14 Jul 2026

சொத்து போகாது, ஆனால் காது கேட்காது!

சொத்து போகாது, ஆனால் காது கேட்காது!

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப்போகக் கூடாது, சொத்துகள் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கைமாறிவிடக் கூடாது என்கிற அதிபயங்கரப் பொருளாதார நோக்கங்களுக்காக, அத்தை மகளையும் மாமா மகனையும் பிடித்துக் கல்யாணம் செய்து வைக்கும் ரத்தப் பாச விசித்திரம் காலம் காலமாக நடந்து வருகிறது.

பிள்ளைகள் யாரையாவது காதலித்துத் தொலைத்துவிட்டால், பெற்றோருக்கு வரும் முதல் ஆத்திரம், நாளைக்கே உன் அத்தை மகனுக்கு உன்னைக் கட்டிக்கொடுக்கிறேன் பார் என்பதுதான். காதல் நோய்க்கு அத்தை மகன்தான் இவர்களின் ஒரே ஆன்டிபயாடிக்!

அண்மை மருத்துவவியல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. ரத்த உறவுத் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு டபுள் ஆகிறதாம்.

பிரிட்டனின் பிராட்போர்டு பகுதியில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்குக்குக் காரணம் இந்த ரத்தப் பாசத் திருமணங்கள்தான் என்று ஆய்வு செய்தே நிரூபித்திருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, நம் ஊர் லட்சணம் என்ன தெரியுமா?

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் பிறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கிறதாம்.

இதில் கர்நாடகத்தில் 30 சதவீதமும், தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தலா 20 சதவீதமும் குழந்தைகள் காது கேளாமல் பிறக்கிறார்கள்.

ஆண்டுதோறும் சுமார் 6 முதல் 8 லட்சம் இந்தியக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த மரபணுப் பெருமையில் தென்னிந்திய மாநிலங்கள்தான் டாப்!

வாழ்க பாரம்பரியம்!

கேரளா மட்டும்தான் இதிலிருந்து கொஞ்சம் தப்பித்திருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காதல் திருமணங்கள் பெருகிவிட்டதால் இந்த வழக்கம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், இன்னமும் குடும்பக் கட்டாயத்துக்காகப் பிடிக்காத மாமன் மகனைத் திருமணம் செய்துகொண்டு அழும் பெண்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த ரத்த உறவுக் கல்யாணங்களால் குழந்தைகளுக்கு என்னென்ன வரும் என்று மருத்துவர்கள் ஒரு பெரிய மெனு கார்டையே நீட்டுகிறார்கள்.

அறிவாற்றல் குறைபாடு,

குழந்தைப் பருவத்திலேயே மரணம்,

நுரையீரல் கோளாறு,

தலசீமியா,

அரிவாள் செல் சோகை,

மூளை, நரம்புகளை அழிக்கும் அபாயகரமான மரபணுக் கோளாறு.

தசை பலவீனம், நடுக்கம்,

பேசவோ விழுங்கவோ முடியாத நிலை என ஒரு பெரிய பட்டியலையே நீட்டுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், சொத்தைக் காப்பாற்றப்போய், பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தையே அடகு வைக்கும் விசித்திர வியாபாரம் இது.

இந்த ஆபத்தான பழக்கம் இன்னும் தொடர்வதற்கு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

நம்ம ஊர் ஜாதி ரீதியான திருமண இணையதளங்கள் முதன்மையான காரணம்.

பணக்காரர்கள் சொத்துப் போகக் கூடாது என்று நினைக்கிறார்கள்; ஏழைகள் திருமணச் செலவை மிச்சப்படுத்த வீட்டுக்குள்ளேயே முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இது அடுத்த முக்கியமான காரணம்.

ஆனால், ஒரு திருமணத்தில் பெண்ணின் ஆரோக்கியமும், அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் எதிர்காலமும் முக்கியம் என்பதை இந்த இரண்டு தரப்புமே யோசிப்பதில்லை.

எல்லாவற்றிலும் முன்னேறி விட்டதாக மார்புதட்டும் நம் நாட்டில், இன்னமும் இந்த மரபணுத் தற்கொலை வழக்கம் தொடர்வது ஒரு சாபக்கேடு. ரத்தச் சொந்தத்தில் கல்யாணம் செய்து கொண்டே இருந்தால், அது நாட்டுக்கு ஆரோக்கியமான மனித வளத்தைத் தராது; மாறாக மருத்துவமனைகளுக்குத்தான் வருமானத்தைத் தரும்.

சொந்த பந்தம் முக்கியம்தான், ஆனால் அது பிறக்கும் குழந்தையின் காதுகளை அடைப்பதாக இருக்கக் கூடாது!

*****

No comments:

Post a Comment