14 Aug 2026

விழுந்தமாவடியும், பேச்சிலர்களின் கல்லீரலும் – ஒரு கிராமியப் பொருளாதார ஆய்வு!

விழுந்தமாவடியும், பேச்சிலர்களின் கல்லீரலும்

– ஒரு கிராமியப் பொருளாதார ஆய்வு!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவது எப்படி என்று அரசு மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நாகப்பட்டினம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்துப் பெரியவர்கள் ஒரு மாபெரும் தத்துவார்த்தப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அங்கே வைக்கப்பட்டிருக்கும் பேனரின் சாரம்சம் இதுதான்.

"கல்யாணம் ஆகாத இளைஞர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம். குடிபோதையில் ரகளை செய்யும் திருமணமானவர்களுக்கு ரூ.5,000 அபராதம். குடிப்பவரைக் காட்டிக் கொடுத்தால் ரூ.2,000 பரிசு!"

இந்த அறிவிப்பைப் பார்த்ததும் எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் சில ஆழ்ந்த தத்துவக் கேள்விகள் எழுவது இயற்கை.

விழுந்தமாவடி பஞ்சாயத்தின் தர்க்கப்படி, மது அருந்துவது என்பது ஏதோ திருமணத்திற்குப் பின் மட்டுமே வழங்கப்படும் ஒரு சிறப்பு உரிமை போலத் தெரிகிறது.

ஓர் இளைஞன் கல்யாணம் ஆகாத வரை அவனது கல்லீரல் பஞ்சாயத்துக்குச் சொந்தமானது; கல்யாணம் ஆகிவிட்டால் அது அவன் மனைவிக்கும், தேவைப்பட்டால் பஞ்சாயத்தின் அபராத நிதிக்கும் சொந்தமானது.

"கல்யாணம் ஆகாதவன் எதற்காகக் குடிக்க வேண்டும்? அவனுக்குத்தான் வாழ்க்கையில் இன்னும் சோகங்களே ஆரம்பிக்கவில்லையே!" என்ற கிராமத்துப் பெரியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

அடுத்து, திருமணமான குடும்பஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனை இன்னும் சுவாரசியமானது.

அவர்கள் குடிக்கக் கூடாது என்று முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை; "குடித்துவிட்டு வீட்டிலோ பொது இடத்திலோ ரகளை செய்யக் கூடாது" என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒரு குடும்பஸ்தன் அமைதியாக, சாதுவாக, யாருக்கும் தொந்தரவு தராமல் தன் வீட்டுக் மூளையில் உட்கார்ந்து குடித்துவிட்டு அமைதியாகத் தூங்கிவிட்டால், அவருக்கு ரூ.5,000 அபராதம் கிடையாது! "குடியுங்கள், ஆனால் நாகரிகமாகக் குடியுங்கள்" என்ற இந்த ஐரோப்பியப் பாணி தாராளமயம் நாகப்பட்டினம் கிராமத்தில் பூத்திருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.

எல்லாவற்றையும் விடப் பிரமாதமான அறிவிப்பு என்னவென்றால், குடிப்பவரைக் காட்டிக் கொடுப்பவருக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை!

இது கிராமப்புறப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு மாபெரும் ஸ்டார்ட் அப் யோசனை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இனி கவலையே இல்லை. மாலை நேரங்களில் புதர் மறைவிலும், தென்னந்தோப்புகளிலும் லைவ் ஸ்ட்ரீமிங் கேமராவுடன் உளவு பார்த்தால் போதும்.

நீங்களே கணக்கு போட்டுப் பாருங்களேன். ஒரு பேச்சிலர் குடிப்பதைப் படம் பிடித்துக் கொடுத்தால், தகவல் சொல்பவருக்கு ரூ.2,000 என்றால், பஞ்சாயத்துக்கு நிகர லாபம் ரூ.3,000.

இதில் ஒரே ஒரு நடைமுறைச் சிக்கல் தான் இருக்கிறது. இரண்டு பேச்சிலர்கள் சேர்ந்து, "டேய், இன்று நீ குடி. நான் உன்னைக் காட்டிக் கொடுத்து 2,000 ரூபாய் வாங்குகிறேன். நாளைக்கு நான் குடிக்கிறேன், நீ என்னைக் காட்டிக் கொடு. வந்த காசில் இருவரும் அபராதத்தைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்" என்று ஓர் உடன்படிக்கை அமைத்துவிட்டால், பஞ்சாயத்து என்ன செய்யும் என்பதுதான் தெரியவில்லை.

இன்றைய சரியான முடிவு, நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று பேனரில் எழுதியிருக்கிறார்கள். உண்மைதான்.

டாஸ்மாக் மூலமாக அரசாங்கம் ஈட்டும் வருவாயை விட, ஊர் பஞ்சாயத்து அபராதம் மற்றும் காட்டிக் கொடுக்கும் ஊக்கத்தொகை மூலமாக ஈட்டும் வருவாய் அதிகமாகிவிட்டால், விரைவில் விழுந்தமாவடி தனது சொந்தக் செலவில் ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தையே அமைத்துவிடும்.

தமிழக அரசு இனி மதுவிலக்கு குறித்து ஆராய எந்தக் குழுவையும் போடாவிட்டாலும் பரவாயில்லை; விழுந்தமாவடி பஞ்சாயத்தாரைக் கூப்பிட்டு ஒரு அரை மணி நேரம் ஆலோசகர் கூட்டம் நடத்தினாலே போதும், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்!

*****

22 நிமிடங்களும் 2 உயிர்களும்!

22 நிமிடங்களும் 2 உயிர்களும்!

மனிதன் தன் வாழ்வில் சில காரியங்களைச் செய்கிறான். அதில் பெரும்பாலானவை அவனுக்கே புரிவதில்லை.

தஞ்சாவூருக்குப் பக்கத்தில் சுந்தரபெருமாள்கோவில் என்றோர் ஊர். ஊரின் பெயரைப் பார்த்தாலே தெரிகிறது, பெருமாள் அங்கு சௌக்கியமாகத்தான் இருக்கிறார். ஆனால், மனிதர்களுக்குத்தான் அவசரம்.

அவசரம் என்றால் சாதாரணமான அவசரம் அல்ல, மூடியிருக்கும் கேட்டைத் தாண்டித் தண்டவாளத்தைக் கடக்கும் அளவுக்கான அவசரம்.

அன்று இரவு, நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி அந்தியோதயா விரைவு வண்டி வந்துகொண்டிருந்தது. ரயில் வரும்போது கேட் மூடப்படும். இது உலகம் அறிந்த விதி.

ஆனால், ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த முதியவருக்கு உலக விதிகளை விட, தன் சொந்த அவசரம் பெரிதாகப் பட்டிருக்கிறது. மூடியிருந்த கேட்டைக் கடந்து அவர் தண்டவாளத்திற்குள் இறங்கினார்.

அங்கே ராகுல் என்றோர் இளைஞர் இருந்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். வயது முப்பது. ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. வடக்கிலிருந்து தெற்கிற்குப் பிழைக்க வந்தவர். அவருக்கு மனிதர்களைக் காப்பாற்றுவது தன் கடமை என்ற எண்ணம் இருந்திருக்கலாம்; அல்லது ஒர் உயிர் போகிறதே என்ற பதற்றம் இருந்திருக்கலாம்.

ரயில் மிக அருகில் வந்துவிட்டது.

முதியவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். ராகுல் எச்சரித்தார். கேட்கவில்லை. உடனே ராகுல் ஓடிச் சென்று அவரைத் தள்ளிவிட முயன்றார்.

இயற்பியலுக்குக் கருணை கிடையாது. மணிக்கு எண்பதோ, நூறோ கிலோமீட்டர் வேகத்தில் வரும் பல நூறு டன் இரும்பு, தர்மத்தையோ, தியாகத்தையோ பார்த்து வேகம் குறைப்பதில்லை.

ரயில் மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்கள்.

இப்போது சில கேள்விகள் எஞ்சுகின்றன.

அந்த முதியவர் யார்? அவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாரா, அல்லது வாழ்க்கையைக் கடந்துவிடலாம் என்று தற்கொலைக்கு வந்தாரா? போலீஸ் விசாரிக்கிறதாம்.

யாரோ ஒரு முகமறியாத முதியவரைக் காப்பாற்ற, ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமான ஓர் இளைஞன் தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். உலகம் இதை வீர மரண வரிசையில் சேர்க்கும்; குடும்பத்தினருக்கு அது ஆறாத துயரம். இந்த விபத்தால் அந்தியோதயா ரெயில் இரவு 11.45 முதல் 12.07 வரை. சரியாக 22 நிமிடங்கள் நின்றிருந்தது. இரண்டு உயிர்கள் முடிவுக்கு வரத் தேவையான நேரம் சில நொடிகள். அதனால் ரயில் தாமதமான நேரம் 22 நிமிடங்கள்.

மனித உயிர்களின் மதிப்பு என்பது என்ன என்ற கேள்வி, அந்த நள்ளிரவு அமைதியில் தண்டவாளத்தின் ஓரங்களில் சப்தமில்லாமல் மிதந்து கொண்டிருக்கிறது.

*****

எமன் வந்தக் கதையை யாருமே கேட்கவில்லை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 5

எமன் வந்தக் கதையை யாருமே கேட்கவில்லை!

மருத்துவமனை தாழ்வாரத்தில் மாலையின் நிழல்கள் நீளத் தொடங்கியிருந்தன. ப்ளோரசன்ட் வெளிச்சத்தில் ஆபரேஷன் தியேட்டர் போர்டு சிவப்பு நிறத்தில் பளபளத்துக்கொண்டிருந்தது.

அவன் சுவரில் சாய்ந்து மூச்சு வாங்க நின்றான். நியூரோ சர்ஜரி பிரிவில், மூளையின் நுண்ணிய நரம்புகளை கத்தியால் தொடும்போது கை ஒரு மில்லிமீட்டர் கூட நடுங்காத ஆசாமி அவன். எத்தனையோ எமர்ஜென்சிகள். ஒன்றில் கூட பதற்றப்பட்டு பார்த்ததில்லை. ஆனால், இப்போது அவனது பல்ஸ் ரேட் 120ஐ தொட்டிருந்தது.

காரணம், புது இளம் மருத்துவரான அவள்.

கையில் கோப்புகளுடன் அவள் கடந்து போகும்போது வீசிய அந்த அரை விநாடிப் பார்வை அவனது மனசுக்குள் குழப்பத்தைக் கிளப்பியிருந்தது. கையில் இருந்த ஸ்டெத்தாஸ்கோப் நழுவப் பார்த்தது.

"என்ன டாக்டர், ஆபரேஷன் தியேட்டர் வாசல்லயே நின்னு லோ போட்டரி ஆயிட்டு இருக்கீங்க?"

சத்தம் கேட்டுத் திரும்பினான் அவன். அங்கே அவனது நண்பன் நின்றிருந்தான்.

"டேய் மூளை அறுவை சிகிச்சை பண்ணும் போது கூட எனக்கு இவ்வளவு குழப்பம் வந்ததில்லைடா. இப்போ அவள் ஒரு பார்வை பார்த்தா பாரு." அவன் தயங்கினான்.

"யாரு, அந்த புது ஜூனியர் டாக்டரா? என்ன ஆச்சு?"

"என்ன பார்வை அது? உயிரை சட்டென்று உறிஞ்சி எடுக்கும் எமன் மாதிரியும் இருக்கு. மை தீட்டிய மனிதப் பெண் கண் மாதிரியும் இருக்கு. காட்டில் வழிதவறி மிரளும் பெண் மான் மாதிரியும் இருக்கு. மூணும் ஒரே பார்வையில் மிக்ஸ் ஆகி வந்தா எந்த மனுஷன் தாங்குவான்?" என்று புலம்பினான் அவன்.

அவனது நண்பன் லேசாகச் சிரித்தான். "டேய், நீ சொல்றது எனக்கு ரொம்பப் பழகின லாஜிக் மாதிரி இருக்கே! கொஞ்சம் பொறு, நாம கீழே மரத்தடிக்குப் போவோம்."

மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரத்தடிக்கு இருவரும் வந்தனர். அப்போது அங்கே இன்னொரு பெண் வந்தாள். அவள் அந்த மருத்துவமனையின் மூத்த ஆலோசகர். அவனது நண்பனின் காதலி.

"என்ன டாக்டர்ஸ், ஏதோ பெரிய அனாலிசிஸ் போயிட்டு இருக்கு போல?" என்றாள் நண்பனின் காதலி.

அவனது நண்பன் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சொன்னான், "இவன் இப்போதான் ஒரு பொண்ணோட பார்வையை அனலைஸ் பண்ணி குழம்பிப்போய் இருக்கான். ஆனா, இதுக்கு வள்ளுவர் அன்னைக்கே 1085 ஆவது குறள்ல ரிப்போர்ட் எழுதிட்டாருன்னு இவனுக்குத் தெரியல."

"நீயாவது தமிழ் படிக்கறதாவது?" நண்பனின் காதலி நண்பனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் கொஞ்சம் அசிடிக் ஆசிட், நிறைய சர்க்கரை.

"நிஜமாத்தான்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம்இம் மூன்றும் உடைத்து.                        (குறள், 1085)

இதுதான் அந்தக் குறள்," என்றான் அவனது நண்பன்.

அவன் நண்பனை அசந்து பார்த்தான். "டேய், நான் யோசிச்ச அதே மூணு விசயங்கள்!"

"ஆமாடா," அவனது நண்பன் விளக்கினான். "ஒன்று கூற்றம், அதாவது நம்ம உயிரை வாங்குற எமன். இரண்டாவது பிணை, அதாவது பெண் மான். அந்த மானோட மிரண்ட பார்வை. மூன்றாவது: மடவரல் நோக்கம், அதாவது எதுவுமே தெரியாத மாதிரி ஒரு அப்பாவித்தனமான பார்வை. இந்த மூன்றும் ஒரே நேரத்துல டிஸ்ப்ளே ஆகும்போது, அது யாரா இருந்தாலும் அவன் காலி. ஆமாடா அப்போ நியூரோ சர்ஜனான உன் கை நடுங்கும்; என்னோட இதயம் சுக்கு நூறா வெடிக்கும்!"

நண்பனின் காதலியின் கண்கள் லேசாகச் சுருங்கியது. "அப்போ நானும் இவனைத் தடுமாற வச்ச அந்த ஜூனியர் டாக்டரும் உங்களுக்கு எமனா?"

"விஷயம் அது இல்லை," அவனது நண்பன் சற்றே நீட்டி லெக்சர் அடித்தான். "அந்தப் பார்வையில எமன் இருக்கான். ஏன்னா அது எங்களை மொத்தமா காலி பண்ணுது. மான் இருக்கு. ஏன்னா அதுல ஒரு பயமும் அழகும் கலந்துருக்கு. அப்புறம் அந்த அப்பாவித்தனம். நான் என்ன பண்ணேன்ங்கிற மாதிரி ஒரு லுக். இந்த மூணும் சேரும்போது எந்த லாஜிக்கும் ஒர்க் ஆகாது."

நண்பனின் காதலி நண்பனைச் சற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இப்போது எமன் இல்லை; மான் மட்டுமே இருந்தது. "இப்போ நான் எப்படிப் பார்க்கறேன்?"

"இப்போவா? வள்ளுவர் தோத்துட்டாருன்னு நினைக்கிறேன்," என்றான் அவனது நண்பன்.

அப்போது அந்த மரத்தடியைக் கடந்து கோப்புகளுடன் கடந்து சென்று கொண்டிருந்தாள் அந்த இளம் டாக்டர். அவள் தன்னை அறியாமல் அவர்கள் நின்றிருந்த மரத்தடியை ஒருமுறை திரும்பிப் பார்க்க, மீண்டும் அதே ஹை வோல்டேஜ் ஷாக் அவனுக்குள் பாய்ந்தது.

அவன் தன் நண்பனைப் பார்த்துச் சொன்னான், "இல்லடா வள்ளுவர் தோக்கல, ஆனா நாம ரெண்டு பேரும் மொத்தமா தோத்துட்டோம்!"

அவர்கள் மூவரும் சிரிக்க அந்த மரத்தடி நிழலில் தமிழ் மறையின் அழகு மெல்ல உறைந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

13 Aug 2026

ரீல்ஸ், ரத்தம், கொஞ்சம் சினிமா!

ரீல்ஸ், ரத்தம், கொஞ்சம் சினிமா!

ஒரு சுத்தியல், ஒரு கத்தி, கொஞ்சம் மது, அப்புறம் ஒரு ஸ்மார்ட்போன் என இவை போதும். இன்றைய மனிதனின் இருண்ட பக்கத்தை வைரல் கன்டென்ட் ஆக்குவதற்கு வேறு என்ன வேண்டும்?

கோவையில் நடந்த ஒரு சம்பவம் வெறும் ஒரு குற்றப்பின்னணிச் செய்தி மட்டுமல்ல; அது நமது காலத்தின் மிகக் கொடூரமான பண்பாட்டு வீழ்ச்சி.

திரையில் ஒரு கதாநாயகன் சுத்தியலால் அடித்து ரத்தத்தை ருசித்தால் அது மாஸ் மாஸ் என்று திரையரங்கில் சீழ்க்கை ஒலியாக மாறுகிறது. அதே காட்சியை நிஜத்தில் ஒரு மனிதனைக் கொன்று, ரத்தத்தை நக்கி, சடலத்தின் மீது நடனமாடி ரீல்ஸ் போட்டால் அது சைக்கோத்தனம் எனச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறது. ஆனால், இந்த இரண்டுக்கும் நடுவே இருந்த நிஜம் – புனைவு எனும் எல்லைக்கோடு இப்போது முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது.

இப்போது மனிதர்களுக்குக் கோபத்தை வெளிப்படுத்தவோ, பகையைத் தீர்த்துக்கொள்ளவோ பெரிய காரணங்கள் தேவையில்லை. நாலு பேர் பார்க்க வேண்டும் என்ற ரீல்ஸ் வெறியும், சில நூறு லைக்குகளும் கிடைத்தால் போதும், எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள்.

கொலை செய்த பிறகு "தப்பு பண்ணி விட்டோமே" என்று பதறுவதற்குப் பதிலாக, "இதை எந்த ட்ரெண்டிங் பேக்ரவுண்ட் மியூசிக்குடன் எடிட் பண்ணலாம்?" என்று யோசிக்கும் நிலைக்கு மூளை மரத்துப் போய்விட்டது.

மது தலையில் ஏறும்போது விலங்குத்தனம் வெளிப்படும் என்பார்கள். ஆனால், அந்த மதுவோடு சேர்ந்து சோஷியல் மீடியா போதையும் சேரும்போது, மனிதன் மிருகமாகக்கூட மாறுவதில்லை; அதையும் தாண்டி கொடூரமாக மாறி விடுகிறான்.

சினிமா வன்முறையைக் கொண்டாடுகிறது, மக்கள் அதை அப்படியே நுகர்கிறார்கள். திரையில் பார்க்கும் கொடூரத்தை நிஜத்தில் செய்து பார்க்கத் தூண்டும் அளவுக்கு மனித மனங்கள் இவ்வளவு சலனப்படக்கூடியவையாகவா இருக்கின்றன? அல்லது, "எப்படிப் பிரபலமானாலும் பரவாயில்லை, வைரல் ஆனால் போதும்" என்ற நவீன மனநோய்க்கு மனித மனங்கள் அனைத்தும் பலியாகிவிட்டனவா?

ரத்தக் கறையுடன் கேமராவைப் பார்த்துச் சிரிக்கும் அந்த பிம்பம், இந்த டிஜிட்டல் சமூகம் உருவாக்கிய ஆகச்சிறந்த பிரம்மாண்டக் கண்ணாடி.

கலையை ரசிப்பதற்கும், அதை வெறியாக மாற்றுவதற்கும் இடையே இருந்த மெல்லிய கோட்டை மனிதர்கள் எப்போதோ தாண்டி விட்டார்கள். இனி கதறல்களும், குருதியும் கூட யாரோ ஒருவரின் டைம்லைனில் 15 செகண்ட் என்டர்டெயின்மென்ட் ஆக மாறினாலும் மாறக் கூடும்.

*****

அதிவேகமாகப் பெரியவர்களாகும் கலை!

அதிவேகமாகப் பெரியவர்களாகும் கலை!

பள்ளி என்பது மனிதர்களை உருவாக்கும் புனிதமான கலைக்கூடம் என்பார்கள். ஆனால், தமிழகத்தின் ஓர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அது சற்றே வேறுவிதமான வேதியியல் பரிசோதனைக்கூடமாக மாறியிருக்கிறது.

அங்கு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியும் பீடி புகைத்திருக்கிறார்கள்.

காரணம் மிக எளிது.

மனிதர்களுக்குத் தங்களை உடனே பெரியவர்களாகக் காட்டிக்கொள்வதில் எப்போதும் ஒரு தீராத அவசரமும், ஆபத்தான கவர்ச்சியும் இருக்கிறது.

சிகரெட் என்பது முதலாளித்துவத்தின் அடையாளம் என்றால், பீடி என்பது பாட்டாளி வர்க்கத்தின் மிகச் சுருக்கமான, மலிவான புகை வடிவம்.

சுவருக்குப் பின்னால் ஒளிந்து நின்று, சுற்றிலும் யாரும் பார்க்கிறார்களா என்று கண்ணை உருட்டிப் பார்த்துப் புகையை விடுவதில், அந்த 15 வயதில் ஒரு சர்வதேசப் புரட்சி செய்த திருப்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடும்.

ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு அந்தப் புரட்சி மனப்பான்மை புரியவில்லை. அவர் வழக்கமான இந்தியப் பண்பாட்டின் பிரதிநிதி. உடனே பெற்றோரைக் வரவழைத்தார். "உங்கள் பிள்ளைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள்!" என்று கூறி விட்டார்.

பெற்றோர்கள், வழக்கம் போலப் பிள்ளைகள் செய்த தவறுக்காக, தாங்களே தவறு செய்தது போல வருத்தம் தெரிவித்துப் பிள்ளைகளை மீட்டுச் சென்றார்கள்.

பிரச்சினையே அங்கிருந்துதான் தொடங்குகியது.

தவறு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை விட, "சே! நம்ம ரகசியம் இப்படி அசிங்கமாக அம்பலமாகி விட்டதே!" என்ற தன்முனைப்பு அந்த மாணவிகளை அதிகம் வாட்டியிருக்கிறது. சுயமதிப்பு போன கவலையில் மாணவிகள் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அடுத்த நாள், ஒரு மாணவி தன் தந்தையின் ரத்த அழுத்தத்திற்குப் போடும் பிபி மாத்திரைகளைக் கொண்டுவந்தார். அப்பாவுக்கு பிபி ஏறும்போதெல்லாம் போடும் மாத்திரை அது.

"வாழ்க்கையே போயிற்று, இனி வாழவே கூடாது" என்று முடிவெடுத்த அந்த மூன்று மாணவிகளும், அதை ஏதோ சாக்லேட் சாப்பிடுவது போல அளவுக்கு அதிகமாக அள்ளிச் சாப்பிட்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரையானது வாழ்க்கையின் அழுத்தத்தைக் குறைத்து, தங்களை நேராக மேலோகத்திற்கு அனுப்பிவிடும் என்று அவர்கள் நம்பியிருக்கக் கூடும்.

அடுத்த சில நிமிடங்களில் தலைச்சுற்றல், மயக்கம். "நாங்கள் பிபி மாத்திரை சாப்பிட்டோம்" என்று பெருமையாக மற்ற மாணவிகளிடம் சொன்ன பிறகுதான், பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பிபி ஏறியது.

பதறிப்போன ஆசிரியர்கள் அவர்களை அரசு மருத்துவமனைக்குத் தூக்கி ஓடியிருக்கிறார்கள். அங்கிருந்து அரசு மருத்துவக் கல்லூரி வரை ஆம்புலன்ஸ் சத்தங்கள் அலறத் தொடங்கியிருக்கின்றன.

மருத்துவமனையில் இப்போது தீவிர சிகிச்சை நடக்கிறது. மாணவிகள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள். ஆனால், "குழந்தைகளை எப்படி வளர்ப்பது?" என்ற கேள்வியிலிருந்து இந்தச் சமூகமும், குடும்பங்களும், பள்ளிகளும் எப்படிப் பிழைத்துக் கொள்ளப் போகின்றன என்பதுதான் தெரியவில்லை!

*****

விழி வழி வைரஸ்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 4

விழி வழி வைரஸ்!

குளிர் சாதன அறையின் சீதளக் காற்று. சுற்றிலும் கருப்புத் திரைகளில் சி++ குறியீடுகளின் பச்சை வெளிச்சம்.

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையின் முன்னணி மென்பொருள் கம்பெனியின் மென்பொருள் பொறியாளன் அவன். வாட்ஸப் சர்வர் டவுன் ஆனாலும் சரி, ஹேக்கர்கள் நெட்வொர்க்கை ஸ்தம்பிக்க வைத்தாலும் சரி மூளையின் நியூரான்களைத் தட்டி ஒரே நிமிடத்தில் தீர்வு கண்டுவிடும் டெக் ஜீனியஸ். பன்னாட்டு கருத்தரங்குகளில் அவனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமெரிக்க வல்லுநர்கள் வியர்த்துக் கொட்டியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவன், இன்று தன் மானிட்டருக்கு முன்னால் டோட்டல் ப்ரீஸ் ஆகி நின்றிருந்தான்.

காரணம், அவனுக்கு எதிரே உட்கார்ந்திருந்த அவள்!

அவள் ஆர்கானிக் அமைதி. ஜீன்ஸ், காட்டன் டாப்ஸ். முகத்தில் மேக் அப் என்ற செயற்கை பூச்சுகளின் எந்த சுவடும் இல்லை. மிகவும் எளிமையான, நேர்த்தியான சுடிதாரின் அழகு தேவதை.

அவன் தன் லேப்டாப் ஸ்கிரீனின் ஓரத்தால் அவளைக் கண்களால் ஸ்கேன் செய்தான். அவள் தன் கமாண்ட் லைன்களில் மூழ்கியிருந்தாள். திடீரென நிமிர்ந்து, அவனது கண்களை நேராய்ச் சந்தித்து, "ஹலோ, இந்த கோடுல ஒரு லாஜிக்கல் எரர் வருது கொஞ்சம் செக் பண்றீங்களா?" என்றாள்.

அந்த நொடி.

அவளது அமைதியான விழிகளிலிருந்து பாய்ந்த அந்த ஒரு பார்வை அவனது மூளையின் சிபியூவை ஓவர்ஹீட் ஆக்கி, நெஞ்சுக்குள் 440 வோல்ட் மின்சாரத்தைப் பாய்ச்சியது!

பக்கத்தில் வந்த அவனது நண்பன், இவனது விரல்கள் கீபோர்டின் மேல் ஹேங் ஆகி நிற்பதைப் பார்த்து உரக்கச் சிரித்தான்.

"என்ன மச்சான்? ரஷ்யன் ஹேக்கர்களோட டிடாஸ் அட்டாக்கையே அசால்ட்டா தூக்கிச் சாப்பிடுற நம்ம கூகுள் லெவல் ஜீனியஸ், ஒரு சின்னப் பொண்ணோட க்யூட் பார்வையில மொத்தமா சிஸ்டம் க்ராஷ் ஆகி நிக்கிறான்?"

அவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் மடிக்கணினியை மூடி வைத்தான்.

"டேய் மச்சான்! நான் எத்தனையோ பக்குகளை கிளீன் பண்ணவன்டா. ஆனா அவளோட பார்வையைப் பாரேன். எந்தக் கெமிக்கலும் இல்லாத நேச்சுரல் ப்ளோ! ஆனா அந்த அமைதியான கண்கள்ல இருந்து வந்த லேசர் பார்வை. என் ஹார்ட்-டிஸ்க்கோட கண்ட்ரோலையே அன்ஆதரைஸ்டா ஹேக் பண்ணிடுச்சுடா!"

நண்பன் தன் தோளைக் குலுக்கிச் சிரித்தான்.

"டேய், இதுக்குத்தான் நம்ம திருவள்ளுவர் அன்னைக்கே ஓர் அல்காரிதம் எழுதி வச்சார். 

"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்."         (குறள், 1084)

பெண்களோட கண்கள் இருக்கே. அதுவும் காதலியோட கண்கள் இருக்கே. அது சாதாரணபட்டது இல்ல. உயிரைப் பறிக்கும் ஆயுதம்!

ஆனா என்ன ஆச்சரியம்னா? இவ்வளவு ஆபத்தான அழகை வச்சுக்கிட்டு, அந்தப் பெண் ரொம்ப வெகுளியா, அப்பாவித்தனமா அமைதியா இருக்குறா இல்ல.

இன்னும் உனக்குப் புரியும்படி உன்னோட பாஷையிலேயே சொல்லணும்னா, அது மிகவும் எளிமையான, ஆபத்தில்லாத ஒரு க்ளீன் யூஸர் இன்டர்பேஸ். ஆனால், அதோட பின்னணியில இயங்குற கோட் இருக்கே அது கம்ப்யூட்டரையே கம்ப்ளீட்டா ஹேக் பண்ணி முடக்கிவிடும் அளவுக்கு ஆபத்தானது!

இதுக்கு மேலயும் இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, அமைதிங்கிற சர்வர்ல, அழகுங்கிற மால்வேர் லோட் பண்ணி, உன் உயிரையே ஹேக் பண்ற மாய ஆயுதம்டா அது!"

அவள் மீண்டும் ஒருமுறை திரையிலிருந்து நிமிர்ந்து, அவனைப் பார்த்து மிகவும் லேசாகப் புன்னகைத்தாள்.

மென்பொருள் உலகத்தின் சூப்பர் கம்ப்யூட்டர் போன்ற அவன், அந்த எளிய பெண்ணின் அமைதியான விழிப் பார்வையில் தன் சோர்ஸ் கோடை மொத்தமாக இழந்து, எந்தப் புகாருமின்றிச் அமைதியானான்!

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

12 Aug 2026

மீண்டும் மீண்டும் எமன்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 3

மீண்டும் மீண்டும் எமன்!

மழையின் சாரலும், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் எஸ்.ஆர்.ஆர் கபேயின் காபி மணமும் கலந்திருந்த அந்தச் சாயங்காலம், அவனுக்கு வழக்கமான ஒன்றல்ல. அவனது இதயத்தின் இயக்கம் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் மாலையாக அது அமையப்போகிறது என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

அவன் தன் நண்பனிடம் தத்துவ மழை பொழிந்துகொண்டிருந்தான்.

"எமதர்மன் எப்படி இருப்பான்? கருப்பான மேனி, தலையில் கிரீடம், கையில் பாசக்கயிறு. இதெல்லாம் சினிமாக்காரன் கிளப்பிவிட்ட பேண்டஸி மச்சி. மரணம்ங்கிறது ரொம்ப சிம்பிள். அது ஒரு கார்டியாக் அரெஸ்ட், இல்லனா பிரேக் பெயிலியர் ஆகி ஓர் ஆக்சிடென்ட். அவ்வளவுதான்!"

அப்போது அவன் மணிக்கட்டில் இருந்த ஆப்பிள் வாட்ச், இதயத் துடிப்பை 72 என்று அமைதியாகக் காட்டிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் சாரல் மழையில் லேசாக நனைந்தபடி, ப்ளோரல் பிரின்ட் காட்டன் புடவையில் உள்ளே நுழைந்தாள் அவள். தோளில் லேப்டாப் பேக், கையில் ஒரு மணி பர்ஸ் என மிக எளிமையாகத்தான் வந்தாள்.

ஆனால், அவளைப் பார்த்ததும் அவனது பேச்சு சட்டென்று நின்றது.

அவள் இவர்கள் இருவரையும் எதிர்கொண்ட போது, தலைதிருப்பி அவனைப் பார்த்தாள்.

அது சாதாரணப் பார்வை அல்ல. மை தீட்டிய அந்தப் பெரிய, கூர்மையான கண்கள். ஒரே ஒரு நொடி அவனை நேருக்கு நேராக ஊடுருவின. அந்த விழிகளுக்குள் ஒரு பேரழகின் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. அதில் வன்முறையில்லை, ஆனால் சுண்டி இழுக்கும் விவரிக்க முடியாத அதிகாரமும் குறும்புச் சிரிப்பும் இருந்தது!

அடுத்த நொடி அவனது மூளை ஹேங் ஆனது. பேச வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே உறைந்தன.

அவன் கை கடிகாரம் திடீரென அதிர்ந்தது. வார்னிங் ஹை ஹார்ட் பீட் டிடெக்டெட் 142 என்று காட்டியது.

அவள் உதட்டின் ஓரத்தில் மெல்லிய புன்னகையோடு, அவர்களுக்கு எதிரே இரண்டு மேசை தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் கேட்க, சட்டென்று சர்வர் கொண்டு வந்த மண மணக்கும் அந்தக் கபே காபியைப் பருகத் தொடங்கினாள்.

இப்போது, அவனது நண்பன் தன் காபியை ஒரு சிப் அடித்து விட்டு உரக்கச் சிரித்தான். காதோடு காதாகக் கிசுகிசுப்பாக, "என்னப்பா. எமன்னா என்னன்னு சயின்ஸ் லெக்சர் குடுத்துட்டு இருந்த? இப்போ என்னடான்னா மூச்சு வாங்கறதையே நிறுத்திட்டு செத்துப் போனவன் போல உட்கார்ந்திருக்கிறே?"

எதிரே அவள் அமர்ந்திருந்தாலும், அவன் தன் போனை எடுத்து அவளுடைய இன்ஸ்டாகிராம் ப்ரொபைலைத் திறந்தபடி தன் நெஞ்சைத் தடவிக்கொண்டான்.

"டேய், எமன்னு ஒருத்தன் இருக்கான்னு நான் இதுவரைக்கும் புத்தகத்துலதான் படிச்சிருக்கேன். ஆனா அவனுக்கு நிஜமாவே உருவம் இருக்குடா. அதுவும் இவ்ளோ அழகா, ப்ளோரல் பிரின்ட் புடவை கட்டிக்கிட்டு வரும்னு நான் கனவுல கூட யோசிச்சதில்ல! அந்த பெரிய, கருப்பான கண்ணுல என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு. என் நெஞ்சுல யாரோ கடப்பாரையை வச்சுத் தோண்டுன மாதிரி ஆயிடுச்சுடா!"

நண்பன் மீண்டும் சிரித்தான். "அடப்பாவி, வள்ளுவர் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே,

"பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு"            (குறள், 1083)

என்று குறள் எழுதிட்டாருடா. அதுக்கு உன்னை மாதிரி ஒரு காதலில் விழுந்த பையன் இவ்ளோ மாடர்ன் பிராக்கெட் போடுவான்னு அவரு நினைச்சிருக்க மாட்டாரு!"

"அட, வள்ளுவர் என்ன சொன்னாரோ எனக்குத் தெரியாது மச்சி," என்றான் அவன். "எனக்கு எமன் எப்படி இருப்பான், எப்படி உயிரை எடுப்பான்னு இதுவரைக்கும் தெரியாது. ஆனா இப்போ தெரியுது. ஒரு பொண்ணோட வசீகரமும், அவளோட அந்த மிடுக்கான, போர்க்களம் போன்ற பெரிய கண்ணும்தான் என் உயிரை அசால்ட்டா தூக்குற எமன்னு! "

காபியைக் குடித்து முடித்த அவள், இவர்களை நோக்கி நடந்தாள். அவனைக் கடக்கும் போது, அதே பேரமர்க் கண்களால் அவனைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள்.

அவன் நண்பனின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு முணுமுணுத்தான்:

"மச்சி எமன் மறுபடியும் ரீ என்ட்ரிடா. எமன் ஒன்னும் கொடூரமான உருவத்துல வரமாட்டான். பெண்களுக்கே உரித்தான பேரழகோட, ரெண்டு பேரழகான கண்ணால நம்மை மொத்தமா காலி பண்ணத்தான் வருவான். ஆனா, இந்த எமன் கிட்ட உயிரைக் கொடுக்கிறதுல ஒரு தனி சுகம் இருக்குடா!"

ஐந்து ரூபாய் டிப்ஸோடு சர்வருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லி விட்டு அவள் கபேயை விட்டுக் கிளம்பி விட்டாள். ஆனால், அவனுக்கோ அவளருகில் அமர்ந்து அவள் காபி குடித்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. அந்த நினைவிலேயே அவன் பிரக்ஞையற்றுப் போன சவம் போல அமர்ந்திருந்தான்.

நண்பன் தன் தலையில் அடித்துக் கொண்டு பாதி குடித்த காபி கோப்பையைப் பார்த்தான். இவர்களின் பேச்சைப் பொறுக்க முடியாமல் அதில் ஓர் ஈ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தது. நிஜமாகவே அங்கே எமன் வந்திருக்கத்தான் வேண்டும், அந்த ஈயின் உயிரை எடுக்க.

*****