14 Mar 2025

தமிழ் வாசிப்புச் சூழல் மற்றும் எழுத்தாள பரிதாபங்கள்!

தமிழ் வாசிப்புச் சூழல் மற்றும் எழுத்தாள பரிதாபங்கள்!

இந்தப் புத்தகக் காட்சியில் என் புத்தகம்தான் அதிகம் விற்பனையானதாகச் சொன்னார்கள். அதிகம் படிக்கப்பட்ட புத்தகமும்தான் என் புத்தகம்தான் என்றார்கள். அப்படியானால் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் கதி?

அவற்றிற்கு வெளியிடப்படும் குறிப்புரைகள் (நோட்ஸ்கள்) அதிகம் வாசிக்கப்படுவதே இல்லையா?

பிறகெப்படி என் புத்தகம் அதிகம் வாசிக்கப்பட்டிருக்கும்?

அதுவும் நான் இதுவரை புத்தகமே வெளியிடாத போது.

இவர்கள்தான் நம் இலக்கிய வாசகர்கள்.

நிலைமை கொஞ்சமல்ல, ரொம்பவே கஷ்டம்தான்.

இப்படியே போனால், அடுத்த ஆண்டில் எழுதப் படிக்கவே தெரியாத என் பாட்டி எழுதிய புத்தகம்தான் அதிகம் விற்பனையாகியிருக்கும்.

புத்தகக் காட்சியின் நிலைமையும் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. போகிறப் போக்கைப் பார்த்தால் ஒன்றாம் வகுப்பு புத்தகம், கோலப்புத்தகம், சமையல் புத்தகம், பாடப்புத்தகங்களுக்கான குறிப்புரை ஏடுகள் (நோட்ஸ்கள்), வாய்பாடு, அகராதிகள், திருக்குறள், பாரதியார் கவிதைகள் தவிர வேறு எதுவும் விற்பனை ஆகாது போலிருக்கிறது.

*****

சில எழுத்தாளர்கள் ஆலோசனை கேட்கிறார்கள்.

ஒரே ஆலோசனைதான்.

நிறைய எழுதுங்கள்.

கொஞ்சமாக எழுதுங்கள் என்றால் கேட்கவா போகிறார்கள்.

*****

ஓர் எழுத்தாளன் என்றால் பெயர் வைக்கவெல்லாம் கூப்பிடுகிறார்கள்.

போனால், மாச்சில் (பிஸ்கெட்), குளம்பி (காப்பி), இனிப்பப்பம் (கேக்) கிடைக்கும் என்று போனேன்.

நாய்க்குட்டிக்குப் பெயர் வைக்கச் சொன்னார்கள்.

நாய்க்குட்டி என்று வைத்து விட்டு, பிஸ்கெட், காப்பி, கேக் (மாச்சில், குளம்பி, இனிப்பப்பம்) சகிதம் திரும்பி விட்டேன்.

இனி யாராவது பெயர் வைக்கக் கூப்பிடுவார்கள்?

கூப்பிட்டாலும் பெயர்களைப் பட்டியலிட்டு நாட்குறிப்பில் (டயரியில்) எழுதிக் கொண்டேன்.

ஆண் குழந்தைக்குப் பெயர் ஆண் குழந்தை.

பெண் குழந்தைக்குப் பெயர் பெண் குழந்தை.

பூனைக்குப் பெயர் பூனை.

மாட்டிற்குப் பெயர் மாடு.

ஆட்டிற்குப் பெயர் ஆடு.

கழுதைக்குப் பெயர் கழுதை.

குதிரைக்குப் பெய குதிரை.

எனக்குப் பெயர் நான்.

உனக்குப் பெயர் நீ.

யாருக்கு வேண்டுமானலும் பெயர் வைக்க தயார்.

உங்கள் அழைப்புகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

*****

No comments:

Post a Comment

புத்தரின் ஞானமும் அவரது இரு சங்கங்களும்!

புத்தரின் ஞானமும் அவரது இரு சங்கங்களும்! ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்பதை கௌதம சித்தார்த்த புத்தர் அரச லிமிடெட் நிறுவன ஊழியராய் இருந்த...