9 Aug 2026

அச்சம் – நடப்பதற்கும் நடக்கப்போவதற்கும் இடையிலான இடைவெளி!

அச்சம் – நடப்பதற்கும் நடக்கப்போவதற்கும் இடையிலான இடைவெளி!

நிகழ்காலம் என்பது நேர்மையானது. அது உங்களை அறைந்தால் வலிக்கும், அவ்வளவுதான். ஆனால், எதிர்காலம் என்பது ஒரு மறைமுகத் தாக்குதல். அது நிழல் யுத்தம் நடத்துகிறது.

ஒரு துயரம் உண்மையில் நிகழும்போது, அதைச் சமாளிக்க நம்மிடம் ஒரு செயல் திட்டம் இருக்கும். ஆனால், அது நிகழ்வதற்கு முன்பு இருக்கும் அந்த இடைவெளியில், நம் மூளை ஒரு மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் போல இயங்கத் தொடங்குகிறது.

நிஜத்தில் நீங்கள் ஒருமுறைதான் சாவீர்கள். ஆனால் அச்சத்தில், சாவதற்கான ஒத்திகையைத் தினமும் ஐந்து முறை பார்த்துப் பழகுகிறீர்கள்.

மனித மூளைக்கு ஒரு விசித்திரமான குணம் உண்டு. ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று கற்பனை செய்தால், அப்படியெல்லாம் நடக்காது என்று தர்க்கம் பேசும். ஆனால், ஒரு கெட்ட விஷயம் நடக்கும் என்று நினைத்தால், அதற்கு மட்டும் பிஹெச்டி தரத்தில் கிராபிக்ஸ் போட்டு விரிவாகக் காட்டும்.

ஒரு காய்ச்சல் வந்தால் அது கொரோனாவாக இருக்குமோ?

ஒரு போன் கால் எடுக்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு விபத்து நடந்திருக்குமோ?

இந்தக் கேள்விகள்தான் நம்மைத் தின்கின்றனவே தவிர, வந்தக் காய்ச்சல் அல்ல, நடக்காத விபத்தும் அல்ல.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், பயம் என்பது ஒரு நஷ்டமான வியாபாரம். நடக்காத ஒரு விஷயத்திற்காக, இப்போதிருக்கும் அமைதியை வட்டியாகக் கட்டிக் கொண்டிருப்பது போன்றது.

ஒரு நிகழ்வு என்பது பத்தில் ஒரு பங்கு வலி என்றால், அதைப் பற்றிய அச்சம் என்பது பத்தில் ஒன்பது பங்கு அதிகப்படியான வட்டி.

வேலையற்ற மூளை பிசாசின் கூடாரம் அல்ல, அது ஓர் இன்சூரன்ஸ் ஏஜென்டின் அலுவலகம். எப்போதும் இல்லாத ஆபத்துகளுக்கு பிரீமியம் கட்டச் சொல்லும்.

நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆனால் நம் பயமோ, சுவர் இடிந்து விழுந்தால் சித்திரம் என்னவாகும்? என்று நினைத்து, சித்திரமே வரையாமல் சுவரைப் பிடித்துக்கொண்டு அழுவதாகும்.

துன்பம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பவன் ஞானி. துன்பமே வராது என்று இருப்பவன் முட்டாள். ஆனால், துன்பம் வந்து விடுமோ என்று இப்போதே அழுதுகொண்டிருப்பவன் ஒரு சராசரி மனிதன்.

நிகழ்வுகள் நம்மைத் தற்காலிகமாகக் காயப்படுத்துகின்றன. ஆனால் அச்சமோ, நம்மை உயிருடன் இருக்கும்போதே பதப்படுத்தப்பட்ட பிணமாக மாற்றி விடுகிறது. எனவே, எதற்கும் கவலைப்படாதீர்கள். ஏனென்றால், நீங்கள் எதற்காகப் பயப்படுகிறீர்களோ, அதை விட மோசமான ஒன்றுதான் நிஜத்தில் நடக்கப்போகிறது.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத விபத்து. இதில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு படுக்கையறையில் அமர்ந்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பயம் என்பது ஒரு குடை போன்றது. மழை பெய்யாதபோதும் அதைப் பிடித்துக்கொண்டு நடப்பவனைப் பார்த்து மேகங்கள் சிரிப்பதில் ஆச்சரியமே இல்லை.

எனவே, கவலைப்படுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் கவலைப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை, உங்கள் முகத்தின் பொலிவு மாறுவதைத் தவிர!

*****

8 Aug 2026

ஆயிரம் ரூபாயும், மனிதனின் பேராசையும்!

ஆயிரம் ரூபாயும், மனிதனின் பேராசையும்!

பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய இயற்பியல் விதி என்னவென்றால், ஈர்ப்பு விசைக்கு அடுத்தபடியாக மனிதனை வேகமாக இழுப்பது டிஸ்கவுண்ட் என்ற மாய வார்த்தைதான். கடவுள் உலகத்தைப் படைத்தபோது மனித மூளையின் ஓர் ஓரத்தில் மலிவு விலை என்றொரு பலவீனமான நரம்பை வைத்து தைத்துவிட்டார் போலும்.

சமீபத்தில் ஒரு நாள், படுக்கையில் படுத்துக் கொண்டு பேஸ்புக்கில் விரலால் உலகை அளந்து கொண்டிருந்தான் ரங்கநாதன். அப்போதுதான் அந்தப் பிரம்மாண்டமான ஆன்மீகத் தரிசனம் அவன் கண்முன்னே தோன்றியது.

ஒரு பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் லோகோவுடன் ஒரு விளம்பரம்.

இருபதாயிரம் மதிப்புள்ள ஒரு 5ஜி செல்போன் இரண்டாயிரம் ரூபாய். அதிலும் ஐம்பது சதவீதம் டிஸ்கவுண்ட். ஆக விலை ஆயிரம் ரூபாய்.

தத்துவார்த்தமாக யோசித்துப் பார்த்தால், இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய்க்கு தரமான ஒரு பட்டன் செல் கூட வாங்க முடியாது. ஆனால் ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி மொபைல் என்றால், ரங்கநாதனின் பகுத்தறிவு அவன் தொண்டையைக் கவ்வி, இது பொய் என்று கத்தியது. ஆனால், கண்களில் தெரிந்த பேராசையின் எச்சில், பகுத்தறிவின் முகத்தில் காறி உமிழ்ந்தது.

கேஷ் ஆன் டெலிவரி இருக்கிறதா என்று தேடினான் ரங்காநதன். இல்லை. பணத்தை இப்போதே கொடு, சொர்க்கத்தை அப்புறம் பார், என்றது அந்த இணையப்பக்கம். அவசர அவசரமாக தன் கிரெடிட் கார்டு எண்களைத் தட்டினான். ஆயிரம் ரூபாய் அவன் கணக்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டது.

மூன்று நாட்கள் கடந்தன. பிரபஞ்சம் அசையாமல் இருந்தது. அவன் வீட்டு வாசலில் எந்தப் பார்சலும் வந்து விழவில்லை.

பொறுமையிழந்து, அந்தப் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் அசல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டான்.

வணக்கம் சார், என் ஆயிரம் ரூபாய் 5ஜி மொபைல் எங்கே? என்றான் ரங்கநாதன்.

ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி மொபைலா என்று வாய் வரை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, கணினியைத் தட்டிய அந்தப் பெண்மணி, மன்னிக்கவும் சார், உங்கள் முகவரியிலோ, உங்கள் பெயரிலோ கடந்த நூறு ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தில் எந்த ஆர்டரும் பதிவு செய்யப்படவில்லை, என்றார் மிகக் குளிர்ந்த குரலில்.

ரங்காதன் அதிர்ந்தான். அவன் ஆர்டர் செய்த பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டையும், பணம் அனுப்பிய ரசீதையும் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினான்.

மறுமுனையில் ஒரு பெருமூச்சு கேட்டது.

சார், இது எங்களுடைய இணையதளமே இல்லை. இது ஒரு நிழல் உலகப் பக்கம். சமூக வலைத்தளங்களில் எங்கள் முகமூடியைப் போட்டுக்கொண்டு சிலர் உங்களைப் போன்ற அப்பாவிகளின் மன்னிக்கவும், பேராசைக்காரர்களின் பணத்தைப் பறிக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நேரடியாக எங்கள் அசல் தளத்திற்கு வந்து வாங்குங்கள். பேஸ்புக் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்று ரங்கநாதனுக்கு இலவசமாக ஒரு தத்துவ வகுப்பெடுத்தார்.

அப்போதுதான் ரங்கநாதனுக்குப் புரிந்தது. அவேன் வாங்கியது ஒரு டிஜிட்டல் கானல் நீர்.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் உலகம் என்பது ஒரு நவீன மாயா பஜார். அங்கே ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி மொபைலும் கிடைக்கும், ஐந்து பைசாவிற்குத் தாஜ்மஹாலும் கிடைக்கும். ஆனால், எல்லாம் உங்கள் பணம் கணக்கிலிருந்து கழியும் வரை மட்டும்தான்.

ஆசையைத் தூண்டும் விளம்பரங்களைப் பார்த்ததும் உமிழ்நீர் சுரக்கக் கூடிய ரங்கநாதன் போன்ற மக்களே, எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அந்த உமிழ்நீரின் விலை சில சமயம் ஆயிரம் ரூபாயாக இருக்கலாம், சில சமயம் உங்கள் வங்கித் கணக்கின் மொத்த இருப்பாகவும் இருக்கலாம்.

இப்போது ரங்கநாதன் இருபதாயிரம் ரூபாய்க்குக் கடையிலிருந்து 5ஜி மொபைல்  வாங்கி கடலை பேட்டுக் கொண்டிருக்கிறான். இதன் சுவை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கிறது. பேராசையின் சுவை எப்போதும் அப்படித்தான் போலும்!

*****

மனித குலத்தின் ஆகப்பெரிய ஏஜென்சி – ஊர் வாய்

மனித குலத்தின் ஆகப்பெரிய ஏஜென்சி – ஊர் வாய்

மனிதன் சமூக விலங்காக மாறியதில் இருந்து இன்றுவரை அவனுக்கு இரண்டு கடவுள்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று, மேலே இருப்பதாகச் சொல்லப்படும் கண்ணுக்குத் தெரியாத கடவுள். மற்றொன்று, பக்கத்து வீட்டில் வசிக்கும் அடுத்தவன் என்கிற நடமாடும் கடவுள்.

முதல் கடவுள் நீங்கள் தப்பு செய்தால் நரகத்திற்கு அனுப்புவார் என்று மிரட்டுகிறார். இரண்டாவது கடவுளோ, நீங்கள் தப்பே செய்யாவிட்டாலும் உங்களை தப்பா நினைத்து இங்கேயே நரகத்தைக் காட்டுவார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் முதல் கடவுளை விட இந்த இரண்டாவது கடவுளுக்குத்தான் அதிகம் பயப்படுகிறார்கள்.

தப்பு செய்யும்போது கூட இதைச் செய்வது பாவம், என்று எவனும் யோசிப்பதில்லை; யாராவது பார்த்து விட்டால் என்ன நினைப்பார்கள்? என்றுதான் சுற்றும் முற்றும் பார்க்கிறான். மனித ஒழுக்கத்தின் அடிப்படையே இந்த பயத்தில்தான் ஒளிந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று நகைச்சுவை!

நிஜமாகவே ஒரு தவறு செய்யும்போது பயப்படுவது நியாயமானது, அறிவியல் பூர்வமானது. ஏனெனில், அங்கே ஒரு காரண காரியம் இருக்கிறது. நீங்கள் ஒருவனை அடித்தால், அவன் திருப்பி அடிப்பான் அல்லது போலீஸில் சொல்வான் என்கிற லாஜிக்கான பயம் அது.

ஆனால், நான் ஒழுங்காகத்தான் இருக்கிறேன், ஆனாலும் அவன் என்னை தவறாக நினைத்து விடுவானோ? என்று பயப்படுவது இருக்கிறதே, அது ஒரு மனநோய்.

ஏனெனில், அடுத்தவன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பது உங்களுடைய நடத்தையைப் பொறுத்தது அல்ல, அவனுடைய அஜீரணக் கோளாறைப் பொறுத்தது.

அவன் அன்று காலை மனைவியிடம் திட்டு வாங்கியிருந்தால், நீங்கள் சிரித்துப் பேசுவது அவனுக்கு அலட்சியமாகத் தெரியும்.

அவன் கடனில் மூழ்கியிருந்தால், நீங்கள் புது சட்டை போட்டிருப்பது அவனுக்கு தலைக்கனமாகத் தெரியும்.

அடுத்தவனுடைய மூளையில் ஓடும் எண்ணங்களை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாமா? உங்கள் வீட்டு ரிமோட்டைப் பக்கத்து வீட்டுக்காரன் கையில் கொடுத்துவிட்டு, தயவுசெய்து நல்ல சேனலாக வையுங்கள் என்று கெஞ்சுவதைப் போன்றது இது.

அடுத்தவன் நினைப்பது அவனது தனிப்பட்ட துயரம்!

உலகிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம், ஒரு முட்டாள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று ஒரு புத்திசாலி கவலைப்படுவதுதான்.

நீங்கள் காலையில் எழுந்து, நேர்மையாக வேலைக்குச் சென்று, யாருக்கும் துரோகம் செய்யாமல் வாழ்கிறீர்கள். ஆனால், தெருக்கோடியில் நிற்கும் நால்வர் உங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள். உடனே உங்கள் இதயம் படபடக்கிறது, ஐயோ, என்னை தப்பா நினைச்சிட்டாங்களோ? என்று.

அங்கேதான் நீங்கள் தோற்கிறீர்கள். அவர்கள் உங்களைப் பற்றித் தப்பாக நினைப்பதன் மூலம் உங்கள் சொத்தா குறைகிறது, அல்லது உங்கள் பேங்க் பேலன்ஸ் மாறுகிறதா? இல்லையே. அது முழுக்க முழுக்க அவனது மண்டைக்குள் நடக்கும் ரசாயன மாற்றம். உங்களுக்கு ஏன் அனாவசியக் கவலை?

அடுத்தவன் உங்களைப் பற்றித் தப்பாக நினைப்பது அவனுடைய தனிப்பட்ட துயரம், அவனுடைய நேர விரயம். அதை அவனோடு நிறுத்திக் கொள்ளாமல், நீங்களும் அதை நினைத்து பயப்படுவது, அவனது முட்டாள்தனத்திற்கு நீங்கள் தரும் ராயல்டி.

காலம் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த அற்பமான வாழ்க்கையில், நாமே ஒரு சுயமான ஸ்கிரிப்ட் எழுதி நடிக்கப் பயந்து, அடுத்தவன் எப்போது கைதட்டுவான் என்று காத்துக்கொண்டிருப்பது ஆகச் சிறந்த அடிமைத்தனம்.

தவறு செய்தால் பயப்படுங்கள், தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். அது உங்களை மனிதனாக வைத்திருக்கும். ஆனால், தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயப்படாதீர்கள். ஏனெனில், இந்த உலகம் உங்களை வாழ்த்தினாலும் தூற்றினாலும், இறுதியில் நீங்கள் தனியாகத்தான் சாகப் போகிறீர்கள். நீங்கள் சாகும்போது அந்த அடுத்தவன் வந்து உங்கள் எமதர்மனிடம் வாதாடப் போவதில்லை.

எனவே, உங்கள் மனசாட்சிக்குத் துரோகம் செய்யாதவரை, உலகம் உங்களை யோக்கியன் என்று நினைத்தாலும் அயோக்கியன் என்று நினைத்தாலும் உங்களுக்கு என்ன?

ஊர் வாயை மூட முற்படாதீர்கள்; உங்கள் காதுகளை மூடிக் கொள்ளுங்கள். வாழ்க்கை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகும்!

*****

7 Aug 2026

கொசுக்களின் உலகமயமாக்கல்

கொசுக்களின் உலகமயமாக்கல்

"பூமிப்பந்து அதன் எல்லைகளைக் கடந்துவிட்டது" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அலறுகிறார். பாவம், அவருக்குப் பந்து விளையாடத் தெரியவில்லை போலும். எல்லைகளைக் கடப்பதுதான் பந்தின் இயல்பு. ஆனால், இங்கே எல்லை தாண்டி ஓடுவது பந்தல்ல; உள்ளே இருக்கும் ஆட்டம்.

மனிதகுலத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு நெருப்பு என்கிறார்கள். அன்று குகைக்குள் சிக்கிய சிக்கிமுக்கிக் கல்லில் தொடங்கிய அந்த ஆதி நெருப்பு, இன்று அண்டார்டிகாவின் பனிப்பாறைகளைத் தின்று செரிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் நாம் ஏற்றிய அடுப்பு, இப்போது நம்மையே அவித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் தத்துவார்த்த நகைமுரண்.

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், பூமிக்கு ஒரு பட்ஜெட் இருக்கிறது. உள்ளே வரும் வெப்பம், வெளியே போகும் கதிர்வீச்சு. வரவு, செலவு கணக்கு சரியாக இருந்தால் பூமி நிம்மதியாக வாழும். ஆனால், கடந்த 65 ஆண்டுகளாக பூமியின் கணக்குப்பிள்ளை தூங்கிவிட்டார் போலும். பட்ஜெட்டில் துண்டு விழுகிறது.

2015 முதல் 2025 வரையிலான பத்தாண்டுகள், இந்த பூமியின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான கோடைக் காலம். 19ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.43 டிகிரி செல்சியஸ் அதிகம். "வெறும் ஒன்றரை டிகிரிதானே!" என்று நாம் குளிர்சாதனப் பெட்டியின் ரிமோட்டைத் தேடலாம்.

ஆனால், மனித உடலின் வெப்பநிலை ஒன்றரை டிகிரி உயர்ந்தால் அதற்குப் பெயர் காய்ச்சல். பூமிக்கு இப்போது வந்திருப்பதும் அதே காய்ச்சல்தான். நாமோ, அதற்கு பாராசிட்டமால் போடுவதற்குப் பதிலாக, இன்னும் கொஞ்சம் கரியமில வாயுவை விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

பூமிக்குக் காய்ச்சல் அடித்தால், முதலில் வியர்ப்பது கடல்களுக்குத்தான். துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி ஓடும்.

1980களில் இருந்த ஆர்டிக் பனிப்பரப்போடு ஒப்பிடும்போது, 2025இல் அது வெறும் 14.19 மில்லியன் சதுர கிலோமீட்டராகச் சுருங்கிவிட்டது. பனி உருகுவது அழகுதான், அது நம்மை மூழ்கடிக்காத வரை.

1993ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது கடல் மட்டம் 11 சென்டிமீட்டர் உயர்ந்திருக்கிறது. கடல் நிலத்தை நோக்கி நகர்கிறது. நாம் நிலத்தை ஆக்கிரமித்ததற்கு, கடல் செய்யும் நாகரிகமான ஆக்கிரமிப்பு இது.

விளைவு?

நிலத்தடி நீர் உவப்பாக மாறுகிறது. இன்னும் சில பத்தாண்டுகளில், வந்தாரை வாழவைக்கும் சென்னை, வந்தாருக்கு நல்ல தண்ணீர் தராத நகராக மாறினாலும் வியப்பில்லை.

ஆழ்கடல்களின் அமிலத்தன்மை கடந்த 41 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே போகிறது. நாம் காற்றில் கரைக்கும் கரியமில வாயுவில் 29 சதவீதத்தைக் கடல் தன் நெஞ்சில் சுமக்கிறது. மனிதனின் பாவங்களைக் கழுவிக் கழுவி, இன்று கடலே நஞ்சாகிக் கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றம் என்பது வெறும் வானிலை அறிக்கை அல்ல; அது ஒரு மருத்துவச் சீட்டு. வெப்பநிலை உயரும்போது, வெள்ளமும் புயலும் இயல்பாகின்றன. இயற்கையின் இந்த ஆக்ரோஷ தாண்டவத்தின் பின்னால் வருவதுதான் நீர் மூலம் பரவும் நோய்கள்.

உலக சுகாதார அமைப்பு ஒரு சுவாரசியமான உண்மையைச் சொல்கிறது: வெப்பம் அதிகமாகும்போது கொசுக்களுக்குக் காண்டிராக்ட் எடுத்தது போல் கொண்டாட்டமாகி விடுகிறது.

உலகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு நாம் உருவாக்கிய இந்த உலக வெப்பமயமாதல்தான் முதன்மைக் காரணம். கொசுக்களைக் கொல்வதற்கு ஆல் அவுட்டைத் தேடும் மனிதன், கொசுக்கள் வாழ்வதற்கான ஆல் இன் ஆல் சூழலைத்தானே உருவாக்குகிறான்.

மறுபுறம், நாட்டின் பொருளாதாரம் மழையின் துளிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பொய்த்துப் போகும் பருவமழை, அல்லது முன்கூட்டியே கொட்டித் தீர்க்கும் வெள்ளம் ஆகிய இவை இரண்டுமே வேளாண்மையின் முதுகெலும்பை உடைக்கின்றன.

வெப்ப அழுத்தத்தால் இன்று உலகில் 1.2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வயலிலும் தொழிற்சாலையிலும் வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி, தன் உடல்நலனை இழக்கும்போது, அந்த நாட்டின் பொருளாதாரமும் தானாகவே முடங்கிப் போகிறது.

மனிதன் விசித்திரமானவன். தான் வாழும்போதும், தன் இறப்புக்குப் பின்னும் தனக்கு இடமளிக்கும் இந்த பூமிக்கு அவன் தரும் பரிசு கரியும் புகையும் மட்டும்தான்.

பூமிக்குத் தாகம் எடுக்கிறது. ஆனால், அது தண்ணீருக்கான தாகம் அல்ல; தன்னுயிரைக் காக்கும் மனிதர்களின் அன்புக்கான தாகம். அந்தத் தீராத தாகத்தைத் தணிக்க நாம் மரங்கள் போன்றவற்றுக்கு உயிர் கொடுக்கும் உன்னதச் செயல்களைச் செய்ய வேண்டும். இல்லையெனில், பூமி தன் தாகத்தைத் தணிக்க நம் எல்லோரையும் ஒரே அடியாகக் குடித்துவிடக் கூடும்.

அதுவரை, காய்ச்சல் அடித்த பூமிப்பந்தின் மீது அமர்ந்து கொண்டு, டெங்கு கொசுக்களோடு அடித்துப் பிடித்து விளையாட்டு விளையாடலாம்.

*****

குடை மற்றும் ஏணி தத்துவம்

குடை மற்றும் ஏணி தத்துவம்

மழை பெய்யும் போது மனிதன் குடையைத் தேடுகிறான். அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான். மழை நின்ற அடுத்த விநாடி, அதே குடை மூலைக்குத் தள்ளப்படுகிறது அல்லது மறதியாகப் பேருந்திலேயே விட்டுச் செல்லப்படுகிறது.

இங்கே குடைக்குக் கிடைத்த மரியாதை அதன் மீதுள்ள நேசத்தால் அல்ல, மழையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற தேவையால்.

மனிதர்கள் உங்களைக் கொண்டாடுகிறார்கள் என்றால், நீங்கள் அவர்களுக்குப் பயனுள்ள ஒரு குடையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களிடம் அவர்களுக்கு அன்பு இருக்கிறது என்று நினைத்து ஏமாந்துவிடாதீர்கள். அங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது, எனவே குடை தேவைப்படுகிறது, அவ்வளவுதான்.

ஒருவர் உங்களை எந்நேரமும் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றால், நீங்கள் அவரது வாழ்வில் இறைவன் போன்றவர் என்று அர்த்தமல்ல, அவரது வீட்டு சுத்தியல் போன்றவர் நீங்கள். ஆணி அடிக்க வேண்டிய தேவை வரும்போதெல்லாம் சுத்தியல் பவித்திரமாகத் தேடப்படும்.

நவீன உலகம் என்பது ஒரு மாபெரும் சந்தை. இங்கே உணர்ச்சிகள் கூட பண்டமாற்று அடிப்படையில் தான் இயங்குகின்றன.

எதிர்பார்ப்பு என்பது எப்படி இருக்கிறது என்றால், நான் உனக்கு இதைச் செய்கிறேன், நீ எனக்கு அதைச் செய் என்பதாக இருக்கிறது.

ஏமாற்றம் என்பது எப்படி இருக்கிறது என்றால், அவன் காரியம் முடிந்ததும் என்னை மறந்துவிட்டான் என்பதாக இருக்கிறது.

காரியம் முடியும் வரை காட்டப்படும் அதீத அக்கறையை, நாம் அன்பு என்று தவறாக மொழிபெயர்த்துக் கொள்கிறோம். நேசம் என்பது எந்தக் காரணமும் இன்றி, நிபந்தனைகள் இன்றி மலர்வது. தேவை என்பது இலக்கோடு வருவது. இலக்கு அடைந்ததும், பாதை மாறிவிடும்.

ஓர் ஏணிக்குத் தெரியும், தன்னை மிதித்துக்கொண்டுதான் மனிதர்கள் மேலே ஏறுகிறார்கள் என்று. மேலே ஏறிய பிறகு யாரும் குனிந்து ஏணிக்கு நன்றி சொல்வதில்லை; மாறாக, மேலே இருக்கும் தளத்தின் அழகைப் புகழத் தொடங்கிவிடுவார்கள்.

நம்மில் பலர், பல உறவுகளில் ஏணிகளாகவே வாழ்ந்து முடிந்துவிடுகிறார்கள்.

அவர் என்னைத் தேடி வருகிறாரே, என்று பெருமைப்பட்டுக்கொள்வது அறியாமை. அவருக்குத் வேறு யாரும் கிடைக்கவில்லை, அல்லது உங்களை விடச் சிறந்த கருவி கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்த உண்மையை எவ்வளவு சீக்கிரம் ஒருவர் உணர்கிறாரோ, அவ்வளவு சீக்கிரம் அவன் ஏமாற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அப்படியென்றால் இந்த உலகத்தில் தூய அன்பே இல்லையா?

மனிதர்கள் உங்களை நேசிக்கிறார்களா இல்லையா என்பதை அறிய ஒரே ஓர் எளிய வழிதான் இருக்கிறது. உங்களுக்கு எதையும் செய்யத் துப்பில்லை என்றும், உங்களிடம் தருவதற்கு ஒன்றுமே இல்லை என்றும் உலகிற்கு அறிவியுங்கள்.

அதன் பிறகும் யாராவது ஒருவர் உங்களோடு அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்தால், அவரை மட்டும் நம்புங்கள். ஏனெனில், அவர் உங்களை நேசிக்கிறார். உங்களின் வெறும் இருப்பை மட்டுமே நேசிக்கிறார்!

*****

6 Aug 2026

அல்காரிதம் சொல்லித் தர முடியாத பாடம்!

அல்காரிதம் சொல்லித் தர முடியாத பாடம்!

தொண்டை நரம்பு புடைக்க பத்தொன்பதாம் நூற்றாண்டு பாணியில் ஒரு மணி நேரம் விரிவுரை ஆற்றும் கல்வி முறையை இன்றைய மாணவர்கள் விரும்புவதில்லை. இதனால் மாணவர்களுக்குக் கவனக்குறைவு அதிகமாகி விட்டது, பொறுமையில்லை, கற்றலில் ஆர்வமில்லை என்று அர்த்தமில்லை.

மாணவர்கள் இன்று மூன்று மணி நேர கிரிக்கெட் போட்டியை அல்லது ஒரே மூச்சில் எட்டு அத்தியாயங்கள் கொண்ட ஓடிடி தொடரை கண் இமைக்காமல் பார்க்கிறார்கள். அப்படியென்றால் அவர்களிடம் கவனம் இல்லாமல் இல்லை, ஆர்வம் இல்லாமல் இல்லை, பொறுமை இல்லாமல் இல்லை. மாணவர்களுக்கு ஏற்ற சுவாரசியம் கற்பித்தலில் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

ஒரு காலத்தில் அறிவு என்பது ஆசிரியரின் தலையில் மட்டுமே இருக்கும் அரிய பொருளாக இருந்தது. அதைப் பெற மாணவர்கள் அவர் பின்னால் கைகட்டி நிற்க வேண்டியிருந்தது. புத்தகங்கள் புனிதமானவையாகக் கருதப்பட்டன.

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ். செயற்கை நுண்ணறிவும், இணையமும் அறிவை தெருவோரக் கடைகளைப் போல ஜனநாயகப்படுத்திவிட்டன.

இன்று தகவல்களை மனப்பாடம் செய்ய வைப்பதற்கு ஆசிரியர் தேவையில்லை. அதை ஓர் எளிய கூகுள் தேடலோ அல்லது சாட்பாட்டோ நொடியில் செய்துவிடும். அப்படியென்றால், ஆசிரியரின் வேலை முடிந்துவிட்டதா?

அங்குதான் உண்மையான சிக்கலே தொடங்குகிறது.

செயற்கை நுண்ணறிவால் தகவல்களைக் கொட்ட முடியும். ஆனால், ஒரு மாணவனின் கண்களில் மின்னும் பயத்தைக் கண்டறிய முடியாது. தோற்றுப்போய் நிற்கும் ஒருவனின் தோளைத் தொட்டு, பரவாயில்லை, எழுந்து வா என்று சொல்ல முடியாது.

இன்றைய குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே உலகத்தைப் பற்றிய பல்லாயிரம் அரைகுறைத் தகவல்களுடன் வருகிறார்கள். அந்தத் தகவல்களை யார் தருகிறார்கள்? சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள்.

வலைதளங்கள் தகவல்களைத் தருகின்றன, ஆனால் அவை விமர்சனச் சிந்தனையைத் தருவதில்லை. அவை உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன, ஆனால் அதை நிர்வகிக்கும் முதிர்ச்சியை வழங்குவதில்லை.

ஒரு காலத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளின் கைகளைப் பிடித்து நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இன்று அவர்களின் கைகளைப் பிடித்து, போலிச் செய்திகளும், வெறுப்புப் பிரச்சாரங்களும் நிறைந்த டிஜிட்டல் காட்டுக்குள்ளிருந்து பாதுகாப்பாக அழைத்து வர வேண்டியிருக்கிறது.

இன்றைய குழந்தைகள் ஆசிரியர்களை மதிப்பதில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. அவர்கள் அதிகாரத்தை மதிப்பதில்லை, ஆனால் அன்பையும் தகுதியையும் ஆராதிக்கிறார்கள். மாணவனின் உலகத்தைப் புரிந்து கொள்ள முயலும் ஆசிரியரை அவர்கள் என்றும் மறப்பதில்லை.

இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, ஒரு செய்தியைக் கண்டதும் அதைச் ஆராய, சந்தேகிக்கக் கற்றுத் தர வேண்டும். மாற்றுக் கருத்துடையோரையும் சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும். மனிதர்களிடம் பரிவு காட்டுவதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இனி வகுப்பறையில் ஆசிரியர்கள் அமைதியாக இருந்தால், அந்த இடத்தில் சமூக வலைத்தளங்கள் அமர்ந்து கொள்ளும். பாடப் புத்தகங்களை தாண்டி, மனிதத்தையும் வாழ்க்கைக்கான நிதானத்தையும் கற்றுக்கொடுக்கும் ஒரு வழிகாட்டியாக ஆசிரியர் மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.

*****

86 லட்சம் மாணவர்கள் எங்கே போனார்கள்?

86 லட்சம் மாணவர்கள் எங்கே போனார்கள்?

காலை நேரத்துத் டீக்கடை பெஞ்சில், சுந்தரத்தின் விரல்கள் நாளிதழைப் பற்றிப் பிடித்திருந்தன. டீ மாஸ்டர் நாயர் கிளாஸை ஆற்றி ஊற்றும் சத்தம், பக்கத்து டேபிளில் சுந்தரம் விட்ட பெருமூச்சோடு போட்டியிட்டது.

"என்ன சுந்தரம்? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையே நீதான் தனியா தாங்கிப் பிடிக்கிற மாதிரி ஒரு முக்கல்?" என்றான் பெருமாள், தனது பன்னை டீயில் தோய்த்தபடி.

"டேய் பெருமாள், இங்க பாருடா 1966 இல் கோத்தாரி ஒரு அறிக்கை கொடுத்தாராம். கல்விக்கு ஜி.டி.பியில 6 சதவீதம் நிதி ஒதுக்குங்கடா சாமின்னு சொன்னாராம். ஆனா நாம அறுபது வருஷம் ஆகியும் இப்போ எவ்வளவு ஒதுக்கியிருக்கோம் தெரியுமா? வெறும் இரண்டரை சதவீதம்தான்!"

பெருமாள் உதட்டோரச் சிரிப்போடு ஒரு சொட்டு டீயை உறிஞ்சினான்.

"இதுல என்ன ஆச்சரியம் சுந்தரம்? கோத்தாரி சொன்னது 1966ல. அப்போ ஆறு சதவீதம் தேவைப்பட்டிருக்கலாம். இப்போதான் எல்லாம் டிஜிட்டல் ஆயிடுச்சே! ஆறுல இரண்டரை போக மீதி மூன்றரை சதவீதம் எங்க போச்சுன்னு கேட்காதே. அது அப்படித்தான். "

"விளையாடாதே பெருமாள்!" சுந்தரம் நாளிதழ் பக்கத்தைச் சுட்டிக்காட்டினான். "கடந்த இரண்டு வருஷத்துல அரசுப் பள்ளிகள்ல 86 லட்சம் மாணவர்கள் குறைந்திருக்காங்களாம். அதுமட்டுமா? ஒரே வருஷத்துல நாடு முழுக்க 4,791 பள்ளிக்கூடங்களை மூடியிருக்காங்க. தமிழ்நாட்டுல மட்டுமே 369 பள்ளிக்கூடம் அவுட்!"

பெருமாள் தன் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து மேஜையில் தட்டினான்.

"அட லூசுச் சுந்தரம், இதுல இருக்குற தொலைநோக்குப் பார்வையை நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்குற! பள்ளிக்கூடத்தையே மூடிட்டா, அங்கே மாணவர்கள் இடைநிற்றல் பிரச்சனையே வராது இல்ல? பாரு இப்போ தொடக்கப் பள்ளியில இடைநிற்றல் விகிதம் 1.8 சதவீதமா குறைஞ்சிடுச்சாம்! பள்ளிக்கூடமே இல்லைன்னா மாணவன் எப்படி பாதியில ஓடிப்போவான்? இதெல்லாம் பக்கா மாஸ்டர் பிளான்!"

"ஆனா பள்ளிகள்ல இன்னும் அடிப்படை வசதியே இல்லையாம்டா. ஒரு பள்ளிக்கூடத்துல இத்தனை மாணவனுக்கு இத்தனை கழிப்பறை, இத்தனை குடிநீர் குழாய் இருக்கணும்னு அரசாணையே இருக்காம். ஆனா நிஜத்துல குழாய் இருக்கு, தண்ணி வரல!"

"குழாயாவது இருக்கே சுந்தரம், சந்தோஷப்படு," என்றான் பெருமாள் மிகவும் தீவிரமான முகத்துடன். "ஒவ்வொரு பட்ஜெட்லயும் புதுப் புது திட்டங்களை அறிவிக்கிறப்போ கிடைக்கிற கைதட்டலும் விளம்பரமும், ஏற்கனவே இருக்கிற கழிப்பறைக்குத் தண்ணி திருகி விடுறப்போ கிடைக்குமா? அறிவிப்புங்கிறது ஒரு கலை! அமுல்படுத்துறதுங்கிறது தேவையற்ற அலுப்பு! அதான் புதுத்திட்டத்தை அறிவிச்சுட்டு, பழைய குழாயைக் காய விடுறாங்க."

பெருமாள் டீக்கான காசை மேஜையில் வைத்துவிட்டு எழுந்தான்.

டீக்கடை நாயர் பழைய பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினார். அந்த குழாயில் தண்ணீர் வருகிறதா, அல்லது பாத்திரத்தில் ஊற்றி வைத்திருக்கும் தண்ணீரில் சமாளிக்கிறாரா என்பதைச் சுந்தரம் இப்போது உற்றுக் கவனிக்கத் தொடங்கினான்.

*****