறும் 15 நாட்களுக்குள் மூன்று முறை வெவ்வேறு கட்சிகளுக்குத் தாவினார்.

காங்கிரஸ் தலைவரான ராவ் பிரேந்திர சிங், கயா லாலை மீண்டும் காங்கிரஸுக்கு அழைத்து வந்து செய்தியாளர்களிடம், "கயா ராம் இப்போது ஆயா ராம் ஆகிவிட்டார்" என்று நகைச்சுவையாக அறிமுகப்படுத்தினார்.

இதிலிருந்தே இந்திய அரசியலில் கட்சி தாவுபவர்களைக் குறிக்கும் "ஆயா ராம், கயா ராம்"  என்ற புகழ்பெற்ற அரசியல் பழமொழி உருவானது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இது வரலாறு.

இப்போது கொஞ்சம் அறிவியல்.

இயற்பியல் விதிகளின்படி ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது.

இத்துடன் கொஞ்சம் அரசியலைச் கலந்தால், 1967 இல் இந்திய அரசியலில் ஒரு எம்.எல்.ஏ ஒரே வாரத்தில் மூன்று வெவ்வேறு கொள்கைகளில் வாழ முடியும் என்று நிரூபிக்கப்பட்டது.

மக்களவையில் கூடிய தூய்மையான மற்றும் நேர்மையான அரசியல் தலைவர்கள் இதைப் பார்த்து கவலைப்பட்டார்கள்.

"இதற்கு ஒரு கடிவாளம் போட வேண்டும்," என்றார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். "கடிவாளம் குதிரைக்குத்தானே?" என்றார் மற்றொரு உறுப்பினர். "பிரதிநிதிகளும் ஓடுகிறார்களே!" என்றார் முதலானவர்.

உடனே ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. "ஒருவர் கட்சி தாவினால், அவர் ஓராண்டுக்கு அமைச்சராகக் கூடாது, சபாநாயகராகக் கூடாது, சம்பளம் வாங்கும் எந்தப் பதவியிலும் இருக்கக் கூடாது" என்று அது பரிந்துரைத்தது. அதாவது, 'நீ சோறு சாப்பிடலாம், ஆனால் தட்டில் கை வைக்கக் கூடாது' என்ற வகையான தீர்வு அது.

ஆனால் அது சட்டமாவதற்கு 1985 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

1985 இல், 52 ஆவது சட்டத் திருத்தம் வந்தது. அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில் "கட்சித் தாவல் தடைச் சட்டம்" என்று பளபளப்பான ஒரு பூட்டு தொங்கவிடப்பட்டது.

இந்திய அரசியவாதிகள் புத்திசாலிகள்.

பூட்டைப் பார்த்ததும் அவர்கள் சாவி தேடவில்லை; பூட்டின் அளவை விடப் பெரிய கதவையே கழற்றினார்கள்.

"தனித்தனியாகத் தாவினால் தப்பு. ஆனால், நாம் அனைவரும் கூட்டமாகத் தாவினால் அது ஜனநாயகம்!" என்று ஒரு மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்கள் தத்துவத்தைக் கண்டுபிடித்தார்கள். பிரிவு 3 அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசமானது. ஆடுகள் தனியாகப் போனால் ஓநாய் பிடிக்கும்; மந்தையாகப் போனால் அதுதான் புதிய பூங்கா!

விளைவு?

மறுபடியும் பூட்டு தயாரிக்க வேண்டியதாகி விட்டது.

2003 இல், 91ஆம் சட்டத் திருத்தம் வந்து, "சரி, இனி மூன்றில் ஒரு பங்கு செல்லாது; மூன்றில் இரண்டு பங்கு வேண்டும்!" என்றது.

அதன் விளைவு என்னவென்றால், சில்லறை வியாபாரம் மொத்த வியாபாரமாக மாறியது. முன்பு எம்.எல்.ஏக்களை ரீடெய்ல் ஆக வாங்கினார்கள். இப்போது ஹோல்சேல் ஆகக் கொள்முதல் செய்தார்கள். ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்து, அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்களை ஏற்றி, ஒரு சொகுசு விடுதிக்கு அனுப்பினால் ஆட்சி க்ளோஸ் என்ற நிலை வந்து விட்டது.

இதெல்லாம் தொகுதியில் வாக்களித்த அப்புசாமிக்கு கொஞ்சம் கூட புரியவில்லை.

பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார் அப்புசாமி. "அண்ணே, நாம போட்ட ஓட்டுக்குத்தான் இந்தத் தொகுதியில மதிப்பில்லை. சரி, இந்த மனசாட்சின்னு ஒண்ணு சொல்வாங்களே, அது இவங்களுக்கு இல்லையா?"

பக்கத்தில் இருந்தவர் சிரித்துக்கொண்டே சொன்னார், "தம்பி, மனசாட்சிங்கிறது தனிநபர் சம்பந்தப்பட்டது. சட்டத்தின் படி, மூணுல ரெண்டு பங்கு பேர் சேர்ந்துட்டா மனசாட்சியும் தானாவே தகுதிநீக்கம் ஆகிடும்!"

"இதையெல்லாம் தடுக்க புது மசோதா கொண்டு வந்தா என்ன?" என்றார் அப்புசாமி.

"தம்பி, கடிவாளம் போடுவது குதிரையைக் கட்டுப்படுத்தத்தானே தவிர, கடிவாளத்தை விற்கும் வியாபாரியைக் கட்டுப்படுத்த அல்ல. இருந்தாலும் புது மசோதா கொண்டு வந்தா மட்டும் என்னவாகப் போகுது? பேருந்தில் சொகுசு விடுதிக்குப் போகும் எம்.எல்.ஏக்களுக்குக் டிக்கெட் விலை கொஞ்சம் அதிகமாகலாம்!" என்று சொல்லி விட்டு, பக்கத்தில் இருந்தவர் முன்னை விட இன்னும் பலமாகச் சிரித்தார். இந்தச் சிரிப்பு மட்டும் இல்லையென்றால் ஜனநாயகம் தரும் மனஅழுத்தத்தைப் பல நேரங்களில் தாங்கவே முடியாது.

அவர் சிரிக்க சிரிக்க, அப்புசாமி தன் வாக்காளர் அடையாள அட்டையைப் பார்த்தார். அது அமைதியாக, எந்தக் கட்சிக்கும் தாவாமல் அவருடைய பையிலேயே இருந்தது.

*****

22 Jul 2026

கடைசி விசிலுக்குப் பிறகு…

கடைசி விசிலுக்குப் பிறகு…

12பி பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது, ஒரு பழைய இரும்புப் பெட்டி ஆஸ்த்மா நோயாளி போல் இருமுவது போல.

சுப்பையா டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தார். அவர் முகம் எனக்கு வாழ்க்கை மேல பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை என்பதைத் தெளிவாகச் சொன்னது. ப்ரீ பஸ் அறிவித்ததில் இருந்து, ஸ்டாப்பில் சேலை கட்டுன உருவத்தைப் பார்த்தாலே அவர் வலது கால் ஆக்ஸிலரேட்டரை அமுக்கப் பழகியிருந்தது.

கண்டக்டர் மாணிக்கத்தின் சில்லறைப் பையில் காசை விட வெறுமை அதிகம் ஒலித்தது. பஸ்ஸுக்கு போர்டு மாற்றினால் மட்டும் போதாது, டிரைவர் புத்தியும் மாற வேண்டுமென்று அவருக்குத் தெரியும்.

அந்தப் பஸ் ஸ்டாப்பில் மூன்று பேர் நின்றிருந்தார்கள். தேர்வு பதற்றத்தில் ஒரு பையன், மீன் கூடையோடு ஒரு பெண்மணி, அப்புறம், தமிழ்நாட்டு பஸ்ஸைப் பற்றி ஆராய்ச்சி பண்ண ஜெர்மனியில் இருந்து வந்த பீட்டர்.

சுப்பையா வண்டியை நிறுத்தாமல் உருட்டினார். மீன் அம்மாள் கத்திக் கொண்டே ஓட, மாணிக்கம் "போ... போ... போட்ரு!" என்று விசில் அடித்தார்.

பையன் ஓடி வந்து படியில் தொங்கினான்.

பீட்டர் தன் நோட்டுப் புத்தகத்தில் இந்தியப் போக்குவரத்து ஒரு த்ரில்லர் விளையாட்டு'என்று குறித்துக்கொண்டார்.

கொஞ்ச தூரத்தில் ஊர்மக்கள் பஸ்ஸை மறித்தார்கள். "சிற்றூருக்குள் பஸ் வர வேண்டும்!" என்று கோஷம்.

பஸ் நின்றது.

அப்போது, மீன் அம்மாள் உள்ளே வந்து உட்கார்ந்தார். "யோவ் கன்டக்டரு, நீ நிறுத்தலைனா நான் வரமாட்டேனா? அடுத்த சிக்னல்ல ஷேர் ஆட்டோவை புடிச்சு ஏறிட்டேன்ல!" என்றார்.

மாணிக்கம் கடுப்பாகி, "மீன் நாறுது, தள்ளி வை" என்றார்.

பீட்டர் மாணிக்கத்திடம், "ஐயா, இதில் ஜிபிஎஸ் இருக்கிறதா? ஆப் இருக்கிறதா?" என்றார்.

மாணிக்கம் சலிப்பாக, "தம்பி, பஸ்ஸுக்கே ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை, இதுல ஆப்பாவது, மாப்பாவது! இந்தப் போர்டைத் தவிர இங்க எதுவும் புதுசு இல்லை" என்றார்.

கடைசியில் ஜெர்மனிக்குப் போன பீட்டர் அறிக்கை எழுதினார், "அங்கு பொதுப் போக்குவரத்து என்பது சேவை அல்ல; அது ஒரு தொடர் போராட்டம்."

ஆறு மாதம் கழித்து அறிக்கை எழுதிய பீட்டர் மீண்டும் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்தார்.

பஸ்ஸில் ஜிபிஎஸ் மின்னியது. சுப்பையா எல்லா ஸ்டாப்பிலும் வண்டியை நிறுத்தினார். மாணிக்கம் பயணிகளிடம் "வாருங்கள் ஐயா" என்று வழிந்தார்.

பீட்டர் வியந்து, "என் அறிக்கையைப் பார்த்து நிர்வாகம் சீர்திருத்தி விட்டதா?" என்றார்.

மாணிக்கம் பீட்டரின் தோளைத் தட்டிச் சொன்னார், "யோவ் வெளிநாட்டுக்காரவே... போன மாசம் பஸ்ஸைத் துரத்துன பொண்ணு வீடியோ சமூக வலைதளத்துல வைரல் ஆகி, கோர்ட் எங்களை உக்கார வச்சுடுச்சு. வேலை போயிடும்னு பயந்து, டிரைவர்-கன்டக்டர் எல்லாரும் ஆளுக்கு சில ஆயிரம் ரூபாய் போட்டு ஜிபிஎஸ் மாட்டி, ஒழுங்கா வண்டி ஓட்டுறோம்!"

பீட்டர் அதிர்ச்சியில் தன் நோட்டுப் புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறித்துக் கொண்டார், "நிர்வாகம் செய்யாததை, ஒரு வைரல் வீடியோ செய்துவிட்டது."

*****

10 செகண்ட் மனிதர்கள்

10 செகண்ட் மனிதர்கள்

இரவு 10:00 மணி.

நவீன் தன் அறையில் கைப்பேசி திரையை வேகமாக ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தான்.

திடீரென ஒரு 10 விநாடி காணொளி அவன் கவனத்தை ஈர்த்தது. வீட்டின் வாசலில் நிற்கும் வயதான தாத்தாவை, ஒரு வாலிபன் மரக்கட்டையால் ஓங்கி அடிப்பது போன்ற காட்சி அது!

நவீனுக்கு ரத்தம் கொதித்தது. "என்ன மிருகத்தனம்! இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது!" என்று ஆத்திரத்துடன் பொங்கி, "இவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்!" என்று காட்டமான கருத்தைப் பதிவிட்டு, அந்த காணொலியை ஆயிரக்கணக்கானோருக்குப் பகிர்ந்தான்.

சில நிமிடங்களில், இணையமே அந்த வாலிபனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி கொந்தளித்தது.

நவீனுக்குத் தான் ஏதோ மிகப்பெரிய சமூகப் புரட்சி செய்துவிட்டதாக ஒரு பெருமிதம்.

அடுத்த அரை மணி நேரத்தில் நவீனின் கைப்பேசியில் ஒரு செய்தி அதிர்வு வந்தது. அதே சம்பவத்தின் முழு காணொளி!

அதைப் பார்த்த நவீன் உறைந்துபோனான். உண்மையில் அந்த தாத்தா மின்சாரக் கம்பியைத் தொட்டு அதிர்ச்சியில் துடித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்த அந்த வாலிபன், தன் உயிரைப் பொருட்படுத்தாமல், கையில் கிடைத்த மரக்கட்டையால் அடித்து தாத்தாவை மின்சாரத் தொடர்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறான்!

தன் அவசரப் புத்தியை நினைத்து நவீனுக்கு வெட்கமாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. உடனே தன் பதிவை நீக்கிவிட்டு, அந்த வாலிபனின் வீரம் மற்றும் மனிதநேயத்தைப் பாராட்டி, "உண்மையான கதாநாயகன் இவன்தான்!" என்று நெகிழ்ச்சியோடு புதிய பதிவு ஒன்றைப் போட்டான்.

மனம் லேசான திருப்தியுடன், யாரையும் தவறாக எடைபோடக் கூடாது என்ற உயரிய சிந்தனையோடு கைப்பேசியை அணைத்துவிட்டு உறங்கச் சென்றான் நவீன்.

மறுநாள் காலை.

நவீனின் வீட்டு வாசலில் பலத்த கூச்சல் சத்தம். கதவைத் திறந்தவனுக்குப் பேரதிர்ச்சி! வெளியே காவல்துறையும், முகத்தில் காயங்களுடன் அந்த வாலிபனும் நின்றிருந்தனர்.

காவல்துறை அதிகாரி நவீனிடம், "தம்பி, நேற்று இரவு இந்த ஆளைப் பாராட்டி ஒரு பதிவு போட்டீங்களே. அதுக்குப் பிறகுதான் இந்த ஆள் பழக்கம் இல்லாத வயசான தாத்தாவைத் தாக்கிப் பணத்தைப் பறிச்ச வழக்கில் தேடப்படும் குற்றவாளின்னு எங்களுக்குத் தெரிஞ்சது. நீங்க போட்ட வீடியோ ஆதாரத்தை வச்சுதான் இவனைக் கைது செஞ்சோம். ரொம்ப நன்றி!" என்றார்.

கைப்பேசித் திரையில் தெரியும் பாதி உண்மையை வைத்து முதல் தீர்ப்பு எழுதிய நவீன், இப்போது கிடைத்த இன்னொரு பாதி உண்மையை வைத்து இரண்டாவது தீர்ப்பையும் எழுதி ஏமாந்திருந்தான்!

அரைகுறைத் தகவல்கள் நிறைந்த காணொளி உலகில், உண்மையின் முகம் எத்தனை முகமூடிகளை அணிந்திருக்கும் என்பதை நினைத்து நவீன் ஸ்தம்பித்து நின்றான்.

*****

21 Jul 2026

ஆர்டிக் ரகசியம்

ஆர்டிக் ரகசியம்

அடர்ந்த மேகமூட்டத்திற்கு நடுவே, உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாடு நடக்கும் டாவோஸ் நகரம் உறைந்து கிடந்தது. அந்த பனிக்குள்ளும், பிரதிநிதிகளின் அறைகளில் புவிசார் அரசியலின் அனல் வீசிக் கொண்டிருந்தது.

பேர்ட் அண்ட் பேர்ட் லண்டன் அலுவலகத்தின் சிறப்பு புலனாய்வு ஆலோசகர்களான ஜோசப் மற்றும் அவரது உலகப் புகழ்பெற்ற பார்ட்னர் டொனால்ட், அந்த உயர்மட்ட மாநாட்டின் பிரத்யேக அரங்கில் நின்றுகொண்டிருந்தனர்.

டொனால்ட் தனது ஓவர் கோட்டைச் சரிசெய்தபடி, "ஜோசப், இதைப் பார். வெளியே பனி உருகுகிறது, ஆனால் மனிதர்களுக்குள் இருக்கும் பனிப்போர் அதிகமாகிறது. அமெரிக்கா புதைபடிவ எரிபொருட்களைப் பிடித்துத் தொங்குகிறது, சீனாவோ பசுமை ஆற்றல், பசுமை நிதி என்று பேசி ஆர்க்டிக் பனிப்பாறைகள் வழியாக செம்பு, லித்தியம் விநியோகச் சங்கிலியைக் கைப்பற்றத் துடிக்கிறது. எல்லா வர்த்தக ஒப்பந்தங்களும் அரசியல் ஆதிக்கம்தான்!"

ஜோசப் தனது மெல்லிய புன்னகையுடன், கையில் இருந்த பளபளப்பான செம்பு  நாணயம் ஒன்றைச் சுழற்றியபடி பேசத் தொடங்கினார்:

"இது வெறும் அரசியல் போட்டி இல்லை, டொனால்ட். எரிசக்தி மாற்றம் என்ற பெயரில் பூமியின் வளங்களை யார் முதலில் சுரண்டுவது என்பதற்கான யுத்தம். ஆர்க்டிக் பனி உருகுவதும், தென் அமெரிக்கக் காடுகள் சுரங்கங்களாவதும் இவர்களுக்கு வெறும் பக்க விளைவுதான்."

"நாம் இதைத் தடுக்க வேண்டாமா ஜோசப்?" டொனால்ட் பதற்றமாகக் கேட்டார்.

"உலகப் பொருளாதார வல்லுநர்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் நம்மைத்தான் நம்பியிருக்கின்றன. சீனாவோ அல்லது அமெரிக்காவோ இந்தப் பசுமைத் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், பூமி மீள முடியாத பேரழிவைச் சந்திக்கும்!"

ஜோசப் அமைதியாகத் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் டேப்ளெட்டை எடுத்து டொனால்டிடம் நீட்டினார். அதில் ஒரு மிகப்பெரிய ரகசிய சுரங்க நிறுவனத்தின் பங்குகளும், ஆர்க்டிக் பிராந்தியத்தின் கனிம உரிமைகளுக்கான ஆவணங்களும் இருந்தன.

அவற்றின் கீழே இருந்த கையெழுத்தைப் பார்த்த டொனால்டின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன.

அங்கே இருந்தது ஜோசப்பின் கையெழுத்து!

டொனால்ட் உறைந்து போய் நின்றார். "ஜோசப். இது என்ன? நீயா? இந்த ஆதிக்கப் போட்டிக்கும், சுற்றுச்சூழல் அழிவுக்கும் பின்னால் நீ இருக்கிறாயா?"

ஜோசப் அந்தத் செம்பு நாணயத்தை டொனால்டின் கையில் வைத்து மூடினார். அவரது முகத்தில் இருந்த புன்னகை இப்போது ஒரு குளிர்ந்த வஞ்சகச் சிரிப்பாக மாறியிருந்தது.

"டொனால்ட், நீ இன்னும் ஏமாளிதான். உலக நாடுகள் அமெரிக்கா என்றும் சீனா என்றும் பிரிந்து நிற்பதாக நினைக்கிறாய் அல்லவா? இல்லை. அந்த இரு துருவங்களையும் மோதவிட்டு, ஆர்க்டிக்கின் உருகும் பனிக்கு அடியில் உள்ள கனிம வளங்களையும், தென்னமெரிக்க கனிமச் சுரங்கங்களையும் பின்னணியில் இருந்து வாங்குவது நம்முடைய கார்ப்பரேட் கூட்டமைப்புதான்."

"அப்படியானால்... காலநிலை மாற்றம், பசுமைத் தொழில்நுட்பம், இந்த டாவோஸ் மாநாடு எல்லாமே?" டொனால்டின் குரல் நடுங்கியது.

"எல்லாமே நாடகம்!" ஜோசப் பெருமிதத்தோடு தொடர்ந்தார். "நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும்போதுதான் அரிய கனிமங்களின் விலை விண்ணைத் தொடும். பனி உருக உருகத்தான் நமக்கான புதிய கப்பல் பாதைகளும் கனிமங்களும் திறக்கும். காலநிலை மாற்றம் என்பது அவர்களுக்குப் பக்கவிளைவு. ஆனால் நமக்கு? அதுதான் மிகப்பெரிய லாபம் தரும் வர்த்தகம்!"

டொனால்ட் அதிர்ச்சியில் பேச்சற்று நிற்க, ஜோசப் தனது கோட்டைச் சரிசெய்தபடி கதவை நோக்கி நடந்தார்.

"வா டொனால்ட், அடுத்த கூட்டத்திற்கு நேரமாகிறது. புதிய உலகம் உருவாவதை நாம் வேடிக்கை பார்க்கப்போவதில்லை... அதை நாம்தான் உருவாக்கப்போகிறோம்!"

*****

மாற்றமே மானுடத்தின் சாபம் அல்லது வெற்றிக்கான பயணம்!

மாற்றமே மானுடத்தின் சாபம் அல்லது வெற்றிக்கான பயணம்!

உலகமே விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டிருக்கிறது என்று தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும் மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்கிறார்கள்.

நாமும் "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதே சோபாவில், அதே பழைய பொசிஷனில் படுத்துக் கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மாறிக் கொண்டே இருந்தால் எப்போதுதான் வாழ்வது?

இந்த உலகத்தில் இரண்டு விஷயங்களை நம்மால் கணிக்கவே முடியாது.

ஒன்று, நாளைக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது.

இரண்டு, நம்மைச் சுற்றி என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்பது.

நாம் ஆசையாக எதிர்பார்த்த மாற்றங்கள் நடப்பதே இல்லை, உதாரணமாக, சம்பள உயர்வு.

ஆனால், நாம் கனவிலும் நினைக்காத மாற்றங்கள் அருணகிரிநாதர் லெவலுக்கு இல்லையென்றாலும், திடீர் லாக்டவுன் போல நம்மை வந்து அணைத்துக் கொள்கின்றன.

இந்த லட்சணத்தில், "மாற்றங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று இலவச அட்வைஸ் எங்கெங்கும் கிடைக்கிறது.

ஆகவே, வேறு வழியில்லை. மாறித்தான் ஆக வேண்டும்.

"நான் மாறவே மாட்டேன், பழைமைவாதம்தான் பேசுவேன்" என்று அடம் பிடிப்பவர்கள், ஸ்மார்ட்போன் காலத்தில் இன்னும் லேண்ட்லைன் போனில் டயல் செய்ய முயல்பவர்கள் போன்றவர்கள். அவர்களை விடுங்கள், நாம் அடுத்த மாற்றத்திற்குப் போவோம்.

ஒரு காலத்தில் துவைக்கும் கல்லில் துணியை வைத்து, கோபத்தையெல்லாம் சலவைக்கல்லில் காட்டி மாங்குமாங்கென்று துவைத்தார்கள். இப்போது சலவை இயந்திரம் வந்துவிட்டது. துணியை உள்ளே போட்டுவிட்டு, அது துவைத்து முடிக்கும் வரை நாம் நிம்மதியாக அமர்ந்து மாற்றங்களைப் பற்றி யோசிக்கலாம்.

சமையலறையில் விறகடுப்புப் புகை போய், கேஸ் சிலிண்டர் வந்து, இப்போது கரண்ட் அடுப்பு வந்துவிட்டது. சமையல் சீக்கிரம் முடிகிறதோ இல்லையோ, சிலிண்டர் விலை ஏறும் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது!

மனிதர்களின் உடைகளிலும் என்னவொரு புரட்சி!

வேட்டி சட்டைதான் அரசியல்வாதியின் அடையாளம் என்ற காலம் போய், இப்போது பேண்ட் சட்டை, கோட் சூட் என்று கார்ப்பரேட் மேனேஜர்கள் போல வலம் வருகிறார்கள். ஆடைகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறுவதில்லை என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ஆறுதல்.

பெண்கள் பாவாடை தாவணி, புடவையில் இருந்து சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று நவநாகரிக மங்கையராக மாறிவிட்டார்கள். தோற்ற மாற்றம் மன மாற்றத்தைத் தருகிறதோ இல்லையோ, துணிக்கடைகளின் கல்லா பெட்டியைத் தீவிரமாக மாற்றியமைத்திருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தைக் கூட இந்த மாற்றம் விட்டுவைக்கவில்லை. சுவர்களில் போஸ்டர் ஒட்டி, காகித நோட்டீஸ் கொடுத்துக் கத்திக் கூச்சல் போட்ட காலம் அவுட். இப்போது அரசியல்வாதிகள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ஓட்டு கேட்கிறார்கள். செலவும் குறைவு, மக்களும் ஸ்கிப் செய்யாமல் சில சமயம் நெட்டிசன்கள் செய்யும் ட்ரோல்களை ரசிக்கிறார்கள்.

கல்வித் துறையிலும் அமைதியான புரட்சியாகக், கரும்பலகையில் சாக்பீஸால் எழுதிப் போட்ட காலம் போய், இப்போது ஸ்மார்ட் கிளாஸ் வந்துவிட்டது. ஒளியும் ஒலியுமாகத் திரையில் படங்கள் ஓடுகின்றன.

முன்பெல்லாம் பதின்பருவப் பிள்ளைகளின் கண்ணில் மொபைல் போன் படக் கூடாது என்று லாக்கரில் பூட்டி வைத்தார்கள் பெற்றோர். இப்போது, "ஆன்லைன் கிளாஸ் கவனிடா செல்லம்" என்று பெற்றோரே ஐபோனைப் பிள்ளைகளின் கையில் திணிக்கும்படியான ஒரு விசித்திரமான மாற்றத்தை காலம் பரிசளித்திருக்கிறது.

இதெல்லாம் சரியா தவறா?

அதையெல்லாம் யோசிக்க நமக்கு நேரமில்லை, ஏனென்றால் அடுத்த நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருக்கிறது.

தனிமனிதர்களின் மனங்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் சமூக வளர்ச்சிக்கு வித்திடுகிறதாம். மாற்றம் என்பது மாறாதது மட்டுமல்ல, அதுதான் நிரந்தரமானது. இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து, "நான் அப்படியேதான் இருப்பேன்" என்று சொல்பவர்கள், சமூகத்திலிருந்து வெகு தூரம் விலகிப் போய்விடுவார்கள் அல்லது காலாவதியாகி விடுவார்கள்.

எனவே, மாற்றங்களை இரு கரம் நீட்டி வரவேற்போம். வேறு வழியில்லை.

அடுத்த முறை உங்கள் மொபைல் ஆப்பரேட்டர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் போதும், இதே பக்குவத்துடன் "மாற்றமே வளர்ச்சியின் பாதை" என்று சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான பயணம்!

*****

20 Jul 2026

நன்றி – ஒரு லாபகரமான தத்துவம்!

நன்றி – ஒரு லாபகரமான தத்துவம்!

உலகம் ஒரு பெரிய கூட்டுறவுச் சங்கம். ஆனால் இதில் உறுப்பினர்களாக இருக்கும் நமக்கு, மற்றவர்கள் நமக்காக உழைப்பது நம்முடைய பிறப்புரிமை என்கிற கர்வம் எப்போதும் உண்டு.

காலையில் எழுந்து பற்பசையை அமுக்கும்போது, அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்று நாம் யோசிப்பதில்லை. அந்தப் பற்பசையைத் தயாரித்தவர், சோப்புக்கு மணம் சேர்த்தவர், நாம் உடுத்தியிருக்கும் சட்டையை நெய்தவர் என ஒரு பெரும் கூட்டமே நமக்காக வியர்வை சிந்தியிருக்கிறது.

நாம் என்னவோ அந்தச் சட்டையை நாமே நெய்தது போலவும், சோப்பை நாமே கண்டுபிடித்தது போலவும் ஒரு மிதப்பில் அலைகிறோம்.

உண்மையில், முகம் தெரியாத மனிதர்களின் கருணையில்தான் நம் காலைக்கடன் முதல் இரவுத் தூக்கம் வரை எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சாப்பிடும் முன் சிலர் கடவுளைக் கும்பிடுகிறார்கள். அது பிரியாணி பிரமாதம் என்று சொல்வதற்காக மட்டுமல்ல. உலகில் பலருக்குத் தட்டே கிடைக்காதபோது, எனக்கு அதில் சோறும் போட்டாயே, என்று நன்றி சொல்வதற்காக.

நன்றி உணர்வு என்பது வெறும் பண்பு அல்ல. அது ஒரு தற்காப்புக் கலை. உதவி செய்தவரிடம் நன்றி என்று சொல்லிப் பாருங்கள், அவர் முகம் மலரும். அந்த மலர்ச்சியில் உங்கள் அகங்காரம் கொஞ்சம் கருகும். அதுதான் முக்கியம்.

நன்றிக்கு இலக்கணம் தேடினால் மகாபாரதக் கர்ணனிடம் போய் நிற்கலாம். தம்பிகள் பக்கம் நியாயம் இருந்தது, தர்மம் இருந்தது. ஆனால் துரியோதனனிடம் செஞ்சோற்றுக்கடன் இருந்தது.

தான் அழியப்போகிறோம் என்று தெரிந்தும், நண்பா, நீ போட்ட சோற்றுக்கு என் உயிரைத் தருகிறேன், என்று நின்றானே, அதுதான் நன்றியின் உச்சகட்ட நையாண்டி. துரோகத்தை விட நன்றியுணர்வு வலிமையானது என்பதை அவன் மரணம் நிரூபித்தது.

மனம் சோர்வாக இருக்கிறதா? ஒரு வெள்ளைத் தாளை எடுங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களைப் பட்டியலிடுங்கள்.

எனக்கு இந்த வேலை கிடைத்தது ஆச்சரியம், இந்த நண்பன் கிடைத்தது வரம், என்று எழுதிப் பார்த்தால், உங்கள் சோகம் காணாமல் போகும். ஏனென்றால், நம்மிடம் இல்லாததை நினைத்து வருந்துவதை விட, இருப்பதை நினைத்து நன்றி சொல்வது லாபகரமானது.

நன்றி ஒரு சிறந்த கரைப்பான். உங்களை எப்போதும் நோகடிப்பவர் கூட, ஒரு காலத்தில் ஒரு சிறு உதவி செய்திருப்பார். அந்தக் கடுகளவு உதவியை மலையளவாக நினைத்துப் பாருங்கள்; உங்கள் கோபம் ஐஸ் கட்டியாய் கரையும்.

நன்றியுணர்வு என்பது ஒரு பிரபஞ்ச ரகசியம். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நன்றி சொல்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பிரபஞ்சம் உங்களுக்குப் பரிசுகளை அள்ளித் தரும். இது ஒரு முதலீடு போன்றது.

தினமும் காலையில் இந்த உயிரைத் தக்க வைத்ததற்கு நன்றி, என்று ஆரம்பித்து, இரவு தூங்கும் முன் இன்று தப்பித்தோம் என்று முடிக்கும் வரை நன்றியுணர்வுடன் இருங்கள். மன அழுத்தம் குறையும், மகிழ்ச்சி கூடும்.

யார் கண்டது? நீங்கள் சொல்லும் ஒரு நன்றி, உங்களை ஒரு மனிதனாகக் கூட மாற்றலாம்! கொஞ்சம் ஓவராகத்தான் போகிறேனோ?!

*****