4 Apr 2026

அன்புள்ள அத்தானே, அடகு வைத்த சித்தானே!

அன்புள்ள அத்தானே, அடகு வைத்த சித்தானே!

மனிதன் ஒரு சமூக விலங்கு. அதிலும் குறிப்பாக, அடுத்தவன் நகையை வைத்துத் தன் கடனை அடைக்கத் துடிக்கும் ஒரு விசித்திரமான விலங்கு.

சம்பவம் மிக எளிது.

ஒரு நெருங்கிய உறவினர் வருகிறார், முகத்தில் அவசரம் என்கிற ஒப்பனையைப் பூசிக்கொண்டு.

மூணே மாசம். வட்டியோட தந்துடுறேன், என்று ஒரு பிட்டைக் கிளப்புகிறார்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

உங்கள் மனைவியின் நகையை (பாவம் அந்தப் பெண்!) அடகு வைத்து அவருக்குப் பணம் தருகிறீர்கள்.

இங்கே நீங்கள் செய்த பிழைகள் இரண்டு.

ஒன்று, மனைவியின் நகையைத் தொட்டது. இது தற்கொலைக்குச் சமம்.

மற்றொன்று, உறவினர் சொல்லை நம்பியது. இது அதைவிடக் கொடுமை.

சரி அடுத்தடுத்த சம்பவத்துக்கு வருவோம்.

மூன்று மாதம் முடிகிறது.

அந்த உறவினர் என்ன செய்ய வேண்டும்? நகையை மீட்டுக் கொடுக்க வேண்டுமே!

அவர் செய்வாரா? செய்ய மாட்டார்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

அவருக்குப் போன் போடுவீர்கள்.

போன் போட்டால் அவர் என்ன செய்வார்? அவர் போன் எடுக்கும் பழக்கத்தையே விட்டிருப்பார்.

வாட் நெக்ஸ்ட்?

பாமா விஜயம் போல அவர் வீட்டுக்கு விஜயம் செய்வீர்கள்.

வீட்டுக்குச் சென்றால், என்னைத் தொந்தரவு செய்யாதே, என்று அவர் எகிறுவார்.

கடன் கொடுத்தவன் வாசலில் பிச்சைக்காரனைப் போல நிற்க, வாங்கியவன் ஏதோ உலக வங்கித் தலைவர் ரேஞ்சுக்குப் பந்தா காட்டுவான்.

என்ன ஒரு கிளைமாக்ஸ்! ஆனால், இதுதான் உலக நியதி.

கடைசியில் நகை ஏலத்துக்குப் போகும் நிலைக்கு வரும்.

பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?

நீங்கள் எங்கோ முட்டி மோதிப் பணத்தைப் புரட்டி நகையை மீட்டிருப்பீர்கள்.

இப்போது அவரோடு பேச்சுவார்த்தை இருக்காது.

முடிந்தது சோலி. உறவு காலி.

இப்போது உங்களுக்குச் சில நீதிகள் சொல்லப்பட வேண்டியிருக்கிறது. அவையாவன,

ஒருவனிடம் இருக்கும் உறவைத் துண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவனுக்குக் கடன் கொடுங்கள். மிக விரைவாக அந்த இலக்கை அடையலாம்.

ஆரம்பத்திலேயே முடியாது என்று சொல்லியிருந்தால், அவர் உங்களை கஞ்சன் என்று திட்டியிருப்பார். இப்போது ஏமாளி என்று நினைத்துச் சிரிக்கிறார். கஞ்சனாக இருப்பது ஏமாளியாக இருப்பதை விட எவ்வளவோ கௌரவமானது.

உங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கிப் பிறருக்குக் கொடுப்பது என்பது, அடுத்தவன் குளிர்காய உங்கள் வீட்டின் கூரையைப் பிடுங்கிக் கொடுப்பதற்குச் சமம்.

இது போன்ற உறவினர்களுக்குப் பணம் தேவைப்படும்போது, இல்லை என்று சொல்லிவிட்டு ஒரு காபி வாங்கிக் கொடுத்து அனுப்பிவிடுங்கள். உறவு வேண்டுமானால் கொஞ்சம் கசக்கும், ஆனால் உங்கள் மனைவியின் கழுத்தில் நகை ஜொலிக்கும்.

பணம் போனால் வரும். ஆனால், போன பணம் வராமல் போனால், அதுதான் அது போன்ற உறவினர்!

இந்த அனுபவம் உங்களுக்கு அப்படியே செட் ஆகியிருந்தால், கீழே கமென்ட் பாக்ஸ் இருக்கிறது, அதில் சொல்லுங்கள். நான்கு பேருக்கு உங்களால் ஞானஸ்நானம் கிடைக்கட்டும்.

*****

இருபதாயிரம் டாலருக்கு ஒரு ரோபோ!

இருபதாயிரம் டாலருக்கு ஒரு ரோபோ!

இவ்வாண்டு நடந்த சீன புத்தாண்டு விழாவைப் பார்த்தீர்களா?

67 கோடி பேர் பார்த்த அந்த டிவியின் நிஜ ஹீரோக்கள் குழந்தைகளுடன் சேர்ந்து குங்ஃபூ செய்த ரோபோக்கள். குங்ஃபூவைச் சும்மா பிசிறு தட்டாமல் செய்கின்றன!

இப்போதைய ரோபோட்டிக் உலகில் இதுதான் ஹாட் நியூஸ்.

ஹாங்க்சோ நகரின் யூனிட்ரீ கம்பெனி செய்த மேஜிக் அது.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் இத்தனை காலம் கோலோச்சிய ரோபாட்டிக்ஸ் ஏரியாவில் சீனா இப்போது ஒரு பெரிய கட் அவுட் நட்டுவிட்டது. உலகச் சந்தையில் பாதிக்கும் மேல் சீன கம்பெனிகளான யூனிட்ரீயும் அஜிபாட்டும்தான் கையில் வைத்திருக்கின்றன.

கடந்த வருடம் மட்டும் 11,000 ஹியூமனாய்டு எனும் மனித உருவ ரோபோக்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். 20,000 டாலர் இருந்தால் நீங்கள் கூட ஒன்றை ஆர்டர் செய்யலாம்!

இப்போதைக்கு இந்த ரோபோக்கள் தண்ணீரை ஊற்றுவது, மேஜையைத் துடைப்பது, அக்ரோபாட்டிக் சாகசங்கள் செய்வது என அசத்துகின்றன.

கேல்பாட் போன்ற நிறுவனங்கள் கடைகளில் விற்பனைப் பிரதிநிதிகளாகவும் இவற்றை இறக்கிவிட்டன.

அமெரிக்க ரோபோக்களை எடுத்துக் கொண்டால், டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோ ஒரு வீட்டு வேலைக்காரன், குழந்தையைக் கவனிக்கும் நர்சு, பி.ஏ என சகலகலாவல்லவனாக வலம் வருகிறது.

என்றாலும், இப்போதைக்கு டெஸ்லா பேக்டரிகளில் பொருட்களைத் தூக்குவது போன்ற ஒரே மாதிரியான வேலைகளுக்குத்தான் இவை பயன்படுகின்றன. ஒரு ஆல்-இன்-ஆல் ரோபோ வர இன்னும் பல வருடம் ஆகும்.

ரோபோக்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வாக்யூம் கிளீனர் அல்லது ரோபோ டாக்ஸிக்கு விதிகள் தெரியும். ஆனால், பாத்திரங்களை அடுக்கி வைப்பதோ அல்லது கதவு கைப்பிடியைத் திருப்புவதோ அவற்றுக்கு மகா கஷ்டம்.

மனிதர்கள் செய்யும் சாதாரண வேலைகளில் இவை இன்னும் 30 முதல் 50 சதவீதம்தான் தேறியிருக்கின்றன. இன்னும் தேற வேண்டியிருக்கிறது. நிஜ உலகம் கணிக்க முடியாதது. அங்கேதான் ரோபோக்கள் தடுமாறுகின்றன.

சாட் ஜிபிடி எப்படி இன்டர்நெட்டில் இருக்கும் கோடிக்கணக்கான வார்த்தைகளைப் படித்துப் பண்டிதரானதோ, அதேபோல் ரோபோக்களும் டேட்டாவை விழுங்கி அறிவாளியாகும் என்பதுதான் தியரி.

ஆனால் மொழிக்கு இருப்பது போல ரோபோக்களுக்குப் படிக்க இன்டர்நெட் கிடையாது. மனிதர்கள் மோஷன் கேப்சர் உடைகளை அணிந்து ஒரு குங்ஃபூ கிக்கை ஆயிரக்கணக்கான முறை செய்து காட்டித்தான் அவற்றுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

ஒரு ரோபோ பிளம்பர் அல்லது ரோபோ நர்சு வர இன்னும் காலம் இருக்கிறது.

ஹியூமனாய்டு ரோபோக்கள் இனிதான் வரப்போகின்றன, ஆனால் மற்ற ரோபோக்கள் இப்போதே கலக்குகின்றன.

உக்ரைன் ராணுவம் யூனிட்ரீயின் ரோபோ நாய்களைப் பயன்படுத்தி டிரோன்கள் போக முடியாத சுரங்கங்களை வேவு பார்க்கிறது.

கார் அசெம்பிளிங் முதல் அறுவை சிகிச்சை வரை ரோபோக்களின் கைகள் பல வருடங்களாக வேலை செய்கின்றன.

சீனாவின் மேட் இன் சைனா 2025 பாலிசிப்படி 2,95,000 ரோபோக்களைத் தொழிற்சாலைகளில் நிறுவியிருக்கிறார்கள்.

சீனாவிலுள்ள ஜீக்கர் கார் தொழிற்சாலையில் விளக்குகளை அணைத்துவிட்டு மனிதர்களே இல்லாமல் ரோபோக்களால் ஒரு நாளைக்கு 800 கார்களைத் தயாரிக்க முடியும்! ஒரு நிமிஷத்துக்கு ஒரு கார் அசெம்பிள் ஆகிறது.

உற்பத்தித் திறனில் சீனா நம்பர் ஒன் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சீனாவிடம் இன்ஜினியரிங் பலம் இருக்கிறது, சப்ளை செயின் இருக்கிறது.

ஆனால், ரோபோக்களின் மூளையான கட்டிங் எட்ஜ் இன்டலிஜென்ஸ் ஏரியாவில் இன்னும் அமெரிக்காதான் லீடிங். ரோபோ கைகால்கள் சீனாவாக இருந்தாலும், அதன் புத்திசாலித்தனம் இன்னும் சிலிகான் வேலியிடம்தான் இருக்கிறது!

இன்று உங்கள் வீட்டு ரோபோ உங்களிடம் காபி கேட்க ஆரம்பித்தால், அதுதான் உண்மையான ரோபாட்டிக்ஸ் புரட்சி!

அது இருக்கட்டும். இப்போதைக்கு 20,000 டாலர் இருந்தால் சீனா ரோபோவை நீங்கள் டெஸ்ட் செய்து பார்க்கலாம்!

****

3 Apr 2026

மெமரி – ஒரு முள்ளும், மலரும்!

மெமரி – ஒரு முள்ளும், மலரும்!

மரணப் படுக்கையில் இருக்கும் மனிதனிடம் போய், உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று விசாரிப்பது ஆகச்சிறந்த மொக்கையான விஷயம்.

அதற்குப் பதில் அவரை ஒரு மென்டல் வெக்கேஷன் அழைத்துச் செல்லலாம்.

உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு எது? எதற்காகப் பாராட்டினார்கள்? நீங்கள் பெற்ற முதல் பரிசு எது? அது உங்களுக்குப் பிடித்திருந்ததா? நீங்கள் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த சாப்பாடு எது? உங்கள் லைப் பார்ட்னரை முதன்முதலில் பார்த்த அந்தத் தருணம் ஞாபகம் இருக்கிறதா? இப்படிக் கேள்விகள் கேட்டு அவரை அவரது கடந்தக் காலத்திற்குள் டார்ச் அடித்து பார்க்க வைப்பதுதான் மெண்டல் வெக்கேஷன்.

கேள்விகளைக் கேட்டதும், மரணப் படுக்கையில் இருக்கும் அந்த நோயாளியின் கண்களில் ஒரு மின்னல் வெட்டும். வலி தற்காலிகமாக மறையும். ஞாபகம் என்பது ஒரு டைம் மெஷின். அது நம்மைத் துயரத்திலிருந்து தூக்கி, எங்கோ ஒரு அழகான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஒருமுறை இரண்டாயிரம் பேர் இருந்த ஒரு சபையில் ஒரு பரிசோதனை செய்தார்கள். “கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூச்சை ஆழமாக இழுங்கள். உங்களுக்குப் பிடித்தமான, இப்போது உயிரோடு இல்லாத ஒருவரை உங்கள் அறைக்குள் அழையுங்கள். அவர் சிரிப்பைப் பாருங்கள். அவர் முடியைத் தொடுங்கள். அவரோடு பேசுங்கள்”, என்று சொன்னார்கள்.

பாதி தியானத்திலேயே அந்த அறையில் விசும்பல் சத்தம் கேட்டது. முதிர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அழுதுகொண்டிருந்தார்கள். நினைவுகள் நம்மை எங்கோ ஓர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது, அழச் செய்கிறது, சந்தோஷிக்கச் செய்கிறது, துக்கிக்கச் செய்கிறது. நிச்சயமாக ஏதோ ஒன்றைச் செய்கிறது.

மிருகங்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சால்மன் மீன் முட்டையிட ஆற்றின் எதிர்த்திசையில் நீந்துகிறது. அணில் தான் ஒளித்து வைத்த விதையைத் தேடுகிறது. அதெல்லாம் வெறும் இன்ஸ்டிங்க்ட். ஆனால், இறந்தவர்களை மீண்டும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறோமே, அந்த ஞாபகம்தான் நம்மை மனிதனாக வைத்திருக்கிறது.

இப்போது வயதான சிலருக்கு அல்சைமர் நோய் வந்து விடுகிறது. இது ஒரு கொடூரமான மறதி நோய். ஒரு மனிதனுக்கு இரண்டு முறை மரணம் என்றால் அது இந்த நோய்தான். அல்மைசர்களுக்கு முதலில் அவர்களுடைய நினைவுகள் அழிந்து போகும் போது ஒரு மரணம். பிறகு உடல் ரீதியாக நிகழும் ஒரிஜினல் மரணம்.

இது போன்ற நிலையில் அவருக்கு ஆத்மார்த்தமான ஒருவர் என்ன செய்ய முடியும்? அவருக்குத் தன்னைத் தெரியவில்லை, யாரையும் தெரியவில்லை என்பதே ஒருவருக்கு எவ்வளவு துயரம் தரும் ஒன்று. ஆனால், இவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வழியும் இருக்கிறது. அது ஞாபகம். அல்சைமர்கள் மறந்து விடுகிறார்கள் என்றாலும், எல்லாவற்றையும் அல்ல, ஒரு சில அவர்களோடு ஒட்டியிருக்கின்றன. அதன் மூலம் ஓர் உயிர்ப்பித்தல் சாத்தியமாகிறது.

 ஒரு துண்டு மாம்பழம். மாம்பழம் எப்படி அவர்களை உயிர்ப்பிக்கும் என்றால், அது அவர்கள் மிக மிக விரும்பிச் சாப்பிடக் கூடியதாக இருக்கும். அதைக் கொண்டு சென்றாலே போதும், அவர்கள் தங்கள் ஞாபக உலகத்தோடு ஒரு தொடர்பைக் கொண்டு வருவார்கள்.

இளையராஜாவின் இசை. அது எப்படி உயிர்ப்பிக்கும் என்றால், அதுவும் அப்படித்தான் அவர்கள் அது மிக மிக நேசித்த, அதற்காகத் தங்களையே கொடுக்கக் கூடிய ஆத்மார்த்தமாக இருக்கும். அதைக் கேட்கும் போது அவர்கள் தங்கள் பழைய உலகில் உலவ ஆரம்பித்து விடுவார்கள். மெல்ல மெல்ல நினைவுகள் பூக்கத் தொடங்கும்.

 ஒரு மொக்கையான ஜோக் கூட சமயங்களில் உயிர்ப்பிக்கும். காரணம் அவர்கள் சிரிப்புக்கு ஏங்கியவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களை நினைவுகளில் மீட்க முடியும் என்றால் அது மொக்கையாக இருந்தால் என்ன, எப்படி இருந்தால் என்ன?

ஆரஞ்சுப் பழத்தை ஒரு நீண்ட சுருளாக உரித்து, ஒவ்வொன்றாகப் பகிர்ந்தளிப்பாரே அந்த மனிதர். அந்தச் சம்பவம் கூட அவர்களை உயிர்ப்பிக்கும். அவர் இப்போதும் அந்த நினைவுகளில் உயிரோடு இருக்கிறார். இப்படி அல்மைசர்களின் நினைவுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் விசயங்களைக் கொண்டு அவர்களை இயன்ற வரை உயிர்ப்பிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அல்சைமர்களைப் பொருத்த வரை மறதி ஒரு வரம் இல்லை, சாபம்!

ஆனால் நினைவுகளும் எப்போதும் இனிமையானவை அல்ல. நம் ஆழ்மனதின் அடித்தட்டில் சில கசப்பான நினைவுகள் துடைப்பக் கட்டையோடு காத்துக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான்.

வாழ்க்கையின் ஆகப்பெரிய சாபம் என்னவென்றால், ஒருவரைப் பற்றிய நினைவை அவருக்கு அணுக்கமானவரே மறந்து விடுவதுதான். அது போன்ற சூழ்நிலைகளில் வாழ்க்கையின் அர்த்தமே அது முடிந்து போகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னும் சில தலைமுறைகள் கழித்து, இந்தப் பூமியில் ஒவ்வொருவரையும் பற்றி நினைக்க ஒரு ஜீவன் கூட இருக்காது. அன்றுதான் ஒரு மனிதன் உண்மையாகவே மரணமடைகிறான். அதுவரை இந்த அவசரமான, அழுத்தமான உலகில் உங்களைத் தாங்கிப் பிடிப்பது இந்த ஞாபகம் மட்டும்தான்.

அது ஒரு பரிசு. அதே சமயம் ஒரு சுமை. அது ஒரு ஆசீர்வாதம். அதே சமயம் ஒரு சாபம். நினைவை இப்படி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

இப்போது உங்கள் கண்களை மூடுங்கள். உங்கள் நினைவுகளை உலவ விடுங்கள். உங்கள் டைம் மெஷின் இன்று உங்களை எங்கே அழைத்துச் செல்கிறது என்று பாருங்கள். உங்களுக்குள் இத்தனை நினைவுகளா என்று நீங்களே மயக்கம் போட்டு விடுவீர்கள். அவ்வளவு நினைவுகளைச் சேமித்து வைத்திருக்கிறது இந்த மூளை. அதை அல்சைமரிடம் பறிகொடுப்பது கொடுமைதானே!

*****

2 Apr 2026

மெமரி டெலீட் – குறிப்பிட்ட ஒன்றை மட்டும் அழிப்பது சாத்தியமா?

மெமரி டெலீட் – குறிப்பிட்ட ஒன்றை மட்டும் அழிப்பது சாத்தியமா?

ஒரு 23 வயது இளைஞன் கிளினிக் கதவைத் தட்டுகிறான். டாக்டர், என் மூளையில் இருக்கும் அந்த ஒரு குறிப்பிட்ட நினைவை மட்டும் டெலீட் செய்ய முடியுமா? என்னால் தூங்க முடியவில்லை, என்று கெஞ்சுகிறான்.

அது, அவனுடைய காதலி அவனை ஏமாற்றிய துயரமாக இருக்கலாம், அல்லது ஒரு போர்க்களத்தில் சக வீரர்களை இழந்த அதிர்ச்சியாக இருக்கலாம். இதற்கு நாம் அனுமதி கொடுக்கலாமா? அவன் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதைப் பொறுத்து அதற்கு ஓ.கே சொல்லலாம்.

ஆனால், நினைவாற்றல் என்பது ஒரு பைல் பீரோ கிடையாது. ஒவ்வொரு முறை நாம் ஒன்றை நினைத்துப் பார்க்கும்போதும், மூளை அதைத் துண்டு துண்டாகச் சேர்த்து மீண்டும் உருவாக்குகிறது. இதற்கு மெமரி ரீகன்சாலிடேஷன் என்று பெயர்.

இப்போது மெமரி டெலீட்டிற்கான சில ஜன்னல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் நினைவில் சில மாற்றங்களைச் செய்ய முடியும். ஒரு பழைய ஜி.பி.எஸ் மேப்பில் ரூட்டை மாற்றுவது போல, ஒரு கசப்பான நினைவின் வீரியத்தை  மட்டும் குறைக்க முடியும்.

ஆராய்ச்சியாளர்கள் இதற்காகப் ப்ரோப்ரானோலோல் என்ற ரத்த அழுத்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது மூளையின் அமிக்டலா பகுதியில் சுரக்கும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனைத் தடுக்கிறது.

2015 இல் பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலில் தப்பியவர்களுக்கு இந்தச் சிகிச்சையை அளித்துப் பார்த்தார்கள். விளைவு? அவர்கள் அந்தச் சம்பவத்தை மறக்கவில்லை. ஆனால், அந்த நினைவுகள் தரும் வலி மட்டும் குறைந்துவிட்டது. ஒரு பழைய எக்ஸ் காதலியைப் பற்றி நினைப்பது போலத்தான் இது. நினைவு இருக்கும், ஆனால் அந்த வலி இருக்காது என்கிறார்கள்.

இது குறித்துப் பயனர்களின் புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன தெரியுமா?

நினைவுகளை மாற்றும் மருந்தை எடுத்துக்கொள்ளும் சாய்ஸ் மக்களுக்கு இருக்க வேண்டும் என்கின்றனர் ஐம்பது சதவீதத்தினர்.

நீங்கள் அந்த மருந்தை எடுத்துக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு இருபது சதவீதத்தினரே ஓ.கே சொல்கின்றனர்.

ஆச்சரியமாக, பலருக்கு நினைவுகளை மாற்ற விருப்பமில்லை. கசப்பான நினைவுகளும் நான் யார் என்பதைத் தீர்மானிக்கின்றன என்று மக்கள் நினைக்கிறார்கள் போல!

எந்தத் தீமையிலும் நன்மை இருப்பது போல, இது போன்ற நன்மையிலும் தீமை இல்லாமல் இருக்குமா? இதிலிருக்கும் ஆபத்துகள் என்று பார்த்தால், இப்படி சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்து விடுவோம்.

ஒரு குற்றத்தைச் செய்தவன் அல்லது சாட்சி சொல்பவன் தன் குற்ற உணர்ச்சியை அல்லது நினைவை அழித்துவிட்டால், சட்டம் எப்படித் தண்டிக்கும்?

நாஜிக்களின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நினைவுகளை அழித்துக்கொண்டால், உலகம் அந்தப் பாடத்தை எப்படிப் படிக்கும்?

கோபம், அழுகை, வருத்தம் என இவையெல்லாம் மனிதனின் அடையாளங்கள். ஒரு மாத்திரை போட்டு இதையெல்லாம் துடைத்துவிட்டால், நாம் வெறும் ரோபோக்களாக மாறிவிடமாட்டோமா?

ஆக, நினைவுகளை அழிப்பது என்பது ஒரு கூர்மையான கத்தி. ஒரு போர் வீரனின் மன அழுத்தத்தைக் குறைக்க இது தைலம். ஆனால், சின்னச் சின்னத் தோல்விகளுக்கெல்லாம் மாத்திரை போட ஆரம்பித்தால், நாம் எதையுமே கற்றுக்கொள்ள மாட்டோம்.

மறதி ஒரு வரம் என்பது கவிதை. ஆனால் தேவையானதை மட்டும் மறப்பது என்பது விஞ்ஞானம்.

மொத்தத்தில் அது வரமா அல்லது சாபமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நாம்தான்!

மெமரி டெலீட் இஸ் யுவர் சாய்ஸ்!

*****

மெமரி டயட் – மூளைக்கு ஒரு ஜிம்!

மெமரி டயட் – மூளைக்கு ஒரு ஜிம்!

நமக்கு இருக்கும் ஆகப்பெரிய பயங்களில் ஒன்று வயதான காலத்தில் நம் நினைவுகளை அல்சைமர் போன்ற நோய்களிடம் பறிகொடுத்துவிடுவோமோ என்பதுதான். ஆனால், கவலைப்படத் தேவையில்லை. நம் மூளை ஒரு விசித்திரமான தசை. அதைச் சரியாகப் பயிற்றுவித்தால், 70 வயதிலும் அது 20 வயது போலச் செயல்படும்.

நீங்கள் ஒன்றை இன்று புதிதாகக் கற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதைத் திரும்ப நினைவுபடுத்திப் பார்க்காவிட்டால், அதில் பெரும்பகுதி காற்றில் கரைந்துவிடும். இதைத்தான் விஞ்ஞானிகள் மறதி வளைவு என்கிறார்கள்.

முதல் 24 மணி நேரம் மிகவும் முக்கியம். அதன் பிறகுதான் நினைவுகள் மெல்ல மெல்ல விடைபெறுகின்றன. 30 வயதில் நம்மால் 83% முகங்களைச் சரியாக அடையாளம் காண முடியும். ஆனால் 70 வயதில் அது 75% ஆகக் குறைகிறது. இந்தச் சரிவைத் தடுக்க சில வழிகள் உண்டு.

அதற்கு மூளைக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறோம் என்பது முக்கியம்.

வைட்டமின் E மற்றும் போலேட் சத்துகள் மூளைக்கு முக்கியம். கீரை வகைகள், பிரக்கோலி, முட்டைக்கோஸ் ஆகியவற்றில் இவை அதிகம்.

ஏன் போலேட் மூளைக்கு அதிகம் தேவை என்றால், இது ரத்தத்தில் இருக்கும் ஹோமோசிஸ்டைன் என்ற அமினோ அமிலத்தின் அளவைக் குறைக்கிறது. இந்த அமிலம் அதிகமானால் இதய நோய் வரும். அத்துடன் மூளை நரம்பு செல்கள் தற்கொலை செய்துகொள்ளும்.

மூளையின் நிறைவாற்றல் தொடர்பான ஆய்வு ஒன்றில், சிலரிடம் ஒரு பொருளின் பெயரை எழுதச் சொன்னார்கள், சிலரை அந்தப் பொருளை வரையச் சொன்னார்கள். முடிவில் பார்த்தால், வரைந்தவர்களுக்குத்தான் அந்தப் பொருட்கள் மிகத் துல்லியமாக நினைவிருந்தது.

இதற்குப் பின்பும் ஓர் அறிவியல் காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் எழுதும்போது மூளையின் ஒரு பகுதிதான் வேலை செய்கிறது. ஆனால் வரையும்போது, அந்தப் பொருளின் வடிவம், அதன் தன்மை எனப் பல விஷயங்களை மூளை ஒன்றாகச் சேர்த்து கோடிங் செய்கிறது. அதனால் வரைந்து படிப்பது அதிக பலன் தரும். தமிழகப் பள்ளிகளில் உயர் தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் படிப்புகளில் மன வரைபடம் மூலம் பாடத்தைக் கற்பிக்க மற்றும் கற்கச் சொல்வதன் பின்னணி இதுதான்.

மற்றுமொரு மூளைக்கு நல்ல பயிற்சி என்னவென்றால், ஒரு காலக்கெடு கொடுத்து பழைய தகவல்களைத் தோண்டி எடுக்கச் சொல்வது. உதாரணத்துக்கு மூன்று நிமிடத்திற்குள் இந்தியாவின் முப்பத்தெட்டு மாநிலங்களின் பெயர்களையும் கடகடவென்று சொல்வது. இது போன்ற பயிற்சிகள் மூளை நரம்புகளுக்கு ஒரு நல்ல ஸ்ட்ரெச்சிங் எக்சர்சைஸ் போன்றது.

மேலும், நினைவாற்றலை வளர்க்க இன்னும் சில சின்னச் சின்ன டிப்ஸ்கள் சொல்லப்படுகின்றன. சூயிங்கம் மெல்லுவது கவனத்தை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டிய விஷயத்தோடு ஒரு வேடிக்கையான கற்பனைப் படத்தை இணைத்துக் கொள்வதும் நினைவாற்றலுக்கு உதவும். உதாரணத்துக்குத் தக்காளி என்று ஞாபகத்தில் வைக்க வேண்டுமானால், ஒரு தக்காளி ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக் ஓட்டுவது போலக் கற்பனை செய்யுங்கள். அது மறக்கவே மறக்காது!

அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட். இவ்வளவையும் படித்து விட்டு, இதை ஒரு நான்கு பேருக்காவது ஷேர் செய்ய மறந்து விடாதீர்கள். அது ஒரு நான்கு பேருக்காவது நினைவாற்றலை வளர்க்க உதவும் அல்லவா!

*****

1 Apr 2026

கத்தியின்றி ரத்தமின்றி மூளைக்குள் ஒரு டூயட்!

கத்தியின்றி ரத்தமின்றி மூளைக்குள் ஒரு டூயட்!

நம் மண்டையோட்டுக்குள்ளே இருக்கும் மூளை ஒரு மகா சமுத்திரம். அதன் மேலடுக்கை வருடிக் கொடுப்பது எளிது. ஆனால், மிக ஆழத்தில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் போன்ற இடங்களைத் தொட வேண்டுமானால், இதுவரை ஒரே வழிதான் இருந்தது. அது மண்டையைத் திறந்து, ஒயர்களை உள்ளே விட்டு ஒரு அறுவை சிகிச்சை செய்வது.

இப்போது இதற்கு ஒரு ஷார்ட்கட் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதற்குப் பெயர் இன்டர்ஃபியரன்ஸ். அதன்படி இரண்டு வெவ்வேறு அலைவரிசை கொண்ட மின்சாரத்தை மூளைக்குள் வெவ்வேறு கோணங்களில் பாய்ச்சுகிறார்கள். அவை இரண்டும் மூளையின் ஒரு குறிப்பிட்ட ஆழமான புள்ளியில் சந்திக்கும்போது, அங்கே ஒரு புதிய குறைந்த அதிர்வு உருவாகிறது. இதைத்தான் டெம்போரல் இன்டர்பெரன்ஸ் என்கிறார்கள்.

எளிமையாகச் சொன்னால், இரண்டு ரயில்கள் வெவ்வேறு வேகத்தில் வரும்போது, அவை சந்திக்கும் இடத்தில் உண்டாகும் அதிர்வு போன்றது இது. இந்த அதிர்வு மூளை நரம்புகளைத் தட்டி எழுப்புகிறது அல்லது அடக்கி வைக்கிறது.

ஏன் இது முக்கியம் என்றால், மண்டையைத் துளைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் லாபம் அதிகம். இதனால் அல்சைமர் எனும் மறதி நோய்க்கு சிகிச்சை, எபிலெப்ஸி எனும் காக்காய் வலிப்பு நோய்க்கு சிகிச்சை, ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு மறுவாழ்வு என இதன் லாபப் பட்டியல் நீள்கிறது. அத்துடன் இதற்கான உபகரணங்கள் விலை குறைவு. ஒரு சாதாரண எலக்ட்ரோட் தொப்பியைப் போட்டுக்கொண்டே சிகிச்சையைத் தொடரலாம்.

காக்காய் வலிப்பு இருப்பவர்களுக்கு இந்த முறையில் ஹிப்போகாம்பஸைத் தட்டிவிட்டு, அவர்களின் தூக்கத்தை சீராக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

வயதானவர்களின் மூளையைத் தூண்டி அவர்களை விரல்களால் வேகமாகத் தட்ட வைத்திருக்கிறார்கள். இது பக்கவாதம் வந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

ஆனால், வெளியே கத்தி வைக்கவில்லை என்பதால் இதை பின்விளைவு இல்லாதது என்றெல்லாம் சொல்ல முடியாது. மூளைக்கு உள்ளே ஏதோ மாற்றம் நடக்கிறது அல்லவா! இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கின்றன. ஒரு லேபில் நடப்பது இன்னொரு லேபில் ரிசல்ட் தருவதில்லை. இருந்தாலும், இது ஒரு ஓப்பன் சோர்ஸ் தெரபியாக மாற வாய்ப்பிருக்கிறது.

அதன்படி சீக்கிரம் ஒரு தொப்பி ரெடியாகும். அதை மாட்டிக்கொண்டு தூங்கினால், மறுநாள் காலையில் அல்சைமர் காணாமல் போய், ஞாபக சக்தி சூப்பர் மேனாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக அறிவியல் வளர்கிறது. நாம்தான் இன்னும் பழைய ஞாபகங்களோடு இருக்கிறோம் இல்லையா!

*****

குதிரையா? கழுதையா? – ஒரு குறுங்கதை!

குதிரையா? கழுதையா? – ஒரு குறுங்கதை!

தியாகராஜனின் அப்பா ஒரு பழைய காலத்து மனிதர். அதாவது, லாபத்தை விட நிம்மதியை அதிகம் நேசிப்பவர். அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. பத்து மூட்டை நெல்லைப் பத்து இடங்களில் வைப்பார். ஏம்பா இந்தச் சிதறல்? என்று கேட்டால், எல்லா எலிக்கும் ஒரே நேரத்துல பசி எடுக்காதுப்பா, என்பார்.

தியாகராஜனுக்கு அது அப்போது புரியவில்லை. அவன் வளர்ந்தான். முப்பத்தைந்து வயதில் ஒரு வீடு, கொஞ்சம் தங்கம், ஒரு காலி மனை என்று ஒரு சமநிலையான மனிதனாக ஆனான். அதாவது, போரடிக்கிற அளவுக்கு ஒழுக்கமான முதலீட்டாளன்.

அப்புறம், அந்தப் பெங்களூர் பார்ட்டி நடந்தது.

கமலக்கண்ணன் அங்கே ஒரு தீர்க்கதரிசி போல அமர்ந்திருந்தான். கையில் மதுக்கோப்பை. கண்களில் பங்குச் சந்தையின் பச்சை நிறக் கனவுகள். தியாகராஜா, நிலம் தங்கம்லாம் வெறும் சென்டிமென்ட் மச்சி. ஓடுற குதிரை மேல காசைப் போடணும். அதான் இன்னிக்கு ரிலிஜியன், என்றான்.

தியாகராஜனுக்கும அந்த மதம் பிடித்துக்கொண்டது.

முதலில் பிக்சட் டெபாசிட்டைத் தியாகம் செய்தான். பிறகு எமெர்ஜென்சி பண்டைக் கொன்றான். பின் மனைவியின் நகைகள் அடகுக் கடை இருட்டில் தவம் இருக்கப் போயின. கடைசியில், அந்தப் புறநகர் மனையையும் விற்றுச் சந்தையில் கரைத்தான்.

விரைவில் தியாகராஜன் ஒரு பங்குச் சந்தைப் புலி என்று ஊருக்குள் வதந்தி பரவியது. சொந்தக்காரர்கள் ஓடி வந்தார்கள். இந்தாங்க என் சேவிங்ஸ், இதையும் கொஞ்சம் புலியாக்கிக் கொடுங்க என்றார்கள்.

மற்றவர்கள் பணத்தில் டே டிரேடிங் செய்வது ஒரு போதை. தியாகராஜனுக்கு அது தலைக்கேறியது. அதுவும் தெரியாத வித்தையைத் தெரிந்ததாக நினைத்துச் செய்வது தற்கொலைக்குச் சமம். அதையும்தான் செய்து பார்ப்போம் என்று தோன்றியதோ அவனுக்கு என்று தெரியவில்லை.

தியாகராஜனின் சனி பெயர்ச்சி சரியில்லையோ என்னவோ? அமெரிக்க ஈரான் போர் தொடங்கியது. சந்தை சீட்டுக்கட்டுகளை விட மோசமாகச் சரிந்தது. அவன் புலி வேஷம் கலைந்தது. இப்போது நான்கு பக்கமும் செல்போன்கள் அலறுகின்றன. தூக்கம் போய் நான்கு வாரம். உலகமே ஒரு பெரிய கடன் பத்திரமாகத் தெரிந்தது.

சோகத்தைப் போக்கிக் கொள்ள பீச் பக்கம் எட்டிப் பார்த்தான். அங்கே கமலக்கண்ணன். பழைய தீர்க்கதரிசியைக் காணோம். யாரோ ஒருவனிடம் ஐநூறு ரூபாய்க்குக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

என்னடா கமலக்கண்ணா? குதிரை என்னாச்சு? என்றான் தியாகராஜன்.

கமலக்கண்ணன் கசப்பாகச் சிரித்தான். குதிரை ஓடுச்சு மச்சி. ஆனா அது என் மேல ஏறி மிதிச்சுட்டு ஓடிருச்சு. ஷேர் மார்கெட் பிராபிட்ன்னு உங்கிட்ட காட்டிய ஸ்கிரீன் ஷாட்ஸ் அத்தனையும் பேக் கிரியேஷன்ஸ். அன்னைக்கு நான் உன்கிட்ட அப்படி சீன் போட்டதே, நீயாவது எனக்குக் கொஞ்சம் கைமாத்துக் கொடுப்பேன்னுதான். ஆனா நீயும் என் கூடவே நடுத்தெருவுக்கு வந்துட்டியே!

தியகராஜனுக்குச் சிரிப்புதான் வந்தது. நாம் எப்போதுமே ஒரு பெரிய முட்டாளாக இருக்கும்போது, நம்மை விடப் பெரிய முட்டாளையே குருவாகத் தேடிக்கொள்கிறோம் என்று தோன்றியது.

வீட்டிற்கு வந்தான். அப்பா ஈஸி சேரில் அமர்ந்து பழைய கணக்குப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகத்தைப் பார்த்தார். என்னப்பா, எல்லா மூட்டைக்கும் எலி வந்துருச்சா? என்றார்.

தியாகராஜன் மெல்லத் தலையசைத்தான்.

அப்பா ஒரு பழைய மஞ்சள் பையை டீப்பாய் மீது தூக்கிப் போட்டார். உள்ளே மஞ்சன் நிறம் மினுமினுக்க தங்கம்.

அன்னைக்கு உன் பெரியப்பா நிலம் வாங்கச் சொன்னப்ப, நான் வேணாம்னு வாங்கி வச்சது. இதுல உன் நஷ்டமெல்லாம் தீராது. ஆனா, உன் வீட்டுல இன்னிக்கு அடுப்பு எரியும். முதல்ல கடன்காரங்களைச் சமாளி. அப்புறம் உழைச்சு இதை மீட்டு வை, என்றார் அப்பா இறுகிப் போன முகத்தோடு.

தங்கத்தின் மஞ்சள் நிறம் அன்று ஒரு பெரிய உண்மையைச் சொன்னது போலிருந்தது தியாகராஜனுக்கு.

அதாகப்பட்டது, குதிரையை விடக் கழுதை மேல் சுமை ஏற்றுவது பாதுகாப்பானது. அது மெதுவாகத்தான் போகும், ஆனால் கீழே தள்ளாது.

மயங்கிக் கிடந்தவனுக்குக் குளுக்கோஸ் டிரிப் ஏற்றியது போல இருந்தது இப்போது தியாகராஜனுக்கு.

*****