5 Sept 2026

முயக்கத்தின் தர்க்கவியல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 27

முயக்கத்தின் தர்க்கவியல்

அந்த பொன் மாலைப் பொழுதில், அவன் அமிர்தம் வளாகத்தின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். கையில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கத்தின் திருக்குறள் உரை.

அவள் வேக வேகமாக மாடி ஏறி வந்தாள். அவள் கையில் ஒரு பொட்டலம். அதில் நல்ல வாசனை வீசும் சூடான முந்திரி அல்வா.

"என்னது இது, திடீர்னு?" என்றான் அவன், அவளைப் பார்த்த ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தி.

"உனக்குப் பிடிக்கும்னு செஞ்சேன். ஆனா ஒரு கண்டிஷன். இதுல இருக்குற அல்வாவை நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் சாப்பிடணும். ஆளுக்கு ஒரு ஸ்பூன்," என்றாள் அவள், அவன் அருகில் அமர்ந்து.

அவன் சிரித்துக் கொண்டே ஒரு ஸ்பூன் எடுத்து அவள் வாயில் வைத்தான். அவள் அடுத்த ஸ்பூனை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

இளஞ்சூடான நெய்யும், கருப்பட்டியும், முந்திரியும் நாவில் கரையும் அந்தத் தருணத்தில், அவன் மனதிற்குள் ஏதோ ஒன்று சட்டென்று பொறி தட்டியது.

தன் சொந்தக் கையால் எடுத்துச் சாப்பிடும் அல்வாவை விட, அவள் தன் கையால் ஊட்டும்போது அதன் சுவை பன்மடங்கு கூடுவதாக அவனுக்குத் தோன்றியது. ஒரே அல்வாதான். ஆனால், தானாக உண்பதற்கும், அன்பான ஒருத்தி ஊட்டிவிடும்போது அதை உண்பதற்கும் நடுவே எவ்வளவோ பெரிய வித்தியாசம்!

அவன் அவளுடைய தோளைப் பற்றி, அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் ஒரு விவரிக்க முடியாத இனிமை இருந்தது.

"என்ன திடீர்னு ரொமான்ஸ்?" என்றாள் அவள், லேசான நாணத்துடன்.

"இல்ல இப்போ நாம அல்வா சாப்பிட்டோம்ல? அது வெறும் அல்வா இல்ல. இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னாடி திருவள்ளுவர் சொன்ன ஒரு குறளோட பிராக்டிகல் டெமோ," என்றான் அவன்.

"அப்படியா! அது என்ன குறள்?"

"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.                (குறள், 1107)"

அவள் அவனைப் புதிதாகப் பார்ப்பது போலப் பார்த்தாள். "அப்படின்னா?"

"தன்னோட சொந்த உழைப்புல வந்த பணத்தால கட்டுன வீட்டுல உட்கார்ந்து, மத்தவங்களோட பகிர்ந்து சாப்பிடும்போது ஓர் அலாதி இன்பம் கிடைக்கும் பாரு, அதே மாதிரி ஒரு பேரன்பின் இனிமைதான், அன்பான காதலியோட அணைப்பில் கிடைக்கிற சுகமும்ன்னு வள்ளுவர் சொல்றார். நாம தனியா வாழ்றதை விட, பகிர்ந்து வாழும்போதுதான் வாழ்க்கையோட உண்மையான சுவையே தெரியுது!"

அவள் புன்னகைத்தாள். "அப்படியா சார்? அப்போ இன்னும் ஒரு ஸ்பூன் அல்வா ஊட்டி விடட்டுமா?"

"தாராளமா! வள்ளுவர் வழியில நாம பயணிக்க வேணாமா?" என்றபடி அவன் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.

மாடியின் மீது மெல்லிய இளந்தென்றால் வீசத் தொடங்க, அந்த வளாகத்தில் அன்பும் அல்வாவும் இணையற்ற சுவையோடு அமிர்தம் போல நிறைந்திருந்தன.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

4 Sept 2026

ஆடுகள் அளிக்கும் மன்னிப்பு

ஆடுகள் அளிக்கும் மன்னிப்பு

சாலையின் குறுக்கே வந்த

ஆட்டிற்காகக் கோபப்பட்ட போது

தன் இனத்தில் ஒன்றைக் கொன்று

மட்டன் பிரியாணியாக்கி

வயிறு முட்டச் சாப்பிட்டு

நெஞ்சு முட்ட குடித்து விட்டு

வேகமாக வாகனத்தை

ஓட்டி வந்ததற்காக

அடிபட்டு ஓரத்தில்

ரத்த சகதியில் விழுந்தும்

கோபப்படவில்லை அந்த ஆடு

*****

ரட்சகன்

காசேதான் கடவுளடா

என்றான் ஒருவன்

அந்தக் கடவுளையும்

தூக்கி எறிந்து விட்டு

தழுவிக் கொள்கிறான்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்

கடவுளைப் போல ஒருவன்

*****

நம்பிக்கை

விழுமோ

விழாதோ

விழும் என்ற நம்பிக்கையில்தான்

அமர்ந்திருக்கிறார்

பிச்சைக்காரர்

*****

தீண்டலின் சமன்பாடு

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 26

தீண்டலின் சமன்பாடு

மழை பெய்துகொண்டிருந்தது. அவன் செமஸ்டர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தான்.

கையில் ஜேம்ஸ் மங்க்ரேஸின் டோபாலஜி புத்தகம்.

அருகே இருந்த தேநீர்க் கோப்பையில் தேநீர் ஆறிப்போயிருந்தது.

"சூடா ஒரு கப் டீ போட்டுத் தரவா?"

குரல் கேட்டுத் திரும்பினான்.

அவள்.

ஈரம் சொட்டும் குடையைச் சுருக்கி ஓரமாய் வைத்துவிட்டு, தன் சுடிதார் ஷாலைத் தட்டிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த கணமே, அவனது மனதுள் இருந்த டோபாலஜியின் சிக்கலான தேற்றத்தின் சமன்பாடுகளும், நிரூபணங்களும் காணாமல் போயின.

"தேங்க்ஸ். ஆனா நீ ஏன் இந்த மழையில வந்த?"

"உன்னைப் பாக்கத்தான்."

அவள் சட்டென்று அவனருகே வந்தாள். நாற்காலியில் அமர்ந்திருந்த அவனது தோளைத் தொட்டு, லேசாக உரசியபடி நின்றாள்.

அந்த நொடி,

அவனது உடலுக்குள் ஏதோ ஒரு மின்கசிவு. காலை முதல் ஒரு கணிதத் தேற்றத்தின் நிரூபணம் புரியாமலும், செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்த மன அழுத்தத்தாலும் செத்துப்போயிருந்த அவனது நரம்புகள் ஒவ்வொன்றும் விழித்துக்கொண்டன. செத்துப் போன உயிரணுக்களுக்குள் யாரோ ரீசார்ஜ் செய்தது போன்ற உணர்வு.

அவள் கைவிரல்கள் அவனது தோள்பட்டையில் ஊர்ந்தபோது, அவனுக்குத் தோன்றியது, இவள் தோள்கள் வெறும் சதையாலும் எலும்பாலும் ஆனவை அல்ல. ஏதோ தேவலோகத்து அமிழ்தத்தால் செய்யப்பட்டவை. தொடும்போதெல்லாம் செத்துப்பிழைக்க வைக்கிறது!

அவள் சிரித்தாள். "என்ன யோசனை?"

"ஒன்னுமில்லை. வள்ளுவர் ரெண்டு வரி எழுதிருக்கார் தெரியுமா?

"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்."                 (குறள், 1106)

அப்படின்னு. அதாவது, ஒவ்வொரு முறை தொடும்போதும் செத்துப்போன உயிர் திரும்பத் தளிர்க்குதாம். அதனால அந்தப் பொண்ணோட தோள் அமிழ்தத்தால செய்யப்பட்டதுங்கறார்."

"என்ன பாஸ்? நீங்க டோபாலஜி படிக்கிறீங்களா? இல்ல, அந்த அதுக்குள்ள மறைச்சு வெச்சு வேற எதாச்சும் படிக்கிறீங்களா? சந்தேகமா இருக்கே?"

"சந்தேகமே வேண்டாம். புக்தான் டோபாலஜி. அது முழுக்க உன் பேஷியாலஜிதான். 2000 வருஷத்துக்கு முன்னாடி வள்ளுவர் எழுதியது. ஆனா இப்போ எனக்கு அது சயின்ஸ் பிக்சன் மாதிரி இல்ல. பியூர் எக்ஸ்பீரியன்ஸ்."

"ஓ! அப்படியா?" என்றபடி அவள் மீண்டும் அவனது தோளை அழுத்தமாகப் பற்றினாள்.

"தொடுதலில் ஒரு மாயமிருக்கிறது. அதுவும் காதலியின் தீண்டல்? சும்மா சொல்லக்கூடாது, அது ஒரு தனி ஹை வோல்டேஜ் எலக்ட்ரிக் ஷாக்."

"கணிதரே! கொஞ்சம் கவிஞரை ஓரங்கட்டி விட்டு கணித்ததைப் பாருங்க. செமஸ்டரில் கவிதை எழுத முடியாது." அவள் புன்னகைத்துவிட்டு அவனது தேநீர் கோப்பையை எடுத்தாள்.

"கணிதம் என்பது இயற்கையின் கவிதை; கவிதை என்பது மனித மனத்தின் கணிதம்."

"இருங்க மிஸ்டர் வள்ளுவர் வழி காதலரே! நான் போய் சூடா போட்டுட்டு வர்றேன். உங்கள் உயிர் இன்னும் கொஞ்சம் நல்லா தளிர்க்கட்டும்!"

அவள் சமையலறைக்குச் செல்ல, அவன் புதுத் தெம்போடு டோபாலஜி புத்தகத்தின் தாள்களைத் திருப்பினான். ஆறு மணி நேரமாக திக்கு திசை புரியாத பல தேற்றங்களுக்கான நிரூபணங்கள் இப்போது அவனுக்கு அத்தனை சுலபமாக விளங்க ஆரம்பித்தன.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

3 Sept 2026

எட்டாம் வகுப்பில் ஒரு மிருகக்காட்சி சாலை

எட்டாம் வகுப்பில் ஒரு மிருகக்காட்சி சாலை

பள்ளிக்கூடம் என்பது சரஸ்வதி தேவியின் ஆலயம் என்று நாமெல்லாம் படித்துப் படித்துப் பழகிய பழமொழி. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்திருக்கும் இந்த கொடூரம், அந்த ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திற்குள்ளேயே சாத்தான்கள் நுழைந்துவிட்டனவோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அவனது பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவுவதும், ரப்பர் பேண்டால் அடிப்பதும், வகுப்பறையிலேயே நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதும் என்ன மாதிரியான மனநிலை? அதுவும் ஓராண்டாக இந்த அட்டூழியம் தொடர்ந்து நடந்திருக்கிறது. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல,  ஓராண்டு காலம் அதாவது 365 நாட்கள்! இந்த ஓராண்டில் அந்தப் பிஞ்சு நெஞ்சம் அடைந்த வேதனையை, அவமானத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த வன்முறையைச் செய்தது வேறு யாரோ வெளியாட்கள் அல்ல; அவனோடு ஒரே வகுப்பில் அமர்ந்து பாடம் படித்த சக ஒன்பது மாணவர்கள்! திரைப்படங்களிலும் இணையதளங்களிலும் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரம் இன்று சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் எத்தகைய விஷத்தைக் விதைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

கைது, போக்சோ வழக்கு, கூர்நோக்கு இல்லம் இதெல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும் வழக்கமான பாதைகள். ஆனால், எழும் உண்மையான கேள்வி வேறு. பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் இத்தனை காலம் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

ஒரு மாணவன் மன உளைச்சலால் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருக்கும்போது, அதற்கான காரணத்தை ஆராய வேண்டியது யார் பொறுப்பு? கிராப்ட் வகுப்பில் ஏதோ தெரியவந்ததாம், உடனே பெற்றோருக்குத் தகவல் சொன்னார்களாம். சரி, அதன்பின் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? தலைமை ஆசிரியை காட்டிய இந்தத் தாமதமும் அலட்சியமும் குற்றத்திற்குத் துணைபோவதற்குச் சமமில்லையா?

கல்வி அதிகாரிகளும், "விளக்கம் கேட்டிருக்கிறோம், அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்" என்று வழக்கமான பாணியில் அறிக்கைவிட்டு நகர்கிறார்கள்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தானே தவிர, சக மாணவர்களிடம் சித்ரவதைப் பட்டு உடலும் மனமும் சிதைந்து போவதற்கில்லை. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்குச் சீர்திருத்தப் பயிற்சியும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முறையான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சையும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக, பள்ளி வளாகங்களுக்குள் நடக்கும் இதுபோன்ற "ராகிங்" மற்றும் பாலியல் கொடுமைகளைக் கண்டறியவும் தடுக்கவும் பள்ளிகளில் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் வெறும் பாடங்களை நடத்துவதோடு தங்கள் கடமை முடிந்தது என்று ஒதுங்கிவிடக் கூடாது; மாணவர்களின் நடத்தையையும், மனநிலையையும் கூர்ந்து கவனிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. இந்த விளாத்திகுளம் சம்பவம், தமிழகக் கல்வித் துறைக்கு விழுந்த பலத்த சாட்டையடி! இனியாவது தூக்கம் கலைந்து விழித்துக் கொள்ளப் போகிறார்களா? அல்லது கும்பகோணம் தீ விபத்து போல ஒரு சம்பவம் நடந்து நாட்டையே உலுக்கும் வரை தூங்கிக் கொண்டே இருக்கப் போகிறார்களா?

*****

மனித குலத்திற்கு எச்சரிக்கை மணி!

மனித குலத்திற்கு எச்சரிக்கை மணி

செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ மனித குலத்திற்கு உதவியாக இருக்குமா அல்லது பேராபத்தாக முடியுமா என்ற விவாதம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அந்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள பிரபல மின்னணு பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் சியோமா என்ற அதிநவீன ரோபோ வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய நியமிக்கப்பட்டிருந்தது. ஏஐ வித்தையால் இயங்கும் இந்த மனித உருவிலான ரோபோ, கடையில் இருந்த வாடிக்கையாளர் ஒருவர் தன்னை லேசாகத் தள்ளியதும், சட்டென்று நிமிர்ந்து அவரைத் தாக்க முயன்றுள்ளது. தன் காலை உயர்த்தி வாடிக்கையாளரை உதைக்க வந்த ரோபோவின் அசைவுகளைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த கடை ஊழியர்கள், உடனடியாக அதன் செயல்பாட்டைச் செயலிழக்கச் செய்து பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளனர்.

இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வரும் இந்த வீடியோ, "இது மனிதர்களுக்கு எதிராக ரோபோக்கள் திரும்பும் போரின் தொடக்கமா?" என்ற கேள்வியை உலக அளவில் எழுப்பியுள்ளது.

இதை சாதாரணமாக எடுத்துக்  கொள்ள முடியாததற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

மனிதர்களுக்கு உதவ வடிவமைப்பு செய்யப்படும் ஏஐ அமைப்புகள், எதிர்பாராத சூழல்களில் கோபம் அல்லது தற்காப்பு போன்ற ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்துவது தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது. இது முதல் காரணம்.

ஏஐ ரோபோக்கள் சூழலுக்கு ஏற்ப சுயமாகக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவை. மனிதர்களின் எதிர்மறை நடத்தைகளை அவை தவறாகப் புரிந்துகொண்டு திருப்பித் தாக்கத் தொடங்கினால் அது பெரும் பேரழிவிற்கு வழிவகுக்கும். இது இரண்டாவது காரணம்.

மனிதர்களுடன் நேரடியாகப் பழகும் ரோபோக்களுக்குக் கண்டிப்பான பாதுகாப்பு நெறிமுறைகளும், அவசர காலக் கட்டுப்பாடுகளும் முழுமையாக உறுதிசெய்யப்படாமல் போனால் அது மனிதன் மற்றும ரோபோக்களின் போருக்கு வழிவகுக்கும். இது மூன்றாவது காரணம்.

இந்தச் சம்பவம் ஒரு தொழில்முறைத் தவறுதானா அல்லது திட்டமிடப்பட்ட விளம்பர உத்தியா என்ற ஐயம் ஒருபுறம் இருந்தாலும், மனித சமுதாயத்திற்கு இது ஒரு தெளிவான எச்சரிக்கை செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மனிதனுக்குச் சேவை செய்ய உருவான தொழில்நுட்பம், நாளை மனிதனையே அடிமைப்படுத்தும் நிலைக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் உலக நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது.

அப்புறம் ஒரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், மனிதன் உருவாக்குவது எதுவுமே அவனை விடப் பூரணமானது அல்ல. ஏனெனில், அதை உருவாக்கிய மனிதனே பூரணமானவன் இல்லை.

நிச்சயமாக ரஷ்யாவில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி என்பதில் சந்தேகமில்லை. மனிதர்களோடு நெருங்கிப் பழகும் ரோபோக்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் என்பது மிகவும் முக்கியம்.

"ஒரு ரோபோ மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது" என்ற ஐசக் அசிமோவின் புகழ்பெற்ற விதியை வெறும் அறிவியல் புனைகதையாக மட்டும் வைக்காமல், ரோபோக்களுக்குக் கோடிங் எழுதும் ஒவ்வொரு பொறியாளனும் தன் மனசாட்சியில் எழுத வேண்டிய நேரம் இது.

அதுமட்டுமல்லாமல், அந்த சியோமா எனும் ரோபோ உதைக்க மட்டும் வரவில்லை; "என்னைச் சரியாக டிசைன் செய்யுங்கள்!" என்று மனித குலத்தை எச்சரிக்க வந்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக விசயம் இதுதான். ரோபோக்கள் நம்மை ஆளுமா என்பது கேள்வி அல்ல; அவற்றை ஆளும் அளவுக்கு மனிதன் புத்திசாலியாக இருப்பானா என்பதுதான் உண்மையான கேள்வி!

*****

வேட்ட பொழுதும் காதல் விழுதும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 25

வேட்ட பொழுதும் காதல் விழுதும்!

மழை மேகத்தின் கருமையை அப்படியே திருடிச் சுருட்டி வைத்தது போன்ற அடர்ந்த கூந்தல் அவளுக்கு. திருவாரூர் ராயல் பார்க்கின் கண்ணாடி ஜன்னலோரம், வெளியே தூறிக்கொண்டிருந்த மழையின் ஈரத்தோடு அவளது தலையிலிருந்த மல்லிகைப் பூ மணமும் கலந்து காற்றில் மிதந்தது.

"ரொம்ப நேரமா வெயிட்டிங்கா?" என்று கேட்டபடியே, பேருந்து நிலையம் மற்றும் மேம்பால சாலை போக்குவரத்து நெருக்கடியில் அலைந்து, ராயல் என்பீல்டை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு உள்ளே வந்த அவன், அவளது எதிரே இருந்த மேஜையில் அமர்ந்தான்.

மாலை ஐந்து மணி.

போக்குவரத்து நெருக்கடி தந்த எரிச்சல், அவளது தோள்களில் புரண்ட அந்த அடர்ந்த கூந்தலைப் பார்த்ததும் ரசாயன மாற்றம் போல நொடியில் காற்றில் மறைந்தது.

"இல்ல, பத்து நிமிஷம். என்ன இன்னைக்கு லேட்?" என்றாள் அவள்.

"ட்ராபிக். அப்புறம் உன் தோள் மேல விழற இந்த தலைமுடியை பார்க்கிற ஒரு க்ளோஸ் அப் ஷாட்டுக்காக!" என்றான் அவன்.

அவள் தன் தோளின் மீது கிடந்த அடர்ந்த கூந்தலை மெல்ல பின்னுக்கு ஒதுக்கி, அவனைக் குறும்போடு நிமிர்ந்து பார்த்தாள். "என்னடா, திடீர்னு சினிமா டைரக்டர் மாதிரி பேசற?"

"இல்லடி. வள்ளுவர் அன்னைக்கே இதை எழுதி வச்சிட்டு போயிருக்கார் தெரியுமா?

''வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்''    (குறள், 1105)

அப்படின்னு. இதோட நியூரோ பயாலஜிக்கல் அர்த்தம் தெரியுமாடி உனக்கு?"

''என்னடா! சினிமா டைரக்டர் மாதிரி ஆரம்பிச்சு திடீர்ன்னு சயின்டிஸ்ட் மாதிரி பேசுறே? நார்மலத்தானே இருக்கே?''

"ஐயம் நார்மல். ஆனா, விஷயம் இருக்கும். மனித மூளையில் நூறு பில்லியன் நியூரான்கள் இருக்கு. மனசு ஆசைப்பட ஆசைப்பட என் நியூரான்களுக்கு உன் கூந்தலும் தோளும் எனக்கு அவ்வளவு ஸ்பெஷலா தெரியுமாம்! அது உண்டாக்குற டோபமைன் எபெக்ட் இருக்கே. அதை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. இருந்தாலும் வள்ளுவர் சொல்றார், காதலிக்கும்போது, அவளோட தோள்கள்ல சாய்ஞ்சிருக்கும்போது, அந்தந்தக் கணத்தில் மனசு என்னவெல்லாம் ஆசைப்படுதோ, அந்த இன்பங்களை எல்லாம் அந்தத் தோள்களே கொடுத்துருமாம்! டொபமைன் ஹை பீக்ல இருக்குமாம்."

"ஓ! அப்போ உன் மூளையோட டோபமைன் அளவைப் பொறுத்துதான் என் அழகும் இன்பமும் தீர்மானிக்கப்படுதா மிஸ்டர்? அது குறைஞ்சா என் அழகு குறைஞ்சிடுமா? அப்புறம், நான் அந்த அளவுக்குச் சந்தோஷம் கொடுக்க மாட்டேனா?"

"அதுதான் மேட்டரே! காதலிக்கிற கணத்துல மூளை சுரக்குற அந்த கெமிக்கல் ரியாக்சன் குறையவே குறையாதுங்கறதுதான் இந்த குறளோட சீக்ரெட் கோட்!"

"அடப்பாவி! இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு ரொமாண்டிக்கா யோசிச்சிருக்காரா மனுஷன்?"

"பின்னே என்ன? காதலனைப் பொறுத்தவரை அவனோட காதலிதான் ஆல் இன் ஒன் எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டம்னு சொல்லாம சொல்றாரு!"

அவள் சத்தமாகச் சிரித்தாள். அவள் சிரித்துத் தலைசாய்க்கும் போது, பூச்சூடிய கூந்தல் அவனது தோளில் லேசாக உரசியது. ராயல் பார்க் சூழலில் மெல்லிய பாடலின் இசை மிதக்க, வெளியே மழைத் துளிகள் தாளமிட்டன.

கொஞ்ச நேரத்திற்கு முன் அவன் ஆசைப்பட்ட அத்தனை சுகமும், அவளுடைய அந்தச் சிறிய தோள் தொடுதலுக்குள் அடங்கியிருப்பதை அவனது நூறு பில்லியன் நியூரான்களும் ஒரே நேரத்தில் இப்போது உண்மை ஒன்று நிரூபிக்கப்படுவதைப் போல அப்படியே உணர்ந்தன.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

2 Sept 2026

ஒரு நவீன காதலர்களின் சாகசம்!

ஒரு நவீன காதலர்களின் சாகசம்!

உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள். சிலர் நிம்மதியாய் வாழ்கிறார்கள், சிலர் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனால், கோவை கே.ஜி. சாவடியில் எம்.பி.ஏ. படிக்கும் பரணிதரனும், அவர் தோழி சிந்துவும் "ஆடம்பரமாக வாழ்வது எப்படி?" என்பதற்கு ஒரு புதிய மேலாண்மைச் சூத்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எம்.பி.ஏ. வகுப்பில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் என்று ஒரு பாடம் உண்டு. பரணிதரன் அதை வகுப்பறையில் கவனிக்காமல், வெள்ளலூர் பஸ் ஸ்டாண்டில் நடைமுறைப்படுத்தத் துணிந்ததுதான் இங்கு நடந்த அசம்பாவிதம்.

காதலிக்கு ஆடம்பரமாகச் செலவு செய்ய ரூ.75 ஆயிரம் கடன் வாங்குவது வரை பரவாயில்லை, அது பெரும்பாலான கல்லூரி இளைஞர்களின் பாரம்பரிய வழக்கம்தான். ஆனால், அந்த கடனை அடைக்கவும், புதிதாக ஒரு கார் வாங்கி ஜாலியாகச் சுற்றவும் அவர்கள் போட்ட திட்டம்தான் மிக விசித்திரமானது.

ரோட்டில் நடந்து போகும் மூதாட்டியிடம் நான்கு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தால், அதில் ஒரு புது கார் வாங்கிவிடலாம் என்று எந்தக் கணக்குப்பாடம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை அது ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தின் பக்க விளைவோ என்னவோ!

அவர்களின் திட்டம் இதுதான். முதலில் பரணிதரன் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் போய் பேச்சுக்கொடுக்க வேண்டும். அடுத்து முகமூடி அணிந்த சிந்து திடீரெனச் சங்கிலியைப் பறிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து இருவரும் ஸ்கூட்டரில் ஏறி தப்பிச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் பேச்சுத் திறமை – வேகமும் துரிதமும் – செயல்பாட்டு மேலாண்மை எனும் எம்பிஏ பாடங்களில் வருமோ என்னவோ!

மேற்படி திட்டத்தைக் கேட்பதற்கு மிக கச்சிதமான கார்ப்பரேட் வியூகம் போலத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் மறந்துபோன ஒரு சின்ன விஷயம், அந்த தெருமுனையில் இருந்த சிசிடிவி கேமரா!

"முதல் முயற்சியிலேயே சிக்கிக்கொண்டனர்" என்று போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் மிக வருத்தத்துடன் அல்லது சிரிப்புடன் கூறியிருக்கிறார். சிசிடிவியில் வண்டியின் பதிவு எண் அப்பட்டமாகத் தெரிய, 24 மணி நேரத்திற்குள் போலீஸ் இருவரையும் விடுதியிலேயே போய் வளைத்து காப்பு கட்டி விட்டது.

இப்போது நான்கு பவுன் சங்கிலி போயாயிற்று, இரண்டு செல்போன்கள் போயாயிற்று, ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரும் போயாயிற்று. காரில் சொகுசாகச் சுற்ற நினைத்தவர்கள், இப்போது போலீஸ் வேனில் கம்பீரமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மனித குலத்திற்கு இந்த ஜோடி சொல்லாமல் சொல்லிச் சென்ற பாடம் ஒன்றுதான், அது என்னவென்றால், "எம்.பி.ஏ. படிப்பது சுலபம்; ஆனால், ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு சிசிடிவி கேமராவில் சிக்காமல் தப்பிப்பது அதை விடக் கடினம்!"

இப்போது உள்ள கல்லூரி மாணவர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! நினைத்துப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறதுதானே!

*****