30 Apr 2026

பெண்கள் - ஆட்ட நாயகிகள்!

பெண்கள் - ஆட்ட நாயகிகள்!

சமீபத்திய தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டது. வாக்குப்பதிவு 85 சதவீதம். 2011 இல் வெறும் 78 சதவீதத்தோடு போதும் என்று நிறுத்திக்கொண்டவர்கள், 15 வருடம் கழித்து இப்போது செஞ்சுரி அடிக்காத குறையாக ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

அதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், இளம் வாக்காளர்களின் எழுச்சி அதாவது முதல்முறை விரலில் மை வைக்கும் ஆர்வம் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

ஆனால், எல்லாவற்றையும் விட முக்கியமானது, பூத்களில் நின்ற பெண்களின் கூட்டம்.

வாக்காளர் பட்டியலில் 1000 ஆண்களுக்கு 1,044 பெண்கள் இருக்கிறார்கள். அதாவது, கவனிப்பாரற்றுப் போகும் ஆண்களை விட பெண்கள் தான் இங்கே அதிகம். இதுதான் பெண்களைத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றியிருக்கிறது. இதற்காகவே அரசியல் கட்சிகள் அவர்கள் பின்னால் அலைகின்றன.

இதில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கிறது. ஆண்கள் பொதுவாக, நான் இந்தக் கட்சிப் பரம்பரை என்று ஒரு லேபிளை ஒட்டிக்கொண்டு அலைவார்கள். ஆனால், பெண்கள் அப்படியல்ல. அவர்கள் ஒரு ப்ரீ ஏஜென்ட் போலச் செயல்படுகிறார்கள்.

முன்னெல்லாம் கிராமங்களில் யாருக்கு ஓட்டுப் போடணும்? என்று பெண்கள் தங்கள் கணவரிடமோ, அண்ணனிடமோ அனுமதி கேட்பதுண்டு. ஆனால் இப்போது அந்த சீனெல்லாம் பழைய படத்தோடு முடிந்துவிட்டது.

2014 இல் நடந்த ஒரு ஆய்விலேயே 70 சதவீதப் பெண்கள், நான் யாரையும் கேட்டு ஓட்டுப் போடுவதில்லை, என்று சொல்லிவிட்டார்கள்.

இந்தச் சட்டசபைத் தமிழகத் தேர்தலில், தகுதி பெற்ற 2.93 கோடி பெண் வாக்காளர்களில் 2.51 கோடி பேர், அதாவது 85 சதவீதம் ஆஜராகிவிட்டார்கள்.

பாவம் ஆண்கள், 2.80 கோடியில் 2.34 கோடி பேர்தான் அதாவது 83 சதவீதம்தான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்கள் வேகமாக முடிவெடுக்கிறார்கள், வரிசையில் நின்று நேரத்தையும் வீணடிப்பதில்லை.

1962இல் வெறும் 48 சதவீதப் பெண்கள் தான் வீட்டை விட்டு வெளியே வந்து ஓட்டுப் போட்டார்கள். ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் 65.72 சதவீத பெண்கள் ஓட்டுப் போட்டு, ஆண்களை அதாவது 65.55 சதவீதத்தை ஓவர்டேக் செய்துவிட்டார்கள்.

50 ஆண்டுகளில் ஆண்களின் ஆர்வம் 7 சதவீதம்தான் கூடியிருக்கிறது, பெண்களுக்கோ 27 சதவீதம் எகிறியிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கும் இது புரிந்துவிட்டது. அதனால்தான் இப்போது வரும் தேர்தல் அறிக்கைகளில், அக்காக்களுக்கு இது, தங்கச்சிகளுக்கு அது, எனப் பெண்களைக் கவரும் திட்டங்கள் மழையாகப் பொழிகின்றன.

இனி வரும் காலங்களில் பெண்கள் ஒரு தனித்த வாக்கு வங்கி. அவர்கள் எதை எதிர்பார்த்து ஓட்டுப் போடுகிறார்கள் என்பது ஆண்களின் நோக்கத்திலிருந்து மாறுபடுகிறது. அதனால்தான் கேஸ் சிலிண்டர், மகளிர் உதவித்தொகை எனப் பெண்களைக் குறிவைத்த ஸ்கீம்கள் தேர்தல் அறிக்கைகளில் வரிசையாக வருகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும், எவ்வளவு வித்தியாசத்தில் தோற்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் மாஸ்டர் கீ இப்போது பெண்களிடம் இருக்கிறது. ஆண்கள் சும்மா கூட்டத்தில் கோஷம் போட மட்டுமே மிச்சமிருக்கிறார்கள்!

*****

No comments:

Post a Comment