19 Sept 2026

குறள் கூறும் ரசாயன மாற்றம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 41

குறள் கூறும் ரசாயன மாற்றம்!

அது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அலுவலகம். மதியம் இரண்டு மணி. அறை முழுவதும் கணினித் திரையின் வெளிச்சம்.

அவன் தனது அறையில் அமர்ந்து விசைப்பலகையை விசையோடு இயக்கிக் கொண்டிருந்தான் அல்லது வேலைப்பளு தாளாமல் நசுக்கிக்கொண்டிருந்தான். குளிர்சாதன இயந்திரத்தின் சத்தம் மட்டுமே பின்னணியில் ரீங்காரமிட்டது.

அப்போது, கோப்புடன் அவன் மேஜைக்கருகில் வந்து நின்றாள் அவள். நிறுவனத்தின் புதிய செயல்திட்டம். அவளது கண்கள் லேசான சோர்விலும் ஒரு கூர்மையான கவனத்தோடு இருந்தன.

"இந்த டேட்டாவை முடிக்க எவ்வளவு நேரமாகும்?" என்று கேட்டாள். அவள் குரல். எப்போதும் அது ஒரு மெல்லிய கிசுகிசுப்பு போலவும், அதே நேரம் துல்லியமாகவும் இருக்கும். அந்தப் பணிவான குரல், அவனின் காதுகளில் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை நிகழ்த்தியது.

அவன் நிமிர்ந்து பார்த்தான்.

அவள் லேசாகப் புன்னகைத்தாள். அப்போது அவளது உதடுகள் விலகிய அந்த விநாடியில், உள்ளே பளிச்சென்று மின்னிய வெள்ளை வெளேர் பற்களின் ஓரத்தில், அந்த நளினமான புன்னகையின் ஈரப்பசை மின்னியது.

அது வெறும் புன்னகை அல்ல.

திருக்குறள் ஞாபகத்திற்கு வந்தது அவனுக்கு.

"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்."                              (குறள், 1121)

பால். அதில் கலந்த தூய தேன். அதோடு அந்த வெண்மையான பற்களின் இடையே சுரந்த அந்தத் துளி நீர். திருவள்ளுவர் எதைச் சொன்னார் என்று அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. அது ஓர் அறிவியல் ரீதியான காவிய ரசாயனம்.

அவளது அந்தப் பணிவான குரலும், அவளது வெண்பற்களுக்கு இடையே ஊறி வெளிப்பட்ட அந்தச் சொற்களும் அவனுக்குள் ஒரு சுகமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தின. கணினித் திரையின் நீல வெளிச்சத்தில், அவள் முகத்தில் படும் லேசான வெளிச்சம் ஒரு கவிதை போலிருந்தது.

"ஹலோ மிஸ்டர்? கேட்டீங்களா?" அவள் மீண்டும் அதே மெல்லிய குரலில் அவன் கவனத்தைக் கலைத்தாள்.

அவள் உதட்டோரம் தளும்பிய அந்தச் சின்னத் துளி நீரின் மினுமினுப்பு, அவனுடைய மூளையில் இருந்த மொத்த எண்களின் குழப்பங்களையும், தர்க்கங்களின் முடிச்சுகளையும் நொடியில் அழித்துவிட்டது.

வள்ளுவர் அன்று சொன்னது எவ்வளவு நிஜம்! வாழ்க்கையின் அத்தனை கசப்புகளையும், டென்ஷன்களையும் இந்தச் சிறிய புன்னகையும் பேச்சும் அடித்துச் சென்றுவிடுகிறது.

அவன் லேசாகத் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னான், "ம். பத்து நிமிஷம். முடிச்சிடுறேன். ஆனா…"

"ஆனா, அப்புறம் என்ன தயக்கம்?" என்றாள் அவள், புருவத்தை உயர்த்தி.

அவன் புன்னகைத்தான். "ஒன்னுமில்ல. உங்ககிட்ட பேசினா மட்டும் அந்தப் ப்ரோக்ராமிங் எரர் மாதிரி, மனசுல இருக்கிற எல்லா எரரும் சடனா கிளியர் ஆயிடுது" என்றான்.

அவள் இதழோரம் லேசான வெட்கத்துடன் சிரித்தாள். "எப்படியோ கிளியர் ஆனா சரிதான்!" அவள் மீண்டும் ஒருமுறை லேசாகப் புன்னகைத்துவிட்டுத் திரும்பினாள்.

அந்த மேஜையை விட்டு அவள் நகர்ந்தாலும், அந்த குளிரூட்டப்பட் அறையின் காற்றில் இன்னும் எங்கோ அந்தப் பாலும் தேனும் கலந்து கொண்டிருந்தது போல ஒரு மாயம் மிஞ்சியிருந்தது அவனுக்கு. அவளது பணிவான பேச்சும், அந்தத் தேன் போன்ற புன்னகையும் அவன் சோர்வையும் குழப்பதையும் நீக்கி மீண்டும் துடிப்பாக்கின.

பத்தே நிமிடத்தில் அந்தப் புதிய செயல்திட்டத்தின் அத்தனை சிடுக்குகளையும் அவன் விடுவிக்க, அவன் உற்சாகமாக வேலை பார்ப்பதை, கண்காணிப்பு அறையில் ஒளிர்ந்த திரையில் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

18 Sept 2026

வாழ்க்கைப் புத்தகத்தின் நொடிப்பிழை

வாழ்க்கைப் புத்தகத்தின் நொடிப்பிழை

மறந்து போயிருந்த அந்த வார்த்தை

அந்த நேரத்தில்

நினைவுக்கு வராமல் போயிருக்கலாம்

கோடைக்கால நினைவுகளில்

வறண்டு போயிருந்த

கண்ணின் மழைக்காலத் துளி

அந்நேரம் விழாமல் இருந்திருக்கலாம்

டிஸ்ப்ளே போன செல்

அந்த நேரம் மட்டும் விழித்துக் கொண்டு

அக்காட்சியைக் காட்டாது இருந்திருக்கலாம்

எல்லாம் நிகழ்ந்தது அந்த ஒரு நொடி

ஒட்டுமொத்த வாழ்க்கையையும்

திருப்பிப் போடும்

அந்த ஒரு நொடி மட்டும்

இந்த வாழ்க்கையில் இல்லாதிருந்தால்

யாரும் யாரையும் பிரிந்திருக்க மாட்டார்கள்

தண்டவாளத்தில் ஓடும் வாழ்க்கை ரயில்

தடம்புரளும் என்பதை நம்பியிருக்க மாட்டார்கள்

அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில்

இனி பிழை திருத்த வழியில்லை என்பதைப் போல

ஒரு நொடிப் பிழையோடு

வாசிக்கப்படுவதாகிறது வாழ்க்கைப் புத்தகம்

*****

அனிச்சம், அன்னம் அப்புறம் அவளின் பாதம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 40

அனிச்சம், அன்னம் அப்புறம் அவளின் பாதம்!

அவன் மருத்துவர்.

அவள் பொறியாளர்.

அவர்களின் காதல் மருத்துவமும் பொறியியலும் கலந்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங் மிராக்கிள் போல இருந்தது.

மருத்துவமனையின் குளிர்பதன அறையில், அவன் அவளது வலது காலை மென்மையாகத் தன் கைகளில் ஏந்தியிருந்தான்.

வலியில் அவள் முகம் சுளிக்க, அவன் கட்டைவிரலால் அவளது குதிகாலில் லேசாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் இப்போது காதலை விட, ஒரு செல்லக் கோபம் கலந்திருந்தது.

"சொன்னதைக் கேட்டாயா? நீ வேலை பார்க்கிற விதம் இருக்கே, அனிச்சம் பூ மாதிரி இருக்க வேண்டிய உன் பாதம், இப்போ அப்படியே நெருஞ்சிப் பழம் மாதிரி மாறிடுச்சு!" என்றான் அவன், குரலில் பாசம் வழிய.

அவள் சப்பாணி கொட்டினாள். "போதும் நிறுத்துங்க! இங்க கால் வலி உயிர் போகுது. இதுல வந்து எனக்கு குறள் கிளாஸ் எடுக்கறீங்க. நான் என்ன வேணும்ன்னா இப்படிச் செய்துகிட்டேன்? ப்ராஜக்ட் டென்ஷன், மீட்டிங், ராத்திரி வரைக்கும் ஆர்கிடெக்ட் ஸ்டாண்ட் அப் டெஸ்க்ல நின்னுகிட்டே டிசைன் பண்ணா இப்படித்தான் நடக்கும்."

அவன் அவளது காலைக் கீழே இறக்கிவிடாமல், இன்னும் கொஞ்சம் ஆதரவாகப் பிடித்துக்கொண்டான்.

"அது எனக்குப் புரியுது செல்லம். ஆனா உன்னை நினைச்சாதான் பயமா இருக்கு. அந்த காலத்துல வள்ளுவர் என்ன அழகா எழுதியிருக்காரு பாரு.

''அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.''                      (குறள், 1120)

அப்படின்னு. அதாவது, அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் எவ்வளவு மென்மையானதோ, அதை விட மென்மையானது உன்னோட பாதங்கள். ஆனா நீ என்ன பண்ணியிருக்க? உன் பாதத்தை நீயே இந்த டேபிள் ஒர்க்கால கல்லு மாதிரி மாத்திக்கிட்ட."

அவளது முகம் சுருங்கியது. கோபமாகப் பேச முயன்றவள், அவன் கண்களில் தெரிந்த உண்மையான அக்கறையைப் பார்த்ததும், அந்தச் கோபம் சலசலவென்று கரைந்துபோக, "இப்போ நான் என்னதான் பண்ணனும் டாக்டர் சார்?" என்று செல்லமாகச் சிணுங்கினாள் அவள்.

அவன் தன் ஸ்டெத்தாஸ்கோப்பைக் கழட்டி மேஜை மீது வைத்தான். புன்னகையுடன் அவளுக்கு அருகில் வந்து நின்றான்.

"மூன்று விஷயங்கள் இன்ஜினியர் மேடம். ஒண்ணு, நீங்க ரொம்பப் பிரியப்படுகிற அந்த ஹை ஹீல்ஸ் செருப்புக்கு இனிமே கும்பிடு போட்டுடுங்க. ரெண்டு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில அந்த ஸ்டாண்டிங் டெஸ்க் ஆர்கிடெக்ட் டிசைன் டிராயிங்குக்கு ஒரு குட்பை சொல்லிட்டு, ஒரு ரெண்டு நிமிஷம் கொஞ்சம் நாற்காலியில உட்காருங்க. மூணு, சாயுங்காலம் அஞ்சு மணி ஆயிட்டா, டான்னு இங்க கண் முன்னால வந்து எங்கிட்டெ கொஞ்சம் தெரபி எடுத்துக்குங்க. சரியா?"

அவள் மெலிதாகச் சிரித்தாள். "சரி! உங்க ஆர்டரை மீற மாட்டேன்."

"சமத்துப் பொண்ணு!" என்றபடி தன் மேஜை டிராயரைத் திறந்த அவன், ஓர் அழகிய பிளாட் சாண்டலை வெளியே எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவள் ஆச்சரியமாக அதைப் பார்த்தாள். "இது என்ன?"

"உனக்காக நேத்தே வாங்குனது. எங்க இன்ஜினியர் இனிமே பூ மாதிரி நடக்கணுமே!"

அவள் அந்தச் செருப்பை வாங்கிக்கொண்டு, "அப்போ என் பாதங்கள் ரொம்ப சாப்ட்னு சொல்ல வர்றீங்க. அப்படித்தானே?"

"நிச்சயமாக. பயாலஜிக்கலா யோசிச்சா. மனித தோலின் டென்சிட்டி, குறிப்பா பாதத்தோட சோல் பகுதி எப்பவுமே அழுத்தம் தாங்கும். ஆனா உன்னோடது..." அவன் பேச்சை முடிப்பதற்குள், அவள் சட்டென்று அவன் காலில் லேசாக மிதித்துவிட்டு ஓடினாள்.

"ஹே! என்ன பண்ற?"

அவள் திரும்பி நின்று, நமுட்டுச் சிரிப்புடன் சொன்னாள், "நீங்கதானே சொன்னீங்க. என் பாதம் அவ்வளவு சாப்ட்ன்னு. சும்மா ஒரு டெஸ்ட் ட்ரை பண்ணிப் பார்த்தேன். வலிக்குதுதானே?"

அவன் தன் கால்களைத் தேய்த்துக் கொண்டே சிரித்தான். அது வலிக்கவில்லை. மாறாக, சிலிர்த்தது. ''ஓ! இதுதான் வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கிறதா?''

''இல்ல. கற்றுக் கொடுத்த குருகிட்டேயே வித்தையைக் காட்டுறது.''

''நாளைக்கு அஞ்சு மணிக்கு மறந்திடாதீங்க இன்ஜினியர் மேடம்!''

''கண்டிப்பா டாக்டர் சார்! மிதி வாங்க தயாரா இருங்க!''

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

17 Sept 2026

காலம் உறைந்த கடிகாரம்

பறக்கும் பச்சை

பசுமரங்கள் அனுப்பிய

பச்சை

பறந்து கொண்டிருக்கின்றன

பச்சைக்

கிளிகளாய்…

*****

தத்ரூபம்

ஆயிரம்

லட்சம்

கோடி

பில்லியன்

பிக்சல்களில்

சிக்காத தத்ரூபம்

கருப்பு வெள்ளை

புகைப்படத்தில்

முறுவலிக்கும்

பாட்டியின் புன்னகைக்கு

*****

காலம் உறைந்த கடிகாரம்

கறையான் அரித்த

எஞ்சிய புத்தகத்தைக் காட்டுவதைப் போல

உறைய வைத்த காலத்தைக் காட்டியபடி

ஏதோ ஒரு காலத்தில்

இனி எதற்கும் உதவாது என்று

எடுத்துப் போடப்பட்ட

பழுதான கடிகாரம்

பழைய பெட்டியொன்றின்

மூலையில் கிடக்கிறது

இனி நேரம் பார்க்க

ஆளிருக்க மாட்டார்கள் என்றாலும்

நாளுக்கு இரு முறை

சரியான நேரம் காட்டும்

அக்கடிகாரத்திற்குத் தெரியும்

அப்பா சொன்ன ஒற்றை வார்த்தையால்

மாரடைப்பால் உயிர் பிரிந்த

அம்மையின் கரங்களிலிருந்து

நழுவி விழுந்து

பழுதான அந்த நேரம்

*****

ஏய் நிலா ஓரம் போ!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 39

ஏய் நிலா ஓரம் போ!

அதிகாலை மணி 5.45.

திருவாரூர், செம்மொழிப் பூங்கா.

புல்வெளி விரித்த பச்சைக் கம்பளத்தைச் சுற்றி அழகழகாக அலங்கரிக்கப்பட்ட ஓவியங்கள் போல வரிசை வரிசையாகப் பூச்செடிகள். ஆங்காங்கே ஏசி போட்டது போன்ற குளுமையைத் தாங்கி நிற்கும் நிழல் மரங்கள்.

நடைபயிற்சி செய்யவும், மெல்லோட்டம் ஓடவும், உடற்பயிற்சி செய்யவும், ஓகம் பயிலவும் ஏராளமான மனிதர்கள்.

மெல்லோட்டத்திற்கான உடையுடன் அவன், அவளை எதிர்பார்த்தபடி.

வழக்கமாக 5.30க்கு வந்து விடுபவள், இன்று சற்றுத் தாமதம்.

அவன் வானத்தைப் பார்த்தான். அதே அல்பத்தனமான வேலை. இன்னும் முழுமையாக மறையாத நிலவு, வெளுத்துக்கொண்டிருக்கும் நீல வானத்தில் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டிருந்தது.

அப்போது செக்கச் சிவந்த டீசர்ட், கருநீல நிற டிரக்சூட், காற்றில் பறக்கும் முடிகள், கழுத்தில் மெல்லிய சில்வர் செயினுடன் தட் தட் என்ற மெல்லோட்டத்திற்கே உரிய மூடுகாலணியின் சத்தத்துடன் அவளது குரல் கேட்டது. "ரொம்ப நேரமாச்சா? இன்னிக்கு இந்தப் பூங்காவைச் சுற்றி பத்துச் சுற்று. ஆரம்பிக்கலாமா? "

அவள் நெற்றியில் அவசர அவசரமாகக் கிளம்பி, வேகமாக ஓடி வந்ததன் வியர்வைத் துளிகள். கலைந்த தலைமுடி. லேசான தூக்கக் கலக்கம். ஆனால், முகத்தில் ஓர் இயல்பான பிரகாசம்.

அவன் பதிலேதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் திரும்பிப் பார்த்துவிட்டுச் சிரித்தாள். "என்ன விசித்திரப் பார்வை? முகத்துல பதில் ஏதும் சொல்லக் கூடாதுன்னு எழுதி ஒட்டியிருக்கா? இப்படி உம்முன்னு பார்த்தா என்ன அர்த்தம்?"

அவன் அவளை அருகில் இழுத்து, வானத்தைக் காட்டினான். "அங்க பாரு! அதிகாலை நேரத்துல வந்து மாட்டிக்கிட்டு முழிக்குது பாரு நிலா."

அவள் புரியாமல் புருவத்தை உயர்த்தினாள். "ஆமா, மார்னிங் மூன். அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கென்னவா?" அவன் இப்போது தீவிரமாகப் பேசத் தொடங்கினான்:

"இந்த அதிகாலை நிலவுக்கு ஒரு செம ஓவர் கான்பிடன்ஸ். ராத்திரி பூரா பவளமா ஜொலிச்சுட்டு, விடியற்காலைல இவளோட முகம் எப்படி இருக்குன்னு ஒரு தடவை பாக்கணும். பேசாம உள்ளே போயிடணும். ஆனா, இது என்ன பண்ணுது? பகல்லயும் வந்து நின்னுட்டு நான்தான் ஒரிஜினல் அழகின்னு சலம்பிட்டு இருக்கு."

அவள் லேசாகச் சிவந்து சிரித்தாள். "உனக்கு எப்போ பாத்தாலும் ரொமான்டிக் பஞ்ச்தானா?"

"இல்ல. வள்ளுவர் அப்பவே சொல்லிட்டார்.

"மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி."                    (குறள், 1119)

அப்படின்னு. மலர் மாதிரி இருக்கிற என் கண்ணழகி முகத்துக்கு முன்னாடி, இந்த நிலவு தோத்துப்போகும். அதான் அதுகிட்ட சொல்லிட்டு இருக்கேன். ஏய் நிலா, பல பேர் பார்க்கிற நேரத்துல, அதுவும் இப்படி பகல் வெளுத்த நேரத்துல வந்து நிக்காதே. உன் மேல இருக்கிற கறுப்புத் தழும்பு இவ மூஞ்சியோட கம்பேர் பண்ணும்போது அசிங்கமாத் தெரியுதுன்னு!"

அவள் அவன் கையைத் தட்டியபடியே செல்லமாகச் சொன்னாள். "போதும். ஜாக்கிங் முடிச்சு ஆபீஸ்க்கு  வேற கிளம்பணும். இப்பவே நேரமாச்சு, சீக்கிரமா கிளம்பு."

இருவரும் செம்மொழிப் பூங்காவைச் சுற்றி முதல் சுற்றை மெதுவாக ஓடத் துவங்கினார்கள்.

"என்னடா நீ? நேரமாச்சுன்னு நான் பரபரப்பா வந்தா, நீ காத்து வாங்கிட்டுக் கவிதை யோசிச்சிட்டு இருக்கே. ஆறே காலுக்குள்ள முடிச்சிட்டுக் கிளம்புனாத்தான் எல்லாத்துக்கும் நேரம் சரியா இருக்கும். இன்னிக்கு ஜாக்கிங்க, ரன்னிங்கா அப்கிரேட் பண்ணுவோமா?"

அவளை நெருங்கியபடி மெல்லோட்டாய் ஓடிக் கொண்டிருந்தவன் ஒரு கணம் நின்றான்.

அவளும் நின்றாள். ஏன் இப்படி இவன் இன்று விசித்திரமாக ஏதேதோ பேசுகிறான், பண்ணுகிறான் என்று அவள் லேசாகச் சிரித்தாள். அந்த அதிகாலை ஒளிவெளியில் அவளது கண்கள் மலர்களைப் போல விரிந்தன. "என்னடா இது? எது கேட்டாலும்  ரொம்ப யோசிக்கிறே. மூளையில ஏதோ சாப்ட்வேர் பக் மாதிரி முகத்துல ஒரு கன்பியூஷன்? என்னதான் பிரச்சனை உனக்கு?"

"இப்போ வானத்தைப் பாரேன்!"

"மறுபடியும் வள்ளுவர், கவிதைன்னு ஆரம்பிக்கப் போறீயா?"

"உன் முகத்தோட போட்டிப் போட முடியாம, நிலவு ஓடிப் போயிட்டுப் பாரு!"

"டேய் அது மூன்செட்றா!" என்றபடி அவள், அவன் மேலும் பேசுவதற்குள் தன் கைகளால் அவனது வாயைப் பொத்தினாள்.

அவளது கையை மெல்ல விலக்கியவன், அவளது விழிகளைப் பார்த்தான். செம்மொழிப் பூங்காவை அவளோடு பத்துச் சுற்று என்ன? நூறு சுற்று சுற்றுவதற்கான உற்சாகமும் ஆற்றலும் அவனுக்குள் பிரவகித்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

16 Sept 2026

தேனாறும் பாலாறும் ஓட....

புத்தகக் கண்காட்சிக்கு வந்தும் புத்தகங்களை வாங்குவதை விட பஜ்ஜி, போன்டா, சமோசா, பப்ஸ், பர்க்கர் என வாங்குபவர்களைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

அறிவுப்பசியை எப்போதும் வயிற்றுப் பசி ஜெயித்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அத்துடன்,

“பசிக்கு உணவில்லாத போது சிறிது

படிப்புக்கும் ஈயப் படும்”

குறளை மாற்றி எழுதவும் தோன்றுகிறது.

*****

ஆன்லைன், கிண்டில், பிடிஎப், ஆப் என்று எவ்வளவோ வந்துவிட்ட பிறகும், இன்னும் புத்தகக் கண்காட்சி என்பது தேவையா?

ஓடிடி வந்த பிறகு திரையரங்கங்கள் இல்லையா! ஸ்விக்கி, சொமாட்டோ வந்த பிறகும் வீட்டில் சமைப்பது இல்லையா! ஆன்லைனில் ஆயிரம் படிப்புகள் வந்தாலும் பள்ளிக்கூடம் சென்ற படிக்கவில்லையா! எத்தனை பாராசிட்டாமல்கள் வந்தாலும் நிலவேம்புக் குடிநீர் இல்லையா! ஆயிரம் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தாலும் இன்னும் அக்கம் பக்கத்துக் கதைகளைப் புரளி பேசுவது இல்லையா! ஆக, எவ்வளவு வந்தாலும், செல்பி எடுப்பதற்காகவே புத்தகங்கள் வாங்கினாலும் சரி, வாங்கி வைத்த புத்தகங்களைப் படிக்காமல் வீட்டில் அடுக்கி வைத்து ஆன்லைனில் படித்தாலும் சரி, இந்த ஆண்டு பத்து புத்தங்களாகவது படிப்பேன் என்று சபதம் எடுத்து அது நிறைவேறாமல் போனாலும் சரி, புத்தகக் கண்காட்சி என்பது எல்லா காலத்துககும் தேவைதான்.

*****

கத்திரிக்கோல் எத்தனையாவது வகை நெம்புகோல் தெரியுமா?

அரசியல் ஆதாரப்புள்ளி மையத்தில் இருந்தால் அது சென்சார் போர்டின் முதல் வகை நெம்புகோல். மற்றபடி, அது இயல்பாகவே முதல் வகை நெம்புகோல்தான் என்பதை அறியும் போது அது அறிவியல் அதிசயமாகத் தெரிகிறதா அல்லது அரசியல் அதிசயமாகத் தெரிகிறது என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுவதுதான் நல்லது இல்லையா?

*****

இன்னும் எத்தனைத் தேர்தலில்தான் ஓட்டுக்கு ஐநூறு, ஆயிரம் என்றே கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் அப்டேட் ஆகவே மாட்டார்களா?

விரைவில் ஐநூறு டாலர், ஆயிரம் டாலர் என்று அப்டேட் ஆகி, வெகுவிரைவிலேயே ஐநூறு பிட்காய்ன், ஆயிரம் பிட்காய்ன் என்று அப்டேட் ஆகியே தீருவார்கள். இதில் ஒரு விசயம் பாருங்கள்! ஆம் நீங்கள் நினைப்பது சரிதான், பட்டுவாடா சுலபம் பாருங்கள்.

*****

தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓட என்ன செய்ய வேண்டும்?

அந்த அளவுக்குத் தமிழகத்தில் தேனையோ, பாலையோ உற்பத்தி செய்ய முடியாது என்பது முதல் விசயம். அப்படியே உற்பத்தி செய்தாலும் பாலாறு ஓடுவது கூட சாத்தியம், தேனாறு ஓடுவது சாத்தியமில்லை, ஏனென்றால் தேனின் பாகுத்தன்மை அதிகம் என்பதால் பாலைப் போல ஓட வாய்ப்பில்லை என்பது இரண்டாவது விசயம். ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய் விற்கும் தமிழகத்தில் பாலாறு ஓடினால் பாலின் நிலைமை என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டியிருப்பது மூன்றாவதுவிசயம். சரிதான் ஆகிற செலவு ஆகட்டும் என்று பாலாறை ஓட விட்டால், இங்கிருக்கும் ஆறுகளில் அடைத்திருக்கும் பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் பாலை ஓட விடுமா என்பது நான்காவது விசயம். இவை எல்லாவற்றையும் கடந்து பாலாறு ஓடினால் பால் விற்பனையாளர்களின் கதி அதோ கதியாகும் என்பது ஐந்தாவது விசயம். இப்போது ஐந்து விசயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள், தமிழத்தில் பாலாறும் தேனாறும் ஓட வேண்டுமா, ஒழுங்காகக் காவிரியில் கர்நாடகம் தரும் தண்ணீர் ஓடினால் மட்டும் போதுமா என்று?

*****

நிலவுக்கு என்ன திமிர்?

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 38

நிலவுக்கு என்ன திமிர்?

அந்தப் பவளமல்லி மரத்து நிழலில் நின்றுகொண்டு அவள் வானத்து நிலவைப் பார்த்துச் சொன்னாள், "இதோட நிறம் என்ன தெரியுமா? சாம்பல். ஆனா பாரேன், சூரியன்கிட்ட கடன் வாங்குன வெளிச்சத்துல என்ன ஒரு பந்தா, நம்ம அரசியல்வாதிங்க மாதிரி!"

அவன் சிரித்தான். "ஏன் நிலவு மேல இத்தனை கோபம்?"

"கோபம் இல்ல. ஆதங்கம். என்னோட முகத்துல இருக்கிற இந்த ஒரிஜினல் எக்ஸ்பிரஷனை உன்னால இந்த நிலவுல பார்க்க முடியுமா? இது ஒரு டெட் பிளானட். அதுல காதலும் இல்ல, கலக்கமும் இல்ல. ஆனா, இந்த நிலவுக்குக் கவிஞர்கள் கொடுக்குற பில்டப் இருக்கே? ரொம்ப ஓவர்!"

அவன் புன்னகைத்துக் கொண்டே சொன்னான், "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? திருவள்ளுவர் எப்போவோ உன்னோட மனசைப் படிச்சுட்டார். அவர் சொல்றாரு, ஏய் நிலவே! உன்னால என் காதலியோட முகத்தை மாதிரி ஒளியைக் கொடுக்க முடியுமா? முடியலன்னா, உன்னோட காதலை விட்டுவிட்டு மரியாதையா ஒதுங்கிப் போ அப்படின்னு."

அவள் புருவத்தை உயர்த்தினாள், "வள்ளுவரே எனக்கு முன்னடியே இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறாரா?"

"சந்தேகமே வேண்டாம்! உன்னோட முகத்துல இருக்கிற பிரகாசம் வெறும் போட்டான் பார்ட்டிகிள்ஸ் இல்ல; அதுல எமோஷன்ஸ் இருக்கு. நிலவுல அது இருக்கா? நாசாவே அந்த நிலவுக்குப் போய் பார்த்துட்டு அங்க ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க."

அவள் அவன் தோளில் செல்லமாகத் தட்டினாள், "இன்றைக்கு எதையாவது சொல்லி உன்னை வம்புக்கு இழுக்கலாம்ன்னு பார்த்தா, நீயென்ன வள்ளுவரையும் அறிவியலையும் கொண்டு வந்து அசரடிக்கிறீயேடா!"

"விசயம் இருக்கு. அன்னைக்கு நீ முகத்துல என்ன க்ரீம் யூஸ் பண்ணுவன்னு கேட்டேனே. ஞாபகம் இருக்கா?"

"ம். அதுக்கு என்ன இப்போ திடீர்னு? நான்தான் க்ரீம்லாம் யூஸ் பண்றதில்லன்னு சொன்னேனே!"

"மேட்டரே அதுலதான் இருக்கு. இன்றைக்கு வானத்தைப் பாரேன் பௌர்ணமி நிலா. அது சூரியனோட வெளிச்சத்தைக் கிரீம் போல பூசிக்கிட்டுத்தான் இப்படி பந்தா பண்ணுது. நீ சொல்றாப்புல பில்டப் கொடுக்குது. அப்படிக் கொடுத்தாலும், அதால உன்னோட முகத்துக்கு ஈடு கொடுக்க முடியல பாரேன். திருவள்ளுவர் இங்க இருந்திருந்தா இப்போ அதைத்தான் சொல்லியிருப்பார்.

"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி."                                   (குறள், 1118)

அப்படின்னு!"

"போதும்டா. வள்ளுவரைக் கூப்பிட்டு வந்து என்னை வர்ணிக்கிறேன்னு, ஒரே அடியா என்னை ஒரு வழி பண்ணிடாதே!" என்று அவள் சொன்னாலும், அவள் முகத்தில் வழிந்த அந்தச் சின்ன வெட்கப் புன்னகை, அந்தப் பௌர்ணமி நிலாவை விட பல நூறு மடங்கு அதிகமாகவே ஒளிர்ந்தது.

அவர்களின் இந்த உரையாடலைக் கேட்டதாலோ என்னவோ, திடீரென்று வானத்தில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது!

நிலவு மெல்ல வானத்து மேகங்களுக்குள் இருந்து இறங்கி, அவர்களதுமுன்னே வந்து விட்டது. அதனிடமிருந்து ஒரு சன்னமான குரல் ஒலித்தது, "ஏய் மானிடர்களே! என்னை நீங்கள் ரொம்ப மட்டம் தட்டுவது எனக்குப் புரிகிறது. உலகமே என்னைப் புகழ்ந்து கவிதை பாடும் போது, நீங்களும் திருவள்ளுவரும் சேர்ந்து கொண்டு, என்னை என்னவோ கருவாட்டுக் கடை சரக்கைப் போல துச்சமாகப் பேசிக் கொண்டு இருக்கிறீர்களே?"

திடீரென்று இப்படி நிலவை அருகில் எதிர்பார்க்காத அவளுக்கு சற்று மயக்கம் கலந்த பயம் வந்து விட்டது.

ஆனால், அவன் சற்றும் அசரவில்லை. நிலவைப் பார்த்துப் பேசத் தொடங்கினான், "ஏய் நிலவே! உன்னை எல்லாரும் கொண்டாடுவது உண்மைதான். ஆனால், நீ மாதத்துக்கு பதினைந்து நாள் தேய்ந்துப் போயிடுற, நடுவுல மேகக் கூட்டம், அப்புறம் கிரகணம் எல்லாம் வந்து உன்னை முழுங்குது. உன்னால ஒரே மாதிரி எப்பவும் இவளோட முகம் மாதிரி ஒளிர முடியுமா? சரி அப்படி இப்படி ஏதோ கொஞ்சம்  மங்கலா தொங்கலா ஒளிர்றன்னு பார்த்தாலும், ஏ கடன்கார நிலவே! அது உன்னோடாதான்னா அதுவும் இல்ல, அது சூரியனோடது. ஆனா, இவளோட முகம், அந்த ஒளி எல்லாம் இவளோடது. யாருகிட்டேயும் கடன் வாங்கிட்டு வந்தது இல்ல தெரியுமா?"

நிலவு சற்றுத் தடுமாறியது. "இருந்தாலும், நான் விண்வெளியில் இருக்கிற பெரிய துணைக்கோளம்பா! என்னைப் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. என்னைப் போட்டு இப்படிக் கலாய்க்கலாமா?" என்று அது அழ ஆரம்பித்து விட்டது.

அவன் விடாப்பிடியாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னான், "அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் காதலிக்கு ஈடாக நீ ஒளிர வேண்டுமானால், முதலில் உன் முகத்தில் களங்கம் மாதிரி இருக்கின்ற அந்தத் தழும்புகளை லேசர் சிகிச்சை செய்து எடு. அதுக்கப்புறம் வந்து பேசு! திருவள்ளுவர் சொல்ற மாதிரி, மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி!"

அவ்வளவுதான்! அவனின் இந்த வெறித்தனமான பதிலைக் கண்டு பயந்துபோன நிலவு, சட்டென்று மேகத்திற்குள் ஓடி ஒளிந்துகொண்டது.

"பாவம்டா நிலா! அதைப் போய் இப்படி நோஸ் கட் பண்ணி ஓட விட்டுட்டீயே! அதோட மனசு என்ன பாடுபடும்?" அவள் முகம் வாடியது.

"இப்போ வாடுறப்போ கூட, உன்னோட முகத்தை அந்த நிலா பீட் பண்ண முடியலையே! " என்று அவன் சொல்ல, "ச்சீ! போடா!" என்று அவன் மார்பில் ஒரு குத்து விட்டாள். பின் என்ன நினைத்தாளோ அவன் மார்பை ஆரத் தழுவிக் கொண்டாள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****