30 Jul 2026

செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ரூபாய்!

செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ரூபாய்!

இந்தியப் பொருளாதாரம் என்பது ஒரு விசித்திரமான யோக நிலை. நாம் உலகின் அதிவேகப் பொருளாதார சக்தி, என்று உரக்கக் கத்தும்போது, இந்திய ரூபாய் மட்டும் தனியாக மூலையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து, மெல்லத் தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டே கீழே இறங்கும்.

அதாவது, வளர்ச்சி மேலே போகிறது; ரூபாய் கீழே போகிறது. இரண்டுமே இயக்கம்தான். இயக்கம்தான் வாழ்வு!

1971 இல் ஒரு டாலரின் விலை 7 ரூபாய் 50 காசுகள். இன்று அதே டாலரின் விலை 97 ரூபாய்!

இது வீழ்ச்சி அல்ல; இது பற்றுறுத்தல். டாலர் என்ற மாயையைத் துரத்தத் துரத்த, அது நம்மை விட்டு விலகிச் செல்கிறது. கச்சா எண்ணெய், தங்கம், ராணுவத் தளவாடங்கள் என உலக ஆசைகளில் நாம் மூழ்க மூழ்க, டாலர் தன் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் எவ்வளவு தான் இறக்குமதி செய்தாலும், நம் தாகம் தணிவதில்லை.

ரூபாய் மதிப்பு சரிவதால் கவலைப்பட என்ன இருக்கிறது? அதில் எத்தனை ஆனந்தங்ககள் ஒளிந்திருக்கின்றன தெரியுமா?

முதலில் அதனால் ஏற்றுமதியாளருக்கு ஆனந்தம். ரூபாய் உடைந்தால் ஏற்றுமதி கூடும்.

இரண்டாவதாக அந்நிய முதலீட்டாளருக்கு ஆனந்தம். வெளிநாட்டினருக்கு இந்தியா மலிவான சொர்க்கமாக மாறும்.

மூன்றாவதாக வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியக் குடும்பங்களின் ஆனந்தம். வெளிநாட்டில் வேர்வை சிந்தி ஒரு டாலர் அனுப்பும் மகனால், ஊரில் இருக்கும் தாய் 97 ரூபாயைப் பெற்று மகிழ்வாள்.

அதாவது, நமது நாணயத்தின் வீழ்ச்சியே, சில குடும்பங்களின் எழுச்சி! என்னவொரு மகத்தான சமநிலை பாருங்கள்.

ஈரான் மீது தாக்குதல் நடக்கிறது; கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது; நமது வர்த்தகப் பற்றாக்குறை 12 லட்சம் கோடியைத் தொடுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 23 பில்லியன் டாலர்களை மூட்டை முடிச்சோடு எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

சீனாவின் யுவான் வலுவடைகிறது. மலேசியாவின் ரிங்கிட் நிமிர்ந்து நிற்கிறது. சிங்கப்பூர், தன் டாலரை உயர்த்துகிறது. ஆனால், இந்திய ரூபாய்?

பொருளாதாரம் செழிப்பாக இருக்கிறது, ஆனால் ரூபாய் ஏன் விழுகிறது? என்ற கேள்விக்கு, நம்மிடம் அமைதியே பதிலாய் இருக்கிறது. மௌனத்தை விடச் சிறந்த தத்துவம் வேறு என்ன இருக்க முடியும்?

பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள், ரூபாய் மதிப்பு விரைவில் செஞ்சுரி அடிக்கும் என்று.

அச்சப்படத் தேவையில்லை. 100 என்பது ஒரு முழுமை. ஒரு சதம். 97 இல் நிற்பதை விட 100 இல் நிற்பது கணக்கு வைப்பதற்கு மிகவும் சுலபமானது அல்லவா?

700 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி இருப்பு வைத்துள்ளோம். ஆனால், அதுவும் நமக்கு முழுமையான அமைதியைத் தரவில்லை. ஏனெனில், உண்மையான அமைதி இருப்பில் இல்லை; இறக்குமதியைக் குறைத்து, உற்பத்தியைப் பெருக்கி, நாம் சுயமாக நிமிர்ந்து நிற்பதில்தான் இருக்கிறது.

உற்பத்திச் செலவு குறைவாக உள்ள நம் நாட்டில், உற்பத்தியைப் பெருக்காமல் இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பது, கையில் அமுதத்தைச் வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் பிச்சை கேட்பதற்குச் சமம்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்தால்தான் தேசத்தின் மதிப்பு உயரும். இல்லையேல், நாம் டாலருக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும் பக்தர்களாகவே எஞ்சியிருப்போம்!

நாம் எப்படி இருக்கப் போகிறோம்?

அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்!

*****

No comments:

Post a Comment