கட்டம் கட்டப்படுகிறதா தவெக?
இந்தக்
கேள்விக்குச் சுற்றி வளைத்தெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நேரடியாகவே, ஆம்
என்று சொல்லி விடலாம்.
இந்தக்
கட்டம் என்பது ஜாதக கட்டம் போன்றதல்ல, ஆனால் சதுரங்கக் கட்டங்களைப் போன்றது. சுற்றி
வளைத்து விட்டால் ராஜாவின் கதி அதோ கதிதான்.
தன்னைச்
சுற்றி வளைத்து விடாமல் வியூகத்தை வகுத்துக் கொள்ள வேண்டியது விஜய்யிடம்தான் இருக்கிறது,
விஜய்யிடம் மட்டும்தான் இருக்கிறது. ஏனென்றால் அந்தக் கட்சிக்கு இருக்கும் ஒரே முகம்
அவர்தான். அவர் இல்லையென்றால் அந்தக் கட்சியில்லை. அதனால் விஜய்யின் தற்போதைய நிலை
என்பது சதுரங்க விளையாட்டின் ராஜாவோடு மிகச் சரியாக ஒன்றிப் போகும்.
அத்துடன்
இது ஒரு பைனரி விளையாட்டு போன்றும் உள்ளது. பைனரியில் பூஜ்ஜியமும் ஒன்றும் மட்டும்
உள்ளது. இந்த விளையாட்டில் அவருக்கு இரண்டு சாய்ஸ்தான். ஒன்று பூஜ்ஜியம், மற்றொன்று
அந்த ஒன்றுதான். பூஜ்ஜியம் என்றால் காலி, ஒன்று என்றால் தப்பித்தார் என்று பொருள்.
அரசியலில்
என்ட்ரி கொடுக்கும் போதே, அது யாராக இருந்தாலும் இந்தக் கட்டம் கட்டுதல் ஆரம்பமாகி
விடும். விஜய்க்கு அது சற்று தாமதமாகத்தான் ஆரம்பமாகி இருக்கிறது. அதுவும் கரூர் சம்பவம்
நடந்த பல வாரங்களுக்குப் பின்பு.
ஏதோ
ஒரு பக்கம் பிடி கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் பாஜகவும், அதிமுகவும் கட்டம்
கட்டுவதைத் தொடங்காமலே இருந்தன. இப்போது விஜய் தனித்து போட்டியிடப் போகிறார் என்பது
தெரிந்ததும் அதிமுக முகாமிலிருந்து கட்டங்கள் பட்டங்களைப் போல பறந்து வரத் தொடங்கி
விட்டன. பாஜகவும் பின்னணியில் இப்போது இணைந்து கொண்டு விட்டது. ‘தற்குறி’ என்ற சொற்பிரயோகத்துடன்
பிள்ளையார் சுழி போட்டு வைத்துள்ள திமுகவும் விரைவில் கட்டம் கட்டுவதைத் தீவிரமாகத்
தொடங்கும்.
கட்சி
தொடங்கி இதுவரை காட்டமான விமர்சனங்களை எதிர்கொள்ளாத விஜய் முதன் முறையாக, ப்ளாக்கில்
டிக்கெட்டை விற்று படம் காட்டுவது ஊழல் இல்லையா என்ற அதிமுகவின் ஏவுகணை தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறார்.
இது தொடக்கம்தான். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலவிதமாக வார்த்தைகளால் கட்டம்
கட்டப்படுவார் விஜய். இதைத் தவிர சிபிஐ கட்டிக் கொண்டிருக்கும் கட்டங்களும் இருக்கின்றன.
தேர்தல்
முடிவுகளுக்குப் பின் விஜய்யின் கட்டத்துக்குள் நிகழப் போவது சனிப்பெயர்ச்சியா, குரு
பெயர்ச்சியா என்பதும் போகப் போகத்தான் புரியும்.
இக்கட்டங்களை
கியூஆர் கோட் கட்டங்களாக மாற்றி எதிர்கொள்வதும், செக்கில் மாட்டிக் கொள்ளும் சதுரங்கத்தின்
கட்டங்களாக எதிர்கொள்வதும் விஜய்யின் சாதுர்யத்தில்தான் இருக்கிறது.
சாதுர்யம்
இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது என்பதால், கட்டங்களை எல்லாம் விஜய் சாதுர்யத்தால்
எப்படிச் சாதிக்கப் போகிறார் என்பதை விசிலடித்துப் பார்க்க மொத்த தமிழ்நாடே தயார்.
ஸோ, டிரெய்லர் முடிந்து விட்டது. ரீல் இல்லாத விஜய்யின் ரியலான புல் மூவிக்கு ரெடியாகலாம்.
*****

No comments:
Post a Comment