31 Jul 2026

2.79 கோடி ஜி.எஸ்.டியும் ஏரி வேலையும்!

2.79 கோடி ஜி.எஸ்.டியும் ஏரி வேலையும்!

உலகத்தில் பலவிதமான அதிசயங்கள் நடப்பதுண்டு. எகிப்து பிரமிடு, தாஜ்மஹால் எல்லாம் பழைய கதை.

நம் ஊரில் நடக்கும் நவீன அதிசயம் என்னவென்றால், ஏரி வேலைக்குச் செல்லும் ருக்மணி அம்மணி என்பவருக்கு 2.79 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக வணிகவரித் துறை அன்போடு நோட்டீஸ் அனுப்பியிருப்பதுதான்!

பாவம் ருக்மணி. 125 நாள் வேலைத் திட்டத்தில் வெயிலில் நின்று மண்ணள்ளிப் போட்டு, அதில் வரும் சொற்பக் கூலியை வாங்கலாம் என்று வங்கிக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே இருந்த வங்கி மேலாளர், “அம்மா! நீங்க சாதாரண ஆள் இல்லை! ஆர்.எம். டிரேடர்ஸ் முதலாளி! நீங்க ஜி.எஸ்.டி கட்டாம இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல வரி ஏய்ப்பு பண்ணியிருக்கீங்க. அதான் உங்க அக்கவுண்ட்டை லாக் பண்ணிட்டோம் என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

இதில் நாம் வியக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

நாட்டின் பெரும் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் எங்கே வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நமது புலனாய்வுத் துறை, ஏரி வேலைக்குச் செல்லும் ஓர் ஏழைப் பெண்ணைக் கச்சிதமாகக் கண்டுபிடித்துவிட்டது!

“யாரை வேணா விட்டுடுவோம். ஆனா இந்த 125 நாள் வேலைக்குப் போறவங்களை விடமாட்டோம் என்ற அவர்களின் கடமை உணர்ச்சியைப் பார்த்து கார்ப்பரேட் முதலாளிகளே கண்ணீர் வடிக்கிறார்கள்.

இது ஒரு புறம். ஏரி வேலைக்குக் கொண்டு செல்லும் வட்டசட்டி, மண்வெட்டிதான் அந்த நிறுவனத்தின் மூலதனம் போலிருக்கிறது!

அப்புறம், 125 நாள் வேலைத் திட்டத்தில் கொடுக்கும் கூலியை வைத்துக்கொண்டு கோடிகளில் டிரேடிங் செய்யும் இந்த பிசினஸ் டெக்னிக் எந்த ஐ.ஐ.எம் மேனேஜ்மென்ட் புத்தகத்திலும் இல்லை.

வழக்கமாகக் கடன் கேட்டுப் போனால், "ஆதார் கார்டு நகல் தெளிவா இல்லை, நாளைக்கு வாங்க" என்று அலைக்கழிக்கும் வங்கிகள், இவ்வளவு பெரிய விவகாரத்தில் மட்டும் எவ்வளவு சுறுசுறுப்பு! "உங்க கணக்கில் வந்த 125 நாள் சம்பளத்தைக் கொடுக்க முடியாது. ஏன்னா நீங்க பில்லியனர் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்கள்.

யாரோ ஒரு மிஸ்டர் டெக்னிக்கல் திருடன், அப்பாவி ருக்மணியின் ஆதார், பான் கார்டைத் திருடி ஆர்.எம். டிரேடர்ஸ் ஆரம்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறான் என்பது சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும். ஆனால், சிஸ்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டும் அது புரியவே புரியாது!

ஏழைக்கு வந்தால் நோட்டீஸ். கோடீஸ்வரனுக்கு வந்தால் வெய்வர்.

எது எப்படியோ. இனிமேல் 125 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், கையில் மண்வெட்டியோடு ஜி.எஸ்.டி பைல் பையையும் கூடவே எடுத்துச் செல்வது நல்லது. நாடாளும் மாடல்கள் வாழ்க!

*****

No comments:

Post a Comment