12 Aug 2026

மீண்டும் மீண்டும் எமன்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 3

மீண்டும் மீண்டும் எமன்!

மழையின் சாரலும், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் எஸ்.ஆர்.ஆர் கபேயின் காபி மணமும் கலந்திருந்த அந்தச் சாயங்காலம், அவனுக்கு வழக்கமான ஒன்றல்ல. அவனது இதயத்தின் இயக்கம் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் மாலையாக அது அமையப்போகிறது என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

அவன் தன் நண்பனிடம் தத்துவ மழை பொழிந்துகொண்டிருந்தான்.

"எமதர்மன் எப்படி இருப்பான்? கருப்பான மேனி, தலையில் கிரீடம், கையில் பாசக்கயிறு. இதெல்லாம் சினிமாக்காரன் கிளப்பிவிட்ட பேண்டஸி மச்சி. மரணம்ங்கிறது ரொம்ப சிம்பிள். அது ஒரு கார்டியாக் அரெஸ்ட், இல்லனா பிரேக் பெயிலியர் ஆகி ஓர் ஆக்சிடென்ட். அவ்வளவுதான்!"

அப்போது அவன் மணிக்கட்டில் இருந்த ஆப்பிள் வாட்ச், இதயத் துடிப்பை 72 என்று அமைதியாகக் காட்டிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் சாரல் மழையில் லேசாக நனைந்தபடி, ப்ளோரல் பிரின்ட் காட்டன் புடவையில் உள்ளே நுழைந்தாள் அவள். தோளில் லேப்டாப் பேக், கையில் ஒரு மணி பர்ஸ் என மிக எளிமையாகத்தான் வந்தாள்.

ஆனால், அவளைப் பார்த்ததும் அவனது பேச்சு சட்டென்று நின்றது.

அவள் இவர்கள் இருவரையும் எதிர்கொண்ட போது, தலைதிருப்பி அவனைப் பார்த்தாள்.

அது சாதாரணப் பார்வை அல்ல. மை தீட்டிய அந்தப் பெரிய, கூர்மையான கண்கள். ஒரே ஒரு நொடி அவனை நேருக்கு நேராக ஊடுருவின. அந்த விழிகளுக்குள் ஒரு பேரழகின் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. அதில் வன்முறையில்லை, ஆனால் சுண்டி இழுக்கும் விவரிக்க முடியாத அதிகாரமும் குறும்புச் சிரிப்பும் இருந்தது!

அடுத்த நொடி அவனது மூளை ஹேங் ஆனது. பேச வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே உறைந்தன.

அவன் கை கடிகாரம் திடீரென அதிர்ந்தது. வார்னிங் ஹை ஹார்ட் பீட் டிடெக்டெட் 142 என்று காட்டியது.

அவள் உதட்டின் ஓரத்தில் மெல்லிய புன்னகையோடு, அவர்களுக்கு எதிரே இரண்டு மேசை தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் கேட்க, சட்டென்று சர்வர் கொண்டு வந்த மண மணக்கும் அந்தக் கபே காபியைப் பருகத் தொடங்கினாள்.

இப்போது, அவனது நண்பன் தன் காபியை ஒரு சிப் அடித்து விட்டு உரக்கச் சிரித்தான். காதோடு காதாகக் கிசுகிசுப்பாக, "என்னப்பா. எமன்னா என்னன்னு சயின்ஸ் லெக்சர் குடுத்துட்டு இருந்த? இப்போ என்னடான்னா மூச்சு வாங்கறதையே நிறுத்திட்டு செத்துப் போனவன் போல உட்கார்ந்திருக்கிறே?"

எதிரே அவள் அமர்ந்திருந்தாலும், அவன் தன் போனை எடுத்து அவளுடைய இன்ஸ்டாகிராம் ப்ரொபைலைத் திறந்தபடி தன் நெஞ்சைத் தடவிக்கொண்டான்.

"டேய், எமன்னு ஒருத்தன் இருக்கான்னு நான் இதுவரைக்கும் புத்தகத்துலதான் படிச்சிருக்கேன். ஆனா அவனுக்கு நிஜமாவே உருவம் இருக்குடா. அதுவும் இவ்ளோ அழகா, ப்ளோரல் பிரின்ட் புடவை கட்டிக்கிட்டு வரும்னு நான் கனவுல கூட யோசிச்சதில்ல! அந்த பெரிய, கருப்பான கண்ணுல என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு. என் நெஞ்சுல யாரோ கடப்பாரையை வச்சுத் தோண்டுன மாதிரி ஆயிடுச்சுடா!"

நண்பன் மீண்டும் சிரித்தான். "அடப்பாவி, வள்ளுவர் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே,

"பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு"            (குறள், 1083)

என்று குறள் எழுதிட்டாருடா. அதுக்கு உன்னை மாதிரி ஒரு காதலில் விழுந்த பையன் இவ்ளோ மாடர்ன் பிராக்கெட் போடுவான்னு அவரு நினைச்சிருக்க மாட்டாரு!"

"அட, வள்ளுவர் என்ன சொன்னாரோ எனக்குத் தெரியாது மச்சி," என்றான் அவன். "எனக்கு எமன் எப்படி இருப்பான், எப்படி உயிரை எடுப்பான்னு இதுவரைக்கும் தெரியாது. ஆனா இப்போ தெரியுது. ஒரு பொண்ணோட வசீகரமும், அவளோட அந்த மிடுக்கான, போர்க்களம் போன்ற பெரிய கண்ணும்தான் என் உயிரை அசால்ட்டா தூக்குற எமன்னு! "

காபியைக் குடித்து முடித்த அவள், இவர்களை நோக்கி நடந்தாள். அவனைக் கடக்கும் போது, அதே பேரமர்க் கண்களால் அவனைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள்.

அவன் நண்பனின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு முணுமுணுத்தான்:

"மச்சி எமன் மறுபடியும் ரீ என்ட்ரிடா. எமன் ஒன்னும் கொடூரமான உருவத்துல வரமாட்டான். பெண்களுக்கே உரித்தான பேரழகோட, ரெண்டு பேரழகான கண்ணால நம்மை மொத்தமா காலி பண்ணத்தான் வருவான். ஆனா, இந்த எமன் கிட்ட உயிரைக் கொடுக்கிறதுல ஒரு தனி சுகம் இருக்குடா!"

ஐந்து ரூபாய் டிப்ஸோடு சர்வருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லி விட்டு அவள் கபேயை விட்டுக் கிளம்பி விட்டாள். ஆனால், அவனுக்கோ அவளருகில் அமர்ந்து அவள் காபி குடித்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. அந்த நினைவிலேயே அவன் பிரக்ஞையற்றுப் போன சவம் போல அமர்ந்திருந்தான்.

நண்பன் தன் தலையில் அடித்துக் கொண்டு பாதி குடித்த காபி கோப்பையைப் பார்த்தான். இவர்களின் பேச்சைப் பொறுக்க முடியாமல் அதில் ஓர் ஈ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தது. நிஜமாகவே அங்கே எமன் வந்திருக்கத்தான் வேண்டும், அந்த ஈயின் உயிரை எடுக்க.

*****

11 Aug 2026

பார்த்தான் செத்தான்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 2

பார்த்தான் செத்தான்!

திட்டசேரி கிராமத்தின் வள்ளியமூர்த்தி கோயிலுக்குப் பின்னால் ஒரு பர்லாங் தூரத்தில் அடர்ந்த தூங்குமூஞ்சி மரம் நிழலாகப் படர்ந்திருந்தது. ஊருக்குள் அவன்தான் சாமியாடி. கையில் எந்நேரமும் ஒரு பழைய சுவடியும், சுடுகாட்டுச் சாம்பலும் வைத்துக்கொண்டு, சுடுகாட்டுப் பாதையிலேயே திரிபவன்.

அன்று இரவு வள்ளியமூர்த்தி கோயிலின் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவனிடம், ஊர்ப் பூசாரி பழனி ஓடோடி வந்தான்.

"சாமியாடி! அந்த ஒண்டி வீட்டுப் பயலுக்கு என்னவோ ஆயிடுச்சுடா! சாயங்காலம் வெண்ணாற்றங்கரை பக்கம் போயிட்டு வந்தவன், திடீர்னு தூக்கித் தூக்கிப் போடுறான். நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டுத் தவிக்கிறான்! எந்தப் பேய் பிடிச்சதுனே தெரியல. கொஞ்சம் வந்து பாருடா!" என்று கதறினான்.

சாமியாடி லேசாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் சுடுகாட்டுப் புகையின் வாடை அடித்தது. அமைதியாக எழுந்து, ஒண்டி வீட்டுப் பயலின் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டுக்குள்ளே ஒண்டி வீட்டுப் பயல் சுவரோரம் சாய்ந்து கிடந்தான். உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் எதையோ பார்த்து வெறித்துக் கொண்டிருந்தன.

சாமியாடி அவனருகே சென்று, அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் இல்லை. கைநாடியைப் பிடித்தான். வேகம் சீராக இல்லை; எகிறிக் கொண்டிருந்தது.

"டேய் பயலே! உன்னை எந்தப் பேய் பிடிச்சது? மோகினியா? மாடத்தியா? காட்டேரியா? இசக்கியா? நீலியா? எங்கே, என்ன நடந்துச்சு சொல்லு?" என்றான் சாமியாடி, குரலில் ஒரு விசித்திரமான ஈர்ப்புடன்.

ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகக் வாய்திறந்தான். குரல் நடுங்கியது:

"ஆத்தங்கரையில தெக்குட்டுப் பொண்ணு தண்ணி எடுக்க வந்தா. நான் மரத்தோட மரமா நின்னு அவளைப் பார்த்தேன். அவளும் திடீர்னு திரும்பி என்னைப் பார்த்தா. நானும் தெகிரியமா நேருக்கு நேரா பார்த்தேன். அவ்ளோதான்."

"அப்புறம்?"

"அவ பார்வை சாதாரணப் பார்வை இல்லை சாமியாடி! இந்திய ராணுவம் பாகிஸ்தான் மேல பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு! என் உயிரே போயிடும் போல இருக்கு சாமியாடி!"

சாமியாடி கலகலவெனச் சிரித்தான். "அடலூசுப் பய மவனே! உன்னைப் பிடிச்சது எந்தப் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. வள்ளுவன் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே எழுதி வச்ச காதல் பேய் உன்னைப் பிடிச்சிருக்கு!"

பழனி பூசாரி குழப்பத்துடன், "என்னடா சொல்ற?" என்றான்.

சாமியாடி தன் சுவடியைத் திறந்தான். அங்கே எழுதப்பட்டிருந்ததைக் காட்டினான்.

"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண்டு அன்னது உடைத்து"              (குறள், 1082)

"இதோட அர்த்தம் என்ன தெரியுமாடா பழனி?" என்றான் சாமியாடி.

பழனி திருதிருவென விழித்தான்.

"இவன் அவளைப் பார்த்தான். அவளும் இவனைத் திரும்பிப் பார்த்தா. அப்படி இரண்டு பார்வைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த ஒரே ஒரு நொடி ஒரு பெரிய போர்க்களமே உண்டாயிடுச்சுடா."

ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகத் தலையை உயர்த்தினான். "அப்போ எனக்குப் பேய் பிடிக்கலையா சாமியாடி?"

"பிடிச்சிருக்குடா. ஆனா இது வேப்பிலை அடிச்சா போற பேய் இல்லை. அந்தப் தெக்குட்டுப் பொண்ணு கையால ஒரு பிடி திருநீறு வாங்கிப் பூசினா மட்டுமே தீருற காதல் பேய்!" என்றான் சாமியாடி.

ஒண்டி வீட்டுப் பயல் மெதுவாகச் சிரித்தான். அவன் நெஞ்சு படபடப்பு அடங்கி, முகத்தில் ஒரு புதிய வெளிச்சம் பரவியது.

சாமியாடி தன் சாம்பல் பையை இடுப்பில் முடிந்துகொண்டு, மீண்டும் அந்த இருட்டுப் பாதையை நோக்கித் தனியாக நடந்து மறைந்தான்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

10 Aug 2026

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 1

வள்ளுவம் 18+

மின்னொளி பளீச்சிட்ட அந்த அரை வினாடி இடைவெளியில், அவளைப் பார்த்தேன்.

மழை பெய்து கொண்டிருந்த திருவாரூர், தியாகராஜர் கோயிலின் அருகே  இருந்த ஓட்டு வீட்டின் அருகே ஒற்றை ஆளாய் நின்றிருந்தாள்.

யார் இவள்?

தலையில் சுற்றியிருந்த நீல நிற துப்பட்டாவையும் மீறி, அந்த முகம் ஏதோ செய்தது.

மனிதப் பிறவிதானா?

அல்லது மழை இரவில் தவறி கீழே விழுந்த ஏதேனும் தேவகன்னியா?

மயிலின் சாயல் இருந்தது. ஆனால் தோகைக்குப் பதில் ஈரமான சுடிதார்.

காதில் அசையும் அந்தப் பெரிய ஜிமிக்கி. அது தங்கமா, கவரிங்கா என்று ஆராயும் அளவுக்கு என் மூளைக்குத் தெளிவில்லை.

மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானவன் போல என் கைவிரல்கள் ஆக்டிவாவின் ஆக்சிலேட்டரை இறுகப் பற்றிக்கொண்டன.

"ஹேய் ஜிமிக்கி பொண்ணே!" என்று மனம் முணுமுணுத்தது.

மார்புக்குள் இதயத்தின் படபடப்பு சட்டென்று அதிகரித்தது. நிஜமாகவே பயமாக இருந்தது.

இவள் தேவதையா?

மயக்கும் மோகினியா?

இல்லை வெறும் மனிதப் பெண்தானா?

தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. என் நெஞ்சம் தன் கட்டுப்பாட்டை இழந்து, பித்தெடுத்து அலைபாயத் தொடங்கிவிட்டது.

அந்த மழையிலும் தெற்கு கோபுர வாசலில் போக்குவரத்து நெரிசல் புளிமூட்டையைப் போல இருந்தது. பின்னால் இருந்த வாகனங்களின் ஒலிப்பெருக்கிகள் காதைப் பிளந்தன.

என் ஆக்டிவா மெல்ல நகரத் தொடங்கியது. கண்ணாடியைப் பார்த்தேன். அவளது உருவம் மழையிலும், பின்னோக்கிச் செல்லும் வெளிச்சத்திலும் மெல்ல மறைந்தது.

அதற்கு மேல் என்னால் ஆக்டிவாவைச் செலுத்த முடியவில்லை.

ஆக்டிவாவை தகர சீட்டுகள் வேயப்பட்டிருந்து ஒரு கடையோரமாக ஓரங்கட்டி விட்டு, வண்டியின் சீட்டைத் திறந்தேன். உள்ளே இருந்த கைபேசியைக் கையில் எடுத்தேன். வழக்கமாக வாட்ஸ்ஆப்பையும், பேஸ்புக்கையும், இன்ஸ்டாவையும் தட்டும் விரல்கள், அன்று தானாகக் கூகுளில் தேடித் தட்டியது திருவள்ளுவரை.

குறள் எண் : 1081

"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு."

இதே குழப்பம், இதே படபடப்பு, இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி அந்த ஆளுக்கும் வந்திருக்கிறது!

வள்ளுவர் பெருமூச்சு விட்டிருப்பார். எனக்கும் அதே பெருமூச்சு. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் எதுவும் மாறவில்லை.

நான் மீண்டும் கைபேசியை ஆக்டிவாவின் சீட்டைத் தூக்கி உள்ளே போட்டு விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்சிலேட்டரை முறுக்கினேன். மழை வலுக்கத் தொடங்கியது. வண்டியின் வேகத்தில் மழைநீர் அம்புகளைப் போல உடலைத் தாக்கத் தொடங்கின. உடல் தொப்பரையாக நனைந்தது.

உடலுக்குள் மழைநீரின் குளிர் நடுக்கம் மற்றும் வெளியே மழைக்காற்றின் ராட்சச குளிர். இந்த இரண்டையும் தாண்டி, வீடு வந்து சேரும் வரை நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று தகித்துக் கொண்டே இருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

9 Aug 2026

நண்டுகளின் கூடாரமும், கார்ப்பரேட் தர்மமும்

நண்டுகளின் கூடாரமும், கார்ப்பரேட் தர்மமும்

மனிதன் கல்வி கற்பதன் நோக்கம் தன்னை மேம்படுத்திக் கொள்வது என்று பழைய புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், நடைமுறையில் அவன் கல்வி கற்பதன் நோக்கம் எப்படியாவது ஓர் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு, சக மனிதனை விட நான்கு ரூபாய் அதிகமாகச் சம்பாதிப்பது மட்டுமே.

ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் பலரும் நினைப்பது, "நாம் நம் வேலையைச் செய்ய வந்திருக்கிறோம்" என்று.

என்னவொரு அறியாமை! நீங்கள் அங்கே வேலை செய்ய வரவில்லை; சக ஊழியர்களைக் கண்காணித்து, அவர்களை விட நீங்கள் எப்படி மேலானவர் என்று முதலாளிக்குக் காட்ட வந்திருக்கிறீர்கள்.

நவீன மேலாண்மை இதற்கு அலுவலக அரசியல் என்று நாகரிகமாகப் பெயரிட்டிருக்கிறது. அடிப்படையில், இது ஒரே குடுவைக்குள் இருக்கும் நண்டுகள் ஒன்றை ஒன்று கீழே இழுத்துக்கொள்ளும் ஓர் ஆதிவாசித் திருவிழா.

தன் தகுதியை வளர்த்துக் கொண்டு நேர்மையாக முன்னேறுவது என்பது மிகவும் போரடிக்கக்கூடிய விஷயம். அதற்குப் பதிலாக, பக்கத்து சீட்டில் இருப்பவனின் வேலையைக் கெடுத்து, அவன் மீது இல்லாத பழி சுமத்தி, வேலையைக் காலி செய்வது எளிதான குறுக்குவழி! இப்போது போட்டிக்கு ஆளில்லை. ஸோ, ஸ்ட்ரெய்ட் புரோமோஷன்.

பல உளவியல் ஆய்வுகள் பணியிட மன அழுத்தத்தை ஒரு பெரிய நோய் என்று சொல்கின்றன. டெலாய்ட், லிங்க்ட்இன் போன்ற நிறுவனங்கள் "அலுவலகச் சூழல் பிடிக்காமல் தான் ஊழியர்கள் ஓடிப் போகிறார்கள்" என்று தரவுகளுடன் அழுகின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஸ்டார்ட் அப்களிலும் ஏற்கனவே டார்கெட் என்ற பெயரில் சாட்டையடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதல் லே ஆப் பயம் வேறு. போதாதற்கு இந்த அலுவலக அரசியல் கூத்தும் சேரும்போது, அலுவலகம் என்பது ஒரு சொகுசான நரகம் ஆகிவிடுகிறது.

இந்த அறம் சார்ந்த சவால்களுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே காரணமல்ல; நம்முடைய கல்வி முறையும் ஒரு முக்கியக் குற்றவாளி.

பள்ளியிலும் கல்லூரியிலும் ஒருவனுக்கு முதலிடம் வர வேண்டும் என்று சொல்லித் தருகிறார்களே தவிர, பக்கத்து மனிதனுடன் எப்படி இணைந்து வாழ்வது என்று சொல்லித் தருவதே இல்லை.

ரேஸ் குதிரைகளாக வளர்க்கப்படும் பிள்ளைகள், ஆபீஸிற்குள் வந்தவுடன் சக ஊழியர்களையும் எதிரிக் குதிரைகளாகவே பார்க்கிறார்கள். அப்புறம் எப்படி அங்கே அன்புநெறி, அறநெறி வளரும்?

நேர்மையாக வேலை செய்யும் அப்பாவிகள் தங்களின் திறமை அங்கீகரிக்கப்படாமல், கடும் விரக்தியில் ஒரு நாள் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஒரு நல்ல ஊழியனை இழப்பது நிறுவனத்திற்கு நஷ்டம் என்று கணக்குத் தெரிந்த முதலாளிகளுக்குப் புரிகிறது. ஆனால், அதைத் தடுக்கும் சிஸ்டம் இன்னும் காகிதப் புலியாகவே இருக்கிறது.

சங்கப் புலவர் புறானூற்றுக் கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றார். அதை இன்றைய கார்ப்பரேட் மொழியில் மொழிபெயர்த்தால், "பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருப்பவனும் உன் சகோதரனே; அவனைக் கவிழ்க்கக் குழி தோண்டாதே" என்று அர்த்தம்.

அலுவலகம் என்பது நீங்கள் சம்பாதிப்பதற்கான இடம் மட்டுமல்ல, நீங்கள் ஒரு மனிதனாக வாழ்ந்து பழகுவதற்கான இடமும் கூட. அதை விடுத்து, சில்லறைத் தனமான சூழ்ச்சிகளால் சக மனிதனின் மன அமைதியைக் கெடுத்தால், இறுதியில் நீங்கள் வாங்கும் சம்பளம் உங்களின் மனநல மருத்துவருக்கே சரியாகப் போய்விடும்!

*****

அச்சம் – நடப்பதற்கும் நடக்கப்போவதற்கும் இடையிலான இடைவெளி!

அச்சம் – நடப்பதற்கும் நடக்கப்போவதற்கும் இடையிலான இடைவெளி!

நிகழ்காலம் என்பது நேர்மையானது. அது உங்களை அறைந்தால் வலிக்கும், அவ்வளவுதான். ஆனால், எதிர்காலம் என்பது ஒரு மறைமுகத் தாக்குதல். அது நிழல் யுத்தம் நடத்துகிறது.

ஒரு துயரம் உண்மையில் நிகழும்போது, அதைச் சமாளிக்க நம்மிடம் ஒரு செயல் திட்டம் இருக்கும். ஆனால், அது நிகழ்வதற்கு முன்பு இருக்கும் அந்த இடைவெளியில், நம் மூளை ஒரு மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் போல இயங்கத் தொடங்குகிறது.

நிஜத்தில் நீங்கள் ஒருமுறைதான் சாவீர்கள். ஆனால் அச்சத்தில், சாவதற்கான ஒத்திகையைத் தினமும் ஐந்து முறை பார்த்துப் பழகுகிறீர்கள்.

மனித மூளைக்கு ஒரு விசித்திரமான குணம் உண்டு. ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று கற்பனை செய்தால், அப்படியெல்லாம் நடக்காது என்று தர்க்கம் பேசும். ஆனால், ஒரு கெட்ட விஷயம் நடக்கும் என்று நினைத்தால், அதற்கு மட்டும் பிஹெச்டி தரத்தில் கிராபிக்ஸ் போட்டு விரிவாகக் காட்டும்.

ஒரு காய்ச்சல் வந்தால் அது கொரோனாவாக இருக்குமோ?

ஒரு போன் கால் எடுக்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு விபத்து நடந்திருக்குமோ?

இந்தக் கேள்விகள்தான் நம்மைத் தின்கின்றனவே தவிர, வந்தக் காய்ச்சல் அல்ல, நடக்காத விபத்தும் அல்ல.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், பயம் என்பது ஒரு நஷ்டமான வியாபாரம். நடக்காத ஒரு விஷயத்திற்காக, இப்போதிருக்கும் அமைதியை வட்டியாகக் கட்டிக் கொண்டிருப்பது போன்றது.

ஒரு நிகழ்வு என்பது பத்தில் ஒரு பங்கு வலி என்றால், அதைப் பற்றிய அச்சம் என்பது பத்தில் ஒன்பது பங்கு அதிகப்படியான வட்டி.

வேலையற்ற மூளை பிசாசின் கூடாரம் அல்ல, அது ஓர் இன்சூரன்ஸ் ஏஜென்டின் அலுவலகம். எப்போதும் இல்லாத ஆபத்துகளுக்கு பிரீமியம் கட்டச் சொல்லும்.

நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆனால் நம் பயமோ, சுவர் இடிந்து விழுந்தால் சித்திரம் என்னவாகும்? என்று நினைத்து, சித்திரமே வரையாமல் சுவரைப் பிடித்துக்கொண்டு அழுவதாகும்.

துன்பம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பவன் ஞானி. துன்பமே வராது என்று இருப்பவன் முட்டாள். ஆனால், துன்பம் வந்து விடுமோ என்று இப்போதே அழுதுகொண்டிருப்பவன் ஒரு சராசரி மனிதன்.

நிகழ்வுகள் நம்மைத் தற்காலிகமாகக் காயப்படுத்துகின்றன. ஆனால் அச்சமோ, நம்மை உயிருடன் இருக்கும்போதே பதப்படுத்தப்பட்ட பிணமாக மாற்றி விடுகிறது. எனவே, எதற்கும் கவலைப்படாதீர்கள். ஏனென்றால், நீங்கள் எதற்காகப் பயப்படுகிறீர்களோ, அதை விட மோசமான ஒன்றுதான் நிஜத்தில் நடக்கப்போகிறது.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத விபத்து. இதில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு படுக்கையறையில் அமர்ந்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பயம் என்பது ஒரு குடை போன்றது. மழை பெய்யாதபோதும் அதைப் பிடித்துக்கொண்டு நடப்பவனைப் பார்த்து மேகங்கள் சிரிப்பதில் ஆச்சரியமே இல்லை.

எனவே, கவலைப்படுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் கவலைப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை, உங்கள் முகத்தின் பொலிவு மாறுவதைத் தவிர!

*****

8 Aug 2026

ஆயிரம் ரூபாயும், மனிதனின் பேராசையும்!

ஆயிரம் ரூபாயும், மனிதனின் பேராசையும்!

பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய இயற்பியல் விதி என்னவென்றால், ஈர்ப்பு விசைக்கு அடுத்தபடியாக மனிதனை வேகமாக இழுப்பது டிஸ்கவுண்ட் என்ற மாய வார்த்தைதான். கடவுள் உலகத்தைப் படைத்தபோது மனித மூளையின் ஓர் ஓரத்தில் மலிவு விலை என்றொரு பலவீனமான நரம்பை வைத்து தைத்துவிட்டார் போலும்.

சமீபத்தில் ஒரு நாள், படுக்கையில் படுத்துக் கொண்டு பேஸ்புக்கில் விரலால் உலகை அளந்து கொண்டிருந்தான் ரங்கநாதன். அப்போதுதான் அந்தப் பிரம்மாண்டமான ஆன்மீகத் தரிசனம் அவன் கண்முன்னே தோன்றியது.

ஒரு பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் லோகோவுடன் ஒரு விளம்பரம்.

இருபதாயிரம் மதிப்புள்ள ஒரு 5ஜி செல்போன் இரண்டாயிரம் ரூபாய். அதிலும் ஐம்பது சதவீதம் டிஸ்கவுண்ட். ஆக விலை ஆயிரம் ரூபாய்.

தத்துவார்த்தமாக யோசித்துப் பார்த்தால், இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய்க்கு தரமான ஒரு பட்டன் செல் கூட வாங்க முடியாது. ஆனால் ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி மொபைல் என்றால், ரங்கநாதனின் பகுத்தறிவு அவன் தொண்டையைக் கவ்வி, இது பொய் என்று கத்தியது. ஆனால், கண்களில் தெரிந்த பேராசையின் எச்சில், பகுத்தறிவின் முகத்தில் காறி உமிழ்ந்தது.

கேஷ் ஆன் டெலிவரி இருக்கிறதா என்று தேடினான் ரங்காநதன். இல்லை. பணத்தை இப்போதே கொடு, சொர்க்கத்தை அப்புறம் பார், என்றது அந்த இணையப்பக்கம். அவசர அவசரமாக தன் கிரெடிட் கார்டு எண்களைத் தட்டினான். ஆயிரம் ரூபாய் அவன் கணக்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டது.

மூன்று நாட்கள் கடந்தன. பிரபஞ்சம் அசையாமல் இருந்தது. அவன் வீட்டு வாசலில் எந்தப் பார்சலும் வந்து விழவில்லை.

பொறுமையிழந்து, அந்தப் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் அசல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டான்.

வணக்கம் சார், என் ஆயிரம் ரூபாய் 5ஜி மொபைல் எங்கே? என்றான் ரங்கநாதன்.

ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி மொபைலா என்று வாய் வரை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, கணினியைத் தட்டிய அந்தப் பெண்மணி, மன்னிக்கவும் சார், உங்கள் முகவரியிலோ, உங்கள் பெயரிலோ கடந்த நூறு ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தில் எந்த ஆர்டரும் பதிவு செய்யப்படவில்லை, என்றார் மிகக் குளிர்ந்த குரலில்.

ரங்காதன் அதிர்ந்தான். அவன் ஆர்டர் செய்த பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டையும், பணம் அனுப்பிய ரசீதையும் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினான்.

மறுமுனையில் ஒரு பெருமூச்சு கேட்டது.

சார், இது எங்களுடைய இணையதளமே இல்லை. இது ஒரு நிழல் உலகப் பக்கம். சமூக வலைத்தளங்களில் எங்கள் முகமூடியைப் போட்டுக்கொண்டு சிலர் உங்களைப் போன்ற அப்பாவிகளின் மன்னிக்கவும், பேராசைக்காரர்களின் பணத்தைப் பறிக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நேரடியாக எங்கள் அசல் தளத்திற்கு வந்து வாங்குங்கள். பேஸ்புக் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்று ரங்கநாதனுக்கு இலவசமாக ஒரு தத்துவ வகுப்பெடுத்தார்.

அப்போதுதான் ரங்கநாதனுக்குப் புரிந்தது. அவேன் வாங்கியது ஒரு டிஜிட்டல் கானல் நீர்.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் உலகம் என்பது ஒரு நவீன மாயா பஜார். அங்கே ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி மொபைலும் கிடைக்கும், ஐந்து பைசாவிற்குத் தாஜ்மஹாலும் கிடைக்கும். ஆனால், எல்லாம் உங்கள் பணம் கணக்கிலிருந்து கழியும் வரை மட்டும்தான்.

ஆசையைத் தூண்டும் விளம்பரங்களைப் பார்த்ததும் உமிழ்நீர் சுரக்கக் கூடிய ரங்கநாதன் போன்ற மக்களே, எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அந்த உமிழ்நீரின் விலை சில சமயம் ஆயிரம் ரூபாயாக இருக்கலாம், சில சமயம் உங்கள் வங்கித் கணக்கின் மொத்த இருப்பாகவும் இருக்கலாம்.

இப்போது ரங்கநாதன் இருபதாயிரம் ரூபாய்க்குக் கடையிலிருந்து 5ஜி மொபைல்  வாங்கி கடலை பேட்டுக் கொண்டிருக்கிறான். இதன் சுவை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கிறது. பேராசையின் சுவை எப்போதும் அப்படித்தான் போலும்!

*****

மனித குலத்தின் ஆகப்பெரிய ஏஜென்சி – ஊர் வாய்

மனித குலத்தின் ஆகப்பெரிய ஏஜென்சி – ஊர் வாய்

மனிதன் சமூக விலங்காக மாறியதில் இருந்து இன்றுவரை அவனுக்கு இரண்டு கடவுள்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று, மேலே இருப்பதாகச் சொல்லப்படும் கண்ணுக்குத் தெரியாத கடவுள். மற்றொன்று, பக்கத்து வீட்டில் வசிக்கும் அடுத்தவன் என்கிற நடமாடும் கடவுள்.

முதல் கடவுள் நீங்கள் தப்பு செய்தால் நரகத்திற்கு அனுப்புவார் என்று மிரட்டுகிறார். இரண்டாவது கடவுளோ, நீங்கள் தப்பே செய்யாவிட்டாலும் உங்களை தப்பா நினைத்து இங்கேயே நரகத்தைக் காட்டுவார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் முதல் கடவுளை விட இந்த இரண்டாவது கடவுளுக்குத்தான் அதிகம் பயப்படுகிறார்கள்.

தப்பு செய்யும்போது கூட இதைச் செய்வது பாவம், என்று எவனும் யோசிப்பதில்லை; யாராவது பார்த்து விட்டால் என்ன நினைப்பார்கள்? என்றுதான் சுற்றும் முற்றும் பார்க்கிறான். மனித ஒழுக்கத்தின் அடிப்படையே இந்த பயத்தில்தான் ஒளிந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று நகைச்சுவை!

நிஜமாகவே ஒரு தவறு செய்யும்போது பயப்படுவது நியாயமானது, அறிவியல் பூர்வமானது. ஏனெனில், அங்கே ஒரு காரண காரியம் இருக்கிறது. நீங்கள் ஒருவனை அடித்தால், அவன் திருப்பி அடிப்பான் அல்லது போலீஸில் சொல்வான் என்கிற லாஜிக்கான பயம் அது.

ஆனால், நான் ஒழுங்காகத்தான் இருக்கிறேன், ஆனாலும் அவன் என்னை தவறாக நினைத்து விடுவானோ? என்று பயப்படுவது இருக்கிறதே, அது ஒரு மனநோய்.

ஏனெனில், அடுத்தவன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பது உங்களுடைய நடத்தையைப் பொறுத்தது அல்ல, அவனுடைய அஜீரணக் கோளாறைப் பொறுத்தது.

அவன் அன்று காலை மனைவியிடம் திட்டு வாங்கியிருந்தால், நீங்கள் சிரித்துப் பேசுவது அவனுக்கு அலட்சியமாகத் தெரியும்.

அவன் கடனில் மூழ்கியிருந்தால், நீங்கள் புது சட்டை போட்டிருப்பது அவனுக்கு தலைக்கனமாகத் தெரியும்.

அடுத்தவனுடைய மூளையில் ஓடும் எண்ணங்களை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாமா? உங்கள் வீட்டு ரிமோட்டைப் பக்கத்து வீட்டுக்காரன் கையில் கொடுத்துவிட்டு, தயவுசெய்து நல்ல சேனலாக வையுங்கள் என்று கெஞ்சுவதைப் போன்றது இது.

அடுத்தவன் நினைப்பது அவனது தனிப்பட்ட துயரம்!

உலகிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம், ஒரு முட்டாள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று ஒரு புத்திசாலி கவலைப்படுவதுதான்.

நீங்கள் காலையில் எழுந்து, நேர்மையாக வேலைக்குச் சென்று, யாருக்கும் துரோகம் செய்யாமல் வாழ்கிறீர்கள். ஆனால், தெருக்கோடியில் நிற்கும் நால்வர் உங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள். உடனே உங்கள் இதயம் படபடக்கிறது, ஐயோ, என்னை தப்பா நினைச்சிட்டாங்களோ? என்று.

அங்கேதான் நீங்கள் தோற்கிறீர்கள். அவர்கள் உங்களைப் பற்றித் தப்பாக நினைப்பதன் மூலம் உங்கள் சொத்தா குறைகிறது, அல்லது உங்கள் பேங்க் பேலன்ஸ் மாறுகிறதா? இல்லையே. அது முழுக்க முழுக்க அவனது மண்டைக்குள் நடக்கும் ரசாயன மாற்றம். உங்களுக்கு ஏன் அனாவசியக் கவலை?

அடுத்தவன் உங்களைப் பற்றித் தப்பாக நினைப்பது அவனுடைய தனிப்பட்ட துயரம், அவனுடைய நேர விரயம். அதை அவனோடு நிறுத்திக் கொள்ளாமல், நீங்களும் அதை நினைத்து பயப்படுவது, அவனது முட்டாள்தனத்திற்கு நீங்கள் தரும் ராயல்டி.

காலம் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த அற்பமான வாழ்க்கையில், நாமே ஒரு சுயமான ஸ்கிரிப்ட் எழுதி நடிக்கப் பயந்து, அடுத்தவன் எப்போது கைதட்டுவான் என்று காத்துக்கொண்டிருப்பது ஆகச் சிறந்த அடிமைத்தனம்.

தவறு செய்தால் பயப்படுங்கள், தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். அது உங்களை மனிதனாக வைத்திருக்கும். ஆனால், தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயப்படாதீர்கள். ஏனெனில், இந்த உலகம் உங்களை வாழ்த்தினாலும் தூற்றினாலும், இறுதியில் நீங்கள் தனியாகத்தான் சாகப் போகிறீர்கள். நீங்கள் சாகும்போது அந்த அடுத்தவன் வந்து உங்கள் எமதர்மனிடம் வாதாடப் போவதில்லை.

எனவே, உங்கள் மனசாட்சிக்குத் துரோகம் செய்யாதவரை, உலகம் உங்களை யோக்கியன் என்று நினைத்தாலும் அயோக்கியன் என்று நினைத்தாலும் உங்களுக்கு என்ன?

ஊர் வாயை மூட முற்படாதீர்கள்; உங்கள் காதுகளை மூடிக் கொள்ளுங்கள். வாழ்க்கை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகும்!

*****