சிலிண்டர் – இனிமேல் இது வெடிகுண்டு அல்ல, தங்கக் குண்டு!
மக்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்முடைய
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒருவழியாக உயர்த்திவிட்டன.
விலை ஏறுமா, ஏறாதா? என்று ஆவலுடன் காத்திருந்த நடுத்தர வர்க்கத்தின் வயிற்றெரிச்சலில்
நெய் ஊற்றும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் என்று இதைப் படிக்க இதயத்
துடிப்பு அதிகமாகலாம். இதய பாதிப்பு மற்றும் அதிர்ச்சியைத் தாங்கும் மனமில்லாதவர்கள்
படிக்காமல் இருப்பது பாதுகாப்பானதாகும். எதையும் தாங்கும் இதயம் படைத்தோர் தொடரலாம்.
19 கிலோ வணிக சிலிண்டரின் பழைய விலைக்கும்
புதிய விலைக்கும் இடையில் ஒரு பெரிய 993 ரூபாய் இடைவெளி. இப்போது இதன் விலை 3,071 ரூபாய்.
ஹோட்டலில் இனி தோசை கேட்டால், அவர்கள் உங்கள் சொத்துப் பத்திரத்தைக் கேட்க வாய்ப்புள்ளது.
5 கிலோ குட்டி சிலிண்டர் வெறும் 261 ரூபாய்தான்
உயர்ந்திருக்கிறது. அதாவது, இப்போது அதன் விலை 810 ரூபாய். ஏழைகளும் நடுத்தர மக்களும்
பட்டினி கிடப்பதைப் பழகிக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதா?
கடந்த மூன்று மாதங்களில் 81 சதவீத விலை உயர்வு
என்பது ஒரு சாதனைதான்! டீ கடைகள், ஹோட்டல்கள் எல்லாம் இனி மியூசியம் ஆக மாறினாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
இது வெறும் டிரெய்லர் தான், மெயின் பிக்சர்
இனிமேல் தான் என்பது போல, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் விரைவில் உயரும் என்று டெல்லி
வட்டாரங்கள் கண் சிமிட்டுகின்றன.
இப்போது பொதுத்துறை நிறுவனங்களுக்கு லிட்டருக்கு
20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால், விஷேஷம் பாருங்கள், இந்த
நஷ்டம் தேர்தலுக்கு முன்பு வரை ஏற்படவில்லையாம். இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, மக்களின் சட்டைப்
பையைத் துடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். பாவம்
அவர்கள்!
இனிமேல் விறகு அடுப்புக்கு மாறுவது கௌரவக்
குறைச்சல் என்று நினைக்காதீர்கள். அதுதான் ரெட்ரோ பேஷன். எரிவாயு விலையைப் பார்த்தால்,
சிலிண்டரை சமையல் செய்யப் பயன்படுத்துவதை விட, ஹாலில் ஷோகேஸில் வைத்து மாலை போட்டு
கும்பிடுவது லாபகரமாக இருக்கும்!
வாழ்க சிலிண்டர்! வளர்க அதன் விலை!!
நீங்களும் வாழ்த்துங்கள். எல்லாரும் வாழ்த்துவோம்.
வாழ்க சிலிண்டரின்றி வளமுடன்!
*****

No comments:
Post a Comment