18 Aug 2026

அலங்காரப் பிழையும் பிளாட்டினப் புன்னகையும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 9

அலங்காரப் பிழையும் பிளாட்டினப் புன்னகையும்!

வெக்கை தணிந்த அந்தி மாலையின் இதமான காற்று.

திருவாரூர் வாசன் கபே வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தினாள் அவள்.

உள்ளே அவன் உட்கார்ந்திருந்தான்.

அவள் கையில் ஒரு நகைக்கடை பை. முகத்தில் 'நான் ஏதோ சாதனை பண்ணி விட்டேன்' என்கிற அளவுக்கு ஒரு பெருமிதம்.

"என்னடி வழக்கம் போல இன்னைக்கும் லேட்டா?" அவன் சேரை இழுத்துப்போட்டான்.

"லேட்டெல்லாம் இல்லை. ஒரு அரை மணி நேரம். ஆனா ஒர்த்! பிஆர்எம்  ஜூவல்லர்ஸ்ல இருந்து வர்றேன்."

பையைத் திறந்து ஒரு குட்டி நகைக்கடைப் பெட்டியை வெளியே எடுத்தாள். திறந்து காட்டினாள்.

ஒரு பிரம்மாண்டமான வைரம் பதிச்ச பிளாட்டினம் நெக்லஸ். விளக்கு வெளிச்சத்தில் அது சும்மா பளபளவென்று மின்னியது.

"எப்படி இருக்கு? மூணு லட்சம்! என் பர்ஸ்ட் இயர் அப்ரைசல் போனஸ் வந்ததும் வாங்கிட்டேன். பங்க்ஷனுக்குப் போட்டா எலிகண்ட்டா இருக்கும்ல?"

அவன் நெக்லஸைப் பார்க்கவே இல்லை.

அவளுடைய கண்களைப் பார்த்தான்.

அவளுடைய அந்த மெல்லிய அச்சம். "அவன் என்ன நினைப்பானோ?" என்கிற லேசான தயக்கம். அப்புறம் அந்த கண்ணியமான நாணம்.

அவன் மெல்ல சிரித்தான்.

"ஏன் சிரிக்கிற? நல்லாயில்லையா?" அவள் முகம் சுருங்கியது.

"நல்லாத்தான் இருக்கு. ஆனா, திருக்குறள் படிச்சிருக்கியா?"

"திடீர்னு திருக்குறளா? எதுக்குடா?"

"அது என்னான்னா,

"பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து."                  (குறள், 1089)

அப்படின்னு ஒரு குறள் இருக்கு."

"அப்படின்னா?"

"மானோட பார்வை மாதிரி ஒரு மாசற்ற மருட்சியான பார்வை. கூடவே ஒரு இயற்கையான நாணம். இது ரெண்டும் இருக்கிற ஒரு பொண்ணுக்கு, வெளியில இருந்து எந்த நகையைக் கொண்டு வந்து பூட்டினாலும் அது வீண்ன்னு வள்ளுவர் சொல்றார்."

அவள் அந்த நெக்லஸையே பார்த்தாள்.

அப்புறம் அவனைப் பார்த்தாள்.

"அதாவது, நீ இந்த மூணு லட்ச ரூபாய் நெக்லஸைப் போட்டுகிட்டா, நெக்லஸோட அழகு கூடுமே தவிர, உன்னோட அழகு கூடப்போறதில்லை. ஏன்னா, உன் கண்ணுல இருக்கிற அந்த இயற்கையான மென்மையும் நாணமும் தான் உனக்கு உண்மையான நகையே தவிர, இந்த மெட்டல் இல்லை."

அவளுக்கு பேச்சு வரவில்லை.

அந்த வைரம் தரும் பளபளப்பை விட, அவனுடைய வார்த்தைகள் அவளுக்குள் ஒரு புது வெளிச்சத்தைக் கொடுத்தன. லேசான வெட்கத்துடன் தன் பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டாள்.

"இப்ப பாரு." அவன் மெல்ல சொன்னான். "இப்ப நீ தலைகுனிஞ்சு நாணத்தோட பார்க்கிற பாரு. இந்த அழகுக்கு முன்னாடி அந்த மூணு லட்ச ரூபாய் பிளாட்டினம் சும்மா தூசி!"

அவள் அந்த ஜூவல்லரி பாக்ஸை மெல்ல மூடி பைக்குள் வைத்தாள்.

"சரி மிஸ்டர் வள்ளுவர்! இப்போ, காபி ஆர்டர் பண்றீங்களா, இல்லை அதுக்கும் குறள் தேடப் போறீங்களா?"

அவன் சிரித்தான்.

அவளும் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில், அத்தனை வைரங்களும், பிளாட்டினங்களும் தோற்றுப்போயின.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment