23 Aug 2026

பார்வைக் கோளாறின் வரலாறு!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 14

பார்வைக் கோளாறின் வரலாறு!

திருவாரூர் தொடர்வண்டி நிலையம்.

மாலை நேரத்துக்கே உரிய பயங்கர கூட்டம்.

அவன் தன் ஐபோன் திரையை வெறித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் கவனம் முழுவதும் முதல் நடைமேடையில் நின்றிருந்த அந்த ஊதார நிற சுடிதார் மேல்தான். பெயர் தெரியாது. ஆனால் தினமும் மாலை 5:15 காரைக்கால் – திருச்சி பயணியர் தொடர்வண்டிக்காக இருவரும் ஒரே நடைமேடையில்.

அவன் மெல்ல தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.

டக் என்று,

அவள்

சட்டென்று,

தன் பார்வையை கீழே திருப்பிக் கொண்டாள். தரையில் கிடந்த ஏதோ ஒரு வீட்டுமனை விற்பனைக்கான விளம்பரத் தாளை அத்தனை தீவிரமாகப் பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

"சரி, நாம் பார்ப்பதைதை அவள் கவனிக்கவில்லை." என்று நினைத்து அவன் மீண்டும் வாட்ஸ்அப்பில் செய்தியொன்றைத் தட்டச்சு செய்யத் தொடங்கினான்.

அடுத்த பத்தாவது வினாடி.

அவன் குனிந்து போனைப் பார்க்கத் தொடங்கிய அந்த கணத்தில், அவள் மெல்ல தலையை உயர்த்தினாள். அவனது முகத்தை, அவன் தலைமுடியை, அவனது அந்தச் சிறிய புன்னகையை தீர்க்கமாகப் பார்த்தாள்.

உதட்டின் ஓரத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு. "லூசு, உன்னைத்தான் பார்க்கிறேன்!" என்பது போன்ற ஒரு மெல்லிய நாணம் கலந்த புன்னகை.

அவன் திரும்பவும் நிமிர்ந்தான்.

அவள் மீண்டும் தரையைப் பார்த்தாள். இப்போது அந்த விளம்பரத் தாள் காற்றில் எங்கோ பறந்து போயிருந்தது. தரையில் அங்காங்கே மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களைத் தீவிரமாக ரசித்துப் பார்ப்பது போல ஒரு பார்வைக்கு மாறியிருந்தாள்.

அவன் குனிந்தான்.

அவள் அவனைப் பார்த்தாள்.

இரண்டு பேருக்குமே தெரியும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று. ஆனால், நேருக்கு நேர் கண்கள் சந்தித்துக் கொள்ளும்போது மட்டும் அந்தக் காதலின் நோக்கு வர்மம் தாக்குதலுக்கு உள்ளாகி தவிடுபொடியாகி விடுகிறது!

இது ஒரு காலத்தால் அழியாத தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் காதலின் செவ்வியல் விளையாட்டு. இச்செவ்வியல் விளையாட்டின் விதிகள் இன்று வரை மாறவில்லை என்பதுதான் இதன் பின்னுள்ள ரகசியம் மற்றும் அதிசயம்.

ஆம்!

"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்."                     (குறள், 1094)

திருவள்ளுவர் காலம் முதல் இந்த 2000 வருடங்களில் ஐபோன் வந்தது, ஆன்ட்ராய்டு போன் வந்தது, 5ஜி வந்தது, ஏஐ வந்தது. ஆனால், பெண்களின் இந்தச் செவ்வியல் அகத்துறை விளையாட்டு மட்டும் மாறவே இல்லை!

தொடர்வண்டி வந்தது. அவள் ஏறினாள். அவனும் பின்னாலேயே ஏறினான். கூட்ட நெரிசலில் அவள் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நிற்க, அவன் இரண்டு அடி தள்ளி நின்றான்.

அவன் தன் ஐபோனை கால்சராயின் பையில் போட்டான். இம்முறை அவன் அவளைப் பார்க்கவில்லை. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தான்.

அவள் இவனையே பார்த்துக்கொண்டு, அதே குறும்புச் சிரிப்போடு மெல்ல சிரித்துக் கொண்டிருந்தாள்.

"அப்படியே நீ என்னைப் பார்த்துக் கொண்டிரு. நீ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் மனக்கண்ணில் பார்த்துக் கொள்கிறேன். நீ பார்ப்பதை நான் நிஜக் கண்ணால் பார்த்தால்தான், பிறந்ததிலிருந்து இதுவரை நிலத்தையே பார்க்காது போல நிலத்தை நோக்கி உன் பார்வையைத் திருப்பிக் கொள்வாயே!" என்று நினைத்தபடியே அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

22 Aug 2026

தலைகுனிதலின் தாவரவியல் தத்துவம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 13

தலைகுனிதலின் தாவரவியல் தத்துவம்!

மழைக்கால மாலை நேரம்.

திருவாரூர், தியாகராஜர் கல்லூரி நூலகத்தின் அமைதியான சூழல்.

வெளியே மழைத்துளிகளின் ஓசை. உள்ளே பழைய புத்தகங்களின் மணமும், மின்விசிறி சுழலும் மெல்லிய இரைச்சலும் மட்டுமே.

மூலை மேஜையில் அவன் அமர்ந்திருந்தான். கையில் தருமபுர ஆதினத்தின் ஞானசம்பந்தம் பதிப்பகம் வெளியிட்ட தண்டபாணி தேசிகர் எழுதிய திருக்குறள் உரைவளம். ஆனால் மனதுக்குள் வேறொரு காதல் புத்தகம் ஓடிக் கொண்டிருந்தது. கடந்த மூன்று மாதங்களாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பேசிப் பழகியதில்லை. ஒரே கல்லூரி, ஆனால் வேறு வேறு துறை.

கடிகாரத்தைப் பார்த்தான்.

3:15.

வழக்கமான நேரம்.

நூலகத்தின் மரக்கதவு மெதுவாகத் திறக்கும் சத்தம் கேட்டது.

வந்தாயிற்று.

அதே வெளிர் மஞ்சள் நிற சுடிதார். கையில் சில குறிப்பேடுகள், புத்தகங்கள். நூலகத்திற்குள் நுழைந்தவள், இயல்பாகச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவள் கண்கள் அவனைக் கண்டுகொண்டன.

நேரம் அப்படியே உறைந்து போன ஒரு நொடி அது.

அவள் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். "எனக்குத் தெரியும் நீ இங்கேதான் இருப்பாய் என்று", "ஏன் நேற்று வரவில்லை?", "இன்றைக்கு ஆய்வகத்தில் செம சோதனை தெரியுமா?" - வார்த்தைகளே இல்லாமல் செய்திகள் வாட்ஸ்அப் மெசேஜை விட வேகமா அவனுக்குப் பரிமாற்றம் ஆயின.

அடுத்த நொடி.

சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டாள் அவள். கண்கள் கீழே இறங்கின. கையில் இருந்த புத்தகங்களை இறுகப் பிடித்துக்கொண்டு, தலையைக் கொஞ்சம் சாய்த்து, தரையைப் பார்ப்பது போல் குனிந்தாள். உதட்டின் ஓரத்தில் ஒரு குறும்புப் புன்னகை. ஒரு மெல்லிய வெட்கம்.

அவ்வளவுதான்.

திருவள்ளுவர் இதை அப்படியே 2000 வருடத்துக்கு முன்பே ஒரு தாவரவியல் கோட்பாடு போலவே எழுதி வைத்துள்ளார்.

"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்."               (குறள், 1093)

விளக்கம் ரொம்ப எளிமையானது. காய்ந்து போன ஒரு செடியைக் காப்பாற்ற வேரில் தண்ணீர் ஊற்றினால் போதும். பிழைத்துக் கொள்ளும். ஆனால், காதல் என்ற விசித்திரமான பயிர் இருக்கிறதே, அதற்கு மண்ணும் தேவையில்லை, மழையும் தேவையில்லை.

காதலிக்கும் அந்தப் பெண் பார்க்க வேண்டும். காதலன் பார்ப்பதை உணர்ந்து சட்டென்று தலையைக் குனிய வேண்டும். வெட்கப்பட்டுத் தலைகுனிகிற ஒரே ஒரு பார்வைதான், காய்ந்து போய்க் கிடக்கும் ஆணின் மனம் என்கிற பயிருக்கு ஊற்றப்படும் அமுதச் சொட்டு.

அவள் தலையைக் குனிந்த அந்த ஒரு நொடியில், அவனின் மனதுக்குள் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. கடந்த ஒரு வாரமாக செமஸ்டர் தேர்வுக்குத்  தயாரிப்பில் இருந்த சோர்வு, நூலகர் எச்சரித்த பயம், அசைன்மென்ட் எரிச்சல் என எல்லாமே சூரியனைக் கண்ட பனித்துளி போல மறைந்துவிட்டன.

அவள் ஒரு மேஜை அருகே சென்று உட்கார்ந்தாள். ஒரு குறிப்பேட்டைப் பிரித்து வைப்பது போல நடித்தாள். ஆனா அவள் விரல்கள் நடுங்குவது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அவன் மெதுவாக எழுந்தான். தண்டபாணி தேசிகரின் உரைவளத்தை மூடி மேஜை மேல் வைத்தான்.

அவள் மேஜையை நோக்கி நடந்தான். ஒவ்வொரு அடியும் ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்தது. காய்ந்துபோன செடிக்குத் தண்ணீர் கிடைத்துவிட்டது. இனி அது வளர வேண்டியது மட்டும்தான் பாக்கி.

அவள் மேஜைக்கு அருகே போய் நின்றான்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள். இம்முறை பார்வையில் வெட்கம் இல்லை, ஒரு சின்ன எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

"இங்க உட்காரலாமா?" என்றான் அவன், குரலைத் தாழ்த்தி.

அவள் தன் புன்னகையை மறைக்க முயன்றபடி, மெல்லிய குரலில் "ம்ம் உட்காருங்க" என்றாள்.

தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டது. காதல் வளர ஆரம்பித்துவிட்டது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

21 Aug 2026

உலக மகா திருட்டு!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 12

உலக மகா திருட்டு!

திருவாரூர் பேருந்து நிலையம் எதிரே.

தைலம்மை திரையரங்கம்.

திரையரங்க குளிர்சாதன வசதியில் குளிர் உடலை நடுக்க, பெரிய திரையில் சண்டைக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

அவன் தன் பார்வையைத் திரை மீது வைத்திருந்தாலும், கவனம் முழுக்கப் பக்கத்து இருக்கையில்தான் இருந்தது. அவனுக்கு அருகே பாப்கார்ன் பக்கெட்டைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள் அவள், அதில் சிலவற்றை எடுத்து வாயில் போட்டபடி திரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கவனம் முழுவதும் திரையிலேயே படிந்திருந்தது.

அவள் சட்டென்று தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் அவனுடைய கண்களை ஒரு மில்லி செகண்ட் தொட்டு மீண்டன. அவ்வளவுதான்.

அந்த ஒரு நொடி.

அது வெறும் பார்வையில்லை. பைட்ஸில் சொல்ல முடியாத டேட்டா டிரான்ஸ்பர்.

அவன் அருகில்தான் இருக்கிறான். நேருக்கு நேர் பார்ப்பதில் ஒன்றும் தடையும் இல்லை, பிரச்சனையும் இல்லை. ஆனாலும் அவ்வபோது நிகழ்கிறது அந்தத் திருட்டுப் பார்வைப் பார்க்கும் களவாணி வேலை.

"என்ன? அந்தப் பிராஜெக்ட் முடிஞ்சதா?" இப்போது அவனைப் பார்க்காமலே, அவள் மெல்லிய குரலில் கேட்டாள். சுற்றிலும் தியேட்டர் சத்தம் இரைந்தாலும், அவள் குரலில் அத்தனை இயல்பு.

"முக்கால்வாசி ஓவர். நைட் எப்படியும் முடிஞ்சிடும்." என்றான் அவன், தன் விரல்களை இருக்கையின் கைத்தாங்கியில் தட்டியபடி.

அவள் லேசாகச் சிரித்தாள். அந்த இருட்டிலும் அவளது புன்னகையின் ஓரத்தில் ஒரு சின்ன சுருக்கம் வெளிச்சமாய் தெரிந்தது. "குட். சீக்கிரம் முடி. நாளைக்கு வீக்கெண்ட்."

அவள் பேச்சை முடித்துவிட்டு மீண்டும் திரை வெளிச்சத்தில் மூழ்கினாள்.

அவன் இடைவேளைக்கான லைட் எரியவும் ஸ்நாக்ஸ் கௌன்ட்டருக்கு எழுந்து சென்றான்.

அவனுக்குள் ஏதோ ஒன்று ஜிவ் என்று இருந்தது. மனம் ஒரு கவிஞனைப் போல நினைக்க ஆரம்பித்தது.

"காதல் என்பது வெறும் மணி நேரப் பேச்சுகளிலோ, வார இறுதி சினிமாக்களிலோ, வாட்ஸ்அப் மெசேஜ்களின் நீளத்திலோ மட்டும் இல்லை.

அவள் அவனைத் தியேட்டர் இருட்டில் கடக்கும் போது சட்டென்று பார்க்கும் அந்த ஒரு வினாடித் திருட்டுப் பார்வை. அதில் இருக்கும் அடர்த்தி இருக்கிறதே, அது முழுமையான காதலை விடவும் மிகப் பெரியது.

வள்ளுவர் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே.

"கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது."         (குறள், 1092)

என்று சும்மாவா எழுதினார்?

அவன் பார்வையில் பாதி, அவளது பார்வையில் பாதி எனப் பிரித்துக் கணக்குப் போட முடியாது. அந்தச் சின்னஞ்சிறு திருட்டுப் பார்வை தரும் கிக். அது அரைப்பங்கு இல்லை, முழு உலகத்தை விடவும் பெரிது.

முழுக்க முழுக்க நேராகப் பார்த்து காதலைச் சொல்வதை விட, அந்தத் திருட்டுப் பார்வை தருவது அரைப் பங்கு இன்பமல்ல. அதையும் தாண்டிய பெருங்கடல்!"

இப்படி நினைத்தபடியே அவன் இரண்டு கூல்ட்ரிங்க்ஸ்களுடன் திரும்பினான்.

"தேங்க்ஸ்," அவள் அதை வாங்கினாள். ஆனால், அவள் அவனைப் பார்க்கவில்லை. திரையில் இடைவேளைக்குப் பிறகான காட்சி தொடங்க, அதைப் பார்த்தபடியே சிரித்தாள்.

ஆனால், அவனுக்குத் தெரியும். அடுத்த சில நிமிடங்களில், அந்த இருட்டிலும் அவள் மீண்டும் ஒருமுறை திருட்டுத்தனமாகப் பார்ப்பாள். அந்த ஒரே ஒரு சிறு நோக்கம் அவனின் மொத்தக் காதலையும் கொள்ளையடித்துச் செல்லும். இப்படி எப்போதும் திருடிச் செல்பவள் அவள்; ஆனானல், கைதாவதோ இவன்

ஆனாலும், அந்த ஒரு மில்லிசெகண்ட் திருட்டுப் பார்வைக்காகவே அவன் அந்த மெண்டல் டார்ச்சர் தரும் ஐநூறு ப்ராஜெக்டுகள் கூட செய்யத்  தயார்.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

20 Aug 2026

தங்கத்தைத் தேடித் துணி பொறுக்கிய திருடர்களின் சோகக் கதை!

தங்கத்தைத் தேடித் துணி பொறுக்கிய திருடர்களின் சோகக் கதை!

பூட்டை உடைப்பது என்பது ஒரு கலை. அதுவும் பட்டப்பகலில், அதுவும் வேலூர் குடியாத்தத்தின் பரபரப்பான ஆற்றோரம் பகுதியில், பூட்டை உடைத்து உள்ளே நுழைய தனித் திறமை வேண்டும். இப்படித் திறமையையும் நேரத்தையும் முதலீடு செய்து உள்ளே நுழைந்த கொள்ளையர்களுக்குக் காத்திருந்தது ஒரு மாபெரும் வரலாற்று அதிர்ச்சி!

கதையின் நாயகர் செல்வம், காந்தி ரோட்டில் ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர். வேலை நிமித்தமாக அவர் சென்னைக்குப் பயணமாகியிருந்தார். அவருடைய மனைவி உண்ணாமலை வழக்கம் போல ஜெராக்ஸ் கடையைக் கவனிக்கச் சென்றுவிட, வீட்டில் எஞ்சியிருந்தது செல்வத்தின் 75 வயதுத் தாயார் கண்ணம்மாள் மட்டுமே. மதிய வேளையில் பாட்டியும் வீட்டைப் பூட்டிவிட்டு மெல்லக் கடைப் பக்கம் நடைபோட, வீட்டின் பூட்டு "யாரும் இல்லையே, வந்து பாரேன்" என்று கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

பூட்டியிருந்த கதவைக் கண்டதும் கொள்ளையர்களின் நெஞ்சில் நிச்சயமாக ரயில்கள் ஓடியிருக்கும். "இன்றைக்குக் குறைந்தபட்சம் ஐம்பது பவுன் தங்கம், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம், ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால் வைரம்!" என்றெல்லாம் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டபடி, பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்திருக்கிறார்கள்.

உள்ளே நுழைந்ததும் அவர்கள் பார்வையில் பட்டது ஒரு பீரோ. கொள்ளை அத்தியாயத்தின் உச்சக்கட்டக் காட்சி இதுதான். பூட்டை உடைத்த கையோடு பீரோவையும் திறந்துவிடலாம் என்று சகல வித்தைகளையும் இறக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பீரோவோ கொள்ளையர்களின் முயற்சிக்குச் சற்றும் மசியாமல், இரும்புக் கோட்டையாக வீறுகொண்டு நின்றிருக்கிறது.

அங்கேதான் அந்தத் தர்மசங்கடமான கேள்வி பிறந்திருக்கிறது. "இவ்வளவு கஷ்டப்பட்டுப் பூட்டை உடைத்து உள்ளே வந்த பிறகு, வெறும் கையோடு திரும்பினால் திருட்டுத் தொழிலுக்கே பெரும் அவமானம் அல்லவா?"

மனதைத் தேற்றிக்கொண்ட கொள்ளையர்கள் சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறார்கள். தங்கம் கிடைக்கவில்லை என்றால் என்ன, இரும்பு இருக்கிறதே! வீட்டில் வைத்திருந்த சுமார் 60 கிலோ எடை கொண்ட இரும்புச் சட்டங்களை முதலில் கண்ணில் ஒற்றிக்கொண்டு அள்ளியிருக்கிறார்கள்.

அடுத்து, "வெறும் இரும்பை மட்டும் தூக்கிச் சென்றால் என்ன மரியாதை?" என்று யோசித்திருக்க வேண்டும். நேரே வீட்டு வாசலுக்கு வந்து, கொடியில் காயப்போட்டிருந்த துணிகளைப் பார்த்திருக்கிறார்கள். சூரிய வெளிச்சத்தில் சுகமாகாய் உராய்ந்து காய்ந்துகொண்டிருந்த துணிமணிகளை, ஒன்று பாக்கி இல்லாமல் வாரிச்சுருட்டித் மூட்டையாகக் கட்டியிருக்கிறார்கள். ஒருவேளை, "அடுத்த திருட்டுக்குப் போகும்போது போட்டுக்கொள்ளப் புதிய ஆடைகள் கிடைத்துவிட்டன" என்ற திருப்தி அவர்களுக்கு இருந்திருக்கலாம்.

இரவில் சென்னையிலிருந்து வீடு திரும்பிய செல்வத்திடம், பாட்டி கண்ணம்மாள் இந்த 'இரும்பு மற்றும் துணி' திருட்டு மேஜிக்கைப் பற்றி விவரித்திருக்கிறார். செய்தி கேட்டு அதிர்ந்துபோன செல்வம், இப்போது போலிசில் புகார் கொடுத்திருக்கிறார்.

பட்டப்பகலில் நடந்த இந்த வீரம் செறிந்த சம்பவத்தைக் கேட்டு குடியாத்தம் மக்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். தங்கம், பணம் திருடுபோகும் என்ற பயத்தில் வீட்டைப் பூட்டிச் சென்றவர்கள், இப்போது கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் துணிகளைக் காப்பற்றத் தனிப் பாதுகாப்புப் படையை அமர்த்தலாமா என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேலூர் காவல் துறை இந்த 'ஆடை மற்றும் இரும்புப் பிரியர்களை' தீவிரமாகத் தேடி வருகிறது.

ஒருவேளை அவர்கள் திருட வந்தவர்கள் அல்ல, துணி துவைக்கும் வேலையை மிச்சப்படுத்த வந்த தொண்டுள்ளம் கொண்டவர்களா அல்லது இரும்புக் கடைக்குச் சாமான்களைத் தேடி வந்தவர்களா என்பது காவல் துறை விசாரணையில்தான் தெரியவரும்.

தங்கத்தைத் தேடிச் சென்ற இடத்தில் துணிகளை அள்ளிய நவீனத் திருடர்களாக அவர்கள் ஆகியிருக்கிறார்கள். வாழ்க திருடர்கள்! வளர்க அவர்களது புதுமையான சிந்தனைகள்!

*****

புண்ணிய பாரதத்தின் புதுமைத் திருவிளையாடல்கள்

27 குத்துகளும், இரண்டு லட்சங்களும்!

மனிதக் குலத்தின் நாகரிகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்பதற்கு நாள்தோறும் பத்திரிகைகளில் வரும் செய்திகளே சாட்சி. அதிலும் குறிப்பாக, நமது கல்வி முறை மாணவர்களை எந்த அளவிற்கு நல்வழிப்படுத்துகிறது என்பதை விளக்குவதற்குத் தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

செய்தி மிக எளிதானது, ஆனால் அதன் உட்பொருள் ஆழமானது. நாகார்ஜுனா பப்ளிக் பள்ளி என்றொரு கல்விக்கூடம். அதன் முதல்வர், திருமதி கே. ரூபா ரெட்டி என்பவர், ஆகஸ்ட் 11 ஆம் தேதி தம் இல்லத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வெறும் கொலையா? இல்லை. உடலில் 27 கத்திக்குத்துகள். செய்தித்தாளில் "கொடூர காயங்களுடன் இறந்துகிடந்தார்" என்று மிக நாகரிகமாக எழுதப்பட்டிருந்தது.

நமது நாட்டின் தொன்மையான மரபில் 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்பார்கள். இதில் தெய்வத்திற்கு முன்பாகக் குருவை வைத்தார்கள். காரணம், குருதான் தெய்வத்தைக் காட்டுவார் என்பதால். ஆனால், நவீன தெலுங்கானாவின் நல்கொண்டா நகரில், பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் குருவை நேரடியாக தெய்வத்திடமே அனுப்பி வைக்கத் தீர்மானித்தார்கள்.

பத்தாம் வகுப்பு என்றால் என்ன வயது இருக்கும்? பதினைந்து அல்லது பதினாறு. இந்த வயதில் மற்ற நாட்டுச் சிறுவர்கள் என்ன செய்வார்கள்? விளையாடுவார்கள், புத்தகம் படிப்பார்கள், அல்லது கைப்பேசியில் கணினி விளையாட்டுகளை ஆடுவார்கள். ஆனால், நமது நல்கொண்டா மாணவர்களோ மிகத் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். அவர்களுக்குப் போதைப் பழக்கம் இருந்தது என்று காவல் துறையினர் கூறுகிறார்கள். போதைப்பொருட்களை வாங்க பணம் வேண்டும் அல்லவா? அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழிதான் பள்ளி முதல்வரின் இல்லத்திற்குச் சென்று நிதி திரட்டுவது அதாவது நிதி சுருட்டுவது.

எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்குத் திட்டமிடல் மிக முக்கியம் என்பதை அவர்கள் பள்ளியில் நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, முதல்வரின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். நோக்கம் மிகவும் புனிதமானது. அதுதான் கொஞ்சம் பணம் வேண்டும்.

அங்கேதான் ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. வீட்டின் உரிமையாளரான பள்ளி முதல்வர் ரூபா ரெட்டி, உள்ளே நுழைந்த மாணவர்களில் ஒருவனை அடையாளம் கண்டுவிட்டார்.

"அட, இது நம்ம பள்ளி மாணவன் அல்லவா!" என்று அவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், மாணவர்களோ 'ஆசிரியர் - மாணவர் உறவில்' எந்தவிதமான குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். தம்மை அடையாளம் கண்டுவிட்டாரே என்ற பதற்றத்தில், அவர்கள் தங்களின் கையில் இருந்த கத்தியைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

ஒரு முறை குத்தினால் மனிதன் இறந்துவிடுவான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள். பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பழகும் பழக்கம் உள்ளவர்கள். எனவே, ஒரு முறையோடு நிறுத்தவில்லை. இரண்டு முறை, மூன்று முறை அல்ல. மொத்தம் 27 முறை!

27 முறை குத்துவது என்பது சாதாரண விஷயமா? அதற்கு எவ்வளவு உடற்பயிற்சியும், கவனக் குவிப்பும் தேவைப்பட்டிருக்கும்! "மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை" என்று புலம்பும் பெற்றோர்கள், இந்த மாணவர்களின் கவனக் குவிப்பைப் பார்த்துப் பெருமைப்படலாம்.

கொலை செய்து முடித்த பிறகு, அவர்கள் அங்கிருந்து ரூ.2.20 லட்சத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

இங்குதான் அவர்களின் அமளிதுமளித்தனமான செயல் வெளிப்படுகிறது. கொள்ளையடித்த பணத்தில் ரூ.1.60 லட்சத்தில் ரத்தக்கறை படிந்திருந்தது. போதை பழக்கம் உள்ள சிறுவர்களான போதிலும், அவர்கள் பணத்தின் மீது கொண்ட பற்றுதல் வியக்கத்தக்கது. ரத்தம் படிந்த பணமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதைத் தங்களோடு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

காவல்துறையினர் வழக்கம்போல விசாரணையைத் தொடங்கினார்கள். ஒரு சிறுவனிடமிருந்து ரத்தக்கறை படிந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனே காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். கிடுக்கிப்பிடி என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். உடனே அந்தச் சிறுவர்கள் உண்மை முழுவதையும் ஒப்புக்கொண்டார்கள். "நாங்கள் போதைக்கு அடிமையானோம்; பணத்திற்காகப் போனோம்; அடையாளம் கண்டதால் குத்தினோம்; பணத்தை எடுத்தோம்" என்று ஒரு சிறுகதை போல வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டார்கள்.

இந்தச் சம்பவத்தைக் கேள்விபடும் போது நமக்குச் சில தத்துவார்த்தமான கேள்விகள் எழுகின்றன:

பள்ளிக்குச் செல்வது அறிவு பெறுவதற்காகவா, அல்லது முதல்வரின் வீட்டு முகவரியைத் தெரிந்து கொண்டு கொள்ளையடிப்பதற்காகவா?

சிறுவயதிலேயே போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமா? ஏனெனில், அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை புழக்கத்தில் விடுகிறார்களே!

2.20 லட்சத்தில் 1.60 லட்சத்தைக் கழித்தால் மீதி எவ்வளவு என்று அந்த மாணவர்களுக்குத் தெரிந்திருக்குமா? அந்த மீதிப் பணத்தை அவர்கள் என்ன செய்தார்கள்?

நமது சமூகம் மிகவும் விசித்திரமானது. "சிறுவர்கள் கையில் புத்தகம் இருக்க வேண்டும்" என்று மேடைகளில் பேசுவார்கள். ஆனால், அந்தச் சிறுவர்களோ கையில் கத்தியையும், பையில் ரத்தம் படிந்த நோட்டுகளையும் வைத்திருக்கிறார்கள்.

பள்ளி முதல்வர் ரூபா ரெட்டி, தம் வாழ்நாளில் எத்தனையோ மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருப்பார். ஆனால், தம்முடைய சொந்தப் பள்ளி மாணவர்கள், '27 குத்துகள்' என்ற மிகப்பெரிய பாடத்தை தமக்குக் கற்பிப்பார்கள் என்று அவர் நிச்சயமாகக் கருதியிருக்க மாட்டார்.

இப்போது அந்த இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அல்லது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அங்கே அவர்களுக்கு போதைப்பொருட்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்: அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அவர்கள் எழுத முடியாமல் போகலாம். அது பற்றி அவர்களுக்குக் கவலை இருக்குமா என்பதும் தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே வாழ்க்கையின் 'மிகப்பெரிய தேர்வில்' தேர்ச்சி பெற்றுவிட்டார்கள், அதாவது, எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இன்றி ஒரு மனிதனை 27 முறை குத்திக் கொல்வது எப்படி என்ற தேர்வில்!

நகரி செய்தித் தாளில் வந்த இந்தச் சிறிய பத்தி, நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான். "பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; ஆனால், அவர்கள் திரும்பி வரும்போது கையில் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதையும், அவர்கள் யாருடைய வீட்டிற்குச் செல்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்."

இல்லையெனில், அடுத்தமுறை உங்கள் வீட்டுச் காலிங் பெல் அடிக்கும்போது, வெளியே நிற்பது உங்களின் அன்பிற்குரிய மாணவனாகக்கூட இருக்கலாம், கையில் கத்தியுடன்!

*****

சக்கர நாற்காலியும் சாத்தான் மகனும்

அன்பு எனும் பெருஞ்சுமை

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது."              (குறள், 45)

என்றார் வள்ளுவர். ஆனால், மணவூர் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் பார்த்தால், வள்ளுவர் சொன்ன அந்தப் பண்பு ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேகம் பிடிப்பதற்குள் நடைமேடையிலேயே கீழே விழுந்து நொறுங்கிவிட்டது போல் இருக்கிறது.

பார்த்தசாரதிக்கு வயது 45. மனதளவில் இன்னும் முதிர்ச்சி அடையாத குழந்தை போலத் தோன்றுகிறது. தாய் பத்மாவதியோ 72 வயதில் படுக்கையில் வீழ்ந்தவர்.

மனித உறவுகளின் சிக்கல் என்னவென்றால், அன்பைக் காட்டுவதற்கு ஆட்கள் திரள்வார்கள்; அதே அன்பைச் சுமையாகக் சுமக்க வேண்டிய சூழல் வரும்போது, 'நான் வருகிறேன்' என்று அமைதியாக நழுவி விடுவார்கள். பார்த்தசாரதியின் மனைவியும் குழந்தைகளும் அப்படித்தான் நழுவியிருக்கிறார்கள்.

சுமை தாங்க முடியாத பார்த்தசாரதி, தாயைக் காப்பாற்ற வேறு வழிகளைத் தேடியிருக்கலாம், சமூக அமைப்புகள், அரசின் உதவிகள், அல்லது ஏதேனும் ஆதரவு இல்லங்கள். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த வழி, காற்றில் நடைபயணம் போவது போலத் தாயைச் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றது.

"கொஞ்சம் காற்று வாங்கி வரலாம் அம்மா!" என்றிருக்கிறார் பார்த்தசாரதி.

இந்த ஒரு வரியில் எத்தனை பாசம், எத்தனை நம்பிக்கை ஒளிந்திருக்கிறது! பத்மாவதியும் அந்த வார்த்தையை நம்பி, தன் மகனின் கைகளைப் பற்றிச் சென்றிருப்பார். ஆனால், ரயில் நிலையத்தின் நடைமேடையை எட்டியபோது, பார்த்தசாரதியின் மனசாட்சி முடங்கிப்போயிருந்தது.

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி ஏலகிரி எக்ஸ்பிரஸ் இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்துகொண்டிருந்தது. பார்த்தசாரதி யோசித்தார் அல்லது யோசிப்பதை நிறுத்தினார். சக்கர நாற்காலி உருண்டது. ஒரு நொடி, ஒரே நொடிதான். தண்டவாளத்தில் ஒரு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

பார்த்தசாரதி காரணம் சொன்னார், தாயைப் பராமரிக்க முடியவில்லையாம். மனைவி பிரிந்து சென்ற விரக்தியாம். சாக்குப்போக்குகளுக்கு என்றும் பஞ்சமிருந்ததில்லை.

ஆனால், காலம் எப்போதும் சாட்சிகளை விட்டுச் செல்கிறது. மனித மனசாட்சி தூங்கிவிட்டாலும், மணவூர் ரயில் நிலையத்தின் ஏதோ ஒரு மூலையில் பொருத்தப்பட்டிருந்த அந்தச் சிறிய கண்காணிப்பு கேமரா தூங்கவில்லை. அது பார்த்தசாரதியின் பதற்றத்தையும், அந்த நெஞ்சைப் பிளக்கும் கொடூரத்தையும் துல்லியமாகப் பதிவு செய்துவிட்டது.

இப்போது அரக்கோணம் ரயில்வே போலீசார் பார்த்தசாரதியைக் கைது செய்து கம்பிகளுக்குப் பின்னால் அடைத்துவிட்டார்கள்.

தான் பெற்ற பிள்ளை தன் வாழ்க்கையைத் தள்ளாட வைப்பான் என்று எந்தத் தாயும் நினைப்பதில்லை. ஆனால், சக்கர நாற்காலியோடு தாயையே தண்டவாளத்தில் தள்ளிவிட்ட பார்த்தசாரதிகள் வாழும் இந்தச் சமூகத்தில், 'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்' என்ற பழமொழி வெறும் கவிதை வரியல்ல; அது ஒரு கொடூரமான நிஜம் என்பதைத் தான் இந்தச் சம்பவம் நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.

மனித உறவுகள் எவ்வளவு பலவீனமானவை என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று தேவையில்லை. பெற்ற பிள்ளைக்குத் தாயைப் பாரமாகத் தெரிய வைக்கும் இந்தச் சமூகம், எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

*****

விழி வழி ஆக்ஸிடெண்டும் 108 ஆம்புலன்சும்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 11

விழி வழி ஆக்ஸிடெண்டும் 108 ஆம்புலன்சும்

அது அந்தி மயங்கும் பொன்மாலைப் பொழுது.

அலுவலகத்தின் மூலையில் உட்கார்ந்திருந்தான் அவன்.

எதிரே அவள்.

அவள் அந்தச் செந்நிறப் பட்டில் தேவதை போலிருந்தாள்.

எதையும் பெரிதாகப் பொருட்படுத்தாத நவீன பெண் அவள்.

ஆனால், அவளது கண்கள். அது வேறு கதை.

அவன் தன் மடிக்கணினியை மூடிவிட்டு அவளைப் பார்த்தான். அவள் தேநீரை உறிஞ்சியபடியே அவனை ஒரு கணம் ஏறெடுத்துப் பார்த்தாள்.

அந்த முதல் பார்வையில் ஒரு கூர்மை இருந்தது. ஓர் அலட்சியம், ஒரு சின்ன ஏளனம், நெஞ்சைக் குத்தும் லேசான நிராகரிப்பு. அவனுக்குள் ஏதோ ஒன்று சரக்கென்று தைத்தது. இதயத்துடிப்பு சட்டென எகிறியது. அது பார்வையா அல்லது நெஞ்சில் இறங்கிய நஞ்சா என்று தெரியாத அளவுக்கு அவனுக்குள் ஒரு சுகமான வலி படர்ந்தது.

"அடப்பாவமே, இவளிடம் மாட்டிக்கொண்டு நாம் படப்போகும் பாடு பெரியது போலிருக்கே!" என்று அவனுக்குள் ஒரு லேசான பயமும், வழிப்பும் உருவானது. அது ஒரு நோய் மாதிரி அவனைத் தொற்றிக்கொண்டது.

அவன் முகத்தைச் சுளித்து, பார்வையைத் திருப்ப முயன்றான்.

அடுத்த நொடி, அவள் தன் பார்வையின் கோணத்தை லேசாக மாற்றினாள். இமைக்கடையில் ஒரு குறும்பு மின்னியது. அவளது உதட்டின் ஓரத்தில் மெல்லிய புன்னகை அரும்ப, அதே கண்கள் இப்போது அவனை ஒரு வசியப்பார்வை பார்த்தன. "பயப்படாதே, நான் உன்னவள்தான்" என்று சத்தமில்லாமல் சொன்னது அந்த இரண்டாவது பார்வை.

முந்தைய நொடியில் நெஞ்சில் ஏறிய அதே வலி, இந்த நொடியில் அப்படியே பனி போல விலகி ஓடியது. உடம்பெல்லாம் ஒரு சுகமான சிலிர்ப்பு. வலி நிவாரணி போல இருந்தது இந்தப் பார்வை.

அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். வள்ளுவன் அன்றைக்கே எழுதிவைத்துவிட்டுப் போன காதல் ப்ரோகிராம் இதுதான் போல!

ஒரே ஜோடி கண்கள் தான். ஆனால் அதற்குள் இரண்டு வெவ்வேறான லென்ஸ்கள்.

முதல் பார்வை என்பது மனதை உயிரோடு வதைக்கும் ஒரு நோய். இரண்டாவது பார்வை என்பது அந்த நோயை உடனடியாகக் குணப்படுத்தும் அருமருந்து.

"என்ன யோசனை?" என்றாள் அவள், தன் மொபைலை மேஜை மீது வைத்தபடி.

"ஒன்றுமில்லை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் உன் கண்களைப் பத்தி அப்படியே கோடிங் எழுதி வச்சிட்டுப் போயிருக்கார், அதைத்தான் நினைச்சேன்" என்றான் அவன், தேநீர் கோப்பையைக் கையில் எடுத்தபடியே!

"இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஏதுடா கோடிங்? அப்போ நான் பிறக்கவே இல்ல. அப்போ எப்படிடா என் கண்ணைப் பத்தி கோடி எழுத முடியும்?" என்றாள் அவள்.

"இதுதான் அந்தக் கோடிங்.

"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து."   (குறள், 1091)

எப்படி இருக்கு?"

அவள் கன்னங்கள் நாணத்தால் சிவந்தன. கண்கள் அவனை அப்படியே விழுங்கி விடுவது போலச் சுருங்கின.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****