ஜனநாயகன் – தியேட்டரில் ஒரு தேர்தல்!
தமிழ்
சினிமாவில் அரசியல்வாதியாக மாறுவதற்கும், சினிமாவில் அரசியல் பேசுவதற்கும் பெரிய வித்தியாசமெல்லாம்
இல்லை. இரண்டுக்குமே கொஞ்சம் கைத்தட்டல், நாலு டைமிங் வசனங்கள், அப்புறம் ஒரு பழைய
பாட்டு ரீமிக்ஸ் இருந்தால் போதும். ஜனநாயகன் படமும் அந்த மரபை மிக நேர்த்தியாகப் பின்பற்றுகிறது.
மலைக்
கிராமத்தில் பிறந்து, படிப்பால் உயர்ந்து, செய்யாத குற்றத்துக்குச் சிறைக்குப் போய்,
கடைசியில் அதே சிறைக்கே பாதுகாவலராகவும் வரும் விசித்திரமான காவல்துறை அதிகாரிதான்
படத்தின் நாயகன்.
இதற்கு
இடையில் கதையின் ஒரு பாத்திரம் உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகி, வழக்கம் போல ஒரு
விபத்தில் இறந்து போகிறது. போவதற்கு முன்னால் அந்தப் பாத்திரம், "என் மகளை ராணுவத்தில்
சேர்த்துவிடு" என்று நாயகனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறது. நாயகனும் ஒரு டியூஷன்
வாத்தியார் போல அந்த மகள் பாத்திரத்துக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறார்.
இன்னொரு
பக்கம், ஆப்பிரிக்காவில் பல கொலைகளைச் செய்து அந்த நாட்டையே சுடுகாடாக்கிய வில்லன்,
இந்தியக் கடற்படையைத் தாக்கி நாட்டிற்குள் நுழையச் சதி செய்கிறார். இந்தச் சூழலில்,
வில்லன் பாத்திரத்திடம் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிச் சீரழியும் மகள் பாத்திரத்தைக்
காப்பாற்ற நாயகன் மீண்டும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்.
அதென்னவோ
இந்தப் படத்திலும் வில்லன்களுக்கு எப்போதும் ஹீரோவின் ஆட்களைத் தவிர வேறு யாரையுமே
கொல்லத் தோன்றுவதில்லை!
வில்லன்
கூட்டமெல்லாம் நாயகனுக்கு பில்டப் கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் நடந்து கொள்கிறார்கள்.
எதிரே நிற்கும் வில்லன்களே "அவன் சாதாரண ஆள் இல்லப்பா!" என்று பேசிப் பேசி
நாயகனை உயர்த்தும் பழைய தொண்ணூறுகளின் தமிழ் சினிமா பார்முலா இதில் இன்னும் கொஞ்சம்
தூக்கலாக இருக்கிறது.
நவீன
தமிழ் சமூகம் தனது பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதும், பிறகு அதே பிம்பங்களின் காலடியில்
விழுந்து வணங்குவதும் ஒரு விசித்திரமான ஆட்டம். ஜனநாயகன் திரைப்படமும் இந்த ஆட்டத்தின்
ஒரு பிரம்மாண்டமான தொடர்ச்சிதான். இங்கே சினிமா என்பது கலை வடிவமாக இல்லாமல், ஓர் அரசியல்
பிரசாரத்தின் வண்ணமயமான சுவரொட்டியாகத் தன் உருவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது
படத்தின்
இயக்குநர் மக்களின் நலன் பேணாத சர்வதேச முதலாளித்துவத்தையும், வாக்காளர் மற்றும் அரசியல்வாதி
இடையிலான நுகர்வு உறவையும் தொட்டுப் பேச முற்படுகிறார். ஆனால், அது காட்சிகளாக உருப்பெறாமல்
பெரும்பாலும் நீண்ட வசனப் பிரசங்கங்களாக மட்டுமே எஞ்சிநிற்கிறது. சிந்தனைகளை உரையாடலாக
மாற்றுவதற்கும், மேடைப் பேச்சை திரையில் ஒப்பிப்பதற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை
படம் பல இடங்களில் கடந்துவிடுகிறது.
தெலுங்கின்
பகவந்த் கேசரி கதையின் விதையை எடுத்துக்கொண்டு, அதன் மேல் அரசியல், சமூகப் பிரச்சினைகள்,
பெண் பாதுகாப்பு, எமோஷன், ஆக்ஷன் என பல வண்ணப் பூச்சுகளைப் பூசியிருக்கிறார் இதன்
இயக்குநர்.
ஜனநாயகன்
என்பது சினிமா என்ற கலை வடிவத்தின் வழியாகத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதா என்றால்
சந்தேகம்தான். ஆனால், ஓர் அரசியல் நகர்வாகவும், ரசிகர்களின் உணர்ச்சிப் பெருக்கைத்
மூலதனமாகக் கொண்ட நுகர்வுப் பண்டமாகவும் தன் இலக்கைக் கச்சிதமாக அடைந்துவிடுகிறது!
திரையரங்கின்
இருளுக்குள் நுழையும் போது, நாம் ஒரு கதையைக் கேட்கப் போகிறோமா அல்லது ஒரு பிம்பத்தின்
ஊர்வலத்தைப் பார்க்கப் போகிறோமா என்ற கேள்வி எழுந்தால், அதற்கு ஜனநாயகன் அந்த இரண்டாம்
தேர்வைத்தான் தன் தோள்களில் பலவந்தமாகச் சுமந்து நிற்கிறது.
ஒரு
கலைஞன் தன் கலைக்கு உண்மையாக இருக்கும் வரைதான் அவன் விஸ்வரூபம் எடுக்கிறான். ஆனால்,
கலை ஒரு மனிதனின் பிம்பத்தைக் கட்டமைக்கும் ஏவலாளாக மாறும் போது, அங்கே கலை மெல்ல மெல்ல
மௌனமாகி விடுகிறது.
நாம்
கொண்டாட்டங்களை விரும்புபவர்கள். நமக்கு நிஜங்களை விட, நிஜங்களைப் போலக் காட்டப்படும்
பிரமைகள்தாம் உற்சாகம் அளிக்கின்றன. ஜனநாயகன் ரசிகர்களுக்கான கொண்டாட்ட அரங்கைத் திறந்து
வைக்கிறது; ஆனால், திரை அணைந்த பிறகு வீட்டிற்கு உடன் வர வேண்டிய ஆழமான மனித அனுபவத்தை
அது தர மறுக்கிறது.
*****

No comments:
Post a Comment