28 Jul 2026

இருட்டும் கட்டணமும் – ஓர் ஒப்பியல் ஆய்வு!

இருட்டும் கட்டணமும் – ஓர் ஒப்பியல் ஆய்வு!

மனிதன் நாகரிகமடைவதற்கு முன்பாக இருட்டைக் கண்டு பயந்தான்; நாகரிகமடைந்த பிறகு மின்சாரத்தைக் கண்டு பயப்படுகிறான்.

அன்றைக்கு இருட்டுக்குள்ளே பேய் இருக்கும் என்று நம்பினான். இன்றைக்கு மின்சாரப் பெட்டிக்குள்ளே மீட்டர் ஓடும் வேகம் பார்த்து, அதற்குள்ளும் ஏதோ ஒரு பேய் ஒளிந்திருக்கிறதோ என்று அஞ்சுகிறான்.

இருட்டு என்பது இயற்கையானது. அதை விரட்டுவதற்கு மின்சாரத்தைக் கண்டுபிடித்தது மனிதனின் புத்திசாலித்தனம். ஆனால், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து, அதை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்பி வைப்பது மனிதனின் அதிபுத்திசாலித்தனம்.

இருளைக் கண்டு அஞ்சுபவன் மனிதன்; மின்கட்டணத்தைக் கண்டு அஞ்சுபவன் குடும்பஸ்தன்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், இரவில் வெளிச்சம் பெற தீப்பந்தங்களையும் விளக்குகளையும் பயன்படுத்தினார்கள். அதற்கு எண்ணெய் செலவானது. எண்ணெய் தீர்ந்து போனால் வெளிச்சம் போய்விடும்.

இன்றோ, கட்டணம் செலுத்தத் தவறினால் வெளிச்சம் போய்விடும். ஆக, காலம் மாறினாலும் செலவு குறைந்தால் வெளிச்சம் போகும் என்ற நியதி மட்டும் மாறவே இல்லை.

தாமஸ் அல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தபோது, உலகம் இருளிலிருந்து விடுதலையடைந்தது என்று பெருமூச்சு விட்டது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த வெளிச்சத்தை அளக்க மீட்டர் என்ற பொறி பொருத்தப்பட்டது.

மின்சார மீட்டர் என்பது ஒரு விசித்திரமான இயந்திரம். நாம் வீட்டில் இல்லாதபோதும் அது ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது.

மின் கட்டணத்துக்கு அமோக ஆதரவளிக்கும் வஸ்துகள் அகஸ்மாஸ்தாக ஒவ்வொரு வீடுகளிலும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்க்க வேண்டுமானால்…

குளிர்சாதனப் பெட்டி என்பது நாம் அறையைக் குளிர்விக்க பயன்படுத்துவது; ஆனால் கட்டணம் வரும்போது அது நம்மை வேர்க்க வைக்கிறது.

மின்விசிறி என்பது காற்றைத் தருவது போலத் தோன்றும், ஆனால் உண்மையில் அது மின்கட்டணத்துக்கான ரூபாய் தாள்களை உருவியெடுத்து நம் பையைத்தான் லேசாக்குகிறது.

தொலைக்காட்சி என்பது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறதோ இல்லையோ, மீட்டரின் சுழற்சியை வேகப்படுத்துகிறது.

ஆக மொத்தத்தில், பழங்காலத்தில் இருட்டில் நடமாடப் பயந்த மனிதன், இன்றைக்கு மின்சாரப் பெட்டியின் அருகே செல்லவே பயப்படுகிறான்.

இருட்டு மனிதனின் கண் பார்வையை மட்டுமே பாதித்தது; ஆனால் மின்கட்டணமோ மனிதனின் நிம்மதியையே பாதிக்கிறது.

இருட்டு என்பது ஒரு தற்காலிகமான நிலை. சூரியன் வந்தால் அது போய்விடும். ஆனால் மின்கட்டணம் என்பது ஒரு நிலையான பிரமை; சூரிய ஒளி மின்னோட்டமாக மாறினாலும், அதற்கும் ஏதேனும் ஒரு வகையில் கட்டணம் வந்துவிடுகிறது.

எனவே, இருட்டைப் பார்த்து பயந்த மனிதன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தான். மின்கட்டணத்தைப் பார்த்து பயப்படும் மனிதன், அடுத்து எதைக் கண்டுபிடிப்பான் என்பதுதான் தற்போதைய கேள்வி!

இந்த ஆய்வு உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் இது போல இன்னும் பல ஆய்வுகள் செய்ய ஆவலோடு இருக்கிறேன். உங்கள் திருப்தியை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். ஆனால், அதற்குக் கொஞ்சம் மின்சாரம் செலவாகும்.

*****

No comments:

Post a Comment