26 Apr 2026

ஏப்ரல் 23 – ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்!

ஏப்ரல் 23 – ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்!

ஏப்ரல் 23, 2026 இல் நடைபெற்ற இந்தச் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் 74 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

அதாவது, தமிழ்நாட்டில் இருக்கும் பத்து பேரில் எட்டு பேருக்கும் மேல் தங்கள் வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள்.

அப்படியானால், அந்த மீதி ஒன்றரை சொச்சம் பேரில் ஒருத்தர் சீரியல் கிளைமாக்ஸை மிஸ் பண்ண விரும்பாதவர், இன்னொருவர் அல்லது அந்த அரை சொச்சம் பேர் யாரென்றால், யார் வந்தால் என்ன? என்று தத்துவம் பேசுபவர்.

இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்திய தேர்தல் ஆணையத்திற்கு முதலில் ஒரு ஓ போடலாம். அவர்கள் செய்த மேஜிக் இதுதான். எஸ்ஐஆர் (SIR), ஏதோ பள்ளிக்கூட வாத்தியார் பெயர் போல இருந்தாலும், இதன் புண்ணியத்தில் சுமார் ஒரு கோடிப் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். இதில் இறந்தவர்கள், ஊரை விட்டு ஓடியவர்கள், இரு ஊர்களில் அட்ரஸ் வைத்திருந்த டபுள் ஆக்டிங் பார்ட்டிகள் என அனைவரும் அடக்கம்.

பட்டியல் இளைத்ததால், வாக்குப் பதிவு சதவீதம் தானாகவே தடித்திருக்கிறது. உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிப்பவர்கள், தராசின் எடையைக் குறைத்துக்கொள்ளும் ஒரு நுணுக்கமான உத்தி இது.

அடுத்துத் தேர்தல் கள நிலவரம் என்னவென்று பார்க்க வேண்டுமே.

இந்த முறை ஆட்டம் சீரியஸானது. திமுக, அதிமுக எனும் நித்தியக் கன்னிகளோடு, தம்பிகளின் அண்ணன் சீமானும், தளபதி விஜய்யும் களத்தில் குதித்திருக்கிறார்கள்.

மொத்தம் 4,023 வேட்பாளர்கள்!

இதில் எத்தனை பேருக்கு டெபாசிட் திரும்பக் கிடைக்கும் என்பது, எத்தனை பேருக்குத் தமிழ் சரியாகப் பேசத் தெரியும்? என்ற கேள்விக்கு நிகரானது.

இந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க, காலை 7 மணிக்கே மக்கள் குட் மார்னிங் சொல்லிவிட்டு வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டார்கள்.

தேர்தல் ஆணையம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பர்சன்டேஜ் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

காலை 9 மணி அளவிலேயே காபி குடித்து விட்டு வாக்களிக்க வந்த வாக்காளர்களால் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.  

9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வெயிலைச் சபித்துக் கொண்டே வாக்காளர்கள் வந்த போதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.

அதன் பிறகு மாலை 6 மணி வரை ஆர அமர வாக்காளர்கள் வந்த போதும் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.

தமிழகத்தின் வெயிலுக்கும், ஜனநாயகத்தின் மீதான காதலுக்கும் நடக்கும் போராட்டத்தில், எப்போதும் ஜனநாயகமே ஜெயிக்கிறது அல்லது அந்த விரல் மை தரும் ஒரு கெத்து ஜெயிக்கிறது என்பது நிரூபணமாகி விட்டது.

தலைவர்கள் அனைவரும் முறைப்படி கடமையை ஆற்றினார்கள்.

முதல்வர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.

எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலேயே ஓட்டுப் போட்டார்.

விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார். அவர் நடையிலேயே ஒரு அரசியல் இருந்தது என்கிறார்கள் ரசிகர்கள்.  சீமானும் அங்கேயேதான்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், விஜய் போட்டியிடும் பெரம்பூரில் 90 சதவீதம், திருச்சி கிழக்கில் 82 சதவீதம், ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் 86 சதவீதம், எடப்பாடியார் தொகுதியில் 92 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

அதிகபட்சமாக கரூர் மக்கள் 92.62 சதவீதம் ஓட்டுப் போட்டு நாங்கதான் டாப் என நிரூபித்திருக்கிறார்கள்.

சென்னை 16 தொகுதிகளில் 84 சதவீதம் பதிவு.

மொத்தத்தில் 2021 தேர்தலை விட 12 சதவீதம் அதிகம்.

வாக்குப் பெட்டிகள் இப்போது 62 மையங்களில் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக இருக்கின்றன. மே 4 ஆம் தேதிதான் அந்த ரகசியப் பெட்டிகள் வாய் திறக்கும். அதுவரை அரசியல் கட்சியினர் நகம் கடித்துக் கொண்டிருப்பார்கள்.

மக்களாகிய நாம்?

நாம் எப்போதோ அடுத்த சீரியலுக்கும், அடுத்த ஐபிஎல் மேட்சுக்கும் நகர்ந்துவிட்டோம்.

மே 4 – அந்த ஒரு நாள் கொஞ்சம் சீரியலுக்கும் ஐபிஎல்லுக்கும் விடை கொடுப்போம். பிறகு மீண்டும் சீரியல், ஐபிஎல் முருங்கை மரத்தில் ஏறி விடுவோம்.

*****

வெள்ளை நிறமும், விவகாரமான மன்னிப்பும்!

வெள்ளை நிறமும், விவகாரமான மன்னிப்பும்!

பாலிவுட்டில் எப்போதுமே ஒரு மேஜிக் உண்டு. அங்கே சில நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திவிடுவதில்லை; அவ்வப்போது வாயைத் திறந்து வம்பையும் விலை கொடுத்து வாங்குவார்கள்.

இந்த வரிசையில் இப்போது லேட்டஸ்ட் வரவு, சீனியர் நடிகர் அன்னு கபூர்.

விஷயம் இதுதான். தமன்னா ஸ்திரீ 2 படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார். அந்தப் பாட்டைப் பார்த்த அன்னு கபூருக்குப் பாராட்டு மழை பொழியத் தோன்றியிருக்கிறது. ஆனால், அவர் பயன்படுத்திய ரெசிபிதான் கொஞ்சம் தப்பாகிவிட்டது.

தமன்னாவைப் பால் போன்ற மேனி கொண்டவர் என்று இந்தியில் சொன்னாராம். அப்படி அவர் வர்ணிக்க, சோஷியல் மீடியா பொங்கி எழுந்துவிட்டது.

என்ன சார், இது உருவக்கேலி மாதிரி இருக்கே? என்று நெட்டிசன்கள் கேட்க, அன்னு கபூர் உடனே ஒரு விளக்கத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.

அந்த விளக்கம், சர்ச்சையைத் தீர்ப்பதற்குப் பதில், எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல் இருக்கிறது.

நான் தமன்னாவின் ஹார்ட் வொர்க்கைப் பார்த்துதான் அப்படிச் சொன்னேன், ஒருத்தர் அழகைப் பாராட்டுறது தப்பா? என்று கேட்கிறார் அன்னு கபூர்.

போதாக்குறைக்கு, நான் இதையே ஆங்கிலத்தில் மில்கி பாடி என்று சொல்லியிருந்தால் யாரும் கண்டுக்க மாட்டார்கள், ஹிந்தியில் சொன்னதுதான் குத்தமா? என்று ஒரு லாஜிக் வேறு.

ஆங்கிலத்தில் சொன்னால் மட்டும் அது எப்படி கவிதையாகும் என்பது அவருக்கே வெளிச்சம்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, தமன்னாவுக்கு வருத்தம் இருந்தால், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயார். எனக்கு 71 வயதாகிறது, என்று சென்டிமென்ட் கார்டை இறக்கியிருக்கிறார்.

71 வயதாகிறது என்பதற்கும், ஒரு பெண்ணின் உடல் பாகங்களை வர்ணிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று யாருக்கும் புரியவில்லை.

மன்னிப்பு கேட்க காலில் விழுவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் அந்த வர்ணனை நாகரிகமா என்பதுதான் இங்கே பில்லியன் டாலர் கேள்வி.

மொழியை விடுங்கள், ஹிந்தியோ? இங்கிலீஷோ? ஒரு பெண்ணின் உடல் நிறத்தையும், அங்கங்களையும் பொதுவெளியில் வைத்து மார்க் போடுவது எந்த ஊர் நாகரிகம் என்று இணையவாசிகள் மல்லுக்கட்டுகிறார்கள்.

கடின உழைப்பைப் பாராட்ட காலில் விழ வேண்டாம் சார், கொஞ்சம் கண்ணியமாகப் பேசினாலே போதும் என்பதுதான் அன்னு கபூரை நோக்கிய பொதுவான கருத்தாக இருக்கிறது.

பாராட்டு என்பது பூங்கொத்து மாதிரி இருக்க வேண்டும். அது ஏன் சிலருக்கு மட்டும் பூமராங் மாதிரி திரும்பி வந்து மூக்கைத் தாக்குகிறது என்பதுதான் புரியாத புதிர்!

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றுஆகா தாகி விடும்.     (குறள், 128)

என்கிறார் வள்ளுவர்.

உண்மைதானே?!

*****

25 Apr 2026

அநீதிக்கு எதிரான நீதி – காலத்தின் தேவை!

அநீதிக்கு எதிரான நீதி – காலத்தின் தேவை!

உலகெங்கும் அநீதியின் முழங்கால் ஒரு கழுத்தை நெரிக்கும் போது, நீதியின் குரல் வீதிகளில் கேட்கிறது. ஆனால் இங்கே? இங்கே அநீதி என்பது ஒரு டெய்லி பேசஞ்சர் போல. தினமும் வந்து போகிறது. யாரும் கவனிப்பதில்லை.

கொரோனா காலத்தில் உலகமே வீட்டுக்குள் அடைந்து கிடந்தபோது, சாத்தான்குளம் காவல் நிலையச் சுவர்களுக்குள் ஒரு மௌனக் கொடூரம் அரங்கேறியது. ஜெயராஜும் பென்னிக்ஸும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அதிகாரம் தன் பற்களைக் காட்டியது.

வழக்கம் போல, காவல்துறை தன் கற்பனைத் திறனைத் தட்டிவிட்டது. அவங்க தரையில் உருண்டாங்க, அதான் காயம் என்றது, மாரடைப்பு வந்துடுச்சு, அதனால்தான் மரணம் வந்துடுச்சு என்றது, ஏறும்போது தவறி விழுந்துட்டாங்க, அதனால்தான் எலும்பு முறிவு என்றது.

இந்தக் கதைகளை எல்லாம் கேட்டால், அந்தப் பகுதியில் புவி ஈர்ப்பு விசை கொஞ்சம் அதிகமாக இருந்ததோ என்று ஒரு சந்தேகம் வரும். இது காவல் மரணமே இல்லை என்று அதிகாரம் தன் முழுத் தொண்டையையும் பயன்படுத்திச் சொன்னது.

இருள் அடர்ந்திருந்த வேளையில், உயர்நீதிமன்றம் தானாகவே உள்ளே நுழைந்தது. அங்கிருந்துதான் சீன் மாறியது. சி.பி.ஐ. விசாரணை, 2000 பக்கக் குற்றப்பத்திரிகை, 100 சாட்சிகள் என மேட்டர் சீரியஸ் ஆனது.

இதில் ஹீரோயினாகத் தெரிந்தது தலைமைக் காவலர் ரேவதி. அதிகாரத்தின் கண்ணுக்கு முன்னால் நின்று, ஆமா, அடிச்சது உண்மைதான் என்று அவர் சொன்ன சாட்சியம், ஒரு திகில் படத்தில் வரும் திருப்புமுனை போன்றது. நீதிபதி முத்துக்குமரனின் தீர்ப்பு, இந்திய நீதித்துறையின் வரலாற்றில் ஒரு டைமண்ட் கட்டி. ஒன்பது காவலர்களுக்கு இரட்டை மரண தண்டனை.

பாதிக்கப்பட்டோருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணத்தால் உயிரைத் திரும்பக் கொண்டுவர முடியாதுதான், ஆனால் அதிகாரம் செய்த தப்புக்கு ஒரு அபராதம் வேண்டாமா?

இது வெறும் லத்தி அடி மட்டுமல்ல. மாஜிஸ்திரேட்டின் அலட்சியம். அதாவது, பார்க்காமலேயே ரிமாண்ட் செய்தது. மருத்துவத்துறையின் பொய்ச் சான்றிதழ். சிறைத்துறையின் கள்ள மௌனம். இப்படி எல்லாரும் சேர்ந்து போட்ட ஒரு பிளான்தான் அந்த இரண்டு மரணங்கள். இது அதிகாரத்தின் அரிவாளில் அறுந்த மனிதத்துவத்தின் ரத்தச் சுவடு.

மரண தண்டனை பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், தென்காசி மணிகண்டன் மீது நடந்த துப்பாக்கிச் சூடு என்ன சொல்கிறது? நாங்க மாற மாட்டோம் என்று காவல்துறை அடம் பிடிப்பது போல இருக்கிறது.

இந்தியாவில் சித்திரவதைக்கு எதிராக இன்னும் ஒரு தனிச் சட்டம் இல்லை என்பது, ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கு பிரேக் போட மறந்துவிட்ட கதையாக இருக்கிறது.

சித்திரவதைக்கு எதிராகக் கடுமையான சட்டம் வேண்டும், அதைவிடக் கடுமையாக அமலாக்கம் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, லத்தியை ஏந்தும் கைகளுக்குப் பின்னால் இருக்கும் மூளைக்குசக் கொஞ்சம் மனிதநேயம் தேவை. அதுவரை, காவல் நிலையங்களின் இருண்ட அறைகள் வெறும் விசாரணை அறைகள் அல்ல, அவை மரணக் கூடங்கள்.

சாத்தான்குளம் தீர்ப்பு ஒரு நம்பிக்கை ஒளி. ஆனால், அந்த ஒளி அணைந்துவிடாமல் இருக்க, சித்திரவதைக்கு எதிரான சட்டம் எனும் பேட்டரி நமக்குத் தேவை. மத்திய அரசு செய்யுமா? அல்லது தமிழக அரசு முந்துமா? பார்ப்போம்.

*****

ஷேக்ஸ்பியரை ஏன் கொண்டாட வேண்டும்?

ஷேக்ஸ்பியரை ஏன் கொண்டாட வேண்டும்?

இங்கிலாந்துக்கு ஒரு ஷேக்ஸ்பியர் என்றால், இந்தியாவுக்கு ஒரு காளிதாசர். ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தின் காளிதாசர் என்றால், காளிதாசர் இந்தியாவின் ஷேக்ஸ்பியர். இப்படிக் குழப்பினால்தான் இருவரின் பெருமைகளும் உங்களுக்குக் கொஞ்சமாவது புரியும். இருவரும் நாடகம் எழுதுவதில் பலே கில்லாடி ஆட்கள்.

காளிதாசரை ஜெர்மனியின் கதே ரசித்த போது நாடக உலகின் சூப்பர் ஸ்டார் ஆனார். அதுவரை நம்மூர் ஆட்கள் அவரை வைத்து குண்டுசட்டியில் குதிரைதான் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஷேக்ஸ்பியரோ நாடகம் எழுதிவிட்டு நாடக உலகின் முடிசூடா மன்னன் என்று ஒரு கற்பனை கிரீடத்தைச் சூட்டிக்கொண்டார்.

மனித மனங்களின் ஆழத்தை அளக்கப்போவதாகச் சொல்லி, நம் எல்லோருடைய அந்தரங்கப் பொறாமைகளையும், பேராசைகளையும் காகிதத்தில் அம்பலப்படுத்தியவர் ஷேக்ஸ்பியர்.

ஷேக்ஸ்பியர் எங்கே படித்தார், என்ன படித்தார் என்பது இன்றும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்தான். அவருடைய அம்மா அவருக்கு தேவதைக் கதைகளைச் சொல்லியிருப்பார் போல. அதனால் தான் பின்னாளில் அவர் எழுதிய நாடகங்களில் பேய்களும், மந்திரவாதிகளும், தேவதைகளும் அடிக்கடி வந்து விசிட் அடித்துப் போகிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் லத்தீன் மொழியை அரைகுறையாகப் படித்தது அவருக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது அதாகப்பட்டது, கதையைத் தழுவுவதற்கு. ஒரு சில விமர்சகர்கள் கதையைத் திருடுவதற்கு என்பார்கள். அதை நாம் கண்டுகொள்ள வேண்டாம். அப்படிப் புளூடார்க் போன்ற பழைய வரலாற்று ஆசிரியர்கள் அவருக்கு வசதியாகப் போய்விட்டார்கள்.

ஷெல்லி தனது கவிதையில் வானம்பாடியைப் பற்றிச் சொல்லும்போது, அது யாராவது காசு கொடுப்பார்கள் என்றோ, யாராவது கைதட்டுவார்கள் என்றோ பாடுவதில்லை என்கிறார்.

ஷேக்ஸ்பியரும் அப்படித்தான். யாரும் வற்புறுத்தாமலேயே 37 நாடகங்களை எழுதித் தள்ளினார். அவருக்குத் தெரிந்ததெல்லாம் மனிதர்களின் மண்டைக்குள் இருக்கும் அன்பு, வெறுப்பு, துக்கம் எனும் ரசாயனக் கலவைகள் மட்டும்தான்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நம்மை ஆண்டபோது அவர்கள் மீது நமக்குக் கோபம் இருந்திருக்கலாம், ஆனால் ஷேக்ஸ்பியர் மீது மட்டும் ஒரு சாப்ட் கார்னர் எப்போதும் உண்டு. விளைவு? அவரது 37 நாடகங்களில் 34 தமிழுக்கு வந்துவிட்டன.

விபுலானந்த அடிகள் ஒரு படி மேலே போய், ஷேக்ஸ்பியர் என்ற பெயரை செகசிற்பியர் என்று மாற்றி ஒரு சுத்திகரிப்புச் சடங்கே செய்துவிட்டார்.

தமிழர்கள் மெக்பத்தை மகபதி என்றும், ரோமியோவை இரம்மியன் என்றும் தமிழ் முறைப்படி பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். ஷேக்ஸ்பியர் மட்டும் இப்போது உயிரோடு வந்து இதைப் பார்த்தால், இது என் நாடகமா இல்லை ஏதோ சங்க காலத்துக் கதையா? என்று லத்தீனிலேயே குழம்பியிருப்பார்.

பென் ஜான்சன் சொன்னது போல, ஷேக்ஸ்பியர் ஒரு காலத்துக்கு மட்டும் உரியவர் அல்ல. மனிதன் எப்போது பொறாமைப்படுவதை நிறுத்துகிறானோ, எப்போது காதலிப்பதை நிறுத்துகிறானோ, அன்றுதான் ஷேக்ஸ்பியர் அவுட் ஆப் டேட் ஆவார். அது நடக்கப்போவதில்லை என்பதால், இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரை நாம் கொண்டாடித்தான் ஆக வேண்டும்.

உலகெங்கும் உள்ள மனிதர்களின் முட்டாள்தனங்களையும், மேன்மைகளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிய அந்த மதங்க சூளாமணியை நாமும் கொஞ்சம் வாசித்துப் பார்க்கலாம். புரியவில்லை என்றால் கவலையை விடுங்கள், ஷேக்ஸ்பியருக்கே பல இடங்களில் தான் என்ன எழுதினோம் என்று புரிந்திருக்காது! அவர் அவருடைய பெயரையே நான்கைந்து வெவ்வேறு ஸ்பெல்லிங்கில் எழுதக் கூடியவராம்!

*****

வறுமை, போர் மற்றும் சில ஆபத்துகள்!

வறுமை, போர் மற்றும் சில ஆபத்துகள்!

உலகம் உருண்டை என்று சொன்னார்கள். இப்போதுதான் தெரிகிறது அது ஒரு டென்னிஸ் பால் என்று. யாரோ எங்கே இருந்தோ அடிக்கிறார்கள், வந்து நம் வயிற்றில் விழுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒரு போரைத் தொடுத்திருக்கிறார்கள். எட்டு வாரங்கள் ஆகிவிட்டன. இன்னும் சில வாரங்கள் இது நீடித்தால், உலகம் முழுவதும் 8.8 மில்லியன் மக்கள் வறுமை என்கிற கோரமான கிளப்பில் உறுப்பினர்களாகப் போகிறார்கள் என்கிறது ஐ.நா. சபை.

அதில் இந்தியாவின் பங்கு மட்டும் 2.5 மில்லியன். ஆமாம், இருபத்தைந்து லட்சம் இந்தியர்கள் புதிதாக ஏழைகளாகப் போகிறார்கள். இந்தியர்களுக்கு ஏற்கனவே வறுமை ஒன்றும் புதிய விஷயமல்ல, ஆனால் இந்த முறை அது இம்போர்ட்டட்.

ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடி விட்டது. உடனே கச்சா எண்ணெய் விலை ராக்கெட் மாதிரி எகிறுகிறது. சரக்குக் கப்பல் கட்டணங்கள், உரப் பற்றாக்குறை எனத் திருவிழா ஆரம்பமாகிவிட்டது.

இந்தியாவுக்கு இது பெரிய சிக்கல். ஏனென்றால், நாம் டீசல் முதல் உரம் வரை எல்லாவற்றுக்கும் பக்கத்து வீட்டுக்காரனைத்தான் தட் மீன்ஸ் பக்கத்து நாட்டுக்காரனைத்தான் நம்பியிருக்கிறோம்.

நம்மவர்களுக்கு இது எதைப் பற்றியும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு சின்ன மீட்டிங் கூடப் போட்ட மாதிரித் தெரியவில்லை. முந்தைய போர்களிலிருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரே பாடம், பாடமே கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.

நாம் விழித்துக்கொள்வதற்குள் இங்கே பல லட்சம் பேருக்கு வேலை போயிருக்கும், பலருக்குச் சம்பளம் குறைந்திருக்கும். பட்டினி என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல், பலரது சமையலறையின் எதார்த்தமாக மாறியிருக்கும்.

இப்போது செய்ய வேண்டியது என்ன?

முதலில் இந்த இறக்குமதி போதையிலிருந்து வெளியே வர வேண்டும். எது எது எப்போது குறையும் என்று ஒரு லிஸ்ட் போட்டு, அதற்கு பிளான் - பி தயார் செய்ய வேண்டும்.

விலைவாசி உயர்வு என்கிற சுனாமி மக்கள் மீது மோதாமல் இருக்க ஒரு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். உணவுப் பாதுகாப்புக் கொள்கையை தூசி தட்ட வேண்டும்.

இல்லையென்றால், எங்கோ நடக்கும் போரின் நெருப்பு, இங்கே ஓர் ஏழை இந்தியனின் வயிற்றில் எரிவதைத் தடுக்க யாராலும் முடியாது.

நாம் இப்போதும் மௌனம் காத்தால், நாளை அந்த மௌனம் ஒரு பெரிய இடுகாட்டின் அமைதியாக மாறிவிடக்கூடும்.

நிச்சயமாக இது சுவாரஸ்யமான வாழ்க்கை கிடையாது, இது ஒரு விபத்து.

அதனால்தான் திருவள்ளுவரும்,

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.           (குறள், 435)  

என்கிறார்.

நாம் என்ன செய்வோம்? என்ன செய்யப் போகிறோம்?

நாம் செய்ய வேண்டியது நம் கையில் மட்டுமில்லை, நம்மை ஆள்வோர் கையிலும் இருக்கிறது. சேர்ந்து எதையாவது செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் சோத்துக்கே சிங்கி என்பது நிஜமானாலும் ஆனதுதான்.

*****

24 Apr 2026

சென்டிமென்ட் – ஒரு காஸ்ட்லி வைரஸ்!

சென்டிமென்ட் – ஒரு காஸ்ட்லி வைரஸ்!

சின்னப்பனுக்குச் சின்ன வயதிலேயே சேமிப்பு வியாதி உண்டு. உடைந்த பொம்மை, பேட், பந்து, பேனா, ஸ்கேல், ஷார்ப்பனர் என எல்லாவற்றையும் வரிசை கட்டி அலமாரியில் பொக்கிஷம் மாதிரி வைத்திருப்பான்.

அப்பா கத்துவார், ஏன்டா இந்தக் குப்பையைத் தூக்கி ஷோகேஸில் வச்சிருக்க என்று.

இது சித்தப்பா கொடுத்தது, பெரியம்மா கொடுத்தது, அத்தை கொடுத்தது, மாமா கொடுத்தது, தாத்தா தந்தது ,பாட்டி தந்தது என ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்லுவான். சரியான சென்டிமென்ட் செக்குமாடாக இருந்தான்.

அப்படித்தான் ஊரில் பாரம்பரியமாக இருந்த வீட்டை அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளோடு பாகம் போட்டு விற்க மனம் வரவில்லை. தாத்தா கட்டியது என இவன் மட்டும் அடம் பிடிக்க, அந்தக் கிராமத்து வீட்டை அப்படியே போட வேண்டியதாயிற்று.

வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போய் இரண்டு நாள் தங்குவதற்கு பத்து நாள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. செலவு ஐம்பதாயிரம். அவன் மனைவி ரங்கமணி டென்ஷனானாள், ஏங்க, இத விட கம்மி காசுல ஹோட்டல்ல ரூம் எடுத்துத் தங்கியிருக்கலாம். இங்கே தூசியில தும்மி தும்மி என் நுரையீரல் பஞ்சராகுது என்று.

அவள் சொன்னது பிராக்டிகல். சின்னப்பன் பார்த்தது சென்டிமென்ட்.

கடைசியில் இப்போது கணக்குப் பார்த்த்தால் ஊருக்குப் போயே பத்தாண்டுகளாகி விட்டன. விளைவு, பத்தாண்டுகளில் அந்த வீடு கறையானுக்கு சிறந்த உணவானது. ஓட்டடைகளுக்கும், கரப்பான் பூச்சிகளுக்கும், பல்லிகள், வௌவால்கள் மற்றும் பாம்புகளுக்கும் மாளிகையானது.

அன்று எல்லாரும் சொன்னதைக் கேட்டு வீட்டை விற்று பாகம் போட்டிருந்தால் எப்படியும் சின்னப்பன் கைக்கு பத்து அல்லது பதினைந்து லட்சம் வந்திருக்கும்.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அவன் சைட் பிசினஸ். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த டிவிடி, விசிடி பிசினஸ். இப்போது அப்படி ஒன்று இருந்ததைச் சொன்னால், பொடிசுகள் கூட அங்கே இங்கே போய் சிரிக்காமல், அந்த இடத்திலேயே சிரிக்கும். இப்போதெல்லாம் அவற்றைச் சீண்ட எலி கூட வருவதில்லை. ஆனாலும், தான் மொத மொதல்ல ஆரம்பிச்ச தொழில் என்கிற சென்டிமென்ட்டில் வருஷா வருஷம் நஷ்டத்தை இன்குபேட்டரில் வைத்துப் பராமரித்து வருகிறான் சின்னப்பன். அதிலும் ஒரு பத்து அல்லது பதினைந்து லட்சத்துக்கு மேல் காலி.

ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் ரங்கமணி எரிச்சலாகச் சொன்னாள், இந்தச் சென்டிமென்ட் உங்களை நடுத்தெருவுல விடப்போகுது. முதல்ல கடையை மூடுங்க என்று.

சரியாகத்தான் சொன்னாள் ரங்கமணி. கணக்குத் தெரியாத சென்டிமென்ட் என்பது ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றுவது போல.

யோசித்த பார்த்த போது, அடுத்த வாரம் கடையை மூடுவது, பூர்வாங்க வீட்டை தற்போது கைக்கு ஐந்து லட்சம் கிடைத்தாலும் போதும் விற்பது என்ற முடிவுக்கு வந்தான் சின்னப்பன்.

உத்தேச கணக்கு போட்டுப் பார்த்தால் இருபது முதல் முப்பது லட்சம் வரை தேவையற்ற நட்டம் அவனுக்கு. அதை அப்படியும் சொல்ல முடியாது. ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொள்ள சின்னப்பன் கொடுத்தடியூஷன் பீஸ்.

இனிமேல் சின்னப்பன் எதையும் சென்டிமென்ட் கண்ணாடியால் பார்க்கப் போவதில்லை. கணக்குப் போட்டுப் பார்த்துதான் மூச்சு விடப்போகிறான். இப்போதெல்லாம், யாராவது வந்து இது உங்க தாத்தா காலத்து என்று ஆரம்பித்தால், உடனே மார்க்கெட் வேல்யூ என்ன என்று கேட்க ஆரம்பித்து விட்டான் சின்னப்பன்.

இனிமேல் யார் கேட்டாலும் பிசினஸ் இஸ் பிசினஸ்தான் சின்னப்பனுக்கு.

*****

22 Apr 2026

குடிமக்கள் Pass ஆகி Boss ஆக…

குடிமக்கள் Pass ஆகி Boss ஆக…

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்துபோன குழந்தையைத் தேடுவது சுலபம். ஒரு மைக்கில் காபி கலர் சட்டை போட்ட பாப்பா, ஐஸ்கிரீம் கடை அருகே நிற்கிறது என்று சொன்னால் போதும், பெற்றோர் ஓடி வந்துவிடுவார்கள். ஆனால், இந்தத் தேர்தல் திருவிழாவில் குடிமக்கள் தொலைந்து போவதுதான் பெரும் சோகம்.

இங்கே ஜனங்கள் இருக்கிறார்கள், ஆனால் குடிமக்கள் எங்கே? ஜுராசிக் பூங்கா டைனோசர்கள் போல அவர்கள் ஒரு கற்பனை உயிரினமாக மாறிவிட்டார்கள் போலிருக்கிறது.

நமது அரசமைப்பின் முகவுரையானது இந்திய மக்களாகிய நாம் என்று சிறப்பாகத் தொடங்குகிறது. நாங்கள்தான் பாஸ் எல்லாம் என்பதுதான் இதன் ஒன் லைன் சம்மரி. ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இந்த வரியின் அர்த்தம் புரியாமலேயே நாம் காலத்தைக் கடத்திவிட்டோம்.

சட்டம் என்ன நினைத்தது? வெகுமக்களைக் குடிமக்களாக மாற்றுவோம் என்று ஆசைப்பட்டது. ஆனால், நடைமுறை என்ன செய்திருக்கிறது? அவர்களை வெறும் ஓட்டு போடும் வாக்காளர்களாகச் சுருக்கி, இப்போது இலவசங்களுக்கு ஏங்கும் பயனாளிகளாகத் தரம் குறைத்திருக்கிறது.

அரசியல் கட்சிகள் இப்போது ஜனநாயக அமைப்புகள் அல்ல, அவை ஒருவிதமான வழிபாட்டுத் தலங்கள். அங்கே கொள்கை, லட்சியம் போன்றவற்றை எல்லாம் பழைய பேப்பரில் கூடத் தேடிப் பிடிக்க முடியாது. அங்கே இருப்பது தலைவர் வழிபாடு மட்டும்தான்.

மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அரசியல் கட்சிகள் அல்ல, அரசியல் கட்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மக்கள். ஆனால், இப்போது வண்டி மாட்டை ஓட்டுவதில்லை, மாடு வண்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறது.

ஜனநாயகம் என்பது மக்களின் குரல் ஒலிக்கும் இடமாக இருக்க வேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்கவும் அனுமதி இருக்க வேண்டும். ஆனால், ஜனநாயகம் என்பது இப்போது சைலண்ட் மோடில் போடப்பட்ட செல்போன் போல அதிர்ந்து கொண்டே இருக்கிறது, சத்தம் வெளியே கேட்பதில்லை.

எல்லாம் போச்சு என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கு நடுவில், டிஜிட்டல் உலகம் ஒரு சின்ன நம்பிக்கையைத் தருகிறது. இது ஒரு மாயக் கண்ணாடி போல. தில்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்து, பக்கத்து வீட்டுப் போர் வரை எல்லாவற்றையும் இது ஒருங்கிணைக்கிறது.

அரசியல்வாதிகள் இதை வாட்ஸ்அப் பார்வேர்டு செய்யப் பயன்படுத்துகிறார்கள். நாமோ இதை வாட்ஸ்அப் விசாரணை செய்யப் பயன்படுத்தலாம். நம்மிடம் மூன்று பிரம்மாண்ட ஆயுதங்கள் உள்ளன.

அவையாவன, என் காசு என்னாச்சு? எனக் கேட்க தகவல் உரிமைச் சட்டம், வேலை ஒழுங்கா நடந்ததா? எனப் பார்க்க சமூகத் தணிக்கை, நீதிமன்றக் கதவைத் தட்ட, பொதுநல வழக்குகள்.

ஆயுதம் இருந்தால் மட்டும் போதாது, அதை அன்லாக் செய்யத் தெரிய வேண்டும். இதற்கு இளைய தலைமுறைக்குக் கொஞ்சம் பயிற்சியும், நிறையத் துணிச்சலும் தேவை.

இலங்கையில் நடந்தது ஒரு சான்று. அங்கே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தவர்கள் வெறும் கட்சி ஆட்கள் மட்டுமல்ல, சிவில் சமூகத்தைச் சேர்ந்த சாமானியர்களும்தான்.

தேர்தல் என்பது ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை விரலில் மை வைக்கும் சடங்கு மட்டுமல்ல. ஓட்டுப் போட்டதுடன் கடமை முடிந்தது என்று நினைப்பது, கல்யாணம் ஆனதும் வாழ்க்கை முடிந்தது என்று நினைப்பதற்குச் சமம்.

உண்மையான ஜனநாயகம் என்பது கண்காணிப்பதில் இருக்கிறது. ஏமாற்றுவதில் பிஹெச்டி முடித்தவர்களைக் கண்காணிக்க, நாமும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக மாற வேண்டும். அப்போதுதான், காணாமல் போன அந்த இந்தியக் குடிமகனை நாம் பேப்பர் விளம்பரம் இல்லாமலேயே கண்டுபிடிக்க முடியும்! பணநாயகம் மாறி ஜனநாயகம் விடியும்!

இப்போது நோட்டை வாங்காமல் ஓட்டைப் போட்டு, அதன் பிறகு ஓட்டுப் போடப்பட்டவர்களை விடாமல் நோட் பண்ணிக் கொண்டிருந்தால், ஜனநாயகத்தில் குடிமக்கள் Pass ஆவது மட்டுமல்ல, எப்போதும் Boss ஆகவே இருப்பார்கள்.

*****