17 Jul 2026

ஒரு வரதட்சிணை இயல்

ஒரு வரதட்சிணை இயல்

மனிதர்கள் விலங்குகளைக் கூண்டில் அடைக்கிறார்கள். ஆனால், தங்களை அடைத்துக் கொள்ள அவர்களே உருவாக்கிய ஆகச்சிறந்த, பளபளப்பான கூண்டுக்கு திருமணம் என்று பெயர். இந்தக் கூண்டின் கதவுகளைத் திறப்பதற்கான சாவியாக வரதட்சிணை என்றொரு நாணயம் புழக்கத்தில் இருக்கிறது. இது ஒரு விசித்திரமான நாணயம். இதன் ஒரு பக்கத்தில் பேராசையும், மறுபக்கத்தில் மரணமும் அச்சிடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள் சில உண்மைகளை நம் முகத்தில் அறைகின்றன.

ஒரு வழக்கறிஞரையும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியையும் கொண்ட ஒரு கனம் கோர்ட்டார் குடும்பத்திலேயே உடலில் ஆறு காயங்களுடன் ஒரு பெண் கல்யாணம் ஆகி சில மாதங்களில் இறக்கிறார். சட்டத்தைக் கொண்டே ஒரு கொலையைத் தற்கொலையாக மாற்ற முயலும் வித்தையைச் சமூகம் வேடிக்கை பார்க்கிறது.

லட்சக் கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், சொகுசு கார் என்று எதற்கும் அடங்காத பேராசையோடு கேட்டு வாங்கிக் கொண்டு புகுந்த வீட்டிற்கு வந்தப் பெண்ணை மாடியிலிருந்து தள்ளி விட்டு கொல்கிறது இன்னொரு வரதட்சணைச் சமூகம்.

00 பவுன் நகையும் சொகுசு காரும் கொடுத்த பின்பும், எஞ்சிய 200 பவுனுக்காகச் சித்திரவதை செய்யப்பட்டு, திருமணமான 78ஆவது நாளில் விஷம் அருந்தி மாண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதையும் இந்த வரதட்சணை தேசத்தில்தான் நடக்கிறது.

பெண்கள் கல்வி கற்கிறார்கள், விண்வெளிக்குச் செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்கள் புகுந்த வீட்டிற்குள் நுழையும்போது, அவர்கள் வெறும் பணம் ஏற்றி வரும் வாகனங்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

இதில் உள்ள பேராசையின் தத்துவம், எல்லாம் உன் மகளுக்குத்தான் என்பதுதான்.

வரதட்சிணை வாங்குபவர்களிடம் ஒரு தனித்துவமான தத்துவம் இருக்கிறது. அவர்கள் அதை வரதட்சிணை என்று அழைப்பதில்லை. அதை இப்படிச் சொல்கிறார்கள், "நாங்கள் எங்களுக்காகவா கேட்கிறோம்? எல்லாம் உங்கள் மகளின் எதிர்காலத்திற்குத்தான். என் மகன் தொழிலை விரிவுபடுத்தினால், சொகுசாக வாழப்போவது உங்கள் மகள்தானே?"

இது மாமியார்கள் உதிர்க்கும் ஆகச் சிறந்த தத்துவார்த்தப் புளுகு. ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சேர்க்கும் மதிப்பை விட, அவளது தந்தை கடன்பட்டு வாங்கும் ஒரு காரின் மதிப்பு புகுந்த வீட்டில் உயர்ந்து நிற்கிறது.

இங்கு மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர்கள்தான். ஒடுக்கப்பட்டவர்கள், தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போது இன்னும் கொடூரமான ஒடுக்குமுறையாளர்களாக மாறுவார்கள் என்ற உளவியல் தத்துவம் இங்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

தன்னைப்போல் ஒரு பெண்தான் அந்த மருமகள் என்பதை உணர மறுக்கும் மாமியார்கள், பேராசையின் தரகர்களாக மாறுகிறார்கள்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், இந்தச் சமூகத்தின் மனநல அறிக்கையை நமக்குக் காட்டுகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் 5,737 வரதட்சிணை மரணங்கள் பதிவாகியிருக்கின்றனவாம்.  அதாவது, நாளொன்றுக்குச் சராசரியாக 15 பெண்கள் வரதட்சிணைக் கொடுமையால் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.

இதில் ஊடக வெளிச்சத்திற்கு வருபவை சில துளிகளே. இருண்ட அறைகளுக்குள், குடும்பம் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளைத் தாங்கிக்கொண்டு, சொற்களாலேயே தினசரி செத்துக்கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம், விண்வெளிக்குச் சுற்றுலாப் போகிறோம், செயற்கை நுண்ணறிவுடன் பேசுகிறோம். ஆனால், நம் வீட்டு இளைஞர்கள் இன்னும் தங்களின் கல்வித் தகுதியையும், வேலைவாய்ப்பையும் சந்தையில் ஏலம் போடும் விலைப்படைப் பொருட்களாகவே வைத்திருக்கிறார்கள்.

வீடு, கார், தொழில் விரிவாக்கம் என்ற பெயரில் பெண்ணின் வீட்டாரைப் பிழிந்தெடுப்பது ஒரு பிச்சைக்காரத்தனம் என்பதை இந்த மேம்பட்ட இளைஞர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

ஒரு சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என்பதன் அடையாளம், அது கட்டியெழுப்பும் வானளாவிய கட்டிடங்களோ, அதன் பொருளாதார எண்களோ அல்ல. அச்சமூகத்தின் பெண்கள், தாங்கள் கொண்டுவந்த சீர் போதவில்லை என்ற காரணத்திற்காகத் தூக்கில் தொங்காமலும், மாடியிலிருந்து தள்ளப்படாமலும், விஷம் குடிக்காமலும் அவர்களால் வாழ முடிகிறதா என்பதுதான்.

பேராசையைக் கலாச்சாரம் என்று கொண்டாடுவதை நிறுத்தாத வரை, இந்த வரதட்சிணை அவலம் தொடரவே செய்யும். இந்தச் சமூக அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது சட்டங்களால் மட்டுமல்ல, மனித மனங்களின் பேராசையை அறுவை சிகிச்சை செய்வதன் மூலமே சாத்தியம். அது ஒன்றும் செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சையல்ல, செலவை அளவோடு வைத்துக் கொள்ளச் சொல்லும் போதும் என்ற மன அறுவை சிகிச்சை.

*****

டிகிரி – ஒரு கோல்டன் டிக்கெட் மாரத்தான்!

டிகிரி – ஒரு கோல்டன் டிக்கெட் மாரத்தான்!

யுனிவர்சிட்டி என்றால் என்ன? பழைய காலத்தில் ஹம்போல்டியன் என்று ஒரு மாடல் இருந்தது. அதாவது, அங்கே படிப்பு என்பதை விட ஆராய்ச்சி தான் மெயின். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து புதுசு புதுசாக எதையாவது கண்டுபிடிப்பார்கள்.

அப்புறம் நெப்போலியன் வந்தான். அவனுக்குத் தேவைப்பட்டது ஸ்கில்டு ஒர்க்கர்ஸ். அரசாங்கத்துக்கும் மிலிட்டரிக்கும் வேலை பார்க்க ஆட்கள் வேண்டும், அதனால் கல்வி என்பது ஒரு பயிற்சி மையமாக மாறியது.

இன்றைய மாடல் என்ன தெரியுமா? அமெரிக்கன் மாடல். இது ஒரு காக்டெய்ல். கொஞ்சம் ஆராய்ச்சி, கொஞ்சம் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், நிறைய மார்க்கெட்டிங்!

இப்போது யுனிவர்சிட்டிகள் அகாடமிகளின் அங்காடித் தெரு போலச் செயல்படுகின்றன. ஒரு காலத்தில் டிகிரி என்பது நடுத்தர வர்க்கத்தின் கோல்டன் டிக்கெட். டிகிரி இருந்தால் வேலை உறுதி, வாழ்க்கை செட்டில். ஆனால், இப்போது அந்த டிக்கெட்டின் விலை எகிறிவிட்டது, டிக்கெட் கொடுக்கும் இடமோ காலியாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் 2010க்குப் பிறகு உள்நாட்டு மாணவர்கள் கல்லூரிகளுக்குப் போவது குறைந்துவிட்டது. அதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம் பீஸ். இது படிப்புச் செலவா அல்லது பட்ஜெட் தாக்கல் செய்யும் தொகையா என்று சந்தேகம் வரும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.

இரண்டாவது காரணம் லோன். படித்து முடிப்பதற்குள் மாணவன் ஒரு நடமாடும் கடன் அட்டையாக மாறிவிடுகிறான்.

மூன்றாவது காரணம் வேலை. டிகிரி வாங்கிய பின் கிடைக்கும் வேலையை விட, டிகிரி இல்லாமலே செய்யும் வேலைகளில் வருமானம் அதிகம் என்ற நிலை.

இப்போது கல்வி என்பது ஒரு பொருள். ஆசிரியர்கள் ஒரு புரொடியூசர். மாணவர்கள் கன்ஸ்யூமர். யுனிவர்சிட்டி ஒரு கார்ப்பரேட்.

ஒரு சிலபஸை ரெடி பண்ணி, அதை சின்னச் சின்ன மாட்யூல்ஸாக உடைத்து, காப்புரிமை வாங்கி, மார்க்கெட்டில் விற்கிறார்கள். இதில் ஆசிரியர்களுக்குச் சுதந்திரம் கிடையாது. அவர்கள் இப்போது பர்ன் அவுட் ஸ்டேஜில் நிற்கிறார்கள். அவர்கள் பாடம் நடத்துவதை விட, பண்டு திரட்டுவதிலும், மேனேஜ்மென்ட் வேலையிலுமே பிஸியாக இருக்கிறார்கள்.

அறிவியல் என்பது தேடல் என்பார்கள். ஆனால் இன்று அறிவியல் என்பது யாருக்கு விற்கலாம்? என்கிற வியாபாரம்.

அத்துடன் டிகிரி வாங்கியவர்கள் தங்களை மேதாவிகளாகவும், வாங்காதவர்களை டம்மிகளாகவும் பார்க்கும் ஒரு கலாசாரப் பிளவு உருவாகிவிட்டது. ஆனால் வேடிக்கை என்னவென்றால், இப்போது கிளெரிக்கல் வேலை பார்ப்பவர்களில் 20 சதவீத பேர் டிகிரி வைத்திருப்பவர்கள். அதாவது, கல்வி அதிகமாகிவிட்டது, ஆனால் வேலைகளின் தரம் அங்கேயே நிற்கிறது.

இந்தியாவில் கதை கொஞ்சம் வேறு. இங்கே இன்னும் டிகிரிக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் பண்ட் மட்டும் இல்லை.

அரசு கொடுக்கும் மானியம் 33.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

யுஜிசி பட்ஜெட்டில் 60 சதவீதம் கத்தரி போட்டுவிட்டார்கள்.

வருடத்துக்கு 1000 காலேஜ்கள் புதிதாகத் தொடங்கப்படுகின்றன. கொடுமை என்னவென்றால், அதில் 80 சதவீதம் பிரைவேட்!

இந்தியாவில் மாஸ் எஜுகேஷன் என்பது 1970களில் ஆரம்பித்து விட்டது. ஆனால் அது தரமானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

யுனிவர்சிட்டிகள் இப்போது அறிவை வளர்க்கும் இடங்கள் அல்ல, சந்தைக்குத் தேவையான சப்ளையை கொடுக்கும் இடங்கள். இந்த ஓட்டத்தில் தொலைந்து போவது மாணவர்களின் கனவுகளும், ஆசிரியர்களின் சுயாட்சியும்தான். கல்வி என்பது மனிதனைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் இன்று அது மாணவர்களைச் சம்பாதிக்க வைக்கவே தடுமாற்றத்தில் தள்ளாடுகிறது.

*****

16 Jul 2026

கஞ்சி – ரெசிபி பழையது, பாலிடிக்ஸ் புதியது!

கஞ்சி – ரெசிபி பழையது, பாலிடிக்ஸ் புதியது!

நம்மூர் சமையலறைகளில் கஞ்சி என்பது ஓர் எளிய திரவம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச வணிக நெட்வொர்க் இருக்கிறதே, அது ஒரு சயின்ஸ் பிக்சன் நாவலை விட சுவாரஸ்யமானது.

நொந்துபோன வயிற்றில் ஊற்றப்படும் கஞ்சிக்குத் தெரியாது, அதற்கு இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்று. 1563களில் கார்சியா டி ஓர்டா என்கிற போர்த்துகீசிய டாக்டர், கோவாவில் இருந்தபடி இதை ஒரு மருந்து என்று ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

தமிழின் கஞ்சிதான் போர்த்துகீசியத்தில் Canje ஆகி, ஆங்கிலத்தில் Congee ஆக உருமாறியது. நாம் வீட்டில் சாதாரணமாகக் குடிக்கும் இந்தக் கஞ்சி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து, லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பிய மருத்துவக் குறிப்புகளில் இடம்பிடித்துவிட்டது. அதாவது, கூகுள் வருவதற்கு முன்பே கஞ்சி வைரல் ஆகிவிட்டது!

இந்த இடத்தில் தான் ஒரு ட்விஸ்ட். இந்தியாவிடம் டிரடிஷனல் நாலெட்ஜ் டிஜிட்டல் லைப்ரரி என்று ஒரு டிஜிட்டல் நூலகம் இருக்கிறது. வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி போன்றவற்றுக்கு வெளிநாட்டவன் பேடன்ட் வாங்கிவிடக்கூடாது என்று நாம் உஷாராகப் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

ஆனால், அங்கே ஒரு சிக்கல். இந்த நூலகம் ஆயுர்வேதம், சித்தா போன்ற பழைய புத்தகங்களில் எழுதியிருப்பதை மட்டும்தான் கணக்கில் கொள்ளும். நம் பாட்டிமார்கள் வாய்மொழியாகச் சொல்லிக்கொடுத்த சுக்குக் கஞ்சிக்கு அங்கே இடமில்லை.

லாபம் தரும் விஷயம்தான் அறிவு,  சும்மா வீட்டில் வைக்கும் கஞ்சி எல்லாம் வெறும் சமையல் என்ற இந்தத் தர்க்கம்தான் உலகளவிலான சட்டத்தின் முன் இப்போதைய மிகப்பெரிய ஓட்டையாக மாறியுள்ளது.

கஞ்சி என்பது வெறும் உணவு அல்ல, அது நம் முன்னோர்களின் பாரம்பரிய வாழ்வியல் அறிவின் கண்டுபிடிப்பு. எந்த அரிசியைப் பயன்படுத்தினால் உடல் சூடு தணியும்? எந்தக் காலநிலையில் நொதிக்க வைத்த கஞ்சி குடிக்க வேண்டும்? இதையெல்லாம் தீர்மானிப்பது நம் வீட்டுப் பெண்கள்தான்.

ஆனால், நவீன அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் ஒரு தனிநபர் கண்டுபிடிப்பைத்தான் அறிவு என்று அங்கீகரிக்கின்றன. ஒரு சமூகமே சேர்ந்து, தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுத்த இந்தக் கூட்டு அறிவை;r  சட்டம் கண்டுகொள்வதில்லை.

இன்று நகர்ப்புறங்களில் பெர்மென்டட் ரைஸ் வாட்டர் என்றும், டீடாக்ஸ் போரிட்ஜ் என்றும் ஸ்டைலாகப் பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். விலை பல நூறு ரூபாய்!

நம் பாட்டி கஞ்சி வடித்தபோது கிடைக்காத மதிப்பு, ஒரு கார்ப்பரேட் கம்பெனி லேபிள் ஒட்டும்போது கிடைத்துவிடுகிறது. இங்கே லாபம் யாருக்குப் போகிறது? கஞ்சியைப் பாதுகாத்த சமூகத்திற்கா அல்லது அந்த பாட்டிலை டிசைன் செய்த கம்பெனிக்கா? பதில் உங்களுக்கே தெரியும்.

கஞ்சி என்பது வெறும் வறுமையின் அடையாளம் அல்ல; அது நம் உயிர்நாடி. இதை வெறும் டெக்னிக்கல் விஷயமாகப் பார்க்காமல், நம் கலாசார அடையாளமாக  அங்கீகரிக்க வேண்டும்.

நிச்சயமாக முதலில் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் இந்தப் பாரம்பரிய அறிவுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், நாளை பழைய சாதம் சாப்பிடுவதற்கும் நாம் ராயல்டி கட்ட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்!

*****

காய்ச்சலின் அனுதாபமும், கடனின் தனிமையும்!

காய்ச்சலின் அனுதாபமும், கடனின் தனிமையும்!

ஒருவனுக்கு 104 டிகிரி காய்ச்சல் அடித்தால், சுற்றியிருப்பவர்களுக்கு அவன் மீது சட்டென்று ஓர் ஆன்மீகக் கருணை பிறந்துவிடுகிறது. நெற்றியில் ஈரத்துணி போடு, கஞ்சி காய்ச்சித் தா. என்று ஆளாளுக்கு ஓடி வருவார்கள்.

ஏன் தெரியுமா?

காய்ச்சல் என்பது இலவச அனுதாபத்தை முதலீடு செய்யக்கூடிய ஒரு தளம். அதற்கு யாரும் பையிலிருந்து காசு எடுக்கத் தேவையில்லை.

ஆனால், கடன் அப்படியல்ல.

காய்ச்சல் வந்தவன் படுக்கையில் படுத்திருப்பான், உலகம் அவனைத் தேடி வரும். கடன் வாங்கியவன் தேடிப் போனாலும், உலகம் படுக்கைக்கு அடியில் போய் ஒளிந்துகொள்ளும்.

கடன் வாங்கிய கணமே, ஒரு மனிதனைச் சுற்றி ஒரு தீண்டாமைச் சுவர் உருவாகிவிடுகிறது. அதுவரை மிக நெருக்கமாக இருந்த நண்பர்கள் கூட, போன் கால்களைத் தவிர்ப்பதற்கும், தூரத்தில் கண்டால் டூவீலரைத் திருப்பி ஓட்டுவதற்கும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள்.

வாங்கும் கடன் என்பது வெறும் பணம் அல்ல, அது எதிர்கால உழைப்பு. இன்று  சொகுசாகச் செலவழிக்கும் ஒவ்வொரு கடன் பணமும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சிந்தப்போகும் வேர்வையை இன்றே அடகு வைப்பதற்குச் சமம்.

இயற்கையின் விதியின்படி காலம் முன்னோக்கி மட்டுமே நகரும்.

வட்டியின் விதியின்படி காலம் தூங்கினாலும், புயல் அடித்தாலும், உலகம் அழிந்தாலும் வட்டி மட்டும் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அது விநாடி முள்ளை விட அதிவேகமாக வளரக்கூடிய ஒரு விசித்திரச் செடி.

நீதிமன்றக் கூண்டில் ஏறும் குற்றவாளிக்குக் கூட வாதாட வக்கீல் வருவார். ஆனால், மாதக் கடைசியில் இஎம்ஐ கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கத்து மனிதனின் கூண்டில், அவனும் அவனது கால்குலேட்டரும் மட்டுமே இருக்கும்.

இன்றைய நுகர்வோர் உலகம் மனிதர்களை எந்நேரமும் வேட்டையாடிக்கொண்டே இருக்கிறது. உன்னிடம் பணம் இல்லை என்றால் என்ன, இதோ கிரெடிட் கார்டு, இதோ பர்சனல் லோன், என்று ஆசைகாட்டி கழுத்தில் கயிற்றை மாட்டுகிறது.

இப்போதைக்கு எங்களிடம் எதுவும் இல்லை, என்று சொல்வதில் இருக்கும் பேரானந்தத்தை இந்த உலகம் நமக்கு மறக்கடித்துவிட்டது.

நம்மிடம் கார் இல்லை, என்ற ஏக்கம் தரும் வலியை விட, காருக்கான தவணைப் பணத்தை இன்னும் கட்டவில்லை, என்று வங்கி ஊழியர் வாசலில் வந்து நிற்கும்போது ஏற்படும் அவமானம் பல மடங்கு கொடியது.

மனிதன் பிறக்கும்போது அம்மணமாகப் பிறக்கிறான். இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை. இடையில் இருக்கும் சில பத்தாண்டுகளில், இல்லாத ஒன்றுக்காக, அடுத்தவன் காசில் எதற்கு இத்தனை பந்தா?

காய்ச்சல் வந்தால் உடல் உருகும், சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால் கடன் வாங்கினால் ஆன்மாவே உருகிவிடும். எனவே, வயிற்றுப் பசிக்கு பழைய கஞ்சி குடித்தாலும், மன அமைதிக்கு சொந்தக் காசையே செலவழிப்போம், என்ற தத்துவத்தோடு வாழப் பழகுவதே புத்திசாலித்தனம்.

ஏனெனில், கடனே இல்லாத மனிதன்தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த கோடீஸ்வரன்!

*****

15 Jul 2026

அணுசக்தியை விட அவசியமான ஆற்றல் சக்தி!

அணுசக்தியை விட அவசியமான ஆற்றல் சக்தி!

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, பட்டாசு வெடித்தாலே காதை மூடிக்கொள்பவர்கள். இரண்டு, அணுகுண்டு வெடித்தால் மட்டுமே உலகமே நம்மைத் திரும்பிப் பார்க்கும் என்று நம்புபவர்கள். நாம் இரண்டாம் வகை.

1998 இல் ராஜஸ்தான் பாலைவனத்தில் மணல் துகள்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது, இந்தியா ஆபரேஷன் சக்தியை நிகழ்த்தியது. இந்தச் சக்தியைக் காட்டியபோது, உலக நாடுகள் சிலவற்றுக்கு அழுகையே வந்துவிட்டது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ செயற்கைக்கோள்கள் வானத்தில் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. ஆனால், நம் ஆட்கள் அந்தச் செயற்கைக்கோள்களுக்கே நாமம் போட்டுவிட்டு, அவை தூங்கும் நேரத்தில் ரகசியமாகச் சோதனையை முடித்தார்கள்.

“அப்போது, நாங்கள் பல ஆண்டுகளாகக் கவனித்தோம், ஆனால் இதைக் கவனிக்க மறந்துவிட்டோம்”, என்று அமெரிக்கா சொன்னபோது, ஒரு சராசரி இந்தியனுக்குக் கிடைத்த ஆத்ம திருப்தி இருக்கிறதே, அது 5ஜி வேகத்தை விட அதிகமானது.

இந்தியா அணு ஆயுதப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தவுடன், உலகம் ஐயையோ, இது பாவம் என்று தடைகளை விதித்தது. ஜப்பானும் அமெரிக்காவும் பொருளாதார ரீதியாக முறுக்கிக்கொண்டன.

ஆனால் தடைகள் வந்தபோதுதான் நமக்குச் சுயபுத்தி வந்தது என்பதுதான் வரலாற்றுச் சோகம்.

மேடம் க்யூரி நோபல் பரிசு வாங்குவதற்கு முன்பே, அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிய கதைகள் நம்மிடம் உண்டு. இருந்தாலும் கலாம் போன்ற இந்திய விஞ்ஞானிகளின் கனவுகள் மற்றும் முயற்சிகள் எல்லாம் சேர்ந்து சேர்ந்து அணு சக்தி என்பது வெறும் அழிவுக்கான கருவியாக இல்லாமல், இந்தியாவின் கெத்துக்கான குறியீடாக மாறியது.

இன்று நாம் சந்திரயான் 3 மூலம் நிலவின் தென துருவத்தில் சைடு ஸ்டாண்ட் போட்டு நிற்கிறோம். மங்கள்யான் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விசிட் அடித்தோம். ஆட்டோ ரிக்‌ஷா கட்டணத்தை விடக் குறைவான செலவில் விண்வெளிக்குப் போகும் வித்தை தெரிந்த ஒரே இனம் நாம்தான். 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏற்றி, இன்னும் இடம் இருக்கு, தள்ளி உட்காருங்க, என்று சொல்லாத குறையாக விண்வெளிக்குப் பார்சல் அனுப்புகிறோம்.

இன்று நம்மிடம் 5ஜி இருக்கிறது, அக்னி ஏவுகணைகள் இருக்கின்றன, பிரம்மோஸ் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்த ஆண்டு ககன்யான் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப்போகிறோம்.

தொழில்நுட்பம் என்பது கத்தியைப் போன்றது. அதை வைத்து காய்கறியும் நறுக்கலாம், கைவிரலையும் பதம் பார்க்கலாம். உலகம் ஒரு சுழற்சி. அன்று அணுவைத் துளைத்தோம், இன்று குவாண்டம் கணினியைத் துளைக்கிறோம்.

முன்னேற்றம் என்பது மொபைல் போனை அடிக்கடி மாற்றுவது அல்ல, நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டை எங்கே கொண்டு செல்கிறது என்பதில் தான் இருக்கிறது.

நிலவுக்குப் போன நாம், ஊரில் இருக்கும் சாலைக் குழிகளைச் சரிசெய்யும் தொழில்நுட்பத்தை எப்போது கண்டுபிடிக்கப் போகிறோம்? ஏனென்றால், அதுதான் அணுசக்தியை விட உண்மையான ஆற்றல் மிக்க சக்தி!

*****

நுகர்வுப் பெருவெளியின் நனவிலிப் பிரஜைகள்

சீரழித்த சினிமா – 40

பாய்ஸ்

நுகர்வுப் பெருவெளியின் நனவிலிப் பிரஜைகள்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச குடும்பக் கட்டுப்பாடுகளுக்கும், கலாச்சார ஒழுக்கத்திற்கும் ஒட்டுமொத்தமாகக் குட்பை சொல்லி விட்டு ஆபாசங்களுக்கு அட்டகாசமாக வெல்கம் சொல்லலாம் என்று நுகர்வுப் பெருவெளியில் உதிர்ந்து போன ஒழுக்கவியலை புதிய தத்துவப் பாடமாக ஓதிய திரைப்படம்தான் பாய்ஸ்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரிக்குச் செல்லும் பருவத்தில் ஒழுங்காகப் படித்துப் பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "பதினெட்டு வயது இளைஞர்கள் ஐந்து பேர் சேர்ந்தால், குட்டிச் சுவரில் அமர்ந்து குட்டிச் சுவராகலாம், கல்வியில் ரேட்டிங்கை ஒதுக்கி வைத்து விட்டு டேட்டிங் போகலாம், குடும்ப ஒழுக்கத்தைக் குப்பையில் எறிந்து விட்டு ஆபாச வெளிகளோடு உலவலாம், பாலியல் தொழிலாளியிடம் போகலாம், நடுரோட்டில் நிர்வாணமாக ஓடலாம்" என்ற ஒரு புதுவிதமான வளரிளம் பருவ வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, பாய்ஸ் திரைப்படத்திற்கு உண்டு.

இத்திரைப்படம் திரைக்கு வந்தபோது தியேட்டர்களில் டிஜிட்டல் சவுண்ட் அதிர இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், அது தியேட்டருக்கு வெளியே ஏற்படுத்திய சமுதாய, உளவியல் அதிர்வுகள் கொஞ்சம் விசித்திரமானவை, ஆபத்தானவை.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் மட்டுமல்ல; அது சமூகத்தின் நனவிலி மனதிற்குள் விஷத்தையோ அமுதத்தையோ மிக மெதுவாக இறக்கும் ஒரு ஊசி. பாய்ஸ் திரைப்படம் வெளியான காலகட்டம், தமிழகம் உலகமயமாக்கலின் முதல் அலைகளை எதிர்கொண்டு, ஐடி கலாச்சாரத்தின் பளபளப்பில் கண்கள் கூசி நின்ற தருணம். அந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் பதின்ம பருவத்தினரின் ஹார்மோன்களின் பெருவெடிப்பைக் கொண்டு நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மீது நிகழ்த்திய உளவியல் அத்துமீறல்கள் சாதாரணமானவை அல்ல.

பதின்ம வயதுக் காதல் மற்றும் இளமைத் துடிப்பு என்கிற பெயரில், தமிழ் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் நிம்மதியைக் குலைப்பதற்காகத் தயாரித்து வெளியிட்ட ஒரு மோசமான சமூக உளவியல் பரிசோதனையான பாய்ஸ் திரைப்படம் ஏற்படுத்திய சீரழிவுகளைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்பவியல் மற்றும் குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் வாலிப வயதில் இருந்தால் போதும்; உங்களுக்குச் சமூக ஒழுக்கமோ, சட்டதிட்டங்களோ தேவையில்லை. நீங்கள் ஐந்து பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு நடுரோட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தெருவில் வருவோர் போவோல் தட்டிக் கேட்போரைக் கேலி செய்யலாம், பெண்களை ஆபாசக் கண்ணோட்டத்தோடு மட்டுமே அணுகலாம் என்பதுதான்.

இதனால், பொது இடங்களில் அநாகரிகமாக நடப்பது குற்றமல்ல, அது ஹார்மோன்களின் உந்துதலால் ஏற்படும் வாலிபக் குறும்பு என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

அத்துடன் வீட்டை விட்டு ஓடிப்போய், கையில் காசில்லாமல், திருட்டுத்தனமாகத் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதை ஏதோ உலக மகா புரட்சி போல இத்திரைப்படம் சித்தரித்தது.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் பெற்றோரின் உழைப்பை மதிக்காமல், கேங்காக சுற்றிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையே பாய்ஸ் கெத்து என்று நினைத்துத் திரியும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள், 7ஜியில் ஸ்டாக்கிங்கை ரசித்தார்கள் என்றால், பாய்ஸ் படத்தில் ஒட்டுமொத்தப் பொறுப்பற்ற தனத்தையுமே இசைத் திறமை என்ற போலிப் போர்வையைப் போர்த்திக் கமர்ஷியலாக விற்றார்கள்.

நாயகனும் அவனது நண்பர்களும் எந்த வேலைவெட்டியும் இல்லாமல், படிக்காமலும், உருப்படியாக எதுவும் செய்யலாமலும், ஆபாசத் தனமாக நடந்து கொள்வார்கள். ஆனால், அவர்கள் பாய்ஸ் என்ற பெயரில் ஒரு மியூசிக் பேண்ட் ஆரம்பித்து, ஒரே ஒரு மேடைப் பாடலின் மூலம் உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக மாறிவிடுவார்கள்.

இந்த உறைபனியூட்டும் குறுக்குவழிப் பாதையை, மிக வண்ணமயமான, பளபளப்பான கிராபிக்ஸ் காட்சிகளாலும், மேற்கத்திய இசையாலும் மூடி மறைத்து, அவங்க சொந்தக் கால்ல நின்னு ஜெயிச்சிட்டாங்க என்று பார்ப்போரைப் பந்தாவாக ஏமாற்றினார் இயக்குனர்.

உழைப்பையும், முறையான கல்வியையும் விடுத்து, அதிர்ஷ்டத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் மாஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

அந்நியன் படத்தில் கொலையை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை வைத்து காமெடியாக்கியது போல, பாய்ஸ் படத்திலும் அதே நகைச்சுவைப் பாத்திரத்தை வைத்து இளைஞர்களின் அத்தனை ஒழுக்கக்கேடுகளையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது இத்திரைப்படம்.

வீட்டை விட்டு ஓடிவந்து நடுத்தெருவில் நிற்கும் பூர்வாங்க பொறுக்கிகளுக்கு அந்த நகைச்சுவைப் பாத்திரம்தான் வழிகாட்டி. அவர் அவர்களுக்கு வாழ்க்கைத் தத்துவம் என்ற பெயரில், எப்படிக் காரியவாதியாக வாழ வேண்டும், எப்படிப் பெண்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற குப்பைகளைக் கற்றுக்கொடுப்பார்.

சமூகச் சீரழிவைச் சரிசெய்ய வேண்டிய திரைப்படங்கள், அத்தனைச் சமுகச் சீரழிவுகளையும் காமெடி மீற்றும் ஆபாச பீஸாக்கித் திரையில் ஜொலிக்க விட்டால், நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்ற வக்கிரமான மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த சினிமாட்டிக் டிராப்.

வழக்கமான தமிழத் திரைப்படங்கள் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. இப்படத்தில் நாயகியின் கதாபாத்திரம், மிகவும் வசதியான, மாடர்ன் பெண்ணாகக் காட்டப்படும். ஆனால், அந்தப் பாத்திரத்துக்கு தன் எதிர்காலத்தைப் பற்றிய குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. கையில் ஐந்து பைசா இல்லாத, உருப்படாத நாயகனைத் துணிந்து காதலித்து, அவனோடு ஓடிவந்து, அப்பாவிக் கோமாளியாக இருப்பதாகவே அப்பாத்திரம் படத்தில் சுருக்கப்படும்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் திறனோ இல்லாதவள்; அவளிடம் டேட்டிங் பேசி, பாய்ஸ்ஸை ஏங்க வைக்காதே, ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே என்று பாடினால், அவள் தன் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கழற்றி எறிந்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிடுவாள் என்ற ஆணாதிக்க நுகர்வோர் வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாகப் பட்டுவாடா செய்தது.

உழைப்பு, பொறுமை, குடும்பப் பொறுப்பு போன்ற விஷயங்களை எல்லாம் அவுட்டேட்டட் எனக் கேலிப் பொருளாக்கிவிட்டு, இன்பார்மேஷன் டெக்னாலஜியும், இன்ஸ்டன்ட் வெற்றியும், கட்டுப்பாடு இல்லாத காமமும் மட்டுமே வாழ்க்கை என்கிற மாயையை விதைத்துச் சென்றது பாய்ஸ்.

பாய்ஸ் பாக்ஸ் ஆபீஸில் சுமாராகவேனும் வசூலைக் குவித்து, ஐந்து புதிய ஹீரோக்களைத் தமிழ் சினிமாவுக்குத் தந்து, அதன் இயக்குநரை மீண்டும் பிரமாண்ட நாற்காலியில் ஏற்றிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

படிப்பு, கரியர் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்போது ஹார்மோன் சொல்வதைக் கேள், என்பது போல ஒரு மாயையை உருவாக்கியது பாய்ஸ். ஆனால், நிஜ வாழ்க்கை என்பது கேமரா ஆங்கிளோ, பிஜிஎம்மோ இல்லாதது. இந்தத் திரைக்கதை நிஜ உலக பதின்பருவத்தினரின் சிந்தனையை அப்படியே மழுங்கடித்து, வாழ்க்கையின் மிக முக்கியமான பில்டிங் பிளாக்ஸ் எனப்படும் கல்வி, ஒழுக்கம் இரண்டையும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது.

திரைப்படத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளாத, வெறும் பண இயந்திரங்களாக அல்லது அடக்குமுறை செய்பவர்களாகவே சித்தரிக்கப்படுவர். இது நிஜ வாழ்க்கையிலும் இளைஞர்களிடையே "பெற்றோர்கள் நம் எதிரிகள்" என்ற பிம்பத்தை வலுப்படுத்தியது. பெற்றோர்கள் என்பவர்கள் தங்களின் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் வில்லன்கள் என்ற பிம்பத்தை இளைய சமூகத்தின் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது பாய்ஸ்.

தமிழ் சமூகத்தின் ஆகச்சிறந்த பலம் மற்றும் சில நேரங்களில் பலவீனம் பெற்றோர் பிள்ளை உறவுதான். தன் வாழ்நாளின் அத்தனை வியர்வையையும் பிள்ளைகளின் கல்விக்காகத் தாரைவார்க்கும் நடுத்தர வர்க்கத் தந்தையர், தாயாரின் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அவர்களின் நியாயமான பதற்றங்கள் யாவும் ஒற்றைப் பரிமாணத்தில் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகக் காட்டப்பட்டது பெரும் உளவியல் விபரீதம். இது குடும்பங்களுக்குள் இருந்த மெல்லிய உரையாடல்களைக் கொன்று, தேவையற்ற கசப்புகளையும், தலைமுறை இடைவெளிகளையும் அசுர வேகத்தில் அதிகப்படுத்தியது.

"படிப்பு, வேலை, குடும்பம் எல்லாமே சலிப்பானது; இன்றைய பொழுது மட்டுமே முக்கியம்" என்ற தத்துவம் இளைஞர்களிடம் இத்திரைப்படத்தால் விதைக்கப்பட்டது. இது வாழ்வின் ஆழமான விழுமியங்களை அழித்து, எல்லாவற்றையும் அர்த்தமற்றதாகப் பார்க்கும் ஓர் ஆபத்தான மனநிலையை உருவாக்கியது.

டீன் ஏஜ் பருவத்தின் இயல்பான ஈர்ப்பை தாண்டி, பெண்களை வெறும் உடலியல் நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் பார்வையை இத்திரைப்படம் ஊக்குவித்தது. இது இளம்பருவத்தினரின் பாலியல் ஒழுக்க நெறிகளில் பெருமளவில் அதீத சிதைவை ஏற்படுத்தியது.

ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் என்பது அதன் பாலியல் முதிர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால், பாய்ஸ் திரைப்படம் பதின்பருவத்து இளைஞர்களின் பாலியல் தவிப்புகளை மிகக் கீழ்த்தரமான, வக்கிரமான வணிகப் பொருளாக மாற்றியது.

பெண் என்பவள் ஒரு சக உயிர், அவளுக்கென்று ஒரு தனித்துவமான ஆளுமை இருக்கிறது என்ற புரிதலைத் தராமல், அவளை வெறும் கவர்ச்சிப் பொருளாகவும், ஆண்களின் பாலியல் வேட்கையைத் தணிக்கும் வடிகாலாகவும் மட்டுமே காட்டியது. காதல் என்பது அகம் சார்ந்த ஓர் உன்னத உணர்வு நிலை என்பதிலிருந்து விலகி, அது உடல்களின் வேதியியல் கவர்ச்சி மட்டுமே என்ற பாலியல் வறுமையை அது இளைஞர்களின் நனவிலி மனதில் பதியவைத்தது.

இப்படத்தின் மிக அபாயகரமான உளவியல் தாக்கம் அதன் பின்பாதியில் இருந்தது. எந்தவித முறையான பயிற்சியோ, உழைப்போ, கலையின் மீதான அர்ப்பணிப்போ இல்லாமல் வெறும் அதிர்ஷ்டத்தாலும், ஒரு சில தந்திரங்களாலும் ஒரே இரவில் பாப் இசை உலகையே ஆட்டிப்படைக்கும் சூப்பர் ஸ்டார்களாக அந்த இளைஞர்கள் மாறுவார்கள். இது இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியை வழங்கியது. அந்த வகையில் இத்திரைப்படம் உழைப்பின்றிப் பெறும் வெற்றியே உன்னதமானது என்ற குறுக்குவழி மனப்பான்மை சமூகத்தின் இயல்பான உழைப்புச் சங்கிலியை அறுத்துப்போட்டது.

மேலும், எந்தவித உழைப்போ, அர்ப்பணிப்போ இன்றி, ஒரே ஓர் ஆல்பம் பாடல் மூலமாக ஒரே இரவில் பெரும் பணக்காரர்களாகவும் நட்சத்திரங்களாகவும் மாற முடியும் என்ற உடனடி வெற்றி கலாச்சாரத்தை இத்திரைப்படம் முன்மொழிந்தது. இது உழைப்பு, பொறுமை, தொடர் முயற்சி போன்ற மனிதகுலப் பரிணாமத்தின் அடிப்படை விழுமியங்களை இளைஞர்களின் மனதில் சிறுமைப்படுத்தியது.

பாய்ஸ் திரைப்படம் இளைஞர்களின் சுதந்திரப் போக்கைக் கொண்டாடுவதாக நினைத்துக்கொண்டு, பொறுப்பின்மை, உடனடி இன்பம் மற்றும் குடும்ப சமூக அமைப்புகளுக்கு எதிரான கலகக்குரல் ஆகியவற்றை மிகைப்படுத்திக் காட்டியது. இது தமிழ் திரையுலகிலும், நிஜ சமூகத்திலும் இளைஞர்களின் இருத்தலியல் நோக்கங்களை திசைதிருப்பி, ஒரு தற்காலிக சமூக உளவியல் சீரழிவிற்கு வித்திட்டது என்றால் அது மிகையல்ல.

பாய்ஸ் திரைப்படம் தமிழ் சமூகத்திற்குத் தந்த உளவியல் கொடை என்பது, தன்னல நுகர்வுவாதம், குடும்ப உறவுகளின் மீதான அவநம்பிக்கை மற்றும் பாலியல் ஒழுக்கமின்மை போன்றவையே. ஒரு சமூகத்தின் ஆன்மாவைச் சிதைத்து, அதை வெறும் நுகர்வுப் பெருவெளியின் கூட்டமாக மாற்றுவதற்குத் திரைக்கலை எவ்விதம் பயன்படக்கூடும் என்பதற்கான ஒரு கசப்பான வரலாற்று ஆவணம் இந்தத் திரைப்படம்.

பெற்றோரை எதிர்ப்பதுதான் சுதந்திரம் என்றும், பொறுப்பின்றித் திரிவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த உத்தி என்றும், ஒட்டுமொத்த தமிழனின் நிஜ வாழ்க்கைக்கான குடும்ப அமைப்பையும் ஒழுக்கத்தையும் அடியோடு சீரழிப்பதுதான் புதிய சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஹார்மோன் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

14 Jul 2026

சொத்து போகாது, ஆனால் காது கேட்காது!

சொத்து போகாது, ஆனால் காது கேட்காது!

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப்போகக் கூடாது, சொத்துகள் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கைமாறிவிடக் கூடாது என்கிற அதிபயங்கரப் பொருளாதார நோக்கங்களுக்காக, அத்தை மகளையும் மாமா மகனையும் பிடித்துக் கல்யாணம் செய்து வைக்கும் ரத்தப் பாச விசித்திரம் காலம் காலமாக நடந்து வருகிறது.

பிள்ளைகள் யாரையாவது காதலித்துத் தொலைத்துவிட்டால், பெற்றோருக்கு வரும் முதல் ஆத்திரம், நாளைக்கே உன் அத்தை மகனுக்கு உன்னைக் கட்டிக்கொடுக்கிறேன் பார் என்பதுதான். காதல் நோய்க்கு அத்தை மகன்தான் இவர்களின் ஒரே ஆன்டிபயாடிக்!

அண்மை மருத்துவவியல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. ரத்த உறவுத் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு டபுள் ஆகிறதாம்.

பிரிட்டனின் பிராட்போர்டு பகுதியில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்குக்குக் காரணம் இந்த ரத்தப் பாசத் திருமணங்கள்தான் என்று ஆய்வு செய்தே நிரூபித்திருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, நம் ஊர் லட்சணம் என்ன தெரியுமா?

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் பிறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கிறதாம்.

இதில் கர்நாடகத்தில் 30 சதவீதமும், தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தலா 20 சதவீதமும் குழந்தைகள் காது கேளாமல் பிறக்கிறார்கள்.

ஆண்டுதோறும் சுமார் 6 முதல் 8 லட்சம் இந்தியக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த மரபணுப் பெருமையில் தென்னிந்திய மாநிலங்கள்தான் டாப்!

வாழ்க பாரம்பரியம்!

கேரளா மட்டும்தான் இதிலிருந்து கொஞ்சம் தப்பித்திருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காதல் திருமணங்கள் பெருகிவிட்டதால் இந்த வழக்கம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், இன்னமும் குடும்பக் கட்டாயத்துக்காகப் பிடிக்காத மாமன் மகனைத் திருமணம் செய்துகொண்டு அழும் பெண்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த ரத்த உறவுக் கல்யாணங்களால் குழந்தைகளுக்கு என்னென்ன வரும் என்று மருத்துவர்கள் ஒரு பெரிய மெனு கார்டையே நீட்டுகிறார்கள்.

அறிவாற்றல் குறைபாடு,

குழந்தைப் பருவத்திலேயே மரணம்,

நுரையீரல் கோளாறு,

தலசீமியா,

அரிவாள் செல் சோகை,

மூளை, நரம்புகளை அழிக்கும் அபாயகரமான மரபணுக் கோளாறு.

தசை பலவீனம், நடுக்கம்,

பேசவோ விழுங்கவோ முடியாத நிலை என ஒரு பெரிய பட்டியலையே நீட்டுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், சொத்தைக் காப்பாற்றப்போய், பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தையே அடகு வைக்கும் விசித்திர வியாபாரம் இது.

இந்த ஆபத்தான பழக்கம் இன்னும் தொடர்வதற்கு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

நம்ம ஊர் ஜாதி ரீதியான திருமண இணையதளங்கள் முதன்மையான காரணம்.

பணக்காரர்கள் சொத்துப் போகக் கூடாது என்று நினைக்கிறார்கள்; ஏழைகள் திருமணச் செலவை மிச்சப்படுத்த வீட்டுக்குள்ளேயே முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இது அடுத்த முக்கியமான காரணம்.

ஆனால், ஒரு திருமணத்தில் பெண்ணின் ஆரோக்கியமும், அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் எதிர்காலமும் முக்கியம் என்பதை இந்த இரண்டு தரப்புமே யோசிப்பதில்லை.

எல்லாவற்றிலும் முன்னேறி விட்டதாக மார்புதட்டும் நம் நாட்டில், இன்னமும் இந்த மரபணுத் தற்கொலை வழக்கம் தொடர்வது ஒரு சாபக்கேடு. ரத்தச் சொந்தத்தில் கல்யாணம் செய்து கொண்டே இருந்தால், அது நாட்டுக்கு ஆரோக்கியமான மனித வளத்தைத் தராது; மாறாக மருத்துவமனைகளுக்குத்தான் வருமானத்தைத் தரும்.

சொந்த பந்தம் முக்கியம்தான், ஆனால் அது பிறக்கும் குழந்தையின் காதுகளை அடைப்பதாக இருக்கக் கூடாது!

*****