27 Sept 2017

சமாதானம் உண்டாவதாக!

சமாதானம் உண்டாவதாக!
            ஆண்களுக்கு ஏன் பெண்களின் உடலில் உரசுவதில் அப்படி ஓர் அலாதி இன்பம்? பேருந்து என்றால் சொல்லவும் வேண்டுமோ! பெண்களின் இடையில் கிள்ளுபவர்கள் வரை பல வகையறாக்கள் முளைத்து விடுகிறார்கள்.
            எவ்வளவோ விஞ்ஞானம் வந்து விட்டது என்கிறார்கள், தொழில்நுட்பத்தில் நம்மை யாரும் அசைக்க முடியாது என்கிறார்கள். வயிறுப் பிதுங்கியது போல் கூட்டமாகச் செல்லும் பேருந்தைக் குறைக்க முடிகிறதா?
            உட்கார்ந்து செல்லும் பேருந்து பயணங்களைப் பெரும்பாலும் கனவில் மட்டுந்தான் காண முடிகிறது. பெரும்பாலானப் பயணங்கள் நின்று கொண்டுதான் அதுவும் தாள முடியாத நெரிசலில் மீள முடியாத நெருக்கடிகளோடுதான் நிகழ்கின்றன. இப்படித்தான் பெண்களின் மேல் உரசுவதற்கும், அவர்களைச் சீண்டுவதற்கும் இந்த நாட்டில் களம் அமைத்துக் கொடுக்கிறார்கள் வளர்ச்சி, வளர்ச்சி என்று வாய் கிழிய கத்துபவர்கள்.
            அப்படிப்பட்ட ஒரு பேருந்து பயணத்தில்தான் ஒரு பெண் தன் இடையில் கை வைத்து தேய்த்த ஒரு ஆண்மகனை(!) போட்டுப் பொளந்து கட்டினாள். அவள் அடித்த அடியின் சத்தம் நடத்துனரின் விசிலை விட பலமாக பேருந்து முழுவதும் கேட்டது. ஓட்டுநரோ எதுவும் நடக்காதது போல வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட கடமை உணர்ச்சி குறையாத ஓட்டுநர்களால்தான் தமிழ்நாட்டின் பயணங்கள் தடை படாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
            கடைசியில் சுற்றி இருந்தவர்கள் சமாதானப்படுத்தி, நடத்துநரும் தன் பங்குக்கு நிலைமையைச் சகஜமாக்கி அந்த ஆண் மகனைப் பின் இருக்கைப் பகுதிக்கு கொண்டு வந்து அமரச் செய்து இயல்பானப் பேருந்து பயணத்தைத் தொடரச் செய்தார்கள்.
            யாருக்கும் பேருந்தைக் காவல் நிலையத்துக்கு விட வேண்டும் என்று மருந்துக்குக் கூட தோன்றவில்லை. காவல் நிலையம் என்றால் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கால தாமதம் ஆகி விட்டால்... என்ன செய்வது? அந்தப் பெண் அந்த ஆண் மகனை அடிக்கும் போதே எல்லாவற்றையும் யோசித்து வைத்திருந்திருப்பார்கள் போல. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல மெளனமாக அதைப் பற்றிப் பேசுவதைக் கூட வெகு கவனமாகத் தவிர்த்தார்கள். அதே பேருந்து பழுதுபட்டு நின்று விட்டால் அரை மணி நேரம் என்ன இரண்டு மணி நேரம் வரை அப்படியே நிற்பார்கள்.
            கடைசி இருக்கையில் அமர வைக்கப்பட்ட நம் ஆண்மகனோ மாப்பிள்ளை போல ஜம்மென்று அமர்ந்த படி மிலுக்காக பயணித்துக் கொண்டிருந்தான்.
            இது நமது பேருந்துப் பயணங்களின் பாரம்பரிய குல வழக்க முறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...