பத்த வெச்சுட்டீயே பரட்டை!
திருமணம், மஞ்சள் நீராட்டு விழா, ஆலய திருவிழா,
காதணி விழா, இறுதிச் சடங்கு வரை காதுகளைப் பதம் பார்க்கும் பட்டாசுகளை ஏன் வெடிக்கிறோம்?
இதை எப்படித் தடுக்கலாம்?
இது
இனிய நண்பர் காளிதாஸின் கேள்வி.
விழாக்களில்
மேற்கொள்ளப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் பண்பாட்டு
வழக்கியல்களோடு தொடர்புடையவை. விழாக்கள் என்றால் மனிதர்களுக்கு தனி மகிழ்ச்சி வந்து
விடுகிறது. மங்கல விழாக்களில் மகிழ்ச்சி, அமங்கல விழாக்களில் அழுகை என்றிருந்த நிலை
கூட இன்று மாறி விட்டது. எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் மகிழ்ச்சி என்ற
நிலை ஏற்பட்டு விட்டது.
திருமணம்,
மஞ்சள் நீராட்டு விழா, காதணி விழா, ஆலய திருவிழா, இறுதிச் சடங்கு என்றில்லாமல் கட்சிக்
கூட்டங்கள், சங்கக் கூட்டங்கள், ரசிகர் மன்றக் கூட்டங்கள் வரை மக்கள் கூடினால் போதும்
அதைத் தனித்துத் தெரியப்படுத்துவதற்குப் பட்டாசுகளைப் பயன்படுத்தும் பண்பாட்டு வழக்கம்
தற்போது தமிழ்ச் சமூகத்தின் நடைமுறையாகவே ஆகி விட்டது.
தேர்தல்
வெற்றிகளை மட்டுமல்லாது பொதுத்தேர்வில் வெற்றி பெற்றதை வெளிப்படுத்துவதற்குக் கூட தற்போது
பட்டாசு வெடிக்கும் கலாச்சாரத்தை மக்கள் கடைபிடிக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளில்
வெற்றி கிடைக்கும் போதும் கூட பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. தங்கள் வெற்றியை வெளிப்படுத்த
பெருஞ்சத்தத்தைப் பயன்படுத்தும் உளவியல் தாக்கத்திற்குப் பலரும் ஆளாகியுள்ளனர்.
ஆயிரம்
பேர் கூடினால் ஆயிரம் வாலாக்களைப் பயன்படுத்துகிறார்களா, இரண்டாயிரம் பேர் கூடினால்
இரண்டாயிரம் வாலாக்களைப் பயன்படுத்துகிறார்களா என்று தெரியாத அளவுக்கு தொடர் வெடிச்சத்தம்
விழாக்களின் பிரமாண்டத்தைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றன.
வெடிச்சத்தம்
என்பது போர்க்குணத்தின் வெளிப்பாடு. ஒவ்வொருவருக்குள் இருக்கும் போர்க்குணத்தை மக்கள்
இப்படித் தணித்துக் கொள்கிறார்கள். திடீரென எழும் சத்தம் கேட்பவர்களைப் பிரமிக்கச்
செய்யும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஏன் இப்படி வெடிச்சத்தம் எழுகிறது என்று அனைவரும்
விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வெடிச்சத்தம் மூலம் தங்களின் அடையாளத்தையும்
புகழையும் விளம்பரப்படுத்த விழைகிறார்கள்.
விழாக்களை
வெளிப்படுத்த மங்கள மேளம், சாவுப்பறை என்பதோடு தற்போது பட்டாசுகளும் சேர்ந்து கொண்டுள்ளன.
வெடிச்சத்தம் எழும்பாமல் சாமி புறப்பாடு நடந்தால் சாமி குற்றம் ஆகி விடும் என்று நினைக்கும்
அளவுக்குப் பட்டாசு சத்தத்தின் பரம ரசிகர்களாக மக்கள் மாறி வருகின்றனர்.
பட்டாசுகள்
காதுகளைக் கிழிப்பதும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதும் கண்டு கொள்ளப்படாத பிரச்சனைகளாகி
விட்டன. அதைத் தடுக்கப் போய் ஒரு பெரும் கலவரத்தை உண்டாக்கிக் கொள்வதை விட, அந்த சிறுநேர
நரகத்தைத் தாங்கிக் கொள்வது மேல் என்ற மனநிலைக்குப் பலர் வந்துவிட்டனர்.
இதற்கு
மேலும் பட்டாசுகள் வெடிப்பது உங்கள் இதயத்தை நோகச் செய்கிறது என்றால், எவ்வளவு நேரம்
வெடிக்க முடியுமோ வெடி, கரியாவது உன் காசுதானே என்று ஆறுதல் பட்டுக் கொள்வதைத் தவிர
வேறு என்ன வழி இருக்கிறது?
ஏதோ
நான்கு பட்டாசுத் தொழிலாளர்கள் வாழ்வில் கொஞ்சம் நல்லது நடந்தால் சரிதான் என்று நினைத்துக்
கொள்வதன் மூலமும் பட்டாசு வெடிப்பதனால் இதயம் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
மற்றபடி
உங்களால் முடிந்த வரை தீபாவளி பட்டாசு வரை வெடிக்காமல் காற்று மண்டலத்தைப் புகையாக்காமலும்,
மற்றவர்களின் காது மண்டலத்தைப் பாதிக்காமலும் இருக்கலாம்.
அதற்கு
மேலும் எதாவது செய்ய வேண்டும் என்றால், எந்தெந்த இடங்களில் வெடிகளை வெடிக்கலாம், எவ்வளவு
சத்தமுள்ள பட்டாசுகளை வெடிக்கலாம், எந்தெந்த நேரங்களில் வெடிக்கலாம் என்று அதற்கு அரசுதான்
அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.
ஒரு
வருடத்திற்குள் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்களிடம்
தேர்தல் வாக்குறுதியாக பட்டாசு வெடித்தலை நெறிபடுத்தும் வழிமுறைகளை நீங்கள் கோரிக்கையாகவும்
வைக்கலாம். இதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் பட்டாசு சத்தம் புடைசூழத்தான் வேட்பாளரே
உங்கள் வீட்டிற்கு ஓட்டுக் கேட்க வருவார் என்பதுதான்.
*****
No comments:
Post a Comment