5 Feb 2026

உலகைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்!

எப்ஸ்டீன் – ஒரு கணினி காலத்து லோலிதா

ஜெப்ரி எப்ஸ்டீன். பெயர் ஒரு மாதிரி ஜேம்ஸ் பாண்ட் வில்லன் போல இருக்கிறது இல்லையா? ஆள் நிஜமாகவே வில்லன்தான். ஒரு பில்லியன் டாலர் மூளை. அசாத்தியமான நெட்வொர்க்கிங். எலெக்ட்ரானிக் வேகம் கொண்ட வாழ்க்கை.

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆலோசகரான எப்ஸ்டீன் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கிய டச் அப்பில் டூ மச்சாக இருந்தவர்.

2000 ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில், சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அவர்களைக் கடத்திச் சென்று தனது சொந்தத் தீவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் இவர் மீது புகார்கள் எழுந்தன. 2019 இல் கைது செய்யப்பட்ட இவர், சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மனுஷன் செய்தது என்னவோ மகா தப்பு. ஒரு தீவையே விலைக்கு வாங்கி, அதில் சிறுமிகளை வைத்துக்கொண்டு தனி உலகம் நடத்தியிருக்கிறார். அந்த லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவில் நடந்தவை எல்லாம் அப்பட்டமான குரூரங்கள்.

அது குறித்து விசாரணை நடத்தி அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்டு வரும் இந்தக் கோப்புகளில் எப்ஸ்டீனுடன் பழகியவர்கள், அவரது தீவிற்குச் சென்றவர்கள் அல்லது அவரது லோலிதா எக்ஸ்பிரஸ் தனி விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர்கள் உள்ளன.

ஏன் இது உலகையே பூகம்பம் போல அதிர வைக்கிறது என்றால், இந்தக் கோப்புகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நபர்களின் பெயர்கள் 9.8 ரிக்டர் ஸ்கேலில் அடுத்தடுத்து அடிபடுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்:

இப்போது வெளியாகி இருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் என்பது ஒரு வகை பண்டோராவின் பெட்டி. திறந்தால் உள்ளிருந்து வண்டுகள் வெளியே வருகின்றன.

யார் யார் அந்த வண்டுகள்?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தொடங்கி இந்நாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட, பிரிட்டிஷ் இளவரசர் ஆன்ட்ரூ, மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யத்தின் பில்கேட்ஸ் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், பெயர் வந்தவர்கள் எல்லாம் இப்போது கோரஸாகப் பாடுவது ஒரே ஒரு பல்லவிதான் - அவரை எனக்குத் தெரியும். ஆனால், அவர் இப்படிப்பட்டவர் என்று தெரியாது. பில் கேட்ஸ் மட்டும் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டு விட்டார்.

ஆனால் அவர்கள் சொல்வது ரொம்ப சௌகரியமான தர்க்கம் இது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தக் கோப்புகளில் இந்தியாவின் நிலை?

இப்போதைக்கு இந்தியா தப்பித்திருக்கிறது. இங்கே கோப்புகள் என்பவை பெரும்பாலும் ரேஷன் கார்டாகவும், மின்சார பில்லாகவும்தான் இருக்கின்றன. எப்ஸ்டீன் கோப்புகளில் இந்தியத் தலைவர்களின் பெயர்கள் இருப்பதாக வரும் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை இப்போதைக்கு நம்ப வேண்டாம். அவை பெரும்பாலும் குரூப் 4 தேர்வுக்கான வதந்திகளை விட மோசமானவை.

அதே நேரத்தில் வருங்காலத்தில் இந்தியா தப்பிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொண்டார், அல்லது செய்யப்பட்டார் இல்லையா! அது இன்னொரு மர்ம நாவல். ஆனால் அவர் விட்டுச் சென்ற டிஜிட்டல் தடயங்கள், இப்போது பல விஐபிகளின் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் சாமானிய மனிதனுக்கு ஒரு சின்ன பயம் வரலாம். அதிகாரம், பணம், ரகசியம் – இந்த மூன்றும் சேர்ந்தால் மனிதன் மிருகமாக மாற எவ்வளவு நேரம் ஆகும்? அதற்கான பதில் ஒன்றும் கடினமானதல்ல, ஒரு நேனோ செகண்ட் போதும்.

கடைசியாக ஒரு கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய மர்மங்களைச் சுமந்து கொண்டு, எப்ஸ்டீன் மட்டும் எப்படி அத்தனை ஆண்டுகள் ஜாலியாகச் சுற்றித் திரிந்தார்?

தப்பு செய்பவர்களை விட, தப்பை வேடிக்கை பார்ப்பவர்களின் அதிகாரம் பெரியது. நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஆனால், உண்மை ஒரு நாள் வெளிவரும் போது வேடிக்கை பார்த்த அதிகார மையங்கள் அனைத்தும் ஆட்டம் காண்பதை அந்த ஆண்டவனே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

*****

மனதின் இரைச்சலுக்கு இலக்கிய தெரபி!

மனதின் இரைச்சலுக்கு இலக்கிய தெரபி!

இப்படி ஒரு மன உளைச்சல் இதற்கு முன் எப்போதும் வாய்த்ததில்லை. காரணம் சிம்பிள். வாசிப்பைக் கைவிட்டது. மனசு என்பது ஒரு லைப்ரரி மாதிரி. ஒழுங்காக அடுக்கி வைக்காத புத்தகங்களால் மூளை இப்போது குப்பையாகிக் கிடக்கிறது.

மீண்டும் ஒரு சீர்மையும் ஒழுங்கும் தேவைப்படுகிறது.

திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியம்... இவற்றைத் தேடித் தேடி படிக்க செய்ய வேண்டும். சூத்திரங்கள் மனதுக்குள் அமர்ந்தால், தர்க்கம் தானாகத் திரும்பும். சிதறிய எண்ணங்கள் வரிசைக்கு வரும்.

அப்புறம் அந்த அதீத உழைப்பு வியாதி.

இத்தனை நாள் யார் யாருக்காகவோ உழைத்தேன். அப்போது விதவிதமான எதிர்பார்ப்புகள் முளைத்திருக்கின்றன. என் உழைப்பை நான்கு பேர் பாராட்ட வேண்டும், அதில் கொஞ்சமேனும் சொற்ப வருமானம் வர வேண்டும் என்ற நப்பாசை.

உலகியல் தர்க்கப்படி பார்த்தால் பார்த்தால், இது ஒரு தேவையற்ற குப்பை வேதாந்தம். உண்பதற்கு, உடுப்பதற்கு, இருப்பதற்கு வருமானம் வருகிறதா? யாரையாவது சந்தித்தால் நான்கு பேருக்குத் தேநீர் வாங்கிக் கொடுக்க பையில் காசு இருக்கிறதா? அதுவே போதுமான சம்பாத்தியம். அதற்கு மேல் ஏன் அதீத எதிர்பார்ப்பு?

அதிர்ஷ்டம் இல்லாமல் ஏதோ கிடைப்பதுதான் எல்லாருக்கும் கொடுப்பினை. முட்டி மோதி யாரும் இதுவரை எதையும் சாதித்ததாகச் சரித்திரம் இல்லை, தலையை உடைத்துக் கொண்டு தக்காளி சட்டினியைப் பார்த்ததுதான் மிச்சம்.

இன்னொரு தவறு, வழக்கமாக எல்லாரும் செய்வது. எல்லாவற்றிலும் கை வைப்பது. மல்டி டாஸ்கிங் என்பது கேட்க நன்றாக இருக்கும். ஆனால், எல்லாத் துறைகளிலும் கால் வைத்தால் கவனம் காற்றில் பறந்துவிடும். அதுதான்  மனச்சோர்வாகத் திடீரென பூதம் போல எதிரில் வந்து நிற்கிறது.

ஆனால் ஒன்று... செயல்பட ஆரம்பித்தால் சோர்வு காணாமல் போய் விடும். ஐந்து நிமிடம் யோசிப்பதை விட, ஒரு நிமிடம் வேலை செய்வது மேல் என்கிற இன்ஜினியரிங் இத்தியாதிதான் இதற்குத் தீர்வு.

இவற்றையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது. வாசிக்க வாசிக்க ஏதோ கொஞ்சம் புரிகிறது. அனுபவப்பட செருப்படி சித்தாந்தங்கள் நிறையே கிடைக்கின்றன.

மற்றபடி நிற்காமல் வாசித்துக் கொண்டே, எதிர்கொள்ளும் அனுபவங்களைச் சுவாசித்துக் கொண்டே பயணித்துக் கொண்டே இருங்கள். இளைப்பாறுவதற்கான நிழல் தரும் கானகத்தைப் பயணமே காட்டிக் கொடுக்கும். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் இதையே நான் சொல்லிக் கொள்கிறேன்.

*****

4 Feb 2026

பணால் ஆன இரண்டு லட்சம் கோடி!

சிலிக்கான் சிப்சும் சிதறிய கனவுகளும்!

இன்று பிப்ரவரி 4 ஆம் நாள் இந்திய ஐடி நிறுவனப் பங்குகளுக்கு ஒரு கேடு காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஐடி நிறுவனப் பங்குகள் சீட்டுக்கட்டுகள் சரிவதைப் போலச் சரிந்து 8 சதவீதம் வரையிலான வீழ்ச்சியைச் சந்தித்து டைவ் அடித்துள்ளன. இது மார்ச் 2020க்குப் பிறகு ஐடி நிறுவனப் பங்குகள் சந்திக்கும் ஒரு மோசமான சரிவாகும்.

இது இயந்திரங்கள் செய்யக் கூடிய சதியா என்றால், இயந்திரங்கள் பண்ணப் போகும் வேலைகளைப் பார்த்து மனிதர்கள் ஐடி நிறுவனப் பங்குகளில் பறிக்கும் குழி. டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரிய ஐடி தலைகளே இன்றைய ஆடிக் காற்றில் அம்மியைப் போலப் பறக்க ஆரம்பித்து விட்டன.

ஏன் சரிந்தன ஐடி நிறுவனப் பங்குகள்?

காரணங்கள் இதோ,

அமெரிக்காவின் Anthropic நிறுவனம் தனது 'Claude' சாட்பாட்டில் புதிய வேலைவாய்ப்பு சார்ந்த தானியங்கி கருவிகளை (Workplace Automation tools) அறிமுகப்படுத்தியுள்ளது. இது சட்டம், விற்பனை மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை மனித உதவியின்றிச் செய்யக்கூடியது. இதனால், இந்திய ஐடி நிறுவனங்கள் செய்யும் பாரம்பரிய வேலைகளுக்கு (Outsourced services) எதிர்காலத்தில் மவுசு குறையுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. அச்சம் எழுந்தால் முதலீட்டாளர்கள் அன்ட்ராயர் கழண்டு விழுவது கூட தெரியாமல் ஓடுவார்கள் என்பதால், ஐடி நிறுவனப் பங்குகள் எல்லாம் பல்டி அடிக்க ஆரம்பித்து விட்டன.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கிலேயே ஐடி நிறுவனப் பங்குகள் தலைகுப்புற விழுந்து கடும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக Nvidia, Microsoft, Alphabet போன்ற நிறுவனங்களின் பங்குகளே டமால் டுமாலைச் சந்தித்தன.

சமீபத்திய இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக இன்று வலுவடைந்தது. ஐடி நிறுவனங்கள் தங்களது வருவாயை டாலரில் ஈட்டுவதால், ரூபாயின் மதிப்பு உயரும்போது அவற்றின் லாப வரம்பு திறந்து வைத்த கற்பூர டப்பாவைப் போலப் பாதிக்கப்படும். இதுவும் ஐடி நிறுவனப் பங்குகள் தலைகுப்புற படுத்துக் கொள்ள காரணமாகி விட்டது.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஐடி நிறுவனங்களின் "Billable Hours" (பணியாளர்களின் வேலை நேரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படும் கட்டணம்) கோடையில் அடிவாங்கும் மேட்டூர் அணையைப் போலக் குறையக்கூடும். இது ஐடி நிறுவனங்களின் எதிர்காலத்தைச் சூன்யமாக்கி விடும்.

இதனால் ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் ஐடி துறை முதலீட்டாளர்களுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவனப் பங்குகளில் ஆர்வமாக முதலீடு செய்தவர்கள் தெருக்கோடியில் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

பொதுவாகப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் விசித்திரமானவர்கள். பயம் வந்தால் விற்றுத் தள்ளுவார்கள். ஆசை வந்தால் வாங்கித் தள்ளுவார்கள். அதனால் இன்று வீழ்ந்த ஐடி நிறுவனப் பங்குகள் சில நாட்களில் ஏறவும் கூடும், ஒருவேளை ஏறாமல் போகவும் கூடும்.

பெரும்பாலும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நாளை என்ன நடக்கும் என்ற பயத்தில் இன்றைக்கே சூசைட் அட்டெம்ப்ட் பண்ணும் கேரக்டர்கள்.

இதன் விளைவு பங்குச் சந்தையில் மட்டுமில்லை, கல்யாணச் சந்தையிலும் இனி பிரதிபலிக்கும். இனி ஐடி மாப்பிள்ளை என்றாலோ, கோடிங் தெரிந்த ஜாம்பவான் என்றாலோ பெண் கொடுக்க கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார்கள். வியாபாரச் சந்தையிலும் இதன் பிரதிபலிப்பு இருக்கும். ஐடி நிறுவனங்களின் பக்கத்தில் இருக்கும் மால்களில், ஹோட்டல்களில் காற்றடிக்கவும் ஆரம்பித்து விடும். ரியல் எஸ்டேட்டை இனி இஷ்டப்படி ஏற்றுவதெல்லாம் வேளச்சேரியிலோ, சோழிங்கநல்லூரிலோ நடக்காது. கொஞ்ச நாள் அடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை.

*****

மனசு - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

மனசு - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

மனசு ஒரு குரங்கா என்றால், இல்லை, அதைவிட மோசம். ஒரு சேனலில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ரிமோட் இல்லாத டிவி போன்றது. கவனச் சிதறல் அதன் செல்லக் குழந்தை. ஒரு புள்ளியில் நிற்க மறுக்கும். ஆழி சூழ் உலகு மாதிரி இது ஒரு மாதிரி நிறைவின்மை சூழ் வாழ்க்கை. இது தன்னைத் தானே பிய்த்துப் போட்டுக் கொள்ளும் ஒரு சைக்காலஜிக்கல் அரக்கன். கடைசியில் ஐயோ, வலிக்கிறதே, ரத்தம் வருகிறதே என அழும். அதற்கு ஆபரேஷன் செய்தால் வலிக்குமா என்று நம்மையே கேட்கும்.

இதிலிருந்து தப்பிப்பதற்கான கொள்கை ரொம்ப எளிமையானது.  அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. பிறகு, சுவாசிப்பதற்கு நமக்கு மூக்கு இல்லாமல் போய் விடும். அது ஆபத்து மட்டுமல்ல, அநாகரிகம். மற்றவர் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது ஒரு தியேட்டர் அனுபவம் போல. அவர் நெருப்பில் குதிக்கும்போது, நாமும் கூடவே குதிப்பது முட்டாள்தனம். ஏற்கனவே வாழ்க்கை ஏகப்பட்ட பிரச்சனைகளை இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்போது, நாமாகப் போய் பெய்ட் சர்வீஸ் எடுத்துக் கொண்டு நாசமாகத் தேவையில்லை. வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்போதும் பை ஒன், கெட் டூ அல்லது பைன் ஒன் கெட் ஒன் ப்ரீ ஆபர்தான். அதனால் எச்சரிக்கை ரொம்பவே அவசியம்.

அடுத்தது, மகிழ்ச்சி. அது ஒரு தனிநபர் சொத்து. மற்றவர்களிடம் போய் பிச்சை கேட்பதில் அர்த்தமில்லை. ஏமாற்றம்தான் மிஞ்சும். சுய மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட. பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு அதுதான் ஒரு தற்காப்பு கலை. என் மகிழ்ச்சிக்கு நான் தான் ஸ்பான்சர். அது மற்றவன் தருவதை விடக் குறைவாக இருக்கலாம், ஆனால் அது சுத்தமானது. கலப்படமில்லாதது. எனது தேவை, எனது விருப்பம். இதில் மற்றவர்களின் தீர்ப்புகளுக்கு வேலையே இல்லை.

உழைப்பது பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே நேற்று கொஞ்சம் சொல்லி விட்டேன். இன்னும் கொஞ்சம் சொல்லவும் இடம் இருக்கிறது. மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்வது தவிர்க்க முடியாது. செருப்பு கொழுப்பதற்கா பிறந்திருக்கிறது, தேய்வதற்குத்தானே. அப்படித்தான். இப்படி படாத பாடு படுவதற்காக யாரும் வந்து பொன்னாடை போர்த்த போவதில்லை, கை தூக்கி விடவும் போவதில்லை. அவரவர் வீடு, அவரவர் பாடு. அதனால் யாருக்காகவும் எதையும் பாலிஷ் செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக உழைப்பது என்பது கமர்ஷியல் சினிமா போல. நமக்கு எதார்த்த சினிமாவே போதுமானது. பட்ஜெட்டும் கம்மி, சென்சார் பிரச்சனைகளும் இருக்காது. யாரோ ஒருத்தர் எப்போதாவது பார்த்து அடடா என்பார். அது போதும் நமக்கு.

சுருக்கமாகச் சொன்னால்… இதைச் சொல்ல ஒரு மாதிரியாகவும் இருக்கிறது, எல்லாரும் சொல்லி விட்டார்கள், இருந்தாலும் வேறு வழியில்லை,  எண்ணங்களை வேடிக்கை பாருங்கள். புரிந்துகொள்ள முயலுங்கள். மனநிறைவு என்பது வெளியே இல்லை, அது உங்களின் சொந்த ப்ரைவேட் ஏரியா. இது எங்க ஏரியா, உள்ளே வராதே என்பது இதற்கு மட்டும் நூறு சதவீதமென்ன, இருநூறு சதவீதம் கூட பொருந்தும். நீங்கள் உங்கள் மனதை ஸ்கேன் செய்யும் போது, வேறு எதாவது தோன்றினால், அதையும் சொல்லுங்கள். சேர்த்துக் கொள்வோம்.

*****

3 Feb 2026

சுயநலத்தின் ஜியோமெட்ரி!

சுயநலத்தின் ஜியோமெட்ரி!

உலகத்தில் உழைக்கிறவன் கதி அவ்வளவுதான். அவன் பிழைக்கத் தெரியாதவன், அப்படியே உழைத்துக் கொண்டே கிடக்கட்டும் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள். மனிதர்களின் சுயநலம் இருக்கிறதே, அது ஒரு தனி டிசைன்!

சரி, நாம் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? கூடாது. லாஜிக் பார்க்காமல், நியாய, தர்மங்கள் பார்க்காமல் அந்தந்த நிமிடம் மனதில் என்ன 'ரா-வாக' (Raw) தோன்றுகிறதோ, அப்படி வாழ வேண்டும். அவ்வப்போது மனதை 'ரீ-சார்ஜ்' செய்து கொள்ளாவிட்டால், மனப்புழுக்கம் ஏறிவிடும். அந்த இறுக்கம் இருக்கிறதே, அது ஒரு சைலண்ட் கில்லர். எப்பேர்ப்பட்ட மனுஷனையும் அப்படியே சாய்த்துவிடும்.

இந்த மனிதர்கள் படுத்தும் பாடுகளில் சில சமயம் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. மூளைக்குச் செல்லும் சிக்னல்கள் கட் ஆனது போல் ஒரு உணர்வு. யாரோ கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், யாரைக் கேட்டாலும் என் கைகளில் கயிறு இல்லையே என்பார்கள்.  சுற்றிலும் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாம் அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஆக்சன் செய்ய வேண்டும்.

ஆனால், ஒரு பயலாவது நாம் என்ன நினைக்கிறோம் என்று யோசிப்பதில்லை. சுயநலம்தான் இயல்பானது இல்லையா?

இவர்களிடம் போய் தர்மத்தைக் கேட்டால் அதற்கு ஒரு பில் போட்டு அதை கேட்டவர்களுக்கே பார்சல் பண்ணி வைப்பார்கள்.

இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால், அவர்களின் கையில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோலுக்கு ஆடும் ரோபோட்டாக நம்மை எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்குத் தேவையெல்லாம் இவர்களுக்குத் தகுந்தாற்போல நடிக்கும் நடிகர்கள்தான், நல்ல மனிதர்கள் இல்லை.

நம்மை வரைபடத்தில் அடைத்து விட்டு, நம் சிறகுகளின் நீளத்தை அளக்கப் பார்ப்பவர்கள் நம்மை மியூசியத்தில் அடைக்கப் பார்க்கிறார்கள். அங்கு நாம் பலராலும் பார்க்கப்படுவோம் என்பது உண்மைதான். நம்மால் வெளியுலகைப் பார்க்க முடியாது. யாரும் நம்மைக் காட்சிப்படுத்த வேண்டாம். அப்படி நம்மை காட்சிப்படுத்துகிறேன் என்பவர்களுக்காக உழைத்துக் கொட்டவும் வேண்டாம்.

அவ்வபோது இவர்களைக் கோபிக்கவும் தயங்கக் கூடாது. இவர்களை விட்டுப் போய் விடுவேன் என்று பாச்சா காட்டவும் தயங்கக் கூடாது. இவர்களை விட்டு விட்டு இவர்கள் கண்ணில் படாமல் சில நாட்கள் காணாமல் போவதும் தவறு கிடையாது.

இந்த மனிதர்கள் மத்தியில் இந்த மனம் என்பது ஒரு பிரஷர் குக்கர் போன்றது. அவ்வபோது சிறு சிறு சந்தோசங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் டமால் ஆகி விடும். அவ்வபோது இவர்களை நையாண்டி செய்ய யோசிக்காதீர்கள். அப்படிச் செய்யாவிட்டால் இவர்கள் உங்களைப் போண்டியாக்கிக் கோவணாண்டி ஆக்கி விடுவார்கள்.

*****

2 Feb 2026

ஆபரேஷன் சைலண்ட் – ரகசியம் காத்தல் & காரியம் முடித்தல் பற்றியது!

ஆபரேஷன் சைலண்ட் – ரகசியம் காத்தல் & காரியம் முடித்தல் பற்றியது!

தன்னம்பிக்கை புத்தகங்களில் ‘உன்னால் முடியும் தம்பி’ ரகக் கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு சந்தேகம் வரும். ஒரு தனி மனிதன் நினைத்தால் இமயமலையை இடமாற்றி விடலாம் என்று எழுதுகிறார்கள். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறை வேறு. ஏதேனும் பூமி அதிர்வோ, கடற்கோளோ நடந்து இமயமலை நகர்ந்தால்தான் உண்டு.

அப்படியிருக்க ஏன் இப்படி எழுதுகிறார்கள்? தமிழ்ப்படங்களில் நடக்கும் நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்கின்ற இவை போன்ற சம்பவங்கள் நடைமுறையில் வாழ்க்கையில் பக்காகி விடும். இதிலும் ஒரு விடயம் இருக்கிறது. இது ஒரு கும்பல் உளவியலை உருவாக்க நினைக்கும் முயற்சி. தனியாக இருக்கும் போது மனிதர்கள் சிறு கல்லை நகர்த்த கூடசோம்பல் படுவார்கள். அதுவே, ஆயிரக்கணக்கில் சேரும் போது இமயமலையைக் கொத்தி அப்படியே கொத்து பரோட்டா போட்டு சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

மனிதர்கள் தனித்தனியாக இருக்கும்போது புத்திசாலிகள். ஆனால் ஒரு கூட்டமாகச் சேரும்போது அவர்களுக்கு ஒரு விசித்திரமான மனநிலை வந்துவிடுகிறது. கூட்டமாகச் செயல்படும்போது அவர்கள் எதற்குப் பிரதிவினை செய்வார்கள், எதற்கு மவுனமாக இருப்பார்கள் என்பதைக் கணிக்க ஒரு தனி அல்காரிதம் தேவை. அது தெரியாமல் நீங்கள் களத்தில் இறங்கினால், தர்ம அடிதான் கிடைக்கும்.

இந்தக் கும்பல் உளவியலைத் தூண்டி விடும் புத்தகங்கள், பஞ்சாங்கத்தைப் போலவும், சமையல் புத்தகங்களைப் போலவும் அமோகமாக விற்பனை ஆகும். அப்படி ஒரு புத்தகத்தை எழுத ஆசைப்படும் கனவான்கள் தமிழ்நாட்டில் நிறைய பேர். அவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையே மாஸ்டர் பீஸ் மனநிலைதான்.

பலர், நான் எழுதினால் பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்குத்தான் எழுதுவேன், என்று பேனாவைத் திறக்காமலேயே காலத்தைக் கடத்துகிறார்கள். இது தப்பு. நீங்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி எழுதிக் குவிக்கும் குப்பைகளுக்கு நடுவில்தான் எங்காவது ஒரு பொக்கிஷம் ஒளிந்து கொண்டிருக்கும். வைரத்தைத் தேடிப் போவதை விட, மணலைத் தோண்டிக் கொண்டே இருங்கள், வைரம் தானாகச் சிக்கட்டும். அந்தப் பொக்கிஷத்தை மட்டும் எடுத்து மெருகேற்றிப் பதிப்பிக்க வேண்டும்.

கடைசியாக ஒரு குறிப்பு,

நம் ஊரில் எதையும் சாதிப்பவர்களை விட, சாதிக்க விடாமல் தடுப்பவர்களுக்குத்தான் யூனியன் அதிகம். நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அதை எப்படி முடக்கலாம் என்று ஒரு கோஷ்டியே கிளம்பும். ஆகவே, மற்றவர்களைச் சாதிக்க வைக்க புத்தகம் எழுத நினைக்கும் நீங்கள் முதலில், உங்கள் சாதனைப் புத்தகத்தை எழுதும் வரை வாயைத் திறக்கக் கூடாது, பேனாவையோ, லேப்டாப்பையோ மட்டும்தான் திறக்க வேண்டும். இல்லையென்றால் வெறும் சத்தம்தான் மிஞ்சும்.

*****

1 Feb 2026

இரத்தக் களறியான இந்தியப் பங்குச் சந்தைகள்!

ஏன் சரிந்தன பங்குச் சந்தைகள்?

இந்தியாவின் மிகப்பெரிய இரு பங்குச் சந்தைகள் நிப்டியும் சென்செக்சும். இரண்டு பங்குச் சந்தைகளுமே பட்ஜெட் தாக்கலுக்குப் பின் மாபெரும் தாக்குதலுக்கு உள்ளாயின.

இன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கமாகப் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை நாள். எனினும் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கப்படுவதைப் போல, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இன்று பங்குச் சந்தைகள் இயங்க அறிவுறுத்தப்பட்டன.

ஒருவேளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இன்று பங்குச்சந்தைகள் இயங்காமல் இருந்தால், நாளை அதீத ஏற்ற இறக்கங்கள் பங்குச் சந்தையில் இருக்கலாம் என்பதற்காகத்தான் இயங்க அறிவுறுத்தப்பட்டன. அந்த நோக்கத்தையே பங்குச் சந்தைகளின் போக்கு மாற்றி அமைத்து விட்டன. இச்சம்பவம் பங்குச் சந்தையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு வலுசேர்க்கும் மற்றுமோர் உதாரணமாகி விட்டது. சுனாமிக்குத் தடுப்பணை கட்ட முடியாது என்பது நிரூபணமாகி விட்டது. பங்குச் சந்தை ஒரு விசித்திரமான மிருகம். அது எப்போது எகிறிக் குதிக்கும், எப்போது விழுந்து கையைக் கடிக்கும் என்பதெல்லாம் அனுமானிக்க முடியாத அமானுஷ்யங்கள்.

அது சரி, ஏன் சரிந்தன பங்குச் சந்தைகள்?

பங்குச் சந்தைகளின் சரிவுகளுக்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

அதில் முதன்மையானது, மூலதன ஆதாய வரி உயர்வு (Capital Gains Tax). இதுதான் சந்தை சரிந்ததற்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் குறுகிய கால மூலதன ஆதாய வரி (STCG) 15% இலிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) 10% இலிருந்து 12.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் லாபத்தில் அதிக வரி கட்ட வேண்டியிருப்பது பங்குச் சந்தையில் ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இது போன்ற கசப்பு மாத்திரைகளை முதலீட்டாளர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். வேறு எங்கேயாவது இனிப்பு மாத்திரை கிடைக்கிறதா என்று தேடப் போய் விடுவார்கள். அப்படி தேட இப்போது ஓடிப் போய் விட்டார்கள்.

பங்குச் சந்தைகளின் சரிவுக்கு இரண்டாவது முக்கிய காரணம், செக்யூரிட்டி டிரான்சாக்சன் வரி உயர்வு (STT). பங்குச் சந்தையில் டிரேடிங் செய்பவர்களுக்கு, குறிப்பாக ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு STT வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது வர்த்தகச் செலவை அதிகரிப்பதோடு, சந்தையில் பணப்புழக்கத்தைக் குறைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் பங்குச் சந்தையில் ஓர் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்று கூட ஆகலாம். யார் விரும்புவார்கள் இதை, புரோக்கரேஜ்ஜை விட டேக்ஸ் கூடுதலாகப் போனால்?

வழக்கமாகவே பங்குச் சந்தையில் அதிக எதிர்பார்ப்பு மற்றும் லாபப் பதிவு (Profit Booking) எப்போதும் இருக்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாகவே நிஃப்டியும் சென்செக்சும் கணிசமாக உயர்ந்திருந்தன. அதே நேரத்தில், பட்ஜெட்டில் சந்தையை அதிரடியாக உயர்த்தும் வகையிலான சலுகைகள் எதுவும் வராததால், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை எடுத்துக்கொண்டு பங்குகளை விற்கத் தொடங்கி விட்டனர். இது இயல்பாகவே சந்தையில் சரிவை ஏற்படுத்தி விட்டது. பட்ஜெட்டை வைத்து ஒரு ஜாக்பாட் அடிக்கலாம் என்று நினைத்தவர்கள், உள்ளதே போதும் என்று துண்டைக் காணும், துணியைக் காணும் என்று கம்பி நீட்டி விட்டார்கள். இது பங்குச் சந்தைகள் சரிவதற்கான மூன்றாவது காரணம்.

நான்காவது முக்கிய காரணமும் ஒன்று இருக்கிறது. அது,  நுகர்வு மற்றும் வருமான வரியில் ஏற்பட்ட ஏமாற்றம். நடுத்தர வர்க்கத்தினரின் கையில் அதிகப் பணப்புழக்கம் இருக்கும் வகையில் பெரிய வருமான வரிச் சலுகைகள் வரும் என்று இந்தப் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் வரவில்லை. பழைய அறிவிப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரி முறையில் வரி தாக்கல் செய்வதில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அது சந்தையின் பெரிய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

இவை எல்லாம் சேர்ந்து பங்குச் சந்தையில் பெருத்த சரிவை ஏற்படுத்தி விட்டன. இது மத்திய நிதி அமைச்சகமும் நிதி அமைச்சருமே எதிர்பாராத ஒரு சரிவாகத்தான் இருக்கும். வழக்கமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்புகள் இப்படிச் சந்தையில் சரிவை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தன. இந்த முறை அதை இந்திய பட்ஜெட் அறிவிப்பு ஏற்றுக் கொண்டு விட்டது.

மொத்தத்தில் கணக்குப் பிள்ளையின் கையை மீறிப் போன ஞாயிற்றுக் கிழமையாகி விட்டது இன்றைய ஞாயிறு. இன்றைய சந்தைச் சரிவில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இது விடியா ஞாயிறுதான்.

*****