ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்தாவது
வருடத்தில்தான் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமா?
முதல்
வருடத்திலேயே நிறைவேற்றி விட்டு நான்கு வருடங்களில் மக்கள் மறந்து விடுவதற்கா என்றுதான்
ஐந்தாவது ஆண்டு நிறைவேற்றுகிறார்கள். இதுதான் அரசியல்வாதிகள் மக்களுக்கு டப் கொடுக்கும்
இடம். ஆனால், மக்களுக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ் கிடைத்தால் போது நான்கே நிமிஷத்தில்
அதையும் மறந்து விடுவார்கள் என்பது வேறு விசயம். இதுதான் மக்கள் அரசியல்வாதிகளுக்கு
டப் கொடுக்கும் இடம்.
*****
இந்தத் தேர்தலில் வேறு என்ன இலவச
வாக்குறுதி கொடுக்கலாம்?
இலவச
சரக்கு. குவார்ட்டர், ஆப், புல் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக்
கொள்ளலாம். இதை ஒன்றைத்தாம்பா இப்போதைக்கு விட்டு வெச்சுருக்காங்க. அதையும் கொடுத்துட்டா
சோலி முடிஞ்சிடும்!
*****
உண்மையில் புதையல், அதிர்ஷ்டம்
என்பதெல்லாம் இப்போதும் இருக்கிறதா?
புதையல்,
அதிர்ஷ்டம் என்பதெல்லாம் பழங்காலத்து வஸ்துக்கள் அல்ல. இப்போதும் இருப்பவைதான். அவை
மறைந்திருக்கும் வஸ்துக்கள். அது எங்கே இருக்கிறதோ, அங்கேதான் எப்போதும் இருக்கிறது.
மறைந்திருக்கும் அதைக் காண ஒரு மைக்ராஸ்கோப் தேவைப்படுகிறது. அதுதான் கொஞ்சம் முயற்சி
மற்றும் உழைப்பு. இந்த வார்த்தைகளைக் கேட்டாலே பலருக்கும் ஒரு சலிப்பும் வெறுப்பும்
அத்தோடு அலுப்பும் வந்து விடுகிறது. ஆனால் இந்தச் சலிப்பு, அலுப்பு, வெறுப்பு இவற்றைத்
தூக்கி எறிந்து விட்டு, முயற்சியாலும் உழைப்பாலும் யார் தேடத் தொடங்குகிறார்களோ அவர்களின்
அட்ரஸ் கேட்டுக் கொண்டு இந்தப் புதையலும், அதிர்ஷ்டும் ஸ்விக்கியில் போட்ட ஆர்டரைப்
போலத் தேடி வந்து விடும் என்பதுதான் ரகசியம்.
*****
தொழில்நுட்பம் வளர்ந்து விட்டால்
எல்லாம் மாறி விடுமா?
தொழில்நுட்பம்
வளர்ந்து விட்டால் எல்லாம் மாறலாம். மாற்ற முடியாதவையும் இருக்கவே செய்யும். அதில்
முதன்மையானது பேசிக் இன்ஸ்டின்க்ட். அதை மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. அதில் முதலிடத்தில்
இருப்பது ஏமாற்றுவதும் திருடுவதும்.
முன்பெல்லாம்
பேருந்தில் ஏறிக் கூட்டத்தோடு கூட்டமாக இடித்துக்கொண்டு, ப்ளேடு போட்டு பிக்பாக்கெட்
அடிப்பார்கள். அது ஒரு மேனுவல் வேலை. இப்போது டிஜிட்டல் இந்தியா. கையில் ஏடிஎம் கார்டும்,
மொபைலில் ஜிபேயும் வந்த பிறகு அந்தப் பாவப்பட்ட பிக்பாக்கெட்காரர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களையும் பாதித்திருக்க வேண்டும். ஆனால் திருட்டு நின்றுவிட்டதா?
அதுதான் இல்லை.
திருட்டு
இப்போது அப்கிரேட் ஆகியிருக்கிறது. ஒரு காலத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியவன், இப்போது
ஒரு லிங்க் அனுப்பி கிளிக் செய்வதற்கு மாறியிருக்கிறான். ஓர் ஓடிபியை சிரித்துப் பேசி
வாங்கினால் போதும், உங்கள் பேங்க் பேலன்ஸ் ஜீரோ ஆகிவிடுகிறது.
அன்று
பிக்பாக்கெட்; இன்று ஆன்லைன் ஸ்கேம். பாட்டில் மாறியிருக்கிறது, ஆனால் உள்ளே இருக்கும்
விஷம் அதேதான்.
இந்த
உலகில் ஐகியூ வளர வளர, திருடர்களின் 'கோடிங்'கும் வளர்கிறது. அதைத் தொழில்நுட்பமே முயன்றாலும்
மாற்ற முடியாது.
*****
இந்தக் கோயிலில் வேண்டிக் கொண்டால்
வீடு கட்ட பணம் வந்துவிடும் என்பவரிடம் என்ன சொல்வது?
வீடு
கட்ட பணம் வந்து விடும், இஎம்ஐ கட்ட தெம்பும் வந்துவிடுமா?
*****

No comments:
Post a Comment