காலத்தையும் உங்களையும் புரிந்து கொள்ளுதல்!
சில
நேரங்களிலா, பல நேரங்களிலா என்று எனக்குத் தெரியவில்லை. அது உண்மையில் ஒவ்வொருவருக்கும்
வேறுபடும். உங்களுடைய முயற்சிகள் தவறாகப் போகின்றன. ஏன் அப்படிப் போக வேண்டும்? அதற்கெனக்
காலம் இருக்கிறது. அதுவரை காத்திருக்க வேண்டும். முயற்சியால் எதையும் சாதித்து விடலாம்
என்று காலத்தைக் கருதாமல் இருந்தால் அந்த முயற்சி பலனற்றுதான் போகும். இங்கு நீங்கள்
காலத்தோடு உங்களையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
முயற்சிகளைப்
பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்தால், உங்களுக்கு சில உண்மைகள் புலப்படும். உண்மையில்
சில பல முயற்சிகளை நீங்கள் செய்யவே வேண்டியதில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. எப்போது
முயற்சி செய்ய வேண்டும், எப்போது முயற்சி செய்யாமல் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க
வேண்டும். அது புரியாமல் எல்லாவற்றையும் முயற்சி செய்து மாற்றலாம் என்று நினைத்தால்
தோல்வியையும் ஏளனத்தையும்தான் சந்திக்க வேண்டும்.
உங்களால்
சில பல நேரங்களில் சும்மா இருக்க முடியாது. உங்கள் அவசரம்தான் பிரச்சனை. நோயைக் கூட
தாங்கிக் கொள்வீர்கள். அவசரத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்குத்தான் நீங்கள்
உங்கள் மனதைப் பழக்க வேண்டும். உங்கள் அவசரத்தால் எதுவும் நிகழ்ந்து விடாது என்பதை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பல நேரங்களில்
நீங்கள் எதையும் செய்யாமல் பொறுமையாக உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க
வேண்டும். ஒரு கொக்கைப் போல நேரம் வாகாக அமையும் போதுதான் நீங்கள் உங்கள் முயற்சியில்
இறங்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் முயற்சிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கூட சேதாரம்
ஏற்படலாம். வாழ்க்கையில் எல்லாம் முயற்சியால் மட்டுமே மாறி விடாது. எப்போது முயற்சி
செய்ய வேண்டுமோ, அப்போது முயற்சி செய்தால் மட்டுமே மாறும்.
ஓர்
அழகான உண்மை என்னவென்றால் நீங்கள் அவசரப்பட்டு எதையும் செய்திருக்க வேண்டாம். அவசரப்பட்டு
எதையும் புரிந்து கொண்டிருக்க வேண்டாம். எதார்த்தம் என்னவென்றால், உங்களது அவசரம் தவறு
தவறாகச் சிந்திக்கிறது. காரணம் சில பல நேரங்களில் போகும் பாதையில் தவறு இருக்கிறது.
பாதை தவறாக இருக்கும் போது அடையும் இடமும் தவறாகத்தான் இருக்கும். உங்கள் அவசரம் உங்கள்
தவறுகளை அதிகப்படுத்தும். தவறான பாதையில் துணிச்சலோடு செல்ல வைத்து விடும். நீங்கள்
அப்போது உணர்வுபூர்வமான நிலையில் பயணித்துக் கொண்டிருப்பீர்கள்.
எல்லாவற்றையும்
நீங்கள் உங்களது உணர்வுபூர்வமான தன்மையைக் கொண்டு மட்டுமே அணுகி விட முடியாது. அறிவுப்பூர்வமாக
யோசித்து அதற்கு ஒத்து வந்தால் நீங்கள் உணர்வுபூர்வமாக அணுகுவது வெற்றி தரும்.
ஒரு
காரியத்தில் இலக்கை அடைவதற்குள் மற்றவர்களோடு கொள்ளும் தொடர்பு முக்கியமானது. இதில்
என்ன பிரச்சனை என்னவென்றால், உங்கள் வேகத்திற்குக் காரியம் நடக்காது. பலவற்றை நீங்கள்
பொறுமையாக விளக்க வேண்டியிருக்கும். நீங்கள் எல்லாவற்றையும் விளக்கிய பிறகும் காரியத்தைக்
குட்டிச்சுவர் ஆக்குவதற்கென்று சிலர் இருப்பார்கள். அதற்காக நீங்கள் உங்களை விட்டுக்
கொடுத்து விட வேண்டியதில்லை. ஆனால் யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தி விடாதீர்கள்.
அதற்காக நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. நீங்கள் பேசாமல்
இருந்தால் கூட போதுமானது. நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலும் போதுமானது.
வாழ்வின்
அடிப்படை அறத்தைப் பொருத்த வரையில் நீங்கள் ஒரு தவறிலிருந்து தொடங்கி விட்டு சரியாக
நடக்க வேண்டும் என்ற எதிர்பார்க்க முடியாது.
நீங்கள்
பாதிக்கப்பட்டிருக்கலாம். வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் இழப்பு மிக மோசமானதாகக்
கூட இருக்கலாம். அதற்காக நீங்கள் தவறான எதையும் தொடங்கி விடாதீர்கள். நீங்கள் மிகச்
சரியாகவே நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கான நியாயத்தைக் கேட்டுக் கொண்டே இருங்கள்.
சரியான
பாதையில் உங்கள் இழப்புக்காக, பாதிப்புக்காக, வஞ்சிப்புக்காக நீங்கள் செயல்பட்டுக்
கொண்டிருக்கலாம். அதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் உங்கள் பாதை தவறாகப் போய் விடக் கூடாது
என்பதில் மட்டும் எப்போதும் கவனமாக இருங்கள். உங்களது பொறுமையையும் நீங்கள் எப்போதும்
கைவிட்டு விடக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருங்கள்.
உங்கள்
பொறுமை தொலையும் நேரம் ஆபத்தானது. அது உங்களது எதிரிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்.
பொறுமையைத் தொலைப்பவர்கள் தங்களைத் தொலைத்து விடுகிறார்கள். நீங்கள் உங்களைத் தொலைத்து
விட்டு நீங்கள் எதை அடைந்து என்ன செய்யப் போகிறீர்கள்? இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதும்
கேட்டுக் கொள்ளுங்கள். காலத்தையும் உங்களையும் புரிந்து கொள்ள இந்த அற்புதமான கேள்வி
உங்களுக்கு எப்போதும் உதவும்.
*****
No comments:
Post a Comment