26 Jul 2026

மேஜைக்கடியில் காந்தி!

மேஜைக்கடியில் காந்தி!

நகராட்சியின் இரும்பு நாற்காலிக்கு வாதநோய் வந்து பல வருடங்களாகிவிட்டன. வெயில் தாங்காமல் அது ஈனஸ்வரத்தில் முனகியபோதெல்லாம், "நான் இருக்கேன்டி செல்லம்" என்று ராமலிங்கம் தன் பிட்டத்தால் அதை அணைத்துக் கொண்டார்.

அவர் மேஜையில் இருந்த மனுக்களுக்கு அடியில் எப்போதும் ஓர் ஐந்நூறு ரூபாய் தாள் அரைப் பிரசவ நிலையில் தலைநீட்டிக்கொண்டிருக்கும். ராமலிங்கம் அதைத் தொடுவதும், விரல்கள் பட்டுப்போன பூச்சிகளைப் போலப் பின்வாங்குவதும் கடந்த இருபது வருடங்களாக நடக்கும் ஒரு சின்னஞ்சிறு நாடகம்.

உள்ளே நுழைந்தார் தலைமை எழுத்தர் சபாபதி. அவர் குரலில் எப்போதும் ஒரு கிலோ வனஸ்பதி தடவியிருக்கும்.

"என்ன யோசனை ராமலிங்கம்?"

"இல்லை சபாபதி. சமூகத்தில் தெருவில் திருடுபவனை அடித்துத் துவைக்கிறார்கள். கோடிகளில் சுருட்டுபவனுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?"

சபாபதி லேசாகச் சிரித்தார். "திருடுறவனுக்கு அதிகாரப் பின்புலம் இல்லை ராமலிங்கம். ஊழல் பண்றவனுக்கு அதிகாரம் இருக்கு. அதிகாரத்தைப் பார்த்துக் கும்பிடு போடுவது நம் டி.என்.ஏவிலேயே ஊறிப்போன ஜீன். பெண்டாட்டி, பிள்ளை குட்டி என்று சுயநலம் இருக்கும் வரை எந்த நாயாலும் இந்த பயத்தை ஒழிக்க முடியாது."

"ஆனால், பயம் நிலையானது இல்லையே?" என்றார் ராமலிங்கம், ஒரு தத்துவ ஞானியின் போஸைக் கஷ்டப்பட்டு வரவழைத்தபடி.

*

அன்று மாலை ஊரின் மைதானத்தில் ஒரு ரட்சகன் தோன்றியிருந்தார்.

"யார் லஞ்சம் கேட்டாலும் செருப்பைக் கழற்றி, மன்னிக்கவும், தர முடியாது என்று துணிச்சலாகச் சொல்லுங்கள்! அரசாங்கம் உங்களுடையது, நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன்!"

மேடையில் ஒலித்த அந்த புதிய அதிகாரத்தின் குரல், அங்கிருந்த இளைஞர்களின் கண்களில் உடனே ஏதோ ஓர் எக்ஸ்ட்ரா வெளிச்சத்தை ஏற்றிவைத்தது. ராமலிங்கத்தின் மகன் கார்த்திக், தன் கைபேசியில் அதை நேரலையாகப் பதிவிட்டு, உலகெங்கும் உள்ள தன் நண்பர்களுக்குப் பகிர்ந்து, தனக்கான லைக்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் கார்த்திக் வீராப்பு பேசினான். "அப்பா, இது வெறும் பேச்சு இல்லை. மேலிருக்கிற அதிகார மரத்தின் ஆணிவேரையே வெட்டப் போகிறார்கள். இனிமேல் நாங்களும் சும்மா இருக்கப்போவதில்லை. பல கோடி கண்கள் கண்காணிப்பில் இறங்கும்!"

ராமலிங்கம் பதில் பேசாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். காலத்தின் நதியில் ஏதாவது புதுக் குப்பை மிதந்து வருகிறதா என்று பார்க்கத் தானும் தயார் என்பது போல ஒரு மெல்லிய நம்பிக்கை அவர் மனதிலும் துளிர்த்தது.

*

அடுத்த நாள் காலை.

நகராட்சி அலுவலகம்.

அதே வாதநோய் நாற்காலி.

மேஜை மீது அதே மனு.

அடியில் அதே ஐந்நூறு ரூபாய்.

மனுவைக் கொண்டு வந்தவர் லேசாகக் கண் சிமிட்டி, "கொஞ்சம் சீக்கிரம் முடியுங்களேன்" என்றார்.

நேற்றைய மேடைப் பேச்சும், மகனின் வீராப்பும் ராமலிங்கத்தின் மனக்கண் முன் கவாத்து அடித்தன.

ராமலிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்தார். காந்தியைப் போலத் தன் முதுகெலும்பை நேராக்கினார். அந்த ஐந்நூறு ரூபாய் தாளை அப்படியே எடுத்தார். நபரிடம் திருப்பிக் கொடுத்து, "லஞ்சம் கொடுக்காதீர்கள். இது உங்கள் உரிமை!" என்றார்.

அந்த மனிதர் திகைக்கவில்லை. அதற்குப் பதிலாக, "யோக்கிய சிகாமணி. சரி, அப்ப வேலையப் பாருங்க" என்று லேசான எள்ளலுடன் சிரித்துவிட்டுத் தாளைப் பையில் போட்டுக் கொண்டு நகர்ந்தார்.

*

மதியம் இரண்டு மணி.

சபாபதி ஒரு காகிதத்தோடு வந்தார். "ராமலிங்கம், உங்களை உடனடியா பி பிரிவுக்கு மாத்தியாச்சு. அங்கே பழைய கிழிஞ்ச கோப்புகளைக் தூசி தட்டி அடுக்குற வேலை."

ராமலிங்கம் அதிர்ச்சியடைந்தார். "ஏன் சபாபதி? நான் என் கடமையைத்தானே செய்தேன்?"

சபாபதி பரிதாபமாகப் பார்த்தார். "காலையில உன்கிட்ட காசு கொடுத்தாரே. அவரு நேத்து மேடையில் பேசினாரே ஒரு ரட்சகன், அவரோட சொந்த மச்சான். லஞ்சம் வாங்காதேன்னு மேடையில் பேசறது மக்களுக்குத் தர்ற ஒருவித போதை மருந்து ராமலிங்கம். ஆனா அந்த சிம்மாசனத்தைச் சற்றே அசைக்கப் பார்த்தாலும், அதே கைதான் வந்து உன் தலையில் அடிக்கும்."

*

மாலை வீட்டில் கார்த்திக் சோகமயமாய் உட்கார்ந்திருந்தான்.

"என்னப்பா ஆச்சு? உங்களை ஆபீஸ்ல மிரட்டுனாங்களாமே? நான் சோஷியல் மீடியால போஸ்ட் போடலாம்னு பார்த்தா, நம்ம ஏரியா இளைஞர் மன்றத்துல இருந்து போன் பண்ணி இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனை, பேசாம இருங்கன்னு சொல்றாங்க அப்பா. போன் பண்ணது வேற யாரும் இல்லை, நேத்து என் கூடவே வந்து கைதட்டுன என் நண்பன்தான்," என்றான். அவனது குரலில் நேற்றிருந்த புரட்சி வடிந்து, ஒருவித அச்சு பிசகாத பயம் எட்டிப்பார்த்திருந்தது.

ராமலிங்கம் மெல்ல நடந்து சென்று ஜன்னல் அருகில் நின்றார். தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்தார். காலியாக இருந்தது.

நாளை மீண்டும் அதே இரும்பு நாற்காலியில் அமர்ந்து, மனுக்களின் அடியில் எட்டிப் பார்க்கும் ஐந்நூறு ரூபாய் தாள்களை எவ்வித சலனமுமின்றி, நாகரிகமாகப் பெறத் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை அவர் மனம் மெதுவாகப் புரிந்துகொண்டது.

இருள் முழுமையாக நகரைச் சூழ்ந்துகொண்டது வழக்கம்போல.

*****

ஒரு பிச்சைக்காரனின் விடியலும், அரை மணி நேர அறுவை சிகிச்சையும்!

நெல் திருவிழா – 2026

ஒரு பிச்சைக்காரனின் விடியலும்,

அரை மணி நேர அறுவை சிகிச்சையும்!

பாரம்பரியத்தைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, கடைசியில் என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறாத குறைதான் இந்த 2026 ஆம் ஆண்டின் நெல் திருவிழா அனுபவம்.

நேற்று நடந்து முடிந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நெல் திருவிழாவுக்குச் சென்று வந்த பிறகுதான் தெரிந்தது, நம் முன்னோர்கள் பாரம்பரிய நெல்லை மட்டும் விட்டுச்செல்லவில்லை, அதை வாங்குவதற்குத் தேவையான தப்பிப் பிழைக்கும் கலையையும் சேர்த்துத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று.

ஒவ்வொரு முறையும் இந்தத் திருவிழாவுக்குக் கிளம்பும்போதும் மனதுக்குள் ஒரு பெரிய கனவு இருக்கும்,  "இன்றைக்கு எப்படியாவது ஏதேனும் ஒருபாரம்பரிய நெல்லை வாங்கி வந்து இந்த ஊரில், இந்த நாட்டில், இந்த உலகத்தில் பாரம்பரிய விவசாயத்தைப் பாதுகாத்து ஒரு கை பார்த்துவிட வேண்டும்!" என்று.

ஆனால், அங்கு சென்றதும் ஒவ்வொரு முறையும் நடப்பதே வேறு.

திருவிழா நடந்த இடத்தை அடைந்தவுடனேயே எனக்குள் ஒரு நடுக்கம் தொற்றிக்கொண்டது. கூட்ட நெரிசலைப் பார்த்தால், அடுத்து ஒரு "கரூர் சம்பவம்" இங்கேதான் நடக்கப்போகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது.

அந்த அலைமோதும் கூட்டத்துக்கு நடுவே சிக்கிச் சின்னப்பின்னமாகி, கடைசியில் உயிர் தப்பி வீடு திரும்பியதே போன ஜென்மத்தில் நான் செய்த ஏதோ ஒரு புண்ணியம்தான்.

நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் தருகிறார்களாம். அதை வாங்குவதற்குப் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் முதல் அரைக்காணி நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வரை, கர்நாடகாவிடம் காவிரித் தண்ணீரைக் கேட்டுப் போராடும் விவசாயிகளின் அதே தர்ணா பாணியில் காலையிலிருந்து அதை கொடுக்கும் வரை தேவுடு காத்து வெயிலில் அங்கே இங்கே நகராமல் பரிதாபமாக உட்கார்ந்திருக்கிறார்கள். எங்கே போனாலும் விவசாயிகளுக்குத் தர்ணா செய்வதுதான் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி போலும்.

அங்கிருந்த கூட்டத்தைப் பார்க்க பார்க்க விழா அமைப்பாளர்களுக்கு ஒரே பெருமிதம்! "அடடே, எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டோம்!" என்று அவர்கள் முகத்தில் அத்தனை திருப்தி. ஆனால், அந்த கூட்டத்தை நெறிப்படுத்தவோ, ஒழுங்கு செய்யவோ அங்கே ஒரு நாய்கூட இல்லை. நாய்கள் ஒருவேளை கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓடியிருக்கலாம்.

மதியம் சுமார் மூன்று மணி வாக்கில்தான் அந்த "பொறுப்பான மன்னர்கள்" வந்திறங்குகிறார்கள். வந்தவர்கள் நேராக அந்தப்புரத்து மாடத்தின் மீது ஏறிக்கொண்டு, கீழே நிற்கும் மக்களுக்குக் காசுகளை வீசி எறிவதைப் போல இரண்டு கிலோ நெல் மூட்டைகளைத் தூக்கி எறிகிறார்கள்.

அதன் பிறகு அங்கு நடந்ததுதான் உச்சகட்டக் கூத்து. எங்கெங்கும் ஒரே பிச்சைக்காரக் குரல்கள்.

"ஐயா, புண்ணியவானே! எனக்கு ஒரு சீரகச் சம்பா நெல்லைப் பிச்சைப் போடுங்களேன்!"

"சாமி, என் பொண்டாட்டி தங்கச் சம்பா கேட்கிறா, ஒரு பிச்சை போடுங்களேன்!"

"மகராசனே, மாப்பிள்ளைச் சம்பா பிச்சை கிடைக்குமா?"

விவசாயிகள் ஆளாளுக்குத் தொண்டை வரளப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் சளைக்காமல், ஒரு மணி நேரம் தொண்டை வறண்டு போகும் அளவுக்கு "ஐயா கனவானே சீரகச் சம்பா பிச்சைப் போடுங்கள்.  ஐயா தர்மவானே தங்கச் சம்பா பிச்சைப் போடுங்கள்" என்று கதறிப் பிச்சை கேட்டேன்.

ஆனால், கடைசியில் தான் உறைத்தது, "பிச்சைக்காரர்களுக்குத் தனக்கு வேண்டிய உணவைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிடையாது" என்கிற கசப்பான உண்மை!

இதற்கு மேல் பிச்சையெடுத்து உயிரை விட முடியாது என்று, ஒரு வழியாக அந்த நெரிசலில் இருந்து தப்பித்து, சரி ஏதாவது பார்க்கலாம் என்று அங்கிருக்கும் அரங்குகள் பக்கம் ஒதுங்கினால். அது அடுத்தகட்ட ஆபத்து!

ஏதாவது ஓர் அரங்கின் பக்கம் தப்பித்தவறி எட்டிப்பார்த்துவிட்டால் போதும், நம்மை அப்படியே கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். அப்புறம் என்ன? அனஸ்தீசியா கொடுக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடக்கத் தொடங்குகிறது!

"இந்த நெல்லோட வரலாறு தெரியுமா தம்பி? கி.மு 200இல் எகிப்து பிரமிடுக்குள்ள இதோட விதையைக் கண்டுபிடிச்சப்போ…" என்று அவர்கள் ஆரம்பிக்கும் அந்த அரிய மருத்துவச் சிகிச்சை தொடர தொடர, நமது மூளையின் ஒவ்வொரு நரம்பையும் பிச்சி பிச்சி எடுத்தாற் போல ஒரு வலி, வேதனை. அறிவியலின்படி மூளை வலியை உணராது என்பார்கள். இங்கே மூளை வலியை உணர்வது வேறு விசயம்.

நாமோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு "சாமி, ஆளை விடுங்க சாமி" என்று மனதுக்குள் அலறுவோம். ஆனால், அறுவை சிகிச்சை முடியாமல் நோயாளி வெளியேற முடியாதே!

சரி, நெல்தான் கிடைக்கவில்லை, அறுவைச் சிகிச்சையும் ஓயவில்லை, அங்கிருக்கும் பாரம்பரியக் கைவினைப் பொருட்களையோ அல்லது மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையோ வாங்கலாம் என்று விலைப்பட்டியலைப் பார்த்தால், அடேங்கப்பா! விலைவாசி விண்ணைத் தொட்டு, அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கே ராக்கெட் விட்டுக்கொண்டிருக்கிறது.

"ஐயா, இந்த அரிசி பண்டத்தின் விலை என்ன?" என்று விசாரித்தால், "அட வெறும் எண்ணூறு ரூபாய்தான் தம்பி!" என்றார்கள். சாதாரணச் சந்தையில் ஐம்பது ரூபாய்க்கு விற்கும் ஒரு பண்டத்துக்கு, பாரம்பரியம் என்கிற ஸ்டிக்கரை ஒட்டி, விலையை ஏரோபிளேன் ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருந்தார்கள்.

சாதாரண ஈயச்சொம்புக்கும், பனை வெல்லத்துக்கும் அவர்கள் சொல்லும் விலையைக் கேட்டால், நம் பாரம்பரியத்தைக் காப்பாற்ற நமது பேங்க் பேலன்ஸையும், ஊர் திரும்ப கையிலிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையு பலி கொடுக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது!

பாரம்பரிய நெல்லைப் பரப்புவது இருக்கட்டும், முதலில் மனிதர்களை மனிதர்களாக நடத்தும் பாரம்பரியத்தையும், பார்வையாளர்களை அறுவை சிகிச்சை செய்யாமல் வாழவிடும் நாகரிகத்தையும் இவர்கள் மீட்டெடுத்தால் நன்றாக இருக்கும்.

இனிமேல் எந்த நெல் திருவிழா பக்கமும் தலைவைத்துக்கூடப் படுக்கப் போவதில்லை.

பாரம்பரிய நெல் விதைகளை விடவும், இந்தத் திருவிழா தந்த மன உளைச்சல்தான் அதிகமாக விளைந்திருக்கிறது!

*****

25 Jul 2026

நிழலின் நிழல்

நிழலின் நிழல்

பாலச்சந்திரனுக்கு அன்றைய காலை நேரம் வழக்கம்போலவே அவசரத்தின் விளிம்பில் இயங்கிக் கொண்டிருந்தது. காரின் ஸ்டீயரிங் வீலைப் பிடித்திருந்த அவனது கை விரல்களில் சிறு நடுக்கம். பின்புறக் சீட்டில், நான்கு வயது ரித்விக் தன் கைகளிலிருந்த பிளாஸ்டிக் பொம்மையை அசைத்துக் கொண்டிருந்தான்.

அவன் மனைவி மாலதி, காரின் கண்ணாடி வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் பார்வை வெளியில் இல்லை; அகத்தில் எதையோ துழாவிக் கொண்டிருந்தது.

"இன்னைக்கு அந்த டே கேர்ல கொஞ்சம் சீக்கிரம் போய் கூட்டிட்டு வந்திடு மாலதி," பாலச்சந்திரன் குரலில் இருந்த படபடப்பு, நகரத்தின் நெரிசலை விட அதிகமாக இருந்தது.

"நான் ஆபீஸ்ல பர்மிஷன் கேட்கணும் பாலா. அவங்க ஆறு மணி வரைக்கும் பொறுப்பா பார்த்துப்பாங்கன்னுதானே காசு தர்றோம்?" மாலதியின் பதில் ஒரு தற்காப்பு அரணாக எழுந்தது.

ஆனால், இருவருக்குமே தெரியும், பிரச்சனை நேரத்தைப் பற்றியது அல்ல. நம்பிக்கையைப் பற்றியது.

கடந்த சில நாட்களாக ரித்விக் பகல்நேரப் பராமரிப்பு மையத்திற்குச் செல்லும்போது காட்டும் அந்தத் தீவிரமான அமைதி, ஒரு சாதாரண வீம்பு அல்ல. குழந்தைகள் அழும்போது நாம் பயப்படுவதில்லை; ஆனால், அவை சட்டென்று வார்த்தைகளை இழந்து, சுவருக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் நிழலைப் போல மாறும்போதுதான் மனித மனம் திடுக்கிடுகிறது.

அன்று மாலை, பாலச்சந்திரன் மையத்தின் கதவைத் திறந்தபோது, வரவேற்பறையில் சிகரெட் வாசனை போல ஒரு செயற்கையான நறுமணம் வீசியது. சுவர்களில் வண்ணப் படங்கள், சிரிக்கும் கார்ட்டூன்கள். எல்லாமே ஒரு சர்வதேசத் தரத்தின் சான்றுகளாகப் பளபளத்தன.

"சார், ரித்விக் இன்னைக்கு ரொம்ப குட் பாய்." என்றார் அங்கு பணிபுரியும் பெண்மணி. அவள் முகத்தில் ஒரு புன்னகை வரையப்பட்டிருந்தது. அச்சடிக்கப்பட்ட புன்னகை.

"அவன் இன்னைக்கு சரியா சாப்பிட்டானா? மத்தியானம் தூங்கினானா?" பாலச்சந்திரன் கேட்டான்.

"யெஸ் சார், எல்லாமே சிசிடிவியில ரெக்கார்ட் ஆகியிருக்கு. வேணும்னா ஆப்ல செக் பண்ணிக்கோங்க."

அவள் சொன்ன அந்த சிசிடிவி என்ற வார்த்தை பாலச்சந்திரனுக்குள் ஒரு விசித்திரமான கசப்பை உருவாக்கியது. மனிதர்களின் கவனத்தையும் அன்பையும் கேமரா லென்ஸ்கள் இடமாற்றம் செய்துவிட்ட ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம்.

கனடாவில் ஏதோ ஒரு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வை நேற்றிரவு கூகுளில் படித்தது நினைவுக்கு வந்தது. நீண்ட நேரம் பராமரிப்பு மையங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு நடத்தை சார்ந்த அசாதாரணங்கள் வரக்கூடும் என்றது அந்த ஆய்வு. அது உண்மையா, அல்லது நகரத்து பெற்றோர்களின் குற்ற உணர்ச்சியை மூலதனமாக்கும் மற்றொரு வியாபாரமா?

தெரியவில்லை.

ஆனால், ஒரு விஷயம் புரிந்தது, குழந்தையை பாதுகாப்பாக வைப்பது என்பது வெறும் கட்டிடத்தின் கதவைப் பூட்டி வைப்பது அல்ல.

வீட்டிற்கு வந்ததும், ரித்விக் தன் காலணிகளைக் கழற்றி வீசிய விதம் வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமாக இருந்தது. மாலதி அவனருகே சென்று உட்கார்ந்தாள்.

"ரித்து அங்கே ஆன்டி உன்னை நல்லா பார்த்துக்கிட்டாங்களா? எதுவும் பயமா இருக்கா?"

சிறுவன் பதிலேதும் சொல்லாமல் தன் கைகளிலிருந்த பொம்மையின் தலையைத் திருகிக் கொண்டிருந்தான். குழந்தைகள் தங்களுக்குள் நடக்கும் வன்முறையை மொழி வழியாக வெளிப்படுத்துவதில்லை; அவர்கள் தங்கள் விளையாட்டின் வழியேதான் உலகத்திற்குச் செய்தி அனுப்புகிறார்கள்.

பாலச்சந்திரன் ஜன்னலருகே போய் நின்றான்.

நகரம் முழுக்க விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. பெங்களூரு, டெல்லி, லண்டன், சிங்கப்பூர் என உலகின் ஏதோ ஒரு மூலையில், இதே நிமிடத்தில், பேசத் தெரியாத ஒரு குழந்தையின் உரிமைகள் மௌனமாக மீறப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

சட்டங்கள் இருக்கின்றன, உரிமங்கள் இருக்கின்றன, பின்னணிப் பரிசோதனைகள் இருக்கின்றன. ஆனால், குறைந்த ஊதியத்தில், ஓய்வில்லாமல், மன அழுத்தத்தில் இயங்கும் ஒரு பராமரிப்பாளரின் கைகளில் தன் குழந்தையின் எதிர்காலத்தை ஒப்படைத்துவிட்டு, அமைதியாக கணிப்பொறித் திரையைப் பார்க்கும் இந்த நவீன வாழ்க்கை எத்தகையது?

"பாலா" மாலதியின் குரல் அவனைக் கலைத்தது.

"என்ன மாலதி?"

"நாம் சம்பாதிப்பது யாருக்காக?"

அந்தக் கேள்விக்குப் பாலச்சந்திரனிடம் உடனடியாக பதில் இல்லை. அது ஒரு தனிநபரின் கேள்வி அல்ல; இந்தச் சமூகம் முழுவதுமாகச் சேர்ந்து தப்பித்துக் கொள்ள முயலும் ஒரு தார்மீகக் கேள்வி.

பாலச்சந்திரன் மெதுவாக நடந்து சென்று ரித்விக்கை அணைத்துக் கொண்டான். குழந்தையின் சுவாசம் அவன் கழுத்தில் பட்டது.

"நாளைக்கு நான் ஆபீஸுக்கு லீவ் போடுறேன் பாலா." என்றாள் மாலதி.

"நானும் போடுறேன்." என்றான் பாலச்சந்திரன்.

இருவரும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்கள். இருள் முற்றிலுமாக நகரை மூடியிருந்தது. ஆனால், அந்த இருளுக்குள்ளும் ஏதோ ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்திற்காக மனித மனம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

*****

டிஜிட்டல் நியாயத்தராசு

டிஜிட்டல் நியாயத்தராசு

நள்ளிரவு ஒரு மணி. முத்தையாவுக்குத் தூக்கம் வரவில்லை. அதற்குக் காரணம் அவருடைய அறுபத்திரண்டு வயது மூட்டு வலியோ, அல்லது தெருவில் குரைக்கும் நாய்களோ அல்ல. அவரது மருமகள் ரேகா ஏந்தியிருந்த அந்த ஐபோன்.

அதன் திரையிலிருந்து வெளிவந்த வெளிச்சம், ஒரு மாயப் பேயின் முகம்போல ரேகாவின் முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது.

"மாமா! இந்த விடியோவை நல்லா பாத்துக்கோங்க. இதுல உங்க பையன் என்னைப் பாத்து அறிவு இருக்கான்னு கேட்ட ஆடியோ தெளிவா இருக்கு. நாளைக்குக் காலைல எட்டு மணிக்குள்ள நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட மன்னிப்பு கேட்கலன்னா, இதை பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் அப்புறம் உங்க சொந்தக்காரங்க வாட்ஸ்அப் குரூப் எல்லாத்துலயும் அப்லோட் பண்ணிடுவேன். வரதட்சணைக் கொடுமைப்படுத்தும் மாமனாரும் கணவனும்னு ஹாஷ்டேக் போட்டுருவேன்!"

முத்தையா கூனிக் குறுகிப் போனார்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, கெட்டிமேளம் முழங்க, சல்லடை போட்டுத் தேடி, நம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என்று ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்மணிதான் இப்போது கையில் ஒரு சிறிய திரையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறாள்.

அவர் மகன் கார்த்திக், பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவனுக்குத் தெரியும், அவன் சொன்ன அறிவு இருக்கா? என்ற கேள்வி, மாலை ஆறு மணிக்கு ரேகா சாம்பாரில் உப்புக்குப் பதிலாகச் சர்க்கரையைப் போட்டபோது தற்செயலாகக் கேட்டது. ஆனால், அந்த மூன்று வினாடி ஆடியோவில் சாம்பாரும் இல்லை, சர்க்கரையும் இல்லை; கார்த்திக்கின் கோபக் குரல் மட்டுமே சாட்சியாக எஞ்சியிருந்தது.

"டேய் கார்த்திக்!" முத்தையா மெல்லக் கிசுகிசுத்தார். "காவல்துறைக்குப் போனாக்கூட பரவாயில்லைடா. நம்ம தரப்பு நியாயத்தைச் சொல்லலாம். ஆனா, இந்த பேஸ்புக்ல போட்டுட்டா, ஊர் சிரிக்குமேடா! நாலு பேர் நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க? என் வாழ்நாள் கௌரவமே போயிடுமே!"

கார்த்திக் பெருமூச்சு விட்டான். "அப்பா, காவல் துறைக்குத் தீர்ப்பு சொல்ல ஆறு மாசம் ஆகும். ஆனா பேஸ்புக்ல ஆறு விநாடில தீர்ப்பு சொல்லிடுவாங்க. அதுல ஆயிரம் பேர் ஷேர் பண்ணுவான், மூவாயிரம் பேர் நம்மளத் திட்டி கமெண்ட் போடுவான். நம்ம பக்கத்து நியாயத்தை நம்ம பொணத்தைக் கொண்டுபோய் சுடுகாட்டுல வச்சாக் கூட அந்த ஆட்களுக்குச் சொல்ல முடியாது."

முத்தையா தன் கைகளைப் பார்த்தார். நடுக்கமாக இருந்தது.

அடுத்த நாள் காலை ஏழு மணி.

முத்தையா தன் அறையிலிருந்து வெளியே வந்தார். ரேகா ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள். கையில் அதே போன்.

முத்தையா மெதுவாக அவளருகே சென்றார். "ரேகா! என்னை மன்னிச்சிடுமா. நாம போலீசுக்கு வேணா போவோம். ஆனா அந்த நெட்ல மட்டும் எதையும் போட்டுடாத. ஊர் மத்தியில குடும்பத்து மானத்தை வாங்கிடாத..."

ரேகா புன்னகைத்தாள். அது ஒரு வெற்றியாளனின் புன்னகை. "பாத்தீங்களா மாமா! சட்டம் தரவேண்டிய பயத்தை இந்த ஒரே ஒரு போன் ஸ்கிரீன் தந்துடுச்சு. இனிமே இந்த வீட்ல நான் சொல்றதுதான் சட்டம்!"

அவள் காபி கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு, தன் அறைக்குச் சென்றாள்.

முத்தையா ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் கண்கள் சுவரில் தொங்கிய அவர் மனைவியின் படத்தைப் பார்த்தன. நல்லவேளை, அவள் உயிரோடு இல்லை.

திடீரென முத்தையாவின் கைப்பேசி ஒலித்தது. அவருடைய நண்பர் சுப்பையா அழைத்திருந்தார்.

"யோவ் முத்தையா! உன் மருமகள் ரேகா பேஸ்புக்ல ஒரு போஸ்ட் போட்டுருக்காப் பாரேன். என் மாமனாரும் கணவரும் என்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கிறாங்க தெரியுமா? அப்படின்னு உங்க மூணு பேர் போட்டோவையும் போட்டு, கீழ ஹேப்பி பேமிலின்னு ஹாஷ்டேக் போட்டுருக்கா!"

முத்தையா திடுக்கிட்டுப் போய் எழுந்தார். தன் கையிலிருந்த போனின் திரையை நோக்கிப் பார்த்தார். அந்த கறுப்புச் சில்லு, ஒரு மயான அமைதியுடன் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

*****

24 Jul 2026

கத்தியும் காகங்களும்

கத்தியும் காகங்களும்

மதிய வெயில் கொட்டாம்பட்டி கிராம ஊராட்சிக்கு வெளியே தார்ச்சாலையை உருக வைத்துக்கொண்டிருந்தது. ஊராட்சி அலுவலகத்தின் வராண்டாவில் உட்கார்ந்திருந்த அண்ணாவியார் தன் வேட்டி மடிப்பில் செருகியிருந்த பாலிதீன் மடிப்பைத் திறந்து, வெற்றிலையையும் சீவலையும் எடுத்து வாயிலிட்டு மென்றபடியே தெருவைப் பார்த்தார்.

அவருக்கு எதிரே கந்தசாமி அமர்ந்திருந்தான். கந்தசாமிக்கு அரசியலில் தீவிர ஈடுபாடு உண்டு. வாரப்பத்திரிகைகளின் நடுபக்கங்களை வரிவிடாமல் படிக்கும் பழக்கமும் உண்டு.

"என்னண்ணே, கூத்தப் பார்த்தீங்களா? அங்கிட்டு 25 பேரு தாவுறானுங்க, இங்கிட்டு 4 பேரு ராஜினாமா பண்றானுங்க... " என்றான் கந்தசாமி, காரசாரமாக.

அண்ணாவியார் லேசாகச் சிரித்துக்கொண்டார். துப்பிய எச்சில் வராண்டா ஓரத்தில் சிகப்பாக விழுந்தது.

"கந்தசாமி... நீ இன்னும் குழந்தையாவே இருக்கே. 1952ல ராஜாஜி சென்னை ராஜதானியில ஆட்சி அமைச்சப்பவே இதெல்லாம் நடந்து போச்சு. 375 சீட்டுல 152 தான் கிடைச்சது. அப்புறம் என்ன பண்ணாங்க? ஆளைப் பிடிச்சாங்க, ஆட்சியைப் பிடிச்சாங்க. அதுக்கு அப்புறம் வந்தவங்களும் அதைத்தான் பண்றாங்க. இதுல புதுசா என்னப்பா இருக்கு?"

"இல்லண்ணே. இது மக்களாட்சிக்கு எதிரான துரோகம் இல்லையா? மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சா, இவனுங்க சுயநலத்துக்காகக் கட்சி மாறுறானுங்க. கோர்ட்ல போய் கேட்டா, ஆதாரம் எங்கன்னு கேக்குறாங்க. மக்கள் பணம் வீணா போகுதே!" கந்தசாமியின் குரலில் ஆதங்கம் கொப்பளித்தது.

அண்ணாவியார் வராண்டாவின் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார்.

மரத்திலிருந்த ஒரு காகம் கீழே குதித்து, வராண்டாவின் ஓரத்தில் யாரோ போட்டுவிட்டுப் போன வடைத் துண்டை நோட்டமிட்டது.

"யோவ் கந்தசாமி, ஆட்டை அறுக்கறவன் எதுக்கு அறுக்கறான்? கறி கடைக்காரனுக்கு லாபம், திங்கிறவனுக்கு ருசி. ஆட்டுக்கு என்ன கிடைக்குது? அதேதான் மக்களாட்சியும்."

"அப்ப இந்த ஜனநாயகத்துக்கு விமோசனமே கிடையாதா அண்ணே? ஏதென்ஸ் நகரத்துல கிரேக்கத்துல ஆரம்பிச்ச பழமையான முறையாச்சே இது?"

"ஏதென்ஸ்ல வாக்களிச்சவன் அறிவாளியா இருந்திருக்கலாம் கந்தசாமி. ஆனா இங்க அரசியல்வாதி தலைக்கு மேல தேர்தல்னு ஒரு கத்தி தொங்கிட்டே இருக்கு. அந்தப் பயம் அவனுக்கு எப்போதும் உண்டு," என்றார் அண்ணாவியார்.

அப்போது தெருவில் ஒரு பிரச்சார வண்டி உரத்த குரலில் பாட்டுப் பாடியபடி கடந்து சென்றது. வண்டியில் நேத்து வரை எதிர்க்கட்சியில் இருந்த ஒருத்தரின் படம், இன்றைக்கு ஆளுங்கட்சியின் தொண்டர்களோடு கம்பீரமாக அச்சிடப்பட்டிருந்தது.

கந்தசாமி அதை வெறுப்போடு பார்த்தான். "இவங்களையெல்லாம் என்ன பண்றது அண்ணே?"

அண்ணாவியார் மெதுவாக எழுந்து, தன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டார்.

"ஒன்னும் பண்ண வேண்டாம். அமைதியா இருந்து வேடிக்கை பாரு. எல்லாத்தையும் இந்த ஜனங்க பாத்துக்கிட்டுதான் இருக்காங்க. கத்தி மேல தொங்குதுன்னு சொன்னேன்ல? அது அறுந்து விழ வேண்டிய நேரத்துல கரெக்டா அறுந்து விழும். அப்போ இந்த ஜனங்க அவனுங்களுக்குத் தேவையான தண்டனையைச் சத்தமில்லாம தீர்ப்பு எழுதி கையில குடுத்துடுவாங்க. போ. போய் வேலையைப் பாரு!"

அண்ணாவியார் நடக்கத் தொடங்கினார்.

இதுதான் சந்தர்ப்பம் என்று வராண்டாவின் ஓரத்தில் கிடந்த வடைத் துண்டைத் தூக்கிக்கொண்டு காகம் தூரத்து மரக்கிளையை நோக்கிப் பறந்தது.

கந்தசாமி அந்தக் காகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

*****

23 Jul 2026

இமயமலைப் பூஞ்சையும் இலக்கியப் புனைவுகளும்!

இமயமலைப் பூஞ்சையும் இலக்கியப் புனைவுகளும்!

ஜெயமோகன் எழுதி இருக்கும் மூளை எனும் அரிய சாதனம் பற்றிய அத்தியாயத்தைப் படித்தபோது, எனக்கு முதலில் எழுந்த உணர்வு ஒரு மெல்லிய சிரிப்புதான். பிறகு, வழக்கம்போல அவரிடம் பொங்கி வழியும் அந்த மகா எக்ஸ்பிரஷனிச உரைநடையைக் கண்டு உருவான அலுப்பு.

ஜெயமோகன் எப்போதும் தன் அனுபவங்களை உலகை உலுக்கும் பேரனுபவங்களாக மாற்றிவிடும் வித்தை தெரிந்தவர். இமையமலையில் அவர் சாப்பிட்ட ஏதோ ஒரு காளான், கூஃப் என்று அவரே பெயரிட்டுக்கொள்ளும் அந்தப் போதைப்பொருள் அவருக்குக் கொடுத்தது வெறும் ஒரு மோசமான மற்றும் அருவருப்பான அனுபவம். அவ்வளவுதான். மலத்திலும் சிறுநீரிலும் புரண்டு, கொசுக்கடி வாங்கி, மூளையின் நியூரான்கள் குழம்பிப்போய் அவர் அடைந்த அந்த அவஸ்தை, நரம்பியல் ரீதியாக எந்தப் போதைக்காளான் சாப்பிடும் ஒருவனுக்கும் நடப்பதுதான்.

ஆனால், ஜெயமோகன் அதை சாதாரணமாகக் கடந்துபோக மாட்டேன் என்கிறார். அதை உபநிடதத்துடனும், அகம் ஏவ இதம் சர்வோஸ்மி என்ற வேதாந்த மெய்யனுபவத்துடனும் முடிச்சுப்போட்டு ஒரு பெரிய தத்துவார்த்த வடிவத்தைக் கொடுக்க முயல்கிறார்.

காளான் சாப்பிட்டு வாந்தி எடுத்ததையும், கட்டிலுக்குக் கீழே கிடந்து அலறியதையும் வேதாந்தத்தின் மெய்யனுபவ விரிவோடு ஒப்பிடுவது, ஒருவன் கால் தடுமாறிச் சாக்கடையில் விழுந்ததை நான் பூமியின் ஆழத்தை நோக்கிப் பயணித்தேன் என்று கவிதை எழுதுவதைப் போன்றது.

இங்கு சில விஷயங்களை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

தன் மூளையைத் தினமும் தூசுதட்டித் துலக்கி வைக்கும் அரிய சாதனம் என்கிறார். உலகம் முழுதும் உள்ள மனிதர்கள் ரீல்ஸ் பார்த்தும், பாக்குப்போட்டும் மூளையை மழுங்கடிக்கிறார்களாம்; இவர் மட்டும்தான் லட்சத்தில் ஒருவராக மூளையைக் கூர்தீட்டிக்கொண்டே இருக்கிறாராம்.

இந்தச் சுயமோகமும், தன்னை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மேதையாகக் காட்டிக்கொள்ளும் அவசரமும் ஜெயமோகனின் பிரத்யேக அடையாளம். மூளையைப் பேணுவது நல்லதுதான், ஆனால் அதை மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதற்கான தராசாக மாற்றுவது அறிவாளித்தனத்தின் அடையாளம் அல்ல.

ஒரு பூஞ்சையை வெண்ணெயில் வேகவைத்துச் சாப்பிட்டுவிட்டு, சுவரும் நானே, கொசுவும் நானே என்று உளறுவது உடைந்து சிதறிய விரிவு என்றால், தீவிரமான காய்ச்சலில் பிதற்றுவதும் வேதாந்த அனுபவம்தானா? ஆலிவர் சாக்ஸையும் உபநிடதத்தையும் ஒரே மூச்சில் இழுத்துப்பிடித்துத் தன் போதை மயக்கத்திற்கு ஒரு அறிவுஜீவி முத்திரை குத்தப் பார்க்கிறார் ஜெமோ.

தத்துவம் சொல்லும் மலர்ச்சி என்பது உணர்வுகளின் குழப்பத்தால் வருவதல்ல; தெளிவின் உச்சத்தால் வருவது. ஜெயமோகனோ தன் பயத்தையும், மாயத்தோற்றங்களையும் தத்துவத்தின் உச்சக் கணங்களாகப் புனைவு செய்கிறார்.

ஜெயமோகனின் இந்தக் கட்டுரை, ஒரு நரம்பியல் கோளாறு அனுபவத்திற்குத் தரப்பட்ட மிகையான தத்துவச் சாயம்.

போதையில் தடுமாறியதை உடைந்து சிதறிய பிரம்ம அனுபவம் என்று எழுதுவது இலக்கிய ரசனைக்குரிய புனைவாக இருக்கலாம்; ஆனால், அதை மெய்யியல் தேடலாக எடுத்துக்கொண்டால் சிரிப்புதான் எஞ்சும்.

கூஃப் காளான் தந்த போதையை விட, தன் சொந்த உரைநடை மற்றும் ஆளுமை மீது ஜெயமோகனுக்கு இருக்கும் போதை மிகவும் தீவிரமானது!

*****

எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு அல்ல!

எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு அல்ல!

1967 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதே கால கட்டத்தில் ஹரியானாவில் வேறு ஒரு மாற்றம் ஏற்பட்டது.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற கயா லால் என்ற எம்.எல்.ஏ குரங்கை விட அதிவேகமாக வெறும் 15 நாட்களுக்குள் மூன்று முறை வெவ்வேறு கட்சிகளுக்குத் தாவினார்.

காங்கிரஸ் தலைவரான ராவ் பிரேந்திர சிங், கயா லாலை மீண்டும் காங்கிரஸுக்கு அழைத்து வந்து செய்தியாளர்களிடம், "கயா ராம் இப்போது ஆயா ராம் ஆகிவிட்டார்" என்று நகைச்சுவையாக அறிமுகப்படுத்தினார்.

இதிலிருந்தே இந்திய அரசியலில் கட்சி தாவுபவர்களைக் குறிக்கும் "ஆயா ராம், கயா ராம்"  என்ற புகழ்பெற்ற அரசியல் பழமொழி உருவானது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இது வரலாறு.

இப்போது கொஞ்சம் அறிவியல்.

இயற்பியல் விதிகளின்படி ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது.

இத்துடன் கொஞ்சம் அரசியலைச் கலந்தால், 1967 இல் இந்திய அரசியலில் ஒரு எம்.எல்.ஏ ஒரே வாரத்தில் மூன்று வெவ்வேறு கொள்கைகளில் வாழ முடியும் என்று நிரூபிக்கப்பட்டது.

மக்களவையில் கூடிய தூய்மையான மற்றும் நேர்மையான அரசியல் தலைவர்கள் இதைப் பார்த்து கவலைப்பட்டார்கள்.

"இதற்கு ஒரு கடிவாளம் போட வேண்டும்," என்றார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். "கடிவாளம் குதிரைக்குத்தானே?" என்றார் மற்றொரு உறுப்பினர். "பிரதிநிதிகளும் ஓடுகிறார்களே!" என்றார் முதலானவர்.

உடனே ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. "ஒருவர் கட்சி தாவினால், அவர் ஓராண்டுக்கு அமைச்சராகக் கூடாது, சபாநாயகராகக் கூடாது, சம்பளம் வாங்கும் எந்தப் பதவியிலும் இருக்கக் கூடாது" என்று அது பரிந்துரைத்தது. அதாவது, 'நீ சோறு சாப்பிடலாம், ஆனால் தட்டில் கை வைக்கக் கூடாது' என்ற வகையான தீர்வு அது.

ஆனால் அது சட்டமாவதற்கு 1985 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

1985 இல், 52 ஆவது சட்டத் திருத்தம் வந்தது. அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில் "கட்சித் தாவல் தடைச் சட்டம்" என்று பளபளப்பான ஒரு பூட்டு தொங்கவிடப்பட்டது.

இந்திய அரசியவாதிகள் புத்திசாலிகள்.

பூட்டைப் பார்த்ததும் அவர்கள் சாவி தேடவில்லை; பூட்டின் அளவை விடப் பெரிய கதவையே கழற்றினார்கள்.

"தனித்தனியாகத் தாவினால் தப்பு. ஆனால், நாம் அனைவரும் கூட்டமாகத் தாவினால் அது ஜனநாயகம்!" என்று ஒரு மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்கள் தத்துவத்தைக் கண்டுபிடித்தார்கள். பிரிவு 3 அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசமானது. ஆடுகள் தனியாகப் போனால் ஓநாய் பிடிக்கும்; மந்தையாகப் போனால் அதுதான் புதிய பூங்கா!

விளைவு?

மறுபடியும் பூட்டு தயாரிக்க வேண்டியதாகி விட்டது.

2003 இல், 91ஆம் சட்டத் திருத்தம் வந்து, "சரி, இனி மூன்றில் ஒரு பங்கு செல்லாது; மூன்றில் இரண்டு பங்கு வேண்டும்!" என்றது.

அதன் விளைவு என்னவென்றால், சில்லறை வியாபாரம் மொத்த வியாபாரமாக மாறியது. முன்பு எம்.எல்.ஏக்களை ரீடெய்ல் ஆக வாங்கினார்கள். இப்போது ஹோல்சேல் ஆகக் கொள்முதல் செய்தார்கள். ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்து, அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்களை ஏற்றி, ஒரு சொகுசு விடுதிக்கு அனுப்பினால் ஆட்சி க்ளோஸ் என்ற நிலை வந்து விட்டது.

இதெல்லாம் தொகுதியில் வாக்களித்த அப்புசாமிக்கு கொஞ்சம் கூட புரியவில்லை.

பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார் அப்புசாமி. "அண்ணே, நாம போட்ட ஓட்டுக்குத்தான் இந்தத் தொகுதியில மதிப்பில்லை. சரி, இந்த மனசாட்சின்னு ஒண்ணு சொல்வாங்களே, அது இவங்களுக்கு இல்லையா?"

பக்கத்தில் இருந்தவர் சிரித்துக்கொண்டே சொன்னார், "தம்பி, மனசாட்சிங்கிறது தனிநபர் சம்பந்தப்பட்டது. சட்டத்தின் படி, மூணுல ரெண்டு பங்கு பேர் சேர்ந்துட்டா மனசாட்சியும் தானாவே தகுதிநீக்கம் ஆகிடும்!"

"இதையெல்லாம் தடுக்க புது மசோதா கொண்டு வந்தா என்ன?" என்றார் அப்புசாமி.

"தம்பி, கடிவாளம் போடுவது குதிரையைக் கட்டுப்படுத்தத்தானே தவிர, கடிவாளத்தை விற்கும் வியாபாரியைக் கட்டுப்படுத்த அல்ல. இருந்தாலும் புது மசோதா கொண்டு வந்தா மட்டும் என்னவாகப் போகுது? பேருந்தில் சொகுசு விடுதிக்குப் போகும் எம்.எல்.ஏக்களுக்குக் டிக்கெட் விலை கொஞ்சம் அதிகமாகலாம்!" என்று சொல்லி விட்டு, பக்கத்தில் இருந்தவர் முன்னை விட இன்னும் பலமாகச் சிரித்தார். இந்தச் சிரிப்பு மட்டும் இல்லையென்றால் ஜனநாயகம் தரும் மனஅழுத்தத்தைப் பல நேரங்களில் தாங்கவே முடியாது.

அவர் சிரிக்க சிரிக்க, அப்புசாமி தன் வாக்காளர் அடையாள அட்டையைப் பார்த்தார். அது அமைதியாக, எந்தக் கட்சிக்கும் தாவாமல் அவருடைய பையிலேயே இருந்தது.

*****