10 Sept 2026

கண்ணில் பூ பூக்கும் தொழில்நுட்பம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 32

கண்ணில் பூ பூக்கும் தொழில்நுட்பம்

மாலை ஆறு மணி. காரைக்கால் கடற்கரையில் உப்பு மணமும், மெல்லிய வறுத்த நிலக்கடலை வாசனையும் சேர்ந்து கொண்டிருந்தன.

அவன் கையில் வாகனத்தின் சாவிக்கொத்தைச் சுழற்றிக்கொண்டிருந்தான். எதிரே அவள் உட்கார்ந்திருந்தாள்.

அவள் கண்கள்! ம்ஹும்! அதைப் பற்றித்தான் பஞ்சாயத்து.

அலை அடிக்கும் கடற்கரையில், அந்தி மயங்கும் பொன்மஞ்சள் மாலை வெயிலில் அவள் கண்களைப் பார்க்காமல் இருக்க முயற்சிப்பது, மின்வெட்டு நேரத்தில் டார்ச் லைட்டை அணைத்து வைக்க முயல்வது போல வீண் வேலை.

"என்ன, நான் பேசுறது உன் காதுல விழுதா இல்லையா?"

"விழுது. ஆனா உன் கண்ணைப் பார்த்துட்டிருந்தா நீ பேசுறது ஆடியோவா கேக்கல, விஷுவல் பிளர் ஆகுது."

அவள் லேசாகச் சிரித்தாள். "என்னது இது புதுசா சைட் அடிப்புக் கலை? பொண்ணுங்களோட கண்ணுப் புகழ்ச்சி சாப்டர் ஒண்ணா? டூவா?"

"இல்ல. சீரியஸா! இந்த உலகத்துல எத்தனையோ பூக்கள் இருக்கு. குறிஞ்சி, பவள மல்லி, தாமரை, செம்பருத்தி, மல்லிகை, முல்லை, செவ்வரளின்னு எத்தனையோ. ஆனா நீ பார்க்கும்போது உன் கண்ணுல ஒரு பூ பூக்குது பாரு! அது மாதிரி பூ உலகத்துல எங்கேயும் இல்ல!"

அவள் இமைகளைச் சிமிட்டி, "அப்படியா!" என்றாள்.

"அப்புறம், நான் என்ன பொய்யா சொல்றேன்? நூறு சதவீத உண்மை!"

"நான் நம்ப மாட்டேன். அக்மார்க் பொய்."

"அப்படின்னா, உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டியதுதான். அதோ பூ விக்குறாங்களே! அவங்ககிட்ட இருக்குற ரோஜாப் பூவை பாரு," என்றான் அவன்.

அவள் அந்தப் பூக்கூடையில் இருந்த சிவப்பு ரோஜாவைப் பார்த்தாள். "ம்ம், அழகா தான் இருக்கு. அதுக்கென்ன இப்போ?"

"அதுதான் பிரச்சனை. பூ அழகாதான் இருக்கு. ஏன்னா, அதை இந்தக் கடற்கரைக்கு வர்ற எல்லாரும் பாக்கலாம். அந்தப் பையன் பாக்கலாம், இந்தப் பொண்ணு பாக்கலாம், அதோ அங்க உட்கார்ந்திருக்குற அந்த வயசானவரு கூட பாக்கலாம். எல்லாரும் பாத்து ஆஹா பூவுன்னு சொல்லலாம்."

அவன் சற்றே முன்னால் சாய்ந்து, அவளது கண்களை நேராகப் பார்த்தான்.

"ஆனா உன் கண்ணு அப்படி இல்லை."

அவள் புன்னகையை அடக்க முயன்று, "என் கண்ணு என்னவாம்?" என்றாள்.

"உன் கண்ணைப் பார்த்தா என் நெஞ்சு குழம்பிப் போகுது. இந்த பூவை எல்லாரும் பாக்குற மாதிரி, உன் கண்ணையும் எல்லாரும் பார்த்துட முடியுமா என்ன? சேச்சே இது எல்லாரும் பார்க்கிற சாதாரண பூ மாதிரி இல்ல. இது எனக்கு மட்டும்தான் சொந்தம்னு என் மனசு அடம் பிடிக்குது. ஆனா, இல்லடா லூசு, இதுவும் எல்லாரும் பாக்குற பூ மாதிரிதான்னு என் மூளை சொல்லுது. ரெண்டுக்கும் நடுவுல என் நெஞ்சு கிறுக்குப் பிடிச்சு அலையுது. திருவள்ளுவருக்கே இதுல ஒரு மயக்கம் இருந்திருக்கு. அவர் என்ன சொல்றார்ன்னா,

"மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று."                     (குறள், 1112)

அப்படிங்றார்."

அவள் தன் கையிலிருந்த மொபைலைக் கீழே வைத்துவிட்டு உரக்கச் சிரித்தாள்.

"ஹலோ மிஸ்டர் ஹேண்ட்ஸம்! எதுக்கு இப்போ வள்ளுவரையெல்லாம் கூப்பிட்டு வந்து, இவ்வளவு சுத்தி வளைச்சு கவிதை பேசிட்டு இருக்கீங்க? மேட்டர் என்ன?"

அவன் தன் பாக்கெட்டில் இருந்த சிறிய பெட்டியை வெளியே எடுத்தான்.

"மேட்டர் இதுதான். இந்த உலகத்துல இருக்குற எந்தப் பூவையும் யார் வேணாலும் பாக்கலாம். ஆனா, இந்தக் கண்களை நான் மட்டும்தான் ஆயுசுக்கும் பாக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு இந்த நெஞ்சுக்கு அனுமதி கிடைக்குமா?"

பெட்டியைத் திறந்தான்.

பெட்டியில் இருந்த வைரக் கம்மலில் அந்தச் சிறிய வைரம் மின்னுவது போல், அவள் கண்களில் ஒரு புது ஒளி மின்னி ஒளிர்ந்தது. அது இந்த உலகத்தில் இதுவரை எந்தத் தாவரமும் பூக்காத பூ போன்றிருந்தது.

-          சூத்திரங்கள் தோன்றும்!

*****

9 Sept 2026

யாருமறியா பராபரமே!

அடையாளம்

கழுத்தில் தொங்கிய

அடையாள அட்டையை

அறுத்து வீசிய போது

ஆசுவாசமாக இருந்தது

அன்றிலிருந்து

அடையாள அட்டை

அணிவதை நிறுத்தி

துறவியாகிப் போனவர்

அடையாளத்திற்காக

அணிந்து கொண்டார்

அந்த நிறத்தை

*****

யாருமறியா பராபரமே!

மேய்ச்சலுக்குப் போன சாலையில்

டாடா ஏஸின் மீதேறி

அடி மாடாகப் போவோம் என்பது

அந்த மாட்டிற்கும் தெரியாது

அந்த மாடு போன பிறகு

மாட்டுப்பால் என்று

பாக்கெட்டில் வரப் போகும்

ரசாயனப் பாலைப் பருகப் போகிறோம்

என்பது

மனிதர்களுக்கும் தெரியாது

எல்லாம் கடக்கும் சாலைக்கும் தெரியாது

விபத்துகளில் சிந்தும் ரத்தம்

எந்த ரசாயனத்தின்

எத்தனை அணு எண் நிறை எண் கொண்ட துளியென்று

*****

யாரும் அறியாத மென்மை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 31

யாரும் அறியாத மென்மை!

ஆவணி மாதத்து மாலை.

மெல்லிய சாரல்.

எஸ்.ஆர்.ஆர் கபேயில் அமர்ந்தபடி திருவாரூருக்கே உரிய வாசன் காபி தூளில் தயாரான காபியைக் குடித்துக்கொண்டிருந்தான் அவன்.

ஈரக் காற்றில் ஏதோ ஒரு மெல்லிய பூவின் வாசனை.

அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அவளது மேஜை மீது, ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையில் அனிச்ச மலர் வைக்கப்பட்ருந்தது. தொட்டாலே அல்லது முகர்ந்தாலே வாடிவிடும் அபூர்வ வகை அது.

அதைப் பார்த்ததும் அவனது நண்பன் தன் மொபைலில் அந்தப் பூவைப் பற்றி ஆர்வம் தாங்காமல் தேடிக் கொண்டிருந்தான்.

"டேய், இந்த அனிச்சப் பூ பத்தி கூகுள் பண்ணிட்டு இருக்கேன்டா. முகர்ந்து பார்த்தாலே வாடிடுமாம். எவ்வளவு சென்சிட்டிவ் பார்த்தியா? உலகத்திலேயே இதான் இருக்கறதுலயே ரொம்ப மென்மையான விஷயம்னு நினைக்கிறேன்." என்றான் நண்பன் ஆச்சரியத்துடன்.

அவன் காபியை ஒரு மிடறு உறிஞ்சிவிட்டு உரக்கச் சிரித்தான்.

"அடப்பாவமே! பூவை முகர்ந்தா வாடும்னா, நிச்சயம் என் எதிரே உட்கார்ந்திருக்க அவளைப் பார்த்திருக்க மாட்டான்."

எதிரே அமர்ந்திருந்த புருவத்தை உயர்த்தினாள். "என்ன? சும்மா இருந்த என்னை எதுக்கு வம்பு இழுக்கிறீங்க?"

"பின்ன என்ன? இந்த அனிச்சப் பூவெல்லாம் லோக்கல் மேட்டர். அன்னைக்கு ஒரு நாள் உன்கிட்ட, ஏய், இன்னைக்கு கொஞ்சம் டல்லா இருக்க போலன்னு சும்மாதான் கேட்டேன். அவ்வளவுதான். அன்னைக்கு ஈவினிங் வரைக்கும் மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு பேச்சையே நிறுத்திட்ட. கண்ணுல இருந்து டப் டப்னு தண்ணி கொட்டுது. குடம் வெச்சு பிடிச்சிருந்தா நாலு குடமாவது நிரம்பியிருக்கும்."

"சும்மா எதாச்சும் சொல்லணும்னு சொல்றதுக்காக, எதையாவது அடிச்சு விடாதீங்க!" என்றாள் அவள்.

நண்பன் சிரித்துக்கொண்டே இருவரையும் பார்த்தான்.

அவன் தன் காபி கப்பை கீழே வைத்துவிட்டு அவளது கண்களை நேரடியாகப் பார்த்தான். குரலில் இருந்த கேலி மறைந்து, ஒரு மெல்லிய ஆழம் கூடியது.

"அப்படியெல்லாம் அடிச்சு விடல. இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய தீசிஸே இருக்கு. அதாவது,

"நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்."         (குறள், 1111)

அப்படின்னு வள்ளுவர் ஒரு சூத்திரமே சொல்லியிருக்கார். அனிச்சப் பூவே! நீ நல்ல இயல்புடையவள்தான், ஆனா, நான் விரும்பும் என் காதலி உன்னை விட ரொம்ப மென்மையானவள்ன்னு தலைவன் பூகிட்ட சவாலே விடுறான்னா பார்த்துககோ!"

"அப்படியா சார்?" அவள் லேசாகச் புன்னகைத்தபடி, "அவ்வளவு மென்மையான பொண்ணா உங்க ஆளு? ஒரு வார்த்தை தவறா சொன்னாக் கூட உடனே வாடிடுவாளா?" எனக் கேட்டாள்.

"அது மட்டும் இல்ல!" அவன் குரலைச் சற்றே தாழ்த்தினான். "வள்ளுவர் சொன்னது வெறும் உடம்போட மென்மையைப் பத்தி மட்டும் இல்ல. மனசைப் பத்தி. இந்த அனிச்சப் பூவை முகர்ந்து பார்த்தாத்தான் வாடும். ஆனா என் காதலி இருக்காளே, அவளை ஏன் இப்படி இருக்கன்னு லேசாக நினைச்சுக் கேட்டாலோ, இல்ல நான் கவனிக்காம வேற பக்கம் என் பார்வை திரும்பினாலோ அவளோட மனசு வாடிடும். அந்தப் பூவை விட அவ அவ்வளவு மென்மையானவ!"

நண்பன் சூழலைப் புரிந்து கொண்டு அமைதியானான்.

அவளது குரலில் ஒரு மெல்லிய நடுக்கம் கூடியது. வேறு யாராவது பெண்ணைப் பற்றி இவன் சொல்கிறானோ என்ற சந்தேகம் வேறு மனதைப் போட்டு அரிக்க ஆரம்பித்து விட்டது. அத்துடன் மனதுக்குள் சின்னதாக ஒரு கோபமும் வந்தது. அதற்கு மேல் முடியாமல், அவள் வினவினாள், "யார் அந்தப் பொண்ணு?"

அவன் மேஜை மீதிருந்த அந்தச் சிறிய அனிச்சம்பூவை லேசாகத் தொட்டான். பூ தன் இதழ்களைச் சாய்த்துக் கொண்டது. பிறகு அவன் நிமிர்ந்து அவளது கண்களை நேராகப் பார்த்தான்.

"வேற யாரு? நீதான்!"

அவள் இமைகளைச் சிமிட்டினாள். அவளது கன்னங்களில் லேசான சிவப்பேறியது. மேஜை மீதிருந்த பூ வாடியதோ இல்லையோ, ஆனால் அவளது வெட்கப் புன்னகை சாரல் மழை பொழியும் அந்த மாலையை இன்னும் அழகாக மாற்றியது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

8 Sept 2026

இடையில் கொஞ்சம் இருக்கிறது மற்றும் இல்லை

காணாமல் போன கற்கள்

ஒரு குடத்தில்

கொஞ்சம் தண்ணீரைக்

காகத்திற்கு வைத்த காலம்

ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று

வாசகம் எழுதப்பட்ட

சுவரைத் தங்குவதற்காக

கற்களையெல்லாம்

காங்கீரிட்டாக்கி மூடியிருந்தது

*****

அவரவர்க்குத் தெரிந்த ரகசியம்

யாரோ சேமித்து வைத்திருந்ததை

பெருச்சாளிகள் தின்று விட்டுப் போகும்

பூனைகள் வந்து பிடித்து விட்டால்

இத்தனை நாட்கள் தப்பித்த

சாகசத்தை நினைத்துக் கொள்ளும்

சிக்கியது ஒன்று

சிக்காதது பலவென்று

பூனைகளுக்கும் தெரியும்

பூனைகளை வளர்ப்பவர்களுக்கும் தெரியும்

*****

இடையில் கொஞ்சம் இருக்கிறது மற்றும் இல்லை

கடைசியில் எல்லாம் இதற்குத்தானா என்று

எளிமையாகச் சொல்லி விடலாம்

இடையில் எத்தனை ஆசைகள்

எத்தனை சுயநலங்கள்

எத்தனை பழிதீர்த்தல்கள்

எல்லாம் கடந்து வந்த பிறகு தெரியும்

ஒன்றுமில்லை என்பதை

துவங்கும் போது

எப்படி இல்லையென்று துவங்க முடியும்

இருக்கிறதென்று துவங்கி

இல்லையென்று முடிப்பதைத் தவிர

வேறு வழியில்லை

*****

அறியாமையின் அழகியல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 30

அறியாமையின் அழகியல்

அந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பத்தாவது மாடியில், கணினியில், பைத்தானில், கடினமான நிரல் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தான் அவன். அவன் ஒரு தொழில்நுட்ப நிபுணன். உலகத்தின் சகல விஷயங்களையும் தர்க்கம், கணிதம், கணினி நிரல் என்ற கட்டுக்குள் அடைக்கப் பார்க்கும் விநோதன்.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அவன் எதிரே அமர்ந்திருக்கும் அவளிடம் எந்த தர்க்கமும் சுத்தமாக வேலை செய்யவில்லை.

அவள் அணிந்திருந்த வைரத் தோடு அறையின் விளக்கு வெளிச்சத்தில் அழகாக மின்னியது. கழுத்தில் பிளாட்டின சங்கிலி புன்சிரிப்பு பூப்பதைப் போலிருந்தது. தன் சுண்டு விரலால் தேநீர்க் கோப்பையைச் சுற்றி வந்து கொண்டிருந்தவள், கூந்தலைக் காதோரம் ஒதுக்கியபடி அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

"என்ன அப்படிப் பார்க்கறே?"

"உன்னைப்பற்றித்தான் யோசிக்கிறேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி, உன்னை முதல்முறை டிராபிக் சிக்னல்ல பார்த்தப்ப, ஓகே, இவ ஒரு சிம்பிளான பொண்ணு, ஐடி ஜாப், கிளாசிக் மியூசிக் பிடிக்கும், காரசாரமா காளான் தோசை சாப்பிடுவான்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது, உன்னைப் பத்தி எனக்கு எண்பது சதவீத டேட்டா கிடைச்சுடுச்சுனு நினைச்சேன்."

அவள் புன்னகைத்தாள். "இப்போ?"

"இப்போ உன்கூட பழகப் பழக, உன்னைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியலைனு புரியுது! நேத்து வரைக்கும் உனக்கு அமைதிதான் பிடிக்கும்னு நினைச்சேன், இன்னைக்கு மெட்டாலிகா ராக் இசை கேட்டுட்டு தலையாட்டுற. உனக்கு கோபம் வராதுனு நினைச்சேன், அன்னைக்கு அந்த ஆட்டோகாரன்கிட்ட நீ பேசுன ஹிந்தியைப் பார்த்து மிரண்டுட்டேன். உன்னை முழுசா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கும்போதெல்லாம், புதுசா ஏதோ ஒண்ணு தெரியுது. நீ ஒரு பெரிய அன்ப்ரெடிக்டபிள் அல்காரிதம்!"

அவள் தன் தேநீர்க் கோப்பையை உதட்டில் வைத்தபடி, லேசாகக் கண் சிமிட்டினாள். "அதுதானே காதல்?"

"நல்லதுதான், ஆனா ஒரு டெக்னாலஜி எக்ஸ்பர்ட்டுக்கு இது மிகப்பெரிய அடி!" என்றான் அவன் சிரித்தபடியே. "நம்ம ஊர்ல ஈராயிரம் வருஷத்துக்கு முன்னாடி வள்ளுவரும் இதே நிலைமையிலதான் இருந்திருக்காரு போல! அவரும் இதையேத்தான் சொல்றாரு!"

"அப்படி என்னதான் சொல்றாராம்?"

"என்ன சொல்றார்ன்னா,

"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு."              (குறள், 1110)

அப்படின்னு சொல்றாரு."

"அப்படின்னா?"

"விஷயம் எளிது. நாம நிறைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க, அடடா, நமக்குத் தெரியாத விஷயம் உலகத்துல எவ்வளவு இருக்குன்னு தோணும்ல? அறிவு பெருக பெருக நம்ம அறியாமை நமக்கு வெளிப்படும். அதே மாதிரிதான் சிறந்த நகைகளை அணிந்த பெண்ணாகிய உன்கிட்ட நான் நெருங்கிப் பழகப் பழக, உன்னைப் பற்றி நமக்கு இன்னும் எதுவுமே தெரியவில்லையேங்கிற அறியாமைதான் கூடுகிறது. காதலுக்கு எப்போதும் வயதாவது இல்லை; அது என்றும் புதுமை."

அவள் அவனைச் சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள். பிறகு தன் கைப்பையிலிருந்து ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

"இது என்ன?" அவன் குழப்பத்துடன் கேட்டான்.

"உனக்கு என்னைப் பற்றி எல்லாமே தெரிஞ்சிடுச்சுனு நீ நினைக்கிற ஒவ்வொரு முறையும், இந்த நோட்டைத் திறந்து படி. இதில் என் நூறு ரகசியங்கள் இருக்கு. தினமும் ஒன்னை மட்டும் படி."

அவன் ஆர்வத்துடன் அதைத் திறக்கப் போனான். அவள் அவனது கையைப் பற்றித் தடுத்தாள்.

"இப்போ வேண்டாம், வீட்டிற்குப் போய் நள்ளிரவில் முதல் பக்கத்தைப் படி."

அன்று நள்ளிரவு, தன் அறையில் அவன் ஆர்வத்தோடு அந்த நோட்டின் முதல் பக்கத்தைத் திறந்தான்.

அதில் அவளின் அழகான கையெழுத்தில் இப்படி எழுதியிருந்தது, ''இந்த நோட்டில் 100 ரகசியங்கள் இருக்கும் என்று நீ நம்பினாய் அல்லவா? அதுதான் என் முதல் ரகசியம். இதில் எந்த ரகசியமும் இல்லை, வெறும் வெற்றுப் பக்கங்கள்தான் உள்ளன. ஆயுசு முழுக்கப் படித்தாலும் முடியாத ஒரு புத்தகத்தை உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. என்னை ஆராய்வதை நிறுத்திவிட்டு, தொடர்ந்து நேசித்துக்கொண்டே இரு!''

அவன் உரக்கச் சிரித்தான்.

வெளியே வந்து, நிலா வெளிச்சத்தைப் பார்த்தபடி மனதுக்குள் நினைத்துக்கொண்டான் "வள்ளுவர் சொன்னது நிஜம்தான். காதல் ஒரு மாளாத புதிர்!"

*****

7 Sept 2026

காதல் என்னும் வெறிநாய் கடித்த காதலிகள்

காதல் என்னும் வெறிநாய் கடித்த காதலிகள்

உலகத்தில் எத்தனையோ விசித்திரமான ஆசைகள் இருக்கின்றன. காதலனுக்குக் கவிதை எழுதிக் கொடுப்பது பழசு; காத்தாடி பறக்க விடுவது அதையும் விடப் பழசு. கோவை மண்டலத்தைச் சேர்ந்த சில கல்லூரி மாணவிகளுக்குத் தங்கள் காதலர்களுக்கு பைக் வாங்கித் தருவதும், அவர்களுடைய கடனை அடைப்பதும்தான் ஆகச்சிறந்த காதலறமாகத் தெரிந்திருக்கிறது. அதுவும் சொந்தப் பணத்தில் இல்லை, தோழியின் வீட்டுப் பீரோவில் இருக்கும் நகையை லவட்டி!

பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது ஜாய் பிரியன்சி, பிகாம் படிக்கும் புத்திசாலிப் பெண். படிப்பு காம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ். ஆனால் நடைமுறையில் அவர் அப்ளை செய்தது தோழி வீட்டு நகையை அபேஸ் செய்யும் சிம்பிள் அப்ளிகேஷன். இரண்டு வாரங்களுக்கு முன்பு தோழியின் வீட்டிற்கு ஜாலியாகச் சென்றவர், பீரோவில் அநாதையாகக் கிடந்த 9 பவுன் நகையைப் பார்த்து நெகிழ்ந்துபோனார்.

காதலன் ஜனகன் சிவாவிற்கு ஒரு பைக் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற புனிதமான லட்சியம் அவர் நெஞ்சில் கனன்றுகொண்டிருந்தது. 9 பவுன் நகையை அப்படியே கடைக்குக் கொண்டு போய் இரண்டரை லட்ச ரூபாயாக மாற்றினார். உடனே காதலனுக்குப் புதிய பைக் வாங்கித் தந்து, "இந்தா பிடி என் காதலின் அடையாளம், ஆக்சிலரேட்டரை முறுக்கு!" என்று கொடுத்திருக்கிறார்.

விஷயம் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனது. ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் துப்பறிந்த போலீஸார், இறுதியில் ஜாய் பிரியன்சியை அரைமணி நேரத்தில் கண்டுபிடித்து கோவைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். பைக் வாங்கி ஜாலியாக வலம் வர நினைத்த காதலன் ஜனகன் சிவாவை இப்போது போலீசார் தேடப்படும் குற்றவாளியாகத் தேடி வருகிறார்கள். காதல் பைக் ஓட்ட வைத்ததோ இல்லையோ, இப்போது காதலனை ஊர் ஊராக ஓட வைத்துவிட்டது!

இதில் வேடிக்கை என்னவென்றால், செப்டம்பர் 1 ஆம் தேதிதான் போத்தனூரில் சிந்து என்ற எம்பிஏ மாணவி, தன் காதலன் பரணிதரனின் கடனை அடைப்பதற்காக முகமூடி அணிந்து வழிப்பறியில் ஈடுபட்டுக் கைதானார். அவர் வழியில் அதே பாணியில், இப்போது ஜாய் பிரியன்சியும் தோழி வீட்டில் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்.

காதலனின் ஆசையை நிறைவேற்றக் கொள்ளைக்காரியாக மாறும் மாணவிகள் ஒன்றை உணர வேண்டும். பீரோவில் நகையைத் திருடி பைக் வாங்கிக் கொடுத்தால், கடைசியில் பயணம் செய்வது என்னவோ அரசு வழங்கி இருக்கும் சிறை வாகனத்தில்தான்.

தோழிகளை வீட்டிற்கு அழைக்கும் கோவை மக்கள், இனி வரவேற்பறையிலேயே ஒரு மெட்டல் டிடெக்டரையும், பீரோவிற்கு டிஜிட்டல் பாஸ்வேர்டையும் போட்டு வைப்பது நல்லது. ஏனெனில், உங்கள் தோழிக்கு எந்த நேரத்தில் காதல் நோய் முற்றி, பைக் வாங்க ஆசை வருமென்று யாருக்குத் தெரியும்?

*****

ஈகோவின் அரையடி இடைவெளி

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 29

ஈகோவின் அரையடி இடைவெளி

மாலை நேரத்துப் பூம்புகார் கடற்கரை.

அலைகள் கரையைத் தொட்டுத் தொட்டுச் சென்றுகொண்டிருக்க, அந்தி வானத்தின் ஆரஞ்சு வெளிச்சத்தில் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்தன அந்தக் கடற்கரை மண்டபங்கள்.

சுற்றி நின்று சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவர்களின் சத்தத்திற்கும், கடல் அலைகளின் பேரிரைச்சலுக்கும் நடுவே, இவர்களுக்கிடையே மட்டும் ஒரு கனத்த மெளனம்.

மணலில் அவனும் அவளும் அமர்ந்திருந்தார்கள். நடுவே அரை அடி இடைவெளி.

பிரச்சனை ரொம்ப பெரிதெல்லாம் இல்லை. மாலை ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்குப் போய் விட்டு கடற்கரைக்கு வரலாம் என்று அவள் சொல்லியிருந்தாள். அவனுக்கு அலுவலகத்தில் திடீரென ஓர் அவசர கூட்டம். கூட்டத்தில் சொன்ன வேலையை அங்கேயே உட்கார்ந்து வேலையை முடிக்க முக்கால் மணி நேரம் தாமதமாகிவிட்டது.

வந்ததிலிருந்து அவள் பேசவில்லை. கடல் அலையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவளது அமைதி கல்மண்டபத்துச் சிலை போல எந்தப் பதிலும் இல்லாமல் இருந்தது.

"சாரிடி செல்லம். மேனேஜர் விடல. லேட் ஆயிடுச்சு," அவன் மெதுவாக ஆரம்பித்தான்.

மௌனம்.

கண்கள் அலைகளிலேயே நிலைத்திருந்தன.

"இங்க பாருடி, அட்லீஸ்ட் என்னை ஒரு தடவை பார்!"

"நான் உங்களைப் பார்க்கவே இல்லை. நீங்க கிளம்புங்க, லேட் ஆச்சுல்ல? ஆபீஸுக்கே போங்க!" குரலில் அண்டார்டிக்கா குளிர்.

அவன் சிரித்துக்கொண்டான். இந்த ஊடல் இருக்கிறதே அது ஆபத்தானது, அதே சமயம் அழகுமானது. இதே புகார் கடற்கரையில் கோவலனையும் மாதவியையும் பிரித்து விட்ட அழகிய பிசாசு அல்லவா இது! ஒரு சின்ன விலகல் கூட பெரிய இடைவெளி போலப் பயமுறுத்தும்.

மெதுவாக மணலில் நகர்ந்து அவள் அருகில் அமர்ந்தான். அவள் கொஞ்சம் தள்ளி நகர்ந்தாள். அவன் மீண்டும் நகர்ந்து அவளது தோளோடு தோள் உரசும் அளவுக்கு நெருங்கினான்.

"கோபமா செல்லம்?"

"இல்லை."

"பின்ன ஏன் மூஞ்சி கிரஷ் ஆன மொபைல் மாதிரி இருக்கு?"

அவள் அவனைத் திரும்பப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் குற்றச்சாட்டுகள். "உங்களுக்கு எப்பவுமே வேலைதான் முக்கியம். ஒரு வாரமா இதே போல காத்திருக்கேன். ஒரு நாளுக்குக் கூட நேரத்துக்கு வர மாட்டீங்க இல்ல. என்னை ரொம்பவே அலட்சியப்படுத்துறீங்க!"

"அய்யோ மேடம்! நாளைக்கு அந்த மேனேஜரை மூஞ்சுலேயே குத்தல. அப்புறம் பாருங்க. இனிமே என்னோட ஆல் இன் ஆல் மேனேஜர் நீதாண்டி செல்லம். மறுபடியும் மறுபடியும் சாரிடி. இதுதான் லாஸ்ட் அன்ட் லாஸ்ட் பார் எவர்." என்று சொல்லி அவளது விரல்களை மெல்லப் பற்றினான்.

அவள் கையை இழுக்க முயன்றாள். ஆனால் அவன் விடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.

அவள் மெல்ல அவனது தோளில் லேசாகக் குத்தினாள். அந்த ஒரு செல்லக் குத்தில் அவளது மொத்தக் கோபமும் கரைந்து போனது.

"பொய்யி!" என்றாள் லேசான புன்னகையோடு.

"நிஜமாடி! இனிமே ஆபீஸை விட நீதான் பர்ஸ்ட்." என்றபடி அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவளது தலை அவனது தோளில் சாய்ந்தது. பூம்புகாரின் கடற்கரைக் காற்றின் குளுமையில், அவளது விரல்கள் அவனது கைகளோடு பிணைந்து கொண்டன. கோபம் மறைந்து, இருவரின் இதயத்துடிப்பும் ஒரே நேர்கோட்டில் இணையத் தொடங்கியது.

ஊடலின் கசப்பு நீங்கி, காதலின் உணர்தல் கூட, அந்த மாலை நேரத்தில் அழகிய கவிதையானது.

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்."                 (குறள், 1109)

என்று கடற்கரை காற்று சொல்வது போல அக்காற்றின் குளுமையிலும் மெல்லோசையிலும் ஒரு சுகந்தம் கூடியிருந்தது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****