வெடித்துச் சிதறுவதிலிருந்து வெளியே வாருங்கள்!
மனச்சோர்வின்
அதி தீவிர நிலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களில் ஒன்று ‘Burn Out’.
1970களில்
அமெரிக்க உளவியலாளர் ஹெர்பர்ட் ப்ரூடென்பெர்கர் உருவாக்கிய வார்த்தை இது.
துவக்கத்தில்
இந்த வார்த்தையானது ஒரு வேலையில் இதற்கு மேலும் தொடர முடியாது என வெடித்துச் சிதறும்
நிலையைக் குறித்தது. இன்றோ வாழ்க்கையில் எதிலெல்லாம் இதற்கு மேல் முடியாது என வெடித்துச்
சிதறுகிறீர்களோ அத்தனையையும் குறிக்கிறது.
இன்று
வேலையில் மட்டுமல்லாது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மனச்சோர்வால் வெடித்துச் சிதறும்
நிலை ஏற்படும் நிலை உள்ளது.
முன்பெல்லாம்
சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை எல்லாம் உடல் சார்ந்த நோய்கள் என்ற நிலை இருந்தது.
இன்று அந்நிலை மாறி விட்டது. மனச்சோர்வால் அடிக்கடி வெடித்துச் சிதறுவதால் கூட அந்நோய்கள்
ஏற்படலாம்.
இதைக்
கேட்டவுடன் நான் கூட மனச்சோர்வால் அப்படித்தான் வெடித்துச் சிதறுகிறேன் என்று நீங்கள்
கூறலாம். நீங்கள் மட்டுமல்ல, உலகில் 80 விழுக்காடு மக்கள் அப்படித்தான் ஒவ்வொரு நாளும்
வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின்றனர்.
சர்க்கரை
நோய், ரத்தக்கொதிப்பு மட்டுமல்லாது வயிறு சார்ந்த பிரச்சனைகள், தோல் சார்ந்த பிரச்சனைகள்,
முடி உதிர்தல், ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் போன்ற பல உடல் நலம் சார்ந்த சிக்கல்கள்
மனச்சோர்வால் ஏற்படும் வெடித்துச் சிதறுதலால் ஏற்படுகின்றன.
மன அழுத்தம்,
தூக்கமின்மை, அதீத சிந்தனை, மனப் பிறழ்வுகள் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் மனச்சோர்வால்
ஏற்படும் வெடித்துச் சிதறுதலால் உண்டாகின்றன.
இதை
எப்படித் தடுப்பது?
வேலையில்,
படிப்பில், நுகர்வில், குடும்பத்தில், சமூகத்தில் என்று வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும்
இன்று போட்டி, பொறாமை, ஒப்பீடு, அதீத எதிர்பார்பபுகள், அதீத இலக்குகள் என்று விஷமத்தனமான
கலாச்சாரம் பரவி வருகிறது. இயல்பாக இருத்தலும், இயல்பாக வாழ்தலும் அர்த்தமற்றவை என்ற
கருதப்படுகின்றன. மன அமைதியும் இணக்கமாக வாழ்தலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.
பொருளாதர ரீதியான போட்டிகளும், மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற ஒப்பீடுகளும் இன்று
அதிகமாகி விட்டன.
இன்றை
வாழ்க்கை முறையில் மன அமைதியை விடவும் பொருளாதார எதிர்பார்ப்புகளும், அந்தஸ்து, அதிகாரம்
போன்ற மேற்பூச்சுகளுக்குத் தரும் முக்கியத்துவங்களும் அதிகரித்து விட்டன. எல்லாம் சேர்ந்து
மனிதர்களை மன அழுத்தம் மிகுந்த சூழ்நிலையில் வாழப் பழக்கி விட்டு விட்டன. ஆனால் ஒரு
கட்டத்திற்கு மேல் அதைத் தாங்க முடியாத மனம் மனச்சோர்வுக்கு உள்ளாகி விடுகிறது.
தொடரும்
மனச்சோர்வு ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறுகிறது. அது எப்படி
வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம். வேலையை விடச் செய்யலாம். வாழ்க்கையிலிருந்து தப்பி
ஓடச் செய்யலாம். மனநலத்தைப் பிறழச் செய்யலாம். தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளச்
செய்யலாம். குற்றவுணர்வில் குமைந்து போகச் செய்யலாம். தன்னைத் தானே அழித்துக் கொள்ளவும்
முயலலாம்.
இதிலிருந்து
நாம் எப்படி வெளியே வரப் போகிறோம்? வழிகள் இல்லாமல் இல்லை. இதுவரை நாம் பழகிய வழிகளுக்கு
எதிராக அந்த வழி இருக்கிறது. அதை விவேகத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையும் அவசியமும்
நமக்கு இருக்கிறது.
நாம்
எளிமையான வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
நம் பொருளாதாரத்துக்குப் பொதுமான அளவு வருமானம் தரும் ஒரு சரியான வேலையைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம். தேவைக்கு அதிகமாகப் பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு
முற்றுப்புள்ளி வைக்கலாம்.
சக்திக்கு
மீறித்தான் வாழ வேண்டும் என்றில்லை, நம் சக்திக்கு உட்பட்டு வாழலாம். யாரையோ மனதில்
வைத்து நாம் உருவாக்கி வைத்திருக்கும் அந்தஸ்து, கௌரவம் என்கிற மனபிம்பத்திலிருந்து
வெளிவந்து நகலாக வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அசலாக வாழ முயற்சிக்கலாம்.
நாம்
எளிமையாகி விட்டால் வாழ்க்கையில் எல்லாம் எளிமையாகி விடும். நாம் சிக்கலாகும் போது
மனமும் சிக்கலாகிறது. அந்தச் சிக்கல் தாங்க முடியாத அளவுக்குப் போகும் போது மனம் தன்னைத்
தானே அறுத்தெடுத்துக் கொள்கிறது. நாம் ஏன் நம்மை அவ்வளவு சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும்?
*****
No comments:
Post a Comment