கடன் வாங்கும் முன்…
கடன்
வாங்கும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் என்னென்ன தெரியுமா?
இப்படி
ஒரு கேள்வியைக் கடன் வாங்குவதற்கு முன் உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
இவ்வளவு விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கடன் வாங்காமல் இருப்பதே நல்லது
என்ற முடிவுக்கு நீங்கள் வந்தாலும் வந்து விடுவீர்கள்.
விவரங்களைத்
தெரிந்து கொள்ளாமலோ, விவரமில்லாமலோ கடனை வாங்கினால், ‘கடன் கொண்டார் நெஞ்சம் போலக்
கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று இலங்கை வேந்தனுக்குச் சொல்லப்பட்ட உவமை உங்களுக்கும்
சொல்லப்பட வேண்டியதாகி விடும்.
கடன்
வாங்கும் முன் பின்வரும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால்
விவரங்களை அறியாத அறியாமையே கடனைக் காலைச் சுற்றிய பாம்பாக மாற்றி விடும். அவ்விவரங்களாவன,
1. கடன்
குறித்த அனைத்து விதிமுறைகள். ஏனென்றால் விதிமுறைகளைக் காட்டியே கடன் கொடுத்த நிறுவனங்கள்
மிரட்டுகின்றன.
2. கடன்
வழங்குவதற்கான மறைமுகக் கட்டணங்கள். ஏனென்றால் நீங்கள் கேட்ட கடன்தொகை ஒன்றாகவும்,
உங்களுக்கு வழங்கப்படும் கடன்தொகை வேறொன்றாகவும் இருப்பதற்கு இதுவே காரணம்.
3. கடனைத்
திரும்ப செலுத்த ஆகும் காலம். ஏனென்றால் இதை அறிந்து கொள்ளாவிட்டால் உங்கள் ஆயுள் முழுவதும்
கடன் தவணைத் தொகையைக் கட்டுவதிலே செலவழிந்து விடும்.
4. கடனுக்கான
வட்டி விகிதம். ஏனென்றால் இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் திடீரென உங்கள் கடனுக்கான
தவணைத் தொகை ஏன் அதிகரிக்கிறது என்பதற்கான காரணத்தை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.
5. மாதத்
தவணைத் தொகை. ஏனென்றால் இதைத் தெரிந்து கொண்டால்தான் தவணைத் தொகைப் போக மற்ற செலவினங்களை
உங்களால் திட்டமிட முடியும்.
6. மாதாந்திர
தவணைத் தொகை அட்டவணை. ஏனென்றால் இப்படி ஓர் அட்டவணையை நீங்கள் கேட்டு வாங்கி விட்டால்
உங்களிடமிருந்து கூடுதலாகப் பிடிக்கப்படும் தொகையை நீங்கள் ஆதாரத்தோடு கேள்வி கேட்க
முடியும்.
7. தவணை
தவறினால் விதிக்கப்படும் அபராதம். ஏனென்றால் இதைத் தெரிந்து கொண்டால் தவணை தவறாமல்
நீங்களும் கட்டுவீர்கள். கூடுதல் அபராதங்களை நிறுவனங்களாலும் வசூலிக்க முடியாது.
8. கடனை
இடையில் முடிப்பதற்கான வாய்ப்புகள். ஏனென்றால் இதைத் தெரிந்து கொண்டால் கடனை இடையில்
முடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத கடன்களை நீங்கள் தவிர்த்து விடலாம்.
9. கடனைக்
கட்டத் தவறினால் எடுக்கப்படும் நடிவடிக்கைகள். ஏனென்றால் இதை நீங்கள் அறிந்து கொண்டு
விட்டால் அந்த நிறுவனத்திடமிருந்து நீங்கள் கடனை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுத்து
விடலாம். இல்லையென்றால் கந்துவட்டிக் கும்பலிடம் மாட்டிக் கொண்ட நிலை ஏற்பட்டு விடும்.
10.
கடன் பெற்றோரின் அனுபவங்கள். ஏனென்றால் இதை நீங்கள் விசாரித்து அறிந்து கொண்டால்தான்
நீங்கள் சரியான நிறுவனத்திடமிருந்து கடன் வாங்குகிறீர்களா என்பதே புரிய வரும். இல்லையென்றால்
கடனுக்காக அந்த நிறுவனம் உங்கள் மானம் மரியாதை உட்பட அனைத்தையும் காலி செய்யத் தயங்காது.
இந்தப்
பத்து விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு கடன் வாங்குங்கள். அதை விட இன்னொரு முக்கியமான
பதினொன்றாவது விவரம் என்னவென்றால், இயன்றவரை கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள்.
அப்படித் தவிர்த்து விட்டால் மேற்படி பத்து விவரங்களுமே உங்களுக்குத் தேவைப்படாது.
*****
No comments:
Post a Comment