13 Sept 2026

பாரம் தாங்கவா வாழ்க்கை?

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 35

பாரம் தாங்கவா வாழ்க்கை?

மாலைச் சூரியன் மரக்கிளைகளின் ஊடே வடிகட்டப்பட்டுத் திருவாரூர், திரு.வி.க பூங்காவின் சிமெண்ட் பெஞ்சின் மீது வெளிச்சக் கீற்றுகளைப் பரப்பியிருந்தது. அந்த அமைதியான சூழலில் அவன் அவளுக்காகக் காத்திருந்தான்.

சற்றுத் தொலைவில் அவளது வருகையைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்றான். ஆனால், அகத்தின் அழுத்தம் முகத்தில் தெரிவதைப் போல ஓர் இறுக்கம். அவன் இதுவரை அவளிடம் காணாத முக வாட்டம்.

அவள் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

அமர்ந்த வேகத்தில் தன் தலையில் சூடியிருந்த அந்தப் பெரிய சிவப்பு ரோஜாப் பூவைக் கழற்றி பெஞ்சின் மீது வீசினாள். அவளது முகம் அந்த ரோஜாப்பூவை விட மோசமாக வாடியிருந்தது.

"என்ன விஷயம்? இவ்வளவு சோர்வா இருக்க? இப்படி உன்னை ஒருநாளும் பார்த்ததில்லையே!" என்றான் அவன்.

"இன்றைக்கு முழு நாளும் அலுவலகத்துல வேலை. ஸ்டாண்டிங் டெஸ்க் குடுத்திருக்காங்க. உட்காரவே முடியல. முதுகு ஒடிஞ்சு போச்சு. அதுபோக, இந்தத் தலை வேறு பாரமா இருக்கு," என்று அலுத்துக்கொண்டாள் அவள்.

அவளது இடையைப் பார்த்தான் அவன். எப்போதுமே லேசாக ஒடியும் தன்மையுடன் இருக்கும் அது, இன்று அந்தச் சோர்வில் இன்னும் மெலிதாகத் தெரிந்தது.

அவன் அவளது தலையைக் பார்த்தான். அத்துடன் பெஞ்சின் ஓரத்தில் தனித்துக் கிடந்த ரோஜாவைப் பார்த்தான்.

சாதாரணமாகப் பூவை வாங்கும்போது காம்பைக் கிள்ளிவிட்டுத்தான் வைப்பாள் அவள். ஆனால் இன்று, அவசரத்தில் எதைப்பற்றியும் யோசிக்காமல், காம்புகளுடன் சேர்த்து அந்தப் பெரிய ரோஜாவை அப்படியே குத்திக் சொருகியிருந்திருக்கிறாள்.

அனிச்ச மலரின் காம்புகள் தாங்க முடியாத பாரம் என்று வள்ளுவர் எதைச் சொன்னாரோ, அந்த மென்மை அவளிடம் அப்படியே இருந்தது.

அவன் புன்னகையுடன் அவளது தோளைத் தொட்டுச் சொன்னான், "நீ என்னதான் பெரிய பிளானிங், பக்கா சிஸ்டமேடிக்குன்னு எவ்வளவு மாடர்னா யோசிச்சாலும், இந்தத் தமிழ் இலக்கியப் புலவர்கள் உன்னை மாதிரி ஆட்களைக் கரெக்டா கணிச்சு வச்சிருக்காங்க."

அவள் புருவத்தை உயர்த்தினாள். "என்ன ஆரம்பிக்கிறீங்க, மறுபடியும் உங்க தொல்காப்பியமா, திருக்குறளா?"

"திருக்குறள்தான்.

"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

நல்ல படாஅ பறை."                       (குறள், 1115)

அப்படின்னு வள்ளுவர் சொல்லியிருக்கார்."

"கொஞ்சம் உங்க வள்ளுவர் சொல்றதைப் புரியும்படி சொல்ல முடியுமா?

"அனிச்சப்பூவைக் காம்போட சேர்த்துத் தலையில வச்சா, அந்தப் பாரமே தாங்காம உன்ன மாதிரி ஆட்களோட இடை ஒடிஞ்சுடும்னு அந்தக் குறள்ல சொல்றார். இருக்குற பூவுலேயே ரொம்ப மென்மையானது அனிச்சப்பூ. அதை காம்பு கிள்ளாம வெச்சாவே அந்தக் கதின்னா, நீ ரோஜாப் பூவை வாங்கிக் காம்பு கிள்ளாம வெச்சிருக்கீயே.  அப்புறம் என்ன ஆகும் தெரியுமா? நீயே யோசிச்சுப் பார்!"

"அப்படி என்னதான் ஆகுமாம்?" அவளது முகத்தில் இருந்த வாட்டம் மறைந்து பதிலை அறிந்து கொள்ளும் நாட்டம் வந்தது.

"ஊரே கூடி உனக்குச் சங்கு ஊத வேண்டியதுதான்!"

"என்னது, சங்கு ஊதுறதா?" அவள் முறைத்தாள்.

"இல்லை, வள்ளுவர் காலத்துல இடை ஒடிஞ்சு விழுந்தா பறை அடிப்பாங்க. இப்போ உனக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்க மாட்டா, மியூசிக் பேண்ட்தான் கூப்பிடணும்!"

தனக்குள்ளிருந்த அத்தனை சோர்வையும் மன இறுக்கத்தையும் மீறி அவள் வெடித்துச் சிரித்தாள். "போங்க மிஸ்டர் வள்ளுவர்தாசனே! அனிச்சப்பூவை விட இந்த ஜோக்குதான் ரொம்பக் கொடூரமான பாரம்."

அவளது இந்தச் சிரிப்புக்குப் பின்னால், அவளது மனபாரம் மறைந்து போன சூழலைப் பார்த்த அவனுக்குள் ஒரு மெல்லிய அக்கறை நிழலாடியது. "வாழ்க்கை எவ்வளவு மென்மையானதுன்னு நம்ம தமிழ்ப் புலவர்கள் அப்பவே சொல்லிட்டாங்க. அப்படி மென்மையா வாழ வேண்டிய வாழ்க்கையை எதுக்கு டென்ஷன் நிறைந்த ஒரு வேலையால பாரமாக்கிக்கணும். அனிச்சப்பூவைக் காம்போட தாங்குறதே பாரம்ன்னா, இவ்வளவு டென்ஷனை மனசுல தாங்குறது எவ்வளவு பாரம்? நெனைச்சுப் பார்க்கவே முடியலையே!"

"சரிங்க புலவர் குல வாரிசே! பாரத்தை நெனைச்சு ரொம்பவே கவலைப்படாதீங்க. நான் கௌம்புறப்பவே ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்துட்டேன். திருவாரூர் லைப்ரரில ஒரு வேலை இருக்கிறதா கேள்விப்பட்டு அதுக்கு அப்ளிகேஷனும் போட்டுட்டேன்."

அவன் சிரித்துக் கொண்டே, பெஞ்சின் மீது அவள் கழற்றி எறிந்த ரோஜாவின் காம்பைக் கிள்ளி அவளுக்குச் சூட்டினான்.

ஒரு கணம் யாரும் அக்கம் பக்கம் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட அவள் அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

12 Sept 2026

கமல் பயோபிக்கில் கமல் நடித்தால்...

காலம் எவ்வளவு மாறி விட்டது?

முன்பெல்லாம் பெண் பார்ப்பதற்கு, மாப்பிள்ளை பார்ப்பதற்கு போட்டோகிராபர்கள் போட்டு எடுத்துக் கொடுத்தார்கள். பின்பு அதை போட்டோஷாப் பார்த்துக் கொண்டது. தற்போதை அதை AI பார்த்துக் கொள்கிறது.

*****

இதற்கு மேல் டிரம்ப் வரியைப் போட வேண்டுமென்றால் எங்கே போடுவார்?

வரிகுதிரை மேல் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.

*****

இயக்குநர் பாலாவிடம் சொல்ல வேண்டிய செய்தி என்ன தெரியுமா?

நந்தாவாகி, பிதாமகனாகி, நான் கடவுளாகி, அவன் இவனாகி, பரதேசியாகி, வணங்கானாகி பாவம் சார் அந்த சேது! அவரை விட்டுடுங்க ப்ளீஸ்.

*****

கமல் பயோபிக்கில் கமல் நடித்தால் எப்படி இருக்கும்?

களத்தூர் கண்ணம்மா டிராயர் கமலிலிருந்து, வாணி கணபதி, சரிகா, கௌதமி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், அரசியல்வாதியாகி டிவியை உடைக்கும் கமல் வரை அனைத்தையும் அவரே வேடம் ஏற்று நடித்து விடுவார். டைட்டில் கார்டில் எல்லா பாத்திரங்களுக்கும் கமல், கமல், கமல்,… என்று போட்டு இது தசாவதாரம் அல்ல, அதையும் தாண்டிய பயோ அவதாரம் என்று போட வேண்டியிருக்கும்.

*****

தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் பற்றி என்ன சொல்வது?

பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அதே நேரத்தில் புதிதாக எதையும் அறிவிக்கலாமலும் இருக்க முடியாது. அதாவது, ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும், இதெல்லாம் தொழில் நேக்கும்மா என்கிற சொல்கிற மாதிரி ஒரு திட்டம்தான் அது.

*****

பூக்களுக்கும் வெட்கம் வரும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 34

பூக்களுக்கும் வெட்கம் வரும்!

கணியன் கணினிப் பூங்கா நிறுவனத்தின் பத்தாவது மாடியில் குளிர்பதன வசதி செய்யப்பட்டிருந்த அலுவலக அறையின் மெல்லிய குளிரில், மங்கலான ஒளியில் அவன் அமர்ந்திருந்தான்.

எதிரில் அவள்.

கண்களில் எந்த ஒப்பனையும் இல்லை, ஆனால் தீவிரமான தவிப்பும் துடிப்பும் நிரம்பியிருந்தன.

"என்ன? லேப்டாப் பேட்டரி டெட் ஆயிடுச்சா, இல்லை ப்ராஜெக்ட் டெட்லைன் நெருங்குதா?" என்றான் அவன்.

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஒரு நொடி அவனது கையில் இருந்த போன் கீழே விழப்பார்த்தது. "அது கிடக்குது விடு. ஆனா, என்ன இது? நீ என்னை நேத்துல இருந்து பார்க்கிற பார்வை, ஏதோ ஏஐ அல்காரிதம் வச்சு ஸ்கேன் பண்ற மாதிரி இருக்கு. என்ன விஷயம்?" என்றாள்.

அவன் லேசாகப் புன்னகைத்தான். "ஒன்றுமில்லை. உன்னைத் பார்த்த உடனே வள்ளுவர் ஞாபகம் வந்துட்டார். உன்னோட கண்களைப் பார்த்த உடனே அவர் எழுதி வச்ச ஒரு சூத்திரம் நியாபகத்துக்கு வந்துச்சு.

"காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று"                  (குறள், 1114)

அதான்!"

அவள் புருவத்தைச் சுருக்கினாள். "புரியல, இந்தச் சூத்திரம் என்ன சொல்லுதுன்னு சொல்லு."

"ரொம்ப சிம்பிள். குவளை மலர் குளத்துல பூக்கும். ஆனா அது தண்ணிக்கு மேலே நிமிர்ந்து பார்க்காம, தரையைப் பார்க்குமாம். ஏன்னா? உன்னோட அழகான கண்களுக்கு ஈடுகொடுக்க முடியல, நம்ம கண்கள் தோத்துடும்னு வெட்கப்பட்டுத் தலைகுனிந்து பார்க்குமாம்."

அவள் சற்றே வெட்கப்பட்டாள். ஆனால், உடனடியாகத் தன்னைத் சமாளித்துக்கொண்டு, "ஓஹோ! அப்போ குவளை மலருக்குக் கூச்ச சுபாவம் அதிகம்னு சொல்ற?"

"இல்லை. இங்குதான் நீ வள்ளுவரைத் தப்பாப் புரிஞ்சுக்கிற. உன் கண்களைப் பார்க்கும் வரை அதுக்கு எந்தக் கூச்ச சுபாவமும் இல்ல. உன் கண்களைப் பார்த்த பிறகுதான் கூச்சப்பட்டு நிலத்தை நோக்குது."

"என்ன பாஸ்! அப்படிப் பார்த்தாலும் லாஜிக் இடிக்குதே. குவளை மலர் இருக்குறது குளத்துலங்றீங்க. அப்ப அது கவிழ்ந்தா தண்ணீரைத்தானே நோக்க முடியும். நிலத்தை எப்படி நோக்க முடியும்?"

"நீ நிக்குறது நிலத்திலத்தானே!"

அவள் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை தொக்கி நின்றது. "நீ ரொம்பத்தான் பில்டப் தர்ற. ஆனா, உன்னோட விளக்கம் சூப்பர்."

"தேங்க்ஸ். டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துட்டாலும், உன்னோடகண்களோட சாப்ட்வேரை இன்னும் எந்தக் கம்பெனியும் காப்பி அடிக்க முடியல பாரு!"

அவளது கன்னம் லேசாகச் சிவந்தது. எப்போதும் சட்டென தர்க்கம் பேசுற அவளது வாய், இப்போது நிஜமாவே பூட்டு போட்ட மாதிரி அமைதியாக இருந்தது.

அவன் தொடர்ந்தான், "என்ன? குவளை மலரே உன் கண்ணைக் கண்டு நிலத்தைப் பார்க்கும்போது, இந்த சாதாரணமானவன் எந்த மூலை?"

அவள் தலை குனிந்து நிலத்தைப் பார்க்க, "அடடா! குவளை மலர் உன் கண்களைப் பார்த்து நிலம் நோக்குது சரி. உன்னோட கண்களும் நிலம் நோக்குதே. அது எதைப் பார்த்து?"

"ச்சீ! போடா! போய் வேலையைப் பாரு!" என்ற படி அவள் அங்கிருந்து மெதுவாக ஓடியது, குவளை மலரே வெட்கப்பட்டு ஓடுவது போலிருந்தது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

11 Sept 2026

நேற்றின் சாயல்

அலையும் குளுமை

கல்லெறிந்து விளையாடுபவரின்

பாதங்களையும்

குளிர்ந்த மனதோடு

தழுவி விட்டுச் செல்கிறது அலை

*****

சமத்துவக் கருப்பன்

எந்த மதமென்றும் தெரியவில்லை

எந்த ஜாதியென்றும் புரியவில்லை

விழுகின்ற நிழல் அத்தனையும் கருப்பு

*****

முடிவில் நனைதல்

எல்லாம் விற்ற பின்

மழையில் நனைந்தபடி

செல்கிறார்

குடைக்காரர்

*****

குட்டிக் கடல்

கடலோரத்தில்

சிறு குழி தோண்டி

அதில் நிரம்பிய

நீரைப் பார்த்துச் சொல்கிறாள்

அம்முக்குட்டி

“இதோ

என்

குட்டிக் கடல்!”

                                                                   *****

நேற்றின் சாயல்

முற்றத்தில் காயும்

ஈரத்துணியிலிருந்து சொட்டும்

ஒரு துளி நீரில்

நேற்று பெய்த மழையின் சாயல்

*****

தேரோடும் வீதியில் திருவள்ளுவரின் குறள்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 33

தேரோடும் வீதியில் திருவள்ளுவரின் குறள்!

மழையின் மெல்லிய ஈரம் காய்ந்தும் காயாமலும் ஈரப்பதத்தைத் திருவாரூரின் நான்கு வீதிகளிலும் பரப்பிக் கொண்டிருந்தது. தேரோடும் வீதியின் இருபுறமும் ஆங்காங்கே வரிசையாக இருக்கும் பழமையான ஓட்டு வீடுகளும், அதன் உச்சியில் செழித்து வளர்ந்திருக்கும் அரசமரக் கன்றுகளும் காலத்தைக் கடந்து நிற்கும் அடையாளங்கள்.

மாலையின் மஞ்சள் வெயில் சற்றே மங்கி, கமலாலய குளத்தின் குளிர் காற்றும் சேர்ந்து திருவாரூரைக் கொஞ்சம் கூடுதலாகவே குளிர்விக்க, தியாகராஜர் வீதியிலுள்ள அந்தப் பாரம்பரிய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தான் அவன்.

காலம் எவ்வளவுதான் மாறினாலும், திருவாரூரின் அந்த மந்தமான சோம்பலும், மாலை நேரங்களில் மணக்கும் அந்தக் காபி வாசனையும் எப்போதையும் விட இன்றைக்குச் சற்று அதிகமாகவே அவனுக்குள் இறங்கியிருந்தது. அவனது கையில் அந்தப் பழைய செப்பு டம்ப்ளர். உள்ளே சுடச்சுட இஞ்சிக் காபி. எதிர் வீட்டுத் திண்ணையில் நின்றுகொண்டிருந்தாள் அவள்.

அவள் தன் கூந்தலைக் கொண்டையாகச் சீவிக்கொண்டிருந்தாள். அவளது அந்தத் திடீர் அசைவில் ஒரு மின்னல் வேகம் இருந்தது. அவளது மினுமினுப்பான அந்தத் தோல் மீது சன்னல் வழியே நுழைந்த விளக்கு வெளிச்சம் பட்டுத் தெறித்தது. இயற்கையின் இணையற்ற படைப்பாகத் தெரிந்தது அது. இயந்திரங்களின் இரைச்சலோ கார்ப்பரேட் டென்ஷனோ இல்லாத இந்தத் திருவாரூரில், அவளது ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு பாரம்பரியப் பாடலின் மெட்டு போல அவனுக்குள் சுழன்றது.

திடிரென்று அவள் திரும்பி அவனைக் கவனித்தாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. அந்த வெண்மையான பற்கள் முத்துப்போல் மின்ன, அவள் லேசாகச் சிரித்தாள். ஏதோ வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்வில் சென்டம் வாங்கியது போன்ற ஓர் அரிய திருப்தி அவனுக்குள் பரவியது.

அவள் சமையலறையிலிருந்து திண்ணையை நோக்கி நகர்ந்து வரும்போதெல்லாம், அந்த வீட்டின் பாரம்பரிய மல்லிகைப் பூ வாசனையும் அவளது இயல்பான நறுமணமும் சேர்ந்து காற்றில் மிதந்து வந்தது. எந்தவொரு செயற்கை வாசனைத் திரவியமும் இல்லாத, மண்ணின் தூய்மையும் காதலின் குளிர்ச்சியும் கலந்த அந்த வெறிநாற்றம் அவனது நரம்பு மண்டலத்தை முழுமையாகச் சமன்செய்தது.

அவளது அந்தக்  கண்கள், திருவாரூர் தேர்த் திருவிழாவின் போது எரியும் ஆயிரமாயிரம் விளக்குகளின் பிரகாசம் போல் பிரகாசித்தன. அதில் அவனது மொத்த மன அழுத்தமும் மகிழ்ச்சிப் பெருக்கமாய் மாறிப் போனது.

வாழைத் தண்டின் மென்மையும் மூங்கிலின் ஒய்யாரமும் கலந்த அவளது தோள்கள் அவனை அப்படியே அள்ளி சொர்க்கத்தில் தள்ளியது போன்ற உணர்வைத் தந்தது. சில விஷயங்களுக்கு தலைமுறைகளும் ஊர்களும் மாறினாலும் காலாவதி தேதி இல்லை என்பதற்கு அவள் ஓர் உயிர்ப்பான சான்று.

"என்ன அப்படி ஒரு பார்வை?" என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

அவன் காபியை ஒரு வாய் குடித்துவிட்டு மென்மையாகப் புன்னகைத்தான். இயற்கையின் உயிர்நுட்பமே வேறுதான். அந்த மேனியின் பிரகாசம், முத்த முறுவல், வெறிநாற்றம், வேல் போன்ற கண்கள், வேய்த்தோள் என இதைவிடச் சிறந்ததொரு சொர்க்கத்தின் கட்டமைப்பு இந்த உலகத்தில், ஏன் இந்தப் பிரபஞ்சத்தில் எங்குமே கிடையாது.

அவனது மைண்ட் வாய்ஸ் எனும் மனதின் குரல் புரிந்தது போல, அவள் அவன் எதிரே வந்து நின்றாள், "என்ன யோசனை மிஸ்டர் கவிஞரே?"

அவன் வார்த்தைகளை மென்று விழுங்குவது போலச் சொன்னான், "ஒன்னுமில்ல! உன்னைப் பார்த்தா, திருவள்ளுவர் காலத்துலேயும் நீதான் இருந்திருக்கணும்னு தோணுது. இல்லன்னா, அவர்தான் உன்னை நேரில் பார்த்துவிட்டு அந்தத் குறளை எழுதி வச்சிருக்கணும்."

"அப்படியா! அப்படியென்ன குறள் அது?" என்றாள் அவள் மீண்டும் முத்துகளைச் சிதற விடும் சிரிப்போடு.

"அதுவா? அது வந்து…

"முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு."                    (குறள், 1113)

அதுதான் அந்தக் குறள்!" என்றான் அவன்.

அவள் அவனது தலையில் லேசாக ஒரு தட்டு தட்டிவிட்டுப் புன்னகையுடன் நகர்ந்தாள். காலம் சுழன்றாலும் காதலின் மொழி மட்டும் மாறுவதேயில்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அந்த மொழி கட்டுக் குழையாமல், நன்னி கூட சிதையாமல் அப்படியே இருக்கிறது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

10 Sept 2026

மறைந்து போகும் ஊதியம்

 

மறைந்து போகும் ஊதியம்

முப்பது ஆண்டுகளின்

இளமை தொலைந்த பிறகு

எதுவும் இல்லை என்றாகிறது

சந்தையின் நிச்சயமற்ற

விளையாட்டுகளில்

எல்லா எண்களும்

பூஜ்ஜியத்தை நோக்கிச் சென்று விட

முதுமையின் மீது

நடத்தப்பட்ட சூதாட்டமாகியிருந்தன

தவணை செலுத்திய கோப்புகள்

எஞ்சிய காலத்தின் வரைபடத்தின் மீது

அதிகாரத்தின் நாற்காலிகள்

வசதியாய் அமர்ந்திருக்க

அரிசிக்கும் பாலுக்கும்

கையேந்தும் நடுங்கும் கரங்களைப்

பகடைக் காய்கள் உருட்டுகின்றன

கௌரவமான தற்கொலைக்கான

தூக்குக் கயிற்றை

முடிச்சிட முடியாமல்

மரணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்க

துரதிர்ஷ்டம் பிடித்த ஊழியர்களிடமிருந்து

தள்ளியே நிற்கிறது பென்ஷன்

****

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு

வெறிச்சோடிக் கிடக்கும்

பாலை நிலத்தில்

வெந்து தணிந்து கொண்டிருக்கும்

கருவேலம் காட்டில்

பசுமையைத் தின்று தீர்த்த முட்கள்

தாகத்தை உறிஞ்சிக் குடித்த வெடிப்புகள்

துளி தேனின்றிப் போனாலும்

தேடும் இறகுகள் இருப்பதை எண்ணி

உற்சாகமாய்ப் பறக்கும்

ஒரு பட்டாம்பூச்சியின்

சிறகசைப்பின் விளைவோ என்னவோ

அதன் வண்ணச் சிறகுகளையொத்த

வானவில்லைத் தீட்டி

பல வண்ணப் பூக்களைப் பூக்க வைக்கும்

கருமையைத் திரட்டிக் கொண்டு

எங்கேயே திக்குத் தெரியாமல்

அல்லாடிய மேகம் ஒன்று திரும்பி வருகிறது

*****