30 Apr 2020

வம்பு மேல வம்பு!

செய்யு - 434        

            சுப்பு வாத்தியாரு செருப்பப் பிடிச்சி வெளியில எறிஞ்சா பெரியவரு மருமவ்வேன்னு கூட பாக்காம அடுத்ததா அடிக்கப் பாயுறாரு. பாத்தாரு சுப்பு வாத்தியாரு பெரிய மனுஷன்னுப் பாக்காம பெரியவர்ரப் பிடிச்சித் தள்ளி வுட்டுப்புட்டாரு. பெரியவரு யய்யோ யம்மாடின்னு அந்தாண்டப் போயி வுழுந்தாரு.
            பெரியவரு சுப்பு வாத்தியாருக்குத்தாம் கொஞ்சம் அடங்குவாரு. அதால சுத்தி நின்ன எல்லாத்துக்கும் சுப்பு வாத்தியாரு வந்து தடுத்ததுல மனசுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கு. கீழே வுழுந்து எழுந்த பெரியவரு கோவத்துல பேசுனாரு பாருங்க அடுத்த வார்த்தெ, "யம்பீ! இத்து எங் குடும்ப விசயம்! இத்துல நீஞ்ஞ தலையிடாதீங்க!"ன்னு. இதெ கேட்டதும் மித்த எல்லாருக்கும் பொக்குன்னு ஆயிடுச்சு, சுப்பு வாத்தியாரு வந்து நெலமெ சமாதானம் ஆயிடும்ன்னு பாத்தா அதெ தாண்டித் தறிகெட்டுப் போவுதேன்னு.
            சுப்பு வாத்தியாரு அதுக்குல்லாம் கலங்கல. "செரி யத்தாம்! ஒங் குடும்ப விசயம். நீஞ்ஞப் பாத்துக்கோங்க. யக்கா! அத்து அவரு குடும்ப விசயமாம்! நீயி இனுமே இவரு கூட ஒரு நிமிஷம் இருக்கக் கூடாது. ஒடனெ கெளம்பு நம்ம கூட. ஏன்னா இத்து எங் குடும்பம் விசயம். நம்மட யக்கா குடித்தனம் நடத்தணுமா வேண்டாமாங்றதெ நாம்மத்தாம் முடிவு பண்ணணும். அதெ மாதிரிக்கி அவரு மருமவ்வே குடித்தனம் நடத்துணுமா வேணாங்றதெ அவருத்தாம் அதாங் யத்தாம் முடிவு பண்ணிக்கிடட்டும். அவரு குடும்ப விசயத்தெ அவரு முடிவு பண்ணிகிடட்டும். நம்ம குடும்ப விசயத்தெ நாம்ம முடிவு பண்ணிக்கிடுறேம். அநாவசியமா யாரும் இஞ்ஞ அவுங்கவங்க குடும்ப விசயத்துல மித்தவங்க தலையிடாம இருந்துக்கிடணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யம்பீ! நல்லாயில்லே! நாம்ம தொட்டுத் தாலியக் கட்டுன பொண்டாட்டி! மருவாதிக் கெட்டுடும்!"ன்னாரு பெரியவரு. அவரோட வாயித் தழுதழுக்க ஆரம்பிச்சிட்டுது.
            "யத்தாம்! நீஞ்ஞ தொட்டுத் தாலியக் கட்டுறதுக்கு மின்னாடியே நமக்கு அத்து யக்கா. தெரியும்ல. நமக்கு மொதல்ல யக்கா. பெறவுதாம் ஒஞ்ஞளுக்குப் பொண்டாட்டி. ஒம்மட மவன்களுக்கு அத்தென பேத்துக்கும் தாய்மாமேம் நாம்ம. நாம்ம எடுக்குறதுதாங் முடிவு. அப்பிடிப் பாத்தாலும் யத்தாம் ஒஞ்ஞள வுட இஞ்ஞ நாம்மத்தாம் எல்லாம். நீஞ்ஞ ச்சும்மாத்தாம். இந்தாரு யத்தாம்! தாய்மாமனான நமக்கு யில்லாத அக்கறை ன்னா ஒனக்கு? நீயி எந்தப் புள்ளையத் தொட்டுத் தூக்கி வளத்திருக்கே? இஞ்ஞ கெடக்குற அத்தனெ புள்ளையையும் தொட்டுத் தூக்கி வளத்தது நாமளும் எஞ்ஞ யக்காவும்தாம். எந்தப் புள்ளைக்கு நீயி ரவ்வ சோறூட்டி வுட்டுருக்கே? சூத்தலம்பி வுட்டுருக்கே? சொல்லு. இஞ்ஞ கெடக்குற மாடுகளப் பாத்த அளவுக்குக் கூட நீயி மனுஷன பாத்தது கெடையாது. நம்மட யக்காவ கட்டலன்னா நீயில்லாம் ஒரு மனுஷம்ன்னு ஒன்னய எவ்வேம் வேலங்குடியில மதிப்பாம்? இஞ்ஞ முடிவுன்னு ஒண்ணுத்தெ எடுக்கணும்னா அத்துக்கு ஒன்னய விட நமக்குத்தாம் அதிகாரம் சாஸ்தி, உரிமெ சாஸ்தி. நாம்ம நெனைச்சேம்ன்னா ஒன்னய யக்கா கூடவே வாழ வுடாம அடிச்சிப்புடுவேம் பாத்துக்க!"ன்னு சுப்பு வாத்தியாரு. இப்பிடி அவரு ஒருமையில எறங்கி அடிச்சதுதாம் வேலங்குடி பெரியவரு கொஞ்சம் அசமடங்குனாரு.
            இவ்வளவு சம்பவம் நடக்குறதெ குடும்பத்துச் சனங்க அத்தனையும் வேடிக்கைப் பாத்துக்கிட்டு வாயை மூடிக்கிட்டு நிக்குதே தவுர ஒண்ணும் வாயைத் தொறந்து ஒண்ணுத்தையும் பேச மாட்டேங்குது.
            பெரியவரு பச்சக்குன்ன அப்பிடியே தரையில உக்காந்து கையி ரண்டையும் படார் படார்ன்னு தரையில அடிச்சாரு. அடிச்சிக்கிட்டே, "இப்ப என்ன பண்ணணுங்றே? வண்டியில ரண்டு மாடும் ஒரு தெசையில இழுக்கணும். சண்டி மாடு வேறொரு தெசையில இழுத்தா வண்டி ஊரு போயிச் சேராது. குடும்பங்றது வண்டி மாதிரி. எல்லா மாடும் ஒழுங்கா இருந்தாவணும். ஒரு சண்டி மாட்டால மொத்தக் குடும்பமும் சந்தியில நிக்குறாப்புல ஆயிடும்!"ன்னாரு காட்டமா.
            "இப்போ ன்னா நடந்துப் போச்சுன்னு இப்பிடி நடக்குது? சண்டி மாடு, சந்தியில நிக்குறேன்னுகிட்டு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதாங் சொல்றேம்! ஒண்ணும் தெரியாத விசயத்துல நீயி ஏம் தலையிடறே?"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
            "நடக்குறது நாகரிகமா இருந்தா நாம்ம ஏம் தலையிடறேம்? நாம்ம தலையிடற அளவுக்கு இஞ்ஞ ஏம் நடக்குது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நேத்தியே படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டேம். பொழுது விடியறதுக்கு மின்னாடி பொம்பளைங்க எழுந்துப்புடணும்னு. பொழுது விடிஞ்ச பிற்பாடும் இழுத்துப் போட்டுக்கிட்டுத் தூங்குனா ன்னா அர்த்தம்? அப்பிடிப் பொம்பளெ தூங்குற குடும்பம் வெளங்குமான்னு கேக்குறேம்?"ன்னாரு பெரியவரு.
            "பொம்பளைங்கன்னா மாசத்துல வூட்டுக்கு வெலக்கு ஆவுற நாள்ல ஒடம்புக்கு முடியாம கொள்ளாமத்தாம் போவும். அப்போ கொஞ்சம் மின்ன பின்னத்தாம் எழுந்திச்சி ஆவணும். அதெல்லாம் அனுசரிச்சுத்தாம் போவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "போவும்! போவும்! அப்பிடியில்லாம் பாத்திருந்தா ஒம்மட யக்கா நம்மடகிட்டெ குடும்பமே நடத்திருக்கவே முடியாது. இஞ்ஞ ஒம்மட யக்கா ஒழைக்கிற ஒழைப்புக்கு இழுத்துச் சுருட்டிக்கிட்டுப் படுத்திருக்கணும். ஒரு நாளு அப்பிடிப் படுத்தது கெடையாது தெரியுமா?"ன்னாரு பெரியவரு.
            "அதாஞ் சொல்லிட்டேன்னே! நம்மட யக்காவால தலைநிமுந்த ஆளு நீயின்னு. நம்ம யக்காவ நீயி மனுஷியாவா நடத்துனே? இஞ்ஞ கெடக்குற இருவது மாடுல்ல இருவத்தோராவது மாடு எஞ்ஞ யக்கா. நமக்கு ன்னா தெரியாதுன்னு நெனைச்சியா? அத்து ன்னா மாடா? மனுஷியா? அந்தப் பாடுத்தானே படுத்துனே? இதுக்காவே சின்ன வயசுல விருத்தியூர்ல தங்க முடியாம, யக்காவுக்கு ஒதவியா இருக்குமேன்னு ஓடியாந்த நாளு எத்தனென்னு நமக்குல்ல தெரியும்? ஒனக்கு மச்சினனான நாமளும் ஒரு மாடு. நம்மளையும் போட்டு வேலைங்ற பேர்ல ன்னா பாடு படுத்துனே. அதெ வுடு. அத்து ஒரு காலம். கஷ்ட காலம். வறுமையில கெடந்த காலம். இப்பவும் அப்பிடின்னா... எல்லாம் எந் யக்காவோட தலையெழுத்து. ஒன்னயும் ஒண்ணும் கேக்க முடியாது. ஒந் நொரைநாட்டியத்தையும் ஒண்ணும் கேக்க முடியாது. நடந்தது நடந்துப் போச்சு. வெரல்ல நோவுன்னா வெரல வெட்டி வீசிப்புட முடியாது. வெரல குணப்படுத்தித்தாம் வெச்சிக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தக் கதையல்லாம் நம்மகிட்ட வாணாம். அப்பிடில்லாம் வெச்சிக்கிட்டவாசித்தாம் இன்னிக்கு குடும்பம்னு தலைநிமுந்து நிக்க முடியுது. பாடுபடாம குடும்பத்தெ நிமுத்த முடியாது. மாடு மாதிரி மனுஷம் பாடுபடணுங்றதுக்காகத்தாம் வூட்டுல மாட்ட வாங்கிக் கட்டுறது. நோகாம கொள்ளாம ஒரு மசுத்தையும் புடுங்கிட முடியாது. நிக்குற ஒவ்வொரு மாடும் கறந்த பாலுதாம் அன்னிக்கு சாப்பாடு. சோத்துக்கு வழியில்லாம கெடந்த நாள்லயும் பாலுக்கும், தயித்துக்கும் பஞ்சமில்லெ. அதக் குடிச்சிட்டுக் கெடந்த நாளு நெறைய. அப்பிடிப்பட்ட மாடுகளுக்கு மாட்டெப் போலவே மனுஷம் பாடுபடறதுல தப்பு ஒண்ணும் யில்ல. இதெல்லாம் பேசிட்டு நிக்காதே. நமக்கொண்ணும் அப்பிடி அவசியமில்ல. என்னவோ வெரலு, நோவு, கொணம்ன்னு சொல்றீயே. அப்பிடி கொணம் பண்ணி வெச்சிக்கிடணும்னு எந்தத் தேவையுமில்ல. வெரலு சரியில்லன்னா வெட்டி வீசிப்புடுவேம். நமக்கு ஒபயோகம் இல்லாத வெரலு நமக்குத் தேவையில்ல. வெரல்ன்னா மோதிரத்தெ போட்டுக்கிட்டு லாத்திக்கிடறதுக்கு மட்டும்ன்னு நெனைச்சியா? பாடுபடணும். ஒடம்புல இருக்குற அத்தனெ உறுப்பும் பாடுபடணும். பாடுபட்டத்தாம் வெச்சிப்பேம். இல்லன்ன நம்ம ஒடம்போட உறுப்பா இருந்தா ன்னா வெட்டி வீச யோசிக்க மாட்டேம். நல்லா சொல்றேம் கேட்டுக்கோ, இந்தப் பொண்ணுக்கு இனுமே இந்த வூட்டுல எடமில்லே!"ன்னாரு பெரியவரு.
            சுப்பு வாத்தியாருக்குக் கோவம் வந்திடுச்சு. அப்பிடி இப்பிடின்னு ஒருமையில பேசுனவரு இப்போ நேரடியாவே மருவாதி அது இதுன்னு காட்டமா கேட்டுப்புட்டாரு, "ஒம் மருமவளுக்கு ஓம் வூட்டுல எடமில்லன்னா வேற யாரு வூட்டுல எடம் இருக்கு? வயசுல மூத்ததுன்னா அந்த மருவாதியோட பேசணும்? மருவாதி கெட்டத்தனமா பேயப் படாது! இதல்லாம் பேச்சா? மருவாதிக் கெட்டுப் போயிடும்!"ன்னு.
            "வேணும்ன்னா அப்பிடி அவசியம்ன்னா இதெல்லாம் பேச்சான்னு கேள்வி கேக்குறவங்க அவுங்க வூட்டுல கொண்டு போயி வெச்சிக்கிட வேண்டியதுதாம்!"ன்னாரு பெரியவரு.
            "நமக்கென்ன? நம்மட பொண்ணு மாதிரித்தானே. நம்மட வூட்டுல கொண்டு போயி வெச்சிக்கிறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "கொண்டுப் போயி வெச்சிக்கிடறது பெரிசில்ல. நீயி வாத்தியார்ர இருக்கேன்னா பின்னாடி நடக்குற வெளைவையும் யோஜனெ பண்ணிக்கிட்டுப் பேசணும். எத்தன நாளுக்கு வெச்சிப்பே? வெச்சிக்கிறீயாம்ல வெச்சுக்கிறே? சந்தானம் வந்து அழைக்க மாட்டாம். அப்பிடி அழைக்கப் போனாம்ன்னா கால வெட்டி அந்தாண்ட தூக்கிப் போட்டுப்புடுவேம். நீயி ஒம்மட வூட்டுலயே வெச்சிக்கிட வேண்டியதுதாங். அதையெல்லாம் யோஜனெ பண்ணிக்கிட்டு முடிவெடு!"ன்னாரு பெரியவரு.
            "நானும் அதத்தாம் சொல்றேம்! நாளைக்கு எவனாவது மருமவள அழைக்க வர்றேம், பொண்டாட்டிய அழைக்க வர்றேம்ன்னு நம்மட வூட்டு வாசல்ல வந்து நின்னாம்ன்னு வெச்சுக்கோ நாமளும் கால வெட்டி அந்தாண்ட வெச்சிப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் பதிலுக்கு.
            "அம்மாம் கொழுப்பு வெச்சிப் போயிடுச்சா ஒனக்கு? பாப்போம் பாப்போம். நாளைக்கி ன்னா நடக்குதுன்னு?"ன்னாரு பெரியவரு.
            "நாளைக்கி எத்து வேணும்னாலும் நடக்கும்? எத்தனெ பயெ ஒத்த காலோட அலையப் போறாம்ன்னு நாளைக்கி நடந்தாத்தாம் தெரியும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்த விருத்தியூரு சனத்துக்கே அழுத்தம் சாஸ்தி. கொழுப்பு கிரிசெ கெட்டுப் போயிக் கெடக்குது. நாம்ம பாக்க வளந்தப் பயெ. நம்ம மின்னாடி ன்னா பேச்சு பேசுறே நீயி?"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
            அதுக்கு மேல சுப்பு வாத்தியாரு பெரியவர்ர பாக்க விரும்பல. நீயெல்லாம் ஒரு மனுஷனாங்ற மாதிரி அலட்சியமா அந்தாண்ட திரும்பி சுப்பு வாத்தியாரு தனம் அத்தாச்சியப் பாத்தாரு. "போயி வேற பொடவையக் கட்டிட்டுக் கெளம்பு. நம்மட வூட்டுக்குப் போவோம்! இஞ்ஞ நீயி இருக்க வாணாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "வேற போடவையல்லாம் கட்டிட்டு வார மாட்டேம்.இதே போடவையோடத்தாம் வருவேம்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "இன்னா நெஞ்சழுத்ததப் பாத்தீயா? ஒம் பேச்சையாவது கேக்குதா? இதையெல்லாம் ன்னா பாடு படுத்தணும் தெரியுமா? இதெப் போயி அழைச்சிட்டுப் போறேங்கிறீயே?போ போ அழைச்சிட்டுப் போயி பட்டாத்தானே தெரியும் ஒரு குடும்பத்தெ நடத்துறதுன்னா சாமானியமா ன்னான்னு? அழைச்சிட்டுப் போறாராமுல்ல அழைச்சிட்டு? இப்பத்தான பொண்ணு புள்ளைன்னு ஆயிருக்கு. மருமவன்னு ஆனாத்தாம் தெரியும் அதோட சங்கதி!"ன்னாரு பெரியவரு.
            "செரி வா! கெளம்பு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பெரியவர்ர மொறைச்சுப் பாத்துக்கிட்டே தனம் அத்தாச்சிக்கிட்டெ.
            சுப்பு வாத்தியாரு ஒருத்தர்கிட்டெயும் ஒண்ணும் சொல்லாம வாசல்ல கெடந்த டிவியெஸ்ஸ ஸ்டார்ட் பண்ணாரு. நனைஞ்சப் பொடவையோட தனம் அத்தாச்சி வந்து பின்னாடி ஏறி உக்காந்துக்கிடுச்சு. மாமானாருகிட்டேயும் ஒண்ணும் சொல்லல, செலையப் போல நின்ன புருஷங்காரரான சந்தானம் அத்தாங்கிட்டயும் ஒண்ணும் சொல்லல. அது பாட்டுக்கு சுப்பு வாத்தியாரோட டிவியெஸ்ல ஏறி உக்காந்துகிட்டு திட்டைக்கு வந்திடுச்சு.
            சுப்பு வாத்தியாரு கெளம்பிப் போன பிற்பாடு அந்த எடம் கொஞ்சம் அமைதியாவுது. ஆனா, செயா அத்தை அதோட ரணகளத்தை ஆரம்பிச்சிடுச்சு. "ஏந் தம்பித்தானே வந்திருக்காம். எதுக்கு வந்திருக்காம்? என்னத்துக்கு வந்திருக்காம்?ன்னு ஒருத்தராவது கேட்டீயளா? அவ்வேம் பாட்டுக்கு அனாதியா வந்து அனாதியா கெளம்புறாம்? வந்தவனுக்கு ஒரு வாயி டீத்தண்ணிய கொடுக்க வுட்டீங்களா? டீத்தண்ணிக் கெடக்கட்டும், ஒரு வாயி தண்ணியக் கொடுக்க வுட்டியளா? ஒஞ்ஞளுக்கு ஒஞ்ஞ சண்டைத்தாம் முக்கியம். எந் தம்பி முக்கியம் கெடையாது. அவ்வேம் இல்லன்னா இன்னிக்கு இந்தக் குடும்பம் கெடையாது. இஞ்ஞ கெடக்குற ஒவ்வொண்ணுத்தையும் தூக்கி வளத்தவேம் அவ்வேம். ஏம்டா அறிவுகெட்ட கம்முனாட்டிகளா! ஒஞ்ஞ தாய்மாமேம்தானடா அவ்வேம்? இத்தாம் ஒரு தாய்மாமேனுக்கு நீஞ்ஞ தர்ற மருவாதியா? வெளங்காத பயலுவோளா! இனுமே இந்த வூட்டுல எங்கிட்டெ யாரும் பேசக் கூடாது. மீறிப் பேசுனா நடக்குறதே வேற? நாம்ம என்னப் பண்ணுவேம்ன்னு நமக்கே தெரியாது!" அப்பிடினிச்சு செயா அத்தை. சொல்லிப்புட்டு பக்கத்துல கெடந்த நாலு பாத்திரத்த தூக்கி மடார்ன்னு மடார்ன்னு அந்தாண்ட தூக்கி வீசுனுச்சு. அதுக்குப் பெறவு யாரும் ஒண்ணும் பேசிக்கிடல. இன்னிக்குக் காலையில யாரு மொகத்துல முழிச்சோம்? இப்பிடி ஆயிடுச்சேன்னு எல்லாம் தலையில கைய வெச்சிக்கிட்டு உக்காந்துட்டுங்க!
*****


No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...