17 Mar 2026

15 ஆயிரம் டாலரும் ஒரு கொலையும்!

15 ஆயிரம் டாலரும் ஒரு கொலையும்!

அஷ்லி ஸ்டீவர்ட். வயது 41. ஆறு குழந்தைகளின் தாய். ஜனவரி 27, 2026 அன்று தன் வீட்டு வரவேற்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். கொன்றது, அவர் முன்னாள் கணவர் ரையான் டாட்.

காரணம்? பணம்.

சம்பவம் நடந்த இடம் அமெரிக்கா.

அஷ்லியும் ரையானும் ஹைஸ்கூல் காலத்திலிருந்து காதலர்கள். 2004 இல் திருமணம். ஐந்து குழந்தைகள் பிறந்தன. 17 வருடங்கள் ஓடின. ஆனால், உள்ளுக்குள் ரையான் ஒரு சைக்கோ என்பது அஷ்லிக்குத் தெரிந்தபோது காலம் கடந்திருந்தது. அடி, உதை, டார்ச்சர். 2021 இல் அஷ்லி விவாகரத்து கோரினார்.

விவாகரத்து கிடைத்தது. ஆடம் ஸ்டீவர்ட் என்பவருடன் அஷ்லிக்கு மறுமணம். ஒரு அழகான பிளெண்டட் ஃபேமிலி. இல்லினாய்ஸின் ஓஸ்வெகோ நகரில் வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தது.

ஐந்து குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதம் 15,000 டாலர் தரவேண்டும் என்று ரையானுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ரையான் ஒரு கைதேர்ந்த ஆப் டெவலப்பர். சம்பளம் லட்சங்களில். கொடுக்கலாம். ஆனால், ஈகோ தடுத்தது.

காசு தர முடியாது என்று அடம்பிடித்தார். திவாலாகிவிட்டதாக மனு போட்டார். ஜனவரி தொடக்கத்தில் நீதிபதி அவரை செம்மையாகக் கவனித்தார். நீ காசு தராமல் உன் குழந்தைகளை பட்டினி போடுகிறாய் என்று வார்னிங் கொடுத்தார்.

அவ்வளவுதான், ரையான் மூளையில் ஒரு விஷமம் உருவானது.

அந்த 27 நிமிடங்கள் மோசமாக அமைந்தன. ஜனவரி 27, 2026. மதியம் 1.10 மணி.

ஆடம் ஸ்டீவர்ட் தன் அலுவலகத்தில் இருந்தார். அவர் போனில் ஒரு பீப் சத்தம். வீட்டு செக்யூரிட்டி கேமரா அலர்ட்.

போனைத் திறந்து பார்த்த ஆடம் அதிர்ந்து போனார். கேமரா லைவ் ஃபீடில் அஷ்லி அலறிக்கொண்டு ஓடுகிறார். பின்னால் ஒரு உருவம் துரத்துகிறது. கருப்பு ஜாக்கெட், முகம் மறைத்த துணி. அது ரையான் டாட் என்று அடையாளம் காண ஆடம்முக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் ஆடம் 911க்கு போன் செய்தார். அது அமெரிக்காவிற்கான அவசர கால எண். போலீஸ் அலறி அடித்துக்கொண்டு அஷ்லி வீட்டுக்கு வந்தபோது, எல்லாம் முடிந்துவிட்டது. அஷ்லி கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார்.

ரையான் டாட் காரில் தப்பிச் செல்லும்போது போலீஸாரால் வளைக்கப்படுகிறார்.

வெறும் 27 நிமிடங்களில் ஒரு உயிர் போய்விட்டது. கொலையாளி சிக்கிவிட்டான்.

இப்போது என்ன?

ரையான் மீது ஃபர்ஸ்ட் டிகிரி மர்டர், ஹோம் இன்வேஷன், ஸ்டாக்கிங் என கிரைம் லிஸ்ட் நீள்கிறது. கோர்ட்டில் அவர் திவாலாகிவிட்டேன் என்று சொன்னதெல்லாம் பொய் என போலீஸ் நம்புகிறது. கத்தி இன்னும் கிடைக்கவில்லை. சிசிடிவி காட்சிகள் தான் மெயின் எவிடென்ஸ்.

மார்ச் மாதம் ரையான் கூண்டில் ஏறுவார். அநேகமாக அவருக்குக் கிடைக்கப்போவது ஆயுள் தண்டனை.

ஆறு குழந்தைகள். அம்மா இல்லை. அப்பா ஜெயிலில். இன்னொரு அப்பாவான ஆடம் இப்போது அந்தக் குழந்தைகளுக்காக கோ ஃபண்ட் மீ பக்கத்தில் உதவி கேட்டு நிற்கிறார்.

இது பற்றி என்ன சொல்வது?

பணம் படுத்தும் பாடு அல்லது ஈகோ படுத்தும் பாடு!

இந்த இரண்டு கருமத்தின் மீதான பிடிப்பை விட்டிருந்தால், இப்படி ஒரு குற்றமே நடந்திருக்காது.

குற்றமே காக்கா பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை.         (குறள், 434)

என்ற திருக்குறளைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

*****

16 Mar 2026

ஒளி பெறும் நிழற்படம்

ஒளி பெறும் நிழற்படம்

விடிந்த பின்

இருட்டுக்கு வேறு நிறம்

அஸ்தமனத்திற்குப் பின்

வெளிச்சத்திற்கு வேறு நிறம்

இரு முனையிலும் தீ

நடுவில் தொங்கும்

நூல் ஏணி வாழ்க்கை

இரண்டு புறமும்

அணையும் போது

நடுவில் பற்றிக் கொள்ளும்

தீப்பொறி மரணம்

இரண்டு பக்கமும் இழுக்க

நடுவில் இழுபடும்

நரம்பாகும் ஆயுள்

விளக்கை ஏற்ற

கவிகிறது நிழல்

ஒளிபெறுகிறது

நீத்தார் புகைப்படம்

*****

நினைக்கத் தெரிந்த மனமும் மறக்கத் தெரிந்த மூளையும்!

நினைக்கத் தெரிந்த மனமும் மறக்கத் தெரிந்த மூளையும்!

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

மறக்கத் தெரியாதா?

1967 இல் வெளியான ஆனந்த ஜோதி திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில், பி. சுசீலாவின் தேன் குரலில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான மிகச்சிறந்த பாடல் இது.

மனதுக்கு மறக்கத் தெரியுமா? தெரியாதா? மறக்கத் தெரியாத மனமும் இருக்குமா என்ன? மனம் என்று சொன்னாலும் இது மூளையின் செயல்பாடு. அது பற்றிய பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்துக் கொஞ்சம் பார்ப்போமா?

அது ஓர் அதிகாலை. காய்கறிச் சந்தை பரபரப்பாக இருக்கிறது. அங்கே ஒரு விசித்திரமான ஆராய்ச்சி. அங்கே சிலரைப் பிடிக்கிறார்கள். உங்களைச் சில கடைகளுக்கு அழைத்துச் செல்வோம், அங்கே சில உணவுகளை ருசி பார்க்கலாம், அப்புறம் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். ஓகேவா? என்கிறார்கள்.

அந்தப் பரிசோதனை மனிதர்கள் ஒரு வளைந்து நெளிந்த பாதையில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆலிவ் ஆயில், அவகேடோ, நட்ஸ் போன்ற கலோரி அதிகமான கடைகளில் ருசி பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம், சத்து குறைந்த கீரைக் கடைகள்.

கடைசியில் அவர்களை ஒரு மையப் புள்ளியில் நிறுத்தி, அந்தக் கடைகள் எங்கே இருந்தன? என்று கேட்கிறார்கள்.

அந்த மனிதர்கள் ஆலிவ் ஆயில் கடையையும், நட்ஸ் கடையையும் துல்லியமாக அடையாளம் காட்டுகிறார்கள். பாவம், அந்தப் பச்சை இலைக் கீரைகள் இருந்த இடம் மட்டும் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

ஏன்?

இங்கேதான் டார்வின் உள்ளே வருகிறார். நம் மூளை ஒரு பழைய மாடல் கம்ப்யூட்டர். அதற்கு இப்போதும் நாம் ஆப்பிரிக்கக் காடுகளில் அலைந்து திரியும் வேட்டைக்காரர்கள் என்றே நினைவு. எங்கே அதிக சக்தி கிடைக்கிறதோ, அந்தப் பாதையை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். அப்போதுதான் உயிர் பிழைக்க முடியும் என்று அது இப்போதும் நமக்குக் கட்டளையிடுகிறது.

ஆக ஒரு மொக்கையான ரெஸ்டாரண்ட்டுக்குப் போகும் வழியை உங்கள் மூளை சேமித்து வைக்காது. அது அதற்கு டைம் வேஸ்ட்!

நமது மூளை ஒரு விசித்திரமான மெஷின். ஒரு கணக்கீட்டின்படி, மனித மூளையின் சேமிப்புத் திறன் சுமார் 2.5 பெட்டா பைட். அதாவது, 30 கோடி மணிநேரம் ஓடக்கூடிய டிவி நிகழ்ச்சிகளை உள்ளே திணித்து வைக்கலாம்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ராஷோமோன் படம் பார்த்திருக்கிறீர்களா? ஒரே சம்பவத்தை நான்கு பேர் நான்கு விதமாகச் சொல்வார்கள். தமிழ் படம் என்றால் விருமாண்டி. இங்கே இரண்டு பேர் கதையை இரண்டு விதமாகச் சொல்வார்கள். நம் நினைவாற்றலும் அப்படித்தான். அது ஒரு க்ரியேட்டிவ் ரைட்டர் போல, உண்மையைச் கொஞ்சம் மாற்றித்தான் எழுதும்.

ஜெர்மன் தத்துவஞானி நீட்சே ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொன்னார். அது மறதியின் செயல்திறன் பற்றியது. உன் மனசாட்சியின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வை. அப்போதுதான் புதிய விஷயங்களுக்கு உள்ளே இடம் கிடைக்கும் என்கிறார் அவர். ஒரு வகையில், மகிழ்ச்சியாக இருக்க மறதி அவசியம். மனசாட்சி கண்டதையும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

ஞாபகம் என்பது நாம் பிறந்த பிறகு வருவதல்ல. ஒரு பரிசோதனையில் 30 வாரக் கர்ப்பிணிகளின் வயிற்றில் ஒரு சத்தமிடும் கருவியை வைத்தார்கள். அந்தச் சத்தம் கேட்டதும் கருவில் இருக்கும் குழந்தை முதலில் துடித்தது. ஆனால், பத்து நிமிடம் கழித்து மீண்டும் அதே சத்தம் கேட்டபோது, அது அலட்டிக்கொள்ளவில்லை. ஓ, இது ஆபத்தில்லாத சத்தம் என்று அது அப்போதே ரெக்கார்ட் செய்துகொள்கிறது.

அதாவது, பாதுகாப்பான மற்றும் ஆபத்தான விஷயங்களை இனம் காண்பதுதான் நினைவாற்றலின் முதல் படி.

குழந்தையாக இருக்கும்போது நமக்கு எக்கச்சக்க நினைவுகள் இருக்கின்றன. ஆனால், 7 வயது ஆகும்போது, முதல் மூன்று வருட நினைவுகள் முழுவதுமாக டெலிட் செய்யப்படுகின்றன.

ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல, நாம் எல்லோருமே நமக்குள் ஒரு டைரியைச் சுமந்து கொண்டிருக்கிறோம். அதில் எதை எழுதுவது, எதை அழிப்பது என்பதைத் தீர்மானிப்பது நம் உயிர்வாழும் உள்ளுணர்வுதான்.

அடுத்த முறை உங்கள் வீட்டுச் சாவியை எங்கே வைத்தீர்கள் என்று மறந்தால் கவலைப்படாதீர்கள். உங்கள் மூளை ஏதோ ஒரு முக்கியமான ஆப்பாயில் அல்லது ஆம்லேட் போடும் கடையைத் தேடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

*****

15 Mar 2026

அட்ராசிட்டி & பேஷன்

அட்ராசிட்டி & பேஷன்

இன்றைய அரசியல் எப்படி இருக்கிறது?

ஒரு கையில் கத்தியையும் மறுகையில் துப்பாக்கியையும் (கத்தி, துப்பாக்கி என்றதும் ஒரு கட்சித் தலைவர் நடித்த திரைப்படங்கள் நினைவுக்கு வருவதற்குக் கம்பெனி பொறுப்பாகாது) கொடுத்து எதிரியென ஒருவரைச் சித்தரித்து விடுவதாக இருக்கிறது.

*****

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்பதைப் போல ஒரு வரி?

500 ரூபாய் நோட்டு கொடுக்கத் தெரிந்து ATM இயந்திரமே உனக்கு 100 ரூபாய் நோட்டு கொடுக்கத் தெரியாதா?

*****

வசதியும் வாய்ப்பும் வந்த பிறகு அதை அனுபவிக்க முடியவில்லையே என்று புலம்புவதற்கு ஒரு உவமை சொல்ல முடியுமா?

எல்லா ஒ.டி.டிக்கும் சப்ஸ்கிரைப் செய்து விட்டு ஒரு ஒ.டி.டியிலும் எதையும் பார்க்க நேரமில்லையே எனப் புலம்புவதைப் போல.

*****

வரி அட்ராசிட்டி, வட்டி அட்ராசிட்டி இரண்டுக்கும் உதாரணம்?

டெபாசிட் செய்யும் பணத்துக்கு 7 சதவீத வட்டித்தான் தருவார்கள். அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்தால் ஜிஎஸ்டி, செஸ் என்று 18 சதவீதம் வரை போட்டுத் தாக்குவார்கள். பெட்ரோல், டீசலுக்கெல்லாம் சதவீதத்துக்கே ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு 100 சதவீதம் வரைப் போட்டுத் தாக்குவார்கள். இதை வரி அட்ராசிட்டி என்று சொன்னால், வட்டி அட்ராசிட்டியும் அதைப் போலத்தான் இருக்கும். டெபாசிட் பணத்திற்கு 7 சதவீத வட்டி தருவார்கள். அதே பணத்தைக் கடனாக வாங்கினால் 18 சதவீதம் வரை வட்டி போடுவார்கள். அதுவே கிரெடிட் கார்டு என்றால் அதையே டபுளாக்கி 36 சதவீதம் வரை போவார்கள். மொத்தத்தில் இரண்டு அட்ராசிட்டிகளும் ஒன்றைப் போலவே, ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை.

*****

கிழிந்த பேண்டை என்ன செய்வது?

சாதாரண பேண்ட் என்றால் கால்சட்டையாக்கி அது கிழியும் வரை போட்டுக் கொள்ளலாம். ஜீன்ஸ் பேண்ட் என்றால் அதை எதுவும் செய்யாமல் பேஷன் என்று போட்டுக் கொள்ளலாம்.

*****

14 Mar 2026

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இந்தியா!

டிரம்ப் என்ன அடி அடித்தாலும் அதைத் தாங்கும் இந்தியாவை நினைக்கும் போது உங்கள் மைண்ட் வாய்ஸில் என்ன தோன்றுகிறது?

“எவ்வளவு அடித்தாலும் இவன் தாங்குறான்டா. இவன் ரொம்ப நல்லவன்.” என்ற வடிவேலுவின் மைண்ட் வாய்ஸ்தானே!

*****

தொடர்ந்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து இந்தியாவுக்குப் பயமில்லையா?

ஜிஎஸ்டியும் டோல்கேட்டும் இருக்க இந்தியாவுக்குப் பயமேன்?

*****

தற்போதைக்குத் தங்கம் விலை உயர்வதை எப்படிச் சமாளிப்பது?

தற்போதைக்குத் தங்கத்தை வாங்காமல் இருந்துதான் சமாளிக்க வேண்டும்.

*****

இனி எப்படி போராட்டம் நடத்தினால் அரசாங்கங்கள் கண்டு கொள்ளும்?

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இலவசங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றுதான்.

*****

வாகனத்தில் செல்லும் போது செல்போனைப் பயன்படுத்தலாமா?

இதெல்லாம் இந்தக் காலத்தில் செல்லுபடியாகாது. பெட்ரோல் பங்குகளில் செல்போனைப் பயன்படுத்தாதீர்கள் என்று எழுதியிருப்பார்கள். பெட்ரோல் பங்குகளின் பல பேமேண்டுகள் கூகுள்பே, போன்பேயில்தான் நடக்கின்றன. அதைப் போலத்தான் வாகனத்தில் செல்லும் போது செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பதும். கூகுள் மேப்பைப் பார்த்துதான் இங்கு பல வாகனங்களே ஓடிக் கொண்டிருக்கின்றன.

*****

13 Mar 2026

இரவின் நிறம்

இரவின் நிறம்

வெளிச்சம் வேண்டுமெனக் கதறிய போது

இருள் வந்தது

இருளுக்குப் பழகிய பின்பு

வலிகள் வந்தன

வலிகளை ஏற்றுக் கொண்ட

ஒரு நாளில் சிரிப்பு பிறந்தது

இத்தனை நாளாய்

இந்தச் சிரிப்பே

நீ எங்கிருந்தாய் என்ற போது

வெளிச்சத்தைத் தேடி

இருளைத் தொலைத்த ஒவ்வொரு பொழுதிலும்

உன் நிழல் போல இருந்தேன் என்றது

அந்தச் சிரிப்பு

நிழலா என்ற போது

உன் மீது பட்ட

வெளிச்சத்தின் இரவு

என்றது சிரிப்பு

*****

தத்துவார்த்தமாக வாழ்தல்!

தத்துவார்த்தமாக வாழ்தல்!

நாயையோ பூனையையோ கண்டால்

அறவே பிடிக்காது அந்த இருவருக்கும்

அவ்வளவு பிடித்து

அப்படி வளர்த்த

மகனும் மகளும்

கைவிட்டுப் போன பிறகு

ஒரு பூனையை வளர்த்திருக்கலாம்

என்ற ஏக்கம்

அவர்களில் ஒருவருக்கு

வாக்கிங் போகையில்

கூடவே துணைக்கு வந்து திரும்பும்

தெருநாய்க்கு ஒரு ரொட்டியைப் போட்டிருக்கலாம்

என்ற குற்றவுணர்வு இன்னொருவருக்கு

என்ன இருந்தாலும்

பூனையையும் நாயையும் வளர்ப்பவர்கள்

அனாதைகளாவதில்லை என்று

அடிக்கடி தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

இப்போது கூட யாதொன்றையும்

வளர்க்கப் பிரியமில்லாத

அந்த இருவரும்

*****