31 Jul 2026

2.79 கோடி ஜி.எஸ்.டியும் ஏரி வேலையும்!

2.79 கோடி ஜி.எஸ்.டியும் ஏரி வேலையும்!

உலகத்தில் பலவிதமான அதிசயங்கள் நடப்பதுண்டு. எகிப்து பிரமிடு, தாஜ்மஹால் எல்லாம் பழைய கதை.

நம் ஊரில் நடக்கும் நவீன அதிசயம் என்னவென்றால், ஏரி வேலைக்குச் செல்லும் ருக்மணி அம்மணி என்பவருக்கு 2.79 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக வணிகவரித் துறை அன்போடு நோட்டீஸ் அனுப்பியிருப்பதுதான்!

பாவம் ருக்மணி. 125 நாள் வேலைத் திட்டத்தில் வெயிலில் நின்று மண்ணள்ளிப் போட்டு, அதில் வரும் சொற்பக் கூலியை வாங்கலாம் என்று வங்கிக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே இருந்த வங்கி மேலாளர், “அம்மா! நீங்க சாதாரண ஆள் இல்லை! ஆர்.எம். டிரேடர்ஸ் முதலாளி! நீங்க ஜி.எஸ்.டி கட்டாம இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல வரி ஏய்ப்பு பண்ணியிருக்கீங்க. அதான் உங்க அக்கவுண்ட்டை லாக் பண்ணிட்டோம் என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

இதில் நாம் வியக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

நாட்டின் பெரும் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் எங்கே வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நமது புலனாய்வுத் துறை, ஏரி வேலைக்குச் செல்லும் ஓர் ஏழைப் பெண்ணைக் கச்சிதமாகக் கண்டுபிடித்துவிட்டது!

“யாரை வேணா விட்டுடுவோம். ஆனா இந்த 125 நாள் வேலைக்குப் போறவங்களை விடமாட்டோம் என்ற அவர்களின் கடமை உணர்ச்சியைப் பார்த்து கார்ப்பரேட் முதலாளிகளே கண்ணீர் வடிக்கிறார்கள்.

இது ஒரு புறம். ஏரி வேலைக்குக் கொண்டு செல்லும் வட்டசட்டி, மண்வெட்டிதான் அந்த நிறுவனத்தின் மூலதனம் போலிருக்கிறது!

அப்புறம், 125 நாள் வேலைத் திட்டத்தில் கொடுக்கும் கூலியை வைத்துக்கொண்டு கோடிகளில் டிரேடிங் செய்யும் இந்த பிசினஸ் டெக்னிக் எந்த ஐ.ஐ.எம் மேனேஜ்மென்ட் புத்தகத்திலும் இல்லை.

வழக்கமாகக் கடன் கேட்டுப் போனால், "ஆதார் கார்டு நகல் தெளிவா இல்லை, நாளைக்கு வாங்க" என்று அலைக்கழிக்கும் வங்கிகள், இவ்வளவு பெரிய விவகாரத்தில் மட்டும் எவ்வளவு சுறுசுறுப்பு! "உங்க கணக்கில் வந்த 125 நாள் சம்பளத்தைக் கொடுக்க முடியாது. ஏன்னா நீங்க பில்லியனர் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்கள்.

யாரோ ஒரு மிஸ்டர் டெக்னிக்கல் திருடன், அப்பாவி ருக்மணியின் ஆதார், பான் கார்டைத் திருடி ஆர்.எம். டிரேடர்ஸ் ஆரம்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறான் என்பது சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும். ஆனால், சிஸ்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டும் அது புரியவே புரியாது!

ஏழைக்கு வந்தால் நோட்டீஸ். கோடீஸ்வரனுக்கு வந்தால் வெய்வர்.

எது எப்படியோ. இனிமேல் 125 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், கையில் மண்வெட்டியோடு ஜி.எஸ்.டி பைல் பையையும் கூடவே எடுத்துச் செல்வது நல்லது. நாடாளும் மாடல்கள் வாழ்க!

*****

குளவியின் நஞ்சும் ஜெயமோகனின் கைராசியும்!

குளவியின் நஞ்சும் ஜெயமோகனின் கைராசியும்!

ஒருவர் பேருந்தில் நடத்துநரிடம் கெட்ட வார்த்தை வாங்கி, மேலதிகாரியிடம் கோப்பை வீசியெறிந்துவிட்டு ஓடிவந்து, பின் சினிமாவுக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததற்குப் பின்னால் பிரபஞ்சத்தின் பேரறிவு செயல்பட்டிருக்கிறது என்று சொல்வதை விடத் தற்காப்புப் புனைவு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஜெயமோகன் தன்னுடைய இந்த "மேகங்களின் குரல்" கட்டுரையில் வழக்கம்போலத் தனது சுயசரிதையை ஒரு வேதாந்த தரிசனமாக மாற்றுவதற்குத் தேவைக்கதிகமான கவித்துவப் பிரயத்தனங்களைச் செய்திருக்கிறார்.

இக்கட்டுரையின் மீதான விமர்சனத்தை நாம் மூன்று தளங்களில் அணுகலாம்.

முதலில், பேருந்து நெரிசலின் புழுக்கத்தில் ஏற்பட்ட கோபத்தையும், BSNL அலுவலகத்தின் வேலைப்பளு தந்த எரிச்சலையும் கட்டுப்படுத்த முடியாமல் அலுவலகக் கோப்பை மேஜையில் தூக்கி வீசிவிட்டு ஓடிவந்த நிகழ்வு என்பது ஒரு சாதாரண மனிதனின் பலவீனம் அல்லது நிதானமின்மை. ஆனால், அதை ஒப்புக்கொள்வதற்கு மனித மனம் அஞ்சுகிறது.

உடனே, அதற்கு லோகிததாஸ் வந்ததையும், இயக்குநர் பாலா அழைத்ததையும் இணைத்து "இது பிரபஞ்சத்தின் திட்டமிடப்பட்ட தர்க்க ஒழுங்கு" என்று சொல்வது ஒரு சுவாரஸ்யமான மாயை.

தன் கோபத்தையும் அவசர முடிவையும் நியாயப்படுத்த, பிரபஞ்சத்தையே துணைக்கு அழைப்பது ஜெயமோகனுக்கே உரிய வலுவான தற்பெருமை.

நடத்துநர் திட்டாவிட்டால் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டாராம்! அப்படியானால் அந்த நடத்துநரின் வசைபாடல் பிரபஞ்சத்தின் ஈக்‌ஷதே வழிகாட்டுதலா? என்னவொரு போலித் தர்க்கம்!

இரண்டாவதாக, லியால் வாட்சனின் Lifetide புத்தகத்திலிருந்து அவர் எடுத்தாளும் குளவி – புழு உவமை சுவாரஸ்யமானது; ஆனால், அது பரிணாம வளர்ச்சியைப் பற்றிய தவறான புரிதலின் வெளிப்பாடு.

இயற்கையின் கோடிக்கணக்கான ஆண்டுகளின் ‘முயன்று தவறுதல்’ என்ற தேர்ச்சி முறையை ஒரே நாளில் குளவிக்கு வந்த யோசனை போலச் சித்தரிப்பது அறிவியல் பூர்வமானது அல்ல.

அறிவியலின் விளிம்புநிலை யூகங்களை எடுத்துக்கொண்டு, அதைத் தன் வேதாந்தக் கோட்பாடுகளுக்குப் பலவந்தமாகப் பொருத்துவது தமிழ் எழுத்தாளர்களின் பழைய நோய். ஜெயமோகன் அதை மிகவும் நேர்த்தியாக, வாசிப்பவரை மயக்கும் நடையில் செய்கிறார்.

மூன்றாவதாக, கட்டுரையின் இறுதியில் வரும் ஈக்‌ஷதே அதாவது, அது சிந்திக்கிறது என்ற பிரம்மசூத்திரத்தின் மேற்கோள், கட்டுரையை ஒரு தத்துவார்த்த உச்சத்திற்குக் கொண்டு செல்வதாகக் காட்டிக்கொள்கிறது.

எறும்பு தீனியைப் பார்ப்பதும், குளவி நஞ்சைச் செலுத்துவதும், இவர் BSNL வேலையை விட்டுவிட்டு நான் கடவுள் படத்திற்குத் திரைக்கதை எழுத வந்ததும் ஒரே பிரபஞ்சத் திட்டத்தின் பகுதிகளாம்!

இதில் உள்ள நகைமுரண் என்னவென்றால், "அந்தத் திட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது, அதை ஊகிப்பவன் பேதை" என்று சொல்லிவிட்டே, முழு கட்டுரையும் அந்தப் பிரபஞ்சத் திட்டத்தைத் தான் ஊகித்து உணர்ந்துவிட்டது போலவே எழுதி முடித்துள்ளார்.

ஒரு படைப்பாளி தன் வாழ்க்கையின் தற்செயல்கள் மீது ஒரு புனைவுத் தன்மையை  ஏற்றிப் பார்ப்பதில் தவறில்லை. அது வாசகனுக்கு வாசிப்பு இன்பத்தைத் தருகிறது.

ஆனால், தன் வாழ்வின் ஒவ்வொரு சிறு சம்பவத்தின் பின்னாலும் ஒரு மகா பிரபஞ்சப் பேரறிவு நின்று இயங்குகிறது என்று நம்புவதும், அதை மற்றவர்களை நம்பச் சொல்வதும் தன்முனைப்பின் உச்சக்கட்டம்.

சுருக்கமாகச் சொன்னால், இது பிரபஞ்சம் ஈக்‌ஷதே செய்ததன் விளைவல்ல; ஜெயமோகன் தன் சொந்த வாழ்க்கையைத் தானே ஒரு மெகா சினிமாத் திரைக்கதையாக மாற்றி யோசித்ததன் விளைவு!

*****

30 Jul 2026

செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ரூபாய்!

செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ரூபாய்!

இந்தியப் பொருளாதாரம் என்பது ஒரு விசித்திரமான யோக நிலை. நாம் உலகின் அதிவேகப் பொருளாதார சக்தி, என்று உரக்கக் கத்தும்போது, இந்திய ரூபாய் மட்டும் தனியாக மூலையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து, மெல்லத் தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டே கீழே இறங்கும்.

அதாவது, வளர்ச்சி மேலே போகிறது; ரூபாய் கீழே போகிறது. இரண்டுமே இயக்கம்தான். இயக்கம்தான் வாழ்வு!

1971 இல் ஒரு டாலரின் விலை 7 ரூபாய் 50 காசுகள். இன்று அதே டாலரின் விலை 97 ரூபாய்!

இது வீழ்ச்சி அல்ல; இது பற்றுறுத்தல். டாலர் என்ற மாயையைத் துரத்தத் துரத்த, அது நம்மை விட்டு விலகிச் செல்கிறது. கச்சா எண்ணெய், தங்கம், ராணுவத் தளவாடங்கள் என உலக ஆசைகளில் நாம் மூழ்க மூழ்க, டாலர் தன் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் எவ்வளவு தான் இறக்குமதி செய்தாலும், நம் தாகம் தணிவதில்லை.

ரூபாய் மதிப்பு சரிவதால் கவலைப்பட என்ன இருக்கிறது? அதில் எத்தனை ஆனந்தங்ககள் ஒளிந்திருக்கின்றன தெரியுமா?

முதலில் அதனால் ஏற்றுமதியாளருக்கு ஆனந்தம். ரூபாய் உடைந்தால் ஏற்றுமதி கூடும்.

இரண்டாவதாக அந்நிய முதலீட்டாளருக்கு ஆனந்தம். வெளிநாட்டினருக்கு இந்தியா மலிவான சொர்க்கமாக மாறும்.

மூன்றாவதாக வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியக் குடும்பங்களின் ஆனந்தம். வெளிநாட்டில் வேர்வை சிந்தி ஒரு டாலர் அனுப்பும் மகனால், ஊரில் இருக்கும் தாய் 97 ரூபாயைப் பெற்று மகிழ்வாள்.

அதாவது, நமது நாணயத்தின் வீழ்ச்சியே, சில குடும்பங்களின் எழுச்சி! என்னவொரு மகத்தான சமநிலை பாருங்கள்.

ஈரான் மீது தாக்குதல் நடக்கிறது; கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது; நமது வர்த்தகப் பற்றாக்குறை 12 லட்சம் கோடியைத் தொடுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 23 பில்லியன் டாலர்களை மூட்டை முடிச்சோடு எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

சீனாவின் யுவான் வலுவடைகிறது. மலேசியாவின் ரிங்கிட் நிமிர்ந்து நிற்கிறது. சிங்கப்பூர், தன் டாலரை உயர்த்துகிறது. ஆனால், இந்திய ரூபாய்?

பொருளாதாரம் செழிப்பாக இருக்கிறது, ஆனால் ரூபாய் ஏன் விழுகிறது? என்ற கேள்விக்கு, நம்மிடம் அமைதியே பதிலாய் இருக்கிறது. மௌனத்தை விடச் சிறந்த தத்துவம் வேறு என்ன இருக்க முடியும்?

பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள், ரூபாய் மதிப்பு விரைவில் செஞ்சுரி அடிக்கும் என்று.

அச்சப்படத் தேவையில்லை. 100 என்பது ஒரு முழுமை. ஒரு சதம். 97 இல் நிற்பதை விட 100 இல் நிற்பது கணக்கு வைப்பதற்கு மிகவும் சுலபமானது அல்லவா?

700 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி இருப்பு வைத்துள்ளோம். ஆனால், அதுவும் நமக்கு முழுமையான அமைதியைத் தரவில்லை. ஏனெனில், உண்மையான அமைதி இருப்பில் இல்லை; இறக்குமதியைக் குறைத்து, உற்பத்தியைப் பெருக்கி, நாம் சுயமாக நிமிர்ந்து நிற்பதில்தான் இருக்கிறது.

உற்பத்திச் செலவு குறைவாக உள்ள நம் நாட்டில், உற்பத்தியைப் பெருக்காமல் இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பது, கையில் அமுதத்தைச் வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் பிச்சை கேட்பதற்குச் சமம்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்தால்தான் தேசத்தின் மதிப்பு உயரும். இல்லையேல், நாம் டாலருக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும் பக்தர்களாகவே எஞ்சியிருப்போம்!

நாம் எப்படி இருக்கப் போகிறோம்?

அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்!

*****

29 Jul 2026

18 டோக்கன்களும் 3 முட்டை மண்டைகளும்!

18 டோக்கன்களும் 3 முட்டை மண்டைகளும்!

மனிதகுலம் எத்தனையோ நோய்களைக் கண்டு அஞ்சியிருக்கிறது. ஆனால், தலைமுடி வழியாக ஒரு புதிய வினோத நோய் பரவுகிறது என்றும், அதற்குத் தடுப்பூசியை விடத் துரிதமான தீர்வு மொட்டை என்றும் கேள்விப்பட்டபோது, நமது சமூகத்தின் அறிவார்ந்த அஸ்திவாரம் எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரங்கேறியிருக்கும் இந்தச் சம்பவம், மனித நம்பிக்கையின் உச்சத்தையும், அதே நேரத்தில் இலவச அரசு உதவித்தொகை என்ற வார்த்தைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் தெய்வீகச் சக்தியையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

சம்பவம் என்ன என்கிறீர்களா?

அரியலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 39 வயது வாலிபருக்கு இன்ஸ்டாகிராம் பார்த்துப் பார்த்துப் சலிப்பு தட்டியிருக்கிறது. உடனே, யாரையாவது ஏமாற்றி விளையாடலாம் என்ற மேன்மையான எண்ணத்துடன் தற்செயலாகச் சில எண்களை அழுத்தவே, அது ஆத்தூரில் உள்ள ஒரு பெண்ணுக்குச் சென்றிருக்கிறது.

விளையாட்டு நபர் வீசிய தூண்டில் சாதாரணமானதல்ல. அவர் பேசியது இதுதான், "கொரோனா போல தலைமுடி வழியா நோய் பரவுதுங்க. வெளிநாட்டுல எல்லாரும் மொட்டை அடிச்சிக்கிறாங்க. நம்ம அரசாங்கமும் நோயைத் தடுக்க மொட்டை அடிக்கிற பெண்களுக்கு 15,000 ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு 45,000 ரூபாய் தருது. உங்க ஏரியாவுக்கு மொத்தம் 18 டோக்கன்தான் இருக்கு!"

இங்கே கவனிக்க வேண்டியது அந்த 18 டோக்கன் என்கிற மார்க்கெட்டிங் தந்திரம்தான். விலைமதிப்பற்ற எதுவுமே கைநழுவி விடக்கூடாது என்ற மனித மனத்தின் பதற்றத்தை அந்த நபர் மிகச்சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதோடு, வாட்ஸ் அப்பில் 500 ரூபாய் கட்டுக்களின் படத்தையும், யாரோ மொட்டை அடித்த படத்தையும் அனுப்பியவுடன், அறிவியல் ஆய்வுகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது அந்தத் தாள்களின் ஒளி.

அறிவியல் ரீதியாக இது சாத்தியமா? மருத்துவத்துறை என்ன சொல்கிறது? என்றெல்லாம் சிந்திக்க நேரமேது?

பதினைந்தாயிரம் ரூபாய் கைநழுவிப்போய்விடுமே என்ற பதற்றத்தில், சித்ரா, ராமாயி, காவேரி ஆகிய மூன்று பாட்டிகளும் சலூன் கடைக்கு விரைந்து, தங்கள் கூந்தலைத் தியாகம் செய்து தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்.

காரியம் முடிந்தது.

அடுத்தது என்ன?

பணம் வாங்க வேண்டியதுதானே!

அந்த மூன்று முட்டை மண்டைகளும் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்குச் சென்ற போதே அந்த மகா உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அங்கே இருந்த அதிகாரிகளுக்குத் தலைசுற்றியிருக்கும்.

"அரசாங்கம் மொட்டை அடிக்கப் பணம் தருகிறதா? அதுவும் 15,000 ரூபாயா?" என்று அவர்கள் திகைத்துப் போய் நிற்க, "டோக்கன் 18 இல் நாங்களும் ஒருத்தருங்க!" என்று இந்த பாட்டிகள் நின்ற காட்சியை நினைத்துப் பார்த்தால், நம் நாட்டின் நிர்வாக அமைப்புக்கே ஒரு புதிய அத்தியாயம் எழுதத் தோன்றும்.

ஒருவேளை அரசாங்கம் உண்மையில் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருந்தால் கூட, இவ்வளவு வேகமாக மக்கள் பயன்பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து அலுத்துப்போய், சும்மா டயல் செய்து ஓர் ஊரையே மொட்டை அடிக்க வைத்த அந்தச் சதீஷ்குமாரை காவல்துறை கைது செய்துவிட்டது. "சும்மா விளையாட்டா பேசுனேங்க" என்று அவர் கொடுத்த வாக்குமூலம், இன்றைய டிஜிட்டல் யுகத்தின் மிகப்பெரிய விபரீதத்தைச் சிரிப்போடு வெளிப்படுத்துகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது, செல்போனில் உலகமே கைமுட்டியில் இருக்கிறது. ஆனால், "தலைமுடியில் நோய் வருது, மொட்டை அடிச்சா 15,000 ரூபாய்" என்ற ஒரே ஒரு போன்கால், பல தசாப்த கால மனித அனுபவத்தையும், பகுத்தறிவையும் சலூன் கடை வாசல் வரை மிக எளிதாக அழைத்துச் சென்று விடுகிறது.

இனியாவது மக்கள் உணர வேண்டும். இலவசமாக அரசாங்கம் தரும் எதையும் நம்பலாம், ஆனால் தலைமுடியைக் கொடுத்துவிட்டு தாலுகா அலுவலகத்தில் காசு வாங்கலாம் என்று சொல்வதை மட்டும் நம்பவே கூடாது.

போன முடி திரும்ப வந்துவிடும்; ஆனால் அந்த 15,000 ரூபாய் ஆசையில் போன தலைமுடி? அது ஒரு காலத்தின் வரலாற்றுச் சுவடு!

*****

புதியது விற்பனைக்கு இல்லை!

புதியது விற்பனைக்கு இல்லை!

திருத்துறைப்பூண்டி, ஏஆர்வி திருமண மண்டபத்தில் நடந்த நெல் திருவிழா 2026 ஐ எழுதியப் பிறகு அத்தனை போன் கால்கள். அட இந்த வலைப்பூவைக் கூட இத்தனை பேர் படிக்கிறார்களா என்று ஒரே ஆச்சரியம்தான் போங்கள்.

மனிதர்கள் எழுத்தைப் பற்றியெல்லாம் போன் போட்டு பேசுவதைக் கேட்க நான் தமிழ்நாட்டில் இருக்கிறேனா, இங்கிலாந்து அல்லது ஜெர்மனியில் இருக்கிறேனா என்று மயக்கம் வராத குறைதான்.

அதென்னய்யா நெல் திருவிழாவை எழுதிய நீர் (வாட்டர் அல்ல), புத்தகத் திருவிழாவை எழுதாமல் விட்டீர் என்று செல்லமான மிரட்டல்கள் அந்தப் போன் கால்களில் ஏராளம்.

ஏனிந்தப் பாவம் எனக்கு? அநாவசியமாக மற்றவர்களின் மிரட்டல்களுக்கு நான் ஏன் ஆளாக வேண்டும்?

ஆனால், காலம் கடந்து விட்டதே!

காலம் கடந்து விட்டது என்றாலும், மதிய சாப்பாட்டை மூன்று மணிக்கேனும் சாப்பிடாமலா இருக்கிறோம்? கல்யாணமோ, சாவோ பிறகு போய் விசாரித்துக் கொள்வதில்லையா? காலம் ஒரு பிரச்சனையே இல்லை என்றார்கள் போன் காலர்கள்.

*

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம்.

மங்கள் வரதர் மஹால்.

குளிர் இல்லாத, ஆனால் காற்றில் இலக்கியவாதிகள் எப்போதோ விட்டுச் சென்ற பெருமூச்சுகள் மட்டுமே அடர்த்தியாக உறைந்திருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை.

மக்களுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் செத்துப்போய்விட்டது என்பதை நிரூபிப்பதைப் போல, அந்த மாலை நேரத்திலும் அந்தப் பேச்சு அரங்கு காலியாகக் கிடந்தது. மனிதர்களை விட அதிக எண்ணிக்கையில் ஈக்கள் பறந்துகொண்டிருந்தன.

புத்தகக் காட்சி நடக்கும் அந்த மஹாலுக்குள் ஜன நடமாட்டத்தைக் காண்பது, அத்தி பூத்தாற்போல அல்ல, அத்தியே இல்லாத மரத்தில் பழம் காய்ப்பது போல அரிதாக இருந்தது.

பதிப்பகத்தார்கள் தங்களுடைய கடைகளுக்கு முன்னால், வியாபாரம் இல்லாத விரக்தியில், ஈக்களைக் கூட விரட்டச் சோம்பல்பட்டுக்கொண்டு டிஜிட்டல் இந்தியாவின் அடுத்தகட்டப் பரிணாமமாகச் செல்போன்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

விகடபாரதி ஒரு தீவிரமான ஆராய்ச்சியாளனைப் போல ஒவ்வொரு அரங்காக ஏறி இறங்கி, உலாவிக் கொண்டிருந்தான். அவனுக்குள் ஓர் ஆராய்ச்சி அரிப்பு எடுத்திருந்தது. தன் கையில் இருந்த குறிப்பேட்டில், மக்கள் அதிகம் விரும்பும் புத்தகம் என்று தமிழில் எழுதி, கீழே பிராக்கெட்டில் பீப்பிள் மோஸ்ட் வான்டட் புக்  என்று ஆங்கிலத்திலும் குறித்துக்கொண்டான். அந்த ஆங்கிலக் குறிப்பு அவனுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்தது.

வார நாட்களில் சீருடையில் அழைத்து வரப்பட்ட பள்ளிச் சிறுவர்கள், "டேய், அந்த காமிக்ஸ் அட்டையைப் பாருடா!" என்று கத்த, அவர்களை அழைத்து வந்த ஆசிரியரோ, "புத்தகத்தைத் தொட்டுப் பார்க்காதே, அழுக்காயிடும்" என்று மிரட்டி, தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பின் முன்னுரையை வாசித்துக்கொண்டிருந்தார். சிறுவர்கள் ஏதோ ஒரு கடையில், முகப்பில் கிடந்த பத்தே நாட்களில் ஆங்கிலம் பேசுவது எப்படி? புத்தகத்தை வாங்கி பையில் திணித்துக் கொண்டார்கள்.

பெரியவர்களும் வந்திருந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வீட்டில் படிக்காமல் வைத்திருக்கும் அதே பாரதியார் கவிதைகள் புத்தகத்தை, இப்போதும் அட்டைப் படம் மாறியிருக்கிறதா என்று திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு, தமிழ் வாழ்க என்று மனதுக்குள் வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.

விகடபாரதி தன் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்தினான்.

ஆங்கிலப் புத்தகப் பிரிவில் கொஞ்சம் மனிதர்கள். அநேகமாக அவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில எழுத்தாளர்கள் எப்படியோ புத்தகம் போட்டு விற்றுத் தள்ளி விடுகிறார்கள். தமிழ்ப் பக்கமோ பயங்கரமான அமைதி.

இருந்தாலும் அதே பரமார்த்த குரு, அக்பர் பீர்பால், முல்லா, பஞ்ச தந்திரம் மற்றும் தெனாலிராமன். அதற்குப் பக்கத்தில் கல்கி, சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, சமையல் குறிப்புகள், ஜாதகம் பார்ப்பது எப்படி? சில பதிப்பகத்தார்கள் திருக்குறள், ஆத்திசூடி மற்றும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளையுத் ஆங்கில அகராதிகளையும் பளபள அட்டையில் போட்டு புது அலையை உருவாக்கி விட்ட திருப்தியில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

விகடபாரதியின் மண்டைக்குள் பளிச் என்று ஒரு ஞானோதயம் உதித்தது.

"ஏன் இந்தப் புத்தகக் கண்காட்சியில் புதிய நூல்களுக்குப் பஞ்சம்?" என்று அவன் மனம் கொந்தளித்தது.

வீடு வந்தவன், சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களை எடுத்து ஆங்காங்கே படித்தான். "அடடே! இந்தப் புத்தகக் காட்சிக்குப் போன புத்தகக் காட்சி பரவாயில்லை. போனதற்கு அதற்கும் போனது பரவாயில்லை." என்று பழைய நினைவுகளில் மூழ்கினான்.

மறுநாள் காலை.

விகடபாரதி ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பூர்வமான முடிவை எடுத்தான். "தமிழ் புத்தகங்களை நானே மீட்டெடுக்கிறேன்!" என்று, தன் வங்கியிலிருந்த மிச்சமீதிப் பணத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு, "இதுவரை வாங்காத புதிய தமிழ் புத்தகங்களை மட்டுமே வாங்குவேன்" என்ற புனித லட்சியத்தோடு மீண்டும் அதே அரங்கிற்குள் காலடி எடுத்து வைத்தான்.

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான். "ஐயா, போன புத்தகக் காட்சியில் இல்லாத புதிய தமிழ்ப் புத்தகம் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டான்.

ஒரு பதிப்பகத்தார் அவனை ஏற இறங்கப் பார்த்து, "தம்பி, இது தீவிர இலக்கியக் கடை. புது புக்கையெல்லாம் நாங்க புத்தகம் போடுறதில்ல. வாழ்க்கையோட கோர முகத்தை, துயரத்தைப் பிரதிபலிக்குறதுதான் இலக்கியம். வேணும்னா போன புத்தகக் காட்சியிலிருந்து இந்தப் புத்தக்காட்சி வரை விற்காத இந்தச் சவப்பெட்டியின் அழுகை நாவலை வாங்குங்க," என்றார்.

ஐந்து மணி நேரத் தீவிரமான, உயிரைக் கொடுக்கும் தேடலுக்குப் பிறகு, விகடபாரதி வாங்கிய மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கை, பூஜ்ஜியம்.

உடலும் மனமும் சோர்ந்து, "தமிழ்நாட்டில் புதிய புத்தகங்களுக்கான தேவை செத்தே போய்விட்டது" என்ற இரங்கல் செய்தியை மனதுக்குள் எழுதியபடி வெளியிலிருந்த சிற்றுண்டி கடை பக்கம் வந்தான். அங்கே பயங்கரக் கூட்டம். புத்தகத் திருவிழா சோடை போனாலும் சிற்றுண்டித் திருவிழா சோடை போகவில்லை.

அங்கே, ஒரு பிரபல பதிப்பகத்தின் உரிமையாளர். அவர் கடைசியாக வெளியிட்ட புத்தகம், துயரங்களின் பள்ளத்தாக்கில் என் கண்ணீர். அவர் பெஞ்சில் உட்கார்ந்து, தன் தொப்பை குலுங்க, வாய்விட்டு, கண்ணீரே வரும் அளவுக்குச் சிரித்துக் ஆனந்தித்துக் கொண்டிருந்தார்!

விகடபாரதி திடுக்கிட்டான்.

ஓடிச் சென்று அவர் பாதங்களுக்கு அருகில் நிற்பது போல நின்று, "ஐயா! இலக்கியப் பெருந்தகையே! எந்தப் புதிய புத்தகத்தைப் படித்து இப்படி மெய்மறந்து ஆனந்திக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்கள், என் தமிழ்ச் சமூகம் பிழைத்துப் போகட்டும்!" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கேட்டான்.

அந்தப் பதிப்பகத்தார் தன் செல்போன் திரையை விகடபாரதியின் முகத்திற்கு நேரே நீட்டினார்.

அதில், வடிவேலுவை வைத்துச் செய்யப்பட்ட அட்டகாச மீம் ஒன்று. அவர் ஆனந்தத்ததை அடக்க முடியாமல் சொன்னார், "யோவ் தம்பி! யாருய்யா நீ? புத்தகக் கண்காட்சியில போய் யாராச்சும் புது புத்தகத்தைத் தேடுவாங்களா? புதுசுங்கறது இப்போல்லாம் வாட்ஸ்அப் மீம்ஸ்லேயும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்லயும் மட்டுமே இருக்க வேண்டிய விஷயம்! புத்தகத்துல பழசும் அரதப் பழசும் மட்டும்தான் இருக்கணும். போய் வேலையைப் பாருய்யா!"

விகடபாரதி கையில் வைத்திருந்த குறிப்பேட்டை மெல்லக் கீழே போட்டான்.

அரங்கின் வாசலில் இருந்த, வாசிப்பு மனிதனை உன்னதப்படுத்துகிறது என்ற பேனர், காற்றில் படபடவென அடித்துக்கொண்டு, அவனைச் செவுட்டு இழுப்பாக இழுப்பது போல இருந்தது!

*****

28 Jul 2026

இருட்டும் கட்டணமும் – ஓர் ஒப்பியல் ஆய்வு!

இருட்டும் கட்டணமும் – ஓர் ஒப்பியல் ஆய்வு!

மனிதன் நாகரிகமடைவதற்கு முன்பாக இருட்டைக் கண்டு பயந்தான்; நாகரிகமடைந்த பிறகு மின்சாரத்தைக் கண்டு பயப்படுகிறான்.

அன்றைக்கு இருட்டுக்குள்ளே பேய் இருக்கும் என்று நம்பினான். இன்றைக்கு மின்சாரப் பெட்டிக்குள்ளே மீட்டர் ஓடும் வேகம் பார்த்து, அதற்குள்ளும் ஏதோ ஒரு பேய் ஒளிந்திருக்கிறதோ என்று அஞ்சுகிறான்.

இருட்டு என்பது இயற்கையானது. அதை விரட்டுவதற்கு மின்சாரத்தைக் கண்டுபிடித்தது மனிதனின் புத்திசாலித்தனம். ஆனால், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து, அதை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்பி வைப்பது மனிதனின் அதிபுத்திசாலித்தனம்.

இருளைக் கண்டு அஞ்சுபவன் மனிதன்; மின்கட்டணத்தைக் கண்டு அஞ்சுபவன் குடும்பஸ்தன்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், இரவில் வெளிச்சம் பெற தீப்பந்தங்களையும் விளக்குகளையும் பயன்படுத்தினார்கள். அதற்கு எண்ணெய் செலவானது. எண்ணெய் தீர்ந்து போனால் வெளிச்சம் போய்விடும்.

இன்றோ, கட்டணம் செலுத்தத் தவறினால் வெளிச்சம் போய்விடும். ஆக, காலம் மாறினாலும் செலவு குறைந்தால் வெளிச்சம் போகும் என்ற நியதி மட்டும் மாறவே இல்லை.

தாமஸ் அல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தபோது, உலகம் இருளிலிருந்து விடுதலையடைந்தது என்று பெருமூச்சு விட்டது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த வெளிச்சத்தை அளக்க மீட்டர் என்ற பொறி பொருத்தப்பட்டது.

மின்சார மீட்டர் என்பது ஒரு விசித்திரமான இயந்திரம். நாம் வீட்டில் இல்லாதபோதும் அது ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது.

மின் கட்டணத்துக்கு அமோக ஆதரவளிக்கும் வஸ்துகள் அகஸ்மாஸ்தாக ஒவ்வொரு வீடுகளிலும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்க்க வேண்டுமானால்…

குளிர்சாதனப் பெட்டி என்பது நாம் அறையைக் குளிர்விக்க பயன்படுத்துவது; ஆனால் கட்டணம் வரும்போது அது நம்மை வேர்க்க வைக்கிறது.

மின்விசிறி என்பது காற்றைத் தருவது போலத் தோன்றும், ஆனால் உண்மையில் அது மின்கட்டணத்துக்கான ரூபாய் தாள்களை உருவியெடுத்து நம் பையைத்தான் லேசாக்குகிறது.

தொலைக்காட்சி என்பது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறதோ இல்லையோ, மீட்டரின் சுழற்சியை வேகப்படுத்துகிறது.

ஆக மொத்தத்தில், பழங்காலத்தில் இருட்டில் நடமாடப் பயந்த மனிதன், இன்றைக்கு மின்சாரப் பெட்டியின் அருகே செல்லவே பயப்படுகிறான்.

இருட்டு மனிதனின் கண் பார்வையை மட்டுமே பாதித்தது; ஆனால் மின்கட்டணமோ மனிதனின் நிம்மதியையே பாதிக்கிறது.

இருட்டு என்பது ஒரு தற்காலிகமான நிலை. சூரியன் வந்தால் அது போய்விடும். ஆனால் மின்கட்டணம் என்பது ஒரு நிலையான பிரமை; சூரிய ஒளி மின்னோட்டமாக மாறினாலும், அதற்கும் ஏதேனும் ஒரு வகையில் கட்டணம் வந்துவிடுகிறது.

எனவே, இருட்டைப் பார்த்து பயந்த மனிதன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தான். மின்கட்டணத்தைப் பார்த்து பயப்படும் மனிதன், அடுத்து எதைக் கண்டுபிடிப்பான் என்பதுதான் தற்போதைய கேள்வி!

இந்த ஆய்வு உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் இது போல இன்னும் பல ஆய்வுகள் செய்ய ஆவலோடு இருக்கிறேன். உங்கள் திருப்தியை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். ஆனால், அதற்குக் கொஞ்சம் மின்சாரம் செலவாகும்.

*****

ரிப்பர் சந்திரனும், தத்துவக் குசுமாஞ்சலியும்!

ரிப்பர் சந்திரனும், தத்துவக் குசுமாஞ்சலியும்!

இன்று நாம் பார்க்கப்போவது ஜெயமோகனின் ஒரு தத்துவார்த்தக் கொலைக் காவியம். பொதுவாக ஒரு சீரியல் கில்லரைப் பற்றிப் பேசினால் க்ரைம் த்ரில்லர் பாணியில் ரத்தம், சதை, போலீஸ் சேஸிங் என்றுதான் போவார்கள். ஆனால், ஜெயமோகனோ, ஓட்டு வீட்டின் ஓட்டை வழியாக உள்ளே புகுந்த ஒரு கொடூரத் திருடனை, அப்படியே மெல்லத் தூக்கிச் சென்று பீகாரில் கி.பி 975 இல் பிறந்த உதயணரின் நியாய குசுமாஞ்சலி தத்துவத்தோடு முடிச்சுப் போட்டிருக்கிறார் பாருங்கள். அங்கேதான் அவர் நிற்கிறார்!

சந்திரனின் கொலை பாணி ரொம்பவே நுட்பமானதாம். கழுத்துக்குப் பின்னால், முகுளத்துடன் மூளை இணையும் புள்ளியில் கீழிருந்து மேல் நோக்கி ஒரே அடி. அடிபட்டவர் முனகக்கூட மாட்டாராம். பக்கத்தில் தூங்குபவருக்கும் கேட்காதாம்.

அடடே, என்ன ஒரு புரொபஷனலிசம்! இதைக் கேட்கும்போது நமக்குக் கொலைகாரன் மேல் கோபம் வரவேண்டுமா, அல்லது அவனுடைய அனாடமி  அறிவைப் பார்த்து வியந்து மெடிக்கல் கவுன்சில் விருது கொடுக்க வேண்டுமா என்றே தெரியவில்லை.

சந்திரனுக்குப் படிப்பறிவு இல்லை, அவனுக்கு லண்டன் ஜாக் தி ரிப்பர் பற்றித் தெரிய வாய்ப்பில்லை, ஆனாலும் வரலாறு அவர்கள் இருவரையும் இணைத்துவிட்டது என்கிறார் ஜெமோ.

உலகத்தில் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுப் படித்து, பிஎச்.டி வாங்கி, வெளிநாடு போய் வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பிடிக்கப் போராடுகிறார்கள். ஆனால், இந்தச் சந்திரன் நீலேஸ்வரத்தில் பிறந்து, கர்நாடகாவில் திம்மையாவிடம் இன்டர்ன்ஷிப் முடித்து, இரும்புக்கம்பியைத் தூக்கிய ஒரே காரணத்திற்காகப் பிரிட்டன் ஜாக்குடன் க்ளோபல் கொலாபரேஷன் செய்துகொண்டான் பாருங்கள்.  அதுதான் ரியல் திறமை!

காந்தியவாதியும் அறிஞருமான சுகுமார் அழீக்கோடு, சந்திரனுக்குக் கருணை காட்டலாம் என்ற நல்ல எண்ணத்தோடு சிறைக்குப் போகிறார். “நீ பெண்களைக் கொடுமைப்படுத்தினாய் அல்லவா?” என்று கேட்க, சந்திரன் அரைக்கணம் புன்னகைக்கிறான். அவ்வளவுதான். அழீக்கோடு நடுங்கி, கைகூப்பி ஓடியே வந்துவிட்டார்.

ஒரு சீரியல் கில்லரிடம் போய் “நீ தப்பு பண்ணினேதானே?” என்று கேட்டால், அவன் என்ன “ஆமாங்கய்யா, தப்புதான்” என்று அழுதுகொண்டா இருப்பான்? அவன் லேசாகச் சிரித்ததற்கே நம் அறிவுஜீவி நடுங்கி ஓடிவந்துவிட்டார் என்றால், இவர்களெல்லாம் எப்படித்தான் உலக தத்துவங்களை அலசி ஆராய்கிறார்களோ? அந்தச் சிரிப்புக்கு பின்னால் இருந்த நெக்ரோபிலியா மேட்டரை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பார்த்துப் புரிந்துகொண்ட பிறகுதான், ஊரே விவாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

சிறை அதிகாரி சொல்கிறார், “அவனுக்கு அழிவில்தான் இன்பம். ஐந்து பேரைக் கொன்றுவிட்டு ஒரு வீட்டில் ஒன்றுமே கிடைக்காமல் திரும்பியிருக்கிறான். கொல்லாதே என்று அவனிடம் சொல்வது, நீ மகிழ்ச்சியாக இருக்காதே என்று சொல்வது போல.”

அடப்பாவிகளா! திருடப் போன இடத்தில் காசு, பணம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஐந்து பேரைக் கொன்ற மனநிறைவோடு திரும்பியிருக்கிறான் அந்த உத்தமன். அவனுடைய ஹேப்பினஸ்ஸில் நாம் தலையிடக் கூடாதாம். என்ன ஒரு மனிதநேயம்!

கதை இங்கேயே முடிந்திருந்தால் அது வெறும் க்ரைம் நியூஸ். ஆனால், ஜெமோ ஆற்றூர் ரவிவர்மாவுடன் மாலையில் வாக்கிங் போகும்போது, “மனிதன் எப்படி இரக்கமில்லாமல் இருக்க முடியும்?” என்று கேட்கிறார். அதற்கு ஆற்றூர், “சம்ஹார பாவம் கடவுளின் இயல்பு, அவனில் அது மட்டும்தான் இருந்தது என்கிறார்.

அதற்கடுத்த சில வருடங்களில் ஜெமோ நியாய குசுமாஞ்சலி படிக்கிறார்.

அப்போது ஜெமோவுக்குப் பல தரிசனங்கள் ஏற்படுகின்றன.

 உலகில் பூகம்பம், பேரழிவு நடப்பதால்தான் கடவுள் பிரபஞ்ச பேராற்றலாக இருப்பதாக அர்த்தமாகிறதாம்.

நாம் மாத்திரை சாப்பிட்டு கோடிக்கணக்கான பாக்டீரியாக்களைக் கொல்வதில்லையா? புலி மானைக் கொல்வதில்லையா? எனவே, சந்திரனுக்குள் இருந்த குரூரமும் அந்தப் பிரபஞ்ச அழிவுச் சக்தியின் ஒரு பகுதிதான் என்று தரிசனம் காண்கிறார் ஜெமோ.

என்ன ஒரு கனெக்சன்! காய்ச்சலுக்கு நாம் போடும் பாராசிட்டமால் மாத்திரையையும், காட்டில் மான் வேட்டையாடும் புலியையும், நள்ளிரவில் ஏழைகளின் ஓட்டைப் பிரித்து மண்டையை உடைக்கும் ரிப்பர் சந்திரனையும் ஒரே தராசில் வைத்து, அதற்கு சம்ஹார பாவம் என்று லேபிள் ஒட்டி, பிரபஞ்சப் பேராற்றலின் மகா பிளான் என்று விளக்கியிருக்கிறார் பாருங்கள். அங்கேதான் தத்துவம் நம்மைத் தலைசுற்ற வைக்கிறது!

இனிமேல் யாராவது வீட்டில் திருட வந்தாலோ அல்லது தலையில் அடிக்க வந்தாலோ, நாம் பதற்றப்படக் கூடாது. “அப்படியே நில்லுங்கள் சகோதரரே, நீங்கள் செய்வது பிரபஞ்சத்தின் ஆக்கவிசைக்கு எதிரான அழிவுவிசை . நீங்கள் வெறும் கரும்பாறை, எல்லாப் பக்கமும் மூடியிருப்பவர். உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க நான் விரும்பவில்லை. அடித்துவிட்டுப் போங்கள்!” என்று தத்துவார்த்தமாகச் சரணடைந்துவிட வேண்டும் போல!

கடைசியாக அந்தச் சிறை அதிகாரி சந்திரனிடம் பேசிவிட்டு, ஏதோ இருட்டு தெய்வத்தைப் பார்த்தது போல நடுங்கிக்கொண்டே நேராகக் கோயிலுக்குப் போய் கும்பிட்டுவிட்டுத் தூங்கப் போனாராம்.

நாமும் இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு, “ஒரு சீரியல் கில்லரின் கொடூர புன்னகைக்குள்ளும், பிணத்துடன் உடலுறவு கொள்ளும் வக்கிரத்துக்குள்ளும் இப்படியொரு வேதாந்த தத்துவ தரிசனம் ஒளிந்திருக்கிறதா?” என்று வியந்து, நேராகக் கணினியை மூடிவிட்டு கடவுளே, என்னை இந்தத் தத்துவவாதிகளிடமிருந்து காப்பாற்று என்று கும்பிட வேண்டியதுதான்!

*****