31 Dec 2019

25.0



            இரண்டு கவிஞர்கள் தொடர்ச்சியாகக் கவிதை பாடும் போது ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. கவிதை உணர்ச்சியைப் பிழிய பிழிய இடையே ஒரு கருத்துக் குவியல் தேவைப்படுகிறது.
            ஒல்லியல் மருத்துவர் அருள் அடுத்ததாகப் பேசத் தொடங்குகிறார்.

            "பரிணாமக் கோட்பாட்டை உலகிற்குத் தந்தவர் சார்லஸ் டார்வின்.
            உயிரினங்களின் தோற்றம் குறித்த ஆய்வை நாற்பது ஆண்டு காலம் மேற்கொள்கிறார் சார்லஸ் டார்வின்.
            தீவிரமான ஆய்வில் ஈடுபட்ட டார்வினுக்கு என்ன நிகழ்கிறது தெரியுமா?
            உலகுக்கு அந்த உண்மை தெரியாது. அவருக்கு அடுத்ததாக என்ன நேர்கிறது என்பது உலகம் அறியாதது.
            சுமார் பத்தாண்டு காலம் வரை அவர் இதய படபடப்பு, ஞாபக மறதி, கை கால் நடுக்கம் ஆகியவற்றோடு அவர் போராட வேண்டியதாகி விடுகிறது.
            டார்வினின் போராட்டம் ஜேம்ஸ் மேன்பி கல்லி எனும் ஒல்லியல் மருத்துவரைச் சந்திக்கும் வரை தொடர்கிறது.
            அவரது நோய்மைக் கால போராட்டத்தைக் காலக் கணக்கில் பார்க்கையில்,
            நாள் கணக்கில் பார்த்தால் 3650 நாட்கள்.
            மாதக் கணக்கில் பார்த்தால் 120 மாதங்கள்.
            வாரக் கணக்கில் பார்த்தால் 520 வாரங்கள்.
            அவ்வளவு காலம் நீடித்த டார்வினின் உடல், மனம் சார்ந்த போராட்டத்தை 30 நாட்களில் ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார் கல்லி.
            பரிணாமக் கொள்கையை உலகிற்குத் தந்தவர் டார்வின்.
            அவரது உடல்நலத்தை முழுமையாக மீட்டுத் தந்தது ஓமியோ.
            ஓமியோ மருத்துவம் ஓர் இயற்கை மருத்துவ முறை.
            மனிதர் இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படி அவரை மீட்டுக் கொண்டு வருவது ஓமியோ. ஓமியோ மனிதர்களை இயல்பாகக் குணப்படுத்துகிறது. பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்துகிறது. முழுமையாக குணப்படுத்துகிறது என்ற சொல்லாக்கத்தை விட முழுமையாக நலமாக்குகிறது என்ற சொல்லாக்கத்தைச் சொல்வதுதாம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
            ஓமியோவை உருவாக்கிய டாக்டர் சாமுவேல் ஹானிமான் ஓர் அலோபதி மருத்துவர் என்ற செய்தியை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அவர் அலோபதியின் பக்கவிளைவுகளை அறிந்து, அத்தகைய பக்க விளைவுகள் இல்லாத இயல்பாக உடலைக் குணமாக்கும் ஓமியோ முறையைக் கண்டறிகிறார்.
            இங்கு மருந்து என்பது இம்மிதாம்.
            இம்மி அளவு மருந்து எப்படிக் குணமாக்கும் என்று கேட்டால் அதன் சக்தி அப்படி. அதாவது இம்மி அளவு விஷம் எப்படி சாகடிக்கிறது என்று கேட்டால் அதன் சக்தி அப்படி.
            கொடுக்கப்படும் மருந்தின் அளவிலா இருக்கிறது மருத்துவம்?
            கொடுக்கப்படும் மருந்தின் செயல்படும் வீரியத்தில் இருக்கிறது மருத்துவம்.
            அதை அறிந்து செயல்படுகிறது ஓமியோ.
            அநாவசியமாக ஒரு இம்மியினும் இம்மி அளவு மருந்து கூட இங்கு வழங்கப்படுவதில்லை.
            இங்கு எந்த மருந்தும் கசப்பில்லை, கார்ப்பில்லை, உவர்ப்பில்லை, துவர்ப்பில்லை, கரிப்பில்லை. அனைத்து மருந்துகளும் இனிப்பானவை. மென்று முழுங்க அவசியம் இல்லாதவை. மருந்தை உட்கொள்ள விருப்பம் இல்லையென்றாலும் வாயில் வைத்தால் கரையக் கூடியவை. அப்படி வாயில் வைத்து உமிழ்நீரோடு மருந்து கலப்பதே போதும் ஓமியோவின் மருந்து செயலாற்றுவதற்கு.
            ஓமியோவில் மருந்தும் செலவும் மிகவும் குறைவு.
            இந்த மருத்துவ முறை மக்களிடம் அதிகம் பரவ வேண்டும் என்று பிரியப்படுகிறேன். நான் ஓமியோ மருத்துவர் என்பதால் மட்டுமே சொல்லவில்லை. மாற்று மருத்துவங்களாகவும், பாரம்பரிய மருத்துவங்களாகவும் சொல்லப்படுகிற சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவமும் மக்களிடம் பரவ வேண்டும் என்றே பிரியப்படுகிறேன். மக்கள் இந்த உண்மைகளை விளங்கிக் கொள்வார்களாக!"
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...