13 Mar 2026

இரவின் நிறம்

இரவின் நிறம்

வெளிச்சம் வேண்டுமெனக் கதறிய போது

இருள் வந்தது

இருளுக்குப் பழகிய பின்பு

வலிகள் வந்தன

வலிகளை ஏற்றுக் கொண்ட

ஒரு நாளில் சிரிப்பு பிறந்தது

இத்தனை நாளாய்

இந்தச் சிரிப்பே

நீ எங்கிருந்தாய் என்ற போது

வெளிச்சத்தைத் தேடி

இருளைத் தொலைத்த ஒவ்வொரு பொழுதிலும்

உன் நிழல் போல இருந்தேன் என்றது

அந்தச் சிரிப்பு

நிழலா என்ற போது

உன் மீது பட்ட

வெளிச்சத்தின் இரவு

என்றது சிரிப்பு

*****

தத்துவார்த்தமாக வாழ்தல்!

தத்துவார்த்தமாக வாழ்தல்!

நாயையோ பூனையையோ கண்டால்

அறவே பிடிக்காது அந்த இருவருக்கும்

அவ்வளவு பிடித்து

அப்படி வளர்த்த

மகனும் மகளும்

கைவிட்டுப் போன பிறகு

ஒரு பூனையை வளர்த்திருக்கலாம்

என்ற ஏக்கம்

அவர்களில் ஒருவருக்கு

வாக்கிங் போகையில்

கூடவே துணைக்கு வந்து திரும்பும்

தெருநாய்க்கு ஒரு ரொட்டியைப் போட்டிருக்கலாம்

என்ற குற்றவுணர்வு இன்னொருவருக்கு

என்ன இருந்தாலும்

பூனையையும் நாயையும் வளர்ப்பவர்கள்

அனாதைகளாவதில்லை என்று

அடிக்கடி தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

இப்போது கூட யாதொன்றையும்

வளர்க்கப் பிரியமில்லாத

அந்த இருவரும்

*****

ஏற்பின்மையின் தேடல்

ஏற்பின்மையின் தேடல்

உன்னை எங்கு எல்லாம் தேடுகிறேன்

முடிவில் களைத்துப் போகிறேன்

மீண்டும் தேடுகிறேன்

தேடிக் கொண்டே இருக்கிறேன்

நீ இல்லை

ஆனால் என் அருகில்தான் நீ இருக்கிறாய்

நான் தேடிக் கொண்டிருக்கும் நீயாக இல்லை

நான் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

நான் ஏன் என் தேடலை நிறுத்திக் கொண்டு

அருகில் இருக்கும் உன்னை

அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது

இல்லாத ஒன்றை

இருக்கின்ற ஒன்றில் நான் ஏன் தேட வேண்டும்

*****

12 Mar 2026

எரியும் ஆவணக் காடு

எரியும் ஆவணக் காடு

ஒரு போர்

நிறுத்தப் போவது யார்

ஒரு யுத்தம்

முடிவுக்குக் கொண்டு வரப் போவது யார்

அமைதிக்கான பரிசைப்

போட்டியிட்டு

வெல்லப் போவது யார்

சமாதானத்துக்கான விருதைச்

சண்டையிட்டு வெல்லப் போவது யார்

எல்லாம் வரலாற்றுக்குத் தெரியும்

அந்த வரலாறு எங்கே இருக்கிறது

காகிதங்களில்

அந்தக் காகிதங்கள் எங்கே இருக்கின்றன

ஏவுகணை வீச்சில்

எல்லாம் எரிந்து கொண்டிருக்கிறன

*****

11 Mar 2026

மறதி கொண்டவன் நெஞ்சம் போல

எச்சரிக்கைப் பலகை

நாயொன்று

லோல்பட்டு லோன் போட்டு

வில்லங்கங்களை விலாசித் தள்ளி

அவஸ்தைப்பட்டு அப்ரூவ்டு மனை வாங்கி

வீடு கட்டி முன்னே ஒரு பலகை வைத்தது

“மனிதர்கள் ஜாக்கிரதை”

*****

கலியுக அன்னம்

பாலையும் தண்ணீரையும்

பிரித்துப் பருகும்

அன்னம்

இக்கலியுகம் வந்த பிறகு

பாக்கெட் பாலில்

பாலையும் ரசாயனத்தையும்

பிரித்துப் பருகிக் கொண்டிருக்கிறது

*****

மறதி கொண்டவன் நெஞ்சம் போல

பாஸ்வேர்ட் மறந்து

பர்கெட் பாஸ்வேர்ட் கொடுக்க

அது பாஸ்வேர்டை

இமெயிலுக்கு அனுப்ப

இமெயிலின் பாஸ்வேர்ட் மறந்தவன்

என்ன செய்வானோ

அதைத்தான் செய்கிறேன்

நான் செய்ய மறந்த வேலையை

உன்னிடம் சொல்லி

நீயும் மறந்து

அதே வேலை என்னிடம் வந்த போது!

*****

10 Mar 2026

மஞ்சள் அபாயம் – ஒரு சயன்ஸ் பிக்சன் குறுங்கதை!

மஞ்சள் அபாயம் – ஒரு சயன்ஸ் பிக்சன் குறுங்கதை!

-         விகடபாரதி

அண்டார்டிகா, மெக்மர்டோ ஆய்வு மையத்தில் முனைவர் இளஞ்செழியின்  லேப்டாப் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். திரையில் ஒரு கிராஃப் செங்குத்தாக ஏறிக்கொண்டிருந்தது. 2050 ஆம் ஆண்டின் ஒரு பிப்ரவரி மாதத்தின் அதிகாலை நேரம் அது.

என்ன செழியன், அதே தானா? பின்னால் வந்து நின்றாள் இளவெயினி. அவள் கையில் ஒரு தெர்மோ பிளாஸ்க்.

அதே தான் வெயினி. இந்த வாரம் மட்டும் டெம்பரேச்சர் இரண்டு டிகிரி கூடியிருக்கு. அது முக்கியமில்லை. இதப் பார். செழியனின் மனம் படபடத்தது.

அவன் ஒரு டிரோன் புகைப்படத்தை பெரிதாக்கினான். அதுவரை வெள்ளையாக மட்டும் தெரிந்த அந்தப் பள்ளத்தாக்கில், இப்போது ஒரு பெரிய மஞ்சள் திட்டு தெரிந்தது. அது ஒரு பூந்தோட்டம் போல விரிந்து கிடந்தது.

பூக்கள் தானே செழியன்? பார்க்க அழகாகத்தான் இருக்கிறது, என்றாள் இளவெயினி.

செழியன் கசப்பாகச் சிரித்தான். டைட்டானிக் கப்பலில் இசை வாசித்ததைக் கேட்டிருக்கிறாயா? அதுவும் அழகாகத்தான் இருந்தது. ஆனால் கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தது. இந்த பூக்கள் சாதாரணமானவை அல்ல. இவை நியூ ரைசோமா வகை. இவை வளர வளர பனியின் அடர்த்தி குறைகிறது. மிக முக்கியமாக, இந்தப் பூக்கள் ஒருவித ரசாயனத்தை மண்ணில் கசியவிடுகின்றன.

என்ன ரசாயனம்? இளவெயினி அதிர்ச்சியோடு கேட்டாள்.

தெரியல. ஆனால் அந்த ரசாயனம் காற்றில் கலந்தால், மனிதர்களுக்கு ஒருவித  போதை வரும். சுற்றியிருப்பவை எல்லாம் அழகாகத் தெரியும். பனி உருகுவதோ, உலகம் அழிவதோ கவலை தராது. ஒருவித கூட்டுத் தற்கொலைக்கு இயற்கை நம்மைத் தயார் செய்யுதோ என்று தோன்றுகிறது.

சரியாக அப்போது, ஆய்வு மையத்தின் அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே பார்த்த இளவெயினி திகைத்து நின்றாள்.

பனிப்பாறைகளுக்கு நடுவே, ஒரு ராட்சத மஞ்சள் பூ ஜன்னல் கண்ணாடிக்கு மிக அருகில் வளர்ந்து நின்றது. அதன் இதழ்கள் மெல்லத் திறந்தன. உள்ளே இருந்து ஒரு மெல்லிய மஞ்சள் நிறப் புகை வெளிப்பட்டது.

இளவெயினிக்கு இப்போது அந்தப் பூ மிக அழகாகத் தெரிந்தது.

செழியன் ஏன் பயப்படுகிறாய்? அந்தப் பூவைப் பார். எவ்வளவு அழகு. ஏன் நாமும் வெளியே போய் அதைத் தொடக்கூடாது? இளவெயினியின் குரலில் ஒரு விசித்திரமான குதூகலம் இருந்தது.

இளஞ்செழியன் அதிர்ச்சியடைந்தான். அவளுக்கு அந்தப் பூ உண்டாக்கும் போதை தொடங்கிவிட்டது. இயற்கை வெறும் வைரஸால் மட்டும் மனிதனை அழிப்பதில்லை. சில நேரங்களில் அது அழகு மூலமாகவும் அழிக்கும் போல.

இளஞ்செழியன் சட்டென்று இளவெயினியின் தோளைப் பிடித்து உலுக்கினான். வெயினி ஜன்னலை விட்டு தள்ளி நில். இது கஞ்சா போதை மாதிரி ஒரு மாயை. அதைப் பார்க்காதே!

இளவெயியினியின் கண்கள் நிலைகுத்தி இருந்தன. அவள் முகத்தில் ஒரு விகாரமான புன்னகை. இல்லை செழியன். அந்தப் பூக்கள் பேசுகின்றன. இவ்வளவு காலம் எங்களைச் சிறை வைத்த பனி விலகிவிட்டது. இப்போது இது எங்கள் முறை என்று சொல்கின்றன. கேள். அந்த இசை கேட்கிறதா?

இளஞ்செழியன் லேப்டாப்பைத் தட்டினான். சென்சார்கள் சிவப்பாக மின்னின. காற்றில் அந்த ரசாயனத்தின் அளவு 40 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்த ஆய்வு மையத்தின் சீல் வைக்கப்பட்ட அறைகளுக்குள்ளும் அது கசியத் தொடங்கும்.

அவன் அவசரமாக ஒரு கமென்ட்டை டைப் செய்தான். ப்ராஜெக்ட் ஐஸ்பெர்க். இது போன்ற ஒரு அவசர நிலைக்காக இந்தியாவின் டிஆர்டிஓஉம் இஸ்ரோவும் ஒரு ரகசியத் திட்டம்.

வெயினி, இதைப் பார்! அவன் லேப்டாப் திரையில் ஒரு பழைய வீடியோ ஓடியது. 1950களில் சரியாக நூறாண்டுகளுக்கு முன்பாக அண்டார்டிகாவில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை படம். பனிக்கு அடியில் புதைந்திருந்த ஒரு விசித்திரமான உலோகக் கோளம் அங்கே தெரிந்தது.

இந்த மஞ்சள் பூக்கள் சும்மா வளரவில்லை வெயினி. பனி உருக உருக, பல லட்சம் ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த ஏதோ ஒன்று வெளியே வருகிறது. அந்த உலோகக் கோளத்தின் மேல் படர்ந்திருந்த பாசிகள்தான் இப்போது பூக்களாக மாறியிருக்கின்றன. இது பூமிக்குச் சொந்தமான தாவரமே இல்லை! இளஞ்செழியன் படபடத்தான்.

சரியாக அப்போது ஆய்வு மையத்தின் தரை அதிரத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே இருந்த அந்த ராட்சதப் பூவின் அடியில் இருந்து ஒரு உலோகம் போன்ற தண்டு மெல்ல எட்டிப்பார்த்தது. அது ஒரு செடி அல்ல. ஓர் ஆன்டெனா!

இளவெயினி இப்போது தரையில் அமர்ந்துவிட்டாள். செழியன் அவர்கள் வந்துவிட்டார்கள். நாம் கார்பனைச் சேர்த்துச் சேர்த்துப் பூமியைச் சூடாக்கியது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அவர்களுக்குத் தேவையான வெப்பநிலையை நாமே உருவாக்கித் தந்துவிட்டோம். தேங்க்யூ ஹ்யூமன்ஸ் என்று சொல்கிறார்கள். இளவெயினி முணுமுணுத்தாள்.

இளஞ்செழியன் உறைந்து போனான். இவ்வளவு காலமாக நாம் பயந்தது வேற்றுக்கிரகவாசிகள் வானத்திலிருந்து வருவார்கள் என்று. ஆனால் அவர்கள் பனிக்கு அடியில் நமக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். நாம் செய்த குளோபல் வார்மிங் அவர்களுக்கு ஒரு வெல்கம் ட்ரிங்க்.

இளஞ்செழியன் அவசரமாகத் தன் சேட்டிலைட் போனை எடுத்தான். ஹலோ. திஸ் இஸ் மெக்மர்டோ பேஸ். ஆபரேஷன் ஐஸ்பெர்க் தோல்வி. அவர்கள் விழித்துக்கொண்டார்கள். மீண்டும் சொல்கிறேன். தி பிளவர்ஸ் ஆர் நாட் பிளான்ட்ஸ். தே ஆர் மெஷின்ஸ்!

அவன் பேசி முடிப்பதற்குள், ஜன்னல் கண்ணாடி தடதடவென விரிசலிட்டது. அந்த மஞ்சள் இதழ்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தன. அறை முழுவதும் அந்த இனிய மணம் பரவியது.

இளஞ்செழியனுக்கும் இப்போது பயம் மறைந்து ஒருவித அமைதி வரத் தொடங்கியது. ஏன் இவ்வளவு காலம் கவலைப்பட்டோம்? உலகம் அழிந்தால் என்ன? இந்தப் பூக்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!

அவன் இளவெயினியின் கையைப் பிடித்துக் கொண்டான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே

என இளஞ்செழியனின் வாய் முணுமுணுக்க, அண்டார்டிகாவில் மஞ்சள் பூ உண்டு என்று இளவெயினியின் இதழ்கள் கடைசி சொற்களை உதிர்த்தன.

இருவரும் அந்த மஞ்சள் புகைக்குள் மெல்லக் கரைந்தார்கள்.

வெளியே அண்டார்டிகா முழுக்கப் பனி உருகி, ஒரு பிரம்மாண்டமான இயந்திரச் சோலை மெல்ல எழத் தொடங்கியது.

*****

9 Mar 2026

கற்பனைப் பூதமும் கையில் இருக்கும் அல்வாவும்!

கற்பனைப் பூதமும் கையில் இருக்கும் அல்வாவும்!

நிஜத்தைச் சொல்லப்போனால் மனிதன் ஒரு வினோதமான பிராணி. அவனுக்குத் தன் கையில் இருக்கும் ஆப்பிளைச் சுவைப்பதில் ஆர்வம் குறைவு. ஒருவேளை அடுத்த வாரம் ஆப்பிள் விலையேறிவிட்டால் என்ன செய்வது? அந்த ஆப்பிளுக்குள் புழு இருந்தால் என் கதி என்ன? என்று கற்பனை செய்து பிபியை ஏற்றிக்கொள்வதில் அவன் பிஹெச்டி முடித்திருக்கிறான்.

மனிதனது மூளை ஒரு விசித்திரமான ஸ்கிரிப்ட் ரைட்டர். அது ஆஸ்கார் விருது வாங்கத் துடிக்கும் இயக்குநரைப்போல, நடக்காத பல விபரீதங்களை நிஜத்தை விட தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பலர் தங்கள் பார்வையை எப்போதுமே அந்தத் தொடுவானத்தில் நங்கூரமிட்டு வைத்திருக்கிறார்கள். தொடுவானம் என்பது ஒரு ஜியோமெட்ரிகல் பொய். நீங்கள் அதை நோக்கி ஓட ஓட, அதுவும் பின்வாங்கும்.

ரிடையர் ஆன பிறகு என்ன செய்வேன்? என் பேரன் அமெரிக்காவில் செட்டில் ஆவானா? செட்டில் ஆக அவனுக்கு விசா கிடைத்து விடுமா? இதெல்லாம் இன்றைய மனிதர்களுக்கான இப்போதைய கவலைகள். இதற்காக இப்போதே கவலைப்பட்டு, இன்று மதியம் உங்கள் தட்டில் இருக்கும் சூடான ரத்தப் பொறியலைச் சுவைக்காமல் ரத்தத்தின் பிரசரை எகிற அடிக்கிறீர்கள்.

உண்மை என்னவென்றால் நம்மை அச்சுறுத்தும் 90 சதவீதப் பிரச்சினைகள் நம் மண்டைக்குள் மட்டுமே ரிகர்சல் பார்க்கப்படுகின்றன. நிஜ மேடைக்கு அவை வருவதே இல்லை.

காலடியில் இருக்கும் நிலம் நிஜமானது. அது செழிப்பானது. அங்கேதான் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அதுதான் நிகழ்காலம்.

இப்போது நீங்கள் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் டீயின் சூடு, உங்கள் மொபைல் திரையின் – ஒளி இதுதான் நிஜம்.

நிகழ்காலம் என்பதுதான் இருப்பதிலேயே மிகச் சிறிய, ஆனால் மிக வலிமையான புள்ளி. கடந்த காலம் ஒரு பழைய நியூஸ் பேப்பர். எதிர்காலம் என்பது இன்னும் அச்சடிக்கப்படாத ஒரு புத்தகம்.

கற்பனைப் பூதங்களை விரட்ட ஒரே வழி, உங்கள் வேலையில் கவனத்தைத் திருப்புவதுதான். ஒரு சின்னக் கணக்கு போடுவது அல்லது ஜன்னல் வழியாக சும்மா வேடிக்கை பார்ப்பது கூட உங்களை நிகழ்காலத்திற்கு இழுத்து வரும்.

தூரத்தில் இருக்கும் மேகத்தைப் பார்த்து குடை தேடுவதை விட்டுவிட்டு, இப்போது உங்கள் காலடியில் இருக்கும் புல்லின் பசுமையைப் பாருங்கள். கற்பனைப் பிரச்சனைகள் என்பவை ஒரு பேய்ப்படம் போல, பார்த்து முடித்துச் சீட்டை விட்டு எழுந்தால் எல்லாம் மறைந்துவிடும். ஆனால், நிகழ்காலம் என்பது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிஜமான கிளைமாக்ஸ்.

பரிணாம வளர்ச்சியில் சிங்கம் வருமா, புலி வருமா என்று பயந்து பயந்தே நம் டி.என்.ஏ வடிவமைக்கப்பட்டுவிட்டது. அதனால், நிஜத்தில் புலி வராதபோது, நம் மூளை ஒரு கற்பனைப் புலியை உருவாக்கி, அதற்குப் பயங்கரமான கிராபிக்ஸ் போட்டு நம்மைப் பயமுறுத்துகிறது.

அதாவது, நடக்காத ஒரு விஷயத்திற்காக இப்போதே அட்வான்ஸாகக் கவலைப்படுவது. எல்லாருடைய மூளைக்குள்ளும் அமைக்டாலா  என்று ஒரு சின்னப் பகுதி இருக்கிறது. இதுதான் பயத்திற்குப் பொறுப்பு. இதற்கு லாஜிக் தெரியாது. இதுதான் ஓவர் ஆக்டிங், ஓவர் ரியாக்சனுக்குப் பொறுப்பு.

இந்தப் பொறுப்பாளி வேலை செய்தால் மனம் உடனே மெகா சீரியல் கதையை எழுத ஆரம்பித்துவிடும். உடனே அட்ரினலின் சுரக்க ஆரம்பித்து விடும். கை வியர்க்க ஆரம்பித்து விடும். இதயம் துடிக்க ஆரம்பித்து விடும். மெகா சீரியல் ரைட்டர்கள் இதைத்தான் பயன்படுத்துகிறார்களோ என்னவோ!

வாழ்க்கை என்பது ஒரு லைவ் டெலிகாஸ்ட். அதை எடிட் செய்ய முடியாது. ஆனால் நாம் ரீவைண்ட் பட்டனையும் பாஸ்ட் ஃபார்வர்ட் பட்டனையும் அழுத்தியே பொன்னான நேரத்தை வீணாக்குகிறோம்.

சுற்றி இருக்கும் ஐந்து பொருள்களைப் பாருங்கள். நான்கு ஒலிகளைக் கேளுங்கள். மூன்று வாசனைகளை நுகருங்கள். இது உங்கள் கவனத்தைக் கற்பனை உலகத்திலிருந்து இழுத்து வந்து நிகழ்கால உலகத்தில் லேண்டிங் செய்ய வைக்கும்.

உங்கள் கவலையை ஒரு நோட்டில் எழுதுங்கள். அதில் எத்தனை சதவீதம் நிஜம், எத்தனை சதவீதம் கற்பனை என்று மார்க் போடுங்கள். கற்பனைக்கு எப்போதும் பூஜ்யம் மார்க் கொடுங்கள்.

கற்பனைப் பிரச்சனைகள் என்பவை ஒரு காகிதப் புலி. அதை நீங்களே வரைந்து, நீங்களே பயப்படுகிறீர்கள். அந்தப் பேப்பரைக் கிழித்துப் போட்டுவிட்டு, நிஜமான புலியைப் பார்க்க ஜூவை நோக்கிப் புறப்படுங்கள். வாழ்க்கை மலரட்டும்.

*****