திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 21
ஐந்தை அடிபணிய வைக்கும் ஒன்று!
மின்னல் வெட்டியது போலத்தான் இருந்தது.
அவன் கையிலிருந்த கி.வா.ஜகந்நாதன்
எழுதிய திருக்குறள் ஆராய்ச்சி பதிப்பிலிருந்து
கண்ணை எடுத்தபோது, எதிரே அவள் நின்றுகொண்டிருந்தாள். கையில் இரண்டு கோப்பை தேநீர்.
அவளது வளையல்கள் "கிலுக்" என்று ஒரு மெல்லிய இசை எழுப்பின.
"என்ன மிஸ்டர்! ஏதோ ஒரு ரொம்ப பெரிய ஆராய்ச்சி போல?"
அவள் தேநீரை நீட்டியபோது, சுட சுட அதன் ஆவியோடு சேர்ந்த ஏலக்காய் வாசம் அவனது
நாசியை துளைத்தது. அது வெறும் தேநீர் வாசனை இல்லை; அவள் பக்கத்தில் இருக்கும்போது மட்டுமே
கிடைக்கும் ஒருவித தனித்துவமான நறுமணம்.
அவன் கோப்பையை வாங்கி ஒரு வாய் உறிஞ்சினான். நாக்கில் சுட சுட கதகதப்பும் இனிப்பும்
கலந்த திருப்தி.
"தேநீர் பிரமாதம்!"
"நான் பண்ணா எல்லாமே பிரமாதம்தான்!" அவள் சிரித்தாள்.
அவள் சிரிக்கும்போது அந்தச் சின்ன அறையில் ஒரு புது வெளிச்சம் பரவுவது போலிருக்கும்.
அவள் உடுத்தி வந்திருந்த அடர் நீலச் சேலையின் சலசலப்பு, அந்த வளையல்களின் ஓசை, அவளுடைய
சிரிப்பின் ஒலி என எல்லாமே அவனது காதுகளில் ஓர் இனிய மெல்லிசையாக விழுந்தது.
அவள் அவனருகே அமர்ந்தாள். அவளது தோள் அவனது தோளில் லேசாக உரசியது. ஒரு சின்ன
மின்சாரம். தொடு உணர்ச்சி என்பது இத்தனை தீவிரமானதா? உடம்பின் ஒவ்வொரு நரம்பும் விழித்துக்
கொள்வது போல இருந்தது.
அவன் அவளையே பார்த்தான். அவளுடைய அந்தப் பெரிய, பிரகாசமான கண்கள். கருவிழிகளுக்குள்
ஏதோ ஒரு புதிர். உலகத்தின் மொத்த அழகையும் அந்த இரண்டு கண்களுக்குள் அடக்கி வைத்தது
போல ஒரு பிரமை.
அப்போதுதான் அவனுக்கு அந்தக் குறள் அவன் நினைவைத் தீண்டியது. அவன் சடசடவென்று
கையில் இருந்த திருக்குறள் ஆராய்ச்சி பதிப்பு நூலின் பக்கங்களை வேக வேகமாகப் புரட்டினான்.
ஈராயிரம் வருடத்துக்கு முன்பே திருவள்ளுவர்,
"கண்டுகேட்டு
உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி
கண்ணே உள." (குறள்,
1101)
என எழுதி வைத்து விட்ட அந்தக் குறளை மனதுக்குள் முணுமுணுத்தபடி அப்படியே ஆச்சரியத்தில்
உறைந்து போனான்.
அட அவர் சொன்னபடி, அப்படியே இந்த இரண்டாயிரம் வருடம் கடந்தும் எதுவும் மாறாமல்,
அதன் சாராம்சம் எதுவும் காலாவதி ஆகாமல் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல்
என்று இந்த ஐந்து புலன்களின் சுகமும், ஒளிர்கிற வளையல் போட்ட இந்த ஒரு பெண்ணிடம் மொத்தமாக
இருக்கிறதே!
"என்ன யோசனை?" அவள் அவனது
கன்னத்தை லேசாகக் தட்டினாள்.
"ஒன்னுமில்லை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் சொன்ன சூத்திரம்
சரிதானான்னு சோதனை பண்ணிட்டு இருந்தேன்."
"என்னவாம்?"
"நீதான்டி அது!" என்று அவன் அவளது கையைப் பற்றிக் கொண்டான். வளையல்கள்
மீண்டும் கலகலவெனச் சிரித்தன.
- சூத்திரங்கள் தொடரும்!
*****






