4 Feb 2026

பணால் ஆன இரண்டு லட்சம் கோடி!

சிலிக்கான் சிப்சும் சிதறிய கனவுகளும்!

இன்று பிப்ரவரி 4 ஆம் நாள் இந்திய ஐடி நிறுவனப் பங்குகளுக்கு ஒரு கேடு காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஐடி நிறுவனப் பங்குகள் சீட்டுக்கட்டுகள் சரிவதைப் போலச் சரிந்து 8 சதவீதம் வரையிலான வீழ்ச்சியைச் சந்தித்து டைவ் அடித்துள்ளன. இது மார்ச் 2020க்குப் பிறகு ஐடி நிறுவனப் பங்குகள் சந்திக்கும் ஒரு மோசமான சரிவாகும்.

இது இயந்திரங்கள் செய்யக் கூடிய சதியா என்றால், இயந்திரங்கள் பண்ணப் போகும் வேலைகளைப் பார்த்து மனிதர்கள் ஐடி நிறுவனப் பங்குகளில் பறிக்கும் குழி. டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரிய ஐடி தலைகளே இன்றைய ஆடிக் காற்றில் அம்மியைப் போலப் பறக்க ஆரம்பித்து விட்டன.

ஏன் சரிந்தன ஐடி நிறுவனப் பங்குகள்?

காரணங்கள் இதோ,

அமெரிக்காவின் Anthropic நிறுவனம் தனது 'Claude' சாட்பாட்டில் புதிய வேலைவாய்ப்பு சார்ந்த தானியங்கி கருவிகளை (Workplace Automation tools) அறிமுகப்படுத்தியுள்ளது. இது சட்டம், விற்பனை மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை மனித உதவியின்றிச் செய்யக்கூடியது. இதனால், இந்திய ஐடி நிறுவனங்கள் செய்யும் பாரம்பரிய வேலைகளுக்கு (Outsourced services) எதிர்காலத்தில் மவுசு குறையுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. அச்சம் எழுந்தால் முதலீட்டாளர்கள் அன்ட்ராயர் கழண்டு விழுவது கூட தெரியாமல் ஓடுவார்கள் என்பதால், ஐடி நிறுவனப் பங்குகள் எல்லாம் பல்டி அடிக்க ஆரம்பித்து விட்டன.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கிலேயே ஐடி நிறுவனப் பங்குகள் தலைகுப்புற விழுந்து கடும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக Nvidia, Microsoft, Alphabet போன்ற நிறுவனங்களின் பங்குகளே டமால் டுமாலைச் சந்தித்தன.

சமீபத்திய இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக இன்று வலுவடைந்தது. ஐடி நிறுவனங்கள் தங்களது வருவாயை டாலரில் ஈட்டுவதால், ரூபாயின் மதிப்பு உயரும்போது அவற்றின் லாப வரம்பு திறந்து வைத்த கற்பூர டப்பாவைப் போலப் பாதிக்கப்படும். இதுவும் ஐடி நிறுவனப் பங்குகள் தலைகுப்புற படுத்துக் கொள்ள காரணமாகி விட்டது.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஐடி நிறுவனங்களின் "Billable Hours" (பணியாளர்களின் வேலை நேரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படும் கட்டணம்) கோடையில் அடிவாங்கும் மேட்டூர் அணையைப் போலக் குறையக்கூடும். இது ஐடி நிறுவனங்களின் எதிர்காலத்தைச் சூன்யமாக்கி விடும்.

இதனால் ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் ஐடி துறை முதலீட்டாளர்களுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவனப் பங்குகளில் ஆர்வமாக முதலீடு செய்தவர்கள் தெருக்கோடியில் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

பொதுவாகப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் விசித்திரமானவர்கள். பயம் வந்தால் விற்றுத் தள்ளுவார்கள். ஆசை வந்தால் வாங்கித் தள்ளுவார்கள். அதனால் இன்று வீழ்ந்த ஐடி நிறுவனப் பங்குகள் சில நாட்களில் ஏறவும் கூடும், ஒருவேளை ஏறாமல் போகவும் கூடும்.

பெரும்பாலும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நாளை என்ன நடக்கும் என்ற பயத்தில் இன்றைக்கே சூசைட் அட்டெம்ப்ட் பண்ணும் கேரக்டர்கள்.

இதன் விளைவு பங்குச் சந்தையில் மட்டுமில்லை, கல்யாணச் சந்தையிலும் இனி பிரதிபலிக்கும். இனி ஐடி மாப்பிள்ளை என்றாலோ, கோடிங் தெரிந்த ஜாம்பவான் என்றாலோ பெண் கொடுக்க கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார்கள். வியாபாரச் சந்தையிலும் இதன் பிரதிபலிப்பு இருக்கும். ஐடி நிறுவனங்களின் பக்கத்தில் இருக்கும் மால்களில், ஹோட்டல்களில் காற்றடிக்கவும் ஆரம்பித்து விடும். ரியல் எஸ்டேட்டை இனி இஷ்டப்படி ஏற்றுவதெல்லாம் வேளச்சேரியிலோ, சோழிங்கநல்லூரிலோ நடக்காது. கொஞ்ச நாள் அடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை.

*****

மனசு - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

மனசு - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

மனசு ஒரு குரங்கா என்றால், இல்லை, அதைவிட மோசம். ஒரு சேனலில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ரிமோட் இல்லாத டிவி போன்றது. கவனச் சிதறல் அதன் செல்லக் குழந்தை. ஒரு புள்ளியில் நிற்க மறுக்கும். ஆழி சூழ் உலகு மாதிரி இது ஒரு மாதிரி நிறைவின்மை சூழ் வாழ்க்கை. இது தன்னைத் தானே பிய்த்துப் போட்டுக் கொள்ளும் ஒரு சைக்காலஜிக்கல் அரக்கன். கடைசியில் ஐயோ, வலிக்கிறதே, ரத்தம் வருகிறதே என அழும். அதற்கு ஆபரேஷன் செய்தால் வலிக்குமா என்று நம்மையே கேட்கும்.

இதிலிருந்து தப்பிப்பதற்கான கொள்கை ரொம்ப எளிமையானது.  அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. பிறகு, சுவாசிப்பதற்கு நமக்கு மூக்கு இல்லாமல் போய் விடும். அது ஆபத்து மட்டுமல்ல, அநாகரிகம். மற்றவர் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது ஒரு தியேட்டர் அனுபவம் போல. அவர் நெருப்பில் குதிக்கும்போது, நாமும் கூடவே குதிப்பது முட்டாள்தனம். ஏற்கனவே வாழ்க்கை ஏகப்பட்ட பிரச்சனைகளை இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்போது, நாமாகப் போய் பெய்ட் சர்வீஸ் எடுத்துக் கொண்டு நாசமாகத் தேவையில்லை. வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்போதும் பை ஒன், கெட் டூ அல்லது பைன் ஒன் கெட் ஒன் ப்ரீ ஆபர்தான். அதனால் எச்சரிக்கை ரொம்பவே அவசியம்.

அடுத்தது, மகிழ்ச்சி. அது ஒரு தனிநபர் சொத்து. மற்றவர்களிடம் போய் பிச்சை கேட்பதில் அர்த்தமில்லை. ஏமாற்றம்தான் மிஞ்சும். சுய மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட. பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு அதுதான் ஒரு தற்காப்பு கலை. என் மகிழ்ச்சிக்கு நான் தான் ஸ்பான்சர். அது மற்றவன் தருவதை விடக் குறைவாக இருக்கலாம், ஆனால் அது சுத்தமானது. கலப்படமில்லாதது. எனது தேவை, எனது விருப்பம். இதில் மற்றவர்களின் தீர்ப்புகளுக்கு வேலையே இல்லை.

உழைப்பது பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே நேற்று கொஞ்சம் சொல்லி விட்டேன். இன்னும் கொஞ்சம் சொல்லவும் இடம் இருக்கிறது. மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்வது தவிர்க்க முடியாது. செருப்பு கொழுப்பதற்கா பிறந்திருக்கிறது, தேய்வதற்குத்தானே. அப்படித்தான். இப்படி படாத பாடு படுவதற்காக யாரும் வந்து பொன்னாடை போர்த்த போவதில்லை, கை தூக்கி விடவும் போவதில்லை. அவரவர் வீடு, அவரவர் பாடு. அதனால் யாருக்காகவும் எதையும் பாலிஷ் செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக உழைப்பது என்பது கமர்ஷியல் சினிமா போல. நமக்கு எதார்த்த சினிமாவே போதுமானது. பட்ஜெட்டும் கம்மி, சென்சார் பிரச்சனைகளும் இருக்காது. யாரோ ஒருத்தர் எப்போதாவது பார்த்து அடடா என்பார். அது போதும் நமக்கு.

சுருக்கமாகச் சொன்னால்… இதைச் சொல்ல ஒரு மாதிரியாகவும் இருக்கிறது, எல்லாரும் சொல்லி விட்டார்கள், இருந்தாலும் வேறு வழியில்லை,  எண்ணங்களை வேடிக்கை பாருங்கள். புரிந்துகொள்ள முயலுங்கள். மனநிறைவு என்பது வெளியே இல்லை, அது உங்களின் சொந்த ப்ரைவேட் ஏரியா. இது எங்க ஏரியா, உள்ளே வராதே என்பது இதற்கு மட்டும் நூறு சதவீதமென்ன, இருநூறு சதவீதம் கூட பொருந்தும். நீங்கள் உங்கள் மனதை ஸ்கேன் செய்யும் போது, வேறு எதாவது தோன்றினால், அதையும் சொல்லுங்கள். சேர்த்துக் கொள்வோம்.

*****

3 Feb 2026

சுயநலத்தின் ஜியோமெட்ரி!

சுயநலத்தின் ஜியோமெட்ரி!

உலகத்தில் உழைக்கிறவன் கதி அவ்வளவுதான். அவன் பிழைக்கத் தெரியாதவன், அப்படியே உழைத்துக் கொண்டே கிடக்கட்டும் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள். மனிதர்களின் சுயநலம் இருக்கிறதே, அது ஒரு தனி டிசைன்!

சரி, நாம் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? கூடாது. லாஜிக் பார்க்காமல், நியாய, தர்மங்கள் பார்க்காமல் அந்தந்த நிமிடம் மனதில் என்ன 'ரா-வாக' (Raw) தோன்றுகிறதோ, அப்படி வாழ வேண்டும். அவ்வப்போது மனதை 'ரீ-சார்ஜ்' செய்து கொள்ளாவிட்டால், மனப்புழுக்கம் ஏறிவிடும். அந்த இறுக்கம் இருக்கிறதே, அது ஒரு சைலண்ட் கில்லர். எப்பேர்ப்பட்ட மனுஷனையும் அப்படியே சாய்த்துவிடும்.

இந்த மனிதர்கள் படுத்தும் பாடுகளில் சில சமயம் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. மூளைக்குச் செல்லும் சிக்னல்கள் கட் ஆனது போல் ஒரு உணர்வு. யாரோ கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், யாரைக் கேட்டாலும் என் கைகளில் கயிறு இல்லையே என்பார்கள்.  சுற்றிலும் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாம் அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஆக்சன் செய்ய வேண்டும்.

ஆனால், ஒரு பயலாவது நாம் என்ன நினைக்கிறோம் என்று யோசிப்பதில்லை. சுயநலம்தான் இயல்பானது இல்லையா?

இவர்களிடம் போய் தர்மத்தைக் கேட்டால் அதற்கு ஒரு பில் போட்டு அதை கேட்டவர்களுக்கே பார்சல் பண்ணி வைப்பார்கள்.

இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால், அவர்களின் கையில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோலுக்கு ஆடும் ரோபோட்டாக நம்மை எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்குத் தேவையெல்லாம் இவர்களுக்குத் தகுந்தாற்போல நடிக்கும் நடிகர்கள்தான், நல்ல மனிதர்கள் இல்லை.

நம்மை வரைபடத்தில் அடைத்து விட்டு, நம் சிறகுகளின் நீளத்தை அளக்கப் பார்ப்பவர்கள் நம்மை மியூசியத்தில் அடைக்கப் பார்க்கிறார்கள். அங்கு நாம் பலராலும் பார்க்கப்படுவோம் என்பது உண்மைதான். நம்மால் வெளியுலகைப் பார்க்க முடியாது. யாரும் நம்மைக் காட்சிப்படுத்த வேண்டாம். அப்படி நம்மை காட்சிப்படுத்துகிறேன் என்பவர்களுக்காக உழைத்துக் கொட்டவும் வேண்டாம்.

அவ்வபோது இவர்களைக் கோபிக்கவும் தயங்கக் கூடாது. இவர்களை விட்டுப் போய் விடுவேன் என்று பாச்சா காட்டவும் தயங்கக் கூடாது. இவர்களை விட்டு விட்டு இவர்கள் கண்ணில் படாமல் சில நாட்கள் காணாமல் போவதும் தவறு கிடையாது.

இந்த மனிதர்கள் மத்தியில் இந்த மனம் என்பது ஒரு பிரஷர் குக்கர் போன்றது. அவ்வபோது சிறு சிறு சந்தோசங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் டமால் ஆகி விடும். அவ்வபோது இவர்களை நையாண்டி செய்ய யோசிக்காதீர்கள். அப்படிச் செய்யாவிட்டால் இவர்கள் உங்களைப் போண்டியாக்கிக் கோவணாண்டி ஆக்கி விடுவார்கள்.

*****

2 Feb 2026

ஆபரேஷன் சைலண்ட் – ரகசியம் காத்தல் & காரியம் முடித்தல் பற்றியது!

ஆபரேஷன் சைலண்ட் – ரகசியம் காத்தல் & காரியம் முடித்தல் பற்றியது!

தன்னம்பிக்கை புத்தகங்களில் ‘உன்னால் முடியும் தம்பி’ ரகக் கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு சந்தேகம் வரும். ஒரு தனி மனிதன் நினைத்தால் இமயமலையை இடமாற்றி விடலாம் என்று எழுதுகிறார்கள். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறை வேறு. ஏதேனும் பூமி அதிர்வோ, கடற்கோளோ நடந்து இமயமலை நகர்ந்தால்தான் உண்டு.

அப்படியிருக்க ஏன் இப்படி எழுதுகிறார்கள்? தமிழ்ப்படங்களில் நடக்கும் நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்கின்ற இவை போன்ற சம்பவங்கள் நடைமுறையில் வாழ்க்கையில் பக்காகி விடும். இதிலும் ஒரு விடயம் இருக்கிறது. இது ஒரு கும்பல் உளவியலை உருவாக்க நினைக்கும் முயற்சி. தனியாக இருக்கும் போது மனிதர்கள் சிறு கல்லை நகர்த்த கூடசோம்பல் படுவார்கள். அதுவே, ஆயிரக்கணக்கில் சேரும் போது இமயமலையைக் கொத்தி அப்படியே கொத்து பரோட்டா போட்டு சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

மனிதர்கள் தனித்தனியாக இருக்கும்போது புத்திசாலிகள். ஆனால் ஒரு கூட்டமாகச் சேரும்போது அவர்களுக்கு ஒரு விசித்திரமான மனநிலை வந்துவிடுகிறது. கூட்டமாகச் செயல்படும்போது அவர்கள் எதற்குப் பிரதிவினை செய்வார்கள், எதற்கு மவுனமாக இருப்பார்கள் என்பதைக் கணிக்க ஒரு தனி அல்காரிதம் தேவை. அது தெரியாமல் நீங்கள் களத்தில் இறங்கினால், தர்ம அடிதான் கிடைக்கும்.

இந்தக் கும்பல் உளவியலைத் தூண்டி விடும் புத்தகங்கள், பஞ்சாங்கத்தைப் போலவும், சமையல் புத்தகங்களைப் போலவும் அமோகமாக விற்பனை ஆகும். அப்படி ஒரு புத்தகத்தை எழுத ஆசைப்படும் கனவான்கள் தமிழ்நாட்டில் நிறைய பேர். அவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையே மாஸ்டர் பீஸ் மனநிலைதான்.

பலர், நான் எழுதினால் பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்குத்தான் எழுதுவேன், என்று பேனாவைத் திறக்காமலேயே காலத்தைக் கடத்துகிறார்கள். இது தப்பு. நீங்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி எழுதிக் குவிக்கும் குப்பைகளுக்கு நடுவில்தான் எங்காவது ஒரு பொக்கிஷம் ஒளிந்து கொண்டிருக்கும். வைரத்தைத் தேடிப் போவதை விட, மணலைத் தோண்டிக் கொண்டே இருங்கள், வைரம் தானாகச் சிக்கட்டும். அந்தப் பொக்கிஷத்தை மட்டும் எடுத்து மெருகேற்றிப் பதிப்பிக்க வேண்டும்.

கடைசியாக ஒரு குறிப்பு,

நம் ஊரில் எதையும் சாதிப்பவர்களை விட, சாதிக்க விடாமல் தடுப்பவர்களுக்குத்தான் யூனியன் அதிகம். நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அதை எப்படி முடக்கலாம் என்று ஒரு கோஷ்டியே கிளம்பும். ஆகவே, மற்றவர்களைச் சாதிக்க வைக்க புத்தகம் எழுத நினைக்கும் நீங்கள் முதலில், உங்கள் சாதனைப் புத்தகத்தை எழுதும் வரை வாயைத் திறக்கக் கூடாது, பேனாவையோ, லேப்டாப்பையோ மட்டும்தான் திறக்க வேண்டும். இல்லையென்றால் வெறும் சத்தம்தான் மிஞ்சும்.

*****

1 Feb 2026

இரத்தக் களறியான இந்தியப் பங்குச் சந்தைகள்!

ஏன் சரிந்தன பங்குச் சந்தைகள்?

இந்தியாவின் மிகப்பெரிய இரு பங்குச் சந்தைகள் நிப்டியும் சென்செக்சும். இரண்டு பங்குச் சந்தைகளுமே பட்ஜெட் தாக்கலுக்குப் பின் மாபெரும் தாக்குதலுக்கு உள்ளாயின.

இன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கமாகப் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை நாள். எனினும் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கப்படுவதைப் போல, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இன்று பங்குச் சந்தைகள் இயங்க அறிவுறுத்தப்பட்டன.

ஒருவேளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இன்று பங்குச்சந்தைகள் இயங்காமல் இருந்தால், நாளை அதீத ஏற்ற இறக்கங்கள் பங்குச் சந்தையில் இருக்கலாம் என்பதற்காகத்தான் இயங்க அறிவுறுத்தப்பட்டன. அந்த நோக்கத்தையே பங்குச் சந்தைகளின் போக்கு மாற்றி அமைத்து விட்டன. இச்சம்பவம் பங்குச் சந்தையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு வலுசேர்க்கும் மற்றுமோர் உதாரணமாகி விட்டது. சுனாமிக்குத் தடுப்பணை கட்ட முடியாது என்பது நிரூபணமாகி விட்டது. பங்குச் சந்தை ஒரு விசித்திரமான மிருகம். அது எப்போது எகிறிக் குதிக்கும், எப்போது விழுந்து கையைக் கடிக்கும் என்பதெல்லாம் அனுமானிக்க முடியாத அமானுஷ்யங்கள்.

அது சரி, ஏன் சரிந்தன பங்குச் சந்தைகள்?

பங்குச் சந்தைகளின் சரிவுகளுக்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

அதில் முதன்மையானது, மூலதன ஆதாய வரி உயர்வு (Capital Gains Tax). இதுதான் சந்தை சரிந்ததற்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் குறுகிய கால மூலதன ஆதாய வரி (STCG) 15% இலிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) 10% இலிருந்து 12.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் லாபத்தில் அதிக வரி கட்ட வேண்டியிருப்பது பங்குச் சந்தையில் ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இது போன்ற கசப்பு மாத்திரைகளை முதலீட்டாளர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். வேறு எங்கேயாவது இனிப்பு மாத்திரை கிடைக்கிறதா என்று தேடப் போய் விடுவார்கள். அப்படி தேட இப்போது ஓடிப் போய் விட்டார்கள்.

பங்குச் சந்தைகளின் சரிவுக்கு இரண்டாவது முக்கிய காரணம், செக்யூரிட்டி டிரான்சாக்சன் வரி உயர்வு (STT). பங்குச் சந்தையில் டிரேடிங் செய்பவர்களுக்கு, குறிப்பாக ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு STT வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது வர்த்தகச் செலவை அதிகரிப்பதோடு, சந்தையில் பணப்புழக்கத்தைக் குறைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் பங்குச் சந்தையில் ஓர் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்று கூட ஆகலாம். யார் விரும்புவார்கள் இதை, புரோக்கரேஜ்ஜை விட டேக்ஸ் கூடுதலாகப் போனால்?

வழக்கமாகவே பங்குச் சந்தையில் அதிக எதிர்பார்ப்பு மற்றும் லாபப் பதிவு (Profit Booking) எப்போதும் இருக்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாகவே நிஃப்டியும் சென்செக்சும் கணிசமாக உயர்ந்திருந்தன. அதே நேரத்தில், பட்ஜெட்டில் சந்தையை அதிரடியாக உயர்த்தும் வகையிலான சலுகைகள் எதுவும் வராததால், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை எடுத்துக்கொண்டு பங்குகளை விற்கத் தொடங்கி விட்டனர். இது இயல்பாகவே சந்தையில் சரிவை ஏற்படுத்தி விட்டது. பட்ஜெட்டை வைத்து ஒரு ஜாக்பாட் அடிக்கலாம் என்று நினைத்தவர்கள், உள்ளதே போதும் என்று துண்டைக் காணும், துணியைக் காணும் என்று கம்பி நீட்டி விட்டார்கள். இது பங்குச் சந்தைகள் சரிவதற்கான மூன்றாவது காரணம்.

நான்காவது முக்கிய காரணமும் ஒன்று இருக்கிறது. அது,  நுகர்வு மற்றும் வருமான வரியில் ஏற்பட்ட ஏமாற்றம். நடுத்தர வர்க்கத்தினரின் கையில் அதிகப் பணப்புழக்கம் இருக்கும் வகையில் பெரிய வருமான வரிச் சலுகைகள் வரும் என்று இந்தப் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் வரவில்லை. பழைய அறிவிப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரி முறையில் வரி தாக்கல் செய்வதில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அது சந்தையின் பெரிய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

இவை எல்லாம் சேர்ந்து பங்குச் சந்தையில் பெருத்த சரிவை ஏற்படுத்தி விட்டன. இது மத்திய நிதி அமைச்சகமும் நிதி அமைச்சருமே எதிர்பாராத ஒரு சரிவாகத்தான் இருக்கும். வழக்கமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்புகள் இப்படிச் சந்தையில் சரிவை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தன. இந்த முறை அதை இந்திய பட்ஜெட் அறிவிப்பு ஏற்றுக் கொண்டு விட்டது.

மொத்தத்தில் கணக்குப் பிள்ளையின் கையை மீறிப் போன ஞாயிற்றுக் கிழமையாகி விட்டது இன்றைய ஞாயிறு. இன்றைய சந்தைச் சரிவில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இது விடியா ஞாயிறுதான்.

*****

எப்படி இருக்கிறது இன்றைய பட்ஜெட்?

எப்படி இருக்கிறது இன்றைய பட்ஜெட்?

திரில்லர் நாவல் போல ஆரம்பித்த இன்றைய பட்ஜெட், இடையிடையே டிவிஸ்ட் கொடுத்து, கடைசியில் பல விசயங்களுக்கு தொடரும் போட்டு மூன்று புள்ளி வைத்திருக்கிறது.

போன முறை கொடுத்ததே அதிகம், இதற்கு மேல் இன்கம்டாக்ஸ் ரிலீப் கேட்காதே என்று தலையில் அடித்து உட்கார வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சாரிடன் விலையில் ஒரு சின்ன ரிலீப் கொடுத்திருக்கிறார்கள்.

நீங்கள் பொருளாதாரப் புள்ளி என்றால், போன பட்ஜெட்டுக்கும் இந்த பட்ஜெட்டுக்குமான ஆறு வித்தியாசங்களைப் பூத கண்ணாடி கொண்டுதான் தேட வேண்டும்.

சென்னை – பெங்களூரு – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில்களை விடப் போகிறார்கள். கண்டிப்பாக அதில் ரிசர்வேஷன் பண்ணுவதற்குள் சாமானியர்களுக்கு ஜீரோ சீட்டுகள்தான் எஞ்சியிருக்கும்.

உள்கட்டமைப்பிற்காகப் பனிரெண்டு லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கியிருக்கிறார்கள். இது கட்சிக்கார கான்ட்ராக்டர்களுக்கும், ஜால்ரா அடிக்கும் நிறுவனங்களுக்கும் அனுகூலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ரோடு ஷோ பண்ணுவதற்கும் வசதியாக இருக்கும்.

புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதற்குள் டிரம்ப் வரியை உயர்த்தாமல் இருக்க வேண்டும்.

சிறு குறுதொழில் நிறுவன வளர்ச்சிக்காக பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது நூறு பேருக்குச் சாப்பாட்டைத் தயார் செய்து லட்சம் பேருக்கு விநியோகம் செய்வதைப் போலத்தான். ஆளுக்கு ஒரு பருக்கைக் கிடைத்தால் பெரிய விசயம்.

டெக்னாலஜி, சிப் என்று பெரிய நிதி ஒதுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இங்கு ரோடுகளில் இருக்கும் குழிகளை அடைக்க எப்போது நிதி ஒதுக்கப் போகிறார்களோ?

வெளிநாடு பறக்கிறவர்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் சில அனுகூலங்கள் இருக்கின்றன. உள்நாட்டிலேயே சுற்றித் திரியும் வந்தே பாரத்துகளுக்கு அது செட் ஆகாது. வந்தேபாரத்துகளில் உள்ளே போய் ஒரு ரவுண்ட் வரும் அளவுக்குச் சம்பாதிப்பவர்களே இங்கு சொற்பம்தான். அவர்களெல்லாம் ஆகாய விமானத்தைப் பார்க்கும் போதெல்லாம் டாட்டா காட்டிக் கொள்ள வேண்டியதுதான். வரி டேட்டா அவர்களுக்குப் புண்ணியம் இல்லாதது.

இந்தப் பட்ஜெட் பல புதுமையான அறிவிப்புகளைக் கொண்டு வந்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் அடித்து விட்டார் டொனால்ட் டிரம்ப். அவர் அவ்வபோது போட்ட பட்டாசுகளை நமத்துப் போக, பல அறிவிப்புகளை அவ்வபோது வெளியிட்டதால் லட்சுமி வெடியாய் வெடிக்க வேண்டிய இந்த பட்ஜெட் பட்டாசு, ஒத்த வெடி ரேஞ்சுக்குத்தான் வெடித்திருக்கிறது.

இந்தப் பட்ஜெட்டைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பாப்கார்ன் விலையைக் குறைத்திருக்கிறார்கள், மற்றபடி தியேட்டர் டிக்கெட் அதே விலைதான். வசதி இருப்பவர்கள் போய் பார்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஓடிடி, டிவி, டெலிகிராம், லிங்க் என்று கிடைப்பதை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

அது எப்படி என்கிறீர்களா? ஜிஎஸ்டி வரி இல்லாத ரோட்டோரக் கடையில் ஒரு வடையென்ன? நான்கு வடை கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். வடைக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும். வரிக்கு நஹி.

தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

*****

ஞாயிற்றுக்கிழமை மசாலாவும் இன்றைய பட்ஜெட்டும்…

ஞாயிற்றுக்கிழமை மசாலாவும் இன்றைய பட்ஜெட்டும்…

ஞாயிற்றுக் கிழமை என்றால் கசாப்புக் கடைகளில் ரத்தம் தெறிக்க, சமையறையில் மசாலா மணக்கும் நாள் இந்தியர்களுக்கு.

அதுவும் இந்த ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் ஸ்பெஷல்.

அதே ரத்தமும் மசாலாவும் மாறி மாறி நாட்டிலும் வீட்டிலும் தெறிக்கலாம், மணக்கலாம், அப்படி ஆகாமல் புஸ்வாணமும் ஆகலாம்.

இந்த ஸ்பெஷலுக்குக் காரணம் இன்றுதான் பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை. மாதமே விடுமுறையில் பிறக்கிறது. அத்துடன் இந்தியாவின் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் ஞாயிற்றுக் கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறதாம்.

இந்த ஞாயிற்றுக் கிழமை ஒளி பிறக்கச் செய்யுமா? இருள் சூழச் செய்யுமா? என்று  ஒவ்வொரு வீட்டின் தகப்பன்சாமியும் பிபி மீட்டரைப் பொருத்திக் கொண்டு தொலைக்காட்சி முன்போ, அலைபேசி முன்போ இன்று தவம் கிடக்கக் கூடும். ஷேர்மார்கெட் இன்று இஸ்ரோ ராக்கெட் போல விண்ணில் பறந்தாலும் பறக்கலாம், அஸ்க்கு புஷ்க்காகி அதள பாதாளத்தில் வீழ்ந்தாலும் வீழலாம்.

நமது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஒன்பதாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப் போகிறார். அவருக்கு இது ஒரு சாதனைப் பயணம். வேறு எந்த இந்திய நிதி அமைச்சரும் இத்தனை பட்ஜெட்களைத் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யததில்லை. அவருடைய சாதனையில் நமக்கெல்லாம் தேவைப்படுவது சலுகைதான். அந்தச் சலுகைகள் இந்த பட்ஜெட்டில் கிடைக்குமா?

விமானத்தில் இருக்கும் கருப்புப் பெட்டியும், பட்ஜெட்டும் ஒன்றுதான். இரண்டையும் திறக்கும் வரை அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. நிர்மலா சீதாராமன் தன்னுடைய கருப்புப் பெட்டியான அந்த டேப்லெட்டைத் திறக்கும் போது நம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா என்பது தெரிந்து விடும்.

இனி வரும் காலம் சிலிக்கான் சிப்புகளின் காலம். பட்ஜெட்டில் 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' மற்றும் செமிகண்டக்டர் உற்பத்திக்கு ஆயிரம் கோடிக்கும் மேல் ஒதுக்கி, இந்தியாவை ஒரு டிஜிட்டல் ஹப்பாக மாற்றும் திட்டங்கள் நிச்சயம் இருக்கும். 'விக்சித் பாரத் 2047' என்பது ஒரு கனவு என்றால், அதற்கான பேட்டரி இந்த பட்ஜெட்டாக இருக்கும். அதில் சந்தேகமே வேண்டியதில்லை.

இராணுவத்துக்கான ஒதுக்கீடும் இந்தியர்களின் பிபி, சுகர் போல அசத்தலாக எகிறித்தான் இருக்கும். அதிலும் எந்த ஐயப்பாடும் வேண்டியதில்லை.

ஆனால், சந்தேகத்தோடு அறிவிப்பு வருமா, வராதா என்பதற்கான சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்கின்றன. அவை இவை,

கடந்த முறை 12 லட்சம் வரை வருமான வரி விலக்குக் கொடுத்தார் நிர்மலா சீதாராமன். இந்த முறை அது 15 லட்சம் ஆகுமா என்பதுதான் மாதச் சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்பு. அத்துடன் அந்த நிலைக்கழிவு எழுபத்து ஐந்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆகி விட்டால் மாதச் சம்பளக்காரர்களின் முகத்தில் ஒரு சின்ன மந்தகாசம், ஸ்வீட் எடு கொண்டாடு சந்தோசம் அரும்பும்.

பணவீக்கம் என்பது ஒரு கண்ணுக்குத் தெரியாத வைரஸ். அது தற்போது கொரோனா வைரஸைத் தாண்டிக் கோர தாண்டவம்  ஆடிக் கொண்டிருக்கிறது. இது சாமானியர்களின் பர்ஸை அடிக்கடிக் காய்ச்சல் அடிக்க வைத்து ஜலதோசம் பிடிக்க வைத்துவிடுகிறது. பணவீக்கத்தைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இருக்குமா என்பதோடு, இன்னும் ஜிஎஸ்டி கொஞ்சம் குறையுமா என்பதுதான் சாமானியர்களின் எதிர்பார்ப்பு. இன்ஷ்யூரன்ஸ் பிரீமியத்தில் இன்னும் கொஞ்சம் வரிச்சலுகை கிடைத்தால் அது சாமானியர்களின் பர்ஸ்க்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் ஏத்தும். நடக்குமா எனப் பார்க்க வேண்டும்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, கடனில் காசு தொலையட்டுமே, நிவாரணத்தில் வாழ்க்கை விடியட்டுமே என்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு 'பிஎம் கிசான்' நிதி அதிகரிக்குமா?

அடித்து வெளுத்துக் காயப்போட்டு சாயம் வெளுத்துப் போய் கிடக்கும் ஜவுளித் துறைக்கு, முக்கியமாக திருப்பூர் போன்ற ஊர்களுக்கு ஏற்றுமதி சலுகை கிடைக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் கைப்புள்ள கணக்காய்க் கிடக்கும் ஏற்றுமதி மற்றும் சிறுகுறுந்தொழில்களுக்கு பூஸ்ட் ஏற்றும் சமச்சாரங்கள் ஏதேனும் இருக்குமா?

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து அதனால் மயங்கி விழ வைத்து, பின் தெளிய தெளிய அடித்துக் கொண்டிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு ஏதேனும் கடிவாளம் போடப்படுமா?

இப்படி இன்னும் நீளும் லிஸ்ட் அதிகம்.

பட்ஜெட் என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது நூற்று ஐம்பது கோடி மக்களின் நம்பிக்கையின் கணக்கு.

எது எப்படியோ? இந்த பட்ஜெட்டில் சாமானியனுக்கான ஒரு சின்ன நிவாரண மாத்திரையாவது நிச்சயம் வைக்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம்.

பட்ஜெட் தாக்கல் 11 மணிக்கு ஆரம்பமாகி விடும். அது முடிந்ததும் அந்த இனிப்பு அல்வா (பட்ஜெட்டுக்குக்கு அடிக்கல் நாட்டும் போது கிண்டப்படுவது) அரசுக்கா அல்லது நமக்கா என்பது தெரிந்து விடும்.

*****