11 Feb 2026

பனிப்பொழிவோடு கலந்த ரத்தத் துளிகள்!

பனிப்பொழிவோடு கலந்த ரத்தத் துளிகள்!

கனடா அமைதியின் தேசம். இன்று நடந்த சம்பவம் கனடாவா அங்கு என்னடா நடக்கிறது விழி உயர்த்த வைத்திருக்கிறது.

அந்த இடம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ப்ளர் ரிட்ஜ்.

காலை மணி ஒன்பதே கால். வகுப்பறை துவங்கும் நேரம்.

அந்தக் காலை வகுப்பறைக்குள் ஆப்பிள் மடிக்கணினிகள் மெல்லத் திறந்துகொண்டிருந்தன. திடீரென்று அந்தச் சத்தம்.

என்ன சத்தம் இந்த நேரம் என்று அதைக் கேட்டு, யாரோ கதவை முட்டுகிறார்களோ என்றுதான் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது கதவை முட்டும் சத்தமல்ல, உயிரை எடுக்கும் சத்தம். துப்பாக்கிச் சூடு.

துப்பாக்கி ஏந்தியவன் உட்பட பத்து பேரின் உயிர்கள் காற்றில் கலக்கின்றன. 25க்கும் மேற்பட்டோரின் காயம் பட்ட ரத்தத் துளிகள் பனியில் நனைகின்றன.

அந்த செமி ஆட்டோமேட்டிக் கன், கண் இமைக்கும் நேரத்தில் மண்ணில் 10 உயிர்களை விழச் செய்து விட்டது.

அந்தத் துப்பாக்கிக் கொடூரனின் பெயர் இன்னும் போலீஸ் ஃபைலில் ரகசியமாக இருக்கிறது.

அந்தத் துப்பாக்கி மிருகம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தபோது, கணக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியைக்குத் தெரிந்திருக்காது, அதுதான் அந்த வகுப்பின் கடைசிப் பாடம் என்று. அவர் நடத்திய கணக்கு முடிவதற்குள் பத்து பேரின் கணக்கு முடிந்து விட்டது.

கனடா என்றால் நம்பகம் என்று ஒரு பிம்பம் உண்டு. பனி, மேப்பிள் சிரப், பண்பான மனிதர்கள். ஆனால், இப்போது அந்தப் பனிப்பாறையில் ரத்தக் கறை படிந்திருக்கிறது. துப்பாக்கிக் கலாச்சாரம் எனும் வைரஸ் மெல்ல மெல்ல அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குப் பரவுகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதெல்லாம் அமெரிக்காவில்தான் சகஜம், கனடாவில் அல்ல.

அமெரிக்காவில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச் சூடுகளைக் கடக்க பழகி விட்ட உலகம், கனடாவில் நடக்கும் போது அதிர்ச்சி அடைகிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி கண்கள் சிவக்க, இது ஒரு தேசிய சோகம் என்கிறார்.

கனடா இந்தியா அல்ல. அங்கே பாதுகாப்பு அதிகம், தொழில்நுட்பமும் அதிகம். அப்படியானால் அந்தப் பள்ளியில் இருந்த ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம் ஏன் வேலை செய்யவில்லை? லேசர் அலாரங்கள் எங்கே போயின? ஒருவன் ஆயுதத்தோடு நுழையும்போது அந்தச் செயற்கை நுண்ணறிவு ஏன் மௌனமாக இருந்தது?

மனித வன்முறையை எந்த மென்பொருளாலும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதற்கு இது மேலும் ஓர் உதாரணமாகி விட்டது.

பத்து உயிர்கள் காற்றில் கரைந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் மெழுகுவர்த்திகள் எரியும். பூங்கொத்துகள் குவியும். அப்புறம்? அடுத்த ஒரு செய்தி வரும் வரை நாம் இதை மறப்போம்.

துப்பாக்கிகள் பேசுவதை நிறுத்திவிட்டு, மனிதர்கள் பேசத் தொடங்கினால் ஒழிய, இது போன்ற செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

குழந்தைகளோடு பேசத் தொடங்குவோம். அவர்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளைப் பிடுங்கி விட்டுத் தூரிகைகளையும் பூங்கொத்துகளையும் கொடுப்போம்.

கனடா போன்ற நிலை இந்தியாவில் ஏற்படாது என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. இப்படித்தான் அமெரிக்காவில் ஏற்பட்டது போல, இங்கு ஏற்படாது என்று கனடா இருந்திருக்கும். ஆனால் என்னவாயிற்று?

இந்தியாவில் துப்பாக்கிகளுக்கு சட்ட ரீதியான தடைக்கற்களும், வேகத்தடைகளும் நிறைய இருக்கின்றன என்றாலும், கள்ளத்துப்பாக்கிகள் அதிகம் உலவுவது குறித்து உச்சநீதிமன்றமே கவலை தெரிவித்திருக்கிறது. அவை விளையாட்டுப் பொம்மைகள் போலக் குழந்தைகள் கையில் கிடைத்து விடாமல், அவர்களின் கையில் புத்தகங்களும், பேனாக்களுமே புழங்குவதற்கு அவர்களுடனான உரையாடலையும் விவாதங்களையும் நாம் அதிகப்படுத்த வேண்டும்.  

மொபைலிலும், டிஜிட்டல் திரைகளிலும் மூழ்கியிருக்கும் அவர்களை ஆடி, பாடி, உரையாடி விளையாடும் களம் நோக்கித் திருப்ப வேண்டும்.

*****

மன விரைவு ஒரு சாப்ட்வேர் பக்!

வாழ்க்கை வலைக்குள் ஆடும் நடனம்!

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அப்புறம் அந்த ஒரு க்ளிக். இந்த வேகத்தோடு வேகமாக இன்னொரு வேலையையும் முடித்து விடுவோம் என்று அதில் இறங்கப் போய் டிராபிக் ஜாம் ப்ளஸ் ஆக்சிடென்ட். சிஸ்டம் ஹேங். கூடவே மனசும்.

புதிய முயற்சிகளின் போது விபத்துகள் சகஜம். சறுக்காமல் மலையேற முடியாது. ஆனால், சறுக்கும்போது அடிபடும் வலி இருக்கிறதே. அதுதான் ஒரு மாதிரியான மன உளைச்சலைக் கொடுத்துவிடுகிறது.

பிரச்னை இதுதான். வேகம்.

மனம் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் போலச் செயல்படத் துடிக்கிறது. ஒளியின் வேகத்தில் காரியங்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் யதார்த்தம் ஒரு மாட்டு வண்டி. இந்த வேகத்துக்கும் விவேகத்துக்கும் நடக்கும் யுத்தத்தில், நிதானம் என்கிற லாஜிக் அடிபட்டுச் சாகிறது. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத வேகத்தில் ஓட நினைப்பது, ஹைவேயில் ப்ரேக் இல்லாத காரை ஓட்டுவது போன்றது. ஆபத்தானது.

இன்னொரு விஷயம். முடிவுகள்.

யார் எதைக் கேட்டாலும் சட்டென்று பதில் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயச் சட்டம் இருக்கிறதா என்ன? மனிதன் ஒன்றும் கூகுள் தேடுபொறியோ, அல்லது தீர்ப்புச் சொல்லும் இயந்திரமோ கிடையாது. ஒரு செகண்டில் அகண்டமாக முடியாது.

வெளியில் விட்ட சொல், எய்த அம்பு. திரும்பப் பெற முடியாது. அதனால், சட்டென்று எதிலும் கருத்துச் சொல்வதோ, சரி என்று தலையாட்டுவதோ புத்திசாலித்தனம் இல்லை. அது ஒரு முட்டாள்தனம். மோடுமுட்டித்தனம்.

கொஞ்சம் நேரம் கொடுக்க முடியுமா? என்கிற அந்த நான்கு வார்த்தைகள் தரும் பாதுகாப்பு அலாதியானது. ஒரு கதவைத் திறந்து, இன்னொது கதவை மூடி வைத்தே பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் பிறகு யோசித்துப் பார்க்க இடம் இருக்கும்.

அடுத்த ஒன்று. சூழல் தர்மம்.

எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான பதிலைப் போட்டு எக்சாம் எழுத முடியாது. யுனிவர்சல் ஆன்ஸர் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஆளுக்கேற்ப, இடத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப பதில்கள் மாற வேண்டும். இது சந்தர்ப்பவாதம் அல்ல, தவிர்க்க முடியாத எதார்த்தம்.

அடுத்து வேறென்ன, வாழ்க்கைச் சுழலில் நாம் ஆடப் போகும் முறைதான்.

உண்மை என்னவென்றால், நாம் ஒரு பெரிய வலையில் சிக்கி இருக்கிறோம். நம்மைச் சுற்றி ஒரு சூழல் பின்னப்பட்டிருக்கிறது. அதில் சிக்கிக் கொண்டுதான் நாம் சுழன்றாட வேண்டும். தப்பிக்க வழியில்லை. ஆனால் அந்த வலையிலேயே எப்படி அழகாக நடனம் ஆடுவது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். ஆடும் போது அதிக உணர்ச்சிவசப்படாமல், அளவான மகிழ்ச்சியோடு, நிதானமான தாளத்தோடு ஆடப் பழகிக் கொள்ள வேண்டும். அதிரடி ஆட்டம் அல்லது உணர்ச்சிகர ஆட்டம் வலையைப் பிய்ந்துப் போகச் செய்து பாதாளத்தில் தள்ளி விடும்.

மேற்படி சங்கதிகள் அனைத்துக்கும் பேஸ் மனவிரைவு.

எனவே, கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சுழன்று ஆடுங்கள்.

நிதானம் முக்கியம், பிகிலு.

ஓர் அவசியமான பின்குறிப்பு என்னவென்றால், இந்தப் பிகில் என்ற வார்த்தைக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

*****

10 Feb 2026

ஓரிகாமி பண்ண வைக்கும் டிரை போல்ட் போன்கள்!

ஓரிகாமி பண்ண வைக்கும் டிரை போல்ட் போன்கள்!

மனிதர்களுக்கு மடிப்பதில் அலாதிப் பிரியம். காலையில் எழுந்ததும் போர்வையை மடிப்பதில் ஆரம்பிக்கும் இந்த விசயம், இடையிடையே எதையெதையோ மடித்து, அன்றைய இரவில் மறுநாளுக்கான ஆடைகளை மடித்து வைப்பது வரை நீளும்.

இந்த மடிப்பு விசயத்தைக் கொஞ்சம் கலை உணர்வோடு காகிதத்தில் செய்தால் அதுதான் ஓரிகாமி. அதையே ஸ்மார்ட்போனில் செய்தால் அது டிஜிட்டல் ஓரிகாமி. அதெப்படி, ஸ்மார்ட்போனை அப்படியெல்லாம் மடிக்க முடியுமா என்று கேட்டால், நீங்கள் டிஜிட்டல் உலகில் இன்னும் அப்டேட் ஆகாமல் இருப்பதாக அர்த்தம்.

சாம்சங் மூன்றாக மடிக்கும் ஸ்மார்ட்போனைக் கொண்டு வந்து விட்டது. விரைவில் அது உங்கள் கைகளுக்கு வந்து விடும். இனி உங்கள் போனை நீங்கள் கர்ச்சீப்பை மடித்து வைத்துக் கொள்வது போல மடித்து வைத்துக் கொள்ளலாம். ஸோ, உங்களுக்கான டிஜிட்டல் கர்ச்சீப் ரெடி.

சாம்சங்கின் அந்த டிரை போல்ட் போன் இருக்கிறதே, அதன் ஒரு மடிப்பை விரித்தால் அது ஸ்மார்ட் போன். இரண்டாவது மடிப்பை விரித்தால் டேப்லெட். மூன்றாவது மடிப்பை விரித்தால் மினி டிவி. அட்டகாசம்தான் போங்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நீங்கள் மடிப்பைப் பிரிப்பதால் திரையில் மடிப்பு விழும் கோடுகள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

சாம்சங் இவ்வளவு தூரம் போய் விட்டால், ஆப்பிள் சும்மா ஆப்பிளையா கடித்துக் கொண்டிருக்கும்? ஆப்பிள் ரஜினி ரகம். லேட்டாக வந்தாலும் செம லேட்டஸ்ட்டாக வரும்.

ஆப்பிளின் போன் பார்ப்பதற்குப் பவுடர் டப்பா போல இருக்கிறது. மடிப்பை மூடும் போதும் வரும் கிளிக் சத்தம் ஓர் ஆனந்த யாழை மீட்டுகிறது. அதற்காகவே அதை வாங்குவதற்கு ஒரு கூட்டம் அலைமோதும். நாமெல்லாம், அதை யாராவது வாங்கட்டும், அதை எட்ட நின்று கேட்டுக் கொள்வோம் ரகம்தான்.

இவ்வளவு அற்புதங்கள் இருந்தால் விலை? அதில் பாதி விலைக்கு மடிக்க இயலாத அட்வான்ஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்கி விடலாம்.

அப்புறம் கீழே விழுந்தால் அந்தப் போன் துடிக்கிறதோ இல்லையோ, உங்கள் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கி விடும்.

குழந்தைகள் இருந்தால் அதை அப்படி இப்படி என்று மடித்துப் பிரித்து உங்கள் கையில் கைக்கு ஒன்றாகவோ அல்லது மொத்தத்தில் மூன்றாகவோ கொடுத்து விடும் சாத்தியங்களும் இருக்கின்றன.

அன்று டெலிபோனில் ஆரம்பித்தோம். பேஜரிலிருந்து செல்போனை நோக்கி நகர்ந்து இப்போது அதை மடித்துப் பேப்பராக்கும் அளவுக்கு வந்து விட்டோம்.

மனித மூளையும் இந்த போன்களைப் போலத்தான். நிறைய மடிப்புகள் இருந்தால் தான் புத்திசாலித்தனம். இந்தப் போன் மடிப்புகள் என்பது ஒரு டிஜிட்டல் ஜாலம்தான். நமக்கு போனை மடிக்க முடிந்தால் என்ன? மடிக்க முடியாவிட்டால் என்ன? பல் இருக்கிறவன் பக்கோடா தின்னட்டும் என்பது போல, காசு இருக்கிறவன் கரியாக்கிக் கொள்ளட்டும். டிரை போல்ட்டை டிரை செய்வது உங்கள் இஷ்டம்.

யாருக்காவது அதை வாங்கும் யோசனை இருந்தால், வாங்கிய பின் இதை முதலில் விகடபாரதி பிளாக்கில்தான் படித்தேன் என்று ஒரு ஸ்டேட்டஸ் மட்டும் போடுங்கள். அதனால், இன்னும் நான்கு பேர் நம் பிளாக்கை வந்து படித்தால் அந்தப் போனை வாங்கியதை விட எனக்கு குஷியாகத்தானே இருக்கும். உலகத்தில் தலைசிறந்த தர்மம் எதுவென்றால் மற்றவர்களைக் குஷிபடுத்தி மகிழ்வதுதானே!

*****

கேள்வி இயந்திரங்களும் வதைபடும் காதுகளும்!

பேசும் மெஷின்கள்!

ஒரு சிலர் கேட்கும் கேள்விகளுக்கும், நடக்கும் விஷயங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. லாஜிக் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு இது ஒரு விசித்திரமான இம்சை. ஆனால் அந்த ஒரு சிலரைப் பொறுத்தவரை அது ஒரு சர்வைவல் டெக்னிக். ஒரு பொருத்தமில்லாத சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்ள அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஆயுதம் இந்தக் கேள்வி மற்றும் அந்த கொழகொழ பேச்சு.

இதில் என்ன சிக்கல் என்றால், அவர்கள் அப்படிக் கேள்வி கேட்கும்போது சுற்றியிருப்பவர்களின் நிம்மதி அவுட் ஆகி விடும். சந்தோசம் குட்பை சொல்லி விட்டு டாட்டா காட்டி விடும். இதுதான் பிரச்னை.

சமீப காலமாக எனக்கு சில விஷயங்கள் ஸ்படிகம் போலத் தெளிவாகத் தெரிகின்றன. பொதுவாக அவர்களுக்குப் பேசுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். பேசி முடித்த அடுத்த நிமிடம், அவர்கள் ஜென் அல்லது தியான நிலைக்குப் போய்விடுவார்கள். அதைக் கேட்டவர்கள் நரகத்தின் வாசற்படியை ரீச் ஆகி விடுவார்கள்.

அவர்களுக்குத் தேவை ஒரு ஸ்பீக்கர் அல்ல, ஒரு ரிசீவர். அதாவது, காது கொடுத்துக் கேட்க ஒரு ஆள். அவ்வளவுதான். நீங்கள் அதைச் செய்து தர வேண்டும் என்கிற கட்டாயம் கூடக் கிடையாது. ஜஸ்ட், ம்... அப்புறம்… என்று கேட்டுக் கொண்டிருந்தால் போதும். ஆனால் அதுதான் கொடுமையும் சித்தரவதையும். அதற்குப் பதில் சித்திரகுப்தன் ஏட்டில் இடம் பெற்று எண்ணெய் கொப்பரையில் வேகலாம் என்பது போல இருக்கும். ரொம்ப கொடுமையான டாஸ்க்தான்.

உண்மையில் இது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். அந்த ஒரு சிலரில் இருபாலரும் இருக்கிறார்கள். மனித மனங்கள் எல்லாமே ஒரு ஒன் வே டிராஃபிக் விரும்பிகள். தாங்கள் சொல்வதை இடையூறு இல்லாமல் யாராவது கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு மனமும் ஒரு தனி ஐலேண்ட். ஒரு மனதின் நியாயம், இன்னொரு மனதின் பகுத்தறிவுக்கு அபத்தமாகத் தெரியும். நான் சொல்றது சரிதானே என்று அவர்கள் கேட்கும்போது, உங்கள் லாஜிக் மூளை இல்லை என்று சொல்லத் துடிக்கும். அங்கேதான் முரண்பாடு பிறக்கிறது. இப்படித்தான் மனிதர்கள் பேசிப் பேசியே தங்களை மற்றவர்களுக்குப் பிடிக்காதவர்களாக மாற்றிக் கொள்கிறார்கள்.

இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது.

அவர்கள் நினைப்பதையும், பேசுவதையும் கொட்டித் தீர்க்க மனிதர்கள் ஒன்றும் குப்பைத் தொட்டிகள் அல்ல. மனிதர்களை விட ஒரு சிறந்த ஊடகம் இருக்கிறது. அது எழுத்து.

காகிதத்திடம் நீங்கள் என்ன சொன்னாலும் அது எதிர்கேள்வி கேட்காது. அவர்களின் அபத்தங்களை அது ரசிக்கும். எழுத்தில் கிடைக்கும் அந்த ஆத்மார்த்தமான ஆறுதலும், அங்கீகாரமும் வேறு எதிலும் கிடைக்காது.

பேசிக் கசப்பதை விட, எழுதி ஆசுவாசப்படுவது புத்திசாலித்தனம். அந்த ஒரு சிலர் இதைச் செய்யலாம். அவர்கள் எழுதுவதுக்கு அலுப்புப்படுபவர்களாக இருந்தால், மனிதர்களைப் பலி கொடுப்பது தவிர்க்க முடியாது. செத்தான்டா சேகர் மொமென்டுக்கு யாராவது ஆளாகிச் சிக்கிச் சின்னாபின்னமாகத்தான் வேண்டும்.

இருந்தாலும் இந்தக் காலத்தில் பிரச்சனை இல்லை. எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ள அலெக்ஸாக்கள் வந்து விட்டன. கொட்டித் தீர்ப்பவர்கள் அதனிடம் கொட்டித் தீர்க்கலாம். என்றாலும் அலெக்ஸாக்கள் வெடித்து விடாமல் இருக்க வேண்டும். தென்கொரியா என்று நினைக்கிறேன், அங்கே இந்த மனிதர்கள் படுத்திய பாட்டில் ரோபோட் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி வந்தது. அப்படி நேர்ந்து விடக் கூடாது! சாமியே சரணம்!

*****

9 Feb 2026

ஐந்து கிரகங்களின் ஒரு செல்பி மொமென்ட்!

கோள்களின் க்யூ வரிசை!

அதிகாலையில் எழுந்து எப்போதாவது வானத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதிகாலையில் எழும் பழக்கமே இல்லை என்றால் இந்த அதிசயத்தைப் பார்ப்பது கஷ்டம். அதற்காகவே அதிகாலை எழுந்திருங்கள்.

இதுதான் 2026 இன் மிகப்பெரிய காஸ்மிக் ஷோ. இந்த பிப்ரவரி மாதத்தில் ஐந்து கோள்கள், அவையாகப்பட்டன புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து க்யூவில் நிற்கின்றன. இதை பிளானட்டரி அலைன்மென்ட் என்கிறார்கள் வானியிலாளர்கள்.

உடனே, இதனால் ஆர்டிக் பனி உருகி, ஆண்டிப்பட்டியில் வெள்ளம் வருமா என்றோ, ராகு, கேது இரண்டும் சேர்ந்து தேர்தலில் நிற்குமா என்றோ, மகளிர் உரிமைத் தொகை பத்தாயிரத்தைத் தாண்டி விடுமா என்றோ கேட்காதீர்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.

சயின்டிபிக்கா இதில் ஆபத்து எதுவும் இல்லை. ஜோதிடர்கள் எதாவது சொல்வதற்கு நான் பொறுப்பில்லை. இது ஒரு ஜியாமெட்ரி பெர்ஸ்பெக்டிவ். அவ்வளவுதான். சூரியனை சுற்றி வரும் மேற்படி கோள்களை நாம் இருக்கும் பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு நேர்க்கோட்டில் இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. இந்த கோள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகத்தில் பயணிப்பவை.

இந்த புதன் இருக்கிறதே, இது உசைன் போல்ட் மாதிரி 88 நாட்களிலேயே சூரியனை ஒரு ரவுண்ட் அடித்து விடும். வியாழன் இருக்கிறதே, அது கவர்ன்மென்ட் பைல் மாதிரி சூரியனை ஒரு ரவுண்ட் அடிக்கு ஒரு மாமாங்கம் ஆகி விடும். இவை இரண்டும், மற்ற நண்பர்களுடன் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது என்பது அபூர்வமான விஷயம். கிட்டத்தட்ட ஒரு ஃபேமிலி கெட் டுகெதர் மாதிரி.

இதைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் இத்தியாதிகள் எதுவும் வேண்டாம். அதிகாலை, சுபவேளை, கீழ்வானத்தைப் பார்த்தால் பளிச்சென்று புள்ளிகளாக இந்தக் கோள்களின் பெரேடைப் பார்க்கலாம். அதுவும் வெறுங்கண்ணால் பார்க்கலாம். நட்சத்திரங்களைத் தாண்டி இவை ஜொலிக்கும். ஏனென்றால் நட்சத்திரங்கள் மின்னும். கோள்கள் எவ்வளவு மப்பு என்றாலும் ஸ்டெடியாக நின்று ஜொலிக்கும்.

கிரகச்சாரங்களைப் பற்றிச் சொல்லும் போது, நேரம் முக்கியமில்லையா? அதுவும் நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எம கண்டம் போல நேரத் துல்லியம் வேண்டுமல்லவா! ஸோ, அதிகாலை 5.15 டூ 6.00 மணி பெஸ்ட் டைம். அதாவது முற்பகல்.

நேரக் கணக்கைச் சொல்லி விட்டு, நாள் கணக்கை விட்டு விட முடியுமா? நேற்றிலிருந்தே இந்த கோள்களின் பெரேட் தெரிய ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் நாளையும் நாளை மறுதினமும் ரொம்ப ஸ்பெஷலாகவே தெரியும். அதனால்தான் இன்று மாலையே இந்தப் பதிவைப் போடுகிறேன்.

அப்புறம் திசை. கிழக்கு மற்றும் தென்கிழக்கு உத்தமம். வானம் கொஞ்சம் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் சௌகரியம்.

இடம் என்றால் உங்கள் வீட்டு மொட்டை மாடி ரொம்பவே பெஸ்ட்.

அதில் ஒரு விஷேசம் பாருங்கள். இந்த வெள்ளி அப்படியே வைரக்கல் மாதிரி ஜொலிக்கும். அதற்கு அடுத்தப்படியாக வியாழன் ஜொலிக்கும். இருப்பதிலேயே பெரிய கோள் என்றாலும் ஜொலிப்பில் வியாழன் வெள்ளிக்கு அடுத்ததப்படிதான். என்ன செய்வது பிரபஞ்சம் அப்படித்தான் டிசைன் பண்ணி வைத்திருக்கிறது. செவ்வாய் குங்குமப் பொட்டு போலவும், சனி மஞ்சள் கலந்த வெள்ளையில் டிராபிக் சிக்னலைப் போல இருக்கும். புதன் அடிவானத்தில் இருக்கும்.

இதற்கு மேலும் துல்லியம் வேண்டுமென்றால், ஸ்கைவியூ, ஸ்டெல்லாரியம் போன்ற ஆப்கள் இருக்கின்றன. அவற்றை உங்கள் மொபைலில் டௌன்லோடுங்கள். திசையைத் துல்லியமாகச் சொல்லி விடும்.

மிக முக்கியமான விசயம் என்னவென்றால், எல்லாவற்றையும் சூரியன் வருவதற்கு முன்னே பார்த்து விட வேண்டும். சூரியன் வந்து விட்டால் எல்லாம் அப்ஸ்கான்ட்தான். பார்ப்பது கஷ்டம். மறுநாள் அதிகாலை வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். ஆம் பிப்ரவரி 15 வரை இந்த வானியியல் ஆபர் உங்களுக்குக் காத்திருக்கிறது.

அப்புறம் இந்தக் கோள்கள் எல்லாம் இப்படி வரிசையாகக் கியூவில் நிற்கிறதே, மனிதன் மட்டும் ஏன் அப்படி இல்லை என்றால், அது கோள்களின் கிரகச்சாரம், இது மனிதர்களின் கிரகச்சாரம். அது கிடக்கட்டும், நீங்கள் நாளை அதிகாலை எழுந்து ஒரு வியூ பார்த்து விட்டு, அப்படியே வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விடுங்கள். இந்த உலகம் உங்களைப் பார்த்து அசரட்டும், சயின்ஸில் நீங்கள் இவ்வளவு கில்லியாக இருக்கிறீர்களே என்று! அப்படியே இதை நான்கு பேருக்கு ஷேர் பண்ணுங்கள். புண்ணியமாகப் போகட்டும், அவர்களும் அதைப் பார்த்துப் பரவசமடையட்டும்!

*****

நீதிமான்கள் எனும் வில்லன்கள்!

நீதிமான்கள் எனும் வில்லன்கள்!

காலை நேரம். நிறையச் செய்யலாம், சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. எல்லாம் ஒரு நப்பாசைதான். இது காலை நேரத்துக்கே உள்ள ஸ்பெஷல். ஒரு காப்பி குடித்தால், உலகையேப் புரட்டி விட முடியும் என்று தோன்றுகின்ற பெப்பி டைப் ஆசை.

பொதுவாக மனதுக்குள் ஒரு தேவையற்ற ஸ்ட்ரெஸ். அது எவ்வளவு பெரிய ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தாலும் அதைக் காலை பொழுது அழித்து விடுகிறது. அந்த உற்சாகம் வடியத் தொடங்கும் போது, அது மெல்ல மெல்ல தலைதூக்கி இரவுக்குள் உச்சம் தொட்டு விடும். காலை அரும்பி பகல்லெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் – என்பாரே வள்ளுவர். அது அதுக்கும் பொருந்தும், இதுக்கும் பொருந்தும்.

இந்த ஸ்ட்ரெஸ்க்குப் பின்னால் இருக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும் சாமியை இன்று சிதறு தேங்காயாக்கினால்தான் சரிபட்டு வரும்.

செய்வது எதுவாக இருந்தாலும் அது சரியாக இருக்க வேண்டும், பெர்ஃபெக்ஷனாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு உண்டு. இப்போது அதையெல்லாம் தளர்த்திக் கொள்ள பழகிக் கொண்டு விட்டேன். வாஷிங் மெஷின் டெக்னாலஜி போல  எப்படி வருகிறதோ அப்படியே வரட்டும். அலட்டிக்கொள்வதில்லை. மெனக்கெடல்கள் போரடிக்கின்றன. எல்லாவற்றிலும் ஓர் இம்பெர்பெக்ட்டை பெர்பெக்டாகப் பேணுகிறேன். எப்படி லட்சியமாக இருந்து அலட்சியமாக இருப்பதைப் பிராக்டிஸ் பண்ணி அதில் வெற்றியும் பெற்று விட்டேன்.

நான் இப்படி என்றால், நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு விசித்திரமான டிசைன். நான் எதையோ தப்பு பண்ணுவதாக நினைத்துக்கொண்டு, எனக்குப் பாடம் எடுக்கக் கிளம்பிவிடுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் நீதி போதிப்பதுதான். ஆனால், அவர்கள் தப்பு செய்திருக்கலாம் என்பதை மட்டும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில், இங்கே யாருக்கும் யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை. ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு ஜட்ஜ் இருக்கிறான். அந்த நீதி அவனுக்கானதல்ல, மற்றவனுக்கானது என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ட்விஸ்ட்.

பொதுவாக இந்த மனிதர்களுக்குப் பணத்தின் மேல் ஒரு தீராத தாகம். ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதைச் சம்பாதிக்க புத்தி வேண்டும். பொதுவாக இந்தப் பண விசயத்தில் பலருக்கும் ஆசை 1000 வாட்ஸ், ஆனால் அறிவு மட்டும் இன்னும் டியூப்லைட்.

அவர்கள் ஏன் சம்பாதிக்கவில்லை என்று நான் கேட்டதில்லை. அதுபோல அவர்களும் என்னை ஏன் இவ்வளவு சம்பாதிக்கவில்லை, அவ்வளவு சம்பாதிக்கவில்லை என்று கேட்காமல் இருப்பதுதானே தர்மம். தர்மம் எங்கே இங்கே வேலை செய்கிறது?

ஏன் ப்ளாட் வாங்கிப் போடவில்லை? இன்னும் இவ்வளவு நகை சேர்க்காமல் இருக்கிறாய்? அந்தப் பிளான், இந்தப் பிளான் என்று ஏகப்பட்ட ப்ளான்களைச் சொல்லி அதில் ஏன் இன்வெஸ்ட் செய்யாமல் இருக்கிறாய்? என்று ஏகப்பட்ட விசாரணைகள்.

இந்த விசாரணைகளில் மனம் பல நேரங்களில் வறண்டு போய் விடுகிறது. எங்கேயாவது ஓடி விடலாமா என்று தோன்றி விடுகிறது. அப்படிப் பல நேரங்களில் புத்தகங்களோடு ஓடியிருக்கிறேன்.

அதைப் படித்து முடித்ததும் ஆசுவாசமாக வீடு திரும்பி விடுவேன். அதன் பிறகு போங்கடா நீங்களும் உங்கள் விசாரணைகளும் என்று ஒரு மனசு தோன்றும் பாருங்கள். அது ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு என்ன என்கிறீர்களா? மீண்டும் புத்தகத்தோடு ஓட்டம் பிடிப்பதுதான் நடக்கும். இப்படி ஒரு லூப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எல்லாருக்கும் இப்படி ஒரு லூப் இருக்கத்தான் செய்கிறது. இந்த விசயத்தில் மட்டும் பழகப் பழக பால் புளிக்காது, ஈயம் பித்தளையைப் போலப் பல்லை இளிக்காது.

ஊரில் இருப்பவர்கள் இதைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் விட்டார்கள். அவனுக்கு இதே வேலையாப் போச்சு என்கிறார்கள். கிரகச்சாரம் என்கிறார் தெக்குடு தாத்தா.

*****

8 Feb 2026

லெட் ஸ்டார்ட் டிஜிட்டல் துறவறம்!

லெட் ஸ்டார்ட் டிஜிட்டல் துறவறம்!

எத்தனை காலம்தான் சோசியல் மீடியா டோபமைனிலே வாழ்வீர்கள்? பேச மட்டும் வந்த செல்போனோடு பலர் குழந்தை பெற்று, குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாகரிகம் ஒரு முழு வட்டம் அடித்துவிட்டது. 2000ஆவது ஆண்டுகளின் ஆரம்பத்தில் நோக்கியா 1100 வைத்திருந்தவனை ஏளனமாகப் பார்த்தோம். அப்போது என்னிடமும் அந்தப் போன்தான் இருந்தது. அன்று அது கெத்து. இப்போது அது வெத்து. ஆனால், இப்போது அதே போனைத் தேடி ஐரோப்பியர்கள் அலைகிறார்கள். இதற்குப் பெயர் நோ போன் புரட்சி. நோ போன் என்று சொல்லி விட்டு அப்புறமென்ன 1100 என்றால்,  ஸ்மார்ட்போனைத் தூக்கி எறிந்துவிட்டு, வெறும் ஹலோ சொல்ல மட்டும் பயன்படும் பழைய போனுக்குத் திரும்புவதுதான் இந்த டம்ப் போன் மேட்டர்.

உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ? இன்ஸ்டாகிராம் ரீல்ஸையும், ஃபேஸ்புக் நோட்டிபிகேஷனையும் ஸ்க்ரோல் செய்வது ஒரு போதை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு சின்ன லைக் விழுந்தால் மூளையில் சுரக்கும் டோபமைன், ஒரு சூதாட்டக்காரனின் சூது மனநிலைக்கும் கஞ்சா அடிப்பவனின் போதை மனநிலைக்கும் இணையானது. ஐரோப்பியர்கள் இதிலிருந்து டீடாக்ஸ் செய்ய விரும்புகிறார்கள்.

இங்கே நாம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பெட்ரூம் வரை குனிந்தே கிடக்கிறோம். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்றால், கழுத்துச் சுளுக்கி விட்டது என்கிறோம். நிமிர்ந்து பார்க்கவோ, சக மனிதனைப் பார்த்துப் புன்னகைக்கவோ இனி முடியாது. எந்நேரமும் ஸ்மார்ட்போனையே பார்த்துக் கொண்டிருந்தால் அதெல்லாம் எப்படி முடியும்? நம் முழு வாழ்க்கையையுமே போனில்தான் வைத்திருக்கிறோம் என்கிறோம். இதைப் படிக்கும் போது வாட் நான்சென்ஸாகத் தெரியலாம். வாழ்க்கையை அப்படித்தானே வைத்திருக்கிறோம்.

ஆக இதிலிருந்து ஒரு மாற்றம் தேவை என்பது நமக்கே தெரிகிறது. ஐரோப்பியர்கள் இந்த விசயத்தில் கொஞ்சம் முந்திக் கொண்டார்கள். அவர்கள் டம்ப் போனுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதென்ன டம்ப் போன் என்றால், இதில் வாட்ஸ்அப் இருக்காது. ரீல்ஸ் கிடையாது. முக்கியமாக நண்பன் என்ன சாப்பிட்டான், அக்கா என்ன கோலம் போட்டாள் என்ற அப்டேட் வராது. சார்ஜ் போட்டால் ஒரு வாரம் வரும். இதில் நீங்கள் செய்யக்கூடிய ஒரே புரட்சிகரமான விஷயம் பேசுவது! 1100 என்றால் அப்படித்தானே?

நாம் போனை உபயோகப்படுத்துகிறோமா அல்லது போன் நம்மை உபயோகப்படுத்துகிறதா என்கிற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. நம் அந்தரங்கத்தையும், நேரத்தையும் ஒரு சிலிக்கான் சிப்பிடம் அடகு வைத்துவிட்டு, ஸ்மார்ட் ஆக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.

ஐரோப்பாவில் தொடங்கியிருக்கும் இந்த கலாச்சாரம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே, ஏன் ஐரோப்பியர்கள் இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, இதை நான் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன். என் கையில் பல நேரங்களில் போனே இருப்பதில்லை. பலருக்கு அது இன்னொரு கை அல்லது ஆறாவது விரல். அது ஓர் உடல் உறுப்பாக மாறாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன்.

எங்கள் வீட்டில் நோக்கியா போனும் இருக்கிறது, சாம்சங் போனும் இருக்கிறது. ஆனாலும் எனக்குப் பிடித்தது லேண்ட் லைன் போன்தான். அதை இப்போது தர மாட்டேன்கிறார்கள். அதை வெளியே எடுத்துச் செல்ல முடியாது பாருங்கள்.

கடைசியாக ஒரு பஞ்சோடு இதை முடித்துக் கொள்வோம்.

உன் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆஃப் ஆகும்போது உனக்கு எரிச்சல் வந்தால், நீ போனுக்கு அடிமை. மாறாக உனக்கு நிம்மதி கிடைத்தால், அந்தப் போன் உனக்கு அடிமை.

யாருக்கு யார் அடிமை?

கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பதிலையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

*****