31 Jan 2018

இப்படித்தான் நல்ல பேர் எடுக்கிறான் எஸ்.கே.!

இப்படித்தான் நல்ல பேர் எடுக்கிறான் எஸ்.கே.!
            ஒவ்வொருவருக்கும் ஒரு மொழிநடை. அவர்களுக்கென ஒரு மொழிநடை தேவைப்படுகிறது. எஸ்.கே.வுக்கென ஒரு மொழிநடை இருக்கிறது. பல நேரங்களில் இரண்டும் ஒத்துப் போவதில்லை.
            அதற்காக எஸ்.கே. என்ன செய்வான்? ஏதோ இந்த மொழி நடையாவது வாய்த்திருக்கிறதே என்று அவன் மகிழ்ச்சி கொள்வதே நல்லது.
            எஸ்.கே.யின் வாழ்வைப் பொருத்த வரையில் அவனது வாழ்க்கையே ஒரு விளையாட்டு. அதை அவன் விளையாட்டாகச் செய்யலாமே தவிர, சீரியஸாக எதைச் செய்வது?
            எஸ்.கே.யைச் சுற்றி இருப்பவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் நினைப்பதுதான் அவர்களுக்கு ஏற்றது. அதில் அநாவசியமாகப் புகுந்து தன் கருத்துகளைத் தெரிவித்து எஸ்.கே. அசிங்கப்படத் தேவையில்லை.
            ஒவ்வொருவரும் தாங்கள் நினைப்பதே சரி என நினைத்துக் கொள்ளும் போது அவர்களிடம் போய் எஸ்.கே. தன் கருத்தைச் சரியென்று எப்படி நிறுவ முடியும்?
            யாருடைய மனநிலையும் நிலையாக இருப்பதில்லை. மனநிலைகள் எப்போது எப்படி மாறும் என்று புரியாத அபாயத்திற்குட்பட்டவை.
            முன்னர் நினைத்ததைப் பின்னர் நினைத்துப் பார்க்கும் போது தவறு என்று சொல்வதற்கு வெளியில் இருந்து ஒருவர் தேவையா என்ன? அவரவர்களின் மனநிலையே அதற்குப் போதுமானது.
            அவரவர்களைப் புகழ்ந்து பேசுவதுதான் எஸ்.கே. தப்பிப்பதற்கான வழி. யாரும் அவனிடம் ஆலோசனைகளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்களைக் குறித்த புகழ்ச்சி மொழிகளைத்தான்.
            பொதுவாகத் தான் பேசுவது சரியென்று எஸ்.கே. நினைத்துக் கொண்டு இருக்கலாம். எஸ்.கே. பேசுவது சரியா? தவறா? என்பது எதிரில் இருப்பவரின் மனநிலையைப் பொருத்தது. எஸ்.கே. வாழும் சூழல் அப்படித்தான் இருக்கிறது. சரியான சூழ்நிலைகளில் சொல்லும் சரியான வார்த்தைகளும் தப்பாவது இப்படித்தான்.
            இவர்களிடம் பேசி மாள முடியாது என்பதால்தான் இப்போதெல்லாம் பேசாமல் இருந்தே நல்ல பெயரை எடுத்துக் கொள்கிறான் எஸ்.கே.!

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...