9 Jul 2026

ராகவனின் ரேடியோவும் கௌடபாதரின் வேதாந்தமும்!

ராகவனின் ரேடியோவும் கௌடபாதரின் வேதாந்தமும்!

வழக்கம் போல ஜெயமோகன் ஒரு மிடில் கிளாஸ் மிலிட்டரி ராகவனைப் பிடித்து, பர்மியக் காட்டுக்குள் கொண்டு போய், இருநூறு அடி பள்ளத்தில் தள்ளி, மண்டையோட்டை உடைத்து, கடைசியில் வழக்கம் போல வேதாந்தத்தை இழுத்து தங்கம்தான் ஆத்மா என்று முடித்திருக்கிறார்.

ஜெயமோகனின் கூற்றுப்படி, கேரளாவில் நூலகங்கள் அறிவு வளர்க்கப் பயன்படுகிறதோ இல்லையோ, குடிகாரர்கள் ஹேங்கோவர் தீர தங்கும் விடுதியாகப் பயன்படுகின்றன என்பது ஒரு புதிய சமூகவியல் கண்டுபிடிப்பு.

நண்பர் குடித்ததால் அவர் வீட்டிற்குப் போக விரும்பவில்லை என்கிறார் ஜெமோ, சரி. ஆனால் 70 வயது ராகவனுக்கு அதே நூலகத்தில் என்ன வேலை? அவரும் அதே வேலையைத்தானே செய்கிறார். அவர் அங்கே வாசிப்புப் பழக்கத்தை மதுவோடு கலக்க வந்திருக்கிறார் போலும். உலகப்போர் நினைவுகளை விட, அந்த நூலகத்தில் அன்று இரவு எத்தனை குவாட்டர்கள் காலி செய்யப்பட்டன என்ற கணக்குதான் எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிகிறது.

ராகவன் சொல்கிறார், "துப்பாக்கியெல்லாம் கொடுத்தார்கள். ஆனால் நான் ஒரு முறைகூடச் சுட்டதாக நினைவில்லை."

இரண்டாம் உலகப்போரில் பர்மா காட்டுக்குச் சென்று, துப்பாக்கியைத் தொடாமல், வெறும் மஞ்சள் கொடியை மூங்கிலில் கட்டி ஆட்டிக்கொண்டிருக்க இவருக்கு பிரிட்டிஷ் அரசு மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறது! பிரிட்டிஷ் காரர்களுக்கு எவ்வளவு பெருந்தன்மை! ஒருவேளை ராகவன் எதிரிகளைத் தன் தொப்பியைக் காட்டியே பயமுறுத்தியிருப்பாரோ என்னவோ.

இருநூறு அடி ஆழமுள்ள, விரல் நுழையுமளவுக்கு இடுங்கலான பாறை வெடிப்புக்குள் தலைகீழாகவோ நேராகவோ செருகிக் கிடக்கிறார் ராகவன். கை, கால் உடைந்திருக்கிறது. மரண அவதி. அந்த நிலையிலும் அவர் செய்த முதல் காரியம், இடுப்பிலிருந்த ரேடியோவை எடுத்து ஆன் செய்து பாட்டு கேட்டது அல்லது சத்தம் போட்டது.

பிரிட்டிஷ் ஆர்மி இவருக்குக் கொடுத்த ரேடியோ எவ்வளவு வாட்டர் புரூப், ஷாக் புரூப் என்று பாருங்கள்! 200 அடி பள்ளத்தில் விழுந்தும் அது ரீங்காரம் பாடி, இவரைக் காப்பாற்றியிருக்கிறது. சோனி நிறுவனத்தினர் இதைக் கேட்டால் இப்போதே ராகவனின் ஆன்மாவுக்கு ராயல்டி தருவார்கள்.

ராகவனின் கனவுகள் எல்லாம் அக்மார்க் 916 தங்கம்.

ஆற்றில் அள்ளிய தண்ணீர் தங்கம்.

மேலிருந்து விழுந்த முயல் தங்கம்.

கையில் எடுத்த துப்பாக்கி தங்கம்.

கடைசியில் சிவந்த பையிலிருந்து வெளிவந்த மான் குட்டி மோப்பம் பிடித்த கல்லும் தங்கம்!

இது திருஷ்ணையோ அல்லது ஆத்மாவின் இயல்போகிடையாது. தன் அக்காவுக்கு 50 ரூபாய்க் கடனில் நல்ல தங்கம் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு வந்த ஓர் ஏழை ராணுவ வீரனின் கில்ட் கான்சியஸ். மாத்ருபூமி பத்திரிகைக்காரர்கள் இந்தக் கதையை ஏன் பிரசுரிக்கவில்லை என்பது இப்போது புரிகிறது. அவர்களுக்கு வேதாந்தத்தை விட பவுன் விலை நிலவரம் முக்கியமாக இருந்திருக்கும்.

கடைசியில் இந்தக் கதையை அப்படியே கொண்டு போய் குரு நித்யாவின் மாணவர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் கொட்டுகிறார் ஜெமோ. அவரும் சளைக்காமல் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம் என்று ஆன்மிகச் சொற்களை அள்ளி வீசுகிறார்.

பிராய்டை இழுக்க வேண்டாம். இது மிக எளிய மனிதனின் ஸ்ட்ரெஸ் விளைவித்த சைக்கோ சோமாடிக் கனவுகள். நிறைவேறாத ஆசை, மரண பயத்தின் விளிம்பில் தங்கமாக உருமாறுகிறது. சிம்பிள்.

ஆனால், கதை அங்கே முடிந்திருந்தால் அது நல்லதொரு உலகப்போர் நாவலின் அத்தியாயம். ஆனால், ஜெமோ சும்மா இருக்க மாட்டாரே! பன்னிரண்டு வருடங்கள் கழித்து ஸ்ரீகிருஷ்ணாவிடம் போய் ஏன் தங்கம்? என்று கேட்கிறார்.

ஒருத்தன் மண்டையில கால் லிட்டர் தண்ணி நிக்கிற அளவுக்குப் பள்ளம் விழுந்து, ஐம்பது வருஷமாக தலைவலியால் அவதிப்படுகிறான் என்றால்,  அவனுக்கு முதலில் சைக்கியாட்ரிஸ்ட்டும், நியூரோ சர்ஜனும்தான் தேவை. அதை விட்டுட்டு, அவரோட மண்டை ஓட்டுப் பள்ளத்தை ஆத்மாவின் பொன்வரி என்று கவிதை பாடுவது என்ன நியாயம்?

அப்புறம், பயாலஜிக்கலாக இது சாத்தியமா மிஸ்டர் ஜெயமோகன்? மண்டை ஓடு இல்லாமல், மூளையை வெறும் தோல் மட்டும் பாதுகாத்துக் கொண்டு ஐம்பது வருடங்கள் தலைவலியோடு வாழ முடியுமா? மெடிக்கல் மிராக்கிள் என்றுதான் சொல்ல வேண்டும். அனிமேஷன் படங்களில் வருவது போன்ற ஒரு விசுவல்.

ராகவனின் மண்டையில் இருக்கும் அந்தப் பள்ளத்தில் வெயில் படக்கூடாது என்பதுதான் உண்மை. ஆனால் நம் வேதாந்திகளோ, அந்தப் பள்ளத்தில் வேதாந்த வெளிச்சத்தைப் பாய்ச்சி அதை ஒரு தத்துவக் கிணறாக மாற்றிவிடுகிறார்கள்.

ராகவன் ஒரு நல்ல மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவசியமே இல்லாமல் ஓர் ஏழை மனிதனின் வறுமையையும், போர்க்கால மன உளைச்சலையும் மாண்டூக்ய உபநிடதம் வரை கொண்டு சென்று பஞ்சதஸியோடு சுட்டிணைப்பதுதான் இந்த தமிழ் இலக்கியவாதிகளின் ஆகப் பெரிய விசித்திரம்.

சுருக்கமாகச் சொன்னால், ராகவன் கண்டது தங்கக் கனவு; எழுத்தாளர் நமக்குக் காட்டியதோ வேதாந்தப் பம்மாத்து!

*****

ரௌடியிஸத்தின் கார்ப்பரேட் புள்ளி!

சீரழித்த சினிமா – 36

நாயகன்

ரௌடியிஸத்தின் கார்ப்பரேட் புள்ளி!

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஏழாம் ஆண்டின் அக்டோபர் திங்களில், தீபாவளித் திருநாளின் கொண்டாட்டங்களுக்கு நடுவே, தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த ஆகச்சிறந்த சட்ட விழிப்புணர்வுக்கும், ஜனநாயக அமைப்புகளின் மீதான நம்பிக்கைக்கும் திரையரங்கு வாசலிலேயே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பியது நாயகன் திரைப்படம்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "சட்டத்தைக் கையில் எடுப்பவன் குற்றவாளி, காவல் துறை அவனைக் கூண்டில் ஏற்றும்" என்ற அடிப்படை சமூக நெறிமுறைகளை அடியோடு பட்டி டிங்கரிங் பார்த்து, "தன் தந்தையைக் கொன்ற போலீஸ்காரனை ஒரு சிறுவன் நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொன்றுவிட்டு மும்பைக்கு ஓடினால் போதும்; அங்கே அவன் பெரிய தாதாவாக மாறி, கடத்தல் தொழிலை நடத்தி, ஏழைகளுக்குப் பிரியாணி போட்டு, போலீஸாரைப் பந்தாடினால் அவன் ஒரு இரட்சகன்" என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, நாயகன் திரைப்படத்திற்கு உண்டு.

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை" என்ற தட்டையான ஆபத்தான போலித் தத்துவமும், இயக்குனரின் வழக்கமான நிழலும் ஒளியும் கலந்த இருண்ட உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு நிழல் உலகக் கூண்டிற்குள் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டுச் சமூகத்திற்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த நீதி நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஓர் ஏழை எளிய மக்களின் தலைவனாக மாற விரும்பினால், உங்களுக்குச் சட்டத்தின் மீதோ அல்லது நீதிமன்றங்களின் மீதோ நம்பிக்கை இருக்க வேண்டியதில்லை. நீங்கள் கத்தியையோ துப்பாக்கியையோ தூக்க வேண்டும்; கடத்தல் பிசினஸ் செய்ய வேண்டும்; உங்களுக்குப் பிடிக்காத அதிகாரிகளைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், நீதிமன்றங்கள் போன்ற குடிமைச் சமூகத்திற்கான அமைப்புகள் எல்லாம் இப்பட நாயகனுக்குப் பொருந்தாது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வந்து சட்டத்தை நிலைநாட்ட முயன்றால், சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். "நீங்க நல்லவரா கெட்டவரா?" என்று பேரன் கேட்கும் உருகும் காட்சியை அரங்கேற்றி, தான் செய்த அத்தனை சட்டவிரோதக் குற்றங்களையும், கொலைகளையும் புனிதப்படுத்த வேண்டும். அதுதான் ஒரு தலைவனின் ஆகச்சிறந்த அடையாளம் என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காமல், "நான் நாலு பேருக்கு நல்லது செய்யத்தான்டா சட்டத்தை மீறுறேன்" என்று தேவையில்லாமல் முறுக்கிக் கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நாயகன் படம், ஒரு தனிநபர் நினைத்தால் ஒட்டுமொத்த மும்பை நகரத்தின் சட்டத்தையே தன் கையில் வைத்திருக்கலாம் என்ற அராஜகத்தை மரியாதை மற்றும் பெரியவர் என்ற லேபிளோடு மாஸ் கமர்ஷியலாக விற்றது.

உறைபனியூட்டும் மாபியா வழிபாட்டு வக்கிரத்தை, இசைஞானியின் உன்னதமான உணர்ச்சிமயமான பின்னணி இசையாலும், பளபளக்கும் கேமரா கோணங்களாலும் மூடி மறைத்து, அவர் தப்பு செய்ய மாட்டார், தட்டிக் கேப்பார் என்று பார்ப்பவனை ஏமாற வைத்து குடிமைச் சமூக விதிகளைக் குப்பையில் தள்ளினார் இப்பட இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு தாதா நினைத்துத் தன் வீட்டு வாசலில் பஞ்சாயத்து கூட்டினால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

நாயகன் ஆஸ்கார் வரை பரிந்துரைக்கப்பட்டு, டைம்ஸ் இதழின் பட்டியல்களில் இடம்பிடித்து, சில தேசிய விருதுகளை வென்று, அதன் நாயகனை ஒரு உலகநாயகன் நாற்காலியில் அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு மாஸ்டர் இயக்குனர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் திரைப்படத்திற்கு முன்பு வரை தாராவி என்பது உழைப்பாளர்களுக்கும், ஏழைத் தமிழர்களுக்கும் புகழ்பெற்ற ஓர் உழைப்பு பூமி. ஆனால், அதற்குப் பிறகுதான், அங்கெல்லாம் தாதாக்கள் பிறக்கிறார்கள், கள்ளக்கடத்தல்தான் பிரதானத் தொழில் என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

ஒருவன் நாலு பேருக்கு நல்லது செய்தால், அவன் சட்டத்தைக் கையில் எடுக்கலாம், கடத்தல் தொழில் செய்யலாம், கொலை செய்யலாம் என்ற ராபின்ஹுட் சிந்தனையை இத்திரைப்படம் சமூகத்தின் ஆழ்மனதில் விதைத்தது.

சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைத் தகர்த்து, டான் எனப்படும் தனிமனித அதிகாரமே சமூகத்தைக் காப்பாற்றும் என்ற ஆபத்தான மாயையை உருவாக்கியது.

வன்முறை என்பது அருவருப்பானது அல்ல; அது தர்மத்தைக் காக்க எழும் ஒரு கம்பீரமான ஆயுதம் என்கிற இப்படம் உருவாக்கிய பிம்பம், பின்னாளில் வந்த நூற்றுக்கணக்கான ரவுடியிசம் பேசும் படங்களுக்குத் தாய்வீடாக அமைந்தது.

"நான் செய்வது தப்புதான், ஆனா நல்லதுக்காகச் செய்றேன்" என்று தங்களின் சொந்தத் தவறுகளுக்கும், ஈகோவிற்கும் நியாயம் கற்பிக்கும் ஒரு மனநிலையை சாமானியர்களிடம் இத்திரைப்படம் உருவாக்கியது.

சோகத்தை வன்முறையாக மாற்றுவதும், வன்முறையை சோகமாக மாற்றுவதுமான ஒருவகை மெலோடிராமாடிக் உளவியலை ரசிகர்களுக்குப் பழகச் செய்தது.

பிரெடெரிக் நீட்சேவின் அதிமானுடர் என்பவன், சமூகத்தின் பொதுவான விதிகளைத் தாண்டி, தனக்கான சொந்த விதிகளை உருவாக்குபவன். அப்படி ஒரு பிம்பமாகவே கட்டமைக்கப்பட்டதுதான் படத்தின் நாயகன் பாத்திரம். இத்தகைய நாயக வழிபாடு, பார்ப்பவர்களிடம் ஒருவித போலிப் பாதுகாப்பு உணர்வையும், அதே சமயம் தங்களின் சொந்தக் கையாலாகாத்தனத்தையும் உருவாக்க காரணமாகியது.

சமூகம் தங்களுக்கு இழைக்கும் அநீதிகளை எதிர்த்து தாங்களாகவே ஜனநாயக வழியில் போராடுவதற்குப் பதிலாக, "நமக்காக ஒரு நாயகன் வருவான், அவன் எல்லாவற்றையும் சரிசெய்வான்" என்ற மெசியா மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட, இது சாமானிய மனிதனின் இருத்தலியல் சுதந்திரத்தையும், செயல்படும் திறனையும் முடக்க துணை போனது இத்திரைப்படம்.

துப்பாக்கிகள், நிழலுலக அதிகாரம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை வீரத்தின் அடையாளங்களாகக் காட்டப்பட்டு, வறுமையிலிருந்து தப்பிக்க உழைப்பை விட, வன்முறை கலந்த குற்ற உலகமே எளிய வழி என்ற எண்ண ஓட்டத்தை எளிய மக்களிடம் இத்திரைக்கதையாக்கம் உருவாக்கியது.

இப்படத்தின் பெயரே நாயகனாக இருந்தாலும், இப்பட நாயகனின் இருத்தலியல் தேடலான தனது தந்தையின் மரணத்திற்கான பழிவாங்கல் மற்றும் தாராவியைக் காப்பது போன்றவை இறுதியாக ஒரு மாபெரும் வன்முறைக் சாம்ராஜ்யமாகவே முடிந்து, இது சமூகத்தின் கீழ்மட்டத்து இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியையே வழங்கியது.

நல்லது × கெட்டது என்ற எல்லைகளை மங்கலாக்குவதன் மூலம், சமூகம் எதை நோக்கி நகர வேண்டும் என்ற தார்மீகக் குழப்பத்தை இந்தப் படம் பார்வையாளர்களிடம் உருவாக்கி, தீமை செய்வதன் மூலமே நன்மையை நிலைநாட்ட முடியும் என்ற முரண்பாடான உளவியலை நிலைநாட்டி, சமூகத்தில் குற்ற உணர்வை குறைத்து, வன்முறையை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மையை இத்திரைப்படம் வளர்த்தது.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு குற்றவாளியை நம் வீட்டு வரவேற்பறைக்கே அழைத்து வந்து, அவனுக்குப் பாலாபிஷேகம் செய்து, "நீங்க நல்லவரா கெட்டவரா?" என்று கேட்க வைத்ததுதான் இந்தத் திரைப்படம் நிகழ்த்திய ஆகச்சிறந்த சைக்காலஜி மனிபுலேஷன்.

நிஜ உலக தாதாக்கள் தங்களைச் சமூக சேவகர்களாகக் காட்டிக்கொள்ளும் போலித்தனத்திற்கு இந்தத் படம் ஒரு டெம்ப்ளேட்டாகவே ஆகிப்போனது.

படத்தில் நாயகன் செய்யும் கடத்தல், கொலை, கட்டப்பஞ்சாயத்து போன்ற எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு சென்டிமென்ட் நியாயம் கற்பிக்கப்படும். இதைப் பார்த்த சராசரி மனிதனின் மூளை, "தப்பு செஞ்சாலும் அதுக்குப் பின்னாடி ஒரு நியாயம் இருந்தா போதும் போல!" என்று பழகிக்கொண்டது.

நாயகன் விதைத்த உளவியல் பாதிப்புதான் இன்றுவரை தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை ஒரு வழிபாட்டுப் பொருளாக வைத்திருக்க உதவுகிறது. நாயகன் தன் மகனை இழக்கிறான், நிம்மதியை இழக்கிறான் என்பது கதையின் முடிவாக இருந்தாலும், திரையரங்கை விட்டு வெளியே வரும் ரசிகனின் மனதில் தங்கியது அந்த மாஸ் இமேஜ் மட்டும்தான்.

ஆக மொத்தத்தில், காட்பாதர் படத்திலிருந்து ஒரு ஸ்கெட்ச் எடுத்து, அதற்குள் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையைத் திணித்து, அதை கேமராக்களின் கோணங்களுக்குள் கொண்டு வந்து விட்டால், தாதாக்களின் வாழ்க்கையைத் தோதாகக் கொண்டாடலாம் என்ற புது டிரெண்டை வில்லத்தனமாக ஆரம்பித்து வைத்தது நாயகன்.

சட்டத்தை மீறிச் செய்யும் கடத்தல்கள்தான் வீரம் என்றும், தென்பாண்டிச் சீமையிலே என்று பாடினால் அத்தனை கொலைகளையும், துரோகங்களையும் ரசிக்கலாம் என்றும், மும்பை நிழல் உலகக் கலாச்சாரமும் வன்முறையும் கலந்ததுதான் உன்னதமான தமிழ் சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

8 Jul 2026

வஞ்சிர மீனும் விவேகசூடாமணியும் – ஒரு மைண்ட் வாய்ஸ்!

வஞ்சிர மீனும் விவேகசூடாமணியும் – ஒரு மைண்ட் வாய்ஸ்!

பொதுவாக நமது ஊர் எழுத்தாளர்கள் காசர்கோடு, திருவனந்தபுரம், நாகர்கோவில் என்று முக்கோண வடிவில் பயணம் செய்யத் தொடங்கினாலே, வாசகர்கள் உளவியல் மற்றும் தத்துவம் என்ற இரண்டு ஏவுகணைகளுக்குத் தயாராகி விட வேண்டும்.

தொலைபேசித் துறை, காவல்துறை, சட்டத்துறை, இலக்கியத்துறை என சகல துறைகளையும் ஒரு வஞ்சிர மீன் குழம்புக்குள் போட்டுத் தாளித்திருக்கும் ஜெயமோகனின் கட்டுரையிலிருந்து நாம் இதைத்தான் அனுமானிக்க முடிகிறது.

கட்டுரையின் முதல் பாதியில் வரும் அந்தப் பலி ஆடான கணவன், உலக மகா தத்துவவாதி. அவனுக்கு அழகிருக்கிறது, வருமானம் இருக்கிறது, ஆனால் அடுத்தவர் தன்னை மதிக்க வேண்டும் என்ற தீராத அரிப்பு இருக்கிறது.

சம்பவத்தன்று நடந்தது என்னவென்றால், அவன் நெய்மீன் கேட்கிறான்; மனைவி வங்கடை சமைக்கிறாள்.

விளைவு முதலில் சாப்பாட்டுத் தட்டு பறந்து பிறகு, குக்கர் மனைவியின் மண்டையில் இறங்குகிறது.

இதற்குப் பெயர்தான் இருத்தலியல் பதற்றம் என்று ஜெமோ லேபிள் ஒட்டுகிறார். உண்மையில் இது அது கிடையாது; பசி நேரத்தில் நெய் மீன் கிடைக்காததால் வந்த வெறும் புட் க்ரேவிங் கோபம், கூடவே சற்றே வீங்கிய ஆண் ஈகோ.

அவள் தன்னை மதிக்கவில்லை என்று அவன் கற்பனை செய்துகொண்டே இருந்தானாம். ஒரு கிலோ தீயைத் தின்றவன், பிறகு பத்து கிலோ தீயைத் தின்றானாம். இத்தனை கிலோ தீயை ஜீரணிக்க அவனுக்கு எப்படிப்பட்ட வயிறு இருந்திருக்க வேண்டும் என்பதுதான் ஒரு நரம்பியல் வாசகராக எழும் முதல் சந்தேகம்.

அடுத்ததாக, இந்தியாவின் மாபெரும் சட்டமேதை வி.ஆர்.கிருஷ்ணய்யர். சுப்ரீம் கோர்ட்டில் முற்போக்குத் தீர்ப்புகளை வழங்கி விட்டு, ஓய்வு நேரத்தில் மாந்திரீகரைப் பார்க்கப் போகிறார். காரணம்? முப்பத்து மூன்று ஆண்டுகள் கூடவே இருந்த மனைவி ஆவியாக வந்து பேசுகிறாராம்.

பேராசிரியர் குமாரபிள்ளை சொல்கிறார், "மனம் தர்க்கப்புத்தியைத் தன் ஆடையாக அணிந்துகொள்ளும், குதிரையாகப் பயன்படுத்தும், நாய் போல வாலாட்ட வைக்கும்."

அபாரமான ஒப்பீடு! ஒரு சட்டமேதையின் மூளையை நாய் என்றும், குதிரை என்றும் மாற்றி மாற்றி வர்ணிக்கும் பேராசிரியரின் தைரியத்தைப் பாராட்ட வேண்டும்.

ஒருவேளை அந்தத் தீர்ப்புகளையெல்லாம் கிருஷ்ணய்யரின் மனைவிதான் ஆவியாக வந்து டிக்டேட் செய்தாரோ என்னவோ, ஆர்.வெங்கட்ராமனுக்குத் தெரிந்திருந்தால் இதையே ஒரு தேர்தல் பிரசார யுக்தியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

கட்டுரையின் கிளைமாக்ஸில் ஆதிசங்கரரின் விவேகசூடாமணி உள்ளே நுழைகிறது. மனமன்றி அறியாமை வேறில்லை.

மனசுதான் அறியாமை, மனசு நினைப்பதெல்லாம் பொய் என்று சங்கரர் அன்றே சொல்லிவிட்டார்.

அப்படியென்றால், நாற்பது ஆண்டுகளாக மனம் என்னும் மாபெரும் அமைப்பைப் பற்றி மட்டுமே பக்கம் பக்கமாக நாவல்களும் கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருக்கும் நம் எழுத்தாளர்கள், உண்மையில் எதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்?

தங்கள் சொந்த அறியாமையைத்தான் இவ்வளவு அழகாகத் தொகுத்து, பைண்டிங் செய்து விற்கிறார்களா?

மனம் என்பது மூளை நரம்புகளின் உருவாக்கம் என்கிறது நவீன அறிவியல். மனம் என்பது கடந்த காலத்தால் ஆனது, அதனால் பதற்றம் அடைகிறது என்கிறார் ஜெமோ.

உண்மையில், இந்த உலகத்தில் சற்றேனும் மனநோய் இல்லாத எவருமே இருக்க முடியாது என்பது உண்மையாக இருந்தால், நெய் மீனுக்காக மனைவியைக் கொன்றவனுக்கும், ஆவியோடு பேசும் நீதிபதிக்கும், அதை நாற்பது வருஷமாக யோசித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளனுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை.

எல்லாவற்றையும் விடப் பெரிய மெய்ஞானம் என்னவென்றால், அடுத்த முறை ஹோட்டலுக்குப் போனால், நெய் மீன் இல்லை என்று சொன்னால் சண்டையிடாமல் ஜாஸ்மின் ரைஸாவது ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அமைதியாக வீடு திரும்புவதுதான் நேர்த்தியானது. மனமாவது மண்ணங்கட்டியாவது.

*****

புலவர் சண்முகவடிவேலுவின் நினைவின் நிழல்கள் – ஓர் எளிய அறிமுகம்

புலவர் சண்முகவடிவேலுவின் நினைவின் நிழல்கள் – ஓர் எளிய அறிமுகம்

ரீல்ஸ் தலைமுறைக்கேற்ற ரியல் புத்தகம்

– புலவர் சண்முகவடிவேலுவின் கால இயந்திரம்

"டேய், இதைத்தான் போன வாரமே எழுதினாய்!" என்று நீங்கள் கொந்தளிப்பது கேட்கிறது. நீங்கள் என் வலைப்பூவின் தீவிர மற்றும் பாவம், துரதிர்ஷ்டவசமான வாசகர் என்று புரிகிறது.

ஒரே விஷயத்தை மறுபடி எழுதுவது குற்றமா?

ஆமாம், குற்றம்தான்.

ஆனால், போன முறை ஒழுங்காக எழுதாமல் விட்டதை, அப்படியே மூடி மறைப்பது அதைவிடப் பெரிய குற்றம் இல்லையா?

இப்படித்தான் குற்றவாளிகள் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொள்வார்கள்.

சரி, குற்ற ஒப்புதல் வாக்குமூலத்திற்கு வருகிறேன்.

அன்று காலை புலவர் சண்முகவடிவேலுவின் 'நினைவின் நிழல்கள்' புத்தகத்திற்கு ஒரு மொக்கையான அறிமுகத்தை எழுதித் தொலைத்தேன். அன்று மாலையே எனக்கு ஒரு விபத்து நிகழ்ந்தது பேராசிரியர் அ. ஜான்பீட்டர் ஐயா வடிவில்.

நாங்கள் உலக மகா தத்துவங்கள் தொடங்கி கரன் கார்க்கியின் கருந்துளை, இடையே கொஞ்சம் இருத்தலியல்வாதம் மற்றும் நான் ஏன் இன்னும் ஓய்வு பெறாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்? போன்ற அத்தியாவசியப் புகார்களைப் பேசிவிட்டு, கடைசியில் இந்த நூலுக்கு வந்தோம்.

"இப்படியாடா ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்வாய்?" என்று பேராசிரியர் ஒற்றைக் கேள்வியில் என் மண்டையில் கொட்டினார். புத்தகம் படிக்காதவனுக்கும் படித்த திருப்தி வர வேண்டும், நீ எழுதியிருப்பது வெறும் கருத்துரை என்று என் முகத்தில் அடித்தாற் போல் புரியவைத்தார். தன் மாணவனின் அரைகுறை வேலையை சகித்துக்கொள்ளாத சாட்டையடி பேராசிரியர் அவர்.

எனவே, வாங்கிய கொட்டுகளுக்குப் பரிகாரமாக, அதே புத்தகத்திற்கு மீண்டும் ஓர் அறிமுகம்.

'நினைவின் நிழல்கள்' என்பதால், ஒரு முறைக்கு இரண்டு முறை படித்தால் நிச்சயம் உங்கள் நிழல் போல நினைவில் ஒட்டிக்கொள்ளும் என்ற நப்பாசைதான்.

வாருங்கள், இப்பொழுதாவது ஒழுங்காக அறிமுகப் படலத்திற்குள் நுழைவோம்.

நாகூரில் பிறந்து, நாகைத் தமிழ்ச் சங்கத்தில் வளர்ந்து, திருவாரூரிலே புகழ் கொண்ட பட்டிமன்ற ஆளுமையான புலவர் இரெ. சண்முகவடிவேலுவின் நகைச்சுவை உரைகளை நீங்கள் நேரில் கேட்டிருக்கலாம், வலைதளங்களிலும், காணொளிகளிலும் கண்டு மகிழ்ந்திருக்கலாம். அவற்றை புத்தகமாகப் பார்க்க நினைத்தால், ‘நினைவின் நிழல்கள்’ என்ற அவரது புத்தகத்தை வாங்கி வரிக்கு வரி வாசித்து நேசிக்கலாம்.

புலவர் சண்முகவடிவேலுவின் பேச்சுக்கலை வரலாற்றை இந்த நூலில் நாம் விட்ட குறை தொட்ட குறையாகத் தரிசித்து மகிழலாம். முழுமையாக தரசிக்க அவர் ‘நினைவின் நிழல்கள்’இன் பல பாகங்களைப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும். இருப்பினும் இந்த முதல் பாக நூலிலேயே அவர் பேச்சுக் கலைக்குள் வரக் காரணமாக இருந்த சூழல், அவரை வளர்த்தெடுத்த ஆளுமைகள், தனக்கெனத் தனி நகைச்சுவை பாணியை அமைத்துக் கொண்ட பாங்கு ஆகியவற்றை இந்த நூலில் நாம் பரக்கக் காணலாம்.

எந்த ஒரு திறமையையும் மாணவப் பருவத்திலிருந்தே வளர்த்துக் கொள்ளத் தொடங்கினால் அத்திறமையில் பேராளுமையாகத் திகழலாம் என்பதற்குச் இந்நூலின் வழியே சண்முகவடிவேலுவின் வாழ்க்கை நல்ல சான்று பகர்கிறது.

பள்ளிப் பருவத்தில் பேசத் தொடங்கிய அவர் இன்று நரை கூடிய பருவம் வரை பேசிய பல்வேறு அனுபவங்களை இந்த நூலில் அறுசுவை உணவை பந்தி வைப்பதைப் போல நகைச்சுவைப் பந்தியாகப் படையல் வைக்கிறார்.

தன்னைப் பற்றிச் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை என்று அவையடக்கம் காட்டினாலும், அவரும் அவருடன் தொடர்புடைய பேச்சு ஆளுமைகளும் இந்நூல் காட்டும் மேடைகளில் எடுக்கும் விஸ்வரூபத்தைப் பார்க்கையில், அவரைப் பற்றி நாம் பெரிதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஜஸ்டிஸ் மகாதேவன், குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், ம.பொ.சிவஞானம்,திருக்குறளார் முனுசாமி, பேராசிரியர் அன்பழகன், ஏ.சிதம்பரநாத செட்டியார், சத்தியசீலன், அறிவொளி, நெல்லைக் கண்ணன், நாகூர் அனிபா போன்ற அமரராகி விட்ட தமிழ்க் குமரர்களை தன் எழுத்து வழி பிரசவித்து மீண்டும் நம்மை வாசிப்பு வழி இந்நூல் பிடித்து ஹாலோகிராம் போலத் தரிசிக்க வைக்கிறார்.

சுகி. சிவம், இலங்கை ஜெயராஜ், பா, நமச்சிவாயம் போன்ற பேராளுமைகளுடன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் தன்னுடைய நண்பர்களான சீனி. சண்முகம், புலவர் சந்திரசேகரன் போன்றோர் உடனான அனுபவங்களையும் அதே பாங்கில் ஓங்கி உரைக்கிறார்.

தன் மேடைத்தமிழ் ஆசான் கோவை இளஞ்சேரன் பற்றியும் நெகிழ்ச்சியோடும் நகைச்சுவையோடும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

காந்தியாருக்குச் சத்திய சோதனை என்றால், புலவர் சண்முகவடிவேலனாருக்கும் அப்படி ஒரு சத்திய சோதனையாக அவரது அப்பாவுடன் நேர்ந்த அனுபவங்களை எவ்விதப் பாசங்குமின்றி அவற்றை நகைச்சுவை சோதனை போல எடுத்தியம்புகிறார். அப்பாக்களைச் சமாளிப்பது காந்தியின் அகிம்சையை விடக் கொடூரமானது என்பதைப் புலவர் உணர்ந்திருக்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் இவர் காலத்தில் திருவாரூர் வ.சோ. மேனிலைப் பள்ளியில் பயிலாமல் முந்திக் கொண்டு பயின்று விட்டோமே என்ற ஏக்கத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் பல பேச்சுக் கலைஞர்களை உருவாக்கிக் கலைஞரின் ஏக்கத்திற்கு ஓர் ஆக்கம் சேர்த்திருக்கிறார் இப்புலவர். இன்றும் ஊக்கம் குன்றாமல் பல கலைஞர்களை உருவாக்கி வருகிறார்.

கடந்த காலத்தைப் பற்றி முதியோர்கள் சொல்ல, அதை கேட்கும் மனநிலையில் இன்றைய இளைய சமூகம் இல்லை என்பதே எதார்த்தம். ஆனால், அந்த எதார்த்தம் தோற்றுப் போவதைப் புலவர் சண்முகவடிவேலுவின் தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் காண முடியும். அதே போல, புலனத்திலும், காணொளியிலும் திளைக்கும் இன்றைய இளைய சமூகம் வாசிப்பத்தில்லை என்ற எதார்த்தத்தையும் இந்தப் புத்தகம் மாற்றி அமைக்கும். அவ்வளவு எளிமை, அத்தனை இனிமை, நகைச்சுவையில் புதுமை இந்த நூல்.

மேடைப் பேச்சாளர்களுக்கும், பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும் மட்டுமல்லாது வாழ்வின் விழுமியங்களையும் அனுபவச் செழுமைகளையும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் பருத்தி நூலாகவும், பட்டு நூலாகவும் ஒருங்கே அமைந்து பயன்தரக் கூடியது. நூலின் நடை பருத்தி நூலைப் போல எளிமையாக இருந்தாலும், அதன் கருத்துகள் பட்டு நூலைப்போல உயர்வாக இருக்கின்றன.

ஒரு கால இயந்திரம் இருந்தால் அன்றைய அண்ணாவின் காலம் தொட்டு, இன்றைய இன்ஸ்டா காலம் வரை 67 ரீல்ஸ் போட்டு விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நினைவின் நிழல்கள் அதற்கேற்ற ஓர் கால இயந்திரம்தான்.

கால மாற்றத்தைப் புரிந்து கொண்டு வரிசைக்கிரமம், சம்பவங்கள் நிகழ்ந்த ஆண்டுகளின் கால ஒழுங்கு பற்றிக் கருத்தில் கொள்ளாமல் ரீல்ஸ் தலைமுறைக்கேற்ற ரியல்ஸ் நிறைந்த கன்டென்டை ஒரு புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார் புலவர் இரெ. சண்முகவடிவேல்.

*****

7 Jul 2026

பாட்டிலில் ஒரு திரவச் சாத்தான்!

பாட்டிலில் ஒரு திரவச் சாத்தான்!

சுமார் அரை நூற்றாண்டாக இந்த மண்ணில் ஒரு பழக்கம் வழக்கம் ஆக்கப்பட்டிருக்கிறது. அதுதான் மதுப்பழக்கம்.

நாட்டின் பெரும்பாலான கொடூரக் குற்றங்கள், 95% சாலை விபத்துகள், கற்பனைக்கு எட்டாத பாலியல் வன்கொடுமைகள் என எல்லாவற்றின் பின்னாலும் இந்தத் திரவ சாத்தான் ஒளிந்திருக்கிறது.

வயிற்றுக்குள் போகும் ஓர் அவுன்ஸ் திரவம், உங்கள் உடம்புக்குள் என்னவெல்லாம் செய்கிறது என்று அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், பக் என்று இருக்கும்.

ஆல்கஹால் உள்ளே போன சில நிமிடங்களில், அது நேராக ரத்தத்தில் கலந்து மூளைக்குச் செல்கிறது. மூளையில் இருக்கும் நரம்புக் கடத்திகளை இது அட்டாக் செய்கிறது.

காபா என்பது மூளையை அமைதிப்படுத்தும் ஒரு கெமிக்கல். ஆல்கஹால் இதை அளவுக்கு அதிகமாகத் தூண்டுகிறது. அதனால்தான் குடித்தவுடன் ஒரு ஹாயான போலி அமைதி கிடைக்கிறது.

குளுட்டமேட் என்பது இது மூளையை சுறுசுறுப்பாக்கும் கெமிக்கல். ஆல்கஹால் இதை லாக் செய்கிறது.

விளைவு?

மூளையின் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிறது. பேச்சு குளறுகிறது. தள்ளாட்டம் வருகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமானால், மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதி தற்காலிகமாக ஸ்விட்ச் ஆப் ஆகும். இதற்குத்தான் பிளாக் அவுட் என்று பெயர். நேற்று இரவு என்ன நடந்தது என்றே ஞாபகம் இருக்காது!

நம் உடம்பின் ஆகப் பெரிய கெமிக்கல் பேக்டரி கல்லீரல்தான். உள்ளே வரும் நச்சுக்களை எல்லாம் வடிகட்டி உடம்பைக் காப்பாற்றுவது இதனுடைய வேலை.

ஆல்கஹாலைக் கல்லீரல் எப்படி டீல் செய்கிறது தெரியுமா?

முதலில் ஆல்கஹாலை அசிடால்டிஹைட் என்ற கெமிக்கலாக மாற்றுகிறது. இந்த அசிடால்டிஹைட் என்பது விஷத்தை விடக் கொடியது. கேன்சரை உருவாக்கும் காரணி!

பிறகு அதை கஷ்டப்பட்டு அசிட்டேட் ஆக மாற்றி உடம்பை விட்டு வெளியேற்றுகிறது.

ஆல்ஹகாலைத் தொடர்ந்து ஊற்ற ஊற்ற, கல்லீரலால் வேலை செய்ய முடிவதில்லை. ஆல்கஹாலில் இருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் படிய ஆரம்பிக்கின்றன. இதுதான் பேட்டி லிவர். நாளடைவில் அந்த செல்கள் எல்லாம் செத்துப்போய், கல்லீரல் சுருங்கி, கல்லாகிவிடும். மெடிக்கல் பாஷையில் லிவர் சிர்ரோசிஸ். அப்புறம் காலி.

குடித்தால் ரத்த அழுத்தம் எகிறும். இதயத் துடிப்பு சீரற்றுப் போகும். இதற்கு கார்டியோமயோபதி என்று பெயர். இதயத்தின் தசைகள் பலவீனமடைந்து, பம்ப் செய்யும் திறனை இழக்கும். திடீர் மாரடைப்புக்கு இதுவே ரெட் கார்பெட் போடும்.

மிக முக்கியமாக, ஆல்கஹால் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் காலி செய்கிறது. வெள்ளை ரத்த அணுக்களின் வீரியத்தைக் குறைத்து விடுகிறது.

எல்லாவற்றையும் விடக் கொடுமை, அது நம் செல்களின் மாஸ்டர் பிளான் ஆன டி.என்.ஏவைச் சிதைக்கிறது. டி.என்.ஏ சிதைந்தால், செல்கள் தாறுமாறாக வளர ஆரம்பிக்கும். அதன் பெயர்தான் புற்றுநோய். வாய், தொண்டை, கல்லீரல், மார்பகப் புற்றுநோய்களுக்கு ஆல்கஹால் ஒரு நேரடி ஏஜென்ட்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஆல்கஹால் என்பது உடலுக்கு எந்த விதத்திலும் தேவையில்லாத ஒரு தேசத்துரோகி.

மது அருந்துவது என்பது, உங்கள் வீட்டின் கம்ப்யூட்டர் மதர்போர்டில் ஆசிடை ஊற்றிவிட்டு, அது நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்.

உடம்பு என்பது ஓர் அற்புதமான பயோ மெஷின். அதை வெறும் எத்தனால் கொண்டு அழிப்பது என்ன மாதிரியான புத்திசாலித்தனம்?

எனவேதான், நமது பேராசான் திருவள்ளுவர் இதை நஞ்சு என்றார். கள் உண்ணாமை என்று தனி அதிகாரமே எழுதி பத்து குறள்களில் மண்டையில் அடிப்பது போல் விளக்கியிருக்கிறார்.

பிற உயிர்களை அழித்து வாழும் இந்த அவலத்தை மணிமேகலை காப்பியமும் “மயக்குங் கள்ளும், மன்னுயிர் கோறலும்” என்று கண்டித்துக் காறித் துப்பியது.

ஆனால் இங்கே நடப்பதோ தலைகீழ் எதார்த்தம். குடிக்கிற ஏழை குடிசை வீட்டில் கிடக்கிறான்; மதுவை விற்கிற அரசோ கல்லா கட்டுகிறது; மது ஆலையை நடத்துகிற முதலாளி சொகுசு பங்களாவில் வாழ்கிறான்.

துயரம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதற்குக் காரணமே குடிகாரக் கணவர்களின் அகால மரணங்கள்தான்.

*****

கொக்கிக் குமாரின் கொடூரக் கோட்பாடுகள்!

சீரழித்த சினிமா – 35

புதுப்பேட்டை

கொக்கிக் குமாரின் கொடூரக் கோட்பாடுகள்!

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் மே திங்களில், தமிழ்நாட்டின் திரையரங்கு வாசல்களில் அரசியலில் கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருந்த விழுமியங்களுக்கும், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வுக்கும், அடித்தட்டு இளைஞர்களின் வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் மிக பிரமாண்டமான கல்லறைகள் எழுப்பப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "ரௌடி என்பவன் என்றாவது ஒருநாள் மனம் திருந்துவான் அல்லது கைது செய்யப்படுவான்" என்ற அறநெறி விதிகளை அடியோடு ஒதுக்கி வைத்து விட்டு, "சென்னையின் பேட்டைகளில் வாழும் ஒரு பள்ளி மாணவன், தன் தாயைக் கொன்ற தந்தையைப் பழிவாங்கத் துப்பில்லாமல் ஓடிவந்து, பசியின் உச்சத்தில் ஒரு கொலை செய்துவிட்டு, அரசியல்வாதிகளின் கைக்கூலியாக மாறி, கடைசியில் சட்டமன்ற உறுப்பினராகவே ஆகிவிடலாம்" என்ற ஒரு புதுவிதமான பிராந்திய வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, புதுப்பேட்டை திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் பயத்திலும் வெறியிலும் பிதுங்கி வழியும் கண்களும், "கடவுள் பாதி மிருகம் பாதி" என்ற போலிப் பாய்ச்சல் பிம்பமும், இயக்குனரின் வழக்கமான இருண்ட, மனப்பிறழ்வு உலகமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கொலைக்கள நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த கல்வி நெறிமுறை என்ன தெரியுமா?

நீங்கள் ஓர் ஏழை வீட்டுப் பிள்ளையாக இருந்தால், உங்களுக்குப் படிப்போ, நேர்மையான உழைப்போ முக்கியமல்ல. எவனாவது உங்களை உற்றுப் பார்த்தால், நடுரோட்டில் வைத்து அவனை எப்படிக் கொத்துக்கறி ஆக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் நிலையம் போன்ற சிவில் சமூக அமைப்புகள் எல்லாம் நாயகன் கொக்கி குமாருக்குப் பொருந்தாது. நகரின் ஆகச்சிறந்த தாதா தன் ஆட்களுடன் வந்து வழிமறித்தால், சட்டத்தை நாடக் கூடாது; தானே ஒரு சைக்கோ ரௌடியாகவோ அல்லது வெறிபிடித்த கொலைகாரனாகவோ விஸ்வரூபம் எடுத்து, "பயம் குமாரு... பயம்..." என்று டயலாக் பேசிக்கொண்டே சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுக்க வேண்டும். அதுதான் ஒரு ரௌடியின் ஆகச்சிறந்த ஆளுமை என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் உருப்படியாக வேலைக்குப் போகாமல், "நாங்கெல்லாம் புதுப்பேட்டை குமார் பரம்பரைடா, இறங்குனா ரத்த ஆறுதான்" என்று தேவையில்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு திரியும் ஒரு முதிர்ச்சியற்ற, வன்முறை விரும்பிகளான வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

புதுப்பேட்டை படத்தில், ஒரு ரௌடி நினைத்தால் ஒட்டுமொத்த தேர்தல் முறையையும் ஜனநாயக அமைப்பையுமே தன் கையில் வைத்திருக்கலாம் என்ற ரௌடியிஸக் கொடுமையை மாஸ் என்ற லேபிளோடு விற்றார்கள். இந்த உறைபனியூட்டும் ரௌடியிஸ வழிபாட்டு வக்கிரத்தை, உணர்ச்சிமயமான, வெறித்தனமான பின்னணி இசையாலும், பளபளக்கும் நியான் விளக்குகளாலும் மூடி மறைத்து, அவன் தப்பு செய்தாலும் அது சூழ்நிலையின் பலி என்று பார்ப்பவனை ஏமாற்றினார் இயக்குனர்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு தாதா நினைத்து எம்.எல்.ஏ ஆனால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது மற்றும் விசித்திரமானது. ஒரு பெண் ரௌடி என்று தெரிந்தே அவனோடு வாழத் துடிப்பதும், அவனது வன்முறையைக் கண்டு காதலில் விழுவதுமாக ஒரு வக்கிர பிம்பமாகக் காட்டப்பட்டார். இன்னொரு பெண் கட்டாயத் தாலி கட்டப்பட்டு, அவனது அராஜகங்களுக்குப் பயந்து அடிமையாக வாழும் பரிதாபகரமாகக் காட்டப்பட்டார்.

பெண்களின் சுயம், கல்வி அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்களின் துயரங்களையும், ஒரு ரௌடியின் அந்தப்புர வாழ்க்கையையும் ரொம்பக் கியூட் அண்ட் கமர்ஷியலாகக் காட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம். இதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் அடுத்த பத்து வருடங்களுக்கு ரௌடிகளைக் காதலிக்கும் லூசுப் பெண் மற்றும் அடிமைப் பெண் சீரழிவுப் பாத்திரங்கள் அணிவகுக்கத் தொடங்கின.

புதுப்பேட்டை பாக்ஸ் ஆபீஸில் ஒரு கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்று, அதன் நாயகனை ஒரு அசாத்திய நடிகராக அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு ஜீனியஸ் நாற்காலியில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் ஒரு அரிவாள் வெட்டு வெட்டுகிறான். வில்லன் தலை தெறித்து விழுகிறான். மனிதநேயத்தின் அடிப்படை விதிகள் அங்கே கதறி அழ ஆரம்பித்தன. தியேட்டரில் இருக்கும் பதினெட்டு வயது இளைஞனின் அட்ரினலின் சுரப்பி, சென்னை கூவம் ஆற்றில் சுனாமி ஏற்பட்டது போலப் பொங்கி வழிய ஆரம்பித்தது.

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை சென்னை என்பது உழைப்பாளர்களுக்கும், கலகலப்பான மெட்ராஸ் பாஷைக்கும் புகழ்பெற்ற ஓர் ஊர். ஆனால், அதற்குப் பிறகுதான், சென்னையில் பிறக்கும் போதே குழந்தைகளுக்குக் கைகளில் அரிவாளும், மனதில் துரோகமும் கற்றுத்தரப்படுகிறது என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

பொதுவாக, சினிமா, வன்முறையைத் தீமையின் அடையாளமாகவே காட்டும். ஆனால், புதுப்பேட்டை அதை ஓர் அவசியம் என்று போதித்தது. வன்முறை என்பது தீமை அல்ல; அது ஒரு தற்காப்பு உத்தி என்ற பிம்பத்தை அது இளைஞர்களின் ஆழ்மனதில் பதிய வைத்தது.

அது மட்டுமல்லாமல், உலகில் உள்ள அத்தனை உளவியல் சிக்கல்களுக்கும் புதுப்பேட்டை ஓர் அபத்தமான தீர்வைச் சொன்னது. உனக்கு ஒரு அநீதி நடந்தால், நீ அதைவிடப் பெரிய அநீதியைச் செய் என்றது. அன்பு காட்டினால் அடிமையாகிவிடுவோம், பயமுறுத்தினால் தான் பவ்யமாக இருப்பார்கள் என்கிற ஓர் ஆபத்தான ஆதிக்க உளவியலையும் இந்தப் படம் மிக நளினமாக இளைஞர்களின் நரம்புகளுக்குள் ஏற்றியது. சமூகம் தங்களை வஞ்சிக்கிறது என்று நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும், தங்களுக்குள் ஒரு குட்டி கொக்கி குமாரை வளர்த்துக்கொள்ள இந்தப் படம் பெரும் உத்வேகமளித்தது.

ஒருவன் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போகும் கொடூரமான காட்சியைக்கூட, தியேட்டரில் இருந்தவர்களை விசிலடிக்க வைத்ததுதான் இத்திரைப்படத்தின் ஆகப் பெரும் சாதனை. வன்முறையை ஒரு கலை வடிவமாக மாற்றி, உளவியல் ரீதியாக, ஒரு கொடூரத்தைக் கொண்டாடும் மனநிலைக்குச் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டதன் பின்னால் இந்தத் திரைப்படத்துக்கு முக்கியப் பங்குண்டு.

மனிதன் மிருகத்திலிருந்து தோன்றினான் என்பதை டார்வின் நிரூபித்தார். ஆனால், மனிதன் மீண்டும் மிருகமாக மாற ஆசைப்படுகிறான் என்பதைப் புதுப்பேட்டை நிரூபித்தது.

வன்முறை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதைச் சொல்லவந்த படம், வன்முறையே வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சென்றது. இப்போதும் சமூக வலைதளங்களில், சாதாரண வாக்குவாதங்களுக்குக் கூட கொக்கி குமாரின் ஜிப் இமேஜ்களைப் பயன்படுத்தும் அளவுக்கு, அந்த வன்முறைப் பிம்பம் ஒரு ஸ்டைல் ஆக மாறிவிட்டது.

புதுப்பேட்டை ஒரு நிகிலிச தத்துவப் பின்னணியைக் கொண்டது. அதாவது, உலகில் நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை, எல்லாம் ஒரு சூன்யம்; அதிகாரமும் பணமும் மட்டுமே நிஜம் என்ற பார்வையை உடையது. இவ்வகையிலான புதுபேட்டையின் தத்துவார்த்தப் பார்வை என்பது வன்முறையை நியாயப்படுத்துவதாகவும், அற விழுமியங்களைக் கேலி செய்வதாகவும் அமைந்தது. இத்திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பல "ரௌடியிசக்" கதாபாத்திரங்கள் கதாநாயகர்களாகக் கொண்டாடப்படும் ஒரு தவறான தத்துவார்த்தப் பாதைக்கு வித்திட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

படிக்கப் போகும் வயதில் லோக்கல் ரௌடிகளோடு சேர்ந்து கொண்டு கொலையும் கொள்ளையும் செய்வதுதான் கெத்து என்றும், சென்னையின் தாதா கலாச்சாரமும் வக்கிர அரசியலும் கலந்ததுதான் தமிழகமும் தமிழ் சினிமாவும் என்று நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சைக்கோ சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

6 Jul 2026

அகோர(ரி)ப் பசிக்குப் பலியான தமிழகத்தின் பொதுப்புத்தி!

சீரழித்த சினிமா – 34

நான் கடவுள்

அகோரப் பசிக்குப் பலியான தமிழகத்தின் பொதுப்புத்தி!

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டின் பிப்ரவரி திங்களில், தமிழ்நாட்டின் திரையரங்கு வாசல்களில் மானுடத்தின் எஞ்சியிருந்த ஆகச் சிறந்த நாகரிகப் பண்புகளுக்கும், சராசரி மனிதனின் அன்றாட மன அமைதிக்கும் மிக பிரமாண்டமான சிதைகள் மூட்டப்பட்டன.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "நாயகன் என்பவன் அநீதியைத் தட்டிக்கேட்பான், காதலியைக் கரம் பிடிப்பான்" என்ற ஆகச்சிறந்த கமர்ஷியல் விதிகளை அடியோடு தகர்த்து, "காசிக்குச் சென்று கஞ்சா புகைத்து, ஜடாமுடி வளர்த்து, அஹம் பிரம்மாஸ்மி என்று கத்தினால் போதும்; அவன் செய்யும் அத்தனை கொலைகளும், அராஜகங்களும் ஆன்மீக விடுதலை என்ற பெயரில் புனிதப்படுத்தப்படும்" என்ற ஒரு புதுவிதமான மனநோயியலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, நான் கடவுள் திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் எந்நேரமும் வெறிக்க வெறிக்கப் பார்க்கும் சிவந்த கண்களும், மனித உடல்களைப் பந்தாடும் வக்கிரப் பாய்ச்சலும், இயக்குநரின் வழக்கமான விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய அதீதக் கற்பிதங்களும் சேர்ந்து, தமிழ்நாட்டு ரசிகர்களின் மூளையை எப்படி ஒரு மயான பூமி நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டுச் சமூகத்திற்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சமூக நெறிமுறை என்ன தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளும், பார்வையற்றோரும் சமூகத்தின் ஆதரவைப் பெற வேண்டியவர்கள் அல்ல; அவர்கள் ஒரு மாபியா கும்பலின் கைகளில் மாட்டிக்கொண்டு சித்திரவதையை மட்டுமே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பதுதான்.

இந்தியத் தண்டனைச் சட்டம், உள்ளூர் காவல் துறை போன்ற அற்பமான அமைப்புகள் எல்லாம் இந்தத் திரைப்படத்தின் உலகிற்குப் பொருந்தாது. நகரின் ஆகச்சிறந்த ரௌடி மாற்றுத்திறனாளிகளை வதைத்தால், சட்டத்தை நாடக் கூடாது; காசியில் இருந்து ஒரு விசித்திரமான அகோரி வந்து, சட்டம் ஒழுங்கைத் தன் வசம் இழுத்து, எல்லோரையும் கொன்று குவிக்க வேண்டும். அதுதான் ஆகச்சிறந்த ஆன்மீக இரட்சிப்பு என்று தமிழ் ரசிகன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

சமூகம் மற்றும் சட்ட அமைப்புகளின் மீது நம்பிக்கையற்று, எல்லாவற்றிற்கும் ஒரு அதிமானுட வன்முறைதான் தீர்வு என்று நம்பும் ஒரு முதிர்ச்சியற்ற, இருண்ட மனநிலையைக் கொண்ட வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

நான் கடவுள் திரைப்படம், ஒரு தனிமனிதன் நினைத்தால் ஒட்டுமொத்தக் காவல் துறையையும், சட்டத்தையும் மண்டியிட வைக்கலாம் என்ற அராஜகத்தை அகோரி பண்பாடு என்ற லேபிளோடு விற்றது. இந்த உறைபனியூட்டும் வன்முறை வக்கிரத்தை, மேஸ்ட்ரோ மற்றும் இசைஞானியின் உணர்ச்சிமயமான பின்னணி இசையாலும், மிரட்டும் காசி காட்சிகளாலும் மூடி மறைத்து, அவன் மனிதர்களுக்கு மேலே வாழ்பவன் என்று பார்ப்பவனை ஏமாற்றியது இயக்குநரின் பக்கா கமர்ஷியல் தந்திரம்.

நீதிமன்றமோ, ஜனநாயக அமைப்புகளோ ஒரு சாமானியனுக்குப் பாதுகாப்பு தராது; ஒரு அகோரி நினைத்தால் மட்டும்தான் இறுதி நீதி அதுவும் மரணத்தின் வழியே கிடைக்கும் என்ற பிற்போக்குத்தனமான தத்துவத்தை விற்று, பார்ப்பவனுக்குச் சட்டம் மற்றும் நீதியின் மீதான தேவையையே துடைத்து எறிந்தது இந்தத் திரைப்படம்.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் கொடூரமானது. நாயகியின் கதாபாத்திரம், எந்நேரமும் அழுதுகொண்டே இருப்பதும், உலகின் ஒட்டுமொத்தக் கொடுமைகளையும் தாங்குவதுமாக ஒரு சுயமற்ற, பரிதாபகரமான பிம்பத்தின் உச்சமாகக் காட்டப்பட்டார். ஒரு பெண்ணின் சுயம், போராட்டம் அல்லது ஆளுமை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவளது துன்பங்களை மிக நீளமாகக் காட்டி, கடைசியில் அவளுக்குக் கொடுக்கும் மரணத்தைக் கருணைக் கொலை என்று நியாயப்படுத்தியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கோம்பாக்கத்துக் கொத்துப்பரோட்டோ தந்திரம். இதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் அடுத்த சில வருடங்களுக்குப் பெண்களை வெறும் வதைபடும் பொருளாகக் காட்டும் சீரழிவுப் பாத்திரங்கள் அணிவகுக்கத் தொடங்கின.

நான் கடவுள் பாக்ஸ் ஆபீஸில் விருதுகளைக் குவித்து, அதன் நாயகனை ஒரு மாற்றுப் பாதை நடிகராக அமர வைத்து, அதன் இயக்குநரை ஒரு க்ரப்ட் மாஸ்டர் அந்தஸ்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

நாயகன் ஒரு கையைப் பிடிக்கிறான், அந்த மனிதனின் எலும்புகள் நொறுங்குகின்றன. நியூட்டனின் விதிகள் அங்கே கதறி அழ ஆரம்பித்தன. தியேட்டரில் இருக்கும் சராசரி இளைஞனின் அட்ரினலின் சுரப்பி, ஒரு மயான அமைதியோடு பொங்கி வழிய ஆரம்பித்தது.

இத்திரைப்படத்திற்கு முன்பு வரை ஆன்மீகம் என்பது அமைதிக்கும், அன்புக்கும், சுய தேடலுக்குமான ஒரு வழியாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகுதான், ஆன்மீகம் என்றாலே மூர்க்கத்தனமாகச் சண்டை போடுவதும், சாபமிடுவதும்தான் என்கிற பொதுப்புத்தி சமூகத்தில் விதைக்கப்பட்டது.

நான் கடவுள் என்று நாயகன் கத்தும்போது தியேட்டரில் விசிலடித்த பாமரனுக்கு, அடுத்த நொடி பஸ்ஸில் டிக்கெட் எடுக்க காசு இல்லையென்ற நிஜம் உறைக்கவில்லை. கடவுள் என்பவர் எல்லாவற்றையும் கடந்தவர் என்ற தத்துவத்தை, எல்லாரையும் அடித்துத் துவம்சம் செய்பவர் என்று தமிழ் சினிமாவுக்கே உரிய ரவுடியிச பார்முலாவிற்குள் இயக்குநர் சுருக்கியதன் விளைவாக, ஆன்மீகம் என்ற பெயரில் வன்முறையையும், மயிர் வளர்ப்பதையும், கஞ்சா அடிப்பதையும் மாஸ் குறியீடாக இளைஞர்கள் சில காலம் கொண்டாடித் திரிந்த உளவியல் விகாரம் நிகழ்ந்தது.

மாற்றுத் திறனாளிகளைச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பதைத் திரையில் காட்டி, நம் நெஞ்சில் ஈரத்தை வரவழைத்தாரா இயக்குநர் என்றால், இல்லை. மாறாக, அவர்களின் அவலங்களை, உடல் ஊனங்களை மிகக் கொடூரமான கோணங்களில் படம் பிடித்து, தியேட்டரில் பாப்கார்ன் தின்றுகொண்டே அதைப் பார்த்து அய்யோ பாவம் என்று வக்கிரமாக ரசிக்க வைக்கும் ஒரு சமூகச் சீரழிவை இப்படம் சாத்தியமாக்கியது. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவனின் துயரத்தை ஒரு மூன்று மணி நேர பொழுதுபோக்கு பொருளாக மாற்றியதில் இயக்குநர் ஜெயித்தார், சமூகத்தின் மனிதாபிமானம் தோற்றது.

சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம் எல்லாமே வேஸ்ட், ஒரு சூப்பர் ஹீரோ இங்கே அகோரி வடிவில் வந்துதான் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் என்ற பாசிசச் சிந்தனையை இப்படம் மிக அழகாக ரசிகனின் அடிமனதில் விதைத்தது.

மன அழுத்தத்தைப் போக்க தியேட்டருக்குப் போனவனை, இன்னும் கொஞ்சம் மன அழுத்தத்தை இலவசமாகத் தந்து, உன் வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று ஒரு தற்காலிக திருப்தியைத் தேட வைத்ததுதான் இந்தப் படத்தின் ஆகச்சிறந்த உளவியல் வஞ்சகம்.

ஒரு மனிதன் தன் செயல்களின் மூலமே தன் இருப்பை வரையறுக்கிறான். நான் கடவுள் பாணியில் வாழ நினைக்கும் ஒருவனுக்கு, அவன் கடவுள் என்று நிரூபிக்க ஒரு பயங்கரமான அரக்கன் தேவை. ஆனால் வேளைப்பளு, மனஅழுத்தம், மாசடைந்த சுற்றுப்புறம், நேரமின்மை, பயணக் களைப்பு போன்ற அன்றாட வாழ்க்கையில் அதற்கெல்லாம் இடமில்லை. இதனால், “நான் அகோரியா? அல்லது வெறும் அப்பாவியா?” என்ற குழப்பத்தில், விலைவாசியோடும், பற்றாக்குறை பட்ஜெட்டோடும், டிராபிக் ஜாமோடும் போராட முடியாமல் தவிக்கத் தொடங்கினான் தமிழ் இளைஞன்.

நான் கடவுள் திரைப்படம் தமிழ் மக்களைத் தங்களின் நிஜமான சராசரி வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே ஒரு ருத்ரனை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியே ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியாக வாழ்ந்து மடிய வேண்டிய சினிமாட்டிக் சாபத்தைத் தந்துவிட்டுச் சென்றது!

நான் கடவுள் ஒரு சினிமா அல்ல; அது நம் மூளைக்குள் திட்டமிட்டுச் செலுத்தப்பட்ட ஒரு நெகட்டிவ் வைரஸ். தத்துவத்தின் பெயரால் வன்முறையையும், யதார்த்தத்தின் பெயரால் வக்கிரத்தையும் விற்ற ஒரு டார்க் எக்ஸ்பிரிமெண்ட். சுருக்கமாகச் சொன்னால், இத்திரைப்படம் சமூகத்தின் அழுக்குகளைத் துடைக்க வந்த துடைப்பம் அல்ல; அந்த அழுக்குகளைத் திரையில் காட்டி காசு பார்த்த, தமிழ் சினிமாவின் டார்க் அண்ட் க்ரிட்டி வியாபார உத்தி.

மரணமே ஒரு அவல வாழ்வின் ஆகச்சிறந்த விடுதலை என்றும், கஞ்சா புகைக்கு நடுவேதான் உண்மை ஒளிந்திருக்கிறது என்றும், வக்கிரமும் ரத்தமும் கலந்ததுதான் ஆகச்சிறந்த கலை என்றும் நம்பிய ஒரு இருண்ட, முதிர்ச்சியற்ற வன்முறைச் சமூகமாகத் தமிழர்களை மாற்ற முயன்றதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச் சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****