29 Aug 2026

விழி பேசும் மொழிகள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 20

விழி பேசும் மொழிகள்

திருவாரூர் பேருந்து நிலையம்.

மழை பெய்துகொண்டிருந்தது. வழக்கம்போலத்தான். மழையிடம் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால், மனிதர்கள்தான் மழையைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ புதிதாகப் பார்ப்பது போல் தங்களை ஏமாற்றிக் கொள்வார்கள். அது மனிதர்களின் வழக்கம்தான்.

மணி மாலை ஆறு பதினாறு.

அவன் பேருந்து நிலைய தூணில் சாய்ந்திருந்தான். வடபாதிமங்கலம் பேருந்து வரக்கூடும் என்ற லேசான நம்பிக்கையில். அல்லது, வடபாதிமங்கலம் பேருந்து வராது என்ற ஆழ்ந்த சந்தேகத்தில். ஆனால், அவன் நிஜத்தில் வடபாதிமங்கலம் பேருந்தை எதிர்பார்க்கவில்லை. அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் மன்னார்குடி பேருந்துக்காகக் காத்திருந்தாள். குடையைப் பிடித்துக்கொண்டு.

இருவரும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள். ஆறு மாதங்களாக. ஆசிரியர் பணிக்கே உரிய அதே மெல்லிய சோகத்துடன்.

அவர்களிடையே இதுவரை நடந்த உரையாடல்கள் மிகவும் மகத்தானவை. 'திறன் தேர்வு நடத்தி விட்டீர்களா?', 'மதிய உணவு சாப்பிட்டீங்களா?', 'மெல்ல கற்கும் மாணவர்களுக்கான அறிக்கை கொடுத்து விட்டீர்களா?'

மனிதர்கள் காதலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பற்றிப் பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள்.

திடீரென மழை தீவிரமடைந்தது. பேருந்து நிலையக் கூரையின் ஓட்டைகள் வழியாக நீர் கொட்டியது. ஜனங்கள் பின்வாங்கியதில், அவனும் அவளும் தவிர்க்க முடியாதபடி நெருங்கி நிற்க நேரிட்டது.

"மழை விடாது போல." என்றான் அவன். உலகிலேயே மிகவும் அறிவார்ந்த ஒரு உண்மையைக் கண்டுபிடித்தவனைப் போல.

"ஆமா." என்றாள் அவள் அந்த உலக மகா உண்மையை நோபல் கமிட்டியே அங்கீகரிப்பது போல.

அவ்வளவுதான் உரையாடல் முடிந்தது. வழக்கம்போல.

அப்போது மன்னார்குடி பேருந்து இரைச்சலோடு வந்து நின்றது. மக்கள் அதை ஏதோ கடைசிப் பேருந்தைப் போல நினைத்துக் கொண்டு முண்டியடித்துக்கொண்டு ஓடினார்கள். கூட்டத்தின் தள்ளுமுள்ளுவில் அவளது கையில் இருந்த குடை நழுவி, கீழே விழப் பார்த்தது.

அவன் சட்டென்று குனிந்து அதை நிலத்தில் விழுமுன் பிடித்தான். அதே வினாடியில் அவளது கையும் அதை எடுக்கக் கீழே வந்தது.

இருவரின் கரங்களும் குடையின் பிடியில் ஒன்றோடொன்று உரசின.

அவன் நிமிர்ந்தான். அவளும் நிமிர்ந்தாள்.

இரண்டு வினாடிகள்.

அந்த மழை இரைச்சலும், மனித இரைச்சலும், பேருந்து ஒலிப்பான்களின் இரைச்சலும் மிகுந்த திருவாரூர் பேருந்து நிலையத்தின் நடுவே, அவர்களின் கண்கள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

சுற்றியிருந்த மக்களின் கூச்சலும், மழை மற்றும் பேருந்துகளின் சத்தமும் ஒரு கணத்தில் அணைந்துபோய், உலகம் ஸ்தம்பித்தது போலிருந்தது.

அவனின் கண்களில் இருந்த தயக்கம் மறைந்து, "எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். இந்த ஆறு மாதமாக இதை உன்கிட்ட சொல்லணும்னு துடித்துக் கொண்டு இருக்கேன்." என்ற விழிகளின் மௌனமான அலறல் அவளுக்குத் தெளிவுபடக் கேட்டது.

அவளது விரிந்த கருவிழிகளில், "எனக்கும் தெரியும். நீ கேட்குற ஒவ்வொரு முறையும் உன் கண்ணைப் பார்த்து நான் பதிலைச் சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். நீதான் புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளைத் தேடுற." என்ற பதில் விழிகளில் மின்னல் போல மின்னி மறைந்தது.

அதாவது அவர்கள் பேசியதன் சாராம்சம் என்னவென்றால்,

"எனக்கு உன்னைப் பிடிக்கும்டா லூசு."

"எனக்கும்தான்டி லூசு. அதுக்கு ஏன் ஆறு மாசம்?"

அவ்வளவுதான். அந்தக் கண் பார்வையில் எல்லாமே எழுதப்பட்டுவிட்டது. அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை; போலித்தனமான வார்த்தை ஜாலங்கள் இல்லை. இப்படியாக ஒரு பெரிய காதல் காவியம் அங்கே முடிந்தது, கவிதைகள், உபதேசங்கள், சினிமா வசனங்கள் எதுவுமே இல்லாமல்.

அவள் மெதுவாகத் தன் கையை விலக்கிக்கொண்டாள். அவளது உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய புன்னகை அரும்பியது. அவன் சேறு படாத குடையை அவளிடம் நீட்டினான்.

"நான் பேருந்து ஏறறேன்," என்றாள்.

"பார்த்து போங்க." என்றான் அவன்.

மன்னார்குடி பேருந்திற்குள் அவள் ஏறி ஜன்னலோரச் சீட்டில் அமர்ந்தாள். பேருந்து கிளம்பி மழை இருளுக்குள் மறைந்தது.

அவர்கள் பேசியது இரண்டே வாக்கியங்கள்தான். ஆனால், இருவருமே தங்கள் வாழ்வின் மிக முக்கிய உரையாடல் முடிந்துவிட்டதை உணர்ந்தார்கள். சொல்ல வேண்டிய அனைத்துக் காதலும் சொல்லப்பட்டுவிட்டது.

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல."                     (குறள், 1100)

-          சூத்திரங்கள் தொடரும்!

****

28 Aug 2026

உண்டியல், ஒரு மர்மக் கதை மற்றும் பூங்காத் தோழி!

உண்டியல், ஒரு மர்மக் கதை மற்றும் பூங்காத் தோழி!

பூங்கா என்பது வெறும் நடைப்பயிற்சிக்கான இடம் மட்டுமல்ல, அது வினோதமான மனிதர்களைச் சந்தைப்படுத்தும் ஒரு தளம். அங்குதான் சுபத்ராவுக்கு அறிமுகமானாள் உபத்ரா.

நான்கு நாட்கள் ஒரே திசையில் நடந்தாலே போதும், இந்தியப் பண்பாட்டின்படி பரஸ்பரம் பற்களைக் காட்டிச் சிரித்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாம் நாள், எத்தனை ரவுண்டு? என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்வியோடு உபத்ரா சுபத்ரா அருகில் வந்தாள்.

அவளது பேச்சில் இருந்த வேகம், அவளை ஓர் அவசரத் தோழி ஆக்கியது சுபத்ராவுக்கு. சில நிமிடங்களிலேயே சுபத்ராவின் குடும்ப ஜாதகம், கணவரின் குறட்டைச் சத்தம், மகளின் பிடிவாதம் என அனைத்தும் அவளுக்குத் தெரிந்துவிட்டது.

இன்னைக்கு உங்க வீட்டுப் பக்கமாதான் ஒரு கடைக்குப் போறேன். அப்படியே உங்க வீட்டுக்கு வந்துட்டுப் போகட்டுமா? என்றாள் உபத்ரா, மிகவும் எதார்த்தமாக.

சுபத்ராவும் ஒரு மிடில்கிளாஸ் பெருந்தன்மையுடன், தாராளமா வாங்க. ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம், என்றாள். எப்போதாவது ஒருமுறை யாரையாவது உபசரித்தால்தான் நாம் வாழ்கிறோம் என்கிற பிரமை நீடிக்கும்.

வீட்டுக்கு வந்தாள். ஹாலில் சோபாவில் அமர்ந்தபடி, சுற்றும் முற்றும் பார்த்தாள் உபத்ரா. சுபத்ராவின் மகளின் பீங்கான் உண்டியல் டிவியின் அருகில் லட்சுமிகரமாக அமர்ந்திருந்தது. மகள் சேமித்து வைத்திருந்த சில்லறைகளும், தாள்களும் அதற்குள் கனமாகத் தவம் இருந்தன.

வீடு ரொம்ப அழகா இருக்கு. நீங்களும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும், என்று காபியை உறிஞ்சிக் குடித்துவிட்டு, ஒரு பித்தலாட்டப் புன்னகையுடன் விடைபெற்றாள் உபத்ரா.

மறுநாள் காலை, சுபத்ராவின் வீட்டில் பிரபஞ்சமே ஸ்தம்பித்தது போல ஒரு காட்சி.

டிவியின் அருகில் இருந்த அந்த உண்டியலைக் காணவில்லை. அது ஒன்றும் கால்கள் முளைத்து நடைப்பயிற்சிக்குச் செல்லும் பூச்சியல்ல. வீட்டில் இருந்த கணவரிடமும், மகளிடமும் விசாரித்தாள் சுபத்ரா. கணவர், யாராவது தியானம் பண்ண எடுத்துட்டுப் போயிருப்பாங்களோ? என்பது போல ஒரு லுக் விட்டார்.

அப்போதுதான் உறைத்தது சுபத்ராவுக்கு நேற்று வந்து போன அந்த பூங்காத் தோழி உபத்ராவின் உபத்ரவம்.

அவள் வந்து போன பிறகு வீட்டுக்கு ஈக்காக்கை கூட வரவில்லை. மகளின் எதிர்காலச் சேமிப்பு சுமார் சில ஐயாயிரம் ரூபாய், அந்தப் பெண்ணின் ஹேண்ட்பேக்குள் கௌரவமாக அடைக்கலம் புகுந்துவிட்டது என்பதை சுபத்ராவின் உள்ளுணர்வு அலறியது.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஓடிப்போகும் காதலனைப் போல, மறுநாளிலிருந்து உபத்ரா பூங்கா பக்கமே வரவில்லை. பூங்காவின் ஒவ்வொரு புதரிலும், பெஞ்சிலும் அவளைத் தேடினாள் சுபத்ரா. அவள் இல்லை. அவளது நட்பு ஒரு இன்ஸ்டன்ட் காபியைப் போலச் சட்டெனக் கரைந்து, கசப்பை மட்டும் மிச்சம் வைத்துவிட்டுப் போய்விட்டது.

தெரியாத நபர்களை வீட்டுக்குள் அழைப்பது என்பது, திருடனிடம் சாவிக்கொத்தைக் கொடுத்துவிட்டு பத்திரமாகப் பார்த்துக்கொள் என்று சொல்வதற்குச் சமம்.

இப்போதெல்லாம் சுபத்ரா யாரையும் வீட்டுக்குள் அழைப்பதில்லை. அழைத்தாலும் காப்பி கொடுப்பதில்லை. கிளம்புறீங்களா, கொஞ்சம் வேலை கெடக்கு என்று படக்கென்று சொல்லி விடுகிறாள்.

*****

அந்நியனாக நடிக்கும் கலை

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் - 19

இவர்களை நம்பவே முடியாது!

திருவாரூர் மாவட்ட மைய நூலகம்.

அமைதியான சூழலில் புத்தகங்களின் வாசனை காற்றில் பரவியிருந்தது.

அவன் தமிழ் இலக்கியப் பிரிவின் மர அலமாரிக்கு அருகில் நின்று ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தான். அவனது கவனம் முழுக்க எதிரே ஆங்கில இலக்கியம் பிரிவில் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த அவள் மீதுதான் இருந்தது.

அவள் கையில் இரண்டு புத்தகங்களுடன் நகர்ந்து வந்தாள். எப்போதாவது நிமிர்ந்து அவனைப் பார்ப்பாள். அந்தப் பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்காது. ஏதோ நூலகத்தில் எதேச்சையாக எதிர்கொள்ளும் ஓர் அந்நிய வாசகரைப் பார்ப்பது போல ஒரு வெற்றுப் பார்வை.

"என்ன, உறுப்பினர் அட்டை புதுப்பிச்சாச்சா?" குரலில் எந்த அதிர்வும் இல்லை. நூலகத்தின் அமைதியைக் கெடுக்காதவாறு, ஏதோ அறிமுகமில்லாதவரிடம் மெல்லிய குரலில் கேட்கும் தொனி.

"ம். புதுப்பிச்சுட்டேன். தண்டத் தொகையும் கட்டியாச்சு."

"ஓ, சரி."

திரும்பவும் அலமாரியில் இருந்த புத்தகங்களுக்குள் மூழ்கினாள்.

ஊர் அறியக் கூடாது என்பதற்காகவும், நூலகக் கட்டுப்பாட்டுக்காகவும் இப்படிச் சந்திக்கும் காதலர்களுக்குள் இது என்ன மாதிரியான நாடகமோ?

இரண்டு வருடங்களாகக் காதலிப்பவர்கள்.

ஆனால், இந்தத் திருவாரூர் நூலகத்தில், சுற்றிலும் நான்கைந்து தீவிர வாசகர்கள் அமைதியாகப் படித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அவர்கள் இருவருக்கும் நடுவே ஒரு பிரம்மாண்டமான இரும்புத் திரை தொங்கிக்கொண்டிருந்தது.

அவனுக்குள் சிரிப்பு வந்தது. அவன் மனதில் சட்டென்று திருவள்ளுவர் வந்து போனார்.

"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள."                (குறள், 1099)

எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது 2026லும் அப்படியே அட்சர சுத்தமாகப் பொருந்துகிறதே என்ற பிரமிப்பு அவனுக்குள்.

அந்நியர்களைப் போல, யாருமே இல்லாத பொதுவான ஒரு பார்வையை வீசுவது உண்மையாகக் காதலிப்பவர்களிடம் மட்டுமே இருக்கும் வித்தை.

ஏனெனில், நூலகத்தில் இருப்பவர்கள் கவனத்தைக் கலைக்கக் கூடாது, யாராவது பார்த்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை. "நாங்கள் இரண்டு பேரும் சும்மா நூலக  வாசகர்கள்தானப்பா" என்று உலகுக்குப் பறைசாற்றும் நாடகம். அந்த நாடகத்தின் ஆகச்சிறந்த நடிகர்கள் காதலர்கள் மட்டுமே.

அவள் அவனைக் கடந்து சென்றபோது அதே வெற்றுப் பார்வையை வீசினாள்.

ஆனால், அவனுக்குத் தெரியும். அந்த வெற்றுப் பார்வைக்கு அடியில் என்ன இருக்கிறது என்று.

அவள் கையில் வைத்திருந்த புத்தகத்தை மேஜை மீது வைத்தபோது, அவளது ஆள்காட்டி விரல் புத்தக அட்டை மீது இரண்டு முறை தட்டியது. அது அவர்கள் மட்டுமே அறிந்த இரகசிய மொழி. 'இன்னும் ஐந்து நிமிடத்தில் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து விடு.'

அவன் எடுத்துப் படித்த புத்தகத்தை மீண்டும் அலமாரியில் வைத்துவிட்டு அமைதியாக வெளியே வந்தான்.

நூலகரிடம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, அவளும் அமைதியாக வெளியே வந்தாள்.

சுற்றியிருந்தவர்கள் நினைத்திருப்பார்கள், 'பாவம், ஏதோ ஆராய்ச்சிப் படிப்புக்கு புத்தகம் எடுக்க வந்திருக்கார்கள் போல.'

நூலகக் கட்டடத்தைக் கடந்து, நிழல் படர்ந்த வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து தனது இரு சக்கர வாகனத்துக்கு அருகில் நின்றான் அவன்.

அடுத்த வினாடி.

அந்த அந்நியப் பார்வை காற்றில் கரைந்து போயிருந்தது. அவளது கண்களில் வெளிப்பட்ட அந்த அளவற்ற வெளிச்சமும், குறும்புச் சிரிப்பும் நூலகத்தின் அமைதியான சூழலில் இருந்த அவளை முற்றிலும் வேறொருத்தியாக மாற்றியிருந்தது.

"ஏன், அங்க உள்ள வச்சு அவ்ளோ மொக்கையாவா பாத்தேன்? அந்த நூலகர் தாத்தா நம்மளையே பாக்குறாரோனு பயத்துல அப்படி மூஞ்சியை வச்சுக்கிட்டேன்!" என்று அவன் கையைப் பற்றிக்கொண்டு கலகலவெனச் சிரித்தாள்.

"அப்பாடி! நிஜமாவே எனக்கு பயமே வந்துருச்சு. ஏதோ அறியாத முகம் மாதிரி அப்படி ஒரு பார்வை. வள்ளுவர் சும்மாவா சொன்னாரு. அந்நியன் மாதிரி பார்க்குற அந்தப் பார்வை இருக்கே, அது காதலர்களுக்கு மட்டுமே கைவந்த கலை!"

அவன் இரு சக்கர வாகனத்தை உதைத்துக் கிளப்ப, அவள் அவனுக்குப் பின்னால் அமர்ந்து அவனது தோள்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

நூலகத்தில் அமைதியாய், அந்நியராய் நடித்த அதே கண்கள், தனிமையில் உலகத்தின் முழு அன்பையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தன. அந்த நாடகத்தில்தானே காதலின் சுவாரஸ்யமே ஒளிந்திருக்கிறது. உலகின் மிகச் சிறந்த நடிகர்கள் காதலர்கள்தானே!

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

27 Aug 2026

நகுதலின் அனாடமி

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 18

நகுதலின் அனாடமி

மழை நின்ற மாலை வேளையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர் வீதி வழியே மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. கமலாலயக் குளத்தின் அலைகளில் விடியற்காலை சூரியனின் பொன்னிறக் கதிர்கள் நடனமாடிக் கொண்டிருக்க, வசந்த மண்டபத்தின் தூணோரம் அமர்ந்திருந்தான் அவன்.

அவன் லேப்டாப் திரையில் ஏஐ மாடல்களுக்கான கோடிங் ஓடிக் கொண்டிருந்தது. எதிரே பிரகாரத்துக் கல் தரையில் அமர்ந்திருந்தாள் அவள். அவளது கரங்களில் ஒரு பழங்காலப் புத்தகம். வடிவேலு செட்டியார் எழுதிய திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்.

அவன் ஒரு முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளன். லாஜிக், டேட்டா, அல்காரிதம் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது.

அவள் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவள், திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் பிஎச்டி செய்து கொண்டிருப்பவள். உணர்ச்சிகளால் வாழ்பவள். இவனுக்கும் அவளுக்கும் காதல் எப்படி வந்தது என்பது தியாகேச பெருமானுக்கே வெளிச்சம்.

"டேய்!"

"சொல்லு, அந்த அமெரிக்க கிளையண்ட்டுக்கு இன்னும் நியூக்ளியர் மாடல் இமெயில் அனுப்பல."

"இதை கொஞ்சம் கேளேன்," அவளது குரலில் பாரிஜாத மலரின் மென்மையைப் போன்ற ஒரு ரகசியக் கிளுகிளுப்பு.

"காமத்துப்பால்ல ஒரு குறள்.

''அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.''               (குறள், 1098)

படிக்கும்போதே மனசுக்குள்ள ஒரு மாதிரி பண்ணுதுடா."

அவன் லேப்டாப்பிலிருந்து கண்ணை எடுக்காமல், "விளக்கம்? பிபிடி போட்டு அனுப்புறீயா?" என்றான்.

அவள் சலித்துக் கொண்டாள். "டேய் லூசு, குறளுக்கு அர்த்தம் தெரியுமா? தளர்ந்த மெல்லிய நடையை உடையவளான தலைவியை நான் பார்த்தப்போ, அவ மனசுல ஏதோ ஒரு பசை அதாவது அன்பு சுரந்து, மெல்லச் சிரிச்சாளாம். அந்தச் சிரிப்புல ஒரு பேரழகு இருந்ததுன்னு தலைவன் சொல்றான். புரியுதா?"

"புரிஞ்சது. யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் நல்லாருக்கு."

"சீ! உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. உனக்கெல்லாம் ரொமான்ஸே வராது. எப்பப் பார்த்தாலும் அந்தக் கம்ப்யூட்டர் திரையையே பார்த்துட்டு இரு," என்று புத்தகத்தை படாரென மூடிவிட்டு, சந்நிதிப் பிரகாரத்தை நோக்கி விறுவிறுவெனச் சென்றாள்.

"ஏய்!" அவள் திரும்பிப் பார்க்காமல் கோயில் பிரகார இருளுக்குள் மறைந்தாள்.

அவன் பெருமூச்சு விட்டான். அவனுக்குக் காதல் வராமல் இல்லை. ஆனால் அதை வார்த்தைகளில் கொட்டத் தெரியவில்லை. கோடிங் எழுதுவது போலக் காதலை வெளிப்படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அடுத்த நாள் மாலை நேரப் பிரதோஷம்.

தியாகராஜர் கோயிலின் ராஜகோபுரத்தின் நிழல் கமலாலயக் குளத்து நீரில் நீண்டு கொண்டிருந்தது. குளத்துப் படிகளில் அவள் அமர்ந்திருந்தாள். இன்னமும் நேற்றைய கோபம் குறையவில்லை. அவனிடமிருந்து போன் வரவில்லை, மெசேஜ் வரவில்லை. "ஒரு சாரி கூட கேட்கத் தெரியாத மரக்கட்டை," என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே குளத்து நீரில் சிறு கற்களை வீசினாள்.

அப்போது படித்துறையில் ஒருவனின் நடைச்சத்தம்.

நிமிர்ந்து பார்த்தாள். அவன்.

வழக்கமாக வேகவேகமாக, வேலைப் பளுவின் அழுத்தத்தில் ஓடிவரும் அவனது நடை இன்று வேறு மாதிரி இருந்தது. கமலாலயக் குளத்தின் அகலத்தையும் கோயிலின் அமைதியையும் உள்வாங்கியது போன்ற ஒரு தளர்ந்த, நிதானமான நடை, அசையியல் நடை! அவனது தோற்றம், சட்டை மடிப்பு, கையில் வைத்திருந்த ஒரு சிறிய காகிதம் எல்லாமே வழக்கத்துக்கு மாறாக ஒரு மென்மையைக் கொண்டிருந்தன.

அவள் அவனை அறியாமல் அவனையே உற்றுப் பார்த்தாள்.

அவன் அருகில் வந்து குளத்துப் படியில் அமர்ந்தான். இருவரிடமும் பேச்சில்லை. அவன் அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். அந்தப் பார்வையில் எந்த அவசரமும் இல்லை. ஒருவிதமான ஆழ்ந்த அன்பு, ஏக்கம், ஒரு சிறிய பயம் எல்லாம் கலந்திருந்தது.

'அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்...' அவளது மனதுள் நேற்றைய குறள் சட்டென்று தியாகராஜரின் அஜபா நடனம் போல ஆடியது.

அவள் உதடுகள் தானாகப் பிரிந்தன. மனதின் அடி ஆழத்தில் ஏதோ ஒரு பசை, அன்பின் பிசின் சுரந்து அவளை அறியாமல் பெருகியது. அவளுக்குள் ஒரு வெட்கம் ஊற்றெடுத்தது. தலை குனிந்து, மெல்ல, ரகசியமாகப் புன்னகைத்தாள். 'பசையினள் பைய நகும்' என்று திருவள்ளுவர் சொன்ன அதே புன்னகை.

அந்தச் சிறிய புன்னகையில் ஆயிரம் கவிதைகள் இருந்தன.

அவன் கையில் இருந்த காகிதத்தை அவளிடம் நீட்டினான்.

அது ஒரு பைதான் கோடிங் அச்சுப் பிரதி.

அவள் அந்தக் காகிதத்தைப் பார்த்துவிட்டு, குளத்துப் படிகளே அதிர உரக்கச் சிரித்துவிட்டாள்.

"என்னடா இது?"

"நேத்து நீ சொன்ன குறளை பைதான்ல எழுத ட்ரை பண்ணேன். வொர்க் அவுட் ஆவுமா?" அவன் அப்பாவித்தனமாகக் கேட்டான்.

"லூசு! வள்ளுவன் 2000 வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை, நீ கோட் பண்ணி வச்சிருக்கயா?"

"கோடிங் முக்கியமில்லை. நீ நேத்து சொன்னப்போ எனக்குப் புரியல. ஆனா இப்போ நீ மெல்லச் சிரிச்சப்போ, அந்தப் பாட்டுல இருந்த மொத்த அர்த்தமும் எனக்குப் புரிஞ்சது."

அவள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். கமலாலயக் குளத்திலிருந்து வீசிய மாலைக் காற்று இருவரையும் தழுவிச் சென்றது. கோயிலின் மணி ஓசையுடன் தொழில்நுட்பமும் தமிழும் அந்தச் சிறிய புன்னகையில் சங்கமித்திருந்தன.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

26 Aug 2026

பிரியமான எதிரிகளும் கனிவான கடுஞ்சொற்களும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 17

பிரியமான எதிரிகளும் கனிவான கடுஞ்சொற்களும்!

திருவாரூர் விஜயபுரம்.

வி.ஆர்.எம் சாலை.

வாசன் கபே.

வடமேற்கு மூலை மேஜையில் அவனும் அவளும்.

மாலை மணி ஐந்தரை இருக்கும்.

கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே மழைத் துளிகள் கோடு கோடாய் இறங்கிக் கொண்டிருந்தன.

இரண்டு காபி டம்ப்ளர்.

நடுவே லேசாக எழுந்த ஆவி.

அவள் தன் கையால் காபி டம்ப்ளரை இப்படியும் அப்படியுமாகச் சுழற்றிக் கொண்டிருந்தாள்.

"எனக்கு திருச்சி ஆபீஸ்க்கு டிரான்ஸ்பர் கன்பர்ம் ஆயிடுச்சு. அடுத்த வாரம் கிளம்பறேன்."

சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள். குரலில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை. செய்தி வாசிப்பாளர் போல ஒரு நிதானம்.

அவன் காபி டம்ப்ளரை உதட்டுக்குக் கொண்டு போனான். கை லேசாக அதிர்ந்தது. அதை மறைக்க, டம்ப்ளரை மேஜை மீது சற்று அழுத்தமாக வைத்தான்.

டங்க் என்ற சத்தம்.

"கிரேட். ஆல் தி பெஸ்ட்," என்றான். குரலில் லேசான நக்கல். உதட்டின் ஓரத்தில் ஒரு செயற்கையான கேலிச் சிரிப்பு.

"தேங்க்ஸ்."

"அங்க போய் ரொம்ப பிஸியாகிடுவ. அப்புறம் வாரத்துல நாலு நாள் திருச்சி, திருவண்ணாமலைன்னு அலைஞ்சிட்டு இருப்ப. அப்புறம் நம்மளையெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகுது? அவனா ஆமா, திருவாரூர்ல ஒருத்தன் இருந்தானேன்னு யோசிப்ப, அவ்வளவுதானே?"

சொற்களை ஒவ்வொன்றாக வெட்டிப் பேசினான். அவனுடைய கண்கள் அவளைப் பார்க்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே பளபளத்த தார்ச்சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் ஓர் அந்நியத்தன்மை. ஒரு பொய்யான கோபம்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "நீ என்மேல கோபமா இருக்கியா?"

"எனக்கென்ன கோபம்? சந்தோஷம்தான்!" என்றான் தோள்களை உயர்த்தியபடி.

அவனே தொடர்ந்தான், "நாம ரெண்டு பேரும் தொழில்முறை நண்பர்கள். அவ்வளவுதானே? நீ உன்னோட பதவி உயர்வைப் பார்க்குறே. நான் என்னோடதப் பார்க்குறேன். இதுல கோபப்பட என்ன இருக்கு? நீ ஒன்னும் எனக்குக் கடமைப்பட்டவள் இல்லையே."

"நீ எனக்கு யாருமே இல்லைங்றது ஓர் உலக மகா நடிப்பு. ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றே இல்ல." மனதுக்குள் நினைத்தபடி அவள் மெல்லச் சிரித்தாள்.

அவனுக்கு அது எரிச்சலூட்டியது. "ஏன் சிரிக்கிற?"

"இல்லை, 2000 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் உன்னைப் பத்தி அவ்வளவு கச்சிதமா பக்காவா எழுதிட்டுப் போயிருக்காரு."

"என்னைப் பத்தியா? ரெண்டாயிரம் வருஷதுக்கு முன்னாடி எப்படி என்னைப் பத்தி? யாரு அது?"

"வேற யாரு? திருவள்ளுவர்தான்!"

"திருவள்ளுவரா? திடீர்னு தமிழ்ப் பாடம் எடுக்கப் போறியா?"

"ம்! அவர் ஒரு குறள் எழுதியிருக்கார்,

"செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு."         (குறள், 1097)

இதோட அர்த்தம் என்ன தெரியுமா?" அவள் தன் கையை மேஜை மீது நீட்டி, அவன் கைக்கு அருகில் கொண்டு சென்றாள்.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் புருவத்தை உயர்த்தினான்.

"உண்மையிலேயே நம்ம மேல அதிக அன்பும் பிரியமும் இருக்கறவங்கதான், அதை வெளியே காட்டிக்கிட்டா அழுதுடுவோம்னு பயந்து, லேசான கடுஞ்சொற்களைப் பேசுவாங்களாம். எதிரி மாதிரி ஒரு பொய்யான, கொடூரமான பார்வையைப் பார்ப்பாங்களாம். ஏதோ சம்பந்தமே இல்லாத அந்நியன் போல நீ யாருன்னே தெரியாதுங்கிற மாதிரி பாவனை பண்ணுவாங்களாம். ஆனா, அந்தப் பொய்யான கோபத்துக்கும், அந்த அந்நியப் பார்வைக்கும் பின்னாடி இருக்கிறது, ஒரே ஒரு விஷயம்தான். உன்னை விட்டு பிரிய முடியலையேங்கிற பயமும் பிரியமும் மட்டும்தான்."

அவன் அசைவற்று உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்தப் பொய் ஆக்ரோஷம், கேலிச் சிரிப்பு, அந்நியப் பார்வை எல்லாம் ஒரு நொடியில் பஞ்சரான வண்டிச் சக்கரம் போல ஆயின.

அவன் தன் கையைத் திருப்பி அவளுடைய விரல்களை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான். அவனுடைய விரல் நுனிகளில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

"நீ திருச்சி போனப்புறம், வீக்கெண்ட்ல நான் பைக் எடுத்துட்டு வந்தா காபி வாங்கித் தருவியா?" என்றான். அவனுடைய குரல் இப்போது மிகவும் தாழ்ந்து, மிருதுவாகியிருந்தது.

அவள் சிரித்தாள். "காபி மட்டும் இல்லை, திருவள்ளுவர் குறளுக்கு விளக்கமும் தருவேன்."

"அதையெல்லாம் நான் விகடபாரதின்னு ஒருத்தன் ப்ளாக்ஸ்பாட்டுல எழுதுறான். அதுலேயே நான் படிச்சுக்கிறேன். எனக்கு நீயும் காபியும் மட்டும் போதும்." அவன் சிறுபிள்ளையைப் போலக் குழறினான்.

கபே ஜன்னலில் மழைத் துளிகள் மெல்ல வழிந்தன. அவர்களுக்கு இடையே உருவாகியிருந்த சிறிய இடைவெளியில், இப்போது இருவருக்குமான தூரம் சுத்தமாகக் குறைந்திருந்தது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

25 Aug 2026

கத்திக் கொள்வது காதலின் டெசிபல் விளையாட்டு!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 16

கத்திக் கொள்வது காதலின் விளையாட்டு!

விளமல்.

தேசிய நெடுஞ்சாலை 83.

சுட்டெரிக்கும் மதிய உச்சி வெயில்.

தார்க்காற்றின் வெப்ப அலைகள் சாலையில் பிம்பங்களை நெளித்துக் காட்டிக் கொண்டிருந்தன.

சிக்னலின் சிவப்பு விளக்கு எரிய, அவன் தன் பைக்கின் எஞ்சினை அணைத்து விட்டு, கால்களைக் கீழே ஊன்றி நிறுத்தினான்.

அவனது ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் அமர்ந்திருந்த அவளது முகம் தெரிந்தது. டிராபிக் ஜாம் கோபத்திலும், வெயிலின் காங்கைத் தாக்குதலிலும் அவளது முகம் அப்படியே கோவைப்பழம் போலச் சிவந்து போயிருந்தது.

சிக்னல் பச்சையைக் காட்டியதும் வண்டியை முறுக்கியபடி திருவாரூர் பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை வழியாகச் சோமசுந்தரம் பூங்காவிற்கு முன் வண்டியை நிறுத்தினான்.

"ஏன்டா உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? இந்த உச்சி வெயில்ல விளமல்ல இருந்து என்னை சோமசுந்தரம் பார்க்கு ஏன்டா கொண்டு வந்திருக்கே? இந்த பனகல் ரோட் டிராபிக்ல வேர்த்து கொட்டுது. எனக்கு ஆபீஸ்ல ஆயிரத்தெட்டு வேலை இருக்கு தெரியுமா?"

அவளது குரலில் டெசிபல் ஏறியிருந்தது. சோமசுந்தரம் பூங்காவின் வாயிலில் சுற்றியிருந்த ஆட்டோக்காரர்களும், பூங்காவின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த பொதுமக்களும் லேசாகத் திரும்பிப் பார்த்தார்கள்.

அவன் சலனமில்லாமல் தன் ஹெல்மெட் விசரை மெல்ல உயர்த்தினான். நெற்றியில் அரும்பியிருந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டே, அவளது கோபமான முகத்தை நேராகப் பார்த்தான்.

"நானும் ஒன்னும் ஜாலியா வரலடி! நீ நேத்து ராத்திரி கெஞ்சி கேட்ட அந்த ஆடிட் ரிப்போர்ட் அனாலிசிஸை, நைட் பூரா தூங்காம முழிச்சு உக்காந்து ரெடி பண்ணியிருக்கேன். இப்போ கரெக்ட் டைம்க்கு சோமசுந்தரம் பார்க்ல வெச்சு அதை உன்கிட்ட தரலைன்னா, ஆபீஸ்ல உன் மேனேஜர் உன்னை எல்லாரும் முன்னாடியும் வச்சு திட்டுவான்னுதான் இந்தச் சுட்டெரிக்குற வெயில்ல ஓடி வந்தேன். அதுக்கு போய் இப்படிக் கத்துறியே!"

"ஓ! பெரிய தியாகி! அதுக்கு நான் தலைகுனிஞ்சு நன்றி சொல்லணுமோ? அதை ஆபீஸ் மெயில்லயே அனுப்ப வேண்டியதானே? இல்ல அதை அங்கேயே ஆபிஸ்லேயே வெச்சு தர வேண்டியதுதானே. அதுக்கு எதுக்கு விளமல்ல இருக்குற ஆபிஸ்லேர்ந்து இவ்வளோ தூரம் வரணும்? என்னை இந்த வெயில்ல அலைய வைக்கணும்னு உனக்கு ஒரு சந்தோஷம், அவ்வளவுதானே?" அவளது கண்கள் கோபத்தில் பொரிந்தன.

"மெயில்ல அனுப்பினா பைல் சைஸ் அதிகம்டி! சர்வர்ல பிளாக் ஆகும்னு தெரியாதா? அதான் பென்டிரைவ்ல கொண்டு வந்தேன். அதெ ஆபிஸ்ல வெச்செல்லாம் கொடுக்க முடியாது. வேணும்னா அமைதியா வாங்கிட்டு போ, இல்லைனா இப்படியே பைக்ல இருந்து இறங்கி ஆட்டோ பிடிச்சு ஆபீஸுக்குப் போ!" அவன் குரலை உயர்த்தினான்.

அவனது முகத்திலும் கடுமையான எரிச்சல் படர்ந்திருந்தது. யாராவது பார்த்தால், இருவரும் ஏதோ பெரிய சண்டை போட்டுக்கொண்டு, இனி வாழ்நாளில் பேசவே மாட்டார்கள் என்றுதான் நினைப்பார்கள்.

அவள் அவனை உக்கிரமாய் முறைத்தாள். "சரி சரி மெண்டல் மாதிரி கத்தாதே! முதல்ல அந்த பென்டிரைவை எடு!"

அவன் தன் சட்டைப் பையில் கைவிட்டு, சிறிய சில்வர் வண்ண பென் டிரைவை எடுத்தான். அதை அவளது கையில் சற்று அழுத்தமாகத் திணிக்கும் அதே வேளையில், சட்டென்று பைக் கவரில் வைத்திருந்த பார்சலையும் அவள் கைகளில் கொடுத்தான்.

"இது என்ன?" அவள் புரியாமல் புருவங்களை உயர்த்தினாள்.

"நீ காலைல ஆபீஸுக்கு சீக்கிரம் போகணும்னு சாப்பிடாம ஓடி வந்திருப்பன்னு எனக்கு நல்லாத் தெரியும். இந்தச் சுட்டெரிக்குற வெயில்ல பசிச்சா வயிறு எரியும். அப்புறம் நாள் முழுக்க உன்னால வேலை செய்ய முடியாது. அதான் வர்றப்பவே பகவதி மெஸ்ல ஒரு மட்டன் பிரியாணி பார்சல் பண்ணிகிட்டு வந்தேன். இப்போது ஒழுங்கா பார்க்குல உக்காந்து சாப்பிடு," என்றான் குரலை மென்மையாக்கி.

அவள் கையிலிருந்த அந்த மட்டன் பிரியாணி பார்சலைப் பார்த்தாள். நொடியில் அவளது கோபம் பனியாக உருகியது. அவளது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

"ஏன்டா அவ்ளோ கோபமாப் பேசுற மாதிரி நடிச்ச? நிஜமாவே எனக்கு கோபம் வந்துடுச்சு தெரியுமா?" அவள் லேசான வெட்கத்துடன் கேட்டாள்.

அவன் சிரித்தான். "நீதானே வெயில்ல சும்மா சும்மா கத்தின. சரி, பொண்ணு முன்னாடி நாமளும் கொஞ்சம் கெத்து மெயின்டெய்ன் பண்ணுவோமேனுதான்! சீக்கிரம் சாப்பிடு. ஆபீஸ்ல கொண்டாந்து விடுறேன்."

"நான் மட்டும் எப்பிடிடா? நீயும் வா!"

"புல் ப்ளேட் பிரியாணியைப் புல் கட்டு கட்டினாத்தான் உனக்கெல்லாம் கட்டுபடியாகும். இது ஆப் ப்ளேட்தான். சீன் போடாம டக்குன்னு சாப்பிடு."

"டேய் அடிச்சேன்னா பாரு. உன்னை இங்கேயோ கொன்னு போட்டு பிரியாணியாக்கித் தின்னுடுவேன்!"

"ஆத்தா மவராசி! நீ செஞ்சாலும் செய்வே. ஷேர் பண்ணி பிரியாணியைத் தின்னுட்டு நான் பிரியாணி ஆகாம தப்பிச்சுக்கிறேன்." என்று அவன் ஆட்டுக்குட்டியைப் போல அவள் பின்னால் போனான்.

அவள் சிரித்தபடியே ஓரமாக மரநிழல் உள்ள அமைதியான பெஞ்சை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்.

கோபம் உள்ள இடத்தில்தான் காதல் இருக்கும் என்கிறார் வள்ளுவர். அதை நீங்களே பாருங்களேன்.

"உறாஅ தவர்போல் சொல்லினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்."                 (குறள், 1096)

-           சூத்திரங்கள் தொடரும்!

*****