1 Jun 2026

மீண்டும் மீண்டும் ரீமேக்காகும் பாசமலர்!

வெற்றுச் சொற்களின் பாராட்டும், மனிதனின் எல்லையற்ற தனிமையும்!

பாசமலர் திரையில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் அடிக்கடி ரீமேக்காகும் ரீல் + ரியல் திரைப்படமாகும்.

குடும்பங்களின் பாசமலர்களைப் பார்த்து அலுத்துப் போன நமக்கு, அரசியலில் பாசமலர்களைப் பார்க்கும் போது அது ஒரு புதுமையான ட்விஸ்ட்டாக இருக்கிறது.

வாஷிங்டனில் இருந்து இந்தியாவைப் புகழ்ந்து வரும் செய்திகள், இரண்டு உலகத் தலைவர்களின் நட்புப் பாராட்டுதலைப் பற்றியது அல்ல. அது மனித இருத்தலின் ஆகப்பெரும் வெறுமையையும், அதிலிருந்து தப்பிக்க மனிதன் தேடும் போலியான அங்கீகாரங்களையும் பற்றியது.

டெல்லியின் பாரத மண்டபத்தில் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், அதிபர் டிரம்ப்பின் குரலை அங்கிருந்தவர்களுக்குக் கேட்பிக்கத் தனது அலைபேசியை மைக்ரோபோனுக்கு முன்னால் நீட்டுகிறார். இந்தத் தொழில்நுட்பக் காட்சி, நவீன மனிதனின் ஆகப்பெரும் அவலத்தைக் காட்டுகிறது. நாம் எல்லையற்ற தொடர்புச் சாதனங்களைக் கைகளில் வைத்திருக்கிறோம். ஆனால், ஒருவரிடம் நேரடியாகப் பேச முடிவதில்லை.

அதிபர் டிரம்ப்பின் குரல் ஒரு கருவியிலிருந்து இன்னொரு கருவிக்குக் கடத்தப்பட்டு, காற்றில் அதிர்வுகளாகப் பரவுகிறது. நான் மோடியின் ரசிகன், என்ற டிரம்ப்பின் சொற்கள், உண்மையின் வெளிப்பாடு அல்ல, மாறாக, பிரபஞ்சத்தின் எல்லையற்ற மௌனத்தைக் கண்டு அஞ்சி, மனிதன் எழுப்பும் வெற்று ஒலிகள் மட்டுமே.

நாம் நமது தனிமையைப் போக்கிக் கொள்ள, பிறிதொரு மனிதனின் குரலைத் தேடிக் கொண்டே இருக்கிறோம்.

மனிதனின் இருத்தலில் நிரந்தரமான உண்மை என்று எதுவுமே இல்லை என்பதை டிரம்ப்பின் முந்தைய பதிவுகள் நிரூபிக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவை நரகக் குழி என்று வர்ணித்த அதே மனிதர், இன்று இந்தியாவை நூறு சதவீதம் நம்பகமான தோழன், என்கிறார்.

ஒரு மனிதருக்கு ஒரு தேசம், ஒரு கணம் நரகமாக இருக்கிறது, அடுத்த கணமே அது சொர்க்கமாக மாறுகிறது. இந்த முரண்பாடு காட்டும் உண்மை என்னவென்றால், உலகியல் அரசியலில் விழுமியங்களுக்கு சுயமான அர்த்தங்கள் இல்லை என்பதுதான்.

அதிகாரமும் சுயநலமும் மட்டுமே அர்த்தங்களை உற்பத்தி செய்கின்றன. நேற்று நாம் தூற்றிய ஒன்றை இன்று போற்றுகிறோம், ஏனெனில் மனித மனம் நிலையற்ற தன்மையால் ஆனது.

தன் எண்ணங்களை டிரம்ப் பகிர்வது ட்ரூத் என்ற சமூக வலைதளப் பக்கத்தில். இது எவ்வளவு பெரிய முரண்நகை! ட்ரூத் என்பதற்கு உண்மை என்பது பொருள். ஆனால், அந்தப் பகிர்வு எந்த அளவுக்கு உண்மையானது?

மனிதன் தனக்குச் சாதகமான புனைவுகளை, மாயைகளை உண்மை என்று பெயரிட்டுத் தன் இருத்தலை நியாயப்படுத்திக் கொள்ள முயல்கிறான். மோடியைப் புகழ்ந்த பதிவை டிரம்ப் அங்கு மறுபகிர்வு செய்வதன் மூலம், உலகிற்குத் தான் இன்னும் முக்கியமானவனாக இருக்கிறேன் என்பதை உரக்கச் சொல்ல முயல்கிறார்.

இருத்தலியல் தத்துவத்தின்படி, மனிதன் பிறப்பால் முற்றிலும் தனியானவன். அவனுக்கு என்று பிரபஞ்சம் எந்த நோக்கத்தையும், அர்த்தத்தையும் தருவதில்லை. எனவே, அவன் புகழ்ச்சிகள், தூதரக விழாக்கள், மற்றும் ரசிகன் என்ற பட்டங்கள் மூலம் தனக்கான ஒரு தற்காலிக அர்த்தத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

என்னையும் அமெரிக்காவையும் இந்தியா 100 சதவீதம் நம்பலாம், என்ற டிரம்ப்பின் வார்த்தைகள் காற்றில் கரைந்து போகக்கூடியவை. ஏனெனில், மனித இருத்தலில் 100 சதவீத நம்பிக்கை என்பது சாத்தியமே இல்லாத ஒரு மாயை.

இந்தச் செய்தி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை விவரிப்பதாகத் தோன்றினாலும், ஆழத்தில் இது காட்டும் உண்மை ஒன்றுதான். மனிதர்கள் அனைவரும் ஒரு பெரிய நாடக மேடையில் இருக்கிறார்கள். அங்கு மைக்ரோபோன்களும், சமூக வலைதளப் பக்கங்களும் மனிதனின் உள்ளார்ந்த தனிமையையும், அர்த்தமின்மையையும் மறைக்கப் பயன்படும் வெறும் முட்டுகள் மட்டுமே.

நாளை அந்தப் பதிவுகள் மாறலாம். இன்றே கூட மாறலாம். நேற்று அப்படி இருந்ததே, இன்று இப்படி இருக்கிறதே என்று கேட்பதில் பொருள் எதுவுமில்லை. இந்த உலகில் எல்லாம் அபத்தங்களே. அதிலும் தலைவர்கள் உதிர்க்கும் முத்துகள் அபத்தங்களின் தத்துப்பிள்ளைகள். அவை பாசமலர்கள் பெற்றெடுத்த வேஷ மலர்கள்.

*****

நவீன மிக்ஸிகளின் வீழ்ச்சியும் மனித மண்டையின் எழுச்சியும்

நவீன மிக்ஸிகளின் வீழ்ச்சியும் மனித மண்டையின் எழுச்சியும்

இன்று சந்தைக்குப் போனால் 750 வாட்ஸ், 1000 வாட்ஸ் எனப் பலத்த சத்தத்துடன் ஓடும் மிக்ஸிகள் கிடைக்கின்றன. சுவிட்சைப் போட்டால் இரண்டு நிமிடத்தில் பாறாங்கல்லைக் கூட பவுடராக மாற்றிவிடும் தகுதி அவற்றுக்கு உண்டு. கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்களோ உளுந்தை பஞ்சு போல ஆக்கித் தருகின்றன.

ஆனால், இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த உலகம் தன் அன்றாட மசாலா தேவைகளுக்கு, அதாவது ஏமாற்று வேலைகளுக்கு, உங்கள் தலையைத்தான் மிகச் சிறந்த அரைக்கும் கல்லாகத் தேர்ந்தெடுக்கிறது. தட் மீன்ஸ், உங்கள் தலையில்தான் மிளகாய் அரைக்கிறது.

இதற்கான காரணம் மிக எளிதானது. மிக்ஸியில் அரைத்தால் மின்சாரக் கட்டணம் வரும், வாரண்டி முடிந்துவிட்டால் ரிப்பேர் செய்ய காசு கொடுக்க வேண்டும். ஆனால், உங்கள் தலையில் மிளகாய் அரைத்தால், இவையெல்லாம் தேவையில்லை பாருங்கள்.

அதுமட்டுமல்லாமல், அரைத்து முடித்ததும் காரம் உங்களுக்குத்தான் ஏறும், அரைத்தவருக்கு ருசியான சட்னி கிடைத்துவிடும்.

இந்த உலகத்தில் உங்கள் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் யாரும் திடீரென்று கையில் அம்மிக் கல்லோடு வருவதில்லை. அவர்கள் மிகவும் அன்பானவர்கள், உங்களின் நலம் விரும்பிகள், சில சமயம் உங்களுக்கு மட்டும் தான் இந்தச் சலுகை என்று வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள்.

மச்சி, உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா? என்று ஒருவர் தோளில் கை போடுகிறார் என்றால், அவர் தன் கையில் காஷ்மீரி மிளகாயை மறைத்து வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

உங்கள் தலை எவ்வளவு ப்ளெய்ன் ஆக, அதாவது வழுக்கையாகவோ அல்லது கூந்தலோடோ இருக்கிறதோ, அவ்வளவு நைஸாக மிளகாய் அரையும். நீங்கள் நான் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் அந்த உன்னத கணத்தில்தான், பின்மண்டையில் காரம் இறங்கத் தொடங்கியிருக்கும்.

பங்குச் சந்தையில் டபுள் டிரிபிள் பிராபிட், பிரெண்ட் கேட்ட பர்சனல் லோன், இன்னும் இரண்டே வருடத்தில் டபுள் மடங்கு லாபம் தரும் ரியல் எஸ்டேட் பிசினஸ் என எல்லாமே மிக்ஸியை விட அதிவேகமாக உங்கள் தலையில் அற்புதமாக மிளகாய் அரைத்து விடுகின்றன.

கடைகளில் விற்கும் மிக்ஸிகளுக்குக் கூட ஓவர்லோடு பிரொடெக்சன்  என்றொரு சுவிட்ச் கீழே இருக்கும். மிளகாய் அதிகமாகிவிட்டால், அது தானாக டக் என்று ஆப் ஆகிவிடும். ஆனால், பிரபஞ்சம் மனித மண்டையைப் படைக்கும்போது அந்த சுவிட்சை வைக்க மறந்துவிட்டது.

நீங்கள் எப்போது அடுத்தவருக்கு உதவப் போகிறேன் என்று தியாகச் செம்மலாக மாறுகிறீர்களோ, அப்போதே உங்கள் தலை ஒரு உலகத்தரம் வாய்ந்த மிக்ஸி ஜாராக உருமாறிவிடுகிறது. உலகம் உங்களை ஒரு நல்லவன் என்று பாராட்டுவது, நீங்கள் காரத்தைத் தாங்கிக் கொண்டு சத்தமில்லாமல் அரைபடுவதற்காக மட்டும்தான்.

எனவே, அடுத்த முறை யாராவது உங்களிடம் வந்து, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், என்று இழுத்தால், உடனே உங்கள் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கே ஏற்கனவே போன வாரம் அரைத்த மிளகாயின் வாசம் இன்னும் மிச்சமிருக்கக் கூடும்!

*****

31 May 2026

காந்தி – அவசரகால நண்பர்!

காந்தி – அவசரகால நண்பர்!

அன்று காலை, அஜாத்தியன் ஊருக்குப் புறப்பட பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தார். அவரிடம் இரண்டு ஆயுதங்கள் இருந்தன. ஒன்று, அரசாங்கம் வழங்கிய சீனியர் சிட்டிசன் இலவசப் பேருந்து பாஸ். இரண்டு, உலகத்தையே ஆளும் 5G மொபைல் போன்.

இனி இந்த ஜென்மத்தில் ரொக்கப் பணம் தேவையில்லை, என்ற தத்துவ ஞானத்தோடு பஸ்ஸில் ஏறி ஜன்னலோர சீட்டில் அமர்ந்தார்.

பஸ் கிளம்பியது. நடத்துனர் விசில் ஊதிக்கொண்டே டிக்கெட் கேட்டு அவரிடம் வந்தார்.

அஜாத்தியன் மிகக் கம்பீரமாக, பாஸ் இருக்குப்பா என்றார்.

பாஸைக் காட்டுங்க ஐயா, என்றார் நடத்துனர். அவரது குரலில் அன்றாட வாழ்க்கையின் சலிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

அஜாத்தியன் தன் பையைத் துலாவிப்பார்த்தார். சட்டப் பை, பேண்ட் பை, பையின் உள் அடுக்கு என எல்லாவற்றையும் தேடினார். அப்போதுதான் அந்தப் பேராபத்து உறைத்தது. அவசரத்திலும் பதற்றத்திலும் சீனியர் சிட்டிசன் கார்டை வீட்டின் டைனிங் டேபிளிலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருந்தார்.

தம்பி, கார்டை வீட்ல வச்சிட்டு வந்துட்டேன். பரவாயில்லை, டிக்கெட் எடுத்துக்கிறேன், என்று சிரித்தபடியே தன் மொபைல் போனை எடுத்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யப் போனார்.

அங்கிருந்த பிரபஞ்சத்தின் அதிபதி லேசாகப் புன்னகைத்தான்.

மொபைல் திரையின் மூளையில் நோ நெட்வோர்க் மற்றும் E என்ற அட்சரங்கள் தோன்றி மறைந்தன. நெட்வொர்க் சிக்னல், ஞானம் பெற்ற முனிவரைப் போல உலக பந்தங்களில் இருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தது. மொபைல் செயலி சுழன்று கொண்டே இருந்ததே தவிர, பணம் பரிமாறப்படவே இல்லை.

தம்பி, நெட்வொர்க் கிடைக்கலப்பா. கொஞ்சம் பொறு, என்றார் அஜாத்தியன், நெற்றியில் வியர்வை அரும்ப.

ஐயா, இது கவர்ன்மென்ட் பஸ். நெட்வொர்க்குக்காகப் பஸ்ஸை நிறுத்த முடியாது. கையில் காசு இருந்தா கொடுங்க, இல்லாட்டி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குங்க, என்றார் நடத்துனர், எந்தவித தத்துவார்த்த சமரசமும் இன்றி.

அஜாத்தியனிடம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கையாளும் டிஜிட்டல் செயலிகள் இருந்தன. ஆனால், நடத்துனர் கேட்ட ஐந்து ரூபாய் இல்லை.

தொழில்நுட்பம் என்பது எவ்வளவு பெரிய மாயை! எலக்ட்ரான்களின் ஓட்டத்தை நம்பி மனிதன் தன் கால்களை நகர்த்திக் கொண்டிருக்கிறான். அந்த எலக்ட்ரான்கள் சோம்பேறித்தனம் பட்டு நின்றால், மனிதன் நடுவழியில் நிற்க வேண்டும்.

இரண்டு ஸ்டாப்பிங் தள்ளிய ஒரு வெறிச்சோடிய இடத்தில் பஸ் நின்றது. அஜாத்தியன்  தன் மொபைல் போனைப் பைக்குள் திணித்துவிட்டு, பஸ்ஸை விட்டு இறங்கினார்.

அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பும் அந்த நீண்ட பாதயாத்திரையில்தான் அவருக்கு உண்மையான தத்துவ ஞானம் பிறந்தது. சுட்டெரிக்கும் வெயிலில், தன் சொந்தக் கால்களையே நம்பி அவர் நடந்து கொண்டிருந்தார்.

நீங்கள் அம்பானியாகவே இருந்தாலும், உங்களுக்காகச் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தாலும், உங்கள் போனில் லட்ச ரூபாய் பணம் இருந்தாலும் நெட்வொர்க் இல்லாத ஒரு கிராமத்துச் சாலையில், நடத்துனரின் கையில் இருக்கும் அந்த அழுக்கான ஐந்து ரூபாய் நாணயம்தான் அதிபதி.

தொழில்நுட்பம் என்பது ஓர் அழகான காதலி போன்றது. தேவைப்படும்போது அது நாட் ரீச்சபிள் ஆகிவிடும்.

அஜாத்தியன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, டைனிங் டேபிளில் அந்தப் பேருந்து பாஸும், அதன் அருகில் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றும் இவரைப் பார்த்துப் பல்லிளித்தன.

அன்று முதல், அவர் வெளியே செல்லும்போது மொபைலை மறந்தாலும் மறக்கிறாரே தவிர, அவசரத் தேவைக்காக ஒரு நூறு ரூபாய் நோட்டைத் தன் பையின் ரகசிய அடுக்கில் மடித்து வைத்துக் கொள்ள மறப்பதே இல்லை.

ஏனென்றால், ரூபாய் நோட்டில் புன்னகைக்கும் காந்தியை விடச் சிறந்ததொரு அவசரக் கால நண்பன் இந்த டிஜிட்டல் யுகத்திலும் வேறு யாருமில்லை!

*****

30 May 2026

தியாகி, நிர்வாகி மற்றும் வியாபாரி – இயக்கங்களின் மரண வாக்குமூலம்!

தியாகி, நிர்வாகி மற்றும் வியாபாரி –

இயக்கங்களின்  மரண வாக்குமூலம்!

இயக்கங்கள் என்பவை ரயில்களைப் போன்றவை. தொடக்கத்தில் அவை எஞ்சின் சூடாக, கரும்புகை கக்க, லட்சியப் பாதையில் தடம் புரளாமல் ஓடப் பார்க்கும். இறுதியில் அவை ஒரு பழைய இரும்புக்கடையில் ஸ்கிராப் ஆகி, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏசி அறைகளில் அலங்காரப் பொருளாக வைக்கப்படும். இந்த மாற்றத்தை வரலாற்று ரீதியாக இப்படிப் பார்க்கலாம்.

இயக்கங்களின் தொடக்கக் கட்டத்தில் இருப்பவர்களுக்குக் கொள்கைதான் சோறு. உண்மையில் இவர்களுக்குச் சோறு கிடைக்காததால்தான் கொள்கையே சோறாகிறது. இவர்களின் அடையாளங்கள் என்பவை தாடி, அழுக்குச் சட்டை, கையில் ஒரு பை, இதயத்தில் ஒரு லட்சியம்.

இவர்கள் அதிகாரம் ஒரு சாக்கடை என்பார்கள். சாக்கடையைச் சுத்தம் செய்யப் போகிறேன் என்று சொல்லி இறங்குவார்கள்.

இவர்கள் எந்த அரசுப் பதவிக்கும் வரமாட்டார்கள். ஏனென்றால், இவர்களுக்குப் பதவி கொடுக்கும் அளவுக்கு அந்த அரசுக்குத் தைரியம் இருக்காது, இவர்களுக்குப் பதவி வாங்கும் அளவுக்குப் புத்திசாலித்தனமும் இருக்காது. இவர்கள் வரலாற்றில் தியாகிகள் என்று அழைக்கப்பட்டு, அடுத்த கட்டத் தலைவர்களால் மாலை போடப் பயன்படுத்தப்படுவார்கள்.

முதல் கட்டத் தலைவர்கள் நட்டு வைத்த மரத்தில் பழம் பழுக்கும்போது, இரண்டாம் கட்டத் தலைவர்கள் வருவார்கள். இவர்களுக்குக் கொள்கை முக்கியம்தான், ஆனா பசிக்குமே? என்று யோசிப்பவர்கள்.

இவர்களின் அடையாளங்கள் இஸ்திரி செய்த சட்டை, கையில் வாட்ச், முகத்தில் ஒரு ராஜதந்திரப் புன்னகை.

கொள்கையை நூறு சதவீதம் கடைப்பிடித்தால் மக்களால் வாழ முடியாது, எனவே அதை 40 சதவீதமாகக் குறைத்துவிட்டு, மீதி 60 சதவீதத்தை நடைமுறைச் சாத்தியங்களோடு கலப்போம் என்பார்கள் இவர்கள்.

இவர்கள் ஆட்சியில் அமர்வார்கள். ரத்தமும் சதையுமான மனிதர்களுக்குச் சில நன்மைகளைச் செய்வார்கள். ஆனால், அந்த நன்மைகளுக்கான விலையாகத் தங்கள் கொள்கையின் ஆன்மாவைச் கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைக்கத் தொடங்குவார்கள்.

இதற்கு அடுத்த இறுதி கட்டம்தான் சுவாரசியமானது. இப்போது இயக்கம் என்பது ஒரு மல்டி நேஷனல் கம்பெனி ஆகியிருக்கும்.. இங்கே தலைவர்கள் பிறப்பதில்லை, அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் அல்லது வாரிசு அடிப்படையில் தரவிறக்கம் செய்யப்படுகிறார்கள்.

இவர்களின் அடையாளங்கள் லேப்டாப், பவர் பாயிண்ட் பிரசன்டேஷன், ஐந்தடுக்கு பாதுகாப்பு, மற்றும் கன்சல்டன்ட் என்று சொல்லப்படும் விலை உயர்ந்த அறிவுரையாளர்கள்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை விட, எதைச் செய்தால் பெரிய பட்ஜெட்டில் புராஜெக்ட் போடலாம்? என்பதுதான் இவர்களின் கவலை.

இயக்கத்தின் பழைய கொள்கைகள் இப்போது டிஜிட்டல் திரைகளில் ஸ்லோகன்களாக மட்டுமே மின்னும். அடிமட்டத் தொண்டன் வாசலில் நிற்க, பினாமி நிறுவனங்களின் முதலாளிகள் ஏசி அறையில் அமர்ந்து டெண்டர் எடுப்பார்கள்.

கொள்கை என்பது இப்போது ஒரு பிராண்டிங் மட்டுமே. ஒரு காலத்தில் அதிகாரம் ஒரு சாக்கடை என்று சொன்ன இயக்கத்தின் வாரிசுகள், இப்போது அந்தச் சாக்கடையிலேயே நீச்சல் குளம் கட்டி, அதில் மினரல் வாட்டர் நிரப்பி விளையாடுவார்கள்.

இது ஒரு சுழற்சி. மதம், அரசியல், கார்ப்பரேட் என எதை எடுத்தாலும் இதுதான் விதி.

இதில் வேடிக்கை என்னவென்றால், கடைசிக் கட்டத்தில் இருப்பவர்கள் இப்போதும் முதல் கட்டத் தியாகிகளின் படத்தைப் போட்டுத்தான் லாப வேட்டையாடுவார்கள். தியாகிகள் சிலையாக இருப்பதால்தான் அமைதியாக இருக்கிறார்கள். ஒருவேளை உயிர் பெற்று வந்தால், மீண்டும் முதல் கட்டப் போராட்டத்தையே தன் இயக்கத்திற்கு எதிராகத் தொடங்க வேண்டியிருக்கும்.

ஆக ஒர் இயக்கம் எப்போது முழுமையாகச் சீரழிந்துவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், எப்போது அந்த இயக்கத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு கன்சல்டன்ட் தேவைப்படுகிறாரோ, அப்போதே அது செத்துவிட்டது என்று அர்த்தம்.

*****

29 May 2026

தூக்கி எறிதலின் தத்துவம்!

தூக்கி எறிதலின் தத்துவம்!

உலகம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி. நாம் அதன் கௌரவமிக்க விநியோகஸ்தர்கள்.

முன்பெல்லாம் எழுதுகோலில் மை தீர்ந்தால், பத்து காசுக்கு மை வாங்கி ஊற்றி, விரல் முழுக்க நீல நிறத்தை அப்பிக்கொண்டு அலைவதில் ஒரு கலை அம்சம் இருந்தது. இன்று பத்து ரூபாய் பேனாவில் மை தீர்ந்தால், அதை ஒரு கணம் கூடத் திரும்பிப் பார்க்காமல் அதை யூஸ் அன்ட் த்ரோ பார்ட்டியாக்கி விட்டார்கள்.

ஏன்?

நேரமில்லையாம்.

ஒரு பேனாவைத் திறந்து ரீபிள் மாற்ற நேரமில்லாத மக்கள், அடுத்த ஒரு மணி நேரத்தை ரீல்ஸ் பார்த்து நேரத்தைத் தொலைக்கக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் நகை முரண்.

கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்வது கௌரவக் குறைச்சல் என்று நாம் நினைக்கத் தொடங்கியதிலிருந்து, நம் வீடுகள் நெகிழிப் பைகளின் குடோன்களாக மாறிவிட்டன.

அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று குப்பை உற்பத்திக் கூடங்கள். ஒரு வாரத்தில் ஒரு டன் குப்பை.

நாம் எதைச் சேமிக்கிறோமோ இல்லையோ, கழிவுகளை மிகச் சரியாகச் சேமித்து இயற்கைக்குத் தானம் செய்கிறோம்.

அந்தக் காலத்தில் ஒரு மேஜை வாங்கினால், அது மூன்று தலைமுறைகளுக்குத் தாங்கும். இன்று வாங்கும் பிளாஸ்டிக் நாற்காலி, உட்காருபவரின் எடையைப் பொறுத்து எப்போது உடையலாம்? என்று தவம் இருக்கிறது. உடைந்தால் என்ன? தூக்கி எறிவோம். புதியது வாங்குவோம். இதுவே இன்றைய தத்துவமாக இருக்கிறது.

கைப்பேசிகளும் அப்படித்தான். ஒரு சின்னக் கீறல் விழுந்தால், அதைச் சரி செய்யத் தோன்றுவதில்லை. பழுது நீக்குபவரைத் தேடுவதை விட, புதிய மாடல் வாங்குவது சுலபம் என்கிறது சந்தை.

பண்டிகை வந்தால் துணி எடுக்கிறோமோ இல்லையோ, புதிய மொபைல் போன் எடுத்து பழையதை மின் கழிவாக மாற்றுகிறோம்.

பழுது நீக்கும் கடைகள் குறைந்து வருவது தற்செயலானது அல்ல. எதையும் சரி செய்யாதீர்கள், புதிதாக வாங்குங்கள் என்று நம் காதுக்குள் ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கிறார்கள் சந்தை நுகர்வு கலாச்சாரவாதிகள்.

மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது என்பது எவ்வளவு அழகான பொய்! உண்மையில் நம்மை நுகர்வுப் பசிகொண்ட இயந்திரங்களாக மாற்றியிருக்கிறார்கள்.

ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையை மண்ணில் வீசுவது நன்றிக்கடன். ஆனால், நாம் அதையும் குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஏனெனில், தூக்கி எறிதல் என்பது இப்போது நம் தசை நார்களில் ஊறிப்போன ஒரு கருத்தியல்.

பொருட்களைத் தூக்கி எறியும் இதே மனநிலை மெல்ல மெல்ல உறவுகளிலும் ஊடுருவுகிறது. ஒரு சின்ன விரிசல் விழுந்தால், ஒரு சின்னப் புரிதல் குறைந்தால், உறவுகளைச் சரி செய்ய யாருக்கும் பொறுமையில்லை.

அடுத்தது யார்? என்று தேடும் யூஸ் அண்ட் த்ரோ கலாசாரம் மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை.

தத்துவம் என்ன சொல்கிறது?

பூமியில் நாம் எதையும் புதிதாகப் படைக்கவில்லை. ஒன்று இன்னொன்றாக மாறுகிறது, அவ்வளவுதான். இந்தச் சுழற்சியை உடைத்து, எல்லாவற்றையும் கழிவாக மாற்றுவது தற்கொலைக்குச் சமம்.

மறுசுழற்சி என்பது ஏதோ ஒரு சட்டம் அல்ல. அது ஒரு மனநிலை. எதையும் தூக்கி எறியும் முன் யோசியுங்கள். ஒருவேளை நீங்கள் எறிவது ஒரு பொருளை மட்டுமல்ல, உங்கள் மனிதத்தையுமாக இருக்கலாம்.

*****

28 May 2026

அரசுப் பள்ளிகளின் இருத்தலியல் சிக்கல்!

அரசுப் பள்ளிகளின் இருத்தலியல் சிக்கல்!

கல்வி என்பது ஓர் ஏணி என்று சொன்னால், அந்த ஏணி எந்த மரத்தில் செய்யப்பட்டது என்பதில் தான் இந்தியச் சமூகம் குறியாக இருக்கிறது. அரசு மரம் என்றால் அலர்ஜி, தனியார் மரம் என்றால் பக்தி.

அரசுப் பள்ளிகள் என்பவை தெய்வங்களைப் போன்றவை. எல்லோரும் அவற்றைக் கும்பிடுவார்கள், வாழ்த்துக் கட்டுரை எழுதுவார்கள். ஆனால் யாரும் அங்கே குடியிருக்க அதாவது பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவதில்லை.

இந்தியாவில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது ஒரு பெரிய விவாதமாகவே மாறவில்லை என்பதுதான் ஆகச்சிறந்த தத்துவம்.

அரசுப் பள்ளியில் படித்தால்தான் அப்துல் கலாம் ஆக முடியும் என்று மேடையில் முழங்குபவர்கள், தன் பிள்ளையை அப்துல் கலாம் ஆக்காமல், அமெரிக்காவுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள்.

நாம் தமிழைத் தாய் என்கிறோம், ஆனால் ஆங்கிலத்தைத்தான் பாஸ் என்கிறோம். தமிழ் வழியில் படிப்பவனுக்கு ஆங்கிலம் பிணக்கு, ஆங்கில வழியில் படிப்பவனுக்குத் தமிழ் ஒரு வழக்கு.

உண்மையில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தாய்மொழியில் படித்து முன்னேறுகின்றன. ஆனால் இந்தியாவிலோ, ஆங்கிலம் என்பது ஓர் அறிவு அல்ல, அது ஒரு தகுதிச் சான்றிதழ்.

அரசுப் பள்ளிகள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மாணவர்கள் வருவார்கள் என்பது, கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கிறார் என்கிற கதையல்ல, பூசாரி வரம் கொடுத்தால்தான் சாமிக்கே மரியாதை என்கிற நிலை.

சீனா ஒரு மாணவனுக்கு 17,000 டாலர் செலவு செய்கிறது. இந்தியா 260 டாலர். இந்த இடைவெளிதான் அரசுப் பள்ளியின் கழிப்பறைக்கும், தனியார் பள்ளியின் ஏசி அறைக்கும் உள்ள வித்தியாசம்.

குறைந்த செலவில் அதிகத் தரம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மிதிவண்டி விலையில் ராக்கெட் வாங்குவதற்குச் சமம்.

அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒதுக்கும் நிதியில் எவ்வளவு சுவரில் ஒட்டுகிறது, எவ்வளவு அறிவில் ஒட்டுகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசு, ஆசிரியர்கள், பெற்றோர் என ஒரு பட்டாளமே உழைக்க வேண்டும்.

வெற்றியின் முதல்படி பள்ளிக்கல்வி என்பது உண்மையானால், அந்தப் படி வழுக்காமல் இருப்பதை உறுதி செய்வதுதான் சமூக நீதி. இல்லையென்றால், அரசுப் பள்ளிகள் என்பது வெறும் புள்ளி விவரங்களில் மட்டும் புள்ளிகளாக மட்டுமே எஞ்சியிருக்கும்.

கல்வி என்பது இருளை நீக்குவது அல்ல, வெளிச்சத்தில் எங்கே குழிகள் இருக்கின்றன என்று அடையாளம் காட்டுவதுதான். அரசுப் பள்ளிகள் அந்தக் குழிகளை மூடட்டும்!

*****

27 May 2026

கோடீஸ்வரக் காலமும் பிச்சைக்காரக் கோலமும்!

கோடீஸ்வரக் காலமும் பிச்சைக்காரக் கோலமும்!

சுஷில் குமார் என்று ஒரு மனிதர். 2011 இல் பீகாரின் மோதிஹாரிலிருந்து கிளம்பி வந்து அமிதாப் பச்சனின் முன்னால் அமர்ந்தார். ஐந்து கோடி ரூபாயை வென்றார். இந்தியாவே அவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியது.

ஆனால், இன்று? அவர் ஒரு பள்ளி ஆசிரியர். இடையில் குடிப்பழக்கம், திவாலான நிலை என நரகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

பணம் என்பது ஒரு விசித்திரமான மிருகம். அதை எப்படி மேய்க்க வேண்டும் என்று தெரியாதவனுக்கு, அது புலியாக மாறி அவனையே தின்றுவிடும் என்பதற்கு சுஷில் குமார் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

திடீர் பணக்காரர்களிடம் ஒரு பொதுவான குணம் உண்டு. பணம் வந்துவிட்டது, இனி மூளை எதற்கு? என்று நினைப்பதுதான் அது.

கைவசம் இருக்கும் பணம் எப்போதும் தீராது என்கிற அறியாமைதான் வீழ்ச்சியின் முதல் படி.

ஒரு குடத்தில் ஓட்டை இருந்தால், அதில் நீங்கள் கங்கையைத் திருப்பினாலும் குடம் நிறையாது.

ஆறாயிரம் ரூபாய் சம்பாதிக்கும்போது இருந்த அதே ஆசைகள், கையில் ஐந்து கோடி வந்ததும் அப்கிரேட் ஆகின்றன. சொகுசு கார், விலையுயர்ந்த வீடு, தேவையற்ற ஆடம்பரம் என இவை எதற்கும் முடிவே இல்லை.

வருமானத்தைப் பெருக்காமல், வாழ்வாதாரத்தின் தரத்தை மட்டும் உயர்த்திக்கொண்டே போனால், ஒரு கட்டத்தில் வாழ்க்கைத்தரம் மேலே இருக்கும், வங்கிக் கணக்கு பாதாளத்தில் இருக்கும்.

பணத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று வரும் நபர்கள், உண்மையில் உங்கள் பணத்தை காணாமல் போகச் செய்யும் மந்திரவாதிகள். நிதியறிவு இல்லாதவர்கள் இவர்களிடம் சிக்கி, ரிஸ்க் என்கிற பெயரில் மொத்தப் பணத்தையும் சூதாட்டத்தில் விடுவது போல இழக்கிறார்கள். பேராசை இருக்கும் இடத்தில் புத்தி வேலை செய்யாது.

சமூகத்தின் கண்களில் பெரிய ஆளாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதே, அதுதான் பலரை அழித்திருக்கிறது. உறவினர்களுக்கு வாரி வழங்குவது, நண்பர்களுக்கு விருந்து வைப்பது என கர்ண வேடம் போடும்போது, உங்கள் பணப்பை மெல்ல மெல்லக் கிழியத் தொடங்குகிறது.

பணம் என்பது உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு, அது அடுத்தவர் முன் நீங்கள் காட்டும் அலங்காரப் பொருள் அல்ல.

ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி, அதை முப்பதாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுவது என்பது, யானை வாங்கி அதற்குத் தீனி போட காசைச் செலவழிப்பது போன்றது. இது லாபமல்ல, ஒரு வகையான ஆடம்பர நஷ்டம். வாடகை வருமானம் என்பது முதலீட்டில் வெறும் 3.6 சதவீதம் என்பதால், அந்தப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் கூட கூடுதல் வட்டி கிடைத்திருக்கும்.

வாழ்க்கை என்பது லாட்டரி அல்ல, அது ஒரு நீண்ட தூர ஓட்டம். திடீரெனப் பணம் கிடைப்பது ஒரு விபத்து. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் தவம்.

மழை அடிக்கும் முன் குடை பிடிப்பது புத்திசாலித்தனம்.

பசிக்குச் சாப்பிடுங்கள், ருசிக்காக உங்கள் வாழ்க்கையைச் சாப்பிடாதீர்கள்.

எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள். கூடை விழுந்தால் எல்லாம் உடையும்.

தெரியாத பாதையில் போகும்போது வழி கேட்பது இழிவு அல்ல, அதுதான் அறிவு.

பணம் உங்கள் வாழ்க்கையை மாற்றாது. உங்கள் புத்திதான் உங்கள் வாழ்க்கையை மாற்றும். பணம் என்பது ஒரு கருவி மட்டுமே. அதைச் சுத்தியலாகப் பயன்படுத்தி வாழ்க்கையைச் செதுக்கப் போகிறீர்களா, அல்லது அதே சுத்தியலால் உங்கள் தலையிலேயே அடித்துக்கொள்ளப் போகிறீர்களா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

இறுதியில், சுஷில் குமார் இன்று ஓர் ஆசிரியர். அவர் பணத்தை இழந்தார், ஆனால் வாழ்வின் பாடத்தைக் கற்றுக்கொண்டார். நீங்கள் பணத்தை இழக்காமலேயே இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது நலம்.

*****