2026 தேர்தல் முடிவுகளை மாற்றிய மாடல்தான் என்ன?
மே 4, 2026.
வழக்கம்போலத்தான் விடிந்தது.
ஆனால், சூரியன் மட்டும் கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி
உதயமானது.
உதயசூரியன் உதித்திருக்க வேண்டிய பல இடங்களில்,
ஒரு புது வெளிச்சம் பாய்ந்தது. எக்சிட் போல் கணிப்புகளை அடித்து நொறுக்குவது போல முடிவுகள்
வெளிவரத் துவங்கின.
தேர்தல் முடிவுகளை நாம் சென்னை அதாவது தலைநகரம்,
நகர்ப்புறம், கிராமப்புறம், டெல்டாப்பகுதி எனப் பிரித்துப் பார்த்தால் இப்படி அமைந்திருக்கிறது.
சென்னையைத் தக்கவைத்துக்கொள்வது என்பது திராவிடக்
கட்சிகளுக்கு எப்போதும் ஒரு கௌரவப் பிரச்சினை. ஆனால், இந்த முறை சென்னைவாசிகளுக்கு
மாற்றம் என்றால் ரொம்பப் பிடித்திருக்கும் போலிருக்கிறது. 37 இடங்களில் 32ஐ தவெகவுக்கு
அள்ளித் தந்து விட்டார்கள்.
இதில் உச்சகட்ட ட்விஸ்ட் என்னவென்றால், முதல்வர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரிலேயே தோல்வியடைந்திருப்பதுதான். கோட்டை நமக்குத்தான்
என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கையில், கோட்டையின் கதவுச் சாவியை யாரோ மாஸ்டர் கீ
போட்டுத் திறந்துவிட்டார்கள்.
நகர்ப்புறமும் தவெகவுக்கு தொகுதிகளை வாரி வழங்கியிருக்கிறது.
இங்கே விஜய்க்கு 46 சதவீத ஓட்டு. அதாவது, ஐடி வேலையில் இருப்பவர்களும், ஸ்விக்கியில்
ஆர்டர் செய்பவர்களும் ஒரே சீராக விஜய்க்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.
கிராமப்புறத்தை எடுத்துக் கொண்டால், இங்கே
மட்டும் திராவிடக் கட்சிகள் கொஞ்சம் மூச்சு விடுகின்றன. விவசாயிகளுக்கு இன்னும் விஜய்யை
விட சூரியனும், இலையும் நெருக்கமாகத் தெரிகிறார்கள்.
டெல்டா பகுதி சூரியனுக்கு ஆதரவாக இருந்திருக்கிறது.
அங்கே மட்டும் 19 இடங்களைத் திமுக கூட்டணி பிடித்துள்ளது. டெல்டா கைகொடுக்காமல் போயிருந்தால்
கூட்டணியின் நிலை இன்னும் மோசமாகப் பின்தங்கிப் போயிருக்கும்.
இத்தேர்தல் முடிவுகளிலிருந்து நாம் என்ன தெரிந்து
கொள்வது?
தமிழக அரசியல் இதுவரை ஒரு திமுக – அதிமுக என
இரு துருவ நிலையில் இருந்து. அது தற்போது முத்துருவமாக மாறியிருக்கிறது.
1967லிருந்து மாறி மாறி தொடர்ந்த திராவிட ஆட்சிகளுக்கு
மாற்றாக ஒரு புதிய ஹீரோ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
விஜய்க்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமாகியது?
விஜய் ஒரு தனி ஒருவன் பாணியிலிலேயே இந்தத்
தேர்தலை அணுகினார். அவர் ஆட்சியிலேயே பங்கு என்று கூட்டணிக்குத் தயாராக இருந்தாலும்,
யாருடனும் கூட்டணி அமையவில்லை அல்லது அமைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.
இந்த நவீன தாராளமய யுகத்தில், சுயமாகத் தன்னைச்
செதுக்கிக்கொள்ளும் வசீகரம் அவரிடம் இருக்கிறது. இதைக் குறிப்பிட்டுச் சொல்ல காரணம்
இருக்கிறது.
கரூர் சம்பவம், மனைவியின் விவாகரத்து மனு,
ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனது, குழந்தைகளை வைத்து அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம்
– என்று எதுவும் அவரைத் தீண்டாமல் டெப்லான் கோட்டிங் வழுக்கிக் கொண்டு போயிருப்பதை
இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
திமுகவின் திராவிட மாடல், அதிமுகவின் பல்க்கான
விலையில்லா வாக்குறுதிகள், பாஜகவின் இந்துத்துவம் – இவற்றைத் தாண்டி விஜய்யின் மாடல்
வெற்றி பெற்றிருப்பதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று தமிழ்நாடே யோசித்துக் கொண்டிருக்கிறது.
அது எதுவாக இருக்கும்?
இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான இன்ஸ்டன்ட்
மேஜிக்கை தனது ஒன் லைனர்கள் மூலமாகவும் ரோடு ஷோக்கள் மூலமாகவும் விஜய் தந்திருக்கிறார்.
பழைய அரசியல்வாதிகளின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகளுக்கு
மாறாக ஒரு குட்டி ஸ்டோரி சொல்லிவிட்டுக் கூலாக விசிலடித்துச் செல்லும் அவரது பாணி மக்களுக்குப்
பிடித்திருந்திருக்கிறது. அந்தப் பிடித்தமே அவர்கள் லைக் பட்டனைத் தட்டி விடுவதைப்
போல விஜய்க்கு வாக்குகளைத் தட்டி விட்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் விஜய்யின் திரைத்துறையிலிருந்து
அரசியல் நோக்கிய வளர்ச்சியை நாம் நுட்பமாக நோக்க வேண்டும்.
பொதுவாகத் தமிழ்நாட்டில் ஒரு நடிகர் அரசியலுக்கு
வந்தால், அவரை எம்.ஜி.ஆருடனோ அல்லது ரஜினியுடனோ ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, அவர் அளவுக்கு
வருவாரா? என்று சோடா குடிப்பதுதான் வழக்கம்.
ஆனால், விஜய் என்கிற இந்த யங் கமாண்டர், பழைய
கமாண்டர்கள் அத்தனை பேரையும் ஒரே லியோ ஜம்ப்பில் ஓரம் தள்ளிவிட்டு, ஆந்திர என்டிஆரைப்
போல தமிழக என்டிஆர் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
அவரது திரையுலக பயணத்தை உன்னிப்பாக நோக்க வேண்டும்.
ஏனென்றால், விஜய்யின் வெற்றி என்பது ஒரு தனிமனிதரின் வெற்றி என்பதை விட, ஒரு நீண்ட
கால மார்க்கெட்டிங் திட்டத்தின் விளைவு. ஆரம்பத்தில் காதலுக்கு மரியாதை கொடுத்து உருகி
உருகி நடித்தவர், எப்போது தளபதியாகத் தன்னைத் தரம் உயர்த்திக்கொண்டாரோ, அப்போதே கோட்டைக்கான
சாவியைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
மற்ற நடிகர்கள் மைக் பிடித்தால் உளறிக் கொட்டும்
காலத்தில், இவர் மௌன விரதம் இருந்தார். அதுவே அவருக்கு ஒரு மிஸ்டிக் அந்தஸ்தைத் தந்தது.
அவர் பேசாததுதான் அவருக்குப் பெரிய பலமாக அமைந்தது. ஏனென்றால், மக்கள் அவர் பேசாத மௌனத்திற்குத்
தங்களுக்குப் பிடித்த அர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டார்கள்.
2013 இல் தலைவா படத்திலேயே டைம் டூ லீட் என்று
அவர் போட்ட டேக்லைனைப் பார்த்து அவர் படத்துக்கான தடை போடும் அரசியல் ஆரம்பித்து விட்டது.
தற்போது அது ஜனநாயகன் வரை நீண்டாலும், அவரது அரசியல் வேகத்தைத் தடுக்க முடியவில்லை.
அவர் தன்னை ஊழலுக்கு எதிரான ஹீரோவாகத் தன்னைத்
திரையில் செதுக்கிக்கொண்ட விதம் அலாதியானது. திரையில் அவர் ஊழலை எதிர்த்து ஓர் அடி
அடித்தால், அது நிஜமாகவே ஊழலுக்கு விழும் அடி என்று மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.
அதன் உச்சகட்டமாக 2024 இல் தமிழக வெற்றி கழகம்
ஆரம்பித்தபோது, அவருக்குக் கூடிய கூட்டம் பிரமாண்டமானது மற்றும் எதிர்பாராதது.
விளைவு?
1977 இல் எம்.ஜி.ஆர் செய்த சாதனையை, கட்சி
ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் விஜய் செய்திருக்கிறார்.
திராவிட மாடலுக்கும், எம்ஜிஆர் மாடலுக்கும்,
இந்துத்துவா மாடலுக்கும் மத்தியில் இப்போது விஜய் மாடல் என்கிற ஒரு புது அரசியலை அவர்
வெற்றிகரமாக லான்ச் செய்திருக்கிறார்.
அவர் கோடிட்டுக் காட்டும் நல்லாட்சி, அவர்
அளித்த வாக்குறுதிகள், அவர் அடுத்து எடுத்து வைக்கப் போகும் அடிகள் குறித்து இப்போதே
எதுவும் கூறி விட முடியாது. அப்படிக் கூறினால் எக்சிட் போல் கணிப்புகள் போல் அவை ஆனாலும்
ஆகி விடும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
*****






