21 Jun 2025

இந்தி படித்தால்தான் வருங்காலத்தில் அரசு வேலைகளா?

இந்தி படித்தால்தான் வருங்காலத்தில் அரசு வேலைகளா?

இந்தி படித்தால்தான் வருங்காலத்தில் அரசு வேலைகள் என்றால்… ஏன் இளைஞர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறார்கள்? கணினிநிரல் மொழி எழுத கற்றுக் கொள்கிறார்கள்? செயற்கை நுண்ணறிவில் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள விழைகிறார்கள்? நீட் தேர்வுக்கும், ஜேஇஇ தேர்வுக்கும் அவ்வளவு சிரமப்பட்டு உயிரியியலையும், கணிதவியலையும், இயற்பியலையும், வேதியியலையும் கற்றுக் கொண்டு கிடக்கிறார்கள்?

சிஏ படிப்பிற்காகப் படாதபாடு பட்டு படிப்பவர்களையெல்லாம் என்ன சொல்வது? அவர்கள் எல்லாம் இந்தியை மட்டும் படித்து சுலபமாக அரசு வேலை வாய்ப்புகளைப் பெறாமல் ஏன் நகைச்சுவை தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரி வடமாநிலங்களில் இந்தி பேசும் அனைவரும் அரசு வேலையில் இருக்கிறார்களா? அல்லது இந்தி தெரிந்தாலே அரசு வேலையில் இருப்பது போலத்தானோ என்னவோ!

முத்தமிழ் வளர்ந்த தமிழ் நிலத்தில் மூன்றாவது மொழியாகத் தமிழ் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

இந்தப் பிள்ளைகளுக்கு இருமொழிக் கொள்கையில் இங்கிலீஷையே நுழைக்க முடியவில்லை. மும்மொழிக் கொள்கையில் ஹிந்தியும் என்றால் மேரா நேம் இஸ் தமிழ்வாலா.

ஹிந்தியால் பள்ளிக்கூடங்கள் இப்படி ஒரு பிரச்சனையைச் சந்திக்கக் கூடும்.

மும்மொழிக் கொள்கை என்றால் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தமிழ், ஆங்கிலச் செய்திகளோடு ஹிந்தி செய்தியும் வாசிக்க வேண்டும். தமிழில் வாசித்ததை அப்படியே ஆங்கிலத்தில், ஆங்கிலத்தில் வாசித்த்தை அப்படியே ஹிந்தியில். ஒரே செய்தியை மூன்று முறை கேட்க வேண்டும்.

ஏன் ஹிந்தி என்றால், அதற்கு இப்படியும் கீழ்கண்ட காரணங்கள் சொல்லப்படலாம்.

இரண்டு என்று இரட்டைப்படையில் இருப்பதால் அது நாட்டிற்கு நல்லதில்லை. மூன்று என்று ஒற்றைப்படையில் இருந்தால் நல்லது நடக்கலாம். அதனால் மூன்றாவது ஹிந்தி மொழியும் கற்க வேண்டும். ஹிந்தி எதற்கு என்றால் அமெரிக்கா அதிபர் டிரம்பிடம் பேச உதவுவதற்காக. அமெரிக்க அதிபர் டிரம்பின் மொழி ஹிந்தி. அவர் விரைவில் ஹிந்தியைச் சர்வதேச மொழியாக்குவார். அப்போது ஹிந்தி தெரியாதவர்கள் எல்லாம் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாது. டிரம்ப் ஹிந்தி தெரியாத அமெரிக்கர்களைக் கை கால்களில் விலங்குகள் இட்டு நாடு கடத்துவார். நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறதல்லவா.

ஹிந்தி கற்பதற்கான அவசியம் குறித்து பலவித கற்பிதங்கள் கீழ்கண்டவாறும் பரப்பப்படலாம்.

ஹிந்தி தெரிந்தால் எல்லா நாடுகளுக்கும் போகலாம். இந்தியாவிற்குள்தானே எல்லா நாடுகளும் இருக்கின்றன. உலக நாடுகள் அனைத்துமே ஹிந்தியைக் கற்க ஆர்வம் காட்டுகின்றன. கனடா அதிபரின் தோல்விக்குக் காரணம் அவருக்கு ஹிந்தி தெரியாததுதான்.

ஹிந்தி பேசி டீக்கடை போடும் போது டீயும் வடையும் சுடச்சுட வேகமாக விற்பனை ஆவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பானிபூரியும் பேல்பூரியும் விற்க ஹிந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசர சட்டம் பலரை ஹிந்திப் படிக்கத் தூண்டியிருக்கிறது.

ஹிந்தி திணிப்பின் தாக்கம் முடிவில் இப்படியும் வெளிப்படலாம்.

முதியோர் கல்வித் திட்டத்தில் ஹிந்தியில்தான் கற்பிக்கப்படும் என்கிறார்கள். அந்தத் தள்ளாத வயதில் எதைக் கற்பித்தால் என்ன? கண்ணும் புரியாமல், காதும் கேட்காமல் ஹிந்தி கற்பது சுலபமாக இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.

விரைவில் இந்தி – ஆங்கிலம் – ஹிந்தி அகராதிகளை லிப்கோவும் மணிமேகலைப் பிரசுரமும் வெளியிடக் கூடும்.

தாகம் எடுத்தால் தண்ணீர் என்று கேட்பதா? வாட்டர் என்று கேட்பதா? பானி என்று கேட்பதா? என்று யோசிப்பதற்குள் மூச்சு முடிந்து விடும்.

4000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை என்பதில் என்ன பெருமை இருக்கிறது? தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது என்பது பெருமையின் பட்டியலில் வந்து விடும்.

முடிவில் இதன் மோசமான அங்கதம் இப்படித்தான் இருக்கும்.

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? என்று எடுத்துச் சொன்னால் இங்கிலீசால் மட்டும் கெடலாம், ஹிந்தியால் கெடக்கூடாதா என்கிறார்கள்.

தமிழை ஆட்சி மொழியாக்குங்கள் என்றால், ஆட்சி மொழிதானே? தமிழ் ஆட்சி மொழி. ஹிந்தி பேச்சு மொழி. ஆஹாஹாஹா என்று சிரிக்கிறார்கள்.

அவர்கள் ஹிந்தியைத் திணிக்கிறார்கள். நம்மால் ஏன் தமிழைத் திணிக்க முடியவில்லை.

ஹிந்தி படித்தால்தான் அரசு வேலை வாய்ப்பு என்கிறார்கள். வருங்காலத்தில் அரசு வேலைவாய்ப்புகள் என்பதைக் கேட்கும் போதே சிரிப்பு சிரிப்பாகத்தான் வருகிறது.

*****

No comments:

Post a Comment