13 Mar 2025

தாளில் எழுதா எழுத்தாளன்!

தாளில் எழுதா எழுத்தாளன்!

உங்களால் எப்படி இவ்வளவு எழுத முடிகிறது என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் எழுதுவதே இல்லை. எல்லாம் தட்டச்சுதான்.

விசைப்பலகையைத் (கீபோர்டு – மியூசிக்கல் கீபோர்டு அல்ல – கணிப்பொறிக்கானது) தொட்டேன் என்றால் கலைந்து கிடக்கும் ஆங்கில எழுத்துகளின் மீது அடங்காத மோகம் கொண்டு அடித்துத் தள்ளி விடுவேன். அவையென்னவோ தமிழ் எழுத்துகளாகத் தோன்றி மறையும்.

நல்லவேளை, விசைப்பலகையின் எழுத்து தமிழில் இல்லை. தமிழில் இருந்து ஆங்கிலத்தில் தோன்றி மறைந்தால், என் கஷ்டகாலம் நான் நோபலுக்கு விண்ணப்பிக்க வரிசையில் (கியூவில்) நின்று தொலைக்க வேண்டும். தமிழுக்கு அந்தக் கஷ்ட காலம் இன்னும் வரவில்லை.

எழுத்துகளை தூவலின் (பேனாவின்) முனைகளுக்குத் தின்னக் கொடுத்து நாட்களாகி விட்டன. தவிரவும் A4 தாளின் விலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாளுக்கொரு விலை. நமக்குக் கட்டுபடியாகாது.

ரோக்காசீட்டுக் காகிதங்கள் ஒரு கட்டு வாங்கி வந்து வைத்திருக்கிறேன். அது எழுதுவதற்காக அல்ல. டிஷ்யூ தாளின் விலை கட்டுப்படி ஆகாததாலும், வீட்டிற்கு வருவோர் போவோருக்குப் பஜ்ஜி, போண்டா வைத்துக் கொடுப்பதற்காகவும்.

எப்போது ஐந்து ரூபாய் பேனாக்களை ஏழு ரூபாய் பேனாக்களாக்காக விலை உயர்த்தினார்களோ, அதற்கு ஜிஎஸ்டியைக் காரணம் சொன்னார்களோ, அன்றே எழுதக் கூடாது என்றெல்லாம் கங்கணம் கட்டிக் கொள்ளவில்லை.

பேனாவில் எழுத இதென்ன பரீட்சையா? பேனாவில் எழுதப் பிடிக்காமல் பரீட்சையில் தேர்ச்சி மதிப்பெண்களுக்கு (பாஸ் மார்க்) அதிகம் எழுதாத அந்த பால்யப் பிரயாங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

கண்ணை மூடிக் கொண்டு திருத்தும் புண்ணியவான்களால் அப்போதும் 35க்கு 70 மதிப்பெண்கள் வாங்கிய அதிசயங்கள் நடந்த அந்தக் காலத்தில், மையூற்றுத் தூவல்களுக்கு (இங்க் பேனாக்கள்) அப்படி ஒரு மதிப்பு.

முடி வெளுத்த மனிதர்கள் அவ்வபோது ஒழுகிய மையைத் தலையில் தடவியதைப் பார்த்த போது, முதல் தலைச்சாய முயற்சி இந்த மையூற்றுப் பேனாக்களிலிருந்துதான் துவங்கியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவி, ஒரு கருத்தரங்கில் கட்டுரை சமர்பித்து முதல் பரிசு வாங்கியதைச் சொன்னால் குறைந்தபட்சம் நீங்கள் மூக்கில் விரல் வைத்துதான் ஆக வேண்டும். நீங்கள் இப்போது வைக்காவிட்டாலும், அப்போது நான் வைத்தேன், ஜலதோசம் பிடித்திருந்ததாக ஞாபகம்.

பந்து முனைப் பேனாக்கள் (பால்பாய்ண்ட் பேனாக்கள்) மீது ஏங்கி, அவற்றைக் காதலித்த அந்த வாலிப பிராயத்தில்,பந்து முனைப் பேனாக்களில் எழுதியதற்காக அடித்த ஆசிரியர்கள் எத்தனை பேர் தெரியுமா? காதலிப்பது எந்த ஆசிரியருக்குப் பிடிக்கும்? அவர்கள் அடித்தாலும் நான் பந்து முனை பேனாக்களைக் காதலித்தேன். அதிலும் குறிப்பாக பிரான்சின் ரெனால்ட்ஸ் மீது அப்படியொரு காதல்.

தலைக்கு மட்டும் நீலச் சாயம் அடித்து, உடலெல்லாம் வெள்ளையாக, அப்படியே திறந்தால் தனுஷ் போல உடம்போடு நீலமாக ஒரு மை உருளை (ரீபிள்). என்ன அழகு தெரியுமா? அளவு சுழியமாக (சைஸ் சீரோ) ஒல்லி தேகத்தோடு அப்படி ஒரு அழகு. கட்டழகு என்றால் அதுதான் கட்டழகு. மையூற்றுத் தூவல் குண்டுகளுக்கு மத்தியில் அந்த ஒல்லியழகு ஆசிரியர்களை எப்படிக் கவராமல் போனதோ, எனக்குத் தெரியவில்லை. அதுதான் ரெனால்ட்ஸ்ன் காதல் (ரொமான்ஸ்) ரகசியத்திற்கான காரணம்.

அந்தக் கதையை விடுங்கள். எழுத்துக் கதைக்கு வருவோம்.

இப்போது தட்டச்சு கூட அதிகம்தான். பேசினாலே அலைபேசி எழுதி விடுகிறது. அது பேனாவை உள்ளே மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா புலனாய்வு நிறுவனம் சொல்லும் உளவுத் தகவலில் உண்மை இல்லாமல் இல்லை.

எழுதுவது என்பது பெரிய பிரச்சனையில்லை. அந்தக் கருமத்தை யாரையாவது படிக்க வைக்க வேண்டும். எனக்குத் தெரியும், அதற்காகத்தான் பலர் எழுதுவதில்லை. நான் அப்படி இருக்க முடியுமா? எல்லாரும் அப்படி இருந்து விட்டால், ஆன்னா, ஆவன்னா எழுத கூட ஆளில்லாமல், அதைச் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் போனால் நினைத்துப் பார்க்கவே எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது.

எழுதுங்கள். யாராவது படிக்காவிட்டாலும் பரவாயில்லை எழுதுங்கள். எழுதுவதெல்லாம் படிக்கப்பட வேண்டும் என்றால், தமிழில் இவ்வளவு புத்தகங்களே வெளிவராது. அச்சகங்களுக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்றே இவ்வளவு புத்தகங்கள் வருகின்றன. நூலகங்களில் அடுக்கி வைக்கவும் எதாவது எழுதப்பட்ட புத்தகங்கள் தேவையாக இருக்கின்றன.

பெரிய அறிவாளி என்று காட்டிக் கொள்வதற்கு ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எழுதப்பட்ட புத்தகங்கள் தேவையாக இருக்கின்றன. 1500ஐயும் சும்மா விட்டு விட முடியுமா? எழுத்துகளால் நிரப்ப வேண்டுமே.

பின்னொரு காலத்தில் யாராவது படிக்க வேண்டும் என்று நினைத்தால் எதையாவது எழுதி வைத்திருப்பது என ஏதாவது இருக்க வேண்டும்.

பஜ்ஜி, போன்டா சாப்பிடும் போது கூட, எழுதிய தாளில் வைத்துச் சாப்பிடும் போது அதன் சுவை கூடுதலாக இருக்கிறது. வெற்றுத்தாளில் வைத்துச் சாப்பிடும் தின்பண்டங்கள் சுவைப்பது இல்லை. அதற்காகவேனும் எழுதப்பட வேண்டும்.

என் எழுத்துகளை அப்படி நீங்கள் பஜ்ஜி, போண்டா வைத்துச் சாப்பிட்டு விட்டு முடியாது.

எல்லாம் எண்ம வடிவில் (டிஜிட்டல் வடிவில்) இருப்பதால், அலைபேசியில் அல்லது கணினித் திரையில் வைத்துச் சாப்பிட்டு அதை எண்ணெய்யாக்கி வீணாக்கிக் கொள்வது உசிதப்படாது.

*****

No comments:

Post a Comment