13 Jun 2026

தமிழனின் பொதுப்புத்தியைச் சாம்பலாக்கிய ஆக்சன் கொள்ளி!

சீரழித்த சினிமா – 11

தூள்

தமிழனின் பொதுப்புத்தியைச் சாம்பலாக்கிய ஆக்சன் கொள்ளி!

இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் தன் அறிவையும், சட்டத்தின் மீதான குறைந்தபட்ச நம்பிக்கையையும் மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே கழற்றி எறிந்துவிட்டு, ஆக்‌ஷன் என்ற ஒற்றைப் போதைக்குள் தங்களை ஒட்டடை அடித்துக் கொண்டது.

அந்தப் புனிதமான காரியத்தைக் கங்கணம் கட்டிக் கொண்டு 2003இல் மிக நேர்த்தியாகச் செய்து முடித்த பெருமை தூள் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அதிரடி வேகமும், சிங்கம் போல நடந்து வரான் என்ற பாடலும் சண்டையும் கலந்த கொத்து பரோட்டா பின்னணி இசையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையில் சட்டமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் ஆக்சன் ரூட்டில் எதிர்கொள்வதே ஆகச்சிறந்த சமூகச் சீர்திருத்தம் என்ற ஆபத்தான பாசிச நச்சை  எப்படி இத்திரைப்படம் நளினமாக விதைத்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ஜனநாயகப் பாடம் என்ன தெரியுமா?

உங்கள் கிராமத்தில் ஒரு தொழிற்சாலையால் தண்ணீர் மாசுபடுகிறது என்றால், நீங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தையோ, நீதிமன்றத்தையோ நாடக் கூடாது. நேராகச் சென்னைக்கு வந்து, அந்த ஏரியா தாதாவையும், அவனுக்குப் பின்னால் இருக்கும் அமைச்சரையும் எதிர்த்து குஸ்தி சண்டை போட வேண்டும் என்பதுதான்.

ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கென்று சில வழிமுறைகள் உண்டு. ஆனால், தூள் பட நாயகனோஅரசமைப்பு வழிமுறைகள் என்பன ஏழைகளுக்குப் பயன்படாத ஒரு குப்பை; ஆக்சன்தான் மக்கள் கையில் எடுக்க வேண்டிய உண்மையான நீதிமுறை, என்ற அராஜகச் சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆழமாக நட்டார்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் நமக்கொரு சமூகப் பிரச்சினை என்றால், சட்டப்பூர்வமாகப் போராடுவதை விடுத்து, நம்ம ஆறுமுகம் மாதிரி அதிரடியா இறங்கி நாலு பேரை ஆக்சனில் பொளந்தால்தான் நாடு விளங்கும் என்று வன்முறையை ஆராதிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற பொதுப்புத்தியை இந்தச் சினிமா உருவாக்கியது.

படத்தில் நாயகி மற்றும் நாயகனுக்கு இடையேயான காதல் மற்றும் நட்பு சித்தரிக்கப்பட்ட விதம் அலாதியானது. சென்னைக்கு வந்தக் கிராமத்து நாயகி, ஆரம்பத்தில் நாயகனை வெறுப்பது போலக் காட்டப்பட்டாலும், இறுதியில் அவனது முரட்டுத்தனத்தைக் கண்டு உருகிப் போவாள்.

ஒரு பெண் தன் சுயமரியாதையோடு இருக்கும்போது, அவளது விருப்பங்களை மதிக்காமல், அவளது எல்லைகளுக்குள் ஓர் ஆண் தன் கிராமத்து ஆணதிகாரப் பிம்பத்தோடு நுழைவதைக் காதல் என்று நியாயப்படுத்தியது இந்தச் சினிமா. பெண்கள் என்னதான் ஓடினாலும், இறுதியில் ஆண்களின் முரட்டுத்தனத்திற்கு முன்னால் மண்டியிடுவார்கள், என்ற ஆணாதிக்கப் புத்தியைத் தமிழர்களின் நெஞ்சில் இன்னும் ஆழமாகப் பதியவைத்தது இந்த சினிமா கரம்மசாலா தூள்.

படம் முழுவதிலும் நாங்க கிராமத்துக்காரங்க, எங்க மண் கெத்து, நாங்க நேர்மையானவங்க, என்ற போலிப் பெருமித வழிந்தோடும். அதேநேரம், சென்னை போன்ற பெருநகர மனிதர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களாகவும், ரவுடிகளாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படுவதை இத்திரைப்படமும் குறையின்றிச் செய்தது.

அறிவியலும், தொழில்நுட்பமும், நவீன நாகரிகமும் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சிந்தனையையும் ஆக்சன் எனும் கரம்மசாலா வட்டத்திற்குள்ளேயே சுருக்கி வைத்தது இந்தத் திரைப்படம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த இளைஞர்கள், உலகளாவிய சிந்தனைகளை நோக்கித் தங்களை வளர்த்துக்கொள்வதை விடுத்து, அடிதடி மற்றும் தூள் பறக்கும் ஆக்சன் வட்டப் பெருமைகளுக்குள் சுருங்கிப் போனார்கள்.

ஒட்டுமொத்தப் படமும் விவேகத்தோடும், பகுத்தறிவோடும் அணுக வேண்டிய ஒரு சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் பிரச்சினையை, வெறும் அடிதடி, ரத்தக் களறி, சேஸிங், பஞ்ச் வசனங்கள், ஆக்சன் என்ற கமர்சியல் பார்முலாவுக்குள் அடைத்துத் தமிழர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்தது.

தூள் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, சீயானுக்கு மாஸ் பிம்பத்தை நிலைநிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

சிங்கம் போல நடந்து வர்றான் என்ற பாடலின் கோதாவிலும், தான் ஒரு வேட்டை விலங்கு என்ற மாயையிலும், பக்கத்து வீட்டு நாய் குரைத்தால் கூட நாய்க்கா இந்த வெறி? என்று தன்னைத்தானே ஹீரோவாகப் பாவித்துக்கொள்ளும் உளவியல் நோய் தமிழர்களிடம் இதனால் பரவியது.

தூள் என்பது வெறும் திரைப்படம் அல்ல; அது தமிழ் சமூகத்தின் கூட்டு நனவிலி மனதிற்குள் செலுத்தப்பட்ட ஒரு நச்சு ஊசி. அதன் உளவியல் பாதிப்புகளைக் கணக்கிட்டால் அது முடிவிலி வரை செல்லும்.

இதித்ரைப்படம் ஏற்படுத்திய இன்ஸ்டன் ஆங்கர் ஆக்சன் மாடல், நிஜ வாழ்க்கையிலும் மக்களிடையே பரவியது. டிராபிக் சிக்னலில் ஒரு விநாடி லேட்டானால் கூட, மக்கள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வில்லனைத் தேடும் அளவுக்குப் பொறுமை இழந்தவர்களாக மாறினர்.

ஆக மொத்தத்தில், சட்டத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் மதிக்காமல், உணர்ச்சிவசப்பட்டு ஆக்சன் அவதாரத்தைக் கையில் எடுப்பதே ஆகச்சிறந்த வீரம் என்று நம்பி ஒரு தூள் கிளப்பும் முரட்டுச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

12 Jun 2026

மண், மனிதர்கள், மற்றும் கிராமியம் - ஒரு பாரதிராஜாவியல்!

மண், மனிதர்கள், மற்றும் கிராமியம் - ஒரு பாரதிராஜாவியல்!

மனிதர்கள் தங்களைச் சுற்றி எப்போதும் ஒரு சுவரை எழுப்பிக் கொள்கிறார்கள். அந்தச் சுவருக்கு யதார்த்தம் என்று பெயர். ஆனால் தேனி அல்லிநகரத்திலிருந்து கிளம்பிய ஒரு மனிதர், அந்தச் சுவர்களில் ஜன்னல்களை அல்ல, வாசல்களையே செதுக்கத் தொடங்கினார். அவர்தான் பாரதிராஜா.

திரையரங்கின் இருட்டில், தன் குரலால் என் இனிய தமிழ் மக்களே... என்று அவர் அழைக்கும்போது, அது வெறும் விளிப்புச்சொல் அல்ல; தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் ஆன்மாவை உலுக்கும் இருத்தலியல் பள்ளியெழுச்சி.

வாழ்வின் ஒரு பகுதியைத் துறக்காமல், இன்னொரு பகுதியைக் கண்டடைய முடியாது. பாரதிராஜா சுகாதார ஆய்வாளர் என்ற பணியைத் துறந்து திரை ஆய்வாளர் ஆனவர். சென்னைக்கு வந்து பெட்ரோல் பங்க்கில் வேலை செய்தபோதும், நாடகங்களுக்காக அலைந்த போதும் அவர் தன் படைப்பு மனதிற்கான தீயைத் தேடிக்கொண்டிருந்தார்.

புட்டண்ண கனகல், பி.புல்லையா போன்றவர்களிடம் உதவியாளராக இருந்த காலம், ஒரு சிற்பி இன்னொரு சிற்பியிடம் உளி வாங்கும் காலம்.

பாரதிராஜாவுக்கு முன், தமிழ் சினிமாவுக்குக் கிராமம் என்பது ஸ்டூடியோவுக்குள் நடப்பட்ட இரண்டு செயற்கை வாழை மரங்களும், ஒரு வைக்கோல் போரும் மட்டும்தான். அவர்தான் கேமராவைத் தூக்கிக்கொண்டு அசல் சாணி நாற்றமும், ஈரமண்ணின் வாசனையும் வீசும் மனிதர்களிடம் சென்றார்.

முதலிரண்டு படங்களுக்குப் பிறகு, இவருக்குக் கிராமத்து மண்ணைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்று உலகம் தீர்ப்பெழுதியது. உலகம் எப்போதும் அப்படித்தான்; உங்களை ஒரு பெட்டிக்குள் அடைக்கத் துடிக்கும்.

பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?

சிகப்பு ரோஜாக்கள் என்ற கத்தியை எடுத்து அந்தப் பெட்டியைப் பிளந்தார். கமல்ஹாசனை ஒரு சைக்கோ கொலைகாரனாக மாற்றினார்.

வாழ்வு என்பது ஒரே பாதையில் செல்வதல்ல, பாதை இல்லாத இடத்தில் ஓடுவது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

காதல் ஓவியம் தோற்றபோது அவர் தமிழ் மக்களைச் சபித்தார் என்று வரலாறு சொல்கிறது. ஒரு கலைஞனின் சாபம் என்பது கோபமல்ல, அது அவனது அதீத அன்பின் ஏமாற்றம். நான் உங்களுக்கு அமிர்தத்தைத் தருகிறேன், நீங்கள் ஏன் இன்னும் சாக்கடையைக் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற தார்மீகக் கோபம் அது.

அவர் ரஜினியையும் விஜயகாந்தையும் வைத்து கொடி பறக்குது, தமிழ்ச்செல்வன் எடுத்தபோது விமர்சனங்கள் வந்தன. உண்மைதான், ஒரு சிங்கம் சில சமயம் புல் தின்ன முயலலாம், ஆனால் அதற்காக அது பசுவாகிவிட முடியாது. அந்திமந்தாரை மீண்டும் அவரது கலைமனதை நிரூபித்தது.

மகன் மனோஜை வைத்து தாஜ்மஹால் எடுத்த பிறகு, பாரதிராஜா தன் பழைய பலங்களை உடைக்கத் துணிந்தார். கண்களால் கைது செய், பொம்மலாட்டம் என்று அவர் புதிய திசைகளில் அலைந்தார். கலை என்பது தேங்கி நிற்கும் குட்டை அல்ல, அது ஓடும் நதி என்பதை அவர் அறிந்திருந்தார்.

மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் அவர் கேமராவுக்கு முன்னால் வந்தபோது, தமிழ் சினிமா ஒரு புதிய நடிகனைக் கண்டடைந்தது.

இயக்குநராக இருந்து நடிகனாக மாறுவது என்பது, படைத்தவன் தன் படைப்புக்குள்ளேயே ஒரு சாதாரண மனிதனாக இறங்கி நடப்பதைப் போன்றது. அது ஒரு தத்துவார்த்தத் தேடல்.

ஒரு மரத்தின் வெற்றி என்பது அது தரும் பழங்களில் இல்லை, அது உருவாக்கும் காட்டில் இருக்கிறது. கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, பொன்வண்ணன் என ஒரு பெரும் இயக்குநர் படையையே அவர் உருவாக்கினார்.

தன் பெயரைத் தியாகம் செய்து, பிற கதையாசிரியர்களின் கதைகளையும் வாங்கிப் அவர் படமாக்கினார். இது அவரது அகந்தையின்மையைக் காட்டுகிறது.

சினிமா என்பது கூட்டுப் பிரார்த்தனை, அதில் தன் முகம் மட்டுமே தெரிய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. சுதாகர், பாண்டியன் என வீதியில் நடந்த மனிதர்களையெல்லாம் பிடித்து வந்து நட்சத்திரங்கள் ஆக்கினார்.

பாரதிராஜாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் தத்துவம் எளிதானது. உன் அடையாளத்தை நீயே தீர்மானி. உலகம் உன்னைச் சுருக்க நினைத்தால், நீ விரிவடைந்துகொண்டே இரு என்பதுதான் அது.

அவர் வெறும் இயக்குநர் இமயம் மட்டும் அல்ல; இமய மலைகள் அசையாது, ஆனால் பாரதிராஜா என்ற இமயம் தன் ஆயுட்காலம் முழுவதும் நடந்து கொண்டே இருந்தது, தன் காமிராவோடும், தீராத தாகத்தோடும்!

*****

ரொமாண்டிசமான ரௌடியிசமும் பொறுக்கித்தனமும்!

சீரழித்த சினிமா – 10

அமர்க்களம்

ரொமாண்டிசமான ரௌடியிசமும் பொறுக்கித்தனமும்!

தொண்ணூறுகளின் இறுதிக்கட்டம், தமிழ்ச் சமூகத்தின் இளைஞர் பட்டாளம் தங்களின் எதிர்காலத்தைப் பற்றிய சுயசிந்தனையை மொத்தமாகக் கழற்றி எறிந்துவிட்டு, ஒரு புதிய ஆன்டி ஹீரோ போதைக்குள் தங்களை ஒட்டடை அடித்துக் கொண்ட காலம். அதற்குப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆகச்சிறந்த நச்சுப் பண்டம்தான் 1999இல் வெளியான அமர்க்களம்.

நாயகனின் சிவந்த கண்களும், பரட்டைத் தலையும், திணறடிக்கும் பிஜிஎம்மும் சேர்ந்து, தமிழ்நாட்டு வாலிபர்களின் மூளையை எப்படி அமர்க்களமாய்க் கூசாமல் பதம் பார்த்தன என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த வாழ்வியல் பாடம் என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு உருப்படியான வேலைக்கும் போகாமல், தியேட்டரிலேயே குடியேறி, மது அருந்திக் கொண்டு, புகை பிடித்துக் கொண்டு, உள்ளூர் தாதாவுக்கு அடியாளாக அலைந்தாலும், நீங்களும் அல்டிமேட் நாயகன் என்பதுதான்.

படத்தில் வரும் நாயகன் ஒரு சமூக விரோதிக்குத் தேவையான அத்தனை தகுதிகளையும் கொண்டவர். தியேட்டரே வீடு, ரௌடித்தனமே வேலை என்று இருப்பவர்.  அவருக்குப் பின்னால் ஒரு சோகமான அனாதை பிளாஷ்பேக்கை ஒட்டி வைத்து, அவர் செய்யும் அத்தனை பொறுப்பற்ற ரவுடித்தனங்களுக்கும் புனித முலாம்பூசியது அமர்க்களம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் உருப்படாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்கள் பலரும், தங்களைத் தாங்களே ஒரு அல்டிமேட் ஸ்டாராகக் கற்பனை செய்துகொண்டு, நமக்கும் பின்னாடி ஒரு சோகக் கதை இருக்குடா, என்று தங்களின் சோம்பேறித்தனத்திற்குத் தத்துவார்த்த முட்டுக் கொடுக்கத் தொடங்கினர்.

இப்படத்தில் நாயகன், நாயகியை எப்படிக் காதலிப்பார் தெரியுமா?

முதலில் அவளை மிரட்டுவார், அவளது சம்மதம் இல்லாமல் பின்தொடர்வார், ஒரு கட்டத்தில் அவளைக் கடத்திக் கொண்டு போய் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைப்பார். ஒரு பெண்ணின் தனிமனித சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்கும் இந்தக் கடத்தல் நாடகத்தைத்தான் இத்திரைப்படம் காதலின் நுழைவாயில் என்று கமர்ஷியலாக நமக்கு விற்றது.

ஒரு பெண்ணைக் கடத்தி வைத்து மிரட்டினாலும், அவளுக்குக் கொஞ்சம் சோறு போட்டு, பழைய கதையைப் பேசினால் அவள் உங்கள் மீது உருகிப் போவாள் என்ற ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் வக்கிரத்தைத் தமிழர்களின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை அமர்க்களத்திற்கு உண்டு.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த நைன்டிஸ் கிட்ஸ் பலரும், பெண்களை மதிப்பதை விடுத்து, அவர்களை மிரட்டுவதையும், கடத்துவதையும், வளைப்பதையும்தான் காதலின் ஆகச்சிறந்த பார்முலா என்று நம்பினர்.

இத்திரைப்படத்தின் பாடல்களும், அதன் பின்னணிச் சூழலும் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த அபத்த்தமான கலாச்சாரப் பங்களிப்பு அளப்பரியது. கையில் மதுக் கோப்பையோடும், வாயில் சிகரெட்டோடும், தாடியை வளர்த்துக்கொண்டு தியேட்டர் சீட்டில் படுத்துக் கிடக்கும் அல்டிமேட் ஸ்டாரின் பிம்பம், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு புதிய டிப்ரஷன் பேஷனைக் கொடுத்தது.

வாழ்க்கையில் ஒரு தோல்வி அல்லது ஏமாற்றம் வந்தால், அறிவார்ந்த முறையில் அதை எப்படிக் கடப்பது என்று யோசிக்காமல், உடனே கள்ளுக்கடைக்கும் டாஸ்மாக்குக்கும் ஓடிச் சென்று, சத்தமில்லாத் தனிமைக் கேட்டேன் என்று அழுதுகொண்டே பாடுவதுதான் காதலின் இலக்கணம் என்று இத்திரைப்படம் மூலம் போதிக்கப்பட்டது.

நிஜ வாழ்க்கையின் எதார்த்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் துப்பில்லாத ஒரு பலவீனமான, போதைக்கு அடிமையான தலைமுறையை உருவாக்க இந்த ரௌடியிஸ டார்க் ரொமாண்டிசிசம் மிகச் சிறப்பாகப் பயன்பட்டது.

படத்தில் நாயகியின் வளர்ப்புத் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி. அவர் தன் மகளைக் கண்டிப்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்க்க முயல்வார். ஆனால், படம் அவரை எப்படிச் சித்தரிக்கும்? ஒரு வில்லனைப் போலவும், இரக்கமற்ற கோமாளியைப் போலவும் காட்டும். அதேநேரம், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு திரியும் ரவுடி நாயகனை உண்மையான பாசக்காரன் எனக் காட்டும்.

பெற்றோர்களின் நியாயமான கண்டிப்பையும், வளர்ப்பு முறையையும் நம் சுதந்திரத்தைப் பறிக்கும் அராஜகம் என்று இளைஞர்களை எண்ண வைத்து, குடும்பக் கட்டமைப்பிற்குள் ஒரு தேவையற்ற கிளர்ச்சியை இத்திரைப்படம் தூண்டிவிட்டது.

அமர்க்களம் பாக்ஸ் ஆபீஸில் மங்காத்தா நாயகனின் மார்க்கெட்டை இமயமலையில் ஏற்றியிருக்கலாம், நிஜ வாழ்க்கையிலும் அதே நாயகியுடன் அவருக்குத் திருமணத்தை முடித்து வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதைக் கெத்து என்றும், பெண்களை மிரட்டுவதைக் காதல் என்றும், மதுவின் போதையில் விழுந்து கிடப்பதைத் தத்துவம் என்றும் நம்பிய ஒரு முதிர்ச்சியற்ற அமர்க்களமான கூட்டமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

11 Jun 2026

கிராமியத் தறியின் திரை மகுடம் – பாரதிராஜா!

கிராமியத் தறியின் திரை மகுடம் – பாரதிராஜா!

மனிதர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நகரத்தை நோக்கி ஓடும் மனிதர்களுக்கு மத்தியில், ஒரு மனிதன் நகரத்திற்கு ஓடிவந்து, பின் ஒட்டுமொத்த நகரத்தையும் கிராமத்தை நோக்கி ஓடவைத்தார். அவர்தான் பாரதிராஜா.

அவருக்குள் ஒரு விசித்திரமான ஏக்கம் இருந்தது. சினிமா கிராமத்திற்குப் போய்விட்டது, ஆனால் கிராமம் ஏன் சினிமாவுக்குள் வரவில்லை? என்பதுதான் அது.

சுகாதார ஆய்வாளர் என்ற அரசுப் பணியைத் துறந்துவிட்டு, சென்னைக்கு அவர் கிளம்பியபோது, அவரிடம் இருந்தது ஒரு பெட்டி அல்ல; கிராமத்து மனிதர்களின் உணர்வும் வியர்வையும் .

இன்று ஐம்பத்தியாறு ஆண்டுகள் கழித்து அவர் பத்மஸ்ரீயுடனும், தேசிய விருதுகளுடனும், உயிரற்ற உடலாகத் தன் சொந்த மண்ணுக்குத் திரும்பியிருக்கிறார். மரணம் என்பது ஒரு பயணத்தின் முடிவு அல்ல, அது ஒரு வட்டத்தின் பூர்த்தி. அவர் கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு முன்பு வரை தமிழ் சினிமா என்பது அரண்மனைகளிலும், பங்களாக்களிலும், மேல்தட்டு மனிதர்களின் பட்டு வேட்டிகளிலும் படுத்துறங்கிக் கொண்டிருந்தது. பாரதிராஜா அதை இழுத்துக்கொண்டு வந்து சேற்றிலும் சகதியிலும் உட்கார வைத்தார்.

ஏவிஎம், ஜெமினி போன்ற பிரம்மாண்ட ஸ்டூடியோக்களின் செயற்கை வெளிச்சங்களை உடைத்துவிட்டு, தேனி, மதுரை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிஜமான சூரிய வெளிச்சத்திற்குக் கேமராவைத் திருப்பினார்.

அதுவரை திரையில் உலா வந்த கார்த்தி, வஸந்த், ராஜா, திவ்யா, காவ்யா, அனிதாக்களுக்கு மத்தியில் பரட்டை, சப்பாணி, குருவம்மா, மயிலு, பொன்னாத்தா என்ற பெயர்களை உலவவிட்டார். மனிதர்களின் பெயர்களில்தான் எத்தனை மண்வாசனை!

இதற்கெல்லாம் உச்சமாக, அதுவரை நடிகர் திலகம் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் உலகநாயகன் என்றும் கொண்டாடப்பட்ட பிம்பங்களை அவர் கையாண்ட விதம் ஒரு தத்துவார்த்த விந்தை. கமல்ஹாசனை வெறும் கோவணம் கட்ட வைத்துச் சப்பாணியாக்கினார். சிவாஜி கணேசனைத் தன் ராஜ தோற்றத்தைக் கழற்றிவைத்துவிட்டு எளிய மனிதனாக முதல் மரியாதை செய்ய வைத்தார். மனிதன் தன் ஆடைகளையும் பகட்டுகளையும் கழற்றி வைக்கும்போதுதான் அவன் முழுமையான மனிதனாகிறான்; நடிகனும் அப்படித்தான் போல.

வசனங்கள் என்பவை அதுவரை அடுக்கு மொழிகளாகவும், பிரச்சாரப் பாணி பிரசங்கங்களாகவும் இருந்தன. பாரதிராஜா அதை கிராமிய மொழி என்று சொல்லப்பட்ட எளிய மக்களின் பேச்சு மொழியாக மாற்றினார்.

பாரதிராஜா என்னும் திரைசூரியன் ஜூன் 10இல் மறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மரணம் என்பது உடலுக்கு மட்டுமே நிகழும் ஒரு சுருக்கமான விபத்து.

அவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு பொன்மகுடம் அல்லது கிராமத்துத் தறியில் நெய்யப்பட்ட பட்டாடை. அவர் திரையிலிருந்து மறைந்திருக்கலாம், ஆனால் அந்த மண் வாசனை தமிழ் சினிமா இருக்கும் வரை ஒரு கிராமத்துத் தென்றலாக வீசிக்கொண்டே இருக்கும். ஏனெனில், காற்றுக்கு மரணம் இல்லை; காற்றோடு கலந்த மண்வாசனைக்கும் மரணம் இல்லை.

*****

கபடி டூ கடத்தல் – சீரழித்த ஒரு பாஸ்ட் பார்வேர்ட் டெக்னிக்!

சீரழித்த சினிமா – 9

கில்லி

கபடி டூ கடத்தல் – சீரழித்த ஒரு பாஸ்ட் பார்வேர்ட் டெக்னிக்!

இரண்டாயிரங்களின் நடுப்பகுதியில், தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த இளவட்டங்களும் தங்களின் படிப்பு, வேலை, எதிர்காலம் போன்ற அற்பமான விஷயங்களை மறந்துவிட்டு, ஒரே ஒரு சொல்லுக்குப் பின்னால் பைத்தியமாக அலைந்தார்கள். அதுதான் கில்லி. 2004இல் வெளியான இத்திரைப்படம், தமிழ் கமர்ஷியல் சினிமாவின் இலக்கணத்தையே மாற்றி எழுதியது.

கில்லி என்ற தலைப்பு வைக்கப்பட்டாலும், இப்படம் கிட்டிப்புள் விளையாட்டோடு தொடர்புடையது கிடையாது. கபடியோடு அதுவும் கமர்ஷியல் கபடி என்ற பெயரில் ஆள் கடத்தலோடு தொடர்புடையது.

தமிழ்நாட்டு இளைஞர்களின் பொதுப்புத்தியை இப்படம் எப்படி மூர் மார்கெட் ரேஞ்சுக்குச் சீரழித்த்து என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த கல்வி தத்துவம் என்ன தெரியுமா? நீங்கள் வீட்டில் அப்பாவிற்குத் தெரியாமல் பொய் சொல்லிவிட்டு, காலேஜுக்குப் போகாமல் கபடி விளையாடப் போகலாம். வழியில் யாராவது ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், அங்கேயே கபடியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மதுரையே அலறும் அளவிற்கு ரவுடித்தனம் செய்யலாம்.

படத்தில் வரும் நாயகன், ஒரு சாதாரணப் போலீஸ் அதிகாரியின் மகன். ஆனால், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் வேகம் இருக்கிறதே, அது எந்த ஒரு சர்வதேச டானுக்கும் குறைவானது அல்ல.

விளையாட்டு வீரனாக வர வேண்டுமென்றால் உங்களுக்கு ஒழுக்கமோ, பயிற்சியோ தேவையில்லை; நடுரோட்டில் ஐம்பது பேரை அடித்துத் துவம்சம் செய்யும் முரட்டுத்தனம் இருந்தால் போதும், என்ற விசித்திரமான வீரத்தை இத்திரைப்படம் இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.

இப்படத்தின் கதையே ஒரு விசித்திரமான முரண்பாடுதான். வில்லன் நாயகியைக் காதலிப்பதாகச் சொல்லி அவளை மிரட்டுகிறார், பின்தொடர்கிறார், அவளது சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்ய முயல்கிறார். இது டாக்சிக் ஸ்டாக்கிங்.

அவரிடமிருந்து நாயகியைக் காப்பாற்றும் நாயகன் என்ன செய்கிறார்? அவரும் அவளை அவளது சம்மதம் இல்லாமல் மதுரையிலிருந்து சென்னைக்குக் கடத்திக் கொண்டு வந்து, தன் வீட்டின் பரணில் அடைத்து வைக்கிறார்!

வில்லன் செய்தால் அது அராஜகம், ஹீரோ செய்தால் அது காதல் என்ற தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இரட்டை நிலையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

பெண்ணின் பாதுகாப்பு என்ற பெயரில் அவளது தனிமனித சுதந்திரத்தை இரண்டு ஆண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பந்தாடுவதை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றி விற்றதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

படத்தில் நாயகனின் தந்தை ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் தன் மகன் உருப்படாமல் சுற்றுகிறானே என்று கண்டிப்பதும், சட்டத்தின்படி நடக்க முயல்வதும் படத்தில் எப்படிச் சித்தரிக்கப்படும் தெரியுமா? அவர் ஒரு காமெடிப் பீஸாகவும், வில்லனுக்குப் பயப்படுபவராகவும், மகனின் கெத்துக்கு முன்னால் தோற்றுப் போகும் ஒரு பலவீனமான அதிகாரியாகவும் சித்தரிக்கப்படுவார்.

பெற்றோர்களின் நியாயமான கண்டிப்பையும், சமூக ஒழுங்கையும் நம் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைப் போடும் வில்லத்தனம் என்று இளைஞர்களை எண்ண வைத்தது இத்திரைப்படம். நிஜ வாழ்க்கையில் வீட்டில் அப்பாவையும், வெளியில் சட்டத்தையும் மதிக்காமல், நாங்க கில்லிடா என்று சுற்றும் ஒரு பொறுப்பற்ற தலைமுறையை உருவாக்க இத்திரைப்படம் மிகச் சிறப்பாகப் பயன்பட்டது.

இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் சாபம், இதன் அசாத்தியமான வேகம். படம் பார்ப்பவனுக்குச் சிந்திக்க ஒரு நொடி கூட இடம் தராமல் பாடல்களாலும், சண்டைக்காட்சிகளாலும், பஞ்ச் வசனங்களாலும் அவனது பகுத்தறிவை மழுங்கடித்து, ஒருவிதத் திரைபோதைக்குள் தள்ளிவிட்டது இந்தக் கில்லி.

விளைவு?

திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தன் நிஜ வாழ்க்கையின் வறுமையையோ, வேலையில்லாத் திண்டாட்டத்தையோ பற்றி யோசிக்காமல், தன்னை ஒரு கில்லியாகக் கற்பனை செய்துகொண்டு அலையத் தொடங்கினான்.

கில்லி பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது, அப்படத்தின் நாயகனை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக அரியணையில் ஏற்றியது. ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

பொறுப்பில்லாமல் பொய் சொல்வதைக் கெத்து என்றும், பெண்களைக் கடத்துவதைக் காதல் என்றும், சட்டத்தை மதிக்காமல் அராஜகம் செய்வதை வீரம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற கில்லித்தனமான சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

10 Jun 2026

காயும் டெல்டா… கரையாத மேட்டூர்!

காயும் டெல்டா… கரையாத மேட்டூர்!

இந்த உலகத்தில் நாம் எப்போதுமே இரண்டு விஷயங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் வருவதாகச் சொல்லும் நண்பர் மற்றும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய காவிரி தண்ணீர். இரண்டுமே பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்பதுதான் பிரபஞ்சத்தின் மாறாத விதி.

வாட் அபௌட் ஜூன் 12 என்றால், நீர் வளத் துறை வட்டாரங்கள் மிகவும் கூலாக, ஜூன் 12இல் சான்ஸே இல்லை பாஸ். ஆகஸ்ட் கடைசியில வேணா வந்து பாருங்க, அப்பவும் இல்லைன்னா செப்டம்பர் பர்ஸ்ட் வீக் கன்பார்ம் என்று டோக்கன் வழங்கிவிட்டார்கள்.

டெல்டா மாவட்டங்களில் இருக்கும் 16 லட்சம் ஏக்கர் நிலங்களும், அதை நம்பியிருக்கும் விவசாயிகளும் குறுவை சாகுபடி என்ற பெயரில் ஏதோ ஒரு கனவு கண்டுகொண்டிருந்தார்கள். பாவம், அவர்கள் கனவில் மண் அள்ளிப் போடுவதுதான் தென்மேற்கு பருவமழையின் தற்போதைய பொழுதுபோக்கு.

பொதுவாக நம் ஊரில் காரியம் நடக்கவில்லை என்றால், உடனே ப்ளாஷ்பேக் கதைகளைப் பேச ஆரம்பித்துவிடுவோம். மேட்டூர் அணைக்கும் ப்ளாஷ்பேக் இருக்கிறது.

91 வருஷ அணை வரலாற்றில், கரெக்டா ஜூன் 12க்கு தண்ணி திறந்தது வெறும் 20 முறைதான்.

அணை நிரம்பி வழிந்ததால், சொன்ன தேதிக்கு முன்னாடியே திறந்துவிட்ட கதையும் நடந்திருக்கிறது. அது 11 முறை. இது போன்ற அதிசயங்கள் எப்போதாவது நடக்கும். இப்போது நோ சான்ஸ்.

60 ஆண்டுகள் தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையை லேட்டாகத் திறந்திருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், லேட்டாகத் திறப்பதுதான் மேட்டூர் அணையின் இயல்பு நிலை.

கடந்த நீர்ப்பாசன ஆண்டில் ஏதோ தெரியாமல் 330 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துவிட்டது. உடனே இந்த வருஷமும் அதே மாதிரி நடக்கும் என்று எதிர்பார்ப்பது காளை மாட்டின் கொம்பில் பால் கறக்கும் கதைதான்!

தற்போது அணை நீர்மட்டம் 79 அடியாகவும், உள்ளே வரும் தண்ணீரின் அளவு வெறும் 760 கனஅடியாகவும் இருக்கிறது. ஆனால், வெளியே குடிநீருக்காக 1,000 கனஅடி திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, கல்லாப்பெட்டிக்கு உள்ளே வரும் காசை விட, வெளியில் போகும் காசு அதிகம். இப்படியே போனால் அணை சீக்கிரம் ஜீரோ பேலன்ஸ் ஆகிவிடும்.

இதற்கெல்லாம் காரணம் நம் அண்டை மாநிலமான கர்நாடகா. அங்கே கபினி, கிருஷ்ணராஜசாகர் என்று இரண்டு அணைகள் இருக்கின்றன. அங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுவதை விட, பெங்களூர் டிராபிக்கைக் குறைப்பது எளிது என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. அந்த இரண்டு அணைகளும் கொள்ளளவு நிரம்பி, வழிந்து, தட்டக் கெட்டு, வேறு வழியே இல்லாமல் வெளியேறும் உபரி நீர் மட்டும்தான் தமிழகத்திற்கு வரும். அதாவது, அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு இலைகளில் சிந்தும் பருக்கைகளைத்தான் நாம் காவிரித் தாய் என்று பயபக்தியோடு வரவேற்க வேண்டும்.

இனி என்ன நடக்கும்?

ஜூன் 12க்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. நாளை கடந்து நாளை மறுநாள் அந்த 12 வந்து விடும். மேஜிக் நடந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப் போவதில்லை. பருவமழை பொய்த்தால் குறுவை சாகுபடி காலி.

மத்திய அரசு, மாநில அரசு, கர்நாடக அரசு, இயற்கை அன்னை என நான்கு தரப்பும் சேர்ந்து நடத்தும் இந்த மாபெரும் வாட்டர் கேம் ஷோவில், எப்போதுமே தோற்றுப் போவது விவசாயி மட்டும்தான்.

டெல்டா விவசாயிகள் இப்போது கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். அணையில் தண்ணீர் இருக்கும்போது விவசாயம் செய்வது சாதாரண விஷயம். அணையில் தண்ணீரைக் கண்ணிலும் காட்டாமல், கவலையை மட்டுமே அறுவடை செய்ய வைப்பதுதான் இந்திய விவசாயத்தின் உன்னதக் கலை!

அடுத்த ஆகஸ்ட் இறுதியில் மேட்டூர் அணையின் மதகுகள் திறக்கப்படுகிறதா, அல்லது விவசாயிகளின் கண்கள் திறக்கப்படுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

*****

சைக்கோத்தனத்தை மசாலாதனமாக்கிப் பின்னோக்கிப் பாய்ந்த திரை!

சீரழித்த சினிமா – 8

வேட்டையாடு விளையாடு

சைக்கோத்தனத்தை மசாலாதனமாக்கிப் பின்னோக்கிப் பாய்ந்த திரை!

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த நிம்மதியும், தூக்கமும் சைக்கோ என்ற ஒற்றை வார்த்தைக்கு முன்னால் மொத்தமாகப் பலியிடப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய லோக்கல் ரவுடிகளையும், அரசியல்வாதிகளையும் ஓரமாக உட்கார வைத்துவிட்டு, மருத்துவப் படிப்பு படித்த இரண்டு இளைஞர்கள் அமெரிக்கா வரை சென்று தொடர் கொலைகள் செய்யலாம்; அவர்களைப் பிடிக்க ஒரு தமிழ்நாட்டு போலீஸ் துப்பாக்கியோடு உலகம் சுற்றலாம் என்ற ஒரு புதுவிதமான உலகளாவிய அத்துமீறல் பார்முலாவைத் தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு உண்டு.

உலக நாயகனின் மிடுக்கான காக்கிச் சட்டை பிம்பமும், பொளந்து கட்டும் தீம் இசையும், நியூயார்க் நகரப் பின்னணியும் சேர்ந்து, தமிழர்களின் சிந்திக்கும் திறனை எப்படி ஒரு குரூரமான எல்லைக்குள் சுருக்கியது என்பதை ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த காவல்துறை ஜனநாயகம் என்ன தெரியுமா? நீங்கள் ஒரு திறமையான போலீஸ் அதிகாரியாக இருந்தால் போதும், உங்களுக்குச் சர்வதேசச் சட்டங்களோ, எப்.ஐஆரோ, நீதிமன்ற வாரண்ட்டோ தேவையில்லை. அமெரிக்காவுக்கே சென்றாலும், அங்குள்ள உள்ளூர் போலீஸை விட உங்களுக்குத்தான் இன்ஸ்டிங்க்ட் அதிகமாக இருக்கும். எவனை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லலாம்.

படத்தில் வரும் காவல்துறை நாயகன், ஒரு நாகரிகமான போலீஸாகக் காட்டப்பட்டாலும், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் விதம் அப்பட்டமான அராஜகம்.

வில்லன் சைக்கோ என்பதால், அவனைக் கொல்லும் போலீஸும் கொஞ்சம் சைக்கோத்தனமாக மாறலாம் என்ற ஆபத்தான சிந்தனையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

விளைவு?

நிஜ வாழ்க்கையிலும் குற்றவாளிகளுக்கு மனித உரிமை எதுக்கு சார்? ஸ்பாட்லேயே போட்டுத் தள்ளுங்க, என்று சட்டத்தின் ஆட்சியைக் கேலி செய்யும் ஒரு வன்முறைப் பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது ஆழமாக விதைத்தது.

இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் சாபம், அது வன்முறையைக் காட்டிய விதம். அதுவரை தமிழ் சினிமாவில் வன்முறை என்பது கச்சாத்தனமான அரிவாள் வெட்டுகளாக இருந்தன. அதை மிகவும் கிளாஸ் ஆக, ஸ்டைலிஷ் ஆக, மருத்துவக் கருவிகளைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டும் குரூரமாக மாற்றி வேட்டையாடி விளையாடியது இத்திரைப்படம்.

கொலையையும், சித்திரவதையையும் ஒரு கலை வடிவம் போலக் காட்சிப்படுத்தி, பார்ப்பவனுக்கு ஒருவித வக்கிரமான சுவாரசியத்தைத் தந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழர்கள், தன் சக மனிதர்களை நேசிப்பதை விடுத்து, நமக்குத் தெரியாத ஒரு சைக்கோ நம்ம பக்கத்துலேயே சுத்திட்டு இருப்பானோ? என்ற தேவையற்ற அவநம்பிக்கையையும், மனப்பயத்தையும் தன் மூளையில் ஏற்றிக்கொண்டார்கள்.

படத்தில் வரும் வில்லன்கள் இருவருமே மனநலம் பாதிக்கப்பட்ட கொடூரக் கொலைகாரர்கள். அவர்களது பெயர்கள் அக்மார்க் தமிழில் அமுதன் மற்றும் இளமாறன் எனப் பெயரிடப்பட்டிருந்தது, தமிழர்களைச் சைக்கோவாகச் சித்தரிக்க நினைத்த குறியீடோ என்னவோ?

இத்திரைப்படம் மருத்துவத் துறையையும், மனநலப் பிரச்சினைகளையும் கையாண்ட விதம் மிகவும் முதிர்ச்சியற்றது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே அவர்கள் கொடூரமானவர்கள், அவர்களைச் சுட்டுக் கொல்வதுதான் சமூகத்திற்கு நல்லது, என்ற ஒரு தவறான புரிதலையம் இது பொதுப்புத்தியில் விதைத்தது.

அறிவியல் பூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும் அணுக வேண்டிய ஓர் உளவியல் சிக்கலை, வெறும் மசாலா படத்திற்கான வில்லத்தனக் கருவியாக மாற்றி, சமூகத்தில் மனநலம் பற்றிய தவறான பிம்பத்தை இன்னும் பலப்படுத்தியதுதான் இத்திரைப்படம் செய்த ஆகச்சிறந்த சீரழிவு.

படத்தின் மிக மோசமான, கசப்பான பகுதி என்னவென்றால், அமுதன் மற்றும் இளமாறன் ஆகிய இருவருக்குள் இருக்கும் ஓரினச்சேர்க்கை அல்லது மாற்றுப் பாலின ஈர்ப்பை ஏதோ ஒரு பெரும் குற்றச்செயல் போலவும், அதுதான் அவர்களைச் சைக்கோக்களாக மாற்றியது போலவும் சித்தரித்ததுதான். இயற்கைக்கு மாறானவர்கள் என்ற போலி முத்திரையைக் குத்தி, அவர்களின் பாலியல் அடையாளத்தையே வன்முறையின் ஊற்றுக்கண்ணாகக் காட்டியது இத்திரைப்படம்.

ஒரு முற்போக்குச் சமூகம் பாலின சமத்துவத்தைப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், கமர்சியல் சினிமா தன் கிளைமாக்ஸ் விறுவிறுப்பிற்காகத் தன்பாலின ஈர்ப்பாளர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் மீதான பொதுச் சமூகத்தின் வெறுப்பை மிகக் கச்சிதமாக மூலதனமாக்கிக் கொண்டது வேட்டையாடு விளையாடு.

தன்னை முற்போக்குக் கலைஞனாகக் காட்டிக் கொள்ளும் உலக நாயகன் இப்படத்தின் நாயகனாக நடிக்க ஒத்துக் கொண்டு, கமர்ஷியல் காக்டெயிலைத் தமிழ் மக்களின் வாயில் ஊற்றி, ஒரு வித சைக்கோ போதையில் தள்ளியதுதான் விசித்திரம்.

வேட்டையாடு விளையாடு பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது. படையப்பாவின் வசூலை முந்திக் காட்டியது. உலக நாயகனின் திரையுலகப் பாதையில் மற்றுமொரு மைல்கல் என்று கொண்டாடப்பட்டது. ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

வன்முறையை ஸ்டைலாகப் பார்ப்பதைக் கெத்து என்றும், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை இன்ஸ்டிங்க்ட் என்றும், பிற மனிதர்களின் அடையாளங்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை ஓர் ஆளுமை என்றும் மாற்றியதுதான் இந்த வேட்டையாடு விளையாடு தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையில் நிகழ்த்திய ஆகச்சிறந்த சைக்கோதனமான சீரழிவு!

*****