23 Aug 2026

பார்வைக் கோளாறின் வரலாறு!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 14

பார்வைக் கோளாறின் வரலாறு!

திருவாரூர் தொடர்வண்டி நிலையம்.

மாலை நேரத்துக்கே உரிய பயங்கர கூட்டம்.

அவன் தன் ஐபோன் திரையை வெறித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் கவனம் முழுவதும் முதல் நடைமேடையில் நின்றிருந்த அந்த ஊதார நிற சுடிதார் மேல்தான். பெயர் தெரியாது. ஆனால் தினமும் மாலை 5:15 காரைக்கால் – திருச்சி பயணியர் தொடர்வண்டிக்காக இருவரும் ஒரே நடைமேடையில்.

அவன் மெல்ல தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.

டக் என்று,

அவள்

சட்டென்று,

தன் பார்வையை கீழே திருப்பிக் கொண்டாள். தரையில் கிடந்த ஏதோ ஒரு வீட்டுமனை விற்பனைக்கான விளம்பரத் தாளை அத்தனை தீவிரமாகப் பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

"சரி, நாம் பார்ப்பதைதை அவள் கவனிக்கவில்லை." என்று நினைத்து அவன் மீண்டும் வாட்ஸ்அப்பில் செய்தியொன்றைத் தட்டச்சு செய்யத் தொடங்கினான்.

அடுத்த பத்தாவது வினாடி.

அவன் குனிந்து போனைப் பார்க்கத் தொடங்கிய அந்த கணத்தில், அவள் மெல்ல தலையை உயர்த்தினாள். அவனது முகத்தை, அவன் தலைமுடியை, அவனது அந்தச் சிறிய புன்னகையை தீர்க்கமாகப் பார்த்தாள்.

உதட்டின் ஓரத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு. "லூசு, உன்னைத்தான் பார்க்கிறேன்!" என்பது போன்ற ஒரு மெல்லிய நாணம் கலந்த புன்னகை.

அவன் திரும்பவும் நிமிர்ந்தான்.

அவள் மீண்டும் தரையைப் பார்த்தாள். இப்போது அந்த விளம்பரத் தாள் காற்றில் எங்கோ பறந்து போயிருந்தது. தரையில் அங்காங்கே மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களைத் தீவிரமாக ரசித்துப் பார்ப்பது போல ஒரு பார்வைக்கு மாறியிருந்தாள்.

அவன் குனிந்தான்.

அவள் அவனைப் பார்த்தாள்.

இரண்டு பேருக்குமே தெரியும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று. ஆனால், நேருக்கு நேர் கண்கள் சந்தித்துக் கொள்ளும்போது மட்டும் அந்தக் காதலின் நோக்கு வர்மம் தாக்குதலுக்கு உள்ளாகி தவிடுபொடியாகி விடுகிறது!

இது ஒரு காலத்தால் அழியாத தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் காதலின் செவ்வியல் விளையாட்டு. இச்செவ்வியல் விளையாட்டின் விதிகள் இன்று வரை மாறவில்லை என்பதுதான் இதன் பின்னுள்ள ரகசியம் மற்றும் அதிசயம்.

ஆம்!

"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்."                     (குறள், 1094)

திருவள்ளுவர் காலம் முதல் இந்த 2000 வருடங்களில் ஐபோன் வந்தது, ஆன்ட்ராய்டு போன் வந்தது, 5ஜி வந்தது, ஏஐ வந்தது. ஆனால், பெண்களின் இந்தச் செவ்வியல் அகத்துறை விளையாட்டு மட்டும் மாறவே இல்லை!

தொடர்வண்டி வந்தது. அவள் ஏறினாள். அவனும் பின்னாலேயே ஏறினான். கூட்ட நெரிசலில் அவள் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நிற்க, அவன் இரண்டு அடி தள்ளி நின்றான்.

அவன் தன் ஐபோனை கால்சராயின் பையில் போட்டான். இம்முறை அவன் அவளைப் பார்க்கவில்லை. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தான்.

அவள் இவனையே பார்த்துக்கொண்டு, அதே குறும்புச் சிரிப்போடு மெல்ல சிரித்துக் கொண்டிருந்தாள்.

"அப்படியே நீ என்னைப் பார்த்துக் கொண்டிரு. நீ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் மனக்கண்ணில் பார்த்துக் கொள்கிறேன். நீ பார்ப்பதை நான் நிஜக் கண்ணால் பார்த்தால்தான், பிறந்ததிலிருந்து இதுவரை நிலத்தையே பார்க்காது போல நிலத்தை நோக்கி உன் பார்வையைத் திருப்பிக் கொள்வாயே!" என்று நினைத்தபடியே அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment