4 May 2026

கிளாட் மித்தோஸ் – வங்கிகளின் டிஜிட்டல் ஜுரம்!

கிளாட் மித்தோஸ் – வங்கிகளின் டிஜிட்டல் ஜுரம்!

உலகில் திருடர்கள் எப்போதும் அப்டேட்டடாகவே இருக்கிறார்கள்.

நாம் கையில் இருக்கும் சில்லறையை எண்ணுவதற்குள், அவர்கள் நம் வங்கிச் சேமிப்பை பிட் காயினாக மாற்றி விண்வெளிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

இப்போது அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் வில்லன் கிளாட் மித்தோஸ்.

அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் இதை உருவாக்கியது. ஆரம்பத்தில் மென்பொருளில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அடைக்க உதவும், என்றுதான் இதைப் பற்றிச் சொன்னார்கள்.

ஆனால், ஓட்டை எங்கே இருக்கிறது என்று தெரிந்தால், அதை அடைக்கிறவர்களை விட, அந்த ஓட்டை வழியாக உள்ளே புகுந்து கல்லாவைத் தேடுகிறவர்களுக்குத்தான் ஆர்வம் அதிகம் என்பது நம் ஊர் சைபர் விதிகளில் ஒன்று.

மனிதக் கண்களுக்குப் புலப்படாத, ஏன் 27 ஆண்டுகளாக ஒரு மென்பொருள் நிபுணருக்குக் கூடத் தெரியாத சிறிய பிழையைக் கூட இந்த மித்தோஸ் ஒற்றை நொடியில் மோப்பம் பிடித்துவிடுகிறதாம்.

இது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும், மறுபக்கம் வங்கிகளுக்கு திகில் கிளப்பியிருக்கிறது.

வீட்டுச் சாவி துவாரத்தில் ஒரு சின்ன விரிசல் இருந்தால் கூட, அதை ஒரு பெரிய வாசலாக மாற்றி உள்ளே நுழையும் வித்தை இந்த மித்தோஸ்க்குத் தெரியும்.

இது தேசவிரோதிகளின் கையில் கிடைத்தால்?

வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணம், நீங்கள் கண் இமைக்கும் நேரத்தில் மாயா பஜார் ஆகிவிடும்.

இந்த ஏ.ஐ பூதத்திடம் இருந்து தப்பிக்க, இப்போது வங்கிகள் தங்களின் பாதுகாப்புச் செலவுகளை வாரி இறைக்க முடிவு செய்துள்ளன.

புதிய சவால்கள் வந்துவிட்டன, எனவே ஐ.டி துறையில் முதலீட்டை அதிகரிக்கிறோம் என்று பொதுத்துறை வங்கிகளே அலறுகின்றன.

அதாவது, திருடன் அதிநவீன கார் வாங்கினால், நாமும் வேகமான ஜீப் வாங்க வேண்டும் என்ற எதார்த்தம்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்க தனியார் வங்கிகளும் தயாராகி விட்டன.

என்ன செய்யப்போகிறது அரசு?

இந்தியாவில் டிஜிட்டல் கைது, போலி க்யூ ஆர் கோடு என ஏற்கெனவே திருடர்கள் கிரியேட்டிவிட்டியில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த கிளாட் மித்தோஸ் அவர்களுக்குக் கிடைத்தால் அது குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டையாக மாறிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தொழில்நுட்பம் வளர வளர, நம் பணத்தைப் பாதுகாப்பதற்கான செலவும் வளர்ந்துகொண்டே போகிறது.

திருடனிடமிருந்து தப்பிக்க நாம் செலவு செய்யும் பணத்தை விட, வங்கியின் லாபம் குறைவாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

அது என்னவென்றால்,

உங்கள் ரகசியக் குறியீடுகளை யாரிடமும் பகிராதீர்கள். ஏனென்றால், மித்தோஸ் மென்பொருள் ஓட்டையைத் தேடும், ஆனால் மனிதர்கள் இன்னமும் அப்பாவித்தனமான மனிதர்களையே தேடுகிறார்கள்!

*****

No comments:

Post a Comment