25 Apr 2024

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்!

இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன.

வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்துவதா பெரிது? அதற்கான மனநிலை வர வேண்டுமே!

அதுவரை பேஸ்புக் அணைந்து கிடக்க வேண்டியதுதான். ஜூம், கூகுள் மீட் எல்லாம் ஓய்ந்து கிடக்க வேண்டியதுதான். டிவிட்டர், ஸ்பாட்டிபை, இன்ஸ்டா என்று என்னனென்னவோ எல்லாம் இருக்கின்றன. எல்லாம் அப்படியே கிடக்க வேண்டியதுதான்.

உங்களது உலகத் தரமான பேச்சை யூடியூப்பில் பதிவேற்றி வாட்ஸாப்பில் உலவ விடலாம்.

தீப்பிடித்தால் எல்லாம் சாத்தியம்.  எப்போது பிடிக்கப் போகிறதோ தீ?

அதுவாகப் பிடிக்காவிட்டாலும் பேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ தீ பிடிக்காமலா இருக்கிறது? ஏதோ ஒரு தீ பிடித்து எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தீயணைப்புத் துறை அமைதியாக இருக்கிறது.

யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். யாரையும் எதையும் தேடித் திரிய வேண்டாம். கையில் அலைபேசி இருக்கிறது. ஒரு காணொளி அழைப்பு செவ்வாயில் இருப்போரையும் வாய் திறக்க வைத்து விடும். உங்கள் அலைபேசியை வைத்து சந்திரனின் பார்க்க முடியாத பள்ளத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கலாம்.

அலைவது வீண். தேடிப் போய் பேசுவது வீண். என்னதான் செய்வது?

உங்களுக்குக் குழப்பம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் குழப்பம் இருக்கும்.

தனி ஒரு வயிற்றுக்கு உணவில்லை என்று அழுதால் சொமோட்டோ உணவு கொண்டு வரலாம். பிச்சையெடுப்பது எளிதானது என்பதை உங்கள் கையிலிருக்கும் அலைபேசி உங்கள் சிந்தனையிலிருந்து மறைக்கலாம்.

எப்படி வழி தேடப் போகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. வருங்காலத்தில் எப்படியோ தேடுவீர்கள். ஆரம்பத்தில் எல்லாம் அசட்டுத்தனமான வழிகள். பிறகுதான் நெறிபடுத்த வேண்டும். அவசரமில்லை.

நெறிப்படுத்தப்பட்ட வழியில் ஒருவர் அபத்தமாகத் தேடத் தொடங்கலாம். ஆரம்பம் எப்போதும் அப்படியே. அவராகவே நெறிபடுத்தப்பட்ட வழிக்கு வரலாம். இங்கு ஒன்றுதான் முக்கியம். அது அவசரப்பட முடியாது.

ஒருநாள் நீங்கள் எதிர்பார்க்கும் திசையில் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் தீப்பற்றக் கூடும். அதுவரை அது அடங்கிக் கிடக்கும். அல்லது பற்றிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் திசையில் தீ எரிந்து கொண்டிருக்கும். இஷ்டப்படியெல்லாம் பற்ற வைக்க இதென்ன நெருப்புப் பெட்டியிலா இருக்கிறது? மனப்பெட்டியில் ரொம்ப பத்திரமாக இருக்கிறது.

*****

22 Apr 2024

மருத்துவர்களா? பொறியாளர்களா? அவர்கள் குழந்தைகளா?

மருத்துவர்களா? பொறியாளர்களா? அவர்கள் குழந்தைகளா?

போகிறப் போக்கைப் பார்த்தால் பிள்ளைகள் மருத்துவம், பொறியியல் தவிர வேறு எதற்கும் படிக்க மாட்டார்கள் போலும்.

அது முடியாமல் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொண்ட பிள்ளைகள்தான் ஆசிரியர்களாகவும், எழுத்தர்களாகவும், கணக்காளர்களாகவும், மின் பணியாளர்களாகவும், வீட்டுப் பராமரிப்புப் பணியாளர்களாகவும் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள் போலும்.

இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தையானது குழந்தையாக வளர்வது அபூர்வம்தான். குழந்தைகள் பெரும்பாலும் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக் கூடத்தில் சேர்ப்பது எதற்காக? அறிவையும் மனிதத் தன்மையையும் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இல்லையா? இதைப் பற்றி நாம் ஏன் பேச மாட்டோம் என்கிறோம்? மருத்துவர் ஆவதையும் பொறியாளர் ஆவதைப் பற்றியும்தான் நாம் பேசுகிறோம். நம் நினைப்பே எப்போதும் அப்படியாக மாறி விட்டது.

பிள்ளைகளை ஏன் நாம் அப்படி மாற்ற நினைக்கிறோம்? மருத்துவராகி அந்தத் துறையை மேம்படுத்தவா? மக்களுக்குச் சேவை செய்யவா? அல்லது பொறியாளராகி மக்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்க்கவா? தொழில்நுட்பங்களை மேம்படுத்தவா? இந்த இரண்டில் ஒன்றாகி விட்டால் எப்படியும் வாழ்க்கையை ஓட்டுவதற்கான, வாழ்க்கையை வசதிப்படுத்திக் கொள்வதற்கான பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில்தானே! குழந்தைகளை மருத்துவராக்கவும் பொறியாளராக்கவும் செய்யும் முயற்சிகள் எல்லாம் பணத்திற்காகப் பணயம் வைப்பதற்காகத்தானே!

மனித வாழ்க்கையைப் பணம் அவ்வளவு பயமுறுத்தி வைக்கிறது. பணம் இல்லாமல் எப்படி வாழ்வது? பணத்தை வைத்திருப்பவர்கள் மட்டும் நன்றாக வாழ்க்கிறார்களா என்ன? பணமில்லாமல் வாழ முடியாது என்பது போல வாழ்க்கையில் பணத்திற்கான இடம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் நிம்மதியாகவும் மன அமைதியாகவும் வாழ்ந்து விட முடியாது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாவிட்டால் பணத்திற்காக நிம்மதியையும் மன அமைதியையும் தொலைத்த மருத்துவர்களையும் பொறியாளர்களையும்தான் பெற்றோர்கள் உருவாக்க வேண்டியிருக்கும். அதற்காகப் பெற்றோர்கள் தாங்களும் கஷ்டப்பட்டு, தங்கள் பிள்ளைகளையும் கஷ்டப்படுத்தி ஒரு கஷ்ட காலத்தை உருவாக்கி அதையே தொடர்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும். இதைப் புரிந்து கொள்ளாமல் போனால் கஷ்ட காலத்தின் மாறாத சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரவே செய்யும்.

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ பார்க்கக் கூடாது. அவர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் விருப்பத்தின் காரணமாக அவர்கள் மருத்துவராகலாம், பொறியாளராகலாம். ஆனால் பெற்றோர்களின் ஆர்வம் மற்றும் விருப்பத்தின் காரணமாக அப்படி ஆகி விடக் கூடாது. ஏனென்றால் அப்படி ஆகுபவர்கள் அந்தத் துறையின் மேல் உண்மையான ஆர்வமோ அர்ப்பணிப்போ உடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது.

ஒரு குழந்தையிடம் நீ மருத்துவர் அல்லது நீ பொறியாளர் என்று சொல்லி வளர்ப்பது கூட ஒரு வகை வன்முறைதான். பிற்காலத்தில் அப்படி ஆக முடியாத குழந்தைகள் அதன் காரணமாகப் பெருத்த மன உளைச்சலை அடையவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆக முடியாததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னுயிரை நீத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

பெற்றோர்கள் அது பற்றி அவர்களிடம் பேசவே கூடாதா என்றால் பேசலாம், வழிகாட்டலாம். வழிகளை அவர்களின் விருப்பதின் பேரிலும் ஆர்வத்தின் பேரிலும் அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான சுதந்திரத்தையும் அவர்களின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் மதித்து நேசிக்கிறோம் என்ற உணர்வையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தர வேண்டும்.

இப்படிப்பட்ட நினைப்பில்தான் நான் பலரிடம் பேசுகிறேன், பழகுகிறேன். இந்தக் கருத்துகளைப் பலரிடம் எடுத்தும் சொல்கிறேன். இதே நினைப்பில் நான் எல்லாரையும் மனிதராக மட்டும் பார்க்கிறேன். அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைக் கூட சில நேரங்களில் மறந்து விடுகிறேன். இது எனக்கு அண்மையில் ஏற்படுத்திய அனுபவம் ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வழக்கமான பல விசயங்களைப் பேசி விட்டு முடிவில், இப்போ எங்கப்பா இருக்கே என்றேன். மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார் அந்த நண்பர். சட்டென்று என்னையும் அறியாமல் உடம்புக்கு என்னப்பா என்று கேட்டு விட்டேன். ஒரு மருத்துவர் மருத்துவமனையில்தானே இருக்க முடியும் என்று அவர் சொன்ன போதுதான் அவர் மருத்துவர் என்ற விசயமே எனக்கு உறைத்தது. இப்படியும் சில நேரங்களில் நிகழ்ந்து விடுகிறது.

*****

18 Apr 2024

ஓ! என் சிறுதானியமே! ஒரு பச்சைத் தமிழனின் தினசரிச் சாப்பாடு! ரசாயனத்தில் தொடங்கி… ரசாயனத்தில் தொடர்ந்து… ரசாயனத்தில் முடிந்து…

ஓ! என் சிறுதானியமே!

இப்போது சிறுதானியம் கவர்ச்சிகரமாகி விட்டது. திரையில் கட்டாயம் இடம்பெறும் குத்துப்பாடலைப் போல உணவிலும் அது கவர்ச்சிகர கட்டாயமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் சிறுதானியம் என்று வாமன வடிவில் இருந்த அது விஸ்வரூப வடிவம் எடுத்து விட்டது. மக்களும் சிறுதானிய ரொட்டி, சிறுதானிய கஞ்சி, சிறுதானிய தோசை, சிறுதானிய இட்டிலி, சிறுதானிய சோறு என்று எதற்கும் குறை வைக்காமல் பஜ்ஜி, சொச்சி, வடை, போண்டா வரை எல்லாவற்றிலும் சிறுதானியத்திற்கு முன்னேறி விட்டார்கள்.

சிறுதானிய உணவு மற்றும் பலகாரங்களில் இருப்பதெல்லாம் சிறுதானியம்தானா என்ற சந்தேகம் எனக்குப் பல நாட்களாகவே உண்டு. ஏனென்றால் அவற்றின் சுவை அரிசி, கோதுமையில் செய்யப்படும் பண்டங்களின் சுவையாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தான் இப்படியா? மற்றவர்களுக்கும் இப்படியா என்றால் மற்றவர்களும் பெரும்பான்மையாக இதே கருத்தைத்தான் சொல்கிறார்கள்.

இதற்கு மேல் எப்படிச் சும்மா இருக்க முடியும் என்று சிறுதானிய உணவு மற்றும் பலகாரங்களைத் தயாரிப்பவர்களை ஓரம் கட்டி விசாரித்தால், முழுக்க முழுக்க சிறுதானியத்திலேயே செய்தால் யார் சாப்பிடுவார்கள் என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். அப்படியானால் அந்த உணவுகளையும் பலகாரங்களையும் எதில்தான் தயாரிக்கிறார்கள் என்றால் அரிசி, கோதுமையில்தான் தயாரிக்கிறார்களாம். இருந்தாலும்சிறுதானிய என்ற பெயரைப் போட்டுக் கொள்வதற்காகப் பேருக்குக் கொஞ்சம் அதில் சிறுதானியத்தைக் கலந்து கொள்வார்களாம். வாக்கும் நேர்மையும் தவறக்கூடாது பாருங்கள் அதற்காக இப்படி.

இதை எப்படிச் சொல்வது? சிறுதானியத்தில் நடக்கும் பெருதானிய கலப்படம் என்றா? அல்லது பெருதானிய உணவில் நடக்கும் சிறுதானிய கலப்படம் என்றா?

தற்போது அரிசி, கோதுமைச் சுவையே பிடிக்காதவர்கள் சிறுதானிய உணவையும் பலகாரங்களையும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்றால் சிறுதானியங்களையும் தாண்டி சுவையான பல பொருட்கள் சேர்க்கப்பட்டால்தான் அவர்களால் சாப்பிட முடியும் என்பது நியாயமான கருதுகோளாகத்தானே இருக்க முடியும்.

நீங்கள் சிறுதானிய உணவைச் சாப்பிட விரும்பினால் நீங்களே சிறுதானியங்களை வாங்கி அதை அரைத்துக் கரைத்து எதையாவது செய்து தின்றால்தான் உண்டு. வியாபாரக் கலப்படங்களை நம்பிப் பலனில்லை.

*****

ஒரு பச்சைத் தமிழனின் தினசரிச் சாப்பாடு

உங்களுடைய சாப்பாட்டு ரகசியம் (டயட் சீக்ரெட்) என்னவென்று கேட்கிறார்கள்?

நானென்ன திரை நடிகனா? அல்லது திரை நடிகையா? என்றும் மார்க்கண்டேயனாக இருக்க நானென்ன சாப்பாட்டு ரகசியத்தை வைத்திருக்கப் போகிறேன்?

பொதுவாகத் தமிழ்க் குடும்பங்களில் என்ன சாப்பாடு சாப்பிடுவார்களோ அதுதான் என்னுடைய சாப்பாடும்.

காலையில் இட்டிலியோ, தோசையோ அது மாவரைத்து வைத்திருக்கும் ரகசியத்தைப் பொருத்தது. இட்டிலி தோசை இல்லையென்றால் இரவில் மீந்த சோற்றின் ரகசியத்தைப் பொருத்து அது பழையதாக இருக்கலாம்.

மதிய உணவு சோறும் குழம்பும். செவ்வாய், வெள்ளி என்றால் சாம்பார். ஏதோ ஒரு பொறியல் அல்லது வறுவல் அல்லது அவியல் அல்லது கீரை மசியல். சில நாட்களில் குழம்பு அல்லது சாம்பாரோடு ரசம் கிடைக்கலாம். அது தாய்குலங்களின் மனதைப் பொருத்தது. நிறைவாக மோர். ஊறுகாய் கிடைத்தால் தாய்குலங்கள் மகிழ்ச்சியான மனநிலை இருப்பதாக அர்த்தம் செய்து கொள்ளலாம்.

இரவில் இட்டிலியும் கிடைக்கலாம். தோசையும் கிடைக்கலாம். மதியம் வடித்த சோறு மீந்து விட்டால் தண்ணீர் ஊற்றிய சோறாகவும் இருக்கலாம்.

மாலையில் ஒரு தேநீரோ குளம்பியோ தாய்குலங்களின் மனநிலைக்கேற்ப ஏதேனும் ஒன்று கிடைக்கலாம்.

இடையில் உறவினர்களோ நண்பர்களோ வந்துவிட்டால் பஜ்ஜியோ, வடையோ சூடான பானத்தோடு அல்லது குளிர் பானத்தோடு கிடைக்கலாம். மற்ற நேரங்களில் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானால் குடித்துக் கொள்ளலாம். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்னுடைய சாப்பாட்டு ரகசியம்.

*****

ரசாயனத்தில் தொடங்கி… ரசாயனத்தில் தொடர்ந்து… ரசாயனத்தில் முடிந்து…

காய்கறிகள், பழங்கள் என்று எதை அப்படியே சாப்பிட முடிகிறது? எல்லாவற்றிலும் ரசாயனங்கள் என்கிறார்கள். அவற்றை வாங்கிக் கழுவி முடிப்பதற்குள் அரை கிலோ உப்பும் கால் கிலோ மஞ்சள் தூளும் காலியாகி விடுகிறது. அப்படிச் செய்தால்தான் அவற்றைச் சுற்றியுள்ள ரசாயனங்கள் நீங்குமாம்.

அப்படிக் கழுவியும் தோலில் ரசாயனங்கள் இருக்கலாம் என்று தோலை உரித்தோ, சீவியோ எடுத்து விடுகிறார்கள். அந்தக் காலத்தில் தப்பு தண்டா செய்தால் இப்படித் தோலை உரிக்கும் கொடூர பழக்கம் இருந்திருக்கிறது. இந்தக் காய்கறிகள் என்ன தப்பு தண்டா பண்ணியதோ தோலோடு எந்தக் கறிகாய்களையும் சாப்பிட வாய்க்கவில்லை.

முட்டைகோஸ், காலிபிளவர் வகையறாக்களையெல்லாம் ரசாயனங்களில் தலை குளிப்பாட்டித்தான் அனுப்புகிறார்கள்.

காரட், முள்ளங்கி, பீட்ரூட் எல்லாம் முகப்போலிவோடு வருவதற்கு ரசாயனப் பூச்சுதான் காரணம் என்கிறார்கள்.

கொத்தவரை, அவரை, தக்காளி, கத்திரி எல்லாம் வீரிய வகை என்கிறார்கள். நாட்டுக் காய்கள் எல்லாம் நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டு விட்டன என்கிறார்கள்.

ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் எல்லா காலத்திலும் கிடைப்பதற்கு ஏற்ற வகையில் ராயல் பழ வகைகளாக மாறி விட்டன என்கிறார்கள். அவையும் ராயல் என்பதற்கேற்ப ஒட்டுத்தாள் (ஸ்டிக்கர்) ஒட்டிக் கொண்டு வருகின்றன. என்னவோ எம்.ஜி.ஆர். மாறுவேடம் போடும் போது முகத்தில் மரு வைத்துக் கொள்வதைப் போல இருக்கிறது அதைப் பார்க்கும் போது. உங்களுக்கு எப்படி இருக்கிறதோ?

காய்கறி, பழங்கள் என்று ரசாயனக் கலப்பையோ ரசாயனக் கலவையையோ உண்டு விட்டு ரசாயனத்திலேயே மருத்துவம் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஆங்கில மருத்துவம் தெருவுக்குத் தெரு கடைகளையும் மருத்துவ நிலையங்களையும் பரப்பி வைத்திருக்கிறது.

ரசாயனத்தில் தொடங்கி ரசாயனத்தில் முடிகிறது வாழ்க்கை. தாய்ப்பாலும் சுத்தமில்லையாமே. அதிலும் ரசாயனக் கலப்பு இருக்கிறதாமே. எனவேதான் ரசாயனத்தில் தொடங்குகிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கடைசியில் இழுத்துக் கொண்டு கிடக்கும் போது மருத்துவர் போடும் ரசாயன ஊசியில் எல்லாம் முடிகிறதா? ஆகவே ரசாயனத்தில் முடிகிறது என்று சொல்வதில் எந்தத் தவறோ மிகையோ இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ரசாயனத்தைச் சேர்த்துக் கொள்வதை விட ரசாயனத்தையே ஏன் உணவாகக் கொள்ளக் கூடாது என்றால் கூடிய விரைவில் அப்படியும் வரும் என்பதால் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்கிறார்கள். என்னத்தைச் சொல்ல என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

*****

15 Apr 2024

திட்டமிட்டுத் திட்டங்களில் வெற்றி பெற…

திட்டமிட்டுத் திட்டங்களில் வெற்றி பெற…

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்வதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றினால் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்ய முடியும்.

செயலைச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய செயல் குறித்துத் திட்டமிடுங்கள். உங்கள் திட்டங்களைப் பட்டியல் போடுங்கள். அதாவது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செயல்முறைகள் மற்றும் திட்டத்திற்குத் தேவையான பொருட்கள், ஆட்கள், பொருளாதார பலம், உதவிகள், ஒருங்கிணைப்புகள் என்று எல்லாவற்றையும் பட்டியல் இடுங்கள்.

பட்டியலில் உள்ளவற்றை உங்களால் எந்த அளவுக்குத் திரட்ட முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். அதற்கேற்ப இப்போது திட்டத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்து மறுவரையறை செய்யுங்கள். இதன்படி நீங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பொருட்கள், ஆட்கள், பொருளாதார பலம், உதவிகள், ஒருங்கிணைப்புகள் போன்றவற்றைச் செவ்வனே திரட்ட முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் போது உருவாகப் போகும் தடைகள், குறுக்கீடுகள், எதிர்ப்புகள் குறித்தும் உத்தேசமாகச் சிந்தித்துப் பாருங்கள். அவற்றை எதிர்கொள்வதற்கான தீர்வுகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்த்து தீர்வுகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் போது உங்களுக்கு உதவுவதற்கான மற்றும் ஆலோசனை சொல்வதற்கான, நம்பிக்கை தருவதற்கான நூல்கள் மற்றும் மனிதர்களும் உங்களுக்குத் தேவை. அவர்கள் உங்கள் அருகில் இருக்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்குங்கள். உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதால் விளையப் போகும் மாற்றங்களையும் நன்மைகளையும் உங்களுக்கு நீங்களே தினம் தினம் சொல்லிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே சொன்னதைப் போலவே அப்படியே மற்றவர்களுக்கும் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதால் விளையும் மாற்றங்களையும் நன்மைகளையும் தினம் தினம் எடுத்துச் சொல்லுங்கள்.

உங்களுக்கும் உங்கள் திட்டத்திற்கும் எப்போதும் ஓர் உணர்வுப்பூர்வமான பந்தத்தை உருவாக்கிக் கொண்டே இருங்கள். நீங்கள் வேறு உங்கள் திட்டம் வேறு என்பது போல இருக்காதீர்கள். அதைப் போலவே உங்கள் திட்டத்தோடு தொடர்புடையவர்களுக்கும் அந்தத் திட்டத்தோடு அவர்களுக்கு ஓர் உணர்வுபூர்வமான பந்தத்தை உருவாக்கிக் கொண்டு இருங்கள். திட்டம் வேறு அவர்கள் வேறு என்று நினைக்கும்படி விட்டு விடாதீர்கள்.

அடிக்கடி உங்கள் திட்டப் படிநிலைகளையும் திட்டம் செயலாவதையும் சரிபாருங்கள். அவ்வபோது தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். உங்களது படைப்பாற்றல் திறனை உங்கள் திட்டத்தின் செயல்முறைகளில் கொண்டு வாருங்கள். இதற்காக உங்கள் திட்டத்தின் படிநிலைகளை அவ்வபோது எடுத்துப் பாருங்கள். அதைச் செம்மைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை யோசிப்பதற்கு ஒரு நாளில் அரை மணி நேரமாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் திட்டம் அதன் விளைவுகள் பற்றி உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளுங்கள். மற்றவர்களிடமும் இது குறித்துப் பேசுங்கள். அப்படிப் பேசும் போது உங்கள் தன்னம்பிக்கையும் பெருமிதமும் அதில் எப்போதும் வெளிப்படட்டும்.

உங்கள் திட்டம் விமர்சிக்கப்படும் போது காது கொடுத்துக் கொள்ளுங்கள். பதிலுக்கு நீங்கள் எதிர் விமர்சனத்தை முன் வைக்காதீர்கள். உங்கள் திட்டத்தின் போக்கே விமர்சனங்களுக்குப் பதில் சொல்லுமா என்று பாருங்கள். அல்லது உங்கள் திட்டத்தின் செயல் வடிவத்தின் மூலமே விமர்சனங்களுக்கான பதிலைச் சொல்லுங்கள், வார்த்தைகளால் அல்ல. விமர்சனங்களுக்கு வார்த்தைகளின் மூலமாகப் பதில் சொல்வதை விட செயல் வடிவில் பதில் சொல்வதுதான் சிறந்தது.

திட்டத்தின் படிநிலைகளைச் செயல்படுத்தும் போது தாமதமாகலாம், குறுக்கீடுகள் நேரிடலாம், எதிர்ப்புகள் உண்டாகலாம். அப்போது பொறுமையாக இருங்கள். மென்மையாகப் பேசுங்கள். நம்பிக்கையோடு அணுகுங்கள். திட்டத்தின் ஏதோ ஒரு படிநிலையில் நீங்கள் தாமதத்தையோ, குறுக்கீடுகளையோ, எதிர்ப்புகளையோ எதிர்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கும். தவிர்க்க முடியாத இந்த எதிர்நிலையை உங்களது அணுகுமுறையால்தான் மாற்ற வேண்டியிருக்கும். அந்த அணுகுமுறையானது ஆக்கப்பூர்வமானதாகவும் நிதானமானதாகவும் தீர்க்கமாகவும் இருக்க வேண்டும்.

தாமதத்தைக் கண்டு கோபப்பட்டாலோ, குறுக்கீடுகளைக் கண்டு பதற்றமானாலோ, எதிர்ப்புகளைக் கண்டு எதிர்த்தாலோ நீங்கள் திட்டத்தின் அடுத்தடுத்த படிநிலைகளைத் தவற விட்டவராவீர்கள். திட்டத்தை மறந்தவர்களாகவும் ஆவீர்கள். ஒரு திட்டத்தைச் செயலாக்கம் செய்பவருக்குக் கோபம், பதற்றம், எதிர்க்கும் தன்மை ஆகியவை தேவையற்றவையாகும்.

நீங்கள் பொறுமையாக இருப்பதால் கூட பல நேரங்களில் தாமதங்களும், குறுக்கீடுகளும், எதிர்ப்புகளும் தாமாகவே நீங்கி விடுவதும் உண்டு. அவசரப்படுவதாலோ, ஆத்திரப்படுவதாலோ, பரபரப்பாவதாலோ அவை நீங்குவதில்லை என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

ஒரு திட்டத்தின் செயலாக்கம் என்பது விதை விதைத்து மலர் மலர்வதைப் போலத்தான், கனிகளாகக் காய்த்துத் தொங்குவதைப் போலத்தான். அதற்கு நீங்கள் காத்திருக்கவும் வேண்டும், பொறுத்திருக்கவும் வேண்டும். உங்கள் மன வேகத்தை மலர்வதற்கு முன்பாக, கனிவதற்கு முன்பாகக் காட்டி விடக் கூடாது. ஒவ்வொன்றும் நிறைவேறுவதற்கு அதற்கே உரிய காலம் இருக்கிறது என்பதை அறிந்து பொறுத்திருக்க வேண்டிய நிலைமைகளும் இருக்கின்றன என்பதை அறிந்து நிதானமாகவும் ஆக்கப்பூர்வமான மனநிலையோடும் செயல்பட்டால் உங்கள் திட்டங்கள் அனைத்திலும் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அத்துடன்,

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.”                          (குறள், 471)

என்ற குறட்பாவையும் மனதில் எழுதி வைத்துக் கொண்டு, இக்குறட்பாவை அவ்வபோது மனக்கண்ணால் பார்த்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது.

*****

11 Apr 2024

உரிமைக்குரல்

உரிமைக்குரல்

அருந்ததி ஆத்தா படுத்த படுக்கையாகி விட்டது. ஊரில் எத்தனையோ பேருக்கு அது வைத்தியம் பார்த்திருக்கிறது. எல்லாம் கைவைத்தியம்தான். அது தற்போது பாட்டியாக இருப்பதால் பாட்டி வைத்தியம் என்றும் சொல்லலாம். மருத்துவர்களிடம் காட்டி ஊசிப் போடாத பல பெண்களுக்கு அருந்ததி ஆத்தாதான் அப்போது மருத்துவர். இப்போது அருந்ததி ஆத்தாவே ஊசி போட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை மருத்துவர் வந்து பார்த்து ஊசி போட்டு விட்டு மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விட்டுப் போகிறார்.

எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன் பாத்தியா என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் கேட்கிறது அருந்ததி ஆத்தா. காலம் அருந்ததி ஆத்தாவை உருக்குழைத்து விட்டது. முன்பு போல அதனால் சேலையைக் கட்ட முடியவில்லை. மேலே ஜாக்கெட்டும் கீழே பாவாடையும்தான் இப்போது அதன் உடை. சேலையைக் கட்டிக் கொசுவத்தைச் செருகிக் கம்பீரமாக இருக்கும் அதன் அந்தக் காலத்து நடை.

பெரும்பாலும் இப்போது ஆத்தா படுத்தே கிடக்கிறது. எப்போதாவது கம்பை ஊன்றிக் கொண்டு வீட்டைச் சுற்றி ஒரு நடை. தெருவில் கொஞ்ச தூரம் ஒரு நடை. அதற்குள் சாலையில் குறுக்கும் மறுக்குமாக வேகமாகச் செல்லும் இரு சக்கர வாகனங்களைப் பார்த்து விட்டு வீட்டுக்குள் போய் முடங்கி விடுகிறது. நம்மள அடிச்சுப் போடுறதுக்குன்னே வண்டியில வருவானுவோ போலருக்கு என்ற அலுத்த குரலும் அதனிடமிருந்து வந்து விடுகிறது.

தெருவில் வருவோர் போவோரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டு மற்ற நேரங்களில் திண்ணையில் படுத்துக் கிடக்கிறது. அதன் குரலுக்கு காது கொடுப்போர் கம்மி. வேறு வேலையில்லை இந்தக் கிழவிக்கு என்று திட்டிக் கொண்டு போவோர் அதிகம்.

அண்மையில் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்  போவதாக அறிவிக்கப்பட்ட போது அருந்ததி ஆத்தாவுக்கும் ஆசை, அரசாங்கம் அறிவிக்கும் அந்தத் தொகையை எப்படியாவது வாங்கி மகனுக்கும் மருமகளுக்கும் கொடுத்து விட வேண்டும் என்று. அதுதான் இப்போது அந்தக் குடும்பத்தின் குடும்பத் தலைவி. உண்ண உடுத்த குறையில்லாத நிலைதான் என்றாலும் இன்னும் இரண்டு காசு வந்தால் அதற்கான தேவையுள்ள நிலையில்தான் இருக்கிறது அருந்ததி ஆத்தாவின் குடும்பம்.

ஊரில் பெண்கள் கிளம்பியதும் அதுவும் கிளம்பியது. ரொம்ப காலத்துக்குப் பிறகு இப்போதுதான் அது சேலையைக் கட்டிக் கொண்டு கம்பை ஊன்றிக் கொண்டு கிளம்பியது. யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தனியொரு ஆளாகப் போய் அதற்கு விண்ணப்பித்து விட வேண்டும் என்ற வைராக்கியமும் அதற்கு இருந்தது.

பணம்ன்னதும் பார்த்தியா கிழவிக்கு தெம்பு வந்துடுச்சே என்று ஊர் சனங்கள் பேச ஆரம்பித்து விட்டன. அருந்ததி ஆத்தா போவதை ஊரு சனமே வீட்டின் வெளியே நின்று வேடிக்கை பார்த்தது.

பாதி தூரம் போனதும் அருந்ததி ஆத்தா என்ன நினைத்ததோ திரும்பி வர ஆரம்பித்து விட்டது. என்ன கிழவி இப்படித் திரும்பி வருகிறதே என்று ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்ததும் என்னால நடந்து போக முடியலைப்பா, உசுரு போறதைப் போல இருக்கு, வலி குத்திக் குடையுது, போவ முடியாமப் போயி அதெ வாங்கி என்ன ஆவப் போவுதுண்ணு தோணுச்சு, அதாங் திரும்பிட்டேன் என்றது.

கிழவியை ஒரு மாதிரியாகப் பார்த்த எல்லாருக்கும் பாவமாகப் போய் விட்டது. வண்டியில் வைத்து அழைத்துப் போகட்டுமா என்று கேட்ட போது அதெல்லாம் வேண்டாம் என்று வீராப்பாக வீட்டை நோக்கி கம்பை ஊன்றியபடி முணகிக் கொண்டே வந்து விட்டது. இதைக் கேட்ட எல்லாருக்கும் இப்போது பரிதாபமாகப் போய் விட்டது. வீட்டிற்கு வந்ததும் மருமகள் அழைத்துப் போகட்டுமா என்ற கேட்ட போதும் வேண்டாம் என்று சொல்லி விட்டது. உடம்பு போனால் என்ன மனதில் இன்னும் சில வீராப்பு குறைந்து விடவில்லை அதுக்கு.

அப்புறம் என்ன நடந்தது என்றால், மதியம் வேலையை முடித்து விட்டு மகன் வந்த பிறகு மகனுடன் வண்டியில் போய் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டு வந்தது.

என்னமோப்பா மொதல்ல வாங்கணும்ன்னு தோணுச்சு. நடந்துப் பார்த்தா முடியலன்னப்போ வேண்டாம்ன்னு தோணுச்சு. இவன் வந்தா இவனெப் பாக்குறப்போ ஏதோ இவன் செலவுக்கு ஆகும்ன்னு பல்லைக் கடிச்சிட்டுப் போயிட்டு வரணும்ன்னு தோணுச்சு. அதாங் கௌம்பிப் போய் பண்ணிட்டு வந்துட்டேன். சருகாகக் கெடக்குற காலத்துலயும் எருவாக எதாச்சும் உபயோகம் இருக்கணும்ல்ல. படுக்க வெச்சு சோறு போடுறவனுக்கு கொடுக்க எங்கிட்டெயும் ஆயிரம் காசு இருக்கட்டும்ன்னு அரசாங்கக்காரன் கொடுக்குறதெ ஏன் விடணும்ன்னு தோணுச்சு. அதாங் போய்ட்டு வந்துட்டேன் என்றது அருந்ததி ஆத்தா. வண்டியில் போய் விட்டு வந்த வலியும் களைப்பும் அதன் உடலில் இன்னும் இருந்தது. தள்ளாத காலத்திலும் ஏதோ அலைக்கழிப்பு அதன் மனதிலும் இருந்தது.

*****

8 Apr 2024

நடப்புக்கு நாம் என்ன செய்ய முடியும்

நடப்புக்கு நாம் என்ன செய்ய முடியும்

நம்பிதான் செய்ய வேண்டியிருக்கிறது

நம்பிக்கைத் துரோகிகளாய் மாறுபவர்களிடம்

என்னதான் செய்வது

 

கடைசி வரைப் பாருங்கள் என்று சொல்லி சொல்லியே

பார்க்க வைக்கப்படுகின்றோம்

 

நேரத்துக்கு ஒரு தொகை நிர்ணயிக்கப் படுவதற்குப் பெயர் ஸ்மார்ட் மீட்டர்

 

நமக்கெல்லாம் தெரிந்து

நாம் கொந்தளிப்பதற்கு

இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.

 

எல்லாவற்றிலும் அரசியல் என்றால்

அரசியலில் என்னதான் செய்கிறார்கள்

 

கல்வித் தந்தையாக ஆசைப்படுபவர்களுக்கு

எந்தக் கருத்தரிப்பு மையம்

சரியாக இருக்கும்

 

வெளிச்சத்திற்கு

தொலைவு ஒரு பிரச்சனையில்லை

இருட்டுக்குள்

தொலைவே தேவையில்லை

அரைகுறை வெளிச்சத்திற்குள்

ஆயிரம் வேகத்தடைகள்

 

வீட்டுநாய் காணாமல் போனால்

தேட வேண்டியிருக்கிறது

இருந்தாலும் சரி

இல்லாவிட்டாலும் சரி

தெருநாயை

யார் தேடப் போகிறார்கள்

*****

4 Apr 2024

அந்தக் காலத்தில் தக்காளியின் விலை அதிகமாக இருந்தது! மற்றும் சில சங்கதிகள்

அந்தக் காலத்தில் தக்காளியின் விலை அதிகமாக இருந்தது!

மற்றும் சில சங்கதிகள்

சிறிது காலத்திற்குள் காய்கறிக் கடைகள் அதிகம் கேட்ட கேள்வி, ‘தக்காளி என்ன விலை?’

கூடிய விரைவில் அடுத்து காய்கறிக் கடைகள் கேட்கப் போகும் கேள்வி, ‘வெங்காயம் என்ன விலை?’

இதுவே வழக்கமாகி விட்டது காய்கறிக் கடைகளுக்கு.

*****

தக்காளி சாஸ் விலை பரவாயில்லை. தக்காளி விலைதான் அதிகமாக இருந்தது அந்தக் காலத்தில். அப்போது தக்காளியைப் பதுக்கிய பதுமுகன் பணக்காரனாகி விட்டான். தக்காளியை வாங்கிய பணக்காரனான விஸ்வேஸ்வரன் ஏழையாகி விட்டான்.

*****

நாட்டில் இஞ்சி விலை, மிளகாய் விலை யாருக்கும் தெரிகிறதா? தெரிவதெல்லாம் நட்சத்திரங்கள். எங்கும் நட்சத்திரங்கள். எதிலும் நட்சத்திரங்கள். இரவில் தெரியும் இந்த நட்சத்திரங்கள் இல்லையென்றால் பகலில் வாழ்க்கை இல்லையோ என்னவோ? நீங்களே ஒரு நட்சத்திரம் படும் மற்றும் படுத்தும் பாட்டைக் கீழே பாருங்கள்.

ஒரு நட்சத்திரம் என்ன பாடு படுகிறது

சூப்பர் நட்சத்திரம் என்ற ஒன்று

நம்பிக்கை நட்சத்திரம் என்ற ஒன்று

உடனடி நட்சத்திரம் என்ற ஒன்று

சுப்ரீம் நட்சத்திரம் என்ற ஒன்று

ஆல் டைம் நட்சத்திரம் என்ற ஒன்று

அல்டிமேட் நட்சத்திரம் என்ற ஒன்று

நட்சத்திரங்கள் நல்ல பெயர் தருபவை

இரவின் திரையில் மட்டும் தெரிபவை

பகலின் வெளிச்சத்தில் காணாமல் போகுபவை

நட்சத்திரங்களுக்காக நாம் ஏன் அலட்டிக் கொள்கிறோம்

மழலையர் பள்ளியில்

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்

பாடியதன் கோளாறோ என்னவோ!

*****

ஐந்து லட்சத்துக்கு நகை வாங்கிய அகிலா பேருந்தில் ஏறினாள். ஏறிய அரை மணி நேரத்தில் ஐந்து லட்ச நகை அபேஸ் ஆனது. அவ்வளவு ரூபாய்க்கு நகை வாங்கினால் ஏற வேண்டியது பேருந்தில் அல்ல, காரில் என்பதை அவள் தாமதமாகப் புரிந்து கொண்டாள். இப்படி அடிக்கடி பேருந்தில் ஏறினால் ஐந்து லட்ச ரூபாயை நகையை லவட்டலாம் என்பதை அபேஸ் பண்ணியவர் புரிந்து கொண்டார். பேருந்தில் பயணிப்பது குறித்து எதிர்மறையான மனநிலையை இது உருவாக்குமானால் அதற்கு நான் பொறுப்பில்லை. இப்படி நடப்பதெல்லாம் ஏதோ சில சந்தர்ப்பங்களில்தான், எப்போதும் அல்ல என்ற எச்சரிக்கைக் குறிப்பையும் அதனால் சேர்த்தே பதிவு செய்கிறேன்.

*****

இந்த வேலைக்கு எவ்வளவு ரூபாய் கேட்பாய் என்று ரஞ்சிதம் படித்துப் படித்துக் கேட்டாள். உங்களிடம் என்ன கணக்குப் பார்க்கக் போகிறேன் என்றான் சிங்காரம். சரிதான் போ பணத்தைக் கொடுக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள் ரஞ்சிதம். வேலை முடிந்த பிறகு சிங்காரம் கேட்ட தொகை அதிகமாக இருந்தது. ரஞ்சிதம் சிரித்துக் கொண்டே தருவதாகச் சொன்ன தொகையை இன்று வரை கொடுக்கவில்லை.

*****

குமார் எல்லா பொருட்களையும் கடனில் வாங்கி வைத்திருக்கிறான். குமாரின் சந்தோஷமும் நிம்மதியும் பறி போய் விடவில்லை. அவனுக்குக் கடன் கொடுத்தவர்களின் நிம்மதிதான் பறி போய் விட்டது. குமார் அலைபேசியை அணைத்து வைப்பதும் இல்லை. குமாரின் அழைப்பு வந்து விடுமோ என்று அவனுக்குப் பயந்து அலைபேசியை அணைத்து வைப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...