28 Apr 2026

ரத்தமும் லூடோவும் - ஒரு நவீனக் கொலைக் குறிப்பு!

ரத்தமும் லூடோவும் - ஒரு நவீனக் கொலைக் குறிப்பு!

டெல்லி என்பது காற்றால் மட்டுமே ஆனதல்ல, அது தற்செயல்களின் குப்பையும்கூட. அங்குள்ள கைலாஷ் ஹில்ஸில் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி வசிக்கிறார். அவருக்கு ஒரு மகள் இருந்தார்.

அந்த மகள் ஐஐடியில் படித்துவிட்டு, தேசத்தின் மிக உயரிய அதிகாரிகளாகப் போகிறவர்கள் எழுதும் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அதே தேசத்தின் அடிமட்டத்தில் ராகுல் மீனா என்ற 19 வயது இளைஞன் லூடோ விளையாடிக்கொண்டிருந்தான்.

ராகுல் மீனா ஒரு பல்துறை வித்தகன். பொய் சொல்லுதல், ஆன்லைன் சூதாட்டம், போலிச் சாவிகள் தயாரித்தல் என அவனிடம் பல திறமைகள் இருந்தன. ஒரு சிபாரிசின் பேரில் அந்த அதிகாரியின் வீட்டிலேயே வேலைக்கும் சேர்ந்தான்.

ஆனால், அவனது ஆன்லைன் லூடோ விளையாட்டு மோகம் அவனைத் துரத்தியது. அதற்கு வேண்டிய பணத்திற்காக அங்கங்கே கை வைத்தான். அதிகாரி அவனை வேலையை விட்டுத் துரத்தினார்.

அன்று இரவு ஒரு மணி இருக்கும். ராகுல் ராஜஸ்தானின் ஒரு மலைப்பகுதியில் பதுங்கியிருந்தான். அதற்கு சற்று முன்புதான் தன் நண்பனின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, ஒரு செல்போன் சார்ஜரைப் பிடுங்கிக்கொண்டு தப்பியிருந்தான். அவனுக்குத் தர்மசங்கடங்கள் குறைவு.

அதிகாலை ஐந்து மணி அளவில் ஒரு சைக்கிள், ஒரு வாடகை வண்டி மற்றும் சில ஏமாற்றங்களுக்குப் பிறகு டெல்லி கைலாஷ் ஹில்ஸ் வந்தடைந்தான்.

அந்த அதிகாரியும் அவர் மனைவியும் உடல் ஆரோக்கியம் தேடி ஜிம்முக்குச் சென்றனர். ராகுல் தன்னிடம் இருந்த போலிச் சாவியால் அந்த அதிகாரி வீட்டின் கதவைத் திறந்தான். இப்போது ஆரோக்கியம் வீட்டிற்குள் நுழையவில்லை, ராகுல் நுழைந்தான்.

மாடியில் படித்துக்கொண்டிருந்த அந்த அதிகாரியின் பெண்ணிடம் ராகுல் கேட்டது பணம். அவள் சொன்னது வெளியே போ.

விவாதம் நீடிக்கவில்லை. தான் திருடி வந்திருந்த அதே செல்போன் சார்ஜர் ஒயரால் அவளது கழுத்தை நெரித்தான். டேபிள் லேம்ப்பால் தாக்கினான். ரத்தம் தரையில் படர்ந்தது. அந்தப் பெண் மயங்கினாள்.

உயிரியல் விதிகளின்படி ஒரு பொருள் மயக்கமடைந்தால் எதிர்ப்பைக் கைவிடும். ராகுல் அந்த ரத்தக் கறைகளுக்கு நடுவே அவளை வன்கொடுமை செய்தான்.

பிறகு மீண்டும் கழுத்தை நெரித்து, அவளது குடிமைப்பணி கனவுகளை நிரந்தரமாகத் துண்டித்தான்.

அடுத்ததாக அவனுக்குப் பணம் தேவைப்பட்டது. பிணத்தின் கைரேகையைக் கொண்டு லாக்கரைத் திறக்க முயன்றான். ஆனால், ரத்தக் கறை படிந்த விரல்களுக்கு நவீனத் தொழில்நுட்பம் ஒத்துழைக்க மறுத்தது.

விரக்தியில் லாக்கரை உடைத்தான். இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளுடன், வேறொரு உடையை மாற்றிக்கொண்டு வெளியேறினான்.

ஒரு பழைய வேலையாளின் நேர்த்தியுடன் வெளியே போகும் போது அவன் சிசிடிவி கேமராவிற்கு ஒரு போஸ் கொடுக்கத் தவறவில்லை.

கடைசியில் கிளைமாக்ஸ் இப்படி அமைந்தது.

போலீசார் அவனைத் துவாரகாவில் ஒரு ஹோட்டலில் வைத்துப் பிடித்தனர். அவன் கொள்ளையடித்த பணத்தில் 7,000 ரூபாயைச் செலவு செய்திருந்தான். ஒருவேளை ஆன்லைன் லூடோவில் மீண்டும் தோற்றிருக்கக்கூடும்.

மருத்துவர்கள் உடலைப் பரிசோதித்துவிட்டு, அந்தப் பெண் வலியின் கொடூரம் தாங்காமல் இறந்திருக்கிறார் என்றார்கள்.

டெல்லி அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால் ராகுல் மீனாவைப் பொறுத்தவரை, இது ஒரு தவறான காய நகர்த்தல், அவ்வளவுதான்.

அடுத்த நான்கு நாட்களுக்கு அவன் போலீஸ் காவலில் இருப்பான். அநேகமாக அங்கே லூடோ விளையாட அனுமதி இருக்காது.

*****

No comments:

Post a Comment