27 Apr 2026

குண்டர்களும் நரகக் குழிகளும் – ஒரு ட்ரம்ப் புராணம்!

குண்டர்களும் நரகக் குழிகளும் – ஒரு ட்ரம்ப் புராணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு விசித்திரமான மனிதர். அவரது கைபேசியும், அதில் அவர் பகிரும் பதிவுகளும் வானிலை அறிக்கையை விடவும் கணிக்க முடியாதவை.

அமெரிக்காவில் மைக்கேல் சேவேஜ் என்றொரு வானொலி வர்ணனையாளர் இருக்கிறார். இவர் சத்தமாகப் பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்.

அவர் இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி சில அழகிய கருத்துகளை உதிர்த்திருந்தார். அதை ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார்.

சேவேஜின் கவிதை வரிகள் சில,

இந்தியாவும் சீனாவும் வெறும் நாடுகள் அல்ல, அவை நரகக் குழிகள்.

அந்த நரகக் குழிகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகிறவர்கள், சரியாக ஒன்பதாவது மாதத்தில் அங்கு இறங்கி, குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையை பார்சல் வாங்குகிறார்கள்.

பிறகு, மொத்தக் குடும்பத்தையும் நரகக் குழிகளிலிருந்து அமெரிக்காவுக்கு இழுத்துக் கொள்கிறார்கள்.

சேவேஜின் பார்வையில், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் வெறும் மென்பொருள் வல்லுநர்கள் அல்ல, அவர்கள் கைகளில் லேப்டாப் வைத்திருக்கும் குண்டர்கள்.

அவர்கள் ஒரு மாஃபியா போலச் செயல்பட்டு, அமெரிக்க வளங்களைச் சுரண்டி, அமெரிக்கர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்துகிறார்களாம்.

ஒரு லேப்டாப்பை வைத்துக் கொண்டு எப்படி ஒரு நாட்டைச் சுரண்ட முடியும் என்ற தொழில்நுட்ப ரகசியத்தை அவர் சொல்லவில்லை.

வழக்கம்போல, இந்தப் பதிவைப் பகிர்ந்துவிட்டு உலகம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய பிறகு, ட்ரம்ப் மெதுவாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

இந்தியா ஒரு சிறந்த நாடு, எனது நல்ல நண்பராகிய மோடியால் ஆளப்படும் நாடு என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக ஒரு ஐஸ் வைத்தார்.

அரசியலில் ஒருவரை நரகக் குழி என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே சிறந்த நண்பர் என்று அழைப்பதில் இருக்கும் கலை நயம் வியக்கத்தக்கது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரணதீர் ஜெய்ஸ்வாலிடம் கேட்டபோது, அவர் மிகவும் நிதானமாகப் பதிலளித்தார்.

அந்தத் தகவல்கள் தவறானவை, தரமற்ற சிந்தனை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

அதாவது, யாரோ எதையோ உளறுகிறார்கள், அதற்கு நாங்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? என்கிற ரீதியில் அந்தப் பதில் இருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கக் குடியுரிமைச் சட்டத்திற்கும், ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்திற்கும் இடையில் இந்தியா ஒரு கால்பந்தாக மாறி இருக்கிறது.

நரகக் குழியில் இருந்து கொண்டு லேப்டாப் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியக் குண்டர்களுக்கு இது ஒன்றும் புதிய செய்தியல்ல.

டிரம்ப் இருக்கும் வரை இது போன்ற செய்திகள் தொடர்கதையாக அல்லது கதைகளாகத்தான் இருக்கும்.

நாம் கதை அல்லது கதைகளைக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். டிரம்ப் ஒரு நல்ல கதை சொல்லி.

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்… என்று தொடங்கும் கதைகளில், இவை ஒரு ராஜாவே சொல்லும் கதைகள்.

*****

No comments:

Post a Comment