16 May 2026

விரல் நுனி நரகம் – ஒரு டிஜிட்டல் ஜாதகம்!

விரல் நுனி நரகம் – ஒரு டிஜிட்டல் ஜாதகம்!

ஒரு காலத்தில் மனிதர்கள் மண்ணைத் தோண்டினார்கள். பிறகு இயந்திரத்தைத் துடைத்தார்கள். இப்போது கைப்பேசியைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விழித்தவுடன் டூத் பேஸ்ட்டையும் பிரஷையும் தேடுகிறார்களோ இல்லையோ, நோட்டிபிகேஷன் பாரில் யாராவது லைக் போட்டிருக்கிறார்களா என்று தேடுகிறார்கள்.

முன்பு ஒழுக்கம் என்பது அண்டை வீட்டாருடன் சண்டை போடாமல் இருப்பது. இன்று, தெரியாத ஊரில் இருக்கும் ஒருவரைத் திட்டி கமெண்ட் போடாமல் இருப்பதே பெரும் ஒழுக்கம்.

சுதந்திரம் என்பது நினைத்ததை வாந்தி எடுப்பது என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு பொய்யான தகவலைப் பகிர்வது என்பது, ஆயிரம் பேருக்குத் தெரியாமல் டயேரியா மாத்திரைகளைக் கொடுப்பதற்குச் சமம்.

இன்று உலகமே விலையில்லா உலகமாகி விட்டது. இதில் இலவசம் படுத்தும் பாடு படாத பாடாக இருக்கிறது. அதிலும் இந்த இலவசச் செயலிகள். இலவசமாக ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்யும்போது நீங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று தப்புக்கணக்கு போடலாம். அங்கே விற்கப்படுவது நீங்கள் தான்.

உங்கள் புகைப்படம், உங்கள் ரசனை, உங்கள் ரகசியங்கள் என இவை அனைத்தும் விளம்பர நிறுவனங்களின் கல்லாவிற்குப் போகும் எரிபொருள். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது உங்கள் மனைவியை விட கூகுள் அல்காரிதத்திற்கு நன்றாகவே தெரியும்.

இணையத்தினால் எழுந்த பிரச்சனைகளே இன்னும் தீர்ந்த பாடில்லை. அதற்குள் அடுத்த பூதம் கிளம்பியது போலச் செயற்கை நுண்ணறிவு புதுப்புது பிரச்சனைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இன்று செயற்கை நுண்ணறிவு கவிதை எழுதுகிறது, படம் வரைகிறது. நாளை அது உங்களுக்காக முடிவெடுக்கும். அப்போது மனிதத் தீர்ப்பு எங்கே போகும்? இயந்திரம் சொல்வதை அப்படியே கேட்பதற்கு நாம் ஏன் ஆறாம் அறிவோடு அலைய வேண்டும்?

விசயங்கள் இவ்வளவு இருக்கின்றன. இதற்கு மத்தியில் திரைக்குப் பின்னால் இருப்பது ஒரு மனிதன் என்பதை மறந்துவிட்டு, கீபோர்டில் வீரவசனம் பேசுவதுதான் இன்றைய நாகரிகம்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யோசிக்கும் போது இப்படிச் சில எண்ணங்கள் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. பரிணாம வளர்ச்சியில் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பார்கள். இப்போது மீண்டும் ஸ்மார்ட்போனுக்குள் கூனிக் குறுகி அமர்ந்து, அந்தப் பழைய நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.

மனிதர்களின் ஆறாம் அறிவுக்கு எப்போதும் வேலை இருக்க வேண்டும். அதற்கு இந்த இயந்திர அறிவை ஆறாம் அறிவு ஆள வேண்டும். மாறாக ஆறாம் அறிவை இயந்திர அறிவு ஆளக் கூடாது. இன்றைய உலகின் பெரும் கவலை இதுவாகத்தான் இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்?

*****

15 May 2026

எத்தனாலா? தண்ணீரா? – எது முக்கியம்?!

எத்தனாலா? தண்ணீரா? – எது முக்கியம்?!

வாழ்க்கையே ஒரு கலவைதான். இப்போது நம் பெட்ரோலும் அப்படி ஆகிவிட்டது. சமீபகாலமாக எத்தனால் கலந்த பெட்ரோல் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. இதனால், பெட்ரோல் இறக்குமதி குறையும் என்கிறார்கள் ஒரு பக்கம். நிலத்தடி நீர் காலியாகிவிடும் என்கிறார்கள் இன்னொரு பக்கம்.

இதில் எது உண்மை?

எத்தனால் என்றால் என்னவென்றால் சர்க்கரை ஆலைகளின் கழிவான மொலாசஸ் அல்லது மக்காச்சோளம், நெல் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை எரிபொருள். குடிப்பவர்களுக்கு இது கிக் தரும், வண்டிக்கு இது பிக் அப் தரும் என்று நம்பப்படுகிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஐடியா வந்தாலும், இப்போதுதான் அரசு இதற்கு சீரியஸ் லுக் கொடுக்கிறது. தற்போது 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்க வேண்டும் என்பது இலக்கு.

சமூக வலைதளங்களில் ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீர் தேவை என்று வெடிகுண்டுகளை வீசுகிறார்கள். நிஜம் என்னவென்றால், சராசரியாக 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவை. இதுவும் குறைவானது அல்ல!

இதனால் நமக்குத் தேவை எத்தனாலா, பெட்ரோலா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கணக்குப் போட்டுப் பார்த்தால், ஆண்டுக்கு 2,200 கோடி லிட்டர் எத்தனால் தேவை. அதாவது ஒரு டி.எம்.சி எத்தனால். இதைத் தயாரிக்க நமக்குத் தேவைப்படும் தண்ணீர், காவிரி ஆற்றில் ஓடும் ஒட்டுமொத்த நீரை விட பல மடங்கு அதிகம்.

காவிரி நீருக்கே நூறு வருடமாகக் கர்நாடகமும் தமிழ்நாடும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கையில், எத்தனாலுக்காக 5,000 டி.எம்.சி தண்ணீரை எங்கே போய்த் தேடுவது?

பெட்ரோல் இறக்குமதியைக் குறைத்தால் ஆண்டுக்கு 8 முதல் 10 பில்லியன் டாலர் மிச்சமாகும். இது நாட்டுக்கு நல்லது.

எத்தனாலுக்காக கரும்பு விவசாயம் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. விவசாயிகளுக்குப் பணம் கிடைக்கிறது, சரி. ஆனால் நிலத்தடி நீர்? அதுவும் எக்கச்சக்கமாகக் குறைந்து வருகிறது.

ஆக, என்ன நடக்கும்? கரும்பிலிருந்து எத்தனால் எடுத்து பெட்ரோல் போடுவோம். நாளை வண்டி ஓடும், ஆனால் குடிக்கத் தண்ணீர் இருக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

உண்மையைச் சொன்னால், எத்தனால் கலந்த பெட்ரோல் என்பது சாதாரண பெட்ரோலை விட உற்பத்திச் செலவு அதிகம். சுமார் 30% முதல் 50% வரை. ஆனாலும், புவிசார் அரசியல் சூழலில் மற்ற நாடுகளை நம்பியிருப்பதை விட, நம்மூர் கரும்பை நம்புவது மேல் என்று அரசு நினைக்கிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், பெட்ரோலைச் சேமிக்கப்போய் தண்ணீரைத் தொலைத்துவிடக் கூடாது.

பெட்ரோல் தீர்ந்தால் மின்சார வண்டிக்கு மாறலாம். தண்ணீர் தீர்ந்தால் எதற்கு மாறுவது?

இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எத்தனால் கனவு கண்டால், எதிர்காலத்தில் பெட்ரோல் பங்குகளில் தண்ணீர் பாட்டில்களையும், குடிநீர் குழாய்களில் பெட்ரோலையும் தேட வேண்டியிருக்கும்.

*****

14 May 2026

அகம், புறம், அந்தப்புரம் மற்றும் கழிப்பறை – ஓர் அலசல்!

அகம், புறம், அந்தப்புரம் மற்றும் கழிப்பறை – ஓர் அலசல்!

நம் ஆட்கள் பரிணாம வளர்ச்சியில் செல்போன் வரை வந்துவிட்டார்களே தவிர, செப்டிக் டேங்க் விஷயத்தில் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறார்கள்.

மகாத்மா காந்திக்குத் தூய்மை என்பது ஓர் ஆன்மீக அனுபவம். எங்கே சுத்தம் இருக்கிறதோ அங்கே இறைமை இருக்கிறது, என்றார் அவர்.

ரயில்வே மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்து, அங்கிருந்த சுகாதாரச் சீர்கேட்டைப் பற்றி அவர் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதினார்.

இன்று அவர் மட்டும் உயிரோடு இருந்து, நம் ஊர் அரசுப் பேருந்து நிலையக் கழிப்பறைகளைப் பார்த்திருந்தால், மீண்டும் ஒரு சத்தியாக்கிரகத்தையே ஆரம்பித்திருப்பார்.

காந்தியின் பதினெட்டு ஆக்கபூர்வத் திட்டங்களில் தூய்மைக்கு ஒரு தனி இடம் உண்டு. வினோபா பாவே போன்ற அறிஞர்கள் எல்லாம் துப்புரவுப் பணியைச் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்த்தார்கள்.

ஆனால் நாம்?

சுதந்திரம் வாங்கிவிட்டோம், ஆனால் இன்னும் சுத்தம் வாங்கவில்லை.

இந்தியாவில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை விட கழிப்பறை வசதி உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாம். அதாவது, வாட்ஸ்அப்பில் குட் மார்னிங் மெசேஜ் அனுப்ப வசதி இருக்கிறது, ஆனால் காலைக்கடனை கழிக்கத்தான் வசதி இல்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வானளாவிய கட்டடங்களிலோ, 5G வேகத்திலோ இல்லை. அந்த நாட்டின் பொது கழிப்பறையில் தண்ணீர் வருகிறதா என்பதில்தான் இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணி நம் ஊர் சாலைகளைப் பார்த்தால் வளர்ச்சி தெரியும், அதுவே ஒரு பொதுக் கழிப்பறைக்குள் நுழைந்தால் நிஜமான இந்தியா தெரியும்.

என் வீடு சுத்தமாக இருந்தால் போதும், தெரு குப்பையானால் எனக்கென்ன? இதுதான் நம் தேசிய தாரக மந்திரம். வீட்டைத் துடைப்பத்தால் பெருக்கி, அந்த குப்பையை அப்படியே அண்டை வீட்டார் வாசலில் தள்ளிவிடுவது ஒரு கலை. இந்தியக் கலை என்றே அதைச் சொல்லலாம்.

குப்பையைத் தொட்டியில் போடுவது ஏதோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிவது போல ஒரு சாகசச் செயலாக நமக்குத் தெரிகிறது.

பொதுச்சொத்தைப் பாதுகாப்பது என்பது நம் மரபணுவிலேயே இல்லை போலிருக்கிறது. ஒரு கழிப்பறை நன்றாகக் கட்டப்பட்டால், அடுத்த வாரமே அதன் கதவு அல்லது குழாய் மாயமாய் மறைந்துவிடுவது நம் ஊர் மர்மம்.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சுகாதாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பள்ளிக் கழிப்பறையிலேயே மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடும் குழந்தைகளுக்கு நாம் எதைக் கற்றுக்கொடுக்கிறோம்?

தூய்மை என்பது ஏதோ ஒரு நாள் மட்டும் துடைப்பத்தைப் பிடித்துப் புகைப்படம் எடுக்கும் ஈவென்ட் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.

உங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருங்கள், இல்லையென்றால் ஆண்டவன் அங்கே வருவாரோ இல்லையோ, டெங்கு கொசு கண்டிப்பாய் விஜயம் செய்யும்!

*****

13 May 2026

ரீல்ஸும் காலப் பெருவழியின் துவாரங்களும்!

ரீல்ஸும் காலப் பெருவழியின் துவாரங்களும்!

சோஷியல் மீடியாவில் ஒரு நிமிடம் என்பது ஒரு மணி நேரமாக உருமாறும் வித்தைக்கு, காலம்தான் பொறுப்பேற்க வேண்டும், நாம் அல்ல. உண்மையில் காலம் என்பது ஒரு ரப்பரைப் போன்றது. நீங்கள் ரீல்ஸ் பார்க்கும்போது அது சுருங்குகிறது, ஒரு வேலையைச் செய்யத் துவங்ககினால் அது முடிவின்றி நீள்கிறது.

நமது மூளை ஒரு வினோதமான ஆவணக்காப்பாளர். நீங்கள் போனைத் தூர வைத்துவிட்டு, சரி, உருப்படியாக எதையாவது சிந்திப்போம், என்று கண்ணை மூடினால், அது பழைய கோப்புகளைத் தூசி தட்டி எடுக்கிறது.

வெயிலோடு உறவாடி கிரிக்கெட் விளையாடி எட்டு வருடங்கள் கருத்துப் போனதை, அடுத்தத் தெரு அனிதாவுக்காக ஆறு வருடங்கள் செக்குமாடு போலச் சுற்றித் திரிந்ததை, குரூப் 4 தேர்விற்காக நான்கு வருடத்தைப் புத்தகங்களில் புதைத்துக் கொண்டதை, கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறேன் என்று போய் இரண்டு வருடங்கள் கர்ப்ப காலத்தில் இருந்ததை எல்லாம் அப்படியே பவர் பாய்ண்டை விட அழகாக ஸ்லைடு போட்டுக் காட்டும்.

வெயிலோடு உறவாடிய அந்த இந்திய கிரிக்கெட் கனவுக்காலம் உங்களைக் கறுப்பாக்கியிருக்கலாம், ஆனால் வெயிலைத் தாங்கும் தோல் பதனிடுதலை அதுதான் செய்தது.

அடுத்தத் தெரு அனிதாவுக்காகச் சுழன்று சுற்றிய  ஆறு வருடங்கள் வீண் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஆறு வருடங்களில் நீங்கள் பொறுமை எனும் பேராற்றலைக் கற்றுக் கொண்டது நிஜம்.

குரூப் 4 இன் நான்கு வருடங்களும், கர்நாடக சங்கீதத்தின் இரண்டு வருடங்களும் பயனற்றதல்ல. வாழ்க்கையின் நிலையாமையை நீங்கள் அப்போது உணரவில்லை என்றாலும், இப்போது ரீல்ஸ் பார்க்கும்போது ஏற்படும் அதே அர்த்தமற்ற உணர்வை அப்போதே முன்கூட்டியே பயிற்சி செய்திருக்கிறீர்கள்.

இதனால் சொல்ல வருவது என்னவென்றால், குற்ற உணர்வு என்பது ஒரு போதை மருந்து. வீணடித்த காலத்தை நினைத்து வருத்தப்படுவது என்பது, அடுத்த சில மணிநேரங்களை வீணடிப்பதற்கான ஒரு முன் அனுமதிச் சீட்டு.

வாழ்க்கையையே வீணடித்துவிட்டோம் என்ற மிகப்பெரிய துக்கம் வரும்போது, அதைத் தாங்கிக் கொள்ள ஒரு சிறிய துக்கம் தேவைப்படுகிறது. அந்தச் சிறிய துக்கத்தை ஸ்க்ரோல் செய்வதன் மூலம் நாம் அடைகிறோம்.

முழு வாழ்க்கையையும் வீணடித்தவனுக்கு, அடுத்த ஒரு மணிநேரம் என்பது ஒரு ஜுஜுபி. ஏற்கனவே கப்பல் மூழ்கிவிட்டது, இப்போது ஸ்பூனால் தண்ணீரை வெளியேற்றி என்ன பயன்? என்று நினைத்துக்கொண்டு ரீல்ஸ் பார்க்கும் அந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் ஆகச்சிறந்த நிர்வாண நிலை.

காலத்தை வீணடித்துவிட்டோமே என்று கவலைப்படுவதும் ஒரு வகையான கால விரயம்தான். நீங்கள் கவலைப்படும் அந்தப் பத்து நிமிடத்தில் இன்னும் இருபது ரீல்ஸ்கள் பார்த்திருக்கலாம்.

ஒட்டுமொத்த வாழ்க்கையும் வீணாகிவிட்டது என்று தோன்றுகிறதா? சந்தோஷம். ஏனெனில், வீணாவதற்கு இனிமேல் உங்களிடம் வாழ்க்கை மிச்சமில்லை என்ற நிம்மதி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது ஒரு ரீல்ஸ் வீடியோ போன்றதுதான். நீங்கள் அதை ரசித்தாலும், ரசிக்காவிட்டாலும் அது ஓடிக்கொண்டே இருக்கும். முடிவில் வாட்ச் அகைன் என்று கேட்க யாருமில்லை. எனவே, கிரிக்கெட், அனிதா, குரூப் 4, கர்நாடக சங்கீதம், ரீல்ஸ் என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். எல்லாம் ஒரே கிணற்றில்தான் விழுகின்றன.

இப்போது அடுத்த ரீல்ஸைத் தள்ளுங்கள். காலம் உங்களுக்காகக் காத்திருக்காது, ஆனால் இன்ஸ்டாகிராம் அல்காரிதம் காத்திருக்கும்!

*****

12 May 2026

பிழைக்கத் தெரிந்தவன் பிழைப்பான் – ஏஐ எனும் எமதர்மன்!

பிழைக்கத் தெரிந்தவன் பிழைப்பான் – ஏஐ எனும் எமதர்மன்!

உலகம் இப்போது ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்தால் அது தவறு. உலகம் இப்போது ஏஐ வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.

நேரம் மிச்சம், காசு மிச்சம் என்று முதலாளிகள் ஏஐயைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பாவம், ஊழியர்கள்தான் லே ஆப் என்ற ஒற்றைச் சொல்லில் வாசலில் நிற்கிறார்கள்.

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 98 டெக் நிறுவனங்கள் சேர்ந்து 92,272 பேரை டாடா சொல்லி வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றன. பெரிய முதலைகள்தான் இப்படி என்றால், இப்போது சின்னச் சின்ன ஸ்டார்ட் அப் குட்டிகளும் ஊழியர்களைக் கடிக்கத் தொடங்கிவிட்டன.

ஏஐ என்பது ஒரு புத்திசாலியான குழந்தை. அந்தப் புத்திசாலி குழந்தை பலருடைய பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது.

முன்பெல்லாம் 100 பேர் தேவைப்பட்ட ஒரு வேலைக்கு ஏஐயைப் பயன்படுத்தினால் பத்து பேரே போதும் என்று ஆகி விட்டது நிலைமை.

ஒரு லட்சம் வரை செலவழித்துப் பார்த்த வேலையை ஏஐயைக் கொண்டு பத்தாயிரத்தில் முடித்து விடலாம்.

இன்னும் பழைய பெருமை பேசிக்கொண்டு, புதுசாக எதையும் கற்காமல் இருந்தால் அவர்களுக்கு எல்லாம் ஏஐ ஆப்பைத் அதாவது ஆப் அல்ல, நிஜமான ஆப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

பிபிஓ, கஸ்டமர் சப்போர்ட், டிக்கெட் சிஸ்டம் எல்லாம் இப்போது ஏஐயின் கையில். கோடிங் மற்றும் டேட்டா என்டரி பக்கம் இனிமேல் ஆட்களே தேவைப்பட மாட்டார்கள் போலிருக்கிறது.

நிதி ஆயோக் ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறது. 2031 இல் டெக் துறையில் ஊழியர் எண்ணிக்கை 80 லட்சத்திலிருந்து 60 லட்சமாகக் குறையுமாம். இந்த அறிக்கை குறிப்பிடும் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், இது அதிகமாகவே இருக்கும் என்று பீதியைக் கிளப்புகிளார்கள் டெக் துறையில் பழம் தின்று கொட்டைப் போட்ட கோட்டைவான்கள்.

பல மாதங்கள் கஷ்டப்பட்டு ஐடி நிறுவனங்கள் உருவாக்கும் ரிப்போர்ட்டை ஏஐ பதினைந்து நிமிடங்களில் பக்காவாகக் கொடுக்கிறது.

விசயம் இதுதான்.

ஏஐ என்பது ஒரு தீராத பசி கொண்ட பூதம். அது நிமிடத்துக்கு நிமிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் டிகிரி முடித்துவிட்டேன், எனக்கு எல்லாம் தெரியும், எப்போது வேலை தரப் போகிறீர்கள் என்று உட்கார்ந்திருந்தால், ஏஐ வந்து கோவணம் வரை உருவி விட்டுப் போய் விடும்.

அடிப்படை அறிவு என்பது எழுதுதல், படித்தல், கணக்கிடுதல் என்பதோடு ஏஐ அடிப்படைகளை அறிந்திருத்தல் என்பதாகத்தான் இருக்கும். இனி ஏஐ காலத்தின் கட்டாயம். இல்லையென்றால், எல்லாவற்றுக்கும் ஏஐ என்ட் கார்டு போட்டு ஒரு கோடிங் எழுதி விடும். எனவே அப்டேட் ஆகா விட்டால் அவுட்தான்.

*****

11 May 2026

மௌனத்தின் மர்மமும் மற்றவர்களின் நல்ல எண்ணங்களும்!

மௌனத்தின் மர்மமும் மற்றவர்களின் நல்ல எண்ணங்களும்!

வாழ்க்கை எனக்கு மட்டும் ஏன் இப்படிப் போகிறது? – இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு தேசிய கீதம்.

இந்தக் கேள்வி எழாத நாளில்லை, இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்ததாகச் சரித்திரமுமில்லை.

இப்போது நாம் இங்கே பேசப் போவது இந்தக் கேள்வியின் மையத்தை அல்ல,  இந்தக் கேள்வியை நீங்கள் வெளியில் சொல்லக் கூடாது என்கிற பரம ரகசியத்தைதான். உங்களை அடித்துக் கேட்டாலும் கூட, ஆள் வைத்து மிரட்டிக் கேட்டாலும் கூட சொல்லி விடக் கூடாது.

உங்களுக்கு ஒரு கஷ்டம் என்று தெரிந்தால், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஓடி வருவார்கள். அது உங்கள் காயத்துக்கு மருந்து போட அல்ல, அந்தக் காயம் எவ்வளவு ஆழமானது என்பதை அளந்து பார்த்துவிட்டு, தங்களுக்கு அது இல்லை என்று நிம்மதி அடைவதற்காக.

நீங்கள், என் வாழ்க்கை ஏன் இப்படிப் போகிறது? என்று சொன்னால் போதும், அவர்கள் உடனே தங்கள் பையிலிருந்து ஆறுதல் என்ற பெயரில் சில விஷக் குளிகைகளை எடுப்பார்கள்.

இதெல்லாம் என்னப்பா பிரமாதம்? பக்கத்துத் தெரு பரமசிவத்துக்குக் காலைக் கடன் கழிக்கவே கடன் வாங்க வேண்டியிருக்கு தெரியுமா? என்பார்கள்.

உங்கள் துயரத்தைவிடப் பெரிய துயரத்தை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி, உங்கள் வலியை அவர்கள் அற்பமானதாக மாற்றிவிடுவார்கள்.

நீங்கள் உங்கள் குழப்பத்தைச் சொன்னால், அவர்கள் அதைத் தீர்க்க மாட்டார்கள். மாறாக, நீங்கள் இதுவரை யோசிக்காத சில புதுப் புதுத் துன்பங்களை அறிமுகப்படுத்துவார்கள்.

நீ ஏன் இது இப்படிப் போகிறது என்று கேட்கிறாய். ஆனால், உண்மை என்னவென்றால், இது இன்னும் மோசமாப் போக வாய்ப்பிருக்கிறது என்று பேதியைக் கிளப்புவதைப் போலப் பீதியைக் கிளப்புவார்கள். உங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை ஒரு திகில் சினிமாவாக மாற்றி உங்கள் கையில் கொடுப்பார்கள்.

இறுதியில், உங்கள் வாழ்க்கை போவதைப் பற்றி வருத்தப்பட்ட நீங்கள், வாழ்க்கை ஏன் இன்னும் போகாமல் இங்கேயே நிற்கிறது? என்று வருத்தப்பட ஆரம்பிப்பீர்கள்.

வாழ்க்கை ஏன் எனக்கு மட்டும் இப்படிப் போகிறது என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. அது கடவுளுக்கே தெரியாத ரகசியம். ஏனெனில் அவர்தான் அந்தத் திரைக்கதையை எழுதிவிட்டு, இடையில் தூங்கிப் போனவர்.

எனவே, இந்தக் கேள்வியை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். நீங்கள் மௌனமாக இருக்கும் வரை, மற்றவர்கள் நீங்கள் ஏதோ ஒரு பெரிய மிஷன் அல்லது தியானத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

நீங்கள் வாயைத் திறந்து ஏன் இப்படி? என்று கேட்ட அடுத்த நிமிடம், உங்கள் மீதான மதிப்பு குறைந்து, நீங்கள் ஒரு பாவப்பட்ட ஜீவன் என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்.

விசயம் இதுதான்.

உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது என்பது முக்கியமல்ல, அது போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்.

நதி ஓடுகிறது என்றால் அது இயற்கை. ரயில் ஓடுகிறது என்றால் அது போக்குவரத்து. வாழ்க்கை ஓடுகிறது என்றால் ஓடி விட்டுப் போகட்டுமே. அது தலைவிதி.

அதை ஏன், எதற்கு என்று கேட்டால், இவனுக்கு ஒன்றும் தெரியவில்லை, என்று நினைத்து உலகம் உங்களைத் துரத்த ஆரம்பிக்கும்.

இனிமேல், வாழ்க்கை ஏன் இப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றினால், ஒரு கண்ணாடி முன்னால் நின்று அந்தக் கேள்வியைக் கேளுங்கள். கண்ணாடி பதில் சொல்லாது, ஆனால் அங்கே நிற்கும் ஆள், நானும் உன்னோடுதான் இருக்கிறேன், என்று ஒரு போலிச் சிரிப்பைச் சிரிப்பார் பாருங்கள். அது போதும்.

அதை விட்டுவிட்டு அடுத்தவரிடம் சொன்னால், உங்கள் வாழ்க்கைப் படகு ஓட்டையாக இருப்பதை ஊருக்கே தம்பட்டம் அடித்து, அதில் இன்னும் கொஞ்சம் தண்ணீரையும் மொண்டு ஊற்றி விட்டுப் போவார்கள்.

மௌனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கை எப்படிப் போனாலும், அது உங்களுடையது மட்டுமே!

இது போன்ற நிறைய கட்டுரைகள் எழுத ஆசை. ஆனால், அது உங்களது தயவின்றி முடியாது.  கொஞ்சம் ஷேர் பண்ணி விட்டு மற்றவர்களை ஒரு வழி பண்ணி விடுங்கள்.

*****

10 May 2026

இழுத்துப் பார்த்தல் எனும் இருத்தலியல் தாகம்!

இழுத்துப் பார்த்தல் எனும் இருத்தலியல் தாகம்!

மனிதன் ஒரு வினோதமான பிராணி. கடவுள் இருக்கிறாரா என்று கேட்பதை விட, பூட்டு பூட்டியிருக்கிறதா? என்று கேட்பதில்தான் அவனது ஒட்டுமொத்த ஆன்மாவும் அடங்கியிருக்கிறது.

ஒரு முறை பூட்டைப் பூட்டுவது செயல். அதை இரண்டு முறை இழுத்துப் பார்ப்பது தரிசனம்.

பூட்டுக்கும் சாவிக்கும் இடையிலான உறவு என்பது ஒரு ரகசிய உடன்படிக்கை.  சாவியாகி நீ திரும்பினால் நான் பிடித்துக்கொள்வேன் என்பது பூட்டின் வாக்குறுதி. ஆனால், மனித மனம் அந்த வாக்குறுதியை நம்புவதில்லை.

பூட்டிய பூட்டை ஒரு முறை இழுக்கும்போது பூட்டு உறுதியாக இருப்பதை உணர்கிறோம். இரண்டாவது முறை இழுக்கும் போதுதான் அந்த உறுதி உண்மை என்று நம்புகிறோம்.

இது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு மட்டுமல்ல, மாறாக, செய்த காரியம் பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடந்திருக்கிறதா? என்பதை உறுதி செய்யும் ஒரு உளவியல் பூர்வமான சடங்கு.

நமக்கு பூட்டு பூட்டப்பட்டிருப்பது மட்டும் முக்கியமல்ல. பூட்டும் போது அந்த கிளிக் சத்தம் நம் மூளையில் ஏற்படுத்தும் அதிர்வுதான் முக்கியம்.

முதல் முறை இழுக்கும்போது பூட்டு அசையாமல் இருந்தால், நமக்குத் திருப்தி வருவதில்லை. ஆம் முதல் முறை ஒரு பூட்டை இழுத்துப் பார்ப்பது என்பது, அந்தப் பூட்டுக்கு நாம் அளிக்கும் ஒரு சிறிய முத்தம் போன்றது. அது வலியற்றது, ஆனால் வழுவானது.

அந்த இரண்டாம் முறை இழுத்துப் பார்ப்பதுதான் முக்கியமானது. ஏன் அந்த இரண்டாம் முறை என்றால், முதல் இழுவை என்பது உடலுக்கானது. அதாவது, பூட்டியாச்சா? என்பதற்கு ஒரு பிசிக்கலான பதில். இரண்டாவது இழுவை என்பது மனதுக்கானது. நிச்சயமாகப் பூட்டியாச்சா? என்பதற்கு ஒரு சைக்காலஜிகல் பதில்.

மூன்றாவது முறை இழுவையும் உண்டென்றால், நிச்சயம் நீங்கள் OCD கேஸ். அதாவது நாகரிகமாகச் சொன்னால், அதீத ஜாக்கிரதை உணர்வு கொண்ட முத்தண்ணா. சைக்காலஜிக்கலாகச் சொன்னால் அப்செசிவ் கம்பள்சி டிஸ்ஆர்டர்.

அதுவே நான்காவது, ஐந்தாவது முறை என்று இழுவைகள் நீண்டால், அவர்கள் பூட்டை மட்டுமல்ல, கதவின் சட்டத்தையும் சேர்த்துப் பிடுங்கப் பார்ப்பார்கள். அவர்கள் நம்பிக்கையைத் தாண்டிய ஒரு புனிதமான பதற்றத்தில் இருப்பவர்கள்.

பூட்டுதலும் அதை இருமுறை இழுத்துப் பார்த்தலும் ஒரு தத்துவமே! உண்மையில், நாம் பூட்டை இழுத்துப் பார்ப்பதில்லை. நம்முடைய பயத்தை இழுத்துப் பார்க்கிறோம்.

பூட்டு திறந்திருந்தால் என்னவாகும்? யாராவது திருடிவிடுவார்கள். திருடுவதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்றால், அங்கேயும் ட்விஸ்ட் இருக்கிறது.  அந்த ஒன்றுமில்லாததை எவரும் எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகக் கூட நீங்கள் ஒருமுறைப் பூட்டி இரண்டு முறை இழுத்துப் பார்க்கலாம்.

எனவே, அடுத்த முறை நீங்கள் பூட்டை இரு முறை இழுத்துப் பார்க்கும்போது கூச்சப்படாதீர்கள். நீங்கள் ஒரு பூட்டைச் சோதிக்கவில்லை, இந்தப் பிரபஞ்சத்தின் நிலையற்ற தன்மையை ஒரு நொடி நிலைநிறுத்தப் போராடுகிறீர்கள்!

*****