3 May 2026

வெயிலும் மண்டை ஓடும் – ஒரு கோடைக்காலக் குறிப்பு!

வெயிலும் மண்டை ஓடும் – ஒரு கோடைக்காலக் குறிப்பு!

சூரியன் இப்போது ஒரு வேலையற்ற தாதாவைப் போலச் செயல்படுகிறது. கத்திரி வெயில் என்னும் அபிஷியல் சித்திரவதைக்கு முன்பே, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

கடந்த சனிக்கிழமை மட்டும் இந்தியாவின் நாற்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.

உத்தர பிரதேசத்தின் பாந்தா நகரில் 117.32 டிகிரி பாரன்ஹீட்டாம். அங்கு யாராவது ஆம்லெட் போட அடுப்பைப் பற்ற வைக்க வேண்டாம், முட்டையைச் சாலையில் உடைத்தாலே போதும்.

தில்லியில் 112 டிகிரி பாரன்ஹீட். இயல்பை விட 11 டிகிரி அதிகம். அதாவது, இயற்கை இப்போது ஒரு ஓவர் அச்சீவர்.

வடமாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்கிறது. தமிழகம், ஆந்திரா போன்ற கடற்கரை ஓரங்களில் வெயிலும் ஈரப்பதமும் சேர்ந்து நம்மை ஓர் உயிருள்ள இட்லி போல வேக வைக்கிறது.

4.5 டிகிரி முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடினால் அதை வெப்ப அலை என்கிறார்கள். எனக்குத் தெரிந்து இதை வெப்பச் சுனாமி என்றே அழைக்கலாம். அதுவே 6.4 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் அது தீவிர வெப்ப அலையாம்.

ஏற்கனவே ஒடிஸாவில் ஆழ்துளைக் கிணறு தோண்டிய தொழிலாளி, கணக்கெடுப்பு நடத்திய ஆசிரியர் எனச் சிலர் இந்த வெப்பச் சுனாமிக்கு தட் மீன்ஸ் வெப்ப அலைக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஊட்டியிலேயே 80 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அடிக்கிறது என்றால், சமவெளி மனிதர்களின் கதி?

உடல்நிலைக்கு இதனால், தக்காளி போல தோல் சிவந்து போவது, ஆபீஸ் வேலையினால் வருவதைத் தவிர்த்து தலைவலி மற்றும் மயக்கம், காதல் மேட்டர் இல்லாமல்   இதயத்துடிப்பு அதிகரித்தல், மிக முக்கியமாக, நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகம் ஸ்ட்ரைக் செய்வது போன்றவை ஏற்படுகின்றன.

இதிலிருந்து உயிர் பிழைக்கும் வித்தைகள்தான் இப்போது நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அந்த டாபிக்கைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்தால்,

மதியம் 11 முதல் 3 மணி வரை வெளியே தலை காட்டாதீர்கள் என்கிறார்கள். அத்தியாவசியத் தேவை இருந்தால் ஒழிய, சூரியனுடன் மல்யுத்தம் செய்ய வேண்டாம். முக்கியமாக டெலிவரி பாய்ஸ், துப்புரவுப் பணியாளர்கள் ஜாக்கிரதை.

கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்க வேண்டுமாம். அது சூரியனைச் செல்லமாக வா என்று அழைக்குமாம். மெல்லிய பருத்தி ஆடைகளே தேவலாம்.

தாகம் எடுக்கிறதோ இல்லையோ, தண்ணீரைக் குடிக்க வேண்டும். இளநீர், மோர், கம்பங்கூழ், எலுமிச்சை சாறு போன்றவைதான் இப்போது நம் மீட்பர்கள்.

இந்த வெப்ப அலை அதாகப்பட்டது வெப்பச் சுனாமியைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இதற்காக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரத் தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கே ஆக்சிஜனும் குளுக்கோஸும் தயார் நிலையில் இருக்கிறது.

இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக, அங்கே போவேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வெயிலில் அலையக் கூடாது. அங்கே போகாமல் இருப்பதே உத்தமம்.

அப்புறம் பேச வேண்டியதைப் பேச வேண்டுமே. அதென்ன என்கிறீர்களா?

மரங்களை வெட்டிவிட்டு கான்கிரீட் காடுகளை வளர்த்தோம். ஏ.சியைப் போட்டு வெளியே இருக்கும் காற்றைச் சூடாக்கினோம். இப்போது இயற்கை ரிட்டர்ன் கிப்ட் தருகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நாம் வெறென்ன செய்ய முடியும். குடை பிடியுங்கள், நீர் அருந்துங்கள், முடிந்தால் நிழலில் தவமிருங்கள். ஒரு புங்கையோ, வேப்ப மரமோ தெருவோரம் நட முடியுமா என்று பாருங்கள். நிழலில் தவமிருக்க மரம் வேண்டுமே!

*****

No comments:

Post a Comment