25 Mar 2026

ரத்தத்தால் எழுதப்படும் பூகோளம் – ஒரு கண்ணீர் அறிக்கை!

ரத்தத்தால் எழுதப்படும் பூகோளம் – ஒரு கண்ணீர் அறிக்கை!

சமாதான மேஜையில் அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்த போதே, வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா.

ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி வீழ்த்தப்பட, மத்திய கிழக்கு நாடுகள் எரிமலைக் குழம்பாய் கொதிக்கின்றன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனானைத் தாக்க, ஈரான் தன் கோபத்தை அமெரிக்கப் படைத்தளங்களின் மீது ஏவுகணைகளாகப் பொழிகிறது.

ஈரமே இல்லாத இதயங்கள் ஏந்திய ஆயுதங்களால், ஈரான் இன்று எரிகிறது! எங்கள் இழப்புகளுக்குப் பழி தீர்க்காமல் இந்தப் போர் அணையாது, என்கிறது ஈரான்.

இது முடிவில்லாப் போர் அல்ல, ஆனால் முடிவுக்கு வரக் காலம் பிடிக்கும், என்கிறது இஸ்ரேல்.

காலத்தின் காலடியில் சிக்கிய எறும்புகளாய் மனித உயிர்கள் நசுக்கப்படுகின்றன. அமெரிக்காவோ, சமாதானப் புறாவைக் கையில் பிடித்துக்கொண்டே, மறு கையால் ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருக்கிறது!

மூன்று வார காலப் போரில், அமெரிக்கா மட்டும் இறைத்திருக்கும் தொகை 20 பில்லியன் டாலர்கள்! இந்தியத் தாயின் கருவூலக் கணக்கில் சுமார் 1.85 லட்சம் கோடி ரூபாய்!

போர் முனையில் சிந்தும் ரத்தம், சாமானியனின் சமையலறையில் கண்ணீராய் வடிகிறது.

அமெரிக்காவில் 2.89 டாலருக்கு விற்ற ஒரு கேலன் பெட்ரோல், இன்று 3.79 டாலரைத் தொட்டுவிட்டது. இந்தியாவிலும் அப்படி விலை ஏறாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

அமெரிக்காவின் ராணுவச் செலவுகள், அந்நாட்டு மக்களின் அன்றாடச் செலவுகளைக் கழுத்தை நெரித்துக் கொல்கின்றன. இந்தப் போர் எங்களுக்கு வேண்டாம் என அமெரிக்க மக்கள் கதறத் தொடங்கிவிட்டார்கள்.

அமெரிக்கப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் தலைவன் ஜோ கென்ட், தன் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டார். ஈரானால் உடனடி அச்சுறுத்தல் இல்லை, இது அதிகார லாபிகளின் அழுத்தம். என் மனசாட்சிக்கு விரோதமாக இந்தப் போரைத் தொடர முடியாது என அவர் வெளியேறிவிட்டார்.

உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.

உலக நாடுகளை உதவிக்கு அழைத்த ட்ரம்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த நாடும் போர்க்கப்பல்களை அனுப்ப முன்வரவில்லை.

இப்போது கூடுதல் படைகளை அனுப்பும் முயற்சியில் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் அதலபாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழப்புகள் 5,000 ஐத் தாண்டிவிட்டது. உண்மை அதை விட அதிகமாகவும் இருக்கலாம்.

இஸ்ரேல் 8,000 கோடிகளைச் சாம்பலாக்கிவிட்டது.

லெபனானின் கட்டடங்கள் இன்று வெறும் மண் மேடுகள்.

வளைகுடா நாடுகளின் சுற்றுலா முடங்கிவிட்டது.

இந்தியாவில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏழையின் அடுப்பு அணைந்து கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தொட்டுவிட்டது. இது 130 டாலரைத் தாண்டினால் உலகமே ஸ்தம்பிக்கும்.

ஈரான் சொல்வது போல 200 டாலரை எட்டினால் அடுப்புகளில் பூனைதான் படுத்துறங்கும். வாகனங்களில் சிலந்திதான் வலை கட்டிப் பயணித்துக் கொண்டிருக்கும்.

ஆயுதம் செய்பவன் அறத்தைப் பேசுவதில்லை.

அதிகாரப் பசி கொண்டவன் உயிரை மதிப்பதில்லை.

எரிபொருள் விலையில் எரிகிறது மனிதம்.

ஏவுகணை மழையில் நனைகிறது பூமி.

ஐ.நா சபையோ மௌன விரத்தில் இருக்கிறது.

இந்தப் போர் நின்றால் மட்டுமே இனி உலகம் விடியும்!

அந்த விடியலுக்காகக் காத்திருக்கிறார்கள் உலக மக்கள் ஒவ்வொருவரும்!

*****

No comments:

Post a Comment