29 Sept 2017

வடிகட்டல் தேர்வுகள்

வடிகட்டல் தேர்வுகள்
            தேர்வுகளுக்குத் தயாராகி வேலைக்கு தகுதியற்றவர்களாய் ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வகை நிலை என்றால், இன்னொரு வகை நிலை  தேர்வுக்காகத் தயாரித்த தயாரிப்பில் நூறில் ஒரு பங்கிற்குக் கூட வேலைக்கான அறிவு தேவைப்படாத நமது தேர்வு தயாரிப்பு முறை.
            வடிகட்டி நல்லதை கீழே விட்டு விடும். அல்லதை தக்க வைத்துக் கொள்ளும். இந்தத் தேர்வுகளும் வடிகட்டித் தேர்வுகளாக இருக்கின்றன. தகுதியானவர்களைக் கீழே விட்டு விட்டு, தகுதியற்றவர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.
            ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற ஒருவர் ல-ழ-ள என்ற மூன்று எழுத்துகளுக்கும் வேறுபாடு தெரியாமல் ஒரு கடிதம் எழுதுகிறார்.
            தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வில் தேர்வு பெற்று அதிகாரிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் செய்வினை - செயப்பாட்டு வினை வேறுபாடு இல்லாமல் மேற்பார்வை நோட்டில் எழுதி வைத்து விட்டுப் போகிறார்.
            இந்தத் தேர்வுகளை ஏன் வடிகட்டல் தேர்வுகள் என்று சொல்லக் கூடாது? அதுவுமில்லாமல் இந்தத் தேர்வுகளில் கேட்கப்படும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எனும் வகையிலான நூறோ அல்லது நூற்றைம்பது ஒரு மதிப்பெண் வினாக்கள் எப்படி ஒருவரின் தகுதியை அளவிட்டு விடும்?
            பதினைந்து, பதினேழு வருடங்கள் படிப்பது வெறும் 150 ஒரு மதிப்பெண் வினாக்களுக்குத்தான் என்றால் அதைப் படிப்பவர்கள் எப்படிப் படிப்பார்கள்? அந்த படிப்பின் மூலம் அவர்கள் எப்படி உருவாகுவார்கள்? என்ற கேள்விகளுக்கு அந்தத் தேர்வுகளிடம் என்ன பதில் இருக்கிறது.
            ஓ! மன்னிக்கவும்! தேர்வுகள்தான் நம்மிடம் கேள்விக் கேட்கும். நாம் தேர்வுகளிடம் கேள்வி கேட்க முடியுமா என்ன?

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...