3 Sept 2026

வேட்ட பொழுதும் காதல் விழுதும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 25

வேட்ட பொழுதும் காதல் விழுதும்!

மழை மேகத்தின் கருமையை அப்படியே திருடிச் சுருட்டி வைத்தது போன்ற அடர்ந்த கூந்தல் அவளுக்கு. திருவாரூர் ராயல் பார்க்கின் கண்ணாடி ஜன்னலோரம், வெளியே தூறிக்கொண்டிருந்த மழையின் ஈரத்தோடு அவளது தலையிலிருந்த மல்லிகைப் பூ மணமும் கலந்து காற்றில் மிதந்தது.

"ரொம்ப நேரமா வெயிட்டிங்கா?" என்று கேட்டபடியே, பேருந்து நிலையம் மற்றும் மேம்பால சாலை போக்குவரத்து நெருக்கடியில் அலைந்து, ராயல் என்பீல்டை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு உள்ளே வந்த அவன், அவளது எதிரே இருந்த மேஜையில் அமர்ந்தான்.

மாலை ஐந்து மணி.

போக்குவரத்து நெருக்கடி தந்த எரிச்சல், அவளது தோள்களில் புரண்ட அந்த அடர்ந்த கூந்தலைப் பார்த்ததும் ரசாயன மாற்றம் போல நொடியில் காற்றில் மறைந்தது.

"இல்ல, பத்து நிமிஷம். என்ன இன்னைக்கு லேட்?" என்றாள் அவள்.

"ட்ராபிக். அப்புறம் உன் தோள் மேல விழற இந்த தலைமுடியை பார்க்கிற ஒரு க்ளோஸ் அப் ஷாட்டுக்காக!" என்றான் அவன்.

அவள் தன் தோளின் மீது கிடந்த அடர்ந்த கூந்தலை மெல்ல பின்னுக்கு ஒதுக்கி, அவனைக் குறும்போடு நிமிர்ந்து பார்த்தாள். "என்னடா, திடீர்னு சினிமா டைரக்டர் மாதிரி பேசற?"

"இல்லடி. வள்ளுவர் அன்னைக்கே இதை எழுதி வச்சிட்டு போயிருக்கார் தெரியுமா?

''வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்''    (குறள், 1105)

அப்படின்னு. இதோட நியூரோ பயாலஜிக்கல் அர்த்தம் தெரியுமாடி உனக்கு?"

''என்னடா! சினிமா டைரக்டர் மாதிரி ஆரம்பிச்சு திடீர்ன்னு சயின்டிஸ்ட் மாதிரி பேசுறே? நார்மலத்தானே இருக்கே?''

"ஐயம் நார்மல். ஆனா, விஷயம் இருக்கும். மனித மூளையில் நூறு பில்லியன் நியூரான்கள் இருக்கு. மனசு ஆசைப்பட ஆசைப்பட என் நியூரான்களுக்கு உன் கூந்தலும் தோளும் எனக்கு அவ்வளவு ஸ்பெஷலா தெரியுமாம்! அது உண்டாக்குற டோபமைன் எபெக்ட் இருக்கே. அதை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. இருந்தாலும் வள்ளுவர் சொல்றார், காதலிக்கும்போது, அவளோட தோள்கள்ல சாய்ஞ்சிருக்கும்போது, அந்தந்தக் கணத்தில் மனசு என்னவெல்லாம் ஆசைப்படுதோ, அந்த இன்பங்களை எல்லாம் அந்தத் தோள்களே கொடுத்துருமாம்! டொபமைன் ஹை பீக்ல இருக்குமாம்."

"ஓ! அப்போ உன் மூளையோட டோபமைன் அளவைப் பொறுத்துதான் என் அழகும் இன்பமும் தீர்மானிக்கப்படுதா மிஸ்டர்? அது குறைஞ்சா என் அழகு குறைஞ்சிடுமா? அப்புறம், நான் அந்த அளவுக்குச் சந்தோஷம் கொடுக்க மாட்டேனா?"

"அதுதான் மேட்டரே! காதலிக்கிற கணத்துல மூளை சுரக்குற அந்த கெமிக்கல் ரியாக்சன் குறையவே குறையாதுங்கறதுதான் இந்த குறளோட சீக்ரெட் கோட்!"

"அடப்பாவி! இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு ரொமாண்டிக்கா யோசிச்சிருக்காரா மனுஷன்?"

"பின்னே என்ன? காதலனைப் பொறுத்தவரை அவனோட காதலிதான் ஆல் இன் ஒன் எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டம்னு சொல்லாம சொல்றாரு!"

அவள் சத்தமாகச் சிரித்தாள். அவள் சிரித்துத் தலைசாய்க்கும் போது, பூச்சூடிய கூந்தல் அவனது தோளில் லேசாக உரசியது. ராயல் பார்க் சூழலில் மெல்லிய பாடலின் இசை மிதக்க, வெளியே மழைத் துளிகள் தாளமிட்டன.

கொஞ்ச நேரத்திற்கு முன் அவன் ஆசைப்பட்ட அத்தனை சுகமும், அவளுடைய அந்தச் சிறிய தோள் தொடுதலுக்குள் அடங்கியிருப்பதை அவனது நூறு பில்லியன் நியூரான்களும் ஒரே நேரத்தில் இப்போது உண்மை ஒன்று நிரூபிக்கப்படுவதைப் போல அப்படியே உணர்ந்தன.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

2 Sept 2026

ஒரு நவீன காதலர்களின் சாகசம்!

ஒரு நவீன காதலர்களின் சாகசம்!

உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள். சிலர் நிம்மதியாய் வாழ்கிறார்கள், சிலர் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனால், கோவை கே.ஜி. சாவடியில் எம்.பி.ஏ. படிக்கும் பரணிதரனும், அவர் தோழி சிந்துவும் "ஆடம்பரமாக வாழ்வது எப்படி?" என்பதற்கு ஒரு புதிய மேலாண்மைச் சூத்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எம்.பி.ஏ. வகுப்பில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் என்று ஒரு பாடம் உண்டு. பரணிதரன் அதை வகுப்பறையில் கவனிக்காமல், வெள்ளலூர் பஸ் ஸ்டாண்டில் நடைமுறைப்படுத்தத் துணிந்ததுதான் இங்கு நடந்த அசம்பாவிதம்.

காதலிக்கு ஆடம்பரமாகச் செலவு செய்ய ரூ.75 ஆயிரம் கடன் வாங்குவது வரை பரவாயில்லை, அது பெரும்பாலான கல்லூரி இளைஞர்களின் பாரம்பரிய வழக்கம்தான். ஆனால், அந்த கடனை அடைக்கவும், புதிதாக ஒரு கார் வாங்கி ஜாலியாகச் சுற்றவும் அவர்கள் போட்ட திட்டம்தான் மிக விசித்திரமானது.

ரோட்டில் நடந்து போகும் மூதாட்டியிடம் நான்கு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தால், அதில் ஒரு புது கார் வாங்கிவிடலாம் என்று எந்தக் கணக்குப்பாடம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை அது ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தின் பக்க விளைவோ என்னவோ!

அவர்களின் திட்டம் இதுதான். முதலில் பரணிதரன் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் போய் பேச்சுக்கொடுக்க வேண்டும். அடுத்து முகமூடி அணிந்த சிந்து திடீரெனச் சங்கிலியைப் பறிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து இருவரும் ஸ்கூட்டரில் ஏறி தப்பிச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் பேச்சுத் திறமை – வேகமும் துரிதமும் – செயல்பாட்டு மேலாண்மை எனும் எம்பிஏ பாடங்களில் வருமோ என்னவோ!

மேற்படி திட்டத்தைக் கேட்பதற்கு மிக கச்சிதமான கார்ப்பரேட் வியூகம் போலத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் மறந்துபோன ஒரு சின்ன விஷயம், அந்த தெருமுனையில் இருந்த சிசிடிவி கேமரா!

"முதல் முயற்சியிலேயே சிக்கிக்கொண்டனர்" என்று போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் மிக வருத்தத்துடன் அல்லது சிரிப்புடன் கூறியிருக்கிறார். சிசிடிவியில் வண்டியின் பதிவு எண் அப்பட்டமாகத் தெரிய, 24 மணி நேரத்திற்குள் போலீஸ் இருவரையும் விடுதியிலேயே போய் வளைத்து காப்பு கட்டி விட்டது.

இப்போது நான்கு பவுன் சங்கிலி போயாயிற்று, இரண்டு செல்போன்கள் போயாயிற்று, ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரும் போயாயிற்று. காரில் சொகுசாகச் சுற்ற நினைத்தவர்கள், இப்போது போலீஸ் வேனில் கம்பீரமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மனித குலத்திற்கு இந்த ஜோடி சொல்லாமல் சொல்லிச் சென்ற பாடம் ஒன்றுதான், அது என்னவென்றால், "எம்.பி.ஏ. படிப்பது சுலபம்; ஆனால், ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு சிசிடிவி கேமராவில் சிக்காமல் தப்பிப்பது அதை விடக் கடினம்!"

இப்போது உள்ள கல்லூரி மாணவர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! நினைத்துப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறதுதானே!

*****

முழங்கால்களில் வீழ்ந்த கல்வி!

முழங்கால்களில் வீழ்ந்த கல்வி!

சாத்தான்களின் கூட்டத்திலும் சில சமயம் நியாயங்கள் துளிர்ப்பதுண்டு. ஆனால், மனிதர்களின் பள்ளிக்கூடங்களில் நியாயங்கள் எப்போதும் முட்டி போட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

பெரம்பலூர் தேனூர் கிராமத்து அரசு மேல்நிலைப்பள்ளியின் கரும்பலகையில் யாரோ சில எதிர்காலப் பிரஜைகள் எழுதி வைத்த ஆபாசங்களை விட, அந்தச் சுவர்கள் கண்டுகொண்டிருந்த அமைதி மிகவும் ஆபத்தானது.

கபில்தேவ் என்ற வணிகவியல் ஆசிரியர், "யாரடா அது?" என்று கேட்டார். மாணவர்கள் கூட்டாக யோசித்து, ஒருமனதாகத் தங்கள் வழக்கமான ஆயுதமான தெரியாது என்பதைப் பதிலாக வீசினார்கள்.

ஆசிரியருக்குக் கோபம் வந்தது. கோபம் என்பது அதிகாரத்தின் எளிய வடிகால். வகுப்பில் இருந்த அத்தனை பேரையும் முட்டிப்போட வைத்தார்.

ஆனால், அவர் ஒரு விஷய மறந்துபோனார். அந்தக் கூட்டத்தில் முட்டி போட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் தந்தை, இந்த நாட்டின் மிகச் சிறிய ஆனால் மிகக் கொடூரமான அதிகார அமைப்பான ஊராட்சிச் செயலாளராக இருந்தார். ராஜசேகர் என்பது அவர் பெயர். அதிகாரத்தின் சிறு துளியைச் சுவைத்த மனிதர்களுக்கு, தங்களின் வாரிசு முட்டிபோடுவதை விடப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ராஜசேகர் பள்ளிக்கு வந்தார். அவருடைய கோபம் நேர்மையானது அல்ல; அது அதிகாரச் செருக்கின் குமுறல். "என் மகனை முட்டிபோட வைக்க உனக்கு எவ்வளவு தைரியம்?" என்று கத்தினார். பள்ளியின் சுவர்கள் ஏற்கனவே ஆபாசங்களைச் சுமந்து பழகியவைதான், இப்போது அந்தப் பஞ்சாயத்துச் செயலாளரின் கெட்ட வார்த்தைகளையும் தாங்கிக்கொண்டன.

"நீயும் முட்டிப்போடு!" என்றார் ராஜசேகர்.

ஒரு வணிகவியல் ஆசிரியர், கணக்குப் பிள்ளையைப் போலப் பயந்து போனார். வகுப்பறையில், சாக்பீஸ் தூசிகளுக்கு நடுவே, மாணவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, ஆசிரியர் கபில்தேவ் தன் முழங்கால்களைத் தரையில் பதித்தார். அது ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் அதிகாரத்தின் முன் தலைவணங்கிய தருணம் அல்ல; கல்வி என்பது அதிகாரத்தின் காலடியில் முட்டிபோட்ட தருணம்.

ஆசிரியர் கபில்தேவ் சில நிமிடங்கள் முட்டிபோட்டிருந்தார். அந்தச் சில நிமிடங்களில் அவர் கற்றுக் கொடுத்த பாடம், பாடப்புத்தகங்களில் இல்லாதது, "அதிகாரம் உள்ளவன் சொல்வதே நீதி."

பிறகு, பயம் மெல்ல வடிந்து தற்காப்பு உணர்வாக மாறியபோது, ஆசிரியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டார். சக ஆசிரியர்கள் உடன் சென்றார்கள். கலெக்டர் ஷரண்யா அறிவிடம் புகார் மனு கையளிக்கப்பட்டது. "விசாரணைக்கு உத்தரவிடப்படும்" என்ற வழக்கமான அரசுக் கோப்புகளின் வாக்குறுதி கிடைத்தது.

தேனூர் கிராமத்து மேகங்களில் இப்போது பரபரப்பு சூழ்ந்திருக்கிறது. ஆனால், கரும்பலகையில் எழுதப்பட்ட ஆபாசமும், வகுப்பறையில் முட்டிபோட்ட ஆசிரியரின் அவமானமும் ஒன்றைத்தான் உரக்கச் சொல்கின்றன, மனிதர்கள் மாறப்போவதில்லை. அவர்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்கும்போதெல்லாம், எதிரில் இருப்பவரை முட்டிபோட வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

*****

சுடும் நீர்! சுடாத தீ!!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 24

சுடும் நீர்! சுடாத தீ!!

குளிர்பதனம் செய்யப்பட்ட அறையின் காற்றில் லேசான லாவெண்டர் வாசனை. வெளியே வெயில் திருவாரூருக்கேகே உரித்தான கொடூரத்தோடு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

அவன் அலுவலகக் கோப்பைப் பார்த்தபடியே தேநீரை ஒரு மடக்கு குடித்தான்.

எதிரே அவள்.

அவளுடைய கூந்தல் நுனியில் இன்னும் லேசான ஈரம், கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சம், விரல்களில் சுழலும் வைர மோதிரம்.

அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் புதிராகவே இருக்கும்.

"என்ன அப்படிப் பார்க்கறே?" அவள் தன் அலுவலகக் கோப்பைப் பார்த்தபடி, தன் ஐலைனர் தீட்டிய கண்களை உயர்த்திக் கேட்டாள் அவள்.

"இல்ல. வெளிய தீயா எரியுது. ஆனா உன்கிட்ட வந்தா மட்டும் குளிருது. அதெ உன்னை விட்டுத் தள்ளிப் போனா சுடவும் செய்யுதுனு யோசிச்சேன்."

அவள் சிரித்தாள். "பிசிக்ஸ் படிச்சவன்னு காட்டிக்காத. சயின்ஸ்ல இதுக்கு பேரு தெர்மோடைனமிக்ஸ் எக்ஸ்செப்ஷன்."

"இல்ல, இது சயின்ஸ் இல்ல. சங்கம் மருவிய இலக்கியம்."

அவள் புருவத்தை உயர்த்தினாள். "தமிழ் வாத்தியார் மாதிரி பேசாத!"

"நிஜமாத்தான். வள்ளுவர் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே உன்னைப் பத்தி எழுதிட்டுப் போயிட்டார்.

"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்."                 (குறள், 1104)

என்று ஒரு குறள் உண்டு."

"அப்படின்னா?"

"தூரம் போனா சுடும். பக்கத்துல வந்தா குளிரும். இப்படி ஓர் அதிசயத் தீயை இவ எங்கிருந்து பிடிச்சுட்டு வந்தான்னு தலைவன் புலம்பறான். என்கிட்ட நீயும் அதே தீயாத்தான் இருக்க."

அவள் கொஞ்ச நேரம் பதிலேதும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். பிறகு தன் அழகிய டைட்டன் கடிகாரத்தைக் கழற்றி மேசை மேல் வைத்தாள். அலுவலகக் கோப்பை மெல்ல மூடினாள்.

"டேய்! குறும்புக்காரா!" அவளது குரல் சட்டென்று இறங்கி, ஒருவித நெருக்கமான நிசப்தத்தை அந்த அறையில் உருவாக்கியது.

"ம்?"

"அந்தத் தீயை நான் எங்கிருந்து கொண்டு வந்தேன்னு உனக்கு தெரியணுமா?"

"எங்கிருந்து?"

அவள் லேசாக முன் நகர்ந்து, அவன் கைகளைத் தன் இரு கைகளாலும் மூடினாள். அவளது விரல்களின் கதகதப்பு அவனுள் இறங்கியது. அதே நேரம், மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு விவரிக்க முடியாத அமைதியும் குளிர்ச்சியும் பரவியது.

"உன்கிட்ட இருந்துதான். நீ என்கிட்ட காட்டுற அன்போட வெளிப்பாடுதான் அது!" என்றாள் அவள்.

வெளியே திருவாரூருக்கே உரிய வெயில் தன் கொடூரத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்க, அந்த அறையில், வள்ளுவரின் அந்த விசித்திரத் தீ இருவருக்குள்ளும் அமைதியாக எரிந்து கொண்டிருந்தது.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

1 Sept 2026

இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?

எப்போது புது வருடம் பிறக்கிறது?

காலண்டரும் டைரியும் இலவசமாக வரும் போது…

*****

அடையாளத்திற்காக அடிக்கடி ஆதார் அட்டையைக் கேட்கும் போது உங்கள் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கிறது?

அந்த ஆதாரில் இருப்பது நானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது! அதை வைத்து எப்படி என்னை அடையாளம் காண்கிறார்களோ?!

*****

தெருவுக்கு நான்கு டிரான்ஸ்பார்மர்கள் இருந்தால் எப்படி இருக்கும்?

ரோடு ஷோ நடத்தும் சில தலைவர்களுக்கு வசதியாகத்தான் இருக்கும்.

*****

இருபது ரூபாய் நாணயத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

அடுத்து ஐம்பது ரூபாய் நாணயம் கூட கிடையாது, ஸ்ட்ரைட்டாக நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் நாணயம்தான்.

*****

அரசியலில் அப்பா – மகன் மோதலை எப்படித் தவிர்ப்பது?

வயதுக்கு வந்ததும் தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள் என்று வீட்டை விட்டு, Sorry கட்சியை விட்டே துரத்தி விட்டு விட வேண்டும்.

*****

அரசியலில் ஏன் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை?

கட்சியை விட்டுத் தூக்கியவர்கள் எல்லாம் கூட்டணியில் வந்து சேர்ந்து விட்டால் எதிரியாவது நண்பனாவது?

*****

எதிர்பாராத கூட்டணி என்பது என்ன?

மீந்துப் போன இட்டிலியோடு, வீணாய்ப் போன வெங்காயம் சேர்ந்து இட்டிலி உப்புமாவாக வந்து நிற்பதுதான்.

*****

இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?

இந்திப் படித்து இந்திக்காரனாகித் தமிழ்நாட்டுக்கு வந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்.

*****

ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் விலைவாசியைக் குறைப்போம் என்று அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுக்கிறார்களே! எந்த தைரியத்தில் அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்கள்?

எதுவாக இருந்தாலும் அது ஆறு மாதத்தில் பழகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்தத் தைரியத்தில்தான் குறைக்கவே முடியாத விலைவாசியைக் குறைப்போம் என்று வாக்குறுதியை வாரி வழங்குகிறார்கள்.

*****

எவ்வளவுதான் வெச்சு செஞ்சாலும் அமெரிக்காவை இந்தியா எதுவும் செய்யாமல் இருக்கிறதே?

வெச்சு செய்யுற அவனுங்களுக்கே அலுக்காத போது, அதெ வாங்கிக்கிற நமக்கு அலுக்கவா போவுது.

*****

தேவலோகத்திற்கான கூகுள் மேப்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 23

தேவலோகத்திற்கான கூகுள் மேப்!

தேசிய நெடுஞ்சாலை 83.

அந்த இரவில், காரின் குளிர்பதனக் காற்றில் இளையராஜாவின் மெல்லிசை ஓடிக் கொண்டிருந்தது.

அவன் டேஷ்போர்டைப் பார்த்தான்.

மணி 11:45.

பக்கத்து இருக்கையில் அவள், அவன் தோள் மீது தலை சாய்த்து அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது லேசான மூச்சுக்காற்று அவன் கழுத்தில் பட்டுத் தெறித்தது.

திடீரென காரின் மியூசிக் சிஸ்டம் தானாகவே சத்தத்தைக் குறைத்துவிட்டு, குரல் வழி உதவியாளரான 'ஆரா' இயங்கியது.

"உங்களது ஹார்ட் ரேட் நிமிடத்திற்கு 62 ஆகக் குறைந்துள்ளது. மூளையின் ஆல்பா அலைகள் சீராக உள்ளன. நீங்கள் இப்போது உச்சகட்ட மன அமைதியில் இருக்கிறீர்கள். சொர்க்கத்திற்குச் செல்ல இதுவே சிறந்த தருணம்," என்றது ரோபோடிக் குரலில்.

"சொர்க்கமா? என்ன உளறுகிறாய் ஆரா?" என்றான அவன்.

"நான் உளறவில்லை. நீங்கள் கடந்த வாரம் பதிவிறக்கம் செய்த 'தேவலோக விஆர்' ஆப் உங்கள் மொபைலில் காத்திருக்கிறது. அதில் 'வைகுந்தம் v2.0' அப்கிரேட் தயார் ஆபர் பிரைஸில். ஜஸ்ட் டென் லேக். தாமரைக்கண்ணன் உலகத்தின் டிஜிட்டல் அனுபவம். அங்கு துக்கமில்லை, மரணமில்லை, எல்லையற்ற பேரானந்தம் மட்டுமே. ஆப்கிரேட் செய்யுங்கள். நீங்கள் அந்த நித்யத்துவத்தை அடைந்துவிடலாம்."

அவன் கண்ணாடியில் பார்த்தான். அவன் மொபைலில் அந்த ஆப் அப்கிரேட் செய்வதற்கான நோட்டிபிகேஷன் மணியடித்தது.

"அங்கு என்னவெல்லாம் இருக்கும்?" அவன் தொடர்ந்தான். 

"மகாவிஷ்ணுவின் பேரழகு, பாற்கடலின் அலை ஓசை, தேவாமிர்தத்தின் சுவை, எந்தக் கவலையுமற்ற நிரந்தர நிம்மதி. மனித மூளை கற்பனை செய்ய முடியாத உச்சபட்ச மகிழ்ச்சி."

அவன் மெல்லத் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். அவள் இன்னமும் உறக்கத்தில் இருந்தாள். அவள் விரல்கள் அவன் கையை இறுக்கமாகப் பற்றியிருந்தன. கனவில் ஏதோ பயந்தவள் போல, அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள்.

அவளது கூந்தல் வாசனை, லேசான வியர்வை மணம், அந்த மென்மையான ஸ்பரிசம் என எந்த வெர்ச்சுவர் ரியாலிட்டி ஆப்பாலும் பிரதியெடுக்க முடியாத ஒரு நிஜத்தின் அசைவு அவனை வசீகரித்தது.

அவன் புன்னகைத்தான். மொபைலில்  இருந்த அந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்தான்.

"என்ன செய்கிறாய்? தாமரைக்கண்ணனின் உலகு உனக்கு வேண்டாம் என்பதா? அதைவிடச் சிறந்தது இந்த பூமியில் வேறு என்ன இருக்கிறது?" ஆரா ஆச்சரியத்துடன் கேட்டது.

"இருக்கிறது ஆரா," அவன் காரை மெல்ல ஸ்டார்ட் செய்தான். "2000 வருடத்துக்கு முன்னாடியே திருவள்ளுவர் அதை சொல்லி விட்டார்.

"தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு?"                   (குறள், 1103)

தான் நேசிக்கும் பெண்ணின் மெல்லிய தோளில் தலைவைத்துத் தூங்கும் அந்த நிஜமான இன்பத்தை விட, அந்தத் தாமரைக்கண்ணனின் வைகுந்த உலகம் அவ்வளவு இனிமையானதா என்ன? கண்டிப்பா இருக்காது!"

ஆரா மௌனித்தது.

அவன் மனம் இறக்கைக் கட்டிக் கொண்டது.

கார் நெடுஞ்சாலையில் வேகமான பறக்க, அவள் அவன் தோளில் இன்னும் கொஞ்சம் ஆழமாக முகம் புதைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு இப்போது அந்த வைகுந்தம் காரின் உள்ளேயே இருப்பது போலிருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

31 Aug 2026

உலகில் நிறுத்த முடியாத ஒரே போர்!

இப்போதெல்லாம் விசாரணை என்றதும் உங்களுக்கு மனதில் முதலில் தோன்றுவது என்ன?

உண்மை வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லை.

*****

தேர்தல் அரசியல் என்பது என்ன?

காந்தியும் கோட்ஸேயும் கூட்டணி வைத்துக் கொள்வதுதான்.

*****

மனைவியதிகாரம் என்பது என்ன தெரியுமா?

நேற்று ஒரு கல் உப்பு கூடுதலாக என்று சொன்னதற்கு, இன்று நான்கு கல் தூக்கலாகப் போடுவதுதான்.

*****

தங்கத்தின் சிறப்பு என்ன தெரியுமா?

ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்க முடியும். தங்கத்தை அப்படி முடியாது.

*****

ச்சும்மா ஓட்டைப் பிரித்து மேய ஒரு வாக்குறுதி…?

மகளிருக்கு மாதந்தோறும் ஒரு கிராம் தங்கம்.

*****

வாக்கிங் போகிறவர்களின் எண்ணிக்கை பிரத்யேகமாகச் சமீப காலங்களில் அதிகரிக்க என்ன காரணம்?

மக்கள் வாக்கிங் போகும் இடங்களாகப் பார்த்து சுவையான பஜ்ஜி, போண்டா, சமோசா கடைகள் அமைவதுதான்.

*****

இந்தியர்களின் எந்த நம்பிக்கை உலகை அசரடிக்கிறது?

கொன்றால் பாவம் தின்றால் போய் விடும் என்பது போல, புண்ணியம் செய்தால் செய்த பாவம் பறந்தோடி விடும் என்ற நம்பிக்கைதான்.

*****

இன்றைய இந்தியனுக்கு என்னதான் பிரச்சனை?

அது இயக்குநர் ஷங்கரைக் கேட்க வேண்டிய கேள்வி சார்!

*****

ஸ்விஸ் பேங்க் எங்கே இருக்கிறது?

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு எங்கிருந்ததோ, அங்கேதான் இப்போதும் இருக்கிறது.

*****

எந்தப் போரையும் அடாவடியாகப் புகுந்து நிறுத்த நினைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் நிறுத்த முடியாத போர் எது தெரியுமா?

அவர் செய்யும் அக்கப்போர். அதை அவர் நினைத்தாலும் நிறுத்த முடியாது.

*****