22 Feb 2026

ரஜினி, கமல் - யார் ஹீரோ? – அன்றே பாடிய காரிக்கண்ணனார்!

ரஜினி, கமல் - யார் ஹீரோ? – அன்றே பாடிய காரிக்கண்ணனார்!

ரஜினியும் கமலும் இணைந்து இனி நடிப்பார்களா?

இந்தக் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.

இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள்.

நெல்சனின் இயக்கத்தில், அனிருத்தின் இசையில் அந்தப் ப்ளக்பஸ்டர் தொடங்கி விட்டது.

நேற்று அந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி விட்டது.

அந்தப் ப்ரோமோ வீடியோவில் கேட்கப்படும் யார் ஹீரோ என்ற அந்தக் கேள்விதான் இப்போது தமிழகத்தின் ஹாட் டாபிக்.

47 வருடங்களுக்குப் பிறகு திரையுலகின் இரண்டு துருவ நட்சத்திரங்கள் மீண்டும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன.

இருவரும் இணைவதில் கோலிவுட்டில் ஒரு புது அப்கிரேடேசன் நன்றாகவே தெரிகிறது. படம் ஆயிரம் கோடியில் ஹிட்டடிக்கும் என்ற ஆருடம் காதைப் பிளக்கிறது.

ப்ரோமோவில் அந்த பென்ஸ் கார், அந்த ரெட்ரோ லுக் எல்லாமே எண்பதுகளின் நாஸ்டால்ஜியாவை இன்றைய டிஜிட்டல் துல்லியத்தில் பார்ப்பது போல் இருக்கிறது.

அறிவியல் விதிகளின்படி பார்த்தால், இரு துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்காது, மற்றும் ஒரே இடத்தில் இரண்டு அதிர்வலைகள் மோதுவது ஆபத்தானது. ஆனால் சினிமாவில் அதுதான் மேஜிக்.

கமல் உலக நாயகன், ரஜினி சூப்பர் ஸ்டார். கமல் உலக ஸ்டாராகவா? ரஜினி சூப்பர் நாயகனாகவா?  நெல்சன் என்ன மேஜிக்கை வைத்திருக்கிறார் என்பதற்கான அப்டேட்டுகள் இனி தமிழ்நாட்டை அதிரடிக்கும்.

நீங்கள் புறநானூற்றின் 58 ஆவது பாடலைப் படித்திருக்கலாம். காரிக்கண்ணனார் பாடியது. அது இது,

நீயே தண்புனற் காவிரிக் கிழவனை இவளே

முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்

கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்

தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது

நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ

இளையது ஆயினும் கிளைஅரா எறியும்

அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்

செருமாண் பஞ்சவர் ஏறே நீயே

அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை இவனே

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென

வரைய சாந்தமும், திரைய முத்தமும்

இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே

பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்

நீல்நிற உருவின் நேமியோனும் என்று

இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு

உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி

இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ

இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்

உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்

பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்

கையகப் படுவது பொய்யா காதே

அதனால் நல்ல போலவும் நயவ போலவும்

தொல்லோர் சென்ற நெறியர் போலவும்

காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி வென்று வென்று

அடுகளத்து உயர்க நும் வேலே கொடுவரிக்

கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி

நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த

குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே               (புறநானூறு, 58)

என்ன சொல்ல வருகிறார் புலவர் என்றால், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே அமர்ந்திருப்பது என்பது வானத்தில் சூரியனும் சந்திரனும் ஒன்றாகத் தோன்றுவது போல் இருக்கிறது, உங்கள் நட்பு நீடிக்கட்டும் என்கிறார். 

நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றால் நட்போடு நடிப்பும் நீடிக்கட்டும் என்று.

ஆக, புலவர் காரிக்கண்ணனார் அன்று சொன்ன அதே சூரிய சந்திர லாஜிக் தான் இன்றும். அது யுனிவர்சல் நாயகன், சூப்பர் ஸ்டார் என்று மாறியிருக்கிறது. மற்றபடி ரஜினி அந்தச் சூரியன், அதே பிரகாசம், வேகம், மாஸ். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். சூரியனும் ஒரு நட்சத்திரம்தானே. கமல் அந்தச் சந்திரன், அதே குளுமை, கலைநயம், ஆழம். இந்த உலகுக்கு ஒரே நாயகமாக அந்தச் சந்திரன்தானே இருக்கிறது.

ப்ரோமோவில் ரஜினி அந்தக் ஏறும் போது ஹீலியம் வாயுவின் வேகம் தெரிகிறது. கமல் பக்கத்தில் நின்று அந்தச் சாவியைப் பிடிக்கும் போது அப்படி ஓர் அமைதி தெரிகிறது. இயற்பியல் விதிகளின்படி பார்த்தால் அது ஒரு செம்மையான சமநிலை.

ப்ரோமோவில் நெல்சன் தன் வழக்கமான டார்க் ஹியூமர் பாணியில் இருவரையும் கலாய்த்திருப்பது ஒரு புத்திசாலித்தனமான தெறிக்கவிடும் விளம்பரம். ரஜினி ஸ்டைலாகக் கார் சாவியைத் தூக்கிப் போட, கமல் அதை இயல்பாகப் பிடிப்பது என்பது இது வெறும் நடிப்பு அல்ல, காலங்காலமாகத் தொடரும் ஒரு நட்பின் தொடர்ச்சி. சங்கப் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடுவார்கள். நெல்சன் இவர்களைக் கிண்டல் செய்து ரசிக்க வைக்கிறார். இது ரிவர்ஸ் சைக்காலஜி

சங்கப் பாடல்களில் உவமை மிக முக்கியம். இந்தப் ப்ரோமோவில் வரும் அந்தப் பழைய பென்ஸ் கார் ஓர் உருவகம். நாங்கள் பழைய ஆட்கள் தான், ஆனால் இன்ஜின் இன்னும் பவர்ஃபுல் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

நமக்கும் எப்போதுமே பழைய விஷயங்கள் மீது ஒரு தீராத கிராவிட்டி உண்டு. கமல் – ரஜினியின் நினைத்தாலே இனிக்கும் அப்படிப்பட்ட ஒன்று. அப்படிப்பட்ட ஒன்றாகவும் இப்படம் இருக்கலாம்.

ஒரு தலையாவது உருளாமல் நெல்சன் படமா என்றால் அதற்கான அறிகுறி எதுவும் இந்தப் ப்ரோமோவில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் லைட் ஹார்ட் உள்ளவர்களுக்கும் ஏற்றதாக இப்படம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை ஹீரோ – வில்லன் மேஜிக் வேண்டும் எனறு நினைத்தால் அந்த வில்லன் பேக்கேஜக்கு இது எப்படி இருக்கு ரஜினியை அடித்துக் கொள்ள ஆளில்லை.

கமல் வண்டியை எடுக்கிறார், ரஜினி ஆசுவாசமாக அமர்ந்திருக்கிறார். அதனால் ரஜினிக்கு இணையான இன்னொரு ஹீரோவாகவும் கமல் இருக்கலாம். கமல் பெயர் முன்னதாகவும், ரஜினி பெயர் அடுத்தாகவும் இருப்பதால் கமலுக்கு இணையான ஹீரோவாக ரஜினியும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து விட மாட்டார்கள் என்பது அவர்கள் ப்ரோமோவில் செய்யும் மேக்கப்பிலேயே தெரிகிறது.

அப்புறம் அந்தப் ப்ரோமோவில் ரஜினியும் கமலும் முன்னால் அமர்ந்திருக்க, நெல்சனும் அனிருத்தும் பின்னால் அமர்ந்திருக்க கார் ஜெட் வேகத்தில் புறப்படுகிறது. இவர்கள் இருவரும் காட்டும் வழியில்தான் நெல்சனும் அனிருத்தும் படத்தை இயக்கவும் இசைக்கவும் முடியும் என்பதற்கான படிமமோ என்னவோ அது.

இவையெல்லாம் டீகோட்கள்தான். படம் வெளிவந்தால்தான் மற்றவை தெரியும். அதுவரை என்ன செய்வது என்பதற்கு ஒரு பார்முலா இருக்கிறது. அது வெயிட் அன்ட் வாட்ச்.

*****

21 Feb 2026

ராஜு முருகனின் மை லார்ட் – ஒரு திரைப் பார்வை!

ராஜு முருகனின் மை லார்ட் – ஒரு திரைப் பார்வை!

கோவில்பட்டி முத்துசிற்பியான சசிகுமாருக்கு ஒரு விசித்திரமான சிக்கல். உயிரோடு இருக்கும்போதே அவர் கையில் டெத் சர்டிபிகேட். மறுபக்கம், ஊர் ஊராக கிட்னி திருடும் கும்பல். விதியின் சதியோ அல்லது திரைக்கதையின் சதியோ ஒரு பெரும்புள்ளியின் உடலுக்கு முத்துசிற்பியின் கிட்னி மட்டும்தான் மேட்ச் ஆகிறது. அப்புறம் துரத்தல், சட்டப் போராட்டம், கொஞ்சம் சென்டிமென்ட். முடிவில் வாய்மையே வெல்லும் மெசேஜ்.

அப்புராணி இமேஜுக்கு சசிகுமார் கச்சிதம். அவரது டெம்ப்ளேட்டான நடிப்பு மற்றும் பானைகளை அவராலேயே தவிர்க்க முடியவில்லை.

கதை நாயகி சைத்ரா ஆச்சார் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அவரது பயமும் காதலும் கலந்த நடிப்பு ஓர் ஆசம்.

எசக் காத்தா பாடல் ஒரு கரிசல் காட்டு கவிதை. ஷான் ரோல்டன் பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார்.

அதிகாரத்துக்கு ஏழைகள் வெறும் நம்பர்தான் என்ற ராஜு முருகனின் டயலாக் பாய்ன்ட் நச்.

இடைவேளை வரை பாய்ன்ட் டூ பாய்ன்ட் பஸ்ஸில் இருந்த வேகம், பின்பாதியில் டவுன் பஸ் ரேஞ்சுக்குப் போய் விடுகிறது. லாஜிக் என்கிற வஸ்துவை சில இடங்களில் தேட வேண்டியிருக்கிறது மை லார்ட்.

திரைப்படங்களில் கருத்துச் சொல்லலாம், தப்பில்லை. ஆனால், சினிமா திரையை பிளாக் போர்டு ஆக்கி பாடம் நடத்துவது கொஞ்சம் போர். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளே இப்போது அதையெல்லாம் விரும்புவதில்லை.

சிறுநீரகத் திருட்டு என்கிற ஒரு சீரியஸான மெடிக்கல் க்ரைமைக் காதல், சென்டிமென்ட், சோசியல் மெசேஜ் எனும் எமோஷனல் மசாலாவோடு கலந்து கொடுத்திருக்கிறது இந்த மை லார்ட்.

சில லாஜிக் ஓட்டைகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், மை லார்ட் பேசுவது முக்கியமான வாதம்.

மை லார்ட் – கிட்னி, காதல், மெசேஜ் அத்துடன் கொஞ்சம் சமூக எதார்த்தம்.

இந்தப் படத்துக்கு மார்க் என்று பார்த்தால், 10க்கு 6½ . அந்தச் சமூக அக்கறைக்காக அரை மார்க் எக்ஸ்ட்ரா! தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

*****

20 Feb 2026

விஜய் – ராஷ்மிகாவின் யாயும் ஞாயும் யார் ஆகியரோ?!

விஜய் – ராஷ்மிகாவின் யாயும் ஞாயும் யார் ஆகியரோ?!

தெலுங்குத் திரையுலகின் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டாவும், கன்னடத்தின் கிரிக் பார்ட்டி ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் பாடப் போகிறார்கள்.

இத்தனை காலமாய் இன்ஸ்டாகிராம் பைனரி கோடுகளில் ஒளித்து வைத்திருந்த காதல், இப்போது ஒரு கல்யாணப் பத்திரிகையாக உருமாறி இருக்கிறது. இருவரும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் அரண்மனையில் பிப்ரவரி 26 இல் டும்டும்க்குத் தயாராகி விட்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் பொருத்தமான ஒரு சங்கப் பாடலைத் தேடினால், சட்டென நினைவுக்கு வருவது குறுந்தொகையின் அந்தப் புகழ்பெற்ற வரிகள்தான்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இது அப்படியே பொருந்துகிறது. அவர் ஆந்திரா, இவர் கர்நாடகா. இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், சினிமா என்கிற அந்த செம்புலத்தில் விழுந்த மழைத்துளிகளாய் இப்போது ஒன்றாகக் கலந்துவிட்டார்கள்.

இவர்கள் காதல் என்னவோ மாலத்தீவில் மலர்ந்திருக்கலாம், ஆனால் கல்யாணம் என்னவோ ராஜஸ்தானில். அப்படித்தான் நடக்க வேண்டும் என்று இப்போது சினிமா நட்சத்திரங்கள் ஓர் எழுதாத விதியையே வகுத்து வைத்து விட்டார்கள்.

ஒட்டகங்கள், வண்ணமயமான தலைப்பாகைகள், மற்றும் கேசரி பால் மணம் வீசும் அந்த ராஜஸ்தான் வெயிலில், திரை ரசிகர்களின் செல்லமான ரவுடி பாய் ப்ளஸ் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா ஷெர்வானி அணிந்து காட்சியளிக்கப் போகிறார். புஷ்பாவில் ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாட்டம் போட்ட ராஷ்மிகா தன் சாமீ சாமீ ராகத்தை நிஜ வாழ்க்கையில் பாடப்போகிறார்.

விஜய் தேவரகொண்டாவின் அந்தத் திமிர் கலந்த ஸ்டைலும், ராஷ்மிகாவின் அந்த வசீகரச் சிரிப்பும் இணையப் போகும் அந்தத் தருணம், தென்னிந்தியத் திரையுலகின் மிகப்பெரிய கிளைமாக்ஸ். ஆந்திரா மீல்சும் கர்நாடகப் பொன்னியும் கலக்க இருக்கும் கலக்கலான தருணம்.

இத்தனை காலம் நாங்கள் வெறும் நண்பர்கள் என்று இவர்கள் சொல்லி வந்ததெல்லாம், சங்கப் பாடலில் வரும் எவ்வழி அறிதும் என்கிற பாவனைதான். ஆனால் இப்போது பிப்ரவரி 26 இல் அன்புடை நெஞ்சம் ராஜஸ்தான் மணலில் அக்னி சாட்சியாக இணையப் போகிறது.

ராஜஸ்தான் மணலில் அந்த அர்ஜுன் ரெட்டி தன் காதலைக் கனிய வைத்து கல்யாணம் செய்யப் போவதுதான் அன்புடை நெஞ்சம் தாம் கலப்பது. சினிமா திரையில் பார்த்த அதே கெமிஸ்ட்ரி, சங்க இலக்கியப் பாடலின் ஆழத்தோடு நிஜமாகப் போகிறது.

வாழ்க்கையும் கூட ஒரு பெரிய தியேட்டர்தான். இதில் இது ஒர் அழகான சுபம் கார்டு இவர்களின் திருமணம். அந்தச் செம்புலப் பெயல் சிவப்பு நகரமான ராஜஸ்தான் நகரங்களிலும் தெறிக்கிறதே. அந்தச் சங்கப் புலவர் செம்புலப்பெயர் நீரார் எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு பாடி விட்டார்! சிவப்பு – சிவப்பு நன்றாகவே பொருந்துகிறது அல்லவா!

அடுத்து விஷால் – தன்ஷிகா திருமணம்தான். அதற்கும் ஒரு பாடல் இருக்கிறது. நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் முடிந்து, திருமணத் தேதி நெருங்கட்டும். அதை எழுதுகிறேன்.

*****

19 Feb 2026

TET தேர்வுக்குத் தயாராவது எப்படி?

TET தேர்வுக்குத் தயாராவது எப்படி?

இனி ஒருவர் ஆசிரியர் ஆக வேண்டுமானால் சரி, பணியில் தொடர்ந்து ஆசிரியராக இருக்க வேண்டுமானாலும் சரி TET என்ற இந்தத் தேர்வை ஹை ஜம்ப் செய்ய வேண்டும். சிவகார்த்திகேயன் டான் படத்தில் செய்ததை டான் என்று டன் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டு விட்டது.

150 கேள்விகள், 180 நிமிடங்கள். சராசரியாகப் பார்த்தால் ஒரு கேள்விக்கு 1.2 நிமிடத்தில் விடையளிக்க வேண்டும். இருந்தாலும் இந்தச் சராசரி ஒரு குத்துமதிப்பிற்காகத்தான். உங்களுக்கு நன்கு விடை தெரிந்த வினாவிற்கு ஒரு நொடியில் விடையளித்து விட்டு, யோசித்து விடை எழுத வேண்டிய கேள்விக்கு இரண்டு நிமிடம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கான  சிலபஸ் என்றால் அது 5 தலைப்புகள்.

முதலில் கல்வி உளவியல். பியாஜேயும், பாவ்லோவும் என்ன சொன்னார்கள் என்று கேட்பார்கள். ஒரு குழந்தையை எப்படிப் பார்க்க வேண்டும்? எப்படி கல்வி கற்பிக்க வேண்டும்? அதற்கான படிநிலைகள் என்ன? அது குறித்துச் செய்யப்பட்டிருக்கும் ஆராய்சிகள் என்ன? என்கிற ரீதியில் நீங்கள் படித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது தாய்மொழி தமிழ்.

பத்தாம் வகுப்பு வரையுள்ள இலக்கணம், செய்யுள் பகுதிகளில் பலமாக இருக்க வேண்டும். முடிந்தால் பனிரெண்டாம் வகுப்பு வரை கூட பலப்படுத்திக் கொள்ளலாம். உரைநடைகளைக் கொஞ்சம் நுணுக்கமாகப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டிச் செய்திகளிலிருந்து நுண்ணோக்கியில் பார்ப்பதைப் போலப் பார்த்தெடுத்து வினாக்களைக் கேட்பார்கள்.

மூன்றாவது சர்வதேச மொழியான ஆங்கிலம். இதற்கு நீங்கள் பத்தாம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களில் ஒரு உலா போய் விட வேண்டும். டென்ஸ், ஆக்டிவ் பேசிவ் வாய்ஸ், டேரக்ட் இன்டேரக்ட், டிகிரிஸ் ஆப் கம்பேரிசன், ஆர்டிகிள் போன்ற கிராமர் இத்தியாதிகளில் புலமை பெற்று விட வேண்டும். அத்துடன் போயம் வெர்ஷன்களில் சிமிலி, மெடாபர் வகையறாக்களையும், அவற்றை எழுதியவர்களை அடையாளம் காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நான்கும் ஐந்தும் உங்களுக்கான பாடங்கள். டெட் 1 என்றால் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்கள். அதுவே டெட் 2 எனும் போது, நீங்கள் கணிதம் மற்றும் அறிவியல் என்றால் நான்காம் பாடம் கணிதம், ஐந்தாம் பாடம் அறிவியல். சமூக அறிவியல் என்றால் நான்காம் பாடமும், ஐந்தாம் பாடமும் உங்களுக்கு அதுவேதான். இதற்கும் நீங்கள் பத்தாம் வகுப்பு வரையுள்ள பாடப்புத்தகங்களை ஓர் அகழ்வாராய்ச்சியைச் செய்ய வேண்டியிருக்கும். கேள்விகள் அப்படித்தான் புகுந்து புறப்பட்டுக் கண்டுபிடித்து எடுத்திருப்பார்கள்.

இப்படியே இவற்றைப் பார்ப்பதுடன் பழைய வினாத்தாள்களையும் ஒரு ரவுண்ட் அடித்து விடுங்கள். எப்படிக் கேள்வி கேட்கிறார்கள் என்பதற்கு இதுதான் கூகுள் மேப்.

படிக்கும் போது கதைப்புத்தகம் போலப் படிப்பது வேலைக்காகாது. பக்கத்திலேயே ஒரு நோட்டை வைத்துக் கொண்டு குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குறிப்புகளை அடிக்கடி பார்த்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பலமுறை என்பது முக்கியம். ஒரு முறை பார்த்தால் அது ரேம் மெமரிதான். அது வேலைக்காகாது. பரீட்சை நேரத்தில் காலை வாரி விட்டு விடும். பலமுறை பார்ப்பதுதான் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் பெர்மினன்ட் மெமரி. அதுதான் பரீட்சையில் கை கொடுக்கும்.

தேர்வை எழுதும் போது நேரம் ஓடிக் கொண்டே இருக்கும். எனவே  தெரியாத கேள்விக்கு ஸ்டெப் எடுத்து, ஸ்டாப் எடுத்து எல்லாம் யோசனை பண்ணாதீர்கள். தெரிந்ததை முடித்துவிட்டு, பிறகு அதற்குத் திரும்புங்கள்.

இந்தத் தேர்வில் நெகட்டிவ் மார்க் கிடையாது என்பது மிகப்பெரிய ப்ளஸ். கல்லா கட்டை போட்டாவது 150 கேள்விகளையும் அட்டெண்ட் பண்ணிவிடுங்கள். ஏதாவது ஒரு ப்ராபபிலிட்டி வேலை செய்யும்!

புதிய புத்தகங்கள், கைடுகள் என்று எதைத் தேடியும் ஓடாதீர்கள். எல்லாம் பத்தாம் வகுப்பு வரையுள்ள தமிழக அரசின் பாடப்புத்தகங்கள்தான். அதுதான் இந்தத் தேர்வுக்கான வேதப்புத்தகங்கள்.

ஆக இதை வெறும் தேர்வாக மட்டும் கருதிக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமென்றால், முதலில் ஆசிரியருக்குப் புரிய வேண்டுமே, அதைச் சோதிப்பதற்கான ஒரு சோதனையாக மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். என்னால் பத்தாம் வகுப்பு வரையுள்ள எந்தப் பாடக்கருத்தையும் எப்படிப்பட்ட மாணவருக்கும் புரிய வைக்க முடியும் என்றால் நீங்கள் இந்த TET தேர்வைப் பற்றிக் கவலைப்படவே வேண்டாம். ஆம், நீங்கள் நூற்று ஐம்பதுக்கு நூறை அசால்டாகக் கடந்து விடுவீர்கள்.

*****

18 Feb 2026

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026 – ஒரு பார்வை!

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026 – ஒரு பார்வை!

பொதுவாக இடைக்கால பட்ஜெட் என்பது சினிமா இன்டர்வெல் ப்ளாக் மாதிரி. இங்கே வைக்கும் ட்விஸ்ட்தான் இன்டர்வெல் முடிந்து அதே படத்தைப் பார்க்க மக்கள் வருவார்களா, அல்லது வேறு படத்தைப் பார்க்கப் புறப்பட்டு விடுவார்களா என்பதைத் தீர்மானிப்பது.

இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பே திமுக அரசு ஒரு மெகா டிவிஸ்ட்டைக் கொடுத்து விட்டது. அது மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வரவு வைத்தது. இனி ஆட்சிக்கு வந்தால் உரிமைத்தொகை மாதந்தோறும் இரண்டாயிரம் என்பதையும் கோடைக்கால சிறப்புத்தொகை என்ற பெயரில் சொல்லாமல் சொல்லி விட்டது.

இதற்கிடையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பட்ஜெட் என்ன சொல்கிறது?

தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த இடைக்கால பட்ஜெட்டைப் பார்த்தால், அது ஒரு மல்டி கலர் மேப் மாதிரி இருக்கிறது.

இந்தப் பட்ஜெட்டில் மைனஸ் குறிகள் நிறைய விளையாடுகின்றன. வருவாய்ப் பற்றாக்குறை நிறைய இருக்கிறது, ஆனால் அதைச் சரிகட்ட வளர்ச்சி என்கிற டானிக்கை ஊற்றியிருக்கிறார்கள்.

பழைய சாப்ட்வேருக்கு புதிய அப்டேட் கொடுத்தது போல, ஏற்கனவே இருக்கும் சமூக நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மகளிருக்கான உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் இவற்றுக்கான நிதி வழக்கம் போலத் தொடர்கின்றன.

தமிழகத்தின் கடன் சுமை ஒரு பக்கம் ஏறிக்கொண்டே போகிறது. இது ஒரு கிரெடிட் கார்டு சுழற்சி போன்று தொடர்வதால், வட்டி கட்டவே ஒரு பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கிறது.

ஒரு பட்ஜெட் என்பது எண்களால் ஆன பெரிய டேட்டா பேஸ். ஆனால், சாமானியனுக்கு அது வெறும் புள்ளிவிவரக் காடு.

வழக்கமாக ஒவ்வொரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போதும் அது அவதார் படம் போலத் தெரிகிறது. ஆனால், அமலுக்கு வரும்போது அது பிளாக் அண்ட் ஒயிட் படமாகிவிடுகிறது.

இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பில் பாலங்கள், மெட்ரோ ரயில் எனத் தமிழகம் ஒரு மெகா சிட்டியாக மாறத் துடிப்பது தெரிகிறது.

கல்வி, மருத்துவத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்வி மேம்பாட்டில் பெரிய பாய்ச்சலை நிகழ்த்துவதற்கேற்ப தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கு, ஊக்கத்தொகைகளுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடைக்கால பட்ஜெட் ஒரு டெமோ வெர்ஷன்தான். தேர்தலுக்குப் பிறகுதான் ஒரிஜினல் வெர்ஷன் ரிலீஸ் ஆகும். அது ஆட்சியைப் பிடிக்கும் கட்சியின் கரங்களில் இருக்கிறது. அப்படி மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு ஆளுங்கட்சிக்கு இப்பட்ஜெட் அச்சாரம் போடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*****

நியாயம், நேர்மை மற்றும் சில துண்டு துணுக்குகள்!

நியாயம், நேர்மை மற்றும் சில துண்டு துணுக்குகள்!

நியாயம் என்பது பல கோடி பக்கங்கள் உள்ள ஓர் அகராதித் தேடல். அது யார் பக்கம் இருக்கிறது என்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வி. என் நியாயம் உனக்கு அநியாயமாகவும், உன் நேர்மை எனக்குப் பிடிவாதமாகவும் தெரிவதில் தான் மனித இனத்தின் சகலமும் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு மண்டைக்குள்ளும் ஒரு குட்டி ஹிட்லர் ஒளிந்து கொண்டிருக்கிறான். தான் நினைப்பதே வேதம், தான் சொல்வதே நியாயம் அவனுக்கு. அவனோடு நீங்கள் தர்க்கம் செய்யப் போனால், உங்கள் ரத்த அழுத்தம்தான் ஏறுமே தவிர, அவன் ஓர் அங்குலம் கூட நகர மாட்டான். வாதம் செய்யச் செய்ய அவன் இன்னும் மூர்க்கமாவான். இறுதியில், சரிதான், நீ சொல்வதே சரி என்று சொல்லிவிட்டு நகர்வதுதான் பிபியைக் குறைக்க எளிய வழி. இதைக் கோழைத்தனம் என்று சொல்ல முடியாது.  இது ஒரு சர்வைவல் டெக்னிக்.

இவர்களை எதிர்க்க முடியாதா? அதற்கு மன வலிமை கிலோ கணக்கில் வேண்டும். கிராம் கணக்கில் இருப்பது பயன் தராது.

அப்படி எதிர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கு ஓர் அறிவாற்றல் வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எதிர்க்கிறேன் என்று கையைத் தூக்கிவிட்டு, பிறகு பின்விளைவுகளைப் பார்த்து பயந்து மன உளைச்சலுக்கு ஆளாவதற்குப் பெயர்தான் பலவீனம்.

அப்படி ஆனால் மனம் ஹேங் ஆன கம்ப்யூட்டர் போல ஆகி விடும்.  ரீ-பூட் செய்ய வழி தெரியாமல் போய் விடும். இதனால் எப்போதும் சோர்ந்து கிடக்கும் ஒரு பயந்த மனதை எதிர்கொள்ள நேரிடும். பயம் என்பது ஓர் இருட்டு அறை. அதில் எதைத் தொட்டாலும் அது பாம்பாகவே தெரியும்.

எதிர்ப்பதைப் போல எதிர்க்காமல் இருப்பதற்கும் பெரிய மன வலிமை வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால்தான் அது சாத்தியம். உங்கள் உணர்ச்சிகளை உங்களுக்கு ஆளத் தெரிந்தால் அதை விட பெரிய வலிமை உலகில் ஏதும் இல்லை.

ஹிட்லர்களை எதிர்த்து அழிக்க வேண்டும் என்பதில்லை. அவர்களாகவே அழிந்து போவார்கள். அவர்களின் சாப்ட்வேர் பேக்கேஜ் அப்படித்தான் டிசைன் பண்ணப் பட்டிருக்கும். அதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

ஆக நதியாய் இருங்கள். எதிர்ப்பவர்களைப் பொருட்படுத்தாமல், யாரையும் எதிர்க்காமல் ஓடிக் கொண்டே இருங்கள். வாழ்க்கையில் நிலையான முடிவு என்பதெல்லாம் ஒரு மாயை. எதிர்க்கின்ற முடிவுகளை க்விஸில் பாஸ் பண்ணுவதைப் போலப் பாஸ் பண்ணுங்கள்.

இன்று எடுக்கும் முடிவு நாளை அபத்தமாகத் தோன்றலாம். வாழ்க்கை என்பது நேர்கோடு அல்ல, அது ஒரு வளைந்து நெளிந்து செல்லும் நதி. பாறைகள் வந்தால் மோதாமல் வளைந்து செல்வதே நதியின் புத்திசாலித்தனம். நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். இதைக் காலத்தின் கட்டாயமாக எடுத்துக் கொண்டாலும் சரிதான், வாழ்க்கையின் கட்டாயமாக எடுத்துக் கொண்டாலும் சரிதான். அது உங்கள் விருப்பம்.

*****

17 Feb 2026

இன்றைய அறிவுலகமும் டிரம்பும்!

இன்றைய அறிவுலகமும் டிரம்பும்!

இன்றைய அறிவுலகம் எப்படி இருக்கிறது என்றால் …

எதற்கு வினை புரிய பண்ண வேண்டும், எதற்கு வினை புரியக் கூடாது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் சரியான அறிவு.

வாட்ஸப்பிலும், பேஸ்புக்கிலும் வரிந்து கட்டிக் கொண்டு உப்புச் சப்பில்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் சண்டை போடுபவர்கள், அக்கிரமங்களை நிஜ வாழ்வில் காணும் போது கண்டும் காணாமலும் சமாதானமாகக் கடந்து விடுகிறார்கள். இப்படித்தான் இருக்கிறது இன்றைய அறிவுலகம்.

*****

இந்தக் காலத்திலும் சோற்றுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பவர்களிடம் என்ன சொல்வது …

அரசாங்கம் இலவச அரிசிக்குப் பதிலாக இலவச சோறு கொடுத்திருக்க வேண்டும்.

*****

உலக நாடுகள் அனைத்துக்கும் எதிராகச் சாட்டையை முறுக்கும் டிரம்புக்கும் சாட்டைக்குள் உள்ள தொடர்பு என்னவென்றால் …

டிரம்ப் வித்தியாசமானவர். ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்பதற்காக இந்தியாவுக்கு வரி விதிப்பார். இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியத்தை வாங்கக் கூடாது என்று சொல்லி விட்டு அவர் மட்டும் இஷ்டத்துக்கு ரஷ்யாவிடமிருந்து யுரேனியத்தைப் பேக்கப் செய்து கொண்டிருப்பார். இந்தியா பாகிஸ்தான் போரை வர்த்தக ஒப்பந்தத்தைக் காட்டி நிறுத்துவார். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்தால் ஆயுத ஒப்பந்தங்களைப் போட்டு பணத்தைக் குவித்துக் கொள்வார். அவர் அனுமதியில்லாமல் எந்த நாடும் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கக் கூடாது என்பார். அப்படியே தொடுத்தாலும் தன் முன்னே வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சாட்டையைச் சுழற்றுவார். ஆனால், ஈரான் மேல் அவர் தொடுத்த தாக்குதலுக்கு என்ன செய்வார்? இப்போது வெனிசுலாவின் மீது அத்துமீறியதற்கு என்ன செய்வார்? தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்வாரா? அல்லது உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் சாட்டையால் அடிப்பாரா? அவர் கையில் இருக்கும் சாட்டையானது எம்ஜியாரின் ‘நான் ஆணை இட்டால்…’ என்பது போலவும் சுழலும், கழைக்கூத்தாடியின் கையில் இருக்கும் சாட்டையைப் போலவும் சுழலும். அது எப்போது எப்படிச் சுழலும் என்பது சமயத்துக்குத் தகுந்தாற் போல டிரம்மை அடிக்கும் டிரம்புக்கே வெளிச்சம்.

*****