திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 38
நிலவுக்கு என்ன திமிர்?
அந்தப்
பவளமல்லி மரத்து நிழலில் நின்றுகொண்டு அவள் வானத்து நிலவைப் பார்த்துச் சொன்னாள்,
"இதோட நிறம் என்ன தெரியுமா? சாம்பல். ஆனா பாரேன், சூரியன்கிட்ட கடன் வாங்குன வெளிச்சத்துல
என்ன ஒரு பந்தா, நம்ம அரசியல்வாதிங்க மாதிரி!"
அவன்
சிரித்தான். "ஏன் நிலவு மேல இத்தனை கோபம்?"
"கோபம்
இல்ல. ஆதங்கம். என்னோட முகத்துல இருக்கிற இந்த ஒரிஜினல் எக்ஸ்பிரஷனை உன்னால இந்த நிலவுல
பார்க்க முடியுமா? இது ஒரு டெட் பிளானட். அதுல காதலும் இல்ல, கலக்கமும் இல்ல. ஆனா,
இந்த நிலவுக்குக் கவிஞர்கள் கொடுக்குற பில்டப் இருக்கே? ரொம்ப ஓவர்!"
அவன்
புன்னகைத்துக் கொண்டே சொன்னான், "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? திருவள்ளுவர் எப்போவோ
உன்னோட மனசைப் படிச்சுட்டார். அவர் சொல்றாரு, ஏய் நிலவே! உன்னால என் காதலியோட முகத்தை
மாதிரி ஒளியைக் கொடுக்க முடியுமா? முடியலன்னா, உன்னோட காதலை விட்டுவிட்டு மரியாதையா
ஒதுங்கிப் போ அப்படின்னு."
அவள்
புருவத்தை உயர்த்தினாள், "வள்ளுவரே எனக்கு முன்னடியே இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறாரா?"
"சந்தேகமே
வேண்டாம்! உன்னோட முகத்துல இருக்கிற பிரகாசம் வெறும் போட்டான் பார்ட்டிகிள்ஸ் இல்ல;
அதுல எமோஷன்ஸ் இருக்கு. நிலவுல அது இருக்கா? நாசாவே அந்த நிலவுக்குப் போய் பார்த்துட்டு
அங்க ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க."
அவள்
அவன் தோளில் செல்லமாகத் தட்டினாள், "இன்றைக்கு எதையாவது சொல்லி உன்னை வம்புக்கு
இழுக்கலாம்ன்னு பார்த்தா, நீயென்ன வள்ளுவரையும் அறிவியலையும் கொண்டு வந்து அசரடிக்கிறீயேடா!"
"விசயம்
இருக்கு. அன்னைக்கு நீ முகத்துல என்ன க்ரீம் யூஸ் பண்ணுவன்னு கேட்டேனே. ஞாபகம் இருக்கா?"
"ம்.
அதுக்கு என்ன இப்போ திடீர்னு? நான்தான் க்ரீம்லாம் யூஸ் பண்றதில்லன்னு சொன்னேனே!"
"மேட்டரே
அதுலதான் இருக்கு. இன்றைக்கு வானத்தைப் பாரேன் பௌர்ணமி நிலா. அது சூரியனோட வெளிச்சத்தைக்
கிரீம் போல பூசிக்கிட்டுத்தான் இப்படி பந்தா பண்ணுது. நீ சொல்றாப்புல பில்டப் கொடுக்குது.
அப்படிக் கொடுத்தாலும், அதால உன்னோட முகத்துக்கு ஈடு கொடுக்க முடியல பாரேன். திருவள்ளுவர்
இங்க இருந்திருந்தா இப்போ அதைத்தான் சொல்லியிருப்பார்.
"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி."
(குறள், 1118)
அப்படின்னு!"
"போதும்டா.
வள்ளுவரைக் கூப்பிட்டு வந்து என்னை வர்ணிக்கிறேன்னு, ஒரே அடியா என்னை ஒரு வழி பண்ணிடாதே!"
என்று அவள் சொன்னாலும், அவள் முகத்தில் வழிந்த அந்தச் சின்ன வெட்கப் புன்னகை, அந்தப்
பௌர்ணமி நிலாவை விட பல நூறு மடங்கு அதிகமாகவே ஒளிர்ந்தது.
அவர்களின்
இந்த உரையாடலைக் கேட்டதாலோ என்னவோ, திடீரென்று வானத்தில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது!
நிலவு
மெல்ல வானத்து மேகங்களுக்குள் இருந்து இறங்கி, அவர்களதுமுன்னே வந்து விட்டது. அதனிடமிருந்து
ஒரு சன்னமான குரல் ஒலித்தது, "ஏய் மானிடர்களே! என்னை நீங்கள் ரொம்ப மட்டம் தட்டுவது
எனக்குப் புரிகிறது. உலகமே என்னைப் புகழ்ந்து கவிதை பாடும் போது, நீங்களும் திருவள்ளுவரும்
சேர்ந்து கொண்டு, என்னை என்னவோ கருவாட்டுக் கடை சரக்கைப் போல துச்சமாகப் பேசிக் கொண்டு
இருக்கிறீர்களே?"
திடீரென்று
இப்படி நிலவை அருகில் எதிர்பார்க்காத அவளுக்கு சற்று மயக்கம் கலந்த பயம் வந்து விட்டது.
ஆனால்,
அவன் சற்றும் அசரவில்லை. நிலவைப் பார்த்துப் பேசத் தொடங்கினான், "ஏய் நிலவே! உன்னை
எல்லாரும் கொண்டாடுவது உண்மைதான். ஆனால், நீ மாதத்துக்கு பதினைந்து நாள் தேய்ந்துப்
போயிடுற, நடுவுல மேகக் கூட்டம், அப்புறம் கிரகணம் எல்லாம் வந்து உன்னை முழுங்குது.
உன்னால ஒரே மாதிரி எப்பவும் இவளோட முகம் மாதிரி ஒளிர முடியுமா? சரி அப்படி இப்படி ஏதோ
கொஞ்சம் மங்கலா தொங்கலா ஒளிர்றன்னு பார்த்தாலும், ஏ கடன்கார நிலவே! அது உன்னோடாதான்னா
அதுவும் இல்ல, அது சூரியனோடது. ஆனா, இவளோட முகம், அந்த ஒளி எல்லாம் இவளோடது. யாருகிட்டேயும்
கடன் வாங்கிட்டு வந்தது இல்ல தெரியுமா?"
நிலவு
சற்றுத் தடுமாறியது. "இருந்தாலும், நான் விண்வெளியில் இருக்கிற பெரிய துணைக்கோளம்பா!
என்னைப் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. என்னைப் போட்டு இப்படிக் கலாய்க்கலாமா?"
என்று அது அழ ஆரம்பித்து விட்டது.
அவன்
விடாப்பிடியாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னான், "அதெல்லாம் எனக்குத் தெரியாது.
என் காதலிக்கு ஈடாக நீ ஒளிர வேண்டுமானால், முதலில் உன் முகத்தில் களங்கம் மாதிரி இருக்கின்ற
அந்தத் தழும்புகளை லேசர் சிகிச்சை செய்து எடு. அதுக்கப்புறம் வந்து பேசு! திருவள்ளுவர்
சொல்ற மாதிரி, மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி!"
அவ்வளவுதான்!
அவனின் இந்த வெறித்தனமான பதிலைக் கண்டு பயந்துபோன நிலவு, சட்டென்று மேகத்திற்குள் ஓடி
ஒளிந்துகொண்டது.
"பாவம்டா
நிலா! அதைப் போய் இப்படி நோஸ் கட் பண்ணி ஓட விட்டுட்டீயே! அதோட மனசு என்ன பாடுபடும்?"
அவள் முகம் வாடியது.
"இப்போ
வாடுறப்போ கூட, உன்னோட முகத்தை அந்த நிலா பீட் பண்ண முடியலையே! " என்று அவன் சொல்ல,
"ச்சீ! போடா!" என்று அவன் மார்பில் ஒரு குத்து விட்டாள். பின் என்ன நினைத்தாளோ
அவன் மார்பை ஆரத் தழுவிக் கொண்டாள்.
-
சூத்திரங்கள் தொடரும்!
*****






