30 May 2026

தியாகி, நிர்வாகி மற்றும் வியாபாரி – இயக்கங்களின் மரண வாக்குமூலம்!

தியாகி, நிர்வாகி மற்றும் வியாபாரி –

இயக்கங்களின்  மரண வாக்குமூலம்!

இயக்கங்கள் என்பவை ரயில்களைப் போன்றவை. தொடக்கத்தில் அவை எஞ்சின் சூடாக, கரும்புகை கக்க, லட்சியப் பாதையில் தடம் புரளாமல் ஓடப் பார்க்கும். இறுதியில் அவை ஒரு பழைய இரும்புக்கடையில் ஸ்கிராப் ஆகி, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏசி அறைகளில் அலங்காரப் பொருளாக வைக்கப்படும். இந்த மாற்றத்தை வரலாற்று ரீதியாக இப்படிப் பார்க்கலாம்.

இயக்கங்களின் தொடக்கக் கட்டத்தில் இருப்பவர்களுக்குக் கொள்கைதான் சோறு. உண்மையில் இவர்களுக்குச் சோறு கிடைக்காததால்தான் கொள்கையே சோறாகிறது. இவர்களின் அடையாளங்கள் என்பவை தாடி, அழுக்குச் சட்டை, கையில் ஒரு பை, இதயத்தில் ஒரு லட்சியம்.

இவர்கள் அதிகாரம் ஒரு சாக்கடை என்பார்கள். சாக்கடையைச் சுத்தம் செய்யப் போகிறேன் என்று சொல்லி இறங்குவார்கள்.

இவர்கள் எந்த அரசுப் பதவிக்கும் வரமாட்டார்கள். ஏனென்றால், இவர்களுக்குப் பதவி கொடுக்கும் அளவுக்கு அந்த அரசுக்குத் தைரியம் இருக்காது, இவர்களுக்குப் பதவி வாங்கும் அளவுக்குப் புத்திசாலித்தனமும் இருக்காது. இவர்கள் வரலாற்றில் தியாகிகள் என்று அழைக்கப்பட்டு, அடுத்த கட்டத் தலைவர்களால் மாலை போடப் பயன்படுத்தப்படுவார்கள்.

முதல் கட்டத் தலைவர்கள் நட்டு வைத்த மரத்தில் பழம் பழுக்கும்போது, இரண்டாம் கட்டத் தலைவர்கள் வருவார்கள். இவர்களுக்குக் கொள்கை முக்கியம்தான், ஆனா பசிக்குமே? என்று யோசிப்பவர்கள்.

இவர்களின் அடையாளங்கள் இஸ்திரி செய்த சட்டை, கையில் வாட்ச், முகத்தில் ஒரு ராஜதந்திரப் புன்னகை.

கொள்கையை நூறு சதவீதம் கடைப்பிடித்தால் மக்களால் வாழ முடியாது, எனவே அதை 40 சதவீதமாகக் குறைத்துவிட்டு, மீதி 60 சதவீதத்தை நடைமுறைச் சாத்தியங்களோடு கலப்போம் என்பார்கள் இவர்கள்.

இவர்கள் ஆட்சியில் அமர்வார்கள். ரத்தமும் சதையுமான மனிதர்களுக்குச் சில நன்மைகளைச் செய்வார்கள். ஆனால், அந்த நன்மைகளுக்கான விலையாகத் தங்கள் கொள்கையின் ஆன்மாவைச் கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைக்கத் தொடங்குவார்கள்.

இதற்கு அடுத்த இறுதி கட்டம்தான் சுவாரசியமானது. இப்போது இயக்கம் என்பது ஒரு மல்டி நேஷனல் கம்பெனி ஆகியிருக்கும்.. இங்கே தலைவர்கள் பிறப்பதில்லை, அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் அல்லது வாரிசு அடிப்படையில் தரவிறக்கம் செய்யப்படுகிறார்கள்.

இவர்களின் அடையாளங்கள் லேப்டாப், பவர் பாயிண்ட் பிரசன்டேஷன், ஐந்தடுக்கு பாதுகாப்பு, மற்றும் கன்சல்டன்ட் என்று சொல்லப்படும் விலை உயர்ந்த அறிவுரையாளர்கள்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை விட, எதைச் செய்தால் பெரிய பட்ஜெட்டில் புராஜெக்ட் போடலாம்? என்பதுதான் இவர்களின் கவலை.

இயக்கத்தின் பழைய கொள்கைகள் இப்போது டிஜிட்டல் திரைகளில் ஸ்லோகன்களாக மட்டுமே மின்னும். அடிமட்டத் தொண்டன் வாசலில் நிற்க, பினாமி நிறுவனங்களின் முதலாளிகள் ஏசி அறையில் அமர்ந்து டெண்டர் எடுப்பார்கள்.

கொள்கை என்பது இப்போது ஒரு பிராண்டிங் மட்டுமே. ஒரு காலத்தில் அதிகாரம் ஒரு சாக்கடை என்று சொன்ன இயக்கத்தின் வாரிசுகள், இப்போது அந்தச் சாக்கடையிலேயே நீச்சல் குளம் கட்டி, அதில் மினரல் வாட்டர் நிரப்பி விளையாடுவார்கள்.

இது ஒரு சுழற்சி. மதம், அரசியல், கார்ப்பரேட் என எதை எடுத்தாலும் இதுதான் விதி.

இதில் வேடிக்கை என்னவென்றால், கடைசிக் கட்டத்தில் இருப்பவர்கள் இப்போதும் முதல் கட்டத் தியாகிகளின் படத்தைப் போட்டுத்தான் லாப வேட்டையாடுவார்கள். தியாகிகள் சிலையாக இருப்பதால்தான் அமைதியாக இருக்கிறார்கள். ஒருவேளை உயிர் பெற்று வந்தால், மீண்டும் முதல் கட்டப் போராட்டத்தையே தன் இயக்கத்திற்கு எதிராகத் தொடங்க வேண்டியிருக்கும்.

ஆக ஒர் இயக்கம் எப்போது முழுமையாகச் சீரழிந்துவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், எப்போது அந்த இயக்கத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு கன்சல்டன்ட் தேவைப்படுகிறாரோ, அப்போதே அது செத்துவிட்டது என்று அர்த்தம்.

*****

29 May 2026

தூக்கி எறிதலின் தத்துவம்!

தூக்கி எறிதலின் தத்துவம்!

உலகம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி. நாம் அதன் கௌரவமிக்க விநியோகஸ்தர்கள்.

முன்பெல்லாம் எழுதுகோலில் மை தீர்ந்தால், பத்து காசுக்கு மை வாங்கி ஊற்றி, விரல் முழுக்க நீல நிறத்தை அப்பிக்கொண்டு அலைவதில் ஒரு கலை அம்சம் இருந்தது. இன்று பத்து ரூபாய் பேனாவில் மை தீர்ந்தால், அதை ஒரு கணம் கூடத் திரும்பிப் பார்க்காமல் அதை யூஸ் அன்ட் த்ரோ பார்ட்டியாக்கி விட்டார்கள்.

ஏன்?

நேரமில்லையாம்.

ஒரு பேனாவைத் திறந்து ரீபிள் மாற்ற நேரமில்லாத மக்கள், அடுத்த ஒரு மணி நேரத்தை ரீல்ஸ் பார்த்து நேரத்தைத் தொலைக்கக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் நகை முரண்.

கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்வது கௌரவக் குறைச்சல் என்று நாம் நினைக்கத் தொடங்கியதிலிருந்து, நம் வீடுகள் நெகிழிப் பைகளின் குடோன்களாக மாறிவிட்டன.

அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று குப்பை உற்பத்திக் கூடங்கள். ஒரு வாரத்தில் ஒரு டன் குப்பை.

நாம் எதைச் சேமிக்கிறோமோ இல்லையோ, கழிவுகளை மிகச் சரியாகச் சேமித்து இயற்கைக்குத் தானம் செய்கிறோம்.

அந்தக் காலத்தில் ஒரு மேஜை வாங்கினால், அது மூன்று தலைமுறைகளுக்குத் தாங்கும். இன்று வாங்கும் பிளாஸ்டிக் நாற்காலி, உட்காருபவரின் எடையைப் பொறுத்து எப்போது உடையலாம்? என்று தவம் இருக்கிறது. உடைந்தால் என்ன? தூக்கி எறிவோம். புதியது வாங்குவோம். இதுவே இன்றைய தத்துவமாக இருக்கிறது.

கைப்பேசிகளும் அப்படித்தான். ஒரு சின்னக் கீறல் விழுந்தால், அதைச் சரி செய்யத் தோன்றுவதில்லை. பழுது நீக்குபவரைத் தேடுவதை விட, புதிய மாடல் வாங்குவது சுலபம் என்கிறது சந்தை.

பண்டிகை வந்தால் துணி எடுக்கிறோமோ இல்லையோ, புதிய மொபைல் போன் எடுத்து பழையதை மின் கழிவாக மாற்றுகிறோம்.

பழுது நீக்கும் கடைகள் குறைந்து வருவது தற்செயலானது அல்ல. எதையும் சரி செய்யாதீர்கள், புதிதாக வாங்குங்கள் என்று நம் காதுக்குள் ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கிறார்கள் சந்தை நுகர்வு கலாச்சாரவாதிகள்.

மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது என்பது எவ்வளவு அழகான பொய்! உண்மையில் நம்மை நுகர்வுப் பசிகொண்ட இயந்திரங்களாக மாற்றியிருக்கிறார்கள்.

ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையை மண்ணில் வீசுவது நன்றிக்கடன். ஆனால், நாம் அதையும் குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஏனெனில், தூக்கி எறிதல் என்பது இப்போது நம் தசை நார்களில் ஊறிப்போன ஒரு கருத்தியல்.

பொருட்களைத் தூக்கி எறியும் இதே மனநிலை மெல்ல மெல்ல உறவுகளிலும் ஊடுருவுகிறது. ஒரு சின்ன விரிசல் விழுந்தால், ஒரு சின்னப் புரிதல் குறைந்தால், உறவுகளைச் சரி செய்ய யாருக்கும் பொறுமையில்லை.

அடுத்தது யார்? என்று தேடும் யூஸ் அண்ட் த்ரோ கலாசாரம் மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை.

தத்துவம் என்ன சொல்கிறது?

பூமியில் நாம் எதையும் புதிதாகப் படைக்கவில்லை. ஒன்று இன்னொன்றாக மாறுகிறது, அவ்வளவுதான். இந்தச் சுழற்சியை உடைத்து, எல்லாவற்றையும் கழிவாக மாற்றுவது தற்கொலைக்குச் சமம்.

மறுசுழற்சி என்பது ஏதோ ஒரு சட்டம் அல்ல. அது ஒரு மனநிலை. எதையும் தூக்கி எறியும் முன் யோசியுங்கள். ஒருவேளை நீங்கள் எறிவது ஒரு பொருளை மட்டுமல்ல, உங்கள் மனிதத்தையுமாக இருக்கலாம்.

*****

28 May 2026

அரசுப் பள்ளிகளின் இருத்தலியல் சிக்கல்!

அரசுப் பள்ளிகளின் இருத்தலியல் சிக்கல்!

கல்வி என்பது ஓர் ஏணி என்று சொன்னால், அந்த ஏணி எந்த மரத்தில் செய்யப்பட்டது என்பதில் தான் இந்தியச் சமூகம் குறியாக இருக்கிறது. அரசு மரம் என்றால் அலர்ஜி, தனியார் மரம் என்றால் பக்தி.

அரசுப் பள்ளிகள் என்பவை தெய்வங்களைப் போன்றவை. எல்லோரும் அவற்றைக் கும்பிடுவார்கள், வாழ்த்துக் கட்டுரை எழுதுவார்கள். ஆனால் யாரும் அங்கே குடியிருக்க அதாவது பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவதில்லை.

இந்தியாவில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது ஒரு பெரிய விவாதமாகவே மாறவில்லை என்பதுதான் ஆகச்சிறந்த தத்துவம்.

அரசுப் பள்ளியில் படித்தால்தான் அப்துல் கலாம் ஆக முடியும் என்று மேடையில் முழங்குபவர்கள், தன் பிள்ளையை அப்துல் கலாம் ஆக்காமல், அமெரிக்காவுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள்.

நாம் தமிழைத் தாய் என்கிறோம், ஆனால் ஆங்கிலத்தைத்தான் பாஸ் என்கிறோம். தமிழ் வழியில் படிப்பவனுக்கு ஆங்கிலம் பிணக்கு, ஆங்கில வழியில் படிப்பவனுக்குத் தமிழ் ஒரு வழக்கு.

உண்மையில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தாய்மொழியில் படித்து முன்னேறுகின்றன. ஆனால் இந்தியாவிலோ, ஆங்கிலம் என்பது ஓர் அறிவு அல்ல, அது ஒரு தகுதிச் சான்றிதழ்.

அரசுப் பள்ளிகள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மாணவர்கள் வருவார்கள் என்பது, கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கிறார் என்கிற கதையல்ல, பூசாரி வரம் கொடுத்தால்தான் சாமிக்கே மரியாதை என்கிற நிலை.

சீனா ஒரு மாணவனுக்கு 17,000 டாலர் செலவு செய்கிறது. இந்தியா 260 டாலர். இந்த இடைவெளிதான் அரசுப் பள்ளியின் கழிப்பறைக்கும், தனியார் பள்ளியின் ஏசி அறைக்கும் உள்ள வித்தியாசம்.

குறைந்த செலவில் அதிகத் தரம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மிதிவண்டி விலையில் ராக்கெட் வாங்குவதற்குச் சமம்.

அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒதுக்கும் நிதியில் எவ்வளவு சுவரில் ஒட்டுகிறது, எவ்வளவு அறிவில் ஒட்டுகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசு, ஆசிரியர்கள், பெற்றோர் என ஒரு பட்டாளமே உழைக்க வேண்டும்.

வெற்றியின் முதல்படி பள்ளிக்கல்வி என்பது உண்மையானால், அந்தப் படி வழுக்காமல் இருப்பதை உறுதி செய்வதுதான் சமூக நீதி. இல்லையென்றால், அரசுப் பள்ளிகள் என்பது வெறும் புள்ளி விவரங்களில் மட்டும் புள்ளிகளாக மட்டுமே எஞ்சியிருக்கும்.

கல்வி என்பது இருளை நீக்குவது அல்ல, வெளிச்சத்தில் எங்கே குழிகள் இருக்கின்றன என்று அடையாளம் காட்டுவதுதான். அரசுப் பள்ளிகள் அந்தக் குழிகளை மூடட்டும்!

*****

27 May 2026

கோடீஸ்வரக் காலமும் பிச்சைக்காரக் கோலமும்!

கோடீஸ்வரக் காலமும் பிச்சைக்காரக் கோலமும்!

சுஷில் குமார் என்று ஒரு மனிதர். 2011 இல் பீகாரின் மோதிஹாரிலிருந்து கிளம்பி வந்து அமிதாப் பச்சனின் முன்னால் அமர்ந்தார். ஐந்து கோடி ரூபாயை வென்றார். இந்தியாவே அவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியது.

ஆனால், இன்று? அவர் ஒரு பள்ளி ஆசிரியர். இடையில் குடிப்பழக்கம், திவாலான நிலை என நரகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

பணம் என்பது ஒரு விசித்திரமான மிருகம். அதை எப்படி மேய்க்க வேண்டும் என்று தெரியாதவனுக்கு, அது புலியாக மாறி அவனையே தின்றுவிடும் என்பதற்கு சுஷில் குமார் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

திடீர் பணக்காரர்களிடம் ஒரு பொதுவான குணம் உண்டு. பணம் வந்துவிட்டது, இனி மூளை எதற்கு? என்று நினைப்பதுதான் அது.

கைவசம் இருக்கும் பணம் எப்போதும் தீராது என்கிற அறியாமைதான் வீழ்ச்சியின் முதல் படி.

ஒரு குடத்தில் ஓட்டை இருந்தால், அதில் நீங்கள் கங்கையைத் திருப்பினாலும் குடம் நிறையாது.

ஆறாயிரம் ரூபாய் சம்பாதிக்கும்போது இருந்த அதே ஆசைகள், கையில் ஐந்து கோடி வந்ததும் அப்கிரேட் ஆகின்றன. சொகுசு கார், விலையுயர்ந்த வீடு, தேவையற்ற ஆடம்பரம் என இவை எதற்கும் முடிவே இல்லை.

வருமானத்தைப் பெருக்காமல், வாழ்வாதாரத்தின் தரத்தை மட்டும் உயர்த்திக்கொண்டே போனால், ஒரு கட்டத்தில் வாழ்க்கைத்தரம் மேலே இருக்கும், வங்கிக் கணக்கு பாதாளத்தில் இருக்கும்.

பணத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று வரும் நபர்கள், உண்மையில் உங்கள் பணத்தை காணாமல் போகச் செய்யும் மந்திரவாதிகள். நிதியறிவு இல்லாதவர்கள் இவர்களிடம் சிக்கி, ரிஸ்க் என்கிற பெயரில் மொத்தப் பணத்தையும் சூதாட்டத்தில் விடுவது போல இழக்கிறார்கள். பேராசை இருக்கும் இடத்தில் புத்தி வேலை செய்யாது.

சமூகத்தின் கண்களில் பெரிய ஆளாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதே, அதுதான் பலரை அழித்திருக்கிறது. உறவினர்களுக்கு வாரி வழங்குவது, நண்பர்களுக்கு விருந்து வைப்பது என கர்ண வேடம் போடும்போது, உங்கள் பணப்பை மெல்ல மெல்லக் கிழியத் தொடங்குகிறது.

பணம் என்பது உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு, அது அடுத்தவர் முன் நீங்கள் காட்டும் அலங்காரப் பொருள் அல்ல.

ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி, அதை முப்பதாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுவது என்பது, யானை வாங்கி அதற்குத் தீனி போட காசைச் செலவழிப்பது போன்றது. இது லாபமல்ல, ஒரு வகையான ஆடம்பர நஷ்டம். வாடகை வருமானம் என்பது முதலீட்டில் வெறும் 3.6 சதவீதம் என்பதால், அந்தப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் கூட கூடுதல் வட்டி கிடைத்திருக்கும்.

வாழ்க்கை என்பது லாட்டரி அல்ல, அது ஒரு நீண்ட தூர ஓட்டம். திடீரெனப் பணம் கிடைப்பது ஒரு விபத்து. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் தவம்.

மழை அடிக்கும் முன் குடை பிடிப்பது புத்திசாலித்தனம்.

பசிக்குச் சாப்பிடுங்கள், ருசிக்காக உங்கள் வாழ்க்கையைச் சாப்பிடாதீர்கள்.

எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள். கூடை விழுந்தால் எல்லாம் உடையும்.

தெரியாத பாதையில் போகும்போது வழி கேட்பது இழிவு அல்ல, அதுதான் அறிவு.

பணம் உங்கள் வாழ்க்கையை மாற்றாது. உங்கள் புத்திதான் உங்கள் வாழ்க்கையை மாற்றும். பணம் என்பது ஒரு கருவி மட்டுமே. அதைச் சுத்தியலாகப் பயன்படுத்தி வாழ்க்கையைச் செதுக்கப் போகிறீர்களா, அல்லது அதே சுத்தியலால் உங்கள் தலையிலேயே அடித்துக்கொள்ளப் போகிறீர்களா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

இறுதியில், சுஷில் குமார் இன்று ஓர் ஆசிரியர். அவர் பணத்தை இழந்தார், ஆனால் வாழ்வின் பாடத்தைக் கற்றுக்கொண்டார். நீங்கள் பணத்தை இழக்காமலேயே இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது நலம்.

*****

26 May 2026

ஒரு மிடில்கிளாஸ் தற்காப்புக் கலை!

ஒரு மிடில்கிளாஸ் தற்காப்புக் கலை!

மாதத்தின் முதல் தேதி காலை 9:01 மணிக்கு மொபைலில் வரும் அந்த மெசேஜ் இருக்கிறதே, அது ஒரு மாயக்காரி.

சம்பளம் கிரெடிட் ஆகிவிட்டது, என அவள் கண் சிமிட்டும்போதே, கூடவே மின்கட்டணம், பால் கணக்கு, வாஷிங் மெஷின் இஎம்ஐ எனப் பத்து பேர் கத்தியுடன் வாசலில் நிற்பார்கள்.

நடுத்தர வர்க்கத்தின் சம்பளம் என்பது, தியேட்டரில் ரிலீஸாகும் பெரிய பட்ஜெட் படம் போன்றது. வெள்ளிக்கிழமை வரும், ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் காணாமல் போய்விடும்.

வாசுதேவன் அத்தகைய ஒரு நடுத்தர வர்க்கப் போராளி. பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளம். ஆனால், அவன் முகத்தில் எப்போதும் ஓர் அலட்டிக்கொள்ளாத அமைதி இருக்கும்.

சென்ற வாரம் அவன் நண்பன் குமார், டீக்கடையில் வைத்து ஆச்சரியமாகக் கேட்டான், ஏன் மச்சி, உன் பொண்ணு அந்தப் பெரிய காலேஜ்ல சேரப்போறாளாமே? பதினைந்தாயிரம் சம்பளத்துல இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? எனக்கு ஒரு மாசம் முடிஞ்சு அடுத்த மாசம் வர்றதுக்குள்ள மூச்சு முட்டுது!

வாசுதேவன் சிரித்தான். அவன் சிரிப்பில் ஒரு மெல்லிய கர்வம் இருந்தது. எல்லாம் அம்மாச்சி சொல்லிக்கொடுத்த வித்தை மச்சி, என்றான்.

வாசுதேவனின் அம்மாச்சி ஒரு மர்மமான மனுஷி. தாத்தா புண்ணாக்கு மூட்டைகளை விற்றுவிட்டுப் பணத்தைக் கொண்டு வந்து நீட்டினால், அதைத் தொட்டுப் பார்த்தே, இதில் ஆயிரம் ரூபாய் இருக்கிறதா? என்பார்.

தாத்தா அசந்து போய், நீ என்ன மந்திரக்காரியா? என்பார்.

அம்மாச்சி மந்திரக்காரி இல்லை. அவர் ஒரு பொருளாதாரப் பூனை. வந்த பணத்தில் பாதியை ஒரு பழைய அடுக்குப் பானையில் போட்டுவிட்டு, அதன் வாயைத் துணியால் கட்டிவிடுவார். பூமி அதிரட்டும், வானம் இடியட்டும், அவசிய அத்திவாசிய காரியங்களுக்குத் தவிர, அந்தப் பானை திறக்கப்படாது.

வாசுதேவனுக்குத் தனது பதின்ம வயதில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பூர்வீக நிலத்தை விற்றபோது அவன் பங்காக இரண்டு லட்சம் ரூபாய் கைக்கு வந்தது.

அப்போதுதான் அவன் பங்காளிகளின் நிஜ முகங்கள் தெரிந்தன. ஒரு பங்காளிக்கு திடீரென தேசபக்தி வந்துவிட்டது. வாழ்க்கையில எப்போ சாவோம்னு தெரியாதுப்பா, என்று தத்துவம் பேசி, கன்னியாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீர் வரை ஊர் சுற்றப் போனார். வந்தபோது கைப்பை காலியாக இருந்தது. ஆனால் இமயமலைப் புகைப்படம் கைவசம் இருந்தது.

இன்னொரு பங்காளி, அம்பானி மட்டும்தான் கார்ல போகணுமா? என்று கேட்டுவிட்டு ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் காரை வாங்கினார். கார் வந்த வேகத்தில் பெட்ரோல் விலையும் ஏறியது. இப்போது கார் வீட்டு வாசலில் ஒரு ஷோபீஸ் போல நிற்கிறது.

வாசுதேவனின் மைத்துனர் இன்னும் ஒருபடி மேலே போனார். மாப்ளே, காலி மனை விற்பனைக்கு வருது. வாங்கிப் போட்டால் ஐந்து வருடத்தில் விதைக்காமலேயே, பராமரிக்காமலேயே பத்து டன் கருவை விறகு வெட்டலாம் என்றார்.

ஆனால் வாசுதேவன், தன் அம்மாச்சியின் மந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பாதி இப்போ, பாதி அப்புறம்!

அவன் அந்த ஒரு லட்சத்தை அப்படியே தங்கமாகவும் இன்னொரு லட்சத்தைப் பிளாட்டாகவும் வாங்கி அடுக்குப் பானையில் போட்டான். கூடவே, மாதம் 2,000 ரூபாய் ஆர்.டி., இன்னொரு 2000 எஸ்.ஐ.பி. உலகம் போக்கில் போய்க்கொண்டிருக்க, இவன் மட்டும் தன் ஆசைகளைக் கொஞ்சம் அடக்கி வாசித்தான். டிவி பழுதானால் ரிப்பேர் செய்தான், புதுசு வாங்கவில்லை. டூர் போவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டான்.

இன்று, பதினைந்து வருடங்கள் கழித்து அந்தப் பானையைத் திறந்து பார்த்தபோது, அதில் இருபது லட்சம் ரூபாய் இருந்தது.

சித்தப்பா போன் செய்து, பொண்ணை அந்தக் காலேஜ்ல சேர்த்திருக்கே. பீஸ் அள்ளிக் கொட்டணுமேப்பா, சமாளிப்பியா? என்று கேட்டபோது, வாசுதேவன் அமைதியாகச் சொன்னான், சமாளிச்சிருவேன் சித்தப்பா.

தன் மகள் அந்தப் பெரிய கல்லூரியின் வாசலில் நுழையும்போது, வாசுதேவனுக்குக் கடன் வாங்கும் பதற்றம் இருக்காது. நகைக்கடையிலோ, வங்கியிலோ போய் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது.

வாழ்க்கை என்பது ஒரு மேஜிக் ஷோதான். ஆனால், கிளைமாக்ஸில் கையில் காசு இல்லையென்றால், அந்த மேஜிக் ஒரு மோசமான காமெடியாக முடிந்துவிடும் என்பதை வாசுதேவன் அறிந்திருந்தான்.

பணத்தைச் செலவு செய்வதை விட, அதைச் சேமிப்பதில் ஒரு சாடிஸ்டிக் சந்தோஷம் இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும், வாசுதேவனைப் போல!

*****

25 May 2026

மாறாத ஐம்பதும், மாறும் பிரபஞ்சமும்!

மாறாத ஐம்பதும், மாறும் பிரபஞ்சமும்!

பிரபஞ்சத்தில் எல்லாமே மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது ஹெராக்ளிட்டஸின் தத்துவம். இன்று இருக்கும் விலை நாளை இல்லை. பெட்ரோல் விலை இன்று 105, நாளை 110, அடுத்த வாரம் 150. இந்த நிலையற்ற உலகத்தில், மனிதன் எதையாவது ஒன்றை பிடித்துக் கொண்டு இப்படித் தன் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கேதான் ஐம்பது ரூபாய் என்ற மாறிலி பிறக்கிறது. ஆங்கிலத்தில் இதை கான்ஸ்டன்ட் என்பார்கள்.

விலைவாசி என்பது ஒரு மாயை. அது ஏறும், இறங்கும். ஆனால், இந்த ஐம்பது ரூபாய் நோட்டு நிலையானது. அது ஒரு தியான நிலை. எப்படி என்கிறீர்களா?

பெட்ரோல், டீசலைப் பொருத்த வரையில் பொருளாதார நிபுணர்கள் டாலரில் கணக்கிடுகிறார்கள். தத்துவவாதியோ தன் பையில் இருக்கும் ஐம்பது ரூபாயைக் கணக்கிடுகிறான். லிட்டர் என்பது அளவை சார்ந்தது. ஐம்பது ரூபாய் என்பது மனநிறைவை சார்ந்தது.

ஆக, விசயம் இதுதான். நீ எவ்வளவு வேண்டுமானாலும் பெட்ரோல் விலையை ஏற்றிக் கொள். நான் ஐம்பது ரூபாய்க்குத்தான் போடுவேன், என்று இந்திய குடிமகன் ஒரு மாறாத முடிவை எடுத்து விட்டான்.

ஒரு காலத்தில் ஐம்பது ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைத்தது. பிறகு அது அரை லிட்டர் ஆனது. இப்போது அது நானூறு மில்லி, முந்நூறு மில்லி எனச் சுருங்கியிருக்கலாம். ஆனால், தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், வண்டி ஓடுவதற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தேவையில்லை, வண்டி அசையத் தொடங்கினால் போதும்.

ஒரு லிட்டர் பெட்ரோல் வேண்டுமானால் நூற்று ஐந்து ரூபாய் தா என்பது பெட்ரோல் பங்கின் நியதியாக இருக்கலாம்.

ஆனால், இந்திய குடிமகனுக்கு பெட்ரோலால் வண்டி ஓட வேண்டும் என்பது இரண்டாம் பட்சம்தான். வண்டியில் பெட்ரோல் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறதே, அதுதான் முதல் பட்சம். அந்த நம்பிக்கையின் விலை ஐம்பது ரூபாய்.

மொத்தத்தில் வண்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, பங்க்கில் இருக்கும் நபர் வண்டியின் டேங்கிற்குள் அந்த இரும்புக் குழாயை நுழைத்து க்ளிக் என்று ஒரு சத்தம் எழுப்புவார்,  அந்த சடங்குதான் முக்கியம். அது ஒரு வகையான ஆன்மீக ஆசுவாசம்.

இந்த உலகம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. போர் நடக்கிறது, கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது, கார்ப்பரேட்டுகள் விலையை தீர்மானிக்கிறார்கள். எளிய மனிதனால் எதையும் மாற்ற முடியாது.

இந்தச் சூழலில், நம் உலக மகா இந்தியக் குடிமகன் ஓர் எல்லையை வகுத்துக்கொள்கிறான். நீ உலகத்தையே மாற்றிக்கொள், என் ஐம்பது ரூபாயை உன்னால் மாற்ற முடியாது. இது ஒரு மௌனப் புரட்சி.

விலை ஏறிவிட்டதே, என்று பதற்றமடைந்து, கணக்கு போட்டு, புலம்பி வாழும் உலக மனிதர்களுக்கு மத்தியில், விலை ஏறினால் எனக்கு என்ன? நான் வாங்குவது எப்போதும் ஐம்பது ரூபாய்க்குத்தான், என்று கடந்து போகும் இந்தியக் குடிமகன், நுகர்வோர் கலாச்சாரத்தின் முகத்தில் அறையும் ஆகச்சிறந்த ஞானி.

இறுதியாக, அந்த ஐம்பது ரூபாய்க்கு ஒரு சொட்டு பெட்ரோல் மட்டுமே வரும் ஒரு நாள் வரக்கூடும். அன்றும் நம் இந்தியக் குடிமகன் பங்க்கிற்குப் போய் ஐம்பது ரூபாயைக் கொடுப்பான். பங்க் ஊழியர் ஒரு துளி பெட்ரோலை ஒரு பஞ்சில் நனைத்து வண்டியின் இன்ஜினில் தடவி அனுப்புவார்.

அப்போதும் நம் இந்தியக் குடிமகன் புன்னகையோடு வண்டியைத் தள்ளிக்கொண்டே போவான். ஏனெனில், அவன் வாங்குவது பெட்ரோலை அல்ல, நான் இன்னும் தோற்றுவிடவில்லை என்ற மனித திமிரை!

வாழ்க பாரதம்! வளர்க பெட்ரோல் விலை!!

*****

24 May 2026

நிழல்களின் நர்த்தனம் – மாய உலகக் கோட்பாடு!

நிழல்களின் நர்த்தனம் – மாய உலகக் கோட்பாடு!

மனிதன் களிமண்ணால் உருவங்களைச் செய்து அதற்கு உயிர் கொடுக்க ஆசைப்பட்டான். அது புராண காலம். இன்று மனிதன் எலக்ட்ரான்களால் போலி ஆன்மாக்களை உருவாக்கி, அதற்கு லைக்குகளையும் வியூஸ்களையும் பிச்சையிட்டு உலவ விட்டிருக்கிறான். இது டிஜிட்டல் காலம்.

இன்று ரூட் மாபியா என்பது வெறும் தொழில்நுட்ப மோசடி மட்டுமல்ல, அது நவீன மனிதனின் ஏமாறக் காத்திருக்கும் மனநிலையை மூலதனமாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த வியாபாரம்.

இந்த ரூட் மாபியாக்கள் நினைத்தால் யாரை முதலமைச்சராக்க வேண்டும், யாரை முதலமைச்சராக்கக் கூடாது, யாரை பிரதமராக்க வேண்டும், யாரைப் பிரதமராக்கக் கூடாது என்பதைக் கூட தீர்மானிக்க முடியுமாம். சுருக்கமாகச் சொன்னால் இது நவீன நரக உலகின் டிஜிட்டல் சாத்தான்கள்தான்.

ஆதி பிரம்மன் உலகைப் படைக்க கோடி வருடங்கள் தவம் இருந்தானாம். ஆனால், இந்த ரூட் மாபியாக்கள் ஒரு சாதாரண லேப்டாப் மற்றும் சில பிராக்ஸி மென்பொருட்களை வைத்துக் கொண்டு, ஒரே நொடியில் பத்து லட்சம் மனிதர்களைப் படைக்கிறார்கள்.

அவர்களுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, வெறும் ஐபி அட்ரஸ் மட்டுமே முகவரி. அவர்களுக்கு பசியும் இல்லை, தூக்கமும் இல்லை. ஆனால், நீங்கள் போடும் பதிவுகளுக்கு ஹார்ட் சிம்பல் போடவும், வசைபாடவும் அவர்களுக்குத் தெரியும்.

நிஜ உலகில் ஒரு மனிதனுக்கு ஓர் ஓட்டுதான். ஆனால், இந்த மாய உலகில், ஒருவனுக்குப் பின்னால் ஒரு லட்சம் நிழல்கள் கைதட்டக் காத்திருக்கின்றன. அப்படியென்றால், இங்கே வாழ்பவன் மனிதனா, அல்லது அந்த நிழல்களா?

யார் அரியணையில் அமர வேண்டும் என்பதை ஒரு காலத்தில் வாள்களும், பீரங்கிகளும் தீர்மானித்தன. பிறகு வாக்குச்சீட்டுகள் தீர்மானித்தன. இன்றோ, கலர்புல்லான எடிட்டிங் செய்யப்பட்ட 30 வினாடி ரீல்ஸ்களும், அதன் கீழே விழும் போலி லைக்குகளும் தீர்மானிக்கின்றன.

உண்மை என்னவென்றால், ஒரு மனிதன் யோசித்து முடிவெடுக்கிறான். ஆனால், ரூட் மாபியாவின் உண்மை என்னவென்றால், ஓர் அல்காரிதம் மனிதனை யோசிக்க விடாமல் முடிவெடுக்க வைக்கிறது.

ஒரு வெற்றுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதற்கு தங்க முலாம் பூசி, சுற்றிலும் ஒரு லட்சம் ரோபோக்களை விட்டு ஆஹா, ஓஹோ என்று கோரஸ் பாட வைத்தால், பாமர மனிதன் அதைத் தெய்வீகப் பாத்திரம் என்று நம்பி விடுகிறான்.

புரிதல் இல்லாத மக்கள், அந்த வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஓடும் குழந்தைகளைப் போல, இந்த போலிப் பிம்பங்களின் பின்னால் ஓடி, தங்களின் எதிர்காலத்தைத் தொலைக்கிறார்கள்.

ஏமாற்றுபவர்கள் இருக்கிற வரை ஏமாறுபவர்கள் இருப்பார்கள் என்பது பழைய தத்துவம். புதிய தத்துவம் என்னவென்றால், நீங்கள் ஏமாறத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அல்காரிதம் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறது.

மக்களுக்கு உண்மை சுடுகிறதோ இல்லையோ, அது மிகவும் போரடிப்பதாக இருக்கிறது. அவர்களுக்குத் தேவை கவர்ச்சியான, அதிரடியான, கண்களைக் கூசச் செய்யும் பொய்கள். ரூட் மாபியாக்கள் தருவது அதைத்தான். அவர்கள் பொய்களை வோட்கா போல வண்ணமயமான கிளாசில் ஊற்றித் தருகிறார்கள். மக்கள் அதை போதையோடு பருகிவிட்டு, நிஜ உலகை மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த ரூட் மாபியாக்கள் உருவாக்குவது தலைவர்களை அல்ல, மாயாவிகளை. ஒரு கணினித் திரையின் பின்னால் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையையும் திசைதிருப்பும் இந்த டிஜிட்டல் சாத்தான்கள் வெல்வது அவர்களின் திறமையால் அல்ல, நமது சோம்பேறித்தனத்தால்.

திரையில் தோன்றும் லைக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்து ஒருவனின் யோக்கியதையைத் தீர்மானிக்கும் வரை, நாம் அனைவரும் இந்த ரூட் மாபியாவின் கண்ணுக்குத் தெரியாத சிறைச்சாலை கைதிகள்தான்.

ஆகத் தத்துவம் என்னவென்றால், திரையைத் துடைத்துப் பாருங்கள். அங்கே தெரிவது தலைவன் அல்ல, உங்கள் ஏமாளித்தனத்தின் பிரதிபலிப்பு மட்டுமே!

*****