28 Jan 2026

வேகமெடுக்கும் மஞ்சள் காய்ச்சல்! – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

வேகமெடுக்கும் மஞ்சள் காய்ச்சல்! – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

ஒரு சவரன் லட்சம் ரூபாய் என்றால்…

 உண்மையில் விலை அதை விட இன்னும் இருபதாயிரம் அதிகம், செய்கூலி, சேதாரம் பார்த்தால் அரை லட்சம் அதிகம். ஒன்றரை லட்சம் இல்லாமல் ஒரு சவரன் சாத்தியமில்லை.

நிலைமை இப்படியே போனால், சாதாரண மனிதர்கள் கல்யாணம் என்றால் ஒன்று வீட்டை விற்க வேண்டும், அது இல்லாதவர்கள் கிட்னியைத்தான் விற்க வேண்டும்.

தங்கத்தை இப்படி விலையேற்றி வைத்ததில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர் பண்ணும் அலப்பரைகள் சூனா பானா வடிவேலு ரகம்தான் என்றாலும், நாட்டில் உள்ள சாமன்யர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் எடுக்க காரணமே அவர்தான்.

சரிதான் போ, என்று தங்கத்தை விட்டு விட்டு வெள்ளியின் பக்கம் தலை வைக்கலாம் என்றால் அதன் விலையும் தலையை வெடிக்கச் செய்து விடும் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது.

வெள்ளி போகிற போக்கைப் பார்த்தால் பிளாட்டினம், வைரமெல்லாம் விரைவில் காலியாகி அந்த இடத்தில் வெள்ளி இருக்கும் போலிருக்கிறது.

இந்த மஞ்சள் காய்ச்சலுக்கு என்னதான் தீர்வு?

தீர்வு வேண்டும் என்பதற்காக பெட்ரமாஸ் லைட்டேதான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல், பித்தளையும் மஞ்சளாக இருப்பதால் பித்தளை நகைகளுக்கு மாறி விட முடியுமா?

இரும்பில் நகைகள் செய்து அவற்றுக்கு மஞ்சள் நிறத்தைத்தான் அடித்துக் கொள்ள முடியுமா?

தேவைப்படும் போது மட்டும் தங்க நகைகளை வாடகைக்கு எடுத்துதான் அணிந்து கொள்ள முடியுமா?

இருபத்து இரண்டோ, இருபத்து நான்கோ அந்தக் கேரட்டை விலை கொடுத்து வாங்க முடியாமல், 22 காரட் அல்லது 24 காரட்டை காய்கறிக் கடையிலிருந்து வாங்கிதான் வைத்துக் கொள்ள முடியுமா?

கடவுள் இருக்கான் குமாரு என்று கவரிங் நகையே போதும் என்று இருந்து விட முடியுமா?

இலக்கியங்கள் சொல்கின்றன என்பதற்காக அறிவுதான் செல்வம், தங்கமல்ல என்று ஒரு பிடிப்போடு வாழ்ந்து விட முடியுமா?

நாம் எதார்த்தத்தைப் பார்க்க வேண்டும்.

தங்கம் விலையேறுவது என்பது தங்கத்தை வாங்க முடியாத பிரச்சனையை மட்டும் உருவாக்காது. வாங்கி வைத்திருக்கும் தங்கத்தைப் பாதுகாப்பதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒரு பவுன் தங்க நகையை அணிந்து கொண்டு பாதுகாப்பாக வீடு திரும்பினால்தான் நீங்கள் சுதந்திர இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்ற நிலை ஏற்படாது என்று சொல்லி விட முடியாது.

இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் எல்லாவற்றின் விலைவாசியையும் ஏற்றும் வகையில் பணவீக்கத்தை வீங்க வைத்து ரூபாய் மதிப்பை பலவீனப்படுத்த வேண்டியிருக்கும்.

அப்படிச் செய்தால் நூறு ரூபாய் நோட்டு பத்து ரூபாய் நோட்டுக்குச் சமானமாக வந்து விடும். ஐநூறு ரூபாய் நோட்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்குச் சமானமாக வந்து விடும். நிலைமை இப்போதே இப்படித்தான் இருக்கிறது என்றால், நூறு ரூபாய் நோட்டை ஒரு ரூபாய்க்கும், ஐநூறு ரூபாய் நோட்டை ஐந்து ரூபாய்க்கும் மாற்றிக் கொள்ளுங்கள்.

ஆக, நிலைமை இப்படியோ போனால் நீங்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம். ஆனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை கோடியைத் தொட்டிருக்கும்.

இந்த மஞ்சள் காய்ச்சலுக்குத் தடுப்பூசி இல்லையா என்றால்… நிச்சயம் இல்லை. அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. இதென்ன கொரோனாவா? தடுப்பூசியெல்லாம் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்த என்று நீங்கள் கேட்டால் யூ ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட். உங்களுக்கு மஞ்சள் காய்ச்சல் அடிக்க வாய்ப்பில்லை.

*****

No comments:

Post a Comment