சீரழித்த சினிமா – 37
தளபதி
மகாபாரத மறுவாசிப்பும் மாபியா வழிபாடும்
தமிழ்
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது ஒரு கூட்டு நனவிலித் தற்கொலைக்கான ஊடகம்.
அதிலும் ஒரு ஸ்டார் நாயகனை, நாயகன் பாணியின்
தொடர்ச்சியாக, கார்ப்பரேட்டுகளின் காட்சிப் பித்தலாட்டக்கார இயக்குநர் ஒருவர், மகாபாரதத்தின்
கர்ணனைத் தூக்கிச் சென்னைத் தாதாத் தெருக்களில் எறிந்தபோது, இங்கே ஒரு மாபெரும் சமூக
உளவியல் பேரழிவு அரங்கேறியது.
தமிழ்
சினிமா அதுவரை காட்டிய "நண்பனுக்காக எதையும் செய்யலாம், ஆனால் சட்டம் தன் கடமையைச்
செய்யும்" என்ற சமூக விதிகளைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, "தாய்
கைவிட்ட ஓர் அனாதைச் சிறுவன், சேரியில் வளர்ந்து பெரிய ரௌடியாக மாறி, அந்த ஊரின் ஆகச்சிறந்த
மாபியா தாதாவுக்குத் தளபதியாக முடிசூடினால் போதும்; அவன் செய்யும் அத்தனை கொலைகளும்,
அராஜகங்களும், நடுத்தெருப் பஞ்சாயத்துகளும் 'உன்னதமான நட்பு' மற்றும் 'மகாபாரதக் கர்ணனின்
தியாகம்' என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர
அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, தளபதி திரைப்படத்திற்கு உண்டு.
நாயகனின்
எந்நேரமும் சட்டையைக் கழற்றத் தயாராக இருக்கும் முரட்டுப் பாய்ச்சல் பிம்பமும், இயக்குனரின்
வழக்கமான நிழலும் ஒளியும் கலந்த இருண்ட உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின்
மூளையை எப்படி ஒரு கொலைக்கள நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு
போட்டுக் கீறிப் பார்ப்போம்.
இத்திரைப்படம்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சமூக நெறிமுறை என்ன தெரியுமா?
நீங்கள்
ஓர் ஏழை எளிய மக்களின் காவலனாக மாற விரும்பினால், உங்களுக்கு நீதிமன்றங்களோ அல்லது
காவல் துறையோ முக்கியமல்ல. ஊரின் பெரிய தாதாவுக்கு நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்;
அவனது எதிரிகளை நடுத்தெருவில் வைத்து எப்படித் துவம்சம் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க
வேண்டும் என்பதுதான்.
இந்தியத்
தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற சிவில் சமூக அமைப்புகள் எல்லாம் பெரிய
இடத்துத் தாதாக்களுக்குப் பொருந்தாது. ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியரோ, காவல் துறையோ
வந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றால், போலீஸைக் கூப்பிடக் கூடாது; தானே ஒரு மாபியா
வீரனாக விஸ்வரூபம் எடுத்துச் சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும் என்பதுதான்
தளபதி போதித்த சமூகவியல் பாடம்.
விளைவு?
இன்றுவரை
நிஜ வாழ்க்கையில் உருப்படியாக வேலைக்குப் போகாமல், "நாங்கெல்லாம் நட்புக்காக உசுரையே
கொடுப்போம்டா, எங்க அண்ணன் இறங்குனா கொத்துக்கறிதான்" என்று தேவையில்லாமல் முறுக்கிக்
கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளியானது
தளபதி திரைப்படம்.
தளபதி
படத்தில், ஒரு ரௌடி கும்பல் நினைத்தால் ஒட்டுமொத்த மாவட்டத்தின் சட்டத்தையே தன் கையில்
வைத்திருக்கலாம் என்ற அராஜகத்தை மரியாதை மற்றும் நட்பு என்ற கமர்ஷியல் லேபிளோடு விற்றார்கள்.
இந்த உறைபனியூட்டும் தனிநபர் வழிபாட்டு வக்கிரத்தை, மேஸ்ட்ரோவின் உணர்ச்சிமயமான, ஆன்மீகத்
தகிப்பு நிறைந்த பின்னணி இசையாலும், பளபளக்கும் கேமரா கோணங்களாலும் மூடி மறைத்து, அவர்
தப்பு செய்ய மாட்டார், தட்டிக் கேப்பார் என்று பார்ப்பவனை ஏமாற்றினார் இயக்குனர்.
நீதிமன்றமோ,
ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு தாதா நினைத்துத் தன்
கோட்டையில் பஞ்சாயத்து கூட்டினால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான
தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து
எறிந்தது இந்தத் திரைப்படம்.
இத்திரைப்படத்திலும்
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் விசித்திரமானது. நாயகனின் காதலி கதாபாத்திரம்,
ரௌடி என்று தெரிந்தே அவனைக் காதலிப்பதும், பின்னர் குடும்பத்தின் வற்புறுத்தலால் ஓர்
அரசு அதிகாரியைக் கட்டிக்கொண்டு அழுவதுமாக ஒரு சுயமற்ற பிம்பமாகக் காட்டப்பட்டார்.
இன்னொரு பெண், கணவனைக் கொன்ற ரௌடியிடமே தஞ்சமடைந்து, அவனது வன்முறையைக் சகித்துக் கொள்வதாகக்
காட்டப்பட்டார். பெண்களின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல்,
அவர்களின் துயரங்களையும், ஒரு ரௌடியின் பாசப் போராட்டத்தையும் ரொம்பக் கமர்ஷியலாகக்
காட்டி ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த செல்லுலாய்டு தந்திரம்.
தளபதி
பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை ஒரு சூப்பர் ஸ்டார் நாற்காலியில் நிரந்தரமாக
அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு மாஸ் இயக்குனர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம்.
ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?
இத்திரைப்படத்திற்கு
முன்பு வரை நட்பு என்பது அன்புக்கும், பரஸ்பர வளர்ச்சிக்குமான ஓர் உன்னத உறவு. ஆனால்,
அதற்குப் பிறகுதான், நண்பனுக்காகக் கொலை செய்வதும், சட்டம் ஒழுங்கை மீறுவதும்தான் உண்மையான
நட்பு என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.
தளபதிக்கு
முன் வன்முறை என்பது சட்டவிரோதமாக இருந்தது. தளபதி அதை ஒரு அழகியல் நுகர்வுப் பொருளாக
மாற்றியது. "அடிச்சான் பாரு ஒரு அடி" என்று சாமான்யன் பரவசமடைந்த கணத்தில்,
வன்முறைக்கு ஒரு தார்மீக நியாயம் கற்பிக்கப்பட்டது.
அத்துடன்
நல்ல தாதா, கெட்ட தாதா என்னும் பகுப்பு உருவானது. சட்டத்தை மதிக்காத ஒருவன் மக்களின்
காவலன் ஆக முடியும் என்ற மாயை, இளைஞர்களின் மூளையில் ஆழப் பதிக்கப்பட்டது. காவல் நிலையங்களை
விட ஏரியா ரவுடிகளின் கட்டப்பஞ்சாயத்து அதிக நம்பகத்தன்மை பெற்றது.
மாபியாத்தனமான
ரௌத்திரம் என்பது ஒரு புனிதப் பண்டமாகப் பரிமாறப்பட இத்திரைப்படம் ஒரு ராஜபாட்டையையே
அமைத்துத் தந்தது.
"நட்புன்னா
என்னன்னு தெரியுமா?" என்று இப்படத்தின் நாயகனும் நண்பனும் கட்டிப்பிடித்துக் கொண்டபோது,
தமிழ்நாட்டின் தர்க்க அறிவு தற்கொலை செய்து கொண்டது. அநியாயக் கொலைகள் செய்யும் ஒருவனை,
அவன் என் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக ஆதரிப்பதுதான் ஆகச்சிறந்த அறம் என்று போதிக்கப்பட்டது.
இந்த லாஜிக் இல்லாத விசுவாசம், நிஜ வாழ்க்கையில் ரவுடிக் கும்பல்களுக்கும், சாதிய அமைப்புகளுக்கும்,
அரசியல் அடிவருடித்தனத்திற்கும் மிகச்சிறந்த எரிபொருளாக மாறியது. நண்பன் தப்பு செய்தாலும்
தட்டிக் கேட்கக் கூடாது, தாதாவுக்குக் குடை பிடிக்க வேண்டும் என்ற விசித்திர வியாதி
பரவியது.
அநாதையாக
வளரும் நாயகன், தன் தாயைத் தேடும் பரிதவிப்பும் சமூகத்தின் மீதும் கொள்ளும் ஆழமான வன்மமும்,
இங்கே ஒரு தலைமுறையின் விக்டிம் கார்டு மனநிலையைத் தூண்டிவிட்டது. "நான் அநாதை,
அதனால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்ற உளவியல் தப்பித்தல், குற்ற உணர்ச்சியை
முற்றிலுமாகத் துடைத்தெறிந்தது.
ரயிலில்
தவறிய குழந்தை, ரயிலையே தடம் புரளச் செய்யும் தாதாவாக மாறுவதை சமூகம் அழுதுகொண்டே ரசித்தது
ஒரு கூட்டு மனப்பிறழ்வு.
தளபதி
திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், சட்டம், போலீஸ், நீதிமன்றம் என்பன எல்லாம் ஹேங்
ஆன சிஸ்டம்ஸ் என்ற எண்ணம் வலுத்தது. "நமக்கு நாமே சட்டம்" என்ற 'தேவா – சூர்யா'
மாடல், இளைஞர்களின் மனதில் ஒரு பேரலல் நீதிபரிபாலனத்தை நியாயப்படுத்தியது. மொத்தத்தில்
வன்முறைக்கு ஒரு கிளாசிக் பெயிண்ட் அடிக்கப்பட்டது.
நாயகன்
மற்றும் அவனது நண்பன் ஆகிய இருவரையும் "சூழலால் உருவாக்கப்பட்ட வன்முறையாளர்கள்"
என்று படம் சித்தரித்து, "அடிபட்டவன் திருப்பி அடிப்பான்" என்ற ஒற்றை வரியைக்
கொண்டு அவர்களின் வன்முறை, சட்டவிரோதச் செயல்கள் அனைத்திற்கும் நியாயம் கற்பித்தது
தளபதி. சமூகம் இந்தத் தர்க்கத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டது. தங்களின் தனிப்பட்ட
தோல்விகளுக்கும், சட்டமீறல்களுக்கும் "சமூகம் என்னை இப்படி மாற்றிவிட்டது"
என்று தனிமனிதர்கள் தங்களின் சுய பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் ஓர் உளவியல் சீரழிவை
இப்படம் மிக ஜரூராக நியாயப்படுத்தியது.
வன்முறையை
அழகியல் ஆக்கினால், சமூகம் அதை ஒழுக்கமாக மாற்றிக்கொள்ளும். அதுதான் ஆபத்து. சூர்யாக்கள்
நிஜ வாழ்க்கையில் கத்தியை எடுத்தால், க்ளைமாக்ஸில் அழுதுகொண்டிருக்க அம்மாக்கள் வரமாட்டார்கள்.
போலீஸ் வேன்தான் வரும் என்ற உண்மையை அவ்வளவு சீக்கிரமாக இப்படம் பார்த்த இளைஞர்கள்
ஏற்றுக் கொள்ளாமல் போனதுதான் இத்திரைப்படம் உருவாக்கிய மாயாஜால ஜகஜ்ஜால பரிதாப பிரதாபம்.
இப்படத்தின்
பின்னணி இசையும், நேர்த்தியான ஒளியமைப்பும் சேர்ந்து ஒரு கொடூரமான தாதாயிசத்தைக் கவித்துவமாக
மாற்றின. மஞ்சள் வெயிலிலும், மழையிலும் ரத்தம் சிந்துவது ஏதோ ஒரு தெய்வீகக் காரியம்
போன்ற சித்திரத்தை உருவாக்கின. மக்கள் கொலையைக் கண்டு அஞ்சவில்லை; மாறாக, அந்தக் கொலையின்
ப்ரேமிங் அழகாக இருக்கிறதா என்று பார்க்கப் பழகினார்கள்.
தளபதி
திரைப்படம், 'சமூக அங்கீகாரம்' மற்றும் 'நட்பு' என்ற பெயரில் ஒரு மாபியா குழுவிற்கான
விசுவாசத்தைப் புனிதப்படுத்தப்படுத்தியது. மாபியா தலைவனின் பார்வைக்காகவும், அவனது
அங்கீகாரத்திற்காகவும் நாயகன் எத்தகைய வன்முறையையும் செய்யத் துணிகிறான். இப்படித்
தனிமனித அஸ்தித்துவம், ஒரு கூட்டுக் குற்றக் கும்பலின் நிழலில் அடகு வைக்கப்படும் தன்மையானது
இளைஞர்களிடையே "ஒரு தலைவனுக்காகவோ அல்லது குழுவிற்காகவோ சட்டத்தைக் கையில் எடுப்பதே
வீரம்" என்ற வன்முறை சார்ந்த அடிமைத்தன உளவியலை மிக ஆழமாகவே விதைத்தது.
தளபதி
திரைப்படம் மகாபாரதத்தின் கர்ணனை அடிப்படையாகக் கொண்டது. இதில் நாயகனின் ஒட்டுமொத்த
வாழ்வும், அவனது பிறப்பின் ரகசியத்தாலும், அனாதை என்ற முத்திரையாலும், கைவிடப்பட்ட
கோபத்தாலுமே அதன் திரைக்கதை தீர்மானிக்கப்பட்டது. ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாக வாழ
முயன்றாலும், அவனது பிறப்பின் சூழல் அவனை ஒரு வன்முறையாளனாகவே வைத்திருக்கிறது என்பதை
நியாயப்படுத்தி, மனிதனின் சுதந்திரமான தேர்வைக் கொச்சைப்படுத்தியது இத்திரைப்படம்.
"ஒருவன்
எங்கு, எப்படிப் பிறந்தான் என்பதே அவனது விதியைத் தீர்மானிக்கும்" என்ற பிற்போக்குத்தனமான,
விதியியல் உளவியலைச் சமூகத்தை நோக்கி இப்படம் வீசியது. இது மனித ஆற்றலையும் சுதந்திரத்தையும்
இழிவுபடுத்தும் செயலன்றி வேறில்லை.
ஜனநாயக
அமைப்புகள், சட்ட ஒழுங்கு ஆகியவற்றின் மீது நம்பிக்கையற்ற, ஒருவித அராஜகவாத உளவியலை
இது சமகால இளைஞர்களிடம் உருவாக்கியது. "சட்டப்படி தண்டிக்க முடியாதவனை, நாமே தண்டிப்பதில்
தவறில்லை" என்ற ஆபத்தான சிந்தனை முறைக்கு இது அழகியல் முலாம் பூசியதை மறுக்க இயலாது.
"சூழ்நிலைகளின்
பலியாடு" என்ற போலியான முகமூடியை அணிவித்து
வன்முறையையும், சட்டவிரோத விசுவாசத்தையும் 'இருத்தலியல் பெருமிதமாக' மாற்றிக் காட்டியதன் மூலம், ஒரு தலைமுறையின் கூட்டு
உளவியலை அது நன்னம்பிக்கையின்மை நோக்கித் தள்ளியது
சுருக்கமாகச்
சொன்னால், தளபதி செய்தது ஓர் எளிய ரௌடியிஸ ரசவாத வித்தை. அது குற்றத்தை அறமாகவும்,
அராஜகத்தைக் கடமையாகவும், வன்முறையைக் காதலாகவும் மொழிபெயர்த்தது. அந்தப் படத்தின்
பாதிப்பில் உருவான வாழ்க்கை முறை இன்னும் நம் தெருக்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது,
கையில் கத்தியுடனும், நெஞ்சில் நட்புடனும்.
நட்பு
என்ற பெயரில் லோக்கல் தாதாவோடு சேர்ந்து கொண்டு சண்டை போடுவதுதான் வீரம் என்றும், காட்டுக்குயிலு
மனசுக்குள்ள. பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல என்று பாடினால் அத்தனை அராஜகங்களையும் ரசிக்கலாம்
என்றும், தாதா கலாச்சாரமும் வன்முறையும் கலந்ததுதான் தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு
விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சண்டைக்காரச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத்
திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு!
*****