கருப்பு – அதிகாரத்தின் நிழல்களும், கடவுளின் வருகையும்!
மனிதன்
தன் இயலாமையின் உச்சத்தில், நியாயத்தின் கதவுகள் யாவும் பூட்டப்படும்போது, பிரபஞ்சத்தின்
ஏதோ ஒரு புள்ளியிலிருந்து தனக்கான விடிவு வரும் என்று நம்புகிறான். அந்த நம்பிக்கையின்
குறியீடான மிளகாய் சாந்து அரைக்கும் சடங்கிலிருந்து தொடங்குகிறது கருப்பு.
ஆனால்,
இங்கே கேள்வி என்னவென்றால், நீதிமன்றம் என்பது மனிதன் உருவாக்கிய சட்டங்களின் தங்குமிடம்.
அங்கே தெய்வீகம் நுழைந்தால் மனிதனின் நீதி என்னவாகும்?
ஓர்
எளிய தந்தை தன் மகளின் மருத்துவத்திற்காகக் கொண்டு வந்த நகைகளை இழக்கிறார். சட்டத்தின்
காவலனாக இருக்க வேண்டிய வழக்கறிஞர் அநீதியின் மொத்த உருவமாக நின்று அதைத் தடுக்கிறார்.
தத்துவம்
என்ன சொல்கிறது என்றால், அதிகாரம் எங்கு செறிவூட்டப்படுகிறதோ, அங்கு அறம் நீர்த்துப்போகிறது.
நீதிமன்றம்
என்ற கட்டமைப்பு, எளியவர்களைக் காப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு செக் வைக்கும் சதுரங்கப்
பலகையாக மாறும்போது, மனிதன் தன் சட்டப் புத்தகங்களை மூடிவிட்டு, ஆதி தெய்வமான கருப்பனை
நோக்கித் திரும்புகிறான்.
சூர்யா
கருப்புசாமியாக இறங்கி வரும்போது, அது வெறும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி மட்டுமல்ல,
அது பிரபஞ்ச நீதியின் வெளிப்பாடு. மிளகாய்ப் பொடியின் உஷ்ணத்தை விடவும், அநீதியைக்
கண்டு எரியும் ஒரு தெய்வத்தின் கோபம் திரை எங்கும் ருத்ரதாண்டவமாக மாறுகிறது.
இயக்குநர்
காட்டும் சில தத்துவார்த்த ஐடியாக்கள் கவனிக்கத்தக்கவை.
அராஜகங்கள்
அரங்கேறும் நீதிமன்றத்தை நல்வழிப்படுத்த, சாட்சாத் கருப்பனே இறங்கி வந்தால் என்னவாகும்?
வழக்கம் போல, லாஜிக் கதவைச் சாத்திவிட்டு ஜன்னல் வழியாகக் குதிக்கும்! ஆம், கடவுள்களுக்கு
வேறு வேலைகள் எதுவும் இல்லை போல!
நாயகி
திரிஷாவுக்கு வழக்கறிஞர் கோட் ஓகே. ஆனால், அந்த லிப் சிங்க்? உதடுகள் ஒரு கிலோமீட்டர்
முன்னால் போகின்றன, வசனங்கள் அரை கிலோமீட்டர் பின்னால் வருகின்றன.
அபிநயங்கரின்
அதிரடி இசையும், ஜி.கே.விஷ்ணுவின் கேமராவும் அந்தத் தெய்வீக ஆக்ரோஷத்தைக் கொண்டாட்டமாக
மாற்றினாலும், தத்துவ ரீதியாக ஒரு கேள்வி எழுகிறது. கடவுள் எல்லாவற்றையும் ஜஸ்ட் காட்
திங்ஸ் என்று தன் மாயாஜாலத்தால் தீர்த்துவிட்டால், மனிதனின் பகுத்தறிவும் போராட்டமும்
எங்கே போவது?
திரைப்படம்
ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ பிரபஞ்சத்திற்குள் நுழைவதும், சிங்கத்தை
உலாவ விடுவதும் தீவிரமான ஒரு தத்துவக் கதையை, சமகால பாப் கலாச்சார ஸ்பூப்பாக மாற்றிவிடுகிறது.
கருப்பு
என்பது ஒரு ஆன்மிகத் தேடலோ அல்லது சட்டத்தின் நுணுக்கங்களைப் பேசும் கதையோ அல்ல. அது,
அநீதி மிஞ்சும் போது ஏதோ ஒரு வடிவில் நீதி திருப்பி அடிக்கும் என்ற மனிதனின் ஆதிப்
பேராசையின் கமர்ஷியல் வடிவம்.
ஆர்.ஜே.பாலாஜியின்
இயக்கத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், பல நட்சத்திரங்கள் வலம் வரும் இந்த கருப்பனின்
யுனிவர்ஸ், சூர்யா என்ற ஒற்றை மனிதனின் மாஸ் கமர்ஷியல் அக்னிக்காகத் தாராளமாகத் தரிசிக்கப்பட
வேண்டிய ஒன்று!
கிளைமாக்ஸில்
அவர் ஆடும் பேயாட்டம் ரசிகர்களுக்கு மிரட்டலான திரை அனுபவம், லாஜிக் பார்ப்பவர்களுக்குத்
தலைவலி அனுபவம்!
படத்துக்கு
பத்துக்கு 6¼ மார்க் கொடுக்கலாம். அந்தக் கால் மார்க் எக்ஸ்ட்ரா, இயக்குநர் ஆர்.ஜே.
பாலாஜியே வில்லனாக நடித்ததற்கு.
*****






