31 Dec 2020

வந்தச் சுவடு தெரியாமப் போவணும்!

வந்தச் சுவடு தெரியாமப் போவணும்!

செய்யு - 672

            டவுன் போலீஸ் ஸ்டேசன்ல போயித் தகவலச் சொன்னதும், வெளியில நின்னுகிட்டு இருந்த போலீஸ்காரரு உள்ளார கம்ப்யூட்டர் மின்னாடி உக்காந்திருந்த ஒரு போலீஸ்காரர்ரப் பாத்து அவருகிட்டெ சொல்லுங்கன்னு அனுப்பி வெச்சாரு. அங்கப் போயி அந்தப் போலீஸ்காரர்ட்டெ கைப்புள்ள தகவலச்‍ சொன்னதும், "ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதுங்க. அவ்வேம் போன் நம்பர்  இருந்தா மொதல்ல கொடுங்க!"ன்னாரு அங்க இருந்த போலீஸ்காரரு.

            போன் நம்பர்ர கொடுத்ததும் அதெ வாங்கி போலீஸ்காரரு போனப் போட்டா பாலாமணி எடுத்துப் பேசுறாம். "யாருய்யா?"ன்னு எரிச்சலா கேக்குறாம்.

            "திருவாரூரு டவுன் போலீஸ் ஸ்டேசன்லேந்து பேசுறேம்!"ன்னதும் கொஞ்சம் அடங்குனாப்புல, "ன்னா விசயம்?"ங்றாம் பாலாமணி.

            "ஒஞ்ஞ மேல ஒரு கம்ப்ளெய்ண்ட் பண்ணிருக்காங்க. கொஞ்சம் திருவாரூரு டவுன் போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போவ முடியுமா?"ன்னாரு போலீஸ்காரரு.

            "நாம்ம பாக்குக்கோட்டைங்க. நமக்குத் திருவாரூருக்கும் சம்பந்தம் இல்லீங்க. நாம்மப் பாக்குக்கோட்டைலேந்து எப்பிடி திருவாரூருக்கு வர்ற முடியும்?"ன்னாம் பாலாமணி சாமர்த்தியமா பதிலச் சொல்றாப்புல.

            "அவரு பேரு என்னா சொன்னீங்க?"ன்னு போலீஸ்காரரு கைப்புள்ளயப் பாத்துக் கேட்டாரு.

            "பாலாமணிங்க!"ன்னாரு கைப்புள்ள. அதெ கேட்டுக்கிட்ட போலீஸ்காரரு, "நீஞ்ஞ பாலாமணிதானே?"ன்னாரு.

            "டாக்டர் பாலாமணி!"ன்னாம் பாலாமணி.

            "அப்ப நீங்கத்தாம். பத்தே நிமிஷத்துல கலக்ட்டரேட் பின்னாடி இருக்குற டவுன் போலீஸ் ஸ்டேசன்ல இருக்கணும்!"ன்னாரு போலீஸ்காரரு கண்டிப்புக் காட்டுறாப்புல.

            "நாஞ்ஞ பாக்குக்கோட்டைங்றேம். நீஞ்ஞப் பாட்டுக்குப் பேசிக்கிட்டெ இருக்கீயே?"ன்னாம் பாலாமணி போன்லயே வெசனக் கடுப்பெடுத்தவேம் போல.

            "சித்தெ நேரத்துக்கு மின்னாடி இஞ்ஞ திருவாரூரு கோர்ட்டுக்கு மின்னாடி வெச்சி ஒருத்தர்கிட்டெ வம்பு வெச்சிருக்கீங்க. அவரு இஞ்ஞ வந்து புகாரு பண்ணிட்டாரு. நீஞ்ஞ திருவாரூரு டவுன் லிமிட்டெ தாண்டி அந்தாண்ட போயிருக்க முடியாது. நீஞ்ஞளா வந்தா நல்லது. ல்லன்னா ஒஞ்ஞ வண்டி நம்பர் வரைக்கும் நோட் பண்ணிக் கொடுத்திருக்காரு. செக் போஸ்ட்ட அலர்ட் பண்ணி ஒஞ்ஞள கொண்டு வர்றாப்புல இருக்கும். எப்பிடி வசதி?"ன்னாரு போலீஸ்காரரு உருட்டித் தெரட்டி மெரட்டுறாப்புல.

            "ந்தா வர்றேம் சார்!"ன்னு சொல்லிட்டுப் பாலாமணி எரிச்சலா போன கட் பண்ணாம்.

            "என்னமா டபாய்க்கிறாம். செரியான ஆளாத்தாம் இருப்பாம் போலருக்கு. வர்றட்டும் கவனிச்சாத்தாம் சரிபட்டு வருவாம்! இவனெ போல எத்தனெ பேத்த பாத்திருப்பேம்?"ன்னாரு போலீஸ்காரரு தன்னோட அனுபவத்தச் சொல்றாப்புல.

            அடுத்த ரண்டே நிமிஷத்துல இன்னோவா கார்ல வந்து நிக்குறாம் பாலாமணி தன்னோட பட்டாளத்தோட. வேக வேகமா எறங்கி, "யார் சார் கம்ப்ளெய்ண்ட் பண்ணது? நாஞ்ஞளும் கம்ப்ளெய்ண்ட் பண்றோம். அவுங்கள அரெஸ்ட் பண்ணுங்க?"ன்னாம் சீறிப் பாயுறாப்புல.

            "அவசரப்படாதீங்கய்யா!"ன்னு கைப்புள்ளயக் காட்டி, "இந்த ஆளுக்கு எதுக்குக் கொலெ மெரட்டல் விடுத்தீங்க? அவர்ரு கையப் பிடிச்சி பின்னாடி வெச்சி முறுக்கி கையி வலிக்குதுங்றாரு. மூட்டு நவுந்திருக்கோமோன்னு பயப்படுறாரு!"ன்னாரு போலீஸ்காரரு.

            ஒடனே ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் தன்னோட கைய யாரோ முறுக்குனாப்புல வெச்சிக்கிட்டு, "ந்தா பாருங்க சார்! அந்த ஆளு நம்ம கைய முறுக்குனதுல வலி தாங்கல. அதெ காட்டத்தாம் ஆஸ்பிட்டல் வரைக்கும் போயிட்டு இருந்தேம்!"ன்னாம் சட்டுன்னு ஜகதால பதிலெ தயாரா வெச்சிருக்குறாப்புல.

            "ன்னாடா கதயா வுடுறீங்க? மொதல்ல போன் பண்ணிக் கேட்டப்ப இஞ்ஞ யில்லவே யில்லன்னீங்க. பாக்குக்கோட்டையில இருக்கறதா சொன்னீங்க. யிப்ப என்னான்னா அந்த ஆளு கைய முறுக்குனதுக்கு ஆஸ்பத்திரிய தேடுறேம்ங்றீங்க! பாக்குக்கோட்டையில இருந்தா பாக்குக்கோட்டையிலத்தானடா கைய முறுக்கியிருக்கணும். அதுக்கு ஏம்டா பாக்குக்கோட்டைய வுட்டுப்புட்டு இஞ்ஞ வந்து ஆஸ்பிட்டல தேடுறீயே? அஞ்ஞ யில்லாத ஆஸ்பிட்டலா ன்னா?"ன்னாரு போலீஸ்காரரு. அதெ கேட்டுட்டு கைப்புள்ளயும், சுப்பு வாத்தியாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

            "மொதல்ல அந்த ஆளுங்கள சிரிக்குறதெ நிப்பாட்டச் சொல்லுங்க. அந்தச் சிரிப்பப் பாத்தாலே உண்மெ ல்லங்றது தெரியலியா?"ன்னாம் பாலாமணி போலீஸ்காரரப் பாத்து.

            "நீஞ்ஞ சொல்றது யப்பிடித்தானய்யா இருக்குச் சிரிக்கிறாப்புல. ஏம்யா கையப் பிடிச்சி முறுக்குனீயன்னா கேட்டா ஒடனே நீஞ்ஞ கைய முறுக்குனாப்புல வெச்சிக்கிட்டு நடிப்பக் காட்டுன்னா சிரிக்காம என்னத்தெ சொல்லுங்க. இந்தப் பையேம் இருக்குற ஒடம்புக்கு எப்பிடிய்யா வயசான ஆளா பிடிமானமே இல்லாம இருக்குற அவரு கையப் பிடிச்சி முறுக்க முடியும்? பொய்யியச் சொன்னாலும் பொருந்தச் சொல்றதா ல்லியா?"ன்னாரு போலீஸ்காரரு கைப்புள்ளயக் கண்ணாலக் காட்டி.

            "முடிவா யிப்ப என்னப் பண்ணச் சொல்றீங்க?"ன்னாம் பாலாமணி நேரடியா விசயத்துக்கு வர்றாப்புல.

            "யப்போ முறுக்குனது உண்மெ! கொல மெரட்டல் கொடுத்தது உண்மெ!"ன்னாரு போலீஸ்காரரு பாலாமணியப் பாத்து.

            அந்த எடத்துல கங்காதரன் வக்கீல் பேச்சுக்கு உள்ளார வந்து, "சாதாரண வாய்ச் சண்டெதாம் சார். பெறவு அவுங்கப் போயிட்டாங்க. நாஞ்ஞளும் போயிட்டேம். அவுங்கத்தாம் என்னவோ பள்ளியோடத்து புள்ளீயோ மாதிரி இஞ்ஞ வந்து கோளு வெச்சிக்கிட்டு இருக்காங்க!"ன்னாரு நமுட்டுச் சிரிப்பெ வெச்சிக்கிட்டு.

            "யப்போ வாய்ச்சண்டெ நடந்தது உண்மெதானே? அதுக்கு நடவடிக்கெ எடுக்கலாம்லா?"ன்னாரு போலீஸ்காரரு வக்கீல் சொன்னதெ வெச்சு அவரு ரூட்லயே நடவடிக்கெ எடுக்குறாப்புல.

            "மொதல்ல கம்ப்ளெய்ண்ட் காட்டுங்க. கேஸ்ஸப் போடுங்க. நாம்ம கோர்ட்டுல பாத்துக்கிறேம்!"ன்னாரு கங்காதரன் தன்னோட மொத்த தெனாவெட்டையும் ஒத்தையா நின்னுக் காட்டுறாப்புல. போலீஸ்காரரு கைப்புள்ளயப் பாத்தாரு. அவரு அப்பத்தாம் பக்கத்துல கெடந்த மேசைக்கு மேல காகிதத்துல வெச்சு நின்னபடியே நாலு வரிய எழுதியிருந்தாரு. அவரால சட்டுன்னு யோசிச்சு இந்தப் பேச்சுக்கு மத்தியில எழுத முடியல. அவரோட கையி வேற நடுங்கிக்கிட்டெ இருந்துச்சு. நின்னுருந்த இம்மாம் நேரத்துல வக்கீலு திருநீலகண்டன் அதெ எழுதி கையெழுத்த வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவரு என்னவோ பொம்மையப் போல நின்னிருந்தாரு.

            போலீஸ்காரவுங்ககிட்டெ கம்ப்ளெய்ண்ட் இல்லன்னு தெரிஞ்சதும், கங்காதரன் வக்கீல் எகிற ஆரம்பிச்சாரு. "ன்னா சார் நெனைச்சிட்டு இருக்கீயே? போலீஸ்ன்னா ன்னா வேணும்ன்னா செய்வீங்களா? கம்ப்ளெய்ண்டய எழுதி வாங்காம கூப்ட்டு வெச்சி மெரட்டுறீயே? எதுத்தாப்புலத்தாம் எஸ்.பி. ஆபீஸ். போயி ஒரு புகார்ர வெச்சேம்னா வெச்சுக்கோங்க. ஒஞ்ஞ வேலப் போயிடும்!"ன்னாரு ஆக்ரோஷமா கங்காதரன்.

            "அவ்சரப்படாதீயே சார்! விசயத்தெ சொல்லி கம்ப்ளெய்ண்ட்ட எழுதிக்கிட்டு இருந்தாரு. அதுக்குள்ள நீஞ்ஞ வந்திட்டீயே. சித்தெப் பொறுங்க. இதோ கம்ப்ளெய்ண்ட்ட எழுதித் தந்துடுவாரு!"ன்னாரு போலீஸ்காரரு கங்காதரன் வக்கீலச் சமாளிக்கிறாப்புல.

            "யப்பாடி யப்பா! அப்பிடின்னா பேனா பேப்பர்ர எடுத்து நம்மப் பக்கமும் ஒரு கம்ப்ளெய்ண்ட்ட எழுதுங்க. அதெயும் இஞ்ஞ கொடுப்பேம்!"ன்னாரு கங்காதரன். ஒடனே ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் இன்னோவா காருக்கு ஓடி அதுல வெச்சிருந்த சூட்கேஸ்ஸ எடுத்தாந்து அதுலேந்து காயிதத்தெ எடுத்து வக்கீல் கங்காதரன்கிட்டெ கொடுத்தாம். அந்த சூட்கேஸ்ஸ கங்காதரனுக்கு இடுப்புக்கு நேரா எழுதுறாப்புல பாலாமணி பிடிச்சிக்க கங்காதரன் வேக வேகமா எழுத ஆரம்பிச்சாரு. அதெ பாத்துப்புட்டுக் கைப்புள்ள நெலமையப் புரிஞ்சிக்கிட்டுச் சட்டுன்னு விகடுவெக் கூப்புட்டு எழுதச் சொன்னாரு. அப்பவும் வக்கீல் திருநீலகண்டன் அதெப் பாத்துக்கிட்டுத்தாம் நின்னாரே தவுர ஒண்ணும் ஒதவிப் பண்ணல. எதுவும் பேசல. இப்பவும் கைப்புள்ள கையெல்லாம் நடுங்கிக்கிட்டு இருந்துச்சு. இருந்தாலும் அவரோட வாயிலேந்து வாசகம் அதுப் பாட்டுக்கு எழுதுறதுக்கேத்தாப்புல கொட்டிக்கிட்டெ இருந்துச்சு. அவரு சொன்னபடி எழுதுனதுல அவர்ர தகாத வார்த்தைகளால திட்டி, கொலை மிரட்டல விடுத்து, தாக்க முயற்சிப் பண்ணுனதா அந்தப் புகாரோட சாரம்சம் அமைஞ்சிருந்துச்சு. அதெ கைப்புள்ள கொண்டுப் போயிக் கொடுத்ததும் போலீஸ்காரரு அதெ சட்டுன்னு வாங்கி, கம்ப்யூட்டர்லப் போயி டக்கு டக்குன்ன டைப் பண்ண ஆரம்பிச்சாரு.

            பாதி எழுதிக்கிட்டு இருந்த கங்காதரன் ஓடியாந்து, "எஞ்ஞ கம்ப்ளெய்ண்டயும் வாங்கிட்டு எதுவா இருந்தாலும் பதிவப் பண்ணுங்க!"ன்னாரு வெடுக்குன்னு கொட்டுற தேளப் போல.

            "இவுங்கத்தாம் பர்ஸ்ட் கம்ப்ளெய்ண்ட் பண்ணிருக்காங்க. அதுக்காக வேணும்ன்னுத்தேம் நீஞ்ஞ கம்ப்ளெய்ண்ட் பண்ண நெனைக்குறீயே. அதெ ஏத்துக்க முடியாது!"ன்னாரு போலீஸ்காரரு அறுத்துக் கட்டிப் பேசுறாப்புல.

            "யிப்ப என்ன பண்ணப் போறீங்க?"ன்னாரு கங்காதரன் முடிவா கேக்குறாப்புல.

            "ஒரு சிஐஆர் போடப் போறேம்!"ன்னாரு போலீஸ்காரரு பண்ணப் போறதெ சொல்றாப்புல.

            "சிஐஆர்தானே போட்டுக்குங்க. பாத்துக்கிறேம்! அதோட காப்பி ஒண்ணு எஞ்ஞளுக்கு வேணும்!"ன்னு கங்காதரன் சொல்லிட்டு சூட்கேஸ் மேல பாதி எழுதி வெச்சிருந்த காயிதத்தெ கசக்கித் தூக்கி எறிஞ்சாரு.

            அதெப் பாத்துட்டு இருந்த போலீஸ்காரரு, "கண்ட எடத்துலயும் குப்பையப் போடாதீயே. அதெ ‍பொறுக்கிப் பக்கத்துல இருக்குற குப்பைத் தொட்டியிலப் போடுங்க. ஸ்டேசன்ல எதுக்குக் குப்பைத் தொட்டிய வெச்சிருக்கேம் இப்பிடிக் குப்பையப் போடவா?"ன்னாரு கோவத்தோட.

            "சார்! பாத்து மருவாதியப் பேசுங்க. நாம்ம ஒரு வக்கீல்!"ன்னாரு கங்காதரன் மொகத்த உள்ளுக்குள்ள இழுத்துக்கிட்டுப் பேசுறாப்புல.

            "நீயி யார்ரா யிருந்தா என்னா? இத்து போலீஸ் ஸ்டேசன். இஞ்ஞ நாஞ்ஞத்தாம் பெரிய ஆளு. வேணும்ன்னா ஒன்னோட கோர்ட்டுல நீயி பெரிய ஆளா இருந்துக்கோ. ஒம் இஷ்டத்துக்குக் காயிதத்தெ கசக்கித் தூக்கி எறிஞ்சிப்புட்டு வக்கீலுங்றயே? வக்கீலுன்னா யிப்படி பண்ணலாம்ன்னு ஒஞ் சட்டப் புத்தகத்துல எழுதிருக்கா? எழுதிருந்தா கொண்டா பாப்பேம்?"ன்னாரு போலீஸ்காரரு. அதுக்குள்ள அவரு சிஐஆர்ரப் போட்டு அதுல கைப்புள்ளைகிட்டெ கையெழுத்து வாங்கிக்கிட்டு அவருக்கு ஒரு காப்பியும், கங்காதரன்கிட்டெ ஒரு காப்பியும் கொடுத்தாரு. அதெ வாங்குன கங்காதரன், "இத்து ஒண்ணு போதும். இதெ வெச்சி யிப்பவோ எஸ்.பி. ஆபீஸ்ல புகார்ரக் கொடுக்குறேம் பாரு. எட்றா வண்டியெ. இன்னிக்கு யாருன்னு பாத்தாத்தாம் சரிபட்டு வரும். இப்பிடியே வுட்டா நாளைக்கு நாம்ம இஞ்ஞ வர்றதா ன்னா?"ன்னாரு சபதம் எடுக்குறாப்புல.

            போலீஸ்காரரு ஒடனே கொரலக் கொடுத்து, "உள்ளார யாரு? இஞ்ஞ கொஞ்சம் வாப்பா! போயி அந்த இன்னோவா கார்ர ஓரங் கட்டு. ஸ்டேசன் மின்னாடி பாதைய அடைச்சிக்கிட்டு தப்பா நிப்பாட்டிக்கிறதாவும், ஸ்டேசன்ல இருக்குற காவலர்கள பணி செய்ய விடாம இன்னோவார கார்ல வந்து மெரட்டுறதாவும் ஒரு கம்ப்ளெய்ண்டப் போடு. அப்பத்தாம் அடங்குவானுவோ. பிடிச்சி உள்ளாரப் போட்டு இன்னோவாவ போயிக் கோர்ட்டுல எடுத்துக்கன்னு வுட்டாத்தாம் சரிபட்டு வருவானுவோ!"ன்னு போலீஸ்காரரு சொன்னதும் கங்காதரன் பேச்சு கொஞ்சம் அடங்குனுச்சு. சட்டுன்னு அவரோட கொரலே மாறுனுச்சு. "ன்னா சார்! யிப்பிடி பட்டுன்னு அவசரப்பட்டா? நீஞ்ஞளும் கோவப்பட்டீயே? நாஞ்ஞளும் கொஞ்சம் கோவப்பட்டேம்! அவ்வளவுதாம். அதுக்குப் போயி?"ன்னாரு கங்காதரன் வளைஞ்சு நெளிஞ்சு சுருள்றாப்புல.

            "நீயி யாருய்யா எம் மாமம் மச்சானா? எம் மேல நீயி கோவப்படவும், ஒம் மேல நாம்ம கோவப்படவும்? கம்ப்ளெய்ண்ட் ஆவுதுய்யான்னா, அதுக்குத் தகுந்தாப்புல நயந்தாப்புல பேசி முடிச்சிக்கிட்டுச் சமாதானமா இனுமே பண்ண மாட்டேன்னு போவீயோ? அதெ வுட்டுப்புட்டு கம்ப்ளெய்ண்ட் ஆயிருக்கா? மண்ணாங்கட்டியான்னு கேட்டு யிப்போ சிஐஆர் வரைக்கும் போட வெச்சிருக்கே. ச்சும்மா மெரட்டிக் கொஞ்சம் எச்சரிச்சு அனுப்புலாம்ன்னு பாத்தா எகுறுறீயே? எப்.ஐ.ஆர்ரப் போட்டுடுவேம் பாத்துக்கோ. போட்டேன்னா இன்னோவா ஸ்டேசனுக்கு எதுத்தாப்புலயே கெடந்து மழையிலயும் வெயில்லயும் துரு பிடிச்சி பழைய இரும்புக்குக் கூட போவ முடியாத அளவுக்கு ஆயிடும் பாத்துக்கோ!"ன்னாரு போலீஸ்காரரு அடிவயித்துல அமிலத்தைக் கரைக்குறாப்புல.

            "சாரி சார்! கொஞ்சம் பேச்சு முத்திப் போனது உண்மெதாம். இனுமே யப்படி நடக்காது!"ன்னாரு கங்காதரன் ரொம்ப தளும்புன கொரல்ல.

            "நீயி சட்டம் தெரிஞ்ச ஆளா இருக்கலாம். அதுக்கா பண்ண தப்பைல்லாம் பண்ணலன்னு சட்டத்தெ வெச்சி மறைச்சிப்புடலாம்ன்னு நெனைச்சிக்காதே. நீயி என்னத்தெ சட்டத்தெ படிச்சிப்பிட்டு நின்னாலும் கோர்ட்டுல நாஞ்ஞ தாக்கல் பண்ணுற எப்ஐஆர்ர வெச்சித்தாம் கேஸ்ஸ நடத்தியாவணும். ஒங் கேஸூக்கு ஆன்னா ஆவன்னாவே இஞ்ஞத்தாம் எழுதுவேம் தெரிஞ்சிக்கோ!"ன்னாரு போலீஸ்காரரு கங்காதரனோட தலையில செரியா குட்டி வுடுறாப்புல.

            "தப்பா நெனைச்சிக்க வாணாம். கோவப்படா வாணாம் சார்!"ன்னாரு கங்காதரன் இப்போ நயப்பாடா பேசுற தொனியில. அவரோட பேச்சுல இருந்த வக்கீல் தொரணையெல்லாம் போன எடம் தெரியல.

            "எதுக்கு நீஞ்ஞ திருவாரூரு லிமிட்ல வர்றீயே?"ன்னாரு போலீஸ்காரரு கங்காதரனக் கேள்வியால தொளைச்சுக் கட்டுறாப்புல.

            "கேஸ்ல ஆஜராவத்தாம்!"ன்னாரு வக்கீல் கங்காதரன் முதுகெ கொஞ்சம் முன்னாடி வளைச்சிக்கிட்டு.

            "அதுக்கு எதுக்கு இத்தனெ பேரு? இத்தனெ பேரு மேலயும் கேஸ் இருக்கா?"ன்னாரு போலீஸ்காரரு கங்காதரனெ கழுவி ஊத்துறாப்புல.

            "டாக்டர்ரு பாலாமணி பேர்ல மட்டுந்தாம்!"ன்னாரு கங்காதரன் முப்பது டிகிரி கோணத்துல சாஞ்சாப்புல.

            "இனுமே அவரும் நீஞ்ஞளுந்தாம் வாரணும். கோர்ட்டுக்கு வந்தோமோ போனோமான்னு சொவடு தெரியாமப் போயிகிட்டெ இருக்கணும். மறுக்கா எதாச்சும் இந்த மாதிரி பெரச்சனெ ஆயிடுச்சுன்னா இந்த சிஐஆர் அப்பிடியே எப்ஐஆர்ரா மாத்திக் கோர்ட்டுக்கு அனுப்பிச்சிடுவேம் பாத்துக்க. நீயி இஞ்ஞ பேசுனது நடந்துகிட்டது எல்லாம் இஞ்ஞ சிசிடிவி கேமராவுல பதிவாயிருக்கு. மின்னாடி இன்னோவா கார்ர விருட்டுன்னு கொண்டாந்து நிப்பாட்டி பாஞ்சு வந்தது வரைக்கும். அதொட புட்டேஜ்ஜ சேவ் பண்ணி வைக்கச் சொல்றேம். அந்த ஆதாரத்தோட வெச்சே எப்ஐஆர்ரப் போடுவேம் பாத்துக்கோ! வக்கீல்ன்னா வக்கீல் மாதிரி நடந்துக்கய்யா! கிளைண்ட்டுகிட்ட கூட வர்றவங்கிட்ட எப்பிடி நடந்துக்கணும்ன்னு எடுத்துச் சொல்லிக் கொடுய்யா. நீயே அவுங்கள கொலயப் பண்ணிட்டு வா, காப்பாத்துவேன்னு சொல்லுவே போலருக்கே. அதாங் பயலுவோ அப்பிடித் தாவுறானுவோ, தவ்வுறானுவோ! கெளம்புங்கய்யா மொதல்ல இஞ்ஞயிருந்து!"ன்னு போலீஸ்காரரு கடுப்படிக்கிறாப்புல சொன்னதும் ஒண்ணும் சொல்ல முடியாம இன்னோவா கார்ல ஏறி கெளம்புனாங்க பாலாமணி, ராசாமணி தாத்தா, ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன், கங்காதரன், இன்னோவா காரோட டிரைவரு எல்லாரும் மொகத்தத் தொங்கப் போட்டுகிட்டு.

            இன்னோவா கார்ல்ல ஏறுன அவுங்க ஒரு ரிவர்ஸ் அடிச்சி அங்கேயிருந்து இடது பக்கமோ வலது பக்கமோ இருக்குற ரோட்டுல கெளம்பாம டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு எதுத்தாப்புல இருந்த எஸ்.பி ஆபீஸ்ஸ நோக்கி இன்னோவால போனாங்க. அதெ பாத்துப்புட்டு கைப்புள்ள சொன்னாரு, "பாருங்க! நீஞ்ஞ அவ்வளவு சொல்லியும் எஞ்ஞப் போறானுவோ?"ன்னு.

            "போவட்டும். அப்பத்தாம் இத்து சீரியஸாவும். இன்னோவாவப் பிடிச்சிப் பிடுங்கிப் போடலாம்!"ன்னாரு போலீஸ்காரரு. அவரு சொல்லி முடிக்கல உள்ளாரப் போன இன்னோவா காரு ஒடனே பட்டுன்னு திரும்பி வெளியில வந்துச்சு.

            அதெப் பாத்துட்டு போலீஸ்காரரு சொன்னாரு, "நம்மள நோட்டம் பாக்குறானுவோ, நாம்ம சட்டுன்னு வெளியில ஓடியாந்து பாக்குறோமா என்னான்னு? அப்பிடிப் பாத்தா எஸ்.பி. ஆபீஸ்குள்ள நொழைவானுவோ! யாரும் வெளியில போயிப் பாக்கலன்னதும் திரும்புறானுவோ. இதுக்குன்னே ஒரு பயெ பின்னாடியே பாத்துட்டு உள்ளார உக்காந்திருப்பாம். இவனெ போல எத்தனெ கேஸ்களப் பாத்துக்கிட்டு இருக்கேம். அடுத்த மொறை இந்தப் பயலுவோ பெரச்சனெ பண்ணா ஒடனே வாஞ்ஞ. இந்தக் கம்ப்ளெய்ண்ட்ட அப்பிடியே அடியில அந்த இன்னோவா காரோட நம்பரையும் சேத்து எழுதுங்க!"ன்னாரு போலீஸ்காரரு. கைப்புள்ள நம்பர்ர சொல்ல விகடு, கம்ப்ளெய்ண்டுக்குக் கீழே இன்னோவாவோட நம்பர்ர எழுதுனாம். கைப்புள்ள ரொம்ப உஷாரா இன்னோவா காரோட நம்பரையெல்லாம் பாத்து வெச்சிருந்தது ஆச்சரியமா இருந்துச்சு. காரியத்துல எறங்குறதுன்னா எவ்ளோ வெவரமா இருக்கணுங்றதுக்கு கைப்புள்ள சரியான ஆளுதாம்.

*****


30 Dec 2020

யாருக்கான வக்கீல் நீங்க?

யாருக்கான வக்கீல் நீங்க?

செய்யு - 671

            செய்யுவோட மனசுல பல கேள்விங்க உண்டாச்சு. எதிர்தரப்பு வக்கீல் ஆஜராவ மாட்டார்ன்னு நம்ம வக்கீல் போன் பண்ணிச் சொல்றாரு. ஆன்னா எதிர்தரப்பு வக்கீல் சரியா ஆஜராவுறாரு. இந்தக் குறுக்கு விசாரணையில அடிஷனலா தாக்கல பண்ண மனுவெ வெச்சித்தாம் வெசாரணைப் பண்ணுவாங்கங்கறப்போ அதுல ஒரு காப்பிய எப்பிடி நமக்குக் கொடுக்காம வுட்டாரு. ஏதோ மறதியில கொடுக்காம வுட்டுருந்தாலும் காலங்காத்தால சீக்கிரமா கோர்ட்டுக்கு வந்த ஒடனே அந்த அடிஷனல பெட்டிஷனக் கொடுத்து படிச்சிப் பாத்துக்கன்னோ அல்லது அதுல இருக்குற சங்கதி இன்னதுன்னோ சொல்லணுமா இல்லியா? அன்னிக்கு எதிர்தரப்பு வக்கீல் வர்ற மாட்டாங்றதெ என்னவோ பெரிசா போன் போட்டுச் சொன்னவருக்கு அடிஷனல் பெட்டிஷன்ல இருக்குறதெ போன் போட்டுச் சொல்றதுக்கு எம்மாம் நேரம் ஆவப் போவுது? அப்பிடியே போன் போட்டுச் சொல்ல முடியாட்டியும் ஆபீஸூக்கு வான்னு வந்து வாங்கிட்டுப் போவக் கூட சொல்லக் கூடாதா? இந்தக் கேள்விங்க அவளோட மனசெ அரிக்க ஆரம்பிச்சதும் இதெப் பத்தி வக்கீல்கிட்டெ கேக்காம வர்ற மாட்டேம்ன்னு சொல்லிட்டு கோர்ட்டு வாசலோட நெலைப்படிக்கிட்டெயே நின்னா செய்யு.

            அதெப் பாத்துப்புட்டு கைப்புள்ள, "அதாம் முடிஞ்சிடுச்சே. வா! மொதல்ல கேண்டீனுக்குக் கெளம்புவேம்! அந்தப் பயலுங்க எடத்தெ காலி பண்ணி கால் மணி நேரம் ஆவுது பாரு!"ன்னாரு ஆட்டம் முடிஞ்சா படுதா காலி ஆவணுங்றதெ சொல்றதப் போல.

            "நம்ம வக்கீல் வெளியில வாரட்டும். அவருகிட்டெ சில கேள்விகளக் கேட்டுப்புட்டுத்தாம் வெளியில வருவேம்!"ன்னா செய்யு பிடிவாதம் பிடிக்குறாப்புல.

            "யப்பா யண்ணங்கார்ரா நீயி ஒடனிருந்து அழைச்சிட்டு வா! நாமளும் யப்பாவும் போயி கேண்டீன்ல டீய அடிச்சாத்தாம் இதுக்கு மேல ஒடம்பு வேல செய்யும்! நாம்ம அஞ்ஞப் போயி டீத்தண்ணிய தொண்டையில எறக்குறதுக்குள்ள வக்கீலும் வந்துப்புடுவாரு. அஞ்ஞயே வெச்சு வக்கீல்ட்டயும் பேசிப்புடலாம். ஒந் தங்காச்சி சொன்னா கேக்காது இப்போ இருக்குற நெலமையில. குறுக்கு வெசாரணெ பரவாயில்ல. முடிஞ்சிடுச்சு. இனுமே இந்த எடத்துல நிக்கக் கூடாது. எடதெ காலி பண்டுறதுதாம் நல்லது! சீக்கிரமா கௌப்பிட்டு வா!"ன்னு சுப்பு வாத்தியார்ர அழைச்சிக்கிட்டுக் கோர்ட்டு கேண்டீன் இருக்குறப் பக்கமா பாத்துப் போனாரு.

            வக்கீல் திருநீலகண்டன் கொஞ்ச நேரம் வரைக்கும் கோர்ட்டு உள்ளாரயே உக்காந்து திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தாரு. செய்யுவும், விகடுவும் வெளியில நிக்குறதப் பாத்துட்டு கேஸ் கட்டுகள கலைச்சிப் போட்டு அதுல என்னவோ தேடுறாப்புல பாத்துக்கிட்டு இருந்தாரு. அவருக்கென்னவோ இப்போ வெளியில வர்றதுக்கு இஷ்டம் இல்லாதப் போல இருந்துச்சு அவரு பண்ணுன வேலைக. கொஞ்ச நேரத்துல மத்த கேஸ்களுக்காக ஆஜராவ வக்கீலுங்க உள்ள வந்து எடம் இல்லாம நின்னுகிட்டு இருந்தாங்க. அவர்ல ஒருத்தரு கட்டுகள பிரிச்சி மேய்ஞ்சிக்கிட்டு இருந்த திருநீலகண்டனப் பாத்து, "கேஸ்ஸூ இருக்கா?"ன்னு கேக்க, திருநீலகண்டன் இல்லங்ற மாதிரிக்கு தலைய ஆட்ட, "நவந்தீங்கன்னா நாஞ்ஞ சித்தெ உக்காந்து கேஸ்ஸப் பாப்பேம்!"ன்னு சொல்ல திருநீலகண்டன் எழும்பி வெளியில வந்தாரு.

            "ஏம்ங்கய்யா! அடிஷனல் பெட்டிஷன்லேந்து கேள்விகளக் கேப்பாங்கங்ற வெசயத்தப் பத்திச் சொல்லவே யில்ல?"ன்னா செய்யு வரண்டாவுக்கு வெளியில வந்த வக்கீலப் பாத்து.

            "அவ்வேம் இப்பிடில்லாம் கேப்பான்னு நாம்ம நினைக்கல. மொதல்ல அந்த வக்கீலு இன்னிக்கு வருவாம்ன்னே நினைக்கல. அன்னிக்கு ராத்திரி ஒனக்குப் போன அடிச்சேனம்மா. அதுக்கு மிந்தி அவ்வேம் அப்பிடித்தாம் பேசுனாம். இனுமே ஒம் ஆம்படையான் சார்பா ஆஜராவப் போறதில்லன்னு. அதுக்குப் பிறகு என்ன மாயம் நடந்துச்சோ? மந்திரம் நடந்துச்சோ? தெரியல. வந்து ஆஜராயிட்டாம். நாம்ம கேக்குறேம், ஆஜராவ மாட்டேங்றதெ போன அடிச்சிச் சொன்னவேம், ஆஜராவப் போறதெ போன அடிச்சிச் சொல்லணுமா இல்லியா? அப்படிச் சொல்லிருந்தா நாம்ம தயாரு ஆயி வந்திருப்பேம் இல்லியா?"ன்னாரு வக்கீல் தன்னோட சங்கடத்தெ சொல்றாப்புல.

            "செரித்தாம்ங்கய்யா! ஒஞ்ஞ நெனைப்பு தப்புல்ல. அந்த வக்கீல் ஆஜராவாட்டி ன்னா? வேற வக்கீலு ஆஜராவலாமில்லியா? அதெ வுடுங்க ஏம் பாலாமணியே குறுக்கு வெசாரணையப் பண்றேம்ன்னு எறங்கலாமில்லியா? அதெ நெனைச்சாச்சும் நீஞ்ஞ இந்த வெசாரணையில என்னென்ன மாதிரியான கேள்விங்க வாரலாங்றதெ கொஞ்சம் கோடுப் போட்டுக் காட்டியிருக்கலாமில்லியா?"ன்னா செய்யு விக்கித்துப் போயிக் கேக்குறாப்புல.

            "அதாம் நீயி ந்நல்லா பதிலச் சொல்லீட்டியே? ஜட்ஜே ஒரு நிமிஷம் அசந்துப் போயித்தாம் பாத்தாரு. அந்தப் பயெ மூக்கொடைஞ்சித்தானே போறாம் போ!"ன்னாரு வக்கீல் சமாதானம் காட்டுறாப்புல.

            "அத்து வேறங்கய்யா! எப்பிடியே சமாளிச்சிட்டேங்றது. ஆன்னா நாம்ம கொஞ்சமாவது கணிச்சி முன்னேற்பாடோட யிருக்கணுமா யில்லியா? அப்பிடி அந்த அடிஷனல் பெட்டிஷன்ல என்னத்தாம் இருந்துச்சு?"ன்னா செய்யு ஞாயம் கேக்க வேண்டிய வக்கீல்கிட்டெயே ஞாயம் கேக்குறாப்புல.

            "முப்பத்தஞ்சு பக்கத்துக்கு அந்தப் பெய கிறுக்கி வெச்சிருந்ததால அதெ நாமளும் படிக்கலம்மா. எவ்வேம்மா அத்தனெ பக்கம் படிக்கிறது? அவ்வேம் கிராஸ் பண்ண பண்ணத்தாம் இஞ்ஞ கோர்ட்லயே உக்காந்து வேக வேகமா படிச்சேம். சுத்தமா வழக்குக்கேச் சம்பந்தம் இல்லாம, பரீட்சையில ஆன்ஸர் தெரியாத பயெ கதெ அடிப்பாம் பாரு. அந்த மாதிரிக்கி அடிச்சி வெச்சிருக்காம். ஒம் குடும்ப வரலாறையே ஆரம்பத்துலேந்து இப்ப வரைக்கும் அவனா திரிச்சித் திரிச்சி எழுதி வெச்சிருக்காம். அதெ விடு. அதெல்லாம் இந்த வழக்குக்குக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாததுதாம். இருந்தாலும், இவ்வளவு விவரம் ஒங் குடும்பத்தப் பத்தி அவனுக்கு எப்படி தெரியும்? ஒம் உறவுலயே ஒனக்கு எதிர்ப்பா யாரோ இருக்காங்க. அவுங்கத்தாம் இதெயெல்லாம் சொல்லிருக்கணும். ஒங்களுக்கு நெருக்கமா தெரிஞ்ச யாரோ சொல்லாம இவ்வளவு நுணுக்கமா எழுதிட முடியாது. அதெ மொதல்ல யாருன்னு கண்டுபிடி?"ன்னாரு வக்கீலு கெழக்கப் போவ வழி கேட்ட மேற்குல நோக்கி வழியக் காட்டுறாப்புல.

            "அதெ கண்டுபிடிச்சி என்னாவப் போவுதுங்கய்யா?"ன்னா செய்யு கொதிக்க வெச்ச பால் பொசுக்குன்னுப் பொங்கித் தளும்புறாப்புல.

            "என்னம்மா இப்பிடிச் சொல்லிப்புட்டே? அதெ கண்டுபிடிச்சித் தடுக்கணுமா இல்லியா?"ன்னாரு வக்கீல் பொங்கி வர்ற பால்ல தணிக்கிறதுக்கு அடுப்புத் தீய கொறைக்குறாப்புல.

            "என்னிக்குக் கலியாணம் ஆயி நாம்ம வாழவெட்டியா எம்மட யப்பா வூட்டுக்கு வந்தேன்னோ அன்னிலேந்தே எல்லா சொந்தமும், ஊரு ஒலகமும் எஞ்ஞளுக்கு எதிரியாயிட்டாங்க. ஒருத்தரு, ரண்டு பேருன்னா இவருதாம் எதிரின்னு கண்டுபிடிச்சி சொல்லலாம். எல்லாமே எதிரின்னா அதுல கண்டுபிடிச்சிச் சொல்றதுக்கு என்ன இருக்கு? எஞ்ஞச் சொந்தக்காரங்க பூராவும் எஞ்ஞ எதிரித்தாம்யா நம்மட தாய்மாமேம் உட்பட! போற எடமெல்லாம் எஞ்ஞளுக்கு எல்லாம் எதிரியாவே ஆவுறாக நீஞ்ஞ உட்பட!"ன்னா செய்யு கால்ல வுழுவுறவேம் சட்டுன்னு கால்ல எடறி வுடுறாப்புல.

            "நாம்ம என்னம்மா எதிரியானேம்?"ன்னாரு வக்கீலு சட்டுன்னு நெலைகொழைஞ்சாப்புல.

            "யிப்போ கொஞ்ச நேரத்துக்கு மின்னாடி நம்மள தயார் பண்ணாமலே கூண்டுல ஏத்தி விட்டு, எடையில எந்த இடத்துலயும் அப்ஜக்சன் பண்ணாமலயே உக்காந்திருந்தீங்க யில்ல."ன்னா செய்யு தப்பு பண்ணுறவனெ வகையா வெச்சு பிடிச்சாப்புல.

            "இந்தாரும்மா! நீயே நல்லா மட்டையடியாத்தாம் அடிச்சே. நாம்ம குறுக்கிட்டிருந்தா அந்த அடி அவனுக்கு விழுந்திருக்காது. அதுவும் இல்லாம அவனுங்களாவே ஓவரா பண்ணி ஜட்ஜூகிட்டெ வாங்கிக் கட்டிக்கிட்டானுவோ. இந்த மாதிரி குறுக்கு விசாரணையில எவனும் அசிங்கப்பட்டு நாம்ம பாத்ததில்ல. ஜட்ஜூமே புரிஞ்சிக்கிட்டாரு. கிராஸ் கேள்விகள்ல எதுவும் வக்கீலோட கேள்விங்க இல்லன்னும், எல்லாம் பாலாமணி எழுதிக் கொடுத்து மனப்பாடம் பண்ணி ஒப்பிவிச்ச கேள்விங்கன்னு. இதெ விட ஒரு வக்கீலுக்கு என்னா அசிங்கம் வேணும்? அந்த அசிங்கம் பிடிச்ச வக்கீலு பண்ணுனதெ அப்ஜக்சன் பண்ணலன்னு வேற நீ சொல்றே?"ன்னாரு வக்கீலு குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்காத அளவுக்கு.

            "எஞ்ஞகிட்டெத்தாம் நல்லாத்தாம் பேசுதீயே? அவனுங்ககிட்டெத்தாம் சரியாப் பேசவே மாட்டேங்குதீயே!"ன்னா செய்யு வக்கீலையும் மட்டையடியா அடிச்சுச் சாய்க்குறாப்புல.

            "அடுத்த அவனெத்தான கிராஸ் பண்ணப் போறம். அப்பப் பாரு! அதுல எதாச்சும் குறைபாடுக இருந்தா சொல்லு. ச்சும்மா கூண்டுல வெச்சிச் செய்யுறன்னா இல்லியான்னு மட்டும் பாரு!"ன்னாரு வக்கீலு வரண்டா சாட்சியா சவால் வுடுறாப்புல.

            அப்போ சுப்பு வாத்தியாரு உள்ளார வேக வேகமா ஓடியாந்து எல்லாரையும் வெளியிலக் கூப்புட்டாரு. கைப்புள்ள கேண்டீன் பக்கமா ரொம்ப உக்கிரமா நின்னுகிட்டு இருந்தாரு. மொகத்துல கோவம் கொப்புளிச்சிக்கிட்டு இருந்துச்சு.

            "ஏம் என்னாச்சு?"ன்னாம் விகடு சட்டுன்னு நெலமெ புரியாம.

            "கேண்டீனுக்கு டீத்தண்ணியக் குடிக்கலாம்ன்னு வந்தா அந்தப் பயலுவோ நாம்ம எப்போ வெளியில வருவேம், வம்பு வைக்கலாம்ன்னு நின்னுருப்பானுவோ போலருக்கு. நாமளும் கைப்புள்ளயும் வந்ததெப் பாத்து அந்தத் தடிமாட்டுப் பயெ பையித்தூக்கி இருக்காம்ல அவ்வேம் கைப்புள்ளயப் பாத்து, ‘டேய் கொட்டாப்புளி ஒன்னய மூட்டெப் பூச்சிய அடிச்சி நசுக்குற மாதிரிக்கி நசுக்காம வுட மாட்டேம்’ன்னாம் பாரு! கைப்புள்ளைக்குக் கோவம் வந்து ‘ஒழுங்கு மருவாதியா ஊருப் போயிச் சேருங்கடா. டவுன் எல்லயத் தாண்டி அந்தாண்டப் போவ முடியாது’ன்னாரு. ஒடனே அந்தப் பயெ ‘கோர்ட்டு காம்பெளண்டுக்குள்ளயே ஒன்னயக் கொன்னுப் போட்டுட்டு அந்தாண்டப் போவவா?’ன்னு கேட்டாம் பாரு, கைப்புள்ளைக்கு வேகம் வந்து, ‘எஞ்ஞ வந்துக் கொல்லுப் பாப்பேம், அதுவரைக்கும் எம் கையில பூப்பறிக்குமா?’ன்னாரு. ஒடனே அந்தப் பயலும் ஓடியாந்து கைப்புள்ளக் கையப் பிடிச்சி அப்பிடியே பின்னாடி வளைச்சி முதுகுக்குக் கொண்டுப் போயி வெச்சி முறுக்குறாம். கைப்புள்ளெ வலி தாங்க முடியாம வுட்டுட்டுடா வுட்டுடான்னு கத்துறாரு. நாமளும் அவ்வேனெ வுட்டுப்புடுடான்னு அந்தாண்ட தள்ளப் பாக்குறேம். முடியல. அவரு கஷ்டப்படுறதெ கொஞ்ச நேரம் ரசிச்சுப் பாத்துப்புட்டு அந்த பாலாமணி பயெ இன்னிக்கு இத்துப் போதும் விட்டுட்டுப்புட்டு வான்னு சொன்னதுக்குப் பெறவு வுட்டுப்புட்டுப் போறாம். போறப்ப அந்தப் ‘பயெ பாத்தீயாடா பன்னாடெ ஒஞ்ஞ எடத்துல ஒஞ்ஞ மாவட்டத்துலயே வந்து எஞ்ஞளால இப்பிடி பண்ண முடியுதுன்னா எஞ்ஞளால யின்னும் என்னென்ன பண்ண முடியும்ன்னு பாத்துக்கோ!’ன்னு சொல்லிட்டுப் வண்டியில ஏறிட்டுக் கெளம்பிப் போறாம்! ரொம்ப சங்கடமா போயிட்டுங்கய்யா! நமக்காகத் தொணைக்கு வந்து அவருக்கு அசிங்கப்படுறாப்புல ஆயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யாரு அந்தப் பயெ?"ன்னாரு வக்கீல் ஒரு அதட்டலப் போடுறாப்புல.

            "அதாம்ங்கய்யா! கறுப்பா ஒரு தோலு பையத் தூக்கிட்டு, மின்னாடி சூட்கேஸ்ஸ கூட எடுத்துட்டு வந்தாம்ல. அவ்வேம் தாடிக்கார கெழவம் இருக்காம்ல அவ்வனோட அண்ணன் மவ்வேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அந்தப் பயலோட தோற்றத்த கண் முன்னாடி நிறுத்துறாப்புல.

            "ஒங்கள யார் சார் தனியா வர்ற போவச் சொன்னது? எல்லாரும் சேர்ந்து போவ வர வேண்டித்தானே?"ன்னாரு வக்கீலு கைப்புள்ளையப் பாத்து என்னவோ செய்யக் கூடாத தப்பெ பண்ணவர்ரப் போல.

            "யாருங்கய்யா தனியா வந்தது? நாமளும் வாத்தியாருமா சேந்துதாம் வர்றேம். அதுவும் கோர்ட்டு வளாகத்துக்குள்ளாரயே வெச்சி இந்த மாதிரிக்கிப் பண்ணிப்புட்டு சவாலு வுட்டுப்புட்டுப் போறாம். அதெ கேக்காம நீஞ்ஞ பாட்டுக்கு எஞ்ஞளுக்கு பெலாக்கணம் வெச்சிட்டு இருக்கீயே?"ன்னாரு கைப்புள்ள வெகுண்டுப் போயி வக்கீலு மேல பாயுறாப்புல.

            "நாமளும் கொஞ்சம் வார்த்தையப் பதனமா வுடணும்! கேஸ் முடிஞ்சா கௌம்ப வேண்டியதுதானே? ஏன் தேவையில்லாத வீண் பேச்சு?"ன்னாரு வக்கீல் கைப்புள்ள குத்தம் வைக்குறாப்புல.

            "யோவ் வக்கீலு! நீயி நம்மப் பக்கமா? அவனுவோ பக்கமா? கோர்ட்டுல வெச்சி ன்னா பேச்சுப் பேசுறானுவோ? அதெப் பத்தி ஒண்ணும் கேக்க மாட்டேங்றே? யிப்போ நம்ம கையப் பிடிச்சி முறுக்க வர்றாம்ன்னா அதெப் பத்தியும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்றே. என்னவோ ஏம் பேசுனே? எதுக்கு தனியா வந்தேன்னு எஞ்ஞகிட்டெ அவனுவோ பக்கமா வக்காலத்து வாங்கிட்டு நிக்குதீயே?"ன்னாரு கைப்புள்ள போதையில இருக்குற குடிகாரனெ தெளிவு பண்ணுறாப்புல.

            "கோவப்பட்டா எப்பிடீங்க தலைவா? இப்போ என்னா பண்ணணும்ங்றீங்க? அதெச் சொல்லுங்க செஞ்சிப்புடுவேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் ஒரு பச்சோந்தி சட்டுன்னு மாறிக்கும் பாருங்க அப்படி.

            "அந்தப் பயலுவோ மேல மொதல்ல ஸ்டேசன்ல கம்ப்ளய்ண்ட் கொடுத்தாவணும்!"ன்னாரு கைப்புள்ள வக்கீல்கிட்டெயே ஒரு வக்கீலப் போல.

            அதுக்கு வக்கீல், "கோர்ட்டு வளாகத்துக்குள்ள நடந்ததுக்கு உள்ளார வந்து போலீஸ் என்கொயரிப் பண்ண மாட்டாங்க!"ன்னாரு சட்டுன்னு சட்ட நெலமைய எடுத்துக் காட்டுறாப்புல.

            "யப்போ ஜட்ஜ்கிட்டயெ போயிச் சொல்லுவேம்!"ன்னாரு கைப்புள்ள விடாப்புடியா வம்பெ வைக்குறாப்புல.

            "கேஸூக்கும் ஒங்களுக்கும் என்னா சம்பந்தம்? நீங்க ஏம் கோர்ட்டுக்குள்ளார வந்தீங்க சம்பந்தமில்லாமன்னு கேட்டா என்னா பதிலச் சொல்லுவீங்க?"ன்னாரு வக்கீல் தம் பக்கத்தையே தானே மடக்குறாப்புல.

            "யோவ் இந்தப் பாருய்யா? நீயி அவுங்ககிட்டெ எதாச்சும் காசி வாங்கிட்டீயா ன்னா? எதெ கேட்டாலும் அவனுக்குச் சாதவமா சகிச்சிக்கிட்டுப் போயித் தொலைங்ற மாதிரிக்கே மறைமுகமா சொல்லுதீயே? இந்தாருய்யா இந்தக் கேஸையும் சேத்து ஒமக்கு எத்தனெ கேஸ்ஸப் பிடிச்சி விட்டுருப்பேம். இன்னிக்கு நாம்ம அவமானப்பட்டு நிக்குறேம்ங்றேம். அதுக்கு எதாச்சும் பண்ணுய்யான்னா இஞ்ஞ போலீஸ் வந்து வெசாரண பண்ண மாட்டாங்கங்றே, ஜட்ஜூ ஏம் வந்தேன்னு கேப்பாருங்றே? நாம்ம யிப்பிடியே இந்த அசிங்கத்தோடயே போயித் தொலையவா?"ன்னாரு கைப்புள்ள வெறுத்துப் போனாப்புல.

            "இப்போ என்னத்தாம் பண்ணணும் தலைவா? அதெச் சொல்லுங்க மொதல்ல!"ன்னாரு வக்கீல் பாடுன பின்பாட்டையே மறுக்கா பாடுறாப்புல.

            "ஏம்யா மொதல்லேந்து ஸ்டேசன் போவணுங்றேம். மறுக்கா மறுக்கா ன்னா பண்ணணுங்றீயே?"ன்னாரு கைப்புள்ள வெடிச்சிச் செதறுறாப்புல.

            வக்கீல் திருநீலகண்டன் ஒரு நிமிஷம் நெத்தியச் சுருக்கிச் யோசிச்சாரு. "சரி கோர்ட்டுக்கு வெளியில வெச்சு வாய்த் தகராறு பண்ணதா டவுன் போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோம். ஏன்னா இது டவுன் லிமிட்லத்தாம் வரும். அதெ வேணும்ன்னாலும் பண்ணலாம்!"ன்னாரு வக்கீலு ஒரு வழியக் காட்டுறாப்புல.

            "அப்பிடிப் பண்ணா அவனுகளெ பிடிச்சி உள்ளார போடுவானுங்களா?"ன்னாரு கைப்புள்ள பொங்கிட்டு வர்ற கோவத்தெ நிறுத்த முடியாம.

            "இப்போ ச்சும்மா ஒரு புகாருதாம். இதுக்கே அரண்டுப் போயிடுவானுவோ கூப்ட்டு விசாரிச்சா. இதெ வெச்சிக்கிட்டு அடுத்ததா இதெ மாதிரிக்கிப் பண்ணுனானுவோன்னா நடவடிக்கெ எடுப்பாங்க! அதுக்காகச் சும்மா அனுப்பிட மாட்டாங்க. ஒரு மெரட்டு மெரட்டித்தாம் அனுப்புவாங்க!"ன்னாரு வக்கீலு கைப்புள்ளைய சாந்தம் பண்டுறாப்புல.

            "யப்போ வாஞ்ஞ மொதல்ல அதெ பண்ணுவேம். எஞ்ஞ இருக்கு டவுன் போலீஸ் ஸ்டேசன்?"ன்னாரு கைப்புள்ள பரபரப்புக் கொறையாம.

            "எல்லாம் கலக்டரேட்குள்ளத்தாம் இருக்கு வாங்க!"ன்னு வக்கீல் கெளம்ப அவரு பின்னால எல்லாரும் போனாங்க. சட்டுன்னு நெலமெ இப்பிடி திடீர்ன்னு மாறும்ன்னு யாரும் எதிர்பாக்கல.

*****

29 Dec 2020

நானும் குறுக்கு விசாரணை பண்ணணும்!

நானும் குறுக்கு விசாரணை பண்ணணும்!

செய்யு - 670

            சுப்பு வாத்தியாரு அன்னிக்கு ராத்திரி சொன்னது சரிதாங்ற மாதிரிக்கி திங்கக் கெழமெ நடந்த வெசாரணையினப்போ வக்கீல் கங்காதரன் பாலாமணி சார்பா ஆஜரானாரு. பாலாமணிக்கும் கங்காதரனுக்கும் இடையில பெரச்சனெ உண்டாயிருந்தாலும் அது இடைபட்ட ரண்டு நாள்ல தீந்திருக்கணும் அல்லது லாலு மாமா எடையில பூந்து சமரசம் பண்ணி விட்டுருக்கணும். அதுல ஏதோ நடந்திருக்கணும். அதெப் பத்தி மேக்கொண்டு நெனைக்க முடியாதப்படி பதினொரு மணிக்கெல்லாம் குறுக்கு விசாரணை ஆரம்பமாயிருந்துச்சு.

            போன மொறையே ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் துடுக்கா பேசி டென்ஷன் பண்ணுறதெப் பாத்த கைப்புள்ள இவுகளெ தனியா போவ வுட்டுத் தவிக்க வுடாம இனுமே ஒவ்வொரு தவாவும் கோர்ட்டுக்கு வந்து ஒத்தாசையா இருந்து எதாச்சும் பேசி வுடணுங்ற முடிவோடயே வந்திருந்தாரு. இந்த மொறையும் ராசாமணி தாத்தாவோட அண்ணன் பையன் கோர்ட்டு வராண்டாவுக்குள்ள நொழைஞ்சதுமே அங்க நின்னுகிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு தரப்பப் பாத்து சும்மா இல்லாம, "இதுவரைக்கும் நடந்ததல்லாம் டிரய்லரு. மெயின் பிக்சர்ரே இன்னிக்குத்தாம் காட்டப் போறேம்! இனுமேத்தாம் டப்பா டான்ஸ் ஆடப் போவுது. டவுசரு கிழியப் போவுது!"ன்னாம். கைப்புள்ள சும்மா இல்ல, "இதேதாம்டா அடுத்த குறுக்கு விசாரணையில ஒம்மட டாக்கடருக்கு டப்பா டான்ஸ் ஆடும், டவுசரு கிழியும். எஞ்ஞளுக்கு இன்னோட முடியப் போவுது. அடுத்ததா ஒஞ்ஞளுக்குத்தாம்டா அஷ்டம சனியே அஷ்ட கோணலா ஆரம்பமாவப் போவுது!"ன்னாரு. அதெ கேட்டுட்டு மேக்கொண்டு பேச வந்தவனெ என்ன நெனைச்சாரோ கங்காதரன் வக்கீல் கையப் பிடிச்சி இழுத்துட்டுப் போயிட்டாரு. இல்லன்னா இன்னும் கொஞ்சம் அவ்வேம் பேசிருப்பாம்.

            மூணு மாசமா இந்த ஜீவனாம்ச வழக்கு எப்பிடித் தேங்கிக் கெடந்துச்சோ அதுக்கு நேர்மாறா மொத்தத்துக்கும் சேத்து இப்போ வேகம் எடுக்க ஆரம்ப்பிச்சிருந்துச்சு. கோர்ட்டு ஆரம்பிச்சதும் வாய்தா தேதிக கொடுத்து முடிச்சு பத்தரைக்கெல்லாம் கங்காதரன் செய்யுவ கூண்டுல ஏத்தி விசாரிக்க ஆரம்பிச்சிருந்தாரு.

            "உங்களுக்கு வேலங்குடியில இருக்குற இன்னொரு மாமன் மகன் தாசு என்பவரோட நிச்சயம் ஆயி, கலியாணம் ஆயி சில காலம் வாழ்ந்து பின்பு பிரிஞ்சு வந்து என்னோட கட்சிக்காரர் பாலாமணியோட வாழ்ந்தது உண்மையா இல்லீங்களா?"ன்னாரு கங்காதரன் ஆரம்பத்துலயே டென்ஷனெ கௌப்பி வுடுறாப்புல. போன குறுக்கு வெசாரணையிலயே கங்காதரன் வக்கீலு செய்யுவோட மனப்பாட்டை நல்லாவே நாடி பிடிச்சிருந்ததால எங்க அடிச்சு ஆரம்பிக்கணுமோ அங்க அடிச்சே ஆரம்பிச்சாரு.

            "இல்ல!"ன்னு ஒத்த வார்த்தையில பதிலச் சொன்னா செய்யு. போன மொறெ பட்ட அனுபவத்துல உணர்ச்சிவசப்படாத நெதானமான மனநெலைக்கு வந்திருந்தா செய்யு. இப்படி ஒத்த வார்த்தையில பதிலு வாரும்ன்னு கங்காதரன் வக்கீலு எதிர்பாக்கல. குட்டையக் கொழப்பணுமேன்னு அவரு கிண்டிக் கலக்கி வுடுற வேலையில எறங்க ஆரம்பிச்சாரு.

            "கோர்ட்ல பொய்யெல்லாம் சொல்லக் கூடாதுன்னு சத்தியப் பிரமாணம் எடுத்துட்டு வாயில வந்த பொய்ய எல்லாம் சொல்லக் கூடாது! ஒஞ்ஞ ரண்டு பேத்துக்கும் கலியாணம் ஆயிருக்கு. சில காலம் ஒண்ணா வாழ்ந்திருக்கீங்க. பின்பு பிரிஞ்சி வந்திருக்கீங்க"ன்னு கங்காதரன் சொல்லிட்டு இருக்குறப்பவே செய்யு அவ்வே பாட்டுக்கு, "ஒஞ்ஞளுக்கு இருக்குற எஞ்ஞ மாமன் மவனோட எல்லாம் கலியாணத்தெ பண்ணி வைக்குறதுதாம் வேலயா? ஒரு கலியாணத்தெயே பண்ணிட்டு இஞ்ஞ கோர்ட்டுல வந்து சிரிப்பா சிரிச்சிக்கிட்டு நிக்குறது ஒஞ்ஞ கண்ணுக்குத் தெரியலயா?"ன்னா நெதானமான மனநெலைய லேசா தவற வுட்டாப்புல.

            "கேள்வியக் கேக்கறதுக்கு மின்னாடி அவசரப்பட்டு குறுக்கப் பூரக் கூடாது. நல்ல கேள்விய வாங்கிக்கிடணும். பிறகு பதிலச் சொல்லணும்!"ன்னாரு ஜட்ஜ் குறுக்கு வெசாரணையில எப்படி நடந்துக்கணுங்றதெ சொல்றாப்புல.

            "இவரு கேக்குற சங்கதி பெட்டிஷன்ல எதுலயும் யில்ல!"ன்னா செய்யு தாம் குறுக்க பூந்ததற்கான ஞாயத்தெ வைக்குறாப்புல.

            "அடிஷனல் பெட்டிஷன்ல இருக்கே. அதெ நீங்கப் படிக்கலையா?"ன்னாரு கங்காதரன் செய்யுவோட அறியாத்தனத்தெ சுட்டிக் காட்டுறாப்புல. அப்பத்தாம் செய்யுவுக்கு திருநீலகண்டன் வக்கீல் அடிஷன் பெட்டிஷனோட காப்பியத் தர்றததையும் அதெப் பத்தி அதுல உள்ள சங்கதியப் பத்திச் சொல்லததும் ஞாபவத்துக்கு வந்துச்சு. அன்னிக்கு ராத்திரிப் போனப் போட்டு உருப்படாத விசயத்தெ சொன்னதுக்கு இதெப் பத்திச் சொல்லிருந்தா இன்னிக்கு குறுக்கு விசாரணையையாவது சமாளிச்சிருக்கலாம்ன்னு நெனைச்சா. அவ்வே அப்படி நெனைச்சுக்கிட்டு இருக்குறப்பவே கங்காதரன் தொடர்ந்தாரு, "உறவினர்கள் மட்டும் அறிந்து நடந்த கலியாணம்ங்றதாலயும், அதெ நீஞ்ஞ பதிவு பண்ணாததாலயும் அதெ நீஞ்ஞ உட்பட யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சிப்புட்டீங்க. ஆன்னா உண்மெங்றது பல நாளு கழிச்சாவது வெளியில வந்துத்தாம் தீரும். ஒரு மாமன் மவ்வேம் போனா என்னான்னுத்தாம் நீஞ்ஞ கோவில்பெருமாள்ல இருக்குற இன்னொரு மாமன் மவ்வேனப் பிடிச்சிருக்கீங்க. அதுக்குள்ள ஏமாந்த சோனகிரியா வந்து என்னோட கட்சிக்காரர் உங்களோட கலியாண வலையில விழுந்துட்டாரு!"ன்னு கங்காதரன் பேச, ஜட்ஜ் குறுக்கிட்டு, "தயவு பண்ணி கதெயல்லாம் அளக்காதீங்க. இது என்னா சினிமாவுல காட்டுற கோர்ட்டுன்னு நெனைச்சிக்கிட்டீங்களா? கேள்வி என்னவோ அதெ கேளுங்க? அப்பிடியில்லன்னா குறுக்கு விசாரணைய இத்தோட நிறுத்துறாப்புல ஆயிடும்!"ன்னு ஜட்ஜ் மொறைப்பு காட்டுனாப்புல கண்டிப்பு காட்டுனதும், அது வரைக்கும் கங்காதரனுக்கு இருந்த துணிச்சலெல்லாம் போன எடம் தெரியாம டக்குன்னு கையி காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. அவருக்கு அடுத்ததா கேக்க வேண்டிய கேள்விக மறந்துப் போயிருக்கும் போல. கையில வெச்சிருந்த பேப்பர்களப் பாத்து சில நிமிஷங்க அப்பிடியே தடுமாறிட்டு நின்னாரு.

            உள்ளார நின்னிருந்த பாலாமணி சட்டுன்னு வெளியில நின்ன ராசாமணி தாத்தாவோட அண்ணன் மவ்வேன் கையில இருந்த பைய்ய வாங்கி அதுலேந்து கொஞ்சம் காயிதத் கத்தைய எடுத்து கங்காதரனுக்கு மின்னாடி வந்து, "இதெ கேளுங்க!"ன்னு எடுத்துக் கொடுத்தாம் பாருங்க, ஜட்ஜூக்குக் கோவம் வந்துடுச்சு மின்னல் அடிச்சாப்புல.

            "ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்! இதென்னா கோர்ட்டா என்னான்னு நெனைச்சிக்கிட்டு இருக்கே? ஆர் யூ எ டாக்டர்? நீ பாட்டுக்கு வெளியிலருந்து பைய வாங்கி அதுலேந்து பேப்பர்ர எடுத்து அட்வகேட்டுக்கிட்டு கொடுக்குறே. அதெ வாங்கி மொதல்ல வெளியில போடுங்க மொதல்ல!"ன்னாரு ஜட்ஜ். டவாலி ஓடியாந்து அந்தக் காயிதத்தெ வாங்கி வெளியில வீசி எறிஞ்சாரு. அடுத்ததா ஜட்ஜ் பாலாமணியப் பாத்து, "ஓரமா நில்லு! கையக் கட்டு! அந்தாண்ட இந்தாண்ட அசைஞ்சே! நடக்குறதே வேற!"ன்னாரு. கங்காதரனப் பாத்து, "இப்பிடித்தாம் கிளையண்ட்ட தயாரு பண்ணி கோர்ட்டுக்குக் கொண்டு வாரதா? கோர்ட்டுல எப்பிடி நடந்துக்கணும்ன்னு சொல்றது இல்லையா?"ன்னாரு கண்ணு ரண்டும் செவந்துப் போறாப்புல. வந்த நாள்லேந்து அந்த ஜட்ஜ் உச்சமா கோவம் காட்டுனது அன்னிக்காத்தாம் இருக்கும். கோர்ட்டு முழுமைக்கும் மயான அமைதியில இருக்குறாப்புல ஒரு சின்ன சத்தம் கூட கேக்காம சவுண்ட்டு புரூப் பண்ணுன அறையப் போல இருந்துச்சு அந்த நேரத்துல.

            "இல்லீங்கய்யா..."ன்னு கங்காதரன் இழுத்ததும், "இந்த இல்லீங்கய்யா, நொள்ளீங்கய்யால்லாம் இனுமே இருக்கக் கூடாது. கோர்ட்டுக்கு உரிய கண்ணியத்தோட இங்க குறுக்கு விசாரணை நடக்கணும். அநாவசியமா கோர்ட்டோட டயத்தெ வீணடிச்சிட்டு இருந்தா கன்டெம்ட் ஆப் த கோர்ட்டு ஆயிடும் ஜாக்கிரதெ!"ன்னாரு ஜட்ஜ். கங்காதரனுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போயிடுச்சு. அவரு கையில வழிஞ்ச வேர்வையில காயிதமெல்லாம் நனைய ஆரம்பிச்சது. அவரு ரொம்ப தடுமாற ஆரம்பிச்சாரு. கையில வெச்சிருந்த காயிதத்தெ மாத்தி மாத்திப் பாக்க ஆரம்பிச்சாரு. அப்புறமா கொஞ்சம் நெதானிச்சாப்புல, "ஒங்களுக்கு பலபேர்ர கலியாணம் பண்ணி ஏமாத்துற பழக்கம் இருக்கா?"ன்னாரு.

            "என்னத்ததாம் ஒருத்தரு கலியாணம் பண்ணி ஏமாத்திருக்காரு. நாம்ம யாரையும் ஏமாத்தல!"ன்னா செய்யு. அவ்வே பதிலச் சொன்னதுக்கு அப்புறமா, "இதெல்லாம் என்னா கேள்வி கருமத்தெ!"ன்னு ஜட்ஜ் தலையில அடிச்சிக்கிறாப்புல கையக் கொண்டு போனாரு. கங்காதரனோட நடுக்கம் இன்னும் அதிகமாயிடுச்சு. அடுத்ததா என்னத்தெ கேக்குறதுங்றதுல தடுமாற ஆரம்பிச்சாரு. ஒரு வழியா கொஞ்சம் நெதானிச்சவரு அடுத்தக் கேள்விக்குத் தாவுனாரு. மின்ன மாதிரி நீட்டி மொழங்காம சட்டுன்னு கேள்விக்கு வந்தாரு.

            "ஒங்களோட எம்பில் படிப்பு முடிஞ்சதா?"ன்னாரு கங்காதரன். அவரு கேட்குறதுல ஒரு கொழறல் இருந்துச்சு.

            "முடிஞ்சிடும்!"ன்னா செய்யு மொல்லமா.

            "முடிஞ்சிதா? முடியலயா?"ன்னாரு கங்காதரன் கண்டிப்புக் காட்டிக் கேக்குறாப்புல. தடுமாறுறாப்புல இருந்தவருக்குச் சட்டுன்னு வக்கீலோட தொரணெ வந்துச் சேந்ததப் பாக்க ஆச்சரியமாத்தாம் இருந்துச்சு.

            "நீஞ்ஞ இப்பிடி கோர்ட்டுல போட்டு படுத்துற பாட்டால இன்னும் நம்மாள முடிக்க முடியலங்கய்யா! போதுமா? புராஜக்ட் சமிட் பண்ணா முடிஞ்சடும்! கோர்ட்டுக்கு அலைஞ்சிகிட்டு இருக்குறதால அங்க இங்க அலைஞ்சி அதெ முடிக்க முடியல!"ன்னா செய்யு தன்னோட கடுப்பெ காட்டுறாப்புல.

            "பதிலச் சுருக்கமா சொல்லுங்க. நீங்க சொல்றதெ இங்க டைப் பண்ணணும் இல்லையா?"ன்னாரு ஜட்ஜ் செய்யுவப் பாத்து. அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல நெதானம் தப்பி உணர்ச்சி வேகத்துல பதிலச் சொல்றதெ உணர்ந்தவளா, "பிராஜக்ட் சப்மிஷன் மட்டுந்தாம் பாக்கியிருக்கு!"ன்னா செய்யு.

            "அதாச்சி எம்பில்ல முடிக்கிற தறுவாயில இருக்குற நீஞ்ஞ கூடிய சீக்கிரமே வேலைக்குச் செல்லும் நிலையில இருக்கும் போது ஒஞ்ஞளுக்கு ஏன் ஜீவனாம்சம் கொடுக்கணும்ன்னு எதிர்பாக்குறீங்க?"ன்னாரு கங்காதரன்.

            அதுக்கு எந்தப் பதிலையும் சொல்லாம ‍அமைதியா நின்னா செய்யு.

            "பதிலச் சொன்னீயள்ன்னா அடுத்தக் கேள்விக்குப் போவலாம்!"ன்னாரு கங்காதரன் நக்கலா.

            "இதுக்கும் சுருக்கமா பதிலச் சொல்லணுமாங்காய்யா?"ன்னா செய்யு ஜட்ஜப் பாத்து.

            "மொதல்ல சொல்லும்மா! பெறவு சுருக்கிக்கலாம்!"ன்னாரு ஜட்ஜ்.

            "இந்தக் கோர்ட்டுக்கு வர்ற ஒவ்வொரு நாளும் நாம்ம சாப்புடமாத்தாம் வர்றேம். இஞ்ஞ வந்து பதினோரு மணி ஆன்னா பசி தாங்க மாட்டேங்குது. சமயத்துல மயக்கம் வந்துடுறாப்புலயம் இருக்கு. ஒரு டீ! ஒரே ஒரு டீ! குடிக்கலாம்ன்னா எங் கையில பைசா காசியில்ல. ஒரு டீத்தண்ணியக் குடிக்கணும்ன்னாலும் அதுக்கான காசிய எஞ்ஞ யப்பாகிட்டயோ, எஞ்ஞ யண்ணங்கிட்டயோ கேட்டு வாங்கித்தாம் குடிக்க வேண்டியதா இருக்கு. நமக்கு வெக்கமா இருக்குங்கய்யா. அவுங்களா வாங்கிக் கொடுத்தா கொடுக்கட்டும்ன்னு அப்பிடியே நின்னுடுறேம். நாமளா கேக்க கூச்சமா இருக்கு. எங் கையில ஒரு பத்து ரூவா யிருந்தா நாம்ம அவுங்கள எதிர்பாக்க வேண்டியதில்லப் பாருங்க! இப்படித்தாம் பல நேரங்கள்ல வெளியில வர்றப்போ பஸ்ஸூக்குக் காசு, பசின்னா ஒரு டீத்தண்ணிய வாங்கிக் கொடுக்க காசின்னு யாருகிட்டெயோ கைய நீட்டி எதிர்பாத்துட்டு வாங்கிட்டுப் போற நெலையில இருக்கேம். இப்பிடி கைநீட்டி வாழ்ந்துகிட்டு இருக்குற வாழ்க்கைக்கு ஜீவனாம்சம் ஏன்னு கேட்டா அதுக்கு நாம்ம என்னத்தெப் பதிலச் சொல்றது? அந்தப் பதில எப்பிடிச் சுருக்கமா சொல்றதுன்னும் தெரியலீங்களேய்யா!"ன்னு சொல்லிட்டு செய்யு தன்னையும் அறியாம அழுவ ஆரம்பிச்சிட்டா. கண்ணுத் தண்ணி அவ்வே கன்னம் முழுக்க நனைக்க ஆரம்பிச்சிடுச்சு. சட்டுன்னு அதெ புரிஞ்சிகிட்டதெப் போல அதெ தொடைக்குறதுக்குள்ள, "கோர்ட்டுல அழுகாச்சி வெச்சி நடிச்சி யாரையும் ஏமாத்த வாணாம்!"ன்னாரு கங்காதரன் மொகத்தெ சுளிச்சாப்புல.

            "நாம்மத்தாம் ஏமாந்துப் போயி நிக்குறேம். நாம்ம யாரையும் ஏமாத்துல. கையில பைசா காசி யில்லாம எல்லாத்துக்கும் மித்தவங்கள எதிர்பாத்துட்டு நின்னு இருந்துப் பாருங்க. யப்போ தெரியும் அதோட வலியும் வேதனையும்!"ன்னா செய்யு ஒடைஞ்சுப் போன கொரல்ல கங்காதரனப் பாத்து.

            “உணர்ச்சிவசப்படாம நெதானமா பதிலச் சொல்லணும்!”ன்னாரு ஜட்ஜ். அவரு மொகத்தப் பாக்குறப்ப அவருக்கும் மனச்சங்கடமாத்தாம் இருந்திருக்கும் போல, சொல்லி முடிச்சதும் கண்ணாடிய கழட்டித் திரும்ப மாட்டிக்கிட்டாரு.

            "நீஞ்ஞ சொல்றது விசித்திரமால்லா இருக்கு. ஒஞ்ஞ யப்பாவுக்கு ஓகையூர்லயும், திட்டையிலயும் பல ஏக்கர் கணக்குல நிலபுலங்கள் இருக்கிறது. ஒஞ்ஞ யண்ணன் ஒரு அரசாங்க வாத்தியாரு. கை நெறைய சம்பளம் வாங்குறவரு. நெலமெ அப்பிடி இருக்குறப்ப நீஞ்ஞ பஞ்சப்பாட்டு பாடுறது விசித்திரமா இருக்கு!"ன்னாரு கங்காதரன் செய்யுவ மடக்கி வீசுற அனுதாப அலைய அடிச்சித் தொரத்துறாப்புல.

            "அதாங் நீஞ்ஞளே சொல்லிட்டீங்களே. எல்லாம் அவுங்ககிட்டத்தாம் இருக்கு. எஞ்ஞகிட்டயா இருக்கு? அவுங்ககிட்டெ யிருந்தா அவுங்க வெச்சிப்பாங்களா? எங்கிட்டெ கொடுப்பாங்களா? அவுங்கவுங்க சம்பாதிச்சி இந்தக் காலத்துல அவுங்கவுங்க குடும்பத்தத்தாம் பாக்க வேண்டிக் கெடக்கு. நாட்டுல வெலவாசி அப்பிடித்தானே இருக்கு!"ன்னா செய்யு தன்னோட நெலைப்பாட்டைச் சரியா எடுத்துச் சொல்றாப்புல.

            "ஏம் ஒஞ்ஞ யப்பா, ஒஞ்ஞ யண்ணன் கொடுக்கறதுக்கு ன்னா?"ன்னாரு கங்காதரன் ஒரு புடி பிடிக்குறாப்புல.

            "தாலியக் கட்டுன புருஷனே ஜீவனாம்சத்தெ கொடுக்குறதுக்கு கோர்ட்டுல வெச்சி இம்மாம் கேள்விகள கேட்டு கொடுக்க வுடாம அடிக்கிறப்போ, எஞ்ஞ யப்பாவும் எஞ்ஞ யண்ணனும் நமக்குச் செய்யணும்ன்னு ன்னா சட்டமா எழுதிருக்கு? சட்டப்படி வர்ற வேண்டியதெய யப்பிடி வர்ற வுடாம அடிக்கத்தானே நீஞ்ஞ யிப்பிடி பேசுதீயே?"ன்னா செய்யு அப்பாவித்தனமா பேசுறாப்புல. அதெ கேட்டுட்டு கோர்ட்டுல இருந்த வக்கீலுங்க, டாவலி, கிளார்க் உட்பட எல்லாரும் சிரிச்சிட்டாங்க. ஜட்ஜ் அதுக்கு வெளிப்படையா சிரிக்காட்டியும் உள்ளுக்குள்ள சிரிச்சிகிட்டதெ அவரோட மொகம் காட்டுனுச்சு. அவரு முகம் திடீர்ன்னு கொஞ்சம் கடுப்பானாப்புல கங்காதரனப் பாத்து, "யோவ் கிராஸ்ஸ ஒழுங்கா கொண்டுப் போயி சட்டுன்னு முடி! அடுத்தடுத்த வழக்குக இருக்கு. எப்பப் பார்த்தாலும் உன்னோட பெரிய ரப்சர்ரா இருக்கு? குறுக்கு வெசாரணை பண்ணுன்னா சிவாஜி படத்துக்குக் கதெ வசனம் எழுதுறாப்புல சோடனெ பண்ணிட்டு இருக்கே!"ன்னாரு. மறுக்கா கங்காதரனுக்கு ஒடம்பெல்லாம் ஆட்டம் காண ஆரம்பிச்சிடுச்சு.

            அந்த தடுமாற்றத்தெ காட்டிக்காதபடி கொரலெல்லாம் கொழறுனாப்புல, "ஒஞ்ஞ யண்ணன், ஒஞ்ஞ யப்பா உதவியில்லாம நீஞ்ஞ எப்பிடி எம்பில் படிக்க முடியும்?"ன்னாரு கங்காதரன் தன்னோட குறுக்கு வெசாரணையோட சரியான போக்கே காட்டுறாப்புல.

            "அதெத்தாம் சொல்றேம். அவுங்க காசிலத்தாம் படிக்கிறேம். எங் கையில பைசா காசியில்ல!"ன்னா செய்யு தாம் சொல்ற பதிலுல்ல இருக்குற அழுத்தத்தெ காட்டுறாப்புல.

            "தொடர்ந்து அவுங்க ஒஞ்ஞளுக்கு செய்யுறதுக்கு ன்னா?"ன்னாரு கங்காதரன் கிடுக்கிப்பிடி போடுறாப்புல.

            "கலியாணத்துக்கு மின்னாடி எம்மாம் வேணும்ன்னாலும் செய்வாங்கய்யா. கலியாணம் அனதுக்குப் பின்னாடி எம்மாம் செய்வாங்க சொல்லுங்க. ஓரளவுக்கு மேல பொண்ணுங்களுக்கு வர்ற பீரியட் டயத்துல நமக்கு ஒரு நாப்கின் பேட் வாங்கணும்ன்னாலும் அதுக்கும் போயிக் காசிக் கொடுங்கன்னு சொல்லிட்டுக் கேட்டுகிட்டு நிக்கச் சொல்லுதீங்களா? எம் நெலமே அப்பிடி இருக்கு!"ன்னா செய்யு. அந்தப் பதிலு கங்காதரன ஒரு நிமிஷம் ஆட்டம் காண வெச்சிடுச்சு. அவரு சர்ட்டு சர்ட்டுன்னு கையில வெச்சிருந்த காயிதத்தெ பொரட்ட ஆரம்பிச்சாரு. அடுத்ததா அவரு கேக்க நெனைச்சக் கேள்வி காயிதத்துல எங்கயோ மாட்டிக்கிட்டதப் போல காயிதங்கள திருப்பி திருப்பி பாத்துட்டே இருந்தாரு. அதுல சில நிமிஷங்க கழிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. கோர்ட்டுல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் இதெ பாக்க ரொம்ப ரசமா இருந்ததெப் போல ரொம்ப ஆவலாதியாப் பாத்துட்டு நின்னாங்க. அக்கம் பக்கத்து கோர்ட்டுல நின்ன சனங்களும் சன்னல் வழியா சுத்திலும் நின்னுகிட்டு இந்த கேஸ்ஸ எட்டிப் பாக்க ஆரம்பிச்சதுங்க.

            நேரமாயிட்டெ இருந்ததெப் பாத்த ஜட்ஜ், "அடுத்த வழக்கு காத்திட்டு இருக்கு. கோர்ட்டோட நேரத்த வீணடிக்காம அடுத்தக் கேள்வியக் கேளுங்க. யில்ல கிராஸ்ஸ முடிங்க இத்தோட!"ன்னாரு கையில கட்டியிருந்த கடியாரத்தெ ஒரு மொறெ பாத்துட்டு.

            "அத்து வந்து... அத்து வந்து..." ன்னு சொல்லிக்கிட்டெ, "கோவில்பெருமாளில் இருக்கும் மாமன் மகன் சற்குணத்தோடு இருக்கும் தொடர்பை விட்டு விட்டு வந்தால் எனது கட்சிக்காரர் வாழ வைக்க தயாராக இருப்பதால், பெட்டிஷனர் எம்பில் படித்திருப்பதால் விரைவில் வேலைக்குச் செல்ல இருப்பதால் ரெஸ்பாண்டன்ட் தரப்பில் எந்த ஜீவனாம்சமும் வழங்க வேண்டியதில்லை!"ன்னு சொல்லிட்டு படபடப்பா கங்காதரன் போயி வக்கீலுங்க உக்காந்திருக்குற மேசைக்கு மின்னாடி இருந்த நாற்காலியில உக்காந்திட்டாரு. அவரு உக்காந்ததும், செய்யு, "என் மீது ஆதரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சாட்டி என் பெண்மையை இழிவுபடுத்துவதால், என்னை வாழ வைப்பதாகச் சொல்லி என் கணவர் என்னை அழைத்துச் சென்று என் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையை உருவாக்க நினைப்பதால் என் கணவர் எனக்கு ஜீவனாம்சத்தோடு, என்னை இழிவுபடுத்தியதற்கு உரிய மானநஷ்டத்துக்கு ஈடான இழப்பீடையும் தர வேண்டும்!"ன்னா தானும் தம் பக்கத்துக்கு தானே ஒரு வக்கீலா மாறிட்டதெப் போல. திடீருன்னு ஒரு நெனைப்பும் தெகிரியமும் அவளுக்கு எப்படி வந்துச்சோ இப்படிப் பேசிட்டு நின்னா. 

            "இதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. ஒங்க வக்கீல் சொல்லணும். நீங்க பாக்ஸ் வுட்டு எறங்குங்க!"ன்னாரு ஜட்ஜ் செய்யுவப் பாத்து நெத்தியச் சுருக்குனாப்புல. ஒடனே பாலாமணி நின்ன எடத்துலேந்து நாலடி மின்னாடி வந்து, "நாம்ம அவுங்கள குறுக்கு வெசாரணை பண்ணணும்!"ன்னாம் ஜட்ஜப் பாத்து.

            "நெனைச்சேன். என்னா மிஸ்டர் கங்காதரன் ஒங்க கட்சிக்காரர் இதெ கோர்ட்டுன்னு நெனைக்குறாரா? யில்ல வேறெதும்ன்னு நெனைக்கிறாரா? இப்பிடி ஆளாளுக்கு கிராஸ் பண்ணணும்ன்னா என்னா அர்த்தம்? நீதிமன்ற அவமதிப்புன்னு தூக்கி உள்ளாரப் போடுறாப்புல ஆயிடும்! என்னா நெனைச்சிட்டு இருக்கீங்க கோர்ட்டப் பத்தி?"ன்னு கங்காதரனப் பாத்துச் சொன்னாரு ஜட்ஜ் வெடிச்சிச் செதறுறாப்புல.

            "நம்மளோட வக்கீல் சரியா கிராஸ் பண்ணல. அதாங் நாம்ம பண்ணணும்ன்னு கேக்குறேம்!"ன்னாம் பாலாமணி தாம் கேக்குறதோட ஞாயத்தெ எடுத்து வைக்குறாப்புல.

            ஜட்ஜ் பாலாமணிய வெறிச்சாப்புல பாத்தாரு. அப்படியே பக்கத்துல நின்னுகிட்டு இருந்த போலீஸ்காரரப்பாத்து, "இந்த ஆளெ பிடிச்சி வெளியில தள்ளுங்க! இதென்ன கோர்ட்டா? சந்தெக்கடையா? ஆளாளுக்கு வந்து வெசாரணை பண்ணும்ன்னா?"ன்னாரு கோவமா. மொத்த கோர்ட்டுமே நடக்குறதெ ஒரு சினிமா படத்தெ பாக்குறாப்புல வெச்ச கண்ணு இமைக்காம பாத்துக்கிட்டு இருந்துச்சு.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...