அரசுப் பள்ளிகளின் இருத்தலியல் சிக்கல்!
கல்வி
என்பது ஓர் ஏணி என்று சொன்னால், அந்த ஏணி எந்த மரத்தில் செய்யப்பட்டது என்பதில் தான்
இந்தியச் சமூகம் குறியாக இருக்கிறது. அரசு மரம் என்றால் அலர்ஜி, தனியார் மரம் என்றால்
பக்தி.
அரசுப்
பள்ளிகள் என்பவை தெய்வங்களைப் போன்றவை. எல்லோரும் அவற்றைக் கும்பிடுவார்கள், வாழ்த்துக்
கட்டுரை எழுதுவார்கள். ஆனால் யாரும் அங்கே குடியிருக்க அதாவது பிள்ளைகளைச் சேர்க்க
விரும்புவதில்லை.
இந்தியாவில்
89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது ஒரு பெரிய விவாதமாகவே மாறவில்லை என்பதுதான்
ஆகச்சிறந்த தத்துவம்.
அரசுப்
பள்ளியில் படித்தால்தான் அப்துல் கலாம் ஆக முடியும் என்று மேடையில் முழங்குபவர்கள்,
தன் பிள்ளையை அப்துல் கலாம் ஆக்காமல், அமெரிக்காவுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள்.
நாம்
தமிழைத் தாய் என்கிறோம், ஆனால் ஆங்கிலத்தைத்தான் பாஸ் என்கிறோம். தமிழ் வழியில் படிப்பவனுக்கு
ஆங்கிலம் பிணக்கு, ஆங்கில வழியில் படிப்பவனுக்குத் தமிழ் ஒரு வழக்கு.
உண்மையில்,
ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தாய்மொழியில் படித்து முன்னேறுகின்றன. ஆனால்
இந்தியாவிலோ, ஆங்கிலம் என்பது ஓர் அறிவு அல்ல, அது ஒரு தகுதிச் சான்றிதழ்.
அரசுப்
பள்ளிகள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மாணவர்கள் வருவார்கள் என்பது, கடவுள்
வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கிறார் என்கிற கதையல்ல, பூசாரி வரம் கொடுத்தால்தான்
சாமிக்கே மரியாதை என்கிற நிலை.
சீனா
ஒரு மாணவனுக்கு 17,000 டாலர் செலவு செய்கிறது. இந்தியா 260 டாலர். இந்த இடைவெளிதான்
அரசுப் பள்ளியின் கழிப்பறைக்கும், தனியார் பள்ளியின் ஏசி அறைக்கும் உள்ள வித்தியாசம்.
குறைந்த
செலவில் அதிகத் தரம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மிதிவண்டி விலையில் ராக்கெட் வாங்குவதற்குச்
சமம்.
அரசு
அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒதுக்கும் நிதியில் எவ்வளவு
சுவரில் ஒட்டுகிறது, எவ்வளவு அறிவில் ஒட்டுகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
அரசுப்
பள்ளிகளை மேம்படுத்த அரசு, ஆசிரியர்கள், பெற்றோர் என ஒரு பட்டாளமே உழைக்க வேண்டும்.
வெற்றியின்
முதல்படி பள்ளிக்கல்வி என்பது உண்மையானால், அந்தப் படி வழுக்காமல் இருப்பதை உறுதி செய்வதுதான்
சமூக நீதி. இல்லையென்றால், அரசுப் பள்ளிகள் என்பது வெறும் புள்ளி விவரங்களில் மட்டும்
புள்ளிகளாக மட்டுமே எஞ்சியிருக்கும்.
கல்வி
என்பது இருளை நீக்குவது அல்ல, வெளிச்சத்தில் எங்கே குழிகள் இருக்கின்றன என்று அடையாளம்
காட்டுவதுதான். அரசுப் பள்ளிகள் அந்தக் குழிகளை மூடட்டும்!
*****

No comments:
Post a Comment