4 May 2026

கிளாட் மித்தோஸ் – வங்கிகளின் டிஜிட்டல் ஜுரம்!

கிளாட் மித்தோஸ் – வங்கிகளின் டிஜிட்டல் ஜுரம்!

உலகில் திருடர்கள் எப்போதும் அப்டேட்டடாகவே இருக்கிறார்கள்.

நாம் கையில் இருக்கும் சில்லறையை எண்ணுவதற்குள், அவர்கள் நம் வங்கிச் சேமிப்பை பிட் காயினாக மாற்றி விண்வெளிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இப்போது அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் வில்லன் கிளாட் மித்தோஸ்.

அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் இதை உருவாக்கியது. ஆரம்பத்தில் மென்பொருளில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அடைக்க உதவும், என்றுதான் இதைப் பற்றிச் சொன்னார்கள்.

ஆனால், ஓட்டை எங்கே இருக்கிறது என்று தெரிந்தால், அதை அடைக்கிறவர்களை விட, அந்த ஓட்டை வழியாக உள்ளே புகுந்து கல்லாவைத் தேடுகிறவர்களுக்குத்தான் ஆர்வம் அதிகம் என்பது நம் ஊர் சைபர் விதிகளில் ஒன்று.

மனிதக் கண்களுக்குப் புலப்படாத, ஏன் 27 ஆண்டுகளாக ஒரு மென்பொருள் நிபுணருக்குக் கூடத் தெரியாத சிறிய பிழையைக் கூட இந்த மித்தோஸ் ஒற்றை நொடியில் மோப்பம் பிடித்துவிடுகிறதாம்.

இது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும், மறுபக்கம் வங்கிகளுக்கு திகில் கிளப்பியிருக்கிறது.

வீட்டுச் சாவி துவாரத்தில் ஒரு சின்ன விரிசல் இருந்தால் கூட, அதை ஒரு பெரிய வாசலாக மாற்றி உள்ளே நுழையும் வித்தை இந்த மித்தோஸ்க்குத் தெரியும்.

இது தேசவிரோதிகளின் கையில் கிடைத்தால்?

வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணம், நீங்கள் கண் இமைக்கும் நேரத்தில் மாயா பஜார் ஆகிவிடும்.

இந்த ஏ.ஐ பூதத்திடம் இருந்து தப்பிக்க, இப்போது வங்கிகள் தங்களின் பாதுகாப்புச் செலவுகளை வாரி இறைக்க முடிவு செய்துள்ளன.

புதிய சவால்கள் வந்துவிட்டன, எனவே ஐ.டி துறையில் முதலீட்டை அதிகரிக்கிறோம் என்று பொதுத்துறை வங்கிகளே அலறுகின்றன.

அதாவது, திருடன் அதிநவீன கார் வாங்கினால், நாமும் வேகமான ஜீப் வாங்க வேண்டும் என்ற எதார்த்தம்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்க தனியார் வங்கிகளும் தயாராகி விட்டன.

என்ன செய்யப்போகிறது அரசு?

இந்தியாவில் டிஜிட்டல் கைது, போலி க்யூ ஆர் கோடு என ஏற்கெனவே திருடர்கள் கிரியேட்டிவிட்டியில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த கிளாட் மித்தோஸ் அவர்களுக்குக் கிடைத்தால் அது குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டையாக மாறிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தொழில்நுட்பம் வளர வளர, நம் பணத்தைப் பாதுகாப்பதற்கான செலவும் வளர்ந்துகொண்டே போகிறது.

திருடனிடமிருந்து தப்பிக்க நாம் செலவு செய்யும் பணத்தை விட, வங்கியின் லாபம் குறைவாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

அது என்னவென்றால்,

உங்கள் ரகசியக் குறியீடுகளை யாரிடமும் பகிராதீர்கள். ஏனென்றால், மித்தோஸ் மென்பொருள் ஓட்டையைத் தேடும், ஆனால் மனிதர்கள் இன்னமும் அப்பாவித்தனமான மனிதர்களையே தேடுகிறார்கள்!

*****

ஏஐ மற்றும் எத்திக்ஸ் – ஒரு டேஞ்சர் ரிப்போர்ட்!

ஏஐ மற்றும் எத்திக்ஸ் – ஒரு டேஞ்சர் ரிப்போர்ட்!

கொரோனா வைரஸை லேபில் வைத்து ஏதோ ஆல்டர் பண்ணப்போய், உலகம் முழுக்க மாஸ்க் போட்டுக்கொண்டு அலைந்தோம். அது ஒரு டிரெய்லர் தான்.

நிஜமான படம் ரொம்பப் பழையது. முதல் அணு குண்டை வெடித்தபோது அதன் பிதா ஓப்பன்ஹைமர் சொன்னார், நானே மரணம், உலகங்களை அழிப்பவன் என்று. அவர் சும்மா கவிதை சொல்லவில்லை, நிஜத்தைச் சொன்னார்.

மனுஷன் எதையாவது கண்டுபிடிப்பான், அப்புறம் அதை வைத்து அவனே அழிந்துபோவான். தொழில்நுட்பம் என்கிற புலிக்குக் கடிவாளம் போடத் தெரியாமல் அதன் வால் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது உலகம்.

கம்ப்யூட்டர் வளர்கிறது, ஆனால் நம் அறிவு?

இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒருமுறை சொன்னார், யார் செயற்கை நுண்ணறிவில் கில்லாடியோ, அவர்தான் உலகத்தையே ஆளுவார். இது சும்மா சயின்ஸ் பிக்‌ஷன் கிடையாது, எதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது.

நாளைக்கு உங்களை யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், உங்களை எக்கனாமிக் சிஸ்டத்தில் இருந்தே டெலீட் பண்ணும் அதிகாரம் அந்த அல்காரிதத்திற்கு உண்டு. உளவு பார்ப்பது, சுதந்திரத்தைப் பறிப்பது என செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐயின் லிஸ்ட் நீளுகிறது.

சிக்மண்ட் பிராய்ட் ஒரு கேள்வி கேட்டார், நவீன வாழ்க்கை நம்மைச் சந்தோஷமாக வைத்திருக்கிறதா?

இவ்வளவு நவீன கண்டுபிடிப்புகள் வந்த பிறகும் நாம் ஏன் சந்தோசமாக இல்லை?

ஒவ்வொரு புது கண்டுபிடிப்புக்கும் ஒரு பின்விளைவு உண்டு.

டெலிபோன் வந்தது. தூரத்தில் இருப்பவர்களுடன் பேசினோம், ஆனால் பக்கத்தில் இருப்பவர்களைப் பிரிந்தோம்.

மருத்துவம் வளர்ந்தது. மக்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள், ஆனால் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஏஐ வருகிறது. வேலைகள் எளிதாகிறது, ஆனால் நாம் வெறும் டேட்டா ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

சிக்கல் என்னவென்றால், இங்கே ஒரு பெரிய கேப் இருக்கிறது.

டெக்னாலஜி தெரிந்தவனுக்கு எத்திக்ஸ் தெரியாது. எத்திக்ஸ் தெரிந்த தத்துவவாதிக்கு டெக்னாலஜி தெரியாது.

கணினி விஞ்ஞானிக்கு அடுத்த கோட் எப்படி எழுதுவது என்பதுதான் குறி. தத்துவவாதிக்கோ காண்ட் சொன்னாரா, மில் சொன்னாரா என்ற தர்க்கம். இரண்டு பேரும் இரண்டு துருவங்கள்.

தத்துவவாதியிடம் பார்முலா இருக்கிறது, விஞ்ஞானியிடம் எண்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டு பேரையும் ஒரே ரூமில் உட்கார வைக்க யாருமே இல்லை.

அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்? கவலைப்படாதீர்கள், எத்திக்ஸ் கமிட்டி பார்த்துக்கொள்ளும், என்று கூலாகச் சொல்வார்கள். நிஜத்தில் அந்த கமிட்டிக்கே அங்கே என்ன நடக்கிறது என்று புரியாது.

ஓப்பன்ஹைமர், அதாகப்பட்டவர் அணுகுண்டின் தந்தை ஒரு விஷயம் சொன்னார், ஏதாவது ஒன்று தொழில்நுட்ப ரீதியாக இனிப்பாக இருந்தால், அதைச் செய்துவிடுவோம். அதன் பிறகுதான் அது சரியா தவறா என்று யோசிப்போம் என்று.

அணு குண்டு அப்படித்தான் வந்தது. இன்டர்நெட் அப்படித்தான் வந்தது. இன்டர்நெட்டை உருவாக்கியவர்கள் அது நாளைக்கு ஆபாசப் படங்கள் பார்க்கவும், கடத்தல்காரர்களுக்கும் பயன்படும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இப்போது ஏஐயை கட்டவிழ்த்து விட்டுவிட்டு, அய்யோ, தப்பு பண்ணிட்டோமோ? என்று பின்னால் யோசிப்பது கேலிக்கூத்து.

தொழில்நுட்பம் வார்ப் ஸ்பீடில் போகிறது. நம்முடைய தார்மீகச் சிந்தனையோ ஆமை வேகத்தில் நகர்கிறது.

இனிமேல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்கிற ரிலேட்டிவிசம் வேலைக்கு ஆகாது. ஒரு பொதுவான, வலிமையான அறநெறி விவாதம் தேவை. அதுவும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் விவாதமாக இருக்க வேண்டும்.

யாரோ ஒரு கமிட்டி பார்த்துக்கொள்ளும் என்று விடுவதை விட, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தத் தொழில்நுட்பத்தை அனுமதிக்கலாம், எதை நிராகரிக்கலாம் என்று முடிவெடுக்கும் பில்டர் நமக்குத் தேவை.

ஏனென்றால், சுவிட்ச் நம் கையில் இருக்கும்போதுதான் நாம் மனிதர்கள். அது அல்காரிதம் கைக்குப் போய்விட்டால் நாம் வெறும் ஜீரோக்கள்தான்!

*****

3 May 2026

மகுடம் சூட்டிக்கொள்ளும் மந்தைகள்!

மகுடம் சூட்டிக்கொள்ளும் மந்தைகள்!

தலைமைப்பண்பு என்பது ஒரு ரசாயன மாற்றம். அதாவது, ஒரு தலைமை நிர்வாகி நினைத்தால் தகரத்தையும் தங்கமாக்குவார். இரசவாதம் எல்லாம் அந்தக்காலத்தோடு போய்விட்டது என்று நினைத்து விடாதீர்கள். அது தலைமையேற்பவர்கள் நினைத்தால் சாத்தியமாகக் கூடியதுதான்.

நிர்வாகம் என்பது ஒரு தவம். ஆனால் நம் ஊரில் பலருக்கு அது ஒரு தப்பித்தல். பதவி வந்ததும் சிலர் தங்களைச் சுற்றி ஒரு பெரிய கோட்டையை எழுப்பிக்கொண்டு, உள்ளே ஒளிந்துகொள்வார்கள்.

நல்ல தலைமை இல்லாவிட்டால், மோசமான அல்லது செயல்படாத நிர்வாகம் உருவாகும். ஆகத் தலைமையிடங்களை வெற்றிடங்களாக நீடிக்க விடக் கூடாது.

தமிழ்நாட்டில் இன்சார்ஜ் என்ற பெயரில் பல இடங்கள் பல துறைகளில் காலியாக இருக்கின்றன.

ஒரு எம்.எல்.ஏ செத்துப்போனால் உடனே தேர்தல் நடத்திப் புது ஆளைப் போடுகிறார்களே, அதே வேகம் ஏன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் இல்லை? ஒருவேளை, துணை இல்லாத வேந்தர்கள்தான் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்று நினைக்கிறார்களோ என்னவோ!

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்தத் தலைமை குறித்துக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். தலைமையில் மூன்று வகை உண்டு:

சிம்ம சொப்பனம் போல இருப்பவர் முதல் வகை.  இவர்களைப் பார்த்தாலே ஊழியர்கள் ஒளிந்து கொள்வார்கள். இவர்களுக்கு ஒழுக்கம் என்றால் மற்றவர்கள் பயந்து நடுங்குவது என்று அர்த்தம்.

கலந்தாலோசகர்கள் இரண்டாவது வகை. இவர்கள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, கடைசியில் தான் நினைத்ததைச் செய்வார்கள். ஆனால் சுற்றியிருப்பவர்களுக்கு நாமும் ஏதோ செய்தோம் என்கிற திருப்தி இருக்கும்.

தோழமைத் தலைவர்கள் மூன்றாவது வகை. நம் மக்கள் பாஷையில் சொன்னால்,  இவர்கள்தான் ஆபத்தானவர்கள். அதாகப்பட்டது, அன்பாகப் பேசியே வேலையை வாங்கிவிடுவார்கள்.

சிலர் பதவிக்கு வந்தவுடன் தன் பயோடேட்டாவை மெருகேற்றுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அலுவலக நேரத்தை ஆபிஸ் வேலைக்குத் தவிர மற்ற எல்லாப் புகழுக்கும் பயன்படுத்துவார்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் பிழைக்கத் தெரிந்தவர்கள், என்று உலகம் சொல்லும்.

ஆனால், தன் நிறுவனத்துக்காகத் தன்னையே உருக்கிக்கொள்பவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள், என்று உலகம் ஏளனம் செய்யும். ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பிழைக்கத் தெரியாதவர்களின் பெயர்தான் காலத்துக்கும் நிற்கிறது. அவரால்தான் நிறுவனமும் நிலைக்கிறது.

ஒரு நிறுவனம் உருப்பட நிதியும் வசதியும் மட்டும் போதாது. அதை வழிநடத்தும் ஆளின் ஆளுமை முக்கியம். அதிகாரம் கையில் இல்லாதபோது குனிந்து கும்பிடு போடுபவர், பதவி வந்தவுடனும் அதே பணிவோடு இருந்தால், அது அந்தப் பதவிக்கே பெருமை. ஆனால், பதவி வந்ததும் முகம் மாறுபவர்கள் முகமூடி அணிந்த கோமாளிகள்.

கடைசியாகச் சொல்ல வேண்டிய ஒன்று இருக்கிறது. இது கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

உருப்படியாக எதையும் செய்ய விருப்பம் இல்லாதவர்கள், தயவுசெய்து அந்தத் தலைமைப் பதவியை ஏற்காதீர்கள். சும்மா இருக்கவே சம்பளம் தரும் இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஒரு நிறுவனத்தைத் தரம் உயர்த்தத் திறனில்லாதவர்கள், வழிவிட்டு ஒதுங்குவதுதான் அந்தப் பதவிக்குச் செய்யும் மிகப்பெரிய அறம்.

உங்கள் பெயர் கல்வெட்டில் இருக்க வேண்டுமா அல்லது சுவரில் கரிக்கோடுகளாக இருக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

*****

வெயிலும் மண்டை ஓடும் – ஒரு கோடைக்காலக் குறிப்பு!

வெயிலும் மண்டை ஓடும் – ஒரு கோடைக்காலக் குறிப்பு!

சூரியன் இப்போது ஒரு வேலையற்ற தாதாவைப் போலச் செயல்படுகிறது. கத்திரி வெயில் என்னும் அபிஷியல் சித்திரவதைக்கு முன்பே, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

கடந்த சனிக்கிழமை மட்டும் இந்தியாவின் நாற்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.

உத்தர பிரதேசத்தின் பாந்தா நகரில் 117.32 டிகிரி பாரன்ஹீட்டாம். அங்கு யாராவது ஆம்லெட் போட அடுப்பைப் பற்ற வைக்க வேண்டாம், முட்டையைச் சாலையில் உடைத்தாலே போதும்.

தில்லியில் 112 டிகிரி பாரன்ஹீட். இயல்பை விட 11 டிகிரி அதிகம். அதாவது, இயற்கை இப்போது ஒரு ஓவர் அச்சீவர்.

வடமாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்கிறது. தமிழகம், ஆந்திரா போன்ற கடற்கரை ஓரங்களில் வெயிலும் ஈரப்பதமும் சேர்ந்து நம்மை ஓர் உயிருள்ள இட்லி போல வேக வைக்கிறது.

4.5 டிகிரி முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடினால் அதை வெப்ப அலை என்கிறார்கள். எனக்குத் தெரிந்து இதை வெப்பச் சுனாமி என்றே அழைக்கலாம். அதுவே 6.4 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் அது தீவிர வெப்ப அலையாம்.

ஏற்கனவே ஒடிஸாவில் ஆழ்துளைக் கிணறு தோண்டிய தொழிலாளி, கணக்கெடுப்பு நடத்திய ஆசிரியர் எனச் சிலர் இந்த வெப்பச் சுனாமிக்கு தட் மீன்ஸ் வெப்ப அலைக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஊட்டியிலேயே 80 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அடிக்கிறது என்றால், சமவெளி மனிதர்களின் கதி?

உடல்நிலைக்கு இதனால், தக்காளி போல தோல் சிவந்து போவது, ஆபீஸ் வேலையினால் வருவதைத் தவிர்த்து தலைவலி மற்றும் மயக்கம், காதல் மேட்டர் இல்லாமல்   இதயத்துடிப்பு அதிகரித்தல், மிக முக்கியமாக, நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகம் ஸ்ட்ரைக் செய்வது போன்றவை ஏற்படுகின்றன.

இதிலிருந்து உயிர் பிழைக்கும் வித்தைகள்தான் இப்போது நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அந்த டாபிக்கைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்தால்,

மதியம் 11 முதல் 3 மணி வரை வெளியே தலை காட்டாதீர்கள் என்கிறார்கள். அத்தியாவசியத் தேவை இருந்தால் ஒழிய, சூரியனுடன் மல்யுத்தம் செய்ய வேண்டாம். முக்கியமாக டெலிவரி பாய்ஸ், துப்புரவுப் பணியாளர்கள் ஜாக்கிரதை.

கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்க வேண்டுமாம். அது சூரியனைச் செல்லமாக வா என்று அழைக்குமாம். மெல்லிய பருத்தி ஆடைகளே தேவலாம்.

தாகம் எடுக்கிறதோ இல்லையோ, தண்ணீரைக் குடிக்க வேண்டும். இளநீர், மோர், கம்பங்கூழ், எலுமிச்சை சாறு போன்றவைதான் இப்போது நம் மீட்பர்கள்.

இந்த வெப்ப அலை அதாகப்பட்டது வெப்பச் சுனாமியைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இதற்காக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரத் தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கே ஆக்சிஜனும் குளுக்கோஸும் தயார் நிலையில் இருக்கிறது.

இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக, அங்கே போவேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வெயிலில் அலையக் கூடாது. அங்கே போகாமல் இருப்பதே உத்தமம்.

அப்புறம் பேச வேண்டியதைப் பேச வேண்டுமே. அதென்ன என்கிறீர்களா?

மரங்களை வெட்டிவிட்டு கான்கிரீட் காடுகளை வளர்த்தோம். ஏ.சியைப் போட்டு வெளியே இருக்கும் காற்றைச் சூடாக்கினோம். இப்போது இயற்கை ரிட்டர்ன் கிப்ட் தருகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நாம் வெறென்ன செய்ய முடியும். குடை பிடியுங்கள், நீர் அருந்துங்கள், முடிந்தால் நிழலில் தவமிருங்கள். ஒரு புங்கையோ, வேப்ப மரமோ தெருவோரம் நட முடியுமா என்று பாருங்கள். நிழலில் தவமிருக்க மரம் வேண்டுமே!

*****

2 May 2026

சிலிண்டர் – இனிமேல் இது வெடிகுண்டு அல்ல, தங்கக் குண்டு!

சிலிண்டர் – இனிமேல் இது வெடிகுண்டு அல்ல, தங்கக் குண்டு!

மக்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்முடைய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒருவழியாக உயர்த்திவிட்டன. விலை ஏறுமா, ஏறாதா? என்று ஆவலுடன் காத்திருந்த நடுத்தர வர்க்கத்தின் வயிற்றெரிச்சலில் நெய் ஊற்றும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம் என்று இதைப் படிக்க இதயத் துடிப்பு அதிகமாகலாம். இதய பாதிப்பு மற்றும் அதிர்ச்சியைத் தாங்கும் மனமில்லாதவர்கள் படிக்காமல் இருப்பது பாதுகாப்பானதாகும். எதையும் தாங்கும் இதயம் படைத்தோர் தொடரலாம்.

19 கிலோ வணிக சிலிண்டரின் பழைய விலைக்கும் புதிய விலைக்கும் இடையில் ஒரு பெரிய 993 ரூபாய் இடைவெளி. இப்போது இதன் விலை 3,071 ரூபாய். ஹோட்டலில் இனி தோசை கேட்டால், அவர்கள் உங்கள் சொத்துப் பத்திரத்தைக் கேட்க வாய்ப்புள்ளது.

5 கிலோ குட்டி சிலிண்டர் வெறும் 261 ரூபாய்தான் உயர்ந்திருக்கிறது. அதாவது, இப்போது அதன் விலை 810 ரூபாய். ஏழைகளும் நடுத்தர மக்களும் பட்டினி கிடப்பதைப் பழகிக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதா?

கடந்த மூன்று மாதங்களில் 81 சதவீத விலை உயர்வு என்பது ஒரு சாதனைதான்! டீ கடைகள், ஹோட்டல்கள் எல்லாம் இனி மியூசியம் ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது வெறும் டிரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் என்பது போல, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் விரைவில் உயரும் என்று டெல்லி வட்டாரங்கள் கண் சிமிட்டுகின்றன.

இப்போது பொதுத்துறை நிறுவனங்களுக்கு லிட்டருக்கு 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால், விஷேஷம் பாருங்கள், இந்த நஷ்டம் தேர்தலுக்கு முன்பு வரை ஏற்படவில்லையாம். இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, மக்களின் சட்டைப் பையைத் துடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். பாவம் அவர்கள்!

இனிமேல் விறகு அடுப்புக்கு மாறுவது கௌரவக் குறைச்சல் என்று நினைக்காதீர்கள். அதுதான் ரெட்ரோ பேஷன். எரிவாயு விலையைப் பார்த்தால், சிலிண்டரை சமையல் செய்யப் பயன்படுத்துவதை விட, ஹாலில் ஷோகேஸில் வைத்து மாலை போட்டு கும்பிடுவது லாபகரமாக இருக்கும்!

வாழ்க சிலிண்டர்! வளர்க அதன் விலை!!

நீங்களும் வாழ்த்துங்கள். எல்லாரும் வாழ்த்துவோம்.

வாழ்க சிலிண்டரின்றி வளமுடன்!

*****

அரசியல் தத்துவவாதிகளின் பீதி ரிப்போர்ட்டுகள்!

அரசியல் தத்துவவாதிகளின் பீதி ரிப்போர்ட்டுகள்!

மாக்கியவல்லி என்றாலே பலருக்கும் ஒரு அலர்ஜி. குரூரமானவர், தந்திரக்காரர் என்று முத்திரை குத்திவிட்டார்கள்.

ஆனால் பாவம், அவர் ஓர் அனுபவஸ்தர். அவர் வாழ்ந்த காலத்து இத்தாலியில் நகரங்களுக்கு இடையே ஓயாத அடிதடி, வெட்டுக்குத்து.

பிளாரன்ஸ் குடியரசுக்காக உழைத்த அவரை, கடைசியில் சித்திரவதை செய்து நாடு கடத்தினார்கள்.

அவர் தி பிரின்ஸ் என்ற புத்தகத்தில் சொன்னது இதுதான். பரம்பரை ஆட்சியைத் தக்கவைப்பது ரொம்ப ஈஸி. ராஜா கொஞ்சம் விவரமானவராக இருந்தால் போதும், நாற்காலி பத்திரமாக இருக்கும்.

ஜனநாயகக் குழப்பங்களை விட, ஒரு வலுவான ராஜா தரும் ஸ்டெபிலிட்டி மேல் அவருக்கு ஒரு தனி காதல் இருந்தது.

அடுத்தது நம் மேத்ஸ் மாஸ்டர் ரெனே டெஸ்கார்ட்ஸ் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். அவர் சொன்ன தத்துவம் என்னவென்றால், உன் நாட்டுச் சட்டத்துக்கு அடங்கி நட, உன்னை வளர்த்த மதத்தை விட்டுக்கொடுக்காதே.

ஏன் இப்படிச் சொன்னார்?

டெஸ்கார்ட்ஸ் பிறக்கும்போது ஐரோப்பாவே ஒரு போர்க்களம். கத்தோலிக்கர்களுக்கும் ப்ரோட்டஸ்டன்ட்டுகளுக்கும் இடையே தீராத தர்மயுத்தம். எலிசபெத் ராணி தன் சொந்தத் தங்கை மேரியின் தலையை வெட்டுகிறார். ஸ்பெயின் நூறு கப்பல்களோடு இங்கிலாந்தை அடிக்க வருகிறது.

இப்படியொரு சூழலில் இருந்த ஒருவருக்கு என்ன பிடிக்கும்?

அமைதிதானே!

அதுதான் அவரது முதல் மாரல் மேக்சிம். ராஜாவுக்கு அடங்கி நடப்பது என்பது அவருக்கு ஒரு தார்மீகத் தேர்வு. குழப்பத்தை விட ஒரு லெஜிடிமேட் அதிகாரம் மேல் என்பது அவர் லாஜிக்.

மாண்டெய்ன் என்பவரும் இதையேதான் சொன்னார்,  ராஜாவின் குணங்களில் முக்கியமானது நீதிதான்.

டெஸ்கார்ட்ஸ் ஒன்றும் சாதாரணப்பட்டவரும் அல்ல. பிளாட்டோ சொன்ன தத்துவ ஞானி ராஜா வருவார் என்று அவர் நம்பவில்லை. ஏனென்றால், சர்வாதிகாரமும் முடியாட்சியும் எப்போது வேண்டுமானாலும் வன்முறையைத் தூண்டலாம் என்று அவருக்குத் தெரியும்.

இவற்றையெல்லாம் தொகுத்து லார்ட் ஆக்டன் என்பவர் ஒரு பஞ்ச் டயலாக் வைத்தார். அது என்னவென்றால், அதிகாரம் கெடுக்கும், முழுமையான அதிகாரம் முழுமையாகக் கெடுக்கும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்களேன்.

மாவோவின் கலாச்சாரப் புரட்சியில் கோடிக்கணக்கானோர் பலியானார்கள்.

ஸ்டாலினின் ரஷ்யாவில் லட்சக்கணக்கானோர் காணாமல் போனார்கள்.

ஹிட்லர் யூதர்கள் மேல் நடத்திய அந்தப் பயங்கரத்தில் அழிந்தவர்கள் பல்லாயிரம்.

ஜனநாயகம் கூட சில சமயம் சொதப்பும்.

1953 இல் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொசாதிக்கைத் தூக்கிவிட்டு, ஷாவை உட்கார வைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான்.

அதன் விளைவு?

1979 புரட்சி, இன்று வரை தொடரும் மதவாதம். தற்போது அமெரிக்கத் தாக்குதல்.

நிற்க, மீண்டும் டெஸ்கார்ட்ஸ்க்கு வருவோம்.

டெஸ்கார்ட்ஸ் தன் நாடான பிரான்ஸை விட்டுவிட்டு டச்சு குடியரசுக்கு ஓடினார்.

ஏன்?

அங்கேதான் சகிப்புத்தன்மை அதிகம்.

அமைதிக் கனிகளைச் சுவைக்க அவருக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. அவர் ஒரு பிராக்டிகல் ஆள். இயற்கை ரகசியங்களை உடைக்க வேண்டும் என்பது அவர் லட்சியம். அதற்கு அரசியல் அமைதி தேவைப்பட்டது.

அதேசமயம், சில ஒற்றை மனித ஆட்சிகள் உருப்படியாகவும் இருந்திருக்கின்றன. ரஷ்யாவின் பீட்டர் த கிரேட், சீனாவின் டெங் சியாவோபிங் போன்றவர்கள் நாட்டை மாற்றினார்கள்.

சில நாடுகளில் பெயரளவுக்கு ராஜா இருந்துகொண்டு அமைதியைத் தருகிறார்கள் கனடா, ஆஸ்திரேலியா போல.

இன்றைய சூழலைப் பாருங்கள். உக்ரைன் மீது ரஷ்யா பாய்கிறது, தைவானைச் சீனா முறைக்கிறது, அமெரிக்கத் தேர்தலிலேயே வன்முறை வெடிக்கிறது, ஈரானை அமெரிக்கா போட்டுப் பொளக்கிறது.

மாக்கிகியவல்லி, மாண்டெய்ன், டெஸ்கார்ட்ஸ் ஆகிய இவர்கள் மூவரும் சொன்ன ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் தத்துவமும் கிடையாது, தலைவனும் கிடையாது.

ஜனநாயகம் முக்கியம்தான், ஆனால் அதற்கு அஸ்திவாரம் அமைதி. அந்த அமைதியைத் தரும் அதிகாரம் எதுவாக இருந்தாலும், அதற்கு அடங்கி நடப்பது ஒரு புத்திசாலித்தனமான டிரேட் மார்க்.

என்னதான் தத்துவம் பேசினாலும், டெஸ்கார்ட்ஸ் போல நாமும் கொஞ்சம் அரசியல் பழகிக்கொள்வது நல்லது.

ஏனென்றால், அமைதி போனால் அப்புறம் எல்லாம் போச்சு!

*****

ஹாய் டியர் மற்றும் சில ஆயிரங்கள்!

ஹாய் டியர் மற்றும் சில ஆயிரங்கள்!

குமாரசாமிக்குத் தனிமை என்பது ஒரு தீராத வியாதி போலிருந்தது. அந்த நேரத்தில் தான் அவளுடைய மெசேஜ் வந்தது. ஹாய் டியர்.

அந்தப் புரொபைல் பிக்சரில் இருந்த முகம், நிலவை விட அழகாக மற்றும் பில்டர்கள் அதிகமாக இருந்தது. குமாரசாமிக்குத் தூக்கம் பறந்தது. யார் நீங்க? என்று கேட்டார், மேசேஜில்தான்.

உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க கண்ணைப் பார்த்தாலே நீங்க ரொம்ப நல்லவர்னு தெரியுது. ரொம்ப நாளா பேசணும்னு நினைச்சேன், ஆனா பயம், என்று அந்தப் பக்கம் இருந்து பதில் வந்தது.

குமாரசாமி கண்ணாடி முன்னால் நின்று தன் கண்களைப் பார்த்துக் கொண்டார். அதில் நல்லவர் என்ற வார்த்தை எழுதியிருப்பது போல அவருக்கே ஒரு பிரமை தட்டியது. வலை துல்லியமாக வீசப்பட்டது.

அடுத்த சில வாரங்கள், குமாரசாமியின் காதுகள் போனுக்குக் கீழேயே குத்தகைக்கு விடப்பட்டன. அவள் கொட்டியது அன்பல்ல, அன்பு மழை.

குமாரசாமி தன் சிறுவயது ரகசியங்கள், ஆபீஸ் மேனேஜரைத் திட்டியது, ஏன், தன் வங்கி லாக்கர் பாஸ்வேர்டு தவிர மற்ற எல்லா ரகசியங்களையும் அவளிடம் கொட்டித் தீர்த்தார்.

ஒரு நாள் இரவு, போனில் அவளது விக்கல் சத்தம் கேட்டது.

என்ன டியர்? என்றார் குமாரசாமி பதற்றமாக.

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன். உடனே ஒரு இருபதாயிரம் கட்டணும். அண்ணன் ஊர்ல இல்லை. என்ன பண்றதுன்னே தெரியல, என்றது அந்தப் பெண்ணின் குரல்.

குமாரசாமி யோசிக்கவில்லை. இருபதாயிரம் என்பது ஒரு தேவதையின் அம்மாவுக்குச் செய்யும் கைங்கர்யம் என நினைத்து உடனே ஜிபே செய்தார்.

அடுத்த வாரம் அவள் தம்பிக்குக் காலேஜ் பீஸ். அதற்கு அடுத்த வாரம் அவள் வளர்க்கும் பூனைக்கு ஆப்பரேஷன். இப்படியாக அவள் கேட்கும் போதெல்லாம் குமாரசாமியின் சேமிப்பு மெல்லக் கரைந்து, ஐம்பதாயிரத்தைத் தொட்டது.

நாம ஏன் நேர்ல சந்திக்கக் கூடாது? என்று ஒருநாள் அவர் ஆசையாகக் கேட்டார்.

அவ்வளவுதான். அந்தக் குரல் தேவதை மிரட்ட ஆரம்பித்தாள். நீங்க என்கிட்ட பேசுன ஆடியோவெல்லாம் என்கிட்ட இருக்கு. ஒழுங்கா கேட்ட பணத்தை அனுப்புங்க, இல்லைன்னா உங்க வைஃப்கிட்ட அனுப்பிடுவேன்.

குமாரசாமிக்கு அப்போதுதான் புரிந்தது, தான் இதுவரை பேசியது ஒரு தேவதையிடம் அல்ல, ஒரு கிரிமினல் எடிட்டிங் மென்பொருளிடம் என்று.

நீங்கள் இப்போது குமாரசாமியைப் பார்த்தால், பணம் போச்சு தம்பி, மானமும் போயிடும் போலிருக்கு என்பார் அழுது கொண்டே. மனுஷன் நொந்து நிஜமாகவே நூடுல்ஸ் ஆகி விட்டார்.

குமரசாமிக்கு நேர்ந்தது மற்ற அசாமிகளுக்கும் நேரக் கூடாது என்றால், அதற்கென சில நீதிகள் இருக்கின்றன. அவையாவன,

முன்பின் தெரியாதவர் உங்கள் மீது அன்பு மழை பொழிகிறார் என்றால், அவர் கையில் குடை இல்லை என்று அர்த்தமல்ல, உங்கள் பாக்கெட்டில் ஓட்டை போடப் போகிறார் என்று அர்த்தம்.

ரகசியம் என்பது உங்கள் வாய்க்குள் இருக்கும் வரைதான் வைரம். அது இன்னொருவர் காதுக்குப் போனால் அது உங்கள் கழுத்தை நெரிக்கும் கயிறு.

போனில் கேட்கும் கனிவான பெண் குரலுக்குப் பின்னால், ஒரு தாடி வைத்த ஆசாமி பீடி குடித்துக்கொண்டே உங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்க வாய்ப்பு 99 சதவீதம் இருக்கிறது.

ஹாய் டியர் என்று வரும் மெசேஜ்களுக்குப் பதில் சொல்வதை விட, ராங் நம்பர் என்று சொல்லிவிட்டுத் தூங்குவது உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆரோக்கியமானது.

*****