முதல் வகுப்பு வினாத்தாள் லீக் காவியம்!
காலம்
காலமாக இந்த நாட்டில் எத்தனையோ வினாத்தாள்கள் கசிந்திருக்கின்றன; பத்தாம் வகுப்பு,
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி மருத்துவ நுழைவுத்தேர்வுகள் வரை வினாத்தாள்கள்
கசிவதும், மோசடிப் பேர்வழிகள் காவல்துறையிடம் சிக்குவதும் நம் நாட்டில் பாரம்பரியமாக
நடப்பவைதான்.
ஆனால்,
சரித்திர சாதனை படைக்கும் விதமாக, உலகத் தமிழர்களின் கல்வி வரலாற்றில் இதுவரை எவரும்
கண்டிராத, கேட்டிராத ஒரு மகா வினாத்தாள் கசிவு நடந்திருக்கிறது. அது என்னவென்றால்,
2026 – 2027 ஆம் கல்வியாண்டின் முதல் பருவ ஒன்றாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிந்திருக்கிறது!
"ஏ
பார் ஆப்பிள். பீ பார் பால்." என்று எழுத்துக்கூட்டிப் படிக்க வேண்டிய, இன்னும்
சரியாக கால் சட்டை அணியத் தெரியாத, பால் மணம் மாறாத ஐந்து வயது பிஞ்சுகள், அதற்குள்
"க்யூ பார் கொஸ்டின், எல் பார் லீக்" என்று பாடம் படித்திருப்பதை அறிந்து
ஒட்டுமொத்த தமிழகக் கல்விச் சமூகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. இன்றைய மழலைகளை
சாதாரணமானவர்கள் என்று நாம் ஒருபோதும் எடைபோட்டுவிட முடியாது.
நேற்று
வரை ரைம்ஸ் எனப்படும் மழலைத் தாலாட்டுகள் பாடிக் கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு கைகளில்,
திடீரென்று சீலிடப்பட்ட கவர்களில் இருந்த இரகசிய வினாத்தாள் எப்படிப் போய் சேர்ந்தது
என்பதை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்றைய குழந்தைகளைச் சாதாரணமாக
கருதி விட முடியாது. இரவோடு இரவாக டார்க் வெப் மூலம் ஹேக்கிங் கோர்ஸ் முடித்துவிட்டு,
கல்வித்துறையின் பிரதான சர்வரைத் தூக்கிவிடும் அளவுக்கு அவர்கள் கோடிங் அறிவு வளர்ந்து
கொண்டு இருப்பது உண்மையில் கவலையளிப்பதாகவே உள்ளது.
பள்ளிகளுக்குச்
சீலிடப்பட்ட கவர்களில் அனுப்பப்பட்ட வினாத்தாள், தேர்வுப் பிள்ளைகளின் கண்களுக்குப்
படுவதற்கு முன்பே ஊருக்குள் தேர்தல் பிரச்சார நோட்டீஸ்கள் போல விநியோகிக்கப்படுகிறதென்றால்,
இன்றைய முதல் வகுப்பு மாணவர்களை நாம் குறைத்து மதிப்பிட்டு விடவும் முடியாது.
மேற்படி
செய்தி குறித்த விவகாரம் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காட்டுத் தீ போல பரவ, அதற்கு
வழங்கப்பட்டிருக்கும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. "வினாத்தாள் வெளியானதாக தகவல்
வந்தது; ஆனால், அதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை." நிச்சயமாகப் பிரச்சனையின்
தீவிரம் மிக சிக்கலாகவும் கடினமாகவும் இருக்கிறது. இதற்கான உண்மையைக் கண்டறிய வேண்டும்
என்றால், ஐன்ஸ்டீன் போன்ற ஒருவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வர வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அதே
நேரத்தில், எந்த வகுப்பாக இருந்தாலும் வினாத்தாள் கசிவைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள
முடியாது என்பதுதான் தவிர்க்க முடியாத எதார்த்தம். உடனே ஒரு புதிய ஆங்கில வினாத்தாள்
அவசரமாகத் தயாரிக்கப்பட்டு, அந்தப் புதிய வினாத்தாள் நாளை காலை மின்னல் வேகத்தில் அனுப்பப்பட்டு,
பள்ளிகள் புதிய வினாத்தாளை ராக்கெட் வேகத்தில் பெற்று, புதிய மறுதேர்வை நடத்த ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வேகம் ஹாலிவுட் அளவுக்கான வேகம் என்பது மறுக்க முடியாதது.
*****






