26 Aug 2026

பிரியமான எதிரிகளும் கனிவான கடுஞ்சொற்களும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 17

பிரியமான எதிரிகளும் கனிவான கடுஞ்சொற்களும்!

திருவாரூர் விஜயபுரம்.

வி.ஆர்.எம் சாலை.

வாசன் கபே.

வடமேற்கு மூலை மேஜையில் அவனும் அவளும்.

மாலை மணி ஐந்தரை இருக்கும்.

கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே மழைத் துளிகள் கோடு கோடாய் இறங்கிக் கொண்டிருந்தன.

இரண்டு காபி டம்ப்ளர்.

நடுவே லேசாக எழுந்த ஆவி.

அவள் தன் கையால் காபி டம்ப்ளரை இப்படியும் அப்படியுமாகச் சுழற்றிக் கொண்டிருந்தாள்.

"எனக்கு திருச்சி ஆபீஸ்க்கு டிரான்ஸ்பர் கன்பர்ம் ஆயிடுச்சு. அடுத்த வாரம் கிளம்பறேன்."

சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள். குரலில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை. செய்தி வாசிப்பாளர் போல ஒரு நிதானம்.

அவன் காபி டம்ப்ளரை உதட்டுக்குக் கொண்டு போனான். கை லேசாக அதிர்ந்தது. அதை மறைக்க, டம்ப்ளரை மேஜை மீது சற்று அழுத்தமாக வைத்தான்.

டங்க் என்ற சத்தம்.

"கிரேட். ஆல் தி பெஸ்ட்," என்றான். குரலில் லேசான நக்கல். உதட்டின் ஓரத்தில் ஒரு செயற்கையான கேலிச் சிரிப்பு.

"தேங்க்ஸ்."

"அங்க போய் ரொம்ப பிஸியாகிடுவ. அப்புறம் வாரத்துல நாலு நாள் திருச்சி, திருவண்ணாமலைன்னு அலைஞ்சிட்டு இருப்ப. அப்புறம் நம்மளையெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகுது? அவனா ஆமா, திருவாரூர்ல ஒருத்தன் இருந்தானேன்னு யோசிப்ப, அவ்வளவுதானே?"

சொற்களை ஒவ்வொன்றாக வெட்டிப் பேசினான். அவனுடைய கண்கள் அவளைப் பார்க்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே பளபளத்த தார்ச்சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் ஓர் அந்நியத்தன்மை. ஒரு பொய்யான கோபம்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "நீ என்மேல கோபமா இருக்கியா?"

"எனக்கென்ன கோபம்? சந்தோஷம்தான்!" என்றான் தோள்களை உயர்த்தியபடி.

அவனே தொடர்ந்தான், "நாம ரெண்டு பேரும் தொழில்முறை நண்பர்கள். அவ்வளவுதானே? நீ உன்னோட பதவி உயர்வைப் பார்க்குறே. நான் என்னோடதப் பார்க்குறேன். இதுல கோபப்பட என்ன இருக்கு? நீ ஒன்னும் எனக்குக் கடமைப்பட்டவள் இல்லையே."

"நீ எனக்கு யாருமே இல்லைங்றது ஓர் உலக மகா நடிப்பு. ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றே இல்ல." மனதுக்குள் நினைத்தபடி அவள் மெல்லச் சிரித்தாள்.

அவனுக்கு அது எரிச்சலூட்டியது. "ஏன் சிரிக்கிற?"

"இல்லை, 2000 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் உன்னைப் பத்தி அவ்வளவு கச்சிதமா பக்காவா எழுதிட்டுப் போயிருக்காரு."

"என்னைப் பத்தியா? ரெண்டாயிரம் வருஷதுக்கு முன்னாடி எப்படி என்னைப் பத்தி? யாரு அது?"

"வேற யாரு? திருவள்ளுவர்தான்!"

"திருவள்ளுவரா? திடீர்னு தமிழ்ப் பாடம் எடுக்கப் போறியா?"

"ம்! அவர் ஒரு குறள் எழுதியிருக்கார்,

"செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு."         (குறள், 1097)

இதோட அர்த்தம் என்ன தெரியுமா?" அவள் தன் கையை மேஜை மீது நீட்டி, அவன் கைக்கு அருகில் கொண்டு சென்றாள்.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் புருவத்தை உயர்த்தினான்.

"உண்மையிலேயே நம்ம மேல அதிக அன்பும் பிரியமும் இருக்கறவங்கதான், அதை வெளியே காட்டிக்கிட்டா அழுதுடுவோம்னு பயந்து, லேசான கடுஞ்சொற்களைப் பேசுவாங்களாம். எதிரி மாதிரி ஒரு பொய்யான, கொடூரமான பார்வையைப் பார்ப்பாங்களாம். ஏதோ சம்பந்தமே இல்லாத அந்நியன் போல நீ யாருன்னே தெரியாதுங்கிற மாதிரி பாவனை பண்ணுவாங்களாம். ஆனா, அந்தப் பொய்யான கோபத்துக்கும், அந்த அந்நியப் பார்வைக்கும் பின்னாடி இருக்கிறது, ஒரே ஒரு விஷயம்தான். உன்னை விட்டு பிரிய முடியலையேங்கிற பயமும் பிரியமும் மட்டும்தான்."

அவன் அசைவற்று உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்தப் பொய் ஆக்ரோஷம், கேலிச் சிரிப்பு, அந்நியப் பார்வை எல்லாம் ஒரு நொடியில் பஞ்சரான வண்டிச் சக்கரம் போல ஆயின.

அவன் தன் கையைத் திருப்பி அவளுடைய விரல்களை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான். அவனுடைய விரல் நுனிகளில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

"நீ திருச்சி போனப்புறம், வீக்கெண்ட்ல நான் பைக் எடுத்துட்டு வந்தா காபி வாங்கித் தருவியா?" என்றான். அவனுடைய குரல் இப்போது மிகவும் தாழ்ந்து, மிருதுவாகியிருந்தது.

அவள் சிரித்தாள். "காபி மட்டும் இல்லை, திருவள்ளுவர் குறளுக்கு விளக்கமும் தருவேன்."

"அதையெல்லாம் நான் விகடபாரதின்னு ஒருத்தன் ப்ளாக்ஸ்பாட்டுல எழுதுறான். அதுலேயே நான் படிச்சுக்கிறேன். எனக்கு நீயும் காபியும் மட்டும் போதும்." அவன் சிறுபிள்ளையைப் போலக் குழறினான்.

கபே ஜன்னலில் மழைத் துளிகள் மெல்ல வழிந்தன. அவர்களுக்கு இடையே உருவாகியிருந்த சிறிய இடைவெளியில், இப்போது இருவருக்குமான தூரம் சுத்தமாகக் குறைந்திருந்தது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment