13 Feb 2026

மைன்ட் – பாய்ன்ட் டூ பாய்ன்ட்

மைன்ட் – பாய்ன்ட் டூ பாய்ன்ட்

முதலில் கவனியுங்கள். பிறகு உள்வாங்குங்கள். அப்புறம் பேசுங்கள். இது ஒரு சிம்பிள் தத்துவம்தான். நில், கவனி, செல் என்று சாலை பாதுகாப்புக்குப் பயன்படும் அதே தத்துவம்தான். வாழ்க்கைப் பாதுகாப்புக்கு ரொம்பவே பயன்படும்.

ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய சிக்கலே அந்த அவசரக் குடுக்கைத் தனம்தான். மனசு அலைபாய்கிறது. அநாவசியமாகக் கவனத்தைச் சிதறவிடக் கூடாது. செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள். ஆனால், தோல்விக்கான காரணத்தை நீங்களே கண்டுபிடியுங்கள். அது சுவாரசியமான குறுக்கெழுத்துப் புதிர். புதிரைக் கண்டடைந்து அதை வெற்றியாக மாற்றுவதுதான் கெத்து.

மனசை ரிலாக்ஸ் பண்ணுங்கள். ஏனோ எதிர்மறை எண்ணங்கள். ஏதோ ஒரு பின்னடைவு போல ஒரு சோர்வு. சுற்றியிருக்கும் சூழலும் ஒரு காரணம். இதை விலக்க நினைக்காதீர்கள், ஆனால் கண்டு கொள்ளாதீர்கள்.

மற்றவர்களைப் புரிந்து கொள்ள நினைத்து அடிபடும் தகர டப்பாவாகி விடாதீர்கள். நெளிந்து போய் விடுவீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவர்களைப் புரிந்து கொள்ள நாம் திணறுவது போல, நம்மைப் புரிந்து கொள்ள அவர்களும் திணறுவார்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள ரகசியம். பொறுமை அவசியம்.

எதற்கெடுத்தாலும் மனசைப் போட்டு ரொம்பக் கட்டுப்படுத்தாதீர்கள். ஓவர் அழுத்தம் கொடுத்தால் ஒரு நாள் வெடிக்கும். இப்படித்தான் என்று எதற்கும் முன்கூட்டியே முடிவெடுக்காதீர்கள். எல்லாவற்றையும் தீர்க்கமாகக் கணிக்க நாம் அவ்வளவு பெரிய தீர்க்கதரிசியா என்ன? ஒரு நெகிழ்வுத்தன்மை வேண்டும். வெகு காலம் நாம் எதையோ போட்டு அழுத்திக் கொண்டு நிம்மதியைத் தொலைத்து விட்டோம். இனி இருப்பதைத் தொலைக்காமல் இருப்போம். நிம்மதி இருந்தால் மதி இருக்கும். மதி இருந்தால் எல்லாம் இருக்கும்.

பக்கம்பக்கமாகப் பேசினால் கேட்பதற்கு யாருக்குப் பொறுமை இருக்கிறது? சின்னச் சின்னப் பேச்சுகள் போதும். அதிகமாகப் பேசுவதற்குப் பத்து வரிகூட அதிகம். விஷயம் முக்கியம். அதிகபடியாகப் பேசுவதில் எதுவும் இல்லை.

எத்தனை பேரை உங்கள் பேச்சு வசீகரிக்கிறது என்பதுதான் மேட்டர். சிறப்பாகப் பேச இரண்டு ஐடியாக்கள் உண்டு. ஒன்று, உங்களைப் பற்றிப் பேசாமல் யாரிடம் பேசுகிறீர்களோ, அவர்களைப் பற்றிப் பேசுங்கள். இரண்டு, பேச்சின் இடையே அவருக்கு நான்கு பாராட்டைப் போடுங்கள். பிறகு பாருங்கள், அவர் பொரைக்கு ஏங்கும் நாயாகி விடுவார்.

எப்போதும் பேசும் போது சீரியசான மேட்டர் வேண்டாம். ஒவ்வொரு மனிதரும் இயல்பிலேயே சீரியசாக இருக்கிறார்கள். ஏற்கனவே அழுந்திக் கிடக்கும் மனிதனை இன்னும் அழுத்தி விடக் கூடாது. காமெடி ரொம்பவே உசிதம். அது கைவராவிட்டாலும் பரவாயில்லை, பழையசோறும் நன்றாகவே இருக்கும். அதென்ன பழையசோறு என்றால், அவரைப் பற்றி மட்டுமே பேசுவது, பேச்சினிடையே அவரைப் புகழ்வது, முன்பே சொன்னேன் இல்லையா, அதுதான்.

அப்புறம், வாழ்க்கையில் எது போதும் தெரியுமா?

பல வேலைகளில் தலையைப் போட்டால், சீக்கிரம் தலை மண்டையைப் போட்டு விடும். ஆகவே ஒரு வேலை, ஒரு தலை. நம் தலயையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று நடிப்பில் இருப்பார், இல்லையென்றால் கார் ரேஸில் இருப்பார். இரண்டிலும் இருக்க மாட்டார். எனவே தல நிம்மதியாக இருக்கிறார். நாம் தலயா, தளபதியா என்ற குழப்பத்தில் நிம்மதியைத் தொலைத்து விடுகிறோம்.

எப்போதும் மன அமைதிதான் டாப் பிரையாரிட்டி. அதற்கு எதிலும் அதிகம் வேண்டாம், அளவே போதும் என்பது முக்கியம். அளவுக்குக் குறைவாகச் செய்தாலும் அது தரமாக இருக்கும். உங்களுக்கு எப்படி வருகிறதோ அப்படியே செல்லுங்கள். ஒத்து வராத வழிகள் வேண்டாம். குறிப்பாகக் காப்பி – பேஸ்ட் வழிகள் சுத்தமாக வேண்டாம்.

அப்படி இதுதான் என் ரூட் என்று முடிவெடுத்து விட்டால், உங்கள் ரூட் கிளியர் ஆகி விடும். ரூட் கிளியர் ஆனால் உங்கள் மனதில் ஏன் டிராபிக் ஜாம் ஆகப் போகிறது. நீங்கள் ஒரு சுதந்திரமான சந்தோசமான மனிதர். அதற்காகத்தானே ஏங்கினீர்கள். அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

*****

No comments:

Post a Comment