20 Sept 2026

அடைபடும் வாழ்க்கை

கூடும் வீடும்

அந்த வீட்டின் மீது பறந்தபடி

வீடு தேடி அலையும்

அப்பறவை அறியாது

அது கூடு கட்டியிருந்த

மரமே

கதவாகவும் சன்னலாகவும்

மாறியிருக்கும்

புது வீடு அதுவென

*****

ஒரு பூ இரு வாசம்

தலையில் வைத்திருபவளுக்கு

அலங்காரம்

கையில் வைத்திருப்பவளுக்கு

வியாபாரம்

*****

அடைபடும் வாழ்க்கை

பெருவெளியில் ஆன உலகில்

பேருந்தில் நுழைகையில்

இடமில்லா இடத்தில்

ஐந்தடி ஆறு அங்குல

யாக்கை திணித்து

பத்துக்குப் பத்து சதுர அறையில்

மூன்றுக்கு ஐந்தரை அடி கட்டிலில்

கிரீச் கிரீச் என

இல்லாத காற்றை இழுத்துச் சுழற்றும்

காற்றாடியின் ஒப்பாரிக்குள்

பன்னிரு மணி நேர

இரவை நுழைத்து

சூரிய விழிப்பில் வெளிவருகையில்

புளிமூட்டைக்குள் அடைபடுவதை ஒத்த

சந்தடிக்குள் சிக்கி

ஓரடி அளவுகோலுக்குள் சிக்கும் சென்டி மீட்டர் போல

சிறு உறைக்குள் அடைபட்டுப் போகும்

பெரும் கடிதமாகிறது வாழ்க்கை

*****

குறள் காட்டும் உயிரியல் மற்றும் உடலியல் தத்துவம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 42

குறள் காட்டும் உயிரியல் மற்றும் உடலியல் தத்துவம்!

மடிக்கணினியின் திரையில் நீல நிற கோடுகள் ஓடிக்கொண்டிருந்தன. செவ்வக விண்டோக்களில் பைதான் கோடுகள். மணி இரவு இரண்டரை. ஜன்னல் வழியே சென்னை, கிழக்குக் கடற்கரையின் குளிர்காற்று மெலிதாக வீசி அறையின் மெல்லிய திரைச்சீலையை அசைத்தது. மேசை மீதிருந்த தேநீர் ஆறிப்போயிருந்தது.

"இன்னும் எத்தனை பக் பிக்ஸ் பண்றது?" என்றது அந்தப் பக்கம் இணைய இணைப்பில் இருந்த அவளது குரல். லேசான இரைச்சல். திருவாரூர் மழையின் சின்னச் சத்தம் பின்னணியில் கேட்டது.

அவன் ஆறிய தேநீரை ஒரு வாய் குடித்துவிட்டு, கண்களைத் கசக்கிக்கொண்டே சொன்னான், "இந்த லாகின் மாட்யூல் சரியா ஒர்க் ஆகலைன்னா நாளைக்கு மார்னிங் கிளைண்ட் மீட்டிங் காலி. நீ தூங்கு."

"நான் தூங்கினா, நீ மட்டும் தனியா முழிச்சிருப்பியா?"

இந்தக் கேள்வி கடந்த ஆறு மாதங்களாக இருவரின் வாழ்க்கையாகிவிட்டிருந்தது. ஒருத்தர் சென்னையில், இன்னொருத்தர் திருவாரூரில். ஆனால் காதலின் தூரம் பூஜ்ஜியம். எண்ம உலகின் ஒளியிழை வடம் வழியே இருவரும் தினமும் நூறு முறையாவது பரிமாறிக்கொள்கிற வார்த்தைகளில் இருந்தது அவர்களின் உலகம்.

அவர்களது காதலைச் சொல்ல வேண்டுமானால், அது கணினிக்கும் மின்சாரத்துக்கும் உள்ள பந்தம் மாதிரி. உடம்பும் உயிரும் போல. உடம்பைவிட்டு உயிர் தனித்து இயங்க முடியாது; இவர்களால் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லாமல் இருக்க முடியாது.

"சரி, கோட் சரி பண்ணிட்டேன். நீ போய் தூங்கு," என்றான் அவன்.

"ம்!"

திரை அணைந்தது. அறையில் ஒரு நிசப்தம் கவ்வியது. ஆனாலும் அந்த மௌனத்தில் அவளது மூச்சுக்காற்று இருப்பதைப்போன்ற ஒரு பிரமை அவனுக்கு.

மறுநாள் மதியம், திருவாரூர் சோமசுந்தரம் பூங்கா அருகே உள்ள அவளது அலுவலகம். கடுமையான வெயில். வாகனங்களின் இயந்திர சூடு வேறு கூடுதலாக.

அவளது அலுவலக அறைக்கு வெளியே உள்ள தேநீர்க் கடையில் அமர்ந்திருந்தான் அவன். அவள் நம்ப முடியாமல் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் சென்னையிலிருந்து வந்து அவளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான்.

அவள் அவசர அவசரமாக அலுவலக மின்தூக்கியிலிருந்து இறங்கி வெளியே வந்தாள். நீல நிறப் புடவை. தோளில் தோல் பை.

அவளை நேரில் பார்த்து மாதங்களாகிறது. ஆனால் அப்படித் தெரியவே இல்லை. நேற்று முன்தினம் இணைய வெளியில் பேசியதின் தொடர்ச்சி போல இருந்தது. உலகத்தின் அத்தனை தூரங்களும் ஒரே வினாடியில் சுருங்கிவிட்டாற் போன்ற உணர்வு.

திடீரென அவள் அவனைக் பார்த்ததும் நின்றுவிட்டாள். கண்கள் விரிந்தன. நம்ப முடியாமல் ஒரு நொடி திகைத்தவள், அப்படியே வேகமாக ஓடிவந்து அவன் முன் நின்றாள்.

"சொல்லாம கொள்ளாம, எப்படி?" என்றாள் மூச்சு வாங்க.

அவன் மெலிதாகச் சிரித்தான். தேநீர்க் குவளையைப் இருக்கையின் அருகில் வைத்தான். "உடம்பு சென்னையில இருக்கு, உயிருக்கு கொஞ்சம் வேலை இருந்தது. அப்படியே திருவாரூருக்கு வந்துடுச்சு."

அவள் அவனது கையைப் பற்றிக்கொண்டாள். அவள் விரல்கள் லேசாக நடுங்குவது அவனுக்குத் தெரிந்தது. அந்த நடுக்கத்தில் காதலின் அத்தனை உண்மையும் இருந்தது.

"என்ன இது சடன் பிளான்?"

"நேற்று நைட் நீ கோடுல ஒரு தப்பு சொன்னியே. அதை கரெக்ட் பண்ண நேர்ல வந்திடுவோம்னுதான்."

அவள் அவனை முறைக்கப் பார்த்தாள், ஆனால் உதடுகள் சிரிப்பை அடக்க முடியாமல் திணறின.

இருவரும் அருகில் இருந்த பூங்காப் பகுதிக்கு நடந்தார்கள். மர நிழல்களில் பெஞ்சுகள் இருந்தன. சுற்றிலும் பல நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மதிய உணவு இடைளையில் அவசர அவசரமாக சாப்பாட்டுப் பொட்டலங்களை பிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு தனி உலகம் ஓடிக்கொண்டிருந்தது.

"உண்மையைச் சொல்லு, ஏன் வந்த?"

அவன் அவளது கண்களை நேராகப் பார்த்தான். "நீ இல்லாம எல்லாமே லாக் ஆனது மாதிரி இருந்தது. மூச்சு முட்டுற மாதிரி இருந்தது. இப்பத்தான் உசிரு உடம்புக்குள்ள வந்த மாதிரி இருக்கு.

"உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு."                        (குறள், 1122)

அப்படின்னு திருவள்ளுவர் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி சொன்னது பொய்யில்ல. இந்த உண்மையை மறந்துட்டு நான் அங்கேயும், நீ இங்கேயும் எத்தனை நாள் இருக்க முடியும் சொல்லு?"

அவள் அவனுடைய தோளில் லேசாகச் சாய்ந்துகொண்டாள். செயற்கை நீரூற்றைக் கடந்து வந்த பூங்காவின் காற்று சில்லென்று வீசியது. அது அவர்களின் மனதை வருடியது.

காதலுக்கு இலக்கணம் வகுக்கத் தேவையில்லை; உடம்பைவிட்டு உயிர் பிரிந்தால் மரணம். அவன் இல்லாமல் அவள் இல்லை; அவள் இல்லாமல் அவன் இல்லை.

இணையம் துண்டிக்கப்பட்டால் ஏற்படும் பிழைச் செய்திகளைப் போல, இவர்கள் பிரியும் ஒவ்வொரு கணமும் ஒரு பிழைதான். அந்தப் பிழையைச் சரி செய்யும் ஒரே மார்க்கம் இந்தச் சந்திப்புதான்.

"இனிமே என்னை விட்டுட்டு சென்னைக்குப் போகக்கூடாது!" என்றாள் அவள் மெல்லிய குரலில்.

"போக மாட்டேன். உன்னை விட்டுட்டு இனி எங்கேயும் போக முடியாதபடி திருவாரூர்லேயே ஓர் ஆபீஸ் போடுற முடிவோடு வந்துட்டேன்!" என்றான் அவன்.

அவள் அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். மெலிதாகச் சிரித்தாள். அவனும் சிரித்தான்.

அந்த நொடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தது. உடம்பும் உயிரும் போல பிரிக்க முடியாத ஒரு காதலின் நீட்சியாக அந்த மதியப் பொழுது நகர்ந்து கொண்டிருந்தது. இனி உடலும் உயிரும் போல என்ற உவமையை விட அவனும் அவளும் போல என்ற உவமை காலத்துக்கும் பொருந்தும் சாசுவதமான உண்மையாகத் திருவாரூரில் மாறிக் கொண்டிருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

19 Sept 2026

குறள் கூறும் ரசாயன மாற்றம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 41

குறள் கூறும் ரசாயன மாற்றம்!

அது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அலுவலகம். மதியம் இரண்டு மணி. அறை முழுவதும் கணினித் திரையின் வெளிச்சம்.

அவன் தனது அறையில் அமர்ந்து விசைப்பலகையை விசையோடு இயக்கிக் கொண்டிருந்தான் அல்லது வேலைப்பளு தாளாமல் நசுக்கிக்கொண்டிருந்தான். குளிர்சாதன இயந்திரத்தின் சத்தம் மட்டுமே பின்னணியில் ரீங்காரமிட்டது.

அப்போது, கோப்புடன் அவன் மேஜைக்கருகில் வந்து நின்றாள் அவள். நிறுவனத்தின் புதிய செயல்திட்டம். அவளது கண்கள் லேசான சோர்விலும் ஒரு கூர்மையான கவனத்தோடு இருந்தன.

"இந்த டேட்டாவை முடிக்க எவ்வளவு நேரமாகும்?" என்று கேட்டாள். அவள் குரல். எப்போதும் அது ஒரு மெல்லிய கிசுகிசுப்பு போலவும், அதே நேரம் துல்லியமாகவும் இருக்கும். அந்தப் பணிவான குரல், அவனின் காதுகளில் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை நிகழ்த்தியது.

அவன் நிமிர்ந்து பார்த்தான்.

அவள் லேசாகப் புன்னகைத்தாள். அப்போது அவளது உதடுகள் விலகிய அந்த விநாடியில், உள்ளே பளிச்சென்று மின்னிய வெள்ளை வெளேர் பற்களின் ஓரத்தில், அந்த நளினமான புன்னகையின் ஈரப்பசை மின்னியது.

அது வெறும் புன்னகை அல்ல.

திருக்குறள் ஞாபகத்திற்கு வந்தது அவனுக்கு.

"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்."                              (குறள், 1121)

பால். அதில் கலந்த தூய தேன். அதோடு அந்த வெண்மையான பற்களின் இடையே சுரந்த அந்தத் துளி நீர். திருவள்ளுவர் எதைச் சொன்னார் என்று அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. அது ஓர் அறிவியல் ரீதியான காவிய ரசாயனம்.

அவளது அந்தப் பணிவான குரலும், அவளது வெண்பற்களுக்கு இடையே ஊறி வெளிப்பட்ட அந்தச் சொற்களும் அவனுக்குள் ஒரு சுகமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தின. கணினித் திரையின் நீல வெளிச்சத்தில், அவள் முகத்தில் படும் லேசான வெளிச்சம் ஒரு கவிதை போலிருந்தது.

"ஹலோ மிஸ்டர்? கேட்டீங்களா?" அவள் மீண்டும் அதே மெல்லிய குரலில் அவன் கவனத்தைக் கலைத்தாள்.

அவள் உதட்டோரம் தளும்பிய அந்தச் சின்னத் துளி நீரின் மினுமினுப்பு, அவனுடைய மூளையில் இருந்த மொத்த எண்களின் குழப்பங்களையும், தர்க்கங்களின் முடிச்சுகளையும் நொடியில் அழித்துவிட்டது.

வள்ளுவர் அன்று சொன்னது எவ்வளவு நிஜம்! வாழ்க்கையின் அத்தனை கசப்புகளையும், டென்ஷன்களையும் இந்தச் சிறிய புன்னகையும் பேச்சும் அடித்துச் சென்றுவிடுகிறது.

அவன் லேசாகத் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னான், "ம். பத்து நிமிஷம். முடிச்சிடுறேன். ஆனா…"

"ஆனா, அப்புறம் என்ன தயக்கம்?" என்றாள் அவள், புருவத்தை உயர்த்தி.

அவன் புன்னகைத்தான். "ஒன்னுமில்ல. உங்ககிட்ட பேசினா மட்டும் அந்தப் ப்ரோக்ராமிங் எரர் மாதிரி, மனசுல இருக்கிற எல்லா எரரும் சடனா கிளியர் ஆயிடுது" என்றான்.

அவள் இதழோரம் லேசான வெட்கத்துடன் சிரித்தாள். "எப்படியோ கிளியர் ஆனா சரிதான்!" அவள் மீண்டும் ஒருமுறை லேசாகப் புன்னகைத்துவிட்டுத் திரும்பினாள்.

அந்த மேஜையை விட்டு அவள் நகர்ந்தாலும், அந்த குளிரூட்டப்பட் அறையின் காற்றில் இன்னும் எங்கோ அந்தப் பாலும் தேனும் கலந்து கொண்டிருந்தது போல ஒரு மாயம் மிஞ்சியிருந்தது அவனுக்கு. அவளது பணிவான பேச்சும், அந்தத் தேன் போன்ற புன்னகையும் அவன் சோர்வையும் குழப்பதையும் நீக்கி மீண்டும் துடிப்பாக்கின.

பத்தே நிமிடத்தில் அந்தப் புதிய செயல்திட்டத்தின் அத்தனை சிடுக்குகளையும் அவன் விடுவிக்க, அவன் உற்சாகமாக வேலை பார்ப்பதை, கண்காணிப்பு அறையில் ஒளிர்ந்த திரையில் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

18 Sept 2026

வாழ்க்கைப் புத்தகத்தின் நொடிப்பிழை

வாழ்க்கைப் புத்தகத்தின் நொடிப்பிழை

மறந்து போயிருந்த அந்த வார்த்தை

அந்த நேரத்தில்

நினைவுக்கு வராமல் போயிருக்கலாம்

கோடைக்கால நினைவுகளில்

வறண்டு போயிருந்த

கண்ணின் மழைக்காலத் துளி

அந்நேரம் விழாமல் இருந்திருக்கலாம்

டிஸ்ப்ளே போன செல்

அந்த நேரம் மட்டும் விழித்துக் கொண்டு

அக்காட்சியைக் காட்டாது இருந்திருக்கலாம்

எல்லாம் நிகழ்ந்தது அந்த ஒரு நொடி

ஒட்டுமொத்த வாழ்க்கையையும்

திருப்பிப் போடும்

அந்த ஒரு நொடி மட்டும்

இந்த வாழ்க்கையில் இல்லாதிருந்தால்

யாரும் யாரையும் பிரிந்திருக்க மாட்டார்கள்

தண்டவாளத்தில் ஓடும் வாழ்க்கை ரயில்

தடம்புரளும் என்பதை நம்பியிருக்க மாட்டார்கள்

அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில்

இனி பிழை திருத்த வழியில்லை என்பதைப் போல

ஒரு நொடிப் பிழையோடு

வாசிக்கப்படுவதாகிறது வாழ்க்கைப் புத்தகம்

*****

அனிச்சம், அன்னம் அப்புறம் அவளின் பாதம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 40

அனிச்சம், அன்னம் அப்புறம் அவளின் பாதம்!

அவன் மருத்துவர்.

அவள் பொறியாளர்.

அவர்களின் காதல் மருத்துவமும் பொறியியலும் கலந்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங் மிராக்கிள் போல இருந்தது.

மருத்துவமனையின் குளிர்பதன அறையில், அவன் அவளது வலது காலை மென்மையாகத் தன் கைகளில் ஏந்தியிருந்தான்.

வலியில் அவள் முகம் சுளிக்க, அவன் கட்டைவிரலால் அவளது குதிகாலில் லேசாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் இப்போது காதலை விட, ஒரு செல்லக் கோபம் கலந்திருந்தது.

"சொன்னதைக் கேட்டாயா? நீ வேலை பார்க்கிற விதம் இருக்கே, அனிச்சம் பூ மாதிரி இருக்க வேண்டிய உன் பாதம், இப்போ அப்படியே நெருஞ்சிப் பழம் மாதிரி மாறிடுச்சு!" என்றான் அவன், குரலில் பாசம் வழிய.

அவள் சப்பாணி கொட்டினாள். "போதும் நிறுத்துங்க! இங்க கால் வலி உயிர் போகுது. இதுல வந்து எனக்கு குறள் கிளாஸ் எடுக்கறீங்க. நான் என்ன வேணும்ன்னா இப்படிச் செய்துகிட்டேன்? ப்ராஜக்ட் டென்ஷன், மீட்டிங், ராத்திரி வரைக்கும் ஆர்கிடெக்ட் ஸ்டாண்ட் அப் டெஸ்க்ல நின்னுகிட்டே டிசைன் பண்ணா இப்படித்தான் நடக்கும்."

அவன் அவளது காலைக் கீழே இறக்கிவிடாமல், இன்னும் கொஞ்சம் ஆதரவாகப் பிடித்துக்கொண்டான்.

"அது எனக்குப் புரியுது செல்லம். ஆனா உன்னை நினைச்சாதான் பயமா இருக்கு. அந்த காலத்துல வள்ளுவர் என்ன அழகா எழுதியிருக்காரு பாரு.

''அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.''                      (குறள், 1120)

அப்படின்னு. அதாவது, அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் எவ்வளவு மென்மையானதோ, அதை விட மென்மையானது உன்னோட பாதங்கள். ஆனா நீ என்ன பண்ணியிருக்க? உன் பாதத்தை நீயே இந்த டேபிள் ஒர்க்கால கல்லு மாதிரி மாத்திக்கிட்ட."

அவளது முகம் சுருங்கியது. கோபமாகப் பேச முயன்றவள், அவன் கண்களில் தெரிந்த உண்மையான அக்கறையைப் பார்த்ததும், அந்தச் கோபம் சலசலவென்று கரைந்துபோக, "இப்போ நான் என்னதான் பண்ணனும் டாக்டர் சார்?" என்று செல்லமாகச் சிணுங்கினாள் அவள்.

அவன் தன் ஸ்டெத்தாஸ்கோப்பைக் கழட்டி மேஜை மீது வைத்தான். புன்னகையுடன் அவளுக்கு அருகில் வந்து நின்றான்.

"மூன்று விஷயங்கள் இன்ஜினியர் மேடம். ஒண்ணு, நீங்க ரொம்பப் பிரியப்படுகிற அந்த ஹை ஹீல்ஸ் செருப்புக்கு இனிமே கும்பிடு போட்டுடுங்க. ரெண்டு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில அந்த ஸ்டாண்டிங் டெஸ்க் ஆர்கிடெக்ட் டிசைன் டிராயிங்குக்கு ஒரு குட்பை சொல்லிட்டு, ஒரு ரெண்டு நிமிஷம் கொஞ்சம் நாற்காலியில உட்காருங்க. மூணு, சாயுங்காலம் அஞ்சு மணி ஆயிட்டா, டான்னு இங்க கண் முன்னால வந்து எங்கிட்டெ கொஞ்சம் தெரபி எடுத்துக்குங்க. சரியா?"

அவள் மெலிதாகச் சிரித்தாள். "சரி! உங்க ஆர்டரை மீற மாட்டேன்."

"சமத்துப் பொண்ணு!" என்றபடி தன் மேஜை டிராயரைத் திறந்த அவன், ஓர் அழகிய பிளாட் சாண்டலை வெளியே எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவள் ஆச்சரியமாக அதைப் பார்த்தாள். "இது என்ன?"

"உனக்காக நேத்தே வாங்குனது. எங்க இன்ஜினியர் இனிமே பூ மாதிரி நடக்கணுமே!"

அவள் அந்தச் செருப்பை வாங்கிக்கொண்டு, "அப்போ என் பாதங்கள் ரொம்ப சாப்ட்னு சொல்ல வர்றீங்க. அப்படித்தானே?"

"நிச்சயமாக. பயாலஜிக்கலா யோசிச்சா. மனித தோலின் டென்சிட்டி, குறிப்பா பாதத்தோட சோல் பகுதி எப்பவுமே அழுத்தம் தாங்கும். ஆனா உன்னோடது..." அவன் பேச்சை முடிப்பதற்குள், அவள் சட்டென்று அவன் காலில் லேசாக மிதித்துவிட்டு ஓடினாள்.

"ஹே! என்ன பண்ற?"

அவள் திரும்பி நின்று, நமுட்டுச் சிரிப்புடன் சொன்னாள், "நீங்கதானே சொன்னீங்க. என் பாதம் அவ்வளவு சாப்ட்ன்னு. சும்மா ஒரு டெஸ்ட் ட்ரை பண்ணிப் பார்த்தேன். வலிக்குதுதானே?"

அவன் தன் கால்களைத் தேய்த்துக் கொண்டே சிரித்தான். அது வலிக்கவில்லை. மாறாக, சிலிர்த்தது. ''ஓ! இதுதான் வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கிறதா?''

''இல்ல. கற்றுக் கொடுத்த குருகிட்டேயே வித்தையைக் காட்டுறது.''

''நாளைக்கு அஞ்சு மணிக்கு மறந்திடாதீங்க இன்ஜினியர் மேடம்!''

''கண்டிப்பா டாக்டர் சார்! மிதி வாங்க தயாரா இருங்க!''

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

17 Sept 2026

காலம் உறைந்த கடிகாரம்

பறக்கும் பச்சை

பசுமரங்கள் அனுப்பிய

பச்சை

பறந்து கொண்டிருக்கின்றன

பச்சைக்

கிளிகளாய்…

*****

தத்ரூபம்

ஆயிரம்

லட்சம்

கோடி

பில்லியன்

பிக்சல்களில்

சிக்காத தத்ரூபம்

கருப்பு வெள்ளை

புகைப்படத்தில்

முறுவலிக்கும்

பாட்டியின் புன்னகைக்கு

*****

காலம் உறைந்த கடிகாரம்

கறையான் அரித்த

எஞ்சிய புத்தகத்தைக் காட்டுவதைப் போல

உறைய வைத்த காலத்தைக் காட்டியபடி

ஏதோ ஒரு காலத்தில்

இனி எதற்கும் உதவாது என்று

எடுத்துப் போடப்பட்ட

பழுதான கடிகாரம்

பழைய பெட்டியொன்றின்

மூலையில் கிடக்கிறது

இனி நேரம் பார்க்க

ஆளிருக்க மாட்டார்கள் என்றாலும்

நாளுக்கு இரு முறை

சரியான நேரம் காட்டும்

அக்கடிகாரத்திற்குத் தெரியும்

அப்பா சொன்ன ஒற்றை வார்த்தையால்

மாரடைப்பால் உயிர் பிரிந்த

அம்மையின் கரங்களிலிருந்து

நழுவி விழுந்து

பழுதான அந்த நேரம்

*****

ஏய் நிலா ஓரம் போ!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 39

ஏய் நிலா ஓரம் போ!

அதிகாலை மணி 5.45.

திருவாரூர், செம்மொழிப் பூங்கா.

புல்வெளி விரித்த பச்சைக் கம்பளத்தைச் சுற்றி அழகழகாக அலங்கரிக்கப்பட்ட ஓவியங்கள் போல வரிசை வரிசையாகப் பூச்செடிகள். ஆங்காங்கே ஏசி போட்டது போன்ற குளுமையைத் தாங்கி நிற்கும் நிழல் மரங்கள்.

நடைபயிற்சி செய்யவும், மெல்லோட்டம் ஓடவும், உடற்பயிற்சி செய்யவும், ஓகம் பயிலவும் ஏராளமான மனிதர்கள்.

மெல்லோட்டத்திற்கான உடையுடன் அவன், அவளை எதிர்பார்த்தபடி.

வழக்கமாக 5.30க்கு வந்து விடுபவள், இன்று சற்றுத் தாமதம்.

அவன் வானத்தைப் பார்த்தான். அதே அல்பத்தனமான வேலை. இன்னும் முழுமையாக மறையாத நிலவு, வெளுத்துக்கொண்டிருக்கும் நீல வானத்தில் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டிருந்தது.

அப்போது செக்கச் சிவந்த டீசர்ட், கருநீல நிற டிரக்சூட், காற்றில் பறக்கும் முடிகள், கழுத்தில் மெல்லிய சில்வர் செயினுடன் தட் தட் என்ற மெல்லோட்டத்திற்கே உரிய மூடுகாலணியின் சத்தத்துடன் அவளது குரல் கேட்டது. "ரொம்ப நேரமாச்சா? இன்னிக்கு இந்தப் பூங்காவைச் சுற்றி பத்துச் சுற்று. ஆரம்பிக்கலாமா? "

அவள் நெற்றியில் அவசர அவசரமாகக் கிளம்பி, வேகமாக ஓடி வந்ததன் வியர்வைத் துளிகள். கலைந்த தலைமுடி. லேசான தூக்கக் கலக்கம். ஆனால், முகத்தில் ஓர் இயல்பான பிரகாசம்.

அவன் பதிலேதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் திரும்பிப் பார்த்துவிட்டுச் சிரித்தாள். "என்ன விசித்திரப் பார்வை? முகத்துல பதில் ஏதும் சொல்லக் கூடாதுன்னு எழுதி ஒட்டியிருக்கா? இப்படி உம்முன்னு பார்த்தா என்ன அர்த்தம்?"

அவன் அவளை அருகில் இழுத்து, வானத்தைக் காட்டினான். "அங்க பாரு! அதிகாலை நேரத்துல வந்து மாட்டிக்கிட்டு முழிக்குது பாரு நிலா."

அவள் புரியாமல் புருவத்தை உயர்த்தினாள். "ஆமா, மார்னிங் மூன். அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கென்னவா?" அவன் இப்போது தீவிரமாகப் பேசத் தொடங்கினான்:

"இந்த அதிகாலை நிலவுக்கு ஒரு செம ஓவர் கான்பிடன்ஸ். ராத்திரி பூரா பவளமா ஜொலிச்சுட்டு, விடியற்காலைல இவளோட முகம் எப்படி இருக்குன்னு ஒரு தடவை பாக்கணும். பேசாம உள்ளே போயிடணும். ஆனா, இது என்ன பண்ணுது? பகல்லயும் வந்து நின்னுட்டு நான்தான் ஒரிஜினல் அழகின்னு சலம்பிட்டு இருக்கு."

அவள் லேசாகச் சிவந்து சிரித்தாள். "உனக்கு எப்போ பாத்தாலும் ரொமான்டிக் பஞ்ச்தானா?"

"இல்ல. வள்ளுவர் அப்பவே சொல்லிட்டார்.

"மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி."                    (குறள், 1119)

அப்படின்னு. மலர் மாதிரி இருக்கிற என் கண்ணழகி முகத்துக்கு முன்னாடி, இந்த நிலவு தோத்துப்போகும். அதான் அதுகிட்ட சொல்லிட்டு இருக்கேன். ஏய் நிலா, பல பேர் பார்க்கிற நேரத்துல, அதுவும் இப்படி பகல் வெளுத்த நேரத்துல வந்து நிக்காதே. உன் மேல இருக்கிற கறுப்புத் தழும்பு இவ மூஞ்சியோட கம்பேர் பண்ணும்போது அசிங்கமாத் தெரியுதுன்னு!"

அவள் அவன் கையைத் தட்டியபடியே செல்லமாகச் சொன்னாள். "போதும். ஜாக்கிங் முடிச்சு ஆபீஸ்க்கு  வேற கிளம்பணும். இப்பவே நேரமாச்சு, சீக்கிரமா கிளம்பு."

இருவரும் செம்மொழிப் பூங்காவைச் சுற்றி முதல் சுற்றை மெதுவாக ஓடத் துவங்கினார்கள்.

"என்னடா நீ? நேரமாச்சுன்னு நான் பரபரப்பா வந்தா, நீ காத்து வாங்கிட்டுக் கவிதை யோசிச்சிட்டு இருக்கே. ஆறே காலுக்குள்ள முடிச்சிட்டுக் கிளம்புனாத்தான் எல்லாத்துக்கும் நேரம் சரியா இருக்கும். இன்னிக்கு ஜாக்கிங்க, ரன்னிங்கா அப்கிரேட் பண்ணுவோமா?"

அவளை நெருங்கியபடி மெல்லோட்டாய் ஓடிக் கொண்டிருந்தவன் ஒரு கணம் நின்றான்.

அவளும் நின்றாள். ஏன் இப்படி இவன் இன்று விசித்திரமாக ஏதேதோ பேசுகிறான், பண்ணுகிறான் என்று அவள் லேசாகச் சிரித்தாள். அந்த அதிகாலை ஒளிவெளியில் அவளது கண்கள் மலர்களைப் போல விரிந்தன. "என்னடா இது? எது கேட்டாலும்  ரொம்ப யோசிக்கிறே. மூளையில ஏதோ சாப்ட்வேர் பக் மாதிரி முகத்துல ஒரு கன்பியூஷன்? என்னதான் பிரச்சனை உனக்கு?"

"இப்போ வானத்தைப் பாரேன்!"

"மறுபடியும் வள்ளுவர், கவிதைன்னு ஆரம்பிக்கப் போறீயா?"

"உன் முகத்தோட போட்டிப் போட முடியாம, நிலவு ஓடிப் போயிட்டுப் பாரு!"

"டேய் அது மூன்செட்றா!" என்றபடி அவள், அவன் மேலும் பேசுவதற்குள் தன் கைகளால் அவனது வாயைப் பொத்தினாள்.

அவளது கையை மெல்ல விலக்கியவன், அவளது விழிகளைப் பார்த்தான். செம்மொழிப் பூங்காவை அவளோடு பத்துச் சுற்று என்ன? நூறு சுற்று சுற்றுவதற்கான உற்சாகமும் ஆற்றலும் அவனுக்குள் பிரவகித்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****